Monthly Archives: June 2016
தோளின் சுமை – சிந்தாமணி


கேவலம், என் சுமையும்
ஒரு பாரமா?
அண்டத்தை அளாவி ஆள்பவன் நீ
அடியவன் என்னை அடைவதும் உனக்கு, ஒரு தூரமா?
இமைகளின் கனத்தைத்
தாங்கா இருவிழிகள்
இரவெல்லாம்
தூக்கம் துறந்தன.
திருட்டு மூட்டையாம்
குருட்டு வேதனை
தோளில் ஏற்றியே
நடந்த பாதங்கள்
பழகின பாதையும் மறந்தன.
பாரவண்டி பக்கத்தில் இருக்க
என் தலையில் ஏனிந்தச்
சும்மாடு சுமைகேடு?
அப்பாடா ,
என் தோளின் சுமையை
உன் தாளில் போட்டதும்
கண்களில் தூக்கம்
கப்பிக்கொண்டது.
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்! —– சிவமால்
இறைவி – விமர்சனம்
இறைவி படம் பார்த்தேன்!
கார்த்திக் சுப்புராஜ் அடுத்த மணிரத்னம் தான்.
கதையும் வசனமும் ஒரு மாதிரி இருந்தாலும் சொல்லும் விதம் அல்ட்ரா புதுசு.
பிடித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு . வித்தியாசமாக இருக்கிறது. என்பதே என் பதில்!
நம் எதிர்பார்ப்புகளை மீறிப் பாத்திரங்கள் பயணிக்கின்றன.
“ஆண் -நெடில் பெண் குறில் – என்ன கேவலமான மனிதர்கள் நாம்’ என்று ஒரு ஆண் சொல்லும் போது ஆண்கள் கை தட்டுகிறார்கள். டைரக்டருக்கு வெற்றி ! படம் வெற்றியடையுமா? தெரியவில்லை.
Inspired by Sujatha’s Jannal malar என்று சொல்கிறார். மணி சாரின் ஆயுத எழுத்து வாசனை கொஞ்சம் அடிக்கிறதோ?
‘பெட்டிக்கு வெளியே’ எண்ணங்கள் நிறைந்த படம்.
முதலில் அதன் டிரைலர் பாருங்கள்!! அப்புறம் புதுயுகம் டிவியில் பத்திரிகை ஆசிரியர் மதன் கார்த்திக் சுப்புராஜை பேட்டி கண்டதின் யூட்யூப் வடிவம் பாருங்கள்!
மொத்தத்தில் அக்கினித் திராவகம்
ஷாலு மை வைஃப் – எஸ் எஸ்
குருஜினியும் ஷாலுவும் பஜ்ரங்க்பலி ஷர்மாவும் சேர்ந்து கோமாதாவின் கோவிலுக்காக்கத் தயார் செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் எதிரணியின் பிரசார பீரங்கி பலமாக வேலை செய்தது. எருமையும்தான் நமக்குப் பால் தருகிறது. சொல்லப்போனால் எருமைமாட்டுக் காபிதான் டிகிரி காபி மற்றவையெல்லாம் வெறும் பிளஸ் டூ தான். எமனுக்கு வாகனம் எருமை. எமன் தமிழன். காமதேனு – கோமாதா எல்லாம் ஆரிய மாயை என்று அவர்கள் பிரசாரம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது.
தமிழ்நாட்டில் எப்பவும் எல்லாத்திலும் ரெண்டு கட்சி இரு
க்கும். அந்தக் காலத்தில தெருக்கூத்திலக்கூட எரிஞ்ச கட்சி எரியாத கட்சி என்று ரெண்டு இருக்குமாம். காப்பிக்கு டபரா டம்ளர் என்று இருப்பது போல. இட்டிலுக்கு சட்னி சாம்பார் என்று இருப்பது போல.
முன்னாடி சோழன்-பாண்டியன் என்று அடிச்சுக்கிட்டோம். அப்புறம் சிவன்-.விஷ்ணு என்று அடிச்சுக்கிட்டோம். சினிமாவில எம் ஜி ஆர் – சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்று எப்பவும் நாம் ரெண்டு பிரிவா பிரிஞ்சே நிப்போம். அரசியல்ல திமுக – அதிமுக, கருணாநிதி – ஜெயலலிதா இப்படி எல்லாத்திலேயும் ரெட்டை ரெட்டையா நாம பிரிஞ்சே இருப்போம். அது தான் இரண்டின் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையோ?
எங்க வீட்டிலேயே எடுத்துக்கங்களேன்.ஷாலு ஆளுங்கட்சி. நான் எதிர்க்கட்சி. ஷிவானி, ஷ்யாம் இருவரையும் சேர்த்துக்கொண்டு மக்கள் நலக்கூட்டணி அமைப்பேன். ஷிவானி, ஷாலுகூட எல்லாத்துக்கும் சண்டைபோடுவா. என்கூட இருப்பது போலத் தோன்றும். ஆனா எங்கட்சிக்கு வரமாட்டா. ஷ்யாம் சுயேச்சை எம் எல் ஏ ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப் போடுவதுபோல யாருக்குப் போடுகிறான் என்பது அவனுக்கே தெரியாது. என் சைடுன்னு நினச்சுக்கிட்டிருப்பேன் ஆனா பல சமயம் சேம் சைடு கோல் போடுவான். ஒவ்வொரு முறையும் எனக்கு சாதகமா ஓட்டுப் போட நான் காசு அல்லது மற்ற சமாசாரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும். ஷாலு அம்மாவாச்சே. குழந்தைகளுக்கு இலவசங்களைக் கொடுத்தே என்னைக் கவுத்திடுவா.
இதெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு ஷாலு ஒரு கொடுமைக்கார அரக்கி மாதிரி, நம்ம சீரியல்களில் வரும் வில்லிகள் மாதிரி தோன்றியிருக்கும்னா அதற்கு நான் பொறுப்பில்லை. நானும் கொஞ்சம் சாதாரண நிகழ்ச்சிக்குக் கண்ணும் காதும் வைத்து எழுதுவதுண்டு. ஷாலு இதைக் கண்டு கொள்வதில்லை என்பதால் என் தெனாவட்டு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
ஆனால் இது எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே ஆட்டிவிடும் என்பதைத் தெரிந்து திடுக்கிட்டுப்போனேன். அது என்ன அக்மெரிண்ட் என்கிறீர்களா?
நானும் ஷாலுவும் எப்படி லவ் பண்ணிக் கல்யாணம் செய்துகொண்டோம் என்று உங்களுக்கு விலாவாரியா சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவுக்கெவ்வளவு இன்னோசெண்ட் ஆக இருந்தாளோ அந்த அளவுக்கு இப்போ இண்டெலிஜெண்டா இருக்கா. கல்யாணம் முடிஞ்சு முதல் இரவில ஷாலு என்கிட்டே சொன்னாள்:
“இங்கே பாருங்கோ! இப்போ உங்க கிட்டே சில முக்கியமான சமாசாரம் பேசப்போறேன். என்னன்னா லவ் பண்ணும் போது நாம நிறைய பொய் சொல்லியிருப்போம். நிறைய சமாசாரங்களை மறைச்சிருப்போம். அதெல்லாம் காதல் பண்ணும் போது ஓகே. ஆனால் கல்யாணம் ஆனப்புறம் நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது.
“கரெக்ட் ஷாலு , நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது. கிட்ட வா “
:”கொஞ்சம் இருங்கோ! நாம நிறைய பேசணும். எங்க தமிழ் டீச்சர் எங்களுக்கு இதைப்பத்தி கிளாஸ் எடுத்திருக்கா. நாம மனம் விட்டுப் பேசணும். அப்பறம்தான் மத்த எல்லாம். “
” தமிழ் டீச்சர் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பேச்சுதான். எங்க என் சி சி மாஸ்டர் கூட சொல்லிக் கொடுத்திருக்கிறார் ஸ்கூலில. பேச்சைக் கொறை செயலில் இறங்குன்னு”
“நான் சீரியஸா பேசறேன். நீங்க ஜோக் அடிக்கிறீங்க. இந்த சமயத்திலதான் நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்.
“நானும் அதையேதான் சொல்றேன்- நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்”
“கொஞ்சம் கேளுங்க! நான் உங்ககிட்டே மறச்சதை முதல்ல சொல்லிடறேன். அப்பத்தான் நான் எந்தவித குற்ற மனப்பான்மையும் இல்லாம உங்க கூட இருக்கமுடியும். அதுக்கப்பறம் நீங்க உங்களைப் பத்தின எனக்குத் தெரியாத உண்மையெல்லாம் சொல்லணும். “
“ஷாலு, உன்னைப்பத்தின எந்த உண்மையையும் என்னால ஏத்துக்கமுடியும். பழசு ஏதாயிருந்தாலும் அதை மறந்துட்டு நம்ம வாழ்க்கையைத் தொடங்குவோம். நேரமாகுது.”
“நீங்க பழசு வேண்டாமுன்னு சொல்றதைப் பாத்தா எனக்கு சந்தேகமாயிருக்கு”
“நீ பழசைச் சொல்லத் துடிக்கிறதப் பாத்தா எனக்கு பயமாயிருக்கு”
” நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடறேன். நீங்க பெருந்தன்மையோட அதை ஏத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
” ஷாலு, இதெல்லாம் சினிமாவிலேயும் கதையிலும் தான் வரலாம். நிஜ வாழ்க்கையில முதல் இரவில் யாரும் இப்படிப் பேசிக்கிட்டிருக்க மாட்டாங்க.”
” ப்ளீஸ், நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடுங்க! நான் உங்களை லவ் பண்ணறதுக்கு முன்னாடியே…….
முன்னாடியே?
சொன்னாள்.
என் தலை வெடித்தது. காலேஜ் படிப்பு முடிஞ்சப்புறம் ஒரு வருஷமா அவள் லவ் பண்ணியிருக்காளா? அவ அம்மா அப்பாவுக்கும் தெரியாமலா? மகாபலிபுரம் லைட் ஹவுஸ் ஜோசியன் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே? எத்தனை நாள் நானும் இவளும் மணிக்கணக்கா பேசிக்கொண்டிருந்தோமே ? அப்பல்லாம் சொல்லலையே? வெறும் லவ் தானா? அதுக்கும் மேல உண்டா?
“அந்த வயசில தெரியாம வந்த ஆசை. அதில ஒரு கிக். மொள்ள அம்மா அப்பாகிட்டே சொன்னேன். எனக்கு வந்த கடிதங்களையெல்லாம் காட்டினேன். அவர்கள் ஒத்துக்கவேயில்லை. எல்லாவற்றையும் கிழித்து எறிந்தார்கள். அதற்குப் பிறகு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.”
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
“விடு ஷாலு, கீதா சொன்னாளே?” என்று ஏதோ பேசவேண்டும் என்று உளறினேன்.
“யார் கீதா?” – அவள் குரல் உயர்ந்தது.
“கீதா .. பகவத் கீதா .. நடந்தது ஓடட்டும் . நடப்பவை நடக்கட்டும். அது சரி..” கொடேஷன் சரியா சொல்லத் தெரியாமல் தடுமாறினேன்.
“இப்ப தான் எனக்கு நிம்மதியாச்சு. உங்களுக்கு அதில ஒண்ணும் வருத்தமில்லையே?”
விஷத்தைக் கொடுத்துவிட்டு அதில் சர்க்கரை போதுமோ என்பது போலல்லவோ கேட்கிறாள் என்று நினைத்தேன்.
“இந்தாங்கோ! இந்தப் பாலைக் குடிச்சுட்டு உங்க கதையைச் சொல்லுங்கோ!” என்றாள்.
“ஷாலு, ஒரே ஒரு கேள்வி உன்னுடைய பழைய சமாசாரத்தைப் பத்தி. நீ லவ் பண்ணிணியே அவன் பேர் என்ன? “
“வாட். லவ்வா?” அலறினாள் ஷாலு. :யாரு சொன்னா நான் லவ் பண்ணினேன்னு ? நான் லா பண்ணினேன்னு சொன்னது உங்களுக்குக் காதில விழலையா? சட்டம். பி ஜி எல். கரெஸ்பாண்டில் பண்ணினேன். உங்களுக்கு லவ்வுன்னா விழுந்தது?”
“அப்பாடா, என் வயத்தில கூஜா நிறைய பாலை வார்த்தாள். நீ ‘லா’ பண்ணினேன்னு சொல்லணுமா என்ன? உன் ரத்தத்திலேயே ஆர்குமெண்ட் ஊறியிருக்கு.”
இந்தக் களேபரத்தில என்னோட பழய கதையைக் கேட்க மறந்துட்டா. நல்லதாப் போச்சு!
“நீங்க எப்படியிருந்தாலும் நான் உங்களை மனசார ஏத்துக்கறதா அன்னிக்கு ஆஞ்சநேயர் ஸ்வாமி கிட்டே வாக்குக் கொடுத்துட்டேன். சரி, நம்ம அக்ரிமெண்டுக்கு வருவோமா?”
“அதென்ன அக்ரிமெண்ட்? ஓஹோ ! கல்யாணத்துக்கு முன்னாடி லா(வ் ) பண்ணின குசும்பா?”
“உங்களை நான் மகாபலிபுரத்தில பாத்த அன்னிக்கு எனக்குத் தூக்கமே வரலை. கனவில நம்ம ரெண்டு பேருக்கும் அன்னைக்கே கல்யாணம் ஆயிடுச்சு. நடு ராத்திரி எழுந்திருச்சு உங்க பேரை மேஜை மேலேயிருந்த பேப்பரில் எழுதினேன். அப்போதான் தெரிஞ்சுது அது ஒரு ஸ்டாம்ப் பேப்பர் என்று. அதில நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனபிறகு நடக்கப்போற ஒரு அக்ரீமெண்டைக் கற்பனையா எழுதினேன். இது தான் அது” என்று காட்டினாள்.
அதை நான் சத்தமாகப் படிக்கப் படிக்க ஷாலு வெட்கத்தில் நெளிந்தாள். அதில் எழுதியிருந்ததைப் படிக்கும்போது எனக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி அக்ரிமெண்ட் போட்டா எந்தக் கல்யாணத்திலும் பிரச்சினை வராது. “இவ்வளவு ஆசையாடா ஷாலுக்குட்டி” என்று கேட்டுவிட்டு அவளை இறுக்கப் பிடித்தேன்.
அந்த அக்ரிமெண்டில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்துகொள்ள ஆசையாய் இருக்கிறதா? சாரி! லேடீஸ் மற்றும் ஜெண்டில்மென். அதெல்லாம் கண்டிப்பா பர்சனல். உங்க ஆசையைத் தூண்டிவிட்டதற்காக ஒரே ஒரு ஐட்டம் மட்டும் சொல்லுகிறேன்.
கண்டிஷன் நம்பர் 7: என்ன தகராறு வந்தாலும் ராத்திரி பத்து மணிக்குக் கட்டிலில் கட்டிப் பிடித்துக் கொண்டு ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பழைய பாடலின் முதல் வரியை மூன்று முறை பாடவேண்டும்.
ஆனால் குவிகத்தில் எழுதிவரும் இந்தத் தொடர் எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே அசைத்துவிடும் போலிருக்கிறதே !
அப்போது போன் அடித்தது. குவிகம் ஆசிரியர்தான். கசாமுசான்னு கத்தினார்.
” நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும் கோமாதா பூஜையையும் பஜ்ரங் பலியையும் தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள். ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள். இதனால் சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்” என்று ஒரே மூச்சில் சொன்னார்.
அதைதொடர்ந்து ஒரு சம்மன் எஸ்எம்எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது
என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள். கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது அந்த எஸ் எம் எஸ். ” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா என்னா சார்) விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.
ஜட்ஜ் ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.
அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில் இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது. உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம். “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை உடனே தடை செய்யவேண்டும் ” என்று புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.
இந்தக் கதை இப்போது நீதி மன்றத்தின் பார்வையில் உள்ளது. இடைக்காலத் தடை இல்லையென்றால் கதை தொடரலாம்.
(வாய்தா ஏதும் இல்லையென்றால் அடுத்த மாதம் முடியலாம்)
அப்பாவின் டைப்ரைட்டர் – டாக்டர் பாஸ்கர் புத்தக விமர்சனம்
ஜூன் 4 – மாலை 4 மணி ஜி ஆர் டி அரங்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்றால் அது ஒரு திருமண அல்லது நிச்சயதார்த்த விழா என்று தானே நினைப்பீர்கள்!
மன்னிக்கவும். அது ஒரு புத்தக வெளியீட்டு விழா!
டாக்டர் பாஸ்கர் எழுதிய ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ என்ற கட்டுரைப் புத்தகம்தான் அது.
மணிமேகலைப் பிரசுரம் பதிப்பித்துள்ளது.
விழாவைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் புத்தகத்தின் விமர்சனத்துக்குப் போகலாம்.
இந்த விழாவில் , பாஸ்கரன் என்ற மனித நேயமிக்க ஒரு மருத்துவரையும், நட்புக்கு உதாரணமாகத் திகழும் சிறந்த நண்பரையும் , தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு எழுதிவரும் எழுத்தாள்மையையும், புத்தகத்தின் மூலம் தந்தைக்கு விழா எடுத்த பெருந்தகைமையையும் கண்டோம்.
ரவி தமிழ்வாணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், லேனா தமிழ்வாணன், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் கிரிஜா ராகவன், உரத்த சிந்தனை ராம் ,முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ,மற்றும் எழுத்துலகப் பிதாமகர் அசோகமித்ரன் ஆகியோரை மனம் போன அளவில் பேசவிட்டு விழாவின் நாயகரான டாக்டர் பாஸ்கர் இரண்டே இரண்டு நிமிடம் பேசிய ஓர் அபூர்வ நிகழ்ச்சியையும் அங்கே கண்டோம்.
இதை எழுதிவிட்டு “அப்பாவின் டைப்ரைட்டர்’ புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டு எழுதுகிறேன். ( இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது இதைப்படித்து முடிக்க )
எனது ஒரு வரி FIR :
படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது.
விவரம்:
சொல் புதிதில்லை கருத்தும் புதிதில்லை. குபுக்கென்று சிரிக்க வைக்கவில்லை. கண்ணின் ஓரத்தில் கண்ணீர் கசிய வைக்கவில்லை. ஆனால் நடை – கோடையின் துவக்கத்தில் அக்கரையின் ஓரத்தில் கொஞ்சமாக ஓடும் காவிரியைப் போல எழுதியிருக்கும் இவரும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சொல்ல வைத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. (அலை பாயுதே மாதவன் சொல்வது மாதிரி )
வறுத்த நிலக்கடலையை அல்லது சீடையை ஒன்றொன்றாக வாயில் போட்டு அசை போட்டுக்கொண்டு அந்தக்காலத்தில் அக்கா , தம்பி தங்கைகளோடு சண்டை போட்டுக்கொண்டு குமுதம், விகடன், கல்கி, கல்கண்டு, சாவி, இதயம், குங்குமம் படிப்போமே !
{ நான்: நான் முதல்லே படிச்சுட்டு தர்றேன்.
அக்கா: நீ முதல்லே வேண்டாம் – முதல் அட்டைலேர்ந்து கடைசி அட்டை வரை படிப்பே !
நான்: இல்லேக்கா -சத்தியமா தொடர் கதைகள்- சிறுகதைகள் எல்லாம் படிக்கமாட்டேன் ! சும்மா துணுக்கு எல்லாம் பாத்துட்டுத் தர்ரேன்
அக்கா: சரி! சரி! நீயே படிச்சுட்டுத் தா. அதுக்காகச் சத்தியமெல்லாம் பண்ணாதே!}
அதைப்போல இதமாக இருந்தது.
பிள்ளையார் சுழி போட்டு, அப்பாவிற்கும் அவரது டைப் ரைட்டருக்கும் ஒரு கும்பிடு போட்டு டாக்டர் பாஸ்கரன் சென்ற பாதை கடற்கரைச் சாலையில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவது போல ஜாலியாக இருந்தது.
பழகிய நண்பர்கள் ( சீராஜூதீன், லேனா)
பிடித்த எழுத்தாளர்கள் ( சார்வாகனன், ம.வே சிவகுமார், சுஜாதா, அழகியசிங்கர், ஜெயகாந்தன், விக்ரமன், அசோகமித்திரன், சந்திரமோகன், சந்திரசேகர், ரமேஷ், முத்துலிங்கம், மாலன் )
மதிக்கும் மனிதர்கள் ( மாமனார், தலைமை ஆசிரியர், டாக்டர் சாந்தா, கிருஷ்ணமூர்தி ஸ்ரீநிவாஸ், டாக்டர் சுனிதி சாலமன், )
பிரபலங்கள் ( தேவன், சஞ்சை சுப்ரமணியன், மாண்டலின் ஸ்ரீநிவாஸ், சோ ,கிரிஜா ராகவன், மனோரமா )
திரைப்படங்கள் ( இதயக்கமலம், தில்லானா மோகனாம்பாள், மைக்கேல் மதன காம ராஜன், காக்கா முட்டை, குற்றம் கடிதல்)
மனதை வருடிய செய்திகள் ( சிறுவயது பள்ளி, மார்கழிப் பூ, செக்கு, கிருஷ்ண ஜெயந்தி,சென்னை வெள்ளம், அய்யப்பன்)
சென்ற இலக்கியக்கூட்டங்கள், படித்த புத்தக விமர்சனங்கள்,
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மருத்துவத் துறையைப்பற்றிப் பல உயரிய பதிவுகள்
டாக்டர் பாஸ்கரன்! உங்களிடம் ஸ்டெத் மட்டுமல்ல நல்லதொரு பேனாவும் இருக்கிறது.
இரண்டையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை!
மணிமகுடம் – புதிய சரித்திரத் தொடர் கதை — ஜெய்சீதாராமன்
முன்னுரை
அமரர் கல்கியின் நாவல்களில் தலைசிறந்த படைப்பு விஜயாலயன் ஸ்தாபித்து தஞ்சையைத் தலைநகரமாய் கொண்டு, ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் பொற்காலமாய் திகழ்ந்த பிற்கால சோழர்களின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகும். என்னுடைய இந்த குறுநாவலை எழுதத்தூண்டிய சிந்தனை, பொன்னியின் செல்வனில் அவர் குறிப்பிட்டிருந்த பாண்டியர்களின் வம்சாவளிப் பொக்கிஷங்களான, விலைமதிக்க முடியாத மணிமகுடத்திலிருந்தும் இரத்தின மாலையிலிருந்தும் எழுந்ததாகும்!! அவைகள் மதுரையைத் தலைநகரமாய் கொண்ட பாண்டியர் பொருட்டு ஈழ மன்னன் மகிந்தனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விவரம் வரலாற்றில் பொறிக்கப்பட்ட சான்றாகும்!! இந்த என் கற்பனை நிறைந்த குறுநாவலின் வடிவாக்கம் அவைகளை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது! நான் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்தவைகளை முடிந்தவரையில் கற்பனை மூலமாகவே சித்தரித்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வனின் கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன் இக்கதையிலும் முக்கிய பாத்திரத்தை ஏற்கிறான். அமரரின் கற்பனை வடிவாக்கம் நந்தினி, திருமலை மற்றும் ஒன்றிரண்டு பாத்திரங்களைத் தவிர ரவிதாசன் உள்பட ஏனையோர் அனைவரும் இவ்வரலாற்றில் அடக்கம். கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நேயர்கள் அறிந்துகொள்ள ஒரு தொடர் வரைபடத்தையும், சோழ நாடு மற்றும் ஈழப் பிரதேசங்களில் வரும் முக்கிய இடங்கள் அடங்கிய வரைபடத்தையும் இணைத்திருக்கிறேன்.
வந்தியத்தேவன், மர்ம புதிர் முடிச்சுகளை அவிழ்த்து, எல்லா பாண்டியர் எதிர்ப்புகளையும் முறியடித்து, மற்றும் தன் புத்தி சாதுர்யத்தினால் பொக்கிஷங்களை சோழர்களிடம் பத்திரமாக சேர்ப்பிக்கின்றானா என்பதற்கான விடையை நாவலின் இறுதியில் காணலாம்.
எனவே என்னால் இயன்றமட்டும் சிரமப்பட்டு இதை ஒரு விறுவிறுப்பான கதையாக முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை சித்தரிக்க முயன்றிருக்கிறேன். அதில் நான் தோல்வியுற்றிருந்தால் இது என் முதல் கதையானதால் உங்கள் மன்னிப்பை நான் சிரம்தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். இதற்குமுன் கதை எழுதும் பழக்கத்தை நான் ஏற்றதில்லை!
கதையை முடித்து முதன்முதலில் இக்கதையின் நகலை என் நண்பர் Mr. சகஸ்ரநாமனிடம் காண்பித்தேன். அதைப்படித்து என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர் – அவரே இக்கதையின் அஸ்திவாரம்!
இக்கதைக்கு உறுதுணையாய் இருந்து என்னை ஊக்குவித்த குரு Ms..ப்ரீதம் சக்ரவர்த்தி, கடைசிவரை சரியான பாதையில் இட்டுச் சென்றவர். அவருக்கு என் முதல் நன்றி உரித்தாகுக! எனக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்திய மனைவி ஷாந்தாவுக்கு நன்றி. எனக்கு ஊக்கமளித்த மகள் சுஷீலாவுக்கு நன்றி. மற்றும் எழுத்துப் பிழைகளை சரிபார்த்துக்கொடுத்த Mr. ஸ்ரீநிவாசன், Mrs. உஷாஸ்ரீநிவாசன், பாலகிருஷ்ணன் முதலியோருக்கு நன்றிகள்!
முக்கியமாக பொன்னியின் செல்வன் க்ரூப்பின் K.சுந்தர் அவர்கள் வரலாற்று சம்பந்தமாக திருத்தங்கள் செய்ய மிகவும் உதவிகள் புரிந்திருக்கிறார். பிழை திருத்தங்கள் மற்றும் சரியான நடைமுறைகள் முதலியவற்றிலும் உதவி செய்து என்னை ஊக்குவித்திருக்கிறார். அவருக்கு நான் என்றென்றும் கடன்பட்டுள்ளேன். க்ரூப்பின் மற்றுமொரு உறுப்பினர் Mr சுந்தர்ராஜனும் பிழைகளை திருத்தம் செய்வதில் துணை புரிந்திருக்கின்றார். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக!
கடைசியாய் இதை படிக்கும் ஒவ்வொரு நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்கள், விமர்சனம் முதலியவைகளை என்னிடம் jands.raman@gmail.com மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த குறுநாவலை அமரர் கல்கிக்கு சமர்ப்பிக்கின்றேன்
ஜெய்சீதாராமன்
==================================================================
அத்தியாயம் 01. குடந்தை சாலையில்..
பொழுது சாயும் மாலை நேரம். சூரியன் தன் பொன்நிறக் கதிர்களால் பூமியை செந்நிறமாக மாற்றிப் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. ஆடி மாதத் தென்றல் மரங்களையும் செடிகொடிகளையும் மெல்ல அசைத்து எழுப்பிய ‘மரமர’சத்தம் தேவகானம் போல் தோன்றியது. வசீகரமும், நல்ல திடகாத்திரமும், வைரம்பாய்ந்த நெஞ்சும் கொண்ட இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்த புரவி ஒன்று கொள்ளிடத்திலிருந்து குடந்தை செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் தலையெடுத்து ஆட்சியை நிலைநாட்டிக் கொண்ட காலம் அது. இளைஞனின் பெயர் ‘வந்தியத்தேவன்’.
பாதை மனித சஞ்சாரமில்லாமல் வெறுமையாய் காட்சியளித்தது. களைப்படைந்தவனாகக் காணப்பட்ட வந்தியத்தேவன் பாதைக்குச் சற்று அருகில் தென்பட்ட ஓடைக்கு அருகில் சென்று கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். புரவியில் தொங்கவிடப்பட்டிருந்த தண்ணீர் குடுக்கையை எடுத்து கவிழ்த்துப் பார்த்து அது தீர்ந்துவிட்டிருப்பதை அறிந்து கொண்டான். இறங்கி ஓடையில் முகத்தைக் கழுவி தண்ணீர் பருகினான். அரை இடுப்பிலிருந்து முறுக்கிக் கட்டிய துணியை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடுக்கையில் தண்ணீரை நிரப்பி, குதிரையின் அருகில் சென்று சேணத்துக் கயிற்றில் மாட்டி, கட்டிக் கொண்டிருந்தான்.அப்போது..
டக் டக்கென்று விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்பொலி கேட்டு, சத்தம் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு திடுக்கிடும் காட்சியைக் கண்டான்!
பாதையில் குதிரையில் ஒருவன் முன்னால் அதிவேகமாய் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் குதிரைகளில் நான்கு நபர்கள் உடலில் போர்த்திய துணியும், தலையில் முண்டாசும் அணிந்து துரத்திக்கொண்டு வந்தனர். முன் குதிரையைத் தாண்டிச் சென்று அதை வழி மறித்துச் சட்டென்று நிறுத்தினார்கள். மடக்கப்பட்ட குதிரை பிளிரிட்டுக்கொண்டு முன் கால்களிரண்டையும் மேலே தூக்கித் தடுமாறியது. அதிலிருந்தவன் கீழே விழுந்தான். துரத்தியவர்களில் ஒருவன் கீழே குதித்தான். இடுப்பிலிருந்து கத்தியை உருவி கீழே விழுந்தவனை நோக்கிப் பாய்ந்தான். நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், விழுந்த நிராயுதபாணியை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதே தன் முதற் கடமை என்று எண்ணி, தான் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். நினைத்ததை உடன் முடிக்கும் இயல்பு கொண்ட நமது வந்தியத்தேவன் குதிரையிலிருந்து வேலை எடுத்து, கணப் பொழுதில் குறி தவறாது பாய்ந்தவன் மேல் எறிந்தான்.
வேல் அவனின் ஒரு தொடையைத் துளைத்தது. நிலை தவறி, தள்ளாடி உதிரம் பெருக அவன் தரையில் விழுந்தான். கத்தி தரையில் விழுந்தது. அதற்குள் தரையில் குதித்த மற்ற மூவர்களில் ஒருவன், கத்தியை முதலில் விழுந்தவனின் நெஞ்சில் பாய்ச்சினான். பிறகு கத்தியை நெஞ்சிலிருந்து வெளியே உருவ முயன்றவாறே வந்தியத்தேவன் இருந்த திக்கை நோக்கினான். அவன் கண்களும், சம்பவ இடத்திற்கு உருவிய கத்தியுடன் பாய்ந்து வந்து கொண்டிருந்த வந்தியத்தேவனின் கண்களும் ஒரு கணம் சந்தித்தன. ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல் கத்தியை உருவும் முயற்சியைக் கைவிட்டு, சட்டென்று பாதி முகத்தை, கழுத்தில் தொங்கிய துணியை ஒரு கரத்தால் இழுத்து மூடி, மற்றொரு கரத்தால் கூட வந்த மற்ற இருவரையும் பார்த்து ஒரு சைகை செய்தான். மூவரும், வேலால் தாக்குண்டவனை விட்டுவிட்டு விரைந்து ஓடினார்கள். இருவர் முதலில் குதிரைகளில் தாவி ஏறினார்கள். மற்றொருவன் வேலால் தாக்கப்பட்டவனின் குதிரையின் முகப்புக் கயிறைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பின்பற்றினான். சுளீரென்று சவுக்கால் அடித்து குதிரைகளை விரட்டிவிட்டார்கள். அவைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.
ஓடி வந்த வந்தியத்தேவன் நின்றான். கொலையாளிகள் விரைந்து சென்று கொண்டிருந்ததைக் கண்டான். கத்தியால் குத்தப்பட்டவனின் முனகல் கேட்டு திரும்பிப் பார்த்தான். தொடர்ந்து சென்று மற்றவர்களைப் பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். முதலில் வேலினால் அடிபட்டவனின் அருகில் சென்றான். உதிரம் நன்கு வெளியேறியதால் பலவீனமடைந்திருந்த அவனைப் பார்த்து “ஏன் அந்த மனிதனைக் கொன்றீர்கள்? உடனே பதிலைச் சொல்” என்று கடினமான தோரணையில் கேட்டான். அந்த மனிதன், சுட்டெரிக்கும் கண்களினால் வந்தியத்தேவனை வெறித்து நோக்கினான். கண் இமைக்கும் நேரத்தில் இடுப்பிலிருந்த சிறிய திருகுவாளை எடுத்து நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டான். அவன் தலை தொங்கியது.
அவனை விட்டுவிட்டு மற்றவனை நோக்கி வந்தியத்தேவன் விரைந்தான். மூக்கில் விரலை வைத்துப் பார்த்து உயிர் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவன், பதிந்திருந்த கத்தியை பலம் கொண்டு உருவி வெளியில் எடுத்தான். அதன் கைப்பிடியில் மீன் உருவம் பொறித்திருந்ததைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் பிறகு தூர எறிந்தான். இரத்தம் குப்பென்று பீறிட்டது. அடிபட்டவன் நினைவை இழந்திருந்தான்.
வந்தியத்தேவன் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் குடுக்கையை எடுத்து வந்து, திறந்து கையில் தண்ணீரை விட்டு முகத்தில் தெளித்தான். குதிரையின் அருகே கீழே விழுந்திருந்த அரைத் துணியை ஓடிப் போய் எடுத்து வந்து, கிழித்து, கத்திக் காயத்தில் வைத்து, இடுப்பைச் சுற்றிலும் கட்டினான். துணியால் அவனுக்கு விசிறினான். நேரம் கடந்தது. அடிபட்டவன் மெல்ல கண்களைத் திறந்தான். சுற்றுமுற்றும் பார்த்து வந்தியத்தேவனை நோக்கினான்.
வந்தியத்தேவன், “நண்பா, வலிக்கிறதா? அவர்கள் யார்? ஏன் உன்னைத் துரத்திக் கொல்ல முயன்றார்கள்?” என்று சரமாரியாய் கேள்விகளைச் பொழிந்தான்.
அடிபட்டவன் ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் ஒன்றும் வெளிவரவில்லை. பேசும் சக்தியை அவன் இழந்திருந்தான்.
“உன்னை உடன் குடந்தைக்கு தூக்கிச் சென்று வைத்தியசாலையில் சேர்த்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறி வந்தியத்தேவன் அவனைத் தூக்க முயன்றான்.
ஆனால், அடிபட்டவனின் கைகள் வந்தியத்தேவனின் கைகளைப் பற்றின. ‘இனிமேல் பயனில்லை’ என்று சொல்வது போல் வந்தியத்தேவனுக்குத் தோன்றியது.மெல்ல ஒரு கரத்தை விடுவித்து, தொலைவில் நின்றுகொண்டிருந்த அவனுடைய குதிரையைச் சுட்டிக் காட்டியபடியே மறுபடியும் ஏதோ சொல்ல முற்பட்டான்! ஆனால் வெறும் முனகல் சத்தம்தான் வெளிவந்தது.
அவனுடைய கண்கள் நன்றியுடன் வந்தியத்தேவன் கண்களை நோக்கின! சிறிது நேரம்தான்! ஒரு கணம் பிரகாசமடைந்த கண்கள் மறுகணம் மங்கி மூடின. கைகள் தளர்ந்தன. அவனைவிட்டு உயிர் பிரிந்தது.
வந்தியத்தேவன் தரையில் அமர்ந்து சிறிது நேரம் மாண்டவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினான்.
மெல்ல எழுந்து நின்றான். நடந்த சம்பவங்களை நினைத்து ஜீரணிக்க சிறிது நேரமாயிற்று. ‘எதற்காகக் குதிரையைச் சுட்டிக்காட்டி இவன் ஏதோ சொல்ல முயன்றான்?’ என்று யோசித்தவாறே அந்த மனிதனுடைய குதிரையின் அருகில் சென்றான்.எஜமானர் இல்லாத வேற்று மனிதர் வந்திருப்பதைப் பார்த்து குதிரை கனைத்து முரண்டு பிடித்தது.
வந்தியத்தேவன் தன் குதிரையின் அருகே சென்றான். பையிலிருந்து தன் குதிரைக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த வெல்லக் கட்டிகளை எடுத்து வந்து, அவற்றில் இரண்டை எடுத்து மிரண்ட குதிரையின் வாய்க்கு அருகே கொண்டு சென்றான். மிகப் பசியுடன் இருந்த அந்தக் குதிரை அதை நாக்கால் பற்றி உண்ண ஆரம்பித்தது. மெதுவாக எஞ்சியிருந்ததையும் கொடுத்தான். அதையும் நன்றாகச் சாப்பிட்டு முடித்தது! குதிரைகளின் பாஷையை அறிந்த வந்தியத்தேவன் கயிற்றைப் பிடித்தவாறே அதன் தாடையைத் தட்டிக் கொடுத்தான் சிறிது நேரம் அதன் கழுத்தை தடவியவாறே இருந்தபின் அது சாந்தம் அடைந்தது.
குதிரையின் முதுகில் கட்டியிருந்த சேணத்தை நோக்கினான். அதன் இரு பக்கங்களிலும் பொருட்கள் வைத்த பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. பைகளை சோதனை செய்தான். அவைகளில் அணியும் ஆபரணங்கள் மட்டுமே இருந்தன. வேல் ஒன்று தனியாக வேறு பையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. இவைகளைத் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை.
‘இந்த சாதாரணப் பொருட்களைப் பற்றியா இவ்வளவு கஷ்டப்பட்டு நம்மிடம் தெரிவிக்க முயன்றான்? நிச்சயமாக இருக்காது! கொல்லப்பட்டவன் ஏதோ முக்கிய உண்மையைப் பற்றியே சொல்ல நினைத்திருக்கிறான். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? ம்.. சேணத்தின் கீழ் ஏதாவது மறைத்து வைத்திருப்பானோ?’ என்று எண்ணியவாறே அதன் அடியில் கையை விட்டுத் துழாவினான். அவன் கணிப்பு வீண் போகவில்லை. பை ஒன்று கீழே விழுந்தது!
பையை எடுத்துக் கவிழ்த்துக் கீழே கொட்டினான்.
உள்ளிருந்து சில எழுத்தோலைகளும், ஒரு கனமான சிறிய தாமிரத் தகடும் கீழே விழுந்தன.
தகடைக் கையில் எடுத்து உற்று நோக்கினான். வேலைப்பாடுடன் கூடிய அந்தப் பதக்கத்தில் ஒரு புலியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மாண்டவன் ஒரு சோழ நாட்டின் கைதேர்ந்த ஒற்றன் என்பதைத் தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கத்தியின் கைப்பிடியில் ஏற்கெனவே கண்ட மீனின் உருவம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பது புரிய ஆரம்பித்தது.
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் பகை முற்றிப்போயிருந்த அந்தக் காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காகச் சோழ ஒற்றனைப் பாண்டியர்கள் கொன்றிருக்கிறார்கள் என்பதை அறிய வந்தியத்தேவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பாண்டிய சதிகாரர்கள் எப்படி சோழ நாடு முழுவதிலும் பரவியிருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்தான்! தொடர்ந்து எழுந்த ஆர்வத்தால் தூண்டப்பட்டுத் தரையில் கிடந்த எழுத்தோலைகளைப் பார்வையிட்டான். அவைகள் கீழ்க்கண்டவாறு காணப்பட்டன:
(தொடரும்)
பேராசிரியர் சிந்தாமணி – பேட்டி
அரசுக் கல்லூரியில் மாணவர்கள் படித்தபின் தங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருப்பது மிகவும் அரிது.
ஆனால் ஒரு ஆங்கிலப் பேராசிரியரை நினைவில் வைத்து அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவரைவைத்து ஒரு சிறிய ஆவணப்படம் எடுப்பது என்பது அரிதிலும் அரிது.
ஜெய் சக்திவேல் என்ற அந்நாள் மாணவர் – இந்நாள் கல்லூரி உதவிப் பேராசிரியர், தனது முன்னாள் பேராசிரியரைப் பேட்டி கண்டு எடுத்த வீடியோ இது.
மாணவருக்கும் பெருமை ! ஆசிரியருக்கும் பெருமை !
முப்பத்தொன்பதாவது புத்தகக் கண்காட்சி -(ஜூன் 1-13 )
காயிதே மில்லத் கல்லூரி மைதானத்திலிருந்த நாட்களிலிருந்தே சுமார் இருபது கண்காட்சிக்கு சென்றிருந்தாலும் இம்முறை பெரிய மாறுதல். மேஜைக்கு அந்தப்பக்கம். நண்பரின் ஸ்டாலைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு.
இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் பைகளில் புத்தகங்களோடு எத்தனை பேர். விடுமுறை நாட்களிலும் கடைசி நாளிலும் நல்ல கூட்டம். விதவிதமான ரசனைகளும் தேவைகளும். புத்தகங்கள் மத்தியிலேயே 13 நாட்கள். முன்பே அறிமுகமான சில எழுத்தாளர்கள், புதிய அறிமுகங்கள், வாசகர்கள், மற்றகடைகளில் இருந்த உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள். விதவிதமான நுகர்வோர் .. நேரம் சென்றதே தெரியவில்லை.
வருபவர்களில்
- லிஸ்ட் எழுதிக்கொண்டுவந்து கேட்பவர்கள்.
- ஸ்டால்களில் புத்தகப் பட்டியல் வாங்கிப்போய் அதிலிருந்து நிதானமாக தேர்ந்தெடுத்து பின்னர் வந்து வாங்குபவர்கள்.
- புத்தகங்களை நோட்டம் விட்டு மனதில் பட்டால் வாங்குபவர்கள்
- சமீபத்தில் வந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட புத்தகத்தை குறிவைத்து வாங்குபவர்கள்
- புத்தகம் வாங்காமலேயே குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவற்றை வாங்குபவர்கள்
- பட்ஜெட் போட்டு வாங்குபவர்கள்
- பாதி வாங்கியபின் ATM சென்று பணம் எடுத்து வாங்குபவர்கள்
- பிரபலங்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பவர்களும் , ‘ஆட்டோக்ராஃப்’ வாங்குபவர்களும்
- கடைசி நாட்களில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் எதிர்பார்த்து வந்தவர்கள்.
- வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றவர்கள்.
ஸ்டால்களில்
- பொருட்காட்சி விற்பனையை பெரிதும் நம்பியிருக்கும் பதிப்பாளர்கள்.
- நஷ்டம் வராமல் விட்டாலே போதும் என்கிற பகுதிநேர பதிப்பாளர்கள்
- கண்காட்சிகளை மட்டுமே நம்பியி’ருக்கும் ஒரு சில பதிப்பாளர்கள்
- குறைவான சொந்த பதிப்புகளும் அதிகப்படியாக பிற புத்தகங்களும் வைத்திருக்கும் பதிப்பகங்கள்
- விற்பனை மட்டுமே செய்யும் விற்பனையாளர்கள்.
- திருவிழாக்கடைகள் போல் உணவகம், கரும்பு ஜூஸ், செடிகள், வாகன ஸ்டாண்ட் இன்ன பிற
நிகழ்ச்சிகளில்
- அரங்கத்தில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள்
- ஸ்டால்களில் பெரிய , சிறிய அளவில் வெளியீட்டு விழாக்கள்
ஒரு ஸ்டாலில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர்களும், உதவியாளர்களும் இருந்தார்கள். நல்ல எனர்ஜியுடன் வேலை செய்தார்கள். ஆனால், ‘வாங்க வேண்டாம் ஸார்.. பார்த்துட்டுப்போங்க’ என்று அழைத்த அந்த இளைஞனிடம் ‘நீயே வாங்கவேண்டாம் என்கிறாயே, அப்ப எதுக்குப் பாக்கணும்?’ என்று கேட்டார்.
விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி மாணவன் சுனில் குமார் தன் நண்பன் மல்லிக்குடன் வந்திருந்தான். அப்பா செலவிற்கு கொடுத்த ரூ.100 க்கும் ஜூலியஸ் சீசர் என்ற புத்தகம் வாங்கிப் போனான். பார்க்கவே நிறைவாக இருந்தது. பல பழைய புதிய நண்பர்களுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்புதான் எனக்கு “TAKE AWAY”.
கிருபாநந்தன்
புத்தகக் கண்காட்சியைக் காணாதவர்கள் நிச்சயமாக ஓர் அருமையான உணர்வைப் பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ! இந்தக் குஷி மற்றும் கொண்டாட்டம் காண நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்கவேண்டும் ! உங்களுக்காக இந்த சிறு வீடியோ !
நேற்றைய நாளையும் நாளைய நேற்றும் (சுரா)
நேற்றைய நாளைக்கும் நாளைய நேற்றைக்கும்
வேறுபாடு நிறைய உண்டு
நேற்றுப் போனால் நாளை வரவில்லை
எனவே நேற்றைய நாளை
வெறும் கற்பனை கனவு எதிர்பார்ப்பு
நாளைக்குப் போய்ப் பார்த்தால்
நாளையும் தெரியும் நேற்றும் தெரியும்
இரண்டிலும் எதார்த்தம் பிடிபடும்
நிஜத்தின் தரிசனம் கிட்டக்கூடும்
ஆனால், ஸ்வாமி, இன்றென்னவோ?
இலக்கியவாசல் 13வது நிகழ்வின் தொகுப்பு
நானறிந்த சுஜாதா” – ஒரு பதிவு
குவிகம் இலக்கிய வாசலின் பதின்மூன்றாவது நிகழ்வாக “நானறிந்த சுஜாதா” பனுவல் புத்தக நிலைய அரங்கில் மே 21, சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு.சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பும் செய்தார்.
.மூத்த எழுத்தாளர் “நகுபோலியன்” அவர்கள் தனது சிறுகதையினை வசித்தார்.
சுஜாதாவின் நாடகமான “மாறுதல்” திருவான்மியூர் ஆனந்த் குடியிருப்புக் குழந்தைகள் ஒரு குறுநாடகமாக . திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அவர்கள் இயக்கத்தில் எல்லோரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றினார்கள்.
(ஆயிரம் நாடகங்களில் பங்கேற்ற திரு தமிழ்த்தேனி, உட்கார்ந்தவாறே ஒரு காட்சியினை கண்முன் நிறுத்தமுடியும் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னது இந்த நாடகம் கொடுத்த அனுபவத்தை நன்கு தெரியப்படுத்துகிறது)
“தமிழ்த்தேனி” அவர்கள் ‘அம்மா’ மற்றும் ‘கன்னியாகுமரி’ என்னும் இரு கவிதைகளால் அவையை அலங்கரித்தார்.
சுஜாதா அவர்களிடம் பக்தி என்றே சொல்லக்கூடிய வகையில் ஈடுபாட்டால் ‘சுஜாதா தேசிகன்’ என்று மாறிவிட்ட தேசிகன் அவர்கள் சுஜாதாவின் எழுத்துக்களுக்குள் நுழைந்த கதையினையும், அமரர் சுஜாதாவின் வியத்தகு பார்வையையும் பழகும் முறையினையும் கூறி எழுத்தாளராகவே நாமறிந்த அவரை ஒரு மாபெரும் மனிதனாகவும் கண்முன் நிறுத்தினார்.
ஜெயராமன் ரகுநாதன் அவர்கள் பிரமிப்பு அடையும் வாசகனாக எழுத்துக்களையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவரது படைப்புகளைக் கொண்டே விவரித்து அனைவரின் மனதிலும் சுஜாதாவை மறுவாசிப்பு செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பங்குபெற்றோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். திரு கிருபானந்தனின் நன்றி நவிலலுடன் இனிய மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
முகநூலில் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள டாக்டர் பாஸ்கரன், திரு சுஜாதா தேசிகன் மற்றும் திரு ஜெயராமன் ரகுநாதன் ஆகியோருக்கும் நமது நன்றி.
ரோஜா நிறச் சட்டை – அழகியசிங்கர்


Click here to Reply or Forward
|
லதாவின் கார்ட்டூன் பக்கம்
இயற்கையின் சீற்றம் – “தைலம்”
எரிதழல் சுழன்றது ஏழுநூறு கோடியாவது முறையாக.
இருளகன்று ஒளி பாய்ந்தது.
இயற்கை அன்னை துயிலெழுந்தாள்.
என்னென்ன புதுமையோ என்றெண்ணிக் கண் விழித்தாள்
“யானறியாத புதுவர வென்னவோ” என எண்ண, எண்ண –
“அம்மா, அம்மா” காற்று வந்து கண்ணைக் கசக்கியது.
“ஏனடா, கண்ணே, கைவிலக்கு, கண்ணக் கசக்காதே.”
“அம்மா, புகை, புகை, இலைப்புகை, ஆலைப்புகை,
வாகனப்புகை, அணுகுண்டுப்புகை, கண் எரிகிறதே.”
“சீ, சிறுபிள்ளை, இதற்குப்போய்” அழுவதா?
அதோ அக்காள் பார், போய் விளையாடு”
ஆழிப்பெண் ஓடிவந்தாள் விழியொழுக
“அம்மா, என்னைச் சேறாக்கினான்,
எண்ணைச் சேறாக்கினான்.
என் செல்வங்களைப் பிணமாக்கினான், பாரம்மா” எனக் கால் பிடித்தாள்.
“பேதையே,நீ கலங்காதே” கண்துடைத்து,
”வான் மகள் அழைக்க வருகிறாள் பார் விளையாட
ஓடு, ஓடு, சேர்ந்து கொள்” என்றாளன்னை
“ஓட்டை போட்டானே அம்மா,
என் சட்டையில் ஓட்டை போட்டானே,
சும்மாயிருந்த என்னைக் கிள்ளினானே,
என் செய்வேன்?” புலம்பி மழையாய் அழுதாள் வான்மகள்.
காற்றும் கடலும் வானும் ஓடிவர,
மெய்தழுவி மூவரையும் மடிசாய்த்தாள் மண்மாதா.
பேதைகளே! யார்க்கஞ்சுவது? எவர்க்கஞ்சுவது?
கேவலம் இந்த மனிதனுக்கா? சே! வெட்கம்!
புகைமண்டலமாக்கினானா உன்னை?
சேறாக்கினானா உன்னை?
கிழித்தானா உன்னை? நீங்கள் என்ன செய்தீர்கள்?
மூவரும் ஒரே குரலில்,
”நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை
எப்பொழுதும் போல் எங்கள் கடமையைத்தான் செய்தோம்”
“எந்த தைரியத்தில் உங்களைத்தொட்டான்?
நானிருப்பது தெரியவில்லை அவனுக்கு?
முட்டாள் மனிதன்!
என்னை சீண்டக் கூடாதென்று தெரியாதா?
என் சீற்றம் புரியாதா அவனுக்கு.
காட்டுகிறேன் நான் யாரென்று.
பிள்ளைகளே, உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை.
காண்பிக்கிறேன், வாருங்கள்
நான் சற்றே திரும்பினால் காற்றே, நீ திசை மாறுவாய்
மனிதன் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து சாவான்
கடலே, நீ கொந்தளிப்பாய்
அவனையும் அவனுடைமைகளையும்விழுங்கி விடுவாய்.
வானமே, நீ ஊதாக் கதிர்ளைக் கக்கி உருக்குலைப்பாய் அவனை
இருக்குமிடம் தெரிந்து நடக்காவிட்டால் இது தான் கதி“.
கோபத்தில் உடல் விதிர்த்தாள், திரும்பினாள்
தலை முடிந்தாள் இயற்கை அன்னை !
சுனாமியாய்ச் சீறினாள் !
பூகம்பமாய் வெடித்தாள் !
மழையாய்க் கொட்டினாள் !
சுஜாதா எழுதிய மாறுதல் நாடகத்தின் குறு வடிவம்
மாபெரும் எழுத்தாளர் சுஜாதா எழுதிய அரைமணிநேரம் 20-25 நிமிடங்கள் நடைபெறக்கூடிய மாறுதல் என்ற நாடகத்தை சின்னஞ் சிறார் நடிப்பதற்காக 8 நிமிடத்தில் சுருக்கி அமைத்த வடிவம் இது. (சுஜாதா மன்னிப்பாராக).
ஆனந்த் அபார்ட்மெண்ட்ஸைச் சேர்ந்த அனன்யா, ஷாலு, கிருத்திகா, ரேகா நடித்து, “மிகவும் சிறப்பாக இருந்தது” என்று டாக்டர் பாஸ்கரன் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்த நாடகம்.
குவிகம் இலக்கியவாசலின் 13வது நிகழ்வில் அரங்கம் ஏறியது.
குறு வடிவம் மற்றும் இயக்கம்: விஜயலக்ஷ்மி
(இந்த நாடகத்தின் ரிகர்சல் போது எடுத்த வீடியோவை அடுத்த பக்கத்தில் காணலாம்)
பாத்திரங்கள்: சுந்தரமூர்த்தி, நாடகாசிரியர் விசுவநாதன்,
நடிகை ராதா, சபா செக்ரட்டரி ராமன்.
விசுவநாதன் ; உங்க நம்பர் என்ன?
சுந்தரமூர்த்தி : ஏ – ஏழு.
விசு : எனக்கும் ஏ – ஏழு கொடுத்திருக்காங்களே!
சுந்த : எங்கே ! காட்டு ! ( விசு காட்டுகிறான் )
சுந்த : (சற்று ஆச்சரியத்துடன்) இது தப்பு. நான் இருபது வருஷமா இந்த சபாவிலே மெம்பரா இருக்கேன். இருபது வருஷமா இந்த ஏ – ஏழிலே உக்காந்திருக்கேன். இதே லொடக்காசி நாற்காலியிலே…… (டிக்கெட்டை மறுபடி பார்க்கிறார்) நீ என்ன மெம்பரா? உன்னைப் பார்த்ததே இல்லையே ! புதுசா!
விசு : ஆமா சார் ! யாரையாவது கேட்டுப் பார்ப்பமா?
சுந்த : கேக்கறது என்ன ? ஸீட்டு தப்பு. அங்க எங்காவது போய் உக்காரு.
(விசு பக்கத்தில் உட்காருகிறான். சுந்தரமூர்த்தி அவனை விரோதத்துடன் பார்க்கிறார்.)
விசு : : செக்ரட்டரி வரட்டும் சார். அவர் தீர்த்து வெக்கட்டும்.
( ஒரு பெண் வருகிறாள். சுந்தரமூர்த்தி போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது. )
பெண் : அண்ணா ! ஸீட்டு கிடைச்சுதா?
விசு : எங்க ! எனக்குக் கொடுத்த அதே சீட் நம்பர்லே இவரு ஓக்காந்திருக்காரு.
பெண் : ஐயோ ! அது எப்படி ! சார் உங்க டிக்கட்டைக் காட்டுங்க.
சுந்தர : இத பாரும்மா ! நான் இந்த சபாவிலே நீ பொறக்கறதுக்கு முன்னாடில இருந்தே மெம்பர். இதே ஸீட்டைத் தேச்சுக்கிட்டு இருக்கிறவன்.
பெண் : அதெப்படி ஸார் உங்க நம்பர் இவனுக்கும் கொடுத்திருக்காங்க ! வேறே ஏதாவது ஏ – செவன் இருக்கா ? ( அவர் பக்கத்திலே உட்காருகிறாள் ). உங்க டிக்கட்டைப் பார்க்கலாமே.
சுந்த : டிக்கட்டு எல்லாம் என்கிட்டக் கிடையாது. நான் மெம்பர்ங்கறேன்.
பெண் : மெம்பர்ஷிப் கார்டைக் காட்டுங்க.
சுந்த : எதுக்குக் காட்டணும் ? காட்ட வேண்டிய அவசியமில்லை.
பெண் : காட்டலைன்னா ஸீட்டையாவது விடுங்க. இவன் கிட்டே ஏ – செவன் இருக்கில்லே ?
சுந்த : என்னடாது எழவாப் போச்சு ! நான் எத்தனை வருஷமா இதே ஸீட்லே…..
பெண் : அப்ப மெம்பர்ஷிப் கார்டைக் காட்டுங்க.
சுந்த : கார்டு கொண்டுவரலை. செக்ரட்டரி வரட்டும். அந்தாளுக்கு என்னை நல்லாத் தெரியும்.
விசு : ராதா விட்டுரு. செக்ரட்டரி வந்தப்புறம் பார்த்துக்கலாம்.
பெண் : இல்லை அண்ணா ! அப்புறம் கூட்டம் ஜாஸ்தி வந்துரும். அதனாலதான் உன்னை முன்னால வந்து உக்காரச் சொன்னேன். நாடகத்தை எழுதினது நீ ! ஒனக்கு இந்தச் சலுகை கூடக் கிடையாதுன்னா எப்படி? (சுந்தரமூர்த்தி திரும்பிப் பார்க்கிறார்) அதுக்கு மேலே நானும் இதில நடிக்கிறேன். இப்ப மட்டும் செக்ரட்டரி இந்த ஸீட்டு உனக்கில்லைன்னு சொல்லட்டும். எல்லாத்தையும் கான்சல் பண்ணிட்டு வீ வில் வாக் அவுட் !
விசு : அதெல்லாம் வேண்டாம் ! பெரியவங்களோட நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடலாம்.
பெண் : மெம்பர்ஷிப் கார்ட்கூட இல்லேண்ணா இவர்கிட்ட !
விசு : எதுக்குத் தகராறு ? அவங்க வரட்டுமே !
(இதற்குள் சுந்தரமூர்த்தியின் தோரணை சற்று மாறியிருக்கிறது.)
சுந்த : (ராதாவிடம்) என்ன சொன்னே நீ ? (விசுவிடம்) இந்த நாடகத்தை நீ எழுதியிருக்கியா ?
விசு : ஆமா ஸார் ! இன்னிக்கு என்ன நாடகம்னு தெரியுமா உங்களுக்கு?
சுந்த : தெரியாது.
விசு ; தெரியாமையா நாடகம் பார்க்க வரீங்க?
சுந்த : இப்ப எல்லா நாடகமும் ஒரே மாதிரிதானே இருக்கு ! ஏதோ ஓரங்க நாடகமோ என்னவோ சொன்னாங்க.
பெண் : உங்க ஒய்ஃப் வரலையா ஸார்?
சுந்த : அவ வந்துட்டா வீட்ல சமையல் பண்றது யாரு?
விசு : வாஸ்தவம்தான்.
பெண் ; `என்ன வாஸ்தவம்? அந்தம்மா மட்டும் டிராமா பார்க்க வேண்டாமா?
சுந்த : அதுக்கு ஒரு எழவும் புரியாது. அழ வேண்டிய இடத்திலே சிரிக்கும்.
பெண் : அவங்களுக்கு அங்கதான் சிரிப்பு வருதோ என்னவோ?
சுந்த : என்ன டிராமா இன்னிக்கு?
விசு : என்ன மாதிரி டிராமா உங்களுக்குப் பிடிக்கும்?
சுந்த : எனக்குப் பிடிக்கிற டிராமா எல்லாம் போயிடுத்துப்பா. அந்தக் காலத்தில கிட்டப்பா, செல்லப்பா, டிராமா எல்லாம் பார்த்திருக்கேன். வெங்கலக் குரல்லே மைக்கே இல்லாம கணீர்னு பாடுவா. என்ன ஸ்டேஜ் எபெக்ட்ஸ் ! அனுமார் ஸஞ்ஜீவி மலையை எடுத்துண்டு வருவார். ஸ்டேஜ்லயே மலை பறக்கும். அவ்வையார் டிராமா பார்த்திருக்கியோ நீ? அதை நாடகத்தோட பொற்காலம்னுதான் சொல்லணும்.
விசு : அப்போ இப்ப…?
சுந்த : இப்ப என்ன ? வெறும் ஜோக்ஸ், இல்ல அரசியல், இல்ல பிராமண வீட்டுக் கதை. இப்ப என்ன பண்றாங்க. நாடகத்தைப் படிச்சுக் காட்டறாங்க. படுதா வேண்டாம். நாற்காலி வேண்டாம். இப்ப ஓங்கண்ணா எழுதியிருக்கிற நாடகத்தைச் சொல்லல. பொதுவா நாடகங்களைப் பத்திச் சொல்லிண்டிருக்கேன். நீ தப்பா நெனைச்சுக்காதே.
பெண் ; நல்ல நாடகங்களைப் பாக்காம எப்படி ஸார் நீங்க சொல்ல முடியும்?
சுந்த : நல்ல நாடகங்கள் இருக்கா, சொல்லு., பாக்கறேன். ஒனக்காகப் பாக்கறேன். (விசுவிடம்) ஆமா ! உன் அபிப்பிராயத்திலே நாடகம்னா என்னன்னு நினைச்சுண்டிருக்கே?
விசு : அதைத்தான் பாக்கப் போறீங்களே?
சுந்த : என்ன, சொல்லேன்.
விசு : சொல்றேன் ! அதுக்குள்ள இந்த சீட்டுப் பிரச்னையைத் தீர்த்துக்கலாம்னுட்டு…
பெண் : (வெளியே பார்த்து) பிரச்னையைத் தீர்த்துரலாம். செக்ரட்டரி வரார்.
சுந்த ; ராமன்! இங்க வாய்யா ! நான் இந்தச் சபாவிலே எத்தனை நாளா மெம்பர்?
செக்ர : என்ன இப்படிக் கேட்டுட்டேள்? ஆரம்பத்திலேருந்தே நீங்கதானே மெம்பர்!
சுந்த : எத்தனை வருஷமா இந்த இடத்திலே உட்கார்ந்துண்டிருக்கேன்?
செக்ர : ஏன்? என்ன விஷயம்?
சுந்த : இவருக்கு என் ஸீட்டைக் குடுத்திருக்கியே, என்னய்யா ஆர்கனைசேஷன் !
செக்ர : இஸ் இட் ? (விசுவிடம்) ஸார் கொஞ்சம் காமிங்கோ! (டிக்கட்டை வாங்கிப் பார்த்து விட்டு, யோசித்து ) இது எப்படி ஆச்சு? (சுந்தரமூர்த்தியிடம்) சார்! ஐம் ஸோ ஸாரி! இன்னிக்கு மட்டும் வேறு ரோவில சீட் போட்டுக் கொடுத்துர்றேன்.
சுந்த : அது எப்படி இவருக்கு மட்டும் சலுகை? இவரை அங்கே போகச் சொல்லு.
செக்ர : சார், இவர் யார் தெரியுமோல்லையோ, ஆதர்.. , டிராமாவோட சிருஷ்டிகர்த்தா, எழுதினவருக்கு ஒரு மரியாதை வேண்டாமா?
சுந்த : வேற ஸீட்டு போட்டுக் கொடுக்கறது? என் சீட்தான் ஆம்டுதோ?
செக்ர ; இத பாருங்க. மத்த ஸீட்டெல்லாம் ஃபுல்லி ரிசர்வ்ட். இன்னிக்குக் கமிஷனர் வரார்.
சுந்த : ஏன், நான் மட்டும் வர மாட்டேனா?
செக்ர : ஆனஸ்டா, அதான் நீங்க இந்த மாதிரி எக்ஸ்பெரிமண்டல் டிராமாவுக்கெல்லாம் வர மாட்டீங்கன்னு நினைச்சோம். அதான் சார் இந்தக் குழப்பம். இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா?
சுந்த : (கண்டிப்பாக) அதெல்லாம் முடியாதுப்பா.
செக்ர : (சுருதி மாறி) அண்ணா மன்னிக்கணும்…. ரொம்பப் பிடிவாதம் பிடிக்கறேள்.
சுந்த : நானா? நானா பிடிவாதம் பிடிக்கறேன்?
செக்ர : ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேளா?
சுந்த : முடியாது. ஆன் பிரின்சிபிள், முடியாது.
செக்ர : (பரிதாபமாக விசுவைப் பார்த்து) ஸாரி சார்! நீங்க வந்து ஒண்ணு செய்யுங்கோ. இப்போதைக்குப் பக்கத்திலேயே இந்த சீட்லேயே உக்காந்து பாருங்கோ. (சுந்தரமூர்த்தியிடம் ஆவேசமாக) அண்ணா ! உங்க ஏ – செவன்லேயே ஜீவித காலம் வரைக்கும் உக்காருங்கோ ! நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். (விசுவிடம்) நீங்க இங்க உக்காந்துக்கங்கோ சார். (பெண்ணிடம்) ஸாரி மிஸ் ராதா, உங்களை மேக்கப் ரூம்ல கூப்பிட்டுண்டிருக்கா.
சுந்த : (தன்னிச்சையாக) நான் எதுக்குச் சொல்ல வரேன்னா, ஒரு பிரின்சிபிள்னு லைஃப்ல வேணும் இல்லையா?
விசு : வாஸ்தவம்தான்.
சுந்த ; பர்சனலா இதை எடுத்துக்கக் கூடாது நீங்க. என் லைஃப் பூரா இப்படி நான் சண்டை போட்டிருக்கேன். ஒரு பிரின்சிபிள்னு வெச்சுண்டா, அதை விடவே கூடாது. அதுலேருந்து மாறவே கூடாது.
விசு : அது எப்படி சார்? மாறுதல் இல்லாம முன்னேற்றமே இல்லையே சார்.
சுந்த : மாறணும்னா நீ மாறிட்டுப் போய்யா. நான் எதுக்கு மாறணும்? எதுக்காக ஒன்னோட வால்யூஸை நான் ஏத்துக்கணும்? இந்த ஓலகத்தில இருக்கிறவரைக்கும் ஒரு பிடிவாதம் வெச்சுண்டு இருக்க எனக்கு உரிமை இருக்கா இல்லியா?
விசு : இந்த மாதிரி பெரியவங்களுடைய பல விதமான பிடிவாதங்களினால இளையவர்கள் செய்ய நினைக்கிற மாறுதல்களுக்குத் தடங்கல் வருதுன்னு நினைக்கிறேன்.
சுந்த : அது எப்படி? எல்லா மாறுதல்களையும் நாங்க ஏத்துக்கணும்னு கட்டாயம் இல்லையே?
விசு : மாறுதல் இல்லேன்னா மனுஷன் செத்துப் போயிடுவான் ஸார். எல்லாத்திலேயும் மாறுதல் வந்துதான் தீரணும்.
சுந்த : மாறுதல்ங்கறது நல்லதுக்கா, கெடுதலுக்கானு பார்க்கணுமா வேண்டாமா?
விசு : அய்யோ, நல்லது கெடுதல் எல்லாம் பத்தி இந்த மாறுதலுக்குக் கவலை இல்ல சார்.
சுந்த : மாறுதலோ, புரட்சியோ நம்மகிட்டே வர முடியாதப்பா.
விசு : வந்துரும் சார் வந்துரும்.
சுந்த : சரி. அது பாட்டுக்கு வரட்டும். (கெடிகாரத்தைப் பார்த்து) இன்னிக்கு உன் நாடகம் என்ன சொல்லுது?
விசு : என் நாடகம் இந்த மாறுதலைப் பத்தித்தான் சார். நீங்க நாடகம்கிறது, பாட்டு, படிப்பினைன்னீங்க. என் அபிப்பிராயத்தில நாடகம், நம்முடைய பாசாங்குகள், பிடிவாதங்களை எல்லாம் காட்டணும்.
சுந்த : அப்படியா? யாரு நடிகர்கள்? நம்ம ராதா. அப்புறம்?
விசு : அப்புறம் நானு, செக்ரட்டரி, நீங்க.. அவ்வளவுதான்.
சுந்த : என்னப்பா சொல்றே? புரியும்படியாச் சொல்லு. நானா?
விசு : இதுவரைக்கும் நாம பேசிக்கிட்டு இருந்ததுதான் என் முதல் ஓரங்க நாடகம் சார். நாடகம் மாறிப் போச்சு. (எதிரே கையைக் காட்டி) அத பாருங்க, அவுங்கல்லாம் இதுவரைக்கும் நம்மைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. (பக்கவாட்டில் பார்த்து உரக்க) விளக்கைப் போடுப்பா ஆடியன்சுக்கு!
இதான் சார், நாடகத்திலே ஏற்பட்டுக்கிட்டு இருக்கிற மாறுதல்.
சுந்த : (நின்று ஆடியன்ஸைப் பார்த்து, பிரமித்து) அடப்பாவி! நான் வரல்ல ! எனக்கு இந்த மாறுதல் வேண்டாம் ! வேண்டவே வேண்டாம் !
விசு : அதைத்தான் நானும் சொல்றேன். வெலகிக்கங்கன்னுட்டு !
( ஏ – ஏழு ஸீட்டில் விசுவநாதன் உட்கார்ந்து கொள்ள, மேடை விளக்குகள் மங்கி மறைய திரை விழுகிறது.)
இந்த குறு நாடகத்தின் ரிகர்சல் போது எடுத்த வீடியோ