Monthly Archives: May 2014
Payanam | Scared | பய[ண]ம்
Full screen,1080p HD and headphones recommended An experimental road trip… Spreading the kural with no kuraL (dialogues) Kural Experiment #1: பய[ண]ம் | Sca…
“Clueless Creations” ன் பய(ண)ம்!
முதல் தரமான திகில் குறும்படம்!
அர்ஜுனனின் அபாரமான நடிப்பு! நல்ல ஒளிப்பதிவு! அளவான பின்னணி இசை! திறமையான இயக்கம்!
கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம்!
(Click the above link to view the short film in youtube)
பொன்னியின் செல்வன் நாடகம் டிக்கட் கிடைக்குமிடம்
Ponniyin Selvan (Tamil Historical Play)
1999 was the centenary year of the popular Tamil novelist Kalki. Magic Lantern staged the first theatrical adaptation of his five part magnum opus Ponniyin S…
1999ல் நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தைப் பற்றி youtubeல் வெளியிட்ட காட்சித் தொகுப்பு!
(Click the above link to view the highlights of the play staged in 1999)
ராஜராஜன் சோழன் உலா
சென்ற வார முடிவில் …….
சிவாச்சாரியார் நடுநடுங்கி விட்டார். தனக்கு ஏன் இந்த விபரீத ஆசை வந்தது? இனி நம் கதி என்னாகுமோ என்று தயங்கித் தயங்கி அவர்கள் முன்வந்து கண்மூடி கைகூப்பிநின்றார்.
( தொடரும்)
இனி இந்த வாரம் … .
அதற்குள் பெண்கள் வரிசையிலிருந்து செம்பியன் மாதேவியார் முன்னால் வந்து, “ கவலைப்படாதீர்கள் சிவாச்சாரியரே! எம்பெருமானுக்கு தினமும் பூஜை செய்யும் உங்களை யாரும் ஒன்றும் செய்துவிட மாட்டார்கள் “ என்றார்.
சிவாச்சாரியாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.
அப்போது வந்தியத்தேவன் குந்தவையின் காதில் ஏதோ ரகசியம் கூறுவது ராஜராஜன் கண்ணில் பட்டது.
“என்ன அக்கா! வந்தியத்தேவர் என்ன சொல்லுகிறார்? சத்தமாகத் தான் சொல்லட்டுமே! அனைவரும் கேட்போமே!”
வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “மன்னர் மன்னா! நீங்கள் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. இத்தனை பேர் இருக்க என்னைப் போய் நந்தியை நகர்த்தி சிவாச்சாரியாரை அழைத்து வரச் சொன்னீர்களே! இது நியாயமா? நந்திக்குப் பக்கத்தில் வந்தாலே என் கால் வெடவெடவென்று ஆடுவது உங்களுக்குத் தெரியுமா? – என்று கேட்டான்.
“ஏன் அப்படி? நந்தியிடம் இவர் என்ன வாலை ஆட்டினார்?” – சிரித்துக்கொண்டே கேட்டாள் வானதி.
“குந்தவி நீயே சொல்லிவிடு! ஆயிரம் வருஷங்களாக நாம் கட்டிக் காத்த ரகசியம் இன்று சிவாச்சாரியாரால் உடையப் போகிறது – வந்தியத்தேவன் சொன்னான்.
அருண்மொழியும் அதற்கு மேலாக, “அப்படி என்ன ரகசியம் அக்கா எனக்குத் தெரியாமல்? சிதம்பர ரகசியத்தைவிட பெரியதாக இருக்கும் போல இருக்கே?” – சிரித்துக் கொண்டே கேட்டார்.
“சொல்லுங்கள் அத்தை!” ராஜேந்திரனும் சின்னக் குந்தவையும் கெஞ்சினார்கள்!
“பெரியதாக ஒன்றும் இல்லை தம்பி! எனக்கும் இவருக்கும் திருமணம் ஆன புதிதில் இலங்கைக்கு ஒரு மாதம் போய் விட்டு வரலாம் என்று கோடிக்கரைக்கு வந்தோம். அங்கே குழகர் ஆலயத்துக்குச் சென்று வந்தோம். அப்போது இவர் என்னை பயமுறுத்துவதற்காக அங்கிருந்த நந்திக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்! நான் பதறிப்போய் எல்லா இடத்திலும் தேடிக் காணாமல் கடைசியில் நந்தி தேவரை வேண்டிக் கொண்டு அவர் தலையில் கை வைத்தேன். நந்தி பகவான் என் வேண்டுகோளைக் கேட்டுப் பொத்தென்று கீழே விழுந்தார் – இவரது கால் கட்டை விரல் மேலே. அப்போது இவர் அலறிய ஆந்தை அலறல் இன்றும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து இவர் நந்தி கிட்டேயே போக மாட்டார். அப்படி ஒரு பயம். அந்த பயத்தைப் போக்கத்தான் தஞ்சைக் கோவிலில் ஒரு பெரிய நந்தியை வைக்கச் சொன்னேன்!”
"அதுதான் திருமணம் ஆன புதிதில் வந்தியத்தேவர் கால் கட்டுப் போட்டுக்கொண்டுத் திரிந்தாரா? ” – வானதியின் கேலி தொடர்ந்தது.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிவாச்சாரியாருக்கும் இவர்களின் உரையாடலைக் கேட்டு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் உணர்ந்தார்.
“மன்னர் மன்னா! தங்கள் சதயத் திருநாள் உலா பற்றிக் கர்ண பரம்பரையாகக் கதை ஒன்று இருந்து வந்தது. ஆனால் யாருக்கும் அது உண்மையா என்று பார்க்கத் துணிவு இல்லை. இன்று மாலையிலிருந்து ஓர் அமானுஷ்யக் குரல் ‘‘நடுநிசியில் கோவிலுக்குப் போ’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்த பிறகு தான் நான் பெற்ற பாக்கியம் புரிந்தது.”
“சிவபெருமானைத் தொட்டுத் தடவி அபிஷேகம் செய்து, அர்ச்சனை கூறி அலங்கரிக்கும் திருக்கரங்கள் அல்லவா தங்களுடையது! தங்களைக் காண்பதில் நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம். நீங்களும் எங்கள் உலாவில் கலந்து கொள்ளுங்கள்” என்றார் ராஜராஜன் .
‘நீர் தான் எனக்குச் சரியான தோழன்! என்று சிவாச்சாரியார் அருகில் வந்தார் மதுராந்தக உத்தம சோழன்! “ என்ன திகைக்கிறீர்? நானும் உம்மை மாதிரி சிவ கைங்கர்யம் செய்து நிம்மதியாக இருந்தேன்! அருண்மொழி என் கையில் செங்கோலைக் கொடுத்துவிட்டு ஓடி விட்டான். அதை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க எத்தனை வருடம் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?
வராகி அம்மன் சிலை அருகே உலா வந்ததும் அனைவரிடத்தும் கூச்சல் கும்மாளம். ‘இன்றைக்கு வந்தியத்தேவன் தான் முதலில்’ என்ற ராஜராஜனின் ஆலோசனையை வந்தியத்தேவன் மறுத்தான். “முடியவே முடியாது! நான் சுவற்றில் முட்டிக் கொள்வதை நீங்கள் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்க வேண்டுமா?” என்று ஆவேசமாக மறுத்தான்.
“சரி சரி பெண்கள் முதலில்” என்று குந்தவை சொன்னதும் அனைவரும் ஒப்புக் கொண்டனர். ‘அப்பாடா’ என்று வந்தியத்தேவன் பின்னால் ஓடிப் போனான்.
கருவூர் ஸ்வாமிகளே! நீங்கள் சொன்னபடிப் போட்டி ஒன்று இங்கு வைப்போம்! கண்ணைக் கட்டிக் கொண்டு கையில் பதும மலரை எடுத்துக் கொண்டு வராகி அம்மன் எதிரிலிருந்து பிராகாரத்தில் உள்ள ஐந்து முழப் பாதையில் அடி பிசகாமல் கோடியில் உள்ள துர்க்கை சிலை வரைக்கும் செல்ல வேண்டும். பாதை தவறி வந்தவர்கள் தோற்றவர்கள். வெற்றி பெற்றவருக்குப் பதும மலர்! சரியா? என்று ராஜராஜன் வினவினார்.
“எல்லோரும் வெற்றி பெற்றுவிட்டால்?” – இது சின்னக் குந்தவையின் கேள்வி.
“யாருமே வெற்றிபெறாவிட்டால்?” – இது ராஜேந்திரனின் சந்தேகக் கேள்வி.
“எல்லாவற்றிற்கும் ஒரே பதில்! பதும மலர் சிவபெருமானின் திருவடியைச் சேரும்! அதற்கு சிவாச்சாரியார் உதவுவார்.” –என்றார் ராஜராஜன் .
அதற்குப் பின் நடந்த கண்கட்டு வித்தையைக் காணக் கண் கோடி வேண்டும். எவ்வளவு பெரிய மனிதர்கள் சிறு குழந்தை போல நடந்து பாதை விலகி அனைவரின் சிரிப்புக்கும் ஆளாகும் போது – சிவாச்சாரியார் தான் பெற்ற இப் பேற்றை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார்.
போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை. ராஜராஜன் கடைசி வரையில் சரியாக வந்து கொண்டிருந்தபோது வந்தியத்தேவன் ‘களுக்’ கென்று சிரித்ததால் தடுமாறித் தோல்வியுற்றார்.
“நான் போட்டியில் கலந்து கொள்ளலாமா?” என்று கேட்டுக் கொண்டு வந்தான் அப்பொழுது தான் உலாவில் கலந்துகொண்ட ஆதித்த கரிகாலன்.
“ஆஹா! வாருங்கள் அண்ணா! வாருங்கள்! பல ஆண்டுகள் வராமல் இருந்த தாங்கள் இந்த ஆண்டும் வரவில்லையோ என்று சற்று முன் தான் பேசிக் கொண்டிருந்தோம். தாங்கள் வந்து இந்த உலாவைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள்!” மனதார வரவேற்றார் ராஜராஜன்.
“இல்லை தம்பி! ஒவ்வொரு வருடமும் வரவேண்டும் என்று தான் நினைப்பேன்! ஆனால் ஏதோ ஓரு நினைவு தடுத்து விடுகிறது. இன்று தாமதமானாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓடோடி வந்தேன்!” என்றான் கரிகாலன்.
பதும மலரை வாங்கிக் கொண்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு சிங்க நடை போட்டு நடந்தான் ஆதித்த கரிகாலன். பதங்கள் இம்மி பிசகவில்லை. நேராக வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல சரியாக இலக்கை அடைந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தார்கள்!
“எப்படி அண்ணா! உங்களால் வெற்றி பெற முடிந்தது? – ராஜராஜன் வினவினார்.
“எல்லாம் என் தோழன் வந்தியத்தேவன் கொடுத்த உபாயம் தான்.”
“ஆனால் அவர் தோற்று விட்டாரே!
“அவனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தான் தெரியும்! எனக்கு ஜெயிக்கத் தெரியும்”!
“சரி சரி! நானே சொல்லி விடுகிறேன்! கரிகாலரிடம் துர்க்கை அம்மன் சிலைக்குப் பின்னால் வீரபாண்டியன் ஒளிந்து இருக்கிறான் என்று சொன்னேன். அவ்வளவு தான். நேரே சென்று கொன்று விட்டார்.. இல்லை வென்று விட்டார். “
‘அருமை! அருமை! என்று அனைவரும் சிரித்தனர். அந்த சிரிப்பு அலை அறுந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது சிவாச்சாரியார் கேட்ட அடுத்த கேள்வி!
(அடுத்த இதழில் முடியும்)
.
சில்மிஷம்
அவன் ஓர் ஆனந்த ஊற்று
அவள் ஓர் சந்தனக் காற்று
இருவர் இடையில் இடைவெளி ஏனோ ?
கரையது கடந்திட கடை திறமீனோ?
தடைகளை அகற்று படைகளை ஏற்று
உடைகளை மாற்று மடைகளை தூற்று
அடைமழை பொழிந்திட இடை மட்டும் நடுங்கிட
எடைகளும் குறைந்திட விடைகளும் பிறந்திட
கயலது துள்ளிட வயலது பொங்கிட
துயிலது துஞ்சிட கடை திறமீனோ?
அவள் ஓர் அழகிய பூச்செண்டு
அவன் ஒரு சீரிய சில்வண்டு
இருவர் இடையே இழைந்திடும் பொன்வண்டு
கருக்கல் வரையில் சில்மிஷம் தினம் உண்டு !!
எங்க அம்மா தங்க அம்மா
( Click the Play Button to listen to the audio version of the poem)
எங்க அம்மா தங்க அம்மா – அது
எங்க அம்மா தங்க அம்மா
இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள சட்னி தருவா
சட்டினி கூட சேர்த்து அவ சாம்பார் தருவா
சட்டினியும் சாம்பாரும் தீர்ந்து போனா
மொளகாப்பொடி எண்ணை ஊத்தித் தருவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
தொட்டிலில் கிடக்கும் போது பாலைத் தருவா
பட்டினி கிடக்கும் போது பாத்துத் தருவா
பருப்பு சோறும் பாலு சோறும் தீர்ந்து போனா
ரத்தத்தையே பாலாக ஊட்டி விடுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
காலை முதல் மாலை வரை காத்துக் கிடப்பா
நேரமானா கண்ணிரண்டும் பூத்துக் கிடப்பா
ரா முழுதும் நான் அழுதா தானும் அழுவா – அட
கண் முழிச்சு நான் சிரிச்சா தானும் சிரிப்பா
அது எங்க அம்மா தங்க அம்மா !
சுரம் வந்து அவதிப் பட்டா ரொம்பத் துடிப்பா
பால் எடுத்து துணியில் ஒத்தி பத்துப் போடுவா
நான் எடுத்த வேலை யெல்லாம் வெற்றி பெறவே
எல்லா ஊரு கோயிலுக்கும் முடிச்சு போடுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
மடியில் இட்டு முதுகில் தட்டிப் பாட்டுப் படிப்பா
இட்டுக் கட்டி மெட்டுப் போட்டு ராகம் பிடிப்பா
சின்னச் சின்னக் கதையா கோடி சொல்லுவா
கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிக் கொள்ளுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
நல்ல சேதி சொல்லி வந்தா ஆரத்தி எடுப்பா
உப்பு மொளகாய் எடுத்து சுத்திப் போடுவா
தப்புத் தண்டா எதுவும் நானுஞ் செஞ்சா
அப்பா கிட்ட சொல்லாம மறைச்சிடுவா !
அது எங்க அம்மா தங்க அம்மா !!
ஓடி ஓடி ஓடாய்ப்போன அம்மாவுக்கு
கோடி கோடி கொடுத்தாலும் ஈடாகுமோ ?
அள்ளி அள்ளித் தந்தாளே எங்க அம்மா – அவளுக்கு
கொள்ளி மட்டும் வைச்சேனே இது தகுமோ ?
அது எங்க அம்மா தங்க அம்மா !
திருடன்
கடைசி பஸ். ஓடி வந்து ஏறினாள் நளினி.
அந்த டொண்டணக்கா பஸ்ஸில் ரெண்டு மீன்கார கிழவிகளைத் தவிர வேற யாரும் இல்லை. கண்டக்டரும் டிரைவரும் வயசானவர்கள்.
கொஞ்சம் திக்கென்றிருந்தது. டவுனுக்குப் போக ஒரு மணி நேரம் ஆகுமே என்று கவலைப் பட்டாள்.
போதாக்குறைக்கு அடுத்த ஸ்டாப்பில் தடியன் ஒருவன் ஏறினான். கண்ணெல்லாம் சிவந்து இருந்தது. அவ்வளவு இடம் இருக்க இவள் சீட்டுக்கு அடுத்த சீட்டில் உட்கார்ந்து அவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். பயந்து நடுங்கியபடி வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டாள் நளினி.
நல்ல வேளையாக அடுத்த ஸ்டாப்பில் வாட்ட சாட்டமா சரத்குமார் ஸ்டைலில் ஒருவன் ஏறினான். நளினிக்கு அப்பத் தான் மூச்சு வந்தது.
டவுன் அருகே வந்ததும் ’ இறங்குடா நாயே’ன்னு சொல்லி நாலு அறை கொடுத்து இறக்கினான்.
குடிகாரன் மாதிரி இருந்தவன் இன்ஸ்பெக்டராம். டிப்டாப் பேர்வழி கற்பழிப்பு ஸ்பெஷலிஸ்ட்டாம்.
நளினிக்கு ஆச்சரியம்!
நிலவு பொழியும் இரவு – பவுர்ணமிக்குச் சிறப்பு!
சித்ரா பவுர்ணமிக்கு என்றுமே தனிச் சிறப்பு!!
ஸ்வாமிஜி
ஸ்வாமிஜி
“…. ஆகவே மனித வாழ்க்கை நிலையற்றது. நமது கர்மங்களும் கிரியைகளும் தொடர்ந்து வரும். பகவானோட பாதார விந்தத்தைப் பணிந்தால் தான் மனசில் அமைதி உண்டாகும். அதுக்கு முதலில் ஆசையை அடக்கணும். ஆசை தான் மனிதனின் மூலச் சத்துரு. ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் கேளுங்கோ! நான் சின்னப் பையனா இருக்கறச்சே கடலை உருண்டைன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அதைச் சாப்பிட்டால் வயத்திலே வலியும் வரும். இருந்தாலும் அந்த ஆசையை விட முடியலே. அதைத் தர மாட்டேன்னு சொன்னதுக்காகப் பெத்த அம்மாவையே அருவாமணையால வெட்டப் போயிட்டேன். ஒரு சின்ன ஆசை எவ்வளவு பெரிய பாவச் செயலுக்கு… “
“சாமிநாதன்.. என் சாமிநாதன்! “
கூட்டம் அவளைத் திரும்பிப் பார்த்தது. ‘ஏ பாட்டியம்மா சும்மா உட்காரு. “ அவள் உட்காரவில்லை. தட்டுத் தடுமாறி ஸ்வாமிஜி பிரசங்கம் செய்துகொண்டிருந்த மேடைக்கு அருகே சென்றாள்.
“சாமிநாதா! என்னைத் தெரியலையாடா?” கிழவியின் குரலில் இருந்த வேகம் ஸ்வாமியைத் திரும்ப வைத்தது. “ யார் அந்த பைத்தியம் ஸ்வாமிஜி கிட்டே தகராறு பண்ணறது? கிழவியை விரட்டு’ கூச்சல் எழுந்தது.
‘சற்று அமைதியாக இருங்கள்’ – ஸ்வாமிஜியின் கணீரென்ற குரல் அனைவரையும் அமைதிப்படுத்தியது. அம்மா! மேடைக்கு வா! நான் உன் சாமிநாதன் தான்’ என்றார். கண் தெரியாமல் கை கால் வெட வெடவென்று நடுங்கிக் கொண்டிருக்கும் அவளை ஸ்வாமிகளே கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவளோ சுற்றுப்புறத்தை மறந்தாள்.
“சாமிநாதா! நீ செஞ்சது உனக்கே நல்லா இருக்காடா ? செல்லத்தையும் குழந்தையையும் அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டியேடா பாவி! “ அவளுக்கு மூச்சு இரைத்தது.ஆனால் அவள் வீசிய சொல்லம்பு மைக் வழியாக அனைவர் காதிலும் விழுந்தது. மறுபடியும் குழப்பம் ஏற்படும் போல இருந்தது. ஸ்வாமிஜி தன் ஒற்றைக் கரத்தாலே அனைவரையும் அடக்கினார்.
‘அம்மா! நீ சொன்னது சரி தான். என் மனைவியையும் குழந்தையையும் உன்னையும் விட்டுவிட்டு நான் போனது உண்மை தான். ஆனால் அது தான் விதி – கர்ம பலன். அதை நீயோ நானோ யாருமோ மாற்ற முடியாது. எல்லாம் அவன் செயல்! – ஸ்வாமி பெற்றவளுக்கு உபதேசம் செய்தார்.
“எதுடா அவன் செயல்? சோத்துக்கு வழி இல்லாம செல்லமும் குழந்தையும் துடிதுடிச்சுச் செத்தாளே !அதுவா அவன் செயல்? கை ஓடிஞ்சு போற அளவுக்கு ஹோட்டல்லே பாத்திரம் தேச்சு வயத்தைக் கழுவிக்கிட்டு வர்ரேனே இதுவா அவன் செயல்? இல்லேடா! இதெல்லாம் உன் செயல். நீ ஒழுங்கா எங்களோட இருந்திருந்தா இந்த கதி எங்களுக்கு வருமா? நீ பொறந்த அன்னிக்கு கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழுத போது அவன் பாத்துப்பான்னு விட்டுட்டுப் போயிருந்தேன்னா தெரிஞ்சுருக்கும்!. உனக்கு மாந்தம் வந்தப்போ சுடற வெயில்லே உன்னைத் தூக்கிட்டு ஓடினேன் பாரு! உன்னை வளர்த்துப் பெரிய மனுஷனா ஆக்கினேன் பாரு! அதுக்குப் பலன் என்னை அனாதையா விட்டுட்டு ஓடினே! இது நியாயமா? இங்கே இருக்கிற அத்தனை பக்தர்களும் சொல்லுங்கோ! சொல்லுடா? சொல்லு! “
ஊழித்தீ வெடித்தது.
‘அம்மா! அம்மா!’ ஸ்வாமிகளின் கண்களில் கண்ணீர் பெருகியது. "நான் செய்தது தவறு தான். என் கடமையை விட்டுட்டுப் போனது மாபெரும் தவறு . அதுக்கு மன்னிப்பே கிடையாது. இப்பொழுதே அதற்குப் பரிகாரம் தேடறேன்! இந்த நிமிடம் முதல் நான் ஸ்வாமிஜி இல்லை. வெறும் சாமிநாதன் தான். வா! அம்மா போகலாம்! “
நடந்தார்கள்!
இரண்டு
இரண்டு மனம் கேட்டான் இதயக் கவிஞன் அன்று
இரண்டில் ஒன்று கேட்டான் இதயத் திருடன் இன்று
இரண்டு வரம் கேட்டாள் இதயமற்ற சித்தி
இரண்டு கண்ணும் தந்தான் இதயமுள்ள வேடன்
உலகின் வளர்ச்சி ஒன்று இரண்டாவது
உலகில் சமன் செய்ய தேவை இரண்டாவது
ஆண் பெண் இரண்டு உடல் உயிர் இரண்டு
இன்பம் துன்பம் இரண்டு உயர்வு தாழ்வு இரண்டு
பிறப்பு இறப்பு இரண்டு உறவு பகை இரண்டு
வெற்றி தோல்வி இரண்டு உண்டு இல்லை இரண்டு
கொடுக்கல் வாங்கல் இரண்டு நேர் எதிர் இரண்டு
உள்ளே வெளியே இரண்டு மேலும் கீழும் இரண்டு
பரமன் பக்தன் இரண்டு இரவு பகல் இரண்டு
கண் இரண்டு காது இரண்டு
கரம் இரண்டு கால் இரண்டு
நாசி இரண்டு இதழ் இரண்டு
மூளை இரண்டு குடல் இரண்டு
கன்னம் இரண்டு சிறுநீரகம் இரண்டு
தாடை இரண்டு நுரையீரல் இரண்டு
தொடை இரண்டு குதம் இரண்டு
தோள் இரண்டு பல்வரிசை இரண்டு
விதை இரண்டு மார்பகம் இரண்டு
இதுதான்
இரண்டின் உருபும் பயனும்
உடன் தொக்கத் தொகையோ ?
தலையிலே ஒரு குட்டு (கோவை சங்கர்)
ஹெயின்ஸ் கொலையென்று வந்தது செய்தி
ஐயையோ அநியாயம் என்றேன் கூவி
மதசார்பிலா பண்பாளன் என்றே கூறி
பரந்த முதுகிலே கிடைத்ததோர் ஷொட்டு!
மஸ்ஜீத் வீழ்ந்தநாள் இந்தியருக்கு துக்கநாள்
கோபமாய் கோஷமிட்டு கொடிபிடித்த என்னிடம்
சபாஷ் மகனேநீ காட்டும்வழி அன்புநெறி
களிப்போடு மகிழ்வோடு புகழாரம் சூட்டினரே!
கோத்ரா ரயிலினிலே பலியானர் இந்துக்கள்
கொடுமை கொடுமையென கூவிய என்னையே
மதவெறியன் சிறுபான்மை மக்களுக் கெதிரியென
கூறியே எந்தலையில் வைத்தனரே ஒரு குட்டு!
ராஸ லீலை
வித்தகன் நீ ஒருத்தன் தானே !
சத்திய வார்த்தை இது நித்தமும் நான் சொல்வேன் !
வித்தகன் நீ ஒருத்தன் தானே !
எத்தனையோ பெண்களின் மனத்தை மயக்கி விட்டு
அத்தனைக் கண்களையும் நின்பாற் ஈர்த்து விட்டு
சித்தினிப் பெண்களின் சித்தம் கலக்கி விட்டு
பத்தினிப் பெண்களின் பாதம் பிறழ விட்டு
மத்தினில் கடைந்த தயிரென மாற்றி
கத்தியின்றி ரத்தமின்றி மனதைப் பறித்து விட்ட
வித்தகன் நீ ஒருத்தன் தானே !
பத்தினில் முத்தான பரமன் நீயன்றோ?
வித்தினில் விளைந்த புத்தளிர் போல
நெத்தியில் குறுவாய் முத்தமும் பதித்தாய்
மத்தள மனத்தினில் சத்தத்தை எழுப்பி
சத்தினைப் பிழிந்த சக்கையாய் மாற்றி
சத்தமின்றி அத்துமீறி என்னுள் புகுந்து விட்ட
வித்தகன் நீ ஒருத்தன் தானே !
மெத்தென யமுனை மெத்தையில் கவிழ்த்து
வித்தைகள் யாவையும் சுத்தமாய்ப் பதித்து
சித்துக்கள் பலசெய்து தலைசுத்த வைத்து
தித்திக்கத் தித்திக்க முத்தங்கள் தந்தாய்
அத்துடன் முடிந்திடும் கதை இது இலையே !
பத்திரமாய் சித்திரமாய் வித்தினை விதைத்து விட்ட
வித்தகன் நீ ஒருத்தன் தானே !
குட்டீஸ் லூட்டீஸ் (கோவை சங்கர்)
நான் என்னுடைய ஆறுவயது மகள் ரமாவுடன் பீட்ஸா வாங்க பீட்ஸா கார்னருக்குப் போனேன். மெனு கார்டைப் பார்த்துக்கொண்டிருந்த ரமா, “ அப்பா இங்கே வாங்க வேண்டாம். இங்கே சாப்பிட்டா நான் குண்டாயிடுவேன்’ என்று அலறியபடியே மெனு கார்டைக் காட்டினாள்.
‘FAT FREE SPECIAL’ என்று அச்சடிக்கப் பட்டிருந்தது.
நானும் கடையில் வேலை செய்பவர்களும் சிரித்த சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.
‘FAT FREE என்றால் கொழுப்பே சேர்க்காமல் பண்ணிய பீட்ஸா என்று அர்த்தம்’ என்று என் மகளுக்குப் புரிய வைக்க முயன்றது ஒரு தனிக் கதை.
( Click the Play Button to listen to the audio version of the poem)
ஓ நாராய்! ஓ நாராய்!
உன் குஞ்சுக்கென்ன மீன் பிடிக்க
சொல்லித் தர வேண்டுமா? – அது
தத்தித் தத்தித் தாவறதை
பாக்கறப்பத் தாவுதே
அது என் உள்ளம்
என்றென்றும் துள்ளும் – ஓ நாராய்!
காலையிலே மாலையிலே சாலை ஓரச் சோலையிலேகோடையிலே வாடையிலே ஓடிவரும் ஓடையிலே
ஓடும் சின்ன மீன்கள் என்றும்
தேவையில்லை என்று சொல்லி
பெரிய பெரிய மீன்கள் என்று
கண்ணில் இன்று தோன்றும் என்று
ஒற்றைக் காலில் நின்று கொண்டு
மோனத் தவம் புரிந்து
மீனுக்காகத் தவிக்கும்
ஓ! நாராய்!
மாங்காட்டுப் பாடல் (ஐந்தாம் வாரம்)
பல்லுயிர் காத்திடும் பகலவனாய் வாஎன்தாயே!
பாலைப் புகட்டிடும் அன்னையாய் வாஎன்தாயே!
பிள்ளைகள் சிரித்திடும் பொம்மையாய் வாஎன்தாயே!
பீடுடைய பெருமானை உடன்அழைத்து வாஎன்தாயே!
புல்லாய்ப் பிறந்தாலும் பனித்துளியாய் வாஎன்தாயே!
பூவண்டாய் இருந்தாலும் தேன்துளியாய் வாஎன்தாயே!
பெண்ணாய் என்தோளில் துஞ்சிவிட வாஎன்தாயே!
பேரனாய் பேத்தியாய் கொஞ்சிட வாஎன்தாயே!
பையனாக` வந்தென்னை கரையேற்ற வாஎன்தாயே!
பொங்கிவரும் மாங்காட்டில் தங்கிவிட வாஎன்தாயே!
போகங்கள் விளைந்திட மேகமாய் வாஎன்தாயே!
பௌர்ணமி இரவினிலே வெளிச்சமாய் வாஎன்தாயே!
ப்ரியமுடன் அழைக்கின்றேன் காத்திடுவாய் எனை நீயே!
புல்லரிப்பு
வெயில் உனக்கையாக இருந்தது ஊட்டி பொடானிகல் தோட்டத்து புல்வெளியில் உட்கார்ந்திருந்த சுகுமாரனுக்கு.
‘இது தான் சுகம்’ என்று புல்வெளியில் படுத்து உருண்டான்.
‘சுகமோ சுகம்’ என்று அந்தக்காலத்துப் பாட்டைப் பாட ஆரம்பித்தான்.
முதுகுக்குக் கீழே ஏதோ அரித்தது போல இருந்தது. சொறிந்தான்.
‘சுகம் எங்கேடா? சொறியிற இடத்தில்’ என்று சினிமா வசனம் பேசினான். ‘புல்லரிப்பு இது தானோ’ என்ற ‘பன் ’ வேற.
திரும்பத் திரும்ப அரித்தது. கழுத்திலிருந்து கால் வரை அரித்தது.
ஓடினான் ஓடினான் டாக்டரிடம் ஓடினான்.
அலர்ஜியாம்! ஆயிரம் அலர்ஜியில் அவனுக்கு ‘புல்’ அலர்ஜி.
ஒன்று முதல் பத்து வரை ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய் !
ஓங்கார ஓசை தினம் கேட்கும் என்பது உண்மையே !
ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய் !
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம் !
ஓம் நமசிவாய என்று மூன்று முறை சொல்லுவாய் !
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே !
ஓம் நமசிவாய என்று நான்கு முறை சொல்லுவாய் !
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே!
ஓம் நமசிவாய என்று ஐந்து முறை சொல்லுவாய் !
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார் !
ஓம் நமசிவாய என்று ஆறு முறை சொல்லுவாய் !
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார் !
ஓம் நமசிவாய என்று ஏழு முறை சொல்லுவாய் !
ஏழு சுரமும் உன் நாவில் இழையும் என்பது சத்தியம் !
ஓம் நமசிவாய என்று எட்டு முறை சொல்லுவாய் !
எட்டுத் திக்குப் பாலகரும் வாழ்த்தி அருளிச் செல்லுவார் !
ஓம் நமசிவாய என்று ஒன்பது முறை சொல்லுவாய் !
நவகோளும் உன்னைச் சுற்றி நல்லதையே செய்திடும் !
ஓம் நமசிவாய என்று பத்து முறை சொல்லுவாய் !
பத்துப் பத்தாய் புண்ணியங்கள் பற்றி வரும் சத்தியம் !
ஓம் நமசிவாய என்று அனுதினம் நீ சொல்லுவாய் !
உனக்கு நன்மை உயிர்க்கு நன்மை உலகுக்கெல்லாம் நன்மையே !!
தி ஜானகிராமனின் “ஐயரும் ஐயாறும்”
திருவையாற்றுக்கு தியாகையர் பஞ்ச கீர்த்தனை சமயத்தில் ஆரோகநாதன் அண்ட் மகளிர் சிஷ்யை கம்பெனி ஓர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றனர். தியாகப் பிரம்மம் இருந்த காலத்தில் திருவையாறு எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சி.
இதுதான் ஜானகிராமன் கதையின் கரு.
காலையில் சோம்பல் முறித்து எழுந்து காவேரியில் குளித்து விட்டு சோழநாட்டுக்கே உரிய இட்லி,ரவா தோசை,டிகிரி காபி சாப்பிட்டுவிட்டு பேப்பர் பேனா சகிதமாக ஆராய்ச்சிக்குக் கிளம்பினர்.
மாணவிகள் குறிப்பிட்டுள்ள சில வீடுகளுக்குச் சென்று அங்கிருப்பவர்களை பேட்டி காண வேண்டும் – புள்ளி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
மாலதி ஆனந்தலக்ஷ்மிப் பாட்டியை (வயது 102) பேட்டி எடுக்கிறாள்!
“நான் மூணாவது இளையாளா அவருக்கு பத்து வயதிலே வாக்கப் பட்டேன். எனக்கும் அவருக்கும் முப்பத்தாறு வயது வித்தியாசம். அவர் நினைவு தெரிஞ்ச நாளா தியாகராஜ ஸ்வாமியைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் … அவரோட பாட்டையெல்லாம் இவர் பாடுவார்… இன்னிக்கு இவா பாடறதைக் கேட்டா இங்கிலீஷிலே பாடறாப்பலே இருக்கு.
அது சரி! தியாகைய்யர் எப்படி இருப்பாராம் ?
வெடவெடன்னு ன்னு சேப்பா இருப்பாராம்! நான் பார்க்கக் கொடுத்து வைக்கலே!
அவருக்கு என்ன பக்ஷணம் சாப்பாடு எல்லாம் பிடிக்கும்?
இதெல்லாம் எதுக்குடி கேக்கறது இந்த பொண்ணு?
அவர் திருப்பதிக்கு தஞ்சாவூர் வழியாப் போனாரா இல்லை கும்பகோணம் வழியாப் போனாரா?
திருப்பதிக்கு போயிட்டு வந்தார். கொட்டையூர் வழியாப் போனா என்ன கண்டியூர் வழியாப் போனா என்ன?
கிரிஜா ஞானஸ்கந்தனைப் பேட்டி காணுகிறாள்!
"எனது முப்பாட்டனாரின் முப்பாட்டனார் ஐயா தீட்சிதருக்குத் தியாகையரைக் கண்டாலே ஆகவில்லை.கலைகளில் இலக்கியம் தான் சிறந்தது-சங்கீதம் கடைசி வகை. தியாகையர் நாவல் எழுதியிருந்தால் நோபல் பரிசு வாங்கியிருப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம் ”
அலமு வைத்திலிங்க ஆசாரியரை பேட்டி கண்டாள்.
“ எனது முன்னோர்கள் தான் தியாகையருக்கு ஜால்ரா உஞ்சவிருத்திப் பாத்திரம் செய்து தந்தவர்கள்!” இதனால் தான் இவரது வம்சத்தின் உறவினர்கள் தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் செல்வத்தில் புரளுகின்றனராம் "
உமா ஜப்யேசக் கவிராயரைப் பேட்டி கண்டாள்!
என் பெரியன்னையின் முப்பாட்டனார் ஐயாரப்ப கவிராயர். அவர் தியாகையரிடம் தனியன்பு கொண்டவர். அதனால் தான் அவரிடம் " தெலுங்கில் பாடாதீர்! மக்களுக்குப் புரியும் தமிழில் பாடுவீர்!என்று பலமுறை மன்றாடியும் ஐயர் கேட்கவில்லை! “தமிழ் நாட்டு இசைப் புலவர்கள் நும் பாக்களின் பொருளனைத்தையும் சிதைத்துக் கொல்வார்கள் என்றார்.” அது மெய்யாகிவிட்டது!
அம்புஜம் பிரணதார்த்திஹர சர்மாவைப் பேட்டி கண்டாள்!
தியாகையர் வருடா வருடம் சீதா கல்யாணம் செய்வதை இவருடைய முன்னோர் எதிர்த்தார்களாம். ராமன் ஆஃப்டர் ஆல் மநுஷன். அவனைத் தெய்வத்துக்குச் சமானமா வைத்து கல்யாணம் செய்யலாமா?
ரமா எக்நாத் ராவை பேட்டி கண்டாள்
சரபோஜி மன்னரிடம் நரஸ்துதி பண்ண மாட்டேன் என்று தியாகையர் கூறினாராம்! ஒவ்வொரு உயிரிலும் கடவுளைக் காணும் ஐக்கிய பாவம் தியாகையருக்கு இல்லை.
இதே போல அடுத்த மூன்று நாட்களிலும் ஏழு பேரும் மூவேழு மக்களைப் பேட்டி கண்டார்கள். பாடகர்கள் பாடும் பாட்டைக் கூட கேட்காமல் பேட்டி கண்டார்கள் ஆரோகநாதன் அண்ட் கம்பெனி.
அடுத்த பகுள பஞ்சமியில் ஆரோகநாதன் “ஐயரும் ஐயாறும்’ என்ற ஆங்கில நூலைத் தன் நண்பரிடம் காட்டினார்.
‘இந்த மாதிரி ரிசர்ச்சை என் ஆயுசிலேயே பார்த்தது கிடையாதுடா! மண்டூகங்கள் நிறைஞ்ச இந்தத் தேசத்திலா இதை வெளியிடறது?’ என்று சொல்லி அமெரிக்காவிற்கு அதை அனுப்பினார்.
சங்கீத மூவரில் மற்ற இருவரைப் பற்றியும் இதே மாதிரி திறனாய்வு எழுதட்டும். 20000 டாலர் ஸாங்ஷன் செய்கிறோம் என்று பதில் வந்ததாம்.அவற்றையும் எழுதி முடித்து மாணவிகளுக்கு நன்றி சொன்னாராம் ஆரோகநாதன்.
இப்போது கிரிஜா, தியாகையர் பாடியது தமிழ்த் தெலுங்கா தெலுங்குத் தெலுங்கா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறாள்! வெற்றி பெற்றால் கிராண்ட் கென்யான் பல்கலைக் கழக ‘டாக்டர்’ பட்டம் அவளுக்குக் கிடைக்கும்!
சூப்பர் டக்கர் வசனங்கள்!
ஜானகிராமன் ஜானகிராமன் தான்!
அந்தக் காலத்து நேடிவிடியை அப்படியே படம் பிடித்துப் போடும் கலை அவருக்குக் கை வந்தது.
மீனங்காடி – ஆறாம் பகுதி (தொடர் பகுதி)
“ அந்த பெரிய மீன் என்ன ஆகாயத்தில் பறக்கிறதா?” மேரி ஆச்சரியத்துடன் பார்த்தாள். மறுபடியும் இன்னொரு மீன் உயரே பறந்தது. அந்த ‘மீனங்காடி’ ஆள் தான் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தூக்கி ‘ஸ்டைலாக’ எறிய அவை இருபது அடிக்கு மேலே பறந்து போய் விழுகிறது
“இதோ பாருங்கள் ! ஒரு பெரிய இறால் மீன் பம்பாய்க்குப் போகுது’ என்று கத்த மற்ற மீன் கடைத் தொழிலாளிகள் அனைவரும் கோரஸாக ‘போகுது பார், போகுது பார்’ என்று திரும்பிக் கத்தினர். தடுப்புக்கு அந்தப் புறம் இருந்த கடைக்காரன் ஒருத்தன் அந்த மீன்களை லாவகமாக ஒற்றைக் கையால் பிடித்து தலை வணங்கி ‘சல்யூட்’ அடித்து நிற்க, மற்ற மக்கள் எல்லோரும் கை தட்டி சந்தோஷத்தில் சிரித்தனர். அவர்களது அந்த ‘சந்தோஷ அலை மேரிக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளுக்குப் பக்கத்தில் இன்னொரு மீன்காரன் ஒரு சிறிய மீனைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் வாயை இப்படி அப்படி அசைத்து அருகில் இருந்த ஒரு சிறுவன் கிட்டே மீன் பேசுவது போல பேசிக் கொண்டு இருந்தான்.
இன்னொரு வயதான மீன்காரன் ‘கேளுங்க, கேளுங்க ! மீனைப் பத்திக் கேளுங்க’ என்று ‘தேவுடா தேவுடா’ ஸ்டைலில் பாடிக் கொண்டிருந்தான்.
கேஷ் கவுண்டருக்கு மேலே இரண்டு பெரிய கடல் நண்டுகள் நடனமாடிக் கொண்டிருந்தன. டை கட்டிக் கொண்டு நின்ற அந்தக் கும்பல் அவர்கள் வாங்க வந்த மீன்களோடு கடைக்காரர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘பக பக’ என்று சிரிக்கத் தொடங்கினர். மொத்தத்தில் அந்த இடம் ‘ஒரு விளையாட்டு மைதானம்’ போலத் தான் தோன்றியது. மேரி தன் கவலையெல்லாம் மறந்து வாய் விட்டுச் சிரித்து அவற்றை ரசிக்க ஆரம்பித்தாள். !
டீ கப்பைக் கையில் வைத்திருக்கும் அனைவரும் ஆபீசர்கள்.-நல்ல பதவியில் இருப்பவர்கள் போலத் தோன்றுகிறது. இந்த மட்ட மத்தியானத்தில் மீன் வாங்க வந்தார்களா? இல்லை வேடிக்கை பார்க்க வந்தார்களா? ஒன்றும் புரியவில்லை.
அந்தக் கூட்டத்தில் ஒரு மீன் கடைக்காரன் தன்னையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை மேரி வெகு நேரம் உணரவில்லை. அவளுடைய சீரியஸான முகமும் அதில் தெரியும் ஆர்வமும் அந்த மீனங்காடிக்காரனை அவள் பக்கம் வரவழைத்தது.
“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான். நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன்,
(தொடரும்)
பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)
(சென்ற இதழின் தொடர்ச்சி )
அன்புடையா ளருகினிலே யிருக்கின்ற கிளுகிளுப்போ
கயல்விழியாள் கண்பார்வை பட்டதன் சிலுசிலுப்போ
இன்பத்தி னுச்சத்தில் முறுவலோடு விழிமூடி
தூங்குகின்ற பாவனையில் பள்ளிகொண்ட பெருமாளை
அன்போடு காதலும் கருணையு மொருசேர
மையலோடு தையலால் பார்க்குமவ் வருட்பார்வை
இனியவளின் கண்ணசைய வருடுகின்ற தென்றலாய்
அடியேனைத் தழுவட்டும் செல்வங்கள் கொடுக்கட்டும்!
மாலனவன் மார்பினிலே ஒளிர்கின்ற கௌஸ்துபமே
தேவியவ ளருளோடு மின்னுகின்ற கண்கள்முன்
பொலிவில்லா மாலைபோல் மங்கியே தெரிகிறது
இணையில்லை ஒளிர்கின்ற கண்களுக்குப் புரிகிறது
உலகினையே களிப்பூட்டும் நாயகனாம் முகுந்தனையே
கண்வெட்டால் களிப்பூட்டும் திருமகளின் கண்பார்வை
நிலவொத்த தண்மையோடு தென்றலாய் மெதுவாக
அடியார்மேல் பரவட்டும் மங்களம் பொங்கட்டும் !
கார்மேக வண்ணனாம் கமலக் கண்ணனவன்
ஈரமிகு நெஞ்சினிலே எழிலோடு கொலுகொண்ட
பார்க்கவ மகரிஷியின் திருமகளாம் நங்கையவள்
மின்னல்போல் ஒளிர்கின்ற முழுமுதல் ஜோதியவள்
ஈரெழு வுலகங்கள் வளமோ டியங்கிடவே
இராப்பகலா யருள்கின்ற கருணையின் வடிவுமவள்
தரணிவாழ் மாந்தர்கள் வழிபடும் தாயுமவள்
அருட்பார்வை வீசட்டும் மங்களம் பொங்கட்டும்!
மாலனவன் மதுபோன்ற அரக்கற்குக் காலனவன்
மங்கள இசையோங்கு மில்லத்து வாஸனவன்
நல்லோர்க்கு நேசனவன் துஷ்டருக்கு துஷ்டனவன்
அடியார்க்கு அடிமையவன் அன்பிற்கு தாஸனவன்
புலங்களையே ஆட்கொண்ட யோகியவ னிதயத்தை
சலனமுறச் செய்வித்த ஜில்லென்ற அருட்பார்வை
அலைமகளாம் திருமகளின் ஈர்க்கின்ற வருட்பார்வை
எம்மீது படட்டும் மங்களம் பொங்கட்டும்
(இன்னும் பொன்மகள் வருவாள்.. பொருள்கோடி தருவாள்!)
மே 2014
பூ : ஒன்று ———————- இதழ் : ஆறு
இந்தியாவில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கும் நாள் மே 16.
ஆம் அன்று தான் நமது தலைவிதி நிர்ணயிக்கப் படப் போகிறது.
மோடி,ராகுல்,சோனியா,மம்தா,ஜெயலலிதா,கருணாநிதி, மாயாவதி, முலாயம் , நிதிஷ் ,லாலு ,கேஜ்ரிவால் ,சரத் பவார்,மற்றும் பலர் இந்தியாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் யாரை எப்படி எவ்வாறு செக் மேட் செய்யப்போகிறார்கள் என்பது தான் நாம் ஆவலோடு காண இருக்கும் விளையாட்டின் முடிவு. அது வரும் வரை நாம் விரல்களில் சிலுவையிட்டுக் காத்திருப்போம்.
—————————————————————-
சென்னையிலும் தமிழகத்தின் மற்ற இடங்களிலும் கத்திரி வெயில் தொடங்கியதும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நான்கைந்து நாட்களாக மழை பெய்கிறது. இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
—————————————————————–
ஜூன் 8 முதல் 14 வரை பொன்னியின் செல்வன் நாடகத்தை மியூஸிக் அகாடமியில் 15 வருடங்களுக்குப் பிறகு அரங்கேற்றப் போகிறார்கள். நாடகத்தில் சிறப்பு அம்சங்களை அடுத்த குவிகம் இதழில் எதிர் பார்க்கலாம்.
சூரியாய நமஹ! சுந்தராய நமஹ!
வீரியாய நமஹ! விந்தராய நமஹ!
காரியாய நமஹ! ஸ்கந்தராய நமஹ!
மோரியாய நமஹ! மம மந்த்தராய நமஹ!
சுட்டும் சுடர் வெயில் அது அக்னியோ?
வெட்டும் கதிர் வெயில் அது கத்திரியோ?
( 25 பக்கங்கள் கொண்ட மே மாத இதழ் இத்துடன் முடிவடைகிறது.
இதற்கு முன்னாள் வெளியான இதழ்களையும் – தொடர்களின் முந்தைய அத்தியாயங்களையும் கீழே படித்து ரசிக்கலாம்)