சரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ

நான்காம் பாகம்

இடைக்காலச் சோழர்கள்

விஜயாலயன்

Ancient tamizhan: Vijayalaya Cholan

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

விஜயாலயன்

 

விஜயாலயன் என்றதும் கல்கியின் பொன்னியின் செல்வன் தான் நமக்கு நினைவு வரும். வயது முதிர்ந்து, இடுப்பிற்குக் கீழே செயலற்று இருந்த போதும் போர்க்களத்தில் வீரர்கள் அவரைத்தூக்கிக் கொள்ள அவர் தன் இரு கைகளிலும் பெரும் வாள் ஏந்தி சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தும் காட்சியை அழகாக, அசாத்தியமாக வர்ணிப்பது என்பது கல்கிக்கு மட்டுமே சாத்தியம்.

கடைச்சங்க காலத்திற்குப் பின் சோழர் பெருமை குறைந்து..
குறுநில மன்னராகி..
பேரரசுகளுக்குக் கப்பம் கட்டி..
சரித்திரத்தில் இடம் பெறாமல்..
பல சோழர்கள்..
இருந்தனர் – இறந்தனர் – தொலைந்தும் போயினர்.
இளவரசிகளை உற்பத்தி செய்து மற்ற நாட்டு மன்னர்களுக்கு மணமுடித்து..
‘நானும் ராஜகுலம் தான்’ – என்று அரசியலில் அலைந்து திரிந்தனர்.
அரசியல் களத்தில் – ஆதாயத்திற்காக ஏதாவது கூட்டணியில் சேர்ந்து போரிடும் கூலிப்படையாகவும் இருந்தனர்.
அப்படிப்பட்ட நாட்களில் ..
அந்த சோழக் குறுநில மன்னர்கள் தங்களுக்கு என்றுதான் விடிவுக்காலம் வருமோ எனக் கனாக் கண்டிருந்தார்கள்.
கல்கியும் அந்த ஆதங்கம் தாங்காமல் தானோ ‘பார்த்திபன் கனவு’ என்று சோழக்குறுநில மன்னன் கதையை எழுதினார் போலும்.

மு.மேத்தா வின் ‘மகுட நிலா’வின் நாயகன் நமது விஜயாலன்.
அவரது காந்தக் கவிதை ஒரு கந்தகக் கவிதையாக வெடிக்கிறது :
“எத்தகைய கொடிய இருட்டையும் கிழக்கின் உறைவாள் கிழிக்காமல் விட்டதில்லை. இருண்ட கண்டமாய் இருந்த இனத்துக்கு வெகுதொலைவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தின் பெயர்தான் – விஜயாலயன். வானச் சுவடியில் வைகறைக் கவிதையை யாரோ வரைந்து கொண்டிருந்தார்கள்” -இது சோழர் எழுச்சியைப் பற்றிய மேத்தாவின் வரிகள்:
அந்த நாவலின் முதல் வரி: “வெளிச்சம் வேகவேகமாக வந்து கொண்டிருந்தது”.

மேலும் மேத்தா எழுதுகிறார்:
“வரலாற்றின் நாயகர்கள் என்று வழிபடப்படுகிறவர்களெல்லாம் ஒரு காலத்தில் கலகக்காரர்கள் என்று கருதப்பட்டவர்களே!”.
விஜயாலயன் அப்படிப்பட்ட புரட்சித் தலைவன்!

சரி.. நாமும் கல்கியின் உந்துதல் நிமித்தம் – சற்றே கதை புனைவோம்.

காந்த மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றான். சோழ மன்னர்கள் தங்களைப் பரகேசரி, இராஜகேசரி, என மாறி மாறி அழைக்கின்றனர். தந்தை பரகேசரி என்றால் மகன் இராசகேசரி. முதல் பரகேசரி விஜயாலயன்! “தஞ்சை கொண்ட பரகேசரி”!

அவன் சிறந்த சிவபக்தன்.

(விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில்)
விஜயாலயன் ‘விஜயாலய சோழிஸ்வரம்’ என்ற கோயிலைக் கட்டினான்.
இது நார்த்தமலையில் (இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில்) அமைந்துள்ளது.
அவன்…
கனவுகளைச் சுமந்து வளர்ந்தான்.
கனவுகள் அவனைச் சோம்பேறியாக்கவில்லை.
கனவுகள் அவன் திறத்திற்கு உரமாயிற்று.
வீரம், விவேகம் அவனுக்கு ஏராளமாக இருந்தது.
துர்க்கை அம்மனின் அருளும் இருந்தது.
வாள் சுழற்றும் வித்தையில் சூரனாக இருந்தான்.
இருகரங்களிலும் வாள் பிடித்துச் சுழன்று சண்டையிடுவது அவன் தனிச் சிறப்பு.

போரென்று ஒன்று வந்தால் – அதில் விஜயாலயன் நிச்சயம் பங்கு பெற்றிருப்பான்.
பெரும்பாலும் பல்லவருக்கு உதவியாக. மெர்சனரீஸ் என்பது போல – கூலிப்படை என்றும் சொல்வர். கூட்டணிப் போரில் அவன் தவறாது அங்கம் வகிப்பான்.
அந்த அங்கத்திற்குப் பெருமை சேர்த்தான்.
அங்கம் வகிப்பதுடன் தன் அங்கத்தில் புண்படுவது பொருட்படுத்தாது போர் புரிவான்.
புண்படுவது – அவன் வீரத்தைப் பண்படுத்தியது.
பல போர்களில் ஈடுபட்டு தன்னுடம்பில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றிருந்தான்!
இதைப் பல கவிதைகள் கல்வெட்டில் பதித்தன.

அரசனான இரண்டு வருடங்களில் – பழையாறை தாண்டி இந்த சோழநாடு வளர வேண்டுமென்றால் என்ன செய்வது என்று யோசித்தான்.
அந்நாளில் – சோழன் நிலையே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் நிலையும்.
இருவரும் பேரரசர்கள் நிழலில் வாழும் மன்னர்கள்.
முத்தரையர் – தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர். இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.  தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர். அந்நாளில் – முத்தரையர் தம் ஆதரவை வரகுண பாண்டியனுக்கு அளித்திருந்தனர்.

விஜயாலயன் ஒரு முடிவு செய்தான்:
‘தஞ்சை எனக்குத் தஞ்சமாக வேண்டும்’.
“சோழர் குலத்தின் தீபம் போன்ற அவர், தன் சொந்த மனைவியின் கரங்களைப் பற்றுவது போல், தஞ்சையைக் கைப்பற்றினார்” – என்று கல்வெட்டுகள் ஒரு கவிதையைப் படைக்கிறது. தஞ்சையைக் கைப்பற்றிய பிறகு, நிசும்பசூதன் என்னும் அசுரனை வதம் செய்த, துர்க்கையாம் நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தான்.

விஜயாலயனது வெற்றி, முத்தரையரின் நண்பர் பாண்டியன் வரகுணவர்மனுக்கு கோபத்தை விளைவித்தது.
பலமிக்க பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர்.
வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தில் நடந்த போரில் விஜயாலயன் தோல்வியுற்றான். தஞ்சையும் பறிபோனது. தோல்விகளைக் கண்டு விஜயாலயன் துவளவில்லை. சோழர்களுக்கு வெற்றி தோல்விகள் ஒரு ரோலர் கோஸ்டர் போல மேலும் கீழும் மாறி மாறி வந்தன. காலமும் விஜயாலயனுக்கு மூப்பை அளித்தது. கால்களைச் செயல்படுத்த இயலாது போயிற்று.
ஆனால் அவன் உறையில் இன்னொரு ஆயுதம் இருந்தது.

அது அவன் மகன் ஆதித்தன்.

ஆதித்தன் தன் தந்தையின் வீரத்தின் நிழலில் வளர்ந்தவன் – பெயருக்கேற்ப சூரியனைப் போலப் பிரகாசித்த வீரனாக வளர்ந்திருந்தான். வீரம் – அறிவு இவற்றுடன் ராஜதந்திரமும் சேர்ந்த கலவை அவன்.
இனி வருவது தமிழகத்தைப் புரட்டிப்போட்ட திருப்புறம்பயப் போர்.
பல்லவன் அபராஜிதன் – சோழன் மற்றும் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி என்று நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

கணக்குப்பார்த்தால் .. பல்லவ படை- பாண்டியப் படை இரண்டும் பெரும் படைகள். கங்க – சோழ படைகள் இரண்டும் சிறு படைகள்.
பெரும் போர்.

பல்லவ – பாண்டிய படைகள் இரண்டும் எண்ணற்ற வீரர்களை இழந்தது. கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி போரில் இறந்தான்.
முதன் முதலாக தன் மகன் ஆதித்தன் சோழ படையின் மாதண்ட நாயக்கனாக போர்க்களத்தில் இறங்கி வெற்றிக்கனியைப் பறிப்பதைப் பார்த்து மகிழலாம் என்று பல்லக்கில் ஏறி திருப்பயம்புரம் வந்து சேர்ந்த விஜயாலய சோழனுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

கடல் போல் திரண்ட இரண்டு படைகளும் ஒன்றையொன்று வெல்லப் போராடி கொண்டிருந்தன. புழுதி பறந்த போர்க்களத்தின் முடிவு இழுபறியாகிக் கொண்டிருந்தது. தன் மகன் ஆதித்தனின் முதல் போர் வெற்றியைப் பார்த்து மகிழ வந்த விஜயாலயன்- போரின் போக்கினால் சிந்தனை வசப்பட்டான். பல்லவ சோழ படைகள் மெல்ல மெல்ல தங்கள் வலிமையை இழந்து – போரிடும் மூர்க்கத்தை மறந்து – தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது.

பல்லவ மன்னன் அபராஜித வர்மன் சரணடையும் முடிவை எடுக்கிறான். அதைக் கேட்டதும் குமுறிக் கொந்தளித்து கோபத்தின் உச்சிக்குச் சென்றான் விஜயாலயன். போர் உடை தரித்து இரண்டு கைகளிலும் வாள் பிடித்து இரண்டு வீரர்களின் தோளில் ஏறியபடி களம் புகுந்தான். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழன், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி புகுந்து சென்ற விடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தான். எட்டுத்திக்கும் எதிரிகளின் தலையைப் பறக்க விட்டான். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். நடக்க இயலாதவனின் வீரம் சோழ படைகளிடம் புது உத்வேகத்தைப் பாய்ச்சியது. வெகுண்டெழுந்த சோழப்படை எதிரிகளைத் துவம்சம் செய்து நிர்மூலமாக்கியது. தனக்கு ஏற்பட்ட பலத்த காயங்களையும் பொருட்படுத்தாது விஜயாலயன் போரிட்டிருந்தான். காலத்தின் விளிம்புக்கு வந்தான் அந்த மாவீரன்.

ஆதித்தன் கலங்கி நின்றான் : “தந்தையே! உங்கள் வீரம் என்றும் அழியாது. உங்கள் பெயரைக் கவிதைகள் பாடும். கல்வெட்டுகள் அதைச் சொல்லிச் சிவக்கும். சரித்திரம் பேசும். ஆனாலும் என் கண்கள் உங்கள் தேகம் படும் பாட்டைத் தாங்கவில்லை” -என்றான்.

விஜயாலயன்:

“மகனே .. நமது கனவு வசப்படும் நாள் நெருங்கியது. புலிக்கொடி பாரெங்கும் பறக்கும் நாள் விரைவில் வரும். கண்ணீரோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. கடமைகள் காத்திருக்கின்றன. பாதைகளும் காத்திருக்கின்றன – உன் பாதங்களுக்காக!” – விஜயாலயனின் அந்த உத்வேகமான சொற்களில் முதலாம் ஆதித்தன் ஆறுதல் அடைகின்றான்.

போரில் வீர மரணமடைந்த விஜயாலய சோழன் என்ற கிழவனுக்குத் தெரியாது! தான் மிகப்பெரிய ஒரு சோழ சாம்ராஜ்யத்திற்கு அடி கோலியிருக்கிறோம் என்று.! பாண்டியர்கள் பல நூற்றாண்டு தலையெடுக்காமல் செய்தது அந்தத் தோல்வி. விஜயாலயனின் பரம்பரையில் வந்தவர்கள்தான் ராஜராஜ சோழனும், தென் கிழக்கு ஆசியாவை வென்ற ராஜேந்திர சோழனும்!

கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தான். போரில் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஆதித்த சோழனுக்குக் கிட்டியது. போரின் முடிவில் சோழர்களின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தன.

அந்தக் கதைகளைச் சுகமாக அனுபவிக்கலாம் விரைவில்..

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

பல்லவப்பாண்டியர்

Let's Go To Pandyas Last Temple Near Virudhunagar - Tamil Nativeplanet

இது என்னடா இது – கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல?
பல்லவப்பாண்டியர்?

பல்லவர் கதை சொல்லும்போது நாம் பாண்டியர்களைப் பற்றி சிறிது மட்டும் சொன்னோம். பல பாண்டியர்களைப் பற்றி சுருக்கமாகக் கூடச் சொல்லவில்லை. அந்தக் குறை எதற்கு? மேலும், சரித்திரப்பாடத்தில் ‘பல்லவர் ஆட்சிக்காலத்தில் ஆட்சி செய்த பாண்டியர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக” என்று கேள்வி வந்தால் நீங்கள் ‘ஞே’ என்று முழிக்கலாகுமா?. உங்களுக்காகவே அந்த பல்லவப்பாண்டியர் பற்றி இந்த இதழில் சுருக்கமாகச் சொல்வோம்.
இவர்களை இடைக்காலப் பாண்டியர் என்றும் சொல்லலாம்.

  • கடுங்கோன் கி.பி. 575-600
  • அவனி சூளாமணி கி.பி. 600-625
  • செழியன் சேந்தன் கி.பி. 625-640
  • அரிகேசரி கி.பி. 640-670
  • ரணதீரன் கி.பி. 670-710
  • பராங்குசன் கி.பி. 710-765
  • பராந்தகன் கி.பி. 765-790
  • இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
  • வரகுணன் கி.பி. 792-835
  • சீவல்லபன் கி.பி. 835-862
  • வரகுண வர்மன் கி.பி. 862-880
  • பராந்தகப் பாண்டியன்கி.பி. 880-900

பாண்டிய நாட்டின் சிற்றரசனாகப் பதவியேற்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்தான். கி.பி. 575 ஆம் ஆண்டில் மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். சற்றேறக்குறைய 400 ஆண்டுகளாய் தமிழகத்தை ஆண்டுவந்த களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடுங்கோன் ஆட்சி கி.பி 600 வரை நீடித்ததது.

பாண்டிய மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பாண்டிய நாட்டின் மன்னனானான். அவன் கி.பி. 600ம் ஆண்டு முதல் கி.பி.625ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தான். இவன் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் சிம்ம விஷ்ணு பல்லவ நாட்டை ஆட்சி புரிந்தான். பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவிற்கும் பாண்டிய மன்னன் மாறவர்மன் அவனி சூளாமணிக்கும் போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணு வெற்றி பெற்றான்.

பாண்டிய மன்னனான செழியன் சேந்தன் கி.பி. 625ம் ஆண்டு முதல் கி.பி. 640ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகன். சடையவர்மன் (ஜடாவர்மன்) என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றிருந்தான். இந்த படத்தைப் பெற்ற முதல் பாண்டிய மன்னன் இவன். சடையன் என்பது சிவபெருமானின் மற்றொரு பெயராகும். சேர மன்னனைப் போரில் வென்றதால் வானவன் என்ற பட்டப்பெயரும் இவன் பெற்றான். இவன் பெயரால் அமையப்பெற்ற ஊர் – இன்றைய நாளில் விளங்கும் ‘சேந்தமங்கலம்’ நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இவன் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த சீனநாட்டுப் பயணி யுவான் சுவாங் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தார். ‘பாண்டிய மன்னன் செழியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது’ என்று தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அரிகேசரி பராங்குசன் தன் தந்தை செழியன் சேந்தனுக்குப் பின் பாண்டிய மன்னனானான். அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் பாண்டிய நாட்டை ஆண்டான். அரிகேசரிக்கு திருவிளையாடல் புராணத்தில் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன் என்ற பெயர்கள் உண்டு. இந்த கூன் பாண்டியனைப் பற்றி முன்பே நாம் விலாவாரியாக எழுதியிருக்கிறோம். ஆதலால் மறுபடியும் எழுதினால் நீங்கள் கடுங்கோபம் கொள்வீர்கள் என்று அறிவதனால் – அடுத்த பாண்டியனுக்குப் போவோம்.

அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். கோச்சடையான் என்றவுடன் ‘தலைவா’ என்று யாரும் எம்பிக் குதிக்கவேண்டாம்! இவன் தான் ஒரிஜினல் கோச்சடையான்! ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். ரணதீரன் – சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் ஆகிய மன்னர்களைப் போரில் வென்றான். ரணதீரன் பெற்ற (சரி.. வைத்துக்கொண்ட) பட்டங்கள்: கோச்சடையான், செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் என்று பல.

பராங்குசன் கோச்சடையான் ரணதீரனின் மகன். இவன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மேலும் முதலாம் இராசசிம்மன், தேர்மாறன், மாறவர்மன் எனவும் அழைக்கப்பட்டான். பராங்குசன் ஆட்சிக்காலத்தில் பல்லவ நாட்டை இரண்டாம் நந்திவர்மன் ஆண்டுவந்தான். பாண்டிய நாட்டின் வட எல்லையில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராங்குசன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் நடை பெற்ற போரில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பாண்டிய மன்னன் பராங்குசனைத் தோற்கடித்தான் என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். பாண்டிய மன்னன் பராங்குசன் கங்க நாட்டின் மன்னனான சிறீபுருசனை போரில் வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். பாண்டியன் பராங்குசன் வடக்கில் உள்ள மாளவ நாட்டை போரில் வென்றான். வெற்றியின் பரிசாக மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான். (மன்னர்கள் சண்டைக்குச் செல்வது இதற்குத்தானோ? – சரி நமக்கு எதற்கு வம்பு!)

பாண்டிய மன்னன் பராங்குசன் மற்றும் கங்க அரசன் மகள் பூதசுந்தரி ஆகிய இருவருக்கும் பிறந்தவன் பராந்தகன்.
(இதைப் பாருங்கள்.. பராந்தகன் – பராங்குசன் இருவரும் வேறு வேறு. அவர்கள் மாறி மாறி வருவார்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்!) பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மன்னன் பராந்தகன் நெடுஞ்சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர் பெற்றவன். கி.பி. 767 ஆம் ஆண்டு காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில். பாண்டியன் பராந்தகன் பல்லவ நந்திவர்மனைத் தோற்கடித்தான். பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் மன்னன் பராந்தகன். ஆண்டாள் திருப்பாவை காலம் இதுவாகவே இருக்கக் கூடும்.

பாண்டிய மன்னன் பராந்தகனின் மகன் இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790ம் ஆண்டு முதல் 792ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் ஆட்சியில் போர் எதுவும் நிகழவில்லை. போர் செய்யவில்லையென்றால் அந்த மன்னனைப் பற்றி நமக்குப் பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு?

இரண்டாம் இராசசிம்மனைத் தொடர்ந்து அவன் மகன் வரகுணன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னன் முதலாம் வரகுணன் கி.பி. 792ம் ஆண்டு முதல் கி.பி. 835ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மாறன் சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர்களாலும் இவன் அழைக்கப்பட்டான். சோழ நாடு தவிரத் தொண்டை நாட்டு மன்னன் தந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை நாட்டையும் பாண்டிய நாட்டின் அதிகாரத்தின் கீழ் வரகுணபாண்டியன் கொண்டுவந்தான்.

வரகுணபாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். சீவல்லபன் பல்லவ, மற்றும் சிங்கள நாடுகளுடன் போர்புரிந்து வெற்றி/தோல்வி அடைந்தது அனைத்தையும் முன்பு விரிவாகக் கூறியிருப்பதால் இப்பொழுது அடக்கி வாசித்து அடுத்த பாண்டியனைப் பார்க்கப் போவோம்.

பாண்டிய மன்னன் சீவல்லபனின் முதல் மகனான வரகுண வர்மன் கி. பி. 862ம் ஆண்டு முதல் கி.பி.880ம் வரை ஆண்டான். வரகுண வர்மன் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு இருந்தான். வரலாற்று சிறப்புமிக்க திருப்புறம்பியப் போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் படைகள் பெரும் தோல்வித் தழுவின. இந்தப்போரில் அபாராஜித பல்லவனும் ஆதித்த சோழனும் வென்றனர். இதைத்தான் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமே!

பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புறம்பியம் போரில் ஆதித்த சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டில் தொடர்ந்து உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்படலாயின. இதைத் தொடர்ந்து கி.பி. 880ம் ஆண்டு பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் ஆட்சியை அவன் தம்பி பராந்தகப் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்ற காலம் போய் ‘தம்பி உடையான் தம்பிக்கு அஞ்சுவான்‘ – என்றாயிற்று. இரண்டாம் வரகுண பாண்டியன் துறவறம் பூண்டான். பராந்தகப் பாண்டியன் சேர மன்னனின் மகள் வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலி மாவட்டத்தில் சேரமாதேவி என்ற நகர் இவள் பேரில் அமைக்கப்பட்டது.

மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் – பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன். கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான்.

களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறைப் போர் புரிந்தனர் என்பது வரலாறு மற்றும் சோழர்கள் ஆதிக்கம் செய்யும் காலம் வந்தது. ஒரு உறையில் பல கத்திகள் இருப்பது சாத்தியமில்லையல்லவா! சோழரின் சூரியன் பாண்டிய நிலவை அமாவாசையாக்கியது! (சோழர்கள் சூரிய குலம் – பாண்டியர்கள் சந்திர குலம் – என்பதை என்னமாக எழுதி விட்டோம்!)

பின்னொரு காலம் பாண்டிய நிலவு முழு நிலவாகும்.
அது வரை சோழரின் காட்டில் மழை!
தமிழகத்தின் ஒரு பொற்காலம் வருகிறது.. பராக்!.
அதைக் காண்போம் விரைவில்

                                                                    (மூன்றாவது பாகம் முற்றும்) 

அடுத்து வருவது பிற்காலச் சோழர்களின் வீர வரலாறு 

Iyyanar wolverine information } அய்யனார் வால்வரின் தகவல் களஞ்சியம் : அருள்மொழிவர்மன் என்னும் இராஜராஜசோழனின் சோழபுராணம்

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

பல்லவர் முடிவு

அன்று – பல்லவன் பல்லவி பாடினான் – பல்லவ வம்சம் பிறந்தது.
பின்பு – பல்லவன் சரணம் பாடினான் – பல்லவ வம்சம் சரித்திரத்தில் நிலைத்தது.
முடிவில்- பல்லவன் மங்களம் பாடினான் – பல்லவ வம்சம் மறைந்தது.

 

 

ஆதி ஒன்று இருக்குமானால் அந்தம் அன்று இருக்கத்தானே வேண்டும்?
மூன்றாம் நூற்றாண்டில் சோழரை வென்று ஆட்சியை அமைத்த பல்லவர்-
ஒன்பதாம் நூற்றாண்டில் அதே சோழரால் அழிந்த கதை இது.

அந்த முடிவுக்கு முந்திய கிளைமாக்ஸ் காட்சிகளை இன்று காணலாம்.
அந்த நாட்களில் – தமிழகத்தின் ஒரு ஐம்பது வருடச் சரித்திரம் பலவாரியாகக் குழம்பியிருந்தது. சரித்திர ஆய்வாளர்கள் டி வி மகாலிங்கம், கே ஆர் ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் இந்தக் காலச் சரித்திரத்தை அலசிப் பலவிதமான மாறுபட்ட முடிவுகளைக் கூறியுள்ளார்கள். அவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருவது இந்தக் கதை:

மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவி ‘சங்கா’. இவள் இராட்டிரகூட மன்னன் அமோகவர்ஷனின் மகள். இருவருக்கும் பிறந்த மகன் ‘நிருபதுங்கவர்மன்’.

மூன்றாம் நந்திவர்மனின் இரண்டாம் மனைவி ‘கந்தன் மாறம்பாவை’. இவள் பழுவேட்டரையரின் புதல்வி. இவர்களுக்குப் பிறந்த மகன் ‘கம்பவர்மன்’.

நந்திவர்மன் தனது ஆட்சிக்காலத்திலேயே நிருபதுங்கவர்மனை யுவராஜாவாக நியமித்து அவனைக் காஞ்சியின் மன்னனாகவே வைத்திருந்தான். கம்பவர்மனை வடபுலத்திற்கு ஆளுனராக நியமித்திருந்தான். கம்பவர்மன் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் இளவரசி விஜயாவை மணம் செய்திருந்தான். இவர்களின் மகன் அபராஜிதவர்ம பல்லவன்.

மூன்று பல்லவர்களை அறிமுகம் செய்து வைக்கிறோம்.

  • .நிருபதுங்கவர்மன்
  • கம்பவர்மன்
  • அபராஜிதவர்மன்

இப்பொழுது சரித்திரச் சதுரங்கம் தொடங்குகிறது.

பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மூன்றாம் நந்திவர்மனுடன் புரிந்த போர்கள் குறித்து நாம் முன்பே அறிவோம். பாண்டியன் ஸ்ரீவல்லபன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று இலங்கை மன்னன் சேனாவை வென்று வந்தான். பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் முயற்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு அவனைத் தூண்டினான். ஆக.. சேனாவின் மருமகன் -இரண்டாம் சேனா – பாண்டியனைப் பழிவாங்குவதற்குப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். ஸ்ரீவல்லபன் தோல்வியுற்று போர்க்களத்திலிருந்து படுகாயங்களுடன் தப்பி ஓடினான். விரைவில் மரணமடைந்தான். இலங்கை மன்னன் மாயப் பாண்டியனை மதுரையில் ஆளும்படி வைத்துத் திரும்பினான். ஸ்ரீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுணன் – பல்லவன் நிருபதுங்கவர்மனது துணையை நாடினான். தந்தைகள் எதிரியாகப் போரிட்டிருந்தாலும் – தன் தேவைக்காகப் பல்லவனின் நட்பை நாடினான். பல்லவனுடைய கடற்படையைக் கோரினான். இருவரும் சேர்ந்து மாயப் பாண்டியனைத் துரத்தி விட்டு – இலங்கைக்கும் சென்று வென்றனர். கி பி 862 இல் இரண்டாம் வரகுணன் பாண்டிய மன்னனாக முடி சூடினான். இரண்டாம் வரகுணனும் நிருபதுங்கவர்மனும் நண்பர்களானர்.

நீங்கள் நினைக்கலாம்!
தென்னிந்தியா தான் அமைதியாகி விட்டதே!
மன்னர்கள் நண்பர்களாயினரே!
இனி என்ன பிரச்சினை?
சுபம் என்று போட்டு படத்தை முடிக்க வேண்டியது தானே!

ஆனால் தமிழகம் பெரும் புரட்சிக்குத் தயாரானது. தமிழக வானில் பழைய மேகங்கள் சில அலைந்து கொண்டிருந்தன. அவை ஒரு புதிய புயலாக மெல்ல வலுவடைந்து வந்தது. அந்தக் கதையை விரிவாகப் பிறகு சொல்வோம். இங்குச் சற்றே கோடி காட்டுவோம்.
விஜயாலய சோழன் பல்லவ – பாண்டிய அரசர்களுக்கு அடங்கிய சிற்றரசன். அவன் மகன் ஆதித்தன் மாபெரும் வீரனாக வளர்ந்தான்.

கி பி 877: சற்று பல்லவ அரசியல் பேசுவோம்.

நிருபதுங்கவர்மன்-வரகுணன் கூட்டணி – வளர்ந்து வரும் சோழர்களைத் தோற்கடித்தது.

கி பி: 884: கம்பவர்மன் நிருபதுங்கவர்மனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான்.
இருவரில் யார் காஞ்சியில் எப்பொழுது ஆட்சி செய்தனர் என்பது சர்ச்சைக்குள்ளது. ஆனால் கம்பவர்மனது மறைவுக்குப் பிறகு அவன் மகன் இளவரசன் அபராஜிதன் பல்லவ அரசனானான். நிருபதுங்கவர்மனும் அபராஜிதனும் இருவரும் பல்லவ நாட்டை போட்டி போட்டுக் கொண்டு ஆண்டனர். அது எப்படி என்பது சரித்திரத்தில் பதியப்படவில்லை. இருவருக்கும் பகை முற்றியது.

இந்நிலையில் – பாண்டியன் – தமிழகத்தில் விஜயாயலயனின் ஆதிக்கம் வலுத்துவருவதை ஒடுக்கச் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தில் சோழர்களைத் துரத்தியடித்தான். விஜயாயலயன் அபராஜிதனிடம் உதவி நாடினான்.

கூட்டணிகள் அமைக்கப்பட்டன.
பகை மேகங்கள் கருக்கத் தொடங்கின.
இடி-மின்னல் வர ஆயத்தமானது

கி பி 879:
முதல் கூட்டணி:
நிருபதுங்கவர்மன் + பாண்டியன் வரகுணன்.

இரண்டாம் கூட்டணி:
அபராஜிதன் ஒரு மெகா கூட்டணி அமைத்தான்:
அதில் விஜயாலய சோழன் சேர்ந்தான். அபராஜிதனின் தாய் கங்க நாட்டு இளவரசி . அதனால் கங்க நாட்டு அரசன் முதலாம் பிரீதிவிபதி அவன் கூட்டணியில் சேர்ந்தான்.

 

திருப்புறம்பயம் போர்:

No photo description available.
இந்த பேரைக் கேட்டாலே தமிழக சரித்திரம் சற்று அதிரும்.
தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதிய போர்க்களம். திருப்புறம்பியம் என்ற ஊர். கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது. அங்கு அந்தப் பெரும் போர் நடந்தது. முதுமையின் காரணத்தால் விஜயாலய சோழனுக்குப் பதிலாக இளவரசன் முதலாம் ஆதித்த சோழனின் தலைமையில் சோழ படைகள் போருக்கு வந்தன. இந்தப் போரில் நிருபதுங்கவர்மனின் பங்கு என்ன என்பது சரியாகப் பதியப்படவில்லை. (அபராஜிதன் நிருபதுங்கவர்மனின் மகன் என்றும் சில ஆராய்ச்சியாளர் கருத்து – ஒரே குழப்பம்!!)

இருதரப்பிலும் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் மாண்டனர்.
அரசர்களது பேராசையால் தான் எத்தனை மனிதர்கள் காலங்காலமாக அழிந்துள்ளனர்!
இந்தப் போரில் மடிந்தது பெரும்பாலும் தமிழரே!

Image result for திருப்புறம்பியம் போர்

கங்க மன்னன் பிருதிவிபதி பாண்டியர் படைகளைச் சூறையாடினான். இதைக்கண்ட பாண்டியன் சீற்றம்கொண்டு அவன்மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால் மாள்வதற்குள் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்திற்கே வெற்றியளித்துவிட்டான். கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டி, ‘தன் உயிர் விட்டும் அபராஜிதனை (வெல்ல இயலாதவன் என்பது அப்பெயரின் பொருள்) அபராஜிதனாகவே ஆக்கிவிட்டான் என்று குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவிபதியை அடக்கம்செய்து நிறுவப்பட்ட பள்ளிப்படைக் கோயில் உள்ளது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கிப் பின்வாங்கினர்.

 

இந்தக் கூட்டணிப் போர் முடிவில் ஆதாயம் யாருக்கு?
பாண்டியர் தோல்வியுற்றுத் தளர்ந்தனர்.
வெற்றி பெற்ற பல்லவரும் பல வீரர்களைப் பலி கொடுத்துத் தளர்ந்தனர். பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது
கங்க மன்னன் இறந்து கங்கர்களும் தளர்ந்தனர்.
சோழன் மட்டும் சிறிய படை மட்டுமே அனுப்பியிருந்தான்.
ஆகவே.. சோழனுக்கு மட்டும் நட்டம் குறைவு. போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜிதன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். ஆதித்தன் சோழநாடு முழுவதையும் மீட்டுக் கொண்டான். போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். “உதிரம் வடிந்த தோப்பு” என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது.

திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தைத் தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறைப் போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்தப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல், இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது.

ஒரு நண்பன் பகைவனாக எத்தனைக் காலம் பிடிக்கும்? சரித்திரம் காலம் நேரம் எதுவும் பார்ப்பதில்லை. வளர்ந்து வரும் சோழர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்வது அபராஜித பல்லவனுக்குப் பிடிக்கவில்லை. பல்லவன் ஆளும் காலம் வரை சோழர் ராஜ்யம் வளர வாய்ப்பில்லை என்பது ஆதித்தனின் எண்ணம். உங்கள் ஊகம் சரிதான்.
போர்!
திருப்புறம்பியப் போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான (?!!) அபராஜிதவர்மனின் மேல் போர் தொடுத்தான். கீழைச் சாளுக்கிய வெங்கி மன்னன் அவனுக்கு உதவினான். ஆதித்தன் – அபராஜிதன் ஏறியிருந்த உயர்ந்த யானை மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றான். பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

பழிக்குப் பழி:

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றி கி.பி. 890 வரை, அதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர். என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

பல்லவர்கள் இந்தியச் சரித்திரத்திலிருந்து மறைந்தனர். நாமும் அவர்களது நீண்ட ஆட்சிக்கு அஞ்சலி செய்து அவர்களுக்கு சரித்திரத்திலிருந்து விடை கொடுப்போம்.

சரித்திரம் நகர்கிறது.

 

 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

மூன்றாம் நந்திவர்மன் அல்லது

கழற்சிங்கனார்

(கி பி 847-869)

Nandivarman High Resolution Stock Photography and Images - Alamy

 

சென்ற நூற்றாண்டில் தமிழ்ப் புதினங்கள் வர ஆரம்பித்த காலம்.
ஒரு நாவலுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பது என்பது அன்று சாதாரணமாக இருந்தது.

‘சோமசுந்தரம் அல்லது தோலிருக்க சுளை முழுங்கி’ – என்ற என்ற வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை யாராவது படித்திருந்தால் ‘கையைத் தூக்கவும்! (சரி.. கை தூக்கியவர்களின் வயதை நான் துல்லியமாகக் கணித்துவிட்டேன்!).

அது போல் இன்றைய நமது கதை இன்று இரண்டு தலைப்புகளுடனும் வருகிறது.
தந்திவர்மனுக்குப் பிறகு மூன்றாம் நந்திவர்மன் அரசு கட்டிலில் ஏறினான்.

தந்தையின் இறுதிக்காலத்தில் காஞ்சியை மீட்ட நந்திவர்மன் – தந்தை அடைந்த தோல்விகளுக்குப் பரிகாரம் செய்யத் துணிந்தான்.

நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களுடனும், கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு சீவல்லபன் தலைமையிலான பாண்டிய மற்றும் சோழர் கூட்டுப் படையை திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் எதிர்கொண்டு தோற்கடித்தான். இதன் மூலம் ‘தெள்ளாறெறிந்த நந்திவர்மன்’ என்ற சிறப்புப் பெயரையும், பெரும் புகழையும் பெற்றான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு அப்போதைய பாண்டிய நாட்டு எல்லையான வைகையாறு வரை விரட்டிச் சென்றான். சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.

தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் (குடமூக்கு) தோற்கடிக்கவும் செய்தான். சரித்திரத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜமப்பா!

தெள்ளாறு தமிழக சரித்திரத்தை இரண்டு முறை புரட்டிப் போட்டுள்ளது.
பின்னாளில் சோழர்களது இறுதிகாலத்தை உறுதிப்படுத்தியதும் இந்தப் போர்க்களமே! இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களுக்குப் பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேளை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்ககக்கூடும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் ! தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் ஒரு வேளை (பின்னாளில்) காடவர்களுடன் நடந்த இரண்டாவது போரில் சோழன் வென்றிருந்தால்? அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை மேண்டும் சில நூற்றாண்டுகள் ஆண்டிருக்கக்கூடும்! 
யாரோ அறிவர்!

தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்ற நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது ‘ நந்திக் கலம்பகம்’.
இதுவே முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.

இது நந்திவர்மனது போர் , வெற்றி, வீரம், கொடை, கல்வி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுகிறது.

நந்திக்கலம்பகத்தைப் பற்றிய கதை பற்றி சற்று கதைப்போம்.:

நந்திவர்மனின் தந்தை தந்திவர்மனுக்குப் பட்டத்தரசிகள் நால்வர். நால்வர்க்கும் நான்கு ஆண் மக்கள். தந்திவர்மன் இறந்தபின்பு நந்திவர்மன் , தனது பேராற்றலால் பல்லவப் பேரரசைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். அதனை ஏற்றுக் கொள்ளாத உடன் பிறப்புகள், நந்திவர்மனை எவ்வழிகளிலாவது கவிழ்க்க வேண்டும்! அல்லது கொன்றுவிட வேண்டும்! என்று , சூழ்ச்சி செய்தனர். ஒன்றும் பலிக்க வில்லை! அந்த சூழ்ச்சியின் விளைவால் தோன்றியதே நந்திக் கலம்பகம் என்பது கதையின் களம்.

தனக்காகப் இயற்றப்பட்ட பாடலைக் கேட்பதற்காகவே, உயிர் துறந்த மன்னன்….! - Seithipunal

அந்தக் கதையின் படி… நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது.. அவனது மரணத்தைப் பற்றி நந்திக் கலம்பகம் எழுதுவது நமது மனத்தை முள்ளால் நெருடுகிறது.

வானுறு மதியை அடைந்தது உன் வதனம்
மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்தது உன் வீரம்
கற்பகம் அடைந்தது உன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்தது உன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயாபரனே

- கழற்சிங்கனார்

நந்திவர்மனுக்கு இன்னொரு பெயர் உண்டு- கழற்சிங்கனார். 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

அந்தக் கதை பெரியபுராணத்தில் வருகிறது.

இப்படி நடந்ததா? இல்லை இது என்ன கற்பனையா? என்று வாசகர்கள் கொந்தளிக்கக் கூடும். கதை சுவையாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். மற்றது சிவன் மயம்!

சரி நாம் கதைக்கலாம்..

கழற்சிங்கனார் (நமது மூன்றாம் நந்திவர்மன் தான்) மாபெரும் சிவபக்தர்.
தன் மகாராணியுடன் திருவாரூர் தியாகேசப் பெருமானைத் தரிசிக்க சென்றார்.
சிவனாரது சிலை முன் – தானும் ஒரு சிலையாக இருந்து தவத்தில் அமர்ந்தார்.
அரசியார் கோவிலைச் சுற்றி வலம் வர விழைந்தார்.

எழில் மிகுந்த மண்டபங்கள் அவள் மனதைக் கொள்ளையடித்தன.
அந்தப் பூங்காவிலிருந்த மலர்கள் சுகந்தத்தைக் கிளப்பி விட்டிருந்ததது.
அந்த மலர்கள் சிவனாருக்கு மட்டுமே அளிக்கத்தக்க மலர்கள்.
யாரும் அதைப் பறிக்கக் கூடாது.

அரசியாருக்கு அந்த மலர்மணம் மனதில் ஒரு இன்பப்புயலை ஏற்படுத்தியது.
ஒரு அழகிய மலரைப் பறித்து.. மோந்து பார்த்தாள்!
‘என்னே இந்த தெய்வீக மலர்!!’ என்று வியந்தாள்.

அரசியின் செயலை கூடியிருந்த தொண்டரில் ஒருவரான செருத்துணை நாயனார் கண்டார். ‘இறைவனுக்கு சொந்தமான மலரைப் பறித்து மோந்து விட்டாளே’ என்று சினங்கொண்டார்.

அரசியென்றும் பார்க்கவில்லை.
குறுவாளை எடுத்து ‘மலரை மோந்த’ மலர் மூக்கை சீவி விட்டார்.
குருதி கொப்பளிக்க தேவி மயங்கி விழுந்தாள்.

ஆலயத்தில் தவமாற்றிக் கொண்டிருந்த மன்னருக்கு செய்தி சென்றடைந்தது.
மன்னன் பதைபதைப்புடன் அரசியிடம் விரைந்தான்.
கண்ட காட்சியில் அவன் உறைந்து போனான்.
“அஞ்சாமல் இந்தக் கொடிய செயலைச் செய்தது யாரோ?” – மன்னன் கண்ணில் தீப்பொறி பறந்தது.

“அந்த யாரோ.. நான் தான்“ – என்று அமைதியாகக் கூறினார் நாயனார்.
சைவத்திருக்கோலத்துடன் இருந்த சிவனடியாரைப் பார்த்த மன்னன்:
“என்ன காரணத்துக்காக இந்த காரியம் செய்யத் துணிந்தீர்” – என்றான்.
நாயனார் : “இறைவனுக்குச் சாத்துவதற்கான மலரை மாதேவி மோந்து விட்டார்”

“என்ன?” – ஒரு நொடியில் .. மன்னன் கோபத்தின் வசமானான்.
உடைவாளை உருவிக்கொண்டான்.
தொண்டர்கள் அனைவரும் நடுங்கினர்.
நாயனார் உறைந்து போய் “சிவனே” என்று ஓலமிட்டார்.

மன்னன்: “நாயனாரே! குற்றத்தை சரியாக ஆராயாமல் முறைப்படி நடக்காமல் தண்டனை கொடுத்தது உம் தவறு.” என்றான்.
நாயனார் ஒன்றும் பேசவில்லை.

அரசன்: “எம்பெருமான் மலரைப் பறித்த கையல்லவா முதல் குற்றம் செய்தது. அதற்கல்லவா முதலில் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறி
சொன்னது மட்டும் இல்லாது அரசியின் மலர்க்கரத்தை வெட்டினான்.

மனைவியை தண்டித்த கழற்சிங்க நாயனார் || kalarsinga nayanar life history

( பாகுபலி இதன் காப்பியா? ) 

நாயனார் – மன்னரின் உயர்ந்த பக்தியைக் கண்டு தலைவணங்கினார்.
இந்தக் காட்சி சுபமாக முடிந்தது!

அது எப்படி என்று தானே அப்பாவித்தனமாக கேட்கிறீர்கள்?
சிவபெருமான் உமையோடு – காளையில் தோன்றி – அரசியின்

துயர் தீர்த்து – அருள் புரிந்து மறைந்தார்.

சுபம்!!

மன்னனுடைய சிவத்தொண்டு காரணமாக, மன்னனை நாயன்மார் கூட்டத்தில் ஒருவனாக கழற்சிங்க நாயனாராகச் சமய குரவர்கள் ஏற்று வழிபட்டார்கள்.

வாசகர்களே! எரியும் விளக்கு அணையுமுன்பு சற்றுப் பிரகாசமாக எரிந்து அணையும் என்று சொல்வார்கள். பல்லவரது ஜோதியில் நந்திவர்மன் தான் அந்த பிரகாசமான விளக்கு.

பல்லவர்களது ராஜ்யம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை காஞ்சியில் கோலோச்சியது.
வெற்றி தோல்வி எல்லாமே மாறி மாறி வந்தது.
வெற்றி பெறும் போது .. கல்லிலே கலை வண்ணம் கண்டு . கோவிலை வடித்தனர்.
தோல்வி பெறும் போதும் துவளாமல் போராடினர்.
அந்த ஆட்சியும் ஒரு முடிவுக்கு வரப்போகிறது.
மூன்றாம் நந்திவர்மன் அதன் கடைசிப் பேரரசன்.

பல்லவர்களைப் பிரியும் நேரம் விரைவில் வருகிறது என்று நினைக்கும் போது நெஞ்சு சற்றே கனக்கிறது.

பல்லவர்களது இறுதிச்சுற்று பல திருப்பங்கள் கொண்டது.

அதை விரைவில் காணலாம்.

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

நந்திவர்மன்

 

பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கும் போது இது என்ன அதிகப் பிரசங்கம் – என்று சொல்வார்கள்.
அது போல.. பல்லவர்களைப் பற்றி சொல்லும் போது..
திடீரென்று இது என்ன இடையில் சேரமான் பெருமாள் கதை – ஆதி சங்கரர் கதை?
குமுறுகிறார்கள் நம் வாசகர்கள்!
ஒரே வார்த்தை : மன்னிப்பு
சரித்திரத்தை நகர்த்துவோம்.
சரி..பல்லவர்களை எங்கே விட்டோம்?

சிறிய முன்கதை:
நரசிம்மவர்மன்..
இரண்டாம் மகேந்திரன்..
பரமேஸ்வரவர்மன்..
ராஜசிம்மன்..
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்..
இவர்களுடன் சிம்மவிஷ்ணுவின் சந்ததி முடிகிறது.

சிம்மவிஷ்ணுவின் தம்பி. பெயர் பீமவர்மன் பரம்பரையில் வந்த நந்திவர்மன் அரசனாகிறான்.
அவன் அரசாட்சி – கிபி 710 முதல் 775 வரை.
அறுபத்தைந்து வருடங்கள் அரசாட்சி!
எந்தப் பல்லவ மன்னனும் இவ்வளவு வருடங்கள் ஆண்டதில்லை!
நந்திவர்மன் .. இரண்டாம் விக்கிரமாதித்யனிடம் தோற்றாலும்..
பல்லவ பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறான்.
ராஷ்டிரகூட மன்னன் தந்திவர்மனுடன் கூட்டு சேர்ந்து..
சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனைக் கொன்று..
சாளுக்கிய வம்சத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறான்.
இரண்டாம் பரமேஸ்வரனது மகன் சித்திரமாயன் பல்லவ அரியணைக்காகப் போராடுகிறான்.

முன் கதை முடிந்தது.

ஒரு மனிதன் தோல்விகள் பல கண்டாலும்..துவளாமல் கடுமையாக பாடுபட்டால் வெற்றிக்கு வழி உண்டு.
மக்களின் மாறாத ஆழ்ந்த அன்பும்..
மனோ திடமும்..
புத்திகூர்மையும்..
நீண்ட ஆயுளும்.. (65 வருடம் அரசனாக ஆண்டான்)
இறையருளும் ..
இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நந்திவர்மன் கதை ஒரு சிறந்த உதாரணம்.

பிரச்சினை என்ன என்று பாருங்கள்:

எட்டாம் நூற்றாண்டில்..மிகவும் கடினமான வேலை என்ன தெரியுமா?
அது.. தென்னிந்தியாவில் ஒரு நாட்டின் அரசனாக இருப்பது..
அரண்மனை உண்டு.. அறுசுவை உண்டு .. அந்தப்புரம் உண்டு.. என்று ஆனந்தமாக இருக்க முடியாது.
பகை மேகங்கள் ..நாற்புறமும் .. இடி முழக்கங்களுடன். அனு தினமும்..
சும்மா இருந்தாலும் விடாமல் வலுச்சண்டைக்கு வர பல மன்னர்கள் ..
வித விதமாகக் கூட்டணி அமைத்துக் கொல்ல வரும் எதிரிகள்..

கதைக்குச் செல்வோம்:
முதல் வில்லன் :கீர்த்திவர்மன்
(நந்திவர்மன் இன்று நமது ஹீரோ.. அதனால் கீர்த்திவர்மன் இன்று நமது வில்லன்).
அவன் கதை முடிந்தது.
சாளுக்கிய வம்சமும் முடிந்தது.
அடுத்தவன்.. சித்திரமாயன் – பரமேஸ்வரன் மகன் ..
அவன் ஒரு பெரும் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டான்.
விக்கிரமாதிய சாளுக்கியனுடன் கூட்டுசேர்ந்தான்..
சாளுக்கியன் நந்திவர்ம பல்லவனை வென்ற பிறகு..
சித்திரமாயன் சில மாதங்கள் பல்லவ அரியணையில் அமர்த்தப்பட்டு இருந்தான் .
நந்திவர்மன் அவனைப் படையெடுத்துத் துரத்தி விட்டான்.
சாளுக்கிய ராஜ்யம் முடிவுக்கு வந்த பின் சித்திரமாயன் பாண்டியனுடன் கூட்டு சேர்ந்தான்.

பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற்கு ஒரு காரணம்..
கொங்குநாட்டு உரிமை!
கொங்குநாடு ஒருகாலத்தில் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்தில் பல்லவரிடமும் கைமாறிவந்தன.
நந்திவர்மன் கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான்.
அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான்.
அடுத்த காரணம்..
சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணடைந்திருந்தது.
இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்

சம்பவத்திற்கு வருவோம்..
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம்.
அது அந்தக் காலத்தில் பல்லவரின் தென்புறக் கோட்டையாக இருந்தது.
அதற்கு நந்திபுரம் என்பது பெயர்.
அந்த நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்தான் – சிறிய காவல் படையுடன்.
பல்லவ பெருஞ்சேனை காஞ்சியில் இருந்தது.
வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதயசந்திரன் – பல்லவப் படைத்தலைவன்.
அந்த தளபதி உதயசந்திரனோ காஞ்சியிலே!

பல்லவன் சிறுபடையுடன் நந்திபுரத்தில் இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் பாண்டியன்.
அது அவனுக்கு இனித்தது.
பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் போருக்கு வந்தான்.
பாண்டியன் படையெடுப்பை நந்திவர்மன் எதிர்பார்க்கவில்லை.
பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்.
சிறிய பல்லவ சேனை சிதறியது.
நந்திவர்மன் நந்திபுரத்தில் நுழைந்தான்.
பாண்டியன் நந்திபுரத்தை முற்றுகை இட்டான்.
நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

சேதி கேட்ட சித்திரமாயன்..
தனது எதிரி நந்திவர்மன் தோற்று அழிவதைக் காண ஆசை கொண்டான்.
கியூரியாசிட்டியால் பூனைக்கு அழிவு என்று சொல்வார்கள்!
மதுரையிலிருந்து நந்திபுரம் செல்லக் குதிரையைத் தட்டினான்.

நந்திவர்மனது நிலை – ஓலை வடிவில் புறா ஒன்று உதயசந்திரனுக்குக் கொண்டு சென்றது.
படைத்தலைவன் உதயசந்திரன் பல்லவப் படையுடன் உடனடியாக நந்திபுரம் செல்ல படையெடுத்தான்.
உதயசந்திரன் வந்த பின் போரின் நிலைமை மாறியது.
பாண்டியர்கள் இரு பல்லவப் படைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு திணறினர்.
பாண்டியன் சித்திரமாயனிடம்:
“உன்னை மதுரையை விட்டு வர வேண்டாம் என்று தானே சொல்லியிருந்தேன்?
என்ன தலை போகிற காரியமாக.. இந்தப் போர்க்களத்துக்குப் புறப்பட்டு வந்தாய்?“ – என்றான்.
அவன் கேள்வி நியாயம் தான் போலும்..
அன்று நடந்த போரில் ..
உதயசந்திரன் தன் வாளால் சித்திரமாயன் தலை கொண்டான்.. கொன்றான்..
பாண்டியன் சொன்னது சரியாயிற்று..
சித்திரமாயனுக்கு அது தலை போகிற காரியமாகியது.
முடிவில் பல்லவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
பாண்டியப்படை மதுரைக்கு திரும்பியது.

இருதரப்பினரும் தாங்கள் வென்றதை மட்டும் கல்வெட்டுகளில் பதித்தனர்.
(இவ்வளவு சரித்திரம் படித்தோமே,
எந்த மன்னனாவது எப்போதாவது தனது தோல்வியை..
கல்வெட்டுகளில் குறித்திருக்கிறானா என்ன?
நமக்கு எதற்கு இந்த குசும்பு)

நந்திவர்மன் கதை தொடரும்..(65 வருட ஆட்சியாயிற்றே).
விரைவில் சந்திப்போம்..

 

சரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2

 

ஹர்ஷவர்த்தனன்-2

Image result for harsha rajyasri kannoj

 

தானேஸ்வரம் கண்ணீரில் தத்தளித்தது.

கவியரசர் பாணர் ராஜ்யவர்த்தனனுக்கும் செய்தி அனுப்பினார்.

அந்த நேரத்தில் ராஜ்யவர்த்தன் ஹூணர்களைப் போரில் வென்று அவர்களை அடியோடு அழித்திருந்தான்.

இனி இந்திய சரித்திரத்தில் ‘ஹூணர்’ என்ற பெயர் வராதபடி செய்தான்.

தானேஸ்வரம் திரும்புமுன் வெற்றியைக் கொண்டாட படைவீரர்களுடன் விருந்திற்கும், கேளிக்கைக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

அந்த கோலாகலத்தில் இடி விழுந்தது.. அது பாணரின் ஓலை வடிவில் வந்தது..தந்தையின் மரணச்செய்தியைச்  சுமந்து வந்தது.

தந்தை மீது பாசம், மதிப்பு, நட்பு எல்லாம் கொண்டவன் ராஜ்யவர்த்தன்.  இடிந்தே போனான். காற்று வேகக் குதிரையில் தானேஸ்வரம் வந்தான்.

ஹர்ஷன் அழுதான்.

சில விஷயங்கள் சொல்லப்படாததால் நன்மை பயக்கிறது. 

ஹர்ஷன் – தந்தை தன்னை அரசனாக்க எண்ணியதை அண்ணனிடம் கூறவில்லை.

ராஜ்யவர்த்தனின் மனமோ சோகத்தில் வெறுத்து விட்டது.

“ஹர்ஷா… உனக்கு வயது பதினாறு… ஆயினும் அரசனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உனக்கு உள்ளது. நீயே  அரசனாகி விடு. எனக்கு அரசனாவதைவிட இறையருள் நாடி துறவு செல்லவே ஆசைப்படுகிறேன். தந்தையின் மறைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது”

 ஹர்ஷன் அழுதான்.

“அண்ணா! நீயே அரசன். தந்தைக்குப் பின் நீயே என் தந்தை.”

ராஜ்யவர்த்தன் ஒருவாறு தேறினான்.

மறுநாளே முடி சூடினான்.

மகுடம் தலை மேல் ஏறியவுடன்…சேதி வந்தது..

நேரம் சரியில்லை என்றால் …கேட்ட செய்திகள் சேர்ந்தே வரும்..

மாளவ மன்னன் தேவகுப்தன் மௌகாரியைத் தாக்கி கிரகவர்மனைக் கொன்று – ராஜ்யஸ்ரீயை சிறையெடுத்த செய்தி தான் அது.

ராஜ்யவர்த்தன் கொதித்தெழுந்தான்.

ராஜ்யவர்த்தன் :“ஹர்ஷா… நான் படைகளுடன் இன்றே புறப்பட்டு தேவகுப்தனைக் கொன்று அக்காவை சிறை மீட்டு வருகிறேன்”

ஹர்ஷன்: “நானும் வருகிறேன்”

ராஜ்யவர்த்தன்: “கூடாது.. நீ இங்கே இருந்து ஆட்சியைப பார்த்துக்கொள்..”

சில சமயம் ..உள் மனது.. நடக்கப்போவதை .. வாய் வழியாக சொல்லி விடும்

ராஜ்யவர்த்தன் :“மேலும் ..போரில் எனக்கு ஏதாவது ஆகி விட்டால் .. நாட்டுக்கு நீ தான் கதி”

ஹர்ஷன்:“அண்ணா! உனக்கு என்றுமே வெற்றிதான்..அக்காவை உடனடியாக மீட்க வேண்டும். வீரம் என்றுமே வெல்லும். ஆயினும் அது விவேகத்துடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாது – கூட்டணிகள் என்றும் பலம் சேர்க்கும். யசோதர்மன் –குப்தர் கூட்டணி – அந்நாளில் ஹூணர்களை எப்படி வென்றது – என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்..”

ஹர்ஷனின் அறிவுக்கூர்மையையும் – அவனது சரித்திர அறிவும் – யுத்த அறிவையும் கண்டு வியந்த

ராஜ்யவர்த்தன் : “ஹர்ஷா … உன் மனதில் உள்ளதைக் கூறு.” – என்றான்.

ஹர்ஷன் தொடர்ந்தான்:

“காமருபத்தின் (இந்நாள் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கரவர்மனை அறிவீர்களா?”

ராஜ்யவர்த்தன் திகைத்தான்.

“நமது அக்கா ராஜஸ்ரீயின் திருமணத்திற்கு வந்த பாஸ்கரவர்மனை பார்த்திருக்கிறேன்..ஆனால் பரிச்சயம் பெரியதாக ஒன்றுமில்லை”

ஹர்ஷன் : “அண்ணா … அக்காவின் கல்யாண விழாவில் பாஸ்கரவர்மனை நான் சந்தித்தேன்… என்னை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காமரூபம் வரும்படி என்னை அழைத்தான்..நம் குடும்பம் அனைவரையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேவகுப்தனுக்கு எதிராக படையுதவி கேட்டு – நாம் பாஸ்கரவர்மனிடம் கூட்டு சேரவேண்டும். அவன் கிழக்கிலிருந்து தாக்க – நீங்கள் வடக்கிலிருந்து தாக்க – தேவகுப்தன் தப்ப முடியாது”  

ராஜ்யவர்த்தன் அசந்து போனான்..

“உத்தமம்.. அப்படியே செய்வோம்”

புறா வழி ஓலை பாஸ்கரவர்மனிடம் சென்றது. அவனும் படையுடன் புறப்பட்டான்.

பத்தாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட படையுடன் ராஜ்யவர்த்தனனும் துரிதமாகச் சென்றான்.

– கன்னோசி நோக்கிப் புறப்பட்டான்.

 

கன்னோசி:

ராஜ்யஸ்ரீ – அரண்மனை சிறையில் காவலில் இருந்ததாள்.

காவலர்கள் அனைவரும் மாளவத்து வீரர்கள்.

அதில் ஒருவனது மனைவி கன்னோசி நகரத்தவள்..பெயர் ரதி.

ராஜ்யஸ்ரீயின் தோழி அவள் – பணிப்பெண்ணாக இருந்தவள்.

தலைவியின் துயர் கண்டு – ரதி துடித்தாள்..

அவளது கணவன் சிறையில் காவலனானப் பணிபுரிந்தான். கணவன் துணையால் அரசி ராஜ்யஸ்ரீயை இரவோடு இரவாக – சுரங்கப்பாதை வழியாக நகரின் எல்லைக்கு கொண்டு வந்தாள்.

“மகாராணி… உங்கள் நிலை கண்டு என் குலை நடுங்குகிறது..இந்தக் குதிரையில் ஏறி தெற்கு நோக்கி சென்று தங்களைக் காத்துக்கொள்ளுங்கள். நகரம் வழியாகச் செல்லாமல் – காட்டு வழியில் சென்று

விடுங்கள். விந்தியக் காடுகளில் உங்களுக்கு இந்த தேவகுப்தனால் ஆபத்து இருக்காது. விரைவில் உங்களைத் தேடி உங்கள் தம்பியர் வருவர். அவர்களுக்கு நான் சொல்லி அனுப்புவேன்  ” – பணிப்பெண் ரதி நடுங்கும் குரலில் கூறினாள்.

“ரதி…உன் உதவி – சீதைக்கு அனுமன் செய்ததை விட குறைந்தது அல்ல” – ராஜ்யஸ்ரீ குதிரையில் ஏறி – விந்தியக்காடு நோக்கி நெடும் பயணம் தொடங்கினாள்.

அரண்மனையில் சிறையிலிருந்து ராஜ்யஸ்ரீ காணாமல் போனதை அறிந்த தேவகுப்தன் திகைத்தான்.

மந்திரி சபையைக் கூட்டினான்.

மந்திரி சொன்னான்:

“மன்னா ! இப்பொழுது நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ராஜ்யஸ்ரீ காணாமல் போனதும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான். நாமே அவளை விடுவித்து விட்டதாக அறிவித்துவிடுவோம். பின்னர் ராஜ்யவர்த்தனன் – நம்மை தாக்குவதற்கு பதில் ராஜ்யஸ்ரீயைத் தேடத் தொடங்குவான். நாம் பொறுத்திருப்போம்”

தேவகுப்தனுக்கு மந்திரியின் யோசனை பிடித்தது.

காமரூபத்தின் பாஸ்கரவர்மனின் படைகள் – ராஜ்யவர்த்தனின் படைகள் இரண்டும் ஒரே சமயம் தேவகுப்தனைத் தாக்கின. வங்காளத்தின் கெளட ராஜ்யத்தின் மன்னான் சசாங்கன் தேவகுப்தனுடன் கூட்டு சேர்ந்திருந்தான். தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டான்.மாளவப்படைகள் சிதறி ஓடின. சசாங்கன் ராஜ்யவர்த்தனனை சந்தித்தான்.

சசாங்கன்:  ராஜ்யவர்த்தனா! நான் தேவகுப்தனின் நண்பன் தான். ஆனால் ராஜ்யஸ்ரீயை சிறையெடுக்க வேண்டாம் என்று தேவகுப்தனிடம் கூறினேன். அவன் சிறைவைத்ததை அறிந்து – அவனிடம் பேசி அவளை விடுவித்தேன். அவள் சென்ற இடம் தெரியவில்லை. அது தெரிந்த சில பேர்களை நான் இன்று இரவு என் மாளிகைக்கு அழைத்து வருகிறேன். நீ இன்று மாலை எனது விடுதிக்கு வந்தால் அவர்களுடன் பேசலாம்” – என்றான்.

வஞ்சகர்களுக்கு பொய்யும்-சதியும் பெரும் பொழுதுபோக்கோ?  

ராஜ்யவர்த்தனுக்கு – அக்காவை கண்டு பிடிக்கும் அவசரம்.

சசாங்கன்:”மேலும் இந்தப்போர் முடிவுக்கு வர நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். இன்றிரவு”

வலைகளில் சிங்கமும் சிக்குவதுண்டே!

அன்றிரவு..ராஜ்யவர்த்தன் நயவஞ்சகமாகப் படுகொலை செய்யப்பட்டான்..

பொன்னியின் செல்வன் கதையின் ஆதித்தகரிகாலனின்அகால மரணம் போல.

தானேஸ்வரம் மீண்டும் கண்ணீர்க்கடலில் மூழ்கியது.

ராஜ்யவர்த்தனன் மறைவு ஹர்ஷனை ஆட்டிவிட்டது.

அவனது  தலை வேகமாக ஆடியது..

அவன் அணிந்திருந்த ஆபரணங்களிருந்து மாணிக்கப்பரல்கள் சிதறி – நெருப்புத் துண்டுகள் போல் தெறித்தன.  உதடுகள் துடிப்பதை நிறுத்தவில்லை. அவை அனைத்து அரசர்களது இரத்தத்தை உறிஞ்சத் துடிப்பது போலத் துடித்தது. சிவந்த கண்கள் எரிமலையை ஒத்தது. உடலெங்கும் வேர்வை மழையானது.

கை கால்கள் வீரத்தில் துடித்தது.

ஹர்ஷன்: “அந்த துரோகி சசாங்கன் அழிய வேண்டும். ஆனால் முதலில் அக்காவைக் காக்க வேண்டும்”.

உடனே புறப்பட முடிவு செய்தான்.

மந்திரிகள் : “ஹர்ஷா! நீ உடனடியாக முடிசூட வேண்டும். பின் படையெடுத்துப் போகலாம்”

ஹர்ஷன் அன்றே மன்னனாக மகுடம் சூடினான். உடனே புறப்பட்டான்.

ஒற்றர்கள் மூலம் ராஜ்யஸ்ரீயின் பணிப்பெண் ரதியின் உதவியால் ராஜ்யஸ்ரீ விந்தியமலைக் காட்டில் இருப்பதை அறிந்தான். மத்திய இந்தியாவின் காட்டில் அவனது படைவீரர்கள் வலை போட்டுத் தேடினர். காட்டில் வசித்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டிருந்த காலம் அது. சிலர் மரம் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாருக்கும் இளவரசியின் இருப்பிடம் தெரியவில்லை. ஒரு கிராமத்தில் புத்த பிக்ஷுக்கள் மற்றும் சன்யாசிகள் இருந்தனர். அவர்களிடம் ஹர்ஷன் விசாரித்தான். அவர்கள் கூற்றுப்படி அருகாமையில் சில பெண்கள் சமீபத்தில் அங்கு வந்தனராம்  – பரதேசி போல உள்ளனராம்  – உடலில் காயங்களுடன் பித்தர்கள் போல அவர்கள் திரிகின்றனராம். 

ராஜ்யஸ்ரீ- அந்த அடர்ந்த காட்டில் – திக்கற்ற பாவையாக – அலைந்து திரிந்தாள்.

பித்துப் பிடித்தவள் போல் ஆனாள்.

இரவுகள் இரக்கமற்றிருந்தது.

சந்திரனை மேகங்கள் கைது செய்த நேரமது.

ராஜ்யஸ்ரீக்கு வாழ்வது தேவையா என்று தோன்றியது.

காட்டில் ஒரு சிறிய கோவிலில் தீபம் எரிந்தது.

புத்தரின் ஆலயம்.

‘ஆஹா… புத்தர் ஆலயத்தில் .. எனக்கு இன்று இவ்வுலகிலிருந்து விடுதலை’ – வாழ்க்கையின் ஓரத்திற்கு வந்துவிட்டாள். காய்ந்த கட்டைகளை அடுக்கி – தீபத்தின் நெருப்பில் பற்றவைத்தாள்.

புத்தரைத் தியானித்தாள்: “தந்தையை  இழந்தேன்.. கணவனை இழந்தேன்…தம்பி பிரபாகரனையும் இழந்தேன்… உன் திருவடியில் எனது  உயிரையும் இழக்க சித்தமானேன்.என்னை ஏற்றுக்கொள்வீரே”

எரியும் தழல் ..‘வா… அருகில் வா… தா… உயிரைத் தா… “ – என்பது போல் நெளிந்துச் சிவந்தது.

புத்தரின் முகம் புன்முறுவலில் இருந்தது..

அந்நேரம் அருகில் ஆள் நடமாட்டம் அரவம் கேட்டது …

சசாங்கனின் படைவீரர்கள் தன்னைக் கண்டு பிடித்து விட்டனரோ?- என்ற கவலை ஒரு கணம்..

மறுகணமே..சாகத் துணிந்தவள் நான்.. எனக்கு வேறென்ன பயம்?

நெருப்பில் விழப்போனாள்.

படைவீரர்களின் முன்னிலையில் ஹர்ஷன் குதிரையில் வந்தான்.

அக்கா அனலில் விழவிருந்த நிலை பார்த்தான்.

‘அக்கா…’ – என்று கதறினான்.

ராஜ்யஸ்ரீ : ‘ஹர்ஷா! நீயா!’

சில நேரங்களில் சில உண்மைக்காட்சிகள் ‘கதை’களை விஞ்சி நிற்கும்.

விதி தங்கள் குடும்பத்தை எப்படி ஆட்டி விட்டது என்று பேசி இருவரும் கண்ணீரில் குளித்தனர்.

அதே விதி தங்கள் இருவரையும் சேர்த்தது குறித்து ஆனந்தக் கண்ணீரில் பேசிக் கொண்டனர்

அப்பேர்ப்பட்ட செண்டிமெண்ட் தருணம் அது.

ராஜ்யஸ்ரீ: “ஹர்ஷா! நான் காணாத துன்பங்கள் இல்லை. இனி எனக்கு சுகவாழ்வு வேண்டாம்.. கருணை பிரான் புத்தரின் பக்தையாக – ஒரு புத்த பிக்ஷுணியாக என் காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன்..”

ஹர்ஷன்:” அக்கா அதை நான் அனுமதிக்க முடியாது” – அதை ஒரு தம்பியாகச் சொல்வதை விட ஒரு மன்னனாகச் சொல்வது போல் தோன்றியது. பாசம் இருந்தாலும் அரசியல் அவனது எண்ணங்களைப் பேச வைத்தது.

‘ராஜ்யஸ்ரீயை வைத்துத்தான் கன்னோசியை வெல்ல முடியும்..ஆளவும் முடியும்”- அரசியலை நன்கு அறிந்தவன் ஹர்ஷன்.

ஹர்ஷன் ராஜ்யஸ்ரீயுடன் கன்னோசி அடைந்தான்.

சசாங்கன் கன்னோசியில் இருந்தான்.

ஹர்ஷன் படைகளின் தாக்குதலில் சசாங்கன் தப்பி ஓடினான்.

ஓடிய சசாங்கன் தன் நாடு (வங்காளம்) – செல்லுமுன் புத்தகயாவை அடைந்தான்.

தன் மதத்தில் – வெறி கொண்ட – அவன் உன்மத்தம் கொண்டிருந்தான்.

சரித்திரத்தில் இடம் பெறுமாறு ஒரு பாதகச் செயல் செய்தான்.

புத்தரின் மகாபோதி கோவிலிலிருந்த போதிமரம் வானுயுர்ந்து அமைதி காத்தது.

புத்தருக்கு அமைதியையும் ஞானத்தையும் தந்த அதே போதிமரம் … சசாங்கனுக்கு வெறியை ஊட்டியதோ?

அதை முழுதுமாக வெட்டிச் சாய்த்தான்..

வங்காளத்திலிருந்த புத்த ஸ்தூபிகளை உடைத்துத் தீர்த்தான்.

சமயவெறி!

ஹர்ஷன் உடனே கன்னோசியைத் தன் தலைநகராக்கினான்.

அடுத்து, வாலாபியைச் சேர்ந்த இரண்டாம் துருவசேனருக்கு எதிராகப் போரிட்டு அவரைத் தோற்கடித்தான். இரண்டாம் துருவசேனர் கப்பம்கட்டும் சிற்றரசரானான்.

சசாங்கனைத் துரத்தியடித்தாலும் – அவனை முழுவதுமாக வெல்ல முடியவில்லை.

சசாங்கன் வங்காளத்தில் ஆட்சி தொடர்ந்தது.

ஹர்ஷன் வட இந்தியாவின் வலிமைமிக்க தலைவரானான்!

தனக்கு பலம் உள்ளது என்று அறிந்தால் தோள்கள் தானாகவே தினவெடுக்கும்…

ஹர்ஷனுக்கும் தினவெடுத்தது.

நர்மதா ஆற்றுக்குத் தெற்கே மேலைச்சாளுக்கியநாட்டில் வாதாபி நகரம் செல்வக் களஞ்சியமாக இருந்தது.

அதன் மன்னன் இரண்டாம் புலிகேசி.

வருடம் கி பி 618:

ஹர்ஷன் – புலிகேசிக்கு ஓலை அனுப்பினான்:

‘இந்தியாவின் மாபெரும் சக்கரவர்த்தியான ஹர்ஷனுக்குக் கப்பம் கட்டும் மன்னனாகி அடங்கினால் உனது  நாடு பிழைக்கும் –இல்லையேல் எங்கள் யானைகள் புலி(கேசி)யை நசிக்கிவிடும்’

புலிகேசி பதில் ஓலை அனுப்பினான்:

“புலிகளும் உண்டு – யானைகளும் உண்டு இங்கே! நர்மதையைத் தாண்டினால் உனது யானைகள் எமது  யானைக்கு பலியாகும்”

ஹர்ஷன் தனது படையெடுப்பை நடத்தினான்.

இருவரும் சொன்னபடி யானைப்படைகளே இருபுறத்திலும் பிரதானமாக இருந்தது.

நர்மதை ஆற்றங்கரையில் நடந்தது கோர யுத்தம்.

யானைகள் – யானைகளைத் தாக்க – ஆறு சிவந்தது..

புலிகேசி நர்மதா நதியின் தென் பகுதியில் தனது யானைப்படைகளைத் திறமையாகப் பிரித்து வைத்திருந்தான்.   திடீரென்று பலத் திசைகளில் புலிகேசியின் யானைகள் தாக்கவே – ஹர்ஷனின் யானைகள் நிலை குலைந்தன. ஒரே நாளில் ஹர்ஷனது யானைகளில் பெரும்பகுதி அழிந்தது.

தோல்வியே கண்டிராத ஹர்ஷன் இதை எதிர்பார்க்கவில்லை.

அரசியல் விவேகம் நிறைந்த ஹர்ஷன் – புலிகேசியை சந்தித்து – உடன்படிக்கைக்கு வந்தான்.

‘இந்த நர்மதா நதி நமக்கு எல்லைக்கோடு.. இதைத் தாண்டி நானும் வரமாட்டேன்… நீயும் வரக்கூடாது’- அது ‘வின்னர் வடிவேல்’ ஸ்டைலில் சொல்லப்பட்டதோ என்னவோ? – யாரறிவர்?

நேபாளம் ஹர்ஷனின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீர் ஆட்சியாளர் கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷன் இணக்கமான உறவைக் கொண்டிருந்தான். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷனது இறுதியான போர் நடவடிக்கையாகும்.

தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன்-பின்னர் ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினான். யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். ஹர்ஷர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பதற்காக கன்னோசி நகரில் ஒரு சமயப் பேரவையைக் கூட்டினார். அதற்கு, அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கிக் கூறினார். இருப்பினும் வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின.

சமயமும் வன்முறையும் என்றும் சேர்ந்தே இருப்பது – என்ன ஒரு சாபக்கேடோ?

ஹர்ஷரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் நடைபெற்ற மாநாடு – ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹர்ஷர் கூட்டும் மாநாடு ஆகும். அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார் என்று யுவான் சுவாங் சொல்கிறார்.

நாற்பத்தொரு வருடம் ஆட்சி!

இங்கு சுபம் என்று போட்டு இந்தக் கதையை முடித்து விடலாம் தான்.. இருப்பினும் காலம் ஒவ்வொரு சரித்திர ஏட்டிலும் முடிவில் திருப்பங்களை எழுதி வைக்கிறது.

ஹர்ஷன் துர்காவதியை மணந்திருந்தான். இருவருக்கும் வாக்கியவர்த்தனன், கல்யாணவர்த்தனன்- என்று இரு மகன்கள். இருவரையும் ஒரே நாள் – ஹர்ஷனின் முதல் மந்திரி அருணாஷ்வா – கொலை செய்தான்..

ஹர்ஷன் மனமொடிந்தான். கி பி 647ல் – அவன் இறந்தபோது ..அந்த பெரும் ராஜ்யத்தை ஆள – ஒரு வாரிசும் இல்லை.. ராஜ்ஜியம் சிதைந்து போனது..

சரித்திரம் சற்றே கண்ணிர் சிந்தி விட்டு .. அடுத்த கதை சொல்ல வருகிறது…

சரித்திரம் நதி போல … யாருக்கும் அது காத்திருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும்…

அடுத்த நாயகன் யாரோ?

பார்ப்போம் விரைவில்.

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ஹர்ஷவர்த்தனன்

Image result for emperor harshavardhan

சரித்திரத்தின் ஏடுகளில் பலர் நாயகனாக இருப்பர்- சிலர் சூப்பர் ஸ்டார்கள் .

அலெக்சாண்டர், சந்திரகுப்த மௌரியர், அசோகர் – இப்படி சூப்பர் ஸ்டார்கள்.

அந்த வரிசையில் இதோ ஒரு சூப்பர் ஸ்டார் -‘ஹர்ஷன்’!

பின்னாளில் முகம்மதியப் பேரரசர் பெரும்பாலான இந்தியாவை ஆண்டனர்.

ஆனால்..கடைசியான இந்தியாவை ஆண்ட (முகம்மதியர் அல்லாத) பேரரசன் ‘ஹர்ஷன்’!

 

கி பி 600:

இந்தியா அன்று சிதறிக்கிடந்தது..

மாபெரும் மன்னர்கள் : வர்த்தனர்கள்- சாளுக்கியர்-பல்லவர்-பாண்டியர் – என்று பலர் இருந்தனர்.

தவிர மாளவம், வங்காள கவுடா, காமரூபா அரசர்களும் சக்தி கொண்டு விளங்கினர்.

இவர்களுக்குள் அடி-தடி-ரத்தம்-வெற்றி-தோல்வி.

இந்தியா இரத்த வெள்ளத்தில் மிதந்தது..

அந்த காலத்தில்..

குப்தர்களின் படைத் தலைவர்களாக புஷ்யபூதிகள் பணியாற்றி வந்தனர்.

அவர்கள் தங்களை வர்த்தனர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்.

புஷ்யபூதி வம்சத்தின் முதல் முக்கிய அரசர் பிரபாகர வர்த்தனர்.

டெல்லிக்கு வடக்கேயிருந்த தானேஸ்வரம் அவரது தலைநகரம்.

ஒரு சினிமாவுக்குத் தேவையான மூலப்பொருள் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

இந்த சினிமாவின் முன்கதை சொல்வோம்:

முதலில் க்ரெடிட்ஸ்:

 

கதை: சரித்திரம்

திரைக்கதை : யுவான் சுவாங்

வசனம்: கவிஞர் பாணன்

இயக்கம்: ஹர்ஷன்

தயாரிப்பு: யாரோ

 

அக்காலத்தில்…

மௌகாரி நாட்டில் –கன்னோசியைத் தலைநகராகக்கொண்டு -அவந்தி வர்மன் அரசாண்டிருந்தான்.

மாளவ நாட்டில் – மஹாசேனகுப்தன் என்ற ஓர் அரசன்.

இந்த இரு நாடுகளுக்கும் பெரும் பகை.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போல..

மகதத்தை விழுங்க இரு நாடுகளும் துடித்திருந்தது!

‘அரசியல் திருமணங்கள்’ பொதுவாகவே அரசியல் கூட்டணி அமைய முக்கிய காரணங்களாக அமைந்தன …

இந்தப் பகைக்கு நடுவில் பிரபாக வர்த்தனன் பிறந்தான்…சக்தி கொண்டு வளர்ந்தான்.

தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னன் ஆனான்.

மாளவம், மௌகாரி – இரு மன்னர்களும் – பிரபாக வர்த்தனனைச் சேர்த்துக்கொண்டால் பலம் கிடைக்கும் என்று உணர்ந்தனர்.

இந்த சதுரங்க ஆட்டத்தில் – மாளவத்தில் மஹாசேனகுப்தன் – முதல் காயை நகர்த்தினான்.

தனது மகளை பிரபாகவர்த்தனனுக்கு மணமுடித்தான்.

அவந்தி வர்மன் – இந்த ஆட்டத்தில் தோற்றுப்போனான்.

திருப்பங்கள் நிகழ்ந்தது.

மாளவத்தின் மஹாசேனகுப்தனுடைய உறவினன் ஒருவன் மஹாசேனகுப்தனது மகன்கள் (குமார், மாதவா) இருவரையும் துரத்திவிட்டு அவனது அரியணையைப் பறித்துக்கொண்டான்.

அவன் நமது கதையில் முதல் வில்லன்..

தேவகுப்தன்..

மஹாசேனகுப்தனது மகன்கள் தானேஷ்வரம் சென்று – பிரபாக வர்த்தனனிடம் அடைக்கலம் புகுந்தனர்.

மைத்துனர்களை தன்னுடன் வைத்துக்கொண்டாலும்… மாளவத்தின் அரியணையில் அவர்களை ஏற்ற முடியவில்லை.

தேவகுப்தன் பலத்தைப் பெருக்கியிருந்தான்.

மௌகாரியைக் கைப்பற்றுவது அவனது முதல் குறிக்கோளாக இருந்தது.

 

மௌகாரி மன்னன் அவந்தி வர்மன்- சதுரங்கத்தின் அடுத்த காயை நகர்த்தினான்.

மெல்ல மெல்ல .. பிரபாகவர்த்தனனை சிநேகம் செய்து கொண்டான்.

தனது மகன் கிரகவர்மனை தானேஸ்வரத்திற்கு அனுப்பி… பிரபாகவர்த்தனன் குடும்பத்துடன் ‘பழக’ விட்டான்.

அவனும் ‘வாங்க பழகலாம்’ – என்றான்.

பழக்கம் திருமணத்தில் முடிந்தது.

பிரபாகவர்த்தனனின் மூத்த மகள் இளவரசி ‘ராஜ்யஸ்ரீ’ – கிரகவர்மன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

கிரகவர்மன் மௌகாரி மன்னனாக முடி சூடினான்.

ராஜ்யஸ்ரீ மணமகளாக கன்னோசி (மௌகாரியின் தலைநகரம்) சென்றாள்.

சிவ-விஷ்ணு பக்தையாக வளர்ந்திருந்த ராஜ்யஸ்ரீ – கன்னோசியில் புத்த மதத்தினால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்தைத் தழுவினாள்.

மாளவ – மௌகாரி பகை.. இப்ப வேற லெவலுக்குப் போனது!

அரசியல் தராசில்..மௌகாரியின் சற்றே எடை கூடியது.

தேவகுப்தன் சரியான நேரத்திற்குக் காத்திருந்தான்.

வங்காளத்தின் ‘கவுடா’ ராஜ்யத்தின் அரசன் ‘சசாங்கன்’ நமது கதையின் முக்கிய வில்லன்.

தேவகுப்தன்-சசாங்கன் – ரகசியக் கூட்டணி அமைந்தது.

அரசியல் கூட்டணிகள்.. அன்றும் –இன்றும்- என்றும் தேவைப்படுகிறது.

அதுவும் ரகசியமாக இருக்கும்போது – சக்தி வாய்ந்து- சதிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது.

தேவகுப்தனின் நேரம் வந்தது.

தானேஸ்வரம்:

பிரபாகவர்த்தனன் வயோதிகனான்.

வயோதிகத்துக்கு நண்பன் வியாதி தானே!

வியாதி அவனை வரித்தது..

மரணம் அவனது துரத்தியது..

அவனைத் தின்னத் துடித்தது..

மூத்த மகன் ராஜ்யவர்த்தனன் – மாவீரன்..வல்லவன்.. நல்லவன்..

ஹூணர்களது எச்சம் …மீண்டும் துளிர் விடத்தொடங்கியிருந்தது கண்டு – அதை முழுதாக அழிக்க ராஜ்யவர்த்தனன் படையெடுத்துச் சென்றிருந்தான்..

இளைய மகன் ஹர்ஷன் …

பதினாறு வயது நிரம்பிய இளைஞன்…

போர்க்கலைகளை நன்கறிந்தவன்.

கவிஞன் …

திடமான மனமுள்ளவன்..

அருகிருந்த காட்டில் ‘வேட்டைக்கு’ சென்றிருந்தான்!

பிரபாகவர்த்தனன் உடல்நிலை கவலைக்கிடம் ஆனது.

கவிஞர் பாணன் – கவிதை மட்டிலுமல்லாது அரசியலிலும் சக்தி வாய்ந்தவன்.

அதிவேக குதிரை வீரன் ஒருவனை அனுப்பி…ஹர்ஷனை வரவழைக்க ஏற்பாடு செய்தான்.

பிரபாகவர்த்தனனுக்கு ஹர்ஷன் மேல் அலாதிப் பிரியம்.

“மகனே ஹர்ஷா! உன் அண்ணன் ராஜ்ய வர்த்தனன் … ராஜ்ஜியம் ஆளப்பிறந்தவன்.

அவன் ரொம்ப நல்லவன்..அரசன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் ஆள்வது கஷ்டம்..”

மூச்சு வாங்கியது.

மேலும் பேசினான்.

“நீ அரசனானால் நமது வர்த்தன ராஜ்ஜியம் சாம்ராஜ்யமாகும் என நம்புகிறேன்”.

ஹர்ஷன் உடன் மறுத்தான்.

“தந்தையே … அண்ணன் ஆளப் பிறந்தவன்.. அவனது வீரத்திற்கு இணை யாருமில்லை.. அவன் தான் அரசனாவான்.. நான் என்றும் அவனுக்கு உதவுவேன்”.

மன்னன் கண்ணீர் விட்டான்.

‘மகனே! நீ வாழ்க’- அது அவனது கடைசி வார்த்தைகள்..

வாசலில் நின்ற காலன் உள்ளே நுழைந்து -பிரபாகவர்த்தனன் உயிரைக் கவர்ந்து சென்றான்..

தானேஸ்வரம் கண்ணீரில் மிதந்தது.

அதே நாள்..

பிரபாகவர்த்தனன் காலமான செய்தி காற்று வேகத்தில் மாளவ மன்னன் தேவகுப்தனை எட்டியது.

அவனது காதில் அது தேனாக இனித்தது.

உடனே.. அதே நாள்..தேவகுப்தன் படைகள் புறப்பட்டு மௌகாரியைத் தாக்கியது.

மௌகாரி மன்னன் கிரகவர்மன் – ராணி ராஜ்யஸ்ரீ – இருவரும் கன்னோசி அரண்மனையில் பூங்காவில் உலவிக்கொண்டிருந்தனர்.

‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்.. ராஜபோகம் தர வந்தான்’ – இருவரும் காதலின் ஆதிக்கத்தில் இருந்தனர்.

ஆபத்து நாற்புறமும் வந்தது.

தேவகுப்தன் படைகள் மௌகாரியை ஒரு மாலைக்குள் தன் வசமாக்கியது.

தேவகுப்தன் கிரகவர்மனைத் தாக்கினான்.

எதிர்பாராத அந்த தாக்குதலில் கிரகவர்மன் இறந்தான்.

ராஜ்யஸ்ரீ – திக்பிரமையால் வீழ்ந்தாள்.

ராவணன் சீதையைச் சிறையெடுத்தது போல் ராஜ்யஸ்ரீ சிறையெடுக்கப்பட்டாள்.

“தேவகுப்தா! என் தந்தை உன்னைச் சும்மா விட மாட்டார்” – என்று அவள் சூளுரைத்தாள்.

தேவகுப்தன் – வெறித்தனத்துடன் சிரித்தான்..

“ராஜ்யஸ்ரீ! இன்று காலை எனது புறா தானேஸ்வரத்திலிருந்து ஒரு நல்ல செய்தி கொண்டு வந்தது! என்ன தெரியுமா?”

ராஜ்யஸ்ரீ: “…”

தேவகுப்தன்:”இன்றைய தலைப்பு செய்திகள்: பி ர பா க  வ ர் த் த ன ன் … மரணம்..தானேஸ்வரம் தத்தளிக்கிறது..அங்கு மன்னன் யாரும் இல்லை”.

ராஜ்யஸ்ரீ ஒடிந்து போனாள்.. துவண்டு விழுந்தாள்..

தேவகுப்தன்: “ஒரு ரகசியம் சொல்லவா?”

ராஜ்யஸ்ரீ:”…”

தேவகுப்தன்: “நீ இந்த கன்னோசி சிறையில் இரு. நான் தானேஸ்வரம் மீது படையெடுத்து அரசனில்லாத அந்த நாட்டை என்னாட்சிக்குக்குள் கொண்டு வருகிறேன்”.

ராஜ்யஸ்ரீ :“என் அண்ணன் ராஜ்யவர்த்தனன் உன்னைக் கொல்லாமல் விடமாட்டான்”

தேவகுப்தன் :”அவன் ஊரில் இல்லை. அவனும் ஹூணர்களுடன் சண்டைபோட்டு சிதைந்து உள்ளான்”

ராஜ்யஸ்ரீ – மௌனமானாள்.

உள்ளம் அழுதது..கண்கள் கண்ணீர் வற்றி உலர்ந்தது..

இந்த இடத்தில் ‘இடைவேளை’ – என்று போடச்சொல்லி ‘யாரோ’ ஒரு தயாரிப்பாளர் சொன்னார் போலும்.

சரித்திரம் மேலும் கூறும்.

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

திருஞானசம்பந்தர்-தொடர்ச்சி

Image result for மந்திரமாவது நீறு

 

(முன் கதை: பாண்டியமன்னன் நெடுமாறன் வெப்புநோயால் துடிக்கிறான்..அவனைக் குணப்படுத்த சமணர்களும் திருஞானசம்பந்தரும் முனைகிறார்கள்)

 

சமணர்கள்- மந்திரங்களை ஓதினர்.. மன்னனது இடப்பகுதியின் வெப்பு பன்மடங்காக அதிகமாயிற்று..  

துடி துடித்த மன்னன் திருஞானசம்பந்தரைப பார்வையாலே வேண்டினான்.

திருஞானசம்பந்தர் ‘மந்திரமாவது நீறு..’ என்ற பதிகம் பாடி..திருநீறை எடுத்து மன்னனது வலது பக்கம் தடவினார்..

தொட்ட இடம் குளிர்ந்தது!

அதே சமயம் இடப்பக்கம் மேலும் கொதித்தது.

‘கடவுள் பாதி..மிருகம் பாதி’ – போல மன்னன் உணர்ந்தான்.

அருகிலிருந்த சமணர்கள் – அந்த வெப்பத்தின் வீரியம் தாங்காது – சற்றே விலகி நின்றனர்.

மன்னனுக்கு திருஞானசம்பந்தர் மீது அன்பும் –சமணர்கள் மீது கடுங்கோபமும் வந்தது.

மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்து : “ஞான வள்ளலே! இந்த இடப்புறத்திலும் நோயை அகற்றி அருளவேண்டும்”

திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்து – திருநீரை மன்னனது இடப்புறத்தில் தடவினார்.

மன்னன் முழுக் குணம் அடைந்தான்.

திருஞானசம்பந்தரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்.

சமணர்கள் வெட்கித்தலை குனிந்தனர்.

ஆயினும் விடுவதாயில்லை!

“மன்னரே! அவரவரது சமயக் கொள்கைகளை ஏட்டில் எழுதி நெருப்பில் இடவேண்டும். யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவர். சம்பந்தரே!  நெருப்புப் போட்டிக்குத் தயாரா?“

மன்னன் அதை நிறுத்து முன், திருஞானசம்பந்தர் : “மகிழ்ச்சி! உங்கள் எண்ணம் அதுவானால் மன்னர் முன்பே அது நடக்கட்டும்”

சூப்பர் சிங்கர் பைனல்ஸ் போல… ஒரு அரங்கம் அமைக்கப்பட்டது.

தீ மூட்டப்பட்டது.

திருஞானசம்பந்தர் தனது பதிகப் புத்தகத்திலிருந்து ..’போகம் ஆர்த்த பூண் முலையாள்’ என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை எடுத்து ‘தளிர் இள வளர் ஒளி’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி ஏட்டை அனலில் இட்டார்.

அனலில் விழுந்த ஏடு .. எரியாமல் பளபளப்பாக மின்னியது..

சமணர்கள் முகம் கருத்தது..

அவர்கள் தீயிலிட்ட ஏடு எரிந்து சாம்பலானது.

அதை எடுத்து தண்ணீரில் குழைத்துப் பார்த்தனர்..

“அரித்துப் பார்க்கிறீர்களோ?” – நெடுமாறன் நகைத்தான்.

“வெப்புநோய் தீர்க்க இயலாமல் முன்பே தோற்றீர்கள்.. அனல் வாதத்திலும் தோற்றீர்கள். சென்று விடுங்கள்”.

திருஞானசம்பந்தர்: ”இனி என்ன வாதம் செய்ய வேண்டும்’ – என்றார் அமைதியாக.

சமணர்கள் பிடிவாதத்தில் :”புனல் வாதம்..அவரவர் ஏடுகளை நதி நீரில் விடவேண்டும். யாருடைய ஏடு நீரை எதிர்த்து செல்கிறதோ அவரே வென்றவராவர்”.

மன்னன் பொறுமை எல்லை கடந்தது.

மந்திரி: “இந்தப் போட்டியிலும் சமணர்கள் தோற்றால் அவர்களை என்ன செய்யலாம்?”-என்றார்.

சமணர்கள் அவமானத்தில் குறுகினாலும்..

“இம்முறை தோற்றால் எங்களைக் கழுவிலேற்றுங்கள்”

அவர்களது நாக்கில் சனியன் போலும்!

கார்காலம்.. வைகை நதி.. கரைபுரண்ட வெள்ளம்..

கரைதனில் மக்கள் வெள்ளம்..

மன்னன் சமணர்களிடம்:”முதலில் உங்கள் ஏடுகளை நீரில் எறியுங்கள்”

சமணர்கள் எறிந்த ஏடு நீரின் வழியே சென்று மறைந்தது..சமணர்கள் நட்டாற்றில் நின்றனர்.

திருஞானசம்பந்தர்  ‘அந்தணர் வானவன் ஆனினம்’ என்று தொடங்கும் பதிகத்தை ஏட்டில் பதித்து…வைகையில் இட்டார்.. ஏடு நீரை எதிர்த்து சென்றது..

ஆனந்தம் பொங்க கூன்பாண்டியன் நெடுமாறன் எழுந்தான்…

அக்கணமே..அவனது ‘கூன்’ நிமிர்ந்த்தது..

திருஞானசம்பந்தர் – அந்த (நீரில் இட்ட) பதிகத்தில் ‘வேந்தனும் ஓங்குக’  -என்று எழுதியிருந்தார்..

இப்பொழுது  ஒரு சின்னப் பிரச்சினை..

திருஞானசம்பந்தர்  போட்ட ஏடு நதியை எதிர்த்து ஓடிக்கொண்டே இருந்தது.

மந்திரி குலச்சிறையார் குதிரையில் ஏறி அதன் பின்னர் கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்.

திருஞானசம்பந்தர்  மந்திரியாரின் நிலைமை அறிந்து – வேறு பதிகம் பாடி அந்த ஏட்டை நிறுத்தினார்.

மந்திரி அந்த ஏட்டை – திருஞானசம்பந்தரிடம் கொணர்ந்தார்.

கூன் பாண்டியன் – ‘நின்றசீர் நெடுமாற நாயனார்’ என்று பெயர் பெற்று உலகு போற்ற வாழ்ந்தான்.

சமணம் மெல்ல அழிந்தது. சைவம் தழைத்தது..

திருஞானசம்பந்தர்.. மதுரையை விடுத்து… தமிழ்நாட்டின் பல சிவத்தலங்களைத் தரிசித்து பல அற்புதங்கள் செய்து- சீர்காழி வந்தார்.

பூம்பாவை என்ற சிவ பக்தை அரவம் தீண்டி இறந்து போனாள்.

திருஞானசம்பந்தர்  பூம்பாவை கதையை கேள்வியுற்றியிருந்தார்.

அவளது எலும்புகள் வைக்கப்பட்ட குடம் முன் நின்று.. பதிகம் பாட… பூம்பாவை உயிருடன் வந்தாள்.

பூம்பாவையின் தந்தை திருஞானசம்பந்தரிடம் “தாங்கள் என் மகளை மணந்து கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பித்தார்..

திருஞானசம்பந்தர்   ‘மறுவாழ்வு பெற்ற இந்த பூம்பாவை என் மகள் போல’- என்று மறுதளித்தார்.

 

இன்னொரு நாடகம் அரங்கேற உள்ளது..

இடம்:சீர்காழி

திருஞானசம்பந்தரின் பெற்றோரும் – சுற்றத்தினரும்:” சம்பந்தா! உனக்கு பதினாறு வயதாகிறது..மண வாழ்வு கொண்டு முறைப்படி வேள்விகள் செய்வாயாக”

திருஞானசம்பந்தர்  மறுத்தார்.

அடி மேல் அடி வைத்தால்..அம்மியும் நகரும் என்பார்கள்..

திருஞானசம்பந்தர்  ஒருவழியாக திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்.

திருப்பெருணா நல்லூர் நம்பியாண்டார் நம்பியின் மகளை திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க முடிவு செய்தனர். திருமண நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தது..நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தரின் கரத்தில் மங்கள நீரை மும்முறை வார்த்து தன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தார். திருஞானசம்பந்தர்   மங்கையின் கரம் பற்றி ஓமத்தை சுற்றி வலம் வந்தார்..

அப்பொழுது.. அவர் எண்ணங்கள் அலை மோதியது.

‘எனக்கு ஏன் இந்த இல்வாழ்க்கை வந்தடைந்தது?சிற்றின்பத்தில் உழலுவதை விட இறைவனது திருவடி  நிழலில் பேரின்பம் காண்பதல்லவா உத்தமம்’ –என்று எண்ணமிட்டார்..

அனைவரும் கோவிலை அடைந்தனர்.

சிவனை மனதில் நிறுத்தி..அவர் திருவடியில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பம் வைத்து ‘நல்லுர்ப்பெருமணம்’ என்று திருப்பதிகம் பாடினார்.

வானில் அசரீரி : “நீயும், நின் மனைவியும்,திருமணத்துக்கு வந்தவர் அனைவரும் எம்மிடம் சோதியாகக் கலந்துகொள்ளவும்”

அங்கு உடனே பெரிய ஒளிவடிவில் ஜோதிலிங்கம் காட்சியளித்தது. அதில் ஒரு வாயிலும் தென்பட்டது.

திருஞானசம்பந்தர்  :

‘காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,

ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே’

என்று பதிகம் பாடினார்.

திருமணத்துக்கு வந்த அனைவரையும் பார்த்து :”சிவஜோதியில் கலந்து கொள்ளுங்கள்.இந்த வாயில் வழி செல்லுங்கள்” – என்றார்.

அனைவரும் சென்ற பின், திருஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த ஒளிவாசலில் சென்று சிவஜோதியுடன் கலந்தார். அந்த வாயில் மூடியது..சிவஜோதியும் மறைந்தது..

இத்தனை அற்புதங்கள் செய்து சைவத்தை நிலை நாட்டிய திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ‘பதினாறு வருடங்கள்’ மட்டுமே!

இப்படிப்பட்ட மகான்களைப் பற்றி எழுதி சரித்திரம் தன்னை புனிதமாக்கிக் கொள்கிறது..

விரைவில் வேறு கதைகள்..

 

 

 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

திருஞானசம்பந்தர்

Image result for திருஞானசம்பந்தர்

 

திருநாவுக்கரசரைத் தொடர்ந்து யாரைப்பற்றிச் சரித்திரம் பேசப்போகிறது  என்று பல ரசிகர்கள் மண்டையைப்போட்டு உடைத்துக்கொள்கிறார்களாம்!

அட … இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

ஒரு குழந்தைக்குக்கூடத் தெரியுமே!

வேறு யார்?

நமது திருஞானசம்பந்தர்தான்.

தென்னிந்திய சரித்திரத்தில் ஒரு சமய மாற்றம் அமைய இந்த இருவருமே முக்கிய காரணமாயினர்.

திருநாவுக்கரசர் பல்லவ மன்னனை சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றினார்..

திருஞானசம்பந்தர் செய்தது என்ன?

மேலே படியுங்கள்..

 

சிவபாதவிருதயர் – பகவதியார் என்ற தம்பதிகள் ‘சீர்காழி’யில் வாழ்ந்துவந்தனர்.

அவர்களுக்கு அந்த ‘தெய்வமகன்’ பிறந்தான்.

மூன்று வயதாகியது.

பொற்றாமரைக்குளத்தில் குளித்திட எண்ணி மகனைக் கரையில் உட்கார வைத்துவிட்டு நீரில் மூழ்கினார்.

குழந்தை தந்தையைக் காணாமல் திரும்பிக் கோவில் கோபுரத்தைப் பார்த்து ‘அம்மா.. அப்பா..’ –என்று அழுதது.

 

உலகில் பிறக்கும் சிலருக்குத்தான் தெய்வ அம்சங்கள் அமையும். அதுவும் காலம் அமையும்போதுதான்.

எத்தனையோ யானைகள் முதலை வாய்ப்பட்டாலும் – கஜேந்திரன் என்ற யானைக்கு மட்டும் ‘ஆதிமூலமே’ என்றவுடன் நாராயணன் உதவிக்கு வந்தான்..

அதுபோல் – அந்தக் குழந்தை அழுகைகேட்டு- அன்று ‘சிவன் – பார்வதி’ அங்கு வந்தனர்.

பார்வதி தன் முலைப் பாலெடுத்து பொற்கிண்ணத்தில் ஞானப்பாலாக குழந்தைக்கு ஊட்டினாள்..

நீராடிய தந்தை – மகனது கையிலும் வாயிலும் பொங்கிய பால்கண்டு – பொங்கினார்.

‘யாரோ இந்த எச்சில் பாலைக் கொடுத்தது’ – என்று வெகுண்டார்..

குழந்தை பேசியது..

” ‘யாரோ’ என்று குறைவாகப் பேசவேண்டாம்.

அது சிவனாரும் பார்வதியாரும் தான்”

‘தோடுடைய செவியன்’ – என்று தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடியது அந்தக் குழந்தை.

தந்தையார் அசந்து போய்விட்டார்.

Related image

தெய்வ அருளாலேதானே இது நிகழ இயலும்..

நகரம் முழுதும் இச்செய்தி பரவியது..

சம்பந்தர்… ஆளுடைப்பிள்ளை … என்று பல பெயர்கள் …

திருநீலகண்ட யாழ்ப்பாணர் – பெரிய சிவபக்தர்.அவரது மனைவி மதங்கசூளாமணி. இருவரும் யாழிசை வல்லுனர்கள். இருவரும் சம்பந்தரின் பதிகங்களுக்குச் சேர்ந்து யாழிசைத்தனர்.

தந்தையார் மகனைத் தோளில் சுமந்து ஆலயம் பல சென்றார்..

திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சந்திப்புகளை ஏற்கனவே பார்த்திருந்தோம்…

சில அற்புதங்கள்:

  • மழைவ மன்னன் மகள்- வலிப்பு நோயால் – வருந்தினாள்… திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அவள் நோய் குணமாயிற்று.
  • ஒரு கன்னிப்பெண் … காதலனுடன் ஓடிப்போய்.. கல்யாணம் செய்துகொள்ளத் துணிந்தாள்.. இருவரும் கோவில் மடத்தில் தங்கியிருக்கையில்… காதலன் பாம்பால் கடிபட்டு …காலமானான். ‘மணமாகுமுன்னே பிணமானான்’. காதலி .. திருஞானசம்பந்தர் காலடியில் வீழ்ந்து புலம்பினாள். திருஞானசம்பந்தர் – ‘சடையாய் எனுமால்’ –என்ற பதிகம் பாடியதும்.. காதலன் உயிர் பெற்றுவந்தான்..
  • திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருடன் இருக்கையில்.. நாட்டில் பஞ்சம்… இருவரும் இறைவனைத் துதிக்க- இறைவன் இருவருக்கும் தங்கக்காசுகள் தந்தருளினார்.

 

ஒரு நாடகம் துவங்குகிறது…

இடம்: மதுரை.

மன்னன் பாண்டியன் .. நெடுமாறன்.. இளவயதிலேயே அவனுக்கு முதுகில் விழுந்த கூன் அவனைக்

கூன் பாண்டியன் ஆக்கியது. சமண மதத்தில் ஈடுபாடுகொண்டான்..

மனைவி. சோழநாட்டு இளவரசி மங்கையர்க்கரசி..

மந்திரி: குலச்சிறையார்.

மகாராணியும், மந்திரியாரும் பெரும் சிவ பக்தர்கள்.

‘சைவத்தை எப்படிப் பரப்பலாம்’ என்று ஆலோசித்தனர்.

மாபெருஞ்சோதியாய் திகழ்ந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவுசெய்து தூதுவனை சீர்காழிக்கு அனுப்பினர்.

 

திருமறைக்காட்டில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இருக்கையில்.. தூதுவர் வந்தனர்..

தூதுவன்: “பாண்டிய நாடு சமணர்களது ஆதிக்கத்தில் சிதைந்துவருகிறது. மன்னரும் அவர்களது வலையில் விழுந்துவிட்டார். தென்னாட்டில் சைவம் தழைக்கவும் – சமணர்களை வெல்லவும் – தாங்கள் மதுரை வந்தருளவேண்டும். மகாராணி, மந்திரி – இவற்றைக்கூறி எங்களை அனுப்பினார்கள்”

திருஞானசம்பந்தர் வதனத்தில் புன்முறுவல் விரிந்தது..

திருநாவுக்கரசர் திடுக்கிட்டார்.

“திருஞானசம்பந்தரரே.. “- என்று தொடங்கி சமணர்களது கொடிய செயல்களைப்பற்றி விளக்கினார் .. “மேலும்.. நாள்-கோள் – சரியில்லாததால் ..இப்பொழுது தாங்கள் போவது உசிதமல்ல” –என்றார்.

திருஞானசம்பந்தர்: “நாம் போற்றுவது பரமனது பாதங்களை.. ‘நாளும்,கோளும்’ நம்மை என்ன செய்யும்?”

‘வேயுறு தோளிபங்கன்’ எனத்தொடங்கும் ‘கோளறு திருப்பதிகம்’ பாடினார்.

விரைவில்..திருஞானசம்பந்தர் – மதுரை புறப்பட்டார்.

அழகிய மதுரை மேலும் அழகுபடுத்தப்பட்டது.

சமணர்கள் ஒன்றுகூடி நிலைமையை விவாதித்தனர்.

மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் அவரை வரவேற்று வணங்கிப் போற்றி, மடத்தில் தங்கவைத்தனர்.

சமணர்கள் புகைந்தனர்.

மன்னரிடம் சென்று அவரை மேலும் குழப்பினர்.

“ஞானசம்பந்தர் தங்கும் மடத்துக்குத் தீ வைக்கவேண்டும்”

குழம்பிய மன்னன் :“ செய்யவேண்டியதை செய்க”

இரவு – மன்னனின் குற்றமுள்ள நெஞ்சு உறங்கத் தவித்தது.. மன்னன் அருகில் வந்த மங்கையர்க்கரசியிடம் நடந்ததைக் கூறினான்.

திடுக்கிட்ட அரசி: “மன்னரே! இது என்ன விபரீதம்? சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வாதம் வைத்து.. யார் வெல்கிறார்களோ – அவர்களை நாம் ஆதரிக்கலாம்.”

மன்னன் சிந்திக்கத்தொடங்கினான்.

சமணர்கள் இரவில் மடத்திற்குத் தீ வைத்தனர்..

மடத்தில்- தொண்டர்கள் விரைவில் தீயை அணைத்துவிட்டு –  திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர்.

திருஞானசம்பந்தர் : ‘இது சமணர்களின் குற்றமாயினும் – இதை ஆதரித்த நாட்டு மன்னனது குற்றம் கொடியது’ – என்றார்.

‘செய்யனே திரு ஆலவாய் மேவிய ..’ எனத்துவங்கும் பதிகம் பாடினார். ஒவ்வொரு பாடலின் ஈற்றடியில்:

‘சமணர் இட்ட தீ பாண்டியனைச் சாரட்டும்’ – என்று கருத்தை வைத்தார்.

உடனே… தீப்பிணி என்னும் வெப்பு நோய் – மன்னனைப் பீடித்தது.

வேந்தன் உடல் துடித்தது.. உயிர் ஊசலாடியது..

மகாராணியும், மந்திரியாரும் திகைத்தனர்..

செய்தி கேட்ட சமணர்கள் – விரைவில் வந்து – மந்திரம் கூறி –பீலி கொண்டு மன்னனைத் தடவினர்.

பீலிகள் எரிந்தன.. பிரம்புகொண்டு மன்னனைத் தடவினர். பிரம்புகள் எரிந்தன..

‘சமணர்களே ! ஓடிப்போங்கள்”- என்று மன்னன் துரத்தினான்.

அரசி : “திருஞானசம்பந்தரை அழைத்து வந்தால் அவரே நமக்கு உதவக்கூடும்”

மன்னன்:” யார் எனது நோயைத் தீர்க்கிறார்களோ அவர்கள் பக்கம் சாய்வேன். திருஞானசம்பந்தர் வரட்டும்” என்றான்.

அரசியும் மந்திரியும் மடத்திற்குச்சென்று.. திருஞானசம்பந்தரது பாதம் பணிந்து…

‘தேவரீர் எங்கள் அரண்மனை வந்து மன்னனைக் காக்கவேண்டும்’- என்று விண்ணப்பித்தனர்.

திருஞானசம்பந்தர்: ‘இன்றே வருவோம்..நன்றே செய்வோம்’

திருஞானசம்பந்தர் வரப்போவதைக்கண்டு சமணர்கள் வெகுண்டு… மன்னனைக் கண்டனர்.

 

“மன்னா! ஒரு வேளை சம்பந்தன் தந்திரத்தால் உங்கள் நோயைப் போக்கினாலும்.. எங்களால்தான் இந்த நோய் தீர்ந்தது என்று தாங்கள் சொல்லவேண்டும்..அதுவே சைவத்தை வெல்லும் வழி” – இப்படி ஒரு மன்னனிடம் கூறவேண்டுமென்றால் ..சமணர்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு! மன்னன் மீது எத்தனை ஆளுமை!

மன்னன் செவி சாய்க்கவில்லை.

“இருவரும் எனது நோயைக் குணமாக்க முயற்சிக்கலாம். நான் பொய் சொல்லமாட்டேன்”.

திருஞானசம்பந்தர் – வந்தார். அரசர் அருகில் அமர்ந்தார்.

சமணர்கள் பொருமினர்.

தங்கள் மந்திரத்தைக் கூவினர்..

திருஞானசம்பந்தர்: “உங்கள் சமயக் கருத்துகளைக் கூறுக”

சமணர்கள் துள்ளி எழுந்து.. ஆர்ப்பரித்தனர்..

அரசியார் குறுக்கிட்டு : “மன்னரே.. முதலில் திருஞானசம்பந்தர் தங்களது நோயைக் குணமாக்கட்டும்.. பிறகு சமண-சைவ வாது நடக்கலாம்”   

சமணர்கள்: “மன்னா! நங்கள் எங்கள் மந்திர மகிமையால் உங்களது இடப்பகுதியைக் குணப்படுத்துகிறோம்.. புதிதாக வந்த சம்பந்தர் – வலது பக்கத்தைக் குணமாக்க முயலட்டும்”.

போட்டி துவங்கியது…

‘இந்த நாடகம் இந்த மேடையில் எத்தனை நாளம்மா’?

சரித்திரம் தொடரும்…

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

Related image

திருநாவுக்கரசர்-தொடர்ச்சி

 

திருநாவுக்கரசர் தில்லை வந்தார்..

பதிகம் பாடினர்…

சிவபெருமான் தனது நடனத் தோற்றத்தைக்காட்டி அவருக்கு அருளினார்.

திருநாவுக்கரசர் – தலம் பல கண்டு சீர்காழி அடைந்தார்..

அங்கு திருஞானசம்பந்தர் தோணியப்பருக்குத் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தார்.

பதினாறு நிரம்பாத ஆளுடைப்பிள்ளையார் அவர்.

அந்தக்கூட்டத்தில்  திருநாவுக்கரசர் சென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

வயது குறைந்தவரானாலும் இறையருள் நிறைந்தவரானவர்..

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரது கரங்களைப்பற்றிக்கொண்டு…அன்புடன்…

‘அப்பரே’ என்றழைத்தார் – தந்தைக்கு சமமானவரே என்று பொருள்பட..

இரண்டு ஞானக் கடல்கள் சங்கமித்தன..

சில நாட்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து பதிகங்கள் பல பாடினர்.

சீர்காழி விழாக்காலம் பூண்டது!

பின் இருவரும் சில பல தலங்களில்..

விடையேறும் பெருமானைத் தரிசித்தபின்..

விடைபெற்றனர்..

திருநாவுக்கரசர் திங்களூர் வந்தடைந்தார்.

அங்கு அப்பூதி அடிகள் என்ற சிவனடியார்..

அவர் திருநாவுக்கரசரின் தீவிர ரசிகர்..

திருநாவுக்கரசர் அவர் வீட்டுக்கு வருவது..

சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்து அதில் வசந்தமும் வீசியதுபோல் இருந்தது..

வீட்டில் வரவேற்று  விருந்து வைக்கும் நேரம்…

அவர் மகன் கொல்லைப்புறத்தில் பாம்பு தீண்டி உயிர் துறக்க…

திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி…

அப்பூதி மகனை உயிர் பிழைக்க வைத்தார்.Related image

சிவத்தலங்களை தரிசித்து திருப்பதிகங்கள் பாடிப் பின்னர்..

திருவாரூர் புற்றிடங்கொண்ட தியாகேசப் பெருமானைத் தரிசித்தார்.

பின்னர்… திருப்புகலூருக்குப் புறப்பட்டார்..

அவ்விடம் திருஞானசம்பந்தர் தலங்கள் பல கண்டு திருப்புகலூரில் தங்கியிருந்தார். 

இரண்டு ஞானச் சிங்கங்களும் சந்தித்து மேலும் பல சிவத்தலங்கள் கண்டு ..

திருமறைக்காடு வந்தனர்..

இங்கு ஒரு திருவிளையாடல் நாடகமாக அரங்கேறியது..

 

காட்சி: சிவன் ஆலயம் மூடிக்கிடக்கிறது..

திருஞானசம்பந்தர்: அன்பர்களே.. ஆலயம் ஏன் அடைபட்டிருக்கிறது?

அன்பர்கள்: மறைகள் ஆதிகாலத்தில் இறைவனை வழிபட்டு .. கதவினை மூடிவிட்டுச் சென்றன.

அவைகளைத் திறக்க இயலவில்லை.

திருஞானசம்பந்தர்: அப்பரே.. நாம் இந்த கதவைத் திறந்து வேணிபிரானை வழிபட… நீங்கள் பதிகம் பாடி திறந்தருள வேண்டும்..

Image result for திருவருட்செல்வர்:

ஆளுடைபிள்ளையாரே.. உங்கள் கருத்துப்படியாகட்டும்..

பதிகம் பாடினார்:

‘பண்ணின் நேர் மொழியாள்’ ….

கதவு திறக்கவில்லை.

திருநாவுக்கரசர் (கலக்கத்துடன்) இன்னொரு பதிகம் பாடுகிறார்:

’இறக்க மொன்றுவீர்’….

அந்தப்பாடல் முடிவில் கதவு தாள் திறந்தது..

இறைவனைத் தரிசித்து வெளியே வரும்போது.

திருநாவுக்கரசர்: திருஞானசம்பந்தரே … இந்தக் கதவு மூடிட நீவிர் பதிகம் பாடவேண்டும்…

திருஞானசம்பந்தர்: உத்தமம்..

ஒரு பதிகம் பாடினார்.

கதவு உடனடியாக மூடிக்கொண்டது..

அதுவும் பாடல் பாடத் துவங்கிய உடன்..

அனைவரும் மகிழ்ந்தனர்…

அனைவரும் மடத்திற்குச் சென்றனர்.

திருநாவுக்கரசர் படுத்துக்கொண்டார்.

உறக்கம் வரவில்லை..

மனது அடித்துக்கொண்டது..

ஞானத்தின் சிகரத்தைத் தொட்டாலும்.. மனித மனது ..அது உணர்ச்சிகளால் .. அலைபாய்ந்தது..

திருநாவுக்கரசர் (மனதுக்குள்): நான் முயன்று இரண்டு பாடல் பாடிய பின்தான் இறைவன் கதவு திறக்க அருளினார். இவர் ஒரு பாடல்… அதுவும் பாடத் தொடங்கிய உடனேயே கதவு மூடியதே!

சிவன் அவர் கனவில் ‘வாகீசா! நாம் திருவாய்மூரில் இருப்போம்.அங்கு வா!’ என்றார்.

திருநாவுக்கரசர் விழித்துக்கொண்டார்.

இரவோடு இரவாக … திருஞானசம்பந்தரை எழுப்ப மனமில்லாது.. கிளம்பிச்சென்றார்..

வழியில் உருவாகியிருந்த பொற்கோயிலை அடைந்து… எம்பெருமானைக் காணாமல் … அங்கே துயின்றார்.

மறுநாள் காலை திருஞானசம்பந்தர் விஷயம் அறிந்து அந்தக் கோயில் சென்று திருநாவுக்கரசரைசந்தித்தார்.

அங்கு இருவருக்கும் கயிலைபெருமான் காட்சியளித்தார்.

பின்னர் இரு ஞானமூர்த்திகளும் பிரிந்து சென்றனர்..

நமது நாடகம் முடிந்தது.

 

தலங்கள் பல கண்டார்.

வயதோ முற்றியது…

மெல்ல நடந்து..தெலுகு நாடு, மாளவம் கடந்து காசி சென்றடைந்தார்.

அங்கிருந்து கயிலை செல்ல நடக்கலானார்.

நடந்து.. நடந்து…அவரது பாதம் தேயத்தொடங்கியது…

பாதம் உதிரம் கொட்டியது..

கைகளை ஊன்றி தத்தி நடந்தார்..

கரங்களும் தேய்ந்தது..

மார்பினில் தவழ்ந்தார்.

மார்பும் தேய்ந்து – எலும்புகள் முறிந்தது..

உருண்டு சென்றார்..

செயலற்று வீழ்ந்தார். 

அங்கு சிவபெருமான் அவருக்கு அருள் புரிய – அவரது உடல் உறுப்புகள் வளர்ந்து பிரகாசித்தன.

திருநாவுக்கரசர்  :அண்ணலே. கயிலை மீது உங்கள் திருக்கோலம் காண அருளவேண்டும்

அசரீரி : ‘அருகிலிருக்கும் பொய்கையில் நீராடி.. திருவையாறு குளத்தில் எழுந்தருள்”

 

பரமபதம் என்ற விளையாட்டு ஒன்று உண்டு..

கட்டம் கட்டமாக முன்னேறி இலக்கை அடையும் முன்னால் ஒரு பாம்பு கட்டம் அடைந்தால் அது முதல் கட்டத்துக்குத் தள்ளிவிடுமே – அது போல..

மேலும் ‘இறைவனோடு ‘வாதாட முடியுமா?

திருநாவுக்கரசர் பொய்கையில் குளித்து  திருவையாறில் எழுந்தார்.

வாக்களித்தபடி பூங்கையில் கயிலைப்பனிமலைபோல் காட்சியளித்தது..

இறைவனும் அவருக்குக் காட்சியளித்து மறைந்தார்.

சில நாட்களுக்குப்பிறகு திருவையாறு விட்டு திருப்பூந்துருத்தி அடைந்தார்.

பாண்டிய நாட்டில் சமணரை வென்று திருஞானசம்பந்தர் அன்று முத்துச்சிவிகையில் வந்துகொண்டிருந்தார்.

அப்பர் யாரும் அறியாதபடி அவரது சிவிகையைத் தோள்கொடுத்துத் தாங்கி நடக்கலானார்.

திருஞானசம்பந்தர் அங்கு அப்பரைக் காணாமல் :

“அப்பர் எங்கிருக்கிறார்” என்றார்.

திருநாவுக்கரசர் : “அடியேன் தங்கள் சிவிகையைத் தாங்கும் பாக்கியம் பெற்றேன்” – என்றார்.

பதைபதைத்த திருஞானசம்பந்தர் – அப்பர் அடிகளை வணங்குமுன் – அப்பர் அவரை வணங்கினார்.

இருவரும் பரமனை வணங்கிப் பாமாலை சாற்றினர்.

பிறகு திருநாவுக்கரசர் – விடைபெற்று – மதுரை சென்றார்.

அங்கு பாண்டிய மன்னன்- மகாராணி மங்கையர்க்கரசி அவரை வரவேற்று வணங்கினர்.

தான் இந்த உலகில் ஆற்றிய பணி முடியும் காலம் வந்ததை உணர்ந்த திருநாவுக்கரசர்:

‘எண்ணுகேன் என் சொல்லி’ – என்று பதிகம் பாடினார்..

சித்திரைத் திங்கள் – சதய நக்ஷத்திர நாளில் – இறைவனடி சேர்ந்தார்.Image result for திருவருட்செல்வர்

சரித்திரங்கள் இந்த மகாஞானிகளை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறது..

சரித்திர ஏடுகள் அடுத்த கதை சொல்ல ஆயத்தமாகிறது..

விரைவில் சிந்திப்போம்..

 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

திருநாவுக்கரசர்

Image result for திலகவதியார் வரலாறு

Image result for திருவருட்செல்வர்

‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பர்.
அதுபோல் சண்டை போட்டு வென்றவன் சரித்திரத்தில் நாயகன்.
அட .. பொதுவாகச் சொன்னேன்!
சில நாயகர்கள் – ‘இலக்கியவாதி’கள் – காளிதாசன் போல.
சில நாயகர்கள் – ‘பேரழகி’கள் – ஆம்ரபாலி போல.
சில நாயகர்கள் – ‘உலகம் சுற்றும் வாலிபர்’கள்- பாஹியான் போல.
சில நாயகர்கள் – ‘இறையருள் பெற்ற சமயக்குரவர்கள்’ – திருநாவுக்கரசர் போல.
இன்று அவர் தான் நமது நாயகர்.

Image result for திலகவதியார் வரலாறு

இடம்: பல்லவ நாட்டின் திருமுனைப்பாடி.
அங்கு புகழனார்-மாதினியார் என்ற தம்பதிகள்.
அவர்கள் மகள் ‘திலகவதி’!
மகன் ‘மருள்நீக்கியார்’!
திலகவதி பெதும்பையானாள்!
அதாவது 12 வயது அடைந்தாள் என்று எழுதியிருக்கலாம்.
ஆனால் என் தமிழ்ப்புலமையை வேறு எங்கு காட்டுவது?
திலகவதி மணப்பருவம் அடைந்தாள் (அந்தக்காலத்தில்!)
மணமகன் – பல்லவ நாட்டு சேனாதிபதி ‘கலிப்பகையார்’!
திருமணம் நிச்சியக்கப்பட்டது.
பல்லவ நாட்டில் அனுதினமும் யுத்தம்.
கலிப்பகையார் யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில்…
தந்தை புகழனார் மரணமடைந்தார்..
தாயார் மாதினியாரும் காலமானார்.
மக்கள் இருவரும் துவண்டனர்..
இடி மேல் இடி இடித்தது..
போர்க்களத்திலிருந்து மரணமென்னும் தூது வந்தது.
கலிப்பகையார் வீர மரணமடைந்த செய்தி.
மணமாவதற்கு முன் மரணம்.
திலகவதி.. துடித்தார்…
‘இனி வாழ்வில் அர்த்தம் இல்லை’ என்று துவண்டார்.
தன்னைக் கைம்பெண்ணாகக் கருதினார்.
சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி!
திலகவதி உயிர் துறக்க முடிவு செய்தார்.
பாலகன் மருள்நீக்கியார் அழுதான் :
“அக்கா! நீயும் போவதானால்.. பின்னே எனக்கு யாரும் இல்லை. நான் உனக்கு முன்னே போகிறேன்”
திலகவதி:
“தம்பி! உனக்காக நான் வாழ்வேன்”.
மாறாத துன்பங்களைச் சந்தித்த மருள்நீக்கியார் – பற்றற்ற வாழ்வுக்கான வழி தேடினார்.
அந்நாளில் சமணசமயம் ஓங்கிக்கிடந்தது.
ஈர்க்கப்பட்ட மருள்நீக்கியார் – சமணத்தைப் பயின்று பெரும் புலமை கொண்டார்.
சமணத்தில் ஆழ்ந்த அவருக்கு ‘தருமசேனர்’ என்று பட்டமளித்தனர்.
தமக்கையார் திலகவதியார் பெரும் சிவபக்தை…
தம்பி – சிவமார்க்கத்தை விட்டுச் சென்றது அறிந்து – வருந்தினார்.

 

மருள்நீக்கியார் திடீரென்று சூலை (வயிற்று வியாதி) நோயால் பாதிக்கப்பட்டார்.
பெரும் வேதனையில் துடித்தார்.
தனக்குத் தெரிந்த சமண மருத்துவங்கள் செய்துபார்த்தார்.
ம்ஹூம்.
சமண மருத்துவர்கள் குணப்படுத்த முயன்றனர்.
வேதனை மேலும் கூடியது.
தணல் மேல் நீந்தும் புழுவென துடியாய்த் துடித்தார்.
மயங்கி விழுந்தார்.
சமணக்குருமார்கள் மயில்பீலியைக் கொண்டு தடவி – மந்திரித்த குண்டிகை நீரைக் குடிக்கச்செய்து வைத்தியம் செய்துபார்த்தனர்.
வைத்தியம் பலிக்காமல் – அவர்கள் கம்பி நீட்டினர்.
மருள்நீக்கியார் தமக்கை திலகவதியிடம் சென்றடைந்தார்.
“அக்கா. உயிர் போகிறதே” – என்று அலறிப் புலம்பினார்.
திலகவதி: “சிவபெருமான் உன்னை சோதனை செய்து ஆட்கொள்ளவே இந்த நோய் தந்தார் போலும். அவரைத் தியானித்து இந்தத் திருநீறு அணிந்து… சிவனைப் போற்றிப் பாடுவாய்”- என்றாள்.
சிவாலயம் அடைந்து சிவலிங்கம் முன் அமர்ந்து ‘கூற்றாயினைவாறு விலக்கலீர்’- என்று பதிகம் பாடினார்.
உடனேயே.. நோய் நீங்கியது.

வானில் ஒரு அசரீரி: ”நாவால் இனிய தமிழ்ப்பாடல் பாடினை. இனி நீ நாவுக்கரசன் என்றழைக்கப்படுவாய்”
மருள்நீக்கியார் … திருநாவுக்கரசர் ஆனார்.

அவரது சைவத்தொண்டு துவங்கியது..
கதை இங்கு முடிந்தது என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
இங்கு தான் நம் கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’.
ஆக்ஷன் சினிமாபோல ஒரு திரைக்கதை விரிகிறது!

சமணமதகுருக்கள் வெகுண்டனர்.
‘துரோகி’ – என்று திருநாவுக்கரசரைத் தூற்றினர்.

அரண்மனையை அடைந்து மன்னன் மகேந்திரவர்மனைச் சந்தித்தனர்.
மன்னன் சமணனாயிற்றே!

“அரசே.. தருமசேனர் தனக்கு சூலை நோய் என்று பொய் சொல்லி – நமது மதத்தை விட்டு விட்டு.. சைவனாகினார்”- என்று புலம்பினர்.
மன்னன் அமைச்சரை அழைத்து தருமசேனரை அழைத்துவர ஆணையிட்டான்.
அமைச்சர் திருநாவுக்கரசரை அணுகி :
“மன்னர் மகேந்திரனின் கட்டளை – உங்களை உடனே அழைத்து வர”

திருநாவுக்கரசர்: “நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்…” என்று பதிகம் பாடி – வருவதற்கில்லை என்றுரைத்தார்.
அமைச்சர் மனம் நெகிழ்ந்து.. அவர் தாள் பணிந்து :”தயவு செய்து வந்தருள வேண்டும்” – கெஞ்சினார்.
திருநாவுக்கரசர் அன்புக்குப் பணிந்து உடன் சென்றார்.

பல்லவன் சபை.
சமண குருக்கள்: “மன்னா.. வெண்ணீறு அணிந்த இவனை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளவேண்டும்”.
மன்னன்: “அவ்வாறே ஆகட்டும்”
திருநாவுக்கரசரை எரியும் நெருப்பில் இருந்த சுண்ணாம்புக் காளவாயில் தள்ளினர்.
சூரியனைப் போல சுட்டெரித்த தீ!
அது..
நிலவின் அடியில் வீசும் இளவேனில் தென்றல்போல் அவருக்குக் குளிர்ந்தது..
‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ – என்று பதிகம் பாடினார்.

ஏழு நாட்கள் கடந்தபின் – மன்னன் ஆணைப்படி – சமணகுருக்கள் நீற்றறையைத் திறந்தனர். திருநாவுக்கரசர் புன்முறுவலுடன் சுகமாக இருந்தார்.

ஆத்திரம் பொங்க சமணகுருக்கள்- மன்னனிடம் சென்று:
“மன்னா.. இவன்.. சமண மந்திரங்களைக் கூறி சாவிலிருந்து தப்பினான். இவனை நஞ்சிட்டுக் கொல்லவேண்டும்” – வேண்டினர்.
பல்லவன் : “அப்படியே செய்யுங்கள்” என்றான்.
அவர்களும் திருநாவுக்கரசரை நஞ்சு கலந்த பாற்சோறு அருந்த வைத்தனர்.
நஞ்சே அமுதமாயிற்று.
சமணர்கள் நிலைகுலைந்தனர்.

Image result for அப்பர் படம்
மன்னரிடம் சென்று:
“இவனை மத யானையால் இடறச்செய்து கொல்லவேண்டும்”- என்றனர்.
பல்லவன்: “சரி”
மதயானை திருநாவுக்கரசர் மீது ஏவிவிடப்பட்டது..
திருநாவுக்கரசர் சிவனை சிந்தையிலிருத்தி : “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்”- என்று துவங்கி “அஞ்சுவது யாதொன்றுமில்லை.அஞ்ச வருவதுமில்லை “ என்று முடியுமாறு பதிகம் பாடினார்.
மதயானை சமணர்களைத் துரத்தி …பலரைக் கொன்றழித்தது.
தன் வினை தன்னைச் சுடும்!

எஞ்சியவர்கள் மன்னரிடம் சென்றனர்.
மன்னன் சமணர்களை வேண்டாவெறுப்பாகப் பார்த்தான்.
‘இனி என்ன”- கர்ஜித்தான்.
சமணர்கள் “தருமசேனரைக் கல்லில் கட்டிக் கடலில் செலுத்தவேண்டும்”.

Related image
மன்னன்: “இதுவே கடைசி முறை.. “-எச்சரித்தான்.
கல்லில் கட்டிக் கடலில் படகில்சென்று திருநாவுக்கரசரை கடலில் தள்ளிவிட்டுத் திரும்பினர்.
‘சொற்றுணை’ என்று தொடங்கி ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ – என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார்.
உடனே கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்தது…கல் தெப்பமாயிற்று… வருணன் – காற்றை கரை நோக்கி வீச…கரை சேர்ந்தார்.
மனிதர்குலத்தை கரை சேர்க்கப் பிறந்தவர் … சுகமாகக் கரையேறினார்!

இரண்யன் பிரகலாதனை செய்ததுபோல … மகேந்திரன் திருநாவுக்கரசரை செய்தான்..
நரசிம்மர் பிரகலாதனைக் காத்து … இரண்யணைக் கோபித்து அவனைக் கிழித்தார்..

சிவபெருமான் திருநாவுக்கரசரைக் காத்து… மகேந்திரனுக்குப் பாடம் புகட்டினார்.
அன்பே சிவம்!!

வைணவ ரசிகர்கள் கோபப்படவேண்டாம்! 

 

Image result for அப்பர்

மகேந்திரன் – திருநாவுக்கரசரின் மகிமை அறிந்து… சமணர்களைத் துரத்தினான்

திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவதிகை அடைந்தார்.
கேள்வியுற்ற மகேந்திரன் .. நால்வகைப்படையுடன் மங்கல வாத்தியம் முழங்க திருநாவுக்கரசரின் பாதங்களைப்பற்றி.. வணங்கி.. பிழை பொறுத்தருள வேண்டினான்.

திருநாவுக்கரசர் பல்லவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து திருவெண்ணீர் அளித்தார்.

மகேந்திரவர்மன் அன்றிலிருந்து சைவனானான்!

இந்தியாவின் சரித்திரத்தில்.. சமணம் மெல்ல அழியத் துவங்கியது..

இந்தக்கதைக்கு இங்கு ‘இடைவேளை’ நேரம்!

நமது சூப்பர் ஸ்டார் திருநாவுக்கரசர் கதை…

 

(தொடரும்..)

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

மகேந்திரவர்மன்

 

Image result for மஹேந்திர பல்லவன்

சரித்திரத்தில் பொதுவாக – ஒரு காலகட்டத்தில் – ஒருவன் பெருநாயகனாக இருப்பான் – அருகில் இருக்கும் மன்னர்கள் அவனிடம் தோற்றிருப்பர் – அல்லது அடங்கியிருப்பர்.

ஒரு சிறு கற்பனை செய்து பாருங்கள்: அலெக்சாண்டர் – ஜூலியஸ் சீசர் – சமுத்திர குப்தன் அனைவரும் ஒரே சமயத்தில் ஆண்டால்?

அது போல ஒரு காட்சிதான் அன்று இந்தியாவில் விரிகிறது…

மகேந்திர பல்லவன் (நரசிம்ம பல்லவன்), இரண்டாம் புலிகேசி , ஹர்ஷவர்த்தனன் – மூவரும் ஒரே சமயத்தில் ஆண்டு – போரிட்டு – பெருமையுடன் நாட்டையும் ஆண்டனர். ஒவ்வொருவரும் ஒரு நாயகர்தான்.

ஒவ்வொருவரும் சரித்திர நாயகர்தான்.

இவ்விதழில் நமது நாயகர் ‘மகேந்திரவர்மன்’.

Image result for harsha pulikesi and mahendra varman

 

சண்டை சமாச்சாரங்களை முதலில் ஆராய்வோம்:

சாளுக்கிய – பல்லவ யுத்தங்கள் எப்படி நடந்தன என்பதுபற்றிப் பல கருத்துக்கள் – மாறுபட்ட கருத்துக்கள் – சரித்திரத்தில் – தாறுமாறாகச் சிதறிக்கிடக்கிறது.

சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தான். அய்ஹொளே கல்வெட்டு,  ‘அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்கவந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச்செய்தது. புலிகேசியின் பெரும்படைக் கடலைக்கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்துகொண்டான்.’- என்று கூறுகிறது. புலிகேசியை காஞ்சி அருகில் வரும்வரை விட்டுவிட்டதால் அது ஒரு தோல்வி என்று ஒரு கூற்று.

புலிகேசியை காஞ்சிக்கருகில் வரவிட்டு – மகேந்திரன் – அவனைத் துரத்தினான் –என்பது பல்லவர் கூற்று. ( பின்னாளில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது). புலிகேசியை காஞ்சிவரையில் வரவிட்டு – அவனைத் துரத்தியது ராஜதந்திரம் என்பது பல்லவர் கூற்று.

சாளுக்கியன் கல்வெட்டு:

Image result for mahendra varman

 “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாதாயிற்று.  புலிகேசியும் பல்லவப் பனியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” –என்கிறது.

காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினான். போர் நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. தன் நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றிவளைத்துக்கொண்டான்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருந்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான்.

கங்க அரசனான துர்விநீதன் புலிகேசியுடன் சேர்ந்து மகேந்திரனுடன் போரிட்டான். துர்விநீதன் காடுவெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுக்கட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா’வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர்செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்”  என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத் தம்பி மகன்; கங்க-துர்விநிதனுக்கு மகள் வயிற்றுப்பேரன். எனவே அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும். அப்பொழுது நடந்த போர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.

சரி! சண்டை போதும்.

சமயத்துக்கு வருவோம். சமயத்தில் அன்று தென்னிந்தியாவில் பெரிய திருப்புமுனை ஏற்பட்ட காலம். சமணமதம் கோலோச்சி வந்த காலம்.

மன்னர்கள் பெரும்பாலோர் சமணத்தை ஆதரித்த காலம்.

சிம்மவிஷ்ணு வைணவத்தை ஆதரித்தாலும் – மகேந்திரன் பட்டத்துக்கு வந்தவுடன் சமணத்தைத் தழுவினான்.

சைவத்திருமுறையில் சிங்கமென வந்த திருநாவுக்கரசர் மகேந்திரனின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக்

கொண்டுவந்தார்.

அது என்ன?

 

சைவசமயம்  மறுபிறப்பு அடைந்த பொற்காலம் பிறந்தது.

மகேந்திரன் அதற்குப் பெரிய காரணமாயிருந்தான்.

 

மகேந்திரன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன்.

இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன்.

சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன்.

Related image

மகேந்திரன் மாமல்லபுரத்தில் செய்தது என்ன?

நாடகத்துறையில் மகேந்திரன் செய்தது என்ன?

என்ன என்ன என்ன?

 

விரைவில்..

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சிம்மவிஷ்ணு

Related image

தென்னிந்தியாவில் பல மன்னர்கள் கி பி 500 லிருந்து 600 ஆண்டுகள் ஆண்டனர்.

அவர்கள்…

பல்லவர், சாளுக்கியர், ராக்ஷ்ட்ரகூடர், கங்கர், களப்பிரர், சேரர், சோழர், பாண்டியர்- என்று பலர்.

அவர்கள் – கலை உணர்வுடன் கோவில்கள், சிற்பங்கள் அமைத்தனர்.

சைவ – வைணவ மத இலக்கியங்களை ஆதரித்து வளர்த்தனர்.

தோள்கள் தினவெடுத்து அருகிலிருந்த நாட்டின்மீது படையெடுத்தனர்.

தோற்றவர்கள் பதுங்கிப் பின் சமயம் கனிந்ததும் வென்றவன் நாட்டில் படையெடுத்தனர்.

பழிக்குப் பழி!!

இரத்தத்திற்கு இரத்தம்!

கூட்டணி அமைத்து –  கொடி பிடித்து – வாள் வீசி – ஒருவரை ஒருவர் கொன்றனர்.

மக்கள் நிம்மதியைக் கண்டிலர்.

 

இந்த சரித்திரப் பாடலுக்கு…

பல்லவன் பல்லவி பாடட்டுமே!

 

சரித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழும்போது … சில நாயகர்கள் அதற்குக் காரணமாயிருப்பர்.

களப்பிரரின் இருண்ட காலத்தை அழிக்கவந்து…சூரியன்போல ஒளியேற்றியவன் – பல்லவ நாட்டில் சிங்கமாக வந்த அந்த அரசன்…

மாவீரன்!

அவன் பெயரோ ‘சிம்ம விஷ்ணு’!

தந்தையோ சிம்ம வர்மன்!

பேரனோ நரசிம்மன்!

சிங்கம், சிங்கம்2, சிங்கம்3!!

கடிக்காமல்…கதைக்குச் செல்வோம்!

(மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறியப்படுகிறது. நன்றி: விக்கிபீடியா )

  

கி பி : 575

அந்த நாள் …

சிம்ம விஷ்ணு அரசனான நாள்..

அது ஒரு பிரம்மாண்டமான முடியேற்கும் விழா அல்ல..

எளிய முறையில் நடந்த விழா…

முடியேற்றவுடன்… சிம்ம விஷ்ணு – மந்திரிகள் மற்றும் படைத்தலைவரை அழைத்து:

“நமது பல்லவ நாடு … இன்று ஒரு எலிவளைபோல் சிறியதாக இருக்கிறது…

நமது கண்ணான காஞ்சி இன்று நம்மிடம் இல்லை.

நமது பெரும்பாட்டனார் குமாரவிஷ்ணு காலத்தில் அடைந்த காஞ்சியை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.

காட்டில் சீதாதேவியைத் தொலைத்த ஸ்ரீராமனின் மனநிலையில்தான் நான் உள்ளேன்.

சாளுக்கியர்,கங்கர், களப்பிரர், சோழர், பாண்டியர் – இவர்கள் நம்மை நெருக்கி .. சுருக்கிவிட்டனர்.

கம்பளிப்பூச்சிபோல் நாம் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம்.

வண்ணத்துப்பூச்சி போல நாம் சுதந்திரமாகப் பறந்து … பருந்துபோல உயர்ந்து… இவர்களை வென்று  நமது பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவவேண்டும்..

கலை, மற்றும் கவிதை, சிற்பம், ஓவியம், கோவில் என்று நாட்டை அலங்கரிக்கவேண்டும்.”

பேசிக்கொண்டே கனவு நிலையை அடைந்தாலும் … அவன் குரலில் இரும்பின் உறுதி தெரிந்தது..

“இன்றே படைதிரட்டி … காஞ்சியில் இருக்கும் களப்பிரனைத் துரத்தி…ஓடவைக்கவேண்டும்”.

படை பல திரண்டது…

நாட்கள் சில உருண்டது..

களப்பிரர் உள்ளம் மருண்டது…

காஞ்சி சிம்மவிஷ்ணுவின் வசப்பட்டது…

ஓடிய களப்பிரப் படையைத் துரத்தி – காவிரி ஆற்றுவரை சென்று… சோழர்களையும் வென்றான்.

அதில் களப்பிரர்களுடன் அவர்களது கூட்டாளி மழவ மன்னனையும் தோற்கடித்துத் துரத்தினான்.

களப்பிரர்களது ஆட்சிக்கு அது அஸ்தமன காலம்…

தென்னாட்டில் இருந்து பாண்டியன் கடுங்கோன் வேறு – படையெடுத்து – களப்பிரர்களை சிட்டெறும்புபோல அழித்தான். எஞ்சிய களப்பிரர்கள் தஞ்சையில் ஒடுங்கினர்.. வெகு விரைவிலே ‘ விஜயாலய சோழன்’ அவர்களை தஞ்சையிலிருந்து துரத்துவான்..

 

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில்:

“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது.

இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”

இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில்:

“இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”

 

வெற்றியாளனாக இருந்த சிம்மவிஷ்ணு காலத்தில் மற்ற அரசர்களும் சக்திகொண்டே விளங்கினர்:

சாளுக்கியநாட்டில் இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642வரை ஆண்டான். கங்கநாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டுவந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். நாசிக்கிலும் வேங்கிநாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.

 

காஞ்சியில் இன்னொரு அரசவைக் காட்சி:

சிம்மவிஷ்ணு புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் ஒரு புலவன் அவைக்களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப்பற்றிய பெருமாள் துதி ஒன்றை வடமொழியில் பாடினான். அதில் இருந்த சொல்லழகும் பொருளழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி:

”இதனை இயற்றியவர் யார்?” என்று ஆவலோடு கேட்டான்.

பாடகன்: “மன்னா! வடமேற்கே அனந்தபுரம் என்னும் ஊரில்  நாராயணசாமி என்பவரது மகன்   தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர்கொண்டார். அப் புலவர் இன்று (கங்க அரசனான) துர்விநீதன் அவையில் இருந்துவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும்புலவர் பாடியதே ஆகும் என்றான்.”

சிம்மவிஷ்ணு: “ஆஹா…எனது மகன் மகேந்திரனுக்கு இன்று மகன் பிறந்துள்ளான். இந்த நரசிம்ம துதி என் மனதை உருக்கிவிட்டாது.. என் பேரனுக்கு நரசிம்மன் என்று பெயர் வைக்கிறேன். அவனது நாட்களில் பல்லவநாடு உன்னத நிலையை அடையும்..”

 உடனே சிம்மவிஷ்ணு ஆட்களை அனுப்பி பாரவியைத் தன் அவைக்கு வருமாறு வேண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து .. புலமையால் அரசனை மகிழ்வித்து, பாக்கள் இயற்றினார்.

 

சிம்மவிஷ்ணுவின்  மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளான்:

“சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலைபோன்றவன். நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்;வீரத்தில் இந்திரனைப்போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.அவன் அரசர் ஏறு”

 

பின்னாளில் தண்டி என்ற வடமொழிப்புலவர் எழுதிய ‘அவந்தி சுந்தரி’ என்ற கதையில்:

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்”

Image result for சிம்மவிஷ்ணு

(மகேந்திரவர்மன் கட்டிய சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்)

சிம்ம விஷ்ணு சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்தான். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.

இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் போலும். வாகாடகர் அஜந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டு – அந்நினைவு கொண்டே மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருத்தனர் போலும்.

 

சாம்ராஜ்யங்கள் தோன்றுகின்றன.

சாம்ராஜ்யங்கள் மறைகின்றன.

களப்பிரர் அழிந்தனர்.

பல்லவர் துவங்கினர்…

சில நிகழ்வுகள் கல்லிலோ, எழுத்திலோ பொறிக்கப்பட்டு சரித்திரமாகிறது…

ஆனால் – பல சுவையான நிகழ்வுகள் மௌனமாக நடந்து முடிந்திருக்கலாம்… அவை சரித்திரத்திலிருந்து நழுவியிருக்கலாம்..

என்றோ ஒரு நாள் அந்த சரித்திர ஆதாரங்கள் கிடைக்கலாம்…

இனியும்…

கண்ணில் எண்ணைவிட்டு சரித்திரத்தைத் தேடுவோம்.

 

 

சரித்திரம் பேசுகிறது – “யாரோ”

மயூரவர்மன்

MayurasharmaPic.jpeg

வலை போட்டுத் தேடுகிறோம்.
நாயகனோ, நாயகியோ யாரும் தென்படவில்லை!
குறுநில மன்னர்கள் இந்தியாவை ஆயிரம் துண்டுகளாக்கி அரசாண்டு வந்தனர்!
சதவாஹனர், களப்பிரர்கள் என்று பலர் தென்னிந்திய ராஜ்யங்களை ஆண்ட காலம்.

இந்த இடத்தில் ‘இடைவேளை’ என்று சினிமாவில் வருவதுபோல் நாமும் போட்டிருக்கலாம்.

ஆனால் நாம் அப்படிப்போட்டுவிட்டு .. நமது கோடிக்கணக்கான வாசகர்கள் கொதித்தெழுந்து விட்டால்?
எதிர்த்து … உண்ணாவிரதமும் … வேலை நிறுத்தமும் எங்கெங்கும் நடந்தால்?
நகர்கள் பற்றியெரிந்தால்?.
தமிழகம் ஸ்தம்பித்துப் போனால்?
நமக்கெதற்கு வம்பு.
அவர்களுக்கு மரியாதைகொடுத்து நாம் தொடர்ந்து கதைப்போம்.
(சரி.. நமது கற்பனையை சரித்திரத்தோடு நிறுத்திக்கொள்வோம்) ???

நெல்மணி சிறியதுதான் – ஆனால் மணிகளைச் சேர்த்தால் அது ஒருவேளைக்கான உணவாகுகிறது.
அதுபோல் பல சிறுகதைகள் நெல்மணிபோல் சரித்திரத்தில் சிதறிக் கிடக்கின்றது.
அவற்றைச் சேகரிப்போம்.
விருந்து சமைப்போம்!
“மீல்ஸ் ரெடி”!

கி பி 350

சற்றே பின்னோக்கிச் செல்வோம்.

பல்லவர்களை முதற்காலப் பல்லவர், இடைக்காலப் பல்லவர், பிற்காலப் பல்லவர் என்று பிரிக்கலாம். 

மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் பிற்காலப் பல்லவர்கள் காலம்.

இந்த கதை முதற்காலப் பல்லவர் காலத்தில் துவங்குகிறது.

பப்புதேவன் என்பவன் பல்லவர் ஆட்சியைத் துவங்கினான்.

அவன் மகன் சிவஸ்கந்தவர்மன் மன்னனாகிக் காஞ்சியைத் தலைநகராக்கி, ‘தர்ம மகா ராசாதிராசன்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டான்.  அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்னும் பெருவேள்விகள் செய்தான். அவன் மகன் இளவரசன் விஷ்ணுகோபன்.  தெற்கே களப்பிரர் … மேற்கே பல மன்னர்கள்… அவமுக்தாவின் நீலராஜன்…வேங்கியின் ஹஸ்திவர்மன். நாடுகளில் ஓரளவுக்கு அமைதி நிலவிவந்தது.

இன்றைய ஷிமோகா …அருகில் தளகுண்டா…

அங்கு மயூரசர்மா என்று ஒரு இளைஞன்!

ஏழ்மைக் குடும்பம்.

பிராமணக் குலம்.

இருபது வயது.

குழந்தைபோல் முகம்.

இரும்புக் கம்பிகளால் செய்ததுபோல் உடல்.

படித்த பாடங்களை உடனே கிரகித்துக்கொள்ளும் பெரும் அறிவு.

அவனது தாத்தா.. இந்தப் பேரனுக்கு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்பினார்.

காஞ்சி நகரப் புகழ் அன்று எங்கும் பரவியிருந்தது.

காஞ்சியின் பல்கலைக்கழகமும் பெரும் பிரசித்திபெற்றிருந்தது.

பாட்டனார் பேரனைக் காஞ்சிக்கு அழைத்துவந்தார்.

மயூரசர்மா வேதம், உபநிஷதம் பாடங்களைக் கற்க ஆரம்பித்தான்.

அதே பள்ளியில் மல்யுத்தம்-குத்துச்சண்டைப் பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டது.

அதைக் காணும்பொழுதெல்லாம் மயூரனுக்குத் தானும் அதைக் கற்கவேண்டுமென்று பேராவல்.

இன்று இந்தியாவில் கிரிக்கெட் எப்படியோ அன்று காஞ்சியில் மல்யுத்தம்.

காஞ்சியின் மல்லர்கள் நாட்டின் புகழ்பெற்ற வீரர்கள்.

மல்லர்களது குருவிடம் அணுகித் தன் இச்சையைத் தெரிவித்தான்.

பிராமணனுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுப்பதில்லை – என்றார் குரு!

மயூரன் ஆசையில் இடிவிழுந்தது.

அவன் ஏகலைவனானான்.

சக மாணவர்கள் மல்யுத்தம் மற்றும் போர்புரியும் முறைகளைக் கற்றுக்கொள்வதை – மறைந்திருந்து பார்த்தே பழகிக்கொண்டான்.
அறிவும் – பலமும் சேர்ந்ததால்…விரைவிலேயே மயூரன் சக்திகொண்ட மல்லனானான்.

காஞ்சியில் மல்லர் திருவிழா …ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடக்கும்.
கிரிக்கெட் வேர்ல்ட்கப் போல!!

அதில் மல்யுத்தப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

மயூரன் பல மல்லர்களை வென்றான்.

காஞ்சி மக்கள் பெரும் ரசிகர்கள்.. இவனது அழகையும், வீரத்தையும் பாராட்டி ஆரவாரித்தனர்.

முடிவில்.. காஞ்சியின் தலைசிறந்த மல்லனுடன் ‘இறுதிச்சுற்று’ போட்டி!

மக்கள் அலைஅலையாகத் திரண்டிருந்தனர்!

இளவரசன் விஷ்ணுகோபன் அரங்கில் – அரியணையில் அமர்ந்து இருந்தான்.

மயூரன் வென்றான்…

மக்கள் கரகோஷம் வானைப் பிளந்தது.

விஷ்ணுகோபன் முகம் கறுத்தது.

‘எங்கிருந்தோ வந்த பரதேசி … எனது சிறந்த மல்லனை வெல்வதா’!

நான்கு சிறந்த குதிரை வீரர்களை அழைத்து, ‘மயூரனுக்கு ஒரு பாடம் சொல்லி வாருங்கள்’ என்றான்..

அவர்கள் புரிந்துகொண்டனர்…

(உங்களுக்குத் தெரியாதா என்ன அதன் பொருள்?  எத்தனை சினிமாவில் நம்பியார் செய்திருப்பார்!)
ஆனால் மயூரன் எம் ஜி ஆர் போல்!

குதிரை வீரர்களிடமிருந்து தப்பினான்.

ஆனால் குதிரை வீரர்கள் உதிர்த்த அவமானச்சொற்கள் அவன் மனத்தைக் காயப்படுத்தின.

விஷ்ணுகோபனும் ‘பல்லவ நாட்டில் பிச்சை எடுக்க வந்தவன் பிச்சையோடு போகவேண்டியது தானே’ என்றான்!

மயூரன் தன் வாளை உயர்த்தி:

‘இளவரசே! வாளுக்குக் குலம் தெரியாது.. தொழில் தெரியாது. வீரமும் வலிமையும்தான் தெரியும். இந்த அவமானத்திற்கு என் வாள்மூலம் பதில்சொல்கிறேன்’ என்றான்.

அன்று தென்னிந்தியாவிலேயே வாட்போரில் தலை சிறந்தவன் என்று பெயரெடுத்திருந்தான் விஷ்ணுகோபன்.

பெருஞ்சிரிப்புடன் தன் வாளை உயர்த்திய இளவரசனின் சிரிப்பு வெகு விரைவில் மறைந்தது!

முகம் வேதனையில் துடித்தது.

விஷ்ணுகோபன் தோல்வியுற்றான்!

விஷ்ணுகோபன் மன்னரிடம் சென்று :

“தந்தையே… மயூரன் ஒரு ராஜத்துரோகி..அவனைத் தண்டிக்கவேண்டும்”.

மன்னன் சிவஸ்கந்தவர்மன் மகனது கூற்றை நம்பி, மயூரனுக்குத் தூக்குத் தண்டனை அறிவித்தான்.

செய்தி காட்டுத்தீப்போல காஞ்சியில் பரவியது…

நலம்விரும்பி நண்பர்களின் உதவியால் மயூரன் காஞ்சியிலிருந்து தப்பினான்.

ஸ்ரீ சைலம் காட்டில் அங்கிருந்த காட்டு மனிதர்களைக் கூட்டுசேர்த்து சிறு படைஉருவாக்கினான்.

அப்பொழுதுதான் ஒரு செய்தி வந்தடைந்தது… இடி போல வந்தது.. மன்னர்களது மடிகலங்கியது..

வடநாட்டின் பேரரசன் – குப்தர்களின் இரும்பு மனிதன்.. இந்திய நெப்போலியன்… சமுத்திரகுப்தன் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்துவருகிறான் என்ற சேதிதான் அது..
சமுத்திரகுப்தன் வருமுன்னர் அவனது வெற்றியும் வலிமையும் பீதியைக் (பேதியைக்) கிளப்பியது.

மன்னன் சிவஸ்கந்தவர்மன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தான்.

ஆயினும் வீரத்தில் குறைந்தவனல்லன்.

மகன் விஷ்ணுகோபனை அழைத்தான். அவனும் பொறாமைக்காரனே ஒழிய – கோழை அல்ல.
மன்னன்:

“விஷ்ணுகோபா!  நமது பல்லவ ராஜ்யத்தை இப்பொழுதுதான் ஸ்தாபித்திருக்கிறோம்.. இது பல நூறாண்டு வளர்ந்து புகழ் பெறவேண்டும்.. சமுத்திரகுப்தனின் தீரத்தையும், வீரத்தையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. தனியாக நாம் அவனை வெல்லமுடியாது… அவமுக்தாவின் நீலராஜன், வேங்கியின் ஹஸ்திவர்மன் மற்றும் சாதவாகன ராஜ்யத்திற்குப் பின்னால் வந்த குறுநில மன்னர்கள்அனைவரையும் அழைத்து ஒரு கூட்டணி அமைப்போம்”

மயூரன் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தான்.

சமுத்திரகுப்தன் படை வந்தது… புயலாக வந்தது…தென்னிந்திய மன்னர்கள் திறமையாகப் போராடினர்.

சமுத்திரத்தின் முன் எந்தக் கூட்டணி தாங்கும்..

குப்தன் காஞ்சியை வென்றான்.

சமுத்திரகுப்தன் தென்னிந்திய வீரத்தைக்கண்டு வியந்தான். இந்தப் பகுதியை நம் நாட்டில் சேர்த்துக்கொண்டால் பாடலிபுத்திரத்திலிருந்து இதை ஆள்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தான்.

காஞ்சியில் சிவஸ்கந்தவர்மனைச் சந்தித்தான். சிவஸ்கந்தவர்மன் தெற்கே இருக்கும் களப்பிரர்களைப்பற்றிக் கூறி  அவர்கள் சேர சோழ பாண்டிய அரசுகளை அடக்கிச் சக்தியோடு இருப்பதைக் கூறினான்.

சமுத்திரகுப்தன் அஞ்சாநெஞ்சன்… இருப்பினும்.. அவனும் ‘சரி… இந்த தென்னிந்தியப் பயணம் போதும்’  என்று முடிவுசெய்தான். சிவஸ்கந்தவர்மன்மீது பெரு மதிப்புக்கொண்டான்.

‘பல்லவரே! காஞ்சியை நீங்களே ஆளுங்கள்…’

பல்லவரின் செல்வங்களைமட்டும் எடுத்துக்கொண்டு சமுத்திரகுப்தன் மகதம் திரும்பினான்.

பல்லவர்கள் தோல்வியுற்றுத் தளர்ந்திருந்தனர்.

மயூரன் இதுதான் சமயம் என்று தனது படைகளைத் திரட்டி, காஞ்சிமீது படையெடுத்தான்.

சக்தி குறைந்த விஷ்ணுகோபனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.

மயூரன் காஞ்சி நகரில் தனக்குப் பெரும் அன்பு செலுத்திய மக்களைப் பார்த்தான்.

நெஞ்சு நெகிழ்ந்தது.

காஞ்சிக்கு ஓரழிவும் வாராமல்செய்து திரும்பினான்.

ஸ்ரீ சைலம் அருகில் கன்னட, ஆந்திரப் பகுதிகளைக் கைப்பற்றினான்.

பானவசியைத் தலைநகராகக்கொண்டு தனது கடம்ப அரசாட்சியைத் துவங்கினான்.

நாட்டின் பிராமண சமூகத்தின் வேண்டுகோளின்படி க்ஷத்ரியனாக மாறி…பெயரை மயூரவர்மன் என்று மாற்றிக்கொண்டான். அவன் துவங்கிய கடம்ப ராஜ்ஜியம் 200 ஆண்டுகள் ஆண்டது.

சரித்திரத்தில் மயூரவர்மன் ஒரு சிறிய நெல்மணி.

அது பொன்மணி!

அவனது கதையை சரித்திரம் பேசுகிறது..

வேறு கதைகள்?  விரைவில்…

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

களப்பிரர்கள்

Image result for களப்பிரர்கள்

 

 

குப்த சாம்ராஜ்யம் அழிந்தது.

ஹூணர்களும் அழிந்தனர்.

புயலாகத் தோன்றி மின்னலாக மறைந்தான் யசோதர்மன்!

பேரரசுகள் மறைந்தன… சிற்றரசுகள் துளிர்த்தன…

இந்திய சரித்திரம் – வழி தெரியாமல் … தலைவனில்லாது… நத்தை போல் ஊர்ந்தது…

நாமும் தவிக்கிறோம் … யாரைப் பற்றி எழுதுவது?

சரி … வட இந்தியாவிற்கு இந்த நிலை வந்தது…

என்று… தெற்கு நோக்கிச் சென்று பார்க்கலாம் என்று பார்த்தால்..

அங்கும் இருண்ட காலமாக இருந்தது.

காதல், மானம் , வீரம் என்று சங்கம் சிறப்பித்துப் பாடிய சேர, சோழ , பாண்டியர் எங்கே?

பெட்டிப்பாம்பு?

தென்னகத்தை ஆளும் மன்னர்கள் யார்?

 

கி பி 300- 700:

இருண்ட காலம்?

அது இருட்டடிக்கப்பட்ட காலம் என்று சிலர் கூறுகின்றனர்.

களப்பிரர்  தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பதுபற்றித் தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில்  ஜைன சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்தனர். எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால்..ஒரு முன்னூறு வருட சரித்திரத்தை ஒரு சிலர் அழித்து விட முடியுமா?

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

ஆனால்  என்ன செய்வது – பூசணிக்காயைக் காணவில்லையே!

எதை நம்புவது?

ஒரு வேளை – எதிர்காலம்  இதற்கு சான்றுகள் அளிக்கக் கூடும்.

நாம் அறிந்ததை வைத்து நமது கதையைப் பார்ப்போம்.

Image result for களப்பிரர்கள்

சங்ககால இறுதியில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை, ‘களப்பிரர்’ என்ற பெயர்கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை, தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். அந்த இனக்குழுவினர் எங்கிருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும், சரியாக அறியமுடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், அவர்களைப்பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ, நாணயவியல் ஆதாரங்களோ கிடைக்கவில்லை. 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வேள்விக்குடி’ செப்பேட்டில், களப்பிரர்களைப்பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய அரசனால் வெளியிடப்பட்டது.

சாதவாகனப் பேரரசர் வீழ்ச்சியுற்றபின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலைபெற்று, தனி அரசுகளாகச் செயல்பட்டன.தமிழ்நாட்டின் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலை வாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் தமிழகத்தைத் தாக்கியிருக்கக்கூடும்.

 

ஒன்று மட்டும் தெரிகிறது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

யசோதர்மன்- குப்தருடன் கூட்டு சேர்ந்ததால் சக்தி வாய்ந்த ஹூணர்களையே அழிக்க முடிந்தது.

ஆனால்.. கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் காலத்திற்குப்பிறகு பல மன்னர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழிந்தனர். ஒரு சோழன் மற்றொரு சோழனைக் கொன்றான்.

மேலும் சங்க இலக்கியங்கள் வீரத்தை மிகவும் உயர்த்தி…’சண்டையிட்டால் தான் நீ வீரன்’  என்று பாடி … மன்னர்களை உசுப்பேத்தி அவர்களை அழித்தது!!

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுவது:

இது இருண்ட காலம் அல்ல…

இது ஒரு விடியல் காலம்..

 

களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும் அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும், நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும், மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியவைகளே ஆகும்.

 

ஒரு கதை புனைவோம்…கற்பனை சிறிதுதான் … ஆனால் சரித்திரம் பெரிது..

 

களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் !

எல்லா மன்னர்களும் விக்ரமாதித்யன் என்று பட்டம் சூட்டிக்கொண்டதுபோல் – எல்லா களப்பிர மன்னர்களும் அச்சுதன்தான்!

சேர சோழ பாண்டியர் மூவரையும் போரில் வென்றான்.

மூவேந்தர்கள் தங்கள் வீரத்தை விட்டாலும்…புலமையை மட்டும் விடவில்லை…

அச்சுதன் கூறினான்:

“தமிழ் நாட்டின் மூவேந்தர்களே! கரிகாலன்,செங்குட்டுவன், நெடுஞ்செழியன்  பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்… வீரம் … வீரம் என்று ஆர்ப்பாட்டம்போட்டு உங்களுக்குள்ளே சண்டைபோட்டீர்கள். இன்று உங்கள் வீரம் எங்கே?…உங்கள் புலமை மட்டும் ஒடுங்கவில்லை. நாட்டின் தலை சிறந்த கவிகள் நீங்கள்தான். உங்கள் கவிகளை நீங்கள் பாடவேண்டும்… எனக்கு மகிழ்ச்சி தந்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்கும் …ஆனால் உங்கள் உடல் மட்டும் எனது சிறையில்தான் தங்கும்”.

அட்டகாசமாகச் சிரித்தான்.

அவர்களைத் தளையிட்டு – சிறையிட்டான் – தில்லை நகரில்.

 

இடம்: தில்லை நகர் – அச்சுதன் அரண்மனை…

அச்சுதன் அரியாசனத்தில் வீற்றிருந்தான்.

சிறைத்தலைவன் அரண்மனைக்கு வந்தான்:

“மன்னர் மன்னா! சிறையிலிருந்து செய்திகள்!” – மன்னனிடம் மூன்று ஓலைச்சுவடிகளைக் கொடுத்தான்.

“என்ன சிறைத்தலைவரே இது?”

“மூவரும் … தங்களது விடுதலைக்காக விண்ணப்பித்து எழுதிய கவிகள் இவை”.

அச்சுதன் அதை வாங்கிப் படித்தான்:    

 

சேரன் பாடிய வெண்பா:

தினை விதைத்தார் முற்றம் தினையுணங்கும் செந்நெல்

தனை விதைத்தார் முற்றமது தானாம் – கனைசீர்

முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த்தானை

அரசுணங்கும் அச்சுதன் தன் முற்றத்து.

 

அச்சுதன் மகிழ்ந்தான்:

“ஆஹா! அற்புதம்!சேரனை விடுதலை செய்க”

 மேலும் படித்தான்.

 

சோழன் பாடிய வெண்பா:

அரசர் குல திலகன் அச்சுதன் முற்றத்தில்

அரசரவதரித்த அந்நாள் – முரசதிரக்

கொட்டிவிடும் ஓசையினும் கோவேந்தர் காற்றளையை

வெட்டி விடும் ஓசைமிகும்.

 

அச்சுதன் மகிழ்ந்தான்:

“மகிழ்ச்சி! சோழனையும்  விடுதலை செய்க”

 

சேரனும் சோழனும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு இறைஞ்சி வேண்டியது அச்சுதனை மகிழ்வித்தது. சோழன், களப்பிரனை “அரசர் குல திலகன்” என்றே பாடியது கண்டு – மனம் மகிழ்ந்த அச்சுதக் களப்பாளன் அவ்விருவரையும் உடனே விடுதலை செய்தான்.

 

பாண்டியன் பாடிய வெண்பா:

குறையுளார் எங்கிரார் கூர்வேலி ராமன்

நிறையறு திங்களிருந்தார் – முறைமையால்

ஆலிக்குந்தானை அலங்குதார் அச்சுத முன்

வாலிக் கிளையான் வரை

 

அச்சுதன் மகிழ்ச்சி திடீரென தடைப்பட்டது.

குருவிகளை வேட்டையாடும் கழுகு போல் … முகம் பயங்கரமாக மாறியது.

“எனக்குப் பிடிக்கவில்லை … பாண்டியனின் தளை இன்னொன்று ஏற்றப்படட்டும்”.

சிறைக்காவலருக்கும், மந்திரிமார்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

“பாண்டியன் பாட்டில் என்ன குறை கண்டீர்கள் மன்னா?” – மந்திரியார் வினவினார்.

அச்சுதன் :

“பாண்டியன் சிறைப்பட்டிருந்த நிலையிலும் பெருமிதம் குறையாமல் தன்னை இராமனுடன் ஒப்பிட்டுக் கொண்டு பாடியிருக்கிறான். அதனாலே அவனுக்கு கூடுதல் விலங்கு”!

சிறையில் பாண்டியன் “நமது பெருமிதம் நமது எதிரியாயிற்றே!.. “ – என்று நொந்தான்.

மிகவும் பணிந்து வேறொரு வெண்பா பாடினான் .

“காவலரே! மாமன்னர் அச்சுதனிடம் இந்த வெண்பாவைச் சேர்த்து எனது பணிவைக் கூறுங்கள்”

 

பாண்டியன் பாடிய வெண்பா:

குடகர் குணகடலென்றார்த்தார் குடகர்க்

கிடகர் வடகடலென்றார்த்தார் – வடகடலர்

தென்கடலென்றார்த்தார் தில்லையச்சுதானந்தன்

முன்கடை நின்றார்க்கும் முரசு

 

அச்சுதன் முகமலர்ந்தான்:  “இது.. இது…சரியான பாட்டு… பலே பாண்டியா! உனக்குத் தந்தேன் விடுதலை”

பாண்டியனும் விடுதலை பெற்று ஓடினான்.

 

இந்த பாண்டியன் வம்சத்தில் 300 ஆண்டு காலம் கழிந்து ‘கடுங்கோன்’ என்ற மன்னன் இந்த களப்பிர மன்னனைத் தோற்கடித்து மீண்டும் பாண்டிய ஆட்சியைத் தொடங்குவான். அது போல விஜயாலய சோழனும்  களப்பிர முத்தரையனை தஞ்சையில் வென்று சோழநாட்டை ஸ்தாபிப்பான்.

 

அதுவரை அவர்களுக்கு இருண்ட காலமே!

 

சரித்திரம் இந்தியாவில் அலைகிறது…வேறு என்ன சுவாரஸ்யமான கதைகள் உள்ளன? தேடுவோம்..

 

 

 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

  

குப்தசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களைக் கூறி இரண்டு மதிப்பெண் பெற்றோமல்லவா?
இன்னொரு காரணம் கூறினால் இன்னுமொரு மதிப்பெண் பெறலாம்.
பதில்: யசோதர்மன்.
இது என்ன புதுக்கதை?
சரித்திரம் சொல்வதையே நாம் பேசுவோம்..

குப்த மன்னர்கள் – பூர குப்தன், நரசிம்ம குப்தன், புத்த குப்தன், பாலாதித்யன், இறுதியில் பானு குப்தன்.
இவர்கள் காலத்தில் ஹூணர்கள் இந்தியாவில் படையெடுத்துப் பெரும் வெற்றியும் பெற்றனர்.
இதனால் மட்டுமல்ல – மாளவத்தின் மன்னன் யசோதர்மன் எழுச்சியும் – குப்தர்களின் முடிவுக்கு ஒரு காரணம்.

ஆக.. இந்த யசோதர்மன் யார்?

குமாரகுப்தன் காலத்தில் மாளவத்தை ஆண்டு, கப்பம் கட்டி வந்த மாளவ மன்னன் பந்துவர்மன். இவன் ஔலிகர ராஜ்யப் பரம்பரையைச் சேர்ந்தவன். அந்தப் பரம்பரையில் கி பி 500ம் ஆண்டு பிரகாஷ தர்மனுக்குப் பிறந்தவன் யசோதர்மன்!
யசோதர்மன், ‘விக்ரமாதித்யன்’ என்ற பட்டம் (அந்த கால ‘பாரத ரத்னா’) சூட்டிக்கொண்டான்..
சந்திர பஞ்சாங்கம் ஒன்று ‘விக்ரம் சம்வாத்’ என்ற பெயரில் தொடங்கினான்.
கஜிராகோவில் விஷ்ணு கோவில் கட்டினான்.
இரண்டாம் காளிதாசன் எனப்படும் மகாகவி, யசோதர்மன் அரசவையை அலங்கரித்தான்.
யசோதர்மன் ஆட்சி வடக்கே இமயத்திலிருந்து தெற்கே திருவிதாங்கூர் வரை இருந்தது.
வேறு என்னதான் செய்தான்?
எப்படி நமது ‘சரித்திரம் பேசுகிறது’ அத்தியாயமாக?
மேலே படிப்போம்.
வருடம்: கி பி 532:

ராமன் கதையென்றால் ராவணனின் மகத்துவம்பற்றி அறியவேண்டும்.
ராவணன் சிறந்த சிவபக்தன்….ராக்ஷசன்.
அதுபோல் மிஹிரகுலன் சிறந்த சிவபக்தன்….ராக்ஷசர்களுக்குக் குறைந்தவன் அல்லன்.
மிஹிரகுலன் ஹூணர் தலைவன் தோரமானாவின் மகன்.

(தோரமானா)
தோரமானா, பஞ்சாப் தேசத்தில் ஹூண சாம்ராஜ்யத்தை உருவாக்கி, குப்தர்களுடன் போரிட்டான். கி பி 510 ல் தோரமானா பானுகுப்தனைத் தோற்கடித்தான். மகதத்தை வெல்லும் ஆசையில் படையெடுத்துஅச் சென்ற தோரமானா வாரணாசியில் இறந்தான்.

(ஏரான் பன்றி – தோரமானா கல்வெட்டுகள்)

அவனுக்குப் பின்பு, அவன் மகன் மிஹிரகுலன் ஆட்சிக்கு வந்தான்.
மிஹிரகுலன் 530 வரை ஹூண அரசனாக இருந்தான்.
சகலா நகரை (இன்றைய சியால்கோட்) தலைநகராகக்கொண்டு ஆண்டான்.
பாரதத்தின் பல பகுதிகளை (காந்தாரம், காஷ்மீர்) கைப்பற்றினான். வெற்றிக்குமேல் வெற்றி அவனிடம் வந்து குவிந்தது.

(MIHIRAKULA- By Classical Numismatic Group, Inc. http://www.cngcoins.com, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=61258049)

புத்த சமயப் புத்தகங்கள் சொல்வது:
மிஹிரகுலன் குற்றம் இழைத்தான்!
கொடுமைகள் பல செய்தான்.
பௌத்த தலங்களை அழித்தான்.
பெளத்த விஹாரங்களைக் கொளுத்தினான்.
புத்த துறவிகளைக் கொன்று குவித்தான்.
1600 பௌத்த விஹாரங்களை, ஸ்தூபங்களை மற்றும் ஆசிரமங்களைதித் தரைமட்டமாக்கினான்.
காந்தாரத்திலிருந்து (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்லாயிரம் பிராமணர்களை அழைத்து, காஷ்மீரில் குடியமர்த்தினான்.
மிஹிரகுலன் ஒரு சிறந்த சிவபக்தன்..காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் மிஹிரேஸ்வரர் ஆலயத்தை  கட்டினான். மேலும், மிஹிரகுலனின் நாணயங்களின் பின்னால் ரிஷபச் சின்னமும் திரிசூலமும்,”ஜயது வ்ருஷப” (ரிஷபமே வெல்லும்) ,”ஜயது வ்ருஷத்வஜ” என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

ஒரு காட்சி சரித்திரத்தைப் புரட்டி எடுத்தது:
இடம்: மாளவ நாட்டு தலை நகரம் – அரண்மனை.
வருடம்: கி பி 528
மன்னன் யசோதர்மன் ஒரு மாவீரன்.
27 வயது இளைஞன்.
வீரன் மட்டுமல்ல …
மாபெரும் படைத்தலைவன்..
தனது வீரப் பிரதாபங்களைக் காட்டித் தனது படைகளை ஊக்குவித்து வெற்றிகண்ட மன்னர்கள் சரித்திரத்தில் பல உண்டு.
யசோதர்மன் அந்த ஜாதி!
இளம் வயதிலே மன்னன் ஆனான்.
ராக்ஷச குணம் கொண்ட ஹூணர்களின் அரிப்பு அவன் நெஞ்சை வாட்டியது.
மந்திரிமார்களுடன் மந்திராலோசனை செய்தான்.
யசோதர்மன்:
“அமைச்சர்களே! நாம் இன்று சரித்திரத்தின் விளிம்பில் இருக்கிறோம்.
இந்தியாவை இந்த புல்லுருவிகளிடமிருந்து காப்பது நமது ஒவ்வொருவரது கடமையாகும்.
மாபெரும் குமாரகுப்தனும், ஸ்கந்தகுப்தனும் – இதை முழுமையாக செய்யவில்லை.
அந்த மாமன்னர்கள் காந்தாரத்தைவிட்டு வெகு தொலைவில் இருந்தது – ஒரு காரணம்.
மேலும் அவ்வளவு தொலைவில் இருந்து படைகளை நடத்தியது அவர்கள் நிதி நிலைமையையும் சீரழித்தது.
நம் நாடு ஹூணர்களின் ராஜ்யத்திற்கு அருகில் உள்ளது.
குப்த மன்னன் நரசிங்ககுப்தன் இன்று ஒரு சிறு குறுநில மன்னன் போல ஆகிவிட்டான்.
நாம் தான் ஏதாவது முடிவு செய்ய வேண்டும்..
அதுவும் இன்றே!”
சபையில் பயங்கர மௌனம்..
மிஹிரகுலனைத் தாக்குவதா?
அனைவரது முகமும் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தது.
யசோதர்மன் சிரித்தான்.
“மந்திரிகளே! யசோதர்மன் என்றொரு மன்னன் இருந்தான்.. இறந்தான் என்பதை விட ..
யசோதர்மன் என்றொரு மன்னன் இருந்தான்… ஹூணர்கள் எனும் வியாதியை இந்தியாவிலிருந்து ‘அடியோடு ஒழித்தான் … என்ற பெயர் சரித்திரத்தில் வரவேண்டும்…
அல்லது..
அந்த முயற்சியில் இறந்தான் என்ற பெயர் வரவேண்டும்”
சபையினர் மெய்சிலிர்த்தனர்.
மன்னன் தொடர்ந்தான்:
“அந்த வெற்றியை மாபெரும் தூண் ஒன்று நிறுவி அதில் பொறிக்கச் செய்வேன்… இது சத்தியம்”
சபை அமைதி இழந்தது..
ஆரவாரம் அடைந்தது..
யசோதர்மன்:
“இந்த வெற்றிக்காக நான் இன்னொரு முயற்சி செய்துள்ளேன்.. நரசிங்ககுப்தனை நான் சந்தித்திருக்கிறேன். குப்தா நாடு இன்று சிறியதாக இருந்தாலும் அவனது மனம் பெரியது…திடமானது.. ஸ்கந்தகுப்தன் தொடங்கியதை முடிவுக்குக் கொண்டுவர அவன் துடித்ததை நான் கண்கூட பார்த்திருக்கிறேன். அவன் தாய் மகாராணி இந்த விஷயத்தில் பெரும் உறுதியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பியிருக்கிறேன்”
ஆஹா… ஆஹா … என்று ஆரவாரம் சபையில் அலை மோதியது..
சில காரியங்கள் நடக்கவேண்டும் என்றால் .. அதற்குத் தேவையான அனைத்தும் தானே சேர்ந்து வரும்…
அதுவும் அன்றே நிகழ்ந்தது!
மந்திராலோசனை கதவு மெல்லத் திறந்தது..
படைத்தலைவன் ஒருவன் உள்ளே நுழைந்து மன்னனின் காதில் ஏதோ சொன்னான்…
மன்னன் முகம் மலர்ந்தது..
“மந்திரிகளே … என் ஓலைக்கிணங்கி …குப்த மகாராணியும்… குப்த சேனாதிபதியும் வந்திருக்கிறார்கள்…வீரனே… உடனே அவர்களை அழைத்து வா”.
இருவரையும் ராஜ மரியாதையுடன் வரவேற்று ஆசனத்தில் அமரவைத்தான்.
மகாராணி:
“யசோதர்மா ! உனது வீரத்தையும் துடிப்பையும் நான் நன்கு அறிவேன்… சரித்திரத்தில் முக்கியக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.. நாம் – குமாரகுப்த சக்கரவர்த்தி மற்றும் ஸ்கந்தகுப்த சக்கரவர்த்தி போல பெரும் சக்தி கொண்டவர்கள் அல்ல. இருந்தாலும் நாம் இணைந்து செயல் பட்டால் ஹூணர்களை இந்தியாவிலிருந்து ஒரேயடியாகத் துரத்த முடியும்…”

யசோதர்மன் :
‘மகாராணி! எங்கள் எண்ணமும் அதுவே… தங்கள் சேனாபதியுடன் சேர்ந்து நாங்கள் திட்டமிடுவோம்…சரித்திரத்தில் ஹூணர்கள் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது.”

திட்டமிட்டபடி.. குப்தர் படை கிழக்கிலிருந்து மிஹிரகுலனின் படையைத் தாக்கியது.
அதே நேரம் யசோதர்மனின் படை தெற்கிலிருந்து தாக்குதல் தொடங்கியது.
இந்த கிடுக்கிப்பிடியில் ஹூணர்கள் சிக்கி சின்னாபின்னமாகினர்.
யசோதர்மன் வாள் ஹூணர்களை கொன்று குவித்தது.
ஈசல் கூட்டத்தை நெருப்பு அழிப்பது போல ஹூணர்கள் மாண்டனர்
மிஹிரகுலன் ராக்ஷசன் போல் போராடினான்.
ராம-ராவண யுத்தம்போல தோற்றமளித்தது.
முடிவில் .. மிஹிரகுலன் – யசோதர்மன் தாக்குதலில் பெருங்காயமுற்று வீழ்ந்தான்.

(யசோதர்மன் – மிஹிரகுலன் சண்டைக் காட்சி)

யசோதர்மன் மிஹிரகுலனைஅச் சிறைப்பிடித்தான்.
ஹூண சைன்னியம் ஒழிந்தது…
எஞ்சியது காஷ்மீர் பகுதிக்கு ஓடி ஒளிந்தது…
மாண்டசோர் சிறையில் மிஹிரகுலன் அடைக்கப்பட்டான்.
மாதம் ஒன்று சென்றது.
அரண்மனையில் யசோதர்மன், நரசிங்ககுப்தன், அவன் தாய் மகாராணி பெரும் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
கொண்டாட்டம்!
கும்பலே கொண்டாட்டம்!
யசோதர்மன் மிஹிரகுலனை சிறையிலிருந்து கொண்டு வந்து அரண்மனையில் நிறுத்தியிருந்தான்.
கைகள், கால்கள் கட்டப்பட்டுத்- தூணில் கட்டப்பட்டிருந்தன.
உடலெங்கும் காயங்கள்.
தவறு.
காயங்களில் உடல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அவ்வளவு காயங்கள்.
யசோதர்மன் அவனிருக்கும் இடத்தை நெருங்கினான்.
அவன் பெரும் தலையில் தனது சக்தி கொண்ட கை வைத்து அழுத்தினான்.
அவன் தலை குனிந்தது.
யாருக்கும் தலை குனியாத அந்த ராக்ஷஸத் தலை குனிந்திருந்தது.

யசோதர்மன்:
“சபையோரே, குப்தமன்னரே, மகாராணி அவர்களே!
நமது வெற்றியை இன்று தூண் ஒன்றில் பறைசாற்றிக் கல்வெட்டாகக் குறிக்கிறேன்.”

யசோதர்மனின் ஒரு கல்வெட்டு இவ்வாறு குறிப்பிடுகிறது :
“ஸ்தானுவைத் (சிவபிரான்) தவிர,வேறு எவர் முன்பும் தலை வணங்காத மிஹிரகுலன்..இன்று யசோதர்மன் முன் அவன் தலை சாய்கிறது” .

(யசோதர்மனின் மாண்டசோர் கல்வெட்டு)

(யசோதர்மனின் மாண்டசோர் கல்வெட்டு)

யசோதர்மன் :
“வெற்றியைக் கொண்டாடும் இந்நாளிலே…
இந்தக் கொடியவனுக்குத் தகுந்த தண்டனை தர விழைகிறேன்.
என்ன தண்டனை வழங்கலாம்”
‘மரணம்… மரணம்… ‘ – என்று சபையோர் முழங்கினர்.
யசோதர்மன்:
‘ உத்தமம். இந்தகிக் கொடியவன் மிஹிரகுலனை சிரச்சேதம் செய்ய ஆணையிடுகிறேன்!”
சபையில் ‘ஆஹா.. ஓஹோ ‘ என்று கோஷம் பொங்கியது.
மகாராணி முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை.
சோகம்தான் இருந்தது.
எழுந்தாள்.
“யசோதர்மா! நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மிஹிரகுலன் போரில் மாண்டிருந்தால் அது சரி. இன்று அவன் காயப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய் … செத்த பிணத்தைப்போல இருக்கிறான். இவனை சிரச்சேதம் செய்வது கீழான படுகொலை. இதை செய்வது நமக்குத் தகுமா?
நாம் ஹூணர்களல்ல.. நமது கலாசாரம் இந்தக் கொலையை அனுமதிக்காது”
அவள் குரல் பணிவாகவும் அதே சமயம் திட்டவட்டமாகவும் இருந்தது.

யசோதர்மன்: “மகாராணி… உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்… மிஹிரகுலன் இரண்டு மாதம் சிறையில் இருந்து உடல் சற்று நலமானதும்… காஷ்மீருக்கு அப்பால் நாடு கடத்துகிறேன்”

சில மாதங்கள் கழித்து மிஹிரகுலனை யசோதர்மன் விடுதலை செய்தான்.
மிஹிரகுலன் காஷ்மீரத்தின் மன்னனைக் கொலைசெய்து அரியணையைக் கவர்ந்து – காந்தாரத்தைத் தாக்க முற்பட்டான்.
ஒருசில மாதங்களிலே அவன் தனது காயங்கள் காரணமாகவே காலமானான்.
அத்துடன் ஹூணர்கள் இந்திய சரித்திரத்திலிருந்து மறைந்தனர்.

ஒரு சில வருடங்களில் யசோதர்மன் தனது நாற்பது வயதில் காலமானான்…
மாளவ அரசும் மெல்ல அழிந்தது…
நரசிங்ககுப்தனுக்குப்பிறகு…பானுகுப்தா, குமாரகுப்தா III , விஷ்ணுகுப்தா … என்று பத்து வருடங்கள் கடந்தது. அந்த அரசர்கள் ஆண்டபின் …
குப்த ராஜ்யமும் அழிந்தது…
பொற்காலம்… போர்க்காலமாயிற்று…

‘சரித்திரம் படித்து என்ன பிரோயஜனம்’ – என்று பலர் நினைப்பதுண்டு.
அரசியலாளர்கள் சரித்திரத்திலிருந்து படிக்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.
இந்த ‘யசோதர்மன்’ சரித்திரத்தில் அறியப்படவேண்டிய பாடம் என்ன?
குமாரகுப்தன், ஸ்கந்தகுப்தன் சாதிக்க முடியாததை யசோதர்மன் எப்படிச் சாதித்தான்?
கூட்டு முயற்சி இருந்தால் எந்த எதிரியையும் வெல்லலாம்.
இந்திய மன்னர்கள் ஒற்றுமையாக இருந்தால் வெளிநாட்டு எதிரிகள் ஒன்றும் செய்யமுடியாது..
அந்த ஒற்றுமை இல்லாததால் – சரித்திரத்தின் பாடத்தை மறந்ததால்– பின்னாளில் வெளிநாட்டு அரசுகள் இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்தனர்.

இனி என்ன நடந்தது… காலம் பதில் சொல்லும்… சரித்திரம் பேசும்…காத்திருப்போம்…

நன்றி:
https://www.jatland.com/home/Yasodharman
https://en.wikipedia.org/wiki/Eran_boar_inscription_of_Toramana
https://kalvisolai.files.wordpress.com/2012/12/tet-paper-2-history-7th-kc.pdf
http://www.ensyklopedia.com/purugupta-of-gupta-dynasty-step-brother-and-successor-of-skandgupta-467-ad-473-ad/
https://en.wikipedia.org/wiki/Yashodharman

சரித்திரம் பேசுகிறது – யாரோ

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

ஸ்கந்த குப்தன்

 

பள்ளியில் சரித்திரப் பாடத்தின் பரீட்சையில் தவறாமல் வரும் கேள்வி!

குப்தசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்களைக் கூறுக. (இரண்டு மதிப்பெண் )

விடை:

  • ஸ்கந்தகுப்தனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குப்த மன்னர்கள் திறமையற்றவர்களாக இருந்தனர்.
  • ஹூணர்கள் என்ற நாடோடி சாதியினரின் தாக்குதல்கள் குப்தராஜ்யத்தை அழிக்க அடிகோலியது.

இரண்டு மதிப்பெண்கள் நிச்சயம்!

உண்மைதான்…அதைத்தான் இந்த இதழில் நாம் காண்போம்..

மனிதனுடைய மண்ணாசை, பொன்னாசை – பல காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. அதில் முக்கியமான ஒன்று – மற்றவரிடம் இருக்கும் பொருளை அபகரிப்பது.  நாட்டைப் பாதுகாப்பதற்குப் பெரும் செல்வம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டு மன்னன் மற்ற நாடுமீது படையெடுத்து வென்று அதனால் அடைந்த செல்வத்தால் (கொள்ளைதானே அது?) தன் நாட்டைப் பணக்கார நாடக்குகிறான்.  மேலும் ஒரு பணக்கார நாட்டைக் கொள்ளையடிக்க அனைவரும் ஆசைப்படுவர். ஆக – சண்டையில்லாமல் ஒரு அரசாங்கம் நடந்தால், அது விரைவில் ஏழை நாடாகி விடுவதற்கு சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன!

 

குமாரகுப்தன் காலம்…

30 வருடம்.

அப்படிப்பட்ட ஓர் அமைதிக்காலம்!

அதாவது செலவுக்காலம்!

புஷ்யமித்திரன் மற்றும்  ஹூணர்கள் படையெடுத்தனர் – கொள்ளையடித்தனர். அவர்களைத் துரத்துவதில் பெரும் பணம் செலவாகி- கஜானா காலியாகக் கிடந்தது.

குமாரகுப்தன் இறக்கும்போது குப்தராஜ்யத்தில் நிலை இது …

 

எல்லாத் தலைமுறைகளிலும் வருவதுபோல்… அன்றும் அரசுரிமைக்கு அடிதடி.

குமாரகுப்தனின் மூத்த மனைவி … தலைமை ராணி- ஆனந்த தேவி.

இளைய ராணிக்குத்தான் முதலில் மகன் பிறந்தான் – ஸ்கந்தன் என்று பெயரிட்டான் – குமாரகுப்தன்.

மூத்த ராணி புகைந்தாள் – தனக்கு மகன் பிறக்கவில்லையே என்று.

ஐந்து வருடம் கழித்து ஆனந்ததேவிக்கு மகன் பிறந்தான்.

பூரகுப்தன் என்று பெயரிட்டனர்.

அன்றிலிருந்து தன் மகன் பூரகுப்தன் குப்த மன்னனாக வர வேண்டி ‘கனவு’ கண்டாள் ஆனந்ததேவி.

சில கனவுகள் சாதிக்கவைக்கிறது!

சில கனவுகள் சதி செய்ய வைக்கிறது!

இதில் ஆனந்ததேவி இரண்டாம் ரகம்.

 

ஸ்கந்தன் மாவீரனாக வளர்ந்தான்..

குமாரகுப்தன் ஆட்சியில்  புஷ்யமித்திரன், ஹூணர்கள் தாக்குதல்களை படை நடத்தி முறியடித்திருந்தான் ஸ்கந்தன்.

ஸ்கந்தன் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தான்.

குமார குப்தனும் ஸ்கந்தனை உயிராகக் கருதியிருந்தான்.

ஸ்கந்த குப்தனை யுவராஜாவாக்கினான்.

ஆனந்ததேவி – பூரகுப்தன் – பொறாமையால் புகைந்தனர்.

கி பி 455:

(ஸ்கந்தகுப்தன் வெள்ளி நாணயம்)

 

குமாரகுப்தனின் மரணத்திற்குப் பின் ஸ்கந்தகுப்தன் மன்னனானான்.

அவன் ஆட்சிக்காலம் எப்படியிருந்தது?

‘சரித்திரம் பேசுகிறது’- இதை ஒழுங்காகப் படித்து வரும் வாசகர்களே!

சுதர்சனா ஏரி – ஞாபகம் இருக்கிறதா?

‘இந்த மாதிரி கேள்வி கேட்டதால்தான்  சரித்திரத்தையே நான் வெறுத்தேன்’ என்று சொல்லும் வாசகர்களே!

பயப்படாமல் மேலே படியுங்கள்..

இனி கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யமாட்டேன்!

இந்த சுதர்சனா ஏரி உடைப்பெடுத்தபோது ..அன்று .. சந்திரகுப்த மௌரியன்  அதைச் செப்பனிட்டான்…

வேறொரு காலத்தில் இந்த ஏரி உடைப்பெடுத்தபோது… ருத்திரதாமன் அதைச் செப்பனிட்டான்…

இன்று இதே ஏரி உடைப்பெடுத்தபோது… ஸ்கந்தகுப்தன் அதைச் செப்பனிட்டான்…

 

ஆனந்ததேவி, பூரகுப்தன் இருவரும் – அனுதினமும் – ஸ்கந்தகுப்தனுக்குத் தொந்தரவு கொடுத்து – எவ்வாறேனும் அரசாங்கத்தை அடைய சதி செய்து வந்தனர்.

ஸ்கந்தகுப்தன் மாவீரன் மட்டுமல்ல – பெரும் அறிவாளியும் கூட. வீரத்துடன் விவேகத்தையும் கலந்து தன்னை எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளை அணுகினான்.

ஆனால் பிரச்னைகள்தான் மலை போல வந்தது..

மலைவாசல் வழியாக ஒன்று வந்தது..

இந்தியாவின் வடமேற்குக் கணவாய் – கைபர் கணவாய். அது  மலைவாசல் என்று சாண்டில்யனால் அழைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவு வாசல். அது வழியாக அயல் நாட்டவர் இந்திய அரசுகளுக்கு அளித்த தொல்லைகளின் விபரங்கள் சரித்திரத்தில் பரவிக்கிடக்கிறது.

ஹூணர் என்ற நாடோடிக்கும்பல்!

மின்னல் வேகத் தாக்குதல்..

அட்டூழியங்கள்..

அவர்கள் …

சாரிசாரியாகக் குதிரையில் வந்தனர்..

கிராமங்களை அழித்தனர்..

ஜனங்களைக் கொன்று குவித்தனர்..

தீப்பந்தத்தால் பயிர்களை அழித்தனர்.

 

சிம்மாசனம் ஏறி ஐந்து வருடத்தில் ஸ்கந்தகுப்தனே படை நடத்தி புருஷபுரம் (இன்றைய பெஷாவர்)  அருகில் அவர்களைத் தோற்கடித்துத் துரத்தினான். படையெடுப்பில் தோற்று ஓடிய ஹூணர்கள் – கரையான்போல மீண்டும் படையெடுத்து வந்தனர்.

பத்து வருடங்களில் சிந்து நதிப் பிராந்தியத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

கபீசம் (இன்றைய காபூல்) அவர்கள் வசப்பட்டிருந்தது.

அவர்களில் சிலர் ஹிந்து – கூர்ஜர பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர்.

(இவர்கள் சந்ததி பின்னாளில் ராஜபுத்திரவம்சமாக வந்தது என்றும் சொல்லப்படுகிறது).

வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போர்முனையிலே கழித்த ஸ்கந்தகுப்தன்..

நோய்வாய்ப்பட்டான்.

தோள்வலி காட்டி எதிரிகளை நடுங்க வைத்தவன்.

தோள் வலியால் துவண்டான்.

அயோத்தி அரண்மனையிலேயே மருத்துவர்கள் தயவால் கிடக்கவேண்டி வந்தது.

(அந்நாளில் பாடலிபுத்திரம் தலைநகராக இல்லாது …அயோத்தியே தலைநகராக இருந்தது…)

ஹூணர்களுக்குத் தோரமானா என்ற தலைவன் –அரசனாகி – ஹூணர்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை அளித்தான். காட்டுமிராண்டிபோல இருந்த படையை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி வலிமைமிக்கதாய் செய்து குப்த ராஜ்யத்தை ஊடுருவி வந்தான். ஹூணர்களின் வழிகளை விட்டு ஹிந்து மன்னர்களைப்போல் நடந்து கொண்டான். மகாராஜா என்ற பெயரையும் சூட்டிக்கொண்டான்.

 

உறவினர்களின் சதியோ அனுதினமும் ஸ்கந்தகுப்தனை ஆட்டிப் படைத்தது.

மாற்றாந்தாய் ஆனந்ததேவி தோரமானாவுடன் கூட்டு சேர்ந்து ஸ்கந்த குப்தனுக்குத் தலைவலியை அதிகரித்து வந்தாள்.

உள்நாட்டு அமைதி குலைந்தது.

நாட்டின் நிதி நிலைமை மோசமானது.

மன்னன் தங்க நாணயத்தின் மாற்றை 108 லிருந்து 73 ஆகக் குறைத்து விடுகிறான்.

சரித்திரத்தில் முதன் முறையாக பணவீக்கம் (devaluation) செய்த மன்னன் இவன் தானோ?

கஜானாவில் பணமில்லை.

பணவீக்கத்தால் வெளிநாட்டு வர்த்தகமும் குறைந்துபோனது.

அரண்மனைத் தூண்களிலிருந்த தங்கத்தகடுகளையும் உருக்கி நாணயம் செய்யப்பட்டது.

பாரதத்தின் சக்கரவர்த்தி அன்று ஒரு பரதேசி! 

சைனியத்திலிருந்த வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாமையால் பல வீரர்கள் ஹூணர் படையில் சேர்ந்தனர்.

பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகம் இல்லை!

ஸ்கந்தகுப்தனுக்கும்  நேர் வாரிசு ஒன்றுமில்லை.

தீர்க்கதரிசனம் கொண்ட அவன் மனது சொன்னது:

‘நமது மூதாதையர் இந்த குப்த ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து வளர்த்துப் பொற்காலமாக்கினர்.

ஏற்கனவே நமது தந்தைக்குக் கூறியதுபோல் என் காலத்திற்குப் பிறகு இந்த குப்தப்பேரரசு மெல்ல அழியுமோ?  பூரகுப்தன் என்ன செய்வானோ?  எது எப்படி ஆனாலும்  எதிர்காலம் நம் கையில் இல்லை. நான் செய்யவேண்டியதை செய்யத்தான் வேண்டும்’.

 

ஒரு சிறு காட்சி விரிகிறது:

கி பி 467:

இடம்:அயோத்தி அரண்மனை.

மன்னன் பஞ்சணையில் நோயுற்றுக் கிடக்கிறான்.

முதன் மந்திரியை அழைத்து , பூரகுப்தன், ஆனந்த தேவி இருவரையும் வரவழைக்கிறான்.

‘தாயாரே! பூரகுப்தா! நான் அரியணையேறி 12 வருடங்கள் பூர்த்தியாக உள்ளது. எனது வாழ்வு சில நாட்களுக்கு மேல் தாங்காது. நமது முந்தையர் இந்த சாம்ராஜ்யத்தைத் தங்கமாக்கிக் கொழித்தனர். இன்று பலமுனைகளில் இதற்கு சவால் ஏற்பட்டு இருப்பது  நீங்கள் அறியாததல்ல. தோரமானா மற்றும் ஹூணர்களை வளரவிட்டால் – குப்தர்கள் கட்டிக்காத்த இப்பொன்னாடு அழிந்து விடும். நீ இந்த ராஜ்யத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும்.எனக்கு வாரிசு வேறு யாரும் இல்லை . நீதான் அடுத்த மன்னன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  இருக்கவும் கூடாது. அதனால் நாளையே உனக்கு யுவராஜ்யப் பட்டாபிஷேகம் நடக்கும்’

என்றும் கலங்கிடாத மன்னன் கண்கள் சற்றே கலங்கியது…

‘மகாராஜா! அது என் கடமை.. என்னால் இயன்றதை நான் செய்வேன்’ – பூரகுப்தன் கண்களிலும் கண்ணீர் வார்த்தது..

ஆனந்ததேவியின் கண்கள் முதல் முறையாகப் பொறாமையை விடுத்தது – சோகத்தைக் காட்டியது.. சில கண்மணிகளும் திரண்டன – கல்லுக்குள் ஈரம்..

அவர்களை அனுப்பிவிட்டு – முதல் அமைச்சரிடம்:

‘மந்திரியாரே! என் வாழ்வு முடியும் நாள் நெருங்கிவிட்டது…சமுத்திர குப்தனும் குமாரகுப்தனும் சென்ற வழியில் நான் சென்றேன். என் வழியில் அடுத்த குப்தன் வந்தால் குப்த ராஜ்ஜியம் நிலைக்கலாம். இன்றேல் அழிந்துவிடும். அப்படி அழிவதானால் அதை நான் தடுத்து நிறுத்த முடியாது. என் கடைசி மூச்சுவரை என் கடமையை செய்தாகவேண்டும்.  இன்னொரு கடமையும் இருக்கிறது. எனது மூதாதையரின் சிறப்பு – மற்றும் என் ஆட்சியின் சோதனைகளும், சாதனைகளும் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டும். பின்னாளில்  ‘சரித்திரம் பேசுகிறது’ என்று எழுதுபவர் யாரோவாக இருந்தாலும் இதுபற்றி எழுத வேண்டும்’

 

ஒரு சுய சரிதை எழுதினான்…

முதன் முதலாக சரித்திரத்தில் தன் சுயசரிதத்தை ஒரு சிறு கவியாக எழுதிய மன்னன் இவன்தானோ?

பத்தொன்பதே வரிகளில்..

அதை பிடாரியில் (உத்திரப்பிரதேசம்)  தூணில் பொறித்தான்..

முதலில் தனது ஆன்றோர்கள் அனைவரையும்  அதில் விவரித்தான்.

பின்னர் தன்னைப்பற்றி எழுதுகிறான்..

அதில் ஒரு சில வரிகள்..

….

ஆட்சியில்…

முழுமை அடைந்து விட்டோம்!

என் தந்தையாரின் பாதங்கள்..அது

விரிந்து வளரும் குளத்து அல்லிகள் போன்றது..அது போல்

விரிந்து வளர்ந்தது அவர் புகழ் இந்த அகிலத்தில் ..

இந்த அல்லிகள் நிரம்பிய குளத்திலே ரீங்காரமிட்டு சுற்றி வரும் தேனி நான்!

இந்தத் தேனி..

கொடுக்கு கொண்டது!

எதிரிகளைக் கொட்டும்..

நான்..

பெரும் புகழ் உடையவன் ஆனவன்.

 

(ஸ்கந்தகுப்தனில் பிடாரி (உத்திரப்பிரதேசம்) தூண் கல்வெட்டு)

 

வாசகர்களே! ஒரு நாடு சுபிக்ஷமாக இருக்கும்போது அதை  ஆள்பதற்குப் பெரிய திறமைசாலியான அரசன் தேவையில்லை.  நாட்டிற்குப் பெரும் துன்பம் வரும்போது அதைப் போக்கி ஆள்பவனைத்தான் சரித்திரம் வெகுவாக மதிக்கிறது. பின்னாளில் எத்தனையோஅமெரிக்க அதிபர்கள் வந்தாலும் – நாடு கண்ட சோதனைகளை எதிர்கொண்டு- வென்று – புகழ்பெற்றான் ஆப்ரகாம் லிங்கன்! அதே போல்தான் நமது ஸ்கந்தகுப்தன். பன்னிரண்டு வருடங்களில் பல விதமான இடையூறுகளைத் தகர்த்தெறிந்து சரித்திரத்தில் நிற்கிறான். அதனால்தான் சாண்டில்யன் குப்தர் காலத்தில் சரித்திரம் எழுத நினைத்தபோது – ஸ்கந்தகுப்தனால் வசீகரிக்கப்பட்டு- மலைவாசல் எழுதினாரோ?

இப்படி ஒரு பொற்காலம் இனி இந்த நாடு கண்டதா?

சரித்திரம் தேடப்படும்…

விரைவில்…

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

குமார குப்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

காளிதாசன் மறைந்துவிட்டான்.

இரண்டாம் சந்திரகுப்தனும் மறைந்துவிட்டான்.

ஒவ்வொரு மன்னன் மறைந்தபோதும்…

அடுத்த மன்னனுக்கான அடிதடி என்பது – எழுதாத உலக நீதி ஆகிவிட்டது.

 

இதில் பொற்காலத்தைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்!

வென்றவர்கள் சரித்திரத்தில் பொன்னாகப் பதிந்தனர்…

தோற்றவர்கள் காலச்சக்கரத்தில் காணாமல் போயினர்…

யார் எப்படி வென்றார்கள் என்பதுபற்றி எப்போழுதுமே சரித்திரம் பல கதைகளைக் கூறுகிறது.

யார் வென்றாலும் அதில் நாம் சுவையான கதையை மட்டும் எடுத்து அசைபோடுவோம்!

சரி… நம் கதைக்குப் போவோம்..

 

கி பி 415:

நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்  இரண்டாம் சந்திரகுப்தன்.

மூத்த மகன் கோவிந்த குப்தன்!

பட்டத்து இளவரசன்!

மகாராணி துருவா தேவியின் மகன் அடுத்தவன் – குமார குப்தன்!

மன்னனுக்கு ‘கார்த்திகேயன்’ (நமது முருகப்பெருமான்) மீது அளவுகடந்த பக்தி.

அதனால் துருவாதேவியின்  மகனுக்கு குமார குப்தன் என்று பெயரிட்டிருந்தான்.

சந்திரகுப்தனின் ஆட்சியில் கோவிந்த குப்தன், குமார குப்தன் இருவரும் பல போர் முனைகளில் வெற்றி சூடிக் கொடுத்தனர்.

 

சந்திரகுப்தனின் பொன்னான ஆட்சி அன்று ஒரு நாளில் முடிந்தது.

வழக்கம்போல நாடெங்கிலும் சோக வெள்ளம்..

எதிரி மன்னர்கள் ‘அடுத்து என்ன நடக்கும்’ என்று ஆவலுடன் காத்திருந்தனர்…

ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கும் உஜ்ஜயினி நகரம் – அன்று பொலிவிழந்து கிடந்தது.

மகாராணிகள் தங்கள் தங்கள் மகனுக்கு மன்னனாக என்ன வாய்ப்பு என்று ஆலோசித்திருந்தனர்.

அதை விட  தங்கள் மகனுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.

ஏனென்றால்..

இளவரசர்களுக்கு…கிடைத்தால் அரியணை! கிடைக்காவிட்டால் கல்லறை!

பொதுவாக… மூத்தவனுக்கு வாய்ப்பு அதிகம்.

கோவிந்தன் மன்னனானான்!

நாட்கள் சில கடந்தது..

சரித்திரத்தில் ஒரு இடம் பிடிக்குமுன் கோவிந்த குப்தன் கல்லறையில் இடம் பிடித்தான்.

ஏன்.. எப்படி என்ற கேள்விகளுக்கு சரித்திரம் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது..

நமக்கு எதற்கு வம்பு…சரித்திரம் அடுத்து என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போம்..

 

துருவா தேவியின் மகன்… குமார குப்தன்… மன்னனானான்.

 

 

 

 

 

 

 

“குமாரகுப்தன் வெள்ளி நாணயம்”

 

விரைவில் குமார குப்தனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

குமார குப்தன் – கந்த பிரானின் பக்தன்- தன் மகனுக்கு ஸ்கந்தன் என்று பெயரிட்டான்.

 

30 வருடங்கள் நகர்ந்தது…

இளவரசன் ஸ்கந்த குப்தன் – மாவீரனாக வளர்ந்திருந்தான்.

 

போரில்லா வாழ்க்கை – காரணமாக மக்கள் பெருமூச்சுவிட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்திய காலம்..

அமைதியான நதியிலே ஓடம்- என்பதுபோல் அரசாங்கம் நடந்து வந்தது.

ஓடம்.. அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்.

அது போல் நர்மதைக்கரையில் மால்வா நாட்டில் ஒரு புரட்சி வெடித்தது.

மேற்கில் ஊழிக்காற்றுபோல் ஹூணரென்ற புயல் தாக்கத் துவங்கியது.

குப்தப்பேரரசின் பெரும்படை மேற்கைப் பாதுகாக்க அனுப்பப்பட்டது.

போர் மேகங்கள் குப்த நாட்டில் வானத்தை ஆக்கிரமித்தது..

குமார குப்தன் – வயோதிக குப்தன் ஆயிருந்தான்..

ஆனால் அவனுக்கு இருந்த ஒரு பெரும் பலம் … ஸ்கந்த குப்தன்

“ஸ்கந்தா! எதிரிகள் நாற்திசையிலும் சூழ்ந்திருக்கின்றனர்” குமாரகுப்தன் குரலில் வருத்தத்தை விட ஆதங்கம் மேலோங்கியிருந்தது.

“சரித்திரம்..குப்தரது தங்க காலத்தைத் தொலைத்தவன் நான் என்றா என்னைப் பற்றிச் சொல்லும்?”

 

ஸ்கந்த குப்தன்: “தந்தையே!  எந்த ராஜ்யமும் அழியாமல் வாழ்ந்ததில்லை.. ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது.. மௌரியர்களும் அழிந்து போயினர்.  அது போல் குப்தர்களும் ஒரு நாள் காணாமல் போவர்…”

குமார குப்தன்: “….”

ஸ்கந்த குப்தன்: “இதனால் என்னை  பயந்தவன் என்றோ .. கோழை என்றோ எடை போடவேண்டாம். சுற்றி வரும் பகை போகப் போர் புரிவேன். உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்”

குமார குப்தன் : “….”

இப்பொழுது ஸ்கந்த குப்தன் கூறிய வார்த்தைகள் சரித்திரமாகியது..

ஸ்கந்த குப்தன்: “இன்னும் இரண்டு வருடங்களில் பகையனைத்தையும் தொலைத்து விடுவேன்..பிறகு, ஒரு மந்திரித்த ராஜ குதிரையை நாடு முழுதும் வெற்றிகரமாக உலவவிட்டு…அதை பலிசெய்து …நீங்கள்  அஸ்வமேத யாகம் செய்வீர்கள். இப்படிதான்  உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம்பெறும். அத்துடன் நமது குல தெய்வம் கார்த்திகேயன் உருவத்துடன் தங்க நாணயம் வெளியிடுவீர்கள். அத்துடன் மகேந்திராதித்யா என்ற பட்டப் பெயருடன் விளங்குவீர்கள். உங்கள் காலத்தில் அகில உலகும் புகழும்படி ஒரு பெரிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும். அது நாளந்தா பல்கலைக்கழகம் என்று பேர்பெற்று விளங்கும்.  மேலும் சுத்தமான தேனிரும்பினால் செய்யப்பட்ட பெரும் தூண் ஒன்று எழுப்பப்படும் . காலத்தில் அழியாத அந்தத் தூணில் உங்கள் வீரதீரங்கள் பறைசாற்றப்படும்…இவை அனைத்தும் நடைபெறாமல் என் உயிர் போகாது.”

 (பின்னாளில்…

  • குத்புதீன் ஐபக் என்ற சுல்தான் அந்த பெரும் தூணைச்சுற்றி மசூதி எழுப்பினான்.
  • நாளந்தா பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியாவின்மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதியால் சூறையாடாப்பட்டு, முற்றிலும் தீக்கிரையானது.

 

குமாரகுப்தனது  கண் கலங்கியது – உள்ளம் நெகிழ்ந்தது..

‘மகன் என்றால் இவனன்றோ மகன்- இதைவிட எனக்கு வேறு பாக்கியம் என்ன இருக்கிறது’!

மகனை ஆரத் தழுவிக்கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

(நாளந்தா பல்கலைக்கழகம்)

   

  

 

 

 

 

 

 

 

 

 

 

நர்மதா பள்ளத்தாக்கு…

ரம்யமான மாலை நேரம்.

குப்த ராஜ்யத்தின் விளிம்பில் இருந்த நாடு.

நாடு என்பதைவிட காடு அது என்றுதான் சொல்லவேண்டும்.

நர்மதா கரையோரக் காடுகளில் வாசித்த காட்டு வாசிகளின் தலைவன் பெயர்:

புஷ்யமித்ரன்.

முகத்தில்.. சந்தன வீரப்பன் போல புதர் மீசை..

கண்களில் .. அனல் பறக்கும் கொடிய பார்வை..  

நெஞ்சில்.. குப்தப் பேரரசையே விழுங்க ஆசைக் கனல்..

அவன்..

குப்த தானியக் கிடங்குகளை சூறையாட்டம் ஆடுவான் ..

குப்த ராணுவக் கிடங்குகளை  அவர்கள் அறியாத இரவு நேரம் வேட்டையாடி ஆயுதங்களைக் கைப்பற்றுவான்..

குப்தர்களின் கருவூலங்களைத் தாக்கித் தங்க நாணயங்களை அபகரித்துக் கொள்வான்.

பணமும், பலமும் சேர்ந்ததால்… அனைவரும் அவனைக்கண்டு நடுங்கினர்..

 

அருகில் இருந்த நாடு ‘வகடக ராஜ்ஜியம்’ .

அங்கு குமாரகுப்தனின் சகோதரி பிரபாவதி குப்தா மகாராணி. அவளும் அரசாண்டு காலமானாள். அவளது மூத்த மகன் திவாகரசேனா – அரியணை ஏறுமுன் அகால மரணமடைந்தான். அடுத்த மகன்கள் தாமோதரசேனா- மற்றும் பிரவாரசேனா இருவரும் கூட்டு அரசராயினர்.

அவர்களுக்கு குமார குப்தன் சொந்த மாமன்தான்… ஆனாலும் வகடக அரசர்களுக்கு மண்ணாசை விடவில்லை..

புஷ்யமித்திரனை வைத்துக் குப்த ராஜ்யத்தைக் களவாடத் திட்டமிட்டனர்.

 

காலம் எப்படி யாரைக் கொல்லும் என்பதை யாரோ அறிவர்!

இரு வகடக மன்னர்களும் ஒரு விபத்தில் காலமாயினர்.

இளவரசன் ஒருவன் மன்னனானான்.

மாதம் ஒன்று தாண்டவில்லை..

அவனும் பூமியைத்தாண்டி காலன் கோட்டை சென்றான்!

இப்பொழுது அவனுடைய மகன்..

புத்தம்புதிய இளவரசன் தேவசேனா..

அவனுக்கோ வயது  8.

மந்திரி ஹஸ்திபோஜன் அரசாங்கத்தைக் கவனித்துக்கொண்டான்.

அவன் நர்மதா நதிக்கரையில் மால்வா நாட்டில் புஷ்யமித்திரனைச் சந்தித்தான்.

கூட்டணி அமைந்தது…

கொள்ளை … கொள்ளை… கொள்ளை..

அது குப்தராஜ்யத்தைக் கரையான் அரிப்பதுபோல் அரிக்கத் தொடங்கியது.

குப்த கருவூலம் மெல்லக் கரையத் தொடங்கியது.

 

ஒரு நாள் இரவு:

அமாவாசை நாள்.

காரிருளைக் கிழித்து நட்சத்திரங்கள் மினுமினுத்தது.

புஷ்யமித்திரன் காட்டு மாளிகையில் பெரும் யோசனையில் இருந்தான்.

‘அடுத்த குப்த ராஜ்யத்தின் சூறையாடல் எங்கு’ என்பதுபற்றி.

அதே நேரம்.. காட்டின் விளிம்பில் சிறு கூடாரம்.

அதில்..மண் தரையில் ஒருவன் பாய் விரித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.

நடு இரவுதாண்டி இரண்டு சாமம் கடந்தது.

உறங்கிக் கொண்டிருந்தவன் கண் விழித்தான்.

கூடாரத்தை விட்டு வெளியே வந்து- தீப்பந்தத்தை லேசாக ஆட்டினான்.

காட்டிலிருந்து அருவிபோல படைவீரர்கள் திரண்டனர்.

காட்டு மாளிகையைச் சுற்றி வளைத்தனர்.

சிறிது நேரத்தில் காட்டு மாளிகை தீப்பிடித்து எரிந்தது..

புஷ்யமித்திரன் உறக்கத்தைவிட்டு வாளை எடுத்தான்.

அவனது வீரர்களும் திரண்டனர்.

அந்த இரவில்- தீப்பற்றி எரிந்த மாளிகையின் வெளிச்சத்தில் போர் நடந்தது.

புஷ்யமித்திரன் காயப்பட்டான்..  பிடிபட்டான்..

“ஸ்கந்த குப்தா! நீயா” –என்று புஷ்யமித்திரன் வியப்புடன் கூவினான்.

அஞ்சாநெஞ்சன் என்று அறியப்பட்ட புஷ்யமித்திரன் முகம் அன்று அச்சத்தைக் காட்டியது…

காயம்பட்ட புஷ்யமித்திரன் கீழே விழுந்து கிடந்தான்.

ஸ்கந்த குப்தனின் கால் புஷ்யமித்திரன் மீது பதிந்தது…

ஸ்கந்த குப்தன்: “புஷ்யமித்திரா! சரித்திரத்தில் உனது ஆட்டம்  இன்றுடன் முடிந்தது.. இனி குப்த நாட்டுக்கு உன்னால் ஒரு தொல்லையும் இல்லை. கல்லறை செல்லும்வரை உனக்கு இனி சிறைதான். மேலும் உன்னுடன் கூட்டு சேர்ந்த வகடக மன்னன்  இனி என் வாளுக்கு இரையாவான். வகடக ராஜ்ஜியம் இத்துடன் முடிந்தது”!

 

ஸ்கந்தன் உஜ்ஜயினி சென்று தந்தையிடம் விபரம் அனைத்தையும் கூறினான்.

“தந்தையே! ஒரு பிரச்சினை தீர்ந்தது.. இனி காந்தாரம் சென்று ஹூணரது படையெடுப்பை முறியடிப்பேன்”

 

சொன்னதைச் செய்தான்!

தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினான்.

ஒரு மகன் உறுதியுடன் தந்தைக்கு உதவி செய்தால்… எந்த தந்தை தான் வெற்றியாளராக மாட்டார்?

மன்னன் மனம் அமைதியடைந்தது…

“இனி நான் நிம்மதியாக உயிர் விடுவேன்” – என்றான் குமார குப்தன்.

இருப்பினும்..

ஹூணர்களைத் தோற்கடிக்க ஸ்கந்தன் படையெடுப்புகள் குப்தரது கஜானாவை காலி செய்தது- அவனது நினைவுக்கு வந்தது..

‘இனி குப்தரின் எதிர்காலம் என்னவாகுமோ?’

இறக்குமுன் – குமார குப்தனுக்கு – ஸ்கந்த குப்தன் அன்றொரு நாள் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது:

“ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது”

‘குப்த நாட்டின் முடிவும் அதுபோல முடியும்’ என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.

அந்த நினைவுடன்… அவன் உயிரும் பிரிந்தது!

 

அடுத்து வரும் கதைகள் என்னவாயிருக்கும்?

விரைவில்…

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ரகுவம்சம் அனுமார் வால்போல் தொடர்ந்து வருகிறதே என்ற கவலைவேண்டாம். அடுத்த மாதம் சரித்திரம் உண்மையில் நகரும் !

சரித்திரம் எப்படியிருந்தாலும் காளிதாசனின்  எழுத்திற்கு ஈடு இணை கிடையவேகிடையாது.

 

ராமன் மகன்கள்: லவன், குசன்!

Image result for lav and kush ramayana

 

குசன் நாகராஜனின்  சகோதரியான குமுதவதியை மணந்துகொண்டான். குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  அதற்கு  அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.

ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்குச் சென்றபோது, அவர் தனக்குத் துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தான். ஆனால் அதுபோலவே அந்தக்  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தான். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மனவருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டான்.

ரகு வம்சத்தில்.. பலப்பல அரசர்கள் பிறந்து… மடிந்து… காலச்  சக்கரம் ஓடியது…

பல மன்னர்களுக்குப் பிறகு அந்த சந்ததியில்…

துருவசாந்தி மன்னனானதும் தனது மூதாதையர்கள்போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தான்.  அப்போது ஒருநாள் அவன் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில், அவன் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு  மரணம் எய்தினான். அந்நேரம் அவனுக்கு சுதர்சனன்  எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு அவர் முடிசூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.

இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்கத்தொடங்கியது.

சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து அறிவில் சிறந்து விளங்கிற்று.  நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். அவனது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த  அவனைப் பல  பெண்கள்  மோகிக்கலாயினர்.

ரகுவம்ச ஆட்சி தொடர்வு  முறிந்தது:

பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப்போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னிவருணனை ஆட்சியில் அமர்த்திவிட்டு, நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்துகொண்டான். அக்னிவருணன் ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவனுக்கு எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக்கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக்கிடந்தது. மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னிவருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைகொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக்கிடந்தான். காமம் தலைக்கேறப் பெண்கள் விஷயத்தில் துர்நடத்தை கொண்டவனாக மாறிக்கொண்டே வந்தான். அவனுக்கு எந்த அமைச்சரும் முன்வந்து அறிவுரை கூறமுடியாமல் பயந்தார்கள். அவர்கள் எத்தனை எடுத்துக்கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறிச் சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு  மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக்கொண்டது.  சில நாட்களிலேயே அவனால் நடக்கக்கூட முடியாமல் போயிற்று.

அக்னிவருணனுக்குக் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. வியாதி பிடித்துக்கிடந்த அக்னிவருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காகத் தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரைத் தொந்தரவு செய்ய இயலாது என்று பொய்கூறி,  அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில்கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக்கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.

அரசன் மரணம் அடைந்தபின், அதை வெளியில் தெரியாமல் மறைத்துவைத்து, அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்தபின், கைதேர்ந்த பண்டிதரை அழைத்து,அவரைக் கொண்டு யாகாக்கினி  எனும் யாகம் செய்வதைப்போலப் போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்துவைத்து அவர் உடலை எரித்தார்கள்.

வாசகர்களே! அந்தக் காலத்திலேயே.. ஆட்சியாளர்கள் ‘தலைவரது’ மரணத்தை மர்மமாக மக்களுக்குத் தெரியாமல் மறைத்து வந்தனர்!

அனைத்துக் காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவியை நாட்டை ஆளுமாறு கோரினார்கள்.  ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும்,  ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.

அவளுடன் ரகுவம்சம் முடிந்தது!!

 

நன்றி:

https://santhipriya.com/2015/06/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-1.html

நன்றி: http://www.sangatham.com/classics/raghu-vamsam-selected-slokas.html

 

காளிதாசரின் ரகுவம்ச காவியம் முடிந்தது.

அவர் எழுதிய மேகதூதம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் இவைகளைப்பற்றியெல்லாம் எழுத வேண்டாமா?

‘ஓட வேண்டாம் வாசகரே… சும்மானாச்சிக்கும் சொன்னேன். இருக்கும் ஒரு வாசகரையும் இழந்துவிட்டுப் பிறகு யாருக்குத்தான் எழுதுவது?’

… சரித்திரம் நகர்கிறது..

அடுத்த கதை என்னவாயிருக்கும்….

ஒரு ரூம் போட்டு யோசிக்கவேண்டிய சமாசாரம்…

சந்திப்போம் விரைவில்…

 

(தொடரும்)

சரித்திரம் பேசுகிறது ! –யாரோ

காளிதாசன்-ரகுவம்சம்4

 

‘குவிகம் ஆசிரியர்’ எச்சரிக்கிறார்:

“இனியும் சரித்திரம் நகரவில்லை என்றால் …” என்று சொல்லாமல் மிரட்டுகிறார்..

Image result for pictures based on kalidas poems

 

 

சரி..ரகுவம்சத்தை இப்பொழுது முடித்துவிடுவோம்.

காளிதாசனையும்  விட்டு நகர்வோம்…

இது சத்தியம்…

(இந்த பத்திரிகை ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருக்கே … தாங்க முடியலப்பா)

 

சரி…நம் கதையை எங்கே விட்டோம்?

 

முன்கதை:

ரகுவம்சத்தில் – திலீபன் , ரகு, என்று தொடங்கி அயன்வரை கதை படித்துக்கொண்டிருக்கிறோம்…

 

Related image

அயன் தன் மனைவி இந்துமதியுடன் பூங்காவில் மகிழ்ந்து இருக்கும்போது… வானத்தில் இருந்து விழுந்த மாலை ஒன்று… இந்துமதியின் மார்பில் விழ… அவள் மரணமடைகிறாள். இனித் தொடர்ந்து கதைக்குச் செல்வோம்.

 

அயனும் மூர்ச்சை அடைந்து விழுந்தான். பிறகு கண் விழித்தான். இறந்துகிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திடுக்கிட்டு, துக்கம் தாளாமல் அழுது புலம்பினான்.

‘தேவி, என்னே விதி இது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ …உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே……பிரியமானவளே ….. நாம்  எந்தப் பாவமும் செய்யவில்லையே… அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்… தேவி….உயிர் பிழைத்து எழுந்துவந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம் மீது உன்னை எரிக்கப்  போடப்படும்  கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?’  என்றெல்லாம் கூறிக்கூறிக் கதறினான்.

 

 

இந்த இடத்தில் நாம் சற்று நின்று, காளிதாசனின் கவிதையைக் கேட்போம்:

 

அந்த தெய்வ மாலை, தேனும் நறுமணமும் திகழும் சோலைக் கொடிகளில் மலர்ந்த வசந்தகாலப் பூக்களின் அழகை நிராகரித்து, மன்னனது மனைவியின் செழித்த முலைகளின் நுனியில் சென்று பொருந்தியது.

எழிலுற எழுந்த முலைகளுக்கு ஒரு கணம் முன்பு கிடைத்த தோழியான அவளைப்  (மாலையை) பார்த்து தன்வசமிழந்தாள் இந்துமதி. ராகு கவர்ந்த சந்திரன்போல கண்மூடினாள்.

உணர்வு நீங்கிய உடலுடன் கீழே விழுகின்ற அவள், கணவனையும் வீழ்த்தினாள். கீழே சிந்தும் எண்ணெய்த் துளியுடன்கூட, விளக்கின் சுடரும் மண்ணில் வீழுமன்றோ? அயன் மயங்கி விழுந்தான்.

தந்தி தளர்ந்து அறுந்த வீணையைப்போலக் கிடந்த அழகியை, அளவற்ற அன்புகொண்ட அவன் எடுத்து அவள் பழகிய மடியில் வைத்துக்கொண்டான்.

அவன் தனக்குரிய இயல்பான தீரத்தையும்விட்டுக் கண்ணீரினால் தழுதழுத்த குரலில், புலம்பலானான். நன்கு காய்ச்சிய இரும்பும் மென்மையை அடைகிறது. எனின், மனிதரைப்பற்றி என்ன சொல்வது?

மலர்களும் கூட உடல்மீது விழுந்து உயிர் போகக் கூடுமோ? அந்தோ, அழிக்கத் துணிந்த விதிக்கு எப்பொருள்தான் கருவியாகாது?

பனித்துளி வீழ்ந்ததும் தாமரை அழிகிறது. அந்தகன் மெல்லியலை மெல்லியலாலேயே கொல்லத் துணிந்தானோ?

இந்த மாலை உயிரைக் கவரும் இயல்புடையதானால், இதனை மார்பில் சூடிக் கொண்டும் என்னை ஏன் கொல்லவில்லை? தெய்வத்தின் இச்சையால், சிலபோது விஷமும் அமுதமாகும். அமுதமும் விஷமாகுமோ?

என்ன துர்ப்பாக்கியம்! இம்மாலையை தெய்வம் இடியாகக் கற்பித்து விட்டது. இந்த இடியால் மரம் வீழவில்லை, அதைச் சுற்றியிருந்த கொடிமட்டும் அழிந்து விட்டதே.

அழகி, வண்டுகள்போன்று நிறமுடைய, மலர்கள் சூடிய, உன் சுருண்ட முன்னெற்றிக் கூந்தலைக் காற்று அசைக்கிறதே. நீ உயிரோடு எழுவாய் என்று எனக்கு அது நம்பிக்கை ஊட்டுகிறதோ?

அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்றுவிட்டது. கலைந்த கூந்தலோடு, பேச்சடங்கிய உன் முகம்!

உனது முதல் அந்தரங்கத் தோழி இந்த மேகலை – அழகிய நடையழிந்து, ஒலி இழந்து போயிற்று. அதுவும் உன்னுடனே சோகத்தால் இறந்துவிட்டதோ?

நீ இந்த அசோகமரத்தை உன் மெல்லியகால்களால் உதைத்தாய். இது பூக்கப் போகிறது. உன் கூந்தலுக்கு அணிகலனாக வேண்டிய அம்மலரை, ஐயோ, எப்படி உனக்கு தர்ப்பண புஷ்பமாகத் தருவேன்?

நீ எனக்கு மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்கையில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத்தான் அபகரிக்கவில்லை?

நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே!  என் கண்ணீரைக்  கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?

 

வர்ணனையில் மயங்கிக் கிடக்கும் நாம் விழித்தெழுந்து.. கதைக்குச் செல்வோம்.

அவனை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறியபின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள்  மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள்.

ஒரு பிளாஷ்பேக் விரிகிறது…

மறுபடியும்… இந்திரனுடைய  ‘விக்டிம்’  கதை!

பதவி மோகம் … அது இந்திரனை ஒரு சீரியல் கில்லர் லெவெலுக்குக் கொண்டுசெல்கிறது.

“மன்னா எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்குச் சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்துபோன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக  இருந்தாள். அவள் இந்திரனின் சபையில்  ஒரு அப்ஸரஸ்  ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து  முடிந்துவிட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம்கொண்டு அவளை மானிடப் பெண்ணாகப் பிறவி எடுத்து பூமியிலேயே சென்று  வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு , தான் வேண்டும் என்றே எந்தத் தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் அவள் மீது இரக்கப்பட்டு  ‘அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்துகொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின்மீது  கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு  மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திரலோகத்துக்குச் சென்றுவிடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுறவேண்டும் என்று அவளுக்குத் தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.”

வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள், “மன்னா இதனால்தான் பூர்வ  ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்குத் திரும்பச் சென்றுவிட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வரமாட்டாள். ஆகவே மனதைத் தேற்றிக்கொண்டு உன் கடமையை வழுவாமல் செய்து வா” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஆனாலும் அயனினால்  இந்துமதியை மறக்க முடியவில்லை.

மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே  உருமாறிக்  கொண்டுஇருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரை காத்திருந்தான்.   தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவனை அரியணையில் அமர்த்திவிட்டு  ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்துவிட்டுப்  பல காலம் உபவாசம் இருந்து…

ஒருநாள்… சரயு நதிக்கரைக்குச் சென்று சரயு நதியில் விழுந்து உயிரைத் துறந்துகொண்டான்.

அது கிட்டத்தட்டத் தற்கொலையாகும்.

 

Related imageபின்னாளில் இராமபிரான் இந்த வம்சத்தில் பிறந்து தனது முடிவைத் தேடும் சமயம்…

இதேபோல் சரயு நதியில் விழுந்து ‘ஜல சமாதி’ கொள்கிறார்!

அயனுக்குப் பின்…

தசரதன் கதை…

அதன் பிறகு…

ராமன் கதை…

இவை இரண்டும் வாசகர்கள் அறிந்ததே!

ஆதலால் அதைக் கூறாது தொடர்வோம்!

 

 

 

‘அப்பாடா…’ என்று வாசகர்கள் விடும் பெருமூச்சின் வெப்பம் என்னைத் தாக்குகிறது!

 

அவசரப்படாதீர்கள்..அவ்வளவு சுலபமாக என்னிடமிருந்து தப்ப முடியுமா?

ராமனுக்குப் பின் நடந்ததை சொல்லியே ஆகவேண்டும்..

சுருக்கமாகச் சொல்லி முடிப்போம்.

(தொடரும்)

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

Related image

காளிதாசன்-ரகுவம்சம் 3 

Image result for paintings on raghuvamsa

ரகுவம்சம் தொடர்கிறது…

ரகுவம்சத்தை நிறைவு செய்து – பிறகு .. இந்திய வரலாற்றின் மற்ற நாயக நாயகிகள் கதைகள் தொடரும்.

இப்பொழுது நேயர்களை ‘ரகு’வின் ஆட்சிக்கு அழைத்துச் செல்கிறோம்.

 

முன்கதை:

ரகுவம்சத்தில் – திலீபன் தொடங்கி ரகு கதை படித்துக்கொண்டிருக்கிறோம்…

ரகு, விஸ்வஜித் யாகத்தைச் செய்து தாராளமாகத் தானங்களைக் கொடுத்தான். அரச கஜானாவின் செல்வம் குறைந்துகொண்டே வந்தது.  யாக முடிவில் மன்னனுக்கு மிஞ்சியது ‘மண் பாத்திரம்’ மட்டுமே. யாகத்தை நடத்தி முடித்து,  ஏதுமற்றவனாய் நின்றான். அவனது கவலை:  இந்த நேரம் பார்த்து எவனாவது தானம் என்று கேட்டு வந்தால்?

கலங்கி நின்றான்!

‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ…’ என்று ஒரு சோகப்பாடல் பாடினான்..

அவன் பயந்தது நடந்தேவிட்டது.

அவனைத் தேடி கௌட்ச முனிவர் வந்தார்.

அவர்..வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர். அவருக்குத் தனது ‘குரு’வுக்குக் குரு தட்க்ஷணை  கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருந்தது. சரி..அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாகப் பெற்றுக்கொண்டு செல்லலாம் – என வந்தார். முனிவரை அமரச் சொல்லி அர்க்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானான்.

முனிவருக்கு ‘விஷயம்’ விளங்கிவிட்டது.

அரசன் இன்று செல்வந்தனல்லன்.. ஒரு அன்னக்காவடி என்று..

அரசன்  கையில் இருந்ததெல்லாம் ..  மண் பாண்டம்… மட்டுமே!

‘சரி இது காசுக்காகாது’ – என்று எண்ணி மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.

முனிவரைத் தடுத்து நிறுத்தி ரகுராமன் கேட்டார் :

முனிவரே! தாங்கள் வந்த காரியம் யாது? அதைக் கூறுவீர்களா?

சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர் கூறினார்:

மன்னா – நான் வரதந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கிச் சில காலமானதுமே அவருக்கான  குரு தட்க்ஷணை என்ன தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு, ‘நான் அவருக்கு செய்யும் பணிவிடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்’  மட்டுமே குரு தட்க்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார். ஆனால் … அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து புறப்படும்போது… கடைசியாக .. ‘நான் என்ன தக்ஷணை தரவேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு அவர்  ‘நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என  பதினான்கு வித்தைகளுக்குத் தட்க்ஷணையாகப் பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா’ என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்.

அடிச்சிட்டார் அந்தர் பல்டி!

குரு – சாதாரண – சராசரி-  மனிதன் ஆனார்!

சில நேரங்களில் சில மனிதர்கள்!

எம்புட்டுப் பணம் கேட்கிறார்!

முனிவர் தொடர்ந்தார்:

நான் உன்னைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு செல்லலாம் என இங்கு வந்தேன். ஆனால் – உன்னுடைய நிலைமை கண்டேன். ஆகவே மன்னா,  இதை எண்ணி நீ யோசனை செய்யவேண்டாம். நான் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்டுக்கொள்கிறேன்.

முனிவரை மீண்டும்  தடுத்து நிறுத்தினார்  ரகுராமன். அவரிடம் கூறினான் ‘மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்டபின் அதை பெற்றுக்கொள்ளாமல் வெறும் கையோடு  போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது நீங்கள் கேட்ட தானத்தைக்  கொண்டுவந்து தருகிறேன்’ என்று கூறிவிட்டு  அவரை  ஓய்வு எடுக்குமாறு கூறினார்.

இந்நாளாக இருந்தால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கியிருக்கலாம்! ஹா ஹா !

பணக்கவலை மனிதனின் தூக்கத்தைக் குலைக்கிறது. இரவு முழுவதும் தூக்கம் இன்றித் தவித்தான் மன்னன். மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டுவரலாம் என்று நினைத்தான். மறுநாள் பொழுதுவிடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி ‘மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிரம்பிக் கிடக்கின்றன’ என்ற சேதியைக்கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்றுபார்க்க அவர் முன் வந்த குபேரன்  ‘மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?’ எனக் கேட்க மன்னனும்  ‘நன்றி குபேரா, நன்றி’ எனக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

அந்நாளைய பஞ்சாப் நேஷனல் வங்கி குபேரன் பேங்க்தான் போலும்!

பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த  கௌட்ச முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் ‘மன்னா! நீ நீடூழி வாழ்ந்து, உன் ராஜ்யத்தைத் தொடர்ந்து  ஆள்வதற்கு, நல்ல மகன் பேறு பெற்றுக்கொண்டும் வாழ உனக்கு  என் ஆசிகள்’ என மன்னனை வாழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்’ . நாளடைவில்  ரகுராமனுக்கும்  ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.

அயன் (அஜா)

 

அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தான். அப்போது விதர்ப தேசத்தைச் சேர்ந்த பேரரசன் தனது தங்கையான இந்துமதிக்கு  சுயம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்குப்  பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அயனுக்கும் அழைப்பு  வந்தது.

அயனும் அந்த  சுயம்வரத்தில் கலந்துகொள்ள விதர்ப தேசத்துக்குக் கிளம்பிச் சென்றான். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில், அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி  ஆக்ரோஷமாகக் கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது.  அயன் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப்பொட்டில் அதைச் செலுத்தினான். உடனே, அந்த யானை மறைந்து அதற்குப் பதில் அங்கு ஒரு அழகிய மனிதன் நின்றுகொண்டு இருந்தான். 

அயனிடம் கூறினான்:

‘மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு நாள் – மாதங்க முனிவரின் சாபம் காரணமாக நான் யானை உருவில் இத்தனை காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் ‘பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும்’

இந்த முனிவர்களோட ரௌசு தாங்கமுடியல … கோபம் வந்தா  .. நல்லாப் போட்டுத் தாக்கறாங்கய்யா..பிடி சாபம்! என்று…

பிரியம்வதன் தொடர்ந்தான்:

‘மன்னா, நானும் இத்தனை காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக்கிடந்தேன்.  மிக்க நன்றி.  மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்குத் தக்க நேரத்தில் உதவிடும்’  என்று கூறியபின் அவருக்கு ஒரு பாணத்தைத் தந்துவிட்டுக் கூறினான் ‘மன்னா! நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்தப் பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக்கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது.  இந்த பாணம் உனக்கு வெற்றியைக்  கொடுக்கும்’.

அயனும் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றான்.

விதர்ப அரசர், நகர் எல்லைக்கே வந்து அவனை வரவேற்றுச் சபைக்கு அழைத்துச்சென்றார். அங்கோ அரண்மனையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து அவரவர் ஆசனங்களில் அமர்ந்துகொண்டு இருந்தனர். அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.

சுயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாகச் சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த  சேலைவழியே பார்த்துக்கொண்டே நடந்துசென்றாள்.  கூட இருந்த அவளது தோழி அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமை பெருமைகளைக் கூறி அவளுக்கு அறிமுகம் செய்துவந்தாள்.  அந்த மன்னர்களும், ராஜகுமாரர்களும்   இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை  வெளிப்படுத்தியவாறு இருந்துகொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சிசெய்தார்கள்.

ஒரு அரசன், தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரைச் சுற்றிச் சுற்றி சுழற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தான். இன்னொருவன், தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்டத் தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை  அவ்வப்போது கையில் எடுத்தெடுத்து மீண்டும்  தன்னுடைய தோள் மீது போர்த்திக்கொண்டான்.  இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்துத் தனது தோள்மீது போட்டுக்கொண்டான்.

சரியான காமெடி பீஸ்கள்!

அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்துசென்றாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிறபோது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது இப்பாடல்..

இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிறபோது ஒவ்வொரு மாடமும் ஒளிபெற்றுப் பின்னர் இருளடைவதுபோல, இவள் வருதலைப் பார்த்து ஒளிபெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார் காளிதாசன்! ***

அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான்.  அவன் அருகில்சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின.  அவனது அமைதியான, அடக்கமான முகமே அவன் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

தோழி:  ‘ராஜகுமாரி..மேலே செல்லலாமா’

இந்துமதி:  ‘சற்றுப் பொறுடி.என்ன அவசரம்’ – மெல்ல முணுமுணுத்தாள்.

தனது கையில் இருந்த மாலையை அயன் கழுத்திலே போட்டாள்.

அரசரும் அவனை ஆரத்தழுவி அனைவர் முன்னிலையிலும் தனது மகளை அயனுக்குத் திருமணம் செய்வித்தார். இந்துமதியை அழைத்துக்கொண்டு அயன் தனது நாட்டுக்குத் திரும்பலானான்.

இங்கு ஒரு சண்டைக் காட்சியை அமைப்பது அவசியம் என்று காளிதாசன் நினைத்தார் போலும்!

இந்துமதி தமக்குக் கிடைக்காத கோபத்தில் வழியில் பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள்.  நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தாக்கினர். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியம்வதன் கொடுத்த  விசேஷ பாணம் நினைவுக்குவர அதை அவன் எதிரிகள்மீது பிரயோகித்தான். அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்றுகுவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினான்.

மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்துகொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகுராமன் மனம் மகிழ்ந்தான். அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரை வணங்கி அவர்களுடைய  ஆசிர்வாதம் பெற்றனர். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகுராமனும் முக்தி தேடி வனத்துக்குச் சென்று விட்டார்.  அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தான் .  ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் நல்ல ஆட்சி தந்தான்.

ஒருநாள் அவனது தந்தை ரகுராமனும் தமது யோக சக்தியைக்கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக்கொண்டான் என்ற செய்தி வந்தது.  தனது தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்தான். அவனுக்குச் சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தான்.  பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்குத் தசரதன் என்ற பெயர்சூட்டி மகிழ்ந்தார்.

அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினார்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார்.

அமைதியாக நதியினிலே ஓடம்!

ஓடும்…

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!

Lord Ram, Elder Sister, shanta, dasharatha, ramayana, rishyasringa, untold, story, lompada, romapada, rama, ayodhya

ஒருநாள் அவன் தனது மனைவி  இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி விளையாடிக்கொண்டு இருந்தான். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பொழுது  வானத்து வழியே நாரதமுனி சென்றுகொண்டு இருந்தார்.

அவரது வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது.

விழுந்த மாலை இந்துமதியின் மார்புமீது வந்து விழுந்தது.

அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்தாள்.

அடுத்த கணம் கீழே விழுந்தாள்.

உடலை விட்டு உயிர் பிரிந்தது…

அது தேவன் செய்த  விதியோ?

சரித்திரம் தொடர்ந்து பேசும்….

அயன் கதை தாண்டி … ரகு வம்சத்தின் கடைசி வரை கதை சொல்வோம்…

 

***

संचारिणी दीपशिखेव रत्रौ
यं यं व्यतीयाय पतिंवरा सा
नरेन्द्रमार्गाट्ट  इव प्रपेदे
विवर्णभावं स स भूमिपालः!!
“Sancharini deepashikheva ratrau
Yam Yam vyatiyay patimvara sa
Narendramargatta eva prapede
Vivarnabhavam sa sa bhoomipalah”.

 

(சப்ஜெக்டுக்கு வா ! சப்ஜெக்டுக்கு வா ! என்று மிரட்டினால் கூட வரமாட்டேன்கிறாரே, இந்த ‘யாரோ’ … வேற வழி ….. தொடரும்) 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

Image result for kalidasa

 

காளிதாசன்-ரகுவம்சம் -2 

Image result for raghuvamsa

 

‘தோள் கண்டார் தோளே கண்டார்” என்றார் கம்பர்.

‘இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டுகளித்து – முடியாமையால் அதனால் பிற உறுப்புக்களின் அழகைப்பார்க்க இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவர் கண்ட வண்ணம் இருந்தார்கள்’ –என்கிறார்!

அதே நிலைதான் நமக்கும்.

 

ரகுவம்சம் எழுதத்தொடங்கி அதை விட்டுப் போக மனம் வரவில்லை.

மேலும் அது இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் அதைத் தொடர்வோம்.

உடனடியாகக் கதைக்குச் செல்வோம்.

 

 

ரகு

திலீபனுக்குப் பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரைச் சூட்டினார்கள்.

தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும்  பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தைத் தருவதற்கு முன்னர்… அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு  அறிவுறுத்தினார்.

அஸ்வமேத யாகமும் துவங்கியது.  அஸ்வமேத யாகக் குதிரைக்குக் காவலாகச் செல்ல, திலீபன் தன் மகன் ரகுவை நியமித்தான். அந்த யாகத்தைக் கண்டு ‘பொறாமை’ கொண்ட தேவலோக அதிபதியான இந்திரன்  அந்த யாகக் குதிரையைகக் கவர்ந்து சென்றுவிட்டான்.

இப்படிப் பல முறை ‘பொறாமை’ கொண்டு அநீதி செய்த இந்திரன் எந்த தெய்வ நீதி மன்றத்திலும் தண்டனை அடைந்ததாகத்  தெரியவில்லை – இந்நாளின் குற்றம் செய்த அரசியல்வாதிபோல!

யாகம் துவங்கியது. 99 குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு யாகம் ஒருவாரியாக நடந்து முடிந்த நிலையில் இருந்தது. நூறாவது குதிரையை அழைத்து வர ரகுவை அழைத்தபோதுதான் … தாம் காவலுக்கு வந்திருந்த யாகக் குதிரையைக் காணோம் என்கின்ற உண்மையை ரகுவும் உணர்ந்தான்.

இந்திரனைப் பார்த்து ரகு  கூறினான்:

இந்திரனே! யாகங்கள் எங்கு நடந்தாலும் அதன் அவிர்பாகத்தில் முதல் பாகத்தைப் பெற்றுக் கொள்பவராக உள்ளவர் நீங்கள் என்றல்லவா முனிவர்கள் கூறுவார்கள். அப்படி இருக்கையில் என்னுடைய தந்தை செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் நீங்கள் குதிரையைக் களவாடிக் கொண்டுபோகலாமோ?  யாகங்களைக் காப்பவரே யாகத்தைத் தடுத்து நிறுத்துபவராக இருக்கலாமா?

இந்திரன் கூறலானான் (வில்லன் நம்பியார் பேசுவதாகச் சற்று கற்பனை செய்யவும்):

ராஜகுமாரனே! உன்னுடைய தந்தை செய்யும் இந்த யாகமானது நடந்து முடிந்தால் அது என்னுடைய செல்வாக்கை மறைத்து விடும். ஆகவே நான் என்னுடைய  நிலைமையில் இருந்து இதைத் தடுத்தேன்.

பதவி ஆசை தேவர்களுக்கும் உண்டு போலும்!

சற்றும் பயமில்லாத ரகு கூறினான்:

இந்திரனே, நீ அந்தக் குதிரையைக் கவர்ந்து செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். நீ வீரனாக இருந்தால் என்னுடன் போரிட்டு என்னை வென்று குதிரையைக்  கொண்டுசெல்

இருவரின் படைகளும் சளைக்காமல் கடுமையாக யுத்தம் நடந்தது. இருவரும் ஒருவரைஒருவர் பயங்கரமாகத்  தாக்கிக்கொண்டார்கள்.  ரகு மீண்டும் மீண்டும் விதவிதமான அம்புகளை ஏவி இந்திரனை நிலைகுலைய வைத்தான். இந்திரன் பவனி வந்த ஐராவத யானையே கதிகலங்கும் வண்ணம்  போர் தொடர்ந்தது. இந்திரனும் ரகுவை ரத்தமயமாக்கிக் கீழே விழவைத்தான்.  ஆனாலும் சளைக்காத ரகு யுத்தத்தைத் தொடர்ந்தவண்ணம் இருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.  இந்திரனும் களைத்துப் போனான்.

ரகு ஒரு வீரன் மட்டுமல்ல..

தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்தான்..

இந்திரனை நோக்கிக் கூறினான்:

தேவலோக அதிபதியே, இன்னும்  உன்னால் என் குதிரையைக் கவர்ந்து கொண்டுசெல்ல   முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா ? என்னைக் கொன்றால் ஒழிய உன்னால் குதிரையை எடுத்துச் செல்ல முடியாது.   எனக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். என் தந்தை செய்யும் யாகத்தின் பலனை அவர் அடைய வேண்டும்.  அதற்கு அந்தக் குதிரை தேவை. அதைக் கொடுக்காமல் உன்னைத் தேவலோகத்துக்குச் செல்ல விடமாட்டேன். ஆனால் அதற்கு மாற்றாக இதற்கொரு உபாயம் உள்ளது. அந்தக் குதிரையை விட மனமில்லை என்றால் என்னுடைய தந்தை செய்யும் யாகத்தின் முழுப் பலனையும் அவர் அடையட்டும்   என சத்தியம் செய்து வாக்குக் கொடுத்து  விட்டுச் செல். நானும் திரும்பிச் சென்றுவிடுவேன். நீயும் யுத்தம் செய்யத் தேவை இல்லை.

அதைக் கேட்ட இந்திரனும் இனிமேலும் தன்னால் சண்டையைத் தொடர்ந்துகொண்டு  ரகுவைத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்தான். அவன் கேட்ட வரத்தை அப்படியே தருவதாக வாக்குறுதி தந்து சத்தியமும்  செய்தபின் தேவலோகத்துக்குத் திரும்பினான்.

ரகுவும் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான்.  ரணகாயத்தோடு வந்த மகனை ஆரத் தழுவி வரவேற்றான் திலீபன். நடந்த அனைத்தையும் கேட்டறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டு  அழுதான்.  மீதி இருந்த யாகத்தைத் தொடர்ந்தான். யாகம் நல்லமுறையில் நடந்து முடிந்ததும் – சில நாட்கள் பொறுத்து ரகுவிடம் தனது ராஜ்யத்தைத் தந்துவிட்டுத் தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி இந்த உலகை விட்டு மறைந்தான்.

Related image

ரகு எனும் ரகுராமன் ராஜ்ய பதவியை ஏற்றுக் கொண்டு அரச பதவியில் அமர்ந்ததும், அவன் மன்னன் ஆக வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் மற்றவர்களும் மனதார மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் -அக்கம்பக்கத்தில் இருந்த அரசர்கள் பொறாமை கொண்டார்கள்.ரகு நான்கு திசைகளையும் நோக்கிப் பெரும் படையுடன் சென்றான்.

வங்க மன்னர்கள் வீழ்ந்தார்கள், கலிங்க மன்னர்கள் சாய்ந்தார்கள். மன்னனின் படையினர் மகேந்திர மலையைத் தாண்டிச் செல்ல, அங்கிருந்த மன்னர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தார்கள்.  ஆனால் மன்னர்களைச் சிறை பிடித்தபின் அந்தந்த மன்னர்கள் தாமே தமது செல்வங்களை ரகுராமனுக்குத் தந்து விட அந்த மன்னர்களை விடுவித்துவிட்டு அவர்கள்  தந்த  செல்வத்தை மட்டுமே தன் நாட்டுக்குக் கொண்டுவந்தான்.

சமுத்திரகுப்தன் பின்னாளில் இதே மாதிரி செய்தான் அல்லவா? ரகுவைப் பின்பற்றியோ என்னவோ?

தென் பகுதியில் காவேரிக் கரையைத்தாண்டி அனைவரையும் வென்று வந்தான் மன்னன் ரகுராமன்.

பாரசீகம் முதல் காஷ்மீர்வரை அனைத்து மன்னர்கள், மற்றும்  நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  மன்னர்களையும்  தோற்கடித்த பின்னர் நாடு திரும்பினான்!

அவன் சென்ற இடங்களெல்லாம் வெற்றி!

அவன் வழியில் வந்த எந்த மன்னரும் அவனிடம் தோற்றனர்!

அவன் வழி தனி வழி!

அவன் டிரான்சோக்சியானா (இந்நாளில் Uzbekistan) படையெடுத்துக் கண்டது வெற்றி! மத்திய ஆசியாவில் படையெடுத்துக் கோர யுத்தம் செய்தான்! தோற்றவர் முகங்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டது!

மன்னர்களின் கொலைவெறியைத்தான்  என்னவென்று சொல்வது!

காம்போஜ நாடு (இந்நாளில் ஈரான்)… சென்றவுடனே –அந்த மன்னன் அடிபணிந்தான்.

இங்கே காளிதாசனது  வர்ணனையைக் காணலாம்:

ரகுவின் திக்விஜயம்:

அன்னப் பறவைக் கூட்டங்களிலும், விண்மீன்களிலும், நீரில் மலர்ந்த ஆம்பல் பூக்களிலும் அவனுடைய புகழ்ச் செல்வமே பரவிக் கிடந்தது போலும்!

கரும்பின் அடர்ந்த நிழலில் அமர்ந்து நெற்பயிர் காக்கும் வேடுவப் பெண்கள், காவலனான ரகுவின் நற்புகழை குமரப் பருவம் தொடங்கிப் பாடினர்.

ஒளிமிகும் அகஸ்திய நட்சத்திரத்தின் உதயத்தால் நீர் தெளிந்தது.

ரகுவின் எழுச்சியால், அவமானத்தை எதிர்நோக்கிய எதிரிகளின் மனம் கலங்கியது.

மதங்கொண்டு, நதிக் கரைகளை முட்டி இடிக்கின்ற, பெருந்திமிள்  படைத்த காளைகள், ரகுவின் பராக்கிரமத்தையே அனுசரித்து அழகாக விளையாடிக் காட்டின.

நதிகளை ஆழமற்றதாக்கி, வழிகளின் சேற்றை உலர்த்தி, ரகுவின் உற்சாகத்திற்கும் முன்னாகச் சென்று அவனை யுத்த யாத்திரைக்குத் தூண்டியது போலும் சரத்காலம்!

மந்தர மலையை இட்டதால் பாற்கடலின் அலைகள் தளும்பித் தெளிப்பதுபோல, நகர மூதாட்டிகள் அவன் மீது பொரிகளைத் தூவினர்.

தேர்கள் கிளப்பிய புழுதியால் ஆகாயம் மண்ணாயிற்று.

மேகங்களை ஒத்த யானைகள் மண்மீது நடந்து சென்று பூமியை ஆகாயமாக்கின.

சிவனாரின் செஞ்சடையினின்று நழுவும் கங்கை நதியை கீழ்க்கடலை நோக்கி அழைத்துச் செல்லும் பகீரதன் போல், ரகு தன் சேனைக் கடலைக் கிழக்கு நோக்கி அழைத்துச் சென்றான்.

செல்வம் துறந்த, பதவி இழந்த, தோல்வியடைந்த மன்னர்கள் நிரம்பிய ரகுவின் வழி, தெளிவானதாக இருந்தது – பழங்கள் உதிர்ந்து, வேர்கள் பறிக்கப்பட்டு, மரங்கள் முறிந்த யானையின் பாதைபோல.

நாற்றாங்காலில் பெயர்த்து நடப்பட்டு, தங்கள் வேரடியில் நிற்கும் தாமரை வரையில் வணங்கித் தாழும் நெற்கதிர்கள்போல, போரில் தோற்றபின் தங்கள் அரசபதவிகளைப் பெற்ற வங்கதேச மன்னர்கள், ரகுவின் மலரடி வணங்கி அவனுக்குச் செல்வமளித்து வளர்த்தனர்.

மகேந்திர மன்னனை சிறைப்பிடித்து, பின்னர் விடுவித்தான். அவனிடமிருந்த திருவை (செல்வத்தை) மட்டும் கவர்ந்துகொண்டான்; நிலமகளைத் (பூமியை) தொடவில்லை.

யானையின் மதநீர் வாசனை பெருக, ரகுவின் சேனை களியாட்டமிட்ட காவேரி, கணவனான சமுத்திரராஜனின் சந்தேகத்திற்கு உள்ளானாள்.

வெகுதூரம் கடந்துவந்த அந்த வெற்றிவீரனின் சேனை, கிளிகள் திரியும் மிளகுக் காடுகள் கொண்ட மலயகிரியின் சரிவுகளில் தங்கிற்று. அங்கு, குதிரைகள் நசுக்கிய ஏலச்செடிகளின் காய்ந்த துகள்கள் மேலே கிளம்பி, ஒத்த மணங்கொண்ட மதநீர் சொரியும் யானைகளின் கன்னங்களில் சென்று படிந்தன. கால் சங்கிலிகளை அறுக்கும் கம்பீரமான யானைகள், கட்டிய கயிற்றைக்கூட நழுவவிடாமல், சந்தன மரக் காட்டில் பாம்புகள் சுற்றிய பள்ளங்களில் நின்றன. தெற்கு திசையில் செல்கையில் கதிரவனின் ஒளிகூட சற்று குறைந்து விடுகிறது. ஆனால் அத்திக்கிலும், ரகுவின் பிரதாபத்தைப் பாண்டியர்கள் தாங்கவில்லை.

தக்ஷிணாயன காலத்தில் (ஆடி – தை வரை) தெற்கு திசையில் தோன்றும் சூரியன் சற்று ஒளி குன்றி இருப்பது இயல்பு. இங்கே கவி அதை சாதுர்யமாக, வீரம் மிகுந்த பாண்டியர்களுக்கு அஞ்சி சூரியனும் (பாண்டியர்கள் சந்திர குலம்), தன் ஒளியை குறைந்தவனாக இருக்கிறான்; ஆனால் அந்த பாண்டியரே ரகுவின் போர் திறனைத் தாங்கவில்லை என்கிறார்!

தாங்கள் சேர்த்துவைத்த புகழைக் கொடுப்பதுபோல், தாமிரபரணி சேரும் கடல் தந்த முத்துக் குவியலை ரகுவின் அடிபணிந்து அவர்கள் அளித்தனர்.

ரகுவின் சேனை எழுப்பிய புழுதி, பயத்தினால் தங்கள் அணிகளைத் துறந்த கேரள நாட்டு மகளிரின் முன்னுச்சிக் கேசங்களுக்கு நறுமணப் பொடியாயிற்று.

முரளா நதியில் வீசிய காற்று கொணர்ந்த தாழம்பூவின் மகரந்தம் படைவீரர்களின் மேலுடையில் படிந்து முயற்சியின்றிக் கிடைத்த ஆடை-வாசனைப் பொடியாயிற்று.

கவசமணிந்த குதிரைகள் எழுப்பிய பேரொலி, அங்கு காற்றிலசையும் பெரும் பனங்காட்டு மரங்களின் சலசலப்பையும் தோற்கடிப்பதாயிருந்தது.

குதிரைகளைமட்டுமே கொண்டு ரகு இமய மலைமீது ஏறுகையில், அங்கு கிளம்பிய தாதுப் பொடிகளால் அந்தச் சிகரங்கள் வளர்வதுபோலத் தோன்றின.

சரள மரங்களில் கட்டிய யானைகளின் கழுத்துச் சங்கிலியில் பிரதிபலித்த ஒளிவீசும் செடிகள் தலைவனான ரகுவிற்கு இரவிலேயே எண்ணையில்லா விளக்குகளாக வழிகாட்டின.

இந்த வர்ணனைகளில் மயங்கிக் கிடக்கும் வாசகர்களே!

எழுவீர்!

அல்லது..

சரித்திரம் பேசுகிறது என்று சொல்லிவிட்டு இது என்ன கதை சொல்கிறாய் என்று கோபம் கொள்ளும் வாசகர்களே!

நதிநீர் தான்  எங்கு போகிறது என்று தெரியாமல் போவதுபோல் நமது கதை போகிறது!

(காளிதாசன் வர்ணனை நமக்கும் சற்று ஒட்டிக்கொண்டதோ!)

ஆக… காளிதாசனிடம் நாம் வசமாய் மாட்டிக்கொண்டோம்!

சரி…ரகுவம்சக் கதை தொடரட்டும்!

 

(சரித்திரம் இன்னும் நிறைய பேசும்) 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

காளிதாசன்-ரகுவம்சம்

Image result for raghuvamsam

காளிதாசன் எழுதிய தேன் கவிதைகளைக் கண்டு நமது மனமென்ற தேனீ ரீங்காரமிடுகிறது.

அட..அங்கிருந்து நகர மறுக்கிறதே!

மனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு நாம் சரித்திரப் பயணத்தைத் தொடர முடியுமா?

இருந்து இலை போட்டு விருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போவோமே!

சரி… கதைக்குப் போவோம்..

 

ஒரு முன்னுரை:

ரகுவம்சம் – இது ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து,  அக்கினி வருணன்வரை சென்று,  அந்நூல் நிறைவடைகிறது. பல கதாநாயகர்களைக் கொண்ட இக்காவியம் –  திலீபன் முதலாக அக்னிவர்ணன் வரை இருபத்தி ஒன்பது அரசர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது. இதில் முக்கியமாக திலீபன், ரகு, அயன்(அஜன்), தசரதன், ராமன் ஆகியோரின் கதையைப் பதினைந்து சர்க்கங்களில் கவி இயற்றி உள்ளார். மீதமுள்ள நான்கு சர்க்கங்களில் ஒரு சர்க்கம் ராமனுடைய மகன் குசனைப் பற்றியும், ராமனுடைய பேரன் அதிதி பற்றியும், ஒரே சர்க்கத்தில் இருபத்தியொரு மன்னர்களைப் பற்றியும் கடைசி சர்க்கம்  அக்னிவர்ணனைப் பற்றியும் அமைந்துள்ளது.

இப்பொழுது முன்கதை:

விஷ்ணு புராணத்தின்படி  இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி. அவருடைய மகள்  அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார்.

சூரியன் கதையை குவிகம் வாசகர்கள் ‘எமபுரிப்பட்டணம்’  மூலம் அறிந்திருப்பீர்கள்!

சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன்.  அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள்

  • கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதன்
  • வசிஷ்ட முனிவர்
  • ஹரிச்சந்திரன்,
  • சிபி மன்னன்.

சூரியனின் மகன் மனுவின் மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர் – கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து  அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு  ஆண்டார்.

சூரிய வம்சத்தின் முதல் மன்னன்  இஷ்வாகு!

ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர்  ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த  மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட  திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.

Image result for raghuvamsam

திலீபன்

காளிதாசர் தனது 30 ஆம் பாடலில்  கூறுகிறார் :

மனு வம்சத்தில், திடீரெனப் பாற்கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப்போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்

திலீபனின் மனைவியின் பெயர் சுடாக்ஷிணா.

அவர்களுக்குக் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது.

மனைவி அருந்ததியுடன் ஆசிரமத்தில் இருந்தார் வசிஷ்ட மாமுனி.

ரகு வம்சத்தில்..அரசர்கள் வருவர்… அரசர்கள் மறைவர்… ஆனால் அனைவருக்கும் ஒரே ராஜ குரு வசிஷ்ட மாமுனி!

அவரை திலீபன் வணங்கி :

“ஸ்வாமி, எனக்குப் புத்திர பாக்கியம் இல்லை. நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்.

வசிஷ்டருக்கு  இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் அடிக்கடி வருவார்கள் போலும்!

வசிஷ்ட முனிவர்: திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். காமதேனு ஒரு சாபம் கொடுத்திருந்தது. அந்த சாபம் விலக வேண்டும் . நீ தேவலோகத்துக்குக் கிளம்பிச்சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு  சேவை செய்துகொண்டு அதற்குப் பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு மனமகிழ்ந்து உனக்குக் குழந்தை பாக்கியத்திற்கு அருள் தரக்கூடும்.

சாபங்கள் என்று ஒன்று இருந்ததால் அதற்கு விமோசனம் என்று இல்லாமலா போய்விடும்!

கதையை சற்று சுருக்குவோம்..

நந்தினி கூறியது :

நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான்.  அதை  அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை நீயும் உன் மனைவியும் குடிக்கவேண்டும்’

நந்தினி  கூறியதுபோல திலீபனும் செய்தான்.

அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்ப்பமுற்றாள்.

இங்கு காளிதாசனுடைய வர்ணனை சிலவற்றைக் காண்போம்.

திலீபனின் மனைவி சுதட்சிணை கருவுற்று மகனைப் பெறுதல்:

 

  • மங்கிய நிலவில், ஒரு சில நட்சத்திரங்களே சிதறிக் கிடக்கும் விடியும் தறுவாயிலுள்ள இரவுபோல, உடல் மெலிவால் குறைந்த அணிகளை அணிந்து, லோத்ர மலர்போன்று வெளுத்த முகத்துடன் அவள் இருந்தாள்.
  • அவ்வேந்தன் தனிமையில் மண்மணம் கமழும் அவளது முகத்தை மீண்டும் மீண்டும் முகர்ந்து மகிழ்ந்தான்; வேனிற்கால முடிவில், மேகம் சிந்திய சிறுதுளிகளால் நனைந்த காட்டு நீர்த் தடாகத்தில் திருப்தியடையாத யானை போல.
  • வானாளும் இந்திரன்போல, அவள் மகன் திசைகளின் எல்லைவரை செல்லும் தேர்கொண்டு, மண்முழுதும் ஆண்டு களிப்பான். அது கருதியோ அவள் மற்ற சுவைகள் அனைத்தையும் உதறி மண்மீது ஆசை வைத்தாள்?
  • பழைய இலைகள் உதிர்ந்து மனம் கவரும் புது இளந்தளிர்கள் துளிர்க்கும் கொடிபோல, கருத் தாங்கும் சிரமங்கள் கடந்து அவளது அவயவங்கள் செழிப்புற்றன.
  • நாட்கள் செல்லச்செல்ல, சற்றே கருத்த முகம்கொண்ட, பருத்த, அவளது இணைமுலைகள், வண்டு வந்தமர்ந்த அழகிய தாமரை மொட்டுக்களின் அழகை வென்றன.
  • பெருநிதியைக் கருவில் சுமக்கும் கடலுடுத்த நிலமகளோ? கனலைத் தன்னுள் ஒளித்திருக்கும் வன்னி மரமோ? அல்லது உள்ளே நீரோடும் சரஸ்வதி நதியோ இவள்? எனத் தன் பட்டமகிஷியைக் கண்ட மன்னன் எண்ணினான்.
  • பிறகு, உரிய காலத்தில், சூரியனைச் சேராமல் உச்ச ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து நின்று அவனது பாக்கியமாகிய செல்வத்தை முன்னறிவிக்க, இந்திராணியை ஒத்த அவள் புதல்வனைப் பெற்றாள்.
  • அந்தக் கணம், திசைகள் தெளிந்தன. காற்று சுகமாக வீசியது. வேள்வித் தீச் சுடர் வலம் சுழித்து அவியை ஏற்றுக் கொண்டது. இவை அனைத்தும் சுப அடையாளங்களாகவே இருந்தன. உலகம் உய்யவன்றோ அத்தகையோர் பிறக்கின்றனர்!
  • அக்குழந்தையின் இயல்பான தேசுடைய ஒளி பிரசவ அறையின் படுக்கையைச் சுற்றிப் பரவியது. அங்கிருந்த நிசி தீபங்கள் ஒளியிழந்து சித்திரத்தில் எழுதப்பட்டவை போலாயின.
  • காற்றில்லாத மடுவில் பூத்த தாமரைபோல அசையாத கண்களால் தன் மகனின் முக அழகைப் பருகினான் மன்னன். நிலவைக் கண்டு, தன்னுள் அடங்காமல் பொங்கும் பெருங்கடலின் நீர்த்திவலைகள் போலப் பொங்கியது அவனது மகிழ்ச்சி.
  • மகவு பிறந்த மகிழ்ச்சியில் கைதிகளை விடுதலை செய்யலாமென்றால், அக்காவலனின் அரசில் கைதிகள் என்று யாருமே இல்லை.

நாட்டில் இப்படியும்  ஒரு பிரச்சனையா?

  • சக்ரவாகப் பட்சிகள் போன்ற அந்த தம்பதியரின் அன்பு, உணர்வில் பிணைந்தது, ஒருவரையொருவர் பற்றியது. ஒரே பிள்ளை பிறந்து, அதைப் பிரித்தது. ஆயினும் அவர்களுக்கிடையில் அது இன்னும் அதிகமாக வளர்ந்தது!
  • அப்புதல்வனின் மெல்லிய சருமத்தின் தீண்டல் அமுதம் பொழிந்தது. அவனை மடியில் ஏற்றிக் கடைக்கண்களை மூடிக் கொண்டான் அரசன். வெகுநாள் கழித்து மகனின் தொடுகையின் இன்பத்தை அறியும் தன்மையை அடைந்தான்.

பிறந்த அந்தக் குழந்தை ‘ரகு’!

ரகுவம்சத்தின் காரணகர்த்தா!

இனி ரகுவின் கதைக்குச் செல்வோம்.

Related image

 

காளிதாசனின் …

தேன் சொட்டும் வர்ணனைகள்!

உவமைகளின் உச்சக்கட்டம்!

கற்பனையின் சிகரம்!

மயங்கித் தவிக்கிறது மனது!

மீண்டும் அந்த அனுபவம் வேண்டும் போலிருக்கிறதல்லவா?

 

அது விரைவில்!

சரித்திரம் பேசுகிறது (18) – யாரோ

காளிதாசன் 

காளிதாசன் என்ற தேன் பாண்டத்தைத் தொட்டுவிட்டோம்!

அதில் – காவியங்களென்ற தேன் கொட்டிக்கிடக்கிறது.

தேனை நக்காமல் விடலாமா?

காளிதாசன் கவிதையால் தீட்டிய சித்திரத்தை நாம் வசனப்படுத்திக் குறுக்கிக் கூற உள்ளோம்.

அந்தக் கவிதை நயத்தை நாம் கூற இயலாது. கதையையாவது கூறுவோமே!

காளிதாசன் எழுதியதை சிறு குறிப்புகளாக  எழுதுவதுகூட காளிதாசனுக்கு நாம் செய்யும் சிறு காணிக்கைதானே!

சரி… கதைக்குப் போவோம்..

 

சாகுந்தலம்:

 

விசுவாமித்திரர்-சக்தி வாய்ந்த முனிவர்- ஆழ் தியானத்தில் இருந்தார்.

தேவர் தலைவன் இந்திரன்!

பயந்தான்.

’இந்த முனியின் பெருந்தவம் இவருக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தால் … ஐயோ .. அப்புறம் நம் கதி?’.

தேவ மங்கை மேனகாவிடம் சென்றான்.

“மேனகா! நீதான் சென்று முனிவருடைய தவத்தைக் கலைக்க வேண்டும்”

அவள் பயந்தாள்! ஆனால் தலைவன் சொல்லைத் தட்டலாகாதே! ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது! மாமுனிவனும் பெண்ணுடன் இணைந்தான்! ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தனது தவம் கலைந்தது கண்டு கோபித்த முனிவன் தாய்-சேய் இருவரையும் மறுக்களித்தான்.

எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது!

மேனகை குழந்தையுடன் தான் இந்திர சபை செல்ல இயலாது என்பதை உணர்ந்தாள்.

கடமையா பாசமா!

கடமை வென்றது.

குழந்தையைக் கானகத்தில் விட்டுவிட்டு வானகம் சென்றாள். கண்வ மகரிஷி அங்கு வந்தார். சாகுந்தலப் பறவைகள் அந்த அழகிய குழந்தையைச் சுற்றி அமர்ந்து-தத்தித்தத்தி- உணவு ஊட்டும் விந்தைக்காட்சியைக் கண்டு அதிசயப்பட்டார். குழந்தைக்கு சாகுந்தலா என்று பெயரிட்டு – தானே வளர்த்தார். தாயைப்போல பிள்ளை! அவள் அழகு வளர்ந்தது- மிளிர்ந்தது!

அஸ்தினாபுர மன்னன் துஷ்யந்தன் மான் வேட்டைக்கு அந்தக் காட்டுக்கு வந்தான். சாகுந்தலையைக் கண்டான்! தோழிகளுடன் கிண்டலும் கும்மாளமுமாக ஆடித்திரிந்த சாகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டான்.

அவளும் அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள். காந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். இயற்கை அன்னை சாட்சியாக!

நாட்கள் இன்பகரமாகத் தொடர்ந்தது!

வசந்த காலம் அவர்கள் இன்பத்துக்குத் துணை நின்றது!

தென்றல் அவர்களுக்கிடையே புக முடியாமல் திணறி நின்றது!

சாகுந்தப் பறவைகள் பனியைச் சிறகில் தாங்கி சிலிர்த்தது.

காதலர்கள் மீது அந்தப் பனி – மலர் இதழ் போல் – பரவியது.

தேகங்கள் சிலிர்த்தன!

நாட்கள் அப்படியே உறைந்து போய்விடக்கூடாதா என்று இரு உள்ளங்கள் ஏங்கின!

(காளிதாசனை எண்ணும்போது நமக்கே இப்படி சில சில்லறைக் கற்பனைகள் தோன்றுகின்றனவே!)

காலச்சக்கரம் சுழலும்போது இன்பம் துன்பம் எல்லாமே முடிவுக்கு வருகிறது.

இன்பமும் துன்பமும் மீண்டும் தொடங்குகிறது.

அஸ்தினாபுர வீரர்கள் மன்னனைத் தேடிக் காட்டுக்கு வந்தனர். நாட்டில் அமைதி குலைந்திருப்பதைக் கூறி – மன்னன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். வேறு வழியில்லாமல்- துஷ்யந்தன் புறப்படத் துணிந்தான். “சாகுந்தலை! விரைவில் வந்து உன்னை அழைத்துச் செல்வேன்.எனது முத்திரை மோதிரம் உனது விரல்களில் இருக்கட்டும்”.

உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்!

கனத்த இதயங்கள் இரண்டு.. மீண்டும் ஒன்று சேரும் நாளுக்காக ஏங்கித்தவித்தது.

ஒரு நாள்..சாகுந்தலா ஆசிரம வாயிலில் பூ மேடையில் அமர்ந்திருந்தாள். மனதோ அலை மோதியது. துஷ்யந்தனுடன் ஆடிப்பாடித் திரிந்த நாட்கள் நெஞ்சில் தென்றலாக வீசியது..கண்கள் சொருகி..ஒரு மோன நிலையில் இருந்தாள். அப்போது அங்கு துர்வாசர் என்ற முனிவர் வந்திருந்தார். முன் கோபத்தில் முதல்வர்! அவளது பணிவிடை வேண்டி அவர் வந்திருந்தார். சாகுந்தலா தன்னிலை மறந்து.. துர்வாசரைக் கவனிக்கத் தவறினாள்.

முனிவர் முனிந்துவிட்டார்.

“நீ யாரை எண்ணி என்னை உதாசீனம் செய்தாயோ அவன் உன்னை மறந்து போகக் கடவது” – சபித்தார்.

சாகுந்தலா தன்னினைவு பெற்று முனிவரிடம் தன் கதையைக் கூறி மன்னிப்பு வேண்டினாள்.

கோபம் தணிந்த முனிவர் “சாகுந்தலை! அவன் உனக்குக் கொடுத்த கணையாழியைக் காணும்போது இழந்த நினைவுகளைத் திரும்பப்பெறுவான்” – என்றார்.

மாதங்கள் பல சென்றது..

வசந்தம் சென்றது… அவள் வாழ்விலிருந்தும் வசந்தம் சென்றது.

மன்னனையும் காணவில்லை.

கோடை வந்தது…

சாகுந்தலை சோகத்தில் இளைத்தாள்.

கண்வ மகரிஷி மகளைத் தேற்றினார்!

“நாளையே உன்னை நான் அஸ்தினாபுரத்து அரண்மனைக்கு அனுப்பிவைக்கிறேன்”

சாகுந்தலா அரண்மனை செல்லும் வழியில்.. தாகம் தாளாமல் .. ஓர் ஏரி ஒன்றில் நீர் எடுத்து அருந்தும் போது – முத்திரை மோதிரம் வழுக்கி விழுந்தது. அதை மீனொன்று விழுங்கியது. மோதிரம் தொலைந்ததை அறியாத சாகுந்தலா அரண்மனை சென்று துஷ்யந்தனைச் சந்திக்கிறாள்.

“யாரம்மா நீ?” – மன்னனின்  இந்த சொற்கள் சாகுந்தலாவைத் தாக்கியது.

சாகுந்தலா தங்கள் இருவரது கதையைச் சொல்ல-மன்னனுக்கு ஒன்றும் நினைவு இல்லாமையால் அவளை மறுக்கிறான்.

சாகுந்தலா தன் மோதிரத்தைக் காட்டினால் மன்னனின் நினைவு திரும்பும் என்று எண்ணினாள்.

ஆனால் மோதிரத்தைக் காணவில்லை.

அவளுக்கு..மோதிரம் மட்டுமல்ல -வாழ்வின் அர்த்தத்தையே தொலைத்து விட்டது போலிருந்தது.

ஆம்.. மீண்டும் மீண்டும்…எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது.

வெறும் உடலுடன் காட்டிற்குத் திரும்பினாள்.

ஒரு நாள்.. ஒரு மீனவன் வலையில் சிக்கியது அந்த மீன்.

அதன் வயிற்றில் அரச மோதிரம்!

மீனவன் மோதிரத்தை மன்னனிடம் சேர்ப்பித்தான்.

துஷ்யந்தன் அந்த மோதிரத்தைக் கண்டான்.

நினைவலைகள் சூறாவளியாகத் தாக்கியது.

சாகுந்தலை… சாகுந்தலை…மனம் அனைத்தையும் அறிந்தது.

எங்கே அவள்… என்றே மனம்- ஆவலால் துடித்தது!

உடனே காட்டுக்குப் புறப்பட்டான்.

பிரிந்தவர் சேர்ந்தால் – பேசவும் வேண்டுமோ?

சாகுந்தலையுடன் இணைந்தான்.

மகன் பிறந்தான்.

பரதன் என்று பெயரிட்டான்.

வளர்ந்தபின் உலகை ஆள வந்தவன்.

அவனே பாரத நாட்டின் பெயருக்குக் காரணமானான்.

அடுத்து நாம் என்ன சித்திரங்களைக் காணப்போகிறோம்?

விரைவில் சந்திப்போம்!

 

சரித்திரம் பேசுகிறது! (18) –யாரோ

காளிதாசன்

காலச்சக்கரம் சுழலும்போது அதுவே இடையிடையே பிரமிப்பில் ஆழ்கிறது.

அதற்குக் காரணம் மனித இனத்தையே மாற்றும் அதிசய மனிதர்களின் அவதரிப்பு!

இலக்கியத் துறையில் மாபெரும் சரித்திரப் புருஷர்கள் ஒரு சில காலங்களில் வாழ்ந்து உலகுக்கு மகிழ்வூட்டி மறைகின்றனர்.

அது அந்தக் காலம் செய்த பேறு என்றே சொல்லவேண்டும்.

ஒரே ஒரு வால்மீகி.

ஒரே ஒரு வியாசர்.

ஒரே ஒரு கம்பன்.

ஒரே ஒரு வள்ளுவன்.

ஒரே ஒரு ஷேக்ஸ்பியர்.

ஒரே ஒரு தாகூர்.

இப்படி நாம் சொல்லிக்கொண்டு வரும்போது ..

ஒரு இலக்கிய சூரியன் சரித்திரத்தின் தொடுவானத்தில் உதித்துப் பிரகாசித்தான்.

ஒரே ஒரு காளிதாசன்!

குப்தர்கள் பொற்காலம் இந்த சூரியனால் ஒளிவீசியது!

ருத்ரதாமன் சம்ஸ்கிருத மொழியில் இலக்கியம் படைத்த காலத்திலிருந்து பல சம்ஸ்கிருத பண்டிதர்கள் – மேலும் கவிஞர்கள் நாடகங்களையும் கவிகளையும் படைக்கத் துவங்கினர். குப்த ராஜ்யத்தில் வீடுகள்தோறும்  ‘இலக்கிய மன்றங்கள்’ இருந்தது. சமஸ்கிருதம் வளர்ச்சியடைந்தது. காளிதாசன் தன் கவிதைகளால் பொற்காவியங்கள் படைத்தான். சாகுந்தலம்,  விக்ரமோர்வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை அந்த மகாகவி எழுதினான்.

பின்னாளில் சர். வில்லியம் ஜோன்ஸ் காளிதாசனுடைய சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபின் அகில உலகும் காளிதாசன் புலமையை அறிந்தது.

இனி கதைக்குப் போகலாம்.

ஒரு காட்சி விரிகிறது. இன்றைய காஷ்மீர் – அந்நாளில். இமயமலை அடிவாரத்தில் ஆடியோடித் திரிந்த சிறுவன் ஒருவன். இயற்கையின் எழில் அவனைக் கவர்ந்தது. உயர்ந்த மலைத்தொடர்கள் அவன் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.வெள்ளி உருகி ஓடுவதுபோல் பனிமலைகளிலிருந்து ஓடைகள் சூரிய வெளிச்சத்தில் மின்னியது. ஓடக்கரையில்  வளர்ந்திருந்தது  குங்குமப்பூச்செடிகள். ஓங்கி உயர்ந்திருந்தது தேவதாரு மரங்கள். மலையின் நடுவில் சிறு ஏரிகள். அவன் மனதில் இத்தனையும் இன்பத்துடன் உறைந்தது.

ஆயினும் புத்திசாலித்தனம் என்பது அவனிடம் மருந்துக்கும் இல்லை. ஆட்டுமந்தை ஒன்றை அவன் நடத்திவந்தான்.  அவனது பெற்றோர்கள்:  இந்த ஊரில் இருந்து கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்! தெற்கே மகதம்  – மாளவம் சென்று வேலைசெய்து பிழைக்க வழியைப்பார்!

சிறுவன் புறப்பட்டான். பாடலிபுத்திரம் சென்றான். காட்சிகள் பல கண்டான். கலிங்கம் சுற்றினான். ஆந்திராவில் அலைந்து திரிந்தான். பின்னர் மெல்ல உஜ்ஜயினி வந்தடைந்தான். நகரத்தின் பொன்னொத்த புதுப்பொலிவும் – வந்தாரை  வாழவைக்கும்       எண்ணப்பாடும் – அவனை வரவேற்றது. மரவெட்டியாக வேலை பார்த்தான். சிறுவன் இளைஞனான்.

அருகிலிருந்த மகிஷபுரி என்ற சிற்றரசரனின் மகள் – இளவரசி வித்யோத்மா. அழகி. பலவும் கற்று பெரும்பாண்டித்யம் கொண்ட அறிவாளி. எதுவுமே – அதிகம் இருந்தால் கர்வம் பெருகுவது இயற்கைதானே! அமைச்சர்களையும் – பண்டிதர்கள் அனைவரையும் தனது அறிவாற்றலால் – அலட்சியம் செய்து அவமரியாதை செய்தாள்.  ‘தன்னை அறிவால் வெல்லும் இளைஞனையே திருமணம் செய்வேன்’ என்றும் சூளுரைத்தாள்.  அமைச்சர்கள் – அகம்பாவம் பிடித்த இந்த இளவரசிக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் என்று நினைத்தனர். இவளுக்கு ஒரு முட்டாளைக் கட்டிவைப்போம் – என்று வெஞ்சினம் கொண்டனர்.

ஒரு மரத்தில் அந்த இளைஞன்  ஒரு கிளையில் அமர்ந்துகொண்டு தான் அமர்ந்த கிளையையே வெட்டும் காட்சியைக் கண்டனர்.

வெட்டி முறிந்த உடன் இளைஞன் கீழே விழுந்த அவலமும் கண்டனர்.

‘இவன் சரியான முட்டாள்! இவனையே இளவரசிக்கு மணமுடித்து அவளது கொட்டத்தையும் அடக்க வேண்டும்’ – என்று எண்ணினர்.

அவனிடம் சென்று : நீ சாப்பிட்டாயா?

அவன்: ரொம்பப் பசிக்குது

அமைச்சன்: எங்களுடன் அரண்மனைக்கு வா! விருந்து கிடைக்கும். ஆனால் நீ வாயைத் திறந்து பேசக்கூடாது.

அவன்:சரி

அமைச்சன் சிற்றரசனிடம் சென்று : அரசே!  நாங்கள் இன்று இந்த அறிவாளி இளைஞனைக் காணும் பாக்கியம் பெற்றோம். இவனே உங்கள் மகளை அறிவால் வெற்றிகொண்டு மணமுடிக்க வந்தவன். ஆனால் இவன் இந்த வருடம் முழுவதும் மௌன விரதம் கொண்டுள்ளான்.

நமது முட்டாள் இளைஞன் இளவரசியிருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

இளவரசி தன் வலக்கரத்தின் ஒரு விரலைக் காட்டினாள். அவன் அதை  ‘இவள் எனது ஒரு கண்ணை குத்துவேன் என்கிறாள்’ என்று எண்ணி , ‘இவளது இரண்டு கண்களையும் குத்துவேன்’ என்பதுபோல் தன் இரு விரல்களைக் காட்டினான்!

இளவரசி தன் ஐந்து விரல்களை விரித்து தனது உள்ளங்கையைக் காட்டினாள். அவன்  ‘இவள் என்னை அறைவதற்குக் கையைக் காட்டுகிறாள்’ என்று எண்ணி  ‘இவளை குத்துவேன்’ என்பதுபோல் தனது விரல்களைக் குவித்து முஷ்டிக்கரத்தைக் காண்பித்தான்.

அருகிலிருந்த அமைச்சர்கள் இளைஞனை வெகுவாக சிலாகித்து : இளவரசி! என்ன அறிஞர் இவர்!

நீங்கள் ஒரு விரலைக் காட்டி, ‘கடவுள் ஒருவர்’ என்றீர். இவர் இரு விரல் காட்டி .. ‘கடவுள் பாதி!  மனிதன் பாதி! இரண்டும் சேர்ந்த கலவை நாம்’ – என்று காட்டுகிறார். மேலும் ஐந்து விரல்களைக் காட்டி, ‘ஐந்து உணர்வுகள்’ என்றீர்.  இவர் அவற்றைக் குவித்து ‘ஐந்து உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதில் சிறப்பு’ என்று கூறுகிறார். இளவரசி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நமது முட்டாள் மௌனியைத் திருமணம் செய்துகொண்டாள்.

கௌண்டமணி தனது சகோதரிக்குப் பெயிண்ட் அடித்து செந்திலுக்குக் கல்யாணம் செய்த சினிமாக் கதைதான்  நமக்கு  நினைவில் வருகிறது!

இளவரசி – கணவன் முட்டாள் என்பதை உணர்ந்து – திட்டித் – துரத்திவிட்டாள். அமைச்சர்களும் அவனைத் துரத்திவிட்டனர். அவர்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது. அழுத இளைஞன் காளி கோவில் சென்று கதறி அழுது முறையிட்டான்: ‘தாயே! எனக்கு அறிவு தரமாட்டாயா?’

அழுது அழுது ஓய்ந்த பின் : ‘தாயே காளி மாதா! எனக்கு நீ அறிவு தரவில்லை என்றால் எனது நாவு இருந்து பலன் என்ன! அதை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்!’  

குறுவாளெடுத்து நாக்கை அறுத்துக்கொள்ள முயன்றான். காளி அங்கு தோன்றி அருளையும் அறிவையும் தந்தாள்.அன்று காளிதாசன் பிறந்தான்! சம்ஸ்கிருத மொழி, காளிதாசன் நாவிலிருந்து வெளிவந்ததால் அலங்காரம் பெற்றது!

காளிதாசன் விக்கிரமாதித்தனின் அரசசபையிலுள்ள நவீன ரத்தினங்களில் ஒருவர். விக்ரமாதித்தர் அரசவையில்  காளிதாசனைத்தவிர  தண்டி, பவ பூபதி போன்ற புலவர்களும் இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை!  ஒருசமயம் இந்த மூவருக்குள் யாருடைய கவித்துவம்  உயர்ந்தது என்ற சர்ச்சை எழுந்தது. தெய்வ சந்நிதியில் காளியிடமே தீர்ப்புக் கேட்பது என்று முடிவானது. மூவரும் காளி கோயிலில் வந்து பாடல்கள் பாடினர். தண்டியின் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூபதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் அசரிரீ ஒலித்தது.

காளிதாசரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை! காளிதாசருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. “அப்படியானால் என் திறமை என்னடி?” என்று ஒருமையில் காளியைத் திட்டிவிட்டார். காளி முடிப்பதற்குள் அவர் அவசரப்பட்டுவிட்டார்.

 “மகனே! காளிதாசா! என்னடா அவசரம் உனக்கு?! நான் மற்றவர்களின் பாண்டித்யம்பற்றியே மெச்சினேன்! உன்னைப்பற்றிச் சொல்வதற்குள் அப்படி என்ன அவசரம்? ‘த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய’ என்று உன்னைப்பற்றிச் சொல்வதற்குள் என்னைத் திட்டிவிட்டாயே” என்றதும் காளிதாசர் அழுதுவிட்டார்.

அந்த ஸ்லோகத்தின் பொருள்  ‘நீதானே நான்! நீதானே நான்! நீதானே நான்’. அதாவது காளிதாசனும் காளியும் ஒன்று. நீயும் நானும் ஒன்றானபிறகு உனக்கு மிஞ்சிய புலவனேது? என்றாள் காளி.

மகாகவி காளிதாசன் ருது சம்ஹாரம், குமார சம்பவம், மேக சந்தேசம், ரகுவம்சம் ஆகிய நான்கு காவியங்களையும் விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்ரம், சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அழகிய மொழி நடையில் நமது சாதாரண அறிவால் நினைத்துப் பார்க்கவே முடியாத உயரிய கற்பனை வளத்தில் படைத்துள்ளார்.

(சகுந்தலை)

சிலர் பிறக்கும்போதே புகழுடன் தோன்றுவர். சிலரது  வாழ்வில் திடீரென்று இறையருள் கிட்டும். இறையருள், யாருக்கு எப்பொழுது கிடைக்கும் என்பது இவ்வுலக நியமங்களின் மாபெரும் புதிர். அதிலும் வெகு சிலருக்குத்தான் இறைவனே நண்பனாகக் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கும். காளிதாசன் அப்பேர்ப்பட்ட வரம் பெற்றவன்! அது உலகுக்கே ஒரு வரம்!

சரித்திரம் இனிமை கண்டது – புதுமை பெற்றது – பெருமை கொண்டது!

வேறு என்ன கதைகள் சரித்திரம் சொல்லப் போகிறது! பொறுத்திருந்து பார்ப்போம்.