செல்வி உரக்கப் படிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்காதனால், தங்கம் சமையலறையை விட்டு வெளியே வந்து வெளியிலிருந்து படுக்கை அறையை எட்டிப் பார்த்தாள். ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த செல்வி, மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்து, “ம்… சாப்பிடு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஓசைப்படாமல் உள்ளே நுழைந்த தங்கம் அவள் பின்னால் வந்து பார்க்கையில் ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு காகம் ஒரு பிஸ்கெட் துண்டை வாயில் வைத்துக் கொண்டிருந்தது. “ம்.. சீக்கிரம் சாப்பிடு. அப்புறம் அம்மா வந்துடுவாங்க” என்று சொல்லிவிட்டு செல்வி கையில் இருந்த பிஸ்கெட்டை மீண்டும் உடைத்து ஒரு துண்டை எடுத்து அந்தப் பறவையில் அருகில் வைத்தாள்.
“காக்காவுக்கு காலையிலே டிபன் ஆயிட்டிருக்கா?” என்ற குரல் கேட்டுத் திரும்பிய செல்வி அம்மாவைப் பார்த்து பயந்தாள். மற்றொரு குரல் கேட்ட அதிர்ச்சியில் காகம் சட்டென்று பறந்து போனது.
“உனக்கு திங்கறதுக்குக் கொடுத்தா அதை காக்காவுக்கு தானம் பண்ணிகிட்டு இருக்கியா?”
“இல்லைம்மா, அது வந்து முன்னாலே உட்கார்ந்து நான் திங்கிறதைப் பார்த்துகிட்டே இருந்தது”
“ஓ… உனக்கு வயித்தை வலிக்கும்னு அதுக்கும் போட்டியா? இதான் பரிச்சைக்கு படிக்கிற லட்சணமா?”
“எல்லாம் படிச்சுட்டேம்மா.”
“சரி, அப்போ இஸ்கூலுக்குக் கிளம்பு”
செல்வி நாற்காலியிலிருந்து இறங்கி, வெளியே இருந்த புத்தங்களைப் பையில் சொருகி வைத்தாள். பிறகு அம்மா அருகில் வந்து, ”அம்மா! அந்த மரத்துக் கிளையிலே, அந்தக் காக்கா கூடு கட்டியிருக்கும்மா. அங்கே பாரேன்” என்று ஜன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரத்தை நோக்கி கையைக் காட்டினாள். மரத்தில் இரண்டு கிளைகள் பிரியும் ஒரு இடத்தில் ஒரு கூடு கண்ணில் தென்பட்டது. காகம் அதன் அருகில் அமர்ந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
”சரி, கூடு அங்கேயே இருக்கட்டும். நீ போய் குளிக்கிற வேலையைப் பாரு”
முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்வி வெளியே போனாள்.
செல்வி, மாரியப்பன், தங்கத்தின் ஒரே செல்ல மகள். அரசாங்க நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் நல்ல சுட்டி. அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பது மாரியப்பனின் ஒரே ஆசை. அதனால் பெண்ணின் மீது கொள்ளைப் பிரியம். அவளை இதுவரை எதற்கும் திட்டியதே இல்லை. கண்டிப்பதெல்லாம் அம்மா தங்கம் மட்டும்தான். தச்சு வேலை செய்பவனுக்கு வருமானம் குறைவு. ஆனாலும் செல்வி எதைக் கேட்டாலும் வாங்கித் தர மறுத்ததில்லை. படிக்க அவளுக்கு ஜன்னலோரம் சுவற்றில் பதித்த மடக்கும் மேஜை செய்து கொடுத்திருந்தான். பிஸ்கெட்டோ, சாக்லெட்டோ எது கேட்டாலும் சாப்பிட வாங்கிக் கொடுத்தான். அன்பு மகளை கண்ணில் பொத்தி வளர்த்தான் தந்தை.
குளித்து, சாப்பிட்டுவிட்டு, புத்தகப் பையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த செல்வியிடம் “எங்கே உங்க அப்பா? புள்ளையை இஸ்கூல்லே கொண்டு விட நேரமாகலையா?” என்று சலித்துக் கொண்டே கேட்டாள் தங்கம்.
“அப்பா, கீழே ரோடு வேலை செய்யிறவங்களோடு சண்டை போட்டுகிட்டு இருக்காரு. கீழ் வீட்டு மாமாவும் கூட இருக்காங்க”
“இப்படித்தான் இவருக்கு நேரம் காலமே தெரியறதில்லை” என்று உரக்கச் சொல்லிக் கொண்டே செல்வியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே தங்கம் வீட்டை விட்டு வெளியே வந்து படியிறங்கினாள்.
நிஜமாகவே கீழே சாலையோரத்தில் மாரியப்பன் ரோடு போட வந்தவர்களுடன் உரக்கக் கத்தி, சண்டைபோட்டுக் கொண்டிருந்தான்.
“ஏங்க! ரோட்டை பெரிசு பண்றேன்னு, மரத்தைச் சுத்தி இம்மாம் பெரிய பள்ளம் தோண்டி வைச்சிருக்கீங்களே? மரம் எப்படீங்க நிக்கும்? கீளே விழுந்துடாது?’
“அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து வளர்ந்துருக்கு. அம்பது வருச மரங்க ரெண்டும். சாமிங்க அது. அதோட வேரை போய் வெட்டிபுட்டீங்க?” என்று சேர்ந்து புலம்பினார் கீழ் வீட்டு தட்சிணாமூர்த்தி.
யானையின் துதிக்கையைப் போல இருந்த மண்ணைக் குடையும் ராட்ஷச எந்திரக் கையின் அருகில் நின்று கொண்டிருந்த தொழிலாளி, “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. ரோட்டை அகலப்படுத்தச் சொல்லி கவர்மெண்ட் ஆர்டரு. அதான் காண்ட்ராக்டர் இப்படி பள்ளம் தோண்டி, மழைத் தண்ணி போற வடிகால் கட்டப் போறாரு. அதுக்கு இப்படித்தான் தோண்டணும். வேறே வழியில்லை”
“அது யாரு காண்ட்ராக்டரு அம்மாம் பெரிய மனுசன்? எங்கிட்டே பேசச் சொல்லு. நான் பார்த்துக்கிறேன். இனிமே ஒரு அடி கூட தோண்டக் கூடாது. மூடு பள்ளத்தை. ஆமாம் சொல்லிட்டேன்” என்று கத்தினான் மாரியப்பன்.
செல்வியை அழைத்துக் கொண்டு, வாசலுக்கு வந்து மாரியப்பன் கத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், “ஏங்க! என்ன இங்கே நின்னு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க? இஸ்கூலுக்கு நேரமாகலையா?” என்றாள்.
திரும்பி தங்கத்தையும் செல்வியையும் பார்த்த மாரியப்பன் ‘ஓ! இரு இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு சுவரில் சாத்தி நிறுத்தியிருந்த சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்து செல்வியிடம் இருந்து புத்தகப் பையை வாங்கி முன் காரியரில் வைத்துவிட்டு, ”ஏறிக்கம்மா” என்றான். செல்வி பின்னால் ஏறியவுடன் தட்சிணாமூர்த்தியின் அருகில் வந்து நிறுத்தி, “மூர்த்தி, இதை இப்படியே விடப்படாது. நாம கவுன்சிலரைப் போய் பார்க்கலாம். ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு அவன் ”சரி” சொல்வதற்கு பொறுத்திராமல் வண்டியை மிதித்து மேலே செலுத்தினான்.
மாரியப்பன் இருக்கும் இந்த வீடு இருபது வருஷத்துக்கு முன்னால் கட்டியது. உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர், சுந்தரவதனம் கட்டிக் கொண்டிருந்த பெரிய வீட்டில் தட்சிணாமூர்த்தி கட்டிட வேலையும், மாரியப்பன் தச்சு வேலையும், சகாயம் எலெக்ட்ரிக் வேலையும் செய்தார்கள். அவரே முன்வந்து, “நீங்க மூணு பேரும் நல்லா வேலை செஞ்சிருக்கீங்க. அதனாலே நம்ம வீட்டுக்கு முன்னாலே ரோட்டோரமா ஒரு காலி மனை இருக்கு பாரு? அது என்னதுதான். அதிலே நீங்க சேர்ந்து ஒரு வீடு கட்டிக்கோங்க. சும்மா ஆளுக்கு ஒரு நாப்பதாயிரம் கொடுங்க போதும்” என்றார். மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நான்காவதாக பெயிண்டிங் வேலை செய்த ராஜவேலுவையைச் சேர்த்துக் கொண்டார்கள். மாரியப்பன் திருவண்ணாமலை பக்கத்தில் கிராமத்தில் இருந்த வீட்டை விற்றான். மற்ற மூவரும் அவரவர் பணம் புரட்டினார்கள். ஐந்து மாதத்தில், ரோட்டோரம் கீழே இரண்டு வீடும், மேலே இரண்டு வீடுமாக கட்டிக் கொண்டார்கள். இவர்கள் வீட்டின் பின்னால் தன் இரண்டாவது துணைவிக்கு கட்டிய வீட்டை ஊராருக்கு மறைக்கத்தான் இந்த இடத்தைக் சுந்தரவதனம் இவர்களுக்குக் கொடுத்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள். அதை நால்வரும் பொருட்படுத்தவில்லை. பணம் கொடுத்து, நிலத்தை வாங்கி அதை நான்கு பேருக்கும் சமமாகப் பிரித்து ரெஜிஸ்டர் செய்தாகிவிட்டது. இனி என்ன கவலை?
”இங்கே பாருங்க! ரோடு குறுகலா இருக்கிறதாலே பெரிய வண்டியெல்லாம் போக ரொம்ப கஷ்டமாயிருக்காம். அதனாலே ரோட்டை அகலப்படுத்தி ஒரகடம் எஸ்டேட் வரையிலும் கொண்டு போய் காஞ்சிபுரம் ரோட்டிலே சேர்க்கப் போறாங்க. பெரிய திட்டம்”. சுந்தரவதனத்தின் மகன் அறிவொளி மாரியப்பனைப் பார்த்துச் சொன்னான். அவன் இப்போது உள்ளூர் கவுன்சிலர்.
“இல்லீங்க, ரோட்டை அகலப்படுத்தறேன்னு பெரிய பெரிய பள்ளமா நோண்டிகிட்டே போறாங்க. மரத்தையெல்லாம் வெட்டிப்புடறாங்க.”
‘மரத்தைத்தானே வெட்டறாங்க? வீட்டை இடிக்கலையில்லை? அதுக்கு சந்தோஷப்படுங்க”
“என்னங்க இப்படிச் சொல்றீங்க?
“அதெல்லாம் அப்படித்தான். உனக்குச் சொன்னா புரியாது. போயிட்டு வா”
மாரியப்பனும் தட்சிணாமூர்த்தியும் சோர்ந்த முகத்தோடு வெளியேறினார்கள். அவர்களுக்குத் தெரியாது, ரோடு ஒப்பந்தம் எடுத்ததே அறிவொளியின் பினாமிதான் என்று.
இருவரும் வீட்டிற்கு வந்த போது, செல்வி வெளியில் தோழர்கள் ஜில்லியோடும் பில்லியோடும் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு நாள், மழையில் நனைந்து வீட்டருகே ஒதுங்கிய நாய்க்குட்டியை செல்வி வீட்டிற்கு எடுத்து வந்து விட்டாள். தொட்டவுடன் ஈரத்தில் ஜில்லென்றிந்த குட்டிக்கு “ஜில்லி” என்றே பெயரிட்டாள். சில நாட்கள் கழித்து எங்கிருந்தோ வந்த குட்டிப் பூனையும் அவர்களோடு சேர்ந்து கொண்டது. அதற்கு ”பில்லி” என்று அவள் பெயர் வைத்தாள். தினம் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அந்தத் தோழர்களோடு விளையாடுவதுதான் அவள் பொழுது போக்கு.
அப்பாவைக் கண்டதும் செல்வி ஓடிப் போய் மாரியப்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா, இந்த வருசம் தீபாவளிக்கு எனக்கு காக்ரா, சோளி வாங்கித் தாப்பா”
“அது என்னதும்மா காக்கா, குருவி?”
“ஐயோ! காக்கா, குருவி இல்லைப்பா. காக்ரா சோளி. அது போட்டுக்கிற டிரெஸ்”
“அப்படியா? வாங்கிட்டா போச்சு. நீ கேட்டு நான் வாங்கித் தராம இருப்பேனா செல்லம்?”
”தாங்கஸ்ப்பா”
செல்லப் பெண் இங்கீலீஷ் பேசுவதைக் கேட்டு உள்ளம் பூரித்த மாரியப்பன் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பிலிருந்து தன்னை அவசரமாக விடுவித்துக் கொண்டு செல்வி, ”அப்பா.. வாயேன், உனக்கு ஒண்ணு காட்டணும்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். வேப்ப மரத்தின் அடியில் வந்து தலையைத் தூக்கி, “அங்கே பாருப்பா! காக்கா கூடு கட்டியிருக்கு” என்றதும் மாரியப்பனும் அதைப் பார்த்தான்.
“அது வந்தும்மா, காக்கா, குருவி மாதிரி பறவையெல்லாம் கீழே கிடக்கற குச்சி எல்லாத்தியும் கொத்திகிட்டு வந்து மரத்திலே வைச்சு இந்த மாதிரி கூடு கட்டிக்கும். அதிலே முட்டை போடும். அப்புறம் அதிலேருந்து குஞ்சு வெளியே வரும்”
“அப்போ, அந்தக் குஞ்சையெல்லாம் நாமே எடுத்து வளர்க்கலாம்பா”
மாரியப்பன் பெரிதாகச் சிரித்து, “காக்கா, அந்தக் குஞ்சையெல்லாம் நம்ம கிட்டே கொடுக்காது செல்லம். பெரிசான உடனே அந்தக் குஞ்செல்லாம் தானே வெளியே பறந்து போயிடும்” என்றான்.
செல்வியின் முகம் வருத்தத்தில் சுருங்கியதாக மாரியப்பனுக்குத் தோன்றியது. காலடியில் வந்து நின்ற ஜில்லியையும் பில்லியையும் பார்த்துவிட்டு, “நீ இவங்க ரெண்டு பேரையும் பெரிசா வளர்த்துகிட்டு இரு. அவங்க எப்பவும் நம்ம கூடவே இருப்பாங்க. இப்போ நாம சந்தோசமா வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே அவளைக் கையில் தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினான்.
அந்த வருடம் தீபாவளிக்குப் பத்து நாள் முன்னதாகவே மழை பெய்யத் தொடங்கி விட்டது. ஒரு நாள் பலத்த காற்றோடு கனத்த மழை பிடித்துக் கொண்டது. காற்றில் வேப்ப மரத்தின் கிளைகள் பேய் ஆட்டம் ஆடி ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதில் அந்தக் கிளையில் இருந்த கூடு கீழே விழுந்து விட்டது. கூடு கீழே விழுவதை செல்வி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். உடனே வெளியில் ஓடிவந்து பார்த்த போது, மரத்தடியில் கூட்டின் குச்சிகள் சிதறிக் கிடந்தன. அருகிலேயே உடைந்து போன சில முட்டைகளும் கண்ணில் பட்டன. அழுது கொண்டே உள்ளே ஓடி வந்த செல்வி, தங்கத்திடம் வந்து, “அம்மா, அந்த காக்கா கூடு கீழே விழுந்துடிச்சும்மா. முட்டையெல்லாம் உடைஞ்சு போச்சு” என்று கதறினாள்.
“அதுக்கேண்டி இப்படிக் கத்தறே? போனாப் போகட்டும். நீ மழையிலே வெளியே போகாம வீட்டிலே கிட. அப்புறம் சுரம் வந்துடும். போய் ஏதாவது படி, போ” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்துவிட்டாள் தங்கம்.
அழுதுகொண்டே அறைக்கு வந்த செல்வி, ஜன்னல் வழியே அந்த மரத்தையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலையில் வீட்டிற்கு வந்த மாரியப்பனிடம் கூடு உடைந்து போனதைச் சொல்லி அழுதாள்.
“அழாதே செல்லம்! காக்கா மறுபடியும் இன்னொரு கூடு கட்டிக்கும். அதிலே புதுசா முட்டை போட்டு குஞ்செல்லாம் பொரிக்கும்.” ஆனாலும் செல்வி சமாதானமானதாகத் தெரியவில்லை அவனுக்கு.
இரண்டு நாள் கழித்து பெரு மழை. ஏதோ புயல் அடிக்கப் போவதாக முன்னமே சொல்லிவிட்டதால் பள்ளிக்கு விடுமுறை. மாரியப்பனும் வேலைக்குப் போகவில்லை. மதியத்தில் திடீரென்று, சாலையோரத்தில் இருந்த அரச மரம் வேரோடு பெயர்ந்து தன்னோடு வேப்ப மரத்தையும் சேர்த்துக் கொண்டு வீட்டின் மீது சாய்ந்தது. சப்தம் கேட்டு மாரியப்பன் ஓடி வந்து பார்த்த போது, வேப்ப மரத்தின் பெரிய கிளை ஒன்று, ஜன்னலருகே வீட்டின் கூரை மீது விழுந்து ஜன்னலையே அடைத்துக் கொண்டிருந்தது. மாரியப்பன் அவசரமாக கீழே இறங்கி வந்தான். இரு மரங்களும் சேர்ந்து விழுந்து வீட்டின் மேல் மாடி கைப்பிடிச் சுவரை உடைத்து ஜன்னலையும் வெளிப்புறம் பெயர்த்து இறங்கி இருந்தது. எந்நேரமும் மரம் மீண்டும் சாய்ந்து சுவர் மேலும் இடிந்து கீழே விழும் அபாயம் தெரிந்தது. நான்கு வீட்டிலிருந்தவர்களும் அவசரமாக வெளியே வந்தார்கள். கட்டிடம் இடிந்து போனதைப் பார்த்து அழத் தொடங்கினார்கள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், அரசாங்க வேலையாட்கள் வந்து மரங்களை அறுத்துக் கிளைகளை அகற்றத் தொடங்கினார்கள். சுற்றுப்புரத்தில் இருந்த பலரும் கூட இருந்து உதவத் தொடங்கினார்கள். உதவிக் கலெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
“கட்டிடம் மேலும் இடிஞ்சு விழும் போல இருக்கு. அதனாலே நீங்க உங்களுக்கு வேண்டிய சாமான்களை எடுத்துகிட்டு சீக்கிரம் வெளியே வந்துடுங்க”
“மரத்தைச் சுத்தி இப்படி பள்ளம் வெட்டினா எப்படீங்க நிக்கும்? அதான் விழுந்துடுச்சு. எங்க வீடே இடிஞ்சு போச்சு”
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இனிமே இந்த வீட்டிலே இருந்தா உங்க எல்லாருக்கும் உசிருக்கு ஆபத்து. அதனாலே காலி பண்ணிட்டு, பக்கத்து ஸ்கூல்லே போய் இருங்க. நான் வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்.”
“அதெப்படிங்க திடீர்ன்னு காலி பண்ண முடியும்? அதெல்லாம் முடியாது. நீங்க பள்ளம் நோண்டினதுக்கு பதில் சொல்லுங்க”
”சொல்ல முடியாது. வீடே மழையிலே ஊறிப்போய் போய் கிடக்கு. தானே இடிஞ்சு போனாலும் போயிருக்கும். உடனே இடத்தைக் காலி பண்ணிடுங்க எல்லாரும்” என்று கத்திவிட்டு, ஜீப்பில் ஏறிப் போய் விட்டார் உதவிக் கலெக்டர்.
அடுத்த ஐந்து நாட்கள் நான்கு குடும்பங்களும் நடுநிலைப் பள்ளியில் செல்வி படிக்கும் ஏழாம் வகுப்பு அறையில் குடியிருந்தார்கள். அவர்களுக்கு சமைத்த உணவு, பிஸ்கெட்டு, தண்ணீர் பாட்டில், பாய், போர்வை எல்லாம் யார் யாரோ வந்து கொடுத்து விட்டு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.
ஆறாம் நாள் காலையில் தீபாவளி. சுற்றுப் புற தெருக்களில் ஜனங்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். செல்வி அதை வாசலில் வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஞாபகம் வரவே, உள்ளே ஓடிச் சென்று, “அப்பா என் தீபாவளி டிரெஸ் எங்கே?” என்று கேட்டாள். கொண்டு வந்த பெட்டிகளில் தேடியும் அது எங்கேயும் காணப்படவில்லை.
“டிரெஸ் எங்கே இருக்குன்னு தெரியலைம்மா. அப்புறம் வீட்டுக்குத் திரும்பிப் போய் தேடி எடுத்துகிட்டு வரேன்” என்று சமாதானம் சொன்னான் மாரியப்பன்.
பத்துநாள் கழித்து, தாசில்தார் அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரி வந்தார்.
”உங்க வீடு ரொம்ப வீணாயிடுச்சு. இனிமே குடியிருக்க லாயக்கில்லை. அதனாலே அந்த வீட்டை முழுசா இடிக்கச் சொல்லிட்டாங்க. உங்க நாலு பேருக்கும் ஆளுக்கு இருபதாயிரம் நஷ்ட ஈடா கொடுக்கச் சொல்லி ஆர்டர்”
“அது எப்படீங்க? இருபது வருசத்துக்கு முன்னே நிலத்துக்கே நாங்க முப்பதாயிரம் கொடுத்து வாங்கியிருக்கோம். மேலே அம்பதாயிரம் செலவு பண்ணி வீட்டைக் கட்டியிருக்கோம். இப்போ இருபதாயிரம் கொடுத்தா எப்படி?” என்று கோபத்துடன் பொரிந்து தள்ளினான் ராஜவேலு.
“நிலம் கவர்மெண்ட் நிலம். பொறம்போக்கு. அதுக்கு ஒண்ணும் கிடைக்காது”
“பொறம்போக்கா? கவுன்சிலர் அறிவொளி ஐயாவோட அப்பாகிட்டே இருந்து வாங்கினது. பக்காவா பட்டா வாங்கிக் கொடுத்திருக்காரு அவரு”
“அது அந்த ஃப்ராட் தாசில்தார் முருகேசன் லஞ்சம் வாங்கிட்டு கொடுத்தது. இந்த மாதிரி நிறைய கேஸ் இருக்கு. அவரை ஸஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க”
“அதனாலே எங்களுக்கு என்ன? கவர்மெண்ட்தானே பட்டா கொடுத்திருக்கு?” என்றான் சகாயம் ஆத்திரத்துடன்.
“இங்கே பாருங்க. அது சரியான பட்டா இல்லை. நீங்க கோர்ட்டுக்குப் போனா கூட உங்க கேஸ் ஜெயிக்காது. பேசாம கொடுக்கிற பணத்தை வாங்கிக்கிட்டு எங்கேயாவது போய் குடியிருந்துக்கோங்க.”
நால்வருக்கும் மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை.
போகும் போது அதிகாரி நின்று, “அடுத்த திங்கட்கிழமைலேருந்து ஸ்கூல் மறுபடியும் திறக்குது. அதனாலே ஒரு வாரத்திலே இடத்தைக் காலி பண்ணிடுங்க” ஏன்று சொல்லிவிட்டுப் போனார்.
மாரியப்பனும் மற்ற மூவரும் எங்கெங்கோ மோதியும் வீடு விஷயமாக ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியில் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டுவிடுவதாக முடிவெடுத்தார்கள். போவதற்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பழைய வீட்டிற்கு அவர்கள் வந்த போது, வீட்டின் முதல் மாடி வரையிலும் இடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மாரியப்பனும் தங்கமும் கண்ணீர் விட்டு அழுதார்கள். திடீரென்று எங்கிருந்தோ ஜில்லியும் பில்லியும் ஓடி வந்து காலடியில் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தன. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் காலை ஜாக்கிரதையாக வைத்து மூவரும் நடந்தார்கள். சட்டென்று ஒரு கற்குவியலுக்குக் கீழே பார்த்து செல்வி “அப்பா” என்று கத்தினாள். அருகில் சென்று பார்த்த போது, செல்வியின் “காக்ரா, சோளி”யின் அட்டைப் பெட்டி இருந்தது. பெட்டியை மெதுவாக உருவி, திறந்து பார்த்த போது, அதில் ஒன்றுமில்லை. ”ஓ” வென்று கதறிய செல்வியை கட்டி அணைத்துக் கொண்டு தேற்றினான் மாரியப்பன்.
”வாங்க திரும்பிப் போகலாம்” என்றாள் தங்கம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
பதில் சொல்லாமல் மேலே நடந்தான் மாரியப்பன்.
மாடிக்குப் போகும் படிக்கட்டு முழுவதும் இடிக்கப்பட்டிருந்ததால் மேலே போக முடியவில்லை. அதனால் கட்டிடத்தைச் சுற்றிக் கொண்டு பின்புறம் வந்தார்கள். அங்கே அவன் ஆசையாக வளர்த்த செம்பருத்தி, நந்தியாவட்டைச் செடிகள் கீழே முறிந்து கிடந்தன. மூலையில் ஏதோ பறவை எச்சமிட்டு தானாக வளர்ந்திருந்த இன்னொரு வேப்ப மரம் மட்டும் நின்று கொண்டிருந்தது.
திடீரென்று “அப்பா அங்கே பாரு!” என்று சொல்லிவிட்டு செல்வி மேலே கையைக் காட்டினாள். நிமிர்ந்து பார்த்த போது, அங்கே மரத்தின் ஒரு கிளையில் காகம் ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது.
“தங்கம்! அந்த காக்காவுக்கு இருக்கிற அதிர்ஸ்டம் கூட நமக்கு இல்லை. இடிஞ்சு போன கூட்டைப் பத்தி கவலைப் படாம, புதுசா கூடு கட்டிகிட்டு இருக்கு அது. நமக்கு அந்த மாதிரி திறமையும் வசதியும் இல்லையே?” என்று சொல்லிவிட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்தான் மாரியப்பன்.