“புராணங்களில், சுயம்வரம் என்பது எவ்வளவு சுவாரசியமான சமாச்சாரம்? இல்லையா மாமி?” என்று தொடங்கினாள் அல்லிராணி.
அங்கயர்க்கண்ணி மாமி, ”ஆமாம்.. தமயந்தி, சீதா, திரௌபதி என்று பலப்பல சுயம்வரங்கள்.. ஆமா..எதுக்கு கேக்குறே.. நீ பையன் பார்க்கத் தொடங்கிவிட்டாயா” என்றாள்.
அல்லி “சீ! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை! நான் இன்று சொல்வது என்னவென்றால்.. தேனீக்கள், இன்னாளிலும் அப்படிதான் சேர்கிறதாம்.. சயன்ஸ் ஆராய்ச்சி சொல்கிறது”
“மேலே சொல்” என்றாள் மாமி.
அல்லி சொன்னாள்:
“ஆண் தேனீக்கள் பலவிதமான மலர்களின் மார்பில் படுத்து, பெண் தேனியின் வரவுக்காகக் காத்திருக்குமாம். பறந்து வரும் பெண் தேனி, இந்த மணமகன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து காதல் உறவு கொள்ளுமாம்”
“வாவ்! ஹவ் ரொமாண்டிக்” – என்றாள் மாமி.
“மாமி.. கதையை முழுதும் கேளுங்கள். பெண் தேனீக்கள் எதை வைத்து தன் நாயகனைத் தேர்ந்தெடுக்கிறதாம் தெரியுமா?”என்றாள் அல்லி.
“நீயே சொல்” என்றாள் மாமி.
“யார் சிறந்த ‘மண’ மகன் என்று பார்க்குமாம். அதாவது சிறந்த ‘மணம் கமழும்’ மாப்பிள்ளை யார் என்று பார்க்குமாம். அதனால், இந்த உறவுக்காக அந்த ஆம்பிளை தேனீக்கள் ரொம்ப ‘ஹோம் வொர்க்’ பண்ணும். பல இடம் அலைந்து, பூக்கள், பழங்கள் ,ரெஸின் என்று பலவற்றில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை சேகரித்து எடுத்து, அவற்றைக் கலந்து ஒரு சிறப்பான வாசனைத் திரவத்தை (பெர்பியூம்) தயாரிக்கும். அதைத் தன் பின்னங்காலிலுள்ள சிறு பையில் சேமித்து வைத்திருக்கும். மலர்மார்பில் படுத்துக்கொண்டு, பெண் தேனீ வரும் அரவம் கேட்டு, தனது சிறகால் அந்த வாசனைத் திரவியத்தை ஸ்பிரே பண்ணுமாம். பெண்தேனி அந்த வாசனையின் மயங்கினால், அது அவனைத் தன் காதலனாகத் தேர்ந்தெடுக்குமாம்” என்ற அல்லி.,” இது தான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்பதோ?” என்று முடித்தாள்.
மாமி சொன்னாள், “எனக்கு இந்த பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன். என் மகாராணி உனக்காக ஓடோடி வந்தேன்’” என்றாள்.
‘எல்லாத்துக்கும் ஒரு கவுண்டர் சினிமாப் பாட்டில் வச்சிரிக்கிங்க”-என்று வியந்தாள் அல்லி.
இது ஒரு அதிசய உலகம்!
https://www.earth.com/news/male-bees-create-perfume-from-flowers-to-attract-females/