Category Archives: கடைசிப்பக்கம்
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
குவிகம் கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டர்!

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
எலியாயணம்!
அசோகமித்திரனின் ‘எலி’ கதை வாசித்துக்கொண்டிருந்தேன் – சமையலறையில் ‘படார்’ என்ற சத்தம் கேட்டு, ‘விழுந்திருச்சு’ என்று கத்தியபடி புத்தகத்தைப் போட்டுவிட்டு ஓடினேன் – மர எலிப்பொறியின் கம்பிகளுக்குப் பின்னால், புதிதாய் ஜெயிலுக்கு வந்த கைதியைப் போல ’திரு திரு’ என முழித்தபடி ஓர் எலி தன் கூரிய மூக்கால் கம்பிகளைத் துழாவியவாறு நின்றிருந்தது. முகம் முழுதும் மரண பயம் அப்பியிருந்தது!
மேற்பக்கக் கம்பிகளின் வழியே ‘டாப் ஆங்கிள்’ வியூவில், சுமாரான பெரிய எலி, ஆசைப்பட்ட வடையை மறந்து, பரிதாபமாக வெளியேற வழியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது! யாரோ திருமணங்களை எலிப்பொறியுடன் ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது – வெளியிலிருக்கும் எலிக்கு உள்ளே வர ஆசை – வடையின் வசீகரம்!. உள்ளே மாட்டிக்கொண்ட எலிக்கோ வெளியே ஓடி விட ஆசை – ஆனால் வழியில்லை, வடை கூட தேவையில்லை!
வீட்டில் எலிகளின் லூட்டி இரவில்தான் அதிகமாயிருக்கும்! அந்தக் காலப் பரண்கள், நெல் பத்தாயம் என எல்லா இடங்களிலும் புழங்கும் எலிகள், இரவானால், இரையைத் தேடி, வீடு முழுவதும் வித விதமான ஓசைகள் எழுப்பியபடி, வலம் வருவது நம் தூக்கதைக் கெடுப்பது! எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடும்! இரவில் துணி உலர்த்தும் மூங்கில் கோல், பித்தளைத் தாம்பாளம், செய்தித்தாள்கள், பரண், பீரோ காலித் தகர டின்கள், எண்ணெய் ஜாடி என எலிகள் உருட்டும் சத்தம் எந்த ஒரு மர்மப் படத்தின் பின்னணி இசையையும் தோற்கடிக்கக் கூடியது!. மாவு டப்பாக்கள், ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய்த் தூக்குகள் என எல்லாவற்றையும் உருட்டித் தரை முழுதும் மாடர்ன் எண்ணெய்க் கோலங்கள்! விளக்குத் திரிகளை இழுத்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால், கிராமங்களில், இரவில் எண்ணெய் விளக்குகளை அணைத்து விடுவது பழக்கம்! ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்று பாடாத குறைதான்!
சுண்டெலி, வெள்ளெலி (அடிப்பக்கம் மட்டும் வெள்ளையாக இருப்பது – சோதனைக் கூடங்களில் புதிய மருந்தையோ, வாக்ஸினையோ போட்டுக் கொள்ளும் தைரியசாலி – சில ஊர்களில் உணவாகவும் …..), ‘கீச் கீச்’ சென்று குரலெழுப்பும் வீட்டு எலி – மூஞ்சூறு, பெருச்சாளி (பெரிய சைஸ் எலி! சாக்கடை, டிரெய்னேஜ் வாசம், பெரிய மளிகைக் கடை, ஓட்டல்களில் ராவேட்டை!), வயல் எலி, கல்லெலி (தன் வளைகளைக் கற்களால் முடி வைக்கும் உஷாரு பார்ட்டி!) என எத்தனை வகை எலிகள்!
‘சரவெலி’ கொஞ்சம் சுவாரஸ்யமானது – பனை, தென்னை, ஈச்ச மர உச்சிகளில் கூடு கட்டி உயரே வாழ்பவை! இரவில் கீழே இறங்கி இரைக்கு அலையும்போது மட்டும் எல்லா எலிகளையும் போலத்தான் – சில மனிதர்கள் எவ்வளவு உயரம் போனாலும், வாழ்க்கை கீழேதான் என்பதை மறந்து விடுகிறார்கள், இந்த ‘சரவெலி’களைப் போல! (‘இன்னா, தத்துவமா?’ என்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் – தூக்கத்தில் பாதத்தைத் தேங்காய்ப் பத்தையைப் போல வருவும் எலிகள் ஏவிவிடப்படும்!).
சிறிய தலையும், நீண்ட வாலும், சற்றுப் பருத்த வயிறும் உள்ள ‘கொறி’ விலங்கு – பாலூட்டிகள் வகையில் அடங்கும் எலிகள்! உலகத்தின் எலிகளையெல்லாம் ‘கருப்பு எலி’, ‘மண்ணிற (பிரவுன்) எலி’ என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம் என்கிறது கூகிளைக் க்ளிக்கும் ‘மவுஸ்’! எந்தப் பொறியிலும் மாட்டாவிட்டால், பிரவுன் எலி இரண்டு வருடங்களும், கருப்பு எலி ஒரு வருடமும் வாழும் சாத்தியம் உண்டாம்.
எலி பாஷாணம் – எலிகள் கொறிக்கும் உணவுப்பொருட்கள் போலவே இருக்கும் – ஆர்செனிக், சல்ஃபர், கொமாரின் போன்ற பல வகை ரஸாயனக் கலவை – கேக் மற்றும் பேஸ்ட் ஆகக் கிடைக்கின்றன. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஆபத்தானவை, மிக அதிகமான கவனம் தேவை. எலிகள் எங்கோ விஷத்தைத் தின்றுவிட்டு, வேறெங்கோ இறந்து கிடக்கும். உடல் நிலை சரியில்லை யென்றாலும், இறக்கும் தறுவாயில் இருந்தாலும், எலிகள் தங்கள் வளைக்குள் வந்து விடவே விரும்புமாம்.
‘கிரீச்’ எனக்கத்தும் எலிக்கு, வலி அல்லது பயம்தான் காரணமாம் – எதிர்பாராமல் நம் மீது பாயும் எலியைக் கண்டு நாம் கத்துவதற்கும் அதேதான் காரணம்! (வீட்லெ எலி, வெளீலெ புலி க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது!)
எலிப்பொறிகள் எண்ணெய்ப் பண்டங்களை வைத்து எலியைப் பிடிக்க உதவுபவை. மர எலிப்பொறிகளில் உயிருடன் மாட்டிக்கொள்ளும் எலிகள்! இரும்புப் பற்கள் (பீமன் பொறி), தடித்த இரும்பு வளையங்கள் கொண்டு எலிகளைப் பிடிப்பது மனதிற்கு வலியைத் தருவது – இரத்த வெள்ளத்தில் அல்லது இரும்பு வளையத்தில் இறந்துகிடக்கும் எலிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கும்.
பொறியிலிருந்து வெளியே விடப்படும் எலிகள் (சண்டை போடும் பக்கத்து வீட்டு அல்லது எதிர் வீட்டு வாசலில் விட்டு விடுவது பெரிய ராஜதந்திரம் – ‘யூ’ டர்ன் அடித்து, நம் கால்களுக்கிடையே ஓடி, திரும்பவும் நம் வீட்டுக்குள்ளேயே வராத வரையிலும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!), ஓடித் தப்பிக்கலாம்; நாய்களாலோ, பூனைய்களாலோ துரத்திப் பிடிக்கப் (கடிக்க!) படலாம்; செங்குத்தாகப் பறந்து வரும் காக்கையினால் கொத்திச்செல்லப்படலாம்! எலியின் விதியைப் பொருத்தது. வெளியே வரும் எலியை ஒரு சாக்கில் பிடித்து, கண நேரத்தில், துணி துவைப்பதைப் போல சாக்கைத் தரையில் அடித்துக் கொல்வது அராஜகமான கொலைக்குச் சமம்! வயல்களில் எலிகளுக்காகக் காத்திருக்கும் பாம்புகள், தப்பித்து வளைக்குள் ஓடும் எலிகள் – வாழ்க்கைப் போராட்டத்தின் குறியீடுதான்!
நாற்பது வகை வியாதிகளைப் பரப்ப வல்லவை எலிகள்! மழைநீர், உணவுப் பொருட்கள் இவற்றில் கலந்துவிடும் எலியின் சிறுநீர், எச்சல் போன்றவைகளால், எலிக் காய்ச்சல் (leptospirosis), ப்ளேக் போன்ற வியாதிகள் பரவலாக வரக்கூடும்.
ஒருமுறை என் காரில் வேலூர் செல்லும்போது, ஏசி வேலை செய்யவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு, எஞ்சினில் கோளாறு என்று டேஷ் போர்ட் ஸ்க்ரீன் கண் சிமிட்டியது. ஸ்டீரிங் வீல் இறுகிப் போக, வண்டி, மாப்பிள்ளை ஊர்வலக் கார் போல, இஞ்ச் இஞ்சாக நகர்ந்தது. வண்டியை ஓரங்கட்டி, போனில் தொடர்பு கொண்ட சர்வீஸ் டீம், இரண்டு மணி நேரத்தில் வந்து, வலது முன் டயருக்கு உட்புறம் எஞ்சினின் அடிப்பக்கத்தில் சில ஒயர்களை எலி கடித்துத் துண்டாக்கியிருப்பது தெரிய வந்தது! வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, செக்யூரிடி, தேங்காய்த் துண்டுகளை காருக்கருகில் காயவைக்கிறார் என்று – பிறகு என்ன, காரின் அடிப்பக்கத்துக்கு எலி ஸ்ப்ரே, புகையிலைக் கட்டு, வலை என்று ஏக காபந்து!
‘எலிக்கு மரணவலியாம், பூனைக்குக் கொண்டாட்டமாம்’, ‘எலி வளையானாலும் தனி வளை தேவை’, ‘அறுப்பு காலத்தில் எலிக்கு ஏழு பொண்ணாட்டியாம்’, ‘சிங்கம் இளைச்சா, எலி மச்சான் முறை கொண்டாடுமாம்’ – இந்தப் பழமொழிகள் எலிகள் எப்படி நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன என்று சொல்கின்றன!
அசோகமித்திரனின் ‘எலி’ கதையைப் படித்ததால் வந்த எண்ண எலிகள் இந்தக் கட்டுரை – அவசியம் வாசிக்க வேண்டிய கதை ‘எலி’! தி.ஜா. வின் ‘சங்கீத சேவை’ – ஒரு சங்கீத எலியின் மேல் நாட்டு அனுபவத்தைப் பகடி செய்கிறது!
‘எலிப்பத்தாயம்’ (தமிழில் பத்தாயம் என்றால் எலிப் பொறியாம்) அடூர் கோபாலகிருஷ்ணனின் தேசீய விருது பெற்ற மலையாளப் படம்.
உலகின் எல்லா வயதினரும் சிரித்து மகிழும் கார்டூன் –
‘டாம் அண்ட் ஜெர்ரி’! எலியும், பூனையும் அடிக்கும்கொட்டம் விலா நோக வைக்கும் சிரிப்பு – எலியின் சாமர்த்தியமும், சுறுசுறுப்பும்,புத்திசாலித்தனமும்அபாரமாயிருக்கும். இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய வில்லியம் ஹன்னா, ஜோசஃப் பார்பெராபாராட்டுக்குரியவர்கள்!
“சுவாமியால் தான் வாகனத்துக்குக் கெளரவம் – அந்த கெளரவத்தைக் கொடுக்க, மூஞ்சூறுக்கேற்றபடி கனம் இல்லாமல் நெட்டியில் செய்த மாதிரி இருக்கிறாராம் பிள்ளையார். ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறாராம்!” – தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா.
பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடுதனை விளைவிக்கும். ஆதலின் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கிறது. இவற்றை அடக்கி நம்மை ஆட்கொள்பவர் பிள்ளையார் என்பதைப் புலப்படுத்தவே தனது காலின் கீழ் பெருச்சாளியை வத்திருக்கிறார் என்ற ஒரு வியாக்கியானமும் உண்டு!
ஏதோ தம்ப்ளர் உருளுகிற சத்தம் வரவே, கிச்சன் பக்கம் தாவிச் சென்றேன் – டைனிங் டேபிள் மேல், கூடையில் இருந்த ஆப்பிளின் மேல் பக்கம் வருவியிருந்தது – நான் எழுதி முடிக்கும் வரை காத்திருந்ததோ என்னவோ!
ஜெ.பாஸ்கரன்
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
அக்டோபர் 5 ஆம் தேதி திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களின் பிறந்தநாள். வாழ்நாளில் ஒரு மனிதர் இவ்வளவு எழுதிக் குவிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ! பதினாறு வயதில் எழுத ஆரம்பித்த இவர் அறுபத்தி ஐந்து வருடங்கள் – தன் வாழ்நாள் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் – எளிமையாக, சுவாரஸ்யமாக, உண்மையாக, சிரிப்பாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக, இன்னும் விதம் விதமாக எழுதியுள்ளார்.
அந்த நாட்களில், கண்ணதாசனின் வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை வாசிப்பது, என் மனதுக்கு இதமாக இருந்தது. வனவாசத்தில், தன்னை ‘அவன்’ என்று படர்கையில் வரித்துத் தன் சுயசரிதையை, மிகவும் வெளிப்படையாக எழுதியிருப்பார்.
அக்டோபர் 2004ல் நான் வாங்கிய புத்தகம் “அவன்”. கங்கை புத்தக நிலையம் வெளியீடு. எப்படித் தோன்றியது என்பது நினைவில் இல்லை. வாங்கியவுடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது நினைவிருக்கிறது! கண்ணதாசனைப் போலவே ‘அவன்’ என்று படர்கையில் தன் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையை ரா.கி.ர எழுதிய புத்தகம் அது. ‘உத்தியைப் பொறுத்த மட்டில் கண்ணதாசனின் வனவாசம் எனக்கு வழிகாட்டி. ஆனால் உண்மைகளை ஒப்புக்கொள்வதில் அவருக்கு இருந்த தைரியமும், துணிச்சலும் எனக்குக் கிடையாது. அவரது ஒப்பற்ற கவிதை நடையும் எனக்குக் கைவராது’ என்கிறார் தன் முன்னுரையில் ரா.கி.ர.!
1500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும், நகைச்சுவை நாடகங்களும் ‘மட்டும்’ எழுதியுள்ள ரா.கி.ர., ‘இலக்கிய வரலாறு என்று எனக்கு ஏதும் இல்லை’ என்கிறார்! மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன.
அவன் புத்தாத்தின், 334 பக்கங்களையும், தொடர்ந்து வாசிக்க வைக்கும் அற்புதமான எழுத்து அவருடையது. எத்தனை மனிதர்கள், நிகழ்வுகள், அனுபவங்கள் – கையில் பத்து ரூபாய் இல்லாத நேரம், கண்ணதாசனுக்கு அவசரமாக சேலம் செல்ல, தன் கை வாட்சைக் கழற்றிக் கொடுத்ததும், பின்னர் ஒரு நாளில் அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதும் ஒரு சிறுகதை போல சொல்லுகிறார். தந்தை மகோபாத்யாய ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார் முதல் எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., தேவன், டி.கே.சி., ராஜாஜி, எஸ்.ஏ.பி. (நாற்பத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக குமுதத்தில் எஸ்.ஏ.பி. யின் கீழே பணி புரிந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை!), வ.ரா. கி.வா.ஜ., நாடோடி, கண்ணதாசன், வானதி திருநாவுக்கரசு, டைரக்டர் ஶ்ரீதர், மாலன் (அவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்கிறார், இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதற்காக!)வரை அவரது அனுபவங்களின் திகட்டாத தொகுப்பு இந்தப் புத்தகம்.
ரா.கி.ர தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பிக்கிறார். முதல் கதை எழுதியதை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். படிப்பு முடிந்ததும், அண்ணனுடன் சென்னைக்கு வந்து, முதன் முதலாக திரு வாசனை அவர் வீட்டில் சென்று சந்திக்கிறார். வயது பத்தொன்பது இருக்கலாம். “ரொம்பச் சின்னப் பையனா இருக்கியேப்பா, கதையெல்லாம் எழுதுவியா? ஏதாவது இருந்தா எழுதிக் கொண்டு வா, பார்க்கலாம்” என்கிறார் வாசன். தன் தந்தையிடம் சமஸ்கிருதம் படித்த தேவன் அப்போது ஆ.வி.யில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவரிடம் இவர் எழுதிய கதையைக் கொண்டு கொடுக்க, ‘நன்றாக இருக்கிறது, பிரசுரிக்கிறேன்’ என்கிறார். பல மாதங்கள் கழித்து, 1946ஆம் வருடம் திடீரென்று அது விகடனில், ராஜுவின் கார்டூனுடன் பிரசுரமாகிறது! “என் முதல் சிறுகதை, முதன் முறையாக விகடனில் வெளியாகி, நானும் ஒரு எழுத்தாளன் என்று பிறவியெடுத்தது அன்றைய தினம்தான்” என்கிறார் ரா.கி.ர.!
‘சக்தி’ மாத இதழ், ‘காலலச்சக்கரம்’ வார இதழ், ‘ஜிங்லி’ சிறுவர் இதழ், ஆ.வி., ‘குமுதம்’ போன்ற பத்திரிகைகளில், இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ’அண்ணாநகர் டைம்ஸ்’ ‘மாம்பலம் டைம்ஸ்’ போன்ற வட்டார இதழ்களில் வெளியான கட்டுரைகள் ஆறு , ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நாலு மூலை, சும்மா இருக்காதா பேனா, ரா.கி.ர. டைம்ஸ் போன்றவை அதிக அளவில் வரவேற்பையும், வாசிப்பையும் பெற்றவை. நாலு மூலை புத்தகத்தை 2005ல் படித்த போது, இப்படியும் இவ்வளவு விஷயங்களை, இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா என வியந்திருக்கிறேன்.
‘நான் கிருஷ்ணதேவராயன்’ வித்தியாசமாக எழுதப்பட்ட இவரது வரலாற்றுப் புதினம் – அதன் ஆடியோ சிடி ரிலீஸ் ஆழ்வார்ப்பேட்டை ‘டேக்’ செண்டரில் நடந்தபோது, இவரது எழுத்து மற்றும் படைப்புகளின் வீச்சும், இவரது மனிதநேயப் பண்புகளும் அன்று பேசிய எழுத்தாளுமைகளின் மூலம் தெரிய வந்தது.
பட்டாம்பூச்சி, தாரகை, ஜெனிஃபர், டுவிஸ்ட் கதைகள், காதல் மேல் ஆணை போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நன்றி கூறும் நினைவு நாள்” – ரா.கி.ர. டைம்ஸில், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பவர்களைப் பற்றிய, வாசிக்க வேண்டிய சுவாரஸ்யமான கட்டுரை!
ஹாஸ்யக் கதைகள், திக்-திக் கதைகள், கன்னா பின்னா கதைகள் (எல்லாக் கதைகளும், கடிதங்கள் மூலமே சொல்லப்பட்டிருக்கும்!), எப்படிக் கதை எழுதுவது? (கதை எழுதுவதற்கான பல உத்திகளை, கதை போல சொல்லியிருப்பார்) போன்றவை ரா.கி.ர. வின் வித்தியாசமான படைப்புகள்!
குமுதத்தில் ‘லைட்ஸ் ஆன்’, கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’, துக்ளக்கில் ‘டெலி விஷயம்’ போன்றவை மிகவும் பிரபலமான கட்டுரைகள் – இவற்றில் வரும் செய்திகளின் விறுவிறுப்பும், கேலியும், நகைச்சுவையும் ஏராளமான வாசகர்களைக் கவர்ந்திருக்கின்றன! இவை புத்தகமாக வரவில்லையே என்கிற வருத்தம் ரா.கி.ர. வுக்கு இருந்ததாகக் கூறுகிறார் சுஜாதா தேசிகன்.
சிறுவாணி வாசகர் மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘ரா.கி.ர. டைம்ஸ்’ ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு. அதில் “Disciplined, Beautiful writing என்று தொடங்கி, ‘ரா.கி.ர.வின் எழுத்தின் ரசிகன். சென்னையில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம், முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்து,’ ராட்சஸன்யா நீ’ என்று பாராட்டும்போது, அதில் துளிக்கூடப் பொறாமை இருக்காது. காரணம், அவரே ஒரு சக ராட்சஸர்” என்று சுஜாதா பாராட்டுகிறார்.
“தேவை பழி போட ஒரு ஆள்’ கட்டுரையில்:
தன் மீதுதான் தப்பு என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் கொண்ட தலைவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒருவர்தான். உலகமெங்கும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டவர் அவர் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதின் மூலம். இந்தியாவுக்கு என்றுமே நண்பராக இருந்தது கிடையாது. அவருடைய மேஜையின் மீது, ’The buck stops here’ என்று ஒரு பலகையில் எழுதி வைத்திருந்தார். ‘எல்லாப் பழியும் என் தலைமீதுதான் விடியும்’ என்பது அதன் பொருள்.
“வாரீர் பிரார்த்தனை செய்வோம்” கட்டுரையில்:
டோரதி ஹோகன் என்ற பெண்மணி தன் தாயைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றில் “அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருந்தாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் – என்றைக்கு என்னைப் பெற்றெடுத்தாயோ அன்று தொட்டு, உன் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை, தியாகங்களையும், வேதனைகளையும், தனிமைகளையும், கண்ணீர்களையும், விரக்திகளையும் நீ தன்னலமற்றுத் தாங்கிக் கொண்டதிற்காக. (ஆதி சங்கரரின் ‘மாத்ரு பஞ்சகம்’ நினைவுக்கு வந்தது – அவர் எழுதிய உணர்ச்சிகளைக் கொட்டும் ஒரே ஸ்லோகம் – தன் அம்மாவைப் பற்றியது.)
“தன்னம்பிக்கை வளர” கட்டுரையில்:
ஒரு குட்டிக் கதை: சத்திரத்தில் படுத்திருந்த ஒருவன், தன் அருகே படுத்திருந்தவனிடம் ‘நான் இரண்டு பெண்டாட்டிக்காரன்! ஆஹா, என்ன ஆனந்தமான வாழ்க்கை!’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்.
மற்றவனுக்கு அதைக் கேட்டு ஆசை ஏற்பட்டது. ஊருக்குப் போய் இரண்டு பெண்களை மணந்தான். ஆனால் வாழ்க்கை துன்ப மயமாயிற்று. நரக வேதனை தாளாமல், சத்திரத்துக்குத் திரும்பி வந்தான். அங்கிருந்தவனிடம், ’உன் பேச்சைக் கேட்டு நான் படாத துன்பமில்லை. எதற்காக என்னிடம் பொய் சொன்னாய்?’ என்று கோபித்தான்.
‘ரொம்ப நாளாய் நான் ஒண்டியாகவே இங்கே கிடக்கிறேன். ஒரு துணை இருந்தால் நல்லது என்று தோணியது.’ என்றான் அந்த மாஜி இரண்டு பெண்டாட்டிக் காரன்.
ஆழ்ந்து, விரிந்த வாசிப்பும், நகைச்சுவை கலந்த எழுத்து நடையும், புத்திசாலித்தனமான செய்தி விவரணைகளும் ரா.கி.ர. வின் படைப்புகள் எங்கும் விரவியிருக்கும். நாலு மூலை, ரா.கி.ர டைம்ஸ் வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்புகள்.
ஜெ.பாஸ்கரன்.ச்ர்
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
லண்டன் ‘கண்’ணும், மகாபலிபுரமும்!
டூரிஸம் (Tourism) என்பதற்கு – ஓரிடத்திற்கு விடுமுறைப் பயணம் / சுற்றுலாச் செல்வோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரும் மற்றும் சேவைகள் வழங்கும் வாணிகத் தொழில்; சுற்றுலாத் தொழில் – என்று விளக்கம் தருகிறது கூகிள் சாமி. சமீபத்தில் பதினோரு நாட்கள் லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தரிசித்து விட்டு வந்த (சில இடங்களில் வெறும் கோபுர தரிசனம் மட்டும்!) போது, மேலை நாடுகளில் சுற்றுலாவுக்கும், அதற்கு வரும் வேற்று நாட்டவர்களுக்கும் அங்கு செய்து தரப்படும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இவற்றை விட இன்னும் சிறப்பான, அழகிய சுற்றுலாத் தலங்கள் நம் ஊரில் இருப்பதே பலருக்குத் தெரியாது – இவற்றை நல்ல முறையில் பராமரித்து, வசதிகளையும், வாய்ப்புகளையும் உயர்த்தி, அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்கலாம்!
ஆகஸ்ட் 18 காலை ஏழு மணிக்கு லண்டன் வெம்ப்ளேயின் ‘ibis’ ஓட்டலில் காலை உணவு முடித்து – பிரட், பன், கேக், பழங்கள், கார்ன் ஃப்லேக்ஸ், பால், காபி – எங்கள் பிரத்தியேகமான வால்வோ பேருந்தில் கிளம்பினோம். அன்று லண்டன் லோக்கல் டூர். 27 வருடங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் லண்டன், அதிகம் மாறவில்லை – சாலையோர ‘பப்’களும், புகை பிடிக்கும் தொப்பிக்காரர்களும், போர்டு எழுதி வைத்து, கெளரவமாகப் பிச்சை கேட்பவர்களும் மாற விரும்பவில்லை!
லேசான தூறல்களுடன் நீஸ்டனில் உள்ள மிகப் பெரிய ‘சுவாமிநாராயணா’ கோவிலுக்குச் சென்றோம். சன்னதிகளும், தியான மண்டபங்களும், கலை நயமிக்கத் தூண்களும் இத்தாலியன் மார்பிளில் இழைத்திருக்கிறார்கள் – அங்கிருந்த செக்யூரிடிகளும், போட்டோ, வீடியோ தடைகளும் தேவைதான் என்று நினைத்தேன்.
அங்கிருந்து, உலகப் பிரமுகர்கள் எல்லாம் மெழுகாக நிற்கும் Madame Tussaud – மெழுகு மியூசியம் சென்றோம். உள்ளுக்குள்ளேயே குட்டி கார்கள், ரயில் வண்டி போல் இணைக்கப்பட்ட ஊர்தியில், இங்கிலாந்தின் சரித்திர நிகழ்வுகளைக் கண்டவாறே – பயமுறுத்தும் லைட்டிங் மற்றும் இசை கூடவே வருகிறது! – வந்தோம். மோடிக்கு வணக்கம், மர்லின் மன்றோவுடன் போட்டோ என திரும்பிய இடமெல்லாம் வி ஐ பி க்கள். தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு நின்ற பெண்ணைக் கடந்து விட, திரும்பி ‘சாரி’ என்றேன் – திரும்பாமல் காமிராவினுள் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த உடையுடுத்திய மெழுகு பொம்மை!
மதியம் லண்டன் சரவணா பவனில் சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினோம்! மசால்தோசையுடன் ஸ்பூன் ஃபோர்க் சகிதம் சண்டையிட்டுக்கொண்டிருந்த வெள்ளைக் காரிக்கு நாக்கு நீளம்!
வெஸ்ட்மின்ஸ்டர் சிடியில் பக்கிங்ஹாம் அரண்மனை, தேம்ஸ் நதி மேல் கட்டப்பட்டுள்ள டவர் மற்றும் லண்டன் பிரிட்ஜ் (இந்தப் பாலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது – பிறக் ஒரு வியாசத்தில் பார்ப்போம்!), ட்ரஃபால்கர் ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ், செயிண்ட் பால்ஸ் சர்ச், கிரீன் பார்க் எல்லாவற்றையும் ‘கோபுர தரிசனமாய்’க் கண்டோம்.
“லண்டன் ஐ” (LONDON EYE), உண்மையிலேயே லண்டன் முழுவதையும் பார்க்கும் கண்தான்! நம்ம ஊர் ஜயண்ட் வீல் (பொருட்காட்சிகளில் வண்ண வண்ணக் குழல் விளக்குகளுடன் சுற்றுமே) மாதிரி – ஆனால் அதைப்போல் பல மடங்கு உயரமானது! ஐரோப்பாவின் மிக உயரமான ஜயண்ட் வீல் – 135 மீட்டர் உயரம். 1999 ல் கட்டப்பட்டது. 32 கண்ணாடிக் கூண்டுகள் – ஒரு முழு சுற்றுக்கு, ஆகும் நேரம் 30 நிமிடங்கள் – மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்க, அப்படியே ஏறிக் கொள்வதும், இறங்குவதும் எளிது! மேலே செல்லச் செல்ல, தேம்ஸ் நதி, ஓடை போல் இளைக்க, குறுக்கேயுள்ள பாலங்கள், கோடுகளாய்த் தெரிய, வாகனங்கள் சிறு பூச்சிகளாய் ஊர்ந்து செல்ல, மனிதர்கள் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தனர். கூண்டுக்குள் இருந்து, கீழே ‘பென்’ என்னும் மணிக்கூண்டு, சர்ச், வானுயரக் கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் மினியேசர் வடிவில் சிறுத்து, நம் வீட்டு கொலுவின் பார்க் போலத் தெரிந்தன! 25 கி மீ சுற்றளவுக்குப் பார்க்கமுடிகிறது. இதன் மறு பெயர் “கொக்ககோலா லண்டன் ஐ”! வருடத்துக்கு 3.75 மில்லியன் உல்லாசப் பயணிகள் இந்தக் கண்ணைக் கண்டு களிப்பதாக ஒரு செய்தி கூறுகிறது!
சரி, ஒரு நாள் லண்டன் டூருக்குப் போதாது. ஆனால் ஒரு நாளில் பார்த்த இடங்களுக்கும், கேட்ட செய்திகளுக்கும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் – டூரிஸம் டெவலப்மென்ட் – நம்மை வியப்பிலாழ்த்துகிறது. எதிலும் ஓர் ஒழுங்கு, நேர நிர்ணயம், பாதுகாப்பு, சின்ன சின்ன விபரங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் – நம்மால் ஏன் முடிவதில்லை என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
சமீபத்தில் பிரதமர் மோடியும், சீனாவின் பிரசிடெண்ட் Xi Jinping அவர்களும் மகாபலிபுரம் கடற்கரை குடைவரைக் கோயில்களைப் பார்த்துப் பின் இரு நாடுகள் இடையே நல்லிணக்கம், வணிகம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். டெரரிஸம் பற்றிப் பேசியவர்கள், டூரிஸம் பற்றிப் பேசியிருப்பார்களா தெரியவில்லை!
அதுவல்ல இப்போது நான் சொல்ல வந்தது – சாதாரண நாட்களில் நாம் பார்க்கும் மகாபலிபுரத்துக்கும், இந்த வாரம் நாம் பார்த்த மகாபலிபுரத்துக்கும் இருந்த வித்தியாசம் – நம்மாலும் முடியும்தானே? டூரிஸம் செழிக்க, நம் ஊரையும் எல்லோரும் வியக்கும்படி பராமரிக்க முடியும்தானே? ஏன் செய்வதில்லை?
மேலை நாடுகளுக்கு இணையான, அதை விட மேன்மையான சுற்றுலாத் தலங்கள் நம் இந்தியாவிலும் உண்டு – சுற்றுலாப் பயணிகளுக்கேற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றவோ, பராமரிக்கவோ நமக்குத் தெரிய வில்லை அல்லது மனமில்லை! வருத்தம்தான் மிஞ்சுகிறது.
பல திரைப்படங்கள் எடுத்த, எடுக்கின்ற ‘யூனிவர்சல் ஸ்டூடியோஸ்’ சிறப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது.
நம்ம ஊர் கலை வளர்த்த ஸ்டூடியோக்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உஷ்ணக் காற்றை உமிழ்ந்த வண்ணம் நாம் கடந்து வந்த கலாச்சாரப் பாரம்பரியங்களை மறந்து விட்டன.
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
(அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மட்டுமல்ல – உலக காபி தினமாமே?)
கொஞ்சம் காபி குடிக்கலாம், வாங்க!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் ஆடு மேய்க்கும் சிறுவன் அதிசயிக்கும்படி அவனது ஆடுகள் துள்ளிக் குதித்து, மகிழ்வுடன் ஆடிக்கொண்டிருந்தன! அருகே இருந்த புதரில் நல்ல சிவப்பு நிறத்தில் காய்த்திருந்த ‘பெர்ரி’ பழங்களைத் தின்றதினால்தான் இந்தப் பரவசம் என்பதை அறிந்தான் ‘கால்டி’ என்ற அந்தச் சிறுவன்! தானும் சிறிது தின்றபோது, ஏற்பட்ட புத்துணர்ச்சி வித்தியாசமாக இருக்கவே, தன் மதகுருமார்களிடம் அவற்றைக் கொண்டு கொடுத்தான். இது ஏதோ சைத்தான் வேலை என்று அஞ்சிய குருமார்கள், அந்தக் காய்களை அருகிலிருந்த நெருப்புக் குண்டத்தில் வீசினர். அதிலிருந்து எழுந்த வாசனை அவர்களை மீண்டும் ஆட்கொண்டன! தீயில் வறுத்து, தண்ணீரில் பாதுகாத்தனர். சைன, ஜப்பானியத் துறவிகளின் தேனீர் பானம் போல, தங்கள் பிரார்த்தனைகளின் போது விழிப்புடன் இருக்க இப்பானத்தை அருந்தத் தொடங்கினர் – பின்னர் படிப்படியாக, காபிக்கொட்டைகளை வறுத்து, கொதிக்கும் நீரில் ஊற வைத்து மணமான டிகாக்ஷன் தயாரிப்பது வந்தது –
கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வந்த ‘ப்ளாக்’ காபி, இன்று பால், சர்க்கரையுடன் சேர்ந்து, வீதிக்கு வீதி ‘கும்மோணம்’ பில்டர் காபியாகி, வாழ்க்கையின் முக்கியமானதொரு அங்கமாகி விட்டது வரலாறு!
காலையில் டைனிங் டேபிளிலோ, பால்கனியில் தொங்கும் மூங்கில் கூடையிலோ, ஹாலில் ஆடும் ஊஞ்சலிலோ, சினிமாக்களில் வருவதைப்போல் வீட்டுக்கு முன்னிருக்கும் புல்தரையிலோ காபி அருந்துவது சுகம் – உடன் அன்றைய சூடான செய்திகளுடன் பேப்பரும் இருந்து விட்டால் இரட்டிப்பு சுகம்! (எதிரில் மனைவியும் இருப்பது காபி தயாரித்தது யார் என்பதைப் பொருத்தது!).
சின்ன வயதில், காபி வாசனையோ, தண்ணீர் கொதிக்கும் சத்தமோ கேட்டால்தான் காலையில் படுக்கையிலிருந்து எழும்பத் தோன்றும்! அம்மா எப்போதும் ப்ளாண்டேஷன் ஏ, பீபெரி (தட்டைக் கொட்டை, குண்டுக்கொட்டை) இரண்டையும் கலந்துதான் உபயோகிப்பாள் – சிக்கிரி எப்போதும் கிடையாது. நல்ல நிறம், மணம், சுவை இவற்றுக்கு இந்த காம்பினேஷனே சரி என்பது அவள் அனுபவம்!
பாண்டிபசாரில் நரசுஸ் காபி, பாண்டியன் காபி அப்போதெல்லாம் பிரசித்தம். முதல் நாள் மறந்து விட்ட சில நாட்களில், மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று, பாண்டியன் காபிப்பொடி வாங்கியிருக்கிறேன்! ஊதுவத்தி மணத்துடன் மதுரை மீனாட்சி சிரித்திருக்க, எவர்சில்வர் சம்புடத்திலிருந்து கரண்டியால் ஏ மற்றும் பீ பொடிகளைக் கலந்து, பாண்டியன் காபி என்று ப்ரிண்ட் செய்த திஸ்யூ பேப்பர் கவரை வாயால் ஊதித் திறந்து, பொடியைக் கரண்டியால் லாவகமாக உள்ளே இட்டு, மேஜையின் மேல் இரண்டு தட்டு தட்டி, அந்தக் கால வெக்டர் வேயிங் மெஷினில் நிறுத்து, பையின் வாயினை இரண்டு மடி மடித்து, பசையுள்ள பிரவுன் கலர் காகித நாடாவால் ஒட்டி, சூடாகக் கொடுக்கும் காபிப்பொடிக்கு வீட்டில் வரவேற்பு அதிகம்!
நாக்கு நீளமான சில பெரிசுகளுக்கு, வீட்டிலேயே அரைக் கைப்பிடி (‘ஸ்ராங்கா’ என்பது தோராயமாக ஒரு கைப்பிடியில் பாதி அளவு!) பச்சைக் காபிக் கொட்டையை வறுத்து – அதிகம் கருக்க விடாமல், சிறிது பொன்னிறத்தில் – கை மெஷினில் (மினியேச்சர் காபி அறவை மெஷின்), கைப் பிடியைக் கரகரவென்று சுற்றி, அதன் மூக்கின் வழியே விழும் புத்தம்புது வாசனையுடன் காபிப் பொடியில் பில்டரில் டிகாக்ஷன் இறக்கி, புதுப் பசும்பாலில் கலந்து, நுரையுடன் சூடாகக் குடிக்கும் காபியைத் தவிர வேறு எதையும் காபி என்று ஒத்துக்கொள்ள மனம் வராது!
பில்டரில் டிகாக்ஷன் இறக்குவது ஒரு கலை! தேவைக்கேற்ப காபிப்பொடியைப் போட்டு சிறிது இதமாக அமுக்கி அதன் மேல் சிலர் சிறிய ஜாலி மூடி ஒன்றை வைப்பார்கள் – என் அம்மா, தினசரி காலண்டரிலிருந்து ஒரு தேதி ஷீட்டைக் கிழித்து, பில்டரில் காபிப் பொடி மேல் போட்டு அதன் மேல் கொதிக்கும் நிரை விடுவாள் – அதையும் நேராக வேகமாக விடாமல், மெதுவாகச் சுற்றியபடியோ அல்லது முன்னும் பின்னுமாகவோ விடுவது ‘ஸ்ட்ராங்’ டிகாக்ஷனுக்கு உத்தரவாதம்! கோபத்துடன் வேகமாக சுடுநீரை விடுவது, பில்டரின் தலையில் தட்டுவது இவையெல்லாம் ‘கொட கொட’வென தண்ணீராய் இறங்கும் டிகாக்ஷனுக்கு வழி வகுக்கும் – நல்ல காபிக்கு உதவாது!! இந்தத் தொல்லைகளிலிருந்து ஓரளவுக்கு விடுதலை கொடுப்பவை இப்போது புழக்கத்திலுள்ள ‘காஃபி மேக்கர்’ என்னும் பில்டர்!
பசும்பாலோ, எருமைப்பாலோ, கறந்த பாலோ, கவர்ப் பாலோ – காபியின் சுவையை மாற்றும் வல்லமை கொண்டவை இவை – நன்கு காய்ச்சி, பொன்னிறம் வரும் அளவுக்கு காபி டிகாக்ஷனைச் சேர்த்து, சர்க்கரையும் (கொஞ்சம் குறைவாக இருந்தால் நல்லது – அடிநாக்கில் காபியின் கசப்பு சிறிது நேரத்துக்கு இருப்பது காபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!) சேர்த்து, இரண்டு முறை நுரை வர ஆற்றி, டபரா தம்ப்ளரில் கொடுக்கப் படும் காபிக்கே என் ஓட்டு!
டீத்தண்ணீர் போல நீர்த்திருக்கும் டிகாக்ஷன், ப்ளாஸ்டிக் வாடையடிக்கும் கவர் பால், டயபெடீஸ் என்று சர்க்கரைக்குப் பதிலாய் சேர்க்கப்படும் ஈக்வல் – இவை நல்ல காபிக்கு விரோதிகள்!
இடம், நேரத்திற்கேற்றார்போல் வித விதமாக அவதாரம் எடுக்கும் காபி! – கல்யாண காபி, ஓட்டல் காபி, டீ ஸ்டால் காபி, சினிமா தியேட்டர் எஸ்பிரஸோ காபி, அவசரத்துக்கு வரும் இன்ஸ்டண்ட் காபி, பாலில்லா பிளாக் காபி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மற்றும் விமானங்களில் தரப்படும் பிரவுன் கலர் காபி என்ற வஸ்து , நிறம், மணம் இல்லா சுடுநீருக்கிணையான ரயில்வே காபி, கிலோமீட்டருக்கு ஒன்றென முளைத்திருக்கும் ‘கும்பகோணம் டிகிரி காபி’ கடைக் காபிகள் – (‘இதுதான் முதலில் வந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி ஷாப்’ என்றவரின் கடையில் காபி குடித்து வெளியே வந்து, போர்டில் பார்த்தால், உரிமையாளர் உம்மர் பாய் என்றிருந்தது!)
உலகில் பெட்ரோலுக்கு அடுத்து அதிக டிமாண்டில் இருப்பது காபிதான்!
காலை ஐந்தரை மணிக்கே திநகர் கீதா கபேயில் நல்ல காபி கிடைக்கும் – முக்தா ஶ்ரீனிவாசன், தமிழ்வாணன், உபால்டு, ஆரூர்தாஸ் போன்றவர்களைக் காலை வேலையில் கையில் அன்றைய பேப்பருடன் – காலைக் காபிக்கு இங்கு வருவதைக் காணலாம்!
“தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காப்பியைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம்” – ஏ.கே.செட்டியார், குடகு, சென்னை, 1967.
இரண்டு நண்பர்கள் சந்தித்தாலும், சிநேகிதியுடன் கடலை போடும்போதும், நடைப் பயிற்சி முடிந்த பிறகும், பெரிசுகள் பழங்கதை பேசும்போதும் காபியும் ஒரு பாத்திரமாக மாறி வாழ்க்கையுடன் இணைந்துவிட்டது என்பதே உண்மை!
வாழ்க காபி ரசிகர்கள்!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
தமிழ்வாணன் – பன்முக வித்தகர்!
தமிழ் வளர்த்த சான்றோர் 59 வது நிகழ்வில், வ.வே.சு அவர்கள் உரையாடியது லேனா தமிழ்வாணனுடன் – பேசப் பட்ட சான்றோர் திரு தமிழ்வாணன் அவர்கள்! ‘துணிவே துணை’, ‘Master of all subjects’ போன்ற வரிகளுக்குச் சொந்தக்காரர், சுதந்திர இந்தியாவில், எளிய தமிழ் மக்களிடையே, பொது அறிவு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். 52 வயதில், 500 புத்தகங்களை எழுதியவர். தனக்காகத் தனி பிரசுரம் ஆரம்பித்தவர்.
இன்றைய அறுபது வயது இளைஞர்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் சொல்வது “ நான் தமிழ்வாணனின் தீவிர வாசகன் / கி” . அறுபதுகளிலேயே ஆறு லட்சம் பிரதிகள் கண்டது கல்கண்டு! சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த துணுக்குச் செய்திகள், அரசியல், சினிமா, மருத்துவம் (இயற்கை வைத்தியம்), ஆன்மீகம், ஜோதிடம், உலகப் பார்வை, கட்டுரைகள், துப்பறியும் நாவல்கள், பாலியல் விழிப்புணர்வு என ஒரு பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தையும், பொது அறிவையும், 32 பக்கங்களில் தாங்கிவரும் ‘கல்கண்டு’, முற்றிலும் தமிழ்வாணன் என்ற தனிமனிதனின் சிந்தனையிலும், உழைப்பிலும் உருவான வார மலர்!
ஜிப்பா, வேட்டி, ஜோல்னாப்பை என்ற எழுத்தாளர்களின் பழமையான உடைகளை மாற்றி, தன் எழுத்துக்களைப் போலவே புதுமையாக, பேண்ட், சர்ட், கருப்புக் கண்ணாடி, ஆங்கிலேயரைப் போன்ற தொப்பி என அணிந்து வலம் வந்தவர். எங்கிருந்தும் போஸ்ட் கார்டில் வெறும் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும் வரைந்து அனுப்பினால், அந்தக் கார்டு சென்னை தியாகராய நகர் மணிமேகலைப் பிரசுரம் வந்தடைந்து விடும் என்பது, தமிழ்வாணனின் உடை நாகரீகத்தின் அங்கீகாரம்!
கலைக்காக வாழ்பவன் ‘கலைவாணன்’, இசைக்காக வாழ்பவன் ‘இசைவாணன்’, தமிழுக்காக வாழ்பவன் ‘தமிழ்வாணன்’ எனப் பொருள் சொல்லி, இராமநாதனாக இருந்தவருக்குத் ‘தமிழ்வாணன்’ எனப் பெயர் சூட்டியவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்!
‘கற்கண்டு’ என்பதுதானே சரியான தமிழ் – ‘கல்கண்டு’ எனப் பிழையாகப் பெயர் சூட்டியிருக்கிறாறே என்று கேள்வி எழுப்பிய தமிழ் ஆர்வலர்களிடம், மு.வ. அவர்கள், ‘தமிழில் பிழை செய்ய மாட்டார் தமிழ்வாணன்; அவரையே கேட்டு வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறார். தமிழ்வாணன் கொடுத்த விளக்கம் முற்றிலும் வித்தியாசனமானது! ‘கல்’ என்றால் ‘படி’, ‘கண்டு’ என்றால் ‘பார்த்து’ – கல்கண்டு என்றால் ’பார்த்துப் படி’ என்றுதான் சொன்னேனே தவிர, இது கற்கண்டு என நான் சொல்லவில்லையே என்றராம்!
‘எழுத்து என்பது பொழுதுபோக்கிற்கு அல்ல, வாழ்க்கைக்குப் பயன்பட’ என்பதில் உறுதியாய் இருந்தவர் தமிழ்வாணன். 46 ல் ‘அணில்’ அண்ணாவாகக் குழந்தைகளுக்கு எழுதியவர் (ஜில் ஜில் பதிப்பகம்)! கருத்துச் சிந்தனைகளையும், வாழ்வு முன்னேற்ற சிந்தனைகளையும் கொடுத்தவர், குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான எழுத்துக்களிலும் வயதிற்கேற்ற முன்னேற்றக் கருத்துக்களைக் கொடுத்து, அவர்கள் சிந்தனா சக்தியையும் வளர்த்தவர்!
‘நூறு ஆண்டுகள் வாழ்வதெப்படி’ என்ற நூலை எழுதியவர், 51 ஆண்டுகளே வாழ்ந்தாலும், 100 ஆண்டுகள் வாழ்பவர்கள் செய்யும் சாதனைகளைப் படைத்தவர் தமிழ்வாணன். ஜோதிடம், நாடகம், திரைப்படம், மருந்து, பல்பொடி தயாரிப்பு என பல்துறைகளிலும் இறங்கி, உழைத்து உயர்ந்தவர். சக எழுத்தாளர்கள் சைக்கிளுக்குக்கூட வழியற்ற காலத்தில், காரில் பவனி வந்தவர் தமிழ்வாணன்!
அரசியலில் புகழின் உச்சத்தில், அசைக்கமுடியாத இடத்தில் இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ம.பொ.சி போன்றவர்களுடன் நட்புடன் இருந்தாலும், கொள்கைகளில் தவறு கண்டபோது, துணிந்து அவர்களை எதிர்க்கவும் செய்தார். அவருடைய கேள்வி பதில்களைப் படித்தாலே புரியும் அவருக்குத் துணை, ‘துணிவு’ மட்டுமே என்று! உதாரணத்துக்கு ஒன்று:
‘ஜனநாயக ஆட்சி என்பது என்ன?’
‘ஓர் ஊரில் மொத்தம் 100 பேர்கள். இந்த 100 பேர்களுள் 49 பேர்கள் அறிவாளிகள்; 51 பேர்கள் மூடர்கள், என்றாலும் அந்த 49 பேர்களையும் இந்த 51 பேர்கள்தாம் ஆள வேண்டும். இதுதான் ஜனநாயக ஆட்சி! அறிவு உள்ளவர்களைக்கூட, அறிவில்லாதவர்கள் ஆள ஜனநாயகத்தில் இடம் உண்டு!
முதன் முதலில் எம் ஜி ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டம் கொடுத்தவர் தமிழ்வாணன் – பின்னர் தமிழக அரசியல், திரை உலகங்களில் ஏராளமான திலகங்கள்!
நன்றி மறவாதவர் தமிழ்வாணன் – முதலில் ஒரு பிரசுரம் துவக்கத் தன் நகைகளைக் கொடுத்த தன் மனைவியின் பெயரிலேயே ‘மணிமேகலைப் பிரசுரம்’!
தேன்மொழி, மணிமொழி, நல்ல நாயகம், பூவேந்தன், அமுதா,வெற்றிவேலன், நெடியோன், சொல்லழகன், மலர்விழி எனத் தமிழ்ப் பெயர்களையே தன் கதாபாத்திரங்களுக்குச் சூட்டிய தமிழ்வாணன், துப்பறியும் கதாநாயகனுக்கு ‘சங்கர்லால்’ எனப் பெயரிட்டதேன்? என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. ‘சர் ஆர்தர் கானண்டாயலின் படைப்பான ஷெர்லாக்ஹோம்ஸ் போல ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது?’ என்ற யோசனையை, கேரள வாசகர் ஒருவர் கூற, ‘இது ஒரு மில்லியன் டாலர் யோசனை’ என மகிழ்ந்து, ‘சங்கர்லால்’ துப்பறிகிறார் எனத் தொடர்கள் எழுதினார் – யோசனை சொன்ன வாசகரின் பெயர் ‘சங்கர்லால்’! தமிழ்வாணனின் நன்றியுணர்வின் வெளிப்பாடு இது.
தேநீர் (தேன் போல் இனிக்கின்ற நீர், தேயிலையிலிருந்து வந்த நீர்), காரோட்டி, மயிரிழை என்பதற்கு பதில் நாகரீகமான நூலிழை, என தமிழ் வார்த்தைகளை பழக்கத்திற்குக் கொண்டுவந்தார்! மொழி வெறியைத் தூண்டுவதாகவோ, கெட்ட செய்திகளையோ எழுதுவதைத் தவிர்த்தவர். ‘ரிக்ஷா’ – மனித சக்தியால் ஓடும் வாகனம் (ஜப்பானிய மொழி), ‘தோசை’ – புளித்த தோய்ந்த மாவில் செய்தது – ‘தோயை’ என்பது ‘தோசை’ என மருவியது- இது போன்ற பல விளக்கங்கள் தமிழ்வாணன் அறிமுகம் செய்திருக்கிறார்.
ஒரு தேனியைப்போல், கன்னிமாரா நூலகம், நியூஸ் வீக், டைம்ஸ், டிட்பிட்ஸ், அமெரிகன் நூலகம் என பல இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்து, எளிமையாய் மொழிபெயர்த்து, எல்லோரும் ரசித்து, வாசித்துப் பயன்பெறும் படி, தன் கல்கண்டில் வெளியிட்டவர் தமிழ்வாணன்!
முதன் முதலாகத் தன்னையே கதாநாயகனாக வைத்து எழுதியவர்! ‘ராகி’ ஓவியருடன் படக்கதைகளுக்கு உயிரூட்டியவர்!
தன்னுடைய மூன்று விரோதிகளாக அவர் குறிப்பிடுபவர்கள்: 1. என் நேரத்தை வீணாக்குபவன். 2.கைமாற்று கேட்பவன். 3.என்னை நேரில் புகழ்பவன்! தேவையில்லாமல் ‘சும்மா’ பார்க்க வருபவர்களைத் தவிர்க்க அவர் தரும் அறிவுரை -“கையில் ஒரு ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, நன்கொடை கேளுங்கள்!”.
தமிழ்வாணனின் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல – துணிவானவை, தூரப் பார்வை கொண்டவை, சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை! உங்களை ஒரு பத்திரிகை தாக்கி எழுதுகிறதே, நீங்கள் ஏன் திருப்பித் தாக்குவதில்லை? என்ற கேள்விக்கு, ‘நாய் நம்மைக் கடிக்கலாம். ஆனால், நாம் நாயைத் திருப்பிக் கடிக்கலாமா? நான் கட்சி சார்பற்றவன். எது உண்மையோ அதை மட்டுமே நாட்டிற்குச் சொல்லுகிறேன்.’ என்று பதில் சொல்கிறார். கேள்வி: “திருக்குறளில் பிடித்த குறள்கள் எத்தனை?” அவர் பதில் “1330”. மன அமைதி எப்போது கிடைக்கும் ? “ஒரு வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பதில் கிடைக்கும்!”
1948 முதல் 1977 வரை, 29 ஆண்டுகள், தன் எழுதுக்களையே தன் சொத்தாக எண்ணி, மறையும் வரை கல்கண்டு ஆசிரியராகத் துணிவையே துணையாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்வாணன்.
அசோகமித்திரன் தன் இரங்கலில், “ அவரது மறைவில் தமிழ் பத்திரிகை உலகம் ஒரு ஒருநிமிடம் ஸ்தம்பித்துப் போனது. இன்னொரு எம்ஜிஆர் சாத்தியமாகாதது போல், இன்னொரு தமிழ்வாணனும் சாத்தியமில்லை “ என்று எழுதுகிறார். உண்மைதான்!
(தமிழ் வளர்த்த சான்றோர் நிகழ்வில் தமிழ்வாணன் பற்றி வ வே சு வும், லேனா தமிழ்வாணனும் உரையாடியதிலிருந்து)
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்
எதிர் மரியாதையும் சுதாமன் குபேர செல்வமும்!
திருமணங்களில் எதிர் மரியாதை செய்வது என்பது ஒரு சாங்கியம்! சம்பந்திக்கு, புடவை, வேட்டி, வெற்றிலைப் பாக்கு, பழம் எல்லாம் வைத்துக் கொடுப்பது ஒரு வழக்கம்! அதுபோலவே, திருமணத்திற்கு வந்திருப்பவர்கள், திரும்பிச் செல்லும் போது, கையில் ஒரு தாம்பூலப் பை கொடுப்பது – அவர் மொய் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும்! – ஒரு வகையான எதிர் மரியாதை, வந்து வாழ்த்தியதற்கு ‘நன்றி’ கூறுதல்!!
தாம்பூலப் பைகள், பல வகை – துணிப் பை, காகிதப் பை, அலங்காரக் கைப் பை என. மணமக்கள் பெயர், மண நாள், ஏதாவது சுவாமி படம் அல்லது கூப்பிய கரங்கள், தேங்க் யூ என பையின் மேல் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும். சிலர் தங்கள் ‘கெத்’தைக் காண்பிக்கும் வகையில் மிக ஆடம்பரமான தாம்பூலப் பைகளைக் கொடுப்பதுவும் உண்டு! சுவாரஸ்யம் பையின் உள்ளே இருக்கிறது – தேங்காய், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் குங்குமம் போன்றவைதான் வழக்கமாக இருக்கும். செலவைக் குறைக்க, தேங்காய் இடத்தில் சின்ன சாத்துக்குடி அல்லது ஒரு ஆரஞ்சு (சீசனுக்குத் தக்கபடி) வைப்பதுவும் உண்டு. வீட்டில் வந்து, அது நார்த்தங்காயா அல்லது வாடிய சாத்துக்குடியா என பட்டி மன்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!
சில பைகளில் சாக்லேட்டுகள், திருமண பட்சணம், வளையல் என வித்தியாசமான வஸ்துக்களும் இடம் பெறும். மிகத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு ஸ்பெஷலாய் சில பரிசுப் பொருட்களை, தனியான பையில் போட்டுக் கொடுப்பவர்களும் உண்டு – ‘ரிடர்ன் கிஃப்ட்’ – பெண்களுக்குத் தனியாகவும், ஆண்களுக்குத் தனியாகவும் (என்ன உபயோகிப்பார்கள் என யோசித்து) கிஃப்ட் பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதற்காக எல்லோரையும் தெரிந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் வாசலில் டியூடியில் இருப்பார்!
சஷ்டி அப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில், புத்தகங்கள் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் – இதை, காரைக்குடி செட்டியார்கள் வீட்டு திருமணங்களில், நிச்சயமாக நடைபெறும் ஒரு வழக்கமாகவே பார்த்திருக்கிறேன்! வாழ்த்துரைகள், பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகங்கள், சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள், முதுமையில் மகிழ்ச்சி, பகவத் கீதை, மகான்களின் பொன்மொழிகள் இப்படிப் பல தலைப்புகள், நமக்குக் கிடைக்கும்!
சமீபத்தில் நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்தில், அருமையான புத்தகம் ஒன்றை, தாம்பூலப் பையுடன் கொடுத்தார்கள் – டாக்டர் டி எஸ்.நாராயணஸ்வாமி தொகுத்திருந்த, ”தெரிந்த புராணம் தெரியாத கதை”என்ற புத்தகம். சுவாரஸ்யமாக இருந்தது! வாசிக்கும் பழக்கம் தொலைந்து வரும் இந்த நாட்களில், இப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுப்பது, வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கொள்ளலாம். இரண்டு வயது குழந்தைக்குக் கூட ‘யூ ட்யூபி’ல் கார்டூன் காண்பித்து சாதம் ஊட்டும் பெண்கள் / ஆண்கள் கதை சொல்லி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கலாம் – இந்தப் புத்தகம் அதற்கு ஒரு நல்ல முன்னோடி என்பேன் நான். இராமாயண, மகாபாரதக் கதைகள் நல்ல வாசிப்பானுபவத்தையும், வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பார்வையையும் அளிக்க வல்லவை என்பது என் எண்ணம். அதை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெரியவர்களின் கடமை!
குசேலசர் கதை நாமெல்லாம் அறிந்ததுதான். இந்தப் புத்தகதில் அந்தக் கதையிலிருந்து:
துவாரகையில் ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பாத பூஜை செய்யும் ருக்மணி, கண்ணனின் பாதங்களில் வழியும் இரத்தம் கண்டு திடுக்கிட்டு, காரணம் கேட்கிறாள். ”வறுமையில் வாடும் என் நண்பன் சுதாமன் என்னும் குசேலன், என்னைக் காண பசியிலும், உடல் தளர்ச்சியிலும் வாடி வந்துகொண்டிருக்கிறான். அவன் கால்களில் குத்தும் முட்களையும், இரத்தத்தையும்தான் இங்கு நீ காண்கிறாய். அதனால் அவன் கால்களில் முட்கள் தைத்ததை அறியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறான்” என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.
குசேலனை நன்கு உபசரித்து, பாத பூஜை எல்லாம் செய்து மகிழ்கிறான் கண்ணன். அவன் கொடுக்கும் அவலில் இரண்டு பிடிகளைத் தின்பதின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் குசேலனுக்கு அளிக்கிறார். மூன்றாவது பிடி அவலை தின்னுமுன், ருக்மணி அதனைத் தடுத்து விடுகிறாள்! எங்கே இருக்கும் மற்ற செல்வங்களையும், தன்னையும், தன் பரிவாரங்களையும் தானமாக்க் கொடுத்து விடுவானோ கண்ணன் என்று தடுத்து விடுவதாகச் சொல்லிவருகிறார்கள் கதை சொல்பவர்கள் – தர்மத்தை, கணவன் செய்யும் தர்மத்தை, அதுவும் மஹாலக்ஷ்மியின் அவதாரமான ருக்மணி தடுப்பாளா? என்ற கேள்வி எழுகிறது. ஶ்ரீகிருஷ்ணன் கேட்கும்போது, ருக்மணி, “ ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல் அனைத்தையும் தாங்களே சாப்பிட்டு விட்டால், அந்தப் பிரசாதத்திற்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்திற்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே என்றுதான், மூன்றாம் பிடி அவலை தங்கள் கைகளைப் பிடித்துத் தடுத்தேன்” என்கிறாள்! ருக்மணி தர்மத்தைத் தடுக்கவில்லை – தர்ம பலன் எல்லோருக்கும் கிடைக்கவே அவ்வாறு செய்தாள்!
தன் வறுமை நீங்கியது அறியாமல் சுதாமன், கண்ணனின் கருணையால் பேரானந்தத்தில் இருந்தான். அவன் மனம் சலனமேதுமின்றி இருந்தது. வந்த வழியே நடந்து ஊர் திரும்புகிறான். இதைக் கண்ட ருக்மணி, “அவருக்குத் தெரியாமலே சகல செல்வங்களையும் கொடுத்துவிட்டு, திரும்பவும் வந்த வழியே நடந்து செல்ல வைத்துவிட்டீர்களே?” என்று கேட்கிறாள். அதற்கு ஶ்ரீகிருஷ்ணர் கூறும் விளக்கம் நாம் அனைவரும் உணர்ந்து விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! பகவான் சொல்கிறார்: “சுதாமன் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. வீட்டிற்குச் சென்று குபேர செல்வத்தால் ஏற்படும் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்ற பேரவா போன்ற புதிய பிரச்சினைகளால் சுதாமன் வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அதனால்தான், அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பரமானந்தத்தை சிறிது நேரம் அவனிடம் இருக்க, திரும்பவும் நடந்து செல்ல அனுமதித்தேன்” என்கிறார்.
பக்தியின் பேரானந்ததையும், குபேர செல்வத்தால் ஏற்படும் தீமைகளையும் எளிமையாகச் சொல்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.
இப்படி 31 புராண, இதிகாசக் கதைகள் உள்ளன – வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் வரையப்பட்டுள்ள கோட்டோவியங்கள் மிகச் சிறப்பு (ஓவியர் ஜே.பாலாஜி)! தாம்பூலப் பைகளில் இப்படிப்பட்ட புத்தகங்கள் கொடுப்பதை வரவேற்கிறேன் – வாசிப்பது அவரவர் விருப்பம்!
(தெரிந்த புராணம் தெரியாத கதை – டாக்டர் டி எஸ் நாராயணஸ்வாமி. LKM Publication, Chennai 600 017. Phone : 24361141).
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
அசோக் நகர் கோடைப் புத்தக விழாவும், நானும்!
வருடா வருடம் அஸ்லி நகரில் உள்ள அரசு நூல்நிலைய வளாகத்தில் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறும். இவ்வருடமும் நடந்துகொண்டிருக்கிறது – ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், சுட்டெரிக்கும் வெயிலில் நண்பர் ஆர் கேயுடன் சென்றேன்.
காம்பவுண்ட் சுவருக்கும், மத்திய நூலகக் கட்டிடத்துக்கும் இடையே சுமாராக 15அடி அகலம், 50-60 அடி நீளத்திற்கு ஒரு பந்தல் – ஃப்ரில் வைத்த வெள்ளைத் துணியில் சீலிங், “ப” வடிவில் ஒற்றை அரங்கம், மூன்று பக்கங்களிலும் புத்தகங்கள், அரங்கின் நடுவில் நீளமான பெஞ்சில், அட்டைப் பெட்டிகளில் புத்தம்புதிய புத்தகங்கள் (50% தள்ளுபடி விலையில்)! சந்தியா பதிப்பகம் மற்றும் ஓரிரண்டு பதிப்பகங்கள் மட்டுமே பங்கு கொண்டிருந்த புத்தகக் திருவிழா – ஆனாலும், நல்ல புத்தகங்கள் இருந்தன.
சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் கதைகள், கார்ட்டூன்கள், மு.வ. நூல்கள், கல்கியின் பொ.செ.. வண்ணதாசன், கலாப்பிரியா, லா ச ரா, க நா சு என நூல்கள் – வாசலில் ஒருவர் பில் மெசினுடன்; அருகில் ஒரு ஃப்ள்க்ஸ் போர்டு, சில புத்தகப் படங்களுடன்…
ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதைத் தொகுப்பு – ந.பிச்சமூர்த்தி), ஹாஸ்ய வியாசங்கள் (பம்மல் சம்பந்த முதலியார்), கல் சிரிக்கிறது (நாவல் – லா ச ரா), இலக்கியச் சாதனையாளர்கள் (க நா சு) – இவை நான்கும் (சந்தியா பதிப்பகம்) நான் வாங்கிய புத்தகங்கள். வெயில், டி.வியில் கிரிக்கெட் போன்ற காரணங்களால், இரண்டு, மூன்று பேர்கள் மட்டுமே புத்தகம் ‘பார்த்துக்’ கொண்டிருந்தனர்.
20% டிஸ்கவுண்டில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, வெளியே ஒரு செவ்விளநீர் (கிட்டத்தட்ட தள்ளுபடி செய்த ஒரு புத்தக விலை!) சீவி, காகித உறிஞ்சு குழல் உதவியுடன் நாக்கையும், தொண்டையையும் சிறிது நனைத்துக்கொண்டு, வீடு வந்துசேர்ந்தேன்!
போன வாரம் இதேபோல் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு தள்ளுபடி விற்பனை – க்ளியரன்ஸ் சேல் என்றார்கள். போயிருந்தேன். அவ்வளவு புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் – வாங்குபவர்களும் இருந்தார்கள். மகிழ்ச்சி. ஆனாலும் புத்தகம் குறித்து, இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது……… ஒரு வேளை வாசிப்போ?
வாங்கிய புத்தகங்களை வாசித்த வரையில் …….
“1937 ல் முதற் பதிப்பு – சென்னை ‘பியர்லெஸ்’ அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது – ஹாஸ்ய வியாசங்கள் – தமிழில் ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார், பே.,பி.எ.ல்., அவர்களால் இயற்றப்பட்டது”. என்ற குறிப்புடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். சென்னை விநோதங்களில், நீர் இல்லாத நீச்சல் குளம் உள்ள கட்டிட விவரணை, பழம் தவிர மற்ற எல்லாம் விற்கும் கார்ப்பொரெஷன் பழக்கடை, ‘பீஸ் – கூட்ஸ் – மார்கெட்’என்ற பெயருடைய ஜவுளிக் கடை கட்டிடத்தில் உள்ள சவுக்கு மரக் கடைகள் என நகைச்சுவயுடன் விவரிக்கிறார். “வயது” என்ற வியாசத்தில், 90 வயதுக்கும் மேலாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான கிழவர் ” சாஸ்திரங்களில் ஒருவனுடைய பொருள், ஒருவனுடைய வயது, ஒருவனுடைய ஆசாரியார் பெயர், இன்னும் இரண்டொரு விஷயங்களை வெளியில் கூறக்கூடாது ” என்று கூறி, வயதைச் சொல்ல மறுத்துவிட்டாராம்.
இப்படி சுவாரஸ்யமான 12 வியாசங்களைக் கொண்ட சின்ன ஆனால் சிறப்பான நூல்!
‘ஜம்பரும் வேஷ்டியும்’ – சிறு கதையில் இரண்டு நண்பர்கள், தன் மனைவிகளின் சந்தேகம், சண்டைகளால் எப்படி வீடு மாற்ற முடிவு செய்கிறார்கள் என்பதை தன் பாணியில் சொல்கிறார் ந.பிச்சமூர்த்தி. 8 சிறுகதைகள் கொண்ட சிறிய தொகுப்பு.
க நா சு அவர்களின் இலக்கியச் சாதனையாளர்கள், நான் வாசித்த மட்டில், மிகச் சிறந்த நூலாக, சுவாரஸ்யமான வாசிப்பானுபவமாக இருக்கிறது. நான்கைந்து பக்கங்களில், தமிழின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளின் குணாதிசயங்கள், படைப்புகள், விருப்பு வெறுப்புகள் எனப் பிழிந்துகொடுக்கிறார். ராஜாஜி தொடங்கி விசுவநாத சத்திய நாராயணா வரை 41 ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கிறார். (நான் 11 வரை வாசித்திருக்கிறேன்!). புதிதாக வாசிக்கவும், எழுதவும் முனைவோருக்கு, அனுகூலமான, பயன்மிகு படைப்பு, ‘இலக்கிய சாதனையாளர்கள்’ என்கிறார் சந்தியா நடராஜன் – உண்மைதான்!
(‘கல் சிரிக்கிறது’ – இன்னும் வாசிக்கவில்லை!)
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
சுதந்திரக் கதை சொல்லும் அந்தமான் செல்லுலார் ஜெயில்!
அடர்த்தியான காடுகளும், எழில்மிகு கடற்கரையும் கொண்ட அழகிய அந்தமான் நிகோபார் தீவுகளின் தலை நகரம் போர்ட் ப்ளேர் –
இந்தியாவின் பகுதியான அந்தமான்,
சுமார் ஆயிரம் மைல்களுக்கு அப்பால், காலாபானி (INFAMOUS WATER) என்றழைக்கப்பட்ட கடல் சூழ்ந்த தீவு என்பதோ,
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த ‘நெக்ரிடோ’ ஆதிவாசிகள்,
தீவுக்கு வரும் புதிய மனிதர்களின் மார்புகளைக் கருணையின்றித் துளைக்கும் அம்புகளை ஏவிவிடும் மனிதர்களின் இருப்பிடம் என்பதோ,
தரை தட்டும் கப்பல்களில் பயணிகள், கோரமான முறையில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டார்கள் என்பதையோ,
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொடுமையான முறையில் தண்டிப்பதற்கான ஜெயில்களைக் கட்டியிருந்தனர் என்பதனையோ,
வீர சவார்கார், நேதாஜி போன்றவர்களின் தியாகங்களையோ –
இன்று கூடைத் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும், அரை டிராயரும் அணிந்து, கையில் பெரிய காமிராவும் கொண்டுவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்!
போர்ட் ப்ளேரில் இருக்கும் ‘செல்லுலார்’ ஜெயில், ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்கவேண்டிய இடம் –
அதன் ஒவ்வொரு செங்கல்லும், இந்திய சுதந்திரம்பற்றிய கதையை சோகத்துடன் சொல்லிக் கொண்டிருப்பதை அங்கு உணரமுடியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் சிதிலமடைந்த நிலையில், பாதுகாப்பற்ற ஜெயிலாகவும், போர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் பாதுகாப்பகமாகவும் இருந்தது செல்லுலார் ஜெயில்.
1979 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களால், செல்லுலார் ஜெயில் ‘நேஷனல் மெமோரியல்’ ஆக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இன்று ஜெயிலின் 7 பகுதிகளில் (WINGS), 1,6, 7 விங்ஸ் மட்டும் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. அந்தமான் தீவு, செல்லுலார் ஜெயில்கள், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள், கைதிகளின் சித்ரவதைகள், ஜப்பானியரின் வன்முறைகள், வீரசவார்கார், நேதாஜி புகைப்படங்கள், மியூசியம், ஆர்ட் கேலரிகளில் சரித்திரம் பேசுகின்றன. செல்லுலார் ஜெயிலின் சரித்திரம் சொல்லும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி மாலை சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது – நான் போன அன்று இந்தியில் ஒலிபரப்பு – ஏதோ சுமாராகக்கூட புரியவில்லை! எனக்கு இந்தி தெரியாதது செல்லுலார் ஜெயிலின் குற்றமல்ல!
ஒரே சமயத்தில் மூன்றுபேரைத் தூக்கிலிடக்கூடிய தூக்கு மேடை, சவுக்கடி வாங்கும் கைதி, கை, கால்களில் இரும்புச் சங்கிலி பிணைத்த கைதிகள், சணலில் தைக்கப்பட்ட கைதி உடை என மனதைப் பிசையும் காட்சிப் பொருட்கள் – ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்ட மேடையின் மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, வீர் சவார்கார் இருந்த ‘செல்’ அவரது புகைப்படத்துடன் –
சுற்றிலும் கடல், ஒருபக்கம், ஜிகே பண்ட் ஆஸ்பிடலாய் மாறிப்போன இரண்டு விங்ஸ், மாடியில் நேதாஜியின் அந்தமான் விசிட் புகைப்படங்கள், புல்வெளிகள், பார்க் பெஞ்சுகள் – நன்கு பராமரிக்கப்படுகின்றன.
1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் விடுதலைப் போராட்ட வீரர்களையும், புரட்சியாளர்களையும் அந்தமான் சிறைக்கு – முதலில் வைப்பர் தீவுச் சிறை, பின்னர் செல்லுலார் ஜெயில் – டேவிட் பாரிக்கர்(ஜெயிலர்), மேஜர் ஜேம்ஸ் பாட்டிஸன் வாக்கர் (மிலிட்டரி டாக்டர்) தலைமையில் அனுப்புவதிலிருந்து தொடங்குகிறது இந்த சிறைச்சாலைக் கொடுமைகள்.
இருநூறு புரட்சியாளர்கள், கராச்சியிலிருந்து 733 பேர் (1863), மற்றும் இந்தியா, பர்மாவிலிருந்து சிறைக் கைதிகள் என இந்தத் தீவில் தண்டனைக்கு அனுப்பப் படுகின்றனர். பஹதூர் சாஃபர் ராயல் குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராகப் பெட்டிஷன் கொடுத்தவர்களும் இதில் அடக்கம்!
வைப்பர் தீவு போர்ட் ப்ளேரிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது. மிகக் கொடூரமான தண்டனைகள் – தூக்குத் தண்டனைகள் உட்பட்ட – வழங்கப்பட்ட இடம். இன்றும் எஞ்சியுள்ள ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட இடங்களைக் (GALLOWS) காணலாம். பேஷ்வார் ஷேர் அலி பத்தான், அப்போதைய இந்திய வைசிராய் லார்ட் மேயோவைக் கொலைசெய்த குற்றத்துக்காக இங்குதான் தூக்கிலிடப்பட்டார்!
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுதந்திரப் போராட்டம் வலுக்கவே, ஏராளமான கைதிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். சார்லஸ் ஜேம்ஸ் லயல் – ஹோம் செக்ரடரி – கடுமையான தண்டனைகளை விதித்தார். தாய் மண்ணிலிருந்து வெகு தூரத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்வதற்காகவே எழுப்பப்பட்டது ‘செல்லுலார்’ ஜெயில். 1896 – 1906 – பத்து வருடங்களில் கட்டப்பட்டது – பர்மாவிலிருந்து செங்கல் வரவழைக்கப்பட்டது – சைக்கிள் சக்கரத்தில் கம்பிகளைப்போல (SPOKES), நடுவில் ‘சென்ட்ரல் டவர்’, அதிலிருந்து ஏழு கிளைகளாக ஜெயில்! காவலர்களுக்கான மத்திய டவரில் ஒரு பெரிய மணி !
பேனொப்டிகான் (PANOPTICON) என்னும் வடிவில், ஜெரெமி பெந்தாம் என்பவரின் எண்ணத்தில் உருவானது இந்த ஜெயில். மூன்று தளங்கள், மொத்தம் 696 அறைகள் (செல்). அறை 14.8 அடிக்கு 9.9 அடி என்ற அளவில், ஒருபுறம் ஜெயில் கதவும், எதிர்புறம் 10 அடி உயரத்தில் ஒரு சின்ன ஜன்னலுடன் இருக்கின்றன. ஒரு கிளையின் அறைகளின் முன் பக்கம், அடுத்த கிளையின் அறைகளின் பின் பக்கத்தைப் பார்த்தவாறு அமைக்கப் பட்டிருப்பதால், கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ முடியாது! சவார்க்கர் சகோதரர்கள் (விநாயக் தாமோதர் சவார்கர், உம்பாராவ் சவார்கர்), இரண்டாண்டுகளுக்கு அதே ஜெயிலில் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் அதே இடத்தில் இருப்பதை அறியமுடியவில்லை!
80,000 க்கும் அதிகமான கைதிகள் – உயிர் பிழைத்தோர் மிக சொற்பமானவர்களே. தேங்காய் உரித்தல், செக்காட்டுதல், அடிமைக் கூலி வேலை, தனிமைச் சிறையடைப்பு, தூக்கு, கசையடி, மருத்துவப் பரிசோதனை என ‘டார்ச்சர்’ .
1868 தப்பியோட முயற்சித்த 238 பேர்களில், 87 பேர் தூக்கிலிடப்பட்டனர் – ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
1933 மே மாதம், உண்ணாவிரத்ப் போராட்டம் 33 கைதிகளால் நடத்தப்பட்டது. போராட்டத்தை முறியடிக்க, உணவை வாயில் திணிக்க, மூன்று பேர் – மஹாவீர் சிங் (லாஹூர் வழக்கு), மோகன் கிஷோர் நமதாஸ், மோஹித் மொய்த்ரா (ஆயுதம் வைத்திருந்த வழக்கு) – மூச்சுத் திணறி இறக்கின்றனர்.
மஹாத்மா காந்தி, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில், சுதந்திர வீரர்கள், அந்தமான் செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் – 1939 ல் செல்லுலார் ஜெயில் காலி செய்யப்படுகிறது.
மீண்டும் 1942 ல் (இரண்டாம் உலகப்போர் சமயம்) ஜப்பானியர்களால் செல்லுலார் ஜெயில் கைதிகளின் கூடாரமாகிறது. கைதிகளையும், பிரிட்டிஷ் அரசுக்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின்பேரில் பிடித்தவர்ககளையும், சித்ரவதை செய்தும், தூக்கிலிட்டும், கடலில் ஜலசமாதி செய்தும் கொல்கின்றனர் ஜப்பானியர். சந்தேகத்தின்பேரில், பொதுமக்கள் முன்னிலையில், சுட்டுக் கொல்வதும், கழுத்தை அறுத்துக் கொலை செய்வதும் இன்றும் அந்தந்த இடங்களில் நினைவுச் சின்னங்களாக மெளனம் காக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது அந்தமானின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் – போர்ட் ப்ளேர் விமான நிலையம், மற்றும் செல்லுலர் ஜெயிலை சிதைத்த மிகப் பெரிய பூகம்பம்.
ஜெயில் மீண்டும் மராமத்து செய்யப்பட்டு – இன்று நாம் காணும் மரத்தால் ஆன கட்டிடங்கள்- சரியாகக் கட்டப்பட்டன.
3, 4 ஆவது விங்ஸ் இடிக்கப்பட்டு, செங்கல் மற்றும் இரும்புத் தளவாடங்கள், தங்கள் பாதுகாப்புக் கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர் ஜப்பானியர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஒன்றறக் கலந்துவிட்ட செல்லுலார் ஜெயில், ஜப்பானியர்கலால் இடித்து ஊனப்படுத்தப்பட்டது!
செல்லுலார் ஜெயில், இப்படிப்பட்ட கொடூரங்களைப் பார்த்ததற்குச் சாட்சியாக இன்றும் வருத்தமுடன் நிற்பதாய்த் தோன்றியது.
செல்லுலார் ஜெயிலின் பெருமைக்குரிய நிகழ்வு – பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே அஞ்சிய, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – HEAD OF AZAD HIND GOVERNMENT – 1943 டிசம்பரில் அந்தமான் வந்து, ஜெயிலைப் பார்வை இட்டதுதான்! இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டம், அந்தமான் நிகோபார் தீவுகள் விடுதலை! முதன் முதலில் 1943 டிசம்பரில் நேதாஜி இந்திய மூவர்ணக் கொடியை அந்தமானில் பறக்கவிடுகிறார்!
செல்லுலார் ஜெயில் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விடுகிறார். தன் முயற்சியால், ஜப்பான் அதிபர் மூலம் 600 க்கும் அதிகமான குற்றமே செய்யாத கைதிகளை, செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்கிறார்.
1945, 15 ஆகஸ்ட் ஜப்பான் அதிபர் ஹிரேஷிதோ சரணடையும்வரை இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன – செல்லுலார் ஜெயில் சரித்திரத்தின் இருண்ட ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது.
அந்தமானில் என்ன இருக்கிறது ? என்ற எண்ணத்துடனேயே அந்தமான் பயணித்தேன் – பார்த்தவை, கேட்டவை, படித்தவை எனக்கு உணர்த்தியது இதுதான்:
இந்திய சுதந்திரம் ‘சும்மா’ கிடைக்கவில்லை – ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் தோய்ந்து, உயிரினில் மாய்ந்து, தியாகத்தில் கனன்று கிடைத்தது.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா” – பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை!
ஜெய் ஹிந்த்!!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
பங்களூரில் ஸிந்துஜாவைத் தேடி….
பங்களூருவில் நாளைய டிராஃபிக்கைக் குறைக்க, இன்றைக்குச் சாலையின் மத்தியில் அரக்கர்கள்போல் நிற்கும் கான்கிரீட் தூண்களும், அதன்மேல் தொண்ணூறு டிகிரியில் உட்கார்ந்திருக்கும் பெரிய பீடமும், நாளை ஏதோ ஒரு முதன் மந்திரியால் பச்சைக் கொடி அசைத்து வெள்ளோட்டம் விடப்படும் மெட்ரோ ட்ரெயினுக்காகக் காத்திருக்கின்றன! இன்றைய சாலைகளைக் குறுக்கி ஒற்றையடிப் பாதைகளைப்போல மாற்றி, எல்லாவகை வாகனங்களையும் ஊர்வலம் செல்ல வைத்திருக்கின்றன. உள்ளே நடப்பது தெரியா வண்ணம், சுற்றிலும் தகர பேனல்கள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அநேகமாக இதே நிலைதான் – ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்வதைப்போல இருக்கின்றன!
தடைகளின்றி சில கிலோமீட்டர்கள் ஏதாவதொரு வாகனத்தில் செல்லமாட்டோமா என்ற ஆதங்கத்துடன், கன்னடத் தமிழில் பேசிய வெங்கடேசனுடன் (பேக்கு, பேக்கு என்ற போதெல்லாம் திரும்பிப் பார்த்து, ‘என்னை இல்லை’ என்று உறுதி செய்துகொண்டேன்!) மேலும் கீழும் குதித்தவாறு ( பாலைவன சஃபாரி இதைவிட குலுக்கலும், வயிற்றைக் கலக்கலும் குறைவாயிருந்த நினைவு!) பென்னர்கட்டாவிலிருந்து சுமார் 20 கிமீ தள்ளியிருந்த கோத்தனூர் நாராயணபுரா கிராஸ் சென்றேன்.
மூன்று பேருடன் குறுக்கே வேகமாய்ப் போகும் ஸ்கூட்டர், முதுகில் பல்லியைப்போல ஒட்டிக்கொண்டு, பாய் ஃப்ரண்டின் காதைக் கடித்தவாறு, கழுத்தைச்சுற்றி, முகம் மறைத்த ஓட்னியுடன், பல்சரில் பவனிசெல்லும் புதுமைப் பெண், புரியாத கெட்டவார்த்தையில் திட்டியவாறு ராங் சைடில் ஓவர்டேக் செய்யும் கருப்பு, மஞ்சள் ஆட்டோ, நாட்பட்ட அழுக்குடன் அசமஞ்சமாய் நின்று, புகை கக்கிக் கிளம்பும் நகர பஸ், விதவிதமான கலர், சைசுகளில் அரை இன்ச் இடைவெளியில் ஊரும் கார்கள் – ஐம்பதடிக்கு ஒரு சிக்னல், சிக்னல் இல்லாத ஜங்க்ஷன்களில் குழப்படியான ட்ராஃபிக் ஜாம், வாயில் வெற்றிலை பாக்குடன், வித்தியாசமாகக் கட்டிய புடவையுடன் பெண்கள், நீலநிற யூனிஃபார்மில் ஆண்கள் (குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளுக்கு நடுவில் சாலையைக் கடந்தபடி மெட்ரோ வேலை), நான்கு சக்கர வண்டிகளில் சப்போட்டா, கிர்னீர் பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை – பாதி சாலையை அடைத்தவாறு வியாபாரம்!
ஒரு காலத்தில் மரங்களும், பார்க்குகளும் நிறைந்திருந்த பெங்களூர், இன்று ராட்சச வடிவில் விண்ணைத்தொடும் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன், வெயில் சுட்டெரிக்க, புழுங்கித் தொலைக்கிற பங்களூருவாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது – இயற்கையை அழிப்பதில் நமக்கு ஈடு நாம்தான்!
20 கிமீ தூரத்தை இரண்டரை மணியில் கடந்தேன்! இரண்டு யூ டர்ன், ஒரு ராங் ஒன் வே, மூன்று முறை நிறுத்தி வழிகேட்டது எல்லாம் இதில் அடக்கம். (கூகுள் மேப் போட்டிருக்கலாமே என்னும் அறிவு ஜீவிகள், எனக்கு அந்த அளவுக்கு விபரம் பத்தாது என்பதையும், டிரைவர் வெங்கடேசனுக்கு வயது அறுபதுக்குமேல் என்பதால் அவருக்கும் இதெல்லாம் தெரியாது என்பதனையும் அறியவும்!)
இவற்றையெல்லாம் கடந்து, அந்தப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து, செக்யூரிடியிடம் என் ஜாதகம் பதித்து, பின்னால் இருந்த ‘ஏ’ ப்ளாக்குக்குச் சென்றேன்! குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்த பிறகு, லிஃப்ட் ஏறுமுன், ஆராம்ஸாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்த நான்கைந்து நாரீமணிகளைத் தாண்டி, லிஃப்டில் 7 ஆம் நம்பரை ஒத்தி, தானாய் மூடித் திறந்த கதவுகளைவிட்டு வெளியேவந்தேன். சிரித்த முகத்துடன் வாசலிலேயே வரவேற்றார் ஸிந்துஜா – எழுத்தாளரும் என் நண்பருமான, ட்டிஆர் நடராஜன்!
அழகிய சிங்கர்தான் ஸிந்துஜாவை எனக்கு அறிமுகம் செய்தார் ‘ஸிந்துஜா கதைகளை படிங்க – ஸிம்பிளா கதை சொல்வார்’ என்றார்! விருட்சத்தில் ஓரிரண்டு கதைகள் படித்திருந்தேன். தினமணிக் கதிர் ஆசிரியர் பாவைசந்திரன் அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு, அவரது ‘நல்ல நிலம்’ நாவலுடன், எம் வெங்கட்ராம் கதைகள், ஸிந்துஜா சிறுகதைகள் புத்தகங்களைக் கொடுத்தார் – அறிமுகமே இல்லாத எனக்கு, அவர் கொடுத்த ஊக்கம் வியப்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது! சென்ற புத்தகக் கண்காட்சிக்கு ஸிந்துஜாவுடன் சென்றிருந்தேன். கே வி ராஜாமணி, சிங்கர், ‘தென்றல்’ சுவாமினாதன், சந்தியா நடராஜன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளுமைகள் – பார்த்துப் பேசினோம்!
அவரது சிறுகதைகள் இயல்பான நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்(தனி பதிவுதான் போடவேண்டும்). எழுத்துக்களும் அவரைப்போலவே – எளிமையும், நேர்மையும் கொண்டவை!!
ஏகாந்தமான, ஏழாவது தளத்தில் கலை நயத்துடன் ஒரு ஃப்ளாட். மகள் கொண்டுவைத்த மிக்சர் வகையறாக்களுடன், ‘சில்’லென்ற லெமன் ஜூஸ் – அன்றைய, இன்றைய பத்திரிக்கைகள், தீபாவளி மலர்கள், இன்று சிறுகதைகள், போட்டிகள், முகநூல் பதிவுகள், எப்போது, எப்படி எழுதுகிறோம், தனி வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என நாற்பது நிமிட உரையாடல் (அரட்டை அல்ல!). மனதுக்கு நிறைவாக இருந்தது.
நா பா வின் குறிஞ்சி மலருடன் விடைபெற்றுக்கொண்டேன். கார் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.
மாலை ஐந்துமணிக்குமேல் ஆகிவிட்டதால், அதிகமான டிராஃபிக்கில் மூன்றுமணி நேரத்தில், ஊர்ந்தபடி வீடு வந்துசேர்ந்தேன்!
இனிமேல் பங்களூரு வந்தால் ‘ககன’ மார்க்கத்தில்தான் வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன் (உடலைச் சுருக்கி, காற்றுபோல் ஆக்கி, நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் ஆகாயமார்க்கமாகச் செல்வது! – மேல் விபரங்களுக்கு கோமலின் ‘பறந்து போன பக்கங்கள்’ பக்கம் 72 – -73 – குவிகம் பதிப்பு – பார்க்கவும்!).
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்



கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
இசைப் பிரியர்களுக்கு டிசம்பர் மாதம் எப்படியோ, அப்படியே புத்தகப்பிரியர்களுக்கு ஜனவரி மாதம் – இவ்வருடமும் புத்தகக் கண்காட்சி YMCA மைதானத்தில் கோலாகலமாக நடக்கிறது. இந்த 42 ஆவது கண்காட்சியில் 800க்கும் அதிகமான அரங்கங்கள், இலட்சக் கணக்கான புத்தகங்கள், ஆடியோ புக்ஸ் இத்தியாதிகள்.
எல்லா அரங்குகளிலும் அநேகமாக எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கின்றன. பெரிய பதிப்பகங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனை செய்கின்றன – எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் – மகிழ்ச்சியான வாசகர்கள்!
பிரபல எழுத்தாளர்கள், அரங்குகளில் வாசகர்களுடன் அளவளாவிக் கொண்டும், புத்தகங்களில் கையொப்பம் இட்டுக்கொண்டும், புத்தகங்கள் வாங்கிக்கொண்டும் உலா வருகிறார்கள்!
முகநூல் நண்பர்கள் நேரில் முகம் பார்த்துப் பேசி மகிழ்கிறார்கள்.
ஆங்காங்கே, சிறுசிறு கூட்டங்களில் புதிய புத்தக வெளியீட்டு வைபவங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.
ஊடகங்கள், பிரபலங்களையும், வாசகர்களையும் பேட்டி எடுப்பதும், ‘வீடியோவில்’ பிடிப்பதும் இடையிடையே நடந்துகொண்டிருக்கின்றன!
துணை இயக்குனர், எழுத்தாளர் சரசுராம் அவர்களின் ‘ராஜா வேசம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா அரங்கு 49ல் நடந்தது. இயக்குனர் சற்குணம் வெளியிட முதற்பிரதியை நான் பெற்றுக் கொண்டேன் – மிக்க மகிழ்ச்சியுடன்!
Zero Degree Publishing (எழுத்து பிரசுரம்) அரங்கில் அமர்ந்துகொண்டு, நேரத்தை வீணாக்காமல் ப்ரூஃப் கரெக்ஷன் செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சாருவுடன் சில நிமிடங்கள் – அவரது ‘நாடோடியின் நாட்குறிப்புகள்’ அவர் கையொப்பமிட்டு வாங்கிக்கொண்டேன்!
நற்றிணையில் எம்.எல். (வண்ணநிலவன்), ஆகாயத் தாமரை (அசோகமித்திரன்), மகா நதி (பிரபஞ்சன்), மற்றும் எஸ் ரா வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘சஞ்சாரம்’, சுதாங்கனின் ‘இன்று’ டன் ‘நான்’, ஆ.மாதவனின் ‘மொழிபெயர்ப்புக் கதைகள்’, ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ’, வேணு வேட்ராயனின் ‘அலகில் அலகு’, பரிபாடல் (புலியூர்க்கேசிகன்) என்னுடன் சேர்ந்து கொண்டன – இது முதல் சுற்று!
இரண்டாவது சுற்றில், ‘கடல்புரத்தில்’, ‘தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம்’ (இந்திரா சவுந்தர்ராஜன்), ’முற்றுப்பெறாத தேடல்’ (லா.ச.ரா), சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி), விருட்சத்திலிருந்து, ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ (அரவிந்த் சுவாமிநாதன்), ‘ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்’ (அழகிய சிங்கர்) புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்!
இவை தவிர, கிருஷ்ணா கிருஷ்ணா (இ.பா), சிதம்பர நினைவுகள் (கே.வி.ஷைலஜா), பீரோவுக்குப் பின்னால் (பாக்கியம் ராமசாமி), ‘சிவப்பு ரிக் ஷா’ (தி.ஜானகிராமன்), ‘நிறக்குருடு’ (சுதாகர் கஸ்தூரி) ஆகியவையும் நட்புகளுக்குக் கொடுப்பதற்காக!
விருட்சம் அரங்கில் ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ புத்தகத்தை அறிமுகம் செய்து ஓரிரு வார்த்தைகள் நான் பேச, சிங்கர் அதை ஓளிப்பதிவு செய்தார். சுற்றிலும் எழுந்த பேச்சு, மைக் அறிவுப்புகள் மற்றும் சப்தங்கள் பதிவு செய்யமுடியாமல் படுத்தவே, பிறகு தனியாக பதிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்! தப்பித்தோம் என பெருமூச்சு விடும் அன்பர்கள், ‘தேடும் புத்தகம் கிடைக்காமல் போகக் கடவது’ என சபிக்கப்படுகிறார்கள்!
புத்தக ஆசையும், வாசிக்கும் காதலும் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் போலும் – புத்தகங்கள் உள்ளவரை நாம் தனியாக இல்லை என்ற உணர்வு இருப்பதென்னவோ உண்மை!
வெளியே அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என நடந்தவண்ணம் இருக்கின்றன!
கண்காட்சியில் சுற்றிய களைப்பு தீர, வெளியே ஸ்டால்களில், காபி, டீ. ஜூஸ், ஸ்னாக்ஸ் கிடைக்கின்றன – எப்போதும்போல் அங்கு எல்லா அரங்குகளையும் விட அதிகக் கூட்டம்!
1977 ல் முதன்முதலில் ஆரம்பித்தது புத்தகக் கண்காட்சி – காயிதே மில்லத் கல்லூரியில் பன்னிரண்டே ஸ்டால்களுடன் – 42 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சியில், விடாமல் கலந்து கொண்டிருக்கும் திரு பாலசுப்பிரமணியன்பற்றிய முகநூல் பதிவில் ஆர் வி எஸ் (பினாக்கிள் பதிப்பகம்) !
“தமிழர் புத்தகங்கள்” ஓர் அறிமுகம் – தொகுப்பாசிரியர் ‘சுப்பு’ (விஜயபாரதம் பதிப்பகம்) – அருமையான இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு வாசகனும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
அனுபவம் !
விருட்சம் அழகியசிங்கர், ‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ – தொகுதி 1 ஐ பாரதி பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்! அதில் தனக்குப் பிடித்த கவிதைகளில் ஒரு நூற்றினைத் தொகுத்திருந்தார். நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேரப் படிக்கும்போது வித்தியாசமாக இருந்தது. எனக்குக் கவிதை எழுத வருமோ வராதோ, தெரியாது, ஆனால் ரசிப்பேன்! நூறாம் பக்கத்தில் உள்ள ஒரு கவிதை ‘அனுபவம்’ பற்றியது – ‘நீ மணி; நான் ஒலி!’ – படித்தபோது மனதில் தோன்றியவைகளை எழுதலாம் என்று தோன்றுகிறது! (கவிதையும் கவிஞரும் வியாசத்தின் கடைசியில்!).
அனுபவம் என்பது ‘பட்டறிவு’ – வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் இவை புதிதாய்த் தோற்றுவிக்கும் ‘அக அறிவு’ அல்லது ‘முன்னமேயே உணர்ந்திருத்தல்’ என்பதாய்க் கொள்ளலாம். இந்த வார்த்தையின் மூல வேர் சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. “பவ” என்றால் ‘நிகழ்வது’, ‘ஆவது’ என இருபொருள் – நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே ‘அனுபவம்’ என்கிறது விக்கிபீடியா!
புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால், எக்ஸ்பீரியென்ஸ் (EXPERIENCE) தான் அனுபவம்!
ஐம்புலன்களுக்கும் அனுபவம் பெறும் அல்லது தரும் திறமை உண்டு – கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, உணர்வது என அனுபவம் நம்மை ஆக்ரமிக்கவல்லது.
படிப்பறிவைவிட, பட்டறிவு எப்போதுமே உயர்ந்ததாகப் படுகிறது. தனது அனுபவத்தினால் ஒன்றைச் செய்து முடிப்பவர், புதிதாய்ப் படித்து வரும் இளைஞரை விடச் சிறிது நன்றாகவும், நேர்த்தியாகவும் அந்த வேலையைச் செய்யக்கூடும். இதற்கு அவரது வயது மற்றும் அனுபவத்தினால் கிடைத்த திறமை காரணமாக இருக்கும். ஆனாலும், இன்றைய இளைஞர்களில் சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். ‘அனுபவம்’ ஒரு மனிதனை எப்படிப் புடம் போட்டு, முழுமையாக்குகிறது என்பதற்காக இதைச் சொன்னேன். (‘பெரிசுங்க எல்லாம் எப்பொவும் இப்படித்தான் பேசும்’ என்ற இளசுகளின் முணுமுணுப்பு காதில் விழுகிறது!)
குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு எல்லாம் இருந்தாலும், உலகம் அறியாமை – அனுபவ ஞானம் இல்லாமை – என்பது நெய்யில்லாத வெண்சோற்றைப் போன்றதாகும் என்கிறது ‘பேதமை’ அதிகாரத்தின் பாடல் ஒன்று (நாலடியார் – 333 ஆம் பாடல்)!
அனுபவம் நம்மையறியாமலே நம்முடன் சேர்ந்துவிடுகிறது – நல்ல அனுபவங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. கெட்ட அல்லது தீய அனுபவங்கள் மனதுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. எந்த அனுபவமானாலும், அது ஏதோ ஒன்றை மனிதனுக்குக் கற்றுக்கொடுக்கத் தவறுவதில்லை! கற்றுக்கொள்ள மறுப்பவன் முன்னேற்றம் காண்பதில்லை! கற்றுக்கொண்டு அனுபவசாலியானவன் ஞானத்தை அடைகின்றான்!
நம் அனுபவம் மட்டும் அல்ல – நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் அனுபவங்களும் நம்மை செம்மைப்படுத்துகின்றன. பிறருக்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ நிகழும்போது, அந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நெருப்பு சுடும் என்பதை நாம் சுட்டுக்கொண்டுதான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை – பிறர் அனுபவத்திலிருந்தும் அறிந்துகொள்ளலாம். வாழ்க்கையில் அனுபவங்களைவிட வேறு சிறந்த ஆசான் இல்லை!
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுவதும் அனுபவங்களின் படிப்பினைகள்தான் – வாழ்வின் அனைத்து அனுபவங்களையும், இந்து மத சித்தாந்தங்களுடன் இணைத்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என்றென்றும், எல்லோருக்கும் பொருந்தி வருபவை!
‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
‘கருடா செளக்கியமா?’
‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே’ கருடன் சொன்னது,
அதில் அர்த்தம் உள்ளது!
அவரது இந்தப் பாடல் அனுபவத்தின் வெளிப்பாடுதானே!
அனுபவங்கள் வாழ்க்கையைச் செப்பனிடுகின்றன – அனுபவங்களால் ஞானம் பெற்றவர்கள்தானே பட்டினத்தாரும், பத்ரகிரியாரும்?
எல்லாவற்றுக்கும் அனுபவம் தேவை என்கின்றன ‘வேலை வாய்ப்பு’ விளம்பரங்கள்!
அனுபவம் நிராகரிக்கப்படும் ஒரே விளம்பரம் “மணமக்கள்” தேவை என்னும் மேட்ரிமோனியல் விளம்பரம் மட்டுமே!
இப்போது அந்தக் கவிதையும் கவிஞரும்!
கவிதை:
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்;
……………….
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;
‘அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
-கவிஞர் – கண்ணதசன்.
அனுபவமே ஆசான். அனுபவமே கடவுள்! அனுபவமே நீயும். அனுபவமே நானும்!!
டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

கஸ்டமர் சர்வீஸ்!!


துணி வாங்கித் தைக்கிற காலமெல்லாம் போய், இப்போது ‘ரெடி மேட்’ டிரஸ் வாங்கி அணிவது பழகிவிட்டது. இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே செலவுதான் – உடனே அணிந்து கொள்ளும் வசதி, தையற்கடையில் ’காஜா’ பையனை முறைத்துக்கொண்டு நிற்க வேண்டாம் என்கிற நிம்மதி, அளவு சரியாக இல்லையெனில், திருப்பிக் கொடுக்கும் சுதந்திரம் – இவையே ரெடிமேட் பக்கம் சாய வைக்கிறது!
ரெடி மேட் டிரஸ்களில் வேறு வகைப் பிரச்சனைகள் – வேண்டும் கலரில் அரைக் கை சட்டை இருக்காது – பிடித்த கலரில் சைஸ் கிடைக்காது – பிராண்ட் வித்தியாசத்தில் ஒரு சைஸ் கூடவோ அல்லது குறையவோ இருக்கும் – ட்ரயல் ரூம் கண்ணாடி குடு குடுப்பைக் காரனையோ, சட்டைப் பட்டன்களுக்கிடையே மூச்சு முட்டிப் பிதுங்கும் சதையையோ காட்டி பயமுறுத்தும். பேண்ட் இன்னும் மோசம் – நம்ம இஞ்சி இடுப்புக்குச் சரியான சைஸ் கிடைக்காது – கிடைத்தாலும் உயரம் சரியாக இருக்காது. ஆல்டர் செய்தால், பேண்ட் ஷேப் மாறி, பைஜாமா ஆகிவிடும் – பிடிக்கக் கூடாத இடத்தில் பிடிக்கவும், பிடிக்க வேண்டிய இடத்தில் லூசாகவும் இருந்து, வித்தியாசமாக நடக்க வைக்கும்! சாமுத்ரிகா லட்சணங்கள் சரியாக இல்லாதது நம் குற்றம் அல்லவே?
ஆறு மாதங்களுக்கு முன் யாரோ கொடுத்தார்கள் என்று – சட்டைத் துணியா, அல்லது பேண்டுக்கா என்று சரியாகச் சொல்ல முடியாதபடி ஒரு மெடீரியல், ஜிப்பா, பைஜாமாவுக்குச் சரியாக இருக்கும் என்றான் என் டிரைவர்! – வீட்டில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு பாண்டி பசாரில் பெரிய ஷோ ரூம் சென்றேன்.
இந்தத் துணியில், ஒரு ஜிப்பாவும், ஒரு ஆஃப் ஸ்லாக்கும் தைக்கலாம் என்றார் அங்கிருந்த டெய்லர். சரி, வந்ததுதான் வந்தோம், இரண்டு பேண்ட் தைத்துக் கொள்ளலாம் என, துணி செலெக்ட் செய்து அளவும் கொடுக்கத் தயாரானேன்! சில தெளிவான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தேன் – சட்டைக்கு ஒரு பாக்கெட், ஏரோ கட்டிங், பேண்டுக்கு ஒரு பின் பாக்கெட், எட்டு லூப்புகள், இத்தியாதிகள். விரைவாக கழுத்து, இடுப்பு, வயிறு, தோள், கால் என்று இன்ச் டேப் தழுவ, அளவுகளைக் குறித்துக்கொண்டு, மஞ்சள் கலர் அட்டையில் ஆர்டர் எண், சார்ஜ் எல்லாம் எழுதி, துணிகளின் மூலையிலிருந்து ஒரு குட்டி முக்கோணம் கட் செய்து, அட்டையுடன் ஸ்டாப்ளர் போட்டுக் கொடுத்தார். ONLY CASH, CARDS NOT ACCEPTED என்ற வாசகத்துடன் அட்டை என்னைப் பார்த்து சிரிப்பதுபோல இருந்தது!
ட்ரையல் எல்லாம் வேண்டாம் (என்னா ஒரு நம்பிக்கை?), குறித்த தேதிக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி, திரும்பி விட்டேன்!
வழக்கம்போல் குறித்த தேதிக்கு இரண்டு மூன்று நாட்கள் தள்ளிச் சென்றேன் – ஏதோ அவசரம், போட்டுப் பார்த்து ஆல்டரேஷன் சொல்ல நேரமில்லை. வாங்கி வந்து விட்டேன் – அந்தப் பிரபல ஷோ ரூமின் மேல் இருந்த நம்பிக்கையால் கூட இருக்கலாம்!
மறுநாள் நிதானமாகப் போட்டுப் பார்த்தபோது வெறுத்துப் போனேன் – இடுப்பில் நிற்காமல் நழுவியது பேண்ட் – உயரம் அதிகமாக, அந்தக் காலத்து ரஞ்சன் குதிரையேற்றப் பேண்ட் போல், மேலே பேகியாகவும், கணுக்காலருகே சுருக்கங்களுடன் சூடி போலவும் வினோதமாக இருந்தது! நல்லவேளை, ஜிப் வேலை செய்தது!
சட்டையின் கை, முழங்கை தாண்டி, கர்மவீரரை நினைவு படுத்தியது! காலர் நாய்க்குட்டியின் காதுகளைப் போல் இரண்டு பக்கமும் தொங்கியது. ”கொஞ்சம் லூசா (சட்டைதான்) தைத்துக் கொள், வளர்ர பிள்ளை” (நீ வளராவிட்டாலும், துணி சுருங்கும் என்பது அவள் சொல்லாதது!) என்பாள் அம்மா! அது இந்த டெய்லருக்கு எப்படித் தெரியும்? அறுபது வயதுக்கு மேல வளர்வேனா? குழம்பினேன்!!
இது சரியில்லை – கொள்ளைப் பணம் கொடுத்து துணி வாங்கி, அதற்கு மேலும் தையல் சார்ஜ் கொடுத்து …. சிவப்புத் துணியைப் பார்த்து மிரண்டு முட்ட வரும் காளை போல, கோபத்துடன் மறுநாள் சென்றேன்.
அன்று அந்தப் பழைய டெய்லர் லீவு – அவர் ’பாஸ்’, வாரம் இரண்டு முறை வருவாராம் – மற்ற நாட்களில் ஃபேக்டரியை – துணி தைக்கும் இடம் – பார்த்துக் கொள்ளுவாராம். ஐந்தரை அடி உயரத்தில், முன் தலை வழுக்கையுடன், சரியான அளவில் பேண்டும், சர்டும் போட்டு, (இவருக்கு மட்டும் பார்த்து, பார்த்துத் தைப்பார் போல – மைண்ட் வாய்ஸ்!) முக மலர்ச்சியுடன் வர வேற்றார். அதற்குள் ட்ரயல் ரூமிலிருந்து வெளியே வந்த மற்றொரு பெரிசு, ‘பர்ஃபெக்ட் ஃபிட்டிங்” என்று கூறி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!
விபரம் கேட்டு,” சாரி சார். தப்பாகத்தான் தைத்திருக்கிறார்கள் – மீண்டும் அளவு எடுத்து, சரி செய்து தருகிறேன்” என்றார். ”இடுப்பில் ஒரு இன்ச் (பேண்ட் இடுப்புக்குத்தான்!) குறைத்து, உயரம் சரி செய்து விட்டால் போதும் – சட்டையின் கை நீளம் குறைத்து, உடம்பைப் (சட்டைக்குத்தான்!) பிடித்து விட்டால் சரியாயிருக்கும்” என்றார். அவரது நிதானம், தவறுக்குப் பொறுப்பேற்று, அதைச் சரி செய்ய எடுத்துக்கொண்ட முயற்சி எல்லாம் என் கோபத்தை வீழ்த்தின.
வேறு ஒரு மஞ்சள் அட்டையில், அதே நம்பருடன் ‘ஆல்ட்ரேஷன்’ என்று எழுதி என்னிடம் கொடுத்தார்.
இரண்டு நாளில் சொன்னதைப்போல, சரி செய்தும் கொடுத்தார்!
அன்று என்னால் தாமதமாகி விட்டதால், அவருக்கு மதியம் ப்ரேயருக்குச் செல்ல முடியவில்லை – வருத்தமாக இருந்தாலும், “நம்ம சர்வீஸ், கஸ்டமர் எல்லாம் முக்கியம்தானே” – அவர் அருகிலிருந்த மற்றொரு சிப்பந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
வெளியே வானத்தில் கருமேகம் மூட்டமாய் இருந்தது – சின்னச் சின்னதாய்த் தூறத் துவங்கியது.
.
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
கோழைகளின் சரணாலயம் “தற்கொலை”
தினமணி.காம் மின்னிதழில் என்னுடைய “தற்கொலை எனும் வியாதி” வியாசம் வெளியான சமயம், ஈரோடு பக்கத்திலிருந்து மிரட்டும் குரலில் ஒரு போன் கால் வந்தது – ‘தற்கொலைகள் தூண்டப்படுகின்றன – சமூகமே அதற்குப் பொறுப்பு. நீங்கள் வியாதி என்கிறீர்களே?’ அமைதியாக நான் சொன்னேன், “யார் தூண்டினாலும், மனதில் நோய் உள்ளவர்களே பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள் – அதற்கான மருத்துவ ஆதாரங்கள் வலுவாக உள்ளன”. போன் உடனே அமைதியான வேகம், மறுமுனையின் கோபம், வெறுப்பு – ஏதோ ஒன்றை உணர்த்தியது!
சமீபத்தில் வாசித்த இரண்டு ‘தற்கொலை’ சிறுகதைகளைப் பார்ப்போம்.
கதை 1:
கு.அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள (விகடன் பிரசுரம்) ”கற்பக விருட்சம்” கதை.
எஸ் எஸ் எல் சி பரீட்சையில் பெயில் ஆகிவிடும் ஒரு ஏழை மாணவன், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான் – கோவில் பட்டராக இருக்கும் அவனது அப்பா, இவன் பாஸ் செய்து, ஏதாவது ஒரு கடையில் வேலை செய்துகொண்டே, தட்டச்சு பயின்று பின்னர் பெரிய வேலைக்குப் போவான் – என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். மொத்த குடும்பமும் – அப்பா, அம்மா, தங்கை – இவனது கையை எதிர்பார்த்து நிற்கிறது.
பல காரணங்களால் நான்கு வருடங்கள் தாமதமாக படிப்பதால், வகுப்பில் இவனே பெரியவன். எதிர்வீட்டுக்குப் புதிதாய்க் குடிவந்த சுகன்யா, இவனிடம் சந்தேகம் கேட்டுப் படிக்கிறாள் – அவளைப்பற்றிய எண்ணங்கள் அவனுள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இன்று ரிசல்ட் வந்துவிட்டது – அவள் தேறி விட்டாள், இவன் தேறவில்லை! இந்த எண்ணம் அவனை மிகவும் துன்புறுத்துகிறது – சுகன்யா மீது கோபமாக மாறுகிறது – அதுவே வெறுப்பாக மாறித் தற்கொலை முடிவுக்குத் தள்ளுகிறது!
வீட்டின் வறுமையும், தங்கையின் திருமணமும் இவனை வருத்தம் கொள்ள வைக்கின்றன; ஆனாலும், எதிர்வீட்டு சுகன்யா பாஸ் செய்து விடுவது இவனுக்கு அவமானமாக இருக்கிறது – இவர்களையெல்லாம் எதிர்கொள்வதைவிட, மரணத்தை எதிர்கொள்வது இவனுக்கு எளிதாகத் தோன்றுகிறது.
இருட்டிய பிறகு ரயில் முன்னால் விழுந்து தற்கொலை செய்துகொள்ள சைதாப்பேட்டை ஸ்டேஷனில் வந்து அமர்ந்திருக்கிறான். ரயில்வே சிப்பந்திகள், வந்து, போகும் பயணிகள் எல்லோரையும் பார்த்து, ஒரு வித பயத்துடன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.
இந்த தாமதிக்கும் நேரம், அவனை மரண பயமும், வாழ்க்கை பயமும் மாறி மாறி ஆட்கொள்கின்றன. தற்கொலைக்குப் பிறகு தன் குடும்பம் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கிறான் – அழகிருந்தாலும், தேறிவிட்டாலும், பாடம் கற்றுக்கொண்டதற்கு ஒரு முறை கூட நன்றி சொல்லாத சுகன்யாவுக்காக உயிரை விடுவதா? என்று தெளிந்து, தன் முடிவை மாற்றிக் கொள்கிறான் –
மிக அழகான இந்தச் சிறுகதையில், அழகிரிசாமி படிப்படியாக தற்கொலைக்கான காரணங்களையும், பின்னர் அவை எவ்வளவு முட்டாள்தனமானவை என்றும் சொல்லிச் செல்கிறார் – உயிரைவிட எதுவும் பெரியதில்லை – எல்லாவற்றையும் எதிர்த்து நின்று ஜெயிப்பதுதான் வாழ்க்கை என்று அழகாக நிறுவுகிறார்.
கதை 2.
சுந்தர ராமசாமியின் “கோழை” சிறுகதை சதங்கை இதழில் டிசம்பர் 1971 இல் வெளிவந்தது – காலச்சுவடு அக்டோபர் 2017 இல் மீண்டும் பிரசுரித்துள்ளது.
மீண்டும் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்று தோற்கிறான் கதையின் நாயகன் – தாங்க முடியாத துக்கமும், நிவர்த்திக்கும் மார்கமும் தெரியாதபோதெல்லாம் கடல் நினைவுக்கு வந்து, தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்! போகும் முன் முகத்தில் தாடி, பார்க்கும் பெண்களைச் சகோதரியாய் நினைப்பது, இரத்த பந்தங்களை ’நன்றாக அழுங்கள்’ என்று மனதாற சபிப்பது – இவை ரெகுலராக நடக்கும்!
இம்முறை நிச்சயமாக தற்கொலை என முடிவுசெய்து, பஸ்ஸில் போகும்போது, விலைமாது ஒருவரும் உடன் பயணிக்கிறார். இவர் அவளைப் பார்த்திருக்கிறார். அவளுக்கும் இவரைத் தெரியும் பார்த்திருக்கும் அளவில்!
கன்னியாகுமரிக் கடலில் ஒரு மணல் மேட்டின் மீது நின்றுகொண்டு, தானே பேசிக்கொண்டும், அழுதுகொண்டும் நிற்கிறார். அப்போது அவளும் அங்கே சற்று தூரத்தில் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். வழக்கம்போல் திரும்பி விடுகிறார் – இம்முறை அப்பெண் தற்கொலை செய்து கொள்வதாக நினைத்து, பயந்து ஓடிவந்து விடுகிறார்! அந்தப் பெண்ணே இவரிடம் வந்து பேசுகிறாள் – அவளது மனதில் இருக்கும் வாழ்க்கை குறித்த தெளிவு இவரிடம் இல்லை எனபது வெளிப்படுகிறது. திரும்புவதற்குக் கூட இவர் கையில் பணம் இல்லை – அவள் காசைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லி, “எங்கு பார்த்தாலும், உங்களைத் தெரியும் என்ற வகையில் நான் புன்னகைக்க கூட மாட்டேன்” என்று கூறிச் செல்கிறாள். “இனி இந்த இடத்திற்கு வரக்கூடாது” என்றெண்ணித் திரும்புகிறார் அந்தக் கோழை!
இந்த இரு கதைகளும் தற்கொலைக்குப் பின் உள்ள மன இயல் ரீதியான போராட்டங்களைச் சுவையுடன் சொல்கின்றன.
சமீபத்தில் படித்த டொரதி பார்கர் (DOROTHY PARKER – 1893-1967) கவிஞரின் “தற்கொலை” பற்றிய கவிதை ஒன்று – முடிந்த வரை தமிழ்ப் ’படுத்தி’. இருக்கிறேன்.
சவரக் கத்திகள் வலி கொடுக்கும்
ஆறுகள் மிகவும் ஈரப்பதத்துடன் குளிர் கொடுக்கும்
அமிலங்கள் கறை படியும்
மருந்துகள் சதைகளைப் பிடிக்கும்
துப்பாக்கிகள் சட்டத்திற்கெதிரானவை
சுருக்குகள் அவிழ்ந்து விடும்
விஷ வாயுக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாது
அதனால்
நீ வாழ்ந்துவிட்டுப் போவதே மேல்!
(ஒரிஜினல் ஆங்கில மூலம் வேண்டுவோர் டாக்டர் ஜி.லக்ஷ்மிபதி அவர்களின் “HOW TO BE MIDDLE CLASS AND HAPPY” –புத்தகத்தின் 53 ஆம் பக்கம் பார்த்துக்கொள்ளவும் !)
ஜெ.பாஸ்கரன்.
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
நெட் வைத்தியம்!
அறுபத்தி இரண்டு வயதுப் பெண்மணி – மினிமம் படிப்பு, வசதியானமத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை கழுத்துப் பவுன் தாலிச்சரடு சொல்லியது.
உடன் வந்திருந்த கணவர் நெற்றியில் கோபிச் சந்தனம், முன் தலையில் முடி நரைத்த கிராப், பின் தலையில் ஒரு சின்ன ‘கொத்தாக’த் தனித்துத்தெரியும் மாடர்ன் குடுமி. அரசு உத்தியோகத்திலோ, பிரைவேட்கம்பெனியிலோ ஹெட் கிளார்க்குக்கு மேல் உயரம் காணாத முகம்!
தெரிந்தவர் யாரோ சொல்லி,என்னைப் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார்கள்.
வந்த பெண்மணி, “கை, கால் குடைச்சல், இடுப்பு வலி” என்றவுடன், வழக்கமான கேள்விகளுடன், ‘சுகர்’ உண்டா? என்றேன்.
“உண்டு” – தலையாட்டியவாறே, கோபிச் சந்தனத்தைப் பார்த்தார். “கண்ட்ரோல்ல இருக்கு”
“என்ன மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள்?”
“மருந்தெல்லாம் கிடையாது – நிறுத்தி இரண்டு வருஷம் ஆச்சு”
“ஓ…” ஆச்சரியம் என்னையும் மீறி முகத்தில் சுருக்கங்களாய் விழுந்தது.
“மூணு வர்ஷமா சுகர் நூற்றி சொச்சத்திலேயே இருந்தது – ஏறவும் இல்லே, இறங்கவும் இல்லே”
“சரி, நல்ல கண்ட்ரோல்தானே, பிறகென்ன?”
அம்மணி அய்யாவைப் பார்க்க, அவர் தலையைக் குனிந்துகொண்டார்.
“இவர்தான், இங்கிலீஷ் மருந்தெல்லாம் பழக்கம் ஆயிடும் – சைடுஎஃபெக்டெல்லாம் வரும், நிறுத்திடுன்னார். நிறுத்திட்டேன்.” (ஏனோ,கிணற்றுக் கயிற்றில் அந்தரத்தில் தொங்கும் குடம் நினைவுக்கு வந்துதொலைத்தது!)
“நல்லதுதான் – டயட், வாக்கிங், எக்சர்சைஸ் ன்னு கண்ட்ரோல்ல இருக்கீங்கபோல”
“இல்லே, வேற மருந்து சாப்பிடறேன்”
கோபிச் சந்தன முகத்தில் மருட்சியுடன் ஒரு பிரகாசம்!
“நாவ இலெ, கொய்யா இலெ, மாவிலை, சிறுகுரிஞான் இலெ, ஆவாரம்பூ –எல்லாத்தையும், முந்தின நாள் இரவே கொதிக்கிற தண்ணீல போட்டு, மறுநாள் குடிக்கணும்”
“வேப்ப இலை கெடையாதா?” – நான்.
“ம்..ஹூம், ரொம்ப கசக்கும்!”
“ம்ம்… சில பேர் வெந்தயம் சாப்பிடறாங்களே?”
“அதுவும் உண்டு. நல்ல தண்ணீல ஊற வெச்சு, வெந்தயத்த வெறும்வயத்துலெ அப்படியே சாப்பிடுவேன்!”
”இதெல்லாம் யார் கொடுத்தாங்க?”
”கூகிள் பாத்துதான் சார்” – முதன் முறையாக வாயைத் திறந்தார் கோபிச்சந்தனம்.
“வெரிகுட்! எந்த மருந்தானா என்ன? சுகர் கண்ட்ரோல்ல இருந்தாவே போதும். லேடஸ்ட் ப்ளட் சுகர் என்ன?”
“ப்ளட் டெஸ்டே வேண்டாம்னுட்டார் இவர். இரண்டு வருஷமாச்சு டெஸ்ட்எடுத்து. கேட்டா, அதுதான் ப்ராப்ளம் ஒண்ணும் இல்லையே’ ங்கறார்.இப்போ கை கால் எல்லாம் கொடையறது, ஏதாவது மருந்து எழுதிக்கொடுங்கோ”.
விபரமறிந்த பக்கத்து வீட்டு மாமி, கடிந்துகொண்டு, டாக்டரைப் போய்ப்பாருங்கோ. சர்க்கரையோட விளையாடாதீங்க. எழுத்த வீட்டு மணிமாமாவுக்கு முட்டிக்குக் கீழே காலை எடுத்துட்டா – ஆம்புடேஷன். . அவரும்இப்படித்தான், சுகர இக்னோர் பண்ணினார்” – பயத்தில்வந்திருக்கிறார்கள்.
ஃபாஸ்டிங், போஸ்ட் பிராண்டியல், மூன்று மாத ஆவரேஜ் HbA1C எல்லாம் எழுதிக் கொடுத்து மறுநாள் வரச்சொன்னேன்……
“அதுவரைக்கும் நாவ இலெ, வெந்தயம்……”
”ம்ம், சாப்பிடுங்க, தப்பில்லே – ப்ளட் டெஸ்ட் ரிஸல்ட் பார்த்து முடிவுசெய்துக்கலாம்”
சந்தோஷமாகக் கணவனும், மனைவியும் எழுந்து சென்றார்கள் –
எனதுமூளைக்குள் இரண்டு ஆடுகள் ‘மே.ஏ.ஏ’ என்று கத்துவதைப் போலிருந்தது.
இரண்டு நாள் கழித்து தயங்கியபடியே வந்த இருவரையும் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது –
அம்மணியின் இரத்தத்தில் ஒரு ரேஷன்கடையில் உள்ள அளவு சர்க்கரை இருந்தது! (நான் அந்தக்கால ரேஷன் கடையைச் சொன்னேன்!).
இப்போது என்ன செய்வது?
இன்று தொந்திரவு இல்லாத நீரிழிவு நோயை – SYMPTOM FREE DIABETES கட்டுப்படுத்தாவிட்டால், நாளை அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இரத்தக் குழாய்களின் மிகச் சிறிய, கடைசி முனைமயிரிழை போன்ற குழாய்கள் பாதிப்பால் உடல் உறுப்புகள் – END ORGANS – செயலிழக்கும். முக்கியமான எல்லா இரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால், கண்களின் விழித்திரை (பார்வை இழத்தல்), சிறுநீரகங்கள்( கிட்னி ஃபெய்லியர், முடிவு டயாலிசிஸ்), மூளை (ஸ்ட்ரோக் – பக்கவாதம்), வெளி நரம்புகள் (நியூரைடிஸ் – ஊசி குத்துவது, மரத்துப் போவது, சிலநரம்புகள் செயலிழப்பது), இதயம் (ஹார்ட் அட்டாக்) – அனைத்து உறுப்புகளும் தனியாகவோ, சேர்ந்தோ பாதிக்கப் படலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒவ்வொரு நாளும், சிறிது சிறிதாக இந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
நான் சொல்லி முடித்தபோது, முகத்தில் எந்த மாறுதலும் இன்றி ஒருவரைஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மருந்துகள், உணவில் சேர்க்க / தவிர்க்க வேண்டியவை, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி எல்லாம் விபரமாகக் கூறி, அனுப்பி வைத்தேன். எந்தவகை சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அவ்வப்போது சுகர் லெவல் மானிட்டர் செய்யவேண்டியதின் அவசியத்தைச் சொன்னேன்.
யூ டியூப், நெட் பார்த்து, வீட்டில் பிரசவம் பார்ப்பதைக் காட்டிலும், இந்தநெக்லிஜென்ஸ் பரவாயில்லையோ என்று தோன்றியது.
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அவசியம்தான் – அது SELF MEDICATION TREATMENT வரை செல்வது ஒரு சொஸைடியின் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல!
கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு காலையிலேயே காலிங் பெல் அடித்தது.
‘சண்டே, காலை கொஞ்சம் சோம்பலாய்த் தூங்கலாம்னா, விடமாட்டாங்களே’ – கண்ணைச் சுருக்கி எதிரே கடிகாரத்தைப் பார்த்தேன். காலை மணி 5.55. வந்த கொட்டாவியைக் கையால் மறைத்தபடி, கதவைத் திறந்தேன்.
’குட் மார்னிங். ஞாயிற்றுக் கிழமையும் சீக்கிரமா வெளீல போய்டப் போறயேன்னு, எழுந்த உடனேயே வந்தேன்!’ சிரித்தபடி ஜிப்பாவில் நண்பன்.
‘குட் மார்னிங்’ – அரைசிரிப்புடன் கதவைத் திறந்து, சோபாவைக் காட்டினேன் – கையில் கொண்டு வந்திருந்த நியூஸ் பேப்பரைப் (என் வீட்டு வாசலில் கிடந்ததுதான்!) பிரித்தவாறே ‘நான் வெயிட் பண்றேன்’ என்று பல் தேய்க்க எனக்கு பெர்மிஷன் கொடுத்தான்!
இப்படித்தான், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், எதிர்பாராமல், வார நாட்களை விட ’பிசி’யாகி விடும்! ஓய்வில்லாமல் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதைப்போன்ற உணர்வு வந்து சோர்வைத்தரும்!
சனிக்கிழமை காலையிலேயே (அரை நாள், முழுநாள் வேலை இருந்தாலும், வாரத்தின் கடைசி வேலை நாள் என்பதால்!) ஹாலிடே மூட் வந்துவிடும். இப்போதெல்லாம், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலையே “வீக் எண்ட்” சிண்ட்ரோம் பிடித்துக்கொண்டு விடுகிறது ! அத்துடன் வெள்ளிக்கிழமையோ, திங்கட்கிழமையோ விடுமுறையானால், ’லாங்க்’ வீக் எண்ட் – ரயில், பஸ்களில் ஒரு அவசரத்துக்குக்கூட இடம் கிடைக்காது!
சிலருக்கு, சண்டே செய்வதற்கென்றே சில கடமைகள் இருக்கின்றன – துணிகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும், புத்தக அலமாரியைச் சரி செய்து, அடுக்கி வைக்கவேண்டும், அங்கங்கே இறைந்துகிடக்கும் பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் (ஒரு வாரமாய்த் தேடிக்கொண்டிருந்த ஸ்டேப்ளரோ, பால்(B) பேனாவோ கண்ணில்படும் அதிர்ஷ்டம் இருக்கிறது!), மதியம் கொஞ்சம் தூங்க வேண்டும் (பகலில் தூங்குவது கெடுதல் என்றாலும் ஞாயிறு பகல் மட்டும் விதி விலக்கு – வார நாட்களில் ஆபீசில் பகலில் தூங்குவது இவ்விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது!) – இப்படிப் பல திட்டங்கள் இருந்தாலும், ஒன்றும் நிறைவேறாமல், ‘சட்’டென வழுக்கி ஓடி விடும் சண்டேக்களே அதிகம்! அன்று மட்டும் கடிகாரம் டபுள் ஸ்பீடில் ஓடுமோ தெரியாது!
இரண்டு மூன்று வேலைகள் வரிசைகட்டி நிற்கும்போது, எதை முதலில் செய்வது, எங்கே தொடங்குவது என்ற யோசனையிலேயே, ஞாயிறு முழுவதும் தீர்ந்து விடுவதும் உண்டு!
அறுபது, எழுபதுகளில் – பள்ளிக்கூட நாட்களில் – ஞாயிறு அவ்வளவாக ரசிக்காது – வார நாட்களில் பள்ளிக்கூடத்தின் கொட்டங்கள் ருசிகரமானவை!
கல்லூரி நாட்களில், பையில் சில்லரை தேறாது; இருந்தாலும் நண்பர்களுடன் கூட்டமாக ஊர் சுற்றுவதில் சிக்கல்கள் இல்லை!
பையில் பத்து ரூபாய் இருந்தால் போதும், அந்த நாளைய சண்டே, ”ஸ்பெஷல்”தான்! காலை பாண்டிபசார் சாந்தா பவனில் ஒரு டிபன் – தக்காளி சட்னியுடன்! இரண்டு ரூபாய்க்குள் காபியுடன் நல்ல டிபன் கிடைத்த காலம் அது!! பஸ்ஸில் ஸ்டேஜுக்கு 4 பைசா வீதம் ஒரு ரூபாயில் மெட்ராஸைச் சுற்றி வரலாம்! ஃப்ரெண்ட்ஸ் வீடு, அரட்டை, பின்னர் லஞ்ச் (3 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு எல்லா மெஸ் / ஓட்டல்களிலும் கிடைக்கும்!) – சாந்தி தியேட்டர் மாதிரி பெரிய தியேட்டரில் மாட்டினீ ஷோ (ரூ1-75 க்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட்!), மாலை மெரீனாவில் இலவசக் காற்று ( சுண்டலுக்குக் காசு இருக்கும்!), மோர் சாதம் சாப்பிட வீட்டுக்கு வந்து விடலாம்!
இப்போதெல்லாம் சண்டேஸ் மிகவும் பிஸி – ஏதாவதொரு கூட்டம், ஒரு விழா, ஒரு சினிமா, ஏதாவதொரு ஓட்டலில் டின்னர் என வீடுகளில் சமையலுக்கும் விடுமுறை – வேண்டியதுதான்.
காலையில் சர்ச்சுகளிலும் / கோயில்களிலும் விசேஷக் கூட்டங்கள்! எல்லா கடவுளும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரொம்ப பிசி – ஓவர்டைம் செய்து அருள்பாலிக்கும் சூழ்நிலை!
வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில், எதைக் காண்பித்தாலும், பார்த்தே தீருவது என்ற சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், சினிமா விருது வழங்கும் விழா, சிறந்த குத்தாட்டப் போட்டி, இசைப் போட்டி, முன்னமேயே முடிவு செய்த விவாதங்கள், வந்து போனது தெரியாத திரைப்படங்கள், வெந்தும் வேகாத சமையற் குறிப்பு நிகழ்ச்சிகள், காமெடி என்ற பெயரில் அழவைத்து வேடிக்கை பார்க்கும் துணுக்குகள் என எதையாவது பார்த்துத் தொலைக்கும் சண்டேக்கள் !
கிரிக்கெட், ஃபுட் பால் என மேட்ச் இருந்து விட்டால் அந்த சண்டே தெருவில் ஈயாடும்!
காபி கொடுத்து, அவன் கொடுத்த இன்விடேஷனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு நண்பனை அனுப்பி வைத்தேன். மூன்று வாரமாக என்ன எழுதுவது என்று தெரியாமல், கடைசி நாள் வரை (அது நேற்றே போய்விட்டது!) திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல முழித்துக்கொண்டிருந்தேன் –
கலைந்து கிடக்கும் புத்தகங்களும், துணிகளும், சிடிக்களும் என்னை பயமுறுத்தின –
பேப்பர்க்காரன், பால்காரன்(ரி), ஜுரத்துடன் வாட்ச்மேன், தர்மம் கேட்டு மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர், ஃப்ரிஜ் மெகானிக் – தொடர்ந்து அடித்த காலிங் பெல்லைக் கழற்றி எறிந்து விடலாமா என்று நினைத்த வேளையில்,
செல் போன் அடித்தது – “ஃப்ரீயா இருக்கியா? இப்போ வரலாமா? ஒரு அவசரம்” – வேறொரு நண்பர்.
என்ன சொல்வது நான்?
கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்
சுழலும் பம்பர நினைவுகள்!
எப் எம் ரேடியோவில் ‘பம்பரக் கண்ணாலே’ பாட்டுக் கேட்டு முடித்தபோது, மனதில் பம்பரமாய்ச் சுழன்றன பழைய நினைவுகள் –பம்பர நினைவுகள்!
எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் –
கொத்தங்குடி மணித் தாத்தா(அப்பா வழி) தான் எனக்கு முதன் முதல் பம்பரம் வாங்கிக் கொடுத்தார்! நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும்! காலையில் கையில் எடுத்ததும் முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா! பம்பரம் ஆக்கர் வாங்குவது அவ்வளவு வருத்தத்திற்குரிய சமாசாரம் அந்த வயதில்!
மண்டையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என வட்டங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட சின்னப் பம்பரமும், அதைச் சுழல வைக்க, இரண்டடி நீள சிவப்புக் கயிறும் – சாட்டையும் என் முதல் பம்பரம், மறக்க முடியாதது.
இரண்டு மூக்கிலும் சளி ஒழுக, நாக்கை மடித்து மேலுதட்டில் அழுத்திக்கொண்டு, இடது கையில் பம்பரத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கீழே ஆணியிலிருந்து வரி வரியாகச் சாட்டையைச் சுற்றுவதில் இருக்கிறது சாமர்த்தியம். சாட்டை வழுக்குவதும், பம்பரம் நழுவுவதும் (சில சமயம் ஏடாகூடமாக, டவுசர் இடுப்பிலிருந்து நழுவுவதும் உண்டு உடுக்கையை விட்டு பம்பரத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளும் விரோதக் கைகளும் உண்டு!) ஆரம்ப நிலை சறுக்கல்கள்!
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சாட்டை சுற்றிய பம்பரத்தைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு, மற்ற விரல்களில் சாட்டையின் முடிச்சு போட்ட நுனியைச் சுற்றிக்கொண்டு, கையை முன்னும் பின்னும் இழுத்து, சாட்டையை உருவி, பம்பரத்தைச் சுழல விடுவது, ‘இழுப்பு பம்பரம்’ விடுதலின் பால பாடம்!
தலைக்குமேல் கையை உயர்த்தி, பம்பரத்தைத் தரையில் குத்துவதைப்போல செலுத்த, சாட்டையை இழுத்துச் சுழல விடுவத “குத்து” அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடம் –
எல்லாவகைப் பம்பர விளையாட்டுகளுக்கும் இம்முறையே பயன்படும்! இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல! இப்படி ‘மட்டையடித்தல்’ சில சமயங்களில் வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை வெளிக்கொணர உதவும் –அதெல்லாம் தேர்ந்த பம்பர ஸ்பெஷலிஸ்டுகளுக்கே உரிய பண்பு!
இழுப்புபோலக் காற்றில் சாட்டையை இழுத்து, சுழலும் பம்பரத்தைத் தரையிறங்க விடாமல், உள்ளங்கையில் ஏந்திக் கொள்வதற்குக் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் வேண்டும்! சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி, காற்றிலிருந்து பம்பரத்தைக் கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள்! (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம் சரித்திரப் பிரசித்தம்!)
கொய்யா, கருவேல மரங்களில் செய்யப்படும் பம்பரங்கள் – மெஷினில் சுழலவிட்டு, சீராக செதுக்கப்பட்டவை! அழகிய வண்ணங்களில் எங்கும்கிடைக்கும்.
(பெரிய கோயில் வாசல்களில், பனை ஓலைப் பெட்டிகளில் பல வண்ணங்களில் சாட்டையுடன் விற்பனை!).
தனியாக ஆசாரியின் மரப் பட்டறைகளில் ‘கடைந்து’ செய்யப்படும் பம்பரங்களுக்கு மவுசும், விலையும் கூடத்தான். ரோஸ்வுட் / தேக்கு மரஃபினிஷ், அழகான சாட்டை சுற்றும் வரிகள், பெரிய மண்டை, குறைந்தஉயரம், தடி ஆணி தரையிலோ, கையிலோ சுழலும்போது, ஒருவித அமைதியுடன் மயங்குவதைப்போலத் தோன்றும் காதருகே கொண்டுவந்தால், சன்னமான ‘ஹம்மிங்’ கேட்கும்!
சிதம்பரத்தில், மேல சன்னதி ஃபேன்சி ஷாப்பில் கலர்ப் பம்பரங்களும், சின்னகடைத் தெருவில் கடைந்த பம்பரங்களும் கிடைக்கும்! அதைவாங்கக் காசுதான் கிடைக்காது!
அவசரத்துக்குச் செய்தாற்போல், ஏதோ ஒரு கட்டையில் சீவி, கொஞ்சம் நீளமான ’கோம்பை’ (இந்த வார்த்தையின் பொருள் அறிய பம்பரப் பண்டிதர்களை அணுகவும்!) போல செதுக்கப்பட்ட பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால், தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச் சுற்றும் – ”தொகுறு” பம்பரங்கள்! நம்ம ஊரில் சில பிரபலங்கள்கூட இப்படித் தொகுறும் பம்பரங்களாக குதித்துச் சவுண்டு விடுவதைக் காணலாம்!!
அதிக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள் (தோற்று, மற்ற பம்பர ஆணிகளால்‘குத்து’ப் பட்டவை) அம்மை வடு முகம்போல இருந்தாலும், சுழலும் போது அழகாகவும், மயங்குவதாகவும் இருக்கும். அடிபட்டால்தானே அமைதியும், அழகும் வருகிறது!
“அப்பீட்” எடுப்பது தெரிந்திருக்க வேண்டும், அதுவும் விரைவாக எல்லோருக்கும் முன்பாக எடுக்கவேண்டும். (இரண்டு மூன்று சுற்றுக்களில் பம்பரத்தைச் சுழலவிட்டு, தரையிலிருந்து சாட்டையால் தூக்கிக் ’காட்ச்’பிடிப்பது ’அப்பீட்’ (அ) கோஸ்’) கடைசியில் எடுப்பவர் தன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்க,, மற்றவர்கள் ’குத்து’ விட, பம்பரம் வெளியே வரவேண்டும் (ஆக்கர் வாங்குவதும், உடைவதும் உள்ளிருக்கும் பம்பரத்தின் தலைவிதியைப் பொறுத்தது!). மீண்டும் எல்லோரும் அப்பீட் – கடைசீ அப்பீட் வட்டத்தின் உள்ளே – ஒரு வட்டம், இரு வட்டம்,
”தலையாரி” ஆடஇரண்டு அரை வட்டம் எனப் பல வகை ஆட்டங்கள்!
பம்பரத்தின் மண்டையில் தகர ஸ்லீவுடன் ஒரு ஆணி, அடித்து, சாட்டையைக் கட்டி, தரையிறக்காமல், அதிலேயே சுற்றுவது “தொங்கிச்சுற்றும் பம்பரம்” – குழந்தைகளுக்கானது சில சிறுமிகளுக்கும்! ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க! நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொன்னேன், பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது!)
இராமாயணத்தில் ‘பம்பரமாய்ச் சுழன்றான்’ என்று வருகிறது! பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா? ஆணியால் குத்துவதாலா? என்ற பட்டிமன்றம் நடத்தலாம்!
தரையில் விடும் பம்பரங்கள் சிறுவர்களுக்கு, வித்தியசமாக, நாயகியரின் தொப்புளைச் சுற்றி, கிச்சு கிச்சு மூட்டும் பம்பரங்கள் தமிழ்க் கதாநாயகர்களுக்கு!
ஆணியின்றி மரத்தில் கூம்பு வடிவில் செதுக்கப்படும் பம்பரங்களும்,பிளாஸ்டிக் தட்டு வடிவில் பம்பரங்களும், ஒன்றன்மேல் ஒன்றாக இரட்டை பம்பரங்களும் இப்போது கிடைக்கின்றன வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட அன்று தெருவில், புழுதியில் ஆடிய பம்பரங்களுக்கு இவை ஒருபோதும் இணையாக முடியாது!
பம்பரம் இப்போது யாராவது விளையாடுகிறார்களா, தெரியவில்லை.கிராமங்களில்கூட போஸ்டர்களில் கட்சிச் சின்னமாகத்தான் பம்பரம் தென்படுகிறது!
எஃப் எம் ரேடியோவில் சந்திரபாபு பாடிக்கொண்டிருக்கிறார் – ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’! கண்களைத் தவிர இன்று வேறெதுவும் நம்மிடையே இல்லை!!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
படம் நன்றி: http://consenttobenothing.blogspot.in
நேர்மையின் மறுபெயர் ஏ என் சிவராமன்!
இந்திய பத்திரிக்கைத் துறையின் பிதாமகர் என்றே சொல்லலாம் – தேசப்பற்று, நாணயம், நேர்மை, மனத் துணிவு, எழுதும் கருத்துக்களில் தெளிவு இப்படிப் பல குணாதிசயங்களின் மொத்த உருவம் திரு ஏ என் எஸ் அவர்கள்.
சென்ற வாரம் டேக் மையத்தில் சதர்ன் ஹெரிடேஜ் சார்பில், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு ஏ என் சிவராமன் அவர்களைப்பற்றி (கீழாம்பூரின் அப்பா வழி மாமா தாத்தா திரு ஏ என் எஸ்) சுமார் தொண்ணூறு நிமிடங்கள் ஓர் அருமையான உரையாற்றினார். – 1904 ல் அவர் பிறந்தது முதல், தனது தொண்ணூற்று ஏழாவது பிறந்த நாளில் (பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றே – மார்ச் 1) இறந்தது வரையிலான சில நிகழ்வுகளைக் கையில் குறிப்பேதுமின்றி, சுவைபடச் சொன்னார் கீழாம்பூர் – அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்!
1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கொச்சியில் பிறந்தார் ஆம்பூர் நாணுஐயர் சிவராமன் ! அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும்! தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார்! படிப்பும் ஒரு முடிவுக்கு வந்தது!
டிசி வாங்கும்போது, அன்றைய பிரின்சிபால் திரு கே சி போஸ், எந்த நேரத்திலும், படிப்பதை விட்டுவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார் – எப்படிப்பட்ட ஆசிரியர்! சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர்! இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு பண்பு இது!
அன்று ஏ என் எஸ் க்குப் பிடித்த தலைவர் திலகர். அவர் மறைவுக்கு, தாமிரபரணி ஆற்றில் திதி கொடுத்தவர் ஏ என் எஸ்! அதனால் பிரிட்டிஷ் போலீசால் கவனிக்கப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்ய, அவர் இருக்கும் கிராமத்துக்கு வருகின்றனர் போலீசார் – இடம் கண்டுபிடித்து வந்து கைதுசெய்து, போலீஸ் வானில் ஏற்றிச்செல்ல, வீட்டிலிருந்து, அக்கிரகாரத்தின் முனைவரை அவரது தாய் கூவியபடி வேனுக்குப் பின்னால் ஓடி வருகிறார். அவருக்குத்தான் தன் பிள்ளையின் மீதும், அதைவிடத் தாய்நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் – கண்ணிலிருந்து வேன் மறையும்வரையில் அவர் ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று உரக்கக் கூவியவாறே ஓடிவருகிறார்!
கல்லிடைக்குறிச்சியில் சில காலம் சுதேசி பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார் ஏ என் எஸ் – அப்போது கிடைத்த நேரத்தில், சரித்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னாளில் தினமணியில் அவரது நேர்மையான தலையங்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது இந்தப் படிப்பு!!
அப்போது மிகச் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்த திரு டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் சென்னையில் நடத்திக்கொண்டிருந்த ’காந்தி’ இதழில் ஏ என் எஸ் சேர்ந்தார். அந்த சமயத்தில் இராஜாஜியுடன் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இருபது மாதங்கள் சிறைத் தண்டனை அடைந்தார். உடன் சிறையில் இருந்தவர் திரு காமராஜ்.
1934 ல் தொடங்கப்பட்ட தினமணிக்கு டி எஸ் சொக்கலிங்கம் ஆசிரியராக, ஏ என் எஸ் அவர்கள் உதவி ஆசிரியர் ஆனார். 1944 ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டுவிட, ஏ என் எஸ் அவர்கள் தினமணி ஆசிரியரானார். 1987 வரை தினமணியின் ஆசிரியராக அவர் ஆற்றிய பணி, பத்திரிக்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!
டி எஸ் சி அவர்களும், ஏ என் எஸ் அவர்களும் பத்திரிக்கை உலகின் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர்! பரஸ்பரம் அவர்கள் புதிய கதராடைகளை பரிமாறிக்கொள்ளாமல், ஒரு தீபாவளியும் கடந்ததில்லை!
காஞ்சி மகாப் பெரியவர், ஒரு முறை ஏ என் எஸ் அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் – ஒரு கோயிலுக்கான ‘ஷெட்’.- இதை ஏன் கொடுத்தார் என்பது இருவருக்கும் புரியாத ஒன்று! திரும்ப வந்த ஏ என் எஸ், திரு கோயங்கா அவர்களிடம், இதைப்பற்றிக் கூற, அருகிலிருந்து கேட்டவர், திரு பிர்லா அவர்கள். அரை மணி நேரத்தில் அந்த ஷெட் கட்டுவதற்கான முழுத் தொகையையும் பிர்லா அவர்கள் வழங்கி விடுகிறார்கள். எல்லாமே எதிர்பாராமல் நடக்கின்றன – பிர்லா அவர்களின் காஞ்சித் தொடர்பு, ஏ என் எஸ் அவர்களாலேயே முதலில் ஏற்படுகிறது!
எமர்ஜென்சியை வெளிப்படையாக எதிர்த்த இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்று தினமணி. சென்சார் கடுமையாக இருந்த காலம் – தலையங்கப் பகுதியை ஒன்றும் எழுதாமல் வெறுமையாக விட்டுவிடுவார் – அல்லது உலக ஜனநாயக நாடுகளைக் கேலி செய்வதுபோல் பகடியாக எமர்ஜென்சியை சாடுவார்!
திரு காமராஜ் அவர்களுக்கும், ஏ என் எஸ் க்கும் அவ்வளவு நெருக்கம். எமர்ஜென்சியில் மனமுடைந்து காமராஜ் மறைந்தபோது, வருந்தி, ஒரு வரி எழுதிவிட்டு, ‘ என் பேனா இனி எழுத மறுக்கிறது ‘ என்றெழுதி சென்சார் இருப்பதைச் சுட்டினார்! எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார்!).
திரு டி எஸ் கிருஷ்ணா, திரு காமராஜ், திரு கருணாநிதி ஆகிய மூன்று பெரும் ஆளுமைகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். எமர்ஜென்சி சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களைச் சந்திக்க, செக்யூரிடிகளுக்குத் தெரியாமல், பேப்பர் கட்டுகளுடன் வேனில் ஏ என் எஸ் பயணித்தது வியப்புக்குரியது!
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரென்ச், ஜெர்மன், உருது என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுத, படிக்கத் தெரிந்தவர். ஒரிஜினல் குரானைப் படிப்பதற்காக உருது மொழியை ஓர் ஆசிரியர் வைத்துக் கற்றுக்கொண்டார் – அப்போது அவருக்கு வயது எண்பதுக்கும் மேலே!
’கணக்கன்’, ‘அரைகுறைப் பாமரன்’ போன்ற புனைப் பெயர்களில், அறிவியல், பொருளாதாரம், அரசியல் களங்களில் ஏராளமான கட்டுரைகள், பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் ஏ என் எஸ். ‘மாகாண சுயாட்சி’ பற்றிய புத்தகம் 1928 லேயே எழுதியவர்! ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன்?’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை! ‘விண்வெளிக்கு அப்பால்’ என்ற இவரது புத்தகம், கலாம் அவர்கள் ஏவுகணைபற்றி அறிந்துகொள்ள ஓர் உந்துதலாக இருந்தது என்று கலாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்!
1987 ஆகஸ்ட் – தினமணி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் – ஆனாலும் படிப்பதையோ, எழுதுவதையோ விட்டுவிடவில்லை!
பத்திரிக்கைத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி, 1988 ல் அவருக்கு “B.D.GOENKA AWARD” கொடுக்கப்பட்டது!
2001, மார்ச் 1 திரு ஏ என் எஸ் மறைந்தார் – அவர் வாழ்க்கை முழுவதும் நேர்மை, உண்மை, உழைப்பு, படிப்பு, எழுத்து என்று நற்பண்புகளால் நிறைந்தது.
இன்றைய இளைஞர் சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் திரு ஏ என் சிவராமன் அவர்கள்.
திரு கீழாம்பூர் அவர்களுக்கு என் நன்றி – அவர் பேசியதில் மிகக் குறைந்த அளவே இங்கே எழுதியிருக்கிறேன் – ஆனாலும் மனம் நிறைவாய் இருக்கிறது!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
(கடைசிப்பக்கம் எழுதிவரும் டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்களுக்குக் கலைமகள் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. – வாழ்த்துக்கள் – குவிகம் )
ஸ்ட்ரெஸ் – தவிர்க்கப்பட வேண்டிய மனநிலை!
அவர் உள்ளே வரும்போதே நடையில் ஓர் அவசரம் தெரிந்தது – அங்கும் இங்கும் பார்த்தபடி வந்தார். கண்களில் ஒரு வித எதிர்பார்ப்பு. எதிரில் அமர்ந்து கையைப் பிசைந்தபடி இருந்தார். மேலோட்டமாக மூச்சு – இடையிடையே ஆழ்ந்த சுவாசம் என ”ரெஸ்ட்லெஸ்” ஆக இருந்தார்.
‘என்ன பிராப்ளம்?”
பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஏ4 தாளை எடுத்தார். வரிசையாக, இடமில்லாமல் நெருக்கி இரண்டு பக்கங்களிலும் கேள்விகளால் நிரப்பியிருந்தார்!
“மறந்து விடக் கூடாதே என்றுதான் . . .. .” – என்றவாறே, நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்கத் தொடங்கினார்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் வரக்கூடியவையே!
இப்போதெல்லாம் சின்னக் குழந்தை முதல் முதியோர் வரை அடிக்கடி பிரயோகிக்கும் சொல் “டென்ஷனா இருக்கு!” ’ஸ்ட்ரெஸ்’ அல்லது ’மன அழுத்தம்’ என்பது ஒருவித மனநிலையே – அமைதியாய் சிந்திக்கும் அல்லது இலேசான மனநிலைக்கு எதிரானது.
ஹான்ஸ் செல்யே என்னும் அறிஞர், இப்படிப்பட்ட மனநிலை உடலின் ‘சமநிலை’யை (HOMEOSTASIS) பாதிக்கிறது என்கிறார்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனிதர்களைப் பாதிக்க கூடியவை மன அழுத்தம் தரக்கூடிய சூழல்களே (STRESSFUL SITUATIONS)!
நம் உடல் ஸ்ட்ரெஸுக்கு எதிர்வினை ஆற்றுவது, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
“கேனன்” எனும் அறிஞர், ஸ்ட்ரெஸ் வரும்போது நாம் மூன்று வழிகளில் நம்மையறியாமலேயே எதிர்வினையாற்றுகிறோம் என்கிறார். ஃபைட் (சண்டையிடுதல்), ஃப்ளைட் (ஓடிவிடுதல்) அல்லது ஃப்ரீஸ் (உறைந்து விடுதல்). – ஏதாவது ஒரு வழியில் நாம் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறோம்!
இந்த எதிர்வினைக்குக் காரணம், நமது மூளைக்குள்ளிருக்கும் ஹைப்போதலாமஸ் – பிட்யூட்டரி –அட்ரினல் தொடர்பினால் சுரக்கும் ‘அட்ரினலின்’,’கார்டிசால்’ போன்ற ஹார்மோன்கள்தான்! இவற்றால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது (பால்பிடேஷன்), இரத்தக் கொதிப்பு (BP) எகிறுகிறது – அதிக வியர்வை மற்றும் கை,கால்களில் நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன!
ஸ்ட்ரெஸில் இருப்பவரது மனநிலை “ஆங்சைடி நியுரோசிஸ்” எனப்படுகிறது. எப்போதும் ஒரு பரபரப்பு, ‘என்ன’ ‘என்ன’ என்பதுபோன்ற ஒரு படபடப்பு, அதிகமான சந்தேகங்கள், சலிப்புகள், கவனக்குறைவு, மறதி, அவசரம் என ஒட்டுமொத்தமான ஒரு ‘திறமைக் குறைவு’ ஏற்படுகின்றது. மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், நமது எண்ணங்களையும், நடத்தைகளையும் மாற்றிவிடுகின்றன!
உள்ளிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் மனோ ரீதியானது – வெளியிலிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் உடல் ரீதியானது!
வாழ்க்கையில் ஏற்படும் இழப்பு, இறப்பு, பிரிவு, புதிய முயற்சிகள், இயலாமை, ஏழ்மை போன்றவை பெரும்பாலும் ஸ்ட்ரெஸுக்கு வழிவகுக்கின்றன.
அன்றாட அலுவல்களில் சலிப்பு, தினசரி ஏற்படும் வெறுப்பு, விரோதங்கள், மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றின் ஒன்றுசேர்ந்த பாதிப்பு – எப்போதும் வெறுப்பேற்றும் நட்பு, அண்டை வீட்டார், உடன் வேலை செய்பவர், போக்குவரத்து நெரிசல், எதிர்பாரா விருந்தினர் – இப்படிப் பல வழிகளில் ஒருவருக்கு அழுத்தம் வரலாம்!
ஸ்ட்ரெஸினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
சோர்வு (மனம், உடல் இரண்டும்!), வலிகள் (கை,கால் குடைச்சல்), தசைகளில் இறுக்கம், அஜீரணம், வாந்தி, பேதி, மலச்சிக்கல், தூக்கமின்மை, குறையும் நோய் எதிர்ப்பு சக்தி (அடிக்கடி ஜலதோஷம், நோய்த் தொற்று), பாலியல் வெறுப்பு, ஆண்மை குறைவு!
நெஞ்சு வலி, படபடப்பு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்கள் தடிப்பு போன்றவை இதயம் சம்பந்தப் பட்டவை!
மயக்கம், அதிக வியர்வை, தலைவலி (டென்ஷன்), உடல் வலி போன்றவை நரம்பு சம்பந்தப் பட்டவை!
தசை இறுக்கத்தினால், கழுத்து, முதுகு வலி, ‘நரம்பு’ இழுத்தல் ஆகியவையும் ஏற்படும்.
நீண்ட நாளைய ஸ்ட்ரெஸ், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.
இவ்வளவு கெடுதல்களை விளைவிக்கக்கூடிய ஸ்ட்ரெஸ் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் – அதிலிருந்து வெளியே வரும் வழியை அறிந்து, காரணத்தைத் தவிர்த்துவிட்டால், நிவாரணம் நிச்சயம்!
மேலே குறிப்பிட்ட நபரின் நேர நிர்வாகம், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்பு, பணியில் அணுகுமுறை போன்றவற்றால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தது!
மன நல ஆலோசகர் மூலம் அவருக்குக் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது! யோகா, மெடிடேஷன் ஆகியவையும் உதவின.
மருந்துகளை விட, பிராணாயாமம், யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி, உணர்வுகளை மனதில் தேக்கி வைக்காமல், பகிர்ந்து கொள்ளுதல், சரிவிகித உணவு, முறையான நல்ல தூக்கம், நேர நிர்வாகம், நல்ல நட்பு, இசை, போன்றவை அதிக அளவில் உதவக் கூடும்!
மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு கலை – அதை அனைவரும் பின் பற்றுவது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்க உதவும்!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
ஃப்ளாஷ் பேக் – விழா!
சுமார் 30-40 வருடங்களுக்கு முன்னால் –
அதாவது டிவி,நெட்,யூடியூப் எல்லாம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யும் முன்பு சினிமா மட்டுமே ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அப்போதைய சினிமாக்கள் கூடியவரையில் நல்லனவற்றையே, கலை நயத்துடன் சொல்லி வந்தன. ஓரிரண்டு கலைஞர்களைத் தவிர, மற்றவர்கள் சினிமாவை அதன் பெருமைக்காகவும் , கலை வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த பொற்காலம் –
தங்களது திறமையாலும், தொழில் மீது கொண்ட பக்தியாலும், படைப்புகளாலும் மட்டுமே பெயர் பெற்ற மூன்று பிரபலங்களுக்கு 11-3-2018 ஞாயிறன்று மாலை ஒரு பாராட்டு விழா நடைபெற்றது – மூன்று மணி நேரம், இனிமையான ’அந்தக் கால சினிமா’ நினைவுகளில் கரைந்தது!
சென்னை ‘ரசிகாஸ்’ கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் சார்பில், திரு.முக்தாசீனிவாசன் (மூத்த திரை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்) திரு.சித்ராலயா கோபு (மூத்த வசனகர்த்தா, மற்றும் இயக்குனர்), திரு.C.V.ராஜேந்திரன் (மூத்த திரைஇயக்குனர்) ஆகியோருக்கு விருது மற்றும் பாராட்டு விழா – திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் திரை உலக ஜாம்பவான்களின் பங்களிப்பு, தமிழ்த் திரையுலக வரலாற்றில் மகத்தானது, மறக்க முடியாதது. பேரா.பிரகாசம், டெல்லி கணேஷ், சித்ரா லக்ஷ்மணன், ரமேஷ் கண்ணா, மோகன்ராம், காந்தி கண்ணதாசன், எம்எஸ்வி ஹரிதாஸ் என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் – பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் ஏராளமான விபரங்கள் – நேரமோ குறைவு. இருந்தாலும் கிடைத்த நேரத்தில் அனைவரின் பங்களிப்பும் சுவையாகவும், சிறப்பாகவும் இருந்தது.
முக்தா V சீனிவாசன்:
எண்பத்தி எட்டு வயதானவர். 1947ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் ‘கிளாப்’பாயாகச் சேர்ந்தவர், பத்து வருடங்களில் தானே ஒரு படத்தை இயக்கி, அரசு விருதைப்பெறும் அளவுக்கு உயர்ந்தார். முதல் படம் முதலாளி (ஏரிக்கரையின் மேலே புகழ்), தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்கள். திட்டமிட்ட நேர்மையான உழைப்பு அவரைத் தயாரிப்பாளர் நிலைக்கு உயர்த்தின. தன் சகோதரர் திரு முக்தா ராமசாமி, தயாரிப்பு நிர்வாகத்தைத் திறம்படக் கவனிக்க, வெற்றிமேல் வெற்றிப் படங்கள் முக்தா பிலிம்ஸில் உருவாயின!
இதயத்தில் நீ, பனித்திரை, தவப்புதல்வன், அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், அவன் அவள் அது, சூரியகாந்தி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தார். திரு.சோ அவர்கள் திரைக்கதை வசனத்தில் வந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களே – பொம்மலாட்டம் படப் பாடலை – வா வாத்தியாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டினா வுடமாட்டேன் – திரு சீனிவாசன் அவர்கள் மேடையிலேயே பாடி மகிழ்ந்தார்!
ஆரம்ப காலங்களில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார் – பின்னர் காங்கிரஸ் அவரை அரவணைத்துக் கொண்டது. தானே இராட்டையில் நூல் நூற்பார் – காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பார் – இன்றும் கதர் ஆடைதான் – விடுமுறைநாட்களில் மெளன விரதம்!
அவர் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ – தொடராக துக்ளக் இதழில் வெளிவந்தது –ஒரு முக்கியமான ஆவண நூலாகத் திகழ்கிறது. நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நான்கு வேதங்களைப் பற்றிய நூல் – சதுர்வேதி –எல்லோருக்குமானது, எளிமையானது.
ஏற்புரையில் அவரது நினைவாற்றலும், மனித நேயமும், நேர்படப் பேசும் தன்மையும்ஒருங்கே வெளிப்பட்டது!
சி.வி.ராஜேந்திரன்:
’தென்னிந்திய சாந்தாராம்’ எனப் புகழப்பட்ட டைரக்டர் ஸ்ரீதரின் சகோதரர் இவர். மீண்டசொர்க்கம் முதல் அவருக்கு அசிஸ்டெண்டாய், அசோசியேட்டாய்ப் பணிபுரிந்தவர். தனது படங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் ஸ்ரீதரிடம் தான் கற்றுக்கொண்ட சினிமாதான் என்கிறார். நில் கவனி காதலி, வீட்டுக்கு வீடு,கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா, நீதி, வாழ்க்கை, சிவகாமியின்செல்வன் என இவரது வெற்றிப்படப் பட்டியல் தொடர்கிறது. பாடல் காட்சிகளைப்படமாக்குவதில் இவருக்கு இணை இவரேதான் என்ற பெயர் பெற்றவர்.
‘சித்ராலயா’ கோபு:
1936 ஆம் ஆண்டு பிறந்த இவர் டைரக்டர் ஸ்ரீதரின் பால்ய சிநேகிதர். தன்னுள்ளிருந்த ‘ஹ்யூமரிஸ்ட்’டை வெளிப் படுத்தியவர் ஸ்ரீதர்தான் என்கிறார். ஸ்ரீதருடன் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர். எல்லாப் படங்களின் நகைச்சுவைப் பகுதிகளையும் எழுதியவர். காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் கார்டில் ”கதை,வசனம் – ஸ்ரீதர் – கோபு” என்று தனக்கு நிகரான அந்தஸ்தைக் கொடுத்த ஸ்ரீதரைப்பற்றிப் பெருமைப்படுகிறார். இவர் முதன் முதலாக டைரக்ட் செய்த படம், ஏவிஎம் மின் “காசேதான் கடவுளடா”! மிகச் சிறந்த, நல்ல நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்– காதலிக்க நேரமில்லை, கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, வீட்டுக்கு வீடு,உத்தரவின்றி உள்ளே வா போன்ற நல்ல நகைச்சுவைப் படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே! சோவுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நட்பை மிகவும் சிலாகித்துக் கூறுகிறார்.
ஸ்ரீதர், நடிகர் திலகம், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன், ஆகிய திறமை மிக்ககலைஞர்களுடன் பணி புரிந்ததைப் பெருமையாக எண்ணி மகிழ்கின்றனர் சி விஆரும், கோபுவும்!
நிகழ்ச்சி துவங்குமுன், சுமார் 35 நிமிடங்களுக்கு, இந்த மூன்று ஜாம்பவான்களின்படங்களிலிருந்து வசனம் மற்றும் சில காட்சிகளின் ”க்ளிப்பிங்” காட்டப்பட்டது.அரங்கத்தில் எழுந்த கைதட்டல்களும், சிரிப்பும், மகிழ்ச்சியும் இவர்களின் புகழை உரத்துச் சொல்வதாய் அமைந்திருந்தன !
ஓர் இனிமையான ஃப்ளாஷ் பாக்” தான் – சந்தேகமே இல்லை!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
”தமிழ்த் தாத்தா” உ.வே.சா. – (1855 – 1942) சில குறிப்புக்கள் !
குவிகம் இலக்கிய வாசல் மற்றும் இலக்கிய சிந்தனை நடத்திய கூட்டத்தில் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்பற்றி உரையாற்றினார். ஒரு மணி நேரத்திற்குள், அழகாக, சுவாரஸ்யமான தகவல்களை தனக்கே உரிய நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார் – அவரது நினைவாற்றல் வியக்கவைத்தது!
உ.வே.சாமிநாத அய்யர், உத்தமதானபுரம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் வெங்கட்ராமன். (பின்னர் சாமிநாதன் என பெயர் மாற்றியவர் குருநாதர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை).
குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும், சாமிநாத அய்யருக்கும் இடையே இருந்த குரு – சிஷ்ய உறவு மிகவும் வியக்கத்தக்கது.
19 ஆம் நூற்றாண்டின் சங்க இலக்கியப் பதிப்புகளுக்கு முக்கியக் காரணமானவர் திரு உ.வே சா அவர்கள்.- இவரது பதிப்புகள் “ஐயர் பதிப்பு” எனச் சிறப்புடன் குறிப்பிடப்படுகின்றன.
இவரது ‘என் சரித்திரம்’ புத்தகம், சுயசரிதைகளில் சிறப்பானது – இவர் ஏடுகளைத் தேடுவதற்கும், பிரதிகள் எடுப்பதற்கும் எடுத்துக்கொண்ட சிரமங்கள், தமிழ் வித்வான் பட்டம் பெற்றது, மற்றும் அன்றைய கல்வி முறை, பதிப்புத் துறையில் இருந்த தடங்கல்கள் என அந்தக்கால சூழல்களை மிகச் சிறப்பாகச் சொல்லிச் செல்கிறது அவரது சரித்திரம்! அவருக்குப் பிறகு, அவரது வாழ்க்கை வரலாற்றில் விடுபட்டவற்றை – அவர் இறக்கும் வரையிலான நிகழ்வுகளை – திரு கி.வா ஜ அவர்கள், “என் ஆசிரியப்பிரான்” என்ற நூலில் தொடர்கிறார் என்பது பலருக்குச் செய்தியாக இருக்கக்கூடும்.
உ.வே.சா. நல்ல இசை ஞானம் உடையவர். கோபாலகிருஷ்ண பாரதியிடம் சில காலம் இசை பயின்றார் – இசையிருந்தால், இலக்கிய இலக்கணத்தில் புத்தி செல்லாது என குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னதால், இசையை விட்டார். ஆனாலும், மிகவும் விருப்பமுடன் செய்யுட்களை ராகத்துடன் பாடி, மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்!
மீ. சு. பிள்ளையவர்களின் மாணவர் திரு தியாகராஜச் செட்டியார் ஓய்வு பெறவே, அந்தப் பணியிடத்துக்கு சாமிநாத அய்யர் அவர்களைப் பரிந்துரைக்கிறார் – அவரது முதல் வேலைக்கான சம்பளம் மாதம் ஐந்து ரூபாய்!
சங்க நூல்கள் பதிப்பு, என் சரிதம் இவை தவிர, திரு உ வே சா அவர்கள் எழுதிய கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. அந்தக் காலத்தில் நிலவிய மனித நேயம், நேர்மை, இயற்கைச் சூழல் என மிகத் தெள்ளிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு எழுதியிருப்பார். சுதேசமித்திரன், கலைமகள், தினமணி, ஆனந்த விகடன், தாருல் இஸ்லாம், தென்னிந்திய ‘வர்தமானி’ போன்ற பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. காலமாற்றத்திற்கேற்ப, எளிமையான தமிழில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது, உ.வே சா அவர்களின் தமிழ்ப் புலமை நம்மை வியக்க வைக்கிறது.
அவர் தனது குருநாதருடைய வாழ்க்கையை, ’ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்னும் உரைநடை நூலாக – இரண்டு பகுதிகளாக, மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். இது தவிர, தியாகராஜச் செட்டியார், கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதய்யர் ஆகியோரது வரலாறுகளையும் எழுதியுள்ளார்.
சாஸ்திரீய சங்கீத விரிவான பதிவுகள், தல புராணங்கள், செவி வழிக் கதைகள், கட்டுரைகள் என இவரது எழுத்துலகம் பரந்துபட்டது.
சங்கராபரணம் நரசயர் கதை:
தஞ்சாவூரை ஆண்ட மஹாராஷ்டிர மன்னர் ஒருவர், மிகச் சிறப்பாக ‘சங்கராபரணம்’ பாடிய நரசயர் அவர்களை மிகவும் புகழ்ந்து, பரிசுகள் கொடுத்து ‘சங்கராபரணம் நரசயர்’ என்ற பட்டமும் கொடுத்துக் கெளரவித்தார்.
ஒரு சமயம் நரசயருக்கு எதிர்பாராத செலவு – அதனால் கடன் வாங்க கபிஸ்தலத்தில் இருந்த இராமபத்திர மூப்பனார் என்னும் செல்வந்தரை அணுகினார்., இசையில் மிகுந்த ஆர்வமும், ஞானமும் உடைய மூப்பனார், ‘கடனுக்கு அடகு வைக்க ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்க, “கண்ணால் காண முடியாது, காதால் கேட்கலாம். காலத்திற்கும் அழியாதது, இன்பத்தைத் தருவது – என் சங்கராபரணம் ராகமே – அதனை அடகு வைக்கிறேன் – தங்கள் பொன்னைத் திருப்பித் தரும் வரையில், நான் அதை எங்கும் பாடுவதில்லை என்று உறுதி கூறுகிறேன்” என்று சொல்லிக் கடன் பத்திரம் எழுதிக் கொடுக்கிறார். சொன்னவாறே எங்கும் சங்கராபரணம் ராகத்தைப் பாடாமலேயே இருக்கிறார்.
கும்பகோணத்தின் பெரும் செல்வந்தர் அப்புராயர் வீட்டுக் கல்யாணத்தில், எல்லோரும் விரும்பும் சங்கராபரண ராகத்தைப் பாட மறுக்கிறார் நரசயர். மூப்பனாரிடம் சங்கராபரணத்தை அடகு வைத்த விபரத்தையும் கூறி, கடனைத் திருப்பித் தந்தால்தான் அந்த ராகத்தைப் பாடமுடியும் என்பதையும் விளக்குகிறார் நரசயர். உடனே ராயர், பொன்னையும், அதற்கான வட்டியையும் செலுத்தி, பத்திரத்தை மீட்டு வர, ஒருவரை அனுப்புகிறார்.
இராமபத்திர மூப்பனார் மகிழ்ந்து, அந்தத் தொகையோடு, மேலும் ஒரு தொகையையும் எடுத்துக்கொண்டு கும்பகோணம் வருகிறார். “ஐயர் அவர்கள் கடனாகக் கேட்டதால் எனக்கு வருத்தம் உண்டாயிற்று. அவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்? விளையாட்டாய் அடகு வைத்தவர், இன்று வரையில் அந்த ராகத்தை எங்கும் பாடவில்லை – அது அவரது உயர்ந்த குணத்தையும், உண்மையையும் காட்டுகிறது” என்று கூறி, மனம் மகிழ்ந்து, முழுத் தொகையைத் திருப்பியதோடல்லாமல், சங்கராபரணத்தை அத்தனை காலம் சிறை செய்ததற்கு அபராதமாக ஒரு தொகையையும் சேர்த்துக் கொடுக்கிறார்.
இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் உ.வே.சா அவர்களின் கட்டுரைகளும், சொல்லோவியங்களும் படிக்கப் படிக்கத் திகட்டாதவை!
மேலும் “செண்டு” என்ற சொல்லுக்குப் பொருளை ஒரு கோயில் பூசாரியிடமிருந்து தெரிந்து கொள்கிறார். ‘ஆட்டிடையன் வெட்டு’ என்பதன் பொருளை கிராமத்தில் ஆடு மேய்க்கும் கிழவனார் ஒருவரிடம் இருந்து தெரிந்து கொள்கிறார்! தமிழைக் கற்றுக் கொள்வதில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை தமிழ்த் தாத்தா அவர்கள்!
”அன்னியர்கள், தமிழ்ச்செவ்வி அறியாதார்
இன்று எம்மை ஆள்வோரேனும்,
பன்னியசீர் மஹாமஹோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து,
பொன்நிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்தனக்குப் புகழ் செய்வாரேல்,
முன்இவன் அப்பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன் பெருமை மொழியல்ஆமோ?
என்கிறார் மகாகவி பாரதி!
”சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புந் தமிழ், வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர்.” – திரு.வி.க.
(ஆதாரம்: 1.முள்ளால் எழுதிய ஓலை – செவிவழிக்கதைக் கட்டுரைகள் – உ.வே.சாமிநாதையர் – காலச்சுவடு பதிப்பகம்.
- நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் – டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை -90).