இலக்கிய வாசல் – மூன்றாம் நிகழ்ச்சி

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற 

பிரபல எழுத்தாளர்   பிரபஞ்சன் அவர்களுடன் 

ஒரு நேர் காணல் !

image
image

இடம் 

 ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் சாலை ஆழ்வார்ப்பேட்டை , சென்னை 600018 

நாள்

சனிக்கிழமை 20 ஜூன் 2015 மாலை 6.30 மணி 

அவருடைய நாவல்களைப் பற்றிய விளக்கங்களை  அவரிடமே நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள ஓர்  அருமையான சந்தர்ப்பம்!

தங்கள் வினாக்களை முன்னதாகவே அனுப்பினால் சிறப்பாக இருக்கும். 

வினாக்களை  தங்கள் பெயர், கைபேசி எண்ணுடன்  ilakkiyavaasal@ gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்!!

ஷாலு மை  வைஃப்

image

“ஷாலு உன்னுடைய தீர்மானத்தில் மாற்றமில்லையா? ”

என் கணவன் என் தோழன் “ சீரியலில் சூர்யா,  சந்தியா கிட்டே  கெஞ்சுவது போல் கேட்டுக் கொண்டிருந்தேன் . 

"குருஜினிக்கு ஆயிரம் சிஷ்ய கேடிகள் சாரி கோடிகள்  இருக்கும் போது சிங்கப்பூர் போக உன்னை ஏன்  தேர்ந்தெடுக்கணும்? ”

 இந்தக் கேள்வியை நான் ஆக்டிவ்  வாய்ஸில பாசிவ்  

வாய்ஸில மற்றும் பல

வாய்ஸில கேட்டும் ஷாலுவிடமிருந்து சிறு புன்னகைக் கீற்றைத் தவிர எந்த மறுமொழியும் வரவில்லை. நான் நவராத்திரி சிவாஜி மாதிரி நவ ரசத்தையும் பிழிஞ்சது தான் மிச்சம். 

திடீரென்று ஞாபகம் வந்தது. இதுக்கு சரியான ஆள் ஷிவானி தான். அவள் அடம் பிடிச்சா யாரும் அவ கிட்டே குறுக்கப் பேச முடியாது. அவளிடம் நன்றாகப் புரியும்படி பத்து நிமிஷம் சொல்லி அவளை ஷாலுவிடம் அனுப்பி வைத்தேன். ‘அப்பா சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே !’ என்று நன்றாக எச்சரித்து அனுப்பினேன். 

“கவலைப் படாதே அப்பா ! அம்மா நம்மளை அம்போன்னு விட்டுட்டு சிங்கப்பூர் போக மாட்டா’ என்று துர்கா படத்தில் பேபி ஷாலினி            ( அவங்களே தான் ! நாளைய டாப் டக்கர் ஹீரோயின் !  அஜீத் மச்சினி – குமுதம் அட்டைப் படம் பாக்கலையா? ) சட்டை போட்ட குரங்குகிட்டே  பேசுவது போல் அபயக் குரல் கொடுத்தாள். அதுக்கு மேல ‘ஷிவானி இருக்க பயமேன்’ என்ற டான்ஸ் போஸ் வேற ! 

எனக்கு வேணும் என்று நொந்துகொண்டு அவளை பேசச்சொன்னேன் ! அடுத்த அறையில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டேன் ! அவர்கள் நிறைய டெசிபலில் பேசியதால் ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் அதுவாகவே என் செவிப்பறையைத் தாக்கியது! 


image

அம்மா ! நான் உன்கூடக் கொஞ்சம் பேசணும் !

பேசிக்கிட்டுத் தானம்மா இருக்கே !

அதில்லே! நான் கொஞ்சம் சீரியஸா பேசணும் !

உங்க அப்பா உன்கிட்டே இதைச் சொல்லச் சொன்னாரா ? 

 ஏன் அப்பா சொல்லித் தான் நான் பேசுவேன்னு நீ நினைக்கிறே ? 

நீ கேட்க வந்த தோரணையே உன்னைக் காட்டிக் கொடுத்திடுச்சு !

என்னன்னு ?

நீ அப்பாவுக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன்னு புரியுது !

நான் உனக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன் !

புரியலையே !

உனக்குப் புரியாதுன்னு தான் நான் விளக்கமா சொல்ல வந்திருக்கேன் !

எதைப் பத்தி ? 

எதைப் பத்தி நான் பேசப் போகிறேன்னு தெரியாம நீ ஏன் அப்பாவை நம்ம பேச்சில இழுக்கிறே ? 

நிச்சயமா இந்த மாதிரி எல்லாம் பேச உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் !

நான் என்ன பேச வந்திருக்கேன்னு தெரியாம நீ ஏன் விஷயத்தை விட்டு வெளியே போற ?

ஏன்னா நீ விஷயத்தைச் சொல்லாமல்  மென்னு முழுங்குரே ! 

நீ தான் விஷயத்தைச் சொல்ல விடாமல் என்னைத் தடுக்கப் பாக்கிறே ! 

நீ சொல்ல வேண்டியதை நேரா சொல்ல வேண்டியது தானே ?

நீ சொல்ல விட்டால் தானே ?

நீ இப்பிடித் தப்பா  சொல்வேன்னு எனக்குத் தெரியும் ! 

நீ இப்பிடித் தான் சொல்வேன்கிறது எனக்கும் புரியும். 

அட! அட! ராம் ஜேத்மலானியும் பராசரன் அவர்களும்  பேசுவது போல் இருந்தது ! ஒட்டுக்  கேட்ட என் காது ஓட்டை ஆயிடும் போல இருந்தது. அம்மாவுக்கு ஏத்த பொண்ணு என்று அவளை மனசில் பாராட்டினேன். 

அம்மா ! நீ குறுக்க குறுக்கப் பேசாதே  ! நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வர்றேன் !

அது தான் ..

உஸ்ஸ்.  நான் சொல்றதைக் கேளு ! நீ சிங்கப்பூர் போறது நம்ம வீட்டில ஒருத்தருக்குப் பிடிக்கலை !

இது தான் ஊர் அறிஞ்ச விஷயம் ஆச்சே! உங்க அப்பா மட்டும் தான் ஆரம்பத்திலேர்ந்து இதுக்கு முட்டுக் கட்டை போடறார். 

அம்மா ! மறுபடியும் நீ தப்பா பேசறே !

முதல்லே நான் என்ன தப்பா சொன்னேன் ? 

நான் தப்பா சொல்வேன்னு நீ சொன்னியே அது தான் உன் முதல் தப்பு !

ரெண்டாவது தப்பு ?

அப்பா மட்டும் தான் இதை எதிர்க்கிறார்னு நீ சொன்னது !

வேற யாருக்குப் பிடிக்கலை? உனக்கா? 

இல்லை ! நான் உன் கட்சி ! 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது !  பப்ளிக் பிராசிக்யூட்டர்  சேம் சைட் கோல் போடற மாதிரி இல்ல இருக்கு !

ஷாலுவும் கொஞ்சம் ஆடிப் போய்விட்டாள் என்று தான் தோன்றியது ! 

வேற யாருடி இதை வேண்டாங்கிறது ?

ஷ்யாம்  அண்ணா ! 

‘இதென்ன புது குண்டா இருக்கு’ என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். 

சும்மா உளறாதேடி!அவன் அன்னிக்கே ஒத்துக்கிட்டான். 

அது அன்னிக்கு! 

இன்னிக்கு மாறிடுச்சா?

ஆமாம்!

எப்படி?

அன்னிக்கு அவன் கிட்டே ஐ பேட் வாங்கித் தர்ரேன்னு  சொன்னே ! அதனால ஒத்துக்கிட்டான்.

ஆமாம். அதுக்கென்ன? 

இன்னிக்கு அவன் மைண்ட் மாறிடுச்சு ! கிரிக்கெட் பேட் தான் வேணுமாம் ! 

அதனால என்ன !  கிரிக்கெட் பேட் வாங்கித் தர்றேன் !

சாரி ஷாலும்மா ! நீ லேட்! அப்பா அவனுக்கு நேத்திக்கே பேட் வாங்கிக் கொடுத்திட்டார் !

அதனால கட்சி மாறிட்டானா?  

அதுமட்டுமல்ல. 

வேற என்னவாம்? 

நீ சிங்கப்பூரில் இருக்கப்போற பத்து நாளைக்கு அப்பா தான் சமைக்கப் போறேன்னு வேற சொல்லி அவனைப் பயமுறுத்தியிருக்கிறார் ! 

அதுமட்டுமல்ல !

எல்லாத்தையும் சேத்துச் சொல்லுடி!

அப்பா அவனுக்கு டெய்லி ஹிந்தி சொல்லித் தரப் போறாராம். கிரிக்கெட் கோச்சிங் வேற கட்டாம். இன்னும் ஒண்ணும் சொன்னாரே!

யார் ?

அதைச் சொல்ல மாட்டேன் ! ம்.  ஞாபகம் வந்திடிச்சு! “ All is fair in love and war” லவ்வுன்னா என்னாம்மா?

செவுள்ளே அறைஞ்சா காது ஜிவ்வுன்னு கேக்கும்! லவ்வாம் லவ்வு. எங்கேடி உங்க அப்பா ? 

ஐயோ ! அம்மா அப்பாவை அறையப் போரான்னு கத்திக் கொண்டே ஓடிப் போய் விட்டாள் ஷிவானி.

ஷாலு நேரா நான் இருக்கிற ரூமுக்கு வந்தாள். 

” என்ன இது! குழந்தையை இப்படிப் பேசப் பழக்கியிருக்கேள்? “

வேணுமுன்னா பாரேன் ! ஷிவானியை வக்கீலுக்குத் தான் படிக்க வைக்கப் போகிறேன் ! என்னமா ஆர்கியு பண்றா?

எனக்கும் ஷிவானிக்கும் நடந்தது ஆர்கியுமெண்ட் இல்லே ! சும்மா டிஸ்கஷன் தான் ! 

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

யார்  கரெக்ட்டுன்னு  பாக்கிறது  

ஆர்கியுமெண்ட்,  எது  

கரெக்ட்டுன்னு பாக்கிறது டிஸ்கஷன் !

எங்கே 

கரெக்ட்டுன்னு பார்க்கிறது தான் அறிவு !

விளையாடாதீங்க ! உண்மையா சொல்லுங்க ! நான் சிங்கப்பூர் போறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் குருஜினி கிட்டே சொல்லி கேன்சல் பண்ணிடறேன் !

ஷாலு ! இந்தா ! உனக்கும்  உங்க குருஜினிக்கும் சிங்கப்பூர் விசா ! எங்க சிங்கப்பூர் ஆபிசில சொல்லி உடனே வாங்கிட்டு வந்தேன் !

ஷாலுவுக்குக் குஷி தாங்கல ! அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு ஒரு கிஸ் கொடுத்தாள். 

பின்னே ஏன் 

ஆர்கியுமெண்ட், டிஸ்கஷன் எல்லாம் !

இதுக்குத் தான்! 


image

அம்மா ! அப்பா ! ஷ்யாம்  அண்ணாவைக்  கன்வின்ஸ் பண்ணிட்டேன் ! அவனுக்கு இப்போ  ஓகேயாம். ஷிவானி  வர இருவரும் பிரிந்தோம் ! 

இது நீ பண்ணின மூணாவது தப்பு ! – ஷாலினி குரலில் சொன்னேன்!

மதிப்பு முதலீடு – சீனு

image

ராம் – “லாவண்யா, இந்த சுப்புப்  பயல் வந்து என்னைக்  கேட்டால் நான் இல்லைன்னு சொல்லிடு .”

லாவண்யா – “கல்யாணம் பண்ணி முப்பது வருஷம் ஆகுது, உங்களுக்கு என்னைப்  புரிஞ்சுக்க முடியலையா என்ன? . எனக்கு சின்ன பொய், பெரிய பொய் எதுவும்  சொல்ல வராது .”

ராம் – “இந்த ஒரு தடவை மட்டும் சொல்லிடு!  காபி வேணா எனக்கு ரெண்டு நாள் கட் பண்ணிடு .”

லாவண்யா – “முடியாது ! ஏன் இன்னிக்கு சுப்புவைப்  பார்த்து இப்பிடி ஓடறீங்க ?”

ராம் – “யாரோ ‘வாரன் பப்பெட்டாம் (Warren Buffett) , அவரு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். உலகத்திலேயே பெரிய பணக்காரராம். அவர் தாஜ்ல இன்னைக்குப் பேசறாராம். நல்லா  இன்வெஸ்ட்மென்ட் செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசப் போறாராம். அதுக்கு இந்த சுப்பு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டு வந்து என்னையும் கூப்பிடறார்.”

image

லாவண்யா – “போயிட்டு தான் வாங்க. வீட்டில சும்மா தானே இருக்கீங்க. ”

ராம் – “இல்லை, நான் இன்னைக்கு பேங்க் போகணும் . கொஞ்சம் அங்கே வேலை இருக்கு .”

லாவண்யா – “பேங்கிலிருந்து ரிடையர் ஆகி மூணு வருஷம் ஆனாலும் உங்களுக்கு டெய்லி பேங்க் போகாம இருந்தா தூக்கம் வராது. என்னால பொய் ஒண்ணும்  சொல்ல முடியாது. நீங்கள் ஆச்சு உங்க சுப்பு ஆச்சு .”

வாசலில் காலிங் பெல் சத்தம் . திறந்தால் –

“என்ன ராம் கிளம்பலாமா?” – சுப்பு

“ரெண்டே நிமிஷம்” – சிரிப்புடன் ராம்

லாவண்யா – “சுப்பு, நீங்க வரதுக்குத்  தான் ராம் இத்தனை நேரம் காத்துக்கிட்டு இருந்தார் !!!" 

பொய் சொல்ல வராது! ஆனால் போட்டுக்  கொடுக்க வரும்!

“அப்பிடியா? “- சுப்பு

"ஹி ஹி. ஆமாம் ” – ராம்

ராம், சுப்பு இருவரும் தாஜ் ஹோட்டலிற்குக்  கிளம்பினர்.

—-

image

“அப்பப்பா என்ன வெயில் ! என்ன வெயில் ! ” 

“காபி கொண்டு வரேன் ! கொஞ்சம் ஏ சி  கிட்ட உட்காருங்க. ஆமாம் , மீட்டிங் எப்படி இருந்துது.”

“பர்ஸ்ட் கிளாஸா  இருந்துது.” 

“மொதல்ல போகப்  பிடிக்கலைன்னு சொன்னிங்க. இப்போ சூப்பர்ன்னு சொல்லறீங்க” 

“நானும் ஏதோ புதுப்  பணக்காரன் பேசறான்னு  பிடிக்காமதான் போனேன்.  ஆனா அந்த வாரன் பப்பெட்  எவ்வளவு சிம்பிள் ஆக இருக்கார் தெரியுமா.  வயசு எண்பத்தி நாலு ஆனாலும் ஆளு என்னமா கணீர் கணீர்னு பேசறார்.  ஷேர் மார்கெட்டில் எப்படி இன்வெஸ்ட் பண்ணுவது என்ற தலைப்பில அவ்வளவு அழகாகப்  பேசினார். “

“இப்படித்தான் அஞ்சு வருஷம் முன்னாடி உங்க மாமா பையன் வெங்கட் சொல்றான்னு ஷேர்ல  ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு நயா பைசா கூட திரும்பி வரலையே. நல்ல வேளை நம்ம பசங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு அபார்ட்மெண்ட் வாங்கினோமோ பொழைச்சோம்!“

"ஆமாம் . அதனால தான் நான் இப்படி இந்த சுப்பு கிட்ட மறைஞ்சிக்கப்  பார்த்தேன் . நீ தான் என்னை காலேல எட்டப்பன் மாதிரிக்   காட்டிக்  குடுத்தே . சரி அதை விடு . வெங்கட் சொன்ன ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பேரு – டே டிரேடிங் . அது கிட்டத்தட்ட ரேஸ்  குதிரை மேலே பணம் கட்டற மாதிரி தான்.”

“ஓஹோ”

இன்னைக்கு இவர் பேசின டாபிக் – “வால்யு இன்வெஸ்டிங்”

“ புதுசா இருக்கே . அப்பிடின்னா  என்ன ?”

“நாம தக்காளி கிலோ ரெண்டு ரூபாய்க்கு விக்கும் போது ஒரு நாலு கிலோஎக்ஸ்ட்ரா  வாங்கறோம் இல்லையா . அதே மாதிரி , ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணறப்போ கூட, விலை கம்மியாக இருக்கும் போது தான் வாங்கணும்.”

“ரெண்டு ருபாய் கிலோ தக்காளி வந்தா , பத்து கிலோ வாங்குவேன் . எங்க அம்மாவுக்கும் ரெண்டு எக்ஸ்ட்ரா கிலோ வாங்குவேன் “

அது மட்டுமில்லாமல் ஒரு கம்பெனி ஷேர் நாம் வாங்கினால் , நம்ம உண்மையாலுமே அந்த  கம்பெனி ஓனர் மாதிரி ஆயிடறோம் ”

“இந்த மாதிரிக் கேள்விப்  பட்டதே இல்லையே.”

image

“ஆமாம் , ஒரு கம்பெனி ஷேர்ல ஒரு பெர்சென்ட் வாங்கினா நாம ஒன் பெர்சென்ட் ஓனர் ஆயிடறோம். அதனால தான் ஒரு கம்பெனி ஷேர் வாங்கும் பொழுது , வீடு , அபார்ட்மெண்ட் , நகை எல்லாம் வாங்கற மாதிரி தீர விசாரிச்சிட்டுத் தான் வாங்கணும் .”

“ஓஹோ . அப்போ ஒரு கம்பெனி ஷேர் வாங்கறோம் என்றால் , அதைப்  பத்தி நிறையப் படிக்கணும்  போல இருக்கே .கம்பெனி எந்த பிசினஸ்ல இருக்கு, எப்படி லாபம் சம்பாதிக்கிறதுன்னு  அதைப்  பத்தித் தெரிஞ்சால் தானே ஓனர்  ஆக முடியும் .நமக்கோ பிசினஸ் பத்தி ஒண்ணும் தெரியாதே”

“சரியான கேள்வி கேட்டாய். நான் பாங்க்லே லோன் ஆபீசராக இருக்கும் பொழுது லோன் சாங்ஷன் செய்யும் முன்னாடி அந்த கம்பெனியோட முழுக்  கணக்கையும் பார்த்துட்டுத்  தான் அப்ரூவ் பண்ணுவேன்.”

“ ஆனாலும், நீங்க இருந்ததோ விவசாய லோன் துறைல. உங்களுக்கு TCS, Reliance பத்தி என்ன தெரியும் ?”

இதுக்குத் தான் இன்னைக்கு வாரன்  ஒரு பஞ்ச் லைன் அடிச்சார் – ‘work within your circle of competence.’ அதாவது உங்களுக்கு எந்தத்   துறையைப்  பத்தி நல்லா  தெரியுமோ, அதுல மட்டும் தான் இன்வெஸ்ட் பண்ண வேண்டும்ன்னு.

“ஆஹா !! நம்ம முதல் பையனுக்கு வீடு வாங்கும் பொழுது கூட நாம எவ்வளவு ஏமாந்து போனோம். இப்போ தான் அந்த ரியல் எஸ்டேட் பத்தியே கொஞ்சம் புரிஞ்சிருக்கு. ஆனால் உங்களுக்குத் தெரிஞ்சதோ விவசாயத் துறை தான். ”

“இந்தியாவில நிறைய விவசாயக் கம்பெனிகள் இருக்கு. அதே மாதிரி பேங்க் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும்.”

“அது சரி !. பேங்க் பத்தி தான் உங்களுக்கு எல்லாமே தெரியுமே , அந்த வாட்ச்மேன் வீடு விலாசம் வரை !!!”

“ சரி சரி . இந்த ரெண்டு துறைல நிறைய நல்ல கம்பெனிக்கு நானே லோன் குடுத்திருக்கேன். இப்போ அந்த கம்பெனி எல்லாம் பெரிய பெரிய கம்பெனி ஆயிடுத்து.”

“நம்ம வெங்கட் வேற மாதிரி சொன்னானே  . ஒரு லட்சம் போட்டால் ரெண்டு மாசத்தில ரெண்டு லக்ஷம் ஆயிடும்னு.”

“அது திவால் கம்பெனியில் போட்டாத்தான் அப்படி வரும்! இந்த வால்யு இன்வெஸ்டிங்ல எல்லாமே லாங் டெர்ம் தான் . நாம வீடு வாங்கினோமே , அந்த வீடு எந்த விலைக்கு போகும்னு தினமும் ரேட் பார்த்து விற்கிறோமா என்ன? இல்லையே . அதே மாதிரி,  ஒரு கம்பெனில ஷேர் வாங்கும் பொழுது , ஒரு மூணு இல்லை அஞ்சு வருஷம் ஆனால் தான் அதோட மதிப்பு அதிகம் ஆகும்.”

“இந்த மாதிரி இன்வெஸ்ட் பண்ணுவது ரொம்ப நல்லா இருக்கே . நமக்குத் தெரிஞ்ச கம்பெனி , நல்ல கம்பெனியாகப் பார்த்து , ரெண்டு ரூபாய் கிலோ தக்காளி மாதிரி விலையில வாங்கினால் நல்ல இன்வெஸ்ட்மென்ட் தான்.”

“சுப்பு இன்னைக்குத் தான் இந்தக் கதையைச்  சொன்னான் . அவன் ரெண்டு பொண்ணுக்கும் ஒரு பதினைஞ்சு வருஷம் முன்னாடி ஆளுக்கு ரெண்டு லக்ஷம் போட்டு ஒரு நல்ல கம்பெனில ஷேர் வாங்கினானாம் . இப்போ அதோட மதிப்பு ரெண்டு கோடிக்கு மேல . அதிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து தான் அவங்களுக்குக் கல்யாணமும் பண்ணினானாம்.”

“அப்படியா !!!”

“ஆனால் சுப்பு இன்னொன்னும் சொன்னான் . சரியாக ஒரு கம்பெனியைப்  பத்தி தெரிஞ்சுக்காம இன்வெஸ்ட் பண்ணினால், பணம் விரயம் ஆகும் வாய்ப்பு நிறைய இருக்குன்னு”

“இதைப்  பத்தி நிறைய கத்துக்க வேணும் போல இருக்கே .”

“கண்டிப்பா . . சுப்பு சொன்னான்

இன்னைக்கு வாரன் பப்பெட் பேச்சைக் கேட்டது  ஒரு பிள்ளையார் சுழி மாதிரி தான் . வாரத்திற்கு ஒரு ரெண்டு மூணு மணி நேரம் வந்து  வால்யு இன்வெஸ்டிங் பத்திச்  சொல்லித்  தரேன்னு சொல்லிருக்கான்.”

“ஆமாம் . நீங்க ரொம்ப வருஷம் முன்னாடி ஏதோ ஒரு விவசாயக் கம்பெனிக்கு லோன் குடுத்தீங்கன்னு சொன்னிங்களே.”

“ஆமாம். நாங்க லோன் குடுத்த கம்பெனி பெயர் – ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட். அப்போ அந்தக் கம்பனியோட முழு மதிப்பே இருபது கோடி ரூபாய் தான் . அதாவது இருபது கோடி 2001ல இருந்தால் அந்த முழுக் கம்பெனியை  விலைக்கு வாங்கியிருக்கலாம்.”

இப்போ அதோட மதிப்பு என்ன ??

“பதினெட்டு ஆயிரம் கோடி.”

“நல்லது . சுப்பு கிட்டே நீங்க இன்னைக்கு மாட்டிக்கிட்டதே  ஒரு லாங் டெர்ம் இன்வெஸ்டிங்னு  சொல்லுங்க.”

“ஹா ஹா . ஆமாம்”

(தொடரும்) 

பங்கார்   டிப்ஸ்

image

யார் இந்த பங்கார்!?

 இவர் ஒரு  பங்குப் புலி ! பங்கு வணிகத்தின் சந்து பொந்துகள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர் ! 30 வருடத்துக்கு மேல் பங்காட்டத்தில் பங்கு கொண்டிருப்பவர் !

குவிகம் வாசகர்களுக்காக அவர் தரும் பங்கு டிப்ஸ் ! 

“இப்போது மார்க்கெட் தூங்கிக் கொண்டிருக்கிறது ! தூங்கும் புலி மீது கல்  எறிந்து அல்லது இடறி  விடாதீர்கள் ! அது நம்மைத் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் !  அது ரொம்ப முக்கியம்!”

பங்கார்  சில பங்குகளைப் பற்றிச் சொல்கிறார். அவற்றை அவர் சொன்ன விலைக்கு வாங்கி (இந்த விலை எப்போ வரும் என்பதும் நம் கையில் இல்லை)  அப்படியே அதை அடை காத்து  பொறுமையோடு காத்திருந்தால் பின்னால் அவை பொன் முட்டைகளாக மாற அதிக வாய்ப்பு உண்டு.  

சில காக்கா முட்டையாக மாறலாம்! ( 80 லட்சம் பட்ஜெட்டில் தயாரித்த காக்கா முட்டை படம் 8 கோடி வசூலாமே!) 


image

இந்த மாதிரி போட்டால் ஒரு டிஸ்கிளைமர் கிளாஸ் போட வேண்டுமே! 

image

போட்டாச்சு! 

கவிதை எழுத பேனா எடுப்பவர் பலர் ! ஸ்ரீனியோ  தனது  காமிராவை எடுக்கிறார்!

மழைத்துளி மழைத்துளி என்றும் அது புதுத்துளி 

இது புகைப்படம் அல்ல கவிதைப்படம் !

(ஸ்ரீனியின் அனுமதியுடன்) 

ஜோக்ஸ்

image

மேகியில் லெட் இருக்காமே?

குழந்தைங்க பென்சில் சீவும் போது விழுந்திருக்கும்!


image

அமெரிக்காவில் புதிய கண்டுபிடிப்பு! இந்திய  ரவா இட்லிகளில் இரும்பு அதிகமாக இருக்கிறதாம் ! ( யோவ்! அது மிளகுய்யா!) 


image

மேகி பேரை மாத்தி மரகதவல்லின்னு வைச்சுடுவோம்! 


image

பத்து வருஷம் தொடர்ந்து மேகி சாப்பிட்டா பாம்பு கடிச்சாக் கூட விஷம் ஒண்ணும் பண்ணாதாம் ! 

இரண்டு நிமிடம்!

image



“அம்மா பசிக்குது!”

“ரெண்டு நிமிஷம் பொறுடா கண்ணு !  மேகி பண்ணித்  தர்றேன்!”

பல ஆண்டுகளாக இந்தியாவின் குழந்தைகளை ஆண்டு வந்தது மேகி ! 

அந்த மேகி இனி இல்லை !

காரணம் சமீபத்திய சோதனைகளில் கண்டுபிடிப்பு ! 

மேகியில் அதிக அளவு ஈயம் கலந்திருக்கிறது.

ஈயம் ஒரு மிகப் பெரிய விஷம்

 ( 0.01% இருக்க வேண்டிய இடத்தில் 17% இருக்கிறதாம் ) .

அத்துடன் அளவுக்கு அதிகமாக மோனோ சோடியம் குளுடமேட்  என்ற மெதுவாகக்  கொல்லும்  ரசாயனம். 

பல மாநிலங்கள் மேகியைத் தடை செய்திருக்கின்றன!

மேகியைத் தயாரிக்கும் நெஸ்லே கம்பெனி பூசி மழுப்புகிறது 

சில வருடம் முன் கோகோகோலாவில் பூச்சிக்கொல்லி என்று ஆரம்பித்து பின்னால் மறந்து விட்டார்கள். அதைப் போல மேகி ஆகக் கூடாது ! 

மேகி மட்டுமல்ல மற்ற எல்லா உணவுப் பொருட்களையும் சோதனை போட வேண்டும் ! அதைவிட நமது பரிசோதனைச் சாலைகளுக்கு என்ன வேலை? 

கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!

image

பிடித்த படைப்பாளிகள் (எஸ் கே என் )

நாஞ்சில் நாடன்


image

நாஞ்சில் வட்டார வழக்கில் உரையாடல்களோடு சமூகப் பார்வையும்
நகைச்சுவையும் சோகமும் ஒரு சேர இழையோடும் படைப்புகளால் நன்கு அறியப்படும்
படைப்பாளி திரு நாஞ்சில் நாடன். 

“சூடிய பூ சூடர்க்க” என்னும் சிறுகதைத்
தொகுப்பிற்காக 2010 ஆம் ஆண்டிற்கான சாகித்ய  அகாதமி விருது பெற்றவர். 

 "தலைகீழ் விகிதங்கள்" தொடங்கி ஆறு
புதினங்களும் பல சிறுகதை, கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. 

மும்பையில்  வாழ்ந்த அனுபவத்திலும் பல
கதைகள் உருவாகியுள்ளன. இவரது “கிழிசல்” என்னும் கதை பல சிறந்த
சிறுகதைகள் பட்டியல்களில் காணப்படுகிறது  

கதை மாந்தர்களை ‘உள்ளது உள்ளபடி’ படைப்பது கவனத்தை ஈர்க்கிறது. ஊர்
ஊராகத் திரிய வேண்டிவரும்   மருந்துக்
கம்பனி  விற்பனைப் பிரதிநிதியைக்
கதாநாயகனாகக் கொண்ட “சதுரங்கக் குதிரைகள்” புதினம் படிக்க நேர்ந்தபிறகு
நான் தேடித் படிக்கும் ஒரு எழுத்தாளர். .

இவரது “ஐந்தில் நான்கு” சிறுகதை இப்படிப் போகிறது:

* * * * * *

மும்பையில் பிழைக்க வேலை தேடிச் சென்று, மூன்றாண்டு கழிந்து சொந்த
ஊருக்கு வரும் “மிஸ்டர். எஸ். கே. முத்து"வின் கதையிது.
பேருந்திலிருந்து ஒரு ஏர் பேக், சஃபாரி சூட்கேஸ் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில்  இறங்கியவனுக்கு வேறு பஸ் பிடித்து நாலு மைலில்
உள்ள தன் ஊருக்குச்  செல்ல முடியும்.
எனினும் மூன்றாண்டுகள் கழித்து மும்பையிலிருந்து வருபவன் பஸ்ஸில் போவதாவது? அந்த  அதிகாலை வேளையில்   டாக்சியில் சென்றாலும் தெருவில் சாணி
தெளிக்கும் சில பெண்டுகள் தவிர யார் கண்ணிலும் படாமல் இறங்கினால், புதிய ஏர் பேக்,
சஃபாரி, வி.ஐ.பி, டபிள் நிட்டட் பேண்ட், ஷோலே ஷூ, பாம்பே டையிங் ஷர்ட், நூற்று
நாப்பது ரூபாய் கூலிங்கிளாஸ் இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது.  

லாட்ஜில் ரூம் எடுத்து ஷேவ், குளியல் முடித்து கையில் நாஷனல்
பேனோசோனிக் என்ற பெயர் கொண்ட   ஜப்பானில்
தயாராவது என்ற போர்வையில்  வரும் உல்லாச
நகர டிரான்சிஸ்டர் கம் காஸெட் பிளேயர் சகிதம் டாக்ஸி பிடிக்க பஸ் ஸ்டாண்ட்
போகிறான்.  அங்கே சில கிராமத்து ஆட்கள்
"இது என்ன புதுசா மணக்கு?” என்ற கேள்வியுடன் நிறைய இழுத்து
சுவாசித்துவிட்டு எஸ். கே. முத்துவை பயபக்தியுடன் பார்க்கிறார்கள்  

ஊர் நெருங்கியதுமே பரபரப்பும் புளகாங்கிதமும். ஊரின் சாலையில்
ஓட்டுனரை கொஞ்சம் மெதுவாகவும் இரண்டு ஹாரன் கொடுத்தும் போகச் சொல்கிறான். அவன்
வீடு ரோட்டோரத்து வீடல்ல. அவன் தெரு முடுக்கில் கார் நுழைவதோ திரும்ப மேலேறி
வருவதோ நடக்காதது.

டாக்ஸி நின்றது. இரண்டு மூன்று ஹாரன் கொடுத்தது. முத்துவின்
ஆசைப்படியே பொது இடங்களில் இருந்தவர்கள் கவனம் திரும்பியது. முதலில் இது யார்
என்று திகைத்தாலும் இவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

கதாசிரியரின் வார்த்தைகளில்

“ அட இது நம்ம காத்தமுத்துல்ல…” திடீரென அவனை அடையாளம்
கண்டுகொண்ட ஒரு அவயம்.

 

“ஆமா.. அவன்தான். அட செறுக்கி. விள்ள ஆளு அடையாளமே
தெரியல்லியேடே! என்னண்ணு மாறிப்போனான். ஊள மூக்கும் பறட்டத் தலயுமா திரிஞ்ச
பயலா?”

 

அவன்
முகம் கோணல் ஆகியதை கண்டு அபசாரம் செய்துவிட்ட குற்ற உணர்வுடன், யார் யாரோ
பெட்டிகளைத் தூக்கிக் கொள்கிறார்கள்.

பேச்சின்
தொனியே மாறுகிறது. “பய ஆளாயிட்டான்” , “இங்க கிடந்தா எருமை
மேய்ச்சுகிட்டு தால கிடக்கணும். எங்கியாச்சும் போய் நாலு காசு பாக்கணும்”
“மாசம் சொளையா நூறு ரூவா அனுப்புறானம் பாத்துக்க”

 

ஊர்
திரும்பும்  ஞாயிற்றுக்கிழமை அன்று பஸ்
நிறுத்தத்தில் பம்பாயில் கிடைக்காத அரும்பொருட்கள் கொண்ட பனையோலைக் கடவு,
திருநெல்வேலியிலிருந்து பம்பாய் வரை சாப்பிட பொட்டலங்கள்.

“பத்திரமா
போயிட்டு வா என்கிறார் அப்பா.

 

கதாசிரியர்
சொற்களில்

 

"ஏ.
காத்தமுத்து.. என்ன பொறப்பிட்டாச்சா? இல்லாட்டாலும் இங்கிண கிடந்து என்னாத்துக்கு?
நம்ம பயலுக்கும் என்னமாச்சும் ஒரு சான்ஸ் உண்டுபண்ணப் பாருடே! சிஸ்த் பாசாயிருக்கான்”
என்று ஒரு தகப்பனார் பரிந்துரை செய்தார்  

 

“அப்பம்
போயி வீடெல்லாம் ஏற்பாடு செய்துகிட்டு எளுத்து போடு. உனக்க அத்தானும் எப்படியும்
வாற ஆவணியில கலியாணத்தை முடிச்சுப் போடணும்ணு சொல்லுகா.. கண்டமானம் செய்யாட்டலும்
உள்ளத்துக்குள்ள செய்வா. மெத்தனமா இருந்திராதே” என்று அம்மா பதினெட்டாம்
முறையாக ஞாபகப்படுத்தினாள்.

 

பஸ்
வந்ததும் அடிச்சுப் பிடிச்சு ஏறிய பிறகு இன்னும் மூன்றாண்டுகளுக்கு ஊருக்கு
வரக்கூடாது என்று எண்ணிக்கொள்கிறான். கொண்டு வந்திருந்த பனிரெண்டு நூறு ரூபாய்
நோட்டுக்களும் வெங்காயம் உறித்ததைப் போல் ஒன்றுமில்லாமல் போய், டிக்கட்டிற்கே
யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாய் கடன்.    
 

கையில் கட்டியிருந்த கடிகாரம் அத்தான் எடுத்துகொண்டுவிட்டார். தவணை
பாக்கி கட்டவேண்டும். கூட வசிக்கும் குத்தாலத்திடமிருந்து இரவல் வாங்கி வந்திருந்த
டிரான்சிஸ்டர் கம் காசெட் பிளேயர் தங்கை புருஷனுக்குப் போய்விட்டது. ஊருக்கு
வருவதற்கான ஏற்பாட்டில் மாதச் சீட்டில் மாதம் ஐம்பது ரூபாய் இன்னும் இருபத்தெட்டு
மாதம் கட்டவேண்டும்.

இப்படி முடிகிறது கதை

இந்தக் கடன்கள் எல்லாம் கழிக்க, எத்தனை ஆண்டுகள் இனிமேல், “தோ
மசால் தோசா, ஊத்தப்பா ஏக் பிளேட், வடா சாம்பர் தீன்’ என்று எண்ணுகையில் அவன்
கண்கள் கலங்கிக் கசிந்தன.

‘அருமாந்த பிள்ளை .. தூர தொலைக்குப் போறமேண்ணு வருத்தப்படுகு’ என்று
பக்கத்து இருக்கைப் பெரியவர் மனதுக்குள் அனுதாபம் சிந்தினார்  

**** **** **** ****

 

 

நாஞ்சில் வட்டார மொழி வளத்துடன் சில கதைகள்

·       
சுடலை மாடன் கொடை காணப்போகும் ஒரு வளர்ந்த சிறுவனின் பார்வையில்
பன்றி பலி உள்ளிட்ட அந்த விழா நடவடிக்கைகளும் வெளியூரிலிருந்து எப்போதாவது வரும்
கணவன் கொண்ட ‘மதனி’ என்ற மாதுவும் – ("பேய்க்கொட்டு”)

·       
போகும் வழியில் ஒரு தோப்பில் இளைப்பாற இருந்த தம்பதியரை ஊரில் உள்ள
சிலர் அங்கிருந்து போகக் கட்டாயப்படுத்த அவர் மறுக்க ஏற்படும் பிரச்சினையை
தீர்க்கும்  நல்ல ‘சுதி’யிலிருக்கும்   ஈஸ்வரமூர்த்தி பட்டா – (“பாலம்”)

·       
திருவிழாவில் அப்பாவுடன் கச்சேரிக்கு அடம் பிடித்துக் கூடப்போகும் சிறுவன், கச்சேரி முடிந்து காப்பிக்கடையில்
சுமார் மூன்று ரூபாய்க்கு உணவருந்திவிட்டு, சந்தடி சாக்கில் இரண்டு தேயிலை என்று
சொல்லி காசு கொடுத்துவிடுகிறார் அப்பா. இதற்காகத்தான் வருடா வருடம் அப்பா
கச்சேரிக்கு வருகிறாரோ என்று எண்ணமிடும்
சிறுவன்,
இனி அப்பாவுடன் திருவிழாவிற்கு
வருவதில்லை என்று முடிவெடுக்கிறான்.  (“கிழிசல்”)

பம்பாய் அனுபவத்தில் படைத்த கதைகள்.

·       
பிரபலமான ஒருவரின் முக்கியஸ்தருக்கான மும்பை ஷன்முகானந்தா அரங்கின்
முன்வரிசை  ‘காம்ப்ளிமென்டரி" டிக்கெட்டில்
நாடகம் பார்க்கப்போகும் அவரது காரோட்டி, இருக்கையிலிருந்து எழுப்பிவிடப்பட, நாடகம் பார்க்காமலேயே வீடு திரும்பும்
சம்பவம். –( “அம்பாரி
மீது ஒரு ஆடு”)

·       
சோமசுந்தரத்திற்கு இன்றைக்குள் மிஷினை ஏற்றிவிட வேண்டிய
கட்டாயம்.  ட்ரக் வராமல் ட்ரான்ஸ்போர்ட்
கம்பனிக்காரர்களை விரட்டி போன் செய்தும் நம்பிக்கையில்லை. மேலதிகாரியோ எப்படியாவது
இன்றே ஏற்றிவிடவேண்டும் என்றும் ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கடிந்துகொள்கிறார்.
விரட்டி விரட்டி மிஷினை ஏற்றிவிட்டு காரியம் சாதித்த பெருமையோடு  மேலதிகாரிக்குப் போன் செய்தால் அவர் எங்கோ
டின்னருக்குப் போயிருக்கிறார் என்பது தெரிந்ததும் உற்சாகம் வடிந்து போகிறது- (“வைக்கோல்”).

எல்லாக் கதைகளிலும் இவரது பார்வையும் கதை சொல்லும் சரளமும்
வியக்கத்தக்கது.

இணையத்தில் படிக்கக் கிடைக்கும் கதைகள்

மனகாவலப்பெருமாள்-பிள்ளை

இடலாக்குடி ராசா

எஸ். கே. என்

கை! கை! வாழ்க்கை

image


செவிலியின் கைகளில் வாழ்வைத் துவங்குகிறோம்

பெற்றோர் கைகளைப் பிடித்துக் கொண்டு 

நட்புக்  கைகளைப் பற்றிக் கொண்டு

காதலில் கைகளைப் பிணைத்துக் கொண்டு 

துணையைக் கைகளில் அணைத்துக் கொண்டு 

பெற்றதைக் கைகளில் ஏந்திக் கொண்டு 

கற்றதைக் கையில் எடுத்துக் கொண்டு 

சுற்றத்தைக் கைகளில் சேர்த்துக் கொண்டு 

 உழைக்கும் கைகளை நம்பிக் கொண்டு

உதவிடக் கைகளை உயர்த்திக் கொண்டு

வணங்கிடக் கைகளைக் குவித்துக் கொண்டு

துயரத்தைக் கைகளில் வாங்கிக் கொண்டு 

துன்பத்தைக் கைகளில் இறுக்கிக் கொண்டு 

வாழ்வைக் கைகளில் தாங்கிக் கொண்டு 

முடிவில் கைகளை விரித்துக் கொண்டு 

நால்வர்  கைகளில்  வாழ்வை முடிக்கிறோம்!


Click older entries to view remaining pages of current month 

இலக்கிய வாசலின் இரண்டாம் நிகழ்ச்சி

இலக்கியவாசல்
இரண்டாம் நிகழ்வாக “நான் ரசித்த   தி.ஜானகிராமன்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல்
சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில் 23.05.2015 அன்று சிறப்பாக
நடைபெற்றது!

 

image

 

 

தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய
இலக்கியவாசல் சுந்தரராசன், வந்திருந்த
சான்றோர் பெருமக்களை அன்புடன் வரவேற்று தி.ஜா.வின்  வாழ்க்கைக்  குறிப்பைச்  சொல்லி அவர் படைப்புகளின் சிறப்புகளை
எடுத்துரைத்து, பார்வையாளர்களைப் பேச அழைத்தார்! 

 திரு.கோபிநாத்
( நடராஜகால் சிறுகதை])  

 

image

குத்தகை நில
வருமானத்தில் உழைக்காமல்
சாப்பிடும் ராமதுரை மாமாவின் குணாதிசயங்களை நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார்! எதிர்வீட்டுப் பெண் திருமணத்தை நிறுத்திவிட முயலும் அவரது வாய்ச்சவடால்களை
முறியடித்துத் திருமணம் செய்து கொண்டுபோகும் பெண்ணைப்பற்றிய கதை இது.  இந்த கதையைச்
சொல்வதே அந்தப்  பெண்தான் என்பது  கதையின்
கடைசியில் தெரிய வருவது மிகவும் சுவாரசியமான ஒன்று!

 

 

திரு.அதியமான்  ( “மோகமுள்”)

 

image

மோகமுள்
நாவலில் எல்லோரும் பாபு ஜமுனா உறவையே சொல்லுகிறார்கள். ஆனால் தான் ரசித்தது   தி.ஜா.எப்படி இயற்கையின் ரசிகராயிருந்தார்
என்பதும் (வாழை மரம் வெட்டப்பட்ட பிறகு அதன் அடிப்பகுதியில் அழகாய் அமைந்துள்ள துவாரங்கள்
அதிசயம்),   ரங்கண்ணாவுடனும் நண்பனுடனும்  (ராஜம்)  உரையாடல்களில் வாழ்க்கையையும் மனிதர்களையும்
அலசும்  சிறப்பையும்  சொல்லி,  தி.ஜா.வின் படைப்புக்களில் தனது
ஆராய்ச்சி தொடர்வதையும் சொல்லி மகிழ்ந்தார்!

 

கவிஞர் தரும.இராசேந்திரன்
(“நாவல் பிறக்கிறது )     

 

image

ஒரு
நாவல் எப்படி உருவானது என்று தி.ஜா.தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதை
எடுத்துரைத்தார்! எதிர் வீட்டுக்  கிழவரின்
இளம்பெண் கல்யாணமும், தனது மகன் குடும்பத்தையே வீட்டைவிட்டு
வெளியேற்றிவிட்டு, இளம் மனைவியுடன் கிழவர் தனிக்குடித்தனம் ஒருவருடம்
நடத்திவிட்டு மரணம் அடைந்த
நிகழ்வையும் குறிப்பிட்டார்.  தன்னை விட
எட்டுவயது அதிகமான அழகும், அமைதியும், புத்திகூர்மையும்
உள்ள பெண் மீது தான் கொண்ட ஒரு தலை  மோகம் தான்
மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது!   “இந்த ஞாபகங்கள் ,என்
ஆசைகள் ,நப்பாசைகள் ,நான்
எப்படி இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள்,  பாத்திரங்களாக
எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாக
சேர்ந்து நாவலாக உருவாயின “ என்று ஜானகிரமனே குறிப்பிட்டுள்ளார்  என்பதைப்  பகிர்ந்துகொண்டார்!

 

 நங்கநல்லூர் ஸ்ரீதரன்:  ("திண்ணை வீரா!”):

 

image

திண்ணையில்
அமர்ந்து கொண்டே “எழுந்து வந்தால் தொலச்சுடுவேன்"  என்று எல்லோரையும் மிரட்டும் ஒரு
பாத்திரம், இறுதியில் வீட்டிற்குள் போகவே இருவர் தூக்கிச்செல்ல வேண்டியிருக்கும்
நிலையில் இருக்கிறார் என்பது  கதை  முடிவில்
தெரியவரும். பாத்திரப் படைப்பும்
சொல்லும் விதமும் மிகவும்  ரசிக்கத்தக்கது
என்றார் . 

 

திரு.தொல்காப்பியன்:  ( "வீடு”.)  

image

 

இந்த
வீடு விற்பதற்கு இல்லை என்று ஒரு டாக்டர் சொல்லிக்கொண்டே இருப்பதுடன் தொடங்கும்
இந்தக் குறுநாவலில், அந்த    டாக்டர் தனது மனைவி மிகவும் அழகாய் இருப்பதை
ரசித்துக்கொண்டே இருப்பார். கம்பௌண்டருடன்
அவளுக்குத்   தொடர்பு ஏற்பட்டுப்  போகிறது .டாக்டர் அப்போதும் மனைவியைத்  தொடாமலே அவளது அழகை ஆராதனை செய்வது கொடுமை.
இக்கதை மூலம் ஒரு படிப்பினையை தி. ஜா. சொல்கிறார்

 

 

 வழக்கறிஞர் திரு .பாலஸ்ரீநிவாசன்:

(“குளிர்”
“வெய்யில்”)

 

image

இரு
முரண்பட்ட தலைப்புகளிள் எழுதப்பட்ட சிறுகதைகள்  இரண்டையும் ஒப்பிட்டு அழகாகப் பேசினார்

 

.“குளிரில்
”-  80 வயது
கிழவி கதவைத்  தட்டினால் அவள் வீட்டில்
திறக்க மாட்டார்கள் .அவ்வப்போது அடியும் வாங்கும் பாட்டிக்கு வக்காலத்து வாங்கிய
பக்கத்து வீட்டுக்காரர்  உபசரித்து
தங்கள் வீட்டில் தூங்க வைத்தால், கிழவி
தனது வீட்டுப்  பெருமை பேசுகிறதாம்!

 

“வெய்யிலில்”
– செல்ல மகள் வெய்யில் நேரத்தில் அவசரமாக ஊருக்கு கிளம்பி இரயிலடி செல்ல ,அவள்
மறந்து விட்டுப்போன துணியை எடுத்துக்கொண்டு வெய்யிலில் ஓடும் மனிதரைப்  பார்த்து  டீக்  கடைக்காரர் , ‘இந்தத்
துணியாவது  உன்னிடம்
இருந்து அவள் பிரிவை எளிதாக்கட்டுமே’  என்பது சிறப்பு!

திருமதி
.விஜயலட்சுமி . ( “தீர்மானம்” )           :-

 

image

இளம்பெண்
விசாலியை அவளது சின்ன மாமனார் வந்து அவள்
கணவர் வீட்டிற்குச் சட்டென்று அழைத்தது அனைவருக்கும் கவலைதர, விளையாடிக்
கொண்டிருந்த விசாலி
சட்டென்று சின்ன மாமனாருடன் கிளம்பிச் செல்கிறாள் ஊருக்கு . வீட்டிலோ அவள் அப்பா
இல்லை. அத்தையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்! வெளியில் சென்றிருந்த அப்பா
வந்து அவள் பின்னாலேயே போய்
வலங்கிமானில் சாப்பாடு செய்வித்து விசாலியிடம் கையில் திணிக்கிறார்…. அவளது ஆசை சோழிப் பெட்டியை! விசாலிக்கு
வயது 10 ! அந்தப் பத்து வயதில் அப்படி ஒரு
தீர்மானமா?

 

 

 

      இலக்கியவாசல் சு.சுந்தரராசன்:
(“அம்மா வந்தாள்” மற்றும் “நள பாகம்”)

 

image

தி.ஜாவின்
புகழ் பெற்ற "அம்மா
வந்தாள் “ நாவலைப் பற்றி மிக விரிவாக, உணர்வுபூர்வமாக
பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். தஞ்சாவூர் ஜில்லாவின் மண்வாசனை தவழும் இந்த
நாவலின் அப்பு, வேதம் படிக்க 4 வயதில்
வேத பாடசாலை சென்றவன், வேதம் கற்று
 இளைஞனாகத்
தன் வீடு திரும்ப முயலும்போது,  வேத பாடசாலையில் உள்ள இளம் விதவை
இந்து அவனை விரும்புவது கண்டு அதிர்ச்சி அடைகிறான். அவன் எவ்வளவோ புத்திமதி
சொல்லியும் கேட்காத இந்து அவனை வலுக்கட்டாயமாகக்  கட்டிப்பிடிக்கிறாள் .அவளைத்   தள்ளிவிட்ட
அப்புவை பார்த்து ‘உன்
அம்மா என்ன யோக்கியமானவளா?” என்று
கேட்டவுடன் அப்பு திகைத்துப் போகிறான் .

 

அவன்
அப்பா தண்டபாணி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவன் அம்மா அலங்காரம்  உண்மையிலேயே அழகானவள் .ஆனால் அவங்க
வீட்டுக்கு வரும் பணக்காரர் சிவசுவிடம் அவளுக்கு கூடாநட்பு ஏற்பட்டு விடுகிறது .
இதை அவள் கணவன் உள்பட யாருமே கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள்.  

 

அப்புவிடம்
பாவமன்னிப்பு கேட்கும் அம்மா அலங்காரம் :உன் வேதத்தாலும் என் பாவத்தைப் போக்க இயலாது
.என்னைப் போன்றவா எல்லாம் காசியிலே போய் மூலையிலே முக்காடு போட்டு உக்காந்து
சாகவேண்டும் என்கிறாள் .. இந்த
நாவல் தி.ஜா.வை ஜாதிப்  பிரஷ்டம் செய்யும்
அளவுக்குப்  பேசப்பட்டதும் உண்மை .  

இலக்கிய
வாசல் கிருபானந்தன்        

image

        :

(“சிலிர்ப்பு” – “தாத்தாவும்
பேரனும்”, “பிடிகருணை”):-

ஒரு சாமியாரின் அருளை வேண்டி
அவருக்கு பிடி கருணை அளிக்க தில்லுமுல்லு செய்யும் ஒரு சிறு வியாபாரி (பிடிகருணை),

வறுமையின் இயலாமையால் கல்கத்தாவில்
குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்
வேலைக்குப் போகும் ஒரு சிறுமிக்கு தன்னால் இயன்ற அன்பைக்கட்டும் வகையில்
ஒரு ஆரஞ்சு அளிக்கும் பாலகன் ( சிலிர்ப்பு ).

தனது தாத்தா மகாநாமரை பழிவாங்க
அவரைப் போரில் வெல்லும் அரசன் விடூடபன் (தாத்தாவும் பேரனும்) ஆகிய கதைகளைக்
குறிப்பிட்டார்.

தான்
கண்ட மனிதர்களையும் நிகழ்வுகளையும் சிறு சிறு உரையாடல்கள் மூலமும் எளிய வருணனைகள்
மூலமும் மிக எளிதாகச்  சொல்லி விடுவது தி.
ஜா வின் சிறப்பு என்று குறிப்பிட்டார்.

அவர்
கதைகளீல் வரும் கூடா நட்பைப் பற்றியும் குறிப்பிட்டார். அதனால் அந்தக் காலத்தில் சில
இல்லங்களில்  ஆனந்தவிகடன் வாங்கிவந்தவுடன்
தி.ஜானகிராமன் , ஜெயகாந்தன் கதை உள்ள பக்கங்களையும் பிய்த்து விட்டுத்தான்
தங்கள் குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுப்பார்களாம்!.      

வந்திருந்து தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் ஏனைய பார்வையாளர்களுக்கும் நன்றி
கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கிருபானந்தன்.

புத்தக வெளியீட்டில் கேட்டது! – (தருமா  ராசேந்திரன் – பாபநாசம் )

image

அண்மையில்   முனைவர் இராமலிங்கம் அவர்களின் சொற்பொழிவில் கேட்டு சிரித்து சிந்தித்து  மகிழ்ந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். 

தமிழ்மொழியின் வளமையை எடுத்துக்காட்ட எத்தனையோ இலக்கண இலக்கியங்களும் காப்பியங்களும் இன்னபிறவும் உள . 

இரும்புக்குள் துவாரம் போட்டால் அதை துளை என்று சொல்கிறோம் . அதையே ஊசியின் ஒரு முனையில் துளை போட்டால் அதை காது என்று சொல்கிறோம் .அந்த ஊசியின் காதில் நூலைக் கோர்த்துக் கிழிந்துபோன துணியைத் தைக்கிறோம் . அந்த காதுக்குள் நுழைந்த நூலைப்போல இப்போது வெளியிடும் நூலும் [புத்தகமும்] உங்கள் மனதில் பதிந்து நல்ல சிந்தனையைத்  தூண்டி வாழ்வில் வளம் சேர்க்கட்டும் !

 எழுதும்போது  இயல்பாகவே குனிந்து  எழுதுகிறோம் [ பணிவு ]  நாம் எழுதும் பேனாவும் குனிந்துதான் எழுதுகிறது எப்போதும் பணிவு நம்மை உயர்த்துகிறது !

“காக்கை கரவா கரைந்துண்ணும்” என்ற குறளுக்கு விளக்கம் சொன்ன ஆசிரியர், காக்கை நாமிடும் உணவை மற்ற காக்கைகளையும் “கா  கா” என்று அழைத்து பகிர்ந்து உண்ணும் என்று சொன்னதை வகுப்பு மாணவர்கள் அனைவரும் அந்த காட்சியைத் தாங்கள் நேரில் பார்த்திருப்பதாகச் சொல்லிய போது , ஒரே ஒரு மாணவன் ஆசிரியரைப்  பார்த்துக்  கேட்டான்: நான் பார்த்த ஒரு காகம் ஒரு முறுக்கை கிழவியிடமிருந்து திருடிவந்து மரத்தின்மேல் உட்கார்ந்து காலிடுக்கில் வைத்துக்கொண்டு தான் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்தி சாப்பிட்டதே அது ஏன் என்று .கேட்டான். 

.வகுப்பு நேரம் முடிந்துபோனதால் ஆசிரியர் பதில் தேடியவாறே வீட்டிற்குச் சென்றார்.இரவு தூக்கம்  தொலைந்தும் , விடை தென்படவில்லை ..காலையில் மகள் கேட்டாள் ஏம்பா இரவு  நீங்க சரியா தூங்கல? மகளிடம் விபரம் சொன்ன ஆசிரியருக்கு மகளிடமிருந்து விடை கிடைத்தது ! மறுநாள் பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவனை வகுப்பறைக்கு  அழைத்துச் சென்று ஆசிரியர் இவ்வாறு சொன்னார் : நல் வழியில் கிடைத்த உணவை காக்கைகள் பகிர்ந்து உண்டன . திருட்டு வழியில் கிடைத்த  உணவை அந்த திருட்டுக் காகம் தான் மட்டும் உண்டது !  எனவே நல் வழியில் சேர்த்த செல்வம் மற்றவர்க்குப் பயன்படும்., தீய வழியில் சேர்த்த செல்வம் மற்றவர்க்குப் பயன்படாது என்ற நீதியையும் எடுத்துச் சொன்னார். மாணவர்கள் மகிழ்ந்தனர் !  


ஒரு கல்யாண வீட்டுக்குப் பேச அழைத்தார்கள் .பேச ஆரம்பிக்கும் போது , ஐயா பொறுமையா பேசுங்க இப்பத்தான் சாம்பார் தயாராகிக்கிட்டு இருக்குன்னாங்க.நான் பேசிக்கொண்டு இருந்தேன் ! ஐயா இன்னும் கொஞ்ச நேரம் அப்பளம் பொரிச்சவுடன் சொல்றோம் .அப்ப  நீங்க பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரையும் சாப்பிடச் சொல்லலாம் என்றார்கள் ! அன்றிலிருந்து கல்யாண வீட்டில் சொற்பொழிவிற்கு நான் போவதை நிறுத்திக்கொண்டேன்  !

உயர் அழுத்த மின்சார கோபுரத்துக்கு வெளியே ஒரு போர்டு “தொடாதீர்கள் அபாயம் , தொட்டால்” மரணம் சம்பவிக்கும் “மீறினால் சட்டப்படி ” தண்டிக்கப்படுவீர்கள் “ ……?

image

இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்சிகளைக் கவிப்பேரொளி நீரை.அத்திப்பூ அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கி மகிழ்வித்தார். 

தி.ஜா வின் சக்தி வைத்தியம்

ஆறு குழந்தைகள் பெற்ற மாமியிடம் ஒண்ணாங்கிளாஸ் பாடம் எடுக்கும் இங்கிலீஷ்காரி மாதிரி  இருக்கும் தஸ்புஸ் டீச்சர் சொல்லுகிறாள் ‘உங்களுக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை’ ‘உங்க பிள்ளை படிப்பில பரவாயில்லை. ஆனால் ரொம்ப குறும்பு பண்ணரான். அவனுடைய  உபரி சக்தியை வேற வழியில் மாத்தணும். இல்லாட்டிக் கெட்டுப் போவான்’

அவளுக்குத் தாங்கல. பதிலுக்குக் கேட்டும் விட்டாள். அடுத்த மாதம் பையனோட ரேங்க் வழக்கமா வர்ற மூணிலிருந்து முப்பத்திரெண்டுக்குச் சரிஞ்சிருக்கு. டீச்சர் வீட்டுக்குப் போனாள். அவள் எங்கேயோ நாடக ஒத்திகைக்குப் போயிருக்கிறாள். 

image

அவள் அம்மா தான் வரவேற்றாள்.அப்புறம் அலுத்துக் கொண்டாள். ’ என்ன டீச்சர் வேலை வேண்டியிருக்கு? முப்பதொரு வயசு வரைக்கும் கல்யாணமே வேண்டாம்னு இருந்தா. பின்னாடி அவளாகவே பண்ணிட்டா. முதல் கொழந்தை தங்கல.இரண்டாவதும் முந்திப்பிறந்து மெஷின்லே வைச்சு இப்பத்தான் மனுஷக் கொழந்தை மாதிரி ஆயிருக்கு. அதெல்லாம் கிடக்கட்டும். முந்தாநாள் உங்க டீச்சரம்மா ஒரு ரசம் வைச்சாளே பாக்கணும். சமுத்ர ராஜாவே வந்து வைச்ச மாதிரி இருந்தது.  புருஷன்  கை நிறைய சம்பாதிக்கரான். இவள் எதுக்கு வேலைக்குப் போகணும். மாப்பிள்ளை  கிளப்புக்குப் போறாரேன்னு அழ மட்டும் தெரியுது. வேற எங்கே போவார்?

‘சரி ஸ்கூலிலேயே பேசிக்கிறேன்’ என்று திருப்தியுடன் மாமி புறப்பட்டாள். தாயே பராசக்தி’ என்று விடை கொடுத்தாள் அம்மாக்காரி.

எல்லாம் பராசக்தி மயந்தான். உபரி சக்தியை நாடக ஒத்திகையில் செலவழித்தால் கூட பராசக்தி கிருபை இல்லாமல் முடியுமோ?

சினிமா.. சினிமா..

பு றம்போக்கு…

image

வெகு நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியைப் பார்க்கிறோம். அவருடன்  ஆர்யா, ஷாம்  இருவருடன் கூட்டணி அமைத்து கம்யூனிசக் கண்ணுடன் எடுக்கப்பட படம்.

பி ஜே பி , தே மு தி க , பா மு கா ஆகியோர் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் கலந்து கொண்ட மாதிரி இருக்கு. 

எதிர்பார்ப்பு நன்றாக இருந்தது. ரிசல்ட்? 



36 வயதினிலே :

image

S2 தியாகராஜா, திருவான்மியூர் தியேட்டரில் பார்த்து விட்டு வந்த போது எங்க குடும்பக் கும்பலும் மற்றவர்களும் அடித்த கமெண்ட்டின் சுருக்கம்! 

மலையாளத்தில் மஞ்சு வாரியர் பெட்டர்!

கணவனின் வில்லத்தனத்தைக் கொஞ்சம்  கொறைச்சிருந்தால்   நேச்சுரலாக இருந்திருக்கும். 

ஒவ்வொரு ஆம்பளையும் இதைப் பாத்துத் திருந்தணும். 

நாம மொட்டை மாடியில் காய்கறி போடலாமான்னு யோசிக்கிறோம்! ஆனால் இந்த திருந்தாத ஜன்மங்கள் எப்படி  தண்ணி  போடலாம்னு தான் யோசிக்கும்! 

என் துபாய் வேலையை ரிசைன் பண்ணி உன் கனவுக்கு உதவி செய்யட்டுமா?

ஒண்ணும் வேண்டாம்! அவ புருஷன் பாரின் போனப்பரம் தான் அவ உருப்பட்டா! 

இது படம் இல்ல பாடம்!

எத்தனை படத்துக்குய்யா  இப்படி படம் பாடம்  பட்டம் அப்படின்னு பீலா விடுவீங்க?  . 

ஜனாதிபதி கிட்டே கேட்ட கேள்வியில் பெரிய பஞ்ச் இருக்கும்னு பாத்தா ரொம்ப சப் !


மாசு  என்கிற மாசிலாமணி! 

image

படத்தில எல்லாரும் பேயாம்!  படம் முடிஞ்சு வரும் போது நமக்கே சிங்கப் பல் முளைச்சு ரெண்டு காலும் இல்லாத மாதிரி ஒரு நினைப்பு!

இப்பவெல்லாம் ரொம்ப பேய் படமா வருது! பேசாம “பேய் சானல்"னு ஒண்ணு ஆரம்பிக்கலாம் போல இருக்கே! ( சன் டிவி ட்ரை  பண்ணலாம்! டெல்லியில அதுக்குக்    கட்டாயம் லைசன்ஸ் தருவாங்க!) 

சித்தர்- சிவவாக்கியர்

image

இந்த மாத சித்தர் சிவவாக்கியர்!

இவர் ஒரு புரட்சி சித்தர்!

இவருக்குப் பிடிக்காதது! – உருவ வழிபாடு, தல  யாத்திரை, மத வாதம், சாதிகள், வேதம் ஓதல் 

இவரது கோட்பாடு –

ஒன்றே குலம் – ஒருவனே தேவன் – உள்ளமே கோவில் 

ஐநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்! 


அவரது சில பாடல்கள்


என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே 

 என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து  கொண்டபின் 

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ 

என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே !


அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் 

சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் 

சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 

எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே!


சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே

 வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?

மாத்திரைப்போ  தும்முளே மறிந்து தொக்க வல்லலிரேல்

சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே  

ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! 


நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா!

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?  

image

ஆத்திச்சூடி

த..தா..தி ..


55. தக்கோன் எனத் திரி /  Be trustworthy.
56. தானமது விரும்பு /  Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /  Serve the protector.
58. தீவினை அகற்று /  Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /  Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் /  Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /  Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /  Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /  Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் /  Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் /  Don’t compete if sure of defeat.

கவிஞர்  வாலி!

image



வாலி அவர்களின் நயமான பாடல் வரிகள் இவை. 


இந்தப் பாடல்களின் முதல் வரியையும் இடம்பெற்ற திரைப் படத்தையும் கண்டுபிடியுங்கள்!!




1) இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார் 

மடி நிறையப்  பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும் 

எதுவந்த போதும் பொதுவென்று
வைத்து 

வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் 


2 ) எந்த நாடு என்ற கேள்வியில்லை 

எந்த ஜாதிஎன்ற பேதமில்லை 

மனிதர்கள் அன்பின் வழிதேடி
-இங்கு 

இயற்கையை வணங்குகிறார்
– மலை 

 உயர்ந்தது போல் 

மனம் உயர்ந்ததென்று -இவர்

வாழ்வில் விளங்குகிறார் 


3 ) நாதத்தோடு கீதம் உண்டாக 

தாளத்தோடு பாதம் தள்ளாட 

வந்தால் பாடும் என் தமிழுக்குப்
பெருமை 

வாராதிருந்தாலோ தனிமை 

நிழல் போலும் குழலாட 

தளிர்மேனி எழுந்தாட 

அழகே உன் பின்னால்  அன்னம் வரும் 


4 ) செம்மாங்கனி -புன்னகை நல்லோவியம் 

செவ்விதழ் – தேன்மாதுளை 

பொன்மொழி – சொல்லோவியம் 

சிந்துநடை போடும் பாற்குடம்

சின்னவிழிப் பார்வை பூச்சரம் 

என்ன மேனியோ இன்னும் பாடவோ 


5) பதவி வரும்போது பணிவு வரவேண்டும் 

துணிவும் வரவேண்டும் தோழா

பாதை தவறாமல் பண்பு குறையாமல் 

பழகி வரவேண்டும் தோழா 



விடை:

1) கொடுத்ததெல்லாம்  கொடுத்தான் ………………. படகோட்டி

2) புதிய வானம் புதிய பூமி ………………………………… அன்பே வா 

3) நான் பாடும் பாடல்  ………………………….கண்ணன் என் காதலன் 

4) மெல்லப்போ மெல்லப்போ ………………………….. காவல்காரன் 

5) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …………….. தெய்வத்தாய் 

டப்ஸ்மாஷ்  செய்யுங்கள்!(முக நூலில் சுட்டது)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


image

“ உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? ”

“ கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!

” வெள்ளைக்கு..!“

” புல்லு..“

” அப்ப கருப்புக்கு..?“

"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..”!

“ இதை எங்க கட்டி போடறீங்க..”

“ எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!”

“ வெள்ளையை..”

“ வெளிய இருக்குற ரூம்ல..”

“ அப்ப கருப்பு ஆட்டை..?”

“ அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..”

“ எப்படி குளிப்பாட்டுவீங்க..?”

“ எதை கருப்பையா..? வெள்ளையையா..?”

“ கருப்பு ஆட்டை..?”

“ தண்ணில தான்”

“ அப்ப வெள்ளையை..?”

“ அதுவும் தண்ணில தான்”

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிறார். 

“ லூசாய்யா நீ,? ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற ! அப்பறம் எதுக்கு திரும்பத் திரும்ப கருப்பா வெள்ளயான்னு கேட்டுட்டே இருக்க ”

“ ஏன்னா வெள்ளை ஆடு என்னுது”

“ அப்ப கருப்பு ஆடு..?”

“அதுவும் என்னுதுதான்”

“ டேய்ய்ய்ய்………!!!!”

இந்த காமெடி டயலாக் யாருக்குப் பொருத்தமாயிருக்கும்?

வடிவேலு ?

விவேக் ?

கவுண்டமணி ?

சூரி?

வாசிப்பு எதுவரை ? (ஸ்ரீதர்)

image


கற்க கரையில, கற்பவர் நாள் சில என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்நாள்முழுவதும்
படித்தாலும் எல்லாவற்றையும் ஒருவரால் படிக்க முடியாது. படிப்பதற்கு
ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. வாழ்நாள்
முழுவதும் ஒருவர் கற்றுக் கொண்டே இருப்பது
அவசியம். வாசிப்பு அதற்குத் துணை புரிகிறது.  

வாசிப்பது ஒரு சுவையான அனுபவம். சிலருக்கு வாசிப்பே சுவாசிப்பாக
இருக்கும் . 

நமக்கு இறைவன் கண்களைக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு மட்டுமல்ல.
படிப்பதற்கும் கூடத்தான். சிலருக்கு வாசிப்பு பள்ளி யோடு முடிந்து விடுகிறது.
சிலருக்கு கல்லூரிவரைதான்  வாசிப்பு. சிலருக்கு
வேலை கிடைக்கும் வரை வாசிப்பு இருக்கிறது. சில பெண்களுக்குக் கல்யாணம்வரை தான் வாசிக்க முடிகிறது. குடும்பம், குழந்தை, வாழ்விட சூழல் , சினிமா, டிவி தாக்கம்,
கிரிக்கெட் உள்ளிட்ட காரணங்களால் பலரது
வாசிப்புத்  திறன் பாதிக்கப்படுகிறது.

வாசிக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் மனைவிக்கு இருக்காது. வார
இதழை வாங்கிக் கொண்டு போனால் ”ஏன் காசை
கரியாக்குகிறீங்க ?”என்று அன்பு
மனைவியின் அதட்டல் கேட்கும். புத்தகங்கள்  படித்துக்கொண்டிருந்தால்  ”வெட்டியாய்
ஏன் பொழுதைக்  கழிக்கிறீங்க” என்று கூறுவாள்.  சில குடும்பங்களில்  மனைவிகளுக்கு படிப்பதில்
ஆர்வம் இருந்தால் கணவனுடைய ரசனை வேறே எதிலாவது இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும்
வாசிக்கும் பழக்கம் இருப்பது  சில
குடும்பங்களில் பார்க்கலாம். அவர்கள் கொடுத்து வைத்த தம்பதிகள்.

வாசிக்கும் பழக்கம் சிலருக்கு இரத்தத்தோடு ஊறி விடுகிறது. யார்
தடுத்தாலும் பொருட்படுத்தாமல் அல்லது யாரும் சொல்லாமலே படிக்கிறார்கள். விமானத்தில்
போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று
வினவியபோது பத்துப்புத்தகங்கள் படிக்கவேண்டி இருந்தது என பதிலளித்தார் அறிஞர்
அண்ணா.

image

வாசிப்பில் ஒவ்வொருக்கு ஒரு விருப்பம் . சிலர் இலக்கியக் கதைகளை
விரும்பிப் படிப்பார்கள். சிலர் ஜனரஞ்சகக் கதைகளை விரும்பிப் படிப்பார்கள்.சிலர் பக்தி
இலக்கியம், ஆங்கில நாவல்கள் போன்றவற்றையும் விரும்பிப் படிப்பார்கள். ஒரு நாள் ஒரு
அறுபது வயது பெண் லெண்டிங் லைப்ரரியில் ஐந்து புத்தகங்கள் எடுப்பதைப் பார்த்து
வியந்தேன்.  இப்போதெல்லாம் புத்தகம் வாங்கித்தான்
படிக்க வேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலும் படிக்கலாம்.

ஓரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது  படிக்க வேண்டும் என்ற
உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.   நாம்
படிக்கும் புத்தகஙகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொண்டால் எவ்வளவு புத்தகங்கள்
படித்திருக்கிறோம் என்ற கணக்கு இருக்கும். நல்ல கதையாக மனதிற்குப் பட்டால் நாட்குறிப்பில்
சிறுகுறிப்பு எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு ஜானகிராமனின் “ பாயசம்” என்ற சிறுகதை.

வாசிப்பு எதுவரை என்று கேட்டால் நிறைய பேர்கள் சொல்லும் பதில் ”முடிந்தவரை
வாசிப்பு “. நண்பர் ஒருவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை. கையை
நீட்டுவது அல்லது கையில் புத்தகத்தைப் பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் அவருக்குப்
படிப்பதில் அதிக ஆர்வம். அவர் மனைவி அவருக்காக  தினமும் வாசிக்கிறாள். வாசிப்பை விரும்புகிறவர்கள்
முடியாதபோதும் வாசிக்க முயற்சி செய்வார்கள்.

.தான் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்
கொண்டே இருந்தாராம் பகத்சிங். 

 எனவே வாசிப்பு என்பது
சுவாசமிருக்கும்வரை என்பதைச்   சொல்லவும்  வேண்டுமா ?

புது வருடம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்! இப்போதே தீர்மானம் எடுப்போம்! 

 இன்றிலிருந்து தினம் ஒரு புத்தகம் படிப்போம்! 

அது பேப்பர் புத்தகமாக இருந்தாலும் சரி மின்-புத்தகங்களாக இருந்தாலும் சரி! 

சூரிய ஒளியில் மின்சாரம்

image

சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றிச் சில குறிப்புகள்:

சூரிய ஒளியில் குளிக்க வெந்நீர் தயாரிக்கலாம் என்பது நிறைய பேருக்குத் தெரிந்தது. மொட்டை மாடியில் தகடுகளைப் பொருத்தி அதிலிருந்து  மின்சாரம் தயாரித்து வீட்டின் தேவைக்கு உபயோகப் படுத்தலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அதற்கான செலவு அதிகம்,  மற்றும் அரசாங்கம்  தரும்  உதவித் தொகையைப் பெறுவது மிகக் கடினம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். 

மின்வெட்டு தீவிரமாக இருந்த காலத்தில் இதைப் பற்றி அதிகம் பேசினோம். தற்போது நிலைமை சற்று முன்னேறியவுடன் அதை மறந்துவிட்டோம். 

 அந்தந்த வீடுகளில் கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பு மிக மிகக் குறைவே.  ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC FAN) மற்றும DC  ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறைப் பயன்படுத்தலாம். 

 வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின் விசிறிகள்  LED விளக்குகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன, 

இவற்றைத்  தவிர வீடுகளில் கிடைக்கும் அதிகப் படியான சூரிய மின்சாரத்தை அரசாங்கத்துக்கு அளித்து நிகர மின் செலவைக் குறைக்க முடியும் என்பது இதன் மிகப் பெரிய விஷயம்.

 

சூரிய ஒளியைக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும்  சிறு மின்னகம் அமைக்க முடியும் என்பது சமீபத்தில் செயலாற்றப்படும் முயற்சி. அந்தக் கிராமங்களில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து  மின்னகத்தின் அளவை நிர்மாணிக்க வேண்டும்.

image


சாதாரணமாக ஒரு கிராம வீட்டுக்கு  2 யூனிட் மின்சாரம் தேவைப்படும். 100 வீடுகள் கொண்ட கிராமத்திற்கு 4 கிலோ வாட் சக்தி கொண்ட மின்னகம் தேவைப்படும். இது ஆண்டுக்கு சுமார் 33000 ரூபாய் பெறுமான மின்சாரத்தைத் தயாரிக்க உதவும். 


இது எப்படி செயல் படுகிறது என்று பார்ப்போம். சூரிய ஒளி குறிப்பிட்ட தகடுகளில் பிரதிபலிக்கும் போது மின்சாரம் தயாராகிறது. அந்த மின்சாரத்தை  நமது இன்வர்டர்  போன்ற மின் சமன் அமைப்பில் ( Power Controlling Unit ) இணைத்து அதை பேட்டரிக்கும் டிஸ்ட்ரிப்யூஷன் பெட்டிக்கும் (DB ) அனுப்ப வேண்டும். அந்த மின் சமன் அமைப்பு நமது டிரான்ஸ்பார்மர் போல செயலாற்றி வீடுகளுக்கும், கடைகளுக்கும், தெரு விளக்குகளுக்கும் மின்சாரம் வழங்கும். 

தேவையை விட அதிக மின்சாரம் கிடைத்தால்  அதை பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவில் பயன் படுத்தலாம். 

மேலே உள்ள படம் இந்த அமைப்பை நன்றாக விளக்கும்! 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரும்மாண்ட அளவில் சூரிய ஒளி மின்னகங்களை அமைக்க அரசாங்கமும் டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரிய கம்பெனிகளும் முனைந்துள்ளன.  

கிராமம்  – அன்றும் இன்றும் (கோவை சங்கர்)

image

கிராமத்தான் யானையைப் பார்த்தாற்போலே 

  என்றெல்லாம் சொல்லிவந்த காலமே போச்சு

ஏருழவன் கைநாட்டு வைக்கின்ற காலம் போய் 

  ஏர் பிடிக்கும் பட்டதாரி கிராமத்தில் மலிஞ்சாச்சு 

‘யாரடா’ என்று சொல்ல பண்ணையில்லை யின்று 

  கூட்டவுப் பணைகள் பெருமளவில் வந்தாச்சு 

சீராகக் கல்விதனைக் கற்றுவரும் கிராமத்தார் 

  ஊரார்க்கு உபதேசம் சொல்லும் வகை வளர்ந்தாச்சு


image

காதிலே பூ வைத்த ஏமாந்த சோணகிரி 

  கேலிக்கு உள்ளான கிராமத்தான் இன்றில்லை 

எத்தொழிலும் யாம் செய்வோம் நாட்டுவளம் பெருகிடவே 

   முரசுகொட்டி நிற்கின்றார் மாண்பு மிகு கிராமத்தார் 

பத்தாண்டு முன்பிருந்த கிராமமில்லை யிப்போது 

  கைத்தொழிலும் முன்னேற வருவாயும் பெருக்கிடவே 

 காந்தி கண்ட சமுதாயம் இனிதாக வருகிறது 


image

நாட்டுவளம் பெருகிடவே கிராமமே ஆதாரம் 

  புத்தம் பிட்டு அரசுக்கு தெளிவாகப் புரிஞ்சச்சு 

திட்டங்கள் பலதீட்டி பழுதரவே செயலாக்கி 

  எண்ணை விளக்குதனை மின்விளக்கால் எழிலாக்கி 

பொட்டைவெளி நிலந்தன்னை பொன்விளையும் பூமியாக்கி 

  கிராமத்து நாகரீகம் நகரத்தை மிஞ்சிடவே

சிட்டாக கிராமங்கள் பீடுநடை போட்டிடவே  

  மட்டற்ற மகிழ்வோடு உறைகின்றார் கிராமத்தார். 

இந்த வார தமிழ் இணைய தளம்

image

சிறுகதைகள் என்ற இணைய தளம் 2011 முதல் செயல்பட்டுக் கொண்டு வருகிறது! 

இதில்,

சிறுகதைகள் படிக்க /படைக்க  ஒரு பகுதி !

290 எழுத்தாளர்கள் இதில் தங்கள் சிறுகதைகளைப் பதிவு செய்துள்ளனர். 

அனைவரும் அவற்றைப் படித்து மகிழலாம். 

கதை கேளுங்கள் என்ற பகுதி ! 

வாசகர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குப் பிடித்தமான சிறுகதை அல்லது தாங்களே இயற்றிய சிறுகதையை தங்கள் சொந்தக் குரலில் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. 

அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

support@sirukathaigal.com .

குவிகம் வாசகர்கள் இந்தத் தளத்திலும் பங்கு பெறலாம்! 

image

இந்த மேமில் உள்ள வரிகளுக்கு கவித்துவமாக வாலி  அவர்கள் படகோட்டியில் எழுதிய ‘என்னை எடுத்து ’ என்ற பாடலைக் கேளுங்கள். காதலின் ஆழம் புரியும். 

தலையங்கம்

image

அம்மா மீண்டும் முதல்வராகி விட்டார் !

நான்கு ஆண்டு சிறை – 100 கோடி அபராதம் என்ற குன்ஹாவின்   தீர்ப்பை அப்படியே மாற்றி விட்டார் குமாரஸ்வாமி. எந்தக் குற்றமும் நடைபெறவில்லை. முழு விடுதலை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும். 

எதிர்க்கட்சிகளுக்கு எட்டிக்காய்.

அம்மா தி மு கா வினருக்கு அல்வா மற்றும் அறுசுவை விருந்து !  

வட சென்னையில் மீண்டும் தேர்தல். அம்மா அவர்கள் போட்டியிடுகிறார் ! அவருடன் போட்டியிட எந்த ஆஸ்தான பாகவதரும்  வரவில்லை !

கொஞ்ச நாள் இப்படி அப்படி என்று பாவ்லா காட்டிக் கொண்டிருந்த கர்நாடக அரசு கடைசியில் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது ! 

இதன் தீர்ப்பு  எப்போது வரும்?  தெரியவில்லை !

image

ஆண்டு : 2                                                                   மாதம் : 6 

image

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா