எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for தேவசிற்பி

விஸ்வகர்மா தேவ தச்சராகவும் சிற்பியாகவும் இருப்பதால் அவருக்கு எண்ணற்ற வேலைகள் இருந்தன. பிரம்மனின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களை இவர்தான் அமைத்தார். ஆயுதங்கள் செய்வதில் அவர் ஒரு விற்பன்னர். கதன் என்ற அசுரனைத் திருமால் வதம் செய்தார். அந்த அசுரனின் எலும்பிலிருந்து ஒரு ஆயுதத்தை விஸ்வகர்மா உருவாக்கினார். அந்த ஆயுதமே ‘கதாயுதம்’ என்று பெயர் பெற்றது. அதே போல் அசுரர்களை எதிர்த்துப் போராட இந்திரனுக்குச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. அதற்காக ததிசி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து உருவாக்கப்பட்டதே வச்சிராயுதம். ஏற்கனவே இவர் சிவபெருமானுக்குப் பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்குச் சாரங்கம் எனும் வில்லையும் வடிவமைத்தவர். இந்திரனுக்காக அவனது தலைநகராம் அமராபதிபுரியையும் புதுப்பித்தவர்.

நீதி நியாயம் சத்தியம் இவற்றின் பிரதிநிதியாகத் தன் பேரன் எமதர்மராஜன் இருப்பான் என்று முதல் பார்வையிலேயே கணித்தவர். மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன் அல்லவா எமன்.? மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காசியபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமன். அத்துடன் அவனுக்குச் சிவபெருமானின் அருளாசியும் கிடைத்திருக்கிறது. அதனால் அவனை எப்படியாவது தென்திசைக் காவலனாக்கி பூவுலக வாசிகளுக்கு அவர்கள் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்ப சுவர்க்க நரக பதவிகளை வழங்கும் நீதியரசனாக ஆக்கவேண்டும் என்ற எண்ணம் விஸ்வகர்மாவின் மனதில் உதித்தது. நரகலோகம் என்னும் எமலோகத்தை உண்டாக்கி அதற்குத் தன் பேரனை அதிபதியாக்கவேண்டும் என்கிற ஆசையும் அவர் முகத்தில் விரிந்தது. அத்தோடு மட்டுமல்லாமல் தன் பேரன் எமனுக்காக எமபுரிப்பட்டணம் என்ற ஊரையும் நிர்மாணிக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்துவிட்டார்.

அதைப்போல் வைவஸ்வத மனு பூலோகத்தின் மனித வர்க்கம் தோன்றுவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருக்கவேண்டும் என்றும் எண்ணினார். மனுவின் வழித்தோன்றலாக வருபவர்கள் மனுஷன் மனுஷி என்று கருதப்படுவார்கள் என்று விஸ்வகர்மா உறுதியாக நம்பினார். அதைச் செயலாற்றவும் தான் முயலவேண்டும் என்று தீர்மானித்தார்.

அழகுப் பெண் எமி, யமுனா நதியாக ஓடி பூலோகத்தவர் பாவங்களைத்தீர்க்கும் புண்ணிய நதியாகப் பிரவாகம் எடுத்துச் செல்லும் வடிவம் இன்றே விஸ்வகர்மாவின் மனக்கண்ணில் விரிந்திருந்தது.

இந்த மூன்று குழந்தைகளையும் நன்றாகப் போஷித்து வளர்க்க தன் மகள் சந்த்யா அவள் கணவன் சூரியதேவனுடன் சேர்ந்து வாழவேண்டும்.

எவ்வளவு விரைவில் சூரியதேவனின் சுடு வெப்பத்தைக் குறைக்க இயலுமோ அவ்வளவு விரைவில் அதைச் செய்து முடித்தால்தான் சந்த்யா மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்த இயலும் என்பதை உணர்ந்துகொண்டதால் அவர் வேலையின் பளு அதிகமாயிற்று. சூரியதேவனின் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கிறபடியால் விஸ்வகர்மா அதை உடனே செயலாற்றத் தொடங்கினார்.

Image result for திரிசூலம்திரிசூலமும் சக்ராயுதமும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பிரம்மர் தனித்தனிக் கட்டளைகளையும் பிறப்பித்திருந்தார். 

ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சக்தி வடிவானதாக சூலப்படை அமையவேண்டும். அதுமட்டுமல்லாமல் சூலத்தில் இச்சா சக்தி , கிரியாசக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் இணைந்து வரவேண்டும். அப்போதுதான் சிவபெருமானின் திருக்கரத்தில் திரிசூலம் இருக்கும்போது அவரைத் துதிக்கும் மக்கள், தேவர், அசுரர் என்ற மூன்று உலகவாசிகளின் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் அழிக்கும் சக்தி வாய்ந்ததாக அது அமையும். சிவனுக்கு உகந்த மூன்று இலைகள் சேர்ந்த வில்வ இலைவடிவில் திரிசூலம் அமையவேண்டும். சிவன் விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம், கனவு காணும் நேரம் என மூன்று நிலையையும் குறிப்பதாகவும் அமையவேண்டும். சத்வ ரஜோ தமஸ் குணங்களின் நீட்சியாகவும் அது இருக்கவேண்டும். மேலும் திரி சூலையின் அமைப்பில் வாரசூலையையும் இணைக்க வேண்டும். அதாவது மக்கள் பயணிக்கக்கூடாத திசையைத் திரிசூலம் சுட்டிக்காட்ட வேண்டும்.திங்கள், சனிக்கிழமைகளில் கிழக்கு திசை,செவ்வாய், புதனில் வடக்கு, வியாழனில் தெற்கு,வெள்ளி, ஞாயிற்றில் மேற்கு திசைகளில் சூலை இருக்குமாறு படைக்கவேண்டும். அந்தந்த திசைகள் பயணிக்கக்கூடாத திசைகள் என மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.

Related imageஅதேபோல் சுதர்சன சக்கரத்துக்கும் பலவிதமான முன்னெச்சரிக்கைகள் உண்டு. சுதர்சன சக்கரம் நூற்றெட்டு வெட்டும் நுனிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும் அவை மாறுபட்ட திசைகளில் சுழலக்கூடியதாகவும் இருக்கவேண்டும். சுதர்சனம் செல்லும் பாதை தனியாக அமையவேண்டும். அதனால் அது எந்த இடத்திற்கும் எளிதில் செல்லும் திறன் கொண்டதாக அமையவேண்டும். அதில் ஒன்பது முக்கோணங்கள் நவகிரகங்களை உருவகப்படுத்துமாறு இருக்கவேண்டும். அது காலச்சக்கரம் என்றும் கருதப்படும். அதனால் அதில் 12 மாதங்களுக்கு ஏற்ப 12 ஒளிக்கற்றைகளும் ஆறு பருவங்களுக்கு இணையாக 6 மையங்களும் இருத்தல் அவசியம். ஏவியபின்னும் கூட பகவான் கட்டுப் பாட்டிலேயே இருக்கவேண்டும்.அதன் வேகம் விஷ்ணு பகவான் செல்லும் வேகத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிக்கணக்கான யோசனை தூரம் செல்லும்படி இருக்கவேண்டும். மற்ற ஆயுதங்களைப் போல் இதனை எறிய அல்லது அடிக்கவேண்டிய அவசியம் இருத்தல் ஆகாது. விஷ்ணு பகவான் மனத்திற்குக் கட்டுப்பட்டு ஏவிய வேலையை முடித்துவிட்டு அவரிடமே திரும்ப வரக்கூடியதாக இருக்கவேண்டும். ஏற்கனவே தயாரித்த வஜ்ராயுதத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றையும்விட அது சக்கரத்தாழ்வார் என்று உருவகிக்கப் போகிறபடியால் அதற்கேற்ற திவ்விய தரிசனத்தோடு அமைவது மிக மிக முக்கியம்.

Image result for புஷ்பக விமானம்குபேரனுக்காகச் செய்யப்படும் சிவிகை ஒரு பறக்கும் விமானமாகச் செயல்படவேண்டும். தேவர்களும் மனிதர்களும் உபயோகிக்கும் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமான வகைகளை விட வித்தியாசமானதாய் அமையவேண்டும். அவைகளில் இருப்பது போல இடஞ்சுழி வலஞ்சுழி இருத்தல் ஆகாது. விமானத்தைச் செலுத்துபவர் எண்ணப்போக்கின்படி மனோவேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கவேண்டும். வலவன் என்கிற விமான ஓட்டி இருத்தல் கூடாது. அதாவது ‘வலவன் ஏவா வான ஊர்தியாக’ அது அமையவேண்டும்.

பரத்வாஜ முனிவர் எழுதிய யந்த்ர சர்வஸ்வம் என்ற மூல புத்தகத்தின் அடிப்படையில்தான் விஸ்வகர்மா ஆயுதங்களைப் படைத்து வந்தார். அதில் ஒரு பகுதி வைமானிக சாஸ்திரம். பலதரப்பட்ட விமானங்கள் எவ்விதம் தயாரிக்க வேண்டும் அவை எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைப்பற்றி அவர் விரிவாகக் கூறியுள்ளார். விஸ்வகர்மா அவற்றையெல்லாம் தன் மனத்திரையில் எண்ணிப்பார்த்தார்.

வானத்திலிருந்தே எரிபொருளைச் சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம். பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் விமானம். தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம். கிதோகமா : மரங்களை எரித்துப் பெரும் எண்ணெய்யில் இயங்கக் கூடிய விமானம். ஹம் சுவாகா : சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம். தாரமுஹா : எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம். மாணிவஹா : செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம். மாராதசாஹா காற்றை உறிஞ்சி சக்தியை எடுத்து இயங்கும் விமானம். மற்றும் ஷக்டிங்கர்ப்பம், விக்யுதம், துருபதம், குண்டலிகம் போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் கூறியுள்ளார்.

இப்போது புதியதாக வடிவமைக்கப்போகும் புஷ்பக விமானம் இவை எல்லாவற்றிற்கும் மேலானதாக அமைய வேண்டும் என்பதை பிரம்மர் சொல்லாமலே ஏற்றுக்கொண்டார் விஸ்வகர்மா.

விஸ்வகர்மாவிற்குத் தனது அரண்மனையிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கும் இயந்திரத்தை வரவழைத்தார். அதனைச் சூரிய மண்டலத்தில் சூரியதேவன் அரண்மனைக்கு வெளியே உள்ள பரந்த வாசல் அருகே நிறுவினார். இயந்திரத்தின் உட் பக்கத்தில் சூரியன் சுலபமாக அமர்ந்துகொள்ளும் இருக்கையை அமைத்தார். அதற்குள் அவர் சூரியதேவனின் ஒளிச் சக்தியை மாற்றும் பெரிய முப்பட்டைக் கண்ணாடி ஒன்றைப் பொருத்தினார். சூரியதேவன் தனது அதிகபட்ச வெப்பத்தையும் ஒளியையும் சில நாழிகைகள் ஒருங்கே வெளியிடவேண்டும். அப்போது முப்பட்டையிலிருந்து வரும் அதீத ஒளியிலிருந்து ஆயுதங்கள் செய்ய அதிலேயே தோன்றும் சீரொளியை உபயோகிக்கவும் திட்டமிட்டார். ஆற்றல் மிக்க ஓளி விலகியதும் சூரியதேவனின் ஒளியும் வெப்பமும் மங்கும். அதன் பிறகு அவருடைய கிரணங்களால் ஸந்த்யாவிற்கு எந்தவித பாதகமும் இருக்காது. ஆனால் இது காந்த சிகிச்சை மாதிரி பலமாதங்கள் தொடர்ந்து பலன் தராது. முதல் முயற்சியில் ஒளியும் வெப்பமும் ஆயுதங்களாக மாற்றப்படும். அதன்பின்னர் அவன் தினமும் ஓர் ஊடகக் கதவின் வழியாகத் தன் அரண்மனைக்கு வரவேண்டும். அப்போது தான் அவன் ஒளியும் வெப்பமும் சந்த்யாவிற்கு ஏற்றபடி இருக்கும்.

அந்த ஊடகக் கதவை சந்த்யாவின் அரண்மனை வாயிலில் வைக்கத் தீர்மானித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது.

(தொடரும்)

 

இரண்டாம் பகுதி

 

மும்மூர்த்திகள் மூவரும் சிரித்துக்கொண்டே மேடைக்குச் சென்றார்கள். அவர்கள் மேடைக்கு வரும்போதே அவர்களுக்கான ஆசனம் தயாராகியிருந்தது. மேடையில் இருந்த சாலமன் பாப்பையா பாரதி பாஸ்கர், ராஜா, திண்டுக்கல் லியோனி அனைவரும் எழுந்து நின்றார்கள். நாம் வணங்கும் தெய்வங்களுடன் ஒரே மேடையில் இருப்பது என்பதை அவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. காண்பது கனவா நனவா என்பது புரியாமல் மயக்க நிலையில் அவர்கள் நால்வரும் இருந்தார்கள்.

Image result for பிரும்மா சரஸ்வதி விஷ்ணு லக்‌ஷ்மி சிவன் பார்வதி” நாரதா! மேடைக்கு வா !” என்று தந்தை பிரம்மர் அழைத்ததும் வேறு வழியின்றி  நாரதரும் மேடைக்கு வந்தார். மும்மூர்த்திகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பது அவர்கள் முகத்தில் விரிந்த புன்னகை உணர்த்தியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சிபெருக்கில் கரவொலி எழுப்பி எழுந்து நின்றனர். பிரம்மர் அனைவரையும் அவரவர் ஆசனத்தில் அமரும்படிக் கூறினார். விஷ்ணு மாறு வேடத்தில் அமர்ந்திருக்கும் முப்பெரும் தேவிகளைப் பார்த்துப் புன்னகை புரிந்து அவர்களையும் மேடைக்கு வரும்படி ஜாடையில் அழைத்தார். அவர்கள் தங்கள் இருக்கையில் நெளிவது புரிந்தது. கூட்டம் அவர்களையும் அடையாளம் கண்டு அதிகப்படியான கரவொலியை எழுப்பினர்.  அருகில் இருந்த எமியிடம்  முப்பெரும்தேவிகளிடம் ஏதோ கூற அவள் வெட்கத்தில் நெளிந்தது நாரதருக்கு மட்டும் புரிந்தது.  மேடையில் பிரம்மரும்- சரஸ்வதியும்,  விஷ்ணுவும் – லக்‌ஷ்மியும் சிவனும் – பார்வதியும் அமர்ந்திருக்கும் காட்சி  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மூன்று காலங்களையும் உணர்ந்த நாரதருக்கு எதை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. கல்விக்கரசி கலைவாணி – நாரதரின் அன்னை , மகன் படும் பாட்டைக் கண்டு அவனுக்கு உதவும் வகையில் பேச ஆரம்பித்தார். 

“பெருமதிப்பிற்குரிய நடுவர் அவர்களே”  என்று  சரஸ்வதிதேவி அழைத்தபோது தான் பெற்ற பிறவிப்பயனை அடைந்த மகிழ்ச்சியில் திளைத்தார் சாலமன் பாப்பையா.

Image result for அர்னாப் கோஸ்வாமிபட்டிமன்றப்பாணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த   இந்த விவாத மேடையைத் தற்போது உங்கள் தொலைக்காட்சிகளில் நடக்கும் குழு விவாதமாக மாற்றி விட்டீர்கள். நாரதனைக் கிட்டத்தட்ட அர்னாப் கோஸ்வாமி அளவிற்கு மாற்றிவிட்டீர்கள். நாரதனுக்கு  ஒரு கோட்டை மாட்டிவிட்டால் குறைந்த பட்சம் உங்கள் நீயா நானா கோபினாத் மாதிரியாவது பேசிக்கொண்டிருப்பான். நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நாரதன் நடுவர் கூறியபடி நெறியாளாராக இருந்து எங்கள் ஆறு பேரையும் கேள்விகள் கேட்டு அதன்மூலம் நடுவர் அவர்களுக்குச் சரியான  தீர்ப்பு வழங்க உதவும்படி கேடுக்கொள்கிறேன். ” என்று கூறியதும் விவாதமேடை

தொலைக்கட்சி மேடையாகிவிட்டது.

அந்த சமயத்தில் மேடையில் இருந்த ராஜா  பக்கத்தில் இருந்த பாரதி பாஸ்கரிடம் ” ஆஹா! இது சரஸ்வதி சபதம் கிளைமாக்ஸ் செட்டிங் போல இருக்கே” என்று  மெதுவாகத்தான் கூறினார்.

ஆனால் அது  ஆப் செய்யப்படாத மைக்கின் வழியாக அரங்கம் முழுவதும் கேட்டு சிரிப்பலைகளப் பரப்பியது. அந்த சிரிப்பு அலையின் வேகம் அடங்குவதற்குள் தன்னை முழுதுமாகச் சுதாரித்துக் கொண்ட நாரதர் தான் எப்படிப் பயணிக்கவேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டார்.

” நடுவர் அவர்களே! நேரடியாகவே நானும் விஷயத்திற்கு வருகிறேன். இன்று இந்த எமபுரிப்பட்டணம் மட்டுமல்ல அனைத்து உலகங்களில் உள்ள ஜீவராசிகள் எல்லாரும்  தெரிந்து கொள்ள ஆசைப்படுவது  ”  எது சிறந்தது ? ஆக்கலா? காத்தலா? அழித்தலா?” என்ற கேள்விக்கான விடைதான். ”

அர்னாப் கோஸ்வாமி என்று கூட்டம் கத்தியது. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்களை விட அதிக சத்தத்தில் நாரதர் பேச ஆரம்பித்தார். 

” அகில உலக மக்கள்  மட்டுமல்ல. நானும் அதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன். மும்மூர்த்திகள்  முப்பெருந்தேவிகளின் அருளாசிகளுடன் அவர்களைக் கேள்விகள் கேட்கும்  நெறியாளனாக மாறுகிறேன்.”

முதல் கேள்வியை  பிரம்மதேவரிடம் கேட்டார். 

“தந்தையே! தாங்கள் படைப்புக் கடவுள். தங்களிடமிருந்துதான் எல்லாம் பிறக்கிறது. எல்லா ஜீவராசிகளும் உருவாகக் காரண கர்த்தா நீங்கள்!  நீங்கள் படைத்தால்தான் காக்கமுடியும் அழிக்கவும் முடியும். அப்படியிருக்க  காத்தலும் அழித்தலும் வாதத்திற்குக் கூட ஆக்கலுடன் போட்டிபோட முடியாது என்பது அறிவுசால் பெருமக்கள் பலரின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை நீங்கள் எப்படிப் பெருந்தன்மையுடன்  ஏற்கிறீர்கள்? என்று முதல்கொக்கிக் கேள்வியை வீசினார்.

பிரும்மர் புன்சிரிப்புடன் ” நான் இதற்குப் பதில் கூறுவதற்கு முன்னால் தேவி சரஸ்வதியின் கருத்தை அறிந்தபிறகு கூறுவதுதான் முறை!  அதுமட்டுமல்லாமல் அவள் கல்விக்கே அதிபதி! அத்தோடு மகளிர் முதலில்!  சரிதானே தேவி! ” என்று கேட்டதும் சபையில் சலசலப்பு உண்டாகியது.

சரஸ்வதி தேவியும் சிறு புன்முறுவலுடன் தன் கருத்தைக் கூற ஆரம்பித்தார்.

” படைப்புக் கடவுள் கூறியது போல முதலில் நான்  முதலில் பெண், பிறகு மனைவி, அதன்பின் தாய், அதற்குப்பிறகுதான் கலைவாணி, கல்விக்கு அதிபதி எல்லாம். இதில் யாருக்கும் அழித்தல் என்றால் பிடிக்காது என்பதுதான் உண்மை. பிறப்பது எல்லாம் அழியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அழிவைச் சிறந்தது என்று யாராலும் எண்ணமுடியாது. அதலால் மீதம் இருப்பவை ஆக்கலும் காத்தலும். இப்போதும் பெண் என்கிற  அளவுகோலை வைத்துப் பார்ப்போம். ஒரு பெண் மணம் புரியும் வரை பெற்றோராலும், மணத்திற்குப் பிறகு கணவணாலும் கடைசிக்காலத்தில் பிள்ளைகளாலும் காப்பாற்றப்படுபவள் என்று பொது நீதி கூறுகிறது.  ஆக, ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர் காத்தல் தொழிலைச் செய்ய வாழ்கிறாள் என்று ஆகிறது. அவள் குழந்தைகளைப் பெறும் போது அவள் ஆக்கல் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் அந்தக் குழந்தையைப் பேணி வளர்க்கும்போது காக்கும் பணியில் ஈடுபடுகிறாள். ஆக, பெண் என்பவள் காத்தல் என்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள். எனவே ஒரு பெண்ணின் பார்வையில் காத்தல்தான் சிறந்தது என்று கூறவேண்டும்.

இப்போது கலைவாணியின் நிலையில் பேச விரும்புகிறேன்.

பிரபஞ்சத்தில் ஆக்கல் ஒரு புள்ளி , காத்தல் ஒரு கோடு அழித்தல் ஒரு புள்ளி. கோடு என்பது என்ன? புள்ளிகளால் ஆனதுதானே! ஆக படைத்தல்  முதற்புள்ளி, காத்தல் அடுத்தடுத்த பல புள்ளி, அழித்தல் முற்றுப்புள்ளி.  அதன்படியும் பல புள்ளிகள் கொண்ட கோடு தான் காத்தல் . ஆகவே காத்தலே சிறந்தது என்று கூறுகிறேன். நான் பிரும்மபுரியில் இருந்தபோதிலும், என் கணவர் படைக்கும் தொழிலான ஆக்கல் தொழிலைச் செய்பவர் ஆயினும் என் கருத்துப்படி  காத்தலே சிறந்தது.” 

” தந்தையே இது என்ன? உங்கள் ஆக்கல் தொழிலுக்கு அன்னையின் மதிப்பீடு என்ன என்பதைக் கேட்டீர்களா? நீங்கல் ஒரு சிறு புள்ளியாமே? தங்கள் கருத்தும் இதுதானா? அல்லது அன்னையின் கருத்தை மறுக்கப் போகிறீர்களா? அவர்கள் கோடு போட்டால் நீங்கள் ரோடு போடுவீர்களா? அல்லது அந்தக்கோட்டைத் தாண்டாமல் கூட்டணி தர்மம் என்று அன்னையின் கருத்துதை ஆமோதிப்பீர்களா?  அப்படியானால் படைப்புத் தொழில் புனிதமானதில்லையா? வெறும் பம்மாத்துதானா? ” நாரதர் கிடுக்கிப்பிடி போட்டார்.

எல்லோரிடமும் கலகம் செய்யும் நாரதர் இன்று   குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குகிறாரே என்று அனைவரும் ரசிக்க ஆரம்பித்தனர். புருஷன் பொண்டாட்டி சண்டை அல்லது கூட்டணியில் தகறாறு என்றால்  வேடிக்கை பார்க்கும் மற்றவர்களுக்கு குஷி தானே?

“நாரதா கேள்! சபையோரும் கேட்கட்டும்!”  என்று ஆரம்பித்து  பிரும்மர் பதில் கூற முன்வந்தார்.

சபையோருக்கு இப்போது சற்று குழப்பம் வந்தது. முதலில் ஒருமுகமாகப் பேசிய பிரும்மர் இப்போது நான்முகனாக நான்கு முகங்கள் வாயிலாகவும் பேச ஆரம்பித்தபோது எந்த முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்பது என்கிற  குழப்பம்தான்.

எமிக்கு,  இப்படி குடும்பத்தில் கும்மி அடிக்கிறார்களே என்ற கவலை வாட்டத் தொடங்கியது. 

(தொடரும்) 

 

.

எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ் )

Related image

சூரிய தேவனுக்கு ஸந்த்யாவைத் தனியே சந்தித்ததில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. மற்றவர்கள் யாரும் வருவதற்குமுன் அவளது தளிர் மேனியை இறுக்க  அணைத்து அவளது சிவந்த கன்னத்தில் தன் இதழைப் பதிக்க விரும்பினான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனது ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கியது.

அதைச் செயலாற்றப் பாய்ந்து சென்ற அவன் கரங்களை ஒரு  கண்ணாடித் திரை தடுத்தது. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரையை அமைத்தது யார்? அவள் தந்தை விஸ்வகர்மாவா? ஒருவேளை திரைக்கு அப்புறம் இருப்பது  ஸந்த்யாவா அல்லது அவளது பிம்பமா?

சூரியதேவனின் தடுமாற்றத்தையும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட கோபத்தையும் பார்த்த  ஸந்த்யாவால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை.

“ பிரபு! நம்மைப் பிரிப்பது திரை மட்டுமல்ல. எனது படைப்பின் ரகசியமும்கூட. நான் உங்களுக்கென்றே பிறந்தவள்தான். ஆனால் தங்களின் வெப்பப் பார்வையைக்கூடத் தாங்க முடியாத அளவிற்கு என்னை மென்மையாகப் படைத்துவிட்டார் பிரம்மதேவர். என் தந்தையாலும் அதை மாற்ற முடியவில்லை.”

அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. சூரியதேவன் துடித்துப் போனான்.

“பிரபு ! நீங்களும் நானும் சங்கமித்த அந்தச் சில கணங்களில் நான் நெருப்பில் இட்ட  பொன்போல உருக ஆரம்பித்துவிட்டேன். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தங்கள் திருப்பார்வைபட்டு உடனே மறையும் பனித்துளியாக நான் இருந்தால் எனக்கு அதுவே போதும்.”

“இல்லை, ஸந்த்யா இல்லை! உன்னுடன் என்றென்றும் வாழத்தான் விரும்புகிறேனே அன்றி உன்னை உருக்கி அழிக்க விரும்பவில்லை. ஆனால் உன்னைப் பார்த்த அந்தக் கணத்திலேயே நான் என்னையே மறந்தவனாகி விட்டேன். நீ இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறி விடுவேன். இதற்கு ஒரு வழி இல்லாமல் போகாது. ”

“ இருக்கிறது சூரியதேவா!”  என்று கூறிக் கொண்டே விஸ்வகர்மா வந்தார்.

WhatsApp Image 2016-12-26 at 4.59.39 PM

“ என்ன வழி, சொல்லுங்கள் “ என்றான் சூரியதேவன் ஆவலுடன்.

“ஸந்த்யா தங்களை மணாளனாக அடைய உண்மையிலேயே பாக்கியம் செய்தவள். ஆனால் நீங்கள் அவளை அடைய வேண்டுமானால் உங்கள் உடலின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.”

“அது எப்படி முடியும் விஸ்வகர்மா அவர்களே?”

“ நான் கைலாசத்தில் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற காந்தப் படுக்கை இருக்கிறது. அதில் தங்களுக்குச் சந்திரனைக் கொண்டு சந்திர காந்தச்  சாணை பிடிக்கவேண்டும். அதைச் சூரிய கிரகணம் என்றும் சொல்லலாம்.  அது சில நாழிகைகள்தான் பீடிக்கும். அப்படிச் செய்யும்போது உங்களின் பிரதிபலிப்பு, உக்கிரம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். சில நொடிகள் நீங்கள் முற்றிலும் இருளடைந்து  மறைந்ததுபோன்ற உணர்வு உண்டாகும். அந்த சிகிச்சை முடியும்போது உங்களிடமிருந்து ஒரு வைர மோதிரம் தோன்றும். அதை ஸந்த்யா அணிந்துகொண்டாள் என்றால் அதன் பின் உங்கள் உக்கிரம் அவளைப் பாதிக்காது. ஆனால் இது நிரந்தரமானது அல்ல. வருடா வருடம் தாங்கள் இந்த சாணை பிடித்துக் கொண்டால்தான் அவளுடன்  நீங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ முடியும். இது தங்களால் முடியக்கூடிய காரியமா?” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டார் விஸ்வகர்மா.

Related image

சூரியதேவன் என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான்.    

ஸந்த்யாவின் கண்ணீர் ததும்பும் விழிகள் அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற துடிப்பில் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.  

(தொடரும்)

இரண்டாம் பகுதி

எமியின் பாந்தமான அழகைப்போலவே அவளுடைய குரலும் அந்த இலக்கியக் கூட்டத்தில் உள்ள மக்களை வசீகரித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எவ்வளவு புண்ணியம் செய்தவள் எமி என்கிற யமுனை என்பது யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் எடுக்கப்போகும் சமயத்தில் அவரைக் குழந்தையாகத் தன் மடியில் தாலாட்டப்போகும் பெருமை பெறப்போகிறவள்.

Related image

கிருஷ்ணன் அவதரித்த உடனே அவரைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு அவரது தந்தை யமுனை ஆற்றைக் கடக்க வருவார். அப்போது அவருக்கு வழிவிட்டு  அந்தக் குழந்தைக் கிருஷ்ணனின் பாதங்கள் கூடைக்கு வெளியே இலேசாகத் தெரியும்போது தன் நீரால் வருடி பாதபூஜை செய்யும் பேற்றைப் பெறப்போகிறவள். அதனால் கங்கையிலும் அதிக புனிதத்தைப் பெறப்போகிற புண்ணிய நதியல்லவா அவள்?

 “ உங்கள் அனைவரையும் இங்கு இந்த நல்ல நாளில் சந்தித்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல பொழுதை எனக்கு அளித்த என் அன்பு அண்ணனுக்கு நன்றி சொல்வதா, அல்லது சிறப்பாகப் பேசி அனைவரையும் அன்பினில் தோயச்சொன்ன  ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி சொல்வதா, அல்லது  நரகத்தில் வாடும் ஜீவன்களுக்காக வாதாடி என்னை அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவைத்த அன்பருக்கு நன்றி சொல்வதா என்று தெரியாமல் அனைவருக்கும் ஒருசேர நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று சொர்க்கபுரிக்கு அழைத்து வந்த என் சகோதரன் நாளை நரகபுரிக்கு அழைத்துச்செல்ல உத்தேசித்திருக்கிறார். என் அண்ணனுடன் செல்லும்போது எனக்கு நரகமும் சொர்க்கமாகவே தெரியும்.

இருந்தாலும் உண்மையான நரகம் என்பது  நாம் அன்பு கொண்ட உள்ளத்திலிருந்து பிரிந்து வாழ்வதுதான்.  உங்கள் புரட்சிக்  கவிஞன் கேட்கவில்லையா?  “ நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ?  என்று.

அந்த வகையில் நான் சிறு வயதிலேயே நரகத்தை அனுபவித்திருக்கிறேன்.

IMG_1072

 என்னுடன் இணைந்தே பிறந்த என் அண்ணன்மீது எனக்கு இருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. நாங்கள் அன்னை என்று நினைத்த எங்கள் சிற்றன்னை எங்களைக் கொடுமை செய்தபோது எனக்கு ஆறுதல் என் அண்ணன்தான். நான் பட்ட சித்திரவதைகளைக் கண்டு கோபத்தில் ஆழ்ந்த என் அண்ணன் சிற்றன்னையைக் காலால் உதைக்கும் அளவிற்குப்போனான். அதனால் அவன் கால்களைக் கொதிக்கும் நெருப்பில் போட்டது மட்டுமல்லாமல் அவனை எங்கோ காட்டிலும் விட்டுவிட்டு வந்துவிட்டாள் எங்கள் சிற்றன்னை. அவனைப் பிரிந்து நான் அழுத அழுகை இன்றைக்கு நினைத்தாலும்  என்னை வாட்டுகிறது.  

( இதைப் பற்றிய விவரமான கதைக்களம் எமபுரிப்பட்டணத்தின் முதல் பாகத்தில் அதற்கான காலம் வரும் போது விவரிக்கப்படும்)

அதுதான் நரக வேதனை என்பதனை உணர்ந்தேன். அதனால் நரகத்தில் துன்பப்படும் ஜீவன்களின்  வேதனைகளுக்கு ஒரு வடிகால் தேட நான் முயல்வேன் என்று இப்போது உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுதான் என்  தந்தையின் கட்டளையும் கூட. 

உங்கள் அன்பிற்கு நன்றி. வணக்கம்.”

(தொடரும்)

 

 

எமபுரிப்பட்டணம் -எஸ் எஸ்

Related image

சூரியதேவனின் விமானம் விஸ்வகர்மாவின் தலைநகரின் மேலே ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. உலகையே தினம் வலம் வரும் போது ,  இவ்வளவு அழகு மிகுந்த பிரதேசத்தை நாம் எப்படிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக இருந்த தன் மாளிகையை விஸ்வகர்மா நொடிக்குள் இந்திரனுடைய அமராவதிப்  பட்டணத்தை  விட அழகாக மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்குப் புலனாயிற்று.

திடீரென்று  சற்றுத் தூரத்தில் அவன் விமானத்தை நோக்கி நுற்றுக்கணக்கான பறவைகள் வருவதுபோல் தெரிந்தது. சற்று உற்று நோக்கினான். அவை பறவைகள் அல்ல  – அனைத்தும் விமானங்கள் என்றும் புரிந்தது. ‘ எதற்காக இத்தனை விமானங்கள்? என்னைத் தாக்க வருகின்றனவா? அப்படியானால் அவற்றைச் சுட்டெரித்து விடவேண்டியதுதான்’  என்று முடிவு கட்டினான்.

விமானங்கள் அருகில் வந்ததும் சூரியதேவன் முகத்தில் இருந்த ரத்தினச்சிவப்பு  மஞ்சள் நிறப் புன்சிரிப்பாக மாறியது.  ஒவ்வொரு விமானத்திலும் அழகுத் தேவதைபோல பெண்கள். வண்ண வண்ண மலர்களையும் வண்ணப் பொடிகளையும் அவன் மீது தூவிக் கொண்டே இருந்தனர். வாசனைப் புகைகளையும் பன்னீரையும் அவன் மீது பரவ விட்டுக்கொண்டிருந்தனர். தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

சூரியதேவனுக்குத் தான் ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவியின் நந்தவனத்திற்குச் சென்றபோது அங்கிருந்த அழகு ததும்பிய சூழல் அப்படியே மீண்டும் வருவதுபோல் இருந்தது. அந்த நந்தவனத்தையும் விஸ்வகர்மாதான் நிர்மாணித்தார்  என்று அன்று பார்வதிதேவி கூறியதும் நினைவில் வந்தது.

 அந்தப் பெண்கள் வந்த விமானங்கள் அவனை அரைவட்ட வடிவமாகச்  சுற்றிக்கொண்டே அவனுடன் பறந்து வந்தன.  அடுத்து வந்தது இன்னொரு விமான வளையம். அவற்றில் இருப்பவர்களைக் கண்டு சூரியதேவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஒவ்வொரு விமானத்திலும் ஒரு தவ சிரேஷ்டர். ஒவ்வொருவரும் மந்திரங்களைச் சொல்லி அவன் மீது கமண்டலத்திலிருந்த நீரை அவன் மீது தெளித்து ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த விமானங்கள்  ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒவ்வொரு முனிவரும் அவன் முன் நின்று வாழ்த்து மந்திரத்தைச்  சொல்லி அவனை வலம் வந்தனர்.

முதலில் வந்தவர் அகத்திய முனிவர்.

“ ஆதித்யா ! உன்னை என் ஹிருதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். நானும் என் சீடர்களும் கூறும் இந்தப் புண்ணிய மந்திரங்களைச் செவிமடுப்பாயாக! உன் பெருமைகளைக் கூறும் இந்த ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பிற்காலத்தில் தேவர், கந்தர்வர், மனிதர் அனைவருக்கும் வழி காட்டும் மந்திரங்களாக விளங்கும் ”  என்று வாழ்த்தி அருளினார்.

Image result for aditya hrudayam

 

நல்வினைகளையும் , வெற்றியையும் ,மங்களத்தையும், மாங்கல்யத்தையும்நீண்ட ஆயுளையும், சிறப்பினையும் தருவதுடன்   பகைவர்களையும், பாவங்களையும், துன்பங்களையும்,கவலையையும் அழிக்கவல்ல  ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் துதிக்கவும்!

தேவரும் அசுரரும் வணங்கும்  உலகின் நாயகனை  மூவுலகத்திற்கும் ஒளிதரும் சூர்யதேவனைத்  துதியுங்கள் !

அனைத்து தேவதைகளின் உருக்கொண்டவரும், பிரகாசமானவரும் ஆன சூரியபகவான் தன் ஒளித்திறத்தால்  உலகைக் காக்கின்றார்.

இவர்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், இந்திரன்,குபேரன், காலதேவன், எமன்,சந்திரன், வருணன் மற்றும் அனைத்து  உயிர்களின் அதிபதியாவார்.

இவர்தான்  பித்ரு தேவதை, வசுக்கள், சாத்யர்கள், அஸ்வினி தேவர்கள்மருத்துக்கள்.மனு, வாயு,அக்னி. மற்றும், உலக மக்களின் உயிர் காக்க , பருவ காலங்களைப் படைத்து ஒளியைக் கொடுப்பவர்.

இவருக்கு மற்ற பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, ஸூர்யன், ககன்,பூஷா, கபஸ்திமான், ஸ்வர்ண சத்ருசன்பானு, திவாகரன்.

இவருக்கென்று பச்சைக் குதிரை உண்டு. ஆயிரம் தீ நாக்குகள் உண்டு.ஏழு குதிரை உண்டு .ஏழு ஒளிக்கிரணங்கள்  உண்டு. இருளைப் போக்கி மங்களம் தரும் பன்னிரு ஒளிக்கற்றைகள் உண்டு.

இவர் தங்கமயமான அண்டத்தைத் தன் கர்ப்பத்தில் தாங்கியவர்.குளிர்ச்சியைத் தருபவர். அதே சமயம் நெருப்பாய் எரிகிறவர். ஒளிமயமானவர்.அக்னியைக் கர்ப்பத்தில் கொண்டவர். பனியை விலக்கும் ஆதவன். அதிதியின் புதல்வர்.

இவரே ஆகாயத்தை  ஆள்பவர். தமோ என்னும் இருளை  விலக்குபவர். ருக்,யஜுர் ,சாம வேதங்களைக் கடந்தவர். மழையைப் பொழிவிக்கின்றவர்.வருணனின் தோழர். விந்திய மலை மேலே வான  வீதியில் பயணம் செய்பவர்.

இவர் வெப்பமாய் கொளுத்துபவர் . வட்ட வடிவானவர். தங்க மயமானவர். விரோதிகளை அழித்து எரிக்கும் குணமுடையவர். உலகத்தின் கவியானவர். மிகுந்த ஜோதி படைத்தவர். சிவப்பு நிறத்தவர். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவர்.

இவர் நட்சத்திரங்கள், கிருகங்கள் இவற்றின் தலைவர். உலகத்தை உருவகித்தவர். தேஜஸ் நிறைந்தவர். பன்னிரு வடிவுள்ளவர்.

உங்களுக்கு எங்களது வணக்கங்கள்!

கிழக்கில் மலைகளில் உதயமாகி மேற்கில் மலைகளில் மறையும் சூர்யனே உனக்கு வணக்கம். ஒளிக்கூட்டங்களுக்குத் தலைவனே வணக்கம். பகலுக்கு அதிபதியே வணக்கம்.

வெற்றியையும் வெற்றியோடு நலனையும் தருபவருக்கு வணக்கம்.வணக்கம்.

 பச்சைக்குதிரை கொண்டவருக்கு, ஆயிரம் கிரணங்கள் படைத்தவருக்கு அதிதியின் புதல்வருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

உக்கிரம் வாய்ந்தவருக்கு வணக்கம். வீரம் செறிந்தவருக்கு வணக்கம். வண்ணம் நிறைந்தானுக்கு வணக்கம். மார்தண்டாயானுக்கு வணக்கம். தாமரையை மலரச் செய்தானுக்கு வணக்கம். வணக்கம்.

 

அனைத்து முனிவர்களும் தங்கள் விமானங்களிலிருந்து மந்திர கோஷங்கள் மூலம் அவனுக்கு முகமன் கூறியது  சூரியதேவனைப் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தன்னைப் புகழ்ந்துரைக்கும் சொற்களைக் கேட்டதும் அவன் பணிவு மேலும் அதிகமாகி இரு கைகளையும் கூப்பி அனைவரையும் வணங்கிய கோலத்தில் விஸ்வகர்மாவின் அரண்மனை முற்றத்தில் வந்து இறங்கினான்.

IMG_1106

அங்கே அழகே உருவெடுத்து வந்தது போல, கையில் மாலையுடனும் கன்னத்தில் வெட்கப் பொலிவுடனும் சூரியதேவனை வரவேற்கக் காத்திருந்தாள் விஸ்வகர்மாவின் மகள்  ஸந்த்யா .

 

இரண்டாம் பகுதி

Image result for jeyakanthan sketch

ஜெயகாந்தன் பேச எழுந்தார்.

அனைவருக்கும் வணக்கம்.  எந்த மேடையிலும் பேசுவதற்கு நான் பயந்தவனல்ல. பேசத் தெரிந்த நாள் முதல் பேசிக் கொண்டே இருந்தேன். பின்பு எழுதத்   தொடங்கினேன். என் எழுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததோ இல்லையோ என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பிடித்தது. எழுதிக் கொண்டே இருந்தேன். பேச்சு எழுத்து இரண்டையும் என் இரு கண்களாகப் பாவித்து என்னை நானே நடத்திக் கொண்டிருந்தேன்.

நான் வெற்றி அடைந்தேன். இறுமாப்புகொண்டேன். கோபத்தில் ஆழ்ந்தேன். வெறுப்பையும் தொட்டேன்.

எத்தனையோ பேர்களை எடுத்து எறிந்து பேசியிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்காக நடைபெற்ற விழாவில் நான் தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசினேன்.  அதுவும் எப்படி?

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக்கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’

இப்படிப் பேசியதற்காக தமிழ் உலகம் என் மேல் அவ்வளவாகக் கோபம் கொள்ளவில்லை. சிலர் மட்டும் வாய் வலிக்க வைதார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் ‘இவன் தன் தாயின் அன்பை நன்றாக அறிந்தவன், தாயைத் திட்டினாலும் அவள் காலடியிலேயே விழுந்து கிடப்பவன்’  என்று நம்பி என்னை மன்னித்தார்கள்.

அதிலிருந்து ஒரு வைராக்கியம் கொண்டேன். பேசுவதையும் எழுதுவதையும் குறைத்துக்  கொண்டேன்,  ஓரு பரிகாரம் போல.

அதனால்தான் என்  80 வது  வயது விழாவின்போது மற்றவர்கள் நிறையப் பேசினார்கள். நான் ஒரு நிமிடம்தான் பேசினேன். அதுவும் என்னவென்று தெரியுமா?

‘’இங்கே என்னை அழைத்தபோது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறையப் பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டேன்.

பேச்சு குறைந்தது.

“எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்” என்றெல்லாம்  என் எழுத்தைப்பற்றி வர்ணித்த நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.

எழுத்தும் குறைந்தது.

என் குறை நிறை எல்லாம் எனக்குள் இருக்கும் பொக்கிஷமாக வைத்திருந்தேன். யாருக்கும் தெரியாது என்ற இறுமாப்பு வேறு.

ஆனால்  என்னை அக்குவேறு   ஆணிவேறாக   அலசிப் பார்த்த நண்பர் மேடையில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னை அழைத்த போது எனது தீர்ப்பு நாள் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அப்போது எனக்கு நான் எழுதிய அக்கினிப் பிரவேசம் கதை  நினைவிற்கு வந்தது.

 நானும் அக்கினிப் பிரவேசத்திற்குத் தயாராகி இங்கு வந்தேன். என்னை நானே புடம்போட இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்தேன். 

அது மட்டுமல்ல , நான் எழுதிய ” சுமை தாங்கி ” என்ற கதையை உங்களுக்குச் சொல்லவேண்டும். 

Image result for a young boy of 10 years dies in accident in tamilnadu

ஒரு போலிஸ்காரன், பக்கத்தில் இருக்கும் காலனியிலிருந்து  வந்த யாரோ ஒரு பத்து வயசுப் பையன் லாரியில் அடிபட்டு இறந்ததைப் பார்க்கிறான். குழந்தையே இல்லாத அவனுக்கு அது கூட  வலியாக இல்லை. அது யாருடைய குழந்தை என்று அந்தக் காலனியில் விசாரிக்கும்போது அவனைப் பெற்ற  தாய் எப்படித் துடிப்பாள் என்பதை நினைத்துக் கலங்குகிறான் போலீஸ்காரன்.  

அவனைக் காலனின் தூதுவன் என்றே நான் அழைத்தேன். 

முடிவில்  தன் கைக்குழந்தைக்குப்  பால் கொடுத்துக் கொண்டிருக்கும்  ஒருத்தியிடம் தயங்கிக்கேட்க , அவள் தன் பெரிய பையன் காசு எடுத்துக் கொண்டு ஐஸ் வாங்கச் சென்றிருப்பதாகக் கூற , அவன் தான் லாரியில்…  என்று போலீஸ் சொன்னதும் ‘ அட ராசா ‘ என்று அவள் ஓடுவதைப் பார்த்து இதயம் வெடிக்க நின்றான்.

ஆனால் அப்போது அடிபட்ட இடத்திலிருந்து வேறொரு குரல்,                    ‘என்னை விட்டுட்டுப் போயிட்டியே ‘ என்ற அலறுவதைக் கேட்டதும், கைக்குழந்தைக்காரி, ‘அது என் பிள்ளை இல்லை’ என்று சிரித்துக் கொண்டே திரும்புகிறாள். 

போலீஸ்காரன் போய்ப் பார்த்தால், அங்கே அவன் மனைவி அழுது கொண்டிருக்கிறாள். ‘எனக்குத்தான் குழந்தை இல்லை, யாரோ பெத்த பிள்ளைக்காக அழக் கூட உரிமையில்லையா என்று கேட்டுக் கொண்டே போலீஸ்காரனுடன் வீடு திரும்புகிறாள். அப்போது ‘என்னைப் பெத்த ராசா போயிட்டியே ‘ என்று முன்னே கேட்ட  அதே கைக்குழந்தைக்காரியின் குரல் மீண்டும் கேட்கிறது. 

இந்தக் கதையில் நான் எமனை நன்றகத் திட்டியிருப்பேன்.

” ஒருத்தி பத்து மாசம்  சுமந்து பெத்த குழந்தையை, இப்படிக் கேள்வி
முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன
நியாயம்?..

சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் – இந்த யமன்
தான்… யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி
அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு?’

‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட
அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு
படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு
இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?…’

‘வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு
கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத
தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்! வரலாமா சாவு? ‘

அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை –
தாய்மையின் சோகம் – அதனை அவனால் தாங்க
முடியவில்லை.

அதனால், நான் எமதர்மராஜனிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். சாவுகூடாது என்று அல்ல. சாவை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தை மனித குலத்திற்குத் தாருங்கள் என்பதைத்தான். 

அதைப்போல, எனக்கு முன்னால் பேசிய நண்பர்,  நரகத்தில் வாடும் நண்பர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும் என்றார். அந்தக் கொள்கையை நான் ஏற்கவில்லை.  அதற்குமாறாக அன்பின் பாதையை அவர்களுக்குக் காட்டவிரும்புகிறேன். வாழ்வில் மட்டுமல்லாமல் அதற்குப் பின்னும் துடிக்கும் உள்ளங்களுக்கு நம் அன்பைப் பரிசாக அளிப்போம். அந்த அன்பு அவர்களுக்குப் பிடி சோறாகமாறி, தைரியத்தைத்தந்து அவர்கள் மனதைக் குளிர்விக்கும்.

 என்னை நம்புங்கள். அன்பை அனைவருக்கும் தாருங்கள்.

அல்லது  

‘என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ ‘ 

இல்லை . நன்றி வணக்கம். 

பேசி அமர்ந்தார் ஜெயகாந்தன். 

எமன் கண்ணைக்காட்ட எமி பேசஎழுந்தாள்.

(தொடரும்)  

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

முதல் பகுதி

பொன்னாலும் , வைரத்தாலும் ரத்தினங்களாலும் இழைக்கப்பட்டாலும் எப்போதும் அமைதியாக இருக்கும் Related imageவிஷ்வகர்மாவின் அரண்மனை அன்று மிகுந்த ஆரவாரத்தில் இருந்தது. தேவர்களுக்காக சொர்க்கத்தையே நிர்மாணித்தவர் விஷ்வகர்மா. சொர்க்கத்தின் அழகைச் சொல்லி மாளாது. இந்திரன் இருக்கும் அமராவதிப்  பட்டணத்தையும் அமைத்தவர் அவரே. விஷ்வகர்மா , தேவ சிற்பி என்றும் தேவ தச்சர் என்றும் அனைத்துலக மக்களாலும் போற்றப்படுபவர். இந்திரனுக்குத் தகுந்த ஆயுதம் வேண்டும் என்றதும் முனி  ஸ்ரேஷ்டர் ஒருவரின் எலும்பிலிருந்து வஜ்ராயுதத்தை அமைத்துக் கொடுத்தவர். பிற்காலத்தில் இலங்கையையும் , துவாரகையையும், ஹஸ்தினாபுரத்தையும் மற்றும் இந்திரப்பிரஸ்தத்தையும் நிர்மாணிக்கத் தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பவர்.

விஷ்வகர்மாவின் ஆயிரம் உதவியாளர்களும் அவருக்கு அமைந்த ஆயிரம் கைகளே. தங்கள் அனைவரையும் பிரம்மாண்டமான மந்திர ஆலோசனை அறைக்கு விஷ்வகர்மா அழைத்த போது அதன் காரணம் என்னவென்று புரியாமல் அனைவரும் திகைத்தனர். தனது புதல்வி ஸந்த்யாவிற்கும் சூரியதேவனுக்கும் அன்றையப் பொழுதில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போகிறது என்று அவர் அறிவித்ததும் அவர்கள் அனைவர்களும்  அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அதைவிட இன்னும் சற்று நேரத்தில் சூரியதேவன் அங்கு வரப்போகிறான் என்றதும் அவர்களின் உவகை பல மடங்கு பெருகியது.

“ எனது ஆயிரம் கரங்களே! சூரிய தேவனுக்கு நாம் மிகவும் பொருத்தமான முறையில் வரவேற்புக் கொடுக்கவேண்டும். ஸந்த்யாவின் அழகைப் பார்த்துப் பிரம்மித்த அவன் நமது  நகரைப் பார்த்து இன்னும் அதிகமாகப் பெருமைப்படவேண்டும்! செல்லுங்கள்! உங்களுக்கு என் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதன்படி செயலாற்றும் திறமை இருக்கிறது . உடனே செயல் படுத்துங்கள்! “ என்று உத்தரவிட்டான்.

அவர்களில் முதல்வன், “ தலைவரே! சூரியதேவன் தற்சமயம் எங்கிருக்கிறார்?” என்று வினவினான்.

“ நமது தங்கத் தடாகத்தில் இருக்கிறார். விமானம் அவரை ஏற்றிக் கொண்டு வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.” என்றார் விஷ்வகர்மா.

“விமானத்தில் ஏறிவிட்டார் என்றால் அவர் அரை நொடியில் வந்துவிடுவாரே?” என்று வினவினான் துணை முதல்வன்.

“ இல்லை , இன்னும் வருவதற்கு இரண்டரை நாழிகைகள் ஆகும். அதற்குத் தகுந்த வண்ணம் விமானத்திற்கு நகரைச் சுற்றி வரும்படிக்  கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார் விஷ்வகர்மா.

“மிக அருமை! தலைவரே! இதோ நாங்கள் செல்கிறோம். சூரியதேவன் மட்டுமல்ல. நம் இளவரசி ஸந்த்யா தேவியும் பிரம் மிக்கும் வண்ணம் நகரை மாற்றப் போகிறோம். விடை கொடுங்கள்” என்று கூறி அவர்கள் அனைவரும் மாயமாய் மறைந்தார்கள்.

மற்ற காவலாளிகளும் , புரோகிதர்களும், பெண்டிரும் கூட அந்த அரண்மனையில் அங்கும் இங்கும் பரபரவென்று பறந்து கொண்டிருந்தனர். அந்த அரண்மனையில் இருந்த அத்தனை மலர்களும், வாசனைத் திரவியங்களும், ஆடை அணிகலன்களும் அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்தப்புரத்தில் இருக்கும் அரச மகளிர் அனைவரும் தங்கள் குல விளக்கான ஸந்த்யாவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

விஷ்வகர்மா  அந்த அலங்கார மண்டபத்திற்கு வந்ததும் ஸந்த்யாவையும் அவள் அன்னையையும் தவிர அனைவரும் அறைக்கு வெளியே சென்று காத்துக்கொண்டிருந்தனர்.

விஷ்வகர்மா அழகுப் பதுமை போல் இருக்கும் தன் மகளைப் பெருமிதத்துடன் பார்த்தார். ஸந்த்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்து அந்த அறையையே சிவப்பாக்கிக்கொண்டிருந்தது.

“ ஸந்த்யா ! உன் அழகுக்கும் நமது பெருமைக்கும் உகந்தவன் சூரியதேவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் ஒரு குறைபாடு உள்ளது. “

ஸந்த்யா தந்தையை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“ஆம். ஸந்த்யா. எந்தப் பிரகாசத்தைப்பற்றி அவனுக்குப் பெருமை இருக்கிறதோ அந்தப் பிரகாசமும் வெப்பமும் அவனை சந்ததியில்லாதவனாக ஆக்கிவிடும்.”

ஸந்த்யா மட்டுமல்ல மகாராணியும் திடுக்கிட்டுப் போனாள்.

விஷ்வகர்மா புன்னகை புரிந்தார் . “ நீங்கள் இருவரும் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். சொர்க்கத்தையே படைத்த எனக்கு இதற்கு ஒரு வழி தெரியாதா? நீ பிறந்த நாளிலிருந்தே உனக்கு மணாளன் சூரியன்தான் என்பதை முடிவு செய்ததும் அவனுடைய குண நலன்களை ஆராய ஆரம்பித்தேன். அப்போது அவனின் குறைபாடு என் கவனத்திற்கு வந்தது. அதைச் சரிசெய்ய வெகுகாலம் யோசிக்க வேண்டியதாயிற்று. அதனால்தான் உன்னையும் அவன் கண்களில்படாமல் அந்தப்புரத்திலேயே ஒளித்து வைத்தேன். சில நாட்கள் முன்னர்தான் கைலாயத்தில் இதற்கான விடை கிடைத்தது.

சிவபெருமான் பாற்கடலில் உதித்த ஆலகால விஷத்தைக் குடிக்கும் போது பார்வதி தேவி அவர் கழுத்திலேயே திருநீலகண்டமாய் இருக்கும்படிச் செய்தார்கள் அல்லவா? விஷம் நின்று விட்டாலும் அதன் உக்கிரம் அவரது உடலில் ஒரு வெப்பத்தையும் பிரகாசத்தையும் ஏற்படுத்தியது. பார்வதி தேவி தன் தந்தை இமவானிடம் இருந்த காந்தக் கல் படுக்கையில் சிவபெருமானைப் படுக்கவைத்து காந்தக் கல்லால் சிவபெருமானின் உடம்பைச் சாணை பிடித்தார். அப்போதுதான் அவரது உக்கிரம் தணிந்தது. அந்தச் சாணை பிடிக்கும் இயந்திரத்தைப் பார்வதிதேவியிடம் வேண்டிப்பெற்று வந்தேன். அதைக் கொண்டு சூரியனின் பிரகாசத்தைக் குறைத்தால்தான் அவனுடன் நீ வாழமுடியும்.”

kunal-bakshi-as-lord-indra-in-karmphal-data-shani

“ தந்தையே அவரது பெருமையே அவரது பிரகாசத்தில்தானே இருக்கிறது. அது இல்லாமல் இருக்க அவர் சம்மதிப்பாரா”

“ நிச்சயம் மாட்டான். ஆனால் அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம்தான் இருக்கிறது. மேலும் சூரியதேவன் தன் பிரகாசத்தை முற்றிலும் இழக்க வேண்டாம். காந்தக் கல்லால் சாணை பிடித்து அவன் பிரதிபலிப்பைக் கொஞ்சம் மட்டுப் படுத்திவிடுகிறேன். அது போதும்.”

“ அது சரியல்ல தந்தையே! வேண்டுமானால் எனக்கு அந்த உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை அளிக்க முயலுங்களேன். உங்களால் முடியாதா என்ன? “ என்று வேண்டினாள் ஸந்த்யா.

“ ஸந்த்யா ! அது இயலாத காரியம். ஏனென்றால் உன்னிடமும் ஒரு குறைபாடு உள்ளது. “

“ ஆம் மகளே! அது உன்னுடனே பிறந்தது” என்று சொல்ல ஆரம்பித்தாள் ஸந்த்யாவின் அன்னை.

(தொடரும்)

இரண்டாம் பகுதி

Related image

Related image

“இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப்  பேசவந்திருக்கும் தலைவர் தர்மராஜன் அவர்களே ! சொர்க்கத்துக்கே அழகு கூட்ட வந்துள்ள சகோதரி எமி அவர்களே ! மற்றும் இன்றைய விழா நாயகரான ஜே கே அவர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் எமபுரிப்பட்டிணத்தின் இலக்கியப் பெருமக்களே!

இன்று நாம் ஜே கே  அவர்களின் அக்னிப்பிரவேசத்தை மையமாக வைத்து அவரது கதைகளையும்  அவரது எழுத்தாள்மையைப் பற்றியும் பேச உள்ளோம். 

அக்னிப்பிரவேசம் கதை  ஜே கே அவர்களின் கதைகளில் நம்மை மிகவும் தாக்கிய குத்தீட்டி  என்று நான் கருதுகிறேன்.  அது எழுதிய அவரையும் பாதித்திருக்கிறது என்று புரிகிறது. அதனால்தான் ‘அக்னிப் பிரவேசம்’  சிறுகதை கடும் விமர்சனத்துக்குள்ளாகியதும், அதன் முடிவை மாற்றி யோசித்து, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையை ஜெயகாந்தன் உருவாக்கினார் என்பதும் நமக்குப் புரிகிறது. 

Related image

அக்கினிப் பிரவேசத்துக்கு வருவோம்.

அறிந்தும்  அறியாமலிருக்கும் கன்னிப் பருவத்தில் ஒரு ஏழைப்பெண் எப்படி ஒரு ஆணின் ஆசைக்குப் பலியாகிறாள் என்ற கதையைச் சொல்லும்போது அதிகம் படிக்காத அவளின் அம்மா  அதைத் திறமையாகக் கையாளும் விதம் இருக்கிறதே ! அம்மம்மா !

அந்த அன்னையின்  வரிகள் என்னால் மறக்கவே முடியாது:

 “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.

……

“ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா… வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கலே..”

கதைகளில் ஜெயகாந்தன் பேசிக்கொண்டே இருக்கிறார்; பாத்திரங்கள் மூலமாகப் பேசுகிறார். பாத்திரங்கள் பேசாதபோது இவரே நேரடியாகப் பேசுகிறார்.

ஜேகே அவர்களின் இந்தத் தத்துவம்தான் இவரை எழுத்துலக மேதையாக மாற்றியது.

ஜெயகாந்தன் அளவிற்குச் சொல்லாடல்களையும் விவாதங்களையும் கதைப்பின்னலின் பகுதிகளாக ஆக்கியவர்கள் இல்லை.

‘வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது என் வேலையல்ல, அவர்களுக்கு எது பிடிக்க வேண்டுமோ அதை எழுதுவதே எழுத்தாளர்களின் கடமை’என்று கூறி ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன், இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ?’ என்று முழங்கியவர் ஜெயகாந்தன்.

தீவிர இலக்கியத்துக்கும், வணிக வெற்றி இலக்கியத்துக்கும் ஒரு பாலம் அமைத்தவராக ஜெயகாந்தனை நாம் காணலாம். இவரது படைப்புகள் மூலம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 

இவர் ஒரு இலக்கியவாதி.  இவரிடம் அரசியல், கலையுலகம், பத்திரிகை , ஆன்மீக அனுபவங்களைப் பார்க்கலாம். மற்ற கதாசிரியரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கலாம்.  காந்தியைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நம்மை,  இவரது வாழ்க்கை அழைக்கிறது. இவரது பல கருத்துக்கள் பிரும்ம உபதேசமே. சில நேரங்களில் சில மனிதர்கள் யாருக்காக அழுகிறார்கள் ? என்று கேட்டவர். ஒரு வீடு ஒரு மனிதன்  ஒரு உலகம் என்று இருக்கும் மனிதனைக் கோகிலா என்ன செய்து விட்டாள்? அல்லது அவனை விட்டு கங்கை எங்கே போய் விட்டாள்.  இந்த நேரத்தில் இவள் என்று சொல்ல இவள் என்ன சினிமாவுக்குப் போன  சித்தாளா? அல்லது  நாடகம் பார்க்கும் நடிகையா ? ஒருத்தி மட்டும் காத்திருக்க  ஒருவேளை அவள் பாவப்பட்ட  ஒரு பாப்பாத்தியாக இருக்குமோ ? அது, இந்த ஒரு குடும்பத்தில் மட்டுமா நடக்கிறது?

காற்று வெளியிலே கழுத்தில் விழுந்த மாலைக்காக அந்த அக்காவைத் தேடிக் கண்டுபிடித்து  இன்னும் ஒரு பெண்ணின் கதையைக் கேட்கலாம். இவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் அல்ல. பாட்டிகளும்  பேத்திகளும் சேர்ந்து படிப்பது சுந்தரகாண்டமும் அல்ல;  இது அவர்களின் அப்பாக்கள்  சொன்ன கதைகளும் அல்ல . இந்த இதய ராணிகளுக்குக் கிடைப்பது என்னவோ சீட்டுக்கட்டு ராஜாக்கள் தான்.

இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கெங்கு காணினும் ஊருக்கு நூறு பேர் ஒவ்வொரு கூரைக்கும் கீழே இருக்கிறார்கள். அவர்களின் கைவிலங்கை உடைத்து ஆயுத பூசை செய்யச்  சொல்வது,  நிச்சயம் கருணையினால் அல்ல.

கண்ணனும் பிரியாலயத்தில்  இருக்கும் உன்னைப் போல ஒருவன் தான்  என்று சொல்வார்கள். ஆனால் ஜெய ஜெய சங்கர,  ஹர ஹர சங்கர என்று  கூறும் மக்களின் ரிஷி மூலத்தை எந்தக் குரு பீடமும் ஆராய முடியாது. மூங்கில் காடுகளில் கரிக்கோடு போட்டுச் செல்லும் மனிதன் எருமை மாடுபோல, பொம்மைபோல கார்களிலும் வண்டிகளிலும் புகை நடுவினிலே நிற்காத சக்கரத்தில் பாரிஸ் , அமெரிக்கா என்று போகிறார்கள்.

இனிப்பும் கரிப்பும்  சேர்ந்த ஒருபிடி சோறு கொடுக்க தேவன் வருவாரா என்று காலை மாலையில் மயக்கமாக இருப்பார்கள். இவர்கள் இறந்த காலங்களில்  யுக சந்திக்களில் புதிய வார்ப்புகளைச் சுமை தாங்கிகளாகச் சுய தரிசனம் செய்வார்கள் .

இப்போது புரிகிறதல்லவா? ஜேகேயின் படைப்புக்களின் உண்மை சுடும் என்பது.  

அதற்கு மூல காரணம் அவரின் அக்கினிப் பிரவேசம்.

அதைப்பற்றி இங்கு பேசுவது மிகவும் பொருத்தம். ஏனெனில் இங்கு நம்மில் பலர் தினமும்  அக்கினிப் பிரவேசம் செய்து வருகிறார்கள். இது நரகாபுரியில் நடக்கும் ஒரு வாடிக்கையான ஆனால் வேதனையான சம்பவம். என்றோ , எங்கோ , எந்தச் சூழ்நிலையிலோ நாம் செய்த தவற்றிற்கு இங்கு கிடைக்கும் தண்டனை அக்கினிப்பிரவேசம்.

 இந்தத் தண்டனையிலிருந்து நரகபுரி மக்களைக் காப்பாற்றும்படி இலக்கியசபையின் சார்பில் காவல் தெய்வமாக அமர்ந்திருக்கும் எம தர்மராஜனைக் கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை இந்த மேடையிலேயே  தருமாறு வேண்டிக்கொண்டு தலைமை உரை ஆற்ற எம தர்மராஜன் அவர்களை  அன்போடு அழைக்கிறேன்.

(தொடரும்)  

எமபுரிப்பட்டணம் -(எஸ் எஸ் )

 

IMG_6692

சூரியதேவனுக்குத் தன் பராக்கிரமத்தைப்பற்றி , தன் அழகைப்பற்றி,  தனக்குத்  தேவ உலகில் கொடுக்கப்படும் மரியாதையைப்பற்றி எப்போதும் ஒருவித கர்வம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.  தன்னைச் சுற்றிவரும் கிரகங்கள், தன்னைச் சார்ந்துவரும் மற்ற வானுலக பூலோக அமைப்புகள், தன்னிடமிருந்து வெளிச்சம்பெறும்  கிரகங்கள் என்று எல்லாமே தன்னுள் அடக்கம் என்ற எண்ணம் சூரியதேவனை எப்போதும் ஓர் உயர்ந்த பீடத்திலேயே வைத்திருக்கும்.

இன்று சூரியன், விஷ்வகர்மாவின் மகள் ஸந்த்யாவைப் பார்த்து மயங்கியது உண்மைதான்.  அந்த அழகுப் பதுமையுடன் சற்றுமுன் கலந்து உறவாடியதைப் பற்றி எண்ணும் போதெல்லாம்    அவன் நெஞ்சிலும் உடலிலும் இன்ப  அலைகள் பெருகிப் பிரவாகம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் ஸந்த்யாவிற்காகத் தரையில் இறங்கியதால் தன்னை இந்தத் தேவதச்சர் எப்படிக் குறைபாடு உள்ளவன் என்று கூறமுடியும் ? ‘என்னிடம்  குறைபாடு இருக்கிறது என்ற எண்ணமே தவறல்லவா? ‘ என்று சூரியதேவன் ஆணித்தரமாக நம்பியதின் விளைவாக உலகங்களைப் படைக்கும் விஷ்வகர்மாவைச்  சுட்டெரிக்கும் கண்களால் நோக்கினான்.

விஷ்வகர்மாவுக்கு சூரியதேவனின் கோபக்கனல்  புன்னகையையே வரவழைத்தது. எந்த ஆண்பிள்ளைக்கும்  கையும் களவுமாகப் பிடிபடும்பொழுது அவனுக்கு வரும் கோபத்தின் அளவிற்கு அர்த்தம் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன? அதுவும் பெண்ணின் தந்தையிடமே பிடிபட்டுவிட்டோமே என்ற ஆத்திரமும் அவனிடம் சேர்ந்திருக்கிறது.   அவை எல்லாவற்றையும்விட ‘நான் அவனைக் குறைபாடு  உள்ளவன் என்று சொன்னது அவனை அதிகம் பாதித்திருக்கிறது’ என்பதை உணர்ந்த விஷ்வகர்மா அவனைச் சமாதானம் செய்யப்புறப்பட்டார்.

‘சூரிய தேவனே ! நீ தான் என் மகள் ஸந்த்யாவிற்குத் தகுந்த கணவன் என்பதை நான் அவள் பிறந்த  உடனேயே தீர்மானம் செய்துவிட்டேன். நீயே அவளைத்  தேடிவரும் காலம் வரும் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவளைப் பார்த்ததும் நீ நேரே என்னிடம் வருவாய், நானும் உன் கவுரவத்திற்கு ஏற்றபடி மிகச்  சிறப்பாக உங்கள் திருமணத்தை முடிக்கவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். பார்த்ததும்   காதல், அதுவும் உடனே  காந்தர்வத் திருமணத்தில்   முடிவடைந்துவிட்டது என்றால்    இதற்கு மேல் நான் என்ன சொல்ல? இருப்பினும் ஸந்த்யாவின் தேக ஸௌந்தர்யத்தில்  ஒரு மந்திர முடிச்சு இருக்கிறது.  அதைச் சரிசெய்யும் காலமும் வந்து விட்டது. ” என்று விஷ்வகர்மா தனது இரண்டாவது அஸ்திரத்தையும் வீசினார் சூரியதேவன் மீது.

விஷ்வகர்மாவின் இந்த இரண்டாவது கணையும் சூரியனைப் பாதித்தது. அவன் கண்களில் சஞ்சலத்தின் ரேகை படிய ஆரம்பித்தது. அதைக் கண்ணுற்ற விஷ்வகர்மா ‘சூரிய தேவா! கலங்க வேண்டாம்! நாம் அரண்மனைக்குச் சென்று இதுபற்றி முடிவெடுக்கலாம்!   அந்தத் தங்கப் பொய்கையில் இருவரும் முழுகி விட்டு நம் அரண்மனைக்கு வாருங்கள். உங்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்ய நான் முன்னே செல்கிறேன். உங்கள் இருவருக்கும் என் ஆசிகள்! ” என்று கூறிவிட்டு முன்னே நடந்தார் விஷ்வகர்மா !

IMG_1106

தந்தை நகர்ந்ததும் மறைவிடத்திலிருந்து ஸந்த்யா வெளியே  வந்தாள். தந்தையின் வார்த்தைகள்  அவளுக்கு அமிர்தம்போல் இனித்தன. சூரியதேவனின் கால்களில்  விழுந்தாள். சூரியனும் அவளை அப்படியே வாரிஎடுத்து அணைத்துக் கொண்டான். இருவருக்கும் இடையே வாய்ச்   சொற்கள் தேவையில்லாமல் இருந்தன. அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டுத்  தங்கப் பொய்கையை  நோக்கி நடந்தான். அவன் முதலில் தண்ணீரில் இறங்கிப் பிறகு மெதுவாக ஸந்த்யாவிற்கும் கைலாகு கொடுத்துத் தண்ணீரில்  இறக்கினான். இருவரும் தண்ணீரில் ஒரே சமயம் மூழ்கினார்கள். சூரியன் முதலில் நீரிலிருந்து வெளியே வந்தான். முதல் நாளே அவனை மயக்கிய ஸந்த்யாவின் பொன்னிற முதுகு தண்ணீருக்குள்ளிருந்து மெதுவாக வரத் தொடங்கியது.  

அதன் அழகைப் பருகியவண்ணம் இருந்த சூரியன் கண்களில் ஏதோ ஒன்று புதியதாகத் தென்பட்டது. ‘ அது என்ன அவள் முதுகில் சிவப்பாக .. ஒரு திட்டு போல.. முதல் நாள்  ரதத்திலிருந்து பார்த்த போதும்  ஏன்  இன்றைக்குப் பார்த்த போதும் , ஏன் அதற்கும் மேலாகச் சற்று முன் இன்ப உறவில் ஈடுபட்டிருந்த சமயத்திலும் அது தென்படவில்லையே! ஒருவேளை ஆசை மயக்கத்தில் கவனிக்கத் தவறிவிட்டேனா? நிச்சயமாக இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் அவன் கண்களின் கூர்மையைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் என்றைக்கும் இருந்ததில்லை.  இருக்கப்  போவதும் இல்லை !

அப்படியானால் அது என்ன? பொன்னில் செம்பு கலந்தாற்போல அது என்ன சிறிய திட்டு?

மெல்ல எழுந்தாள் ஸந்த்யா. அவள் முகத்திலும்  பொட்டு வைத்தது போல அதே மாதிரி சிறிய சிவந்தத் திட்டு ! அது அவள் அழகுக்கு அழகூட்டுவதாக  இருந்தாலும்  அவன்  கண்களை ஏனோ அது உறுத்தியது.  “ஸந்த்யா! இது என்ன சிவந்த திட்டு முதுகிலும் முகத்திலும் ?” என்று அவன் கேட்டதும் அவள் திடுக்கிட்டு  ” இருங்கள் இன்னும் இரு முறை முழுக   வேண்டும்” என்று சொல்லி அவன் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இரண்டாவது முறை நீரில் முழுகி மெதுவாக எழுந்தாள். ‘என்ன ஆச்சரியம்! முதுகில் இருந்த அந்தச் சிவப்புத் திவலை மறைந்து விட்டதே! முகத்திலும் அதைக் காணவில்லையே? மூன்றாவது முறை அவள் நீரில் மூழ்கினாள். மூழ்கியவள் மூழ்கியவள்தான் . எழுந்திருக்கவே இல்லை ! அப்படியே மறைந்து விட்டாள்.

சூரிய தேவன்  திடுக்கிட்டான். அதுமட்டுமல்லாமல் அந்தப் பொய்கையின் நீரும் மறைந்து விட்டது. சூரியனின் உடம்பிலிருந்த நீர்த் திவலைகளும் மறைந்து விட்டன.  அவன் உடைகளும் மாறியிருந்தன. அவன் கண்ணெதிரே பொய்கை இருந்த இடத்தில் ஒரு சிறு விமானமும் காத்துக்கொண்டிருந்தது.

விஷ்வகர்மாவின் சித்து விளையாட்டு ஆரம்பித்துவிட்டதா?

(முதல் பகுதி தொடரும் – இரண்டாவது பகுதி ஆரம்பம்)

 

 

இரண்டாம் பகுதி ……………………….

Related image

 

” அண்ணா ! இது என்ன சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா? “

ஏன் இப்படிக் கேட்கிறாய்  எமி? நீ சென்றால் நரகபுரியும் சொர்க்கமாக மாறிவிடும் என்பது உண்மை தான்! உன் கரம் பட்ட இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறிவிடும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த யமுனை   நதி அல்லவா  நீ? அப்படி  ஒரு வரத்தையல்லவா நம் தந்தை வேண்டிப்பெற்றிருக்கிறார்!”

” ஆனால் அண்ணா ! நான் நடந்து வரும்போது  சில இடங்களில்    நரகத்தின் காட்சிகளைக் கண்டேன். கொதிக்கும் எண்ணையின் வாசத்தை உணர்ந்தேன். சாட்டையின் சவுக்கடிகள் சத்தமும் கேட்டது. அவை உண்மையா அல்லது என் பிரமையா?”

” ஆகா! உன் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது.  நீ பார்த்தது உண்மைதான். அது சொர்க்கத்தில் இருக்கும் நரகத்தின் ஜன்னல். நிழல். மாயை. சில இடங்களில் மட்டும் இது தெரியும்.  சொர்க்கபுரி வாசிகளுக்கு அவ்வப்போது நரகத்தின் காட்சி தெரியவேண்டும். உணவை உண்ணும்போது நம்மை அறியாமல் கார மிளகாயைக் கடிக்கவேண்டும். மலர்ப்படுக்கையில் துயிலும்போது சிறு முள் முதுகைப் பதம் பார்க்க வேண்டும். பாடல் கேட்கும்போது சிறிது அபசுரம் தட்ட வேண்டும். அப்போதுதான் நாம் பெற்றிருக்கும் பொருளின் மதிப்பு நமக்குப் புரியும்.  அதற்காகத்தான் இந்த நிழற்காட்சிகளைப் படைத்திருக்கிறோம் . அதைப்போல நரகாபுரி மக்களுக்கும் சொர்க்கத்தின் நிழற்படம் தெரியும் “

” நன்றாகப் பேசுகிறாய் அண்ணா? எமபுரியில் நீ அதிகம் பேசுவதேயில்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்!”

” உண்மை  எமி ! உன்னிடம்தான் நான் அதிகம் பேசுவதாக நானே உணருகிறேன். அதுமட்டுமல்லாமல் இன்று சொர்க்கபுரியில் ஒரு கூட்டத்தில் நான் பேசவேண்டும். “

“அது என்ன கூட்டம்? “

” தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஓர் இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். “

“என்னது? இலக்கியக் கூட்டமா? சொர்க்கத்திலா?  பூலோகத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்த ஆசை இன்னும்  விடவில்லையா? “

” அது  எப்படித்  தீரும் ? எத்தனைப்  பிறவிகள் எடுத்தாலும் மனிதர்களின் பாரம்பரியக் குணம் மட்டும் போகவே போகாது. கோபம், ஆசை, காமம், பேச்சு,   இசை, பாசம், புத்தி, பயம், சாதுரியம், போன்றவை அவன் ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும். இது தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் , கந்தவர்களுக்கும் பொருந்தும்.”

” புதுமையாக இருக்கிறது.  சொர்க்கவாசிகளுக்கே இவ்வளவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் நரக வாசிகளுக்கு இன்னும் அதிகமான குணங்கள் ஒட்டிக் கொண்டிருக்குமே? . அங்கே இந்த மாதிரி அமைப்புகளெல்லாம் கிடையாதா? “

” சொன்னால் நம்பமாட்டாய்! இங்கே இருப்பதைவிட  அங்கே இது போன்ற அமைப்புகளும் நிகழ்வுகளும் மிக மிக அதிகம். இன்றைய இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்க சொர்க்கபுரி எழுத்தாளர்களும் நரகபுரி எழுத்தாளர்களும் சேர்ந்தே வருவார்கள்.

“அதெப்படி அண்ணா?”

“இந்தக் கருத்து புரியவேண்டுமானால் உனக்கு இன்னொரு ரகசியத்தையும் சொல்லவேண்டும்.  சொர்க்கம் நரகம்  என்பது நீ நினைப்பதைப்போல இரண்டும் தனித் தனி இடங்கள் அல்ல. இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் சுவரும் உண்மையான சுவரும் அல்ல. இது இரண்டும் நான் பார்க்கும் பார்வையில்  தான் இருக்கின்றன. சித்திரகுப்தனுக்கும்  தர்மத்வஜனுக்கும் இந்தப் பார்வை உண்டு. இதை ‘மெய்நிகர்’ என்றும் சொல்வார்கள். அதாவது உண்மையைப் போல இருக்கும் ஆனால் உண்மை அல்ல. இதே இடத்தை நரகபுரியாக மாற்ற என் பார்வையைச் சற்றுத் திருப்பினால் போதும். நாம் நரகபுரியில் இருப்பதை நீ உணர்வாய். இதோ  பார் !”

“இது என்ன மாயம்? என் உடம்பு எரிவதைப் போல இருக்கிறதே? எங்கே போயிற்று சொர்க்கபுரியின் சுகந்த மணம் ? நான் யமுனை நதியாக மாறினால் தான் இந்தத் தீயின் ஜ்வாலையிலிருந்து என்னைக் காத்துக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதே?

” கவலைப்படாதே! நாம் நரகபுரிக்கு நாளைக்குத் தான் செல்கிறோம். இதோ நீ தொடர்ந்து வந்த சொர்க்கபுரி  ! அதோ தெரிகிறது பார் இலக்கியக்கூட்டம்.”

” ஆமாம்!  ஒரு சின்ன சந்தேகம்! இலக்கியவாதிகள் அனைவரும் சொர்க்கபுரியில் தானே இருப்பார்கள்?

” முதலிலேயே நான் சொன்னேன்  இந்தக் கூட்டத்திற்கு இரு சாராரும் வருவார்கள். ஆனால்  யார் சொர்க்க புரியில் இருக்கிறார்கள் யார் நரக  புரியில்  இருக்கிறார்கள் என்பது எங்களில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அதனால் இலக்கியவாதிகள் சொர்க்கபுரிவாசியாகவும் இருக்கலாம் நரகபுரிவாசியாகவும் இருக்கலாம்.”

” நீங்கள் இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்போகிறீர்கள்? “

“நான் மட்டுமல்ல, நீயும் பேசப்போகிறாய் !”

” நானா? “

கூட்டத்தைத் துவக்கி வைத்துப்  பேசப் போகிறவன் நான். நன்றி தெரிவித்துக் கூட்டத்தை முடிக்கப் போகிறவள் நீ “

“அது சரி! என்ன தலைப்பு? யார் தலைமை வகிக்கிறார்கள்? “

” தலைப்பு அக்கினிப் பிரவேசம்   தலைமை வகிப்பவர் ஜெயகாந்தன் “

” எனக்கு மட்டும் சொல்லுங்கள் அண்ணா ! இவர் எந்த புரியைச் சேர்ந்தவர். அப்போது தான் நான் நன்றி உரை கூறுவேன். “

” சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம் என்று சொல்வார்கள். ஆனால் தங்கையிடம் சொல்லலாம்”

சொன்னான்.

(தொடரும்)

எமபுரிப் பட்டணம் (எஸ் எஸ்)

பகுதி – ஒன்று – அத்தியாயம் -இரண்டு

Image result for shani serial

தேவ சிற்பி விஷ்வகர்மா தன் மகள் ஸந்த்யாவிற்காக   அமைத்துக்கொடுத்த தனி நீச்சல் குளம் அது. படிகள் பொன்னாலும் பக்கவாட்டச் சுவர்கள் வெள்ளியாலும் அமைந்தது  அந்த நீச்சல் குளம்.  அதற்கு வானுலக சரஸ்வதி நதியிலிருந்து நீர் சுனையாக ஊறிக்கொண்டிருந்தது.   அதில்  ஸந்த்யா தன் தோழிகளுடன் உல்லாசமாக நீந்தி விளையாடிக் கொண்டிருப்பாள்.

Image result for suryadev and sandya in sani serial

சில சமயம் அவள் தனியே அந்தக்  குளத்தில் நீந்த வருவாள்.   .  யாருமில்லை என்பதால் சுதந்திரமாகவே நீந்திக் கொண்டிருப்பாள். அன்று அப்படிக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஸ்படிகம் போன்ற  தண்ணீரில் ஒரு  பொன்னைப் போல ஒளிவீசும் அழகான  உருவத்தைக் கண்டாள். அந்த உருவம் அவள் மீது படர்வது போன்ற உணர்வை அடைந்தாள்.  திரும்பி நேராகப் பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. அதனால் முதுகைக் காட்டிக் கொண்டே தண்ணீரில் தெரியும் சூரிய தேவனின் அழகு பிம்பத்தைக் கண்டாள்.  அவள் முதுகை சூரியனின் கிரணங்கள் மெல்ல வருடுவதை உணர்ந்து இதுவரை அனுபவிக்காத இன்ப அதிர்வு உடல் முழுதும் பரவுவதை உணர்ந்தாள்.

அடுத்த நாளும் சூரியதேவன் வருகைக்காக அவள் மனதும் உடலும் ஏங்கியது. அந்த நேரமும் வந்தது. நேரிடையாகப் பார்க்கவேண்டும் என்று குளித்துக் கொண்டிருக்கும் அவளுக்குத் தோன்றியது. பொன்னிற உருவம்தான் தெரிந்தது. கண்கள் கூசின. இடையில் ஒரு சிறு மேகம் வந்ததால் அதன் வழியே  சூரியதேவனின் அழகு முகத்தைப் பார்க்கமுடிந்தது. மேகம் மறைந்ததும் அவள் கண்கள் தண்ணீரில் தெரியும் அவனுடைய பிம்பத்தைப் பார்த்துப் பிரமித்தன.  அவன் அழகை அள்ளிப் பருகியவண்ணம் ஒரு மயக்க நிலையில் இருந்தாள்.

திடீரென்று அந்த பிம்பம் பெரிதாகத் தோன்றியது.  அவள் அருகே கரையில் சூரியதேவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளுக்குத் தலை சுற்றுவதைப் போல இருந்தது. அவன் அவளைக் கை நீட்டி அழைக்கக் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பு போலச் சென்றாள். கரையிலிருந்து கைலாகு கொடுத்து அவளைத் தூக்கினான். சூரியனின் வெதுவெதுப்பில் அவளது நீர்த்திவலைகள் எல்லாம் மறைந்து சூடு ஏறுவதை  உணர்ந்தாள்.

குளிக்கச் சென்ற தன் பெண் இன்னும் வரவில்லையே என்று தேடிக்கொண்டு விஷ்வகர்மா அங்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்துத் திடுக்கிட்டார் !

(தொடரும்)  

பகுதி : இரண்டு : அத்தியாயம்: இரண்டு

 

  IMG_1077

இரண்டு:

 யமுனாவைக்  கண்டதும் எமனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின.  இருக்காதா பின்னே? அவனுடைய ஆருயிர்ச் சகோதரி ‘எமி’ அல்லவா அவள்? இரட்டையர்களாகப் பிறந்த எமன்,  எமி  இருவருக்கும் இடையே சிறு வயது முதல் இருந்த பாசத்துக்கு அளவே கிடையாது. எமி கேட்டாள் என்பதற்காக வானத்துச் சந்திரனை ஒருமுறை அவளுக்கு விளையாடப் பறித்துக் கொண்டுவந்தான் எமன். அதற்காக அவன் தந்தையின் கோபித்துக் கொண்டதைப்பற்றிக்கூட  அதிகமாகக் கவலைப்படவில்லை.

எமிக்கும் அண்ணன் எமன் மீது உயிர்.

“வா! சகோதரி “ என்று வாஞ்சையோடு அவள் கரத்தைப் பிடித்து மண்டபத்துக்கு அழைத்து வந்தான்.

“இது என்ன அண்ணா?  இவ்வளவு பெரிய தீபம்?”

“எமி! நீ முதல் முறையாக எமபுரிக்கு வருகிறாய்! அதுவும் இந்தத் தீபாவளி நாட்களில் வருவது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?

இன்று திரயோதசி.   இன்று பூமியில்  வீட்டைச்சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பர்.   மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று பூலோக மக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், நமது சொர்க்கபுரி, நரகபுரி  இரண்டிலும் இருக்கும்    பிதுர்க்கள் பூமிக்குச் செல்வார்கள்.

  அப்படிச் செல்பவர்கள்  தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்குத் திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டும்.  தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் பூலோகவாசிகள்  ஏற்றும் தீபத்துக்கு என் பெயரை வைத்து ‘எம தீபம்’ என்று சொல்கிறார்கள்.  இதை அவர்கள் வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள்… வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம்.

இதனால் மக்களுக்கு விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது; நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!” இப்படி ஒரு வரத்தை நான் பூலோக மக்களுக்குத் தந்துள்ளேன்.

ஒருமுறை  திருச்சிற்றம்பலம் * என்னும் கிராமத்தில் எனக்குத் தனிக்கோவில் கட்டி மக்கள் என்னை வழிபட்டனர்.

Image result for thiruchitrambalam, yama temple

 அவர்கள் விருப்பதிற்கேற்ப  கருவறையில் எருமை வாகனத்தில் மேற்கு திசைநோக்கி நான்கு திருக்கரங்களுடன் . கீழ்வலக்கையில் தீச்சுடரும், இடக்கையில் ஓலைச்சுவடிகளும், மேல்வலக்கையில் சூலாயுதம் தாங்கியும், இடக்கரத்தில் கதையுடனும் அருள் பாலித்தேன்.

அப்போதுதான்  அவர்கள் என்னிடம் வேண்டிக்கொண்டார்கள்.           “ ஸ்வாமி, மரணம் தவிர்க்கமுடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் திடீர் மரணம், விபத்துக்கள் சம்பவிக்காது , நோய் நொடியின்றி ஆரோக்யமாக இறக்க வழி கூறுங்கள்” என்று வேண்டினர்.

அப்போதுதான் தீபாவளிக்கு முந்திய நாள் தீபம் ஏற்றி வழிபடுங்கள் . நீங்கள் கேட்டுக்கொண்டபடி துர்மரணம் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறினேன்.

அவர்கள் ஏற்றும் தீபங்களின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத்தான் நமது எமபுரிப்பட்டிணத்திலும் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது.

எமி! இன்று  உன் கையால் தீபத்தை ஏற்று! பூலோக மக்கள் சந்தோஷமாக வாழ அது வழிகாட்டும்” என்றான் எமன் .

சித்ரகுப்தன் , தீப்பந்தத்தை எடுத்துத் தர  எமி எம தீபத்தை  ஏற்றினாள். அது சுடர்விட்டுப் பிரகாசித்தது.

எமி! நாளை  தீபாவளி ! உன்னை சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்! அதுவரையில் உன் அறையில் ஓய்வெடுத்துக் கொள் “ என்றான் எமன்.

 

(தொடரும்)

* தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோவில் உள்ளது

எமபுரிப் பட்டணம் (எஸ் எஸ் )

முன்னுரை!

எமபுரிப்   பட்டணம் என்ற இந்தத் தொடரை இரண்டு பிரிவாக எழுதப் போகிறேன்.

Image result for எமன்

 

முதல் பகுதி , புராணங்களை  மையமாக வைத்து அவற்றில்  குறிப்பிட்டுள்ள கதைகள் , கிளைக் கதைகள் போன்றவற்றை விளக்கும் கதைத்தொகுப்பு.  முக்கியமாக கருட புராணம், விஷ்ணு புராணம் ¸மார்க்கண்டேய புராணம், சிவபுராணம், கந்த  புராணம் , சாம்ப புராணம்  போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். அதில் வரும் கதைச் சம்பவங்கள் பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்தவையாக இருக்கக்கூடும்.  அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அந்த சிக்கலில் ஒரு சௌகரியமும் உள்ளது.

முதலில் சிக்கலைப் பற்றிச் சொல்லுவோம்.  ஒவ்வொரு புராணத்திலும் கதை கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . அவற்றில் வரும் பாத்திரங்கள் ஒன்றாக இருந்தாலும் அவைகளின் தன்மை மாறுபட்டு இருக்கின்றது. எது சரி , எது தவறு  என்பது யாருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

உதாரணங்கள் சொல்லி உங்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி ஓடச் செய்யப்போவதில்லை.

இதில்  என்ன சௌகரியம் என்றால்,  இந்தப் புராணப் பகுதியிலும்  கொஞ்சம் நமது கற்பனையைக் கலந்து கொள்ளலாம்.இந்தப் புராணத்தில் கொஞ்சம், அந்தப் புராணத்தில் கொஞ்சம் என்று எடுத்துக் கொள்ளும்போது  நம் கதை  ஒரு புதுப்  புராணம்போல் ஆகலாம். அதைத்தான் புராணக் கதைகளைத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கும் நண்பர்களும் செய்கிறார்கள். ராமாயணம் , மகாபாரதம் என்று நாம் அதிகமாகப் படித்துப் பழக்கப்பட்ட கதைகளைச் சொல்லும் போதும்,  ‘ இது மக்களை மகிழ்விப்பதற்காக மூலத்தை ஒட்டி சற்று மாறுபட்டுச் சித்தரித்துள்ளோம் ‘ என்று சுற்றி வளைத்து,    “பொறுப்புத் துறப்பு” என்ற பகுதியில் கோடிட்டுக் காட்டி விடுவார்கள்.

அந்தப் “பொறுப்புத் துறப்பின்” சௌகரியம் எனக்கும் கிட்டும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

ஆனால் நாம் காணப் போகும் எமபுரிப்பட்டணத்தின்  இரண்டாம் பகுதி முற்றிலும் புதியது. முழுக்க முழுக்க நம் கற்பனையே. இதற்கும் முதல் பகுதிக்கும் சில நிகழ்வுகள் இணையாக வந்தால் அவை தற்செயலாக நேர்ந்தது என்றே கொள்ளவேண்டும். இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ? பூலோகத்திலிருந்து அவனிடம் செல்லும்  மனிதர்கள்  –  அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், விஞ்ஞானிகள் ,  மன்னர்கள், சாமானியர்கள் எல்லோரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தப் பகுதி .

இது ஜாலியாக இருக்கும்.

இந்த இரண்டு பிரிவான கதை, புராணமும், நவமும் கலந்ததாக இருக்கும்.  புராணம் என்பது பழையது. நவம் என்பது புதியது. இரண்டும் கலந்து வருவது இந்தத் தொடரின் சிறப்பு.

இன்னொரு  முக்கியமான கருத்து. மனிதன்  இறந்த பின் எங்கு செல்கிறான், அவன் இந்த உலகில் செய்த நல்லது,கெட்டது அவற்றிக்குத் தண்டனைகளும், பரிசுகளும் கிடைக்கின்றனவா, அவன் மறு பிறவி எடுக்கிறானா, போன்றவை  மிகவும் ஆழமான தத்துவார்த்த எண்ணங்கள். எல்லா மதங்களும் இவற்றை வெவ்வேறு பாணியில் சொல்லுகின்றன. அவற்றை எண்ணிப் பார்க்கும் போது  அவை ஒரு திகில் கலந்த பயமாகவே இருக்கின்றன.

Related image

பயம் தான் மனிதனை ஆட்டிப்படைக்கும் முதல் சக்தி. அந்தப் பயத்தில் மனிதன் நல்லதும் செய்கிறான். கெட்டதும் செய்கிறான். பயம் ஒருவனை நல்லவனாக வைத்திருக்கின்றது என்றால் அந்தப் பயமே அவனுக்குத் தீங்காகவும் மாறிவிடுகிறது. பயப்படாத ஜீவ ராசியே உலகில் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பய உணர்ச்சியே மூலாதாரம்.மனிதனின் ஒவ்வொரு வெளிப்பாடும் பயத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பயத்தை மனிதன் ஒருகாலும் வெல்ல  முடியாது. வென்றது மாதிரி நடிக்கலாம். அது உள்ளூர அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும். எல்லா பயங்களிலும் மனிதன் அதிகமாகப் பயப்படுவது எம பயம் – அதாவது மரண பயம் ஒன்றிற்குத்தான். சாவைப் போல மனிதனைப் பயமுறுத்துவது வேறொன்றும் இல்லை. அது அவனை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். பிறந்த உடனேயே ஏன் அதற்கு முன்னாலேயே மரிக்கும் சிசுக்கள் உண்டு. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் துடிதுடித்து இறந்த மனிதர்களும் உண்டு. இந்த சாவு எப்போது யாரை எங்கு எவ்வாறு பிடிக்கும் என்பது தான் புரியாத புதிர். மனித வாழ்வில் அவிழ்க்க முடியாத மிகப் பெரும் புதிர் – சாவு .

Related image

இந்தப் புதிர்தான் – அத்துடன் இணைந்த பயம்தான் மனிதனுக்கு அவன் வாழ்வில் சுவாரஸ்யம் கூட்டுகிறது என்று சொன்னால்  ஏற்றுக்கொள்வீர்களா?

உண்மை அது தான்.

இந்த சுவாரஸ்யமான பய உணர்ச்சியுடன் எமபுரிப்  பட்டணத்துக்குச் செல்வோம் !

 

 

எமபுரிப் பட்டணம்

Related image

Related image

( படங்கள்  நன்றி :  ” சனி” தொடர் – கலர்ஸ் டி வி )

ஆதித்யன் என்ற பெயர்கொண்ட சூரிய தேவன்*  தன்  ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் தகதக என்ற பொன் கிரணங்களைப் பாய்ச்சிக்கொண்டு  பவனி வந்துகொண்டிருந்தான்.  கீழ்த் திசையில் அவன் உதிக்கும்போதே உலகைச் சூழ்ந்துள்ள இருள் விலகிச் சென்றன. அவன் தான் பிறந்த விதத்தை எண்ணிக் கொண்டே பவனி வந்து கொண்டிருந்தான்.

பிரளயத்திற்குப் பிறகு பகவான் விஷ்ணு உலகத்தைப் படைக்க எண்ணம் கொண்டு பிரும்மனைப் படைத்தார். பிறகு பிரஜாபதிகளைப் படைத்தார். மரீசி முனிவர் அதிதி  தேவியின் மூலம் மண்ணிலும் விண்ணிலும் பரவி இருக்கும்மாதிரி ஒரு அண்டத்தை ஏற்படுத்தினார். அந்த அண்டத்திலிருந்து சூரியன் தோன்றினான்.   அவனுக்குள் இருந்த இருபது பிரபைகளும், ஆயிரம் கிரணங்களும்  மழை , பனி , வேனில் என்று பல பருவங்களை ஏற்படுத்தி பூவுலகையும், வான் உலகையும் உய்வித்துக் கொண்டிருந்தன.

சூரிய தேவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. உதயகிரியிலிருந்து புறப்படும் சூரியன் ஜம்பூத்வீபத்தில் பிரகாசித்து ஈசான்யத்தில்  இருக்கும் பரமேஸ்வரனைத்  துதித்து,  அக்னியைப் போற்றி, மற்ற பிதுர்க்களுக்கு ஆசி  வழங்கி , நடுவில் இருக்கும் நாராயணன், பிரும்மா அவர்களை வணங்கி, இந்திரனுடைய அமராவதிப் பட்டணம் மற்றும் தேவர்களின் பட்டணங்களில் சஞ்சாரம் செய்து ஒவ்வொரு திக்குப் பாலகர்களும் வணங்கி வாழ்த்தத் தன் பயணத்தைத் தினமும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.   அதனால்,  அவன் தன்னைப்பற்றியும் தன் பொன்னிறக் கிரணங்கள் பற்றியும் அளவுகடந்த பெருமை கொண்டிருந்தான்.

அவன் கவனம் எப்போதும் எங்கும் சிதறவே சிதறாது. அவனது குதிரைகளும் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து அடி பிறழாமல் அமைதியாகவே சென்றுகொண்டிருக்கும். அவன் தேர்க்கால் படும் இடங்களைச் சுற்றி தேவர்களும் கந்தர்வர்களும், அசுரர்களும், மனிதர்களும் , நாகர்களும், அப்சரஸ்களும் , மற்ற விலங்கு, பறவை , புழு பூச்சி இனங்களும் அண்ணார்ந்து பார்த்து சூரியனுக்கு வணக்கம் சொல்லிவிட்டே செல்வார்கள்! தான் கர்வப்பட்டால் அது தப்பில்லை என்ற எண்ணம் அடிக்கடி சூரிய தேவனுக்குத் தோன்றும். அந்தப் பெருமை அவன் தேஜசை அதிகப்படுத்தியது.  தனக்கு நிகர் என்று சொல்ல யார் இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டே வந்த சூரியனின் கண்கள் திடீரென்று கூசுவதுபோல் ஒரு கணம் தோன்றியது. ‘சே ! சே ! என் கண்களாவது, கூசுவதாவது? நான்தான் மற்றவர்களைக் கூசும்படிச் செய்ய வல்லவன். இது ஏதாவது பிரமையாக இருக்கும்.’  என்று எண்ணினான்.

ஒரு வேளை என் கர்வத்துக்குப் பங்கம் நேரிட, யாராவது தேவ அசுரர்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. மீண்டும் கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பான்.   அப்போது  மறுபடியும் அதேபோன்று   அவன் கண்களை வேறு ஒரு கிரணம்  தாக்குவதை உணர்ந்தான். அது அவன் கண்களை அப்படியே கட்டிப்போட்டது. அதுவும் சில நொடிகள்தான். உடனே அது மறைந்து விட்டது. தன் ஒளிப் பாதைக்கு எதிராக மற்றொரு ஒளி வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அன்றைய தினம் அவன் பயணம் தொடர்ந்தது. அந்தக்  கிரணம் மீண்டும் வரவில்லை. அவன் மனமோ ஒரு நிலையில் இல்லை.

மறுநாள் அந்த  இடத்துக்கு வந்தபோது அதே போன்று கண் கூசும் நிலையை உணர்ந்தான். நிச்சயமாக அங்கு ஏதோ ஒரு தங்கமோ, வைரமோ, ரத்தினமோ மலை வடிவில் புதியதாக தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ணித் தேரை, ஒரு கணம் நிறுத்தி, கண்களை இடுக்கிக்கொண்டு  உற்றுப் பார்த்தான்.

இது தேவதச்சன் விஸ்வகர்மாவின் மாளிகையல்லவா ?  அது என்ன பொன்னால் ஆன தாமரைக் குளமா? அதில் இங்கும் அங்கும்  ஒரு பெண்  நீந்துகிறாளே ?  யார் அவள்? அடேடே ! அவள் தேக காந்தியிலிருந்தல்லவா அந்த ஒளி வருகிறது? என் பொன் கிரணங்களை மங்கச்செய்யும் அளவிற்கு அவள் தேக ஒளி மின்னுகிறதே ? யார் அவள்? 

juhi-parmar-in-shani-serial

சூரியனின் ரதத்தில் பூட்டியிருந்த ஏழு குதிரைகளும் சிலிர்த்துக் கொண்டன – தங்களுக்குள் சிரித்துக் கொண்டன. ரதம் மட்டும் தன் பாதையில் தொடர்ந்து சென்றது. சூரியனின் மனம் மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கும் குமரியின் முதுகுப்புறத்திலேயே தங்கிவிட்டது.

(தொடரும்)

 

நவம்:

எமபுரிப்பட்டணத்தில் அன்றைக்குத் தீபாவளிப் பண்டிகை. தீபாவளிக்கு முந்திய இரவு.

வாட்டசாட்ட கம்பீரத்துடன்  எமன் அட்டகாசமாகத் தன் அரியணையில் அமர்ந்திருந்தான். சித்திரகுப்தனுக்கும் கிங்கரர்களுக்கும்   நன்றாகத் தெரியும். எப்போதும் ஒருவித கோப முகத்துடனேயே இருக்கும் எமன் இன்று சிரித்து மகிழும் திருநாள். நரகபுரி,சொர்க்கபுரி இரண்டின் கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும். அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் அன்று பூலோகத்தைப் பார்க்கும் சந்ததர்ப்பம் கிடைக்கும். அவர்கள் வான வீதிக்கு வந்து அதன் விளிம்பில் நின்று கொண்டு பூலோகத்தில் நடக்கும் தீபத் திருநாளை மனம் திருப்தி அடையும்வரை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

“அதோ விளக்குகளை ஏற்றத்  தொடங்கிவிட்டனர்.பூமி ஜகஜ்ஜோதியாக மின்னுகிறது  பாருங்கள்! “ என்று கிங்கரன் ஒருவன் உரத்த குரலில் கூறினான். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று பூமியில் மக்கள் ஏற்றும் தீபம்  எமபுரிப் பட்டணத்தை நோக்கி  என்பதில் எமன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

“ தலைவரே! எம தீபம் ! எம தீபம் ஏற்றிவிட்டார்கள் ! ” என்று அவன் கணக்கன் சித்திரகுப்தன் கூறியதும் துணைத் தலைவன்  தர்மத்வஜன் அருகிலிருந்த கோட்டை மணியை அடித்தான். உடனே  நரகாபுரியிலிருந்து எண்ணை நிறைந்த கொப்பரையை  ஆயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் தூக்கிக் கொண்டு  வந்தார்கள். சொர்க்கபுரியிலிருந்து  ஆயிரம் அடி  நீளமுள்ள திரியும்  கொண்டுவரப்பட்டது. வழக்கமாக எமன் தன் கையாலேயே அந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவான்.

‘ இன்று ஏன் இன்னும் நம் தலைவர் தீபத்தை ஏற்ற முன்வரவில்லை? நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா? ‘ என்று அனைத்துக் கிங்கரர்களும் தவிக்க, தர்மத்வஜன் முன்வந்து கணீரென்ற குரலில் பேசினான்.

“ எனதருமை எமபுரிப் பட்டணவாசிகளே! நாளை சதுர்த்தசி ! தீபாவளிப்  பண்டிகை ! அதனால் இன்று பூலோகம் முழுதும் எம தீபம் ஏற்றி நம் தலைவரை வாழ்த்தி,  அவர் அருளை வேண்டி  பூஜை செய்கின்றனர். அதனை அங்கீகரிக்கும் வகையில் நாமும் இந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவோம்.  வழக்கமாக நம் தலைவரே  இந்த தீபத்தை ஏற்றி நமக்கெல்லாம் விருந்துகொடுப்பார். ஆனால் இன்று அவர் ஏற்றப்போவதில்லை. இந்த தீபத்தை ஏற்றுவதற்காக முதன் முறையாக நமது மதிப்பிற்குரிய விருந்தாளி ஒருவர் வருகிறார். அதோ அவரே வந்து விட்டார்! அவரை வாழ்த்தி வரவேற்போம்” என்றான் தர்மத்வஜன்.

வாசலில் அழகுத் தேவதையாக நின்று கொண்டிருந்தாள் யமுனா !!

(தொடரும்)

 


  • சூரியனின் பெருமையை உபபுராணமான சாம்ப புராணம் விவரிக்கிறது

 

 

 

 

 

எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ்)

  எமபுரிப்பட்டணம் (தொடர் கதை)

 

Related image

Image result for markandeya painting

விஷ்ணுபுரி – சிவபுரி – பிரும்மபுரி  போல  சாவுத்தேவன் எமனின்  தனி உலகம்  எமபுரி .

அதன் தலைநகர்  எமபுரிப்பட்டணம் .

இறந்தபின் மனிதன் இங்குதான் செல்கிறான். இங்கு வந்தபிறகு அவன் அவள் அது என்று எதுவும் கிடையாது. ஆத்மாதான்.  ஆத்மாவின் தலைஎழுத்தும் உடல் எழுத்தும் படிக்கப்படுகின்றன. ஆத்மா  பூமியில் செய்த நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து அவற்றிற்கேற்ப நீதி வழங்கப்படுகிறது. அதன்படி ஆத்மா  சொர்க்கபுரிக்குச் செல்லலாம். அல்லது நரகபுரிக்குச் செல்லப் பணிக்கப்படலாம். சொர்க்கபுரி – நரகபுரி இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத வேலி உண்டு. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஆத்மாக்கள் சென்று வருவதுண்டு.

எமன் தான் இரண்டுபுரிக்கும் தலைவன் – சர்வாதிகாரி. அவனுக்கு உதவிபுரிய ஒரு பெரும் படையே உண்டு. அவனுக்கு என்று நிறைய சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவன் அழிக்கும் கடவுளான சிவன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டான்.

மார்க்கண்டேயனை உதைத்தவன் இவன்.

சாவித்திரிக்கு வாக்குக் கொடுத்து சத்தியவானைப் பிழைக்க வைத்தவனும் இவன்.

நசிகேதனுக்கு வேண்டும் வரம் கொடுத்தவனும் இவன்.

ஆனால் அதெல்லாம் பழங்கதை. எருமை மாட்டு வாகனம் , பாசக்கயிறு, சித்திரகுப்தன், கிங்கரர் போன்றவையும் பழங்கதைதான்.

இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ?

பூலோகத்திலிருந்து அவனிடம் வரும் அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், மன்னர்கள், சாமானியர்கள் எல்லோரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தத்  தொடர் கதை.

ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும் உண்மையில் அவை அப்படி இருக்கவும் கூடும் .   உண்மையில் எப்படி  இருக்கிறது என்பதற்கு யாரிடமும்  ஆதாரம் கிடையாது.  இது இப்படி இல்லை என்று ஆதாரம் காட்டினால் அது ஏற்றுக் கொள்ளப்படும் .

இன்னொரு முக்கியமான சமாசாரம்.  இது கொஞ்சம் வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது. இது யாருடைய மனத்தையாவது புண்படுத்தினால் கோடிட்டுக் காட்டுங்கள். அப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்படும். அதற்கான முன்கூட்டிய மன்னிப்பை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்! 

எமபுரிப்பட்டணம் –  ஒரு பயங்கரமான தொடர் !  மனபீதி கொள்ளுபவர்கள், பிஞ்சு மனம் படைத்தவர்கள் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக்கொண்டு  படிக்கவும்.

அதற்காக மிகவும் பயப்படத் தேவையில்லை. ஜாலியான பகுதிகளும் கிளுகிளுப்பான பகுதிகளும் அவ்வப்போது   வரலாம்.

Image result for yamadharmarajRelated image

சொர்க்கபுரியில் கிடைக்கும் அமுதத்தைவிட நரகத்தில் கிடைக்கும் மதுவின் சுவைக்காக அங்கு செல்லும் ஆத்மாக்களைக் கண்டு நீங்கள் சிரிக்கலாம்.

நரகபுரியிலிருந்து தப்பிவந்து சொர்க்கத்தில் மறைந்துகொள்ளும் சிலரின் கதை உங்களுக்குக்  கிலியை வரவழைக்கலாம்.

எமபுரியில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களைப்பற்றிப் படிக்கும்போது உங்கள் இலக்கிய ரசனை தூண்டப்படலாம்.

உங்கள் அபிமான நடிகர்களை-  குறிப்பாக நடிகைகளை மீண்டும் சந்திக்கும் போது உங்களுக்குக் குஷியாகவும் இருக்கலாம்.

அரசியல்வாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாகவும்  இருக்கலாம்.

அங்கும் வகுப்பு வாதம்,  மற்றும் வகுப்புக் கலவரமும் நடைபெறும்போது பூமியே மேல் என்று தோணலாம்.

ஒரு புதிய உலகத்துக்குப் புதிய பரிமாணத்தில் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்! அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் ! எதற்கும் வீட்டிலே சொல்லிவிட்டு  வந்துவிடுங்கள்!

இந்த முன்னுரையோடு    எமபுரிப்பட்டணம்  கதைக்குச் செல்ல இன்னும் ஒரு  மாதம் வரை பொறுத்திருங்கள்!

(திகில் ஆரம்பமாகிறது)

எமபுரிப்பட்டணம் (எஸ் எஸ் )

  எமபுரிப்பட்டணம் (தொடர் கதை)

Related image

விஷ்ணுபுரி – சிவபுரி – பிரும்மபுரி  போல  சாவுத் தேவன் எமனின்  தனி உலகம்  எமபுரி .

அதன் தலைநகர்  எமபுரிப்பட்டணம் .

இறந்தபின் மனிதன் இங்குதான் செல்கிறான். இங்கு வந்தபிறகு அவன் அவள் அது என்று எதுவும் கிடையாது. ஆத்மாதான்.  ஆத்மாவின் தலைஎழுத்தும் உடல் எழுத்தும் படிக்கப்படுகின்றன. ஆத்மா  பூமியில் செய்த நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து அவற்றிற்கேற்ப நீதி வழங்கப்படுகிறது. அதன்படி ஆத்மா  சொர்க்கபுரிக்குச் செல்லலாம். அல்லது நரகபுரிக்குச் செல்லப் பணிக்கப்படலாம். சொர்க்கபுரி – நரகபுரிக்கும் இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத வேலி உண்டு. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஆத்மாக்கள் சென்று வருவதுண்டு.

எமன் தான் இரண்டுபுரிக்கும் தலைவன் – சர்வாதிகாரி. அவனுக்கு உதவிபுரிய ஒரு பெரும் படையே உண்டு. அவனுக்கு என்று நிறைய சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவன் அழிக்கும் கடவுளான சிவன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டான்.

மார்க்கண்டேயனை உதைத்தவன் இவன். சாவித்திரிக்கு வாக்குக் கொடுத்து சத்தியவானைப் பிழைக்க வைத்தவனும் இவன். நசிகேதனுக்கு வேண்டும் வரம் கொடுத்தவனும் இவன்.  ஆனால் அதெல்லாம் பழங்கதை. எருமை மாட்டு வாகனம் , பாசக்கயிறு, சித்திரகுப்தன், கிங்கரர் போன்றவையும் பழங்கதைதான்.

இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ?

பூலோகத்திலிருந்து அவனிடம் வரும் அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், மன்னர்கள், சாமானியர்கள் எல்லாரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தத்  தொடர் கதை.

ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும் உண்மையில் அவை அப்படி இருக்கவும் கூடும் .   உண்மையில் எப்படி  இருக்கிறது என்பதற்கு யாரிடமும்  ஆதாரம் கிடையாது.  இது இப்படி இல்லை என்று ஆதாரம் காட்டினால் அது ஏற்றுக் கொள்ளப்படும் .

இன்னொரு முக்கியமான சமாசாரம்.  இது கொஞ்சம் வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது. இது யாருடைய மனத்தையாவது புண்படுத்தினால் கோடிட்டுக் காட்டுங்கள். அப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்படும். அதற்கான முன்கூட்டிய மன்னிப்பை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்! 

எமபுரிப்பட்டணம் –  ஒரு பயங்கரமான தொடர் !  மனபீதி கொள்ளுபவர்கள், பிஞ்சு மனம் படைத்தவர்கள் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு  படிக்கவும்.

அதற்காக மிகவும் பயப்படத் தேவையில்லை. ஜாலியான பகுதிகளும் கிளுகிளுப்பான பகுதிகளும் அவ்வப்போது   வரலாம்.

 

Image result for yamadharmarajRelated image

 

சொர்க்கபுரியில் கிடைக்கும் அமுதத்தை விட நரகத்தில் கிடைக்கும் மதுவின் சுவைக்காக அங்கு செல்லும் ஆத்மாக்களைக் கண்டு நீங்கள் சிரிக்கலாம்.

நரகபுரியிலிருந்து தப்பிவந்து சொர்க்கத்தில் மறைந்துகொள்ளும் சிலரின் கதை உங்களுக்குக்  கிலியை வரவழைக்கலாம்.

எமபுரியில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களைப் பற்றிப் படிக்கும் போது உங்கள் இலக்கிய ரசனை தூண்டப்படலாம்.

உங்கள் அபிமான நடிகர்களை-  குறிப்பாக நடிகைகளை மீண்டும் சந்திக்கும் போது உங்களுக்குக் குஷியாகவும் இருக்கலாம்.

அரசியல்வாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாகவும்  இருக்கலாம்.

அங்கும் வகுப்பு வாதம்,  மற்றும் வகுப்புக் கலவரமும் நடைபெறும்போது பூமியே மேல் என்று தோணலாம்.

ஒரு புதிய உலகத்துக்குப் புதிய பரிமாணத்தில் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்! அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் ! எதற்கும் வீட்டிலே சொல்லிவிட்டு  வந்து விடுங்கள்!

இந்த முன்னுரையோடு    எமபுரிப்பட்டணம்  கதைக்குச் செல்ல அடுத்த மாதம் வரை பொறுத்திருங்கள்!

(திகில் ஆரம்பமாகிறது)