முன் கதைச் சுருக்கம்
இதுவரை…….
இடைக்கால சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்த போது சோழர் கீழிருந்த வாணகப்பாடி நாட்டு சிற்றரசன் வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப் பட்டிருந்தான்.
புதுப் பதவியை ஏற்குமுன், பாண்டியர் வம்சாவளி மணிமகுடமும் மற்றும் புராதனமான இரத்தின மாலையும் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத் தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர் பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்கு, தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத் தீவுக்கு வருகிறான்.
அவன் மணிமகுடமும் இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டு எடுத்து வந்து, அவர்களின் கலத்தில் ஏறியதும், கடல் கொள்ளைக்காரர்களின் கைகளில் சிக்குகிறான். அவர்களிடமிருந்து சாதுர்யமாகத் தப்பித்த வந்தியத்தேவனுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன்மணிமகுடம், இரத்தின மாலையுடன் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறி தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களில் திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.
ஐந்து நாட்களுக்குப்பிறகு ரவிதாசன் கூட்டத்தினர், ராசிபுரத்தில் நந்தினியிடம், கைப்பற்றிய மணிமகுடத் தங்கப் பெட்டியை சமர்ப்பிக்கின்றனர். நந்தினி ஆவலுடன் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மணிமகுடம், இரத்தின மாலைக்குப் பதிலாக வெறும் கற்கள் இருப்பதைக்கண்டு, வந்தியத்தேவன் அவர்களை நன்றாக ஏமாற்றியிருப்பதை அறிகிறார்கள். வந்தியத்தேவனை தீர்த்துக்கட்ட சபதமெடுக்கிறார்கள்.
இனி……………………..
அத்தியாயம் 13.சேனாதிபதி வந்தியத்தேவன்
நான்கு நாட்களுக்குப் பிறகு..
மாதோட்டத்தில் சோழர் படையின் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாரின் பாசறைக்கு வெளியே படை முழுவதும் குழுமியிருந்தது.
உள்ளே ஈழப்படையின் மாதண்ட நாயகனான, சுந்தர சோழரின் புதல்வர் அருள்மொழிவர்மர், பெரிய வேளார், மற்றும் வந்தியத்தேவன் கூடியிருந்தனர். அடிபட்ட வந்தியத்தேவன் உடம்பு பூரணமாகக் குணமடைந்திருந்தது.
அருள்மொழிவர்மர் வந்தியத்தேவனைப் பார்த்து “தோழா! உன் உடம்பு முழுவதும் குணமடையுமுன் உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை. ஆனால் உன் சாதனையைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தெரிந்துகொண்டேன்” என்றார்.
சேனாதிபதி, “உன் தீரத்தை திருமலை மூலமாகக் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினேன்.. ஆனால் திருமலை திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டான். செவ்வேந்தியும் மற்ற படை வீரர்களும் உன்னைப் புகழ்ந்தார்கள். பொக்கிஷங்களை அடைய எப்படி புதிர் முடிச்சுகளை அவிழ்த்து, புத்தியை உபயோகப்படுத்தி, மதியாலும் வீரத்தாலும் அடைந்தாய் என்பது எவராலும் செய்ய இயலாத சாதனை! ஆனால் பாண்டியச் சதிகாரக் கும்பல்களும், கடல் கொள்ளைக்காரர்களும் எப்படியோ உன்னிடமிருந்து அவைகளை பறித்து எடுத்துக்கொண்டு போனது என்பது விதி!” என்று கூறி முடித்தார்.
அப்போது வீரன் ஒருவன் உள்ளே வந்து பணிவுடன் வணங்கி, “திருமலை உங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்று கூறினான். வேளார் உடனே அழைத்துவருமாறு தலையை அசைத்தார்.
திருமலை வந்து எல்லோரையும் வணங்கி கையிலிருந்த மூட்டையை கீழே வைத்தான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருள்மொழி, “என்ன திடீரென்று மாயமாய் எங்கே மறைந்திருந்தாய்? மூட்டையில் என்ன?” என்று கேட்டார்.
திருமலை “மறைந்தவிதத்தை விவரிக்குமுன் இந்த மூட்டையில் வந்தியத்தேவர் சோழ குலத்தினரால் மிகவும் அவசியமானதாக வேண்டப்படும் பொருட்களை வைத்திருக்கிறார். அவைகளைப் பரிசாக உங்களிடம் சேர்ப்பிக்க என்னிடம் கொடுத்துள்ளார். மேலும் உங்கள் ஆவலைத் தூண்ட விரும்பவில்லை.. இதோ!” என்று மூட்டையை அவிழ்த்தான்.
அருள்மொழி உள்ளிருந்து ஒரு கிரீடத்தை வெளியில் எடுத்தார். எடுத்து, ஆச்சர்யத்தில் மூழ்கி, “இது.. இது.. பாண்டியர் மணிமகுடமல்லவா?” என்றார்.
உடன் இருந்த வேளார் இரத்தின மாலையைக் கையில் எடுத்தார். அவர் மூச்சு ஒரு கணம் நின்றது. மறுபடி நின்ற மூச்சு வேலையைத் தொடங்கியது. ஸ்தம்பித்துப் போன அவர் “இது.. இதுவும்.. பாண்டியர் இரத்தின ஹாரம் அல்லவா!” என்றார். அவர் வியப்பின் சிகரத்தில் நின்றிருந்தார். வந்தியத்தேவனைப் பார்த்து,
“சதிகாரக் கும்பல் உன்னிடமிருந்து அவைகளை அபகரித்தது உண்மை அல்லவா?பின் எப்படி..?” என்றார்
வந்தியத்தேவன் “பொக்கிஷப் பெட்டியை அவர்கள் அபகரித்தது என்னவோ உண்மை. அதை இப்போது திறந்து பார்த்து ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள்” என்றான் அவனுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்.
குழுமியிருந்த சபையில் ஆச்சர்யக் கூக்குரல்கள் மிகுந்தது.
பிறகு அவர்களுக்குக் குடந்தை சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து திருமலையைப் போர்க் கப்பல்களைக் கொண்டுவர அனுப்பியதுவரை விளக்கிக் கூறினான். திருமலை கிளம்புமுன் அவனிடம் பொக்கிஷப் பொருட்களை மீட்டபின் அவற்றை பெட்டியிலிருந்து அகற்றி பாறையின் அருகிலிருந்த புதருக்குப் பின் மறைக்கப் போவதாகச் சொல்லியிருந்ததையும் கூறினான். தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் பொக்கிஷங்களை உங்களிடம் ஜாக்கிரதையாக சேர்க்கும்படியும் திருமலையிடம் முன்பே சொல்லியிருந்ததைச் சுட்டிக்காட்டினான்.
“என்னுடைய முன்யோசனையின் பேரில் திருமலை எங்களையெல்லாம் தீக்கு இரையாக்க ஆரம்பித்துக் கொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்டபின் படகில் மறுபடி பூததீவுக்குப் போய்ப் பொருட்களை எடுத்து கொண்டுவரச் சென்றிருக்கிறான். அப்போதுதான் அவன் மாயமாய் மறைந்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள். பிறகு நடந்தவையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்” என்று கூறி முடித்தான்.
“ஆமாம்!அவர்களை ஏமாற்ற, மற்றும் அவர்களுக்குச் சந்தேகம் வராமலிருக்கப் பெட்டிக்குள் அப்படி என்னதான் வைத்திருந்தாய்?” என்று அருள்மொழி வினவினார்.
வந்தியத்தேவன் “கற்கள்..” என்றான்.
எல்லோரும் குப்பென்று சிரித்தார்கள். அனைவரது சிரிப்பும் அடங்க ஒரு நாழிகை ஆயிற்று.
அருள்மொழி மறுபடியும் “பலே வந்தியத்தேவா! உன் வீரத்தையும் விவேகத்தையும் கண்டு நான் வியக்கிறேன்! உன்னை நண்பனாக அடைய நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ” என்று அவனை ஆரத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அருள்மொழி மேலும் “இந்த பாண்டியர் புராதான பொக்கிஷங்கள் பாண்டிய நாட்டுக்கே சொந்தமானவை. நமக்கு அடிபணிந்து நம்மால் நியமிக்கப்படும் அரசனிடம் உரிய காலத்தில் அவைகள் ஒப்படைக்கப்படும்! பாண்டிய தேசத்து மக்களால் அது ஒரு மகத்தான செய்கையாகக் கருதப்படும் என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை!” என்று உணர்ச்சப் பரவசப்பட்டுச் சொன்னார்.
வேளார் “வந்தியத்தேவா! இது பொன்னான நேரம். வெளியில் நமது படை கூடியிருக்கிறது, எதனால் தெரியுமா? இன்றிலிருந்து சேனாதிபதி பதவியிலிருந்து நான் விடுதலையாகிறேன். நீ அதை ஏற்கப் போகிறாய். அதை இந்த நல்ல நாளில் அறிவிக்கத்தான் இந்த ஏற்பாடு” என்றார்.
எல்லோரும் பாசறையிலிருந்து வெளியே வந்தனர்.
திருமலை, “ஈழத்தின் தளபதி மாதண்ட நாயகர் அருள்மொழிவர்மர்..! வாழ்க! வாழ்க!!” என்று இடி முழக்கக் கூறினான்.
எல்லோரும் “வாழ்க! வாழ்க!!” என்றார்கள்.
“ஈழத்தின் சேனாதிபதி கொடும்பாளூர் பூதிவிக்ரம கேசரி பெரிய வேளார் வாழ்க!’ என்றான்.
எல்லோரும் “வாழ்க! வாழ்க!!” என்றார்கள்
அருள்மொழியிடம், வேளார் தன் கத்தியை இடுப்பிலிருந்து எடுத்து நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்டு அருள்மொழி, வந்தியத்தேவன் அருகில் சென்று கைகளை உயர்த்தினார்.. வந்தியத்தேவன் கத்தியைத் தன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டான். பிறகு வலக்கையில் அதை ஏந்தி உயரப் பிடித்தான்.
திருமலை “ஈழத்தின் புதுச் சேனாதிபதி..
வாணர் குல வீரர்..
வல்லத்து அரசர்..
வல்லவரையர் வந்தியத்தேவர்..
வாழ்க!”
என்று மறுபடியும் இடி முழங்கினான்.
எல்லோரும் கைகளை உயர்த்தி “வாழ்க! வாழ்க!!” என்றனர்.
“வீர வேல்..”
“வெற்றி வேல்..”
முடிவுரை
வந்தியத்தேவனால் மீட்கப்பட்ட மணிமகுடம் பல வருடங்களாக உத்தம சோழர் மற்றும் பிறகு பட்டம் ஏறிய ராஜராஜசோழன் பாதுகாப்பில் சோழ அரண்மனையிலேயே இருந்தது. கடைசி பல்லவ வாரிசான பார்த்திபேந்திரன் சோழப்பேரரசின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசனாக சோழர்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தான். அவன் மனம், சிதைந்த பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் தலை தூக்கி நிலை நாட்டத் துடிதுடித்துக் கொண்டிருந்தது. சோழர்களின் பரம்பரைப் பகைவர்களான பாண்டிய நாட்டுடன் ரகசியத் தொடர்பு வேறு கொண்டிருந்தான். தஞ்சையில் மகுடம் வைத்துப் பாதுகாக்கப்படும் இடம், பாதுகாக்கும் மெய்க் காவலர்கள் பற்றிய விஷயங்களை அடிக்கடி பாண்டிய நாட்டுக்குத் தெரிவித்துக் கொண்டும் இருந்தான். தஞ்சை மாளிகையிலேயே சோழர் வீரர்களுடன் பாண்டவ உளவாளிகள் சிலர் புகுந்திருந்தார்கள். பாண்டியர்கள் மறுபடியும் மணிமகுடத்தை அபகரித்தார்கள். (அடைந்தார்கள் என்று கூறுவது மிகப் பொருந்தும்!) அது கருத்திருமன் உதவியால் மறுபடியும் ஈழ நாட்டு மகிந்தனிடம் வந்தடைந்தது. வேறு ஓர் கண்காணா இடத்தில் மீண்டும் அதை மகிந்தன் மறைத்து வைத்தான்.
அடுத்த சோழப் பேரரசனான ராஜேந்திரன் காலம் வரை அது ஈழத்தில் ரகசிய கண்காணிப்பில் மறைந்திருந்தது. இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டெடுத்த கீழ் காணும் கல்வெட்டினால் உறுதி ஆகிறது:
ராஜேந்திர சோழன் மறைந்த பாண்டியர் மணிமகுடத்தை மீட்டு வந்த உண்மையான வரலாறு சோழ சரித்திரத்தில் சிகரம் வாய்ந்த நிகழ்சியாகும்! இந்த என் குறுநாவலைத் தொடர்ந்து எழுதக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு! விரைவில் அதற்கான சூழ் நிலை அமையும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
வணக்கம்!
———————————————————————————————————————–
அனுபந்தம்
சோழநாடு/ஈழம் வரைபடம்
வரலாற்றின் முக்கிய பாத்திரங்கள்
நான் ஜெ.ராமன், ஜெய்சீதாராமன் என்னும் புனைப்பெயரில் இக்கதையை எழுதியிருக்கிறேன். பிறந்தது 1939ம் ஆண்டு பட்டுக் கோட்டையில். 1965ல் இந்தியாவைவிட்டு முதலில் இங்கிலாந்து நாட்டிற்கும் பின்னர் ஆஸ்த்ரேலியாவிற்கும் குடிபெயர்ந்து 33 வருடங்களுக்குப் பின் பிறந்தமண்ணிற்கே திரும்பி வந்தேன். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் பலகாலம் வேலை பார்த்துவிட்டு முடிவில் Franchised Austrlia Postன் உரிமத்தில் தொழிலதிபராய் பணிபுரிந்தேன்.
இந்த ‘மணிமகுடம்’ குறுநாவல் எனது முதல் படைப்பு, 2011ல் தொடங்கி 2016ல் நிறைவு பெற்றது. நான் இந்த கதையை மேலே தொடருவதும் அல்லது வேறு சரித்திர நாவல்களை உருவாக்குவதும் இந்தக் கதையில் எனக்கு உங்களால் கிடைக்கும் அங்கீகாரத்தைப் பொருத்திருக்கிறது.