Monthly Archives: September 2019
கி ராவின் உரை
தமிழக எழுத்தாளர்களின் பீஷ்மப் பிதாமகர் கி ரா தனது 96 வயதில் பேசிய உரையைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
நாம் பெற்ற பயன் இந்தக் கானொளியைப் பார்ப்பதும் கேட்பதும் !
சொக்கா பரிசுத்தொகை எவ்வளவு? அஞ்சு லட்சமா? – படியுங்கள்!
ஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
அவளைப் பார்க்க ஆரம்பித்தது மிக விசித்திரமான வகையில். என்னுடைய ஒரு க்ளையண்ட் தன் மன உளைச்சலுக்கு என்னிடம் மனநல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தாள். அவளுடன் கூட வந்து கொண்டிருந்த பத்து வயது சிறுமி ஒரு நாள் என்னை அணுகி, “என்னையும் பார்க்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பினாள். மகள், உறவு அல்ல, நட்புக்காக வருகிறாள் என்று அறிந்ததும் அசைந்து போனேன்.
இவள் ரஜினி. முட்டிக்குக் கீழே வரும் நீள உடை, காலையில் பின்னிய இரண்டு ஜடை அவிழ்ந்த நிலை.வகுப்பில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருப்பதாகக் கூறினாள். அவள் சிறுமி என்பதால் தன் பெற்றோருடன் வரச் சொன்னேன். அம்மாவை அழைத்து வந்தாள்.
அம்மா, உமா, இல்லத்தரசி, ரஜினி அந்தக் க்ளையண்டுடன் வருவது தனக்குத் தெரியாது என்று முகத்தைச் சுளித்துச் சொன்னாள். எனக்கு வியப்பானது. இங்கு வந்து போக ஒன்றரை மணி நேரமாகும். ஆறு ஸெஷன்கள் ஆகிவிட்டன. கவனிக்கவில்லை என்றாள். இப்போது வந்ததே வகுப்பு ஆசிரியை ரஜினியைப் பற்றி அனுப்பிய கடிதத்தால் தான் என்றாள்.
யதேச்சையாக ரஜினிக்குப் போன வருடமும் இந்த வருடமும் அதே வகுப்பு ஆசிரியை. அவர்கள் கவனித்ததில் வகுப்பில் ரஜினி நல்ல மதிப்பெண்கள் எடுப்பாள் ஆனால் சிரித்துப் பார்த்ததில்லை, இது தனக்குக் கவலையாக உள்ளது என்று ஆசிரியை தெரிவித்து இருந்தாள். யாரையாவது திட்டினால், அல்ல யாருக்கேனும் மனச் சஞ்சலங்கள் இருந்தால் ரஜினி உடனே அழுது விடுவாள். தோழி என்கிற அளவிற்கு யாரும் அவளுடன் பேசாமல் இருந்தாலும் அவள் யாரையும் குறை கூறவோ, திட்டவோ மாட்டாளாம்.
கவனம் பாடத்தில் இருக்காது, அவளை அழைத்தால் திடுக்கிட்டுப் பார்ப்பாள், ஏதோ கனவு காணுவது போல் தோன்றுவாளாம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது, பொருத்தமே இல்லாமல் கேள்வி கேட்பதாகக் கூறியிருந்தார்.
முத்து முத்தாக இருக்கும் ரஜினியின் கை எழுத்து. எழுதுவதை அவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து எழுதுவாளாம். வகுப்பு போர்ட்டில் எழுதுவது இவள் தான்.
அந்த ஆசிரியையைத் தான் சந்திக்கவில்லை என்றாள் ரஜினியின் அம்மா உமா. வீட்டில் உள்ள வேலைகளைச் செய்யவே நேரம் சரியாக இருப்பதால் போகவில்லை என்றாள். வீட்டில் அவளுடைய மாமனார் மாமியார் இருப்பதால் எல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயப்படிதான். அவர்கள் இருவருக்கும் மற்ற பேரக்குழந்தைகளிடம் இருக்கும் அளவிற்கு ரஜினி மேல் ஈடுபாடு கிடையாது என்றாள். கருநிறமும் இதற்கு ஒரு காரணம்!
தனக்கும், தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகள் மேல் இருக்கும் பாசம் இவளிடம் சொட்டு கூட இல்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னாள். இவளைக் கொண்டு கர்ப்பம் எனத் தெரிந்ததுமே அதைக் கலைக்க வழிகளைக் கடைசி வரை தேடினாளாம். ரஜினியைப் பெற்று எடுத்தாள், பாசம் பந்தம் எதுவும் இல்லை என்றாள்.
தனக்கு அந்த குழந்தையைத் தொடக் கூட பிடிக்கவில்லை, பிறந்ததிலிருந்தே ரஜினியை உமாவுடைய அம்மா, சரசா தான் ஆசை ஆசையாக வளர்த்தாள் என்றாள். கருநிறத்தினால் அவளை ஷ்யாமளி என்று தான் அழைப்பாளாம், இன்றும் அப்படித்தான். ரஜினியின் அப்பா, சேகர், கணக்கு பேராசிரியர், வீட்டிற்கு மூத்த மகன். இவரும் மாமனாரும் எல்லா முடிவுகளை எடுப்பார்கள். இவர்களுடன் ரஜினியின் மூன்று சித்தப்பா, அவர்களின் மனைவி, மக்கள்.
ரஜினியைச் சொல்ல நினைத்ததைச் சொல்லச் சொன்னேன். தான் பெரும்பாலும் தானாகவே, தனியாகவே இருப்பது, விளையாடுவதாகச் சொன்னாள். அம்மா கிட்டப் போனாலே தள்ளி விடுவாளாம்.
பெரும்பாலும் சரசா பாட்டியின் வீட்டிற்குப் போய் விடுவாள். இவர்கள் வீட்டிலிருந்து ஐந்தாவது தெரு. பாட்டிக்கு இவள் தங்களுடன் இருப்பது பிடித்தது தான். ஆனால் தன் பெண் உமாவும் இவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்பியதால் சிறிது நேரம் ஆனதும் திரும்பிப் போகச் சொல்வாளாம்.
அவர்கள் வீட்டில் ரஜினி நிறத்தைப் பார்க்காமல் அவளை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு மாமிகளும் அவளுக்கு வயதுக்கு ஏற்ற வேலை தருவார்கள், அவர்கள் கூடவே செய்வாள். இரண்டாவது மாமியும் பல முறை ரஜினியைத் தத்து எடுத்துக் கொள்ள யோசனை செய்ததுண்டு. ஒரு பொழுதும் அவளைத் திட்டியோ, எளக்கனமாகப் பேசியதோ இல்லை. மாமாக்களும்.
அவளுடன் புதிர்கள் கேட்டு விளையாடுவார்கள். மாமா மாமிகள், நால்வரும் பாடம் விளக்கிட கற்றுத் தருவதும் செய்தார்கள்.
ரஜினிக்கு இவர்கள் தன்னிடம் காட்டும் பாசத்தினால் விருப்பம் இல்லாமலேயே தன் வீட்டிற்குத் திரும்புவாளாம். அவள் எங்கே இருக்கிறாள் என்று வீட்டில் யாரும் தேட மாட்டார்கள். பொழுதைக் கழிக்க, ஆறரை மணி வரை தனக்குத் தானாக விளையாடிக் கொண்டிருப்பாளாம். என்றும் யாரும் தேடியோ அழைத்ததோ இல்லை என்றாள். வீடு திரும்பியதும் வீட்டுப் பாடம் முடித்து, படிப்பது அவள் வழக்கம். எட்டரை மணி அளவில் அண்ணன், தம்பி, தங்கைகளுக்குப் பாடங்களை எழுதித் தருவதற்கு நேரம். அந்த நேரம் மட்டும் ரஜினியிடம் அவர்கள் பேசுவார்களாம்.
தன்னை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினாள். என்ன ஒரு மனப்பக்குவம், எல்லோரும் நிராகரிப்பதைத் தெரிந்தும் இவள் தன்னை மேம்படுத்திக் கொள்ள யோசித்தாள்! பெரும்பாலும் நிராகரிப்பு மனக்கசப்பை உண்டாக்கும். வெறுப்புத் தட்டும். ரஜினி கொஞ்சம் வேறு பட்டவளாகவே இருந்தாள்.
அவளுடைய பெற்றோருடன் இதற்கான பதிலைத் தேட ஆரம்பிக்கப் போவதாக அவளிடம் சொன்னேன். அதுவரையில் அவளைத் தினமும் ஏதோ ஒரு சிறுகதை எழுதி அதற்கு பொருத்தமான படத்தையும் வரையப் பரிந்துரைத்தேன்.
ரஜினியின் பெற்றோருடன் ஸெஷன்களை ஆரம்பித்தேன், இருவருடன் சேர்ந்தும், தனித்தனியாகவும். சேகர் பிரமித்துப் போனார். தன் பெண் குழந்தை இந்த அளவிற்கு மனத் தவிப்புடன் இருப்பதை இப்போது தான் உணர்ந்தார். ஆசிரியை மடலை இங்கே தான் படித்தார். யாரும் காட்டவில்லை என்றார். வேலைப் பளு, வீட்டுப் பொறுப்பில் ரஜினிக்காக நேரம் கிட்டவில்லை. உமா சமையல் அறை, மற்ற வேலையில் கிடைக்கிற சுகம் ரஜினியுடன் இருப்பதில் இல்லை என்றாள்.
பிறகு பெற்றோரைத் தனியாகச் சந்தித்தேன். உமா தான் மேற்கொண்டு படிக்க ஆசைப் பட்டாளம். கணவர், மாமனார், மாமியார் ஒப்புதல் தர, அப்போது தான் கர்ப்பிணியானாள். தன் வாய்ப்பு போனதே இந்த கர்ப்பத்தினால் என்பதால் சிசுவை வெறுத்தாள். அத்தோடு இதுவரை இரண்டும் ஆண் பிள்ளைகள். இவளைக் கர்ப்பமாக இருக்கையில் பார்த்த எல்லோரும் இந்த முறைப் பெண் என்றார்கள், இதுவும் அவளுக்குப் பிடிக்க வில்லை. மொத்தத்தில் இந்தப் பிரசவம், குழந்தை தன் வாழ்வில் தடை என்று எடுத்துக் கொண்டாள். மாமனார் மாமியாரும் அப்படியே நினைக்கையில், அவளுக்கு ஆதரவு.
அதன் விளைவு? உமா தன்னுள் வளர்ந்த த்வேஷத்தை பற்றி விளாவரியாக விவரித்தாள். இந்த பகிர்தலில் அவளுடைய பலகாலமாக உள்ளே வைத்திருந்த நஞ்சை வெளியே உமிழ்ந்து, உமிழ்ந்து தன்னுடைய பல கசப்பான அனுபவங்களைப் பற்றிச் சொன்னாள். படிப்பது பிடித்தது என்பதால் பல கட்டுரைகள் படித்து வந்து, அதில் உள்ளக் கருத்துக்களை தன்னுடைய வாழ்வின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டு தெளிவு அடைந்தாள். இந்த தருணத்தில் சேகருடன் ஸெஷன்கள் தொடங்கின.
சேகர், இதுவரை தன் பிள்ளைகளுக்கான பொறுப்பே மதிப்பெண் கையெழுத்துப் போடுவது ஒன்றுதான் என்பதிலிருந்து மாற்றி அமைக்கத் தேவை என்பதை உணர்ந்தார். ரஜியுடன் சேர்ந்து செய்யக் காலையில் தினம் வீட்டிற்கு வேண்டிய பால் வாங்குவது, மற்றும் அவளுடனும், வீட்டில் உள்ள குழந்தைகளுடனும் கேரம், செஸ், ரிங் டெனிகாய்ட் எனப் பலவகை விளையாட்டைப் பட்டியலிட்டோம். வீட்டில் பெரியவர்கள் எவ்வாறு மற்றவர்களை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து குழந்தைகளும் செய்கிறார்கள் என்பதனால் இப்படிச் செய்யப் பரிந்துரைத்தேன். விளையாடும்போது ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட நல்ல சந்தர்ப்பமாகிறது.
வீட்டினர் ஏற்றுக் கொள்வதிலும், நடத்தும் விதத்திலும் குறைகள் இருந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ரஜினி உதாரணமானாள்.
ரஜினி தான் எழுதி வைத்திருந்த ஒவ்வொரு கதையையும் அவளுடன் படித்தேன். இது பல ஸெஷன்களுக்குத் தொடர்ந்தது. அதில் பல நிலைமைகள் வெளிப்படையாகத் தெரிய வர, என் புரிதலுக்கு அவற்றைக் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து அவை நினைவூட்டியவற்றைப் பற்றிப் பேசி நிவர்த்தி செய்யப் பல மாதங்கள் ஓடின இதில் பல வடுக்கள் வெளி வந்தன. கதைகள், வரைபடங்கள், பப்பெட்டுகள் அந்த காயங்கள் ஆறுவதற்கு உதவின.
சுபாவத்தில் உதவி செய்யும், மற்றவர் துன்பத்தை விலக்க ஏதாவது செய்ய முயலும் மனப்பான்மை உள்ளவள். கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் அன்பு, பாசம் என்பது அவள் பெற்றோர், கூடபிறந்தவர்களிடமிருந்து அவ்வளவாக்க இனிமேலும் கிடைக்கும் என்பது போல் எனக்குத் தோன்றவில்லை.
சற்று மாறாக, வேறு வழி ஒன்றை யோசித்தேன். வீட்டிற்கு அக்கம்பக்கத்தினரிடம் இவள் குழந்தைகள் வீட்டுப் பாடங்களுக்கு சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் உதவத் தயார் என்று சொல்லச் சொன்னேன். மெதுவாகக் குழந்தைகள் வரத் தொடங்கின. இவள் மற்றவர்களுக்கு அன்பு காட்டி, அக்கறையோடு கற்றுத் தருவதை தாத்தா பாட்டி பார்க்கப் பார்க்க மனம் கரைய ஆரம்பித்தது. என் யுக்தி பலித்தது.
பள்ளிக்கூடத்தில் அவளை மற்றவர்கள் சேர்த்துக் கொள்ள அவளுடைய வகுப்பு ஆசிரியையை அழைத்து உரையாடினேன். அவர்கள் விவரங்கள் புரிந்தவர். இருவரும் சேர்ந்து இவ்வாறு நாங்கள் நிகழ்த்தினோம். மதிய உணவு இடைவேளையின் போது ரஜினியை ஒதுக்கி வைப்பது பளிச்சென்று தெரிந்தது அதற்கு, படிப்பில் சற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஐந்து பிள்ளைகளை தேர்வு சேய்தோம். அவர்களுக்கு ரஜினியை “ஸ்டடி பட்டீ” (study buddy) ஆக நியமித்தோம். ஐவரை இடைவேளை நேரத்தில் சந்தித்து கூடப் படிப்பாள், விளக்கங்கள் அளிப்பாள். நேரம் இருக்கும் பொழுது நர்ஸரீ குழந்தைகளுக்கும் எழுத, வரையக் கற்பிப்பாள். ஒரு மாதம் கடந்தது. அந்த ஐவரின் படிப்பிலும் மாற்றங்கள் தெரிந்தது. ஐவர் படை பலம் ஆனது.
ரஜினியின் சமூகத் திறன், உரையாடல் மேம்படுத்த அவளை என் ஸோஷியல் ஸ்கில் குழுவில் சேர்த்துக் கொண்டேன். இது அவளுடைய திறன்கள் மலர உதவியது. ஆசிரியை கடிதத்தில் எழுதியிருந்த குறைகளை ஒவ்வொன்றாகச் சரி செய்து வந்தோம். இதன் பிரதிபலிப்பு, ஐவர் படையில் எதிரொலித்தது. நாளாக நாளாக அவள் வகுப்பு தோழிகள் மாற்றத்தைக் கவனித்து, கேட்க ஆரம்பித்தனர்.
உமாவும் சேகரும், ரஜினி செய்துவரும் முயற்சிகளைப் பார்த்து வந்தார்கள். இப்போது அவர்கள் தன் பங்கைச் செய்ய வேண்டியதாயிற்று. உமா, சேகர் தான் செய்த புறக்கணிப்பைப் புரிந்து கொள்ள அத்தாட்சியாக உதவ, ஆசிரியின் ரிபோர்ட்டை எடுத்துக் கொண்டேன். அதன் ஒவ்வொரு வரியில் சொல்லப்பட்டது ஏன் உண்டாயிற்று என்றும், சீர் செய்ய என்ன செய்யலாம் என்றும் கலந்து ஆலோசிக்கப் பல வாரங்களுக்கு ஸெஷன்கள் தேவையானது.
பிறப்பிலிருந்தே அம்மாவால் நிராகரிக்கப் பட்டவள் ரஜினி. இந்த மாதிரி நிகழ்ந்தால் கருவிலிருந்தே வேண்டாதவர்கள் என்பதைக் குழந்தைகள் உணர்வார்கள். ரஜினிக்கு அவளின் சரசா பாட்டியும், இரண்டு மாமா மாமியும் அரவணைத்துப் பார்த்துக் கொண்டது பெரிய தெம்பானது. செஷங்களுக்குப் பின்னர் இந்தக் கூட்டத்தில் அவள் அப்பாவும் சேர்ந்தார். அம்மா சேர இன்னும் நேரமாகும், உமாவுடன் ஸெஷன்களும் அவளின் மாற்றங்களும் இன்னும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. பள்ளியில் அவளுடைய வகுப்புத் தோழிகள், ஐவர் படை என்று ஆரம்பித்து, எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது!
அம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
வதக்கல் வாழ்த்து !
எளிய வதக்கல் கறியே !
உன் எளிமையை என்றும் இகழேன் நான் !
எத்தனை வகை கறி உண்டாலும்
உன் சுவையை எதிலும் அறியேன் நான் !
உருளை வெங்காயம் வதக்கி வைத்தால்
நம் உள்ளம் முழுதாய் வசப்படுமே !
வாழையை பொடியாய் வதக்கி வைத்தால்
நம் வாயில் உமிழ் நீர் பெருகிடுமே !
வெண்டையை அழகாய் வதக்கி வைத்தால்
வெடுக்கென்று அதனை ருசித்திடுவோம் !
கத்திரிக்காயை வதக்கி வைத்தால்
கதி மோட்சம் நமக்கு கிட்டிடுமே !
கொத்தவரைக்காயை வதக்கி வைத்தால்
அதை ரசித்து ருசித்து சாப்பிடுவோம் !
அவரைக்காயை வதக்கி வைத்தால்
அனுபவித்து நாம் சுவைத்திடலாம் !
பீன்ஸ் பொரியல் என்றால் கூட
போதுமென்று நாம் சொல்வதில்லை !
பீட்ரூட்டைக் கூட நாம் விடுவதில்லை –
எதைக் கொடுத்தாலும் கறி சமைத்திடுவோம் !
தேங்காய் இன்றி வெறுமனே செய்தால்
சாத்வீகமாக ஒரு வதக்கல் !
தேங்காய் சேர்த்து விறுவிறுப்பாக
ரஜோ குணம் காட்டும் ஒரு வதக்கல் !
கண்டம் விட்டு கண்டம் தாவியும்
காண்போமா இச்சுவை தரணியிலே ?
அன்னை கைமணம் இருந்து விட்டால்
ஆண்டவனே நீயும் எனக்கெதற்கு ?
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
விஷ்வகர்மாவிற்கு ஸந்த்யாவின் நிலைமை புரிய ஆரம்பித்துவிட்டது. சூரியதேவனின் வெப்ப சக்தியைத் தாங்கும் தன்மை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவரிடம் இருந்த ஒரே மருந்து காந்தசிகித்சைதான். ஆனால் முதன்முறை ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு சூரியதேவன் அதற்குச் சம்மதிக்க மாட்டான் என்று நம்பினார். வேறு என்ன வழி? அப்படியே விட்டுவிட்டால் ஸந்த்யா உருக்குலைந்து அழிவது உறுதி. அதனால் சூரியதேவன் காலில் விழுந்தாலாவது சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
அதற்கான முயற்சியை அப்பொழுதே துவங்கினார். தன் மனைவியிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படிக் கூறிவிட்டு அவசரம் அவசரமாக விடைபெற்றுச் சென்ற மும்மூர்த்திகளைத் தொடர்ந்தார். சூரியமண்டலத்திலிருந்து அவர்கள் மூவரும் புறப்படுவதற்கு முன் அவர்களை அடைந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.
விஷ்வகர்மா மகா ருத்ர பிரும்மனைப் படைக்கச் செய்த முயற்சிகளைப் பற்றி மும்மூர்த்திகளுக்கும் நன்கு அறிந்திருந்தார்கள். விஷ்வகர்மாவின் இந்த செயல்கள் எல்லாம் சிறுபிள்ளையின் செய்கையைப் போல் இருந்ததால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அதனால் அவர்கள் சிறு புன்னகையுடனே விஷ்வகர்மாவைப் பார்த்தனர்.
சிவபெருமான் ஒன்றும் அறியாதவர் போல ” எழுந்திரியுங்கள் தேவசிற்பியாரே! உங்களுக்கு என்ன குறை? ஏன் இப்படிக் கலங்கிய முகத்துடன் ஓடி வருகிறீர்கள் ? என்று வினவினார்.
” என்னுடைய பிழையைத் தேவரீர் அனைவரும் பொறுத்து என் மகள் ஸந்த்யாவைக் காத்தருள வேண்டும்” என்று கண்களில் நீர்மல்கக் கூறினார்.
பிரம்மரும் ” புரிகிறது விஷ்வகர்மா, சூரியனின் வெப்பச் சலனத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் உன் பெண்ணின் துயரைத் தீர்க்கும் வழி உங்களுக்கே நன்கு தெரியுமே? ஏற்கனவே ஒருமுறை செய்தும் முடித்தீர்களே? அதை மீண்டும் செய்யவேண்டியதுதானே?” என்றார்.
” நான் செய்த மாபெரும் பிழையினால் சூரியதேவன் மறுபடியும் அந்த சாணை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அதை விட்டால் எனக்கு வெரு உபாதையும் தெரியவில்லை” என்றார் விஷ்வகர்மா.
“கவலையை விடுங்கள் தேவசிற்பியாரே! என்று கூறிய பிரும்மர், ” உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை. தற்சமயம் மகாவிஷ்ணுவிற்கும் பரமேஷ்வரருக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் தேவைப்படுகிறது. அதைச் செய்யும் பொறுப்பைத் தேவசிற்பியான உங்களிடம் விட்டுவிடுகிறோம். அந்த சக்தி ஆயுதங்களின் மூலக்கூறுகள் சூரியனுடைய பிரகாசத் துகள்கள் தான் என்பதை நீங்களே உணர்வீர்கள். அந்த ஆயுதங்கள் மிக அவசரமாகத் தேவை என்று நாங்களே சூரியனிடம் சொல்கிறோம். பிறகு அவன் தானாகவே வந்து உங்களிடம் அந்த சாணை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வான். “
” ஆஹா! தங்கள் கருணையே கருணை! ஆனால் அந்த சிகிச்சையில் கிடைக்கும் சூரிய துகள்களிலிருந்து மூன்று ஆயுதங்கள் செய்யலாம். சிவபெருமானுக்குத் திரிசூலம் ஒன்று வடிவமைத்துத் தருகிறேன்.
அதைப்போல் பலமான சுதர்ஷனச் சக்கர ஆயுதத்தை விஷ்ணு பகவானுக்காக உருவாக்கித் தருகிறேன். மூன்றாவதாக, படைக்கும் கடவுளான உங்களுக்குப் பயங்கர அஸ்திரம் ஒன்று செய்து தரட்டுமா? ” என்று விஷ்வகர்மா தன் தொழில் கர்வம் மேலோங்க வினவினார்.
ஆனால் பிரும்மரோ , ” தேவசிற்பி! எனக்கென்று ஏற்கனவே பிரும்மாஸ்திரமும், பிரும்மதண்டமும், பிரும்மாஷிரா என்ற மூன்று ஆயுதங்கள் உள்ளன. பிரும்மாஸ்திரம் உலகத்தில் எதையும் அழிக்கவல்லது. ஆனால் அதைப்பெறுபவன் வெறும் திறமைசாலியாக மட்டும் இருந்தால் போதாது. எது அநீதி எது அக்கிரமம் என்று உணர்ந்து அந்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் தகுதி உடையவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களும் சிலசமயங்களில் தவறுதலாகப் பிரயோகம் செய்துவிட்டால் அப்போது பிரும்மாஸ்திரத்தை அடக்க உதவுவதே பிரும்மதண்டம். பிரும்மாஷிரா பிரும்மாசஸ்திரத்தைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்தது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி எந்த அஸ்திரத்துக்கும் கிடையாது. எங்கள் மூவரில் ஒருவர்தான் அதைத் தடுக்கமுடியும். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நீங்கள் திரிசூலத்தையும் சுதர்ஷனச் சக்கரத்தையும் படையுங்கள்! பாக்கியிருக்கும் துகள்களை வைத்து முடியுமானால் நமது குபேரருக்கு ஒரு புஷ்பக விமானம் செய்து கொடுங்கள்! பல வகைகளில் தேவ உலகத்திற்கு உதவும் அவருக்கு நம் அன்புப் பரிசிலாக இதை அளிக்கலாமே? ” என்றார்.
சிவபிரானும், மகாவிஷ்ணுவும் புன்முறுவலுடன் பிரும்மர் கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டனர்.
விஷ்வகர்மாவும் மனமகிழ்ந்து ” அப்படியே செய்து முடிக்கிறேன் மகாபிரபு! ” என்று கூறி புறப்படத் தயாரானார்.
“சற்றுப்பொறுங்கள், முதலில் நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புதிய ஆயுதங்கள் உருவாக்குவதால் சூரியனுடைய வீரியம் குறையும். உங்கள் மகள் அவனுடன் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அது ஸந்த்யா பிறப்பிலிருந்தே ஏற்பட்டுள்ளது. அதை மாற்ற நீங்கள் முயன்றதும் எங்களுக்குத் தெரியும். ஆகவே ஸந்த்யாவை விதிப்படி வாழ விடுங்கள்! விதியை மீறினால் பல வக்கிரங்களுக்கு ஆளாக நேரிடும். இந்த சிகித்சையை உங்கள் அரண்மனையில் செய்யலாகாது. சூரியதேவனின் இருப்பிடத்திலேயே செய்யவேண்டும். இந்த முயற்சிதான் இரண்டாவதும் இறுதியானதும் கூட. மூன்றாவது தடவை முயன்றால் அந்த இடத்திலேயே உங்கள் மீது என் பிருமாஷிரா பாயும். நன்கு புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்! ” என்று எச்சரித்து அனுப்பினார் பிரும்மர்.
விஷ்வகர்மாவும் மூவரையும் வணங்கி விடை பெற்றார்.
மகாவிஷ்ணுவின் முகத்தில் பூத்த புன்முறுவல் பெருஞ்சிரிப்பாக மாறியது. ” என்ன பிரும்மரே! சூரியகுடும்பத்தில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் உண்டாக்கப் போகின்றீர்கள்? ” என்று நகைப்புக்கிடையே வினவினார்.
பரமேஸ்வனும் சிரித்துக்கொண்டே ” எனக்குச் சமமான ஒரு ஈஸ்வரனை உருவாக்க பிரும்மர் செய்யும் முயற்சிகளுக்கு என் பாராட்டுதல்கள்” என்றார்.
இதெல்லாம் அறியாத விஷ்வகர்மா ‘ இந்த மட்டில் தனது பெண்ணிற்கு விமோசனம் கிடைத்ததே ‘என்று எண்ணி அதைச் செயலாற்ற விரைந்தார்.
(தொடரும்)
இரண்டாம் பாகம்
சாலமன் பாப்பையா கூறினார்:
வீட்டுலே சொல்லிக்கிட்டு வந்தேன்னு லியோனியே சொல்லிகிட்டார். அதுமட்டுமா அழிதல்தான் நாட்டுக்குத் தேவை என்று ஆணி அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிருக்கிறார். புரட்யூசர்கள் கோடி கோடியா போட்டு பணத்தை அழிக்கலேன்னா படம் இவ்வளவு சூப்பரா வருமா?
அதுமட்டுமா என்னமா தத்துவ முத்திரைகளைப் போட்டுத் தாக்கினார் –
கோழியை அழிச்சாதான் குருமா பண்ணமுடியும்
நேற்று என்ற ஒன்று இன்று அழிந்தால் தான் நாளை என்ற ஒன்று பிறக்கும்
தின்ற சோறு கழிவாய் அழிந்தால்தான் புதுச்சோறு திண்ணமுடியும்
அட அட! இதுக்கு மேலே பேசறதுக்கு என்னய்யா இருக்கு ? ஆக்கல் அழித்தல் ரெண்டும் தானே முக்கியம் கன்ஸ்ட்ரக்ஷன் பார் டிஸ்ட்ரக்ஷன், டிஸ்ட்ரக்ஷன் பார் கன்ஸ்ட்ரக்ஷன். நடுவிலே என்ன காத்தல் ? பாரதி பாஸ்கரும் லியோனியும் தொவை தொவைன்னு தொவச்சப்புறம் ராஜா என்ன பேசி கிழிக்கப்போறார்? காத்தல் என்ற நொண்டிக்குதிரைக்கு முட்டுக்கொடுப்பாரா இல்லை புதுசா எதாவது சரக்கு வச்சிருக்காரா பாப்போம்.. வாங்க ராஜா !
நடுவர் அவர்களே! பாரதி பாஸ்கர் அம்மாவும் லியோனியும் தொவச்சுப் போட்ட துணிக்கு நான் இப்போ அயர்ன் பண்ண வந்திருக்கேன். அதாவது காவந்து பண்ண வந்திருக்கேன்.
அப்புறம் காத்தல் தொழில் செய்பவனுக்கு நொண்டிக்குதிரை சண்டிக்குதிரை கிண்டிக்குதிரை அப்படின்னு எந்தவித வித்தியாசமும் கிடையாது. எல்லாத்தையும் ஒரே மாதிரி காப்பாத்தவேண்டியது தான் அவரோட வேலை. அப்பத்தான் ஜாக்பாட்டில ஜெயிக்கமுடியும்.
என்னோட கருத்துக்களைச் சொல்லி வாதத்தைத் தொடங்கறதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் இந்த விவாத மேடைக்கு வந்த விதத்தைப் பத்தி சொன்னாங்களே! அதில எனக்கு ஒரு சேதியை உங்க கூட பகிர்ந்துக்க ஆசைப்படறேன். பாரதியம்மா ஆக்கல் தான் பெரிசுன்னு நக்கலடிச்சு வேற யாரும் ஆணியப் புடுங்கவேண்டாம் அப்படின்னு டயலாக் வேற அடிச்சாங்க. இவ்வளவு தைரியசாலி அம்மா இங்கே வர்ரதுக்கு பயந்தாங்க . புரட்சித்தலைவி அம்மா அப்படின்னு ஏதோ சால்ஜாப்பு சொல்லிட்டு போனாங்க. ! லியோனி என்னாடான்னா தனக்கே ஒப்பாரி கேட்டுட்டு வந்தேன்னு பயந்துகிட்டே சொன்னார். உண்மையில் என்ன நடந்ததுன்னா ரெண்டு பேருக்குமே இங்கே வர பயம். நாந்தான் இவங்க ரெண்டுபேரையும் காப்பாத்துறேன்னு சொன்னதினால வந்தாங்க. இப்ப சொல்லுங்க! என்னோட காத்தல் இல்லேன்னா இந்த ஆக்கலும் அழித்தலும் விக்கலும் வாந்தியும் எடுத்துகிட்டு இருப்பாங்களே தவிர விவாத மேடைக்கு வந்திருக்கவே மாட்டாங்க!
அப்புறம் ஒரு குழந்தைய உண்டாக்குறது கஷ்டமா அழிக்கிறது கஷ்டமா இல்லே காப்பாத்துறது கஷ்டமா?
சாலமன் பாப்பையா குறுக்கிட்டு ” எனக்கு இப்போ மூணுமே கடினம்தான்.”
நடுவர் அவர்களே ! நான் பொதுவா சொல்றேன் ! அண்ணன் விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லட்டுமா? நம்ம நாட்டிலே ஒரு நிமிஷத்தில 34 பிறப்பும் 10 இறப்பும் நடக்குது. ஒரு மணி நேரத்தில இந்த எண்ணிக்கை 2062, 603 ஆக இருக்குது. ஒரு மணியில 49481 , 14475 ஆகுது. ஒரு நாளில 15 லட்சம் பேரு பொறக்கிராங்க.4 லட்சம் பேரு மண்டையைப் போடறாங்க. ஆனா இந்தியாவில இருக்கற ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா? 135 கோடிக்கு மேல. இந்த 135 கோடி மக்களைக் காப்பாதுறது -அதாவது காத்தல் எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ நம்ம மந்திரிகளுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும் .கஷ்டத்தை விடுங்க! எவ்வளவு முக்கியம் அது?
நாட்டை விடுங்க ! வீட்டுக்கு வாங்க! கல்யாணம் பண்ணின பத்தாம் மாசத்தில நாம ஒரு உருப்படியை ஆக்கிப்பிடறோம்.
சாலமன் பாப்பையா குறுக்கிடு, ” என்னவோ நிமிஷக் கணக்கெல்லாம் சொன்னிங்க! பத்து மாசம் வரைக்கும் காத்திருக்கணுமா? “
ஐயோ, நடுவர் அவர்களே! அதிலெல்லாம் மாத்தம் கிடையாது. அந்தக் குழந்தைக்கு பர்த் சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா இல்லே பின்னாடி வயாசாகி டெத் சர்திபிகேட் வாங்கிறது முக்கியமா ? இல்லே இதெல்லாம் விட நடுவிலே டிகிரி சர்ட்டிபிகேட் மற்றும் ஆயிரக்காணக்கான சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா? நல்ல பையன், நல்ல பொண்ணு, நல்ல மாணவன் , நல்ல படிப்பாளி, நல்ல விளையாட்டு வீரன், நல்ல பேச்சாளி, நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல அப்பா, நல்ல அம்மா, நல்ல மாமியார் ( இது ரொம்ப கஷ்டம்) , நல்ல மருமகள் ( இது அதைவிடக் கஷ்டம்) நல்ல தொழிலாளி, நல்ல முதலாளி, நல்ல தாத்தா நல்ல பாட்டி ,நல்ல நண்பன், நல்ல மனிதன் இப்படி ஆயிரக்கணக்கான சட்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கு. இதுதானே முக்கியம். இப்படி சர்ட்டிபிகேட் வாங்க வைக்கறது தான் காத்தல் தொழிலின் மகத்துவம்.
ஆக்கறது ஈசி, அழிக்கிறது அதைவிட ஈசி. ஆனா வைச்சு காவந்து பண்ணறது ரொம்ப ரொம்ப கஷ்டம் மட்டுமில்ல முக்கியமும் கூட.
கல்யாண சமாசாரத்துக்கு வாங்க. தாலி கட்டறது ஒரு சில நிமிஷத்தில முடிஞ்சுடும். அய்யரோ, சர்ச்சோ, நிக்காஹோ, ரிஜிஸ்டர் ஆபீஸ் எதுவானாலும் சரி. அதே மாதிரி டிவோர்ஸ் வாங்கிறதும் ஒரு சில மாசங்களில வாங்கிடலாம். கோர்ட், தலாக் அப்படின்னு சில அமைப்புகள் இருக்கு. ஆனா புருஷனும் பொண்டாட்டியுமா வருஷக் கணக்கில வாழறது எவ்வளவு கஷ்டம்னு எல்லா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் மட்டும்தான் தெரியும். ஆனா அதுதான் மனித குலத்துக்கே தேவையான ஒண்ணு. வைச்சுக் காப்பாத்தணும்.
சோத்துபாட்டுக்கே வருவோம். சோத்தை ஆக்கி வச்சுப்புட்டா போதுமா? அது திங்கிறவரை பத்திரமா பாதுக்காக்க வேண்டாமா? சரியாப் பாதுகாக்கலேன்னா புழு பூச்சி வந்து அரசாங்கம் சீல் வைக்கிற மாதிரி ஆயிடாதா?
சன் டிவியில எத்தனை சீரியல் பாத்திருப்பீங்க? மெகா சீரியல்! அதுல வர்ற முதல் எபிசோடு ஆக்கல் கடைசி எபிசோடு அழித்தல் இரண்டுக்கும் நடுவில வருதே தொள்ளாயிரத்து சொச்சம் எபிசோட் அதுதான் அந்த சீரியலையும் டி ஆர் பி ரேதிங்கையும் காப்பாத்துது.
இந்த விவாத மேடை நடக்கிறதே சன் குடும்பத்தினர் ஊரிலதான். அதாவது எமபுரிப்பட்டணம். சன்னோட சன் ஊர். அதாவது சூரியதேவனுடைய மகன் எமன் அவர்களின் ஊர். பெரியவரின் மகன் எமதர்மராஜாவும் மகள் எமியும் இங்கே வந்திருக்காங்க. எங்க ஊர் பாஷையில எமன் தான் தளபதி. அவர் சகோதரி கனிவாக மொழிகிறவர் என்பது பார்த்தாலே தெரிகிறது. எமன் அவர்கள் தர்மராஜன். அழித்தல் தொழிலைச் செய்பவர் தான். ஆனால் இன்றைய பேச்சைக் கேட்டபிறகு நிச்சயம் காத்தல் அணிக்குத்தான் ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
சாலமன் பாப்பையா எழுந்தார். “இப்போ தீர்ப்பு சொல்லவேண்டிய வேளை வந்திடுச்சு. வழக்கமான பாணியில் இல்லாம வேற மாதிரி தீர்ப்பு சொல்லலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க ஆதரவு வேணும் ” என்று சொல்லி புதிய முறை என்ன என்பதை விளக்கினார்.
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். “இது நடக்க முடியாத செயல்” என்று நாரதர் சத்தமாகவும் கூறினார்.
சபையில் கொந்தளிப்பு உருவாகும் போல இருந்தது.
மும்மூர்த்திகளும் திகைத்தனர்.
(தொடரும்)
இன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்
நன்றி: விக்கிபீடியா
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.
மனைவி சந்திரபிரபா, மகன்கள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இவரது முதல் கதையான “பழைய தண்டவாளம்” கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன. ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.”அட்சரம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.
“இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்” என்று ஜெயமோகனும், “ஜெயகாந்தன் போல… எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்” என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்[3][4]. புத்தாயிரத்தின் இலக்கியம் – இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் “எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது” என்று கருத்துரைத்துள்ளார்
விருதுகள்
வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011ஆம் ஆண்டுக்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
இதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது யாமம் புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது.
இவர் எழுதிய அரவான் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:
தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது 2001
ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது 2008
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011
சாகித்ய அகாதமி விருது (சஞ்சாரம் நாவல்)
சாகித்ய அகாதமி விருது
சஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.
படைப்புகளின் பட்டியல்
புதினங்கள்
உப பாண்டவம்
நெடுங்குருதி
உறுபசி
யாமம்
துயில்
நிமித்தம்
சஞ்சாரம்
இடக்கை
பிதின்
சிறுகதைத் தொகுப்புகள்
வெளியில் ஒருவன்,
காட்டின் உருவம்,
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்
நடந்துசெல்லும் நீரூற்று
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
நகுலன் வீட்டில் யாருமில்லை
புத்தனாவது சுலபம்
தாவரங்களின் உரையாடல்
வெயிலை கொண்டு வாருங்கள்
பால்ய நதி
மழைமான்
குதிரைகள் பேச மறுக்கின்றன
காந்தியோடு பேசுவேன்
என்ன சொல்கிறாய் சுடரே
கட்டுரைத் தொகுப்புகள்
விழித்திருப்பவனின் இரவு
இலைகளை வியக்கும் மரம்
என்றார் போர்ஹே
கதாவிலாசம்
தேசாந்திரி
கேள்விக்குறி
துணையெழுத்து
ஆதலினால்
வாக்கியங்களின் சாலை
சித்திரங்களின் விசித்திரங்கள்
நம் காலத்து நாவல்கள்
காற்றில் யாரோ நடக்கிறார்கள்
கோடுகள் இல்லாத வரைபடம் – உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
மலைகள் சப்தமிடுவதில்லை
வாசகபர்வம்
சிறிது வெளிச்சம்
காண் என்றது இயற்கை
செகாவின்மீது பனி பெய்கிறது
குறத்தி முடுக்கின் கனவுகள்
என்றும் சுஜாதா
கலிலியோ மண்டியிடவில்லை
சாப்ளினுடன் பேசுங்கள்
கூழாங்கற்கள் பாடுகின்றன
எனதருமை டால்ஸ்டாய்
ரயிலேறிய கிராமம்
ஆயிரம் வண்ணங்கள்
பிகாசோவின் கோடுகள்
இலக்கற்ற பயணி
திரைப்படம் குறித்த நூல்கள்
பதேர் பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள்
அயல் சினிமா
உலக சினிமா
பேசத்தெரிந்த நிழல்கள்
இருள் இனிது ஒளி இனிது
பறவைக் கோணம்
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
===குழந்தைகள் நூல்கள்===
கால் முளைத்த கதைகள்
ஏழு தலை நகரம்
கிறுகிறு வானம்
லாலிபாலே
நீளநாக்கு
தலையில்லாத பையன்
எனக்கு ஏன் கனவு வருது
காசுகள்ளன்
பம்பழாபம்
சிரிக்கும் வகுப்பறை
அக்கடா
உலக இலக்கியப் பேருரைகள்
ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்
ஹோமரின் இலியட்
ஷேக்ஸ்பியரின் மெக்பெத்
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும்
தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா
பாஷோவின் ஜென் கவிதைகள்
வரலாறு
எனது இந்தியா
மறைக்கப்பட்ட இந்தியா
நாடகத் தொகுப்புகள
அரவான்
சிந்துபாத்தின் மனைவி
சூரியனை சுற்றும் பூமி
நேர்காணல் தொகுப்புகள்
எப்போதுமிருக்கும் கதை
பேசிக்கடந்த தூரம்
மொழிபெயர்ப்புகள்
நம்பிக்கையின் பரிமாணங்கள்
ஆலீஸின் அற்புத உலகம்
பயணப்படாத பாதைகள்
தொகை நூல்கள்
அதே இரவு, அதே வரிகள்,
வானெங்கும் பறவைகள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள நூல்கள்
Nothing but water
Whirling swirling sky
பணியாற்றிய திரைப்படங்கள்
சண்டைக்கோழி
பாகுபலி
ஆல்பம்
பாபா
தாம்தூம்
பீமா
உன்னாலே உன்னாலே
கர்ண மோட்சம்
மோதி விளையாடு
சிக்கு புக்கு
அவன் இவன்
யுவன் யுவதி
சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்கள்
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு.
சண்டக்கோழி படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்[
சரித்திரம் பேசுகிறது – யாரோ
யுவான்சுவாங்
ஹர்ஷர், புலிகேசி, நரசிம்மபல்லவர் என்று பல ஹீரோக்கள் இருக்கும்போது – அதே நேரத்தில் – இன்னொரு சூப்பர் ஸ்டார் இந்தியாவில் உருவானார். அது எந்த நாட்டின் மன்னனும் அல்ல. கத்தி பிடித்தவீரனும் அல்ல. அறிவையும் எழுத்து கோலையும் நம்பி பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் பயணித்து, சமய நூல்களை ஆய்ந்து, கற்று, மொழிபெயர்த்து, மன்னர்களின் மதிப்பைப் பெற்று. சரித்திரத்தில் இடம் பெற்றது மற்றுமல்லாமல், சரித்திரத்தையே தொகுத்துத் தந்தவர். அன்றைய நாளின் ‘சரித்திரம் பேசுகிறது’ – எழுதியது யாரோ என்ற கேள்விக்கு விடையே அவர் தான்..
அவர் தான்..
யுவான் சுவாங்!
அவரது கதை எழுதி சரித்திரம் பேசலாம்.
முதலில் சீனாவுக்கு செல்வோம்.
அட.. இந்நாள் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்லும் போது.. நாமும் கொஞ்சம் சீனாவுக்குச் செல்வோமே!
கி பி 602:
சீனாவில்..இந்நாளின் ஹெனான் மாகாணம்:
யுவான் சுவாங் பிறந்தான்.
அவன் குடும்பத்தில் அனைவரும் அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் இருந்ததர்.
தந்தையார் மகனுடைய அறிவுக்கூர்மையையையும், கற்கும் ஆர்வத்தையும் அறிந்தார்.
சிறு வயதிலிருந்தே அவன் சமயப்புத்தகங்கள் படிக்க பெரு விருப்பம் கொண்டிருந்தான்.
பதின்மூன்று வயதில் அவன் பயிற்சி புத்தத்துறவியாக (ட்ரெய்னிங்) நியமிக்கப்பட்டான்.
இருபது வயதில் முழுத்துறவியாகினான்.
பின்னர் சீனா முழுதும் பயணித்து புத்தசமய நூல்களைத் தேடி சேகரித்தான்.
நாட்டில் கிடைத்த அந்நூல்கள் பெரும்பாலும் அரைகுறையாகவும், தவறாகவும் இருப்பதை உணர்ந்தான்.
முன்னாளில் பாஹியான் இந்தியா சென்று பல புத்த சமய புத்தகங்களை சீன மொழிக்கு கொண்டு வந்ததை அறிந்தான்.
அன்று பாஹியான் செய்ததைப் போல நாமும் செய்யவேண்டும்?
அதுக்கும் மேலே!
யுவான் சுவாங் – மனம் இந்தியா செல்வதை விரும்பியது.
நன்றி: (Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=247641)
சீன அரசாங்கம் யாரும் வெளிநாட்டு செல்லத் தடை விதித்திருந்தது.
விசா கொடுக்கவில்லை!!
யுவான் சுவாங்கின் வெளிநாட்டுத் திட்டம் பற்றி அறிந்திருந்த அரசாங்கம், அதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டது.
பயணம் போக குதிரை வேண்டுமே.
யுவான் சுவாங் குதிரை வாங்கினான்.
அது மெலிந்த சிவப்பு நிறக் குதிரை.
பாலைவனப் பயணம் அறிந்த பலான குதிரை.
யுவான் சுவாங் – சீனாவைத் தாண்டியது காட்சிகள் பாகுபலி காட்சிகளை மிஞ்சும்.
சீன எல்லை.
காவலர்கள் கண்விழித்து இரவும் பகலும் எல்லையைக் காத்து நின்றனர்.
அவர்களுக்கு அரசாங்கம் செய்தி அனுப்பியிருந்தது.
யுவான் சுவாங் எல்லை தாண்டி செல்ல முயலுவான் என்று.
அவனைத் தடுத்திட வேண்டும்.
யுவான் சுவாங்கின் நண்பன் வெளிநாட்டவன் ஒருவன்.
கட்டடம் கட்டுவதில் வல்லவன்.
சீன எல்லையில் இருந்தது நதி.
அதில் ஒதுக்குப்புறத்தில்.. ஒரு சிறு பாலத்தைக் கட்டினான்.
யுவான் சுவாங் அந்தப்பாலத்தில் தப்பிச்செல்ல குதிரையில் வந்தான். அவனுடன் 12 தோழர்களும் உடன் வந்தனர். சீனத்தின் எல்லைப்பாதுகாவல் படையினர்- தப்பிச் செல்லும் யுவான் சுவாங்கை துரத்தினர்.
அம்பு மழை பெய்தனர்.
பயணிகள் தப்பித்தனர்.
வழியில் கோபி பாலைவனம்.
அங்கும் ஆபத்து.
உயரத்தில் ஒரு காவல் மணிக்கூண்டு.
அதன் தாழ்வாரத்தில் ஒரு தொட்டியில் தண்ணீர்.
பாலைவனத்தில் தண்ணீர் தங்கம் போன்றது… விலைமதிப்பில்லாதது.
யுவான் சுவாங் கூட்டம் தாகத்தால் வரண்டது.
இரவின் போர்வையில் மெல்ல நீர்த்தொட்டியை அணுகினர்.
மணிக்கூண்டிலிருந்த வீரர்கள் அம்பு எய்தினர்.
இறையருள் இல்லாதிருந்தால் அந்தத் தாக்குதலில் யுவான் சுவாங் மாண்டிருக்க வேண்டும்.
தப்பித்த யுவான் சுவாங் – பாலைவனத்தில் ஐந்து நாட்கள் வழி தவறி.. தண்ணீர் இல்லாமல்..தடுமாறினான்.
மரணத்தின் விளிம்பு கண்டான்..
பாலைவனம் தாண்டிய பின்…
க்லேஸியர் என்னும் பனிப்பாறைகள் கொண்ட நிலம்..
யுவான் சுவாங் தனது பத்து நண்பர்கள் பனியில் உறைந்து மரித்ததைக் கண்டான்.
மனம் தொய்ந்தான்.
‘புத்தர்’ நம்மை ஏன் இறக்க விடவில்லை – என்று யோசித்தான்.
அதுவும் கடந்து போனது.
சில மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இது. எந்த இடத்திலும் அவர்கள் செல்லு முன்னரே அங்கு அவர்களது புகழ் அடைந்து விடும். முன்பு அலெக்சாண்டரிடம் இதைத் நாம் பார்த்தோம். யுவான் சுவாங் அப்படிப்பட்ட புகழ் கொண்டிருந்தான்.
துருக்க மன்னர் (இந்நாளின் துருகேசஸ்டான்) ‘கான்’ – ஒரு குறுநில மன்னன்!
அவன் யுவான் சுவாங்கை வரவேற்க தடபுடல் அலங்காரங்கள் செய்தான்.
தங்கத்தால் இழைத்த பெரும் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது.
அதில் அவனது மந்திரிகள் இருபுறமும் பாய் போட்டு அமர்ந்திருந்தனர்.
மற்ற முக்கியப் பிரமுகர்கள் பின்னர் நின்றிருந்தனர்.
மன்னன் ‘கான்’ கூடார மண்டபத்தை விட்டு வெளியே வந்து முப்பது அடிகள் நடந்து வந்து யுவான் சுவாங்கை வரவேற்று..முகமன் கூறி ..உள்ளே அழைத்துச் சென்றான். பிறகு இசை நிகழ்ச்சி ஒன்றை துவங்கி வைத்தான். தனது மந்திரிகளுக்கும் – முக்கிய விருந்தினர்களுக்கும் மதுவும் – புலாலும் வழங்கினான். யுவான் சுவாங் மற்றும் அவன் குழுவுக்கு திராட்சை சிரப் அளித்தான்.
அதைத்தான் தமிழர்கள் சொன்னாரோ: ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’!
யுவான் சுவாங் சிறப்புரை ஆற்றினான்: ‘தான் என்ற என்னமிலாது செய்யும் கர்மா’, ‘முக்தி’, மற்றும் ‘மிருக வதை தடுப்பு’ –என்று பல கொள்கைகளை விவரித்தான்.
அட என்னடா இது.. எமபுரிப்பட்டணம் போல – காதுல பூ –என்றோ நினைக்கவேண்டாம்…
சரித்திரத்தை – சற்றே சாயம் பூசிப் பேசுகிறோம்..
தொடரும்…
கைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்

தமிழகத்தின் கைலாஷ் பாபு என்ற ஓவியர், டால்டன் கெட்டி என்ற பிரபல
கலைஞரின் படைப்புக்களைக் கண்டு பிரமித்து அதன் உத்வேகத்தில் 200க்கும்
மேற்பட்ட பென்சில் கூர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.
அவரது மையக் கருத்துக்களும் சமூகத்திற்கு விழிப்புணர்ச்சி தருபவைகளாக இருக்கின்றன. (உதாரணமாக – தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல்) . மரபை உடைக்கும் வகையிலும் இவரது படைப்புக்கள் உள்ளன. (உதாரணம்: ரத்தக்கறை படிந்த சானிடரி நாப்கின் பற்றிய சிலை)



( நன்றி : இன்ஷார்ட்ஸ்)
காலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்
மலையில் முகிலும் படிகிறது – காணும்
மனதில் கவிதை வடிகிறது -மிகத்
தொலைவில் சாலை முடிகிறது – சென்று
தொட்டால் பொழுது விடிகிறது -திரிந்து
அலையும் எண்ணம் குவிகிறது – வாழ்வின்
ஆழ்ந்த உண்மை தெரிகிறது – சற்றுத்
தலையும் சுற்றி வருகிறது – படைப்பின்
தன்மை பற்றிப் புரிகிறது.

குயிலின் குரலும் கேட்கிறது -செவியில்
கொஞ்சம் தேனைச் சேர்க்கிறது -மென்மை
இயையும் ஏழு பண்ணினிமை -அதில்
எழுந்து பரவி ஆர்க்கிறது – பெரும்
மயலும் சோர்வும் மறைகிறது – பிணியின்
வலியும் மெல்லக் குறைகிறது – செயலில்
முயன்று பார்த்து முன்னேறும் – புது
முனைப்பில் உள்ளம் விரைகிறது.
கேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி? காணொளி
Let us Make Engineering Simple (LMES) ஒரு உபயோகமான வீடியோ சானல்!
இதில் கணக்கு , விஞ்ஞானம் , மற்றும் பல பொறியியல் தத்துவங்களை அழகான தமிழில் சொல்லிக் கொடுக்கிறார். சிறிய முயற்சியாக பிரேமானந்த் சேதுராமன் என்பவர் ஆரம்பித்தார். இன்று ஒரு பெரிய அகாடமியாக அது வளந்துள்ளது. எஞ்சினீரிங் படித்துவிட்டு அமெரிக்காவில் பலதரப்பட்ட இடங்களில் 8 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு 2014இல் அமெச்சூராக விஞ்ஞானத் தத்துவங்களை வீடியோ மூலம் விளக்கி பேஸ்புக், யூடியூப் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்தார். இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒருலட்சத்திற்கும் அதிகமான பேர் சந்தாதாரர்களாக சேர்ந்தும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ‘லைக்’ போட்டும் வரவேற்றிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுவரை 4573 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். 3.7 லட்சம் பேர் இவரைப் பிபற்றுகிறார்கள். 1.7 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இவரது படைப்புக்களைக் கண்டிருக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் இந்தவீடியோ!
பார்த்ததுப் பயன் அடையுங்கள்!!
தீர்வு….! – நித்யா சங்கர்
காட்சி… 1
( சுந்தரின் வீடு. மாலை 5 மணி.. நீட்டாக டிரஸ் செய்து கொண்டு
சுந்தரின் வருகையை நோக்கி ஆவலோடு ஹாலில் உட்கார்ந்து
கொண்டு பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கிறாள் சூர்யா – சுந்தரின்
மனைவி. குழந்தைகள் ரம்யாவும், சவிதாவும் வெளியே விளையாடப்
போயிருக்கிறார்கள். சுந்தரின் ஒன்று விட்ட சகோதரன்- சித்தப்பா
பையன், முரளி, உள்ளே கஸ்ட் ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
சுந்தர் குஷாலாக ‘மங்கையரில் மகராணி.. மாங்கனி போல் உன் மேனி..’
என்று சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே, ப்ரீஃப் கேஸுடன்
உள்ளே நுழைந்து சூர்யாவின் பக்கத்தில் சோபாவில் அமர்கிறான்)
சூர் : அட.. அட.. இன்னிக்கு என்ன ஐயா செம மூடில் இருக்கற மாதிரி
இருக்கு?
சுந் : வாஹ்… வாஹ்… அதையேன் கேட்கறே… ஆபீஸ் விட்டு அப்படியே
வந்துட்டிருந்தேனா… அப்படியே கிறங்கி நின்று விட்டேன்…
சூர் : (ஏளனமாக) ஏன் உங்க மானேஜரைப் பார்த்தீங்களாக்கும்…?
சுந் : மானேஜரைப் பார்த்தால் ஏன் கிறங்கி நிற்கிறேன்..? அதிர்ந்து
அல்லவா நின்னுருக்கணும்… அப்பப்பா.. பெண்ணா அவள்..! என்ன
ஸ்ட்ரக்சர்… ஒவ்வொரு அங்கமும் அப்படியே ரவிவர்மா ஓவியம்
போலே செதுக்கி செதுக்கி வெச்ச மாதிரி…. வெச்ச கண்ணை எடுக்-
கவே முடியலையே…!
சூர் : (முகம் சிறிது சிவப்பாக மாற) நீங்கள்ளாம் ஆபீஸிற்கு வேலை செய்-
யப் போறீங்களா… இல்லே ரோடிலே போற பெண்களையெல்லாம்
‘ஸைட்’ அடிக்கப் போறீங்களா..?
சுந் : சூர்யா..இந்தக் கடவுள் எங்களுக்கு கண்ணையும் கொடுத்து. அழகான
பெண்களையும் படைச்சுட்டானே… அழகழகா அவங்க எதிரிலே
வரும்போது பார்க்காம இருக்க முடியலியே.. வழவழப்பான உடல்..
அதுவும் நேர்த்தியா அந்த ப்ளூ ஷ்ஃபான் ஸாரி. உடுத்திட்டிருந்தா
பார்… மார்வலஸ்.. நீ பார்த்திருந்தாக் கூட அப்படியே அவளை
அள்ளி அணைச்சுருப்பே…
சூர் : (சிறிது கோபமாக) என்ன… டிராக் மாறுது… ஆமா.. அதுமாதிரி ஒரு
அழகியைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதானே…
சுந் : (பெருமூச்சுடன்) என்ன செய்யறது..? அதுலே ரெண்டு ப்ராப்ளம்
இருக்கே… ஒண்ணு… எனக்கு ஆல்ரெடி கல்யாணமாயிடுத்து… நம்ம
சட்டப்படி ‘பிகமி’ அலௌடு இல்லே…
சூர் : (சிறிது அழுகையோடு) ஓஹோ… அதுக்கென்ன நான் கன்ஸென்ட்
லெட்டர் கொடுத்துடறேன்..
சுந் : ஐ நோ… ஐ நோ.. என் சூர்யா டார்லிங் அதைக் கொடுத்துடுவா…
ஆனா.. அவள் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கணுமே..
சூர் : ஏன் அதையும் கேட்டுப் பார்த்துடறதுதானே..?
சுந் : ம்.. விடுவேனா.. அவள் வழவழப்பான உடம்பைத் தொட்டு, அவ
ஸாரியையும் தொட்டுப் பார்த்துப் பேசி வாங்கி வந்துட்டேன்..
சூர் : ஓ.. நோ… இன்காரிஜிபிள்.. (கண்ணைக் கசக்குகிறாள்)
சுந் : அடி அசடே… (ப்ரீஃப் கேஸைத் திறந்து அந்த நீல ஸாரியை எடுத்து கொடுக்கிறான்)
சூர் : ஓ,, மார்வெலஸ்…
சுந் : பைத்தியம்.. நான் சொன்னது ஷோகேஸ் பொம்மையை…
சூர் : (அசடு வழிய) ஆமாமா… சமர்த்துதான்..
சுந் : ம்… கல்யாணமாகி பதிமூணு வருஷமாச்சு… உங்கிட்டே இருக்கிற
சமர்த்து கொஞ்சமாவது இங்கே வரவேண்டாமா..
(என்றபடியே அவளை அள்ளி அணைக்கிறான்)
சூர் : ஸ்.. சும்மா இருங்க… குழந்தைக வந்துடப் போறாங்க… முரளி
அண்ணா வேறே கெஸ்ட் ரூமில் இருக்கார்…
சுந் : முரளி வந்திருக்கானா..? எப்ப வந்தான்..?
சூர் : இப்பத்தான்.. வந்து ஒரு மணி நேரமாச்சு… ரெஸ்ட் எடுத்திட்-
டிருக்கார்.
சுந் : ஓகே.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்..
(ரம்யாவும், சவிதாவும் ஓடி வருகிறார்கள்)
ரம் : டாடீ… நான் கேட்ட அந்த டெடி பேர் வாங்கி வந்தீங்களா..?
சுந் : (பெருமூச்சோடு) அதையேன்டா கேட்கறே.. நான் அந்தக் கடைக்குப்
போனேனா… அந்தக் கடை வாசல்லே ‘நோ பார்க்கிங்’ போர்டு போட்டிருந்தது..
அவனே ‘நோ பார்க்கிங்’ போர்டு போட்டிருக்கிறப்போ
நாம எப்படிப் பார்க்கறதுன்னு வந்துட்டேன்…
ரம் : போங்க டாடீ.. நீங்க எப்பவுமே இப்படித்தான்.. ஆசையா கேட்டா
உடனே வாங்கித்தர மாட்டெங்கறீங்க…
சுந் : யூ ஸில்லி.. கமான் டார்லிங்…
(டெடி பேரை எடுத்துக் கொடுக்கிறான். ரம்யா அதை
வாங்கிக் கொண்டு குதிக்கிறாள்)
ஹாய்… சவிதா… இந்தா உனக்கு நீ கேட்ட பொம்மை…
(சவிதாவின் முகத்திலும் மகிழ்ச்சி தொத்திக் கொள்கிறது)
சூர் : ஆமா.. ஐயாவுக்கு திடீரென்று எங்கிருந்து இவ்வளவு பணம்..?
சுந் : போனஸ் வந்தது..
(ஹாலில் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த
முரளியின் மனதிலே ஆதங்கம். மெதுவாக முணு-
முணுக்கிறான்)
முர : வாட் எ ஹாப்பி ஃபாமிலி.. என்னை மாதிரியே சம்பளம்,
ஸர்வீஸ்… பட்.. சின்ன குடும்பம்… நம்ம வீட்டிலே நடக்-
கறது நேர் எதிரிடையாயில்லே இருக்கு..
(அவன் பார்வையிலே அவனது வீட்டுக் காட்சி
விரிகிறது)
காட்சி — 2
(முரளியின் வீடு. முரளி தலையில் இடி விழுந்த மாதிரி
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்-
திருக்கிறான். அவன் மனைவி சாந்தா பக்கத்தில் தரையில்
உட்கார்ந்திருக்கிறாள். குழந்தைகள், ராமு (11வயது),
வேணு (7 வயது), காயத்ரி (6 வயது), உமா (2 வயது)
மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூலைக்கொரு-
வராய் உட்கார்ந்திருக்கிறார்கள்)
ராமு: நம்மாலே முடியாது… நம்மாலே முடியாது… எப்பவும் இதே
பாட்டுத்தான். அங்கே என் ஃப்ரண்ட்ஸெல்லாம் ஜாலியா
எக்ஸ்கர்ஷன், பிக்னிக்னு போறாங்க… என்னை ஒரு வருஷம்
கூட அனுப்பறதில்லே..
முர : ராமு… அதுக்குப் பணம் கொடுக்க வேண்டாமா.. நமக்கு
ஏகப்பட்ட செலவு… பிக்னிக்குக்கு கொடுக்கறதுக்கு பணத்துக்கு
எங்கே போறது..?
ராமு: எல்லோருடைய அப்பாவும் எப்படிக் கொடுக்கறாங்களாம்? என்
தலைவிதி… பிக்னிக் போக முடியாது… எல்லார் மாதிரியும் கொஞ்-
சம் டீக்கா டிரஸ் போட்டுட்டு போகலாம்னா அது முடியாது..
மத்தியான லஞ்சுக்கு எல்லோரும் விதவிதமா டிபன், சாப்பாடெல்-
லாம் கொண்டு வராங்க. நம்ம வீட்டிலேயோ எப்பவும் தயிர்
சாதம்… இல்லே இல்லே… மோர் சாதம்… எனக்கு என் ஃப்ரண்டு
க்ரூப்லே தலை நிமிர்ந்து நிற்க முடியலே… எல்லோரும் டீஸ்
பண்ணறாங்க… ஏன்தான் பிறந்தேனோ..?
(சலிப்போடு வெளியே போகிறான்.. அதிர்ந்து உட்கார்ந்-
திருந்தான் முரளி. 11 வயது பையன் பேசும் பேச்சா இது?
நிதர்சனமான உண்மையை ஜீரணிக்க முடியவில்லை)
வேணு: (மெதுவாக தயங்கியபடி) அப்பா.. என் யூனிஃபார்ம் கிழிஞ்சி-
ருக்காம். எங்க மிஸ் பணிஷ் பண்ணினாங்க. உடனே புதுசு
வாங்கிப் போட்டுட்டு வரணும்னு சொல்லியிருக்காங்க.
முர : சாந்தா.. யூனிஃபார்ம் என்ன விலையாகும்?
சாந் : குறைஞ்சது ஐநூறு ரூபாய் ஆகும்..
முர : மை காட்… நான் என்ன பண்ணுவேன்..?
வேணு: அப்பா.. நாளைக்கு புதுசு போட்டுட்டு போகலைன்னா எங்க
டீச்சர் வகுப்புக்குள்ளே விடமாட்டாங்க…
(அழ ஆரம்பித்தாள்)
முர : (எரிச்சலோடு) ஓ… ஸ்டாப் இட்.. பார்க்கலாம்.
சாந் : உங்க கையாலாகாத்தனத்தையும். எரிச்சலையும் குழந்தைகள் மேல்
ஏன் காட்டறீங்க…?
முர : வாட் டூ யூ மீன்… கையாலாகாத்தனமா..? நாள் பூரா உழைச்சு
ஓடாத் தேயறேன்… உன் கண்ணுக்கு அதெல்லாம் தெரியலியா?
சாந் : அது சரிதான்.. உழைக்கிறீங்க.. ஆனா பிராக்டிகலா பார்த்தா
குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க முடியலையே?
வேணு என்ன செய்திருக்கான் தெரியுமா? எல்லா பசங்களும் லஞ்ச்
அவர்லே ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னிருக்காங்க. குழந்தைதானே..
இவனுக்கும் ஆசை வந்திருக்கு… பக்கத்திலிருந்த பையனுடைய
பையிலிருந்து ரூபாய் எடுத்துட்டுப் போய் வாங்கித் தின்னிருக்கான்.
இது அவனுடைய டீச்சருக்குத் தெரியப் போய் ஒரே அமர்க்களம்..
நான் சாயந்திரம் குழந்தைகளைக் கூப்பிடப் போனபோது ஒரே
கம்ப்ளைன்ட்…
முர : (அதிர்ச்சியோடு, கோபமாக) டேய் திருட்டு ராஸ்கல்…
(அடிக்க கை ஓங்குகிறான். வேணு பயத்தில்
மூலையில் பதுங்குகிறான்)
சாந் : நோ.. அவனை ஒண்ணும் சொல்லாதீங்க… நான் ஆல்ரெடி
கண்டிச்சிருக்கேன்… குழந்தைகளுக்கு நாம பிராபரா வேண்டியதைச்
செய்யலேன்னா அவங்க தடம் மாறினாலும் மாறிடுவாங்க. இந்த
நாலையே சமாளிக்க முடியாதபோது வயத்துலே வேறே இது
ஒண்ணு… கர்மம்.. கர்மம்…
(அலுத்துக் கொள்கிறாள்)
முர : சாந்தா… நீயும் என்னை வார்த்தையாலே கொல்லாதே…!
சாந் : இல்லீங்க… நான் உங்க மனதை கஷ்டப்படுத்தணும்னு சொல்லலே..
இதுதான் உண்மை.. சம்பாதிக்கிறீங்க… வாஸ்தவம்.. ஆனா
நம்மாலே மத்தவங்க மாதிரி டீஸன்டா – ரெஸ்பெக்டபிளா – நல்ல
வீட்டிலே கம்ஃபர்டபிளா இருக்க முடியறதா பாருங்க.
(அலுப்போடு எழுந்து உள்ளே போகிறாள். பித்துப்
பிடித்தவன் போல் உட்கார்ந்திருக்கிறான் முரளி)
காட்சி — 3
(சுந்தர் வீட்டில், கெஸ்ட் ரூமில் பழையதையே நினைத்துக்
கொண்டிருந்த முரளி, ‘ஹாய்… முரளி’ என்ற சுந்தரின்
குரல் கேட்டு இவ்வுலகிற்கு வருகிறான்)
சுந் : டேய்… என்னடா… கனவு கண்டுண்டிருக்கியா…?
முர : இன் எ வே எஸ்… சுந்தர்… உன்னைப் பார்த்துப் பொறாமைப்-
படறேண்டா….
சுந் : டேய்… டேய்… என்னடா இது…?
முர : நோ.., ஐ ஆம் ஸீரியஸ்… ‘சிறு துளி பெருவெள்ளம்’னு சொல்ற
மாதிரி ‘சிறு குடும்பம் பெருமகிழ்ச்சி’.. இப்ப என்னைப் பார்…
நாலு குழந்தைகளாச்சு… அதோடு ஷீ ஈஸ் இன் ஃபேமிலி வே..
செலவைத் தாக்குப் பிடிக்க முடியலே… திண்டாடறேன்.. நீ ப்ளான்
பண்ணி, டீ.வி.., ஃப்ரிட்ஜ், சொந்த வீடு… இத்யாதி.. இத்யாதி…
குடும்பத்தை ஹாப்பியா வெச்சிருக்கே…
சுந் : ‘குழந்தைகள்’ செல்வங்கள்டா…
முர : அது பழைய காலத்துலே சுந்தர்… ராக்கெட் வேகத்துலே விலைவாசி
ஏறற இந்தக் காலத்துக்கு ஒத்து வராது.
சுந் : ஒருமாதிரி அவங்களை ஒப்பேத்தி விட்டேன்னா, அப்புறம் ஹாயா
வ்வொருவர் வீட்டிலேயும் போய் கொஞ்சம் கொஞ்சம் இருந்துண்டு அவங்க கூட
சந்தோஷமா இருக்கலாமே…
முர: நானும் அப்படித்தான் நினைத்தேன்.. ஆனா இப்போ அவங்களை
நல்லபடியா அவங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து
வளர்த்தலேன்னா, இந்தக் காலத்துப் பசங்களுக்கு அப்பா மேலே
உள்ள பாசமும், மதிப்பும், மரியாதையும் போயிடுமோன்னு பயமா-
யிருக்கு… உலகமும் மெடீரியலிஸ்டாக ஆயிட்டு வறது.. ‘ஆமாமா..
இந்த அப்பன் நமக்கு என்ன பண்ணினான்.. நாம் எதுக்கு அவ-
னுக்கு பண்ணனும்’னு திங்க் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்-
சுடுவாங்க. நெட் ரிஸல்ட்… இப்பவும் மன வேதனை… அப்பவும்
மனவேதனை….
சுந் : முரளி.. உனக்கும் ஆல்மோஸ்ட் என்னைப் போல்தானே சம்பளம்
வரது…
முர : கரெக்ட்… ஆனா அடுத்தடுத்து பிரசவம் ஆனதாலே சாந்தா உடம்பு
ரொம்பவும் கெட்டுப் போனதாலே எக்கச்சக்கமாய் மெடிகல் எக்ஸ்-
பென்ஸ் ஆயிடுத்து. ஆயிண்டும் இருக்கு… ‘பிள்ளையார் பிடிக்கப்
போய் குரங்காய் மாறிடுச்சு’ன்னு சொல்வாங்க. அதுபோல வயது
காலத்துலே ஒண்ணுக்கு நாலு பசங்க இருந்தா நல்லதுன்னு நினைக்-
கப் போய்… சும்மாவா சொன்னாங்க… சிலருக்குச் சொன்னாத்
தெரியும்.. சிலருக்கு அனுபவிச்சாத்தான் புரியும்னு… நான்
ரெண்டாவது வகை போலிருக்கு….
சுந் : கமான்… டோன்ட் லூஸ் ஹார்ட்… கடவுள் நல்ல வழி காட்டுவார்..
முர : என்னடா காட்டப் போறார்… உனக்கு ஏதாவது யோசனை
தோணிச்சின்னா சொல்லு…
சுந் : (சிறிது யோசித்து) நீ தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்..
சாந்தா ஆல்ஸோ ஷுட் நாட் மிஸ்டேக் மீ…
முர : டேய் சொல்லுடா… முடியும்னா செய்யலாம்.. இல்லேன்னா வீ வில்
டிராப் இட்…
சுந் : டேய் முதல்லே நீ போய் ஒரு ஃபாமிலி ப்ளான்னிங் டாக்டரைப்
போய் பார்… இப்ப பிறக்கப் போற குழந்தையையும், உமாவையும்
நல்ல வசதியாக இருக்கும் நமக்குத் தெரிந்த குழந்தையில்லாத
இரு தம்பதிகளுக்கு தத்துக் கொடுத்துடலாம். அந்தக் குழந்தைகள்
ப்ராப்ளம் இல்லாம சீரும் சிறப்புமா வளர்வாங்க. பின்னே ராமுவும்
வேணுவும், காயத்ரியும் தானே.. ரொம்பக் கேர்ஃபுல்லா ப்ளான்
பண்ணி செலவு செய்து, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம்
செய்து கொடு. சாந்தாவுக்கும் நல்ல டாக்டர்கிட்டே கூட்டிட்டுப்
போய் காட்டி மருந்து கொடுத்து ஹெல்த் இம்ப்ரூவ் பண்ண வழி
செய்துடு…இப்போ எல். ஐ.சி., பாங்குகள் நிறைய ஸேவிங் ஸ்கீம்ஸ்
ஆஃபர் பண்ணறாங்க… அதுலே சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா
சேமிச்சுக்கோ… அந்த ஸ்கீம்ஸ் பீரியட் பதினஞ்சு, இருபது வரு-
டம்னு இருக்கறதாலே மந்த்லி டெபாஸிட் கம்மியாத்தான் இருக்கும்
ஸ்ட்ரெயின் தெரியாது.. குழந்தைகளுக்கெல்லாம் ஜாம் ஜாம்னு
கல்யாணம் பண்ணி அவங்களைத் தனிக் குடித்தனம் வைத்துவிட்டு
நீயும், சாந்தாவும் இந்தப் பென்ஷன் ஸ்கீம்ஸில் வர பணத்தை
வெச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்.. குழந்தைகள்கிட்டே எதிர்-
பார்க்கறதுக்கு பதிலா நீ அவங்களுக்கு ஏதாவது செய்யலாம்.
இப்போ உனக்கு இம்மீடியட்டா ஏதாவது மொத்தப் பணம்
வேணும்னா சொல்லு… நான் ஏற்பாடு பண்ணித் தரேன்.
(முரளி சுந்தரையே ஒரு கணம் பார்த்தான். அவன்
கண்களில் கண்ணீர்.. அப்படியே அவனைத் தழுவிக்
கொண்டான்)
ஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி
ஒரு கோப்பை சூரியன்- காலவன் கவிதைகள்-(ஆர்.கே.ராமநாதன்)
நூல் விமர்சனம்
கவிதை என்பது என்ன? எவற்றைக் கவிதை எனச் சொல்லலாம்?விதை என்பது வாழ்விற்கு இன்றியமையாதது.விதை விதைத்து பயிர் வளர்த்து உயிர் ஓம்புவது போல் எண்ணங்களை, சிந்தனைகளை விதைத்து மனித மனங்களைப் பயிரிட்டுப் பதன்படுத்துவதால்,’க’ என்னும் விகுதி சேர்த்து கவிதை எனப் பெயரிட்டார்களோ?
அறிந்த சொற்களின் வழியே அறியாத ஒன்றை கவிதை அறிமுகம் செய்ய வேண்டும்.அறிவின் புரிதல்களைத் தாண்டி புது அனுபவத்தை கவிதைகள் தர வேண்டும்.அவை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டாலும்,அவரவர் மன நுட்பத்திற்கேற்றவாறே உணரப்படுகின்றன.
கவிதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இயக்கம், வங்கி வேலை எனப் பன்முக ஆளுமையான ஆர். கே, ‘காலவன்’ என்ற புனை பெயரில் ‘ஒரு கோப்பை சூரியன்’ என்ற தலைப்பில் ‘குவிகம்’ வெளியீடாக தன் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். பதிப்பாளர்களின் 50-வது நிகழ்ச்சியில் அவர்களின் 25-வது பதிப்பாக இந்நூல் வெளி வந்துள்ளது சாலச் சிறப்புடையது.
லா ச ராவின் மயக்கும் திகைக்க வைக்கும் எழுத்தின் தாக்கம் இவரது சில கவிதைகளில் காணப்படுகிறது.
‘உண்மையின் சுடரொளியில் ஒளியுறும் சொற்களின் விக்ரகங்கள்’ சொல்லெனப்படுவது என்கிறார்.’குவளையின் தரிசனமும் ஸ்பரிசமும் போதும் அது நிரம்பியிருந்தாலும், காலியாகவே இருந்தாலும்’என்ற வரிகள், நினைவுகள் கிளர்த்தும் எண்ண வண்ணங்களை அழகாகக் காட்டுகின்றன.கோப்பை இவரை மிகவுமே கவர்ந்திருக்கிறது.’குவளை மேல் சதிராடும் நீராவியாக’ என்று எழுதுகிறார்.’தொடர்புச் சங்கிலிகள் துளித்துளியாய் சேதி சொல்ல ஒரு குவளை தேறியது; ஒரு குவளை காதல் மழை மேகம்’
‘நீ வந்த பிறகு தான் கவிதைகள் உணர்வின் தீர்க்க நிலை முகமணிந்து கொண்டது ‘ எனக் காதலியைக் கொண்டாடுகிறார்.அவள் தான் இது நாள் வரையான தன் தேடலின் இலக்கு எனப் புரிந்து கொள்கிறார்.
‘நானும் நீயும் நாமெனும் கலப்பின் வர்ணக் கீற்றுகளெனும் வரையறை வகுத்திணைத்தேன் பிறகுதான் நிறப்பிரிகை மாற்றம் புரிபடல் துவங்கியது-நான் நீ என்பதாய் நீயே நான் என்பதாய்’ இவ்வரிகள் லா ச ராவை நோக்கி என்னை அழைத்துச் சென்றன.அதே போல் மற்றொன்று
‘வெறும் காலடிச் சத்தத்தில்,
மன எதிர்பார்ப்பின் நொடிகளில்,
சிநேகத்தின் வாசனைப் பரவலில்,
தோற்ற நிழலின் சிறு கவிப்பில்,
தரிசனத்தின் ஆதர்சத்தில்,
ஆறுதல் சார்பின் எதிர்பார்ப்பில்,
வெறும் சுண்டு விரல் பலத்தில் கூட
விலக்கமேற்று வரவேற்கும்
திரைச் சீலை வடிவில்தானே
வண்ணம் கொண்டதாய்
வலம் வந்தன
நமக்குள்ளான கதவுகள்..?’
அவள்’ஒவ்வொரு பார்வையிலும் ஒரு கவிதை எழுதி வைக்கிறாளாம்;ஒவ்வொரு கவிதையிலும் பார்வை பதித்து வைக்கிறாளாம்’! கொடுத்து வைத்தவர்.
‘என் அத்தனை கவிதையும் உன் பார்வை பேச்சிற்கு முன்
யாக நெய்த்துளி எனத் தெரியாத நிழல் முனியாக’ என உருகுகிறார்.
‘வார்த்தைகளின் கூடாரம்’ சிறப்பாக இருக்கிறது.
அம்மா, அப்பா, தோழி,வீடு, காகம், துரோகம்,என்று அனைத்துமே பாடு பொருளாகின்றன இவருக்கு.நாமிருக்கும் உடலில் உணர்வு இணைந்திருப்பது போல் இவர் வசிக்கும் வீடு இவருடன் பிணைகிறது.
பிற மொழிச் சொற்களை இவர் தவிர்ப்பது நலம்.’தெய்வச் செயல்’ கவிதைக்கு மனம் இணங்கவில்லை; தூயது, போலிக்கு மயங்குவது என்பது எக்காலத்திலும் உண்மையில்லை.
‘இருப்பேன் என்றென்றும் ஒரு கவிதையாய், கதையாய்,படைப்பாய்,பாட்டாய்’ என்ற இவர் ஆவல் நிறைவேறுவதாக!
திரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்
மணிரத்தினத்தின் இருவர் படப் பாடல்
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்.
மலர் போன்றவளே.. சற்று இங்கே நில்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
செங்கனி ஊறி மிகவும் இனிப்பாக இருக்கும் உன் இதழ்களைதிறந்து உன் மொழியால் என்னுடன் பேசு..
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
அதாவது அன்று ஒரு நாள் முழு நிலவின் போது அந்தபுரத்தில் உள்ள குளத்தில் நெற்றியில் முத்து போல நீர் உருண்டோட நீராடிய பெண்மணி நீயா??
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
திருமகன் என்றால் எல்லா நற்பண்புகளும் கொண்ட ஒருவன். திருமகனே என்னை சற்று பார்.
வெள்ளை குதிரையில் வந்தவனே.. வேல் போன்ற என் கண்கள் கூறும் வார்த்தைகளை கேள்..
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அன்று முழுநிலவில் நான் அந்தபுர குளத்தில் நீராடுகையில் என்னை பார்த்தவன் நீயா..
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன..
மான்களின் விழிகளை கொண்ட இந்த பெண்ணின் கண்களில் இருந்து வரும் பார்வை, அம்புகளை போல என் மனதை துளைக்கிறது..
பாண்டினாடனைக் கண்டு என்உடல் பசலை கொண்டதென்ன..
பாண்டி நாட்டு வீரனே.. உன்னை கண்டதும் என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது..
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
அன்று நான் முழு நிலவின் வெளிச்சத்தில் கண்ட அந்த காட்சி..
இன்றும் என் கனவில் தோன்றிக்கொண்டே இருக்கிறது..
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை..
இடையினில் மேகலை இருக்கவில்லை..
உன்னை காணாத துயரத்தில் துடித்து துடித்து இளைத்து போனேன்.
இளைத்த காரணத்தினால் என் இடுப்பினில் மேகலையும் நிற்கவில்லை..
யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
என் தாயும் உன் தாயும் எந்த விதத்திலும் சம்மந்தபடாதவர்கள்..
ஆனாலும் நம் இருவரது இதயமும் ஒன்றாக கலந்தது எப்படி??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
நானும் நீயும் எந்த விதத்திலும் தெரிந்தவர்கள் இல்லை..
ஆனாலும் எப்படி நமக்குள் இந்த உறவு ஏற்பட்டது??
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.
ஒரே ஒரு முறை தான் என்னை நீ தொட்டாய்..
அதுவே என்னுள் ஒரு அரும்பு பூத்தது போல ஆகி விட்டதே..
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.
நீர் மண்ணோடு கலந்து பிரிக்க முடியாதது போல எப்படி ஆகின்றதோ அப்படி நம் நெஞ்சங்கள் சேர்ந்துவிட்டது எப்படி??
‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு
லூயிஸ் ஃபோன்ஸி என்ற உலகப் பிரசித்தி பெற்ற ஸ்பானிஷ் பாடகர் ! அவரது ‘டெஸ்பேஸிடோ ‘ என்ற ஆல்பம் அவரை பல விருதுகளுக்குச் சொந்தக்காரராக்கியது. ஹிந்திப்பாடல் போலவே இருக்கும் இந்த ஸ்டைலிஷ் பாடலைக் கேட்டு மகிழுங்கள் !
(இதைப் போல ஒரு ஹிந்தி, தமிழ், தெலுங்கு பாட்டைக் கேட்டமாதிரி இருக்குல்ல?
Luis Alfonso Rodríguez López-Cepero, popularly known as Luis Fonsi, is a Puerto Rican singer and songwriter who shot to stardom with his world famous Spanish song ‘Despacito’. He won four Latin Grammy Awards for the song. Interested in music from a young age, he always knew that he was meant to be a singer.
Luis Fonsi – Despacito ft. Daddy Yankee
6,329,693,494 views
குட்டீஸ் லூட்டீஸ் :—சிவமால்
‘தாங்க்ஸ் ஃபார் நாட் யூஸிங் மொபைல்”
பணம் எடுப்பதற்காக பாங்கிற்கு சென்றிருந்தேன். என் மகள்
மிதிலாவும் உடன் இருந்தாள். க்யூவில் நின்றிருந்த என்னிடமிருந்து
மொபைல் ஃபோனை வாங்கி தன் சிநேகிதிக்கு கால் பண்ண புறப்பட்-
டாள்.
‘மிதிலா.. இங்கே ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது. அங்கே
போட்டிருக்கு பார்’ என்று காஷியர் காபினின் முகப்பைக் காட்டினேன்.
‘தாங்க்ஸ் ஃபார் நாட் யூஸிங் மொபைல் ஃபோன்’ என்று ஒரு
போர்டு தொங்கிக் கொண்டிருந்தது.
‘என்னப்பா… ‘மொபைல் யூஸ் பண்ணாதே’ என்று எழுதவில்லையே..
இப்போ என்ன நான் மொபைல் யூஸ் பண்ணலேன்னா என்னைத் தாங்க்
பண்ணுவாங்க. யூஸ் பண்ணினா தாங்க் பண்ண மாட்டாங்க. அவ்வ-
ளவுதானே. எனக்கு அவர்கள் தாங்க்ஸ் வேண்டாம்’ என்று நம்பரை
அழுத்த ஆரம்பித்தாள்.
திகைத்து நின்றேன்.
–
குவிகம் இல்ல நிகழ்வுகள்
இன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன் – எஸ் கே என்
உஷா சுப்ரமணியன்
1976ல் “வடிகால்” என்னும் ஆனந்தவிகடன் முத்திரைக் கதையுடன் அறிமுகமான இவர் இதழியல் படித்தவர். 350க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
அயோவா பல்கலைக் கழக உலக எழுத்தாளர் மாநாட்டில் பங்கு பெற்றவர். இவரது சிறுகதைகள் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வர்த்தகப் படங்களும் விளம்பரப் படங்களும் தயாரித்தவர். ஓவியம் பரதநாட்டியம் ஆகிய கலைகளிலும் தேர்ந்தவர்.
** ** **
இவரது “போருக்குப் புறப்பட்டவள்” என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.
“போற்றி, போற்றி… பெண்மை போற்றி..! என் பெயர் பாரதி, அழைக்கின்றேன் நான், என் பெயர் கொண்ட முண்டாசுக் கவிஞரை வக்காலத்திற்கு…” நிமிர்ந்த உடம்பும், நேர்கொண்ட பார்வையும் கட்டுக் கடங்காத தன்னம்பிக்கையும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை கூட்டம் கைதட்டி வரவேற்றது.
தோற்றத்திலும் பேச்சிலும் செயலிலும் பாரதிகண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களுக்கான உண்மையான விடுதலை பெற்ற பெண்கள் அடங்கிய பொன்னுலகத்தை கனவுகாணும் வீராங்கனையாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மடைதிறந்த வெள்ளம்போல் மேடைகளில் பொழிபவள் பாரதி.
கல்லூரியிலும் மேடைகளிலும் எப்போதும் வியந்து பார்க்கப்படும் பாரதிக்கு ஒரே அண்ணன், சம்பத். டாக்டராகவோ என்ஜினீயராகவோ அவனைப் பார்க்க பெற்றோர்கள் ஆசைப்பட்டாலும் அவன் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு பாங்க் வேலையில் சேர்ந்தவன். பாரதிதான் ஊரையே மேய்க்கும் தலைவியாக வரப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு பெற்றோருக்கு.
எல்லா அண்ணன்-தங்கைகளையும் போலவே பாரதிக்கும் சம்பத்திற்கும் இடையே ஒருவர் மற்றவர் காலை வாரும் வேடிக்கை வாக்குவாதங்கள்.
வீட்டிலிருக்கும் பாட்டிக்கும் பாரதிமேல் கொள்ளை ஆசை. பாட்டி அந்தக் காலத்திலேயே திருமணத்திற்கு முன் வரவிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதியவள்.
உறவில் திருமணம் நிச்சயத்தபின் பெரியவர்கள் பேச்சுக்கிணங்கி கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டாம் என்று எழுதியவள். பாட்டியின் தைரியமும் தெளிந்த மனப்போக்கும் தான் பேத்திக்கு வந்துவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.
பாரதி எம் ஏ. முடித்து வேலைக்குப்போக பரிட்சைகள் எழுதி வந்தாள். ஓய்வுநேரத்தில் பிரஞ்சு வகுப்பு, டென்னிஸ் பயிற்சி, ஆடைகளில் முழுச் சுதந்திரம் என்று வளைய வந்தாள்.
பாரதியின் திருமணப் பேச்சு எழுந்தது. டெல்லியில் பெரிய கம்பெனி எக்ஸிகூடிவ், நல்ல சம்பளம், அமெரிக்க எம்.டெக், திருமணமாகி வெளிநாட்டில் இருக்கும் தமக்கை, நல்ல குடும்பம், ஜாதகமும் பொருந்தி வந்திருந்திருந்தது.
அம்மா இந்த வரனைப் பார்க்கலாம் என்றாள். அப்பா மகளின் கருத்தை கேட்டார். அவள் பதிலளிக்கவில்லை. அண்ணன் சம்பத்திற்கு வேறு எண்ணம். இருபத்தோரு வயதில் குடும்பப் பெண்ணாக அமிழ்துபோகவேண்டுமா என்று கேட்டான். கொஞ்ச காலம் சுதந்திரமாக இருந்து, நல்ல வேலைக்குப்போய் தனக்குப் பிடித்தவனை மாப்பிள்ளையாக வரிக்கட்டுமே என்பது அவன் அபிப்பிராயம் கூறினான்.
சில வினாடிகள் மௌனமாக இருந்த பாரதி, காதுகள் சிவக்கச் சீறினாள்…
“உனக்கு இருபத்தெட்டு வயசாகிறது. இன்னும் பெண் ஒண்ணும் சரிப்படலை. ஏழு வயது சின்னவளுக்கு நல்ல இடம் வரதுன்னு வயிற்றெரிச்சலா இருந்தா வெளிப்படையாச் சொல்லிவிட்டுப் போறதுதானே…”
எல்லோருக்கும் அதிர்ச்சி. எனினும் வந்துள்ள வரன் பற்றி பாரதியின் அபிப்பிராயம் என்ன என்று தெரிந்துவிட்டது.
பிள்ளை டெல்லியிலிருந்து வந்தான். பாரதி சூரிதார் அணிந்து அவனுடன் சோபாவில் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாள். பைப் பிடிக்கும் தந்தையும் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் தாயும் டின்னருக்கு வந்தார்கள். கல்யாணம் நிச்சியமாயிற்று.
ஐ.ஏ.எஸ். நுழைவுத் தேர்வுக்கு நாட்கள் நெருங்குகிறது என்று சம்பத் நினவுபடுத்திக்கொண்டே இருந்தான். ஆனால் பாரதியோ புடவை, ஆடைகள், நகைகள் வாங்கக் கடைக்குபோவதில் ஆர்வமாக இருந்தாள்.
பத்திரிகை கூட அடித்தபிறகு ஒரு சிக்கல். அலுவலகத்திலிருந்து அப்பா சுரத்திலாமல் வந்தார்.
“இன்று காலை பையனின் அப்பா போன் செய்தார். அவர் பிள்ளை கார் வாங்கினால் கம்பெனியில் மாசம் ஆயிரம் ரூபாய் அலவென்ஸ் கிடக்குமாம்…. புதிசா இல்லாவிட்டாலும் ஒரு பழைய மாடல் கார் ஐம்பதாயிரத்துக்கு வாங்கிடுங்கோ என்றார்”
பாட்டிக்கு மாக கோபம். அவ்வளவு ஸ்டைலாகப் பழகிய அந்த குடும்பத்தார் சொல்வது ஒத்துவராது என்றாள். புத்திசாலிப் பேத்திக்கு இந்த சாமர்த்தியக்கார சம்பந்தம் வேண்டாம் என்றாள்.
ஏற்பாடெல்லாம் ஆனபிறகு நிறுத்துவதற்கு அப்பாவிற்கு சங்கடமாக இருந்தது. தன் வளையல்களை வேண்டுமானாலும் விற்கத்தயார் என்றாள் அம்மா.
தனது பிராவிடண்ட் நிதி லோன் எடுத்தால் அடைப்பதற்கு சர்வீஸ் இல்லை. வேறு வழியில்லாததால், முழுவதையும் எடுத்துவிடுவதுதான் என்று தீர்வு என்கிறார் அப்பா.
அடுத்த அறையிலிருந்து சீறிக்கொண்டு வந்தாள் பாரதி.
“அப்பா லோன் எடுத்தால் திருப்பமுடியாது. சரி ஒத்துக்கிறேன் … எட்டு வருஷமா சம்பாதிக்கிறானே அண்ணா, அவனுக்குத் தங்கை கல்யாணத்தில பொறுப்பில்லையா? பி.எஃப்பிலும் பாங்கிலும் யாருக்குச் சேர்த்து வைக்கிறான்? ஒவ்வொரு குடும்பத்தில் அஞ்சு தங்கைகளுக்கு ஒரு அண்ணன் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இவனால் ஒருத்தி கல்யாணத்துக்கு உதவ முடியாதா? கேட்கிறபடி கேட்டாள் தன்னால் தர்ரான், உங்க பெண்ணின் வாழ்க்கையில் உங்களுக்கு இவ்வளவுதான் அக்கறை..”
என்று அழ ஆரம்பிக்கிறாள்.
மேடையேறி முழக்கும் புதுமைப் பெண்ணை தலைமுடி முழுவதுமாக வெளுத்த பாட்டி இரக்கத்துடன் பார்த்தாள்.
ஏதாவது சொன்னால், “கார் என்ன அவருக்கு மட்டும் ஏறிப் போகவா, என்னையும் ஆசையுடன் ஏற்றிப் போகத்தானே..” என்று பதில் வரும் என்று புரிந்து பெருமூச்சு விட்டாள்.
என்று முடிகிறது.
** ** **
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அந்தக்கால இளைஞர்கள் எண்ண ஓட்டங்களுக்கும் சவால்களுக்கும் இடையே போராடி வந்ததை மையமாகக் கொண்ட கதைகளை, உஷா சுப்பிரமணியன் உட்பட, பலர் எழுதினார்கள். முரண்பாடுகளும் ‘hypocrisy’களும், சமரசங்களும் விரவிக்கிடக்கும் கதைகள் இவை.
மேடையில் முழங்கும் கருத்துகள் சொந்த வாழ்க்கையில் பொருளற்றுப் போகும் அவலத்தை கதையில் வடித்திருக்கிறார். போகிறபோக்கில் ஒரு பத்தி வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
இதே தகுதியும், வயதும் உள்ள ஆண்மகன் இடைப்பட்ட காலத்தில் உணரும் பாதுகாப்பின்மை அவளிடம் இல்லை. ‘இன்னும் ஒரு கரண்டி தயிர்விடு’ என்று அம்மாவிடம் கேட்க அவள் தயங்கவேண்டாம்… வேலை வெட்டி இல்லாமல் ஷோக்கைப் பாரு என்று அப்பா முணுமுணுக்கவில்லை. வேறு வீட்டுக்குப் போகப் போகும் பெண் என்ற சலுகை நிறையக் கிடைத்தது”
இணையத்தில் கிடைக்கும் இவரது கதைகள்
விகடன் கதைகள்
கதா ரசிகர்களுக்கு இந்த விகடன் கதைகள் நல்ல விருந்து.
சிறுகதைகள் சிறப்பிதழ் (199 பக்கங்கள்) என்றும் சொல்லலாம்.
கமலஹாசன், அனுராதா ரமணன், மேலண்மை பொன்னுசாமி, பாக்கியம் ராமசாமி மற்றும் பலரின் கதைகள் இதில் இருக்கின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைச் சொடுக்கி விகடன் கதைகள் தளத்திற்குச் செல்லுங்கள்.
சந்திராயன் -2 – டி ஹேமாத்ரி
எப்படியாவது தொடர்புகொள், இதுதான் வேண்டுவது,,*,

ஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்
அறம் கதையின் தாக்கம் என்னைவிட்டு மறையவில்லை. அதுவும் ஒரு அழகான கதைசொல்லி திரு பவா செல்லதுரை சொல்லும்போது அதம் சிறப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.
கேளுங்கள். கேட்டபின் ஜெயமோகன் அவர்கள் வலைப்பக்கத்தில் அந்தக் கதையையும் படித்து மகிழுங்கள் !!
3 இடியட்ஸ் – அருமையான காட்சி
உங்கள் மனதையும் மூளையையும் ஒரே சமயத்தில் தொடும் நகைச்சுவைக் காட்சி – 3 இடியட்ஸ் படத்தில் ஆமிர்கான் மெஷினைப் பற்றியும் சொல்லும் ஜனரஞ்கமான காட்சி !
3
குக்கீஸ் – அருமையான காமெடி
இது ஒரு அழகான குறும்படம். மெல்லிய நகைச்சுவை இழையும் இந்தக் குறும்படத்தைப் பார்த்து ரசியுங்கள்.
குவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
“எந்த அற்புத மரி?” என்றேன் நான்.
“இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்.”

“அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட – நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு – நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் “இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.
***
நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?
என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து
எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.
சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.
ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் சுமதியைப் பார்த்தேன்.
கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.
*****
மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
(அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மட்டுமல்ல – உலக காபி தினமாமே?)
கொஞ்சம் காபி குடிக்கலாம், வாங்க!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் ஆடு மேய்க்கும் சிறுவன் அதிசயிக்கும்படி அவனது ஆடுகள் துள்ளிக் குதித்து, மகிழ்வுடன் ஆடிக்கொண்டிருந்தன! அருகே இருந்த புதரில் நல்ல சிவப்பு நிறத்தில் காய்த்திருந்த ‘பெர்ரி’ பழங்களைத் தின்றதினால்தான் இந்தப் பரவசம் என்பதை அறிந்தான் ‘கால்டி’ என்ற அந்தச் சிறுவன்! தானும் சிறிது தின்றபோது, ஏற்பட்ட புத்துணர்ச்சி வித்தியாசமாக இருக்கவே, தன் மதகுருமார்களிடம் அவற்றைக் கொண்டு கொடுத்தான். இது ஏதோ சைத்தான் வேலை என்று அஞ்சிய குருமார்கள், அந்தக் காய்களை அருகிலிருந்த நெருப்புக் குண்டத்தில் வீசினர். அதிலிருந்து எழுந்த வாசனை அவர்களை மீண்டும் ஆட்கொண்டன! தீயில் வறுத்து, தண்ணீரில் பாதுகாத்தனர். சைன, ஜப்பானியத் துறவிகளின் தேனீர் பானம் போல, தங்கள் பிரார்த்தனைகளின் போது விழிப்புடன் இருக்க இப்பானத்தை அருந்தத் தொடங்கினர் – பின்னர் படிப்படியாக, காபிக்கொட்டைகளை வறுத்து, கொதிக்கும் நீரில் ஊற வைத்து மணமான டிகாக்ஷன் தயாரிப்பது வந்தது –
கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வந்த ‘ப்ளாக்’ காபி, இன்று பால், சர்க்கரையுடன் சேர்ந்து, வீதிக்கு வீதி ‘கும்மோணம்’ பில்டர் காபியாகி, வாழ்க்கையின் முக்கியமானதொரு அங்கமாகி விட்டது வரலாறு!
காலையில் டைனிங் டேபிளிலோ, பால்கனியில் தொங்கும் மூங்கில் கூடையிலோ, ஹாலில் ஆடும் ஊஞ்சலிலோ, சினிமாக்களில் வருவதைப்போல் வீட்டுக்கு முன்னிருக்கும் புல்தரையிலோ காபி அருந்துவது சுகம் – உடன் அன்றைய சூடான செய்திகளுடன் பேப்பரும் இருந்து விட்டால் இரட்டிப்பு சுகம்! (எதிரில் மனைவியும் இருப்பது காபி தயாரித்தது யார் என்பதைப் பொருத்தது!).
சின்ன வயதில், காபி வாசனையோ, தண்ணீர் கொதிக்கும் சத்தமோ கேட்டால்தான் காலையில் படுக்கையிலிருந்து எழும்பத் தோன்றும்! அம்மா எப்போதும் ப்ளாண்டேஷன் ஏ, பீபெரி (தட்டைக் கொட்டை, குண்டுக்கொட்டை) இரண்டையும் கலந்துதான் உபயோகிப்பாள் – சிக்கிரி எப்போதும் கிடையாது. நல்ல நிறம், மணம், சுவை இவற்றுக்கு இந்த காம்பினேஷனே சரி என்பது அவள் அனுபவம்!
பாண்டிபசாரில் நரசுஸ் காபி, பாண்டியன் காபி அப்போதெல்லாம் பிரசித்தம். முதல் நாள் மறந்து விட்ட சில நாட்களில், மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று, பாண்டியன் காபிப்பொடி வாங்கியிருக்கிறேன்! ஊதுவத்தி மணத்துடன் மதுரை மீனாட்சி சிரித்திருக்க, எவர்சில்வர் சம்புடத்திலிருந்து கரண்டியால் ஏ மற்றும் பீ பொடிகளைக் கலந்து, பாண்டியன் காபி என்று ப்ரிண்ட் செய்த திஸ்யூ பேப்பர் கவரை வாயால் ஊதித் திறந்து, பொடியைக் கரண்டியால் லாவகமாக உள்ளே இட்டு, மேஜையின் மேல் இரண்டு தட்டு தட்டி, அந்தக் கால வெக்டர் வேயிங் மெஷினில் நிறுத்து, பையின் வாயினை இரண்டு மடி மடித்து, பசையுள்ள பிரவுன் கலர் காகித நாடாவால் ஒட்டி, சூடாகக் கொடுக்கும் காபிப்பொடிக்கு வீட்டில் வரவேற்பு அதிகம்!
நாக்கு நீளமான சில பெரிசுகளுக்கு, வீட்டிலேயே அரைக் கைப்பிடி (‘ஸ்ராங்கா’ என்பது தோராயமாக ஒரு கைப்பிடியில் பாதி அளவு!) பச்சைக் காபிக் கொட்டையை வறுத்து – அதிகம் கருக்க விடாமல், சிறிது பொன்னிறத்தில் – கை மெஷினில் (மினியேச்சர் காபி அறவை மெஷின்), கைப் பிடியைக் கரகரவென்று சுற்றி, அதன் மூக்கின் வழியே விழும் புத்தம்புது வாசனையுடன் காபிப் பொடியில் பில்டரில் டிகாக்ஷன் இறக்கி, புதுப் பசும்பாலில் கலந்து, நுரையுடன் சூடாகக் குடிக்கும் காபியைத் தவிர வேறு எதையும் காபி என்று ஒத்துக்கொள்ள மனம் வராது!
பில்டரில் டிகாக்ஷன் இறக்குவது ஒரு கலை! தேவைக்கேற்ப காபிப்பொடியைப் போட்டு சிறிது இதமாக அமுக்கி அதன் மேல் சிலர் சிறிய ஜாலி மூடி ஒன்றை வைப்பார்கள் – என் அம்மா, தினசரி காலண்டரிலிருந்து ஒரு தேதி ஷீட்டைக் கிழித்து, பில்டரில் காபிப் பொடி மேல் போட்டு அதன் மேல் கொதிக்கும் நிரை விடுவாள் – அதையும் நேராக வேகமாக விடாமல், மெதுவாகச் சுற்றியபடியோ அல்லது முன்னும் பின்னுமாகவோ விடுவது ‘ஸ்ட்ராங்’ டிகாக்ஷனுக்கு உத்தரவாதம்! கோபத்துடன் வேகமாக சுடுநீரை விடுவது, பில்டரின் தலையில் தட்டுவது இவையெல்லாம் ‘கொட கொட’வென தண்ணீராய் இறங்கும் டிகாக்ஷனுக்கு வழி வகுக்கும் – நல்ல காபிக்கு உதவாது!! இந்தத் தொல்லைகளிலிருந்து ஓரளவுக்கு விடுதலை கொடுப்பவை இப்போது புழக்கத்திலுள்ள ‘காஃபி மேக்கர்’ என்னும் பில்டர்!
பசும்பாலோ, எருமைப்பாலோ, கறந்த பாலோ, கவர்ப் பாலோ – காபியின் சுவையை மாற்றும் வல்லமை கொண்டவை இவை – நன்கு காய்ச்சி, பொன்னிறம் வரும் அளவுக்கு காபி டிகாக்ஷனைச் சேர்த்து, சர்க்கரையும் (கொஞ்சம் குறைவாக இருந்தால் நல்லது – அடிநாக்கில் காபியின் கசப்பு சிறிது நேரத்துக்கு இருப்பது காபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!) சேர்த்து, இரண்டு முறை நுரை வர ஆற்றி, டபரா தம்ப்ளரில் கொடுக்கப் படும் காபிக்கே என் ஓட்டு!
டீத்தண்ணீர் போல நீர்த்திருக்கும் டிகாக்ஷன், ப்ளாஸ்டிக் வாடையடிக்கும் கவர் பால், டயபெடீஸ் என்று சர்க்கரைக்குப் பதிலாய் சேர்க்கப்படும் ஈக்வல் – இவை நல்ல காபிக்கு விரோதிகள்!
இடம், நேரத்திற்கேற்றார்போல் வித விதமாக அவதாரம் எடுக்கும் காபி! – கல்யாண காபி, ஓட்டல் காபி, டீ ஸ்டால் காபி, சினிமா தியேட்டர் எஸ்பிரஸோ காபி, அவசரத்துக்கு வரும் இன்ஸ்டண்ட் காபி, பாலில்லா பிளாக் காபி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மற்றும் விமானங்களில் தரப்படும் பிரவுன் கலர் காபி என்ற வஸ்து , நிறம், மணம் இல்லா சுடுநீருக்கிணையான ரயில்வே காபி, கிலோமீட்டருக்கு ஒன்றென முளைத்திருக்கும் ‘கும்பகோணம் டிகிரி காபி’ கடைக் காபிகள் – (‘இதுதான் முதலில் வந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி ஷாப்’ என்றவரின் கடையில் காபி குடித்து வெளியே வந்து, போர்டில் பார்த்தால், உரிமையாளர் உம்மர் பாய் என்றிருந்தது!)
உலகில் பெட்ரோலுக்கு அடுத்து அதிக டிமாண்டில் இருப்பது காபிதான்!
காலை ஐந்தரை மணிக்கே திநகர் கீதா கபேயில் நல்ல காபி கிடைக்கும் – முக்தா ஶ்ரீனிவாசன், தமிழ்வாணன், உபால்டு, ஆரூர்தாஸ் போன்றவர்களைக் காலை வேலையில் கையில் அன்றைய பேப்பருடன் – காலைக் காபிக்கு இங்கு வருவதைக் காணலாம்!
“தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காப்பியைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம்” – ஏ.கே.செட்டியார், குடகு, சென்னை, 1967.
இரண்டு நண்பர்கள் சந்தித்தாலும், சிநேகிதியுடன் கடலை போடும்போதும், நடைப் பயிற்சி முடிந்த பிறகும், பெரிசுகள் பழங்கதை பேசும்போதும் காபியும் ஒரு பாத்திரமாக மாறி வாழ்க்கையுடன் இணைந்துவிட்டது என்பதே உண்மை!
வாழ்க காபி ரசிகர்கள்!