Category Archives: கடைசிப்பக்கம்
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
குவிகம் கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டர்!

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
எலியாயணம்!
அசோகமித்திரனின் ‘எலி’ கதை வாசித்துக்கொண்டிருந்தேன் – சமையலறையில் ‘படார்’ என்ற சத்தம் கேட்டு, ‘விழுந்திருச்சு’ என்று கத்தியபடி புத்தகத்தைப் போட்டுவிட்டு ஓடினேன் – மர எலிப்பொறியின் கம்பிகளுக்குப் பின்னால், புதிதாய் ஜெயிலுக்கு வந்த கைதியைப் போல ’திரு திரு’ என முழித்தபடி ஓர் எலி தன் கூரிய மூக்கால் கம்பிகளைத் துழாவியவாறு நின்றிருந்தது. முகம் முழுதும் மரண பயம் அப்பியிருந்தது!
மேற்பக்கக் கம்பிகளின் வழியே ‘டாப் ஆங்கிள்’ வியூவில், சுமாரான பெரிய எலி, ஆசைப்பட்ட வடையை மறந்து, பரிதாபமாக வெளியேற வழியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது! யாரோ திருமணங்களை எலிப்பொறியுடன் ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது – வெளியிலிருக்கும் எலிக்கு உள்ளே வர ஆசை – வடையின் வசீகரம்!. உள்ளே மாட்டிக்கொண்ட எலிக்கோ வெளியே ஓடி விட ஆசை – ஆனால் வழியில்லை, வடை கூட தேவையில்லை!
வீட்டில் எலிகளின் லூட்டி இரவில்தான் அதிகமாயிருக்கும்! அந்தக் காலப் பரண்கள், நெல் பத்தாயம் என எல்லா இடங்களிலும் புழங்கும் எலிகள், இரவானால், இரையைத் தேடி, வீடு முழுவதும் வித விதமான ஓசைகள் எழுப்பியபடி, வலம் வருவது நம் தூக்கதைக் கெடுப்பது! எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடும்! இரவில் துணி உலர்த்தும் மூங்கில் கோல், பித்தளைத் தாம்பாளம், செய்தித்தாள்கள், பரண், பீரோ காலித் தகர டின்கள், எண்ணெய் ஜாடி என எலிகள் உருட்டும் சத்தம் எந்த ஒரு மர்மப் படத்தின் பின்னணி இசையையும் தோற்கடிக்கக் கூடியது!. மாவு டப்பாக்கள், ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய்த் தூக்குகள் என எல்லாவற்றையும் உருட்டித் தரை முழுதும் மாடர்ன் எண்ணெய்க் கோலங்கள்! விளக்குத் திரிகளை இழுத்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால், கிராமங்களில், இரவில் எண்ணெய் விளக்குகளை அணைத்து விடுவது பழக்கம்! ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்று பாடாத குறைதான்!
சுண்டெலி, வெள்ளெலி (அடிப்பக்கம் மட்டும் வெள்ளையாக இருப்பது – சோதனைக் கூடங்களில் புதிய மருந்தையோ, வாக்ஸினையோ போட்டுக் கொள்ளும் தைரியசாலி – சில ஊர்களில் உணவாகவும் …..), ‘கீச் கீச்’ சென்று குரலெழுப்பும் வீட்டு எலி – மூஞ்சூறு, பெருச்சாளி (பெரிய சைஸ் எலி! சாக்கடை, டிரெய்னேஜ் வாசம், பெரிய மளிகைக் கடை, ஓட்டல்களில் ராவேட்டை!), வயல் எலி, கல்லெலி (தன் வளைகளைக் கற்களால் முடி வைக்கும் உஷாரு பார்ட்டி!) என எத்தனை வகை எலிகள்!
‘சரவெலி’ கொஞ்சம் சுவாரஸ்யமானது – பனை, தென்னை, ஈச்ச மர உச்சிகளில் கூடு கட்டி உயரே வாழ்பவை! இரவில் கீழே இறங்கி இரைக்கு அலையும்போது மட்டும் எல்லா எலிகளையும் போலத்தான் – சில மனிதர்கள் எவ்வளவு உயரம் போனாலும், வாழ்க்கை கீழேதான் என்பதை மறந்து விடுகிறார்கள், இந்த ‘சரவெலி’களைப் போல! (‘இன்னா, தத்துவமா?’ என்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் – தூக்கத்தில் பாதத்தைத் தேங்காய்ப் பத்தையைப் போல வருவும் எலிகள் ஏவிவிடப்படும்!).
சிறிய தலையும், நீண்ட வாலும், சற்றுப் பருத்த வயிறும் உள்ள ‘கொறி’ விலங்கு – பாலூட்டிகள் வகையில் அடங்கும் எலிகள்! உலகத்தின் எலிகளையெல்லாம் ‘கருப்பு எலி’, ‘மண்ணிற (பிரவுன்) எலி’ என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம் என்கிறது கூகிளைக் க்ளிக்கும் ‘மவுஸ்’! எந்தப் பொறியிலும் மாட்டாவிட்டால், பிரவுன் எலி இரண்டு வருடங்களும், கருப்பு எலி ஒரு வருடமும் வாழும் சாத்தியம் உண்டாம்.
எலி பாஷாணம் – எலிகள் கொறிக்கும் உணவுப்பொருட்கள் போலவே இருக்கும் – ஆர்செனிக், சல்ஃபர், கொமாரின் போன்ற பல வகை ரஸாயனக் கலவை – கேக் மற்றும் பேஸ்ட் ஆகக் கிடைக்கின்றன. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஆபத்தானவை, மிக அதிகமான கவனம் தேவை. எலிகள் எங்கோ விஷத்தைத் தின்றுவிட்டு, வேறெங்கோ இறந்து கிடக்கும். உடல் நிலை சரியில்லை யென்றாலும், இறக்கும் தறுவாயில் இருந்தாலும், எலிகள் தங்கள் வளைக்குள் வந்து விடவே விரும்புமாம்.
‘கிரீச்’ எனக்கத்தும் எலிக்கு, வலி அல்லது பயம்தான் காரணமாம் – எதிர்பாராமல் நம் மீது பாயும் எலியைக் கண்டு நாம் கத்துவதற்கும் அதேதான் காரணம்! (வீட்லெ எலி, வெளீலெ புலி க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது!)
எலிப்பொறிகள் எண்ணெய்ப் பண்டங்களை வைத்து எலியைப் பிடிக்க உதவுபவை. மர எலிப்பொறிகளில் உயிருடன் மாட்டிக்கொள்ளும் எலிகள்! இரும்புப் பற்கள் (பீமன் பொறி), தடித்த இரும்பு வளையங்கள் கொண்டு எலிகளைப் பிடிப்பது மனதிற்கு வலியைத் தருவது – இரத்த வெள்ளத்தில் அல்லது இரும்பு வளையத்தில் இறந்துகிடக்கும் எலிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கும்.
பொறியிலிருந்து வெளியே விடப்படும் எலிகள் (சண்டை போடும் பக்கத்து வீட்டு அல்லது எதிர் வீட்டு வாசலில் விட்டு விடுவது பெரிய ராஜதந்திரம் – ‘யூ’ டர்ன் அடித்து, நம் கால்களுக்கிடையே ஓடி, திரும்பவும் நம் வீட்டுக்குள்ளேயே வராத வரையிலும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!), ஓடித் தப்பிக்கலாம்; நாய்களாலோ, பூனைய்களாலோ துரத்திப் பிடிக்கப் (கடிக்க!) படலாம்; செங்குத்தாகப் பறந்து வரும் காக்கையினால் கொத்திச்செல்லப்படலாம்! எலியின் விதியைப் பொருத்தது. வெளியே வரும் எலியை ஒரு சாக்கில் பிடித்து, கண நேரத்தில், துணி துவைப்பதைப் போல சாக்கைத் தரையில் அடித்துக் கொல்வது அராஜகமான கொலைக்குச் சமம்! வயல்களில் எலிகளுக்காகக் காத்திருக்கும் பாம்புகள், தப்பித்து வளைக்குள் ஓடும் எலிகள் – வாழ்க்கைப் போராட்டத்தின் குறியீடுதான்!
நாற்பது வகை வியாதிகளைப் பரப்ப வல்லவை எலிகள்! மழைநீர், உணவுப் பொருட்கள் இவற்றில் கலந்துவிடும் எலியின் சிறுநீர், எச்சல் போன்றவைகளால், எலிக் காய்ச்சல் (leptospirosis), ப்ளேக் போன்ற வியாதிகள் பரவலாக வரக்கூடும்.
ஒருமுறை என் காரில் வேலூர் செல்லும்போது, ஏசி வேலை செய்யவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு, எஞ்சினில் கோளாறு என்று டேஷ் போர்ட் ஸ்க்ரீன் கண் சிமிட்டியது. ஸ்டீரிங் வீல் இறுகிப் போக, வண்டி, மாப்பிள்ளை ஊர்வலக் கார் போல, இஞ்ச் இஞ்சாக நகர்ந்தது. வண்டியை ஓரங்கட்டி, போனில் தொடர்பு கொண்ட சர்வீஸ் டீம், இரண்டு மணி நேரத்தில் வந்து, வலது முன் டயருக்கு உட்புறம் எஞ்சினின் அடிப்பக்கத்தில் சில ஒயர்களை எலி கடித்துத் துண்டாக்கியிருப்பது தெரிய வந்தது! வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, செக்யூரிடி, தேங்காய்த் துண்டுகளை காருக்கருகில் காயவைக்கிறார் என்று – பிறகு என்ன, காரின் அடிப்பக்கத்துக்கு எலி ஸ்ப்ரே, புகையிலைக் கட்டு, வலை என்று ஏக காபந்து!
‘எலிக்கு மரணவலியாம், பூனைக்குக் கொண்டாட்டமாம்’, ‘எலி வளையானாலும் தனி வளை தேவை’, ‘அறுப்பு காலத்தில் எலிக்கு ஏழு பொண்ணாட்டியாம்’, ‘சிங்கம் இளைச்சா, எலி மச்சான் முறை கொண்டாடுமாம்’ – இந்தப் பழமொழிகள் எலிகள் எப்படி நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன என்று சொல்கின்றன!
அசோகமித்திரனின் ‘எலி’ கதையைப் படித்ததால் வந்த எண்ண எலிகள் இந்தக் கட்டுரை – அவசியம் வாசிக்க வேண்டிய கதை ‘எலி’! தி.ஜா. வின் ‘சங்கீத சேவை’ – ஒரு சங்கீத எலியின் மேல் நாட்டு அனுபவத்தைப் பகடி செய்கிறது!
‘எலிப்பத்தாயம்’ (தமிழில் பத்தாயம் என்றால் எலிப் பொறியாம்) அடூர் கோபாலகிருஷ்ணனின் தேசீய விருது பெற்ற மலையாளப் படம்.
உலகின் எல்லா வயதினரும் சிரித்து மகிழும் கார்டூன் –
‘டாம் அண்ட் ஜெர்ரி’! எலியும், பூனையும் அடிக்கும்கொட்டம் விலா நோக வைக்கும் சிரிப்பு – எலியின் சாமர்த்தியமும், சுறுசுறுப்பும்,புத்திசாலித்தனமும்அபாரமாயிருக்கும். இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய வில்லியம் ஹன்னா, ஜோசஃப் பார்பெராபாராட்டுக்குரியவர்கள்!
“சுவாமியால் தான் வாகனத்துக்குக் கெளரவம் – அந்த கெளரவத்தைக் கொடுக்க, மூஞ்சூறுக்கேற்றபடி கனம் இல்லாமல் நெட்டியில் செய்த மாதிரி இருக்கிறாராம் பிள்ளையார். ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறாராம்!” – தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா.
பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடுதனை விளைவிக்கும். ஆதலின் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கிறது. இவற்றை அடக்கி நம்மை ஆட்கொள்பவர் பிள்ளையார் என்பதைப் புலப்படுத்தவே தனது காலின் கீழ் பெருச்சாளியை வத்திருக்கிறார் என்ற ஒரு வியாக்கியானமும் உண்டு!
ஏதோ தம்ப்ளர் உருளுகிற சத்தம் வரவே, கிச்சன் பக்கம் தாவிச் சென்றேன் – டைனிங் டேபிள் மேல், கூடையில் இருந்த ஆப்பிளின் மேல் பக்கம் வருவியிருந்தது – நான் எழுதி முடிக்கும் வரை காத்திருந்ததோ என்னவோ!
ஜெ.பாஸ்கரன்
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
அக்டோபர் 5 ஆம் தேதி திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களின் பிறந்தநாள். வாழ்நாளில் ஒரு மனிதர் இவ்வளவு எழுதிக் குவிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ! பதினாறு வயதில் எழுத ஆரம்பித்த இவர் அறுபத்தி ஐந்து வருடங்கள் – தன் வாழ்நாள் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் – எளிமையாக, சுவாரஸ்யமாக, உண்மையாக, சிரிப்பாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக, இன்னும் விதம் விதமாக எழுதியுள்ளார்.
அந்த நாட்களில், கண்ணதாசனின் வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை வாசிப்பது, என் மனதுக்கு இதமாக இருந்தது. வனவாசத்தில், தன்னை ‘அவன்’ என்று படர்கையில் வரித்துத் தன் சுயசரிதையை, மிகவும் வெளிப்படையாக எழுதியிருப்பார்.
அக்டோபர் 2004ல் நான் வாங்கிய புத்தகம் “அவன்”. கங்கை புத்தக நிலையம் வெளியீடு. எப்படித் தோன்றியது என்பது நினைவில் இல்லை. வாங்கியவுடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது நினைவிருக்கிறது! கண்ணதாசனைப் போலவே ‘அவன்’ என்று படர்கையில் தன் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையை ரா.கி.ர எழுதிய புத்தகம் அது. ‘உத்தியைப் பொறுத்த மட்டில் கண்ணதாசனின் வனவாசம் எனக்கு வழிகாட்டி. ஆனால் உண்மைகளை ஒப்புக்கொள்வதில் அவருக்கு இருந்த தைரியமும், துணிச்சலும் எனக்குக் கிடையாது. அவரது ஒப்பற்ற கவிதை நடையும் எனக்குக் கைவராது’ என்கிறார் தன் முன்னுரையில் ரா.கி.ர.!
1500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும், நகைச்சுவை நாடகங்களும் ‘மட்டும்’ எழுதியுள்ள ரா.கி.ர., ‘இலக்கிய வரலாறு என்று எனக்கு ஏதும் இல்லை’ என்கிறார்! மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன.
அவன் புத்தாத்தின், 334 பக்கங்களையும், தொடர்ந்து வாசிக்க வைக்கும் அற்புதமான எழுத்து அவருடையது. எத்தனை மனிதர்கள், நிகழ்வுகள், அனுபவங்கள் – கையில் பத்து ரூபாய் இல்லாத நேரம், கண்ணதாசனுக்கு அவசரமாக சேலம் செல்ல, தன் கை வாட்சைக் கழற்றிக் கொடுத்ததும், பின்னர் ஒரு நாளில் அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதும் ஒரு சிறுகதை போல சொல்லுகிறார். தந்தை மகோபாத்யாய ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார் முதல் எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., தேவன், டி.கே.சி., ராஜாஜி, எஸ்.ஏ.பி. (நாற்பத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக குமுதத்தில் எஸ்.ஏ.பி. யின் கீழே பணி புரிந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை!), வ.ரா. கி.வா.ஜ., நாடோடி, கண்ணதாசன், வானதி திருநாவுக்கரசு, டைரக்டர் ஶ்ரீதர், மாலன் (அவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்கிறார், இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதற்காக!)வரை அவரது அனுபவங்களின் திகட்டாத தொகுப்பு இந்தப் புத்தகம்.
ரா.கி.ர தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பிக்கிறார். முதல் கதை எழுதியதை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். படிப்பு முடிந்ததும், அண்ணனுடன் சென்னைக்கு வந்து, முதன் முதலாக திரு வாசனை அவர் வீட்டில் சென்று சந்திக்கிறார். வயது பத்தொன்பது இருக்கலாம். “ரொம்பச் சின்னப் பையனா இருக்கியேப்பா, கதையெல்லாம் எழுதுவியா? ஏதாவது இருந்தா எழுதிக் கொண்டு வா, பார்க்கலாம்” என்கிறார் வாசன். தன் தந்தையிடம் சமஸ்கிருதம் படித்த தேவன் அப்போது ஆ.வி.யில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவரிடம் இவர் எழுதிய கதையைக் கொண்டு கொடுக்க, ‘நன்றாக இருக்கிறது, பிரசுரிக்கிறேன்’ என்கிறார். பல மாதங்கள் கழித்து, 1946ஆம் வருடம் திடீரென்று அது விகடனில், ராஜுவின் கார்டூனுடன் பிரசுரமாகிறது! “என் முதல் சிறுகதை, முதன் முறையாக விகடனில் வெளியாகி, நானும் ஒரு எழுத்தாளன் என்று பிறவியெடுத்தது அன்றைய தினம்தான்” என்கிறார் ரா.கி.ர.!
‘சக்தி’ மாத இதழ், ‘காலலச்சக்கரம்’ வார இதழ், ‘ஜிங்லி’ சிறுவர் இதழ், ஆ.வி., ‘குமுதம்’ போன்ற பத்திரிகைகளில், இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ’அண்ணாநகர் டைம்ஸ்’ ‘மாம்பலம் டைம்ஸ்’ போன்ற வட்டார இதழ்களில் வெளியான கட்டுரைகள் ஆறு , ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நாலு மூலை, சும்மா இருக்காதா பேனா, ரா.கி.ர. டைம்ஸ் போன்றவை அதிக அளவில் வரவேற்பையும், வாசிப்பையும் பெற்றவை. நாலு மூலை புத்தகத்தை 2005ல் படித்த போது, இப்படியும் இவ்வளவு விஷயங்களை, இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா என வியந்திருக்கிறேன்.
‘நான் கிருஷ்ணதேவராயன்’ வித்தியாசமாக எழுதப்பட்ட இவரது வரலாற்றுப் புதினம் – அதன் ஆடியோ சிடி ரிலீஸ் ஆழ்வார்ப்பேட்டை ‘டேக்’ செண்டரில் நடந்தபோது, இவரது எழுத்து மற்றும் படைப்புகளின் வீச்சும், இவரது மனிதநேயப் பண்புகளும் அன்று பேசிய எழுத்தாளுமைகளின் மூலம் தெரிய வந்தது.
பட்டாம்பூச்சி, தாரகை, ஜெனிஃபர், டுவிஸ்ட் கதைகள், காதல் மேல் ஆணை போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நன்றி கூறும் நினைவு நாள்” – ரா.கி.ர. டைம்ஸில், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பவர்களைப் பற்றிய, வாசிக்க வேண்டிய சுவாரஸ்யமான கட்டுரை!
ஹாஸ்யக் கதைகள், திக்-திக் கதைகள், கன்னா பின்னா கதைகள் (எல்லாக் கதைகளும், கடிதங்கள் மூலமே சொல்லப்பட்டிருக்கும்!), எப்படிக் கதை எழுதுவது? (கதை எழுதுவதற்கான பல உத்திகளை, கதை போல சொல்லியிருப்பார்) போன்றவை ரா.கி.ர. வின் வித்தியாசமான படைப்புகள்!
குமுதத்தில் ‘லைட்ஸ் ஆன்’, கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’, துக்ளக்கில் ‘டெலி விஷயம்’ போன்றவை மிகவும் பிரபலமான கட்டுரைகள் – இவற்றில் வரும் செய்திகளின் விறுவிறுப்பும், கேலியும், நகைச்சுவையும் ஏராளமான வாசகர்களைக் கவர்ந்திருக்கின்றன! இவை புத்தகமாக வரவில்லையே என்கிற வருத்தம் ரா.கி.ர. வுக்கு இருந்ததாகக் கூறுகிறார் சுஜாதா தேசிகன்.
சிறுவாணி வாசகர் மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘ரா.கி.ர. டைம்ஸ்’ ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு. அதில் “Disciplined, Beautiful writing என்று தொடங்கி, ‘ரா.கி.ர.வின் எழுத்தின் ரசிகன். சென்னையில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம், முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்து,’ ராட்சஸன்யா நீ’ என்று பாராட்டும்போது, அதில் துளிக்கூடப் பொறாமை இருக்காது. காரணம், அவரே ஒரு சக ராட்சஸர்” என்று சுஜாதா பாராட்டுகிறார்.
“தேவை பழி போட ஒரு ஆள்’ கட்டுரையில்:
தன் மீதுதான் தப்பு என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் கொண்ட தலைவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒருவர்தான். உலகமெங்கும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டவர் அவர் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதின் மூலம். இந்தியாவுக்கு என்றுமே நண்பராக இருந்தது கிடையாது. அவருடைய மேஜையின் மீது, ’The buck stops here’ என்று ஒரு பலகையில் எழுதி வைத்திருந்தார். ‘எல்லாப் பழியும் என் தலைமீதுதான் விடியும்’ என்பது அதன் பொருள்.
“வாரீர் பிரார்த்தனை செய்வோம்” கட்டுரையில்:
டோரதி ஹோகன் என்ற பெண்மணி தன் தாயைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றில் “அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருந்தாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் – என்றைக்கு என்னைப் பெற்றெடுத்தாயோ அன்று தொட்டு, உன் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை, தியாகங்களையும், வேதனைகளையும், தனிமைகளையும், கண்ணீர்களையும், விரக்திகளையும் நீ தன்னலமற்றுத் தாங்கிக் கொண்டதிற்காக. (ஆதி சங்கரரின் ‘மாத்ரு பஞ்சகம்’ நினைவுக்கு வந்தது – அவர் எழுதிய உணர்ச்சிகளைக் கொட்டும் ஒரே ஸ்லோகம் – தன் அம்மாவைப் பற்றியது.)
“தன்னம்பிக்கை வளர” கட்டுரையில்:
ஒரு குட்டிக் கதை: சத்திரத்தில் படுத்திருந்த ஒருவன், தன் அருகே படுத்திருந்தவனிடம் ‘நான் இரண்டு பெண்டாட்டிக்காரன்! ஆஹா, என்ன ஆனந்தமான வாழ்க்கை!’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்.
மற்றவனுக்கு அதைக் கேட்டு ஆசை ஏற்பட்டது. ஊருக்குப் போய் இரண்டு பெண்களை மணந்தான். ஆனால் வாழ்க்கை துன்ப மயமாயிற்று. நரக வேதனை தாளாமல், சத்திரத்துக்குத் திரும்பி வந்தான். அங்கிருந்தவனிடம், ’உன் பேச்சைக் கேட்டு நான் படாத துன்பமில்லை. எதற்காக என்னிடம் பொய் சொன்னாய்?’ என்று கோபித்தான்.
‘ரொம்ப நாளாய் நான் ஒண்டியாகவே இங்கே கிடக்கிறேன். ஒரு துணை இருந்தால் நல்லது என்று தோணியது.’ என்றான் அந்த மாஜி இரண்டு பெண்டாட்டிக் காரன்.
ஆழ்ந்து, விரிந்த வாசிப்பும், நகைச்சுவை கலந்த எழுத்து நடையும், புத்திசாலித்தனமான செய்தி விவரணைகளும் ரா.கி.ர. வின் படைப்புகள் எங்கும் விரவியிருக்கும். நாலு மூலை, ரா.கி.ர டைம்ஸ் வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்புகள்.
ஜெ.பாஸ்கரன்.ச்ர்
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
லண்டன் ‘கண்’ணும், மகாபலிபுரமும்!
டூரிஸம் (Tourism) என்பதற்கு – ஓரிடத்திற்கு விடுமுறைப் பயணம் / சுற்றுலாச் செல்வோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரும் மற்றும் சேவைகள் வழங்கும் வாணிகத் தொழில்; சுற்றுலாத் தொழில் – என்று விளக்கம் தருகிறது கூகிள் சாமி. சமீபத்தில் பதினோரு நாட்கள் லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தரிசித்து விட்டு வந்த (சில இடங்களில் வெறும் கோபுர தரிசனம் மட்டும்!) போது, மேலை நாடுகளில் சுற்றுலாவுக்கும், அதற்கு வரும் வேற்று நாட்டவர்களுக்கும் அங்கு செய்து தரப்படும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இவற்றை விட இன்னும் சிறப்பான, அழகிய சுற்றுலாத் தலங்கள் நம் ஊரில் இருப்பதே பலருக்குத் தெரியாது – இவற்றை நல்ல முறையில் பராமரித்து, வசதிகளையும், வாய்ப்புகளையும் உயர்த்தி, அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்கலாம்!
ஆகஸ்ட் 18 காலை ஏழு மணிக்கு லண்டன் வெம்ப்ளேயின் ‘ibis’ ஓட்டலில் காலை உணவு முடித்து – பிரட், பன், கேக், பழங்கள், கார்ன் ஃப்லேக்ஸ், பால், காபி – எங்கள் பிரத்தியேகமான வால்வோ பேருந்தில் கிளம்பினோம். அன்று லண்டன் லோக்கல் டூர். 27 வருடங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் லண்டன், அதிகம் மாறவில்லை – சாலையோர ‘பப்’களும், புகை பிடிக்கும் தொப்பிக்காரர்களும், போர்டு எழுதி வைத்து, கெளரவமாகப் பிச்சை கேட்பவர்களும் மாற விரும்பவில்லை!
லேசான தூறல்களுடன் நீஸ்டனில் உள்ள மிகப் பெரிய ‘சுவாமிநாராயணா’ கோவிலுக்குச் சென்றோம். சன்னதிகளும், தியான மண்டபங்களும், கலை நயமிக்கத் தூண்களும் இத்தாலியன் மார்பிளில் இழைத்திருக்கிறார்கள் – அங்கிருந்த செக்யூரிடிகளும், போட்டோ, வீடியோ தடைகளும் தேவைதான் என்று நினைத்தேன்.
அங்கிருந்து, உலகப் பிரமுகர்கள் எல்லாம் மெழுகாக நிற்கும் Madame Tussaud – மெழுகு மியூசியம் சென்றோம். உள்ளுக்குள்ளேயே குட்டி கார்கள், ரயில் வண்டி போல் இணைக்கப்பட்ட ஊர்தியில், இங்கிலாந்தின் சரித்திர நிகழ்வுகளைக் கண்டவாறே – பயமுறுத்தும் லைட்டிங் மற்றும் இசை கூடவே வருகிறது! – வந்தோம். மோடிக்கு வணக்கம், மர்லின் மன்றோவுடன் போட்டோ என திரும்பிய இடமெல்லாம் வி ஐ பி க்கள். தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு நின்ற பெண்ணைக் கடந்து விட, திரும்பி ‘சாரி’ என்றேன் – திரும்பாமல் காமிராவினுள் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த உடையுடுத்திய மெழுகு பொம்மை!
மதியம் லண்டன் சரவணா பவனில் சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினோம்! மசால்தோசையுடன் ஸ்பூன் ஃபோர்க் சகிதம் சண்டையிட்டுக்கொண்டிருந்த வெள்ளைக் காரிக்கு நாக்கு நீளம்!
வெஸ்ட்மின்ஸ்டர் சிடியில் பக்கிங்ஹாம் அரண்மனை, தேம்ஸ் நதி மேல் கட்டப்பட்டுள்ள டவர் மற்றும் லண்டன் பிரிட்ஜ் (இந்தப் பாலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது – பிறக் ஒரு வியாசத்தில் பார்ப்போம்!), ட்ரஃபால்கர் ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ், செயிண்ட் பால்ஸ் சர்ச், கிரீன் பார்க் எல்லாவற்றையும் ‘கோபுர தரிசனமாய்’க் கண்டோம்.
“லண்டன் ஐ” (LONDON EYE), உண்மையிலேயே லண்டன் முழுவதையும் பார்க்கும் கண்தான்! நம்ம ஊர் ஜயண்ட் வீல் (பொருட்காட்சிகளில் வண்ண வண்ணக் குழல் விளக்குகளுடன் சுற்றுமே) மாதிரி – ஆனால் அதைப்போல் பல மடங்கு உயரமானது! ஐரோப்பாவின் மிக உயரமான ஜயண்ட் வீல் – 135 மீட்டர் உயரம். 1999 ல் கட்டப்பட்டது. 32 கண்ணாடிக் கூண்டுகள் – ஒரு முழு சுற்றுக்கு, ஆகும் நேரம் 30 நிமிடங்கள் – மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்க, அப்படியே ஏறிக் கொள்வதும், இறங்குவதும் எளிது! மேலே செல்லச் செல்ல, தேம்ஸ் நதி, ஓடை போல் இளைக்க, குறுக்கேயுள்ள பாலங்கள், கோடுகளாய்த் தெரிய, வாகனங்கள் சிறு பூச்சிகளாய் ஊர்ந்து செல்ல, மனிதர்கள் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தனர். கூண்டுக்குள் இருந்து, கீழே ‘பென்’ என்னும் மணிக்கூண்டு, சர்ச், வானுயரக் கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் மினியேசர் வடிவில் சிறுத்து, நம் வீட்டு கொலுவின் பார்க் போலத் தெரிந்தன! 25 கி மீ சுற்றளவுக்குப் பார்க்கமுடிகிறது. இதன் மறு பெயர் “கொக்ககோலா லண்டன் ஐ”! வருடத்துக்கு 3.75 மில்லியன் உல்லாசப் பயணிகள் இந்தக் கண்ணைக் கண்டு களிப்பதாக ஒரு செய்தி கூறுகிறது!
சரி, ஒரு நாள் லண்டன் டூருக்குப் போதாது. ஆனால் ஒரு நாளில் பார்த்த இடங்களுக்கும், கேட்ட செய்திகளுக்கும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் – டூரிஸம் டெவலப்மென்ட் – நம்மை வியப்பிலாழ்த்துகிறது. எதிலும் ஓர் ஒழுங்கு, நேர நிர்ணயம், பாதுகாப்பு, சின்ன சின்ன விபரங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் – நம்மால் ஏன் முடிவதில்லை என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
சமீபத்தில் பிரதமர் மோடியும், சீனாவின் பிரசிடெண்ட் Xi Jinping அவர்களும் மகாபலிபுரம் கடற்கரை குடைவரைக் கோயில்களைப் பார்த்துப் பின் இரு நாடுகள் இடையே நல்லிணக்கம், வணிகம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். டெரரிஸம் பற்றிப் பேசியவர்கள், டூரிஸம் பற்றிப் பேசியிருப்பார்களா தெரியவில்லை!
அதுவல்ல இப்போது நான் சொல்ல வந்தது – சாதாரண நாட்களில் நாம் பார்க்கும் மகாபலிபுரத்துக்கும், இந்த வாரம் நாம் பார்த்த மகாபலிபுரத்துக்கும் இருந்த வித்தியாசம் – நம்மாலும் முடியும்தானே? டூரிஸம் செழிக்க, நம் ஊரையும் எல்லோரும் வியக்கும்படி பராமரிக்க முடியும்தானே? ஏன் செய்வதில்லை?
மேலை நாடுகளுக்கு இணையான, அதை விட மேன்மையான சுற்றுலாத் தலங்கள் நம் இந்தியாவிலும் உண்டு – சுற்றுலாப் பயணிகளுக்கேற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றவோ, பராமரிக்கவோ நமக்குத் தெரிய வில்லை அல்லது மனமில்லை! வருத்தம்தான் மிஞ்சுகிறது.
பல திரைப்படங்கள் எடுத்த, எடுக்கின்ற ‘யூனிவர்சல் ஸ்டூடியோஸ்’ சிறப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது.
நம்ம ஊர் கலை வளர்த்த ஸ்டூடியோக்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உஷ்ணக் காற்றை உமிழ்ந்த வண்ணம் நாம் கடந்து வந்த கலாச்சாரப் பாரம்பரியங்களை மறந்து விட்டன.
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
(அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மட்டுமல்ல – உலக காபி தினமாமே?)
கொஞ்சம் காபி குடிக்கலாம், வாங்க!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் ஆடு மேய்க்கும் சிறுவன் அதிசயிக்கும்படி அவனது ஆடுகள் துள்ளிக் குதித்து, மகிழ்வுடன் ஆடிக்கொண்டிருந்தன! அருகே இருந்த புதரில் நல்ல சிவப்பு நிறத்தில் காய்த்திருந்த ‘பெர்ரி’ பழங்களைத் தின்றதினால்தான் இந்தப் பரவசம் என்பதை அறிந்தான் ‘கால்டி’ என்ற அந்தச் சிறுவன்! தானும் சிறிது தின்றபோது, ஏற்பட்ட புத்துணர்ச்சி வித்தியாசமாக இருக்கவே, தன் மதகுருமார்களிடம் அவற்றைக் கொண்டு கொடுத்தான். இது ஏதோ சைத்தான் வேலை என்று அஞ்சிய குருமார்கள், அந்தக் காய்களை அருகிலிருந்த நெருப்புக் குண்டத்தில் வீசினர். அதிலிருந்து எழுந்த வாசனை அவர்களை மீண்டும் ஆட்கொண்டன! தீயில் வறுத்து, தண்ணீரில் பாதுகாத்தனர். சைன, ஜப்பானியத் துறவிகளின் தேனீர் பானம் போல, தங்கள் பிரார்த்தனைகளின் போது விழிப்புடன் இருக்க இப்பானத்தை அருந்தத் தொடங்கினர் – பின்னர் படிப்படியாக, காபிக்கொட்டைகளை வறுத்து, கொதிக்கும் நீரில் ஊற வைத்து மணமான டிகாக்ஷன் தயாரிப்பது வந்தது –
கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வந்த ‘ப்ளாக்’ காபி, இன்று பால், சர்க்கரையுடன் சேர்ந்து, வீதிக்கு வீதி ‘கும்மோணம்’ பில்டர் காபியாகி, வாழ்க்கையின் முக்கியமானதொரு அங்கமாகி விட்டது வரலாறு!
காலையில் டைனிங் டேபிளிலோ, பால்கனியில் தொங்கும் மூங்கில் கூடையிலோ, ஹாலில் ஆடும் ஊஞ்சலிலோ, சினிமாக்களில் வருவதைப்போல் வீட்டுக்கு முன்னிருக்கும் புல்தரையிலோ காபி அருந்துவது சுகம் – உடன் அன்றைய சூடான செய்திகளுடன் பேப்பரும் இருந்து விட்டால் இரட்டிப்பு சுகம்! (எதிரில் மனைவியும் இருப்பது காபி தயாரித்தது யார் என்பதைப் பொருத்தது!).
சின்ன வயதில், காபி வாசனையோ, தண்ணீர் கொதிக்கும் சத்தமோ கேட்டால்தான் காலையில் படுக்கையிலிருந்து எழும்பத் தோன்றும்! அம்மா எப்போதும் ப்ளாண்டேஷன் ஏ, பீபெரி (தட்டைக் கொட்டை, குண்டுக்கொட்டை) இரண்டையும் கலந்துதான் உபயோகிப்பாள் – சிக்கிரி எப்போதும் கிடையாது. நல்ல நிறம், மணம், சுவை இவற்றுக்கு இந்த காம்பினேஷனே சரி என்பது அவள் அனுபவம்!
பாண்டிபசாரில் நரசுஸ் காபி, பாண்டியன் காபி அப்போதெல்லாம் பிரசித்தம். முதல் நாள் மறந்து விட்ட சில நாட்களில், மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று, பாண்டியன் காபிப்பொடி வாங்கியிருக்கிறேன்! ஊதுவத்தி மணத்துடன் மதுரை மீனாட்சி சிரித்திருக்க, எவர்சில்வர் சம்புடத்திலிருந்து கரண்டியால் ஏ மற்றும் பீ பொடிகளைக் கலந்து, பாண்டியன் காபி என்று ப்ரிண்ட் செய்த திஸ்யூ பேப்பர் கவரை வாயால் ஊதித் திறந்து, பொடியைக் கரண்டியால் லாவகமாக உள்ளே இட்டு, மேஜையின் மேல் இரண்டு தட்டு தட்டி, அந்தக் கால வெக்டர் வேயிங் மெஷினில் நிறுத்து, பையின் வாயினை இரண்டு மடி மடித்து, பசையுள்ள பிரவுன் கலர் காகித நாடாவால் ஒட்டி, சூடாகக் கொடுக்கும் காபிப்பொடிக்கு வீட்டில் வரவேற்பு அதிகம்!
நாக்கு நீளமான சில பெரிசுகளுக்கு, வீட்டிலேயே அரைக் கைப்பிடி (‘ஸ்ராங்கா’ என்பது தோராயமாக ஒரு கைப்பிடியில் பாதி அளவு!) பச்சைக் காபிக் கொட்டையை வறுத்து – அதிகம் கருக்க விடாமல், சிறிது பொன்னிறத்தில் – கை மெஷினில் (மினியேச்சர் காபி அறவை மெஷின்), கைப் பிடியைக் கரகரவென்று சுற்றி, அதன் மூக்கின் வழியே விழும் புத்தம்புது வாசனையுடன் காபிப் பொடியில் பில்டரில் டிகாக்ஷன் இறக்கி, புதுப் பசும்பாலில் கலந்து, நுரையுடன் சூடாகக் குடிக்கும் காபியைத் தவிர வேறு எதையும் காபி என்று ஒத்துக்கொள்ள மனம் வராது!
பில்டரில் டிகாக்ஷன் இறக்குவது ஒரு கலை! தேவைக்கேற்ப காபிப்பொடியைப் போட்டு சிறிது இதமாக அமுக்கி அதன் மேல் சிலர் சிறிய ஜாலி மூடி ஒன்றை வைப்பார்கள் – என் அம்மா, தினசரி காலண்டரிலிருந்து ஒரு தேதி ஷீட்டைக் கிழித்து, பில்டரில் காபிப் பொடி மேல் போட்டு அதன் மேல் கொதிக்கும் நிரை விடுவாள் – அதையும் நேராக வேகமாக விடாமல், மெதுவாகச் சுற்றியபடியோ அல்லது முன்னும் பின்னுமாகவோ விடுவது ‘ஸ்ட்ராங்’ டிகாக்ஷனுக்கு உத்தரவாதம்! கோபத்துடன் வேகமாக சுடுநீரை விடுவது, பில்டரின் தலையில் தட்டுவது இவையெல்லாம் ‘கொட கொட’வென தண்ணீராய் இறங்கும் டிகாக்ஷனுக்கு வழி வகுக்கும் – நல்ல காபிக்கு உதவாது!! இந்தத் தொல்லைகளிலிருந்து ஓரளவுக்கு விடுதலை கொடுப்பவை இப்போது புழக்கத்திலுள்ள ‘காஃபி மேக்கர்’ என்னும் பில்டர்!
பசும்பாலோ, எருமைப்பாலோ, கறந்த பாலோ, கவர்ப் பாலோ – காபியின் சுவையை மாற்றும் வல்லமை கொண்டவை இவை – நன்கு காய்ச்சி, பொன்னிறம் வரும் அளவுக்கு காபி டிகாக்ஷனைச் சேர்த்து, சர்க்கரையும் (கொஞ்சம் குறைவாக இருந்தால் நல்லது – அடிநாக்கில் காபியின் கசப்பு சிறிது நேரத்துக்கு இருப்பது காபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!) சேர்த்து, இரண்டு முறை நுரை வர ஆற்றி, டபரா தம்ப்ளரில் கொடுக்கப் படும் காபிக்கே என் ஓட்டு!
டீத்தண்ணீர் போல நீர்த்திருக்கும் டிகாக்ஷன், ப்ளாஸ்டிக் வாடையடிக்கும் கவர் பால், டயபெடீஸ் என்று சர்க்கரைக்குப் பதிலாய் சேர்க்கப்படும் ஈக்வல் – இவை நல்ல காபிக்கு விரோதிகள்!
இடம், நேரத்திற்கேற்றார்போல் வித விதமாக அவதாரம் எடுக்கும் காபி! – கல்யாண காபி, ஓட்டல் காபி, டீ ஸ்டால் காபி, சினிமா தியேட்டர் எஸ்பிரஸோ காபி, அவசரத்துக்கு வரும் இன்ஸ்டண்ட் காபி, பாலில்லா பிளாக் காபி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மற்றும் விமானங்களில் தரப்படும் பிரவுன் கலர் காபி என்ற வஸ்து , நிறம், மணம் இல்லா சுடுநீருக்கிணையான ரயில்வே காபி, கிலோமீட்டருக்கு ஒன்றென முளைத்திருக்கும் ‘கும்பகோணம் டிகிரி காபி’ கடைக் காபிகள் – (‘இதுதான் முதலில் வந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி ஷாப்’ என்றவரின் கடையில் காபி குடித்து வெளியே வந்து, போர்டில் பார்த்தால், உரிமையாளர் உம்மர் பாய் என்றிருந்தது!)
உலகில் பெட்ரோலுக்கு அடுத்து அதிக டிமாண்டில் இருப்பது காபிதான்!
காலை ஐந்தரை மணிக்கே திநகர் கீதா கபேயில் நல்ல காபி கிடைக்கும் – முக்தா ஶ்ரீனிவாசன், தமிழ்வாணன், உபால்டு, ஆரூர்தாஸ் போன்றவர்களைக் காலை வேலையில் கையில் அன்றைய பேப்பருடன் – காலைக் காபிக்கு இங்கு வருவதைக் காணலாம்!
“தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காப்பியைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம்” – ஏ.கே.செட்டியார், குடகு, சென்னை, 1967.
இரண்டு நண்பர்கள் சந்தித்தாலும், சிநேகிதியுடன் கடலை போடும்போதும், நடைப் பயிற்சி முடிந்த பிறகும், பெரிசுகள் பழங்கதை பேசும்போதும் காபியும் ஒரு பாத்திரமாக மாறி வாழ்க்கையுடன் இணைந்துவிட்டது என்பதே உண்மை!
வாழ்க காபி ரசிகர்கள்!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
தமிழ்வாணன் – பன்முக வித்தகர்!
தமிழ் வளர்த்த சான்றோர் 59 வது நிகழ்வில், வ.வே.சு அவர்கள் உரையாடியது லேனா தமிழ்வாணனுடன் – பேசப் பட்ட சான்றோர் திரு தமிழ்வாணன் அவர்கள்! ‘துணிவே துணை’, ‘Master of all subjects’ போன்ற வரிகளுக்குச் சொந்தக்காரர், சுதந்திர இந்தியாவில், எளிய தமிழ் மக்களிடையே, பொது அறிவு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். 52 வயதில், 500 புத்தகங்களை எழுதியவர். தனக்காகத் தனி பிரசுரம் ஆரம்பித்தவர்.
இன்றைய அறுபது வயது இளைஞர்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் சொல்வது “ நான் தமிழ்வாணனின் தீவிர வாசகன் / கி” . அறுபதுகளிலேயே ஆறு லட்சம் பிரதிகள் கண்டது கல்கண்டு! சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த துணுக்குச் செய்திகள், அரசியல், சினிமா, மருத்துவம் (இயற்கை வைத்தியம்), ஆன்மீகம், ஜோதிடம், உலகப் பார்வை, கட்டுரைகள், துப்பறியும் நாவல்கள், பாலியல் விழிப்புணர்வு என ஒரு பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தையும், பொது அறிவையும், 32 பக்கங்களில் தாங்கிவரும் ‘கல்கண்டு’, முற்றிலும் தமிழ்வாணன் என்ற தனிமனிதனின் சிந்தனையிலும், உழைப்பிலும் உருவான வார மலர்!
ஜிப்பா, வேட்டி, ஜோல்னாப்பை என்ற எழுத்தாளர்களின் பழமையான உடைகளை மாற்றி, தன் எழுத்துக்களைப் போலவே புதுமையாக, பேண்ட், சர்ட், கருப்புக் கண்ணாடி, ஆங்கிலேயரைப் போன்ற தொப்பி என அணிந்து வலம் வந்தவர். எங்கிருந்தும் போஸ்ட் கார்டில் வெறும் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும் வரைந்து அனுப்பினால், அந்தக் கார்டு சென்னை தியாகராய நகர் மணிமேகலைப் பிரசுரம் வந்தடைந்து விடும் என்பது, தமிழ்வாணனின் உடை நாகரீகத்தின் அங்கீகாரம்!
கலைக்காக வாழ்பவன் ‘கலைவாணன்’, இசைக்காக வாழ்பவன் ‘இசைவாணன்’, தமிழுக்காக வாழ்பவன் ‘தமிழ்வாணன்’ எனப் பொருள் சொல்லி, இராமநாதனாக இருந்தவருக்குத் ‘தமிழ்வாணன்’ எனப் பெயர் சூட்டியவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்!
‘கற்கண்டு’ என்பதுதானே சரியான தமிழ் – ‘கல்கண்டு’ எனப் பிழையாகப் பெயர் சூட்டியிருக்கிறாறே என்று கேள்வி எழுப்பிய தமிழ் ஆர்வலர்களிடம், மு.வ. அவர்கள், ‘தமிழில் பிழை செய்ய மாட்டார் தமிழ்வாணன்; அவரையே கேட்டு வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறார். தமிழ்வாணன் கொடுத்த விளக்கம் முற்றிலும் வித்தியாசனமானது! ‘கல்’ என்றால் ‘படி’, ‘கண்டு’ என்றால் ‘பார்த்து’ – கல்கண்டு என்றால் ’பார்த்துப் படி’ என்றுதான் சொன்னேனே தவிர, இது கற்கண்டு என நான் சொல்லவில்லையே என்றராம்!
‘எழுத்து என்பது பொழுதுபோக்கிற்கு அல்ல, வாழ்க்கைக்குப் பயன்பட’ என்பதில் உறுதியாய் இருந்தவர் தமிழ்வாணன். 46 ல் ‘அணில்’ அண்ணாவாகக் குழந்தைகளுக்கு எழுதியவர் (ஜில் ஜில் பதிப்பகம்)! கருத்துச் சிந்தனைகளையும், வாழ்வு முன்னேற்ற சிந்தனைகளையும் கொடுத்தவர், குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான எழுத்துக்களிலும் வயதிற்கேற்ற முன்னேற்றக் கருத்துக்களைக் கொடுத்து, அவர்கள் சிந்தனா சக்தியையும் வளர்த்தவர்!
‘நூறு ஆண்டுகள் வாழ்வதெப்படி’ என்ற நூலை எழுதியவர், 51 ஆண்டுகளே வாழ்ந்தாலும், 100 ஆண்டுகள் வாழ்பவர்கள் செய்யும் சாதனைகளைப் படைத்தவர் தமிழ்வாணன். ஜோதிடம், நாடகம், திரைப்படம், மருந்து, பல்பொடி தயாரிப்பு என பல்துறைகளிலும் இறங்கி, உழைத்து உயர்ந்தவர். சக எழுத்தாளர்கள் சைக்கிளுக்குக்கூட வழியற்ற காலத்தில், காரில் பவனி வந்தவர் தமிழ்வாணன்!
அரசியலில் புகழின் உச்சத்தில், அசைக்கமுடியாத இடத்தில் இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ம.பொ.சி போன்றவர்களுடன் நட்புடன் இருந்தாலும், கொள்கைகளில் தவறு கண்டபோது, துணிந்து அவர்களை எதிர்க்கவும் செய்தார். அவருடைய கேள்வி பதில்களைப் படித்தாலே புரியும் அவருக்குத் துணை, ‘துணிவு’ மட்டுமே என்று! உதாரணத்துக்கு ஒன்று:
‘ஜனநாயக ஆட்சி என்பது என்ன?’
‘ஓர் ஊரில் மொத்தம் 100 பேர்கள். இந்த 100 பேர்களுள் 49 பேர்கள் அறிவாளிகள்; 51 பேர்கள் மூடர்கள், என்றாலும் அந்த 49 பேர்களையும் இந்த 51 பேர்கள்தாம் ஆள வேண்டும். இதுதான் ஜனநாயக ஆட்சி! அறிவு உள்ளவர்களைக்கூட, அறிவில்லாதவர்கள் ஆள ஜனநாயகத்தில் இடம் உண்டு!
முதன் முதலில் எம் ஜி ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டம் கொடுத்தவர் தமிழ்வாணன் – பின்னர் தமிழக அரசியல், திரை உலகங்களில் ஏராளமான திலகங்கள்!
நன்றி மறவாதவர் தமிழ்வாணன் – முதலில் ஒரு பிரசுரம் துவக்கத் தன் நகைகளைக் கொடுத்த தன் மனைவியின் பெயரிலேயே ‘மணிமேகலைப் பிரசுரம்’!
தேன்மொழி, மணிமொழி, நல்ல நாயகம், பூவேந்தன், அமுதா,வெற்றிவேலன், நெடியோன், சொல்லழகன், மலர்விழி எனத் தமிழ்ப் பெயர்களையே தன் கதாபாத்திரங்களுக்குச் சூட்டிய தமிழ்வாணன், துப்பறியும் கதாநாயகனுக்கு ‘சங்கர்லால்’ எனப் பெயரிட்டதேன்? என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. ‘சர் ஆர்தர் கானண்டாயலின் படைப்பான ஷெர்லாக்ஹோம்ஸ் போல ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது?’ என்ற யோசனையை, கேரள வாசகர் ஒருவர் கூற, ‘இது ஒரு மில்லியன் டாலர் யோசனை’ என மகிழ்ந்து, ‘சங்கர்லால்’ துப்பறிகிறார் எனத் தொடர்கள் எழுதினார் – யோசனை சொன்ன வாசகரின் பெயர் ‘சங்கர்லால்’! தமிழ்வாணனின் நன்றியுணர்வின் வெளிப்பாடு இது.
தேநீர் (தேன் போல் இனிக்கின்ற நீர், தேயிலையிலிருந்து வந்த நீர்), காரோட்டி, மயிரிழை என்பதற்கு பதில் நாகரீகமான நூலிழை, என தமிழ் வார்த்தைகளை பழக்கத்திற்குக் கொண்டுவந்தார்! மொழி வெறியைத் தூண்டுவதாகவோ, கெட்ட செய்திகளையோ எழுதுவதைத் தவிர்த்தவர். ‘ரிக்ஷா’ – மனித சக்தியால் ஓடும் வாகனம் (ஜப்பானிய மொழி), ‘தோசை’ – புளித்த தோய்ந்த மாவில் செய்தது – ‘தோயை’ என்பது ‘தோசை’ என மருவியது- இது போன்ற பல விளக்கங்கள் தமிழ்வாணன் அறிமுகம் செய்திருக்கிறார்.
ஒரு தேனியைப்போல், கன்னிமாரா நூலகம், நியூஸ் வீக், டைம்ஸ், டிட்பிட்ஸ், அமெரிகன் நூலகம் என பல இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்து, எளிமையாய் மொழிபெயர்த்து, எல்லோரும் ரசித்து, வாசித்துப் பயன்பெறும் படி, தன் கல்கண்டில் வெளியிட்டவர் தமிழ்வாணன்!
முதன் முதலாகத் தன்னையே கதாநாயகனாக வைத்து எழுதியவர்! ‘ராகி’ ஓவியருடன் படக்கதைகளுக்கு உயிரூட்டியவர்!
தன்னுடைய மூன்று விரோதிகளாக அவர் குறிப்பிடுபவர்கள்: 1. என் நேரத்தை வீணாக்குபவன். 2.கைமாற்று கேட்பவன். 3.என்னை நேரில் புகழ்பவன்! தேவையில்லாமல் ‘சும்மா’ பார்க்க வருபவர்களைத் தவிர்க்க அவர் தரும் அறிவுரை -“கையில் ஒரு ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, நன்கொடை கேளுங்கள்!”.
தமிழ்வாணனின் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல – துணிவானவை, தூரப் பார்வை கொண்டவை, சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை! உங்களை ஒரு பத்திரிகை தாக்கி எழுதுகிறதே, நீங்கள் ஏன் திருப்பித் தாக்குவதில்லை? என்ற கேள்விக்கு, ‘நாய் நம்மைக் கடிக்கலாம். ஆனால், நாம் நாயைத் திருப்பிக் கடிக்கலாமா? நான் கட்சி சார்பற்றவன். எது உண்மையோ அதை மட்டுமே நாட்டிற்குச் சொல்லுகிறேன்.’ என்று பதில் சொல்கிறார். கேள்வி: “திருக்குறளில் பிடித்த குறள்கள் எத்தனை?” அவர் பதில் “1330”. மன அமைதி எப்போது கிடைக்கும் ? “ஒரு வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பதில் கிடைக்கும்!”
1948 முதல் 1977 வரை, 29 ஆண்டுகள், தன் எழுதுக்களையே தன் சொத்தாக எண்ணி, மறையும் வரை கல்கண்டு ஆசிரியராகத் துணிவையே துணையாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்வாணன்.
அசோகமித்திரன் தன் இரங்கலில், “ அவரது மறைவில் தமிழ் பத்திரிகை உலகம் ஒரு ஒருநிமிடம் ஸ்தம்பித்துப் போனது. இன்னொரு எம்ஜிஆர் சாத்தியமாகாதது போல், இன்னொரு தமிழ்வாணனும் சாத்தியமில்லை “ என்று எழுதுகிறார். உண்மைதான்!
(தமிழ் வளர்த்த சான்றோர் நிகழ்வில் தமிழ்வாணன் பற்றி வ வே சு வும், லேனா தமிழ்வாணனும் உரையாடியதிலிருந்து)
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்
எதிர் மரியாதையும் சுதாமன் குபேர செல்வமும்!
திருமணங்களில் எதிர் மரியாதை செய்வது என்பது ஒரு சாங்கியம்! சம்பந்திக்கு, புடவை, வேட்டி, வெற்றிலைப் பாக்கு, பழம் எல்லாம் வைத்துக் கொடுப்பது ஒரு வழக்கம்! அதுபோலவே, திருமணத்திற்கு வந்திருப்பவர்கள், திரும்பிச் செல்லும் போது, கையில் ஒரு தாம்பூலப் பை கொடுப்பது – அவர் மொய் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும்! – ஒரு வகையான எதிர் மரியாதை, வந்து வாழ்த்தியதற்கு ‘நன்றி’ கூறுதல்!!
தாம்பூலப் பைகள், பல வகை – துணிப் பை, காகிதப் பை, அலங்காரக் கைப் பை என. மணமக்கள் பெயர், மண நாள், ஏதாவது சுவாமி படம் அல்லது கூப்பிய கரங்கள், தேங்க் யூ என பையின் மேல் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும். சிலர் தங்கள் ‘கெத்’தைக் காண்பிக்கும் வகையில் மிக ஆடம்பரமான தாம்பூலப் பைகளைக் கொடுப்பதுவும் உண்டு! சுவாரஸ்யம் பையின் உள்ளே இருக்கிறது – தேங்காய், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் குங்குமம் போன்றவைதான் வழக்கமாக இருக்கும். செலவைக் குறைக்க, தேங்காய் இடத்தில் சின்ன சாத்துக்குடி அல்லது ஒரு ஆரஞ்சு (சீசனுக்குத் தக்கபடி) வைப்பதுவும் உண்டு. வீட்டில் வந்து, அது நார்த்தங்காயா அல்லது வாடிய சாத்துக்குடியா என பட்டி மன்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!
சில பைகளில் சாக்லேட்டுகள், திருமண பட்சணம், வளையல் என வித்தியாசமான வஸ்துக்களும் இடம் பெறும். மிகத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு ஸ்பெஷலாய் சில பரிசுப் பொருட்களை, தனியான பையில் போட்டுக் கொடுப்பவர்களும் உண்டு – ‘ரிடர்ன் கிஃப்ட்’ – பெண்களுக்குத் தனியாகவும், ஆண்களுக்குத் தனியாகவும் (என்ன உபயோகிப்பார்கள் என யோசித்து) கிஃப்ட் பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதற்காக எல்லோரையும் தெரிந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் வாசலில் டியூடியில் இருப்பார்!
சஷ்டி அப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில், புத்தகங்கள் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் – இதை, காரைக்குடி செட்டியார்கள் வீட்டு திருமணங்களில், நிச்சயமாக நடைபெறும் ஒரு வழக்கமாகவே பார்த்திருக்கிறேன்! வாழ்த்துரைகள், பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகங்கள், சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள், முதுமையில் மகிழ்ச்சி, பகவத் கீதை, மகான்களின் பொன்மொழிகள் இப்படிப் பல தலைப்புகள், நமக்குக் கிடைக்கும்!
சமீபத்தில் நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்தில், அருமையான புத்தகம் ஒன்றை, தாம்பூலப் பையுடன் கொடுத்தார்கள் – டாக்டர் டி எஸ்.நாராயணஸ்வாமி தொகுத்திருந்த, ”தெரிந்த புராணம் தெரியாத கதை”என்ற புத்தகம். சுவாரஸ்யமாக இருந்தது! வாசிக்கும் பழக்கம் தொலைந்து வரும் இந்த நாட்களில், இப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுப்பது, வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கொள்ளலாம். இரண்டு வயது குழந்தைக்குக் கூட ‘யூ ட்யூபி’ல் கார்டூன் காண்பித்து சாதம் ஊட்டும் பெண்கள் / ஆண்கள் கதை சொல்லி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கலாம் – இந்தப் புத்தகம் அதற்கு ஒரு நல்ல முன்னோடி என்பேன் நான். இராமாயண, மகாபாரதக் கதைகள் நல்ல வாசிப்பானுபவத்தையும், வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பார்வையையும் அளிக்க வல்லவை என்பது என் எண்ணம். அதை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெரியவர்களின் கடமை!
குசேலசர் கதை நாமெல்லாம் அறிந்ததுதான். இந்தப் புத்தகதில் அந்தக் கதையிலிருந்து:
துவாரகையில் ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பாத பூஜை செய்யும் ருக்மணி, கண்ணனின் பாதங்களில் வழியும் இரத்தம் கண்டு திடுக்கிட்டு, காரணம் கேட்கிறாள். ”வறுமையில் வாடும் என் நண்பன் சுதாமன் என்னும் குசேலன், என்னைக் காண பசியிலும், உடல் தளர்ச்சியிலும் வாடி வந்துகொண்டிருக்கிறான். அவன் கால்களில் குத்தும் முட்களையும், இரத்தத்தையும்தான் இங்கு நீ காண்கிறாய். அதனால் அவன் கால்களில் முட்கள் தைத்ததை அறியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறான்” என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.
குசேலனை நன்கு உபசரித்து, பாத பூஜை எல்லாம் செய்து மகிழ்கிறான் கண்ணன். அவன் கொடுக்கும் அவலில் இரண்டு பிடிகளைத் தின்பதின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் குசேலனுக்கு அளிக்கிறார். மூன்றாவது பிடி அவலை தின்னுமுன், ருக்மணி அதனைத் தடுத்து விடுகிறாள்! எங்கே இருக்கும் மற்ற செல்வங்களையும், தன்னையும், தன் பரிவாரங்களையும் தானமாக்க் கொடுத்து விடுவானோ கண்ணன் என்று தடுத்து விடுவதாகச் சொல்லிவருகிறார்கள் கதை சொல்பவர்கள் – தர்மத்தை, கணவன் செய்யும் தர்மத்தை, அதுவும் மஹாலக்ஷ்மியின் அவதாரமான ருக்மணி தடுப்பாளா? என்ற கேள்வி எழுகிறது. ஶ்ரீகிருஷ்ணன் கேட்கும்போது, ருக்மணி, “ ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல் அனைத்தையும் தாங்களே சாப்பிட்டு விட்டால், அந்தப் பிரசாதத்திற்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்திற்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே என்றுதான், மூன்றாம் பிடி அவலை தங்கள் கைகளைப் பிடித்துத் தடுத்தேன்” என்கிறாள்! ருக்மணி தர்மத்தைத் தடுக்கவில்லை – தர்ம பலன் எல்லோருக்கும் கிடைக்கவே அவ்வாறு செய்தாள்!
தன் வறுமை நீங்கியது அறியாமல் சுதாமன், கண்ணனின் கருணையால் பேரானந்தத்தில் இருந்தான். அவன் மனம் சலனமேதுமின்றி இருந்தது. வந்த வழியே நடந்து ஊர் திரும்புகிறான். இதைக் கண்ட ருக்மணி, “அவருக்குத் தெரியாமலே சகல செல்வங்களையும் கொடுத்துவிட்டு, திரும்பவும் வந்த வழியே நடந்து செல்ல வைத்துவிட்டீர்களே?” என்று கேட்கிறாள். அதற்கு ஶ்ரீகிருஷ்ணர் கூறும் விளக்கம் நாம் அனைவரும் உணர்ந்து விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! பகவான் சொல்கிறார்: “சுதாமன் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. வீட்டிற்குச் சென்று குபேர செல்வத்தால் ஏற்படும் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்ற பேரவா போன்ற புதிய பிரச்சினைகளால் சுதாமன் வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அதனால்தான், அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பரமானந்தத்தை சிறிது நேரம் அவனிடம் இருக்க, திரும்பவும் நடந்து செல்ல அனுமதித்தேன்” என்கிறார்.
பக்தியின் பேரானந்ததையும், குபேர செல்வத்தால் ஏற்படும் தீமைகளையும் எளிமையாகச் சொல்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.
இப்படி 31 புராண, இதிகாசக் கதைகள் உள்ளன – வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் வரையப்பட்டுள்ள கோட்டோவியங்கள் மிகச் சிறப்பு (ஓவியர் ஜே.பாலாஜி)! தாம்பூலப் பைகளில் இப்படிப்பட்ட புத்தகங்கள் கொடுப்பதை வரவேற்கிறேன் – வாசிப்பது அவரவர் விருப்பம்!
(தெரிந்த புராணம் தெரியாத கதை – டாக்டர் டி எஸ் நாராயணஸ்வாமி. LKM Publication, Chennai 600 017. Phone : 24361141).
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
அசோக் நகர் கோடைப் புத்தக விழாவும், நானும்!
வருடா வருடம் அஸ்லி நகரில் உள்ள அரசு நூல்நிலைய வளாகத்தில் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறும். இவ்வருடமும் நடந்துகொண்டிருக்கிறது – ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், சுட்டெரிக்கும் வெயிலில் நண்பர் ஆர் கேயுடன் சென்றேன்.
காம்பவுண்ட் சுவருக்கும், மத்திய நூலகக் கட்டிடத்துக்கும் இடையே சுமாராக 15அடி அகலம், 50-60 அடி நீளத்திற்கு ஒரு பந்தல் – ஃப்ரில் வைத்த வெள்ளைத் துணியில் சீலிங், “ப” வடிவில் ஒற்றை அரங்கம், மூன்று பக்கங்களிலும் புத்தகங்கள், அரங்கின் நடுவில் நீளமான பெஞ்சில், அட்டைப் பெட்டிகளில் புத்தம்புதிய புத்தகங்கள் (50% தள்ளுபடி விலையில்)! சந்தியா பதிப்பகம் மற்றும் ஓரிரண்டு பதிப்பகங்கள் மட்டுமே பங்கு கொண்டிருந்த புத்தகக் திருவிழா – ஆனாலும், நல்ல புத்தகங்கள் இருந்தன.
சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் கதைகள், கார்ட்டூன்கள், மு.வ. நூல்கள், கல்கியின் பொ.செ.. வண்ணதாசன், கலாப்பிரியா, லா ச ரா, க நா சு என நூல்கள் – வாசலில் ஒருவர் பில் மெசினுடன்; அருகில் ஒரு ஃப்ள்க்ஸ் போர்டு, சில புத்தகப் படங்களுடன்…
ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதைத் தொகுப்பு – ந.பிச்சமூர்த்தி), ஹாஸ்ய வியாசங்கள் (பம்மல் சம்பந்த முதலியார்), கல் சிரிக்கிறது (நாவல் – லா ச ரா), இலக்கியச் சாதனையாளர்கள் (க நா சு) – இவை நான்கும் (சந்தியா பதிப்பகம்) நான் வாங்கிய புத்தகங்கள். வெயில், டி.வியில் கிரிக்கெட் போன்ற காரணங்களால், இரண்டு, மூன்று பேர்கள் மட்டுமே புத்தகம் ‘பார்த்துக்’ கொண்டிருந்தனர்.
20% டிஸ்கவுண்டில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, வெளியே ஒரு செவ்விளநீர் (கிட்டத்தட்ட தள்ளுபடி செய்த ஒரு புத்தக விலை!) சீவி, காகித உறிஞ்சு குழல் உதவியுடன் நாக்கையும், தொண்டையையும் சிறிது நனைத்துக்கொண்டு, வீடு வந்துசேர்ந்தேன்!
போன வாரம் இதேபோல் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு தள்ளுபடி விற்பனை – க்ளியரன்ஸ் சேல் என்றார்கள். போயிருந்தேன். அவ்வளவு புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் – வாங்குபவர்களும் இருந்தார்கள். மகிழ்ச்சி. ஆனாலும் புத்தகம் குறித்து, இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது……… ஒரு வேளை வாசிப்போ?
வாங்கிய புத்தகங்களை வாசித்த வரையில் …….
“1937 ல் முதற் பதிப்பு – சென்னை ‘பியர்லெஸ்’ அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது – ஹாஸ்ய வியாசங்கள் – தமிழில் ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார், பே.,பி.எ.ல்., அவர்களால் இயற்றப்பட்டது”. என்ற குறிப்புடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். சென்னை விநோதங்களில், நீர் இல்லாத நீச்சல் குளம் உள்ள கட்டிட விவரணை, பழம் தவிர மற்ற எல்லாம் விற்கும் கார்ப்பொரெஷன் பழக்கடை, ‘பீஸ் – கூட்ஸ் – மார்கெட்’என்ற பெயருடைய ஜவுளிக் கடை கட்டிடத்தில் உள்ள சவுக்கு மரக் கடைகள் என நகைச்சுவயுடன் விவரிக்கிறார். “வயது” என்ற வியாசத்தில், 90 வயதுக்கும் மேலாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான கிழவர் ” சாஸ்திரங்களில் ஒருவனுடைய பொருள், ஒருவனுடைய வயது, ஒருவனுடைய ஆசாரியார் பெயர், இன்னும் இரண்டொரு விஷயங்களை வெளியில் கூறக்கூடாது ” என்று கூறி, வயதைச் சொல்ல மறுத்துவிட்டாராம்.
இப்படி சுவாரஸ்யமான 12 வியாசங்களைக் கொண்ட சின்ன ஆனால் சிறப்பான நூல்!
‘ஜம்பரும் வேஷ்டியும்’ – சிறு கதையில் இரண்டு நண்பர்கள், தன் மனைவிகளின் சந்தேகம், சண்டைகளால் எப்படி வீடு மாற்ற முடிவு செய்கிறார்கள் என்பதை தன் பாணியில் சொல்கிறார் ந.பிச்சமூர்த்தி. 8 சிறுகதைகள் கொண்ட சிறிய தொகுப்பு.
க நா சு அவர்களின் இலக்கியச் சாதனையாளர்கள், நான் வாசித்த மட்டில், மிகச் சிறந்த நூலாக, சுவாரஸ்யமான வாசிப்பானுபவமாக இருக்கிறது. நான்கைந்து பக்கங்களில், தமிழின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளின் குணாதிசயங்கள், படைப்புகள், விருப்பு வெறுப்புகள் எனப் பிழிந்துகொடுக்கிறார். ராஜாஜி தொடங்கி விசுவநாத சத்திய நாராயணா வரை 41 ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கிறார். (நான் 11 வரை வாசித்திருக்கிறேன்!). புதிதாக வாசிக்கவும், எழுதவும் முனைவோருக்கு, அனுகூலமான, பயன்மிகு படைப்பு, ‘இலக்கிய சாதனையாளர்கள்’ என்கிறார் சந்தியா நடராஜன் – உண்மைதான்!
(‘கல் சிரிக்கிறது’ – இன்னும் வாசிக்கவில்லை!)
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
சுதந்திரக் கதை சொல்லும் அந்தமான் செல்லுலார் ஜெயில்!
அடர்த்தியான காடுகளும், எழில்மிகு கடற்கரையும் கொண்ட அழகிய அந்தமான் நிகோபார் தீவுகளின் தலை நகரம் போர்ட் ப்ளேர் –
இந்தியாவின் பகுதியான அந்தமான்,
சுமார் ஆயிரம் மைல்களுக்கு அப்பால், காலாபானி (INFAMOUS WATER) என்றழைக்கப்பட்ட கடல் சூழ்ந்த தீவு என்பதோ,
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த ‘நெக்ரிடோ’ ஆதிவாசிகள்,
தீவுக்கு வரும் புதிய மனிதர்களின் மார்புகளைக் கருணையின்றித் துளைக்கும் அம்புகளை ஏவிவிடும் மனிதர்களின் இருப்பிடம் என்பதோ,
தரை தட்டும் கப்பல்களில் பயணிகள், கோரமான முறையில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டார்கள் என்பதையோ,
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொடுமையான முறையில் தண்டிப்பதற்கான ஜெயில்களைக் கட்டியிருந்தனர் என்பதனையோ,
வீர சவார்கார், நேதாஜி போன்றவர்களின் தியாகங்களையோ –
இன்று கூடைத் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும், அரை டிராயரும் அணிந்து, கையில் பெரிய காமிராவும் கொண்டுவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்!
போர்ட் ப்ளேரில் இருக்கும் ‘செல்லுலார்’ ஜெயில், ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்கவேண்டிய இடம் –
அதன் ஒவ்வொரு செங்கல்லும், இந்திய சுதந்திரம்பற்றிய கதையை சோகத்துடன் சொல்லிக் கொண்டிருப்பதை அங்கு உணரமுடியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் சிதிலமடைந்த நிலையில், பாதுகாப்பற்ற ஜெயிலாகவும், போர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் பாதுகாப்பகமாகவும் இருந்தது செல்லுலார் ஜெயில்.
1979 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களால், செல்லுலார் ஜெயில் ‘நேஷனல் மெமோரியல்’ ஆக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இன்று ஜெயிலின் 7 பகுதிகளில் (WINGS), 1,6, 7 விங்ஸ் மட்டும் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. அந்தமான் தீவு, செல்லுலார் ஜெயில்கள், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள், கைதிகளின் சித்ரவதைகள், ஜப்பானியரின் வன்முறைகள், வீரசவார்கார், நேதாஜி புகைப்படங்கள், மியூசியம், ஆர்ட் கேலரிகளில் சரித்திரம் பேசுகின்றன. செல்லுலார் ஜெயிலின் சரித்திரம் சொல்லும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி மாலை சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது – நான் போன அன்று இந்தியில் ஒலிபரப்பு – ஏதோ சுமாராகக்கூட புரியவில்லை! எனக்கு இந்தி தெரியாதது செல்லுலார் ஜெயிலின் குற்றமல்ல!
ஒரே சமயத்தில் மூன்றுபேரைத் தூக்கிலிடக்கூடிய தூக்கு மேடை, சவுக்கடி வாங்கும் கைதி, கை, கால்களில் இரும்புச் சங்கிலி பிணைத்த கைதிகள், சணலில் தைக்கப்பட்ட கைதி உடை என மனதைப் பிசையும் காட்சிப் பொருட்கள் – ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்ட மேடையின் மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, வீர் சவார்கார் இருந்த ‘செல்’ அவரது புகைப்படத்துடன் –
சுற்றிலும் கடல், ஒருபக்கம், ஜிகே பண்ட் ஆஸ்பிடலாய் மாறிப்போன இரண்டு விங்ஸ், மாடியில் நேதாஜியின் அந்தமான் விசிட் புகைப்படங்கள், புல்வெளிகள், பார்க் பெஞ்சுகள் – நன்கு பராமரிக்கப்படுகின்றன.
1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் விடுதலைப் போராட்ட வீரர்களையும், புரட்சியாளர்களையும் அந்தமான் சிறைக்கு – முதலில் வைப்பர் தீவுச் சிறை, பின்னர் செல்லுலார் ஜெயில் – டேவிட் பாரிக்கர்(ஜெயிலர்), மேஜர் ஜேம்ஸ் பாட்டிஸன் வாக்கர் (மிலிட்டரி டாக்டர்) தலைமையில் அனுப்புவதிலிருந்து தொடங்குகிறது இந்த சிறைச்சாலைக் கொடுமைகள்.
இருநூறு புரட்சியாளர்கள், கராச்சியிலிருந்து 733 பேர் (1863), மற்றும் இந்தியா, பர்மாவிலிருந்து சிறைக் கைதிகள் என இந்தத் தீவில் தண்டனைக்கு அனுப்பப் படுகின்றனர். பஹதூர் சாஃபர் ராயல் குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராகப் பெட்டிஷன் கொடுத்தவர்களும் இதில் அடக்கம்!
வைப்பர் தீவு போர்ட் ப்ளேரிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது. மிகக் கொடூரமான தண்டனைகள் – தூக்குத் தண்டனைகள் உட்பட்ட – வழங்கப்பட்ட இடம். இன்றும் எஞ்சியுள்ள ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட இடங்களைக் (GALLOWS) காணலாம். பேஷ்வார் ஷேர் அலி பத்தான், அப்போதைய இந்திய வைசிராய் லார்ட் மேயோவைக் கொலைசெய்த குற்றத்துக்காக இங்குதான் தூக்கிலிடப்பட்டார்!
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுதந்திரப் போராட்டம் வலுக்கவே, ஏராளமான கைதிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். சார்லஸ் ஜேம்ஸ் லயல் – ஹோம் செக்ரடரி – கடுமையான தண்டனைகளை விதித்தார். தாய் மண்ணிலிருந்து வெகு தூரத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்வதற்காகவே எழுப்பப்பட்டது ‘செல்லுலார்’ ஜெயில். 1896 – 1906 – பத்து வருடங்களில் கட்டப்பட்டது – பர்மாவிலிருந்து செங்கல் வரவழைக்கப்பட்டது – சைக்கிள் சக்கரத்தில் கம்பிகளைப்போல (SPOKES), நடுவில் ‘சென்ட்ரல் டவர்’, அதிலிருந்து ஏழு கிளைகளாக ஜெயில்! காவலர்களுக்கான மத்திய டவரில் ஒரு பெரிய மணி !
பேனொப்டிகான் (PANOPTICON) என்னும் வடிவில், ஜெரெமி பெந்தாம் என்பவரின் எண்ணத்தில் உருவானது இந்த ஜெயில். மூன்று தளங்கள், மொத்தம் 696 அறைகள் (செல்). அறை 14.8 அடிக்கு 9.9 அடி என்ற அளவில், ஒருபுறம் ஜெயில் கதவும், எதிர்புறம் 10 அடி உயரத்தில் ஒரு சின்ன ஜன்னலுடன் இருக்கின்றன. ஒரு கிளையின் அறைகளின் முன் பக்கம், அடுத்த கிளையின் அறைகளின் பின் பக்கத்தைப் பார்த்தவாறு அமைக்கப் பட்டிருப்பதால், கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ முடியாது! சவார்க்கர் சகோதரர்கள் (விநாயக் தாமோதர் சவார்கர், உம்பாராவ் சவார்கர்), இரண்டாண்டுகளுக்கு அதே ஜெயிலில் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் அதே இடத்தில் இருப்பதை அறியமுடியவில்லை!
80,000 க்கும் அதிகமான கைதிகள் – உயிர் பிழைத்தோர் மிக சொற்பமானவர்களே. தேங்காய் உரித்தல், செக்காட்டுதல், அடிமைக் கூலி வேலை, தனிமைச் சிறையடைப்பு, தூக்கு, கசையடி, மருத்துவப் பரிசோதனை என ‘டார்ச்சர்’ .
1868 தப்பியோட முயற்சித்த 238 பேர்களில், 87 பேர் தூக்கிலிடப்பட்டனர் – ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
1933 மே மாதம், உண்ணாவிரத்ப் போராட்டம் 33 கைதிகளால் நடத்தப்பட்டது. போராட்டத்தை முறியடிக்க, உணவை வாயில் திணிக்க, மூன்று பேர் – மஹாவீர் சிங் (லாஹூர் வழக்கு), மோகன் கிஷோர் நமதாஸ், மோஹித் மொய்த்ரா (ஆயுதம் வைத்திருந்த வழக்கு) – மூச்சுத் திணறி இறக்கின்றனர்.
மஹாத்மா காந்தி, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில், சுதந்திர வீரர்கள், அந்தமான் செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் – 1939 ல் செல்லுலார் ஜெயில் காலி செய்யப்படுகிறது.
மீண்டும் 1942 ல் (இரண்டாம் உலகப்போர் சமயம்) ஜப்பானியர்களால் செல்லுலார் ஜெயில் கைதிகளின் கூடாரமாகிறது. கைதிகளையும், பிரிட்டிஷ் அரசுக்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின்பேரில் பிடித்தவர்ககளையும், சித்ரவதை செய்தும், தூக்கிலிட்டும், கடலில் ஜலசமாதி செய்தும் கொல்கின்றனர் ஜப்பானியர். சந்தேகத்தின்பேரில், பொதுமக்கள் முன்னிலையில், சுட்டுக் கொல்வதும், கழுத்தை அறுத்துக் கொலை செய்வதும் இன்றும் அந்தந்த இடங்களில் நினைவுச் சின்னங்களாக மெளனம் காக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது அந்தமானின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் – போர்ட் ப்ளேர் விமான நிலையம், மற்றும் செல்லுலர் ஜெயிலை சிதைத்த மிகப் பெரிய பூகம்பம்.
ஜெயில் மீண்டும் மராமத்து செய்யப்பட்டு – இன்று நாம் காணும் மரத்தால் ஆன கட்டிடங்கள்- சரியாகக் கட்டப்பட்டன.
3, 4 ஆவது விங்ஸ் இடிக்கப்பட்டு, செங்கல் மற்றும் இரும்புத் தளவாடங்கள், தங்கள் பாதுகாப்புக் கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர் ஜப்பானியர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஒன்றறக் கலந்துவிட்ட செல்லுலார் ஜெயில், ஜப்பானியர்கலால் இடித்து ஊனப்படுத்தப்பட்டது!
செல்லுலார் ஜெயில், இப்படிப்பட்ட கொடூரங்களைப் பார்த்ததற்குச் சாட்சியாக இன்றும் வருத்தமுடன் நிற்பதாய்த் தோன்றியது.
செல்லுலார் ஜெயிலின் பெருமைக்குரிய நிகழ்வு – பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே அஞ்சிய, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – HEAD OF AZAD HIND GOVERNMENT – 1943 டிசம்பரில் அந்தமான் வந்து, ஜெயிலைப் பார்வை இட்டதுதான்! இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டம், அந்தமான் நிகோபார் தீவுகள் விடுதலை! முதன் முதலில் 1943 டிசம்பரில் நேதாஜி இந்திய மூவர்ணக் கொடியை அந்தமானில் பறக்கவிடுகிறார்!
செல்லுலார் ஜெயில் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விடுகிறார். தன் முயற்சியால், ஜப்பான் அதிபர் மூலம் 600 க்கும் அதிகமான குற்றமே செய்யாத கைதிகளை, செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்கிறார்.
1945, 15 ஆகஸ்ட் ஜப்பான் அதிபர் ஹிரேஷிதோ சரணடையும்வரை இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன – செல்லுலார் ஜெயில் சரித்திரத்தின் இருண்ட ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது.
அந்தமானில் என்ன இருக்கிறது ? என்ற எண்ணத்துடனேயே அந்தமான் பயணித்தேன் – பார்த்தவை, கேட்டவை, படித்தவை எனக்கு உணர்த்தியது இதுதான்:
இந்திய சுதந்திரம் ‘சும்மா’ கிடைக்கவில்லை – ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் தோய்ந்து, உயிரினில் மாய்ந்து, தியாகத்தில் கனன்று கிடைத்தது.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா” – பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை!
ஜெய் ஹிந்த்!!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
பங்களூரில் ஸிந்துஜாவைத் தேடி….
பங்களூருவில் நாளைய டிராஃபிக்கைக் குறைக்க, இன்றைக்குச் சாலையின் மத்தியில் அரக்கர்கள்போல் நிற்கும் கான்கிரீட் தூண்களும், அதன்மேல் தொண்ணூறு டிகிரியில் உட்கார்ந்திருக்கும் பெரிய பீடமும், நாளை ஏதோ ஒரு முதன் மந்திரியால் பச்சைக் கொடி அசைத்து வெள்ளோட்டம் விடப்படும் மெட்ரோ ட்ரெயினுக்காகக் காத்திருக்கின்றன! இன்றைய சாலைகளைக் குறுக்கி ஒற்றையடிப் பாதைகளைப்போல மாற்றி, எல்லாவகை வாகனங்களையும் ஊர்வலம் செல்ல வைத்திருக்கின்றன. உள்ளே நடப்பது தெரியா வண்ணம், சுற்றிலும் தகர பேனல்கள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அநேகமாக இதே நிலைதான் – ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்வதைப்போல இருக்கின்றன!
தடைகளின்றி சில கிலோமீட்டர்கள் ஏதாவதொரு வாகனத்தில் செல்லமாட்டோமா என்ற ஆதங்கத்துடன், கன்னடத் தமிழில் பேசிய வெங்கடேசனுடன் (பேக்கு, பேக்கு என்ற போதெல்லாம் திரும்பிப் பார்த்து, ‘என்னை இல்லை’ என்று உறுதி செய்துகொண்டேன்!) மேலும் கீழும் குதித்தவாறு ( பாலைவன சஃபாரி இதைவிட குலுக்கலும், வயிற்றைக் கலக்கலும் குறைவாயிருந்த நினைவு!) பென்னர்கட்டாவிலிருந்து சுமார் 20 கிமீ தள்ளியிருந்த கோத்தனூர் நாராயணபுரா கிராஸ் சென்றேன்.
மூன்று பேருடன் குறுக்கே வேகமாய்ப் போகும் ஸ்கூட்டர், முதுகில் பல்லியைப்போல ஒட்டிக்கொண்டு, பாய் ஃப்ரண்டின் காதைக் கடித்தவாறு, கழுத்தைச்சுற்றி, முகம் மறைத்த ஓட்னியுடன், பல்சரில் பவனிசெல்லும் புதுமைப் பெண், புரியாத கெட்டவார்த்தையில் திட்டியவாறு ராங் சைடில் ஓவர்டேக் செய்யும் கருப்பு, மஞ்சள் ஆட்டோ, நாட்பட்ட அழுக்குடன் அசமஞ்சமாய் நின்று, புகை கக்கிக் கிளம்பும் நகர பஸ், விதவிதமான கலர், சைசுகளில் அரை இன்ச் இடைவெளியில் ஊரும் கார்கள் – ஐம்பதடிக்கு ஒரு சிக்னல், சிக்னல் இல்லாத ஜங்க்ஷன்களில் குழப்படியான ட்ராஃபிக் ஜாம், வாயில் வெற்றிலை பாக்குடன், வித்தியாசமாகக் கட்டிய புடவையுடன் பெண்கள், நீலநிற யூனிஃபார்மில் ஆண்கள் (குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளுக்கு நடுவில் சாலையைக் கடந்தபடி மெட்ரோ வேலை), நான்கு சக்கர வண்டிகளில் சப்போட்டா, கிர்னீர் பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை – பாதி சாலையை அடைத்தவாறு வியாபாரம்!
ஒரு காலத்தில் மரங்களும், பார்க்குகளும் நிறைந்திருந்த பெங்களூர், இன்று ராட்சச வடிவில் விண்ணைத்தொடும் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன், வெயில் சுட்டெரிக்க, புழுங்கித் தொலைக்கிற பங்களூருவாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது – இயற்கையை அழிப்பதில் நமக்கு ஈடு நாம்தான்!
20 கிமீ தூரத்தை இரண்டரை மணியில் கடந்தேன்! இரண்டு யூ டர்ன், ஒரு ராங் ஒன் வே, மூன்று முறை நிறுத்தி வழிகேட்டது எல்லாம் இதில் அடக்கம். (கூகுள் மேப் போட்டிருக்கலாமே என்னும் அறிவு ஜீவிகள், எனக்கு அந்த அளவுக்கு விபரம் பத்தாது என்பதையும், டிரைவர் வெங்கடேசனுக்கு வயது அறுபதுக்குமேல் என்பதால் அவருக்கும் இதெல்லாம் தெரியாது என்பதனையும் அறியவும்!)
இவற்றையெல்லாம் கடந்து, அந்தப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து, செக்யூரிடியிடம் என் ஜாதகம் பதித்து, பின்னால் இருந்த ‘ஏ’ ப்ளாக்குக்குச் சென்றேன்! குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்த பிறகு, லிஃப்ட் ஏறுமுன், ஆராம்ஸாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்த நான்கைந்து நாரீமணிகளைத் தாண்டி, லிஃப்டில் 7 ஆம் நம்பரை ஒத்தி, தானாய் மூடித் திறந்த கதவுகளைவிட்டு வெளியேவந்தேன். சிரித்த முகத்துடன் வாசலிலேயே வரவேற்றார் ஸிந்துஜா – எழுத்தாளரும் என் நண்பருமான, ட்டிஆர் நடராஜன்!
அழகிய சிங்கர்தான் ஸிந்துஜாவை எனக்கு அறிமுகம் செய்தார் ‘ஸிந்துஜா கதைகளை படிங்க – ஸிம்பிளா கதை சொல்வார்’ என்றார்! விருட்சத்தில் ஓரிரண்டு கதைகள் படித்திருந்தேன். தினமணிக் கதிர் ஆசிரியர் பாவைசந்திரன் அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு, அவரது ‘நல்ல நிலம்’ நாவலுடன், எம் வெங்கட்ராம் கதைகள், ஸிந்துஜா சிறுகதைகள் புத்தகங்களைக் கொடுத்தார் – அறிமுகமே இல்லாத எனக்கு, அவர் கொடுத்த ஊக்கம் வியப்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது! சென்ற புத்தகக் கண்காட்சிக்கு ஸிந்துஜாவுடன் சென்றிருந்தேன். கே வி ராஜாமணி, சிங்கர், ‘தென்றல்’ சுவாமினாதன், சந்தியா நடராஜன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளுமைகள் – பார்த்துப் பேசினோம்!
அவரது சிறுகதைகள் இயல்பான நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்(தனி பதிவுதான் போடவேண்டும்). எழுத்துக்களும் அவரைப்போலவே – எளிமையும், நேர்மையும் கொண்டவை!!
ஏகாந்தமான, ஏழாவது தளத்தில் கலை நயத்துடன் ஒரு ஃப்ளாட். மகள் கொண்டுவைத்த மிக்சர் வகையறாக்களுடன், ‘சில்’லென்ற லெமன் ஜூஸ் – அன்றைய, இன்றைய பத்திரிக்கைகள், தீபாவளி மலர்கள், இன்று சிறுகதைகள், போட்டிகள், முகநூல் பதிவுகள், எப்போது, எப்படி எழுதுகிறோம், தனி வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என நாற்பது நிமிட உரையாடல் (அரட்டை அல்ல!). மனதுக்கு நிறைவாக இருந்தது.
நா பா வின் குறிஞ்சி மலருடன் விடைபெற்றுக்கொண்டேன். கார் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.
மாலை ஐந்துமணிக்குமேல் ஆகிவிட்டதால், அதிகமான டிராஃபிக்கில் மூன்றுமணி நேரத்தில், ஊர்ந்தபடி வீடு வந்துசேர்ந்தேன்!
இனிமேல் பங்களூரு வந்தால் ‘ககன’ மார்க்கத்தில்தான் வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன் (உடலைச் சுருக்கி, காற்றுபோல் ஆக்கி, நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் ஆகாயமார்க்கமாகச் செல்வது! – மேல் விபரங்களுக்கு கோமலின் ‘பறந்து போன பக்கங்கள்’ பக்கம் 72 – -73 – குவிகம் பதிப்பு – பார்க்கவும்!).
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்



கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
இசைப் பிரியர்களுக்கு டிசம்பர் மாதம் எப்படியோ, அப்படியே புத்தகப்பிரியர்களுக்கு ஜனவரி மாதம் – இவ்வருடமும் புத்தகக் கண்காட்சி YMCA மைதானத்தில் கோலாகலமாக நடக்கிறது. இந்த 42 ஆவது கண்காட்சியில் 800க்கும் அதிகமான அரங்கங்கள், இலட்சக் கணக்கான புத்தகங்கள், ஆடியோ புக்ஸ் இத்தியாதிகள்.
எல்லா அரங்குகளிலும் அநேகமாக எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கின்றன. பெரிய பதிப்பகங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனை செய்கின்றன – எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் – மகிழ்ச்சியான வாசகர்கள்!
பிரபல எழுத்தாளர்கள், அரங்குகளில் வாசகர்களுடன் அளவளாவிக் கொண்டும், புத்தகங்களில் கையொப்பம் இட்டுக்கொண்டும், புத்தகங்கள் வாங்கிக்கொண்டும் உலா வருகிறார்கள்!
முகநூல் நண்பர்கள் நேரில் முகம் பார்த்துப் பேசி மகிழ்கிறார்கள்.
ஆங்காங்கே, சிறுசிறு கூட்டங்களில் புதிய புத்தக வெளியீட்டு வைபவங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.
ஊடகங்கள், பிரபலங்களையும், வாசகர்களையும் பேட்டி எடுப்பதும், ‘வீடியோவில்’ பிடிப்பதும் இடையிடையே நடந்துகொண்டிருக்கின்றன!
துணை இயக்குனர், எழுத்தாளர் சரசுராம் அவர்களின் ‘ராஜா வேசம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா அரங்கு 49ல் நடந்தது. இயக்குனர் சற்குணம் வெளியிட முதற்பிரதியை நான் பெற்றுக் கொண்டேன் – மிக்க மகிழ்ச்சியுடன்!
Zero Degree Publishing (எழுத்து பிரசுரம்) அரங்கில் அமர்ந்துகொண்டு, நேரத்தை வீணாக்காமல் ப்ரூஃப் கரெக்ஷன் செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சாருவுடன் சில நிமிடங்கள் – அவரது ‘நாடோடியின் நாட்குறிப்புகள்’ அவர் கையொப்பமிட்டு வாங்கிக்கொண்டேன்!
நற்றிணையில் எம்.எல். (வண்ணநிலவன்), ஆகாயத் தாமரை (அசோகமித்திரன்), மகா நதி (பிரபஞ்சன்), மற்றும் எஸ் ரா வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘சஞ்சாரம்’, சுதாங்கனின் ‘இன்று’ டன் ‘நான்’, ஆ.மாதவனின் ‘மொழிபெயர்ப்புக் கதைகள்’, ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ’, வேணு வேட்ராயனின் ‘அலகில் அலகு’, பரிபாடல் (புலியூர்க்கேசிகன்) என்னுடன் சேர்ந்து கொண்டன – இது முதல் சுற்று!
இரண்டாவது சுற்றில், ‘கடல்புரத்தில்’, ‘தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம்’ (இந்திரா சவுந்தர்ராஜன்), ’முற்றுப்பெறாத தேடல்’ (லா.ச.ரா), சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி), விருட்சத்திலிருந்து, ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ (அரவிந்த் சுவாமிநாதன்), ‘ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்’ (அழகிய சிங்கர்) புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்!
இவை தவிர, கிருஷ்ணா கிருஷ்ணா (இ.பா), சிதம்பர நினைவுகள் (கே.வி.ஷைலஜா), பீரோவுக்குப் பின்னால் (பாக்கியம் ராமசாமி), ‘சிவப்பு ரிக் ஷா’ (தி.ஜானகிராமன்), ‘நிறக்குருடு’ (சுதாகர் கஸ்தூரி) ஆகியவையும் நட்புகளுக்குக் கொடுப்பதற்காக!
விருட்சம் அரங்கில் ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ புத்தகத்தை அறிமுகம் செய்து ஓரிரு வார்த்தைகள் நான் பேச, சிங்கர் அதை ஓளிப்பதிவு செய்தார். சுற்றிலும் எழுந்த பேச்சு, மைக் அறிவுப்புகள் மற்றும் சப்தங்கள் பதிவு செய்யமுடியாமல் படுத்தவே, பிறகு தனியாக பதிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்! தப்பித்தோம் என பெருமூச்சு விடும் அன்பர்கள், ‘தேடும் புத்தகம் கிடைக்காமல் போகக் கடவது’ என சபிக்கப்படுகிறார்கள்!
புத்தக ஆசையும், வாசிக்கும் காதலும் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் போலும் – புத்தகங்கள் உள்ளவரை நாம் தனியாக இல்லை என்ற உணர்வு இருப்பதென்னவோ உண்மை!
வெளியே அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என நடந்தவண்ணம் இருக்கின்றன!
கண்காட்சியில் சுற்றிய களைப்பு தீர, வெளியே ஸ்டால்களில், காபி, டீ. ஜூஸ், ஸ்னாக்ஸ் கிடைக்கின்றன – எப்போதும்போல் அங்கு எல்லா அரங்குகளையும் விட அதிகக் கூட்டம்!
1977 ல் முதன்முதலில் ஆரம்பித்தது புத்தகக் கண்காட்சி – காயிதே மில்லத் கல்லூரியில் பன்னிரண்டே ஸ்டால்களுடன் – 42 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சியில், விடாமல் கலந்து கொண்டிருக்கும் திரு பாலசுப்பிரமணியன்பற்றிய முகநூல் பதிவில் ஆர் வி எஸ் (பினாக்கிள் பதிப்பகம்) !
“தமிழர் புத்தகங்கள்” ஓர் அறிமுகம் – தொகுப்பாசிரியர் ‘சுப்பு’ (விஜயபாரதம் பதிப்பகம்) – அருமையான இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு வாசகனும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!