வண்ணதாசன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது !

தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத்  தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் வண்ணதாசன். படம்: அவரின் ஃபேஸ்புக் பக்கம்

இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர்  சி.கல்யாணசுந்தரம்.  கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார்.

இவர் ஏற்கனவே கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைத்  தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.

இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

வங்கிப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்  வண்ணதாசன்.

தமிழின் மூத்த  எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விருதுக்குப் பெருமை சேர்க்கிறார்.

 

தலையங்கம்

Image result for jayalalitha last rites

 

Image result for jayalalitha last rites

 

பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர், அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா  டிசம்பர்  5 ஆம் தேதி அன்று இரவு நம்மை  விட்டுப்  பிரிந்துவிட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் அனைத்து உள்ளங்களுக்கும்  குவிகம் தன் இதய பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது .

Image result for jayalalitha as actress

சிறுவயதிலிருந்தே நடனத்தில் தனது தனி முத்திரையைப் பதித்தவர் .

Image result for jayalalitha funeral

திரைப்படங்களில் தன் திறமையாலும் எம் ஜி ஆரின் ஆதரவாலும் முதல் இடத்தைப் பிடித்தவர். இவர் நடித்த படங்களில்  90 சதவீதம் சூப்பர் வெற்றி.

அரசியலில் இவர் அடைந்த வெற்றிக்கு அளவே இல்லை. 6 முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பல சோதனைகளைத் தாண்டி வெற்றி கண்டவர். ஊழல் வழக்கினால் முதல்வர் பதவியை இழந்தவர். அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பால் 100 கோடி அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். ஆனால் பின்னால் அவையெல்லாம் சட்டத்துக்கு முரணானது அல்ல என்று தீர்ப்பு வாங்கி மக்களின் முதல்வராகத் திகழ்ந்தவர்.

அவருக்குப் பின்  அதிமுக வில் யார்?

சசிகலா??

விரைவில் தெரியும்!

1எடிட்

 

 

சோ

சோவின் மறைவு ஒரே எழுத்தில் சொல்லப்போனால் ‘ஓ ‘

பத்திரிகையாசிரியர் சோ, எழுத்தாளர் சோ, அரசியல்வாதி சோ, நாடகாசிரியர் சோ, நாடக நடிகர் சோ, திரைப்பட  நடிகர் சோ,  பேச்சாளர் சோ, டைரக்டர்  சோ, சட்ட நிபுணர் சோ, பின்னால் ஜெயலலிதாவின் ஆலோசகர் சோ , மிடாஸ் போன்ற மதுக்கம்பெனிகளுக்கு  நிர்வாக இயக்குனர் சோ !

இதில் எந்த சோவை உங்களுக்குத் தெரியும்?

எல்லா  சோவிற்கும்  ஒரு  பொதுவான இழை  – நகைச்சுவை !

காலத்துக்கு ஏற்ப மாறுபவர் ! ஆனால் சந்தர்ப்பவாதி அல்ல.

காங்கிரசைத் திட்டினவர் – தி மு க வை ஆதரித்தவர். அ திமு க வை எதிர்த்தவர். எம் ஜி ஆரை ஆதரித்தவர். ஜனதாவை மதித்தவர். மொரார்ஜி, வாஜ்பேய், மோடி இவர்களைத் தீவிரமாக ஆதரித்தவர். ஜெயலலிதாவை ஆதரித்தவர்.

ஒவ்வொன்றும் காரணம் இல்லாமல் அவர் செய்ததில்லை.

யாருக்கும் தலை வணங்காத ஜெயலலிதா -இவருக்குத் தலை வணங்கியதாக ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வலம் வந்திருக்கிறது.

துக்ளக் என்ற அரசியல் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தியதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சோவின் மகாபாரதமும் அவரது எங்கே பிராமணனும் என்றென்றும் பேசப்படும்.

அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் குவிகத்தின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

குவிகம் இலக்கியவாசலின் 21 வது நிகழ்வு

குவிகம் இலக்கியவாசலின் நிகழ்வில்  உலகத் தரம் வாய்ந்த தமிழ் ஓவிய இலக்கியர் அல்லது இலக்கிய ஓவியர் திரு இந்திரன்  அவர்கள்  “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் !

No automatic alt text available.

Image may contain: 1 person, sitting and indoor

அவர் நிகழ்த்திய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு !

(நன்றி : திரு: விஜயன்)

 நெருப்பு சுடாது – எஸ் எஸ்

தன் கையில் உள்ள சிகரெட் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தான் குமார். கடந்த பத்து நாட்களில் அவனுடைய வேலை இதுமட்டும்தான் என்றாகி விட்டது.  எங்கே போயிற்று அவனுடைய அட்டகாசம்? எங்கே போயிற்று அவனுடைய கம்பீரம்? ஏன் இப்படி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்?

Related image

திடீரென்று குரல் கேட்டது. “ குமாரண்ணே! நாயக்கர் வீடு தீப்பிடிச்சுடுச்சு அண்ணே!”

“ நெஜமாவாடா சொல்றே! நம்ம நாயக்கர் வீடா? “ பத்து நாட்கள் ஆடாமல் அசையாமல் இருந்த குமாரை இந்தச் சேதி உலுக்கியது.  அப்படியே நாயக்கர் வீட்டை நோக்கி ஓடினான். “ நளினி! உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதே! கடவுளே!” மனதுக்குள் வேண்டிக்கொண்டே ஓடினான்.

பந்தக்கார நாயக்கர் வீடு ஊர்க்கோடியில் உள்ள பெரிய வீடு.  நாட்டு ஓடு போட்டு முன்னாலேயும் பின்னாலேயும் கூரை போட்டு வேய்ந்த பங்களா.  சுற்றிலும் பந்தல் அலங்காரத்துக்குத் தேவையான மூங்கில், துணி வளையங்கள், கயிறு, கூரை வேறு. கோவிந்தசாமி நாயக்கர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்.  ‘நளினி! நளினி!’ என்று எரியும் வீட்டைக் காட்டிக் கதறி அழுது உள்ளே பாயத் துடிக்கிறார்.  குமாருக்கு எல்லாம் புரிந்து விட்டது.  நளினி எரியும் வீட்டுக்குள்! யாரும் எதிர்பார்க்கவில்லை, எரியும் வீட்டுக்குள் குமார் பாய்ந்து ஓடுவான் என்று!.

எரியும் வீட்டுக்குள் புகுந்த அவனை புகையும் நெருப்பும், கீழே விழும் கம்புகளும் ஒன்று சேர்ந்து தாக்கின.  தாழ்வாரத்தைக் கடந்து எப்படி உள்ளே வந்தோம் என்பது அவனுக்குப் புரியவில்லை.  கம்பங்கள் படீர் படீர் என்று வெடித்துக்கொண்டிருந்தன.  தென்னை உத்திரம் கீழே விழுந்து விடுமோ என்று பயமாக இருந்தது.  எரியும் மூங்கிலைத் தாண்டி வீட்டிற்குள் போனான்.  பல அறைகள் கொண்ட பழங்கால வீடாகையால் நளினி எந்த அறையில் இருப்பாள் என்று தெரியாமல் ஒவ்வொரு அறையாகப் பார்த்துத் தேடினான். ‘ நளினி! நளினி!’ என்று கத்திக்கொண்டே அங்கும் இங்கும் ஓடினான்.

நிலைமை நேரத்திற்கு நேரம் மோசமாகிக்கொண்டே வந்தது. நளினியைக் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்தான்.  அவளைக் காணவில்லை என்று நினைக்கும்போது அவன் பதட்டம் அதிகரித்தது.  வீட்டின் பின்புறம் ஓடினான்.  அங்கோ முழுவதும் கீற்றுக்கொட்டகை. தீயின் கோர தாண்டவம் அங்கு அதிகமாகவே இருந்தது. முதலில் தீப்பிடித்த இடம் அதுதான் போலும்.  தீயின் நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.  நடுவிலே ஒரு சிமெண்ட் திட்டு. அதன் நடுவே நளினி மயங்கி விழுந்து கிடக்கிறாள்.  தீயின் ஜுவாலைக்கு நடுவே நளினி! குமாருக்கு மூச்சு நின்று விடும்போல இருந்தது. அவன் நரம்புகள் புடைத்தன.

எப்படி அவளை அணுகுவது என்று ஒரு சில செகண்டுகள் யோசிப்பதற்குள் எரியும் தட்டி ஒன்று அவள் மேல் விழுந்தது.  அவ்வளவுதான்.  நெருப்புக்கு ஊடே ஓடினான்.  உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நெருப்பு உக்கிரமாகத் தாக்கியது.  எதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகே சென்று எரிந்து கொண்டிருந்த தட்டியைத் தூர எறிந்தான். எரியத் தொடங்கிய நளினியின் புடவையைக் கசக்கி அணைத்தான்.  நல்ல வேளை! அந்தத் தட்டியைத்தவிர வேறு தீயின் நாக்குகள் அவளைத் தொடவில்லை.  ஆனால் புகை மண்டலம் அவளை மயக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.  அவள் தலைமுடியை அவிழாமல் இறுக்கி முடிந்து அவளை ஆட்டுக்குட்டியைத் தூக்குவதுபோலத் தூக்கினான்.  நிமிர்ந்து பார்த்தால் மேலே இருந்து இன்னும் பல கூரைகள் சரிந்து எரியத் தொடங்கின. அந்த இடம் இன்னும் சில நிமிடங்களில் தீயின் கோரப்பிடிக்குள் சிக்கிவிடும் என்பதை உணர்ந்தான்.

அவளைத் தூக்கிக்கொண்டு பின்புற வழியில் ஓடலாம் என்று பார்த்தால் அங்கே ஒரே நெருப்புக் கோளம். முற்றிலும் அடைபட்டிருந்தது.  வந்த வழியே திரும்ப வேண்டியதுதான் என்று அந்த நெருப்பு வளையத்தைத் தாண்டி ஓட்டு வீட்டுப் பகுதிக்கு வந்தான்.  ஓடுகள் ஒவ்வொன்றாக அப்போதுதான் வெடிக்கத் துவங்கின.

நடுவில்  சின்ன முற்றம் மாதிரி இடம் வந்ததும் அவன் கால்கள் தடுமாறின.  மூங்கில் கிழித்துத் தோள்பட்டையிலிருந்து  இரத்தம் வேறு கொட்டிக் கொண்டிருந்தது. அப்படியே நளினியைக் கீழே போட்டு அவனும் மயங்கி அவள் மேல் விழுந்தான்.  அந்த அதிர்ச்சியில் நளினியின் மயக்கம் தெளிந்தது. “ யார்.. நான்… எங்கே.. ஐயோ.. நெருப்பு… குமார்… நீங்க எங்கே..  அவளால் யோசிக்கவே முடியவில்லை.  அந்த முற்றத்தைத்தவிர  மற்ற எல்லா இடத்திலும் நெருப்பு சூழ்ந்திருந்தது.

தன்னைக் காப்பாற்ற வந்த குமாரும் மயங்கிக் கிடக்கிறான் என்பதை உணர்ந்ததும் அவளுக்குத் துக்கம் பீறிட்டது. “ குமார்! குமார்!” என்று அவன் கன்னத்தைத் தடவி அவனை மயக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள் . முடியவில்லை. அந்த நேரம் பார்த்து வெடித்த ஓடு அவன் தலையில் வெகு வேகத்துடன் தாக்க ‘ அம்மா’ என்று அலறி எழுந்தான் குமார்.  அவனுக்குச் சுரணையும் வந்தது.  மேலும் பல ஒடுகள்  வெடிக்கும் போல் இருப்பதைப் பார்த்து நளினி குமாரை மெல்ல இழுத்து மேடான மூலைக்குக் கொண்டுபோனாள்.  மடாலென்று முறிந்த உத்திரம் சலசலவென்று ஓடுகளைக் கொட்டி வெளியே செல்லும் வழியைச் சுத்தமாக அடைத்து விட்டது.

“ இனி தப்ப முடியாது குமார்! நாம ரெண்டு பேரும் இங்கேயே சாம்பலாக வேண்டியதுதான்!” நளினி அழுதுகொண்டே கூறினாள். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு மற்றவர் மீது விழும் தீப்பந்தங்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.  நளினி!  குமார்! என்று இரு குரல்கள் மட்டும் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தன.

@@@@@@@@@@@@@@@@@@

இதே இடத்தில்தான் பத்து நாட்கள் முன்னே… இருவரும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான்.. வேறு ஒரு தீ அன்றைக்குக் குமாரைச் சூடேற்றியிருந்தது.

“ நளினி!”

“ குமார்! நீங்களா? நீங்க எப்படி இங்கே!”

“ நளினி! உன்  வீட்டில் யாரும் இல்லே என்று தெரிஞ்சுக்கிட்டுதான் வந்தேன்.  நளினி! ஐ நீட் யு.. ரைட் நௌ ..”

“ குமார்! இது சரியில்லை! யாராவது பார்த்தால்…”

“ என்ன நளினி! இதிலென்ன தப்பு? நம்ம கல்யாணம் நிச்சயமான மாதிரிதானே ! உங்கப்பாதான் ஓகே சொல்லிட்டாரே!”

“ அதுக்காக இந்த நேரத்தில் நீங்க இப்படி வருவது சரியில்லை. கொஞ்ச நாள் பொறுங்க பிளீஸ்..”

“ நோ நளினி!  என்னைத் தடுக்காதே! கிணற்று நீர், ஆக்கப் பொறுத்தவன் இந்தப் பழமொழி எல்லாம் வேண்டாம். எனக்கு நீதான் வேணும். இந்த முற்றத்திலே, முத்தத்திலே ஆரம்பிப்போம்.”

இழுத்து அணைத்து அவள் உதட்டுடன் கலந்து முத்தமிட்டான். முதல் முத்தம் தித்தித்தது.  ஆனால் அதிலே போதை மருந்து வாசனை இருந்தது.  நளினிக்கு மயக்கமே வரும்போல் இருந்தது.

“ குமார்! நீங்க குடிச்சிட்டு வந்திருக்கீங்க ! மரியாதையா வெளியே போயிடுங்க! ஐ ஹேட் யு!”

“ நோ குமார்! ப்ளீஸ் வேண்டாம்! கல்யாணத்துக்கு அப்புறம் குமார்… ப்ளீஸ்.. தயவு செஞ்சு… இது சரியில்லை…. குமார்.. விட்டுடுங்க… குமார்… நோ… நோ… சே! நீங்க எல்லாம் ஒரு மனுஷனா!”

“ ப்ளீஸ் நளினி! முதல் இரவுக்கு ஒரு சிறு ஒத்திகை. அவ்வளவுதான்.. கமான்..”

எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை. அவனைக் கீழே தள்ளிவிட்டு நின்றாள்.

“ கெட் அவுட் குமார்! குடிச்சிட்டுக் கன்னாபின்னாவென்று நடந்து கொள்ளும் உங்களை லவ் பண்ணினேன்னு நினைச்சா வெட்கமா இருக்கு! மரியாதையா வெளியே போயிடுங்க! இல்லே சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடுவேன்!”

“ இவ்வளவு நடந்தப்புறம் உன்னை சுவைக்காமப் போக நான் என்ன மடையனா!” என்று  கத்திக்கொண்டே அவள்மீது பாயப்போனான்.

“ இதுக்கு மேலே ஒரு அடி எடுத்து வைச்சீங்கன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாது.”

அவள் குரலில் இருந்த விபரீத ஒலி அவனை பயமுறுத்தியது.  அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்துவிட்டு விடுவிடுவென்று வெளியே ஓடிவிட்டான்.  அன்று வெளியே போன குமாரைத் திரும்ப சந்திக்க மறுத்து விட்டாள் நளினி. அவர்கள் திருமணப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பே முற்றுப்புள்ளி போட்டுவிட்டாள்.  ‘குமாரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்ற தன் பெண் ‘அவனை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மத்திலும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் கோவிந்தசாமி நாயக்கர். அவனுக்காகப் பெண் கேட்டு வந்த அவனது பெற்றோரிடம்  அவனை மணக்க முடியாது என்று அவளே நேரில் சொல்லி விட்டாள்!”

@@@@@@@@@@@@@@@@@@@

“ நளினி எழுந்திரு! நெருப்பு இந்த முற்றத்துக்கு வர்றதுக்கு முன்னாடி எப்படியாவது நாம தப்பிக்கணும்.”

“ குமார்! நீங்க ஏன் எனக்காக இந்த நெருப்பில் வந்து மாட்டிக் கொண்டீர்கள்?”

“ நளினி! நீ நெருப்பில் இருக்கிறாய் என்று தெரிந்து என்னால் சும்மா இருக்க முடியுமா? என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாத்தறதுதான் என் கடமை!”

“ ஐயோ குமார்! உங்கள் உண்மையான அன்பைப் புரிஞ்சுக்காம நான் உங்களைப் பலமா காயப்படுத்திட்டேன். அதுக்குத்தான் இந்த தண்டனை.  நீங்க எப்படியாவது தப்பிச்சுப் போயிடுங்க!”

“ தப்பு உன்மேலே இல்ல நளினி! என்னோடதுதான்! இல்லேன்னா அன்னிக்குப் போதை மருந்து சாப்பிட்டிருப்பேனா? உங்கிட்ட தகாத முறையில் நடந்திருப்பேனா?”

“ என்னது? போதை மருந்தா?”

“ ஆமா நளினி! நம்ம காதலை நண்பர்கள்கிட்டேசொல்லி ஒரு ட்ரீட் கொடுத்தேன். அதில ஒரு துரோகி எனக்கு வைத்திருந்த  ஜூஸிலே போதை மருந்தைக் கலந்து கொடுத்திட்டான்.  அதனால்தான் அப்படி நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சுடுன்னு நான் எழுதிய லெட்டர், நேரில் வந்து  சொன்னது எதையுமே நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை!”

“ ஐயோ குமார்! உங்க சின்னத் தப்புக்குப் பெரிய தண்டனை கொடுத்திட்டேனே! என்னை மன்னிக்க மாட்டீங்களா?”

அதற்குள் தீயின் நாக்குகள் அந்த முற்றத்தைச் சுற்றிப் பரவத் தொடங்கியது. எரியும் தீ நாக்குகளுக்கு நடுவே அவர்கள் இருவரும்.

“ குமார்! எனக்கு ஒரு வரம் தருவீர்களா?”

“ வரமா! நானா! இப்போதா?”

“ ஆமாம் குமார்! இப்போதேதான்! நாம ரெண்டுபேரும் எழுந்திரிச்சுத் தப்பிச்சுப் போக முடியாத சூழ்நிலை! எந்த நிமிஷத்திலும் தீயின் நாக்குகள் நம்மை சாப்பிடப்போகின்றன!  என் ஆசை .. வரம்… என்னன்னா,  நான் சாகும்போது உங்கள் மனைவியாக சாக விரும்புகிறேன்! மஞ்சள் கயிறு இல்லை! மாலைகள் இல்லை! நம்மை சுத்தி இருக்கும் அக்னி சாட்சியா என்னை மனைவியா ஏத்துக்கங்க குமார்!”

“ நளினி!”

Related image

இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கட்டிக்கொண்டார்கள். அவன் தீப்புண்களுக்கு உதட்டால் ஒத்தடம் கொடுத்தாள். நெருப்பின் சூடு அவளை அணுகாமல் அவள் உடலைத் தன் உடலால் போர்த்தினான்.! அவளது கண்ணீர் அவன் காயங்களுக்கு மருந்தாயிற்று. ‘இதுதான் மாலை’  என்று இருவரும் தங்கள் கரங்களை மற்றவர் கழுத்தில் மாற்றி மாற்றிச் சுற்றினர்.  ‘இதுதான் தாலி’ என்று அவள் கழுத்தில் மூன்று முறை முத்தமிட்டான்.  காற்றில் நெருப்பு எரியும் ஓசை நாதஸ்வரமாக ஒலிக்கிறது.  வெடிக்கும் ஓடுகள் மேளசத்தம்!  ‘கெட்டிமேளம்! கெட்டிமேளம்!’  அக்னியை வலம் வருவதற்குப் பதிலாக அக்னியே அவர்களை வலம் வந்தது.  ‘இப்போது நமக்கு முதல் இரவு! ஏன் உன் உடம்பு இப்படி சுடுகிறது? பயமா? வெட்கமா?’

“ இவ்வளவு வெளிச்சத்துக்கு நடுவில்… குமார்! எனக்கு வெட்கமாக இருக்கிறது! நம்மைச் சுற்றியுள்ள நெருப்பு விளக்கை அணையுங்களேன்! குமார்! ப்ளீஸ்.. குமார்!”

“ நளினி!”

அவர்கள் தலைக்கு மேலே பெரிதாக எரியும் திரைச்சீலைகள் அந்த புது மணத் தம்பதிகளை நெருப்புப் போர்வை போர்த்தி அழகு பார்க்கத் துடிக்கின்றன.

அதற்குப் போட்டியாக, தூரத்தில் தீயணைக்கும் வண்டியின்                             ‘ கணகண’வென்ற ஓசை ஒலிக்கின்றது.

யார் முந்துவார்கள்?

புத்தகக் கண்காட்சி 2017

எழுதப் படிக்கத்தெரிந்த அனைத்து மக்களும் வரவேண்டிய இடம் !!!

வாருங்கள்! புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்! எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஆதரியுங்கள்!

நண்பர் அழகியசிங்கரின்  விருட்சம் அரங்குக்கு வாருங்கள்!

pic3

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

அசோகருக்கு அப்புறம் …

 

அசோகர் வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்தாரென்றாலும் சரித்திரத்தில் அவர் ஒரு ஹீரோ தான்.

ரஜினி வில்லனாக வந்து ‘தலைவா’ ஆனதைத்தான் நாம் பார்த்திருக்கிறோமே!

அடுத்த 500 வருடங்கள் இருண்ட காலத்தில் உருண்டாலும் …

சரித்திரம் உறங்கி விடவில்லை.

அந்நேரத்தில் உலகில் மற்ற பல சாம்ராஜ்யங்கள் சக்கைப் போடு போட்டன.

தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் வீரம் வளர்த்து – சங்கத் தமிழ் வளர்த்து – காவியங்கள் படைத்துப் பொற்காலத்தை உருவாக்கினர்.

ரோமாபுரியில் சீசர்கள் மூன்று கண்டங்களில் ஆதிக்கம் செலுத்தி- கலாச்சாரத்தைப் பெருக்கி வெற்றி நடை போட்டனர்.

இயேசுநாதர் கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்து பின் உயிர்த்து எழுந்து உலகுக்கு ஒளியூட்டினார்!

புத்த மதம் பரவினாலும் ஹிந்து மதமும் பரவிப் பறந்தது,

மகாயான புத்த பிக்ஷுக்கள்

 

அசோகருக்குப் பின்?

நடந்தது என்ன?

பெரும்பாலான சரித்திரக் கதாசிரியர்கள் நேராக குஷானர்களைப் பற்றிச் சொல்லி… உடனே குப்த சாம்ராஜ்யம் என்று குடு குடுவென்று ஓடி விடுவார்கள்..

நாம் சற்று நிறுத்தி யோசிப்போம்!

சின்னஞ்சிறு செய்திகளை அசை போட்டுச் சுவைப்போம்.

சரித்திரத்தின் நிழலில் …நின்று நிதானமாக…கதைப்போம்.

Image result for king ashoka family tree

அசோகர்:

வருடம்: 232 BC

பாடலிபுத்திரம் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தது.

தக்ஷசீலத்திலிருந்து செய்தி பறந்து வந்தது.

சக்கரவர்த்தி அசோகர் காலமானார்.

அவரது உடல் வெகு வேகத் தேரில் பாடலிபுத்திரம் வந்தது.

அசோகரது மகன் கூனாலா மற்றும் அவன் மகன் சம்ப்ரதி – உஜ்ஜயினியில் இருந்தனர்.

அவர்களுக்கும்  செய்தி சேர அவர்களும் பாடலிபுத்திரம் விரைந்து வந்தனர்.

அசோகரது மற்றொரு பேரன் தசரதா அசோகரது இறுதி யாத்திரையை நிர்வகித்தான்.

அசோகரின் உடலில் மயில்படமிட்ட மௌரியக் கொடி சுற்றப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு அரண்மனை உப்பரிகையில் வைக்கப்பட்டது.

மகத மக்கள் அரண்மனை வாயிலில் பெருந்திரளாகக் கூடித் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

அடுத்த நாள் மாலை ஆதவனின் தங்கக் கிரணங்கள் மெல்ல மறையும் நேரம். அசோகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சாம்பல் காசியில் கங்கையில் கரைக்கப்பட்டது.

 

மறுபடியும் அரசாட்சி உரிமை யாருக்கு?

எல்லாத் தலைமுறைகளிலும் இந்த பிரச்சினை கடினமான ஒன்று தானே!

இந்தக் கேள்வி இல்லை என்றால் சரித்திரம் என்றுமே சுவாரஸ்யமாக இருந்திருக்காது!

அசோகருக்கு மூன்று மகன்கள்.

முதல் மகன் ‘மகேந்திரா’.

இரண்டாவது மகன் ‘டிவாலா’.

மூன்றாவது மகன் ‘கூனாலா’.

மகள் ‘சங்கமித்ரா’.

மகேந்திரன், சங்கமித்ரா இருவரும் மகாராணி தேவியின் மக்கள்.

இருவரும் பாடலிபுத்திரத்தை விட்டு விலகி சாமான்ய குடி மக்களாக வாழ்ந்தனர்.

அசோகர் புத்தமதத்தைத் தழுவிய போது – அசோகர் இருவரையும் சந்தித்து:

“மகேந்திரா, சங்கமித்ரா … நீங்கள் இருவரும் நமது பிரதிநிதியாக இருந்து புத்த மதத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும். இலங்கைக்குச் செல்லுங்கள். திரும்பி வந்து மௌரிய அரசாட்சியை ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று பணித்தார்.

மகேந்திரன்:

“தந்தையே…மகிழ்ச்சி.. ஆனால் ஒரு வேண்டுகோள்.. புத்தரின் போதனைகள் எங்கள் உள்ளத்தில் ஆழ்ந்திருக்கின்றது. ஆகவே அரசாட்சியில் என் மனம் ஈடுபடவில்லை. என்னை வற்புறுத்த வேண்டாம்’

அசோகரின் கண்களில் நீர் கசிந்தது.

‘அரசு வேண்டும் என்பதற்காக கொலைகள் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில்..இப்படி ஒரு தியாகமா? எனக்குப் பெருமை சேர்த்தீர்கள்”

மகேந்திரன் – சங்கமித்ரா சென்ற பின் அசோகரது இரண்டாவது மகன் ‘டிவாலா’ – அசோகருடைய பிரியமான மகன். மகாராணி ‘கருவாக்கி’ யின் மகன். தக்ஷசீலத்திற்கு அவன் ஆளுனராக இருந்து வந்தான். அசோகர் அவனை தனக்குப் பின் அரசன் என்று எண்ணி மகிழ்ந்திருந்தான். அவனது அகால மரணம் அசோகரை உலுக்கி விட்டது.
அவன் மகன் தசரதா ஒரு இளைஞன்.

கூனாலா அசோகரின் மூன்றாவது மகன். மகாராணி பத்மாவதியின் மகன்.

பத்மாவதி முன்னமே இறந்து விட்டதால் மகாராணி ‘அசந்திமித்ரா’ கூனாலாவை வளர்த்தார்.

(ராணிகளுக்குத் தான்  பஞ்சமே இல்லையே!)

அசந்திமித்ராவின் மறைவிற்குப் பின் ஒரு ‘மோகக் கதை’ விரிந்தது.

காமத்தின் சக்தி அபரிமிதமானது.

அசந்திமித்ரா அசோகரை அன்புடன் ‘கவனித்து’ இன்பம் அளித்தாள்.

அவள் மறைவு அசோகரை பெரிதும் வாட்டியது.

ராணியின் பணிப்பெண் ‘திஷ்யரக்ஷா’ அழகி.

அழகுடன் இளமை சேர்ந்தால் அதன் விளைவை சொல்லவும் வேண்டுமோ?

அந்தப்புரம் அழகு ராணிகளால் நிரம்பி வழிந்தாலும் புது மலர் போல் இருந்த பணிப்பெண் அசோகரது கண் பார்வையில் பட்டாள்.

வயது கூடியிருந்தாலும் அசோகரது ஆசை அடங்க வில்லை.

என்ன தான் புத்த பக்தராக இருந்தாலும் –ஆசையை அடக்கலாம் … ஆனால் மோகத்தை?.

மன்றம் வந்த தென்றல் அவள்… அசோகரின் மஞ்சத்தில் விழுந்தாள்.

மோகத்தின் உச்சியில் அசோகர் கூறினார்:
’இளம் பூவே…உன்னை என் ராணியாக்குகிறேன்’

திஷ்யரக்ஷா அசோகரின் ஆசைக்கிழத்தியாக இருந்தபோதும் அவள் இளமை அவளை சும்மா விடவில்லை.

கண்கள் அலை பாய்ந்தது.

பருவம் பாய் விரித்தது.

இளவரசன் கூனாலா முப்பது வயதுக் காளை.

திடகாத்திரமான தோள்களும் – விரிந்த மார்பும் –சிங்கம் போல் நடையும்!.

அவனது உடலின் வெகு அழகிய அங்கம் – அவனது கண்கள்!

தாமரைக் கண்கள் என்று இதிகாச நாயகர்களின் கண்களைப் பற்றிக் கூறுவதை அன்று அவள் உணர்ந்தாள்.

அந்தக் கண்களில் ‘அவள்’ விழுந்தாள்.

மகேந்திரன் , டிவாலா இருவரும் அரசுரிமையிலிருந்து மறைந்து விடவே கூனாலாவுக்குத்தான் மௌரிய அரியணை என்பது நிச்சயமானதே!

கூனாலாவுக்கு நான்கு வருடங்களுக்குமுன் திருமணமாகி மூன்று வயது ஆண் குழந்தை இருந்தது.

‘அதனால் என்ன?’

‘நானும் அவன் காதலியாகிறேனே’- என்றாள் திஷ்யரக்ஷா..

மயங்குகிறாள் ஒரு மாது.

‘ஒரு கிழவனுக்கு ராணியாக இருப்பதை விட ஒரு அழகிய வாலிபனுக்கு வைப்பாட்டியாக இருந்து சுகம் அனுபவிப்பதே மேல்’ – என்று எண்ணினாள்.

பாடலிபுத்திரத்தின் அரண்மனைப் பூங்கா.

தென்றல் மலர் செடிகளில் ஊர்ந்து வந்தது.

கூனாலா ஒரு ஆலமரத்தின் அடியில் பஞ்சணை ஒன்றில் அமர்ந்து இன்பம் ததும்பும் பாடல் பாடிக்கொண்டிருந்தான்.

முறைப்படி சங்கீதம் பயின்றவன்.

அவனது குரல் இனிமை விவரிக்கத்தக்கதல்ல.

அனுபவித்தால் தான் விளங்கும்.

அந்த தேவ ராகம் கேட்டு திஷ்யரக்ஷாவின் உடல் மோக ராகத்தில் துடித்தது..

அவனை நெருங்கி மயக்கம் தரும் பார்வையை வீசினாள்.

வெட்கத்தை விடுத்தாள்.

இச்சையை உரைத்தாள்.

கூனாலா அவள் அழகை ரசித்திருந்தாலும் அவள் தந்தையின் காமக்கிழத்தி என்பதை உணர்ந்திருந்தான். மேலும் அவள் ஒரு பணிப்பெண் என்பதையும் கூறி,

“இந்த கேடு கெட்ட எண்ணத்தைக் கை விடு. இனி நான் உன்னை என் கண்களால் காண்பதில்லை’ – என்று கடிந்து கொண்டான்.

மோகத்தில் இருந்த திஷ்யரக்ஷா மனதில் காயப்பட்டாள்.

நீலாம்பரியானாள்.

அவன் படையப்பா அல்லன்.

அவனது தாமரைக் கண்களைப் பார்த்தாள்.

மோகம் மறைந்து கோபம் அவளை ஆட்கொண்டது.

‘இந்தக் கண்கள் என்னைக் காணாவிடில் அது இருந்துதான் என்ன பயன்?’.

ஆத்திரம் பொங்கியது.

விஷப் பொடியை எடுத்து வெகு விரைவாக கூனாலா எதிர்பாராத வேளையில்  அவன்  கண்களில் அப்பினாள்.

இளவரசன் துடிதுடித்தான்.

அந்த தாமரைக் கண்கள் கருகின.

பார்வை அந்தக் கண்களை விட்டுப் பறந்தது.

பாவையும் அந்த அரண்மனையை விட்டுப் பறந்தாள்.

கூனாலா பாடலிபுத்திரத்தை விட்டு விலகி இருந்தான்.

ஆண்டுகள் 3 உருண்டோடியது.

கூனாலா ஒரு இசைக்கலைஞனாக மாறுவேடம் தரித்து அசோகரது அரண்மனைக்கு வந்தான்.

அரச மண்டபத்தில் ஒரு இசைக் கச்சேரி நடத்தினான்.

அசோகர் அந்த தேவகானத்தில் மெய் மறந்தார்.

‘கலைஞரே- தாங்கள் வேண்டும் பரிசு யாது?’

கலைஞருக்கு வேறு என்ன..ஆட்சி தானே வேண்டும்!!

கூனாலா தன் வேடத்தைக் கலைத்து:

‘தந்தையே! மௌரிய அரசாட்சி வேண்டும்’ என்றான்.

அசோகர் அவனது நிலை பார்த்து மனமிரங்கினார்.

ஆனால் – கனமான மனத்துடன்:

‘மகனே கூனாலா! உன் நிலை கண்டு என் மனம் பச்சாதாபம் கொள்கிறது.

ஆனால் கண்கள் அற்ற உனக்கு அரசுரிமை தர இயலாது’

கூனாலா: ‘அரசே! நான் எனக்காக இதைக் கேட்கவில்லை. என் மகனுக்காகக் கேட்கிறேன்’

அசோகர்: ‘எப்பொழுது?’

கூனாலா:’ சம்ப்ரதி’- என்றான்!!

சம்ப்ரதி என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள்.

அசோகர் ஒத்துக்கொண்டார்.

அதிலிருந்து கூனாலாவின் மகன் பெயர் சம்ப்ரதி என்று வழங்கப்பட்டது.

மன்னர் நினைத்தார்- தான் இன்னும் பத்து-இருபது ஆண்டுகள் ஆள்வோம்- அதற்குள் – 5 வயது பாலகன் சம்ப்ரதி அரசனாக வயது அடைவான்.

ஆனால் விதி தன் முடிவுகளை யாரையும் கேட்டு எடுப்பதில்லை.

அசோகர் தக்ஷசீலத்திற்குச் சென்ற சமயம்… காலமானார்.

சாணக்கியருக்குப் பிறகு அவர் அளவுக்குத் திறமை கொண்ட மந்திரிகள்/அரசியல் ஆலோசகர்கள் இல்லை. எனினும் சாணக்கியரின் புகழ் மந்திரிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும் சக்தியையும் கொடுத்திருந்தது.

அசோகருக்குப் பின் நிலைமைக்குத் தீர்வு காண மகா மந்திரி துடித்தார்.

நிலைமை என்ன?

சம்ப்ரதி 5 வயது பாலகன். தசரதா 20 வயதினன்.

தசரதா தான் அரசனாக எண்ணம் கொண்டிருந்தான்.

அசோகர் சம்ப்ரதியைப் பிற்கால அரசன் என்று அறிவித்திருந்தான்.

தசரதா: தாத்தாவின் ஆட்சிக்குப்பிறகு யார் அரசாள்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மகா மந்திரி: ‘நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்’

‘என்ன’ – இரு இளவரசர்களும் ஒரே நேரம் கூவினர்.

அவர்கள் முகம் சிவந்தது.

குரல்கள் கர்ஜித்தது.

‘நிறுத்துங்கள்!’ மந்திரியின் குரல் இடியென முழங்கியது.

‘நான் சொல்வதை முழுதாகக் கேளுங்கள் முதலில்’.

‘நீங்கள் இருவரும் இந்த ராஜ்யத்தை அரசாளத் தகுதி உள்ளவர்கள்தான்!’

மந்திரிக்குத் தன் வார்த்தைகளிலே நம்பிக்கை இல்லை – இருப்பினும் நம்பிக்கை இருப்பது போல் பேசினார்.

‘ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள்வதென்றால் எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

சக்கரவர்த்தியின் மூத்த மகன் மகேந்திரன் புத்த பிக்ஷு ஆகி விட்டார். – ஆகவே அவர் அரசராக வாய்ப்பில்லை.

தசரதா.. உனது மாமன் ஜாலுக்கா காஷ்மீர் பகுதிக்குத் தானே மன்னன் என்று பிரகடனம் செய்து விட்டான்.

வீரசேனன் காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரித்து அதை அரசாளத் துவங்கிவிட்டான்.

விதர்பா நாடும் மௌரிய அரசிலிருந்து பிரிந்து தனி நாடாயிற்று.

மகாமேகவாகனா அரச குடும்பம் கலிங்கத்தை நம்மிடம் இருந்து பறித்து விட்டது.

தென்னிந்தியாவில் இப்பொழுது நமக்கு ஒரு பகுதியும் இல்லை.

தனநந்தன் காலத்திலிருந்து மகத நாட்டில் எவ்வளவு செல்வம் கொழித்திருந்தது!!

அந்த செல்வத்தைப் பற்றி தமிழ் நாட்டில் புறநானூறில் எப்படி எழுதியிருந்தனர்.

ஆனால் – அசோக சக்கரவர்த்தி காருண்ய குணத்தால் – அரசின் அனைத்து செல்வங்களையும் மடங்களுக்கும் துறவிகளுக்கும் தானம் செய்துவிட்டார். கஜானா காலி!”

பெருமூச்சு விட்டார்.

இளவரசர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

மந்திரி தொடர்ந்தார்:

இவர் என்னதான் சொல்கிறார்? என்று இளவரசர்கள் இருவரது முகமும் குழப்பத்தில் ஆழ்ந்தது.

‘பாடலிபுத்திரம் மற்றும் அருகிலிருக்கும் பகுதிக்கு தசரதா அரசனாகட்டும். உஜ்ஜயினி ,தக்ஷசீலம் பகுதிகளுக்கு சம்ப்ரதி அரசனாக இருக்கட்டும். பத்து வருடம் கழிந்து – சம்ப்ரதி – அசோகா சக்கரவர்த்தி ஆணையின்படி அரசனாகட்டும்.”

அதன் படியே நடந்தது.

அசோகருக்கு பின்னர் வந்த இவர்கள் அவர் அளவுக்குத் திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும், அசோகர் படைவீரர்களை கலைத்துப் புத்தமதப் பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசைக் கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.

ஆக்கல் ஒன்று இருக்குமானால் அழிவு ஒன்று இருக்கத்தானே வேண்டும்?

சரிவு துவங்கியது!

இனியும் சரித்திரம் பேசட்டும்.  

Image result for king ashoka family tree
Reference:

https://www.facebook.com/thehistoryofindia/posts/456085961070198:0

http://nationalviews.com/chakravartin-ashoka-samrat-dasrath-maurya-kunala-samprati

 

மணிமகுடம் – ஜெய் சீதாராமன்


அத்தியாயம் 06.                                          கொல்லிமலை

chapter-6-final

கொல்லிமலைப் பகுதியையும் சுற்றுவட்டாரத்தையும், இந்த வரலாறு நடந்த சுமார் எண்ணூறு வருடத்திற்குமுன், வல்வில்ஓரி என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். அவன் மிகச் சிறந்த கொடை வள்ளல். வீரத்திலும் சிறந்து விளங்கினான். போரில் பல நாடுகளை வென்று அதிபதியானான். அவன் வீரத்தைப் பற்றி இதிகாசங்களிலும் அங்கு வழங்கி வரும் நாட்டுப் பாடல்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். வில்லம்புக் கலையில் அவனை மிஞ்ச ஒருவரும் இல்லை என்று அவைகளில் பேசப்படுகிறது. அவன் வில்லிலிருந்து கிளம்பிய ஒரே அம்பு, ஒரு சிங்கத்தையும், மானையும், கரடியையும் கடைசியாக ஒரு காட்டு எருமையையும் கொன்றது என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த வம்சத்தில் உதித்தவன் தற்போதைய கடம்பூர் குறுநில மன்னன் சம்புவரையர். அவன் மகன், இளவரசன் கந்தமாரன் தஞ்சையில் தங்கியிருந்த மாளிகைக்கு நமது நண்பர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்.

கந்தமாரன் இருவரையும் வரவேற்றான். வந்தியத்தேவனைக் கட்டித் தழுவி “நண்பா, நலமா? கடம்பூர் மாளிகை தீக்கிரையான பின் புது மாளிகையைப்பாலாற்றுக்கு வடக்கே வல்லத்திற்கு அருகாமையில் கட்ட ஆரம்பித்திருக்கிறோம். இனி நாமிருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று நாத்தழுதழுக்கக் கூறினான்’.

அதற்கு வந்தியத்தேவன் “நான்கூட வல்லத்தில் மாளிகை கட்டும் வேலையை ஆரம்பித்துள்ளேன். நான் இங்கே உன்னைப் பார்க்க வந்தது, வேறு காரியத்திற்காக உன் உதவியை நாட” என்றான்.

“என்ன உதவி வேண்டுமானாலும் கேள். தயங்காமல் அதை செய்து முடிப்பது நண்பனான என் தலையாய கடமை” என்றான் கந்தமாரன்.

வந்தியத்தேவன் நடந்த சம்பவங்களைக் கூறிச் சித்திரங்களில் கணித்தவற்றை விளக்கினான். பிறகு “நண்பா, உன் பூர்வீகமான கொல்லிமலையில் பெரியகோவிலூர்அரப்பள்ளீஸ்வரர் சிவன்கோவிலில் அடுத்த பௌர்ணமித் திங்களன்று நடுநிசியில் ஆபத்துதவிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அது கருத்திருமன் இலங்கையிலிருந்து கொண்டு வந்திருக்கும் பாண்டிய புராதனப் பொக்கிஷங்களான மணிமகுடம் இரத்தின ஹாரம் பற்றிய ரகசியமாகும். மாவீரன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற அவர்களைப் பழி தீர்க்க, அவர்களின் உயிர் நாடியான பொக்கிஷங்களை சோழ குலம் அடைய வேண்டும். அவை ஈழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் இருப்பிடத்தைப் பற்றிய ரகசியத்தைத்தான் அவர்கள் விவாதிக்கப் போகிறார்கள். எப்படியாவது அதைப்பற்றி அறிந்து, இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அடைந்து, சோழர்களிடம் சேர்ப்பிக்க இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதைத் தவறவிடக் கூடாது. எனவே உன் உதவியை நாடி வந்திருக்கிறேன்” என்று கூறி முடித்தான்.

“சோழ வம்சத்தை பூண்டோடு அழிக்க சபதமெடுத்திருக்கும் சதிகாரர்கள் எங்கள் பூர்வீக வட்டாரத்திற்குள் இருந்துகொண்டே செயல்படுவது என் இரத்தத்தைக் கொதிக்க வைக்கிறது.  இருக்கட்டும்! என் உதவி என்றும் உனக்கு உண்டு. நானே உன்னுடன் கொல்லிமலைக்கு வந்து என்னாலான அனைத்தையும் அவசியம் செய்கிறேன். ஆனால் அந்த இடத்திற்கு அதிபதியான என்னை மக்கள் பார்த்துவிட்டால் ஊரைக்கூட்டிக்கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த செய்தி சதியாளர்களுக்கு எட்டிவிடக்கூடும்! நமது காரியமும் கெட்டுவிடும். ஆகையால் நாம் மாறுவேடத்தில் செல்லுவது உசிதம்” என்று கந்தமாரன் கூறினான்.

உடனிருந்த திருமலை “வந்தியத்தேவா, நான் இங்கிருந்து கோடிக்கரை செல்லுகிறேன். அங்கு என் குருவிற்காக ஒரு மரக்கலம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஈழத்திற்கு விரைவாகச் செய்திகள் அனுப்பவும் மற்ற தேவைகளுக்கும் அவைகளைப் பயன்படுத்துவார். மதுரை சோழர்களிடம் வீழ்ந்தபின் மாதோட்டத்திற்கு ராமேஸ்வரம் மூலமாக செல்வதே உசிதமான வழி என்றாலும் கோடிக்கரை மூலமாய் மாறுவேடங்கள் தரித்துச் செல்வதே உகந்தது. உன்னைப் பத்திரமாய் அங்கு கொண்டு சேர்ப்பது என் தலையான கடமை. நான் என் குருவிடம் செய்திகளைத் தெரிவித்துவிட்டு அங்கு உங்களுக்காகக் காத்திருப்பேன்” என்று கூறி திருமலை அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

வந்தியத்தேவன் “கந்தமாரா! பௌர்ணமிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. கொல்லி மலைக்குச் செல்ல எத்தனை நாட்கள் தேவை?” என்றான்.

கந்தமாரன் “மூன்று நாட்கள் தேவை. நாளை விடியற் காலையில் நாம் கிளம்ப வேண்டியிருக்கும். இன்று இரவு என்னுடனையே நீ தங்கலாம்” என்றான்.

கந்தமாரனும், வந்தியத்தேவனும்  மாளிகைக்குள் சென்றார்கள்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் போன்ற காவியங்களில் வெகுவாகப் போற்றப்படும் கொல்லிமலை, இராமாயண இதிகாசத்தில் சுக்ரீவனின் பொறுப்பில் இருந்த தேன் நிறைந்த மதுவனமாக  இடம் பெற்றிருந்தது! அதன் உச்சியிலிருந்த, ‘அரப்பள்ளீஸ்வரா சதகம்’ போன்ற பாடல்களில் போற்றப்பட்ட பெரியகோவிலூருக்கு பௌர்ணமித் திங்களுக்கு முதல் நாள் பொழுது சாயும் நேரத்தில் வந்தியத்தேவனும் கந்தமாரனும் வந்துசேர்ந்தார்கள். அன்று இரவு நடுஜாமம்தான் பௌர்ணமித் திங்கள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்! அவர்கள் தலையில் முண்டாசுடனும், முகத்தில் அடர்த்தியான மீசையுடனும், நெற்றியில் பட்டை விபூதியுடனும், அரையில் வெள்ளை நிற உடுப்புடனும் காணப்பட்டர்கள். உள்ளே அவர்களின் உடன்பிறவா கத்தியையும், தேவைப்பட்டால் உபயோகிக்க மறைத்து வைத்திருந்தார்கள்.

குதிரைகளை இருவரும் ஒரு மரத்தில் கட்டினார்கள்.

கந்தமாரன் “வந்தியத்தேவா, அதோ பார்த்தாயா, அரப்பள்ளீஸ்வரர் சிவன் கோவிலை! இன்று பிரதோஷ நாள். கோவில் மக்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் வெளியேறி கதவு மூடப்பட்டதும் நாம் உள்ளே செல்லலாம். உள்ளே போக வேறு வழி இருக்கிறது” என்று கூறி வந்தியத்தேவனைக் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஆற்றின் கரை ஓரமாக அழைத்துச் சென்றான்.

“இதுதான் ‘ஐயாறு’.  நாம் செல்ல வேண்டிய பாதை அதோ” என்று ஒரு ஒற்றை அடிப்பாதையைச் சுட்டிக் காட்டினான் கந்தமாரன்.

ஒருமுறை சுற்றிலும் நோட்டம்விட்டு ஒருவரும் அருகில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு அவ்வழி நடக்கலானான். வந்தியத்தேவன் அவனைத் தொடர்ந்தான்.

“நண்பா, இந்தப் பாதையின் முடிவிலே பார்த்தவர்களைப் பரவசப்படுத்தும் ‘ஆகாய கங்கை’ நீர்வீழ்ச்சி இருக்கிறது. உன்னை ஒரு நாள் அங்கு அழைத்துச் செல்லுவேன்” என்றான் கந்தமாரன்.

ஒற்றை அடிப் பாதை சரிவாகக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பள்ளத்தாக்கு போலும்! குறிப்பிட்ட ஒரு கரடு முரடான இடம் வந்ததும் கந்தமாரன் பாதையைவிட்டு விலகி, மலைக் காட்டுக்குள் செடி கொடிகளை விலக்கிக்கொண்டு வந்தியதேவனுடன் முன்னேறினான். சிறிது தூரம் நடந்தபின் திடீரென்று நின்றான். சற்றுத் தொலைவிலுள்ள ஓர் பெரிய பாறையை சுட்டிக்காட்டினான். கீழே ஓர் குகைத் துவாரம் தென்பட்டது.
“வந்தியத்தேவா, ஒரு காலத்தில் சித்தர்கள், புத்த மதத்தினர்கள் மற்றும் சமணர்களும் இந்த இடத்தின் அமைதியைக் கண்டு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே தங்கினார்கள். அவர்களால் உபயோகப்படுத்தப்பட்ட குகைகள் ஆங்காங்கே இருக்கின்றன. இது ஒரு சமணர் குகை. வா” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

கந்தமாரன் கையில் கொண்டுவந்திருந்த மூட்டையை அவிழ்த்து பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்துத் தீப்பந்தம் ஏற்றினான். அங்கு சமணர்கள் கல் படுக்கைகள் இருந்தன. ஒரு தியானக் கோலத்தில் அமர்ந்திருந்த தீர்த்தங்கரர் சிலை இருந்தது. குகைக்குள் குனிந்து தரையைச் சுற்றிலும் ஆராய்ந்தான். தரையில், பாதி கரியாய் தீய்ந்திருந்த சில கட்டைகளைக் கண்டான். ‘ஓகோ!அப்படியா!’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு “வந்தியத்தேவா, வந்த வேலை முடிந்தது! வா, எங்களது முன்னோர் மாளிகைக்குச் செல்லலாம்” என்றான்.

குகைக்கு வெளியே வந்து கொண்டிருக்கும் போது இதுவரை இருளில் மறைந்திருந்து அவர்கள் செய்கைகளை நோக்கிக் கொண்டிருந்த மனிதன் ஒருவன் பயங்கரமாகக் கத்திக் கொண்டே கந்தமாரன் மேல் பாய்ந்தான். நிலை தடுமாறிய கந்தமாரன் ஒன்றும் புரியாமல் தரையில் அலறிக்கொண்டு விழுந்தான். அவன் கையில் பிடித்திருந்த தீப்பந்தம் தரையில் விழுந்தது. வந்தியத்தேவன் கண் இமைக்கும் நேரத்தில் அணையப் போகும் தீப்பந்தத்தைப் பாய்ந்து சென்று கைப்பற்றினான். ஆனால் அதற்குள் தீப்பந்தம் உயிரை விட்டிருந்தது. தீபம் அணைந்தது! எங்கும் காரிருள்! தடால் என்று ஒரு சத்தம்! ‘ஐயோ’ என்று ஓர் அலறல்! மறுபடி நிசப்தம்! சிறிது நேரம் கழித்துத் தீப்பந்தம் மறுபடியும் ஏற்றும் ஓசை! வெளிச்சத்தில் கையில் தீப்பந்தத்துடன் தெரிந்த வந்தியத்தேவன் கீழே நோக்கினான். அங்கே அவர்களைத் தாக்கியவன் மயக்கமாகிக் கிடந்தான். அவன் தலையிலிருந்து உதிரம் தரையில் வழிந்து கொண்டிருந்தது.. சுதாரித்துக் கொண்டு எழுந்த கந்தமாரன்,

“வந்தியத்தேவா, என்ன நேர்ந்தது?” என்று வினவினான்.

“இந்த மனிதன் நாம் இங்கு வந்தபோது குகையில் மறைந்திருந்தான் போலும்! சதிகாரக் கும்பல்களில் இவனும் ஒருவனாக இருக்கலாம்! சமயம் பார்த்து நம் இருவரையும் தீர்த்துக்கட்ட உன் மேல் பாய்ந்திருக்கிறான். நான் அவன் மண்டையில் அணைந்த தீப்பந்தத்தினால் அடித்ததால் மயங்கிக் கிடக்கிறான். அவனது முகத்தைப் பார்! இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போல் தோன்றுகிறது” என்றான் வந்தியத்தேவன்.
கந்தமாரன் அவன் முகத்தை நோக்கியதும் வியப்படைந்தான்.

“வந்தியத்தேவா, இவன் பெயர் இடும்பன்காரி. நீ கூடப் பார்த்திருக்கலாம். கடம்பூரில் எங்கள் அரண்மனைச் சேவகனாய் வேலை பார்த்தவன். ஆதித்த கரிகாலன் மறைவிற்குப் பின் திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டான். பாண்டியர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று இப்போது தெரிகிறது. எங்கள் அரண்மனையில் இருந்துகொண்டு ஒற்றன் வேலை பார்த்திருக்கிறான்” என்று கந்தமாரன்இடும்பன்காரியின் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தான்.

“வந்தியத்தேவா, நமக்கு மீண்டும் ஒரு சிக்கல். இவன் உயிர் பிரிந்துவிட்டது, இவன் இங்கு இறந்ததை சதியாளர்கள் அறிந்தால், எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள். இன்றைய கூட்டத்தில் அந்த ரகசியம் விவாதிக்கப்படாமலே போகலாம். உடனே உடலை அவர்கள் கண்களில்படாதவாறு அப்புறப்படுத்த வேண்டும்” என்று கந்தமாரன் கூறினான். இருவரும் அவனை அருகில் இருந்த புதர் ஒன்றின் பின்னால் மறைத்து வைத்தார்கள். சரகுகளைக் கொண்டு தரையில் இரத்தக் கறைகளை முடிந்தமட்டும் சந்தேகம் வராதபடி மூடினார்கள். ஒற்றையடிப் பாதையில் மறுபடி ஊருக்குத் திரும்பினார்கள்.

கோவில் கூட்டம் அதற்குள் நன்றாகக் குறைந்திருந்தது. நேராக கந்தமாரன் அவர்களின் பூர்வீக மாளிகைக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்றான். அதற்குள் நன்றாக இருட்ட வேறு ஆரம்பித்திருந்தது.

கந்தமாரன் மறுபடி சுற்றிலும் ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு படியில் ஏறிக் கதவை லேசாகத் தட்டினான். கதவிலிருந்த குட்டிக் கதவு உள்ளிருந்து சிறிது திறந்தது. ஒருவன் தலையை வெளியே நீட்டி “யார் அங்கே?” என்றான்.

“சகாதேவா, நான்தான் உங்கள் இளவரசர்” என்று கந்தமாரன் தன்  மீசையைச் சட்டென்று விலக்கி அவனிடம் காண்பித்துவிட்டு மறுபடியும் அணிந்து கொண்டான்.

“வணக்கம் இளவரசே!” என்று கந்தமாரனை வேற்று உடையில் பார்த்த அதிர்ச்சியில் சற்றே லயித்த சகாதேவன் கதவை முழுவதுமாகத் திறந்து வெளியில் வந்தான்.கந்தமாரன் கால்களில் விழப்போன அவனை தன் இரு கைகளாளும் தூக்கி நிறுத்திய கந்தமாரன் ‘உஷ்..’ என்று உதட்டில் கையை வைத்து அவனை எச்சரித்து வந்தியதேவனுடன் உள்ளே சென்றான்.

உள்ளே ஓசைப்படாமல் நுழைந்தனர் நண்பர்கள் இருவரும்.
“சகாதேவா, எங்களுக்கு உண்ண உணவு ஏதாவது இருக்கிறதா?”
“இதோ ஒரு நொடியில் சமைத்துவிடுகிறேன்” என்றான் சகாதேவன்.
“வேண்டாம் சகாதேவா. பழங்கள் இருந்தால் போதுமானது” என்று கந்தமாரன் கூற, “நமது தோப்புகளிலிருந்து நிறைய காய்கனிகள் சந்தைக்கு எடுத்துச் செல்ல தோட்டத்தில் குவித்திருக்கிறார்கள்.இதோ எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு சகாதேவன் சென்றான்.

அவன் அவ்விடத்தை விட்டு அகன்றதும், சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்த நண்பனை நோக்கிய கந்தமாரன்,
“வந்தியத்தேவா, சகாதேவன் எங்கள் வம்சத்தைப் பரம்பரை பரம்பரையாய் பாதுகாத்துவரும் குடும்பத்தைச் சேர்ந்தவன். தனிக்கட்டை. மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். நாம் பழங்களை விரைவில் உண்டுவிட்டு நமது அடுத்த காரியத்தில் இறங்க வேண்டும். கோவிலிலிருந்து எங்கள் வம்ச முதல்வன் வல்வில்ஓரியினால், சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஒரு பெரிய சுரங்கப் பாதை, மலை அடிவாரத்திற்குப் பக்கத்திலுள்ள ராசிபுரம்வரை செல்லுகிறது. நாம் தற்போது பார்த்த குகையில் வாழ்ந்த சமணர்கள் ஒரு சிறு பாதையை உருவாக்கிப் பெரிய சுரங்கத்தில் இணைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்தது. ஆனால் எப்படியோ பாண்டிய சதிகாரர்கள் இதை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதை அவர்கள் சதித்திட்டக் கூட்டங்களுக்கு உபயோகப்படுத்துகிறார்கள் போலும்! எனினும் கவலையில்லை. இந்த மாளிகையிலிருந்து கோவிலுக்குச் செல்ல எங்களுக்கென்று ஒரு பிரத்யேகமான சுரங்கமும் உள்ளது. அது சகாதேவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. அதில்தான் உன்னைக் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்போகிறேன்” என்றான் கந்தமாரன்.

வாழைப்பழம், மாதுளை, பலா போன்ற பழங்களை ஒரு பெரிய தட்டிலும் தேன், தேங்காய்பால், தண்ணீர் முதலியவைகளை குடுக்கைகளிலும் எடுத்து வந்து அவர்களுக்கருகில் வைத்துவிட்டு, சகாதேவன் கைகட்டிப் பக்கத்தில் நின்றான்.

கந்தமாரன் “சகாதேவா, நீ உடனடியாக ஒரு உதவி செய்ய வேண்டும். எங்கள் குதிரைகள் கோவிலுக்கருகில் மரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளை இங்கு கொண்டுவந்து கொள், இனிப்புத் தீனி முதலியவைகளைக் கொடுத்து நன்கு இளைப்பாற்று. காலையில் நாங்கள் உணவு உண்டபின் எங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும். முதலில் தந்தை படுக்கும் அறையில் உள்ள சுரங்கப் பாதையில் நாங்கள் கோவிலுக்குச் செல்ல ஏற்பாடு செய்” என்று உத்தரவு பிறப்பித்தான்.

(தொடரும்)

 

 

கவிதை ஒரு அலையே! இலையே!! சிறையே !!! -ஈஷ்வர் கிருஷ்ணன்

பத்மநாபன் எதையோ தேடுகிறார்? – அழகியசிங்கர்

Image result for heart attack in a small town hospital in tamilnadu

 

பத்மநாபன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து சுரம், தலைவலி என்று எதுவும் வந்ததில்லை. அடிக்கடி வயிறு வலிக்கும். அதுவும் அஜீரணத்தினால். ஆனால் ஒருமுறை சுரம் வந்துவிட்டது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்தான் ஒவ்வொரு வருடமும் அவருக்கு மே மாதத்தில் சுரம் வந்துவிட்டுப் போகும். அதன்பின் அவருக்கு சுரம் அடித்ததே இல்லை. வயிற்றைக் கட்டுப்படுத்தாத அஜீரண தொந்தரவுதான் அடிக்கடி அவருக்கு இருக்கும். அன்று சுரம் வந்தவுடன், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஊரில் அவர் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. டாக்டர் என்று யாரையும் பார்த்ததில்லை. சென்னையிலும் பெரும்பாலும் அவர் டாக்டரைப் பார்ப்பதில்லை.

அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிவாதான். இருவரும் இலக்கியம் பேசும் நண்பர்கள். சிவாக்கும் அவருக்கும் பலமடங்கு வயது வித்தியாசம். ஆனால் இலக்கியம் பேசும்போது வயது வித்தியாசம் தெரியாது. பார்ப்பதற்கு இளம் வயதுக்காரராக இருந்தாலும், சிவா எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவரைத்தான் பத்மநாபன் போனில் கூப்பிட்டார். சுரம் என்றார். சிவா பத்மநாபனைப் பார்க்க வரும்போது ரசக் கரைசலை எடுத்துக்கொண்டு வந்தார். பத்மநாபன் நெகிழ்ந்து விட்டார்.

தனியாக ஒருவர் இருக்கும்போது, இது மாதிரியான உதவிகள் நிச்சயமாக தேவையாக இருக்கும்.
“என்ன சார், என்னமோ மாதிரி ஆகிவிட்டீர்கள்,” என்றார் சிவா..
“நீங்கதான் ஏதாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டும்,”என்றார் பத்மநாபன்.

அந்த ஊரில் நெடுக பல மருத்துவமனைகள் உண்டு. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்ப ஆயுத்தமானார் பத்மநாபன்.
சிவா மகாதான தெருவில் உள்ள ஒரு இருதய நோய் சம்பந்தமான மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். சாதாரண சுரத்திற்கு ஏன் இங்கு அழைத்துப் போகிறார் என்று யோசித்தார் பத்மநாபன்.
அந்த மருத்துவ மனையில் ஒரே கூட்டம். டோக்கனை வாங்கி வைத்துக்கொண்டு பத்மநாபன் அமர்ந்திருந்தார். கூட்டம் நகர்வதாகத் தெரியவில்லை. பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.

“சிவா போய்விடலாமா” என்று கேட்டார் பத்மநாபன்.
“வேண்டாம், சார்,” என்றார் சிவா.
இருவரும் இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டமோ வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இதய நோயாளிக்காரர்கள். சாதாரண சுரத்திற்கு இங்கு ஏன் வந்தோம்?

ஒரு வழியாக டாக்டரைப் பார்க்க அனுப்பினான் அங்குள்ள ஊழியர்.
உள்ளே நுழைந்து டாக்டர் எதிரில் அமர்ந்தாலும், டாக்டர் பத்மநாபனைப் பார்க்கவில்லை. போன் மேலே போன். பேசிக்கொண்டே இருந்தார். சுரவேகத்தோடு பத்மநாபன் டாக்டரைக் கடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவா மேலும் கோபம். ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வந்தார்?

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உள்ளே அவசரமாக டாக்டரைப் பார்க்கக் கணவன் மனைவி இருவர் வந்தார்கள். ரொம்ப அவசரம். கணவன் மார்பைப் பிடித்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தான். “டாக்டர் தாங்க முடியலை டாக்டர். வலி தாங்க முடியலை,” என்று மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் பதட்டமாகியிருந்தோம். டாக்டர் அவனைப் பார்த்து, “சட்டையைக் கழட்டுங்க..” என்றார். அவனால் சட்டையைக் கூட கழட்ட முடியவில்லை. “டாக்டர் வலி அதிகமாக இருக்கிறது,”என்று அவன் இன்னும் கத்தினான்.

பத்மநாபனுக்கும், சிவாவிற்கும் தர்மசங்கடமாக இருந்தது. சிறிது நேரத்தில் கத்தினவன் கீழே விழுந்துவிட்டான். உடனே பரபரப்பு கூடி விட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பத்மநாபனும், சிவாவும் அந்த இடத்தைவிட்டு வாசலுக்கு ஓடி விட்டார்கள். சிவா அந்தக் காட்சியைப் பார்த்ததால் வாந்தி எடுத்தார். “என்ன சிவா, வாந்தி எடுக்கிறீங்க?”என்று பத்மநாபன் கேட்டார்.

“என்னால தாங்க முடியாது சார்,” என்றார் சிவா.
“வேற ஆஸ்பத்திரிக்குப்   போகலாம்…ரொம்ப காலியா இருக்கிற ஆஸ்பத்திரியா  பாருங்க…சாதாரண சுரத்திற்குப் பார்க்கிற டாக்டராகப் பாருங்க…”
“அந்த ஆளுக்கு என்ன ஆயிருக்குமோ…உயிரோடு இருப்பாரா…செத்துப் போயிருப்பாரா…”
“சிவா..அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு எதுக்கு…மேலும் அவர் இறந்தாலும் நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்..”என்றார் பத்மநாபன்.

பின் அங்கிருந்து ஒரு சாதாரண டாக்டரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு பத்மநாபனைக் கொண்டுவந்துவிட்டுப் போய்விட்டார் சிவா.
கொஞ்சம் நேரம் கழித்து சிவாவிடமிருந்து போன் வந்தது. “சார், அந்த ஆள் போயிட்டான்..”என்றார் சிவா.

கேட்டவுடன் சொரேரென்றிருந்தது பத்மநாபனுக்கு. அவர் கண் முன்னால ஒரு 40 அல்லது 42 வயதுக்குட்பட்ட ஒருவர் மார்பு துடித்து இறந்தும் விட்டார். அப்போது அந்த மனிதன் துடித்த துடிப்பு. கத்திய கத்தல் அவர் காதில் இப்போதும் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தது. காலையில் நடந்த சம்பவமே பத்மநாபன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

தனியாக இருப்பதால்தான் இதுமாதிரியான பிரச்சினை. குடும்பத்தோடு இல்லாமலிருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அவருக்குத் தோன்றியது.

சுரம் வேகம் தணிந்து விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தார். பின் கடைக்குச் சென்று ஒரு தர்மாமீட்டரை வாங்கிக்கொண்டு வந்தார். தர்மாமீட்டரை எடுத்து வாயில் இடுக்கிக்கொண்டு சுரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுரம் சாதாரணமாகத்தான் இருந்தது. இந்தத் தர்மாமீட்டரெல்லாம் பயன்படுத்திப் பல ஆண்டுகளாயிற்று.

பத்மநாபன் தன்னையே கேட்டுக்கொண்டார். ‘நான் என்ன பயந்தாங்கொள்ளியா?’ என்று.
‘ஆமாம்.’ என்று தனக்குள் பதிலும் சொல்லிக்கொண்டார்.

எந்த மனிதன்தான் பயம் இல்லாமல் இருக்க முடியும்?கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனியாக இங்கு இருக்கிறார். குடும்பம் சென்னையில். அப்பாவிற்கு 85 வயது. மனைவி இன்னொரு வங்கியில் பணிபுரிகிறாள். அவளால் அவருடன் அவர் இருக்குமிடத்திற்கு வந்திருக்க முடியாது.

முதலில் இந்தத் தனிமை வாசம் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனியாக இருந்ததில்லை. தனிமை என்றால் என்ன என்பதைக் கூட அவர் யோசித்ததில்லை. இந்த ஊருக்கு வந்தபிறகு தனியாக ஒரு வாழ்க்கை நடத்த வேண்டியதை நினைத்து அவருக்கு வருத்தமாக இருந்தது. அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாக ஓடி திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் பொழுது போய்விடும். அவர் தனியாக வீடு மாதிரி எடுத்துத் தங்கியிருந்தார்.

இரவு படுத்துக்கொள்ளும்போது முதன் முதலாக அவருக்குப் பயமாக இருந்தது. இதுவும் வேடிக்கையாக இருந்தது. 50 வயதில் தனக்குப் பயமா? அவர் இருக்குமிடம் கோயில் இருக்கும் தெருவில். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அந்தப் பயம் போய்விட்டது. எப்போதும் சனிக்கிழமை சென்னைக்கு ஓடிவிடுவார். திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி இந்த ஊருக்கு வந்துவிடுவார்.

பெரும்பாலும் அவருக்குப் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது. ஆனால் என்ன, நேரம் இருப்பதில்லை. அவரைச் சுற்றிலும் யாரும் புத்தகம் படிப்பவர்கள் இல்லை. ஏன் அலுவலகத்தில் யாரும் பேப்பரைக் கூடப் படிப்பதில்லை.

அவரால் ஒரு நிமிஷம்கூட புத்தகம் அல்லது பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு வியாதியா என்று கூட யோசிப்பார். இந்தத் தருணத்தில்தான் சிவாவின் நட்பு கிடைத்தது. சிவா ஒரு சிவில் இன்ஜினியர். தனியாக வீடு கட்டிக்கொடுக்கும் பணி. எப்போதும் அவர் சுலபமாக இருப்பதுபோல் பத்மநாபனுக்குப்படும். புத்தகம் படிப்பதுதான் சிவாவிற்கு வேலை. தடித்தடியாய் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பார். பின் அதைப்பற்றிப் பேச பத்மநாபனை நாடி வருவார்.

காலையில் மரணம் அடைந்தவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார் பத்மநாபன். பொழுது இருட்டத்தொடங்கிவிட்டது. அப்போதுதான் காலையில் நடந்த சம்பவம் அவரைத் தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டிருந்தது. இறந்து போனவரின் முகம் அவர் ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தது. அவர், மனைவியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு போட்ட சத்தம், அவர் மனதில் அலறிக் கொண்டிருப்பதாகப் பட்டது.

பத்மநாபன் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பலவிதமாக முடிச்சுப் போட்டுக்கொண்டிருப்பார். இப்படி முடிச்சுப் போடுவது ஆபத்து என்று உணர்ந்திருந்தார்.

என்ன படித்திருந்தால் என்ன? மரண பயம் எளிதில் போவதில்லை..50 வயது..தனிமை. பத்மநாபன் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார். சம்பத் என்ற எழுத்தாளர் எழுதிய இடைவெளி என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. அவர் புத்தகம் அச்சாகி வருவதற்குமுன் இறந்துவிட்டார். அந்தப் புத்தகம் முழுவதும் மரணத்தைப் பற்றியே சம்பத் எழுதியிருப்பார். அவருடைய மரணம்கூட ஒரு நாடகம் மாதிரி எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது.

காலையில் கூட மரணம் ஒரு நாடகம் நடத்திவிட்டுச் சென்றதாகத் தோன்றியது. எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறதோ என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார். காலையில் நடந்த நிகழ்ச்சி மரணத்தைப் பற்றிய ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சியாகத் தோன்றியது. ஜாக்கிரதை என்று மரணம் மிரட்டிவிட்டுச் சென்று விட்டதா?

பத்மநாபனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பொதுவாக தூங்கும்போது விளக்கெல்லாம் அணைத்துவிட்டுத் தூங்குவார். ஆனால் அன்று அவர் எல்லா விளக்குகளையும் எரியவிட்டுத் தூங்க முயற்சி செய்தார். எப்படியோ தூங்கி விட்டார்.

அடுத்தநாள் அவருக்கு சுரம் அளவு குறைந்துவிட்டது. அலுவலகத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார். அன்று சனிக்கிழமை. எப்போதும் அவருக்கு சனிக்கிழமை என்றால் மகிழ்ச்சியான நாள். அன்றுதான் அவர் சென்னைக்கு ஓடும் நாள். ஓடிவிட்டார் சென்னைக்கு. திரும்பவும் திங்கள் வந்தபோது அவருக்கு மரணத்தைப் பற்றிய காட்சி மறந்துவிட்டது.
சிவா அவரைப் பார்க்க வந்தபோது அப்போது நடந்த நிகழ்ச்சியை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். சிவா ஓடிவந்து வாந்தி எடுத்ததைக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார்.

அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அங்கிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
“உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அப்படி ஆகிவிடுகிறது. அன்று என்னால் தாங்க முடியவில்லை,”என்றார் சிவா.
“மரணம் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது,”என்றார் பத்மநாபன்.

இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஓடிவிட்டன. பத்மநாபன் மறந்து விட்டார். அவர் அலுவலகத்தில் மகாதேவன் என்று ஒருவர் இருக்கிறார். பார்ப்பதற்கு நீலு என்ற நடிகர் மாதிரியான தோற்றத்தில் இருப்பார். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார். அவருடைய சில செய்கைகள் பத்மநாபனுக்கும் எரிச்சலாக இருக்கும். அலுவலகத்தில் அவருக்கு கெட்ட பெயர். அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். அவருக்கு 2 பெண். ஒரு பையன். ஒரு பெண் இன்ஜினியரிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பாட்டும் பாடுவாள். கர்நாடக சங்கீதத்தில் ஒரு திறமை உண்டு.

pic2

அந்தப் பெண்ணிற்குக் கும்பகோணத்தில் ஒரு பாட்டுக் கச்சேரி நடத்த வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் விருப்பம்.
அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்தப் பெண்ணின் கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியரைப் பேச ஏற்பாடு செய்தார். பெண்ணிற்குப் பாட்டுச் சொல்லிக்கொடுத்த ஆசிரியையைப் பேசக் கூப்பிட்டார். 90 வயதான ஒரு மிருதங்க வித்வானையும் பேசக் கூப்பிட்டார். பின் ஒரு பத்திரிகை அடித்து எல்லோருக்கும் வினியோகம் செய்தார்.

“பத்மநாபன் வந்திடுங்க..சாப்பாடெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன்,” என்றார் மகாதேவன் ஒருநாள் பத்மநாபனைப் பார்த்து.

அந்த நாள் வந்தது. பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் 30 கிலோமீட்டர் தூரம். பஸ்ஸில் 1 மணிநேரம் பயணம். அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. 7.30 மணியிருக்கும். பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு கும்பகோணம் போய்ச் சேருவதற்குள் நேரம் அதிகமாகிவிட்டது. கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றார். மகாதேவனின் பெண் பாடிக்கொண்டிருந்தாள்.

மகாதேவன் இவரைப் பார்த்தவுடன், வேகமாக ஓடி வந்தார். “என்ன ரொம்ப நேரம் ஆகிவிட்டதே?” என்று விஜாரித்தார். “டிபனெல்லாம் தீர்ந்து விட்டது…காப்பி சாப்பிடுங்க…ராத்திரி சாப்பாடெல்லாம் ரெடியாய் இருக்கும்..சாப்பிட்டுவிட்டுப் போங்க,” என்றார்.

பாட்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்தப் பெண் ‘தம்’ கட்டிக்கொண்டு பாடுவதாகத் தோன்றியது. பின் ஒரு இடைவேளை. மேடையை எல்லோரும் பேசுவதற்காகத் திருத்தம் செய்தார்கள்.

ஒவ்வொருவராக மேடையில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் பாட்டுத் திறமையை மெச்சிப் பேசினார்கள். பேராசிரியர் பேசும்போது, “வித்யா பாட்டில் மட்டுமல்ல…படிப்பிலும் நெம்பர் ஒன்..”என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். 90 வயது மிருதங்க வித்வான் தள்ளாடித் தள்ளாடி மேடையில் வாழ்த்தினார். மேலும் மிருதங்க வித்வான் பென்சன் வாங்கிக்கொண்டு கும்பகோணத்தில் அந்த வயதிலும் தனிமையில் இருப்பதைப் பற்றியும் சொன்னார்.

ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்தப்பின், திரும்பவும் வித்யா பாட ஆரம்பித்தாள். மேடையில் இருந்தவர்கள் எல்லோரும் கீழே வந்து அமர்ந்தார்கள். வித்யா துக்கடாக்கள் பாட ஆரம்பித்தாள். சம்போ…சிவ சம்போ…என்ற பாட்டை உருக்கமாகப் பாட ஆரம்பித்தாள். அந்தப் பாட்டு எமனை அழைக்கும் பாட்டு என்று பத்மநாபனுக்குத் தோன்றியது.

திடீரென்று ஒரு சத்தம். வித்யாவின் கல்லூரிப் பேராசிரியர் நாற்காலியிலிருந்து கீழே சாய்ந்து விட்டார். வித்யா இதைப் பார்த்துவிட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டாள். மகாதேவன் அவசரம் அவசரமாக ஓடிவந்து பேராசிரியரைப் பிடித்துக் கொண்டார். பேராசியர் மயங்கியே விழுந்துவிட்டார். பாட்டு முழுவதும் நின்றுவிட்டது. பின் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பேராசிரியரைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். மகாதேவனுக்குத் துணையாக பத்மநாபனும் சென்றார்.

அவசரம் அவசரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவ மனையில் அவசரப் பிரிவில் பேராசிரியரை அழைத்துக்கொண்டு போனார்கள். சிறிது நேரத்தில் பேராசிரியரைப் பரிசோதித்த டாக்டர், “அவர் எப்போதோ இறந்து விட்டார்,”என்று சொன்னார்.

எல்லோருக்கும் அதிர்ச்சி. பத்மநாபனுக்குத் திகைப்பாக இருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. மகாதேவனிடம் சொல்லிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றார். பின் அங்கிருந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து அவர் ஊருக்குப் பயணமானார். வீடு போய்ச் சேர இரவு 11 ஆகிவிட்டது.

வீட்டிற்கு வந்தவுடன் பத்மநாபனுக்குப் படபடவென்றிருந்தது. ஒரு பாட்டுக் கச்சேரி நடக்கும்போது இது மாதிரி மரணம் அவர் எதிர்பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைப் புகழ்ந்து பேசிய பேராசிரியர் முகம் அவர் முன்னால் மிதந்துகொண்டிருப்பதுபோல் தோன்றியது. பத்மநாபனுக்கு ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுந்து கொண்டிருந்தது. ஏன் இதுமாதிரியான நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதுவும் அவர் முன்னிலையில்.. மரணம் திரும்பவும் ஒரு நாடகத்தை நடத்துகிறதா? அல்லது அவரை எச்சரிக்கை செய்கிறதா?

பத்மநாபன் உறுதியாக இதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று நினைத்தார். ஆனாலும் தூக்கம் வரவில்லை. பேராசியர் பற்றிய எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார்.
ஏன் நாம் இந்தக் கச்சேரிக்குப் போனோம் என்று யோசித்தார் பத்மநாபன். அன்று மானேஜர் அந்தக் கச்சேரிக்கு வரவில்லை.

அன்று இரவும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சென்னைக்கு இப்போதே ஓடவேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்குப் போக வேண்டாமென்றும் பட்டது. மரணம்தான் முக்கியம். என்ன பெரிய வேலை என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார். 50 வயதில் இதெல்லாம் எதற்கு? பதவி உயர்வு பெற்று எதற்கு இதுமாதிரி அவதிப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எல்லாம் தனக்குள். தனக்குள். அன்று இரவும் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தார்.
அடுத்தநாள் அவர் அலுவலகத்திற்குப் போகும்போது அவர் முகமே சரியில்லை.

மகாதேவனும் வந்திருந்தார். அவர் சாதாரணமாக இருந்தார். “யாரும் சாப்பிடவில்லை. எல்லா சாப்பாடும் வீணாகப் போய்விட்டது..”என்றார். என்ன மனிதர் இவர். சாப்பாடு வீணாகிப் போனதைப் பற்றிப் பேசுகிறார். ஒரு மரணம் அவர் முன்னால் நடந்ததைப் பற்றிச் சற்றுக்கூடக் கவலைப்படாத மாதிரி இருக்கிறாரே.. அந்தப் பெண் வித்யாவிற்கு எப்படி இருந்திருக்கும்.. தன் முதல் கச்சேரி அரங்கேறும்போதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்றெல்லாம் யோசித்திருக்குமோ?
அன்றும் சனிக்கிழமை. அந்த முறை சென்னை போனால், ஒரு வாரமாவது அங்கிருக்க வேண்டுமென்று தோன்றியது. மரணத்தின் நாடகத்தைத் தன்னால் மறக்க முடியாது போல் இருந்தது.

மகாதேவனைப் பார்த்து, இளங்கோ என்ற கடைநிலை ஊழியர், “என்ன மகாதேவன், சார்.. உங்க பெண் கச்சேரியில ஒரு பேராசிரியரை நிரந்தரமா ஊருக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு..”என்று இடிஇடியென்று சிரித்தபடி கேட்டான்.

மகாதேவன் அதைக் கேட்டுச் சிரித்தார்.

பத்மநாபனுக்கோ ஒருவாரம் லீவு எடுத்துக்கொண்டு போகவேண்டும்போல் தோன்றியது. சிறிது நேரத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மேலாளருக்குப் போன் வந்தது. “ஒருவாரம் பத்மநாபனுக்கு சென்னையில் டிரெயினிங்,”என்று.
ஆச்சரியமாக இருந்தது பத்மநாபனுக்கு.

 

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா

நன்றி: ஹிந்து

 

அவரது மிக பிரபலமான நகுமோமு என்ற பாடல் இதோ!

அவரது பாடலைக் கேட்க ஒரு நாள் போதுமா?

(சரி, இந்த தேவ கானத்தை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தால் எப்படியிருக்கும்? கேட்கவேண்டுமா?

 

சென்னை: பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (வயது 86) சென்னையில் காலமானார்.

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் கிராமத்தில் பாலமுரளி கிருஷ்ணா பிறந்தார். இவர் 6 வயதில் கச்சேரி செய்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர். கர்நாடக சங்கீதத்தின் அச்சாணிகளில் ஒருவர்.

அவர் தெலுங்கு பக்த பிரகலாதாவில் நாரதராக நடித்து, அத்துடன் நடிப்புத் தொழிலுக்கு முழுக்குப் போட்டவர். சதி சாவித்திரி என்ற படத்தில் பாடியிருக்கிறார்.

ஜி‌ வி அய்யர் சம்ஸ்கிருதத்தில்  தயாரித்த ஆதி சங்கராச்சார்யா , ராமனுஜாச்சார்யா , மாத்வாச்சார்யா படத்துக்கு இசை அமைத்தார். ஹம்ஸகீதே என்ற கன்னடப் படத்திற்கு இசை அமைத்ததற்காகத் தேசிய விருது பெற்றார். மாத்வாச்சார்யா படத்திற்கு இசைக்கான தேசிய விருதைப் பெற்றார்.

அவரது  முதல்  தமிழ் சினிமா பாடல் ஸ்ரீதரின் கலைக்கோயில் படத்தில் 1964இல் பாடிய “தங்க ரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தான். அதைக் கேட்கவேண்டுமா?  கீழே உள்ள ஆடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்!

 

 

 

கவிக்குயில் படத்தில் அவர் பாடிய “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் மிகப்  பிரபலம் ஆகும். இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய” ஒரு நாள் போதுமா” உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம் ஆகின.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா இசை அமைத்தும் உள்ளார்.

ஸரஸ்ரீ  மற்றும் சுமுகம் ராகங்களை அறிமுகம் செய்தார்.

எண்ணற்ற கீர்த்தனைகளையும் தில்லானாக்களையும் வடிவமைத்தவர்.

மத்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

படைப்பாளிகள்: இரா முருகன் – எஸ் கே என்

 

era-murugan

எழுபது எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர்களில் பெருமளவிற்கு ‘சுஜாதா’வினால் ஈர்க்கப்பட்டு முயற்சி செய்தவர்கள். முன்னமே எழுதி வந்தாலும் சுஜாதாவின் படைப்புகளைத் தீவிரமாகப் படித்து வந்தவர்கள். சுஜாதாவின் தாக்கம் பல எழுத்தாளர்களை ஆக்கிரமித்தது. அவரை மானசீக குருவாகக் கருதுபவர்களும் ஏராளம்.

இந்நிலையில் அவர்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது சர்வ சாதாரணம்.  ஒரு சிலரே தங்களுக்கென்று ஒரு கதையாடல் பாணி கைவரப் பெற்றார்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அவர்களில் சட்டென்று நினைவிற்கு வருபவர் இரா முருகன்.

புதுக் கவிதையில் (கணையாழி -1977) தொடங்கிக் கவிஞராக, பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். வானொலியில் தனது கதைகளை வாசித்துள்ளார். திரைக்கதை வசனங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடர்கட்டுரை, மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு, ஆங்கிலத்திலிருந்து கவிதை மொழிபெயர்ப்பு என்று பல பங்களிப்புகள். இவரது ‘அரசூர் வம்சம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு கண்ட நாவல். மாந்திரீக யதார்த்த (magical realism) வகையில் குறிப்பிடும்படியாக எழுதுபவர்.

இவரது செரங்கூன் மனிதர்கள்  சிறுகதை ..

*   *   *   *

ஈஸ்வரி, இந்தப் பெயர் உணர்த்தக்கூடிய, புலர் காலையில் துயிலெழுந்து, குளித்து, கூந்தலில் நுனி முடிச்சும், கையில் அர்ச்சனைத் தட்டுமாக, ஒலிபெருக்கியில் அம்பாள் பாடல் காதில் அறையும் கோயிலை நோக்கி நடக்கிற, அல்லது ‘மாமா, அத்தை சேர்ந்து நில்லுங்கள், நமஸ்காரம் பண்ணிக் கொள்கிறோம்’  என்று காலில் மெட்டி ஒலிக்க, மாக்கோலம் உலராத தரையில், வயிறு பெருத்த கணவனின் மனம் பொருந்தாத, தாமதமான இயக்கத்தோடு  கடைக்கண்ணால் பார்த்து இணை சேர்ந்து வணங்கி எழுகிற, பிம்பங்களிலிருந்து விலகியவளாக செரங்கூன் வீதியைத் துயில் உணர்த்தப் போகிற பெண்.

என்று தொடங்குகிறது.

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலைபார்க்கும் 28 வயதுப்பெண்ணான ஈஸ்வரி, குழந்தை இல்லாதவள். கணவனும் அது போன்றே ஒரு கடையில் வேலை செய்பவன்.  இரவு  வெகுநேரம் வரை  ‘கணவனே கண் கண்ட  தெய்வம்’ சினிமா வீடியோவில் பார்க்கின்ற ஈஸ்வரி – ‘அதை நீயே பார்த்து அழுதுக்கிட்டு இரு, என்று சொல்லி  மாரடோனாவின் சர்ச்சைக்குரிய உலகக்கோப்பை கோல் எத்தனாவது முறையாகவோ பார்க்கும் பழனியப்பன்.

காலையில் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பும்போது, தான் வேலைக்குப் போகவில்லை. வீவு சொல்லிவிடு என்கிறான். காரணம் மறுநாள் பங்குகொள்ளப்போகும் தீமிதி.

முதன் முதலாக தீமிதிக்கப்போவதாக சொன்ன தினம் நினைவிற்கு வருகிறது. தனக்குப் பயமாக இருக்கிறது. வேண்டாமே என்கிறாள். விரதமெல்லாம் இருக்குமே என்று கேட்கிறாள்.

“ஆமா, ஒரு மாசத்திற்கு விரதம். நாளையிலிருந்து சவரம் கிடையாது. கவிச்சி கிடையாது. நீயும் கிடையாது..”

இதை மென்மையாகச் சொல்லியிருக்கலாம். வழித்து எரிகிற ரோமமும், கடித்துத் துப்புகிற எலும்பும், நீயும் எல்லாம் எனக்கு ஒன்றுதான். தேவையானால் வேண்டும். இப்போது தேவையில்லை.

கடைவேலையில் வித்தியாசமான வாடிக்கையாளர்கள்… காணாதது கண்டதுபோல் வாங்கிக் குவிக்கும் இந்திய யாத்திரிகள்.  அடிக்கடி வெளிநாட்டுப் பொருள்  விற்கும் வியாபாரிகளுக்காக  பொருள் வாங்கவரும் ‘கூரியர்’ சிங்காரம் அண்ணாச்சி.  இங்கேயே பிறந்து இதுவரை இந்தியாவே போகாத ஈஸ்வரிக்கு முன்பெல்லாம் தமிழர்களைக் கண்டால் நம்ம ஊர்க்காரங்க  என்ற உணர்வு இருந்ததுண்டு.

எல்லா ஊரும் ஒன்று தான் என நினைக்கும் பழனியப்பனுக்கு ஆட்டோ மெக்கானிசம் படித்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட எண்ணமும் உண்டு,

வேலையில் மும்மரமாக இருந்துவிட்ட ஈஸ்வரிக்கு கணவனுக்கு லீவு சொல்லத் தாமதமாக நினைப்பு வருகிறது. பொது டெலிபோன் சென்று அவன் வேலைபார்க்கும் கடைக்குப் போன் செய்கிறாள். யாரிடம் சொல்வது? நினைவிற்கு வருவது உஷா நாயர் என்னும் பெயர்.உஷா நாயருக்கு முன்னமே தெரியுமாம். சொல்லிவிட்டளாம்.

பழனியப்பனுக்கும் அந்த உஷா நாயருக்கும் தொடர்பு இவளுக்கும் தெரிந்திருக்கிறது.  இருவரும் சேர்ந்து சுற்றுவதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள்.

“யாரோட சுத்தினா உனக்கென்ன? இங்கு என்ன பிள்ளையா குட்டியா, வாசல்லேயே காத்திருக்கிட்டுருந்துட்டு, அப்பா, அப்பான்னு ஓடி வந்து காலைக் கட்டிக்க?”

.. “இந்த வீட்ல பிள்ளை அழுகைதான் கேட்கலை. உன் புலம்பலாவது நிக்கக்கூடாதா? குடிக்காதே.. குடிக்காதே.. சே .. வேற பேச்சு கிடையாதா?”

உடன் வேலைபார்க்கும் சுபாவிற்காக  அவளுடன் ஷாப்பிங் போகிறாள். ஒரு சீனக்குழந்தையும் அதனைக் கூட்டிக்கொண்டுபோகும் கிழவரும், சலனமில்லாமல் ரிக்ஷாவில் போகும் ஜப்பானிய வயோதிக டூரிஸ்டுகள்.. எல்லா இயக்கமும் ஏதோ ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு அமைதியா இழைந்தோடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.

பஸ்ஸில் திரும்புகையில் சில மலேசிய இளைஞர்களும், இவளைத் தீர்க்கமாகப் பார்க்கிற ஒரு பெண்ணும்.

ஏதேதோ எண்ண ஓட்டங்கள்.

பெண்ணே, உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இந்தக் கண்கள் மட்டும் போதுமா கணவனைக் கட்டிப்போட? ஆறு மீட்டர் அளந்து  துணி வெட்டுவாயா? டீகோ மாரடோனா தீமிதித்தால் பார்க்கப் போவாயா?

ஒரு பெரிய கூட்டம் ஒருத்தொருத்தராகப் போய் வி.சி.ஆர். விலை விசாரிக்கிறார்கள்.  சுருள்சுருளாகப்பட்டுத்துணிக்கு நடுவிலிருந்து ஈஸ்வரி எட்டிப்பார்கிறாள்.’ஏமாந்துவிடாதே பெண்ணே’ – மோ கிழவி சொல்கிறாள். ‘உனக்கு குழந்தை பிறக்க நேர்ந்துகிட்டேம்மா, இந்தா குங்குமம்’ சிங்காரம் அண்ணாச்சி பிரசாத்தை நீட்டுகிறார். ‘சீக்கிரம், சீக்கிரம்’   பழனியப்பன் தட்டுதடுமாறித தீக்குழியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறான். மேளக்காரர்கள் ஆவேசமாகக் கொட்டி முழக்குகிறார்கள். ‘ சீக்கிரம், சீக்கிரம்’. பழனியப்பன் ஒரு காலை எடுத்து தீயில் இறங்க முற்பட .. கால் தடுமாறி ..

Image result for FIRE WALK IN SOUTH INDIAImage result for FIRE WALK IN SOUTH INDIA

“வேணாங்க, ஐயய்யோ வேணாங்க” ஈஸ்வரி என்ற அந்த இருபத்தெட்டு வயது சிங்கைத்  தமிழ்ப்பெண், சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க அழ ஆரம்பித்தபோது, வெளியே மழை வலுத்துக் கொண்டிருந்தது .

என்று முடிகிறது.

*   *   *   *

நிகழ்வுகளுக்கிடையே, அலைபாயும் மனப்போராட்டத்தை  இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும், தகவலும் எண்ண ஓட்டங்களும் மாறிமாறி சொல்லும் ‘ஜம்ப் கட்’ உத்தியும் இக்கதைக்கு  வளமூட்டுகின்றன.

சமீபத்தில் வெளியான வைக்கோல் கிராமம்  , மாய யதார்த்த சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது.

 

 

தமிழில் தொழில்நுட்பப்பாடம் – கவிதை வடிவில்

தமிழில் இவ்வளவு அருமையான கவிதைகளுடன் தொழில்நுட்பத்தை யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை.

முனைவர் சுப்பராமனுக்கு நமது பாராட்டுதல்கள் !

(நன்றி : TEDx Salem-Dr.T S Subbaraman-Science in Classical Tamil -அறிவியல் தமிழ்)

பாருங்கள்/கேளுங்கள் வீடியோவை !

குவிகம் இலக்கியவாசல் -20

குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் 2016  நிகழ்வாக
“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்” ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் நவம்பர் 18 அன்று  சிறப்பாக நடைபெற்றது.
சுந்தரராஜனின் வரவேற்பு உரைக்குப்பின்னர் திரு ஈஸ்வர் கிருஷ்ணன் கவிதை  வாசித்தார். 


தொடர்ந்து இம்மாதச் சிறுகதையினை திரு சுப்ரமணியன் வாசித்தார்.
திரு ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் “எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”திரையிடப்பட்டது.
சுமார் ஒன்றைரை மணி நேரம் அனைவரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தினைப் பார்த்து மகிழ்ந்தனர்
நிகழ்வில் பங்குபெற்றோரின் கேள்விகளுக்கு ரவி சுப்ரமணியனின் பதில்கள் பல தகவல்கள் கொண்டதாக அமைந்தன.
கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஈரம் – ஈஸ்வர்

Image result for an old man in chennai pulling cart

ராமய்யாவுக்கு வண்டியை அதற்கு மேலும் இழுக்க முடியவில்லை.  நல்ல வேளையாக,  நகரத்தின் மிகுந்த போக்குவரத்து நெரிசல், உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த அந்த நெடுஞ்சாலையிலும், ஒரு பெரிய ஆலமரம், தெய்வம்போல் நின்று, நிழலைத் தந்து கொண்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெய்யில்.  சூரியன் சென்னையை மட்டும் ஏன் இப்படிச் சுட்டெரிக்கிறான்? இந்த நகரத்தின்மீது அவனுக்கு ஏன் இத்தனை கோபம்?  வண்டியை நிறுத்தி விட்டு ராமய்யா, வேட்டியை மடித்து, இறுக்கிக் கட்டியிருந்த இடுப்புத் துணியை அவிழ்த்து உதறி, முகத்தையும், உடலையும் துடைத்துக் கொள்கின்றான்.

 

ராமய்யா இந்த அறுபத்திரண்டு வயதில், வாழ்க்கையில் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியாகச் சென்னையில் வந்து விழுந்தவன்.  அவனுக்கு என்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது.  தாகம் தொண்டையை வறட்டுகிறது. தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை.

எதிரே, அந்த சிறு சாலை,  இந்த நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இடத்தில் ஒரு வட்டமான போலீஸ் நிழற்குடை.  முதலில் ராமய்யா அதைக் கவனிக்கவில்லை.  பார்த்திருந்தால், அங்கு நிழலுக்குக்கூட நிற்காமல், கஷ்டப்பட்டாவது வண்டியை இழுத்துக்கொண்டு, இன்னும் ஒரு கிலோ மீட்டர் போய் தள்ளி நிறுத்தியிருந்திருப்பான்.

போலீசுக்கும், அவனுக்கும் இருந்த உறவுதான் எவ்வளவு விசித்திரமானது.  போன ஜென்மத் தொடர்போ?

தாமிரவருணித் தண்ணீர் ஜில்லென்று இறங்கிப் பழகிய தொண்டை ராமய்யாவுக்கு.  பதினைந்து வயது ராமய்யாவுக்குத் தாமிரவருணி ஈரம் பழகிப்போன ஒன்று.  அவன் போதாத நேரம் அந்த வயதில்தான் தொடங்கப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்ததோ?

கிராமத்தில் ஆடு ஒன்று களவு போக, அதற்கு அவன்தான் உடந்தை என்று யாரோ காணாமலே சாட்சியும் சொல்ல, ஊர் பஞ்சாயத்தால் அவன் குற்றத்திற்கு உடந்தையாகக் கருதப்பட்டு, பஞ்சாயத்திற்கு இரண்டு ரூபாய் அபராதம் கட்டவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டான்.  கோபமே உருவான இளைஞனாக இருந்த ராமய்யா, இந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குத் தலைவணங்க மறுக்க, விஷயம் பெரிதாகி, தேவையே இல்லாமல் போலீஸ்வரை போயிற்று. – உபயம் ஊர்ப் பெரிய மனிதர்கள்.

ஊருக்குப் பெரிய மனிதர்கள் என்று வந்து நின்றவர்கள் ஊதிவிட, அந்தப் பக்கத்துச் சின்ன காவல் நிலையம், காரணமேயில்லாமல் ராமய்யாவைப் புரட்டி எடுத்தது.  இனி இறந்தாலும் அந்த ஊருக்கு வரமாட்டேன் என்று கோபத்தில் சூளுரைத்து விட்டு, மதுரைக்குத் திருட்டு ரயில் ஏறி வந்த தன் தலை எழுத்தை, ராமய்யா இன்றளவும் நொந்து கொண்டுதான் இருக்கிறான்.

ஆஹா! அந்தத் தாமிரவருணித் தண்ணீர்தான் என்ன சுகம்! இப்பொழுது நினைத்தாலும் தொண்டையில் ஜில்லென்று ஒரு சிலிர்ப்பு!

மதுரையில் ராமய்யா ஒரு நான்கைந்து வருடங்கள் இன்ன வேலைதான் என்றில்லாமல், என்னென்னவோ வேலைகள் பார்த்து வந்தான். பூ கட்டுவது, இலை விற்பது, எப்பொழுதும் நடக்கும் கூட்டத்திற்கு மைக் கட்டுவது… நிரந்தரமாக அவனுக்கு வேலை என்று ஒன்று கிடைத்து அமரும் சமயம், வேலைக்குப் போகும்பொழுது வழியில் ஒரு கொலை விழ, அதைப் பார்க்க நேரிட்ட சாட்சிகளில் அவனும் ஒன்று.  தொடர்ந்த போலீஸ் தொல்லையால் அவன் நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவேண்டிய கட்டாயம் நேரிட்டது.  தண்டனை பெற இருந்தவனுக்குப் பின்னால் ஒரு பெரிய ரவுடி சாம்ராஜ்யமே இருந்ததால், அந்த மீனாட்சிக் கோட்டையும் அவனுக்குப் பாதுகாப்பு அற்றுப் போக இரவோடு இரவாக, அவன் டிக்கெட் எடுத்து, அடுத்த கட்டப் பயணமாகக் கோவை நோக்கிப் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்பொழுதெல்லாம் கோவையில் தண்ணீர் பிரச்சனை.  தாமிரவருணித் தண்ணீரில் நனைந்த சுகத்தை மறக்காத தொண்டைக்கு, வைகையும், சிறுவாணியும் அடுத்ததாகத்தான் பட்டது.  நெஞ்சில் அந்த ஈரம் நிற்கவில்லை.  சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, உறவு என்ற ஒன்று, யார் என்று கூட அறியாமல் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்த ராமய்யா என்ற மனிதனுக்கும், வள்ளி அம்மை என்ற பெண்ணுக்கும் கோவையில்தான் பரிச்சயம் ஏற்பட்டது.  அவனுக்கு அச்சு அலுவலகத்தில் வேலை. பக்கத்தில் இருந்த ஒரு மில்லின் அலுவலகத்தைப்  பெருக்கும் வேலை வள்ளியம்மைக்கு.  இந்தத் தொடர்பு பிறகு அவன் பக்க உறவு என்ற யாரும் இன்றியும், திருமண உறவாக உருப்பெற்றது.

திடீரென்று ஒருநாள் அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்த பிரஸ்ஸில் அதிரடி போலீஸ் சோதனை.  தடை செய்யப்பட்டிருந்த ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்திற்கான சுவரொட்டிகள் அச்சடித்த அச்சகம் என்ற முறையில்,  அங்கு பணி புரிந்தவர்களும் கைதாக, இவனும் அவர்களில் ஒருவனானான். மீண்டும் போலீஸ் கெடுபிடிகள், தொந்தரவுகள். சிறைவாசம் வேறு.  இது பல வாரங்கள் தொடர்ந்தது.  கூலிக்காக சுவரொட்டிகள் ஒட்டிய காரணம் ஒன்றைத்தவிர அவன் மீது பெரிய குற்றத்தைச் சுமத்தக் காவல்துறையாலும் முடியவில்லை.  பெரிய பின்னணி என்பது இல்லாதிருந்த காரணத்தால், அவனுக்கு ஜாமீன் கொடுத்து, அவனை வெளியே கொண்டுவர யாரும் முயற்சிக்கவும் இல்லை. இது அந்த நீதிபதிக்கே புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.  தீவிரவாத இயக்கங்கள் சம்பந்தப்பட்டவர்கள்  போலீசாரால் கைது செய்யப்படும்போது, அவர்களுக்கு எப்படியேனும் ஏதாவது ஒரு முறையில், திடீரென்று முளைக்கும் சமூக நல விரும்பி அமைப்புக்களோ, அல்லது ஏதாவது ஒரு கட்சியின் முகத்திரையாகச்  செயல்படும் சில மனித உரிமைக் கழக அமைப்புக்களோ, நிச்சயமாகப் பின்னணியில்  இருந்து  உதவிகள்  அனைத்தும் செய்யும். இவனுக்கு அத்தகைய ஆதரவு ஏதும் கிடைக்காத காரணமே, அந்த நீதிபதியை யோசிக்க வைத்திருக்கவேண்டும்.  ஒரு சாதாரணக் கூலியை தீவிரவாதி அந்தஸ்துக்கு உயர்த்தாமல், அவர் அவனை எச்சரித்து, விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

குறுகிய அந்த சிறை வாழ்க்கையை அவன் அனுபவித்துக்கொண்டிருந்த அந்தப் போதாத நேரத்தில், விதி இன்னமும் அவனுடன் விளையாடியது.  பிரசவ வலியில், சரியான நேரத்தில் கவனிக்க மனித உறவுகள் இன்றி, வள்ளியம்மை பிரசவ நேர துர்மரணம் எய்த, சிசுவும் இறந்தே பிறந்தது.  ஈமச்சடங்குகள் செய்ய அவனுக்குத் தற்காலிக அனுமதி கிடைத்தது.  சிதை மூட்டி, அவர்களைச் சாம்பலாக்கி, சிறை திரும்பு முன்னரே, ராமய்யாவுக்கு வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்களே மாறிப்போயின.  சமூக அமைப்பின் பாதுகாவல் அரணான காவல் துறை என்பதே ராமய்யாவுக்கு ஒரு  கசப்பான, வேண்டாத உறவாக மாறிவிட்டது.  உறவு என்பதே  இல்லாமற்போன அந்த மனித மனத்தில், வேண்டாத உறவு என்பதாக ஒன்று புதிதாக முளைத்தது.  போலீசைத் தொலைவில் பார்க்க நேரிட்டால் கூட, ராமய்யா முகத்தைத் திருப்பிக்கொண்டு, செறுமித் துப்பி, நகர்ந்து போவது, ஒரு இயற்கையான நிகழ்ச்சியானது.

வள்ளியம்மைக்குப் பிறகு சிறுவாணியும் அவனுக்குக் கசந்துவிட, ஒரு லாரியில் ஏறி அவன் தொடர்ந்த பயணத்தில், திருச்சி இடறியது.

கொஞ்ச காலம் காவிரி அவனுக்கு சுகமான அனுபவமாகத்தான் இருந்தது.  வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல், வயிற்றைக் கழுவமாத்திரம் என்றே அவனுக்கும் ஒரு ஜோலி தேவைப்பட, அதுவும் அவனுக்குச் சில நாட்களில் கிடைத்தது –  ஒரு தனியார் பேருந்துக் கம்பெனியில். அவன் வயிறு கழுவ, போதுமான வேலையாக அது இருந்தது.  பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து நிறுவனமாக அது இருந்தாலும், சில குறிப்பிட்ட சரக்குகள் அங்கு வந்த பேருந்துகளில் ஏறுவதும், இறங்குவதும்கூட  அங்கு வாடிக்கையாக இருந்தது.  ஏற்றி இறக்குவது அவன் தொழிலாயிற்று.  அதற்கு அதிக நேரம் தேவைப்படாது என்பதால், அந்த பஸ் கம்பெனி வாசலில் நின்றுகொண்டு, வருகின்ற, போகின்ற பஸ்களின் கால அட்டவணை, போய்ச் சேரும் இடம் இவற்றை உச்சஸ்தாயிக் குரலில் கூவிக்கூவி வாடிக்கை சேர்ப்பதும் அவன் தொழில் தர்மங்களில் ஒன்றாயிற்று.  ஆனால் நிரந்தரம் என்பது அவன் தலையில் எழுதப்படாத ஒரு விதியோ!

தேர்தல் கூட்டங்களுக்கும் எல்லாக் கட்சிகளின் மாநில மகாநாட்டுக் கூட்டங்களுக்கும் பிரசித்தி பெற்ற அந்தக் காவிரிக் கரையில் அவன் அனுபவம் வேறானது. திருச்சியில்தான் அவனுக்கு முதலில் நட்பு என்ற ஒன்றே பரிச்சயமானது -மாரிமுத்துவின் மூலம்.  மாரிமுத்து கம்பெனி வாசலில் வண்டியில் கடலை-சுண்டல்-பலகாரம் என்று விற்பவன்.  ராமய்யாவுக்கு மாத்திரம் அவன் கடையில் மாதாந்திரக் கணக்கு என்ற அளவில் வளர்ந்த நட்பு.  மாரிமுத்து ஒரு கட்சியின் மாநில மகாநாட்டுக் கூட்டத்துக்கு, சுண்டல்-கடலை வண்டியுடன் வியாபாரத்திற்குப் புறப்பட்டபோது, ஒரு மாறுதலுக்காகத் துணைக்கு வருமாறு இவனை அழைக்க, ஒரு நாள் ஓய்வுபெற்று இவனும் துணைக்கு மாரியுடன் போக நேரிட்டது.

திடீரென்று மாநாட்டுக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம், பெரிய அடிதடி ரகளை, சில கைகள், சில கால்கள் வெட்டப்பட, அங்கு ஒரு போர்க்களம்.  அது ஆளும் கட்சி மாநாடு.  எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே செய்த குழப்பம் என்று இது உருமாறி, குழப்பத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சி ஆட்களில் ஒருவனாக ராமய்யாவும் கைதானான்.  நிஜமாகவே இவன் வேலை பார்த்த பேருந்து நிறுவனர் எதிர்க்கட்சி பிரமுகராகவும் இருந்ததால், இவன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சாயம் பெற்று வலுவானது.  அவர் ஏவித்தான் இவனைப் போன்ற ஆட்கள், கூட்டத்தில் கலாட்டா செய்ததாக நம்ப இடம் ஏற்பட்டது.  எவ்வளவு எடுத்துரைத்தும் கேட்காமல் போலீஸ் அவர்கள் பாணியில் அவனை நன்றாகவே கவனித்துக்கொண்டது.  இவனை வெளியே கொண்டுவர,  கம்பெனி படாதபாடுபட வேண்டியதாயிற்று.  “ ஏண்டா சோம்பேறி! லீவு எடுத்துக்கிட்டு, அந்தக் கூட்டத்துக்குப்போய், எனக்குத் தண்டச் செலவு வச்சிட்டயேடா!” என்று நியாயமான கோணத்தில் முதலாளி   கத்த காவிரியையும் இரண்டு நாட்களில் ஒதுக்க வேண்டியதாயிற்று.

ராமய்யா பிறகு ராஜமுந்திரி, அலகாபாத் என்றெல்லாம் கூடப் போயிருக்கிறான்.  கோதாவரி, யமுனா என்று எல்லா தண்ணீரும் அவனுக்குப் பழகியது.  ஆனால் விசித்திரமாக அங்கும் ஏதாவது ஒரு  முறையில் அவனுக்கும், போலீசுக்கும் பழைய உறவு தொடர்ந்தது. தாமிரவருணி இனிப்பு அவன் தொண்டையிலும், போலீஸ் என்ற கசப்பு  அவன் நெஞ்சிலும்  இருந்து இன்றளவும் இறங்கவில்லை. கடைசியாக ராமய்யா வந்து விழுந்த இடம் சென்னை. இந்த ஊரில் ராமய்யாவுக்குப் பிடிக்காமல் போனது போலீஸ் மாத்திரம் அல்ல.  தண்ணீரும்கூட. எவ்வளவு குடித்தாலும் நெஞ்சில் சுவையில்லை.  தாகமும் அடங்குவதில்லை.

வெய்யிலோ மகா கொடுமை! தொழில் கிடைக்கும் நேரமாகப் பார்த்து சுட்டெரிக்கிறது.  இன்னும் இரண்டு கிலோ மீட்டராவது வண்டியை இழுக்கவேண்டும்.  ஒரு மாடு சுமையில் பாதியாவது இருக்கும். கூலி இருபது ரூபாய் கிடைக்கும்.

ராமய்யாவுக்கு அந்த ஆலமரம்  நிஜமாகவே ஆண்டவன் –  அவனுக்காகவே படைத்த வரமாகவே பட்டது. அவன் துண்டால்  முகத்தைத் துடைத்து எடுக்க, எதிரே ஒரு டிராபிக் போலீஸ்

போலீஸ் எந்த உடுப்பில் இருந்தால் என்ன? உருவம் மாறவா போகிறது?  ராமய்யாவுக்கு உடனே அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று இருந்தது.

வந்த போலீஸ்  ராமய்யா அருகே வந்து நின்றான். இளம் வயதுதான்.  தொப்பியைக் கழற்றி விட்டுக் கைக்குட்டையால் , முகத்தையும், தலையையும் ஓட்டத் துடைத்துக் கொண்டான்.

“ நல்ல வெய்யிலில்ல?”

“……….” ராமய்யாவிடமிருந்து பதிலில்லை.

“ நான் இங்ஙன வந்து மூணு மாசமாச்சு… அதோ, அந்தக் கொடைதான் நம்ம கோட்டை.” சாலைக்கு நடுவே இருக்கும் டிராபிக் போஸ்டைக் காட்டுகிறான்.

“ அப்பப்போ இந்த வண்டியை இளுத்துக்கிட்டுப் போற, பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.  ஏன்யா! இந்த மதிய வெய்யில்ல,  தார் ரோட்டுல, செருப்புக்கூட இல்லாம, இவ்வளவு சுமையையும் வச்சிக்கிட்டு வண்டி இளுத்துக்கிட்டுப் போறியே, சூடு கொறஞ்சப்புறந்தான் வண்டி கட்டுவேன்னு யாருக்கா இருந்தாலும் சொல்ல வேண்டியதுதானேய்யா!”

“ பொழப்பு அப்பிடி….”  ராமய்யா வேண்டாவெறுப்பாகப் பதில் சொல்கிறான்.

“ கொஞ்சம் இரு! ..” சொல்லியவாறே அந்தப் போலீஸ் இளைஞன், மரத்திற்கு மேற்காக சாலையைத் தொட்டவாறு சுவருடன் ஒட்டி இருக்கின்றாற்போல் தோற்றம் அளிக்கும் மின்சாரப் பெட்டி இணைப்புப் பக்கம் போகிறான்.  அந்த மின்சாரப் பெட்டிக்குப் பின்னால் சுவற்றுப்  பக்கமாகத் தொங்கும் ஒரு பையையும், கூடவே ஒரு ஜோடி செருப்பையும் எடுத்து, ராமய்யா அருகே வருகிறான்.  அந்த ஜோடி செருப்பை ராமய்யா காலடியில் போடுகிறான்.

“ வெய்யில்ல வண்டி கட்டமாட்டேன்னா வெட்டியா போடப் போறானுவ?  இல்லே சாயரட்சைக்கு சரக்குப் போனா, துட்டு தரமாட்டேன்னு சொல்லிருவாங்களா? எங்களுக்குத்தான் தலை எளுத்து. வேகாத வெய்யில்ல நிக்கணும். வேண்டாதவங்களைப் புடிக்கணும். கைநீட்டி கவர்ன்மெண்ட் சம்பளம் வாங்குறோமில்ல… அது இளுக்குறபடி  ஆடணும்.. உனக்கு என்னய்யா தலை எளுத்து.. இந்தா! இந்த செருப்பை மொதல்ல மட்டிக்க..”

ராமய்யா தயங்குகிறான்.

“என்ன ரோசனை? இங்கிட்டு செருப்புத் தைக்கிறவன் ஒருத்தன் அந்த எம்.இ.எஸ். பாக்ஸ் பக்கம், சின்ன கோணி கட்டிக்கிட்டு கடை வச்சிருந்தானே? அவன் போன வாரம் பூட்டான்யா! மிஞ்சினது  இந்த சோடிதான்.  உரிமை கொண்டாட யாரும் இல்ல… போன வாரம் இதப் பார்த்தப்பவே எனக்கு உன் நெனப்பு வந்தது.  நான்தான் அதை அங்கிட்டு பத்திரமா எடுத்து வச்சேன். உன் காலுக்குன்னு அளவெடுத்தாப்போல சரியா இருக்கு பாரு! மாட்டிக்க..!”

ராமய்யாவைக் கட்டாயப்படுத்தி, கால்களில் அணிய வைக்கிறான்.  கால் குறுகுறுக்கிறது. புது அனுபவம்.

கொண்டுவந்த பையிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுக்கிறான்.  ஒரு விழுங்கு குடிக்கிறான்.  ராமய்யாவிடம் நீட்டுகிறான்.

“ குடி” ராமய்யா வாங்கத் தயங்குகிறான்.

“ பயப்படாதே! நல்ல தண்ணிதான்.  படிச்ச பொண்ணைத்தான் கட்டியிருக்கேன்.  இந்த மெட்ராஸ் தண்ணியக் காச்சாம குடிக்க வுடமாட்டா அவ. வெளிலயும் நான் குடிக்கக் கூடாதுன்னு கண்டிசன்… மீற முடியுமா?  நீயும் கொஞ்சம் தொண்டைய நனைச்சிக்க.”

ராமய்யாவுக்கு நிஜமாகவே அந்த சமயம் அந்தத் தண்ணீர் தேவைப்படுகிறது.  இருந்தாலும் காக்கிச் சட்டையிடம் வாங்கியாவது குடிக்க வேண்டுமா?

“ அட குடிங்கறேன்ல… இந்தத் தாளாத வெய்யில்ல, வண்டி இளுக்கறியேன்னுதான்  பாட்டில நீட்டுறேன்.  ஊத்திக்க… இந்த ஏரியால தண்ணி கெடக்கறதே  ரொம்பப் பாடுய்யா..”

ராமய்யா கையில் அவன் பாட்டிலைத் திணிக்கிறான்.

ஒரு மிடறு உள்ளே போகிறது. இன்னும் கொஞ்சம். ராமய்யா பாட்டிலை அந்த கான்ஸ்டபிள் இளைஞனிடம் கொடுக்க, அவன் பாட்டிலை மூடிப் பையில் வைத்துக் கொள்கிறான்.

“ எங்க ஆத்தா அடிக்கடி சொல்லும். வெய்யில்ல காயற தொண்டைக்குத் தண்ணி குடுக்கணம்டா…. இல்லைன்னா, நாம  பொறவி எடுத்து ஒரு பிரயோசனமும் இல்லேன்னு… ம்…. ஆயிரிச்சு…. அது போய் சேர்ந்து மூணு வருசம்…… ஆனா சொன்னது மனசுல நிக்குது.  உன்னையப் பார்த்தப்போ அதுதான் நெனவுக்கு வந்தது…… சரி வரட்டா! அடுத்த டூட்டி நாலு மணிக்கு.  வூட்டுக்குப் போவணும்.  ஆமா தண்ணி நல்லா இருந்திச்சா? கார்ப்பரேசன் தண்ணிதான்.  இருந்தாலும் காச்சின தண்ணி, அதான் கேட்டேன்.

அவன் போய் மறைகிறான்.

வெகு காலத்திற்குப் பிறகு, ராமய்யாவுக்குத் தொண்டை ஈரமாகிறது. ஈரம், நெஞ்சில் இறங்குகிறது.

 

 

 

வெண்பா ( எஸ்.எஸ் )

Image result for தமிழ் வெண்பா

வெண்பா தான் தமிழ் பாக்களிலே மிகவும் கடினமான அமைப்பு!

புகழேந்தி என்ற புலவர் நளன் சரித்திரத்தை  நள  வெண்பாவாக அமைத்து வெண்பாவிர்க்கோர் புகழேந்தி என்ற பட்டத்தைப் பெற்றவர்!

திருக்குறளின் 1330 பாட்டுக்களும் வெண்பாவின் வகையில் சேர்ந்தவை !

வெண்பாவின்  பொது இலக்கணம்: .

” செப்பலோசை உடையதாய் , ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்  சீராய்,இயற்சீரும் வெண்சீரும் கலந்து , இயற்றளையும், வெண்டளையும்  மருவி, ஏனைய சீரும் தளையும் வாராது,  பெரும்பாலும் நாள், மலர், காசு,பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிவதே வெண்பாவின் பொது இலக்கணம். “

( ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் தமிழாசிரியர் திரு த.ச. பாலசுப்பிரமணியன் சொல்லிக்கொடுத்த நினைவிலிருந்து)

Image result for வெண்பா

எப்படி வெண்பா எழுதுவது என்று பின்னால் பார்க்கலாம்.

இந்தப் பக்கத்தில் சில வித்தியாசமான வெண்பாக்களைப் பார்க்கலாம்.

கவிஞர் கண்ணதாசன் நடத்திய இலக்கிய இதழ் “தென்றல்’.

அதில் ஒருமுறை வெண்பாப் போட்டிக்குக் “கொண்டு வந்து போட்டுக் கொளுத்து’ என்ற ஈற்றடியைக் கொடுத்தது.
அப்போட்டிக்கு வந்த வெண்பாக்களில் ஒன்று கவிஞரின் நெஞ்சை மிகவும் கவர்ந்தது.

அவ்வெண்பா இது:

அந்திவரை இரந்தேன், அன்பே! பிடியரிசி
தந்தார்; உணவு சமைத்திடுவாய்! – இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய்க் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து.

ம.இலனியன் எழுதிய அந்த வெண்பா நல்ல கவிதைக்கு இலக்கணமாகிறது என்று போற்றியுள்ளார் கண்ணதாசன்.

கிரேஸி மோகன் வெகு  காலமாக வெண்பாவில் நகைச்சுவையைத் தெளித்து வருகிறார்.  அதுக்கு ஒரு சாம்பிள்:

மசாலா தோசையென்றும் மாம்பழத்து ஜூஸ் என்றும்
குஷாலாயிருக்குமென்று குல்ஃபியும் — மஜாவா
ஸாட்டர்டே சாயங்காலம் சக்கைப்போடு போட்டதனால
வாட்டரா’கப் போச்சே பணம்!

அவர் கமலஹாசனைப் பற்றி எழுதிய வெண்பா இது:

‘பத்தாறு (அறுபது) ஆனாலும் பார்க்கப் பதினாறு
பித்தேற வைக்கும் பவுருஷமே சொத்தாய்
சினிமாவை சேர்த்துவைத்த சாகா வரமே
இனிமேலும் நூற்றாண்(டு) இரும்’

 

சுஜாதா  பழைய கணையாழி இதழில் எழுதிய  வெண்பா:

விண் நெடுகப் பரவி, பாரிஸ் வனிதையர் போல்
கண்ணடிக்கும் தாரகை யெல்லாம் எண்ணி வைத்த
முட்டாள் ஒருவர் இருக்கார்; அவர் நமக்கு
எட்டாத கடவுளப்பா!

 

நா.பா. தீபம் இதழில் ஒரு வெண்பாப் போட்டி
வைத்திருந்தார். ஈற்றடி வேண்டாம் வரதட்சணை.                                       வெண்பாப் பிரியர் சுஜாதா பிரபலமானவராக
இருந்த போதும் ஒரு வெண்பா எழுதி அனுப்பினார்.

“பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.”

சுஜாதாவின் ஆள் டைம் அதிரடி வெண்பா:

மிசா மறைந்து எமெர்ஜென்சி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்று எடுத்துக்கொண் டெல்லோரும்
_த்திரம் குடிக்கவா ரும்.

 

காந்தியைப் பற்றிய முதல் ஆவணப் படம்

cartoon_7.jpgNon-violence, Our Street Anchor

 

ஏ கே செட்டியார் அவர்கள் 1937இல் இருந்து காந்தியடிகள் பற்றிய ஆவணப் படத்தை எடுக்கத் துவங்கியவர். காந்தியைப் பற்றிய ஆவணங்களை இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து 50000 அடி படச்சுருளைச் சேகரித்து  அவற்றிலிருந்து 1940இல்  ஆவணப்படத்தைத் தொகுக்க முற்பட்டார்.

ஆகஸ்ட் 23, 1940இல் அந்த ஆவணப்படம்  வெளியாயிற்று. ஆனால் ஆங்கில அரசின் கடுமையான் சட்டத்தினால் அந்தப் படம் முடக்கப் பட்டது.  பிறகு 1947இல் ஹிந்தி மொழி மாற்றத்துடன் அது வெளியானது. அதற்குப் பிறகு வெகு காலம் அந்தப் படத்தின் பிரிண்ட் காணாமல் போய் விட்டது என்றே எல்லாரும் நினத்தார்கள்.

1998 இல் அதன் சுருக்கமான வடிவம் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகர் பல்கலைக்கழகத்தில் இருந்ததை 2006இல் கண்டு பிடித்தார்கள். சரித்திர ஆசிரியர் ஏ ஆர்  வேங்கடாசலபதி அவர்கள் முயற்சியால்தான் இது வெளிவந்தது. அதற்குப் பின்  அதே சுருக்கமான படச் சுருள் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்ததும் வெளிவந்தது.

முதலில் தயாரித்த முழுப் படம் எங்கும் கிடைக்கவில்லை.

இருப்பினும்  கிடைத்த படத்தில் காந்தி அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் சிறப்புக் குழுவில் பங்கேற்றது, லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கு பெற்றது, உப்பு சத்யாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அவை நான்கு வீடியோக்களாக மாற்றப்பட்டு இப்போது உங்கள் பார்வைக்காக,   கீழே தரப்பட்டுள்ளன.

 

சரித்திர – சுதந்திர ஆவணப்பட இரசிகர்களுக்கு அருமையான விருந்து!

 

கோமலின் தண்ணீர் தண்ணீர்

கோமலின் தண்ணீர் தண்ணீர்

Image may contain: 2 people, people on stage, table and indoor

கோமல் 80 விழா 18 நவம்பர் மாலை நாரதகான சபாவில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.

திரைப்பட இயக்குனர் SP. முத்துராமன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, தமுஎகச துணைத்தலைவர் சிகரம் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினர்களாக உரையாற்ற, CPI (M) மானிலத்தலைவர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க தலைவி வாசுகி உமாநாத் , தமுஎகச பொருளாளர் இரா.தெ.முத்து, மற்றும் உறுப்பினர்கள் பல பேர், சிந்தனையாளர்/எழுத்தாளர் ஞானி, சபா செயலாளர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- சேகர் ராஜகோபால், ப்ரம்மகான சபா- ரவி, நாரதகான சபா- ஷங்கர் கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர்கள் ஹிந்து தமிழ் அரவிந்தன், தீக்கதிர் குமரேசன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன், நாடக உலக ஜாம்பவான்கள் காத்தாடி, MB மூர்த்தி, அகஸ்டோ, தமிழிசைஆத்மநாதன், மற்றும் எத்தனையோ நடிகர்கள், எழுத்தாளர்கள் இரா.முருகன், நாடக எழுத்தாளர்/இயக்குனர் பிரளயன், சின்னத்திரை பிரபலங்கள் DD, கல்யாணமாலை மோகன், மற்றும் அனைத்து நாடக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Image may contain: 5 people, people sitting and indoor

அனைவருக்கும் எனது நன்றிகள் பல.


அரங்கேறி 35 ஆண்டுகள் ஆன பிறகும் , இன்றும் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் சமகாலத்திய ஒரு நாடகமாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
சமூக ப்ரக்ஞை உள்ள ஒரு படைப்பாளிக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக இதைக் கருதுகிறேன்.

லலிதா தாரிணி – கோமலின் மகள் மற்றும் இந்த நாடகத்தை இயக்கியவர். ( முகநூல் பதிவிலிருந்து) 

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாடகம் இத்தனை அளவிற்குத் துடிப்புடன்இருப்பதற்கு முக்கிய காரணங்கள்:-

கோமலின் மனித நேயக் கதை   – மனதைத்தொடும் வசனங்கள். நடிகர்கள் பாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கும் நயம். அந்த அழகான கிராம மேடை அமைப்பு –  திறமையான ஒலி,ஒளி அமைப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய – இன்றைய இயக்குனர்கள்.

பங்குபெற்ற அனைவருக்கும் குவிகத்தின் மனமுவந்த   பாராட்டுதல்கள்!

 

சென்னைப் பையன்

இது ஒரு புதுமையான ஆடியோ முயற்சி!

முதலில் வேறு பாட்டு வருவது போலத் தோன்றினாலும் கடைசியில் வருவது சென்னைப் பையன் பாடல் தான் !

சென்னைப் பையன் சென்னைப் பையன் நான் தாண்டா !சின்னப்பையன் சின்னப் பையன் இல்லேடா                                                 எல்லாம் எனக்குத் தெரியும்டா                                                                         சொல்லித்தர சொல்லித்தர  வேண்டாம்டா

 

(மேலும் பல வரிகள். அவற்றைப்  பாட்டிலேயே  கேட்கலாம்)

http://chennaipaiyan.madewithopinion.com/chennaipaiyan/#

 

குறு நாடகங்கள் – எஸ் கே என்

 

 

No automatic alt text available.

தமிழில் நாடகங்கள் அதிகமாக மேடையேறியது எழுபது எண்பதுகளில்தான். அவற்றில் பெரும்பாலானவை ‘துணுக்குத் தோரணம்’ என்று வகைப்படுத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில்   பெரும்பாலோர் நாடகங்களுடனோ சபாக்களுடனோ ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு இருந்திருப்பார்கள். தொலைக்காட்சி வந்தபிறகு நாடகங்கள் குறைந்தன. நல்ல நாடகம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கு உண்டு.

இந்த ஆண்டு அல்லயன்ஸ் ஃப்ராங்சைஸ் ஒரு குறுநாடகவிழா நடத்தியது. சுமார் பத்து நிமிடங்கள் கொண்ட முப்பது நாடகங்கள் மூன்று வாரங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலும் இளைஞர்கள் பங்குகொண்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் மிகுந்த புத்துணர்ச்சியை அளித்தது.  அதில் எட்டு நாடகங்களை  மீண்டும் ‘CRISPY THEATER’ அரங்கேற்றியது. அந்தக்  குறுநாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

‘ஷ்ரத்தா’ நாடகக் குழு கடந்த ஒரு சில ஆண்டுகளாக சில நல்ல நாடகங்களை மீண்டும் ரசிகர்களுக்குப் பார்க்க வாய்ப்பு அளித்தது. ஒருமுறை மூன்று சிறுகதைகளை நாடகமாக்கி சிறப்பாக அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு எட்டு குறுநாடகங்கள் மேடை ஏற்றினார்கள்.

எட்டு நாடகங்கள் துண்டுப் பிரசுரத்தில் இருந்தாலும் நாங்கள் சென்ற தினத்தில் ஏழு நாடகங்களே இருந்தன.

  • சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயக்காய்தூள்’ ஒரு நபர் நாடகமாக (மோனோ ஆக்டிங்) ரசிக்கும் வகையில் இருந்தது. ஓவியர், அவரது மனைவி மற்றும் படம் வரையச் சொன்ன வியாபாரி ஆகிய மூன்று பாத்திரங்களையும் அந்த நடிகர் சிறப்பாகச் செய்தார்.
  • ‘அது’ – ‘ஸ்கைலேப்’ பூமியில் விழுந்து உலகமே அழியப்போகிறது என்ற பீதி உலவியது. அதுபோல் விண்வெளியிலிருந்து மாபெரும் ‘அது’ விழுந்து உலகம் அழியவிருப்பதாக அஞ்சும் நிலையில் ஒரு இளம் தம்பதியர் அதனை எதிர்கொள்ளும் காட்சியும், மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என ஒரு பிச்சைக்காரன் மூலமாகவும் இந்த நாடகம் சித்தரித்தது, ரசிக்கமுடிந்தது. பிறக்கப்போகும் குழந்தைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம் என அந்த தம்பதியினர் முடிவு செய்கிறார்கள். எளிய வசனங்களும் இயல்பான நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது.
  • ‘மெல்லத் தமிழ் இனி …’ பாரதியார் பாடல்களில் தவறாகப் பயன்படுத்தப்படும் ‘மெல்லத் தமிழினி’, நல்லகாலம் பாரதியாரை இழுக்கவில்லை. தமிழ் படிக்காத ஒரு மாணவி தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க,   ஒரு ஆட்டோ ஓட்டுனரின் தமிழால் ஈர்க்கப்படுவதாக சென்னைத் தமிழ் கிண்டலுடன் காண்பிக்கப்பட்டது. பரவாயில்லை. (ஒரு வேண்டுகோள் ‘மெல்லத்தமிழினி சாகும்’ என்று எவனோ சொன்னதாக கூறுபவர்களைப்  பாரதி சாடியல்லவா இருக்கிறான். பாரதியாரே அப்படிச் சொன்னார் என்று மேடையிலும் உரையாடல்களிலும் சொல்லுவோரை முழுப் பாடலையும் படிக்கச் சொல்லுங்கள். புண்ணியமாய் போகும்)
  • ‘கைபேசி’ – ‘மைமிங்’ வகையில் வசனமே இல்லாத வகை நாடகம் இது. பங்கேற்றவர்கள் சிறுவர்கள் என்பதால்  ‘எனர்ஜி லெவல்’ மிகச் சிறப்பாக உற்சாகமாக இருந்தது. பிணம்தூக்கிகள் ஒவ்வொருவராகக் கைபேசியில் பேசப்போவதும், அம்போ என்று விடப்பட்ட பிணம் தானும் ஒரு செல்போன் எடுத்து பேசத்தொடங்குவதும் நல்ல கற்பனை. சொல்ல முயற்சிக்கப் பட்டவைகளில் பல  பார்வையாளர்களைச் சென்றடைய வில்லை என்று தோன்றிற்று.
  • ‘அறியா சனம்‘ தலைப்பு ஒரு சிலேடை என்று நினைக்கிறேன். ஒரு மைக் தான் கதைசொல்லி. மற்ற ‘சனங்கள்’ வந்துபோக, மேலிருந்து தொங்கும் ஒரு நாற்காலி –  ‘அறியாசனம்’ கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்குகிறது. வித்தியாசமான நாடகம். வசனங்கள் நினைவில் நிற்காததால் காட்சியுடன் ஒன்ற முடியவில்லை.
  •  ‘தாலிக்கொடியும் தொப்புள்கொடியும்’ மற்றும் ‘கடைசிக் கடிதம்’ ஆண்டாள் பிரியதர்சினியின் இரு கதைகள் நாட்டிய அபிநயங்களோடு ஒரே கலைஞரால் நிகழ்த்தப்பட்டன. எனக்கு ரசனை பற்றாது என்பதால் ‘ஜகா’ வாங்கிக்கொள்கிறேன்.

நல்லவேளை ஏழு நாடகங்களுடன் விட்டார்களே என்ற ஆசுவாசத்துடன் அரங்கத்தை விட்டு அகன்றோம். நாம் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் சென்றதுதான் தவறோ?

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ . பாஸ்கரன்

dr1

நம்பிக்கை என்னும் மந்திரச் சாவி!  

Image result for faith

அது வானம் பார்த்த பூமி!

மழை பொய்த்து, பூமியும் அந்தக் கிராமத்து மக்களின் மனங்களும் வறண்டு கிடந்தன.

இயற்கையை எதிர்த்து மனிதன் என்ன செய்து விட முடியும்?
ஊரே ஒன்றுகூடி, ஊரின் நடுவிலிருக்கும் கோயிலின் முன் கூட்டுப் பிரார்த்தனை செய்வது என முடிவு செய்தது கிராமப் பஞ்சாயத்து. குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் மழை வேண்டி கோயில் முன் திரண்டனர்.

கூட்டத்தின் நடுவில் ஒரு சிறுவன் மட்டும் தாழங்குடை ஒன்றைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான்!

பிரார்த்தனை நிச்சயம்; மழை வரப்போவதும் நிச்சயம்! நனையாமலிருக்கக் குடை கொண்டுவந்த சிறுவன்தான் ‘நம்பிக்கை’ யின் மறு உருவம். மற்றவர்களின் நம்பிக்கையில் சந்தேகம் கலந்திருக்கிறது.

ஒன்றின் மீது நமக்கிருக்கும் உறுதியான பிடிப்பு, எண்ணம், எதிர்பார்ப்பு – FAITH, HOPE, TRUST, CONFIDENCE – நம்பிக்கையாகும்.

அம்மாவினால் அடையாளம் காட்டப்படும் அப்பா – குழந்தையின் முதல் நம்பிக்கை!

அழுதால் பால் கிடைக்கும் – அம்மாவின் மீது குழந்தையின் நிஜ நம்பிக்கை!

மேலும் மேலும் உயர்த்தும், மாணவன் ஆசிரியர் மீது வைக்கும் நம்பிக்கை!

சீரான வாழ்க்கைக்கு ஆதாரம், கணவன் மனைவி இடையில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையே!

ரயிலிலோ, பேருந்திலோ, விமானத்திலோ பயணம் செய்வதும் ஒருவித நம்பிக்கையில்தான்!

விடாமுயற்சியுடன் ஓடி, வியர்த்து உழைப்பதுவும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்தானே!

மறுநாள் காலை கண் விழிப்போம் என்ற நம்பிக்கையுடனேயே முதல் நாள் இரவு தூங்கிப் போகிறோம்!

நம் ஒவ்வொரு எண்ணத்திலும், செயலிலும் நம்பிக்கையே ஆதார சுருதியாக இருக்கிறது!

நம்பிக்கைதானே வாழ்க்கை!

ஓட்டப்பந்தயத்தில் ஓடத் தயாராய் நிற்கும் ஒருவர், இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ‘நான் எங்கே ஜெயிக்கப் போகிறேன்’ என்று நம்பிக்கை இழந்தால், அவர் அந்தக் கணமே மற்றவர்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதற்குத் தயாராகிவிட்டார் என்பது உறுதியாகி விட்டது!

எல்லோருக்கும் முதலில் வேண்டியது ‘தன்னம்பிக்கை’.

மகாகவி பாரதியின் நம்பிக்கையே, சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ‘ என்று பாடவைத்தது!

“நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை “ சொன்னவர் அப்துல் கலாம் அவர்கள்!
பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தபோது, ‘ப்ரூப் படிக்கத் தெரியுமா?’ என்றார்கள்; ‘தெரியும்’ என்றேன். பழக முடியும் என்று நம்பினேன். பழகிக்கொண்டேன்.

‘கவிதை எழுதத் தெரியுமா?’ என்றார்கள்; நம்பினேன். எழுதினேன்.
‘முடியும்’ என்றால் முடிகிறது; தயங்கினால் சரிகிறது. – இது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது!

தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வது ஒன்றே வெற்றிக்கு வழி.
நம்பிக்கைகளில் முதன்மையானது ‘இறை நம்பிக்கை’. இருக்கிறானா இல்லையா என்பதல்ல கேள்வி – நம்பிக்கை அவசியம்! எதையாவது நம்பித்தானே ஆகவேண்டும்! எதை நீ நம்புகிறாயோ அதுவே ‘இறைவன்’ என்பேன் நான்!

‘உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பார் கண்ணதாசன் – உன் நம்பிக்கையைப் பொறுத்தது அது!

“கபடமற்ற மனம் இல்லாவிட்டால் இறைவனிடம் சட்டென்று நம்பிக்கை வராது! “ “ இறைவனின் திருநாமத்தில் நம்பிக்கை இருந்தால் தீர்த்த தலங்களுக்குப் போவது கூட அவசியமில்லை “ என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர்.

புதிதாய்ச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு, கப்போர்டு பூட்டைத் திறக்கும் நம்பர் காம்பினேஷன் தெரியவில்லை அல்லது மறந்து விட்டது. சிறிது நேர முயற்சிக்குப் பின், அந்தப் பள்ளியின் பாதிரியாரிடம் சென்று உதவி கேட்டார். உள்ளே வந்த பாதிரியார், இரண்டு எண்களைத் திருப்பிவிட்டு, சிறிது நேரம் அமைதியானார் – மேலே நிமிர்ந்து பார்த்து ஏதோ முணுமுணுத்தார். பின்னர், குனிந்து, மூன்றாவது எண்ணைத் திருப்பிப் பூட்டைத் திறந்து விட்டார்.

பாதிரியாரின் நம்பிக்கையில் ஆசிரியை வியந்து போனார்! சிரித்தபடியே பாதிரியார் சொன்னார்,”இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. மேலே கூரையில் இந்தப் பூட்டின் நம்பர் எழுதி ஒட்டப்பட்டுள்ளது!”

நம்பிக்கை சிறியதோ, பெரியதோ – அது கொண்டுவரும் மாற்றம் மிகவும் உன்னதமானது!

Image result for faith