யுவான் சுவாங்கின் பயணம் தொடர்ந்தது.
தென்மேற்கு திசையில் தொடர்ந்து தாஷ்கெண்ட் வழியாக சாமர்கண்ட் வந்தான். பிறகு தெற்கு திசையில் பாமீர் பீடபூமி வழியாக குண்டூஸ் நகர் வந்தான். அங்கு பல புத்த மடாலயங்களைக் கண்டு, புத்த இலக்கியங்களை வாங்கினான்.
‘படித்ததை கொடுத்தான். பிடித்ததை எடுத்தான்’.
சந்தித்த சமய இலக்கிய விற்பன்னர்களுடன் ’அளவளாவல்’ செய்தான்.
பயணம் கிழக்கு திசையில் தொடர்ந்தது.
ஷிபர் கணவாய் 3000 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதன் வழியாக ‘கபிசி’ (இன்றைய காபூல்) வந்தடைந்தான். காந்தாரம் மற்றும் அதன் தலைநகர் புருஷபுரம் – பழைய காலத்து செல்வாக்கெல்லாம் போய் இடிபாடுகளுடன் காணப்பட்டது. அங்கும் வாது செய்து புத்தமதத்தில் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டினான். புருஷபுரம் அருகே பல புத்த ஸ்தூபிகளைப் பார்த்தான். முக்கியமாக கனிஷ்கர் ஸ்தூபி. (வருடம் 1908: டி.பி. ஸ்பூனர் எண்ற தொல்பொருள் ஆய்வாளர் – யுவான் சுவாங்கின் எழுத்தைத் துணையாகக் கொண்டு – இந்த ஸ்தூபியைக் கண்டு பிடித்தார்).
பல நாடுகள், நகரங்கள், சிகரங்கள் தாண்டி – சிந்து நதியைக் கடந்து – தக்ஷசீலம் வந்தான். அந்நகரம் பாழடைந்து கிடந்ததைக் கண்டான்.
அப்பாடா! ஒரு வழியாக இந்தியா வந்தடைந்தான்!
ஜலந்தர், மதுரா , யமுனை, கங்கை ஆறுகள் தாண்டி…கன்னோசி வந்து சேர்ந்தான்.
கன்னோசி ஹர்ஷனின் தலைநகரம்.
தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன். பின்னர் சகோதரி ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார். யுவான் சுவாங் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினான்.
யுவான் அங்கிருந்த நூற்றுக்கணக்கான புத்த மடாலயங்களையும், ஆயிரக்கணக்கான புத்த மதக்குருமார்களையும் கண்டு அளவளாவினான். பின்னர் அயோத்யா, கெளசாம்பி வழியாக கபிலவஸ்து அடைந்தான். அங்கு புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்தான். அந்நாளில் பாஹியான் அங்கு வந்ததை நினைவு கூர்ந்தான். கண்கள் பனித்தன.
(தன்ஹுஆங் குகை)
கி பி 637:புத்தர் பிறந்த லும்பினி நகரிலிருந்து புத்தர் மறைந்த குஷிநகரம் வந்தான். அங்கிருந்து காசி, வைசாலி, பாடலிபுத்திரம், சாரநாத், புத்த கயா சென்று கடைசியில் நாலந்தா பல்கலைக் கழகம் வந்தான். அறிவாளிகளுக்கும, அறிவைத் தேடுபவர்களுக்கும் பல்கலைக்கழகம் ஒரு வரப்பிரசாதம்.
யுவான் சுவாங்..
தேன் குடித்த நரியானான்.
வான் பார்த்த மயிலானான்.
பேன் பார்த்த குரங்கானான்.
(எதுகை-மோனை என்ற பெயரில் நமது கற்பனை என்ன என்ன எழுதுகிறது. ஹி.. ஹி..)
இரண்டு வருடம் அங்கேயே தங்கி விட்டான்.
கற்றது: தர்க்க சாஸ்திரம், இலக்கணம், சமஸ்கிருதம். புத்த பள்ளி ‘யோகசாரம்’. அங்கும் யுவான் பாடம் கற்றான்.
நாலந்தாவில்..
நீல மலர்கள் நிறைந்திருந்தது.
சிவந்த கனகப் புஷ்பங்கள் பரந்திருந்தது.
மாமரங்களில் மாம்பழங்கள் குலுங்கிப் பழுத்திருந்தது.
அது ஒரு கல்விக் களஞ்சியம்.
ஹார்வர்ட்,ஸ்டான்போர்ட், ஐ ஐ டி- எல்லாத்தையும் போல உலகப்பிரசித்தி பெற்றிருந்த கல்விக்கழகம். அங்கு மகாபெரிய மடாலயத்தின் தலைவர் ‘சிலபத்ரா’!
மிகச் சிறந்த ஆசான்!
மருத்துவத் திலகம்!
மகாயானக் கொள்கைகளின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.
யுவான் சுவாங் அவரது மாணவனானான்!
சிலபத்ரா ஒரு சீன அறிஞர் வருவது குறித்து ஏற்கனவே கனவு கண்டிருந்தார்.
யுவான் சுவாங் சிலபத்ராவிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.
இந்நாளின் பாங்களாதேஷ் முழுதும் சுற்றிப் பயணம் செய்து பிறகு யுவான் தென் திசை திரும்பினான்..
ஆந்திரதேசம் …
அமராவதியில் புத்த விஹாரங்கள் இருந்தன ..ஆனால் அவை ஆட்கள் யாருமில்லாது காலியாகத் தூர்ந்து கிடந்தன..அங்கும் அவனுக்குக் கற்க வேண்டியது கிடைத்தது..
அங்கிருந்து பல்லவர் தலை நகரம் காஞ்சி சென்றடைந்தான்.
புத்த சமயம் அங்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்று கண்டான்.
காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தான்.
இந்நாளில் இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.அதுபோல் ..அந்நாளில் நரசிம்மவர்ம பல்லவனும் யுவான் சுவாங்கை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.
இன்றும் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களில் யுவான் சுவாங் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்துப் புறப்பட்டு நாசிக், அஜந்தா, மாளவம் என்று பல இடங்களைக் கண்டு மீண்டும் நாலந்தா வந்தான்.
காந்தம் கவர்ந்தது போலும்!
காமரூபத்தின் (இந்நாளில் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கர வர்மன் இந்து அரசன். இருப்பினும் யுவான் சுவாங்கின் புகழ் அறிந்து அவனை தனது நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தான். யுவான் சுவாங்கும் அந்த அழைப்பை ஏற்று காமரூபத்தின் பிராகியோதிஷ்புரத்தை வந்தடைந்தான். மூன்று மாதங்கள் அங்கிருந்தான். அதே நேரம் கன்னோசியில் ஹர்ஷவர்த்தனனுக்கு – யுவான் சுவாங்கை வரவழைத்து விழா எடுக்கவேண்டும் என்ற ஆசை விரிந்தது.
ஹர்ஷன் பாஸ்கரனுக்கு மடல் விடுத்தான்:
“நண்பா! யுவான் சுவாங்கை உடனே இங்கே அனுப்பு. நீயும் உடனே வா. ஒரு முக்கியமான சமாசாரம்”
இருவரும் நண்பர்கள்.
பாஸ்கரனுக்கு யுவான் சுவாங்கை விட மனமில்லை!
பதில் மடல் விடுத்தான்:
“யுவான் சுவாங்கை அனுப்புவதற்கில்லை… அதற்கு பதிலாக என் தலையைக் கேள். அனுப்புகிறேன்”
ஹர்ஷன் பதில் கடிதம் :
“சரி! உடனே தலையை அனுப்பவும். அதையும் யுவான் சுவாங்கிடமே கொடுத்தனுப்பவும்”
பாஸ்கரன் விழுந்து விழுந்து சிரித்தான்- ஹர்ஷனின் ‘காமெடி’ கண்டு!
பாஸ்கரன் யுவான் சுவாங்கை தனது ரதத்திலேயே கன்னோசிக்கு அழைத்துச் சென்றான். ஹர்ஷனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! நண்பனுடன் யுவான் சுவாங் – இருவரது வருகை உவகை தந்தது!
ஹர்ஷன் கன்னோசியில் ஒரு மாபெரும் புத்த மாநாடு நடத்தவிருந்தான். சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பது அதன் முக்கிய நிகழ்வாகத் திட்டமிட்டிருந்தான். அதற்குத்தான் அவன் பாஸ்கரனையும், யுவான் சுவாங்கையும் அழைத்திருந்தான். அதற்கு அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தான். புத்த மாநாட்டில் இரு மன்னர்கள் தவிர அண்டை நாட்டு மன்னர்கள், ஏராளமான புத்த பிக்ஷுக்கள், பிராமணர்கள் மற்றும் சமணர்கள் அனைவரும் கூடியிருந்து கொண்டாடினர்.
இங்கு ஒரு சிறு கதை சினிமா திரைக்கதை போல் விரிகிறது:
ஹர்ஷன் இந்த மாநாட்டு அலங்காரம் அமைப்பு எல்லாம் வெகு பிரம்மாண்டமாக செய்திருந்தான். கோபுரம் ஒன்று கட்டி அதில் மிகப்பெரிய புத்தர் சிலையை நிர்மாணித்திருந்தான். பாஸ்கரன், யுவான் சுவாங் அமர உயரத்தில் சிம்மாசனம் அமைத்திருந்தான். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கி விரிவுரை ஆற்றினான்.
மதம் என்ற வார்த்தை தமிழில் பொருத்தமான டபுள் மீனிங் உள்ள வார்த்தை! யானை மதம் கொள்வது போல் மனிதனும் சமயம் என்ற மதம் கொள்கிறான்! அன்பை போதிக்கும் சமயங்கள் மதமாகி மனிதர்களுக்குள் சமயப்பூசலை ஏற்படுத்தி- கொலைவெறியாகவும் மாறுகிறது! ஹர்ஷனுடைய புத்த ஆட்சியை – பிராமணர்கள் வெறுத்தனர். சசாங்கன் போதி மரத்தை வெட்டி வீழ்த்தி தனது மதவெறியைக் காட்டினான். வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின. அந்த மாபெரும் மாநாட்டில் புத்தர் சிலை இருந்த இடம் திடீரென நெருப்புப்பிடித்து எரியத்தொடங்கியது. அது புத்தமத ஆதிக்கத்தைத் தாளாத கூட்டத்தின் செயல். ஹர்ஷன் அந்த நெருப்பை அணைக்க நேரடியாக ஓடினான். ஹர்ஷனது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பின்னர் ஹர்ஷன் பிரயாகையில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமிக்குமிடத்தில்- கும்பமேளாவுக்கு யுவான் சுவாங்கை அழைத்துச் சிறப்பித்தான். கும்பமேளாவை முதன் முறையாக பெரிய அளவில் ஹர்ஷன் தான் கொண்டு வந்தான். ‘அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார்’ என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளான். பிரயாகையிலிருந்து கன்னோசி திரும்பிய யுவான் சுவாங் தாயகம் திரும்ப எண்ணம் கொண்டான். ஹர்ஷன் கனத்த இதயத்துடன் அவனுக்கு ஒரு மிகப்பிரம்மாண்டமான வழியனுப்பு விழா நடத்தினான்.
கி பி 645:
பதினாறு ஆண்டுகள் கழித்து, கைபர் கணவாய் வழியாக, யுவானின் சீனா திரும்பிய பயணம் சாகசம் நிறைந்திருந்தது. கள்வர்கள் யுவான் குழுவை தாக்கி பணம் பறித்தனர். அவர்களது உடமைகளைச் சுமந்து வந்த யானை நீரில் மூழ்கியது. அந்த உடமைகளைச் சுமந்து செல்ல போக்குவரவுக்காகத் திண்டாடினர். நூற்றுக்கணக்கான சமஸ்கிருத புத்த இலக்கியங்கள் மற்றும் புத்த சிலைகள்- அவை அனைத்தையும் தாயகம் கொண்டு செல்லவேண்டுமே! !
சீனாவில் யுவான் சுவாங்கிற்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது. சீனாவில் இது வரை எந்த புத்தமதகுருவுக்கும் இது போல் வரவேற்பு கிடைத்ததில்லையாம். மன்னர்- அரசு ஊழியர், வியாபாரிகள் மற்றும் அனைத்து மக்களும் விடுமுறை எடுத்து கொண்டாடினர். வீதியில் எங்கும் மக்கள் வெள்ளம். யுவான் சுவாங்கிற்கு ‘கட் அவுட்’, விழாக்கால இசை என்று தடபுடல் செய்தனர். யுவான் சுவாங்குடைய சொத்துக்களை (வேறு ஒன்றுமில்லை.. புத்தகங்கள் தான்) சுமப்பதற்கு 20 குதிரைகள் தேவைப்பட்டதாம்! தங்கம், வெள்ளி, சந்தனமரம் – இவைகளாலான நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை அவன் கொண்டு வந்திருந்தான். இயற்கையும் – மெல்லிய தென்றலை வீசி அவனை வரவேற்றது. யுவான் சுவாங் சீனாவிலிருந்து புறப்பட்ட போது அவன் வளர்த்த பைன் மரத்தைத் தழுவி விடை பெற்றிருந்தான் . அம்மரம் அவன் மேற்கு திசை பயணம் துவங்கிய பொழுது அத்திசை நோக்கி வளைந்து இருந்தது. யுவான் சுவாங் இப்பொழுது திரும்ப வரும் போது – அம்மரம் திரும்பி அவன் திசையை நோக்கி வளைந்ததாம். (இது என்ன கப்ஸா? என்று வாசகர்களுக்கு என்னைத் திட்டத் தோன்றுகிறதல்லவா? நான் படித்ததைதான் எழுதினேன்) சக்கரவர்த்தி தைசாங் – தனது அனுமதி இல்லாமல் யுவான் சுவாங் நாட்டை விட்டு சென்றதை (மறக்கவில்லை பாருங்களேன்) – மன்னித்து அவனது நண்பனான். அரண்மனையில் தனது அந்தரங்க அறையில் வரவேற்று – அவனது கதைகளைக் கேட்டறிந்தான். அவனுக்கு அரசுப் பதவிகளை அளித்தான். அதை மறுதலித்த யுவான் சுவாங் மடாலயத்தில் சேர்ந்தான். அவன் காலமாகும் வரை அவன் காலம் புத்த இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலேயே கழிந்தது. இன்றும் சில புத்தர் ஆலயங்களில் யுவான் சுவாங்கின் படம் வரையப்பட்டுள்ளது- அதற்கு வழிபாடும் நடக்கிறதாம்..
மனிதன் என்பவன் … தெய்வமாகலாம்…!
அவன் எழுதியது சரித்திரம்.. அவன் ஒரு சரித்திரம்!
சரித்திரம் மெல்ல நகர்கிறது…
விஸ்வகர்மா மும்மூர்த்திகளையும் சந்தித்து ஆசிபெற்று ஸந்த்யாவைக் காப்பாற்ற வரமும் பெற்று அதனால் உண்டான மகிழ்ச்சியுடன் சூரிய மண்டலத்துக்கு வந்தார்.
அவர் திரும்பி வருவதற்கு முன்பே சூரியதேவனுக்கு மும்மூர்த்திகளின் விருப்பம் மனச்செய்தியாக வந்துவிட்டது. தன் கிரணங்கள் சிலவற்றை இழந்தாலாவது மும்மூர்த்திகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவன் மனம் வாக்கு செயல் அனைத்திலும் நிறைந்து இருந்தது.
அதனால் அவனே விஷ்வர்கமா திரும்ப வந்ததும் அவரை வரவேற்று அவர் காலில் விழுந்து வணங்கினான்.
விவரம் அறிந்ததும் ஸந்த்யா ஈன்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்ந்தாள். தாயும் தந்தையும் தன்னுடனே இருப்பார்கள் என்ற எண்ணமும் அவளுக்குப் பூரிப்பை அளித்தது.
காலத்தை வீணடிக்காமல் விஷ்வகர்மா இம்முறை காந்த சிகிச்சைக்குப் பதில் மற்றொரு புதிய முயற்சியில் சூரியக்கிரணங்களைக் குறைக்கத் திட்டமிட்டார்.
விஷ்வகர்மா தனது சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்த புதிய அறிவாற்றலை இதில் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி காந்த சிகிச்சை அதற்குப் பின் சாந்துக்குளியல் இரண்டும் தேவையில்லை. அதனால் சூரியதேவனுக்கு மயக்கத்தைத் தரத் தேவையில்லை. ஸந்த்யா இந்தச் சிகிச்சையைச் செய்ய இயலாது. அதுவும் நன்மைக்கே! போன தடவை நடைபெற்ற தவறுகள் இம்முறை நடக்காது. சூரியதேவனும் ஸந்த்யாவும் காதலில் ஈடுபட மாட்டார்கள். ராகுவும் குறுக்கே வரமாட்டான். தனது புதிய அறிவாற்றலைச் சூரியதேவனுக்கு விளக்கினால் அவனும் இதன் சிறப்பை அறிந்து மிகவும் ஒத்துழைப்பான் என்று உறுதியாக நம்பினார்.
” சூரியதேவரே, நீங்கள் முதன்முதலில் ஸந்த்யாவைத் தங்கப் பொய்கை அருகில் பார்த்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கினீர்கள். நான் உங்களை என் மாளிகைக்கு அழைத்து உங்கள் நிச்சயதார்த்தம் விழாவை நடத்தி பின்னர் சுபயோக சுபதினத்தில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் ஸந்த்யாவின் குறைபாடும் உங்கள் குறைபாடும் திருமணத்திற்குத் தடையாயிருக்கும் என்பதைக் கண்டேன். அதனால் காந்தச் சிகிச்சை மூலம் தங்கள் ஒளிக் கிரணங்களைச் சாணை பிடிக்கலாம் என்று ஸந்த்யா மூலம் தங்களுக்குத் தெரிவித்தேன். தாங்களும் பெருந்தன்மையுடன் அந்தச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டீர்கள். ஸந்த்யா அந்த சிகித்சையைச் செய்து முடித்த பிறகு உங்கள் காதல் எல்லை மீறியது. அதன் விளைவு சந்த்யா இந்த மூன்று குழந்தைகலையும் கருத்தரித்தாள்.”
சூரியதேவனால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.
” அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, விஷ்வகர்மா அவர்களே! நான் காதல் மயக்கத்திலிருந்தபோது ராகு என்னை விழுங்கிச் சக்தி பெற்றுக் கொண்டதையும் என் நெருப்பு வலையை மீறி அவன் தப்பிச் சென்றதையும் என்னால் என்றைக்கும் மன்னிக்கவே முடியாது. நானும் ஸந்த்யாவும் காந்தருவ மணம் புரிந்து கொண்டோம், இனிப் பிரிந்திருக்க முடியாது என்றதும் தங்கள் சிற்பி மூளை வித்தியாசமாகச் செயல் படத் துவங்கியது. ஸந்த்யா என் மூலம் கருத்தரித்து விட்டாள் அதுவும் மூன்று குழந்தைகளை என்று அறிந்ததும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். பெருமைப்பட்டிருக்க வேண்டும். தாத்தா ஆகப் போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நாளில் நாங்கள் இருவரும் கலந்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கிற மகாபிரும்மருத்ரன் வருவான் என்ற ஆசையில் நீங்கள் என்னென்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? என்னை மயக்கத்தில் ஆழ்த்தி என்னிடமே அனுமதி வாங்கி என் குழந்தைகளைக் கொல்லத் துணிந்தீர்கள். அதுமட்டுமல்லாமல் ஸந்த்யாவை உங்கள் இல்லத்திலேயே இருத்தி அவளுக்குப் பதிலாகப் பதுமை ஒன்றையும் அனுப்புவதாகக் கூறி என் விருப்பத்திற்கு மாறாக என்னை அனுப்பியும் வைத்தீர்கள்! என் ஜென்ம விரோதி ராகு குறுக்கிட்டதில் உண்மை வெளிவந்து ஸந்த்யா என்னிடம் ஓடி வந்து உண்மை அனைத்தையும் கூறினாள். எனக்கு அன்றைக்கு வந்த கோபத்தில் தேவசிற்பி என்று கூட பார்க்காமல் உங்களை அன்றே அழித்திருப்பேன். ஸந்த்யாவைப் பெற்ற தந்தை என்பதால் என் கோபத்தை நானே விழுங்கிக் கொண்டேன்” .
விஷ்வகர்மா கண்களிலும் ஸந்த்யாவின் தாயின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.
ஸந்த்யா தான் நிலைமைப் புரிந்து கொண்டு பேச்சைத் திசை திருப்பினாள்.
” அழகுக் குழந்தைகள் மனு, எமன், எமி பிறந்திருக்கும் குதூகல நாளில் ஏன் பழைய வேண்டாத நிகழ்வுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்? தந்தையே ! இப்போது மும்மூர்த்திகள் வேண்டிக் கொண்டபடி இவரிடமிருந்து ஆயுதங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்! அந்த முயற்சியில் எங்களுக்கும் நன்மை கிடைக்கும்” என்று வேண்டிக்கொண்டாள்.
சூரியதேவனும் நிலைமையைப் புரிந்துகொண்டு ,” சரியாகச் சொன்னாய் ஸந்த்யா! நேற்றைய நாள் முடிந்த நாள். தினமும் நான் புதியதாய் உதிக்கின்றவன்.நடக்கப் போவதைப் பற்றிப் பேசுவோம். விஷ்வகர்மா அவர்களே! எப்பொழுது துவக்கப் போகிறீர்கள் உங்கள் காந்த சிகித்சையை? ” என்று வினவினான்.
சூரியதேவரே உங்கள் கோபம் நியாயமானது தான். என் தவற்றை மன்னிக்கும்படி பலமுறை வேண்டியும் நீங்கள் செவி சாய்க்கவில்லை. இன்று பிரும்மர் அருளினால் உங்கள் மன்னிப்பைப் பெறுவதற்குத் தகுதி உடையவனாகி விட்டேன். அது மட்டுமல்ல. சற்று முன்வரை நான் காந்த சிகித்சை அளிப்பதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது அதைவிடச் சிறந்த முறை ஒன்று என் சிந்தனையில் உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்கு விளக்கிய பிறகு தங்கள் அனுமதியுடன் அதனைப் பயன்படுத்த விழைகிறேன்” என்ற பீடிகையில் ஆரம்பித்தார் விஷ்வகர்மா.
“சொல்லுங்கள்! அனைவரும் கேட்கட்டும்” என்று கூறினான் சூரியதேவன்.
” சூரியதேவரே! கொஞம் விளக்கமாகச் சொல்ல அனுமதியை மீண்டும் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒளி வெப்பம் எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அதே சமயத்தில் உங்கள் ஒளி துகள்களாலும் ஆனது. அதுமட்டுமல்லாமல் அதற்கு அலைபோல பரவும் குணமும் உண்டு. அதை அலை நீளம் என்ற அளவையால் அளக்க முடியும்.
உங்கள் வெள்ளை ஒளி உண்மையில் ஏழு நிறங்களால் ஆனது. அதை உங்கள் தேர்ச்சக்கரத்தில் உள்ள ஏழு குதிரைகளும் நிர்ணயிக்கின்றன. உங்கள் ஒளி, மழைக்காலங்களில் நீர்த்திவலைகளில் புகுந்து வரும் பொழுது அந்த ஏழு வண்ணங்களும் வானவில் வண்ணங்களாக உரு மாறுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த வெள்ளை நிற ஒளி பல நிறங்களாகப் பிரிவதை நிறமாலை என்கின்றோம். ஒளி ஒரு சிறிய துளை வழியாகச் செல்லும்போது ஒளி விலகுதல் நடைபெறும். அதாவது ஒளியின் கற்றை விரிகின்றது.
முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரியும்
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது.
இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை வரி. இதில் ஆற்றல் இழப்பு இல்லை.
முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள வரிகள். இதில் ஆற்றல் இழப்பு உண்டு.
முதன்மை வரியைவிடக் குறைவான அலைநீளமுள்ள எதிர் வரிகள் இதில் ஆற்றல் அதிகரிக்கும்.
சீரொளி என்ற ஒரு ஒளிவடிவமும் உண்டு. அதன் ஒளிக்கற்றையில் உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும்.
சீரொளி சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. பொதுவாக அகல்விளக்கு , கதிரவன் முதலானவற்றிலிருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் ஒரே அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களும்கூட ஒன்றுக்கொன்று அலைமுகங்கள் மாறுபட்டும் முரண்பட்டும் காணப்படும். அதாவது ஓர் ஒளியலையின் அலைமுகம் ஏறுமுகமாக இருக்கும் போது, அதே அலைநீளம் கொண்டிருக்கும் வேறு ஒளியலைகள் இருந்தாலும் அவற்றின் அலைமுகம் இறங்குமுகமாக இருக்கக்கூடும். ஆனால் சீரொளி உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும். சீரொளியின் பயன்பாடுகள் பலவும் இப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
தடிப்பான இரும்பை வெட்டி அறுப்பது ஒட்டவைப்பது வரை பற்பல பயன்பாடுகளுக்குச் சீரொளி பயன்படுகின்றது.ம் செய்கின்றன.
மேலும் சொல்லப்போனவரை ஸந்த்யா தடுத்து நிறுத்தினாள். “தந்தையே, தங்கள் சிற்ப மாணாக்கர்களுக்குப் போதிப்பதை இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் எப்படி இவருடைய கதிர் வெப்பத்தைக் குறைக்கப்போகிறீர்கள் , மும்மூர்த்திகளுக்கு எப்படி ஆயுதம் செய்யப்போகிறீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்களேன்” என்றாள்.
சரி, சுருக்கமாகவே சொல்கிறேன். சூரியனை நான் தயாரித்திருக்கும் ஓர் ஊடகத்தின் வழியே செல்லும்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன். அவர் அப்படி வரும் போது ஆற்றல் அதிகரிக்கும் எதிர் வரிகளைக் கொண்டு ஆயுதங்கள் செய்யப்போகிறேன். அந்த ஆயுதங்களின் இணைப்புகளை இணைக்க இவரது ஒளியில் வரும் சீரொளியைப் பயன்படுத்தப்போகிறேன்.
அந்த ஆற்றல் மிக்க ஓளி விலகியதும் சூரியதேவனின் ஒளியும் வெப்பமும் மங்கும். அதன் பிறகு அவருடைய கிரணங்களால் ஸந்த்யாவிற்கு எந்தவித பாதகமும் இருக்காது”
” மிகவும் மகிழ்ச்சி தந்தையே! இந்தப் பாதுகாப்பு நிரந்தரமாக இருக்குமா அல்லது காந்த சிகிச்சை மாதிரி சில காலம் மட்டும் இருக்குமா? ” என்று வினவினாள் ஸந்த்யா.
” மகளே! தான் இருக்கின்ற பொருட்களைக் கொண்டு அவற்றில் என் அறிவைப் பயன்படுத்திச் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் தொழிலாளி தான். மும்மூர்த்திகள் மாதிரி படைப்பாளி அல்ல. இந்த ஊடகத்தை உங்கள் அரண்மனை வாயிலில் வைக்கப்போகிறேன். அதனால் சூரியதேவன் எப்பொழுதெல்லாம் அரண்மனைக்குள் வருகிறாரோ அப்போது அவர் மங்கிய வெப்பத்துடன் கூடியவராகத் தான் உள்ளே வருவார். ஆனால் இந்த ஊடகத்திற்கு எதாவது பாதகம் விளையாதவாறு காக்கவேண்டும். ஊடகத்தில் விரிசல் எதாவது ஏற்பட்டால் பின்னர் அது முழுவதுமாகச் செயல் இழந்துவிடும்”
” ஊடகத்தில் விரிசல் வந்தால் குடும்பத்தில் விரிசல் வருமே? ஊடகத்தை எப்படிப் பாதுகாப்பது?” என்று கவலையுடன் வினவினாள் சந்த்யாவின் தாய்.
இந்த ஊடகத்தை வேறு எந்தப் பொருளும் பாதிக்கமுடியாது. ஆனால் நான் தயாரிக்கப்போகும் இரு ஆயுதங்கள் இதன் மீது பட்டால் ஊடகம் ஓட்டையாகவிடும். “
“அப்படி என்ன ஆயுதங்களை நீங்கள் படைக்கப்போகிறீர்கள்? ” என்று சூரியதேவன் வினவினான்.
” சிவபெருமானுக்குத் திரிசூலமும், விஷ்ணுவிற்குச் சுதர்சனச் சக்கரமும்” என்று பதில் உரைத்தார் விஷ்வகர்மா.
” மும்மூர்த்திகளால் எனக்கு என்றென்றும் துயரம் வராது. இதுபோதும் எங்களுக்கு” என்று சூரியதேவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
ஸந்த்யாவின் அன்னை கொண்ட கவலை நியாயமானது என்பதைக் காலம் சொல்லியது.
(தொடரும்)
சாலமன் பாப்பையா தன் தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறாரோ என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் எதிர்பார்க்காத ஒன்றை அவர் கூறினார்.
மூன்று அணியினரும் சிறப்பாகவே பேசினாங்க!
முதலில் சொன்ன மாதிரி எனக்கு இங்கே தீர்ப்பு சொல்லக் கொஞ்சம் தயக்கம். காரணம் இது எமபுரிப்பட்டணம் என்பதால் அல்ல . எமன் எதிரே அமர்ந்திருக்கிறார் என்பதனால் அல்ல.
எல்லாவிதமான பேச்சுக்களையும் இடம் பொருள் ஏவல் பார்த்துப் பேசவேண்டும் என்பது தமிழ் மூதுரை. அது என்ன இடம் பொருள் ஏவல்? எந்த இடத்தில் எதைப்பேச வேண்டும் என்று தெரிந்து பேசவேண்டும். நாம் பேசுவது எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள் என்று புரிந்துகொண்டு பேசவேண்டும். ஏவல் -அதாவது எந்த அளவிற்குக் குரலை உயர்த்திப் பேசவேண்டும் என்பதை உணர்ந்து பேசவேண்டும். எதை எந்தப் பொருளில் எந்த அளவில் தெரிந்து புரிந்து உணர்ந்து பேசவேண்டும் என்பது இடம் பொருள் ஏவல் என்றாகிவிட்டது. . மனிதனாகப் பிறந்த அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயப் பாடம் இந்த இடம் பொருள் ஏவல்.
நானும் மனிதன் தான். தமிழும் தெரியாமல் படித்துவிட்டவன். அதனால் இந்த இடம் பொருள் ஏவல் என்ற பொது மறையை மதிக்கின்றவன். அதனை முக்காலே மூணு வீசம் பயன்படுத்துகிறேன். ஏதோ சொச்சம் வைக்கிறேனே ஏன் என்று கேட்கிறீர்களா? பட்டி மன்றத்திற்கோ வழக்காடு மன்றத்திற்கோ விவாதமேடைக்கோ தலைமை தாங்கும்போது இந்த இடம் பொருள் ஏவலை நான் பொருட்படுத்துவதில்லை. இந்தப் புனிதமான தலைமைப் பீடம் பொதுமறையிலிருந்து விலக்கு அளிக்கிறது. இதை சிறப்பு முறை என்றும் நான் சொல்வதுண்டு.பொதுத்தமிழ் சிறப்புத்தமிழ் என்று தமிழ்ப்பாடத்தில் வருவதுபோல.
அதன்படி, எந்த இடமாக இருந்தாலும் எனது தீர்ப்பை ஐயம் திரிபர எடுத்துச் சொல்வதே என் வழக்கம். எந்தப் பொருள் சரியானது என்று எனது துலாக்கோல் கருதுகிறதோ அதைத் தெளிவாகச் சொல்வது என் மரபு. குரலை ஏற்றி இறக்கிப் பேசவேண்டிய வசியமில்லை. ஆனால் கணீரென்று ஆணித்தருணமாகச் சொல்லவேண்டியது என் கடமை.
வழக்கம் மரபு கடமை என்ற மூன்று சிறப்புக்களையும் ஒதுக்கிவிட்டு பொதுமறையின் அடைப்படையில் சற்று வித்தியாசமாகத் தீர்ப்புச் சொல்ல விழைகிறேன்.
அதற்குக் காரணம் நான் இந்த விவாதமேடை ஆரம்பத்தில் சொன்ன நிகழ்வுதான். மதுரையில் நடைபெற்ற விவாதம். தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது “சண்டையா? சோகமா? காதலா? ” என்ற விவாதம். அந்த விவாதமேடைக்கு எம் ஜி ஆர் சிவாஜி ஜெமினி மூன்றுபேரும் வந்திருந்தார்கள் என்று கூறினேன். இவர்கள் மூன்று பேரையும் வைத்துக்கொண்டு நாம் எதாவது தீப்புக் கூறினால் ஏதாவது ஏடாகூடம் நடைபெறுமோ என்ற பயம். அந்த பயம் எனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் அல்ல. அதனால் கூட்டத்தில்குழப்பம் வந்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியவேண்டுமே என்கிற கவலையினால் ஏற்பட்ட பயம். நாம தான் இடம் பொருள் ஏவல் பார்க்கிற ஆசாமி இல்லையே ! தைரியமாக தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது காதல்தான் என்று முடித்தேன். அந்த இடத்தில் அப்படியே ஒரு நில நடுக்கம் எற்பட்டதுபோலத் குலுங்கியது. எம் ஜி ஆர் சிவாஜி இருவர் ரசிகர்களும் கொலைவெறியுடன் மேடைக்கு வந்தார்கள்.
அப்போ அங்கே ஒரு அதிசயம் நடந்ததுனால நாங்க எல்லோரும் தெய்வாதீனமா தப்பிச்சோமுன்னு சொன்னேனில்ல? அது என்ன தெரியுமா? அந்தக்கூட்டத்துக்குக் கவிஞர் கண்ணதாசனும் வந்திருக்கிறார். யாருக்கும் தெரியாம ஒருமூலையில உட்கார்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். தகறாறு வருவதைப் பார்த்தவுடன் அவர் உடனே மேடைக்குத் தாவி வந்தார். மைக்கைக் கையில் எடுத்தார். பேச ஆரம்பித்தார்.
” மதுரை மகா ஜனங்களே ! இந்த ஊர்ல ஒரு பாண்டியன் தப்பா தீர்ப்பு சொன்னதுக்காக ஊரையே எரிச்சா ஒரு கண்ணகி. அப்படிப்பட்ட ஊர்ல இவர் தப்பா தீர்ப்பு சொன்னா நாம சும்மா விடுவோமா?
என்ன இது, கவிஞர் எரியிற கொள்ளியில எண்ணையை ஊத்துறாரேன்னு பயந்தேன்.
” ஆனா பாண்டியன் மாதிரி நாமளும் அவசரமா தீர்ப்பு சொல்லலாமா? கொஞ்சம் பேசிப்பார்ப்போம். எனக்கு மதுரை ஜனங்களைப் பத்தி நல்லாவே தெரியும். இந்தத் தலைப்பைப் பத்தியும் தெரியும். தமிழும் கொஞ்சம் தெரியும். அதனால அமைதியா உட்காருங்க! நாம் இந்தத் தீர்ப்பு சரியா தவறா அப்படீன்னு ஒரு அப்பீலுக்குப் போவோம். அப்பிலுக்கு யார் தீர்ப்பு சொல்வது?
கூட்டம் “கண்ணதாசன் கண்ணதாசன்” அப்படின்னு கத்தியது. மேடைக்கு ஆத்திரத்தோடு வந்தவுங்க அமைதியா அவங்க இடத்தில் உட்காருவதும் தெரிந்தது.
“நானா? மன்னிக்கணும் . இதுக்குத் தீர்ப்புக் கூறத் தகுதியானவர்கள் இவர்கள் மூவரும்தான். திரையுலக ஜாம்பவான்கள் இந்த மூன்று பேரையும் மேடைக்கு அழைக்கிறேன். எம் ஜி ஆர் அவர்களே, சிவாஜி அவர்களே, பிரதர் ஜெமினி சற்று மேடைக்கு வந்து இந்தத் தீர்ப்பைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள்” என்று அழைத்தார்.
மூன்று பேரும் சிரித்துக்கொண்டே மேடைக்கு வந்தார்கள்.
இந்த அப்பிலுக்கு நீங்க தான் தீர்ப்பு சொல்லணும் . பேசினவங்க பேச்சை வைச்சு இந்த நீதிபதி தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது சண்டையில்லை, சோகமுமில்லை காதல்தான் அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டார்.
மக்கள் எல்லாரும் கோபத்தில் இருக்காங்க! நீங்க சொல்லுங்க ? நம்ம படங்களில எது சிறந்து விளங்குது ? சண்டையா? சோகமா? காதலா? பிரதர் நீங்க சொல்லுங்க? என்று ஜெமினியைக் கேட்டார்.
“காதல்தான் . நான் வேற என்ன சொல்வேன்” என்றார்
சிவாஜி, நீங்கள்?
காதல் தான்
ஆண்டவனே ! ( எம் ஜி ஆரும் கண்ணதாசனும் ஒருத்தரை ஒருத்தர் ஆண்டவனேன்னுதான் கூப்பிடுவாங்களாம்) நீங்க என்ன சொல்ரீங்க?
“காதல்தான் “
“அப்பறம் என்ன? என் ஓட்டும் அதுக்குத்தான். எல்லரும் வீட்டுக்குப் போய் காதல் செய்யுங்கள்” என்று சொல்லி நிகழ்ச்சியை முடிக்க மக்கள் அனைவரும் இவர்கள் நால்வரையும் மேடையில் பார்த்த மகிழ்ச்சியோடு கலைந்து போனார்கள்.
இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால் இப்போது நான் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் இங்கு வந்திருக்கும் மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்த அவர்களுடைய கருத்தினைக் கேட்க விரும்புகிறேன். அவர்கள் மூவரையும் நன்கு அறிந்த நாரதர் அவர்கள் கண்ணதாசன் போல நெறியாளராக இருந்து மும்மூர்த்திகளின் கருத்தை அறியும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்றார் சாலமன் பாப்பையா.
இதைக் கேட்டுவிட்டுத்தான் ” இது நடக்க முடியாத செயல்” என்று நாரதர் சத்தமாகக் கூறினார்.
(தொடரும்)
ரா கி ரங்கராஜன் மொழிபெயர்த்த ”The Right Kind of House” என்ற சிறுகதையை சில மாதங்களுக்கு முன் படித்தேன். சிறுகதை படித்த பின் அதனுடைய குறும்படத்தையும் தேடி பார்த்தேன். சிறுகதையை திரைக்கு கொண்டு வரும் போது என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை கவனிக்க முடிந்தது.
நன்றி: சுஜாதா தேசிகன்
அந்தக் கதை சுருக்கமாக இங்கே…
ஊருக்குள் நுழையும் வாட்டர் பெரி என்பவர், அங்கே வீடு ஒன்று விற்பனைக்கு என்ற பலகையை பார்த்துவிட்டு அந்த ஊர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அதை பற்றி விசாரிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஒரு வயதான பெண்; ஐந்து வருஷம் முன்பு பையனைப் பறிகொடுத்தவர்; கடந்த ஐந்து வருஷமாக அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அல்லது வந்தவர்கள் அதன் விலையைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார்கள்; வெறும் 10,000 டாலர் பெறுமான வீட்டை அந்தப் பெண் ஐந்து மடங்கு அதிக விலை சொல்லுகிறார் போன்ற தகவல்களை அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருப்பவர் சொல்லுகிறார்.
“நான் வேண்டும் என்றால் அந்த பெண்மணியிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று வாட்டர் பெரி கிளம்புகிறார். அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறார். ”பேரம் பேசுவதாக இருந்தால் நீங்கள் போகலாம்” என்று அந்தப் பெண்மணி கராராகப் பேசுகிறார். வாட்டர் பெரி “சரி நீங்கள் சொல்லும் விலைக்கே அந்த வீட்டை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்கிறார். ”நிஜமாகவா ?” என்று கேட்டுவிட்டு அவருக்கு லெமன் ஜூஸ் தருகிறார் அந்தப் பெண்மணி. பிறகு ”இந்த வீட்டைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும்” என்கிறாள்.
தன்னுடைய குடும்பம் பற்றிய தகவல்களைச் சொல்லுகிறார். தன் கடைசிப் பையன் சில வருடங்களுக்கு இறந்துவிட்டான் என்கிறார். “எப்படி?” என்று வாட்டர் பெரி கேட்க, ஒரு நாள் ராத்திரி தன் மகன் ஒரு கருப்புப் பையுடன் வந்தான். அந்த பையில் என்ன இருக்கிறது என்று சரியாகச் சொல்லவில்லை. சில வாரங்கள் இங்கே இருக்க போவதாகவும் சொன்னான்; பிறகு அவன் தன் வேலை போய்விட்டதாகவும் அந்தப் பெண்மணி சொல்லுகிறார்.
சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் ராத்திரி அவன் அறையில் பேச்சுக் குரல், சண்டை, சாமான்கள் உருளும் சத்தம் கேட்டு அங்கே தான் போன போது தன் மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தான் என்றும். சுட்டவன் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டான் என்றும் சொல்லுகிறார்.
இவள் மகனுக்கு ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சொல்லித் தெரியவருகிறது. பங்கு போடுவதில் ஏதோ பிரச்சனையில் இவன் சுடப்பட்டான் என்றும் தெரியவருகிறது. ”சுட்டுவிட்டு போனவனைக் கண்டுபிடித்தீர்களா?” என்று வாட்டர் பெரி கேட்க, அதற்கு அந்த பெண் ”இல்லை. அதனால் தான் இந்த வீட்டை ஏகப்பட்ட விலைக்கு விளம்பரம் செய்தேன். ”நிச்சயம் கொலை செய்தவன். என் மகன் இந்த வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு போக வருவான் என்ற நம்பிக்கையில் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருந்தேன்” என்கிறாள்.
வாட்டர் பெரி லெமன் ஜூஸை கீழே வைத்த போது கண்கள் இருண்டது. “லெமன் ஜூஸ் கொஞ்சம் கசக்கிறது” என்றார்.
ஹிட்ச்காக் தயாரித்த அந்தக் குறும்படத்தைப் பார்த்து ரசியுங்கள் !
செப்டம்பர் மாத நிகழ்வுகள்
குவிகம் இல்லத்தில் நடைபெறும் அளவளாவல் மற்றும் இலக்கிய அமுதம் நிகழ்வுகளையும், ஆழ்வார்பேட்டையில் குவிகம் இலக்கிய வாசல் சார்பில் நடக்கும் நிகழ்வினையும் பற்றிய குறிப்பினை மாதம்தோறும் எழதலாம் என்று தொடங்குகிறோம்.
இது செப்டம்பர் மாத நிகழ்வுகளுக்கான பதிவு
“வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் “ என்னும் முகநூல் குழுவின் நிர்வாகி திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு. ஒரு தீவிர வாசகர் ஒரு முகநூல் குழுவின் மூலம் பலரையும் படிக்க வைத்து அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளச் செய்தது இவரது சிறப்பு.
கோவில்பட்டியில் நினைவு தெரிந்த நாள் முதல் அரசியல் மற்றும் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவந்த அனுபவங்கள், பங்களூரூவில் இருந்த நாட்களில் தமிழ்ச் சங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டது, தனது ஊர் மற்றும் அலுவலக நண்பர்கள் பலர் இலக்கியச் சம்பந்தமாகவே இயங்கி வருவது பற்றி பகிர்ந்துகொண்டார்.
வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் தளத்தின் தரத்தைத் தொடர்ந்து உற்சாகத்துடன் தக்கவைப்பது குழுவின் ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும், இதுவரை பதிவுகள் எழுதாத நண்பர்கள்/எழுத்தாளர்கள் அனைவரையும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தங்கள் வாசிப்பு அனுபவத்தை வாசிப்போம்…குழுவில் பகிர வேண்டும் என்றும் கூறி இதுவரை குழுவில் சேராதவர்களுக்கு அழைப்பும் விடுத்தார்
இலக்கிய அமுதம் சார்பில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களைப்பற்றி திரு. அமுதோன் உரையாற்றினார்.
திரு அமுதோன் கவிஞர் சுரதா மற்றும் கவிஞர் கண்ணதாசன் இருவரிடமும் பழகியவர். இருவரும் மென்மையான உள்ளம் படைத்தவர்கள், மற்றவர்கள் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடியவர்கள் என்பதற்கு உதாரணங்கள் சொன்னார்.
கவிஞர் சுரதாவைப் பற்றிய சில செய்திகள்.
“ஆணி அடிச்ச இடத்தில் அடையாளம் இல்லாமல் போகுமா?’
செப்டம்பர் 22: அளவளாவல்
1955 முதல் சென்னையில் நடந்த ஆன்மீகச் சொற்பொழிவு, இலக்கிய நிகழ்வு எல்லாவற்றிலும் பார்வையாளர் இடையே சங்கரிபுத்திரன் அவர்களை பார்கலாம் என்று சொல்வார்கள்.
கலந்துகொள்வதோடு ஒரு சிறு குறிப்பு, ரசமான செய்திகள் என்று பத்திரிகைகளில் பகிர்ந்துகொண்டவர் அவர். 88 வயதான சுப்பிரமணியம் அவர்களுக்கு ‘சங்கரிபுத்திரன் புனைப்பெயரைச் சூட்டியவர் தோழர். பாலதண்டாயுதம்.
கோவைச் சிறைச்சாலையில் எழுத்தராகப் பணிபுரிந்த இவர் அந்தச் சமயத்தில் ஒரு தூக்குத் தண்டனைக் கைதிக்கு அவர் அராசங்க அனுமதியுடன் உதவியதை இன்றும் நினைவு கொள்கிறார்.
இலக்கியச் சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் சார்பில் சனிக்கிழமை 28-9-19 அன்று “திரு ஏ.என்.சிவராமன் – ஒரு பன்முகப் பார்வை” என்ற தலைப்பில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் பேருரை ஆற்றினார்.
அது பற்றி நண்பர் ஆர்கே ராமநாதனின் முகநூல் பதிவு
மாதாந்திர கூட்டத்தில் தினமணி ஆசிரியராக அரை நூற்றாண்டுக்கு மேல் திறம்பட பணி புரிந்த ஏ என் எஸ் என்றழைக்கப்படுகிற ஏ என் சிவராமன் அவர்களின் பன்முகத் திறமை பற்றி நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ள அவரின் பேரன் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (கலைமகள் ஆசிரியர்) அவர்களைவிட பொருத்தமான நபர் வேறு யாரும் இருக்கமுடியுமா என்ன?
ஏ என் எஸ்ஸின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள், பத்திரிகை ஆசிரிய அனுபவப் பகிர்வுகள் என இரண்டையும் சரிவரப்பின்னி அவற்றை காலக் கிரம வரிசைப்படுத்தாமல் சுவாரஸ்யத்திற்கும் கோர்வைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசிய முறை கவனக்குவிப்பாய் கேட்க வைத்தது. பிழைதிருத்தி மணி சம்பவக்கதையை முத்தாய்ப்பாய் சொன்னதும் நல்ல ஃபினிஷிங் டச் .!
காந்தியவழிக் கொள்கை ஈடுபாடு, வன்முறைக்கு வாய்ப்பளிக்காத நேர்பட்ட எழுத்து வெளிப்பாடு,கட்டுரை, தலையங்கம்,பல்துறைத்தொடர் (விவசாயம் குறித்த 40 கட்டுரைகள் பல்கலைக்கழக பாடத்திட்டமாய் வைக்கப்பெற்றது அதன் வீரியத்தைப் பறைசாற்றும்) இவைதாண்டி சிறுகதையிலும் முத்திரை பதித்த எழுத்துத்திறன் (எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறந்த நூறு தமிழ்சிறுகதைகள் தேர்ச்சி பட்டியலில் ஏ என் எஸ் எழுதிய நாலாணாவும் நாலு அவுன்ஸ் பிராந்தியும் இடம் பெறும் என சிலாகித்ததை குறிப்பிட்டார்) எழுதிய பகுதிகள் ஒரு வாசகனாய் தனக்கு திருப்தி ஏற்படுத்தினால் மட்டுமே அது பிரசுரமாகும் என்னும் மனக்கொள்கை கொண்டிருந்தவர்.
எமர்ஜென்ஸி காலத்தில் தமிழில் அதிகம் கண்காணிக்கப்பட்டதும் அரசாங்க தணிக்கைக்கும் அதிகமாக உள்ளானது தினமணியும் துக்ளக்கும் என்பது பத்திரிகை தர்மநிலை நேர்மை பேசுவதின் ருசு.
தினமணி அப்போது தலையங்கத்தில் வெறுமே வெள்ளைப் பக்கம் பிரசுரித்தது ஏ.என்.எஸ்ஸின் தனித்துவ எமர்ஜென்ஸி எதிர்ப்பு நிலை பிரகடன முழக்கம்.( துக்ளக்கில் கறுப்பு மைக்கோடுகளும் அட்டையில் ஒருமுறை முழுக்க முழுக்க கறுப்பு பக்கம் அச்சானதாகவும் ஞாபகம்). தான் மேற்கொண்ட எழுத்துப்பணிக்கு கண்ணியம் சேர்த்ததும் பரந்துபட்ட வாசிப்பை எழுத்திலும் பரவிவரச் செய்ததும் ஏ.என்.எஸ்ஸின் தனிச்சிறப்பு என்றால் அதுதான் அவரின் படைப்புப்பணிக்கான அங்கீகாரம் என்பதுதானே சரியாக இருக்கும்?!
மஹாத்மா காந்தி அவர்களின் குரலை இந்த 150வது பிறந்த நாளில் கேட்டு நினைவாஞ்சலி செய்வோம்.
ராணு மொண்டால் என்பவர் கல்கத்தாவில் ராணாகட் ரயில் நிலையத்தில் சினிமா பாடல்களைப் பாடி காசுக்காகக் கையேந்திக் கொண்டிருந்தவர். சிறு வயதிலேயே பெற்றொர்களை இழந்தவர். 19 வயதில் திருமணமாகி ஒரு பெண்ணுக்குத் தாயானவர்.
லதா மங்கேஷ்கர் போல அவ்வளவு தத்ரூபமாக அவர் பாட, அந்தக்குரலில் மயங்கிய அதீந்திர சக்கரவர்த்தி என்ற வழிப்போக்கர் ராணுவின் பாடலைப் பதிவு செய்து அதனை யூ டியூபில் போட அது வைரலாகி ராணுவிற்கு ஆயிரக் கணக்கானோர் பாராட்டுதல்களைத் தெரிவிக்க அவரது குரல் வெளிச்சத்துக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ஸிங்கர் போட்டியில் கலந்து கொள்ளவும் ராணுவிற்கு வாய்ப்புக் கிட்டியது. அதில் பங்குபெற்ற பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா ராணுவிற்கு ஹிந்தித் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் அளித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவரை கல்கத்தவில் உள்ள பிரபல மனமகிழ் மன்ரம் அவரை துர்கா பூஜை விழாவில் சிறப்புப் பாடகராக பாடவும் அழைத்திருக்கிறது.
எத்தனை நல்ல உள்ளங்கள்!!!
திறமைக்கு உகந்த மதிப்பைக் கொடுக்க நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும். !!!
அவர் ரயில் நிலையத்தில் பாடி வைரலான பாடலையும், திரையில் பாடிய பாடலையும் கேட்டு ரசியுங்கள்!
நாடகத் துறை இப்பொது மறுமலர்ச்சி அடைந்துகொண்டிருக்கின்றது என்றால் இவரைப்போன்றவர்கள் மீண்டும் மேடைக்கு வந்திருக்கிறார்கள் என்பதால்தான்.
யார் அவர்?
கோமல் தாரிணி – கோமல் சுவாமினாதன் என்ற புலிக்குப் பிறந்த புலி.
“இளைய தலைமுறையினரை மேடை நாடகங்கள் பக்கம் திருப்பறதுதான் என் லட்சியம். கலைஞர்களுக்கு தியேட்டர்தான் முதல் பாடசாலை. வசன உச்சரிப்பு, உடல்மொழின்னு எல்லா நுணுக்கங்களையும் மேடை நாடகங்கள் மூலமாதான் மெருகேற்றிக்க முடியும். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுன்னு சொல்லிக்கிட்டா அதுக்குத் தனி மரியாதை இருக்கு. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ கலைஞர்களுக்கு மேடையில் வாய்ப்புகள் காத்திட்டிருக்கு…’’ நம்பிக்கையளிக்கிறார் கோமல் தாரிணி.
தண்ணீர் தண்ணீர் நாடகத்தைப்பார்த்த சில பிரபலங்களின் கருத்துக்கள்:
திருமதி வித்யா சுப்பிரமணியம் :
தண்ணீர் தண்ணீருக்கு எண்பதுகளில் ஏற்பட்ட சிக்கல் தெரியும். அப்போது நாடகமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலச்சந்தர் மூலம் அதைத் திரைப்படமாகப் பார்த்து வியந்திருக்கிறேன்.
இத்தனை காலம் கழித்து நேற்று மேடையில் மீண்டும் அதை நடகாமாகப் பார்த்தது நல்லதொரு அனுபவம். இதை விமர்சிப்பதென்பது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல. மூன்றே மூன்று குடிசைகள் கொண்ட செட்டிங்கும் சரி, ஒலி, ஒளி அமைப்புகளும் சரி, அற்புதம். சுவர்க்கோழியின் ரீங்காரத்திலிருந்து, மரம் அறுத்து மாட்டுவண்டி செய்யும் சப்தம் வரை ஒலிவடிவிலேயே பல விஷயங்களைக் காட்சி படுத்தியிருந்தது பிரமாதம். நடித்தவர்கள் அத்திப்பட்டு கிராம மக்களாக வாழ்ந்திருந்தார்கள்.
ஆர் டி முத்து :
ஒன்றரை மணிநேர நாடகத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதபடியால் இடியாகவும் கிண்டலாகவும் வந்திறங்குகின்றன. வாத்தியார் ராமன்,வீராசாமி போன்ற பழைய கலைஞர்கள் இறந்து போனாலும், போத்திலிங்கம் மீண்டும் வாத்தியார் ராமனாக வந்து இயல்பான நடிப்பில் அசத்துகிறார்.
சாய் சுந்தரி நாராயணன்:
வானம் பொய்த்த ஈரம் காய்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் தினம்தினம் தண்ணீருக்கான தீர்க்க இயலாத போராட்டமும், அதன் பின்னணியில் அரசியலும் தான் கதை.
பங்கேற்ற ஒவ்வொருவரும் வாழ்ந்திருந்தார்கள்.
கௌரி கிருபானந்தன்:
வாணி மகாலில் அக்டோபர் 11, அன்று நடந்த “தண்ணீர் தண்ணீர்” நாடகம் மிகஅருமை. எங்கேயும் தோய்வு இல்லாமல் விரைவு ரயில் வண்டி போல் நாடகம் மேடை ஏற்ப்பட்டதோடு பார்வையாளர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டது. இயக்குனர் தாரிணி அவர்களின் முனைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. அரங்க அமைப்பு கூடுதல் சிறப்பு பெற்றுவிட்டது.
விகடன் பாராட்டுகிறது:
தண்ணீர் தண்ணீர் நாடகத்திற்கு முன் பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் ஐந்து சிறுகதைகளை நாடகமாக்கி வெற்றிகரமாக மேடை ஏற்றினார்.
அதற்கு முன் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ஐந்து பேரின் கதைகளை நாடகமாக்கி நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.
இதுபோல இன்னும் நிறைய நல்ல நாடகங்களை மேடைக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டிவரும் தாரிணி அவர்களுக்குப் பாராட்டுதல்கள்!
தொடருட்டும் அவரது நாடகப் பயணம்!
அவரது வலைப்பூவில் அவரே தன்னைப்பற்றிக் கூறுகிறார்.
பார்த்தசாரதி ராகவன் என்னும் பாஸ்போர்ட் பெயர் கொண்ட நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது அனைத்தும் சென்னை நகரில்.
சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்.
என் அப்பா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பரம்பரையாகப் பள்ளி ஆசிரியர். தாத்தாவும் பெரியப்பா ஒருவரும் இரண்டு அத்தைகளும் அவர்களது வாரிசுகளில் ஒரு சிலரும் பள்ளி ஆசிரியர்களாகவே உள்ளார்கள். பள்ளி நாள்களில் ஒழுங்காகப் படிக்காததால் நான் பத்திரிகை ஆசிரியர் ஆகிப்போனேன்.
காஞ்சீபுரம் கிருஷ்ணா ஸ்கூல், கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி, தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தேன். மிகவும் சுமாரான மாணவன். ஆனால் பேச்சுப் போட்டிகளில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து பேசி எப்படியாவது பரிசு வாங்கிவிடும் வழக்கம் இருந்தது. ஓர் ஆண்டு விழாவுக்கு வருகை தந்த கோகுலம் ஆசிரியர் அழ. வள்ளியப்பா கொடுத்த உற்சாகத்தில் என் முதல் எழுத்து முயற்சியாகக் கவிதை மாதிரி ஒன்றை எழுதிப் பார்த்தேன். அதை வள்ளியப்பா கோகுலத்தில் பிரசுரித்தார். தொடர்ச்சியாக, ஒன்பதாம் வகுப்பில் இருந்தவரை நிறையக் கவிதைகள் எழுதித் தள்ளிக்கொண்டிருந்தேன்.
பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் முதல் முதலில் தீவிரமாகப் புனைகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அதற்குமுன் தொடர்கதைகளாகச் சிலவற்றை மட்டும் படித்திருந்தேன். லா.ச. ராமாமிருதத்தின் உரைநடையைப் படித்ததும் கவிதையைத் தலைமுழுகினேன். அந்நாளில் என்னைப் பைத்தியம் பிடித்து அலையவைத்த எழுத்து அவருடையது. தொடர்ந்து, தமிழின் அனைத்து முக்கியமான படைப்பாளிகளையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். குரோம்பேட்டை லீலா லெண்டிங் லைப்ரரியில் பொதுவாக என்னைத் தவிர நவீன இலக்கிய நூல்களை அந்நாளில் வேறு யாரும் தொடுவதில்லை என்பதால் நான் விரும்பிய அனைத்து நூல்களும் எனக்கு எளிதாகக் கிடைத்தன. பல அரிய புத்தகங்களைத் தொலைந்துவிட்டது என்று நூலகரிடம் பொய்சொல்லி நானே வைத்துக்கொண்டது பற்றிய உறுத்தல் இப்போதும் உள்ளது.
என் அப்பாவுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. பாரதி கலைக்கழகம் என்ற பெயரில் இன்றும் இயங்கும் கவிஞர்களின் அமைப்பு ஒன்றை என் பெரியப்பா சுராஜ் நடத்தி வருகிறார். என் அப்பா உள்ளிட்ட சுமார் நூறு மரபுக்கவிஞர்கள் அங்கே பிறந்து வளர்ந்தவர்கள். மாதம்தோறும் அவர்கள் நடத்தும் கவியரங்குகளுக்குச் சென்றுவருவேன். அங்கு அறிமுகமான கவிஞர் நா.சீ. வரதராஜன் [பீஷ்மன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதுவார்.] லா.ச. ராமாமிருதத்தின் நண்பர். அதனாலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. நான் எழுதித் தள்ளிக்கொண்டிருந்த குப்பைகளைக்கூடப் பொருட்படுத்திப் பாராட்டி, உற்சாகப்படுத்துவது அவருடைய வழக்கம். நான் பிரமாதமான எழுத்தாளனாக வருவேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லி, என்னை நம்பவைத்து அந்த வழியில் திருப்பிவிட்டதில் முக்கியப் பங்கு அவருடையது.
அதே வேலையை இன்னும் சற்றுப் பிந்திச் செய்தவர் தி.க. சிவசங்கரன். திருமணமான புதிதில் என் மனைவி அலுவலகத்துக்கு போன் செய்து, ‘இன்று தி.க.சியிடமிருந்து கார்ட் வரவில்லை’ என்று சில நாள்களில் வியப்போடு சொல்லுவாள். நெல்லையில் இருந்தபடி சென்னையில் என்னை வளர்த்தவர் அவர்.
கல்லூரிக்குச் சென்ற வயதில் எழுத்தார்வம் அதிகரிக்க, படிப்பில் நாட்டமற்றுப் போனது. எப்போதும் ஊர் சுற்றல், சினிமா, இலக்கியக் கூட்டங்கள், குட்டிச்சுவர் அரட்டைகள் என்று தடம் மாறினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கதைப் பிரசுரம், ஏராளமான அரியர்ஸ் என்று வீடு திரும்பினேன்.
மிகுந்த குழப்பமான, கொந்தளிப்பான காலக்கட்டம். ஒரு பொறுக்கியாகவும் பரம சாதுவாகவும் மாறிமாறி வாழ்ந்த தருணம். எதிர்காலம் எதுவென்று தெரியாமல் மிகவும் குழம்பினேன். திடீர் எழுச்சியும் திடீர் விரக்தியுமாக மாறி மாறி மனத்துக்குள் அலைக்கழிக்கப்பட்டேன். பக்திப் பித்து ஏறியது. மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் என்று கொஞ்சம் அலைந்தேன். ஓயாமல் ரஜனீஷ், ஜே. கிருஷ்ணமூர்த்தி, சித்தர் பாடல்கள் என்று என்னென்னவோ படித்தேன். ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தா, உனக்கு இந்த வழி ஒத்துவராது, போய்விடு என்று சொன்னார். நேரே பறங்கிமலை ஜோதி தியேட்டருக்குச் சென்று மூன்று காட்சிகள் தொடர்ச்சியாகப் பார்த்து அவரை மனத்துக்குள் பழிவாங்கினேன். என் பொருட்டுக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த பெற்றோருக்கு எந்த வகையிலாவது ஆறுதல் தர முடியுமா என்று பார்த்தேன். வழி ஏதும் புலப்படவில்லை. தம்பிகள் இருவரும் அமர்க்களமாகப் படித்து, பள்ளி முதல், கல்லூரி முதல் என்று புகழ் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் அவமான உணர்வை அதிகரித்தது.
உலகத் தொடர்பிலிருந்து என்னை முற்றிலுமாகக் கத்தரித்துக்கொண்டு, எக்கச்சக்கமாக எழுதினேன். என்மீது பரிதாபப்பட்டு என் பெரியப்பா சுராஜ், தம் நண்பரான விக்கிரமனிடம் சொல்லி எனக்கு அமுதசுரபியில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். நாநூறு ரூபாய் சம்பளம். லிங்கிச் செட்டித் தெருவில் அலுவலகம். ஒரு மணிநேர ரயில் பயணம்.
அந்தப் பயணத்தில் ம.வே. சிவகுமாரைச் சந்தித்தேன். முன்னதாக கன்னிமரா நூலகத்தில் அவரது புத்தகப் பின் அட்டையில் போட்டோ பார்த்து அவரை அடையாளம் கண்டுகொண்டிருந்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஒரே நாளில் நண்பராகவும் ஆசிரியராகவும் ஆகிப்போன சிவகுமார் எனக்கு எழுத்தின் நுட்பங்களை போதித்தார். பல நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டினார். நிறைய புத்தகங்களையும் வாசிக்கக் கொடுத்தார். அசோகமித்திரனை மனப்பாடம் செய்யச்சொன்னார். உருண்டை உருண்டையாக, ஒன்றோடொன்று ஒட்டாமல், உதிர்ந்துகிடக்கும் வேப்பம்பழங்கள் போன்ற கையெழுத்தில் அவர் எழுதும் சிறுகதைகளையெல்லாம் எனக்கு முதலில் வாசிக்கக் கொடுப்பார்.
சிவகுமாரின் தொடர்புக்குப் பிறகுதான் என் எழுத்து எனக்கே பிடிக்கத் தொடங்கியது. பத்திரிகை ஆசிரியர்களும் அதன்பிறகுதான் என் கதைகளைப் பொருட்படுத்த ஆரம்பித்தார்கள். கணையாழி ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் என்னுடைய ஒரு கதையைப் படித்துவிட்டு நேரில் வரச்சொல்லிப் பாராட்டி, அடுத்த இதழில் பிரசுரித்தார். கல்கி சீதாரவி கடிதம் எழுதிக் கூப்பிட்டுத் தொடர்ந்து எழுத இடம் கொடுத்தார். கி. ராஜேந்திரன் கல்கிக்கே வந்துவிடும்படி சொன்னார்.
எட்டாண்டுக் காலம் கல்கியில் இதழியல் பயின்றேன். கி. ராஜேந்திரனின் அண்மையும் அரவணைப்பும் ஆசிரியத்துவமும் எனக்கு உலகைப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தன. சீதாரவி ஆசிரியர் ஆனபிறகு கல்கியில் நிறைய எழுத ஆரம்பித்தேன். அநேகமாக, நான் எழுதி மிச்சமிருக்கும் இடங்களில்தான் மற்றவர்கள் எழுதுவார்கள் என்னுமளவுக்கு எழுதிக்குவித்தேன். அங்கே துணை ஆசிரியராக இருந்த இளங்கோவன் என் பரபரப்பு சுபாவத்தை மட்டுப்படுத்தினார். அவரது ஆளுமையையும் பணி நேர்த்தியையும் பார்த்துப் பார்த்துத்தான் என்னை வடிவமைத்துக்கொண்டேன். என் இடம், இருப்பு, வெற்றிகள், ஏற்றங்கள் அனைத்துக்கும் காரணமாக யாரையாவது சுட்டிக்காட்டச் சொன்னால் அவரைத்தான் சொல்வேன்.
2000ம் ஆண்டுத் தொடக்கத்தில் குமுதம் சென்றேன். அதுநாள் வரை சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவன், குமுதத்தில் அரசியல் எழுதக் காரணமாக இருந்தவர் ஆசிரியர் ராவ். பிறகு ரிப்போர்ட்டர் ஆரம்பிக்கப்பட்டபோது அதையே தொடர்ந்தேன். இடையில் குமுதம் ஜங்ஷன் என்னும் மிடில் மேகசினுக்கு எண்ணமும் வடிவமும் அளித்தேன். ஓராண்டுக்காலம் ஆசிரியராக இருந்து அந்தப் பத்திரிகையைக் கொண்டுவந்தேன். ‘குமுதம் இப்போதுதான் வயசுக்கு வந்திருக்கிறது’ என்று பேட்டி கொடுத்து அந்தப் பத்திரிகையை இழுத்து மூடச்செய்த பெருமை கமலஹாசனைச் சாரும்.
சில அரசியல் காரணங்களால் குமுதத்தில் என்னால் வெகுநாள் நீடிக்க முடியவில்லை. வெளியே வந்த என்னை ஆசிரியராக வைத்துத் தொடங்கப்பட்ட சபரி பப்ளிகேஷன்ஸை, அந்நிறுவனத்தாரால் தொடரமுடியவில்லை. பதிப்புத்துறைதான் இனி என்ற முடிவில் மட்டும் மாற்றமின்றி இருந்தேன்.
2003ம் ஆண்டு ராயர் காப்பி க்ளப் என்னும் இணைய மடல் குழுவில் அறிமுகமான பத்ரி சேஷாத்ரி, 2004 பிப்ரவரி முதல் தேதி கிழக்கு பதிப்பகத்தைத் தொடங்கினார். எனக்கு அது மிக முக்கியமான ஆண்டு. கிழக்கின் ஆசிரியராகப் பொறுப்பேற்றது, நீண்டநாள் காத்திருந்து குழந்தை பிறந்தது, பாரதீய பாஷா விருது கிடைத்தது, கெட்டிமேளம் தொடரின் கதை வசனகர்த்தாவாக முதல் முதலில் மீடியாவுக்குள் உத்தியோகபூர்வமாகக் காலெடுத்து வைத்தது என்று பல சம்பவங்கள். ஆகஸ்ட் 31, 2011 வரை நியூ ஹொரைசன் மீடியாவின் கிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ் பதிப்புகளுக்கும் ஆசிரியராக இருந்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கிழக்கு இக்காலக்கட்டத்தில் கொண்டுவந்தது. பல புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. எட்டாண்டுக் காலம் கிழக்கில் பணியாற்றி, செப்டெம்பர் 1, 2011 முதல் பணி விலகினேன்.
கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுத ஆரம்பித்தேன். கெட்டி மேளம் தொடரின்மூலம் இயக்குநர் விக்கிரமாதித்தன் அதனைத் தொடங்கிவைத்தார். கிழக்கிலிருந்து வெளியே வந்தபோது அதுவே முழுநேரப் பணியாகிப் போனது.
1997ல் எனக்குத் திருமணம் நடந்தது. என் மனைவி அதற்குமுன் நியூஸ் டுடே என்னும் நாளிதழில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்பதால் என் பணியின் கஷ்ட நஷ்டங்கள் அவருக்குப் புரிந்தது. எழுத்து, வாசிப்பு சார்ந்த அவரது ரசனை வேறு என்பதால் வீட்டில் இலக்கிய சர்ச்சைகளுக்கோ, வாத விவாதங்களுக்கோ இடமில்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொழுதுகளில் படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ, படம் பார்த்துக்கொண்டோ இருப்பேன். இது பற்றிய விமரிசனங்கள் இருந்தாலும் என் மனைவியும் குழந்தையும் என்னை முற்றிலும் புரிந்துகொண்டவர்கள். என் பெற்றோரைப் போலவே குடும்பப் பணிகளை என் தலையில் சுமத்தாதிருக்கிறார்கள்.
எனக்கு இளையராஜா பிடிக்கும். வீணை பிடிக்கும். வத்தக்குழம்பு பிடிக்கும். நீச்சல் பிடிக்கும். மதிய உறக்கம் பிடிக்கும். கடவுள் பிடிக்கும். ஜென் பிடிக்கும். மசாலா படங்களையும் கலைப்படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்கப் பிடிக்கும். ட்விட்டர் பிடிக்கும். மாவா பிடிக்கும். மரபுக்கவிதை பிடிக்கும். யோசித்தால் இன்னும் சில அகப்படக்கூடும். ஆர்வங்கள் அதிகம் என்றாலும் அக்கறை ஒன்றுதான். எழுத்து. தீர்ந்தது விஷயம்.
எஸ் ராமகிருஷ்ணன்
2018ஆம் ஆண்டிற்கான சாஹித்ய அகடமி விருதினைப் பெற்றுள்ள திரு எஸ் ராமகிருஷ்ணன், மிகச் சிறந்த பேச்சளாரும்கூட. படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் எப்போதும் இலக்கியத்துடனே வாழ்ந்துவரும் இவர், பல இடங்களைச் சுற்றிப் பார்த்து அனுபவித்தும் அனுபவம்பெற்றும் வருபவர்.
இவர் ஆரம்பித்துள்ள பதிப்பகம் “தேசாந்திரி” என்று பெயரிடப்பட்டுள்ளது மிகவும் பொருத்தம்.
ரசித்த படைப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் போதும், மேடைகளில் உரையாற்றும்போதும் நாமும் அவருடன் அந்தப் புத்தகத்தைப் படிப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்துபவர்.
எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதியுள்ளார். இருபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
இவரது “எம்பாவாய்” என்கிற கதை இப்படித் தொடங்குகிறது…
1976இல் வாகினி சுப்பிரமணியம் தொகுத்த “காலத்தின் குரல்”’ என்கிற ஆங்கிலத் தொகுப்பில் என் அம்மா எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி இருக்கிறது என்ற செய்தியை அமெரிக்காவிலிருந்து வேணி எழுதியிருந்தாள். என்னால் நம்ப முடியவில்லை.
கதைசொல்லியின் மகள் அமெரிக்கப் பொது நூலகத்தில் படித்த அந்தப் பகுதியினை ஸ்கேன் செய்து அனுப்புகிறாள். அந்தக் கடிதம் 26, ஜூலை 1974 என்று தேதியிடப்பட்டிருந்தது. இந்தக் கதை சொல்லப்படுவதற்கு நாற்பது ஆண்டுகள் முன்னால். கடிதம் எழுதியவர் இறந்து சில ஆண்டுகள் கழிந்துவிட்டன.
நன்மதி என்ற பெயருடைய, ஆறாவது வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்ட, பதினைந்து வயதில் திருமணமாகி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புகுந்தவீடு வந்து பதினேழு வயதில் முதல்குழந்தை பெற்ற அம்மாவிற்கு நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆசை.
காப்பிப்பொடி அரைத்து வியாபாரம் செய்யும் சகோதரர்களில் மூத்தவரான கணவருக்கு கதை, சங்கீதம் எதிலும் ஈடுபாடு கிடையாது. வாரப் பத்திரிகைகள் படிக்கும் மைத்துனர் மதுரை சென்று வரும்போது புது நாவல்கள் வாங்கிவருபவர். மகனும் நூலகத்திலிருந்து அவ்வப்போது புத்தகங்கள் எடுத்துக் கொடுப்பதுண்டு. வாகினியின் நாவல்கள் அறிமுகமாகி அவரது கதைகளை விடாமல் படித்து வருகிறாள் நன்மதி.
அச்சமயம் வருடம் ஒருமுறை மட்டுமே நடக்கும் இலக்கியக் கூட்டத்திற்கு வாஹினி வரப் போகிறாள் என்ற செய்தி ஒரு தட்டியில் நோட்டீஸ் ஒட்டியிருப்பதாகத் தெரிகிறது. அதைப் பார்க்கப் போகலாமென்றால், பெண் ஒருத்தி தனியாக வெளியில் போகக்கூடாது என்கிற குடும்ப விதிமுறை தடுக்கிறது. மகனைப் பள்ளிக்கு கூட்டிச் செல்வதுபோல் சென்று பார்க்கிறாள் நன்மதி.
வாஹினி எப்படி ஊருக்கு வருகிறாள், அவளைப்பார்க்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறாள் . கூட்டத்திற்கும் செல்ல ஆசை. ஆனால் கூட்டம் நடக்கும் நேரம், மாலை உணவு தயாரிக்க வேண்டிய நேரம். என்றாலும் பக்கத்து வீட்டில் சாதம் வைக்கச் சொல்லிவிட்டு, கூட்டத்திலிருந்து வந்து சாம்பார், ரசம் தயாரித்து விடலாம் என ஏற்பாடு செய்துகொள்கிறாள்.
பட்டுப்புடவை கட்டிக்கொண்டு போனால் தெரிந்துவிடும் என்று தனக்குப் பிடித்த வேறு ஒரு புடவை கட்டிக்கொண்டு தன் மகனை (கதைசொல்லி) அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள். கூட்டம் தொடங்கும்வரை தெரிந்த ஜோசியர் வீட்டில் இருந்துகொள்கிறாள்.
கிராப் தலை, பேன்ட் சட்டை அணிந்து மென்மையாகப் பேசுகிறாள் வாகினி. ஒரு பெண்மணி கூட பார்வையாளராக வரவில்லை. நன்மதி ஏதோ வேளையாக வந்தவள் தற்செயலாக வந்ததுபோல் பாவனையுடன் இருக்கிறாள். வாஹினி இவளைப்ப்பார்த்து ஒரு புன்முறுவல் பூக்கிறாள்.
பேகல் நிறைய எழுதவேண்டும், வர்ஜீனியா உல்ப், வில்லா கேதார், ஔவையார் போன்ற படைப்பாளிகளைப் பற்றி பேசுகிறாள். ஆண்டாள் பிறந்த ஊர் என்பதற்காகவே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்ததாகக் கூறுகிறாள்.
வீட்டிற்கு வந்ததும் நன்மதி கூட்டத்திற்குப் போய்வந்தது தெரிந்து அவர் கணவரும் மாமனாரும் கோபித்துக் கொள்கிறார்கள். கூடத்திற்குப் போய்வந்த மைத்துனர், வாஹினியை மறுநாள் காலை உணவிற்கு வீட்டிற்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
( மீதி அடுத்த இதழில் )
மரம் மரம் மரம் சாமி தந்த வரம்
வரம் வரம் வரம் நாம நட்ட மரம்
முக்கனிக்கு மூணு மரம்
மா மரம் பலா மரம் வாழை மரம்
மாமரம் மா மரம்
மாந்தளிரோ உவமை மாம்பூவில் வண்டு
மாவிலைகள் தோரணம் மாவடுவோ ஊறுகாய்
மாங்காய் மசக்கை மாம்பழமோ தித்திப்பு
மாங்கொட்டை மருந்து மாம்பலகை கட்டில்
மாஞ்சோலைக் குயில்கள் மாந்தோப்பில் காதல்
பலா வேர்ப்பலா
பலாஇலையில் பிரசாதம் பலாப்பிஞ்சு கறிவகை
பலாப்பலகை மிருதங்கம் பலாக்காய் வறுவல்
பலாப்பழம் தேன் பலாக்கொட்டை கூட்டு
பலாச்சக்கை தைலம் பலாவேர் மருந்து
பலாப்பால் பிசின் பலாத்தோப்பில் யானை
வாழையடி வாழை
வாழைக்கன்று மேடைக்கு வாழை இலை உணவுக்கு
வாழைப்பூ வடைக்கு வாழைக்காய் திதிக்கு
வாழைப்பழம் பூஜைக்கு வாழைத்தண்டு கல்கரைக்க
வாழைத்தோல் காகிதம் வாழை நார் மாலைக்கு
வாழைமரம் தோரணம் வாழைக்கிழங்கு மருந்து
வாழைப்பட்டை குளிர்ச்சி வாழைத்தோப்பில் மாடு
முக்கனியே தமிழகம்
மா பாண்டியநாடு
பலா சேரநாடு
வாழை சோழநாடு
முக்கனியே முத்தமிழ்
வாழை இயல்
மாங்கனி இசை
பலாச்சுளை நாடகம்
முக்கனியே வாழ்வியல்
மாங்கனி மார்பகம் !
பலாச்சுளை பெண்குறி !
வாழைப்பழம் ஆண்குறி !
பள்ளித் தலைமை ஆசிரியையான சுகுணாவுக்கு எங்கள் டாக்டரின் அணுகுமுறை பரிச்சயமானது, பிடித்தமானது. அதனால்தான் தன் பள்ளிக்கூடத்தில் சமீபத்தில் சேர்ந்திருந்த ஆசிரியையான முத்துலட்சுமியை எங்களிடம் அழைத்து வந்தாள். கடந்த ஒரு மாதமாக முத்துலட்சுமி சோகமான முக வாட்டத்துடன் இருப்பதைக் கவனித்திருந்தாள். . வாராவாரம் குழுவாக ஆசிரியர்களைச் சந்திக்கும் போதும் அவளுடைய சிதறிய கவனத்தையும், பதட்டத்தையும் கவனித்தாள். முத்துலட்சுமி அடிக்கடி லீவு, தலைவலி என்றாள்.
பக்கவாட்டில் டாக்டரைப் பார்த்தாள். அவர் எல்லா பரிசோதனையும் செய்து உடல் நோய் ஒன்றும் இல்லை என்றார். மன உளைச்சல் என்று மூன்று மாதத்திற்கு மருந்து கொடுத்திருந்தார். முத்துலட்சுமியின் நிலைமையைப் பார்த்து, சுகுணா டீச்சர் எங்கள் டாக்டரிடம் அவளை அழைத்து வந்தாள். டாக்டர் அவளை தன் வலியை வர்ணிக்கச் சொல்லி, அவள் பதில்களைக் கேட்ட பிறகு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர்ரான என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்.
முத்துலட்சுமி இந்தப் பள்ளிக்கூடம் சேர்ந்த இரண்டாம் வாரத்திலிருந்தே தான் சோகமாக இருப்பதை உணர்ந்தாகச் சொன்னாள். முப்பத்து ஐந்து வயது, ஆசிரியர் படிப்பு படித்தவள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை. மகள்கள் நிலா, கலா இருவரின் பள்ளி ஆண்டு போய்க்கொண்டு இருந்ததால் தந்தையுடன் இருக்க வேண்டியதாயிற்று. அவளுடைய இளைய மகள் நிலா, அம்மா முத்துலட்சுமியுடன் வீடியோவில் பேசும்போது “அம்மா அதே புடவையா? மாத்திருக்கவில்லை? இங்கு இருந்தது போல ஏன் அம்மா சிரிப்பதில்லை?” என்று கூறியதைப் பகிர்ந்தாள்.
நான்கு மாதத்திற்கு முன்பு முத்துலட்சுமியும் அவளுடைய கணவரும் சென்னை வந்திருந்த போது இவர்களுக்கு பிடித்தமான இடத்தில் நிலத்தை வாங்கினார்கள். சொந்த வீடு கட்ட ஆசை, கட்ட ஆரம்பித்தார்கள். இதைப் பார்வையிட முத்துலட்சுமி இந்தியாவில் தங்கிவிட்டாள். கணவர், பிள்ளைகளிடமிருந்து, இதுவே முதல் பிரிவு. தவித்தாள்.
இன்னொரு காரணி, முத்துலட்சுமி எதிர் வகுப்பில் ஒரு பையன் அடி வாங்குவதைப் பார்த்தாள். பள்ளியில் புது ஆசிரியையான இவளால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவனுக்காகப் பரிதாபப் பட்டாள். தன் வகுப்பு ரமேஷ், தாமஸ் இருவரும் தினமும் அடி வாங்குவதும் (நான் சொல்வது முப்பது வருடத்திற்கு முன்பு, அடிக்கக் கூடாது என்ற சட்டம் முழுதாக அமல்படுத்துவதற்கு முன்னால்) தெரிய வந்தது. இவர்களைக் காப்பாற்ற இயலவில்லையே என்று மனம் வருந்தியது. பள்ளிக்கூடம் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சோர்வாக இருப்பது போல் இருந்தது. “என்ன செய்வது” என்று தெரியவில்லை. அந்த தவிப்பே தலைவலி ரூபமானது. மனம் மொழியில் தவிப்பு, அதுவே உடல் மொழியில் தலைவலியாக ஆனது.
மற்றவரிடம் நக்கலாக, அவதூறாகப் பேசமாட்டாள், யாரையும் உதாசீனம் செய்யமாட்டாள், கண் பார்த்து உதவி செய்வாள். விரும்பிக் கற்றுத்தருவாள். மாணவர்கள் அடி வாங்குவதைப் பார்த்து அதை ஜீரணிக்க முடியவில்லை. புதுசாக சேர்ந்ததால் அந்த பள்ளியின் நிர்வாக முறைகள் தெரியவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தத்தளித்தாள்.
இந்த ஒரு மாத காலமாக தனக்கு மட்டும் சமைப்பதைக் குறைத்ததாகச் சொன்னாள். பசி இல்லையாம். தூக்கமும் தான். இதை முதலில் சரிவரச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவளுடைய ஆழ் மனதில் மாணவர்கள் நிலை வாட்டியது. அதற்குப் பிரதானம் கொடுத்தேன். அதைப் பற்றி ஸெஷனில் பேச ஆரம்பித்தோம்.
முத்துலட்சுமி டீச்சர் ட்ரெயினிங்களில் விவரிக்கும் வெவ்வேறு கற்றுத் தரும் விதங்களைப் பற்றியும், ஆராய்ச்சிகளின் முறைகளையும் சக ஆசிரியைகளுடன் உற்சாகத்துடன் பகிர்வாள். அவைகளை அமலுக்குக் கொண்டு வர முயன்று, கூடப் பணிபுரிவோரை இதில் சேர்த்துக் கொள்வாள். இதனால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்தது அவளை மேலும் ஊக்கவைத்தது..
இந்தப் “பகிர்தலை” சுகுணா டீசரின் உதவியுடன் சற்று மாற்றி அமைத்தேன். முத்துலட்சுமியைத் தகவல்களைத் தேடிச் சேகரிக்க ஊக்க வைத்தேன். சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட, தலைவலி தானாக விலகியது. தன் முயற்சி பலருக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக அந்த தகவல்களை எளிதாக அவளை எழுதச் சொல்லி, படங்களுடன் ஆசிரியைகள் அமரும் அறையில் வைக்க முடிவெடுத்தோம். அதற்கென்று ஒரு இடம், இதை யார் வேண்டுமானாலும் படிக்க உபயோகிக்க, அது சந்தேகங்களைத் தெளிவு செய்யும் “கற்றல்-பகிருதல்” இடமாகியது, மெதுவாக இதில் ஆர்வம் கூட தங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் இரண்டோ மூன்றோ ஆசிரியர்கள் இங்குக் கூடிப் பகிர்வது என்றிருந்தது. முத்துலட்சுமி உபயோகமாகத் தான் செய்ததைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம் அடைந்தாள்.
இந்த யுக்தியை வைத்து, மாணவர்கள் நிலை தன்னை வாட்டியதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி அவளை யோசிக்கச் செய்தேன். இதில் அவள் தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததும் வெளிப்படையாகப் புரிய வந்தது. இதற்கு விடை காணலாம் என்று ஸெஷன்கள் போனது.
அதே நேரத்தில் முத்துலட்சுமியின் பக்கத்து நிலம் காலியாக, இவர்களே அதை வாங்கினார்கள். அங்கு ஒரு சின்ன குடிசை போட்டாள். இதைப் பற்றிப் பேசினாள். இந்த சமயத்தில், அங்குக் கட்டிடம் கட்ட வந்தவர்களின் பிள்ளைகள் படிக்காமல் இருப்பதைப் பார்க்கச் சங்கடமாக இருப்பதாகச் சொன்னாள். அதைப் பற்றி இன்னும் யோசிக்கவும் செய்தேன், பேச வைத்தேன். பிடிக்காத நிலைமைகளைச் சங்கடமாகக் காண்பது மன உளைச்சல் உண்டாவதற்கு சந்தர்ப்பம் ஆகும். அதே சங்கடங்களை அவை என்ன, எப்படித் தீர்வு செய்வது என்ற பதில்களைத் தேடலே மன உளைச்சலுக்கு இடம் இல்லாமல் செய்து விடும். முத்துலட்சுமி, இந்தப் படிக்காத ஏழு பிள்ளைகளுக்கு, அந்த குடிசையில் மாலை நேரத்தில் வகுப்பு நடத்துவது என்று தீர்மானம் ஆனது. ஆரம்பித்தாள்.
சுறுசுறுப்பானது முத்துலட்சுமியின் நாட்கள். செய்யச் சக்தி தேவைப் பட்டது, தானாக உணவு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கினாள். இத்துடன் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தேன். அந்த ஏழு பிள்ளைகளையும் தன்னுடைய உடற்பயிற்சியில் சேர்த்துக்கொண்டு, தினம் ஒரு விதமான உடற்பயிற்சி என்று அமைந்தது.
அதே போல வாரம் ஏழு நாட்களுக்கும் எழுதுவது, படிப்பது என்று மட்டுமே அல்லாமல் அவர்களுக்குப் பாட்டு, வரைவது, நாடகம், நாட்டியம் எனப் பாடங்களை பல்வேறு முறையில் பயின்றாள்.
இதைச் செய்த போதிலும் அந்த தண்டிக்கப் படும் மாணவர்களைப் பற்றிய சிந்தனை வந்தது. அவள் முன்னால் பல கேள்விகள் நின்றன. அந்த மூன்று மாணவர்கள் போல் இருப்பவர்கள் ஏன் இப்படித் தண்டிக்கப் படுகிறார்கள், அதற்கு என்ன செய்யலாம்? தன் ஆசிரியர்களுடன் இந்த கேள்வியை எழுப்பத் துணிவு வந்தது. “கற்றல்-பகிருதல்” இடத்தில் விடைகளைப் பகிர ஆரம்பித்தாள். அவற்றைச் செயல் படுத்திக் காட்டினாள். அந்த காலத்திலேயே ஸாஃப்ட் ஸ்கில்ஸை (Social-Emotional Learning Skills) படிப்பில் சேர்த்து விட்டாள்.
தன்னால் முடிந்ததைச் செய்ததும், தான் செய்வதில் குதுகலம் அடைய மனநலம் மேலோங்கியது. நிலா கலா, கணவனுடன் வீடு கட்டுவதை, எப்படி அமைக்க என்ற யோசனைகளைக் கூட்டாகப் பேசி முடிவு செய்வதை ரசித்து, சந்தோஷமானாள். தான் செய்வதைப் பற்றிப் பகிர்ந்தாள். நாட்கள் திருப்தியாக நகர்ந்தது!
எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது.
கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள் மனம் கேள்வி கேட்டது.
‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே… என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன்.
கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.
“மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார் கூறியிருக்கிறார்…”
“அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆ·ப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது தியானம் பண்ண விடு!”
ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்… மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம். ஒழுங்காகத் தியானம் செய்.
அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும் தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்றவேண்டும். ஐந்நூறு ரூபாயாவது ஆகும்.
தியானம்… தியானம்… எங்கேயோ போகுதே.
கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது. சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும்.
சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?
தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை.
அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே.
அவரால் எப்படி முடிந்தது. பசியே எடுத்திருக்காதா? மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை? நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.
“ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!”
எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.
“இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?… கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?”
கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.
நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள் தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.
சரி சரி… மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ.
தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.
அமைதியான நதியினிலே ஓடம்… அருமையான பாட்டு.
சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே…
ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!
ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம். இப்போது, மாத்திரை போட்டுக் கொண்டால் தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலிமை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?
உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது?
அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு-
தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டுமானாலும் நினை. ப்ளீஸ்… கொஞ்சம் ஒத்துழையேன்.
அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.
‘அலை பாயுதே கண்ணே…!
என் மனம் அலை பாயுதே!’ கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்படவில்லை.
அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்?
ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.
இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.
முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி,
ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை. அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.
ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா…
நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்.
லீவு நாள்ல கூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!
திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ… இதுதான் தியானமா?
எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.
யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.
“ஏங்க… எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை?”
பபி…
-துக்ளக் சத்யா படித்ததில் பிடித்தது😀
மலர் மெத்தையில் நாம் புரள
மண்தரையில் சுகம் இழந்து
நாளும் துன்பத்தில் வீழ்ந்து
துவளும் குடும்பங்கள் இங்கே!
பலவித பட்டாடை அணிந்து
அறுசுவையோடு உண்ண
ஒருசுவையும் அறியா மக்கள்
தெருவில் திரிவதும் இங்கே!
துடிப்புள்ள சிறுவர் சிறுமிகளும்
படிக்க பள்ளிக்குச் செல்லாமல்
நாளும் வெடிமருந்தில் கலந்து
வாழ்வை தொலைப்பது இங்கே!
அனைத்தும் அறிந்த நாமும்
ஆர்ப்பாட்டமின்றி விழிப்புணர்வோடு
அன்போடு சிறுவர் சிறுமியர்
பள்ளி செல்ல துணைபுரிவோம் !
பட்டாசில்லா தீபாவளி
குடிசைவாழ் மக்களோடு கலந்து
கட்டுப்பாட்டோடு கொண்டாடி
தீப ஒளியில் மகிழ்வோம்!
(நன்றி: https://ta.wikipedia.org/s/ch3)
இராவணனை நாடகத் தலைவனாக அமைத்து இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை நாடகக் காவலர் மனோகர் நடித்தார் என்பது அனவரும் அறிந்த்து.
ஆனால் கம்ப ராமாயணத்தை அடியொற்றி அதேபோல ஐந்து காண்டங்களுடன் இராவணனைக் காவியத் தலைவனாக்கி இராமனைக் கெட்டவனாக்கி அமைக்கப்பட்ட நூல் இராவண காவியம். முடிவில் இராவணன் துன்பியல் தலைவனாக அழிந்து படுகிறான்.
இந்த இராவண காவியம் எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய புலவர் குழந்தை அவர்களின் புரட்சிக் காப்பியம் இராவணகாவியம்.
திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் இயற்றப்பட்ட இன்னூல் 1946 இல் வெளிவந்தது.
எந்தமிழன் செந்தமிழ்க்காக வாழ்ந்தஇரா
வணன்பெருஞ்சீர் இனிது பேசும்
செந்தமிழின் பூங்காவாம் இராவணகா
வியம்எனும்இத் தேம்பா நூலைத்
தந்தமிழின் பண்பாட்டை அறிந்துநடைப்
பிடித்தினிது தகவே வாழப்
பைந்தமிழின் பேரேடா வருங்காலத்
தமிழர்க்குப் படைக்கின் றேனே
இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 – ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் தேதி தடைசெய்யப்பட்டு பிறகு 1971ம் ஆண்டு (தி மு க ஆட்சியில்) அரசின் தடை நீக்கப்பட்டது.
இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. .
இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை பாடியுள்ளார். இக்காவியம் வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாகச் சித்தரிக்கிறது.
இது கூறும் கதை இங்கே:
இராவணனின் இல்லறம்
இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவியின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன், பீடணன் என மூன்று ஆண் குழந்தைகளும், காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டார்.முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.
ஆரியர் வருகை
வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கு கோசிகன் (விசுவாமித்திரர்) போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணனுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.
இராம சகோதரர்களின் கொலைகள்
வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் (விசுவாமித்திரர்) அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன் எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புருத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இனங்காததால், இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்து கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றார்.
சீதையை இராவணன் கவர்தல்
படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம் வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாக போற்றினார்.
பீடணன் வெளியேறல்
இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது என்றார். பீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் பீடணன் தன்படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார்.
கும்பகன்னன், சேயோன், இராவணன் வீர மரணம்
இராமனுக்கும் இராவணுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகன்னன் போரில் வீர மரணமடைந்தார். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணன் அவருடைய மகன் சேயோன் தேற்றினார். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.
இராமனால் இராவணனின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார், பீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன.
மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தார். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தார்.
எப்படி இருக்கிறது இந்தத் திராவிட இராவணாயணம் ?
அன்னநடை யென்பார் மின்னலிடை யென்பார்
செந்நுதல் கருங்கூந்தல் கயல்விழி யென்பார்
கன்னமோ தித்திக்கும் மாம்பழக் கதுப்பென்பார்
மனங்கவர் கொவ்வைப் பழமே யதரமென்பார்!
நாவென்பார் இன்சுவை யளிக்கும் என்பார்
கவர்கின்ற பற்களோ முத்துக்கள் என்பார்
பூவொத்த மென்மையுடை மெய்தா னென்பார்
செவ்விய கதுப்புக்கள் பெண்ணழகே யென்பார்!
ஆசையைத் தூண்டிவிடும் வாய்தா னென்பார்
பேச்சின்றி மயக்கிவிடும் மலரிதழ் என்பார்
இச்சைதனை யுருவாக்கும் மென்துடை யென்பார்
அச்சமொடு நடைபயிலும் தளிர்பாத மென்பார்!
தேன்குரலே பெண்குரலாம் நாணமே முகவழகாம்
மன்னருமே ஆடிவிடும் மருள்கின்ற கண்வீச்சாம்
தன்னழகால் வரும்மமதை எழில்தனையே கூட்டிடுமாம்
இன்னெழில் வதனமுமே கெஞ்சலொடு கொஞ்சிடுமாம்!
பண்பாடும் புலவருமே இவையெல்லாம் கூறியபின்
பெண்ணிற்கு கற்புமிக மிகமிகவே வேண்டும்
ஆண்களுமே பிறபெண்ணை சோதரியாய் கொளவேண்டும்
புண்ணாக்கும் வார்த்தைகளை சொல்வதுதான் சரியாமோ!
பருவத்தை ஏன்கொடுத்தான் பெண்ணெழிலை ஏன்படைத்தான்
உருவத்தை படமாக்கும் விழிதனையே ஏனளித்தான்
மருட்டிடும் சலனமுடை மனந்தனையே ஏன்கொடுத்தான்
வெருட்டுகின்ற ஆசைதனை ஏனிறைவன் அளித்திட்டான்!
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
நண்பர்கள் நால்வர் சேர்ந்து விட்டால்
நிறையவே அங்கே இருக்கும் கிண்டல் !
நவராத்திரி கொலு வந்தது என்றால்
நிச்சயம் நமக்கெலாம் கிடைக்கும் சுண்டல் !
ஒன்றா இரண்டா சுண்டலின் வகைகள் !
விதம் விதமாக எத்தனை சுவைகள் !
கொலு வைத்த வீட்டில் மணக்கும் மணக்கும் –
மனதைக் கொள்ளை அடிக்கும் சுண்டல் !
சாமிகள் படியில் கொலு வீற்றிருப்பர் !
மாமிகள் ரெடியாய் சுண்டலை வைப்பர் !
மற்றவர்க்கெல்லாம் ஒற்றைக் குறிக்கோள் –
“ஒரு கை பார்ப்போம் இன்றைய சுண்டல் !”
எத்தனை சுண்டல் வந்து விட்டாலும்
சுண்டலின் ராணி பட்டாணி சுண்டல் !
அலுக்காது சலிக்காது அசை போடுவோம் நாம் –
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் !
வெள்ளையும் கருப்புமாய் காராமணி சுண்டல் !
அதேபோல் இருவிதம் கொண்டை சுண்டல் !
உப்பும் காரமும் சரியாய் இருந்தால்
சற்றும் சளையாது தின்போம் சுண்டல் !
பழகிய நட்பு போல் பாசமாய் இருக்கும்
கரையும் பாசிப் பருப்பு சுண்டல் !
அளவாய்த் தேங்காய் துருவிச் சேர்த்தால்
அள்ளித் தின்போம் கடலைச் சுண்டல் !
நெஞ்சு நிமிர்த்திடும் நிலக் கடலைச் சுண்டல் !
நிறுத்த முடியாத சுவைதரும் சுண்டல் !
அனைவரும் வந்து அன்புடன் சுவைக்கும்
நம நம நாவிற்கு நல்லதொரு சுண்டல் !
எத்தனை வகைகள் ! எத்தனை சுவைகள் !
அம்மா கைமண அதிசய சுண்டல் !
என்றும் நினைவினில் தங்கிடும் அன்னை
என்னை நினைத்து செய்திட்ட சுண்டல் !
காலையில் தூவும் மழைபிடிக்கும்
காரிருள் மேவும் மதிபிடிக்கும்
மாலையில் மயங்கும் ஒளிபிடிக்கும்
மார்கழி வழங்கும் பனிபிடிக்கும்
சோலையில் சிரிக்கும் மலர்பிடிக்கும்
தோகையை விரிக்கும் மயில்பிடிக்கும்
வேலையில் வீசும் அலைபிடிக்கும்
வீணையில் பேசும் கலைபிடிக்கும்.
( வேலை — கடல்)
கோட்டையில் பறக்கும் கொடிபிடிக்கும்
கோடையில் மரத்தின் அடிபிடிக்கும்
ஈட்டிய பொருளில் கொடைபிடிக்கும்
ஏட்டினில் கம்பன் நடைபிடிக்கும்
கேட்டிலும் சிறக்கும் மனம்பிடிக்கும்
கீழ்மையை வெறுக்கும் குணம்பிடிக்கும்
பாட்டினில் எழுந்த பண்பிடிக்கும்
பாரினில் பிறந்த மண்பிடிக்கும்.
முகத்தினில் மகிழும் நகைபிடிக்கும்
மொய்மலை முகிலின் புகைபிடிக்கும்
அகத்தினில் அன்பின் ஒளிபிடிக்கும்
ஆற்றலில் அடங்கும் நிலைபிடிக்கும்
தொகுத்ததில் என்றும் புறம்பிடிக்கும்
தொலைந்திடும் கதிரின் நிறம்பிடிக்கும்
வகுத்ததில் குறளின் அறம்பிடிக்கும்
வாழ்வெனும் தெய்வ வரம்பிடிக்கும்
தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘கீழடி – தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் பேசினார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். கீழடி இன்னும் பல பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் அகழாய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரிந்த அகழாய்வு இதுவரை நடைபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. மதுரை ஒரு பழைமையான நகரம். சங்க காலத்தில் தலைநகரமாக இருந்துள்ளது. வைகை நதிக்கரையின் இரண்டு புறமும் எட்டு கிலோ மீட்டர் பரப்பளவில் முழுமையாகச் செய்யப்பட்ட ஆய்வில் 293 இடங்களில் பழைமையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த பகுதியே இல்லை எனக் கூறப்பட்டு வந்தது. அதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே இந்த ஆய்வைச் செய்தோம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை கண்டுபிடித்தோம்.
அந்த நூறு இடங்களில் ஒரு இடம்தான் கீழடி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தென்னை மரங்கள்தான் கீழடி மேட்டுப் பகுதியைக் காப்பாற்றியுள்ளன. இல்லை என்றால் அந்த இடம் பிளாட்டாக மாறியிருக்கும். 110 ஏக்கர் கொண்ட பரப்பளவில் 5 கிலோ மீட்டர் அளவிற்கே அகழாய்வு செய்யப்படுகிறது.
இதையும் படிக்கலாம்.. கீழடி ஸ்பெஷல்: கீழடி-முசிறிப்பட்டிணம் தொடர்புகள்!
இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால்தான் முழுமையான வரலாறு தெரியவரும். போதிய கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அகழாய்வு செய்யவேண்டும். ஹரப்பா, மொகஞ்சதாரோ பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கெல்லாம் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அகழாய்வு நடைபெற்றன. அதுபோல் கீழடியிலும் ஆய்வுசெய்யவேண்டும்.
கீழடியில்தான் அதிக அளவில் செங்கல் கட்டடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இதை நகர நாகரிகம் இல்லை எனக் கூற முடியாது. இந்தக் கூற்றை மாற்றியது இரண்டாம் கட்ட அகழாய்வுதான். நகர மக்கள்தான் அதிநவீன வாழ்க்கையை விரும்புவர். கீழடியில் எங்களுடைய ஆய்வில் ஏறக்குறைய 15 உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. அங்குள்ள உறை கிணறுகள், வடிகால் முறை போன்றவற்றை காணும்போது, அது நகர வாழ்க்கைதான் என்பது உறுதியாகிறது.
மேலும், 1,800 தொல்பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வருகிறது. பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதற்கான மூலப்பொருள்களின் தடயம் இருந்திருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்படி எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. மேலும், அரைகுறைப் பொருள்களாக அல்லாமல், முழுமையான பொருள்களாகவே கிடைத்துள்ளன. எனவே, வெளியிலிருந்துதான் பொருள்களை வாங்கியிருக்க வேண்டும். நகர நாகரிகத்தில்தான் பொருள்களை வெளியில் வாங்கும் பழக்கம் இருக்கும்.
யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணிகலன்கள் போன்றவையும் கிடைத்தன. இதன் மூலம், கீழடியில் நகர நாகரிகம் என்பது மட்டுமல்லாமல், முழுமையான நாகரிக வாழ்க்கை இருந்தது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில்தான் பானை ஓடுகளில் கிறுக்கல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் இதுபோல வேறு எங்கும் இல்லை. சிந்துவெளியில் கூட வரைபட எழுத்துகள்தான் கிடைத்தன. வரைபடம் மூலம் தகவலை வெளிப்படுத்தும் முறை இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் காணப்படும் கிறுக்கல்கள் தமிழ் பிராமி எழுத்து என்பதை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த எழுத்து வடிவங்கள்தான் பின்னர் அசோகர் காலத்துக்குச் சென்றிருக்கும்.
பானையில் எழுதும் பழக்கம் சாமானிய மக்களிடம்தான் இருந்திருக்கிறது. அவர்கள்தான் எழுதியுள்ளனர். பானையில் அரசன் எழுத வாய்ப்பில்லை. எனவே, அக்காலத்திலேயே தமிழர் நாகரிகத்தில் சாமானிய மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது அறிய முடிகிறது. இப்போதும் கூட எவர்சில்வர் பாத்திரத்தில் பெயர் எழுதும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இந்தப் பழக்கம் இந்தியாவில் வேறும் எங்கும் கிடையாது. எனவே, கீழடி வளமைமிக்க நாகரிகமாகத்தான் இருந்திருக்கும்.
இன்னும் அங்கு நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. வெறும் 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படும் அகழாய்வு மூலம் முழுமையான தகவல்கள் கிடைக்காது. பத்து வருடங்களாவது அகழாய்வு செய்ய வேண்டும். மேலும் இன்னும் ஆழமாக அகழாய்வு செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் தமிழர்களின் நாகரிக வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அதற்குத் தொடர்ச்சியாக 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேலாக அகழாய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் தமிழர் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய முடியும். மேலும் காவிரி, தாமிரபரணி போன்ற நதிகளின் ஓரங்களிலும் அகழாய்வு செய்யப்பட வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!
படம்- நன்றி : விகடன்
‘ஏன்பா… அத்திவரதர் தண்ணிக்குள்ளேயிருந்து வந்து,
நாப்பத்தெட்டு நாள் மக்களுக்கு தரிசனம் குடுத்துட்டு மீண்டும்
தண்ணிக்குள்ளே தூங்கப் போய்ட்டாரே… இப்போ ஏன் நம்ம
மந்திரி அத்திவரதர் தண்ணிக்குள்ளிருந்து வந்து தரிசனம்
கொடுக்க என்னவெல்லாம் ஏற்பாடுகள் பண்ணனும்னு விலாவாரியா
கட்சி செயல் கூட்டத்துலே பேசிக்கிட்டிருக்காரு..!?’
‘ அட, அதையேன்பா கேட்கறே… இது ரெண்டு மாசத்துக்கு
முன்னாலேயே மினிஸ்டருக்கு எழுதிக் கொடுத்த ஸ்பீச்…!
அதை நல்லா மனப்பாடம் பண்ணி பேச இவ்வளவு நாளா-
யிருக்கு… சந்தர்ப்பம் புரியாம அவரும் செயல்கூட்டத்துலே
வெளுத்து வாங்கறாரு…!’
சின்ன வயசுல 2 ரூபாவோட கடைக்குப் போனா நெறய பொருள்களோட வெளிய வரலாம்..
இப்போ அப்புடி இல்ல. எல்லா கடையிலையும் சிசிடிவி காமிரா வச்சிருக்காங்க !!
படம்: பஞ்சவர்ணக்கிளி
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
இதை எழுதிய நகுபோலியன் ஒரு சிறந்த கணித மேதை.
நம் குவிகம் நிகழ்வில் ஒருமுறை தனது சிறுகதையைப் படித்தவர்.
நண்பர் கிருபானந்தன் நகுபோலியன் அவர்களிடம் நேரில் பேசி இந்தக் கதையைக் குவிகத்தில் வெளியிடும் அனுமதியைப் பெற்றோம்.
அவரைப் பற்றி வராஹிமிகிரர் கோபு அவர்கள் தன் வலைப் புத்தகத்தில் இட்ட பதிவு:
கோபுவின் குறிப்பு: “மழநாட்டு மகுடம்” சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன் கணையாழி பத்திரிகையில் வந்தது. ஆசிரியர் நகுபோலியன் என்ற பாலசுப்ரமணியன் இதை இந்த வராஹமிஹிராகோபு வலைத்தளத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தார். கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தார்.
அப்பொழுது நகுபோலியன் யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு அவர் யார் என்று தெரியாமல் மறந்திருந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தில்லியிலிருந்து சென்னை மனை மாறி இவர் வந்தபொழுது, தானே நகுபோலியன் என்று ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் தெரிவித்து, ஒரு மர்மத்தை முடிச்சவித்து, இன்ப அதிர்ச்சி தந்தார்.
இவரிடம் நான் நான்கு வருடங்களாக ஸமஸ்கிருதம் பயின்று வருகிறேன். “பாரதி பாலு” என்று தில்லியல் இவர் பிரபலம். இப்பத்திவின் இறுதியில் இவரை பற்றி குறிப்பிட்டுள்ளேன். இவர் கணித நிபுணர், பன்முக புலவர். கே.வி.சர்மா நூலகத்திலும் அவர் இல்லத்திலும் இவருடன் ஆரியபடீயம், லீலாவதி, பஞ்சசித்தாந்திகம், ப்ரிஹத் சம்ஹிதை, வேதாங்க ஜ்யோதிஷம், கணித சார சங்க்ரஹம் போன்ற விண்ணியல் நூல்களை திக்கி திக்கி தடுமாறி படித்து கலந்து பேசி பொருள்கேட்டு ரசித்து ருசித்த சுவையான நாட்கள் பற்பல.
அத்தியாயம் 303
கோப்பெருந்தேவி எங்கே?
அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை – பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!
சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின் பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் – ”கோப்பெருந்தேவி எங்கே?”
கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ”கோப்பெருந்தேவி எங்கே?” – அந்தக் கானாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.
அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது;அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.
அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது – பீறிட்டுக் கொண்டு!
அது போகட்டும் – அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!
அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் – இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.
என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில்,விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.
அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!
மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணப் படுக்கையிலே கிடக்கிறான்!”மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்” என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!
திருமழபாடியிலே திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (த தி கி ட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ”திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்” என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!
(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான்,இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)
சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ”முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்” இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ”முக்குடுமி கொண்ட முதுபல்லவன்”இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும்,அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம்,தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய்,வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ‘எக்ஸ்’ போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே – சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? – சமண சுந்தரியேதான்!!)
அத்தியாயம் 305
திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம். (தொடரும்)
பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.
தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ”மழநாட்டு மகுடம்” – வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இதுபற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ”அரபு நாட்டு அரசுரிமை”யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ”கடாரத்துக் கன்னி”என்றாவது மாற்றிப்போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்துகொண்டு அதற்காவனசெய்வதுதான்.
தங்கள் ”நகுபோலியன்”
பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா. அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக் கீற்றும் நாமக் கீற்றும் சேர்ந்த (18 – ம் புள்ளி ஆடு புலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்கு விழி மங்கை படத்தையும் மறக்காமல்’லா.சு.ர.’ வைப் போடச் சொல்லுங்கள். – பாலு
லண்டன் ‘கண்’ணும், மகாபலிபுரமும்!
டூரிஸம் (Tourism) என்பதற்கு – ஓரிடத்திற்கு விடுமுறைப் பயணம் / சுற்றுலாச் செல்வோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரும் மற்றும் சேவைகள் வழங்கும் வாணிகத் தொழில்; சுற்றுலாத் தொழில் – என்று விளக்கம் தருகிறது கூகிள் சாமி. சமீபத்தில் பதினோரு நாட்கள் லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தரிசித்து விட்டு வந்த (சில இடங்களில் வெறும் கோபுர தரிசனம் மட்டும்!) போது, மேலை நாடுகளில் சுற்றுலாவுக்கும், அதற்கு வரும் வேற்று நாட்டவர்களுக்கும் அங்கு செய்து தரப்படும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இவற்றை விட இன்னும் சிறப்பான, அழகிய சுற்றுலாத் தலங்கள் நம் ஊரில் இருப்பதே பலருக்குத் தெரியாது – இவற்றை நல்ல முறையில் பராமரித்து, வசதிகளையும், வாய்ப்புகளையும் உயர்த்தி, அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்கலாம்!
ஆகஸ்ட் 18 காலை ஏழு மணிக்கு லண்டன் வெம்ப்ளேயின் ‘ibis’ ஓட்டலில் காலை உணவு முடித்து – பிரட், பன், கேக், பழங்கள், கார்ன் ஃப்லேக்ஸ், பால், காபி – எங்கள் பிரத்தியேகமான வால்வோ பேருந்தில் கிளம்பினோம். அன்று லண்டன் லோக்கல் டூர். 27 வருடங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் லண்டன், அதிகம் மாறவில்லை – சாலையோர ‘பப்’களும், புகை பிடிக்கும் தொப்பிக்காரர்களும், போர்டு எழுதி வைத்து, கெளரவமாகப் பிச்சை கேட்பவர்களும் மாற விரும்பவில்லை!
லேசான தூறல்களுடன் நீஸ்டனில் உள்ள மிகப் பெரிய ‘சுவாமிநாராயணா’ கோவிலுக்குச் சென்றோம். சன்னதிகளும், தியான மண்டபங்களும், கலை நயமிக்கத் தூண்களும் இத்தாலியன் மார்பிளில் இழைத்திருக்கிறார்கள் – அங்கிருந்த செக்யூரிடிகளும், போட்டோ, வீடியோ தடைகளும் தேவைதான் என்று நினைத்தேன்.
அங்கிருந்து, உலகப் பிரமுகர்கள் எல்லாம் மெழுகாக நிற்கும் Madame Tussaud – மெழுகு மியூசியம் சென்றோம். உள்ளுக்குள்ளேயே குட்டி கார்கள், ரயில் வண்டி போல் இணைக்கப்பட்ட ஊர்தியில், இங்கிலாந்தின் சரித்திர நிகழ்வுகளைக் கண்டவாறே – பயமுறுத்தும் லைட்டிங் மற்றும் இசை கூடவே வருகிறது! – வந்தோம். மோடிக்கு வணக்கம், மர்லின் மன்றோவுடன் போட்டோ என திரும்பிய இடமெல்லாம் வி ஐ பி க்கள். தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு நின்ற பெண்ணைக் கடந்து விட, திரும்பி ‘சாரி’ என்றேன் – திரும்பாமல் காமிராவினுள் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த உடையுடுத்திய மெழுகு பொம்மை!
மதியம் லண்டன் சரவணா பவனில் சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினோம்! மசால்தோசையுடன் ஸ்பூன் ஃபோர்க் சகிதம் சண்டையிட்டுக்கொண்டிருந்த வெள்ளைக் காரிக்கு நாக்கு நீளம்!
வெஸ்ட்மின்ஸ்டர் சிடியில் பக்கிங்ஹாம் அரண்மனை, தேம்ஸ் நதி மேல் கட்டப்பட்டுள்ள டவர் மற்றும் லண்டன் பிரிட்ஜ் (இந்தப் பாலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது – பிறக் ஒரு வியாசத்தில் பார்ப்போம்!), ட்ரஃபால்கர் ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ், செயிண்ட் பால்ஸ் சர்ச், கிரீன் பார்க் எல்லாவற்றையும் ‘கோபுர தரிசனமாய்’க் கண்டோம்.
“லண்டன் ஐ” (LONDON EYE), உண்மையிலேயே லண்டன் முழுவதையும் பார்க்கும் கண்தான்! நம்ம ஊர் ஜயண்ட் வீல் (பொருட்காட்சிகளில் வண்ண வண்ணக் குழல் விளக்குகளுடன் சுற்றுமே) மாதிரி – ஆனால் அதைப்போல் பல மடங்கு உயரமானது! ஐரோப்பாவின் மிக உயரமான ஜயண்ட் வீல் – 135 மீட்டர் உயரம். 1999 ல் கட்டப்பட்டது. 32 கண்ணாடிக் கூண்டுகள் – ஒரு முழு சுற்றுக்கு, ஆகும் நேரம் 30 நிமிடங்கள் – மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்க, அப்படியே ஏறிக் கொள்வதும், இறங்குவதும் எளிது! மேலே செல்லச் செல்ல, தேம்ஸ் நதி, ஓடை போல் இளைக்க, குறுக்கேயுள்ள பாலங்கள், கோடுகளாய்த் தெரிய, வாகனங்கள் சிறு பூச்சிகளாய் ஊர்ந்து செல்ல, மனிதர்கள் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தனர். கூண்டுக்குள் இருந்து, கீழே ‘பென்’ என்னும் மணிக்கூண்டு, சர்ச், வானுயரக் கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் மினியேசர் வடிவில் சிறுத்து, நம் வீட்டு கொலுவின் பார்க் போலத் தெரிந்தன! 25 கி மீ சுற்றளவுக்குப் பார்க்கமுடிகிறது. இதன் மறு பெயர் “கொக்ககோலா லண்டன் ஐ”! வருடத்துக்கு 3.75 மில்லியன் உல்லாசப் பயணிகள் இந்தக் கண்ணைக் கண்டு களிப்பதாக ஒரு செய்தி கூறுகிறது!
சரி, ஒரு நாள் லண்டன் டூருக்குப் போதாது. ஆனால் ஒரு நாளில் பார்த்த இடங்களுக்கும், கேட்ட செய்திகளுக்கும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் – டூரிஸம் டெவலப்மென்ட் – நம்மை வியப்பிலாழ்த்துகிறது. எதிலும் ஓர் ஒழுங்கு, நேர நிர்ணயம், பாதுகாப்பு, சின்ன சின்ன விபரங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் – நம்மால் ஏன் முடிவதில்லை என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
சமீபத்தில் பிரதமர் மோடியும், சீனாவின் பிரசிடெண்ட் Xi Jinping அவர்களும் மகாபலிபுரம் கடற்கரை குடைவரைக் கோயில்களைப் பார்த்துப் பின் இரு நாடுகள் இடையே நல்லிணக்கம், வணிகம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். டெரரிஸம் பற்றிப் பேசியவர்கள், டூரிஸம் பற்றிப் பேசியிருப்பார்களா தெரியவில்லை!
அதுவல்ல இப்போது நான் சொல்ல வந்தது – சாதாரண நாட்களில் நாம் பார்க்கும் மகாபலிபுரத்துக்கும், இந்த வாரம் நாம் பார்த்த மகாபலிபுரத்துக்கும் இருந்த வித்தியாசம் – நம்மாலும் முடியும்தானே? டூரிஸம் செழிக்க, நம் ஊரையும் எல்லோரும் வியக்கும்படி பராமரிக்க முடியும்தானே? ஏன் செய்வதில்லை?
மேலை நாடுகளுக்கு இணையான, அதை விட மேன்மையான சுற்றுலாத் தலங்கள் நம் இந்தியாவிலும் உண்டு – சுற்றுலாப் பயணிகளுக்கேற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றவோ, பராமரிக்கவோ நமக்குத் தெரிய வில்லை அல்லது மனமில்லை! வருத்தம்தான் மிஞ்சுகிறது.
பல திரைப்படங்கள் எடுத்த, எடுக்கின்ற ‘யூனிவர்சல் ஸ்டூடியோஸ்’ சிறப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது.
நம்ம ஊர் கலை வளர்த்த ஸ்டூடியோக்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உஷ்ணக் காற்றை உமிழ்ந்த வண்ணம் நாம் கடந்து வந்த கலாச்சாரப் பாரம்பரியங்களை மறந்து விட்டன.