“கடலே காற்றை புரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப் பந்தில் பள்ளங்களில் தேங்கியிருக்கும் கடல் நீர், அந்தச் சுழற்சியிலே தலை கீழாகக் கவிழ்ந்து திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்து விடாதபடி ஆதரிக்கின்றாள்.
அவள் திரு நாமம் வாழ்க.
கடல் பெரிய ஏரி, விசாலமான குளம், பெருங்கிணறு
அது பற்றியே கடலும் கவிழவில்லை.
பராசக்தியின் ஆணை.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்.
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது.
மலை நமது தலை மேலே புரளவில்லை.
கடல் நமது தலை மேலே கவிழவில்லை.
ஊர்கள் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்.
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.
நடுக்கடல் தனிக்கப்பல்
வானமே சினந்து வருவது போன்ற புயற்காற்று
அலைகள் சாடி வீசுகின்றன; நிர்த்துளிப்படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன; சூறையாடுகின்றன.
கப்பல் நர்த்தனம் செய்கிறது.”
பள்ளியிலிருந்து திரும்பிய சரவணனுக்கு அம்மா பாரதியாரின் வசன கவிதைகளை வாய்விட்டு உணர்ச்சிகரமாகப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவும், கேட்கவும் ஆசையாக இருந்தது.
‘வா, சரூ, நம்ம குவிகம் ஒலிச் சித்திரத்திற்காக பாரதியின் கடலைப் பற்றிய வசன கவிதையை பதிவு செஞ்சுண்டிருக்கேன்’ என்றார் அம்மா.
‘அம்மா, நான் கூட இன்னிக்கி கடலையும், கடல் ஆய்வுகள்ல முக்கியமான ஒன்னப் பத்தியும் தான் ஸ்கூல் லைப்ரரில படிச்சேன். அதப் பத்தி ஃப்ரெண்ட்ஸோட டிஸ்கஷனும் நடந்தது.’
“அப்படி என்ன செய்திடா அது?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் அப்பா
‘முதல்ல, அப்பாவும் புள்ளையும் கை கால் அலம்பிண்டு வாழப்பூ வடையும், டீயும் சாப்பிடுங்கோ, மீதியெல்லாம் அப்புறம்தான்.’ என்றார் அம்மா.
‘என் செல்ல அம்மா’ என்று அம்மாவைக் கட்டிக் கொண்டுவிட்டு தன் அறைக்கு ஓடினான் சரூ.
அவன் ட்ரஸ் மாற்றிக் கொண்டு வருவதற்குள், அப்பா அழகாக வேஷ்டி கட்டிக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு இவனுக்காகக் காத்திருந்தார்.
‘சரியான செங்கோட்ட பேசஞ்சர்டா நீ’ என்றார்.
அப்போது சஞ்சயும், பவானியும், அவர்களின் அம்மாவும் வந்தார்கள். பவானியின் அம்மா ஏலம், சுக்கு போட்ட பானகம் கொண்டு வந்திருந்தார்.
தேனீர் வேண்டாம் என்று அதை விட்டுவிட்டு அனைவரும் பானகத்தையும், வாழைப்பூ வடையையும் ஒரு கை பார்த்தனர் என்றால், நம் சரவணன் இரு கை பார்த்தான்.
“இந்த மாதமே, அதாவது, பங்குனியே தனிச் சிறப்புள்ள மாதம். ஸ்ரீ ராம நவமி, பங்குனி உத்திரம், முருகன் தெய்வானை கல்யாணம், வள்ளி, ஐயப்பன் பிறப்பு, நாராயணன்-லக்ஷ்மி கல்யாணக் கோலம், பார்வதி- பரமேஸ்வரன் தம்பதிகளான திரு நாள், எல்லாம் பங்குனி உத்திரத்தில் தான்.” என்றார் பவானியின் அம்மா.
‘அம்மா, நம்ம தமிழ் மாச வரிசப்படி இது 12வது மாதம். சூரியன் முழுச் சுற்றை முடிக்கிற மாசம்’ என்றாள் பவானி.
தன் பங்கிற்காக, அப்பா தன் கட்டைக் குரலில் ‘பங்குனி மாதத்தில் ஓரிரவு, பால் போல் காய்ந்தது வெண்ணிலவு’ என்று பாட சரூவிற்கு பானகம் புரைக்கேறி விட்டது.
‘கொழந்தைய இப்படியா பயமுறுத்தறது?’ அப்படின்னு சரூவின் அம்மா குரலில் சஞ்சய் சொல்ல மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
“ஆமாண்டா, வெள்ளி நிலவை நெனைக்கறச்சே, நீலக் கடலான ராமனையும் சேத்து நெனச்சுக்கணும்.” என்றார் அப்பா.
எல்லோரும் விழிக்க, அது வெளுப்பு, இது கறுப்பு என்றவர், ‘சரூ, என்னவோ படிச்சேன்னியே’ன்னு எடுத்துக் கொடுத்தார்.
‘ரொம்ப இன்ட்ரஸ்டான செய்திப்பா. தானாகவே கடலுக்குள்ள போய், அந்த விவரங்கள சேகரிக்க ஒரு ட்ரோன் வந்திருக்கு.’
‘என்னது?” என்றாள் பவானியின் அம்மா வியப்புடன்.
‘ஆமாம்மா, கடலுக்குள்ள போறது சாகசம் மட்டுமில்ல, பல எதிர்பார்க்காத ஆபத்துக்களும் உண்டு. அதன் பேரலைகள், அதன் ஆழம், அதன் மர்மம் எல்லாமே மனிதன பயமுறுத்தியும் இருக்கு, வசீகரிச்சும் இருக்கு.’
‘சைல் ட்ரோன்னு (Sail Drone) ஒரு கம்பெனி. அது அலாஸ்கா கடல் பகுதியில 3200 அடி உயரமான மலையை முதல்ல கண்டுபிடிச்சது.’
‘கடலுக்குள் மலை’ என்றாள் பவானி.
ஆமாம், குடைக்குள் மழை மாதிரி.
ஓ அந்த சினிமாவா? பார்த்திபன் எப்போதுமே மாறுதலா திங் பண்றவர்.
அந்தக் கம்பெனி ‘சர்வேயர்’ ன்னு பேர் வச்ச ட்ரோனைத்தான் அனுப்பி முன்னாடி மலையக் கண்டுபிடிச்சது.
இப்ப, வாயேஜர் என்ற ட்ரோன அனுப்பறது. அது, கடலுக்குள்ள மட்டுமில்ல, கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதிகளையும், மணல் வெளிகளையும் காட்டப் போறது. காத்துல சருக்கற உறை மிதவை (wind surf rig) மாதிரி அமைப்பு. 33 அடி உயரம். 900 அடி ஆழம் வரைக்கும் கடலுக்குள்ள பாத்து படம்பிடிக்க காமெராக்கள், சோனார் கருவிகள் எல்லாம் இந்த ட்ரோன்ல் இருக்கு.
சோனார் கருவின்னா?
கடல்ல தண்ணி இருக்கா, அதுக்குள்ள இருக்கற பொருட்கள், உயிர்கள் போன்ற பல விஷயங்கள் எழுப்பற ஒலியப் பதிவு செய்யற முற இது. வௌவால் எப்படி தலைகீழாகப் பறந்து ஒலி அலைகளால தன் பாதைல போறதோ, அந்த மாதிரி ஒலி அளவுகளைக் கணக்கிட்றது கடல் வளத்தத் தெரிஞ்சுக்க உதவும்.
ப்ரமாதம்டா. காணாத ஆழத்துக்குப் போறதும், அதுல ஆளே இல்லாம தானா இயங்கறதும்..
அது மட்டுமில்ல. சட்டத்துக்குப் பொறம்பா என்ன நடந்தாலும் இதோட கண்ணேல்ந்து தப்ப முடியாது.
பல நாடுகள் ராத்திரியோட ராத்திரியா இரசாயனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் எல்லாத்தையும் அவாளோட கடல் எல்லையத் தாண்டி, வளர்ந்து வரும் நாடுகளின் கடல் எல்லையில கொட்றா, அதை இது கண்டுபிடிச்சுடும். கடல் மாசுபட்றதும், கடத்தல்களும், வரம்பு மீறி மீன்களைப் பிடிக்கறதையும் இது கண்காணிச்சு புகைப்படச் செய்தியாகத் தரும்.
இது தரக்கூடிய அத்தனையும், வானியல் நிபுணருக்கு, கடல் ஆய்வாளர்களுக்கு பெரிய தகவல் திரட்டாக இருக்கும். அது மட்டுமல்ல எத்தனையோ கடற்பாசி தொழில் நிறுவனம் இருக்கு அவைகளெல்லாம் இந்தத் தகவல் திரட்டால நல்ல முன்னேற்றம் காணும்.
முக்கியமா ஒண்ணு சொல்லணும்; மனுஷனே இல்லாம இது வேல செய்யுது. துருவக் கடல் பகுதி போல, இன்னமும் பயங்கர வசீகரமாக இருக்கற கடல் பகுதியிலெல்லாம் இதை அனுப்பி
சைன்டிஸ்ட்கள் தங்கள் ஆய்வை நல்ல பாதுகாப்போட செய்யலாம்.
உண்மதான்டா, விஞ்ஞானத்த நல்ல வழில பயன் படுத்தினா அத்தன உயிர் இனத்துக்கும் நல்லதும் நடக்கும், உலகமும் செழிக்கும்.
அம்மா, இன்னொரு வட கொடேன் எல்லோருக்கும்.
ஏன்டா, கடோத்கஜா, எதைப் படிச்சாலும், சாப்பாட்டுக்குத் திரும்பிட்ற பாத்தியா?
பவானி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.