சீதாபதி, லட்சுமிபதி, நியூரோபதி!
“சொன்னா புரிஞ்சிக்கோம்மா! டாக்டர்னா அப்படி தான் பேசுவாங்க! வியாதிக்காரங்களைப் பார்த்துப் பார்த்து அவுங்களுக்கு மரத்துப் போயிருக்கும். நீ நெனைக்கற மாதிரி பொறுமையா, இரக்கமா, சமாதானமா பேசுவாங்கன்னு எதிர்பார்க்க முடியாது.” குமார் பொறுமையாக எடுத்துச் சொன்னபோதிலும் ரமாவிற்கு கோபமும் ஆத்திரமும் தாங்கவில்லை.
“சும்மாவா சொல்றார்? 500 ரூபா ஃபீஸ் சுளையா வாங்கிண்டு தானே சொல்றார்? அப்போ ஒரு நல்ல வார்த்தை சொன்னாதான் என்ன?” என்றாள்.
ஒண்ணுமில்லை. தாங்க முடியாத கால் வலின்னு டாக்டர் கிட்ட போனபோது அவர் கொஞ்சங்கூட தயவு தாட்சண்யமின்றி, “இருவது வருஷமா சுகர் இருந்தா அப்படி தான் இருக்கும்! கால்ல இருக்கிற நரம்பெல்லாம் பலவீனப்பட்டுப் போயிருக்கும்! ” என்றார்.
அது மட்டுமா சொன்னார்? “உங்க உடம்பில ரத்தம் ஓடல. அதை தெரிஞ்சிக்கிங்க மொதல்ல. வெறும் சர்க்கரை தண்ணி தான் ஓடுது. அதுக்கு தான் கண்டிப்பா வாக்கிங் போங்கன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா கால் வலி, வாக்கிங் போகலன்னு வந்து நிக்கிறீங்க!”
“நான் ஒண்ணும் நிக்கல டாக்டர்! ஒக்காந்து கிட்டு தான் பேசறேன். என்னால நிக்க முடியலன்னு தானே ஒங்க கிட்ட வந்திருக்கேன்!” என்றாள் ரமா ரோஷமாக.
அவள் கூட கணவர் ரவி தான் வந்திருந்தார். டாக்டர் அவரிடம் சொன்னார், “இதோ பாருங்க சார்! இவுங்களுக்கு வந்திருக்கிறது ‘டயபடிக் நியூரோபதி’. இந்த வலியெல்லாம் அப்படி தான் இருக்கும். ஆனாலும் பொறுத்துக்கிட்டு வாக்கிங் போயி தான் ஆகணும். ரொம்ப முடியலேன்னா ஏதாவது வலி நிவாரணி மாத்திரை தரேன்!” என்று எழுதிக் கொடுத்தார்.
வலியிலும் கோபத்திலும் வாயடைத்துப் போய் அங்கிருந்து வெளியே வந்த ரமா கணவரிடம் வேகமாகக் கேட்டாள், “சீதாபதி, லட்சுமிபதின்னு ராமரையும் கிருஷ்ணரையும் சொல்வாங்க. கேட்டிருக்கேன். இதென்ன புதுசா நியூரோபதி? எனக்குப் புரியலையே?” என்றாள்.
ரவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ரமா பரம வெகுளி. அவளுக்கு நிறைய விஷயங்கள் எடுத்துச் சொன்னாலும் புரியாது. முக்கியமாக மெடிகல் சம்பந்தபட்ட விஷயங்கள் சுத்தமாக அவள் மண்டையில் ஏறாது. முணுக்கென்றால் கோபம் வேறு வந்து விடும். இருந்தாலும் நியூரோபதியை சீதாபதி லட்சுமிபதியோடு ஒப்பிட்டது அவருக்கு சிரிப்பு தாங்கவில்லை. ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்து மகன் குமாரிடம் சொல்லிச் சொல்லி சிரித்தார்.
ரமாவின் புகார் என்னவென்றால் டாக்டர், “பயப்படாதீங்கம்மா! எல்லாம் சரியாயிடும். இந்த மாத்திரையை போட்டுக்குங்க!” என்று ஒரு நல்ல வார்த்தை கூட சொல்லாதது, அதுவும் சொளையா 500 ரூபாய் கன்ஸல்டிங் ஃபீஸ் வாங்கிக்கொண்டு. “எப்போ பார்த்தாலும் உடம்பில சர்க்கரை தண்ணி தான் ஓடறதுன்னா நான் பேசாம நாளையிலிருந்து வெறும் சர்க்கரை தண்ணியே குடிக்கறேன். அந்தத் தண்ணியாவது உடம்பில ஒழுங்கா ஓடறதான்னு பார்க்கலாம்!” என்றாள் ஆத்திரத்தில் மூச்சிறைக்க.
“நான் எவ்வளவு நாளா சொல்லிண்டிருக்கேன்? கால்ல தசைகள் இறுகிப் போய் தான் கால் வலியே வரும். அதுக்கு ஸ்டெரெட்சிங்க் எக்ஸர்ஸைஸ் பண்ணினா சரியாயிடும்னு” என்றான் குமார்
ரமா வீறாப்பாக எழுந்தாள்.,”சரிடா! வா! இப்பவே சொல்லிக் கொடு. இன்னியிலிருந்தே செய்றேன்!” என்றாள்.
அப்பாவும் பிள்ளையும் ஒருவரையொருவர் பார்த்து நமட்டு சிரிப்பாக சிரித்துக் கொண்டார்கள்.
குமார் அவளை முதுகில் இதமாகத் தட்டிக் கொடுத்தான். “இப்போ வேண்டாம். நீ சாப்டுட்டு தூங்கு! நாளையிலிருந்து நிச்சயமா!” என்றான் ஆறுதலாக.
மறுநாள் காலை பொழுது விடிந்ததுமே குமார் எழுந்திருக்கக் காத்திருந்தாள் ரமா.
“வா! எக்ஸர்ஸைஸ் சொல்லிக் கொடு!”
குமார் கால் தசைகளைத் தளர்த்தும் சில எளிய பயிற்சி முறைகளை அவளுக்குக் கற்றுக் கொடுத்தான்.
அவள் தப்பும் தவறுமாக செய்ய, “மக்கு! மக்கு!” என்று செல்லமாகத் திட்டியபடியே சரியாக செய்ய வைத்தான்.
ரமா அடுத்தபடியாக கணவரிடம் போனாள், “எங்கே அந்த பிண்ட தைலம்? நீங்க தேய்ச்சுக்க சொல்வீங்களே?” என்றாள்.
“எத்தனை மாதங்களாக உனக்கு இந்த எண்ணையை தடவிக்கோ! கொஞ்ச நேரம் ஊறி வென்னீர் விட்டுக்கோ, கால்வலி சரியாய்ப் போயிடும்னு சொல்றேனே? நீ கேட்டா தானே? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்!” என்று கிண்டல் செய்தபடி ரவி பிண்ட தைலத்தை எடுத்துக் கொடுத்தார்.”
“கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்னு ஏன் சொல்லணும்?” என்றாள் ரமா கோபமாக கணவரோடு ஒரு யுத்தத்திற்கு தயாராகும் முஸ்தீபுகளுடன்.
“ஏம்ப்பா அப்படி சொல்ற?” குமாரும் அம்மாவோடு சேர்ந்து கொண்டான்.
“பின்னே எப்படி சொல்லணும்?” என்றார் ரவி.
“கண் கெட ஆரம்பிச்சதுமே சூரிய நமஸ்காரம்னு சொல்லலாம் இல்லையா? என்றான் குமார் சிரித்துக் கொண்டே.
ரமாவும் பிள்ளை சொல்வதை ஆமோதிப்பதைப் போல பெருமிதமாகக் கணவனை ஏறிட்டு சொன்னாள், “ஆமாம்! இப்போ நான் மாறிட்டேன் இல்ல?”
“அதாம்மா இந்த டயபடிக் நியூரோபதி வந்து உன்னை மாத்திடுத்து. … …” ரமாவிற்கு அந்தப் பெயர் மறந்து போய் விட்டது. ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு பிறகு கேட்டாள்.
“டாக்டர் சொன்னாரே அதுவா?” என்று.
“ஆங்! அதே தான்! சீதாபதி, லட்சுமிபதி, நியூரோபதி…..” என்று ஜாக்கிரதையாக சிரிக்காமல் சொன்னார் ரவி. ஆனால் குமாரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நகை சுவையாக உள்ளது. வாழ்த்துகள்.
LikeLike