குவிகம்

     குவிகம்- 29 , மே 2016                                       (email: editor@kuvikam.com)

அன்புள்ள குவிகம் வாசகர்களுக்கு,

வணக்கம்

நீங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தில் ஒருவர் ! ஆம். குவிகம் வாசகர்களின்  எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேற்பட்டுவிட்டது !

அதாவது, உங்கள் குவிகம் இதழ் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ( அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்பது புரிகிறது) 

இன்றில்லாவிட்டாலும் நாளை படிக்கப் போகிறார்கள் ! 

edit1

குவிகம் இருபத்தொன்பது மாதங்களாக வருகிறது.

மாதம் 25 மின்-பக்கங்கள்  – மொத்தம்  725 பக்கங்கள் வந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களாக நமது குவிகத்தை  kuvikam .com என்ற தனி அமைப்பில் கொண்டுவந்துள்ளோம். அதற்குப்பிறகு  2766 பார்வைகள்  1327 பார்வையாளர்கள். போதாதுதான்.  இன்னும் நிறைய வாசகர்களை நமது தளத்துக்கு அழைத்து வரவேண்டும் ! 

உங்களுக்கு ஒரு வேண்டுகோள் !  

( பயப்படாதீர்கள்! காகித விலையேற்றம் காரணமாக பத்திரிகையின்  விலையை  ஏற்றப் போகிறோம் என்று  சொல்லப்போவதில்லை – சொல்லவும் முடியாது. )

உங்கள் கருத்துகளைத் தற்போது நேரில் சந்திக்கும்போதும், போனில் பேசும்போதும் சொல்கிறீர்கள் ! தயவுசெய்து இமெயில் மூலமாக அல்லது குவிகத்தின் பக்கங்கள் மூலமாக   எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, பரவாயில்லை , மோசம் என்ற கமெண்ட்ஸ்களையும்,  மற்ற உங்கள் பொதுக்  கருத்துகளையும் எங்களுக்கு எழுதுங்கள் ! 

மற்ற நண்பர்களின்  ஈ -மெயில்களையும் editor@kuvikam.com என்ற  நமது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் –  அவர்களையும் நம் குவிகத்தில் குவிக்கலாம் !   

நன்றி !

 

தலையங்கம்

 

மாத்தி யோசி….மாத்தி யோசி…. மாத்தி யோசி …

நாளை மே  16 தமிழகத்தில் தேர்தல் நாள்.

மாறி மாறி வரும் தி மு க -அ தி மு க என்ற துலாம் பலகை ஆட்டமா?   

இல்லை இந்த ஆண்டு அம்மா மீண்டுமா? 

இரண்டும் இல்லாத மூன்றாவது அணிக்கு  வாய்ப்பு இருக்கிறதா ?

கவர்ச்சி நடிகை கவர்ச்சியைக் காட்டி மக்களை இழுப்பது போல அரசியல்வாதிகளும் இலவசங்களைக் காட்டி நம்மைக் கவரப் பார்க்கிறார்கள். 

கருத்துக்கணிப்பு இப்போது விலை போகிறது. கட்சிகள் சொல்லுவது போலக் காட்சிகள் எழுதப்படுகின்றன.  

ஓட்டைக் கூடக் காசு கொடுத்து வாங்கலாம் என்று அரசியல் வாதிகள் துணிந்து செயல்படுகிறார்கள். 

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தலைவர்களோடு ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து அலறுகிறார்.  

ஊடக  விளம்பரங்களில் நாகரிகம் நசுங்கி மிதிபடுகின்றது. 

எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது . பண்பு கிடையாது. நல்ல உணர்வுகள் கூடக் கிடையாது.

இணையதளங்களிலும், எல்லாக் கட்சிகளும் ஒருவரை  ஒருவர் எவ்வளவுக்கு அசிங்கம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்.

படித்தவர் –  படிக்காதவர், பணக்காரன் – ஏழை , ஆண் –  பெண் அனைவரும் அசிங்கப் படுத்துகிறோம். அசிங்கப் படுகிறோம்.

எங்கே நாம் போகிறோம். ? போகப்போக இவை இன்னும் மோசமாகப் போகுமேயன்றி நல்லபடியாக மாறும் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.   

ஆபாசம் இல்லாத தேர்தல் நடக்காதென்றால் தேர்தல் இல்லாத ஜனநாயகம் சாத்தியமா என்று மாத்தி யோசிக்கலாமே? 

 

 

 

ஷாலு மை வைஃப் -எஸ்எஸ்

ஷாலு முதலில்  மோடிஜியைப் பார்த்ததைப் பத்திக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு சஸ்பென்சில் என்னை நிறுத்தி வேணுமென்னே என்னை டீஸ் செய்து, பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக மெகா சீரியல் மாதிரி நடுநடுவே கமர்சியல் பிரேக்குடன் சொன்னாள்.  என்ன இருந்தாலும் நம்ம நாட்டுப் பிரதமரை வெளிநாட்டிலே பார்த்து, அவரோட பேசி, அவர் கொடுத்த டீயைக்  குடித்த அனுபவம்  யாருக்குக் கிடைத்தாலும்  அவர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதில் கொஞ்சமும் தப்பில்லை. ஷாலு ஆனாலும் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாள் . ஒருவேளை குருஜினியோட … Continue reading

குரங்கு மேட்டர் – சரசம்மாவின் சமரசம் – பாஞ்சாலியைத் துகிலுரித்தபோது… ……… (சிந்தாமணி )

யாரையும் புடிக்கலே

நாங்கள் புதியதாக ஆரம்பித்திருக்கும் அகில இந்திய கட்சி இது தான் ‘நோட்டா’ .

உடன்பிறப்பே! ரத்தத்தின் ரத்தமே ! மக்கழே ! உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் நோட்டாக் கட்சிக்குப் போட்டு ஆதரியுங்கள்!

எங்கள் கட்சிக் கொடி என்ன தெரியுமா? கருப்புக் கொடியில் 49 ஓட்டை. சிம்பாலிக் ஆக செக்ஷன் 49 -ஓ வை நினைவுப் படுத்த.

எங்களை எலெக்ஷன் கமிஷன் அங்கீகரித்து எங்களுக்காகத் தனி  சின்னம் ஒதுக்கியிருக்கிறது.  அது தான் இது!

மறந்து விடாதீர்கள்! எங்கள் சின்னம் கடைசியில் இருக்கும்.

 

அதற்கு எவ்வளவு நோட்டுக் கொடுக்கப்போகிறோம் என்று கேட்கிறீர்களா?நோட்டாவுக்கே நோட்டா? வேண்டியது தான்.

எங்கள் நோட்டாவை ஆட்சி பீடத்தில் அமர்த்தினால்  நாங்கள் என்னென்ன இலவசங்கள் தருவோம் தெரியுமா?

நோட்டாவின் தேர்தல் அறிக்கை 

  • சன் டிவி, கலைஞர் டிவி,  ஜெயா டிவி, மக்கள் டிவி,கேப்டன் டிவி போன்ற கட்சி டிவிக்களை ஒழிப்போம். அதற்குப் பதிலாக சினிமா சேனல், சீரியல் சேனல், விளையாட்டு சேனல் என்று ஒவ்வொரு துறைக்கும் தனி சேனல் அமைப்போம்.
  • எல்லோருக்கும் பஸ், ரயில் , ஆகாய விமானம் பயணம் இலவசம்.
  • கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மற்ற பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும். இல்லாவிட்டால் கார் லைசன்ஸ் ரத்து. சைக்கிள்.ஸ்கூட்டர்,பைக்காரர்களுக்கும் அது பொருந்தும். அதன் சீட்டு எண்ணிக்கையை விடக் குறைந்த பேர்களுடன் ஓட்டினால் அபராதம்.
  • ரேஷன் கடையில் எல்லாம் இலவசம். சமையல் கேஸ் இலவசம்.  சினிமாவும் இலவசம்.
  • இந்தியா முழுதும் எல்லா பொருட்களுக்கும்  – உப்பு, குடிநீர், மருந்து, எல்லாம் நோட்டா பிராண்ட்தான். எந்தப்  படமும் இருக்காது –  அம்மா படம் உள்பட.
  • மாதாமாதம்  மேலும் என்னென்ன பொருட்கள் இலவசமாகக் கொடுக்கலாம் என்று யோசித்து செயல் படுத்துவோம்.
  • வேலையில்லாமல் இருக்கும் அனைவரும் அரசாங்க ஊரக வளர்ச்சித் திட்டத்தில் வேலை செய்யவேண்டும். இலவசமாகச் சாப்பாடு போடப்படும். சம்பளம் கிடையாது.
  • எல்லா பள்ளிகளும் , கல்லூரிகளும் பீஸ் வாங்காமல் செயல்படும். அரசாங்கமே எல்லாவற்றையும் நடத்தும்.
  • ஆறு கடல் குளம் ஏரி எல்லாம் தேசியமயமாக்கப்படும். எல்லா நதிகளும் இணைக்கப்படும். எந்த மாநிலமும் அதற்குச் சொந்தம் கொண்டாடமுடியாது. 
  • மீனவர்கள் மீன் பிடிக்கப் போகும்போது அவர்களை மற்ற நாடுகள் கைது செய்யாமலிருக்க நமது கடற்படையும் கூடப் போகும். 
  • விரைவில் நமது சந்திராயானம் சந்திரனில் ஆட்களைக் குடியேற்றும். 
  • வீடு இல்லாதவர்களுக்கு அரசே வீட்டைக் கட்டிக் கொடுக்கும். 
  • இப்போது தமிழ் நாட்டில் முக்கியமான கட்சி நாங்கள் தான். நாங்கள் யாரோடும் கூட்டு வைக்கமாட்டோம்.

 

போருமய்யா! நீர் நோட்டாவை வைச்சிக்கிட்டு பீலா விடுறது என்று குமுறுவது கேட்குது.

சரி, உண்மையில் நோட்டாவிற்கு ஓட்டுப் போட்டால் என்னவாகும்?

இது உங்கள் எதிர்மறை எண்ணத்தைத் தெரிவிக்கும் முறை தானே தவிர எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை அல்ல.

நோட்டா ஓட்டுக்களை எண்ணி அவற்றைச் செல்லாத ஒட்டாக அறிவிப்பார்கள். நோட்டாவிற்குப் போடும் ஓட்டு தேர்தல் வெற்றி-தோல்வியை மாற்றவே மாற்றாது. உதாரணமாக மொத்தம் 100 பேர் மட்டுமே ஒரு தொகுதியில் வாக்காளர்கள் இருந்து அதில் 99 பேர் நோட்டாவிற்குப் போட்டாலும் , மீதமுள்ள ஒரு ஓட்டை வாங்கியவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இப்படித் தான் தேர்தல் சட்டம் கூறுகிறது.

முதலில் இருந்த செக்சன் 49 ஓ வை மாற்றிச் சென்ற ஆண்டு இந்த நோட்டாவைக் கொண்டுவந்தார்கள். சென்ற ஆண்டு 1.5 சதவீத மக்கள் நோட்டாவிற்கு ஓட்டுப் போட்டனர்.

செக் 49 ஓ படி, உங்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்காவிட்டால் அதற்கென்ற ஒரு பாரம் (17 A ) வாங்கி அதில் உங்கள் எதிர்ப்பை ஓட்டைக் காரணத்துடன்   பதிவு செய்து கையெழுத்திட்டு  தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கவேண்டும். இது உங்கள் ஓட்டை யாரும் கள்ள ஒட்டாகப் போடுவதைத் தடுக்கும். ஆனால் இதனால் ஓட்டின் ரகசியம் பாதுகாக்கப்படாததால் இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நோட்டா  இருப்பதால் இப்போது கட்டாய ஓட்டுரிமையைக் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள்.

வரட்டும். அதுதான் நல்லது.

லாக்கர் – அழகியசிங்கர்


 சனிக்கிழமை மிஸஸ் சாரி போன் செய்கிறாளே என்று அவள் மீது எனக்குக் கோபம். சனிக்கிழமை இரண்டு மணியுடன் அலுவலகம் முடிந்து விடுகிறது. பின் நாங்கள் வங்கிக் கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பும்போது மணி மூன்றடித்து விடும். சனிக்கிழமைகூட நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்ற கடுப்பு எனக்கு எப்போதும் இருக்கும்.

மிஸஸ் சாரி இப்போது நங்கநல்லூரில் வசிக்கிறார். அவர் கணவரும் அவரும்தான் தனியாக இருக்கிறார்கள். பிள்ளைகள், பெண்கள் எல்லோரும் இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். சாரி குடும்பத்தில் எல்லோருக்கும் ஏகப்பட்ட வருமானம். நல்ல நிலையில் இருந்து சாரி அவர்கள் ரிட்டையர்டு ஆகி, பென்சன் பணம் கணிசமான அளவிற்கு வாங்குகிறார். அவர்கள் முதலில் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள். அப்போது எங்கள் வங்கியில் ஆரம்பித்த கணக்கை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எப்போதோ கணக்கை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. காரணம் திருவல்லிக்கேணியில் உள்ள எங்கள் கிளைதான் ராசியான கிளையாம்.

சாரி மாமி லாக்கருக்காக நங்கநல்லூரிலிருந்து இங்கு வந்து லாக்கரைத் திறப்பாள். அவள் போட்டிருக்கும் சேமிப்பு கணக்குகளிலிருந்து வட்டி ஒழுங்காக வரவில்லை என்றால், ஏன் என்ற கேள்வியைக் கேட்பாள். நேரே உள்ளே தலைமை மேலாளரைப் போய்ப் பார்ப்பாள். அவர் எனக்கு அவர் அறையிலிருந்து போன் பண்ணிக் கூப்பிடுவார். நான் உள்ளே போய் சொல்ல வேண்டும்.
பின் மிஸஸ் சாரி என் ஸீட்டிற்கு வந்து, ஒவ்வொரு மாதமும் ஒண்ணாந்தேதி வட்டி வந்திடும், ஏன் வரலைன்னு ஒரு பாட்டுப்   பாடுவாள். அவளை சமாதானம் செய்ய வேண்டும்.

பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கீதா சொல்வாள் : “சார், அந்த மாமியை பகைச்சுக்காதீங்க..எல்லா டெப்பாஸிட்டுக்களையும் எடுத்துக்கிட்டுப் போயிடுவா…”

கீதா இப்படி சொல்வாளே தவிர ஒரு உதவியும் செய்ய மாட்டாள். பெரிய ராணி மாதிரி அவளுக்கு நினைப்பு. தன் டிரஸ் மீது அழுக்கே படாம உட்கார்ந்து போகிறவள்.

சனிக்கிழமை வந்தாலே ஒரே கூட்டமாக இருக்கும். அதுவும் முதல் வாரம் என்றால் கேட்கவே வேண்டாம்.

மிஸஸ் சாரி சரியாக ஒன்றரை மணிக்கு வந்தாள்.

“லேட் ஆயிடுத்து,” என்றாள் மிஸஸ் சாரி.

“உட்காருங்கள்,” என்று உட்கார வைத்தேன்.

என் முன் நின்ற வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் மிஸஸ் சாரி வந்திருப்பதையே மறந்து விட்டேன்.

கீதா உடனே, “மாமியை உள்ளே அழைத்துப் போய் லாக்கரைத் திறந்து விடுங்க,”என்று சொன்னவுடன் மாமி எதிரில் உட்கார்ந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது.

லாக்கர் நோட்டில் கையெழுத்துப்போடும்படி சொன்னேன். பின் மிஸஸ் சாரியை லாக்கர் அறைக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஒவ்வொரு முறையும் லாக்கருக்கு அழைத்துக்கொண்டு போவதற்குள் எனக்குப் பெரும்பாடாக இருக்கும். எங்கள் கிளையில் லாக்கர் கீழே பாதாள அறையில் இருக்கிறது. உண்மையில் லாக்கர் பக்கத்தில்தான் வங்கிப் பணத்தைப் பூட்டி வைக்கும் பெட்டகமும் இருக்கும்.

மிஸஸ் சாரியை லாக்கர் முன் நிறுத்தி லாக்கரைத் திறந்து வைத்தேன். பெரிய லாக்கர் வைத்திருந்தாள் மாமி. இதைத் தவிர பையன், பெண்ணிற்கெல்லாம் வேற வேற லாக்கர் வைத்திருந்தாள். லாக்கரைத் திறந்து அதில் உள்ள பொருள்களை எண்ணுவாள். அதற்குத் தன் கையிலிருந்து ஒரு நோட்புக் வைத்திருந்தாள். அதில் எழுதியிருக்கிற ஐட்டம்ஸ் சரியாகப் பார்த்து ஒப்பீடு செய்த பிறகுதான் போவாள்.

“நீங்க சீக்கிரமா முடிச்சுடுங்க..இன்னிக்கு சனிக்கிழமை..அரைநாள்தான்..இன்னும் கொஞ்ச நேரத்தில பூட்டிடுவோம்..”

“சரி, சரி,” என்றாள் மாமி.

நான் மாடி ஏறி வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். ஏறும்போது மூச்சிரைக்கும். பெரிய அவதி. லாக்கரில் ஒருவரை விட்டுவிட்டு வந்திருப்பேன். மேலே போய் என் ஸீட்டில் உட்காரப் போனால் இன்னொருவர் வந்திருப்பார். திரும்பவும் அவரை அழைத்துக்கொண்டு லாக்கருக்குப் போக வேண்டும். இப்படியே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வந்து கொண்டிருப்பார்கள். எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் யாரிடம் இதையெல்லாம் காட்ட முடியும்.

லாக்கரைப் பற்றி இன்னொரு பிரச்சினை என் ஸீட் முன்னால் நின்று கொண்டிருந்தது. வந்திருந்தவர் டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டிருந்தார். லாக்கர் லெட்ஜரில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டுமாம். அவரை உட்காரச் சொன்னேன். அவர் கொண்டு வந்த பேப்பரைப் பார்த்தேன்.

“யார் பெயரில் லாக்கர் இருக்கிறது?” என்று கேட்டேன்.

“தங்கை பெயரிலும் அவர் கணவர் பெயரிலும் இருக்கிறது.”

“அவர்கள் இருவரும் வர வேண்டும்.”

“அவர்கள் இருவரும் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார்கள்..”

“அவர்கள் இருவரும் ஒரு முறையாவது நேராக இங்குவந்து உங்கள் பெயரைச் சேர்க்கவேண்டும் என்று சொல்லவேண்டும்..”

“இப்போதைக்கு அவர்களால் வர முடியாது…”

“அப்படியென்றால் ஒன்றும் செய்வதிற்கில்லை…”

“அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார்கள். என் பெயரைச் சேர்க்கச் சொல்லி..”

“கடிதம் கொடுத்தாலும் நேரே வரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு பிரச்சினைவரும்.”

நான் சொன்னதைக்கேட்டு பெரிதாக சத்தம் போட்டபடி அவர் கடுப்புடன் அந்த இடத்தை விட்டுப் போனார்.

இந்த வங்கிக் கிளையில் லாக்கர் எப்போதும் ஒரு பிரச்சினை. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வங்கி இது.

சனிக்கிழமை என்பதால் 12 மணிக்கே வங்கியை மூடிவிட வேண்டும். ஆனால் முடிவதில்லை. நசநசவென்று கூட்டம். தாங்க முடியவில்லை. ஒரு வழியாகக் கூட்டம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். ஒவ்வொரு ஊழியரும் வீட்டிற்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். இதோ கீதாவும் கிளம்பிவிட்டாள். கொடுத்து வைத்தவள். வீடு பக்கத்திலேயே அலுவலகம். விருப்பமான நேரத்தில் வந்துவிட்டுப் போகலாம். எதிரில் எஸ்பி பார்த்துக்கொண்டிருந்த ஆபிஸர் ஜெகந்நாதன் டிபன் சாப்பிடப் போய்விட்டார்.

உள்ளே தலைமை மேலாளர் வட்டார அலுவலகத்தில் கூட்டம் என்று கிளம்பிப் போய்விட்டார். சனிக்கிழமை என்பதால் வரமாட்டார். இரவு பங்களுர் போகும் வண்டியில் ஏறி திங்கள் காலையில்தான் அலுவலகம் வருவார். மாடியில் லோன் ஆபிஸர் கூடுவாஞ்சேரியிலிருந்து வருகிறார். சனிக்கிழமை என்றால் யாரிடமும் சொல்லாமல் கூட ஓடிப் போய்விடுவார். அவருக்கும் தலைமை மேலாளருக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டுதான் இருக்கும்.

இதோ கோடியில் உட்கார்ந்திருக்கும் ஓய்வு ஊதியம் பார்க்கும் அலுவலரும் கிளம்பிவிட்டார். இப்போது நானும், தலைமை காஷியரும், பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் வைக்கும் கடை நிலை ஊழியர் கேசவனும்தான் இருக்கிறோம்.

தலைமைக் காஷியர் கூப்பிட்டார்.

“சார், முடிந்து விட்டது. வர்ரீங்களா?”

“இதோ” என்று காஷியர் அறைக்குள் நுழைந்தேன்.

எல்லாவற்றையும் எண்ணிக் கையெழுத்துப் போட்டேன். பின் கேசவனைக் கூப்பிட்டு காஷ் எடுத்துக்கொண்டு போகும் பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே சென்றோம். பாதாள அறைக்குச் செல்ல வேண்டும். பின் காஷ் காபினைத் திறந்து எல்லாப் பெட்டிகளையும் உள்ளே வைத்துப் பூட்டினோம். வெளியே வந்து ஸ்டிராங் ரூமை பல சாவிகளை வைத்துப் பூட்டினோம். பின் மாடிக்கு வந்து கதவைப் பூட்டினோம்.

“இன்னிக்கு ஏகப்பட்ட கூட்டம்….ஐந்நூறில இரண்டு கள்ள நோட்டு வேற,,” என்று அலுத்துக் கொண்டார். இதோ காஷியரும் கிளம்பிப் போய் விட்டார்.

நானும் கேசவனும்தான். கணினிக் கணக்குகளையெல்லாம் முடிக்கச் சிறிது நேரம் ஆகும். வேகம் வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறேன்..

“என்னப்பா கேசவா…சனிக்கிழமை கூட வங்கியைவிட்டுச் சீக்கிரமா கிளம்ப முடியலை…”என்றேன் அலுத்தபடியே.

“ஆமாம். சார்…இங்கே அப்படித்தான்…”

அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் குடிக்கப் போய்விடுவான். அவனால் குடிக்காமல் இருக்க முடியாது. சனிக்கிழமை நிச்சயமாகக் குடி உண்டு.

“என்னப்பா கேசவா…ஜெகந்நாதன் இல்லை.”

“அவர் அப்பவே வீட்டிற்குப் போய்விட்டார். தெரியாதா உங்களுக்கு”

“அப்படியா….சீக்கிரம் வங்கியைப் பூட்டிவிட்டு வீட்டிற்குப் போக வேண்டும்…”

அவசரம் அவசரமாக நானும் கேசவனும் வங்கியைப் பூட்டிவிட்டுக் கிளம்ப ஆயுத்தமானோம்… மெயின் ஸ்விட்சை கேசவன் ஆப் செய்தான்…அந்த சமயத்தில் யாரோ சன்னமாய் சத்தம் போடுகிற மாதிரி குரல் கேட்டது…

“கேசவா…யாரோ சத்தம் போடுகிற மாதிரி குரல் கேட்கிறது. எங்கே?”

“சார், அது ரோடில யாரோ சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாங்க…வாங்க சார் போகலாம். “

வங்கிக் கதவைப் பூட்டும்போது எனக்குக் காரணம் புரியாத படபடப்பு இருந்தது. பூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். இன்னும் ஒரு நாள் வங்கியைப் பற்றி நினைக்க வேண்டாம்.

மேற்கு மாம்பலத்திலிருந்து தினமும் நான் 8 மணிக்கே திருவல்லிக்கேணிக்கு வந்து விடுவேன். திரும்பவும் வீடு போய்ச் சேர ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணி ஆகிவிடும். அண்ணாசாலை வழியாக மாலையில் வீட்டிற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.

“என்ன இன்றைக்கு சீக்கிரம் வந்து விட்டீர்கள் போலிருக்கே?” என்று கேட்டாள் மனைவி.

“இல்லை. உண்மையில் மானேஜர் சீக்கிரமாய்க் கிளம்பிப் போய்விட்டார்…அதான் கொஞ்சம் சீக்கிரம்…அவர் இருந்தால் போக விட மாட்டார்.

“இன்னிக்கு தி நகர் மார்க்கெட் போகணும்…மொத்தமா காய்கறி வாங்கிக்கொண்டு வந்துடலாம்..அர்ச்சனாவிற்கும் வாங்கிக் கொண்டு வந்துடலாம்..”என்றாள் மனைவி.

“எனக்குத் தூக்கம் வரும்போல் இருக்கு…நான் தூங்கறேன்..எழுப்பு,”
என்று கூறியபடி அறையில் போய்ப் படுத்தேன்.

கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன். விழிப்பு வரும் சமயத்தில் எனக்கு
யாரோ முனகுவதுபோல் குரல் கேட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டேன். மணி ஆறடித்திருந்தது. என் உடம்பு பரபரப்பாகிவிட்டது. மிஸஸ் சாரியைப் பற்றி திடீரென்று ஞாபகம் வந்தது. லாக்கரிலிருந்து மிஸஸ் சாரி சொல்லிக்கொண்டு போகவில்லை என்று ஞாபகம் வந்தது. அவசரம் அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டேன். கேசவனுக்கு போன் செய்தேன்.

“என்ன சார்,” என்று கேட்டான் கேசவன்.

“உடனே ஆபீஸிக்கு வா…அந்த  மிஸஸ் சாரி போகும்போது
சொல்லிக்கொண்டு போகலை… மிஸஸ் சாரியைப் பூட்டிக்கிட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன்..”

“நான் நல்லா பாத்தேன் சார்…யாரும் இல்லை..”

“எனக்கு தூக்கம் வராது. கதவைத் திறந்து பார்த்திட்டா நல்லது.”

“என்ன ஆச்சு…கடைக்கு வரலையா?”
என்று கேட்டாள் மனைவி.

எரிச்சலுடன், “இல்லை இல்லை,” என்றேன் மனைவியைப் பார்த்து.

திரும்பவும் திருவல்லிக்கேணியை நோக்கி ஓட்டினேன். பனகல் பார்க் பக்கம் போக முடியாமல் கூட்டம். மிஸஸ் சாரி அங்கிருக்கக் கூடாது என்று எனக்கு இஷ்டமான தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

போகும்போது தலைமை காஷியர் வீட்டிற்குப் போய் அவருடைய சாவியை வாங்கிக்கொண்டேன். “ஏன்?” என்று கேட்டார்?

“மிஸஸ் சாரியை வைத்துப் பூட்டிவிட்டோமோவென்று, தோன்றுகிறது,” என்றேன்.

“ஐய்யய்யோ….நான் வரட்டுமா?”

“வேண்டாம். நான் பூட்டிட்டுத் திரும்பவும் சாவியைக் கொண்டுவந்து கொடுத்திடறேன்..”

கேசவன் வங்கி வாசலில் காத்திருந்தான்.

“மிஸஸ் சாரியை வைத்துப் பூட்டிவிட்டோமோவென்று, தோன்றுகிறது”என்றேன்.

“ஐய்யய்யோ….நான் வரட்டுமா?”

“வேண்டாம். நான் பூட்டிட்டு திரும்பவும் சாவியை கொண்டு வந்து கொடுத்திடறேன்..”

கேசவன் வங்கி வாசலில் காத்திருந்தான்.

“கேசவா..மிஸஸ் சாரி லாக்கருக்குப் போனவங்க வெளியே வந்த மாதிரி தெரியலை..”

“ஏன் சார், வரலைன்னா எப்படி சார்…அவங்க கிட்டே செல்போன் இருக்காது..போன் பண்ண மாட்டாங்க..”

“அதான் ஒண்ணும் புரியலை….”

அவசரம் அவசரமாகக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போனோம். மெயினை ஆன் செய்தேன். கேசவன் மாடிப்படிக்கட்டுக் கேட்டைத் திறந்தான். லைட்டைப் போட்டான்.

அங்கும் இங்கும் எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. மனித அரவம் கேட்டதும் பதுங்கிக் கொண்டன.

“சார் எந்தச் சத்தமும் கேட்கலை.. உங்களுக்குப் பிரமை சார்..”

ஸ்ட்ராங் ரூமைத் திறந்தோம். ஸ்ட்ராங் ரூமைப் பூட்டிவிட்டால், அந்த இடம் கும்மென்று இருக்கும். காற்று நுழையக் கூட வழி இருக்காது. யாராவது மாட்டிக்கொண்டால் மூச்சுத் திணறிச் சாக வேண்டியதுதான்.

எனக்குத் திக்கென்றிருந்தது.

“சாரி மாமி..”என்று சத்தம் போட்டபடி லாக்கர் அறைக்குள் நுழைந்தேன்.

நான் லாக்கர் திறந்த இடத்தில் சாரி மாமி மயக்கம் போட்டு விழுந்திருந்தாள்.

எனக்குப் பதட்டமாகப் போய்விட்டது. அவசரம் அவசரமாக முகத்தில் தண்ணீரை அடித்தோம். மாமி அசைந்து கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.

மாமி லாக்கரில் எல்லாவற்றையும் வைத்துவிட்டுச் சாத்தியிருந்தாள். லாக்கரிலிருந்து நகைகள் எதுவும் எடுத்துக்கொண்டு போகவில்லை. லாக்கரில் நகைகளை வைப்பதற்குத்தான் வந்திருக்கிறாள் போலிருக்கிறது.

மாமியை நானும் கேசவனும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து மாடிப்படி வழியாக ஏறி ஹாலில் படுக்க வைத்தோம்.

கேசவனைப் பார்த்து, கேசவா..மாமிக்கு மூச்சு வர்றது இல்லையா? என்று நடுக்கத்துடன் கேட்டேன்.

“மூச்சு வர்றது…கவலைப்படாதீங்க.. மாமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தால் போதும்…பக்கத்திலேயே சக்தி ஆஸ்பத்ரி இருக்கு..சேர்த்து விடலாம்..”

“கேசவா, நான் இங்க இருக்கேன்..நீ போய் டாக்டர் யாரையாவது கூப்பிட்டு வா…”

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, ஆஸ்பத்ரியில் சேர்க்கச் சொன்னார்.

“டாக்டர்..என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டேன்.

“ஒண்ணும் தெரியலை..ஆஸ்பத்ரியில உடனடியாகச் சேர்க்கணும்..”

நானும் கேசவனும் பக்கத்தில் இருக்கிற  ஆஸ்பத்ரியில் சாரி மாமியைச் சேர்த்துவிட்டு, வங்கிக் கதவைச் சார்த்திவிட்டு ஆஸ்பத்ரியில் கிடந்தோம். பின் மாமி வீட்டுக்குப் போன் பண்ணித் தகவல் தெரிவித்தேன். கீதாவிடம் போன் பண்ணிச்சொன்னேன். அவளும் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்துவிட்டாள். க்ளூக்கோஸ் வாட்டர் எல்லாம் ஏற்றியவுடன் மாமி கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணைத் திறந்து பார்த்தாள். என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.

“என்ன இப்படி செய்து விட்டீர்களே?” என்றாள் கோபமாக.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். “மன்னிச்சிடுங்கோ..நீங்க லாக்கரிலிருந்து வந்து விட்டீர்கள் என்று நினைத்தேன்.”

“நல்லா நினைத்தீர்கள், போங்கள்..”என்றாள் சாரி மாமி விரக்தியுடன்.

டாக்டர் தனியாகப் பேசும்போது, “இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால், மாமி பிராணன் போயிருக்கும்,” என்றார்.

எனக்கு கேட்கும்போது திக்கென்றது. எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சாரிமாமா எப்படியோ வந்து சேர்ந்தார். ரொம்ப வயசானவர். என்னைப் பார்த்து கண்டபடி திட்ட ஆரம்பித்தார். நான் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தெரியாமல் நடந்துடுத்து…மன்னித்துக் கொள்ளுங்கள்,”என்றேன்.

“நான் உன்னை சும்மா விடமாட்டேன். போலீசுல சொல்றேன்..”என்றார் உணர்ச்சி வசப்பட்டு. கீதாவிற்கு ரொம்பத் தெரிந்தவர். கீதா என்னை மன்னிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டாள்.

சாரி மாமி இரண்டு நாட்கள் ஆஸ்பத்ரியில் இருந்தாள். எங்கள் வங்கிக்கிளையிலிருந்து எல்லோரும் சாரி மாமியை விஜாரித்தார்கள். தலைமை மேலாளர் என்னைத் தனியாகக் கூப்பிட்டுக் கண்டபடி திட்டினார்.

“உங்களாலே பிராஞ்ச் பேரே கெட்டுப்போயிடுத்து…”

வீட்டிற்குப் போன இரண்டு வாரங்களில் சாரி மாமி செய்த காரியம் என்னவென்றால், எல்லா கணக்குகளையும் நங்கநல்லூருக்கு மாற்றியது. லாக்கர்கூட சாரி மாமி மாற்றிவிட்டார்.

என்னை வேற இடத்திற்கு மாற்றும்படி கிளை மேலாளர் வட்டார அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

குறும்படம் – “நவம்” – இண்டஸ் கிரியேஷன்ஸ்

சியேட்டல் இண்டஸ் கிரியேஷன்ஸ் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது.

நாடக  மக்கள் அவர்கள்.

அவர்களுடைய குறும்படம் இது  நவம்.

வித்தியாசமாக இருக்கிறது

குட்டீஸ் லூட்டீஸ்:——- சிவமால்

என்ன சொல்லிப் புரிய வைக்க….!
ஸிக்னலை நெருங்கியதும் கரெக்டாக சிகப்பு விளக்கு
எரிந்தது. அலுப்போடு காரை நிறுத்தினேன்.

கோடை வெய்யில் சுட்டெரிக்க, ‘ரமா, கொஞ்சம் தண்ணி
கொடு’ என்றேன் மனைவியிடம்.

மனைவி நீட்டிய பாட்டிலிலிருந்து நீர் அருந்தி முடிக்கவும்
ஆம்பர் லைட் வரவும் சரியாக இருந்தது. காரை ஸ்டார்ட்
செய்தேன்.

‘அப்பா.. வெயிட்..வெயிட்.. நீங்க இப்போ வண்டி ஓட்டக்
கூடாது’ என்று தடா போட்டாள் என் அருகில் அமர்ந்திருந்த
என் பெண் மிதிலா.

‘ஏம்மா…”

‘அங்கே பாருங்க.. அந்த போர்டைப் பாருங்க.’ என்று
ரோட்டின் ஒரு புறத்தில் இருந்த போர்டைக் காட்டினாள்.

‘டோன்ட் டிரிங்க்.. அன்டு டிரைவ்’ என்று ஆங்கிலத்தில்
எழுதப்பட்டிருந்தது.

அட.., பகவானே… இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன
சொல்லி புரிய வைப்பேன்..!

 

ராமானுஜர் 1000

 

பாரததேசத்தில்  சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, முக்கிய குருமார்கள் மூவர். 

அத்வைத சித்தாந்தத்தின் மூலவர் ஆதி சங்கரர் 

விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடி ராமானுஜர் 

துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர் 

பூஜ்யகுரு ராமானுஜரின் (1017-1137)  1000 வது ஜெயந்தி அடுத்த ஆண்டு 2017ல் வருகிறது. 

பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றியவர்.

ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர். 

தாழ்த்தப்பட்டவர்களை அன்றைக்கே கோயிலுக்குள் அழைத்துச் சென்ற புரட்சியாளர். 

மதத்தில்  புரட்சி செய்த மகான்.

தனது குருவான  திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை “எவருக்கும் வெளியிடக்கூடாது” என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார்.

ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார்.

இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, இது குருவின் சொல்லுக்குத் துரோகமிழைப்பதாகும் என்றும், இதற்கு நரகம் புக நேரிடும் என்றார்.

இராமானுஜரோ,  எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கு செல்வதும் பாக்கியமே என்றார்.

முடிவில்  தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டுத் திவ்ய மந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார்.

இப்போதும் உடையவர் ராமானுஜரின்  திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.

ராமானுஜரைப் பற்றி விஜய் டிவியில் வந்த ஒரு பாடல் காட்சியைப் பார்த்துப் பரவசம் அடையுங்கள். ( நன்றி  யூ டியூப் )

 

வாசகர் பக்கம்

வாசகர்  எண்ணம்

[வாசகர்களைத் துருவி துருவிக் கேட்டதில் கிடைத்த எண்ணங்கள் இவை.

பெயரைப் போடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் போடவில்லை.] 

சந்திரகுப்தரும் சாணக்கியரும் எக்கேடோ கெட்டுப் போகட்டும். இந்திய கிளியோபாட்ரா அமராப்பள்ளியைப் பற்றி சொல்லுங்கள் !

 குட்டீஸ் சுட்டீஸ் நன்றாக இருக்கிறது !

சரித்திரம் பேசுகிறது எழுதுவது யாரோ? அட்டகாசமா இருக்கு. அதுவும் சந்திரகுப்தர் கதை டாப் டக்கர்.

இலக்கியவாசலைப் பத்தியே எழுதி மூணு பக்கத்தை ரொப்பீட்டீங்களே !

குமுதத்திலே கடல்புறா நாடகம் சூப்பர்னு எழுதியிருக்காங்க, நீர் என்னவோ காமாசோமான்னு எழுதியிருக்கிறீரே?

ஏன் ஸ்வாமி? சினிமா பாக்க காசில்லையா? ஒரு பட விமர்சனம் கூட குவிகத்தில வர மாட்டேங்குது?

அலாரம் கதை மணியாக இருந்தது.

‘எதற்காக எழுதுகிறேன்?’ பகுதி சுயவிமர்சனமோ என்று நினைத்தேன்.

குறும்படங்கள் எல்லாம் கலக்கலாக இருக்கின்றன.

தலையங்கங்களில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிவதேயில்லை !

 

தேர்தல் நையாண்டிகள் – தமிழ்த்தேனீ

cartoon3

விரலிலே மையிட்டு அழகு பார்க்கிறார்; பதவி வந்தவுடன் துரோணர் போல  விரலைக் கேட்கிறார்

வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்.வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் என்று சொல்லலாமே! இறுதி வாக்காளர் என்று சொன்னால் பயமாக இருக்கிறது

கோடி கோடியாய் பணம் சேர்த்து வைத்திருப்போர் கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருப்போர் வேட்பாளர்களாய். கோடி கோடியாய் வாக்காளர்கள் ஏழைகளாய்

அசோகர்   சாலை இரு மருங்கிலும் மரங்களை நட்டார்  ஆறுகள் குளங்கள் வெட்டினார். ஆட்சியாளர்கள்  சாலை இரு மருங்கிலும்   மக்களை  நடுகிறார்கள்.

இதுவரை நானே உங்களை ஆண்டேன், இனியும் நான்தான் ஆளுவேன் . நான் ஆளுகின்ற காலத்திலே உங்களுக்கு என்ன செய்தேன், என்பது முக்கியமல்ல. இனி ஆளப்போகும் காலங்களில் நான் என்ன செய்யப் போகிறேன், என்பதும் முக்கியமல்ல. என்னைத் தவிர யார் கேட்டாலும் ஆளும் பொறுப்பைத் தராதீர்கள் . ஏனென்றால் நாட்டை ஆண்டு ஆண்டே பழக்கப்பட்டுவிட்டேன். என்னால் இந்த நாட்டை ஆளாமல் இருக்க முடியாது என்பதுதான் முக்கியம். அது மட்டுமல்ல பொதுமக்களே ஒரு ரகசியத்தையும் சொல்கிறேன் எனக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறு தொழில்களே எதுவும் தெரியாது . ஆகவே நான் உயிரோடு இருக்கும் வரையில் தயவு செய்து எனக்கே ஆளும் பொறுப்பினைத் தாருங்கள்

கற்பனையைச் சொன்னேன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது உண்மையைச் சொன்னேன்  கரங்கள் என்னைப் பிளந்தன

யார்  ஜெயிப்பார் இந்த தேர்தலில்  நமக்கு நிச்சயமாகத் தெரியும்  கதாநாயகன்தான் ஜெயிப்பான் என்று. மக்கள் கண்ணுக்கு  எல்லோருமே  வில்லனாகத் தெரிகிறார்கள்.யார் ஜெயித்தாலும்   அவர்களே   வில்லன்  அவர்களே கதாநாயகன்   என்னும் முடிவுக்கு  மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

மேலிடத்திலே இருந்து வரும் தலைவர்கள் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் இந்தி மொழியிலே பேசுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எப்படி புரியும் என்பது விவாதிக்கப்படுகிறது. எனக்கு ஒரு சந்தேகம் – தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் தமிழிலே பேசுகிறார்கள் பல தலைவர்கள். அதெல்லாம் மட்டும் மக்களுக்குப் புரிகிறதா என்ன ?

கப்பலை  நிலை நிறுத்தப் பயன்படும்  நங்கூரமும்  கப்பலிலேயே  பயணிக்கிறது.   வாகனங்களை நிறுத்த பயன் படும்  ஓட்டத் தடை  எனப்படும்   Break   வாகனத்தோடே  பயணிக்கிறது. ஊழலைத் தடுக்க  மட்டும்  எதாலும் முடிவதில்லை.cartoon 1

வேட்பாளரை மாற்றக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் மக்களின் விழிப்புணர்வைக் காட்டினாலும் அறிவித்த வேட்பாளரின் எதிர்ப்பாளர்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டமோ எனும் சந்தேகமும் வருகிறது. பாவம் வாக்காளர்கள் அவர்களுக்கு எப்போதும் குழப்பமே
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நலத் திட்டங்களை செயல் படுத்துவோம்  என்று வாக்குறுதி அளிப்போரே!  ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீகளா? இன்னும் இல்லையா !ஓ ! அவைகளையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நிறைவேற்று வீர்களா?   இப்போதுதான் புரிகிறது

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று எல்லோருமே பேசுகிறார்கள். ஆக மொத்தம் யாருக்குமே நம்பிக்கை இல்லை ஆட்சிக்கு வருவோம் என்று.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் இலவச கணினி எல்லாம் கொடுக்கிறீர்களே. படிக்க இயலாத பிள்ளைகளுக்கு இலவச படிப்பைக் கொடுப்பீர்களா ?

ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்களே! குழந்தைகள் மேல் பாசமே இல்லாதவர்கள். பெற்ற தாயே குழந்தையைக் கொல்லலாமா?  பெற்றவர்களே இப்படிச் செய்தால் அந்த ஊழல் குழந்தை பாவம் எங்குதான் போகும் ? குழந்தையை அனாதையாக விடலாமா?

நாட்டிலே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அதிகமாகிவிட்டனர் எங்கு குற்றம் நடந்தாலும் அடையாளம் தெரியாத சிலரால் நடத்தப்பட்டது என்கிறார்கள்.. ஒரு வேளை வேற்றுக் கிரகவாசிகளாக இருப்பரோ ?. இந்த நாட்டில் உள்ளோரையே அடையாளம் தெரியவில்லை என்றால் வேற்று கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும் ? அதனால் வேற்று கிரக வாசிகளைக் கண்டு பிடித்து முதலில் அவர்களுக்காவது அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்களிக்கும் தலைவர்களை, அப்படி நிறைவேற்றாவிட்டால் உங்களை என்ன செய்யலாம் என்று வாக்காளர்கள் யாரும் கேட்டுவிடாதீர்கள். எங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று எந்தத் தலைவராலும் சொல்லவும் முடியாது, சொல்லவும் மாட்டார்கள். அதையும் தவிர இந்தக் கேள்விக்கு இன்னமும் யாருக்குமே பதில் தெரியாது .

நுகர்வோர்  பயன் படுத்தும்  மின்சாரக்  கட்டணத்தைக் குறைக்க எளிதான பல வழிகள் உள்ளன . அவற்றில் சிறந்த வழி மின்சாரம் அளிப்பதைக் குறைப்பது ஒன்று. அப்போது மின் கட்டணம் அதிகமாகக் கட்டவேண்டிய அவசியம் இராது.

ஊழல் நாடுகள் பட்டியலில் எழுவத்தி ஆறாவது  இடத்தில் இந்தியா உள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஓ அதிலும் முதல் இடம் இல்லையா வருத்தமாகத்தான் இருக்கிறது இன்னும் முன்னேறினால்தான் முதல் இடத்தைப் பிடிக்க முடியும்

ஒரு வேட்பாளர் வீட்டிற்கு வந்தார் அவருடன் கூட வந்தவர்கள் ஐயா வணக்கம் நீங்க நம்மளுக்குதான் ஓட்டு போடுவீங்கன்னு தெரியும் இருந்தாலும் வீடு தேடி வந்து கேக்கறதுதானே முறை  என்றார் சாமர்த்தியமாக நான் மிருதுவான குரலில் உங்களுக்குதான் ஓட்டு போடணும்னு நீங்க கேக்கறதுக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கா அப்படீன்னு கேட்டேன். உடனே அவர் சார் நீங்க போடுவீங்கன்னு நம்பிக்கையா வந்தோம் என்றார். நான் ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போடமாட்டேன்னு சொல்லவே இல்லே உங்களுக்குத்தான் போடணும்கிறதுக்கு ஏதாவது வலுவான காரனம் இருக்கானுதான் கேட்டேன் என்றேன் . உடனே மற்றவர்கள் இவரு நமக்கு ஓட்டு போடமாட்டாரம் வாங்க அடுத்த வீட்டுக்கு போகலாம் என்றார். வீட்டுக்கு வீடு கட்சிக்குக் கட்சி மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் வலுவான காரணம் மட்டும் சொல்ல முடியவில்லை ஒருவராலும்.

ஏய்யா உனக்கெல்லாம் எதுக்கு கௌன்சிலர் ஆகணும் எம் எல் ஏ ஆகணும் மந்திரி ஆகணும்னு இந்த வேண்டாத ஆசை ? என்னண்ணே அப்பிடிக் கேட்டுட்டீங்க மக்கள் மேலே எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? நானும் நாலு எழுத்து படிச்சவன்தானே ! நானும் ஒரு முறையாவது சட்டசபைக்கு , பார்லிமெண்டு்க்கு எல்லாம் போயி அந்த மைக்கு நாற்காலி எல்லாத்தையும் தூக்கி அடிச்சு அன்-பார்லிமென்ட் வார்த்தையெல்லாம் பேசணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?

பட்டு வாடா, செல்லமே வாடா,  கண்ணே வாடா, முத்தே வாடா, பவழமே வாடான்னு கொஞ்சுவாங்க அந்தக் காலத்திலே ! இப்போ என்னடான்னா பட்டுவாடாவையே தடை செய்யறாங்களாமே ?

ஒரு தேர்தலை நடத்தி அதில் பங்கு கொண்டு மக்கள் மனதில் ஆசைவிதைகளைத் தூவி வருங்காலத்தில் நறுமணம் கமழும் ஒரு பூந்தோட்டத்திலே அவர்களை குடியேற வைப்பது போன்ற கனவுகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தி அவர்களை மயக்கி அவர்கள் மனதை வசியம் செய்து வாக்களிக்கச் செய்து வெற்றி பெறுவது என்பது உண்மையிலேயே கடினமான செயல்தான்

“ஏண்டா நாம தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் போட்ட போதெல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து கையைத் தட்டி ஆரவாரம் செஞ்சு மகிழ்ந்தாங்களே ! எதிர்க்கட்சியைப் பத்தி நாம் சொன்ன புள்ளி விவரமெல்லாம் கேட்டு ஆமா ஆமா ன்னு கோஷம் போட்டாங்களே. அப்புறம் ஏண்டா நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட ஓட்டே போடலே மக்களுக்கு நாம பேசினதெல்லாம் புரியலையா?” “அவங்களுக்கு நாம பேசினது மொத்தம் புரிஞ்சு போச்சுண்ணே, அதான் ஓட்டு போடலே”

மதுவிலக்கு கொண்டுவருவோம் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று எல்லாத் தலைவர்களுமே சூளுரைக்கிறார்கள் பொது மக்களே நன்றாக உற்றுக் கவனித்துக் கேளுங்கள் , மது விலைக்கு கொண்டு வருவோம் என்றுதான் சொல்கிறார்கள்!

வாக்களிப்பது மக்கள் கடமை அளித்த வாக்கை காப்பாற்றுவது வேட்பாளர்கள் கடமை அல்லவா? அவற்றை நிறைவேற்றாத வேட்பாளர்களை என்ன செய்யலாம் ?

ஜெயிக்கிற குதிரைமேல் பணம் கட்டியே பழக்கப்பட்டுவிட்டோம் நாம்.   இல்லையென்றால்  நம் பணமும் பறி போய்விடுமே என்கிற பயத்தில். ஆனால் அரசியல் அப்படியல்ல.  ஜெயிக்கிற கட்சிக்கு  வாக்களித்தால் ஏற்கெனவே  பறி போன   நம் பணமும், இனி வருங்காலங்களில்  நாம் ஈட்டும் பணமும் இரண்டும் சேர்ந்து  போய்விடும் . ஆகவே ஜெயிக்கிற கட்சி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு  வாக்களிக்காமல்  ஜெயிக்க வேண்டிய  கட்சிக்கு வாக்களியுங்கள்

நாட்டின் முதுகெலும்பு தொழிலாளிகள். அந்தத் தொழிலாளிகளுள் முக்கியமான தொழிலாளி விவசாயி. அப்படிப்பட்ட விவசாயியைக் கடன் வாங்க வைத்து வட்டி கட்ட வைத்து விட்டு இப்போதென்ன திடீர் அக்கறை விவசாயிகளின் கடனை முழுவதுமாக நீக்க? தேர்தல் காலத்தில் மட்டுமே வருகிறதா விவசாயிகளின் நினைவு ?

“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்னும் ஔவையின் மொழியிலே குடி உயரக் கோன் உயர்வான் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டுதான் குடியை உயர்த்துகிறார்களோ ?

பால் கூட வாங்க முடியலே படிக்கவும் முடியலே மின்சாரமும் இல்லே , படிச்சும் வேலை கிடைக்கலே என்றெல்லாம் யாரையோ நடிக்க வைத்து அவர்களைப் பேசவைத்து அதை வெளியிடுகிறார்களே.  உண்மையான மக்களை சந்தித்தாலே நடிக்க வைக்க வேண்டும் எனும் அவசியம் இல்லாமலே மக்களே உண்மையை் பேசுவார்களே. எதற்கையா இந்த நடிப்பும் வேஷமும்? எல்லாவற்றையுமே நடிப்பால்தான் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்துவிட்டீர்களா.? ஆமாம் நடித்தால்தானே நம்புகிறார்கள் மக்கள்

ஸ்கூட்டர் விலையிலே பாதி தருவதை விட ஒண்ணு செய்யலாம் பாதி ஸ்கூட்டர் இந்த தேர்தலிலேயும் மீதி ஸ்கூட்டர் அடுத்த தேர்தலிலேயும் தரலாம். முழுக் கிணறு ஆகிவிடும். ஏற்கெனவே கிணறுகளாகப் பார்த்து பார்த்துதான் ஸ்கூட்டரெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது

கணக்கிலே கடன் வாங்கிக் கழிக்கலாம்  கூட்டலாம்  கணக்கில்லாமல் கடன் வாங்கக் கூடாது. அதே போல் கணக்கில்லாமல்  இலவசங்களை வழங்கக் கூடாது

முன்பெல்லாம் வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை மரியாதையாக காரிலே அழைத்துச் சென்று வாக்களிக்க வைப்பார்கள். வாக்களித்தவுடன் மறந்துவிடுவார்கள் வீட்டுக்கு நடந்துதான் வரவேண்டும் . இப்போது வாக்களிக்கச் சென்று பாதுகாப்புடன் வீட்டுக்குத் திரும்ப முடிகிறது என்பது மனதுக்கு ஆறுதலான விஷயம். ஆனாலும் இப்போதும் வாக்களித்த மறுகணமே வாக்காளர்களை மறந்துவிடுகிறார்களே வேட்பாளர்கள் என்பதுதான் வருத்தப்படுத்தும் விஷயம்

இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஜோதிட நம்பிக்கை மட்டும் யாரையுமே விடுவதில்லை. ஜோதிடர்களும் இறையை விட அவர்கள் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு ஏதேனும் சொல்லிவைக்கிறார்கள். அதை நம்பி எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்னும் ஆர்வமுள்ளவர்கள் கெட்ட கிரகங்களின் பார்வையிலிருந்து விடுபடவேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு கோயிலிலே கொள்ளையடித்தாகிலும் அந்தப் பணத்திலே கொஞ்சம் ஜோதிடருக்கும் அள்ளிக் கொடுத்துவிட்டு அவர் சொல்படியெல்லாம் ஆடுகிறார்கள் வெள்ளைத் துண்டு, மஞ்சள் துண்டு பச்சைத் துண்டு என்றெல்லாம் கலர் கலராக துண்டுகளை போர்த்திக் கொண்டும் தலையில் கட்டிக் கொண்டும் ரவிக்கையாகத் தைத்துப் போட்டுக்கொண்டும் பிரசாரம் செய்கிறார்கள். கலர்க் கனவுகள் நிறைந்த தேர்தலப்பா இது!  துண்டுப் பிரசாரம் கேள்விப்பட்டிருக்கிறேன் சிறு சிறு காகிதத்திலே அச்சிட்டு அதைக் கொடுப்பார்கள். இது வித்தியாசமான துண்டுப் பிரசாரமாக இருக்கிறது

எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது உங்கள் உரிமை. உங்கள் விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பது உண்மைதான். வீடு தேடி வந்து வாக்களிக்கக் கோரும் வேட்பாளர்களின் ஆட்களும் மனிதர்களே , வேட்பாளரும் மனிதரே. ஆகவே வருபவர் யாராக இருந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று அன்போடு உபசரித்து மரியாதையாக வழி அனுப்புங்கள். அதற்குப் பிறகு நன்கு ஆலோசித்து உங்கள் மனசாட்சிப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். மதம் கட்சிகள் எதிர்கட்சி நம் கட்சி எதுவுமே முக்கியம் இல்லை. மனிதம் முக்கியம். ஆகவே மனிதம் காப்போம்

வேட்பாளர்களே தேர்தல் நேரத்தில் நீங்கள் பேசுவதையெல்லாம் உற்றுக் கவனிக்கிறார்கள் பொது மக்கள் . மற்ற நேரங்களில் நீங்கள் பேசுவதே இல்லையே என்னும் ஏக்கத்தில். ஆனால் எப்போது மக்களைப் பேசவிட்டு நீங்கள் கேட்கப் போகிறீர்கள் அந்த ஏக்கம் உங்களுக்கு வராதா?

இந்தியாவின் தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இதோ !

தேசிய தண்ணீர் விநியோக அமைப்பு (National Water Grid)

மின்சாரத்தை இந்தியா முழுவதும் விநியோகிக்க ஒரு மின்சார விநியோக அமைப்பு இருக்கிறது.  அதைப் போல இந்திய நதிகளில் ஓடும் தண்ணீரை நதிகள் இணைப்பின் மூலம் ஒரு தண்ணீர் கட்டத்தை ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தினால் உபரியாகக் கடலில் கலக்கும் தண்ணீர் தேவையான மக்களுக்குப் பயன்படச் செய்ய முடியும்.

இதைப்பற்றி விவரம் அறிந்துகொள்வதற்காக குவிகம் ஆசிரியரும் அவர் நண்பர்  ஜே ராமன் அவர்களும்  பிரபல நீர்வள ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்களைச் சந்தித்தனர்.

டாக்டர் கல்யாணராமனின் ஆணித்தரமான இரு மாபெரும் கருத்துக்கள்:

கங்கா , யமுனா சரஸ்வதி என்ற வரிசையில் வரும் சரஸ்வதி ஆறு கற்பனை ஆறு அல்ல.  சரஸ்வதி சமவெளி நாகரீகம் என்று சொல்லத்தக்க அளவில் இருந்த ஒரு உண்மையான ஆறு தான். செயற்கைக் கோள் படங்கள் மூலமாக இந்தத் தண்ணீர்த் தடம் ராஜஸ்தானில் இருக்கிறது என்று  நிரூபித்ததுடன், ஆழ் துளை சோதனை மூலம்   அந்தத் தடத்தில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது என்றும் நிரூபித்துள்ளனர். (இதைப் பற்றிய விவரங்களை அடுத்த குவிகம் இதழில் பார்ப்போம். )

இரண்டாவது,  தேசியத்  தண்ணீர் விநியோக அமைப்பு என்ற நதி நீர் இணைப்புத் திட்டம். இதைப் பற்றி டாக்டர் கல்யாணராமன் கூறிய கருத்துக்களை  விவரமாகப் பார்ப்போம்.

தேசியத்  தண்ணீர் விநியோக அமைப்பு

தேசிய தண்ணீர் விநியோக அமைப்பு 100 சதவீத சாத்தியமே.

பிரும்மபுத்திராவில் பிப்ரவரி -மார்ச் மாதம் உபரியாக – வெள்ளமாக ஓடிக் கடலில் கலக்கும் தண்ணீரை மட்டும் தென்னிந்தியாவிற்குக் கொண்டுவந்தால் இங்கிருக்கும் கோதாவரி,கிருஷ்ணா ,காவேரி போன்ற நதிகளில் வருடம் முழுவதும் வரும் தண்ணீரைப் போல இன்னொரு மடங்கு  தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும். இதனால் பிரும்மபுத்ரா நதிநீர் கன்யாகுமரிக்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியம்.    இது அனைவரும் கூறிவரும் நதிநீர் இணைப்பின் மூலம் தான் சாத்தியமாகும்

இதைவிட,  டாக்டர் கல்யாணராமனின் மகத்தான கருத்து என்னவென்றால் நமது இந்தியாவிற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீர் நமது வசம் இருக்கும் இமயமலையில் 1500 பனிப்பாறை ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்தியாவில் எல்லா நிலங்களிலும் மூன்று போகம் உணவு தானியங்கள் விளைவிக்கலாம். மேலும் தரிசாக இருக்கும் 9 கோடி  ஏக்கர் நிலங்கள் விளைச்சலுக்கு உபயோகமாக்கலாம்.  இதன் மூலம் நாம் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவது உறுதி.

டாக்டர் கல்யாணமானின் வலைப்பூவில் (bharatkalyan97.blogspot.in) இந்தத் தேசிய தண்ணீர் விநியோக அமைப்பைப் பற்றி விரிவான  விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

இதைப் பற்றி அவர் கூறியதின் சாரம்:

இந்த நதிநீர்த் திட்டம் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சி பி ராமஸ்வாமி அய்யர், விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் கே எல் ராவ் , தஸ்தூர் போன்றவர்களும் இதில் ஆர்வம் காட்டினார்.   அப்போது இத் திட்டம் தேசிய தண்ணீர் வளர்ச்சி செயலாண்மை ( National Water Development Agency) என்று அழைக்கப்பட்டது. அது தான் கங்கா-காவிரி திட்டம்  மாலைக் கால்வாய்த்திட்டம்  (Garland Canal)  என்றும்   பிரபலமாயின .

ஆனால் கங்கையில் தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் இத் திட்டம் செயல் படுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியது. மேலும் விந்திய மலைகளைத் தாண்டித் தண்ணீரைக் கொண்டுவருவது நடைமுறையில் முடியாத செயலாக இருந்தது. அதைப்போலவே 300 மீட்டர் அகல மாலை போன்ற கால்வாயில் இருவழியாகத் தண்ணீர் போக வழியும் (Head) இல்லாமல் இருந்தது.

அதற்கு மாற்றாக ஒரு திட்டத்தை நமது நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

அதன்படி, பிரும்மபுத்ராவிலிருக்கும் தண்ணீரை  சங்கோஷ், டிஸ்டா, மேச்சி , கோசி, கக்கர் ,சாரதா போன்ற நதிகள் மூலமாக கங்கையில் கலக்கச்  செய்ய வேண்டும் .

பிறகு கங்காவை பரக்கா பாரேஜ் வழியாக சுபர்ணரேகாவில் இணைக்க வேண்டும்.

சுபர்ணரேகாவை மகாநதி-கோதாவரி- கிருஷ்ணா – பெண்ணார்-பாலார்-காவேரி -வைப்பார்-குண்டார் -வைகை – தாமிரபரணி- கன்யாகுமரி என்று இணைத்து பிரும்மபுத்ரா தண்ணீரை இந்தியாவின் கீழ்க்கோடிக்குக் கொண்டுவரலாம்.

விந்திய மலைகளில் தண்ணீரை நீரேற்றுவதற்குப் பதிலாக தண்ணீர் மலைகளைச்  சுற்றி ஒரு பிரதக்ஷிணமாக வந்தால் சுலபமாகக் கொண்டுவரலாம்.

பங்களாதேஷின் உதவி நமக்குத் தேவை தான். அந்த நாடு வெள்ளத்தில் வருடாவருடம் அவதிப் படுவதைத் தடுக்க அவர்கள் கட்டாயம் இத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்வர். இரு நாட்டினருக்கும் win-win திட்டம்தான்.  அவர்களுக்குத்  தண்ணீர் இழப்பு ஏதுமில்லாமல் ஒப்பந்தம் செய்யலாம்.

 

மேலும் நேபாலில் சாரதா நீர்மின் திட்டதை இந்தியா செயல் படுத்தினால், இந்தியாவிற்குத் தண்ணீரும் நேபாளுக்கு அதிக அளவு மின்சாரமும் கிடைக்கும்.

இந்த நதிநீர் இணைப்பின் திட்டத்தை 3D ரேடார் டோபாகிராபி  மூலம் ஆறு ஆண்டுகளில் தயாரிக்கலாம்.

தேசிய நீர் விநியோக அமைப்பை அமைக்க உச்சநீதி மன்றம் 2014ல் உத்தவரவு பிறப்பித்துள்ளது..

இது நமது பொருளாதாரத்தை உலக வல்லரசுகளுக்கு மேலாக உயர்த்தும்.

இதில் வேறு எந்தவித வெளிநாட்டுத் தொழில்நுட்பமும் தேவையில்லை. அணைகளும் கால்வாய்களும் கட்டும் தொழில் நமக்கு ஆயிர வருடங்களாகப் பழகிய ஒன்று.

முக்கியமாக , இதற்குத் தேவையான மூலதனம் – பணம் எப்படித் திரட்டுவது? 9 கோடி ஏக்கர் தரிசு நிலங்களை விலை நிலமாக மாற்றுவதால் முதலீட்டுக்குத் தக்க வருமானம் கிடைக்கும் என்பது உறுதி. இதனால் உலக வங்கியும் மற்ற நிறுவனங்களும் இந்திய மக்களும் (பத்திரங்கள் மூலமாக ) இதில்  பங்கேற்று இதற்குத் தேவையான முதலீட்டைத் திரட்ட முடியும்.

இவற்றால் காடு  வளம் அதிகரிக்கும்.

சுற்றுபுரச்சூழல் பாதுகாக்கப்படும்.

நதிநீர்ப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

அணைகள், கால்வாய்கள் கட்டுவதால் புலம்பெயரும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இது அடிகோலும்.

இத் திட்டம் இமய மலையிலிருந்து கன்யாகுமரி வரை இருக்கும் அனைத்துத் தர மக்களையும் கலாசாரம் – பாரம்பரியம் என்ற இணை கோட்டில் இணைக்கும்.

நமது உச்ச நீதி மன்றமும் இத் திட்டத்தை மேலும் கால தாமதப் படுத்தாமல் உடனே நிறைவேற்றத் தொடங்கும்படி 2012ல் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தான் பாரதியார் அன்றே சொன்னார்:  ‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்… மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’  என்று. தீர்க்கதரிசி அவர்.

இது கனவல்ல. 100 சதவீதம் சாத்தியமானதே.

நமக்குத் தேவை – நம்மால் முடியும் என்ற ஒருமித்த எண்ணம் மட்டும்தான்.

செயலாற்றுவோம்.

அவளைக் கொன்று விட்டேன் ( சு ரா )

ஏனோ புரியவில்லை ஏன் அவளை நான் வெறுக்கவில்லை என்று !
காரணம் தெரியவில்லை ஏன் அவள் மீது இன்னும் பரிவு என்று !

ஒன்று மட்டும் புரிகிறது  அவள் முழுக்க முழுக்க நல்லவள் அல்ல 
எனக்கும் அவளைப் பிடிப்பதில்லை  என்னிடமே நடிக்கிறாள்

அப்பாவி போல என்னிடம் கொஞ்சிச் சிணுங்கிச் சிரிக்கிறாள் 
வேஷம் போட்டு மோசம் செய்வதில் அவள் கைதேர்ந்த கைகாரி

அவள் மனதின் சாக்கடை உடம்பில் முத்துமுத்தாய் வேர்க்கிறது 
அழகான தோல் என்று அளவுக்கு மீறி கர்வம் திமிர் அகங்காரம்

பாசம் உறவு நட்பு எல்லாம் அவளுக்குக் காறித்துப்பும் எச்சில்
கண்மூடித்தனமான என் பரிவு பரிதாபம் நேற்றோடு முடிந்துவிட்டது.

நான் யாரென்று காட்டவேண்டும், தண்டித்தேயாக வேண்டும்!
எப்படி ?  எப்படி ? கத்தியா? கடப்பாறையா ? கடுவிஷமா ? 

பொல்லாதவள்  அவள் சாகசக்காரி என்னை ஏமாற்றிவிடுவாள் 
பொறுத்தது போதுமென பொங்கி  முடிவுகட்ட முடிவு செய்தேன் 

நினைத்ததை முடித்து விட்டேன் அவளைக் கொன்று விட்டேன் 
ஒன்று புரியவில்லை  ஏன் அதைத் தற்கொலை என்கிறார்கள் ?

படைப்பாளி – திலீப்குமார் (எஸ்கே என்)

கட்டுரையில் மேற்கோள்கள் அதிகம் என்பதால் மேற்கோள் குறித்த ஒரு கவிதையுடன் தொடங்கியுள்ளேன்.
“அழகே அல்ல”

ஆணித்தரமாய் மேடையில் முழங்கினார் அரசியல்வாதி அய்யாசாமி
எந்தக் கருத்தையும் சொந்தமாகவே சிந்திக்க வேண்டும்
அடுத்தவன் கருத்தை எடுத்துச் சொல்வது அழகே அல்ல
மேற்கோள் காட்டி பேசுபவன் எல்லாம் முட்டாள் என்றான்
சீன அறிஞன் சியாங்கு புயாங்கு.
(கணையாழியில் எப்போதோ படித்த கவிதை
கவிஞர் பெயர் நினைவிலில்லை)
1. விக்கிபீடியாவில் திலீப்குமார் பற்றி
திலீப்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டவர். சிறுகதை, இலக்கியத் திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தத்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள்.
2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் “பாஷா பாரதி” என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.
2. அசோகமித்திரன் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து..
“திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையானப் பரீட்சார்த்தப் படைப்பு. சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது உற்சாகம் தவிர்த்தது அல்ல.

திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.”

3. ஆபிதீன் பக்கங்களில் ஒரு பதிவு :-

தன்னுடைய ’தீர்வு’ சிறுகதை உருவான விதத்தை திலீப் அதில் சொல்லியிருந்தார் இப்படி : ‘ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் “தீர்வு” என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேளை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை.

விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்துக் கதையை வேறு பிரதியெடுத்துக் கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது. ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது “தீர்வு” கதையை ஞாபகப் படுத்தினேன். அது          ” நல்ல கதையாச்சே, அப்பவே போடச் சொல்லிட்டேனே! “என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டுக் கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது.’
அந்தக் கதை இப்படிப் போகிறது.

தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் 30 குடும்பங்கள் வசிக்கும் ஒரு கட்டிடத்தில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குப் போகும் போது கண்ட காட்சி வழக்கத்திற்கு விரோதமாய் இருந்தது.
வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்த முற்றமும், சுத்தமாக இருந்த நடைவெளியும, கிணற்றைச் சுற்றிக் கும்பலாக நின்றுகொண்டிருந்த ஒரே ஆண்களும் பெண்களும் குழந்தைகளும், அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிகச் சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்த மாமாவும் …

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். ஒரு பக்கம் கோவில் சுவரும் மற்ற மூன்று பக்கங்களிலும் சுற்றியுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் வசிக்கும் 30 குஜராத்தி குடும்பங்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்க்கும் ஆண்கள், சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடைய மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும் ரசனை உடைய பெண்கள், சராசரியாக குடும்பத்திற்கு ஐந்து வாரிசுகள் கொண்ட குடும்பங்கள் இவை.
எதிரில் வந்த கோபால்பாய் தெரிவித்த விஷயம் இதுதான்.
“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.”

மேல்மாடியிலுள்ள மாமாவின் வீட்டில் ரொம்பவும் மடி ஆச்சாரம் பார்க்கும் பாட்டி கோவிலுக்குப் போயிருந்தாள். கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவளாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

கிணற்றடியில் அந்த எலியை எடுக்க ஒரு பழக்கூடையை.க் கயிற்றில் கட்டி முயற்சி நடக்கிறது. அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்த மாமா, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபடுகிறார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான். மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார்.
இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வி.  ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும் என்று சொல்லப்பட்டாலும் எல்லோர் முகத்திலும்  கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன. ஹெல்த் ஆபீஸ் போவதைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாக்குச் சொல்கிறார்கள். தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.
மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனையும் செயலாக்கப்படுகிறது. மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோவிலிலிருந்து திரும்பிவந்த பாட்டி என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன் என்று குஜராத்தியில் கூறுகிறாள்.

பீரோவினுள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின் மேல் உட்கார்ந்திருந்த சின்னச் சின்ன விக்ரஹங்கள் தவிர மூலையில் காவித் துணியில் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்த ஏதோ முடிந்துவைக்கப்பட்ட மிகச் சிறிய மண்குடம் இருந்தது. ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள்.

“ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.
பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யாணி’ல் லயிக்கத் துவங்கினாள். என்று முடிகிறது கதை.

இணையத்தில் கிடைக்கும் இவரது மற்ற கதைகள் ( கதைப் பெயரைச் சொடுக்கினால் கதையைப் படிக்கலாம்)

மூங்கில் குருத்து,

கண்ணாடி,

கடிதம்

தீர்வு,

கானல்

தடம்,

 அக்ரஹாரத்தில் பூனை

 

 

 

பாலக்காடுத் தமிழ்

தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவது தங்கிலிஷ் !

அதைப்போல் தமிழும் மலையாளமும் கலந்து பேசுவது தலையாளம்.

அந்தத் தலையாளத்திற்கென்றே அழகாய் அமைந்தது பாலக்காட்டுத் தமிழ். அதில் ஒரு ஓசை நயம் இருக்கும். ஒரு சங்கீத வாசம் இருக்கும்.

பெரும்பாலும் பாலக்காட்டுப் பெண்ணைத் தஞ்சாவூர் மாப்பிள்ளைக்குக் கட்டுவார்கள். அவர்களுக்குள் இருக்கும் கலாசார மாறுபாடுகள் இரண்டு குழந்தை பிறந்த பிறகுதான் சம நிலைக்கு வரும்.

பல படங்களில் பேசப்பட்டாலும் மைக்கேல் மதன காமராஜனில்தான் பாலக்காட்டுத் தமிழ் கமலஹாசனால்  ரசிக்கும்படிப் பேசப்பட்டிருக்கும்.

அதில் கமலும் ஊர்வசியும் பேசும்  காட்சியைப் பாருங்கள். அந்த  சீன் உங்களுக்காகக் கீழே காத்திருக்கு. அந்த ஓ.. ஓ.. சொல்லும் அழகு.. பாலக்காடுத்  தமிழ் இழையும்.

சரி , பாலக்காட்டுத் தமிழின்  ஸ்பெஷாலிடியைப் பார்ப்போமா? நெட்டில் பல இடங்களில் தேடியதில் கிடைத்த தகவல் இவை.

பாலக்காடு பிராமணர்களின்  குடும்பக் கட்டுக்கோப்பு அழகாக இருக்கும்.

என்ன பிரச்சினை என்று வந்தாலும் கடைசியில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாதானமாகிவிடுவார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் சிறப்பு.

கூட்டுக் குடும்பம்,  உறவினர்கள் – பெரியவர்களுக்கு மரியாதை, நளினம், பாந்தம், அமைதி, பொறுமை, குருவாயூரப்பன்,  பாரம்பரிய உடை, விஷுக்கனி, தலைக் குளியல், சுத்தம், சுகாதாரம், அழகு உணர்ச்சி,  மூக்குத்தி, வேஷ்டி உடுத்தும்  ஆனால்  பனியன் போடாத ஆண்கள், பாவாடை தாவணி முண்டு பெண்கள், பாட்டு, ஸ்லோகம், தெய்வபக்தி, படிப்பு, இங்கிலீஷ் பிரியம், கொஞ்சம் தண்ணியா நிறைய கோப்பி ( கும்பகோணம் டிகிரிக்கு மாறுதல்) , நல்ல ரசனை, தெச்சிப்பூ, சந்தனம் இட்டுக் கொள்ளும் அழகு, குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்கும் முறை,  பால் பாயசம், நேந்தரம்பழம், பலாப்பழம்,வித்தியாசமான ருசியான சமையல், சத்தம் போட்டுப் பேசும் தன்மை, பிடிவாதம், பேச்சில் வாதம் போன்ற எல்லாமே நன்றாக நேர்த்தியாக இருக்கும்.

சமையலில் பாலக்காட்டுக்குத் தனித்துவம் உண்டு. தேங்காய் இல்லாமல் சமைத்தால்  அது ஒரு சமையலா? என்பார்கள்.

பாலக்காட்டில் ‘வாடா போடா வாடி போடி’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.  “அண்ணா வாடா !.. போனைக் கொடுடி ! ” இதெல்லாம் அங்கே சாதாரணம். 

நாம ரிசர்ச் பேப்பர் எழுதப் போறது இல்லை. பாலக்காட்டுத் தமிழை ஒரு குட்டி நாடகத்தின் மூலம்  பாப்போமா ?  

அதன் ஸ்கிர்ப்ட் இப்படி.

 

ண்:   என்டே குருவாயூரப்பா !

பெண்: : விளிச்சேளோ?

ஆண்:  ஏய்ய்.. பகவானைத் தொழுதேன்.

பெண்: அசலாத்தில என்ன பேசிண்டிருக்கா  தெரியுமா?

ஆண்:  நோக்கும் நேக்கும் சண்டைன்னா? ஓ……எத்தற பிராவஷ்யம்    சொல்லி யிருக்கேன். அவாளெல்லாம் பிராந்தாக்கும். கிட்டியா? “

பெண்: அல்லா. நாம தான்  மோஷமாம்.  எப்பவும்  ஈஷிண்டிருக்கோமாம்.

ஆண்:  ஓ….. ..கொஞ்சங்கூட விவஸ்தையே இல்லை. அவாளாலே நமக்கு  எப்பவும்  புத்திமுட்டு. எனக்கு வர்ற ஆத்திரத்தில அவாளை நாலு சவுட்டு சவுட்டணும் போல இருக்கு.

பெண்:  நல்ல நாளா  ஏன் இப்படி வையரேள்?  நாளைக்கு  நம்ம குட்டனுக்கு ஆத்யம் சோறு கொடுக்கப்போறோம். என்னென்ன பண்ணணும்னு வாத்தியார் சொன்னாரே ? ஒரு பிராவஷ்யம் திருப்பிச் சொல்லுங்களேன்.

ஆண்:   மொதல்லே  நேக்குக் கொறச்சு  வெள்ளம் கொண்டுவா! ……  நா வறள்ரது. அப்பிடியே இந்தக் கிடக்கை , போத்தி, பொதப்பு எல்லாம் எடுத்து மடிச்சு வச்சுடேன்.

பெண்:  நீங்க உங்க தோர்த்து , முண்டு எல்லாம் சரிக்க போட்டுக்கோங்கோ அசலாத்து மாமி பாத்தா சிரிப்பா.

ஆண்:  நேக்கென்னடி. நான் மிடுக்கன். நீயும் மிடுக்கி தான். ஒரேடியா விஸர்க்கரது. அதான் காத்து வாங்கறாப்போல இருக்கேன்.

பெண்: நேக்கு தணுக்கறது.  நேத்திக்கு தோஷை சாப்பிட றச்சே எரிஞ்சு  பத்தித்து. பனியோன்னு ஸம்ஸயம்

ஆண்:  கிட்ட வா பாக்கறேன்.

பெண்: நீங்கிக்கோங்கோ! உங்களுக்கு களிப்பா இருக்கா?  இன்னிக்கு மடி. சித்தே சும்மா இருங்கோ.

ஆண்:  இங்கே பார். நான் அரி,   பஞ்சாரை, பப்படம், மத்தன் ,எளவன், உள்ளி ,சக்கை,நேந்த்ரங்காய் ,மொளகாப்பழம் எல்லாம் மெனக்கிட்டு வாங்கிட்டு வந்துட்டேன், கிட்டியா ? மனசிலாச்சா?

பெண்: ஈஸ்வரா , உள்ளியை  ஏன்னா வெறுமனே  வாங்கிட்டு வந்தேள் ?

ஆண்:  சாரமில்லை. தெரியாம வாங்கிட்டு வந்து இப்போ வாங்கிக் கட்டிக்கறேன். அதுக்கு ஏன் கரையரே?

பெண்: உங்களுக்கென்ன, மச்சில போய் சீட்டாடிண்டிருப்பேள். நான்னா அத்தரை  ஜோலியும்  இழுத்துப் போட்டுச் செய்யணும். உங்க அத்தங்கா, அம்மாஞ்சி, அத்தான்மன்னி, அம்மாமி   எல்லாரும் . குத்தம் சொல்ல மட்டும்  ஸ்பஷ்டமா வந்துடுவா.

ஆண்:   அவாளை விடு   , என்னென்ன அயிட்டம் பண்ணப் போறே  நீ?

பெண்: பாலடைப்பிரதமன், மோர்க்கூட்டான்,  மொளகூட்டல் , பொரிச்சுழம்பு, புளிய குத்தி உப்பேரி, ரசகாளன், குறுக்குக் காளன், ஓலன், மசியல், பொடித்துவல், உப்பிலிட்டது, உப்படன், பப்படம், எரிசேரி, புளிசேரி, மெழுக்குபெரட்டி, சக்கைப் பிரதமன் , சக்கை வரட்டி, புழுக்கு, அரைச்சுக் கலக்கி, மொளஹாஸ்யம், தோரன், பச்சடி, அவியல், சம்மந்தி, சம்பாரப்பொடி, இடிச்சுப் பிழிஞ்ச பாயசம்,உக்காரை, நெய்யப்பம், புட்டு. குணுக்கு  அப்பறம்..

ஆண்: என்னவாக்கும் அடிக்கிக்கிட்டே போறாய்? , நம்ம  கோந்தைக்கு சோறுண்ண  சமைக்கறயா  இல்லே விஷுக்கனி  சத்தியா?   தெரியாமத் தான் கேக்கறேன்.குஞ்சு இத்தறையும் சாப்பிடுமோ? நாம சாப்பிட்டாலே  வயறு கேடு வருமாக்கும்.  நாலு நாளைக்குத் தூரல் எடுக்கும்.

பெண்: இதுக்குத்தான் குருவாயூரப்பன் அம்பலத்தில  சோறுண்ணல் வச்சுக்கலாம்னு  சொன்னேன். கேட்டேளோ? ஆத்து மனுஷி சொன்னா கேக்கப்படாதுன்னு ஒரு வைராக்யம். – அழிச்சாட்டியம் பண்ணினேள். அங்கே போனா எல்லாத்திலும் ஒரு துளி போட்டு விளம்புவா? நாமளும் அப்படியே ஆகாரம் கழிச்சடலாம். இங்கே இதெல்லாம் பண்ணணும்னு குட்டனோட தாத்தி – உங்க அம்மா அடிச்சுச் சொன்னாளே, ஒர்மை இல்லையா ?  அப்ப என்ன பண்ணிண்டிருந்தேள்?

ஆண்: அம்மா சொல்லிட்டாளோன்னோ? செய்யவேண்டியதுதான். நான்தான் மடியன். நீ பறக்கப் பறக்க சீக்கிரம் செய்வே . அதுசரி, அத்தறையும்  காலம்பரைக்கா, உச்சைக்கா?

பெண்: காலம்பரைக்கு கஞ்சிவெள்ளம் தான். மனசிலாச்சா?

டீ! குட்டி, ஆத்துக்கே வரச்சே  செருப்பை அழிச்சுட்டு வரணும்னு எத்தர பிராவஷ்யம் பறஞ்சிருக்கேன்? விருத்திகேடு ! விட்டா அடுக்களை வரைக்கும் வந்திடுவே?

குட்டி:  சாரி மாமி ! பாவாடையத்  தழயக் கட்டிண்டதனாலே அழிக்க மறந்துட்டேன்.

பெண்: என்னடி வர்த்தமானம்? மொள்ள வாயேன்,  அப்படிஎன்ன தெரக்கு?

குட்டி : மாமி,    பாட்டிக்கு சீராப்பு  மூக்குசளி, படலையாம் . விக்ஸ் வாங்கிட்டு வரச் சொன்னா?

ஆண்: சூர்ப்பனகா மருந்து வேணுமான்னு உங்க பாட்டியாண்ட கேளு!

பெண்: போறுமே உங்க குசும்பு.    பாட்டி தான் சமைக்கறதுக்கு   ஜாட மாடையா ஹெல்ப் பண்ணப்போறா? அவாளைப்  போய்க் கரிச்சுக் கொட்டிண்டு. நீங்க உபகாரம்  பண்ணாட்டியும் தோஷமில்லே. உபத்ரவிக்காம இருந்தா சரி.    குட்டி! அந்த மாடத்தில இருக்கு விக்ஸ். எடுத்துண்டு போ. அப்படியே அந்த தாலத்தில  மாம்பழக் கஷ்ணம் இருக்கு. அதை நீயும் கழிச்சுட்டு பாட்டிக்கும் எடுத்துண்டு போ. அப்பறம் பாட்டிக்கிட்டே அப்பக்காரை,சீஞ்சட்டி,  ஆப்பை ,சட்டுவம், தளப்பிக்கறதுக்கு ஒரு வெந்நீர் அடுக்கு,    நான் கேட்டேன்னு சொல்லு. உங்கம்மாகிட்டேர்ந்து கொஞ்சம் மந்தாரையும், தெச்சிப்பூவும் வேணும்னு  சொல்லு.

ஆண்: ஏண்டி , விளக்குக் கத்தர நேரமாச்சு, நான் ஜெபிக்கணும் பஞ்சபாத்திரம் எடுத்துட்டு வா. இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

பெண்: கரைச்ச தோஷை சுட்டுத்தர்ரேன்.  வெல்லம் தொட்டுண்டு சாப்பிடலாம்.

ஆண்: நெஞ்சக் கரிக்காம இருக்க   கொஞ்சம் ஸம்பாரமும் பண்ணிடு. மறக்காம குளிகை தந்திடு, கிட்டியா? 

நாத்தனார்:  மன்னி, குஞ்சு  கரையறான். ஒருவேளை தூளியிலே மூத்திரம் கொல்லைக்கும் போயிட்டான் போலயிருக்கு.  சீக்கிரம் வாங்கோ.

பெண்:  அபிஷ்டு, அச்சுபிச்சு மாதிரி கத்தாதே.  இப்போ தான் ஜட்டிய மாத்திட்டு வந்தேன். சந்தியில கொசு கடிச்சிருக்கும். எதுக்கும் வார்க்கட்டையும் சாணாச்சுருணையும் எடுத்து வை. 

ஆண்: ஈஸ்வரோ ரஷது.  எண்டே குருவாயூரப்பா! 

 

 

 

 

.

 

 

 

 

 

குவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா

Ilakiya_Vasal_V03_OP01

ஒரு வருடம் !

பன்னிரண்டு நிகழ்வுகள் !

சிறார் முதல் சிகரங்கள் வரை எல்லோரும் மகிழ்ந்து, குவிந்து, மையமாக இருந்த காரணத்தால் குவிகம் இலக்கியவாசல் மகிழ்வுடன் பெருமிதமும் கொள்ளுகிறது.

குவிகம் இலக்கிய வாசல் துவக்கவிழா – இலக்கியமும் நகைச்சுவையும் – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு, ஜெயபாஸ்கரன்  அவர்கள் முன்னிலையில்

இரண்டாவது நிகழ்வு – தி ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிக் கலந்துரையாடல்

மூன்றாம் நிகழ்வு – பிரபஞ்சன்  அவர்களின்  நேர்காணல்

நான்காம் நிகழ்வு – சிறுகதைச் சிறுவிழா

ஐந்தாம் நிகழ்வு  – முகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம்

ஆறாவது நிகழ்வு – திரைப்படப் பாடல்களில் கவிநயம்

ஏழாவது நிகழ்வு –  சாரு நிவேதிதா தலைமையில் “அசோகமித்திரன் படைப்புகள்”

எட்டாவது நிகழ்வு – ஸ்ரீஜாவின் தன்  வரலாற்றுப்  புதினம் பற்றிய உரை

ஒன்பதாவது நிகழ்வு – அழகிய சிங்கரின் நேர்பக்கம் – நூல் அறிமுகம்

பத்தாவது நிகழ்வு –  ரவி தமிழ்வாணன் தலைமையில் “புத்தக உலகம்” பற்றிய ஆய்வு

பதினோராம் நிகழ்வு – பாம்பே கண்ணன் தலைமையில் பொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்’ கலந்துரையாடல்

பன்னிரெண்டாம் நிகழ்வு – ஞானி தலைமையில்  நாடகம் – “நேற்று இன்று நாளை” பற்றிய உரை

ஆண்டு விழா நிகழ்வைப் பற்றிக் குவிகத்தின் விளக்கம்:

குவிகம் இலக்கியவாசலின் ஆண்டு விழா, ஏப்ரல் 23ம் தேதி அன்று சென்னை  தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் “இயல் இசை நாடகம்” என்ற தலைப்பில் அரங்கம் நிறைந்த திருவிழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

சிறார்களின் வில்லுப்பாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

எழுத்துலக சிகரங்கள் திரு அசோகமித்திரன் மற்றும் திரு இந்திரா பார்த்தசாரதி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் சிறப்பைக் கூட்டியது

திரு சுந்தரராஜன் தனது வரவேற்புரையில் கடந்த பன்னிரண்டு மாதங்களில் குவிகம் இலக்கியவாசல்  நிகழ்த்திய  பன்னிரண்டு  சுவையான நிகழ்ச்சிகளைப்   பற்றி விவரமாக எடுத்துரைத்தார். இலக்கியத்தில் நகைச்சுவை என்ற முதல் நிகழ்ச்சியிலிருந்து
நேர்காணல், கலந்துரையாடல், புத்தக அறிமுகம், சரித்திர நாவல் படைத்த அனுபவங்கள், கவியரங்கம், புத்தக உலகம், சிறுகதை சிறுவிழா என்று இதுவரை நடந்துள்ள விவரங்களைத் தெரிவித்தார்.

திரு அழகியசிங்கர்,  திரு  மியூசிக் கண்ணன் மற்றும் திருமதி  லதா ரகுநாதன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களைப் பற்றிப் பேசினார்கள்.

திரு அசோகமித்திரன், திரு இந்திரா பார்த்தசாரதி இருவரும் குவிகம் இலக்கியவாசலைப் பாராட்டியதுடன்  இன்றைய இலக்கியத்தைப் பற்றித் தங்கள் கருத்துரைகளையும் எடுத்துரைத்தனர். நாடகத்தை இறுதி வரையிலும் கண்டுகளித்துத் தங்களுடைய பாராட்டுக்களைத்  தெரிவித்தார்கள்.

திருமதி தாரிணி கணேஷ்  நாடகமாக்கி இயக்கிய  திரு கோமல் சுவாமிநாதனின் சிறுகதையின்    “மனித உறவுகள் ” பாரா ட்டுகள் பெற்றது.

IMG_3328

திரு கோமல் சுவாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி மற்றும் அவரது புதல்வன் திரு ரவியும் விழாவில் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. முந்திய நிகழ்வுகளைச் சிறப்புற நடத்தித் தந்த திரு பாம்பே கண்ணன், திரு ரவி தமிழ்வாணன், திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

சிறப்புரைகள், வில்லுப்பாட்டு மற்றும் நாடகத்தின் ஒளிவடிவங்களைக் கீழே குறிப்பிட்டுள்ள  வலைப்பூவில்  காணலாம்.

http://ilakkiyavaasal.blogspot.in/

வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

இனி இரண்டாம் ஆண்டு  இனிதே தொடங்குகிறது !

 

 

ராசி பலன் — நித்யா சங்கர்

‘ஓ கடவுளே.. எக்ஸெலன்ட்.. டேய் கிரி.. இங்கே சீக்கிரமா
வாடா.. இங்கே பார்.. ‘ — ஹாலில் உட்கார்ந்து தினசரியைப்
புரட்டிக் கொண்டிருந்த பாலு சந்தோஷ மிகுதியில் கூவினான்.

சமயலறையில் காபி போட்டுக் கொண்டிருந்த கிரி என்னமோ ஏதோ என்று ஓடி வந்து, ‘என்னடா.. ஏன் இப்படிக்
கத்தறே..? என்ன ஆச்சு?’ என்றான்.

தான் படித்துக் கொண்டிருந்த தினசரியின் ‘ராசி பலன்’
பகுதியைச் சுட்டிக் காட்டினான் பாலு.

‘இந்த ராசிதாரரின் பெயர் பத்திரிகையில் வரும்’ என்று
உரக்கப் படித்தான் கிரி.

‘எக்ஸாக்ட்லி.. ஐ ஆம் வெயிட்டிங் ·பார் திஸ்.. என்னு-
டைய கனவுகள் நிறைவேறப் போகின்றன. நான் ‘முல்லை’
பத்திரிகைக்குக் கதை அனுப்பி இருந்தேன் அல்லவா..?
ஐ ஆம் ஷ¤வர்.. அது பிரசுரமாகப் போகிறது. முல்லை
இஷ்யூ நாளைக்கு வரும் இல்லையா..! நாளை விடியல்
எனக்கு பேரின்பமான விடியல்.. ஓ.. அட் லாஸ்ட் இட் ஈஸ்
கோயிங் டு ஹாப்பன்… டேய் எனக்கு என்ன செய்யறதுன்னே
தெரியலே… ஒரு நிமிஷம் மகிழ்ச்சியாலே உரக்கக் கத்திச்
சிரிக்கலாம் போலிருக்கு… இன்னொரு நிமிஷம் கத்தி
அழலாம் போல – ஆனந்தக் கண்ணீர் வடிக்கலாம் போல –
இருக்கு’ என்று கிரியைக் கட்டி அணைத்துக் கொண்டு
கனவுலகில் சஞ்சரித்தான் பாலு.

ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், ‘ஒரு வேளை
பாலுவின் கதை முல்லையில் வராமல் இருந்தால் அவனுக்கு
அது எத்தனை ஏமாற்றத்தைக் கொடுக்கும்… அதை அவன்
எப்படித் தாங்குவான்’ என்று குழப்பத்தின் உச்சியில்
இருந்தான் கிரி.

‘டேய்.. பாலு.. இந்த தினசரியில் வரும் ‘ராசி பலன்’
எல்லாம் அதே மாதிரி வரும் என்று சொல்ல முடியாது..
இந்த பலன் மிக ஜெனரலாக எழுதப்படுவது.. ஒரு
மனுஷனுக்கு அவனுடைய ஜாதக கிரக நிலைப்படிதான்
எல்லாம் நடக்கும்’ என்று சிரித்தபடியே அவனுடைய
உணர்ச்சிகளை-எதிர்பார்ப்பை- ஒரு சமநிலைக்குக்
கொண்டுவரத் தலைப்பட்டான் கிரி.

‘போடா ·பூல்… நான் இந்த தினசரிப் பத்திரிகையில்
வரும் ராசி பலன் பகுதியை வாராவாரம் படிக்கிறேன்னு
உனக்குத் தெரியும். அவர் போட்ட மாதிரியே எனக்கு
எல்லாம் நடந்துவருவதும் உனக்குத் தெரியும். ஸோ..
இதுவும் நடக்கும். ஜோதிடர் ஆதவன் நடக்கும் என்கிறார்..
நடக்கும்’ என்றான் பாலு உறுதியாக.

‘டேய் நான் என்ன சொல்ல வரேன்னா…’

‘நோ.. நீ ஒண்ணும் சொல்லவேண்டாம். இன்னிக்கு
நமக்கு ஹாலிடே.. இந்த சந்தோஷத்தை மஜாவா
கொண்டாடறோம்.. ஓட்டலுக்கு.. சினிமாவுக்கு எல்லாம்
போய் தூள் கிளப்பப்போறோம். கமான் கெட் ரெடி’
என்று முதுகில் அழுத்தமாக ஒரு ஷொட்டு கொடுத்தான்
பாலு.

ஹோட்டலிலும் சரி.. சினிமா தியேட்டரிலும் சரி..
ஏன் அன்று இரவு படுத்தபோதும் சரி.. கதை முல்லையில்
பிரசுரமாவது பற்றியே பேசிக் கொண்டிருந்தான் பாலு.

‘டேய்.. என்னுடைய கதையை முதல்லே போட்டி-
ருப்பாங்களா.. இல்லை கடைசியில் போட்டிருப்பாங்களா..
யாருடா ஓவியம் போட்டிருப்பாங்க.. டேய் இந்த கதை
ஹீரோயினை லதா வரையணும். அப்படியே கோயில்
சிற்பம் போல அழகா இருக்கும்.. ஆனா அவங்க
இப்பவெல்லாம் வரையறது இல்லே. இந்தக் கதைக்கு
நிறைய விமரிசனங்கள் வரும் பாரேன். ஏன்னா..
என்னுடைய கதையின் ஸப்ஜெக்ட் அப்படி.. ரியலி..
விமரிசனங்களைப் படிக்க ரொம்ப இன்டரஸ்டிங்கா
இருக்கும் இல்லே.. அதையெல்லாம் ·பைல் பண்ண
ஒரு தனி ·பைல் போடணும். இட் ஷ¤ட் பி எ
பெர்மனென்ட் ரிகார்டு.. இதை எல்லா பத்திரிகைக்-
காரர்களும் படிப்பாங்க. நீ பாரேன்.. படிச்சுட்டு
இப்படி ஒரு எழுத்தாளனை இத்தனை நாளா ரெகக்-
னைஸ் பண்ணாம விட்டுட்டோமேன்னு வருத்தப்படப்
போறாங்க.. இம்மீடியட்டா ஆறு ஏழு கதைகளை
ரெடி பண்ணி வெச்சுக்கணும். ஏன்னா.. தீபாவளி
மலருக்காக எல்லா பத்திரிகைகளிலிருந்தும் கதை எழுத
ரிக்வெஸ்ட வந்தா இம்மீடியட்டா அனுப்பணும் பார்..
இட் ஈஸ் ஸோ கிரேட்.. ஐ ஆம் ஸோ ஹாப்பி..’ என்று
அரற்றிக் கொண்டிருந்தான் பாலு.

‘கடவுளே.. இவனுடைய ஏக்கத்துக்கும், ஆசைக்கும்
இந்த ஒரு கதையையாவது முல்லை பத்திரிகையிலே
பிரசுரம் பண்ணிக் கொடுத்து விடேன். நான் உன்
கோயிலுக்கு வந்து ஐம்பத்தோரு முறை வலம்
வருகிறேன்.. ‘ என்று கடவுளை மனமுருக வேண்டிக்
கொண்டான் கிரி. பாலுவின் அரற்றலைக் கேட்டுக்
கொண்டிருந்த கிரி தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு
புரண்டு படுத்தான்.

அரற்றிக் கொண்டிருந்த பாலு எப்போது தூங்கினான்..
படுக்கையில் புரண்டு கொண்டிருந்த கிரி எப்போது
தூங்கினான் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் காலை 6 மணி. வெளியிலே ஓடுகின்ற
வாகனங்களின் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான் கிரி.
முந்தைய நாள் இரவு அரற்றிக் கொண்டிருந்த பாலுவின்
நினைவு வந்து அவனது கட்டிலைப் பார்த்தான். ஆளைக்
காணோம்.

அவசர அவசரமாக எழுந்து முகத்தைக் கழுவி,
சட்டை போட்டுக் கொண்டு வெளியே வந்து பாலுவைத்
தேடினான். எங்கே போயிருப்பான் என்ற பதட்டம்
அதிகரித்தது கிரியின் மனதில்.

‘ஒரு வேளை.. முல்லை பத்திரிகை வாங்க கடைக்குப்
போயிருப்பானோ..? ஓ.. கடவுளே…’ என்று தனக்குள்
முணுமுணுத்தபடியே கதவைப் பூட்டிக் கொண்டு இரு
தெருக்கள் தள்ளியிருந்த புத்தகக் கடைக்கு ஓடினான்.

‘கடையில் பாலுவைப் பார்த்ததும்தான் அவனுக்கு
நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அவன் கையில் ‘முல்லை’
இதழ். அவன் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.
நிலமையைப் புரிந்து கொண்டான். அவன் கதை அந்த
இதழில் இடம் பெறவில்லை. பித்துப் பிடித்தவன் போல்
இருந்தான் பாலு. மெதுவாகக் கடையிலிருந்து இறங்கி
ரோட்டைக் கிராஸ் பண்ண முற்பட்டான்.

அந்த ரோட்டின் மறுபக்கத்தில் இருந்த கிரி, ‘டேய்
பாலு.. இருடா.. அங்கேயே நில்.. நான் வரேன்..’ என்று
கத்தினான்.

வாகனங்கள் இரைச்சலில் பாலுவிற்குக் காது
கேட்கவில்லையோ.. அல்லது ஏமாற்றத்தின் உச்சத்தில்
இருந்த பாலுவிற்குச் சுற்றுப் புறச் சூழலும் மறந்து
விட்டதோ… ஒரு பக்கத்திலிருந்து வேகமாக வந்து
கொண்டிருந்த ஆட்டோவைக் கவனிக்காமல் ரோட்டை
நோக்கி நடந்து விட்டான்.

கண்மூடிக் கண்திறப்பதற்குள் எல்லாம் நடந்து
முடிந்து விட்டது. அந்த ஆட்டோ டிரைவர் எவ்வளவோ
முயற்சி பண்ணி பிரேக் போட்டும் விபத்தைத் தவிர்க்க
முடியவில்லை. ‘ஐயோ.. அம்மா..’ என்று ஆட்டோவின்
சக்கரங்களின் அடியில் சிக்கிக் கத்திக் கொண்டிருந்தான்
பாலு. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற கிரி, ஓடிப் போய்
பாலுவை சக்கரங்களிலிருந்து விடுவித்து அந்த ஆட்டோ-
விலேயே பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

ஊஞ்சல் போல் காலை துணியால் கட்டி தொங்க
விட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியின் மருந்து நெடியின்
நடுவில் படுத்தபடியே அன்று வந்த தினசரியைப்
புரட்டிக் கொண்டிருந்தான் பாலு.

‘இடியட்.. இடியட்.. நீ என்னடா படிச்சவன்தானே..?
இப்படியா பண்ணுவே.. ஏதோ ராசி பலனைப் பார்த்து விட்டு
அதீத கற்பனையை வளர்த்துட்டு இர்ரெஸ்பான்ஸிபிளா…
சே…’ என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் கிரி.

‘எஸ்.. அதுதானே பார்த்தேன்.. டேய் இந்த நியூஸ்
ஐட்டம் படி’ என்று அந்த தினசரியை கிரியிடம் நீட்டினான்
பாலு.

‘ரேஸ் கோர்ஸ் ரோடில் ஏதோ நினைவில் ரோடைக்
கிராஸ் பண்ணப்போன பாலு என்ற வாலிபரை ஒரு
ஆட்டோ மோதியது. பாலு உடனே ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். முழுத்
தவறும் தன்னுடையதுதான் என்று பாலு எழுத்து மூலம்
கொடுத்ததன் பேரில் போலீஸார் ஆட்டோ டிரைவரை
கைது செய்யவில்லை’ என்று உரக்கப் படித்தான் கிரி.

‘பார்த்தியா.. என் பெயர் பத்திரிகையில் வந்து
விட்டது. ஆதவன் சொன்னால் அது நடக்கும். என்ன
என் கதை பிரசுரமாகி என் பெயர் வரும்னு நினைச்சேன்..
அது நடக்கலே.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்று
கட கடவென்று சிரித்தான் பாலு.

கிரியின் கண்களில் நீர் திரண்டது.

 

வந்தியத்தேவன் – ஷிவா – முகநூல் பதிவு (அனுமதியுடன்)

“திருமகள் போல பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனைக்கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி… “

என்ற ராஜராஜ சோழரின் கட்டியம் எங்கே உரத்துக் கூறப்பட, அதன் பின்சோழம் சோழம் என்று வீரர்கள் தங்கள் கேடயத்தில் வேலை இடிக்கும் பெரும் சத்தமும் அதன் பின்னே தொடர்ந்தது. சோழ சாம்ராஜ்ஜியம் அத்துணை தூரம் வளர்ந்திருந்ததென்றால் அதற்கு முக்கியக் காரணம் சோழ குல மன்னர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய அத்துணை படையெடுப்புக்களிலும் பங்குபெற்ற குறுநில மன்னர்களும் தான். அப்படி குறுநில மன்னர்களில் ஒருவரும் இராஜராஜ சோழ தேவரின் தமக்கை குந்தவையின் கணவருமான வந்தியத்தேவர் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு ஆசனத்தில் குந்தவை பிராட்டியும் அவரது மடியில் சோழ குல வாரிசு இராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான்.

“தேவி கேட்டாயா, சோழ ராஜ்ஜிய முழக்கத்தை. இங்கிருந்து கேட்கும் போழுதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.”

பிறகு ராஜேந்திரனிடம் திரும்பி, “ராஜேந்திரா நீயும் உன் தந்தை போலவே பெரும் பேரும் புகழும் அடையவேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பம்.”

“மாமா, பெரியவன் ஆனதும் நானும் தந்தையை போல் நாடுகளையெல்லாம் பிடிக்கிறேன். இதெல்லாம் இருக்கட்டும். தந்தைக்கென்று இவ்வளவு பெரிய நாடும், மக்களும் இருக்கிறார்களே. உங்களுக்கென்று சொந்தமாக நாடு கிடையாதா?” சிறுவயது பாலகனாகையால் தைரியமாக கேட்டுவிட்டான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த குந்தவைபிராட்டி,

“அப்படிக்கேள் என் செல்லமே, பெண்டாட்டி வீட்டில் உட்கார்ந்து அரசியல் செய்கிறீர்களே. உங்களுக்கெல்லாம் தனியாக வீடே கிடையாதா?” என்று கேள் சொல்லிவிட்டு சிரித்தார்கள்.

அவருடைய ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்த வந்தியத்தேவர், குந்தவை அமர்ந்திருந்த இருக்கையின் முன் முழங்காலிட்டு உட்கார்ந்து, பிராட்டியின் கைகளை தன் கையில் வைத்துக் கொண்டு,

“தேவி இளவரசன் கேட்டதை விடு, சின்னப்பிள்ளை, நீ சொல், இந்த கணம் சொல், உனக்கு ஆள்வதற்கு ஒரு நாடு வேண்டுமா? சோழ சாம்ராஜ்ஜியத்தை விட பெரிய நாடு வேண்டுமா? சொல் நான் வென்று தருகிறேன். பல போர்க்களங்களை வென்று தருகிறேன், உன் தம்பிக்கு போட்டியாக வேண்டாம், வடக்கே போய்விடுவோம். மேலை சாளுக்கியத்தையும் தாண்டி, இல்லையேல் பாரதகண்டத்திலேயே வேண்டாம், கடல்கடந்து, கடாரம், சாவகத்தீவு பக்கம் போய், உனக்கான ராஜ்ஜியத்தை நான் நிறுவுகிறேன். நீ மட்டும் இந்த சோழ தேசத்தை விட்டுவருவதாக ஒரு வார்த்தை சொல், ராஜராஜனை விட்டு, ராஜேந்திரனை விட்டு, வருவதாக சொல்.” கேட்டுவிட்டு குந்தவையையே பார்த்தார்.

ராஜேந்திரன் தான் கேட்டதனாலே தான் வந்தியத்தேவர் இப்படி கேட்கிறார் என்று கவலைப்படத்தொடங்கினான். அந்தச் சமயம் அங்கே வந்த இராஜராஜரிடம் குந்தவை,

“அருள்மொழி கேட்டாயா! நான் சோழதேசத்தை விட்டு வரவேண்டுமாம்.” சொல்லிவிட்டு வந்தியத்தேவரை திரும்பி பார்த்தாள்.

“கேட்டுக்கொண்டுதான் இருந்தேன், அக்கா நீ என் ஒருவனை நாடு பிடிக்கும் பைத்தியமாய் அலையவிட்டதும் இல்லாமல், இப்பொழுது தேவரையும் உனக்காக நாடு பிடிக்க சொல்லி கேட்கிறாயா. விட்டால் நீ எனக்கும் தேவருக்கும் இடையில் பொறாமையை வளர்த்துவிடுவாய் போலிருக்கிறது.” சொல்லிவிட்டு சிரித்தார்.

இதற்குள் வந்தியத்தேவர், குந்தவைதேவியின் கைகளை அவரிடமே கொடுத்துவிட்டு, எழுந்து நின்றார், பிறகு,

“அரசே உங்களுக்கும் எனக்குமிடையில் பொறாமையை யாராலும் வளர்த்துவிட முடியாது. நம் தேவியாலும்தான். அதுமட்டுமில்லாமல், பொறாமை ஒரு மிகக்கொடுமையான நோய், உலகத்தின் எல்லா கொடுரங்களையும் அதுதான் ஆரம்பித்து வைக்கிறது. உங்களுக்குத்தான் அர்ஜூனன் கதை கூட தெரிந்திருக்குமே!” சொல்லிவிட்டு நகர்ந்து சென்று தூணுக்கருகில் நின்றார். குந்தவைபிராட்டியின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ராஜேந்திரன் நேராக வந்தியத்தேவரிடம் வந்து.

“அது என்ன கதை மாமா?”

அர்ஜூனனைப்பற்றிய அந்தக் கதையை ராஜேந்திரனிடம் சொல்லத் தொடங்கினார்.

“இராஜேந்திரா, அர்ஜூனன், மிகவும் பொறாமை பிடித்தவன் தன்னைவிட வில்வித்தையில் சிறந்தவர் யாரும் கிடையாது, தன்னைவிட அழகில் சிறந்தவர் கிடையாது என்று, இதை அருகில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட நினைத்தார். அதே போல் ஒரு நாள், அர்ஜூனனும் கண்ணனும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கன்னனை பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது அர்ஜூனன், கண்ணனிடம், இது என்ன யாரைக்கேட்டாலும் கன்னனைப்போல் கொடையில் சிறந்தவனே கிடையாது என்று சொல்கிறார்கள். நானும் தான் தானம் செய்கிறேன்.

யார் வந்து எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன். அப்படியிருக்க கன்னன் மட்டும் எப்படி கொடையில் சிறந்தவனாக இருக்க முடியும் என்று கேட்டான், கண்ணனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அர்ஜூனன் கேட்கவேயில்லை, அவனுடைய பொறாமை குணம் மாறவேயில்லை, இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைத்த கண்ணன், அர்ஜூனனிடம் தான் ஒரு போட்டி வைப்பதாகவும் அப்பொழுது புரிந்து கொள்வாய் என்றும் அர்ஜூனனிடம் சொன்னார். கண்ணன் சின்னதாக ஒரு தங்க மலையை உருவாக்கினார். பிறகு அர்ஜூனனை அழைத்து, இன்று இரவுக்குள் நீ இதை தானமாக கொடுக்க வேண்டும் கொஞ்சம் கூட மிச்சம் மீதி இல்லாமல் என்று சொன்னதும் முதலில் சிரித்த அர்ஜூனன்.

மக்களையெல்லாம் அழைத்தான், பிறகு ஒரு மண்வெட்டியை எடுத்து வெட்டி வெட்டி கொடுக்கத் தொடங்கினான். நேரம் ஆகியும் கொஞ்சம் மட்டுமே குறைந்திருந்ததால், பிறகு தன் காண்டீபத்தை எடுத்து மலையை கொஞ்சம் கொஞ்சமாக அம்பெய்து வெட்டிக் கொடுக்கத் தொடங்கினான். ஆனால் அந்த மலை எவ்வளவு வெட்டியும் குறையவேயில்லை. இரவானது கண்ணன் அங்கு வந்து பார்த்தபொழுது மலை சிறிதளவே குறைந்திருந்தது.

கண்ணன் அருகில் வந்த அர்ஜூனன், கண்ணா, என்னால் இவ்வளவுதான் கொடுக்க முடிந்தது, கன்னன் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளாமல் எப்படி யார் கொடைவள்ளல் என்று தீர்மானிக்க முடியும் என்று கேட்டான். அதைக்கேட்டு சிரித்த கண்ணன் திரும்பிப் பார்த்தார். கன்னன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்த கன்னனிடம் கண்ணன், போட்டியென்றெல்லாம் சொல்லாமல் தங்கமலையை காட்டி, இந்த மாதிரி ஒரு தங்க மலையென்றும் தானம் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். அதைக்கேட்ட கன்னன்.

அங்கே நின்று வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்து, இனிமேல் இந்த மலையை நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் சிரிக்கத்தொடங்கினார். பிறகு அர்ஜூனனிடம், இப்பொழுது புரிகிறதா காண்டீபா யார் கொடைவள்ளல் என்று, நீ இந்த மலையை தங்க மலையாய் பார்த்தாய், ஒருவனிடம் கொடுக்க உனக்கு மனது வரவில்லை, தகுதி, தராதரம் பார்த்து இவருக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொடுத்தாய்.

நீ எப்படி கொடைவள்ளல் ஆகமுடியும், அதே சமயம் கன்னனைப்பார் அவன் அதை தங்கமலையென்று பார்க்கவில்லை, யாரிடம் கொடுக்கிறோம் என்று பார்க்கவில்லை, கொடுத்துவிட்டான் அவன்தான் கொடைவள்ளல். இதனால் நீ இனிமேலாவது பொறாமைபடுவதை நிறுத்துவிடு என்று சொன்னார். இதைக்கேட்ட அர்ஜூனனும் திருந்தினான் அதனால் இராஜேந்திரா நீயும் யாரையும் பார்த்து பொறாமைபடக்கூடாது. அது ஒரு பெரிய நோய்!” வந்தியத்தேவர் முடித்துவிட்டு திரும்பி இராஜராஜனைப்பார்த்தார்.

ராஜராஜர் உடனே,

“தேவரே, இது ராஜேந்திரனுக்காக சொல்லப்பட்ட கதையா, இல்லை எனக்கானதா?” கேட்டுவிட்டு நகைத்தார்.

“அரசே, இது உங்கள் இருவருக்குமான கதையல்ல, எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பலகதைகளில் இதுவும் ஒன்று.”

சொல்லிவிட்டு இராஜராஜரைப் பார்த்து நகைத்தார் வந்தியத்தேவர். இடையில் தலையிட்ட குந்தவைதேவி,

“உங்கள் சண்டையில் எனக்காக நாடுபிடிக்கும் எண்ணத்தை மறந்துவிட வேண்டாம்.”

“அக்கன் இன்னொருமுறை இப்படி கேட்கவேண்டாம். அவர் சொன்ன அத்துனையும் உண்மையே, தேவர் நினைத்தால் மாநக்காவரத்தையோ, இல்லை கடாரத்தையோ, இலாமுரித்தேசத்தையோ உனக்காக வென்று தரமுடியும் இதில் எனக்கு சந்தேகமே கிடையாது.

சிலசமயங்களில் வாள் பயிற்சிகளின் போது, வல்லவரையரின் வாளை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பறக்கடிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் நாங்கள் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழன்” ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க, என் ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் காந்தளூர்ச்சாலை மீது போர்புரிந்த பொழுதுதான் உண்மையை உணர்ந்தேன்.

அந்த முன்குடுமி அந்தணர்கள் போர்வீரர்கள் போல் உடையணிந்து வந்ததும் தான் தாமதம், வந்தியத்தேவரின் முகத்தில் தெரிந்த கோபமும், அவரின் வாளின் வேகமும் என்னை வியப்படையசெய்தது.

பதினாறு ஆண்டுகள், ம்ம்ம், ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க இத்தனை காலம் பொறுத்திருந்த அந்த வெறியை நான் அவர் கண்களில் பார்த்தேன். இவரது குதிரை சென்ற இடமெல்லாம் தலைகள் உருளுகின்றன. அப்பப்பா என்ன வேகம் அப்பொழுதுதான் தெரிந்தது, தேவரால் என்னுடைய வாளை ஒரு நொடிப்பொழுதில் விசிறி எறிந்துவிடமுடியுமென்ற உண்மை.”

சொல்லிமுடித்துவிட்டு பெருமூச்சுவிட்டார் ராஜராஜர்.

சுமார் பதினாறு ஆண்டுகள், இரண்டாம் ஆதித்தன் இறந்தபிறகு, இராஜராஜருக்கு பதில் அவருடைய சிற்றப்பனான உத்தமசோழன் ஆட்சிபுரிந்த காலம்.

அரியணையின் மேல் உள்ள ஆசையால் தனக்கு ஆதரவான ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, உத்தமசோழன், தன்னை இளவரசனாக்குமாறு, சுந்தர சோழரை வற்புறுத்த, உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாதென கருதிய ராஜராஜரும் இதற்கு மனமாற ஒத்துழைக்க, இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலனுக்கு பிறகு, உத்தமசோழன் பதவியேறான்.

சுமார் பதினாலு ஆண்டுகள் தன்னுடன், துணை அரசனாக இருந்த தன் மகன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் பின்னப்பட்ட சூழ்ச்சிகளை பொறுக்கமுடியாமல், சுந்தரசோழரும் இறந்து போக. உத்தமசோழனின் ஆட்சிகாலத்திற்கு பிறகு பதவியேற்ற இராஜராஜர் முதல் காரியமாக படைதிரட்டி, கரிகாலனின் கொலைக்காகவும், காந்தளூர்க்கடிகையில் சோழர்களுக்கெதிராக போர்ப்பயிற்சி அளஇத்துவந்ததற்காகவும் முன்குடுமி சோழ அந்தணர்களை பழிவாங்கும் பொழுது நடந்த சம்பவங்கள் அவரின் மனக்கண்ணில் விரிந்தது.

“அக்கன் இன்னுமொறு உண்மையை உங்களுக்கு விளக்கவா?” என்று கேட்டுவிட்டு, ராஜேந்திரனை தன்னருகில் அழைத்தார்.

“இராஜேந்திரா, மாமாவிடம், உங்களுக்கென்று சொந்தமாக நாடு இல்லையா என ஏன் கேட்டாய்? சொல்.”

இதுவரை நடந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த இராஜேந்திரன், இத்தனைக்கும் தான் கேட்ட கேள்விதான் காரணம் என நினைத்து வருந்திக் கொண்டிருந்ததால். இராஜராஜர் கேட்டதும்,

“தந்தையே மாமாதான் அத்தையிருக்கும் சமயமாய்ப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க சொன்னார்கள்.”

இதைக்கேட்டு சிரித்த இராஜராஜர்,

“அக்கா இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரியும், ஒன்றும் அறியாத பிள்ளை கேட்ககூடிய கேள்வியல்ல அது. மேலும் இப்படி செய்ய வந்தியத்தேவரை தவிர ஒருவராலும் முடியாதென்பதும் தெரியும்.” சொல்லிவிட்டு வந்தியத்தேவரின் அருகில் வந்து அவரை கட்டிக்கொண்டார்.

ஆனால் ராஜேந்திரன் கேட்டதைப்போல் அல்லாமல், வந்தியத்தேவர், சோழ சாம்ராஜியத்தின் கீழ் “வல்லவரையர் நாடு” என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர். தன் தலைமையின் கீழ் மாதண்ட நாயக்கராக, சோழகுலத்தின் வெற்றிக்காக அவரும் அவரது படையும் பங்குபெற்றிருக்கிறது.

“தம்பி இதெல்லாம் எனக்கு தெரியாதென்றா நினைக்கிறாய். சரி இது எத்துனை தூரம் செல்கிறது என்று பார்க்கத்தான் பேசாமல் இருந்தேன்.”

சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.

பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

“தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்.”

“அருண்மொழி என்னயிது???”

சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் ‘மன்னரே’ என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.

இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.

“தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,

இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.

கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.

இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.

சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்…” முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.

வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,

“தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.

நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?”

முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.

சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.

இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,

“மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.

எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?

நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.

வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்.”

வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,

“என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,

“தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்.”

வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

 

நவீனக் கவிதைகள் – ஒரு ‘மாதிரி’

(படம்: நன்றி,  நவீன விருட்சம்)

மரபுக் கவிதையின் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றிலிருந்து விடுவித்துக் கொண்ட கவிதைகளை புதுக்கவிதை அல்லது  நவீனக் கவிதை என்றும் சொல்லலாம்.  

இரண்டும் ஒன்றா? வெவ்வேறா?

கவியரங்கத்திலும் , வாரப் புத்தகங்களிலும் வசனத்தை அப்படி இப்படி உடைத்து தங்களைத் தாங்களே சிலாகித்துக் கொள்வதுதான்   புதுக் கவிதை என்று சொல்லிக் கொள்ளப்படும் வசன கவிதை.  புதுக் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவை படிக்கணும். கேக்கறவங்க ரெண்டாவது தடவை படிக்கும் போது கை தட்டணும். பெரும்பாலும் முகஸ்துதியாகவே இருக்கும்.
 
 
 நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன்,   சுந்தர ராமசாமி ( பசுவய்யா ), சி.மணி, கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களின் கவிதைகளையே சொல்லவேண்டும்.
 
அது சரி, இந்த நவீன கவிதைகள்  எப்படியிருக்கும் ?
 
வித்தியாசமான களமாக இருக்கும்.
 
கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கும்.  கவிஞன் படிப்பவனுடன் நேராக உரையாடுவான். சங்கப் பாடல் மாதிரி இவற்றையும் யாராவது விளக்கிச் சொன்னால் தான் புரியும். புரிந்த பிறகு மீண்டும் படித்தால் ‘ஆகா..ஆகா..’ என்று சொல்லிச் சொல்லிக் குதிக்கத் தோணும்.
 
நவீனக் கவிதைகள் ஆழ் மனத்தில் ஒருவிதத்  தாக்குதலை ஏற்படுத்துகின்றன. நவீனக் கவிதைகளின் முக்கியச் சாறு  அதில் கொப்பளிக்கும் அனுபவங்கள் தான். கவிஞன் மனத்திலிருந்து படிப்பவன் மனத்திற்கு அப்படியே அம்பு போலப் பாயும். மனத்திற்கு வலி உண்டாகும். இன்ப வலியாகவும் இருக்கலாம். துன்ப வலியாகவும் இருக்கலாம். அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நேரமும் ஆகலாம். அல்லது புரியாமலும் போகலாம்.  புரிந்தபிறகு கிடைக்கும் சுகானுபாவம் அப்படியே வெகு காலம் இருக்கும். 
 
படிமம், குறியீடு, பின்புலம் , பங்களிப்பு, வீச்சு, பெண்ணீயம் போன்ற பல சமாசாரங்கள்  இந்த நவீனக் கவிதைகளின் ‘ஜார்கன்’கள்.
 
உதாரணத்திற்கு ‘உடைந்த பாறை’ என்பது ஒரு படிமம்.  பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது நொறுங்கிய மனதினைக் குறிப்பிடக் கூடியதாக  இருக்கலாம். படிப்பவன் தன்  அனுபவத்தைச் சேர்த்து  அந்த படிமத்தைப் புரிந்து கொள்வான்.  ஆனால் எல்லாக் கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. படிமக் கவிதையின் சிக்கனத்திற்கும் பளிச்சிடும்தன்மைக்கும் இணையாக உலகக் கவிதை வரலாற்றிலேயே வேறொன்றையும் முன்னுதாரணமாய்க் காட்ட முடியாது.
  
 இந்த நவீன கவிதையின் ஆரம்பமாக பிச்சமூர்த்தியின் முதல் கவிதை ‘காதல்’மணிக்கொடி இதழில் வெளிவந்தது.  பிறகு எழுத்து’-வில் எழுதத் தொடங்கிய தர்மு சிவராமு என்கிற பிரமிள்.  பிறகு  தேவதேவன். சுகுமாரன் . சத்யன் ,  ரமேஷ்-பிரேமின் போன்றோர் படிமக் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தனர்.
படிமம் தமிழ்க்கவிதைக்கு ஒரு முக்கிய வரவு. ஆனால் அதைப் பயன்படுத்திய பெரும்பான்மையோர் வெறும் உத்தியாகவும் அலங்காரமாகவும் பார்க்கத் தொடங்கியவுடன் ‘படிமம்’ வீழ்ச்சியடைந்தது. சங்கக் கவிதைகளில் இருந்த  உருவகம், ஒப்புமை, அணி போன்றவற்றின் மாறுபட்ட வரவு தான்   படிமம்.
 

இம்மாதிரிக்  கவிதைகள்  ஒரு சிறு குழுவுக்கான மொழியாகச் சுருங்கிப் போய்விட்டது. அறிவு ஜீவிகளுக்கென்று இந்தக் கவிதைகள்  முத்திரை குத்தப்பட்டு தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன.

சில  அருமையான நவீனக் கவிதைகளைப் பார்ப்போம் :


IMG_3066

ந .பிச்சமூர்த்தியின் கவிதை

வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு;
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்.
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்;
அழகென்னும் கிளியை அழைத்தேன்.
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்

க.நா.சு அவர்களின் கவிதை :

மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்
காற்று அடிக்கும்போது தொண்டையில்
புழுதிபடியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்தி விட்டேன்
யாரோ எழுதிய நூல்களைக் கிடைக்கும்போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப் போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்தி விட்டேன் புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக்கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன்
காதலிகள் தேடி வந்தபோது ஆசை
அடித்துக்கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆக்ஷேபிப்பாள் என்று
பயந்து ஒதுங்கி ஒதுங்கிப்
போய் விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய் விட்டாள். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.
சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவரிக்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.

 

நகுலன் அவர்களின் கவிதா வரிகள்:

 

பசவய்யா என்ற சுந்தர ராமசாமி எழுதிய கவிதை

என் நினைவுச்சின்னம்

இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே

இருப்பினும்
நண்ப,
ஒன்று மட்டும் செய்.

என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
‘கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்’ என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

 

பிரிவு – சி.மணி கவிதை

வேதனை, விழிக்கு  விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம் நாசியில் ஏற
கசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க
அனலும்  பனியும் மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு உலகில் என்னை விட்டு
கூடுவிட்ட பறவையென
ஓடி மறைந்தாய்

கல்யாண்ஜி (வண்ணதாசன்) அவர்களின் கவிதை முத்து

நிலா பார்த்தல்

ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.

மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.

தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.

தேவதேவனின் அன்பின் முத்தம் கவிதை

 

பார்த்திருக்கிறாயா?
பாலை நடுவே ஒரு கடலை?
அங்கே
உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்
சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி
அலைகளிலே அசைந்து வரும் படகை?

பருகியிருக்கிறாயா,
பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்
உள்ளதாம் அன்பின் முத்தம்?

கலங்கியிருக்கிறாயா என்றாவது,
எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்
குடம் நீர் கவிழ்ந்து
கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?

பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?
தவிதவித்திருக்கிறாயா,
சூர்ய அடுப்பாக மாறி
இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?

இறுதியாக,
உன் துயரங்களினின்றும்
உயிர்த்தெழுந்திருக்கிறாயா,
தன்னந்தனியாய் அப்படகில் வரும்
அந்தத் தண்ணீர்க் குடமாக?

 

தேவதச்சனின் கவிதை

சிறுமி கூவுகிறாள்.

நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நிலா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன அலையை போல சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

 

சுகுமாரனின் கவிதை விளாசல்

காமம் செப்புதல்

நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ

பூமியை உறிஞ்சிவிடப்
பொழிகிறது
பொழிந்து தணிகிறது மேகம்

சினம் தணியக்
கூடலும் ஆயுதம் ஆவதெப்படி?
யோசித்துக் கிடந்த என் உதடுகளில்
சொட்டி விழுகிறது உன்
ஒரு துளிக் கண்ணீர்

அந்த ஒற்றைத் துளியில்
நூறு கடலின் உவர்ப்பு
அந்த ஒற்றைத் துளிக்கு
உறைபனிப் பாறையின் கனம்.

சமயவேல் கவிதை

விடுமுறை வேண்டும் உடல்

எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது
எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.

ஆத்மாநாம் அவர்களின் கவிதை.

எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்

உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்

மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்

உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே.

ஞானக்கூத்தன் கவிதை

  
பசு மாட்டின்
தலை
கால்
மடி
வால்
ஆசனம்
முதலான இடங்களைத்
தேவதைகள் தங்கள்
இருப்பிடங்களாகக் கொண்டுள்ளார்களாம்
இன்று நானொரு
யானையைப் பார்த்தேன்
தென்கலை நாமம் திகழ
பெரிய புல்லுக்கட்டு
தென்னை மட்டை
தேங்காய்களை நிதானமாகத்
தின்று கொண்டிருந்தது
யானையைக் கேட்டேன்
பசுவைப் போல் உன் உடம்பில்
தேவதைகள் இடம் பிடித்திருக்கிறார்களா என்று
எனக்கே போதாத என் உடம்பின்
எல்லா இடங்களிலும்
நானே வாழ்கிறேன்
என்றது யானை.
 
 

கலாப்பிரியாவின் கவிதை 

 

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

மனுஷ்ய புத்திரன் கவிதை

 

ஒரு யானையென வீழ்ந்த
எங்கள் வயலோர மரம்
நெடுஞ்சாலை போக்குவரத்தை
ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகச் சொன்னார்கள்

எனக்கு போய்ப்பார்க்க
மிகவும் ஆசை

காலம் செறிந்த வேர்களின்
கடைசி உயிர் வாசமும்

ஒரு மரத்தின் வெற்றிடத்தில்
இம்மழை
எச்சலனங்களோடு
பெய்யுமென்றும்

இருமல்கள்
முணுமுணுப்புகள்
மலஜல ஈரக்கடன்கள்
ஏதும் அற்ற
ஒரு சாந்த நீங்குதலும்
நான் அறியாதவை

போய்ப் பார்த்துவிடவேண்டும்
எப்படியென

இன்றைய தலைமுறை இளைஞர்களும் வித்தியாசமான நவீனக் கவிதைகளை எழுதி நம் ஆழ் மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அவற்றைப் பிறகு பார்ப்போம் 

 

கார் திருட்டு – ஜே ராமன்

 

கார் திருட்டு

பேங்கிலிருந்து நோ பார்க்கிங் ஸோனில் பார்க் பண்ணியதற்கான அபராதத் தொகையை பத்தாவது தடவையாகக் கட்டிவிட்டு மனச்சோர்வுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என் டீனேஜ் மகள் ஷீலாவுக்குக் கார் வாங்கிக் கொடுத்த நாள் முதல் இந்த பார்க்கிங் டிக்கெட் அபராதம் அடிக்கடி கட்டுவது எனக்கு மிகச் சாதாரண விஷயமாகி விட்ட்து. கார் என் பெயரில் இருப்பதால் டிக்கெட் ஜாம் ஜாமென்று மெயிலில் எனக்கு வந்துவிடும்!

பாவம் ஷீலா! ஸ்கூலில் சக மாணவர்களுடன் போட்டியிட்டுக்கொண்டு படிப்பதே பெரிய சவால்! அதைத் தவிர ம்யூசிக்கில் அதிக ஆர்வம் காட்டியதால் கர்நாடக சங்கீத  பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக் கொண்டாள். அவள் நாட்டம் இங்லீஷ் பாப் ம்யூசிக்கில் சென்றதால் எங்கள் அனுமதியுடன் ஒரு கிதார் வாசிப்பவருடனும் மற்றுமொரு ட்ரம்மருடனும் இணைந்து வார இறுதியில் சின்னச்சின்ன இசைவிழா நிகழ்ச்சிகள்வேறு நடத்தி அவளை ஒரு இயந்திரமாக மாற்றிக்கொண்டிருந்தாள். அவள் நேரமின்மையால் அவதிப்படுவதால் இந்த பார்க்கிங் டிக்கெட் பிரச்சனயை நான் பெரிது பண்ணாமல் அமைதியாய் அபராதத் தொகையை கட்டிக்கொண்டு வந்தேன்!

    இரவு  வந்தது. மணம் பறக்க சமைத்திருந்த டின்னர் டைனிங் டேபிளில் அழகாக வைக்கப்பட்டிருந்தது. ‘இன்னமும் ஷீலா வரவில்லை? ம்…. இன்று என்ன சமையல்?’ என்று மனைவியிடம் வினவ ‘எந்த தப்பான இடத்தில் பார்க் பண்ணிவிட்டு அடுத்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாளோ, தெரியவில்லை! இன்றைய சமையல் மெந்தியகீரை குழம்பு, உருளைக்கிழங்கு பொடிமாஸ், கேரட் வெள்ளரி போட்ட பச்சடி மற்றும் மைசூர் ரசம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ஷீலா ‘டாடி, இன்று ஒழுங்காக பார்க் பண்ணி அடுத்த கான்செர்ட்டை ஏற்பாடு செய்து வந்திருக்கிறேன்.. காரை கேரேஜில் விடவில்லை.  ஒரே பசி, வீட்டிற்கு முன்னால் வெளியிலேயே ரோடில் பார்க் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். ஸாரி டாடி’ என்று விடை அளித்துவிட்டுக் கை கழுவி முகம் அலம்பி எங்களுடன் சாப்பிட ஆரம்பித்தாள். ‘மம்மி, யூ ஆர் தி பெஸ்ட் குக்  இன் தி வேர்ல்ட்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்த ஷீலா ‘குட் நைட் டாடி மம்மி. நாளை மேதமேடிக்சில் டெஸ்ட். தயாராக்க வேண்டும்’ என்று  கூறிவிட்டு தன் ரூமுக்குச் சென்றாள். நாங்களும் டைனிங் டேபிளை விட்டு எழுந்தோம். டைனிங் டேபிள், சமையலறை வேலைகளை இருவரும் சமமாக பகிர்ந்து முடித்துக்கொண்டு  டீவீ  ரூமுக்குள் நுழைந்தோம்.

*      *        *       *

தூக்கிவாரிப் போட்டது. அலறிப்   புடைத்துக்கொண்டு ஆழ்ந்த நித்திரையிலிருந்து விழித்து படுக்கையில் குதித்து எழுந்தேன். ‘என்னங்க சத்தம்?’ என்று பதட்டத்துடன் மனைவி கேட்ட கேள்விக்கு பதில் ஷீலாவின் அறையிலிருந்து ‘டாடி டாடி’ என்ற கூக்குரலிருந்து கிடைத்தது. இருவரும் ஷீலா ரூமுக்குப் பறந்தோம். போவதற்கு முன் கடிகாரம் 1.30  அதிகாலை என்று காட்டியதை மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.. ‘டாடி, என் கார் ஸ்டார்ட்டாகும் சத்தத்தைக் கேட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.  அங்கு   காரை யாரோ ஓட்டிக்கொண்டு போவது தெரிந்தது..’ என்று பதைபதைப்புடன் ஷீலா கூறினாள்.

நானும் ஷீலாவும் ஆடைகளை மாற்றிக்கொண்டு என் காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். ‘என்ன ப்ராப்ளம்’ என்று கேட்ட போலீஸ் ஆஃபீசரிடம் விஷயத்தை விளக்கி ஒரிஜினல் டாக்குமெண்டுகளையெல்லாம் காண்பித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்தோம். காண்டாக்ட் லாண்ட் லைன் நம்பரையும்.(அப்போதெல்லாம் மொபைல் கிடையாது) பதிவு செய்து கொண்ட ஆஃபீசர் ‘இப்போதெல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காரில் சொகுசாய் செல்லத் திருடியவன் அதை  வேறு இடத்தில் அம்போ என்று விட்டுவிட்டுப் போவது ஒரு ரகம்! இதில் கார் உடன் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. மற்றொரு ரகம் பெரிய ‘கார் திருட்டு ராக்கெட் கும்பல்’ காரை திட்டம்போட்டுத் திருடிக் கண்காணாத இடத்திற்கு எடுத்துச் சென்று அக்கு வேறு ஆணிவேறாய் எல்லா பார்ட்டுகளையும் கழட்டி வேறு கார்களில் மாட்டுவது ,அல்லது அவர்கள் கும்பலைச் சேர்ந்த வியாபாரிகள் மூலமாக விற்பது.  இந்த ரகத்தில் காரை மறந்துவிட வேண்டியதுதான்’ என்று கூறினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு பெரும் மன பாரத்துடன் வீடு திரும்பினோம்.

எஃப் ஐ ஆர் பதிவு செய்து  இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் போலீசிடமிருந்து ஒரு தகவலும் இல்லையே. அவர்களை நாமே காண்டாக்ட் பண்ணலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே லாண்ட் லைன் மணி அலறியது. ஷீலா ‘டாடி, போலீசிலிருந்து உங்களுக்கு கால்’ என்று ரிசீவரை நீட்டினாள்.

‘ஹலோ. காரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா’ என்னும் என் கேள்விக்கு போலீஸ் ஆஃபீசர் ‘நல்ல செய்தி! கார் கிடைத்துவிட்டது! நீங்கள் ரொம்ப லக்கி. திருடியவன்   சொகுசு சவாரி செய்துவிட்டுக் காரை உங்கள் வீட்டிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் வரிசையாக வீடுகள் இருக்கும்  பகுதியில் டம்ப் பண்ணிவிட்டு சென்றிருக்கிறான். நல்ல வேளையாகக்  ‘கார் ராக்கெட்’ கும்பலிலிருந்து தப்பியது! பேப்பர் பென்சில் இருக்கிறதா? அட்ரஸ் சொல்லுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்’. என்றார். விலாசத்தைக் குறித்துக்கொண்டவுடன் தாங்க்ஸ் சொல்லி ரிசீவரை வைத்தேன். ‘ஷீலா, கார் கிடைத்து விட்டது. இன்று ஞாயிறுதானே! கிளம்பு போய் காரை எடுத்துவந்து விடலாம்’ என்றவுடன் ஷீலா துள்ளிக் குதித்துக்கொண்டு கிளம்பினாள்.

அட்ரஸை அடைந்தோம். குறிப்பிட்ட சந்து வரிசையான பழைய வீடுகளின்  பின்புறத்தில் இருந்தது. காரேஜ், வீடுகளின் பின் பக்கம் இருப்பது அந்தக்கால  கட்டட அமைப்பு விசேஷம்! சந்து ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. சந்தில் திரும்பியதும் எங்கள் காரின் பின் பகுதி தூரத்தில் காண ஷீலா ‘டாடி, அதோ நம்ம கார்’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினாள்!

அருகே வந்த எங்களுக்கு அங்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!!!!

காரின் நான்கு வீல்களைக் காணவில்லை! நான்கு வீல்களுக்குப் பக்கத்தில் கற்கள் வைத்துக் கார் அவைகளில் நிறுத்தப்பட்டிருந்தது!

நான்கு கதவுகளும் அஜாராக திறந்து வைக்கப் பட்டிருந்தன! உள்ளே கார் சீட்டுகளெல்லாம் கத்தியால் கீறப்பட்டு உள்ளிருந்தவை பயங்கரமாய் வெளியில் நீட்டிக்கொண்டு எள்ளி நகையாடின! ஸ்டியரிங் வீல் காணவில்லை! ரேடியோ/காசெட் ப்ளேயர்/சிடி ப்ளேயர் மிஸ்ஸிங்!

பூட் கதவு திறந்திருந்தது! உள்ளே ஸ்பேர் வீல்/டூல்ஸ்/ஜாக் காணோம்!

பானெட் வேறு திறந்து நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது! உள்ளே இஞ்சின், பாட்டெரி, ஏர் கண்டிஷனர் உள்பட முழுதும் வெறுமையாக இருந்தன!!!

எங்களால் இந்த எதிர்பாராத அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. ஷீலா ‘டாடி’ என்று என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அப்போது ஒரு அதிசியம் நிகழ்ந்தது!

காருக்குப் பக்கத்திலிருந்த கேரேஜைத் திறந்துகொண்டு ஒரு வயதான பெரியவர் எங்களை நோக்கி வந்தார்! ‘ஹலோ’ வென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘இது உங்கள் காரா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு ‘இந்த சந்தில் இதுவரை இரண்டு கார்கள் டம்ப் செய்யப்பட்டிருக்கின்றன. இது மூன்றாவது.. இடம் ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக வெறிச்சென்றிருப்பதால் கார் திருடர்கள் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போலும்! உங்கள் கார் இங்கு 5ம் தேதி காலையில் டம்ப் செய்யப்பட்டிருக்கிறது. இது என் கவனத்தைக் கவர்ந்தது.. இந்தப் பேட்டைக்குச் சொந்தமில்லாத காரானதால் எனக்கு சந்தேகம் வந்து அதைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். மாலை சுமார் 5 மணிக்கு என் சந்தேகம் வலுப்பட்டது. எங்கள் பேட்டை போலீஸுக்கு உடனே ஃபோனில் தகவல் கூறினேன். அன்றும் அடுத்த நாளும் கார் அலங்காமல் குலுங்காமல் அப்படியே பார்க்கிங்கில் இருந்தது. நான் மறுபடி போலீசிற்கு ஃபோன்பண்ணி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று வினவினேன். தொலைந்த காரைப் பற்றிய தகவல் வேறு போலீஸ் பேட்டையிலிருந்து வந்திருந்ததாகவும் நீங்கள் தகவல் கொடுத்த உடனேயே அவர்களுக்கு மெஸேஜை அனுப்பி உஷார் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் மூன்றாம் நாள் காலையில் நான் இங்கு வந்து பார்த்தபோது காட்சி முழுவதும் தலைகீழாக மாறியிருந்தது. கார் பார்ட்டுகளெல்லாம் மிஸ்ஸிங்க்! கார் உள்ளே சீட்டுகளையெல்லாம் நாசம் செய்திருந்தார்கள். நீங்கள் ஏன் முதல் நாளன்றே வந்து காரை எடுத்துப் போகைல்லை?’ என்று கேட்டார்.

போலீஸின் அஜாக்ரதையினால் வெகுண்ட நான் ‘எங்கள் பேட்டை போலீஸிடமிருந்து இரண்டு மணி முன்னால்தான் எனக்குக் காரைப் பற்றிய தகவல் கிடைத்தது. உடனேயே விரைந்து வந்துள்ளோம். கார் கிடைத்த நல்ல செய்தியைத்தான் சொன்னார். டேமேஜ் பற்றிய விவரம் அவருக்குத் தெர்ந்திருக்கவில்லை. என்ன கொடுமையிது! என்று பதிலளித்தேன். ‘ஏதோ தப்பு நடந்திருக்கிறது. காஃபி அருந்திக்கொண்டே அடுத்த கட்ட வேலையைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாம்’ என்று அவர் வீட்டிற்கு எங்களை அழைத்தார். கேரேஜ் வழியாக வீட்டுக்குள் சென்றோம்.

‘என் ஒய்ப்ஃ காலமாகி 3 வருடம் ஆகிறது. ஒரே மகன். இன்னும் மணமாகவில்லை. இப்போது ஜப்பானுக்கு வேலைவிஷயமாய் சென்றிருக்கிறான்’ என்று சொல்லிக்கொண்டே எங்களை டைனிங் டேபிளில் அமர்த்திவிட்டு ஒரு நொடியில் காஃபி போட்டு ஒரு தட்டில் எடுத்துக்கொண்டுவந்து வைத்தார். கோப்பைகளில் ஊற்றி ‘மில்க், சக்கரை ப்ரௌன் சக்கரை எதுவேண்டுமானாலும் கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

தன் சட்டைப் பையிலிருந்து விசிடிங் கார்டை எடுத்து ‘அசட்டையாக இருந்த போலீஸை சும்மா விடாதீர்கள்’ என்று நீட்டினார். ‘இதில் என் அட்ரெஸ் ஃபோன் நம்பர்  எல்லாம் இருக்கிறது. நான் இதில் உங்களுக்கு சாட்சியாகவும் உறுதுணையாகவும் இருக்கத் தயார்’’ என்றார். நானும் என் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்து ‘நாளை இங்கு வந்து கார் இருக்கும் நிலையை பல கோணங்களில் போஃட்டோ எடுக்கப்போகிறேன். பின் போலீஸில்  தெரிவித்து அவர்கள் அனுமதியுடன் காரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்கிறேன். உங்களின் இந்த ஹெல்ப்பை நாங்கள் என்றென்றும் மறக்கமாட்டோம். ரொம்பவும் தாங்க்ஸ்’ என்று விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்த நாள் காலையில் அந்த இடத்திற்குச் சென்று பல கோணங்களில் ஃபோட்டோக்கள் எடுத்து இன்ஸ்டண்ட் ப்ரிண்ட் ஸ்டுடியோவில் கொடுத்து ப்ரிண்ட்கள் தயார் செய்து வைத்துக் கொண்டேன்.

அன்று இரவு நான் பின் வருமாறு  போலிஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதினேன்.

‘மேலே ரெஃபெரென்ஸ் செய்துள்ள என் கார் இம்மாதம் மூன்றாம் தேதி காலை 1.30 மணி அளவில் என் வீட்டிற்கு முன் இருக்கும் ரோடில் பார்க் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து களவாடப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு 5ம் தேதி காலையில் என் வீட்டிலிருந்து சுமார் 40 கிமி தொலைவில் உள்ள  மேலே குறிப்பிட்டுள்ள லேனில் களவாளிகள்  டம்ப் செய்திருக்கிறார்கள். அந்த பேட்டைக்குச் சொந்தமில்லாத காரை மேலே குறிப்பிட்ட குடிமகன் – என் சாட்சி – கண்காணித்து மாலை 5 மணி அளவில் அந்த பேட்டை போலீசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். சாட்சி நபர், ஒரு ஆக்க்ஷனும் எடுகாமல் கார் குத்துக் கல்லாய் அப்படியே இருப்பதைக் கவனித்து,  7ம் தேதி போலீசிடம் என்ன ஆக்ஷன் எடுத்திருக்கிறீர்கள் என்று வினவ,  ஆஃபீசர் ரெலெவெண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5ம் தேதியே மெசேஜ் அனுப்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.  இதற்குப் பிறகு 7ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை ஒரு பயங்கர அமைதி.   15ம் தேதி காலை சம்பவ லேனுக்கு வந்தடைந்த போது கார் பார்ட்டுகள் எல்லாம் களவாடப்பட்டு கார் தாறுமாறாக டேமேஜ் ஆகியிருப்பது தெரிய வந்தது. சாட்சி நபர் 7ம் தேதி மாலை வரை கார் எந்த டேமேஜுமில்லாமல் இருந்ததைக் கவனித்திருக்கிறார். 7ம் தேதி இரவு பார்ட்டுகளையெல்லாம் கழற்றி எந்தக் காரணதிற்காகவோ டேமேஜ்வேறு செய்திருக்கிறார்கள். இதை 8ம் தேதி காலை சாட்சி நபர்   பார்த்திருக்கிறார். எனக்கு 15ம் தேதி காலை 10 மணி அளவில் எங்கள் பேட்டை போலீஸிடமிருந்து கார் டம்ப் செய்யப்பட்ட தகவல் தெரிந்தது. டம்ப் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்து உண்மையை அறிந்தோம். சாட்சி நபரின் காண்டாக்ட் நம்பர் மற்றும் விலாசம் மேலே கொடுக்கப் பட்டிருக்கிறது.

என்னால் உங்களுக்கு விடும் கோரிக்கை:

1.கார் டேமேஜ் ஆனது 7ம் தேதி இரவு. கார் டம்ப் செய்ப்பட்ட விவரம் உங்களுக்கு 5ம் தேதி மாலையே தெரியும். ஏன் என்னை உடனே காண்டாக்ட் பண்ணவில்லை? இதன் மூலம் டேமேஜை பூரணமாக தவிர்த்திருக்கலாம் அல்லவா?

2.ஐந்தாம் தேதியிலேயே தெரிந்த விஷயத்தை எனக்கு 15ம் தேதி – கார் டேமேஜ் ஆகி 8 நாட்களுக்கு பின் – தெரிவித்தது ஏனோ?

3.எங்கள் பேட்டை ஸ்டேஷன் எனக்கு 15ம் தேதி அறிவித்தபோது கார் டேமேஜான விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் காரைப் பற்றி எந்தத் தகவலையும் அப்டேட் செய்து கொள்ளாதது எனக்கு வியப்பளிக்கிறது.  இது ஏனோ?

இதனால் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏதோ தவறு நேர்ந்திருப்பது ஊர்ஜிதமாகிறது.

தயவு செய்து உண்மையைக்  கண்டுபிடித்து எனக்குச்  சரியான தீர்ப்பைத்  தெரிவியுங்கள். தப்பு உங்களுடையது என்பது உறுதியானால் என் காருக்கு உரிய  காம்பென்சேஷன் வழங்கத் தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இத்துடன் டேமேஜ் கண்டிஷனில் எடுத்த சில ஃபோட்டோக்களை இணைத்திருக்கிறேன். இன்னும் கார் அதே இடத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அனுமதி அளித்தால் அப்புறப்படுத்திவிடுகிறேன்’ என்று கையெழுத்திட்டுக் கடிதத்தை முடித்தேன்.

கொரியரில் கமிஷனருக்கு லெட்டரை ஃபோட்டோக்களுடன் புதியதாக என் ஒர்க் நம்பரையும் சேர்த்து அனுப்பிவைத்தேன்.

அடுத்த நாள் கமிஷனர் ஆஃபீசிலிருந்து காலை 10 மணிக்கு ஒர்க் நம்பருக்குக் கால் வந்தது.    

‘உங்கள் கோரிக்கை நம்பர் ஒன்றைப் பற்றிய ஓர் கேள்வி கேட்கலாமா? 6ம் தேதி காலை 11 மணிக்கு உங்களை ஃபோனில்  காண்டாக்ட் பண்ணியதற்கான ரிகார்ட் பதிவாகியிருக்கிறதே!’ என்ற வினா அங்கிருந்து வந்தது.

‘அது என் வீட்டு நம்பர். என்னிடம் பேசியதாகப் பதிவாகி இருக்கிறதா? பகலில் ஷீலா ஸ்கூலுக்குச் சென்றிருப்பாள். நாங்களும் எங்கள் வேலை அலுவகங்களுக்குச் சென்றிருந்திருப்போம்’.

சிறிதுநேரம் மௌனம் நிலவியது. ‘ஸாரி. உங்களிடம் பேசியதாகப் பதிவாகவில்லை’

‘ஏன் மாலையில் அல்லது அடுத்த நாளில் காண்ட்டாக்ட் பண்ணவில்ல?’

‘சாரி. அதற்கு இப்போது எங்களிடம் விடையில்லை, தாங்க்ஸ்’ என்றுகூறி ரிசீவரை வைத்துவிட்டார்கள்.

பகல் 12 மணிக்கு மற்றுமொரு கால்.

‘இதை கார் இன்ஷூரன்ஸிலிருந்து க்ளைம் பண்ணியிருக்கலாமே’ என்ற கேள்வி அங்கிருந்து வந்தது.

‘இது தேர்ட் பார்ட்டி ஒன்லி  இன்ஷூரன்ஸ். கார் களவுக்கு க்ளைம் பண்ண அதில் இயலாது’ என்று பதிலளித்தேன்.

‘தாங்க்ஸ்’ – ஃபோன் கட்டாகிவிட்டது.

பிறகு மதியம் 1 மணிக்கு இன்னுமொரு கால். ‘இதோடு இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளலாமா? இனிமேல் இம்மாதிரியான தப்புக்கள் நடக்காதவாறு இருக்க நாங்கள் உறுதியளிக்கின்றோம்’

அதற்கு நான் ‘எனக்கும் அந்த அபிப்பிராயம்தான். ஆனால் என் கருத்துக்கு இதில் இடமேயில்லை. என் மகள் ஷீலா அதற்கு உடன்படமாட்டாள். வீக்கெண்டுகளில் கான்செர்ட் பண்ணிக்கொண்டும் ஸ்கூல் படிப்பிலும் கான்செண்ட்ரேட் செய்தும் இந்த கார் அவள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமான பொருளாகிவிட்ட்து. அவளிடம் இதை என்னால் சஜெஸ்ட் செய்ய இயலாது. மன்னிக்கவும்’ என்று பதிலளித்தேன்.

அத்துடன் சம்பாஷணை முடிவடைந்தது.

அன்று மாலை  காலிங் பெல் அடித்தது. நான் கதவைத் திறந்தபோது போலீஸ் ஆஃபீசர் ஒருவர்  நின்றுகொண்டிருந்தார்.

ஆஃபீசர் ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா?’ என்றார்.

‘நிச்சயமாக’ என்று அவரை லவுஞ்சிற்கு அழைத்துச் சென்று  சோஃபாவில் அமருமாறு பணித்தேன்.

‘போலீஸ் செய்த தவறினால் எற்பட்ட உங்கள் இழப்பிற்கு நாங்கள் மிகவும் வருந்தி மன்னிப்பைக் கோருகிறோம். எங்கள் நல ஃபண்டிலிருந்து காரின் இன்றைய மதிப்புக்கு இதோ இந்த கேஷ் செக். தயவுசெய்து பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று செக்கை நீட்டினார். அதைப் பெற்றுக்கொண்டு ‘மிகவும் நன்றி’ என்று கூறினேன்.

‘ஒரு சின்ன விண்ணப்பம், இந்த காகிதத்தில் நிகழ்வைப் பற்றி புகழ்வானாலும் அல்லது இகழ்வானாலும் உங்கள் கருத்தை எழுதித் தாருங்கள். அதை அப்படியே எங்கள் மேகஸீனில் பப்லிஷ் செய்துவிடுகிறோம்.’ என்று பேப்பரையும் பென்னையும் நீட்டினார்’.

‘போலீஸ் குற்றவாளிகளைத்தான் கண்டுபிடித்துக் கூண்டில் ஏற்றுவார்கள். இந்த சம்பவம் அதற்கு நேர்மாறான விதிவிலக்கு.  தன் குற்றத்தையே கண்டுபிடித்ததுமல்லாமல் இழப்புக்குச் சரியான ஈடு கொடுத்ததற்காக போலீஸ் டிபார்ட்மெண்டை நான் மிகவும் மதித்துப் பாராட்டுகிறேன்’ என்று எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்த ஆஃபீஸர் சிரித்துக்கொண்டே ‘தாங்க்ஸ், ஷீலாவிடம்’ என் சார்பில் சாரி தெரிவித்து விடுங்கள். மற்றும் டேமேஜ் காரைப் பற்றிக் கவலை வேண்டாம். நாங்களே அகற்றிவிடுகிறோம்’ என்று கூறியவாறு விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

 

அன்று இரவு மூவரும் டின்னர் சாப்பிடும் சமயம் ஷீலாவிடம் விஷயத்தை விளக்கினேன். ‘டாடி’ என்று சந்தோஷ மிகுதியால் கோஷமிட்டாள். மனைவியிடம், ‘ சாட்சி நபருக்கு ஃபோன் பண்ணவேண்டும். அவருக்கு ஃப்ளவர் பொக்கே அனுப்ப எற்பாடு செய்யப்போகிறேன்’ என்றேன்.. மூவரும் லவுஞ்சுக்குச் சென்று அமர்ந்தோம். ‘டாடி, அந்த செக்கைக் காட்டுங்கள்’ என்றதும் நான் அதை எடுத்துவந்து காட்டினேன்.

அதை கையிலெடுத்துப் பார்த்தவாறே  ‘நான்தானே வெளியே காரை பார்க் பண்ணியிருந்தேன் கேரேஜில் விடாமல்!. எனவே இந்த செக்  என்னுடையது. எனக்கே சொந்தம்’.

‘எங்கே அவளைக் காணோம்’ என்ற எனக்கு மனைவி அளித்த பதில்

“எஸ்கேப்”

இது ஸிட்னி ஆஸ்ட்ரேலியாவில் பல வருடங்களுக்கு முன் என் வாழ்வில் நடந்த ஒரு  உண்மைச் சம்பவம்.  ஆஸ்ட்ரேலியா போலீஸ் இங்கு மாதிரி ரொம்பவும் திறமைசாலிகள். ஆனால் முக்கிய வேறுபாடுகள் திறமையில் இல்லை தோற்றத்தில் இருக்கிறது. போலீஸில் சேர முக்கிய தேவை குறைந்த பட்சம் 6 அடி உயரம். டம்மி தெரியாமல் உடம்பை ட்ரிம்மாக வைத்திருக்கிறார்கள். போலிஸ் ஃபைன் பணத்தின் ஒரு சிறு பகுதி போலீஸ் நல ஃபண்டுக்கு செல்கிறது. இது அவர்களின் கடமை உணர்ச்சியை மேலும் வலுப்படுத்துகிறது.  

இந்த வகையான சம்பவம் இங்கு நடந்திருந்தால் அதன் விளைவு எப்படியிருந்திருக்கும்? போலீஸ் எப்படி ஹாண்டில் பண்ணியிருப்பார்கள்? பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  

 

 

 

 

 

 

 

 

 

குவிகம் இலக்கியவாசல் பதின்மூன்றாம் நிகழ்வு

பதின்மூன்றாம்  நிகழ்வு

 நான் அறிந்த சுஜாதா”

முன்னிலை:  சுஜாதா தேசிகன்
ஜெயராமன் ரகுநாதன்

கலந்துரையாடல் :

வருகை தருவோர் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும்

சுஜாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும்

இம்மாதக் கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல் 

அனைவரும் வருக 


 பனுவல் புத்தக நிலையம்,  எண். 112, திருவள்ளுவர்  சாலை, திருவான்மியூர் சென்னை  600041         21  மே   2016,
சனிக்கிழமை,
மாலை – 6.30 மணி
 (திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் –       BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

தொடர்பிற்கு : சுந்தரராஜன் (9442525191) – கிருபானந்தன் (9791069435)            

சம்பளம் போட்டாச்சா? – கீதா

‘சர்’ரென்று  அந்த வங்கியின் வாசலில் வந்து நின்றது ஒரு ஹீரோ ஹோண்டா. ஸ்டைலாய் இறங்கினார் ராகவன். சப்தமேயில்லாமல் பின்னால் வந்து ஸ்கூட்டியை வளைத்து நிறுத்தின மோகன் அவரைப் பார்த்துக் கையுயர்த்தியபடியே, “ என்ன ராகவன் சார்! சம்பளம் போட்டாச்சா?” என்றார்.  ”  ஒ! ஹலோ மோகன்! சம்பளமா? போட்டாச்சுன்னு சொன்னாங்க, அதான் வந்தேன்” – ராகவன்.   பேசியபடியே உள்ளே நுழைந்த அவர்களை முரளி வரவேற்றார், “வாங்க, வாங்க, காணமேன்னு பார்த்தேன்.” “ஆமா, முரளி சம்பளம் போட்டாச்சா?” என்று கேட்டார் மோகன்.

“மணி ஒம்பதே முக்கால் தானே ஆகுது. சீட்ல ஆளைக்காணோம். வந்தாத்தான் தெரியும்.” – முரளி.

“இதோ, ரகு வந்துட்டாரே. என்ன ரகு, சம்பளம் என்னாச்சு?” – ராகவன்.

“ சார், பில் பாசாயி,ட்ரெஷரியிலிருந்து ஆபீசுக்கும் வந்தாச்சு. இன்னிக்கு எடுத்துக்கலாம்னு சொன்னாங்க.” – இது ரகு.

“ஏம்பா, சம்பள ரிஜிஸ்தரில் கையெழுத்தேபோடலியே, எப்படிச் சம்பளம் எடுக்குறது?” இது இந்தக் கும்பலில் புதிதாகச் சேர்ந்து கொண்ட ராஜப்பாவின் ஐயம்.

அதற்குள் தனது இடத்துக்கு வந்த குமாஸ்தா விஜயனைப் பார்த்து இவர்கள் அனைவரும்’ஹலோ என்றும் கையைத்தூக்கியும் வரவேற்க, விஜயன் இவர்களை ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்து –“என்னங்க சார், சம்பளமா? போட்டாச்சு!” என்றார்.

ஒருவர் வெளிப்படையாக முகம் மலர்ந்தார். நாசூக்காக உள்மூச்சு வாங்கியும், இதைப்பற்றிக் கவலையே படாதமாதிரி ‘பாவ்லா’ செய்தனர் மற்றவர்கள். தத்தம் காசோலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தனர். பணமும் வந்தது.

“என்ன ரகு உங்க கையிலே?” – ராஜப்பா

“அதுவா? ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஃபார்ம்.”

“எங்களுக்குக் கிடைக்கலியே?” – பதறினார்கள் ராஜப்பவும், ராகவனும்.

“தெரியாதா? வெள்ளிக்கிழமைக்குள்ளே குடுக்கணும்.”- ரகு.

“ இதோ மத்தியானத்துக்குள்ளே போய் வாங்கிடறோம்” என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடிய அவர்களைப் பார்த்துப் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த குமார், விஜயனிடம்,” ஏன் சார் இவர்களெல்லாம் ஒரே ஆஃபீஸில் வேலை பார்க்கிறார்களா?” என்று கேட்டார்.

“இவங்களா?“ என்று சின்ன கிண்டலான சிரிப்புடன், “இல்லை. இவங்க அத்தனை பேர் மனைவிகளும் ஒரே இடத்தில் வேலை பாக்கிறாங்க. பேச்செல்லாம் அவங்க சம்பளத்தைப்பற்றிதான் “என்று தெளிவுபடுத்தினார் விஜயன்.

பொங்கியெழு முருகா! — கோவை சங்கர்

பொங்கியெழு முருகா !

 

 

 

 

காக்கின்ற கடவுளே முருகா – உன்னை நம்பியே நிற்கின்றோம் நாங்கள்

கறுப்புச் சந்தையிலே பணம்புரட்டும் மாந்தரில்
கனல்கக்கி யுனையெதிர்த்த கயவரைத் தெரியலையா!

நேர்மையே தர்மமென நேர்வழியில் சென்றுவிட்டு
அவதியுறும் நன்மக்கள் கூக்குரல் கேட்கலையா!

லஞ்சப்பேய் அவனன்றி ஓரணுவும் அசையாது – இங்கே
பஞ்சத்தின் கொடுமைகள் சொல்லிசொல்லி மாளாது
தஞ்சமென்று உன்முன்னே நிற்கின்றோம் இப்போது
அறம்வாழ மறம்வீழ நீஎழுவது எப்போது?

காசேதான் கடவுளெனும் தாரகமந்திரம் -நாம்
சுயநலக் கூட்டத்தின் சொடுக்கிவிட்ட பம்பரம்
அச்சமொடு ஜடமாக ஆகிவிட்டோம் யந்திரம்
நேர்மையின் வழிபோக எப்போது சுதந்திரம்!

புன்னகை போதும் பொங்கியெழு முருகா
மென்மையது போதாது வடிவேல் மருகா
நடத்திக் காட்டிடு இன்னுமொரு ஸம்ஹாரம்
பாடுபடும் எங்களுக்கு அதுவே ஆதாரம்!