நவீனக் கவிதைகள் – பாகம் இரண்டு

Image result for புதுக்கவிதை

சென்ற மே மாதம் சில பிரபலங்களுடைய புது மற்றும் நவீனக் கவிதைகளைப் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னும் சில கவிதைகளைப்  பார்ப்போமா?

Image result for நவீன கவிதை

எழுதிய கவிஞர்களுக்கும் இணைய தளத்திற்கும் மிக மிக நன்றி:

இது உமாமகேஸ்வரி எழுதிய கவிதை.

Image result for கவிதை

“தொட்டி மண்ணிற்குள்
இட்டவிதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
சமையலறையின் வெம்மையில்
குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்
படுக்கையறையின் புழுக்க மோகத்தில்
அலைகிறது அதன் அமைதி
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று”

இது கனிமொழியின் கவிதை வரிகள்:

Image result for புதுக்கவிதை

” எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்.
தருவதைத் தவிர.”

கவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்

“சாட்சியம்”

Image result for moon in the sky

இந்த நிலா ஒளியைத்தான்
நான் யாசித்தது.
ஒரு பழத்தைப் பிழிவது போல்
பிழிந்து அதன் சாற்றை
இப்படிஎன் கையில் ஊற்றுங்கள்.
ஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.
சகதியும் அகோரமுமான நான்
ஒளித்துண்டாய் விழுவேன்
என் மீது நீங்கள் சுமத்தும்
குற்றங்களுக்கெதிராய்…..
அதுவரைக்கும் இப்படித்தான்.
ஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்
உங்களால் கழற்ற முடியாத
என் வன்மம்.

 யுகபாரதியின் கவிதா வரிகள்

பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்குImage result for புதுக்கவிதை
எடுத்துப் போவாள்

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்

அவன் வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.

வேடிக்கை என்னவென்றால் யுகபாரதிக்கு  ‘மன்மத ராசா’  பாடல் புகழ் தேடித் தந்துள்ளது. இது தான் இன்றைய நிலை.

இவ்வளவுதான் முடிகிறது – விக்ரமாதித்யன்

Image result for pencil sketches

நேற்று நண்பகல்
அஞ்சலகம் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்தில் இருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
கடந்த முறை
கபாலீஸ்வரர் கோயில் சென்றிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
போனவாரம் போல
பார்வையிழந்த ஒருவரை
சாலையின் குறுக்கே கடந்துபோக
கூட்டிக்கொண்டு சென்றேன்
சமீபத்தில்
தற்கொலையுணர்வு மேலிட்டிருந்த
நண்பர் ஒருவரை
தேடிப்போய் பார்த்து
தேற்றிவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று நாள் இருக்கும்
எதார்த்தங்களை எதிர்கொள்ள இயலாமல்
சதா குடித்துக்கொண்டேயிருந்த
இளங்கவிஞன் ஒருவனை
இதற்காகவெல்லாம் ஓய்ந்துவிடக்கூடாது என்று
எடுத்துச்சொல்லி இயல்புநிலைக்கு இட்டு வந்தேன்
கழிந்த மாதம்
நடந்த விபத்திலிருந்து
சிறிது காலம்
குடிப்பதில்லையென்று இருக்கிறேன்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில்.

சாயாசுந்தரம் – கவிதை

Image result for tamil girl dying in a fan sketch

என்றாவது பேசியிருக்கலாம்
நாளை என்னவாகப் போகிறோம்
நாம் என்று ……

எப்போதாவது யோசித்திருக்கலாம்
உண்மையின் வெப்பம்
நம்மை எப்படிப் பொசுக்கும் என்று…..

யாரிடமாவது கேட்டிருக்கலாம்
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணங்களை ……

ஒரு இறகின் பயணமாக
இன்று மட்டுமே சாஸ்வதம்
என நினைத்திருந்த என்னிடம் ….

வாழ்க்கை முழுதும் வருவாயா
எனக் கேட்டால் எப்படிச்
சொல்லமுடியும் ?
எனக்குத் தெரியாத
ஒன்றைப் பற்றி ?

முடிவிலி எழுதிய நீயும் நானும்

Image result for புதுக்கவிதை

உன் பெண்ணியத்தில் எனக்கு
விருப்பமில்லை …
என் ஆணாதிக்கத்தில் உனக்கு
ஒப்புதலுமில்லை ….

ஆயினும் …
இருள் கவயும் மாலையிலும்
பனி சூழ்ந்த இரவுகளிலும்
கலைந்த நம் படுக்கையினூடே
சில நிமிடங்களேனும்
அம்மணமாய் மூர்ச்சையாகி கிடக்கின்றன
உன் பெண்ணியமும்
என் ஆணாதிக்கமும் ….

சக்தி ஜோதியின் தாக்கும் வரிகள்:

Image result for tamil girl dying in a fan sketch

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்று குழம்பினாள்
வெளியே கிளம்பும் பொழுது
வழக்கமான நிகழ்வு தான்
என்றபோதும்
இன்று வேறுமாதிரி உணர்வு

பார்த்துப் பார்த்து தெரிவு செய்தாள்
தரையில் உறங்குகிற
இரண்டு குழந்தைகளையும்  முத்தமிட்டாள்
வெள்ளைக் காகிதத்தைத் எடுத்து
இரவு விளக்கின் ஒளியில் கடிதம் எழுதி
நான்குபுறமும் பிசிறின்றி மடித்தாள்
துளியும் பிசிறு விழாத செயல்களைச் செய்வதில்
விருப்பமுடையவள் அவள்
அறையின்  சூழல் உணராது உறங்கும்
கணவனைப் பார்த்தாள்
மிக அன்னியமாக உணர்ந்தாள்
அப்படியே குழந்தைகளைப் பார்த்தாள்

சுழழும் மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள்
காற்று தடைபட
குழந்தைகள் விழிக்க வாய்ப்பிருக்கிறது
போதையின் வாசனை சூழ்ந்த அவன் விழிப்பது
சந்தேகம் தான்

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/2006/babu.html

இது நம்ம ரீலு

tvr

படம்: நன்றி: ஆர்.பிரசாத்,திருவள்ளுவர் கார்ட்டூன் Economic Times South

திருவள்ளுவர் முதலில் இந்தமாதிரி தான்  திருக்குறளில் கடவுள் வாழ்த்து எழுத முயற்சித்தாராம்.  அதற்குள் அவர் மதம் மாறிவிட்டதாலும் , இலக்கணம் கொஞ்சம் இடிக்குது என்ற காரணத்தினாலும்  மாற்றி, தற்போது இருப்பதுபோல் எழுதி விட்டாராம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பிரம்மன் முதற்றே உலகு

கற்றதனால் ஆய பயனென்கொல்  கணபதி 
நற்றாள் தொழார் எனின்.

மலைமகள் ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

வேண்டுதல் வேண்டாமை இலாசிவனைச் சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா பரந்தாமன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பொறிவாயில் ஐந்தெழுத்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்

தனக்குவமை இல்லாசிவன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

அறவாழி முருகன்  தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தால் அரிது

கோளில் பொறியில் குணமிலவே எட்டெழுத்தான்
தாளை வணங்காத் தலை

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
பரமனடி சேரா தார்

 கடைசிப்பக்கம்     டாக்டர் ஜெ பாஸ்கரன்

பனைமர நட்பு  !

dr1

 “நண்பேண்டா….” “அம்மா, அப்பாவையெல்லாம் விட எனக்கு என்ஃப்ரண்ட்ஸ்தான்  முக்கியம்”                                                             “உலகத்திலேயே ஃப்ரண்ட்ஷிப்தான் உயர்ந்தது” “ஃப்ரண்ஷிப்புக்காக உயிரையும் கொடுப்பேன்”  

இதெல்லாம் இன்றைய இளைஞர்களிடையே சுற்றிவரும்  நட்பாஞ்சலித் தொடர்கள்! 

உண்மைதான்.

கிருஷ்ணன் – குசேலர் நட்பு முதல்கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்பாரி – கபிலர்கர்ணன் – துரியோதனன்ராஜாஜி – பெரியார் எனப் பல நட்புகளின் பெருமையை நாம் அறிவோம்.

நட்புகளிலேயே பள்ளிக்கூட நட்புக்கொரு தனி இடம் உண்டு.    உயர்ந்தவன் – தாழ்ந்தவன்ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு   ஏதுமின்றி சுற்றித் திரியும் மகிழ்ச்சியான காலம் அதுகவலைகளும்,  பொறுப்புகளும் இல்லாத காலமும் கூட!

நாற்பது வருடங்களுக்கு முன்னால் பள்ளிக்கூடத்தில் மலர்ந்த நட்புஇன்றும் தொடர்கிறது  நானும்என்னுடன் படித்த பதினைந்து நண்பர்களும் தொடர்பிலிருப்பது மிகவும் சுகமான ஒன்று! வீட்டில் விசேஷம்பொது விழாதிருமணம் என நண்பர்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்வதுஒரே கலாட்டாவாக இருக்கும்

அதுபோலவேமருத்துவக் கல்லூரியில் மலர்ந்த நண்பர்கள்இன்றும்  வாட்ஸ் அப்பில் அரட்டையடிப்பதுகல்லூரிநாட்களை  நினைவுத்   திரையில் ரீவைண்ட் செய்து பார்ப்பது போல் சுவையானது!

சிறு வயது நண்பர்களைபல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன?  ஃப்ளாரிடாவில் வசிக்கும் மருத்துவர் (மகப்பேறு சிறப்புமருத்துவர்ஃப்ராங்க் போயெம் தனது “DOCTORSCRY,TOO என்ற புத்தகத்தில்   சொல்வது   சுவாரஸ்யமானது.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களைக் கொண்டது வெற்றிகள்தோல்விகள்வருத்தங்கள்,  சந்தோஷங்கள்புதிய எண்ணங்கள்முயற்சிகள்புதிய நட்புகள்   என பல  வண்ணங்கள்  அந்த நாட்களை நம்முடன் பகிர்ந்துகொண்ட நண்பர்களை மீண்டும் சந்தித்து  அவர்கள் நம்முடன் இப்போது  இல்லையென்றாலும்  நன்றி சொல்லிஅந்தத் தருணங்களைத் திரும்ப வாழ்வது சுவாரசியமானதும்மகிழ்ச்சியானதும்தானே !

நாம் எல்லோரும் அப்பாஅம்மாகணவன்மனைவிபிள்ளை,  அண்ணன்தங்கை என்று ஏதாவது ஒரு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறோம் – நமக்கென்று ஓர் ஆசைஒரு சொல்ஒரு நிமிடம் – நாம் நாமாக இருக்கும் தருணம் – நம் இளவயது நட்புகளுடன் மட்டுமே சாத்தியம்

நாம் நாமாக இருப்பதற்கு உதவும் நட்புக்கு ஈடு ஏதாவதுஇருக்கிறதா?

நாலடியாரில் நட்பாராய்தல் பாடல் ஒன்று:                             

கடையாயார் நட்பில் கமுகனையார் ஏனை                   இடையாயார் தெங்கின் அனையார் – தலையாயார்                           எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே           தொன்மை உடையார் தொடர்பு.

 சினேகப் பண்பில் கடைசிதரம் – தினமும் கூடிப் பழகி ஏதாவது உதவி செய்தால் மட்டும் நிலைக்கும் நட்பு  (பாக்குமரம்போல் தினமும் நீர் பாய்ச்ச வேண்டும்).

இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தைப் போன்றவர்கள்– விட்டு விட்டு நீர் பாய்ச்சுவதைப் போலஅவ்வப்போது உதவி செய்தால்தான் நட்பு நிலைக்கும்!

முதல்தரமான நட்புடையவர்கள் பனை மரம் போன்றவர்கள் – விதையிட்ட நாளைத்தவிர கவனிக்காமலே விட்டுவிட்டாலும்தானாய் வளர்ந்து பயன் தரும் – அதுபோல பழைய நினைவுகளை மறக்காதவர்களுடைய நட்புகாலங்காலமாக நிலைத்திருக்கும்!

பனைமர நட்பு வாய்த்தவர்கள்பாக்கியசாலிகள !

 

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.   .  

கவர் பெண்

cover
உலகின் மிகவும் செக்ஸியான பெண் என்று இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். (2000 – 2001)பீப்பிள் பத்திரிகை தேர்ந்தெடுத்த 100 அழகான பெண்களில் இவர் தான் முதன்மை இடத்தைப் பிடித்தவர். (2011)  லோ என்று அழைக்கப்படும் இவர் அமெரிக்கர். பாடக -நடிகர் – நடனப்பெண்மணி,  ஃபேஷன் நிபுணர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
 
கிட்டத்தட்ட நம்ம சிம்ரன்  மாதிரி இருக்கிறார் இல்ல?
 
அவருக்கு இப்போது 47 வயது.

2030இல் சங்கர் இயக்கத்தில் ரஜினி படம் – நாம் எப்படி இருப்போம்?

rajini rajini2

\Image result for martianஇது 2030 வது வருடம். இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவர் செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் வேற்றுக் கிரகவாசி. பெயர் அங்காரகன்.

பூமியை ஆக்ரமிக்க ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒவ்வொருவர் வருகின்றனர்.  எட்டு வில்லன்கள் –  ஜாக்கி சான், அஜீத், விஜய், ஆமிர்கான், மகேஷ் பாபு, பிருத்விராஜ்,  டாம்க்ரூஸ்,  பிராட் பிட்.   எப்படி மற்ற கிரக வாசிகளையெல்லாம் சண்டையில் தோற்கடித்து விரட்டிவிடுகிறார்  என்பது தான் ஷங்கரின் அருமையான கதை .

கடைசியில் ரஜினியும்   வேற்றுக்கிரகவாசியாகையால் அவரும் போகவேண்டும் என்று பூமியில் மக்கள் போராட அப்போது அவர்களுக்கு உண்மை தெரியவருகிறது. ரஜினி உண்மையில் மங்கள்யானில் சென்ற பூமிநாதன் என்ற நம்மவர். மற்ற கிரகங்கள் பூமியைக் கைப்பற்றப்போவதை அறிந்து காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் அங்காரகனைக் கொன்றுவிட்டு  அவன் வடிவில்  வருகிறார். கடைசியில் உண்மை அங்காரகன் -அட்டகாசமான வில்லன் பத்துத் தலைகளுடன் வந்து பூமிநாதனுடன் மோத வருகிறான். அது  வேறு யாரும் இல்லை . கமல் தான்.

ஹீரோயின் ஹாலிவுட்டிலிருந்து வந்த அழகுப் பதுமை.   ஷங்கரின் பிரும்மாண்ட படம் அது. இந்தியாவின் எல்லாமொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியான படம்.

போதுமா நம்ம ரீல்?

 

அது சரி.  உண்மையில் 2030இல் நாம் எப்படி இருப்போம்?

கிப்லிங்கர் என்பவர் சொல்லுகிறார். இது உண்மை தான்.

Subscribe to Kiplinger's Personal Finance

 

சென்ட் வாசனை, டெக்னாலஜி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போகும் !

நன்றாகத் தூங்க வைக்கும்  புது கணினிமயமாக்கப்பட்ட படுக்கை

நம்  குளிர்சாதனப்பெட்டியே தேவையான சாமான்களை வரவழைக்கும்

வயல்களை விட அடுக்கு அடுக்கான  உயரங்களில் உணவுப் பொருட்கள் விளையும் – விளைச்சல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இருக்காது.

டிரோன்கள் சாமான்களை உங்கள் வீட்டு வாசலிலேயே  பட்டுவாடா செய்யும்

உங்கள்  வை ஃபை ரவுட்டர் மற்ற எல்லாப் பொருட்களையும் இயக்கும்.

நடமாடும் வீட்டு  உபயோகச் சாமான்கள் (நடமாடும் படுக்கை, கட்டில்)

டிரைவர் இல்லாத கார்

அதிவேகத்தில் பறக்கும் ஆகாயவிமானங்கள்

கைரேகை கையெழுத்து பாஸ்வோர்ட் இல்லாமல் முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் சாதனம்

சாவிகளே இல்லாமல் போய்விடும். டிஜிட்டல் சாதனத்தினால் திறக்கலாம் மூடலாம்.

மாயக் கண்ணாடி அணிந்துகொண்டு வர்சுவலாக எங்கு வேண்டுமானாலும் போகலாம்- அதாவது பார்க்கலாம். 

இயற்கை வாயு, காற்று, சூரிய ஒளி, போன்றவற்றால் சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.

விட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பேட்டரியில் சேமித்து வைக்கும் வசதி

குளிக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் உபயோகிக்கும் முறை

உங்கள் ஆரோக்கியத்தைச்  சரியாகக் கண்காணிக்க மைக்ரோ சிப் உடலில் பொருத்தப்படும்.

உங்களுக்குத் தேவையான  பிரத்தியேகமான மருந்துகள் கிடைக்கும்

சோதனைச் சாலையில் தயாரித்த உங்கள் உடல் உபகரணங்கள் தயாராக இருக்கும்.

நீங்கள் பேசுவதை உங்கள்  போன் பதிவு செய்யும்

எல்லா பரிமாற்றமும் மின்னணு மூலமே நடக்கும். பணம்,செக்,கிரெடிட் கார்ட் எல்லாம் மறைந்துவிடும்.

 

 

 

 

 

 

 

 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

சோழன்



sp4

முற்கால சோழ நாட்டுக் கதைகளைச்  சற்றுப் பார்ப்போம்.

இவைகள் எல்லாம்  கி மு 300 – கி பி 100 வாழ்ந்த சோழ மன்னர்கள் பற்றி

 

sp1:

சூரிய குலத்திலிருந்து வந்தவர்கள் சோழர்கள்.

தூங்கெயில் எறிந்த தொடுத்தோள் செம்பியன் புகார் நகரில் 28 நாள் இந்திர விழா எடுக்க ஏற்பாடு செய்தான். பருந்திடமிருந்து புறாவைக் காத்த சிபி இவன். பசுவின் கன்றை தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை அளித்த மனுநீதி சோழன் இக்காலத்தைச் சேர்ந்தவன்.

முதல் கதை: சோழ மன்னன் செங்கணான்.

சென்ற இதழில் சுருக்கமாகக் கோடி காட்டினோம்.
இப்பொழுது விரித்துக் கூறுவோம்.

சரித்திரத்தை விடுத்து சற்றே புராணம் கூறுவதைக் கேட்போம்!

திருவானைக்காவல் என்னும் தலத்தில் ஒரு நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது.
யானை ஒன்று தினமும் தனது துதிக்கையால் தண்ணீரும், பூவும் எடுத்துவந்து சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. (திருவானைக்காவல்!!).

அந்த நாவல் மரத்தின் மீது சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் வலையால் பந்தல் அமைத்தது.
யானை சிலந்தி வலையைக் கண்டது.
‘எம்பெருமானுக்குக் குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே!’ யானை வருந்தியது.
யானை வலையை அழித்துச்   சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது.
வலை அறுந்தது கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் வலை பின்னியது.
இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும் யானை அதை அழிப்பதுமாக செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன.
சிலந்தியின் பொறுமை எல்லை கடந்தது.
வலையை அழித்திடும் யானையை ஒழிக்க வேண்டும்!
முடிவு கட்டியது!

ஒரு நாள் – சிவபெருமானை வழிபட வந்த சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து… கடித்தது.
யானையும் துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது.
சிலந்தி இறந்தது.
யானையும் சிலந்தியின் விஷம் தாங்காமல் மடிந்தது.

புராணம் மேலும் கூறுகிறது!

சிலந்தியும் யானையும் சிவலோகத்தில் சிவத்தொண்டர்களாம்.

கோபம் – பொறாமையால் – ஒருவரை ஒருவர் சபித்து இவ்வாறு சிலந்தி-யானை என்று பிறந்தனராம்.

இறைவன் யானைக்கு (மட்டும்) சிவபதம் அளித்தார்.
சிலந்தியைச் சோழர் குலத்தில் உதித்து கோயில்கள் அமைத்துச் சிவத்தொண்டு புரிய அருள் செய்தார்.

ஏன் யானைக்கு மட்டும் சிவபதம்?
யானையைக் கொல்லச் சிலந்தி ‘முதலில்’ முயன்றதால் அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது (செம லாஜிக் மச்சி!)

சிலந்தி சோழ குலத்தில் பிறந்தது.

பிறந்த போதே குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன.
அரசியார் குழந்தையை உச்சிமோந்து என் செல்வக்கோச் செங்கணான் என்று வாஞ்சையோடு கொஞ்சினாள்.
கோச்செங்கட் சோழர் சிவ ஆலயம் எழுப்பத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டினார்.

நெஞ்சம் மறப்பதில்லை!
அது நினைவை இழக்கவில்லை!

யானைப் பகை மனதில் இன்னும் இருந்தது!
அதனால் – திருவானைக்காவல் கோவிலில் யானை நுழைய முடியாதபடி ‘சிறு’ வாயில் அமைத்தார்!

போர்க்களத்தில் பெரும்வீரனாக இருந்ததுடன்  சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்த சிறந்த சிவபக்தன் செங்கணான்!

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன்  சோழன் செங்கணானுடன் போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்தான்.

சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

யானைகள் மீது எத்தனை வெறுப்பு? பூர்வ ஜென்ம பகையோ?

Grey pottery with engravings, Arikamedu, 1st century CE

By PHGCOM – self-made photographed at Musee Guimet, 2007, GFDL, https://commons.wikimedia.org/w/index.php?curid=3598599

 

sp2

இரண்டாம் கதை: கிள்ளியும் கிள்ளியும்!

சேர, சோழ, பாண்டியர்கள் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டு மடிந்தது கண்டு நாம் நொந்து போகிறோம்.
ஆனால் இந்தக் கதை இன்னும் சோகமானது.
சோழர்களே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு அழிந்தனர்.

கரிகாலனுக்குப் பின் நலங்கிள்ளி என்ற ஒரு சோழன் பூம்புகாரிலிருந்து அரசாண்டான்.
நெடுங்கிள்ளி என்ற சோழன் உறையூரிலிருந்து அரசாண்டான்.

கோவூர் கிழார் என்ற பெரும் புலவர்  தமிழ் நாட்டில் பெரும் புகழ் கொண்டு விளங்கினார்.
சேர சோழ பாண்டிய அனைத்து மன்னர்களுடைய அன்புக்கும் பாத்திரமானவர்.  

அவர் அந்தக்கால கண்ணதாசன்!

இப்படிப்பட்ட கவிஞர்கள் மன்னர்களின் வீரத்தைப் பாராட்டிப் பாடல் அமைப்பர்.
ஆயினும் அதே சமயம் மன்னர் தவறிழைத்தாலோ அதைக் கடுமையாக விமர்சிக்கத் தயங்கமாட்டார்கள்.
அந்தக்கால ‘துக்ளக் சோ’!

உதாரணத்திற்கு: வெண்ணிக் குயத்தியார் என்ற கவிஞர் சோழன் கரிகாற் பெருவளத்தான் வெண்ணியில் சேர பாண்டியர்களை வென்றது குறித்துப் பாடுகையில் இவ்வாறு கூறுகிறார்:

“கரிகால் வளவ! பல போர்களில் வென்ற உனது ஆற்றல் பெரிது!
பெருஞ்சேரலாதனை  வென்றதால் நீ பெரியதொரு வெற்றியை அடைந்திருக்கிறாய்! ஆனால் வெற்றியுடன் தோல்வியும் உன்னைச் சேர்ந்திருக்கிறது!
போரில் புண்பட்டதால் சேரன் போர்க்களத்திலேயே வட திசை நோக்கி உயிர் துறந்தான்!
அதனால் உனக்குப் பழி நேர்ந்து விட்டது!
அவன் மானத்தைப் பெரியதாக மதித்தான்.
நீயோ மானத்தை விட வெற்றியையே பெரிதாக மதிக்கிறாய்!
சீர் தூக்கிப்பார்! நீ  அடைந்த வெற்றியை!”

என்ன துணிவு!

சரி நமது கிள்ளி versus கிள்ளி கதைக்கு வருவோம்!

கோவூர் கிழார்  பாடல் ஒன்றில் – சேரநாட்டைச் சேர்ந்த வஞ்சி நகரமும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரை நகரமும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன.

அவன் சக்தி படைத்த சோழன்!

நட்பை வளர்ப்பது கடினம்!
பகை மூட்டுவதோ எளிது!
இருவருக்கும் கடும் பகை.

நலங்கிள்ளி பெரும் படை கொண்டு உறையூர் கோட்டையை முற்றுகையிட்டான்.
நாட்கள் நகர்ந்தன.
முற்றுகை தொடர்ந்ததது.
கோவூர் கிழார் இப்படி இரு சோழர்களும் அடித்துக்கொள்வதைப் பார்த்து வெதும்பினார்.

இந்த போர் நல்லதல்ல என்று எண்ணிய கோவூர் கிழார் உலகத்து இயற்கையையும் நாட்டுநடப்பையும் சுட்டிக்காட்டிப் போரைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்.

உன்னோடு போரிட வந்திருக்கிறவன்
பனம்பூமாலை அணிந்தவன் (சேரன்) அல்லன்.
வேப்பம்பூமாலை அணிந்தவனும் (பாண்டியன்) அல்லன்.
இரண்டுபேரும் ஆத்திமாலை அணிந்தவர்களே (சோழர்களே)
உங்களில் எவர் தோற்றாலும் உங்களின் குடி தான் தோற்றது.
இரண்டுபேரும் வெற்றி பெறுவதும், உலகத்தியற்கை அல்ல.
எனவே உங்களின் செயல் குடிப்பெருமையைக் காப்பதாக இல்லை;
மாறாக இது உங்களைப் போன்ற பிற மன்னர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.
இதைப் பாடலாக்குகிறார் கோவூர் கிழார்.

நல்ல அறிவுரைகள் அரசர்களின் காதில் ஏறவில்லை.
ஆனால் புறநானூறில் ஏறி சரித்திரத்தைக் கூறுகிறது.

அதுமட்டுமல்ல.
நலங்கிள்ளியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து இளந்தத்தன் என்றொரு புலவன் நெடுங்கிள்ளியின் கோட்டைக்குள் வந்து விட்டான். நெடுங்கிள்ளி இந்தப்புலவரை ஒற்றன் என்று கருதிக்  கொல்ல ஆணையிட்டான்.

கோவூர் கிழார் துடி துடித்து விட்டார்.
நண்பன் இளந்தத்தன் மாபெரும் கவிஞன்!
அவன் மீது இப்படி ஒரு போலிக் குற்றமா?
கடிதக் கவிதை ஒன்று தீட்டி நெடுங்கிள்ளிக்கு அனுப்பினார்.

அதில் மன்னரின் பெருமை பேசுவதைக் காட்டிலும் புலவர்களின் இயல்பையும் பெருமையையுமே பெரிதும் பேசியிருக்கிறார்.

அவர் சொன்னது:
புலவர்கள் பெற்ற செல்வத்திற்காக மகிழ்வார்கள்;
அதை சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்வார்கள்.
பெற்ற செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளாமல்.. முகம் வாடாமல்.. மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
அப்படிப்பட்ட இவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்

இப்படி எழுதினார்.

கணைகளை விட கவிதைகளின் தாக்கம் அதிகம்!
நெடுங்கிள்ளி இளந்தத்தனை உடனே விடுதலை செய்தான்.

கோவூர் கிழார் மேலும் பார்த்தார்.
சரி. போரை நிறுத்தத்   தான் கூறிய அறிவுரையை இந்த மன்னர்கள் கேட்கவில்லை.
அப்படியானால் அவர்கள் வீரத்துடன் போர் புரியட்டுமே?

எதற்காக நெடுங்கிள்ளி பயந்து கொண்டு கோட்டையில் பதுங்கி உள்ளான்?

கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று கவி பாடினார்:

“நெடுங்கிள்ளி!

முற்றுகையிடப்பட்ட உறையூர் கோட்டையின் நிலைமையை அறிவாயாக.
குழந்தைகள் பாலில்லாமல் கதறுகின்றனர்.
மகளிர் பூவற்ற வெறுந் தலையை முடிந்து கொள்கிறார்கள்.
மக்கள் நீரும் சோறும் இன்றி வருந்தும் ஒலி கேட்கிறது.
இந்நிலையில் இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல்.
பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே!
நீ அறவழியில் வாழ விரும்பினால்:
நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு;
நீ மறவழியில் வாழ விரும்பினால்:
நலங்கிள்ளியுடன் போர் செய்.
வாளாவிருப்பது தவறு! உன் வாளை உயர்த்து!
இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது”

இப்படி ஒரு மன்னன் முன்பு கூற எத்தனை துணிச்சல் வேண்டும்!

ஆனால்,
கணைகளை விட கவிதைகளின் தாக்கம் அதிகம்!

நெடுங்கிள்ளி கோட்டையை விட்டு வெளி வந்து நலந்கிள்ளியுடன் போரிட்டான்.
காரியாறு என்ற இடத்தில நடந்த கடும் போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டான்.

சேர சோழ பாண்டியர்கள் இவ்வாறு சண்டையிட்டதால்தானோ ஒரு சில நூற்றாண்டுகளில் தமிழகமே இருண்ட காலத்தில் தள்ளப்பட்டது.

சரித்திர வெறியர்கள் மேலே படியுங்கள்!

மற்றவர் அடுத்த இதழில் முற்காலப் பாண்டியர்களுக்காகக் காத்திருங்கள்!

சோழ மன்னர்களைப் பற்றி ஒரு சில வரிகள் கொண்ட தொகுப்பு:

 

இளஞ்சேட் சென்னி (உருவப் பல்தேர்)

இவன் கரிகாற் பெருவளத்தானின் தந்தை.
தேர் உலா விரும்பி என்று பாடப்பட்டவன்.
பெருங்குன்றூர் கிழார் இவனை “வான்தோயு நீள்குடை வயமான் சென்னி” என்று குறிப்பிட்டு அவனது கொடையைப் போற்றுகிறார்.

இளஞ்சேட் சென்னி (செருப்பாழி எறிந்தவன்)

இவன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப்பெயருடன் குறிப்பிடப்படுகிறான். செருப்பாழி என்பது சேரமன்னனின் ஊர். இவன் இந்த ஊரைக் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இந்த வெற்றியைப் போர்க்களத்திற்கே சென்று பாடி போர்யானைகளைப் பரிசாகத் தரும்படி ஒருபாடலில் வேண்டுகிறார். மற்றொரு பாடலில் இவன் தந்த அணிகலன்களை எந்த அணியை எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் தம் உடலில் ஆங்காங்கே அணிந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார். (ஒவ்வொருவருக்கும் எப்படியெல்லாம் பிரச்சினை வருது?)

இளஞ்சேட் சென்னி (பாமுள்ளூர் எறிந்தவன்)

இவன் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப் பெயர்களுடன் குறிப்பிடப்படுகிறான். பாடல் இவனை ‘நெய்தலங்கானல் நெடியோன்’ எனக் குறிப்பிடுகிறது. பாமுள்ளூர் சேரமன்னனின் ஊர். இதனை இவன் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவனை இரண்டு பாடல்களில் போற்றியுள்ளார்.  ஒரு பாடலில் பகைவர் பணிந்தால் தண்டிக்காதே என்று அவனை அறிவுறுத்துகிறார். மற்றொரு பாடலில் பகைவரின் கோட்டையை வெல்வதற்கு முன்பே  அக் கோட்டையைத் தன் பாணர்களுக்கு இவன் வழங்கிவிடுவான் என்கிறார்.

கரிகாற் பெருவளத்தான்

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன். வெண்ணிப் போரில் பெருஞ்சேரலாதனையும், பாண்டியனையும், 11 வேளிரையும் வென்றான். வாகைப் பறந்தலைப் போரில் 9 மன்னரை வென்றான்

பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களின் பாட்டுடைத் தலைவன்.

மனைவி நாங்கூர் வேள் மகள். முதுமைக் கோலத்தில் தோன்றி அரசவையில் தீர்ப்பு வழங்கினான் என்றும், கருவூரில் இருந்தபோது கழுமலத்துப் பட்டத்து யானை இவனுக்கு மாலை போட்டு அரசன் எனக் காட்டியது என்றும், இளமைக் காலத்தில் காலில் தீப் பட்டு உயிர் பிழைத்தான் என்றும், இரும்பிடர்த் தலையார் இவனது தாய்மாமன் என்றும் பிற்காலப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களின் பாட்டுடைத் தலைவன். பட்டினப் பாலை நூலாகத் தன்னைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதிநோறாயிரம் பொன் பரிசாக வழங்கினான். (அம்மாடி! எம்புட்டு பணம்). இவன் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்துகொண்டு அரசாட்சி செய்தான்.  ஒருகாலத்தில் இமயமலை வரை சென்று இடைப்பட்ட அரசர்களை வென்றான்.

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை!

sp3

 

கிள்ளி வளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்)

பிட்டையை வென்று கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். சேரனின் வஞ்சிமுற்றத்தை வென்று குடநாட்டைக் கைப்பற்றினான். கோவூர் கிழார் இவனை போர்க்களத்தில் கண்டு பாடி களிறுகளைப் பரிசாகப் பெற்றார்.

கிள்ளி வளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று விளக்கமாக வேறுபடுத்திக் காட்டப்படும் இவன் ‘பசும்பூட் கிள்ளிவளவன்’ ‘பெரும்பூண் வளவன்’ எனப் பாடல்களுக்குள் குறிப்பிடப்படுகிறான். இச் சோழன் உறையூர் அரசன். இவனை 10 புலவர்கள் பாடியுள்ளனர். ஆலத்தூர் கிழார்,ஆவூர் மூலங்கிழார் , இடைக்காடனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், கோவூர் கிழார் ,நல்லிறையனார் ,வெள்ளைக்குடி நாகனார் என்னும் எழுவரும் இவனது போராற்றலையும், வள்ளல் தன்மையையும் போற்றிப் பாடியுள்ளனர். மாறோக்கத்து நப்பசலையார் இவனது கொடைச் சிறப்பையும், இறப்பையும் பாடியுள்ளார். ஆடுதுறை மாசாத்தனார்,ஐயூர் முடவனார் ஆகிய இருவரும் இவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடியுள்ளனர். இவன் கருவூரை அடுத்த ஆன்பொருநை ஆற்றுமணலில் தன் படையை நிறுத்தி, முரசு முழக்கிச் சேரனைப் போருக்கு அழைத்தான். சேரன் கோட்டையை விட்டு வெளிவரவில்லை. இப்படிப்பட்ட சேரனோடு போரிடுவதற்கு வளவன் நாணவேண்டும் என்று ஒரு புலவர் அறிவுரை கூறினார். இவன் பாணர்க்குப் பொன்-தாமரை விருதும், தேரும் வழங்குவான்.நினைத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் என இவனைப் போற்றும் ஒரு புலவர் இன்சொல் பேசி எளிமையாக வாழவேண்டும் என அறிவுறுத்துகிறார். இவன் மலையமான் மக்களை யானைக்காலால் மிதிக்கவைக்க முயன்றபோது, அழும் குழந்தை யானையைக் கண்டு அழுகையை நிறுத்திக்கொண்டு வேடிக்கை பார்த்த்தைச் சுட்டிக் காட்டி குழந்தையைக் கொல்வதை ஒரு புலவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

கோப்பெருஞ்சோழன்

கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். புலவனாகவும் விளங்கினான். சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறை இவனை வென்றான். தன் மக்கள் இருவர் மீது போருக்கு எழுந்தான். புலவர் ஒருவர் அறிவுரையைக் கேட்டு மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். (வடக்கிருந்து உயிர் விட அந்நாளில் பெருங்கூட்டம் போலும்!)  கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனார், பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவனுடன் வடக்கிருந்தவர் பலர். பிசிராந்தையார் வருவார், அவர் வடக்கிருக்க இடம் ஒதுக்குக என்றான்.  தன்னுடன் வடக்கிருக்கத் துணிந்த பொத்தியாரை மகன் பிறந்த பின் வருக என்றான். அவ்வாறே அவர் வந்தபோது,அவருக்குத் தன் கல்லறையில் இடம் கொடுத்தான். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு நட்பிற்கு இலக்கணம்.

நலங்கிள்ளி சேட்சென்னி

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்னும் விளக்கப்பெயரைக் கொண்ட இவன் சிறந்த வீரன். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் இவனை ‘இயல்தேர்ச் சென்னி’ என்று குறிப்பிடுகிறார். இவனது பெயரிலுள்ள ‘நலங்கிள்ளி’ என்பதை இவனது தந்தையின் பெயராகக் கொள்வது தமிழ் மரபு.

நலங்கிள்ளி (சோழன்)

சோழன் நலங்கிள்ளி ஒரு புலவனாகவும் விளங்கினான். சேட்சென்னி நலங்கிள்ளி புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்கள் இவனுக்கு உண்டு. ஆலத்தூர் கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவனது போராற்றலைக் கண்டு வடபுலத்து அரசர்கள் நடுங்கினர். பாண்டிய நாட்டு ‘ஏழில்’ அரண்-கதவில் தன் புலிக்கொடியைப் பொறித்தான். தன் தாயத்தாரோடு பகைமை பூண்டு நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டைக்குள்ளும் உறையூர்க் கோட்டைக்குள்ளும்  அடைத்துக்கொண்டிருந்தபோது முற்றுகையிட்டுத் தாக்கினான். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லை மதித்துப் போர்த்தொழிலைக் கைவிட்டு அறச் செயல்களைச் செய்தான். தாய் குழந்தைக்குப் பால் சுரப்பது போலப் பாணர்களுக்குப் பரிசில் வழங்குவான்.பெருங்கலம் என்னும் கப்பல் செல்வ-வளம் சேர்க்கும் புகார்த் துறைக்கு அரசன். வங்கக் கப்பல்களை வேள்வித் தூணில் கட்டி நிறுத்தி வைக்கும் நாட்டை உடையவன்.

முன்பே இவன் கதை படித்தோமே!

நெடுங்கிள்ளி

காரியாற்றுத் துஞ்சியவன்

முன்பே இவன் கதை படித்திருக்கிறோம்!

பெருந் திருமா வளவன்

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். திருமாவளவன் என்னும் பெயர் கரிகாலனைக் குறிக்கும். இவன் பெருந்திருமாவளவன். உறையூர் மருத்துவன் தாமோதரனார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவனுடைய நண்பன்.

பெருநற் கிள்ளி (இராசசூயம் வேட்டவன்)

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பது இவனைச் சுட்டும் பெயர். உலோச்சனார், ஔவையார் , பாண்டரங்கனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் போரில் வல்லவன். தேர்வண் மலையன் என்னும் குறுநில மன்னனின் துணையுடன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டு வென்றவன். சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருபெரு வேந்தர்களின் நண்பன். இவனது இராசசூயத்தைப் புறநானூற்றுப் பாடல் “அவி உணவினோர் புறம் காப்ப அறநெஞ்சத்தோன் வாழ” என்னும் தொடரால் குறிப்பிடுகிறது

பெருநற் கிள்ளி (போர்வைக் கோ)

சோழன்   போர்வைக் கோப் பெருநற்கிள்ளி என இவன் சுட்டப்படுகிறான். போர்வை என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்டவன். சாத்தந்தையார் , பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் உறையூர் அரசன் தித்தன் என்பவனின் மகன் எனக் கொள்ளப்படுகிறான். முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்று வீழ்த்தினான். தந்தை தித்தன் இவனுக்கு ஆட்சி வழங்காதபோது புல்லரிசி உணவை மட்டுமே உண்டு வாழ்ந்துவந்தான் (இப்படி ஒரு உண்ணா விரதமா?)

பெருநற் கிள்ளி (முடித்தலைக் கோ)

சோழன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி என்னும் பெயரால் இவன் சுட்டப்படுகிறான். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு பகைமை கொண்டிருந்தான். இவன் கருவூரின்மீது படையெடுத்துச் சென்றபோது இவன் ஏறியிருந்த பட்டத்து யானை மதம் பிடித்து ஓடியது. சேரனுடன் அவனது வேண்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த புலவர் முடமோசியார் சோழன் துன்பமின்றி மீளவேண்டும் என வாழ்த்தினார். சேரன் இரும்பொறை அவனைக் காப்பாற்றினான்.

நன்றி: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D

குவிகம் வாசகர்களே! கடைசி வரை இந்த இதழைப் படித்தவர்கள் சரித்திரத்தில் பேரார்வம் கொண்டவராகத் தான் இருக்க முடியும்!
அதே ஆர்வம் தான் என்னை இச் சரித்திரம் எழுதத் தூண்டுகிறது.

சரித்திரம் மேலும் பேசட்டும்!

 

கண்களை நம்பாதே – ஈஸ்வர்

Image result for eateries near besant nagar beach

சரவணனுக்கு நம்ப முடியவில்லை. இந்த வயதிலேயே வாழ்க்கை அவனுக்கு இவ்வளவு பெரிய ஆச்சரியத்தை அளிக்குமா? கற்பனைகூட செய்ய முடியவில்லை . இதே பணியாள் சீருடையில் இந்த ஃபுட் ஹவுஸில் வெளிவாயில்  கதவைத் திறந்துபோய் கடற்கரைக் காற்றை ரசிக்கவேண்டும் போலிருந்தது. அவன் முதலாளி இத்தாலிக்காரனா பிரஞ்சுக்காரனா என்று கூட சரவணனுக்குத் தெரியாது. ஆனால் இவனுடைய பட்லர் இங்கிலீஷைக் கேலி செய்யாமல் அவனும் ஐரோப்பிய வாடையில் தமிழில் பேசுவான். வேலையில்  படு கறாராக இருந்தாலும் , இளகிய மனசுக்காரன்தான். முதலாளி கடைசியாகச் சொன்னதைக் கேட்டபிறகு , தன் எண்ணத்தை வெளிப்படுத்த , முதலாளியும் கோபிக்காமல் சிரித்தவாறே ‘சரி ‘ என்கின்றான். சீருடையிலேயே  வெளியே வருகிறான் சரவணன்.

மே மாத சூடு பின் மாலைக் கடற்காற்றிலும் தெரிந்தது. சௌமியிடம் எப்படி அவனால் இப்படிக் கேட்க முடிந்தது?  ஆண் என்ற குருட்டுத் தைரியமா? அவள் செருப்பைக் கழட்டியிருந்தால் கூட, வார இறுதிக் கடற்கரைக் கூட்டம் முழுக்க அவள் பின்னால்தான் நின்றிருக்கும். அதைக்கூட அவனால் யோசிக்க முடியாமல் போயிருந்தது.

எதிரே சாலையின் வலப்பக்க ஒர முடிவில் இருந்த மாதாகோவில் மணியோசை இப்போது ஏனோ கேட்கிறது. இதுநாள் வரை அவன் இதுபோல் வெளியே வந்து நின்றதே கிடையாது. மணி அடிக்கும் நேரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது .

நாளைக்கு அவன் அம்மா ஆற்காடு கிராமத்திலிருந்து இந்நேரம் வந்திருப்பாள். அவன் வேலை பார்க்கும் இதே  ஃபுட் ஹவுஸில் , அவனுக்குப் பிடித்த, சௌமியாவுக்குப் பிடித்த, இதே ஃபுட் ஹவுஸின் அந்த மூலை ஓரத்து இருக்கையில் தயங்கியவாறு உட்கார்ந்திருப்பாள். நீளம், பச்சை, ஊதா என்று தினமும் அவன் யாருக்காவது ஆர்டர் எடுத்துக் கொண்டு  வந்து  வைக்கும் மெலிதான உயர்ந்த வண்ணக் கோப்பையில் இருக்கும் ஏதாவது ஒரு பழ ரசத்தைப் பருகிக் கொண்டிருப்பாள் . எதிரே மேஜையில்,  அவள் இதுவரை சுவைத்து அறிந்திராத ஏதாவது ஓர் ஐரோப்பிய உணவுவகை,  பஃப்பாகவோ, பீட்ஸாவாகவோ , சிக்கன் ஃப்ரையாகவோ , நன்கு அலங்கரிக்கப்பட்டுக் காகித அட்டைப்பெட்டி தட்டுகளாக, துடைத்துக் கொள்ள சௌகரியமாக ஒரு சிறு முக்கோண கண்ணாடி டிரேயில்  டிஷ்யு பேப்பராக பக்கத்தில் இருக்கும். அவனுக்குத் தெரிந்து அவன் அம்மா வாழ்க்கையில் இதேபோன்ற உணவகத்தில் காலடி எடுத்துக்கூட வைத்திருக்க மாட்டாள். நல்ல சேலை உடுத்திக்கொண்டு , தலையை நன்றாக வகிடு எடுத்து சீவி வாரி , பளிச்சென்று வரவேண்டும் என்று பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறான். சௌமியைப் பார்த்தால் அம்மா அரண்டு போய்விடலாம். அவர்கள் இருவரையும் அந்த ஃபுட் ஹவுஸில் எதிரும் புதிருமாகப் பார்க்கப் போகும் யாரும், என்ன வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளலாம்.

Image result for sitting in a beach restaurant in indiaவாசலில் நடைபாதை தாண்டி ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் கிறக்கத்துடன் சாய்ந்தவாறு இருக்கும் இளஞ்ஜோடிகள் . இடுப்பை, தோளைத்  தழுவியவாறு மெல்லப் பறக்கும் நிலையில் சில இளம் காதலர்கள். அந்தக் கடற்கரைக்கு அவன் உணவகத்தில் வரும் பெண்கள் மீது சரவணனுக்கு ஒருவகை மோகம் உண்டு. ஆனால் நல்ல எண்ணம் இருந்ததே இல்லை. பெரும்பாலான பெண்கள் அவன் கற்பனைக்கு எட்டாத அழகுப் பதுமைகள்தான் என்பதை அவனால் மறுக்க முடியாது. இறுக்கமான பனியன்களில், அதைவிட இறுக்கமான ஜீன்ஸுகளில் , உடலின் சகல வளைவுகளும் அசைந்து குலுங்க, அவர்களின் ஜில்லென்ற சிரிப்பொலி ஓசை அதைவிட மயக்கும், இந்தச் சூழ்நிலைக் கைதிகளாகவே அங்குள்ள உணவகங்களில் , கிரெடிட் கார்டுகளை இளைக்கவைத்து, ஃபுட்ஹவுஸ் முதலாளி போன்றவர்களைக் கொழிக்க வைக்க, ஒரு பெருங்கூட்டமே அங்கு ஊர்ந்து வருவதும், அதனாலேயே அவனைப்  போன்ற சாதாரணர்களுக்கு அங்கு வேலைகள் கிடைத்துக்கொண்டிருந்ததும், அவனுக்கு நன்கு தெரியும்.

அவன் பிறந்து வளர்ந்தது ஆற்காடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில். கல்லூரி இறுதிப் படிப்பு வரை அருகில் இருந்த ஒரு சிற்றூர் அரசினர் கல்லூரியில். அங்கெல்லாம் இதேபோன்ற பெண்களைப் பார்ப்பது சற்று அரிதே. ஆனால் இங்கு வேலையில் சேர்ந்த பிறகு இதைப்போன்ற   பெண்கள்தான் இந்த உலகமே, என்ற அளவிற்குத் திகட்டியே போயிருந்தது.

Image result for eateries near besant nagar beach

இப்படித்தான் கடந்த பல சனி ,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவறாமல் ,அவள், சௌமி என்ற சௌம்யாவைப்  பார்க்க நேரிட்டது. சொல்லி வைத்தாற்போல் அவன் ஆர்டர் எடுக்கும் மேசைகளில், குறிப்பாக அந்த மூலை  ஓரத்து இருக்கையில்தான் வந்து சௌம்யா அமர்வாள். ஆனால் இதுவரை அவன் பார்த்த பெண்கள், பெரும்பாலும் ஏதோ ஓர் ஆணுடன் மாத்திரந்தான் அங்கு வருவதை அவன் கண்டிருந்தான். ஆனால், இந்தப்பெண்ணோ , வந்த எல்லா நாட்களிலும் வேறுவேறு ஆண்களுடனோ, அவர்களுடன் வரும் பெண்களுடனோ மாத்திரமே அங்கு வருவதை அவன் கண்டான். தவிரவும், சிரிக்கச் சிரிக்க அவர்களுடன் பேசுவது, அவர்களுக்காக அவளே ஆர்டர் செய்வது, நானூறு ஐந்நூறு என்று பில்லுக்குச் செலவழிப்பது, பின்பு போகும்பொழுது அவர்களிடமிருந்து பெரும் பணமோ , காசோலையோ பெற்றுக்கொண்டு, கைப்பையில் அடக்கிக் கொள்வது , மற்றும் லேப்டாப்பில் அவர்கள் விலாசம் மற்றும் தொடர்பு எண்களைப் பதிவு செய்து கொள்வது என்றெல்லாம் அவன் பார்க்க நேரிட,  அதிச்சியாகவும் இருந்தது. உடைகள் அணியும் விதத்திலும் அவள் யாருக்கும் குறைந்தவளாகத் தோன்றவில்லை. ஏதோ இரண்டே முறைதான் அவளைச்  சல்வார் கம்மீசில் பார்த்ததாகச் சரவணனுக்கு ஞாபகம். பார்க்க மிகவும் நாகரீகமாக, மிக நளினமான உடல்வாகுடன் இருக்கும் அந்த அழகிய பெண்ணிற்குள் கண்ட கண்ட ஆடவர்களையும் சிரித்து வளைத்துப்போட்டு, பெரும் பணம் கறக்கும் ஒரு மோசமான ……………… அந்தத் தொழில் செய்யும் பெண் இருக்கிறாளோ என்றுகூட அவன் நினைக்க நேரிட்டது.  

இந்த சூழ்நிலையில் அவள் நண்பர்களுக்காக ‘ஆர்டர்’ கொடுத்து, லேப்டாப்பைத் திறந்து ஏதோ தட்டியவாறே  இருக்க, அவள் மேஜையில் அவள் கேட்டவற்றை அழகாக சரவணன்  அடுக்கியவாறு இருக்க, அவன் பார்க்க நேரிட்டது அவள் பேஸ்புக் பக்கம். மென்மையாக சிரித்துக்கொண்டு சௌமி என்கின்ற சௌம்யா நிற்கிறாள். Image result for a girl and a boy in a car with a laptopகீழே 18 ஃபான்டில் ,CALL THIS GIRL என்ற வாசகம். கண்கள் காணும் அந்த வாசகம் ஆழமாக, வேதனையுடன் அவனுள் இறங்குகிறது. அவன் பணிபுரியும் ஃபுட் ஹவுஸ் மாதிரி , உணவகங்கள் , அவர்கள் அறியாமல், இதெற்கெல்லாம்கூட பயன்படுத்தப் படுகின்றனவோ? CALL GIRL என்ற வார்த்தை அவன் அரசுக் கல்லூரி ஆங்கில அறிவுக்கு எட்டாத வார்த்தை இல்லை. ரேட்டுத் தான் தெரியவேண்டுமோ?

அவன் பிறந்து வளர்ந்த ஆற்காடு கிராமத்தில் , அவன் நினைத்தாலும் சிலரின் கீழ் பணியில் அமர, அவனால் முடியாது. அங்கு ஊர்க்கட்டுப்பாடு அப்படி. ஆனால் எந்த ஊர் என்றே தெரியாத இந்த முதலாளி உணவகத்தில் அவன் யார் யார்யாருக்கெல்லாமோ, ஆர்டர் எடுப்பதுடன், சப்ளை செய்யவும் வேண்டியிருக்கிறது.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீன் பிடிப்பவளாக இருக்கிறாள் இந்தப் பெண். நானூறு ஐநூறு ரூபாய்களை அவன் தட்டில் வைத்துவிட்டு  , அந்த ஃபுட் ஹவுஸில் அமர்ந்தாவாறே நாற்பதினாயிரம், ஐம்பதினாயிரம் என்று இளைஞர்களிடம் கறக்கிறாள். தெரிந்து கொள்ளவேண்டும்.  என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாடு எப்படிப் போனால் எனக்கு என்ன என்று சரவணால் இருந்துவிட முடியாது.

Image result for a boy and girl in eateries near besant nagar beachஇப்படித்தான், தனக்கு ஓய்வான ஒரு நாளில் சரவணன் அவள் கார் அருகே அவளுக்காகக் காத்திருந்தான். எல்லாம் முடித்துக்கொண்டு  கார் கதவைத் திறந்து உள்ளே ஏறப்போன அவள் முன் வந்து நின்றான். அவள் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.

“என்ன , இன்னிக்கு வேலைக்கு ஜூட்டா?”

:அப்படியில்லை. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்”

“என்னிடமா? “ – ஆச்சரியம் கலந்திருந்த பார்வை கூட அழகாக இருந்தது.

“சரி, கார்லேயே உக்காந்து பேசுவோம்.. எனக்கு அதுதான் சௌகரியம்”

குளிர்சாதனத்தை இயக்கியவாறே, இடக்கைப் பக்கக் கதவைத் திறந்தாள்.

தயங்கியவாறே அவன் ஏறி அமர ,

“என்ன வேணும்?  வேறு ஏதாவது வேலை..?”

“இந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேன்,  உங்கள் லேப்டாப்பில உங்களைப் பாக்கிறவரை”

“மை காட், அடுத்தவங்க லேப்டாப்பைக்கூடப் பார்ப்பாங்களா?”

“ வேணும்னு பாக்கலை. ஆர்டரை டேபுள்ல வைக்கரப்போ , நீங்க லேப்டாப்பைத்  தொறந்து வைச்சிருந்தீங்க .பேஸ்புக் , உங்க பக்கம் கண்ணுல பட்டிடுச்சு. சங்கடமாப் போச்சு. அதான் “

” அதுல என்ன சங்கடம்?” – லேப் டாப்பைத் திறந்தவாறே கேட்டாள்.

பேஸ்புக் .. அவள் பக்கம்.. அவள் புகைப்படம்.. சௌமி என்கின்ற சௌம்யா. CALL THIS GIRL .. எழுத்துக்கள்.

“நல்லாத்தானே இருக்கேன்?”  

“ ஆமாங்க நல்லாவே இருக்கீங்க. இதே போட்டோதான். சமூக வலைத் தலங்கள்ல உங்களை மாதிரி பொண்ணுங்க படம் போட்டுக்கறதே தப்பு. அதுவும் உங்க புரபஷனோட CALL GIRL னு வேறே போட்டிருக்கீங்க.. தப்பில்ல?.. வாழ்க்கைல அப்படி என்னங்க கஷ்டம் உங்களுக்கு? நல்லதே இல்லீங்க “

நிதானமாக அவனைப்  பார்க்கிறாள். சிரிக்கிறாள்.

“இங்கிலீஷ்ல இப்படியெல்லாம்கூட சங்கடம் வரும்னு இதுவரை எனக்கும் தோணலை ..” நிறுத்துகிறாள். . பிறகு, இன்னும் ஓர் இருபத்தைந்தாயிரம் கலெக்ட் பண்ணணும், சரவணா. சனிக்கிழமைக்குள்ள முடிக்கணும், நீதான் கலெக்ட் பண்ணிக்குடேன்.  CALL THIS GIRL … காணாமப் போயிடுவா.”

“என்ன சொல்றீங்க?”

“முழுசாப் படிடா, மண்டு “ லேப்டாப்பை அவன் பக்கம் திருப்புகிறாள். படிக்கிறாள். வரிசையாக ஏதேதோ பெயர்கள். விலாசங்கள். தொலை தொடர்பு எண்கள் . கோடிட்டு பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை எண்கள்.

CHILDREN  CANCER HELPLINE . Total Funds Collected so far … Rs 9,75,000/

“எல்லாருமே புதுப்புது நண்பர்கள். ஒவ்வொரு நாளும் ஒருத்தர் மூலம் ரெண்டு பேராவது அறிமுகம் ஆவாங்க. உங்க  ஃபுட் ஹவுஸில எனக்கு செலவு நானூறோ ஐநூறோதான் . ஆனால் இந்த Cancer Helplineக்கு வரவு லட்சத்தில. ஏதோ பீச்சில ஜாலியா நேரத்தை  வீணடிக்கற  கூட்டம்னு நீ இவங்களை நினைச்சியா? வர்ற ஞாயித்துக்கிழமை மாதாகோயில்லேர்ந்து பல்கலைக்கழகம் வரை மாரத்தான் ஓட்டத்தில கலந்துக்கறவங்க  இவங்க. ஏன், இந்த இருபத்தைந்து அஞ்சாயிரம் நீயே கலெக்ட் பண்ணிக்குடு. பேஸ்புக்கில நீயும் என் ஃபிரண்ட் ஆயிடலாம். என் நண்பர்கள் உனக்கும்நண்பர்கள் ஆயிடுவாங்க. என் ஃபிரண்ட் நீ, சொல்றதைக் கேட்டு CALL THIS GIRL காணாமப் போயிடுவா. என்னால யார் மனசும் வருத்தப்படக்கூடாது. அதுதான் எனக்கு வேணும். ஜொள்ளு விடாம, என்கூட மாரத்தான்ல ஓட வர்றியா? இருபத்தஞ்சு தான் டார்கெட். முடிச்சுக் கொடு. உன்கூட கையைப்  பிடிச்சுக்கிட்டு, ஒரு கிலோமீட்டராவது ஓட நான் தயார், ஃப்ரண்டா. வர்றியா? “

ஆடிப்போனான் சரவணன். அன்றிரவே ஆற்காடு கிராம அம்மாவிடம் பேச நேரிடுகையில் இதையும் சொல்கிறான். அம்மா இன்னும் அதிர்ச்சி தருகிறாள்.

“ சரவணா! .. நல்ல காரியம் யார் மூலமா நடந்தா என்னப்பா? அந்தப் பொண்ணுகிட்டே சொல்லு. நம்ம கிராமத்து சனங்க லேசுப்பட்டவங்க இல்லை. சரவணா, சனிக்கிழமை அதே டேபுள்ல அந்தப் பொண்ணுகூட நான் வந்து உக்கார்றேன். நீ ஆர்டர் எடு. பில்லு  நான் கட்டறேன். அந்தப் பொண்ணு லட்சியம் நிறைவேறிடிச்சுன்னு தைரியமா சொல்லு. நம்ம ஊர் சாதி சனம் சார்பா நீயே அவ கூட ஓடு. ஆனால் ஒண்ணு,  இந்தக் கையைப் பிடிச்சு ஓடறதெல்லாம் வேணாம். நம்ம சனம் ஏத்துக்காது. கைகுடு. நல்ல காரியத்துக்கு நண்பனா  கைகுடு.  முடிஞ்சா நானே ஓடப்பாக்கறேன். டேபுளை மாத்திரம் இப்பவே ரிசர்வ் பண்ணிடு. சனிக்கிழமை பொட்டியோட வர்றேன்”

சரவணன் அரைகுறை ஆங்கிலத்தில் முதலாளியிடம் எல்லாம் சொல்லியிருந்தான். கேட்டு சிரிக்கும் அவன் ஐரோப்பியத் தமிழில் சொல்கிறான்.

“ஜமாய், சரவணா! ஆயா வரட்டும். நீ ஆர்டர் எடு. பில்லு பணம் என் கான்ட்ரிபூஷன். நல்ல காரியம். என்  ஃபுட் ஹவுஸுக்குப் பெருமை. வேற என்ன வேணும்? விடாதே… நீ ஓடு சரவணா! “

கடலையே பார்க்கிறான் சரவணன். காற்று இப்போழுது ஜில்லென்று வீச ஆரம்பிக்கிறது.

தோட்டதிகாரம் – எஸ் எஸ்

Image result for pictures of kannaki

கோகுலன் சென்னையில் ஒரு பெரிய நகைக்கடை வணிகரின் மகன். அழகன். கண்மணி , அவளும் ஒரு பெரிய வைர வியாபாரியின் மகள். அழகி.  இருவர் திருமணமும் மேற்படி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு  ஏ வி எம்  ராஜேஸ்வரியில் வழக்கமான ஆடம்பரத்துடன் கிட்டத்தட்ட மூன்று ‘சி’ செலவில் தாம் தூம் என்று நடைபெற்றது. ரிசப்ஷன் போது கண்மணி அணிந்திருந்த வைரத்தோடு மட்டும் ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று வந்திருந்த மற்ற நகைக் கடைக்கார்கள் பேசிக்கொண்டார்கள். சிவப்பை உமிழும் அந்தத் தோடு  டால் அடித்தது.

முதல் இரவு அடையார் பார்க்கில். கண்ணே, மணியே, தங்கமே, முத்தே, வைரமே  என்று பாடிக்கொண்டார்கள் இரு நகைக்கடை  இளஞ்சிட்டுக்கள் .இருவர் கண்களிலும்  மிதந்த காதல் உடலெங்கும் பரவியது.

மறுநாள்  இருவரும் தேன் நிலவிற்கு தாய்லாந்தின் பட்டயாவிற்குப் போனார்கள். மரக் கட்டைகளுக்கும் காதல் வெறியைப் பற்றவைக்கும் அந்த அழகுப் பிரதேசத்தில் இவர்கள் இருவரும் சிறகடித்துப் பறந்தார்கள்.
இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் கும்பலின் முக்கியமானவர்கள் தங்கியிருந்தார்கள். ஹீரோ, ஹீரோயின் , தயாரிப்பாளர் மூவர் மட்டும் இங்கே. மற்றவர்களெல்லாம் சுமாரான லாட்ஜில் அடைக்கப் பட்டிருந்தார்கள். ஹீரோயின் ஸாத்வி.
Image result for kissable lipsதமிழ்நாட்டின் சமீபத்திய கவர்ச்சிப் புயல். ஸ்ரீதேவிக்குக் கண் – இலியானாவுக்கு இடுப்பு – ரம்பாவுக்கு.. நமீதாவுக்கு .. என்றெல்லாம் இருக்கும் தமிழ் சினிமா  வரிசையில் ஸாத்வியின் உதடுகள் -இதழ்கள் மிகவும்  பிரபலம்.அவள்,  அவற்றை மட்டும் தனியாக இன்ஷ்யூர் செய்திருப்பதாக வதந்தி வேறு. வைரமுத்து வேறு அவள் இதழுக்காக ஒரு பாட்டு எழுதி பிலிம்ஃபேர் விருது வாங்கினார் என்றும் செய்தி அடிபட்டது.

இரவு பத்து மணிக்கு கோகுலனும் கண்மணியும் வெளியே சுற்றிவிட்டு தங்கள் 44 வது மாடியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட  தனி சூட்டுக்கு லிப்டில் போகும் போது, லிப்டில் தனியாக ஸாத்வி வந்தாள்.  கண்மணியைத்  தமிழ் என்று அறிந்ததும்  ஸாத்வி அவளைக் கட்டிக் கொண்டாள். கோகுலனுக்குக் கை கொடுத்தாள். பத்தாயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. ஆனால் ஸாத்வியின்  கண்களில் கண்ணீர். தயாரிப்பாளர் , ஹீரோ இருவரும்  அவளைத் தொந்தரவு செய்கிறார்கள் . இன்று ஒரு இரவு தப்பித்துவிட்டால் நாளை இந்தியா போய்விடலாம். எங்கே ஒளிவது?

கோகுலனும் கண்மணியும் ஸாத்வியை ரகசியமாக முக்காடு போட்டுத் தங்கள் தனி சூட்டுக்கு  அழைத்துச் சென்றார்கள்.  அவர்கள் படுக்கை அறை அலங்கரித்திருந்த விதத்தைப் பார்த்து ஸாத்விக்கே ஒரு மாதிரி இருந்தது.  அவள் பக்கத்தில் இருந்த சிறு அறையில் புகுந்து கொண்டாள். ஹீரோவுடன் இருப்பதாக தயாரிப்பாளரிடமும் , தயாரிப்பாளருடன் இருப்பதாக ஹீரோவிடமும் போன் செய்துவிட்டு சுகமாகத் தூங்கினாள் ஸாத்வி. ஆனால் அவர்கள் இருவரும் ஸாத்வியை  நினைத்துக் கொண்டு  தூங்க முடியாமல் துடித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல. கோகுலனும் கண்மணியும்   கூட அன்று வேறு காரணமாகத்  தூங்க முடியவில்லை.  ஸாத்வியின் அழகு இருவரையும் பாதித்திருந்தது . என்னதான் தனி அறையாக இருந்தாலும் இன்னொரு பெண் பக்கத்தில் இருக்கும் போது எப்படி ? இது கண்மணியின் ஆசையை அணைத்தது. கவர்ச்சிப் புயல்  உடன் தேனிலவு … நினைக்கும் போதே கோகுலனுக்கு உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. பக்கத்தில் இருக்கும் கண்மணியை மறந்தே போனான். அவனும் தூங்கவில்லை.

மறுநாள் காலை ஸாத்வி தன் கவர்ச்சி இதழால் கண்மணிக்கு முத்தம் கொடுத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு புறப்பட்டாள். போவதற்கு முன் கோகுலனின் கையைப் பிடித்துக்கொண்டு அவனிடமும் மன்னிப்புக் கேட்கத் தவறவில்லை. அவள் கையை விடுவிக்க அவனுக்கு மனசே இல்லை.

அடுத்த வாரம் அவர்கள் சென்னை திரும்பினார்கள். ஸாத்வியின் கவர்ச்சி உதடுகள் அவனை ‘வா வா’ என்று ஒவ்வொரு நிமிடமும் அழைத்துக் கொண்டே இருந்தன. அவளுக்குப் போன் செய்தான். Image result for beautiful girl with a diamond jewel in her navelஅவளைச் சந்திக்க அவள் இல்லத்துக்குப் போனான். பெரிய முத்துப் பதித்த அழகிய சிறு சங்கிலியை அவளிடம் காட்டினான். அவளது அழகிய உதடுகள் மேலும் அழகாக விரிந்தன. அவ்வளவு  பெரிய அழகான முத்தை அவள் பார்த்ததே இல்லை. ‘இருபது லட்சம்’ என்றான். “ இதை எங்கே அணிவது?, காதிலா, கழுத்திலா?” என்று அவன் தோளில் கையை வைத்துக் கேட்டாள். ‘தொப்புளில்’ என்று சொல்லி அவள் ஆசைப்பட்டபடி அவனே அணிவித்தான். அவள் இதழ்கள் அவனுடைய இதழ்களைப் பற்றின.

கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் லட்சியம் செய்யவில்லை. சூட்டிங் தவிர மற்ற எந்த இடத்துக்கும் கோகுலன் இல்லாமல் ஸாத்வி  போவதில்லை. அவள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டான்.  கண்மணி? அப்படி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதையே மறந்து விட்டான். ஸாத்விக்கு என்றே தனி வீடு, நகை, கார், தோட்டம் எல்லாம் வாங்கிக் கொடுத்தான். யார் சொல்லையும் கேட்பதாக இல்லை. யார் மிரட்டலுக்கும் பயப்படுவனும் இல்லை அவன். அசையும், அசையாச் சொத்துக்கள் எல்லாம் கரைய த் தொடங்கின.

அன்றைக்கு அவளைக் காணோம். அவள் இல்லாமல் அவனுக்கு என்னவோ போலிருந்தது. மதுவிற்கு  அடிமை  – போதை மருந்துக்கு அடிமை .அதைப்போல  பெண்ணும் ஒரு அடிமைப்படுத்தும்  பொருளா?   அவள் இல்லையென்றால் ஏன்  மனதும் உடம்பும் இப்படித் துடிக்கின்றன? இப்போதே அவள் வேண்டும். எங்கே அவள்? அவள் நடிக்கும் சூட்டிங் ஸ்டூடியோவிற்குச் சென்றான் முதல் முறையாக. அவனைத் தெரிந்தவர் அங்கே நிறையபேர் இருந்தார்கள். யாரும் அவனைத் தடுக்க முயற்சிக்கவில்லை. அங்கே அவள் முத்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாள். வசனங்கள் ஒலித்தன .

“ எங்கே உன்னுடைய காதலன் ?”

“ அவனைக் காதலன் என்று சொல்லாதே! அவன் என் அடிமை! என் கால் கொலுசை நக்கும் நாய்”

“அப்படியானால் நான்?”

“ நீ என்  இதழ்த் தேனைச் சுவைக்க வரும்  பட்டாம்பூச்சி.”

“ ஆஹா! இதழ்த்தேனே.. சுவைத்தேனே ..” – பாடல் வரி மெல்ல ஒலிக்கும் போது அவன் அவளை முதலில் மெதுவாக மூன்று முறை பிறகு அழுத்தமாக மூன்று முறை முத்தம் கொடுத்தான். அவனிடமிருந்து ஒரு சில வினாடிகள் விலகி பிறகு அதைவிட வெறியுடன் ஸாத்வி அவனை நாலைந்து முறை முத்தமிட்டாள்.

இந்த முத்தக் காட்சி நாலைந்து டேக்குகள் வாங்கின. டைரக்டர் கட் என்று சொன்னபிறகும் கூட அவர்கள் இருவரும் லிப் லாக்கிலிருந்து வெளியே வரவில்லை.

‘அவன் என் அடிமை! என் கால் கொலுசை நக்கும் நாய். – நீ -பட்டாம்பூச்சி .. இதழ்த்தேனே.. சுவைத்தேனே!’ –  அந்த வரிகள் கோகுலின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.

வேகமாக வீட்டுக்குத் திரும்பினான். சற்று நேரத்தில் ஸாத்வி வந்தாள். “இது வெறும் நடிப்புத் தான்” என்று அவள் எவ்வளவு சொல்லியும் அதை நம்பும் மனநிலையில் அவன் இல்லை.  அவன் மனதில் அந்த லிப்லாக் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருந்தது. இருவருக்கும் வாக்குவாதம். சண்டை முற்றியது. காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தான்.

வீட்டில் தனியே இருந்த கண்மணியைப் பார்த்ததும் அவன் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவளைக் கட்டிக் கொண்டு அழுதான். அவளுக்குப் புரிந்துவிட்டது. சொத்தெல்லாம் அடமானத்தில். அவர்கள் குடியிருக்கும் வீட்டையும்  காலி செய்யச் சொல்லிவிட்டாட்கள். மறுநாள்  ஒரு கோடியை ஸாத்விக்குக் கொடுக்காவிட்டால் அவன் உயிரையும் Image result for antique diamond earring of ancient tamilsஎடுத்துவிடப் போவதாகச் சற்றுமுன் ஒருவர் போனில் கூறியது நினைவுக்கு வந்தது. அவனிடம்  பணமில்லை. அவளிடமும் பணமில்லை. சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் அணிந்திருந்த தோடுகள். திருமணத்தின் போது அவள் தந்தை அவளுக்கென்று வாங்கியது. கோடி ரூபாய் பெறும். சரியாகப் பராமரிக்காதலால்  அழுக்கடைந்து   இருந்தாலும் அவற்றின் மதிப்பு குறையப் போவதில்லை. அந்த தோடுகளைக்  கழற்றி அவனிடம் கொடுத்து  ‘இதை ஸாத்விக்குக் கொடுங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை …’ என்று கண்ணீர் மல்கக் கூறினாள். அவன் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டவனைப் போல் துடித்தான்.

“கண்மணி ! உன் அருமை தெரியாத பாவி நான். இதை  அவர்களுக்குக் கொடுக்கப் போவதில்லை. நாம் இருவரும் இப்போதே மதுரை செல்வோம். அங்கே என் தந்தையின் உயிர் நண்பர் கீர்த்திலால் இருக்கிறார். அவர் நமது காட் ஃபாதர். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல  செல்வாக்கு உண்டு. ‘டான்’ களும் அவருக்குப் பயப்படுவார்கள். அவர் மூலமாக இதை  விற்று நாம் மதுரையிலேயே தொழில் செய்வோம்.” இருவரும் புறப்பட்டார்கள்.

மதுரையின் போலீஸ் கமிஷனர் பாண்டியனுடைய சின்ன  வீட்டில் ஏக அமர்க்களம்.

அவர் பெயர் எல்லா ஊழலில் வந்தாலும் அவரை யாரும் அசைக்கமுடியாது. காரணம் அவருக்கு அமைச்சகத்தில் இருந்த செல்வாக்குத்தான்.   அவரால் தான் ஆளுங்கட்சி கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அவரைப் பற்றிப் புகார் கொடுத்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை. மதுரையே அவர் கையில். ஆனால் அவரோ அவருடைய சின்னவீடு தேவியின் கையில். அவர் அடாவடியாகச் சம்பாதிப்பதே அவளைத் திருப்திப்படுத்தத்தான்.

அப்படித்தான், அன்று காலை ஒரு குவாரி காண்ட்ராக்டர் தன்னுடைய நன்றியறிதலை அவருக்குத் தெரிவிப்பதற்காக ஒரு அழகான ஜோடி வைரத் தோடுகளை அவருக்கு அன்பளிப்பாகத் தந்தார். ஹாலந்திலிருந்து திருட்டுத்தனமாக வந்தவை அவை. விளக்கின் அருகில் அவை  பச்சையாக மின்னியன. அந்தத்தோடுகளின் அருமை பெருமைகளையும் சொன்னார். அடுத்த கணம் தேவியின் காதுகளில் அவை மின்னின. தேவி அவரைச் சிறிது நேரம் இன்பத்தின் உச்சியில் பறக்க வைத்தாள். அந்த மிதப்பில் அவர்  இருக்கும் போது   அவசரமாக அலுவலக அழைப்புவர தவிர்க்கமுடியாமல் சென்றார். இரவு எப்படியும் வந்துவிடுகிறேன் என்று உறுதி அளித்துவிட்டுச் சென்றார். மாலை முக்கிய மீட்டிங்கில் இருக்கும்போது தேவியின் போன் அலறியது. மீட்டிங் எப்படியோ போகட்டும் என்று அவள் வீட்டுக்குப் பறந்தார். தேவி கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள். அவளின் ஒரு தோடு காணவில்லையாம். இரண்டு தோடுகளில் ஒன்று சற்று லூசாக இருந்ததால் அதைச் சரிசெய்ய பிரபல வைரக் கடைக்குச் சென்றாள். அதைச் சரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் இரண்டு தோடுகளில் ஒன்றைக் காணோம். எங்கு தொலைந்தது? கடையிலா ? வீட்டிலா ? வழியிலா ?  தேவிக்கு ஒன்றும் புரியவில்லை.

பாண்டியன் அசரவில்லை. ‘கவலைப்படாதே இன்னும் நாலு மணிநேரத்தில் அந்தத் தோடு கிடைத்துவிடும்’ என்று உறுதிகூறினார். தன் போலீஸ் ஆட்களால் அது முடியாது என்று அவருக்குத் தெரியும்.  அதுமட்டுமல்ல யாராவது விஷயத்தை  வெளியில் விட்டுவிட்டால் , பிறகு தோடு எப்படி வந்தது என்ற விசாரணை வரும் என்பதும்   அவருக்குத் தெரியும். அதனால் அவரின் நம்பகமான வலதுகரம் மதுரையை அழைத்தார். மதுரையால் மதுரையில் முடியாத காரியம் எதுவும் இல்லை. விஷயத்தைச் சொன்னார். அவன் களத்தில் இறங்கினான்.

கோகுலன் கண்மணியின் தோடுகளை எடுத்துக்கொண்டு தன் ஆப்த நண்பர்  கீர்த்தியிடம்  விற்றுத் தரும்படிக் கேட்க வைரக்கடை  அருகே வந்து கொண்டிருந்தான். அங்கே ரவுண்ட் வந்துகொண்டிருந்த மதுரையின் சந்தேகப் பார்வை கோகுலன் மீது விழுந்தது.

பாண்டியனுக்கு மதுரையிடமிருந்து போன் வந்தது. “ திருடன் அகப்பட்டுவிட்டான். பொருள் அவனிடம் தான் இருக்கிறது” என்று சொன்னான்.  தோடு கிடைத்த  மகிழ்ச்சியில்  பாண்டியன்,   தேவிக்கு முத்த மழை பொழிந்து கொண்டிருந்தான்.  மறுபடியும் போன் மதுரையிடமிருந்து வந்தது  “அவன்  உயிர் போனாலும் பொருளைத் தர மாட்டேன் என்கிறான். என்ன செய்வது? “என்று கேட்டான். “பறித்துக் கொண்டு வா” என்று கத்தினார் பாண்டியன். உயிரைப் பறிக்கக் கத்தியால் குத்தினான். கோகுலன் துடிதுடித்து வீதியில் விழுந்தான். மதுரை அவனிடமிருந்த இரு தோடுகளையும் எடுத்துக் கொண்டு ஒன்றைத் தன் பெல்ட்டின் ரகசிய அறையில் பதுக்கினான். மற்றொன்றை பாண்டியனிடம் கொடுக்கக்  காரில்  பறந்தான்.

கீர்த்திலால் கண்மணியிடம் வந்தார்.  பாண்டியன் மதுரையைக் கொண்டு  கோகுலனைத் திருடன் என்று கூறி,அவனைக்  கத்தியால் குத்தி, தோடுகளை எடுத்துக்கொண்டு போனதைக் கூறினார்.  கண்மணி  துடிதுடித்துப் போனாள்.  கோகுலனைக்கூடப் பார்க்காமல் நேராகப் பாண்டியன் இருக்கும் தேவியின் வீட்டிற்குப் போனாள். காவலர்கள் யாரையும் காணோம். காலிங் பெல்லை அழுத்தினாள் . அப்போதுதான் தேவியைத் திருப்திப்படுத்திவிட்டுப் புறப்படத் தயாராகயிருந்த கமிஷனர் பாண்டியன் அவளைப் பார்த்து,  “யாரம்மா நீ?உனக்கு என்ன வேண்டும்? ” என்று விசாரித்தார்.

“உங்களால் திருடன் என்று தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட கோகுலனின் மனைவி  கண்மணி நான் என்றாள்”

“ திருடனின் உயிரைப் பறித்தாலும் தப்பில்லை. இருந்தாலும், நான் தோட்டை மட்டும் பறித்துக் கொண்டு வரச்சொல்லி மதுரையிடம் சொன்னேன்” என்றார்.

“ அவன் என் கணவனின் உயிரையே பறித்துவிட்டான். என் கணவர்  திருடர் இல்லை. அது என் தோடு.”

“ இருக்கவே முடியாது.”  என்று கூறினான்.

“ நெருப்புச் சோதனையில் தெரிந்துவிடும்” என்று ஆத்திரத்துடன் கூறினாள் கண்மணி.

“அந்தச் சோதனை எனக்கும் தெரியும்” என்று கூறி தேவியை அழைத்தான். அவள்  காதிலிருந்த தோடுகளைக் கழட்டச் சொன்னார். தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் லைட்டரை பற்ற வைத்துத்  தோட்டுக்கு அருகே கொண்டு சென்றார்.

“ என் தோடு ஹாங்காங்கிலிருந்து வந்தது. பச்சை நிறத்தை உமிழும்” என்று சொன்னார்.  ஒரு தோடு பச்சை நிற ஜாலம் காட்டியது. “ மற்றது என் தோடு . அது ஹாலந்திலிருந்து வந்தது. சிவப்பு நிறத்தை உமிழும்”  என்று கூறி   அவனிடமிருந்து லைட்டரை வாங்கி அடுத்த தோட்டுக்கருகே சென்றாள். அது அந்த அறையையே சிவப்பு நிறத்தில் மூழ்க அடித்தது.

பாண்டியனும் தேவியும் திடுக்கிட்டார்கள்.

Image result for madhavi in silapathikaram

அந்த அதிர்ச்சியில் அவர்கள் இருக்கும் போதே கண்மணி,  பாண்டியனின் துப்பாக்கியை எடுத்து “ நீயா கமிஷனர்! நீ ஒரு கொலை காரன்” என்று கூறி அவனைத் துப்பாக்கியால் சுட்டாள். தடுக்க வந்த தேவியையும் சுட்டாள். பக்கத்து வீடுகளில் வெடித்த பட்டாசு வெடிச் சத்ததில் இந்தத் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்கவில்லை.

இன்னும் அவள் கோபாவேசம் அடங்கவில்லை. வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதற்குள் மதுரை அமர்ந்து தான் திருடிய கண்மணியின்  தோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் மயக்கத்தில் அவனுக்கு உள்ளே  நடந்த துப்பாக்கிச் சத்தம் கேட்கவில்லை.  அவன் தான் மதுரை, தன் கணவனைக் கொன்றவன் என்று உணர்ந்து கொண்டாள். அவனை எப்படி அழிப்பது? அவன் போராத காலம் அவன் காரின் பெட்ரோல் டாங்க்  திறந்திருந்தது. சத்தம் இல்லாமல் அருகே சென்றாள். மார்பில்  மறைத்து வைத்திருந்த பாண்டியனின் சிகரெட் லைட்டரை எடுத்தாள். அதைப்  பற்றவைத்து  அந்த டாங்கில் போட்டாள்.

மதுரையுடன் காரும் எரிந்தது.

கூட்டமாக ஆட்கள் வரும் சத்தம் கண்மணிக்குக் கேட்டது. அவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.

கண் விழித்ததும், தான் ஒரு மலையாள இயற்கை வைத்திய விடுதியில் இருப்பதை உணர்ந்தாள் கண்மணி. கதவைத் திறந்து கொண்டு வந்தார் கீர்த்திலால். “ஐயா! தாங்களா? நான் எப்படி?” என்று கேட்டாள்.

“ நான் தானம்மா உன்னைத் தொடர்ந்து வந்தேன். நீ பாண்டியனைக் கொன்று விட்டு  மதுரையை எரித்துவிட்டு வந்ததும் அங்கேயே மயங்கி விழுந்தாய்.  நான் உன்னை என்னுடைய கேரளா  செல்லும் லாரியில் போட்டு அனுப்பினேன். ஒரு மாதமாக  நீ மயக்கத்தில் இருந்தது எனக்கு மிகவும் வருத்ததைக் கொடுத்தது. இது கேரளக் காட்டில் இருக்கும் மிகச் சிறந்த  ஆயுர்வேத ஆஸ்பத்திரி.  உன்னை எப்படியாவது குணப்படுத்திவிடுவார்கள் என்று தெரியும். மதுரையில் ரவுடி மதுரைக்கும் பாண்டியனுக்கும் நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள் என்கிற மாதிரி செட்டப் செய்திருக்கிறேன். ஆனாலும் அவர்களுடைய ஆட்களும் போலீசும்  உன்னைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அதனால்  நீ இங்கிருந்து சீக்கிரம் புறப்படவேண்டும்.” என்றார் கீர்த்திலால்.

“ஐயா!! என் கணவரை …..”  சொல்ல முடியாமல் துடித்தாள் கண்மணி.

அப்போது ஒரு ஹெலிகாப்டர் வரும் சத்தம் கேட்டது.  கீர்த்திலால்  அவசரமாக வெளியே சென்றார்.  அந்த ஹெலிகாப்டர் அவர்கள் இருந்த இடத்துக்கு அருகே நின்றது. அதிலிருந்து இரண்டுபேர் பிடித்துக்கொள்ள கோகுலன் இறங்கி நடந்து வந்தான்.கழுத்திலும் , வயிற்றிலும்  கட்டுப் போட்டுக்கொண்டிருந்தாலும் உயிர் பிழைத்துவிட்டான்.   கண்மணிக்குத்  தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஓடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டாள்.இருவர் கண்களும் நன்றி நிறைந்த கண்ணீரோடு கீர்த்திலாலைப்  பார்த்தன.

“ நீங்கள் இருவரும் இந்தியாவில் இருப்பது ஆபத்து. உங்களை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.  இப்போதே இந்த ஹெலிகாப்டரில் ஏறி திருவனந்தபுரம் செல்கிறீர்கள். அங்கே உங்களுக்குப் புது பாஸ்போர்ட்  விசா எல்லாம்  வழங்கப்படும். உடனே நீங்கள் துபாய்க்குப் போகிறீர்கள். சொல்ல மறந்து விட்டேனே? இனி உங்கள் பெயர் கோவலன் – கண்ணகி. எல்லா நலனுடனும் நீங்க துபாயில் வாழ சகல வசதிகளையும் செய்திருக்கிறேன் “ என்றார் கீர்த்திலால்.

ஹெலிகாப்டர் அவர்கள் மூவரை  மட்டும் ஏற்றிக்கொண்டு பறந்தது.

அந்த ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் இரண்டு பணக்கார  சகோதரர்கள் தங்கி உடம்பைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள்.  ஆஸ்பத்திரி மருத்துவர் சாத்தனிடம்  அவர்களைப்  பற்றி விசாரித்தனர்.

“அவள் கண்மணி . அவன் கோகுலன்.  அவர்கள் கதை  தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சிலப்பதிகாரம் போலவே இருக்கிறது. கீர்த்திலால் தான் எல்லாவற்றையும் சொன்னார். ஒரு வித்தியாசம். அதில் சிலம்பு. இதில்  தோடு.” என்று அவர்கள் கதையைச் சொன்னார்  சாத்தன்.

“அவர்கள் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கே. இதை அப்படியே தமிழ் சினிமாவாக எடுக்கலாமா? விஜய் சேதுபதி , லட்சுமி மேனன், நயன்தாரா சரியா இருப்பாங்க. நீ என்ன சொல்லற இளங்கோ?” என்று கேட்டார் மூத்த அண்ணன் மற்றும் தயாரிப்பாளர் செங்குட்டுவன்.   “ நான் திரைக்கதை எழுதி இயக்கத் தயார்.  தோட்டதிகாரம் என்ற பெயர் ஒகேயா?” என்றார்  அவரது தம்பி இளங்கோ, பிரபல டைரக்டர்.

“ அது சரி, ஸாத்வி கேரக்டரில் ஸாத்வியையே நடிக்க வைத்து விட்டால் என்ன? என்று கேட்டார் செங்குட்டுவன்.

“சாரி! சாரே! ஸாத்வி கதை எனக்கு நன்றாகவே தெரியும். நான் தான் அவளுக்குக் குடும்ப வைத்தியன். அவள்  நடிப்பதையே நிறுத்திவிட்டு ராஜஸ்தான் மவுண்ட் ஆபூக்குப் போய் பிரும்ம குமாரிகள் இயக்கத்தில் சேர்ந்து விட்டாள். ஒரு ரகசியம். கோகுலனுக்கும் அவளுக்கும் ஒரு பெண் குழந்தை கூட இருக்கிறது. அவள் பெயர் மேகலா.  மேகலாவை மையமாக வைத்து ஒரு பெரிய நாவல் எழுதத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார் சாத்தன்.

“சரி, முதலில் தோட்டதிகாரம் ஆரம்பிப்போம்”  என்றார் செங்குட்டுவன்.

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சுவாமிநாதய்யர்

Image result for u ve swaminatha iyer

தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை உண்டல்லவா?

தமிழ்த் தாத்தா உ.வே.சுவாமிநாதரின் தமிழில் நம் அனைவருக்கும் பங்கும் உரிமையும் பாசமும் மரியாதையும் எப்போதும் இருக்கவேண்டும்!

அவர் பிறந்த உத்தமநாதபுரத்திற்குக் ( கும்பகோணம் -தஞ்சை செல்லும் வழியில் பாபநாசத்தில்  இறங்கி அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் செல்லவேண்டும் )  குவிகம்  நண்பர்கள் வட்டம் சென்று தாத்தாவின் நினைவிடத்தைக் கண்டு – வணங்கி – ஆராதித்துவிட்டு வந்தது. 

தமிழக அரசு அவர் இருந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி வைத்திருக்கிறது. அதற்காக அனந்த கோடி நன்றி. 

அவர் இல்லை என்றால் இன்று தமிழில் இருக்கும் எண்ணற்ற சங்கப் பாடல்கள் எல்லாம் நம் கண்களுக்குத்  தென்படாமலேயே போயிருக்கும். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் , சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்  இத்தனை அழகாக நமக்குக் கிடைத்திருக்காது. 

அங்கே எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்! 

img_7245

img_7256-1
img_7261

img_7255

img_7257

அவரது வரலாற்றை ஒரு சிறிய நாடகமாக அமைத்திருக்கிறார்கள். பார்த்து அவர் பெருமையை உணருங்கள்!!

 


இருட்டிலோர் மின்னல் கண்டேன்….! —கோவை சங்கர்

 

happy images pictures sms greetings

கருக்கிருட்டு வேளையிலே ஒளியைக் கண்டேன்
இருட்டடை நெஞ்சினிலும் அறிவைக் கண்டேன்
கரத்தினி லேந்திய வாணம் போலே
மருட்டிடும் பகைவரை வெருட்டக் கண்டேன்!

அறமோங்கி மறம்வீழ்ந்த திருநா ளிதுவே
திறனோங்க அருளீந்த பெருநா ளிதுவே
மறங்கொண்ட வீரரைப் படைத்த வண்ணல்
அறமோங்க முரசார்த்த பொன்னா ளிதுவே !

அரக்கர்க்கு அழிவீந்த கண்ணன் திண்மை
குரங்கனைய பகைவர்க்கு அழிவைத் தேட
உரமுடை இந்தியர்தம் நெஞ்சில் ஓங்க
இறைவனி னருள்நோக்கி இறைஞ்ச வேண்டும் !

ஆசையெனும் பாவியினால் அழிவைக் கண்ட
இச்சையொடு மதிமருண்ட அரக்கர் நிலைமை
ஆசையினை வாழ்விலே அடைந்து கொள்ள
திசைமாறிச் செல்பவர் உணர்தல் வேண்டும் !

பளபளக்கும் மெய்யினிலே எண்ணெய் தேய்த்து
விளங்கிடவே வெந்நீரில் குளியல் செய்து
துலங்கிடவே புத்தாடை அணித லுடனே
உளத்தினிலும் தூய்மையினை யணிதல் வேண்டும் !

மின்னலொடு இடிகளுமே சேர்ந்தது போலே
கன்னங்கரு இருள்கிழிய வாணம் வைக்கும்
பொன்போன்ற நம்நாட்டு மக்கள் எல்லாம்
வன்மையினை ஒருமையொடு எதிர்த்தல் வேண்டும் !

எண்ணமொடு சொல்லையும் செயலில் காட்டி
திண்ணமொடு உலகினிலே பயின்றா ராகில்
கண்ணிய தீபாவளி விழாவின் நோக்கம்
இனிதுறவே நடந்திடலு மவரே காண்பார் !

 

ஔரங்கசீப் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் (விமர்சனம் – கிருபாநந்தன்)

Panoramic Tale From ‘Aurangazeb’.

‘இந்நாடகம், இதில் வரும் கதாபாத்திரங்களின் ஒன்றுக்கொன்று முரண்பட்ட மன இயல்புப் போரட்டங்களைப் பகைப்புலனாகக் கொண்டிருக்கிறது’ என்றும் ‘இது ஒரு சரித்திர நாடகம் என்பது ஒரு எதேச்சையான சம்பவம்’ என்கிறார் திரு இந்திரா  பார்ததசாரதி.

அல்யான்ஸ்  ஃப்ராசன்சேஸ் (இதன் உச்சரிப்பை ஒருமாதிரி கூகிளிட்டு தெரிந்து கொண்டேன்) அரங்கில் “ஔரங்கசீப்’ நாடகத்தைப் பார்த்த பிறகுதான் இ பா வின் மேற்கண்ட கருத்துக்களைப் படித்தேன்.

வரலாற்றுப் பாடங்கள் மூலமாக நாமறிந்த ஔரங்கசீப் …. சங்கீத விரோதி, போர் வெறியன், , சகோதரர்களைக் கொன்று ‘ஷா இன் ஷா’ ஆனவன்,  எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து கிழடுதட்டி  மகனாலேயே சிறைவைக்கப்பட்டு மடிந்தவன் … என்பதுதான்.

நாடக அறிவிப்பைப் பார்த்துவிட்டுஃப் பலருக்கு எழுந்த சந்தேகம், இந்த நாடகம் கதாநாயகனை மகிமைப்படுத்துமோ என்பது தான். அரசாள்வதில் நேர்மை, ஊழலற்ற கட்டுக்கோப்பான அரசாங்கம் நடத்துவது, மதுவை ஒழிப்பது  ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டவன் என்றாலும் அதனை சாதிக்க சகோதர்களைக்     கொல்வது, தந்தையைச் சிறையிடுவது, நுண்கலைகளை ஒடுக்குவது போன்ற கேள்விக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றியவன் என்று சித்தரிக்கப் படுகிறான்.

எல்லா மனிதர்களையும் போன்றே  நல்ல மற்றும் தீய குணங்களைக் கொண்ட கலவை தான் ஔரங்கசீப் என்பது  நாடகத்தைப் பார்த்தபிறகு தோன்றுகிறது.

இனி நாடகம்.

ஒரே அரங்கு, நான்கே காட்சிகள், (ஒரு காட்சி மட்டும் அரண்மனை தர்பாருக்கு வெளியே என்றாலும் ஒரு மாற்றமும் காண்பிக்கவில்லை)..  

கதாநாயகன் தவிர

கடந்த காலத்திலேயே வாழ்ந்து நடைமுறைச் சாத்தியமில்லாத கனவுகளுடன் வாழ்ந்த அரசனான  ஷாஜஹான் (தாஜ்மஹால் கட்டியதால் இன்னும் அறியப்பட்டாலும், அது கட்டப்படும்போது மக்கள் பாடாய் பட்டார்கள்).

தானே இன்னொரு அக்பர் என்னும் கனவில், மத நல்லிணக்கம், மக்கள் மகிழ்ச்சி போன்ற குறிக்கோள்கள் கொண்டிருந்தாலும் சாமர்த்தியத்தில் தம்பி ஔரங்கசீபிடம் தோற்றுப்போகும் மூத்தவன் தாரா

தாராவிற்கு பக்கபலமாக ஜஹனாரா, ஔரங்கசீப்பிற்குத் துணையாக ரோஷனாரா என்று ஷாஜஹானின் புதல்விகள்.

ஆகிய முக்கிய பாத்திரங்கள்

ஜெயிப்பவர் பக்கம் சாயும் சந்தர்ப்பவாதிகளான சிற்றரசர்கள் மற்றும் படைத்தளபதிகள்,  தாராவை உஷார் படுத்தவரும் மௌல்வி  தனது உயிரையே காப்பாற்றியவன் தாரா என்றாலும், அவனையே சிறைப்பிடித்து ஒப்படைக்கும் மாலிக் போன்ற துணைக் கதாபாத்திரங்கள்.

இ பா வின் முத்திரையாக கூர்மையான, பொருள் பொதிந்த  தர்க்கபூர்வமான வசனங்கள் இந்த நாடகத்தின் பெரும் பலம். வசன உச்சரிப்புகளும் (குறிப்பாக உருது மற்றும் அராபிய சொற்கள்) மிக நன்றாக இருந்தது. நடிப்பிலும் எல்லோரும் நன்றாகச் செய்தார்கள்.

தர்பாருக்கு அரசகுடும்பத்தினர் ஒருபுறமிருந்தும் மற்றவர்கள் பிறபுறங்களிலிருந்தும் வருவதும் காட்சியில் இல்லாத உப பாத்திரங்கள் மேடையின் பின்புறத்தில் அரண்போன்று நிற்பதும் புதிய உத்திகளாகப் பட்டன.

சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த கதை, தற்போதும் தேவையாக உணரக் காரணமே இ.பா வின்  வசனங்கள்தான் என்று படுகிறது. நாடகம் தமிழில்தான் எழுதப்பட்டது என்றாலும், ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி என்று பலமொழிகளில் முன்பே அரங்கேற்றப்பட்டு, தமிழில் இப்போதுதான் நடிக்கப் படுகிறதாம். ஆச்சரியம்.

நாடகத்தைப் பார்த்தது ஒரு நல்ல அநுபவம். மீண்டும் அதனைப் படித்தது இன்னொரு நல்ல அநுபவம்.    

பார்த்தாலும் படித்தாலும் ஏமாற்றம் நிச்சயம் இருக்காது என்பது என் நம்பிக்கை.

 

img_7067

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 04. அரசிலாறு.

part-4-final-copy

வந்தியத்தேவனின் ஆழ்ந்த உறக்க நிலை அடுத்த ஒன்றரை ஜாமத்திற்கு மட்டுமே நீடித்தது. அவன் அடிமனதில் பதிந்து மறைந்து வெகுவாக பாதித்திருந்த ஒரு துக்ககரமான சம்பவம் மேல்மனதிற்கு வந்து அவனை அப்படியே ஸ்வப்பன நிலைக்குக்  கொண்டு சென்றது. அதில் ஒரு சுந்தர வதனம் படைத்த ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அவனுடைய மடியில் அவள் தலை சாய்ந்திருந்தது. ஆ! அது என்ன? அவளின் கண்கள் ஏன் மூடிவிட்டன? அய்யோ! அவளின் உயிர் உடலைவிட்டுப்  பிரிந்துவிட்டதே! அதற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்றெல்லாம் எண்ணிய வந்தியத்தேவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தலை சுற்றியது. திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்தவன் சுய நினைவு நிலைக்கு வந்தான்! ஸ்வப்பன உலகத்தில் நிகழ்ந்த உண்மையான சம்பவங்கள் அவன் மனதில் பவனி வந்தன.

**************************************************************

ஆதித்த கரிகாலனின் மர்ம மறைவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நிகழ்வதற்கு முன் அவனைக் கண்ணும் இமையுமாக வந்தியத்தேவன் கண்காணித்து வந்தான். அதற்கு வேண்டிய பல உத்திகளை அவன் கையாள வேண்டியிருந்தது. அதற்காக சம்புவரையர் மகள் – நண்பன் கந்தமாறனின் சகோதரி மணிமேகலையின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டான். அதன் விளைவு மணிமேகலையின் மனதில் அது ஒருதலைக்  காதலாக மலர்ந்தது. சதிகாரர்கள் ஆதித்த கரிகாலனைக் கொன்று பழியை வந்தியத்தேவன் மேல் விழும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அவ்வாறே பழி அவன் மேல் விழுந்தது. வந்தியத்தேவன் மேல் கொண்ட அளவிலாக் காதல் மற்றும் வந்தியத்தேவனின் பழியை தாங்க இயலாத  நிலை, பழியைத்  தானே ஏற்க முயன்று அது மணிமேகலையைப் பிச்சியாக்கியது. கரிகாலன் மறைவிற்கு வந்தியத்தேவன் காரணமல்ல என்று நிரூபிக்கப்பட்டு அவன் விடுவிக்கப்பட்டதை அறியாத மணிமேகலை அவனை மனதில் நினைத்தவளாகவே மற்றும் அவன் மடியில் தலை வைத்தவாறே  மறைந்தும் போனாள்!

**************************************************************

நிகழ்ந்தவை வந்தியத்தேவனின் மனதை மேலும் மேலும் உருக்கியது. தன்னால் ஒரு இளம் பெண் பலியானதை அவனால் ஏற்கவே முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

கடைசியாக அந்த நினைவு அவனை விவேகமடைய வைத்து ஒரு வைராக்கியசாலியாய் மாற்றியது! பழைய நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ‘நமக்கு ஏன் இந்த வாழ்வு? பாண்டியர் சதிச்செயல்களைப் பற்றிய உண்மைகளைக் கையாளுவது மாமந்திரி அநிருத்தர் மற்றும் ஒற்றர் தலைவன் திருமலை போன்றவர்களின் வேலை. அவர்களிடம் கணித்தவைகளைச்  சமர்ப்பித்துவிட்டு நாம் வல்லத்திற்குச்  சென்று நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்’ என்று வந்தியத்தேவன் வைராக்கியம் கொண்டான்!

‘காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்கும் திருமலை இப்போது எங்கே இருப்பான்?தஞ்சையில்தான் இருக்கக்கூடும்! அங்குதான் அவனைச்  சந்திக்க வேண்டும்’ என்று எண்ணிய வந்தியத்தேவன் கதிரவன் உதிக்கு முன் எழுந்து குளித்துவிட்டு அரசாங்க விடுதியிலிருந்து திருவையாறு வழியாகத்  தஞ்சையை நோக்கிச்செல்ல,  பயணத்தைத் தொடங்கினான். களைப்படைந்திருந்த குதிரை இரவு ஓய்விற்குப் பின் நன்றாக சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது. வந்தியத்தேவனையும் அவன் மனதின் சுமையையும் தாங்கிக் கொண்டு பறந்து சென்றது.

Image result for vanthiyathevan pictureதிருவையாற்றை அடையுமுன் குதிரை அரசிலாற்றங்கரையை நெருங்கியது. அங்கு வந்தியத்தேவனின் குதிரை மரங்கள் நிறைந்த அடர்த்தியான நதியின் கரை ஓரமாக சிறிது தூரம் வந்ததும் அவன் மனதில் கிளுகிளுப்பை உண்டாக்கிய  சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தான். கடிவாளத்தைப்  பிடித்து நிறுத்தினான் -இல்லை.. ஏதோ ஒரு சக்தி அவனை நிறுத்த வைத்தது.

‘இந்த இடத்தில்தான் ‘அய்யோ முதலை..’என்ற பெண்களின் அபயக்குரலைக் கேட்டுக்குதிரையை வாயு வேகமாய்விட்டுக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தோம்! பஞ்சு அடைக்கப்பட்ட பொய் முதலையை நிஜ முதலை என்று எண்ணி குறிபார்த்து வேலைப்  பாய்ச்சினோம்!’ என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எந்த மரத்திற்கு முன்னால் வாயைப்  பிளந்து கொண்டு நின்ற முதலை வைக்கப்பட்டிருந்ததோ அங்கு வந்தடைந்தான். குதிரையிலிருந்து இறங்கி வசதியான வேர் ஒன்றில் அமர்ந்தான். ‘வேலுக்கு இழுக்கு நேர்ந்து மனம் நொந்திருந்தபோது இளைய பிராட்டி சொன்ன ஹிதமான வார்த்தைகள் இப்போது நினைத்தாலும் பரவசப்படுத்துகிறதே!’ என்று ஒரு கணம் மெய்மறந்தான். மறுகணம் மணிமேகலையின் நினைவுகள் அவன் மனதை மீண்டும் நிறைத்தன. கண்ணிலே நீர் மல்கியது. வளைந்து செல்லும் நதிப்ராவகத்தின் ஓசை சோககீதம் பாடுவதாகத் தோன்றியது. துக்கத்தில் தீவிரமாக ஆழ்ந்து தன்னை மறந்த நிலைக்குச் சென்றான்.

வந்தியத்தேவன் அமர்ந்த அடர்த்தியான மரத்திற்குச்  சிறிது தூரத்திற்கு முன்னால் இருந்த ஓடத்துறையில் ஒரு அழகிய அன்ன வடிவமான வண்ணப்படகு வந்து நின்றது. இது என்ன மாயம்! அதில் Image result for kundavai and vanthiyathevanஅவன் மனம் கவர்ந்த இளைய பிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்! படகில் வந்த காவல் ஆட்களிடம் அங்கேயே காத்திருக்கும்படி பணித்துவிட்டு, கரையில் இறங்கி மெல்ல வந்தியத்தேவன் அமர்ந்திருந்த மரத்திற்கு அருகில் வந்தாள். வந்தியத்தேவனை அங்கு எதிர்பாராமல் பார்த்த அவளின் அகன்ற கண்கள் மலர்ந்து பவளச்  செவ்வாய்கள் வியப்பினால் விரிந்தன. மகிழ்ச்சியை அடக்க முடியாமல் மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

வந்தியத்தேவன் குந்தவை வந்ததையோ, பக்கத்தில் வந்து அமர்ந்ததையோ கவனிக்கவில்லை. கண்களில் தாரையாக உருண்ட நீர்த்துளிகளோடு மணிமேகலையின் சோக நினைவினால் ஆற்றின் ப்ரவாகத்தை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான்.

குந்தவை அவன் முகத்தை நோக்கினாள். அவன் கண்களில் வழிந்த நீர் அவள் மனதை நெகிழவைத்தது. ஒரு நொடியில் அவன் மனதில் ஓடும் துயரச்  சிந்தனைகளைப்  புரிந்துகொண்டாள். குந்தவை திரும்பி வந்தியத்தேவன் கண்களிலிருந்த கண்ணீரை இடுப்பிலிருந்து எடுத்த துணியினால் ஒத்தி எடுத்தாள். குந்தவையின் கை ஸ்பரிசமும் கை வளைகள் எழுப்பிய நாதமும் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்து சேர்த்தன. இன்ப அதிர்ச்சியால் உந்தப்பட்ட வந்தியத்தேவன் மனதில் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுந்தது.

குந்தவை “வல்லத்து அரசர் வந்தியத்தேவரே, உங்களுடைய துக்கத்தை நான் அறிவேன்” என்றாள்.

வந்தியத்தேவன் “இது கனவா.. அல்லது நினைவா” என்றான்.

“இது நினைவுதான்..”

“எப்படி இங்கே..”

“கடம்பூரில் நடந்த துக்க செய்தி எங்களுக்கு வந்தது முதல் எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருந்தது.சஞ்சலம் அடையும் போதெல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நீங்கள் எங்களைக் காப்பாற்ற வீரச்செயல் புரிந்த இந்த இடத்திற்கு வருவதுண்டு.மனமும் அமைதி அடையும். அதற்காகவே இன்றும் வந்தேன்.”

குந்தவையின் சொற்கள் வந்தியத்தேவனை சொர்க்க பூமிக்குக்  கொண்டு சென்றது. சிறிது நேரம் அதிலேயே திளைத்திருந்தான். ‘மணிமேகலையின் மறைவிற்கு நான் காரணமாகிவிட்டேனே!இதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது” என்று துக்கம் பொங்கக் கூறினான்.

அதற்குக்குந்தவை சரியான மறுமொழி கூறினாள். “மணிமேகலை இறந்ததற்குத்  தாங்கள் காரணமல்ல. அந்த பாபச்செயலைப்  புரிந்தவர்கள் நாங்களே. எங்கள் கோரிக்கையை சிரமேற்கொண்டு, உயிரைப் பணயமாய் வைத்து, பெரிய பழியையும் சுமந்து, எடுத்த காரியத்தில் ஓரளவு வெற்றியும் கண்டீர்கள். கரிகாலன் மரணத்திற்கு அவனே காரணம். எடுத்த காரியத்தினை முடிக்க மணிமேகலையைச்  சிறிது பயன்படுத்தியபோதிலும் அவளிடம் மிகவும் கௌரவமாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டீர்கள். மேலும் கந்தமாறன் உங்களின் வீரச் செயல்களைப் பற்றி அவளிடம் வர்ணித்தபோது மணிமேகலை தன் மனதை உங்களுக்குப் பறிகொடுத்திருந்தாள். ஆகவே அவனுக்கும் இதில் பங்கேயின்றி தாங்கள் ஒருக்காலும் மணிமேகலையின் மரணத்திற்குப் பொறுப்பேற்க முடியாது” என்றாள்.

வந்தியத்தேவன் உடலும் உள்ளமும் ஒருவாறு பரவசமடைந்த போதிலும் சமாதானமடையாமல் “இருப்பினும் இந்த பொய், புரட்டு வேலைகளை என் மனது விரும்பவில்லை. அதற்கெல்லாம் அநிருத்தர், திருமலை போன்றவர்கள் இருக்கிறார்கள்’ நான் அமைதியான வாழ்க்கையைத் தொடங்கத் தீர்மானம் செய்துள்ளேன்” என்று கூறிவிட்டு,  குடந்தை சாலையில் நடந்தவைகளிலிருந்து அரசாங்க விடுதியில் தான் கணித்தவைகளையும் எடுத்துரைத்தான்.

குந்தவை அதனை வியப்பாகவும் வந்தியத்தேவனின் மதிநுட்பமான கணிப்புகளை கேட்டும் பெருமிதமடைந்தாள்.

கடைசியாய் வந்தியத்தேவன் “நடந்தவைகளையும் கணித்தவைகளையும் அநிருத்தரிடமும்,     திருமலையிடமும் சமர்ப்பித்துவிடப் போகிறேன். மேலும் எனக்குக் கொடுக்கப்பட்ட ஈழச் சேனாதிபதி பதவியிலிருந்தும் விடுதலை தரச் சொல்லிக்     கேட்டுக் கொள்ளப் போகிறேன்” என்று பெரியதொரு குண்டைத்   தூக்கிப்போட்டான்.

அதிர்ச்சி அடைந்தாள் குந்தவை. மனதைக் கவர்ந்தவனின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்திருந்தபோதிலும் ,‘மாபெரும் வீரனின் மகத்தான சேவையை சோழர்குலம் இழக்க நேர்ந்துவிடும் போலிருக்கிறதே.  வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தது போலவும், மஹாபாரதப் போருக்கு முன் கௌரவர்களின் சேனையை வீழ்த்த பாண்டவர்கள் மலை   யைப் போல் நம்பியிருந்த அர்ஜுனன்,  வில்லைக்  கீழே எறிந்துவிட்டு, ‘காட்டுக்குச்  சென்று சன்யாசம் மேற்கொள்ளப்போகிறேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணரிடம் உரையிட்டது போல் அல்லவா இது இருக்கிறது! ஸ்ரீகிருஷ்ணர் எப்படி அர்ஜுனனுக்குப் பகவத் கீதையை உபதேசித்து அவன் கடமையை உணரவைத்தாரோ அப்படி வந்தியத்தேவனின் இந்த முடிவை மாற்றி அவனுக்கு உண்மையை உணரவைத்து, ஊக்குவித்து சமநிலைக்குக்   கொண்டுசேர்க்கும் முக்கியப் பணி   தனக்கு இப்போது இறைவனால் இடப்பட்டிருக்கிறது’ என்பதை உணர்ந்தாள்.

வந்தியத்தேவனைப் பார்த்து “உத்தமசோழர் ராஜ்யப் பொறுப்பை ஏற்றாலும் அவருக்கு உறுதுணையாய் அருள்மொழி இருக்கப்போகிறான். அவனுக்கு வலக்கையாகத்  தாங்கள் இருக்க வேண்டாமா? எந்த சந்தர்ப்பமும், நிகழ்ச்சியும் அரசியலில் சகஜம் அல்லவா? எந்தச்  சூழ்நிலையிலும் தங்கள் மனதைத்  தளரவிடலாமா? இது போன்ற எண்ணற்ற விஷயங்களைத்  தாங்கள் சந்திக்க வேண்டிவரும். அவைகளில் சில இன்பத்தை அளிக்கவல்லது. பல துன்பங்களைத்  தரக்கூடியவை. சில கோபங்களை வரவழைக்கும். பல மனத்தைத் தளர வைப்பவை. அவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து சம நிலையில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டாமா? என் மனம் கவர்ந்த வந்தியத்தேவரே! நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் கடமைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிந்தித்துப் பாருங்கள்! பாண்டியர் உயிர்நாடியான மணிமகுடத்தையும் இரத்தின ஹாரத்தையும் ஈழத்திலிருந்து மீட்டு வருவது தங்கள் ஒருவராலேயே முடியும்! அதற்குத் தங்களைத்  தயார் படுத்திக்கொள்ளுங்கள். ஈழச் சேனாதிபதிப்  பதவி ஏற்று அருள்மொழிக்குப் பக்க பலமாய் இருங்கள். மணிமேகலையாகிய தெய்வம் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து உங்களை நடத்திச் செல்வாள். என் இந்த நம்பிக்கையைத்  தகர்த்து விடாதீர்கள்!!!” என்று உணர்ச்சிவசமாய்ப்  பேசி முடித்தாள்.

ps2

குந்தவையின் கொவ்வை மலர்களை ஒத்த இதழ்களிலிருந்து பொங்கிய ஒவ்வொரு வார்த்தையும் வந்தியத்தேவன் நரம்புகளை முறுக்கி அவனை நிமிர்ந்து நிற்க வைத்தன. வைராக்கியம் தகர்ந்தது!! மனம் சமச்சீர் தெளிவை  அடைந்தது. !!! தன் கடமை என்ன என்பதை உணர்ந்து, நிலை தடுமாறியதை நினைத்து வருத்தப்பட்டான்.

“தேவி!உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்து உண்மையை விளக்கின. என் கடமையை  உணர்த்தியதற்கு உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கின்றேன். என் சித்தம் நிலை குலைந்து தடுமாறியதற்காக வருத்தப்படுகிறேன்” என்றான்.

குந்தவை வந்தியத்தேவன் சோக உலகத்திலிருந்து மீண்டதை உணர்ந்தாள். அவன் பேசியதைக் கேட்டுப் பெருமிதம் கொண்டாள்.

Image result for kunthavai and vanthiyathevan“வெற்றியோடு திரும்பி வாருங்கள்.உங்களுக்காக நான் என்றென்றும் காத்திருப்பேன்” என்று குந்தவை தன் திருக்கரங்களை நீட்டினாள். வந்தியத்தேவன் தன் சொல் செயலிழந்து கைகளைப் பற்றிக்கண்களில் ஒற்றிக்கொண்டான்.

“திருமலையை முதலில் தஞ்சையில் சந்தித்துப்புதிரில் மறைந்திருக்கும் சில வினாக்களின் விவரங்களைப் பற்றிக் கலந்தாலோசித்துவிட்டுப்  பிறகு என் நீண்ட பயணத்தைத் தொடங்குவேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டு குதிரையில் தாவி ஏறினான். விருட்டென்று திரும்பி குதிரையைத்  தட்டிவிட்டான். குதிரை பிய்த்துக்கொண்டு பறந்தது.

வந்தியத்தேவனின் குதிரை மறையும்வரை பார்த்திருந்துவிட்டு நிம்மதியான பெருமூச்சுவிட்டாள். என்றும் இல்லா ஆனந்தத்துடன் ஓடத்துறைக்குத்  திரும்பினாள் குந்தவை.

(தொடரும்)

 

இலக்கியவாசல் நிகழ்வு – அக்டோபர் 2016

இணையத்தில் கோமலின்                ” சுபமங்களா” ………………..

fullsizerender-4

Image result for கோமல் சுவாமிநாதன்

 

திரு கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1991 முதல்1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த        “சுப மங்களா ” வின் 59இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்”  என்னும் மலரும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன

வெளியிடுபவர்  :                                                      திரு. திருப்பூர் கிருஷ்ணன்

முன்னிலை :                                                                                                                           கவிஞர்  வைத்தீஸ்வரன்

நாள் : அக்டோபர் 15, 2016               சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம்             P.S.உயர்நிலைப் பள்ளி             ராமகிருஷ்ணா மடம் சாலை     மயிலை சென்னை 600 004

sm1

 

sb3

 

sb2

 

கோமல் சுவாமிநாதன் (19351995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர்.

கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 1957 ல் நாடக ஆசையால் சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 ல் அவர்களுக்காகப் ‘புதிய பாதை’ என்ற முதல் நாடகத்தை எழுதினார்.

திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் வசன உதவியாளராகப் பணியாற்றினார்.

1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடககுழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். .

1980ல் இவர் எழுதிய தண்ணீர் தண்ணீர் என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல்,  யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

இதழியல்

வாழ்க்கையின் கடைசியில், தன் நாடகக் குழுவைக் கலைத்து விட்டு இதழியலில் ஈடுபட்டார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப் பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களைப் பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது

( நன்றி : விக்கிபீடியா )

கோமல் படைப்புகள்

சன்னதித் தெரு, 1971,
• நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),
• மந்திரி குமாரி, 1972,
• பட்டணம் பறிபோகிறது, 1972,
• வாழ்வின் வாசல், 1973,
• பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),
• ஜீஸஸ் வருவார், 1974,
• யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
• ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),
• அஞ்சு புலி ஒரு பெண், 1976,
• கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் “இலக்கணம் மீறிய கவிதைகள்” என வழங்கப் பெற்றது),
• ஆட்சி மாற்றம், 1977,
• சுல்தான் ஏகாதசி, 1978,
• சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
• செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),
• தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),
• ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
• அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
• நள்ளிரவில் பெற்றோம், 1984,
• இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
• கறுப்பு வியாழக்கிழமை, 1988,
• நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
• கிராம ராஜ்யம், 1989,
• மனிதன் என்னும் தீவு, 1989,
• அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,
பணியாற்றிய மற்ற படைப்புகள்,
• புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
• மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
• தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
• டாக்டருக்கு மருந்து,
• கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )
• டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் “கற்பகம் வந்தாச்சு” என்ற பெயரில் படமாகியது),
• அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
• அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
• கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)
• என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)

நவம்பரில் வர இருக்கிற தண்ணீர் தண்ணீர் நாடகத்திற்கான ஒரு டீசர்

[youtube https://www.youtube.com/watch?v=hsuLSfswulo&w=560&h=315

அக்டோபர் 15ஆம் தேதி  இணையத்தில் வெளிவந்துள்ள “சுபமங்களாவின்” இணையதளத்திற்குச் செல்ல :

http://www.subamangala.in/

நேர்மையே உன் நிறம் என்ன..? — நித்யா சங்கர்

Image result for school admission in chennai vijayadashami i

 

‘ஐ ஆம் ஸாரி மேடம்… நான் எத்தனை தடவை
சொல்றது? எங்க ரூல்ஸ்படி எல்.கே.ஜி. அட்மிஷனுக்குக்
குழந்தைக்கு மூன்று வருடம் பத்து மாதம் வயதாகி
யிருக்கணும். உங்க குழந்தைக்கு மூன்று வருடம் ஒம்பது
மாதம் தான் ஆகியிருக்கு. ஸோ.. ஒரு மாதம் ஷார்ட்.
அட்மிஷன் கொடுப்பதற்கில்லை..’ என்று அடித்துக் கூறினாள்
பிரின்ஸிபால்.

சுபாஷ் நகர் கான்வென்ட். தன் பெண்ணிற்கு அட்மிஷன்
வாங்குவதற்காகச் சென்றிருந்த சுமதி, பிரின்ஸிபாலின்
முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்-
திருந்தாள். அவள் பக்கத்தில் பிரமித்துப் போய் உட்கார்ந்-
திருந்தாள் அவள் தோழி வனஜா. பெயர் பெற்ற லேடீஸ்
கிளப்பின் பிரஸிடென்ட்.

‘ஸிஸ்டர்.. நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. இந்த ஒரு
மாதம் ஷார்ட்டேஜுக்காக அவளுக்கு ஒரு வருடம் வீணாப்
போய் விடும். நீங்க மனது வெச்சா கொஞ்சம் அட்ஜஸ்ட்
பண்ணலாம்..’ என்றாள் சுமதி தன்னை சமாளித்துக் கொண்டு
சிறிது கெஞ்சலாக.

‘என்ன நீங்க..? சொன்னதையே திருப்பித் திருப்பிச்
சொல்லிக்கிட்டு..? மூன்று மாதம் பத்து மாதம் முடிஞ்ச
குழந்தைக பல பேர் கியூவிலே நின்னுட்டிருக்காங்க… அவங்-
களுக்கெல்லாம் நான் அட்மிஷன் கொடுத்தாகணும்..”

இதுவரை பேசாமலிருந்த வனஜா, ‘ஸிஸ்டர்.. சுமதியுடைய
முதல் குழந்தை உங்க ஸ்கூலில்தான் படிக்குது.. ஸோ.. அவ
இரண்டாவது பெண்ணையும் இங்கேயே சேர்க்கப் பிரியப்-
படறா.. இரண்டு பேரும் சேர்ந்து ஸ்கூலுக்கு வந்துட்டுப்
போகலாம் பாருங்க..’ என்றாள் மெதுவாக.

‘ஐ ஆம் ஸாரி.. அதுக்கு நான் என்ன செய்யறது..? எங்க
ஸ்கூலிலே அட்மிட் பண்ணிக்க முடியாது.. வேறே ஏதாவது
ஸ்கூலிலே டிரை பண்ணிப் பாருங்க.. ஈ·ப் யூ ஆர் ஸோ
பர்ட்டிகுலர், பெரிய பெண்ணுடைய டி.ஸி.யையும் வாங்கிக்-
கிட்டு அந்தப் பள்ளிக் கூடத்திலியே சேர்த்துடுங்க. ஸோ..
ரெண்டு பெண்களும் சேர்ந்தே ஸ்கூலுக்குப் போகலாம்’
என்றாள் பிரின்ஸிபால் சிறிது எகத்தாளத்தோடும், இறுமாப்-
போடும்.

வனஜாவின் முகம் கோபத்தால் சிறிது மாறியது. சுமதி
நிதானத்தோடு இருக்கும்படி அவள் கையைப் பிடித்து
அமுக்கினாள்.

மேலெழுந்து வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
வனஜா, ‘ஸிஸ்டர்.. உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
நீங்கள் அட்மிஷன் கொடுத்துள்ள ஐம்பது ஸ்டூடண்ட்ஸில்
அட்லீஸ்ட் இருபது ஸ்டூடண்ட்ஸ்க்காவது நீங்க விதிச்ச
வயத விட கம்மியாத்தான் இருக்கும். அவங்க ·பால்ஸ்
பர்த் ஸர்டி·பிகெட் வாங்கிட்டு வந்து குழந்தைகளைச் சேர்த்தி
யிருக்காங்க.. ஆனா இந்த சுமதி ரொம்ப நேர்மையா குழந்-
தையின் சரியான பிறந்த தேதியைக் கொடுத்து பர்த் ஸர்டி-
·பிகெட் வாங்கிட்டு வந்திருக்கா.. பட், இந்த ஒரே ஒரு
மாத ஷார்ட்டேஜுக்காக எங்க குழந்தைக்கு அட்மிஷன்
இல்லை. இதைக் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா..?’
என்றாள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக.

‘அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நாங்க
ரெகார்டுபடிதான் போக முடியும்’ என்றாள் பிரின்ஸிபால்
முடிவாக.

சில நிமிடங்கள் யோசனையோடு உட்கார்ந்திருந்த
வனஜா, ‘ஸிஸ்டர்.. ஈ·ப் யூ டோன்ட் மைன்ட்.. கொஞ்சம்
டெலிபோனை யூஸ் பண்ணிக்கலாமா..? என்று கேட்டாள்.

‘ம்..’ என்ற பதில் வந்தது பிரின்ஸிபாலிடமிருந்து.

யாரிடம் பேசப் போகிறாள் என்ற திகைப்போடும்,
ஆவலோடும் உட்கார்ந்திருந்தாள் சுமதி.

டெலிபோன் நம்பர்களைச் சுழட்டிய வனஜா, சில
வினாடிகள் காத்திருந்து விட்டு, ‘ஹலோ.. ஆன்டி, எப்படி
இருக்கீங்க.. நான் வனஜா பேசறேன். ஸி. எம். இருக்காரா?
கொஞ்சம் கனெக்ஷன் கொடுக்கறீங்களா..’ என்று கூறிக்
காத்திருந்தாள்.

‘ஹலோ ஸார்.. நான் வனஜா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா? உங்க வெளி நாடு ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது..?’

‘ …. ‘

‘ஓ.. வெரிகுட்.. நான் இப்ப சுபாஷ்நகர் கான்வென்டி-
லிருந்து பேசறேன். ஒரு சின்ன பிராப்ளம்….’

‘ ….’

‘சேச்சே… அப்படி ஒண்ணுமில்லே.. ப்ராப்ளமில்-
லேன்னாலும் ·போன் பண்ணுவேன். இந்த ரெண்டு மாசமா
ஒரே பிசி.. என் பிரண்டு சுமதியுடைய ஸெகன்ட் டாட்ட-
ருக்கு அட்மிஷனுக்காக வந்தோம். ஆனா ஒரு மாசம்
ஏஜ் ஷார்ட்டேஜுங்கறாங்க..’

‘…..’

‘என்ன..? மூணு வயது நாலு மாதக் குழந்தைகளையும்
இவங்க சேர்த்துக்கிட்டிருக்காங்களா..? உங்களுக்கு
கம்ப்ளெயின்ட் வந்துருக்கா.. அப்போ ஏன் இந்தக்
குழந்தையை மட்டும் சேர்த்துக்க மாட்டேங்கறாங்க..?’

‘….’

‘சரி, நாங்களும் ரிப்போர்ட் பண்ணறோம்.. எஜுகேஷன்
மினிஸ்டருக்கு ஒரு லெட்டர் அனுப்பிச்சிட்டு உங்களுக்கும்
ஒரு காபி அனுப்பறோம்.. நாளைக்கு வந்து நான் உங்களைப்பார்க்கறேன்..’ என்று டெலி·போனை வைத்து விட்டு, ‘தாங்க்யூ ஸிஸ்டர்.. வா சுமதி போகலாம்..’ என்று எழுந்தாள் வனஜா

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த
பிரின்ஸிபாலின் முகம் வெளிறி யிருந்தது.

‘ஒரு நிமிஷம்.. நீங்க ஏன் ஸி. எம். லெவலுக்கு போயிட்
டீங்க..? ஸி. எம்.மைத் தெரியும்னு முன்னாலேயே சொல்லக்
கூடாதா..? இந்தம்மாவின் குழந்தைக்கு அட்மிஷன் கொடுக்-
கிறேன்.. ஆனா.. ஒரு கண்டிஷன்.. ஸி.எம். கிட்டே சொல்லி
ஏதோ எங்க ஸ்கூலைப்பத்தி கம்ப்ளெய்ன்ட்ஸ்னு சொன்னீங்-
களே.. அதைப் பத்தி ஸிவியரா ஆக்ஷன் எடுக்காம பார்த்-
துக்கணும்’ என்றாள் பிரின்ஸிபால் அழாக் குறையாக.

வனஜா பெருமையோடு சுமதியைப் பார்த்துச் சிரித்துக்
கொண்டே அமர்ந்தாள்.

சுமதிக்கும், வனஜாவிற்கும் ராஜோபசார மரியாதை
நடந்தது.

குழந்தையின் அட்மிஷன் ·பீஸைக் கட்டிவிட்டு
வெளியே வந்த சுமதி, ‘வனஜா இதுவரை எங்கிட்டே நீ
சொன்னதேயில்லையே, உனக்கு ஸி. எம். மைத்
தெரியும்னு. நீ இந்த ஏரியாவுலேயே பெரிய லேடீஸ்
கிளப் பிரஸிடென்ட்னு தெரியும்.. அதனால்தான் நானே
உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆனா உனக்கு
சீ·ப் மினிஸ்டரைத் தெரியும்னு தெரியாது..’ என்றாள்.

வனஜா கடகடவென்று சிரித்தாள். ‘சீ·ப் மினிஸ்-
டரையாவது… தெரியறதாவது.. ஏதோ ஒரு நம்பரைச்
சுழற்றினேன். எங்கேஜ்ட் ஸவுன்ட் வந்தது. சீ·ப்
மினிஸ்டர் கிட்டே பேசற மாதிரி ஒரு டயலாக். அவ்வளவு-
தான். உன் பெண்ணுக்கு அட்மிஷன். இந்தக் காலத்துலே
நேர்மைக்கும், உண்மைக்கும் விலையே இல்லே..’

திகைத்து நின்றாள் சுமதி.

நேர்மையே உன் நிறம் என்ன…?

 

 

சட்டத்தில் எப்படி ஓட்டை போடுவது? – சாய்

 

சில  விசித்திரமான வழக்குகள்:

பாராசூட் எப்போதும் நாம் தலைக்குத் தடவுகிற தேங்காய் எண்ணை தானே. ஆனால்  தயாரிப்பாளர்கள் அதை  வெறும்  தேங்காய் எண்ணை என்று தான் விளம்பரப்படுத்துவார்களே தவிர, தலைக்கு உபயோகிக்கும்                                                 ஹேர் ஆயில் என்று சொல்லவே மாட்டார்கள். காரணம் உணவுப் பொருளாக உபயோகிக்கும்  தேங்காய் எண்ணைக்கு எக்ஸைஸ் வரி கிடையாது. ஹேர் ஆயிலுக்கு உண்டு. இன்னொரு அட்வான்ஸ்டு பாராசூட் எண்ணை என்று ஒன்று உண்டு. அதை  ஹேர் ஆயில் என்று சொல்கிறார்கள். அதுக்கு எக்ஸைஸ் வரி உண்டு.  இப்போ புரியுதா?

அரசாங்கம் என்ன செய்தது தெரியுமா? 200 மில்லிக்குக் கீழே  தேங்காய் எண்ணை இருந்தால் அது ஒப்பனைப் பொருளாகக் கருதப்படும் என்றும் அதற்கான  எக்ஸைஸ் வரி கட்டவேண்டும் என்றும் அறிவித்தது.

பாராசூட்  தயாரிப்பாளர்கள்   இதை எதிர்த்து அப்பீல் சென்று வெற்றி அடைந்தார்கள். அதனால் பாராசூட் தேங்காய் எண்ணயை நம் தலையில் மட்டுமல்ல அரசாங்கத்தின் தலையிலும் தடவுகிறார்கள்!

 

தெரு – அழகியசிங்கர்

நான் எங்கே? – எஸ் எஸ்

 

Image result for old broken cycle sketch

என் இரு சக்கர வாகனம் நின்றுவிட்டது.

இத்தனை நாள் இருந்து  வந்த எங்கள் தோழமை முடிந்துவிட்டதா?

மக்கர்  செய்ததும் கொஞ்சம் தட்டிக் கொடுத்தவுடன்  புறப்படுமே, அது மாதிரித் தற்காலிக வேலை நிறுத்தமா? இல்லை, முற்றிலும் பழுதாகிவிட்டதா?

இயந்திரக் கோளாறா ? இயக்கக்  கோளாறா?                                                 காற்றுப் போய் விட்டதா? தீனி தீர்ந்துவிட்டதா?                                            நரம்பு தெறித்து விட்டதா? துடிப்பு நின்றுவிட்டதா?                                      முகம் கோணிக்கிடக்கிறது. உருவமே மாறிப்போய் விட்டது.

வெளிச்சமே இல்லை. எல்லா ஓட்டைகளிலிருந்தும் பிசிக் பிசிக்கென்று ஏதேதோ வழிகின்றன.

இதை என் அம்மா அப்பா தான் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்.  எவ்வளவு சீராட்டல்கள்? பாராட்டல்கள் ?

திருமணமானதும் என் மனைவிக்குத்தான் இதன் மீது கொள்ளை கொள்ளையாய் ஆசை. அவள் இதைக் கொஞ்சித் தழுவும் போது எத்தனை ஆனந்தம்? மகிழ்ச்சி? சந்தோஷம்? குதூகலம்?

என் மகனும் மகளும் இதில் பவனி  வரும்போது புதிதாக ஒன்று தெரிந்ததே ? அது  என்ன? ஓ ! அதுதான் சொர்க்கமா?

இன்று,

இதைத் தூக்கி எறிந்துவிடு என்று எல்லோரும் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

என்னைவிட,  இதனால்,  இவர்களுக்குத் தான் கஷ்டம் அதிகம் போலிருக்கிறது.

இத்தனை காலம் இதனுடன் பழகிய எனக்கு இதைத் தூக்கி  எறிவது அவ்வளவு  சுலபமாயில்லை. முடியவும் முடியாது. முடியவே முடியாது.

என் மகன் வந்தான். ” நீ தானடா அதனை எடுத்து எறிய வேண்டும்” என்று எல்லோரும் அவனிடம் சொன்னார்கள். அதனை   அப்படி எறிய விடுவேனா?

என் மகள் வந்தாள். அவள் கண்ணீர் அதன் மேல் பட்டது. இனி அது கண்ணீருக்கும் தகுதியற்றது என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது .

கட்டின மனைவி வந்தாள்.அவளுக்குத் தானே அதன் மேல் முதல் உரிமை. துயரம் கண்ணில் தெறிக்க அதைக் கட்டிப் பிடித்து அழுதாள். பிறகு உண்மையின் நிதர்சனத்தைப்  புரிந்து கொண்டாள் .

மற்ற உறவினர்கள் எல்லாரும் வந்தார்கள். ‘இது இப்படித்தான். என்றைக்காவது வாய் பிளக்கும் ‘ என்று ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டு  புறப்பட்டார்கள். 

எனக்கே புரிந்துவிட்டது. அதன் துடிப்பு மட்டுமல்ல இயக்கமும் நின்றுபோய் விட்டது.

Image result for old broken cycle clipart

நேரமாகிவிட்டது. மணி அடித்தாகி  விட்டது. எங்கோ ‘ஊ’ என்று ஊளையிடும் ஓசை கேட்கிறது. நாலு பேர் அதைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

அதில்லாமல் நானா?

நான் எங்கே?    

 

தீவு பிறந்த கதை – ஸர்ட்ஸீ(SURTSEY) – ராமன்

உலக வரைபடத்தில்  இல்லாத நிலப்பரப்பு  திடீரென்று கடல் அடிமட்டத்திலிருந்து மேலே முளைத்தது –  புதிய தீவு ஒன்று பிறந்தது!!

தீவுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஸர்ட்ஸீ (surtsey).

பிறந்த வருடம் 1967ல்.

இடம் ஐஸ்லாண்ட் நாட்டின் தென்கோடி எல்லை.

pic1pic2

 

 

 

 

       ஆரம்ப காலத்தில்                             15 நாட்களுக்குப் பிறகு


 pic3pic4

ஸர்ட்ஸீ தீவு                                   ஐஸ்லாண்ட் – தென்கோடியில் ஸர்ட்ஸீ

 

வட அட்லாண்ட்டிக் கடலில்  மட்டத்திலிருந்து கீழே 130 மீட்டரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தரை மட்டத்திற்கு நவம்பர் 1963ல் வெளிவந்து 1967 ஜூன் வரை நீடித்தது.  2.7 சதுர கிமீ-ல் இருந்த நிலப் பரப்பு தற்போது அலை அரிப்பினால் 1.3 சதுர கிமீ-ல் குறைந்து காணப்படுகிறது.

 ஸர்ட்ஸீயின் பெயருக்கு, இயற்கையை வழிபட்டு வந்த பழங்கால ஸ்காண்டினேவியாவின் நார்ஸ் மிதாலஜியில்  அனல் அல்லது பூதத்  தீவு என்று பொருள்.

முதலில் எரிமலையின் மூன்று வாய்கள் மூலமாக ஏற்பட்ட வெடிப்புகள் கடைசியில் ஒன்றாக இணைந்து இந்த தீவு உருவானது. 130 மீ கடலுக்கு அடியில் சாதாரணமாக ஏற்படும் வெடிப்புகள் பல திசைகளில் சிதறி தண்ணீர் அழுத்தத்தினால்  நனைக்கப்பட்டு பரவி விலகிவிடும். தொடர்ந்து  வெடிப்புகள் நீடித்தால் அதன் மூலமாய் வெளிவரும் உருகிய உலோகக் கலவைகளினால் மேடுகள் கிளம்பும். வெடிப்புகளினால் கட்டுப்படுத்த இயலாத மேடுகள் பெரிதாகிப் பெரிதாகி  கடல் மேல் மட்டத்திற்கு மேலே வந்துவிடும்.

1964ம் ஆண்டில் தண்ணீர் கலவையினால் நிகழ்ந்த வெடிப்புகளின் வாய்களை தண்ணீர் வெகு எளிதில் செல்ல இயலாததால் எரிமலையின் வீரியம் குறையத் தொடங்கியது. அப்போது எரிமலை குழம்புகளின் ஊற்றுகள் மற்றும் ஆறுகளின் செயற்பாடுகள் தொடங்க ஆரம்பித்தன. இறுக்கமற்ற எரிமலை சாம்பல்களும், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பாறைகளும் எரிமலை குழம்புகளினால் மூடப்பட்டு  தீவு கடல் அலைகளினால் அடித்துக்கொண்டு போகவிடாமல் காப்பாற்றப்பட்டது. எரிமலை 1967 ஜூனில் சாந்தம் அடைந்தது. இப்போது வருடா வருடம் ஸர்ட்ஸீ 1.0 ஹெக்டேர் நிலத்தை இழந்து வருகிறது. இழந்த நிலம் எரிமலை குழம்பினால் மூடப்படாத இறுக்கமற்ற பாறைகளும் சாம்பல்களுமாகும்!  குழம்பினால் முற்றிலும் மூடப்பட்ட இத்தீவு மறைய இப்போது வாய்ப்பில்லை.

பல்லுயிர் பெருக்கத்தைப் (biodiversity) பற்றி ஆராய இத் தீவு முதல் நிலையான உதாரணம். பாறைகளில் 1967ம் வருட இறுதியில்   பாசி மற்றும் பூக்கள் இல்லாத செடிகளும் தென்பட ஆரம்பித்தன. 2008ம் ஆண்டு 69 வகையான செடி கொடிகள் தென்பட்டு கடைசியில் 30 மட்டுமே இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்தாபனமாயின. இடம் மாறும்(migratory) பறவைகள் தீவில் கூடு கட்ட ஆரம்பித்தன. இதனால் மண்ணின் தரம் உயர ஆரம்பித்தது. புதிய புதிய செடி இனங்கள் வருடத்திற்கு 5 வீதம் உண்டாகின்றன. பறவைகளின் பெருக்கம் தீவின் செடிகொடிகளின் பெருக்கத்திற்கு உதவின. இப்போது 12 வகையான பறவைக்  கூட்டங்கள் இங்கு கூடு கட்ட வருகின்றன. பஃபின், ஸீல் மற்றும் ஸ்டார் மீன்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து காற்றினால் தள்ளப்பட்டு மற்றும் அதன் பலத்தினாலேயே வந்த பறக்கும் பூச்சிகள், மரக்கிளைகளில் தங்கி மிதந்து வந்தவைகள், கரையில் ஒதுங்கிய கடலில் செத்த உயிரினங்கள் மூலமாகவும் இன்று 663 பூச்சிகள் முக்கியமாக உண்ணிகள் கணக்கிடப்பட்டுள்ளன.

pic5

pic6

 

பஃபின்                                                                          ஸீல்

ஆராய்ச்சியாளர்கள் வசிக்கும் குடில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தீவில் வாழ எவருக்கும் அனுமதி கிடையாது. ஐஸ்லாண்ட் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல இயலாது.

தற்சமயம்  UNESCOவினால் அங்கீகரிக்கப்பட்டு காப்பாற்றப்படும் தீவாக விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!!!

 

 

 

 

 

 

 

 

அகக் கண் – சிந்தாமணி

மகாகவி பாரதியார் தம் “விநாயகர் நான்மணி மாலை”யின் தொடக்கத்திலேயே விநாயகர் வழி பாட்டால் உண்டாகும் பயன்களைப் பட்டியல் இடுகின்றார். ‘உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்’. அது என்ன அகக்கண்? நாம் அறிந்த கண் இவ்வுலக மாந்தரை – பொருட்களை பார்க்கவல்ல புறக்கண் மட்டுமே. நம்மைப் பொறுத்தவரையில் அகம்- மனம் என்பது சிந்திக்க மட்டுமே.

அது அப்படியே இருக்கட்டும்.

இறை நம்பிக்கை உள்ள நம்மில் பலர் கோவிலுக்குச் செல்கின்றோம், பூசை அறையிலும் வழிபடுகின்றோம், தோத்திரங்கள் சொல்கின்றோம், அர்ச்சனை செய்கின்றோம், ஆசாரம் காக்கின்றோம். இவை எல்லாம் புற வழிபாடுகள்.

இதைப் பற்றி தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ன கூறுகிறார்?

இறைவன்  எங்கோ ஆலயத்தில் மட்டுமே  அலங்காரம் செய்துகொண்டு  இருக்கின்றான்   என்று கருதி அவன் மீது பக்தி உள்ளவனைப்போல்  வெறும் பாவனையோடு பக்தி வேடம் அணிந்தேன். என் பொய்மையையும் போலி பக்தியையும் அவன் அறியமாட்டான் என்று நம்பினேன்.

ஒரு நாள் என் அகக்கண் திறந்தது. அதில் பார்த்தால்  வீட்டில் மாட்டப்பட்டுள்ள CCTV போல,  என் உள்ளத்தின் உள்ளே அவன்மிக ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றான்.

அதுமட்டுமல்ல.

அங்கேயே இருந்துகொண்டு நான் போடும் பக்தி வேஷங்களையெல்லாம் – கள்ளத்தனங்களையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டு தான் இருக்கின்றான் என்பதை உணர்ந்தேன்.

அடடா, இதை  அறியாமல் இத்தனை நாள் நான் வெளிவேஷம் போட்டுக்கொண்டிருந்தேனே என்ற என் அறியாமையை  எண்ணி வெட்கப்பட்டு விலா நோகச் சிரித்தேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் முழுப் பாடலைப் பார்ப்போமா?

உள்ளத்தே உறையும் மாலை
      உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
      தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
      உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
      விலவு அறச் சிரித்திட்டேனே

 

இதையே அப்பர் என்கிற திருநாவுக்காரசாரும் சொல்கிறார். எப்படி?

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே

 

Image result for pictures of apparநான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தை வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து-  உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்.    ( நன்றி: சந்தானம் நாகராஜன் )

யார் முதலில் சிரித்தார் ?  யார் மூலவர் ? யார் உற்சவர்? யார் முன் மொழிந்தது? யார் வழி மொழிந்தது? யாரைப் பார்த்து  யார் காப்பி அடித்தார்கள்?  என்று நம் மனத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு தோன்றுகிறதல்லவா?

அதையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணரும் போது  நம் வேஷமும் கலைந்து போய் விடுகிறது.  

படைப்பாளி – எஸ் கே என்

பாவண்ணன்

pd1

மொழிபெயர்ப்புகள், கவிதைகள், நாவல்கள். குறுநாவல்கள், கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள், நூல்-திரை-நாடக விமரிசனங்கள் என பன்முகப் படைப்பாளியான பாவண்ணனின் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி  பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. தமிழக அரசின் குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது, இலக்கிய சிந்தனை நாவல் பரிசு, கதா விருது போன்று பல அங்கீகாரங்கள் பெற்ற இவர், பைரப்பாவின் மகாபாரதப் பின்னணி கன்னட நாவலின் மொழிபெயர்ப்பான “பருவம்’ நூலுக்காக 2005 சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்.

* * * * * * * * * *

இவரது நலிவு என்னும் சிறுகதை

அருமாந்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சைவண்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது.

Image result for village school teacher in a tamil nadu christian school

என்று தொடங்குகிறது

அங்கு ஆசிரியையான லூசி அடவில்லாத கணவனாலும், நிரந்தரமற்ற வேலைகளாலும் இன்னல்களே வாழ்க்கையாக வாழுபவள்.

எப்போதும் பேருந்து கான்வென்டிற்குச் சற்றுத் தொலைவிலேயே நிற்கிறது. இறங்கியதும் நடக்கத்தொடங்காமல்  ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டு புழுதி அடங்கும்வரை கைக்குடடையால் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு நின்று விடுகிறாள்.   வாந்தி வருவதுபோல் இருக்கிறது. நடக்கக்கூடப்    பலவீனமாக இருக்கிறது. தினப்படி ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கி சாப்பிட்டிருந்தாலோ, ஒரு மாதமாவது பெரியாஸ்பத்திரியில் பெட்டில் இருந்து சிகிச்சை பெற்றிருந்தாலோ குணமாகி இருந்திருக்கலாம். ஆஸ்பத்திரியில் சேரலாம என்று கணவனிடம் கேட்டபோது பதிலேதும் சொல்லவில்லை. நான்கு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை.

கணவன் ஜோசப் ஒருமுறை சஸ்பென்ஷனில் இருந்தபோதுதான் குழந்தை பிறந்தது. அந்தச் சமயத்தில்தான் இந்த வாந்தியும் தொடங்கியது. முன்பெல்லாம் வேலை பார்த்த பூச்சி மருந்துக்கடை, பேப்பர் ஃபாக்டரி காரணமாக வரும் சாதாரண வாந்தி என்று நினைத்தாள். 

அவள் வேலை பார்த்துவந்த  பூச்சி மருந்துக்கடைக்கும், அனாதை இல்லத்திற்கும் ஜோசப்பின் அம்மா வந்து தரக்குறைவாக சத்தம்போட்டது, சத்தம்போட்ட அம்மாவை ஜோசப் இழுத்துப்போட்டு உதைத்தது என கசப்பான அனுபவங்கள்தான் வாழ்க்கை. திரும்பவும் ஜோசப்பிற்கு சஸ்பென்ஷன். கான்வென்ட் சம்பளத்தில் பஸ் செலவு போகத்தான் குடும்பச் செலவுகளுக்கு. இடையிடையே காசு கேட்டுக்கணவனின் தொல்லை.

வரவர இந்த வாந்தியும் சோதனை செய்கிறது. நேற்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் குடலே அறுந்து போகிற மாதிரி வலிகண்டு புரட்டியது. வகுப்பறைக்குள்ளேயே அசிங்கமாகிவிடுமோ என்னும் பயம். இதோ வாசலுக்குப் போய்விடலாம் என்ற அவசரத்தில் நடக்க, வயிற்றில் மேஜை இடிக்க,  காலையில் சாப்பிட்ட கம்பு மாவுக்களி, மருந்து மாத்திரைகள் எல்லாம் வெளியில். ஒரே களேபரம் எல்லா மிஸ்களும், மதரும் வந்துவிட்டார்கள். பொன்னம்மா ஆயாதான் இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாள். வகுப்பை அப்படியே விட்டுவிட்டு பஸ் ஏற்றி  அனுப்பிவிட்டார்கள்.

இந்தக் கம்பத்திலேயே சாய்ந்துகொண்டிருப்பதை விட மெதுவாக கான்வெண்டே போய்விடலாம் எனத் தோன்றுகிறது.

இடுப்புப்பக்கம் இற்றுப்போகிறமாதிரி வலிக்கிறது. கொஞ்சம் தாராளமாய் உட்கார்ந்தால் தேவலாம் போல் இருக்கிறது. மின்னுகின்ற தண்டவாளம் பார்வையில் பட்டு ‘கான்வென்டுக்கே போயிர்லாம், பக்கத்தில் தானே’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு நடக்கிறாள்.

குழந்தையின் ஞாபகம் வருகிறது. இந்த வேலையை வாங்கிக்கொடுத்த மேரி அத்தையும் அவள் புருஷனும் நினைவிற்கு வருகிறார்கள்.

ஜோசப், ஜோசப் அம்மா மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். மேரி அத்தை,  மேரி அத்தை புருஷன் மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். எல்லாம் மாதாவின் செயல்.

முதல் பெல் அடிக்கும் பொன்னம்மாளின்     ‘இப்போது பரவாயில்லையா?’ என்ற கேள்விக்கு ‘ம்..’ என்று பதிலளிக்கிறாள். ஸ்டாஃப் ரூமை நெருங்கும்போது எதிர் ஹாலிலிருந்து மதர் கூப்பிடுவது கேட்கிறது.

குட் மார்னிங், இப்ப எப்படியிருக்கு, நல்லாயிருக்கேன்’ , டேக் யுவர் சீட், பரவாயில்லை போன்ற உரையாடல்களுக்குப் பிறகு

‘தப்பா எடுத்துக்கக் கூடாது. நேத்து நீங்க போனப்புறம் ஒங்களைப்பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்னேன். ஒரு வியாதியை ரெண்டு வருஷமா வளர உட்டுக்னு இருக்கிறது ரொம்ப தப்பு. ஆரோக்யம்தான் எல்லாத்துக்கும் அடித்தளம். நீங்க அவசியம் டாக்டரைப் பார்க்கணும். நல்லா ஓய்வெடுக்கணும் சீக்கிரமா குணமாவனும். இன்னிக்குத் தேதி பதினாலுதான். ஆனா உங்க முழுச் சம்பளமும் இந்த பாக்கெட்ல இருக்கு’

‘மதர்…’

‘ஒங்களை நாங்க  வெளியேத்தறதா நினைச்சுக்கக் கூடாது. நீங்க மருத்துவம் செஞ்சிக்கதான் அனுப்பறம். ஒங்க உடம்பு குணமாக எல்லோரும் மாதாவை  பிரார்திக்கறம்.’

பேச ஒன்றுமில்லாமல் இரண்டு சொட்டுக் கண்ணீருடன் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு  வெளியே வரும்போது மதர் தோளில் தட்டிக் கொடுக்கிறாள்.

தொடை நடுக்கம் அதிகமாகவே வாசலைப் பார்த்து நடக்க இருந்த லூசி ஸ்டாஃப் ரூம் பெஞ்சில் உட்காருகிறாள்.

என்று கதை முடிகிறது.

பாவண்ணனின் பல கதைகள் எதார்த்தங்களையும், போராடுதல்களையும் இயலாமையையும் உள்ளது உள்ளபடி சித்தரிப்பவை. இவரது ‘ஜெயம்மா’ ,’கையெழுத்து’ போன்ற கதைகள் குறிப்பிடத் தக்கவை.

 

பாபநாசத்தில் அக்டோபர் இரண்டில் – காந்தி-சாஸ்திரி -காமராஜ் -தினமலர் ஆசிரியர் விழா