குண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்

      தமிழறிவு!!: குண்டலகேசி

   முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்டு, அவளைப் பழிவாங்க நினைத்தான். 

அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……

         வழியில் கண்ட வனப்புமிகு காட்சிகள்

                மலைப் பகுதியின் எழில்

 

ஆடையென மேகநிரை மாமலையை மூடும்

     அழகுமயில் அதைக்கண்டு  சிறகுவிரித் தாடும்

ஓடையிலே விலங்கினங்கள் நீரருந்தி ஓடும்

     உயர்மரத்துக் கிளையுகந்து வான்முகட்டைச் சாடும்

பேடையினை ஆண்பறவை இலைநடுவே தேடும்

     பெண்குயிலும் துணையுடனே சேர்ந்திசைப்பண் பாடும்

வாடையினால் சிலபறவை கூடுகளில் வாடும்

     வனப்புடைய  வண்ணமலர் செடிகொடிகள் சூடும்!

 

மேகத்தின் நிழல் போன்ற யானைக் கூட்டங்கள்

 

அகிலும் மணக்கும் சந்தனமும்

     அடர்ந்த  மலையின் சாரலிலே

முகிலின் பரந்த கரியநிழல்

     மொத்தம் வந்து படிந்ததெனத்

திகழும் யானைக் கூட்டங்கள்

     சேர்ந்து நெருங்கி உறங்கினவே 

நிகரில் மருப்பும் ஒளிவீசும்

     நெளியும் மின்னாய்க் கண்கூசும்

 

        ( மருப்பு — யானைக்கொம்பு)

 

           தினைப்புனம் காக்கும் பெண்கள்

 

நெடுமரத்தின் உச்சியிலே நிலைத்தபரண் மீதமர்ந்து

தடதடவென் றடிக்கின்ற தட்டையொடு தழலொலித்து

விடுகதிர்கள் கவர்கிளிகள் விலகிடவே அவைவிரட்டும் 

சுடர்தொடிக்கை மடவார்கள் சூழ்ந்ததினைப்  புனம்கண்டார்.

 

      ( தட்டை, தழல் — கிளிகளை வெருட்டும் கருவிகள்)

                 தட்டுவதால் ஓசை எழுப்புவது தட்டை

                 சுழற்றுவதால் ஓசை எழுப்புவது தழல்

 

                                கானகச் சிறப்பு

வானாடு பறவையினம் வண்முகிலுள் போய்மறையும்

கானாடு பிணைமறிகள்  கலையுடனே தாம்விரையும்

தேன்நாடு பொறிவண்டு  செறிமலர்கள் இதழுறையும்

கான்நாட்டின் காட்சிகளைக்  கண்டவரின் மனம்நிறையும்!

 

                      ( பிணை- பெண் மான்)

                           ( மறி – மான் குட்டி)

                         ( கலை – ஆண் மான்)

 

                              வஞ்சகம் கண்டிலள்

பஞ்சுநிகர் மஞ்சுதவழ் மாமலையும், அம்மலைமேல்

விஞ்சியுயர் விண்தொட்டு விளையாடும் வியன்மரங்கள்,

கொஞ்சுகுளிர் வீழருவி கோலமிகு காட்சிகளை

வஞ்சியவள் கண்டனளே வஞ்சகம்தான் கண்டிலளே

       

            போகாதே எனத் தடுத்த பறவைகள்

முத்தன்ன வெண்ணகையாய் மொய்குழலாய் மென்னடையாய்    சித்திரையின் முழுநிலவாய்ச் சிரிப்பவளே பத்திரையே

இத்தரையில் கொடியவன்பின் இனிப்போதல் விடுவையெனக்

கத்தினவே  புள்ளினங்கள் காவென்றும் கீயென்றும்

            

        செல்லாதே  எனத்தடுத்த மரக் கிளைகள்

 

சேலாடு விழியுடையாய், செல்லற்க, செல்லற்க,

வேலோடு வழிப்பறிசெய் வீணன்பின் செல்லற்க,

நூலோதிப் பயனென்ன? நோக்கறிந்து பிழைப்பையெனக்

காலாடு மரக்கிளைகள் கைகளினால் தடுத்தனவே

                        ( கால் — காற்று)

                ( காலாடு — காற்றில் ஆடும்)

(தொடரும்)

 

குண்டலகேசியின் கதை -6 – தில்லைவேந்தன்

Tamil Kundalakesi for Android - APK Download

 

 

முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவித்தான்.
இனி, அவர்களின் திருமணத்தைக் காண்போம்……..

 

 

கதிரவன் தோற்றம்

பேரெழில் பத்தி ரையாள்
பெட்புடன் காளன் தன்னைச்
சீருடன் மணக்கும் காட்சிச்
சிறப்பினைக் காண்ப தற்குத்
தேரினில் குதிரை ஏழு
செலுத்தியே கிழக்கு வானில்
காரிருள் பகைவி ரட்டிக்
கதிரவன் வந்தான் மாதோ!

திருமண ஊர்வலம்

ஈர்ந்தண் முழவு ததும்பிடவும்
யாழும் குழலும் விளங்கிடவும்
ஆர்ந்து முரசம் அதிர்ந்திடவும்
ஆழி சங்கம் முழங்கிடவும்
சேர்ந்து முத்து வெண்குடைகள்
திசைகள் தோறும் எழுந்திடவும்
ஊர்ந்து மணநாள் ஊர்வலமும்
ஊரே வியக்கச் சென்றதம்மா

மணவிழாவிற்கு வந்த பல்வகை மக்கள்

பெடையன நடையார் வந்தார்
பேரிளம் பெண்கள் வந்தார்
விடையன இளையோர் வந்தார்
மெய்தளர் முதியோர் வந்தார்
உடைப்பெரும் செல்வர் வந்தார்
உயர்நிலை இருப்போர் வந்தார்
நடைமெலி நல்கூர்ந் தாரும்
நாட்டமே மிக்கு வந்தார்
( பெடையனம்- பெண்அன்னம் )

( பேரிளம் பெண்கள் — வயது முதிர்ந்த பெண்கள்)
( நல்கூர்ந்தார் — வறியவர்)

திருமண விருந்து

காலை வந்த ஊர்மக்கள்
களித்துப் பொங்கல், வெண்சோறு,
சாலச் சிறந்த கறிவகைகள்,
தயிர்சேர் இனிய புளிப்பாகர்
ஞாலம் விரும்பும் நறுங்கனிகள்,
நாவை மயக்கும் நல்லினிப்பு
மேலும் மேலும் கேட்டுண்டு
மேவும் விருந்தின் சுவைபுகழ்ந்தார்!

(தயிர்சேர் இனிய புளிப்பாகர் — தயிர் கலந்து செய்த , இனிய புளிப்பையுடைய மோர்க்குழம்பு)

மணவிழா மண்டபம்

மண்டபத்தின் வாயிலிலே இரும ருங்கும்
வாழையுடன் கமுகுமரம் தலைவ ணங்கும்
கண்டவர்கள் மனமயங்கும் நீலப் பட்டின்
கவின்மிகுந்த விதானத்தில் முத்துத் தொங்கும்
வண்டினங்கள் மொய்க்கின்ற மணக்கும் பூக்கள்
வண்ணவண்ண மாலைகளாம் இங்கும் அங்கும்.
பண்டையர்தம் முறையினிலே அலங்க ரித்த
பாங்கினுயர் மணவறையில் மகிழ்ச்சி பொங்கும்.

மணமக்கள் மண்டபம் வந்தடைதல்

வெண்புரவி மீதேறித் திண்தோள் காளன்
மேன்மைமிகு மண்டபத்தை வந்த டைந்தான்
மண்புகுந்த நிலவனைய பத்தி ரையாள்
மகிழ்ச்சியுடன் மணிச்சிவிகை ஊர்ந்து வந்தாள்
பண்புகுந்த இன்னியங்கள் முழங்க மேளம்
பருவரைமேல் இடியொலிபோல் அதிர ஆங்குக்
கண்புகுந்த மணக்கோலக் காட்சி யாலே
கண்பெற்ற பயனடைந்தார் நகர மாந்தர்

( இன்னியங்கள் — இசைக்கருவிகள்)
( பருவரை — பெரிய மலை)

திருமணம்

வெள்ளி முளைக்கும் வைகறையில்
வேள்வித் தீயை வலம்வரவும்
அள்ளிப் பூக்கள் அவர்மேலே
ஆன்றோர், பெரியோர் சொரிந்திடவும்
கள்ளி ருக்கும் மலர்க்கூந்தல்
காதல் மங்கை பத்திரைக்கும்
துள்ளும் இளமைக் காளனுக்கும்
தூய மணம்தான் சிறந்ததுவே!

(தொடரும்)