அந்தக் கடற்கரையில் அனைவரும் உள்ளே நீந்தப் போனால் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த சிக்கலை கண்டுபிடிக்க கடற்கரை காவல் துறை அதிகாரியாக அவனை நியிமித்திருக்கிறார்கள்.
அன்று அவன் பணியில் முதல் நாள். அவன் உந்து வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். கடற்கரையை நோக்கி வந்தான். அவனுக்குப் பணி நியமித்திருந்த இடத்தை அடைந்தான்.
கடலில் மூழ்கி தொலைந்து போகிறவர்களை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்டுள்ளதால் ஸ்கூபா டைவிங் சூட்டினை அதிகாரிகள் அவனுக்கு அளித்திருந்தனர். அவன் பார்க்கப் போவது கடற்கரை காவலர் பணி. அவன், தன் பணியிடத்தில், கடற்கரை பாதுகாப்பு அலுவலகத்தில் சென்று அமர்ந்தான். அங்கேயிருந்து கடற்கரையை நோட்டமிட்டான். பறவைகள் பறந்து கொண்டிருக்க, காற்று மிதமாக வீசிக்கொண்டிருக்க கடற்கரை அமைதியாக இருந்தது.
கடல் நீர் என்னவோ மிக சுத்தமாக சிறிய அலைகள் நிரம்பிக் காணப்பட்டது. உள்ளே பவளப்பாறைகள் தெளிவாகக் கண்ணுக்குப் புலப்பட்டது. இந்தக் காட்சி விரிகுடாவை அலங்காரப்படுத்திக் காட்டியது. மணலோ வெள்ளை நிறம்! இந்த அற்புதமான காட்சியைக் கண்டு அவன் இன்பத்தால் பரவசமுற்றான். கடல் நீர் சுத்தமாக இருக்கக் காரணம் உள்ளே ஆழத்தில் இருக்கும் பவளப் பாறைகள் தான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு மனிதன் அங்கு டைவிங் ஆடை அணிந்து கொண்டு கடலுக்குள்ளே ஸ்கூபா டைவிங் செய்யக் கடலுக்குள் சென்றான். இந்தக் கடலில் இருக்கும் அபாயத்தை அவனுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்ய அவன் தன் பணியிடத்தை விட்டு வெளியே வந்தான்.
ஆனால், அந்த மனிதன் அதற்குள் கடலுக்குள் சென்று விட்டான். அவன் அந்த மனிதனையே கண்காணித்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் தண்ணீரில் துள்ளிப் பாய்ந்து சிறிது தூரம் நீந்திச் சென்றான். பிறகு தண்ணீருக்கு அடியில் டைவ் செய்து சென்றான். அப்போது அந்தக் கடற்கரை காவல்துறை பணியாளனுக்கு மனது ‘திக்’ என்றானது. சில நொடிகள் பொறுத்துப் பார்த்தான். ஆனால் அந்த மனிதன் மேலே வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவ்விடம் மட்டும், கொந்தளித்து கொப்பளித்தது.
அச்சம் மேலிட அவன் கடலுக்குள் சென்ற அந்த மனிதனைக் காப்பாற்ற நினைத்து தானும் ஸ்கூபா டைவிங் சூட்டை அணிந்து கடலுக்குள் சென்றான். சிறிது தூரம் நீந்தி கடலுக்குள் ஆழமாக மூழ்கி சென்றான். அங்கே எவ்வளவு அழகிய காட்சிகள்! அழகழகான மீன்கள் மற்றும் பவளப்பாறைகள் காணப்பட்டன. சில நொடிகள் கழித்து சீல மீன்கள் காணப்பட்டன. இவை ஒரு வகையில் ஆபத்தானவை. ஏனென்றால், சீல மீன்கள் ஒரு பெரிய உருவங்கொண்ட ஒன்றைக் கண்டால் அதனை வேட்டையாடும் பிராணி என்று கருதி அவனை கும்பலாகத் தாக்கும். அவ்வாறே அவனைத் தாக்கின. அதனை கட்டுப்படுத்த முடியாமல் தண்ணிரின் மேற்பரப்பிற்கு வந்தான்.
அங்கு விசித்திரமான காட்சிகளைக் கண்டான். தொலைவில் ஒரு தீவு அதில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்தன. பார்ப்பதற்கு ஒரு திகிலூட்டும் காட்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு மனித நடமாட்டம் இல்லை. அத்தீவில் அவன் தேடிய மனிதன் இருந்தான். கரைக்கு நீந்தி வந்ததும் அவன் ஓட ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து கடற்கரை பாதுகாப்பு காவல் பணியாளனும் ஓட ஆரம்பித்தான். கரைக்கு வந்ததும் ஒரே மர்மமாக இருந்தது. தன்னைப் பின் தொடர்ந்து யாரோ வருவது போல இருந்தது. ஆனாலும் முன்னே சென்ற அந்த மனிதனை நோக்கிச் சென்றான். அவன் கொஞ்சநேரம் நின்று பிறகு கலங்கரை விளக்கத்தை நோக்கி சென்றான். கதவைத் திறந்து உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து செல்லும் நோக்கத்தோடு இவனும் சென்றான். அப்போதும் அவனுக்கு தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதைப் போல் இருந்தது. அச்சம் உண்டாயிற்று. பிறகு கலங்கரை விளக்கம் நோக்கி ஓடினான், உள்ளே சென்றான்.
முன்னால் ஓடும் மனிதனைக் கண்டு அச்சப்படுவேனா அல்லது பின்னால் தொடர்ந்து வரும் நபரைக் கண்டு அச்சப்படுவேனோ என்று மனதில் குழப்பம் மிகுந்தது. முன்னே அந்த மனிதன் செல்லும் நடமாட்டமும், பின்னே கலங்கரை விளக்கம் வாசற்கதவு திறக்கும் ஓசையும் கேட்டது. அச்சம் அதிகமாக உண்டாயிற்று.
முன்னே செல்பவர் எப்படி என்று தெரியாமல், பின்னே வருபவர் யார் என்று புரியாமல் ஒரு கேள்விக்குறியுடன் முன்னே சென்றான். நெற்றியில் வியர்வைத்துளிகள்! ஆனால் அவன் கையில் இருந்த துப்பாக்கி அவனுக்குத் துணிவைக் கொடுக்க அதனை பிடித்துக் கொண்டு முன்னேறினான்.
கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குச் சென்றான். அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருந்தான். திரும்பிப் பார்க்கவில்லை. இவன் திகைத்துப் போனான். அவனைப் பின் தொடர்ந்து வந்தவன் அவன் அருகில் நெருங்கி விட்டான். அவன் வேறு வழியின்றி துப்பாக்கியை எடுத்துப் பின்னால் திரும்பி அவனை சுட்டான். தோட்டா அவன் மண்டையை பிளந்து சென்றது. அதே நொடி அவன் முன்னால் இருந்த மனிதன் அந்த காவல்துறை பணியாளர் மேல் துப்பாக்கியால் சுட்டான். எல்லாம் ஒரே நேரத்தில் நடந்தது. காவல்துறை பணியாளர் மாய்ந்தார்.
அடுத்த காட்சி காவல்துறை அலுவலகத்தில் அந்த விரிகுடாவில் நிகழும் மர்மம் குறித்து விசாரணை. அங்கு பணிக்குச் செல்கிறவர்கள் மாயமாக மறைவது ஒரு தீர்வில்லாத வழக்காகிறது. அவர்களால் தீர்வு கண்டு பிடிக்க முடியாமல் போனதால் உயர் அதிகார்கள் பெருங்குழப்பத்திற்கு ஆளாகியிருந்தனர். அப்போது அந்த சூழலை அறிந்த ஒரு விஞ்jஞானி அங்கே வரவழைக்கப்பட்டிருந்தார். அந்த இடம், கால அளவு, அஃதாவது ஒரு டைம் டைமென்ஷன், அமைந்த இடம், பர்முடா முக்கோணம் போன்று மர்மம் நிலவும் இடமாகக் கருதப்படுவதாக அவர் தெரிவித்தார். அங்குள்ள அதிகாரிகள் அதை விளக்குமாறு கேட்டனர். அவ் விஞ்jஞானி சொன்னார்.” நம் பூமியில் எங்கு விலைமதிப்பற்ற செல்வம் இருக்குமோ, அதனை எளிதில் யாரும் அடைய முடியாத நிலையில் சில மர்மங்களை இயற்கையே உருவாக்கி அதைப் பாதுகாக்கும் வேலையை செய்கிறது. இந்த விலை உயர்ந்த பவளப்பாறையை மனிதனிடமிருந்து காப்பாற்ற இயற்கை செய்யும் சூழ்ச்சி என்றும் சொல்லலாம். அந்த மனிதன் கடலுக்குள் செல்வதும் , பிறகு மீன்களால் தாக்கப்படுவதும், கலங்கரை விளக்கம் உச்சிக்குச் சென்று மாய்வதும் எல்லாமே காலம் செய்யும் சூழ்ச்சி. இதனை ‘கண்ணாடி வளைய முரண்பாடு’ என்பர். நாம் முடிவெட்டும் கடையில் இருபுறமும் முன்னேயும் பின்னேயும் கண்ணாடி இருக்கும் அல்லவா? நம் பிம்பம் பலவகையாகத் தெரியும். அது போன்று தான் காலத்தில் நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் இறந்தகாலம் எல்லாமே ஒரே நேர்கோட்டில் தோற்றமளிக்கிறது. அந்த மனிதன் தன் எதிர்காலத்தை நோக்கி தான் செல்கிறான். ஒருத்தன் கடலில் மூழ்கிப் போகிறான் அல்லவா? அதைக் கண்டு இவன் செல்கிறான் இது நிகழ்காலம். அவனைப் பின் தொடர்ந்து வருபவன் இவனுடைய இறந்தகாலம். இது ஒரே மனிதனின் ஒரே சமயத்தில் ஏற்படும் முக்காலத் தோற்றம். அனைத்து நபர்களும் இவனே. இது எல்லாமே ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது இவன் மாய்ந்து போகிறான். இது எல்லாமே ‘கண்ணாடி வளைய முரண்பாடு’ சித்தாந்தந்தான். இதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போய் நிற்கும்போது, “நான் பணிக்குச் செல்கிறேன்” என்று என்று கூறி இவர்கள் முன் வந்து நின்று சல்யூட் அடித்துச் சென்றான் அந்த கடற்கரை பாதுகாப்பு பணிக்குச் சேர்ந்த அதே மனிதன். இவ்வாறு முடிவில்லாமல் இந்த முரண்பாடு தொடர்கிறது.
எழுதியவர்: