Monthly Archives: February 2015
தலையங்கம் – ஆ.ஆ. – ஆச்சரியம்


No wonder BROOM sweeps! It is meant for sweep!
டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றி அனைத்துப் பிரிவினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதன் சிறப்புகள் :
- ஊழலுக்கு எதிரான கட்சி வென்றுள்ளது- நல்ல காலம் பிறக்குது..
- எழுபதில் 67 இடங்கள் வெற்றி! உண்மையில் வரலாறு காணாத வெற்றி!
- தேர்தல் ஜோதிடர்கள், கருத்துக் கணிப்புக்கள் அனைத்தையும் (மேலே காண்க) இது பின் தள்ளி விட்டது. .
- பிஜேபியை வெறும் 3 சீட்டுக்குத் தள்ளி- காங்கிரசுக்கு முட்டை கொடுத்து மீதம் 67 ஐயும் எடுத்துக் கொண்டது!
- மோடி அலையைக் கட்டுப் படுத்தியது!
ஆ..ஆ..வின் ஆர்ப்பரிப்புக்குக் காரணம் என்ன?
. உறுதியான வாக்குறுதிகளை வழங்கியது
- டெல்லி தனி மாகாணம்
- எல்லோரும் உட்பட்ட ஜன் லோக் பால் சட்டம்
- 2 லட்சம் கழிப்பறைகள்
- பாதி விலையில் மின்சாரம்
- எல்லோருக்கும் 700 லிட்டர் தண்ணீர்
- சிசிடிவி கேமராக்கள் -பெண்கள் பாதுகாப்பு படை
- 500 பள்ளிகள் , 20 கல்லூரிகள்
- உதவி மையங்கள் டெல்லி முழுவதும் இலவச WIFI வசதி
வெற்றிக்கான மற்ற காரணங்கள்:
- சாதாரண மக்களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டது ( பத்து ரூபாய் மப்ளர் vs பத்து லட்சம் சூட்)
- திட்டமான பிரசாரம்
- வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்டது (இதுவரை யாரும் செய்யாதது!)
- முஸ்லிம் ஓட்டுக்கள் மொத்தமாக வந்தது
- மற்ற எதிர்க்கட்சிகளும் இவர்களை ஆதரித்தது
- பி ஜே பியை விவாதத்திற்கு அழைத்தது
- கிரண் பேடியை முதல்வராக அறிவிக்க வைத்தது
- ஓட்டுக்குக் காசு கொடுக்காதது
- காங்கிரஸின் படு வீழ்ச்சி
- காங்கிரஸ்-பிஜேபிக்கு ஒரு மாற்று
இனி மோடி,
- ஆகாய விமானத்திலிருந்து தரைக்கு வரவேண்டும்!
- பாலம் விமான நிலையத்திற்குப் போவதற்குப் பதிலாக பாலங்கள் கட்டவேண்டும்!
- மற்ற நாட்டை விட்டு நம் நாட்டைக் கவனிக்க வேண்டும்
இனி காங்கிரஸ்,
- பெருமளவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!
இனி ஆ.ஆ.
- செயல்.. செயல்.. இது தான் தாரக மந்திரமாக இருந்து நல்ல மாற்றுக் கட்சியாக மலரவேண்டும்.
நடக்குமா? நடக்கவேண்டும்!
——————————————————————–
ஆண்டு : 2 மாதம் : 2

Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
ஒபாமாவின் இந்தியா விஜயம் – அதுவும் நமது குடியரசு விழாவில் கலந்து கொண்டது பெருமையான செய்தி தான்.
தொடரட்டும் இந்தியா அமெரிக்கா நல்லுணர்வு !
இந்த வீடியோ சும்மா ஜாலிக்காக! நல்லா கலாய்ச்சிருக்காங்க !
நன்றி: Headlines Today
2014 தமிழ்த் திரைப்படம் -ஒரு கண்ணோட்டம் (Action King )
2014 இல் வழக்கத்துக்கு மாறாக நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன. எல்லா வருடங்களிலும் ரஜினி அஜீத் சூர்யா தனுஷ் படங்கள் வரும். ஹிட் ஆகும். ஆனால் இந்த வருஷம் சில நல்ல புதுமையான படங்கள் வந்துள்ளன .அவை ஹிட்டும் ஆகியிருக்கின்றன.
சரி இந்த வருடம் வந்த சிலபடங்களைப் பற்றி டாப் 10 பாணியில் பேசுவோம்
லிங்கா

தலைவர் படம் என்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு போனதினாலே சுமார் ரகத்தில் லிங்காவைச் சேர்க்க முடிந்தது. இல்லைன்னா ???? ரஹ்மான் பாட்டு எதுவும் மனசிலே நிக்கலை. ரஜினியின் பழைய படங்களை மிக்ஸியில் அரைத்து தோசை ஊத்தியிருக்கிறார் கே. எஸ் ரவிகுமார். சாரி தலைவரே. தோசை வேகவில்லை.
பத்துக்கு நாலு
அரிமா நம்பி:

நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. வித்தியாசமான திருப்பங்கள்.செதுக்கியதைப் போன்ற பாத்திரங்களும் வசனங்களும். விக்ரம் பிரபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகள் இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்கிருக்கலாம். தொய்வு இல்லாமல் போகிறதுக்காக டைரக்டரைப் பாராட்டலாம். டூயட் பாடற வழக்கத்தை யாராவது மாத்தினால் தேவலை.
பத்துக்கு ஆறு.
யாமிருக்க பயமே:

திகிலும் காமெடியும் கலப்பது தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட். நிறைய இடங்களில் பயமும் குபீர் சிரிப்பும் வருகின்றன என்றாலும் அவை எதிர்பார்த்த மாதிரி தான் இருக்கின்றன, நிறைய பேரின் நடிப்பு சுமார் ரகத்துக்கு கீழே! நல்ல முயற்சி.
பத்துக்கு ஏழே கால் .
வாயை மூடிப் பேசவும்:

புதுமையான கனவுக் கதை. சின்னச் சின்னப் பாத்திரங்களும் நல்லா பண்ணியிருக்காங்க. குறும்படத்தை பெரிய படமா எடுத்திருக்கற சிரமம் பார்க்கும் போது தெரியுது.சுந்தரலிங்கம் சார்! தமிழ் சினிமாவுக்கு செம புதுமையான வரவு.
பத்துக்கு ஏழு.
மெட்ராஸ்:

இந்தப் படத்தின் ஹீரோ சுவர் தான். அந்தப் பாணியில் சொன்னால் பழைய சுவத்துக்குப் புதுப் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அங்கே அங்கே கலர் சூப்பரா இருந்தாலும் நிறைய இடங்களில் பெயிண்ட் சாயம் போயிருக்கு. ஏம்ப்பா! இந்த தமிழ் பேசற ஹீரோயின்கள் எல்லாம் எங்கே போயிட்டாங்க? ஒண்ணு ரெண்டு பாட்டு கேட்க நல்லாவே இருக்கு.
பத்துக்கு ஆறே முக்கால் .
கதை திரைக்கதை வசனம் இயக்கம்

வித்தியாசமா எடுக்கணும்னு முடிவு பண்ணி எடுத்த இந்தப் படத்தை பார்த்திபன் நல்லாவே கொண்டு போயிருக்கிறார்.எல்லாத்தையும் தலை மேல் போட்டுக்கிட்டு நடிப்பில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். அருமையான முயற்சி.
பத்துக்கு ஏழு.
காவியத் தலைவன்

நல்ல தரமான காலப் பின்னணி . நல்ல திறமையான நடிகர்கள்.சூப்பரான ரஹ்மானின் இசை. கண்ணைக் கவரும் உடைகள். அருமையான ஒளிப்பதிவு. இத்தனை ‘நல்ல’ க்கள் நிறைய இருந்தும் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நல்லா இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏன் ? டைரக்டரைக் கேட்க வேண்டிய கேள்வி. கதையோட கருவும் 1930 வருட நாடகப் பின்னணியும் சரியா ஒட்டவில்லை.
பத்துக்கு ஏழேகால்
தெகிடி:

புதுமைச் சரக்குடன் விறுவிறுப்பையும் சரியா கலந்து கொடுத்திருக்கிறார்கள். முக்கியக் கதா பாத்திரங்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ‘விண்மீன் விழியில்’ பாட்டும் எடுத்த விதமும் ரொம்ப நாளைக்குப் பிறகு திரும்பிப் பார்க்க வைக்கின்றன. எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
பத்துக்கு ஏழே முக்கால்.
சதுரங்க வேட்டை:

எடிட்டிங் என்றால் இந்தப் படத்தைப் பார்த்துத் தான் கத்துக்கணும் . திரைக்கதையும் வசனமும் காமெடியை அல்லாக்க தூக்கிவிடுது. ஊ ழலைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரணும் என்பதற்காக எடுத்த படம் இல்லை. ஆனால் அது இயல்பா மக்களுக்குப் போய்ச் சேர்வது தான் இதன் பெரிய வெற்றி. நடிப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து க்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தா படம் எங்கேயோ போயிருக்கும்.
பத்துக்கு எட்டு.
ஜிகிர்தண்டா:

2014இல் டாப் படம் இது. இதுவரைக்கும் நாம் பாக்காத கதை /திரைக்கதை . டைரக்டர் கார்த்தி சுப்பராஜ் சூப்பரா கலக்கிட்டீங்க! ஒரு ரவுடி படம் ‘மாஸ்’ படமாக மட்டுமில்லே ‘கிளாஸ்’ படமாகவும் இருக்க முடியும்னு நிரூபித்த படம்.அதே மாதிரி படத்தை சீரியஸா எடுத்து போகாம காமெடியில் காவடி கட்டினது ரொம்ப ரொம்ப சூப்பர். சாதாரண ரவுடியை சினிமா களத்தைப் பார்த்து மியூசிக், லைட்டிங்க், ஒலிப்பதிவு எல்லாம் பிச்சு ஒதரவிட்டு பின்னாடி அவனோட தனி ஸ்டைலைக் கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர். அசால்ட்டா திரிந்த ரவுடி சேதுவை ஒரு முத்திரை ஹீரோவா மாத்தின விதம் இன்னும் பல வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் தமிழ்ப் படத்தின் திருப்புமுனையா நிலைச்சு நிக்கும் .
பத்துக்கு ஒன்பது.
பார்க்காமல் கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து சொல்ல அனுமதித்தால்,
கோச்சடையான் – பத்துக்கு மூணு.
ரம்மி – பத்துக்கு நாலு
முண்டாசுப்பட்டி – பத்துக்கு ஐந்து
கப்பல் – பத்துக்கு ஐந்து
பிசாசு: – பத்துக்கு ஆறு
கயல் – பத்துக்கு ஆறரை
மற்ற மாஸ் படங்கள் – ஜில்லா, வீரம், அஞ்சான் ,மான் கராத்தே, கத்தி இதுக்கெல்லாம் என்ன மார்க் போட்டாலும் ரசிகர்கள் மாலை போட்டு அபிஷேகம் செய்து பார்க்கத் தான் போறாங்க!
2015இல் படம் எடுக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
– வித்தியாசமா எடுங்க!
– புத்திசாலி மக்களை ( அவர்கள் தான் மெஜாரிட்டி) கவர ரூம் போட்டு யோசிச்சுக் கதை எழுதுங்க!
– ஃபார்முலா 44 கதை வேணாமே!
– தமிழ்ப் படத்தின் தரத்தைக் கொஞ்சம் முன்னுக்குக் கொண்டு வாங்க!
– பாத்திரங்களைப் புதுப் பாணியில் செதுக்குங்க!
– பாலச்சந்தருக்கு அப்புறம் ஹீரோயின் படங்களையே காணோம். நல்ல தமிழ் பேசத்தெரிந்த ஹீரோயின்களை வைத்து ஹீரோயினை மையமாகக் கொண்ட படமும் எடுங்கள்!
– விறுவிறுப்பா எடிட்டிங் பண்ணுங்க.
– ஒண்ணரை மணி நேரத்தில் படத்தை முடிங்க!
– தேவையில்லாத பாட்டு பைட் எல்லாம் வேணாங்க!
இதெல்லாம் சொல்லறது ஈஸி கண்ணா! செஞ்சு பார்டா என்று சொல்றீங்களா!
எங்க ஆசையைச் சொல்லிப்புட்டோம். அப்பறம் உங்க விருப்பம்!!
வாலண்டைன் தின ஸ்பெஷல் – ஒரு காதல் கானா
பாடலைக் கேட்க மேலே கிளிக் செய்யவும்

காலேஜ் வாசல் டீ கடையில நின்னு
காத்துக் கெடந்து தினமும் தின்னு பன்னு
காதல் வந்து மனசு எல்லாம் மண்ணு
ஒரு லுக் விட மாட்டியா நீ கண்ணு
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப் பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா
போன மாதம் கிழமை வெள்ளி
பாத்து இருந்தேன் எந்தன் ஜோலி
தலை நெறைய வாசனை மல்லி
கடைக்கு வந்தா ஸ்கூட்டியை தள்ளி
அவ டயறு மட்டும் ஆக வில்லை பஞ்சர்
என் ஹார்ட் டியூபு வீக் ஆகி டார்ச்சர்
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப் பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா
உன் அண்ணன்கிட்டே வாங்கி மொத்து
ஆக மாட்டேன் காதல் பரத்து
ஜெய்ப்பேன் நீ என் காதல் சொத்து
நான் சூரியவம்ஸம் சரத்து
அட வாங்கித் தாறேன் கோல்டு பேங்கிலு செயினு
வில் யு பி மை ஸ்வீட்டு வேலன்டைனு
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப் பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா
காலேஜ் வாசலில் காத்து கெடக்கும் ஆளு
என் ஹீரோ நீயி, நான்தான் உன்னோட கேர்ளு
அப்பன் கிட்டே வந்து பொண்ணு கேளு – நீ
தாலி கட்டு, பார்த்து முகூர்த்த நாளு
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு லவ்வு பண்ணிட்டேன்
என் ராசா உந்தன் வேலன்டைனு நானும் ஆகிட்டேன்

ஐ – ஒரு அனாடமி (ராசாத்தி கண்ணு )
‘ஐ’ என்றால் அது ஐந்து என்றால்
அதன் விமர்சனமும் ஐந்து பரிணாமத்தில் …

1. இது ஒரு ஷங்கர் படம்
ஷங்கர் படம் என்றாலே சிலவற்றை எதிர்பார்க்கலாம்.அந்த Checklist வைத்து இந்தப் படத்தைப் பார்ப்போம்
அளவில்லாத பிரம்மாண்ட பட்ஜெட் -செக்
ஹிட் ஹைடெக் பாடல்கள் -செக்
சூப்பர் சினிமாட்டோக்ராஃபி -செக்
இதுவரை பார்த்திராத இடங்கள் -செக்
புதுமையான சண்டைக் காட்சிகள் -செக்
பானைப்பாட்டு , பூக்கள் நிறைந்ததே பாட்டு -செக்
ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்கள் -செக்
கொடூரமாகப் பழி வாங்கும் படலம் -செக்
வலுவான கதை, திரைக்கதை – sorry மிஸ்ஸிங்
2. கதை, திரைக்கதை, நடிகர்கள்
பொதுவாக ஒரு பெரிய நாட்டளவுப் பிரச்சினையை ஷங்கர் தீர்த்து வைப்பார். ஆனால் இதில் ஒரு தனிமனிதன் பிரச்சினையைக் கையாண்டிருக்கிறார்.
ஒரு பாடி பில்டரின் புதுமையான கதை.அவரின் மிஸ்ட ர் இந்தியா கனவு, அதற்காக உடம்பை தயார் செய்யும் முயற்சிகள் எல்லாம் காட்டி இருக்கிறார். ஆனால் அவர்களின் சக்தி,முதலீடு எல்லாம் அந்த கட்டு மஸ்தான உடம்பு தான் என்பதை இன்னும் கொஞ்சம் மனதில் நிற்கும்படியாகக் காட்டியிருக்கலாம்.
ஹீரோவின் உருவம் மாறுவது ஒரு முக்கியமான கட்டம். அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருந்தால் பார்ப்பவரின் மனதைத் தொட்டிருக்கும். அங்கே டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார்.
மேலும் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையால், முதலிலிலேயே மாறுபட்ட ஹீரோவை பார்த்ததால், அந்த மாற்றம் தரும் பஞ்ச் மிஸ் ஆகிறது.
ஷங்கரின் எல்லா படங்களிலுமே ஒன்றிரண்டு நெகிழ வைக்கும் டைலாக் ,காட்சி வரும். இதிலும் இருக்கு – , சந்தானத்தின் கண்ணிலேயே கண்ணீர் வரும் அளவுக்கு. ஆனால் நம்மால் ஏனோ ரசிக்க முடியவில்லை.
அடுத்தது இது தான் நடக்கும் என்றும், இவர் தான் முக்கிய வில்லன் என்றும் எல்லோராலும் எளிதாக யூகிக்க முடியும் என்று ஷங்கரால் ஏனோ யூகிக்க முடியவில்லை. எல்லோருக்கும் எளிதாக புரிந்த வில்லன்களின் சதித் திட்டத்தை, 80 களில் வரும் படம் போலே, அவர்களே விரிவாக விளக்குவது சற்று எரிச்சலைத் தருகிறது.

ஹீரோயின் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் தான். ஒரு மாடலாக வருவதால், பல விதமான, குறைவான உடைகளில் வந்தாலும், கண்ணுக்கு உறுத்தாமல் அழகாக இருக்கிறார். தமிழர்களின் மனதில் கவர்ச்சிக் கன்னி கோடி லைக்ஸ் வாங்குவார் என்பதில் ஆச்சர்யம் இல்லை. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
காமெடிக்கு சந்தானம். முன் பாதியில் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால் பின்பகுதியில் சீரியஸ் டைமில் காமெடி கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. பவர் ஸ்டாரும் சில இடங்களில் வந்து, விழுந்து விழுந்துச் சிரிக்க வைக்காவிட்டாலும் , சில ஸ்மைல்களை அள்ளிச் செல்கிறார்.
வில்லன்களில் சில பேர் அனாவசியம். சண்டைக் காட்சிகள், சினிமாட்டோக்ராஃபி மற்றும் காட்சி இடங்கள் மிக பிரமாதம். ஒவ்வொரு ஷாட்டையும் பார்க்கப் பார்க்க அழகு. காமிராமேனுக்கு ஒரு தனி ஷொட் டு. அடுத்த வெகேஷன் எல்லோரும் சீனா லொகேஷன் போனால் ஆச்சரியம் இல்லை !.
புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக புது வகையான சதி மற்றும் பழி வாங்கும் யுக்திகள் என்று டைரக்டர் காட்டி இருக்கிறார். ஆனால் முகம் சுளிக்கும் வகையில் கொடூரமாக இருக்க வேண்டுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் .
3. இசை, பாடல்கள்
ரஹ்மானின் இசை இதில் கொ டி கட்டிப் பறக்கிறது. தலைவர் படத்தில் சற்று கோட்டை விட்ட ரஹ்மான் இதில் விட்ட இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஏற்கனவே பாடல்களெல்லாம் மெகா ஹிட். இசை மற்றும் பாடியவர் குரல் கேட்டு எல்லோரும் மெரசலாயிட்டோம். பாடல்களை படம் ஆக்கிய விதமும் அபாரம்.
4. ஐ என்றால்?
தமிழிலே ‘ஐ’ என்கிற சொல்லுக்கு அர்த்தங்கள் பல. அதை ஒரு பாட்டுலே மதன் கார்கி ரொம்ப ரொம்ப ஐ(ஹை) யாக சொல்லி இருக்கிறார்
“ ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐ களின் ஐ அவள் தானா ?”
“ ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐ களின் ஐ அவன் நீயா?”
கதையைப் பொறுத்தவரை ‘ஐ’ இரண்டு இடத்துலே முக்கியமா வருது.
ஹீரோ ஹீரோயின் லவ் பண்ணுவதற்குக் காரணம் – ஐ (ஒரு பெர்ஃப்யூம்)
அதே மாதிரி வில்லன் ஹீரோவை அட்டாக் பண்ணுவதும் – ஐ (ஒரு வைரஸ்)
5. அதற்கும் மேலே ‘I’ என்றால் ‘நான்’ என்கிறார் விக்ரம்

சினிமாத் துறையில் விக்ரமின் அர்ப்பணிப்புப் பற்றி எல்லோரும் அறிந்தது தான். ஒரு படத்தில் ஒரு கெட்டப்பில் வந்தால், அடுத்த படத்தில் வேற கெ ட்டப்புக்குக் கடுமையா உழைக்கும் ஒரு நேர்மையான நடிகர் . ஆனால் இந்த படத்தில் அதற்கும் மேலே ஒரே படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் வருகிறார்.
விக்ரம் in ஐ என்பதை விட இது விக்ரமின் ஐ
முதலில் ஒரு பாடி பில்டர் – இதற்காக நல்ல கட்டு மஸ்தான உடம்பை தயார் செய்திருக்கிறார். மிஸ்டர் இந்தியா போட்டிக்காக எண்ணை தடவிய உடம்போடு போஸ் குடுக்கும் விக்ரமின் உழைப்பை நன்றாகப் பாராட்ட வேண்டும்.
அடுத்து ஒரு ஹேண்ட்ஸம் மாடல் – மோதலில் லுக் மாறுவது, பிறகு பாடி லாங்குவேஜ் என்று நம்பும்படியாக இருக்கிறது. இங்கு டைரக்டருக்கும் பாராட்டுகள் சொல்ல வேண்டும்.
ஹீரோயின் அவரை காதலிக்கிறேன் என்று சொல்லும் போது, கூல் மாடல் லுக்குடன், அப்பாவியாக சென்னை தமிழில் “லிங்கேசா நம்பாதே நம்பாதே ” என்று ஓடும் காட்சி அருமை. பூக்களே,ஆய்லா பாட்டில் அவரைப் பார்த்து, அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த பெண்கள் கூட, தங்கள் பாய்ஃப்ரெண்ட் இவர் போல் இருக்க வேண்டும் என்று சொல்லும்படி வைத்து விட்டார்.
கடைசியாக கூனன் – இதற்காக மேக்கப் மட்டும் போதுமென்று இல்லாமல் எடையைக் குறைத்து, அந்த பாத்திரத்துக்கு ஏற்றபடி தன்னையே உருமாற்றி இருக்கிறார்.
அதனால் விக்ரமின் நடிப்பு, உழைப்பு, body builder physique, ஹேண்ட்ஸம் லுக், கூனிக் குறுகிய கோலம் எல்லாம் காண கண்டிப்பாக ஐ பார்க்கலாம்.
ஆனால் கதை, திரைக்கதை என்று பார்த்தால் ??

ஆகமொத்தம் இந்த ‘i’ ஃபிசிக்ஸ்ஸில் வரும் கரண்ட்டாக இல்லாமல் கணிதத்தில் வரும் கற்பனையாகத் தான் இருக்கிறது.
படத்தைப் போலவே இந்த விமர்சனமும் நீ…..ண்டு விட்டது!
ஆத்திசூடி – Aathichoodi

ஔவையாரின் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
மேலே உள்ள லிங்க் ஆத்திச்சூடிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
ஆத்திச்சூடியின் வரிகளும் அதன் ஆங்கிலப் பொருளும்: (facebook லிருந்து ) நன்றி: இன்டெர்நெட்

அ.. ஆ..இ ..
1. அறம் செய விரும்பு / Learn to love virtue.
2. ஆறுவது சினம் / Control anger.
3. இயல்வது கரவேல் / Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் / Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் / Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / Speak no envy.
13. அஃகம் சுருக்கேல் / Don’t shortchange.
அடுத்தது ……….. க..ங ..ச.. (அடுத்த இதழில்)
சென்னைப் புத்தகக் கண்காட்சி

இந்த வருடம் சூப்பர் டூப்பர் ஹிட்!
10 கோடிக்கு மேல் புத்தக விற்பனை!
சென்ற ஆண்டைவிட 30% அதிக மக்கள் வருகை!
வளர்க புத்தகக் காதல்!
மாதொருபாகன் by பெருமாள் முருகன்

பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஒரு மாபெரும் இலக்கிய சர்ச்சையைத் துவக்கிவிட்டது.
இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் சிலர் குழந்தை பிறக்க கணவனால் முடியாது என்ற போது சமூகம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைப்படி கண்ணுக்குத் தெரியாத ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார்..
{இதே முறைப்படி தான் மகாபாரதத்திலும் வம்ச விருத்திக்காக வியாசர் மூலம் திருதராஷ்ட்ரனும் பாண்டுவும் விதுரனும் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. }
இது சரியா தவறா என்ற கேள்வி இல்லை இந்த சர்ச்சைக்குப் காரணம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எழுதியதற்காக பெருமாள் முருகனுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அலுவலகர்கள் முன்னிலையில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். அவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெறுவதாக அவரைக் கூற வைத்தனர். அதைத் தொடர்ந்து அவர், பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார் – இனி கதையே எழுதமாட்டார் என்றும் அவரே அறிவித்தார்.


அதற்குப் பிறகு மற்ற எழுத்தாளர்களும் சில சமூக ஆர்வலர்களும் எழுத்தாளரின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் பெருமாள் முருகனை அந்த அமைப்புகள் நடத்திய விதத்தைக் கண்டித்தனர். நீதி கேட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.
இப்போது நிறைய எழுத்தாளர்கள் அவருக்காகவும் எழுத்து சுதந்திரத்துக்காகவும் வரிந்துகட்டிக் கொண்டுப் போராட வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்? அளவில்லா சுதந்திரம் சரியானதா? திரைப் படங்களுக்கு சென்சார் இருக்கின்றன. ஆனால் பத்திரிகைகள், கதைகளுக்கு அந்த மாதிரி இல்லை. ஆராய்ச்சி அல்லது கற்பனை என்ற பெயரில் யார் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?
மாற்றாக யார் எழுத்தை வேண்டுமானாலும் சமூக ஆர்வலர்களும் பலம் படைத்த அரசியல், ஜாதி, ஊடக குழுக்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் தடை செய்யக் கூறிப் போராட்டம் நடத்தலாமா?
இதப் பற்றி குவிகத்தின் கருத்து என்ன என்று நண்பர்கள் கேட்டனர்.
நாம் சொல்வது இது தான்.
எழுத்தாளர்களுக்கு வானளாவிய சுதந்திரம் தரப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ‘your liberty stops where my nose starts ’ என்ற தத்துவப்படி பிறர் நலனுக்கு உணர்வுகளுக்குப் பாதகம் ஏற்படுமே என்றால் எழுத்தாளரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக எழுத்தாளர் நீதி மன்றங்கள் நாட்டளவில் உலக அளவில் அமைக்கப் பட்டாலும் தவறில்லை!
இளைஞர்க்கு வழிகாட்டு (கோவை சங்கர்)



ரயில் விவரம் தெரிய 139க்கு எஸ்எம்எஸ் செய்யவும்

ரயிலில் பயணம் செய்வோர்களுக்கு மிகவும் உபயோகமானது 139க்கு எஸ்எம்எஸ் செய்து விவரங்கள் தெரிந்து கொள்வது!
ஸ்மார்ட் போன் தேவையில்லை. சாதா போனே போதும்!
எஸ்எம்எஸ் அனுப்பினால் பதில் எஸ்எம்எஸ் வரும்.
என்னென்ன ?
1) சீட் நம்பர் தெரிந்து கொள்ள
SMS “PNR < 10 Digit PNR Number > to 139
2) ரயில் வரும்/புறப்படும் நேரம் அறிய
SMS ” AD <Train No.> <Station code / STD Code of Station > to 139
3) செல்லும் பாதையில் முக்கிய நிலையங்களில் ரயில் போகும் நேரம்.
SCHEDULE <Train Number>
4) ரயில் நாம் சேரவேண்டிய நிலையத்தை அடைவதற்கு முன் (சுமார் அரை மணி ) நமக்கு ஒரு அலாரம் கொடுக்க ! ( இரவில் பயணம் செய்யும் போது குறிப்பாக ரயில் தாமதமாகப் போகும் போது இது மிகவும் உபயோகமாயிருக்கும்)
SMS ALERT <PNR Number> to 139
5) ரயில் எங்கு பயணிக்கிறது/எவ்வளவு தாமதம் என்பதை அறிந்து கொள்ள
SMS SPOT <Train Number >
6) இதைத் தவிர சீட் இருக்கிறதா என்பதையும் கட்டணம் எவ்வளவு என்பதையும் கூட அறிந்து கொள்ளலாம் ! SEAT / FARE என்ற சொற்கள் மூலமாக!
வாழ்க டெக்னாலஜி ! வளர்க ரயில் துறையின் சேவை!
ஷாலு மை வைஃப்

இன்னிக்கு ஜனவரி ஒண்ணு! ஷாலு காலை ஆறு மணிக்கு எழுந்து காபி குடித்துக்கொண்டே இன்னிலிருந்து ஏதாவது புதுசா ஆரம்பிக்கணும்! என்ன பண்ணலாம் என்று யோசித்தாள். மேஜை மேலே இருக்கும் ஸ்வாமினியின் போட்டோவைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். படத்தை எடுக்கும் போது அதன் அருகிலிருந்த டிவி ரிமோட் கீழே விழுந்து டிவி தானாக ஆன் ஆகியது.
அதில் “நலந்தானா” என்ற பாடல் ஆடலுடன் திரையில் வந்தது.
உடனே அவளுக்கு ஒரு பொறி தட்டியது. தலைக்கு மேலே ஒரு பல்ப் எரிந்தது.

ஆஹா இது தான் ஸ்வாமினியின் கட்டளை என்று ‘கண்டேன் சீதையை’ பாணியில் புல்லரித்தாள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் பண்ணியது எப்படி ஸ்வாமினிக்கு தெரிந்தது? நான் இந்த மாதம் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் ஸ்வாமினியின் ஆணை. தன் அறிவைத் தானே மெச்சிக் கொண்டாள்.அந்தப் பாடல் முடிவில் வந்த உருவமும் ( மோகனாம்பாளின் தாயார் வடிவாம்பாள் தான்) ஸ்வாமினி சாடையில் இருந்தது அவளுக்கு தெய்வாதீனமாக இருந்தது.
உடனே செயலில் இறங்கினாள் ஷாலு. ஸ்டூலை எடுத்துப் பரணில் இருக்கும் அவளது கருப்பு டிரங்க் பெட்டியை தேடலானாள். அதில் தான் அவளுடைய பரத நாட்டிய டிரஸ், கொண்டை, காகித கனகாம்பரப்பூ, ராக்கொடி, நகை செட், அத்தர் எல்லாம் இருந்தன. ஆறாவது படிக்கும் போது நலந்தானா பாட்டுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவில் அபிநயம் பிடித்த போது டான்ஸ் டீச்சர் கோமளாவுடன் போய் மைலாப்பூரில் பத்து கடைகளில் ஏறி இறங்கி வாங்கியது. இருபது வருஷமானாலும் பத்து இடத்துக்கு சேகர் டிரான்ஸ்பரில் சென்ற போது கூட இந்த டிரங்க் பெட்டியைத் தூக்கி எறிய மனசு வரவில்லை. ஒவ்வொரு வருஷமும் விஜயதசமி அன்றைக்கு அதைத் திறந்து பார்த்து கற்பனையில் கொஞ்ச நேரம் ஆடிவிட்டுத் தான் டிரங்க் பெட்டியை மூடுவாள்.
மெள்ள டிரங்க் பெட்டியை கீழே வைத்துத் திறந்தாள். அதில் முக்கியமான ஒன்றைக் காணோம்! அவளது சலங்கை! எங்கே போயிற்று என்று புரியாமல் ஒரு நிமிடம் குழம்பினாள். சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒருமுறை ஷிவானிக்குச் சலங்கையைக் காட்டிவிட்டு சேகரிடம் ஒரு மஞ்சப் பையில் போட்டு டிரங்க் பெட்டியில் வைக்கச் சொன்னது. சேகர் வேணுமென்றோ ( அல்லது வேண்டாமென்றோ) அதை பெட்டிக்குப் பின்னால் எறிந்து விட்டான். ‘சரி பிறகு எடுத்துக் கொள்ளலாம்’ என்று அவளும் அப்போது விட்டுவிட்டாள். இப்போ அது ரொம்பப் பின்னாடி போய் விட்டது. கிடைக்க மாட்டேங்குது.
அப்பொழுது ஷ்யாம் ஒன் பாத் ரூம் போக அவசர அவசரமாக ஓடி வந்தான்.
“ஷ்யாம் கண்ணா ! அம்மாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ணிரியா?”
“போம்மா ரொம்ப அர்ஜண்ட்” என்று சொல்லி பாத் ரூமுக்குள் போய் டமால்ல்ன்னு கதவைச் சாத்தினான்.
“சனியனே மெல்ல சாத்துடா!"
எவன் தயவும் வேண்டாம் நாமே எடுப்போம் என்று அந்த மஞ்சப்பையை நகர்த்தினாள். அவள் போறாத நேரம். அது இன்னும் கொஞ்சம். ஒரு அடி உள்ளே தள்ளிப் போய் விட்டது.
திடீரென்று அவள் காலில் ஏதோ பிறாண்டுவதை உணர்ந்து ‘ஐயோ’ என்று அலறினாள். கீழே பார்த்தால் ஷ்யாம் தான் அவள் காலடியில்.. அந்த அலறலில் கீழே விழப் போன அவள் சுவத்தைப் பிடித்துக் கொண்டதால் தப்பித்தாள்.
"ஷ்யாம் கண்ணா அம்மாவுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா! நான் உன்னைத் தூக்கிப் பிடிச்சுக்கறேன். நீ அந்தப் பரணுக்குள்ளே இருக்கிற மஞ்சப் பையை எடுத்துத் தாயேண்டா!”
“சரி, நான் எடுத்துத் தர்றேன். இன்னிக்கு சாயங்காலம் பீச்சுக்குக் கூட்டிட்டுப் போகணும் சரியா? ”
“சரிடா! வா!”
“மஞ்சப்பை தெரியுதாடா?”
“அம்மா என் கிரிக்கெட் பேட்-பால் இருக்கும்மா ! தொலைஞ்சு போச்சுன்னு பொய் தானே சொன்னே!”
பக்கத்து விட்டு ஜன்னலை உடைச்ச கோபத்தில தூக்கி எறிஞ்சது! இப்போ அவன் கண்ணிலே படுது
“முதல்லே மஞ்சப்பையை எடு!”
“அதெல்லாம் முடியாது. முதல்லே பேட்-பால்”.
“சரி எடுத்துத் தொலை!” பேட் பாலைத் தூக்கி கீழே வீசினான்.
“அம்மா !மஞ்சப் பையைக் காணோம்மா!”
“நல்லாப் பாருடா! நான் இன்னும் கொஞ்சம் தூக்கி விடறேன்!”
“அம்மா என் டமாரம்!”
ஐயோ! அது வேற அவன் கண்ணில பட்டுடுச்சா! இனிமே நம்ம காதெல்லாம் டமாரம் தான்!
“ஷ்யாம்! ஒழுங்கா மஞ்சப் பையை எடுத்துக் குடு! இல்லேன்னா உன்னைப் பரணுக்குள்ளேயே இறக்கி விட்டிடுவேன்!”
“சரிம்மா! டமாரம் மட்டும் எடுத்துக்கிட்டு மஞ்சப்பையை எடுத்துத் தர்றேன்!”
“அம்மா! மஞ்சப்பை கிடைச்சுடுத்து! அதுக்குள்ளே என்னம்மா ஜால்ரா மாதிரி?”
“அது சலங்கைடா”!
“சலங்கையை என்னம்மா பண்ணுவாங்க? ”
“அதைக் காலிலே போட்டு டான்ஸ் ஆடணும்டா!”
“நான் போடவா?”
“முதல்லே இறங்கு! அப்பறம் போடலாம்!”
“அட சனியனே! ஏண்டா சலங்கையை என் காலிலே போட்டே! வலி பிராணன் போறது?”
“நீ தானேம்மா சலங்கையைக் காலிலே போடணும்னு சொன்னே! ”
மெல்ல அவனை இறக்கிவிட்டுக் காலைத் தடவிக் கொண்டே சலங்கையை எடுத்துத் தடவிப் பார்த்தாள்.
அவளுக்கே அவள் கொஞ்சம் கொஞ்சமாக சந்த்ரமுகி ஸ்டைலில் மாறுவது போல் உணர்ந்தாள்.
“அம்மா பசிக்குது” என்று ஷிவானி வந்தபோது தான் ஷாலுவுக்குத் தெரிந்தது. இன்னிக்கு காலை டிபனைப் பத்தி யோசிக்கவே இல்லை என்பது.

அதற்குப் பிறகு ஷாலு சுத்தமாக மாறிவிட்டாள்.
“இத பாருங்கோ! இன்னிக்கி நாம கோமளா டீச்சரைப் பார்க்கணும்! திரும்ப நான் பரத நாட்டியம் கத்துக்கிட்டு இந்த மாசம் 26ம் தேதி குடியரசு தின விழாவிலே நம்ம காலனியில் பரத நாட்டியம் ஆடப் போறேன்!”
“இங்கே பாரு ஷாலு! கோமளா டீச்சர் அன்னிக்கு உனக்கு சரியா கத்துக் குடுக்கலைங்கிறதுக்காக இன்னிக்கு அவங்களைப் பழி வாங்கக் கூடாது! அவங்களுக்கு இப்போ 75 வயசு இருக்கும்.சும்மா நின்னாலே கால் ரெண்டும் ஆடும்.”
கோமளா டீச்சரைப் பார்க்கப் போனோம் அவர்கள் படுத்த படுக்கையில் இருந்தார்கள். ஷாலு மனம் தளரவில்லை. அவர்கள் நடத்துற டான்ஸ் ஸ்கூல் போனோம். அங்கே ஷியாமளா என்ற அவரது மாணவி சொல்லிக் கொடுப்பதாகக் கேள்விப் பட்டோம்.
போய்ப் பார்த்தால் ஷியாமளா ஷாலுவின் கிளாஸ்மெட். சின்ன வயதில் ஷாலு மாதிரி ஆட முடியவில்லை என்று கோபித்துக் கொண்டு டான்ஸை நிறுத்திவிட்டு கராத்தே சேர்ந்தவள். அவளிடம் கற்றுக் கொள்ள ஷாலுவுக்கு ஈகோ பிரச்சினை.
“நான் என் குரு கோமளாவின் போட்டோவை வைத்துக்கொண்டு ஏகலைவி மாதிரி கத்துக்கப்போறேன் ” என அறிவித்தாள் ஷாலு.
அதற்குப் பின் ஷாலுவின் போக்கே மாறிவிட்டது. தினமும் ஆறு மணிநேரம் அசுர சாதகம் செய்தாள். மற்றவர்களுடைய மெய் வருத்தம் பார்க்காமல் மற்றவர்களைக் கண் துஞ்சவிடாமல் கருமமே கண்ணாக இருந்தாள். மூன்று ஜீவன்கள் பசி பட்டினியில் துடித்தாலும் கவலைப்படாமல் நாட்டியமே உயிர் மூச்சு என்று இருந்தாள்.

ஏற்கனவே நான் சமையலில் மாஸ்டராக இருந்ததால் பட்டினிச் சாவிலிருந்து தப்பினோம். இது தான் சாக்குன்னு ஷ்யாம் இருபத்து நாலு மணி நேரமும் விளையாட்டே கதின்னு இருந்தான். பக்கத்து பிளாட் காரர்கள் உணர்ச்சிகள் – முதலில் பாராட்டு.. சந்தோஷம் .. அனுசரணை..பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் ஆத்திரம் கோபம் கடைசியில் கொலைவெறி அளவிற்குப் போய்விட்டார்கள். பிளாட் செக்ரட்டரி மொழி பட செக்ரட்டரி மாதிரி எங்களைக் காலி பண்ணிப் போகச் சொன்னார். அப்புறம் தான் அவருக்குத் தெரிந்தது இது எங்க சொந்த வீடு என்று. லீகல் நோட்டீஸ் கொடுக்கப் போவதாகக் கத்தி விட்டுச் சென்றார்.
.எல்லாரும் என்கிட்டே தான் சொல்வார்களே தவிர ஷாலுகிட்டே பேச பயம்.“என்ன கொடுமை சேகர் சார் "என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டம் அழுதுவிட்டுப் போவார்கள்.
ஷிவானி தினமும் அம்மா ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். ஷாலு தூங்கும் போது இவள் சலங்கையைக் கட்டிக்கொண்டு தையா தக்கா என்று குதிப்பாள்.

ஜனவரி 26 குடியரசு வந்தது. அன்று மாலை கலை நிகழ்ச்சிகள். ஷாலுவின் நண்பிகள் மற்றும் அவள் உறவினர்களெல்லாம் வந்து அவள் பங்குபெறும் பரத நாட்டியத்தைக் காண ஓடோடி வந்தார்கள்.
அதே நலந்தானாவுக்கு ஷாலு ஆடினாள். .மேடையில் ஷாலுவைப் பார்க்க அவள் ஆட்டதைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பிரமாதமாக ஆடினாள். ‘கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ’ என்று அபிநயம் பிடிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் சறுக்கி விழுந்தாள். எழுந்திருக்க முடியவில்லை. பாட்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஷாலுவால் ஆட முடியவில்லை.நான் மேடை ஏறி ஷாலுவைக் கைத்தாங்கலாகப் பிடித்தேன். சீரியசாக ஒன்றும் இல்லை!

பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம் ஷிவானியை மேடையில் ஏத்திவிட்டான். எந்த வித மேக்கப்பும் இல்லாமல் ஷிவானி அம்மாவின் ஆட்டத்தைத் தொடர்ந்தாள். நலந்தானா என்று அம்மாவைக் கண்ணால் கேட்டு ஷிவானி ஆடியதும் பயங்கர கைதட்டல். ஷிவானிக் குட்டி பார்த்த ஞானத்திலேயே பிரமாதமாக ஆடினாள். எல்லோரும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கத்த மீண்டும் முதலிலிருந்து பாட்டு துவங்கியது. ‘கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ’என்ற இடம் வரும் போது ஷாலுவிற்கு எல்லாம் சரியாகிவிட்டது .அவளும் .ஷிவானியுடன் தொடர்ந்து ஆடினாள்.

அன்னிக்கு ஷாலு தான் சூப்பர் ஸ்டார். அவளைப் பேசச் சொல்லி மேடைக்கு அழைத்தார்கள். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவி மாதிரி நல்லா பேசினாள். இருபத்தைந்து நாளில் இருபது வருடத்துக்கு முன் கத்துக் கொண்டநாட்டியத்தைத் தனக்கு திரும்பக் கொண்டு வந்ததற்காக தனது ஸ்வாமினிக்கு நன்றி சொன்னாள். இனிமேல் தான் ஆடப்போவதில்லை என்றும் இனி ஷிவானியை பரதம் கற்றுக் கொள்ள வைப்பது தான் தனது முதல் வேலை என்றும் சொன்னாள். அரங்கமே கை தட்டியது.
கடைசியாக அவள் சொன்னது என்னை ஆச்சரியத்தில் மிதக்க வைத்தது.
” நான் இந்த மாதிரி நாட்டியத்திற்கு மீண்டும் வர முக்கிய காரணம் என் கணவர் சேகர் தான்! அவர் தான் ‘என் கணவன் என் தோழன்’ சீரியலில் வரும் சூர்யா மாதிரி என்னை உற்சாகப் படுத்தினார் “ என்று சொன்னது தான்.
அன்றைக்கு இரவு அவளிடம் கேட்டேன். ‘ஏன் இப்படி மேடையில் ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னாய்?
"அப்பொழுது தான் நீங்கள் எனது அடுத்த மாத முயற்சியான கார் ஓட்டும் படலத்துக்கு உங்கள் காரைக் கொடுப்பீர்கள் ” என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
எனக்குத் தலை சுற்றியது!
சிவ சம்போ நாடகம்
பார்க்கலாம் போல இருக்கிறதே?
டிவி சீரியலுக்கு ஓ (ட்டு ) போடுங்க!! – (ராசாத்தி கண்ணு )
டிவி சீரியல் பார்ப்பது தவறா? ஒரு வித்தியாசமான கோணம்

பொதுவாக நம் வீடுகளில் ஒரு பேச்சு உண்டு…
- சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, சீரியல் ப்ரேக்லே தான் காபி கிடைக்கும் எங்க வீட்டுலே
- அமெரிக்காவில் இருந்து பேசினாலும், எங்க அம்மா சீரியலுக்கு நடுவுல பேச மாட்டாங்க
- எப்போ பார்த்தாலும் அபி, கோபி, வாணி,ராணி பத்தி தான் கவலைப் பட்டுட்டு இருப்பாங்க, ஏதோ அவுங்களும் நம்ம குடும்பம் போல
- ஞாயிறு ஆனால் ஒரே சோகமா இருப்பாங்க. அன்னிக்கி சீரியல் இருக்காதே
- இந்த சீரியல் எப்பவுமே ஒரே அழுகை தான், அவங்க பேச்சும், ஒரே மோசமா தான் இருக்கும்.
- எதிலே பார்த்தாலும் ஒரே சதித்திட்டம், மாமியார்-மருமகள் கொடுமை, குழந்தை மாற்று, எல்லாம் மோசமான சிந்தனைகள், இதை பார்த்து தான் நம்ம வீட்டு பெண்களும் அப்படி யோசிக்கிறாங்க
- வீட்டில் தாத்தா பாட்டி சீரியல் பார்ப்பதால், குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகுது
- இந்த டிவி முன்னாடி வேஸ்ட் பண்ற டைம்லே ஏதாவது உருப்படியா செய்யலாம்
எந்த விஷயமும் அளவுக்கு மீறினால் அது நல்லது இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக சீரியல் பார்ப்பதே தவறு என்று சொல்வது சரியில்லை.
முக்கியமான குற்றச்சாட்டுகளை எடுத்து சற்று ஆராய்வோம் (நீயா நானா கோபிநாத் பாணியில்)
டிவி யில் வரும் எல்லா பெண்களும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நிறைய பெண்களைக் கொடூரவாதிகளாய்க் காட்டுகிறார்கள்.
உங்கள் மனதில் இன்னும், மெட்டி ஒலி சரோவும், சாந்தி வில்லியம்ஸ் மாமியாரும் தான் இருக்கிறார்கள். இல்லையென்றால் நளினி – அபி காம்பினேஷன்.
சற்று இந்தக் காலத்துக்கு வாங்க.! அதே சாந்தி வில்லியம்ஸை வாணி ராணி அறிவாலும் அன்பாலும் சமாளிப்பதைப் பாருங்கள்.
அழுகை இருந்தாலும், சீரியலில் தான் பெண்களைத் தொழில் அதிபர்கள், சமுதாயத்தில் முன்னேறுபவர்களாகக் காட்டுகிறார்கள்.
- அதே அபி கடைசியில் வெற்றி பெற்றது ஞாபகம் இல்லையா?
- சித்தி ராதிகா துணி ஃபேக்டரி உரிமையாளர்
- என் கணவன், என் தோழன் – சந்தியா ஐபிஎஸ்
- வாணி – வக்கீல்
பெண்கள் அழுது கொண்டு இருக்கும் காலம் போய் , சாதிக்கும் காலம் சீரியலில் வந்தாச்சு, உங்களால் ஏன் ஒப்புக்கொள்ள முடியவில்லை?
சில கதாபாத்திரங்கள் கொடூரமாகத் தான் இருக்கிறார்கள். ராவணன் கொடூரமாக இல்லாவிட்டால் ராமன் புகழ் எப்படி மேலோங்கும்?
குடும்பத் தலைவிகள் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள். இதனால் கணவன்மார்கள், அவர்களைக் குற்றம் சொல்கிறார்கள் – ‘நாங்கள் களைத்து வரும் போது எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. டிவி ஸ்கிரீன் பார்த்தபடியே ஒரு தலை அசைப்பு தான் கிடைக்கிறது’
கணவனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த காலம் இப்போ இல்லைதான். ஆனால் அதற்கு டிவி மட்டும் காரணம் இல்லை.
முன்பெல்லாம் கணவன் அவசரமாக வேலையை முடித்து விட்டு மனைவியைப் பார்க்க ஓடி வருவான். ஆனால் இன்றோ, அவன் வருவதே வாணி-ராணி வரும்போது தான். அதுவும் ஹெட்செட் போட்ட ஃபோன் பேசிக்கொண்டே, வந்த பத்தாவது நிமிஷம் லேப்டாப் வேலை.
அவள் சாப்பாடு கொடுக்க ஐந்து நிமிஷம் லேட் ஆனா, இந்த குற்றச்சாற்று.. அவள் சாப்பாடு சூடு செய்யும் வேளையிலே, சேனல் ஸ்போர்ட்ஸுக்கு மாறியிருக்கும். இதே டெண்டுல்கர் ஆடும்போது சேனல் மாத்தினா சும்மா இருப்பார்களா? இது கணவன்மார்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும்.
சீரியல் பார்த்து விட்டு, அந்த மாதிரி டிரஸ் பண்ணவேண்டும் என்று அனாவசியமாக முயற்சி செய்கிறார்கள். அது மட்டும் இல்லை, இந்த ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்து அந்த ஹீரோவை எப்போதும் ஸ்மார்ட்,ஹேண்ட்ஸம்னு வர்ணித்து எங்களை வெறுப்பேத்துகிறார்கள்.
.ஏங்க கஜினி சூர்யா , ஐ விக்ரம் பாத்து நீங்க ஜிம் மெம்பர்ஷிப் எடுக்கலே?
சிவாஜி,எந்திரன் படத்தைபார்த்து தலைவரையும் தாண்டி ஸ்ரேயா, ஐஸ் மேலே ஜொள்ளு விடலே ?
ஹிந்தி டிவி சீரியல் க்ரியேட்டர் ஏக்தா கபூர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாங்க..
“Movies – you idolize men and fantasize women…Hindi Serials – you idolize women and fantasize men”
இந்த சீரியல்ல எப்போதுமே பெண்களுக்கு தான் முக்கியத்துவம் குடுக்கறாங்க! எப்போதும் பெண்கள் கூடிக் கூடி வம்பு பேசிக்கொண்டே இருக்காங்க! ஹஸ்பண்ட்ஸ் எல்லாரையும் டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க.
ஏங்க சினிமாவில் ஹீரோயின் வெறும் பாட்டுக்கும், கிளாமருக்கும் மட்டுமே வருகிறார்கள். பசங்க தான் எப்போதும் பாரில் உட்கார்ந்து “ஃப்ரெண்ட் ஃபீல் ஆய்டாலே, ஹாஃப் அடிச்சு கூல் ஆய்டாலே” னு சொல்லிக் குடிச்சுட்டு இருப்பாங்க.
பெண்களை மையப் படுத்தி படம் எடுத்தது பாலசந்தர் காலத்தோட போயேபோச்சு. சீரியலிலாவது அவுங்களுக்கு முக்கியத்துவம் குடுத்தா உங்களுக்கு ஏன் நோவுதாம்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எப்போதுமே சீரியல் கதாபாத்திரங்களைப் பத்தியே தான் கவலைப்பட்டுட்டு இருக்காங்க.
உங்கள் விஷயத்திலோ, பிள்ளைகளைப் பத்தியோ அவுங்க கருத்துகள் சொன்னா ,
“ நாங்கல்லாம் இன்னும் சின்ன பசங்களா என்ன? ”
“எங்களுக்கும் குழந்தை வளர்க்கத் தெரியும். ”
“இது எல்லாம் ஒங்க காலம் போலே இல்லை.”
“நீங்க ஏன் டென்ஷன் எடுத்துகிறீங்க? எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.”
“சும்மா என்னைப் பத்திக் கவலைப்படாதே பாட்டி/தாத்தா . எனக்கு தெரியும்”
“பெருசுக்கு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கணும்”
எதற்க்கு வம்பு என்று அவுங்களும் ஜோதா,அக்பர் ,துளசி,சரவணன் , மீனாட்சி பத்திக் கவலைப் பட ஆரம்பிச்சுட்டாங்க.
வீட்டில் உள்ளவர்கள் டிவி சீரியல் பார்ப்பதால் குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகிறது.
ஏங்க, சீரியலை விடுங்க டிவி யில் என்ன பார்த்தால் பசங்க படிப்பு வளரும். யுஜிசி ப்ரோக்ராம் பார்த்து அறிவு வளரும் என்று சொல்கிறீங்களா? வீட்டில் டிவி இருப்பதே படிப்புக்கு எதிரி தான்.
இந்த டிவி முன்னாடி வேஸ்ட் பன்ற டைம்லே ஏதாவது உருப்படியா செய்யலாமே
டிவி சீரியல் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. எப்படி பாட்டு கேட்பது, இன்டெர்நெட் பிரவுசிங், கிரிக்கெட் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, போட்டோக்ராபி, ஃபிரண்ட்ஸ் கூட பீச்,சினிமா என்று சுத்துவது, காலேஜ் கேண்டீன்லே அரட்டை அடிப்பது, ஆஃபிஸ் வாட்டர் கூலர் காஸிப் பண்ணுவது, வாட்ஸாப் மெசேஜ் அனுப்புவது, பேஸ்புக்லே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை லைக் போடறது, டெய்லி ஸ்டேடஸ்லே மெசேஜ் சொல்வது போல இதுவும் ஒண்ணு, வேலைக்கு ஆல்டெர்னெட்
அதுனாலே ரொம்ப ஆராயாம சீரியலைப் பாருங்க சார்! லைஃப் நல்லா இருக்கும். (லைஃப் சந்தோஷமா இருக்கோ இல்லையோ வொய்ஃப் சந்தோஷமா இருப்பாங்க )
கீழே தெரிகிற older entries லிங்கைக் கிளிக் செய்யவும். குவிகத்தின் 16 முதல் 25 வரை உள்ள பக்கங்களை ப் படிக்க முடியும்!