(படங்கள் பெரிதாகத் தெரிய அதன் மேல் க்ளிக் செய்யவும்)
Monthly Archives: February 2014
தலையங்கம்
மலர் : 1 இதழ் : 3 பிப்ரவரி 2014
- சென்னையில் சங்கீத சீஸன் முடிந்து நாட்டியம் மற்றும் நாடகங்களுக்கு சபாக்கள் இடம் கொடுக்கும் காலம் இது!
- பொங்கலோடு முடியும் மிதமான குளிர் காலம் பிப்ரவரியிலும் தொடர்வதால் சென்னைக்கு இன்னும் குளிர் விட்டுப் போகவில்லை!
- தை – மாசி மாதம் வருவதால் ஏகப்பட்ட கல்யாணங்கள் – பூணல்கள்!
- மகா சிவராத்திரி இந்த மாதம் வருகிறது! கண் முழித்து பரமபதம் ஆடி சினிமா பார்த்தது எல்லாம் அந்தக் காலம்!
- வாலண்டைன் டே வருவதால் ரோஜாப் பூக்களுக்கு தட்டுப்பாடு!
- அரசியல் ரம்மி ஆரம்பித்துவிட்டது. எந்த சீட்டைச் சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என்ற தேர்தல் ஜுரம் சூடு பிடிக்கிறது!
- பொடி வைத்து -கத்திப் பேசும் பார்லிமெண்டில் கத்தி மின்னுகிறது -. மிளகுப் பொடி தூள் கிளப்புகிறது!எல்லாம் தெலுங்கானா பிரச்சினை! இது சரிதானா?
- எல்லாருக்கும் பிரதமராகணும்னு ஆசை! ராகுல். மோடி, ஜெயலலிதா, மம்தா, மாயாவதி,முலயாம் சிங்,பட்டியல் நீளுகிறது!
- சென்னையில் கூவத்தை மணமாக்க 3000 கோடிக்கு மேல் கொட்டப் போகிறார்கள்!
- கெஜ்ரிவாலை குதிக்க வைத்து காங்கிரஸும் பி ஜே பி யும் வேடிக்கை பார்க்கின்றன!
வானமே நீ என்போல் ஏழையா? (அனுராதா)
வானமே நீ என்போல் ஏழையா?
உனக்கு இந்த கிழிந்த மேக உடை தேவையா?
அப்படித்தான் உனக்கு என்ன துக்கமோ?
கறுத்துப் போனது உந்தன் மேக முகமோ?
சோகத்தைச் சொல்ல தேவை ஒரு மொழி !
இடியைத் தவிர உன்னிடம் வேறு என்ன வழி !
நட்சத்திரங்களை எங்கோ நீ தொலைத்தாய்
அதைத் தேடித்தேடி இங்கும் அங்கும் அலைந்தாய் !
விரக்திப் புன்னகை இதழ்களில் தவழ்கிறது !
மின்னல் வேகத்தில் உன் உள்ளம் தளர்கிறது !
எனக்கு மட்டும் சொல்லிவிடு என்ன செய்தாய் பிழை !
கண்ணீரை அடக்காதே பெய்துவிடு நீ மழை !
பாங்க் A T M லிருந்து ஜோக்ஸ் வருது!!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மாட்டுக்கு லோன் எங்கே கிடைக்கும்?
மாட்டுக்கெல்லாம் லோன் தர மாட்டோம்!மனுஷங்களுக்குத் தான் தருவோம்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
=========================================================
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
போட்டோ ஐ .டி, அட்ரஸ் புரூப் எல்லாம் கொடுத்தாலும் நம்ம
ஜிம்மி பேர்லே அக்கவுண்ட் ஓபன் பண்ண மாட்டாங்களாம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
#########################################################
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஏன் ஹவுசிங்க் லோனை கட்டலை ?
நீங்க கொடுத்த லோனை வைச்சு எங்க அப்பாவுக்கு சமாதி தான் கட்ட முடிஞ்சுது!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜாதகம் பொருந்தியிருந்தாலும் K Y C நார்ம்ஸ் சரியா இருந்தாத் தான் பொண்ணைக் கொடுப்பாராம் பேங்க் மேனேஜர்!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மாங்காட்டுப் பாடல்
தங்கமென வைரமென ஜொலிக்கின்ற தாயே!
தாங்காத துயர்போக்கும் மாங்காட்டுத் தாயே!
திங்களென திங்கள்எல்லாம் திகழ்கின்ற தாயே!
தீங்குகள் வாராமல் காக்கின்ற தாயே!
துங்கமுக மைந்தனை தந்துவிட்ட தாயே!
தூங்காத விழியாலே துயர்நீக்கும் தாயே!
தெங்கின்இள நீர்போல இனிக்கின்ற தாயே!
தேமதுரத் தமிழாலே பாடவைக்கும் தாயே!
தைவெள்ளித் திருநாளில் ஆடவைக்கும் தாயே!
தொல்லைகளைப் போக்கிவிட வந்துவிடு தாயே!
தோல்விகளை வெற்றியாக மாற்றிவிடு தாயே!
தௌஹித்ரர் தவழ்ந்துவர அருள்தருவாய் தாயே!
த்ரௌபதி அம்மனாக காத்திடுவாய் நீயே!
பாண்டியனின் நெருடல்!
“பிக் பாக்கெட்! மூஞ்சியையும் முழியையும் பாரு! திருட்டுப் பய! அறைஞ்சு கொல்லணும்!”
“அடிக்காதீங்க! அடிக்காதீங்க! நான் எடுக்கலை ”!
“சும்மா கேட்டா இல்லைன்னு தான் சொல்வானுக! நாலு போட்டா தானா வருது”!
“ஐயோ சாமி.. என் கிட்டே இல்லீங்க! அடிக்காதீங்க”!
“இந்த மாதிரிக் காவாலிப் பசங்களையெல்லாம் நிக்க வைச்சு சுடணும்”
“கொல்லாதீங்க! நான் சத்தியமா எடுக்கலை”!
“என்ன நெஞ்சழுத்தம் பாத்தேளா! கள்ளுணி மங்கனாட்டம் நிக்கறான் பாருங்கோ”!
“வலிக்குது சார்! நான் எடுக்கலை சார்”!
“இவனை சும்மா விடக் கூடாது! அதோ இன்ஸ்பெக்டர் வர்ராறு! அவருக்குத்தான் உண்மையைக் கக்க வைக்கத் தெரியும்!”
“உண்மையைச் சொல்லு ! போலீஸ்காரன் அடி எப்படி இருக்கும்னு தெரியுமா?"
"சார்! இது உங்க பர்சா பாருங்க!”
“ஆமாம் சார் இது.. எப்படி உங்களிடம்….”
“முந்தின ஸ்டாப்பிலே நீங்க ஏறும் போது உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தது! எடுத்து உங்க கிட்டே கொடுக்கறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு! உடனே ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு இந்த ஸ்டாப்புக்கு வந்தா….”
கூடியிருந்த அத்தனை பேர் நெஞ்சுகளையும் ஏதோ ஒன்று நெருடுகின்றதே! அது கோவலனைக் கொன்ற பாண்டியனின் நெருடல்!
மண்ணாங்கட்டி
மண்ணாங்கட்டி
மண்ணாங்கட்டிக்கு ஒரு சுண்ணாம்பு பொட்டு வைத்து
தண்ணீரில் குளிப்பாட்டி – அது
கண்ணீரில் கரைவதைப் பார்த்து பார்த்து அவ
கைகொட்டிச் சிரிச்சாளாம் …. ஓ
கைகொட்டிச் சிரிச்சாளாம் !
வாழை நாரெடுத்து அழகா முழம் தொடுத்து
ரோஜா மாலை ஒண்ணு செஞ்சாளாம் – அது
வாடாம இருக்க அசங்காமல் இருக்க
அடுப்புக் குள்ளே அதை வைச்சாளாம் !
ஆட்டம் ஆடவேண்டி மெட்டு இட்டுக் கட்டி
பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டாளாம்!
ராகம் தொடங்கையில் நாகப் பாம்பு ஒண்ணு
கழுத்தைக் கட்டிக் கொண்ட கதையாச்சே !
பாட்டி மத்தெடுத்து சட்டிப் பானையிலே
கெட்டித் தயிரை நல்லா கடைஞ்சாளாம்!
வெண்ணை திரண்டு வந்து கண்ணைப் பறிக்கையிலே
மண்ணைப் போட்டு விட்ட கதையாச்சே !!
வெந்தழலால் வேகாது – கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமியின் படைப்புலகம் பெரும்பாலும் வாழ்வின் யதார்த்தங்களை எடுத்துச் சொல்லும் என்கிறார் பழ. அதியமான்.. தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்தியவர் அழகிரிசாமி என்கிறார் பிரபஞ்சன்.
அவரது கதைகள் படித்துச் சுவைக்க வேண்டியவை. தோண்டத் தோண்ட சுரக்கும் ஊற்று அவை!
அதில் “வெந்தழலால் வேகாது “ என்ற புராணக் கதையை இப்பொழுது பார்ப்போம்!
நடுராத்திரியில் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறையில் மீனாட்சியும் சுந்தரரும் படுத்திருக்கயில் உறக்கம் வராமல் அவதிப் படுகிறார் சுந்தரர். காரணம் அன்றைக்குத் தான் தருமிக்காக நக்கீரனை எரித்து, பிறகு மற்றைய புலவர் வேண்டுகோளுக்கு இணங்க அவரை உயிர்ப்பித்து வந்திருக்கிறார். தன்னுடைய வெறி தணிய சுடுகாட்டுக்குக் போய் பேய்க் கணங்களுடன் தாண்டவம் ஆடிவிட்டு வேறு வந்திருக்கிறார்!
மீனாட்சியும் பெண்ணுக்கே உரிய கவலையுடன்இப்படி தூங்காமல் கண் விழித்தால் என்னாகும் என்று அவரைத் தொட்டுப் பார்த்த்தாள்! அனல் போல் கொதித்தது அவரது நெற்றிக் கண்ணும் உடம்பும்! ‘முன்பு ஒருமுறை பஸ்மாசுரனுக்கு வரத்தைக் கொடுத்துவிட்டு பயந்து ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்தமாதிரி இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டு ஏன் தவிக்கிறீர்கள் ’ என்று சுட்டிக் காண்பித்தாள் மீனாட்சி! ‘சரி சரி உறங்குங்கள்’ என்று சுருண்டு கிடந்த புலித் தோலை இழுத்து அவர் உடலை நன்றாகப் போர்த்தினாள் !
‘அப்போதே யோசனை செய்யாமல் போனேன் என்று ‘ சுந்தரர் சராசரி மனிதன் போல புலம்பினார். மன்மதனை எரித்த தப்பையும் சுட்டிக்காட்ட மீனாட்சி தவறவில்லை!அவருடைய மேலான கவலை என்ன வென்றால் நக்கீரன் கடைசி வரை தான் செய்ததை பிழையென்று ஒப்புக்கொள்ளவில்லை! நீங்கள் சொன்னது சரியென்று நீங்களும் நிரூபிக்கவில்லை என்பதை சுருக்கென்று குத்திக் காட்டினாள் சகதர்மிணி.
தமிழ்ச்சங்க புலவர்கள் அனைவரும் சுந்தரரின் செயலை தருமியின் எதிரில் கேவலமாக விமர்சனம் செய்தனர். சங்கப் பலகை வேண்டுமென்று புலவர்கள் அவரிடம் போனது புலவர்கள் செய்த முதல் தவறு என்று பரணர் சொல்ல மற்றவரும் அதையே ஆமோதித்தனர். எல்லாரும் போய் நக்கீரனைப் பிழைக்க வைக்க வேண்டினார்கள். அவர் கைவசம் இருக்கும் மன்னிப்பு அவருக்கே தேவையா யிருந்தது. சுந்தரரும் நக்கீரனிடம் அவர் சொன்னது பிழை என்று ஒத்துக் கொள்ள வைப்பாரோ என்று எல்லாருக்கும் பயம். சிவனைப் பற்றி ஒரு வெண்பா பாடினால் கரையேற்றுவோம் என்றார். நக்கீரனும் பாடினார். சுந்தரர் அவரை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். நக்கீரனைப் பார்க்க சுந்தரருக்கு கண் கூசியது. உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். அதற்குப் பின் மற்ற புலவர் எல்லாரும் சுந்தரரை மீண்டும் கலாய்த்தார்கள் இதை தருமி சுந்தரரிடம் சொன்னதால் தான் சுந்தரருக்கு அன்று தூக்கம் அழிந்தது.
குற்றம் குற்றமே என்ற சொற்கள் எரிச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன ! மன சாந்திக்காக படுக்கையை விட்டு வெளியே வந்தார்! மீனாட்சியும் ‘ஏன் இப்படி உடம்பையும் மனதையும் போட்டு அலட்டிக் கொள்கிறீர்கள்? இனிமேல் சங்க விவகாரத்துக்கு நீங்கள் போக வேண்டாம்’ என்றாள் . சுந்தரருக்கு அந்த வார்தைகளை சகிக்க முடியவில்லை. வெளியே வந்த சுந்தரர் திடுக்கிட்டுப் போனார். தருமி அவர் வாங்கிக் கொடுத்த பொற்கிழியை வேண்டாமென்று அவர் முன்னால் வைத்து விட்டுப் போய்விட்டான்.
தொப்பென்று படுக்கையில் வீழ்ந்தார் சுந்தரர். மீனாட்சி அவரைத் தடவிக் கொடுத்தாள். அவரது நெற்றிக்கண் கைலாய பர்வதத்தின் பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போயிற்று!
அழகிரிசாமியின் கற்பனையில் யதார்த்தம் மிளிர்கிறது என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்!
பெருமாளே ! (விஜயலக்ஷ்மி)
ராகம்: பெரியாறே
பெருமாளே ! பெருமாளே !
ஸ்ரீ ரங்க நாதப் பெருமாளே !
நாடி வருகின்ற கோடி மக்களின்
குறை தீர்க்கும் பெருமாளே – எங்கள்
குறை தீர்க்கும் பெருமாளே !
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளே !
பாதங்களைப் பணிகின்றோம் இந்நாளே !
அறிவும் இல்லாத பொருளும் இல்லாத
பாமரரைக் காத்திடணும் – இந்தப்
பாமரரைக் காத்திடணும்
அலையலையாய் மக்கள் கூட்டம் வந்திடணும்
கோவிந்தன் உன் நாமம் பாடிடணும்
ரத்ன சேவை கண்டிடணும் முத்து சேவை கண்டிடணும்
ஏகாதசி திருநாளிலே – வைகுந்த
ஏகாதசி நன்னாளிலே !
பாரெல்லாம் உன் நாமம் பாட வேண்டும்
தெருவெல்லாம் பக்தி வெள்ளம் ஓட வேண்டும்
தேடி உன்னை நாடணும் நாடி உன்னைப் பாடணும்
நாராயணன் நாமம் எந்நாளுமே – ஸ்ரீமந்
நாராயணன் நாமம் எந்நாளுமே !!
ராதை – கோதை – சீதை
அவளது செக்கச் சிவந்த விழி
சிங்காரமான விழி !
மண்ணை விழுங்கி வெண்ணைய் திருடி
கோபியர் கொஞ்ச கோலமடிக்கும்
கோவர்த்தன கிரி கொற்றவனைக் காண
ராதை அங்கு வந்தாள்
ராதை அங்கு வந்தாள் – போதை தரும் விழியாள் !
( அவளது )
மண்ணை மிதித்து விண்ணை அளந்து
பொன்னைக் கொடுத்து பெண்ணை மணந்து
கோலங்கள் காட்டும் கோவிந்தனைக் காண
கோதை அங்கு வந்தாள்
கோதை அங்கு வந்தாள் – போதை தரும் விழியாள் !
( அவளது )
கல்லை மிதித்து பெண்ணை விடுத்து
வில்லை முறித்து தன்னை மணந்த
கோதண்ட ராமனைக் காணக்காண வேண்டி
சீதை அங்கு வந்தாள்
சீதை அங்கு வந்தாள் – போதை தரும் விழியாள் !
( அவளது )
மீனங்காடி – தொடர் – மூன்றாவது அத்தியாயம்
மூன்றாம் மாடி
வேலையில் சேர்ந்த உடனே அந்த டிபார்ட்மெண்டின் தன்மை என்ன -மற்றும் வேலை செய்பவர் யார் யார் என்று தெரிந்து கொண்டாள். இதற்கே ஒரு மாதம் பிடித்தது. அங்கு வேலை செய்யும் சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தாலே ‘ சாவு கிராக்கி’ ‘குப்பைத் தொட்டி’ என்பது சரியான பெயர் என்று தோன்றும். அதிலும் அந்த பாபு ஏழு தடவை போன் அடித்த பிறகு தான் எடுப்பான். எடுத்த உடனே தொடர்பையும் துண்டிப்பான். அதில் என்ன திருப்தியோ அவனுக்கு ! அந்த எலிசபெத் இன்னும் ஒரு படி மேலே ! சீக்கிரமா வேலை செஞ்சா என்ன குறைஞ்சு போயிடும் – என்று மிரட்டிய அதிகாரியின் சொந்த பைலை வேண்டுமென்றே தொலைத்து விட்டு அவரைத் திண்டாட வைத்தவள். மேரி ஸ்டோர் ரூமுக்குப் போகும்போது இந்த மாதிரி பேச்சுக்கள் நிறைய காதில் விழும். மத்தியானம் சாப்பிட்டுவிட்டு டிபார்ட்மெண்டுக்கு வந்தால் நாலைந்து பேர் மேஜை மீது தலை குனிந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
பத்து மணி ஆபீஸுக்கு பத்தரை வரை ஒருவர் மாற்றி ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். அதுவரை போன் அடித்துக் கொண்டே இருக்கும். வேறு யாரும் மற்றவர் போனை எடுக்கவே மாட்டார்கள். ‘ ஏன் லேட்’ என்றால் ‘ இன்னிக்கு லீவு சொல்ல வந்தேன்’ பாணியில் பேசி விட்டுப் போவார்கள் ! எல்லாமே ரொம்ப ரொம்ப நிதானமாக ஆமை வேகத்தில் நடக்கும். மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.
ராத்திரி குழந்தைகள் இருவரும் தூங்கிய பிறகு டயரி எடுத்து நேற்று எழுதியதைப் படித்தாள்.
“என்ன ஆபீஸ் ! கொஞ்சம் கூட உயிரே இல்லாத மயான பூமி மாதிரி அல்லவா இருக்கிறது ! மனித நடமாட்டமே இல்லாத தீவு மாதிரி இருக்கிறது ஆபீஸ் ! எதற்குமே சந்தோஷப்படாத ஜந்துக்கள் இங்கு இருப்பவர்கள் ! இப்படிக் கூட இருக்க முடியுமா என்ன?
முப்பது பேர் எனக்குக் கீழே வேலை செய்கிறார்கள். வாங்குகிற சம்பளத்துக்குத் தகுந்தபடி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்குக் கிடையாது போலும் ! மனிதர்கள் என்னவோ நல்லவர்கள் போலத் தெரிகிறார்கள். ஒரு வேளை வருடக் கணக்காக ஒரே வேலையைத் தொடர்ந்து செய்து வந்ததினால் வந்த அலுப்பா ! வேலையில் ஏன் இப்படி ஒரு மந்தம்? அதில் வேலை செய்யும் இளைஞர்கள் கூட கிழவர்கள் மாதிரி இருக்கிறார்கள். அந்த டிபார்ட்மெண்டின் கலாசாரம் எல்லோரையும் நன்கு பாதித்து இருந்தது. கொஞ்ச நஞ்ச திறமைசாலியைக் கூட மரக்கட்டையாக மாற்றி விடும் திறமை அந்த டிபார்ட்மெண்டுக்குத் தான் உண்டு.
அந்த ஆபீஸுக்குள் – அந்த மூன்றாம் மாடிக்குள் நுழையும்போது ஏதோ ஆக்ஸிஜனே இல்லாத காற்றை சுவாசிப்பது போல மூச்சு மூட்டுகிறது ! போன வாரம் தான் தெரிந்தது அந்த நாலு கிளார்க்குகளும் ஆபீஸில் வாங்கின கம்ப்யூட்டரை இரண்டு வருஷமா உபயோகப் படுத்தாமலே இருக்கிறார்கள் என்று. “ நாங்க இவ்வளவு வருஷமா கூட்டிக் கழித்துக்கிட்டு வரலே ! புதுசா எதுக்கு கம்ப்யூட்டர்?” என்று கூறுகிற கும்பல் அவர்கள். இது மாதிரி இன்னும் எத்தனை பேரோ?
நம்ம வேலையை நாம நல்லா செய்தால்தான் நமக்கும் நல்லது, நம்ம கம்பெனிக்கும் நல்லது. இந்த உண்மையை மூணாம் மாடி மக்களிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?
“நாங்க செய்யற வேலை முக்கியமான வேலை. இது எங்களுக்கே புரியுது. ஆனால் எங்களைப் பற்றி யாரும் கவலைப் படறதில்லை. மேலதிகாரிகளும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில்லை. தாமதமானாலும் வேலை நடந்தால் போதும் என்று விட்டு விட்டார்கள்.” என்று அவர்களே சொல்லும் அளவிற்கு மோசமாகவே இருந்தது அந்த டிபார்ட்மெண்ட்.
இந்த வேலையில் விருப்பத்தோட எவரும் வேலை செய்யறதில்லை. என் ஒருத்திக்குத்தான் பணப் பிரச்சினை. பெண்களில் பெரும்பாலானவர்கள் டைவர்ஸ் செய்தவர்கள். குழந்தைகளுடன் தனியே வாழ்பவர்கள் ! அந்த ரேணுகா போன வருடம் பாட்டியாகி விட்டாள். இந்த ஜார்ஜ் அவங்க அப்பாவோட உடம்பை சரி செய்யவே இந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறான். எதற்காக எல்லோரும் – என்னையும் சேர்த்து – இந்த வேலையில் இருக்கிறோம் ! நல்ல சம்பளம், சௌகர்யம், பாதுகாப்பு இதுக்குத்தானே !”
மேரி தான் எழுதிய கடைசி வரிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தாள். இந்த வேலை நிச்சயமாக ஒரு வரப் பிரசாதம் தான். நிரந்தர வேலை, நல்ல சம்பளம், நல்ல பாதுகாப்பு ! திடீரென்று அவளுக்கு ஒரு பயம் வந்தது. ‘ இந்த பாதுகாப்பான வேலை நிரந்தரமாக எப்போதும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? இந்த உண்மை இங்கே வேலை செய்பவர்களுக்குத் தெரியுமா? இல்லை புரியுமா? மார்க்கெட் நிலவரம் நிதிக் கம்பெனிகளை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை இவர்கள் அறிவார்களா? மற்ற நிதிக் கம்பெனிகளுடன் போட்டி போட்டு முன்னால் நிற்க நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கருத்து ஏன் இவர்கள் மூளைக்கு இன்னும் எட்டவில்லை? நாம் தயாராக இல்லாவிட்டால் நமது வேலை பறி போய் புதிய வேலை தேட வேண்டும் என்ற உண்மை ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?
மேரிக்கு அதற்கான பதில் தெரிந்திருந்தது. இவர்கள் இந்த டிபார்ட்மெண்டில் ரொம்ப காலமாகவே இருந்து கிணற்றுத் தவளைகளாக மாறி விட்டவர்கள். பெரிய பிரச்சினை வந்து கம்பெனியை மூடுவதற்கு முன்னால் நாம் ‘ரிடயர்ட்’ ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை அவர்கள் அனைவருக்கும் இருந்தது. மேரி தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டாள். தனக்கு அந்த மூட நம்பிக்கை இருக்கிறதா?
போன் மணி அவள் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது. நனவுக்கு வந்தாள். அதைத் தொடர்ந்து வந்தன தொடர் வெடிகுண்டு போல ஒரே களேபரம் !
ஒரு முக்கியமான வாடிக்கையாளரின் பைலைக் காணவில்லை. இந்த டிபார்ட்மெண்டில் தான் கடைசியாக இருந்ததற்கான ஆதாரம் இருந்தது. அடுத்தது வேறு டிபார்ட்மெண்டிலிருந்து இங்கே வந்து ஒருவருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் போதாது என்று ஒரு கம்பெனி வக்கீலோடு பேசும்போது போனை மூணு தடவை வேணுமென்றே ‘கட்’ செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு. ஒரு முக்கியமான ப்ராஜெக்டுக்கு இன்று தான் கடைசி நாள். அதிலே வேலை செய்யும் ஆள் உடம்பு சரியில்லை என்று இன்று வரவில்லை. பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாக வந்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே மதிய உணவிற்குக் கிளம்பினாள் மேரி. !
இந்த டிபார்ட்மெண்டுக்கு வந்த பிறகு மதிய உணவிற்குக் கேண்டீன் போகாமல் வெளியே போய் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள் மேரி. கேண்டீனில் மற்ற சீனியர் மேனேஜர்கள் இவள் டிபார்ட்மெண்டைப் பற்றி சொல்லும் குறைகளைக் கேட்க முடியவில்லை. இதைத் தவிர்க்கவே அவள் வெளியே போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அப்படியே ஆபீஸுக்கு வெளியில் உள்ள ஒரு சின்ன மலைக்கு அருகே இருக்கும் ஏரிக்கரையில் இருக்கும் உணவு விடுதியில் தான் சாப்பிடுவாள். நல்ல அமைதியான இடம். அப்பப்போ உல்லாசப் பிரயாணிகளும் வருவார்கள். மனதுக்கும் இதமாக இருக்கும் அந்த இடம் !
அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.
சோம்பேறி ராஜா
சோம்பேறி ராஜாவுக்கு கோயில் ஒண்ணு கட்டினா
உற்சவ மூர்த்தியாய் நான் இருப்பேன் – அம்மாடி
கோபுர உச்சியில் தூங்கிடுவேன் !
பக்த கோடி மக்க ளெல்லாம்
கர்ப்ப கிருகம் வந்து நின்று
பாட்டுப் பாடி ஆசி வேண்டி வந்திடுவார் !
சாமி எங்கே காணோம்டா
செஞ்ச பாவம் என்னாடா
என்று சொல்லி புலம்பிடுவார் – நானோ
கோபுர உச்சியில் தூங்கிடுவேன் !
காலை மணி அஞ்சரைக்கு கச்சிதமா எந்திரிப்பேன்
காப்பி குடிப்பேன் அப்புறம் தூக்கம் பிடிப்பேன்
சனிக் கிழமை ராத்திரி தூங்கப் போய்
திங்கட் கிழமை காலை எந்திரிப்பேன்
போட்ட ஷூவைக் கழட்ட நேரமில்லை
போட்டுக் கிட்ட சட்டையும் தோய்க்கவில்லை
குளி குளிச்சு ரொம்ப மாசமாச்சு – அட
ஷேவ் பண்ணியும் மாசம் ஆறாச்சு !
காளை என்னைக் கட்டிக் கொள்ள
கச்சிதமா பொண்ணு வந்தா
விட்டு விடு சோம்பேறித் தனத்தை என்றாள்
சரி கண்ணே என்று விட்டு விட்டேன்
கிட்ட வாடி என்று கட்டிக் கொண்டேன்
சோம்பேறித் தனத்துக்கு முழுக்குப் போட்டேன்
சுறு சுறுப்பாய் நானும் மாறி விட்டேன்
இப்பெல்லாம்
சோம்பேறி ராணிக்கு கோவில் ஒன்று கட்டினா
உற்சவ மூர்த்தியாய் அவள் இருப்பாள் – நானோ
கோபுர வாசலில் காத்திருப்பேன் !!
இருபத்தைந்து இந்திய மேதைகள்
வெள்ளி விழா கொண்டாடிய NDTVயின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தலை சிறந்த வாழும் இந்திய மேதைகளுக்கு டிசம்பர் 14, 2014ல் ராஷ்ட்ரபதி பவனில் விருந்து – விருது அளித்த போது எடுத்த படம்!
அவர்கள் ………………………………………………
- அமிதாப் பச்சன்
- அனிஷ் கபூர்
- அமர்த்தியா சென்
- A R ரஹ்மான்
- C N R ராவ்
- ஏல பட்
- பாலி நாரிமன்
- இந்திரா நூவி
- ஹரி பிரசாத் சௌர்சியா
- கபில் தேவ்
- லியாண்டர் பயஸ்
- M S சுவாமிநாதன்
- முகேஷ் அம்பானி
- N R நாராயண மூர்த்தி
- ரஜினிகாந்த்
- ரத்தன் டாடா
- சச்சின் டெண்டுல்கர்
- SS. பத்ரிநாத்
- S. H. ராஜா
- ஷாருக் கான்
- வெங்கடராமன் ராமகிருஷ்ணன்
- விக்ரம் சேத்
- வஹீதா ரஹ்மான்
- Y K ஹமீத்
- ஜுபின் மேத்தா
திருப்பாவை
தமிழ்த் திரைப்படங்கள்
ஒரு வரி விமரிசனம்
சந்திரா: ரூபா ஐயரின் காதல் ஓவியம்
மாலினி 22 பாளையங்கோட்டை : மலையாள ரீ மேக்
கோலி சோடா: பசங்க தூள் கிளப்பறாங்க
இது கதிர்வேலன் காதல்: வழக்கமான மசாலா
இங்கே என்ன சொல்லுது: சந்தானம் காமெடி மசாலா
உ : படம் எடுப்பதைப் பற்றிக் கதை
புலிவால்: நாயர் பிடித்த புலிவால் மாதிரி ஆபத்தான விஷயம்
பண்ணையாரும் பத்மினியும் : மெல்லச் செல்லும் அழகுக் கவிதை
ரம்மி : ஜாதிக் காதல் கலவரம்
இது நம்ம நாடு – நாடக விமர்சனம்
V வரதராஜனின் “ இது நம்ம நாடு” ஓர் அரசியல் ஊசி வெடி பட்டாசு !. யுனைடெட் விஷுவல்ஸ் நாடகக் குழுவிற்காக துக்ளக் சத்யா எழுதி TV வரதராஜன் நாடக வடிவாக்கி இயக்கிய மேடை நாடகம் இது!
வரதராஜனின் தாத்தா அவருக்கு 25 கோடி சொத்தை கொடுக்க அதை எப்படி முதலீடு செய்வது என்று வரதராஜனும் அவரது குடும்பமும் ஆருயிர் நண்பனும் சேர்ந்து ஆடுவது – ஆட்டுவது தான் இது நம்ம நாடு.
சினிமா, பத்திரிகை என்று ஆரம்பித்து அதில் அரசியல் வாதிகளின் குறுக்கீட்டால் நஷ்டமடையும் வரதராஜன் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்றதும் அதுவரை ஷேர் ஆட்டோவாயிருந்த கதை சும்மா SUV மாதிரி ஓட ஆரம்பிக்கிறது.
சும்மா சொல்லக் கூடாது! – வசனத்தில் துக்ளக் சத்யா பூந்து விளையாடுகிறார். காங்கிரசைத் தாக்கும் போதும் சரி, தமிழ் நாட்டு அரசியலைத் தாக்குவதிலும் சரி துக்ளக் சத்யா தான் வரதராஜன் குரலில் பேசுகிறார் என்பது சுத்தமாகத் தெரிகிறது. ஆனால் வரதராஜன் மற்றும் அவரது மனைவி, நண்பர் ராமசேஷன், , அரசியல்வாதிகள், ஹை கமாண்டின் எடுபிடி சர்தார்ஜி அனைவரது நடிப்பும் கன கச்சிதம்! நாடகத்தை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.
குடியை ஒழிக்க ‘டாஸ்மாக்’ பெயரில் தனி மாவட்டம் அமைத்து அங்கு மட்டும் குடிக்கலாம் , அரசுக்கு வருமானத் திற்கும் பஞ்சமில்லை, குடிகாரருக்கும் கஷ்டமில்லை என்பது புதுமையான நகைச்சுவை.
கருணாநிதி,மன்மோகன் சிங், சோனியா, ஹை கமாண்ட், 3ஜி, ஓட்டுக்கு காசு,போன்ற அரசியல் நையாண்டிகள் வரதராஜனின் வார்த்தையில் நொறுங்கும் பல்புகள். பவுண்டரி,சிக்ஸர் என்று கவலைப் படாமல் சிங்கிள் ரன்னாக ஸ்கோர் செய்கிறார்கள் நடிப்பவர்கள் அனைவரும்!
எப்போதும் துக்கப்படற பிரைம்மினிஸ்டர்,குடும்பாலயம், அரசியல் வாதிகளால் பாதிக்கப் பட்டவர் முன்னேற்றக் கழகம் ( அ.பா.மு.க), டெபுடி பிரைம் மினிஸ்டர் ஆன வரதராஜன் முதன் முதலில் கையெழுத்திட்ட கோப்பின் மூலம் மூணு லட்சம் கோடிக்கு மேல ஊழல், அதனால் வரும் சிபிஐ விசாரணை, முடிவில் அப்பீல் இல்லா ஆயிரம் ஆண்டு கடுங்காவல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி – நாடகம் முழுவதையும் நம்மை சிறு புன்னகையுடன் பார்க்க வைக்கிறார்கள்.
வசனத்தில் இருக்கும் பஞ்ச்சுக்கு ஒரு பதச் சோறு – ‘ஹை கமாண்ட் அவனுமில்லை, இவனுமில்லை so நீயா ‘ – கை தட்டல் எகிறுகிறது!
அந்த மாதிரி பஞ்ச் கதையிலும் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருக்க முடியும்.
இது நாடகமல்ல -அரசியல் நையாண்டிகளின் தொகுப்புச் சிதறல்! என்ற ஹிந்து பத்திரிகையின் விமர்சனத்துக்கு நாமும் வழி மொழிகிறோம்!
அழுகை தானே அழுகை தானே
போகும் போது யாரும் ஒன்றாய் போவதுமில்லை
இருக்கும் வரையில் யாரும் பிரிவை நினைப்பது மில்லை
அழுகைதானே மனிதன் பேசும் ஆரம்ப வார்த்தை-அவன் அடங்கும் போதும் தொடங்கும் வார்த்தை அழுகை தானே ! அழுகை தானே !
இன்பம் யாவும் இரவைப் போல
விடிந்த பின்னால் கலைந்து போகும்
துன்பம் யாவும் நிழலைப் போல
ஓட ஓட கூடத் தொடரும்
சிரிப்பை மனிதன் மறந்து விட்டால்
வாழ்க்கை எல்லாம் அழுகை ஆகும்
துடிக்கும் மனதை அடக்கி வைத்தால்
சொர்க்க புரியின் கதவு திறக்கும் !
ஆசை நெஞ்சில் தீர்ந்து போனால்
அழுகை கண்ணில் மறைந்து போகும்
காசை அள்ளி வீசினாலும்
துயரம் அங்கே தோன்றப் போமோ?
செய்யும் தொழிலை சுத்தமாகச்
செய்யும் மனிதன் தெய்வமாவான் – அவன்
போகும் போது உலகம் முழுதும்
அழுகை தானே ! அழுகை தானே !!
ஆடா தொடா எலை
ஆடா தொடா எலையை அரைச்சுப் போட்டான் – அந்தக்
காயமெல்லாம் மாயமாக மறைஞ்சு போச்சே !
முந்தா நாள் காலையில மாடு வாங்கப் போகையில
கந்தன் வந்தான் கத்தி கந்தன் வந்தான்
கந்தன் வந்தான் கத்தி கந்தன் வந்தான்
ஜோப்பு மேல உள்ள காசை அள்ளித் தாடா – இல்லை
பல்லைத்தாட – என்று
கந்தன் கேட்டான் கத்தி கந்தன் கேட்டான்
கந்தன் கேட்டான் கத்தி கந்தன் கேட்டான்
காசு மேல ஆசையால இல்லே என்றான்
மாடன் இல்லே என்றான்
ஆளு வரும் சத்தம் கேட்டு ஓடப் போனான்
கந்தன் ஓடப் போனான்
போகு முன்னே மாடனுக்கு தடியால் தந்தான்
மூங்கில் கழியால் தந்தான்
முதுகில் பலமாய் தந்தான் – வலி
தாங்க முடியாமலே ஓடி வந்தான்
மாடன் ஓடி வந்தான்
மருந்து தேடி வந்தான்
நாட்டு வைத்திய நரை முனியும் தடவிப் பார்த்தான்
முதுகைத் தடவிப் பார்த்தான்
முதுகைத் தடவிப் பார்த்தான்
அப்புறம்
ஆடா தொடா எலையை அரைச்சுப் போட்டான் – அந்தக்
காயமெல்லாம் மாயமாக மறைஞ்சு போச்சே!
சந்தான கிருஷ்ணன் (விஜயலக்ஷ்மி)
ராகம்: செந்தாழம் பூவில்