இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, நமது மத்திய அரசாங்கத்தினால் 2010ம் ஆண்டு முதல் “பால சாஹித்ய புரஸ்கார் விருது” வழங்கப்பட்டு வருகின்றது. 9 முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்காக படைக்கப்பட்டு வரும், சிறந்த இலக்கிய படைப்புகளுக் காக இந்த விருது, மத்திய அரசினால், ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
“சாஹித்ய அகாதமி விருது” நமது மத்திய அரசாங்கத்தினால் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு மொழிகளில், இலக்கியங்களைப் படைத்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக “சாஹித்ய அகாதமி விருது” விளங்குகிறது. 24 இந்திய மொழிகளில் படைக்கப்பட்டு வரும் இலக்கிய நூல்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள், சிறந்த இலக்கியங்களைப் படைக்க பெரும் தூண்டுகோலாக இருந்து வருகிறது. இதன் மூலம், சிறந்த நூல்களைப் படைக்கும் இலக்கியவாதிகள் சிறப்பு செய்யபட்டு வருகிறார்கள். சிறந்த இலக்கிய படைப்புகள் தொடர்ந்து வெளி வர பெரும் அளவு உதவி செய்து வருகின்றன இது போன்ற விருதுகள்.
இந்த விருது தொடங்கப்பட்ட காலங்களில், சிறார் இலக்கியங்கள் தவிர வேறு அனைத்து இலக்கிய படைப்புக்களையும் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு, விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், சிறார் இலக்கியப் படைப்புகள், முக்கியத்துவம் பெறாமல் இருந்து வந்தன.
அக்கால கட்டங்களில், குழந்தை எழுத்தாளர்கள் ஆதரவின்றி காணப்பட்டனர். இதனால், சிறார் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத ஒரு மந்தமான சூழ்நிலை காணப்பட்டது. சிறார் இலக்கியங்களையும் ஊக்குவிக்கும் விதமாக,, 2010ம் ஆண்டு, நமது மத்திய அரசாங்கம், “பால சாஹித்ய புரஸ்கார் விருது” வழங்க ஆரம்பித்தது. இந்த விருது தொடங்கப்பட்ட ஆண்டு முதல், இது வரை 14 எழுத்தாளர்கள், “பால சாஹித்ய விருது” வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள்
“பால சாஹித்ய புரஸ்கார் விருது” தாமிரத்தால் செய்யப்பட்டுள்ள நினைவுப் பத்திரத்துடன், ரூபாய் ஐம்பதாயிரம் காசோலையுடன் இந்திய தலை நகர் “புது தில்லி” நகரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட நூலுக்கென்று விருது வழங்கப்படாமல், ஒரு குழந்தை எழுத்தாளரின் வாழ்நாள் முழுவதும் அவர் குழந்தை இலக்கியத்திற்கென்று ஆற்றியப் பணிகளைக் கருத்தில் கொண்டும், பல குழந்தை எழுத்தாளர்களுக்கு, “பால சாஹித்ய புரஸ்கார் விருது” வழங்கப்பட்டிருக்கிறது.
“பால சாஹித்ய புரஸ்கார் விருது” தொடங்கப் பட்ட காலத்திலிருந்து இதுவரை அந்த விருது வழங்கப்பட்டவர்களின் விவரங்கள்.
பால சாஹித்ய புரஸ்கார் விருது பட்டியல்
| வ. எண் | ஆண்டு | எழுத்தாளரின் பெயர் | நூலின் பெயர் |
| 1. | 2010 | மா. கமல வேலன். | அந்தோனியின் ஆட்டுக்குட்டி- புதினம் |
| 2. | 2011 | எம்.எஸ்.தங்கப்பா | சோளக்கொல்லை பொம்மை-கவிதை |
| 3. | 2012 | கோ.மா.கோதண்டம் | காட்டுக்குள்ளே இசை விழா-சிறுகதை |
| 4. | 2013 | ரேவதி – (ஈ.எஸ்.ஹரிஹரன்) | பவழம் தந்த பரிசு-சிறுகதைகள் |
| 5. | 2014 | இரா.நடராஜன் | விஞ்ஞான விக்கிரமாதித்தன்
கதைகள் – சிறுகதைகள் |
| 6. | 2015 | செல்ல கணபதி | தேடல் வேட்டை – கவிதைகள் |
| 7. | 2016 | குழ. கதிரேசன் | வாழ்நாள் சிறுவர் இலக்கியத்துக்காக |
| 8. | 2017 | வேலு சரவணன் | வாழ்நாள் சிறுவர் இலக்கியத்துக்காக |
| 9. | 2018 | கிருங்கை சேதுபதி | சிறகு முளைத்த யானை- கவிதைகள் |
| 10. | 2019 | தேவி நாச்சியப்பன் | வாழ்நாள் சிறுவர் இலக்கியத்துக்காக |
| 11. | 2020 | எஸ்.பால பாரதி | மரப்பாச்சி சொன்ன இரகசியம்-புதினம் |
| 12. | 2021 | மு.முருகேஷ் | அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை – புதினம் |
| 13. | 2022 | ஜி.மீனாட்சி | மல்லிகாவின் வீடு – சிறு கதைகள் |
| 14. | 2023 | உதய சங்கர் | ஆதனின் பொம்மை – புதினம் |
