குவிகம் குழுமம் – குவிகம் மின்னிதழ்

குவிகம் இலக்கியவாசல், அளவளாவல், பதிப்பகம், ஒலிச்சித்திரம் , குறும் புதினம் , ஆவணப்படம்

காளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்

பர்வதராஜனின் மலை வடிவைப் பற்றிச் சொல்லிய கவிஞர்  அவனது மனித வடிவைப் பற்றிக் கூறுகிறார். 

Pancharama Kshetra -Shiva Parvati Kalyanam | మానస సంచరరే

அழகே உருவெடுத்த தெய்வமகள்  மேனாவை முறைப்படி மணந்த இமவான்

பறக்கும் சிறகுபெற்ற மைனாகன் தன்னை  மைந்தனாய்ப்  பெற்ற இமவான் 

தக்ஷன் தந்தஉடல் அழித்துவந்த தேவிக்குத்  தந்தையாய் ஆன  இமவான்

செல்வக் குலவிளக்காம் பார்வதியை  மேனைக்கு அளித்திட்ட  இமவான்     

 

அடுத்தது பார்வதி தேவியின் அறிமுகம் ! 

 

மங்களநாயகி  பார்வதி சங்க நாதத்துடன் வந்தாள் சந்தன வாசமுடன் வந்தாள்  

ரத்தினக்குவியல் மின்னிய  மலைபோல மேனையும் பொலிவு பெற்றாள்

மலையரசனிடம்  வந்துதித்த பார்வதியும்  மலைமகளெனப்  பேர் பெற்றாள்  

வளர்பிறை  நிலவென மின்னும்  அங்கமும் ஒருங்கே  சேரப்பெற்றாள்

 கங்கைப்புனிதமும்  தீபஒளியும் சொல்லின்அழகும்  ஒருசேர வளர்ந்தாள்  

மங்கைப் பருவம்வரை கங்கைக் கரையினில்  தோழியர்சூழ பவனிவந்தாள்   

 

அழகே உருவெடுத்த பார்வதியின் புறஅழகை சொல்லுவது இயலாது  

 

கங்கை நீருக்கு அன்னங்கள் தாமே வருவது  போல

ஒளிச்செடிக்கு  ஒளிக்கற்றை  தாமே வருவது போல

முற்பிறவியில் கற்றது  பார்வதிக்குத் தாமாகவே வந்தன

 

மணக்கும் மலரினும்  மயக்கும் மதுவினும் மிஞ்சுவது பார்வதியின் இளமை

தூரிகைபட விரியும் சித்திரம் சூரியனைக் கண்ட தாமரை அவளது ரூபம்

செம்பாதம் தரையில் பதிந்து நடைபழகும்போது   தாமரை மலராய் மாறும்         

எழில்பொங்கும்  நடைஅழகு அன்னப் பறவைக்கே   வெட்கம் தரும் 

உருண்டு திரண்ட காலிற்கே  பிரும்மனின்  திறமை முழுதும் சென்றதுவோ ?

யானையின் துதிக்கை வாழையின் தண்டு இணைந்தது அவளது  தொடைகள்  

சிவபிரானே மயங்கிய இடையழகை சொல்லில் சொல்ல இயலுமோ ?

 

மேகலையில் பதித்த நீலமணியின் ஒளி அவளது ரோமாவளி

இடையின் மெல்லிய மடிப்புகள் மன்மத அழைப்பின் படிகள்

மலரினும் மெல்லிய கரங்கள் சிவனைத் தழுவிடும்  கயிறுகள்

மார்பினில்  தவழும் முத்துமாலை தனக்கே  தேடிக்கொண்ட அழகு      

சந்திரனின் ஒளியும் தாமரையின் மணமும் சேர்ந்த காந்த முகம்

பவழத்தில் பதித்த முத்து செந்தளிரில் பூத்த முல்லை அவள் புன்னகை

குயிலே நாணி ஓடும் தேன்கொண்ட தெள்ளமுதம் அவள் குரல்

மருளும் தாமரைக் கண்கள்  மான்கள் அவளிடம் பெற்றனவோ?

மையிடாத  நீண்ட புருவம்  மன்மதன் வளைக்கும்  வில்லோ?     

மங்கையவள்  கூந்தலைக் கண்டும் வெட்கமின்றி வாலசைக்கும்  மான்கள்

அழகின் உவமை  அனைத்தையும் அவளிடமே  பதித்துவிட்டான் பிரும்மனும்

 

இமவான் இல்லம் வந்த நாரதரரும்  சிவபிரானுக்கே அவள் சொந்தம் என்றுரைக்க

நெஞ்சம் நெகிழ்ந்த இமவான் மனத்தால் அன்றே அவளைத்  தாரை வார்த்து  

பெண்ணை  மணமுடிக்க சிவன்வரும் நாளை எண்ணிக் காத்திருந்தான்.  

Devo Ke Dev Mahadev Actor Mohit Raina Charge 1 Lakh Rupee Per Day ...

ஸதியைப் பிரிந்த சிவனும் பற்றை முற்றும் துறந்து அலைந்து திரிந்தார்

தவமே சிவம் எனக் கொண்டு  இமயச்சிகரம்   நோக்கி தாமே நாடிவந்தார்

சிவம் இருக்குமிடம்  சிவகணம் இருக்குமிடம் சேவை புரிந்திட தேடிவந்தன

சிவனது வாகனம் ரிஷபமும்  ஆங்கேவந்து ஆனந்தக்  குரல் எழுப்பிற்று

தவப்பலன்தரும்  சிவனே அக்னி சாட்சிகொண்டு  அருந்தவம் புரிய வந்தார்  

இமயம் வந்த சிவனுக்கு சேவை செய்ய  மகளையும் அனுப்பினன் இமவான்   

புலன்களை  அடக்கிய   பிரானும்  பார்வதியின் சேவையை ஏற்றுக்கொள்ள  

மலர்ந்த முகத்தினள் பார்வதியும்   நியமமுடன் சிவசேவை செய்யலானாள்  ! 

 

(முதல் சர்க்கம் முடிந்தது .. அடுத்தது இரண்டாம் சர்க்கம் !)

குவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா

சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள் ...

 

 

நன்றி: அழியாச்சுடர் –

Ananda Vikatan - 19 October 2011 - ஒரு லட்சம் ...

 

( படம்: ஆனந்த விகடன் )

 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

-மகாகவி

Welcome to delegates of Bharathi International

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

“தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்…”

“இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?”

“பேரறிஞர் அண்ணாங்களா?”

“இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க”

“அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்”

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக “வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்.”

“எதுக்கு?” என்றார் டாக்டர்.

“அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க.”

“உண்மையிலேயே தெரியாதுங்க”

“பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்.”

“ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.”

“இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க”

“சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க”

“உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க…?”

“எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது..” டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..

“வள்ளுவர் சொல்லிக்காரு-

`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.

இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு…”

ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், “ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்” என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். “செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்” நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. “தாங்க்ஸ்” என்று அவளைப் பார்த்தபோது “யூ ஆர் வெல்கம்” என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.

கூடிப் பிரியாமலே – ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே

ஆடி விளையாடியே – உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி…

“டாக்டர் வணக்கம்”

“ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?”

“உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க…”

“உத்கல் எங்க இருக்குது?”

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி”

“ஆ. ஐ ஸீ” என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

“யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?”

“நோ… ஐம் பிரிஸைடிங். மத்தியானம்… ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?”

“எஸ். காண்ட் ஸ்பீக்.”

“இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது”

“அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை..”

“டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?”

“சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?”

“ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா….? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை.”

“பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்” செல்வரத்னம்… எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.

மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.

மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது “அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ” என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.

டாக்டர் லேசாக,

`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,

கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,

பூதலத்தினை ஆள்வதில் இன்பம்…`

என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.

“வணக்கம் ஐயா”

“வணக்கம். நீங்க”

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

“கண்டு கன காலம்” என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக… “வாங்க. எப்ப வந்தீங்க?”

“இஞ்சாலையா?”

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

“நீங்கதானா செல்வரத்னம்?”

“ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்.” இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.

“எங்க வந்தீங்க?”

“சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்.” மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் “வாங்க வாங்க. உள்ள வாங்க.” என்றார்.

அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

“விழாவில எண்ட பேச்சும் உண்டு,” என்றான்.

“அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?”

“ஆமாம்.”

“ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப..”

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன…

“உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?”

“ஊர்ல யாரும் இல்லிங்க”

“அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?”

“தங்கச்சி இல்லைங்க,” என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

“என்ன சொல்றீங்க?”

“எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க”

“அடப்பாவமே. எப்ப? எப்படி?”

“ஆகஸ்ட் கலகத்திலதாங்க”

“ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?”

“தெருவில வெச்சு… வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.”

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

“ஏதாவது சாப்பிடறீங்களா?”

“கோப்பி” என்றான்.

“இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது.”

“அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,”

“சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?”

“நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?”

“அப்படியா?”

“அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க.”

“அடடா”

“அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.”

“எங்க சொல்ல விரும்பறீங்க?”

“இன்றைய கூட்டத்திலதான்”

“இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே”

“பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த்தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?”

“கட்டாயம். கட்டாயம்”

“அதைத்தாங்க சொல்லப் போறேன்.”

“அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே..”

“இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்.”

டாக்டர் சற்றே கவலையுடன் “குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?” என்றார்.

“சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்.”

“புரியலீங்க”

“ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?”

“எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு…”

“வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க”

“இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க…”

“சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க – நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக்கமேன்னாங்க..”

“நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க.”

“அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. ..” அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

“ரொம்ப பரிதாபங்க”

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு “எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. ” சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, “எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?”

டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். “இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க…”

“அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?

சொந்த சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ – கிளியே

செம்மை மறந்தாரடீ

-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?”

“அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்..”

“எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்.”

“என்ன புத்தகம்?” என்றார் கவலையோடு.

“இந்த மாநாட்டு மலரை”

“எதுக்குங்க அதெல்லாம்…?”

“பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?” அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். “பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை”

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

“மணி.. நான்தான்”

“என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?”

“ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.”

“அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க…”

“மணி. ஒரு சின்ன சிக்கல்…”

“என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?”

“அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.”

“பேசட்டுமே. உங்களுக்கென்ன?”

“அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.”

“என்ன செய்யப் போறான்?”

“யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து…”

“த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்”

“எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க”

“என்ன. கேக்குதா?”

“கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.”

“எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?”

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

“என்ன செய்யச் சொல்றீங்க?”

“எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு..”

“அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க”

“எப்படியாவது..”

“வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்.”

“சரி மணிமேகலை”

“கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு..”

டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

மாநிலம் காக்கும் மதியே சக்தி

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி

சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு “எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்…” என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் “தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே..” என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.

“முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்.” என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

“ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி…”

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.

“அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்.”

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.

டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை..” என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.

*****

பாரதி நூற்றாண்டு நினைவுத் தொகுப்பாக, பாரதி பதிப்பக வெளியீட்டில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய “பாரதி சிறுகதைகள்” முதற்பதிப்பில் (1982) இருந்து

சரித்திரம் பேசுகிறது – யாரோ

சேரமான் பெருமாள்

 

‘சரித்திரம் பேசுகிறது’ – இந்தத் தொடரில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்கள் உண்மைக்குப் புறம்பானது – என்று ஒரு வாசகர் குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் சொல்வது நமது கடமை.

சரித்திரத்தில் எது உண்மை என்று சொல்வது என்பது..

…சில நேரங்களில் கடினமானது.

…பல நேரங்களில் இயலாத ஒன்று.

கிடைத்த ஆதாரங்களை வைத்து பல சரித்திர வல்லுனர்கள் ‘சரித்திரம்’ என்னும் ‘கதையை’ ஜோடிப்பர்.

அது கதை பாதி? உண்மை பாதி? அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா?

ஆதாரங்களில் சில புத்தக வடிவாக இருக்கும்.

சில கருத்துக்கள் அந்த ஆதாரத்தை எழுதியவர் யாரைச் சார்ந்திருப்பவர் என்பதைப் பொறுத்திருக்கிறது.

உதாரணத்துக்கு ஹர்ஷரைப் பற்றி அவரது அரண்மனை கவிஞர் பாணர் அவரது வெற்றிகளை பற்றி மட்டும் சொல்வார்.

அவரது தோல்விகளையும் வெற்றிகளாகவே சொல்வார்.

கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தறிந்த வல்லுனர்களின் இடையேயும் கருத்து வேறுபட்டிருக்கும்.

ஒரே மரணம்!

ஒரு பார்வையில்…அது படுகொலையாக – மற்றும் கொடிய செயலாக சித்தரிக்கப்படலாம்.

மறு பார்வையில்…அதுவே மாவீரமாகவும் சித்தரிக்கப்படலாம்.

பொன்னியின் செல்வனில்..

சோழர்கள் ஹீரோக்கள்!

பாண்டியர்கள் துரோகிகள்!

அது கல்கியின் பார்வையில்..

(பொன்னியின் செல்வனின் தீவிர ரசிகர்கள் கொதித்தெழுந்தால்.. ‘யாரோ’ அப்படி சொல்லிவிட்டார் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம்).

எதற்காக இத்தனை பெரிய பீடிகை என்று தானே கேட்கிறீர்கள்?

பல்லவர்-சாளுக்கிய யுத்தங்களையே பார்த்துப் பார்த்து நொந்து போன வாசகர்களுக்கு ஒரு இடைவேளை.
கேப்பில கிடா வெட்டின கதை!

இந்த இதழில் .. சேரமான் பெருமாள் – கதை.

குழப்பங்கள் நிறைந்த ஒரு கதை.

சில சினிமாக்களின் ஒரே கதை இரண்டு மாறுபட்ட கதைகளாக கதைக்கப்படுகிறது.

அது போல் தான் இங்கு..

ஆகவே.. பொங்கவேண்டாம். பொறுத்திருங்கள்.

 

சேரமான் பெருமாளிள் என்ற சேர மன்னன் – தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் என்ன செய்தான் என்பதில் தான் இரண்டு கதைகள்:

ஒரு கதை: ‘மெக்கா’.. மறு கதை: ‘கைலாசம்’

என்னடா இது?.. கைலாசம் எங்கே .. மெக்கா எங்கே?

அமாவாசைக்கும்- அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?

சரித்திரம் பல விந்தைக் கதைகளை தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது.

அந்தப் பெட்டகத்திலிருந்து ஒரு கதை ..சொல்வோம்.

முதல் கதை: மெக்கா

கி பி 625

இடம் : மகோதயபுரம்.-

ஒரு துறைமுக நகரம்.

பின்னாளில் இதை முசிரிப்பட்டினம் என்றும் சொல்வர்

இந்நாளில் இது கொடுங்களூர்.

சங்களா நதி (இன்றைய பெரியார் நதியின் துணை நதி) அரபிக்கடலுடன் சங்கமிக்கும் நகரம்.

சேர மன்னன் சேரமான் பெருமாளின் அரண்மனை நதியின் சங்கமத்துக்கு அருகிலிருந்தது.

மன்னன் அரண்மனையில் பஞ்சணை மீது படுத்திருந்தான்.

வெகு நேர முயற்சிக்குப் பின்.. அயற்சியால் .. தூங்கினான்.

நாள் முழுதும் பிரச்சினைகள்..

மன்னர் என்பது பிரச்சினைகளின் மொத்த உருவம்.

கனவுகளும் தொந்தரவுகளால் அவனைத் துரத்தியது.

கனவில் ஒரு காட்சி .. கீழ் வானத்தில் சந்திரன் பிரகாசிக்கிறான்..

அந்த நிலா.. அவன் பார்க்கும் போதே இரண்டாகப் பிளக்கிறது.

கனவிலிருந்து விழிக்கிறான்.

என்ன கனவு இது?

மீண்டும் உறக்கம்.

அதே கனவு.

சந்திரன் உடைகிறான்.

நன்கு விழித்த மன்னன் மெல்ல எழுந்து உப்பரிகை செல்கிறான்.

வானத்தை நோக்க.. சந்திரன் இரண்டு பகுதிகளாகத் தெரிந்தது.

சோம பானத்தை இரவு மிதமிஞ்சி அருந்தி விட்டேனோ? – மன்னன் மயங்குகிறான்.

வானத்தில் சந்திரன் முழுமையாகச் சிரிக்கிறான்.

காலை .. மன்னன் அரண்மனை சோதிடர்களை அழைத்து..

தன் கனவைக் கூறி விளக்கம் கேட்கிறான்..

அரண்மனை சோதிடர்களது விளக்கம் அரசனுக்கு திருப்தியளிக்கவில்லை.

அன்று காலை அரசபையில் .. வெளி நாட்டு பிரமுகர்களாது சந்திப்பு நிகழ்ந்தது.

அவர்கள்.. அரபு நாட்டவர்கள். இலங்கைக்குச்  சென்று கொண்டிருந்தவர்கள்.

மன்னன் அவர்களிடம் தனது விசித்திரக் கனவைப்பற்றிக் கூறினான்.

அவர்களது முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“மன்னவா.. அரபு நாட்டில் இறைவனது தூதர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

அவர் இந்த அற்புத லீலை செய்துள்ளார். நாங்கள் இதைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம்” – என்றனர்.

மன்னன் வியப்புடன் “ “யாரோ அவர் யாரோ?” – என்றான்.

“அவரது பெயர் முகம்மது நபி. இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர். இறைவன் அவருக்கு குரான் என்ற வேத நூலை 23 வருடங்கள் உபதேசித்தார்.” -என்றனர்.

மன்னன் மனம் அந்த விந்தையில் இணைந்தது.

மனதில் ஒரு சங்கல்பம்.

இஸ்லாமே தனது வாழ்க்கை வழி -என்று உறுதி பூண்டான்.

பிறகு எல்லாம் ரகசியமாக நடந்தது.

நாட்டின் பல பகுதிகளுக்கு பல ஆளுநர்களை நியமித்தான்.

கப்பலில் யாருக்கும் தெரியாமல் ஏறி சில நாட்களில் மெக்கா சென்றடைந்தான்.

நபிகள் நாயகத்தைக் கண்டு அவரது சீடனாகி – இஸ்லாம் மதத்தைத் தழுவினான்.

சில வருடங்கள் மெக்காவில் வாழ்ந்ததான்.

ஜெட்டா நாட்டு மன்னனின் தங்கையை மணந்தான்.

பூமாலையில் விழுந்த வண்டு போல்.. பேரின்பத்தை அடைந்தான்.

தாஜூதீன் என்ற பெயரைக் கொண்டான்.

ஆயினும், சேர நாட்டை அவன் மறக்கவில்லை.

அந்த மதத்தின் உயர்ந்த கொள்கைகளை சேர நாட்டிலும் பரப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

சேர நாட்டில் மசூதிகள் அமைக்கப் பெரு விருப்பம் கொண்டான்.

கி பி 629`:

திரும்பி வர பயணம் மேற்கொண்டான்.

வழியில் ஓமான் வந்தவுடன் உடல் நிலை குன்றியது.

தனது முடிவு நெருங்கிவிட்டதை சேரமான் உணர்ந்தான்.

உடனே.. சேரநாட்டில் தான் ஆட்சிக்கு வைத்திருந்த தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதினான்.

‘இக்கடிதம் கொண்டுவரும் எனது நண்பர்களை சிறப்பாக வரவேற்று உபசரிக்கவும்’- என்று எழுதினான்.

அதை தனது நண்பர்களிடம் கொடுத்து அனுப்பினான்.

‘மாலிக் பின் தினார்’ என்பவன் தன் நண்பர்களுடன் கேரளா சென்றடைந்தான்.

அந்தக் கடிதங்களைக் கண்ட அந்த ஆட்சியாளர்கள் மகிழ்ந்தனர்.

சேரமான் மறைந்ததை எண்ணிக் கண் கலங்கினர்.

‘மாலிக் பின் தினார்’ கொடுங்களூரில் சேரமான் மசூதியைக் கட்டினார்.

அது இந்தியாவின் முதல் மசூதி!

அவருக்குப்பின் சேரநாட்டில் பல மசூதிக்கள் எழுந்தன.

காலப்போக்கில் …இந்தியாவில் அன்று பயிரிடப்பட்ட இஸ்லாத்தின் முதன் நாற்றுக்கள் மெல்ல மெல்ல வளர்ந்து மரங்களாகித் தோப்பானது. .

ஒரு கதை முடிகிறது..

(கொசுறு : இந்தக் கருத்தை மையமாக வைத்து கவிஞர் கண்ணதாசன் கதை எழுதி  ஒரு திரைப்படம் எடுக்க இருந்ததாக அவரே தன்  சுய சரித்திரத்தில் எழுதியுள்ளார். பிறகு அதை மையகமாக வைத்து சேரமான்  காதலி என்று ஒரு நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாதமி விருது கூட கிடைத்தது ) 

அது சம்பந்தப்பட்ட வரிகள் சில: 

 

மறு கதை விரைவில்.

“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Adoption

நான் ஸோஷியல் வர்க் லெக்சரராக இருந்தபோது நடந்தது இது. எங்களது ஸோஷியல் வர்க், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் பாடத் திட்டத்தின் படி வகுப்பில் நடத்தும் பாடம் வாரத்தில் மூன்று நாட்கள். மற்ற மூன்று நாட்களில் ஃபீல்ட் வர்க்: படித்ததைப் பயன்படுத்த வெவ்வேறு நிறுவனங்கள், என். ஜு. ஓகளில் பணி புரிந்து படித்ததைச் செயல் படுத்த வேண்டும்.

அன்று மாணவர்களுடன் கலந்து ஆலோசிக்கும் ஃபீல்ட் வர்க் நாள் இல்லை. இருந்தும் என்னுடைய மாணவி நிஷா என்னை அவசரமாகச் சந்திக்க வந்தாள்.

நிஷா, ஸோஷியல் வர்க் முதுகலை இரண்டாவது வருடம், மெடிக்கல் அண்ட் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் சிறப்புப் படிப்பு. மனநல ஆஸ்பத்திரியில், நிஷா மதிப்பீடு செய்ய ருத்ர என்ற எட்டு வயதான குழந்தையைத் திரும்ப அனாதை விடுதியில் சேர்த்ததாகவும், அவன் நிலை குனிந்து இருப்பதை அங்குள்ள மேற்பார்வையாளர் அழைத்து வந்தவள் சொன்னதாகக் கூறினாள், நிஷா. குழந்தை விசும்புவதைத் தாங்க முடியவில்லை என்று சொல்லி நிஷா அழுதாள்.

ருத்ரவின் கதை கேட்டதில் மனம் துடித்தது என்றும், அவனுக்கு எற்பட்ட விளைவுகள் தன்னைக் கஷ்டப்படுத்துவதாகச் சொன்னாள். சமாதானம் ஆன பிறகு விவரிக்கச் சொல்லிப் புரிந்து கொண்டேன்.

ருத்ர இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போது, அவனைப் பெற்றவர்கள் இந்த அனாதை இல்லத்தின் தொட்டிலில் விட்டுச் சென்று விட்டனர். இவ்வாறு வந்த பல குழந்தைகளுடன் அவனை வளர்த்து வந்தார்கள். முறைப்படி இவனையும் தத்து கொடுக்கப் பதிவு செய்தார்கள்.

வெட்கத்தினால் ருத்ர கீழேயே பார்த்துக் கொண்டு இருப்பானாம். இதுவோ அல்ல கருமை நிறத்தினாலோ, வெகு நாட்களுக்கு யாரும் தத்தெடுக்க வில்லை. அவனை ப்ரேம் குடும்பத்தினர் தத்தெடுக்கும் போது ருத்ரவின் வயது, நான்கு.

ப்ரேம் அரசு நிறுவனத்தில் கணக்கு பார்க்கின்ற குமாஸ்தா. மனைவி, சுப்பிரபாவிற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. ஒரே ஒரு பெண், தியா, எட்டு வயது. சுப்பிரபாவின் உயிர். ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ப்ரேமின் பெற்றோரும் கூடவே இருந்தார்கள்.

பரீட்சை விடுமுறைகளில் ஊருக்குப் போய் இருந்த போதெல்லாம், தியா அங்குக் குழந்தைகள் அனைவரும் தம்பி, தங்கைகளுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க, தனக்கும் தம்பி வேண்டும் என்ற ஆசையைப் பெற்றோரிடம் சொன்னாள். அவர்கள் குடியிருந்த பகுதியில் மேல் மாடி பெண்மணி, கீழே இவளுடைய தோழி வீட்டில், அக்கம்பக்கத்தினர் பலபேருக்குக் குழந்தை பிறந்தது. குழந்தைகளைப் பார்த்துப் பூரித்துப் போனாள் தியா.

தியாவிற்கு ஒரு தம்பியோ தங்கையோ இருப்பதை ப்ரேமும் அவனுடைய பெற்றோரும் விரும்பினார்கள். தியா எதைக் கேட்டாலும் அதைச் செய்து,  வாங்கித் தரும் பழக்கம் சுப்பிரபாவிற்கு உண்டு. தியா அடம் பிடிப்பதைக் குறைக்கத் தம்பி-தங்கை இருப்பது உதவும் எனத் தாத்தா-பாட்டி நம்பினார்கள். இந்த அபிப்பிராயம் சுப்பிரபாவிற்கு இல்லை. இன்னொரு குழந்தை இருந்தால் தியாவை இப்போது போலப் பார்த்துக் கொள்ள முடியாது என்று எண்ணினாள். அதற்கு ஏற்றவாறு, இன்னொரு குழந்தை பிரசவிப்பது நல்லது அல்ல என்று மருத்துவர் பரிந்துரைத்தார்.

ப்ரேம் சிந்தித்தான். பெற்றோரிடம் இதைப் பற்றிப் பல விதங்களான யோசனைகள். சுப்பிரபா இவர்களுக்கு எதிர் யோசனை சொல்லப் பயந்தாள். ப்ரேம் விடை தேடுவதிலிருந்தான்.

இந்த நிலையில் தான் சுப்பிரபாவின் மருத்துவர் குழந்தை ஒன்றைத் தத்து எடுக்கலாம் என்று பரிந்துரை செய்தாள். அதுவரை இவர்கள் அப்படி யோசிக்க வில்லை. இப்போது கலந்து பேச ஆரம்பித்தார்கள். பேசப் பேச ஒரு பயம் கலந்த ஆர்வம் எல்லோருக்கும் ஒட்டிக் கொண்டது. இந்த நிலையில் தியாவிற்கு எப்படி எடுத்துச் சொல்ல என்று தடுமாறியதால் அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை.

சுப்பிரபா தியாவிடம் இதை எடுத்துச் சொல்ல மறுத்தாள். தாத்தா-பாட்டியும் அப்படித்தான். ப்ரேம் தீவிரமாகச் சிந்தித்தான். தான் எங்கேயோ படித்த தகவல் ஒன்று ஞாபத்திற்கு வந்தது. வரப்போகிற பாப்பா குடும்பத்தினர் பாசத்தில் தேர்ந்தெடுத்த பாப்பா என்பது தான். பூசி முழுகாமல் தியாவிற்கு விளக்கம் தர அது உதவியது.

இவ்வாறு முறைப்படி தத்தெடுக்க முடிவு செய்தார்கள். பலரிடம் கேட்டு, தீர விசாரித்த பிறகே அந்த இல்லத்தில் பதிவு செய்துகொண்டார்கள். இல்லத்தினரும் விதிமுறைகளின் படி, நேரம் குறித்து தகவல்களைப் பதிவு செய்யச் சொன்னார்கள். ப்ரேம் ஆவலோடு சுப்பிரபாவுடன் சென்றான். தத்தெடுக்கத் தயாராக இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள (பரிசோதிக்க) இல்லத்தினர் பல கோணங்களிலிருந்து இருவரையும் தனியாகப் பல கேள்விகள் கேட்டார்கள். சுப்பிரபா திரும்பத் திரும்ப ப்ரேம் தான் பரிந்துரை செய்துள்ளதைப் பெருமையாகச் சொன்னாள். அவர் எடுத்த முடிவிற்கு முழுமனதோடு அவருடன் தான் ஒத்துழைப்பு தருவதாகச் சொன்னாள். அவர் இருக்கிறார், நாம் குழந்தையை நன்றாக வளர்ப்போம் என்று உறுதி மொழி தந்தாள்.

இதைத் தொடர்ந்து, சூழலை எடைபோட்டு, தத்து எடுப்பதில் எந்த அளவிற்கு ஆசையும், ஆர்வம், வசதி இருக்கிறது என்பதைக் கணிக்க, ஸோஷியல் வர்கர் வீட்டுக்கு வந்தார்கள். அத்துடன் தத்தெடுக்கப் படும் குழந்தையுடன் யார் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை அறியவும், அவர்களைப் பற்றிய விவரங்கள், அவர்களின் விருப்பங்கள் கேட்டறிந்தார்கள். இவ்வளவு அலசி ஆராய்வது குழந்தை குடி போகும் இடம் சுகமாக அமையவே.

ஸோஷியல் வர்கர் வரப் போவதாகக் கூறியதும், ப்ரேம் தியாவிற்கு விளக்கம் செய்ய ஆரம்பித்தான். பல படங்களைச் சேகரித்து, நான்கு-ஐந்து வரிகள் கதை போல் தொகுத்து விளக்க ஆரம்பித்தான். வருவது பாசத்தால் தேர்ந்தெடுத்த குழந்தை, மற்றும் விடுதியில் விட்ட குழந்தைகள் நாட்டின் பொறுப்பு என்றான். அங்குள்ள ஒரு குழந்தை இவர்களின் பாசத்தில் பங்கு கொள்வதாக எடுத்துக் கூறினான். மேலும் வரப்போகிற பாப்பா நம் மனதைத் தொட்ட குழந்தை, அதனால் “ஸ்பெஷல்” என்றான்.

இதைக் கேட்ட நாளிலிருந்து தியாவின் ஆர்வம் நாளுக்கு நாள் கூடியது. வீட்டினருக்கும் அப்படித்தான். சுப்பிரபாவிற்கொ மனதில் சந்தேகம் வருடியது, பிரேமை போல் நாமும் பாசமாக இருப்போமா? தியாவிடம் பாசம் குறையுமா? தியா தம்பி தான் வேண்டும் என்றதால் ஆண் குழந்தை என்று முடிவு எடுத்தார்கள், சுப்பிரபாவும் அதான் விரும்பினாள்.

எந்த குழந்தையைப் பல பேரால் வேண்டாம் என்று நிராகரிக்கப் பட்டதோ, அப்படி ஒரு பாப்பாவைத் தேர்வு செய்வதென்று ப்ரேம் குடும்பத்தினர் உறுதியாக இருந்தார்கள். அப்படி ஒரு குழந்தை தான் ருத்ர. அவனுடைய பெரிய கண்கள் அவர்களைக் கவர்ந்தது. குழந்தை நலத்தை முழுதாக பரிசோதனை செய்த பின், நீதிமன்றத்தின் அனுமதி முறைகளை முடித்த பின் வீட்டிற்க்கு அழைத்து வந்தார்கள். ருத்ர தத்தெடுக்கப் பட்டது பதிவானது. நிறுவனத்தினர் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தனர்.

ருத்ர வெட்கத்தில் மூழ்கிப் போனான். ப்ரேம் அவனை அணைத்து, தலையை வருடி பாசத்துடன் தைரியத்தையும் ஊட்ட ஆரம்பித்தார். தியா சாக்லேட் தந்து, விளையாட வைத்தாள். தாத்தா தன்னுடன் அவனைக் கடைக்குக் கூட்டிச் செல்வது, பாட்டி பூஜைக்கு உதவி செய்வது என மெதுவாக மற்றவரிடமும் பரிச்சயம் ஆனான். சுப்பிரபா தயங்கித் தயங்கிப் பழகினாள்.

விடுதியிலிருந்து அவன் போய்க்கொண்டிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றி, வீட்டின் அருகே உள்ள, தியா செல்லும் அதே பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். படிப்பு, வீட்டுப் பாடங்களை ப்ரேம் பார்த்துக் கொண்டான். இருவரின் நெருக்கம் நன்றாகத் தென்பட்டது. தியா அவனை கை பிடித்து பாசமாக அழைத்துச் செல்வாள். தன்னுடைய நண்பர்கள் அவனுக்கும் நண்பர்கள் ஆனார்கள். ஒற்றுமை நிலவியது. தியா-ருத்ர அரவணைப்பைப் பார்த்து எல்லோரும் சந்தோஷப் பட்டார்கள்.
தத்து-சொந்த குழந்தை வித்தியாசம் தெரியாத அளவிற்கு வளர்த்து வந்தார்கள்.

ஒரு விதத்தில் இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்று சொல்லலாம். ஐந்து வயதில் குழந்தையை வீட்டிற்கு அழைத்த வந்ததுமே அவனிடம் தத்தெடுத்ததைப் பகிர்ந்து கொண்டார்கள். இவ்வாறு விளக்கினார்: “அவர்களின் பாசத்தில் வந்தவன் என்றும், அவர்கள் அவனைத் தேடி வரச் சற்று தாமதமாகியதாக. இதயத்தில் பிறந்தவன்.” ஆனால் இவ்வளவு நாட்களாக விடுதியில் பார்த்துக் கொண்டதால் அவர்கள் சூட்டிய பெயரே இருக்கட்டும் என்றார்கள்.

விடுதியினரும் குழந்தை தத்து எடுக்கப் பட்ட நிஜத்தைப் பெற்றோரே விளக்குவது நன்று என்று ஊக்குவித்தார்கள். அப்போது தான் குழந்தை பெற்றோரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க இதுவே முதல் படி என்றார்கள். ருத்ர பெற்றோரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதைப் பல முறை கேட்டு மகிழ்ந்தார்கள் – யார் கேட்டாலும் ருத்ர, தான் பாசத்தால் இருதயத்தில் பிறந்தவன் எனக் கம்பீரமாக விளக்கினான். ப்ரேம் இது பெரிய வெற்றி என்றே எண்ணினான்.

பெருமையுடன் ப்ரேம் இந்த தத்து எடுப்பது ஏன், அது மனதின் பிறப்பு என்றதை ஒரு ஐந்து பக்கம் உள்ள சிறிய புத்தகமாக வடிவு செய்து, விளக்கங்களுக்குப் பல படங்கள் வரைந்து, படமும் இவற்றைச் சொல்லும் பாணியில் தயாரித்து, விடுதிக்குத் தந்தான். பலருக்கு மிக உபயோகமாக ஆனதால் அவர்களே வெளியிட்டார்கள். சித்திரங்களுடன் இந்த புத்தகம் தத்தெடுத்த பெற்றோருக்குத் தரப்பட்டன. விளக்குவது மிக அவசியம். வேறு யாரிடமிருந்தோ கேட்டு, தேவையற்ற குழப்பங்கள் உருவாகும் சூழ்நிலையைத் தவிர்க்கலாம். புத்தகம் எடுத்துச் சொல்ல உதவுகிறது எனத் தத்து எடுக்கும் பெற்றோர் சொல்லுவதைக் கேட்க, ப்ரேம் ஆத்மத் திருப்திப் பட்டான்.

ருத்ர பிறந்த நாளென்று அவன் இருந்த விடுதிக்குப் போய் அங்குள்ள அவனுடைய நண்பர்கள், வளர்த்த ஆயா எல்லோருக்கும் இனிப்பு தருவதைப் பழக்கம் ஆக்கினார்கள்.

ருத்ர குடும்பத்துடன் ஒட்டிப் போனான். வீட்டினரும் தங்கள் குழந்தை என்றே இருந்தது. சுப்பிரபா வேலை ராஜினாமா செய்து வீட்டில் இருக்க விரும்பினாள், இருந்தாள். ப்ரேம் கண்டிப்புடன் செல்லமும் செய்தான் ருத்ராவை. ப்ரேம் மனதில் தத்து எடுத்து குழந்தையை வளர்ப்பதில் ஒரு நிம்மதி நிலவியது. ருத்ர சந்தோஷமாக வாழ்ந்தான். இவை யாவையும் சுப்பிரபா புதுமையாகப் பார்த்தாள்.

நேரம் ஓடியது. ஒரு நாள் ப்ரேம் வீடு திரும்பி வரவில்லை. தொலைப்பேசியில் காவல்துறையினர் அழைத்து, வீட்டுக்கு அருகில் சாலை விபத்தில் இறந்து விட்டான்  என்ற செய்தி தந்தார்கள். இடிந்து போனாள் சுப்பிரபா. தாத்தா பாட்டி ஆடிப்போனார்கள், தியா, ருத்ர அழுதார்கள். உலகம் தலைகீழாக மாறியது.

எல்லாம் மாறியது. தாத்தா பாட்டிக்குத் தாங்க முடியவில்லை, ஊருக்குப் போய் விட்டார்கள். வீட்டில் சப்தம் இன்றி, ஏதோ என்று இருந்தார்கள். மூன்று மாதத்திற்குள் ப்ரேம் அலுவலகத்தில் ஒரு வேலை சுப்பிரபாவுக்கு தரப்பட்டது. மனம் இல்லாமல் ஏற்றுக் கொண்டாள். விதவை கோலம் வாட்டியது. இதனாலோ, பொறுப்பினாலோ இப்போது எல்லாமே சலிப்பு தட்டியது அவளுக்கு.

மாதங்கள் கசப்பாகக் கடந்தன. தியாவிற்குக் குவிந்தது பாசம், ஆனால் ருத்ர எதைச் செய்தாலும் சுப்பிரபாவிற்கு அவன் மேல் கோபம் வந்தது. பிறந்த நாள் அன்று விடுதிக்கு அவசரமாக அழைத்து வந்தாள். சுப்பிரபா தான் செய்வதைத் தடுக்க முடியவில்லை.

ஒரு வருடம் முடிந்தது. ருத்ர பிறந்த நாள் அன்று ருத்ரவை இல்லத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கேயே விட்டு விட்டாள். ஆமாம், விடுதியினர் அவ்வளவு தீவரமாக அலசி பரிசோதனை செய்து தான் குழந்தையை அனுப்பி வைத்திருந்தார்கள். இப்போதோ, சுப்பிரபா முறைப்படி அவனை மறுபடி விட்டு விட விண்ணப்பம் செய்தாள்.

அவர்கள் வியப்புடன், ஏன் இவ்வாறு சுப்பிரபா செய்கிறாள் என்ற கேள்விக்கு, இமைக்கா நொடியில் “அவர் இருக்கும் வரை பார்த்துக் கொள்வேன் என்று தானே சொன்னேன்” என்றாள். ஆமாம் அப்படித் தானே சொன்னாள். இப்போது அந்த ஸோஷியல் வர்கர் மிக வருந்தினாள், தான் ஏன் இதை ஆராயவில்லை என்று. எல்லா விதிமுறைகள் முடித்து ருத்ரவை விட்டுச் சென்றாள்.

அடுத்த பல சனிக்கிழமை காலை வேளையில் அம்மா, தியா வருவார்கள் என நம்பி காத்து இருந்தான், ருத்ர. யாரும் வரவில்லை. ஏமாற்றம், துக்கம், திரும்பவும் நிராகரிப்பு. திரும்ப அதே பள்ளிக்கூடம். வகுப்பு மாணவரின் ஏதேதோ கேள்விகள், கேலியும். துவண்டு போனான். தான் என்ன தவறு செய்தோம்? ஏன் இப்படி விட்டு விட்டார்கள்? ஒன்றும் புரியவில்லை. இந்த நிலைக் கலைந்த நிலையில் குழந்தையை நிஷா சந்தித்தாள்.

இந்த நிலை இப்போதெல்லாம் பல இடங்களில் நடக்கிறது. தத்து எடுத்துத் திருப்பி விடுதிகளில் சேர்த்து விடுவது பல குழந்தைகளின் நிலைமை. குறிப்பாக, ஆறு வயதிற்கு அதிகமாக உள்ள குழந்தைகள். வருத்தப்பட வேண்டிய விஷயம். அட்ஜஸ்ட் ஆகவில்லை என்கிறார்கள்.

இந்தக் கசப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில், ருத்ர ஏற்றுக்கொள்ளக் கஷ்டப்பட்டான். இதனால் அடிக்கடி உடல்நிலை தடுமாறியதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். தான் விடுதியில் இருப்பதை அவன் ஏற்றுக்கொள்ள உதவ, அவர்களின் ஸோஷியல் வர்கருடன் என்னுடைய மாணவி நிஷாவும் சேர்ந்து கொண்டாள்.

நிஷா மேற்பார்வையாளராக நான் இருந்ததால் கூட்டாகச் செய்தோம். குழந்தைக்கு மூன்று நிலையில் அணுகினோம். அவனுடைய உளவியல் உபாதைகளுக்கு ப்ளே தெரப்பி மூலம் முற்பட்டோம், உறவை வளர்க்க பல்வேறு பாதைகளை வகித்தோம். விடுதியில் வரும் குழந்தைகள், ஓர் வயதிருக்குள் இருப்போரின் பராமரிப்பில் ருத்ர ஒத்துழைப்பு தந்தான். மாலையில் கால்பந்து விளையாட்டு, விடுதியில் இருக்கும் ஆலயத்தில் பூப்பறித்துத் தருவது, குழந்தைகளை வரிசைப் படுத்துவது. தோட்டத்தில் அரைமணி நேரம், என்று. இதை தவிர்த்து பக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தின் தாத்தா பாட்டிமார்களுக்குக் கடிதம் எழுதுவது (இது 1990 காலகட்டம்), பேசுவது என்று. மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் ப்ளு க்ராஸில் உதவுவது, வாய்ப்பேச்சா பிராணி அன்பு செலுத்தும் விதமே மனதிற்கு ஆறுதல் தரும். தந்தது.

ஆரம்பத்தில் நிஷா எதற்காக இந்த கலவை? இத்தனை தேவையா? என்று கேள்வி எழுப்பினாள். ஒரு முறை அல்ல, இருமுறை நிராகரிக்கப் பட்ட ருத்ரவின் மனது உறவுகளை நம்ப இடம் தராது. அதுவும் பாசமே பொழியும் குழந்தை அவன். மற்றவர்கள் பாசத்திற்கு காத்துக்கொண்டு இருக்கலாம். எப்போது வரும், தெரியாது. அவனின் அழகே பாசம் காட்டுவதில். தன்னைச் சுற்றி உள்ள அனைத்து தரப்பினருக்கும் வாரி வழங்குவதில் வரும் சுகம் அவனுக்கு திருப்தி தரும். தானாக வளரும் பாசம்.

ருத்ர படிப்பிலும் கவனத்தை செலுத்தினான், ப்ரேம் சொன்னதை செய்வதற்கு. போகப் போக, பல மாதங்களுக்கு பிறகு, அவனுக்கு சுப்பிரபா தன்னை திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்ற உண்மை புரிந்தது. இந்த புரிதல் ஒரு பக்கம், நேரத்தை பலருடன் பங்குகொண்டதில் அவன் புத்துணர்ச்சி மேலோங்கியது. .

ராமனைத்தேடி……. பாம்பே கண்ணன்

பசுமை நிறைந்த மலைப்பகுதி ...

சமீபத்தில் சிக்மகளூர் சென்றிருந்தேன். 

மலை வாசஸ்தலமாகவும் இல்லாமல் அழகிய இயற்கைக் காட்சிகள் பெரிதாக இல்லாமல் பொழுது போனது.

இருந்தும்  அங்கே ஒரு ராமர் கோவில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

வழக்கம் போலக் கோவில் தரிசனங்கள் தான் என நினைத்துக்கொண்டு விசாரிக்க ஒரு அழகான சிறிய கோவில் மட்டும்தான் இங்கு ராமர் கோவில் என்று வழிகாட்டினர்.

அழகான சன்னதிதான் இருந்தும் சற்றே சமீபகாலத்தியது. ஆனால் எனக்கு விவரம்தந்தவர்கள் அது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் எனச் சொல்லி இருந்தனர்.

இதுதான் அந்த கோவிலாக இருக்க வேண்டும் என நினைத்து யாருமே இல்லாத அந்த சன்னதியில் வலம் வந்தோம்.

மணியோ இரவு 7 அந்த நேரம் பார்த்து இளம் தம்பதிகள் இருவர் உள்ளே வந்து ராமனைத் தரிசித்தனர்.

பின்னர் அந்த இளைஞன் என்னிடம் இந்த ஊர் ராமன் கோவில் இதுதானா ஆனால் 1200 வருட. பழமையான கோவில் ஒன்று இருக்கிறதாமே உங்களுக்குத் தெரியுமா எனக்கேட்டு என் ஆவலைத் தூண்டினான்

நாங்களும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் எனச் சொல்ல அவர்கள் சென்று விட்டனர். 

ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியவர்கள் மீண்டும் ராமனைத்தேடினோம் ஆட்டோ காரர்களை விசாரித்ததில் இதே ராமரையே காட்டினர்.

ஒரே ஒருவர் மட்டும் நாங்கள் பேசிய ஹந்தி தமிழ் ஆங்கிலம் எல்லாவற்றையும் என்ன புரிந்து கொண்டாரோ ஒரு பழமையான கோவில் இருக்கிறது என கை காட்டினார். 

மணியோ 7 30.  அங்கு விரைந்தோம்.

நள்ளிரவு போலக் கும்மிருட்டு தோட்டங்களுக்கு நடுவே பழமையான கோவில்!

ஓ இதுதான் அந்த ராமன் சன்னதி என வேகமாக உள்ளே நுழைந்தோம் வைணவ தலங்களுக்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை

அர்ச்சகர் வரவேற்றார் ‘ ராமர் கோவில் இதுதானா ?’எனக்கேட்பதற்கு வாய் திறக்குமுன் ஈஸ்வரன் அருள் பாலித்தார்

அது ஒரு அழகான சிவன் கோவில் ஸ்வாமியின் பெயர் போலா ராம ஈஸ்வரன்!

இங்கும் ராமனா சரி !

இதுதான் போலும் எனத் தீர்மானித்துத் திரும்ப இருந்தவர்களிடம் இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நீங்கள் தேடும் ராமர் கோவில் இருக்கிறது ஆனால் வேகமாகப் போகவேண்டும் 8 30 க்கு கோவில் சாத்தி விடுவார்கள்  என ஹிந்தியில் சொல்ல மீண்டும் துரத்தினோம் வழி கண்டு பிடிப்பது சிரமமாகத்தான் இருந்தது. 

மூன்றாவது கிலோமீட்டருக்கு அருகே அழகிய தென்னாட்டுக் கோபுரம் வடகலை நாமம் தாங்கி நின்றது. 

கண்டேன் என் ராமனை என என் மனைவி கூவவில்லை அவ்வளவுதான் சன்னதிக்குள் விரைந்தோம்.

அழகிய ராமர் சீதா லக்ஷ்மண ஹனுமன் சமேதராக வீற்றிருந்தார் அர்சனை செய்தோம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு தல புராணம் கேட்க நினைத்து இந்த கோவில் 1200 வருடங்கள் பழமையானதாமே அதைப்பற்றிச் சொல்லுங்கள் எனக்கேட்க பட்டர் ‘இது அவ்வளவு பழமை இல்லையே ‘என்று ஒரு ராம பாணத்தை வீசினார்.

அப்ப அந்த ராமர்…..

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முயன்று பாருங்கள் கோவில் மூடியிருப்பார்கள் என்றார். 

இது என்ன தொடரும் சோதனைகள்.  இன்று போய் நாளை வரவும் முடியாது.  பெங்களூர் திரும்ப வேண்டும். 

எல்லோரும் சோதித்தால் ராமனை வேண்டலாம் ராமனே சோதித்தால்…. என்ற தவளை போல விரைந்தோம்.

கோவில் மூடி இருந்தார்கள் இளைஞர் ஒருவர் வாசலில் நின்றிருந்தார்.

தரிசனம் பண்ண வந்தேளா அதான் காத்திண்டு இருக்கேன் என்றார் .

நாங்க வரோம்னு எப்படித் தெரியும் எனக் கேட்க என்னமோ உத்தரவு வந்தது என்றார்.

அவர்தான் அந்த கோவில் பட்டராம் மூடப்பட்ட கோவில் திறக்கப்பட்டது பூட்டி இருந்த சன்னதி கதவுகள் விலகின ராமரும் சீதையும் லட்சுமணனும் பிரகாசமாகத் தரிசனம் தந்தனர் அதன் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் கோவில் தல புராணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

இது பரசுராமனுக்கு ராமன் திருமணம் முடிந்தவுடன் தரிசனம் தந்த இடமாம் சத்திரியர்களைக் கொல்லும் விரதம் பூண்டிருந்த பரசுராமர் ராமனும் சத்திரியன் எனப் போர் செய்து தோற்றுப் போகிறார்.

நானே விஷ்ணுவின் அவதாரம் என்னை ஜெயிப்பவன் விஷ்ணுவைத்தவிர வேறு யார் எனக் கேட்க ராமன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தாராம் எப்போதும் ராமனுடன் காட்சி தரும் அனுமன் இங்கில்லை காரணம் இந்த கால கட்டத்தில் ராமன் அனுமன் சந்திப்பு நிகழ வில்லை

நேரம் 9 30.  ஒரு பெண் எங்கள் பின்னாடி நின்று கொண்டிருந்தாள்.

விடை பெறும் நேரம்.

பட்டர் பெயர் கேட்டேன் விஷ்ணு என்றார் கண்ணன் என்றேன்.

கோவில் பிரதான பட்டர் பெயர் கண்ணன் என்றார்.

புறப்படும் நேரம் அந்த இளம் பெண் ராம நாமம் 108 முறை எழுதிவிட்டு போங்கள் என பேப்பர் பேனா கொடுத்தார் அந்த பெண் திருமணமாகிக் குடியிருப்பது திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் அருகேயாம்.

எதை எண்ணி வியப்பது ?

பழமையான கோவிலைத்தேடிவந்து எங்களையும் தேட வைத்த அந்த இளம் தம்பதியை நினைத்தா?

ஒரு ராமனுக்கு மூன்று ராமனும் ஒரு ராமேஸ்வரனும் தரிசனம் தந்ததையா!

விஷ்ணு வெளியே காத்திருந்து தரிசனம் செய்வித்ததையா!!

கோவில் மூடிய பின் ஒரு பெண் வந்து ராம நாமம் எழுதச் சொன்னதையா!

நிறைவுடன் திரும்பினோம்.

மே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்

 

மே 3 – சுஜாதாவின் பிறந்தநாள் . இதுசமயம் அவரது நினைவு நாளை நாம்  கொண்டாடியது நினைவிற்கு வருகிறது.

பிப்ரவரி 28 சுஜாதா அவர்களின் நினைவு நாள். அதைக் குவிகம் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

பிரபல நாடக இயக்குனர் தாரிணி அவர்கள் குவிகத்திற்காகச் செய்த சிறப்பு  நிகழ்வு  அது !

சுஜாதா அவர்களைப் பற்றிய ஒரு சிறந்த காணொளி !  பார்த்து மகிழுங்கள்! 

 

அனுமதி’ என்ற சுஜாதாவின் நாடகம் குவிகம் மேடையில் நடைபெற்றது.

( இந்த நிகழ்வு பற்றி  மார்ச் குவிகத்தில் ஏன் எழுதவில்லை என்று தாரிணி கோபித்துக் கொண்டார். அவர் கோபம் நியாயமானது. அதுவும் நாடகக் கலைஞர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி குவிகத்திற்காகச் செய்த சிறப்பு நிகழ்வு அது! அவர்களைக் குவிகத்தில் கொண்டாடியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது என தவறு. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பை வேண்டுகிறேன்)

சுஜாதாவின் ‘அனுமதி’ கதைச் சுருக்கம் இதோ: 

நேர்மையான தந்தை. படித்து முடித்த மகனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்று தவிக்கும் தாய்.  சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞன்  மகன்.  தந்தையின் நேர்மைக்கு  அலுவலகத்தில் ஒரு சோதனை . சட்டத்தை மீறி ஒரு  திட்டத்துக்கு அனுமதி கோரும்  ஒரு பணமுதலையின் கையாள் . அதற்கு விலையாக அவன்  தருவது  வேலைக்காக அவர் மகன் எழுதப்போகும்  நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள் !  அப்பா சபலத்தில் ஊசலாடி சரி என்கிறார். மாதிரிவினா என்று அவனிடம் உண்மையான தேர்வின் வினாத்தாள் கொடுக்கப்படுகிறது. பையன் தேர்வுக்கு செல்கிறான். விஷயத்தைப் புரிந்து கொள்கிறான். வெறும் பேப்பரைக் கொடுத்துவிட்டு வீடு திரும்புகிறான்.   ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டானே என்று தாய் துடிக்கிறாள்.  தன் காரணமாக தந்தையின் நேர்மை சரியக்கூடாது என்று  மகன்  சொன்னதைக் கேட்ட   தந்தை பெருமிதத்துடன்  அவனை  அணைத்துக் கொள்கிறார்.  

தந்தையாக ஸ்ரீராமனும் தாயாக அனுராதாவும் மகனாக ஆதித்யாவும்  அனுமதி கேட்பவராக பரமேஸ்வரனும்  நடிக்கவில்லை;  மேடையில் வாழ்ந்து காட்டினார்கள். 

சுஜாதாவின்  உயிருள்ள கதைக்கு மெருகூட்டியவர்  தாரிணி. 

ஒரு நிறைவான நாடகத்தைப் பார்த்த பெருமித்துடன் விடைபெற்றோம். 

 

 

Anumathi

 

அட கடவுளே…! -நித்யா சங்கர்

சிறுகதை: சஞ்சலம் ஏன் சஞ்சனா... – தி ...

‘அட கடவுளே…. சீனிவாசன் வாட் ஈஸ் திஸ்..?’

மேஜையில் வைக்கப் பட்டிருந்த கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்த நிதித் துறை அமைச்சகச் செயலர் ஜெயராஜன் அலறினார்.

பக்கத்துக் காபினில் இருந்த சீனிவாசன், ‘என்னமோ ஏதோ’ என்று பயந்து, ஜெயராஜன் காபினிற்கு ஓடி வந்து அவர் பார்த்துக் கொண்டிருந்த ·பைலை எட்டிப் பார்த்தார்.

‘என்ன சீனிவாசன்.. கொரோனா வைரஸில் இறந்த ஆயிரம் பேர்களுடைய குடும்பங்கள் தலா ஐம்பது லட்சம் காம்பன்ஸேஷன் கேட்டு அப்ளை பண்ணி இருக்காங்க.. ஐநூறு கோடி இன் ஒன் கோ… ‘ என்றார் ஜெயராஜன் மூச்சு விடாமல். அவர் முகம் பேயறைந்தது போல் இருந்தது.

‘ஆமாம் ஸார்… இந்த பேஷன்ட்ஸ்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்திட்டிருந்த ப்ராஸஸ்லே சில டாக்டர்ஸ¤களும், செவிலியர்களும் இறந்துட்டாங்க இல்லையா…அவங்க குடும்பங்களப் பார்த்து ஆறுதல் சொல்லப் போயிருந்த நம்ம முதலமைச்சர் பத்திரிகைக்காரங்க கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இறந்தவர்களுக்கு ஐம்பது லட்சம் காம்பன்ஸேஷன் கொடுக்கப்படும்னு சொன்னாரில்லையா… அதுதான்… வைரஸால் இறந்தவங்க சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எல்லாம் அப்ளிகேஷன் போட்டிருக்காங்க…’

‘பட்.. நாம ஒண்ணும் டைரக்ஷன்ஸ் கொடுக்கலையே…ஜி. ஒ. ஒண்ணும் அனுப்பலியே…”

‘சரிதான்… ஆனா ஓபனா முதன்மந்திரி அப்படிச் சொன்னதை கவர்ன்மென்ட் ஆர்டரா எடுத்துட்டாங்க..’

‘அவர் இறந்த டாக்டர்ஸ், செவிலியர்கள் குடும்பங்களுக்குன்னு சொல்லலியே… ஜெனரலா வைரஸால் இறந்தவங்களுக்குன்னு சொல்லிட்டாரே… அதையே வேதவாக்கா எடுத்துட்டாங்க…’

‘ஓ..மை காட்… இப்போ என்ன செய்யறது..? இவ்வளவு பணத்தை எங்கே புரட்டறது…?’

‘ஸார்.. இதுலே ரொம்ப சோகமான விஷயம் என்னன்னா மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நூறு பெரியவர்கள் சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி ‘நம்ம குடும்பத்துக்கெல்லாம் இவ்வளவு பணம் ஒரு போதும் கிடைக்காது.. சம்பாதிக்கவும் முடியாது. நாம போனாலும் நம்ம குடும்பம் சௌக்கியமா கஷ்டப்படாம இருக்கட்டும்னு’ நினைத்து, இந்தத் தொற்று உள்ளவங்களைத் தேடிப் பிடித்து தொத்து வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இறந்துருக்காங்க… ஆல் மோஸ்ட் எ கைன்ட் ஆ·ப் ஸூயிஸைட்..அவங்க குடும்பங்களும் அப்ளை பண்ணி இருக்காங்க..’

‘ஓ.. வெரி பாதெடிக்.. கொரோனா லாக் டவுனால் மாகாணமே ஸ்தம்பித்துப் போய் கவர்ன்மென்டுக்கு சேர வேண்டிய வருமானமும் மிகவும் குறைந்து போய் விட்டது.. இதுலே நலிந்து போன குடும்பங்களுக்கு நாம் செய்து கொண்டிருக்ம் இலவச சாமான்கள் டிஸ்ட்ரிப்யூஷன் வேறு… இன்·ப்ரா]ஸ்ட்ரக்சர் செலவுகள் வேறு… கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில்கொரோனா பேஷன்ட்ஸைத் தனிமைப் படுத்தி வைக்க தனிவார்டுகள்.. பெட்கள்.. இத்யாதி இத்யாதி… நாம கலக்ட் பண்ணிக் கொண்டிருக்கிற பப்ளிக் டொனேஷன்ஸ் இந்தச் செலவுகளுக்கெல்லாம் வெறும் சோளப் போரிதான்.. அப்படி இருக்கும்போது நாம இப்போ இந்தப் பணத்துக்கு எங்கே போகிறது..? நம்ம மந்திரிகள் நம்ம நிதிநிலைமை தெரியாம ஏதாவது ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு வந்துடறாங்க.. இப்போ நாம தலையைப் பிச்சுக்கணும்.. ·பண்ட்ஸ் மொபிலைஸேஷனுக்காக… கடவுளே.. இப்போ என்ன பண்ணப் போறேன்.. இந்தப் பணத்தை எப்படி எங்கே மொபிலைஸ் பண்ணப் போறேன்..’ என்று கூறி கண்ணை மூடினார்.

கண்களில் திடீரென்று தண்ணீர் விழுந்த மாதிரி இருக்க சட்டென்று கண்களைத் திறந்தார்.

அவர் கட்டிலில் படுத்திருக்க பக்கத்தில் தண்ணீர் சொம்புடன் மனைவி ஜலஜா நின்றிருந்தாள்.

‘ஏன்.. என்ன ஆச்சு..?’ என்று மலங்க மலங்க விழித்தார் ஜெயராஜன்.

‘அதை நீங்கதான் சொல்லணும்… திடீரென்று புரண்டு புரண்டு படுத்திட்டிருந்தீங்க.. அப்புறம் ‘நான் என்ன செய்யப் போறேன்.. இந்தப் பணத்தை எங்கே மொபிலைஸ் பண்ணப்போறேன்’ என்று பிதற்றினீங்க… என்ன ஏதாவது கனவு கண்டீங்களா…?’என்றாள் ஜலஜா.

சிறிது வெட்கத்துடன் சிரித்தார் ஜெயராஜன். பின் தான் கண்ட கனவை மனைவியிடம் சொன்னார்.

பெரிதாகச் சிரித்தாள் ஜலஜா. ‘நீங்க ·பினான்ஸ் செக்ரடரியே ஆயிட்டீங்களா… ரொம்ப ஆசைதான்… முதல்லே உங்க கம்பனியிலே பிராஞ்ச் மானேஜர் ப்ரமோஷன் வாங்கற வழியைப் பாருங்க.. உங்க வீட்டு வரவு செலவுகளை நேர் பண்ணற வழியைப் பாருங்க.. அப்புறம் செகரடரியாக ஆக யோசிக்கலாம்.. இப்போ நாட்டு வரவு செலவுகளை கோட்டையிலுள்ள செகரடரி பார்த்துக்குவார். நேத்து நியூஸ்லே,ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்திருந்தால் அந்தக் குடும்பங்களுக்கு காம்பன்ஸேஷன் கொடுக்கப்படும்னு முதலமைச்சர் கூறியுள்ளதாக சொன்னார்கள் இல்லையா… அதைப் பார்த்துட்டு அப்படியே படுக்கப் போயிருக்கீங்க.. அது இப்படி ஒரு கனவா வந்திருக்கு… கொஞ்சம் தண்ணீர்குடிச்சிட்டு படுங்க..’ என்று படுத்தாள்.

சிறிது தண்ணீர் குடித்து விட்டுப் படுத்த ஜெயராஜுக்கு தூக்கம் போய் விட்டது.

முகமூடி – ஜெ பாஸ்கரன்

முகமூடி!

 

Are India's poor social distancing? Niti Aayog to survey over 100 ...

குடிசை வாசலில் முள் தாடியுடன் அமர்ந்திருந்தான் சிலுவை – எதிரே மடித்த கால்களின் மேல், தலையை வைத்து, அரைக் கண்கள் மூடியபடி படுத்துக் கிடந்தது மணி. ஊரெங்கும் கொரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவு.

குப்பை பொறுக்கும் சாக்கு, உள்ளே ஓரத்தில் கிடந்தது. ஒரு வாரமாக வருமானம் இல்லை. தாடியைச் சொறிந்த படி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் போலீஸைக் கண்டு, தோளிலிருந்த துணியால் மூக்கு, வாயை மூடினான். கிழிசலின் வழியே மூக்கு எட்டிப் பார்தது!

காலையில் நல்ல டீயும், பன்னும் தின்றுவிட்டு, தோளில் சாக்குடன் கிளம்பினால், ஒரு மணிக்குள் முனியன் கடையில் பொறுக்கியதைப் போட்டுக் காசு பார்த்து விடுவான் – மதிய சாப்பாட்டுக்கும், மாலை சாராயத்துக்கும் கவலை இல்லை. இந்த ஊரடங்கில், ஒரு டீ க்கே வழியில்லை!

தெரு முனை வரை வந்த மணியைத் துரத்தினான் – ‘எனக்கே வழியில்லை, இதுலெ நீ வேற’ என்பதைப்போல! ஓரத்தில் கிடந்த துண்டு பீடியை எடுத்து அழுக்குத் துணியில் துடைத்து, நெருப்புக்குத் தேடினான். முகமூடியுடன் வேகமாக சைக்கிளில் போனவன், நின்று, முகமூடியைக் கீழே இழுத்து, ஒரு சிகரெட் பற்ற வைத்தான். அவனருகில் சென்று ‘நெருப்பு’ என்றான். சிகரெட் பிடிப்பவன் இவனை ஏற இறங்கப் பார்த்து, வத்திப்பெட்டியைக் கொடுத்து விட்டு, ‘உன் முகமூடி கிழிந்திருக்கிறது – பாதுகாப்பில்லை’ என்றான். பெட்டியை திருப்பி வாங்கிக்கொண்டு, திறந்த வாயிலிருந்து புகை ஊதியபடி சைக்கிளை மிதித்தான்!

கிழிசல் வழியே பீடியை வலித்தபடி நடந்தான் சிலுவை – பழக்கம் காரணமாக அருகேயிருந்த குப்பைத் தொட்டியை நோண்ட, நீலக் கலரில் ஒரு மாஸ்க், ஒரு பக்க நாடா இல்லாமல் கையில் கிடைத்தது. உதறி, முகத்துக் கிழிசல் துணியைத் தோளில் போட்டுக் கொண்டு, முகமூடியை ஒருவாறு அணிந்து கொண்டான். பீடியைத் தொட்டியில் தேய்த்து, அணைத்து, காதில் சொருகிக் கொண்டான். ஏதாவது டீக்கடை தென்படுகிறதா என்று பார்த்தபடி சென்றான்.

கொரோனா பாஸிடிவ் தாத்தா அந்த வீட்டில் இருப்பதையோ, முதல் நாள் மாஸ்க்கைப் பாட்டி குப்பைத்தொட்டியில் போட்டதையோ, கார்ப்பொரேஷன் ஒட்டியுள்ள பச்சைப் போஸ்டரையோ சிலுவை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை!

ஜெ.பாஸ்கரன்.

இன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்

பிரபஞ்சன்

பிரபஞ்சனின் “காகித மனிதர்கள்”

மானுடம் வெல்லும்”, “வானம் வசப்படும்” என்னும்  நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தலைப்புகளில் சரித்திர நாவல்கள் எழுதியவர்.

சிறந்த சிறுகதை  பட்டியல் எல்லாவற்றிலும் இவரது  “மரி என்கிற ஆட்டுக்குட்டி”  இடம் பெறுவதைப் பார்த்திருப்பீர்கள்.

சாகித்ய அகதமி விருது உட்பட பல்வேறு விருதுகள்  பெற்றவர். தொலைக்காட்சியில் சிறப்பான புத்தக அறிமுக தொடர்நிகழ்வினை அளித்தவர்.

சிறந்த விமரிசகர்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கத்  தொடர்ந்து முயற்சிகள் செய்தவர்.

வழக்கமான மன்னர்களின் கதையாக இல்லாமல்,    மக்களின் மற்றும்  ஊரின் கதையாகப் படைக்கப்பட்ட வரலாற்று நூலான ‘வானம் வசப்படும்’ முன்னுரையில்   ‘தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!’ என்று சொல்லியிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி .

தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் அதுபற்றிக் குறிப்பிடும்போது  “அப்போது எழுதிவிட்டேன். இன்றைய மனமுதிர்ச்சி அன்றிருந்திருந்தால்   அப்படி எழுதியிருக்க மாட்டேன்.” என்று குறிப்பிட்டதையும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும்.

முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த பிரபஞ்சன் புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்த மனிதர்.

2018 டிசம்பர் மாதம் மறைந்த பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டு,  21 குண்டுகள் முழங்க அரசு மரியாதைகளுடன்  தகனம் செய்யப்பட்டது.

* * * *

இவருடைய பாதுகைகள் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது

இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கறுப்பு மின்னல் மாதிரி அவை ஒளிர்ந்தன.

பொன்னுத்தம்பி  சட்டம் படித்துவிட்டு ஒரு வழக்கறிஞராகப் புதுச்சேரியில்  நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த  இளைஞன்.  அவனது முக்கியமான கனவுகளில் ஒன்று வழக்காடும் பிரஞ்சுக்காரர்கள் போலவே ‘மொடமொட’ வென்ற கால்சராய் மற்றும் சப்பாத்தும் (shoe) அணிந்து கொண்டு  நீதிமன்றம் செல்லவேண்டும் என்பது.

அதற்காகவே  பிரெஞ்சுக்காரர்களுக்கு  சப்பாத்து   செய்துதரும் மாடன் என்கிற ஒரு தொழிலாளியிடம் ஆசை ஆசையாக ஒரு ஜோடி  சப்பாத்து செய்து கொண்டான்.  அதிகமான விலை கொடுக்க வேண்டியிருந்தது.  துரைகளைப் போல அணிய வேண்டும் என்றால் துரைகள் கொடுக்கும்  கூலியையும் கொடுக்க வேண்டியது அவசியம்தானே.

கால்சராய்  மடிப்பு பழுதுபடாமல் அந்தக் காலணிகளை அணிந்துகொண்டான்.

மேலே படிந்திருந்த தூசை, அவற்றுக்கு நோகாமல் தட்டிச் சுத்தம் செய்தான். ஒவ்வொன்றிலும் காலை நுழைத்துக் கயிற்றால் இழுத்துக் கட்டிக் கொண்டான். வளர்ப்பு நாய்க்குட்டி காலைக் கவ்வியது மாதிரி சப்பாத்துகளும் கவ்விக் கொண்டன. நாலடி நடந்தான்.

திண்ணையில் அமர்ந்திருந்த அவருடைய தகப்பனார் மகனைப் பார்த்து எழுந்து நின்றார். அரை நூற்றாண்டுகளாக வெள்ளைக்காரர்களின்  ‘பட்லர்’ ஆக இருந்து  வெள்ளை நிறத்தைக் காணும் தோறும் குனிந்து குனிந்து வணங்கி கூன்போட்ட முதுகு அவருடையது.

பத்ரம்பா, பத்திரம்! துரைகளோடு வாழ்க்கை நடத்தறது பேயோட சம்சாரம் பண்ணற மாதிரி. எப்போ மரம் ஏறும் எப்போது இறங்கும்னே கண்டுபிடிக்க முடியாது. கும்பிட்டு வாழனும். கும்பிட்டவன் கூழ் குடிப்பான். வம்பிட்டவன் வைக்கோல் தின்பான்னு பெரியவங்க சொல்லுவாங்க.“

வழக்கம் போல அந்த உபதேசங்களைப்  புறக்கணித்துவிட்டு இன்று நீதிமன்றத்திற்கு நடந்தே போவது என்று முடிவு செய்தான்.  காலில் அணிந்திருந்த பாதுகைகள் அவனை நட நட என்று ஊக்குவித்ததுபோல அவனுக்குத் தோன்றியது. வினோதமான ஒலி எழுப்பிய சப்பாத்துக்கள் தெருவில் உள்ளோர் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தது

காலணிகள் செய்கிற சத்தம்   திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை எழுந்து  நிற்கச் செய்தது. பலருக்கு  பொன்னுத்தம்பியைத்  தெரிந்திருக்காது.  ஆனால் உத்தியோகஸ்தர்கள் அணியும் காலணிகளை அணிந்து  வருபவன்  பெரிய உத்தியோகஸ்தராகத்தானே இருக்க வேண்டும். நிற்பதன் மூலம் அந்த உத்தியோகஸ்தனுக்கு தங்கள்  மரியாதையைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.

பொன்னுத்தம்பி உள்ளே செல்லும் பொது  கணம் நீதிபதி  ஆசனத்தில் இருந்தார் மற்ற வழக்கறிஞர்களும் அரசு வழக்கறிஞர் வந்து விட்டிருந்தார்கள்.

புதிய  காலணிகள் அணிந்த பொன்னுத்தம்பி “வணக்கம் கணம் நீதிபதி அவர்களே” என்று  பணிவாக  பிரஞ்சு மொழியில் கூறினான்.

நீதிபதியின் பார்வை இவன் அணிந்திருந்த சப்பாத்துகளின்மேல் விழுந்தது. கண்கள் சிவக்க காலில் அணிந்திருப்பது சப்பாத்து தானே என்று கேட்டார் ஆம் என்று   மறுமொழி கொடுத்தான் தம்பி.

மறுப்புக்கு உரிய அடையாளமாக, நீதிபதியின் தலை அசைந்தது. “தங்கள் நடத்தைக்கு நான் வருந்துகிறேன். மிஸ்யோ பொன்னுத்தம்பி பிள்ளை! என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்.“

அங்கிருக்கும் அனைவரின் கால்களை பார்க்கிறான்  பொன்னுத்தம்பி. நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்,  ஐரோப்பியர் அல்லாத வழக்கறிஞர்களைத் தவிர,  சப்பாத்து  தான் அணிந்திருந்தார்.

நீதிபதியும் பல்வேறு வழக்கறிஞர்களும் சப்பாத்து அணிந்திருக்கும்போது தனக்கு அது தடை செய்யப்படுவது விளங்கவில்லை என்று பணிவோடு ஆனால் உறுதியோடு முறையிட்டான் தம்பி.

இந்தியனான  பொன்னுத்தம்பி  இந்தியப் பழக்க வழக்கங்களையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுவதாகச்  சொன்னார் நீதிபதி.

வழக்கறிஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டுமோ அந்த மரபுப்படி நான் உடுத்தியிருக்கிறேன். ஐரோப்பிய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் இந்திய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் உடுத்த வேண்டும் என்ற நியதியை நம் நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. ஆகவே நான் எந்த விதமான உரிமையையும் மீறும் பிரச்சினை எழவில்லை. தாங்கள், நான் சப்பாத்து அணிந்து வருவதை மறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவி்ல்லை.”

என்று வாதிடுகிறான் பொன்னுத்தம்பி.

 “தாங்கள் வரம்புக்கு மீறிப் பேசினீர்கள். எங்கள் காலனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படிப் பேசியது தவறானது மட்டுமல்ல, மரியாதை குறைவானது. ஐரோப்பிய கனவான்களோடு தங்களை ஒப்பிட்டுப் பேசுவதை நான் அங்கீகரிக்க முடியாது. என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வரக்கூடாது என உத்தரவிடுகிறேன். வருவீராயின், தங்கள் வழக்கறிஞர் உரிமை பறிக்கப்படும் என்பதை அறிவீராக! தாங்கள் வெளியேறலாம்“ என்று கூறிவிட்டு நீதிபதி வேகமாகச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞரும் சென்றார்.

பொன்னுத்தம்பியைத் தவிர  இரண்டு வழக்கறிஞர்கள் மட்டும் அவையில் இருந்தார்கள் அதில் ஒருவர்  பொன்னுத்தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு பெருமைக்குரிய காரியம் பண்ணி விட்டதாகப் பாராட்டுகிறார்.  மற்ற வழக்கறிஞரும்  அவரைத் தழுவிக்கொண்டு சொன்னார்:-

 “மிஸ்யோ பிள்ளை! பிரெஞ்சிந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இன்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நிறத் திமிருக்கு எதிராக இன்று நீங்கள் வைத்த நெருப்பு ஒரு சினனப் பொறி. இந்தப் பொறிதான் வளர்ந்து நாளைக்கு இந்தக் காட்டையே அழிக்கப் போகிறது, பாருங்கள்!“

அன்றிரவு அவனுக்கு தூக்கம் வரவில்லை நடுத்தெருவில் வேஷ்டி உரியப்பட்டது போலவும், கண்ணுக்குத் தெரியாத சக்தி பின்னாலிருந்து அறைந்தது  போலவும்  உணர்கிறான்.  ஜாதி மதம் தேசியம் நாடு இனம் ஐரோப்பியன் இந்தியன் வெள்ளை கருப்பு உசத்தி தாழ்த்தி எத்தனை எத்தனை பள்ளங்கள் என்று வேதனைப்பட்டான்.

மன்றத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும்  கூடுதல் குறைவு இல்லாமல் எழுதி  பாரிஸ்  நகரத்து மன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதுகிறான்.

வணக்கத்துக்குரிய நீதிபதி அவர்களே! எனக்குப் பிரியமானதும், நீதிமன்றம் அனுமதித்ததுமான உடைகளையும் சப்பாத்தையும் அணிந்தே நான் நீதிமன்றம் செல்லத் தாங்கள் உத்தரவிடவேண்டும். புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பையே தாங்களும் ஆதரிப்பீர் எனில், இந்த வழக்குரைஞர் வேலையை விடுவேனே அல்லாது, என் வழக்கத்தை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீதி ஒருபோதும் சாகாது என்பதை நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் சந்நிதானத்தின் முன் மனிதர் என்ற முறையில், சமத்துவத்தை மட்டுமே நான் கோருகிறேன்‘

என்று கடிதத்தை முடிக்கிறான். நம்பிக்கையோடு உறங்கவும் செய்கிறான். பாரிசில் இருக்கும் முற்போக்கான ஒரு வழக்கறிஞர் நண்பருக்கு அனுப்பி வைக்கிறான்.

ஆண்டொன்று கழிந்தும் பதிலொன்றும் இல்லை. தந்தைக்கு இவன் செய்கையில் உடன்பாடு இல்லை.

“எனக்கு அப்பவே தெரியும். ராஜாவோடு சூதாட முடியுமாடா? முட்டாளே! அவன் நூறு கிராமம், ஆயிரம் பசுன்னு பந்தயம் வைப்பான். தலையிலே இருக்கிறதைக் கொத்தாகப் பிடுங்கி வச்சாக்கூட ஆயிரம் மயிரு தேறுமாடா உன் தலையில்?“ என்றார்.

நாட்கள் கடந்தாலும் நல்ல தீர்ப்பு வருகிறது. பாரீஸ் உயர்நீதி மன்றம், புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, பொன்னுத்தம்பிப் பிள்ளை தன் விருப்பம் போல உடுத்திச் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்துக்கு வரலாம் என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது.

பொன்னுத்தம்பி, ஐரோப்பியர் போலவே உடுப்பும் சப்பாத்தும் அணிந்து நிமிர்ந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தான். ஊர்பிரமுகர்களும் சக வழக்கறிஞர்களும்  மாலை அணிவித்தார்கள்.

“பிள்ளை, பிரெஞ்சு ஆட்சியோடு போராட்டம் நடத்தி முதல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பிரான்சிலும் மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. நாம் விடுதலை பெற ரொம்ப நாள் ஆகாது“ என்று நெஞ்சம் விம்ம, ஊர்பிரமுகர்  ஷண்முக முதலியார் வாழ்த்தினார்.

நீதிபதியின் வளாகத்துக்குள் நுழைந்தான் பொன்னுத்தம்பி. நீதிபதி மாறிவிட்டிருந்தார். முந்தையவரினும் முதிய ஒருவர் நீதிபதி ஆசனத்தில் இருந்தார்.

நீதியரங்கத்தில் நுழைந்த  பொன்னுத்தம்பி, “வணக்கம் கனம் நீதிபதி அவர்களே!“ என்று தலை குனிந்து அவருக்கும் மன்றத்துக்கும் வணக்கம் செலுத்தினான். புதிய நீதிபதி நேசத்தோடு பொன்னுத்தம்பியைப் பார்த்தார்.

 “தோலின் நிறம்தான் நமக்கு வேறே தவிர அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள் தானே? வாருங்கள். எல்லா மனிதர்களையும் நாம் நேசிப்போம். நமக்கு விதித்திருக்கிற நீதியைப் பரிபாலனம் செய்கிற கடமையை முழுச் சித்தத்தோடு நாம் செய்வோம். என் நீதிமன்றம் தங்களை வரவேற்கிறது“ என்றவாறு நீதிபதி எழுந்து தன் கைகளை பொன்னுத்தம்பியிடம் நீட்டினார்.

பொன்னுத்தம்பி அந்த நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

என்று முடிகிறது.

* * *

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தைத்தான் கதையாகச் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன். இது போன்றே தில்லையாடி வள்ளியம்மை தியாகத்தையும் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார்.

இறுதிநாட்களில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும் மருத்துவர்கள் அனுமதியோடு மறையும்வரை தினமும் சில பக்கங்களாவது   படித்துக்கொண்டே இருந்தாராம்.

 

வரலாற்றுப்  பதிவுகள் – எஸ். கே. என்

(சென்ற மாதம் திரு என்  செல்வராஜ் வல்லிக்கண்ணன் சுயசரிதையிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகளைத் தந்ததைப் பார்த்தோம்.

அதை இன்னொரு கோணத்தில் பார்க்கிறார் எஸ் கே என் )

 

Historical Records Commission | County of Sonoma

  • இப்போது இணையவழிக் கூட்டங்கள் நிறைய நடக்கின்றன. அதில் ஒரு கருத்து வெளியிடப்பட்டது:

நாம் பல செய்திகளை ஆவணப்படுத்துவது இல்லை. எல்லோரும் தங்கள் முன்னோர்கள் மற்றும் குடும்ப வரலாற்றை எழுதிவைக்கவேண்டும். யாரோ ஒருவருக்கு தேவைப்படும் செய்தி அதில் கிடைக்கக்கூடும்.   

  • சில மாதங்களுக்கு முன் பேச்சுவாக்கில் ஒரு  பிரபல எழுத்தாளர் ஒரு கருத்தினைச் சொன்னார்:-

“இதற்கு விதிவிலக்குகள் கட்டாயம் உண்டு. என்றாலும் நடைமுறையில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. உண்மையான நடப்புகளை கற்பனைப் பெயர்கள் வைத்து எழுதினால் அது புனைவு. உண்மையான பெயர்களை வைத்து நடப்புகளைத் திரித்து எழுதினால் அது வாழ்க்கை வரலாறு.”

  • ஒரு வாழ்க்கை வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது என்று ‘அம்பலம்’ மின்னிதழில் இருபது வருடங்களுக்கு முன்பு ‘மோளம்’ என்னும் புனைப்பெயரில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.

 

                                                                        

உண்மையில் நடந்தது வரலாற்றில் எழுதப்படுவது
தணிகாசலத்துக்கு ஆறு வயதாக இருக்கும்போது வழக்கம்போல மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிப் போனான். மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு குட்டிநாய் அவனைக் குறிபார்த்துத் துரத்தி வரவும், பயந்து அலறி ”ஐயோ, செத்தேன்’ என்று கத்திக் கொண்டே ஓடிப்போய் அருகிலிருந்த தென்னை மரத்தில் ஏறிக் கொண்டான் தணிகாசலம். ஆறாம் வயதிலிருந்தே இவருடைய பொதுத் தொண்டு ஆரம்பமாகி விட்டது என்று கூறலாம். ஒருநாள் இவர் தனிமையை நாடி (அப்போது முதலே சிந்திப்பதற்கு தனிமையை நாடிச் செல்வது இவர் வழக்கமாயிற்று) ஊரின் புறத்தே உள்ள ஓரிடத்திற்குச் சென்று இருந்தார். அப்போது சிந்தனை வயப்பட்டிருந்த இவர் மீது ஒரு ஓநாய் பாய்ந்தது. அஞ்சா நெஞ்சனாகிய நம் தலைவர், கையிலிருந்த குறுந்தடியால் அதன் மண்டையைப் பிளந்தார். அதுவும் ஒரே அடியில்! ஊர் மக்கள் அனைவரும் இவர் வீரத்தைப் பாராட்டி ‘ஓநாயின் தொல்லை ஒழிந்தது’ என்று நிம்மதியாக வாழத் தொடங்கினர்.

 

அவனுக்கு அப்போது வயது பன்னிரண்டு. ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பும்போது அந்த ஊர் மசூதி வழியாக வந்து கொண்டிருந்தான். மாடப்புறா ஒன்று மசூதி சுவரில் உட்கார்ந்து தானியத்தைக் கொறித்துக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் ‘லபக்’ கென்று அதைப் பிடித்து வேட்டிக்குள் மறைத்து வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டான் தணிகாசலம். மசூதியைச் சேர்ந்த அல்லாபிச்சை எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவன் புறாவை தர மறுத்து விட்டதோடு, அவன் அதை ஐந்து ரூபாய்க்கு அசலூரில் வாங்கியதாகவும் சாதித்தான் தலைவர் தணிகாசலம் அப்போது பனிரெண்டே பிராயத்தினர். அந்த வயதிலும் அவர் மனதில் கருணை உணர்ச்சி காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. ஒரு சமயம் பள்ளிவாசலைச் சேர்ந்த மாடப்புறா ஒன்றை கழுகு ஒன்று குறிபார்த்துப் பாய்ந்தபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சுவரின் மீது அவர் ஏறி, புறாவை மீட்டு, வீடு கொணர்ந்து சேர்த்தார். ஏமாற்றமடைந்த கழுகு அதற்குப்பிறகு அவரை எங்கு கண்டாலும், தன் கூரிய அலகினால் கொத்தித் துன்புறுத்தத் தொடங்கியது. ஆனாலும் ஊர்மக்கள் அவரை ‘புறா காத்த புண்ணியர்’ என்று போற்றத் தலைப்பட்டார்கள்.

 

அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் தணிகாசலம். படிப்போ ஏறவில்லை. அவனுடைய நாட்டமெல்லாம் எதிலோ இருந்தது. ஒரு நாடகம், நாட்டியம், சினிமா விடமாட்டான். நடிகர்கள் யாராவது அந்த ஊருக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் புறப்பட்டுப்போகும் வரையில் அவர்கள் தங்கியிருக்கும் விடுதி வாசலிலேயே பழிகிடப்பான். இறுதி தேர்வின்போது இப்படித் தவம் கிடந்து விட்டு, அரைமணி நேரம் கழித்துப் போனான். அவனிடம் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அதை அப்படியே விடைத்தாளில் எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறினான்.   

 

ஏட்டுப் படிப்பில் என்றுமே இவர் மனம் சென்றதில்லை. உலக அறிவு பெற வேண்டுமென இவருடைய உள்ளம் துடித்தது. அதைத் தேடி அலைந்தார். கலை ஆர்வம் மிகுந்தவராய், ரசிகராய் விளங்கினார். இறுதிப் பரீட்சையும் வந்தது. எல்லோரையும் கலங்க வைக்கும் கணிதத் தேர்வுக்கு காலம் கழித்துச் சென்றாலும் அடுத்த கால் மணி நேரத்துக்குள்ளேயே ஆசிரியர்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும்படி விடைத் தாளில் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினார் நம் அரும்பெரும் தலைவர் தணிகாசலம் அவர்கள்.
சிவகாமி என்றொரு பெண். எடையைக் குறைத்துப் போட்டு ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஏகாம்பரம் என்கிற மளிகைக் கடைக்காரர் மகள் அவள். அரும்பு மீசை இளைஞனான தணிகாசலத்துக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது. பல விதங்களில் முயன்று பார்த்தான். முதலில் அவளுக்குக் கடிதம் எழுதினான். அதை அவன் முகத்திலேயே விட்டெறிந்தாள் சிவகாமி! தெருவிலே சந்தித்து, பேச்சு கொடுத்தான். அவள் செருப்பைக் கழற்றி ‘ஜாக்கிரதை!’ என்று எச்சரித்தாள். பிறகு நண்பனை தூது விட்டான். ஏகாம்பரம் கொடுத்த உதையில் தூதுபோனவன், கைக்கு கட்டுப்போட புத்தூருக்குப் போனான். கடைசியில் வேறு வழியின்றி, ஏகாம்பரத்தின் மளிகைக் கடையிலேயே இலவசமாகப் பொட்டலம் கட்டிக் கொடுக்க முன் வந்தான் தணிகாசலம். தன்னைவிட தணிகாசலம் ஏமாற்று வித்தைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் கண்டு, இப்படிப்பட்ட ஆளை நாம் கட்டாயம் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, ஏகாம்பரம் தன் மகளை அவனுக்கே மணம் செய்து கொடுத்தார்.    குமரப் பருவத்தில் அடியெடுத்து வைத்ததுமே இவரது வாழ்க்கையிலும் காதல் அரும்பியது. நேர்மையையும், நாணயத்தையும் தராசின் இரு தட்டுகள் போல பாவித்து வந்த வணிகப் பெருமகனார் ஒருவரின் மகள்பால் இவரது மனம் சென்று லயித்தது. ஆனால் சிவகாமி என்ற பெயர் கொண்ட அவ்வம்மையாரோ இவரை உடனே ஏற்றுக் கொள்ளாமல் பல சோதனைகளை நடத்திப் பார்த்தார்கள். அவற்றிலெல்லாம் வெற்றி கண்டு அன்னாரின் தந்தையின் ஆசியும் பாராட்டும் பெற்று அம்மையாரின் கரம் பற்றினார் நம் தலைவர் பெருந்தகை அவர்கள்.

 

அகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி

Teen Darwaza 1880s.jpg

 

இந்தியாவில் செல்வம் கொழிக்கும் நகர்களில் அகமதாபாத்திற்குத் தனி இடம் உண்டு.

லக்ஷ்மி வாசம் செய்யும் ஊர் என்று சொல்வார்கள் !

அதற்குப் பின்னால் ஒரு கர்ண பரம்பரை கதை உள்ளது.

அகமதாபாத்தின் பத்ரா கோட்டை காளி கோவிலில் ஒரு முஸ்லீம் குடும்பம் கடந்த 600 வருடங்களாக ஒரு அணையா விளக்கை – அகண்ட ஜோதியைத் தொடர்ந்து எரியச் செய்து வருகிறார்கள்.

இந்த இரண்டிற்கும் ஒரே காரணம்.

அதுதான் இது.

1415 இல் அகமதாபாத்தை ஆண்டு வந்தவர் அகமத் ஷா !

அவரது காவல் தலைவன் கொத்தவால் கிவாஜா சித்திக்கி என்பவன். அரபு நாட்டிலிருந்து இந்திய நாட்டுக்கு அடிமையாக வந்து தன் திறமையால் காவல் தலைவன் பதவியை அடைந்தவன்.

ஒருநாள் இரவில் சித்திக்கி அகமதாபாத் பத்ரா கோட்டையில் காவல் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தான்.

அப்போது அந்த நள்ளிரவில் சர்வ அலங்கார பூஷிதையாக ஓர் அழகுத் தேவதை கோட்டையைவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“யார் அவள், அனுமதியில்லாமல் கோட்டையைவிட்டு வெளியேறுவது ?” என்று அருகில் சென்று பார்த்தான்.

பார்த்ததும் புரிந்துகொண்டான்.

அந்த அழகுத் தெய்வம் வேறு யாருமல்ல !

ஸ்ரீதேவி , மகாலக்ஷ்மி என்றெல்லாம் துதிக்கப்படும் லக்ஷ்மிதேவி !

” அடடா! நாட்டிற்கு ஏன் இந்த சோதனை! செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால் நாட்டின் செழுமையும் வளமையும் என்னாவது? லக்ஷ்மி தேவி செல்வதை எப்படியாவது தடுக்கவேண்டும்.” என்றெல்லாம் நாட்டுப் பற்று கொண்ட சித்திக்கி யோசிக்க ஆரம்பித்தான்.

” லக்ஷ்மி தேவி போவது என்று தீர்மானித்துவிட்டாள் என்றால் அந்தத் தெய்வத்தைத் தன்னால் என்ன மன்னனாலும் தடுத்து நிறுத்த முடியாதே” என்று கலங்கினான் அந்த காவல் தலைவன்.

வேறு வழியில்லை. தேவியிடமே சரண் அடைவதுதான் வழி என்று உணர்ந்துகொண்டு லக்ஷ்மி தேவியிடம் மன்றாடிப் பார்த்தான்.

தேவி அவன் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. அந்த நாடு செல்வத்திமிரில் இருக்கிறது. அதை ஒழிக்கத் தான் அங்கிருந்து செல்லவேண்டியது அவசியம் என்று உறுதியாகக் கூறினாள்.

கடைசியில்,” தாயே ! ஒரே ஒரு வேண்டுகோள். நான் சாதாரண பணியாள்தான். லக்ஷ்மி தேவி போவதை அனுமதித்த காவல் வீரனின் தலையை மன்னன் துண்டித்துவிடுவார். ஆகையால் தான் மன்னனிடம் சென்று விஷயத்தைக்கூறி அவர் அனுமதி பெற்றுத் தான் திரும்பும் வரை தேவி இந்த இடத்திலேயே இருக்கவேண்டும். கோட்டையைத் தாண்டிச் செல்லக்கூடாது ” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான் சித்திக்கி.

லக்ஷ்மி தேவி காவலனின் கடமை உணர்ச்சியைப் பாராட்டி அவன் திரும்பிவரும் வரை அங்கேயே இருப்பதாக வாக்களித்தாள்.

சித்திக்கி மன்னனிடம் விரைந்து சென்று விஷயத்தைக் கூறினான். மன்னன் மிக மனக்கவலை அடைந்தான்.

சித்திக்கி மேலும் சொன்னான். ” மன்னரே! லக்ஷ்மி தேவி நம் நாட்டை விட்டுப் போகாதபடி ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று கூறினான்.

“அது எப்படி சாத்தியமாகும் ? ” என்று மன்னன் வினவினான்.

” நான் திரும்பிச் சென்றால் தானே லக்ஷ்மிதேவி இந்த நகரை விட்டுச் செல்வார்கள் ?” என்று கூறி தன் வாளால் தன் தலையை மன்னன் முன் அறுத்து எறிந்தான்.

மன்னனும் மற்றோரும் துடிதுடித்துப் போய்விட்டனர்.

மன்னன் பத்ரா கோட்டைக்குச் சென்று லக்ஷ்மி தேவியிடம் காலில் விழுந்து விஷயத்தைக் கூறினான்.

சொன்ன வாக்கைக் காப்பாற்றவும் சித்திக்கியின் தியாகம் வீணாகப் போகக்கூடாது என்பதற்காகவும் லக்ஷ்மி தேவி அகமதாபாத்திலேயே இருப்பதாக உறுதி கூறினாள்.

அதனால்தான் இன்னும் அகமதாபாத்தில் செல்வம் கொழிக்கிறதோ என்னவோ?

அந்த பத்ரா கோட்டையில்தான் லக்ஷ்மி தேவி பத்ரகாளி என்ற பெயரில் இன்றும் வாசம் செய்கிறாள்.

சித்திக்கியின் நினைவாக அவனுடைய சமாதியும் கோவில் அருகேயே இருக்கிறது. அவன் நினைவாக அந்தக் கோவிலில் அந்த அகண்ட ஜோதியைத் தொடர்ந்து எரியவைத்து 600 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்து வருகிறார்கள்.

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இதைப்போல் நிறைய நம்பிக்கைகள் நம்நாட்டில் உண்டு.

 

குறும்படம் – பசி

கொடுமை கொடுமை வறுமை கொடுமை – அதனினும் கொடுமை இளமையில் வறுமை 

இந்தக் கொரானா  காலத்தில் பசியில் துடிக்கும் ஏழை உள்ளங்களை நினைக்கும் போது  மனதை இறுக்கிப் பிழிகிறது

இந்தப் பாடத்தைப்  பாருங்கள். 

If You Have Tears Shed Them Now. !

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே

முதல் பக்கம் எப்போதும் அட்டைப்படம்

கடைசிப்பக்கம் என்ற பதமே மிகவும் பிரசித்தி பெற்றது.

சுஜாதா அதற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தே கொடுத்துவிட்டார்.

நாம் புதிதாக ஒரு நடுப்பக்கம் என்று ஒன்று ஆரம்பித்தால் என்ன?

(இது ஏற்கனவே எல்லா நாளேடுகளிலும் இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நடுப்பக்கம் என்று ஒரு இணையதளமே இருக்கிறது என்கிறீர்களா?

விளையாட்டு - naduppakkam.com

இருக்கட்டுமே!

என்ன செய்வது ?

நமது ஐடியாவை  நமக்கு முன்னாடியே பலர் காப்பி அடித்து விடுகிறார்கள்)

நமது குவிகம் நடுப்பக்கத்தில் சில சிறந்த கட்டுரைகள் வரும் !

இந்த மாதம் சந்திரமோகனின் எல்லோரும் நல்லவரே கட்டுரை.

அவரது எழுத்தும் பாணியும் கருத்தும் சற்று வித்தியாசமாக இருக்கும் !

 

எல்லோரும் நல்லவரே

Ellorum Nallavare - Wikipedia

இது நான் 1975 ம் ஆண்டு பார்த்த ஒரு படத்தின் பெயர்.

ஜெமினி நிறுவனம் கடைசியாகத் தமிழ்,தெலுங்கு , கன்னடம், இந்தி என 4 மொழிகளில் எடுத்தது.

படம் ஓடவே இல்லை.

ஆனால் படத்தின் பெயரும் அதில் கூறப்பட்ட கருத்தும் இன்றும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன .

நான் இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் சிறு வயதில் நாம் கேட்கும்,பார்க்கும்,படிக்கும் எதுவும் சட்டென மனதில் பதிந்து விடுகிறது.

மறந்து போன சில விஷயங்களை ஞாபகப்படுத்துவதே எனது நோக்கம்.

சரி, படத்துக்கு வருவோம். எல்லோரும் நல்லவரே என்பது எனக்குச் சரியெனவே படுகிறது. இம்மண்ணில் தோன்றும் அனைவரும் நல்லவரே.

புலமைப்பித்தன் “ எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” என்று கூறுகிறார். உண்மையே.

ஆனால் அவரது அடுத்த வரியில் எனக்குச் சம்மதமில்லை.

ஒருவர் நல்லவராவதும் தீயவராவதும் எதனால்?

பின் அவரே”நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள் என்கிறார்.

நான் disclaimer ஆக ஏற்கனவே சொல்லி விட்டேன் , நான் கூறுவது அறிவுரையில்லை.

ஔவை பாட்டியைக் கேட்டால் அவர் எல்லாமே பழக்கம் என்கிறார்.

சித்திரமும் கைப் பழக்கம்

செந்தமிழும் நாப் பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்

நித்தம் நடையும் நடைப்பழக்கம்

நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்

முதல் மூன்று வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. நான்காவது வரியில் நடை என்பது நல்ல நடை, ஒழுக்கம் ஆகும் .

எனவே அதுவும் நம் பழக்கத்தில்தான் வருகிறது என்கிறார்

கடைசி வரியில் சற்று குழப்புகிறார் பாட்டி.

நட்புடன் இருப்பது ,அடுத்தவரிடம் அன்பு காட்டுவது, பிறருக்குக் கொடுத்து உதவுவது மூன்றும் பிறவிக்குணம் என்கிறார்.

அது சரியா எனக் கேட்டால் எனது குரு சும்மா …. என்கிறார். தனது சம கால புலவரான கம்பரை மட்டம் தட்டவே கடைசி வரியாம்.

அவரும் இவரை நிறையத் திட்டி எழுதியிருக்கிறாராம்..

பெரிசுங்க அப்பவே இப்படி !

 

எல்லோரும் நல்லவரே

 

 

இம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே

படம்: பயணங்கள் முடிவதில்லை
பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இதில் வரி அழகா? இசை அழகா?  இரண்டும் சேர்ந்ததால் அழகா? சொல் மனமே !

 

 

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

 

நீ – எஸ் ஏ பி

குமுத்தில்  எஸ் ஏ பி அவர்கள் எழுதிய தொடர்கதை ‘நீ’ 

அதில் எழுதப்பட்ட ஒரு பக்கத்தைப் படித்தால் இன்றைக்கும் சிறப்பாக இருக்கும்! 

அதைதான் கடுகு அவர்கள் தன்னுடைய வலைப் பதிவில் எழுதியுள்ளார். 

படித்து மகிழ்வோம். 

நன்றி: கடுகு

நன்றி: http://jeeveesblog.blogspot.com/2009/10/blog-post_04.html

 

 

 

பிறகு, “நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா?” என்றாள், சகுந்தலா.

“ஓ,” என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.

“நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றாள் சகுந்தலா.

“நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்!” என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.

சகுந்தலா அவளை கையமர்த்தினாள். “கொஞ்சம் பொறேன்?.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்.”

“அதற்குப் பத்து கேள்வி எதற்கு!” என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். “ஒரு கேள்வி போதுமே? ‘நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டால் போயிற்று!”

“அதுதானே நடக்காது!” என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. “நீங்கள் கேட்கிற கேள்விக்கு, ‘ஆமாம், இல்லை’ என்று மட்டும் தான் பதில் சொல்வேன்!”

“அப்படியா? ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது,” என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.

“அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும்? எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்று சவால் விட்டாள் சகுந்தலா.

உற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். “ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது!” என்று விதி வகுத்தாள்.

“நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா?” என்றான், கண்ணன்.

சகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

கண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, “என்ன இது! இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்?” என்று புகார் செய்தான்.

“உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்,” என்றாள் சகுந்தலா.

“ஓஹோ என்றானாம்! இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்?.. சரி, சொல்லுங்கள், ஆணா?”

“உம்,” என்றாள் சகுந்தலா.
“ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்.”
“ஆமா.”
“சுமாராக என்ன வயதிருக்கும்?”
சகுந்தலா மெளனம் சாதித்தாள்.
“அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று?” என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.
“மறந்துவிட்டேன்,” பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.
“டாக்டரா?”
“இல்லை.”
“வக்கீலா?”
“இல்லை.”
“இஞ்ஜினியரா?”
“இல்லை.”
“எழுத்தாளரா?”
“இல்லை.”
“ஓவியரா?”
“இல்லை.”
“நடிகரா?”
“இல்லை.”
“பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா?” என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.

“சகுந்தலா, “இல்லை,” என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.
அவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், “அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன? நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!” என்று மன்றாடினான்.

“நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்!” என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.

ஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.

“உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும்? ஐந்தா?” என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.

ஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. “ஒன்பது” என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “ஒருகாலும் இல்லை! ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது!” என்று கூச்சலிட்டான்.

“அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்,” என்று புன்னகை செய்தாள்.

“இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா?” என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்.”தமிழரா?”

“ஆம்,” என்றாள் சகுந்தலா.

“இரண்டே கேள்வி பாக்கி,” என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.

பளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ? பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ? பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, “பட்டதாரியா?” என்றான்.

“இல்லை,” சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே!

கடைசியாக ஒரு கேள்வி: “பிரம்மசாரியா?”

“ஆம்,” என்றாள் சகுந்தலா.

கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது.

“நான் நினைத்தது யாரை?” என்றாள் சகுந்தலா.

“நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்,” என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.

சகுந்தலா தயங்கினாள். பிறகு, “காமராஜ நாடார்,” என்றாள்.

கண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது!

“அடே! என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே!” என்று ஒருத்தி பாராட்ட, “நல்ல ஆளாகப் பிடித்தாய்!” என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, “இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை!” என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே? ‘முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்,” என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

அப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.

— “நீ” யில் எஸ்.ஏ.பி.

கோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்

தனிமையிலே இனிமை காண முடியுமா? 

அதுவும் கொரானா கதவடைப்புக் காலத்தில் தனிமையை சமாளிக்க முடியுமா? 

முடியுமே! 

இந்த மாதிரி குறும் நாடகங்களைப் பார்த்தால்  தனிமையை ரசிக்க முடியும் ! 

பார்த்து ரசியுங்கள்!

 

 

 

 

 

 

கோடை – செவல்குளம் செல்வராசு

குளுகுளு ஊட்டியான தக தக சென்னை ...

 

கோடைச் சூரியன் உமிழ்ந்த

ஒட்டுமொத்த வெயிலையும்

வெக்கையாய்க் கீழிறக்கிக் கொண்டிருக்கிறது

ஓட்டு வீடு.

தூங்க முடியாமல்

முதுகு நனைந்து படுத்துக்கிடக்கையில்

எப்படியோ வந்து தொலைத்தது ஆசை.

 

“கடைசியா பங்குனி உத்திரத்து அன்னைக்கு…

பத்து நாள் ஆச்சு”

மெதுவாகத் தொட்டுத் திருப்பிய விரல்களுக்கு

கிளர்ச்சி வயப்பட்டு

மெதுவாக மேலேறிப் படர்ந்தபோது

‘சொத்தென’ முதுகில் விழுந்தது ஏதோவொன்று.

 

பதறியபடி உதறி எழுந்து பார்த்தபோது

‘சின்னவ’ தலைமாட்டில் கிடந்தது

செந்தேள்க் குஞ்சொன்று. 

 

‘பெரியவ’ எழுந்து “அம்மா தண்ணீ” ன்னா

தேள் எடுத்துப் போட்டு

நீர் எடுத்துக் கொடுத்து

பாய் திரும்பி

விட்டம் பார்த்துக்கிடந்தோம்

ரகசியமாய்ப் புன்னகைத்தாள் !

வெக்கையும், வேட்கையும்,

விரக்தியும் ஏமாற்றமும் கசிய.

மொத்தமாய்க் கலைந்துவிட்டது

 

இனி மேகங் கூட எத்தனை நாளாகுமோ?

இந்தக் கொடுங் கோடையில்.

 

அம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் !

அம்மா கை உணவு (27)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
5. ரசமாயம் – ஜூலை 2018
6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
21. அவியல் அகவல் நவம்பர் 2019
22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
24. சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
25. துவையல் பெருமை மார்ச் 2020
26. பொடியின் பெருமை ஏப்ரல் 2020

27. கீரை மகத்துவம் !

முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்.

எளிமையின் இலக்கணமே !
ஏழைக்கேற்ற காய்கறியே !
எவருக்கும் எட்டிவிடும் உணவுகளில் உத்தமனே !
ஊருக்கு உபயோகம் உனைப்போலே யாரும் இல்லை !

காய்கறிகள் அனைத்துமே உடலுக்கு ஏற்றவைதான் –
அளவு கூடிடிலோ அமிர்தமும் நஞ்சாகும் !
எத்துனைதான் உண்டாலும் ஏதுகுறை எனும் விதமாய்
இருப்பது ஒன்றேதான் – அதுவே எம் கீரை என்போம் !

ஒன்றா இரண்டா கீரையிலே வகை தொகைகள் !
வரிசையாய் வந்துவிடும் கீரை பெயர் சொல்லிடிலோ !
இன்றுரைப்பேன் உலகத்தீர் எம் கீரை பெருமையினை –
ஏற்றிடுவீர் என்றே நான் இப்போதே பகர்கின்றேன் !

முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முடக்கத்தான் –
பாலக் பசலை பொன்னாங்கண்ணி அவள் !
மணத்தக்காளி மற்றும் முருங்கையும் ஒரு கீரை !
எதைச் சொல்வேன் இப்படி எத்தனையோ பல கீரை !

கடைந்திடலாம் அள்ளி அள்ளி ருசித்திடலாம் !
துவையல் செய்திடலாம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம் !
மோர்க்கீரை செய்து விட்டால் பாத்தி கட்டி அடித்திடலாம் !
யார் கீரை வெறுத்திடுவார் ? அதன் சுவையை மறுத்திடுவார் ?

உயர்ந்த குணம் , உயர்ந்த மனம், உயிர் சக்தி உயர்த்திடுமே !
சத்தைக் கொடுக்கும், நமக்கு சத்தியமாய் கை கொடுக்கும் !
பார்த்தால் புரியாது, பகட்டு எதுவும் கிடையாது !
என் அன்னை அன்பினைப் போல் விலை மதிக்க முடியாது !

***********************************************
ஜி.பி. சதுர்புஜன்
E Mail: kvprgirija@gmail.com Ph: 98400 96329

பழைய கடன்!- தில்லைவேந்தன்

நீ போ அம்மா வந்திடுவா என்ற ...

பழைய கடன்!

நேற்றுக் குறித்த  பேச்செல்லாம்
     நினைவு நிழலின் வீச்சாகும்.
ஆற்றில் சென்ற வெள்ளத்தில்
     அடுத்த நாளும் குளிப்பதுண்டோ?
போற்றி அழைத்த போதினிலும்
     போன காலம் வந்திடுமோ?
காற்றில் கரைந்து போயிற்றோ?
     கண்முன் மறைந்து போயிற்றோ?

கடந்த காலக் கிழிசலினைக்
     கண்டு தைத்துச் சரிசெய்ய
உடைந்து   போன      ஊசியேனும்
      உலகில்  இன்று  கிடைத்திடுமோ?
நடந்து முடிந்த அத்தனையும்
     நன்றோ, தீதோ, எதுவெனினும்
கிடந்து துடித்துப் புலம்புவதால்
     கிடைக்கும் பயன்தான் ஒன்றுண்டோ

மணிகள், நாட்கள், மாதங்கள்
     மறைந்த காலச் சேதங்கள்.
துணியும் இற்றுக் கிழிவதைப்போல்
     தொலைந்த காலம் அழிந்திடுமே.
அணியும் உடையும் நைந்துவிடும்
       அழியும் உடலும் மறைந்துவிடும்.
பணிகள் ,கடமை  முடித்திடுவோம்
      பழைய கடனைக் கழித்திடுவோம்!

                                     

வீரப்பெண்மணி! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 

உலகின் முதல் தற்கொலைப் போராளி ...

பெண்ணே இன்று 

வீட்டிலே நீ
அடைந்து கிடக்கும்
கூண்டுக் கிளியல்ல
நாட்டையே ஆளும்
வீரப்பெண்மணி!

நீ நிற்கும்
நெடுமரம் அல்ல
நீரில் மிதக்கும் மரக்கலம்!
அனைவருக்கும்
அடைக்கலம் தரும்
வீரப்பெண்மணி!

நீ
அலங்காரப் பதுமையல்ல
அணி வகுத்து
நாட்டைக் காக்கும்
வீரப்பெண்மணி!

நீ
பயனில்லாக்
காட்டுப் பூ அல்ல
மக்கள் விரும்பும்
மணமிக்க மலர் !

நீ
பாலியல் தொந்தரவு
கண்டும் கேட்டும்
பதுங்கும் பூனையல்ல
பாயும் பெண் புலி !

நீ
நுகர்ந்து எறியும்
மலரல்ல
அனைவரும் விரும்பும்
சந்தன மலர்கள் !

நீ
இன்று வன்கொடுமை
கண்டும் கேட்டும்
வளைந்து செல்லும்
நதியல்ல
ஆர்பரிக்கும் கடல்!

நீ
பெண் உரிமைக்காக
மண்டியிடாமல்
வீரத்துடன் போராடி
உயிர் விடும்
கவரி மான்!

நீ
வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்
காட்டு விலங்கல்ல
இல்லத்தில்
தீப ஒளி வீசும்
குத்து விளக்கு !

நீ
நீரோட்டம் அல்ல
மனித உள்ளங்களை
உணர்ந்து செல்லும்
உயிரோட்டமுள்ள

வீரப்பெண்மணி!

 

சிரி சிரி சிரி – ஹேமாத்ரி

அந்த கோட்டைத் தாண்டி வாங்க – சிரி ...Laughing with tears and pointing emoticon Vector Image

சிரி,
*கஷ்டம்  குறையும்…*
சத்தமாய் சிரி,
*சந்தோஷம் கூடும்…*
நண்பர்களுடன் சிரி,
*தனிமை விலகும்…*
சொந்தங்களுடன் சிரி,
*நேரம் இனிக்கும்….*
பாசத்துடன் சிரி,
*தாய்மை மலரும்…*
உதவிசெய்து சிரி,
*போற்றும் உலகம்…*
உழைத்துவிட்டு சிரி,
*வாழ்க்கை அர்த்தமாகும்..*
சிரிக்கவைத்து சிரி,
*ஜீவன் சக்திபெறும்…*
உண்மையாய் சிரி,
*கடவுள் கண்முன் தோன்றும்…*
உனக்குள் மட்டும் சிரி,
*கடந்து போகும் இதுவும்…*

கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

எனது இந்த மொட்டைமாடி – The blue jay <3

 

மொட்டை மாடி !

முதன் முதலில் நான் பார்த்த ‘மொட்ட மாடி’ எதிர் வீட்டு மணிச் செட்டியார் கட்டிய மாடி வீட்டில்தான்! நாங்கள் இருந்த அந்தத் தெருவில் எல்லாமே ஓட்டு வீடுகள் – முற்றம் உண்டு, மாடி கிடையாது! கிரகப்ரவேசத்துக்குப் போன நான், அருகிலிருந்த இரும்பு ஏணியில் ஏறி, பெரிய தொட்டி போலிருந்த மொட்டை மாடியைப் பார்த்துப் பரவசமானேன் – அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்! சின்னச் சின்ன சதுரங்களாகப் பதிக்கப் பட்டிருந்த, செங்கல் நிறச் சொருகு ஓடுகள் (இந்தப் பெயரெல்லாம் பின்னாளில் என் டிக்‌ஷ்னரியில் சேர்ந்தவை!) மனதிற்குள்ளும் பதிந்து போயின! நான்கு அல்லது ஐந்தடி உயரக் கைப் பிடிச் சுவற்றில் சாய்ந்துகொண்டு சுற்றியிருக்கும் ஓட்டு வீடுகளையும், குடிசைகளையும் பார்ப்பது புதியதாக இருந்தது. வானம் அருகில் இருப்பதாய்ப் பட்டது! தெருவில் கூடையில் பானை வைத்து மோர் விற்றுச் செல்லும் அஞ்சலைப் பாட்டியின் நடை வித்தியாசமாகத் தெரிந்தது – பானை மூடியில் சிந்திய மோரில் சூரியன் பளிச்சிட்டது!

கூரைகளில்லாத மாடி வீடுகளின் தலைப் பகுதி, கட்டிடம் இல்லாத வெட்ட வெளி; அதனால் ’மொட்டை’ மாடி என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை! இப்போதெல்லாம் மாடிகள் மொட்டையாக இருப்பதில்லை – புல்வெளிகள், காய்கறிகள், பூக்கள் எனப் பசுமையாகவும், சின்ன குடில், ஊஞ்சல், மேசை நாற்காலி என உபயோகமான இடமாகவும் மாறியிருக்கின்றன!

மொட்டை மாடியின் ஒரு கோடியில் சின்னக் குடிசையோ – ஃபேன், லைட், படுக்கை வசதிகளுடன் – அல்லது கல் அறையோ (சேர்த்துப் படித்து வரும் அனர்த்தத்துக்கு நான் பொறுப்பல்ல!) கட்டி ஒரு அட்டாச்டு மொட்டை மாடி வசதியை அனுபவிப்பவர்களும் உண்டு!

கோடைக் காலம் வந்தால், நம்ம ஊர்களில் ‘பவர் கட்’ டும் சேர்ந்தே வந்து விடும்! இரவில் வீட்டினுள் புழுக்கம் தாங்காது. அப்போது மொட்டை மாடிக் காற்று இதமானது. சென்னை போன்ற கடற்கரை ஓர நகரங்களில், மதியத்திற்கு மேல் வீசும் கடற்காற்று, இரவில் மொட்டை மாடியை குளிர்வித்து மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியைத் தரக்கூடும். பள்ளிக்கூட நாட்களில், பாண்டிச்சேரி (இன்றைய புதுச்சேரி) மாமா வீட்டில் இரவில் மொட்டை மாடியில்தான் தூக்கம்! தலையருகில் ஒரு டார்ச் லைட், ஒரு சொம்பில் குடிநீர், தலையணை, பாய் அல்லது ஜமக்காளத்துடன் மாடிக்குச் சென்று விடுவோம். சில நாட்களில், நிலா வெளிச்சம் இருந்தால், மொட்டை மாடியிலேயே இரவுச் சாப்பாடும் உண்டு! கோடையில் போர்த்திக்கொண்டு படுத்ததும் உண்டு – கொசுக் கடியிலிருந்து தப்பிக்க!

தி நகர் வீட்டு மொட்டை மாடியில் ஏறி, பக்கவாடில் உள்ள மங்களூர் ஓட்டுக் கூரையில் இறங்கி மாங்காய் பறித்த கோடைகள் சுகமானவை – இரவு டிரான்சிஸ்டரில் பதினோரு மணிவரை ‘விரும்பிக் கேட்டவை’ பாடல்கள் கேட்டுவிட்டு, காலை, சூரியன் கண்ணில் அடிக்கும் வரை தூங்கிய நாட்கள், ஆளுக்கொரு மாம்பழம் தின்றபடியே, குழந்தைகளாய்ப் பேசிச் சிரித்த நாட்கள், மொட்டை மாடி என்னும் திறந்தவெளி சொர்க்கத்துடன் பின்னிப் பிணைந்தவை!

எதிர் வீட்டு மொட்டை மாடியில் – வீட்டு ஓனர் முதலியாரம்மாவின் அனுமதியுடன் தான்! – காலையில் வெளிச்சம் வந்தவுடன், கையில் புத்தகத்துடன் படிக்கப் போன காலங்கள் மறக்க முடியாதவை. வாசித்த ‘நாராய், நாராய் செங்கால் நாராய்’ செய்யுளும், ‘Daffodil’ போயமும், ராபர்ட் ஃப்ராஸ்டும், திரு.வி.க. வும், சரித்திரமும், பூகோளமும், தோலின் குறுக்குவெட்டுத் தோற்றமும் இன்னும் மறக்கவில்லை – மொட்டை மாடிக்கும் இதில் பங்குண்டு என்பது என் மனது அறியும்!

தாம்பரம் தாண்டி, பெருங்களத்தூரில் ஸ்டேஷனில் இறங்கி, வயல்கள், ரோஜாத் தோட்டங்கள் எல்லாம் குறுக்கே கடந்து, பெரிய ஏரிக்கு இரண்டு கிமீ முன்னால் இருந்தது என் சித்தப்பா கட்டிய புது வீடு! (இன்று பெருங்களத்தூரில் தோட்டங்களும் இல்லை, ஏரியும் இல்லை – நிரம்பி வழிகிறது வீடுகளாலும், வீடுகளில் ஜனங்களாலும்!). முதல் நாள் மாலையே கடைசி ரயில் பிடித்து சென்று விட்டோம். மாடிப் படிகள் இன்னும் கட்டப்படாத வீடு – பக்கத்தில் தொங்கிய கயிற்று ஏணியில் ஏறி, மொட்டை மாடியில் இரவு தூங்கினோம். காலை மூன்றரை மணிக்கெல்லாம், தூரத்தில், வயல்களைத் தாண்டி, தெற்கிலிருந்து மதறாஸ் வரும் ரயில் வண்டிகள், மரவட்டை ஊர்ந்து வருவது போல் முழுவதுமாகத் தெரியும் – அந்த காலை, இன்னும் மனதில் ஓவியமாய்த் தங்கிவிட்டது – படியில்லா மொட்டை மாடியுடன்!

கொரோனா லாக்கவுட் வந்த பிறகுதான் என் வீட்டு மொட்டை மாடியை நான் நன்கு பார்க்கிறேன்! எல்லா மாடிகளிலும், கவிழ்த்து வைத்த இட்லிப் பானை மூடி போல ‘டிஷ்’ ஆண்டென்னாக்கள்! வெறும் கிளிப்புகளோ அல்லது காற்றில் பறந்து தப்பிக்க முயலும் ஆடைகளோ தொங்கும் கம்பிக் கயிறுகள்! கைப்பிடிச் சுவர் வீங்கினாற்போல் அங்கங்கே தெரியும், ஸ்ப்ளிட் ஏசி யின் அவுட் டோர் யூனிட்டுகள்!

வெளியில் நடக்கமுடியாது – அதனால் மொட்டை மாடியில் எட்டு வடிவில் நடக்கிறேன். (இன்று கூட ‘எட்டு’ பெயிண்ட் பண்ண வேண்டுமா? விளம்பரம் ஒன்று பார்த்தேன்!). சுற்றிலும் எல்லா மொட்டையிலும், கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும், திசையே தெரியாமலும், குட்டையும் நெட்டையுமாகப் பலர் நடந்து கொண்டிருக்கிறார்கள் – அந்தக் கால அரண்மணைக் காவலர்கள் போல் ‘பாரா’ போடுகிறார்கள்; தலையில் இரும்புத் தொப்பியும், கையில் ஈட்டியும்தான் இல்லை! மாலைத்தென்றல் போல இதில் பெண் காவலர்களும் உண்டு என்பது சுவாரஸ்யமானது!

பூத்தொட்டிகள், சில காய்கறிச் செடிகள், குரோட்டன்ஸ், துளசி என அழகான தோட்டம் போடப் பட்டுள்ள மொட்டை மாடிகளுக்குத் தனி அந்தஸ்து வந்துவிடுகிறது. அழகுடன், உபயோகமும் கூட என்பதால்!
என் நண்பன் வீட்டு மொட்டை மாடி, ஒரு அழகிய பார்க் போலவே இருக்கும் – தரையெங்கும் கொரியன் கிராஸ், சுற்றிலும் வண்ண வண்ணப் பூக்கள்,காற்றில் அசைந்தபடி நிற்கும் செடிகளுடன் பூந்தொட்டிகள், நடுவில் நான்கைந்து பேர் அமர்ந்து கொள்ள வசதியாய் கலையழகுடன் அமைக்கப் பட்ட அறுகோண மண்டபம், நடப்பதற்கு வசதியாய்ப் புல் தரையில் பதிக்கப் பட்ட அழகிய சிமெண்ட் ஸ்லாப்கள், அலங்கார வண்ண விளக்குகள் எனப் பார்ப்பதற்கே மிகவும் ரம்யமாய் இருக்கும்! மொட்டை மாடி பராமரிப்பதே ஒரு கலை எனத் தெரிந்து கொண்ட நேரம் அது!

சம்மர் வந்துவிட்டால், மொட்டை மாடிக்கு டிமாண்ட் அதிகமாகி விடும்! அப்பளம், வடகம் (துணியோடு ஒட்டியடி சின்ன சின்ன ‘சில்’லுகள் போல் காயும் ஜவ்வரிசி வடாம் – மாடியிலேயே துணியோ, பிளாஸ்டிச் ஷீட்டோ விரித்து, அதன் மேலேயே பிழியப் படும் மற்ற வடாம் வகைகள்) ஒரு வருடத்துக்கென செய்யப்படும் சம்மர் ஸ்பெஷல் வேலைகள் – குடையுடன் அல்லது ஒரு குச்சியில் கருப்புத் துணியுடன் காக்கை ஓட்டும் வேலை கொஞ்சம் போர் என்றாலும், வேறு சில நன்மைகளும் உண்டு – தொந்திரவு இல்லாமல் புத்தகம் படிப்பது, கீழ் வீட்டு மாமியுடன் துணி காய வைக்க வரும்போது அரட்டை மற்றும் உதவி (மாமிக்குக் கண்ணுக்கழகாக ஒரு பெண் இருப்பது உ.நெ.க!). சில சமயங்களில், பருத்தி புடவையாய்க் காய்த்தாற்போல், அந்தப் பெண்ணே கடலை போட வரும்போது – ‘மொட்டை மாடியே உனக்கொரு நமஸ்காரம்’ என்பது மைண்ட் வாய்ஸாக ஒலிப்பது எல்லாம் பூர்வ ஜென்ம வரங்கள்!!

மொட்டை மாடிகள் வாயிருந்தால் பல கதைகள் சொல்லும்! காதல், பிரிவு, சோகம், பிறர் அறியாமல் அழுவது, சில இரகசியப் பரிமாற்றங்கள் (காதல் கடிதங்களும் இதில் அடக்கம்!) என மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே மொட்டை மாடியை நான் காண்கிறேன்!

இளையராஜாவின் ‘மொட்டமாடி, மொட்டமாடி’ அஞ்சலி படப் பாடல் மொட்டை மாடிக் காதலை சினிமாத் தனமாகக் காட்டுகிறது!

சுற்றிலும் எத்தனை அடுக்கு மாடிகள் எழுந்தாலும், நடுவில் உயிர்ப்புடன் இருக்கும் ஒற்றை மொட்டை மாடி வீடே எனக்குப் பிடிக்கிறது!!

 

ஒளிந்து விளையாடும் சூரியன், பூமி ...