பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-6
சம்பந்தரும் சமணர்களும்.
புத்தரும், மகா வீரரும் மக்களுக்கு அன்பைப் போதித்து அறவழி காட்ட வந்த மஹான்கள். அவர்களை மற்ற மதங்களை அழிக்க வந்தவர்களாக்கிய பழி பல நூறாண்டுகளுக்குப் பின் வந்த அவர்களது மத குருக்களையே சேரும்.
சம்பந்தரை சமணர் என்று கூறுகிறாயா? கேள்வி என் காதில் விழுகிறது.
சமண மதத்தின் தலையாய கொள்கையான புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை பேரறமாய் நாடெங்கும் சைவர்களிடமும் பரவியது சம்பந்தரால்.
அறவொழுக்கத்தை கடைப் பிடிக்காதவருக்கு வீடு பேறில்லை பரப்பியவர் சம்பந்தர்.
வேள்விகளை உயிர்ப் பலியில்லா யாகமாக மாற்றியவர் சம்பந்தர்.
கள்ளையும் புலாலையும் ஒழித்து, மாவும் அப்பமும் உண்டு களித்து சைவரோடு சேர்ந்து பலர் தீ வடிவில் சிவனைத் தொழ வைத்தவர் சம்பந்தர்.
கோவிலில் நுழையக்கூடாத பிரிவைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்பாண நாயனார் தோள் மீது கைபோட்டு கோவில்களுக்குள் அழைத்துச்சென்று தன் பாடல்களுக்கு அவரை யாழ் இசைக்க வைத்தார். இறுதியில் ஈசனுடன் கலந்த பொழுது யாழ்பாணரையும் உடன் அழைத்துச் சென்றார்.
மேலே கூறியவை அனைத்தும் சமண மதக் கொள்கைகள். நாளடைவில் சைவ, வைணவ மதத்தைச் சார்ந்தவர்களும் அவைகளை தமதாக்கிக் கொண்டனர்.
சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் பௌத்தர்களும், சமணர்களும் நற் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு அறம் பிறழ்ந்தமையால் சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்க வாசகரும் அவர்களுடன் வாதிட்டு அறத்தை நிலை நாட்ட வேண்டிய தேவை வந்தது.
‘அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை” என திடமாக நம்பிய சம்பந்தர், சமணமும், புத்தமும் ஈசனால் ஆக்கப்பட்டவை எனவும் நம்பினார். அவர்கள் வழிபாடும் சிவ வழிபாடே, அவர்கள் உரையாடலும் இறைவனுரையே, அவர்கள் மறவுரையும் அறவுரையே, அவர்கள் கொள்கையை நிலை நாட்டியவனும் ஈசனே. அதுமட்டும் அல்லாது எல்லாம் ஈசன் வடிவெனும் பொழுது சமணரும் புத்தரும் மற்றையோரும் அவன் வடிவே அன்றோ’ என்று பாடுகிறார் சம்பந்தர். எனவே சம்பந்தர் சமணர்களுடைய கொள்கைகளை அழிக்கப் பிறந்தவரல்லர்.
சேக்கிழாரோ பெரிய புராணத்தில் சம்பந்தரின் தந்தை சமணரை அழிக்க ஒரு பிள்ளை வேண்டுமென வேண்டிப் பெற்றார் என்கிறார். சம்பந்தரும் தனது திருக்கடைக் காப்புகளில் பத்தாவது பாடல் தோறும் புத்தர்களையும் சமணர்களையும் பழித்துப் பாடுகின்றார்.
ஒரே குழப்பமாக உள்ளதே?
சமண புத்த கொள்கைகள் நம் மண்ணிற்கு உகந்த தமிழர் கொள்கையேயாகும். அவை களைகளால் மூடப் பட்டு வாடத் துவங்கின. களைகளை நீக்கி பயிரைச் செழித்து வளரச் செய்யவே சம்பந்தர் தோன்றினார்.
சம்பந்தர் காலத்தில் புத்தர்கள் சீரும் செல்வாக்கும் பெற்று விளங்கவில்லை. அழிவின் விளிம்பில் இருந்தனர். எனவே சம்பந்தர் அவர்களை அதிகம் சாட வில்லை. சமணர்களில் வெள்ளை உடுத்திய சுவேதாம்பரர், உடையிலாது திரிந்த திகம்பரர் ஆகியோரில் பின்னவரே தலைவிரித்து ஆடினார்கள். பின்னவரின் கூடா ஒழுக்கத்தையே சம்பந்தர் பழித்தார்.” அவர்களை அமணர் என்றே அழைக்கிறார்.
சம்பந்தர் சமண கொள்கைகளை வெறுக்க வில்லை. பின் வந்த சமணர்களின் வெறுப்பூட்டும் நடவடிக்கைகள வெறுத்தார். சமணத் துறவிகளின் நடவடிக்கைகளே சமணம் அழிவதற்கும் காரணமாய் இருந்தன.
சம்பந்தர் வரலாற்றில் நடந்த பல சம்பவங்களில் அதிகம் பேசப்படுவைகளில் ஒன்று எட்டாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய கதை.
பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை தம் வயப்படுத்திய சமணர்கள் சைவர்களை சமணர்களாக்கிக் கொண்டிருந்தனர். சோழநாட்டின் இளவரசியும் பாண்டிய நாட்டின் அரசியுமான மங்கையற்கரசி, அமைச்சர் குலச்சிறையர் உடன் சேர்ந்து மன்னனையும் மக்களையும் சைவத்தை நோக்கி திருப்ப ஞான சம்பந்தரை அழைத்து வந்தனர். மன்னனின் சூளை நோய் சமணத்தையும் சைவத்தையும் சோதிக்கும் கருவியாக அமைந்தது. பல சோதனைகளை தாண்டி சம்பந்தர் மன்னனின் நோய் தீர்த்தார். சமணர்களால் நோய் தீர்க்க முடிய வில்லை. பின்னர் சம்பந்தரை சமணர்கள் அனல் வாதம், புனல் வாதம் என மன்னர் முன் போட்டியிட அழைத்தனர். இரண்டிலும் சம்பந்தர் வென்றார். வாதங்களில் தோற்றபின் பல சமணர்கள் திருநீறு பூசி சைவராய் மாறினர். பலர் கடலில் விழுந்து மாய்ந்தனர். மீதம் எட்டாயிரம் சமணர்கள் நாற்பது ஆயிரம் சைவர்கள் முன்பு கழுவில் ஏற்றப்பட்டனர். இது கதை.
இக்கதையை சம்பந்தரின் தேவாரம் கூற வில்லை. சம காலத்தில் வாழ்ந்து சம்பந்தரை பிரமிப்பாக பார்த்து வணங்கி சம்பந்தரின் பல்லக்கைச் சுமந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர் பெருமையாக பாட வில்லை. திருத் தொண்டத் தொகை பாடிய சுந்தரர் கூற வில்லை. அவர்கள் மறைந்து சில ஆண்டுகளில் புத்த மதத்தின் வேரைத் தேடி வந்து காஞ்சியில் சில காலம் தங்கி சரித்திரம் எழுதிய சீன யாத்ரிகர் யுவான் சுவாங் பேச வில்லை.
இக்கதையை சில நூறு ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலில் வழங்கியவர், மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிதம்பரம் கோவிலில் செல் அரித்திருத்த தேவாரம், திருவாசகம் ஏடுகளை நமக்குத் தேடித் தந்த நம்பியாண்டார் நம்பி ஆவார். அவர் கூட சுந்தரரின் திருத் தொண்டத் தொகை தழுவி எழுதிய திருத் தொண்டர் திருவந்தாதியில் இக்கதையை கூற வில்லை. பின்னர் எழுதிய திருஞான சம்பந்தர் திருவந்தாதியில் இக்கதையை கூறுகிறார்.
நம்பியாண்டார் நம்பியின் படைப்பை மூலமாக வைத்து தான் சேகரித்த தகவல்களையும் இனைத்து நாயன் மார் வரலாற்றை விரிவாக்கிய சேக்கிழாரும் இக் கதையை பெரிய புராணத்தில் சற்று மாற்றிக் கூறுகிறார். சேக்கிழாருக்கு சம்பந்தர் எட்டாயிரம் உயிர்களை கொன்றவர் என்ற பழி கூடாது என்ற ஆதங்கம். பின்னர் வந்த திருவிளையாடல் புராணம் இக்கதையை வேறு வடிவில் கூறுகிறது.
அறத்தையும், அன்பையும் போதித்த சம்பந்தர் தன் பதின்ம வயதில் எட்டாயிரம் உயிர்களை போக்க உடன் பட்டிருப்பாரா என்ற முதல் கேள்வியே அந்நிகழ்வு ஒரு கற்பனை கதை என எண்ண வைக்கிறது.
பாண்டியன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பில் பலியான ஓர் உயிர்க்கு ஈடாக பற்றி எரிந்தது மதுரை மாநகர். அப்படியிருக்கையில் எட்டாயிரம் உயிர்களை பரிப்பது அவ்வளவு சுலபமா?
கழுவேற்றும் முறையை நாமறிவோம். எட்டாயிரம் கழு முணைகள் தயாரித்து ஒரே சமயத்தில் கழுவேற்றுதல் அன்று சாத்தியமா?
பாரதத்தின் இன்றைய மக்கள் தொகை 130 கோடி, நூறாண்டுகளுக்கு முன் பாரதி வாழ்ந்த காலத்தில் 30 கோடி. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நாற்பதாயிரம் சைவர்களும் எட்டாயிரம் சமணர்கள் குடும்பங்களுடன் வைகைக் கரையில் கூடியிருக்க முடியுமா?
ஒரே சமயத்தில் பல்லாயிரம் உயிர்களை ஒரு மன்னனால் பலி வாங்க இயலுமா? சரித்திரம் அவனை கொடுங்கோலனாகக் காட்டியிருக்குமே?
கேள்விகள் சரியா? தவறா? தெரிய வில்லை. ஆனால் கேள்விகள் எழாமல் இல்லை.
சமணத்தின் பிடிப்பால் சைவத்திற்கு மாறாது கழுவேர உடன் பட்டிருந்தால் கொள்கைப் பிடிப்பால் உயர்ந்தவர்களாக அல்லவா சமணர்கள் போற்றப்பட வேண்டும்.
நிகழ்வு நடந்த காலத்திற்கும் முதலாவதாக பதிவிடப் பட்ட காலத்திற்கும் இடையே பல நூறு ஆண்டுகள் இடைவெளி. சிறு வயதில் நான் படித்த கதை ஒண்று ஞாபகம் வருகிறது. தெருவின் முதல் வீட்டின் முன்னர் செறிமானக் கோளாரில் ஒருவன் எடுத்த வாந்தியில் கறுப்பாக மிளகு ஒன்று வந்து விழுந்தது. பல வீடுகள் தள்ளி கடைசி வீட்டை அடைந்த செய்தியில் முதல் வீட்டுக் காரன் எடுத்த வாந்தியில் காகா ஒன்று வந்து விழுந்ததாக இருந்தது. அதுபோல செவி வழிச் செய்தி பல நூறு ஆண்டுகள் கழிந்த பின் கழுவேற்றப் பட்டவர்கள் எட்டாயிரம் ஆகியிருக்கலாம்.
எது எப்படியோ? சமயக்குரவர்கள், ஆழ்வார்கள் காலத்திற்கு பின்னர் சைவமும் வைணவமும், முன்னர் தோன்றிய வைதீக மதம், சமணம், பௌத்தம், ஆசிவகம் ஆகியவற்றின் வேண்டாத கொள்கைகளை ஒதுக்கி வேண்டிய நல்ல கொள்கைகளைக் கொண்டு ஒன்றாக கலந்த ஒரு கலவை மதமாக மக்களை நல் வழிப் படுத்தி வருகிறது என்றால் தவறில்லை.
ஆசிவகம் என்ற மதம் பற்றி தலைப்பில் கோடிட்டு விட்டு அதைப் பற்றி பேசாது சென்றால் சரியில்லை. அடுத்த பதிவில் ஆசிவகம் பற்றி பார்ப்போம்.