எல்லாம் முருகன் செயல்
ராகவன், சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸை பிடிக்க திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டார். வண்டி வந்து தன் சீட்டில் அமரும் வரை சற்று பதட்டத்துடன் காணப்பட்டார்.
நல்ல வேலை அவரது இருக்கை ஜன்னல் ஓரம் இருந்தது. A C யும் மிதமான சுகத்தை கொடுத்தது. அவரது உடல் சற்று சோர்ந்து இருந்தாலும் முகத்தில் நிம்மதியும் சந்தோசமும் தெரிந்தது. ரயில் வண்டி வேகமாக முன்னே செல்ல மனமோ அதை விட வேகமாக பின்னே செல்லத்துவங்கியது.
எவ்வளவு சந்தோசமான நாட்கள். அப்பா, அம்மா மூன்று சகோதரர்கள். சற்று வசதியான குடும்பம். சிறு வயதில் அம்மா அப்பாவின் அன்பையும் குறைவற்ற வசதியையும் தவிர வேறு எதையும் நால்வரும் பார்க்க வில்லை. தோல் பதனிடும் தொழிற் சாலை. தாத்தா ஆரம்பித்தது. அப்பா கடுமையாக உழைத்து பெரிதாக்கினார். அப்பா தோல் வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தார்.
மூன்று சகோதரர்களும் அப்பாவுக்கு உதவியாக ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துக் கொண்டார்கள். ராகவனுக்கோ அண்ணா பல்கலையில் ME முடித்திருந்தாலும் வியாபாரத்தில் அதிக நாட்டம். படிப்பை முடித்து நான்கு ஆண்டுகள் நல்ல வேலை செய்து கை நிறைய சம்பாதித்தது மட்டுமல்லாது பை நிறைய சேர்க்கவும் செய்தார்
தொழில்வாய்ப்புகள் சென்னையில் அதிகம். ஒரு நல்ல நாளில் அப்பாவே வந்து ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தார். அப்பா எவ்வளவு வற்புறுத்தியும் முதலீடு அவரிடம் வாங்க மறுத்து விட்டார். அனைவரின் திருமணத்தை மட்டுமல்ல பேரக்குழந்தைகளையும் பார்த்த மகிழ்ச்சியில் அப்பா கண் மூடினார்.
ராகவன் மனைவியோ மனதாலும் மிக அழகானவர். இரண்டு பெண் குழந்தைகள் படிப்பில் ராகவனை விட திறமை அதிகம். மனதழகில் அம்மாவிற்கு சமமாக வளர்ந்தார்கள்.
வியாபாரத்தில் மூழ்கிய ராகவனுக்கு பல வருடங்கள் ஓடியதும் தெரியவில்லை, திண்டுக்கல்லில் என்ன நடக்கிறது என்றும் தெறியவில்லை. அப்பாவின் மரணத்திற்கு பின் ஊர் போய்வருவது கூட குறைந்தது. பெரிய முருகன் பக்தர். மாதம் ஒருமுறை பழனி செல்லும் பொழுது வீட்டில் தலையை காட்டி வருவார்.
சக்கரம் மேலேயே சென்று கொண்டிருந்தால் இறங்குவது எப்பொழுது. கடவுளை மறந்து விடுவோமே. சனி பகவானுக்கும் வேலை வேண்டுமே.
அப்படி ஒரு சூழ்நிலை நம் ராகவனுக்கும் வந்தது. இத்தாலிக்கு அனுப்பிய நான்கு கோடி மதிப்புள்ள பொருளுக்கு பணம்வரவில்லை. இத்தாலியன் பொருளை எடுத்து விற்று விட்டு தரத்தின் மேல் பழி போட்டு பணம் அனுப்ப மறுத்தான். தூதரக உதவியுடன் இத்தாலியில் வழக்கு நடக்கிறது. என்னவாகும் என தெரியாது. பேரிடி. வழக்கு எப்பொழுது முடியும் எனவும் தெரியாது. இடையே கடன் கொடுத்தவர்க்கும், வங்கிக்கும் பதில் சொல்ல முடியாமல் துவண்டார். அப்பொழுது தான் திண்டுக்கல் ஞாபகம் வந்தது. தன் பங்காக குறைந்தது ஐந்தாறு கோடியாவது வரும் என மனகணக்கிட்டிருந்தார்.
அங்கு சென்றவுடன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். சகோதரர்கள் தங்களுக்குள் சொத்தை பங்கிட்டு கொண்டு ரூபாய் ஒரு கோடியளவே இவருக்கு ஒதுக்கியிருந்தார்கள்.
சென்னை திரும்பியவர் மனதளவில் துடித்துக்கொண்டிருந்தார். கணவன், மனைவி இருவரும் சகோதரர்களுடன் சண்டை போடவோ கோர்ட்டுக்கு செல்லவோ கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
பின் அவர்கள் எடுத்த முடிவு யாரையும் வியக்க வைக்கும்.
அதன்படி இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல் வந்தார். சகோதரர்களுக்கு விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்தார். யாரும் எதிர்பாராவண்ணம் தனக்கு ஒதுக்கியிருந்த சொத்தை பழனி முருகனுக்கு தானமாக எழுதி பதிந்து விட்டு தான் அடைந்த சஞ்சலம் நீங்கி நிம்மதியுடன் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார் பை நிறைய முருகன் பிரசாதங்களுடன்.
வீட்டில் நுழைந்தவுடன் மனைவி, மகள்களை பார்த்தவுடன் இருந்த சிறிதளவு களைப்பும் நீங்கி முருகன் முன்னே பத்து நிமிடம் அமர்ந்து கண்ட தரிசனத்தை விவரித்ததை கேட்டால் நமக்கே புல்லரிக்கும்.
அச்சமயம் அலை பேசி மணி ஒலிக்கிறது. ரோமிலிருந்து வழக்கறிஞர் ‘ sir, we have won. Court awarded our claim in total and also an additional penalty of INR two crore. INR 6 crore will be transferred in to your account tomorrow “
இப்பொழுது சொல்லுங்கள் இப்பரிசு அவர்கள் நல்ல மனதிற்கு கிடைத்ததா அல்லது எல்லாம் வல்ல முருகனின் செயலா?