இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

கி. ராஜநாராயணன்

பேசும் புத்தகம் | கி. ராஜநாராயணன் சிறுகதைகள் *பேதை* | வாசித்தவர்: ப.காளீஸ்வரி - Bookday

 

ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்னும் இயற்பெயர் கொண்ட கி.ரா கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1923ல் பிறந்தவர். அண்டை வீட்டுக்காரரான கு.அழகிரிசாமி இவரது பால்ய சிநேகிதர். இருவரும் சாகித்ய அகதமி விருது பெற்றவர்கள்.

கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையைச் சொற்களால் படம் பிடித்துக் காட்டியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த, அதிகம் படிக்காத இவர்,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எண்ணற்ற விருதுகள் பெற்ற இவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்துவருகிறார்.   

**  ** ***

Ki Raa காய்ச்ச மரம் - YouTubeஇவரது “காய்ச்ச மரம்” என்னும் கதை

நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக்காடு,  நாலு சோடி உழவு மாடு. தொழு நிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமைக் குடியிருக்கும் வீடு. பூர்வீக வீடு போக மூணு கார வீடுகள்.

என்று தொடங்குகிறது.

நிம்மாண்டு நாயக்கரின் மனைவி பேரக்காள்.  நான்கு பெண் மக்களுக்கும்  நான்கு ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல குடும்பங்களில் சம்பந்தம் செய்து… பேரப்பிள்ளைகள் எடுத்து .. பெரிய ஆலமரம்தான் அவர் குடும்பம்.   பேரக்காள். கொண்டுவந்த 1௦௦ பவுன் நகைகள் பெண்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் போட்டாயிற்று    

சொத்தைப் பிரித்துத் தந்துவிடவேண்டும் என பிள்ளைகள் விரும்புகிறார்கள். நேரடியாகக் கேட்காவிட்டாலும் பெரியவர் காதிற்கு எட்டிவிடுகிறது. பருத்திக்காடு  சென்று திரும்பும்போது, ஒரு மரத்தடியில் பெரியவரும் அவர் மனைவியும் அமர்கிறார்கள். அப்போது பையன்கள் ஆசைப்படுகிறார்களே என்ன செய்யலாம் என மனைவிடம் கேட்கிறார் நிம்மாண்டு.

“இதிலே என்ன இருக்கு? எப்ப இருந்தாலும் அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டிய பாரம்தானே, பிரிச்சுக் கொடுத்திட வேண்டியது தானே? நமக்கும் வயசாகிப் போச்சு. கிட்ணா, ராமான்னு உட்கார்ந்து சாப்பிட வேண்டிய காலத்திலே ஏன் இப்படி லோலோன்னு அலைஞ்சு திரியணும்” என்றாள் பேரக்காள்.

பையன்களை அழைத்து முடிவினைத் தெரிவிக்கிறார். ஒரு மத்யஸ்தரை அழைத்து வரச் சொல்கிறார். நீங்களே பிரித்துவிடுங்களேன் என்று பிள்ளைகள் சொல்ல கட்டாயம் மத்தியஸ்தர் வேண்டும்  என்று  சொல்லிவிடுக்ரர் நாயக்கர்.  

பையன்கள் நால்வரும் பாறைப்பட்டி கந்தச்சாமி நாயக்கரைக் கூட்டி வந்தார்கள். பாறைப்பட்டி நாயக்கர் எல்லோருக்கும் பொதுவானவர். ஊர்ப் பெரிய மனுசன். தெற்கு வடக்கு போய் வரும் மனுசன். விபரம் தெரிந்தவர்.

பாறைப்பட்டி நாயக்கர் வந்தார். “வாங்க பாறைப்பட்டி மாப்ள!” என்று சிரித்தபடி நிம்மாண்டு நாயக்கர் வரவேற்றார்

வெற்றிலை எச்சில் துப்ப வசதியாக் தொழுவத்திலேயே அமர்ந்துகொண்ட கந்தச்சாமி, பேரக்ககாள் கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு  விவரம் கேட்டுக்கொள்கிறார்.

வீட்டிலிருந்த பருத்தி, வத்தல், மல்லி, தானியங்கள் உட்பட மொத்த சொத்தும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டன. எல்லாம் வாய்க்கணக்காகவே. சரி தானே என்று கேட்டார் பாறைப் பட்டி. பையன்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று கலந்து பேசினார்கள். பின்பு வந்து சரி என்றார்கள்.

நான்கு பாகங்களையும் நான்கு துண்டிச் சீட்டில் எழுதி குலுக்கிப் போடப்படுகிறது. ஒவ்வொரு பையனும்  எடுத்த சீட்டில் உள்ளது அந்தப் பையனுக்கு.  அதில் ஆளுக்கு ஒரு வீடு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் சில சௌகர்யங்களும் சில அசௌகர்யங்களும் இருந்தன. கிடைத்த வீட்டின் அசௌர்யங்கள்தான் அந்தந்த மருமகளின் கண்களில் பட்டன.   பூர்வீக வீடு அண்ணனுக்குக் கிடைத்ததில் தம்பிகளுக்கெல்லாம் வயத்தெரிச்சல்.

பாகப்பிரிவினை ஒருவழியாக முடிந்தது.  என்றாலும் நிம்மாண்டு பூர்வீக வீட்டுக்குள் சென்று பெரிய வெங்கலத் தவலையைத்  தூக்கி வந்தார். எல்லாம் வெள்ளைக்காரன் காலத்து வெள்ளிக் காசுகள் 2000 இருந்தன. அவற்றையும் சம பங்காக பிள்ளைகளுக்குக் கொடுத்தார். நிம்மாண்டு. (இந்த இடத்தில் ஒரு கணக்கு 12 வெள்ளிக்காசுகள் ஒரு பவுன் தங்கத்திற்கு சமமாம்.)

அந்தக் காலத்தில் 12 வெள்ளிக் காசுகளுக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். மொத்த‌ம் 2000 காசுகள் இருந்தன. காசுகளையும் சரிசமமாகப் பகிர்ந்தார்கள்.காசுகளை மகன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது நிம்மாண்டு நாயக்கரின் முகத்தைப் பார்க்கணுமே . மனுசன் முகத்திலே ஒரே சந்தோசம்.

மகன்களுக்கும் மகிழ்ச்சி. என்றாலும் ‘பொல்லாத கிழவரு’ மேலும் பணத்தை புதைத்து வைத்த்திருக்கலாம் என்கிற சந்தேகமும் இல்லாமலில்லை.  

பணத்தைப் பகிர்ந்தது சரியில்லையே  என்று பாறைப்பட்டி கவலைப்படுகிறார்.

“இப்போ இந்தக் கிழவர் பண்ணியது வம்பான வேலை. பையன்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவு கொடுத்திருக்கு. வத்தல், பருத்தி, உளுந்து, மல்லி முதல் கொண்டு அவ்வளவும் கொடுத்தாச்சு. இப்பப் போயி இவரு ஏன் பணத்தையும் பகிர்ந்து கொடுக்கணும். நோக்காடு, சாவுன்னா பிரயோசனப்படுமே” என்று பாறைப்பட்டி நினைத்துக் கொண்டார்.

நிம்மாண்டு, பாறைப்பட்டியைப் பார்த்து சொன்னார், “இத்தனை நாள் பிள்ளைகள் என் கையை எதிர்பார்த்து இருந்தாங்க . இனி நான் அவங்க கையை எதிர்பார்த்து இருக்கணும்” என்று சொன்னார்.

இருக்கிறது எல்லாத்தையும் கொடுத்தாகிவிட்டது. மூணு வேளைக் கஞ்சி, கட்டிக்கிடத் துணி, தலைக்கு எண்ணெய் இவைதான் இனி  தேவை என்று பிள்ளகளிடம் சொல்லிவிடுகிறார். மாதம் ஒரு பையனிடம் என்று முறை. முதல் சுற்று நல்ல கவனிப்போடு சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நாளாக நாளாக நிலைமை மோசமானது.

மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும்  நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு, உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு.

இருவரும்  வற்றி, மெலிந்து, சாயம் போன கந்தல் துணி போலாகிவிட்டார்கள்.  எண்ணெய் காணாத  தலை பிசுபிசுவென்று ஆகிப்போனது.

அப்பா அம்மாவைப் பார்த்துப் போக வந்த சின்ன மகள் நிலைமையைப் புரிந்து கொள்கிறாள். கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அண்ணன்களையும் மதினிகளையும் திட்டித் தீர்க்கிறாள். பெற்றோர் குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் வடிக்கிறார்கள்..

தன்னோடு வந்து விடும்படி மகள் சொல்ல  ‘சம்மந்தக்காரங்க’  வீட்டுல போய் இருக்கிறது சரியில்லை என்று சொல்லிவிடுகிறார் நிம்மாண்டு.

“எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிருவோமா?” என்று யோசிக்கிறார்கள். நடுவுள்ள மகள் வருகிறாள். அப்பா, அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் பண்டமெல்லாம் கொண்டு வருகிறாள். கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள்.

ஒரு நாள் அதிகாலை வயசாளிகள் இருவரும் கோவில்பட்டி புறப்பட்டுப் போனார்கள். தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் பயந்து பயந்து நடந்தார்கள். கம்மலையும், வெள்ளி அரணாக் கயித்தையும் விற்றார்கள். சாமியைக் கும்பிட்டு ரயிலேறி மதுரைக்குப் போனார்கள்.

மதுரை ரயில்வே ஸ்டேசனில் கணக்கு வழக்கில்லாத கூட்டம்.  என்ன செய்வது, எங்கே  போவதென்று  தெரியாமல் திண்டாடுகிறார்கள். பேரக்காவிடம்  ஒரு சின்ன குழந்தை வந்து ஒட்டிக்கிகொள்கிறது. குழந்தையின் குடும்பம் இராமேஸ்வரம் போகிறது.. இவர்களும் ராமேஸ்வரம் போகலாம்னு முடிவு செய்கிறார்கள்.

கண்காணாமல் போன சமாச்சாரம் முதலில் ஊருக்குத் தெரிந்து, பிறகுதான் பிள்ளைகளுக்குத் தெரிகிறது.  பிள்ளைகள் மனசு பதறுகிறது. மருமக்கமார்கள் ‘எங்கனயாவது கிடக்கும்’னு எரிச்சலோடு சொல்கிறார்கள்

கிணத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பிணமாக மிதப்பதாகச் செய்தி வருகிறது. ஓடிப்போய் பார்த்ததில் வேறு யாரோ என்று தெரிகிறது. பிள்ளைகள் கொஞ்ச நாள் தாய் தகப்பனை ஓடி ஆடித் தேடுகிறார்கள். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள்  கழிந்து விடுகின்றன. இவர்களை ஊரே மறந்து போய்விடுகிறது.

வேண்டுதலுக்காக ராமேஸ்வரம் போன பாறைப்பட்டி நாயக்கர் கோவில் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பிச்சைக்காரர்கள் இடையே நிம்மாண்டுவையும் பேரக்காளையும்  பாத்து திகைக்கிறார்.  பாறைப்பட்டி நாய்க்கர் தற்செயலாகத் திரும்பிப் பார்க்கிறார்.

ரெண்டு பேர் தலையும் மொட்டை போட்டிருக்கு. பாறைப்பட்டியால தாங்க முடியல. தலையில தலையில அடிச்சுக்கிட்டார். ‘கோன்னு’ அழுதார்.

வயசாளிகள் இருவரும் அழவில்லை. கண்ணில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணீர் வரலை. நிம்மாண்டு நாயக்கர் பாறைப்பட்டி நாயக்கரை முன்னப் பின்ன தெரியாத ஆளைப் பார்ப்பது போல் பார்த்தார்.

பேர்க்காளுக்கு பாறைப்பட்டி நாயக்கரை அடையாளம் தெரிந்தது. வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசினாள்.

“எம்பிள்ளைக எல்லாரும் நல்லா இருக்காகளா?”

என்று முடிகிறது கதை.

** ** ** ** **

‘முதுமக்கள்’ என்று இன்னொரு கதையும் உண்டு. சொத்தை ஐந்தாகப் பிரித்து  ஒரு பங்கை தங்களிடமே வைத்துக்கொண்டு மற்ற நான்கு பாகங்களை நான்கு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்து நிம்மதியாக வாழ்ந்த தம்பதியரின் கதை இது. தங்கள் வசமிருந்த தோட்டம் துறவு மற்றும் கால்நடைகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறையும் வராமல்  பார்த்துக் கொள்கின்றன. வந்திருந்த விருந்தாளிக்கு ஆட்டுப்பால் காப்பி கொடுத்து உபசரிக்கும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.

கரிசல் வட்டார வழக்கில் இவரது பல படைப்புகள் இருந்தாலும்,  எளிய நேரடியான மொழியில் குறிப்பிடத்தக்க பல கதைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய கதைகளில் ’இடக்கர் அடக்கல்’ அற்ற,  வட்டர வசைச் சொற்கள் விரவிய  கதைகளாகத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தது ஒரு பிரபல வாரப் பத்திரிகை. அதனால், கி ரா என்றாலே வட்டார வழக்கு, கொச்சையான படைப்புகள்  என்று மாயை நிலவி வருகிறது என்று சொல்லலாம்.

இவரது கோபல்ல கிராமம் கதையின் ஒரு அத்தியாயத்தைப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது,  பல முறை வாய்விட்டுச் சிரித்தததும், சக பயணிகள் கேலிப் பார்வைகளை என் முதுகில்  உணர்ந்ததும் … அது வேறு அனுபவம்.  

மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான கதை மாந்தர்களும் இவர் கதைகளின் சிறப்பம்சம்.

 

                                                                                        எஸ். கே என்.  

 

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

image.png

பி எஸ் ராமையா

உப்பு சத்தியக்கிரத்தில் பங்குகொண்டு சிறைத்தண்டனை பெற்றவர். கதர் விற்பனையாளராகவும் தொண்டர் முகாம்கள் அமைத்து நடத்துபவராகவும் தேசிய இயக்கத்தில் பணியாற்றியவர்.

தமிழ் உரைநடை இலக்கியத்தில் ‘மணிக்கொடி காலம்’ என்று அறியப்படும் அளவிற்கு மணிக்கொடி பத்திரிகை மிக முக்கியமானதாகும். வத்தலகுண்டு சுப்ரமணியன் ராமையா என்னும் பி எஸ் ராமையா (வத்தலகுண்டு ஆங்கிலத்தில் Batlagundu என்று எழுதப்படுகிறது) ‘மணிக்கொடி’ ஆசிரியராகப் பணியாற்றிய காலம் 1935 மார்ச் முதல் 1938 ஜனவரி வரை. மணிக்கொடியிலிருந்து விலகியபின்   நாடகத்திலும் திரைத்துறையிலும் கவனம் செலுத்தினார்.

“தேரோட்டி மகன்”, “பிரசிடன்ட் பஞ்சாட்சரம்”,   “போலீஸ்காரன் மகள்” போன்ற மிக நாடகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிரசிடென்ட் பஞ்சாட்சரமும் போலீஸ்காரன் மகளும் திரைப்படமாகவும் வெற்றி பெற்றன. போலீஸ்காரன் மகள் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது.

1940 தயாரிக்கப்பட்ட “பூலோக ரம்பை” திரைப்படத்தில் தொடங்கி, “பணத்தோட்டம்” என இருபது திரைப்படங்கள் இவரது கதை- வசனம் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள். இவற்றில் சில படங்களை அவரே தயாரித்திருக்கிறார். இயக்கியும் இருக்கிறார்.  ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் இவரது ‘மலரும் மணமும்’ கதைக்கு பத்து ரூபாய் சன்மானமாகப் பெற்றார்.  ‘ஜெயபாரதி’ என்னும் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். முன்னூறுக்கும் ஏற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை  ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி கதிர்’, ‘குமுதம்’ தவிர மணிக்கொடியில் வெளிவந்தவை.

 ‘ராமையாவின் சிறுகதைப் பாணி’ என்னும் நூலை சி.சு. செல்லப்பா எழுதியிருக்கிறார்.

மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது ராமையா பெற்றார்.

* * * * * *

இவரது “மடித்தாள் பட்டி” என்னும் கதை

மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, “இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.

என்று தொடங்குகிறது

வேறு வழியின்றி வண்டியிலிந்து  குதித்து ஆலமத்தடிக்குப் போகிறார். புண்பட்ட மாட்டை மட்டும் ஒட்டிக்கொண்டு வண்டிக்காரன் செல்கிறான்.  அந்த இடத்தின் அழகும் கம்பீரமும்  அவர் மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாற்றுகிறது. மூன்று பக்கம் குன்றுகள் சூழ்ந்த இடம். சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கருங்கல் கரடு ஒரு பக்கம்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக புதர்கள் முளைத்திருந்தன.

இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்று கொண்டிருந்தது.

ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.

ஒரே அறைகொண்ட அந்தக் கோயிலின்  முன்புறம் ஆணும் பெண்ணுமாக இரு மண் சிலைகள்.  மரத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய வெண்கல மணி. படையல் இடப்பட்டதின் அடையாளமாக  அடுப்பு மூட்டி எரித்த மும்மூன்று  செங்கற்கள்.  ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த கதைசொல்லி  ‘முருகா’ என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார்.

அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.

யாரோ சோம்பேறிப் பண்டாரம் என்று முதலில் தோன்றினாலும் அவர் முகத்தில் இருந்த தனிக்களை இவரை ஈர்க்கிறது. ’பூசை போட வந்தீர்களா’ என்று கேட்கிறார் பண்டாரம். தற்செயலாக இங்கு வரநேர்ந்ததைச் சொல்லிவிட்டு கோவிலைப்பற்றி விசாரிக்கிறார்.

 பண்டாரம் அந்த கோவிலின் கதையைச் சொல்கிறார். பக்கத்திலுள்ள இந்தக் கோயில்  தெய்வம் என்று அடுத்துள்ள கிராம மக்கள் நம்பினார்கள். முன்னொரு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.

மதுரையில் ஆண்டுவந்த திருமலைநாயக்கர் இறுதிக்காலத்தில் மைசூர் உடையார் படைகள் மதுரையைமீது படையெடுக்க வந்த வழியில்  சத்தியமங்கலம் வரை மைசூர் படைகள் பிடித்துவிட்டன. மறவச்சீமை அதிபதி ரகுநாத சேதுபதி நாயக்கருக்கு உதவியாக பெரும் படையுடன்  வந்தார்.  எதிரிளைத் துரத்தி வெகு தூரம் பின்வாங்கச் செய்துவிட்டார்.    

மூன்று புறம்  மலைசூழ்ந்து கோட்டைபோல இருந்தது. அதைப் பயன்படுத்திகொண்டு  மைசூரில் இருந்து வரும் உதவிக்காககே காத்திருந்தன மைசூர் படைகள். சேதுபதியின் படைகளும் ஒரு காத  தூரத்தில் முகாமிட்டார்.  பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்திலேயே ஒதுங்கி இருந்தன

பத்தாம் நாள் மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. அதுபற்றிய உளவு தெரிந்துகொண்டு மேற்கொண்டு யுத்தம் எப்படிச் செய்யலாம் என திட்டம் தீட்ட முடிவுசெய்தார், சேதுபதி. உளவறியத் திறமைசாலிகள் பலர் இருந்தும்  தானே உளவறியச் சென்றாராம் சேதுபதி.

அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.

ஊரைவிட்டு ஓடிவிட்ட கிராம மக்களில் ஒருவன் கள்ளமுத்தன். பணக்காரன். பணத்தை வீட்டிலேயே ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் போயிருந்தான். சில நாட்களாகச் சண்டை ஏதும் நடக்காததால் புதைத்த செல்வத்தை எடுத்துப்போக வந்திருந்தான் . மனைவியும் மடியாச்சியும் பிடிவாதமாகக் கூட  வந்திருந்தாள்.   

புதைத்தவற்றை தோண்டி எடுக்கும்போது சேதுபதி வீட்டுக்குள் குதித்தார். கள்ளமுத்தன் பயந்து கத்தினான். சேதுபதி தான் யாரெனப் புரியவைத்தார். சேதுபதிக்குப் பதிலாக கள்ளமுத்தன்  உளவறிந்து வரலாமே என்கிற யோசனையைச் சொல்கிறாள் மடியாச்சி. என்ன காரணத்தாலோ சேதுபதி அதற்குச் சம்மதித்தார்.   கள்ளமுத்தன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான்.

ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்த பேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக் கொடுப்பதாகச் சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக் கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!

கள்ளமுத்தன் சேதுபதியைக் காட்டிக் கொடுத்து எதிரிகளிடமிருந்து பெரும் சன்மானம் பெறாலாம் முடிவு செய்கிறான். மைசூர்ப் படைகளின் தளபதியச் சந்தித்தான்  அதன்படி  ஐம்பது வீரர்களை உடனனுப்பினால் சேதுபதியைப் சிறைபிடித்துகொண்டு வருவதாகச் சொன்னான்.  ஆனால் தளபதியோ கள்ளமுத்தனைக் காவலில் வைத்துக்கொண்டு  வீரர்களை மட்டும் அனுப்புகிறான். துப்பு சரியாக இருந்தால் வெகுமதியும் தவறாக இருந்தால் தண்டனையும் கள்ளமுத்தனுக்குக்  கிடைக்கும் என்று ஏற்பாடு.

நூறு வீரர்கள் சேதுபதியைச் சிறப்பிடிக்கச் சென்றார்கள். சேதுபதி தப்புவதற்கு நேரம் தராமல் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே குதித்து விட்டார்கள்

 “மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.

ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத்தாள். ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில் விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்தாள். பானையிலிருந்த தண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்து சேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், ‘என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கி வெட்டச் சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.

கணவனைத் தவிர வேறு யாரையும்  ஒரு பெண் மார்போடு அணைத்துக்கொள்ள மாட்டாள் என நம்பினார்கள்.  மடியாச்சியும் வீர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்பும்படியான பதில்களைச் சொன்னாள். வீரர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

தளபதி கள்ளமுத்தன் மூக்கை அறுத்துவிட்டான். கள்ளமுத்தன் கோபத்துடன் திரும்பிவந்து மனைவியின் மூக்கையும் அறுத்ததோடு,  கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான்.

சேதுபதி தாமே போய் உளவு அறிந்துகொண்டு  மறுநாளே மைசூர்ப் படைகளைத் தாக்கி மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்.. மடிச்சியாச்சியின் மூக்குக்கு பதிலாக மைசூர் தளபதியின் மூக்கையே வாங்கிப் பழி தீர்த்துக்கொண்டார்.   அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் ஏற்பட்டது என்கிறார் அந்தப் பண்டாரம்..

சேதுபதி திரும்பி வரும் வழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத்  தங்கினார். மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார். மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.

நானும் கூடவே எழுந்து, “இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், “அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ளவர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்” என்றுபுறப்பட்டார்.

அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

என்று கதை முடிகிறது.

*******

ஒரு செவிவழிக் கதையினை சுவாரசியமான சிறுகதையாகப் படைத்திருப்பது வியக்க வைக்கிறது.

எப்போதோ படித்த ஒரு செய்தி.  மணிக்கொடியின் இதழ் அச்சாவதற்குமுன் பக்கங்கள் குறைந்தால்  ‘இந்தா பிடி’ என்று ஒரு  அருமையான சிறுகதையை தேவையான பக்க அளவிற்கு   எழுதித் தந்துவிடுவாரம் ராமையா.

ஒருமுறை கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி” நாடகத்தையும், பி.எஸ். ராமையா எழுதிய தளவாய் குமாரப்பிள்ளை நாடகத்தையும் ‘சேவா ஸ்டேஜ்‘ தயாரித்து பம்பாயில் அரங்ககேற்றம் செய்ததாம்.  அது குறித்த சுவையான செய்திகளை ‘கோமல்’ சுவாமிநாதன் ‘பறந்துபோன பக்கங்கள்’ பகுதியில் சுபமங்களாவில் எழுதியிருக்கிறார்.   

 

 

படைப்பாளிகள்: இரா முருகன் – எஸ் கே என்

 

era-murugan

எழுபது எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர்களில் பெருமளவிற்கு ‘சுஜாதா’வினால் ஈர்க்கப்பட்டு முயற்சி செய்தவர்கள். முன்னமே எழுதி வந்தாலும் சுஜாதாவின் படைப்புகளைத் தீவிரமாகப் படித்து வந்தவர்கள். சுஜாதாவின் தாக்கம் பல எழுத்தாளர்களை ஆக்கிரமித்தது. அவரை மானசீக குருவாகக் கருதுபவர்களும் ஏராளம்.

இந்நிலையில் அவர்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது சர்வ சாதாரணம்.  ஒரு சிலரே தங்களுக்கென்று ஒரு கதையாடல் பாணி கைவரப் பெற்றார்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அவர்களில் சட்டென்று நினைவிற்கு வருபவர் இரா முருகன்.

புதுக் கவிதையில் (கணையாழி -1977) தொடங்கிக் கவிஞராக, பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். வானொலியில் தனது கதைகளை வாசித்துள்ளார். திரைக்கதை வசனங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடர்கட்டுரை, மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு, ஆங்கிலத்திலிருந்து கவிதை மொழிபெயர்ப்பு என்று பல பங்களிப்புகள். இவரது ‘அரசூர் வம்சம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு கண்ட நாவல். மாந்திரீக யதார்த்த (magical realism) வகையில் குறிப்பிடும்படியாக எழுதுபவர்.

இவரது செரங்கூன் மனிதர்கள்  சிறுகதை ..

*   *   *   *

ஈஸ்வரி, இந்தப் பெயர் உணர்த்தக்கூடிய, புலர் காலையில் துயிலெழுந்து, குளித்து, கூந்தலில் நுனி முடிச்சும், கையில் அர்ச்சனைத் தட்டுமாக, ஒலிபெருக்கியில் அம்பாள் பாடல் காதில் அறையும் கோயிலை நோக்கி நடக்கிற, அல்லது ‘மாமா, அத்தை சேர்ந்து நில்லுங்கள், நமஸ்காரம் பண்ணிக் கொள்கிறோம்’  என்று காலில் மெட்டி ஒலிக்க, மாக்கோலம் உலராத தரையில், வயிறு பெருத்த கணவனின் மனம் பொருந்தாத, தாமதமான இயக்கத்தோடு  கடைக்கண்ணால் பார்த்து இணை சேர்ந்து வணங்கி எழுகிற, பிம்பங்களிலிருந்து விலகியவளாக செரங்கூன் வீதியைத் துயில் உணர்த்தப் போகிற பெண்.

என்று தொடங்குகிறது.

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலைபார்க்கும் 28 வயதுப்பெண்ணான ஈஸ்வரி, குழந்தை இல்லாதவள். கணவனும் அது போன்றே ஒரு கடையில் வேலை செய்பவன்.  இரவு  வெகுநேரம் வரை  ‘கணவனே கண் கண்ட  தெய்வம்’ சினிமா வீடியோவில் பார்க்கின்ற ஈஸ்வரி – ‘அதை நீயே பார்த்து அழுதுக்கிட்டு இரு, என்று சொல்லி  மாரடோனாவின் சர்ச்சைக்குரிய உலகக்கோப்பை கோல் எத்தனாவது முறையாகவோ பார்க்கும் பழனியப்பன்.

காலையில் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பும்போது, தான் வேலைக்குப் போகவில்லை. வீவு சொல்லிவிடு என்கிறான். காரணம் மறுநாள் பங்குகொள்ளப்போகும் தீமிதி.

முதன் முதலாக தீமிதிக்கப்போவதாக சொன்ன தினம் நினைவிற்கு வருகிறது. தனக்குப் பயமாக இருக்கிறது. வேண்டாமே என்கிறாள். விரதமெல்லாம் இருக்குமே என்று கேட்கிறாள்.

“ஆமா, ஒரு மாசத்திற்கு விரதம். நாளையிலிருந்து சவரம் கிடையாது. கவிச்சி கிடையாது. நீயும் கிடையாது..”

இதை மென்மையாகச் சொல்லியிருக்கலாம். வழித்து எரிகிற ரோமமும், கடித்துத் துப்புகிற எலும்பும், நீயும் எல்லாம் எனக்கு ஒன்றுதான். தேவையானால் வேண்டும். இப்போது தேவையில்லை.

கடைவேலையில் வித்தியாசமான வாடிக்கையாளர்கள்… காணாதது கண்டதுபோல் வாங்கிக் குவிக்கும் இந்திய யாத்திரிகள்.  அடிக்கடி வெளிநாட்டுப் பொருள்  விற்கும் வியாபாரிகளுக்காக  பொருள் வாங்கவரும் ‘கூரியர்’ சிங்காரம் அண்ணாச்சி.  இங்கேயே பிறந்து இதுவரை இந்தியாவே போகாத ஈஸ்வரிக்கு முன்பெல்லாம் தமிழர்களைக் கண்டால் நம்ம ஊர்க்காரங்க  என்ற உணர்வு இருந்ததுண்டு.

எல்லா ஊரும் ஒன்று தான் என நினைக்கும் பழனியப்பனுக்கு ஆட்டோ மெக்கானிசம் படித்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட எண்ணமும் உண்டு,

வேலையில் மும்மரமாக இருந்துவிட்ட ஈஸ்வரிக்கு கணவனுக்கு லீவு சொல்லத் தாமதமாக நினைப்பு வருகிறது. பொது டெலிபோன் சென்று அவன் வேலைபார்க்கும் கடைக்குப் போன் செய்கிறாள். யாரிடம் சொல்வது? நினைவிற்கு வருவது உஷா நாயர் என்னும் பெயர்.உஷா நாயருக்கு முன்னமே தெரியுமாம். சொல்லிவிட்டளாம்.

பழனியப்பனுக்கும் அந்த உஷா நாயருக்கும் தொடர்பு இவளுக்கும் தெரிந்திருக்கிறது.  இருவரும் சேர்ந்து சுற்றுவதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள்.

“யாரோட சுத்தினா உனக்கென்ன? இங்கு என்ன பிள்ளையா குட்டியா, வாசல்லேயே காத்திருக்கிட்டுருந்துட்டு, அப்பா, அப்பான்னு ஓடி வந்து காலைக் கட்டிக்க?”

.. “இந்த வீட்ல பிள்ளை அழுகைதான் கேட்கலை. உன் புலம்பலாவது நிக்கக்கூடாதா? குடிக்காதே.. குடிக்காதே.. சே .. வேற பேச்சு கிடையாதா?”

உடன் வேலைபார்க்கும் சுபாவிற்காக  அவளுடன் ஷாப்பிங் போகிறாள். ஒரு சீனக்குழந்தையும் அதனைக் கூட்டிக்கொண்டுபோகும் கிழவரும், சலனமில்லாமல் ரிக்ஷாவில் போகும் ஜப்பானிய வயோதிக டூரிஸ்டுகள்.. எல்லா இயக்கமும் ஏதோ ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு அமைதியா இழைந்தோடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.

பஸ்ஸில் திரும்புகையில் சில மலேசிய இளைஞர்களும், இவளைத் தீர்க்கமாகப் பார்க்கிற ஒரு பெண்ணும்.

ஏதேதோ எண்ண ஓட்டங்கள்.

பெண்ணே, உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இந்தக் கண்கள் மட்டும் போதுமா கணவனைக் கட்டிப்போட? ஆறு மீட்டர் அளந்து  துணி வெட்டுவாயா? டீகோ மாரடோனா தீமிதித்தால் பார்க்கப் போவாயா?

ஒரு பெரிய கூட்டம் ஒருத்தொருத்தராகப் போய் வி.சி.ஆர். விலை விசாரிக்கிறார்கள்.  சுருள்சுருளாகப்பட்டுத்துணிக்கு நடுவிலிருந்து ஈஸ்வரி எட்டிப்பார்கிறாள்.’ஏமாந்துவிடாதே பெண்ணே’ – மோ கிழவி சொல்கிறாள். ‘உனக்கு குழந்தை பிறக்க நேர்ந்துகிட்டேம்மா, இந்தா குங்குமம்’ சிங்காரம் அண்ணாச்சி பிரசாத்தை நீட்டுகிறார். ‘சீக்கிரம், சீக்கிரம்’   பழனியப்பன் தட்டுதடுமாறித தீக்குழியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறான். மேளக்காரர்கள் ஆவேசமாகக் கொட்டி முழக்குகிறார்கள். ‘ சீக்கிரம், சீக்கிரம்’. பழனியப்பன் ஒரு காலை எடுத்து தீயில் இறங்க முற்பட .. கால் தடுமாறி ..

Image result for FIRE WALK IN SOUTH INDIAImage result for FIRE WALK IN SOUTH INDIA

“வேணாங்க, ஐயய்யோ வேணாங்க” ஈஸ்வரி என்ற அந்த இருபத்தெட்டு வயது சிங்கைத்  தமிழ்ப்பெண், சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க அழ ஆரம்பித்தபோது, வெளியே மழை வலுத்துக் கொண்டிருந்தது .

என்று முடிகிறது.

*   *   *   *

நிகழ்வுகளுக்கிடையே, அலைபாயும் மனப்போராட்டத்தை  இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும், தகவலும் எண்ண ஓட்டங்களும் மாறிமாறி சொல்லும் ‘ஜம்ப் கட்’ உத்தியும் இக்கதைக்கு  வளமூட்டுகின்றன.

சமீபத்தில் வெளியான வைக்கோல் கிராமம்  , மாய யதார்த்த சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது.

 

 

படைப்பாளிகள் – எஸ் கே என்

சு தமிழ்ச்செல்வி

 

எளிய மக்களின் நீண்ட வாழ்வின் நுண்ணிய பகுதிகளை அவர்கள் மொழியிலே பதிவு செய்யும் சு.தமிழ்ச்செல்வி, அவரது அளம், மாணிக்கம் மற்றும் கீதாரி ஆகிய நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர். இவரது சிறுகதைகளிலும் பெண் விவசாயக் கூலிகள் சந்திக்கும் அவலங்களும் இயலாமையும், பல சமயங்களில் வேறு வழிதெரியாது மூட நம்பிக்கைகளை கைக்கொள்ளுவதும் காணப்படுகின்றன. ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். “மாணிக்கம்” புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்.

அவரது ‘யதார்த்தம்’ என்கிற கதை..

                                                * * * * * * *

Image result for indian poor dying in government hospital drawing

“ஏய், இங்க யாரு ஊளையிடறது? கொஞ்சம்கூட அறிவில்லாம..” கத்திக்கொண்டே வந்தாள் அந்த நர்ஸ்.

என்று தொடங்குகிறது. இடம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாலுக்கா தலைநகரான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை. அழுதழுது வீங்கிப் போயிருந்த மாரியப்பனும் தலைவிரிகோலமாய் மரத்தடியில் ஆஸ்பத்திரிக்கு வெளியே திடீர் திடீரென பெருங்குரலெடுத்து அழும் அவன் மனைவி கண்ணம்மாவும்  அவனது அம்மா காலை நாலரை பஸ்ஸில் வருவாள் என எதிர்பார்த்துக்கிடந்தார்கள். வரும்போது ஏதேனும் பணம் தோதுபண்ணிக் கொண்டுவரலாம். அவள் வந்தால்தான் இவர்கள் ஊருக்குப் போகமுடியும். கையில் இருந்ததோ இரண்டு மூன்று ரூபாய்கள்தான். இயலாமையும், துக்கமும் நெஞ்சை அழுத்துகிறது.

இப்படியெல்லாம் ஆகுமென்று தெரியுமா என்ன? நேற்று காலையிலேயே மூன்றரை வயது மகனுக்கு உடம்பு காய்ந்து கொண்டு  இருந்தது. பக்கத்து ஊர் ஆசுபத்திரியில் காண்பிக்கலாம் என மனைவியின் கோரிக்கை. ஆனால் அங்கு போய்விட்டு வந்து நடவுக்குப் போக சாத்தியமில்லை. இருவரும் சம்பாதிக்கும் குறைந்த வருமானத்தில்தான் வாழ்க்கை. வேலை கிடைக்கும் ஒரு சில நாட்களிலும் ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால்..? ‘முக்குட்டு’ கடையிலிருந்து காப்பித்தண்ணியும் ‘சொர’ மாத்திரையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குப்போகத்தான் தீர்மானித்தாள்.

இருபோக சாகுபடி நடந்த நாட்களில் எதாவது வேலை கிடைத்துக்கொண்டே இருக்கும். வாய்கால் எல்லாம் காய்ந்து அல்லாடும் விவசாயத்தில் வேலை என்று கிடைப்பதே மிகச் சொற்பம்.

வேலை முடிந்து வீடு திரும்பும் கண்ணம்மா, காய்ச்சல் கண்ட மகனுக்கு ரசம் வைத்துக் கொடுக்க சிறு நண்டுகளைத் தேடிப்பிடித்து மடியில் கட்டிக்கொண்டு வந்தாள்.

மகனுக்குக் கிட்ட நெருங்கவே முடியாத காய்ச்சலில் தூக்கித்தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. வேலை சீக்கிரம் முடிந்தாலும் கூலி பெறத் தாமதமாகி அப்போதுதான்  வீடு திரும்பிய மாரியப்பன், மகனைத் தோளில்  போட்டுக்கொண்டு, மனைவியுடன்  ஏழரை மணி பஸ் பிடித்து இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

ஆஸ்பத்திரிக்கு வந்தபோது நைட் ட்யூட்டி டாக்டர் வந்திருக்கவில்லை. இவ்வளவு மோசமான ‘கேஸ்’ பார்க்க நர்ஸ்களுக்கும் விருப்பமில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சியதால் வைத்தியம் பார்த்தார்கள். வேண்டாத தெய்வமில்லை. ஊசிபோட்ட மயக்கத்தில் குழந்தை உறங்குகிறான் என்ற நினைப்பிலும்,  இனி பிள்ளையைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையிலும்  ஏதோ டீயும் பன்னும் தின்று கண்ணயர்கிறார்கள். இடையில் திடுக்கிட்டுக் கண்விழிக்கும்போதுதான் புரிகிறது பிள்ளை இறந்து கிடப்பது.

பதினைந்து ரூபாயுடன் முதல் பஸ்ஸில் வந்த கிழவி, பேரப்பிள்ளை போய்விட்டது என்று அறிந்து ஒருபாட்டம் அழுது தீர்த்தாள்.

சரி. இப்போது ஊர் திரும்பவேண்டுமே? கார் என்றால் இருநூற்றைம்பது ஆட்டோ என்றாலும் நூற்றைம்பது.

“அம்மா, நீங்க ரெண்டியரும் அழுது  ரெகள பண்ணாதிய. புள்ளைய மடில போட்டுக்கிட்டு பஸ்ஸுலேய  போயிருவம்” என்றான்.

துக்கத்தைத் தொண்டையில் அடைத்துக்கொண்டு மூன்றரை டிக்கெட் எடுத்தான். கண்ணம்மாவை சமாளிக்கும் கடமை கிழவிக்கு.

பஸ் நான்கைந்து ஊர்களைக் கடந்திருந்தது. கண்மூடி மயங்கிக் கிடந்தவள் சாமி வந்தவளைப்போல் திடீரென்று எழுந்தாள். கிழவி சுதாரித்துக்கொண்டு பிடித்து அழுத்தி உட்காரவைப்பதற்குள், “ஐயோ.. நான் பெத்த தங்கமே.. ” என்று அலறிக்கொண்டு மகனிடம் பாய்ந்தாள் கண்ணம்மா. ஓடிக்கொண்டிருக்கும் பஸ்சில் நிலைதடுமாறி விழுந்தாள்.

கம்பியில் குத்தி ரத்தம் வழிய மூவரும் இறக்கிவிடப்படுகிறார்கள். எல்லோரும் இரக்கப்பட்டாலும்  உதவி செய்ய முன்வரவில்லை. மாரியப்பனுக்குத் துக்கத்தைவிட மனைவிமேல் கோபம் பெரிதாக  வந்தது.

அந்த ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த டீக்கடைகளில் கிழவி துக்கத்தைச் சொல்லி அழுதாள்.

Image result for poors travelling in a bus with a dead child in india

பிள்ளை இறந்த இரண்டாம் நாள், துக்கத்துடன் அவனது பொருட்களை வெறித்துப் பார்த்துகொண்டிருந்தாள் கண்ணம்மா.  அவளிடம் ‘இப்படியே அழுதுகொண்டிருந்தாலும் செத்த பிள்ளை திரும்பி வரப்போவதில்லை, எல்லோருடன் நடவுக்குப் போனால் வேலை நினைப்பில் எல்லாம் மறந்து போகும்’ என்கிறாள் கிழவி. அந்த ‘டீக்கடை மவரசனுக்கு’ பணம் திருப்பித் தர வேண்டுமல்லவா?

தெருவில், ‘இன்று வேலை கிடைக்கவேண்டுமே’ என்ற பரபரப்புடன், ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தார்கள் நடவு நடப்போகும் பெண்கள். அவளுடன் கண்ணம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

என்று முடிகிறது.

                                                * * * * * * *

‘இயல்பில் ஆண் பெண் என்னும் ஏற்றத்தாழ்வெல்லாம் இல்லை; உடல் தோற்றத்திற்குத்தான் இந்த ஆண் பெண் அடையாளமெல்லாம்’ என்று சொல்லும் தமிழ்ச்செல்வி பெண்ணியம் குறித்த கோட்பாட்டுரீதியான வாசிப்புப் புரிதலெல்லாம் பெரிய அளவில் தான் கொண்டிருக்கவில்லை என்கிறார். இன்னல்களுக்காட்பட்ட பெண்ணொருத்தி இயல்பாகத் தனது வாழ்வியலைப் பதிவு செய்யும்போது அதுவே பெண்ணெழுத்திற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கத்தான் செய்யும் என்கிறார்

இவரது வலைப்பூவில் மற்ற படைப்புகளின் விவரங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன.

 

 

 

படைப்பாளி – எஸ் கே என்

பாவண்ணன்

pd1

மொழிபெயர்ப்புகள், கவிதைகள், நாவல்கள். குறுநாவல்கள், கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள், நூல்-திரை-நாடக விமரிசனங்கள் என பன்முகப் படைப்பாளியான பாவண்ணனின் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி  பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. தமிழக அரசின் குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது, இலக்கிய சிந்தனை நாவல் பரிசு, கதா விருது போன்று பல அங்கீகாரங்கள் பெற்ற இவர், பைரப்பாவின் மகாபாரதப் பின்னணி கன்னட நாவலின் மொழிபெயர்ப்பான “பருவம்’ நூலுக்காக 2005 சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்.

* * * * * * * * * *

இவரது நலிவு என்னும் சிறுகதை

அருமாந்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சைவண்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது.

Image result for village school teacher in a tamil nadu christian school

என்று தொடங்குகிறது

அங்கு ஆசிரியையான லூசி அடவில்லாத கணவனாலும், நிரந்தரமற்ற வேலைகளாலும் இன்னல்களே வாழ்க்கையாக வாழுபவள்.

எப்போதும் பேருந்து கான்வென்டிற்குச் சற்றுத் தொலைவிலேயே நிற்கிறது. இறங்கியதும் நடக்கத்தொடங்காமல்  ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டு புழுதி அடங்கும்வரை கைக்குடடையால் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு நின்று விடுகிறாள்.   வாந்தி வருவதுபோல் இருக்கிறது. நடக்கக்கூடப்    பலவீனமாக இருக்கிறது. தினப்படி ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கி சாப்பிட்டிருந்தாலோ, ஒரு மாதமாவது பெரியாஸ்பத்திரியில் பெட்டில் இருந்து சிகிச்சை பெற்றிருந்தாலோ குணமாகி இருந்திருக்கலாம். ஆஸ்பத்திரியில் சேரலாம என்று கணவனிடம் கேட்டபோது பதிலேதும் சொல்லவில்லை. நான்கு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை.

கணவன் ஜோசப் ஒருமுறை சஸ்பென்ஷனில் இருந்தபோதுதான் குழந்தை பிறந்தது. அந்தச் சமயத்தில்தான் இந்த வாந்தியும் தொடங்கியது. முன்பெல்லாம் வேலை பார்த்த பூச்சி மருந்துக்கடை, பேப்பர் ஃபாக்டரி காரணமாக வரும் சாதாரண வாந்தி என்று நினைத்தாள். 

அவள் வேலை பார்த்துவந்த  பூச்சி மருந்துக்கடைக்கும், அனாதை இல்லத்திற்கும் ஜோசப்பின் அம்மா வந்து தரக்குறைவாக சத்தம்போட்டது, சத்தம்போட்ட அம்மாவை ஜோசப் இழுத்துப்போட்டு உதைத்தது என கசப்பான அனுபவங்கள்தான் வாழ்க்கை. திரும்பவும் ஜோசப்பிற்கு சஸ்பென்ஷன். கான்வென்ட் சம்பளத்தில் பஸ் செலவு போகத்தான் குடும்பச் செலவுகளுக்கு. இடையிடையே காசு கேட்டுக்கணவனின் தொல்லை.

வரவர இந்த வாந்தியும் சோதனை செய்கிறது. நேற்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் குடலே அறுந்து போகிற மாதிரி வலிகண்டு புரட்டியது. வகுப்பறைக்குள்ளேயே அசிங்கமாகிவிடுமோ என்னும் பயம். இதோ வாசலுக்குப் போய்விடலாம் என்ற அவசரத்தில் நடக்க, வயிற்றில் மேஜை இடிக்க,  காலையில் சாப்பிட்ட கம்பு மாவுக்களி, மருந்து மாத்திரைகள் எல்லாம் வெளியில். ஒரே களேபரம் எல்லா மிஸ்களும், மதரும் வந்துவிட்டார்கள். பொன்னம்மா ஆயாதான் இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாள். வகுப்பை அப்படியே விட்டுவிட்டு பஸ் ஏற்றி  அனுப்பிவிட்டார்கள்.

இந்தக் கம்பத்திலேயே சாய்ந்துகொண்டிருப்பதை விட மெதுவாக கான்வெண்டே போய்விடலாம் எனத் தோன்றுகிறது.

இடுப்புப்பக்கம் இற்றுப்போகிறமாதிரி வலிக்கிறது. கொஞ்சம் தாராளமாய் உட்கார்ந்தால் தேவலாம் போல் இருக்கிறது. மின்னுகின்ற தண்டவாளம் பார்வையில் பட்டு ‘கான்வென்டுக்கே போயிர்லாம், பக்கத்தில் தானே’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு நடக்கிறாள்.

குழந்தையின் ஞாபகம் வருகிறது. இந்த வேலையை வாங்கிக்கொடுத்த மேரி அத்தையும் அவள் புருஷனும் நினைவிற்கு வருகிறார்கள்.

ஜோசப், ஜோசப் அம்மா மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். மேரி அத்தை,  மேரி அத்தை புருஷன் மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். எல்லாம் மாதாவின் செயல்.

முதல் பெல் அடிக்கும் பொன்னம்மாளின்     ‘இப்போது பரவாயில்லையா?’ என்ற கேள்விக்கு ‘ம்..’ என்று பதிலளிக்கிறாள். ஸ்டாஃப் ரூமை நெருங்கும்போது எதிர் ஹாலிலிருந்து மதர் கூப்பிடுவது கேட்கிறது.

குட் மார்னிங், இப்ப எப்படியிருக்கு, நல்லாயிருக்கேன்’ , டேக் யுவர் சீட், பரவாயில்லை போன்ற உரையாடல்களுக்குப் பிறகு

‘தப்பா எடுத்துக்கக் கூடாது. நேத்து நீங்க போனப்புறம் ஒங்களைப்பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்னேன். ஒரு வியாதியை ரெண்டு வருஷமா வளர உட்டுக்னு இருக்கிறது ரொம்ப தப்பு. ஆரோக்யம்தான் எல்லாத்துக்கும் அடித்தளம். நீங்க அவசியம் டாக்டரைப் பார்க்கணும். நல்லா ஓய்வெடுக்கணும் சீக்கிரமா குணமாவனும். இன்னிக்குத் தேதி பதினாலுதான். ஆனா உங்க முழுச் சம்பளமும் இந்த பாக்கெட்ல இருக்கு’

‘மதர்…’

‘ஒங்களை நாங்க  வெளியேத்தறதா நினைச்சுக்கக் கூடாது. நீங்க மருத்துவம் செஞ்சிக்கதான் அனுப்பறம். ஒங்க உடம்பு குணமாக எல்லோரும் மாதாவை  பிரார்திக்கறம்.’

பேச ஒன்றுமில்லாமல் இரண்டு சொட்டுக் கண்ணீருடன் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு  வெளியே வரும்போது மதர் தோளில் தட்டிக் கொடுக்கிறாள்.

தொடை நடுக்கம் அதிகமாகவே வாசலைப் பார்த்து நடக்க இருந்த லூசி ஸ்டாஃப் ரூம் பெஞ்சில் உட்காருகிறாள்.

என்று கதை முடிகிறது.

பாவண்ணனின் பல கதைகள் எதார்த்தங்களையும், போராடுதல்களையும் இயலாமையையும் உள்ளது உள்ளபடி சித்தரிப்பவை. இவரது ‘ஜெயம்மா’ ,’கையெழுத்து’ போன்ற கதைகள் குறிப்பிடத் தக்கவை.

 

படைப்பாளி -(எஸ் கே என் )

ம வே சிவக்குமார்

 

சென்ற ஆண்டு மறைந்த ம.வே  நெய்வேலியைச் சேர்ந்தவன். (என் இனிய நண்பன் என்பதால் ‘ன்’ விகுதி). ஒரு வித்தியாசமான துடிப்பான நண்பன். தற்செயலாகக் கணையாழியில் வெளிவந்திருந்த “கடவுளும் கையாட்களும்” என்னும் சிறுகதையைப் படித்த பிறகுதான் அவன் எழுதுவான் என்றே தெரியும். அடுத்தமுறை சந்தித்தபோது வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  தான் காணும் விஷயங்களில் ஒரு வேறுபட்ட பார்வை மற்றும் எது எழுதினாலும் அதனூடே ஒரு நகைச்சுவை. கதைகளுக்குப் பெயரிடுவதிலும் ஒரு வேறுபாடு. ஆகியவை குறிப்பிடத்தக்கன.

வேடந்தாங்கல் (வேடம் தாங்கும் மனிதர்கள்), வட்டம்   (அந்தகால அறிவுஜீவிகள் – அவர்கள் எழுதுவதும் பேசுவதும் மற்றவரைச் சென்றடையாத குழூஉக்குறி), கடைச் சங்கம் (இளைஞர்கள் பொழுதுபோக்கும் டீ கடை பெஞ்ச்) என்று சில உதாரணங்கள். பல பொது நண்பர்களும் உண்டு என்பதால் அவன் கதைகளில் யாரைக் குறிக்கிறான் என்றும் புரியும். பெரிதாகச் சாதிக்கக் கூடியவன் என்று எழுத்தாளர் சுஜாதா, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி போன்றோரால் எதிர்பார்க்கப்பட்டவன். தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் ஒன்றுக்கு வசனம் எழுதியவன். சிறிதுகாலம் திரைப்படத்துறையிலும் இருந்தவன். தனக்கு உரிய அங்கீகாரம்  இல்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தது, தனது நாடகத்தை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம் என்று பல தடாலடிகள்.

“உன்னை நம்பு’ என்னும் சிறுகதை

“கொஞ்ச நாட்களாகவே எதைத்தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது.” என்று தொடங்குகிறது. அடுத்தடுத்து பல சறுக்கல்களில் பொருளாதாரம் மோசமாகி, கடனுக்கு வாய்தா சொல்லும் பொய்களும் தீந்துபோன நிலை.  தொட்டதற்கெல்லாம் சிடுசிடுப்பு. அடுத்தமாதம் சீட்டு எடுத்துவிட்டால் பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்கிற  நம்பிக்கையில் தூங்கிப்போகிறான் . சிறு சிறு நகைகளையும் அடகு வைத்துக் கட்டிவரும் சீட்டு அது.

சீட்டு பிடித்துவந்த பால்கார சங்கர பாண்டியின் குடும்பமே காணாமல் போய்விட்டது. சீட்டுக்கட்டிய எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள். கதவை உடைத்து உள்ளே இருந்த சாமான்களை எடுத்துப்போகிறார்கள். இவன் எடுத்து வந்தது ஒரு கிரைண்டர். மனைவி அதை வீட்டில் சேர்க்கவில்லை. எல்லாமே போயிற்றே என்ற பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

திடீரென சங்கரபாண்டி திரும்பிவந்து   குடும்பத்தோடு வெளியூர்  சென்றிருந்த சமயத்தில் இவர்கள் எல்லாம் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான  பணம் பண்டங்கள் எல்லாவற்றையும்   சூறையாடிவிட்டதாகப் புகார் கொடுக்க சூறையாடிவர்கள் பட்டியலில் இவன் பெயரும்.

மனைவியின்  தோழி சொன்னாள் என்று ஒரு சாமியாரைப் பார்க்கிறார்கள்.

நாக்கு வெளியில் தள்ளிய காளி படம், நடுவில் சூலம் குத்தப்பட்ட அம்பாரமாய்  குங்குமம், அந்த சூலத்தில் குத்தப்பட்ட எலுமிச்சம்பழம், சாம்பிராணிப்புகை,    சப்பணமிட்டு தியான நிலையில் கண் மூடியிருந்த சாமியார் …

“சாமியார் இப்போது கடவுள் மாதிரி. அதுக்கு ஒளிவு மறைவு கிடையாது. கூச்ச நாச்சமும் தெரியாது. பொட்டில அடிச்ச மாதிரி கேள்வி கேட்கும். அது கிட்டே பொய் சொல்லமுடியாது. எதிர்லே  ஆள் வந்து உட்கார்ந்ததுமே  அவன் யாருன்னு அதுக்குத் தெரிஞ்சுடும். வந்தவனுக்கு என்ன பிரச்சினை அதுக்கு என்ன தீர்வுன்னு டக்குன்னு பிடிபட்டுவிடும். அது உன்னப் பார்க்காது. தியானத்தில இருக்கு. உன் வார்த்தைகள்  அதுக்குக் கேட்கும். காதுல விழற வார்த்தைக்கு அது வாய்ல சொல்ற வார்த்தைதான்  பதில்.  தலையை ஆட்டிட்டு தட்சணையை வெச்சுட்டுப் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்”    

இவன் டோக்கன் 132. வரிசையில் கூப்பிடப்பட்டாலும், சாமியாரே திடீரென  அறிவிப்பு செய்து யாரையாவது கூப்பிடுவார். அதுபோல கூப்பிடப்பட்ட ஒரு சேலத்துக்காரரை  -நீ தம்பிக்கு  துரோகம் செய்தாய். அவன் உன்னை  பதிலுக்கு  துரோகம் செய்தான். தானிக்குத் தீனி சரியாப் போச்சு. இங்கு வந்ததே தப்பு.  ஓடு’ என்று மானத்தை வாங்குகிறார்.

வரிசையில் சிலருக்குப் பிறகு,

” … சீட்டுப்பணம் கட்டி சிக்கல்லே இருக்காரு ஒருத்தரு. அவரை வரச் சொல்லு” என்று அறிவிக்கிறார். 

“வாய்யா. கிரைண்டரு. உனக்கு உன்  சம்சாரம்தான் ஆதரவு. இவளை விட்டுவிடாதே. இவதான் உனக்கு அச்சாணி. ரெண்டு மாடும் இணையா  இருந்தா எதையும் ஜெயிச்சுரலாம். மழை அடிக்கறப்போ உப்பும் காத்தடிக்கறப்போ மாவும் வித்துட்டுப் போனானே ஒருத்தன். அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். தப்பு எங்கேன்னு யோசி. எல்லாம் சரியாயிடும்.  இப்ப  இல்லேன்னா அடுத்த தடவை. ஓடிட்டே இருந்தாத்தான் நிக்க முடியும் புரியுதா? உழைப்புதான் ஜெயிக்கும்.”       

குலதெய்வம் எது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் சாமியார் 

“…   மேட்டுத் தெருவிலேர்ந்து  இன்னார் மகன் இன்னார் பேரன் நேர்ல வந்து ஆஜர் ஆவாம அவனுக்கு நாம் ஒண்ணும் பண்ண முடியலையேன்னு ஏங்கிக்கிட்டு இருக்கு. அப்பிடி விடலாமா? அதனால் அவளைப் போய் பார்.   உன் சீட்டுப்பணம் போனது போனதுதான். புத்திக் கொள்முதல். இனி யாரையும் நம்பாதே. உன்னை நம்பு. குல தெய்வத்தை கூட வெச்சுக்க. அடுத்து ஒரு முயற்சி செய். அதுலேர்ந்து படிப்படியா நல்லாயிடுவே. கிளம்பு”  

என்கிறார்.

 

கையில் காசில்லாததால் குலதெய்வத்தைப் பார்க்கத் தாமதமாகிக் கொண்டே வந்தது. அடகிலிருந்த நகைய விற்று சொந்த ஊர் போகிறார்கள். குலதெய்வத்தைப் பார்க்க வருபவர்கள் முன்கூட்டியே ஐயரிடம் தகவல் சொல்லி வரவழைப்பார்களாம். செல் நம்பர் கிடைக்கிறது.

கோயில்  பாழடைந்து இருந்தது. கூட வந்திருந்த மனைவியும் அவள் தாயாரும் அருகே ஒரு வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் ஓடிப்பிடித்து தூண்களைச் சுற்றி விளையாடுகிறார்கள்.   ஐயரும் வருகிறார், ஆனால் சற்று தாமதமாக. அதற்குள் காட்டுச் செடிகளை வெட்டிச் சுந்தம் செய்கிறான் .

கோவிலில் விநாயகர் தலையிலிருந்து ஓணான் குதித்து ஓடுகிறது. அம்மன் ஓட்டடைக்கு நடுவில் மூக்குத்தி  காணமல் போய் இவன் மனைவியைப் போலவே துவரம் தூர்ந்துவிடாமல் குச்சி ஒன்று வைத்திருந்தாள்.

பூஜையும் கற்பூரமும் முடிந்து கோவிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இவனுக்கும் மனைவி லலிதாவிற்கும் தோன்றுகிறது.

குறைந்த பட்சம் கோவிலைச் சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று ஐயர் சொன்னார். லலிதா யோசித்தாள். குழந்தை ரம்யாவைக் கூப்பிட்டு கொலுசு, வளையல், தோடு முதலியவற்றைக் கழற்றினாள். முதலில் அழுத குழந்தை அது அம்மனுக்கு என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டது. மெயின் ரோடு வரை கூட வந்து அடகுக் கடையில் ஐயர் பணத்தை வாங்கிக்கொண்டார் .

எங்கள் குலதெய்வ நேர்த்திக்கடன் இவ்வாறு இனிதே முடிந்தது. பதிலுக்கு வரலக்ஷ்மி செய்கிறபோது செய்யட்டும்.

என்று கதை முடிகிறது

இந்தக் கதையினை முழுதும் படிக்க    உன்னை நம்பு.

இணையத்தில் கிடைக்கும் இன்னொரு கதை  கடவுள்

சாதிக்க வேண்டிய உயரத்தை எட்டாவிட்டாலும் ‘வட்டம்’, ‘வேடந்தாங்கல்’, ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும்   ‘பாப்கார்ன் கனவுகள்’ , ‘இறங்கப் போறீங்களா?’  மற்றும் போன்ற படைப்புகளுக்காக நினைவில் இருப்பான் ம.வே.சிவக்குமார்

 

படைப்பாளி – கு. அழகிரிசாமி (எஸ் கே என்)

 

இடைச்சேவல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவரும், இவரது நெருங்கிய நண்பரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கி ராஜநாராயணனும் சாகித்ய அகடமி விருதுபெற்ற, குறிப்பிடத்தக்க படைப்பாளிகள். இவர் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், விமரிசனங்கள் ஆகியவையும், இவரது சிறுகதைகளைப் போலவே படிப்பினையைப் போதனையாகச் சொல்லாத அரிய அனுபவம் என்று கூறலாம். இவர் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர்.  கீர்த்தனைகள் படைத்தவர்

*****

மிகவும் பேசப்படும் இவரது குமாரபுரம் ஸ்டேஷன் என்னும்  கதை

‘குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவிற்கு எந்த ஊரும் கிடையாது. ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயராவது வைத்துத்தானே ஆகவேண்டும்?’

என்று தொடங்குகிறது  .

புதியதாக மாற்றலாகி வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரின் பால்ய நண்பர் சுப்பராம ஐயர் ஓரிரு நாட்கள் தங்குகிறார். இந்த ஸ்டேஷனுக்கு பிரயாணிகளும் வருவதுண்டோ என்கிற ஐயம் அவருக்கு. ‘இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன் இருந்தால் போதும் இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது’ என்கிறார்.

அதற்கு ஸ்டேஷன் மாஸ்டர் கோவில்பட்டி சந்தை தினங்களில் பத்து டிக்கட்களாவது தேறும் என்கிறார். தவிர, கோடையில் சுற்றுவட்டாரத்தில் நிலத்தில் வேலை செய்பவர்கள் மண்கலயங்களில் குடிநீர் எடுத்துச் செல்வார்களாம்.

தண்ணீர்ப்பந்தலுக்குப் பதிலாக ஸ்டேஷன் கட்டிவிட்டார்கள் என்று கேலி செய்கிறார் சுப்பராம ஐயர். ஸ்டேஷன் மாஸ்டர் பள்ளிக்கூடம் என்பது எதற்காக என்று  கேள்வி கேட்கிறார். நூறு குழந்தைகள் படிக்கத்தான் என்று பதில் வருகிறது. பிள்ளைகள் எதற்காகப் படிக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி. சுப்பராம ஐயர் பதிலளிக்கா விட்டாலும் ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லுகிறார்.

 ‘எந்த பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம். படிக்காதவனுக்கும் வேலை உண்டு என்று சட்டம் செய்யட்டும். எவனாவது மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

மூன்றாம் நாள் காலையில் எட்டுமணி பாசஞ்சர் வண்டியில் சுப்பராம ஐயர் ஊர் திரும்ப இரயிலுக்காகக் காத்திருக்கிறார். கோவில்பட்டி சந்தைக்குச் செல்லும் பயணிகள் முன்னதாகவே வந்து stationவெற்றிலைப் பாக்கு போட்ட வண்ணம் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதோ மாடு வாங்கிவந்த கதையை ஓர் ஆசாமி சொல்ல மற்றவர்கள் கவனமாக ‘ஊம்’ போட்டுக்கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பேச்சுகளில் உள்ள உண்மை சுவாரஸ்யம், அர்த்தம் மற்றும்   தூரத்தில் தெரியும் கிராமங்களும் தனக்கு ஒரு பாடம் கற்பிப்பதாக உணர்கிறார், சுப்பராம ஐயர்.

பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க  நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக  அவசர அவசரமாக வருகிறார்கள். காலில் பூட்சும், க்ளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாக, பள்ளிக்கூடத்திற்கு எப்போதோ வரும் பெரிய இன்ஸ்பெக்டரைப்போல காணப்படும் சுப்பராம ஐயரை வியப்போடு பார்க்கிறார்கள்.   

ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கட் கொண்டு வந்து கொடுக்கிறார். இரயிலும் வருகிறது. கூட்டமில்லை. ஐயர் ஏறிய பெட்டியிலேயே அந்தச் சிறுவரும் அவர்களுடன் வந்த பெரியவரும் ஏறிக்கொள்கிறார்கள். ஏராளமான சாமான்களோடு பூதாகரமான ஆகிருதியுடன் ஒருவரும் அவருடைய கனத்தில் முக்கால் வாசியாவது இருக்கும் ஒரு அம்மாளும் அந்தப் பெட்டியில் ஏற்கனவே இருக்கிறார்கள். அந்த மனிதரின் வைரக்கடுக்கன், வைரமோதிரம், தங்கப்பித்தான்கள் சிறுவர்களின் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறது.

பூதாகாரமான மனிதர் சௌஜன்யமாக சிறுவர்களை எங்கே பிரயாணம் என்று கேட்கிறார். அவர்கள் ஊரான இடைச்சேவலில் ஏழாம் வகுப்பு இல்லை என்றும், கோவில்பட்டியில் உள்ள பெரிய பள்ளியில் பரிட்சை எழுதிச் சேருவதற்குத்தான் அவர்கள் செல்கிறார்கள் என்றும்சிறுவர்கள் சார்பில்  பெரியவர் பதில் சொல்கிறார்.

நானே கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் என்று அந்த வைரக்கடுக்கன் ஆசாமி மூன்று கேள்விகள் கேட்கிறார்

“வாட்டீஸ் யுவர் நேம்?”. “வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?’, “வாட் கிளாஸ் யூ பாஸ்?” எனக் கேட்கிறார். பதில்கள் கேட்டு நீங்கள் எல்லாம் பாஸ் என்கிறார். மேலும் கேள்விகள் கேட்கச் சொன்னால், “நம்ம இங்க்லீஷ் அவ்வளவுதான். அதுக்குமேல எங்க வாத்தியார் கத்துக்கொடுக்கல” என்று சிரிக்கிறார். 

பூதாகாரமான ஆசாமி திருநெல்வேலியில் பங்கஜ விலாஸ் என்னும் ஹோட்டல் நடத்துவதாகவும், நிறைய  படிக்கும் பையன்கள் இவர் ஹோட்டலில்தான் சாப்பிடுவதாகவும் தர்மத்திற்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டிவருவதாகவும் சொல்கிறார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. என்றாலும் அவர் ஹோட்டலில் சாப்பிடும் மாணவர்கள் எல்லாம், ஏன் இந்த நான்கு சிறுவர்களும் கூட,   தன் குழந்தைகள் தானே என்கிறார்.

அந்தப் பரீட்சைக்குப் பெரிய வாத்தியார் ஒரு மாசம் வீட்டில் வைத்து, மிகுந்த முயற்சி எடுத்துப்  பாடம் சொல்லிக்கொடுத்தாகவும், அந்தப் பையன்களில் ஒருவன் தனது பேரன் என்றும், மற்ற பையன்களில் ஒருவன் வசதி இல்லாதவன் ஆகையால் அவன் செலவுகளைத் தானே பார்த்துக் கொள்வதாகவும் பெரியவர் சொல்கிறார்.

சுப்பராம ஐயர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயரை எழுத்துக்கூட்டி ‘அன்னா கரீனா – லியோ டோல்ஸ்டோய்’ என்று ஒரு சிறுவன் படிக்கிறான்.

“டோல்ஸ்டோய்!. அதுவும் சரிதான்! சொல்லிக்கொடுக்காத வரையில் யாருக்கும்  டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்?” என்று நினைத்துக்கொள்கிறார் சுப்பரம ஐயர்.     

பரிட்சைக்குத் தயார் செய்வதற்காகப் பெரிய வாத்தியார் கொடுத்திருந்த காகிதங்களைச் சிறுவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

“பட்டிக்காட்டுப் பயல்கள் ஆனாலும் படிப்பு நல்ல படிப்புதான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைகமேல அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேனே” என்றார் பெரியவர்

“அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர்.

இதைக் கேட்டதும் சுப்பராம  ஐயரின் உடம்பு சிலிர்த்தது.

இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட ஹோட்டல்காரர், படிச்சிருந்தா  உத்தியோகம் பார்த்திருக்கலாம் . ஆனா இத்தனை வருஷமா பள்ளிப் பிள்ளைகளுக்கு உபகாரம் செய்திருக்க முடியாது என்கிறார்

“..நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்காரனை மிரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம்..” 

கோவில்பட்டியில், பெரியவரையும் பிள்ளைகளையும் தங்குவதற்காக அவர்கள் ஊரைச் சேர்ந்த ஒரு போர்ட்டர் தன் வீட்டிற்கு அழைத்துப்போகிறான்.

சுப்பராம ஐயர் வீடு போகும்போது நினத்துக்கொள்கிறார்.

குமாரபுரம்  ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்துடன் வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது,  ஹோட்டல்காரரின் தர்ம குணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப்போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு  இப்படி,  எல்லாமே அவருக்கு ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டது போன்ற  ஆனந்தப் பரவசம் ..  கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும், போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்று அவருக்கு ஒரு நிமிடம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ‘குமாரபுரம் ஸ்டேஷனுக்கு பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேற்படிப்பிற்காக இவர்கள் வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர்ப்பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்…

அந்தச் சிறுவர்கள் சேர வந்திருந்த பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு இடம் கிடைப்பதும் அந்தப்பள்ளியில் பரிட்சை வைத்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் ஹெட் மாஸ்டர், அந்த சுப்பராம ஐயர்தான் என்று கதை முடிகிறது.

*****

பலராலும் குறிப்பிடப்படும் இவரது கதைகள்: அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று,  தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி.

இணையத்தில் கிடைக்கும் சில கதைகள்

அன்பளிப்பு,   இருவர் கண்ட ஒரே கனவு , தியாகம்          

  எஸ் கே என்

படைப்பாளி ஆதவன் – (எஸ் கே என்)

ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் 

1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்த  கே எஸ் சுந்தரம் (ஆதவன்) இந்திய இரயில்வேயிலும், ‘நேஷனல் புக் டிரஸ்டின்’  தமிழ்ப் பிரிவில் துணையாசிரியராக தில்லியிலும்  பெங்களூரிலும்  பணியாற்றியவர். 1987 ல் சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக  வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக்  கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை” என்கிறார் திரு அசோகமித்திரன்.

அவர் சொற்களிலேயே ஏன் எழுதுகிறேன் என்பதைப்பற்றி :

“எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.”

தன் எழுத்துக்கள் குறித்து

‘நானும் என் எழுத்தும்’ என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது – ‘இவனும் இவன் மூஞ்சியும்’ என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் – என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கெடுப்பானேனென்று, பல சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். “யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே – இந்த – என்ன சொன்னீர்கள்?”

 

சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞனான ராமசேஷனின் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் பதிவாகும் “என்பெயர் ராமசேஷன்” இவரது தலை சிறந்த படைப்பு என்று அறியப்படுகிறது. இந்தப் புதினத்தின்  ரஷ்ய மொழியாக்கம் இலட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகியது.

இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின்  வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம், தொழிலாளர் உலகம் ஆகிய சூழலில் படைக்கப்பட்ட “காகித மலர்கள்” மற்றொமொரு சிறந்த புதினம்.

‘இண்டர்வியூ’, ‘அப்பர் பெர்த்’, ‘தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு’, ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’,  ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ ஆகியவை  இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் சில.

சுசீ என்றழைக்கப்படும் பள்ளியாசிரியை சுசீலா, மற்றொரு ஆசிரியையான மிஸ் டாமினிக் பற்றி சொல்லும் இவரது ‘சினேகிதிகள்’ சிறுகதை

“மிஸ் டாமினிக் தன்னைவிட இருபது ஆண்டுகள் ஜூனியரான என்னைப் பார்த்து பொறமைப்படுகிற ஒரு காலமும் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை”

என்று தொடங்குகிறது

வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்த அன்றே மிஸ். டாமினிக் தான் பிரின்சிபால் அறைக்கு வழி சொல்கிறாள். நேர்முகத்தேர்வின் குழுவில் அவளும் இருக்கிறாள். கேள்விகள் கேட்டதெல்லாம் பிரின்சிபால் அகதா மட்டுமே.

வேலைக்குச் சேர்ந்தபிறகு ஆறாம் வகுப்பிற்குக் கணக்குப் பாடம் எடுப்பது  சுசீலாவிற்குக் கிடைக்கவும் மிஸ் டாமினிக் தான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள். ‘மிடில்’  வகுப்புகளுக்குக் கணக்கு எடுப்பது மிஸ் டாமினிக்கின் ஏகபோக உரிமையாம்.

டாமினிக்கும் சுசீலாவும் சிநேகிதிகள் ஆகிவிடுகிறார்கள். கொண்டு வரும் மதிய உணவை மிஸ் டாமினிக் வீட்டிற்குச் சென்று சாப்பிடும் அளவிற்குப் பழகிவிடுகிறார்கள். அகதா பிரின்சிபாலாக இருந்தவரை டைம் டேபிள் வாங்குதல், எல்லா வகுப்பு பிராகரஸ் கார்டுகளை மேற்பார்வையிடுதல், பார்ட்டிகளோ சுற்றுலாக்களோ ஏற்பாடு செய்தல் என்று பல பொறுப்புகள்  மிஸ் டாமினிக் வசம் இருந்தன. ப்ரின்சிபாலுடன் டாமினிக் டீ சாப்பிடும்போது சுசீலாவும் பல சமயம் இருப்பாள்.

வெவ்வேறு ஆசிரியைகளின் பலவீனங்கள், வகுப்புகளில் நடந்த தவறுகள், ரகளைகள், போட்டிகள், பொறாமைகள் முணுமுணுப்புகள்  எல்லாம் பற்றி பிரின்சிபாலுக்கு  மிஸ் டாமினிக் மூலமாகத் தகவல் கிடைத்துவிடும். யாரவது லீவு  போட்டால் அதை எடுக்க மிஸ் டாமினிக்  வந்துவிடுவாள். நோட்புக்குகளை பரிசீலித்து அதிலுள்ள தவறுகளை பிரின்சிபாலுக்கு ரிப்போர்ட் செய்துவிடுவாள்.

டாமினிக்குடன் நல்ல உறவுகளைப் பேணிவர ஒவ்வொரு டீச்சரும் பாடுபட்டாள். அதே சமயத்தில் அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்றால் தங்களைப் பற்றி- தங்கள் குறைபாடுகளைப் பற்றி – அவளுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்துகொண்டு சற்று விலகியே இருக்கவும் செய்தார்கள். என் ஒருத்தியிடம் மட்டும் டாமினிக் காட்டிய   அன்பும் பரிவும் அவர்களுடைய  பொறாமையைக் கிளப்பிவிட்டதில் ஆச்சரியமில்லை. ஒற்று வேலை செய்வதிலும், தங்களைப் பற்றி பிரின்சிபாலிடம் கோள் மூட்டி விடுவதிலும் நானும் டாமினிக்குக்கு உடந்தை என்றும் சிலர் நினைத்தார்கள்.

சிலர் டாமினிக்கைப் பற்றி, தனியாக இருக்கிறாளா, ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, காதல் தோல்வியா,   சகோதர சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் இவள் வாயைக் கிண்டுவார்கள். இவள் பதிலளிக்காமல் நழுவிவிடுவாள்.

அகதா ஓய்வுபெற்று பெண்டிக்டா பிரின்சிபாலாக வந்தும் டாமினிக்கின் பொறுப்புகளிலோ, அதிகாரத்திலோ எந்த குறைவும் ஏற்படவில்லை.

பிரின்சிபாலுக்குத் தளபதியாக, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பயமூட்டுபவளாக இருந்த டாமினிக் சுசீலாவிடம்  மட்டும் செடி கொடிகள், நாய்கள், உலக நடப்புகள், கல்விமுறையில் சீர்திருத்தங்கள் என்று அரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பவளாக இருந்தது யாருக்குத் தெரியும்.

டாமினிக்கின் தோழமை காரணமாக ப்ரின்சிபலின் அந்தரங்க வட்டத்தில் தானும் அடக்கம் என்ற பிரமையில் திளைத்து வந்தாள்.

பள்ளி அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெண் பணம் கையாடிவிட்டதால் அவளை நீக்கிவிட்டார்கள். அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு நம்பகமான ஆள் தேவைப்பட்டது. பிரின்சிபால் பெனடிக்டாவும் டாமினிக்கும் வேறு  ஆளை நியமிக்கும் வரை அந்தப் பொறுப்பை சுசீலாவை ஏற்க வைக்கிறார்கள். நாமும் அதிகார வட்டத்தில் ஒரு நபர் என்னும் பிரமையில் அப்பொறுப்பை ஏற்று சுசீலா என்னும்  ‘டீச்சர்’,  ‘கிளார்க்’ ஆகிவிடுகிறாள். புதுப் பொறுப்பில் வாசுதேவன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.  சுசீலாவைச் சந்திக்க வந்த வாசுதேவனை, பள்ளியின் கணக்கு வழக்குகள் பரிசீலிக்க பெனடிக்டா கேட்டுக்கொள்கிறாள்.  சுசீலா – வாசுதேவன் நட்பு  திருமணத்தில் முடிகிறது.

திரும்பவும் குமாஸ்தாவிருந்து ஆசிரியை ஆகலாம் என்றால், “அந்த லைனிலிருந்து தொடர்பு அறுந்துபோய் இவ்வளவு நாளாகிவிட்டதே!” என்று சொல்லிவிடுகிறாள், பிரின்சிபால் பெனடிக்டா

பெனடிக்டா ஓய்வுபெற்றதும் மரியம் என்னும் புது பிரின்சிபால் பொறுப்பேற்கிறார். அவருக்கு டாமினிக்கின் வழிமுறைகள் பிடிக்கவில்லை. தன் வழி முறைகளை நியாயப்படுத்த  முயன்ற டாமினிக்கிடம் “உங்கள் கருத்துக்களை ஆதரிக்கும் வேறு பள்ளிக்கூடத்தில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்” என்கிறார் பிரின்சிபால்.

ஸ்டாஃப் ரூமில் இருந்தாலே உரத்த குரலும் சிரிப்புமாக அந்த அறையையே கலகலக்க வைக்கும் மிஸ் டாமினிக், அமைதியாகி விடுகிறாள். அரசியாக இருந்தவள், ஒரே நாளில் சாதாரணப் பிரஜை ஆனாள். சுசீலாவிற்கு அவள் மீது அனுதாபமாக இருந்தது.

டாமினிக் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருக்கையில், காசு வசூலித்து ஸ்வீட் காரம் காப்பியுடன், தனது வீட்டிலேயே ஒரு ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்கிறாள் சுசீலா.

தேநீர் விருந்து பெரும் வெற்றி. எல்லோரும் கலைந்துபோனதும் சுசீலாவின் கையைப் பிடித்துக்கொண்டு உரக்க அழுகிறாள்.

“நான் உனக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு சுசீ” என்னை மன்னித்துவிடு.”

“மிஸ் டாமினிக் ! எனக்குப் புரியவில்லை.”

“நான் உன்னைப் பார்த்துப் பொறாமைப் பட்டேன்”

“நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?”

“சுசீ .. நீ ஆறாம் வகுப்பு டீச்சராக இருந்தபோது – உன் படிப்பு சொல்லிக் கொடுக்கும் திறனைப் பலர் புகழ்ந்தார்கள். குறிப்பாக, கணக்குச் சொல்லித்தருவதை… என்னால் அதைத் தாங்க முடியவில்லை சுசீ.. நான்தான் கணக்குச் சொல்லித்தருவதில் எக்ஸ்பர்ட் என்று நினைத்திருந்தேன்.”

“நீங்கள்…. நிஜமாக … “

“நீ ட்யூஷன் சொல்லித்தருவாயா என்றுகூடச் சில பெற்றோர் பெனடிக்டாவிடம் விசாரித்தார்கள். எனக்கு பயமாகப் போய்விட்டது, சுசீ “

“பயமா? எதற்காக?”

“நாமிருவரும் குடியிருந்தது  ஒரே ஏரியாவில். எனக்கு வர வேண்டிய ட்யூஷன் கிராக்கிகளை நீ பறித்துக் கொண்டு விடுவாயோ என்று பயமாயிருந்தது. …”

ட்யூஷனில் தனக்குப் போட்டியாக சுசீ வரக்கூடாது என்பதற்காகவே, அவளை ஆபீசில் போடும்படி பிரின்சிபாலிடம் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறாள் டாமினிக். சுசீலா அதிர்ச்சியில் துவண்டு போகிறாள்.

“என்னை மன்னித்துவிடு சுசீ! என்னை மன்னித்துவிடு!” என்று அவள் மீண்டும் அரற்றினாள். “உன்னைப்போல நானும் யாரவது ஓர் இளைஞனுடன் சமரசம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நான் மிகவும் கர்வம் பிடித்தவள். பணியாதவள். எல்லா ஆண்களையும் என்னிடமிருந்து விரட்டிவிட்டது. ஒரு கட்டத்திற்குப் பிறகு யாருமே மிச்சமில்லை. நான் மேலும் என் பிடிவாதத்தில் சிறைப்பட்டு, வக்கிரமான சுயநலவாதியாகி, என் உறவினர்களையும் விரோதித்துக் கொண்டு, கடைசியில் நான் அன்போடு நேசித்த ஒரு ஜீவனுக்குக்கூட துரோகம் பண்ணுமளவிற்கு..  “

தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மீது தனது  மதிப்பீடுகள் யாவும் பறிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டு வாழ்க்கையும் பயனற்றதாக உணர்ந்து, மற்றவர்களை நம்புவதையே கேள்விக்குறியாக்கி…

மிஸ் டாமினிக்!  நீ என் மனதில் சந்தேக விதைகளைத் தூவிவிட்டாய். அவநம்பிக்கையுள்ளவளாக்கி விட்டாய். இதுதான் நீ செய்த மிகப் பெரிய குற்றம், டாமினிக் இனி எந்த ஒரு  ஜீவனையும் முழு மனதாக ஒப்புக்கொள்ளவோ, அதன் மீது நம்பிக்கை வைக்கவோ.. ஓ காட்!

ஒய்வு பெற்றபிறகு மிஸ் டாமினிக் இதே நகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில்தான் வசித்து வருவதாகக் கேள்வி.  யாரோ அட்ரஸ் கூடக் கொடுத்தார்கள். ஆனால் நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. பார்க்க வேண்டுமென்று தோன்ற வில்லை.

என்று முடிகிறது கதை

இணையத்தில் கிடைக்கும் இவரது சில கதைகள்.

இண்டர்வியூ          புதுமைப்பித்தனின் துரோகம்      முதலில் இரவு வரும்

 

வானத்தைத் தொட்டவர்:

வானத்தைத் தொட்டவர்: சாகித்திய அகாடமி விருது பெற்ற கௌரி கிருபானந்தன்

கௌரி கிருபானந்தன் எழுதிய “மீட்சி” என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்திற்கு 2015 வருடத்திற்கானசாகித்திய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது கிடைத்திருக்கிறது.

Meetchi
“மீட்சி” என்பது 2015 வருட சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ள, “விமுக்தா என்ற பெயரில் திருமதி ஓல்கா” எழுதிய தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்புப் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமுக்தா என்ற கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்திரதாரியாக சொல்லப்பட்டவை.

எண்டமூரி வீரேந்தர நாத் மற்றும் யத்தன்பூடி சுசிலா ராணி போன்ற எழுத்தாளர்களின் எண்ணற்ற தெலுங்கு நாவல்களை கௌரி கிருபானந்தன் சுவை படத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் இருக்கும். தேன் போல் இனிக்கும்.

gowri.kirubanandan2
விருதைப் பற்றி அவருக்குத் தெரிந்த போது அவர் அமெரிக்காவில் இருந்தார். “ நான் எதிர்பாராதது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
கௌரி.கிருபானந்தன் சிகரத்தைத் தாண்டி வானத்தைத் தொட்டுவிட்டார். அவர் இன்னும் நிறைய விருதுகள் பெற வேண்டும்,

என் . ஸ்ரீதரன் அவர்கள் வல்லமை என்ற வலைத் தளத்தில் இப்படிக் குறிப்பீட்டிருக்கிறார். மிகவும் பொருத்தமானது. (நன்றி)

படைப்பாளி – மா அரங்கநாதன் ( எஸ் கே என்)

 

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த, புதுச்சேரியில் வாழ்ந்து வந்து, பிறகு சென்னையில் குடியேறிய  மா. அரங்கநாதன் என்னும் படைப்பாளியின் கதைகளை ஒரு முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தபோது சற்று வித்தியாசமான கதைகளும், அவற்றைச்  சொல்லும் முறையும் கவனத்தை ஈர்த்தது. 2009 ல் வெளிவந்துள்ள  அவரது அறுபதிற்கும் மேற்பட்ட  சிறுகதைகள் தொகுப்பு  நல்ல வாசிப்பு அனுபவமாக இருந்தது.   ஐம்பதுகளில் தொடங்கி  பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கி உள்ளார்.. சாகித்ய அகாதமிக்காக மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். பல பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக   இடம் பெற்றுள்ளன. ‘பரளியாற்று மாந்தர்’ என்னும் நாவல் தவிர பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். ‘மூன்றில்’ இலக்கிய அமைப்பை நடத்தி வந்திருக்கிறார். அதே பெயரில் வந்த சிற்றிதழ் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். ஒரு சில கதைகள் தவிர மற்றவற்றில் முத்துக்கறுப்பன் என்னும் பெயரில்தான் இவரது கதாநாயகன் இருப்பான்.  நிகழ்வுகளை மட்டுமே சார்ந்த கதைகளாக இல்லாமல் வாழ்வின் புதிர்களைக் காண்பிக்கும் கதைகள்

***   ***  ***

“தேங்காய்” என்னும் இவரது கதை

அசலூரில் அரசாங்க வேலை பார்க்கும் முத்துக்கறுப்பனின் தந்தை, சிவசங்கரன் இறந்து போகிறார். . மூத்த மகனான வேலுவிற்கு உள்ளூரிலேயே வேலை. வருமானமும் குறைவு.  சற்றுப் பேச்சுத் தடுமாற்றமும் உண்டு. பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் பிள்ளை தான் பெண்வீட்டாரிடம் பேசி வேலுவிற்கு மணமுடித்து வைத்தார். அந்தத் திருமணத்தை முன்னின்றும் நடத்தி வைத்தார்.

சிதம்பரம் பிள்ளைக்கு வேலுவிடம் இருந்த நெருக்கம் முத்துக்கறுப்பனிடம் கிடையாது. முத்துக்கறுப்பனுக்கும் அவரிடம் ஒரு பயம். என்னவென்று சொல்லவியலாத பயம். இவனது திருமணத்தில் பக்கத்து வீட்டுகாரராகவே பங்கெடுத்துக்கொண்டார்.

“அவன் ரொம்ப பெரியவன் மாதிரி ஆயிட்டான் – நம்மையெல்லாம் எங்க மதிக்கிறான்” என்று சௌகர்யமாக ஒதுங்கிக்கொள்வார்.

சிவசங்கரனின் காரியங்கள் மளமளவென்று நடந்துகொண்டிருந்தது. சிதம்பரம் பிள்ளைதான் முன்னேயிருந்து காரியங்களைக் கவனித்தார். அவர் குரல்தான் தூக்கியடித்துக்கொண்டிருந்தது. செத்தவரின் விருப்பப்படி அவருக்கு செல்லமான ஆத்தங்கரைத் தென்னந்தோப்பில் தான் அடக்கம் செய்ய முடிவாகியது.       

ஊருக்குப் பெரியவர் என்பதால் மட்டுமல்ல, அங்குள்ள எல்லாருடனும் ஒரு விதத்தில் தொடர்புடையவரது கடைசி ஊர்வலமாதலால், அது சுவாமி புறப்பாடு மாதிரி  தோன்றியது, வீட்டு வாசலிலும் தெருவிலும் நின்ற பெண்கள் கும்பிட்டுக்கொண்டனர். இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த குழந்தைகளின் கைகளைச் சேர்த்து வைத்து கும்பிடச் செய்தவர்களும் உண்டு. ஊர்கிழங்கள் தங்களுடையதை ஒத்திகை பார்த்தன.

காடேற்று, தேங்காய்க் கிழமை, பயிற்றுக் கிழமை, பதினாறாம் நாள் சடங்கு என்று காரியங்கள் நடந்தன.

இரவு,  பெண்டுகள் அழுவதற்காக அழைக்கப்பட்டார்கள். முறைப்படி ஒப்பாரி வைத்தார்கள்.

“கத்திரிக்காய் எங்களுக்கு

கைலாயம் உங்களுக்கு    .  

வாழைக்காய் எங்களுக்கு

வைகுண்டம் உங்களுக்கு”

என்று பாடி பரலோக பதவி அளித்தார்கள்

பெரிய மனிதர்கள் மற்றுமுள்ள காரியங்களைக் குடும்பத்தினரை வைத்துப் பேசலானார்கள். அதை அந்த வீட்டில் பேசவேண்டாமென்று, சிதம்பரம் பிள்ளை தன்வீட்டிற்கு எல்லோரையும் அழைத்தார்.

“அவன் வாயில்லாப் பூச்சி- சர்க்கார் வேலையும் இல்லே- நமக்கு இரண்டு பேரும் ஒண்ணுதான் .ஆனா மேற்கொண்டு பார்த்தா, வேலுதான் கஷ்டப்பட்டிருக்கான்” என்று தொடங்கினார் சிதம்பரம் பிள்ளை.. ” ஆனா இந்த விஷயத்தில முத்து ஏதாவது நினைச்சுக்கக் கூடாது. அவனையும் ஒரு வார்த்தை கேட்டுடணும்”

முத்துக்கறுப்பனின் மனைவியோ, வாயைப் பொத்திக்கொண்டு “இந்த மனிதருக்கு என்ன கெடுதல் செய்தீங்க- இப்படி ஈரல் குலையைப் பிடுங்கறாப்பில கேக்காரே ” என்று முணுமுணுத்தாள்.

ஆனால், முத்துக்கறுப்பனோ “எல்லாம் மாமா சொல்றாப்பிலேயே வைச்சுகிடுவோம்- நான் மாட்டேன்னா சொல்லப்போறேன்” என்றான்.

தென்னந்தோப்பின் மீதான பாகத்தை விட்டுக் கொடுப்பதன் மூலம்  முத்துக்கறுப்பன் தனக்கு ஒரு பாரம் இறங்கிவிட்டது போலத் தென்பட்டான். சாவுச் செலவு பூராவும் மூத்தவன்தான் ஏற்றுக்கொண்டான் என்று நம்பிவிடுவது எளிதான விஷயம்.

வயல் வெளிகள் மேலுள்ள உரிமையும் அப்படித்தான் என்ற எண்ணமும் ஏற்பட்டது.

திடீரென வெளியில் ஏதோ அமளி.

இன்று அதிகாலை தேங்காய் திருடும்போது ஒருவன் அகப்பட்டானாம். அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

கருக்கலிலேயே மரத்தில் ஏறி, அங்கிருந்தபடியே ஒரு கயிறு மூலம் கீழே மெதுவாக இறக்கிவிடுவானம். இறங்கி வந்து வயல் வரப்பு வழியாக அவன் ஊர் சென்று விடுவானாம்.

“என்ன முத்து! நீதான் டவுன்லே இருக்கியே. இது மாதிரி பார்த்திருக்கியா?” என்று ஊர் மூத்தவர் கேட்கிறார்.

முத்துக்கறுப்பன் அசட்டுச் சிரிப்போடு பார்க்கையில் சிறிது வியர்த்தது. ஆற்றங்கரை காற்று நன்கு வீசிக்கொண்டிருந்தது. தேங்காய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த நார் நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது. நீண்டு…

நீண்டு சென்றது அது- அவனது பயம் துளித் துளியாகக் கண்ணாடியில் படிந்த பனியாகத் துடைக்கப்படுகிறது. வெள்ளை வெளேரென ஓர் ஏழு வயதுப் பையன் துள்ளி அந்த ஆற்றங்கரைப் பகுதியில் செல்வது மங்கலாகிறது. அது அற்புதமான ஓர் அதிகாலைப் பொழுது.

பலூன் போல ஒரு குலை மரத்திலிருந்து இறங்குகிறது. இரண்டு கால்கள் இறங்கி வருவது தெரிகிறது. அந்த நடை இவனுக்குப் பரிச்சயமாகத் தோன்றுகிறது. மேட்டில் ஏறித்தான் வரவேண்டும். பக்கத்தில் வந்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஆள் வேறுபுறம் திரும்பிப் போய்விடுகிறார்.

முத்துவிற்கு நடுக்கம். அவரை

வீட்டில் பார்த்தால் எப்படிப் பேசுவது என்ற எண்ணம் தோன்றி நடுக்கம் அதிகமாகிறது. ஆனால் ஏழு வயது சிறுவன் வீடு போகாமலிருக்க முடியாது.

றுநாள் வீடு திரும்பும் போது தென்னந்தோப்பைக் கடந்து போகிறார்கள், முத்துக்கறுப்பனும் அவன் மனைவியும்.

“உங்க பேரில என்னதான் அப்படியொரு ஆங்காரமோ தெரியலை அந்தப் பாவி மனிசனுக்கு” என்று திரும்பவும் ஆரம்பித்தாள் மனைவி

“அது அப்படியில்லே- நாந்தான் பதினஞ்சு வருஷமா பயந்துகிட்டிருந்தேன்னு நினைச்சேன். அப்படியில்லே. அவர்தான் அதிகமா நடுங்கிக்கிட்டு இருந்திருக்காரு” என்று சொல்ல நினைத்தான் முத்துக்கறுப்பன்.

என்று முடிகிறது.

படிக்கவேண்டிய இவரது பல கதைகளில் இணையத்தில் கிடைப்பவற்றில் சில  

மூன்றில்      ஞானக்கூத்து

 

 

 

 

 

 

 

ஆயிஷா – இரா . நடராஜன்

ஆயிஷா [Ayeesha].

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா… இந்த யதார்த்தத்தைப் போட்டு  உடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியைப் புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கணக்கானவர்களைக் கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு,   இரா. நடராசனை, ‘ஆயிஷா நடராசன்’ என்றே அறிய வைத்த கதை.

– கணையாழி வழி – ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

– ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

– நிகர் முதல் வாசல் வரை – 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கிப் பரவலாக எடுத்துச் சென்றன.

– அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

– அதைத் தவிர ஏழு தன்னதிகாரக் கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

– ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

 

 

படைப்பாளி – நாகூர் ரூமி

கிருபா2

 

கணையாழி குறுநாவல் போட்டிகளால் பெரும்பாலோர்  கவனத்திற்கு வந்த எஸ்.சங்கர நாராயணன், அழகிய சிங்கர், சமீபத்தில்  மறைந்த ம.வே. சிவக்குமார் போன்று  மற்றுமொரு படைப்பாளி நாகூர் ரூமி. ஆம்பூர் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவரான திரு ஏ எஸ் முகம்மது ரபி, கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர்களுக்கான  இவரது சுய முன்னேற்ற நூல்களும், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளும் மிகப் பிரசித்தம்.

சிக்மண்ட் ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் ‘கதைகள் கவிதைகள்’  மஸ்னவி காவியத்திலிருந்து  ‘சூஃபி கவிதைகள்’ , ஹோமரின் ‘இலியட்’ , பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான ‘உடல் மண்ணுக்கு’, பாரக் ஒபாமாவின் ‘நம்மால் முடியும்’  ஆகியவை இவரது தமிழாக்கங்களில் சில

இவரது வலைத்தளம்    பறவையின் தடங்கள்

இவரது பிருந்தாவனில் வந்த கடவுள் என்னும் கதை

ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

என்று தொடங்குகிறது.

தூண்களைச் சுற்றிய சிமென்ட் தளத்தில் அமர்ந்து, சூட்டையும் பொருட்படுத்தாமல், அரட்டை அடிக்கும் பெண்கள், இருபது வருடங்களாக பிச்சை எடுக்கும் கையிழந்த பிச்சைக்காரன் ஆகியோரை கவனித்தபடியே  தனது  எஸ். 6  கோச்சில்   72 வது இருக்கையை அடைகிறான் அமீர். ஆனால், அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது. இவன் டிக்கெட்டைக் காண்பித்ததும் எதிரில்  உட்கார்ந்து இருந்த அவள் குடும்பத்தினர் ஏதோ சொல்ல வேறு இருக்கைக்குப்  போய்விட்டாள்.

அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

 

சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஜே.கிருஷ்னமூர்த்தியின் ‘தெரிந்ததிலிருந்து விடுதலை’  புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

எதிரிலிருந்தவர், அந்தப் புத்தகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் ஜே கே வின் முப்பது புத்தகங்கள் வாசித்துள்ள ரசிகன் என்று கூறி ‘  நீங்க ஜே.கே. விரும்பி படிப்பீங்களா சார்?’ என்று கேட்கிறார். இவனோ , “நானும் படிச்சிருக்கேன்” என்கிறான் பட்டும்படாமல்.

அவரோ விடாப்பிடியாக இருவரும் சந்தித்தது இறைவனின் அருள் என்கிறார், இவன் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறான்.

பின் ஏன் ஜே கே படிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவர்  அழகாக இருக்கிறார் என்பதால் என்று பதிலளிக்கிறான்.

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில்சார் போட்டுப் போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

சென்ட்ரல் வரப் பத்துநிமிடம் இருக்கும் வரை வாதம் தொடர்கிறது. அப்போது ஊனமுற்ற ஒரு ஐந்தாறு வயது சின்னப் பையன் தனியாக பிச்சை கேட்டு வருகிறான். சிலர் சில்லரை போட்டனர். சிலர் பார்க்காத மாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத் தேடியபோது  ……..

kiruba3

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தைத் தான் பெற்ற பிள்ளையின் முகத்தைத் துடைப்பதைப் போலத் துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒருயூஸ்அன்த்ரோதட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

 

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் இறங்கிச் செல்ல,  இதுதான் சமயம் என ஜே கே ரசிகரிடமிருந்து தப்பிக்கிறான் அமர்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

என்று கதை முடிகிறது.

===================================================

இவரது குறுநாவல்    குட்டியாப்பா  கட்டாயம் படிக்கப்படவேண்டிய படைப்பு.  இணையத்தில் கிடைக்கும் இன்னும் சில கதைகள்

தேவதையும் பூனைக்குட்டியும்

கங்கா ஸ்நானம்

அவரோகணம்