குவிகம் பற்றி ராஜ் வெப் விடீயோஸ் பேட்டி வீடியோ

மார்ச் 17 அன்று  குவிகம் இல்லத்தில் கவிஞர் தில்லை வேந்தனின் அளவளாவல் .

அது சமயம் அங்குவந்த ராஜ் வெப் வீடியோஸ், நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களிடத்தும் குவிகம்பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

அந்த வீடியோ ராஜ் இணையதளத்தில் வெளியானது. 

மிகவும் நிறைவாக இருந்த காணொளி காட்சி! 

பார்த்து ரசியுங்கள்! 

 

தமிழ் வளர்க்கும் இலக்கிய அமைப்பு- குவியம் இலக்கிய வாசல்

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

Related image

திருநாவுக்கரசர்-தொடர்ச்சி

 

திருநாவுக்கரசர் தில்லை வந்தார்..

பதிகம் பாடினர்…

சிவபெருமான் தனது நடனத் தோற்றத்தைக்காட்டி அவருக்கு அருளினார்.

திருநாவுக்கரசர் – தலம் பல கண்டு சீர்காழி அடைந்தார்..

அங்கு திருஞானசம்பந்தர் தோணியப்பருக்குத் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தார்.

பதினாறு நிரம்பாத ஆளுடைப்பிள்ளையார் அவர்.

அந்தக்கூட்டத்தில்  திருநாவுக்கரசர் சென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

வயது குறைந்தவரானாலும் இறையருள் நிறைந்தவரானவர்..

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரது கரங்களைப்பற்றிக்கொண்டு…அன்புடன்…

‘அப்பரே’ என்றழைத்தார் – தந்தைக்கு சமமானவரே என்று பொருள்பட..

இரண்டு ஞானக் கடல்கள் சங்கமித்தன..

சில நாட்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து பதிகங்கள் பல பாடினர்.

சீர்காழி விழாக்காலம் பூண்டது!

பின் இருவரும் சில பல தலங்களில்..

விடையேறும் பெருமானைத் தரிசித்தபின்..

விடைபெற்றனர்..

திருநாவுக்கரசர் திங்களூர் வந்தடைந்தார்.

அங்கு அப்பூதி அடிகள் என்ற சிவனடியார்..

அவர் திருநாவுக்கரசரின் தீவிர ரசிகர்..

திருநாவுக்கரசர் அவர் வீட்டுக்கு வருவது..

சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்து அதில் வசந்தமும் வீசியதுபோல் இருந்தது..

வீட்டில் வரவேற்று  விருந்து வைக்கும் நேரம்…

அவர் மகன் கொல்லைப்புறத்தில் பாம்பு தீண்டி உயிர் துறக்க…

திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி…

அப்பூதி மகனை உயிர் பிழைக்க வைத்தார்.Related image

சிவத்தலங்களை தரிசித்து திருப்பதிகங்கள் பாடிப் பின்னர்..

திருவாரூர் புற்றிடங்கொண்ட தியாகேசப் பெருமானைத் தரிசித்தார்.

பின்னர்… திருப்புகலூருக்குப் புறப்பட்டார்..

அவ்விடம் திருஞானசம்பந்தர் தலங்கள் பல கண்டு திருப்புகலூரில் தங்கியிருந்தார். 

இரண்டு ஞானச் சிங்கங்களும் சந்தித்து மேலும் பல சிவத்தலங்கள் கண்டு ..

திருமறைக்காடு வந்தனர்..

இங்கு ஒரு திருவிளையாடல் நாடகமாக அரங்கேறியது..

 

காட்சி: சிவன் ஆலயம் மூடிக்கிடக்கிறது..

திருஞானசம்பந்தர்: அன்பர்களே.. ஆலயம் ஏன் அடைபட்டிருக்கிறது?

அன்பர்கள்: மறைகள் ஆதிகாலத்தில் இறைவனை வழிபட்டு .. கதவினை மூடிவிட்டுச் சென்றன.

அவைகளைத் திறக்க இயலவில்லை.

திருஞானசம்பந்தர்: அப்பரே.. நாம் இந்த கதவைத் திறந்து வேணிபிரானை வழிபட… நீங்கள் பதிகம் பாடி திறந்தருள வேண்டும்..

Image result for திருவருட்செல்வர்:

ஆளுடைபிள்ளையாரே.. உங்கள் கருத்துப்படியாகட்டும்..

பதிகம் பாடினார்:

‘பண்ணின் நேர் மொழியாள்’ ….

கதவு திறக்கவில்லை.

திருநாவுக்கரசர் (கலக்கத்துடன்) இன்னொரு பதிகம் பாடுகிறார்:

’இறக்க மொன்றுவீர்’….

அந்தப்பாடல் முடிவில் கதவு தாள் திறந்தது..

இறைவனைத் தரிசித்து வெளியே வரும்போது.

திருநாவுக்கரசர்: திருஞானசம்பந்தரே … இந்தக் கதவு மூடிட நீவிர் பதிகம் பாடவேண்டும்…

திருஞானசம்பந்தர்: உத்தமம்..

ஒரு பதிகம் பாடினார்.

கதவு உடனடியாக மூடிக்கொண்டது..

அதுவும் பாடல் பாடத் துவங்கிய உடன்..

அனைவரும் மகிழ்ந்தனர்…

அனைவரும் மடத்திற்குச் சென்றனர்.

திருநாவுக்கரசர் படுத்துக்கொண்டார்.

உறக்கம் வரவில்லை..

மனது அடித்துக்கொண்டது..

ஞானத்தின் சிகரத்தைத் தொட்டாலும்.. மனித மனது ..அது உணர்ச்சிகளால் .. அலைபாய்ந்தது..

திருநாவுக்கரசர் (மனதுக்குள்): நான் முயன்று இரண்டு பாடல் பாடிய பின்தான் இறைவன் கதவு திறக்க அருளினார். இவர் ஒரு பாடல்… அதுவும் பாடத் தொடங்கிய உடனேயே கதவு மூடியதே!

சிவன் அவர் கனவில் ‘வாகீசா! நாம் திருவாய்மூரில் இருப்போம்.அங்கு வா!’ என்றார்.

திருநாவுக்கரசர் விழித்துக்கொண்டார்.

இரவோடு இரவாக … திருஞானசம்பந்தரை எழுப்ப மனமில்லாது.. கிளம்பிச்சென்றார்..

வழியில் உருவாகியிருந்த பொற்கோயிலை அடைந்து… எம்பெருமானைக் காணாமல் … அங்கே துயின்றார்.

மறுநாள் காலை திருஞானசம்பந்தர் விஷயம் அறிந்து அந்தக் கோயில் சென்று திருநாவுக்கரசரைசந்தித்தார்.

அங்கு இருவருக்கும் கயிலைபெருமான் காட்சியளித்தார்.

பின்னர் இரு ஞானமூர்த்திகளும் பிரிந்து சென்றனர்..

நமது நாடகம் முடிந்தது.

 

தலங்கள் பல கண்டார்.

வயதோ முற்றியது…

மெல்ல நடந்து..தெலுகு நாடு, மாளவம் கடந்து காசி சென்றடைந்தார்.

அங்கிருந்து கயிலை செல்ல நடக்கலானார்.

நடந்து.. நடந்து…அவரது பாதம் தேயத்தொடங்கியது…

பாதம் உதிரம் கொட்டியது..

கைகளை ஊன்றி தத்தி நடந்தார்..

கரங்களும் தேய்ந்தது..

மார்பினில் தவழ்ந்தார்.

மார்பும் தேய்ந்து – எலும்புகள் முறிந்தது..

உருண்டு சென்றார்..

செயலற்று வீழ்ந்தார். 

அங்கு சிவபெருமான் அவருக்கு அருள் புரிய – அவரது உடல் உறுப்புகள் வளர்ந்து பிரகாசித்தன.

திருநாவுக்கரசர்  :அண்ணலே. கயிலை மீது உங்கள் திருக்கோலம் காண அருளவேண்டும்

அசரீரி : ‘அருகிலிருக்கும் பொய்கையில் நீராடி.. திருவையாறு குளத்தில் எழுந்தருள்”

 

பரமபதம் என்ற விளையாட்டு ஒன்று உண்டு..

கட்டம் கட்டமாக முன்னேறி இலக்கை அடையும் முன்னால் ஒரு பாம்பு கட்டம் அடைந்தால் அது முதல் கட்டத்துக்குத் தள்ளிவிடுமே – அது போல..

மேலும் ‘இறைவனோடு ‘வாதாட முடியுமா?

திருநாவுக்கரசர் பொய்கையில் குளித்து  திருவையாறில் எழுந்தார்.

வாக்களித்தபடி பூங்கையில் கயிலைப்பனிமலைபோல் காட்சியளித்தது..

இறைவனும் அவருக்குக் காட்சியளித்து மறைந்தார்.

சில நாட்களுக்குப்பிறகு திருவையாறு விட்டு திருப்பூந்துருத்தி அடைந்தார்.

பாண்டிய நாட்டில் சமணரை வென்று திருஞானசம்பந்தர் அன்று முத்துச்சிவிகையில் வந்துகொண்டிருந்தார்.

அப்பர் யாரும் அறியாதபடி அவரது சிவிகையைத் தோள்கொடுத்துத் தாங்கி நடக்கலானார்.

திருஞானசம்பந்தர் அங்கு அப்பரைக் காணாமல் :

“அப்பர் எங்கிருக்கிறார்” என்றார்.

திருநாவுக்கரசர் : “அடியேன் தங்கள் சிவிகையைத் தாங்கும் பாக்கியம் பெற்றேன்” – என்றார்.

பதைபதைத்த திருஞானசம்பந்தர் – அப்பர் அடிகளை வணங்குமுன் – அப்பர் அவரை வணங்கினார்.

இருவரும் பரமனை வணங்கிப் பாமாலை சாற்றினர்.

பிறகு திருநாவுக்கரசர் – விடைபெற்று – மதுரை சென்றார்.

அங்கு பாண்டிய மன்னன்- மகாராணி மங்கையர்க்கரசி அவரை வரவேற்று வணங்கினர்.

தான் இந்த உலகில் ஆற்றிய பணி முடியும் காலம் வந்ததை உணர்ந்த திருநாவுக்கரசர்:

‘எண்ணுகேன் என் சொல்லி’ – என்று பதிகம் பாடினார்..

சித்திரைத் திங்கள் – சதய நக்ஷத்திர நாளில் – இறைவனடி சேர்ந்தார்.Image result for திருவருட்செல்வர்

சரித்திரங்கள் இந்த மகாஞானிகளை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறது..

சரித்திர ஏடுகள் அடுத்த கதை சொல்ல ஆயத்தமாகிறது..

விரைவில் சிந்திப்போம்..

 

 

 

குவிகம் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டி முதல் பரிசு – இலையுதிர்காலம் – ஹேமா

 

 

 

ஈரோடைச் சேர்ந்த இவர் வேலைநிமித்தம் அமெரிக்காவில் வசிக்கிறார். இயற்பெயர் ஹேமலதா.  

அங்கு வெளிவரும் தென்றல் இதழிலும் பல மின்னிதழ்களிலும் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. 

லேடீஸ் விங்ஸ்  தீபாவளி சிறுகதைப் போட்டி -2016 முதல் பரிசு   (‘வானப்பிரஸ்தம்’), 

வெட்டிப்ளாக்கர் போட்டி (‘அப்பாவின் நிழல்’ ) மற்றும் பிரதிபலி வலை தளம் (‘ஏணிப்படிகள்’ ) ஆகியவை இவர்  பெற்ற பரிசுகள்               

 

       

 

 

Image result for சிறுகதை

 “குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும் ஒன்றோடொன்று தலைமுட்டிக் கிரீச்சிட.

உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணரமுடிந்தது மண்டையில் அடித்தாற்போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

அழைப்புச் சத்தம் மீண்டும் மீண்டும் குறைந்த இடைவெளிகளில் ஒலிக்க. ம்ஹும்.. எழ முடியவில்லை அவரால். உடம்பு அசத்தியது. ‘யாரது நேரங்கெட்ட நேரத்துல?  மதிய நேரம் அசருவாங்கங்கிற அறிவில்ல?’ முனகிக்கொண்டே எழுந்த வாசுகி நிதானமாய் வந்து கதவைத் திறந்தார்.

“நீயா.?”

“நல்லா தூங்கிட்டு இருந்தேன், சரி, வா வா.” பாந்தமாய் வந்த வரவேற்பில் வெளியே நின்ற நபரின் அகம் வாடினாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் உள்ளே வந்தார். “போன சனிக்கிழமையே வருவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன், கடைசில ஆளையே காணோம். இன்னிக்கு வந்து நிக்குற!?”

“வர முடியலக்கா. சுமி வீட்டுல இருந்து ஞாயித்துக் கிழமைதான் வந்தோம்“ கழுத்தடியில் துளிர்த்திருக்கும் வியர்வையை ஒற்றிக்கொண்ட விமலாவின் ஜாடை அச்சு அசலாய் வாசுகியை ஒத்ததாய்.

“எங்க உன் வீட்டுக்காரரு?” சோம்பலாய் கொட்டாவிவிட்ட வாசுகி எதிர் சோஃபாவில் கால் நீட்டிப் படுத்துக்ள்ள, உட்காரக்கூடச் சொல்லாத புறக்கணிப்பைப் பெரிதுபடுத்தாமல் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார் விமலா.

“அபி குட்டிக்கு இரண்டு நாளா ஜுரம். காலைல நானும் இவரும்தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்ட்டு வந்தோம். இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல. அதுதான் நான் மட்டும் வந்தேன்”

“எப்படி இருக்கக்கா? முட்டி வலி தேவலையா?”

“ம்ம்.. ஏதோ இருக்கேன், உயிரோட.” வெறுப்பைப் பொதிந்துவந்த சொற்களில் வாஞ்சையாய் அக்காவைத் தழுவ நீண்ட கை அப்படியே சுருண்டுகொண்டது.

“இங்க ஒருத்தி இருக்கேன்ற நினைப்பு யாருக்கு இருக்கு, உனக்கு இருக்கிறதுக்கு? ஏதோ பெரிய மனசுபண்ணி இன்னிக்கு வந்தியே, அதுவரைக்கும் தப்பிச்சேன் போ.” முகத்தை இழுத்துவைத்த போலி சிரிப்புடன் நக்கல் செய்யும் வாசுகியின் பாவனை நல்ல வெயிலில் கிளம்பி வந்திருந்த விமலாவின் மனதைத் தைக்கத் தவறில்லை.

‘ஏன் இவ்வளவு ஏளனம் இந்த வயசுல?’ சிவந்த முகத்துடன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியபடி எதிரிலிருக்கும் தன் சகோதரியைப் பார்க்க ஒருவகையில் ஆதங்கம் எனில் ‘என்னையும் தள்ளாமைபடுத்துதுன்னு என்னிக்காச்சும் நீ புரிஞ்சுக்குவியா?’ உள்ளுக்குள் சின்னதாய் எரிச்சல் மண்டவும் தவறவில்லை.

“எனக்கு மட்டும் வயசு திரும்புதா? உன்னைவிட நாலு வருஷம்தான் சின்னவ நானு” விமலா சமாதானமாய்ச் சிரித்தார்.

“உன் மகன், மகளுக்கு ஊழியம் செய்யுறதுக்கு மட்டும் வயசாகலையோ? அப்படியே பூனைக்குட்டிமாதிரி பம்முற. உங்க வீட்டுக்காரருக்கு வர்ற பென்ஷன்ல ராணிமாதிரி தனியா இருக்கிறதைவிட்டுட்டு.”

உறவுக்குரிய நாசுக்கின் எல்லைமீறிய விமர்சனத்தில் விமலா முகத்தில் பரவிய சூடு கோடைக்கால அனலை விசிறிவிடப் போதுமானதாய்.

‘எப்படி நீ இப்ப இருக்கியே, இந்த மாதிரியா.’ நறுக்கென்று முகத்துக்கு நேரே கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? பல்லைக் கடித்தபடி தன்னை அடக்கிக்கொண்டார் அவர்.

‘என் பென்ஷன் பணம் எனக்கு இருக்கு, சர்வ சுதந்திரமா நான் என் வீட்டுலதான் இருப்பேன். நினைச்ச நேரம் தூங்குவேன், எழுந்துப்பேன். உங்க வீட்டுக்கு வந்தா எனக்கு இந்த வசதிலாம் பத்தாது. இரண்டு நாளைக்கு மேல ஒத்துப்போகவும் செய்யாது. முதல் நாள் வாழையிலை, இரண்டாம் நாள் தையல் இலை, மூணாம் நாள் கையிலன்னு. ச்சே.. ச்சே. அதெல்லாம் நம்மால முடியாது. நான் யார் வீட்டுக்கும் போகமாட்டேன்டி.’

பெற்ற பிள்ளைகளிடம்கூட இப்படிக் கறாராய் கோடு கிழித்துத் தள்ளி நின்றபடி, நான்கு கதவடைத்த கான்க்ரீட் சுவர்களுக்கு மத்தியில் புதையல் காக்கும் பூதம்போல ஒற்றையாய் இவள் இருக்க, பிள்ளைகளை அனுசரித்து வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னை எப்போதும் நையாண்டி செய்வது என்ன மாதிரியான மனநிலை? புரியவில்லை விமலாவுக்கு.

“எத்தனை கோடி கொடுத்தாலும் உன்னைமாதிரி ஓடி ஓடி அடிமை வேலை பார்க்க என்னால முடியாதுடிம்மா. நல்லா ஓடுறீங்க புருஷனும் பொண்டாட்டியும் ஸ்கூலுக்கும், ஆஸ்பத்திரிக்கும்” பேச ஆளில்லாமல் நாக்கில் சுருண்டு கிடந்த சர்ப்பம் முழுதாய் விழித்துப் படம் எடுக்கத்தொடங்க..

“நான் அடிமை வேலை பார்க்குறதா நீ நினைக்குற. குடும்பத்தை அனுசரிச்சுப்போறதா நான் நினைக்கிறேன். நம்மால முடிஞ்ச சகாயத்தைப் பிள்ளைங்களுக்குச் செஞ்சுட்டுப் போகணும்னு.. சரி, விடு. தேவையில்லாத பேச்சு என்னத்துக்கு? உனக்குப் பிடிச்சமாதிரி நீ இருக்க, எனக்குப் பிடிச்சமாதிரி நான் இருக்கேன்”

‘வந்த இடத்தில் எதுக்கு வீண் வாக்குவாதம்?’ கோபத்தை அடக்கிய குன்றலுடன் வார்த்தைகள் வெளிப்பட்டாலும் விமலாவின் முகம் செத்துப்போனது உண்மை. ஒவ்வொரு முறையைப்போலவே ‘ஏன் இங்கு வந்தோம்?’ என்றிருந்தது. சூட்டுக் கங்காய் இவள் வீசும் சொற்களைக் கூடப்பிறந்த தன்னாலேயே பொறுக்க முடிவதில்லையே. நடுத்தர வயதில் இருக்கும் மகன் மருமகள்கள் எப்படி அனுசரிப்பார்கள்?

முன்கை நீண்டால்தானே முழங்கை நீளும்? வயதில் பெரியவள் இவளே, சிறுசுகளை அனுசரிக்காமல் தேளாய்க் கொட்டினால், வாழ்க்கைப்பாட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் எவ்வளவு தூரம் நெருங்கி வருவார்கள்? ‘தனிமையே சுகம்’ என்று அடமாய் இருப்பவளுக்கு ‘இல்லை, இது உன்னை நீயே வைத்து பூட்டிக்கொண்ட சிறை’ என எப்படிப் புரிய வைப்பது?

“அப்புறம் எப்படி இருக்கா சுமி?” இரண்டும் ஆண் வாரிசாய் போனதில் தங்கை பெண்மேல் வாசுகிக்குத் தனிப் பிரியம் உண்டு.

“நல்லா இருக்கா. ‘பெரியம்மாவைக் கேட்டதா சொல்லு, போய் அப்பப்ப பார்த்துக்கோ’ன்னா.”

“அதான் நீ வந்தியாக்கும். என்ன நல்லா பொழுது போச்சா பொண்ணு வீட்டுல?” ஒட்டாத குரலில் கேட்டாலும் அதில் ஒளிந்திருக்கும் ஏக்கம்?

“ம்ம்ம்.. பத்து நாள் ஓடினதே தெரியல.. அக்கா,  நான் ஒண்ணு சொன்னாத் தப்பா எடுத்துக்காதே. நீயும் குமார்கிட்டயும், சுரேஷ்கிட்டயும் போக வர இருக்கலாம்ல.. இங்க கொஞ்ச நாள், அங்க கொஞ்ச நாள்னு”

“அது சரி.. யாரு கூப்பிட்டா என்னை? வேணாம்டி அம்மா. வேணாம்.. அவனுங்க கூப்பிடவும் வேண்டாம். நான் போகவும் வேண்டாம். எனக்கு அங்கெல்லாம் சுத்தப்பட்டு வராது. என் வீடே எனக்குச் சொர்க்கம்.” விரக்தியை மறைத்த வாசுகியின் சலிப்புத் தொனியில் விமலாவுக்கு ஆயாசமாக இருந்தது..

“பசங்க உன்னைக் கூப்பிடலையா என்ன? சும்மா சொல்லாதே.. மருமகளுங்களும் சொல்லத்தானே செய்யறாங்க. நீதான் போக மாட்டேங்குற.” தமக்கையை லேசாக அதட்டினாலும் இதைச் சொல்லும்போது அவர் குரலும் நலிந்துதான் போனது.

ஆரம்ப நாட்களில் பிள்ளைகள் அம்மாவை அனுசரணையாய் கூப்பிட்டது நிஜம் தான். “தனியா இருக்க வேணாம்” என்று வற்புறுத்தவும் செய்தார்கள். உடம்பில் ரத்தத்தின் துறுதுறுப்பு சூடாக இருக்கும்வரை இவள் ‘மாட்டேன்’ என்று நிர்தாட்சண்யமாக மறுக்க, போகப்போக அவர்களும் இந்த விலகல் நடைமுறைகளுக்குப் பழகிப்போனார்களோ என்னவோ..

இப்போதெல்லாம் ‘இவங்கதான் வர மாட்டேங்குறாங்க.. நாங்க என்னபண்றது?’ என்கிறமாதிரி மேலோட்டமான தப்பித்தல்தான் தெரிகிறதேதவிர உள்ளபடிக்கு அவர்களும் ஆத்மார்த்தமாகத் தாயை அழைப்பதாய் தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஒட்டாமல் இப்படி தனித்தனியே வாழ்ந்தது தவறா, இல்லை இன்றைய நாகரீக உலகத்தின் அசுர வேகத்தில் பந்த பாசம் எல்லாம் பின்னால் போனதா, யாரைக் குறை சொல்ல? எதை நிந்திக்க?

“அதெல்லாம் சரிப்படாதுடி.. உன்னைதிரி இன்னொரு வீட்டுல உட்கார்ந்தெல்லாம் என்னால ஜீவிக்க முடியாது” வயதானாலும் சுறுசுறுவென்ற கோபமும், படபடப் பட்டாசு பேச்சும் மாறவேயில்லை வாசுகியிடம்.

“எங்க ராணி.. ஆளைக் காணோம்?”

“நிறுத்திட்டேன்”

“ஏன் என்னாச்சு?” வழக்கம்தான் இது. ஒவ்வொருமுறை வரும்போதும் வேலை ஆட்கள் மாறிக்கொண்டேயிருப்பது.

“பிடிக்கல, எதிர்த்து எதிர்த்துப் பேசறா, ‘சரிதான் போடி’ன்னு நேத்து ராத்திரி பையைத் தூக்கி வெளில வீசிட்டேன். திட்டிட்டே கிளம்பிட்டா. ஏஜென்சில சொல்லியிருக்கேன். வேற ஆளை அனுப்புவான், திருட்டுப் பய. காசை சுளையா வாங்கிட்டு அடங்காப்பிடாரிங்களா அனுப்பி வைக்கிறான்”

“ஏன்க்கா, ஏன்க்கா இப்படிப் பண்ணுற? ‘அடேய் புடேய்’னு நீ அதிகாரமா வேலை பார்த்த காலம் இல்லை இது, அட்ஜஸ்ட் பண்ணிதான் போகணும். கொஞ்சம் தழைஞ்சு போனா என்ன கெட்டுப் போயிடும் உனக்கு? இப்ப எப்படித் தனியா இருப்ப?”

“சரிதான் போடி. எனக்குப் புத்தி சொல்ல வந்துட்டா. எப்படியோ இருந்துப்பேன். உன்னைக் கூப்பிட்டேனா? உன் வேலையைப் பார்த்துட்டுப் போ”

‘நிஷ்டூரி’ உயிரோடு இருக்கும்வரை மூத்தவளின் கோபத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ந்துபோகும் அம்மாவின் முணுமுணுப்பு இப்போதும் காதோரம் ஒலிப்பதுபோல்.

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. உன்னைச் சொல்லிக் குத்தமில்ல. போன மனுஷன் தாங்கித்தாங்கி உன் திமிரை ஏத்தி விட்டுட்டுப் போயிட்டாரு” வீடெல்லாம் குப்பையாக இருப்பதன் அர்த்தம்புரிய, கொண்டுவந்த கூடையை மேடையில் வைத்த விமலா துடைப்பத்தை எடுத்தார்.

ஆடி மாதக் காற்றில் அடுத்த வீட்டுப் புங்கை மரத்தின் இலைகள் சமையலறை முகப்பில் சேர்ந்திருக்க, சத்தைகளைக் கூட்டித் தள்ளிய விமலாவின் அறுபத்தைந்து வயது உடல் இறங்கு வெயிலில் வியர்வையைப் பெருக்கியது.

“நீ வர்றப்ப நல்ல கனவு. பெல் அடிச்சுக் கெடுத்துட்ட” அக்காவின் நொடிப்பில் கசப்பாய் முறுவல் பரவ..

‘காத்தடிச்சு உதிர்ந்து போயிருக்கிற இந்த இலை மாதிரிதான் மனுஷ வாழ்க்கை. இதுல இவ்வளவு விறைப்பா நின்னு என்ன சாதிக்கப்போற? இந்தக் கோபத்தைச் சாக்கா வைச்சு உன் பசங்களும் தள்ளிநிக்க.. ப்ச். என்னவோ போ.’

“நாங்க இரண்டுபேரும் ஏதோ பெரிய ஹோட்டல்ல உட்கார்ந்திருக்கோம்டி. சுத்திலும் ஏதோ பாட்டு எல்லாம் ஓடுது மெலிசா.” வெகு அரிதாகக் கல்லுக்குள் சுரக்கும் ஈரம். கனவில் கண்டது நேரில் நடந்ததைப்போலவே இருந்ததோ என்னவோ, வாசுகியின் முகத்தில் பெரிதாய் ஒரு புன்னகை மலர.

“உன் அத்தான் எனக்குப் பிடிச்ச பாஸந்தியை எடுத்து ஊட்டி விடுறாரு” 

சட்டென்று நெகிழ்ந்து உருகும் குரலில், பாசம் பெருக நிமிர்ந்த விமலா, “ம்ம்.. அப்புறம்.!?” கிண்டலும் சிரிப்புமாகக் கேட்டார்.

“மேசையைச் சுத்திலும் அத்தனை வகை இருக்குடி. எல்லாமே எனக்குப் பிடிச்சதா.”

“பாருடா. அப்புறம் அத்தான் வேற என்ன சொன்னாரு?”

“அவரு என்ன சொல்லுவாரு? விமலா. டி.” ‘அழுகிறாளா என்ன? அவர் நினைவு வந்துவிட்டதா?’

“அழாதக்கா. அவரு உன் கூடவேதான் இருக்காரு..”

“அவரு மகராசனா போயிட்டாரு.. நான் கிடந்து.” இதுவரை கேட்டதேயில்லை இவ்வளவு மெலிந்த குரலை.

”எப்படிச் சொல்லன்னு தெரியல.. குடல் சுத்திசுத்தி..”

“?”

“வயிறோடு சேர்த்து நெஞ்செல்லாம் எரியறதுல.”

“உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? “ பதட்டம் ஏற துடைப்பத்தைத் தொப்பெனப் போட்டுவிட்டு அக்காவின் தோளைப்பற்றினார் விமலா.

“எனக்கு………….”

தமக்கையின் அத்தனை உணர்வுகளையும் மொழி பெயர்க்கத் தெரிந்த விமலா அவள் அடுத்து சொன்ன ஒற்றை வார்த்தையின் கனம் தாங்கமுடியாமல் சமைந்துதான் போனார்.

“ரொம்பப் பசிக்குதுடி.” மீண்டும் தீனமாய் அதே சொற்களை உச்சரித்த அந்தப் பழுத்த இலை கண்களில் வழியும் பரிதவிப்புடன் தங்கையருகே மடிந்து அமர, “பாவி மகளே, உனக்கேன்டி இந்தத் தலையெழுத்து? அடிவயித்துல எரியுற அக்னியை அணைக்க முடியாமத்தான் இப்படி அனலா கொட்டுறியா?” சேலைத் தலைப்பை வாயில் சொருகிக்கொண்ட விமலா கண்களில் பெருகும் நீருடன் தன் அக்காவைப் பாய்ந்து அணைத்துக்கொண்டார்.

 

 

லிடியன் நாதஸ்வரம் உலக இசை மேதை

’தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டம் வென்ற சென்னை சிறுவன்

லிடியன் நாதஸ்வரம்!

2023-ம் ஆண்டு எலான் மஸ்க்கின் தலைமையில் நிலவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்பதே லிடியன் நாதஸ்வரத்தின் கனவாம்.

 

 

 ஏ. ஆர். ரகுமானின் கே.எம். இசைப்பள்ளியில் பயின்று வரும் 13வயது மாணவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றதற்கு ஏ.ஆர். ரகுமான் பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

குவிகம் பொக்கிஷம் – வாழ்க்கை-சி.சு.செல்லப்பா

Related image

வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா.

”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வரும

பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே-சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம். அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி. ஏறிப்போயிருந்த ஒற்றை வண்டி நிழலிலே ஏறும் வெயிலுக்குத் தக்கபடி ஒதுங்கி ஒதுங்கி ஒண்டுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. கண்முன்னே அனல் பூச்சி பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

மாமாவின் வாயிலிருந்து வார்த்தை சீறி விழுந்தது. ”ஏன் புள்ளே, ஏன், அந்தக் கரட்டுமேலே கூட்டிவைக்கிறதுதானே? குத்துக்கல்லு குத்துக்கல்லா இருக்குமே – களத்துலே நெல்லு களமாக் கிடக்கும்.”

”இல்லேப்பா. வகையாக் களம் சிக்கல்லே. வேணுமினா……..”

”அது எப்படிச் சிக்கும்? அறுகங்கட்டையிலே செதுக்கினாத்தானே களம் கூட்டறபோது அறுப்புக்காரன் ‘இதுக்கு மேலே கூட்டவல்லீங்க, நெல்லு நின்னுக்கிது’ன்னு விட்டுட்டுப் போயிடுவான்? அதெல்லாம் கோளாறாகத்தான் செய்வே, உன்பாட்டைப் பாத்துக்கிறதுக்கு?”

”அவருதான் இங்கிட்டுக் கூட்டச் சொன்னாரு.”

”அவன் சொன்னானா? ஏன் சொல்லமாட்டான்? வீடு அந்தா இருக்குது. தலைச்சுமையா வெக்கட்டைக் கொண்டுட்டுப் போயிரலாம். பள்ளக்களத்திலே வச்ச மழை பெய்தால் அவதிப்படறது ஐயன்தானே? அவனவன் பாடுதாண்டா அவனுக்கு. என்னடா, மணி இரண்டாச்சு. பொளுது சாஞ்சுக்கிட்டு வருது. இன்னும் களத்துலே கட்டைக் காணோம். இவனெல்லாம் கொத்துக்காரன்னு வந்து பேசிக்கிட்டான்.”

மிராசுதாரர் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவி செய்ததே தவிர, குளுமைக்கும் சுமுகத்திக்கும் அங்கே ஏது இல்லை.

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. அவன் இஷ்டப்படிதான் அங்கே, இருபது ஆட்கள் நாலைந்து நடை சும்மா கரைமேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து கதிரடித்துச் சாற்றுப் பார்த்துப் பொலிவிட்டு அளவு பிடித்துக் குறிபோட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடைசூழ ஊருக்குத் திரும்பப் பவனி போகவேண்டும்.

இருட்டிலே போகவேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை. புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி, மறுபக்கம் கொடிக்கள்ளி, இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்து போனால்தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டைகளுக்கு இடுக்கிலும், இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்து கிடந்த மண் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்குக் கோயில்கட்டி வைத்துவிடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.

இந்த ரீதியில் பவனி வந்து இறங்கின நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளி தந்திரம், பொட்டலடி, காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தனவே. ”களத்திலேதான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்” என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடி தண்ணீருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கின சலிப்புக் குரலில் கலந்தது.

அதற்குப் பதில் உடனே வந்தது. ”சாமி, சாமி! அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ! மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது? என்ன ஐயா கவுண்டரே! நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்று கொண்டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.

”காளி முத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன்தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே? அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போனது போனது, வந்தது வந்ததுதான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப சந்தர்ப்பத்தில் மிராசுதார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.

”ஆமாடா, எல்லாரும் மச்சுவீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க? பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை……”

”ஹ§ம். இந்தா சொல்றீங்களே. துரோகம் நினைச்ச நாய் அந்த பாருங்க: செட்டியாருக்கு அரைமா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”

”ஏன்? வீடு நிலைக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு” என்று சேர்வையும கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.

‘ஹ§ம்! நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத்தானே? கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம்? சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சுப் போடச் சொல்லு.”

”சரி; போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக்கிட்டாத்தான். உங்க கையை விட்டுமாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்தீங்க? ஹ§ம், ஏது?”

”அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே! சரி. சந்தணக்குடும்பா! நட. காளிமுத்தா, சும்மாத்தானே நிக்கிறே?”

”வாறேன், போங்க.”

மாமா புறப்பட்டவுடன் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக்கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப்பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக்குரலாக – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்து கொண்டது.

நீர் வறட்சி உண்டாக்கும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும். ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங் கழித்த உடலுக்கு என்னவோ நப்பாசை, ஒரு களத்துக்குப் போய் அறுவடை பூராவும் தெரிந்துகொண்டு விட வேண்டுமென்று. அப்புறம் நானும் கிராமவாசி. ‘கிராமத்துக்கு போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா?

மேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப் போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதியையும், ஏச்சையுமே பரிமாறிக்கொண்டு பண்பட்டுப்போன தாக்குகளாக அத்தனையும் பட்டன எனக்கு. அங்கு நடந்து வரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் தொடர் சம்பாஷணைகள் இதை வலியுறுத்துவன.

அந்தரத்தில் கம்பி மேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டி இருந்தன.

சமாளித்து எட்டு வைப்பதற்கு தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும், மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறுமாறாக நிதானமில்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயாவுக்கு நடந்து பழக்கமில்லே போலிருக்கு. பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரஸித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா?’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா?’ என்று ஏளனம் செய்கின்றன.

வரப்பு வரப்பாகக் கடந்து கொண்டிருந்தோம். திடீரென்று, “ஸ்ஸ்…. இருடா. அதென்ன சப்தம்? அழுகைமாதிரி இருக்கே? அதென்னாடா சந்தணம்?” என்று மாமா கேட்டார். என் காதிலும் அப்போது ஓலக்குரல் விழுந்தது.

சந்தணம் விளக்கினான். “ஆமாங்க. நம்ம செங்குளத்து ஐயரு மகன் இறந்து போயிருச்சு, அந்த பொழுது உச்சிக்கு வர நாலு நாழிக்கு முந்தி, சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க இல்லையா?”

“ஆமாடா. பத்து நாளா உடம்பு குணமில்லேன்னு பேசிண்டா. ஒரே பிள்ளை. போயிருச்சா? அடப்பாவமே!”

“அந்தக் கிழட்டு ஐயரு போடற சப்தம் எம்மாந் தூரத்துக்குக் கேக்குது? அடேயப்பா! சகிக்கலீங்க” என்று காளிமுத்தன் தொடர்ந்து சொன்னான்.

“ஹ§ம்; போகுது. அதுக்குத் தலைவிதி முடிஞ்சுது. அல்பாயுசு. அவ்வளவுதான். யாருடா அது அங்கே? வேலுதானே, கொடிக்காலுக்கு அங்கிட்டு?”

‘பார்’ வேலைக்காரன் கைமாதிரி மாமாவின் வாயிலிருந்து சடாரென்று மாறி தொனியில் வார்த்தை கிளம்பினதை நான் க்ஷணத்தில் கிரஹிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு மரணச் செய்தி காதில் விழவும் சாவின் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிற உள்ளத்தில் நினைவு மறைந்து போகுமுன் புது அர்த்தபுஷ்டியான வார்த்தைகளைத் தொடரமுடியவில்லை.

“ஆமாங்க, வேலுதான்-ஏ, தேவாய்யோய்…” என்று கூவினான் சந்தணம்.

“அட, அவனாக வரானா பார்ப்போமே. கெடுத்து விட்டாயே காரியத்தை, அவசரக் குடுக்கை! விட்டுப் பார்க்காமே? ஒளிஞ்சுக்கிட்டுத் திரியறான் அவன்.”

“இல்லீங்க. இங்கிட்டுத்தான் வருவாரு” என்றான் காளிமுத்தன்.

செங்குளத்து ஐயர் மகன் சாவுப் பேச்சிலிருந்து மாறின சம்பாஷணைக்கு அந்தச் சுற்றுப்புறமே ஒத்துக்கொண்டுவிட்டது. தேவனும் காது கேட்கும் தூரத்தில் வரவே மாமா, “சந்தணம், தேவரு இங்கிட்டு எதுக்கு வாராரு? அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிருச்சு, லக்ஷ¤யமா பண்ணுவார்?” என்று கிண்டல் செய்துகொண்டே நடந்தா‘.

வேலு மேல்துண்டை எடுத்து மரியாதைக்காகப் புஜங்களில் வளைத்துக் கொண்டே, “ஆமா, பண்ணையை விடப் பெரிய பண்ணை இந்தச் செங்கட்டான் பட்டியிலே ரொம்பப் பேரில்ல இருக்காங்க?” என்றான்.

மறுபடியும் பல்லவி ஆரம்பம்.

“ஆமாடா, சக்கரையாப் பேசுவே இல்லே? போன வருசத்துக் குத்தகைப் பணம் பாக்கி கிடக்குது. தீர்க்க வழியில்லே, போகிற இடம் வருகிற இடம்னு.”

“அது இல்லாமே எங்கிட்டுப் போயிருங்க? பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண்டிட்டு வந்து கொடுத்திடணும்னுதான் நேத்துக்கூடச் சந்தணம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா, சந்தணம்?”

“வேலிக்கு ஓணான் சரியான சாக்ஷ¤தான்–தோப்புக்குக்கடவு எங்கேடா? மேற்கே இருந்தா?”

“இல்லீங்க. ஆட்டுக்கார பசங்க துட்டு பண்ணுதுங்கன்னு அடைச்சுப்புட்டேங்க. கிழக்காலே வாங்க” என்று சந்தணம் முன் ஓடிக் கடவு பிடுங்கிவிட்டு வழியில் கிடந்த முட்களை ஒதுக்கி எறிந்து தள்ளி நின்றான்.

அழுகைச் சப்தம் பலத்து வந்து விழுந்தது.

“மாமா, அதோ பாருங்க” என்று தோப்பை அடுத்துள்ள ஓடையின் மறுகரையைச் சுட்டிக் காட்டினேன்.

“இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள். சரி, நாம்ப மேற்கே போவோம். அவர்கள் போன பிறகு இங்கே வருவோம். கண்றாவியைப் பார்க்காமே திரும்பு” என்று கால்களைத் திருப்பிக் கிழக்கு நோக்கிப் போட்டார்.

“அதான் சரீங்க, எதிர்க்க நின்னா மாதிரியாத்தான் இருக்கும். வாங்க சாமி-சின்ன சாமி” என்று என்னை அழைத்த பிறகுதான் நானும் சேர்ந்து அடி எடுத்து வைத்தேன். அந்தத் தோற்றத்தையே அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்.

முதல் தடவையாக மசானத்தை அப்போதுதான் பார்க்கிறேன். நகரத்துத் தெருக்களில் பாடைகள், அழுகை, சங்கு, தம்பட்ட முழக்கங்களோடு எங்கேயே மூலை திரும்பிப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஓய்ந்து போய் அலுப்பு ஆற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தி இருந்த அந்த இடத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. விவரம் தெரியாத, ஆனால் மிகவும் கோரமான ஒரு கற்பனைதான் எனக்கு யூகம், கேள்வி இரண்டின் மூலமாகவும் பதிந்திருந்தது- அந்தக் கோரமான கற்பனையை நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சில எட்டுக்களுக்கு ஒருதரம் கண்மட்டும் திரும்பித் திரும்பி அலறலும் கூட்டமும் நிறைந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

முதல் பார்வையில் ஓடையின் எதிர்க்கரையில் ஒரு மேட்டின் நடுவே அடுக்கி இருந்த விறகு எருக்களிடையே பளிச்சென்று தெரிந்தது. அந்தச் சின்ன உருவம். அடுத்த கண் வீச்சின்போது மேலே மேலே அதன் மீது எருக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஐயோ, ஒவ்வோர் எருவும் அந்தச் சிறு உடலை மறைக்கும்போது எத்தனை குரல்கள் அலறித் துடித்தன! ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ராவி இது!” என்று எல்லோருக்கும் முன்னால் காலடிகளை எட்டிப்போட்டேன். அழுகைக் குரல்கள் என்பின் குறைந்து தங்கிவிட்டன. ஆனால் அந்தச் சித்திரம் மாத்திரம் என் கண்ணிலே தங்கிவிட்டது.

எத்தனையோ மேட்டுத்துண்டுகள் ஆற்றோரங்களிலும் ஓடையடிகளிலும் படிந்து கிடக்கின்றன. அவைமீது மிதித்துப் போயிருக்கிறேன். குப்பையும் கூளமும் சாம்பலும் அமோகமாகக் கிடக்கும். ஒருவித விசேஷமும் அவைபற்றின நினைவுகளில் சம்பந்தப்பட்டதில்லை. அந்த மேட்டுத் துண்டுகளைப் போலத்தான் இதுவும் ஒன்று. மேடு பள்ளம் நிரம்பின மண் தரை. இதற்கு மட்டும் மசானம் என்ற தனிக்குறிப்பு எதற்கு? ஆமாம். இதோடு சாவு சம்பந்தப்பட்டிருப்பதனால்தான்; மற்ற இடங்களோடோ வாழ்வு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்தியாசம். சந்தர்ப்ப பேதத்திலே அர்த்தம் கொடுக்கும் நாம் இட்ட காரணப் பெயர் அது.

வேறு எந்த விதத்தில் இயற்கையானது மசானத்துக்கும் அடுத்துள்ள இடங்களுக்கும் மாறுபாடு காட்டுகிறது? ஊருக்கு வெளியே தனித்து ஓடிவரும் இதே ஓடை ஊருக்குக்குள்ளும் ஓடிவருகிறது. சாவு குடி இருக்கும் சின்ன மண்மேடு இந்த மசானம். என் வாழ்வு குடி இருக்கும் பெரிய மண்மேடு அந்தக் கிராமம். இயற்கையின் ஆதரவில் எந்த இடத்தையும் மசானமாகச் செய்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

“இதுதான் அம்பி, நம்ப பெரிய தோப்பு; ஐயாயிரம் தென்னைக்குக் குறைச்சல் இல்லை” என்று தோப்பைக் காண்பிக்கும் மாமாவின் குரல் காதில் விழவும் மனத்தோடு பேசுவதை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தேன். தென்னந்தூறுகளிடையே வந்துகொண்டிருந்தோம்.

வேலு முன்னோடி இரண்டு தென்னங் கீற்றுக்களை இழுத்து வந்து போட்டான். உட்கார்ந்துகொண்டோம். அண்ணாந்து பார்த்தேன். சிலந்திக் கூடுகள்போல் பசுந் தென்னோலைகள் பின்னி வீசிப் பரந்த மட்டைகளுக்கு அடியில் மரத்தோடு ஒட்டிப் பச்சைப் பசேலெனக் குலை குலையாகச் சிறிதும் பெரிதுமாகக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தாக உணர்ச்சி உடனே உண்டாயிற்று. “சீககிரம் இளநீர் போடச் சொல்லுங்க, மாமா” என்று அவசரப்படுத்தினேன்.

“இங்கே தோப்பு இல்லாட்டா?” என்று மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அது வேறே கேள்வி” என்றேன்.

“எந்த மரத்துலே போடட்டுங்க?” என்று இடுப்பில் அரிவாளைச் செருகிக்கொண்டே சந்தணம் அண்ணாந்து பார்த்தான்.

தோப்புக்காரன்–உனக்குத் தெரியாதா? போடு வளுக்கைப் பதமா.”

“முத்தினதா இருந்தா அப்புறம் பாத்துக்கோ” என்று நான் சேர்த்தேன்.

சந்தணம் மரத்தில் ஏறி இளநீர்களை வெட்டித்தள்ள, வேலு வெட்டிக் கொடுக்க, மாமாவும் நானும் மாறி மாறி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம். தொண்டை இனித்துக் குடல் குளிர்ந்தது.

திடீரென்று வேலு ஆரம்பித்தான்: “பாவம், செங்குளத்து ஐயரு பாடு இனிமே ரொம்ப அம்பலமாப் போயிருச்சுங்க. அந்த ஒரே மகன் மேலே உசிரை வச்சுக்கிட்டு இருந்தாரு.”

இளநீர் சாப்பிடும் உற்சாகத்தில், அது உடலில் ஏற்றின குளுமையில் கொஞ்சம் மறந்திருந்த அந்தக் காட்சி மறுபடியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

“ஆமாடா. அந்த மருமகன் வீட்டோட வந்து இருந்துவிடலாம்; ஐயருக்கு வேறு வழி இல்லை” என்று மாமா தொடர்ந்தார்.

“நல்லதுக்கா மருமகன் வாச்சு இருக்கிறாரு! அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பாத்திட்டுப் போயிருவாரு. ஊரிலே அவரைப் பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க!” என்று சந்தணம் கலந்துகொண்டான்.

“இன்னைக்குத்தானா தெரியும்? வேணும் அந்த ஐயருக்கு அன்னைக்கே நாலு சாத்துச் சாத்தி லஜ்ஜைய வாங்கிட்டு இருந்தா வழிக்கு வந்திருக்கும் அதை விட்டுப்போட்டு..” என்று மாமா இழுத்தார்.

“அதைச் சொல்லுங்க. அப்படிச் செய்துட்டு இருந்தா இந்தாத் தொலைக்கு வந்திருக்காதுங்க” என்று பண்ணையின் தீர்ப்புக்கும் நியாய உணர்ச்சிக்கும் பண்ணைக்காரச் சந்தணம் ஒத்து ஊதினான்.

“போகுது; அவன் அவன் தலைவிதிப்படி நடக்கிறது. நமக்கு என்ன? ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே? அதை இழுத்துப் போட்டிடலாமா? என்ன யோசனை?” என்று பேச்சைச் சடாரென்று மறுபடியும் முறித்து எங்கேயோ திருப்பினார் பண்ணை. திடீர் திடீரென மாறின தோரணை காட்டுவது அவருக்கு எவ்வளவு சுளுவாக இருந்தது என்பதுதான் எனக்குத் திகைப்பை ஊட்டியது. வாஸ்வதம்! செங்குளத்து ஐயரின் பிள்ளை மரணம், அவர் குடும்ப விஷயம். அந்தப் பேச்சுக்கு அவ்வளவு அவகாசந்தான் கொடுக்க முடியும். மீதி நேரம் தம் குடும்பத்தின் சுகம், தம் சம்பந்தமாக அக்கரைகளுக்குத்தான். இது யதார்த்தந்தானே?

என் மனப்போக்கு இப்போதும் தன் வழியே தொடர்ந்தது. ஆனாலும் வெளி வார்த்தைகள் காதிலே வந்து தாக்கிக்கொண்டிருந்தன.

சந்தணம் கொஞ்சம் கிட்ட நெருங்கி மெல்லிய குரலில் இழுத்தான். “என் காதிலேயும் பட்டதுங்க. இணைசேர்ந்த நிலம் ஒரே தாக்கா அமஞ்சு போயிருங்க. புரவிலேயே ஓங்கின கை நம்முதுதான். எப்படியாவது முடிச்சுப்புடுங்க.”

கலகலத்த சிரிப்பு மாமா உதடுகளிலிருந்து வெளிவந்தது. “ஆமாடா, உனக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்கு வகையாச் சேருதில்லே! சிபார்சு செய்யமாட்டே? வேலு! சந்தணம் யோசனையைக் கேட்டியா?”

“சொல்றது சரிதாங்க. வாங்கிருங்க. காலத்துக்கு நான் உழுதுப்படறேன்க” என்று வேலு கண்களைக் சிமிட்டிக்கொண்டே பல்லைக் காட்டிக் கூறினான்.

“பாருடா! அனவன் தன் தன் பாட்டைப் பாத்துக்கப் பேசறான்; திருட்டுப் பயலுக!”

இருவரும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார்கள். “பண்ணை நிழல்லே நிக்காட்டி எங்களுக்குப் பிழைப்பு ஏது?” என்றான் வேலு.

“அதைச் சொல்லுங்க” என்று ஆமோதித்தான் சந்தணம்.

மாமா குரலை உயர்த்தி, நிலமா! போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத் தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா..? சரி களத்திலே கட்டு வந்திருக்கும். போகலாம் வா, அம்பி” என்று துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்; “சந்தணம், அங்கிட்டு எட்டிப் பாரு, அவுங்கப் போயிட்டாங்களான்னு. தோப்பைச் சுத்திப் பாத்துவிட்டு போவோம்” என்றார்.

சந்தணம் போய்வந்து, போய்விட்டதாகச் சொன்னான்.

தோப்பைச் சுற்றிக்கொண்டு மேலைக் கோடிக்குப் போனோம். என் கண்கள் தாமாகத் தோப்புக்கு வெளியே பார்த்தன. சற்று முன் அலறல் நிறைந்து கிடந்த அந்த இடத்தில் அமைதி பதிந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தமட்டும் அழுதுவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அங்கே ஒன்றியாகக் கிடந்த உடலுக்குக் காட்டின மரியாதையும் அவ்வளவுதான்.

விறகும் எருவும் அரைகுறையாக முன்பு அடுக்கி இருந்த இடத்தில் பூரணமாக மேலே ஈரமண் அப்பி மெழுகி இருந்தது. லேசான புகைச் சுருள்கள் அதன் பக்கங்களில் வெளியேறிக்கொண்டிருந்தன. ஒன்றியாகக் கிடந்த உடல் என்று சொன்னேன்; தவறு. இரண்டு உருவங்கள் ஏதோ முனகிக்கொண்டிருந்தன. வார்த்தை தௌ¤வில்லை. செய்கை கண்களில் விழுந்துகொண்டிருந்தது. அந்தப் புது ஈர மண்மேட்டைச் சுற்றிவந்து புகைவரும் இடுக்குகள் வழியே குச்சியை விட்டுக் குத்திக்கொண்டிருந்தன; உள்ளே கனியும் கனலைத் தூண்டிவிடும் முயற்சி அது. பிணத்தின் சாந்தியைக் குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பூரணமாக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வேலை அது.

இத்தனை பேரும் அலக்ஷ¤யமாய் விட்டுப்போன உடல் அது. மசானத்தில் கொண்டு போட்டதோடுகூட இருந்து பழகின அத்தனை பேருடைய பொறுப்பும் தீர்ந்துவிட்டது. எங்கேயோ சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்களிடம், மேற்கொண்டு அந்த உடலோடு உறவு கொண்டாடும பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தம் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள். எரிந்து கிடக்கும் சாம்பலை மிகுந்த அக்கறையோடு பார்க்க நாளை வரப்போகிறார்கள். அதுவரை இந்த மேட்டிலே பழிகிடக்கும் இந்த இரண்டு உருவங்களும் சாம்பலைப் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றன. என்ன அக்கறையடா இவர்களுக்கு; விசித்திரம்!

என் நடையிலே மசானம் என்ற அந்த மேடு என் முதுகுக்குப் பின் விழுந்துகொண்டிருந்தது.

பண்ணைப் பார்க்கும் பள்ளிக்குக் களத்துச் ‘சிந்துமணி’யில் கவனம். காளிமுத்தனுக்கும் உழுபடைக் கவுண்டனுக்கும் பண்ணையோடு உறவு கெடா திருப்பத்தில் சிரத்தை. மிராசுதார் மாமாவுக்குக் குத்தகை ஜரூராக வசூலாவதிலும், நிலம் இணைசேர்ப்பதிலும் அக்கரை. சந்தணத்துக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்குச் சேருவதில் ஆத்திரம். வேலுவுக்கு நிலம் உழுவதில் ஆசை. பொசுக்கவந்த கூட்டத்துக்கு வீடு திரும்பும் அவசரம். எனக்கு இளநீர் சாப்பிடுவதில் உற்சாகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்- இப்படி அவனவன் பாடு அவனவனுக்குப் பெரிது. சின்ன ஆத்மா பிரிந்ததில் ஒன்றிற்கும் குந்தகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு ஆத்மாக்களுக்கு மட்டும் அதைக் கரையேற்றுவதில் இவ்வளவு அக்கரையா? இவ்வாறெல்லாம் மறுபடியும் நிழலோட்டம். எட்டி நடந்தோம் களம் நோக்கி.

திடீரெனப் பின்னால் ஓர் ஒற்றைக் குரல் வெடித்துக் கிளம்பியது.

“மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை.”

அந்த இடமே எதிரொலித்தது. எங்கிருந்து என்று அறியத் திரும்பப் போனேன்.

“வஞ்சமில் லாதமெய்க் காதல்அல் லாதில்லை”
என்று இரண்டு குரல்கள் ஜதையாக முடித்தன.

பிரமித்துப் போய் நின்றேன். அந்த ஆனந்த கீதம் மண் மேட்டிலே பிணத்தைக் குத்திக்கொண்டிருந்த அந்த இரு உருவங்களின் உச்சரிப்பு. என் பிரமிப்பு அடங்கு முன்னரே அடுத்து எத்தனையோ வரிகள் மளமளவென்று காற்றில் கலந்துவிட்டன.

பிரபஞ்சம் மாயம்: சந்தேகமில்லை. வேதாந்தம் அந்தத் தத்துவத்தை மூளையில் திணித்திருக்கிறது. ஆனால் எது ஆனந்தம்? சாவா? சாவாக இருந்தால் பொருத்தந்தான். ஓய்வில் ஆனந்தந்தானே! இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்திகொடுக்கும் அந்த ஜீவன்களின் வேலையில் ஆனந்தமா? அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம்கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவுதான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்துவந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது! சாதல் குடி இருக்கிற இடத்தில் காதலின் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறது; மசான பூமியினின்று காதலர் சோலையை உண்டாக்கிவிடுகிறது கற்பனை உள்ளத்தில். இந்த நினைப்பில் என் உள்ளம், சிலிர்த்தது. இயற்கையின் பகைப்புலத்தில் என்ன முரணான சித்திரம்!

உழன்றேன்; அதன் மறுபக்கம் நினைவுக்கு வந்தது. வாஸ்தவம்! சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒருவிதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பில்தான் காதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப்போக்கின் தடையும் சக்தியில் ஓய்வும் காதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந் தோப்பிலே காதல் கூவும் பக்ஷ¤! எதிர்மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ! எல்லாம் இயற்கையின் பகைப்புலத்தில்!

ஆனாலும் சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை.

இவ்வளவு எல்லாம் முரண்பாட்டை நினைத்து நான் குழம்பினேனே; எதிரே இருந்த குரல்கள் அந்த வரிகளைக் கொஞ்சமாவது சிந்தித்து உச்சரித்திருக்குமா? நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கரையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு! அவர்களுக்கும் பொறுப்பில்லை. அவர்கள் செய்வது ஒரு முறைவேலை, ஊதியத் தொழில், பள்ளி, காளிமுத்தன், கவுண்டர், மிராசுதார் மாமா, சந்தணம், வேலு, நான் இவர்களைப் போன்றவர்களே அவர்களும். இதுதான் வாழ்க்கை

 

அந்த ஒரு வருடத்திற்கு முன்….பின்! – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for கணவன் மனைவி

ரஞ்சித் என்னுடைய மாணவியின் குடும்ப நண்பர். என் மாணவியிடமிருந்து நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், மனநல ஆலோசகரும் என அறிந்துகொண்டு, தான் படும் இன்னலுக்குத் தீர்வு காண என்னை ஆலோசிக்க வந்தார்.

ரஞ்சித்தின் குழப்பம்,  தன் மனைவி பாயல்பற்றித்தான். இவர்களுக்குக் கல்யாணமாகி இருபது வருடங்கள் கடந்திருந்தது. அவர்களை ஆதர்ச தம்பதியர்களாகத்தான் உற்றார் உறவினர்கள் அனைவரும் கருதினார்கள். ஒரு வருட காலமாகப் பாயலின் போக்கு அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. அவள் சமைக்கும் வகைகள் எப்பொழுதும்போல அப்படியே இருந்தாலும், வீட்டுப் பராமரிப்பு, வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துக்கொள்வதில் நிறைய மாற்றங்கள். ரஞ்சித்திற்கு அவளிடம் இதுவரை இல்லாத சுயநலம், செலவழிக்கும் பழக்கம், உபயோகிக்கும் வார்த்தைகள் கவலை உண்டாக்கியது.

என்னவென்று புரியவில்லை. யாரைக் கேட்பது என்றும் தெரியவில்லை. ஒருநாள் தன் அப்பாவிற்கு உணவு தரவில்லை, கேட்டபிறகு, மன்னிப்புக் கேட்டாள். ஏனோ அவனுக்கு அது வெறும் வாய்வார்த்தையாகத்தான் தோன்றியது. இது நடந்தபின்பே என்னை ஆலோசிக்க முடிவெடுத்தார்..

ரஞ்சித், 45 வயதுடையவர். தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை. தன் அப்பா-அம்மாவிற்கு மூத்த மகன் என்பதால் அவர்களைத் தானே பார்த்துக்கொள்வதாக முடிவு. பாயலின் பரிபூரண சம்மதம் கிடைத்ததால்தான் அவளைக் கல்யாணம் செய்துகொண்டார்.

பாயல் பட்டதாரி. நல்ல வசதியான மேல்தட்டுக் குடும்பம். நம் கலாச்சாரம், நாட்டின் குடும்பப் பண்பாட்டைப் புரிந்துகொண்டு அனுசரிப்பவள். அவளுடைய மாமனார், மாமியார் அவளைப் பெருமையுடன் புகழ்வார்கள். அவளும் அவர்களை “அம்மா” “அப்பா” என்றே அழைப்பதுமட்டும் அல்லாமல் தன் பெற்றோராகவே பாவித்தாள். இவர்களை மாமனார்- மாமியார்- மருமகள் எனத் தெரியாத அளவிற்கு இருந்தது.

அதனாலேயே இந்த ஒரு வருட மாற்றம் வியப்பாக இருந்தது. சில வருடங்களுக்கு முன் மாமியாருக்கு ஈரல் பாதித்து, சுமார் ஒரு வருடத்திற்கு மருத்துவ உதவி தேவையானது. பாயல் அவர்களை முழு அன்பு, ஆதரவுடன் பார்த்துக்கொண்டாள். அவர்கள் மறைந்து வருடங்கள் ஆயினும் அவள் அவர்கள் இல்லாத வடுவைச் சுமப்பது உணரமுடிந்தது.

இதே பாயல், கடந்த ஒரு வருடமாக, மாமனாரின் உடல்நிலைமேல் குறைந்த அக்கறை காட்டினாள். அவரின் பகல் உணவு ஏனோதானோ என்று இருக்கும், பேச்சு ஓரிரு வார்த்தையாக இருந்தது.

இதே சமயத்தில்தான் அவள் ஒரு பள்ளியின் மேல்அதிகாரியானாள். தொலைவிலிருந்ததால், சீக்கிரம் கிளம்பவேண்டியிருந்தது. பொறுப்புகள் முடித்துத் திரும்பி வருவதற்குள் ஆறுமணி ஆகிவிடும். வந்ததும் சமையலில் இறங்கிவிடுவாள்.

இருபது வருடக் கல்யாண வாழ்க்கையில், அவர்களுக்குள் வாக்குவாதம் நேர்வது, இந்த ஒரு வருட காலமாகத்தான். ரஞ்சித்திற்கோ தான்செய்வது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. பாயலை ஏன் இவ்வளவு ஏசுகிறோம், இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகப் போகிறோம்? எனத் தோன்றியது.

ரஞ்சித்தைப் பாயலுடன் வருமாறு பரிந்துரைத்தேன். பாயல் வந்தாள். கண்களும் கைகளும் அவள் உள் நிலவும் உணர்வைக் காட்டியது. வருவதற்குத் தயக்கம் என்றாலும் ஒத்துவந்தாள்.

பாயல் தன்னுடைய மாற்றங்களைத் தன் கண்ணோட்டத்திலிருந்து சொன்னாள். அவர்களின் இரண்டு பெண்களும் பெரிய வகுப்பில் இருப்பதால் வேலைசெய்யவும், வந்த பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் தோன்றியது என்றாள். மாமியாரின் மறைவுக்குப்பின் அவர்கள் இல்லாதது மிகவும் வாட்டியது. இந்த நிலையைச் சமாளிக்க வேலைக்குப்போக முடிவெடுத்தாள்.

முகநூலில் புது அறிமுகங்கள். பெண்கள் முன்னேற்றம்பற்றி எப்போதும் பேசுவோர். மாமியார் மறைவு நேரத்தில்தான் இவர்கள் பழக்கம் ஆரம்பமானது. திரும்பத்திரும்பப் பாயலிடம், தன் வளர்ச்சியை மையமாக வைத்து யோசிக்கவேண்டும் என்றார்கள். இவ்வளவு காலமாகக் குடும்பத்திற்கு உழைத்தாய், “உனக்காக” செய் என வலியுறுத்தினார்கள்.

சொல்லி வைத்ததுபோல் அந்தத் தருணத்தில்தான் இந்த வேலையும் வந்தது. அவர்கள் ஊக்குவிக்க, தனக்கென்று முதல்முறையாக யோசிப்பதாகக்கருதி, வீட்டில் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் முடிவுஎடுத்தாள். ஏனோ இதுவரையில் ஒரு தனியார் பள்ளியில் காலை மூன்றுமணி நேரம் மட்டும் வேலை செய்ததே அவள் மாமனார் மாமியார் பரிந்துரைத்ததால்தான் என்பதை முகநூல் தோழிகளுக்குச் சொல்லவில்லை, தனக்கும் நினைவிற்கு வரவில்லையோ(?).

பாயலுடன் ஆலோசித்து, குறிப்பாக ஏன் செய்தோம், பின் விளைவுகள் என்ன, இவை இரண்டைப்பற்றி மேலும் பேசச்சொன்னேன். செய்தது சரி என்று நிரூபிக்க முயன்றாள். முகநூல் நண்பர்கள் சொன்னது சரிதான் எனப் பகிர்ந்தாள்.

மெதுவாக அதன் பாதிப்பை ஒவ்வொன்றாக எடுத்து அவளை ஆராயச்சொன்னேன். செய்யமுயன்றதும், இப்படி இந்த முடிவினால் அவள்-ரஞ்சித் உறவுக்கு எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாள். அவளை ரஞ்சித்துடன் உரையாடப் பரிந்துரைக்க, அடுத்த பல ஸெஷன்களுக்கு கணவன் மனைவியை ஒன்றாகப் பார்த்தேன்.

பாயல், தன் மாமியாரின் கடைசிக்காலப் பராமரிப்பில் தான் வரைவது, தைப்பது ஒவ்வொன்றாக நிறுத்தியதை ரஞ்சித் மிக வேதனையுடன் அவளுக்கு நினைவூட்டினான். அதைக் கேட்க, பாயல் கண்களிருந்து கண்ணீர் மல்கியது. தன் அம்மா உயிருடன் இருந்தவரை, வாராவாரம் நடந்த வந்த பூஜை, பஜன் நின்று விட்டதைச் சோகத்துடன் பகிர்ந்தார்.

பாயல் வியப்படைந்தாள். தான் ஏன் இப்படி மாறினோம்? அறிந்து கொண்டாள், இவை எல்லாம் மாமியார் நினைவைத் தந்தது. தன்னை வாட்டியது என்றாள். தன் அம்மாவிற்கும் பாயலுக்கும் உள்ள நெருக்கம் தெரிந்ததும் ரஞ்சித் திகைத்தான்.

இந்தத் தற்காலிக மாற்றத்தைப்பற்றிப் பாயல் விடை தேட, பல ஸெஷன்கள் அவளுடன் மட்டும் எனச்சென்றது. இதில் அவளுடைய முகநூல் தொடர், அதன் பாதிப்பை ஆராய்ந்தோம்.

பாயல் பின்னோக்கிப் பார்க்கையில், மாமியார் மறைவின் கசப்பைத் தவிர்க்க அவர்களை நினைவூட்டும் விஷயங்களைத் தான் தவிர்த்ததை உணர்ந்தாள். ஆனால் கசப்பு தொடர்ந்தது. அந்த முகநூல் நட்பின் பிடியில், “நீ உன்னை, உன் வாழ்க்கையை யோசி, மற்றவர்கள் பிறகு” என்பது மையம்கொள்ள, அங்கிருந்து உறவுகளில் மோதல் ஆரம்பமானது. அவர்கள் சொல்வது தன் கோட்பாடு, நெறிமுறைகள், சூழலுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று ஒப்பீடு செய்யவில்லை. “தன்னை” பரிதாபம் கூற, அவளும் அதை ஆமோதித்ததால் பச்சாதாபம் கூடி, தன்நலத்தில் இறங்க, சுயநலத்தில் சிக்கினாள். தன்னுடைய முன்னேற்றத்தில் குடும்பத்தின் பங்கு இருக்கிறது, இருந்ததைப் பார்க்கவில்லையோ?

ஆழமாக யோசிக்கப் பாயலுக்குத் தெளிவானது, நம் நலன் கண்டிப்பாகத் தான் கவனம் செலுத்த வேண்டியவையே, அதற்காக நம்முடன் இருப்போரைப் பலிகொடுத்து இல்லை என்று. அடுத்தபடியாக ஆலோசித்ததில் மேலும் தெளிவு வந்தது -“தன்னை” உறுதிப்படுத்திக் கொள்ள, அந்த அதிகாரப் பதவி தேவைப்பட்டிருந்தது. இதை மேலும் ஆராய, இன்னும் தெளிவுபெற்றாள்: அதிகாரத்தால் முன் இல்லாத பலத்தை அனுபவித்தாள். நாற்பதுபேரை அதிகாரம் செய்வதில் அவளுடைய சொற்கள், பாவனைமாற, முகநூல் நண்பர் உதவ, தன்நலத்தில் இருந்தாள். இந்தக் கோணத்திலிருந்து தன்னைப் பார்க்க, தான் எவ்வாறு மாறினோம் என்பதைத் தெளிவாக அவள் காண, ஒவ்வொன்றையும் குறித்துக்கொள்ளப் பரிந்துரைத்தேன்.

Image result for இந்திய கணவன் மனைவி சண்டை கார்ர்டுன்

பட்டியல் நீண்டது. பாயல் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதற்கு அவளுக்கு ஒரு சபாஷ்! ஆராயத்தொடங்கினோம். அறிந்தும் அறியாமலும் உறவுகளை இரண்டாம் பட்சமாகத் தான் வைத்ததை உணர்ந்தாள். இப்படிச் செய்வது தன் இயல்பே இல்லை என்றாள். வேலை இடத்திலும் கறார் பேர்வழி என்று பெயர், பாசம், அன்பு, காட்டவில்லை.

இந்தக் கட்டத்தில் அவளுடைய மாமனார் வரவேண்டும் என்றேன். பெரியவர், பாயலை எந்தக் குறையும் கூறவில்லை. அவர் தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக ஓய்வு பெற்றவர். அவருக்குப் பாயல் தன்னிடம் ஏதோ மறைப்பதுபோல் தோன்றுவதாகக் கூறினார். மேலும், “எங்களைப் பார்த்துக்கொண்டு டையர்ட் ஆகினதால் தையல், ட்ராயிங் நிறுத்தி விட்டாளோ” என்று வியப்பாகச் சொன்னார். இதை, எங்கள் துறையில், “கேர் கிவர் ஃபடீக்” (care giver fatigue) என்பது. இதைப் பெரியவர் விவரித்தார். “ஒருவரைப் பராமரிக்க, கவனம் அதில்மட்டுமே செலுத்த, தன் ஆசை, வேலைகளைப் பூட்டிவிட்டால் நாளடைவில் தனக்குத்தானே பாவம் என்ற ஃபீலிங் வர வாய்ப்புண்டு”.

பாயல் இதை மேலும் தைரியத்துடன் ஆராய்ந்தாள். ஒன்று தெளிவானது, தன் மாமியாரின் மறைவுக்குப்பிறகு மாமனாரின் உடல்நிலை தடுமாற, அவரின் காருண்ணியம் தன்னை வாட்டும் எனவே விட்டேத்தியாக இருந்தாள்.

இந்த நிலைமையைப்பற்றிப் பேச தன் உள்ளில் ஊர்ந்த அச்சம் அவள் கவனத்திற்குத் தென்பட்டது. எங்கே இவரும் மாமியார்போல் அவஸ்தைப்படுவாரோ என்றும், அவர் மறைவை எவ்வாறு தான் தாங்குவோம் என்று பாயலுக்குச் சஞ்சலம்.

பாயலுக்கு நிஜத்தைச் சந்திக்கவேண்டிய நிலை வந்ததால், மாமனாருடன் திரும்ப ஸெஷ்ன்கள் ஆரம்பமாயின. பாயல் தன் அச்சத்தை அவரிடம் பகிர்ந்தாள். அவரும் அவளுடைய செயல்பாட்டினால் தான் கவலைப்படுவதை விவரித்தார். மேலும் ஆராய, தெளிவு பிறந்தது. வயது, வயதானதால் வரும் இன்னல்கள் வாழ்க்கையின் நிதர்சனம். ஜனனம் மரணம் நாம் ஜீரணிக்க வேண்டியவை. இவைகளைச் சந்தித்து, மீண்டும் பயணிக்கவே உறவு, குடும்பம் என்ற சூழல் உள்ளது.

இதற்கு அஞ்சி பாயல் செய்ததில், தன்னுள் ஊறிக்கிடந்த குற்ற உணர்வைப் பார்க்கத் துணிந்தாள். இவை ஊறியபடி இருந்ததால் அவளுடைய பாசம், கனிவு, அரவணைப்பு மங்கிப்போய், சிடுசிடுப்பு, ரஞ்சித்துடன் மனக்கசப்பு ஆரம்பமானது.

முகநூல், தோழி என எல்லோரையும் தன்னுடைய இந்த நிலைக்குப் பாயல் பொறுப்பாக்கினாள். மறுத்தேன். பாயலைச் சிந்திக்கச்செய்தேன். ஏனென்றால் மற்றவர்கள் தங்களுடைய கருத்தை, அபிப்பிராயங்களைப் பகிர்வார்கள். அவற்றை அலசி, ஆராயவேண்டியது நம் பொறுப்பாகும். நம் சூழலைப் புரிந்து, அதற்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும். பாயலின் முகநூல் தொடர்புகள் அவளுக்கு ஒவ்வொன்றையும் யோசித்ததால் அவள் தன் சுயயோஜனையை உபயோகிக்கவில்லை. அவர்கள் சிறுதுளிக்கும் முடிவெடுக்க, “மைக்ரோ மேனேஜ்மென்ட்” (micro management) நாளடைவில் சுயசிந்தனை இல்லாத வாழ்க்கையாகப் போனது. உஷார், போகப்போகச் சலித்துவிடும்.

பாயலின் மாமனாரும் தன் நிலையைப் பகிர்ந்தார். அவள் தன்னைப் பார்த்துக்கொள்வதில்லை என்ற தன் கருத்தை முன்வைத்தார். பாயல் ஏனோ தடுமாறுகிறாள், அவளைத் தானாகச் சுதாரித்துக்கொள்ள விட்டதாகச்சொன்னார். இதிலிருந்து ஒன்று தெரிந்தது- கடந்த ஒரு வருட காலம், ஒவ்வொருவருக்கும் தங்களை, தங்களைச் சுற்றி இருப்பவரைப்பற்றி ஏதோ வாட்டியது. ரஞ்சித் கொஞ்சம் வெட்கப்பட்டார், தான் தன் அப்பாவைபோலப் பக்குவமாக நடந்துகொள்ளவில்லை என்று.

இப்படிப்பட்ட சூழலில் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை மூவரையும் (பாயல், ரஞ்சித், மாமனார்) ஆலோசிக்க வைத்தேன். ரஞ்சித்தும், மாமனாரும் பாயல் மீண்டும் முன்போல் கலகலப்பாக இருப்பதே  பிரதானம் என்றார்கள். பாயல் வீட்டை முன்போல் பாசத்துடன் அரவணைக்க வேலை நேரத்தை மாற்றவிரும்பினாள்.

மாமனார் அவளிடம் அவர்கள் இருப்பிடத்தில் இருக்கும் அதே நிறுவனத்தின் ப்ரீ-ஸ்கூலுக்கு செல்லலாம் எனப் பரிந்துரைத்தார். பாயல் தன் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றிப் பேசினாள். அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள (அங்கிருந்த மேல் அதிகாரி கல்யாணம் முடிவானதில் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாள்), அவளை அங்கு பொறுப்பு ஆசிரியையாக நியமித்தார்கள். அங்கு மிகச் சிறிய வயதுடைய பிள்ளைகள் கற்றலுக்கு விதவிதமான வழிகளில் சொல்லித் தருவது இவளுக்கு பிடித்தமானது என்பதால், அது பாயலின் உற்சாகத்தையும் தூண்டும் என நானும் நம்பினேன்.

பாயல் சரியாகி வருகிறாளா என்ற கேள்விக்கு நான் கண்ட சில பதில்கள்: மாமனாருக்குப் பின்னி வரும் ஸ்வெட்டர், தன் புடவையில் பூக்களைத் தைத்தது, வேலை செய்வோரிடம் அன்பு கலந்த அதிகாரம். மேலும் படிக்க வீட்டில் ஊக்குவிக்க, எங்கள் நிர்வாகத்தின் ஆசிரியர் படிப்பிற்குச் சேர்ந்தாள்!

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for சூரியதேவன் விஷ்வகர்மாவின் மகள்

ஸந்த்யாவின் முகத்தில் தெரிந்த கோபாக்னியைக்  கண்டு பயந்த சூரியதேவன் அவள் வார்த்தைகளால்  தெளித்த அக்னித் திராவகத்தின் சூட்டுக்கோல்களைப் பொறுக்கமாட்டாமல் தவித்தான். சூரியனின் நெஞ்சையே எரிக்க வைத்த எரி அம்புகள் அல்லவா அந்த வார்த்தைகள். தான் அரை மயக்கத்தில் சாந்துக்குளியலில் இருந்தபோது விஷ்வகர்மா தன்னிடம் உதிக்கப்போகும் மாபெரும் மஹாபிரும்மருத்ரனுக்காக மூன்று உயிர் என்ன  மூன்று கோடி உயிர்களை அழிக்கலாம் என்றவகையில் தன்னிடம் பேசி அதற்கு அனுமதியும் வாங்கியது எல்லாம் கனவோ என்று இருந்தான். ஆனால் இப்போது ஸந்த்யா கூறும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமே அவனுக்குப் புரிந்தது.

” என்ன! நான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையா?” என்று மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் சூரியதேவன் கூறியதைக் கேட்ட ஸந்த்யா தற்போது ஆச்சரியத்தின் வலையில் விழுந்தாள். “தந்தையாகப் போகும் சேதி அவனுக்கு தெரியாதா? அதை நான் இப்படியா சொல்லுவது ?” என்ற எண்ணம் அவளை நிலைகுலையச் செய்தது.

அவள் கண்ணில் இருந்த கோபம் மறைந்தது. காதலும் ஆசையும் வெட்கமும் ஒன்றோடொன்று போட்டிபோட முடியாமல் தவித்தன.

சூரியதேவன் அருகில் வந்து ஸந்த்யாவை இறுகத் தழுவிக்கொண்டான். ஸந்த்யாவும் அவன் தோள்களைப்பற்றி  அவன் பரந்த மார்பில் முகம் புதைத்து ஆறுதல் அடைந்துகொண்டிருந்தாள். தனக்கும் சூரியதேவனுக்கும் இடையே தந்தை ஒரு மாயவலையைப் பின்ன முயற்சித்திருக்கிறார் என்பதை அவள் நன்கு புரிந்துகொண்டாள்.

சூரியதேவனோ அவள் சொன்ன வார்த்தைகளின் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. மூன்று குழந்தைகள், மூன்று குழந்தைகள் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே அவள் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான். மெதுவாக அவளைத் திருப்பி அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளது ஆலிலை வயிற்றை மெல்லத் தடவிக்கொடுத்தான்.

பிறகு மெல்ல அவளைத் தூக்கிக்கொண்டு அன்னப்பறவையை அணைத்து எடுத்துச் செல்வதுபோல அவளுக்குக் கொஞ்சமும் வலிக்காத அளவில் தன்னுடைய பஞ்சணையில் படுக்கவைத்தான். அவள் வெட்கத்தில் பஞ்சணையில் நெளிந்தது, இளமயில் ஒன்று தன் தோகையை விரித்துவிரித்து மூடுவதுபோல் இருந்தது. சூரியதேவனும் அவள் அருகே அமர்ந்து அவள் மெல்லிய கைகளைத் தன் கைகளில் சிறைப்படுத்தி ஆவல் ததும்பும் விழிகளால்

” மூன்று குழந்தைகளா? நமக்கா? எப்படி?எப்படி? எங்கு?  தடாகத்திலா?  காந்த அறையிலா?” என்று கோர்வையாகக் கேட்கத் தெரியாமல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.

காந்த அறையில்தான்  நிகழ்ந்திருக்கவேண்டும். தடாகத்தில் உங்களிடம் வெப்பம் அளவிற்கு அதிகமாக இருந்ததால் என் உடலே உருகத் தொடங்கிவிட்டதே! ஆனால் காந்த சிகித்சைக்குப்பிறகு  நாம் அளவிற்குமீறி அத்துமீறிவிட்டோம். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்திருக்கிறது. நம் மீது ராகுவின் பார்வையும்பட்டிருக்கிறது.”

ராகுவின் பெயரைக் கேட்டதும் சூரியதேவன் திடுக்கிட்டு எழுந்தான்.

” ராகு ! என்ன தைரியம் அவனுக்கு! அவனை அந்த ஸ்வர்ணபானுவை என்றைக்கு அமிர்தத்தைத் திருடினானோ அன்றே கொன்றிருக்கவேண்டும். “

அதைத்தானே மாகாவிஷ்ணுவும் செய்தார். ஆனால் அமிர்தம் உண்டதால் அவனை யாரும் அழிக்க முடியாது. சிவபெருமானும் ராகுவையும் கேதுவையும் படைத்து அழிவில்லாதவர்களாக வரம் கொடுத்துவிட்டாரே!”

“அதுமட்டுமல்லாமல் என்னையும் வருடத்தில் ஒருமுறை அவன் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருக்கும்படியல்லவா செய்துவிட்டார்! இனி என்னால் பொறுக்கமுடியாது. அவனை அழித்தே தீருவேன்”

” சினத்தை விடுங்கள்! அவன் நமக்கு பெரிய உதவி புரிந்திருக்கிறான்.”

” ராகுவா? நமக்கா? நிச்சயம் இருக்கமுடியாது. அதில் ஏதாவது வஞ்சனை இருக்கும்”

” நீங்கள் இம்முறை ராகுவை மன்னிக்கத்தான் வேண்டும். அவனின் பார்வை காமத்தைத் தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருஷ்டி உங்கள்மீது விழுந்ததால்தான் உங்கள் கண்ணில்  தடாகத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்மீது உங்கள்  காதல் பார்வை விழுந்தது. மேலும் காந்த அறையிலும் அவன் பார்வை நம்மீது பட்டதால் நமக்குள் காதல் தீ பற்றிஎரிந்தது. நாமும் கலந்தோம். மூன்று குழந்தைகள் என் வயிற்றில் உருவாகின. என் தந்தை குழந்தைகள் ஜனித்ததை அறிந்து அவற்றை அழிக்க மருந்தினைக் கொடுத்து என் தாய் மூலமே எங்களுக்குத் தெரியாமல் புகட்டவும் ஏற்பாடு செய்தார். அதைத் தடுத்தது யார் தெரியுமா? “

“யார்?”

“ராகுதான்.”

” உன் தந்தை நம் குழந்தைகளைக் கொல்லமுயற்சிக்கிறார். என் எதிரி அதைத் தடுத்துக் காப்பாற்றுகிறான்.  விந்தையிலும் விந்தை”

” அதைவிட நீங்களும் என் தந்தையுடன் சேர்ந்து குழந்தைகளைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்றும் எங்களை  நம்ப வைத்தான். அதனால்தான் உங்களைத் தேடிக்கொண்டு உங்கள்  லோகத்திற்கே  வந்தேன். உங்களைப் பார்த்த மாத்திரத்திலே தெரிந்துவிட்டது உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று”

” என் பிஞ்சுச் செல்வங்களை நானே அழிக்க முற்படுவேனா? இதற்குக் காரணமான விஷ்வகர்மாவைத் தண்டிக்காமல் இருக்கமுடியாது”

” உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் அவர் என்னைப் பெற்ற தந்தை. அவரும் மஹாபிரும்மருத்ரன் அவதரிக்கவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார். அவரை விட்டுவிடுங்கள். நானும் அவரை மறந்துவிட்டு உங்கள் மனைவியாக இந்த நொடியிலிருந்து வாழச் சம்மதிக்கிறேன்.”

” ஆஹா! இது போதும் ஸந்த்யா! இது போதும்.! நீ என்னுடன் இக்கணத்திலிருந்து இருப்பதாக சம்மதித்தால் விஷ்வகர்மாவை என்ன, ராகுவையும் சேர்த்து மன்னிக்கிறேன். மும்மூர்த்திகளின் ஆசிகளைப் பெற்று நம் இல்வாழ்வைக் களிப்புடன் துவங்குவோம். வா! என் இதய ராணியே!”

ஸந்த்யாவை அணைத்தபடியே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஸந்த்யாவுடன் அவளது நிழலும் கூடவேசென்றது. அதனால் விளையப்போகும் ஆபத்துக்களைப்பற்றி அந்தத் தெய்வீகக் காதலர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

காமம் அவர்கள் கண்களை மூடி இருந்தது.

(தொடரும்)

இரண்டாவ்து பகுதி

Image result for சாலமன் பாப்பையா

எமபுரிப் பட்டணத்தின்  அழகிய தமிழ் உள்ளங்களே! பேசுவதற்கென்றே பிறந்த என் சக தோழர்களே! வழக்கமான பட்டி மன்றத்தில் ஒரு தலைப்பைக் கொடுத்து ஓர் அணி அதை ஒட்டியும் மற்றோர் அணி அதை வெட்டியும் பேசுவது மரபு. உதாரணாமாக ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு ஓர் அணியை ‘ஆம், தமிழ் இனி சாகும்’ என்று ஒட்டிப் பேசவிட்டு, மற்ற அணியை ‘இல்லை,தமிழ் இனி சாகாது’ என்று வெட்டிப் பேசுவது அந்தக்கால பட்டிமன்ற மரபு.

பின்னால் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் வந்தபோது தலைப்பிலேயே இரு அணிகளின்  கருத்து வெளிப்படையாகத் தெரியும்.  அதாவது ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ என்று தலைப்பு இருக்கும். மக்களுக்கும் நன்றாகப் புரியும். அப்படித்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஒரு பெண்கள் கல்லூரியில் இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு  அம்மையார் எழுந்து ‘கண்ணகி – மாதவி புரிகிறது . அதென்ன கற்பு? இரண்டு பேரும் கறுப்பா? என்று கேட்டார். அப்படியே ஆடிப்போய்விட்டேன். ‘அவர்கள் இருவரும் கருப்பு இல்லையம்மா! நான்தான் கறுப்பு’ என்று சொல்லிவிட்டு அந்தத் திசைக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

ஆக, பட்டிமன்றத்தில் தலைப்பை வைக்கும்போதே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல ‘இதுவா அதுவா’ என்று சரியாகக் கோடிட்டுக் காட்டவேண்டும். ஒரு சமயம் ‘நிம்மதியான வாழ்வைத் தருவது ‘இல்லறமே/துறவறமே’ என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் இல்லறம் சார்பில் பேச இருந்தவர்கள் மூன்று பேரும் சாமியார்கள். துறவறம் என்று பேச வந்தவர்கள் மூவரும் ரெண்டு பெண்டாட்டிக்காரர்கள். துறவறம் பெண்ணுக்குச் செய்யும் அநீதி என்று ஒருவர் வாதிட, இல்லறம் ஆணிற்குச் செய்யும் அநீதி என்று மற்றவர் வாதிட தீர்ப்பு சொல்வது மிகவும் கடினமாகிவிட்டது. சரி, புதுமையான தீர்ப்பைச் சொல்லுவோமே என்று நிம்மதியான வாழ்விற்கு இளமையில் இல்லறம் என்றும் முதுமையில் துறவறம் என்றும் முடிவு கூறி விடைபெற்றேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் என் மனைவி எனக்கு இரண்டு காவி வேட்டியை வைத்துவிட்டுப் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

அது பட்டி மன்றத்தில். இது விவாத மேடை. மூன்று தலைப்புக்கள் இருக்கின்றன. மூன்று அணிகளும் இருக்கின்றன. 

“எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா? ” என்பதுதான். 

இங்கு பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர். 

ஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி 

காத்தல் சார்பில் ராஜா  அணி 

அழித்தல்  சார்பில் திண்டுக்கல் லியோனி  அணி 

இங்கு பேச வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யுமுன் இந்தத் தலைப்பைப்பற்றி நாம் கொஞ்சம்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.

அந்தக் காலத்தில் ஏ பி நாகராஜன் ஐயா அவர்கள் கல்வியா? செல்வமா? வீரமா? எது சிறந்தது ? என்ற கேள்வியைக்கேட்டு சரஸ்வதி சபதம் என்று ஒருபடம் எடுத்தார். அதில் கலைமகளும், அலைமகளும், மலைமகளும் தங்கள் கட்சி ஜெயிக்கவேண்டும் என்று பூலோகம் வந்து புலவனுக்கும், அரசிக்கும், தளபதிக்கும் இடையே பகையை உண்டாக்கி முடிவில் நாடு இவர்கள் சண்டையால்  அழியும் நிலை வரும்போது மும்மூர்த்திகளும் வந்து மூன்றும் சமம் இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கிடையாது என்று சொல்லி சுபம் போடுவார்கள். 

அதைப்போன்ற தலைப்புதான் இன்றைக்கும் நம் முன் நிற்கிறது. ஆக்கல், காத்தல்,அழித்தல் மூன்றும் மிகமிக முக்கியத் தொழில்கள்! ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. பிரும்மா ஆக்கலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும் சிவன் அழித்தலுக்கும் காரணகர்த்தாக்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆக இம்மூன்று தொழில்கள் புரிகின்ற மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பது இந்த விவாதமேடையின் விவாதப்பொருள் அல்ல. மூன்று தொழில்களில் எது தலையானது, முக்கியமானது, சிறந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இன்றைய விவாதத்தின் பணியாகும். பேசுபவர்களும் கேட்பவர்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெறவேண்டும். ” 

Related image

சாலமன் பாப்பையா மேலும் பேசத்தொடங்கும்போது  அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சேர்ந்து முன் வரிசையில் வந்து அமர அவையின் கரகோஷம் நிற்பதற்கு பத்து நிமிடங்கள் ஆயின. அவர்களுக்குப் பின்வரிசையில் மாறுவேடத்தில் இருந்த முப்பெரும் தேவிகளும் தங்கள் இருக்கையில் நிலை கொள்ளாமல் தவித்தனர். 

எமி ஆச்சரியப்பட நாரதர் முகத்தில் புன்னகை அரும்பியது. 

(தொடரும்) 

 

 

 

 

 

 

நரக தண்டனைகள்

 

Related image

 

கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்…

1. பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
2. கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.
3. அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள்பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.
4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

7. பிறரை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8. அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.

10. தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11. பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.

12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.

14. அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன் வழியைவிட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்திக் கொலைபுரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.

17. டம்பத்திற்க்காக பசுவதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18. வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19. வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவவதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங்கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20. பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.

21. எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22. தன்னைமட்டுமே பெரியதாய் மதித்துப் பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23. நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24. எவ்விதத் தீமையும் புரியாதோரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25. தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26. பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.

27. வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலவாதிகளும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.

28. செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.

 

தவறு செய்பவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்பதை அனைத்து மதங்களும் எச்சரிக்கின்றன என்பதே உண்மை. வரம்புமீறித் தவறு செய்யும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?

 

கண்வேறு எதைக் காணவேண்டும்– கோவை சங்கர்

Image result for மீனாக்ஷி அம்மை

கண்டுவிட்டேன் உனைக் கண்டுவிட்டேன் – உனைக்கண்ட
கண்வேறு எதைக் காணவேண்டும்..!

துள்ளிவரும் மீன்களிலுன் கயல்விழியைக் காண்கின்றேன்
தெளிவான நீரிலேயுன் உள்ளத்தைப் பார்க்கின்றேன்
கள்ளமிலா குழந்தைகளின் களிப்பான சிரிப்பினிலே
பெண்ணேயுன் மோகனப் புன்னகையைப் பார்க்கின்றேன்!

ஆழமான அன்புடனே பாசமதும் ஒருசேர
எழிலோங்கும் தாயுருவில் உன்னைநான் பார்க்கின்றேன்
பசுமையாய் பயிர்களும் பரவிநிற்கும் பூமியிலே
பச்சையம்மா நானுந்தன் எழில்மேனி காண்கின்றேன்!

வட்டமான தண்ணிலவும் வானுலகில் ஓடுகையில்
வட்டமான உன்முகத்தை சாந்தமொடு பார்க்கின்றேன்
விரிவான நீள்வானின் நீளத்தை யளக்கையிலே-உன்
பரந்தமனப் பான்மையினைப் பாங்கோடு பார்க்கின்றேன்!

நீயில்லா இடமில்லை ஆட்கொள்ளா ஆளில்லை
வையத்தி லுன்புகழ் சொல்லாத நாவில்லை
திருமகளே கலைமகளே மலைமகளே மீனாட்சி
பெருந்தேவி உன்நாமம் பாடாத இசையில்லை!

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆடுபவளும் நீயே ஆட்டுவிப்பவளும் நீயே
உன்னடியார் விருப்பத்தை யேற்றவோர் வண்ணம் – பல
உருவத்தில் தோன்றுகின்ற மாயவளும் நீயே!

இயற்கையில் நாமுணரும் இயக்கமும் நீயே
பல்வகை அணுக்களின் ஜீவனும் நீயே
காண்கின்ற இடமெல்லாம் இருப்பவளும் நீயே
முழுமுதற் கடவுளாம் பரப்பிரம்மம் நீயே!

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (21) – புலியூர் அனந்து

Image result for புளியமரம்

 

சாலையில புளியமரம்

ஜமீந்தாரு வச்ச மரம்

ஏழைகளைக் காக்கும் மரம்

எல்லோர்க்கும் உதவும் மரம்

 

வேம்பு எட்டாம் வகுப்பு படிக்கும் நாளிலிருந்தே பகுதி நேர வேலை செய்யத்தொடங்கினான். சில நாட்கள் ஒரு காப்பிக்கொட்டை அரவை நிலையம். ஸ்டவ் பழுது பார்க்கும் கடை, சைக்கிள் வாடகை மற்றும் பழுது பார்க்கும் கடை என்று குறைந்த வருவாயானாலும் சம்பாதிக்கத் தொடங்கினான், படிப்பிலும் சோடைபோனவனல்ல. நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி வகுப்புத்  தேறினான். கல்லூரியிலும் உதவித்தொகை கிடைத்தது. அது திருப்பிச் செலுத்தவேண்டிய வட்டியில்லாக் கடன் உதவித்தொகை. அதுவும் ஆசிரியப் பணியில் சேர்ந்தால் தள்ளுபடி ஆகிவிடும். (இப்போது அந்த நடைமுறை உள்ளதா என்று தெரியவில்லை)

மேலும் கல்லூரிக்கு 12 கிலோ மீட்டர் போகவேண்டும். அவன் வேலை செய்த சைக்கிள் வாடகைக் கடையிலிருந்து ஒரு சைக்கிளில் கல்லூரி போவான். சைக்கிள் கடை முதலாளி அந்தச் சலுகையை அவனுக்கு அளித்திருந்தார்.

வீட்டில் மாமனுக்கு வேண்டியதைப் பார்த்துக்கொள்வது, சைக்கிள்கடை பகுதிநேர வேலை, கல்லூரிப் படிப்பு என்று எப்போதும் உழைப்புதான். முகத்தில் எரிச்சல் சிடுசிடுப்பு எப்போதும் கிடையாது. பள்ளி மாணவர்களின் கணிதம் அல்லது ஆங்கிலம் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் தீர்த்து வைப்பான்.

கோவில் பண்டிகை, பள்ளிக்கூட விழாக்கள், பொதுத் துப்புரவுப் பணிகள், ஊரில் நடக்கும் எந்தப் பொதுப்பணியிலும் வேம்புவின் பங்களிப்பு சிறிதாவது இருக்கும். பலர் செய்யத் தயங்கும் விஷயங்களிலும் அனாயாசமாக ஈடுபடுவான். இறந்தவர்களுக்காக மூங்கில் தென்னங்கீற்று, கயிறு ஆகியவைகொண்டு ‘பாடை’ தயாரிக்கும்  நாகசாமித் தாத்தாவிற்கு இவன்தான் உதவியாளன். நாகசாமித் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லையென்றால், முழு வேலையையும் இவன்தான் செய்வான். தாத்தா மேற்பார்வை பார்ப்பார். இப்போதெல்லாம்  இதுபோன்ற வேலைகளுக்கு ‘கான்டிராக்ட்’ வந்துவிட்டது. அப்போது இவர்கள் எந்த தொகையும் வசூலிப்பதில்லை. எந்தத் தோப்பிலிருந்து பச்சை தென்னங்கீற்றுகள் எடுத்தாலோ மூங்கில் வெட்டிக்கொண்டாலோ யாரும் ஆட்சேபிப்பதில்லை. 

வேம்புபற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எல்லோரும் ‘அவன் ரொம்ப நல்லவன், பாவம்…” என்பார்கள். (கு)தர்க்கமாகக் கேள்வி ஒன்று கேட்கத் தோன்றும். நல்லவனாக இருப்பது புண்ணியம் அல்லவோ ? பாவம் எப்படி ஆகும்? நான் எப்போது யாரைக் கேள்வி கேட்டிருக்கிறேன்?)?

பட்டப் படிப்பு  படித்தான். ஆசிரியர் பணிக்கான படிப்பும் படித்து எங்கள் ஊரில் இருந்த ஒரு தனியார் பள்ளியிலேயே ஆசிரியராகச் சேர்ந்துவிட்டான். அரசுப் பள்ளியில் சேர்வதைத்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் விரும்புவார்கள். இவன் உள்ளூரிலேயே  வேலைக்குச் சேர்ந்ததற்கு தன்னுடன் இருந்த மாமனைக் காரணமாகச் சொல்வான். ஏன், மாமனுடனேயே இவன் வெளியூர்க்குச் செல்லலாமே? வெளியூர் போகாததற்கு ஊர் மக்களிடம் இருந்த நன்றி உணர்ச்சிதான் காரணமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தான் பெற்ற உதவிகளுக்குப் பதிலாக பலமடங்கு ஊருக்குத்  திருப்பித் தரவேண்டும் என்பது அவனது அறிவிக்கப்படாத கொள்கை என்று தோன்றிற்று.

எப்போது ஊருக்குச் சென்றாலும் வேம்புவுடன் சில மணி நேரமாவது கழிக்காமல் நான் ஊரைவிட்டுக் கிளம்பியதில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வேலை பார்த்த நான், உள்ளூரில் இருந்து பயணம்செய்து வேலைபார்த்த வருடங்கள்  மிகக் குறைவு. அப்போதெல்லாம் நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேம்புவின் கூடவே இருப்பேன்.

எனக்கு வேலை கிடைத்ததைக் கேட்டபோது வேம்பு சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. “பாஸ்..(என்னை எப்போதும் அப்படித்தான் அழைப்பான்.)  நீங்க பாசாயிட்டிங்க. ஸ்கூலிலேயும் சரி .. வீட்டிலேயும் சரி.. உங்களை ஒரு பொருட்டா யாரும் மதிச்சதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், நீங்க ஒருமாதிரியா செட்டிலாயிடுவீங்கன்னு  உங்க வீட்டிலே பெருமூச்சு விடுவாங்க. இதப் பார்றா.. இவனுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தை என்று உங்கள் கூட்டாளிகள் பொறாமைப்படலாம்.  நீ நீயாகவே இரு. உனது  வெற்றி எது என்பதை நீயே புரிந்துகொள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.” 

எனக்கென்னவோ அவன் சொன்னது ஓர் மேடைப்பேச்சு போலத்தான் அன்றுபட்டது. திரும்பவும் நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. நான் அதுபோல நடந்துகொண்டேனா என்பது ஒரு கேள்விக்குறிதான்.

வேம்புவின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நபரைப்பற்றியும் சொல்லவேண்டும்.

ஊரில்  எங்கள் தெருவில் இருந்த, அப்பா அம்மா வைத்த  பெயரே  என்னவென்று தெரியாமல்  எல்லோராலும் அய்த்தான் மதனி என்றோ கண்ணாடி மதனி என்றோ அழைக்கப்பட்டு வந்த பெண்மணிதான் அது.

சிறுவர், பெரியவர் என்ற வயது  வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் அவர் மதனிதான்,  அவரைவிடக் குறைந்து இருபது வருடமாவது மூத்தவர்களான பால்காரப் பாட்டி, சிவன் கோவில் அர்ச்சகர் கூட அவரை மதனி என்றுதான் கூப்பிடுவார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த காலத்திலேயே ஐம்பது வயதினைக் கடந்தவர் அவர். ஒரு பழைய வீடு அவருடையது. மராமத்து பார்த்துப் பல மாமாங்கம் ஆகிவிட்ட வீடு அது. முன்னால் திண்ணை ஒட்டி சிறு அறைகள் இருந்தன, அதில் யாரேனும் சொற்ப வாடகைக்குக் குடியிருப்பார்கள்.

பள்ளி நாட்களிலேயே அன்னையை இழந்தவர். அப்போது இவருக்குப் பத்து வயதாம். வேறு உடன் பிறப்புகள் இல்லை. வழக்கத்திற்கு மாறாக, தந்தை மறுமணம் செய்துகொள்ளவில்லை.

குழந்தையாக இருந்த காலத்தில் மிக வசீகரமாக இருப்பாராம். ஊரில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் ஒரு வாரம் உற்சவம் நடக்கும். அதில் ஒருநாள் ஒரு குழந்தைக்குக் கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு வீடாக அழைத்துப் போவார்கள். மதனியின் மூன்று வயது முதல் ஏழு வயதுவரை அந்த வேஷத்திற்கு இவர்தானாம்.

அன்னையை இழந்த வருடம் அந்த இளம் வயதிலே வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டு  எதிலும் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறார். தந்தை மறுமணம் செய்துகொள்ளாததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம்.

அந்தச் சமயத்தில் ஒரு நாடகக்குழு ஊருக்கு வந்தது. அதில் ஒரு பால முருகனாக ஒரு சிறுவன் நடித்துவந்தான். நாடகத்தன்று காலையில் அவனுக்குக் கடும் ஜுரம். குழப்பத்தில் இருந்த நாடகக் குழுவில் யாரோ மதனியைப் பார்த்திருக்கிறார்கள்.  இந்தப் பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

மதனியின் அப்பாவிற்கு அரை மனது. நாடகத்தில் அம்மா வேடம்போடும் நடிகை இவளை நடிக்க வைப்பது என் பொறுப்பு என்று கூறி அணைத்துக்கொண்டாராம். மதனியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் கண்டு தந்தை கண்ணீர் ததும்ப அனுமதி கொடுத்தாராம்.

மேடையில் தோன்றிய அந்த ஒரு நிமிடத்தை மதனி பலமுறை பலரிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்..

அது ஒரு சமூக நாடகம்தான். ஒரு காட்சியில் கதாநாயகிக்கு முருகன் அருள் புரிவதாக ஒரு கனவுக் காட்சி. அதில் முருகன் வேடமணிந்த சிறுவன் அல்லது சிறுமி ஆகாயத்தில் இருந்து தோன்றுவதுபோலவும் சிலவினாடிகள் காட்சி அளித்து மறைவதுபோலவும் காட்சி அமைத்து இருந்தார்களாம்.

இதுபோன்ற காட்சிகளில் முருகனை நிற்க வைத்து திரை போட்டுவிடுவார்கள். பார்க்கும்போது திரைஎன்று தெரியாமல் மங்கலாக வெளிச்சம் அமைத்திருப்பார்கள். மேடை முழுவதும் ஒளியைக் குறைத்துவிட்டு சட்டென்று திரையை இழுத்துவிடுவார்கள்.

இந்தக் குழு வேறு முயற்சி செய்திருந்தார்கள். மரத்தில் ஒரு அமைப்பு செய்து அந்த நடிகரை அமரவைத்து ஊஞ்சல்போல் மேடையின் ஒரு பக்கத்தில் சற்று உயரத்திலிருந்து  கொண்டுவந்து, சில நொடிகள் நடுவில் நிறுத்தி வசனம் முடிந்தவுடன் மேடையின் மறு பக்கத்திற்கு இழுத்துவிட்டார்களாம். இந்தப் புதுமை பெரும் வரவேற்புப் பெற்றதாம். .

கதாநாயகிக்கு முருகன் அருள் கிடைத்ததோ இல்லையோ, மதனிக்கு வாழ்க்கையில் பிடிப்புவர இது காரணமாக இருந்தது என்று தோன்றுகிறது.

சில ஆண்டுகளிலேயே சமையல் செய்யவும் தொடங்கிவிட்டார். பதிமூன்று வயதிலேயே கரண்டி எடுத்துவிட்டேன் என்று சொல்வார்.

பதினெட்டு வயதிலேயே திருமணமும் ஆயிற்று. புகுந்த வீடு ஊருக்கு அருகில்தான். திருமணமாகிப் போனவர் சில நாட்களில் பிறந்த வீடு வந்திருக்கிறார். கணவர் உடன் வரவில்லை, வந்த அன்றைக்கு மூன்றாவது  நாள், கணவரின் சித்தப்பா வந்திருக்கிறார். மதனியின் கணவரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் திரும்பி வரும்வரை புகுந்தவீடு போகவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கணவர் திரும்பவில்லை.‘போது விடிவதற்குள் திரும்பி இங்கே வந்துவிட்டேன்’ என்று குறிப்பிடுவார் மதனி.

தந்தை இறந்தபின் கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டார். கணவரின் பெற்றோர்  ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். தங்கள் வீட்டினைக்  காணாமல் போன தங்கள் ஒரே மகனின் மனைவியான மதனிக்கு ஒரு பத்திரம் மூலம் எழுதிவைத்திருந்தார்கள். தங்கள் வாழ்நாள்வரை தங்கள் உரிமையை  வைத்துக்கொண்டு பின்னர் மதனிக்குச் சேரவேண்டும் என்று ஒரு நிபந்தனை. தானம் என்னும் வகைப் பத்திரம் அது.    

அந்த வீட்டினை அப்போது நிலவிய விலைக்கே அடுத்த வீட்டுக்காரர் வாங்கிக்கொண்டார்.  தவிர மதனியின் தந்தைக்குக் கிராமத்தில் கொஞ்சம் சாகுபடி நிலம் இருந்தது. அதுவும் விற்கப்பட்டது. எல்லாம் அஞ்சலக வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் மதனி.  அதில் வரும் வட்டியும், வீட்டிலிருந்து  கிடைக்கும் வாடகையும் மதனிக்கு  வருமானம். மருத்துவச் செலவு என்று பெரிதும் எதுவும் கிடையாது. ஆகையால்   ‘கடவுள் புண்ணியத்தில்’ (மதனியின் வார்த்தைகளில்) ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

அன்னையை இழந்த சோகத்திலிருந்து மீண்டுவந்த மதனி இந்தச் சோகத்திலிருந்தும் மீண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.  தன் வீட்டில் குடியிருந்தவர்களைத் தன் சொந்தக் குடும்பமாகவே நடத்திவந்தார். மற்றவர்களின் சந்தோஷங்களைத் தனது சந்தோஷமாகக் கொண்டாடிய வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.  வீட்டைக் காலி செய்யவேண்டி வரும்போது குடியிருந்தவர்கள் கனத்த இதயத்தோடுதான் போவார்கள்.

மதனி இதனையும் வித்தியாசமாகப் பார்ப்பார். ஓர் குடும்பம் போனாலும் அடுத்து குடிவருபவர்களால் தனது குடும்பம் மேலும்  பெருகுகிறது என்பார். நெருங்கிய, ஏன் எட்டத்து சொந்தம் என்று சொல்லும்படியாக யாருமில்லாத மதனிக்குப் பழகும் யாவரையும் சொந்தம் போலவே பாவிக்கும் பரந்த மனம் படைத்திருந்தார். 

அந்த வீட்டின் மனையில் ஒரு பெரிய புளியமரம் உண்டு. வருடம் ஒருமுறை புளியம்பழம் எடுப்பார்கள். வழக்கமாக ஏலம் விட்டு பணமாகத்தான் சொந்தக்காரர் வாங்கிக்கொள்வார். ஆனால் மதனி ஆள்வைத்து புளி சேகரித்து, அதில் ஐந்தில் ஒரு  பகுதியைக் கூலியாகக் கொடுத்துவிடுவார். மீதமுள்ளவற்றைத்  தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்துவிடுவார். 

மாதம் ஒருநாள்  தபால் அலுவலகம் சென்று பணம் எடுக்கப் போகவேண்டும். அதற்குத் துணையாக யாரேனும் தேவைப்படுவார்கள். நான்கூட சிலமுறை துணைக்குப் போயிருக்கிறேன். இது தவிர பிறர் உதவி எதுவும் அவர் எதிர்பார்த்ததில்லை.

(தொடரும்)

 

 

திரைக் கவிதை: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

Image result for மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

படம்: கேளடி கண்மணி

பாடல் : வரதராஜன்

இசை : இளையராஜா

பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன்

 

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

(மண்ணில் இந்த)

 

 

 

அம்மா கை உணவு (14) – சதுர்புஜன்

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
  12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
  13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019 

 

 

பாயசப் பாமாலை

Image result for பாயாசம்

பாயசம் ! பாயசம் !

பாசத்தைப்போலே பாயசம் !

பாயசம் ! பாயசம் !

பலருக்கும் பிடித்தது பாயசம் !

 

இலைபோட்டு விருந்து சாப்பாடு என்றால்

முதலில் வருவது பாயசம்தானே !

மாப்பிள்ளைப் பொண்ணு வீட்டுக்கு வந்தால்

பரிமாறுவதும் பாயசம்தானே !

சப்புக் கொட்டி சப்புக் கொட்டி

சாப்பிடுவது நல்ல பாயசம்தானே !

சிறியவர் பெரியவர் எவர் என்றாலும்

ஒரு கை பார்ப்பதும் பாயசம்தானே !

 

சேமியாவிலே பாயசம் வைத்தால்

சுவைத்து சுவைத்து சாப்பிடுவோம் நாம் !

ஜவ்வரிசியில் பாயசம் வைத்தால்

ஜல்தி ஜல்தி என சாப்பிடுவோம் நாம் !

வெல்லப் பாயசம்  என்றால் போதும்

வேறு எதுவும் தேவை எனக்கில்லை !

கடலைப் பருப்பு பாயசம் என்றால்

கட கடவென்று குடித்திடுவேன் நான் !

 

பால் பாயசம் என்றால் போதும்

பல்லில்லாத பாட்டியும் ரசிப்பாள் !

பாதாம் பருப்பை அரைத்து வைத்தால்

பணக்காரர்களின் பாயசம் அதுவே !

சாதம் வைத்தும் பாயசம் செய்வர்

சோடை போகாத சுவை அதில் உண்டு !

எது வைத்தாலும் தோற்றுப் போகும்

இளநீர்ப் பாயசம் என்றும் வெல்லும் !

 

தாராளமாக திராட்சை போட்டால்

திகட்டாதெனக்கு பாயசம் !

முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டால்

சுவையில் முந்தும் பாயசம் !

சர்க்கரை எனக்கு அளவாய் வேண்டும்

குடிக்கத் தோன்றும் பாயசம் !

அன்னையின் கையின் அன்பு சேர்ந்தால்

அல்டிமேட் அந்தப் பாயசம் !

    

பாயசம் ! பாயசம் !

பாசத்தைப்போலே பாயசம் !

பாயசம் ! பாயசம் !

பலருக்கும் பிடித்தது பாயசம் !

 

 

                                                                 

சிட்டுக்குருவிகள் நினைவு தினம்-ஹேமாத்ரி

Image result for சிட்டுக்குருவிகள்
எங்கள் குரலில் *சங்கீதம் தந்தோம்*,
உங்கள் குரலில் *சண்டையைத்தான் கேட்டோம்.*
உங்கள் சண்டை ஓயவில்லை,
*எங்கள் சத்தம் ஓய்ந்துவிட்டது,,*
உங்களை சூழ்ந்திருந்த நாங்கள், *குறைந்தே போனோம்,,*
ஊருக்கு வெளியிலிருந்த மிச்சமும், *மறைந்தே போனோம்….*
 எங்களை விரட்டிவிட்டு,  *இப்போது தேடுகிறீர்கள்*,
என்ன விந்தையிது, *எப்போது மாறுவீர்கள்…*.
புகையிலும் கதிர்வீச்சிலும், *மறைந்தது எங்கள் தலைமுறைகள்….*
புகைப்படம் சிலவற்றில், *தெரிகிறது எங்கள் உறவுமுறைகள்…*
ஒரு கூட்டு பறவை என்று, *வாழ சொன்னோம்,*
தனி கூட்டு மனிதராய், இன்று *உங்களை பார்க்கிறோம்…*
ஆறறிவு மட்டும் போதாது,
*அடுத்தவரிடம் கொஞ்சம் பழக தெரிந்துகொள் மனிதா…*
இத்தனைநாள் கூடியிருந்தோமே, *இன்று செல்போன் சத்தம் மட்டுமே போதுமா மனிதா…*
எங்களைத்தான் சேர்க்கவில்லை, *இதையாவது சேருங்கள்…*
சிட்டுக்குருவிகள் தினம் என்பதோடு *நினைவை சேருங்கள்…*
*சிட்டுக்குருவிகள் நினைவு தினம்* என்று….
எங்களை நீங்கள் விரட்டினாலும், *உங்களின் நினைவுகளோடு சிறகடித்து பறக்கும்…*.
*கடைசி தலைமுறை சிட்டுக்குருவிகள் நாங்கள்……*

 

சிறுகதை எழுத்தாளர்கள் சிறு குறிப்புக்கள் – ஐம்பதில் முதல் பத்து – என் செல்வராஜ்

Image may contain: 1 person

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

 

நன்றி: : http://puthu.thinnai.com/?p=33105

Image result for வண்ணதாசன்

வண்ணதாசன்

வண்ணதாசன் என்ற புனை பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனை பெயரில் கவிதைகளும் எழுதும் இவரின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.  இவர் தி க சிவசங்கரன் அவர்களின் மகன். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம்பெற்ற எழுத்தாளரான இவர் தீபம் இதழில் 1962 ல் எழுதத் தொடங்கி இன்றுவரை தொடந்து சிறுகதைகள் எழுதி வருபவர். 12 சிறுகதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதை தொகுப்புக்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தனுமை, நிலை, ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன், சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்.

 

Image result for கு ப ரா

கு ப ராஜகோபாலன்

கு ப ரா என பரவலாக அறியப்பட்ட கு ப ராஜகோபாலன் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் சிறுகதை ஆசான் என்று அழைக்கப்படுகிறார்.

கு ப ராவின் பக்கத்து வீட்டுக்காரர் ந பிச்சமூர்த்தி.  இவர்களிருவரும் இலக்கியத்திலும் இணைபிரியாமல் இருந்தனர்.இவரின் இளைய சகோதரி

கு ப சேது அம்மாள். கு ப ரா வின் எழுத்துக்கள் பெரும்பாலும் ஆண் பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களை கு ப ரா தம் சிறுகதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். கு ப ரா சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் விடியுமா?, ஆற்றாமை, கனகாம்பரம், திரை, நூருன்னிசா, சிறிது வெளிச்சம், புனர் ஜென்மம்.

Image result for புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

இவரது இயற் பெயர் சொ.விருத்தாசலம். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும்கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து – நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான். நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்துபார்த்தவர் புதுமைப்பித்தன். இவரது அனைத்துச் சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. முழுத்தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

Image result for அம்பை

அம்பை

அம்பை என்கிற சி எஸ் லட்சுமி, தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையான தமிழ் சிறுகதைகளின் முன்னோடி.

பல பெண் படைப்பாளிகள் தொட சிரமப்படும் விஷயங்களை சர்வ சாதாரணமாகத் தொட்டுச்சென்றவர். இவரின் முழுச் சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. பெண்கள்பற்றிய ஆராய்ச்சி, ஆவணக்காப்பகமான ஸ்பாரோ என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் , சிறகுகள் முறியும், புனர் ,கருப்பு குதிரை சதுக்கம், மிருத்யு, வெளிப்பாடு.

Image result for மௌனி

மௌனி

இவரின் இயற்பெயர் மணி. மௌனி என்ற புனை பெயரில் சிறுகதைகள் எழுதினார். தமிழ் சிறுகதை உலகில் மிகக் குறைந்த அளவே கதைகள் எழுதி நிலைத்த புகழைப் பெற்றவர். இவர் 24 கதைகள் மட்டுமே எழுதி உள்ளார்.

அவை அனைத்தும் மனித மனங்களை எக்காலத்திலும் பிணிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. மௌனியின் படைப்புகள் என்ற முழுத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அழியாச்சுடர், பிரபஞ்ச கானம், சாவில் பிறந்த சிருஷ்டி, ஏன்.

 

Related image

வண்ணநிலவன்

இவரின் இயற்பெயர் உ ராமச்சந்திரன், கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஷ் அய்யர் தெரு ஆகிய புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர்.

வண்ணநிலவன் சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் சிறுகதையில் பல்வேறு உத்திகள் , கூறல் முறைகள் , உலகங்கள், மற்றும் மனிதர்களைக் கையாண்டு அவற்றை கலையனுபவமாகவும் ஆக்கிய சிறுகதையாளர்.  இவரின்சிறந்த சிறுகதைகள் எஸ்தர், கரையும் உருவங்கள், பலாப்பழம், மிருகம் ,உள்ளும் புறமும்.

 

Image result for அசோகமித்திரன்

அசோகமித்திரன்

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தியாகராஜன். எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவரது கதைகள். 1996 ல் அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகிய சிறந்த நாவல்களை எழுதியவர். அசோகமித்திரன் சிறுகதைகள் என்ற சிறுகதைகளின் முழுத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புலிக்கலைஞன்,பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும், குழந்தைகள், மாறுதல், பார்வை.

Related image

கிருஷ்ணன் நம்பி

இவரது இயற்பெயர் அழகிய நம்பி. முதல் சிறுகதை ” சுதந்திர தினம் ” 1951ல் வெளிவந்தது.  கண்ணன் சிறுவர் இதழில் சசிதேவன் என்ற பெயரில்குழந்தைப் பாடல்களை எழுதினார்.கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன.1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து `யானை என்ன யானை?’ என்ற புத்தகத்தைக் கொண்டுவந்தது. கிருஷ்ணன் நம்பியின் படைப்புக்கள் முழுத் தொகுப்பாக கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. மருமகள் வாக்கு இவரது புகழ் பெற்ற சிறுகதை. மிகக்குறைவான கதைகள்தான் எழுதினார் என்றாலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிவுசெய்துள்ளது. கதைகளை சொல்லும் முறையில் ஒரே பார்வை முறையைக் கையாண்டார். ஆசிரியர் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. பாத்திரங்களே சம்பவங்களைப் பேசுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் , மருமகள் வாக்கு, சட்டை, எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு.., காணாமல் போன அந்தோனி.

Image result for சுஜாதா

சுஜாதா

இவரது இயற்பெயர் ரங்கராஜன். தன் மனைவி பெயரான சுஜாதா என்ற பெயரில் எழுதியவர். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர். கணையாழி இதழில் பல வருடங்கள் கடைசிப் பக்கம் என்ற பத்தியை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய கற்றதும் பெற்றதும் தொடர் மிகவும் பிரபலமானது. நாவல்,குறுநாவல்,சிறுகதைகள்,விஞ்ஞானச் சிறுகதைகள், நாடகம், செவ்விலக்கியங்களின் அறிமுகம் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர். இவரது “என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ ” பெரும் வரவேற்பைப்பெற்ற நாவல்கள். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் நகரம், ஜன்னல், நிஜத்தை தேடி, திமலா.

 

Related image

தி ஜானகிராமன்

தஞ்சை மாவட்டப் பேச்சும் நையாண்டியும் தனது கதைகளின் தனித்தன்மைகளாக் கொண்ட படைப்பாளர் தி ஜா என அன்புடன் அழைக்கப்படும்

தி ஜானகிராமன். விடுதலைக்குப் பிந்திய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். புகழ்பெற்ற மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை எழுதியவர். தி ஜாவின் படைப்புக்களில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே இருந்தனர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். தி ஜானகிராமன் சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சிலிர்ப்பு, பாயசம், முள்முடி, கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை, கோதாவரிக் குண்டு.

 

(மற்றவை பிறகு) 

சித்திரைப் பாவையே வருக ! –  பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்

           

Related image

இன்று

நாங்கள் காலை துயில் எழுந்து

நாட்காட்டியைப் பார்த்தால்

பங்குனித்திங்கள் பெற்றெடுத்த  

சித்திரைப்பாவையே உந்தன்

மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

 

இன்று

நோக்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நேசக்கரம் நீட்டுகிறதே !

 

இன்று

கேட்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மனிதநேயம் ஒலிக்கிறதே !

 

இன்று

தீண்டுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மலரின் மென்மை உணரப்படுகிறதே !

 

இன்று

பேசுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !

 

இன்று

நுகருமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நறுமணம் வீசுகிறதே!

 

இன்று

வணங்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

தெய்வ அருள் பொழிகிறதே!

 

இன்று   

சித்திரைப்பாவை உன் வரவாலே

நேத்திரம் குளிர்ந்தது

சத்தியம் தர்மம் மனிதநேயம்    

நித்தியம் உலகில் வளர வேண்டி

சித்திரைப் பாவையை நாம்

பக்தியுடன் வணங்கி வரவேற்போம் !

 

                                  

சிம்ஹாஞ்சனாவின் அற்புத பேச்சு

தாயை மிஞ்சும் மகளின் பேச்சு புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
கண்ணதாசன் விழாவில் சட்டக்கல்லூரி மாணவி சிம்ஹாஞ்சனாவின் அற்புத பேச்சு :
கண்ணதாசனின் பாடலுக்கு விளக்கம் சொன்னவர்  வழக்கறிஞர் சுமதியின் மகள்

குட்டீஸ் லூட்டீஸ்:எங்கள் ஓட்டு – சிவமால்

Image result for ஓட்டுக்கு நோட்டு

‘ரொம்ப தர்மசங்கடமா இருக்கே..! ஒரு கட்சி ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க.. இன்னொரு கட்சி
2000 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க.. மூன்றாவது கட்சி 3000 ரூபாய் கொடுத்துருக்காங்க. யாருக்கு ஓட்டுப் போடறது..?’ என்று புலம்பிக் கொண்டிருந்தேன் மனைவியிடம்.

அருகிலிருந்த என் ஐந்து வயது மகள் மிதிலா. ‘கவலையேபடாதீங்க அப்பா… நீங்க போய் ஓட்டுப் போடலேன்னா
யாராவது உங்க ஓட்டைப் போட்டுடுவாங்க.. அதனாலே நமக்குக்  காசு கொடுக்காத ‘நோட்டா’ வுக்கு ஓட்டுப் போட்டுடுங்க. இப்படிப் பணம் கொடுத்தவங்களுக்கும் இது ஒரு பாடமா இருக்கும்’ என்றாள் சர்வ சாதாரணமாக.

திகைத்துப் போய் நின்றோம் நானும் என் மனைவியும்.

 

பறந்து போகும் மன ஏக்கம் – ராதாகிருஷ்ணன்

 

Related image

கால் தலையில் வலியில்லை

காய்ச்சல் எதுவும் எனக்கில்லை

சளியோ கபமோ இலையெனினும்

இரத்தக் கொதிப்பு சரியெனினும்

ஏதோ சங்கடம் எனத் தோன்ற

மருத்துவரிடம் நான் சென்றேன்

 

நாடி பிடித்து அவர் பார்த்தார்

ஓய்வு பெற்ற பலருக்கும்

நோய் இது பொதுவாய் வருமென்றார்

கடந்த கால ஏக்கமென

கூறப்படும் இந்நோய்க்கு

அரிய மருந்து ஒன்றுண்டு

என்றே அவர் பரிந்துரைத்த

நியமங்களையே கடைப் பிடித்து

நற்பலனை நான் கண்டதினால்

யாவரும் அவற்றால் பயன் அடைய

இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்!

 

ஆண்டில் மூன்று நான்கு முறை

பழைய நண்பர் பலர் சேர்ந்து

பதிந்த நினைவுகள் அசை போட்டு

பகிர்ந்து உண்டு கதை அடித்து

பொருள் காணாது பல பேசி

உள்ளம் உறுத்தா வசை பாடி

கேலிகள் செய்து வாய் சிரித்து

சிலமணி நேரம் செலவழிக்க

பறந்து போகும் மன ஏக்கம்

 

புத்துணர்ச்சி கண்டிடவும்

முதுமை குறைந்த வாழ்விற்கும்

இஃதோர் அரிய செயல்முறையே!

மாம்பழமாம் மாம்பழம்! – மா வீ ரா

Image result for மாம்பழம் வகைகள்

விதவிதமாய் மாம்பழங்கள்

வீதியிலே விற்குது!

 

ரகம்ரகமாய் குவிந்துயெங்கும்

சந்தையிலே கிடக்குது!

 

மல்கோவா மாம்பழம் அது

மனசையெல்லாம் கவருது!

 

அல்போன்சா மாம்பழம் அது

ஆசையெல்லாம் தூண்டுது!

 

பங்கணப்பள்ளி மாம்பழம் அது

எங்களையெல்லாம் அழைக்குது!

 

மங்களமாய் இருப்பதாக

செந்தூரம் காட்டுது!

 

ஒட்டுமாங்காய் சட்டெனவே

பற்றிக்கொள்ளத் தோனுது!

 

விட்டிடாமல் நீலக்கனி

ஒட்டிக்கிட பார்க்குது!

 

காலாபாடி காட்சிதந்து

கருத்தையெல்லாம் கவருது!

 

கட்டுமூட்டை  உள்ளிருந்து

ருமாங்கனி துள்ளுது!

 

இமாம் பசந்த் இருப்பதிலே

பெரிசெனநான் சொல்லுது!

 

இப்படித்தான் மாம்பழங்கள்

எங்கும்குவிந்து விற்குது!

 

எல்லாவற்றையும்  கண்டபின்பு

எச்சிநாவில் ஊறுது!

 

பச்சைப்பிள்ளை எங்கள் மனமும்

பழங்களுக்கு ஏங்குது!

 

பார்க்கப்பார்க்க ஆசைவந்து

உள்ளுக்குள்ளே துள்ளுது

 

கொட்டிக்கிடக்கும் பழங்களிலே

கொள்ளும் ரகத்தைச் சொல்லுங்க!

 

கூறுக்கேற்ற விலையைச் சொல்லி

நாளும் வாங்கிச் செல்லுங்க

அழ வள்ளியப்பா

வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி “மலரும் உள்ளம்” 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். “சிரிக்கும் பூக்கள்” என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், “குழந்தைக் கவிஞர்” என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.

நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

அழ. வள்ளியப்பாவின் நூல்களுள் சில:

  1. மலரும் உள்ளம் – 1 (பாடல் தொகுதி) –
  2. பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி)
  3. சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல் தொகுதி)
  4. சுதந்திரம் பிறந்த கதை
  5. ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல் தொகுதி)
  6. ரோஜாச் செடி
  7. உமாவின் பூனைக் குட்டி
  8. அம்மாவும் அத்தையும்
  9. மணிக்குமணி
  10. மலரும் உள்ளம் – 2 (பாடல் தொகுதி)
  11. கதை சொன்னவர் கதை
  12. மூன்று பரிசுகள்
  13. எங்கள் கதையைக் கேளுங்கள்
  14. நான்கு நண்பர்கள்
  15. பர்மாரமணி
  16. எங்கள் பாட்டி
  17. மிருகங்களுடன் மூன்று மணி
  18. நல்ல நண்பர்கள்
  19. பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)
  20. குதிரைச் சவாரி
  21. நேரு தந்த பொம்மை
  22. நீலாமாலா
  23. பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)
  24. வாழ்க்கை விநோதம்
  25. சின்னஞ்சிறு வயதில்
  26. பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

அவரைப்பற்றிய காணொளி இங்கே: 

 

 

 நல்ல  திருப்பம்!- தில்லைவேந்தன்

.               நல்ல  திருப்பம்!
Image result for sky
ஆவின் கன்று குரலெழுப்பி,
     ‘அம்மா’ என்று  விளிப்பதையும்,
கூவும் குயிலின் இசையினிலே
      குழலும் விரவிச் சிறப்பதையும்,
பூவில் வண்டு தேனருந்திப்
     போதை கொண்டு பறப்பதையும்,
பாவின் பொருளாய்ப் பலமுறையும்
     பாடிச் சலித்துப் போய்விட்டேன்
திரும்பத் திரும்பக் காதலினைத்
     திகட்டும் வரையில் பாடிவிட்டேன்.
விரும்பிக் கேட்கும் இன்னிசையை
      வெறுக்கும் அளவு போற்றிவிட்டேன்.
கரும்பின் சுவையைப் புகழ்ந்துவிட்டுக்
     கைக்கும்  வேம்பின் நலம்மறந்தேன்
அரும்பும் வேர்வை சிந்திடுவோர்
      அவரைப் பற்றிப் பாடிடுவேன்
கதிரை, மதியை, விண்மீனைக்
     கவிதை பாடிக் களைத்துவிட்டேன்
நதியை, மலையை,கடலழகை
     நாளும்  பாடி நலிந்துவிட்டேன்
பொதியை இறக்கி வைக்கின்றேன்
     போதும், போதும், இனிமக்கள்
விதியின் பிடியை உதறிவிட்டு
       மேன்மை யுறவே பாடிடுவேன்.
மானி டத்தின் மகத்துவத்தை
     வாழ்வின் நிலைத்த தத்துவத்தை,
ஊனை உருக்கும் உண்மைகளை
     உரக்கச் சொல்லிப் பாடிடுவேன்
போன வற்றைப் புறந்தள்ளிப்
      புதிய உலகம் படைத்திடவே
நானி யற்றும் ஒளிர்கவிதை
       நல்ல    திருப்பம்   ஆகட்டும்!
           
                                       
   

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

சுதந்திரக் கதை சொல்லும் அந்தமான் செல்லுலார் ஜெயில்!

அடர்த்தியான காடுகளும், எழில்மிகு கடற்கரையும் கொண்ட அழகிய அந்தமான் நிகோபார் தீவுகளின் தலை நகரம் போர்ட் ப்ளேர் –

இந்தியாவின் பகுதியான அந்தமான்,

சுமார் ஆயிரம் மைல்களுக்கு அப்பால், காலாபானி (INFAMOUS WATER) என்றழைக்கப்பட்ட கடல் சூழ்ந்த தீவு என்பதோ,

நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த ‘நெக்ரிடோ’ ஆதிவாசிகள்,

தீவுக்கு வரும் புதிய மனிதர்களின் மார்புகளைக் கருணையின்றித் துளைக்கும் அம்புகளை ஏவிவிடும் மனிதர்களின்  இருப்பிடம் என்பதோ,

தரை தட்டும் கப்பல்களில் பயணிகள், கோரமான முறையில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டார்கள் என்பதையோ,

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொடுமையான முறையில் தண்டிப்பதற்கான ஜெயில்களைக் கட்டியிருந்தனர் என்பதனையோ,

வீர சவார்கார், நேதாஜி போன்றவர்களின் தியாகங்களையோ –

இன்று கூடைத் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும், அரை டிராயரும் அணிந்து, கையில் பெரிய காமிராவும் கொண்டுவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்!

போர்ட் ப்ளேரில் இருக்கும் ‘செல்லுலார்’ ஜெயில், ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்கவேண்டிய இடம் –

அதன் ஒவ்வொரு செங்கல்லும், இந்திய சுதந்திரம்பற்றிய கதையை சோகத்துடன் சொல்லிக் கொண்டிருப்பதை அங்கு உணரமுடியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் சிதிலமடைந்த நிலையில், பாதுகாப்பற்ற ஜெயிலாகவும், போர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் பாதுகாப்பகமாகவும் இருந்தது செல்லுலார் ஜெயில்.

1979 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களால், செல்லுலார் ஜெயில் ‘நேஷனல் மெமோரியல்’ ஆக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இன்று ஜெயிலின் 7 பகுதிகளில் (WINGS), 1,6, 7 விங்ஸ் மட்டும் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. அந்தமான் தீவு, செல்லுலார் ஜெயில்கள், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள், கைதிகளின் சித்ரவதைகள், ஜப்பானியரின் வன்முறைகள், வீரசவார்கார், நேதாஜி புகைப்படங்கள், மியூசியம், ஆர்ட் கேலரிகளில் சரித்திரம் பேசுகின்றன. செல்லுலார் ஜெயிலின் சரித்திரம் சொல்லும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி மாலை சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது – நான் போன அன்று இந்தியில் ஒலிபரப்பு – ஏதோ சுமாராகக்கூட புரியவில்லை! எனக்கு இந்தி தெரியாதது செல்லுலார் ஜெயிலின் குற்றமல்ல!

ஒரே சமயத்தில் மூன்றுபேரைத் தூக்கிலிடக்கூடிய தூக்கு மேடை, சவுக்கடி வாங்கும் கைதி, கை, கால்களில் இரும்புச் சங்கிலி பிணைத்த கைதிகள், சணலில் தைக்கப்பட்ட கைதி உடை என மனதைப் பிசையும் காட்சிப் பொருட்கள் – ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்ட மேடையின் மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, வீர் சவார்கார் இருந்த ‘செல்’ அவரது புகைப்படத்துடன் –

சுற்றிலும் கடல், ஒருபக்கம், ஜிகே பண்ட் ஆஸ்பிடலாய் மாறிப்போன இரண்டு விங்ஸ், மாடியில் நேதாஜியின் அந்தமான் விசிட் புகைப்படங்கள், புல்வெளிகள், பார்க் பெஞ்சுகள் – நன்கு பராமரிக்கப்படுகின்றன.

1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் விடுதலைப் போராட்ட வீரர்களையும், புரட்சியாளர்களையும் அந்தமான் சிறைக்கு – முதலில் வைப்பர் தீவுச் சிறை, பின்னர் செல்லுலார் ஜெயில் – டேவிட் பாரிக்கர்(ஜெயிலர்), மேஜர் ஜேம்ஸ் பாட்டிஸன் வாக்கர் (மிலிட்டரி டாக்டர்) தலைமையில் அனுப்புவதிலிருந்து தொடங்குகிறது இந்த சிறைச்சாலைக் கொடுமைகள்.

இருநூறு புரட்சியாளர்கள், கராச்சியிலிருந்து 733 பேர் (1863), மற்றும் இந்தியா, பர்மாவிலிருந்து சிறைக் கைதிகள் என இந்தத் தீவில் தண்டனைக்கு அனுப்பப் படுகின்றனர். பஹதூர் சாஃபர் ராயல் குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராகப் பெட்டிஷன் கொடுத்தவர்களும் இதில் அடக்கம்!

வைப்பர் தீவு போர்ட் ப்ளேரிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது. மிகக் கொடூரமான தண்டனைகள் – தூக்குத் தண்டனைகள் உட்பட்ட – வழங்கப்பட்ட இடம். இன்றும் எஞ்சியுள்ள ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட இடங்களைக் (GALLOWS) காணலாம். பேஷ்வார் ஷேர் அலி பத்தான், அப்போதைய இந்திய வைசிராய் லார்ட் மேயோவைக் கொலைசெய்த குற்றத்துக்காக இங்குதான் தூக்கிலிடப்பட்டார்!

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுதந்திரப் போராட்டம் வலுக்கவே, ஏராளமான கைதிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். சார்லஸ் ஜேம்ஸ் லயல் – ஹோம் செக்ரடரி – கடுமையான தண்டனைகளை விதித்தார். தாய் மண்ணிலிருந்து வெகு தூரத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்வதற்காகவே எழுப்பப்பட்டது ‘செல்லுலார்’ ஜெயில். 1896 – 1906 – பத்து வருடங்களில் கட்டப்பட்டது – பர்மாவிலிருந்து செங்கல் வரவழைக்கப்பட்டது – சைக்கிள் சக்கரத்தில் கம்பிகளைப்போல (SPOKES), நடுவில் ‘சென்ட்ரல் டவர்’, அதிலிருந்து ஏழு கிளைகளாக ஜெயில்! காவலர்களுக்கான மத்திய டவரில் ஒரு பெரிய மணி !

பேனொப்டிகான் (PANOPTICON) என்னும் வடிவில், ஜெரெமி பெந்தாம் என்பவரின் எண்ணத்தில் உருவானது இந்த ஜெயில். மூன்று தளங்கள், மொத்தம் 696 அறைகள் (செல்). அறை 14.8 அடிக்கு 9.9 அடி என்ற அளவில், ஒருபுறம் ஜெயில் கதவும், எதிர்புறம் 10 அடி உயரத்தில் ஒரு சின்ன ஜன்னலுடன் இருக்கின்றன. ஒரு கிளையின் அறைகளின் முன் பக்கம், அடுத்த கிளையின் அறைகளின் பின் பக்கத்தைப் பார்த்தவாறு அமைக்கப் பட்டிருப்பதால், கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ முடியாது! சவார்க்கர் சகோதரர்கள் (விநாயக் தாமோதர் சவார்கர், உம்பாராவ் சவார்கர்), இரண்டாண்டுகளுக்கு அதே ஜெயிலில் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் அதே இடத்தில் இருப்பதை அறியமுடியவில்லை!

80,000 க்கும் அதிகமான கைதிகள் – உயிர் பிழைத்தோர் மிக சொற்பமானவர்களே. தேங்காய் உரித்தல், செக்காட்டுதல், அடிமைக் கூலி வேலை, தனிமைச் சிறையடைப்பு, தூக்கு, கசையடி, மருத்துவப் பரிசோதனை என ‘டார்ச்சர்’ .

1868 தப்பியோட முயற்சித்த 238 பேர்களில், 87 பேர் தூக்கிலிடப்பட்டனர் – ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

1933 மே மாதம், உண்ணாவிரத்ப் போராட்டம் 33 கைதிகளால் நடத்தப்பட்டது. போராட்டத்தை முறியடிக்க, உணவை வாயில் திணிக்க, மூன்று பேர் – மஹாவீர் சிங் (லாஹூர் வழக்கு), மோகன் கிஷோர் நமதாஸ், மோஹித் மொய்த்ரா (ஆயுதம் வைத்திருந்த வழக்கு) – மூச்சுத் திணறி இறக்கின்றனர்.

மஹாத்மா காந்தி, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில், சுதந்திர வீரர்கள், அந்தமான் செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் – 1939 ல் செல்லுலார் ஜெயில் காலி செய்யப்படுகிறது.

மீண்டும் 1942 ல் (இரண்டாம் உலகப்போர் சமயம்) ஜப்பானியர்களால் செல்லுலார் ஜெயில் கைதிகளின் கூடாரமாகிறது. கைதிகளையும், பிரிட்டிஷ் அரசுக்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின்பேரில் பிடித்தவர்ககளையும், சித்ரவதை செய்தும், தூக்கிலிட்டும், கடலில் ஜலசமாதி செய்தும் கொல்கின்றனர் ஜப்பானியர்.  சந்தேகத்தின்பேரில், பொதுமக்கள் முன்னிலையில், சுட்டுக் கொல்வதும், கழுத்தை அறுத்துக் கொலை செய்வதும் இன்றும் அந்தந்த இடங்களில் நினைவுச் சின்னங்களாக மெளனம் காக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது அந்தமானின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் – போர்ட் ப்ளேர் விமான நிலையம், மற்றும் செல்லுலர் ஜெயிலை சிதைத்த மிகப் பெரிய பூகம்பம்.

ஜெயில் மீண்டும் மராமத்து செய்யப்பட்டு – இன்று நாம் காணும் மரத்தால் ஆன கட்டிடங்கள்- சரியாகக் கட்டப்பட்டன.

3, 4 ஆவது விங்ஸ் இடிக்கப்பட்டு, செங்கல் மற்றும் இரும்புத் தளவாடங்கள், தங்கள் பாதுகாப்புக் கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர் ஜப்பானியர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஒன்றறக் கலந்துவிட்ட செல்லுலார் ஜெயில், ஜப்பானியர்கலால் இடித்து ஊனப்படுத்தப்பட்டது!

செல்லுலார் ஜெயில், இப்படிப்பட்ட கொடூரங்களைப் பார்த்ததற்குச் சாட்சியாக இன்றும் வருத்தமுடன் நிற்பதாய்த் தோன்றியது.

செல்லுலார் ஜெயிலின் பெருமைக்குரிய நிகழ்வு – பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே அஞ்சிய, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – HEAD OF AZAD HIND GOVERNMENT – 1943 டிசம்பரில் அந்தமான் வந்து, ஜெயிலைப் பார்வை இட்டதுதான்! இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டம், அந்தமான் நிகோபார் தீவுகள் விடுதலை! முதன் முதலில் 1943 டிசம்பரில் நேதாஜி இந்திய மூவர்ணக் கொடியை அந்தமானில் பறக்கவிடுகிறார்!

செல்லுலார் ஜெயில் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விடுகிறார். தன் முயற்சியால், ஜப்பான் அதிபர் மூலம் 600 க்கும் அதிகமான குற்றமே செய்யாத கைதிகளை, செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்கிறார்.

1945, 15 ஆகஸ்ட் ஜப்பான் அதிபர் ஹிரேஷிதோ சரணடையும்வரை இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன – செல்லுலார் ஜெயில் சரித்திரத்தின் இருண்ட ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது.

அந்தமானில் என்ன இருக்கிறது ? என்ற எண்ணத்துடனேயே அந்தமான் பயணித்தேன் – பார்த்தவை, கேட்டவை, படித்தவை எனக்கு உணர்த்தியது இதுதான்:

இந்திய சுதந்திரம் ‘சும்மா’ கிடைக்கவில்லை – ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் தோய்ந்து, உயிரினில் மாய்ந்து, தியாகத்தில் கனன்று கிடைத்தது.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா” – பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை!

ஜெய் ஹிந்த்!!