இது செப்டம்பர் மாதம். பிரபலமான ‘கம் செப்டம்பர்’ பாடல் இசையைக் கேட்டுக்கொண்டே குவிகத்தைப் படியுங்கள்!
சபை நடுவே ‘நீட்’ ஓலை வாசியான் நின்ற மரம் போல நிற்கின்றது தமிழகம்.
என்ன ? கமலுடைய ட்விட்டர் பதிவு மாதிரி புரியாமலிருக்கிறதா?
தமிழகத்தின் இன்றைய போராட்டங்களைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியவில்லை.
நீட்டுக்கு எதிராக உயர்நீதி மன்றம் சென்ற அனிதாவைப் பாராட்டுகிறோம்.
ஆனால் அதற்காகத் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை எப்படிப் பாராட்டுவது? காரணம் எவ்வளவு வலுவுள்ளதாக இருந்தாலும் தற்கொலை தவறானதுதான்.
தமிழகத்தின் தரம் குறைந்த கல்வி முறையைக் குறை கூறுவதா?
இந்தியா முழுவதும் ஒரே மாதிரிக் கல்வியைத் தரத் தவறிவிட்ட அரசு இயந்திரங்களைக் குறை கூறுவதா?
எதிலும் இந்திக்காரர்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கும் மத்திய இந்தியாவின் வெறியர்களைக் குறை கூறுவதா?
மருத்துவக் கல்விக்குக் கோடிக்கணக்கில் கட்டாய நன்கொடை வாங்கும் பண முதலைகளைக் குறை கூறுவதா? அல்லது அதைத் தடுக்க வக்கில்லாமல் இருக்கும் அரசுத் துறையைக் குறை கூறுவதா?
அநீதிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தால்தான் நீதி கிடைக்கும். போராடுபவர்களின் குறிக்கோள் வெவ்வேறு மாதிரி இருக்கலாம்.
அக்டோபர் புரட்சியிலிருந்து, இந்தி எதிர்ப்பு தொடர்ந்து, தொழிற்சங்கப் போராட்டங்கள் பரவி, ஜல்லிக்கட்டுவரை எண்ணற்ற போராட்டங்களை நாம் சந்தித்திருக்கிறோம்.
அந்த வகையில் நீட் போராட்டத்தின் குறிக்கோளைப் பாராட்டுகிறோம். ( நீட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்யச்சொல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது )
இது மோடிக்கு எதிரானது அல்ல. நாட்டுக்கு எது முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காகவே நடக்கும் போராட்டம்.
ஜாதி, மதம், அரசியல், உணர்ச்சி வேகம் போன்றவற்றைத் தாண்டி யோசித்து முடிவெடுப்போம்.
அனைவரையும் பேசவிடுங்கள். மாற்றுக் கருத்துக்களை நசுக்காதீர்கள். ‘ தேசம் கேட்க விரும்புகிறது ‘ என்று வெற்றுக் குரல் எழுப்பாதீர்கள். எதிர்மறைக் கருத்துக்களை எடுத்து எறியுங்கள்.
முடிவில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அப்போதுதான் , சபை நடுவே ‘நீட்’ ஓலை வாசியான் நின்ற மரம் போல நாம் அனைவரும் நிற்க வேண்டிவராது.
சால்மன் என்பது பசிபிக் கடலிலும், கடலை ஒட்டிய மலைப் பாங்கான பகுதிகளிலும் வாழும் ஒரு வித மீன்.
அது கடலிலிருந்து 1000 மைலுக்கு அப்பால் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும் நல்ல தண்ணீர் ஓடையின் கீழே அல்லது ஆற்றோரம் இருக்கும் பாறைகளில் முட்டையிடும். 2 /3 மாதங்களில் பிங்க் வண்ணத்தில் இருக்கும் அந்த முட்டைகளை உடைத்துக் கொண்டு சால்மன் சின்னஞ் சிறு வடிவில் வெளிவரும்.
அந்தக் குட்டி சால்மன்கள் பல வாரங்கள், தான் இருந்த முட்டையின் கருவையே உணவாக்கிக் கொண்டு பாறைகளிலேயே வாழும்.பிறகு 5 முதல் 10 வாரத்தில் கொஞ்சம் பலம் பெற்று சின்னஞ் சிறு மீன்களாகத் தண்ணீரில் நீந்தத் தொடங்கும்.
அதற்குப் பிறகு அவை கடலை நோக்கிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்கும். சலசலக்கும் ஒடைகளின் நீரில் குதித்துக்கொண்டும் நீந்திக் கொண்டும் தான் வாழப்போகும் பசிபிக் கடலை அடையப் புறப்படும். அது ஆயிரம் மைல்களாக இருந்தாலும் சால்மன்களுக்குக் கவலை இல்லை.
வழியே அவற்றிற்குத்தான் எத்தனை இடையூறுகள் காத்திருக்கின்றன?
ஆனால் தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த சால்மன்கள் வேகமாகப் பாயும் அருவிகளில் நீரின் வேகத்தோடு இறங்கி ஆற்றில் நீந்தி கடைசியில் தான் வாழப்போகும் கடலை நோக்கிச் செல்லும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். இந்த சமயத்தில் இந்த சால்மன்ளகளுக்குக் கடல் நீரில் வசிக்கத் தகுந்தமாதிரி உடலின் வாகு மாறும். ஆறு அங்குல நீளத்தில் உடலில் சில வரிகளோடு இவை பயணத்தைத் தொடரும். ஓரிரு வருடங்களில் கடலில் வசிப்பதற்கான முழுத் தகுதியையும் அடைந்து விடும்.
கடலை அடைந்தவுடன் அங்கு இருக்கும் சால்மன் கூட்டத்தோடு இந்த இளம் சால்மன்களும் கலந்து கொள்ளும். அவற்றின் நிறமும் தகதகவென்று வெள்ளி போல மாறும். இனத்தோடு வாழ்ந்து வாலிபம் எய்து நாலைந்து வருடங்கள் குஷியாக இருக்கும். அப்போது அவற்றின் நீளம் 20 அங்குலம் முதல் ஐந்தடி வரை இருக்கக் கூடும் .
வாலிப சால்மன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வயது வந்தவுடன் செய்யும் காரியம்தான் மகத்தானது. தான் பிறந்த பாறைகளில்தான் தன் குஞ்சுகளும் பிறக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவை மீண்டும் ஆறுகள் வழியாக அருவிகள் வழியாகச் செல்லத்தொடங்கும். . இந்த முறை அவை நீரின் வேகத்திற்கு எதிர்த் திசையில் செல்லவேண்டும். கடலில் இருந்தபோது இவை தன்உடலில் சேர்த்து வைத்திருந்த கொழுப்புக்களே இவற்றிற்கு இந்த சக்தியைக் கொடுக்கின்றன. (பாகுபலியில் அருவிக்கு மேலே நாயகன் செல்வதுபோலே இவையும் செல்லும்) .
அப்போதும் அவற்றைப் பிடிக்க மனிதர்களும் மற்ற விலங்குகளும் காத்துக் கொண்டிருக்கும். பாறையில் ஒளிந்திருக்கும் கரடிகள் சுவையான சால்மனைத் தின்னக் காத்துக் கொண்டிருக்கும். பலசமயம் இந்த சால்மன்கள் துள்ளிக் குதித்து, காத்திருக்கும் கரடியின் வாயிலேயே நேராக விழுவதும் உண்டு..
இந்தப் பயணத்தின்போது அவை தன் உடல் கொழுப்பை வேகமாகக் கரைத்து அடுத்த தலைமுறையைக் கொடுக்கத் தயாராயிருக்கும். முடிவில், தான் பிறந்த இடத்தை அடைந்ததும் பெண் சால்மன் அதே ஓடைத் தண்ணீரின் அருகே உள்ள பாறைகளில் 2500 முதல் 7000 வரை முட்டைகள் இடும். ஆண் சால்மன்கள் அந்த முட்டைகளைக் கருத்தரிக்க வைக்கும்.
அதற்குப் பின் நடப்பதுதான் மிகமிகக் கொடுமையானது.
முட்டைகள் கருத்தரித்ததும் அந்த ஆண் சால்மனும் பெண் சால்மனும் ஓரிரு வாரங்களில் தான் பிறந்த பாறையிலேயே தன் உயிரையும் விட்டுவிடும்.
அதற்குப் பிறகு அந்த முட்டைகளிலிருந்து வந்த புது சால்மன் குஞ்சுகள் தங்கள் வாழ்க்கை வட்டத்தை மீண்டும் துவக்கும்.
சால்மனின் தியாகம் உணமையிலேயே மகத்தானது.
சிற்றிதழ்களே தன் உயிர்மூச்சு என்று கூறி , அதற்காகவே சிற்றிதழ் உலகம் என்ற மின்னிதழைத் துவக்கியவர் திரு க்ரிஷ் ராமதாஸ் அவர்கள். முக நூலில் அவரது பதிவுகளைப் படித்து அவரைப் பாராட்டி குவிகம் இதழுக்காக சிற்றிதழ்பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதுமாறு வேண்டிக் கொண்டோம். அவர் மின்னிதழ் துவக்க இருந்ததால் பிறகு எழுதுவதாக வாக்களித்தார்.
அவரது மின்னிதழைப் பாராட்டிக் குவிகம் ஜனவரி 2017 இதழில் எழுதிய கட்டுரையின் பகுதி இது:
அப்படிப்பட்ட நண்பர் மூளையில் தோன்றிய கட்டியினால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்.
அவரது இழப்பு சிற்றிதழ் உலகிற்கே பேரிழப்பு.
அவரது பிரிவால் வாடும் உறவினருக்கும் நண்பர் வட்டத்திற்கும் குவிகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
ராமகுப்தர் (மறைவு)
முன் கதை:
சமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்.
இளைய மகன் சந்திரகுப்தன்.
மாவீரன் சந்திரகுப்தனுக்கும் பேரழகி துருவாதேவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
சமுத்திரகுப்தன் இறந்தவுடன் ராமகுப்தன் மந்திரியின் உதவியால் முடிசூடத் திட்டமிட்டான்.
அத்துடன் அழகி துருவாதேவியையும் சூழ்ச்சியால் மனவியாக்கத் துணிந்தான்.
ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..
ராமகுப்தன் குப்தச் சக்ரவர்த்தியானான்..
காதலர்கள் உள்ளம் துவண்டது..
இனி கதை தொடர்கிறது:
காலம் மெல்ல உருண்டது..
சமுத்திரகுப்தன் காலமானதும் அவனுக்கு அடங்கியிருந்த சில மன்னர்களுக்குக் குளிர்விட்டுப்போனது.
அந்த மன்னர்களில் சிலர் சக்தி பொருந்திய மன்னர்கள்.
சக வம்சத்தின் ருத்ரசிம்மா-II.
சமுத்திரகுப்தனின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவன்.
அவன் மகன் … அவன் பெயரும் ருத்ரசிம்மா-III.
பெயரைக்கேட்டாலே சும்மா அதிரும்.
வீரனாக வளர்க்கப்பட்டான்.
முரடன்.
பலத்தில் யானை போன்றவன்.
அவன் தந்தை சாகும் முன் மகனை அழைத்து…
“மகனே! குப்தர்கள் நம்மைக் குனிய வைத்துவிட்டனர்.
நான் சாகப்போகும் தருணம் நெருங்கி விட்டது.
இதே நேரம் சமுத்திரகுப்தனும் சாகக்கிடக்கிறான்.
அவனுக்குப் பின்
அந்த ஆட்சியைக் குலைத்து…
அவனது ஆதிக்கத்தை அழித்து…”
சற்றே மூச்சு வாங்கி… நிறுத்தினான்.
“……..” – மகன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தந்தை தொடர்ந்தான்:
“அவர்களது பெருமையை அழிக்கவேண்டும்.
அவமானத்தில் அந்தப் பரம்பரை துடிக்கவேண்டும்”
மேலும் தொடர்ந்தான்:
“மகனே!
குப்தரின் மாபெரும் செல்வம் ..
அவர்கள் படையெடுத்துச் சேர்த்த செல்வம்..
அவரது கடலார்ந்த சேனா பலம் ..
உலகப் பிரசித்தி பெற்ற அந்த மன்னர்களின் ராணியர்களின் அழகும் செல்வாக்கும்… முதலாம் சந்திரகுப்தனின் ராணி குமாரதேவி முதல் ‘துருவாதேவி’ வரை அனைவரும் பொக்கிஷங்கள்…
துருவாதேவியின் அழகுபற்றிதான் உலகே அறிந்ததே!
அவர்களது இந்த அனைத்துச் செல்வங்களையும் நீ பறித்து அவர்களை அவமானத்தில் குறுக வைக்கவேண்டும்”
சக மன்னன் ருத்ரசிம்மாவும் சமுத்திரகுப்தனும் ஒரே நாளில் இறந்தனர்.
ராமகுப்தன் குப்த மன்னனான அதே நாள் ‘இளவரசன் ருத்ரசிம்மா’வும் சக நாட்டு மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
குப்தர்களை வெல்வதற்கு சமயம் பார்த்துக்காத்திருந்தான்…
ராமகுப்தன் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருந்தான்!
நான்கு வருடங்கள் மெல்லச் சென்றது..
பல இதயங்கள் சோகத்தை மனதில் புதைத்து அந்த வடுவுடன் வாழ்வை நடத்தின.
ஒரு நாள் ராமகுப்தன் தன் மனைவியுடன் ஒரு சிறிய படைகொண்டு ஒரு இன்பச்செலவுக்காகப் புறப்பட்டான். அங்கும் இங்கும் திரிந்து சக ராஜ்யத்தின் எல்லை அருகே வந்தனர்.
அங்கு சக மன்னன் ருத்ரசிம்மாவின் பெரும் சேனை வந்து கொண்டிருந்தது.
ராமகுப்தனின் சிறு படை தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.
ராமகுப்தன், துருவாதேவி இருவரும் சிறைபிடிக்கப்பட்டனர்.
ருத்ரசிம்மா ராமகுப்தனுக்குக் கடிதம் அனுப்பினான்.
‘ராமகுப்தா!
என்னிடம் சிக்கிக் கொண்டாய்!
உன்னுயிர் என் கையில் உள்ளது!
அதை உன்னிடமிருந்து பறிப்பது உன் பதிலில் இருக்கிறது.
உன் மனைவி துருவாதேவி முன்பு சந்திரகுப்தனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள்.
ஆனால் அதற்கு முன்பு அவள் தந்தை அவளை எனக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஆக அவள் எனக்கே சொந்தமானவள்.
அவளை எனக்கு மணமுடிக்க ஒப்பி என்னுடன் அனுப்பிவைத்தால்..
உன்னை உன் நாட்டுக்கு அனுப்பி வைப்பேன்.
இல்லாவிடில்…
உன்னுயிர் உன் உடலில் தங்க வாய்ப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அடைந்தால் ‘மகாதேவி… இல்லாவிடில் உனக்கு ‘மரண தேவி’ “
கடிதம் ராமகுப்தனைச் சுட்டெரித்தது.
ராமகுப்தன் மௌனமாகத் துருவாதேவியிடம் கடிதத்தை நீட்டினான்.
துருவாதேவி கடிதத்தைப் படித்தாள்.
அவளது பொன் போன்ற முகம் யானைத் தந்தம்போல் வெளுத்தது.
கோபம், துக்கம் பீறிட்டது.
வீரம் துணிச்சல் கொண்டவளாயினும் அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.
ராமகுப்தன் கேட்டான்:
“துருவாதேவி… அது உண்மையா?”
துருவாதேவி:
“ஆமாம். என் தந்தை என்னை சக மன்னன் ருத்திரசிம்மனுக்கு மணமுடிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சக மன்னனின் தீய குணங்களை அறிந்து திருமணத்தை நிறுத்தி விட்டார்.”
ராமகுப்தன்:
“தேவி! பேரழகியே! உன்னை என்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது. ருத்திரசிம்மனுடன் போர் புரிவேன்”
துருவாதேவி ஆனந்தப் பெருமூச்சு விட்டாள்.
‘ராமகுப்தன் வீரம் குறைந்தாலும் கொள்கை கொண்டிருக்கிறானே.” – என்று நிம்மதியடைந்தாள்.
“நீங்கள் ருத்திரசிம்மனுடன் போர் புரிந்து அவனைக் கொல்லுங்கள்… ஒரு வேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என் உயிரை நான் போக்கிக் கொள்வேன்.. ஒரு நாளும் ருத்திரசிம்மனுக்கு உடையவளாக மாட்டேன்”
இந்த செய்தி கேட்டு ருத்திரசிம்மன் இடிஇடியென சிரித்தான்.
ராமகுப்தனை அழைத்து வரச்சொன்னான்.
ராமகுப்தன் கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு, கைகள் பின்னால் வைத்துக் கட்டப்பட்டு ருத்திரசிம்மன் முன் இழுத்து வரப்பட்டான்.
ருத்திரசிம்மனின் சிரிப்பு அடங்கியபாடில்லை.
“ராமகுப்தா! நீ ஏற்கனவே தோற்றுவிட்டாய்!
என்னிடம் போர் புரிவாயா?
உன் நிலைமையைப் பார்.
ஏற்கனவே உன் பாதி உயிர் போய் விட்டது.
என்னைப் பார்.”
ருத்திரசிம்மனின் பருத்த முகத்தை அவனது பெரும் மீசை மேலும் பயங்கரமாக்கியது.
உருண்டு திரண்ட தோள்களுடன், பெருத்த இடையுடன் அவன் ஒரு ராக்ஷசன்போல் கர்ஜித்தான்.:
“உன் மனைவியைக் கடைசிமுறை பார்த்துக் கொள்.
அவளை பலவந்தமாக தூக்கிச்சென்று மணமுடித்துக்கொள்ள எனக்குத் தெரியும்.
ஆனால்..ஒரு சில நாட்கள் உங்களை இங்கு தங்கவிட்டு உனக்கு நடக்கும் சித்திரவதைகளைக் கண்டு களிக்கப்போகிறேன்.
பிறகு உன் உயிர் என் கையால் போகும்” என்று நிறுத்தினான்..
அவனது கரங்கள் கொலை வெறியைக் காட்டியது.
“ஒரு வேளை மனம் மாறி துருவாதேவியை நீயே என்னிடம் அனுப்பி வைத்தால், உன்னை உயிருடன் விட்டு விடுவேன்…
அது மட்டுமல்லாது நீ பாடலிபுத்திரம் சென்று அரசனாக இருக்கலாம்.
ருத்திரசிம்மன் வாக்குத் தவற மாட்டான்.
ஆனால் நினைத்ததை அடையாமல் விட மாட்டான்”
ராமகுப்தன் நடுங்கி விட்டான்.
துருவாதேவியிடம் சென்றான்.
“என் ராணி!
உன்னை சகராஜனுக்கு நான் அளிக்காவிடில் நான் என் ராஜ்யத்தை இழக்க நேரிடும். உயிரையும் இழக்க நேரிடும்.
ஆனால் உன்னை அவனுக்குக் கொடுத்தாலோ எனது மனம் உடைந்து விடும்.
தாங்குவது மிகக் கடினம்.
என்ன செய்வேன்?
வெளிப்படையாகச் சொல்வதானால் நான் அரசனாக நீடிப்பதையே விரும்புகிறேன்.
ஆதலால்…
உன்னை இந்தக் கொடியவனிடம் அனுப்பப்போகிறேன்.
நீ அவனை மணம் செய்து கொள்வதை அறிந்து நான் பெரு வேதனை கொள்வேன்.
ஆனால் எனக்கு என் நாட்டுக்குத் திரும்ப செல்லவேண்டும்”
சொல் கேட்டு இடி விழுந்தாற்போல் துடித்தாள் துருவாதேவி.
“நினைத்தேன் … நினைத்தேன்.. உனக்காவது .. வீரம் வருவதாவது..
சே! என்ன மனிதன் நீ! மனிதனா நீ? உன் தம்பி இப்படி ஒரு செயலை கனவிலும் செய்வாரா?”
ராமகுப்தன் கோபத்தின் வசமானான்.
“சந்திரகுப்தனை இதில் எதற்காக இழுக்கிறாய். அவன் அப்படி மாவீரன் என்றால் ஏன் நமக்கு உதவ வரவில்லை”
துருவாதேவி:
“அவருக்கு நம் நிலைமை எப்படித் தெரியும்? அவருக்கு செய்தி அனுப்பினால் நடப்பதைப் பார்”
ராமகுப்தன்:
“அவனுக்கு எப்படிச் செய்தி அனுப்புவது? நம் சேனையில் பாதி இறந்து விட்டது. மீதி இரும்புச் சங்கிலியால் கட்டுண்டு உள்ளனர்.”
வீரமற்று சோரம் போக… வழி தெரியாமல் இருந்தான் ராமகுப்தன்.
பாடலிபுத்திரத்தில்…
‘அண்ணன் மகாராணியுடன் சென்று மூன்று நாட்களில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லையே’ என்று வியந்தான்.
‘வாரங்கள் இரண்டு சென்றதே!’ என்று யோசித்தான்.
உடனே சிறு படை ஒன்றைச் சேர்த்துத் தேடலானான்.
குப்த ராஜ்ய உளவாளிகள் பெரும் திறமை வாய்ந்தவர்கள்.
சந்திரகுப்தன் அவர்கள் துணை கொண்டு தேடினான்…
சக நாட்டு ருத்திரசிம்மன் அவர்களைச் சிறைப்பிடித்ததைக் கேள்விப் பட்டான்.
விரைவில் சக நாடு எல்லையை அடைந்தான்.
ராமகுப்தனைக் காவல் காக்கும் ருத்திரசிம்மன் வீரர்கள்
சந்திரகுப்தனையும் அவனுடன் இருந்த இருபது வீரர்களையும் பார்த்தனர்.
குடிபோதையில் கண் மண் தெரியாமல் சிரித்தார்கள்.
‘ஹேய்… நீ குப்தனா? இது தான் உன் பெரும் படையா?”
அனைவரும் பெரிதாகச் சிரித்து ஓய்ந்தனர்.
“உனது மகாராஜாவும் ராணியும் எப்படி சுகமாக இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமா?”
அவர்களை ராமகுப்தன் இருப்பிடம் அழைத்துச் சென்றனர்.
சங்கிலியால் கட்டப்பட்டு நாய்போல் இருந்த அண்ணனைக் கண்டு சந்திரகுப்தனுக்கு, துக்கத்துடன் கோபமும் வந்தது. அதை அடக்கிக்கொள்ளுமுன் துருவாதேவி அழுகையுடன் அலறத் தொடங்கினாள்:
“சந்திரகுப்தா.. தான் அரசாள்வதற்காக உங்கள் அண்ணன் என்னை சக ராஜன் ருத்திரசிம்மனுக்குக் கொடுத்து விட முடிவு செய்து விட்டார்”- ஓலமிட்டாள்.
சந்திரகுப்தன் திடுக்கிட்டான்.
“இது என்ன அநீதி அண்ணா? இதை எவ்வாறு செய்யத் துணிந்தாய்? நமது தந்தையின் பெருமையை நினைத்துப் பார். கேவலம் அரசாட்சிக்காக அன்பும் அழகும் நிறைந்த மனைவியை விட்டுக் கொடுப்பாயோ? வெட்கம் வெட்கம்”
ராமகுப்தன்:
“போதும் உன் அறிவுரை.. இவள் என் மனைவியாய் இருந்து நான் உயிர் விடுவதை விட, குப்த அரசனாக இருந்து புகழ் பெறுவதையே விரும்புகிறேன்”
துருவாதேவி இதைத் தாங்கமுடியாமல் மண்ணில் விழுந்தாள்.
சந்திரகுப்தன் சொன்னான்:
“தேவி. நான் இது நடக்க விடமாட்டேன். போர் புரிந்து உங்களை மீட்பேன்”
முன்னாளில் தன் இரு கரங்களினால் ஒரு சிங்கத்தையே கொன்ற சந்திரகுப்தன்.. உடனே தனது கத்தியை விசிறிப் போர் புரிந்தான். காவலர்களைக் கொன்றான்.
ஆயினும் காட்டைச் சுற்றி சூழ்ந்திருந்தான் சக நாட்டுப் பெரும் படையுடன் ருத்திரசிம்மன்.
சந்திரகுப்தன் :”உங்கள் மன்னனிடம்… துருவாதேவியை அழைத்து வந்திருப்பதாகக் கூறி என்னைக் கூட்டிச்செல்”
சந்திரகுப்தன் ஒரு பெண் வேடம் பூண்டு சக வீரர்களிடம்.. தன்னை ருத்திரசிம்மனிடம் அழைத்துச் செல்லப் பணித்தான்.
பீமன் திரௌபதை போல் வேடம் தரித்துச் சென்று கீசகனைக் கொன்றதுபோல்…
சந்திரகுப்தன் ருத்திரசிம்மனை அடைந்து போர் புரிந்து தன் வெறும் கைகளினாலே ராக்ஷசன்போன்ற அவன் கழுத்தை நெரித்துக் கொன்றான்.
தோல்வியுற்ற சக நாட்டு சேனை ஓட்டம் பிடித்தது.
அண்ணனையும் துருவாதேவியையும் மீட்டு பாடலிபுத்திரம் அடைந்தான்.
பாடலிபுத்திரத்தின் தெருக்கள் திருவிழாக்கோலம் பூண்டன.
சந்திரகுப்தனின் சாகசங்களை மக்கள் கொண்டாடினர்.
அவனது உருவப்படத்தை தெருக்களில் வரைந்து மகிழ்ந்தனர்.
அதே சமயம் ராமகுப்தனின் கோழைத்தனத்தை வெறுத்தனர்.
சில தெருக்களில் அவனது கொடும்பாவி வைத்திருந்தனர்.
‘நாட்டாசைக்காக மனைவியைப் பயணம் வைத்த துரோகி’ என்று மக்கள் அந்த கொடும்பாவியில் காரி உமிழ்ந்தனர்.
ராமகுப்தனுக்கு வருத்தம், கோபம், குற்ற உணர்ச்சி, பொறாமை எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தது.
தன்னை மக்கள் தூற்றுவது ஒரு புறம்.
சந்திரகுப்தனை மக்கள் ஏற்றுவது மறுபுறம்.
அரசவை கூடியது.
ராமகுப்தன் நடந்த நிகழ்ச்சியை தனது வெற்றியாக அறிவிக்க முயன்றான்.
துருவாதேவி எழுந்து பேசினாள்:
ஒரு காளி சிங்கத்தின் மேலிருந்து இறங்கியதைப் போன்ற தோற்றம்..
‘மந்திரிமார்களே…மக்களே..இந்த துரோகம்… அநீதி நீங்கள் அறிவீர்கள்..
ருத்திரசிம்மனிடம் என்னை அனுப்பத் துணிந்த இந்த அற்பனுக்கு என் மீது இனி எந்த தார்மீக உரிமையும் இல்லை. அந்த மணம் முறிந்து விட்டது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இன்றும் எல்லா அரசர்களும் பின்பற்றி வரும் ஒரு தத்துவம். அதில் அவர் கூறியது: ‘ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ள காரணங்கள்: கணவன் மனைவியை விட்டுக் கண்காணா இடம் சென்றாலோ, அரசனுக்கு எதிராகக் குற்றம் செய்தாலோ, மனைவியின் உயிருக்கு ஊறு விளைவித்தாலோ, ஆண்மைக் குறைவு உள்ளவனாக இருந்தாலோ’”
மேல் மூச்சு வாங்கியதால் அவளது உடல் துடித்தது.
சமஸ்கிருதப் பாண்டியத்தியம் பெற்றிருந்ததால், அவள் மேலும் கூறினாள்:
“இதே காரணங்களை பராசர் முனிவரும் புராணங்களில் கூறியிருக்கிறார்
இன்று நான் ராமகுப்தன் மனைவியுமல்ல.. அவன் எனக்குக் கணவனுமில்லை.”
என்றாள்.
அவையினர் அனைவரும் ஆமோதித்தனர்.
‘துருவாதேவி வாழ்க’ என்று பெருங்கோஷமிட்டனர்.
ராமகுப்தன் தலை குனிந்தான்.
அன்று மாலை…இடம் ராமகுப்தனின் அறை:
“மந்திரி..எனக்கு இப்படி ஏன் நிகழ்ந்தது? இதற்கு ஏதாவது செய்யவேண்டுமே”- என்றான்.
பழைய மந்திரியை அழைத்தான்.
அந்த மந்திரி..
அதே கொடிய மந்திரி..
பொய்யுரைத்து ராமகுப்தனை அரசனாக்கிய அதே மந்திரி.
“ராமகுப்தா… உனது கோழைத்தனம் உனது முட்டாள்தனத்தால் இன்று பகிரங்கமாகி நாடு முழுதும் பரவி நாறி விட்டது”
ராமகுப்தன் ஒடிந்து கிடந்தான்.
“எனினும் இன்றும் நான்தானே ராஜா? ஏன் ஒருவரும் என்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை”
மந்திரி சிந்தித்தான்.
கொடுமதியானுக்கு தீய எண்ணங்கள் எளிதாக உருவெடுக்கும்.
மந்திரி சொன்னார்:
“ஒன்று மட்டும் நிச்சயம். உங்களது தம்பி இங்கு இருக்கும்வரை உனக்கு மரியாதையும் கிடைக்காது. சந்தோஷமும் இருக்காது.”
ராமகுப்தன் :
“நீ சொல்வது சரிதான். அவனை நாடு கடத்தி விட வேண்டும்”
மந்திரி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு மேலும் கூறலானான்:
“அப்படிச்செய்தால் …சந்திரகுப்தன் ஒரு படையைத் திரட்டி உன்னை எளிதில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவான்.
ஆனால்…அவன் திடீரென இறந்து போனால் ????
அனைவரும் நாளடைவில் அவனை மறந்து போவர்.
சரித்திரத்தில் அவனுக்கு ஒரு வரி கூட இருக்காது.
பிறகு…
காலம் உன்னை கேவலமாக்கியது.
அதே காலம் உங்களைக் கோலமிட்டு அலங்கரிக்கும்.
குப்தர்களின் பொற்காலம் உங்களால் உருவாகும்.
அது உங்களால்தான் என்று சரித்திரம் பேசும்”
மந்திரியின் வார்த்தை ஜாலம் ராமகுப்தனை ஈர்த்தது.
“மந்திரி.. நீ சொல்வது சரி தான்.. ஆனால் சந்திரகுப்தன் நெடுங்காலம் வாழ்வானே!” என்று நொந்து கொண்டான்.
மந்திரி: ‘அவனது விதியை மாற்றிவிட்டால் நமது விதியும் மாறும்.
ஒரு வேளை… சந்திரகுப்தன் தூக்கத்திலேயே மர்மமாக இறந்து விட்டால்?”.
ராமகுப்தனுக்கு விளங்கிவிட்டது.
மந்திரி தொடர்ந்தார்:
“இன்றே! நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும்.
இன்றிரவே!
அவனில்லாமல் அரசாள நான் உங்களுக்கு உதவுவேன்”
அன்றிரவு…
குப்த சாம்ராஜ்யத்தின் எதிர் காலத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் இரவு.
நள்ளிரவு கடந்து இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
இருட்டு எங்கும் பரவி ஒரு பயங்கரம் நிகழப் போவதை அமைதியாக அறிவித்தது.
பேயும் உறங்கும் வேளை.
சந்திரகுப்தன் தனது அறையில் படுத்திருந்தான்.
ஒரு சிறிய விளக்கு முணுமுணுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ என்பதைப் போல்…சந்திரகுப்தனுக்கு
உறக்கம் வரவில்லை .
‘துருவாதேவி’யை எண்ணி அவன் மனம் அலை பாய்ந்தது.
‘விதி நம் வாழ்வில் எப்படி விளையாடிவிட்டது?
துருவாதேவி எனக்கு மனைவியாயிருப்பாள்..
ஆனால் ராமகுப்தனை மணம் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது..
இப்படி ருத்திரசிம்மனுக்குக் கொடுக்க ராமகுப்தன் முனைந்தது’
இந்த எண்ணங்கள் அவனைத் தூங்கவிடவில்லை.
அந்த நேரம் .. ஒரு கருப்பு உருவம் சத்தம் செய்யாமல் அவன் படுக்கையை நெருங்கியது.
அதன் கைகளில் நீண்ட வாள்.
அந்த தூங்காவிளக்கு அந்த வாளை மட்டும் காட்டியது.
ஓங்கிய வாள் சந்திரகுப்தனின் தலையைக் கொய்திருக்கும்.
சந்திரகுப்தன் பந்துபோல் பாய்ந்து .. வந்தவனின் கரத்திலிருந்த வாளைப் பிடுங்கி..
‘இந்நேரத்தில் என்னைக் கொல்ல வந்திருக்கும் துஷ்டா..” என்று கூறியபடி..
அவன் வயிற்றில் வாளைப் பாய்ச்சினான்.
அவனது அலறல் சந்திரகுப்தனைத் தாக்கியது.
காவலர் விளக்குப் பந்தங்கள் கொண்டு வந்தனர்.
இரத்த வெள்ளத்தில் ராமகுப்தன்.
உயிர் பறந்து விட்டது..
சந்திரகுப்தன் துடி துடித்துப் போனான்.
அண்ணனின் உடலை மடியில் தாங்கியபடி.
‘ஐயோ அண்ணா… “அலறினான்.
“என்னைக் கொல்ல நீயே வந்தாயா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இந்த நாட்டை விட்டே சென்றிருப்பேனே. நேராகக் கேட்டிருந்தால் என் உயிரையும் தந்திருப்பேனே. துருவாதேவி கிடைக்காமல் போனதுமுதல் நான் ஒரு நடைப்பிணமாகத்தானே இருக்கிறேன். ஐயோ .. என்ன செய்வேன்..தந்தையார் எவ்வளவு சொல்லியிருந்தார்? ‘உன் அண்ணனைக் காப்பதற்காக உன் உயிரையும் கொடுக்கத் தயங்காதே’- என்று சொன்னாரே. இன்று உன் உயிரை நானே பறித்து விட்டேனே” – புலம்பினான்.
உண்மையான பாசமுள்ள தம்பியும் துரோகம் நிறைந்த அண்ணனும் ஒரு தாய் வயிற்றில் பிறப்பது கதை போல் தோன்றினாலும்… நிகழ்ந்தது.
மந்திரி வந்தார்.
“சந்திரகுப்தா! அண்ணன் இறந்து விட்டான்.
தம்பியையே கொலை செய்ய முற்பட்டது துரோகத்தின் எல்லை.
அவன் கொல்லப்பட்டது அவனது துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனை.
நீ கலங்காதே!”
மேலும்:
“நான் ராமகுப்தனின் ஆதரவாளனாக இது நாள்வரை இருந்தேன்.
ஆனால் இன்று ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தங்கள் தந்தை… தந்தை என்ற நிலையில் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவேண்டும் என்று விரும்பினாலும்..மன்னன் என்ற நிலையில் தாங்கள்தான் அரசனாகத் தகுதியாளர் என்றும் கருதினார். தங்களை மன்னனாக்க என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் எனது சுயநலம் கருதி ராமகுப்தனுக்கு ஆதரவளித்தேன்.
இன்று அவன் இறந்ததும் உங்கள் பக்கம் சாய்கிறேன் என்று நீங்கள் எண்ணக்கூடும்.
அனால் உண்மையைக் கூறாமல் இறந்தால் என் கட்டை வேகாது. இனி எனக்குத் தாங்கள் எந்த தண்டனை அளித்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார்.”
மந்திரியின் வாக்கில் சத்தியம் இருந்தது.
மன்னன் மன்னித்தான்.
சில நாட்கள் சென்றன.
சந்திரகுப்தன் அரண்மனைப் பூங்காவில் இருந்த மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தான்.
‘என் வாழ்வில் எப்படிப்பட்ட சோகங்கள் நடந்து விட்டது’ என்று எண்ணினான்.
பூங்காவில் வண்ண மலர்கள் குலுங்கிக் கிடந்தது.
வாடைக் காற்று பூங்காவில் அனுமதியின்றி நுழைந்தது.
அத்துடன் ஒரு சுகந்தம் வீசியது.
மெல்லிய சலசலப்பு அவன் கவனத்தைக் கவர்ந்தது.
துருவாதேவி அவன் அருகில் வந்தாள்.
சந்திரகுப்தன் மனதில் பலவித எண்ணங்கள் அலைமோதின.
துக்கம், பச்சாதாபம், சுயவெறுப்பு….
‘தேவி … என்னை மன்னித்துவிடுங்கள்… அண்ணனை நான்..” சொல்வதற்குள்…
துருவாதேவியின் மலர்க்கரங்கள் அவனது இதழைப் பொத்தியது.
“மன்னா… நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டாம்..இறைவன் நம்மை ஒன்று சேர்ப்பதற்காக இப்படிச் செய்தான் என்று நினைக்கிறேன்.
உங்கள் பண்பும், நற்குணமும், வீரமும், தெய்வத்தன்மையும் என் மனதில் என்றும் கோவிலாக இருக்கிறது. என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்கள் அடிமை.”
சந்திரகுப்தன் ஒரு நொடியே யோசித்தான்.
‘இந்த மலர் ஏன் வாடவேண்டும்?
நமது தோட்டத்தில் என்றும் மணம் பரப்பவேண்டும்’
துடித்த அவள் இதழ்கள் அவன் இதழ்கள் சேர அடங்கியது.
பல காலம் காத்துக்கிடந்த இரு கிளிகள் அன்பைப் பரிமாறிப் பசியாறியது.
சந்திரகுப்தன் அரசனாக முடி சூடினான்.
அதற்கு முன் துருவாதேவியை மணந்தான்.
ராமர் பட்டாபிஷேகம் அயோத்தியை மக்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சி அன்று பாடலிபுத்திரத்திலும் இருந்தது.
(சந்திரகுப்தன்- துருவாதேவி)
இருவரும் ராஜா-ராணியாகி இந்தியாவின் பொற்காலத்தை உருவாக்கினர்.
வாழ்க்கை , பொண்டாட்டி எல்லாம் சில சமயம் சொகுசா இருக்கும்; பல சமயம் கரடு முரடா இருக்கும்.
கொஞ்சம் அமெச்ரிசூரிஷ் ஆக இருந்தாலும் , இந்தக் கருத்தை விளக்கும் குறும்படம் – நல்ல பாடம்.
சூரியதேவனின் விமானம் விஸ்வகர்மாவின் தலைநகரின் மேலே ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. உலகையே தினம் வலம் வரும் போது , இவ்வளவு அழகு மிகுந்த பிரதேசத்தை நாம் எப்படிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக இருந்த தன் மாளிகையை விஸ்வகர்மா நொடிக்குள் இந்திரனுடைய அமராவதிப் பட்டணத்தை விட அழகாக மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்குப் புலனாயிற்று.
திடீரென்று சற்றுத் தூரத்தில் அவன் விமானத்தை நோக்கி நுற்றுக்கணக்கான பறவைகள் வருவதுபோல் தெரிந்தது. சற்று உற்று நோக்கினான். அவை பறவைகள் அல்ல – அனைத்தும் விமானங்கள் என்றும் புரிந்தது. ‘ எதற்காக இத்தனை விமானங்கள்? என்னைத் தாக்க வருகின்றனவா? அப்படியானால் அவற்றைச் சுட்டெரித்து விடவேண்டியதுதான்’ என்று முடிவு கட்டினான்.
விமானங்கள் அருகில் வந்ததும் சூரியதேவன் முகத்தில் இருந்த ரத்தினச்சிவப்பு மஞ்சள் நிறப் புன்சிரிப்பாக மாறியது. ஒவ்வொரு விமானத்திலும் அழகுத் தேவதைபோல பெண்கள். வண்ண வண்ண மலர்களையும் வண்ணப் பொடிகளையும் அவன் மீது தூவிக் கொண்டே இருந்தனர். வாசனைப் புகைகளையும் பன்னீரையும் அவன் மீது பரவ விட்டுக்கொண்டிருந்தனர். தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
சூரியதேவனுக்குத் தான் ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவியின் நந்தவனத்திற்குச் சென்றபோது அங்கிருந்த அழகு ததும்பிய சூழல் அப்படியே மீண்டும் வருவதுபோல் இருந்தது. அந்த நந்தவனத்தையும் விஸ்வகர்மாதான் நிர்மாணித்தார் என்று அன்று பார்வதிதேவி கூறியதும் நினைவில் வந்தது.
அந்தப் பெண்கள் வந்த விமானங்கள் அவனை அரைவட்ட வடிவமாகச் சுற்றிக்கொண்டே அவனுடன் பறந்து வந்தன. அடுத்து வந்தது இன்னொரு விமான வளையம். அவற்றில் இருப்பவர்களைக் கண்டு சூரியதேவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஒவ்வொரு விமானத்திலும் ஒரு தவ சிரேஷ்டர். ஒவ்வொருவரும் மந்திரங்களைச் சொல்லி அவன் மீது கமண்டலத்திலிருந்த நீரை அவன் மீது தெளித்து ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒவ்வொரு முனிவரும் அவன் முன் நின்று வாழ்த்து மந்திரத்தைச் சொல்லி அவனை வலம் வந்தனர்.
முதலில் வந்தவர் அகத்திய முனிவர்.
“ ஆதித்யா ! உன்னை என் ஹிருதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். நானும் என் சீடர்களும் கூறும் இந்தப் புண்ணிய மந்திரங்களைச் செவிமடுப்பாயாக! உன் பெருமைகளைக் கூறும் இந்த ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பிற்காலத்தில் தேவர், கந்தர்வர், மனிதர் அனைவருக்கும் வழி காட்டும் மந்திரங்களாக விளங்கும் ” என்று வாழ்த்தி அருளினார்.
நல்வினைகளையும் , வெற்றியையும் ,மங்களத்தையும், மாங்கல்யத்தையும், நீண்ட ஆயுளையும், சிறப்பினையும் தருவதுடன் பகைவர்களையும், பாவங்களையும், துன்பங்களையும்,கவலையையும் அழிக்கவல்ல ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் துதிக்கவும்!
தேவரும் அசுரரும் வணங்கும் உலகின் நாயகனை மூவுலகத்திற்கும் ஒளிதரும் சூர்யதேவனைத் துதியுங்கள் !
அனைத்து தேவதைகளின் உருக்கொண்டவரும், பிரகாசமானவரும் ஆன சூரியபகவான் தன் ஒளித்திறத்தால் உலகைக் காக்கின்றார்.
இவர்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், இந்திரன்,குபேரன், காலதேவன், எமன்,சந்திரன், வருணன் மற்றும் அனைத்து உயிர்களின் அதிபதியாவார்.
இவர்தான் பித்ரு தேவதை, வசுக்கள், சாத்யர்கள், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள்.மனு, வாயு,அக்னி. மற்றும், உலக மக்களின் உயிர் காக்க , பருவ காலங்களைப் படைத்து ஒளியைக் கொடுப்பவர்.
இவருக்கு மற்ற பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, ஸூர்யன், ககன்,பூஷா, கபஸ்திமான், ஸ்வர்ண சத்ருசன், பானு, திவாகரன்.
இவருக்கென்று பச்சைக் குதிரை உண்டு. ஆயிரம் தீ நாக்குகள் உண்டு.ஏழு குதிரை உண்டு .ஏழு ஒளிக்கிரணங்கள் உண்டு. இருளைப் போக்கி மங்களம் தரும் பன்னிரு ஒளிக்கற்றைகள் உண்டு.
இவர் தங்கமயமான அண்டத்தைத் தன் கர்ப்பத்தில் தாங்கியவர்.குளிர்ச்சியைத் தருபவர். அதே சமயம் நெருப்பாய் எரிகிறவர். ஒளிமயமானவர்.அக்னியைக் கர்ப்பத்தில் கொண்டவர். பனியை விலக்கும் ஆதவன். அதிதியின் புதல்வர்.
இவரே ஆகாயத்தை ஆள்பவர். தமோ என்னும் இருளை விலக்குபவர். ருக்,யஜுர் ,சாம வேதங்களைக் கடந்தவர். மழையைப் பொழிவிக்கின்றவர்.வருணனின் தோழர். விந்திய மலை மேலே வான வீதியில் பயணம் செய்பவர்.
இவர் வெப்பமாய் கொளுத்துபவர் . வட்ட வடிவானவர். தங்க மயமானவர். விரோதிகளை அழித்து எரிக்கும் குணமுடையவர். உலகத்தின் கவியானவர். மிகுந்த ஜோதி படைத்தவர். சிவப்பு நிறத்தவர். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவர்.
இவர் நட்சத்திரங்கள், கிருகங்கள் இவற்றின் தலைவர். உலகத்தை உருவகித்தவர். தேஜஸ் நிறைந்தவர். பன்னிரு வடிவுள்ளவர்.
உங்களுக்கு எங்களது வணக்கங்கள்!
கிழக்கில் மலைகளில் உதயமாகி மேற்கில் மலைகளில் மறையும் சூர்யனே உனக்கு வணக்கம். ஒளிக்கூட்டங்களுக்குத் தலைவனே வணக்கம். பகலுக்கு அதிபதியே வணக்கம்.
வெற்றியையும் வெற்றியோடு நலனையும் தருபவருக்கு வணக்கம்.வணக்கம்.
பச்சைக்குதிரை கொண்டவருக்கு, ஆயிரம் கிரணங்கள் படைத்தவருக்கு அதிதியின் புதல்வருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.
உக்கிரம் வாய்ந்தவருக்கு வணக்கம். வீரம் செறிந்தவருக்கு வணக்கம். வண்ணம் நிறைந்தானுக்கு வணக்கம். மார்தண்டாயானுக்கு வணக்கம். தாமரையை மலரச் செய்தானுக்கு வணக்கம். வணக்கம்.
அனைத்து முனிவர்களும் தங்கள் விமானங்களிலிருந்து மந்திர கோஷங்கள் மூலம் அவனுக்கு முகமன் கூறியது சூரியதேவனைப் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தன்னைப் புகழ்ந்துரைக்கும் சொற்களைக் கேட்டதும் அவன் பணிவு மேலும் அதிகமாகி இரு கைகளையும் கூப்பி அனைவரையும் வணங்கிய கோலத்தில் விஸ்வகர்மாவின் அரண்மனை முற்றத்தில் வந்து இறங்கினான்.
அங்கே அழகே உருவெடுத்து வந்தது போல, கையில் மாலையுடனும் கன்னத்தில் வெட்கப் பொலிவுடனும் சூரியதேவனை வரவேற்கக் காத்திருந்தாள் விஸ்வகர்மாவின் மகள் ஸந்த்யா .
ஜெயகாந்தன் பேச எழுந்தார்.
அனைவருக்கும் வணக்கம். எந்த மேடையிலும் பேசுவதற்கு நான் பயந்தவனல்ல. பேசத் தெரிந்த நாள் முதல் பேசிக் கொண்டே இருந்தேன். பின்பு எழுதத் தொடங்கினேன். என் எழுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததோ இல்லையோ என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பிடித்தது. எழுதிக் கொண்டே இருந்தேன். பேச்சு எழுத்து இரண்டையும் என் இரு கண்களாகப் பாவித்து என்னை நானே நடத்திக் கொண்டிருந்தேன்.
நான் வெற்றி அடைந்தேன். இறுமாப்புகொண்டேன். கோபத்தில் ஆழ்ந்தேன். வெறுப்பையும் தொட்டேன்.
எத்தனையோ பேர்களை எடுத்து எறிந்து பேசியிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்காக நடைபெற்ற விழாவில் நான் தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசினேன். அதுவும் எப்படி?
‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக்கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’
இப்படிப் பேசியதற்காக தமிழ் உலகம் என் மேல் அவ்வளவாகக் கோபம் கொள்ளவில்லை. சிலர் மட்டும் வாய் வலிக்க வைதார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் ‘இவன் தன் தாயின் அன்பை நன்றாக அறிந்தவன், தாயைத் திட்டினாலும் அவள் காலடியிலேயே விழுந்து கிடப்பவன்’ என்று நம்பி என்னை மன்னித்தார்கள்.
அதிலிருந்து ஒரு வைராக்கியம் கொண்டேன். பேசுவதையும் எழுதுவதையும் குறைத்துக் கொண்டேன், ஓரு பரிகாரம் போல.
அதனால்தான் என் 80 வது வயது விழாவின்போது மற்றவர்கள் நிறையப் பேசினார்கள். நான் ஒரு நிமிடம்தான் பேசினேன். அதுவும் என்னவென்று தெரியுமா?
‘’இங்கே என்னை அழைத்தபோது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறையப் பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டேன்.
பேச்சு குறைந்தது.
“எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்” என்றெல்லாம் என் எழுத்தைப்பற்றி வர்ணித்த நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.
எழுத்தும் குறைந்தது.
என் குறை நிறை எல்லாம் எனக்குள் இருக்கும் பொக்கிஷமாக வைத்திருந்தேன். யாருக்கும் தெரியாது என்ற இறுமாப்பு வேறு.
ஆனால் என்னை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்த நண்பர் மேடையில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னை அழைத்த போது எனது தீர்ப்பு நாள் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அப்போது எனக்கு நான் எழுதிய அக்கினிப் பிரவேசம் கதை நினைவிற்கு வந்தது.
நானும் அக்கினிப் பிரவேசத்திற்குத் தயாராகி இங்கு வந்தேன். என்னை நானே புடம்போட இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்தேன்.
அது மட்டுமல்ல , நான் எழுதிய ” சுமை தாங்கி ” என்ற கதையை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
ஒரு போலிஸ்காரன், பக்கத்தில் இருக்கும் காலனியிலிருந்து வந்த யாரோ ஒரு பத்து வயசுப் பையன் லாரியில் அடிபட்டு இறந்ததைப் பார்க்கிறான். குழந்தையே இல்லாத அவனுக்கு அது கூட வலியாக இல்லை. அது யாருடைய குழந்தை என்று அந்தக் காலனியில் விசாரிக்கும்போது அவனைப் பெற்ற தாய் எப்படித் துடிப்பாள் என்பதை நினைத்துக் கலங்குகிறான் போலீஸ்காரன்.
அவனைக் காலனின் தூதுவன் என்றே நான் அழைத்தேன்.
முடிவில் தன் கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியிடம் தயங்கிக்கேட்க , அவள் தன் பெரிய பையன் காசு எடுத்துக் கொண்டு ஐஸ் வாங்கச் சென்றிருப்பதாகக் கூற , அவன் தான் லாரியில்… என்று போலீஸ் சொன்னதும் ‘ அட ராசா ‘ என்று அவள் ஓடுவதைப் பார்த்து இதயம் வெடிக்க நின்றான்.
ஆனால் அப்போது அடிபட்ட இடத்திலிருந்து வேறொரு குரல், ‘என்னை விட்டுட்டுப் போயிட்டியே ‘ என்ற அலறுவதைக் கேட்டதும், கைக்குழந்தைக்காரி, ‘அது என் பிள்ளை இல்லை’ என்று சிரித்துக் கொண்டே திரும்புகிறாள்.
போலீஸ்காரன் போய்ப் பார்த்தால், அங்கே அவன் மனைவி அழுது கொண்டிருக்கிறாள். ‘எனக்குத்தான் குழந்தை இல்லை, யாரோ பெத்த பிள்ளைக்காக அழக் கூட உரிமையில்லையா என்று கேட்டுக் கொண்டே போலீஸ்காரனுடன் வீடு திரும்புகிறாள். அப்போது ‘என்னைப் பெத்த ராசா போயிட்டியே ‘ என்று முன்னே கேட்ட அதே கைக்குழந்தைக்காரியின் குரல் மீண்டும் கேட்கிறது.
இந்தக் கதையில் நான் எமனை நன்றகத் திட்டியிருப்பேன்.
” ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை, இப்படிக் கேள்வி
முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன
நியாயம்?..
சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் – இந்த யமன்
தான்… யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி
அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு?’
‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட
அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு
படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு
இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?…’
‘வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு
கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத
தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்! வரலாமா சாவு? ‘
அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை –
தாய்மையின் சோகம் – அதனை அவனால் தாங்க
முடியவில்லை.
அதனால், நான் எமதர்மராஜனிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். சாவுகூடாது என்று அல்ல. சாவை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தை மனித குலத்திற்குத் தாருங்கள் என்பதைத்தான்.
அதைப்போல, எனக்கு முன்னால் பேசிய நண்பர், நரகத்தில் வாடும் நண்பர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும் என்றார். அந்தக் கொள்கையை நான் ஏற்கவில்லை. அதற்குமாறாக அன்பின் பாதையை அவர்களுக்குக் காட்டவிரும்புகிறேன். வாழ்வில் மட்டுமல்லாமல் அதற்குப் பின்னும் துடிக்கும் உள்ளங்களுக்கு நம் அன்பைப் பரிசாக அளிப்போம். அந்த அன்பு அவர்களுக்குப் பிடி சோறாகமாறி, தைரியத்தைத்தந்து அவர்கள் மனதைக் குளிர்விக்கும்.
என்னை நம்புங்கள். அன்பை அனைவருக்கும் தாருங்கள்.
அல்லது
‘என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ ‘
இல்லை . நன்றி வணக்கம்.
பேசி அமர்ந்தார் ஜெயகாந்தன்.
எமன் கண்ணைக்காட்ட எமி பேசஎழுந்தாள்.
(தொடரும்)
படிக்கும் பழக்கமுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதும் ஆசை இருக்கும். அதில் ஒரு பகுதியினரே ஆர்வத்தோடு செயலாக்குகிறார்கள். அப்படி எழுதியவற்றை மற்றவரிடம் கொண்டு சேர்ப்பது வேறு வித்தை. தற்போது வலைப்பூக்களும், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் பலருக்கு எழுதவேண்டும் என்கிற ஆசையை (நப்பாசை!) பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன.
கதைகள், கட்டுரைகள், கவிதைகள் சிலருக்கு, ஒரு புத்தகம் போடும் அளவிற்குச் சேர்ந்துவிட்டால், அதைப் புத்தகமாக வெளிக்கொணர பல இடையூறுகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று அந்தப் புத்தகத்தை வெளியிட பதிப்பாளர் கிடைப்பது. அப்படியே கிடைத்தாலும் இது ஒரு வணிக ஒப்பந்தம் என்பதால் எல்லோராலும் அவற்றின் நன்மை தீமைகளைப் புரிந்துகொள்ள இயலாது.
பதிப்பாளர்கள் உங்கள் புத்தகத்தை அவர்கள் செலவிலேயே பதிப்பித்துவிட்டு, விற்பனையில் 10 முதல் 15 சதவிகிதம் வரை ராயல்டி என்று கொடுப்பதுதான் பாரம்பரியமான பதிப்பு முறை. இதில் ஆரம்ப மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு பதிப்பாளர் தேர்ந்தெடுப்பது மிகவும் அரிது. தமிழ் நாவல் உலகில் ஒரு மைல்கல் என்று சொல்லப்படும். திரு. நீலபத்மநாபனின் “தலைமுறைகள்” என்னும் நாவலுக்கு, ஒரு பதிப்பாளர் கிடைக்கச் சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது என்பதும், மிகுந்த சிரமங்களுக்கு இடையே அந்த நாவல் வெளிவந்தது என்பதும் வரலாறு. நீல பத்மநாபன் தனது படைப்பான “இலையுதிர் காலம்” புதினத்திற்காகவும் அதற்கு முன்பே ஐயப்ப பணிக்கரின் கவிதைகள் மொழிபெயர்ப்புக்காகவும் இரு சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி.
எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையிலான நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட இம்முறை, பற்பல கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. சரியான ராயல்டி கிடைப்பதில்லை என்பதே எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் மனக்குறை.
பின்னாட்களில் சில மாற்று முறைகளும் நடைமுறைக்கு வந்தன.
தயாரிப்புச் செலவு முழுவதும் அல்லது பெரும்பங்கினையும் எழுத்தாளரே செய்யவேண்டும். பதிப்பாளர் பிரதிகளில் ஒரு பகுதி எழுத்தாளரிடமே கொடுக்கப்படும். அவற்றை விற்றுத் தன் முதலீட்டை மீட்பது ஒரு பெரும் சவால்.
தனது செலவிலேயே, புதியதாக ஒரு பதிப்பகம் பெயரில் தாங்களே வெளியிட்டுக்கொள்வதும் சகஜம். இதிலும் மேற்குறிப்பிட்ட விற்பனை பிரச்சினைதான்.
இப்போது நடைமுறைக்கு வந்துள்ள “PRINT ON DEMAND” மிகக் குறைந்த எண்ணிக்கையில் (30 அல்லது 50) புத்தககங்கள் பதிப்பிக்க வசதி இருப்பதால் முதலீடு குறைகிறது, தேவைப்பட்டால் மீண்டும் அச்சிட்டுக் கொள்ளவும் இயலும்.
தற்சமயம் இதைத் தவிர மின்-புத்தக (E BOOKS) வெளியீடுகளும் பிரபலமாகி வருகின்றன. தமிழில் இவ்வகையில் புஸ்தகா, கினிகே போன்று சில இணையதளங்கள் உள்ளன. விற்பனை நோக்கமின்றி பிறர் படிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தால் ‘ப்ரதிலிபி’ நல்ல தெரிவு. (OPTION என்னும் சொல்லுக்கு தெரிவு என்பது தமிழாக்கம்)
இந்தப் பீடிகையுடன் “SELF PUBLISHING WITH AMAZON” பற்றிய சில தகவல்கள்.
பதிப்புரிமை தன்னிடமே உள்ள எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பினை ஈ-புத்தகமாக விற்பனை செய்ய அமேசான் சுயபதிப்பு முறை வசதியாக உள்ளது.
இந்தப் புத்தகங்களை கிண்டில்(KINDLE) கருவி தவிர ஆண்ட்ராய்ட், செல் போன், ஐ போன் மற்றும் கணினிகளிலும் படிக்க முடியும்.
தமிழ் புத்தகத்தை கிண்டில் ஈ-புக்கில் பதிப்பிக்கும் முறையை இப்போது பார்ப்போம்.
இதன் வலைத்தளம் kdp.amazon.com
இது ஓரளவிற்கு அறிமுகம் மட்டுமே. இன்னும் விவரமாகத் தெரிந்துகொள்ள தகவல்கள் இருக்கலாம்.
இம்முறையின் முக்கிய நலனே, புத்தகம் வாங்கப்படுகிறதா, படிக்கப்படுகிறதா என்று தெரியவருவதும், நமக்கு உரிமையான பணம் நமக்கு கட்டாயம் வந்து சேர்கிறது என்பதும்தான்.
குறைபாடுகள் உள்ளனவா, அப்படியானால் அவற்றை எப்படித் தவிர்க்கலாம் போன்றவை இதுவரை கவனத்திற்கு வரவில்லை.
இந்நிலையில் எமது பரிந்துரை “WORTH A TRY”.
கிண்டிலில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பார்க்கவேண்டுமா?
குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தகமும், எஸ் கே என் அவர்களின் புத்தகமுமான ” சில படைப்பாளிகள்” என்ற புத்தகத்தைப் பாருங்கள். இந்தப்படத்தைக் க்ளிக் செய்தால் அமேசான் இணையதளத்துக்குச் செல்லலாம்.
26 ஆகஸ்ட் , சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் ஸ்ரீனிவாச நிலையம் , அம்புஜம்மாள் தெரு , ஆள்வார்பேட்டையில்
குவிகம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடு
சுரேஷ் ராஜகோபால் எழுதிய ” நான் என்னைத் தேடுகிறேன்” கவிதைத் தொகுப்பு.
வெளியிட்டவர்: திரு லக்ஷ்மணன்
முதல் பிரதி பெற்றுக்கொண்டவர்கள்: கிருபாநந்தன், அழகியசிங்கர், டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன் , சிந்தாமணி சுந்தரராமன்
தொடர்ந்து நடைபெற்றது இலக்கிய சிந்தனையின் 576வது நிகழ்வு திரு தேவராஜசுவாமிகள் உரை ” ஸ்ரீ ராமானுஜர்”அதன் காணொளித் தொகுப்பு இதோ:
தொடர்ந்து குவிகம் இலக்கியவாசலின் 30வது நிகழ்வு
” நினைவில் நின்ற கதை” –
தங்களுக்குப் பிடித்த சிறுகதையைப் பற்றி டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன், சுந்தரராமன் ஆகிய மூவரும் பேசினார்கள்.
நல்ல முயற்சி !
முன்கதை…..
வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பீஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காணவந்திருந்த, கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சாரத் தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் தஞ்சாவூரில் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதை சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன் கேட்கின்றனர். அரங்கேற்றப்பட்ட சீன கலாநிகழ்ச்சிகளைக் கண்டு பிரமித்த சக்கரவர்த்தி, தான் துவங்க இருக்கும் பிரம்மாண்ட பெருவுடையார் ஆலயத்திற்குப் பணி செய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்வித்து உற்சாகப்படுத்த அங்கேயே தங்கி நடத்த இயலுமா என்ற வேண்டுகோளை வாங்மெங் முன் வைக்கிறார்.
இனி……………
அடுத்த நாள், சபை மறுபடியும் கூடியது. நானும் என் குழுவும் சக்ரவர்த்தியை வணங்கி நின்றோம். “என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?”என்று அரசர் வினவ, நான் பதிலளிக்கலானேன்.“அரசே! மனைவி, மக்கள், பெற்றோர் மற்றும் சுற்றத்தார் எவரும் எனக்கில்லை. எனவே நேற்றே நான் உங்களுக்கு உதவ முடிவெடுத்துவிட்டேன். உங்களின் இந்த உலகப் பெரும் சாதனையை நினைத்து வியந்து அதில் எனக்கும் என் குழுவிற்கும் ஒரு சிறு பங்கு கிடைக்கப்போவதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். ஆலயம் கட்டி முடிவடையும்வரை இங்கேயே இருப்பேன். இது உறுதி!”
“உங்கள் குழுவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று மறுபடி அரசர் கேட்டார். அதற்கு நான், “ஒரு பாதி மணமாகாத ஆணும் பெண்ணும் கலந்த இளைஞர்கள். மறுபாதி மணமானவர்கள். இளைஞர்களுக்கு சம்மதம். மற்றவர்கள் கப்பல் கிளம்பும்வரை இருப்பார்கள். எனினும் கவலை கொள்ள வேண்டாம். எங்கள் கப்பல்கள் வருடம் இருமுறை இங்கு வருகிறது. கிளம்பியவர்களுக்கு பதிலாக அமர்த்த புதிய கலைஞர்கள் கொண்டு வரப்படுவார்கள். உங்கள் விருப்பத்துடன் சோழ நாட்டிலேயே புதிய தமிழ் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெற தயார் செய்துவிடுகிறேன்” என்றேன்.
ராஜராஜசோழ தேவர் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து என்னை அப்படியே தழுவி, “என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி. நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறி திருமந்திர ஒலை நாயகம் கிருஷ்ணன் ராமனை அழைத்து எங்களுக்கு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
சம்பவப் பட்டியல் பதிவு அதிகாரி வாங்மெங் எழுதியிருப்பதை மேலேதொடர்ந்து படித்தார். “கிருஷ்ணன் ராமன் எங்களுக்கு, தங்க, ஒத்திகை பார்க்க போன்ற ஏனைய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்தார். வேலை செய்வோர் தொழில்களுக்கேற்றவாறு இடங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் நாடக மேடைகள் அதற்கேற்ப கட்டப்பட்டன. அவைகளில் கலை நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப்பெற்று நடந்தேறின. கடின உழைப்பினால் சோர்வடைந்திருந்த உழைப்பாளிகளுக்கு இது புத்துணர்வு அளித்தது. தெம்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். ஆகையால் அவர்களுடைய உழைப்புத் திறன் பல மடங்கு உயர்ந்தது.
ஆலயம் கட்டும் பணியால் உழைப்பாளிகளின் குடும்ப நிர்வாகம் பாதிப்படைந்தது. இதில் இல்லத்தரசிகளின் பங்கு மேலானது. குடும்ப நிர்வாகத்துடன் வீட்டு நிர்வாகத்தையும் தலைமேல் ஏற்றுத் திறம்பட செய்தனர். எனினும் எல்லாவற்றிற்கும் எல்லை என்று ஒன்று இருக்கிறதல்லவா? களைப்படைந்திருந்த மனைவிமார்களுக்கு கலை நிகழ்ச்சிகள் குடும்பங்களுக்கென்று தனியாக நடத்தப்பட்டன. எனவே குடும்பமும் இதனால் பயனைப்பெற்றது. நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன.நாடகங்கள் தஞ்சாவூரில் மட்டுமல்லாது நார்த்தாமலை, நாகப்பட்டினம் போன்ற மற்ற ஊர்களிலும் நடத்தப்பட்டன.
நான் சோழநாட்டு தமிழ் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். மூன்று மாதங்கள் நிறைவுக்கு வந்தன. கப்பலில் செல்வோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. தமிழ் நடிகர்கள் தயாரானார்கள். மணமான கலைஞர்கள் தாய் நாட்டுக்குச் செல்லக் கப்பலேறினார்கள். மூன்று ஆண்டுகள் உருண்டன . எனக்குத் தமிழ் பேச நன்றாகவே வந்தது. நிகழ்ச்சிகளைக் காலம், இடம் மற்றும் பார்வையாளர்களை மனதில் கொண்டு என் அநுபவத்தையும் கற்பனையையும் சேர்த்துத் தயாரித்து வந்தேன்.
இந்தக் காலகட்டத்தில் விமானத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு ராஜராஜ சோழ தேவரின் ஆலயத்தின் முதல் தளம் வரை உயர்ந்திருந்தது. ஆராய்ந்து திட்டமிட்ட சில வேலைகள் இரு தளங்களிலும் ஒரே சமயத்தில் நடைபெற்றன
அன்றொரு நாள்! நிகழ்ச்சி நடத்த நார்த்தாமலை சென்றிருந்தேன். என்னால் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யப்பட்ட நார்த்தாமலை தமிழ்க் குழுவின் நாடகம் அங்கு நடந்தேறியது. மறுநாள் காலையில் உணவருந்திய பின் புரவியில் தஞ்சாவூருக்குக் கிளம்பினேன். பாதி வழியில் அச்சம்பட்டி அருகில் வனப்பகுதியில் வரும் சமயம் பகல் பொழுதாகிவிட்டது. திடீரென மேகம் இருண்டது. இடி மின்னலுடன் காற்று பேரிரைச்சலுடன் பெரிய மழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்தது. உடைகள் நன்றாக நனைந்துவிட்டன. ஒவ்வொரு இடி மின்னல் போதும் குதிரை கனைத்துக் கால்களைத் தூக்கி மிரண்டு கொண்டிருந்தது.
கடைசியாக யாருமில்லாத பாழடைந்த மண்டபம் ஒன்று தென்பட்டது. மெதுவாகக் குதிரையை அதன் அருகே ஓட்டிக்கொண்டு சென்றேன். இறங்கிக் குதிரையை இரண்டு தட்டு தட்டினேன். பாவம் எங்கேயாவது ஓடிப் பிழைத்துக் கொள்ளட்டும், நாம் எப்படியாவது இவ்வழி போகும் வழிப்போக்கர்களின் உதவியை நாடிக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். குதிரை நொடிப்பொழுதில் பிய்த்துக்கொண்டு பறந்து சென்றுவிட்டது. எங்கு சென்றது என்று புரியவில்லை!
மண்டபத்தில் நிறையத் தூண்கள் காணப்பட்டன. கடைசியில் தென்பட்ட இரு தூண்களின் நடுவில் கீழே கிடந்த கட்டைகளின் உதவியால் சுத்தம் செய்துவிட்டு மேலாடையைக் கழட்டி உலரப் போட்டுவிட்டுக் கையைத் தலையணையாக்கிப் படுத்ததுதான் தெரியும், எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்பது தெரியாது. ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு உட்கார்ந்தேன்.
மழை நின்றுவிட்டிருந்தது. காற்று, இடி, மின்னல் அடங்கி அமைதி அடைந்திருந்தது. மேகம் இன்னும் இருண்டிருந்ததால் விளக்கு ஏதுமில்லாமல் மண்டபம் கும்மிருட்டில் மூழ்கியிருந்தது. மண்டபத்தின் முன் பகுதியிலிருந்து இருவர் கம்மியக் குரலில் ரகசியமாகப் பேசும் பேச்சுக்குரல் மிகவும் துல்லியமாகக் கேட்டது. அவர்களுக்கு நான் இங்கு படுத்திருப்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடனே அவர்களின் உதவியை நாடலாம் என்று எழ எத்தனித்தேன். அதற்குள் அவர்கள் பேச்சின் ஒரு பகுதி என் காதுகளுக்கு எட்டி என்னைத் திகிலடைய வைத்தது. அதில் கொலை, தீ, விஷம் போன்ற வார்த்தைகள் அடிபட்டதால் என் வயிற்றில் புளியைக் கரைத்துத் தலையைச் சுற்ற வைத்தது. திடுக்கிட்ட நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவர்கள் சம்பாஷணையை கூர்ந்து ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.
“நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டுக்கொள். இன்று புதன் கிழமை. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பகல் நேரத்திற்குள் நாம் திட்டமிட்டபடி சோழநாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இரண்டு காரியங்களை வெற்றிகரமாக முடித்தாக வேண்டும். தஞ்சாவூர் விண்ணகரத்திலிருந்து வடக்கேயுள்ள குறிப்பிட்ட பத்தாயிரம் வேலி நிலங்களில் நன்கு செழித்து வளர்ந்துள்ள நெற்கதிர்கள் முற்றி, உயர்ந்து, தலை சாய்ந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுக்குமுன் அவைகளில் ஒரே சமயத்தில் தீ வைக்கப்பட்டு கதிர்கள் கருகி சாம்பலாக்கப்படும். தஞ்சாவூரில் குவிந்துள்ள ஆலயம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். சோழ நாடு குறுகிய காலத்தில் இதை ஈடுகட்ட தவிப்பார்கள். இந்தா, இந்த ஓலையை குணசேகரனிடம் நாளை காலைக்குள் ஒப்படைத்துவிடு. மற்றவைகளை அவன் பார்த்துக்கொள்வான்.
இரண்டாவது உனக்கிடப்பட்டிருக்கும் வெகு முக்கிய வேலை, ஒவ்வொரு வெள்ளியன்றும் ராஜராஜன் பகல்பொழுது ஆலயம் கட்டும் பணியைப் பார்வையிட நேரில் அங்கு வருவான். தஞ்சாவூரில் ஊடுருவியிருக்கும் நமது கூட்டாளிகளின் உதவியைக்கொண்டு அவனை அங்கேயே தீர்த்துக்கட்டவேண்டும். அதற்கு அங்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது சோழர்களுக்குப் பெரிய பேரிடியாக அமையும். நமது உயிரைப் பணயம் வைத்து இதில் இறங்கியுள்ளோம். நமது உயிர் போனாலும் இக்காரியத்தை வெற்றிகரமாய் முடித்தாகவேண்டும். இனி ஒன்றும் பேசவேண்டாம். சோழ நாட்டில் சுவர்களுக்கும் காதுகள் உண்டு. நீ உன் வழியே செல். நான் என் வழி போகிறேன்”.
இத்துடன் சம்பாஷணை முடிவுற்றது. குதிரைக் குளம்புகளின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசியில் நிசப்தம் நிலவியது.
(தொடரும்)
தியேட்டர் மெரினா படைப்பில் ரா.கிரிதரன் இயக்கத்தில் அபயரங்கதிலகா என்னும் விசித்திரமான பெயரில் உருவான நாடகத்தை சமீபத்தில் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கேற்றியது. அருமையான கதையையும், பெரும்பாலான வசனத்தையும் எழுதிப் பாராட்டைத் தட்டிக்கொண்டு போனவர் ஜெ.ரகுநாதன். வசனத்தில் கிரிதரனும் இணைந்து தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்.
தஞ்சை பெரிய கோவிலில் தொப்பி அணிந்தவரின் சிலை. அதன் விவரம் ஒரு கண்டுபிடிக்காத புதிர். அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த கற்பனை கலந்த நாடகத்தின் மையம். ‘நான் யார்?’ என்று நாடகம் தொடங்குகிறது. விஷ்வகர்மா யாதவ் என்னும் தொப்பியணிந்த RAW(Research and Analysis Wing of Govt of India) வேலைதாரி கடலில் விபத்தில் விழுந்து தவிக்கும் போது ஆரம்பிக்கிறது. டைம் ட்ராவலில், காலத்தில் பின்னோக்கிச் சென்று ராஜராஜ சோழன் காலத்திற்குச் சென்றுவிடுகிறார். அந்தக் காட்சியை அணைந்து அணைந்து ஒளிரும் விளக்குகள் மூலம் காட்டியிருப்பது ஜோர்.
அடுத்து அவர் எப்படி மீட்கப்படுகிறார் என்பதைக் காட்டும் காட்சியும் அற்புதம். கடல், படகு ,மேலும் அதைத் துடுப்புபோட்டு வலித்துவரும் நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பொன்னியின் செல்வனின் பூங்குழலி ‘அலைகடலும் ஒய்ந்திருக்க அகக் கடலும் பொங்குவதேன்’ பாட்டைப் பாடிக்கொண்டே வந்து மீட்பது மூலம் நாமும் காலவெள்ளத்தில் பின்னோக்கித் தள்ளப்படுகிறோம். ராஜராஜனின் முதல் வருகை பார்வையாளர்கள் மூலம் – நல்ல உத்தி.
பிறகு காந்தளூர் சாலை போரில் தோற்கடிக்கப்பட்ட நம்பூதிரி ஆசிரியன் ‘பரமன்’, அப்போரில் இழந்த தன் 14 வயது சிறுவனுக்காக ராஜராஜனைக் கொன்று பழி தீர்த்துக்கொள்ள தஞ்சை வருகிறான். பரமன் ஆட்களுக்குக் கிடைத்த யாதவ்வின் துப்பாக்கியால் ராஜராஜனைச் சுட்டுத்தள்ள ஏற்பாடாகிறது. ராஜராஜன், பரமன் மற்றும் எல்லோரும் கூடியிருக்கும்போது பரமனின் ஆள் ராஜராஜனைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் சமயம் கதாநாயகியின் தந்தை திங்களாச்சான் துப்பாகியின் திசையை மாற்றிவிட, குண்டு ராஜராஜனுக்கு பதிலாக பரமன் மேல் பாய்ந்து அவனைக் கொல்லுகிறது.
ராஜராஜன் விஷ்வகர்மா யாதவைப்பற்றியும் எப்படி அவன் துப்பாக்கி தன்னைக் காப்பாற்றியது என்பதையும் அறிந்து அவனுக்குக் கோவிலில் சிலை வடிக்க உத்தரவிடுகிறான். மேலும் யாதவ் டைம் ட்ராவலில் 1000 வருடம் பின்னோக்கித் தள்ளப்பட்ட விஷயத்தை ரகசியமாக வைக்க முடிவெடுக்கப்படுகிறது.
இதில் காமெடி கலந்த யாதவ்வின் இயல்பான நடிப்புக்கு த்ரீ சியெர்ஸ். அநிருத்தர், கோவில் கட்டிய பெருந்தச்சன், பட்டத்திளவரசன் ராஜேந்திரன் முதலானோர் ஆங்காங்கே வந்து நாடகத்தைப் பளபளபாக்குகின்றனர். குறிப்பாக சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட ராஜேந்திரன், தந்தை கட்டும் ஆலயத்திற்காக செலவிடும் செல்வங்கள் அனைத்தும் வீண் என்று கூறி அதை சோழ சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கவும், படை பலத்தை அதிகரிக்கவும் செலவிடத் தந்தையிடம் சீறுவது இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ராஜராஜனின் இயல்பான நடிப்பு நாடகத்தின் உச்சம். யாதவ்விற்கும் கதாநாயகிக்கும் ஏற்படும் ரொமான்ஸ் நன்றாகவே காண்பிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா சீன்களுக்கும் ஏற்றதாய் அமைக்கப்பட்ட ஒரே ஒரு வடிவமைப்பு நைஸ். அரசவையில் நடத்தப்பட்ட நடனக்காட்சி சரியான நேரத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. சவுண்ட், ம்யூசிக், லைட்டிங், காலத்திற்கேற்ற ஆபரணங்கள் க்ரேட். ஒரே ஒரு குறை. RAWவிற்கு பதிலாக எல்லோரும் புரிந்துகொள்ளும் எளிதான டிபார்ட்மெண்டைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
ராஜராஜன், கடைசி சீனில் கதாநாயகியின் பெயர் என்ன என்று கேட்க அதுவரை அறிவிக்கப்படாத பெயர் ‘அபயரங்கதிலகா’ என்று அவள் தெரிவித்து நாடகமுடிவை மெருகேற்றி முடிக்கிறார்கள்.
இந்த நாடகத்தின் வெற்றி ரகுநாதனுக்கும் கிரிதரனுக்குமே உரித்தாகும்
(சென்ற இதழ் தொடர்ச்சி..)
காட்சி — 3
(மாதவன் வீடு. மாலை நேரம். மாதவன் ஹாலில் அமர்ந்து
கொண்டிருக்கிறான். ராஜாராமன் வருகிறான்)
ராஜா : (வந்து கொண்டே) குட்டிச் சுவர்.. எதை எடுத்தாலும் குட்டிச் சுவர். எப்படிப் பார்த்தாலும் குட்டிச் சுவர்.
மாத : (சிரித்துக் கொண்டே) பின்னே… ஏதாவது கழுதைகிட்டே யோஜனை கேட்டுப் போய்நின்னுருப்பே… குட்டிச்சுவராத்தானே
இருக்கும் பக்கத்துலே…
ராஜா : (எரிச்சலோடு) எக்ஸாக்ட்லி கரெக்ட்.. இவ்வளவு நாள் இது
தெரியாம இருந்துட்டேன் பாருடா.. என் மூளையை அடுப்புலே
தான் போடணும்.
மாத : சரி… கொண்டாடா.. என்னடா கரெக்ட்…?
ராஜா : ஆமா… உன் யோசனையைக் கேட்டுட்டுப் போய்த்தான்
செஞ்சேன்… குட்டிச் சுவர் இல்லாம வேறென்ன இருக்கும்…
மாத : (திடுக்கிட்டு) டேய்.. டேய்… ஹோல்டான்… ஹோல்டான்…
என்னடா சொல்றே?
ராஜா : பச்சையா சொல்லச் சொல்றியா… நீ சொன்னபடி நீ கழுதை
தாண்டா…
மாத : ஏண்டா.. டேய்.. திட்டறதுன்னு புறப்பட்டுட்டே… இப்படி
மூஞ்சிக்கு நேரே திட்டணுமாடா…? நேரே பார்த்தபோது நாலு
புகழ்ச்சி வார்த்தை சொல்லிப்புட்டு நான் இல்லாதபோது என்னைக்
கண்டபடி ஆசை தீர வையக்கூடாதாடா…?
ராஜா : இது வேற நியூ அட்வைஸா..? டேய் எங்கப்பா.. உன் கிட்டே
அட்வைஸ் கேட்டதும் போதும். நான் இப்போது அவதிப்-
படறதும் போதும்..
மாத : டேய் அப்படி என்னடா முழுகிப் போயிடுத்து..?
ராஜா : குடி முழுகிப் போயிடுத்துடா… குடி முழுகிப் போயிடுத்து….
மாத : முழுதுமே முழுகிடுத்தா…?
ராஜா : (ஏளனமாக எரிச்சலோடு) இல்லே வால் மட்டும் பாக்கி இருக்கு.. போடா.. குடியே முழுகிப் போயிடுத்துங்கறேன்…
மாத : ஓ… அப்போ சரி… கவலையை விடு… சாண் போனா என்ன..
முழம் போனாலென்ன….? விடு கவலையை…
ராஜா : டேய்.. என் உள்ளம் வேதனைப்பட்டுட்டிருக்கு… உனக்கு
விளையாட்டா இருக்கா..?
மாத : வாழ்வே ஒரு விளையாட்டுத்தானே பிரதர்.. நீ வெளங்கற
மாதிரி சொன்னாத்தானே எனக்குப் புரியும்.. முதல்லே உட்கார்..
(ராஜாராமன் உட்கார்கிறான்)
ராஜா : டேய்.. என் வைப் மனோ கண்டு பிடிச்சுட்டாடா….
மாத : (திடுக்கிட்டு) என்ன கண்டுபிடிச்சுட்டாளா..?
ராஜா : இன்னும் முழுதும் கண்டுபிடிக்கலே… நான் வாராவாரம்
எங்கேயோ போறேன்னு அவளுக்கு சந்தேகம் வந்துடுத்து…
மாத : டாமிட்… அவளுக்கு எப்படீடா தெரிஞ்சது..?
ராஜா : ஏதோ தற்செயலா நம்ம கிருஷ்ணன் வைப் கமலாவைப்
பார்த்திருக்கா… அவ உண்மையை உடைச்சுட்டா…
கிருஷ்ணன் ஸண்டே வெளியிலேயே போறதில்லைன்னு
உளறி வெச்சுட்டா…
மாத : க்வைட் அன்·பார்ச்சுனேட்… மூடி மூடி வெச்சா இப்படித்-
தாண்டா… நாம நம்ம ப்ரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லி வெச்சிருந்தா
சமாளிச்சிருக்கலாம்…
ராஜா : நீ இந்த யோஜனையைச் சொன்னபோது நான் அதைத்தான்
சொன்னேன்… நீதான் வேண்டாம்னுட்டே…
மாத : டேய்.. அனாவசியமாய் இதுக்கெல்லாம் எதற்கு பப்ளிசிடி கொடுக்கணும்னு பார்த்தேன்… இது போய் இப்படி முடியும்னு எனக்கு
என்ன ஜோசியமா தெரியும்..? நாம தப்பா ஒண்ணும் செய்யலேன்னு உன் வைஃப்க்கு நம்பிக்கை ஏற்படறமாதிரி நீ ஒண்ணும் சொல்லலியா..?
ராஜா : சொன்னேன்டா… சொன்னேன்.. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு சொல்றமாதிரி சந்தேகம் ஏற்பட்ட மனதுக்கு எல்லாத்தையுமே சந்தேகத்தோட பார்க்கத்தான் தோணும்.
மாத : இப்போ என்னடா பண்ணறது? பேசாம உன் வைஃப்கிட்டே
உண்மையைச் சொல்லிட்டா…
ராஜா : இடியட்… நீயே இப்படிச் சொல்றியே.. உண்மையைச் சொன்னா ஷுவரா மனஸ்தாபம் வரும். குடும்பத்துலே மகிழ்ச்சியே கெட்டுப்போயிடும்.
மாத : அப்போ ஒண்ணு பண்ணு… வாராவாரம் அங்கே போகாதே..
அவளை மறந்துடு..
ராஜா : டேய்… அவளை நான் எப்படீடா மறக்க முடியும்?
மாத : வேறே என்னடா செய்ய முடியும்?
ராஜா : டேய் மாதவா.. மனோரமாவிற்கு ஏண்டா என் மேலே நம்பிக்கை ஏற்பட மாட்டேன்ங்குது? அவ மகிழ்ச்சிக்காக நான் எதையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன்..? என் உயிருக்கு உயிராக
இருந்த அம்மாவை விட்டுட்டுத் தனிக் குடித்தனம் போட்டேன்.
அவள் கேட்டதுக்கும், சொன்னதுக்கும் மதிப்புக் கொடுத்து
அதன்படியே நடந்துட்டிருக்கேன். அவளுக்குத் தெரியாத
இரகசியங்கள் என்கிட்டே ஒண்ணுமே இல்லே இது ஒண்ணத்
தவிர..
மாத : அந்த இரகசியம்தான் என்னன்னு உன் வைஃப் கேட்கறாளே..?
ராஜா : அதெப்படி நான் அதைச் சொல்றது? வீண் மனஸ்தாபங்கள்
உண்டாகி குடும்ப மகிழ்ச்சியே கெட்டுப் போயிடுமே.. ம்…
மாத : எக்ஸாக்ட்லி.. அதுக்கு ஒரு வழிதான் இருக்கு… நீ ஒண்ணுமே
நடக்காதமாதிரி சாதாரணமா இரு.. மேலும்மேலும் சந்தேகம்
வளரறமாதிரி நடந்துக்காதே… இனி ஸண்டேஸண்டே
போகாதே…
(ராஜாராமன் காதில் ஏதோ கூறுகிறான்)
ராஜா : ம்… அப்படித்தான் செய்யணும். மாதவா, நான் போய்ட்டு
வறேன்.. நாளைக்குப் பார்ப்போம்..
(போகிறான்.. மாதவன் அவனையே பார்த்துக்
கொண்டு நிற்கிறான்.. அவன் கண்களில் நீர் )
மாத : அட, ராஜாராமா… உன் நல்ல மனதுக்கா இந்த சோதனைகளெல்லாம் வரணும்..
காட்சி – 4
(ராஜாரமன் வீடு.. அந்தி வேளை.. மனோரமா ஏதோ
படித்துக் கொண்டிருக்கிறாள்.. ராஜாராமன் வருகிறான்)
ராஜா : (வந்து கொண்டே) மனோ… மனோ…
மனோ: (புத்தகத்தை மூடி வைத்தவாறு) ம்.. வந்துட்டீங்களா.. டிரஸ்
மாத்திட்டு வாங்க… காபி கொண்டுவறேன்…
ராஜா : ம்.. இன்னிக்கு என்ன ஏக தடபுடலா உபசாரங்கள் நடக்குது..?
(காபியைக் குடிக்கிறான்)
மனோ: தடபுடலான்னா..? காபி நல்லா இருக்கா..?
ராஜா : ஓ.. எஸ்.. ஆனா ஒண்ணுதான் குறை…
மனோ: (திடுக்கிட்டு) குறையா..?
ராஜா : ஆமா.. சர்க்கரைன்னு நெனச்சிட்டு உப்பை அள்ளிஅள்ளிப்
போட்டிருக்கே… சர்க்கரைக்கு ரேஷன் பார்…
மனோ: ஐயையோ… உப்பையா போட்டுட்டேன்… இப்போ என்ன
செய்யறது..?
ராஜா : ம்.. அதுக்கு ஒரே வழிதான் இருக்கு.. நெறைய மிளகாய்த்
தூளைப் போட்டுட்டா காரத்துக்கும் உப்புக்கும் சரியாய்ப்
போயிடும்…
மனோ: (சிரித்துக் கொண்டே) அதைவிட வேறே ஒரு நல்ல வழி
இருக்கு..
ராஜா : என்னது..?
மனோ: கொண்டுபோய்க் கொட்டிட்டு வேறே காபி கொடுக்கறது..
(காபியைக் கொண்டு கொட்டிவிட்டு வேறு
காபியுடன் வருகிறாள்)
ராஜா : இதுலே சுண்ணாம்புப் பொடியைக் கலக்கலியே…?
(மனோரமா சிரிக்கிறாள்.. ராஜாராமன் காபியைக்
குடிக்கிறான்.)
மனோ: இன்னிக்கு ஒரு அருமையான புத்தகம் படிச்சேன்…
ராஜா : ஓ.. தெரியுமே…
மனோ: (திடுக்கிட்டு) என்ன தெரியுமா…?
ராஜா : ஓ.. எஸ்…
மனோ: எப்படி…?
ராஜா : ஊஹூம்.. சொல்ல மாட்டேன்..
மனோ: சரி.. வேண்டாம்…
ராஜா : அடிப்பாவி.. நீ கெஞ்சுவேன்னல்ல நெனச்சேன்.. சொல்றேன்
கேளு.. நீ இன்னிக்கு என்ன வரவேற்ற தோரணையும்,
ஓடிப் போய் காபி கொண்டுவந்த தோரணையும் பார்த்த-
போது ஏதோ இன்னக்குப் புதுசா அறிவைத் தரக்கூடிய
புத்தகம் படிச்சிருப்பேன்னு முடிவுக்கு வந்தேன்.
மனோ: ஆமா… என்னை எப்பவும் கலாட்டா பண்ணிட்டிருக்கணும்..
அதுதான் உங்க பொழுதுபோக்கு… அது போகட்டும்..
இன்னக்கு நான் படிச்ச தீம் எத்தனை பிரமாதமா இருந்தது
தெரியுமா..? கேட்கறீங்களா…?
ராஜா : ம்… கேட்காம விடவா போறே.? சொல்லு…
மனோ: ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த ஒரு குடும்பம்
சந்தேகத்துனாலே பிளவுபட்டுடுத்து… கணவன் மேலே
மனைவிக்கு சந்தேகம் வந்துடுத்து… அவளாலே சந்தேகப்-
படவும் முடியலே… சந்தேகப்படாமலும் இருக்க முடியலே..
அவ மனசு சந்தேகப்பட்டு வருத்தப்பட சந்தோஷமே
அழிஞ்சு போச்சு…
ராஜா : ஓஹோ.. மனோ… நீ எதுக்கு இந்தக் கதையைச் சொல்றேன்னு
எனக்குப் புரிஞ்சிடுத்து..
மனோ: நம்ம குடும்பம் எத்தனை சந்தோஷமா நடந்துட்டு
வந்தது… அந்த சந்தோஷத்தைக் கெடுக்க இப்படியா வந்து
சேரணும்…?
ராஜா : மனோ… அந்த சந்தோஷம் கெடக் கூடாதுன்னுதான் நானும்
முயற்சி பண்ணறேன்…
மனோ: இப்படியொரு சந்தேகம் இருக்கறபோது எப்படி நான்
சமாதானத்தோடு இருக்க முடியும்..?
ராஜா : மனோ.. என்னை உனக்குத் தெரியாதா..? நான் உனக்குத்
துரோகம் நினைப்பேனா..? என்மேலே உனக்கு நம்பிக்கை
இல்லையா..?
மனோ: மனப்பூர்வமா நம்பிக்கை இருக்கு..
ராஜா : பின்னே என்ன..? ஏன் அனாவசியமா அலட்டிக்கறே…
நான் தப்பான வழியிலே ஒண்ணும் போக மாட்டேன்.
மனோ: நீங்க செய்யறது தப்பு ஒண்ணும் இல்லேன்னா ஏன்
என்கிட்டேயிருந்து அதை மறைக்கறீங்க… சொல்லிடுங்களேன்..
ராஜா : ஸாரி மனோ… இனிமே தயவுசெய்து இந்தப் பேச்சையே
எடுக்காதே…
மனோ: (பெருமூச்சுடன்) சரி.. என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு
உங்கமேலே பூரணமா நம்பிக்கை இருக்கு… இனிமேல் இதைப்
பற்றிப் பேசவே மாட்டேன்….
(உள்ளே போகிறாள்.)
(என்னதான் நடக்கிறது..? மனோ ராஜாராமனை
உண்மையில் நம்பி விட்டாளா.. இல்லை ஏதாவது
திட்டம் வைத்திருக்கிறாளா…?
(அடுத்த இதழில்,,,)
தொடரும்)
உலக அளவில் சூரியகிரகணங்கள் மிகவும் ஆரவாரத்தோடு வரவேற்கப்படுகின்றன.
அதுவும் முழு கிரகணம் என்றால் அதற்குக் கிடைக்கும் வரவேற்பே தனி.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவதால் சூரியன் பூமிக்கு, சில நிமிடங்கள் முழுவதும் தெரியாமல் போகும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் பல இடங்களில் முழு கிரகணம் தெரிய வந்தது.
இந்த நுற்றாண்டில் வட அமெரிக்காவில் நிகழ்ந்த , நிகழப் போகும் சூரியகிரணங்களைப் பற்றிய படம் இது.
அமெரிக்காவில் உள்ள மெட்ராஸ் என்ற இடத்தில் முழு சூரியகிரகணம் நன்றாகத்தெரியும் என்று அறிவித்ததால் அங்கு ஏகப்பட்ட கூட்டம்.
காலையில் சாதாரணமாக சூரியன் உதயமாகி பின்னர் 9 மணி அளவில் சூரியனின் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கடிக்கப்பட்ட ஆப்பிள்போல மாறி, பிறையைப் போல மாறி, முடிவில் 10.19 மணிக்கு கும்மிருட்டாக மாறுவதே முழு சூரிய கிரகணம். அப்போது மற்ற கிரகங்கள் தெரியும். நட்சத்திரங்கள் தெரியும். பறவைகள் இருட்டாகி விட்டதோ என்று மயங்கும். மிருகங்கள் விஷயம் புரியாமல் கூக்குரலிடும்.
இந்த முழு ‘கண்ணடைப்பு’ நாடகம் சுமார் 2 நிமிடம் 2 வினாடி வரை நீடித்தது.
அங்கு எடுத்த வீடியோவைப் பாருங்கள்!
இயற்கையின் அற்புத விளையாட்டு உங்கள் மனத்தைக் குதூகலிக்கச் செய்யும்.
நான் வேலையிலிருந்து களைப்புடன் உள்ளே நுழைந்தேன்.
நான் வருவதை அம்மா கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் “என்ன? ” என்பதுபோல் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.
“எப்படி இருக்கே அப்பா? ” சட்டையைக் கழட்டிக்கொண்டே கேட்டேன்.
அப்பா அரைமயக்கத்திலிருந்தார். போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ளத் தலையைத் திருப்பிக் குரல் வந்த திசையைப் பார்த்தார்.
“ நீ வந்துட்டியா? “
நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது. அம்மா மெதுவான குரலில் சொன்னர்.
“ இதோட ஆறேழு தரம் சிறுநீர் கழிச்சுட்டார்..”
நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன் அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்குத் தேவையான மாத்திரைகள் இருந்தன. டாக்டர் நாளைக்குத்தான் வரச்சொல்லியிருந்தார்.
கடந்த ஆறு மாத காலமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டியிருந்தது. அவருக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக்களெல்லாம் சிறுநீர் மூலமாக வெளியேறிக் கொண்டிருந்தன. ஆபத்தான நிலைக்குப் போய்விடுவார்.
ஆஸ்பத்திரிக்குப்போய் இரண்டு மூன்று நாட்களுக்கு நாலைந்து பாட்டில்கள் ஊட்டத்தை செலுத்தினால்தான் ஓரளவு நிலைமை சீராகி வீட்டிற்கு வருவோம். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பி விடும்.
” இது தற்காலிக வைத்தியம் தான்… வயதாகி விட்டது…பார்த்துக் கொள்ளுங்கள்…” என்றார் டாக்டர் எச்சரிக்கையுடன்
அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்
” இன்னிக்குத் தானே போகணும்…?”
“இன்னிக்கு இல்லேப்பா..நாளைக்குத்தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்….”
“ அப்போ…இன்னிக்கு இல்லையா?…”
“ இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை இருக்கே! அது முடிந்த பின் நாளைக்குப் போகலாமே…”
என் பதில் அப்பாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டார். நான் உடை மாற்றிக்கொள்ள உள்ளே போனேன்.
“ அப்போ இன்னிக்கு இல்லையா?… இன்னிக்கே போ..க..லா..மே…”
அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன் தனக்குள்ளே முனகலுடன் முடிந்தது.
எனக்கு அவர் வேதனையை உணரமுடிந்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த அம்மா ” அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே! அவருக்கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு இருக்கு…” என்று எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தாள்.
சிறிது தயக்கத்துக்குப்பிறகு நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன்.
எங்கள் வீட்டுக்குச் சிறிது தூரத்தில்தான் நகரத்தின் பிரதான சாலை இருந்தது. ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும் சிரமம் அல்ல. கடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும் அப்பாவின் உடல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் நிவர்த்தியில்லாத துக்கத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியிருந்தன.
அப்பாவைப்பற்றி அப்படிப்பட்ட சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாதென்று எனக்குள் எவ்வளவோ எச்சரிக்கை செய்து கொண்டேன்.
அப்பா சமீப காலம்வரை ஆரோக்கியத்துடன் இருந்தவர். சொல்லப் போனால் என்னை விட உடல் தெம்புடன் இருந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட தீராத ஆஸ்துமா வேதனையில் நான் தவித்தபோது மழை கொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்து கொண்டு நடந்துபோய் டாக்டரை அழைத்து வந்து ஊசி போடச்செய்து மூச்சுத்திணறலை ஆறுதல்படுத்தினார். அவருக்கு வயதாகி உடல் நலம் இப்படிக் கெட்டுப்போகுமென்று நான் எண்ணிப் பார்த்ததேயில்லை
பிரதான சாலை ஒரு ஆட்டோ கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. வித்தியாசமாகப் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலையின் இருபக்கமும் காவல்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்
சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக்கொடிகள் எந்த அக்கறையுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.
மெதுவாக ஒரு காவல்காரரரை நெருங்கி “இன்னிக்கு என்ன ஸார் விசேஷம்?..” என்று கேட்டேன்.
“ இது தெரியாதா?.. பேப்பர்லே எல்லாம் வந்திருக்கே! இந்தத் தெரு முனையிலே இருக்கற பெரிய ஆஸ்பத்திரியை பிரதமர் வந்து தொறக்கறாரே… முதல் மந்திரி எல்லாம் வரப் போறாங்களே!…..”
“ அப்போ…”
இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்…”
நான் உதவியற்றுச் சாலையின் வெறுமையைப் பார்த்துவிட்டு நடந்தேன்
வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழட்டினேன். நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தமாதிரி தலையைத் தூக்கினார் அப்பா.
இன்னிக்குப் போக முடியாதுப்பா…”
“ என்னாச்சு? “
“…பிரதம மந்திரி இந்த வழியா போறாராம். அதனாலெ ட்ராபிக்கை எல்லாம் நிறுத்தி வச்சிருக்கான். இப்போ போகலைன்னா டாக்டரை நாளைக்குத்தான் பாக்க முடியும். “
அப்பா இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார் .பெருமூச்சு விட்டார்.
“பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா…நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”
அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாகச் சொன்னதாகத் தெரியவில்லை. அவர் கேட்டது ஒரு வகையில் நியாயமாக யதார்த்தமாகக் கூட இருந்தது.
மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை அவர் வாயில் மெள்ள ஊற்றி மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன் . போர்த்தி விட்டேன்.
“கொஞ்சம் பொறுத்துக்கோங்கோப்பா..…நாளைக்குப் போயிடலாம்.. ஏற்கனவே நாளைக்குத்தான் டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கார்..””
நான் மெதுவாக என் அறைக்குள் போய்க்கொண்டிருந்தேன்.
“ஏம்ப்பா..பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா.. ஜனங்களை இப்படி விரட்டி அடிக்கணுமா?..எம்மாதிரி பிராணாவஸ்தை.” பட்றவ…னெ..ல்லாம்………………………..”…
வார்த்தை வராமல் துக்கம் தொண்டையை அடைத்து ஏதோ முணுமுணுப்பாக முடிந்தது. ..
அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுமுணுப்பாகத் தொனிக்காமல் இது மாதிரி வேதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் எத்தனையோ பாமர மக்களின் குரலாக ஒலித்தது.
மறு நாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனேன்.
நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகி விட்டது. அப்பா பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நிலைமையைப் பார்த்து அறிந்து கொண்ட நர்ஸ் ஓடிப்போய் டாக்டரை அவசரமாக வெளியே அழைத்து வந்தார்.
டாக்டர் அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு “அய்யய்யோ…” என்றார். தனக்கு மட்டும் சொல்லிக் கொண்ட மாதிரி.
“நேற்றே வந்திருக்க வேண்டும் டாக்டர்... .வரமுடியாமல் போய் விட்டது….” என்றேன் கவலையுடன்
” அடடா..… நேற்று வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே! …..ஏன் இப்படி தாமதப்படுத்தினீங்க? . என்னா ஆச்சு?”
“ அது வந்து.. ரோட்லே ….” நான் சொல்ல வாயெடுத்தேன்.
அதற்குள் அப்பாவின் கையும் தலையும் வேகமாக அசைந்தது.
பேச்சு வராமல் மூச்சு தொண்டையில் சிக்கிக்கொண்டு உயிரின் இரைச்சலுடன் இழுத்துக் கொண்டிருந்தது ..
அப்பா நடுங்கிய விரல்களை அந்தரத்தில் யாரையோ சுட்டிக் காட்டியவாறு அவர் சொன்ன அந்த முடிவான வார்த்தை…..
“ பி…ர….தழ்.. ம்ம ….. ர்.”.
கொஞ்ச நாள் முன் பிளாஸ்டிக் அரிசிபற்றி எல்லா ஊடகங்களிலும் பரவலாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன அல்லவா ?
அதைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் கேட்போமா?
புலனாய்வுத்துறை, அந்த வீட்டில் அதிகாலை ஐந்து மணி அளவில் வந்து சோதனைபோட ஆரம்பித்துவிட்டனர் என்ற செய்தி அதற்குள் அந்தப் பெரிய வீதியில் எப்படிப் பரவிற்று என்றே இன்னமும் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்ல. இருபது, முப்பது மனிதர்களாவது அங்கு குழுமி விட்டனர். பங்களாவினுள் இருந்து இரண்டு பேர் வெளியே வர, அவர் முன்னர் சிறு மைக்கை நீட்டியவாறே ஒரு ஊடகக்காரி கேள்விகளை ஆரம்பித்துவிட்டாள்.
‘சார், புலனாய்வுத்துறை, அஞ்சு மணிக்கெல்லாம் இந்தப் பங்களாவை சோதனை போடறது எங்களுக்குத் தெரியும் சார். நீங்க பங்களாவோட பாத்ரூமைக் கூட சோதனை போட்டதா செய்தி வெளில கசிய ஆரம்பிச்சுது .ஏதாவது கெடைச்சுதா சார்.. மக்கள் தெரிஞ்சிக்க ஆசைப்படறாங்க..”
சங்கரலிங்கம் எதுவும் சொல்லும் மன நிலையில் இப்பொழுது இல்லை. அதிகாலை மூன்றரை மணிக்கே அவர் எழுப்பப்பட்டு விட்டார். வெளியே கார் வந்து நின்றதும், அழைப்பு மணி, ஒலித்ததும்தான் அவருக்குத் தெரியும். எதற்குமே நேரம் கொடுக்கப்படவில்ல. இன்னும் இருவர் வீடுகளுக்குப் போய், அவர்களையும் இதுபோல் அவசரம் அவசரமாக அதே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவர்கள் வந்த வண்டி இந்த பங்களாவுக்கு வரும்போது காலை மணி நாலரை ஆகியிருந்தது. புலனாய்வுத்துறை வாழ்க்கை அவருக்குத் தலையில் எழுதப்பட்டிருந்ததா, என்று அவருக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.
இந்த வீட்டுக்காரர்கள் அழைப்பு மணி ஒலி கேட்டு, கதவைத் திறந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். சடசடவென்று உள்ளே வந்த அதிகாரிகள் , ஒன்றும் பேசாமல் அடையாள அட்டைகளைக் காட்டி, தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்து, கை பேசிகள் அனைத்தையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு, வீட்டில் இருந்த, அனைத்துக் கணினிகளையும் பிடுங்கி, அவற்றினுள் கடந்து, புலனாய்வை மேற்கொண்டபோது மணி ஐந்தைத் தொட்டுவிட்டது.
அவர்தான் முதலில் பாத்ரூமுக்குப் போனார். அவர் அவசரம் அவருக்கு. காலையில் வேகவேகமாக வந்ததன் விளைவு. இந்தப் பெண்ணிடம் , அதை எப்படிச் சொல்லுவது.?
“ஆமாம்.. சில டாக்யுமெ…. ‘ நிறுத்துகிறார். ஊடக மொழி அவருக்கு நினைவுக்கு வர..
“ஆமாம்.. சில ஆவணங்கள் சிக்கி இருக்கு. இதுக்கு மேலே எதுவும் கேக்காதீங்க…
‘சார்..சார்…”
அதிகாரிகள் இருவரும் காலை காஃபி சாப்பிட, அருகில் இருக்கும் ஏதோ ஒரு நாயர் கடைக்குப் பறக்கின்றனர்.
முதலில் அவர்களிடம் சிக்கிய ஒரு ஆவணம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து எடுத்த ஒரு டைரியில் இருந்த ஒரு சிறு குறிப்புத்தான்.
‘கட்டினவதானே’ன்னு கண் மூடித்தனமா கம்முனு இருந்தே, கடைசிலே கண்ணை மூடிக்கிட்டு கண்ணீர் சிந்தற நிலைக்குக் கொண்டு போயிடும்’டா., வாத்தியாரா இல்லாம பெத்த அப்பனா சொல்லணம்னு தோணிச்சு. சொல்லிட்டேன். சின்ன வயசுலயே உனக்குச் சொல்லியிருக்கேன். சமயத்துல உன் போக்கே சரியில்லயோன்னு தோணுது.’
பெத்த தந்தை, பையனை விட்டுப்போய் ஓராண்டு காலம் ஆகிவிட்டதாம். மகன் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும், தந்தை எங்கோ போரூரில் தனியாக இருக்கிறாராம்.
என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்று இன்னமும் வெளியில் தெரியாது. புலனாய்வுத் துறை எப்பொழுதுமே ஊடகங்களிடம் இருந்து ஒதுங்கிநின்றே செயல்பட, பல காரணங்கள் இருக்கின்றன.
அடுத்தபடியாக அவர்களிடம் சிக்கிய ஒரு முக்கிய ஆவணம்தான் அவர்களை மேலும் குழப்பியது.
குமுதம், விகடன் பத்திரிகை அளவில் ஆன ஒரு தனி மனிதனின் கையேடு. குழந்தைகள் பள்ளிப் புத்தகங்கள் வாங்கியவுடன் அவற்றிற்கு அட்டைபோடும் பழுப்பு வண்ணத் தாள்களில் உருவான ஒரு ஆவணம்.
அதைப் பார்த்தால், அதற்கு உரியவர் ஒரு பெரிய பதவியில் இருக்கும் உயர்ந்த அதிகாரி என, நிச்சயமாக யாரும் சொல்லமாட்டார்கள். பக்கத்திற்குப் பக்கம் வட்ட வடிவில் இந்தியத் திரை உலகின் அவ்வளவு நடிகைகளும் ஏதாவது ஒரு கோணத்தில், ‘one piece or two piece ‘ துணிகளில் அனாயாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பக்கங்கள் அனைத்திலும் மையமாக, இந்த வீட்டு மனையாள் ஒய்யாரமாகக், கிறங்கடிக்கும் சிரிப்பில் நின்றிருந்தாள்.
இவர்களில் அனைவரிலும் மேலானவள் என் செல்லம்- ஒவ்வொரு பக்க அடியிலும், இந்தக்குறிப்பு.
கிறங்கடிக்கும் அந்த சிரிப்புக்காரி அந்தக் கையகலத் துணித் துண்டுகள்கூட இல்லாத நிலையில் பலவகையான நிலைகளில் படமாக இருந்தாள்
திரை உலகத் தாரகைகளைப்போல் இவள் சிவப்பு வண்ணத்தினள் அல்ல. ஆனால் அவர்களில் பலரைவிட இவள், உடல் வளத்தில் மிகச் செழுமையானவளாகவே இருந்தது, வீட்டிற்குள் வந்தவுடன் அவளைப் பார்த்தவுடனேயே, இந்த உண்மை, புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைவரின் எக்ஸ்ரே கண்களிலும் பதிந்துவிட்டது. நெடுநெடுவென்ற உயரம் வேறு. கண்களை அகற்ற முடியாத வளைவுகள். . அடக்க அடக்க அடங்காத அரபிக்குதிரை போன்ற தீட்சண்யமான கண்கள். நான் வேற ஜாதி, என்ற அட்டகாசப் பார்வை. இதுதான் அவள் வீட்டுக்காரனை, அவன் உயர்ந்த பதவியில் இருந்த ஆரம்பகாலக் கட்டங்களில் அவளிடம் ஈர்த்திருக்கவேண்டும்.
பாவிப் பய, குப்புற விழுந்துட்டான்.
புலனாய்வுத் துறைக்குப் புரிந்துவிட்டது.
ஆனால் புரியாமல் குழப்பியது மூன்றாவது ஆவணம்தான்.
அடுத்தபடியாக புலனாய்வுத்துறை ஆராய்ந்துகொண்டிருந்த ஒரு ஆவணம், சில வங்கிக்கணக்குகள்.. அவ்வப்பொழுது பல லட்சம் வரவு வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், வேறு எங்கெங்கோ புறப்பட்டுப் போயிருந்தன. இந்த வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இந்த வீட்டு மனையாளின் தனி பீரோவில் பல விலை உயர்ந்த புடவைகளின் நடுவில் மிக பத்திரமாக இருந்தன. அதே பீரோவில், தனிப் பெட்டகமாய் ஒளிந்திருந்த ஒரு ரகசிய அறையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரு சாவிக்கொத்தில் ஒன்று, வங்கி லாக்கர்சாவி என்பது இவ்வளவு வருட அனுபவத்தில் அந்த புலனாய்வு மூளைகளுக்கு உடனடியாகத் தெரிந்த விஷயமாக இருந்தது.
முதலில் அதுபற்றிக்கூற அந்த வீட்டு ஆண் மறுத்துவிட்டான்.
“சார், நீங்க என்னைத்தானே விசாரிக்க வந்திருக்கீங்க? என்னை என்ன வேணும்னாலும் கேளுங்க சார்.., ரத்னா பாவம் சார், அவ ஒரு சாதாரண அரசாங்க ஊழியர் மட்டும்தான். அவளையும் வாட்டுறீங்க. இது ரொம்பவே அராஜகமா இருக்கு.”
“உங்களுக்கே தெரியும் மிஸ்டர் சரவணன். தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு உள்ளயே போயி நாங்க கட்டாயமா சோதனை போடவேண்டிய காலத்துல இப்போ இருக்கோம். யாரை, எப்போ, எப்படி சோதனை போடணும், அப்படிங்கற இந்த விஷயங்களை நாங்க பாத்துக்கறோமே, ப்ளீஸ்..”
அதற்குப்பிறகு சரவணன் IAS –சால் பேசமுடியவில்லை.
“சாரி ரத்னா,” அவள் முகத்தைத் தடவியவாறே, அவளுக்கு ஆறுதல் சொல்கிறான் சரவணன். “ இவனுகள்ள சில பேரு இப்படித்தான். வலுக்கட்டாயமா, பாத்ரூமுக்குள்ள கூட புகுந்து சோதனை போடுவானுங்க. நாம ஒண்ணும் செய்யமுடியாது. மடில கனமிருந்தா பயப்படணும்.. நமக்கென்ன பயம்?”
சரவணனால் கண்ணீர் விடும் நிலையில் உள்ள ரத்னாவை அணைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
“சார், நீங்க உங்க சம்சாரத்தோட இதோ, இந்த சோஃபாவுல, உட்கார்ந்துகிட்டு, உங்க பாணியிலயே ஆறுதல் சொல்லிக்கிட்டு இருங்க. நாங்க மத்த இடங்கள்லயும் சோதனை போட்டுடறோம்.”.
“இவன்லாம் எப்படி ஒரு IAS ஆபீசர் ஆனான்.. இவனும் ஒரு களவாணிப்பயதானோ?”- மனதில் ஓடிய ஓட்டத்தை அடக்கிக்கொண்டு சங்கரலிங்கம் அடுத்துச் செய்யவேண்டிய காரியங்களில் கவனத்தைச் செலுத்தினார்.
வங்கி பாதுகாப்புப்பெட்டகம் வேறு பல ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தது.
சரவணன் வங்கி மேலாளர் எதிரேதான் அமர்ந்திருந்தான். முகம் சற்றே வாடி இருந்தது.
சரவணனும் ‘நல்ல மூக்கும் முழியுமாக’ இருந்தவன்தான். கூர்ந்து நோக்கும் கண்கள். நீண்ட நாசி. சட்டென்று மறந்துவிட முடியாத முக அமைப்பு. மனைவியை விட நல்ல நிறம் வேறு. காரில் இருந்து இறங்கி, கோட்டை வாசலில் சும்மா நின்றால் கூட , கடக்கும் முக்கால்வாசிப் பெண்கள் வழிய வந்து ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லாமல் போகமாட்டார்கள். அதில் பாதி, கடந்த பின்பும், ஒருமுறையாவது, இவனைத் திரும்பிப் பார்க்காமல், போயிருக்க மாட்டார்கள். அவனுக்கு அப்படி ஒரு ராசி.
இருந்தாலும் விவரம் அறிந்த எந்த ஜோசியனும், ரத்னாவின் ராசி அவனுடையதை அடித்துவிட்டது என்றே சொல்லி இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு அமைச்சரவைக் கூட்டத்தின், ஆரம்ப கட்டப் பணிகளுக்காக அவன் ஒரு அமைச்சரின் அறைக்குள் போனவன், தற்செயலாக அங்கு வேறு ஏதோ காரணமாக வந்த ரத்னாவைப் பார்க்க நேரிட்டது. அவள் என்ன செய்வது என்றே தெரியாமல் சிறு புன்முறுவல் பூத்தாள். அவ்வளவே. சரவணன் அன்று விழுந்தவன்தான். இதை ஜோசியர்கள் வேறு எப்படிச் சொல்ல முடியும்?
ஆனால் ரத்னா எதற்காக அந்த அமைச்சர் அறைக்கு அடிக்கடி போனாள் என்று அவன் இதுவரை கேட்டதில்லை. இப்பொழுதும் போகிறாளே, ஏன் என்றும் அவனுக்குத் தெரியாது. அவளுடைய வங்கிக் கணக்குகளை அவன் ஆராய்ந்ததே இல்லை.
அவள் உடலை மட்டுமே ஆராய்ந்திருக்கிறான். அவளும் அதற்கு முழுவதுமாகவே சம்மதித்து, அவளைப்பற்றி வேறு எதுவும் அவன் அறிந்திராதவறே பார்த்துக்கொண்டிருந்தாள்.
வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தினுள் கிடைத்த வேறு சில ஆவணங்கள், அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
ரத்னாவின் தனிப் பெயரில் சென்னையிலும், கோவையிலும், பெங்களூரிலும் என மூன்று தனி பங்களாக்களும், மும்பையில் இரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்களும் இருந்தன. அவற்றின் மதிப்பே பல கோடிகளைத் தாண்டியது. வேறு சில வங்கிகளிலும் அவள் பெயரில் பல லட்சக்கணக்கான நீண்ட கால வைப்புத்தொகைகள் இருந்தன. ஒரு கோடை பங்களாவில் இருந்த நகைகளின் மொத்த மதிப்பு, நிச்சயமாக, ஒரு சாதாரண அரசு ஊழியர் இவ்வளவு நகைகள் வாங்க, நியாயமான வழியே இல்லை என்று பார்த்தவுடன் கூற வைத்தது..
கடைசியாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் சரவணனைப் பற்றி, அவன் பள்ளி இறுதிப் படிப்பு முடித்த சமயம் ஒரு பத்திரிகையில் வந்த பேட்டி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு ஆவணமாயிற்று.
பள்ளி இறுதிச் சுற்றுத்தேர்வில் அவன் மாகாணத்தில், அவன்தான் முதல் மாணவன். அவன் ஆசிரியர்களில் சிலர் அப்பொழுது கொடுத்திருந்த பேட்டிகள்:
“சரவணன் நிஜமாகவே சூது வாது அறியாப் பிள்ளைங்க.. தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பான். அடுத்தவங்க காரியங்கள்ல தலையிடவே மாட்டான். வீட்டுலயும் அப்படித்தான்னு அவங்க அப்பாவே ஒரு முறை எங்ககிட்ட சொல்லிருக்காருங்க.” – ஒரு ஆசிரியர். “
“ஆனா அவன் பாணியே தனிங்க.. அவன் சிலரை நம்பினா கண்மூடித்தனமா நம்பிடுவானோன்னு எனக்குத் தோணும். இதக் கூட அவங்க அப்பாதான் எங்ககிட்டியே கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காரு. பெத்தவங்களுக்குத் தெரியாததாங்க?”- இன்னொரு ஆசிரியர்.
சங்கரலிங்கம் பத்திரிகைகளுக்கு நேரிடைப் பேட்டிகள் கொடுப்பத்தைத் தவிர்ப்பவர்.
ஆனால் இப்படியும் சில அதிகாரிகள் வரலாற்றில் இருப்பதை அவர் அரசாங்கத்திடம் சொல்லவே விரும்புகிறார். என்னவென்று சொல்வது?
சிக்கிய சில ஆவணங்கள் சில உண்மைகளைப் புட்டு வைத்து விட்டன.
அங்கு கிடைத்த ஆவணங்கள், அவர்களுக்கு அடுத்து எங்கு அதிரடி சோதனை நடத்தவேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்துகின்றன.
இப்பொழுது இவர்கள் இருவரில் யாரைத் தூக்கி உள்ளே போடவேண்டும்?
இதுவே சங்கரலிங்கம் முன் ஊசலாடும் கேள்வி.
தலைவனிடம், தலைவி ,”உலகத்திலேயே சிறந்த பரிசு வேண்டும். தருவாயா ? “என்று கேட்டாள்.
“மேடம், உங்களை ஒரு பத்து நிமிஷம் பார்க்கலாமா? கேட்டுக் கொண்டே அவினாஷின் அப்பா உள்ளே நுழைந்தார். மிகக் கண்ணியமானவர்.
உள்ளே வந்தவர் உட்காராமல், “அவினாஷ் உங்களைப் பார்க்க விரும்புகிறான். தப்பா எடுத்துக்கவேண்டாம். அவனுக்கு ஒன்றும் இல்லைன்னு எனக்குத்தெரியும். அவனாக வந்தால், சிறுவன் என்று உங்கள் ரூல்ஸ்படி பார்க்க மாட்டீர்கள். அதனால்தான் நான் வந்தேன். அவன் க்ளியரா உங்களை, ஸைக்கியாட்ரிக் ஸோஷியல் வர்க்கரைத்தான் பார்க்கவேண்டும் என்று தெளிவாகச் சொன்னான்” என்றார்.
அன்றைக்கு ஏற்கேனவே அப்பாய்ண்ட்மென்ட் பல இருந்ததால் மறு நாளைக்கு நேரம் குறித்துக் கொடுத்தேன். மறு நாள், நான் வருவதற்கு முன்னேயே அவினாஷ் அப்பாவுடன் காத்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன், அப்பாவிடம், “அப்பா, நீ இங்கேயே இரு, ப்ளீஸ்பா”. என்னைப் பார்த்து “மேடம், தயவுசெய்து நான் மட்டும் உள்ளே வரேன்” என்றான். இவன் ஒன்பது வயதான சிறுவன். அடர்த்தியான சுருட்டைமுடிச் சுருள்கள் நெற்றியில் திராட்சைக் கொத்து போலிருந்தது. வண்டு கண்களை விரித்து என் பதிலுக்குக் காத்திருந்தான்.
அவனின் கனிவு என்னைக் கவர்ந்தது. இப்படிச் செய்வதன் அவசியம் என்னவோ என்று என் ஆர்வமும் தூண்டியது.
இருவருமாக உள்ளே நுழைந்தோம். நான் உட்காரக் காத்திருந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான். உடனே திகில் சினிமா பார்ப்பதுபோல் நாற்காலியின் விளிம்பிற்கு வந்து “மிஸ், … ஸாரி , மேடம், நான் உங்களை ஒன்று கேட்கவேண்டும் ஆனா ப்ராமிஸ், யாரிடமும் சொல்லக்கூடாது” என்று ஆரம்பித்தான். நான், இங்கு சொல்வது யாரிடமும் போகாது என்று எடுத்துச் சொன்னேன்.
அவினாஷ் சொன்னான், “நாங்கள் ஸ்கூலுக்கு ஒரு வேனில் போவோம் -வருவோம். எங்களோடு தீரஜ் வர ஆரம்பித்து இருக்கிறான். அவனைப் பற்றித் தான் சொல்ல வேண்டும். சொல்லலாமா? அப்பாவுக்கு அவன் அப்பா ரொம்ப தோஸ்த். அதான் அப்பாவை வெளியே உட்காரச்சொன்னேன்”. எவ்வளவு அக்கறை என்று வியந்தேன்!
விவரத்தைச் சொல்லச் சொன்னேன். சொல்ல ஆரம்பித்தான். “நான் அவன் பின் சீட்டில் உட்காருவேன். சில நாட்களாக அவன் விசும்பல் கேட்கிறது. இறங்கும்பொழுது ஒன்றும் பேசுவதில்லை, ‘பை ‘ கூடச் சொல்லாமல் போய்விடுகிறான். பாவமா இருக்கு. ஏதாவது செய்ய வேண்டும். அதான் உங்களை ஐடியா கேட்கலாமென்று நினைத்தேன். உஷாவின் பயத்தை நீங்கள் ஈஸியாகச் சரி செய்ததைப் பார்த்திருக்கிறேன்”.
வேறு யாரிடம் இதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டான் என்பதையும் கேட்டேன். சீரியஸாக “என் டைரி” என ரகசியம் சொல்லுவதுபோல் சொன்னான். “அப்பாவிடம் எல்லாம் சொல்லுவேன். அப்பாவுக்கு தீரஜ் அப்பா நல்ல தோஸ்த்..” மேலும் ஏதோ சொல்ல வந்து, அப்படியே விட்டு விட்டான்.
தீரஜ் விசும்பல் எப்பொழுதெல்லாம் என்று கேட்க ஆரம்பிப்பதற்குள் அவனே “எங்க வேன் முதல் வரிசையில், அஜய், ரவி, சங்கர், விஷ்வாஸ் உட்காருவார்கள். இவங்களுக்கு, வேன் அண்ணன் கூட பயப்படுவாங்க. அவர்கள் தீரஜை அதிகம் டீஸ் (tease) பண்ணுவாங்க, சீண்டிக்கொண்டே இருப்பாங்க”.
இதை வர்ணிக்க இவன் கண்கள் கலங்கியது,”ரொம்ப பாவமா இருக்கு. என்ன செய்யணும் சொல்லுங்க மேடம்?” என்றபடி கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டான்.
மேலும் விவரித்தான். நால்வரில் விஷ்வாஸ்தான் பாஸ். மற்ற மூவரும் விஷ்வாஸ் சொல்வதைச் செய்வார்கள். அவர்களில் தீரஜ் வருவதைப் பார்த்துச் சொல்வது ரவியின் இலாகா. சங்கர், தீரஜ் உள்ளே நுழைந்ததும் “கர்ல் (girl) எப்படி இருக்கே?” குரல் எழுப்புவான். விஷ்வாஸ் தீரஜைப் பார்த்தபடி மூவரிடமும் ஏதோ பேசி, சிரிப்பார்கள். இறங்கும்போது, விஷ்வாஸ் வேன் கதவைத் தடுத்து நிற்பான்.
தீரஜ் நான்காவது படிப்பவன். படிப்பில் சுமார். அவன் அப்பாவின் லட்சியம், அவன் டென்னிஸ் வீரனாக வேண்டும். தினமும் டென்னிஸ் பயிற்சி. பல போட்டிகளில் போய் விளையாடியிருக்கிறான். எல்லாவற்றிலும் தோல்வி. அவன் அப்பாவுக்கு மிகவும் வருத்தம். இதனால் அவர் இவனை “நீ கர்ல் (girl) மாதிரி இருக்க. பாய் மாதிரி போல்டாக இரு” என்பாராம். அவினாஷின் அப்பா அவரிடம், “ஏன் எல்லோர் முன்னும் சொல்லணும்? உனக்கே உன் மகள் எவ்வளவு துணிச்சல்காரின்னு தெரியும். அப்போ, இவனை ஏன் கர்ல்னு சொல்ற?” என்று கேட்பதும் உண்டு.
அவினாஷ் என்னை என்ன செய்ய வேண்டும் என்று மறுபடியும் கேட்டான். தீரஜ் திறமைகளைபபற்றிக் கேட்டேன். நன்றாக வரைவான், நிறைய ஜோக் சொல்வான், உதவி செய்வான், பாடம் சொல்லித் தருவான், நன்றாக டான்ஸ் ஆடுவான் என வரிசைப் படுத்தினான். வேன் உள்ளே மாறி விடுகிறான். இப்படி டீஸ் பண்ணித் துன்புறுத்துவதை என்னவென்று புரிந்து கொள்வது என்றும் கேட்டான்.
அவினாஷுக்கு விளக்கிச்சொன்னேன், டீஸ், கேலி செய்வது எல்லாம் ஓரிரு நிமிடம் இருக்கும் அதற்குப் பிறகு அதை விட்டு விடுவார்கள். எந்த கசப்பும் இருக்காது. விளையாட்டுக்குச் செய்வார்கள். இதில் வஞ்சகம் இருக்காது.கொட்டிக் கொண்டே இருக்கமாட்டார்கள்.
தீரஜுக்கு விஷ்வாஸ், அவன் கூட்டாளிகள் செய்வதை ஆங்கிலத்தில் “புல்லீயிங்” (Bullying) என்றும் கேலி செய்வோரை “புல்லீ” (Bully) என்றும் சொல்வார்கள். புல்லீயிங்கில் கேலி, கிண்டலாகவே இருக்கும். இந்த புல்லியிங் செய்வதினால் , பாதிக்கப்பட்டவர் கூனிக் குறுகுவதைப்பார்த்து மேலும் புல்லியிங் செய்வார்கள். பெரும்பாலும் இப்படி புல்லீ செய்வோர் வயதிலோ, தோற்றத்திலோ, வசதிகளிலோ, வித்தியாசம் இருக்கக்கூடும். வேறுபாடினாலேயே துன்புறுத்துவோரை அடிமைபோலவே கையாளுவது இவர்களின் குறிக்கோளாகும்.
அதேபோல் யாரை “புல்லீயிங்” செய்கிறார்களோ அவர்கள் பயத்தினால் வெட்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனாலையே புல்லீகள் சொல்வதைச் செய்வார்கள். புல்லீகள், தன் பயந்த சுபாவத்தை மறைக்க “என்னை புல்லீ செய்ய முடியாது” என்று அடாவடி செய்வதும் உண்டு. மேலும் புல்லியிங் செய்பவர்கள் யாரும் தங்களைத் தடுக்காததால் செய்து கொண்டே இருப்பார்கள்.
மேலும் விவரித்தேன், “தீரஜை இதிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றால் அவன் தன்னம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். விஷ்வாசை மட்டும் அல்ல, இதைப்போன்ற மற்ற சூழ்நிலைகளையும் சமாளிக்கத் தெரியவேண்டும்”. இன்னும் ஒன்று எடுத்துக் சொன்னேன் “தீரஜ் இங்கு வரலாம், அவனிடம் கலந்து பேசிப் பல யோசனைகள் செய்யலாம். இதே போல், நீயும், உன் நண்பர்களும் தீரஜுக்கு நிறையச் செய்யலாம்” என்று சொன்னேன்.
“அப்ப நான் அவனுக்குப் பரிஞ்சு பேசலாமா?” என்று அவினாஷ் கேட்டான்.
நான், “கண்டிப்பாகப் பேசலாம். இதை “Bystander Support” என்போம். அதாவது வேடிக்கை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்பினால் கூடக் கேலி செய்பவர்கள் உணர ஆரம்பிப்பார்கள். தங்களால் மற்றவர்கள் காயப்படுவதை அவர்கள் கவனத்திற்கே திசை திருப்புகிறோம். இதை விளையாடும்பொழுது நாமே செய்திருப்போம். யாரோ வேண்டும் என்றே மற்றவரைச் சீண்டினால் , எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அதை நிறுத்திவிடுவோம். அதேபோல்தான் இதுவும் . இதை நண்பர்கள் செய்யும்பொழுது “பியர் ஸப்போர்ட்” (Peer Support) என்போம். ஆனால் தீரஜ், எனக்கு பியர் ஸப்போர்ட், பைஸ்டான்டர் ஸப்போர்ட் இருக்கு என்று விட்டுவிடக்கூடாது. அவனும் தன் பங்கிற்கு முயலவேண்டும்.” என்றேன்.
இரண்டே நாளில் தீரஜ் அவன் அப்பாவுடன் வந்தான். தீரஜ் தோற்றத்தில் தன் வயதினருடன் ஒப்பிட்டால் மிக மெலிந்து, குட்டையாக இருந்தான். கண்கள் பயத்தில் விரிந்து, தயக்கத்துடன் வந்தான். அவன் பெயருக்கும் தோற்றத்துக்கும் பொருந்தவே இல்லை.
அவினாஷ் அவன் பின் நின்றிருந்ததைக் கவனித்தேன். தீரஜ், “மிஸ்” என்று சொல்லி நிறுத்தினான். உடனே அவினாஷ் அவன் கையைப் பற்றி, “நீ பேசுடா! மேடம் ரொம்ப கூல்” என்று ஊக்கப்படுத்தினான். தீரஜ் அப்பா அவனை முறைத்தபடி, “தீரஜ்! என்ன இது? பேசப் போறயா, இல்ல…” என்றார். நான் உடனே, “இதோ, கொஞ்ச நேரத்தில் சொல்ல ஆரம்பிப்பான்” என்று சொல்லி, அவரைச் சற்று வெளியே செல்லும்படிக் கேட்டுக்கொண்டேன். அவினாஷ் அவர் கையைப் பிடித்து “வாங்க அங்கிள், அவனே சொல்வான்” என்று, தன்னுடன் அழைத்துச்சென்று, கதவையும் மூடிக் கொண்டு போனான்.
தீரஜ், அவன் அப்பாவின் டென்னிஸ் ஆசை பற்றி ஆரம்பித்தான். அவரின் கனவு இவனுக்கு ஒத்து வரவில்லை என்று விவரித்தான். அப்பா இவனை வீட்டிலும், வெளியிலும் “கர்ல்” என்று கூறுவதையும், வேனிலும், விஷ்வாஸும் அவன் தோஸ்தும் அதே மாதிரி “கர்ல்” என்றே அழைப்பதையும் விவரித்தான்.
தீரஜுக்குப் மிகவும் பிடித்தது, படம் வரைவது, கதை கற்பனை பண்ணிச் சொல்வது, மற்றவர்களைச் சிரி்க்க வைப்பது. டென்னிஸ் விளையாடும்போது , கதைகளைப்பற்றியும் , படம் வரைவதைப்பற்றியுமே யோசிப்பான். அதனாலேயே டென்னிஸ் விளையாட்டில் மனம் செலுத்த முடியாமல் தோற்றுப் போவான். டென்னிஸ் பிடிக்காததால் அதில் தோல்வி அடைவது பற்றி அவனுக்கு அவ்வளவாகக் கவலை இல்லை. ஆனால் அவனுடைய அப்பா ரொம்ப ஃபீல் பண்ணுவார். அவன் தோற்ற நாள் முழுவதும், அவனை “கர்ல்” என்றே அழைப்பார். மேலும், பெண்கள்தான் வரைவார்கள், பாட்டிதான் கதை சொல்வாள் என்று அவர் சொல்வதால் , இவற்றையெல்லாம் யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்தே செய்வான். இப்படிச் செய்வதை பெரிய குற்றம் என்றும் நினைத்தான்.
விஷ்வாஸின் ‘புல்லீ”யினால், தீரஜ் அடிக்கடிக் கண் கலங்கிவிடுவான். இதனாலேயே, அவர்கள் கர்ல் எனச் சொல்கிறார்களோ என்று நினைத்தான். அதே சமயம், தன் தங்கை மிகத் தைரியசாலி, அப்படியிருக்க அப்பா ஏன் இப்படிச் சொல்கிறார் என்ற குழப்பத்தையும், தர்ம சங்கடத்தையும் அடைந்தான்.
வீட்டில் வரைவதையும், வர்ணம் தீட்டுவதையும் அப்பா “வெட்டி செயல்” என்பதால் மறைத்தே செய்வான். இதற்கு நேர் எதிராக, ஸ்கூல் நோட்டீஸ் போர்டில், கிளாஸில் இவன் ஓவியங்களே நிறைந்திருக்கும். இவன் வகுப்புத் தோழர்களும், டீச்சர்களும் ஊக்கப் படுத்துவார்கள்.
அப்பாவைப் பொறுத்தவரை ஆண் பிள்ளை என்றால் விளையாட வேண்டும். தன்னால் வெல்ல முடியாத டென்னிஸ் பரிசை வென்றாக வேண்டும். இதற்காகவே அவர், இவனுடைய டென்னிஸ் கோச்சிங் நேரத்திற்கு ஏற்றாற்போல் தன் வேலையை அமைத்துக் கொண்டார்.
டென்னிஸ் கோர்ட்டில் இவனுடன் 4 பேர் உண்டு. நன்றாக விளையாடுவார்கள். தீரஜின் கோச் இவனை நிறையத் திட்டுவார், “நீ டென்னிஸ் விளையாட லாயக்கேயில்லை” என்று சொல்வார்.
அவன் விளையாடுவதை அவன் அப்பா கூர்ந்து கவனிப்பது, அவனைக் கண்காணிப்பதுபோல் தோன்றியது. இது வெட்கத்தை அதிகரித்து அவன் கண்களைத் தளும்பும்படி செய்யும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.
இங்கு ஷேர் செய்வதுபோல், அப்பாவிடம் இந்த டென்னிஸ் வேண்டாம் என்று எப்படிச் சொல்வது என்று தடுமாறினான்.
தீரஜின் அப்பா என்னிடம் வந்ததே அவமானம் என்று நினைத்தார். அவர், அன்று இரண்டு மணி நேரம் மட்டும்தான் இருக்க முடியும் என உறுதியாக இருந்தார். இங்கு வந்தால் டென்னிஸ் நேரம் பாதிக்கும் என்றார்.
சரி என்று அவசர சிகிச்சைபோல் பாவித்து, விஷயத்தை ஆரம்பித்தேன். அவினாஷ் கூடவே இருந்ததை “Peer Support” பியர் ஸப்போர்ட்டாக எடுத்துக் கொண்டேன்.
நான், இதை, Role play “பங்கேற்பு நாடகம்” வடிவம் கொடுத்து அணுகலாம் என்று முடிவெடுத்தேன். மூவரும் (தீரஜ், அவினாஷ், நான்) ஒவ்வொரு பாத்திரமாக மாறிச் செய்தோம். தீரஜ், விஷ்வாஸாகவும் , நான் அவினாஷாகவும், அவினாஷ் தீரஜாகவும் நடித்தோம்.
புல்லீயுங் (Bullying) செய்யும் நேரம் தீரஜை எப்படியெல்லாம் அணுகலாம் என்று ஆரம்பித்தேன். இதற்கு, முதலில் மற்றவர்களைப் பார்ப்பதுபோலவே, புல்லீயையும் பார்க்க வேண்டும். அவர்களுக்கும், மற்றவருக்குச் சொல்லும் அதே, “ஹலோ”, “குட் மார்னிங்”, “பை “. இதை நடைமுறையில் எப்படிச் செய்வதென்று Role play “பங்கேற்பு நாடகம்” மூலம் செய்துபார்த்தோம்.
விஷ்வாஸ் புல்லீ செய்ய, அவனைப் பார்த்து, “ஆம், நீ சொல்லுவது உனக்குச் சரி எனத் தோன்றினாலும் அது என் மனசைப் புண்படுத்துகிறது” எனலாம். இதை வெவ்வேறு மாற்றம் செய்து, ஒரு 10 நிமிடம் செய்தோம். தீரஜ் முகத்தில் செய்யமுடியும் என்ற ஒரு மிகச் சின்ன ஓளி பிரகாசித்தது.
அடுத்ததாக, வேனிலிருந்து இறங்கும்பொழுது தடுத்தால், “மன்னிக்கவும், கொஞ்சம் இடம் கொடுக்க முடியுமா?” எனக் கண்ணைப் பார்த்துச் சொல்லவேண்டும். இந்த முறை , நான் விஷ்வாஸ் பாத்திரமானேன். பல முறை தீரஜ் கண்கள் தளும்பின. செய்யச்செய்ய அவனுக்குப் புரிந்தது, மனதின் பயம், உடலில் தெரியும். அதனாலேயே, நாம் சொல்வதில், நமக்கு நம்பிக்கை இருப்பது முக்கியம். இது புரிந்தவுடன் தீரஜ், தீரஜாகச் (அதாவது தைரியமாக) செய்தான்.
அப்பாவும், வேனில் மற்றவர்களும் சொல்வதால் தான் அப்படியே கர்ல் ஆகி விடுவோமோ என்ற தீரஜின் பயத்தை எடுத்துக்கொண்டோம். “நீ கர்ல்”, “நீ கோழை”, என்றால் என்ன செய்ய வேண்டும்? இதிலும், தீரஜை, தீரஜாகவே இருக்கச் சொன்னேன். கேள்விமேல் கேள்வி கேட்டு, யோசிக்க வைத்தேன். இது சம்பந்தப்பட்ட பல கேள்விகள், அவினாஷையும் கேட்டேன். 20 நிமிடங்களில் பல வழிமுறைகள் தோன்ற ஆரம்பித்தன.
மற்றவர் சொல்வது, செய்வது பிடிக்கவில்லை என்றால் “நீ சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை” அதாவது அந்தச் சொல்/செயல் குறிப்பாகப் பிடிக்கவில்லை என்று தெரிவிக்கும்படி தீரஜிடம் கூறினேன்.
ஏதோ காரணத்தினால் பேசத் தைரியம் வரவில்லை என்றால், தைரியமான தோற்றத்துடன் (நடுங்காமல், தலை குனியாமல்) அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும். புல்லீ சொல்வதைச் சட்டை செய்யவோ, அவர்களின் வார்த்தைகளை மனதில் ஏற்றுக்கொள்ளவோ கூடாது. இப்படிச் செய்தபின் நமக்கு நாமே ஒரு சபாஷும் கொடுத்துக் கொள்ளவேண்டும் (இப்படிச் செய்வதில் நம் தைரியம் இன்னும் அதிகரிக்கும்).
புல்லீகள் வன்முறை உபயோகிப்பதில் சில விதங்களைச் சொன்னேன். வேண்டும் என்றே இடிப்பது, புண்படுத்தும் சொற்களைச் சொல்லுவது , பொருட்களை எங்கேயாவது ஒளிப்பது, உதாசீனப்படுத்தும் பெயர் சூட்டுவது, நக்கலாகச் சிரிப்பது போன்றவற்றை அவர்கள் செய்யக்கூடும்.
இப்படிச் செய்யும்போது கோபம் வரத்தான் செய்யும். அது நியாயம் தான். அந்தக் கோபத்தைத்தான் புல்லீயும் விரும்புவார்கள். அதற்காகவே சீண்டுவார்கள். மாறாக, நாம் கோபத்தை அடக்கி நகர்ந்து விட்டால், புல்லீ, புல்லீ செய்யமுடியாது.
புல்லீகள் ஊக்கப்படுவதே மற்றவரின் பலவீனத்தில்தான். எந்த மாற்றமும் காட்டாமல் இருந்தால், புல்லீயிங் தானாகவே நின்றுவிடும். இப்படிச் செய்யத் தைரியமும், தன்னம்பிக்கையும் முக்கியம்.
மேலும், நம் எல்லோருக்கும் தனித்துவம் உண்டு. உதாரணத்துக்கு, நம் பெயர் தீரஜ் என்றால் ‘தைரியம்’. எதற்கு, எங்கு, எப்பொழுது தைரியம் என்பதை தீரஜ்தான் முடிவு செய்யவேண்டும். அவினாஷ் என்றால், ‘என்றும் அழியாது’. எது ‘என்றும் அழியாது’ என்று அவினாஷ் முடிவு செய்யவேண்டும். இவற்றையெல்லாம் தீரஜுக்கு விளக்கினேன்.
அதற்குள் சிகிச்சை நேரம் முடிவடைந்தது. தீரஜ் -அவினாஷ் இருவரும் ஜோடிப் புறாக்கள்போல் ஒன்றாகக் கைகோர்த்துச் சென்றார்கள். தீரஜ் -அவினாஷ் இருவருக்கும் பலம் கூடியது! தீரஜ் தோள் தூக்கி நடப்பதைப் பார்த்து, பங்கேற்பு நாடகம் நிஜ வாழ்விலும் வெல்லும், என்று முழுக்க நம்பினேன்.
சில மாதங்களுக்குப் பிறகு தீரஜின் தைரியம் கூடிக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.
உன்னைத் தொட்ட தென்றல் என்னைத் தொடும்போது
மதுவுண்ட மயக்கமே இனிமை இனிமை
உன்னுருவம் நிழலாடும் கள்ளுண்ட என்னுள்ளம்
களிப்புடனே குதிப்பதுவும் புதுமை புதுமை !
ஈரவிதழ் ரோஜாவை சுற்றிவரும் வண்டானேன்
கயல்விழியை பூசிநிற்கும் குளிர்ச்சிமிகு மையானேன்
கன்னங்கரு கூந்தலையே அளைக்கின்ற சீப்பானேன்
தேமதுரக் குரலினிலே இணைந்துவரும் இசையானேன்..!
கட்டான மேனியின் வழுவழுப்பும் நானல்லவோ
எடுப்பான மார்பகத்தின் துடிப்புமது நானல்லவோ
அன்னநடை மெல்லிடையின் அழகான அசைவானேன்
நாணத்தால் கன்னங்கள் நிறம்மாற சிவப்பானேன்..!
எனக்காக நீயும் உனக்காக நானுமாய்
ஏழேழு ஜன்மங்கள் தொடர்ந்துவரும் சொந்தமடி
ஈருடல் ஓருயிர் பெண்ணே பெண்ணே
நீவேறு நான்வேறு இல்லையடி கண்ணே..!
ஓரிடம்தனிலே நிலையில்லா துலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் வினோதமான பொருளே
ஏதோ ஊரும் மாறி பள்ளியும் மாறி கொஞ்சம் கொஞ்சமா ‘செட்டில்’ ஆகிக்கொண்டு வந்த காலம் அது.
அந்தக் காலத்து வீடுகளைப்போல ஒட்டுத் திண்ணை, பெரிய திண்ணை, முற்றம், தாழ்வாரம், சில அறைகள், நெல் சேமித்துவைக்கும் பத்தாயம், சமையல்கட்டு, பின்கட்டு, கிணறு இரண்டாம் கொல்லை என்றெல்லாம் இருந்தது. இப்போது வழக்கில் இல்லாத ரேழி, ஆளோடி, கூடுவாமூலை என்ற சொற்களால் சில இடங்களைக் குறிப்பிடுவார்கள்.
வீடு நிறைய மனிதர்கள். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மற்றும் குழந்தைகளாகிய நாங்கள் ஆறு பேர். வீட்டோடு ஒரு மூதாட்டியும் இருந்தாள். தாத்தாவிற்குத் தமக்கையோ, அண்ணியோ ஏதோ உறவு முறை. அப்பா, அம்மா உட்பட நாங்கள் எல்லோரும் அவர்களை ‘அயித்தா’ என்று அழைப்போம். சித்தப்பா, பெரியப்பா, அத்தை என்று என் தந்தையின் உடன்பிறந்தோர் யாரும் கிடையாது. பாட்டிக்குப் பிறந்த குழந்தைகளில் என் அப்பா மட்டும்தான் தங்கினாராம்.
எங்களைச் சுற்றி இருந்த உறவினர்கள் பெரும்பாலும் தாத்தா வழிதான் என்று நினைவு. எப்போதாவது பாட்டியின் உடன்பிறப்பு என்று ஒரு சின்னப் பாட்டி வருவதுண்டு. பொம்பிளைத் தாத்தா என்று அழைக்கப்படும் ஒரு மாமா தாத்தா வருவதும் உண்டு. (அவர் ஊர் பொன்மலை என்றும் பொன்மலைத் தாத்தா மருவி பொம்பளைத் தாத்தா ஆயிற்று என்று பின்னாளில் தெரியவந்தது.) என் அம்மா வழியில் உறவினர்கள் யாரும் வந்து போனதாக எனக்குத் தெரியவில்லை.
வருஷத்திற்கு இருமுறை எங்கள் தாத்தா தனது பெற்றோருக்குக் கொடுக்கும் திதிகளில் பக்கத்து ஊர்களிலிருந்து கூட உறவுக்காரர்கள் வருவார்கள். சாப்பாடு இரண்டு பந்தி நடக்கும். என் வயதை ஒத்த சிறுவர்களும் வருவார்கள் என்பதால் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக அந்த ஓரிரு தினங்கள் கழியும்.
எதிலும் விசேஷ கவனமின்றி, பள்ளிக்கூடம், விளையாட்டு, சாப்பாடு என்று போய்க்கொண்டிருந்தது. தீபாவளி போன்ற பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுவோம். இப்போது யோசித்துப் பார்த்தால், எல்லா உறவினர்களுக்கும் தாத்தாவிடம் ஒரு மரியாதையும் பயமும் இருந்ததுபோலத் தெரிகிறது. தாத்தாவிற்குக் கணிசமான சம்பாத்தியம் என்று தோன்றுகிறது. அப்பாவும் ஏதோ சம்பாதித்ததால் பணத்தட்டுப்பாடு இருந்ததில்லை என்று நினைக்கிறேன் . உறவினர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கலும் இருந்திருக்கும். அதில் தாத்தா எப்போதும் ‘கொடுக்கல்’ தான். பணத்தைத் திருப்பிக்கேட்டு அதில் கொஞ்சம் கசமுசாவும் உண்டு.
தெருவிலேயும் திண்ணையிலேயும் விளையாடிக்கொண்டும் வீட்டுப்பாடம் செய்துகொண்டும் பெரும்பகுதி நேரம் கழிந்தாலும், சமயத்தில் வீட்டிற்கு உள்ளேயும் போவோமல்லவா? அந்தச் சமயத்தில் சில சமயம் பெரியவர்கள் சத்தம் போட்டுக்கொண்டோ, குசுகுசு என்று பேசிக்கொண்டோ இருந்தால், ஏதோ பிரச்சினை என்று புரியும். திட்டு வாங்குவதற்குள் ஓடி வந்துவிடவேண்டும்.
வீட்டிலே பாட்டிதான் எல்லாம். ஆயித்தாவும் தன் பங்கிற்கு பாட்டிக்கு ஏதாவது ஆலோசனை சொல்லுவாள். குடும்ப விவகாரங்கள் எல்லாம் அயித்தா, பாட்டி தாத்தா மூவரும்தான் முடிவு செய்வார்கள். ஆனால், பணம் காசு விவகாரமெல்லாம் தாத்தாதான். என் அப்பாவோ, அம்மாவோ தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்வதுகூட கிடையாது. அந்தக் காலத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த விஷயங்களை ஓரளவு விவரம் தெரிந்தபிறகு அசைபோட்டபோது தோன்றியதுதான் இவை.
ஏதோ ஒரு சமயத்தில் அண்ணன் அப்பாவிடம் “நீங்கள் ஏன் தாத்தாவை ஏதும் கேட்பதில்லை?” என்று விசாரித்தான். அண்ணனிடம் அப்பா கூறியது இதுதான்.
“தவறோ, சரியோ பெரியவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவது பழகிப் போய்விட்டது. ஆனால், நீ என்னை இப்போது கேள்வி கேட்பதுபோல் எனக்கு என் அப்பாவைக் கேட்கத் தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதனால் ஒன்றும் பாழாய்ப் போகவில்லை.”
அண்ணன் நல்ல மார்க் வாங்குவான். சில நண்பர்கள் இவனிடம் பாடத்தில் சந்தேகம்கூடக் கேட்பார்கள். அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்று எல்லோரும் நம்பினார்கள். தம்பியும் தங்கையும் நல்ல பெயர் எடுத்துவந்தார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு என்னை மட்டம் தட்டுவது அயித்தா, தாத்தா மற்றும் பாட்டிக்கு விருப்பமான காரியம். அப்பாவும் அம்மாவும் மௌனிகள்.
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால், “நீயும் இருக்கியே…?”, “உடன் உடத்தவர்கள்”, “சமத்து தொட்ட கை”, போன்ற சொற்றொடர்களைத் தடைசெய்திருப்பேன்.
எங்கள் வீட்டிற்கு எதிரில் ‘முனிசிபாலிட்டி’ வேணு என்று ஒருவர் இருந்தார். அவர் மகன் குமரேசன் மூத்தவன். மூன்று இளைய சகோதரிகள் அவனுக்கு. குமரேசன் ஃபெயிலாகிப் ஃபெயிலாகி என் அண்ணன், நான், என் தம்பி மூவரின் வகுப்புகளிலும் அவன் இருந்திருக்கிறான். விளையாட்டுகளில் கெட்டிக்காரன். கில்லி-தாண்டு என்னும் விளையாட்டில் ஒரு புது ஆட்டத்தையே வடிவமைத்தவன். தெருவிலே சேர்ந்தாற்போல் இருந்த இரண்டு பெரிய காலி மனைகளில் அந்த ஆட்டம் நடக்கும். ஆட்டமிழக்காமல் ஒரு முழு ரவுண்டு வருவது ‘மலையேறுதல்’ என்ற வெற்றிக்கொடி.
முதல்முறையாக குமரேசன் கிட்டத்தட்ட ‘மலையேற’ இருந்தான். அந்தச் சமயத்தில் அவன் சித்தப்பாவும், மாமாவும் அங்கு வந்து அவனை இழுத்துப்போனார்கள். ‘முனிசிபாலிட்டி’ வேணு திடீரென்று இறந்துவிட்டாராம்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவன் ஒரு தானிய மண்டியில் வேலை செய்வதைப் பார்த்தேன். கவலையில்லாமல் திரிந்து வந்த அவனுக்குக் குடும்பப் பொறுப்பு. அம்மாவையும் சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டுமே? அந்த வயதில் புரிந்த அளவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
சில வருடங்களில் எங்கள் வீட்டிலும் காற்று திசை திரும்பியது.
‘அயித்தா’வின் காலம் முடிந்திருந்தது. தாத்தா சம்பாதிக்கப் போவதும் நின்று போயிருந்தது. அப்பாவின் சம்பாத்தியத்தில் வீடு ஓடியது. தாத்தாவின் ‘கொடுக்கல்கள்’ பல ‘வாங்கல்’ இல்லாமல் போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாகப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களையிழந்தன. திதி நாட்களில் வருவோர் குறைய ஆரம்பித்தார்கள்.
சிறுவர்களாகிய எங்கள்மீது அதிகம் விழவில்லை என்றாலும் வீட்டு நிலைமை ஓரளவிற்குப் புரிந்தது. அப்போது நான் பள்ளிப்படிப்பு முடித்திருந்த சமயம். ஒரே மாதத்தில் பாட்டியும் தாத்தாவும் மறைந்தார்கள். தம்பி தங்கைகள் பள்ளியில் இருந்தனர். அண்ணன் ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பு முடித்தான். அவனை அருகிலிருந்த நகரக் கல்லூரியில் சேர்த்தார்கள். என் அப்பாவின் நண்பர் ஒருவர் அவனைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து அவன் படிப்புச் செலவைத் தானே ஏற்றுக்கொண்டாராம். பாட்டி, தாத்தா இருந்தவரையில் என் அப்பாவிற்கு நண்பர்கள், அதிலும் உதவக்கூடிய நண்பர்கள் இருப்பார்கள் என்று யாரும் நினைத்துக்கூட இருக்கமாட்டார்கள்.
எப்படிச் சாதித்தார் என் அப்பா என்று தெரியவில்லை. பதினெட்டு வயதுகூட நிரம்பாத என்னை எங்கள் மாவட்டத்திலேயே இன்னொரு நகரத்தில் கவர்மெண்டும் இல்லாத, ப்ரைவேட்டும் இல்லாத ஒரு ஸ்தாபனத்திலே வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
என்னை ஒத்த பையன்களில், குமரேசன் தவிர, சம்பாதிக்கத் தொடங்கியது முதலில் நான்தான். ஏன், அண்ணன் பட்டப்படிப்பு முடித்து வேலைக்குப் போவதற்கு முன்பே நான் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். என் அம்மா அதை ‘கடவுள் செயல்’ என்பாள். வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது ஊரில் சிலருக்குப் பொறாமை.
எப்படியோ தினமும் பஸ்ஸில் அலுவலகத்திற்குப் போய்வரும் ஊழியன் ஆக மாறினேன். வீட்டிற்குத் திரும்ப பஸ்ஸிற்காகக் காத்திருந்தபோது, ‘சார் சார்’ என்ற குரல். யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அந்த நபர் என் தோளைத்தட்டிப் பேசியபோதுதான் என்னையும் ‘சார்’ என்று கூப்பிடுவார்கள் என்று உணர்ந்தேன்.
(என் ஊரிலேயே எனக்கு வேலை கிடைக்காதென்று அசாத்திய நம்பிக்கை. உள்ளூரில் விலைபோகாத மாட்டைக் கொம்பு சீவி, பெயிண்ட் அடிச்சு வெளியூர் சந்தையிலே விற்று விடுவார்களாம். அப்படித்தான் எனக்கும் வெளியூரில் வேலை கிடைத்ததோ?.என்னையும் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் காலமும் இருந்தது என்பது ஒரு பேராச்சர்யம்)
………………. இன்னும் வரும்.
“ நாளைக்கு வியாழக்கிழமையாயிற்றே, வருகிறீர்களா?”
“ எங்கே வர வேண்டும்?”
“இரான் ஆப்பிள் செண்டர் அருகே ஃபர்ஸ்ட் ஸ்கொயர் தாண்டி 148ஆவது ஸ்ட்ரீட்டில் ரெமாசானிக்கு! பர்வின் பொலீவார்டு வழியா க வந்து இடது புறம் திரும்ப வேண்டும்”
” அங்கென்ன விசேஷம்?”
”வந்து பாருங்களேன்!”
எனக்கு அரேபிய இரவுகளும் ஸ்ட்ராபெர்ரி ஹுக்காவும் அதன் ஆரஞ்சுப்புகையும், டேபிள்களுக்கு இடையே ஊடாடும் இடுப்பு தெரியும் சர்வர் நங்கைகளும், அவர்கள் தங்கத்தட்டின் மேல் பரப்பி வரும் ஷிஷ்லிக்கும், சிலோ கெபாபும், லிபிய மற்றும் அல்பெலா பொலொவும் கண்ணில் மின்ன சரி என்று தலையாட்டினேன்.
கொஞ்சம் கதை வசனம் உங்களுக்குச்சொல்ல வேண்டும்.
போன வாரம் வைஸ் ப்ரெசிடெண்ட் கூப்பிட்டனுப்பினார்.
” எதிர்பார்த்த மாதிரியே நாசர் அல் மஹ்ரூக்கி கவுத்துட்டான் ரகு!”
“அய்யோ! என்ன ஆச்சு க்ரிஷ்?”
” அதான் இரான் கோட்ரோ கம்பெனி!”
“ என்ன நம்ம ப்ரொபோசல் காலியா?”
“இல்லப்பா! நம்ம ப்ரொபோசல்தான் ஷார்ட் லிஸ்டட்!”
“ அட ! அப்பறம் என்ன க்ரிஷ்?”
“நீ வேற! நாசர் அல் மஹ்ரூக்கி இப்ப காலை வார்ரான்! அவனால தனியா டெமோ பண்ண முடியாதாம்!”
“ நாசமாப்போக! ஒரு வாரம் உயிரவிட்டு ட்ரயினிங் குடுத்தோமே!”
“ அவனுக்கு கான்ஃபிடென்ஸ் இல்லியாம்! உன்ன அனுப்பச்சொல்றான்!”
“நானா? நேத்துதான் சிட்னிலேர்ந்து வந்திருக்கேன்! நான் இப்ப மறுபடி கிளம்பினா, லதா ஹை கோர்ட்டுக்குப்போய்டுவா?”
“வேற வழியே இல்ல ரகு! ஒரு மில்லியன் டாலருக்கு மேல ரெவின்யூ! கிளம்பிடு! நா வேணா லதா கிட்ட பேசறேன்!”
நாசர் அல் மஹ்ருக்கியை கெட்ட வார்தையில் திட்டிக்கொண்டே அன்று இரவு டெஹ்ரானுக்குக்கிளம்பினேன்.
நாசர் இருக்கானே அவன் ஒரு ரசிக்கக்கூடிய ராஸ்கல். ஒமார் ஷ்ரீஃப் போன்ற வசீகர முகம். கச்சிதமாகத் திருத்தப்பட்ட ப்ரஷ் மீசை, ஒன்றிரண்டு நரை எட்டிப்பார்க்கும் ராயசம். தீபாவளி கம்பி மத்தாப்பு பத்த வைப்பதுபோல சிகரெட்டை ஒன்றை விட்டு ஒன்றைப்பற்ற வைத்து ஊதுவான். சுலபமாகச் சிரிப்பான். சாயங்காலம் சாப்பிட ஆரம்பித்தால் நடு இரவுவரை விடாமல் சாப்பிடுவான். இவன் புண்ணியத்தில் என் வெயிட் ஏறினதுதான் மிச்சம். எங்களின் இரானிய ஏஜண்ட். அட்சரம் சாஃப்ட்வேர் தெரியாது. என்னமோ இவந்தான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வேலை கத்துக்கொடுத்தாமாதிரி பேச்சு. உட்கார்ந்து செய்யவேண்டிய வேலையானால் கைவிரித்து விடுவான்.
“ழகு! உங்க ஆளுங்கள அனுப்பு! எல்லாம் துடியாக இருக்கானுவ! என்ன சாப்பிடுவீங்க மெட்ராஸுல?”
“ஒண்ணும் இல்லை! உடம்பு வளைஞ்சு சிரத்தையா வேலை செய்யணும், அவ்வளவுதான்!”
“ஓ! அவ்வளவு கஷ்டம் என்னால ஆகாது” என்று சிரிப்பான். உடனேயே, “ கம் ழகு! லெட்ஸ் க்ராப் யஃபிலாஃபெல்” என்று சடுதியில் அக்கம்பக்கத்து சாப்பாட்டு கிளப்பில் நுழைந்து விடுவான்.
ஒவ்வொரு நாளும் வீடு வீடு என்று மூன்று வேற வேற இடத்துக்குப்போகும் அவனைக் கேட்டேன்.
”என்னடா தகிடு தத்தம் இது? நேத்து வீடுன்னு கிழக்குப்பக்கம் போனே! இன்னிக்கு வடக்கால போறியே?”
சொன்னான்.
அவனுக்கு மூன்று மனைவிகள்!
எப்போதும்போல டெஹ்ரான் ஏர்போர்ட்டில் ஆரவாரமாக வரவேற்றான்.
“ ஆருயிர் நண்பா ! ழகு! தெரியும் நீ வந்து விடுவாய் என்று!”
“ ஒரு வாரம் இங்க வந்து ட்ரெயின் பண்ணினேனே! எதுக்குடா என் தாலிய அறுக்கற?”
பகபகவென சிரித்தான். “ கூல் ழகு!”
வளர்த்துவானேன்.
அடுத்த நாள் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை குடாய்ந்து குடாய்ந்து கேள்வி கேட்டார்கள் இரான் கோட்ரோ ஆசாமிகள். ஒரு வழியாகத் திருப்தியானவுடன் காண்ட்ராக்ட் காசு பத்தி ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட கறிகாய் பேரத்துக்குப்பிறகு ஒரு வழியாக எதிர்பார்த்ததுக்கு மேல் கொஞ்சம் கொசுறு கேட்டு வாங்கி கையெழுத்திட்டார்கள். அந்த சந்தோஷத்தில் நாசர் அப்படியே சிகரெட், கண்ராவி செண்ட் மற்றும் வியர்வை நாத்தத்துடன் என்னைக் கட்டிக்கொண்டான்.
இரான் கோட்ரோவின் ஜெனெரல் மானேஜர் பெஹ்ரூஸ் என்னை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.
“நாம் இப்போது பிஸினஸ் பார்ட்னர்கள். இன்று என் வீட்டில் உனக்கு விருந்து. என் மனைவி லாலெஹ் அருமையாகச் சமைப்பாள்!”
“நான் கொஞ்சம் கஷ்டமான விருந்தினன்! வெஜிட்டெரியன் மட்டும்தான்!”
“ கூல்! நாங்களும் முழுக்க முழுக்க வெஜிட்டேரியன்ஸ்!”
“என் மூன்றாவது மனைவிக்கு இரண்டு மாதமாக பீரியட் தள்ளிப்போகிறது. டாக்டரிடம் போக வேண்டும், என்னை மன்னித்துவிடுங்கள்!”
நாசர் விலகிக்கொள்ள பெஹ்ரூஸ் அவரே என்னைக் காரில் வீட்டுக்கு அழைத்துப் போவதாகச்சொன்னார்.
அவர் வீட்டு ஹால் ஏதோ நம் பக்கத்து வீட்டின் ஹால் போல ரம்யமாக இருந்தது. உள்ளிருந்து ஊதுவத்தி மணம். சன்னமாக எங்கோ ஒரு பாடல் ஒலி. பேஹாக் ராகம்போல ஒரு குழைவும் இழைவும். பெஹ்ரூஸின் மனைவி லாலெஹ் சின்னதாக வெளிர் முகத்துடன் தாராள சிரிப்புடன் இருந்தார்.
“யூ லைக் ரசம்?”
அபார எலுமிச்சை ரசம். ஆனால் கொத்தமல்லிக்குப்பதிலாக புதினா வாசம்! சோளத்தில் பண்ணின ரோடியும், சுரைக்காயில் செய்த சப்ஜியும், இரானிய ஸ்வீட்டுமாய் அமர்க்களமான விருந்து. சாப்பிட்டவுடன் ஹாலில் உட்காரவைத்து க்ரேன்பர்ரியில் செய்த ஜூஸில் தேன்விட்டு பாதாம்பொடிகள் தூவின ஒரு அமிர்தத்தோடு உண்ட மயக்கம்!
“ழகு! நாளைக்கு மாலை நீங்கள் ஃப்ரீயாக இருந்தால் உங்களை ஒரு இடத்துக்கு அழைத்துப்போக ஆசை?”
” ஃப்ரீதான்! எங்கே?”
சரியாக ஏழு மணிக்கு ஓட்டல் வாசலிலிருந்து கால் பண்ணி அழைத்துக்கொண்டு போனார்.
”நேத்து லாலெஹ் சொன்னாளே அதான் இந்த ஃபர்ஸ்ட் ஸ்குயர்! அப்படிப்போய் திரும்பினால் 148 ஆவது ஸ்ட்ரீட்.”
சற்றே குறுகிய பாதை. அமைதியாக இருந்தது. எந்த வீட்டிலும் அதிக வெளிச்சமில்லை. தெருவில் நிறைய கார்கள். ஆனால் அதிக நடமாட்டம் இல்லை. அந்தக்கால மர்ஃபி ரேடியோபோல சதுரமும் செவ்வகமும் இல்லாத ஒரு கட்டிடம். அபார்ட்மெண்ட்போல இருந்தது. மூன்று மாடிகள்தான் இருக்கும். உள்ளே நுழைந்து இடது பக்கம் படியேறி ஒரு சிறு லேண்டிங்கில் திரும்பி மறுபடி மேலேறினோம். சட்டென்று விரிந்த காரிடார். எதிர்எதிரே ரெண்டு கதவுகள். வலது பக்கத்தைத் தேர்ந்தெடுத்துத் தட்டினார்.
உள்ளே மெல்லிசாக பேச்சுக்குரல். எனக்கு அட்ரினாலின் ப்ரவாகம்!
திறக்கப்பட்ட கதவில் நுழைந்தோம். நீண்ட பாதையில் ஷூக்களைக் கழற்றச்சொன்னார். தாண்டினால் மஹா ஹால். முன்னால் ஒரு இருபது பேர் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். ஒரு பக்கமாக ஆண்களும் அந்தப்பக்கம் பெண்களும். எல்லோரும் பர்தாவை தூக்கி கழுத்தில் சுற்றியிருந்தனர். அபார அரேபிய பளபளப்பு முகங்கள். மெல்லிய குரலில் கிசுகிசுப்பான அரபிக் பேச்சு தவிர அமைதிதான். எல்லோருக்கும் முன்னால் எதிரே பெரிய சிம்மாசனம். மலர் அலங்காரம். கால் வைத்துக்கொள்ள ஒரு சின்ன ஸ்டூல். அதிலும் பட்டுத்துணி போர்த்தப்பட்டு ஒரு குழந்தை மலர் காத்திருந்தது. ஊதுவத்தி மணம்.
“பெஹ்ரூஸ்! எப்படி சாத்தியம் இது?”
“எல்லாம் அவர் கருணைதான்! இது வரை எங்களிடம் யாரும் எதுவும் கேட்டதில்லை!”
அந்த சிம்மாசனத்தில் பரந்த தலை முடியுடன் சிவப்பு அங்கியோடு அபய ஹஸ்தம் காட்டும்…………..
புட்டபர்த்தி சாய் பாபாவின் உருவப்படம்.
”தினக் தினக்” என்று ஒரு சின்ன மேள சப்தத்துடன் இரான் தலை நகரில் ஆப்பிள் செண்டருக்கு அருகேயுள்ள 148ஆவது ஸ்ட்ரீட்டில் வியாழக்கிழமை பஜன் ஆரம்பித்தது.
இரண்டாவது அத்தியாயம்
சென்ற அத்தியாயத்தைப் படித்தவர்கள் சிலர் மிகப்பிரபலமான ஒரு ஆங்கில வசனத்தை (ஷேக்ஸ்பியர் எழுதியது) மேற்கோள் காட்டி இருந்தனர்
உலகமே ஒரு நாடக மேடை அதில் நடிப்பவர்கள் யாவரும் நடிகர்கள்
ஒப்புக்கொள்கிறேன் உலகமே நாடக மேடைதான். நாம் எல்லோரும் நடிகர்கள்தான். இருந்தும் சிலர்தானே பிரபலமான நடிகர்கள் ஆகிறார்கள். எல்லோரும் இல்லையே !
அந்த வாக்கியத்தை இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த உலகைப் படைத்தவன், ஒரு திரைக்கதை எழுதுகிறான். அதில் நாம் எல்லோரும் பாத்திரமேற்று அவன் எழுதியபடி நடிக்கிறோம்.
நமக்குத் தெரியாமல் அவன் நாம் ஏற்று இருக்கும் பாத்திரத்தையும் காட்சி அமைப்புகளையும் அப்போதைக்கு அப்போதுதான் எடுத்துச் சொல்கிறான். முன்கூட்டித் தெரிவிப்பதில்லை ! ஒரு ரிகர்சல் பார்ப்பதில்லை! நேரடியாக ஆக்ஷன் தான்.
ஆகையால் இது அந்த நேரத்து நடிப்பு !
எந்த ரசிகனுக்காகவும் நடத்தப்படுவதில்லை
நம்மைப் படைத்தவனுக்காக , அவன் இஷ்டப்படி ஆட்டுவிக்க நாமும் ஆடுகிறோம்.
இதில் நம் நடிப்பு எங்கே வெளிப்படுகிறது ? திறமை எங்கே உள்ளது ?
ஆனால் இங்கு மேடையில் , தொலைக்காட்சியில் , திரைப்படத்தில் நிலைமை அப்படி இல்லையே !
இறைவன் நடத்தும் நாடகமாகிய நமது வாழ்க்கையில் நமக்கு அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது.
வாசலில் ஒரு அழைப்பு மணி ஒலிக்கும்போது யார் அழைக்கிறார்கள் என்று தெரியாது.
ஸ்கூட்டரில் போனால் அது பஞ்சர் ஆகுமா என்று தெரியாது.
பஸ் பிரேக் டவுன் ஆகாமல் போகுமா என்று தெரியாது.
அலுவலகம் போனால் மேனேஜரிடம் திட்டு விழுமா எனத் தெரியாது.
காதலி காத்திருப்பாளா இல்லை கோபித்துக்கொண்டு போய் விடுவாளா என்பது தெரியாது.
அடுத்த மாதம் நமக்கு உடம்பு சரியில்லாமல் போகுமா தெரியாது.
ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையில் நமக்கு சஸ்பென்ஸ்தான்.
இப்படி இருக்கையில் நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கப் போகிறவர்கள் யார் ? யாருடன் நமக்கு பகைமை ஏற்படப் போகிறது? யாரை நாம் எப்போது இழக்கப் போகிறோம் ? பத்து வருடங்கள் கழித்து நாம் யாராக, எங்கே, எப்போது , எப்படி இருக்கப் போகிறோம் என்பது கடவுள் நமக்கு அமைத்து வைத்திருக்கும் மர்மங்கள் நிறைந்த ஸ்கிரிப்ட் வாழ்க்கை .
இதைத்தான் வள்ளுவர்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து உலகு.
என்கிறார்.
ஆனால்
நீங்கள் நடிகனாக ஏற்கும் கதாபாத்திரத்தைப் பாருங்கள்.
ஒரு நடிகனுக்கு அவன் ஏற்கும் கதா பாத்திரங்கள் என்னவாகப் போகிறது, எப்போது இறக்கப்போகிறது என்று சகல விவரங்களும் தெரியும்.
அவன் ஆயுள் எழுபது வருடங்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கதா பாத்திரம் என்னவாகப் போகிறது என்று அவன் அறிவான்.
தனது மகனை அன்பான பாசமுடன் வளர்க்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு அவன் வளர்ந்தபின் பெரிய கிரிமினல் ஆகித் தன்னையே எதிர்க்கப்போகிறான் என்று முன்கூட்டியே தெரியும்
(தங்கப்பதக்கம் திரைப்படம்)
தான் காதலிக்கும் பெண் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை மணக்கப்போகிறாள் என்று காதலனுக்குத் தெரியும்.
நெருங்கிய நண்பன் துரோகியாக மாறினால் அதுவும் முன் கூட்டியே தெரியும் .
என்ன இது ? இப்படி எல்லோருக்கும் தெரிந்த ஒரு சாதாரண விஷயத்தை ஏதோ ஒரு பெரிய விஷயம் போலச் சொல்கிறேனே என்று சலித்துக் கொள்கிறீர்களா?
( தொடர்ந்து பேசுவோம் )
ஆசிரியர் தினத்தன்று பிறந்த நாள் காணும் தன்னிகரில்லாத் தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களை நினைவு கூர்வோம்.
சிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் தன்னுடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம்.
பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார்.
இது ஒரு வரலாற்று ஆவணம்.
அவருடைய குடும்ப வரலாறு, அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன இதில் இடம் பெறுகின்றன.
அதிலிருந்து சில வரிகள் :
இள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப்பற்றி:
“சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,
குதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,
காற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல
சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி
நெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
‘தம்’ மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி
நிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்
அடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்.”
சிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:
“தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;
அரும்பொன் காலிடல் அபசாரமாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே”
செக்கிழுத்ததைப் பற்றி:
“திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான், உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே!”
ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டிய தமிழர், தொழிலாளர்களுக்காகப் போராடிய தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரத்துக்காகத் திலகரைத் தலைவராகக்கொண்டு கர்ஜித்த சிங்கம் , நீதி மன்றத்தில் சுதேசிகளுக்காக் குரல் எழுப்பிய வழுக்குரைஞர் கடைசியில் சிறைப்பட்டு, செக்கிழுத்து வறுமையில் வாடினார் என்பதை எண்ணும்போது கல்லும் கரையும்.
வ உ சி அவர்களே எழுதிய இந்தப் பாடலைப் படித்தால் நெஞ்சம் விம்மும்.
வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று – சந்தமில் வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து.
அப்படிப்பட்ட வ உ சியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படம் தான் சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன்.
இத்திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.
சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன.
கதையை ம. பொ. சிவஞானமும், திரைக்கதையை கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ். டி. சுந்தரமும் எழுதியிருந்தனர்.
இது வீரபாண்டிய கட்டபொம்மனை தயாரித்து இயக்கிய பி. ஆர். பந்துலு அவர்கள் இயக்கித் தயாரித்த திரைப்படம்.
இப்படம் 1962ல் 9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது
இது வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்.
இப்படத்தில் வ உ சியாக வாழ்ந்து காட்டிய சிவாஜியின் நடிப்பின் சில பரிமாணங்களை இந்த வீடியோவில் காணலாம்.
சாரு நிவேதிதா, விவேகம் படத்திற்கு அவரது வழக்கமான பாணியில் விமர்சனம் சொல்லப் போக , அதற்காக அவருக்குக் கொலை மிரட்டல் வர, அதற்காக அவர் அஜித்துக்கே ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியது இப்போது தமிழ் நாட்டில் பரவலான சமாசாரம்.
முதலில் அவரது விமர்சனத்தைக் கேட்கலாமா?
மை டியர் அஜித்,
மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்கமுடியவில்லை. உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு பல எண்களிலிருந்து ஆபாச வசைகள் வந்தன. மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் என் பேச்சுக்குக் கீழே உள்ள பின்னூட்டங்களில் தங்கள் அடையாளத்துடன் தங்கள் தொலைபேசி எண்ணுடன் என்னை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள். ”உன் மகள் —————(ஜனன உறுப்புக்கான தமிழ்க் கொச்சை) காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருக வேண்டும்” என்று உங்கள் ரசிகர் ஒருவர் எழுதியிருக்கிறார். இதெல்லாம் சமூக மனநோய். இதையெல்லாம் இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏன் எதுவுமே சொல்லவில்லை? என்னை விட ப்ளூ ஷர்ட் மாறனுக்கு அதிக கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. எல்லோரும் தங்கள் தொலைபேசி எண், பெயர் எல்லாம் போட்டுத்தான் மிரட்டுகிறார்கள் என்பதால் அவர்கள் வெறுமனே பயமுறுத்தவில்லை; சொன்னதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. உங்கள் ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து எல்லோரையும் என்னை மிரட்டச் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே என் உயிர் பற்றி எனக்குப் பயமாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கும் நண்பராக இருந்தார். அப்போது அவர் உங்களைப் பற்றிக் கூறிய விஷயங்கள், உங்களைப் போன்ற ஒரு பண்பாளரைப் பார்ப்பது அரிது என்பதாகவே இருந்தது. உங்களைப் பற்றி உங்களோடு பழகும் அத்தனை பேருமே அப்படித்தான் சொல்கிறார்கள். முந்தாநாள் தி இந்துவில் வந்துள்ள இந்தக் குறிப்பைப் பாருங்கள்:
உங்களுக்கு நெருக்கமான ஒரு டாக்டர் – அவர் தன் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை – கூறுகிறார்: “ஒருமுறை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அஜித்தைப் பற்றிக் கேட்டதும் எதார்த்தமாக அவரைப் பற்றி எப்படி உணர்ந்தேனோ அதே போன்று ஹி இஸ் அ ஸ்வீட் பர்ஸென் என்று சொன்னேன். பேட்டி ஒளிபரப்பானதும் அஜித் என்னை அழைத்தார். “நான் நடிகன், பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்வதற்காகக் கட்டணம் பெற்றுக் கொள்கிறீர்கள். இதில் நடிகனுக்கு மட்டும் எங்கிருந்து கிரீடம் வந்தது? எதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் புகழ வேண்டும்?” என்று என்னை வாங்கு வாங்கென்று வாங்கினார்.
அது மட்டும் அல்ல; அந்த டாக்டரைப் பார்ப்பதற்காக முறையாக அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வரிசையில்தான் செல்வீர்களாம். கேட்டால் “உங்களுக்கு நண்பன் என்பதற்காக உங்கள் தொழில் எதிக்ஸைக் கெடுப்பது சரியாக இருக்காது” என்று சொல்வீர்கள் என்று எழுதுகிறார் உங்கள் நண்பர்.
அஜித், என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நான் இதுவரை 80 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் 20 புத்தகங்கள் மலையாளத்தில் உள்ளன. உலக சினிமா பற்றி மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் என் எழுத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உங்கள் விவேகம் பற்றி நியாயமான முறையில் மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் விமர்சனம் செய்தேன். நான் பொதுவாக தமிழ் சினிமா பார்ப்பதில்லை. ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்களை – நண்பர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே பார்ப்பது வழக்கம். ஆனால் மெட்ராஸ் செண்ட்ரலில் தமிழ்ப் படங்களை விமர்சனம் செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதால் விவேகத்தை முதல் நாள் பார்த்தேன். நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்தி விமர்சித்தேன். சினிமாவையும் மீறி உங்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையுமே அதற்குக் காரணம். இல்லாவிட்டால் விவேகத்தில் இடைவேளை வரை இயக்குனர் சிவா கொடுத்த டார்ச்சருக்குக் கன்னாபின்னா என்றுதான் திட்டியிருக்க வேண்டும். அதற்காக இடைவேளைக்குப் பிறகு டார்ச்சர் இல்லை என்று அர்த்தமில்லை.
ரகசிய போலீஸ் 115 என்று நினைக்கிறேன். எம்ஜியார் பாகிஸ்தான் ராணுவத்தை ஒற்றை ஆளாக போட்டுத் தள்ளி விட்டுத் தப்பி ஒரு வேலியைத் தாண்டிக் குதிப்பார். அதில் தமிழில் இந்தியா என்று எழுதியிருக்கும். அதையெல்லாம் என் சிறுவயதில் ரசித்தேன். இப்போதும் எல்லோரும் அதே மனநிலையில் இருப்பார்களா? சிவா இன்னும் ரகசிய போலீஸ் 115 காலத்திலேயே இருக்கிறார். விவேக் ஓபராய் போன்ற வில்லனை எம்ஜியார் படங்களில் கூடப் பார்த்ததில்லையே அஜித்?
சரி, போகட்டும். உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு என் தொலைபேசியில் கொலை மிரட்டல் விட்டுக் கொண்டும் ஆபாச வசைகளை எழுதிக் கொண்டும் இருப்பவர்களை நீங்கள் எப்போது கண்டிக்கப் போகிறீர்கள்? அல்லது, ஒன்று செய்யுங்கள். என் வீடு சாந்தோம் – மயிலாப்பூர் எல்லையில் எம்.எஸ். விஸ்வநாதனின் வீட்டுக்கு எதிரே உள்ளது. சீக்கிரம் ஒருநாள் என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்குப் பிடித்த பிரியாணி செய்து தருகிறேன். உங்களுக்கு நான் பிரியாணி பரிமாறுவதை செல்ஃபீ எடுத்து ட்விட்டரில் போட்டால்தான் கொலைகார ரசிகர்கள் என்னை உயிரோடு விடுவார்கள். சீக்கிரம் வாருங்கள்.
பின்குறிப்பு: நீங்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை நல்லவராக இருந்தாலும் தவிர்க்கவே முடியாமல் ஒரு சிறுதெய்வம் ஆகி விட்டீர்கள். நடிகர்கள் அத்தனை பேருமே சிறுதெய்வங்கள்தான். உங்கள் ரசிகர்கள் எல்லோரும் பக்தர்கள். அதனால்தான் படத்தை விமர்சித்தால் தங்கள் கடவுளை விமர்சித்து விட்டதாக எண்ணிக் கொலை மிரட்டல் விடுகிறார்கள். தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம். அதை நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும். அரசியலில் கூட இந்த நிலை இல்லை. நான் ஜெயலலிதாவை விமர்சித்திருக்கிறேன்; கருணாநிதியை விமர்சித்திருக்கிறேன். மோடியை விமர்சிக்கிறேன். இதுவரை ஒரு மிரட்டல் வந்ததில்லை. உங்களுடைய ஒரே ஒரு படத்தை நாகரீகமான முறையில் விமர்சித்ததற்குக் கொலை மிரட்டல்; ஆபாச வசை.
இந்த நிலையை மாற்ற முயலும் என் போன்ற சிறியவர்களுக்கு உங்களைப் போன்ற கடவுள்களின் ஆதரவு தேவை. அட்லீஸ்ட் நான் கடவுள் இல்லை என்று உணர்ந்து கொண்ட உங்களைப் போன்ற நடிகர்கள் இதற்குத் தங்களால் ஆன ஆதரவை நல்க வேண்டும்.
தங்கள் நண்பன்
சாரு நிவேதிதா
மிக அழகிய அரண்மனை அது. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், கோட்டைக் கொத்தளங்களும், சுற்றிச் சுழன்றோடும் நீர்ச்சுனைகளும் கொண்டு, மன்னனின் ரசனைக்கு அத்தாட்சியாக நின்றுகொண்டிருந்தது!..
நீண்ட தூரப் பயணம். முகத்திலும் உடலிலும் களைப்பின் அறிகுறிகள். அரண்மனை வாயிலில் வந்து, நிமிர்ந்து நின்று, “நான் ஒரு செந்தமிழ்ப் புலவன். அரசரைக் காண வந்துள்ளேன்’ என்கிறான் வந்தவன்.
தோற்றத்திலும், சொற்களின் தோரணையிலும் அவன் புலவன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
கூர்மையானது வாள் மட்டுமல்ல, பார்வையும் கூடத்தான். அங்கிருந்த காவலாளி – அந்தக் கணமே விரைந்து அரசராணையை நிறைவேற்றுகிறான்.
புலவரை மிக்க மரியாதையுடன் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறான். பட்டுப் பீதாம்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரவைக்கிறான் – மேலிடத்து உத்தரவு அப்படி!
“யாரங்கே?” – தட்டிய கையொலிக்குப் பணியாரங்களும், பழரசங்களும் புலவன் முன் அணிவகுக்கின்றன!
”அரச மண்டபத்தில் அதிமுக்கியமான நாட்டு நிலவரம் குறித்த ஆலோசனையில் அரசனும், மந்திரியும், சேனாதிபதியும், மற்றும் முக்கிய அதிகாரிகளும் தீவிரமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அரசரது அனுமதி பெற்று விரைந்து வருகிறேன்; அதுவரை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்” – மின்னலென மறைகின்றான் காவலன்.
ஆசனத்தில் அமர்ந்தபடியே, கண்களைச் சுழல விடுகின்றார் புலவர். விருந்தினர் மாளிகையின் பொலிவு அவரை மயக்குகிறது – தன் தோளில் போர்த்தியுள்ள பட்டு வஸ்திரத்தின் விசிறி மடிப்புகளைச் சரி செய்துகொள்கிறார் – அதிலிருக்கும் கிழிசல் வெளியே தெரியா வண்ணம்!
”மன்னா, உன் கொற்றம் வாழ்க! கொடை வாழ்க!! வெகுதூரத்திலிருந்து தங்களைக் காண ஒரு புலவர் வந்திருக்கிறார். விருந்தினர் மாளிகையில் தங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் மன்னா!”
“அப்படியா, மிக்க நன்று. அமரச் செய்து தாகத்திற்கு ஏதேனும் கொடு”
“ம்ம், மந்திரியாரே, இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியமானது – இடையில் நிறுத்தக் கூடாதது. வந்திருக்கும் புலவருக்குத் தேவையான சன்மானம், பொன், ஆடை ஆபரணங்களை அளித்து, வழியனுப்பி விட்டு வாருங்கள். மற்றுமொரு சமயம் நான் அவரை சடுதியில் சந்திப்பதாகவும் சொல்லுங்கள்.”
’உத்தரவு மன்னா – அப்படியே செய்கிறேன்”
ஒரு பார்வையில், காவலாளிகள் இருவர் பின் தொடர, மந்திரியார் விருந்தினர் மாளிகை நோக்கி நடக்கிறார் – மனம் மட்டும் இங்கேயே மன்னரின் ஆலோசனைக் கூட்டத்தில்!
மந்திரியாரின் நடை, உடை மற்றும் பின் தொடரும் காவலாளிகளைக் கண்டு, மரியாதையுடன் எழுந்து, வணங்கி நிற்கிறார் புலவர்.
மந்திரியார், அகமும், முகமும் மலர வணங்கி, “ வணக்கம் புலவரே, தங்கள் வரவு நல்வரவாகுக! எங்கள் நாட்டில் தங்கள் புனிதப் பாதம் படரக் கொடுத்து வைத்திருக்கின்றோம் – நான் இந்நாட்டின் முதன் மந்திரி!”
”வணக்கம்! மன்னரின் தரும குணமும், தயாள மனமும் கேள்விப்பட்டு அடியேன் வந்துள்ளேன். இந்த இடமும், காவலரின் பண்பும், விருந்தினரை உபசரிக்கும் விதமும் நான் கேள்விப்பட்டதை உறுதி செய்கின்றன! மிக்க மகிழ்ச்சி! மன்னரைக் காணும் ஆர்வத்தில் உள்ளேன் – அவரது செங்கொடையும், கொற்றமும் செழிக்கப் பாடல் இயற்றியுள்ளேன்!”
“மிக்க நன்று. தீந்தமிழையும், தெய்வப் புலவர்களையும் போற்றிப் பாராட்டுவதிலும், வாரி வழங்குவதிலும், வாழ்த்தி வணங்குவதிலும் பேரானந்தம் கொள்பவர் எம் மன்னர்! ஆனால்….. இன்று ஒரு முக்கிய அரசு ஆலோசனைக் கூட்டம்; அரசரால் உங்களை நேரில் காண இயலாது – வருந்துகிறேன். அவர் ஆணைப்படி, இந்தப் பரிசுகளை, எங்கள் நாட்டின் சீராக உங்களுக்களிப்பதில் பெருமையடைகிறேன்!”
புலவர் முகம் மாறுகிறது – கோபமா, வருத்தமா அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை! பரிசு, பட்டம், பதவி என்றால் உடனே ஓடிச் சென்று வாங்கிக் கொள்வதுதானே முறை? அதுவும் அரசனே கொடுக்கும்போது தடை என்ன இருக்கமுடியும்? தொலை தூரத்திலிருந்து, கிழிந்த மேலாடையுடன் உதவி நாடி வந்திருக்கும் புலவன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே? என்ன தயக்கம்?
அந்தக் காலத் தமிழன் தன் மீதும், தன் திறமை மீதும் மிகவும் நம்பிக்கையும், உவப்பும் கொண்டவன்.
குமுறுகிறார் புலவர் –
‘பெருங்குன்றுகளையும், மலைகளையும் கடந்துவந்து, மன்னரைக் கண்டு, போற்றிப் புகழ்ந்து, மகிழ்வித்துப் பரிசில் பெற வந்திருக்கும் எனக்கு என்ன பரிசு தகுதியானது என்பதனை,என்னைக் காணாமலே, எங்ஙனம் உங்கள் மன்னர் தெரிந்து கொண்டார்? எதற்காகப் பரிசு? நான் புலவன் என்பதாலா? என் புலமை என்னவென்றே அறியாமல் என் திறமைக்குப் பரிசை எங்ஙனம் நிர்ணயம் செய்யமுடியும்? நானென்ன வாணிகப் பரிசிலனா?
என்னைச் சிறிது நேரம் பார்த்து, அறிந்து, போற்றி, தினை அளவு பரிசு தந்தாலும் அதனைப் பெரிதாய் எண்ணி மகிழ்வேனே – அதுதானே இனிமையானதும் கூட!’
அரசனைக் காணாமல் பரிசை மட்டும் வாங்கிக் கொள்வதில் விருப்பமற்ற புலவர் – திறமைக்கேற்ற பரிசு, விருது – கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அந்நாளில் தெரிந்திருந்தது!
208 – புறநானூற்றுப் பாடல்
பாடியவர் – பெருஞ்சித்திரனார்
பாடப்பெற்றவர் – அதியமான் நெடுமான் அஞ்சி
திணை – பாடான் திணை
துறை – பரிசில்
பாடல்:
குன்றும் மலியும் பல பின் ஒழிய
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு’ என
நின்ற என் நயந்து அருளி ‘ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க,தான்’ என, என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அருங் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,
தினை அனைத்து ஆயினும், இனிது – அவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.
இந்தப் புறநானூற்றுப் பாடல், அந்தக் காலத் தமிழரின் நேர்மை, தன்னம்பிக்கை, தகுதிக்கேற்ற பரிசு / விருது போன்றவை குறித்துப் பேசுகிறது. – (படித்ததில் பிடித்தது!!)
(பரிசு / விருதுகள் இன்று அளிக்கப்படுவது, பின்னர் ஒரு நிலையில் திருப்பப்படுவது, என்பதைப்பற்றியெல்லாம் யாராவது இன்று குழப்பிக்கொண்டால் அதற்குப் பொறுப்பு நானல்ல – சங்க காலப் புலர்கள்தாம்!)