Monthly Archives: September 2018
தலையங்கம் – கேரளாவில் வெள்ளம்
கேரளாவின் கண்ணீர் வெள்ளம் !
சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது.
கீழே பதிவுசெய்த வீடியோக்கள் கேரள மக்கள் வடித்த கண்ணீர் வெள்ளத்தை நமக்கு
எடுத்துக் காட்டுகிறது.
நமது கரங்கள் அவர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும்! ஊன்று கோல்களாக மாறட்டும்!
நம்மால் முடிந்ததை ஒவ்வொரு இந்தியனும் அளிக்க வேண்டிய தருணம் இது!
குவிகமும் தன் பங்கிற்குக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளது.
நீங்களும் அனுப்பலாமே!
சங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.
சங்க்ராம்ஜெனா நான்கு கவிதை நூல்களை ஒடியா மொழியிலும் இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இவரின் கவிதைகள் இந்தியன் லிட்டரேச்சர், காவ்யபாரதி, நியூ இங்கிலீஷ் ரிவியூ மற்றும் மாஸ்டர் பொயட்ரி இன் டிரான்ஸ்லேசன் போன்ற முக்கிய இதழ்களில் வெளியாகியுள்ளன. காந்திஜியின் ஒடிசா ( இரு தொகுதிகள் ), பர்மிய நாட்கள் என்ற நூல்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலம், ஒடிய மொழிகளில் எழுதியும் மொழிபெயர்த்தும் தொகுத்தும் வெளியிட்டிருக்கிறார். நவீன ஒடியக் கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.இந்திய அரசின் கலாச்சாரத் துறையில் மூத்த பெல்லோசிப் பெற்றவர். மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருது, பானுஜி விருது கவிதைக்காக –உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். நிசாந்த ( ஒடிய ) மார்க் ஏசியா ( ஆங்கிலம் ) என்ற இரு இதழ்களின் ஆசிரியராக விளங்கி வருகிறார். .
இந்தக் கவிதைகள் Looking for things என்ற அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர்கள் பிபுபந்தி, அர்ரபிந்தோ பெஹேரா. ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.
உங்கள் கவிதை
அன்று உங்கள் கவிதைகளை வாசித்தேன்
எப்படி உணர்ந்தேன் என்று தெரியவில்லை
வார்த்தைகள், ஒலிகள் மற்றும் அகரவரிசைகள்
தனிமை இருட்டின் சாலை நீண்டது
உங்களின் பின்னப்பட்ட கூந்தல் போல.
உங்கள் கண்கள் திறந்தும்
ஆனால் ஈர்ப்பில்லாமலும் இருப்பது போல்
பலவார்த்தைகள் புரியாமல்
ஒவ்வொருவரியின்
ரிதம் தொலைந்து போயிருந்தது
நிஜமானது என்றாலும் இறுக்கமான
உங்கள் உறவினைப் போல்.
உங்கள் வார்த்தைகள் முறையற்றும்
உங்களின் ஆழமான தொடர்பு மாதிரி.
வரிகளில் எந்த குறியீடுகளும் இல்லை
இடையில்… அல்லது முற்றுப்புள்ளி இறுதியில்
உங்கள் முடிவற்ற ஞாபகமறதி போல்.
பல வார்த்தைகளின் அர்த்தங்கள்
விளங்காதவையாக.
உங்கள் மனதின் பதிவுகள் போல
உங்கள் அன்பான மற்றும் நியாய கோபம் போல.
உங்கள் கவிதைகளைப் படிக்க
இடைவெளி விட்டு
நான் கண்களை மூடிக் கொண்டேன்
உங்கள் கையெழுத்தில் பிரதியில்
என் உள்ளங்கைகளைப் பதித்தேன்
உங்கள் உடம்பு ஆழமான சிநேகித்ததில்
இருப்பதைப் போல் அதன் உணர்தல்
நெருக்கமாக, முற்றுப்பெறும் வட்டமாக
உங்களின் கவிதைகளைப் போலில்லாமல்.
காந்தி
கண்ணாடிகள், செருப்புகள், மற்றும் நடைக் கைத்தடி
சரித்திரத்தின் பல பக்கங்களில்
ஒருவரை அறிந்து கொள்ளலாம்.
அரை நிர்வாணப் பக்கிரி ஒருவரைக்
கண்டுகொள்ளலாம்.
எண்ணற்ற பல நூல்களின் மூலம்
அவரின் வார்த்தைகள் கூர்மையாக அறியப்பட்டன.
கூட்டங்களில் ஒரு நம்பகமான,
உறுதியான குரல் கேட்டது.
நவகாளியின் நெருப்பில்
பயமோ, சந்தேகமேயில்லாமல்
தடையில்லாமல் ஒரு தனிமனிதன் நடந்தார்.
அவரின் கைகளில் ஆசைகளோடான தடி
கண்களில் எண்ணற்ற கனவுகள்
மாற்றங்களால் தொடப்படாத நம்பிக்கை.
மத வேலிகளுக்கு அப்பால்
ஜாதி, வர்ணம்,
அவர் நிச்சயமாக நம்பினார்
எல்லாவற்றின் இறுதியிலும்
அவர் நிச்சயமாக அந்த ஆண்களை,
பெண்களைச் சந்திக்கலாம் என்று.
தன் சொந்த இன்பங்களை விட
பிறரின் வலியை முக்யமானதாக கருதுபவைகளுக்கு
பெரிதும் விரும்புகிறார் வெறும் நிலத்தைவிட,
கடவுளைவிட மனிதர்களை இன்னும்.
சூத்திரம்
மலையின் மீது ஒரு கல்லை எறியுங்கள்
யாரும் பார்க்காத போது
அது ஒரு பழக்கமாகிவிடும்.
மரங்கள், பறவைகள், வயல்கள் காடுகளுடன் பேசுங்கள்
யாரும் பக்கத்தில் இல்லாதபோது
அது மெல்ல ஒரு பழக்கமாகிவிடும்.
நிலவு, வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து
வாய்விட்டு சிரியுங்கள்
மைதானமொன்றில் தனியாக நின்றுகொண்டு
அந்த நாளின் இறுதியின்
வருத்தங்கள், வலிகள், மயக்கங்கள்
தோல்விகள் அனைத்தும்
மெல்ல ஒரு பழக்கமாகிவிடுவதை
தெரிந்து கொள்வீர்கள்
யாரும் உங்களை கவனிக்காத போது.
வீட்டில், வெளியில்
எல்லோரும் இருக்கும் போது
நீங்கள் இல்லாதது போல
நீங்கள் வாழ்வது
யாரும் பார்க்காதோ, உங்களை கேட்காதோ போல்
நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்
வாழ்வது ஒரு பழக்கமாகிவிடும்.
எப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்? – வைதீஸ்வரன்
எப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்?? !!!
நம் வாழ்க்கையின் ஓட்டம் நம் கையில் இல்லை. வருஷங்கள் நம்மைக் கடத்திக்கொண்டே போகின்றன. சற்று நின்று நிறுத்திப் பார்க்கக்கூட நம்மால் முடியாது. திரும்பிப் பார்க்காத ஓட்டம்தான் . தொடுகோட்டை தொடும்போது வெற்றியா தோல்வியா…என்பதை அறிந்துகொள்ள முடியாமல் நாம் காணாமல் போய்விடுகிறோம்….
பிரபஞ்சமே பிரும்மாண்டமான உயிர்களின் கொண்டாட்டம்தான்
இதில் மனிதன் தனக்குள் கர்வமாகப் பெருமைப்பட்டுக் கொள்வது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
நான் விடியவிடிய ஆறு மணிக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தேன். அதற்கு முன் நள்ளிரவில் என் அம்மாவுக்கு வலி எடுத்தபோது பாகக்காய் தின்னவேண்டுமென்று ஆசை வந்துவிட்டது….[வந்து விட்டதாம்]
கேள்விப்பட்ட என் பெரியம்மா மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள். அந்தச் சமயத்து ஆசையை எப்படி நிறைவேற்றுவதென்று மிகவும் பரபரப்பாகி விட்டாள்.
பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் பாகக்காய் கொடி இருப்பது ஞாபகம் வந்தது, அந்த நள்ளிரவில் பூச்சி பொட்டுகளுக்கு பயப்படாமல் அங்கே ஓடிப்போய் சுவற்றில் ஏறி பாகக்காயை பறித்துவந்து அவசரமாக வாணலியில் எண்ணையை ஊற்றிப் பொரித்து பிரசவ அறையில் வலியுடன் முனகிக் கொண்டிருந்த என் அம்மாவின் வாயில் சுடச்சுடப் பாகக்காயைப் போட்டிருக்கிறாள். போட்ட மறு நிமிடம் நான் பிறந்தேன்.
பின்னால் நான் சிறுவனானபோது என் பெரியம்மா நான் ஏதாவது அடம் பிடித்து அழுதால் ” ஏண்டா…..பாகக்காயைத் தின்னு பொறந்தவன் தானே! பின்னே நீ எப்படி சிரிச்ச முகமா இருப்பே! “ என்று சீண்டி விடுவாள்…..
பாகக்காய் தான் கசந்தாலும் அதைத் தின்றவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது…என்று பின் காலத்தில் நான் எனக்குள் சமாதனம் சொல்லிக் கொள்வேன்!…
என் பிறந்த தினம் 22 செப்டம்பர். இந்த உலகமே இனிமையுடன் ஆனந்தமாக வாழ வேண்டுமென்று ஒரு கவிதை மூலம் என் பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன்
விருத்த நினைவில்
—————————————
விழிதரும் பார்வையே!
விரிந்த வான்மலரே!
மலர்பெறும் வாசமே!
மறைந்து தழுவும் காற்றே!
கசிந்து பின் பெருக்கெடுக்கும்
கருணையெனும் வெள்ளமே!
கவியெனும் கரும்பே!
புவியினை ஒரு புள்ளியாக்கி
மனமெனும் கூட்டில்
மறைத்து வைத்த சூட்சுமமே!
நிகழ்வெனும் கூத்தை
நிஜம் போல் நடத்தும்
மாயக் கோலே!
இரண்டறக் கலந்த இனிப்பென
எனை மறந்த தருணம்
உளம் ததும்பும் மரண சுகமே!
நின்னடியில்
அகம் பொருள் ஆவிதனை வைத்துப்
பாடி நின்றேன்
ஆனந்தம்
அகிலமெல்லாம் பெறவே!
வைதீஸ்வரன்
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
ராகு காலம் படர்ந்த அந்த மூன்றே முக்கால் நாழிகைகளில் விளைவுகள் அவற்றின் போக்கிலே துரிதமாக நடைபெற்றன.
ஸந்த்யாவின் நிழலில் மறைந்து இருந்த ராகு அவள் விமானத்தில் வரும்போதும், சாந்துக் குளியல் அறைக்கு வரும்போதும் தப்பிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் ராகு தப்பிக்க இஷ்டப்படவில்லை. விஷ்வகர்மாவின் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் கண்ட ராகு அவர் ஏதோ தீவிரமாகச் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டான். ‘ ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை , அவர் ஏன் இவர்கள் திருமணத்தை உடனே நடத்தக்கூடாது என்று சொல்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவனுடைய தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.
‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்பதுபோல அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூரிய தேவனைப் பழி வாங்க முடியுமா என்ற பாணியிலேயே அவனுடைய எண்ணம் சென்றது. அதுமட்டுமல்லாமல் தன்னை யாரும் கொல்லமுடியாது என்ற அகம்பாவம் அவனுக்கு நிறைய உண்டு. அமுதம் குடித்தவனல்லவா அவன்.
விஷ்வகர்மா ஸந்த்யாவின் தாயிடம் ஏதோ ரகசியமாகக் கூறிவிட்டு சூரியதேவன் இருக்கும் அறைக்குச் செல்வதைப் பார்த்தான். அதுவரை ஸந்த்யாவின் நிழலில் மறைந்து இருந்தவன் யாரும் அறிமாமல் விஷ்வகர்மாவின் நிழலில் மறைந்து கொண்டான். அவர் சூரியதேவன் படுத்திருக்கும் இடம் சென்று காவலாளிகளை அப்புறப்படுத்திவிட்டுத் தன் கையிலுள்ள கோலால் சூரியதேவனை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தி ஏதோ அவருடைய ஆணைக்குக் கட்டுப்படுத்தப்போகிறார் என்று புரிந்து கொண்டான்.
விஷ்வகர்மா ‘மகாருத்ரபிரும்மன்’ என்று மூன்றுமுறை கூறியதைக் கேட்டதும் ராகு திடுக்கிட்டுப் போனான். மகாருத்ரபிரும்மன்பற்றி அவனும் சுக்ராச்சார்யார் சொல்லக் கேட்டிருக்கிறான். தனுர் மாதத்திலிருந்து தை மாதம் என்று அழைக்கப்படும் மகர மாதத்திற்குப் போகும் ஸங்கராந்தித் திருநாள் தேவர்களின் இரவுப்பொழுது முடிந்து பகல்பொழுது ஆரம்பமாகும் புண்ணிய காலம். அந்தச் சமயத்தில் விஷ்ணு, சிவன், பிரும்மர் மூவர் ஆசியுடன் மணம் புரிந்து அன்று கரு உருவானால் அந்தக் கருவில் பிறக்கும் திருமகன் மகாருத்ரபிரும்மன் என்ற சக்தியுடன் இருப்பான். அப்படிப்பட்ட ஒருவன் உதித்தால் அவனை யாரும் வெல்லமுடியாது. அவன் அரக்கர் குலத்தை முற்றிலும் அழித்து ஒன்றுமில்லாதவராகச் செய்துவிடுவான். அப்படி ஏதாவது நடைபெறும் என்று தோன்றினால் அதை நடக்கவிடாமல் செய்வது அசுர குலத்தில் உதித்த ஒவ்வொருவரின் கடமை என்று அசுரகுரு ஆணித்தரமாகக் கூறியது அவன் மனதில் மீண்டும் ஒலித்தது.
இப்போது விஷ்வகர்மா என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய அவன் தன் பாம்புச் செவியைத் தீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.
விஷ்வகர்மா தன் கருத்திலேயே தன் முழு கவனத்தைச் செலுத்தி இருந்ததால் ராகு தன் நிழலில் மறைந்து இருப்பதை உணரவே இல்லை. அவர் சூரியதேவனை மயக்க நிலையில் ஆழ்த்திவிட்டு அவர் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தார்.
” சூரியதேவரே ! நான் செய்யும் பணி பஞ்சமாபாதகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களிடம் முன்கூட்டியே மன்னிப்பைக் கேட்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். சில நாழிகைக்கு முன்னால் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட உங்கள் வம்ச வித்துக்கள் மூன்றையும் நான் அழிக்கப்போகிறேன். என் பேரக் குழந்தைகளை நானே அழிக்கப் போகிறேன். இதைச் சொல்லும்போது என் இதயமே வெடித்துவிடும் போல உணருகிறேன்.
கோடானகோடி அண்டங்களின் நன்மையை முன்னிட்டு இதை நான் ரகசியமாகச் செய்யவேண்டியிருக்கிறது. மகாருத்ரபிரும்மமனைப்பற்றிச் சுக்ராச்சார்யார் மூலம்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அப்படிபட்ட ஒரு சக்தி பிறப்பது தேவர்களுக்கும் பிடிக்கவில்லை அசுரர்களுக்கும் பிடிக்கவில்லை. தங்களுக்கு மேற்பட்ட ஒரு சக்தி வருவது யாருக்குப் பிடிக்கும்? ஆனால் அது இப்போது தேவைப்படுகிறது. அந்த சக்தி ஒரு புதிய பரிமாணத்தில் உலகைப் படைக்கும். அந்தப் படைப்பைச் செய்யவே தேவசிற்பியான நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
மகாருத்ரபிரும்மனை மூலப் பரம்பொருளாகக் கொண்டு நான் படைக்கும் அந்த புதிய உலகம் இப்போது இருக்கும் அனைத்து உலகங்களையும் அழித்துவிடும். உங்களுக்கு நன்கு தெரியும் மேல் ஏழு லோகங்களும் கீழ் ஏழு லோகங்களும் இருக்கின்றன என்று.
பிரும்மர் இருக்கும் ஸத்யலோகம், தேவதைகள் உறையும் தபோலோகம் , பித்ருக்கள் இருக்கும் ஜனோலோகம், இந்திராதி தேவர்கள் இருக்கும் சொர்க்கலோகம், முனிவர்கள் இருக்கும் மஹரலோகம், கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் வசிக்கும் புனர்லோகம், மனிதர்கள், விலங்குகள், வசிக்கும் பூலோகம் இவை மேல் லோகங்கள்.
அவற்றைப்போல அசுரர்கள் வசிக்கும் அதல லோகம், விதல லோகம் சுதல லோகம், தலாதல லோகம் , மகாதல லோகம் ,பாதாள லோகம், ரஸாதல லோகம் என்று ஏழு லோகங்களும் கீழ் லோகங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
மகா ருத்ர பிரும்மன் வந்தபிறகு அவனுக்காக நான் ஒரு தனி லோகத்தையே உண்டு பண்ணுவேன். இந்தப் பதினாலு லோகங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அப்படிப்பட்ட லோகத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு நானே இட்டுக்கொண்ட மகத்தான பணி. அதற்காகத்தான் ஸந்த்யாவைப் பெற்றெடுத்தேன். உலகின் ஒளி நாயகனான உங்கள் மூலம்தான் அந்த சக்தி பிறக்கமுடியும். இதை நான் யாரிடமும் சொல்லமுடியாது. அப்படிச் சொன்னால் அந்தப் புதிய மகா லோகத்தை நிர்மாணிக்கும் சக்தி எனக்குக் கிட்டாமல் போகும்.
பின்னால் பிறக்கப் போகும் உங்கள் மகன் பெருமை மிகுந்தவனாக வருவது உங்களுக்குப் பெருமை அளிக்கும். நீங்கள் உங்கள் சாந்து குளியல் முடிந்தபிறகு உங்கள் பர்வதத்திற்கு ஸந்த்யாவின் ஸ்வரூபத்துடன் சென்று விடுங்கள்! ஸந்த்யாவை உங்கள் பிரபையுடன் இங்கே இருக்க வைக்கிறேன். சில மாதங்கள்தான் இருக்கின்றன – நான் எதிர்பார்க்கும் வேளை வருவதற்கு. அது வந்தவுடன் உங்கள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.
அதனால் தற்சமயம் உங்கள் மூன்று குழந்தைகளையும் அழிப்பதற்கு எனக்கு அனுமதி கொடுங்கள்! இந்த சமயம் என் மனைவி அதற்கான மருந்தை ஸந்த்யாவிற்குக் கொடுத்திருப்பாள். அது அவள் வயிற்றில் இருக்கும் மூன்று குழந்தைகளையும் உருத் தெரியாமல் ஆக்கியிருக்கும்
மீண்டும் உங்களிடம் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்”
விஷ்வகர்மா கூறியதன் ஒவ்வொரு சொல்லையும் சூரியதேவனுடைய ஆழ்மனது கேட்டு அனுமதி அளித்தது.
ஆனால் அது மனிதர் காதில் கொதிக்கும் எண்ணை விட்டதுபோல ராகுவிற்கு இருந்தது.
இதை எப்படியும் தடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்வகர்மாவிற்குத் தெரியாமல் கதவில் இருக்கும் சாவித்துவாரத்தின் வழியாக அந்த அறையிலிருந்து வெளியேறி ஸந்த்யா இருக்கும் அறைக்கும் அப்படியே சாவித்துவாரத்தின் வழியாக உள்ளே சென்றான்.
அங்கே ஸந்த்யாவின் தாய் மருந்தை புகட்டுவதற்காக ஸந்த்யாவின் அழகிய இதழ்களைத் தன் கையால் திறந்துகொண்டு தங்கக் கிண்ணத்தைச் சாய்க்கத் தலைப்பட்டாள்.
மூன்றே முக்கால் நாழிகை வரை அதீத பலம் இருக்கும் அந்த ராகுகாலம் முடிய இன்னும் சில நொடிகளே இருந்தன. அதற்குள் அவன் நினைத்த காரியத்தைச் செய்யவேண்டும். அதற்குப் பின்னால் அவனால் அந்தக் காரியம் செய்ய முடியாது.
தான் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்தான் அதற்கான விபரீத செயலில் துணிச்சலுடன் இறங்கினான் ராகு.
விளைவுகள் அதி பயங்கரமாக இருந்தன.
(தொடரும்)


ரவி கவிதை
நிலவு சூடும் அழகும் – கங்கை
நீர் மலிந்த சடையும்
உலவும் அரவு புனையும் – எகின்
உறுதி வாய்ந்த உடலும்
அலகிலாத கருணை -பொழியும்
அமுத வதனம் ஐந்தும்
கலைகளான பரமே – என்றன்
கவிதையான சிவமே !
தாதையாகி நின்றாய் – நீயே
தாயுமாகி வந்தாய் !
வேத வடிவமானாய் – என்றும்
விரியும் அண்டமானாய் !
ஜோதி வடிவமானாய் – வானில்
சுடரும் கோள்களானாய்
நாதமான பரமே -என்னுள்
நானுமான சிவமே
அஞ்சு நெஞ்சினோடு – சூழும்
அசுரர் தேவர் கூத்தம்
தஞ்சமென்று நின்றன் – கமலத்
தாள்பணிந்த வேளை
‘அஞ்சல் அஞ்சல்’ என்றே – அங்கே
ஆலஹாலம் என்றோர்
நஞ்சை உண்ட பரமே- என்னுள்
நடனமாடும் சிவமே!
பாடுகின்ற நாவில் – பனுவல்
பரிமளிக்க வருவாய்!
தேடுகின்ற நெஞ்சில் – பக்தித்
தேன் துளிக்க வைப்பாய் !
ஏடு தந்த நின்மேல் -பாடல்
எழுத வைத்துகந்தாய்
காடு நாடும் பரமே – உமையாள்
காதலிக்கும் சிவமே!
சரித்திரம் பேசுகிறது – யாரோ
சரித்திரம் பேசுகிறது! – யாரோ
ஸ்கந்த குப்தன்
பள்ளியில் சரித்திரப் பாடத்தின் பரீட்சையில் தவறாமல் வரும் கேள்வி!
குப்தசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்களைக் கூறுக. (இரண்டு மதிப்பெண் )
விடை:
- ஸ்கந்தகுப்தனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குப்த மன்னர்கள் திறமையற்றவர்களாக இருந்தனர்.
- ஹூணர்கள் என்ற நாடோடி சாதியினரின் தாக்குதல்கள் குப்தராஜ்யத்தை அழிக்க அடிகோலியது.
இரண்டு மதிப்பெண்கள் நிச்சயம்!
உண்மைதான்…அதைத்தான் இந்த இதழில் நாம் காண்போம்..
மனிதனுடைய மண்ணாசை, பொன்னாசை – பல காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. அதில் முக்கியமான ஒன்று – மற்றவரிடம் இருக்கும் பொருளை அபகரிப்பது. நாட்டைப் பாதுகாப்பதற்குப் பெரும் செல்வம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டு மன்னன் மற்ற நாடுமீது படையெடுத்து வென்று அதனால் அடைந்த செல்வத்தால் (கொள்ளைதானே அது?) தன் நாட்டைப் பணக்கார நாடக்குகிறான். மேலும் ஒரு பணக்கார நாட்டைக் கொள்ளையடிக்க அனைவரும் ஆசைப்படுவர். ஆக – சண்டையில்லாமல் ஒரு அரசாங்கம் நடந்தால், அது விரைவில் ஏழை நாடாகி விடுவதற்கு சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன!
குமாரகுப்தன் காலம்…
30 வருடம்.
அப்படிப்பட்ட ஓர் அமைதிக்காலம்!
அதாவது செலவுக்காலம்!
புஷ்யமித்திரன் மற்றும் ஹூணர்கள் படையெடுத்தனர் – கொள்ளையடித்தனர். அவர்களைத் துரத்துவதில் பெரும் பணம் செலவாகி- கஜானா காலியாகக் கிடந்தது.
குமாரகுப்தன் இறக்கும்போது குப்தராஜ்யத்தில் நிலை இது …
எல்லாத் தலைமுறைகளிலும் வருவதுபோல்… அன்றும் அரசுரிமைக்கு அடிதடி.
குமாரகுப்தனின் மூத்த மனைவி … தலைமை ராணி- ஆனந்த தேவி.
இளைய ராணிக்குத்தான் முதலில் மகன் பிறந்தான் – ஸ்கந்தன் என்று பெயரிட்டான் – குமாரகுப்தன்.
மூத்த ராணி புகைந்தாள் – தனக்கு மகன் பிறக்கவில்லையே என்று.
ஐந்து வருடம் கழித்து ஆனந்ததேவிக்கு மகன் பிறந்தான்.
பூரகுப்தன் என்று பெயரிட்டனர்.
அன்றிலிருந்து தன் மகன் பூரகுப்தன் குப்த மன்னனாக வர வேண்டி ‘கனவு’ கண்டாள் ஆனந்ததேவி.
சில கனவுகள் சாதிக்கவைக்கிறது!
சில கனவுகள் சதி செய்ய வைக்கிறது!
இதில் ஆனந்ததேவி இரண்டாம் ரகம்.
ஸ்கந்தன் மாவீரனாக வளர்ந்தான்..
குமாரகுப்தன் ஆட்சியில் புஷ்யமித்திரன், ஹூணர்கள் தாக்குதல்களை படை நடத்தி முறியடித்திருந்தான் ஸ்கந்தன்.
ஸ்கந்தன் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தான்.
குமார குப்தனும் ஸ்கந்தனை உயிராகக் கருதியிருந்தான்.
ஸ்கந்த குப்தனை யுவராஜாவாக்கினான்.
ஆனந்ததேவி – பூரகுப்தன் – பொறாமையால் புகைந்தனர்.
கி பி 455:
(ஸ்கந்தகுப்தன் வெள்ளி நாணயம்)
குமாரகுப்தனின் மரணத்திற்குப் பின் ஸ்கந்தகுப்தன் மன்னனானான்.
அவன் ஆட்சிக்காலம் எப்படியிருந்தது?
‘சரித்திரம் பேசுகிறது’- இதை ஒழுங்காகப் படித்து வரும் வாசகர்களே!
சுதர்சனா ஏரி – ஞாபகம் இருக்கிறதா?
‘இந்த மாதிரி கேள்வி கேட்டதால்தான் சரித்திரத்தையே நான் வெறுத்தேன்’ என்று சொல்லும் வாசகர்களே!
பயப்படாமல் மேலே படியுங்கள்..
இனி கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யமாட்டேன்!
இந்த சுதர்சனா ஏரி உடைப்பெடுத்தபோது ..அன்று .. சந்திரகுப்த மௌரியன் அதைச் செப்பனிட்டான்…
வேறொரு காலத்தில் இந்த ஏரி உடைப்பெடுத்தபோது… ருத்திரதாமன் அதைச் செப்பனிட்டான்…
இன்று இதே ஏரி உடைப்பெடுத்தபோது… ஸ்கந்தகுப்தன் அதைச் செப்பனிட்டான்…
ஆனந்ததேவி, பூரகுப்தன் இருவரும் – அனுதினமும் – ஸ்கந்தகுப்தனுக்குத் தொந்தரவு கொடுத்து – எவ்வாறேனும் அரசாங்கத்தை அடைய சதி செய்து வந்தனர்.
ஸ்கந்தகுப்தன் மாவீரன் மட்டுமல்ல – பெரும் அறிவாளியும் கூட. வீரத்துடன் விவேகத்தையும் கலந்து தன்னை எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளை அணுகினான்.
ஆனால் பிரச்னைகள்தான் மலை போல வந்தது..
மலைவாசல் வழியாக ஒன்று வந்தது..
இந்தியாவின் வடமேற்குக் கணவாய் – கைபர் கணவாய். அது மலைவாசல் என்று சாண்டில்யனால் அழைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவு வாசல். அது வழியாக அயல் நாட்டவர் இந்திய அரசுகளுக்கு அளித்த தொல்லைகளின் விபரங்கள் சரித்திரத்தில் பரவிக்கிடக்கிறது.
ஹூணர் என்ற நாடோடிக்கும்பல்!
மின்னல் வேகத் தாக்குதல்..
அட்டூழியங்கள்..
அவர்கள் …
சாரிசாரியாகக் குதிரையில் வந்தனர்..
கிராமங்களை அழித்தனர்..
ஜனங்களைக் கொன்று குவித்தனர்..
தீப்பந்தத்தால் பயிர்களை அழித்தனர்.
சிம்மாசனம் ஏறி ஐந்து வருடத்தில் ஸ்கந்தகுப்தனே படை நடத்தி புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) அருகில் அவர்களைத் தோற்கடித்துத் துரத்தினான். படையெடுப்பில் தோற்று ஓடிய ஹூணர்கள் – கரையான்போல மீண்டும் படையெடுத்து வந்தனர்.
பத்து வருடங்களில் சிந்து நதிப் பிராந்தியத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
கபீசம் (இன்றைய காபூல்) அவர்கள் வசப்பட்டிருந்தது.
அவர்களில் சிலர் ஹிந்து – கூர்ஜர பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர்.
(இவர்கள் சந்ததி பின்னாளில் ராஜபுத்திரவம்சமாக வந்தது என்றும் சொல்லப்படுகிறது).
வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போர்முனையிலே கழித்த ஸ்கந்தகுப்தன்..
நோய்வாய்ப்பட்டான்.
தோள்வலி காட்டி எதிரிகளை நடுங்க வைத்தவன்.
தோள் வலியால் துவண்டான்.
அயோத்தி அரண்மனையிலேயே மருத்துவர்கள் தயவால் கிடக்கவேண்டி வந்தது.
(அந்நாளில் பாடலிபுத்திரம் தலைநகராக இல்லாது …அயோத்தியே தலைநகராக இருந்தது…)
ஹூணர்களுக்குத் தோரமானா என்ற தலைவன் –அரசனாகி – ஹூணர்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை அளித்தான். காட்டுமிராண்டிபோல இருந்த படையை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி வலிமைமிக்கதாய் செய்து குப்த ராஜ்யத்தை ஊடுருவி வந்தான். ஹூணர்களின் வழிகளை விட்டு ஹிந்து மன்னர்களைப்போல் நடந்து கொண்டான். மகாராஜா என்ற பெயரையும் சூட்டிக்கொண்டான்.
உறவினர்களின் சதியோ அனுதினமும் ஸ்கந்தகுப்தனை ஆட்டிப் படைத்தது.
மாற்றாந்தாய் ஆனந்ததேவி தோரமானாவுடன் கூட்டு சேர்ந்து ஸ்கந்த குப்தனுக்குத் தலைவலியை அதிகரித்து வந்தாள்.
உள்நாட்டு அமைதி குலைந்தது.
நாட்டின் நிதி நிலைமை மோசமானது.
மன்னன் தங்க நாணயத்தின் மாற்றை 108 லிருந்து 73 ஆகக் குறைத்து விடுகிறான்.
சரித்திரத்தில் முதன் முறையாக பணவீக்கம் (devaluation) செய்த மன்னன் இவன் தானோ?
கஜானாவில் பணமில்லை.
பணவீக்கத்தால் வெளிநாட்டு வர்த்தகமும் குறைந்துபோனது.
அரண்மனைத் தூண்களிலிருந்த தங்கத்தகடுகளையும் உருக்கி நாணயம் செய்யப்பட்டது.
பாரதத்தின் சக்கரவர்த்தி அன்று ஒரு பரதேசி!
சைனியத்திலிருந்த வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாமையால் பல வீரர்கள் ஹூணர் படையில் சேர்ந்தனர்.
பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகம் இல்லை!
ஸ்கந்தகுப்தனுக்கும் நேர் வாரிசு ஒன்றுமில்லை.
தீர்க்கதரிசனம் கொண்ட அவன் மனது சொன்னது:
‘நமது மூதாதையர் இந்த குப்த ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து வளர்த்துப் பொற்காலமாக்கினர்.
ஏற்கனவே நமது தந்தைக்குக் கூறியதுபோல் என் காலத்திற்குப் பிறகு இந்த குப்தப்பேரரசு மெல்ல அழியுமோ? பூரகுப்தன் என்ன செய்வானோ? எது எப்படி ஆனாலும் எதிர்காலம் நம் கையில் இல்லை. நான் செய்யவேண்டியதை செய்யத்தான் வேண்டும்’.
ஒரு சிறு காட்சி விரிகிறது:
கி பி 467:
இடம்:அயோத்தி அரண்மனை.
மன்னன் பஞ்சணையில் நோயுற்றுக் கிடக்கிறான்.
முதன் மந்திரியை அழைத்து , பூரகுப்தன், ஆனந்த தேவி இருவரையும் வரவழைக்கிறான்.
‘தாயாரே! பூரகுப்தா! நான் அரியணையேறி 12 வருடங்கள் பூர்த்தியாக உள்ளது. எனது வாழ்வு சில நாட்களுக்கு மேல் தாங்காது. நமது முந்தையர் இந்த சாம்ராஜ்யத்தைத் தங்கமாக்கிக் கொழித்தனர். இன்று பலமுனைகளில் இதற்கு சவால் ஏற்பட்டு இருப்பது நீங்கள் அறியாததல்ல. தோரமானா மற்றும் ஹூணர்களை வளரவிட்டால் – குப்தர்கள் கட்டிக்காத்த இப்பொன்னாடு அழிந்து விடும். நீ இந்த ராஜ்யத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும்.எனக்கு வாரிசு வேறு யாரும் இல்லை . நீதான் அடுத்த மன்னன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருக்கவும் கூடாது. அதனால் நாளையே உனக்கு யுவராஜ்யப் பட்டாபிஷேகம் நடக்கும்’
என்றும் கலங்கிடாத மன்னன் கண்கள் சற்றே கலங்கியது…
‘மகாராஜா! அது என் கடமை.. என்னால் இயன்றதை நான் செய்வேன்’ – பூரகுப்தன் கண்களிலும் கண்ணீர் வார்த்தது..
ஆனந்ததேவியின் கண்கள் முதல் முறையாகப் பொறாமையை விடுத்தது – சோகத்தைக் காட்டியது.. சில கண்மணிகளும் திரண்டன – கல்லுக்குள் ஈரம்..
அவர்களை அனுப்பிவிட்டு – முதல் அமைச்சரிடம்:
‘மந்திரியாரே! என் வாழ்வு முடியும் நாள் நெருங்கிவிட்டது…சமுத்திர குப்தனும் குமாரகுப்தனும் சென்ற வழியில் நான் சென்றேன். என் வழியில் அடுத்த குப்தன் வந்தால் குப்த ராஜ்ஜியம் நிலைக்கலாம். இன்றேல் அழிந்துவிடும். அப்படி அழிவதானால் அதை நான் தடுத்து நிறுத்த முடியாது. என் கடைசி மூச்சுவரை என் கடமையை செய்தாகவேண்டும். இன்னொரு கடமையும் இருக்கிறது. எனது மூதாதையரின் சிறப்பு – மற்றும் என் ஆட்சியின் சோதனைகளும், சாதனைகளும் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டும். பின்னாளில் ‘சரித்திரம் பேசுகிறது’ என்று எழுதுபவர் யாரோவாக இருந்தாலும் இதுபற்றி எழுத வேண்டும்’
ஒரு சுய சரிதை எழுதினான்…
முதன் முதலாக சரித்திரத்தில் தன் சுயசரிதத்தை ஒரு சிறு கவியாக எழுதிய மன்னன் இவன்தானோ?
பத்தொன்பதே வரிகளில்..
அதை பிடாரியில் (உத்திரப்பிரதேசம்) தூணில் பொறித்தான்..
முதலில் தனது ஆன்றோர்கள் அனைவரையும் அதில் விவரித்தான்.
பின்னர் தன்னைப்பற்றி எழுதுகிறான்..
அதில் ஒரு சில வரிகள்..
….
ஆட்சியில்…
முழுமை அடைந்து விட்டோம்!
என் தந்தையாரின் பாதங்கள்..அது
விரிந்து வளரும் குளத்து அல்லிகள் போன்றது..அது போல்
விரிந்து வளர்ந்தது அவர் புகழ் இந்த அகிலத்தில் ..
இந்த அல்லிகள் நிரம்பிய குளத்திலே ரீங்காரமிட்டு சுற்றி வரும் தேனி நான்!
இந்தத் தேனி..
கொடுக்கு கொண்டது!
எதிரிகளைக் கொட்டும்..
நான்..
பெரும் புகழ் உடையவன் ஆனவன்.
(ஸ்கந்தகுப்தனில் பிடாரி (உத்திரப்பிரதேசம்) தூண் கல்வெட்டு)
வாசகர்களே! ஒரு நாடு சுபிக்ஷமாக இருக்கும்போது அதை ஆள்பதற்குப் பெரிய திறமைசாலியான அரசன் தேவையில்லை. நாட்டிற்குப் பெரும் துன்பம் வரும்போது அதைப் போக்கி ஆள்பவனைத்தான் சரித்திரம் வெகுவாக மதிக்கிறது. பின்னாளில் எத்தனையோஅமெரிக்க அதிபர்கள் வந்தாலும் – நாடு கண்ட சோதனைகளை எதிர்கொண்டு- வென்று – புகழ்பெற்றான் ஆப்ரகாம் லிங்கன்! அதே போல்தான் நமது ஸ்கந்தகுப்தன். பன்னிரண்டு வருடங்களில் பல விதமான இடையூறுகளைத் தகர்த்தெறிந்து சரித்திரத்தில் நிற்கிறான். அதனால்தான் சாண்டில்யன் குப்தர் காலத்தில் சரித்திரம் எழுத நினைத்தபோது – ஸ்கந்தகுப்தனால் வசீகரிக்கப்பட்டு- மலைவாசல் எழுதினாரோ?
இப்படி ஒரு பொற்காலம் இனி இந்த நாடு கண்டதா?
சரித்திரம் தேடப்படும்…
விரைவில்…
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி
திரு வாஜ்பாய் பிரதமராக முதன்முதல் பதவி ஏற்ற
தருணத்தில் ஒரு நேர்காணலில் தனது கவிதை ஒன்றைச் சொன்னார்
அதிலிருந்து சில வரிகளின் தமிழாக்கம் ( கிருபானந்தன்)
நெடிதுயர்ந்த மலைகளிலே
மரங்கள் இருப்பதில்லை
செடிகள் வளர்வதில்லை
புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை
காணுமிடமெல்லாம் எல்லாம் பனிக்கட்டிகள்
ஒரு சமாதியை ஒத்த வெளுப்புடன்
இறப்பினைப் போன்ற குளிர்ச்சியுடன் ….
நீரினைக் கல்லாக்கும் அந்த உயரம் எதற்கு
என்று தொடங்கும் கவிதையினை
ஆண்டவனே,
எனக்கு அவ்வளவு உயரத்தை
எப்போதும் கொடுக்காதே
சக மனிதனுடன் கைகுலுக்க இயலாத
உயர்ந்த நிலையினை
எப்போதும் கொடுக்காதே
என்று முடிக்கிறார் திரு வாஜ்பாய்

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
எல்லாப் பருவங்களிலும்
காண இயலாது
“தயக்கம்! மறுப்பு!” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்
நான் “வாத்ஸல்யா” என்ற மனநல ஆலோசனை மையம் தொடங்கியிருந்த நாட்கள். தினம் காலை இரண்டு மணி நேரம் ஒரு அரசு புற்றுநோய் பிரிவில் தொண்டர் பணி புரிந்தேன்.
ஒரு நாள், பெரிய டாக்டர், அவசரமாக என்னை அழைத்து, அப்துல் என்பவரைப் பார்க்கப் பரிந்துரைத்தார். “அவருக்கு ரத்தப் புற்றுநோய் (ல்யூகேமியா), ஆனால் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்” என்றார். அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கச் சொன்னார். அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று சொன்னார்.
நான் போய் சேர்ந்த அடுத்த பத்து நிமிடங்களில் அப்துல் வந்து சேர்ந்தார். நல்ல உயரம், கச்சிதமான உடல் அமைப்பு, அடர்த்தியான முடி, வெள்ளை வெளேர் பான்ட்- ஷர்ட், பளபளப்பான கருப்பு பூட்ஸ். நடையில் ஒரு கம்பீரம் தெரிந்தது.
35 வயதானவர், ஈரோடில் பெயர்பெற்ற ஜவுளிக்கடையின் உரிமையாளர். அத்துடன் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல்களில் காலணிகள், மேலாடைகள் உற்பத்தி செய்யும் தொழில் அதிபராக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் கவனம் இருக்கும் என்று தேர்ந்து எடுத்தாகக் கூறினார்.
அவர் சொல்லின் முழு வீச்சை என்னால் ஏற்றுக் கொள்ளமுடிந்தது. என்னுடைய முதுகலை பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி அரசு மருத்துவமனையில்தான் செய்தேன். அங்குள்ள டாக்டர், நர்ஸ் மேன்மையாக, சாந்தமாக நோயாளிகளை அணுகுவதையும் கவனிப்பதையும் பார்த்துப் பிரமித்துப் போனேன். பல நோயாளிகள் பொருளாதாரத்தில் எளியவர்கள், அதைப் பொருட்படுத்தாமல் அவர்களை மனிதர்களாக நடத்தினார்கள். இப்படிப்பட்ட இடத்தை அப்துல் தேர்ந்தெடுத்ததை மனதிற்குள் பாராட்டினேன்.
தன் ஊரில், அப்துல் தன் குடும்ப டாக்டரிடம் போவதுண்டு. சமீப காலமாக, யார் எங்கே இருமினாலும் இவருக்கு உடனே ஜலதோஷம், கூடவே காய்ச்சல் வந்துவிடும். உடம்பு மிகச் சோர்வாக இருப்பதையும் கவனித்தார். அவர் மனைவி ஆயிஷா, இவர் காலை வேளையில் தொழுகைக்கு எழுந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வதால் கவலை கொண்டாள்.
மூன்று பிள்ளைகள். அந்தக் காலகட்டத்தில், இரண்டு பிள்ளைகள் சட்டம். மூன்றாவது கர்ப்பம் என ஊர்ஜிதம் ஆனதும், அங்குள்ள மாவட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்களைச் சந்தித்து, இதற்கு அனுமதி வாங்க வேண்டுமா என்று விசாரித்தார். இப்படிச் சட்ட திட்டங்களை மதிப்பதைப் பார்த்து எல்லோரும் வியந்து போனார்கள், பலர் நண்பர்கள் ஆனார்கள்.
சென்ற வாரம், தன் குடும்ப டாக்டர் சொன்னபடி, புற்றுநோய்தானா என்று ஊர்ஜிதப்படுத்த, சென்னை வந்து முதல்முறையாக டாக்டர்களைச் சந்தித்தார். ரத்தப் பரிசோதனை எல்லாம் செய்துகொண்டார். டாக்டர் அவரை மூன்று நாட்களுக்குப் பிறகு வரச்சொன்னார். வேலை இருந்ததால் ஒரு வாரத்திற்குப் பின்தான் வர முடிந்தது. டாக்டர்கள், அப்துலுக்கு விவரித்து, சிகிச்சையைச் சீக்கிரமாக ஆரம்பிக்க வலியுறுத்தினார்கள்.
அப்துலுக்குத் தனக்கு புற்றுநோய் எனக் கேட்டதும் ஒரு பக்கம் வியப்பு. மறுபக்கம் இதைத் தன் வாழ்விற்கு இடையூறாகக் கருதி கோபம், அழுகை. எனக்கு, பிற்காலத்தில் “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்”ல் வரும் ஜாகிர் பாத்திரத்தைக் கண்டதும் இவர் ஞாபகம்தான் வந்தது. அப்துல் தன் பெற்றோரை ஹஜ்ஜுக்கு அழைத்துச்செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். “அதை முடிக்காமல் எப்படி சுயநலவாதியாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்?” என்றார். தன் கடைசிக் குழந்தையை சினிமாவிற்கு கூட்டிச் செல்வதாகச் சொல்லி இருந்தாராம். அந்த வாக்கை உடைப்பதா?
எல்லாவற்றுக்கும் மேலாக எதற்காகச் சிகிச்சை என்றார். “எப்படியும் புற்றுநோயால் மரணம் நிச்சயம். ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்யவேண்டும்” என்று திரும்பத்திரும்பக் கேட்டார்.
நோயாக இருந்தாலும் வாழ்வின் தரம் நிலைத்திருக்கவே சிகிச்சை. அதுவும் அப்துலுக்குப் புற்றுநோய் எனக் கண்டறிந்ததும் சிகிச்சை ஆரம்பித்துக் கொண்டால் அது பரவுவதைத் தடுக்க முடியும், விளைவாக, உடல் நிலை சுதாரித்தால், எடுத்திருந்த ஹஜ் ப்ளான்களையும் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்று சொல்லிச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வலியுறுத்தினோம்.
சில சமயங்களில் அதிர்ச்சியான செய்தியைப் பெறுபவர்கள், டாக்டர் முதலில் சொன்ன விஷயத்தை முழுதாக உள்வாங்கிக் கொள்ளாமலும் இருக்கலாம். அப்துலிடம் தனக்கு வந்த புற்றுநோய் பற்றியும், அதன் சிகிச்சை முறைகளையும் மறுபடி விவரித்தால் அதை உள்வாங்கிக் கொண்டு, தன்னம்பிக்கையும் இருப்பதால், சிகிச்சை முடிவெடுக்க உதவும் என்று எனக்குத் தோன்றியது. டாக்டரிடம் தொலைபேசியில் பரிந்துரைத்தேன். அப்துல் டாக்டரைச் சென்று சந்தித்தார். பிறகு பயம், குழப்பத்துடன் ஊர் சென்றதாகவும், இரண்டு நாட்களில் திரும்புவார் என்றும் டாக்டர் எனக்குத் தெரிவித்தார்.
சொன்னது போலவே இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்துல் வந்தார், பத்து பேருடன்! பல விதமானவர்கள். அவருடைய நற்செயலால் கூடிய கூட்டம். அப்துலின் உடல்நிலைபற்றிக் கவலைகொண்டு வந்திருந்தார்கள். டாக்டரும், நானும் நிலையை விவரிக்க, கண்கலங்கி விட்டார்கள்.
அப்துலை அழைத்து, இந்தப் பக்கபலத்தைப்பற்றி விவரிக்கச் சொன்னேன். வந்தவர்களிடமும் கேட்டேன். அச்சமின்றி, ஒவ்வொருவரும் பலவற்றைப் பட்டியலிட்டு, தன்னால் எப்படி, என்ன செய்யமுடியும் என்பதை வரிசைப்படுத்திச் சொன்னார்கள். இதை அங்குள்ள மற்ற நோயாளிகளின் நிலைமையுடன் அப்துலை ஒப்பிடச் சொன்னேன். இப்படி ஆதரவாளர்கள் சிகிச்சையின்போது நமக்கு ஊக்குவிக்கும் விதங்களைக் கணிக்க, அப்துலின் மனம் மாற ஆரம்பித்தது.
டாக்டர், என்னை அழைத்து, எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு நல்லது என்றார். என்னுள் ஒரு ஐ.சி.யூ விறுவிறுப்பு நடனமாடியது.
அப்துல் மதத்தில் கல்யாணத்தில் “மெஹர்” தரும் பழக்கம், மணப்பெண்ணிற்கு உத்திரவாதமாக. பணம் மட்டும் அல்ல, நம்மை நம்பி வந்தோரைக் காப்பாற்றுவது தர்மமே. அப்துல் கடமையின் முழு வீச்சில் இருந்ததால் இதை விலாவாரியாகப் பேசி வலியுறுத்தினேன். சிகிச்சை நிராகரிப்பு, கடமைகளிலிருந்து ஓடுவதாகும் என்றேன். பொறுப்பானவரான அப்துலை, இந்த ஒப்பீடு திகைக்க வைத்தது. யோசிக்கத் தொடங்கினார்.
தனக்குள் இருந்த பயங்களினால் தத்தளிப்பதாக அப்துல் சொன்னார். மரணத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். புற்றுநோய் என்றால் எப்படியும் மரணம் நிச்சயம் என்ற தன் புரிதலைப்பற்றிக் கூறினார். சிகிச்சைத் தொல்லை வேறா என்றார்.
சிகிச்சையால் பின்விளைவுகள் நேரலாம், ஆனால் அவை நிரந்தரமானது அல்ல. சிகிச்சை, புற்றுநோயைத் தடுத்து நிறுத்தும் கருவி. அதற்கு நாம் ஒப்புக்கொள்ளாதது நாமே முட்டுக்கட்டை போடுவதுபோல் ஆகும் எனச் சிந்திக்கச் சொன்னேன். இன்னொரு விதத்தில், சிகிச்சை எடுக்காதது தற்கொலை செய்வதற்குச் சமம். அது அவர் மதக் கோட்பாட்டை அவமதிப்பது போல் ஆகும் என நினைவூட்டினேன். அப்துலிடம் இதையும் பகிர்ந்தேன், சிகிச்சையால் பிரயோஜனம் இல்லை என்றால் அதை இந்த அளவிற்குச் சொல்லமாட்டோம் என்பதையும் சொன்னேன்.
அடுத்த கட்டமாக, தன்னுடைய இளம் வயதில் பலவற்றை சாதிக்கப் பட்டியலிட்டு நேரம் சுருங்கிப் போவதை நினைத்துப் பதறினார். அப்துலை தன்னுடைய இந்த வருத்தமும், சிகிச்சை செய்து கொள்ளாததும் நேர் எதிராக இருப்பதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். நேரத்தைக் கூட்டிக்கொள்ள சிகிச்சை ஒரு வழியாகுவதைப்பற்றி உரையாடினோம்.
அப்துலுக்கு வருத்தம், கோபம், பீறி வந்தது. க்யூப்லார் ராஸ் அவர்களின் யதார்த்தமான “டெத் அண்ட் டையிங்” (Death and Dying) புத்தகத்திலிருந்து பல பக்கங்களை அப்துலுடன் படித்தேன். அதில், இவர் நிலையில் இருப்பவர்களின் விவரிப்பும், அப்துலுக்கு ஏற்பட்ட குழப்பங்கள்பற்றியும் பல சர்ச்சை உண்டு. வாழ்க்கையில் திடீரென எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும், நாம் எல்லோரும் அனுபவிப்பது: அதிர்ச்சி அடைவது, மறுப்பது, தனிமையை விரும்புவது, நிலையை மாற்றப் பேரம் பேசுவது, மனம் உளைச்சலுக்கு ஆளாகுவது, கடைசியாக ஏற்றுக் கொள்வது என்று படித்தோம். ஒவ்வொரு பாகமாகப் படிக்க, அப்துல் தன் அந்தரங்கத்தில் அது ஓடுவதைக் கண்டறிந்தார். அந்த ஆசிரியர், புத்தகத்தை நோயாளிகளிடம் கேட்டுப் பதிவு செய்ததாலும், அதில் கற்பனையோ, போதிப்பதோ இல்லாததாலும்தான் இப்படியோ? படிக்கப் படிக்கத் தயக்கம் நகர்ந்து, சிகிச்சைக்கு அப்துல் ஒப்புக்கொண்டார்.
நடுநடுவில், கடவுள் மீது நம்பிக்கைபற்றிப் பல அலசல் மோதல். அப்துல் ஆண்டவனை நம்புவர். மதத்தில் சொல்வதைச் செய்பவர். ஐந்து முறை தொழுவது, தானம் செய்வது எனப் பல. சிகிச்சை செய்துகொள்ள அவருடைய நம்பிக்கை உபயோகப்பட்டது. ஒரு சமரசக் கருத்தைச் சற்று மாற்றி, நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் பல அடிகளை எடுத்து, முயற்சிகளுக்குத் துணை நிற்பார் என்றேன்.
அவருக்குத் தெளிவானது, சிகிச்சைக்கு ஒத்துழைப்பதும் ஒரு தேவையான சுயமுயற்சி! தன்நம்பிக்கையைச் சோதிக்க இப்படி நிகழவில்லை. கடவுள் பரிசோதனையாளர் இல்லையே! நம்பிக்கை இருப்பதால், தாங்கி-சமாளித்து-வெளியே வர முடியும். ஏனென்றால், இந்த நிலைகளில் ஆதரவுகளை, வளங்களை, நமக்குத் தோள் கொடுத்து காப்பாற்றுவாரை, நம் ஆசிகளை எண்ணிக் கொள்வது மருந்தாகும்! அப்துல் இவை ஒவ்வொன்றையும் பெரிய சொத்தாகக் கருதினார். அப்துல் தன்னுடைய அனுபவிப்பைத் திடநம்பிக்கையுடன் சேர்த்து அதை வைத்தியத்தின் மூலப் பொருளாக்கினார்
இந்தக் கட்டத்தில் ஆயிஷாவையும் சேர்த்துக் கொண்டேன். அவர்களும் நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார். அப்துலினுள் ஒரு அச்சம், இதுவரையில் தானே எல்லாம் கவனித்துக் கொண்டதால் இப்பொழுது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்று திகைத்தார். “என் சிகிச்சையின்போது, ஏதாவது நடந்து விட்டால் ஆயிஷா எப்படிச் சமாளிப்பாள்”? என்ற கேள்வி. ஆயிஷா ஒவ்வொன்றையும் கையாளுவதைப் பார்த்து, அவளிடம் இதுவரையில் பார்க்காத திறன்களைப் பார்த்து, தெம்பானார் அப்துல். மெதுவாகப் பதில் கிடைக்க, சமாதானம் ஆனார். இதையொட்டி அவர் பகிர்ந்தார்: எப்பொழுதெல்லாம் இந்தச் சந்தேகம் எழுகிறதோ அவரை உற்சாகப் படுத்தும் பாடல் வரி, “கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா..”. தன் நம்பிக்கை, உற்றார் உறவினரின் ஆதரவு, தெம்பைத் தருகிறதை உணர்ந்தார்.
ஆயிஷா-அப்துல் புற்றுநோய் என்றாலே மரணம் என்ற முடிவெடுத்து முற்றுப்புள்ளி ஏன் வைக்கிறார்கள் என்று
ஆராய்ந்தோம். மரணம் வரும்பொழுது வரும். காத்திருப்பது, செயலற்ற நிலையை உணர்த்தும். நம்மால் முடிந்ததை, முடியும்வரை செய்வதை, மரணமோ, புற்றுநோயோ தடுக்க முடியாது என்பதை இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.
டாக்டரும் நானும் இதையே வலியுறுத்தினோம். சிகிச்சை தன் பங்கிற்கு நலன் கொண்டு சேர்க்கும் என்று உறுதி அளித்தோம். நம்பிக்கை இருந்ததால் அப்துல் இதை ஏற்றுக் கொண்டார்.
நம்பிக்கையால் தெம்பு கூடும். அப்துல் அந்தத் தெம்பில் முயற்சியை எடைபோட்டு, பெரிது, சிறிது என்றில்லாமல் முயற்சி என்பதை மட்டும் மனதில் கொண்டு செய்தார். தெம்பு அதிகரித்தது. ஆன மாற்றங்களை எடை போடாமல் கவனிக்க, ஒவ்வொன்றும் நேர்மறை சிந்தனையானது. மெதுவாக, இதுவே ஊக்குவித்தது; மனப்பான்மையானது. தினமும் இப்படியே இருந்துவர, நிரந்தரமாக, நிலையைக் கையாள நல்ல ஆயுதமானது!
இதை அனைத்தையும் அப்துல் திட்டமிட்டுச் செய்தார். நல்லாசிகளைக் குறித்து, பகிர்ந்துகொண்டார். அன்றாடம் அடைந்த வெற்றி, மைல்கற்கள் உற்சாகத்தைக் கூட்டியது. அப்துல் திருப்தி அடைய, அவர் குடும்பம், உற்றார் உறவினர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
முடிவு எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. நிச்சயமே. அப்துல் தன் நிலையை மாற்றி, தன் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயம், செயலற்ற நிலை கொண்டு வந்ததை உணர்ந்து அதிலிருந்து விடுதலை பெற்று நகர்ந்துகொண்டார். அதற்குப் பதிலாக, தினப் பொழுதை அளிக்கப்பட்ட இனிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டார்.
கீமோதெரபிக்கு வருபவர்கள் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டார்கள். பலருக்குப் பல தற்காலிக மாற்றங்கள் இருந்தாலும், சிலரின் கண்களில் திகழும் வீரத்தையும், புன்னகைகளையும் பார்த்துக் கற்றுக்கொண்டார்கள் – வருவதை வெல்லுவது நம்மிடத்தில்தான் இருக்கிறது என்று. எதிர்கொள்ள இதயத்துடன், தோள் கொடுக்க பலர் இருப்பதே மருந்தாகும். அப்பொழுது தினம் ஒரு வரம் என்று வாழ்ந்து அப்துலைப்போல் நோயை (எதிர்ப்புகளை) வீழ்த்தி வாழமுடியும்!
**********************************************************************
ஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்
ஓவியன் தூரிகை
வண்ணத்தில் மூழ்கி
வண்ண ஓவியமானது !
வீணையின் தந்திகளில்
விரல்கள் உறவாடி
இன்னிசையானது !
கவிஞன் எழுதுகோல்
வார்த்தையுடன் விளையாடி
இனிய கவிதையானது !
கடல் அலைகள் மேகத்தில்
கலந்து பேசி உறவாடி
கொட்டும் மழையானது!
விண்ணில் சிறகடித்து
ஒற்றைச் சிறகோடு
சுற்றிய வெண்புறா
‘வன்முறைக்கு விடை கொடு
அன்புக்கு இடம் கொடு
உண்மைக்கு உயிர் கொடு
அமைதிக்கு கை கொடு ‘
மௌனமாகப் பேசி
மண்ணுலகில்
சமாதானச் சின்னமானது !
மேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி
தமிழில் ஒரு மைல்கல் படம்! பார்க்கத் தவறாதீர்கள்!
முதலில் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பின் நன்றி.
சினிமாவில் சம்பாதித்ததை நல்ல சினிமா எடுக்கும் கனவுகளோடு அலையும் பல புதிய இயக்குநர்களுக்கு அவர் வாழ்வு கொடுக்கட்டும்.
மழைகொட்டிக்கொண்டிருக்கிற விடியலில் ரெங்கசாமி மலைகிராமத்திற்கு வேலைக்குக் கிளம்புகிறபோதே நாமும் அவனுடன் கிளம்பிவிடுகிறோம்.
தேய்ந்த அந்த ஹவாய் செருப்புக்களுடன் அவன் நடக்கிறபோது என்றும் தேயாத ஒரு கனவொன்றை அவன் சுமந்து செல்கிறான் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அவனுக்கென்று ஒரு சிறிய இடம்.
வாங்க வேண்டுமென்பதே அந்தக்கனவு.
உழைப்பை உறிஞ்சி அவனுக்குக் கிடைக்கப்பெற்ற அந்த நிலமே அவனை தன் காவல்காரனாக்கிக் கொள்வது ஒரு துயரம்.
அதற்காக இந்தப்படம் துயரத்தையும்,வலியையும் மட்டுமே சொல்லி அயர்வை ஏற்படுத்தவில்லை.
நிஜத்தில் போக்குவரத்தில்லா மலைகிராமங்களில் பயணிக்கும்போது சந்திக்கும் மனிதர்களை ,இரண்டு மாநில எல்லைகளில் வாழும் அம்மக்களின் புரிந்துணர்வை ,தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சும் முதலாளிகள் இருப்பினும் ,நல்ல “கங்காணியை” கம்யூனிஸம் பேசினாலும் நிஜ பரிவுடன் அத்தொழிலாளிகளுக்காக நடந்து கொண்டிருக்கும் ” சாக்கோ”வை , கொஞ்சமும் சினிமாத்தனமின்றி காண்பிக்கிறது. இயக்குனர் “லெனின் பாரதிக்கு” வாழ்த்துகள்.
யதேச்சையாக தேநீர்க்கடையில் நிச்சயிக்கப்படும் ரெங்கசாமியின் திருமணம், தான் வாங்க இருக்கும் நிலத்தை தன் மகனுக்கு அடையாளம் காட்ட வேட்டியை மரத்தில் கட்டிவிட்டு வரும் தகப்பன்.எல்லாம் யதார்த்தம்.
உரியடியில் வழுக்குமரத்தில் ஏறி சறுக்கிக்கொண்டே இருப்பதுமாதிரிதான் நம் எல்லோரையுமே ,நம் சிறிய/ பெரிய கனவுகளை அடைந்து விட முடியாமல் நம் வாழ்க்கை திசை திருப்பி எங்கெங்கோ கொண்டு நிறுத்துகிறது. ஆனாலும் எப்படியோ சமரசமோ ,சமாதானமோ செய்து கொண்டு வாழ்க்கையை நாம் ஓட்டி விடுகிறமாதிரி ,உழைப்பை தவிர வேறொன்றறியாத மக்களால் இருக்க முடிவதில்லை என்பது எத்தனை வருத்தம் தருவது அதைவிட அப்படி இருப்பவர்கள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட மாட்டார்களா என நாம் ஏங்கி தவிக்க நேரிடுவதும்.
ரெங்கசாமியின் சேமிப்பில் வாங்கப்பட்ட ஏலக்காய் மூட்டை பிரிந்து உருண்டு சரிகிறபோது மனம் பதைபதைப்பதெல்லாம் அதனால்தானோ ?
கட்சி சந்தா கொடுக்க மரத்தின் மேலிருந்து இறங்கி வருபவனை காட்டுகிறஅந்தக்காட்சி ஒன்று போதும் தேனி ஈஸ்வரை பாராட்ட.
வெகுநாட்களுக்குப்பிறகு மனதை மீட்டும் இளையராஜாவின் பின்னணி இசை. நானும் இந்தப்படத்திலொரு பாத்திரம் என்கிறது.
ரெங்கசாமியின் வீட்டில் பளபளவென்று தேய்த்து வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பித்தளை தவலையும் அதன் மேல் வைத்திருக்கும் எவர்சில்வர் சொம்பும் ஆஹா!
படத்தில் வாழ்ந்திருக்கும் அத்தனை பேருமே அருமையான தேர்வு.
எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்ததற்குக்காரணமென்னவெனில்,நானும் இப்படிபட்ட கிராமம் ஒன்றிற்கு பணிநிமித்தம் நடந்து சென்றிருக்கிறேன்.” இந்தா ஊர் வந்துரும் ஊர் வந்துரும் ” என என்னை எட்டு கிலோமீட்டர் நடக்க வைத்திருக்கிறார்கள் .வழியில் அவர்கள் கும்பிடும் சிறுதெய்வம் போலொரு தெய்வத்திடம் நானும் பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
நடை பழகியபிறகு அவ்வூர் மக்களுக்கு தகவல்களைக் கொண்டு செல்பவளாக இருந்திருக்கிறேன்.
ஒரு பாய்,ட்ரங்க் பெட்டி ,இரண்டு மூன்று தாம்பாளங்கள் ஒரு குடம் கொஞ்சம் பாத்திரங்கள் என திருமணம் முடித்து ஊருக்குத் திரும்புபவர்களுடன் நடந்திருக்கிறேன்.விடைபெறும்போது அதிரச தூக்கிலிருந்து எனக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
மற்றொரு கிராமத்தில் இரவானால் கரும்புக்காட்டுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததை போகிற வருகிறவர்களிடம் ” தண்ணீ தேடி வருதுங்க அதுங்களும் பாவம் எங்க போவும்” என சொல்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
கழுதைகள் மட்டும் சுமைதூக்கிச்செல்லும் ஊரில் கயிற்றுக்கட்டிலில் உடம்புக்கு முடியாதவரை ஊர்சனங்களே சேர்ந்து ஓட்டமும் நடையுமாய் வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பிழைக்க வைத்ததைப் பார்த்திருக்கிறேன்.
அதனால்தானோ என்னவோ இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் கண்களை விட்டுப் போகமறுக்கிறது.
மிகுந்த அன்புடன் தரப்படும் இனிப்பின் ஒரு விள்ளலைப் பெற்றுக்கொள்கிற மகிழ்வுடன் .
வீட்டிற்கு வந்தும் ” கிறுக்குக் கிழவியின் ” ஓலமும்,ரத்தம் கக்கி சாகும் வனகாளியின் இருமலும், கைப்பையும் குடையுமாய் தொழிலாளர்களுக்காக நடந்து திரிந்து விரக்தியுறும் ” சாக்கோவும்” நினைவில்.
பொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்
நன்றி : அழியாச்சுடர்கள் ( கதை வடிவத்திற்கு )
நன்றி: சே சிவகுமார் – ஒலி வடிவம்
வக்கீல் அண்ணா பந்தியை ஒரு நோட்டம் விட்டார்.
அடியேன்.அவருக்குநேர்த்தம்பி அல்ல.ஒன்றுவிட்டதம்பிகூட அல்ல. அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு உலகமே அவரை, அண்ணா.அண்ணா! என்று வாய்நிறைய அழைத்தது.அந்த மாதிரித் தம்பிதான் நான். ஒரே தெரு எதிர்த்த வீடு-இந்த உறவைத் தவிர வேறொன்றும்இல்லை.அதேகாரணத்தால் உலகத்தாரைவிடநான்மிக மிக நெருங்கிய தம்பி கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று ஓடும் தம்பி, ஈஸன் ஹோவர் போட்டிபோடுவதிலிருந்து இளம்வித்வான் கச்சேரி வரையில் அவருடைய அபிப்பிராயத்தை எல்லோருக்கும் முன்னால் முதல் முதலாக, அந்தரங்கத்தில் கேட்கும் அபிமானத்தம்பி
அண்ணா பந்தியைச் சாரி சாரியாக நோட்டம் விட்டார். ஜூனியர் பாப்பா பந்துலு, பூதகணங்களாகச் சேவைக்குக் காத்துக் கிடக்கும். அண்டைவீட்டு இளைஞர்கள்.எதிர்த்தவீட்டுதான்,இரண்டு குமாஸ்தாக்கள்-எல்லோரும் செய்த சாப்பாடு ஏற்பாடு சரியாக இருக்கிறதா என்று அந்த ராஜாளி நோட்டம் ஆராய்ந்து கொண்டி ருந்தது. அவர் திருப்தி அடைய வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலைதான். ஜூனியர் பாப்பா, வேற்றுத் தெருவுக்குள் கால் வைத்துவிட்ட நாயைப்போல ஒண்டிஒடுங்கி நடந்துகொண்டிருந்தார். அண்ணாவின் பார்வைகம்பீரமாக ஒவ்வொரு நபரையும் அவருடைய அந்தஸ்தையும் எடைபோட்டு, சரி,ம், சரி என்று ஆமோதம் செய்து கொண்டுவந்தது.
அண்ணா கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி. கொலையும் பறியும் புரிந்துவிட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகச் சட்டத்தின் வாயில் மாட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டிருந்தவர்களை வெளியே பிடுங்கி எறிந்து அபயம் தந்திருக்கிறார். தீவட்டிக் கொள்ளையோ, கொலை பாதகமோ-எதுவாயிருந்தால் என்ன? அண்ணா திவலை பறக்க, நீர்வீழ்ச்சியைப்போல வாதாடும்போது நீதிபதியின் தனித்தன்மை, நடுநிலைமை எல்லாம்.அமுங்கி ஆற்றோடு போய்விடும். இப்பேர்ப்பட்ட அண்ணா. வாழ்க்கையில் நீதிபதி வாழ்க்கையில் எந்தத்தப்பையும்-குற்றம் கிடக்கட்டும்-தவற்றைக்கூட சின்னத்தப்பைக்கூட லேசில் விடமாட்டார். சாணக்கிய சாகசம் செய்து வேரை எற்றி, நீறாக்கி, வெற்றி அடைந்த பின்புதான் அமைதி காணுவார்.
அண்ணாவின் பிள்ளைக்கு முதல் நாளைக்கு முதல் நாள் கல்யாணம் ஆகிவிட்டது. மறுநாள் இரவு எல்லோரும் திரும்பி விட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் கிருகப் பிரவேசம். மணப் பெண்ணை அழைத்தாகி விட்டது. கோலாகலமாகத்தான் எல்லாம் நடந்தது. ஒரே பிள்ளை! சாப்பாட்டுக்கு இலைபோட்டாய்விட்டது.நூற்றைம்பது இலை போடக் கூடிய கூடத்தில் நெருக்கி இன்னும் ஐம்பது இலை விழுந்திருக்கிறது. கொல்லைக் கட்டு, அடுக்களை, கொல்லை நடை வாசல் நடைஎங்கே பார்த்தாலும் இலைபோட்டிருக்கிறது. கூடத்துப் பந்தி பொறுக்கான் பந்தி. இருநூறு இலையும் அண்ணாவின் அபிப்பிராயத்தில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஜூனியர் பந்துலுவும் நானும்பார்த்துத்தான் உட்கார்த்திவைத்திருக்கிறோம்.
அண்ணா கம்பீரமாகப்பார்க்கிறார். வாழ்க்கையில் நீதிபதிஅவர். சின்னத் தவறு நடந்தாலும் தவறுதான். துளி அபஸ்வரம்பேசினாலும் அபஸ்வரந்தானே-அண்ணாவும். வெறும்வக்கீல் அல்ல பெரிய சங்கீத ரசிகர். ரசிகர் என்பதைவிடச் சங்கீத க்ரிடிக் (விமரிசகர்) என்று சொல்வது பொருத்தம். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்து நீந்தியவர். வேங்கமடமகி சார்ங்க தேவர் எல்லாம் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். தமிழ்ப் பண்களையெல்லாம் துருவித் துருவிக் கேட்டிருக்கிறார். மாகாணத்தின் எட்டு மூலையிலும் எங்கே சங்கீத சர்ச்சை நடந்தாலும் அண்ணா அங்கே இருப்பார் தலையின் முன். வழுக்கை பளபளக்க, ஒரு ராகத்தை பேச்சில்தான் விளக்கிக் கொண்டிருந்த மகாநாட்டில் பிரமாதமாக ஒரு அண்ணாவின் தலையை ஒருவர் கார்ட்டுனாக வரைந்திருந்தார். அது பெரிதாகி அண்ணாவின் ஆபீஸில் தொங்குகிறது.
அண்ணாவுக்கு யார் பாடினாலும் பிடிக்காது. அவருடைய லக்ஷ்ய சங்கீதத்தின் வாசற்படியைக்கூடத் தற்கால சங்கீத வித்வான் யாரும் மிதிக்கவில்லை என்பது அவர் கருத்து அவருடைய சொந்த ஊரான பூக்கால் குளத்தில் ஒரு பெண் நன்றாகப் பாடும் அதன் பாட்டைத்தான் அவர் திருப்தியோடுகேட்பார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்குமுன்வாழ்ந்த ஒருவாக்கேயக்காரரின்பேரனுடைய சிஷ்யனின் பெண் வயிற்றுப்பேத்தி அந்தப்பெண். அவள் இப்போது கல்யாணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி ஹைதராபாத்தில் குடியும் குடித்தனமுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். கிருகப் பிரவேச வைபவத்திற்கு மாலையில் அவள்தான் கச்சேரி செய்யப் போகிறாள். ஹைதராபாத்திலிருந்து அதற்காகத்தான் அவள் வந்திருக்கிறாள்-அபஸ்வரம் என்ற வார்த்தையிலிருந்து எங்கெங்கோ போய்விட்டது.அபஸ்வரம் என்ன.அவச்சொல்கூட_அண்ணாகாதில் விழக்கூடாது.கல்யாணத்திற்குமுன்.கிருகப்பிரவேசத்திற்காகப்பந்தல் போட்டுக் கொண்டிருந்தான். காலை எட்டுமணி குமாஸ்தாக்கள் இன்னும் வரவில்லை..பிச்சைக்காரன் ஒருவன் வந்துசேர்ந்தான்.அந்த நிழலே அண்ணா வீட்டு வாசலில் விழக்கூடாது. ஆள் புதிது. துந்தனத்தை மீட்டிக்கொண்டு கருதியோடு இழைந்து கள்வியகுரலில் பாடிக்கொண்டுவந்தான்
“காஞ்சிமாபுரியில் வாழும் காமகோடிவாவா வாங்க்ஷையுடன் வந்தெனக்கு வரமருள வாவா, தற்பரம் அளிக்கும் திவ்ய கற்பகமே வா வா”
“ஏய் மறுபடியும்பாடு”
“காஞ்சிமாபுரியில் வாங்க்ஷையுடன் வந்தெனக்கு.”
“என்னது?”
“வாங்க்ஷையுடன்.”
“வாஞ்சையில்லை?”
“இல்லீங்க”
“ ஏன்”
“எங்க குருநாதன் அப்படித்தான் சொல்லிக்கொடுத்தாரு”
“யாரு உங்க குருநாதன்?”
“முருகப்பண்டாரம்”
“எங்கே இருக்கார் அவர் இப்போ?”
“சமாதி ஆயிட்டாருங்க”
“போனாப் போறார்.நீ இனிமே வாஞ்சைன்னு சொல்லு’
“அவரு வாங்க்ஷைன்னுதானே சொல்லுவாரு”
“அப்ப உனக்கு அரிசி கிடைக்காது.”
“வேணாமே.”
“நீ வேணும்னுதான் கேட்டுப் பாரேன்-கிடைக்கிறதா பார்ப்போம்.”
“நீவேணும்னுதான் என்னைச் சொல்லச் சொல்லிப்பாரேன். நான் சொல்கிறேனா,பார்ப்போம்”
“சீ.சீ.நாயே! போ! பதில் பேசாதே”
“நானா இப்போ வள்ளுவள்ளுனு உளுவறேன்?”
“போடான்னா”
“அட போய்யா, பிச்சைக்கு வந்த இடத்திலே சண்டைக்குல்ல நிக்கறே கச்சைகட்டிக்கிட்டு” என்று பந்தல்காரன் இடைமறித்தான்.
“போய்யா.போ.ஏங்க அந்த ஆளோடவம்பு? தக்கு பிக்குன்னு ஏதாவது உளறுவான்.நமக்கு என்னாத்துக்குங்க”
“குருநாதன் சொல்லிவிட்டானாம், அவன் சொல்ல மாட்டானாம்!”
“ஆமாய்யா சொல்லத்தான் மாட்டேன். சொல்லு, மனுசன் உண்டாக்கினதுதான்.காக்காய்க்குக்கிளின்னுபேர் வச்சுநானூறுபேர் அளைச்சா கிளிதான். ஆமாம்”
“நீ இப்பப் போகமாட்டே? போய்யா.அப்புறம் தெரியுமா?”
அப்போதுதான் நானும் வந்து சேர்ந்தேன். “ஏதோ தெரியாத பயல்’
“யாரு, அவனா? நீன்னா தெரியாத பயல். பாயின்ட் பாயின்டாப் பேசறான் தெரியாத பயலாம்.பிடிவாதக்காரப் பயன்னா அவன்’
“தொலையறான் அண்ணா, விடுங்கோ’
அண்ணா வாழ்க்கை,வார்த்தை எல்லாவற்றிலும் நீதிபதி:ஆமாம்.
அண்ணா பந்தியைப் பார்த்துக்கொண்டேவந்தார்.திடீரென்று முகம் இருண்டது.புருவத்தைச்சுளித்தார்.மூக்கின் இதழ் விரிந்தன.
“ஏய், பஞ்சாமி”
“அண்ணா.”
“வா, இப்படி”
ஒடினேன்.
“யாரது”
“யாரது”
“எங்கே?”
“அதோ பார்!”
கூடத்தில் நடைநிலைக்கு எட்டியதாழ்வாரத்தில் போட்டிருந்த பந்தியில் ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தான்.நடுப்பருவத்தைக் கடந்து கிழத்தனத்தில் கால் வைத்த பருவம் எலும்பும் தோலுமான உடல் அளவுக்கு மிஞ்சிய நரை கன்னம் முழுவதையும் மறைத்த தாடி ஒழுங்கில்லாத குரங்குத் தாடி பல பல பட்டினிகளால் வயதை மீறிய மூப்புத்தோற்றம் கண்ட தண்ணிரில் நனைத்துநனைத்துப் பழுப்பேறிய, மடித்துப்போன, ஒட்டுகள் போட்டவேட்டி பக்கத்தில் அதே பழுப்பு நிறத்தில் ஒரு மூட்டை இவ்வளவு காபந்துக்களுக்கிடையே, ராகுவந்து அமுதத்திற்கு அமர்ந்ததுபோல அமர்ந்துவிட்டான்.அமுதசுரபியை ஏந்தி வரும் மால் பூண்ட மோகினி வேடந்தான் மயங்கிவிட்டது: அண்ணாகூட ஏமாந்துவிடுவாரா.என்ன?
“எப்படிடா வந்தான் அவன்” என்று இரைச்சல் போட்டார்.
மெளனத்தைத் தவிர வேறு விடை எதைச் சொல்ல? “
அழகா இருக்கடா நிர்வாகம் கிளப்புடா அந்தக் கழுதையை’
“உட்கார்ந்துவிட்டானே, அண்ணா” என்று மெதுவாகச் சொன்னேன்.
“அப்படியா, மன்னிக்கணும்’ என்று ஒரே ஒட்டமாக ஓடினார். அந்த இலைக்கு முன் நின்றார். இருநூறு முகங்களும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன.
“ஏய், எழுந்திர்றா”
அவன் வாய் பேசாமல் அவரை நிமிர்ந்து பார்த்தான். வாயில் போட்ட கறி உள்ளே செல்லாமல் அந்தரத்தில் நிற்க, எச்சிலான கை இலையில் இருக்க, அவரை மெளனமாகப்பார்த்தான். “எழுந்திருடா” மீண்டும் அதே தீனமான பார்வை.
“எழுந்திருடான்னா’
“பசிக்கிறது, எச்சில் பண்ணிவிட்டேன்.”
அவ்வளவுதான்.
அப்படியே தலைமயிரை ஒரு லாவு லாவினார் அண்ணா. உடும்புப் பிடி!
“எழுந்திர்றாங்களேன்.பதில்சொல்லிண்டா உட்கார்ந்திருக்கே”
பிடித்த பிடியில், பரதேசியின் கை தானாகவே பக்கத்திலிருந்த மூட்டையை அனைத்துக்கொள்ள, காலும் தானாகவே எழுந்து விட்டது. இடது கையால் அப்படியே தர தரவென்று அவனைத் தள்ளிக்கொண்டு, நடையைக் கடந்து, வாசல் திண்ணையைக் கடந்து, ஆளோடியைக் கடந்து, படியில் இறங்கி, பந்தலுக்கு வெளியே ஒரு தள்ளுத் தள்ளினார் அண்ணா தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புறவிழுந்தான் அவன்.
“அப்பா, அம்மா, பாவி” என்று முனகிக்கொண்டே எழுந்தான். திரும்பி அவரைப் பார்த்தான். முகம் கொதித்தது. பசியின் எரிச்சல் கண்ணில் எரிந்தது.கைக்கு எட்டிவாய்க்குக்கூடத்துளி எட்டிபசியைக் கிளப்பிவிட்டு முழுவதும் கிட்டாமல் போனதன் எரிச்சல் முகத்தில் எரிந்தது. ஆற்றாமையும் கோபமும் தொண்டையை அடைக்கபசியால் மூச்சு வேகமாக சின்னச் சின்னதாகச் தொண்டையில் ஏறி இறங்கி, வயிறு குழைய, ஒரே கத்தாகக் கத்தினான் அவன்.
“ஒய் வக்கிலே, நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்காந்து எச்சில் பண்ணினவனைக் கிளப்பி, யமதூதன் மாதிரி தள்ளிண்டு வந்திரே”
“ஏய், போறயா,நொறுக்கி விடட்டுமா?”
கண் கனல் கக்க, சாணக்கியனைப்போல, விரிந்த குரலில் ஒர் இரைச்சல் போட்டான் அவன்.
“போறேன், இதோ போறேன், ஆனால் திரும்பி வருவேன். அடுத்தமாசம் இதே தேதிக்கு உம்மவீட்டிலேயே சாப்பிடவரேன்.நீர் அழுதுகொண்டு போடற சாப்பாட்டுக்கு வரேன். பார்த்துக்கும்.”
விறுவிறுவென்று நடந்தான். எனக்குச் சொரேர் என்றது.என்னமோ சொல்லிவிட்டானே! அண்ணா ரெளத்ரம் பொங்கச் சீறினார்,
“ஏய் போய் அந்தப் பயலை இழுத்துண்டுவாடா,சும்மாவிட்டு விடுகிறதா அந்தப்பயலை”
“அண்ணா, உள்ளே போங்களேன். சகதியிலே கல்லைத்துக்கி எறியலாமா? என்று.அவரை இறுகஅனைத்துஉள்ளே தள்ளிக்கொண்டு போனேன்.என் பிடியை மீறமுடியாமல் அண்ணா மெதுவாக உள்ளே சென்றார்.
என்ன அவச்சொல் ஆபாசமான வார்த்தைகள் மங்களமான வைபவத்தில் கேட்கவொண்ணாத கொடுர அவச் சொல் ருசிக்க முடியாத அவச்சொல் உதட்டில் வைத்துப் பருகும் பாலில் மேலே யிருந்து ஒரு துளிநஞ்சு விழுந்து,வாய்க்குள் போய்விட்டதுபோல் என் கண் இருண்டது; உள்ளம் இருண்டது. எப்படிப் பேசினான் இந்த வார்த்தைகளை!பாவி இனியநாதம்பொழியும் தந்தியை அறுத்து அவ ஓசையை எழுப்பிவிட்டான்.என் மனம் படபடஎன்று பறந்தது.
“எலே, உம் மூஞ்சிஏண்டா அசடுவழியறது. முட்டாள்:”
மாலையில் கச்சேரி நடந்தது. பூக்கால் குளத்துப்பர்வதம் பாடினாள். இனிய ஞானம். நல்ல ஞானம். ஆனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என்பதைக் குரல் காட்டிக்கொண்டே வந்து, பாட்டைக்கூட மூன்றாம் தரமான பாட்டாக அடித்துவிட்டது. அண்ணா முன்னால் உட்கார்ந்து கைமேல் கையில் தாளம் போட்டு, விரலை எண்ணி, சிரக்கம்பம் செய்துகொண்டிருந்தார். இரண்டு மணிநேரம் ஆவதற்குள் இரண்டாயிரம் ஆஹாகாரம் வந்துவிட்டது. ஆட்டுகிற ஆட்டலில் தலை ஒடிந்து விழுந்துவிடும்போல் இருந்தது.அண்ணாவின் கற்பனை பயங்கரமானதுதான்.
மணமகனும் மணமகளும் ஒரு சோபாவில் உட்கார்ந்து கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நடுவில் மணமகன் எழுந்து கொல்லை நடைப்பக்கம் சென்றான்.
பத்து நிமிஷத்திற்கெல்லாம் அண்ணாவின் சம்சாரம் பரபரவென்று என்னைக் கூப்பிட்டாள்.
“ஏய் பஞ்சு, அண்ணாவைக்கூப்பிடு”
அண்ணாவும் நானும் உள்ளே போனோம். அடுக்களையில் கல்யாணப்பையன்பிரக்ஞைதவறிப்படுத்துக்கிடந்தான்.கொல்லையில் போனவன் ஒரு முறை வாந்தி எடுத்தானாம். பிறகு “தலை கிறுகிறு என்கிறது”என்று முனகினானாம்.அடுக்களையில்வந்து மடேர் என்று விழுந்தானாம். மூர்ச்சை போட்டுவிட்டது. ஸ்திரீகள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அண்ணாவின் தமக்கை விசிறிக் கொண்டிருந் தாள.
“குழந்தே குழந்தே’ என்று அண்ணா அழைத்தார்.
“விஸ்வநாதா.விஸ்வநாதா” என்று நான் அழைத்தேன். நல்ல மூர்ச்சை, பதில் வரவில்லை.
“பஞ்சு, நான் என்னடா செய்வேன்” என்று உட்கார்ந்தவாறே என்னை நிமிர்ந்து பார்த்தார் அண்ணா.
திகில்படர்ந்த அந்தப் பார்வையை அந்த முகத்திலேயே நான் பார்த்ததில்லை. “ஒண்ணுமில்லேண்ணா! இதோ போய் டாக்டரை அழைச் கண்டுவரேன்.கவலைப்படாதிங்கோ”
என்று சொல்லிவிட்டு ஓடினேன். டாக்டர் வந்தார். அரை மணி தட்டிக்கொட்டிப்பார்த்தார். ஊசி போட்டார். மருந்து எழுதிக் கொடுத்தார். மூர்ச்சை தெளியவில்லை. பெரிய டாக்டரை அவரேபோய் அழைத்து வந்தார்.கோமா சோமா என்று ஏதோ வைத்தியபாஷையில்பேசிக்கொண்டார்கள். என்னத்தைச் சொல்கிறது. மூர்ச்சைதெளியும் வழியாக இல்லை. ஒரே பேத்தல், பிதற்றல், ஏழெட்டு நாள் கண்திறக்கவில்லை. உள்ளூர் டாக்டர்கள், மந்திரவாதிகள் எல்லோரும் பார்த்தார்கள். திருச்சியி லிருந்து இரண்டு டாக்டர்கள், பிறகு ராஸிலிருந்து ஐந்தாறு டாக்டர்கள்! கடைசியாகக் கல்கத்தாவிலிருந்து விமானத்தில் ஒரு நிபுணர் வந்தார். கையைப் பார்த்தார்.”இன்னும் நாற்பத்தெட்டுமணி நேரத்திற்குப்பிறகுதான் சொல்ல வேண்டும்; பிறகுமூர்ச்சைதெளிந்தால் கொடுங்கள்” என்று ஒரு மருந்தை எழுதிக்கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் பீஸையும்வாங்கிக்கொண்டுபோய்விட்டார்.
அவ்வளவு பெரிய டாக்டர் சொல்வது வீணாகவாபோய்விடும்? மூன்றாம்நாள் காலையில் எல்லாம் அடங்கிவிட்டது.
எல்லாம் மாயாஜாலம்போல் இருந்தது எனக்கு எவ்வளவு வேகம் அண்ணாவின் ஒரே பிள்ளை ஒரே இன்பக்கனவு அவருடைய ஜகமே அவன்தான்.அது அழிந்துவிட்டது!
அண்ணாதேம்பினார். திடீரென்று நினைத்துக் கொண்டு வாய்விட்டு அழுவார். அழாத நேரத்தில் சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். திடீரென்று புன் சிரிப்புச் சிரிப்பார்; பேய் சிரிக்கிறாற்போல் இருந்தது எனக்கு குலைநடுங்கிற்று!
“என்னடாபஞ்சாமி, என்ன சிரிக்கிறேனென்று பார்க்கிறாயா? நாளைக்குத் தேதி ஐந்து, அதனால்தான் சிரிக்கிறேன்.”
நான்பதில் சொல்லவில்லை.சோகத்தில் சிரிக்கிறார்.அழுகிறார், புலம்புகிறார். இஷ்டப்படி பேசட்டும் என்று விட்டுவிட்டேன். பிரமையடைந்து, நிதானமிழந்து ஆடிக் கொண்டிருந்த சித்தத்தில் என்ன என்ன தோன்றுகிறதோ? மோகம் சோகத்தின் இரட்டை
“நாளைக்குத் தேதி ஐந்துடா.நாளைக்குத்தான் பன்னிரண்டாம் நாள் என் உயிர் போய் போன ஐந்தாம் தேதி கிருகப் பிரவேசம்.அந்தப் பரதேசிப்பயன் அவ்வளவு கணக்காக ஆணியடித்தாற் போலச் சொன்னான்,பார்”.
எனக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை. பரதேசியின் நினைவாகத்தான் இருந்தேன்.
மறுநாள் பன்னிரண்டாம்நாள் காலையில் ஈமக்கடன்கள் தொடங்குகிற சமயம் காலை எட்டு மணி இருக்கும், வாசலில் வந்து நின்றான் அவன் சவம் உயிர் பெற்று வந்ததுபோல் வந்து நின்றான். வெளுத்துப்போன தாடி, மீசை, எலும்பும் தோலுமான உடல் பழுப்பேறிய நைந்துபோனதுணி,கையில் மூட்டை கல்யாணத்தன்று வந்த அதேவேஷந்தான்.
எனக்கு ஒரேயடியாகப்பற்றிக்கொண்டு வந்தது. நெஞ்சு கோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணைவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.
அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார்.
“ஸார்.வருத்தப்படாதீர்கள். நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான்.
அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று.
“ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா.
“என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்”
“நீர்தானே ஐயா சாபமிட்டீர்?”
“என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்.”
“எப்படி?”
“எங்கும் இருக்கிறது நாதம் கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே. அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான்
“உமக்கு வருங்காலம் தெரியுமா?”
“தெரியாது என்னமோவாயில் வந்ததைச்சொன்னேன்.”
“ம்.நீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்?”
“அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்யவேண்டுமா, என்ன? அறிவு இருந்தால்பிச்சைஎடுக்காமல்,சோற்றுக்குஅலையாமல் இருந்துவிடமுடியுமா?”
“நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை”
“எப்படிப் புரியும்? பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை.தெம்பு இல்லை.உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு; உம்மிடம் இல்லை.
சிமின்டில்,வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும்.உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம் துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்கு நீர் வக்காலத்து வாங்கியிருப்பீரா? அவன் கொலை செய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாக வாதாடி, அவனுக்கு நீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப்பரதேசி, தரித்திரம் எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை.”
அண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,”ஒய் காலதேவரே,உட்கார்ந்து பேசுமேன்.கால் வலிக்கவில்லையா?” என்று வேண்டினார்.
காலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, “ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான்.
எழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி
(முக நூலிலிருந்து)
14.10.1942ல் பிறந்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் ,நாவல்,சிறுகதை,பயணக்கட்டுரை,இலக்கியக்கட்டுரை ,நேர்காணல் ,மொழிபெயர்ப்பு என பல்வேறு தளங்களில் தன் எழுத்துத்திறமையை பதித்தவர்.
சிவசங்கரியின் முதல் சிறுகதை:
” அவர்கள் பேசட்டும்”என்கிற முதல் சிறுகதை 1968ல் கல்கியில் பிரசுரமானது அதற்குப் பிறகு 150சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.35 நாவல்கள்,13 பயணக்கட்டுரைத்தொகுப்புகள், 7 கட்டுரைத்தொகுப்புகள் ,2 வாழ்க்கைச்சரிதங்கள் . குறுநாவல்கள்.
1996ல் அம்மா சொன்ன கதைகள் என்ற ஒலிநாடாவையும் வெளியிட்டார்.
1998 முதல் 2009 வரை “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு “என்கிற அவரின் அரிய முயற்சியின் வாயிலாக இந்திய இலக்கியகர்த்தாக்களையும் அவர்தம் படைப்புகளையும் நாம் அறிந்து கொள்ள வைத்திருக்கிறார்.
1983 ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சிவசங்கரி அவர்களின் ” பாலங்கள் ” கதை இன்றும்,என்றும் பேசப்படுகிற ,ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.
பிராம்மண சமூகத்தின் அக்கால சம்பிரதாயங்களையும் படிப்படியாக அவை உருமாறுகிறதையும் அந்த நாவலில் சொல்லியிருப்பார்.
அந்த சமயத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நாவல் அது.
இவருடைய பாரத தரிசனம் என்னும் நூலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்க்கான பரிசினைப்பெற்றவர்.( 2010 ஆண்டில்)
நண்டு,மற்றும் 47 நாட்கள் ஆகிய இவரின் கதைகள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டன.
” ஒரு மனிதனின் கதை” மற்றும் ” கருணைக்கொலை” இந்த இரண்டு தொடர்கதைகளும் வெளிவந்தபொழுது மிகுந்த பரபரப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தின.
இவரின் அதிதீவிர வாசகி ” லலிதா” என்பவரே இவரின் வளர்ப்புமகளாக மிக நீண்ட வருடங்கள் இவருடனே இருந்து சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களாதலால் அப்பொழுதெல்லாம் இவரின் தொடர்கதைகள் இடம்பெறும் வார ,மாத இதழ்களை எதிர்நோக்கிக் காத்திருந்த வாசக ,வாசகியர் அதிகம்.
” சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது” என்கிற கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது என் பார்வையில். மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வேண்டிய அத்தனை அறிவுரைகளும்,கருத்துக்களும் அந்தப்புத்தகத்தில் இருக்கும். சிவசங்கரி பரதநாட்டியக்கலைஞர் என்பதால் அவர் கதைகளில் ” இசை” இயல்பாகவே இருக்கும். இலக்கியவாதிகள் அவரை சேர்த்துக்கொள்ளவில்லையெனினும் மிகப்பரந்த வாசகர் வட்டத்தை பெற்றவர்.இவரின் எல்லா படைப்புகளை ஓரளவுக்கு நான் படித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
மேல்தட்டு மக்களின் வாழ்க்கைமுறையைக்கூறுதல்,இவர் கதைகளின் ஆண்,பெண் பாத்திரங்கள் மிக மிக நல்லவர்களாகவே இருப்பது, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மனிதர்களாகவே காதலர்களோ,கணவன் மனைவியோ இருப்பது என்பதே மிகைப்படுத்தப்பட்டது..
இவைதான் இவர் எழுத்தின் குறைகளென சொல்வார்கள். ஆனால் பெண்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளராகவே என்றும் அவர் இருக்கிறார் என்பதே உண்மை.
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து
சீட்டுக் கட்டு கணக்காக
இங்கே வீட்டைக் கட்டி இருக்காக
வீட்டைக் கட்டி இருந்தாலும்
பலர் ரோட்டுமேல படுக்காக
இப்போது சென்னை என்றுதான் சொல்கிறோம். மெட்ராஸ் என்றோ பட்டணம் என்றோதான் ஊரில் குறிப்பிடுவார்கள். என் அண்ணன் சென்னையில்தான் படிக்கப் போயிருந்தான். எனது தம்பியும் தங்கையும் ஏதோ ஒரு உறவினர் கல்யாணத்திற்கு அப்பா அம்மாவோடு போய்விட்டு வந்திருந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து எனக்கு ஏதோ பரிக்ஷை. நான் போகவில்லை.
எனது பட்டிணப் பிரவேசம் பத்தொன்பது வயதில்தான். அதுவரை சினிமாக்களில் ஒரு கதாபாத்திரம் சென்னை வருகிறது என்றால் சென்ட்ரல் ஸ்டேஷனும் எல்.ஐ.ஸி கட்டிடமும் காட்டுவார்களே, அவற்றைப் பார்த்ததுதான்.
வழியனுப்ப வரும் அளவிற்கு எனக்கு அப்போது நண்பர்கள் யாரும் இல்லை. என்னை வழியனுப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிச்செல்ல பஸ் கிடைப்பது சிரமம் என்பதால் அப்பாவும் ரயில் நிலையம் வரவில்லை.
பெட்டி படுக்கையோடு (படுக்கை என்றால் ஒரு ‘ஏர்பில்லோ’ என்று காற்றடிக்கும் தலையணை மட்டும்தான்.) இரயிலுக்காகக் காத்திருந்தேன். அங்கு காத்திருந்தவர்களில் ஒரு குடும்பம் இருந்தது.
கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தை. அவர் மாற்றலில் வேறு ஊர் போகிறார் என்று புரிந்தது. அலுவலக மற்றும் அண்டை வீட்டு மக்கள் என பத்து பேருக்குமேல் வந்திருந்தார்கள். அவர் பழகுவதற்கு இனியவராக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவர்களுக்கு ‘ bon voyage’ என்று வாழ்த்தினார் ஒருவர்.
அக்கரைச் சீமைக்குப் போவோருக்குத்தான் bon voyage என்று சொல்லி வழியனுப்புவார்கள் என்று நினைத்திருந்தேன் வாயேஜ் என்றாலே கடல் பயணம் என்று எனக்குத் தோன்றும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அலுவலகத்தில் இந்தப் பேச்சு அடிபட்டது.
‘வாயேஜ்’ என்றால் கடல் பயணம் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் தன் கைப்பையிலிருந்து ஒரு ஆங்கிலம் தமிழ் அகராதியை எடுத்தார். (அவர் பெயரே அகராதி ஆறுமுகம் என்பார்கள். சாதாரணமாக அந்த அடைமொழி தேவையில்லாமல் விவாதம் வலிப்போருக்குத்தான் ஏற்படும். ஆனால் இவர் ஒரு டிக்ஷ்னரியை எப்போதும் பையில் வைத்திருப்பதால் அந்தப் பெயர்,) ‘வாயேஜ்’ என்றாலும் ஜர்னி என்றாலும் பயணம்தான். வாயேஜ் என்ற சொல்லிற்கு ஒரு பிரஞ்ச் வார்த்தைதான் மூலம் என்றெல்லாம் படித்துக் காட்டினார்.
கொலம்பஸ் அமெரிக்கா சென்ற கடல் பயணம்பற்றி ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதில்தான் முதன் முதல் அந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாயேஜை கடலோடு இணைத்துவிட அதுதான் காரணம் என்று புரிந்தது.
ரயில் வந்தது. நான் ஏறிய பெட்டியில்தான் காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் ஏறினார்கள். அவரவர் இடத்தைத் தேடிப் பிடித்து,பொருட்களை சரியாக வைத்து, டிக்கட் பரிசோதகரிடம் டிக்கட் காண்பித்து, … படுக்க வேண்டிய பெர்த் சரி செய்து… அப்புறம் தூங்கப் போக நேரம் சரியாக இருந்தது. அந்தப் பயணைத்தில் பெரும்பாலான கதைகளில் வரும் ‘இரயில் சிநேகிதம்’ ஏதும் கிட்டவில்லை.
எழும்பூர்வரை டிக்கட் இருந்தாலும் தாம்பரத்திலேயே இறங்கச் சொல்லியிருந்தான் அண்ணன்.
ரயிலில் நன்றாகத் தூங்கிவிட்டேன். இரவு முழுவதும் பயணம் செய்தது அதுதான் முதல் முறை. எங்கே நன்றாகத் தூங்கி தாம்பரத்தைக் கோட்டை விட்டுவிடுவோமோ என்று பயம் இருந்தது. ஆனால் காலையில் சீக்கிரம் எழுந்துவிடவேண்டும் என்று முடிவோடு படுத்தால், எவ்வளவு ஆழ்ந்த உறக்கம் வந்தாலும், சரியாக விழிப்பு வந்துவிடும். நான் கண் விழித்த சில நிமிடங்களில் செங்கல்பட்டு வந்திருந்தது. எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து, பல் விளக்கிவிட்டு இறங்கத் தயார் என்று நினைக்கும்போதே சரியாக தாம்பரம் ரயில் நிலையத்தில் வண்டி நுழைந்துகொண்டு இருந்தது. இன்னும் பொழுது விடியவில்லை.
ரயிலை விட்டு இறங்கியாயிற்று. ஒருவரை ஒருவர் தேடுவதற்குப் பதிலாக நடைமேடையில் எடைபார்க்கும் எந்திரம் அருகில் வந்து நின்றுவிடவும் என்று தெளிவாகச் சொல்லியிருந்தான்.
எடைபார்க்கும் இயந்திரம் கண்ணில்படவில்லை. அது எங்கிருக்கிறது என்று யாரையாவது கேட்கவேண்டும். எடை பார்க்கும் எந்திரம் என்று சொல்லிக் கேட்பதைவிட ‘வையிங் மிஷின்’ என்று கேட்பதுதான் எளிது. இதுபோல் மற்ற மொழிச் சொற்கள் நமது பேச்சில் கலந்துவிடுவது இது போன்ற விஷயங்களால்தான்.
ஒரு ரயில் பணியாளர் ஒருவரைப் பார்த்துவிட்டேன். அவரிடம் ‘ இங்கே வைட்டிங் மிஷின் எங்கே இருக்கும்?” என்று கேட்டு விட்டேன்.
அவர், “காத்திருக்கும் ரூமா?” என்று பதில் கேள்வி கேட்டார்.
‘வையிங்’ என்பதற்குப் பதிலாக நான் தவறாகக் கேட்டுவிட்டேன் என்பது அந்தச் சமயத்தில் புரிந்தது. பாருங்கள், அந்தப் பாழாய்ப் போன ‘weighing’ என்கிற சொல் சட்டென நினைவில் வரவில்லை. கலர் கலர் பல்ப், கலர் கலர் டிஸ்க், காந்தித் தாத்தாவின் ராட்டை., ஜோசியம் சொல்லும் அட்டை என்றெல்லாம் அண்ணன் விளக்கியிருந்தான். அதனை இவருக்கு எப்படிச் சொல்லுவது? மையமாகத் தலையை ஆட்டினேன். அவரும் கடமையாக ஏதோ வழி சொன்னார். மீண்டும் ஒரு தலை ஆட்டல். அவர் போய்விட்டார்.
முன்னால் போவதா, பின்னால் போவதா என்று யோசித்து முடிவெடுப்பதற்கு முன் ஆபத்பாந்தவனாக அண்ணன் வந்துவிட்டான். (பார்த்தீர்களா ‘ஆபத்பாந்தவன்’ இன்னொரு வேற்றுமொழி இடைச் செருகல்.)
வெளியே வந்தோம். சைக்கிள் ரிக்ஷா பிடிக்கும்வரை நடந்த தூரத்திலேயே மூட்டைகள்போல கையும் காலும் தெரியாமல் போர்த்திக்கொண்டு ஏராளமான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நாகேஷ் பாடும் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாட்டு நினைவு வந்தது.
அண்ணன் ஒரு ரூமில் தங்கியிருந்தான். அவனுடன் அவனது நண்பன் ஒருவன் தங்கியிருக்கிறானாம்.. இடத்தை அடைந்ததும் பைகளை இறக்கி வைத்து, உள்ளே போவதற்கு முன்பே அவன் பலமாகக் கையைத்தட்டி யாரையோ கூப்பிட்டான். அவன் அறைக்கு எதிர் சாரியில் ஒரு டீக்கடை இருந்தது. இவன் இரண்டு விரல் காட்டிவிட்டு அறையைத் திறந்தான்.
உள்ளே ரூம் மேட் தூங்கிக்கொண்டு இருந்தார். உள்ளே ஆளை வைத்துப் பூட்டிவிட்டுப் போவதா? வித்தியாசமாக இருந்தது. வாயைத் திறந்து கேட்பதற்குமுன் அவனே பதில் சொன்னான்.
“அவன் விழிப்பதற்குள் நான்தான் திரும்பி வந்து விடுவேனே? இல்லை என்றாலும் ஜன்னல் வழியா பலமாகக் கையைத் தட்டினால் டீக்கடைப் பையன் டீ கொண்டு வருவான். ஜன்னல் வழியாக அவனிடம் தன் சாவியைக் கொடுத்து திறக்கச் சொல்லிவிடுவான். ஒன்றும் பிராப்ளம் இல்லை.”
அண்ணன் இன்னமும் படித்துக்கொண்டுதான் இருந்தான். கடைசி வருஷம் பரிட்சையில் தவறியிருந்தான். ஒரு ‘தோற்றோர் இயல் கல்லுரி’ யில் (அதாவது tutorial institute) படித்துக்கொண்டு இருந்தான். இன்ஸ்டியூட் நகரின் மத்தியப் பகுதியில் இருந்தது. வாடகை குறைவாக இருக்கவேண்டும் என்பதால் இங்கே அறை எடுத்திருந்தான். இரயில் சீசன் டிக்கட் மிக மலிவு. பக்கத்தில் ஒரு சிறிய மெஸ். எப்படியோ சமாளித்து வந்தான்.
“என்னோடு நீ தங்கலாம். ஆனால் நீ போக வேண்டிய இடம் இரயில் நிலையம் அருகில் இல்லை. இங்கிருந்து நேரடி பஸ் இல்லை. நாளை நீ போகும்போது நானும் கூட வருகிறேன். என்ன ஏற்பாடு செய்யலாம் என்று பார்ப்போம்.” என்றான்.
குளித்து, மெஸ்ஸில் போய் இட்டிலி சாப்பிட்டு, கொஞ்சம் காலார நடந்து ஊர்க்கதைகள் பேசி … அறைக்குத் திரும்பும்போது ரூம் மேட் விழித்தெழுந்து விட்டார். டீக்கடைப் பையனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்குள் நாங்கள் வந்துவிட்டிருந்தோம்
அண்ணனும் அந்த நண்பரும் ஒருவரை ஒருவர் ரூம் மேட் என்றுதான் கூப்பிட்டுக் கொண்டார்கள். ஊரிலெல்லாம் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வதுதான் பழக்கம். இது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.
அந்த நண்பர் ஏதோ ஒரு சிறிய நிறுவனத்தில் எழுத்தராக இருந்தார். வீட்டிற்குப் பணம் அனுப்பவேண்டும். சிக்கனமான வாழ்க்கை. அவரது தமிழ் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அவர் தன் மாவட்டப் பேச்சினை சென்னை தமிழோடு கலந்து பேசுவார். ‘பேஜார்’, ‘நாஷ்டா’ ,‘கலீஜ்’ , ‘குந்திகினு’ , ‘ரப்ச்சர்’ என்றெல்லாம் வார்த்தைகள் வரும். ஒரு மாதிரி புரிந்து கொள்வேன். அகராதி ஆறுமுகம் இருந்தாலும் பிரயோஜனமில்லை எந்த அகராதியிலும் இந்த வார்த்தைகள் கிடைக்காது. தெருவில் விற்றுக்கொண்டு போகும் வியாபாரிகள் என்ன விற்கிறாகள் என்று அவர்கள் கூவலிலிருந்து பழக்கப் பட்டவர்களால்தான் கண்டுபிடிக்க முடியும்.
எப்படியோ ஒரு மணிவரை பொழுது போயிற்று. பின்னர் சாப்பாடு. மாலையில் ஒரு சினிமா. நடுவில் ஏதோ கொறிக்க. குடிக்க .. அறையில் ஒரு மூலையில் ஒரு நோட்டுப் புத்தகம் தொங்கிக்கொண்டிருந்தது. என்ன பொதுச் செலவானாலும் எவ்வளவு செலவு, யார் செய்தார்கள் என்று குறித்துவிடுவார்கள். மாதா மாதம் செட்டில்மென்ட் . நான் வந்ததைப்போல யாரவது ‘கெஸ்ட் ‘ வந்திருந்தால் அதற்கும் ஒரு குறிப்பு.. பிரிப்பதற்கு வேறு ஒரு ஃபார்முலா.
‘மதியத் தூக்கம் விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியப்படும் ஒரு போனஸ்’ என்றார் ரூம் மேட். அறையில் இரண்டு கட்டில்கள் மட்டுமே. எனக்குக் கட்டிலைக் கொடுத்துவிட்டு அண்ணன் தரையில் படுத்துக் கொண்டான். எனக்கு மதியத் தூக்கம் பழக்கமில்லை. பயணக் களைப்பில் தூக்கம் வந்திருக்கவேண்டும். மூவரும் தூங்கி எழுந்தபோது மாலை ஆகிவிட்டிருந்தது.
புறநகர்ப் பகுதி என்பதால் சுற்றுப்புறம் சற்று பெரிய டவுன் – எங்கள் மாவட்டத் தலைநகர் போலத்தான் இருந்தது. பக்கத்தில் ஒரு தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு, இரவு உணவு முடித்து அறைக்குத் திரும்பினோம்.
“காலையில் கொஞ்சம் சீக்கிரம் போகலாம். இப்போ தூங்குவோம். நாளைய சங்கதி நாளைக்கு. பொழச்சுக் கிடந்தா பூனைக்கு .” என்றான் அண்ணன். மதியம் தூங்கியிருந்தும் விரைவிலேயே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.
அண்ணன் சொன்னதுபோல “நாளைய சங்கதி நாளைக்கு”
…. இன்னும் வரும்
.
மேடை நகைச்சுவை – அரவிந்த் SA
இன்றைய இளஞர்கள் அரவிந்தின் ஸ்டேண்ட் அப் காமெடி என்றால் வரவேற்று அரங்கு நிறைந்த காட்சியாக அமைக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. பாருங்கள் !
திரைக்கவிதை – வாலி
படம் : மன்னன்
பாடல் : அம்மா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீராதம்மா
உன்னாலே பிறந்தேனே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்
அம்மா கை உணவு (7 )
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை குவிகத்தில் வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் 2018
இட்லி மகிமை ஏப்ரல் 2018
தோசை ஒரு தொடர்கதை மே 2018
அடைந்திடு சீசேம் ஜூன் 2018
ரசமாயம் ஜூலை 2018
போளி புராணம் ஆகஸ்ட் 2018
அன்னை கைமணக் குறள்கள் !
எச்சுவை கண்ட வாயிலும் ஊறும்
இஞ்சித் துவையலென்றால்.
ஏணி வைப்பினும் எட்டுமோ என்னம்மை
இரசத்தின் கைமணமே.
எக்கூட்டும் வேண்டாவெனப் புகல்வர்
புளிக்கூட்டு நா தொட்டவர்.
வாவென்று சொல்லி வயிற்றைக் கரைக்கும்
வற்றல் குழம்பு மணம்.
வழுக்கிச் செல்லுமே வாய்க்குள் மோர்க்குழம்பின்
சேப்பங்கிழங்கெனும்தான்.
பருப்பும் பசுநெய்யும் பிசைந்தாலும் வருமோ
பொரித்தல் கூட்டு சுவை.
மூவாசையை விட்டேன் வெங்காய சாம்பார் விட்ட
தோசையை விட்டு விடேன்.
பர்கரும் பிட்சாவும் வாங்குமே பிச்சை
கரமுர அடையிடமே.
கன்னலும் கனியும் தருமோ அன்னை
களியின் கூட்டின் சுவை.
எண்ணிக்கை இல்லாது வேண்டும் எழுபிறப்பும்
அன்னை கொழுக்கட்டையே.
@@@@@@@@@@@@@@
தமிழ் மருத்துவம் – நன்றி T K B
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
வெப் சீரிஸ்
சினிமா, சீரியல் இவற்றைத்தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளன. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.
நிமேஷ் இயக்கத்தில் SRINIKHA நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஏ ஸ்டோரி. 40 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த ஏ ஸ்டோரியில் சமுதாயத்தை உலுக்கிப் பார்க்கும் பல விஷயங்களைப் பேசியிருப்பதாக இயக்குனர் நிமேஷ் கூறியுள்ளார். துணிச்சலான காட்சிகளுடன் வெளியாகியுள்ள ஏ ஸ்டோரி டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் அடுத்தகட்டமாக இந்த வெப் சீரிஸ் பார்க்கப்படுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘மாரி’ படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி நடித்த, ‘ I am suffering from kadhal’ வெப் சீரிஸின் வெற்றி. இந்த நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் தனது ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ என்னும் வெப் சீரியஸை தயாரித்துவருகிறார். வி.இஸட் துரையும் தற்போது ‘அருவி’ படத்தில் நடித்த சுவேதா சேகரை வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதை அவர் இந்தியில் இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சுவேதா அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
நடிகர் மாதவன், உடல் உறுப்பு தானத்துக்காகத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளை மையமாக வைத்து ‘பிரீத்’ என்ற வெப் சீரியஸில் நடித்தார். இந்தியில் இதை மயங் ஷர்மா இயக்கினார். மாதவனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவும், தமிழில் பாபி சிம்ஹாவும் வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரித்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.
இயக்குநர் வசந்தபாலன் , தனுஷ் , கௌதம் மேனன் ஆகியொரும் வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டு வருகிறார்கள்
ஆட்டோ சங்கரின் கதை வெப் சீரிஸாக வெளிவருகிரது.
உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்கும்போது சென்சாரில் படக்குழு பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, இதற்கான மாற்று ஊடகமாக இணையத் தொடர்களை கையில் எடுத்துள்ளனர் பலர். அவற்றிற்கு சென்சார் பிரச்சினை இல்லை என்பதால் தங்கள் மனதில்பட்டதைத் தயக்கமின்றிச் சொல்ல முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சென்சார் இல்லாததால் இத்தகைய இணையத் தொடர்களில் ஆபாசம் அத்துமீறிக் காணப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது
நலன் குமாரசாமி, இப்போது, ’கல்யாணமும் கடந்து போகும்’ என்கிற வெப் சீரிஸ் இயக்குவதில் பிஸியாகியுள்ளார்.
10 கதைகளைக் கொண்ட இந்தத் தொடரில் திருமண வைபவங்களில் நடக்கும் அபத்தங்களைப்பற்றி நகைச்சுவையாகச் சொல்வதோடு, வரதட்சணை, காதல், முதியவர்களிடையே உள்ள உறவு, கடல் தாண்டிய காதல், மறுமணம் போன்ற விஷயங்களும் அலசப்படுகிறது.

குட்டீஸ் சுட்டீமால் – சிவமால்
அப்படியும் இருக்குமோ…?
அன்று ஏனோ காலையிலிருந்து ஆஸ்த்மா ரொம்பத் தொந்தரவு
கொடுத்துக் கொண்டிருந்தது. எளிதாக மூச்சு விடமுடியாமல்
திணறிக் கொண்டிருந்தேன். என் மனைவியும், பெண் மிதிலாவும்
ஆதரவோடும், வருத்தத்தோடும், அக்கறையோடும் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
‘பூர்வ ஜன்மத்தில் என்னெல்லாம் பாவங்கள் செய்தேனோ..
இந்த ஆஸ்த்மா இப்படித் தொந்தரவு செய்யுது…’ என்றேன்
ஈனஸ்வரத்தில்.
என்னையே பார்த்துக் கொண்டிருந்த மிதிலா, ‘அப்பா…
நீ சின்ன வயதிலே பூச்சிகளையெல்லாம் பிடித்துத் தண்ணீரில்
போட்டிருப்பாய்.. அது மூச்சு விடமுடியாம எப்படித் தவிச்சுப்
போயிருக்கும்..? அதேபோலே மீன்களைப் பிடித்துத் தரையில்
போட்டிருப்பாய்.. அவை மூச்சு விடமுடியாமல் எப்படித் துள்ளித்
துடிச்சு செத்திருக்கும்..? அவை கொடுத்த சாபங்கள்தான் உன்னை
இப்படி வாட்டி எடுக்குது….’ என்றாள்.
நானும், என் மனைவியும் திகைத்துப் போய் அவளையே
பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ..?
1084 இன் அம்மா – எஸ் கே என்.
ஞானபீட மற்றும் சாஹித்ய அகடமி விருதுகள் பெற்ற வங்காளப் படைப்பாளி மகாஸ்வேதா தேவி அவர்களின் ‘ஹஜார் சௌராசின் மா’ என்னும் நாவல் நாடக வடிவில் தமிழில் 1084இன் அம்மா என்கிற பெயரில் சென்னை அல்லயான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற்றது.
இடதுசாரி இயக்கம் வங்காளத்தில் வலுப்பெற்று வந்த காலத்தில் போராளிகளாகப் பல இளைஞர்கள் பங்குபெற்றனர். அதில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் போலீசாரால் கொல்லப்பட்டார்கள். வங்காள சரித்திரத்தில் அந்தக் காலகட்டம் கொடூரமானது.
அந்தப் பின்னணியில் மகாஸ்வேதாதேவி அவர்களின் படைப்பான ‘ஹஜார் சௌராசின் மா’ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் தேசிய விருதையும் பெற்றது.
சுஜாதா என்னும் பெண்மணிக்கு உடனே பிணக்கிடங்கிற்கு வருமாறு தொலைபேசியில் சொல்கிறார்கள். அவளது மகன் ப்ரதி கொல்லப்பட்டு சடலம் எண் 1084 ஆக அங்கே கிடக்கிறான். செய்தி கேட்ட ப்ரதியின் தந்தையும் அண்ணனும் அந்த விஷயத்தை வெளியில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சுஜாதா மட்டும் தனியாகச் சடலத்தைப் பார்க்கிறாள். அங்கே கிடக்கும் மற்ற சடலங்களும் அவர்களின் குடும்பத்தாரின் சோக அலறல்களும் நெஞ்சை உலுக்குகின்றன.
அவனுடன் கடைசியில் கூட இருந்து பலியான நண்பனின் தாய், பெண் நண்பரான நந்தினி ஆகியோரைச் சந்திக்கிறாள். அவர்கள் மூலம் அவள் அறியும் தகவல்கள், தாயான அவளுக்கே தெரியாத விஷயங்கள்.
ப்ரதி மரணத்தையும் மறந்து., அவன் சகோதரிக்கு நிச்சயதார்த்தம் செய்கிறார்கள் அண்ணனும் தந்தையும். போராளியான ப்ரதியின் மறைவு குடும்பத்தாருக்கு – (தாய் சுஜாதாவைத் தவிர) சோகத்தை விட நிம்மதியைத் தருகிறது என்பதுதான் அபத்தமான நிதர்சனம்.
நாடகத்தில் அனைத்து நடிகர்களும் உணர்ச்சிபூர்வமாக அதேசமயம் யதார்த்தமாக நடித்தார்கள். முக்கியமாக சுஜாதாவாக, நந்தினியாக மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்கள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார்கள்.
பின்னணியில் வங்காள மொழிப் பாடல்கள், ஒளி அமைப்பு, நான்கு இளைஞர்களின் நடனம் ஆகியவை நாடகத்தின் இறுக்கத்தன்மைக்கு வலு சேர்த்தன. ஆளைவிட உயரமான ஜெயில் கம்பிகள் கொண்ட நான்கு ஜன்னல் போன்ற அமைப்புதான் காட்சி அமைப்பு. அவற்றையே ப்ரதியின் வீடு, பிணக்கிடங்கு, நண்பனின் வீடு, போலீஸ் விசாரணை அறை என்று ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசம் தெரியும் வகையில் உபயோகப்படுத்தியிருந்தார்கள்,
நாடகத்தைப் பார்க்க வந்திருந்த அற்புதம்மாள் (பேரறிவாளனின் தாய்) நாடகத்தை வியந்து பாராட்டினார். தனது 27 ஆண்டு காலப் போராட்டத்தையும் சற்று விளக்கினார்.
–
இரண்டு முகங்கள் – குறும்படம்
இறைவா ! இந்தக் கொடுமையிலிருந்து பெண்களை எப்படிக் காப்பாற்றப் போகிறாய்?
நானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்
பாசம் என்னடா பாசம்…! — கோவை சங்கர்
பாசம் என்னடா பாசம் அதுவெறும் பகல்வேஷம்
பசப்பு வார்த்தைகள் ஏகம் போகிறோம் நாம்மோசம்!
உறவென்பது நம்மிடம் பணம் இருக்கும்வரை
நட்பென்பது நம்மிடம் வசதி இருக்கும்வரை
பையிலே பணமிலையேல் விலையில்லை இங்கே
பண்புக்கும் நேர்மைக்கும் மதிப்புதான் எங்கே?
பணமென்றால் வாய்திறக்கும் பிணமென்றான் கவிஞன்
போடடா அவன்வாயில் அள்ளியள்ளி சர்க்கரை
வாழ்ந்தாலென்ன நீ வீழ்ந்தாலென்ன
பணமிலையேல் உன்மீது யாருக்கடா அக்கறை!
நாணயம் பேச்சிலே என்றகாலமெலாம் போச்சு
நாணயம் கையிலே என்றகாலமும் வந்தாச்சு
பணம்காசு பணம்காசு என்பதே உயிர்மூச்சு
பணம்காசு தொலைந்தாலே இன்னுயிரும் போச்சு!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
கோழைகளின் சரணாலயம் “தற்கொலை”
தினமணி.காம் மின்னிதழில் என்னுடைய “தற்கொலை எனும் வியாதி” வியாசம் வெளியான சமயம், ஈரோடு பக்கத்திலிருந்து மிரட்டும் குரலில் ஒரு போன் கால் வந்தது – ‘தற்கொலைகள் தூண்டப்படுகின்றன – சமூகமே அதற்குப் பொறுப்பு. நீங்கள் வியாதி என்கிறீர்களே?’ அமைதியாக நான் சொன்னேன், “யார் தூண்டினாலும், மனதில் நோய் உள்ளவர்களே பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள் – அதற்கான மருத்துவ ஆதாரங்கள் வலுவாக உள்ளன”. போன் உடனே அமைதியான வேகம், மறுமுனையின் கோபம், வெறுப்பு – ஏதோ ஒன்றை உணர்த்தியது!
சமீபத்தில் வாசித்த இரண்டு ‘தற்கொலை’ சிறுகதைகளைப் பார்ப்போம்.
கதை 1:
கு.அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள (விகடன் பிரசுரம்) ”கற்பக விருட்சம்” கதை.
எஸ் எஸ் எல் சி பரீட்சையில் பெயில் ஆகிவிடும் ஒரு ஏழை மாணவன், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான் – கோவில் பட்டராக இருக்கும் அவனது அப்பா, இவன் பாஸ் செய்து, ஏதாவது ஒரு கடையில் வேலை செய்துகொண்டே, தட்டச்சு பயின்று பின்னர் பெரிய வேலைக்குப் போவான் – என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். மொத்த குடும்பமும் – அப்பா, அம்மா, தங்கை – இவனது கையை எதிர்பார்த்து நிற்கிறது.
பல காரணங்களால் நான்கு வருடங்கள் தாமதமாக படிப்பதால், வகுப்பில் இவனே பெரியவன். எதிர்வீட்டுக்குப் புதிதாய்க் குடிவந்த சுகன்யா, இவனிடம் சந்தேகம் கேட்டுப் படிக்கிறாள் – அவளைப்பற்றிய எண்ணங்கள் அவனுள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இன்று ரிசல்ட் வந்துவிட்டது – அவள் தேறி விட்டாள், இவன் தேறவில்லை! இந்த எண்ணம் அவனை மிகவும் துன்புறுத்துகிறது – சுகன்யா மீது கோபமாக மாறுகிறது – அதுவே வெறுப்பாக மாறித் தற்கொலை முடிவுக்குத் தள்ளுகிறது!
வீட்டின் வறுமையும், தங்கையின் திருமணமும் இவனை வருத்தம் கொள்ள வைக்கின்றன; ஆனாலும், எதிர்வீட்டு சுகன்யா பாஸ் செய்து விடுவது இவனுக்கு அவமானமாக இருக்கிறது – இவர்களையெல்லாம் எதிர்கொள்வதைவிட, மரணத்தை எதிர்கொள்வது இவனுக்கு எளிதாகத் தோன்றுகிறது.
இருட்டிய பிறகு ரயில் முன்னால் விழுந்து தற்கொலை செய்துகொள்ள சைதாப்பேட்டை ஸ்டேஷனில் வந்து அமர்ந்திருக்கிறான். ரயில்வே சிப்பந்திகள், வந்து, போகும் பயணிகள் எல்லோரையும் பார்த்து, ஒரு வித பயத்துடன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.
இந்த தாமதிக்கும் நேரம், அவனை மரண பயமும், வாழ்க்கை பயமும் மாறி மாறி ஆட்கொள்கின்றன. தற்கொலைக்குப் பிறகு தன் குடும்பம் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கிறான் – அழகிருந்தாலும், தேறிவிட்டாலும், பாடம் கற்றுக்கொண்டதற்கு ஒரு முறை கூட நன்றி சொல்லாத சுகன்யாவுக்காக உயிரை விடுவதா? என்று தெளிந்து, தன் முடிவை மாற்றிக் கொள்கிறான் –
மிக அழகான இந்தச் சிறுகதையில், அழகிரிசாமி படிப்படியாக தற்கொலைக்கான காரணங்களையும், பின்னர் அவை எவ்வளவு முட்டாள்தனமானவை என்றும் சொல்லிச் செல்கிறார் – உயிரைவிட எதுவும் பெரியதில்லை – எல்லாவற்றையும் எதிர்த்து நின்று ஜெயிப்பதுதான் வாழ்க்கை என்று அழகாக நிறுவுகிறார்.
கதை 2.
சுந்தர ராமசாமியின் “கோழை” சிறுகதை சதங்கை இதழில் டிசம்பர் 1971 இல் வெளிவந்தது – காலச்சுவடு அக்டோபர் 2017 இல் மீண்டும் பிரசுரித்துள்ளது.
மீண்டும் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்று தோற்கிறான் கதையின் நாயகன் – தாங்க முடியாத துக்கமும், நிவர்த்திக்கும் மார்கமும் தெரியாதபோதெல்லாம் கடல் நினைவுக்கு வந்து, தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்! போகும் முன் முகத்தில் தாடி, பார்க்கும் பெண்களைச் சகோதரியாய் நினைப்பது, இரத்த பந்தங்களை ’நன்றாக அழுங்கள்’ என்று மனதாற சபிப்பது – இவை ரெகுலராக நடக்கும்!
இம்முறை நிச்சயமாக தற்கொலை என முடிவுசெய்து, பஸ்ஸில் போகும்போது, விலைமாது ஒருவரும் உடன் பயணிக்கிறார். இவர் அவளைப் பார்த்திருக்கிறார். அவளுக்கும் இவரைத் தெரியும் பார்த்திருக்கும் அளவில்!
கன்னியாகுமரிக் கடலில் ஒரு மணல் மேட்டின் மீது நின்றுகொண்டு, தானே பேசிக்கொண்டும், அழுதுகொண்டும் நிற்கிறார். அப்போது அவளும் அங்கே சற்று தூரத்தில் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். வழக்கம்போல் திரும்பி விடுகிறார் – இம்முறை அப்பெண் தற்கொலை செய்து கொள்வதாக நினைத்து, பயந்து ஓடிவந்து விடுகிறார்! அந்தப் பெண்ணே இவரிடம் வந்து பேசுகிறாள் – அவளது மனதில் இருக்கும் வாழ்க்கை குறித்த தெளிவு இவரிடம் இல்லை எனபது வெளிப்படுகிறது. திரும்புவதற்குக் கூட இவர் கையில் பணம் இல்லை – அவள் காசைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லி, “எங்கு பார்த்தாலும், உங்களைத் தெரியும் என்ற வகையில் நான் புன்னகைக்க கூட மாட்டேன்” என்று கூறிச் செல்கிறாள். “இனி இந்த இடத்திற்கு வரக்கூடாது” என்றெண்ணித் திரும்புகிறார் அந்தக் கோழை!
இந்த இரு கதைகளும் தற்கொலைக்குப் பின் உள்ள மன இயல் ரீதியான போராட்டங்களைச் சுவையுடன் சொல்கின்றன.
சமீபத்தில் படித்த டொரதி பார்கர் (DOROTHY PARKER – 1893-1967) கவிஞரின் “தற்கொலை” பற்றிய கவிதை ஒன்று – முடிந்த வரை தமிழ்ப் ’படுத்தி’. இருக்கிறேன்.
சவரக் கத்திகள் வலி கொடுக்கும்
ஆறுகள் மிகவும் ஈரப்பதத்துடன் குளிர் கொடுக்கும்
அமிலங்கள் கறை படியும்
மருந்துகள் சதைகளைப் பிடிக்கும்
துப்பாக்கிகள் சட்டத்திற்கெதிரானவை
சுருக்குகள் அவிழ்ந்து விடும்
விஷ வாயுக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாது
அதனால்
நீ வாழ்ந்துவிட்டுப் போவதே மேல்!
(ஒரிஜினல் ஆங்கில மூலம் வேண்டுவோர் டாக்டர் ஜி.லக்ஷ்மிபதி அவர்களின் “HOW TO BE MIDDLE CLASS AND HAPPY” –புத்தகத்தின் 53 ஆம் பக்கம் பார்த்துக்கொள்ளவும் !)
ஜெ.பாஸ்கரன்.