மார்ச்  2014 

                         பூ : ஒன்று ———————- இதழ் : நான்கு 

image

இ -பத்திகையின் சிறப்பு ஆடியோவும்  வீ டியோவும் தான்! சாதாரண  பத்திகைகளில் இதை அனுபவிக்க முடியாது.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கோச்சடையான் படத்தின் டிரைலர் லிங்க்கும் , 108 அம்மன் போற்றிப் பாடலும் , Happy Song ம், Twinkle Twinkle little star – நர்சரி  ரைமும் ஆடியோவாக உங்களை அசத்தப் போகிறது!

மேலும் இது ஹோலியின் வருகையை வரவேற்கும் இதழ்!வண்ணங்களின்  மெருகும் கலந்து நிறைந்து இருக்கும்!

ஒரு கவிதை போட்டியும்  இருக்கிறது!

ஒரு பக்கக் கதைகள் , ஜோக்குகள், கவிதைகள்  ஆகியவைகளும் பரந்து காணப்படுகின்றன. 

படிப்பவர்கள் தங்கள் கருத்தையும் படைப்புகளையும்  கீழே குறிப்பிட்டுள்ள இ -மெயிலுக்கு  அனுப்புங்கள்! பிரசுரிக்கப்படும்!

=======================================================

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

========================================================

தலையங்கம்

அரசியல் ரம்மி 

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வரப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்!

எத்தனை கருத்துக் கணிப்புகள்!

மோடி அலை வீசுகிறதா? ஆம் ஆத்மி வலை வீசுகிறதா? காங்கிரஸ் விலை பேசுகிறதா? 

பி ஜே பிக்கு இது அருமையான சந்தர்ப்பம்! கருத்துக் கணிப்புக்கு ஊடே அதன் வெற்றி மாலை தெரிகிறது! மோடி பிரதமராவதும் உறுதியாகத் தெரிகிறது!

தமிழ் நாட்டில் சீட்டுக் கட்டில் ரம்மி செட் சேர்ப்பது போலே கட்சிகள் ஒட்டிக் கொள்கின்றன! இந்த ஆட்டம் முடியும் வரை அவர்கள் ஒட்டி உறவாடுவார்கள்! அடுத்த ஆட்டத்தில் செட் மாறும்!

image

       

  • தைரியமாக  பிரதமர் கனவில் ஜெயலலிதா தனி அணி- நாற்பதும் எனக்கே என்று.
  • பி ஜே பி , விஜயகாந்த் , வை கோ , ராமதாஸ் ஒரே அணியில் சண்டை .போட்டுக்  கொள்கிறார்கள்!
  • தி மு க விற்கு கூட்டணி என்று சொல்லிக் கொள்ள சில கட்சிகள்  உள்ளன!
  • ஆனால் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் மட்டும் பாவம் தனித் தனி!
  • தேர்தல் நெருங்க நெருங்க இந்த ரம்மியில் கொஞ்சம் மாறுதல் ஏற்படலாம்!
  • சில ஜோக்கர்கள்  ரம்மிக்கு கை கொடுக்கலாம். 
  • தேர்தலுக்குப் பிறகு புது செட் அமைந்தாலும்  அமையலாம்!

நமது வாக்காளர்கள் எப்பவும் புத்திசாலிகள்!

இந்திராகாந்தியின் எமர்ஜென்சியை தூக்கி எறிந்து ஜனதாவைக் கொண்டு வந்தார்கள்!ஜனதா கிச்சடி ஆனதும் அதைத் தூக்கி அடித்து  மீண்டும் இந்திராவைக் கொண்டு வந்தார்கள். ராஜீவ் காந்தியை எதிர்க்கட்சியில் உட்கார வைத்தார்கள்! வாஜ்பாயின் இந்தியாவை ஒளிர விட்டார்கள்! சோனியாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் ஆட்சியைத் தந்தார்கள்!

இன்றைக்கு மோடி கையில் செங்கோல் கொடுக்கப் போகிறார்கள்?

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலும் பண பலமும் தான் உண்மையில் ஆட்சி புரிகின்றன! இவற்றின் பிடியிலிருந்து நம்மைக் காக்க யாருமேயில்லையா?

ஏனில்லை ! நான் இருக்கிறேன்!’ என்று சினிமா பாணியில் யாராவது வரமாட்டார்களா? என்று ஆவலோடு காத்திருக்கிறான்  இந்தியக் குடிமகன்!

கணபதி!கணபதி!கணபதி!

                                                               

கணபதி!கணபதி!கணபதி!
கணபதி!கணபதி!கணபதி!

கணபதியானை துதித்துப் பாரும்  
கணமதில் மரண  பயமது சாகும்  
கணபதி பேரைச் சொன்னால் போதும் 
கனவில் செய்த பாவமும் போகும்

கணபதி!கணபதி!கணபதி!
கணபதி!கணபதி!கணபதி!

ஒரு பக்கக் கதை

டாக்டர் 

கல்யாணம் ,குழந்தை பெத்துக்கிறது இதையெல்லாம் நினைச்சா ஸ்வேதாவுக்கு பயம்! அப்போது தான் தினத்தந்தியில் விளம்பரத்தைப் படித்தாள். டாக்டர் மிருதுலா தேவியின்  "  A to Z’  ட்ரீட்மெண்ட்டைப்  பற்றி!

லிஸ்டைப் படித்தாள். வேடிக்கையாக இருந்தது! காதலிப்பது எப்படி, கணவனுடன் ஜாலியாக இருப்பது எப்படி, குழந்தை பெத்துக்க  வழி, பெத்துக்காம இருக்க வழி, பால் கொடுப்பது எப்படி, மற்றும் தொப்பை குறைய முகப்பரு போக்க இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு ட்ரீட்மெண்ட் தருகிறாராம்

                     image

.ஆனால் பாவம் டாக்டர் மிருதுலா தேவிக்கு அம்பது வயதாகியும் இன்னும் கல்யாணமே ஆகலை!

கோச்சடையான் – The Legend – Theatrical Trailer (Tamil) ft. Rajinikanth, Deepika Padukone

“ கோச்சடையான்” ஐ கிளிக் செய்து தலைவரின் ட்ரைலரைப் பாருங்கள்!

சத்யம் திரையரங்கில் 9, மார்ச் அன்று நடைபெற்ற ஆடியோ ரிலீஸ் செம தூள்! ஷாருக் கானின் லுங்கி டான்ஸுடன் ஏகப் பட்ட தடபுடல்!

முழுப் படத்தைப் பார்க்கும் ஆவலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.!

கோச்சடையான் – The Legend – Theatrical Trailer (Tamil) ft. Rajinikanth, Deepika Padukone

https://www.tumblr.com/audio_file/kuvikam/79875924815/tumblr_n25la2s65o1sp6th0?plead=please-dont-download-this-or-our-lawyers-wont-let-us-host-audio

Click the ‘PLAY’ button to listen the song

HAPPY SONG

I am happy , happiest of all
Give you happy, happiness for all

When you talk when you walk
When you take when you give
When you love when you live
Be Happy, Be Happy, Be always Happy ( I am Happy)

Body is the slave to the mind and heart
Load it with the happiness nothing but an art
Have a clear Ideal
Have a clear Character
Have a clear Mind and heart
Be Happy, Be Happy, Be always Happy ( I am Happy)

Prayer is a common song any one can sing
Nothing but a calling bell you can also ring
Life is short Make it sweet
Lamp is there hold it tight
Love the Lord, Lord is love
Be Happy, Be Happy, Be always Happy ( I am Happy)

Beauties are skin deep care them to hoots
Duties are different start from the roots
Shape you well, Make you fit
Go to the ground, Aim the Goal
Hit the ball, Game is won
Be Happy, Be Happy, Be always Happy ( I am Happy)

மாங்காட்டுப் பாடல் !

         

சக்கரத்தின்     முன்னின்று     தவம்செய்யும்        தாயே!
சாக்காடு        பிணிஎல்லாம்   போக்கிவிடும்        தாயே!
சிக்கல்களை    நீக்கிவிட்டு     சுகமளிக்கும்         தாயே!
சீக்கிரமாய்      வந்துவிடு      மாங்காட்டுத்         தாயே!
சுக்காக         மருந்தாக       விளங்குகின்ற      தாயே!
சூட்சும         ரூபமாய்        ரட்சிக்கும்            தாயே!
செக்கினிலே    சிக்காமல்       தூக்கிவிட்ட          தாயே!
சேக்கிழார்      போலென்னை எழுதவைத்த         தாயே!
சைகைமொழி   பேசிஎன்னை    மகிழவைத்த         தாயே!
சொக்கத்தங்கம் போலவந்து     சொக்கவைத்த        தாயே!
சோகவிழி      மாற்றிவிட்டு    வாகைதந்த                    தாயே!
சௌபாக்ய      வாழ்வுதந்து     ஆதரிக்கும்                       தாயே!
ஸ்ருங்கார      பார்வைகொண்டு காத்திடுவாய்      நீயே!

image

000000000000000000000000000000000000000000000000000000000

image

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

               image

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

image

……………………………………………………………………………………………………

108 Amman Dharshan with POTRI song

 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திய 

   108 அம்மன்  கோவில் பயணம் 

எழுதியவர்: விஜயலட்சுமி சுந்தரராஜன்

  1. அதிரூப சுந்தரியே சென்னை காளிகாம்பாளே போற்றி! 
  2. ஆதிவழித் துணையே வண்டலூர் இரணியம்மனே போற்றி! 
  3. இடர்களை நீக்கிடும் பொத்தேரி புவனேஸ்வரியே போற்றி!
  4. ஈடில்லா வாழ்வு தரும் திருக்கச்சூர் அஞ்சனாக்ஷியே போற்றி!
  5. உறவுகளைப் போற்றிடும் செங்கல்பட்டு சின்னமுத்துமாரியே போற்றி! 
  6. ஊரார் வணங்கிடும் அச்சரப்பாக்கம் மூங்கிலம்மனே போற்றி!
  7. எங்கும் நிறைந்த முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மனே போற்றி!
  8. ஏக்கங்கள் தீர்த்திடும் பாண்டிச்சேரி பச்சைவாழியம்மனே போற்றி!
  9. ஐம்புலன் அடக்கிடும் கடலூர் அஞ்சுகிணத்து மாரியம்மனே போற்றி!
  10. ஒப்பில்லா தேவியே தில்லையின் தில்லைஅம்மனே போற்றி!
  11. ஓங்கார சக்தியே சிதம்பரம் தில்லை காளியே போற்றி!
  12. கருணைக்கடலே தில்லை அகிலாண்டேஸ்வரியே போற்றி!
  13. காருண்ய ரூபியே தில்லை காருண்ய மாரியம்மனே போற்றி!
  14. கிரிதரன் சோதரியே சிதம்பரம் சிவகாமசுந்தரியே போற்றி!
  15. கீர்த்தியை அளித்திடும் தில்லை புண்டரீஸ்வரியே போற்றி!
  16. குவலயம் காத்திடும் சிதம்பரம் மஹா முத்து மாரியே போற்றி!
  17. கூர்வாள் ஏந்திடும் தில்லை துர்க்கை அம்மனே போற்றி!
  18. கெட்டதை அழித்திடும் கொள்ளிடம் புலீஸ்வரியே போற்றி!
  19. கேட்டதைத் தந்திடும் கொள்ளிடம் நாகமுத்துமாரியம்மனே போற்றி!
  20. கைகளைப் பற்றிடும் சீர்காழி புற்றடியம்மனே போற்றி!
  21. கொடுமையை அழித்திடும் சீர்காழி சிவகாமசுந்தரியே போற்றி!
  22. கோடி நன்மை தரும் சீர்காழி பத்ரகாளியம்மனே போற்றி!
  23. சந்ததி தந்திடும் சீர்காழி கோமளவல்லியே போற்றி!
  24. சாந்த ஸ்வருபியே சீர்காழி அங்காளபரமேஸ்வரியே போற்றி!
  25. சிந்தையில் நிறைந்திடும் வைத்தீஸ்வரன்கோவில் தையல் நாயகியே போற்றி! 
  26. சீரான வாழ்வுதரும் வைத்தீஸ்வரன்கோவில் துர்க்கை அம்மனே  போற்றி!
  27. சுடரின் ஒளியே திருநன்றியூர் மாரியம்மனே போற்றி!
  28. சூரரை வதைத்திடும் மாயவரம் படைவெட்டி மாரியம்மனே போற்றி!
  29. செருக்கை அழித்திடும் மாயவரம் துர்க்கை அம்மனே போற்றி!
  30. சேர்ந்தார்க்கு ஞானம் தரும் மாயவரம் ஞானாம்பிகையே போற்றி!
  31. சொந்தங்கள் சேர்த்திடும் மாயவரம் பிரசன்ன மாரியம்மனே போற்றி!
  32. சோதனைகள் அகற்றிடும் மாயவரம் சியாமளாதேவியே போற்றி!
  33. சௌபாக்கியம் தந்திடும் மயிலாடுதுறை அபயாம்பாளே போற்றி!
  34. தனங்கள் தந்திடும் மாயவரம் பெரிய மாரியம்மனே போற்றி!
  35. தானாகவே வந்திடும் மயிலாடுதுறை பேச்சாயியம்மனே போற்றி!
  36. திருமணம் வளம் தரும் திருக்கடையூர் அபிராமியே போற்றி!
  37. தீயதை அழித்திடும் ஒழுகைமங்கலம் மாரியம்மனே போற்றி!
  38. துயரினைத் தீர்த்திடும் கீழகாசாக்குடி சீதளாதேவியே போற்றி!
  39. தூயவர் துதித்திடும் காரைக்கால் ஏழை மாரியம்மனே போற்றி!
  40. தெய்வமாய் விளங்கிடும் காரைக்கால் அம்மையாரே போற்றி!
  41. தேயாத வாழ்வு தரும் நாகை நெல்லுக்கடை அம்மனே போற்றி!
  42. தையலர் வழிபடும் நாகை எல்லைஅம்மனே போற்றி!
  43. தொல்லைகள் தொலைத்திடும் நாகை மாகாளியம்மனே போற்றி!
  44. தோல்விகள் நீக்கிடும் நாகை நீலாயதாக்ஷாயணி அம்மனே போற்றி!
  45. நன்மையைத் தந்திடும் பொரவச்சேரி ஸ்வர்ண காளியே போற்றி!
  46. நான்மறை போற்றிடும் பொரவச்சேரி மீனாக்ஷி அம்மனே போற்றி!
  47. நினைத்ததை அருளிடும் பொரவச்சேரி சிங்கார காளியே போற்றி!
  48. நீண்ட கண்ணுடை சிக்கல் வேல் நெடுங்கண்ணியம்மனே போற்றி!
  49. நுண்ணிய அறிவு தரும் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மனே போற்றி!
  50. நூபுர அழகியே கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகையே போற்றி!
  51. நெக்குருக வைக்கும் அடியக்காமங்கலம் முத்துமாரியம்மனே போற்றி!
  52. நேர்வழி காட்டிடும் திருவாரூர் கமலாம்பிகையே போற்றி!
  53. நொந்தாரை தேற்றிடும் திருவாரூர் ரௌத்ர துர்க்கையே போற்றி!
  54. நோகாமல் காத்திடும் திருவாரூர் சப்த மாதாக்களே போற்றி!
  55. பலபல நலம் தரும் திருவாரூர் நீலோத் பாலாம்பிகையே போற்றி!
  56. பாலருக்கு அருள்தரும் திருவாரூர் காமாக்ஷியம்மனே போற்றி!
  57. பித்தனின் பத்தினியே காட்டூர் ருத்ரகாளியம்மனே போற்றி!
  58. பீடைகள் போக்கிடும் காட்டூர் பிடாரியம்மனே போற்றி!
  59. புலவர்கள் பாடிடும் காட்டூர் மாகாளியம்மனே போற்றி!
  60. பூவையர் வணங்கிடும் காட்டூர் அபிராமியே போற்றி!
  61. பெரியவர் போற்றிடும் காட்டூர் பொற்பவள காளியம்மனே போற்றி!
  62. பேய்மனம் மாற்றிடும் தஞ்சை வாராஹியே போற்றி!
  63. பொறுமையின் உருவே தஞ்சை பெரியநாயகியே போற்றி!
  64. போற்றப் படுபவளே தஞ்சை காசி விசாலாட்சியே போற்றி!
  65. மங்காத புகழுடைய தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷியே போற்றி!
  66. மாசில்லா மாணிக்கமே தஞ்சை கோடியம்மனே போற்றி!
  67. மின்னல் கொடியிடையாள் தஞ்சாவூர் ஆனந்தவல்லியே போற்றி!
  68. மீன்விழியாளே தஞ்சை பாலாம்பிகையே போற்றி!
  69. முக்காலம் உணர்ந்தவளே தஞ்சை ராகுகால துர்க்கையே போற்றி!
  70. மூன்று உலகம் ஆள்பவளே தஞ்சை உஜ்ஜயினி மாகாளியே போற்றி!
  71. மென்மனம் கொண்டவளே தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மனே போற்றி!
  72. மேன்மை தருபவளே புதுக்கோட்டை புவனேஸ்வரியே போற்றி!
  73. மோகம் அழிப்பவளே புதுக்கோட்டை தக்ஷிண காளியே போற்றி! 
  74. வஞ்சகரை வெல்பவளே புதுக்கோட்டை அஷ்டதசபுஜாங்ககாளியேபோற்றி!
  75. வாளினை ஏந்திடும் கானாடுகாத்தான் அய்யனார் காளியே போற்றி!
  76. விண்ணவர் வணங்கிடும் கானாடுகாத்தான் பொன்னழகியம்மனே போற்றி!
  77. வீரத்தின் விளைநிலமே கானாடுகாத்தான் பரமனூர் காளியே போற்றி!
  78. வெல்லமென இனிப்பவளே கோவிலூர் நெல்லை அம்மனே போற்றி!
  79. வேல்விழியாளே காரைக்குடி கொப்புடை அம்மனே போற்றி!
  80. யாவரும் போற்றிடும் திருப்பத்தூர் சிவகாமசுந்தரியே போற்றி!
  81. அன்னையாய் அருளிடும் திருப்பத்தூர் அங்காளபரமேஸ்வரியே போற்றி! 
  82. இன்னல்கள் நீக்கிடும் திருப்பத்தூர் பூமாயி அம்மனே போற்றி!
  83. உன்னத வாழ்வுதரும் மதுரை மீனாக்ஷி அம்மனே போற்றி!
  84. என்னுயிர் காத்திடும் மதுரை மதுரவல்லித் தாயே போற்றி!
  85. கன்னியர் வணங்கிடும் மதுரை காமாக்ஷி அம்மனே போற்றி!
  86. தன்னிகர் இல்லா மதுரை திரௌபதி அம்மனே போற்றி!
  87. மன்னரும் பணிந்திடும் மதுரை தெப்பக்குள மாரியம்மனே போற்றி!
  88. வெண்ணையாய் உருகிடும் திருப்பரங்குன்றம் வெண்ணை காளியே போற்றி!
  89. எண்ணங்கள் நிறைவேற்றும் திருப்பரங்குன்றம் விஷ்ணு துர்க்கையே போற்றி!
  90. மண்ணினைக் காத்திடும் உறையூர் வெக்காளி அம்மனே போற்றி!
  91. அள்ளி அள்ளித்  தந்திடும் ஸ்ரீரங்கம் ரெங்கநாயகியே போற்றி!
  92. உள்ளத்தில் உறைந்திடும் திருவானைக்காவல் மகா மாரியம்மனே போற்றி!
  93. கோள்களின் நாயகியே திருவானைக்காவல் விஷ்ணு துர்க்கையே போற்றி!
  94. கள்ளமில்லா மனத்தவளே திருவானைக்காவல் உமா மகேஸ்வரியே போற்றி!
  95. வெள்ளமென வழிந்திடும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே போற்றி!
  96. அமுதத்தைத் தந்திடும் சமயபுரம் ஆதி மாரியம்மனே போற்றி!
  97. ராகு கால பூஜை ஏற்கும் சமயபுரம் நாககன்னியம்மனே போற்றி!
  98. பாகுமனம் கொண்டவளே சமயபுரம் பள்ளத்தாளம்மனே போற்றி!
  99. அசுரரை அழித்திடும் சமயபுரம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி!
  100. சமயத்தில் காத்திடும் சமயபுரம் மாரியம்மனே போற்றி!
  101. ஔஷதம் ஆகிடும் திருப்பட்டூர் பிரம்ம நாயகியே போற்றி!
  102. கௌரவம் காத்திடும் திருப்பட்டூர் காசி விசாலாட்சியே போற்றி!
  103. ரௌத்ரம் தணித்திடும் திருப்பட்டூர் ரேணுகா தேவியே போற்றி!
  104. சௌந்தர்ய ரூபிணியே சிறுவாச்சூர் மதுர காளியம்மனே போற்றி!
  105. பௌர்ணமி நிலவே திருவக்கரை வடிவாம்பிகையே போற்றி!
  106. வக்கிரங்கள் போக்கிடும் திருவக்கரை வக்ர காளியம்மனே போற்றி!
  107. அக்கிரமங்கள் அழித்திடும் திருவக்கரை வைஷ்ணவி முத்தாலம்மனே போற்றி!
  108. அன்னையே செவ்வண்ணமே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தியே போற்றி! போற்றி!..

108 Amman Dharshan with POTRI song

ஒரு பக்கக் கதை

காதல் 

image    ஷாலினிக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்! உண்மையான காதல்னா என்ன? எல்லாப் பசங்களும் ஜொள்ளுப் பார்ட்டியாகத் தான் தெரிந்தது. எவன் மேலேயும் அவளுக்கு அது இதுவரை வரவில்லை.

கிரண் அவளுடைய நெருங்கிய சிநேகிதி.. ’ டீ ஷாலினி! மனோ ஜெம்டி.அவன் தான் என் லவர்’ என்றாள். அது போன மாதம். ‘மனோ தண்டம்டி குணால் தான் ஸ்வீட். அவன் தான் எனக்கு எல்லாம் என்றாள். இது போன வாரம். ‘கண்ணன் தாண்டி என் காதலன்! அவன் தான் என் உயிர் மூச்சு’ இது முந்தா நாள்.

image

இதுலே எது உண்மையான காதல் என்று ஷாலினிக்குப் புரியவே இல்லை. ஆனா இன்னிக்குக் காலையிலே மழையில் நனையும் போது  குடை குடுத்து உதவினானே ஜெகன்! அவனைப் பார்த்த நிமிடத்தில் ஷாலினிக்கு காதலின் அர்த்தம் புரிந்தது.

வேடிக்கை என்னவென்றால் ஜெகன் கிரணை மனசாரக் காதலிக்கிறான்.!

காதல் என்பது நான் என்றால்

காதல்       என்பது      மண்ணானால்      – அதில்    
      மின்னும்    பொன்       துகள்       நீயன்றோ ?
காதல்       என்பது      நெருப்பானால்     – அதில்
      துடித்திடும்   திரியும்      நானன்றோ ?

காதல்       என்பது      காற்றானால்       – அதில்
      தூவிடும்    மகரந்தம்    நீயன்றோ?
காதல்       என்பது      மலையானால்     – அதில்
      பொழிந்திடும் மழையும்    நானன்றோ ?

காதல்       என்பது      நதியானால்        – அதில்
      பொங்கிடும்  நுரையும்    நீயன்றோ ?
காதல்       என்பது      கடலானால்        – அதில்
      அலைபோல் தவிப்பது    நானன்றோ ?

காதல்       என்பது      மதுவானால்       – அது
      தந்திடும்     போதை     நீயன்றோ ?
காதல்       என்பது      தேனென்றால்      – அதைச்
      சேர்ந்திடும்  தேனி       நானன்றோ ?

காதல்       என்பது      நீயென்றால்        – உனைத்
      தொழுதிடும் பக்தன்      நானன்றோ ?
காதல்       என்பது      நானென்றால்      – என் 
      உயிரின்     ஸ்வாஸம்   நீயன்றோ ?

ஹோலி ! ஹோலி!

ஹோலி   இந்தியாவில் சிறப்பாகக்   கொண்டாடப்படும்  பண்டிகை.!

நமக்குப் பொங்கல் போல இதுவும் ஒரு அறுவடை திருவிழா தான்.  இன்று அது  வண்ணங்களின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  

ஹோலி என்றாலே வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பூசி விளையாடும் குதூகலம் என்பதை ஹிந்திப் படம் பார்த்த அனைவரும் அறிவோம். 

ஹோலிக்கு புராண கலரும் உண்டு.

நீல வண்ண கிருஷ்ணன் வெள்ளை ராதையின் மீது வண்ணப் பொடிகளைப் பூசி விளையாடி திருப்தி அடைந்தானாம். அதில் துவங்கியது வண்ண வண்ண ஹோலி. 

image

இன்னொரு கதையும் உண்டு. ஹிரண்யகசிபு ‘ஹோலிகா’ என்ற அவனது சகோதரியை பிரகலாதநானுடன் நெருப்பில் இறங்கும்படி கூறினானாம்.. ஹோலிகாவை நெருப்பு சுடாது என்ற வரம் இருந்ததானால் அவளும் தைரியமாக நெருப்பில் இறங்கினாளாம். பகவான் விஷ்ணு ஹோலிகாவை தகனம் செய்து  பிரகலாதனை எரி  படாமல் காப்பாற்றினார்.

தீயதை எரித்து நல்லதைக் காக்கும் செயலாக ஹோலிக்கு முதல் நாள் ஹோலி நெருப்பு வைத்து நம்ம  சொக்கப்பனை மாதிரி . கொண்டாடுகிறார்கள் வட இந்தியாவில்

image

கலர் என்றதும் அந்த நாள் ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின்  ’ when you see color think of us’ என்ற விளம்பரம் ஞாபகம் வருகிறது.

இப்போது சினிமா நிறுவனமான UTV யின் வண்ணத் தூரிகை ஹோலிக்கு நல்ல உதாரணம்!  

image

( UTV யின் முழு வீடியோவை இந்த லிங்கில் பாருங்கள் – http://vimeo.com/14872328)

விஜய் TV யின் மகாபாரதம் 

விஜய் TV யின் மகாபாரதம் புதிய கற்பனை கலந்து இருந்தாலும் சுவாரசியமாக போகிறது. பாத்திரங்கள் எல்லாம் அருமை. குறிப்பாக அர்ஜூன் ,துரியோதனன், கிருஷ்ணன், பீமன், சகுனி, இடும்பி , குந்தி நல்ல பொருத்தமாக இருக்கிறார்கள்.

அர்ஜுனனை முதன்மை ஹீரோவாக கொண்டு வருவது கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது!

திரௌபதி அழகாக மாடர்ன் மாடல் பொம்மை மாதிரி இருக்கிறார். ரூபா கங்குலியை மிஞ்சுவாரா என்பதை வரப்போகும் எபிசோடுகள் தான் தீர்மானிக்கும்.

பஞ்ச பாண்டவர்கள் ஜாலியாக ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது நன்றாக இருக்கிறது.

தயாரிப்பு , காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு,, தமிழ் டப்பிங், பாடல்கள் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன. . தெரிந்த கதை என்று இருந்தாலும் இவர்கள் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் கதைக்கு சுவாரசியம் கூட்டுகிறது!

தவறாமல் பார்க்க வேண்டிய சீரியல் இது!

ஒரு பக்கக் கதை

பீட்ஸா 

                                 image

அபர்ணாவுக்கு நல்ல செக்ஸி வாய்ஸ். இருபது வயதில் பாப் மியூசிக்கில் இந்தியாவையே கலக்குகிறவள். அவள் மைக் எடுத்து பாட ஆரம்பித்தால் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கும்பலே குதிக்கும். அவளும் அவள் டிரஸ்ஸும் அவளை இந்தியாவின் ‘மடோனா’ வாக மாற்றியது..

அவள் அம்மா சுபத்ராவுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவேயில்லை.பின்னே என்ன  எம்‌எஸ்,  எம்‌எல்‌வி  மாதிரி கர்நாடக சங்கீதத்தில் கரைகண்ட சுபத்ராவுக்கு இப்படி ஒரு பொண்ணா? அம்மாவுக்கு அம்மாவா குருவுக்கு குருவா பதினைந்து வருஷம் பாட்டு சொல்லிக் கொடுத்தேனே! இதுக்காடி?மனசு தாங்காமல் கேட்டாள் சுபத்ரா!

“ அம்மா புரிஞ்சுக்கோ! உங்க அம்மா தயிர் சாதம். நீ தோசை! நான் பீட்ஸா!

சுபத்ராவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை!

                         image

மரியாதை

 

காதலுக்கு   மரியாதை  – டும்டும்  மேளம் கல்யாணம் !

காதலிக்கு   மரியாதை  –   அச்சம்  ஆசை   வெட்கம்

காதலனுக்கு மரியாதை  –  வேலியைத்  தாண்டாத   வரை

மனைவிக்கு மரியாதை  –  மடியில் தூங்கும்   குழந்தை

கணவனுக்கு மரியாதை   – பையில் காசு  இருக்கும்   வரை

தங்கைக்கு   மரியாதை – அண்ணன்  வாழ வைப்பான்   என்பது

அண்ணனுக்கு மரியாதை –  மலர் போல் தங்கையைக் காப்பது

தாய்க்கு  மரியாதை  –  மகன்  வைக்கும்  கொள்ளி

தந்தைக்கு   மரியாதை  –  மகன் பிடிக்கும்  பிண்டம்

தம்பிக்கு மரியாதை  – அண்ணன்   இல்லை   என்றால்

மாமனுக்கு  மரியாதை  –   தாயம் விழும் வரை

அத்தைக்கு  மரியாதை   – பெண்ணைக் கொடுக்கும்  வரை

மகளுக்கு    மரியாதை   – தனியா வீட்டுக்கு    வராதவரை

மகனுக்கு    மரியாதை   – மருமகள்    வீட்டுக்கு    வரும்வரை

ஆண்டவனுக்கு மரியாதை –  கவலை மனசில்  இருக்கும்வரை

 அதாவது    உசிரு  உடம்பில்  இருக்கும்வரை !!

ஒரு பக்கக் கதை

தொழில் 

image

மாவு மில்லில் மிளகாய் நெடி நாலூருக்கு வீசியது. சரமாரியா அடுக்குத் தும்மல் வந்தது கோவிந்துக்கு. அரைக்கிற குமாருக்கு மட்டும் எப்படி தும்மலே வரலைன்னு  ஆச்சரியப் பட்டான் கோவிந்து.

image

அதே மாதிரி கணபதி ஹோமப் பகையிலே ஊரோடு சேர்ந்து இவனும் கண்ணைக் கசக்கினான். ஆனால் வெங்குட்டு வாத்தியார் மட்டும் கண்ணைக் கசக்காமல் கணீரென்று மந்திரம் சொன்னார்.

image

அதுபோலவே போனவாரம் கோவிந்து மார்ச்சுவரிக்குப் போயிருந்தான். குடலே வெளி வந்துவிடும் போல வாடை. ஆனால் மார்ச்சுவரி வாட்ச்மேன் செஞ்சி பிரியாணி தின்று கொண்டிருந்தான்.

தொழில் என்று ஒன்று வந்தால் தும்மல், புகை,வாடை எதுவும் வராது என்பதை கோவிந்து புரிந்துகொண்டான்!

கவிதைப் போட்டி

கீழே உள்ள படத்துக்குத் தகுந்தாற்போல நான்கு வரியில் கவிதை எழுதி அனுப்புங்கள்! சிறந்த கவிதைக்கு  Rs. 100/ பரிசு காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய email : ssrajan_bob@yahoo.com 

image

கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி

:அதன்  அழகிய தமிழ் மொழிபெயர்ப்பு :

கண்ணைச் சிமிட்டும் குட்டி நட்டி
உன்னைப் பார்த்தேன் எட்டி எட்டி
கள்ளம் இல்லா வானுலகில்
துள்ளும் வைரக் கண்ணடி நீ !

தலைப்பில் உள்ள   “கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி”  ஐ க்ளிக் செய்யவும்.  ‘குட்டி நட்டியின்’  பாட்டைக் கேட்கலாம்! 

கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி

முருகன் என் காதலன்

 

                         

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா?

உன்னைக்   காண       ஓடி         வந்தேன்
என்னை     நானே       தந்து        விட்டேன்
வள்ளிக்     கணவன்     துள்ளி      நின்றான்
வள்ளிக்     கிழங்கென   அள்ளிக்     கொண்டான்
என்னிரு     விழியில்    பள்ளி       கொண்டான்
பன்னிரு     கரத்தால்    பின்னிக்     கொண்டான் !

பழனிப்      பழமாய்     பிசைந்து    விட்டான் 
பழமுதிர்    சோலையாய் மாற்றி      விட்டான் 
செந்தூர்     அலையில்   மிதக்க  வைத்தான் 
தணிகை    மலையில்   தவழ   வைத்தான் 
சுவாமி      அவனைச்   சுற்றி       வந்தேன்
குன்றத்து    வலையில்   சிக்கிக்       கொண்டேன்

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா? 

ஒரு பக்கக் கதை

சிரிப்பு 

image

தீபாவிற்கு  அடிக்கடி காரணமில்லாமலே சிரிப்பு வரும். சின்ன வயதிலிருந்து இன்னிக்கி வரை எப்போதும் சிரிப்பு தான். தூக்கத்திலும் சிரிப்பாள். பக பக வென்று வாய்  விட்டு சிரிக்கும் சிரிப்பு அவளுடைய ஸ்பெஷாலிட்டி. அம்மா அடிக்கடி கத்துவாள் – அவுட்டுச் சிரிப்பு சிரிக்காதேடி!

நாளைக்கு அவளைப் பொண்ணு   பார்க்க வருகிறார்கள். வரப்போகிறவன் எப்படி இருப்பான் என்று எண்ணி அதைமட்டும் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்.

வந்த மாப்பிள்ளை கத்திரிக்காய்க்கு கையும் காலும் வைச்சது மாதிரி இருந்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது அவளுக்கு. ’ பெரிய எடம். சிரிச்சுக் கெடுத்திடாதே..“ அம்மா சிடுசிடுத்தாள்.

"எனக்கு பொண்ணைப்  பிடிச்சிருக்கு’ என்று சொல்லி அவளைப் பார்த்து மெல்ல சிரித்தான்.அந்த  கத்திரிக்காய் மாப்பிள்ளை!

தீபாவின் சிரிப்பு நின்றது. அதற்குப் பிறகு அவளால் சிரிக்கவே முடிவதில்லை – ஆயுசு முழுவதும்.

image

மழைத் துளியில் உதித்து மறுநாளே மாண்டு விடும்      காளான் அல்ல நான்! மழைநீரை உறிஞ்சி தினந்தோறும் குடிக்கும்      ஆலமர வேர் நான் ! பூங்காற்றில் பொதிந்து பனித்துளியில் கரைந்து விடும்      துகள் அல்ல நான்! புயற்கூற்றை எதிர்த்து கடலலையைத் தடுத்து நிமிர்ந்து      நிற்கும் காட்டரண் நான்! மோகத்தில் தவழ்ந்து பெண் மொழியில் திளைத்து      செவ்வாயை சுவைக்கும்  கவிஞனல்ல நான்! மேகத்தைத் துளைத்து விண்வெளியில் பறந்து செவ்வாயைத்     … Continue reading

மீனங்காடி (தொடர்) — நான்காவது பகுதி

மீனங்காடி 
(சென்ற மாதம் முடிவில்………..)

image

அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.

(இனி இந்த மாதம் ! ……………………………)

image

மேரி ! நான் தான் பிரசாத் பேசறேன்”

பிரசாத் அவளது புது டிபார்ட்மெண்டுக்கு மேலதிகாரி !

கடவுளே ! இந்த நேரத்தில் இவரா? இந்த டிபார்ட்மெண்டுக்கு வருவதா வேண்டாமா என்று யோசித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இவர்.  ரொம்பவும் திமிர் ஜாஸ்தி ! எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவதில் கில்லாடி ! நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனைக் கீழே வைத்து விடுவார். “ஏன் இந்த வேலையை இன்னும் முடிக்கலை” என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லும்போதே, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நாளைக்குள்ளே முடிக்கணும்” என்று சொல்லி விட்டு எழுந்து போய் விடுவார்.  கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்கும் வினோத அதிகாரி அவர்.  “ மேரி ! இந்த ஸ்டாண்டர்ட் புராஜக்ட் என்னாச்சு? ஏன் இன்னும் முடிக்கலை?” எல்லோருக்கும் தெரியும் , அது இன்னும் இரண்டு வருஷத்துக்கு முடியாது என்று. இருந்தாலும் இப்படிக் கேட்பதுதான் பிரசாத்தின் வழக்கம்.  இந்த மூணாம் மாடிக்கு இங்கிருக்கிற தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் மேலதிகாரி பிரசாத்தும் ஒரு சாபக்கேடு என்று மேரி எண்ணினாள் !

“ இப்போது தான் டைரக்டர்கள் மீட்டிங் முடிந்து வர்றேன் ! உன் டிபார்ட்மெண்ட் பற்றி விவரமா பேசணும் ! இன்னிக்கு மத்தியானமே !”

கண்டிப்பா வர்றேன் ! ஏதாவது பிரச்சினையா?”

“சேர்மன் சொல்றார். கம்பெனிக்குக் கடுமையான போட்டி இருக்கு ! சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நாம இருக்கிற இடத்திலேயே நிற்க இன்னும் அதிகம் ஓட வேண்டியிருக்கும். எல்லா தொழிலாளிகளும் வேலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளணும் ! உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கணும் ! சில டிபார்ட்மெண்டுகளில் இருக்கும் மெத்தனமான மந்த போக்குகளைப் பற்றிப் பேசினோம்.”

மேரியின் உடம்பில் ஒரு பயம், நடுக்கம் பரவியது.

“சேர்மன் ஒரு கருத்தரங்குக்குப் போனாராம். நம்ம கம்பெனியில் இருக்கிற மந்தப் போக்கைப் பற்றி மற்றவர்கள் பேசியது ரொம்பவும் அவமானமாயிருந்ததாம். மூணாம் மாடி மட்டும் அப்படி இருக்குன்னு குறிப்பிட்டு சொல்லவில்லை ! ஆனால் இந்த உன்னோட டிபார்ட்மெண்ட் பெரிய தலைவலியாகத் தான் இருக்கு ! நீ என்ன சொல்றே?”

image

“மூணாவது மாடி பற்றி குறிப்பா என்ன சொன்னாங்க?” மேரி கேட்டாள்.

“இந்த டிபார்ட்மெண்டுக்குப் புதுப் பட்டப் பெயர் வைச்சிருக்கார்களாம் ! ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ எவ்வளவு அசிங்கமா இருக்கு ! என் அதிகாரத்தில் இருக்கிற ஒரு டிபார்ட்மெண்டுக்கு இப்படி ஒரு கேவலமான பேரா?”

“குப்பைத் தொட்டி என்று சொன்னார்களா?”

“ ஒரு தடவைக்கு நாலு தடவை சொன்னார். உன்னால், உங்க டிபார்ட்மெண்டால் எனக்கு சரியான டோஸ் கிடைத்தது. தேவையா என்ன? நாம் எடுத்த புது முடிவுகளைப் பற்றி அவங்க கிட்டே சொன்னேன். உன்னை இந்த டிபார்ட்மெண்டுக்கு மேனேஜரா போட்டிருக்கிறதையும் சொன்னேன். ‘சாக்குப் போக்கு எல்லாம் வேண்டாம், இந்த டிபார்ட்மெண்ட் சீக்கிரம் சரியாகணும்’ என்று உத்தரவு போட்டார். நீ  எல்லாவற்றையும் சரி செய்திட்டே இல்லே?”

‘எல்லாவற்றையும் சரி பண்ணிட்டேனா?” வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏழெட்டு வருஷமா இருக்கிற பிரச்சினை. “

இன்னும் இல்லை” என்று மெதுவாகச் சொன்னாள்  மேரி.

“மேரி ! நீ இன்னும் வேகமா போகணும். உன்னால் முடியாதுன்னா சொல்லு ! உனக்குப் பதிலா வேறு யாரையாவது போடறேன் ! பாஸ் கண்டிப்பா சொல்லிட்டார்.

image

இங்கே இருக்கிற தொழிலாளிகள் அனைவரும் ஒழுங்கா வேலை செய்யணும். அவர்களின் நடவடிக்கைகள்  எல்லாம் சுத்தமா மாறி ஆகணும். அதுக்கு நீ என்ன, எப்படி செய்வாய்னு தெரியாது ! ஆனால் சீக்கிரம் முடிக்கணும். ஏன் இந்த மூணாம் மாடி மட்டும் இப்படி இருக்கீங்க? நீங்க எல்லோரும் ஆபீஸ் வேலை தானே செய்யறீங்க? ஏதாவது ராக்கெட்டா விடறீங்க? உங்களால் கம்பெனிக்கு வெளி மார்க்கெட்டில் எவ்வளவு கெட்ட பெயர்? இதை இனிமே வளர விடக் கூடாது. மீட்டிங்கில் ஒவ்வொரு டைரக்டரும் கேவலமா பேசறாங்க ! உங்க கிழட்டுக் கும்பல் வேலையில் பெரிசா ஒண்ணும் சாதிக்க வேண்டாம். பிரச்சினைகளை உண்டு பண்ணாமல் இருந்தால் போதாதா?” கன்னா பின்னா என்று கத்தினார்.

‘சரி இதைப் பற்றி இன்னும் விவரமா பேசணும் ! எப்ப வர்றே?”

“இரண்டு மணிக்கு வரட்டுமா?”

“இரண்டரைக்கு வா ! சரியா?”

 “கண்டிப்பா” அவள் குரலில் இருந்த கோபம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே மேரி ! நீ இதில் இன்னும் தீவிரமா கவனம் செலுத்தணும்”

போனை வைத்து விட்டார்.

"சரியான…….. ” திட்ட வார்த்தை தெரியாமல் தடுமாறினாள் மேரி.

என்ன இருந்தாலும் அவர் பாஸ். சொன்ன விதம் எப்படி இருந்தாலும் விஷயம் என்னமோ நூறு சதவீதம் உண்மை. ‘கவலைப்படாதே மேரி’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

(தொடரும்)