நோ பேங்க் – சந்திரமோகன்

இது எஸ் பேங்க். இதை பற்றி அனைவருக்கும் நல்லாவே தெரியும். 
ஆனால்  நோ பாங்க்?  படியுங்கள்!! 
Account holders queue up outside Yes Bank to withdraw money in Mumbai on Saturday, March 7, 2020. (Photo: PTI)
‘நோ பேங்’ என்னவோ தனியார் வங்கிதான், ஆனால் கிண்டி ஏரியாவில் மிகவும் பிரபலம்.
அரசு வங்கி எல்லாம் காற்று வாங்கிக் கொண்டு இருக்கையில் நோ பேங்கில் வேலை செய்பவர்களுக்கு ஏ சி யிலும் வியர்த்து வடியும்.அவ்வளவு வேலை.
ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள கூட்டத்தை விட வங்கிக்குள் சற்று கூட்டம் அதிகம் காணப்படும்.
அதுவும் ஐம்பது ரூபாயை கூட ஆன் லைனில் மாற்றும் இந்த நாட்களிலும்.
அதற்கெல்லாம் மொத்த காரணம் அந்த கிளையின் தலைமை மேனேஜர் ராகவனே.
ராகவனிடம் கேட்டால் A.R. ரஹ்மானின் ரசிகரான அவர் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்பார். 
அவ்வளவு தன்னடக்கம்.
சென்னையை சுற்றிலும் உள்ள பெரும்பாலான தொழிற் சாலைகளில் ‘ எங்கள் வங்கி நோ பேங்’ என்ற போர்டு காணப்படுவதற்கும் அவரே காரணம்.
அனைத்திலும் அவரது உழைப்பும், வாடிக்கையாளர்களிடம் வைத்து இருந்த உறவும் பளிச்சிடும்.
ராகவன் வங்கிக்கு வெளியே பூனை என்றால் வங்கி உள்ளே புலி.
அக்கவுண்டன்ட் ராமானுஜம் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு பின் பவ்யமான நமஷ்காரம் செய்வது  நம் ராகவனுக்கே. அவ்வளவு பயம்
கேஷியர் சங்கரோ, ராகவனின்  கேபினை தாண்டும் பொழுது குனிந்துதான் கடப்பார். கன்னத்தில் போட்டுக் கொள்வது மட்டும் இல்லை. அவ்வளவு மரியாதை.
லோன் ஆபிஸர் சுந்தரத்திடம் மட்டும்தான் தனக்கு சிரிக்கவும் தெரியும் என ராகவன் காட்டிக் கொள்வார்.
நடக்கப் போகும் சம்பவங்களில் நாம் அதிகம் சந்திக்கப் போவது ராகவன், சுந்தரம் இருவர் மட்டுமே. மற்றவர்கள் பற்றி நாம் அதிகம் கவலைப் பட வேண்டாம்.
இனி flashback
நான்கு மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்.  நீங்கள்தான் சுந்தரம் செய்தது சரியா, தவறா என சொல்ல வேண்டும்.
சுந்தரம் சம்பளம் வாங்கியவுடன் செய்யும் முதல் காரியம் , ஊரில் இருக்கும் பெற்றோர்கள் சிலவிற்கு பணம் அனுப்புவதே. கூடவே சிறுக சிறுக சேர்த்து தன் ஒரே தங்கையின் மணத்தையும் முடிவு செய்து விட்டான்.
திருமணத்திற்கு ஐந்து தினங்களே பாக்கி. தலைமை அலுவலகத்தில் இருந்து அவன் விண்ணப்பித்து இருந்த ஒரு லட்சம் ரூபாய் லோன் இன்னும் சாங்ஷன் ஆகி வர வில்லை.
இரண்டு தினங்களில் ஊருக்கு சென்று மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். பணம் இல்லாமல் ஊருக்கும் போக முடியாது.
வேலை ஓடாது குளம்பிப் போய் அமர்ந்து இருக்கையில் ராகவனிடம் இருந்து அழைப்பு.
புதிய லோன் புரபோஷல் ஒன்று, இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் முடிக்க உத்திரவுடன் சுந்தரம் கையில் கொடுக்கப் பட்டது.
ஏதாவது சந்தேகம் என்றால் பயனிர் லிமிடெட் என்ற அந்த கம்பேனியின் ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ள சொல்லி பதில் பேச விடாமல் போனை கையில் எடுத்துக் கொண்டார் ராகவன்.
கவனக் குறைவுடன் பார்த்தாலுமே ‘பயனிர்’ கம்பேனி கொடுத்த கணக்கில்  சுந்தரம் ஒரு பெரிய தவறை கண்டு பிடித்தான்.
அத்தவறை திருத்தினால் அவர்கள் கேட்பதில் பாதி கூட லோனாக தர முடியாது.
கடிதத்தில் விளக்கம் கேட்டு விட்டு லீவ் முடிந்து  வந்து பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி ராகவன் கேபினுக்குள் நுழைந்தான்.
‘“ சார்! கம்பேனி கொடுத்துள்ள கணக்கில்  சில தவறுகள் உள்ளன. விளக்கம் கேட்டு கடிதம் எழுதுகிறேன். பதில் வரட்டும் சார். அதற்குள் தங்கை திருமணத்திற்கு ஒரு வாரம் லீவில் சென்று வருகிறேன்” என்றான் சுந்தரம்.
அதற்கு ராகவன், “ என்ன இது சுந்தரம்? நாளை பரபோசல் H O போக வேண்டும். நான் மேலே நாளை அனுப்புவதாக கூறிவிட்டேன். இன்று எவ்வளவு நேரம ஆனாலும் முடித்து விட்டு நாளை ஊருக்கு போங்கள். தேவை என்றால் பயனிர் ஆடிட்டர் ஶ்ரீதரிடம் பேசி பதில் வாங்குங்கள்” என சற்று கடுமையாகவே கூறி விட்டார்.
வேறு வழி இல்லை.  ஆடிட்டர் ஶ்ரீதர் நேரில் வந்து explain செய்வதாக கூறி , அவர் வரும் பொழுது இரவு மணி எட்டு. வங்கியில் சுந்தரம் மட்டும் புரபோசலில் தீவிரமாக இருந்தான்.
ஆடிட்டர் ஶ்ரீதர் நேரத்தை வீனாக்காமல் ” சார்! அந்த தவறு தெரிந்து செய்ததுதான்.
விளக்கமே கொடுக்க முடியாது.  மேலே கூட தெரியும். நீங்களும் பார்த்த மாதிரி காட்டிக் கொள்ள வேண்டாம்” என கூறியதோடு. அல்லாமல் அவன் கையில் ஒரு பொட்டலத்தை தினித்தார்.
பிரித்து பார்த்த சுந்தரம் பதறி விட்டான். சுளையாக ஒரு லட்சம்.
துவக்கத்தில் கோபம், சந்தர்ப்ப சூழ் நிலையால் யோசனையாக மாறி, முடிவில் பொட்டலம் அவன் பையில் சென்றது.
சமயத்தில் கடவுளாக பார்த்து அனுப்பியது என மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.
அடுத்த நாள் காலை வங்கி வந்து ராகவனிடம் ‘very good’ ஒன்று வாங்கி தங்கையின் திருமணத்திற்கு சென்று வந்தான்.
நேற்று மாலை வரை,  உயிரையே போக்கும் அளவிற்கு பிரச்சனை பூதாகரமாகும் என நினைத்தே பார்க்க வில்லை சுந்தரம்.
(அப்படி என்னவாயிற்று அடுத்து பார்ப்போம்)
அன்று வங்கி வழக்கத்தை விட சற்று பரபரப்பாக இருந்தது.காரணம் ராகவன் அறையில் அமர்ந்து இருந்த Special Audit Team. அவர்கள் H O லிருந்நு வந்து இருந்தார்கள்.
ஊழியர்கள் எல்லோரும் அது வழக்கமாக நடக்கும் ஆடிட் இல்லை என புரிந்து கொண்டார்கள்.  ஏனெனில் அவர்களுடன் vigilance chief ம் உடன் இருந்தார்.
சுந்தரம், ராகவனுடைய அறைக்கு அழைக்கப் பட்டான்.
“ சுந்தரம்! இவர்கள் ஸ்பெஷல் ஆடிட் டீம். இந்த லிஸ்டில் உள்ள file அனைத்தும் கொடுங்கள்” என்று ராகவன் கூறினார்.
ஐந்தே பெயர்கள் இருந்த அந்த லிஸ்டில் கடைசியாக இருந்த பெயர் ‘ பயனிர் லிமிடெட்’.  அதை பார்த்த உடன் சுந்தரத்திற்கு கால்கள் நடுங்குவது போலவும் , தலை சுற்றுவது போலவும் தோன்றியது.
நமக்குதான் ஏனென்று தெரியுமே.
சற்று தடுமாறிப்போன சுந்தரம், கேட்ட பைல்களை அவர்களிடம் சேர்ப்பித்தான்.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நரகம் எப்படி இருக்கும் என்பதை செல்லாமலே உணர்ந்தான் சுந்தரம்.
ஐந்து கம்பேனிகளில் இருந்தும் சம்பந்தப் பட்டவர்கள் வரவழைக்கப் பட்டனர். பயனிரிலிருந்து ஶ்ரீதரன் வந்து இருந்தார். சுந்தரம் அவரை பரிதாபமாக பார்ப்பதை தவிர  வேறு ஒன்றும் செய்ய  முடிய வில்லை.
ராகவன்தான் ஆடிட் டீமை வரவழைத்திருப்பார் என சுந்தரம் நினைத்தான். ராகவன் ஒன்றும் அறியாதவர் போல முகத்தை வைத்துக் கொண்டு சாதாரணமாக இருந்தார்.
மூன்றாவது நாள் ஆடிட்டர்கள் கிண்டி இந்தியன் வங்கி செல்கிறார்கள் என கேட்ட பொழுது சுந்தரத்திற்கு கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய் target அவன்தான் என தெரிந்து கொண்டான்.
காரணம், தங்கை திருமணம் முடிந்து வந்த பின் லோன் சாங்ஷன் ஆயிருந்தது. முதலில் பணத்தை என்ன செய்வது என தெரியாமல் தவித்தவன், பின்னர் அருகில் இருந்த கிண்டி இந்தியன் வங்கியில் போட்டு வைத்தான்.
அவன் பைத்தியம் பிடித்தவன் போல் ஆனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வேலை மட்டும் போனால் பரவாயில்லை. கைது ஆகி பேப்பரில் வந்து ஜெயில் அது, இது, என அவனால் கற்பனை கூட பண்ண முடிய வில்லை.
தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே வழி என முடிவு செய்தான். ஆனால் அடுத்த நிமிடம் ஊரில் வயதான பெற்றோர் நினைவிற்கு வந்தார்கள். செய்தி கேட்டால் அவர்களும் உயிரை விட்டு விடுவார்களே என்ற பயம் வந்தது.
இறுதியாக ஒரு முடிவு எடுத்து தன்னை ராகவன் ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நம்பினான்.
நேராக இந்தியன் வங்கி சென்று தன் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.
அன்று மாலை ஆடிட் டீம் சென்று விட்டது. பெரும்பாலான ஊழியர்களும் சென்று விட்டனர்.
ஒரு லட்சம் ரூபாயை ராகவனிடம் ஒப்படைத்து கண்களில் நீர் வர நடந்த உண்மை அனைத்தையும் கூறினான் சுந்தரம்.
ராகவன் ஒன்றுமே கூறாமல் பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியது சுந்தரத்திற்கு ஆச்சரியமாகவும், சற்று கவலையாகவும் இருந்தது.
இருந்தாலும் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான்.
மறு நாள் காலை ஆடிட் டீம் வர வில்லை.
சுந்தரத்திற்கு சற்று நிம்மதி.
ஆனால் Vigilance chief மட்டும்  இருந்தார்.
சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் வண்டி வந்து நின்றதை சுந்தரம் கவனித்தான். அதில் மப்டியில் வந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் ராகவன் அறைக்கு சென்றார்கள்.
சுந்தரத்திற்கு சர்வ நாடியும் அடங்கி விட்டது. ராகவனிடம் இருந்து இவ்வளவு பெரிய துரோகத்தை எதிர் பார்க்க வில்லை. அவருக்காக இரவும் பகலும் எவ்வளவு உழைத்து இருப்பான். நன்றி கெட்ட மனிதன் என நினைக்கும் பொழுது, கண்கள் களங்கியது.  பெற்றோர் கண்முன் வந்து நின்றனர்.
எல்லாம் முடிந்து விட்டது. ராகவனிடமிருந்து அழைப்புக்காக காத்திருந்தான் சுந்தரம்.
ஆனால் இது என்ன! ராகவனும், Vigilance Chief ம் போலீஸ் அதிகாரிகளுடன் செல்கிறார்கள்.
அவர்கள் சென்ற பின் ‘ ராகவன் லோன் கொடுத்ததில் முறை கேடுகள் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டாராம். இந்தியன் வங்கியில் அவரது லாக்கரை சீல் வைத்துள்ளார்களாம்.
அனைத்தையும் அவரே ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் கூட கொடுத்து விட்டாராம். அவரை கைது செய்துள்ளார்களாம்’ என ராகவன் கேபினை பார்த்துக்கொண்டே பயந்த குரலில் பக்கத்தில் இருந்தவர் கிசு கிசுத்தது சுந்தரம் காதுகளில் விழுந்தது.

 அவள் வந்தாள்! – தில்லைவேந்தன்

அவள் வந்தாள்!     
Image result for பசுமைப் பெண்    
பரவி  நிலவு பால்பொழியப்
     பனியும் தண்மைத் தேன்பொழிய,
மரமும் மலையும் மலைத்திருக்க,
     மண்ணும், விண்ணும் களைத்திருக்க,
விரவிக் காற்றில் மணம்வீசி
     வெள்ளைப் பூக்கள் விரிகின்ற
இரவில் அவளும் நடந்துவந்தாள்
     எல்லா அழகும்  கடந்துவந்தாள்.
குறிஞ்சி, முல்லை, வயல்மருதம்,
     கொஞ்சும் அலையின் நெய்தலென
அறிந்த நான்கு நிலத்திணைகள்
     ஆர்ந்த வடிவாய் அவள்வந்தாள்.
இறைஞ்சும் எழிலின் இறைவியென
     இயைந்த ஒயிலாய் அவள்வந்தாள்.
முறிந்த நெஞ்சப் புண்ணாற்றும்
     மூலி கையாய்  அவள்வந்தாள்!
                          

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

 

16164603

ராஜசிம்மன்  

 

‘புத்தன் வந்த திசையிலே போர்’- என்றான் ஒரு கவிஞன். இந்திய சரித்திரத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் – போர் தனது வாளால் எழுதிய ரத்தக்கறை! சென்ற இதழில் சாளுக்கிய விக்ரமாதித்யனும் பல்லவ பரமேஸ்வரனும் அடித்துக்கொண்டதைப் பார்த்தோம். கி பி 680 ல் இந்த இருவரும் ஒரே வருடத்தில் காலமானர். அதற்குப்  பிறகு நடந்ததைப் பார்ப்போம்.  

சாளுக்கிய கதை:

விக்ரமாதித்யன் மகன் வினயாதித்யன் கி பி 681 முதல் 696 வரை சாளுக்கிய அரசை ஆண்டான். வினயாதித்யன் மகன் விஜயாதித்யன். வினயாதித்யன் வட இந்தியாவில் ஒரு படையெடுத்து வென்றான். அந்தப் போரில் இளவரசன் விஜயாதித்யன் சாகசங்கள் செய்திருந்ததான். விஜயாதித்யன் கி பி 696 முதல் 733 வரை அரசாண்டான்-  37 வருடம்! அவன் காலம் அமைதிக் காலம். அதனால் நாட்டில் செல்வம் கொழித்தது. ஆலயங்கள் பல எழுப்பினான்.

பல்லவர் கதை:

பரமேஸ்வரன் கி பி 680ல் காலமானான். அவன் மகன் யுவராஜா ராஜசிம்மன் மன்னனானான். இவனும் கி பி 720 வரை அரசை ஆண்டான். நாற்பது வருடம்!

வினயாதித்யன், விஜயாதித்யன் அதே நேரம் சாளுக்கிய நாட்டை ஆண்டனர். இவன்  காலமும் பொதுவாக அமைதிக் காலம். ஆலயங்கள் பல எழுப்பினான். அழகிய கைலாசநாதர் ஆலயம் எழுப்பினான். மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் அமைத்தான். இலக்கியம் வளர்த்தான். மகா கவி தண்டி அவன் அரசவையை அலங்கரித்தார். அவர் ராஜசிம்மனின் ஆசிரியர். பாண்டிய நாடும் அமைதியாக இருந்தது. தென்னிந்தியா ஒரு அமைதிப்பூங்கா ஆயிற்று.

 

இப்படி அமைதியாயிருந்தால் ‘சரித்திரம் பேசுகிறது’ எழுதுவதற்கு சமாச்சாரம் எங்கே?

‘ஒய் திஸ் கொலவேரி’ – என்று தானே கேட்கிறீர்கள்?

நாம் என்ன செய்வோம்? நமக்கு வேண்டியது சுவாரஸ்யமான கதை.

ராஜசிம்மனும் , விஜயாதித்யனும் பொட்டு வைத்துக்கொண்டு பொங்கல் சாப்பிட்டார்கள் என்று கதை சொன்னால் நீங்கள் அடிக்கவருவீர்கள்!!

அந்த அமைதிக்கு முன் ஒரு சிறு கதை விரிகிறது.. (ஆமாம் போர் தான்!):

வினயாதித்யன், ராஜசிம்மன் இருவரும் ஒரே நேரம் அரசனாகினரல்லவா?

வினயாதித்யன் தந்தை விக்ரமாதித்யன் – தன் தந்தை புலிகேசி அழிக்கப்பட்ட அவமானமும், பரமேஸ்வரனிடம் தான் பெற்ற சில தோல்விகளும் -மனதை அரித்திருந்தது. சாகும் தருணம்: “வினயாதித்யா .. இந்தப் பல்லவனைப் பழி வாங்கினால் தான் என் கட்டை வேகும்” – என்றான்.

சாளுக்கியத்துக்கும் பல்லவத்துக்கும் இடையே இருந்தது கங்க நாடு. வினயாதித்யன் முதலில் கங்கபாடியைத் தாக்கினான். கங்கன் முதலாம் சிவமாறனை தோற்கடித்து பிறகு ராஜசிம்மனை தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. போரில் ஒரு முடிவும் ஏற்படாமல் முடிந்தது. இரு தரப்பினரும் தங்கள் தங்கள் தலைநகருக்கு திரும்பினார்கள்.

பல்லவ நாட்டில் மழை பெய்யவில்லை. கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. கஜானா – மூலபண்டாரம் – வற்றியது. பஞ்சத்தால் காஞ்சிபுரம் பொலிவிழந்தது. கவி தண்டி , மற்றும் அரசவை அறிஞர்களும் காஞ்சி விட்டு நாடெங்கும் திரிந்தனர். ராஜசிம்மனும் சில காலம் காஞ்சி நகர் துறந்தான். மூன்று வருடம் பஞ்சம். ராஜசிம்மனும் காஞ்சி வந்தான். ஒரு நாள் புத்த துறவி ஒருவர் காஞ்சிக்கு வந்தார். அவரது பெயர் வச்சிரபோதி.

ராஜசிம்மன்: “துறவியே! மழை வருமாறு தாங்கள் இறைவனை வேண்டுங்கள். மற்ற சமயக் குறவர்களும் தங்கள் இறைவனை வேண்டுங்கள்”. வேண்டுதல் பலனளித்தது.

வானம் கண்ணீர் விட்டது. பல்லவ நாடு மகிழ்ந்தது. ஒரு வருடத்தில் நாடு செழிப்பானது. ராஜசிம்மன் உடனே கைலாசநாதர் ஆலயம் கட்ட ஆரம்பித்தான். சில வருடம் கழிந்தது. கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டு முடிந்தது.

Image result for கைலாசநாதர் கோவில்

ராஜசிம்மன் அரசகுருமார்களை சந்தித்து கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தான். பூசலார் என்ற நாயன்மார் – திருநின்றவூரில் -தானும் சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது முடியாமல் போகவே – தனது மனத்திலேயே ஆலயம் கட்டி – அதற்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். ராஜசிம்மன் குறித்த அதே நாள்! ராஜசிம்மன் கனவில் சிவன் தோன்றி “பூசலார் கட்டிய கோவிலில் அன்று எழுந்தருளுவோம். உனது கும்பாபிஷேகம் செய்ய வேறு நாள் பார்த்துக்கொள்” என்று கூறி மறைந்தார்.   

ராஜசிம்மன் திருநின்றவூர் சென்று பூசலாரை சந்தித்து “ஐயா! உங்கள் கோவில் எங்குள்ளது? அதைக் காட்டுங்கள்” -என்றார். பூசலார் திகைத்தார். தமது வரலாற்றை மன்னனிடம் கூறினார். ராஜசிம்மன் தனது கனவைப் பற்றிப் பூசலாரிடம் சொன்னார்.

அகக்கோவில் கட்டிய அன்பருக்கு வணக்கம் செலுத்தி மீண்டான்! (நன்றி: பெரியபுராணம் எழுதிய சேக்கிழார்).

சில வருடங்களுக்கு அமைதி நிலவியது. ஆனால் நீறு பூத்த நெருப்புப்போல பகை (யுத்தங்கள் தான் வேறென்ன) அடுத்த தலைமுறையில் தொடரும். ஆவலுடன் காத்திருக்கும் வாசக நண்பர்களே.. விரைவில் சந்திப்போம்.

  

 

 

 

        

அம்மா கை உணவு (25) – சதுர்புஜன்

Image result for துவையல்

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
  12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
  13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
  14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
  15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
  16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
  17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
  18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
  19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
  20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
  21. அவியல் அகவல் நவம்பர் 2019
  22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
  23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
  24. சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
  25. துவையல் பெருமை !

 

துவையல் எனில் எனக்கென்றும் கொண்டாட்டம்தான் –

தஞ்சாவூர்க்காரன் நல்ல சுவையறிந்தவனாம் !

கரணம் தப்பினாலே மரணம்தானே !

நல்ல துவையல் செய்வதுவும் வித்தை தானே !

 

ஏனோ தானோ என்றெல்லாம் செய்தால் வராது –

போடுவதை போட்டால்தான் துவையல் சுவைக்கும் !

அளவு விகிதம் அத்தனையும் அத்துப்படி ஆனா –

துவையல் சுவை நாவினிலே நற்றமிழாகும் !

 

உப்பு மிளகாய் புளியை வைத்து எவரும் அரைக்கலாம் –

அத்தனையும் ஒற்றுமையாய் சேர்ந்து வரணுமே !

துவையல் கலையை கற்றுவிட்டால் சமையல் ராணிதான் –

மற்றதெலாம் தானே வரும் எளிதில் கூடுமே !

 

தேங்காய்த் துவையல் துவையல்களின் தலைவனாகுமே !

அதிலுள்ள தங்க ருசி தரணியில் இல்லை !

பருப்புத் துவையல் பந்து பந்தாய் உண்போம் நாமே !

மிளகு ரசம் கூட வேண்டும் முடிவில்லாமலே !

 

வெங்காயத் துவையல் வாசம் – வாயிலே ஊறும் !

விழுங்கத் தோணும் சுடச் சுட சாதம் சேரும் !

கத்திரியை நன்கு சுட்டால் நாசியைத் தாக்கும் !

துவையலரைத்து வெட்டும் போது இன்னும் கேட்கும் !

 

செரிமானம் சரியாக இஞ்சித் துவையல் !

வாயில் ருசி மீண்டும் வர புதினாத் துவையல் !

சாத்வீகம் கூடும்போது கொத்தமல்லியாம் –

எந்தக் காயின் தோலினையும் துவையலாக்கலாம் !

 

எந்த ஊரு போனாலும் இதுபோல் இல்லை !

அன்னை செய்த துவையலைப் போல் எதுவும் இல்லை !

எதனைப் போட்டு அரைத்தாலும் இதன் சுவை வருமா ?

அன்னை காட்டும் அன்பைப் போல் எதுவும் வருமா ?

 

 

என்ன பிடிக்கும் ? வாட்ஸ் அப்பில் வந்தது

 மனதைத் தொடும் கதை. 

வாட்ஸ் அப்பில் வந்தது

எழுதியது யார் என்று தெரியவில்லை 

யாராயிருந்தாலும் அவர் நம் பாராட்டுக்குறியவர். 

 

Image result for சிறுகதை

என்ன பிடிக்கும் ?

 

“அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?” ராதுவின் குரலில் பதட்டம்.

” அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு. இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க”.

” இப்போ அப்பா எப்படி இருக்கார்?”

“நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்”.

” அண்ணா, நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். “

” சரிடாம்மா . நான் அவன்கிட்ட பேசறேன்.”

” அம்மாவுக்குத் தெரியுமா?”

” தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா”.

” அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்”.

” சரி, நீ டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. நான் காரை எடுத்துண்டு ஸ்டேஷனுக்கு வரேன்”.

சாப்பிடும்போது அம்மாவிடமும் அப்பாவிடமும் ராதுவும் ரகுவும் வருவதைப் பற்றி சொன்னான் ரவி. அவ்வளவுதான், அம்மாவுக்கு இரண்டு இறக்கை முளைத்த மாதிரி ஆகி விட்டது. அப்பாவின் மலர்ந்த முகம்தான் அவருடைய சந்தோஷத்தின் அறிகுறி.

” எனக்கே ஒரு வாரமா அவா ரெண்டு பேரையும் குழந்தைகள் எல்லாரையும் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. நல்லதாய் போச்சு. கொஞ்சம் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீ சித்த போய் மெஷின்ல அரைச்சுண்டு வந்துடு. குழந்தைகளுக்கு கொஞ்சம் பட்ஷணம், அப்புறம் கொஞ்சம் கஞ்சி மாவு, சாம்பார் பொடி, புளிக்காய்ச்சல், சேவை மாவு. ரகு பொண்டாட்டிக்கு என் கை முறுக்கு ரொம்ப பிடிக்கும் …”

” அம்மா,அம்மா… நிறுத்து கொஞ்சம் மூச்சு விடு..எல்லாம் பண்ணலாம். எங்க எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு சொல்றியே, அப்பாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் சொல்லு”.

உங்கப்பாக்கு நான் என்ன பண்ணி குடுத்தாலும் பிடிக்கும்தான்”. கீற்றாய் மின்னி மறைந்த நாணம் கலந்த பெருமை அவள் வைரத்தோடை மங்கச் செய்தது.

” சரி, அப்பாக்கு பிடிச்சதா ரெண்டு ஐட்டம் சொல்லு பார்ப்போம்.”

” நான் தினமும் அவர் இலைல எஸ்ட்ராவா என்ன போடறேன்னு பார்த்து தெரிஞ்சுக்கோடா”. அம்மா சிரித்தபடி எழுந்து சென்றாள்.

ரவிக்கு ஒரு கணம் அம்மாவை நினைத்து கவலையாக இருந்தது. எப்படி தாங்குவாள்?

ராதுவும் ரகுவும் வந்தவுடன் வீடு களை கட்டி விட்டது. அம்மா சமையலறையோடு ஐக்கியம் ஆகி விட்டாள். அப்பாவை சாக்கு வைத்து எல்லோருக்கும் பிடித்தது எல்லாம் அம்மா செய்து தள்ளிக்கொண்டிருந்தாள். அப்பா எல்லோருடனும் சிரித்துப் பேசி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு ஆசையாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது ஷர்ட்டும் புடவையும் வாங்கினார்கள். வீடு வெகு நாட்கள் கழித்து கூச்சலும் கேலியும் விளையாட்டும் அமர்க்களமுமாய் ஆரவாரப்பட்டது. அப்பாவின் உடல்நிலையைப் பற்றிய கவலை கூட சற்று மறந்து விட்டது. சனிக்கிழமை அன்று வெளியில் போவதாகத் திட்டம் போட்டார்கள்.

“எனக்கு எல்லாருடனும் பீச் போகணும்னு ஆசை. அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாம். அம்மாவுக்கு ஒரு வேளை ரெஸ்ட்டா இருக்கட்டும்.” அப்பா சொன்னார்.

அன்றைய பொழுது மிக இனிமையாக கழிந்தது. மகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் டிஜிட்டல் உதவியுடன் அமரத்துவம் பெற்றன. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள். ” அப்பா, என்ன சாப்பிடறேள்?”
அப்பாவுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தார்கள்.

” அம்மா, உனக்கு என்ன வேணும்?”
” எனக்கு சாம்பார் இட்லி வேண்டாம்,காரமா இருக்கு.” ஒரு வாண்டு கத்தியது.
” இதே வேலை..எதையாவது ஆர்டர் பண்ண வேண்டியது, ஒரு வாய் சாப்பிட்டுட்டு வேண்டாங்க வேண்டியது. ” ராது குழந்தையிடம் சிடுசிடுத்தாள்.
” குழந்தையை வையாதே. நான் அதை எடுத்துக்கறேன். அவனுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கொடேன்” அம்மா .
” உனக்கு வேணும்ங்கிறதை சொல்லும்மா. இவனை விடு”.
” பரவாயில்லை, எனக்கு இட்லி போதும், அவன் கேட்கிறதை ஆர்டர் பண்ணு “.
குழந்தைகள் மிச்சம் மீதி வைத்ததை அம்மாவும் ராதுவும் பகிர்ந்து கொள்ள ஒரு வழியாக டின்னர் முடிந்தது.

திரும்ப வரும்போது அப்பா மிக நெகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது.
இரவு தூங்குமுன் அம்மாவிடம் சொன்னார்.
” ரொம்ப நாள் கழிச்சு குழந்தைகள் எல்லோரோடும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறதுகள். எத்தனை பேருக்கு இது வாய்க்கும்?”
” நீங்க சொல்றது சரிதான்”. அம்மா ஆமோதித்தாள்.
” ஆனா எனக்கு ஒரு சந்தேகம். எப்பவும் அப்பா, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற பசங்க இப்ப என்ன ஒரு ரெஸ்ட்ரிக்க்ஷனும் இல்லாம ஓவர் உபசாரம் பண்றதுகளேன்னுதான்.”
” ஒரு ரெண்டு நாள் எல்லாரும் சேர்ந்து இருக்கறதுனாலதான் இதெல்லாம். அப்புறம் நானே உங்க ரெகுலர் டயட்டுக்கு மாத்திடுவேன்”. அம்மா சிரித்தாள்.
“அதானே பார்த்தேன், சரி , தூங்கலாம். டயர்டா இருக்கு, நாளை காலம்பற மெல்ல எழுந்துக்கோ. லீவு நாள்தானே”.
” பார்க்கலாம். அதுவாவே சீக்கிரம் எப்பவும் போல முழிப்பு வந்துடும்.”
ஆனால் மறுநாள் காலை அம்மாவுக்கு சீக்கிரம் முழிப்பு வரவில்லை. எல்லோரும் எழுப்பியும் அவள் முழித்துக் கொள்ளவே இல்லை.
வீடு உறைந்து போனது. யாருக்கும் அம்மாவின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. அப்பா அப்பான்னு அம்மாவை கவனிக்காம விட்டிட்டோமோ, ஒரு நாள் கூட ஒரு வலின்னு கூட சொன்னது இல்லையே என்று புலம்பி மருகினார்கள். அதிர்ச்சியிலும்,துக்கத்திலும் பத்து நாட்கள் போனது தெரியவில்லை.
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் சமையல்ல சேர்த்துடலாம்”.சமையல் மாமி ராதுவிடம் கேட்டார்.
“அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?…ரகு அண்ணா நீ சொல்லேன், அம்மாவுக்கு என்ன பிடிக்கும்? நான் இங்கே வரும்போதெல்லாம் அம்மா எனக்கு பிடிச்சதை செய்வா. அவளுக்கு என்ன பிடிக்கும்னு இப்போ ஒன்னும் தோணலியே..”
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ? ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்வாளே தவிர, அவளுக்குப் பிடிச்சதை கவனிக்கலையே, ரவி, நீ சொல்லு, அம்மாக்கு என்னல்லாம் பிடிக்கும் ?”
” ம்ம்..எப்பவும் எல்லாருக்கும் போட்டுட்டு அம்மா தனியாத்தான் சாப்பிடுவா..எனக்கு இது பிடிக்கும்னு எதுவும் அவ பண்ணினதா தெரியலையே..கடவுளே, என்ன இது..அம்மாக்கு என்ன பிடிக்கும் …”
” அப்பா, அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?”
” அம்மாவுக்கு… அம்மாவுக்கு என்ன பிடிக்கும்”?
*

 

குவிகம் பொக்கிஷம் கர்வத்தின் விலை – உருதுக்கதை -சிராஜ் அன்வர்

Image result for சிப்பியும் காகமும்Image result for சிப்பியும் காகமும்

ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும். அப்படிப் பட்ட சிப்பிப் புழு ஒன்றின் கதை தான் இது.

இந்தப் புழு தன்னிடம் தானே பெரும் மகிழ்வு கொண்டிருந்தது. உலகத்திலேயே தான் தான் அதிமுக்கியமான ஜீவன் என அது நம்பியது. உண்மைதான், பட்டுப் புழுவும் பயனுள்ளதே, ஆனால் பட்டு, முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவதில்லை. எனவே தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது தகும் என்று சிப்பிப் புழு கருதியது.

ஒரு நாள், கடலில் பெரும்புயல் வீசியது. அலைகள் உயரமாய், வீசிக் கொண்டு வெறியோடிருந்தன. இயற்கையே பயங்கரமாக தோன்றியது. அதனால் நமது சிப்பிப் புழு மென்மையான தன் கூட்டை மூடிக்கொண்டு, கடலின் கரையில் உறுதியாய்க் கிடந்தது. முயன்று, பாதுகாப்புக்காகக் கரைக்குப்போவது தன் தகுதிக்குக் கீழானது என்று அது எண்ணியது. அலைகள் வலிதாக இருந்ததால், அதன் தீர்மானத்துக்கு மாறாக, புழுவும் அதன் சிப்பியும் வாரி எடுக்கப்பட்டு கரை மீது எறியப்பட்டன. திறந்த கடற்கரையில் தான் இருப்பதைக் கண்ட புழு, எச்சரிக்கையாகத் தன் சிப்பி மூடியை உயர்த்தியது இடுக்கு வழியே உலகைப் பார்த்தது. அப்படி அது பார்க்கும் போதே, மற்றொரு பெரிய அலை அதைத் தூக்கி மேலும் தள்ளி மணலில் விட்டெறிந்தது. இப்போ, உண்மையிலேயே கலவரமான நிலைமை தான் அலைகள் அதன் மேலே புரண்டன; அதை உருட்டிப் புரட்டின. ஆயினும், அதை மறுபடியும் கடலுக்குள் இழுக்கப் போதிய பலம் அவற்றில் எதற்கும் இல்லை. அப்பாவி சிப்பிப் புழு அந்த இடத்திலேயே கிடந்தது. கடலுக்குள் திரும்பிப் போக வழியேயில்லை. அது மிகவும் கோபம் கொண்டது.

கரை அருகில் ஒரு சிறு மரம் நின்றது. அதில் ஒரு காகம் நெடு நேரமாக இருந்து, சிப்பிப் புழு படும் பாட்டைக் கவனித்தது. முடிவில், அது கீழே வந்தது. தன் அலகால் சிப்பி மீது தட்டி, “யாரது உள்ளே? கதவைத் திற” என்று அதட்டலாய் கூறியது.

சிப்பிப் புழு அதிருப்தி அடைந்தது. யாரோ மோசமான கழிசடை என்னைத் தொந்தரவு செய்கிறது” என்று அது தனக்குள் சொல்லிக் கொண்டது. பிறகு, “யார் அது?” என்று கத்தியது.

“நான் கழிசடை இல்லை. நான் ஒரு காகம் அதிலும் புத்திசாலிக் காகம். கதவைத் திறந்து வெளியே வா.”

“நான் ஏன் வெளியே வரவேண்டும்?”

“சும்மாப்பேசி மகிழ, அவ்வளவு தான் என்று காகம் மென்மையாய் சொன்னது.

“எனக்குப் பேச நேரமில்லை. நான் வெளியே வரவில்லை.”

“நல்லது. ரொம்ப சரி. ஆனால் அங்கே உள்ளே நீ என்ன பண்ணுகிறாய்?”

“நான் முத்து உண்டாக்குவதில் கருத்தாக இருக்கிறேன். மேலும், உன்னைப் போன்ற அசிங்கமான அழகற்ற ஒரு ஜந்துவுடன் நான் ஏன் பேசவேண்டும்?” என்று சிப்பிப் புழு மிடுக்காகக் கூறியது.

“ஒகோ-எவ்வளவு உயர்வு!” என்று காகம் சிரித்தது. “என் அருமை நண்பனே, நான் விரும்பியதெல்லாம் கடலின் அமைப்பு, அளவு பற்றிய சில கேள்விகளை உன்னிடம் கேட்கலாம் என்பது தான். இந்தப் பரந்த உலகம் பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லவும் விரும்பினேன்.”

“ஏனோ”

“ஏனென்றால், எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம். நான் ஒரு பல்கலைக்கழகத்தின் கூரை மேல் வசிக்கிறேன். அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். அதனால் அறிவியலில் எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பற்றியும், அங்கு நடப்பது குறித்தும் கேட்டறிய விரும்புகிறேன். புறா முட்டைகள், குருவி முட்டைகள் எல்லாம் அங்கு உள்ளனவா?”

“என்ன பேத்தல்” என்று வெடுக்கெனப் பேசியது சிப்பிப் புழு. “புறாக்களும் குருவிகளும் கடலில் இருப்பது போல் தான்!”

“அதைத் தானே நான் உன்னிடம் கேட்டறிய விரும்பினேன்.”

“மடத்தனமான கேள்விகள் கேட்காதே” என்றது சிப்பிப் புழு. “கடலில், என்னை போல், லட்சக்கணக்கான சிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அனைத்தினும் நானே பெரியவன். அதனால் நான் மற்ற சிப்பிகளுடன் பேசுவதில்லை. ஆயிரமாயிரம் வகை வர்ணமீன்கள் இருக்கின்றன; பல்லாயிரம் வகைச் செடிகள் இருக்கின்றன. அவ்வளவுதான். உன்னைப் போன்ற முட்டாள்தன அசட்டுப் பிராணிகள் அங்கு கீழே இல்லை.”

காகம் சிரித்தது. நீ என்னை முட்டாள் என்பதில் எனக்கு கவலை யில்லை. உண்மையில் நான் முட்டாள் இல்லை. நான் ஒரு காகம்- அதிலும், புத்திசாலிக் காகம், ஆனால், நண்பனே, நீ இதை எல்லாம் உன் சிறிய பொந்துக்குள் இருந்தபடியே சொல்கிறாயே, ஏன் நீ வெளியே வரக்கூடாது?”

“உனக்கு நல்ல பண்பு கிடையாதா? என்னுடன் நெருக்கமாய்ப் பேச உனக்கு என்ன துணிச்சல் நான் உன் நண்பன் இல்லை.”

“நீ கடல் அரசன் போல் அல்லவா பேசுகிறாய்!”

“சந்தேகம் இல்லாமல்-நான் தான் முத்துக்களை உண்டாக்குகிறேன். அது கடலுக்குக் கீர்த்தி சேர்க்கிறது. எல்லாம் என்னால் தான்” என்றது சிப்பிப் புழு.

காகம் குறும் சிரிப்புடன் சொன்னது: “அப்படியானால் நான் அவசியம் பார்க்க வேண்டும். இப்படி ஒரு அற்புதமான பொருளை நான் பார்த்ததேயில்லை.”

“நான் பொருள் இல்லை-நான் சிப்பிப் புழு, முத்துக்களை ஆக்குவோன்.”

“நல்லது, நல்லது. மாட்சிமை மிக்கவரே, தயவு பண்ணி வெளியே வந்து, உம்மைக் காணும் வாய்ப்பை எனக்கு அளிக்கமாட்டிரா?” என்று காகம் நகைச் சுவையுடன் கூறியது.

இல்லை; மாட்டேன். நான் கதவைத் திறக்க முடியாது. எனக்கு அதிக வேலை.”

“நீ உன் முத்தைப் பிறகு செய்யலாம். இப்ப கதவை திற. நான் எளிய, சாதாரண காகம், உன்னைப் போன்ற முக்கிய நபரை-முத்து செய்யக் கூடியவரை, பார்க்க ஆசைப்படுகிறேன். நான் முத்தையும் பார்க்க வேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் ஒரு முத்தைக் கண்டதில்லை.”

“நான் தான் சொல்லிவிட்டேனே, நான் திறக்கமாட்டேன். நீ பெரிய புத்திசாலி என்று நீ நினைத்தால், நீயே ஏன் அதை திறக்கக் கூடாது?”

சிப்பிப் புழு இப்படிக் காகத்தை கேலி பண்ண முடிந்தது. ஏனெனில், தன் சிப்பியின் மூடியை காகம் ஒரு போதும் திறக்க இயலாது என அது உறுதியாக நம்பியது.

ஆனால் இப்போது காகம் கோபம் கொண்டது.

“நல்லது. அது தான் உன் விருப்பம் என்றால், நான் செய்து காட்டுவேன். நடப்பது உனக்குப் பிடிக்காது போனால் என்னைக் குறை கூறாதே.” 

காகம் சிப்பியைத் தன் அலகில் கவ்விக் கொண்டு, மேலே மேலே பறந்து போயிற்று. ஒரு பாறை அடுக்கை அடைந்தது. மிக உயரே பறந்தபடி அது சிப்பியை பாறைக்கு நேராகப் போட்டது. சிப்பி தூள்துள்ளாகச் சிதறியது. காகம் அதன் பின்னே பாய்ந்தது. சிப்பிப் புழுவை அலகில் கொத்தியது. ஒரே விழுங்கில் முழுங்கித் தீர்த்தது.

பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடமிருந்து விலகி உருண்டோடிக் கொண்டிருந்தது. விலையில்லாத அந்த முத்து ஒரு சாணக் குவியலினுள் விழுந்ததை அது கவனித்தது. பின்னர் காகம் மேலெழுந்து வானத்தில் உயர்ந்து, மகிழ்வுடன் கத்தியவாறு, பறந்தது.

(உருதுக் கதை)

குட்டீஸ் லூட்டீஸ்: ஜாதகப் பொருத்தம்..!- சிவமால்

 

ஜாதகப் பொருத்தம்Image result for அம்மா அப்பா பொண்ணு..!

‘பத்துப் பொருத்தம் பெர்·பெக்டா பொருந்தியிருக்குன்னு ஒரு ஜோசியர் இல்லே ரெண்டு ஜோசியர்கள் சொன்னாங்க..
ஜாம் ஜாம்னு பெரிய அளவிலே பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். இன்னும் ஆறு மாதம் கூட ஆகலே..
மாமியார் கொடுமை தாங்கலைன்னு அடிக்கடி கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்கிறா. என்ன செய்யறதுன்னே தெரியலே.’
என்று புலம்பிக் கொண்டிருந்தான் நண்பன் பரந்தாமன்.

அவன் வீட்டில் அவனுடன் பேசிக் கொண்டிருந்த எனக்கு எப்படி ஆறுதல் சொல்றது என்றே தெரியவில்லை.

அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்த என் மகள் மிதிலா திடீரென்று, ‘அங்கிள்.. நாம அங்கேதான் ஒரு சிறிய
தப்பு பண்ணறோம்’ னு சொன்னாள், வியந்தபடியே அவளை நோக்கினோம்.

‘நீங்க பையன் பெண் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்தீங்க இப்பல்லாம் மெயினா பெண்ணின் ஜாதகம் வரப் போற
மாமியார் ஜாதகத்துடன் பொருந்தியிருக்கான்னு பார்க்கணும்..        அப்புறம்தான் பையன் பெண் ஜாதகப் பொருத்தம் எல்லாம்..’
என்றாளே பார்க்கலாம்.

ஒரு நிமிடம் அவளையே வியந்து நோக்கிய எங்களுக்கு அந்த வேதனையிலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

 

பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம்

நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கேLAASARAAஇருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துகொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும், பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலை தீபாவளியதுமதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?
இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறதோன்னோ? சரி, நான் அசடு, போங்கோளேன்; திருப்திதானே? நான் வெகுளி, எனக்கு மனசில் ஒண்ணும் வைத்துக்கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார்; ”ஜகதாகிட்டே யாரும் அசதி மறதியாய்க்கூட ஒரு ரகஸ்யத்தைச் சொல்லிடாதேயுங்கள். ஒருத்தர்கிட்டேயும் சொல்லக்கூடாது என்றால் ஒரு கடிதாசுத் துண்டிலாவது அதை எழுதி எறிந்து விடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபத்தான மனுஷி.” ஆமாம். அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள். நான் பின் யாரிடத்தில் சொல்லிக் கொள்வது, தலை தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாத கஷ்டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினால், புக்காத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிற பொல்லாப்பைக் கட்டிக்கவா? நான் அசடாயிருக்கலாம்; ஆனால் அவ்வளவு அசடு இல்லை. அப்புறம் எனக்கு யாரிருக்கா; நீங்களே சொல்லுங்களேன்!
தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னால் அம்மா வந்திருந்தாள், ஆசையா பெண்ணையும் மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைத்துப் போகணும் என்று. நீங்கள் ஊரில் இல்லை. இருக்கவும் மாட்டேள் என்று தெரிந்ததும் அவள் முகம் விழுந்ததைப் பார்க்கணுமே, எடுத்து மறுபடியும் சேர்த்து ஒட்ட வைக்கிற தினுசாய்த் தானிருந்தது.
”சரி, மாப்பிள்ளைதான் இல்லை, ஜகதாவைக் கூட்டிக் கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு. உங்களிஷ்டப்படியே கல்யாணமாகி நாலாம் நாளா கிருஹப்பிரவேசத்துக்கு விட்டதுதானே!” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் அம்மா (உங்கள் அம்மா – இப்போ எனக்கு இரண்டு அம்மான்னா ஆயிட்டா!) ஓரக் கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே, “என் பிள்ளை எப்போ அங்கே வர முடியல்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோபுல்லோன்னு இருந்துட்டுப் போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும்தானே! அப்புறம் உங்களிஷ்டம். அவளிஷ்டம். இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!” என்றார்.
இதென்ன கன்றுக் குட்டிக்கு வாய்ப்புட்டை போட்டு பாலூட்டற சமாசாரமா? என்னை அம்மா ஆழம் பார்க்கிறது தெரியாதா, என்ன? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. இந்த வீட்டிலேயே யாரு பளிச்சுனு பேசறா? இங்கேதான் பேசினதுக்குப் பேசின அர்த்தம்  கிடையாதே! எனக்குத் திடீர்னு சபலம் அடிச்சுண்டது. என் கையொட்டின தம்பி சீனுவைப் பார்க்கனும்னு. ஒரு நிமிஷம் என்னை பிரிஞ்சு இருந்ததில்லை. காலையில் கையலம்பி நனைஞ்ச சட்டையை மாத்தறதிலிருந்து, ராத்திரி தொட்டிலில் அவன் படுக்கையை விரிக்கிற வரைக்கும் அக்காதான் எல்லாம் பண்ணியாகணும். இப்போ குழந்தை என்ன பண்றானோ? ஆனால் நான் இங்கேயே இருக்கேன்னு சொல்லிவிட்டேன். அம்மா கண் தளும்பிற்று. அம்மா பேசாமே போயிட்டாள். நான் கொஞ்ச நாழி திக்பிரமை பிடிச்சு நின்றேன். அம்மா குறுஞ்சிரிப்புடன் என்னை ஒரு நிமிஷம் ஆழ்ந்து நோக்கி விட்டுக் காரியத்தைப் பார்க்கப் போயிட்டார். அவருக்கு உள்ளூற சந்தோஷம். எனக்குத் தெரியும், நான் பரீட்க்ஷையில் ஜெயித்து விட்டேன் என்று. என்ன பரீக்ஷை? பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறது தான்.
“ஆமாம்; நான் கேட்கிறேன் – இதென்ன உத்தியோகம், ஒரு நாள் கிழமைக்குக் கூட பெற்றவர் உற்றவர் கூட இல்லாமல்படிக்கு? என்னதான் ‘காம்’பில் கிளம்பிப் போனாலும் சமயத்துக்கு லீவு வாங்கிக் கொண்டு திரும்பி வர முடியாதா?
ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குத்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தார் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில்! பணக்காரன் தங்கக் கூண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப் போல் இருக்கிறவர்கள் இதிலுமில்லை; அதிலுமில்லை; காலை ஊன்றக்கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? நான் ஏங்கி உருகித் தவித்துக்கொண்டு? உத்தியோகத்தை உதறிவிட்டு ஓடிவந்துவிட முடிகிறதா? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. மனஸு வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனஸு வெச்சிருக்கேன்!
ஆனால் அதற்காக என்னோடு பேசக் கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, ‘ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?” என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவி விடுவார்களா? அதையும் தான் பார்த்து விடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத்தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக்கூடாது என்றால் பிள்ளைகள் கலியாணம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?
ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப்பட்டாளாம். இடம் போகாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண்ணுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டால் கேட்கவே வேண்டாம். திடீர்னு ஒரு ஜோடியின் ஒரு படுக்கை தானாகவே திண்ணையில் வந்து விழுந்து விடுமாம். சீட்டைப் போட்டுக் குலுக்கினாற் போல் யார் படுக்கை என்று போட்ட பிறகுதான் தெரியுமாம். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது; திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிண்டிருக்க வேண்டியதுதான். அம்மா சொல்றப்போ எனக்கு சிரிப்பாய் வரும், இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னால் அப்பா கூடச் சொன்னார்: “இதென்னடி, இது அவ்வளவு உசிதமோ? ஒரே சம்சார வீடாயிருக்கிறது. பையன் நாலு பேருக்கு நடுவே நாலாமவனாயிருக்கிறான். இன்னும் கலியாணத்துக்கு  ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிறாப் போலிருக்கிறது…”
“இருக்கட்டும், இருக்கட்டும், நிறையக் குடித்தனமாயிருந்து நிறையப் பெருகட்டும். நாளாவட்டத்தில் இது தான் நம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்போ நமக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே பிக்கு பிடுங்கல் இல்லாமல், கையை கோத்துண்டு போனவாளெல்லாம் கடைசியில், உலகம் தெரியாமல், எது நிலைச்சுது தெரியாமல், நாயும் பூனையுமா நாறிண்டிருக்கிறதை நான்  பார்த்துண்டுதானே இருக்கேன்! பையன் நல்ல வேளையா நாலாம் பிள்ளையாத்தானே இருக்கான்? என் மாதிரி, என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப்பெண்ணாய் வாழ்க்கைப்படவேண்டாமே?”
அம்மா அப்படிச் சொல்றப்போ நன்னாத்தானிருக்கு. நாவலில் கதாநாயகியாயிருக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது? நிஜம்மா, நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக் கொள்வேன்? எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் முன்றானை நுனியை அடைச்சுண்டு கிணற்றடிக்கு ஓடிப்போயிட்டேன்.
எத்தனை நாழி அங்கேயே உட்கார்ந்திருதேனோ அறியேன்.
“என்னடி குட்டீ, என்ன பண்றே?”
எனக்குத் தூக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச் செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக் கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஓரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்!
”ஒண்ணுமில்லையே அம்மா!” என்று அவசரமாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.
“அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே” (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) “என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும் உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட; குட்டி இதென்ன இங்கே பாருடீ!”
அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
“ஏ குட்டி, எனக்குத்தான், கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?”
“இருக்கிறதே!”
“குறைஞ்சிருக்கா?”
”இல்லையே, நிறைய இருக்கே!”
”இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன். கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக் கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு-” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
நான் கிணற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் நின்றிருந்தேன். நெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரியிருந்தது. மேலே மரத்திலிருந்து பவழமல்லி உதிர்ந்து கிணற்றுக்குள் விழுந்து கொண்டிருந்தது. தும்பையறுத்துக் கொண்டு கன்றுக்குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது.
இந்த வீட்டில் யார்தான் பளிச்சென்று பேசுகிறார்கள்? வெளிச்சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத்தாண்டி அதனுள்தான் இருக்கிறது.
ஆனால் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சியில்லையா? அவர்களுக்குத்தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் அசல் ஊமையில்லையே, ஊமை மாதிரி தானே! எனக்கு ‘ரெஸ்பெக்டே’ இல்லையோன்னோ? ஆமாம், அப்படித்தான். போங்கோ நான் உங்களுக்கு இப்போ கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசி கொண்டிருக்கிறேன். இல்லை, கடிதாசியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னாலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்? நான்தான் அப்பவே சொல்லிவிட்டேனே, என் நெஞ்சிலிருக்கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று!
எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சில் முள் மாட்டிண்ட மாதிரி, கண்டத்தை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க் காய, வாசலுக்கும், உள்ளுக்குமா அலைஞ்சது? அப்போ உங்களுக்கு மாத்திரம் என்னோடு பேச ஆசையில்லை என்று நான் சொல்ல முடியுமா? அதை நினைத்தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை அடைக்கிறது. என்ன பேசவேண்டும் என்று நினைத்தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னால் நீங்கள் யாரோ, நான் யாரோ? பரதேசிக் கோலத்தில் படி தாண்டி உள்வந்து நீங்கள் என் கைபிடித்தும் ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த காரியம் நிறைவேறி விட்டாற்போல் எனக்குத் தோன்றுவானேன்?
அப்படிக் காத்திருந்த பொருள் கைகூடிய பின்னரும், இன்னமும் காத்திருக்கும் பொருளாகவே இருப்பானேன்? இன்னமும் ஜன்மங்களின் காரியம் நிறைவேறவில்லையா? இப்பொழுது நெருப்பு என்றால் வாய் வெந்துபோய் விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிறாயே என்று கேட்காதேயுங்கள். இப்போ நான் சொல்லப் போவதைத் தைரியமாய்த்தான் சொல்லவேணும். நீங்கள் எங்கேயோ ‘காம்ப்’ என்று தூரதேசம் போய்விட்டீர்கள். இந்த நிமிஷம் எந்த ஊரில் எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரையை அண்ணாந்து பார்த்தபடி என்ன யோசனை பண்ணுகிறீர்களோ? நானும் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன நிச்சயம்? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கத்தான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாஅழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவர்களை நம்பிக் கொண்டிருப்பதிலும் தான் உயிர் வாழ்கிறோம்.
என் தகப்பனாருக்கு வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும். “என்னப்பா?” என்று கேட்டால் சொல்வார், “அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும், வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிரேன்,” என்று வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.
ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்போது நால்வராயிருப்பவர்கள், ஐவராயிருந்தவர்கள் தானே.
கடைசியில் எதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ, அதுக்கே வந்து விட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலை தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான்.
அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் ப்ரமிப்பாய்த்தானிருக்கிறது. அந்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார். ஓய்ச்சல் ஒழிவில்லை! சிறிசுகள் எங்களால் அவருக்குச் சரியாய்ச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போய் அவர் மாமியாருக்குச் சிசுரூஷை பண்ணிவிட்டு, மலம் முதற்கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது – வேறொருவரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை – அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கி விட்டால், தாலத்தையும், சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் நடுக்கல். அழகாயிருக்கிறார், வழிந்த சுழி மாதிரி, ஒல்லியாய், நிமிர்ந்த முதுகுடன்; இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: “என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ‘ரிடையர்’ ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபிஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் ‘டப்’பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய் ‘பொட்’டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிறவரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்ணு இருக்கு. அப்புறம்-”
“ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேள்?” என்பார் மூத்த ஓர்ப்படி.
”பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டேயிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?”
”இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சல்?”
அம்மாவுக்கு உள்ளூறச் சந்தோஷந்தான். ஆனால் வெளிக் காண்பித்துக் கொள்ள மாட்டார். “அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும் முன்னாலே வந்துட்டே. பின்னாலே வந்தவாளுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயேன்; அவளுக்குக் காலேஜ் குமரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு… நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தகமாயிருக்கேன். அவள் பிறந்ததிலிருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்னா முதன்முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்தவா நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப் போறேள்?”
”இல்லேம்மா; நாங்கள் நீங்கள் சொன்னதைக் கேட்கறோம்மா..” என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்ப்பாடு ஒப்பிப்பது போல், கோஷ்டியாய்ச் சொல்லுவோம்.
“ஆமா என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள் – ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகணும். ஆளுக்கு அஞ்சு நாள் காலையிலெழுந்து காப்பி போடுங்களேன் என்கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரைமணி நேரம் அதிகம் தூங்கறேள்.”
எங்களுக்கு ரோஸமாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒண்ணும் சொல்லமுடியாது. நாங்கள் 5 1/2 மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 1/2 மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்து கொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு. இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்?
“வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சுட்டுப் போயிடுங்கோ, ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக்காதபடிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே; நான் ஒண்டியாயிருந்தப்போ எல்லாத்தையும் நானேதானே செஞ்சாகணும்; செஞ்சிண்டிருந்தேன். இப்போ என்னடான்னா கூட்டம் பெருத்துப் போச்சு; வேலையே ஏலம் போட்டாறது. ஊம், ஊம்… நடக்கட்டும்.. நடக்கட்டும். எல்லாம் நடக்கிற வரையில் தானே? நானும் ஒரு நாள் ஓஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட்டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்? நீங்கள் செஞ்சதை நான் ஏத்துண்டுதானே ஆகணும்? மடியோ, விழுப்போ, ஆசாரமோ, அநாசாரமோ-”
அம்மா அவர் காரியத்தைப் பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்தமாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை நன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம்கூட கிடையாது. ஜலம் குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன்னால்- இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஓரகத்திதான் கேட்கமுடியும்- ஒப்புக்கொள்ள மாட்டார். “எனக்குக் காது கேட்கல்லையே!” என்று விடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத் தெரியாதா என்ன?
உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பங்கரையில் வந்து, “என்னம்மா பண்ணியிருக்கே?” என்று வாணலியிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்கு கேள்விமுறை கிடையாது. அதுக்கென்ன செய்வது? நான் அப்படியிருந்தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந்திருப்பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை சொல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறிசுகள், பெரிசுகள், விதவிதங்கனிடை உழல்கையில், எந்த சீலத்தை உண்மையா கொண்டாட முடியும்?
ஓரோரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ நாங்கள் அஞ்சு பேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப்புக் காரியம் இல்லையா, குழந்தைகள் காரியம் இல்லையா,  சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங்கள்.. இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள், ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்கு குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மௌன விரதம்! தலை கலத்தின் மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக் கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா, கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு, “இன்னும் பசிக்கிறதே, ரஸம் சாப்பிட்டேனோ? மோர் சாப்பிட்டேனோ?” என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார். குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.
எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின ராத்திரியானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்துவிடுகிறது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறதுமாய் அம்மா கை எப்படி வலிக்கிறது? மைஸூர்ப்பாகு கிளறும்போது கம்மென்று மணம் கூடத்தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல் கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டாலும் உங்களை நினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மௌனம். ஒன்றைத்தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மௌனம் கூட ஒரு ‘ஸ்டே’ஜூக்குப் பிறகு அநுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக் கொள்ளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மௌனமாயிருக்கிற வயசா? நெஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக்கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக் கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியாயிருக்கிறேள்? நீங்கள் புருஷாள். உங்களுக்கு உண்மையிலேயே விரக்தியாயிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்னவள்தானே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசணும், எனக்குப் பேச்சு வேணும். உங்கள் துணை வேணும்… ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்து கொள்கிறேனே! என்னை மன்னிச்சுக்கோங்கோ, தப்பா நினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லை. ‘நானும் நீயும்’ எனும் இந்த ஆதாரத்தி ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம். எனக்கு இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்து விடுகிறது.
ஆனால், ‘நானும் நீங்களும்’ என்று எல்லாம் எண்ணவும், எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை மறந்து எங்கே ஒதுக்கி வைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்துதான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது. குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால் தானே எனக்குக் கிட்டினீர்கள்? ஆலகால விஷமும் அதிலிருந்துதான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்திலிருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடிகிறது! நீங்க்ள் எங்கேயோ இருக்கிறீர்கள்.
எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிருலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்றசாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்திரி. கூடத்து ஊஞ்சலில் புது வேஷ்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளையும் நானே உடுத்திக் கொண்டு விட்டால் என்ன? பொம்மனாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளையும், உங்களுக்காக நானே! நீங்கள்தான் இல்லையே, எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே?
அம்மா ஒரு மரச் சீப்பில் கரும் பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.
”குட்டீ, சாப்பிட்டுட்டையா?”
”ஆச்சு அம்மா”
”தின்ன வேண்டியதெல்லாம் தின்னாச்சா?”
”ஆச்சு -” (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை. நான்தான் துண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!)
“அப்படியானால் உக்கார்ந்துக்கோ, மருதாணியிடறேன்.”
அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. “ என்னம்மா பண்றேள்?” அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்கு  காது கேட்கவில்லை. என் பாதங்களை எங்கோ நினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத்திட்ட கைகள் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவை மேல் குனிந்தார். அவர் தோளும் உடலும் அலைச்சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண் பட்டுப்போல் அவள் கூந்தல் பளபளத்தது. என் பாதங்களின் மேல் இரு அனல் சொட்டுகள் உதிர்ந்து பொரிந்தன.
“அம்மா! அம்மா!” என்று அழுகை வந்து விட்டது. அதுவே ஒட்டுவாரொட்டி. எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லை.
”ஒண்ணுமில்லேடி குட்டி. பயப்படாதே.” அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டார். “எனக்கு என்னவோ நினைப்பு வந்தது. எனக்கு ஒரு பெண் இருந்தாள். முகம் உடல்வாகு எல்லாம் உன் அச்சுதான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள். என் நெஞ்சை அறிஞ்சவள் அவள்தான். மூணு நாள் ஜூரம். முதல் நாள் மூடிய கண்ணை அப்புறம் திறக்கவேயில்லை. மூளையில் கபம் தங்கிவிட்டதாம். இப்போத்தான்
காலத்திற்கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புது தினுசாய் வரதே? பின்னால் வந்த விபத்தில் அவளை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போத்தான் தெரியறது. உண்மையில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப்பதற்கில்லை. நல்லதோ கெடுதலோ அது அது, சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்து விடுவதுபோல், உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்துவிட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், ‘அடி முட்டாளே! இதோ இருக்கிறேன், பார்!’ என்று தலை தூக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே போகப்போக நம்மைத் தாக்கும் மனோசக்தியாய்க்கூட விளங்குகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும் நானும், எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் நேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத்தில் நீடிச்சு இருந்திண்டிருக்கணும்…?”
இதைச் சொல்லிவிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன்னை அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளினாற்போல் ஒரு பெருமூச்செறிந்தார்; அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடுவதில் முனைந்தார். ஆனால் அவர் எனக்கு இடவில்லை. என் உருவத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண்ணின் பாவனைக்கும் இடவில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்குப் பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணியிட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்துக்கு அந்த இளமையின் சின்னமாய்த்தான் அவருக்கு நான் விளங்கினேன்; எனக்கு அப்படித்தான் தோன்றிற்று.
இப்படியெல்லாம் நினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான்  எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ?
இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா – அப்பா, பிறகு நாங்கள்
– நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளிய்யிருப்பது போல் பாட்டி மூன்றா மாடியில்  எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக் கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.
சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல், ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.
“என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?”
எனக்கேத் தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது. அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. அன்புடன் என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே நடந்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்.
“பரவாயில்லை. பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.”
அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று. அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்தால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள்.
எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.” அப்பாவும், அம்மாவும் மேலேறிச்  செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மௌனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டூலை’ வைத்து மேலேறி, மாடி விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போடுகிறான்.
திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனைமீது உக்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம்.
இது ஆராதனை இல்லாது ஏது? ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.
பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும்,  இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது?
“ஐயோ ஐயோ-” என ரேழி அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க ஓடுகிறோம். ‘வீல்’ என அழுதபடி குழந்தை அவன் பாட்டி மேல் வந்து விழுகிறான். “என்னடா கண்ணே?” அம்மா அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் பேரன். இரண்டாமவரின் செல்வமில்லையா?
“பாட்டி! பாட்டி!” பையன் ரோஸத்தில் இன்னும் விக்கி விக்கி அழுகிறான். “அம்மா அடி அடின்னு அடிச்சுட்டா-”
“அடிப்பாவி! நாளும் கிழமையுமாய் என்ன பண்ணீட்டடா உன்னை!” அம்மாவுக்கு உண்மையிலேயே வயிறு எரிந்து போய்விட்டது. கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சிருப்பதைப் பார்த்ததும்,
“காந்தீ! ஏண்டி காந்தீ!!-”
ரேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்கார்ந்திருந்தாள். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குத்திட்டு, அந்த முட்டி மேல் கைகளைக் கோர்த்துக்கொண்டு, கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வது கூட அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக்கனல் வீசிற்று. உள் வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டாதும் அவள் எழுந்திருக்கக் கூட இல்லை.
“ஐயையோ!” என் பக்கத்தில் சின்ன மன்னி நின்று கொண்டிருந்தாள். முழங்கையை பிடித்துக் காதண்டை, “காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு” என்றாள்.
காந்தி மன்னிக்கு இப்படி நினைத்துக் கொண்டு, இம்மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாட்களுக்குக் கதவையடைத்துக் கொண்டு விடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனை ராகு பிடிப்பது போல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்விவிடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள்.
காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால் நிஜமாகவே கேட்கவே முடியவில்லை. காதையும் பொத்திக்கொண்டு கண்ணையும் இறுக மூடிக்கொண்டு விட்டேன். அந்த காக்ஷியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்னா, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப் போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராமே! எந்த மஹாபாவி சிகரெட்டை அணைக்காமல் தூக்கி எறிந்தானோ, அல்ல வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடைச் சாமான்கள் பனை மர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணாவுக்குப் பிராணன் அங்கேயே போய்விட்டதாம் அண்ணாவுக்கு முகமே இல்லையாம்; சில்லு சில்லாய்ப் பேந்து விட்டதாம். முகமிருந்தவிடத்தில் துணியைப் போட்டு மூடிக் கொண்டு வந்தார்களாம்.
சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா, எட்டா?
நிஜம்மா கேக்கறேன்; இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல்லோரும் எப்படி ஸஹிச்சிண்டிருந்தீர்கள்? அம்மாவும், அப்பாவும் எப்படி இதிலிருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லோரும் முதலில் எப்படி உயிரோடிருக்கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? இது நேர்வதற்கு முன்னால், அவள்தான் ரொம்பவும் கலகலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாய் இருப்பாளாமே!
இப்போக்கூட, அந்த முகத்தின் அழகு முற்றிலும் அழியவில்லை.  அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், நெருப்பில் பொன் உருகி நெளிவது போல, தன் வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிறாள். அவளுக்கு அவள் கதி நேர்ந்த பின், மற்றவர் போல் தெறித்துக்கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒருவராய், இதுவரை இங்கேயே அவள் தங்கியிருப்பதிலும் ஒரு அழகு பொலிகின்றது.
அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச்  சற்றுக் குரல் தணிந்தது.
“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு – குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”
“நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”
காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.
“அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”
”பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!” பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.
“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”
அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.
“நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”
மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?”
நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசறவாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?
அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
“காந்தி, இதோ பார், இதோ பாரம்மா-”
சேகர் ஒரு ஊசி மத்தப்பாடை அம்மாவுக்கும் பாட்டிக்கும் முகத்துக்கு நேர் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் கன்னத்தில் கண்ணீர் இன்னும் காயவில்லை.
எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோருக்கும் கண்கள் நனைந்திருந்தன.
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்……

இம்மாத திரைக்கவிதை – நீல வண்ணக் கண்ணா வாடா 

மருதகாசி அவர்களின் நூற்றாண்டு விழா !

அவருடைய பல சிறந்த பாடல்களில் ” நீல வண்ணக் கண்ணா வாடா ” என்ற பாடலை இம்மாதத் திரைக் கவிதையாகத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் 

Image result for மருதகாசி

பாடல் : மருதகாசி 

படம் :  மங்கையர் திலகம் 

பாடியவர் : பால சரஸ்வதி  தேவி 

இசை : எஸ் தக்ஷிணாமூர்த்தி

நடிப்பு: பத்மினி 

 

 

நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்த வடிவில்  வந்தான்
எல்லையில்லா கருணைதன்னை
என்னவென்று சொல்வேனப்பா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம்   வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான  நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்க  செய்யும்  வாடை  காற்றே
நியாயமல்ல   உந்தன்  செய்கை
தடை  செய்வேன்  தாளை  போட்டு
முடிந்தால்  உன்  திறமை  காட்டு

விண்ணில்  நான்  இருக்கும்  போது
மண்ணில்  ஒரு  சந்திரன்  ஏது
அம்மா  என்ன  புதுமை  இது  
என்றே கேட்கும்  மதியை  பாரு

இன்ப  வாழ்வின்  பிம்பம்  நீயே
இணையில்லா  செல்வம்  நீயே
பொங்கும்  அன்பின்  ஜோதி  நீயே
புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே
புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே

புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே

 

 

இம்மாத ஆடியோ – கா காளிமுத்து உரை

டாக்டர் காளிமுத்து  அரசியல்வாதி மட்டுமல்ல – ழகான பேச்சாளரும் கூட ! .

அவருடைய குரலில் இலக்கியம் தெறிக்கும். 

அவரை மேடை மணி என்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கூறியுள்ளார். 

அவருடைய தமிழை இந்த மாத ஆடியோவாக வழங்குகிறோம். 

 

பரந்தாமனின் நீதிமன்றம் ! பாம்பே கண்ணன்

Image result for மகா விஷ்ணு லக்ஷ்மி
அந்த பக்தன் கோவிலில் பெருமாள் சன்னதியில் நின்று மனமுருக பிரார்த்திக் கொண்டான்
பெருமாள் புன்முறுவல் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தார்
பெருமாளே நான் இயக்கிய திரைப்படம் நாளை வெளிவருகிறது ஆனால் இன்றிரவே அது வலையில் வெளி வந்து விடும் நாங்களும் எவ்வளவோ போராடிப் பார்த்து விட்டோம் எங்களால் piracy மை தடுக்க முடியவில்லை அக்கிரமங்கள் நடக்கும் வந்து அப்பாவிகளை ரட்சிக்கும் ஆபத்பாந்தவா வா இந்த பைரசியை தடுத்து எங்களைப் போன்ற இயக்குனர்களை காப்பாற்று
கன்னத்தில் போட்டுக் கொண்டான்
கண்ணீர் விட்டான்
மாதவன் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்
பக்கத்திலிருந்த தாயாருக்கு கண்கலங்கியது என்ன‌இருந்தாலும் அன்னை அல்லவா
இன்றிரவே படத்தைப் பார்த்துவிட்டு படம் திரைக்கு வரு முன்பே எனக்கே கதை சொல்கிறார்கள் இது வயிற்றில் அடிப்பது இல்லை?
அடுத்தவன் உழைப்பை திருடி பெருமைப் பட்டுக்கொள்வது அதர்மம் இல்லையா?
கேசவன் புன்னகை ஓவியம் போல மாறாமல் இருந்தது
தேவி கண்ணனை  கடைக்கண்ணால் பார்த்தாள்
அவள் முகம் வாடி இருந்தது
அன்று மாலை பாற்கடலில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் பாத் கமலங்களை பற்றி லேசாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தாள் மகா லக்ஷ்மி
அவள் முகத்தில் சிறு கோபம் இணைந்திருந்தது
பிரபோ இது உங்களுக்கே ஞாயமாக தெரிகிறதா?
தேவி பல ஆண்டுகளாக தொடர்ந்து நீயே ஓய்வில்லாமல்  கால்களை அழுத்தி வருகிறாய் இது ஞாயமில்லைதான் நான் வேண்டுமானால்
போதும் உங்கள் ஹாஸ்யம் நான் கூற வந்தது இன்று முறையிட்ட உங்கள் பக்தனைப் பற்றித்தான்
யார் அந்த சினிமா கதாசிரியர் இயக்குனர்தானே
பரவாயில்லையே கோடிக்கணக்கான பக்தர்களிடையே அவனை சட்டென நினைவு கூர்ந்தது எவ்விதம்
லக்ஷ்மி! அவன் கதறியதைப்பார்த்து உலக மாதா உன் கண்களில் நீர் சுரந்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?
நீங்கள்தான் கொஞ்சமும் பரிதாபப்படாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தீர்களே? சரி இப்போது அவன் என் பக்தன் அவன் கேட்டபடி நீங்கள் பைரசியை அழித்து சினிமாவைக் காப்பாற்றினால் என்ன?
எனக்கு அதில் விருப்பமில்லை?
ஏன்?
நம்பிக்கைத் துரோகம் என்றானே இவன் செய்த துரோகம் தெரியுமா? யாரோ எழுதிய கதையை தன் கதை என்று போட்டு படம் எடுத்தானே அந்த கதாசிரியர் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும் என யோசித்தானா குறைந்த பட்சம் கதை எழுதியது நானில்லை என ஒப்புக் கொண்டானா இது நம்பிக்கை துரோகம் இல்லையா? ஒரு நல்ல எழுத்தாளனின் நல்ல படைப்பை தன் படைப்பாக பறை சாற்றிக் கொண்டானே இது வயிற்றில் அடிப்பது இல்லையா?
நாதா இவ்வளவு விஷயம் உள்ளதா ஆனால் எல்லோரும் அப்படி இல்லையே
நாம் இப்போது இவனைப் போன்றவர்களைப் பற்றிதானே பேசுகிறோம்
இருந்தும்…..
நல்லவர்களுக்காக பெய்யும் மழை
கெட்டவர்களுக்காக ஏற்படும் ஊழிக்காற்று
இவற்றின் ஆதாயங்களுக்கும் சேதாரங்களுக்கும் பாரபட்சம் கிடையாது
அண்ணலே உமது விளையாட்டு புரிந்தது
உனக்கு ஏற்கனவே புரிந்தது என நான் அறிவேன்
சரி நம்ம பக்தனுக்கு இந்த தவறுகளுக்கு என்ன தண்டனை
அவன் எடுத்த இந்த படம் வெற்றிகரமாக ஓடும்
இது தண்டனையா எனக்கே புரியவில்லை
ஆம் அந்த வெற்றி களிப்பில் தான் ஜெயித்து விட்ட மமதையில் தனக்கு எல்லாம் தெரியும் என படங்கள் எடுப்பான் அவை கேவலமாக தோற்றுப் போகும் சினிமாவிலிருந்து ஒதுக்கப் படுவான் எதாவது ஒரு தொலைகாட்சி தொடரில் எபிசோட் டைரக்டர் ஆவான் TRP இல்லையென வேலை போகும். இதற்கிடையில் தன் திறமையால் முன்னுக்கு வந்து ஒரு இயக்குனர் யார் கண்டார்கள் இவனிடம் ஏமாந்தவனாகவே இருக்கலாம் அவனிடம் உதவி இயக்குனாராக சேருவார் இதை விட வேறு என்ன தண்டனை அவனுக்குத் வர முடியும்
பரந்தாமா உன் நீதி மன்றமே தனி உன் தீர்ப்புகளும் தனி ரகம்
மகாலக்ஷ்மியும் புன்னகை புரிந்தாள்

டிப்பன் பாக்ஸ் – குறும்படம்

 

தனியார் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவன் . மதிய உணவு எடுத்துச் செல்ல நல்ல டிபன் பாக்ஸ் இல்லையே என்பதற்காக என்ன செய்கிறான் தெரியுமா? குறும் படத்தைப் பாருங்கள்!

 

அதிரடி அடுக்குமாடி

 

குவிகம் ஆசிரியர்  எழுதும் ” அதிரடி அடுக்குமாடி ” நகைச்சுவைத்  தொடர் லேடீஸ் ஸ்பெஷல்  மார்ச் இதழில் ஆரம்பம். படித்து மகிழுங்கள் ! 

 

 

 

 

 

 

பார்வை…! — நித்யா சங்கர்


Image result for பெண் பார்க்கும் படலம்

பெண் பார்க்கும் படலம்…

பெண் சுகுணாவின் பெற்றோர்கள் ராகவனும், மைதிலியும் ஓடியாடி வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை முரளியின் பெற்றோர்கள் ஸ்ரீதரன், வைதேகியின் முகங்களில் ஒரு குதூகலம், பூரிப்பு…

நமது வழக்கப்படி, தங்களது விருப்புகள், வெறுப்புகள், எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் – இவற்றையெல்லாம்
தனியாகப் போய் அரை மணி நேரம் விவாதித்து விட்டு வந்திருந்தார்கள் முரளியும், சுகுணாவும்.

சுகுணாவின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கம் கலந்த பூரிப்பைப் பார்த்த ராகவன் மைதிலிக்கு மனதில் ஒரு பரவசம்-
ஒரு நிம்மதி. முரளியின் முகத்திலே ஒரு திருப்தியின் நிழலைக் கண்ட ஸ்ரீதரன் வைதேகி முகங்களிலும் ஒரு நிம்மதி.

சொஜ்ஜி, பஜ்ஜி, பரிமாறப்பட்டது. டிபன் சாப்பிட்டுக் கொண்டே உலகச் சமாசாரங்களையெல்லாம் குதூகலமாக
அலசிக் கொண்டிருந்தார்கள் இரு வீட்டாரும்.

‘மாப்பிள்ளை.. நம்ம சமுதாயத்தின் முக்கியமான காவியங்கள் – ராமாயணமும், மகாபாரதமும். கடவுள் அவதாரங்-
களான ராமரும், கிருஷ்ணரும் உண்மையாகவே முக்கியமான நாயகர்கள். நீங்கள் லை·ப்லே ராமரா இருக்க விரும்பறீங்-
களா, இல்லே கிருஷ்ணரா இருக்க விரும்பறீங்களா..?’ என்று கேட்டார் ராகவன் திடீரென்று.

ஒரு விநாடி கூட தயக்கமின்றி, ‘இதிலென்ன சந்தேகம்..? கிருஷ்ணரா இருக்கத்தான் விரும்புவேன்..’ என்றான் முரளி.

‘அப்படியா..” என்ற ராகவன் முகத்தில் சிறிது வாட்டம். ஒரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு, மற்றவர்கள் பேச்சில்
கலந்து கொண்டார்.

‘ஓ… ரொம்ப டைம் ஆச்சு…. அப்ப நாங்க கிளம்பறோம். போய் கலந்து பேசி ·போன் பண்ணறோம்’ என்று எழுந்-
தார் ஸ்ரீதரன்.

மாப்பிளை வீட்டார் விடை பெற்றுக் கொண்டு போய் அரை மணி நேரம் ஆகியிருக்கும்.

‘எனக்கு என்னவோ இந்த இடம் சரிப்படும் என்று தோணவில்லை… ‘ என்றார் ராகவன் சிறிது வருத்தத்துடன்.

‘என்ன சொல்றீங்க..?’ என்று கேட்டாள் மைதிலி சிறிது அதிர்ச்சியுடன்.

இந்த இடம் நிச்சயமாகக் குதிரும் என்று கனவு கண்டு கொண்டிருந்த சுகுணாவும் அதிர்ச்சியோடு நோக்கினாள்.

‘இல்லே.. ஏகபத்தினி விரதனான ராமனை விட்டு விட்டு எப்போது கோபியர்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் கிருஷ்-
ணரின் வாழ்க்கைதான் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னாரோ.. அங்கேயே எனது மதிப்பிலிருந்து ஹன்ட்ரட் பர்-
ஸன்ட் விழுந்துட்டார்… நாம் இவளைக் கட்டிக் கொடுத்துட்டு அவர் கோபிகா கிருஷ்ணன் போல் இருந்துட்டார்னா..?
கொஞ்சம் சலனத்துக்கு ஆளாயிட்டார்னா நம்ம மகளின் கதி…?’ என்றார்.

மைதிலியின் மனதிலும் சிறிது குழப்பம் ஏறியது.

கனவுகளில் மிதந்து கொண்டிருந்த சுகுணாவின் மனதில் ‘ஒரு வேளை.. அப்பா சொல்வது போல் இருந்து விட்டால்..’
என்ற சந்தேகம் எழுந்தது. கனவுகளுடன் இருந்த அவள் முகம் வாடிச் சூம்பியது.

‘இப்போ என்ன செய்யப் போறீங்க..? என்ன சோல்லப் போறீங்க…?’ என்றாள் மைதிலி.

‘அவர்கள் போய் டிஸ்கஸ் பண்ணிட்டு ·போன் பண்ணறேன்னு சொன்னாங்க இல்லையா… அவர்கள் கால் வந்ததும்
ஏதாவது பதில் சொல்லி சமாளிப்போம்’ என்றார் ராகவன் தீர்மானமாக.

‘டேய்.. பெண்ணின் அப்பா ராகவன் கேட்ட கேள்விக்கு, நீ ஏகபத்தினி விரதனான ராமன் போல் வாழணும்னு சொல்-
லியிருக்கணும். உன் பதிலைக் கேட்டு அவர் முகம் சிறிது வாடி விட்டது. ஆனால் அதை அவர் சாமர்த்தியமாக
மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் தெரியுமா..?’ என்றார் ஸ்ரீதரன் முரளியை நோக்கி.

‘அப்பா உங்கள் பார்வையில் அப்படித் தோன்றலாம்.. பட் என் பார்வையில் இட் ஈஸ் டோடலி டி·பரண்ட்.. நீங்க
நம்ம காவியங்களைப் படிச்சீங்கன்னா, ராமர் இல்லற வாழ்க்கையிலே சந்தோஷமா வாழ்ந்த நாட்கள் ரொம்பக் கம்மி…
ஆனா கிருஷ்ணன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தார். என்னுடைய குடும்ப
வாழ்க்கையும் அப்படி சந்தோஷமா இருக்கணும்.. அதனாலே தான் அப்படிச் சொன்னேன். நீங்க அவங்களுக்கு ‘எஸ்’
ஸ¤ன்னு சொல்லிடுங்க…’ என்றான்.

‘இல்லடா… முறைப்படி பெண் வீட்டார்தான் ·போன் பண்ணி விவரம் கேட்கணும். அவங்க கால் வந்தா க்ரீன்
ஸிக்னல் குடுத்துடறேன்’ என்றார் குதூகலமாக.

ராகவனின் ·போன் காலுக்காக காத்திருந்தார்கள்.

 

இன்னும் சில பாடைப்பாளிகள் – களந்தை பீர் முகமது – எஸ் கே என்

களந்தை பீர் முகமது

Image result for இஸ்லாமியக் குடும்பம்

நெல்லை மாவட்டம் களக்காடைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகக் கதை, கட்டுரை, விமர்சனம் என பல தளங்களில் இயங்கி வருபவர். ‘காலச்சுவடு’  இதழின் ஆலோசனைக் குழுவில்  பணியாற்றுபவர். இலக்கியச் சிந்தனை, த.மு.எ.ச, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகள் பல இவரது பங்களிப்பை அங்கீகரித்துள்ளன

# # #

யாசகம் கதை இப்படித் தொடங்குகிறது

வாப்பா அன்று உற்சாகமாக வந்தார். முகத்தில் ஒரு மலர்ச்சி .அவர் செருப்பை கழட்டி போடும்போதே அந்தத் துள்ளல் தெரிந்தது. பொதுவாகவே வியாபாரம் இப்போதெல்லாம் நன்றாக இருப்பதாக அவர் சொல்வதை தவுலத் கேட்டிருக்கிறாள் வாங்கி வந்த காய்கறிகள் அன்றைக்கே விற்றுவிட்டால் நல்ல வியாபாரம் இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்தால் வியாபாரத்தைப் பெருக்கிவிடலாம் என்று வாப்பா சொல்வதும் தவ்லத்திற்குத் தெரியும்.

ஒரு சிறிய இஸ்லாமியக் குடும்பத்தின்  மூத்த பெண் தவ்லத்  பார்வையில்  கதை போகிறது. தவ்லத் திருமண வயதில் இருக்கிறாள். அதுவரை தவ்லத்தின் நிக்காஹ் குறித்து வாப்பா வெளிப்படையாகப் பேசியது இல்லை என்றாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தவ்லத்தைத் தள்ளிவிடவேண்டும் என்கிற கவலை அவருக்கு உண்டு.  அது முடிந்து  சில வருடங்கள் கழித்து,  பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கும்  இளையவளையும் தள்ளிவிட்டக வேண்டுமே?     ஒரே மகனான   புகாரி பற்றி வாப்பாவிற்கு எப்போதும் புகார் தான்.  மனம்கொண்டால் தான் தந்தையின் கடையைக் கவனித்துக் கொள்வான். பெரும்பாலும் ஊர்  போக்கிரிகளுடன் ஊர் சுற்றுவது அவன் வாடிக்கை.

இதுவரையில் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சரியாக இருக்கின்ற வருமானம்.  எப்போதும் நல்ல சாப்பாடு போட்டு இருக்கின்றார் வேறு எந்த விதமான வசதிகளும் பெருகி விடவில்லை. டெலிபோன். டெலிவிசன் எல்லாம்  இன்றியமையதாகிவிட்டப்  பிறகுதான் அவை வீட்டிற்கு வந்தன.

தந்தையின் மலர்ச்சிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று தவ்லத் யோசிக்கிறாள். வியாபாரம் பெருக ஏதேனும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம். அல்லது ஏதேனும் வரனைப் பற்றிய தகவல்களுடன் வாப்பா வீட்டிற்கு  வந்து இருக்கலாம். என்னவென்று அவர் தான் சொல்ல வேண்டும். அதுவும் உம்மா மூலமாகத்தான்  தெரியப்படுத்துவார்.

வாப்பா  ருசித்துச் சாப்பிட்டார்.  வேறு எங்கெல்லாமோ பார்வைகளில் பார்வைகளைத் திருப்பி, திரும்பிய இடமெல்லாம் பார்வையை அப்படியே வைத்துவிட்டு வாய்க்குள் போன உணவை மென்று கொண்டிருக்கிறார் இது புது வாப்பா அவர் இன்று சாப்பிடுவது ரொம்ப அழகாக இருந்தது தவ்லத்துக்கு.

 

 

வாப்பா கொண்டுவந்திருக்கும் நல்ல செய்தி எதுவாக இருக்கும் என்று மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருந்தால் இருந்தாள் தவ்லத்.  இந்த வருடம் ஹஜ் யாத்திரை போக இருப்பதாகத் தெரிவிக்கிறார் வாப்பா.  அவருடைய உற்சாகம் சரியே. அவரது தூரப் பார்வையில் ஹஜ் யாத்திரை மட்டுமே இருந்தது.

அதை புரிந்து கொண்ட அடுத்த கணம்தான் தவுலத் உணர்ந்தாள் தனக்கான மணவாளன் அந்தப் பார்வையில் இல்லை என்பதை!  இப்போது அவள் மட்டுமே ஒரு குதிரையில் மெதுவாக செல்கிறாள் மறுபடியும் மரங்கள் நிறைந்த ஒரு பொட்டல் வெளி. பரவாயில்லைமுதலில் அப்பாவின் ஆசை நிறைவேறட்டும்.

எப்படியோ மார்க்கக்   கடமையை நிறைவேற்ற நினைக்கிறார். வாப்பா. பல கஷ்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு துணிச்சலாக ஹஜ்  போவதே பக்தியின் அடையாளம் என்பது வாப்பாவின் முடிவு . இதுபோல வாப்பாவின் ஹஜ் பயணம் பற்றி மற்றவர்கள் சொல்லக் கூடும்.   சிலர் ஹஜ் அடிக்கடி போய் வருகிறார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாமியரின் மற்றொரு கடமையான  ‘ஜகாத்’   கொடுப்பதில்  ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டும் உண்டு.

வாப்பாவின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி இருபது நாட்களே ஆகியிருந்தன ஹஜ் போவதற்கான பணம் கட்டாயம் சேர்ந்து இருக்காது.   உம்மா  வந்ததும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து விட்டாள்.  நபிஸஸ் அம்மா ‘யா அல்லாஹ் இது என்ன சோதனை. இரண்டு குமருகள்  வீட்டிலே இருக்கும் போது  எப்படி சாத்தியம்?’ என்கிறாள். 

ஆனால் யாத்திரை செய்ய வாப்பா மிகவும் உறுதியாக இருக்கிறார். ஊரில் எங்கே திரும்பினாலும் ஹாஜிமார்களாக இருக்கிறார்கள். தானும் அதுபோல் ஆகவேண்டாமா என்பது வாப்பாவின் கேள்வி.

நீண்ட ஜிப்பா, வெள்ளைக் கைலி,  நீங்காத தொப்பி மற்றும் நீண்ட வெண்தாடி  .. இவைகளுடன் தோன்றும் ஹாஜிமார்களுக்கு இடையில் தொப்பியில்லாமல் பான்ட் ஷர்ட் போட்டு தாடி மட்டும் கொண்ட ஹாஜிமார்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஹாஜிமார்களுக்கும் வாய்தா, வழக்கு என்று வந்துவிட்டது. எந்தச் சொத்துத் தகறாரிலும் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு ஹாஜிமார்களோ மும்மூன்று ஹாஹிமார்காகளோ இருக்கிறார்கள். ஒரு ஹாஜியார் வீட்டுப் பெண் இன்னொரு ஹாஜியாரால் தலாக் செய்யப்பட்டு திரும்புகிறாள். பஸ் ஏறும்போது அடிதடி என்று  ரத்தக் காயத்துடன் திரும்பும் ஹாஜிமார்களும் இருக்கிறார்கள்.    இதையெல்லாம் அண்ணன் புகாரி சொல்லும்போது, தவுலத் ‘ஹாஜியார் மேல் அண்ணனுக்குப்  பொறாமை’ என்று நினைத்துக்கொள்வாள். மார்க்கத்திற்கு எதிராகப் பேசுகிறானே என்ற எரிர்ச்சலும் குடும்பத்தினருக்கு உண்டு.

புகாரி வீட்டிற்கு வருவதற்கு என்று எந்த குறிப்பிட்ட நேரமும் கிடையாது.  அவனால் குடும்பத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவன் பேசுவது எல்லாமே ஏறுக்கு மாறானது என்பது தவ்லத் உட்பட எல்லோரின் எண்ணம்.  

 

 

 

‘ஹஜ் பணத்திற்கு என்ன செய்யப்போறீங்க?’ என்று கேட்கிறார் ம்மா நபீஸ்.  

இதைக் கேட்டதும் அவர் தாடியைத் தடவினார். ‘ கடனா பணம் கேட்டுப் பார்த்தேன். ஒண்ணும் நடக்கல.  கடைய எம்பேர்ல எழுதித் தந்தீங்கன்னா பணம் தாரேன்னு சொல்றான் எலெக்ட்ரிக் கடை மூசா. வேறு எங்கேயும் கடன் கெடைக்கலேன்னா அப்படித்தான் செய்யணும்!’ 

 “யா ரஹ்மானே! நீங்க சொல்றது ஆண்டவனுக்கே பொறுக்காதே” என்று பதறிவிடுகிறார் நபீசம்மா. கடையையும் கொடுத்துவிட்டால் அப்புறம்  வருமானமே இல்லாமல்  என்ன செய்வது என்று பயம் வந்துவிடுகிறது. மேலும் இரண்டு பெண்களின் நிக்காஹ் எப்படி நடக்கும்?

அண்ணன் புஹாரி சொல்வதிலும் உள்ள நியாயம் இப்போது தவ்லத்திற்குப் புரிகிறது .

தவ்லத்திற்கு மூச்சு முட்டிவிட்டது.  அவள் சட்டென்று விலகிப்போய் அழ ஆரம்பித்துவிட்டாள்.  புகாரி காக்கா  உடனே இங்கு வந்து குதிக்க வேண்டும் என்று அங்குமிங்குமாக அழுத கண்ணீரோடு பரபரத்துப் பார்த்தாள்.

நபீசம்மாவும் அழ ஆரம்பிக்கிறாள்.

 “என் புள்ளைங்களை நான் காப்பாத்துவேன். எப்படியாவது காப்பாத்துவேன். இந்தப் பார்- இந்தப் பார்… தெருவில நின்னு பிச்சையெடுத்தாவது – இப்படி பிச்சையெடுப்பேன்” என்று தன் தோளில் கிடந்த துண்டை யாசகம் செய்பவனைப் போல நடித்து நீட்டிக் காட்டினார்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நேரத்தில் யாசிக்கும் குரல்களோடு தன் வாப்பாவின்  குரலும் ஒலிப்பதுபோல் தவ்லத்திற்கு  தோன்றுகிறது  

தொழுகை முடிந்து கூட்டம் கூட்டமாக பள்ளிவாசல்களிருந்து  கரைந்து வழியும் தொழுகையாளர்களிடமிருந்து ஏதோ ஒரு சில கைகள் அவ்வப்போது அபூர்வாமாய் நீண்டு சின்னச் சின்ன  கரன்ஸிநோட்டுகளைக்  கைமடக்காக போட்டபோதும், விரித்துப் பிடித்த துணியில் இன்னும் எவ்வளவோ வெற்றிடம்.  வாப்பா.. ம்மாவின் குரல்களும் சளைக்காமல்  கேட்டபடியே இருக்கின்றான் நீண்ட காலத்துக்குமாக.

என்று முடிகிறது .

# # #

இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் இல்லாத இவர்கதைகளும் நிறைய உண்டு.  தவிர, இஸ்லாமியக்  குடும்ப மற்றும்  சமுதாயப் பின்னணி பல   கதைகளில் இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகள் அனைத்து மதத்தினருக்கும் பொதுப்படையாகப்  பொருந்தும் என்று தோன்றுகிறது. இந்தக் கதையும் அப்படித்தான்.

வில்லன்

Image result for மகாபாரதத்தில் அர்ஜுனன் வில் சுயம்வரம்

 

வில்லன் என்பது அழகிய தமிழ் வார்த்தை

கலித்தொகை 37, கபிலர்

 

கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட

கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,

“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for டிப்ரெஷன்

 

சுமதியை, அவள் தத்தெடுத்திருந்த பெண் சுபா எங்களிடம் அழைத்து வந்தாள். சுபாவின் கையை இறுக்கிப் பற்றியபடியே சுமதி வந்தாள். மகன் முருகனும் கூட வந்தான்.

இரண்டு வருடமாகச் சுமதிக்கு அடிக்கடி தலைவலி. அத்துடன், படபடப்பு, தூக்கம் சரியாக வருவதில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை என்பாளாம். தனிமையில் அதிகரிக்கும், கூட யாராவது இருந்து விட்டால் எந்த விதமான தொந்தரவும் இருக்கவே இருக்காதாம். அப்பாவின் மரணத்திற்குப் பிறகே

இப்படி நடப்பதாகச் சொன்னார்கள்.

மனோதத்துவ பரிசோதனையில் இந்த குணாதிசயங்கள் “ந்யூராட்டிக் டிப்ரெஷன்” (Neurotic Depression)இன் அறிகுறி என்பது ஊர்ஜிதமானது. இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்பதை இங்குப் பகிரப் போகிறேன்.

சுமதி வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலே இருப்பவள். ஒரு காலத்தில் செழித்து வாழ்ந்த விவசாய குடும்பம். இப்போது அவள் பட்டணத்தில் வாழ்வைத் தேடி வந்ததின் விளைவு!

இன்றைய தேதியிலும் அவள் உடன் பிறந்தவர்கள் விவசாயிகள். எண்பது வயதிலும் அப்பா தன்னால் முடிந்ததைச்செய்து வருகிறார். எழுவது வயதான அம்மா, கணவருக்கு ஈடு கொடுப்பவள்.  கடுமையாகப் பேசி விமர்சிப்பதால், பலர் இவளுடன் உறவை முறித்துக்கொண்டார்கள்.

சுமதியின் இரண்டு அண்ணன்மார்களும் கல்யாணத்திற்குப் பிறகு தங்களுடைய குடும்பத்துடன் தனியே வசிக்கிறார்கள். அம்மாவின் புண்படுத்தும் வார்த்தைகளே இந்த முடிவிற்குக் காரணம் என்று கூறினார்கள். மூன்றாவது அண்ணன் விவசாய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்.

தங்கை பிரசவத்தில் இறந்துவிட்டாள். அம்மாவின் கண்டிப்பினால் அண்ணன்கள் சுமதியிடம் அதிக பாசத்தைக் காட்டினார்கள், அவளுக்குக் கல்யாணம் ஆகும் வரையில்.

அண்ணன்கள் விவசாயத்தில் கை கொடுக்க, சுமதி சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என்ற பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வாள். சுமதியை இரண்டாம் வகுப்புடனும் அண்ணன்களை ஐந்தாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விட்டார்கள். சுமதிக்குத் தோழிகளுடன் பேச, விளையாட அனுமதி கிடையாது.

நான்கு வருடங்களுக்கு விளைச்சல் குறைந்து விட்டதில் குடும்பம் சற்று கஷ்டப்பட்டது. விவசாயத்தின் வருமானத்தில் தான் சுமதி கல்யாணத்திற்குச் சேமித்து வந்தார்கள். அந்த சேமிப்பிலிருந்து கஷ்டத்தைப் போக்க எடுக்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயம் பார்த்து, சுமதியின் கல்யாணத்திற்கு வரன்கள் வந்தன. அவர்களில் ஒருவர், இருபது வயதான சுந்தரம். அவன் எந்த செலவும் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முன் வந்தான். சுமதியைப் பற்றி கேள்விப் பட்டதால் தங்களது குடும்பத்திற்குப் பொருத்தமாக இருப்பாள் என்பதால் தான்.

கல்யாணம் ஆனது. அப்போது சுமதியின் வயது பதினாறு. சுந்தரம் குடும்பத்தினரும் விவசாயிகள். அவன் மூத்த மகன் என்பதால் தன் பெற்றோருடன் இருந்தான். கூட சுந்தரத்தின் இரு தம்பிகளுக்கும். தங்கைகளுக்கும்  கல்யாணம் ஆகிவிட்டன.

சுந்தரத்தின் பெற்றோர் வயோதிக நிலையிலிருந்ததால் வேலைகளைப் பிள்ளைகள் பங்கு போட்டிருந்தார்கள். சுமதியின் கைப்பக்குவம் எல்லோருக்கும் பிடித்திருந்ததால், அவளுக்குச் சமையல் கட்டு என்று முடிவானது. சுந்தரம் ஆதரவாக இருந்ததால் எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சென்றாள். எல்லோரும் அவளைப் புகழ்ந்து பேசினார்கள்.

வாழ்க்கை இவ்வாறு நல்லபடி போய்க் கொண்டிருந்தது. திருமணம் ஆகி ஏழு எட்டு வருடங்கள் ஓடின. குழந்தை பிறக்கவில்லை.  சுந்தரம் அதை ஒரு விஷயமாகக் கருதவில்லை. ஆனால் சுமதியின் சுந்தரத்தின் சகோதரி உஷா இதைப் பற்றி தன் கருத்தைப் பேச ஆரம்பித்தாள். தன் பெண்ணை இரண்டாவது தாரமாகக் கட்டித் தருவதாகக் கூறினாள். சுந்தரம் சரியென்று சொல்லவில்லை. சுமதி மிகவும் பயந்து விட்டாள்.

உஷா மிகப் பிடிவாதமாக வற்புறுத்தினாள். திருமணத்திற்கு சம்மதித்த சுந்தரம், சுமதியை விவாகரத்துச் செய்ய மறுத்தான். மறு கல்யாணத்திற்குப் பின்னும் அங்கேயே அவள் தங்கும்  படி செய்தான்.. சுமதி இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஏனென்றால் அவளுடைய அம்மா வீட்டைப் பொறுத்தவரை, அவரவர் தன் குடும்பத்தில் வருகிற பிரச்சனைகளை தானே சமாளிக்க வேண்டும் என்று. தீர்மானமாக இருந்தார்கள் .

சுந்தரத்திற்கு மறு திருமணம் நடந்த அடுத்த வருடமே இரண்டாவது மனைவி    ஆண்மகவை ஈன்றாள். முருகன் என்ற பெயர் சூட்டினார்கள். சுந்தரமும் அவனுடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போவதால் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சுபாவுடையதானது. இவளிடமே இருப்பதால் முருகன் அவளை “அம்மா” என்றே அழைத்தான். சுமதி பூரித்துப் போனாள். 

சுந்தரத்தின் மற்றொரு தங்கை தனக்குப் பிறந்த பெண் கருநிறம் என்றதால் அடியோடு அந்தக் குழந்தையை வெறுத்தாள். இதை சுமதி கேள்விப் பட்டதும் அந்தக் குழந்தையை தானே தத்தெடுத்துக் கொண்டாள்.  இவள் தான் சுபா. என்றுமே சுமதி பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டாள்.

இப்படி மூவரானது சுமதியின் உறவுகள். அந்த இன்னொரு தங்கை வசதியானவளாக இருந்ததில் எப்போதாவது பணம் கொடுப்பாள். சுந்தரம் வீட்டின் ஒரு அறையை இவர்களுக்கு என்று வைத்தார்கள். குழந்தைகளை வளர்க்க சுமதியும் , தையல், பூத் தொடுப்பது  போன்ற  கைத் தொழில்கள் செய்ய ஆரம்பித்தாள்.

இவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில் சுந்தரத்திற்கு வலது பக்கத்தில் பக்கவாதம் வந்தது. சிகிச்சை செய்து ஒர் அளவு குணமாகிக் கொண்டிருந்தான். ஆனால் வேலைக்குப் போக முடியவில்லை. சுந்தரத்தினால் இனி சம்பாதிக்க முடியாது என கருதினாள் அவனுடைய இரண்டாவது மனைவி. விவாகரத்து பெற்று அல்லது  சுந்தரத்தைத் துறந்து அவர்கள் பக்கத்தில் குடியிருந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டாள். 

சுமதி தன்னால் முடிந்தவரை உழைத்து, சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டு, சுபா-முருகன் இருவரையும் படிக்க வைத்தாள். சுபாவிற்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்தாள். சுந்தரத்தின் இரண்டாவது தம்பி சுபாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அவன் நடத்தை சுமதிக்குப் பிடிக்காதலால், அதைத் தட்டிக் கழித்து விட்டாள். அவன் சுமதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.

சுபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து முடிக்கையில் முருகன் ஸ்கூல் முடித்திருந்தான். மேற்கொண்டு டிப்ளோமா படிக்க விரும்பினான். பணப் பற்றாக்குறை. ஆனால் அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று சுமதிக்கு இருந்தது. சுமதி இவ்வாறு பொறுப்புகளை தனி ஒருத்தியாக ஏற்பதைப் பார்த்து, மனம் சோர்ந்து சுந்தரம் மரணம் அடைந்தான். அன்றிலிருந்து பகிர யாரும் இல்லை என்பதை சுமதி உணர்ந்தாள். மனம் வருந்தியது.

முருகனை மேற்கொண்டு படிக்க வைக்க ஆசைப் பட்டாள். வழி தெரியவில்லை. எங்கே தன்னுடைய இயலாமையினால் படிப்பு நின்று விடுமோ என்று நினைத்து வாடிப் போனதில் சுமதிக்கு மன உளைச்சல் நேர்ந்தது. இந்த நேரத்தில் தான் சுபா அவளை எங்களிடம் அழைத்து வந்தாள்.

முருகனுக்கு தன்னால் இப்படி நேர்ந்தது என்ற குற்றப் மனப்பான்மை வாட்டியது. அவனையும் சுமதியுடன் கூடவே பார்க்கத் தொடங்கினேன். முருகன் படிக்க விரும்புவதை ஊக்கப்படுத்தும் வகையில் சுமதியை யோசிக்கச் செய்தேன். அவளுக்கு உறுதுணையாக முருகன் இருக்கும் படியான பாதைகளைப் பற்றி அவர்களை யோசிக்கச் செய்தேன். 

சுமதி அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் வங்கியில் விசாரிக்க முடிவெடுத்தாள். முருகன் தன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் பேச முடிவெடுத்தான். மேற்கொண்டு முன்னேற பாதை இருக்கிறது என்று தெரிய வந்ததே சுமதியை அசுவாசப் படுத்தியது. இரண்டு நாட்களில் திரும்பி வந்தார்கள். வங்கிக்குத் தேவையான ஆதரவை சுமதியின் பூ வாங்கும் வாடிக்கையாளார்  ஒருவர் செய்வதாகச் சொன்னாள்.

முருகன் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததை காலேஜ் தலைமை ஆசிரியர் கவனித்து படிப்பிற்குப் பண உதவி (scholarship) இருப்பதைப் பற்றி கூறினார். இதுபோன்ற சலுகைகளைப் பற்றிய பல தகவல்களைத் தந்தார். இந்த தகவல்கள்   புரிய வர, சுமதி அமைதி அடைந்தாள்.

அம்மாவும் மகனும் (வளர்ப்பு மகன் என்ற சாயல் எதிலும் தென் படவே இல்லை) மிக சந்தோஷப் பட்டார்கள். முருகனின் கவலை, தான் படிக்க வெளியூர் போனால் யார் தன் அம்மாவைப் பார்த்து கொள்வார்கள் என்று. இருவருக்கும் தெரியாமல் சுபா என்னைச் சந்தித்தாள்.

சுபா தன் கணவனுடன் வந்தாள். இருவரும் அந்த இரண்டு வருடம் சுமதி தங்களுடன் இருப்பதை விரும்பவதாக தெரிவித்தார்கள். சுமதி இதை ஒப்புக் கொள்ள மறுப்பதாகச் சொல்லி சுபா வருந்தினாள். இவர்களை சுமதி முருகனுடன் சேர்ந்து வரச்சொல்லி அனுப்பி வைத்தேன்.

அதற்கு முன்பு சுமதி ஸெஷனுக்காக என்னிடம் வந்தாள். தனக்கு மனத் தோழனாக சுந்தரம் இருந்ததைப் பற்றி விளக்கினாள். சமீப காலமாக தனக்குப் பேசி, பகிர யாரும் இல்லாதது போல இருப்பதாகக் கூறினாள். இதை விலாவாரியாகப் பேச தன்னுடைய கூடப் பிறந்தவர்களைப் பற்றி பகிரச் செய்தேன்.

கல்யாணம் ஆகும் வரையில் கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக, மன ஒற்றுமையுடன் இருந்ததை ஞாபகம் செய்யச் செய்ய அவர்களுடன் உறவை மீண்டும் புதுப்பிக்க நினைத்தாள். செய்தாள். இதுவும் மனதிடத்தை அதிகரித்தது.

கூடப் பிறந்தவர்களை சந்திக்கையில் சுமதி பலவற்றை கவனித்தாள். குறிப்பாக, ஒவ்வொருவரும் தன்னுடைய பிள்ளைகளுடன் இருப்பதை. சுமதியை தங்களுடன் சுபாவும் கணவரும் அழைத்து வந்தார்கள். அவர்களுடன் இந்த இரண்டு வருடம் சுமதி இருந்தால் அது எப்படி தனக்கும் உதவும் என்பதை வர்ணித்தார்கள். சுபாவும் கணவரும் உற்சாகத்துடன் சொன்னதே சுமதியை உருக்கியது.

முருகனின் மேல் படிப்பு பக்கத்து டவுனில் அமைந்தது. அங்கேயே ஹாஸ்டலில் இருக்கச் சொன்னார்கள். இருப்பதற்கு முருகன் முடிவு செய்தான். அடுத்த மூன்று செஷங்களில் சுபாவுடனும் கலந்து ஆலோசித்து அம்மாவின் இருப்பிடம், நிம்மதி பற்றி முடிவெடுக்கப் பட்டது. சுபாவுடன் இருக்க சும்டஹியிடம் பரிந்துரைத்தான். சுமதி சுபாவுடன் இருக்க ஒப்புக் கொண்டாள். மனம் நிம்மதி அடைந்தாள்.

 சுந்தரம் இல்லாததற்கு ஈடுகட்ட முடியாது எனத் தோன்றியது. சுபா வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எட்டு பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு விட்டு அழைத்து வருவதென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டாள். இனி மீதி வாழ்க்கை இப்படி பல பிள்ளைகளுக்காக என்ற எண்ணத்தை ஏற்றுக் கொண்டு மனத்தெளிவுடன் வாழ்ந்தாள் சுமதி.

 

கொரானா உயிர்க்கொல்லி

சீனாவில் ஆரம்பித்து  இன்று உலகத்தையே  அச்சுறுத்தும் கொடிய விஷக் கிருமி கோவிட் 19 என்கிற கொரானா நோய். !

இதை மூன்றாம் உலக யுத்தம்  எனலாம்!

உலகளாவிய தொற்று நோய் ( PANDEMIC) என்று சொல்லப்படுகிறது.

இதைப்பற்றி விவரிக்கிறது இந்த அறிவு பூர்வமான காணொளி !

 

 

 

 

 

சுஜாதா குவிஸ் – ( பதில் அடுத்த பக்கம்)

சுஜாதா குவிஸ்

Image result for சுஜாதா

 

  1. சுஜாதாவை வளர்த்த அவரின் அப்பாவழிப்பாட்டியின் முழுப்பெயர் என்ன? (பல இடங்களில் சுஜாதா இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்) 

 

  1. சுஜாதாவின் அப்பா இவரிடம் கேட்கவேண்டும் என்று எழுதிவைத்துக்கேட்கமுடியாமலேயே இ|றந்துவிட்டசப்ஜெக்ட் என்ன? –

 

    3.அந்தக் கேள்வியெல்லாம் நாங்க கேக்கறதிலை” என்னும் அதிர்ச்சி வரிகளுடன் முடியும் சுஜாதாவின் சிறுகதை எது? –

 

  1. லாயர்கணேஷ் தோன்றிய முதல் கதை எது? அடுத்த சில கதைகளில் வரும் அவரின் அஸிஸ்டெண்ட் பெயர் என்ன? –

 

  1. மகாவிஷ்ணுதான் தரிசனம் தர விரும்புகிறாரோ என்று பார்த்தால்” என்னும் சுவாரஸ்ய வரிகளில் தொடங்கி சுஜாதா எழுதினது என்னசப்ஜெக்ட்?

 

  1. சுஜாதா பல இடங்களில் மேற்கோள் காட்டிய பெண் கவிஞர் யார்? –

 

  1. நிம்ஜோஇண்டியன்டிஃபன்ஸ் ஆடுவியா” என்று கேட்கும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா?

 

  1. Dying is an art like everything else I do it exceptionally well –சுஜாதா மேற்கோள் காட்டிய இந்தக்கவிஞர் யார்?  இதை மேற்கோள் காட்ட வேண்டிய உந்துதல் என்னவாக இருக்கும்?

 

  1. சுஜாதாவின்லாண்டரிக்கணக்கில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன? –

 

  1. வட்டநிலாப்பின்னணியில்,வண்ண ஜரிகை நிலத்தில் அந்தத்தோணி அசைந்து அசைந்து வந்தது. எங்கும் இருட்டு. காட்டைப்போல இருட்டு. மசியைப்போல இருட்டு. சாவைப்போல இருட்டு.” – இந்த அபார வரிகள் எந்தக்கதையில் வருகின்றன?

 

  1. சுஜாதா எழுத்தாளர் ஆனபிறகு எழுதிய முதல் நாடகத்தின் பெயர் என்ன?

 

  1. சுஜாதா – பூர்ணம்விஸ்வனாதன் கூட்டணியில் வந்த முதல் நாடகம்  எது?

 

  1. திராவிடன் பண்டுதானே?அது பிராவிடண்ட பண்ட் , இங்க்லீஷ் பேப்பரை மாவு சலிக்கிறதுக்கு உபயோகப் படுத்தினா அவ்வளவுதான் வரும். இது எந்த நாடகத்தில் வரும் வசனம்?

 

  1. கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் வரும் எதிர்கால மனிதனின் பெயர் என்ன?அவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் ?

 

  1. இந்த நாடகத்தைசெட்டுக்கள் ஏதும்  இன்றியே ஒளியால் பிரித்து நடிக்க முன்வந்தாலும் எனக்குச் சம்மதமே ! – சுஜாதா எந்த தன் நாடகத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்?

 

  1. அலன்பெக்கர் எழுதிய டோலரஸ் என்ற நாடகத்தின் பாதிப்பில் சுஜாதா எழுதிய நாடகம் எது?

 

  1. ஜே பிமில்லரின் பிரபல டெலிவிஷன்  நாடகத்தை ஒட்டி எழுதிய நாடகம் எது?

 

  1. சுஜாதா என்கிற ரங்கராஜன்எங்கு பிறந்தார்?

 

  1. முதல் கதை எந்தப் பத்திரிக்கையில் வந்தது?

 

  1. சுஜாதாவுடன் திருப்பூர் கிருஷ்ணன் பணியாற்றியது எந்தப் பத்திரிகையில்?

 

21 . கணையாழியில் சுஜாதா கடைசிப்பக்கத்தை எவ்வளவு காலம் எழுதினார்?

 

22 .   அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு வரியில் சுஜாதாவை ஊக்குவித்த பத்திரிகை ஆசிரியர் யார்?

 

  1. ஒரு நாணயம் (coin) பற்றி சுஜாதா ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எந்த நாணயம் அது?

 

  1. .”என்னே இந்த சமூகத்தின் கொடுமை?”என்று சுஜாதா ஒரு கதையில் எழுதாமல்இருந்ததற்காக தன்னைப் பாராட்டிக் கொள்ளும் கதை எது?

 

  1. . “கணவனின் சட்டை என்பதே ஒருகிறக்கத்தைஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள். முதுகுப் பக்கத்தில் லேசான பர்பியூம் வாசனை. நம் வீட்டில் இந்த வாசனை கிடையாதே? ”  இது எந்தக் கதையில் வருகிறது?

 

  1. சுஜாதா எழுதியதிமலா என்ற சயின்ஸ் பிக்‌ஷனில் திமலா எதை உருவகப் படுத்தியிருக்கிறது?

 

  1. .சுஜாதாவின் எந்தக் கதை குமுதத்திலும் பின்னர் குங்குமத்திலும் பிரசுரிக்கப்பட்டது? அதற்கு இலக்கியச் சிந்தனையின் விருது கூட கிடைத்திருக்கிறது. 

 

  1. .விகடனில்வந்த ஒரு கதை டி வியில் நாடகமாக வந்துள்ளது?

 

  1. இந்த கதையைப் படித்து விட்டு,உங்க வீட்டிற்கு (கொல்ல) வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம். எந்தக் கதை ?

 

  1. இலட்சம் புத்தகங்கள் என்கிற சிறுகதை எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது?

 

  1. தலைமைச் செயலகம் என்று எதைப்பற்றி எழுதினார்?

 

  1. சுஜாதாவின் கருப்பு வெளுப்பு சிவப்பு கதையின் speciality என்ன?
  2. எமர்ஜென்ஸிபற்றி சுஜாதா பாடிய நேரிசை வெண்பாவின் முதல் சொல் எது ? 

 

  1. . சிறுவர் இலக்கிய வரிசையில் சுஜாதா எழுதிய நாவல் எது ?

 

  1. எல்லோருக்கும் தெரிந்த ஆனால் தெரியாதது மாதிரி நடிக்கும் சுஜாதாவின் பிரபலமானஜோக்கில்வரும் நாடு எது? 

 

  1. சுஜாதாவின் கோணல் பார்வை என்று அவரை விமர்சித்து புத்தகம் போட்ட எழுத்தாளர் யார் ? 

 

  1. ஓலைப்படாசுஎன்ற கதையின் மெயின் தீம் என்ன ? 

 

  1. சுஜாதாவின் முதல் நாவல் எது?

 

  1. . சுஜாதா தயாரித்த தமிழ்ப் படம் எது?

 

  1. சுஜாதாவின் எந்தத் தொடர் கதைக்காக அவருக்குகட்-அவுட்வைத்தார்கள்? 

 

  1. பத்துசெகண்ட்முத்தம் எதைப்பற்றி? 

 

  1. 14 நாட்கள் எதைப் பற்றி?

 

  1. சுஜாதா எழுதியஒரெழுத்துநாவலின் பெயர் என்ன? 

 

  1. சுஜாதாவுக்குத்தமிழில் பிடித்த 6 வார்த்தைக் கதை? 

 

  1. சுஜாதா ஒரு நடிகர்-நடிகைதிருமணத்திற்குசென்று எடுத்த போட்டோ கற்றதும் பெற்றதுமில் வந்திருக்கிறது. யார் அவர்கள்?                                 
  2. காகித சங்கிலிகள் என்ற நாவல் எந்த வியாதியை அடிப்படையாக வைத்து எழுதியது?

 

  1. கொலையுதிர்காலத்தில் சுஜாதா பயன்படுத்திய விஞ்ஞானக் கோட்பாடு எது? 

 

  1. கணையாழியில் சுஜாதா எழுதிய

 “பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்

 முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி

 பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர

 வேண்டாம் வரதட் சணை.”

என்ற வெண்பாவிற்கு  ஈற்றடி கொடுத்தவர் யார்? 

 

  1. கதை கட்டுரை தவிர முவரதராசனார்– சுஜாதா இருவருக்கும் உள்ள ஒருஒற்றுமை என்ன? 

 

50 நைலான் கயிறு கதையில் டெலிபோன் எண்ணின்  முடிச்சை அவிழ்ப்பது எது? 

 

 

 

 

 

 

சுஜாதா குவிஸ் -விடை

Image result for சுஜாதா

 

சுஜாதா குவிஸ் ( விடை)

 

  1. லட்சுமி அம்மாள்
  2. பையானிக்ஸ்
  3. மஹாபலி
  4. பாதி ராஜ்யம்,நீரஜா
  5. ரெடீனாடிடாச்மெண்ட்
  6. எரிக்காஜாங்
  7. ரோபோ- யம் என்று பெயர். ஆகாயம் என்னும் நாடகம்
  8. சில்வியா பிளாத், அவர் தற்கொலை செய்துகொண்டார்
  9. கர்ச்சீஃப்1 (ரத்தக்கறையுடன்)
  10. கரையெல்லாம் செண்பகப்பூ
  11. முதல் நாடகம்
  12. ஒரு நாடகம் அல்ல;இரு நாடகங்கள் : ஒரு கொலை – ஒரு பிரயாணம்
  13. கடவுள் வந்திருந்தார்.
  14. ஜோ,22ம் நூற்றாண்டு
  15. டாக்டர்நரேந்திரனின் வினோத வழக்கு
  16. சரளா
  17. முயல்
  18. திருவல்லிக்கேணியில்
  19. 1953இல் சிவாஜி என்ற பத்திரிகையில் வந்தது.
  20. அம்பலம் என்கிற இணையதளப் பத்திரிகையில்
  21. 35வருடங்கள்
  22. எஸ் ஏ பி அண்ணாமலை (குமுதம்)
  23. இரண்டனா
  24. அரிசி
  25. வாஷிங் மெஷின்
  26. திருமலாதிருப்பதி
  27. நிஜத்தைத் தேடி
  28. முதல் மனைவி
  29. பாலம்
  30. யாழ்ப்பாணம்
  31. மூளை
  32. பாதியில் நிறுத்தப்பட்டது .
  33. மீசா
  34. பூக்குட்டி
  35. மெக்ஸிகோ
  36. வெற்றியழகன்
  37. சிறுவனின்பிளாக்மெயில் 
  38. நைலான்கயிறு 
  39. லிட்டில்ஜான் / நிலாகாலம் / பாரதி
  40. கனவுத் தொழிற்சாலை
  41. ஒலிம்பிக்ஸ்100 மீட்டர் ஓட்டம் 
  42. இந்தியா பாகிஸ்தான் போரைப்பற்றி
  43.  ஆ 
  44. ஒருஊர்லஒரு நரியாம். அதோட சரியாம்  
  45. சூர்யாஜோதிகா
  46. கிட்னிசெயல் இழப்பு, nephrology 
  47. ஹோலோகிராம்
  48. நா பார்த்தசாரதி
  49. இருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்
  50. ஜாக்பாட்

எல்லிஸ் டங்கனின் தமிழ்நாடு 1930 களில்

எல்லிஸ் டங்கன் ( யார் தெரியுமா?    எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவர் . சீமந்தனி, இரு சகோதரர்கள்,அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி  மந்திரி குமாரி   உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர். அமெரிக்கர் ) 

தென்னிந்திய  வாழ்க்கை என்ற அவர் குறும்படத்தை பாருங்கள் ! 

அவர் படத்திலிருந்து சுட்ட காட்சிகள் மாதிரி இருக்கிறது. 

அவரே  பின்குரல் !

 

எமபுரிப்பட்டணம் – அறிவுப்பு

 

எமபுரிப்பட்டணம் இரு வடிவங்களில் வந்துகொண்டிருப்பது குவிகம் வாசகர்களுக்குத் தெரியும். 

முதல் பகுதி சூரிய புத்திரனாக  எப்படி எமன் பிறக்கிறான் என்பதைப் பற்றி புராண ஆதாரங்களுகள் கூடிய கற்பனைச் சித்திரம். 

இரண்டாம் பகுதி இன்றைய கால கட்டத்தில் எமபுரிப்பட்டணத்தில் நடைபெறும் கலாட்டாக்கள் ! 

இந்த இரண்டையும் வெவ்வேறு வடிவில் கொண்டு செல்லப் புதிய திட்டம் உருவாகி வருகிறது. 

அதற்கு சற்று காலம் தேவை ! 

புது வடிவம் என்ன – எப்படி வரப்போகிறது  என்பதைப் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வரும் 

அது வரைக்கும் சற்று பொறுக்கலாமே! 

Image result for fingers crossed

 

 

Related image

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

ஒட்டாவா வில் ஒருநாள்!
ஒரு வெள்ளிக்கிழமை மாலை, யூ எஸ் ஸிலிருந்து கனடாவின் ரொரன்டோ வந்து சேர்ந்தேன். ஏர் கனடா அலுங்காமல் வானில் ஏற்றி இறக்கியது – வெஜிடேரியன் என்று, மஞ்சள் கலரில் உப்பு சப்பில்லாத ஒரு சாதமும், பன்னீர், காலிஃப்ளவர் போட்ட சப்ஜியும், பல்லை உடைக்கும் பிரட்டும், பழத்துண்டுகளும் கொடுத்தார்கள். ரோஸ்டட் பாதாம், முந்திரி பரவாயில்லை – அருந்திய பழரஸ பானங்கள் குறித்து நான் எழுதுவதாயில்லை!
ஒரு நாள் லோகல் டவுன் டவுன் (Downtown) சுற்றிவிட்டு, மறுநாள் ஞாயிறு அதிகாலை 8 மணிக்கு (!) தரைவழி கிளம்பினோம். கிட்டத்தட்ட 450 கி.மீ தொலைவில் உள்ள ஒட்டாவா (அட்டாவா என்கிறார்கள் இங்குள்ளவர்கள் – Ottawa ) சென்று, மறுநாள் திரும்புவதாகத் திட்டம்.
சாலைகள், கார்கள், ரூல்கள் எல்லாம் அமெரிக்கா போல்தான். சாலையின் இரு புறமும், அடர்ந்த பனி – ஸ்னோ – வெள்ளைப் பஞ்சு மெத்தை விரித்தாற்போல்! இலைகள் ஏதுமின்றி, வானை நோக்கிய கிளைகளுடன் மரங்கள், கிருத்துமஸ் மரங்கள் – கோன் வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில், ஊசி முனைகளுடன் தட்டையான இலைகளுடன் – ஸ்காட்ஸ் பைன் மரங்கள் – பனித்தரையைத் துளைத்து வெளியே வந்தது போல் பனி போர்த்தி நின்று கொண்டிருந்தன. ஓக், லிண்டேன், வால்நட், ஏழெட்டு வகை ‘ஃபர்’ மரங்கள் இந்தப் பனிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன! போட்டோக்களிலும், ஆங்கிலப் படங்களிலும் பார்த்தது – நேரில் அதிசயமாயும், மனதுக்கு குளிர்ச்சியாயும் இருந்தது! கார் செல்லும் வேகத்தில், எதிரே வழுக்கிச்செல்லும் பனிபடர்ந்த இடங்களும், மரங்களும் மிகவும் ரம்யமான காட்சிதான்!
இங்கு ‘ஸெமி காண்டினெண்டல்’ சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை குளிரும், பனிப் பொழிவும் – ஏப்ரல் முதல் ஈரப்பதம் நிறைந்த கோடை! ஜனவரியில் குளிரும், பனியும், காற்றும் அதிகமாக இருக்குமாம் – (-5.4 ‘F to -21.6’F)!
ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் ஒட்டாவாதான் கனடாவின் தலை நகரம்! கலை, கலாச்சாரம், கிரியேட்டிவிடி நிறைந்த அழகிய நகரம். இங்குள்ள மியூசியம், காலரிகள் தேசீய அளவில் புகழ் பெற்றவை.
ஒண்டாரியோ வின் தென்கிழக்கில், ஒட்டாவா நதியின் தென் கரையில், காடின்யூ விலிருந்து க்யூபெக் வரை அமைந்துள்ளது ஒட்டாவா நகரம் (2790 sq km பரப்பளவுள்ளது). இது ‘ரிடெயு’ நதியும், ‘ஒட்டாவா’ நதியும் சேருகின்ற இடம்! இந்த நதிகள் போக்குவரத்துக்கும், நீர் மின்சக்தி எடுக்கவும் பயன்படுகின்றன!
பிரிட்டிஷ் எஞ்சினீயர் லெப்.கலோனல் ஜான்பை என்பவர், ரிடெயு நதியையும், ஒட்டாவா நதியையும் ஒரு கெனால் (203 கி மீ ) மூலம் இணைத்தார் – போக்குவரத்துக்காக. ஒட்டாவா நதியின் தென்கரையில், தனக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் என ஒரு கிராமத்தை அமைத்தார். அது அவர் பெயரிலேயே ‘பைடவுன்’ என்றழைக்கப்பட்டது. 1855 ல் ஒட்டாவா நகரமாக சேர்க்கப்பட்டது!
‘அல்கான்குவின்’ என்னும் நேடிவ் அமெரிக்கர்கள் வியாபார நிமித்தம் ஒட்டாவா நதிக்கரையில் குடியேறியதும், 1613 ல் சாமுவேல் டி சாம்ப்ளயின் இந்த இடத்தை ‘நியூ ஃப்ரான்ஸ்’ எனப் பெயரிட்டதும் வரலாறு. 1857 ல் ஒருங்கிணைந்த கனடா, பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் டொமினியன் (அரசுரிமை) ஆயிற்று. விக்டோரியா மகாராணியால் ‘ஒட்டாவா’தலை நகரமாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
ஒழுங்காக பராமரிக்கப்பட்ட சாலைகள், வான் முட்டும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கடைகள், ரெஸ்டாரெண்டுகள், வண்ண மயமான நியான் விளக்கு போர்டுகள், தலை முதல் கால் வரை மூடிய விண்டர் ஆடைகளில் மனிதர்கள் ( குளிருக்கு அஞ்சாத பெண்கள், அரை டிராயரில் அலைந்ததையும் பார்க்க முடிந்தது – நேடிவ் கனடா மக்களைக் குளிர் கண்டு கொள்வதில்லையாம்!). கையில் ஒரு காபி அல்லது பீர் டின் சகிதம், வாய் வழி குளிர்ப் புகை வர, எதையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்த மக்கள்! பஸ்களும், தரையில் வழுக்கிச் செல்லும் மாடர்ன் டிராம் களும் அழகு! அண்டர்கிரவுண்ட் ரயில் அதற்கான ஸ்டேஷன் மேலே மெயின் சாலையில் – தேவைக்கேற்ப பயணிக்கலாம்!
போகிற வழியில் 70 – 80 மைல்களுக்கு ஒன்று வீதம், EnRoute என்னும் – (சொவனீர் ஷாப், காபி ஷாப் – Tim Hortons ல் கிட்டத்தட்ட நம்ம ஊர் காபி கிடைக்கிறது! – ரெஸ்ட் ரூம்கள்) – பயணிகள் சிறிது இளைப்பாறும் இடம் உள்ளது. விலை கூட என்றாலும், நன்கு பராமரிக்கப்பட்ட இடங்கள்!

ஒட்டாவா வில் மதியம்  லஞ்ச் எதிர்பாராதது  நம்ம  ஊர்  மலையாள  சேச்சி  உணவகம் 

Thali – coconut lagoon –

சோறு , பூர இரண்டு ,  சப்ஜி , பப்படம் , சாம்பார் , தயிறு

என  அமர்க்களம்!

சிரித்த  முகத்துடன் (சந்தனம் மிஸ்ஸிங் )

உபசாரம் செய்த சேச்சிக்கு வயது இருபத்தைந்துக்குள்தான்!

பொடி நடையாக அருகே இருந்த பார்லிமெண்ட் கட்டிடம் சென்றோம். சுற்றிலும் பனி. மிகப் பழைய கட்டிடங்கள். மணிக் கூண்டு. வாசலில் ஏதோ ஒரு கட்சியினர் கொடிகளுடன் அரசுக்கு எதிரான கோஷங்கள் போட்டபடி நின்றிருந்தார்கள். போலீஸ் பந்தோபஸ்த்து, பந்தல், வாழ்க ஒழிக கூச்சல்கள், தலைமுறை சொல்லும் பேனர்கள் எதுவும் கிடையாது – ‘இதெல்லாம் ஒரு போராட்டம்’ என்றது மைண்ட் வாய்ஸ்!

The centennial flame – பார்லிமெண்ட் முன்பு ஒரு ஜோதி எரிந்துகொண்டிருக்கிறது – 1966 டிசம்பர் 31 ல் பிரதம மந்திரி லெஸ்டர் பி பியர்சன் முதன்முதலாக ஏற்றியது – முதல் 100 வருட கூட்டாட்சி நிறைவுக்கு! 2017 டிசம்பர் 13 ல் ஜஸ்டின் ட்ருடீன், 150 ஆண்டு நிறைவுக்கு, மீண்டும் ஜோதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜோதியைச் சுற்றி மாகாணங்கள் கூட்டமைப்பில் சேர்ந்த தேதிகள் பூவின் இதழ்கள் போன்ற வடிவில் குறிக்கப்பட்டுள்ளன.
கருநீல யூனிஃபார்மில், இடுப்பில் வாக்கி டாக்கியுடன் நின்றுகொண்டிருந்த செக்யுரிடி முக மலர்ச்சியுடன் பார்லிமெண்ட் டூருக்கு அனுப்பி வைத்தார். மினி ஏர்போர்ட் போல் ஒரு செக்யூரிடி செக் – பிறகு உள்ளே கைடுடன் சென்றோம் – கிரே கலர் யூனிஃபார்மில், வட்டமான முகத்தில் சிறு வட்ட ஷெல் ஃப்ரேம் கண்ணாடியுடன், ரெடிமேட் புன்னகை வீசியபடி வந்த கைட் மூன்று இடங்களில் நின்று பார்லிமெண்ட், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கூட்டம் நடக்கும் விதம், கமிட்டி மீட்டிங் நடக்கும் இடம் எல்லாம் காண்பித்தபடி, விவரித்தார். கேள்விகளுக்கு பதில் அளித்தார். பார்லிமெண்டின் மசோதாக்கள் கமிட்டியில் விவாதிக்கப்பட்டு, இறுதியில் பிரிட்டிஷ் ராணியின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாவதை விளக்கினார்! அங்கும் அன்பார்லிமெண்டரி வார்த்தைகள் பேசப்படுவதையும், அவை எவ்வாறு சபாநாயகரால் தடுக்கப் படுகின்றன என்பதையும் விவரித்தார். எங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதான் என்று நினைத்தேன் – சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் பற்றிப் பேசவில்லை! உள்ளே, தலையில் குல்லாய் எதுவும் போடக் கூடாது என்றாள் – அங்கே பார்லிமெண்டிற்கு அளிக்கப்படும் மரியாதை வியக்க வைத்தது. மறக்க முடியாத அனுபவம்.
அருகருகே உள்ள இரண்டு, மூன்று கட்டிடங்கள் – குறுக்கே செல்லும் நீரோடைகள் பனியில் உறைந்து கிடந்தன. பார்லிமெண்ட் உறுப்பினர்கள் ‘ஸ்கேடிங்’ செய்தவாறு வருவார்களாம்! பழைய கட்டிடங்களின் அழகும், அமைப்பும் மாறாமல், புதிய வசதிகளைச் செய்து கொள்கிறார்கள்! நமது ஊரில் இடிக்கப் பட்ட புராதன கட்டிடங்கள் நினைவில் நிழலாடின!
கனடாவின் அத்லெட் டெர்ரி ஃபாக்ஸ், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக மேற்கொண்ட ‘ஓட்டப் பயணம்’ – அவர் புற்றுநோயால் ஒரு காலை இழந்தவர் – அவரது மனித நேயம், அவர் பெயரால் உலகம் முழுதும் நடத்தப்படும் ஓட்டங்களும், கிடைக்கும் நிதி உதவியும் வியக்க வைக்கின்றன. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் (23 வயதில் இறந்து விடுகிறார்) அவரது சிலை ஒன்று பார்லிமெண்டுக்கு எதிரில் வைத்துள்ளார்கள். மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய சிலை!
Major’s Hill Park – ‘நேஷனல் காபிடல் கமிஷன்’ஆல் பராமரிக்கப் படுகிறது. இதில் பார்லிமெண்ட்டும் சுற்றுப்புற இடங்களும் அடங்கும்.
இரவில் கை கால்கள் விறைத்துவிடும் குளிர் – காற்று வேறு ஊதி, ஊதிக் குளிரை அதிகரிக்கும். இரண்டு மூன்று லேயர் உடைகள் அவசியம்! மரங்களில் சீரியல் விளக்குத் தோரணங்களும், கடைகளின் நியான் விளக்கு போர்டுகளும், தூரத்தில் தெரியும் கட்டிடங்களும், உறைந்த பனிப் பொழிவுகளும், பனிகட்டி ஆறுகளும் – கண்களுக்கு விருந்துதான்!
நிறம் மாறும், ஆளுயர எழுத்துக்களில் OTTAWA – முன் நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்! 170 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ‘பார்’, புகையிலைக்கான தனிக் கடை ‘Mr Smoke’ எனப் புருவம் உயர்த்தும் இடங்கள்.
குளிரில் பிச்சை எடுத்துக் காலம் தள்ளும் ‘ஹோம்லெஸ்’ மனிதர்கள் இங்கும் உண்டு.
மறுநாள் காலை சிறிது தாமதமாகக் கிளம்பினோம் – வந்தவழியே திரும்பினோம். காலை என்பதால் வீடுகளும் பனித் தொப்பிகளைக் கழற்றாமல் எங்களைப் பார்த்துச் சிரித்தன!
வழியில் ‘கோரா’ என்ற இடத்தில் ‘ப்ரஞ்ச்’ (காலை, மதிய உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்து உணவு!) சாப்பிட்டோம். காலை 5 முதல் மதியம் 3 வரை மட்டும் இயங்கும் இந்த உணவகங்கள் பிரசித்திபெற்றவை! பிரட், பன், கேக்குகள், வெஜ் சாலட்ஸ், பழங்கள், ஜூஸ் போன்றவை மட்டும். ஒரு முறை சாப்பிட்டால், அடுத்து இரண்டு வேளைக்குப் பசிக்காது – அவ்வளவு சுவை மற்றும் அளவு!!
பார்க்க வேண்டிய இடம் ஒட்டாவா!
ஜெ.பாஸ்கரன்.