Monthly Archives: May 2015
வைகாசி மாத இலக்கிய வாசல்

குவிகம் இலக்கிய வாசலின் இரண்டாவது நிகழ்ச்சி இம்மாதம் 23 ஆம் தேதி. சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு
"நான் ரசித்த தி. ஜானகிராமன்"
என்னும் தலைப்பில் கலந்துரையாடலாக நடைபெறவிருக்கிறது.

இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை 600041 (திருவான்மியூர் சிக்னல் – திருவான்மியூர் பேருந்து நிலையம் வழியில் BOMBAY DYEING SHOW ROOM அருகில் )
நிகழ்ச்சி கலந்துரையாடலாக வடிவமைக்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் தாங்கள் ரசித்த ஒரு படைப்பைப் பற்றி ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வசதியாக, பேசவிருக்கும் படைப்பின் தலைப்பை (மூன்று தலைப்புகள் குறிப்பிடவும்) மின்னஞ்சல் மூலம் முன்பாகவே தெரிவிக்கவும்,
பலர் ஒரே ரசிப்பைப் பற்றிப் பேசுவதைத் தவிiர்க்கவே இந்த முன்னேற்பாடு.!
தங்களுக்கு அளிக்கப்படும் தலைப்பு முன்னதாகவே தெரிவிக்கப்படும்.
தங்கள் இலக்கிய நண்பர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன் சுந்தரராஜன் – கிருபானந்தன்
– குவிகம் இலக்கிய வாசல்
மினனஞ்சல் : ilakkiyavaasal@gmail.com
பக்கம் – 2
ஷாலு மை வைஃப்
சென்ற
மாதத்தில்

ஃபென்டாஸ்டிக்
ஷாலு! கோமாதா பூஜையைக் கலக்கிட்டே“ என்றேன்.
அவள்
அதற்குப் பதில் சொல்லாமல் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கோமாதா பூஜை
செய்ததற்கு உடனே பலன் வந்துவிட்டது என்றாள்.
’என்ன என்ன’ என்று ஆவலோடு கேட்டேன்.
மெல்லச் சிரித்துக் கொண்டே காதில் சொன்னாள்.
அதைக்
கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
இனி …..
நான் ஏதோ
கற்பனை செஞ்சதில் அவள் என்ன சொன்னாள் என்பது காதில் விழவே இல்லை. அதற்குள் தலை வேறு சுற்ற ஆரம்பித்து விட்டது. என்ன என்ன என்று கேட்பதற்குள் ஷிவானியின் ’அம்மா ’ என்ற அலறலைக் கேட்டதும் ஓடிவிட்டாள் ஷாலு.
என் கற்பனை
வாயு வேகத்தில் மனோ வேகத்தில் ஆட்டோ வேகத்தில் ஓடியது!
·
ஷிவானிக்குப்
பிறகு ஒரு தமிழ்ச்செல்வன் வேண்டும் என்று ஒரு ஜாலி இடைவேளை போது சொல்லுவாள். நான் ரெட்டை வால்களே போதும் என்று சொல்லுவதுண்டு! அது பலித்துவிட்டதோ?
·
இல்லை என்
மாமியாரும் மாமனாரும் இங்கே வந்து ஒரு வருஷம் டேரா போட வர்ராங்களோ?
·
அல்லது
பெரியவனை சைனிக் ஸ்கூலில் சேர்க்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தா! நான் தான் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். கோமாதா தயவால அது நடக்கப் போகுதா?
·
அல்லது
ஷாலுவுடன் பிளாட்
அஸ்ஸோசியேஷன் பொருளாளர் பதவிக்குப் போட்டி போட்டு ஜெயிச்ச சுழல் மாலு யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிட்டாளா?
( ஸ்பின்ஸ்டர்
என்பது சுருங்கி ஸ்பின் ஆகி அது தமிழ்ப் படுத்தப்பட்டு சுழல் ஆகிவிட்டது)
·
இல்லை எங்க
மானேஜர் கிழம் கோமாதாவைப் பாத்து ரொம்ப புல்லரிச்சு எனக்கு பிரமோஷன் ஏதாவது ரெகமண்ட் பண்ணிட்டாரா?
அதற்கு
மேல் என் கற்பனை ஓடவில்லை. அதற்குள் ஷிவானி ஓடி வந்து ’அப்பா ! அம்மா உன்னை சாமி ரூமுக்கு வரச் சொன்னா’ என்று கத்தி விட்டு விளையாட ஓடிவிட்டாள்.

ஷாலு
ஸ்வாமி படத்துக்கு முன்னாடி தொடர் நமஸ்காரம் செய்து கொண்டிருந்தாள். ஷாலு எப்பவும்
இப்படித்தான். அவள் நினச்சது நடந்தாலும் சரி அல்லது நினைக்காதது
நடக்காமலிருந்தாலும் சரி தொடர் நமஸ்காரம் ஆரம்பித்து விடுவாள். 13,26,39 என்று எண்ணிக்கை 13ன் வரிசையில் போகும். சில சமயம் ”இன்னிக்கு பதிமூணு பதிமூணு
ஆச்சு!
அப்ப மொத்தம் எத்தனை “என்று கேட்பாள். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு இந்த
பதிமூணாம் வாய்ப்பாடு ஒதறல். சாய்ஸ்ல விட்டுடிவேன். ஏதோ ஒரு நம்பரைச் சொல்லுவேன்.
அவளும் சரி என்று விட்டுவிடுவாள். அவளுக்கும் பதிமூணு தகராறு. எங்களுக்குள்ளே இருந்த ( நோட் மை லார்ட்! இருந்த) பதிமூணு பொருத்தம் தான் எங்க கல்யாணத்துக்கே காரணம். அந்த ப்ளாஷ் பேக்கைப் பின்னாடி தேவையானா பாத்துக்கலாம்.!
போறும்
ஷாலு! இப்படி ரொம்ப நமஸ்காரம் பண்ணினா ஆர்தோபோரோசிஸ் வரப் போகுது என்று பலமுறை
சொல்லிப் பயமுறுத்திப் பார்த்தேன். அவள் பனங்காட்டு நரி. ’இது எத்தனை சக்தி வாய்ந்தது தெரியுமா?
’ டிவி பாட்டியே சொல்லிட்டா? டிவி பாட்டி தான் அவளுக்கு சுப்ரீம் கோர்ட்.
தன்வந்திரி பாட்டி . எதற்கெடுத்தாலும் ஒரு பாட்டி வைத்தியம் சொல்வாள். அதனால் அவள்
பெயர் தன்வந்திரி ஆகி அதுவும் சுருங்கி டிவி ஆகிவிட்டது. அது தெரியாமல் இப்போ
புதுசா குடி வந்தவங்க பாட்டி டிவி சீரியல்ல நடிச்சதால அந்தப் பேர் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அது உண்மையோ என்று எங்களுக்கும்
சந்தேகம் வந்துவிட்டது.
’சஸ்பென்ஸ் தாங்கல ஷாலு. சொல்லித் தொலையேன்!’ அதற்கும் ஷாலு மசியல. இன்னும் ஒரு மணி நேரத்தில
சரியான்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன் என்று டென்ஷனை ஏத்திவிட்டு டென்ஷனே இல்லாமல் சொன்னாள்.
”உடனே தெரிஞ்சுக்கணுமா? காரை எடுங்க ! நம்ம ரெண்டு பேர் மட்டும்
கல்யாணி ஆஸ்பத்திரிக்குப் போவோம். அங்கே டாக்டர் லக்ஷ்மி கிட்டே கேட்டுட்டா சஸ்பென்ஸ் ஓடைஞ்சுடும்! “
சரி! இது –
’அடி
மூணாவது கள்ளி ’ கேஸ் தான்!
சந்தேகமேயில்லை! ஆனால் அவ பேசற தோரணையைப் பாத்தா அது இல்லை என்கிற மாதிரியில்ல
இருக்கு.

கல்யாணி
ஆஸ்பத்திரிக்குப் போனோம். அப்பாயிண்ட் மெண்ட் வாங்க வேண்டாமா? என்று கேட்டேன். இதுக்கெல்லாம் தேவையில்லை. நீங்க கொஞ்சம் வெளியே இருங்கோ! என்று சொல்லிவிட்டு . ’ஷாலு உள்ளே யாரோ இருக்காங்க போலே ’ என்று நான் சொன்னதைக் காதில் போட்டுக்
கொள்ளாமல் டாக்டர் ரூமுக்குள் சென்றாள் .
நான் அங்கே
உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த ஐடி பொண்ணுகளுக்கு என்ன பிராப்ளமா இருக்கும்னு யோசித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச
நேரத்தில் ஒரு மலையாள சேச்சி நர்ஸ் ஓடி வந்து ’ஷாலு மேடம் ஹஸ்பண்ட் யாருன்னு”
ஏலம்
போட்டுக்கொண்டே வந்தாள். அவர்கள் மத்தியில் என் இமேஜ் சைக்கிள் ஸ்டாண்டில விழுந்த சைக்கிள் மாதிரி மடமடென்னு சரிஞ்சது. (நன்றி: சித்து – Wickets
are falling like cycles in a cycle stand)
’ டாக்டர் உன்னை விளிக்குண்ணு ’ என்று செந்மலையாளத்தில் மரியாதையாய்க்
கூப்பிட்டாள். என் மரியாதையைக் காப்பாத்திக் கொள்ள வேகமாக ஓடினேன்.
உள்ளே ஷாலு
கூட குருஜினி. மற்றும் டாக்டர் லக்ஷ்மி . குருஜினி எப்போ வந்தார் .ஒன்றுமே புரியவில்லை.
’கங்க்ராஜூலேஷன்ஸ் ’
– டாக்டர்
லக்ஷ்மி என்னைப் பார்த்துக் கூறினார். எனக்குத் தலையும் காலும் புரியவில்லை.
உங்க மனைவி
ஷாலு..
ஷாலு?
குருஜினி
கூட சிங்கப்பூர் போகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நான் போவதாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு பெரிய டாக்டர் கான்பிரன்ஸ் இருப்பதாலே எனக்குப் பதிலா குருஜினியின் சீடரா ஷாலு போகிறார்கள்.
ஆ- தானம் வெற்றிகரமாக முடித்த உங்களுக்குப் பரிசு வேண்டாமா? இது தான் குருஜினி பம்பர் பரிசு. உங்களுக்கு ஒன்றும் ஆக்ஷேபணை இல்லையே?
“ஜஸ்ட் ஒரு மாதம் தான். குழந்தைகளை யெல்லாம்
இவரே நல்லா கவனித்துக் கொள்வார். ரொம்ப நன்றி குருஜினி! ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்! ’என்று சொல்லி விட்டு நான் இவருக்கு விளக்கமா
சொல்லறேன் ! வாருங்கள் போகலாம் என்று என்னை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் ஷாலு.
ரூமை
விட்டு வரும் போது சேச்சி நர்ஸ் மீது நான் தெரியாமல் மோதப் போக , ஐடி பொண்ணுகள் எல்லாம் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க, ஷாலுவும் அவளுக்கு இருந்த எக்ஸைட்மென்ட்டில் ’சாரி’ சொல்வதற்குப் பதிலா நர்ஸுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்ல சேச்சி தமிழில் விழித்தாள். !
’நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளா?’
ரஜினிக்காக
எஸ்பி பாலசுப்ரமணியன் எங்கோ கிண்டல் சிரிப்புடன் பாடிக்கொண்டிருந்தார்.
பக்கம் – 3
கோபுலு

தில்லானா மோகனாம்பாள் -வாஷிங்டனில் திருமணம் ,துப்பறியும் சாம்பு கதைகளுக்கு உருவம் கொடுத்து உயிரைக் கொடுத்தவர் கோபுலு அவர்கள். ஏப்ரல் 30ந் தேதி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
தில்லானா மோகனாம்பாள்:

துப்பறியும் சாம்பு:

வாஷிங்டனில் திருமணம்:

விளக்கெண்ணை குடிக்க வைக்கும் காட்சி:


ஸ்டேஷனில் ரயில் வருமுன் பிளாட்பாரக் காட்சி!

தஞ்சையில் பிறந்து தஞ்சை கலாசாரத்தில் திளைத்தவர். ஆனந்த விகடனின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டான மாலி அவர்களின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு விகடனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். . கதைகள், கார்ட்டூன், துணுக்கு, சிரிப்பு இவற்றிற்கெல்லாம் அவர் வரைந்தது அவரின் தனித் தன்மையைப் படம் பிடித்துக் காட்டியது.
கலைமாமணி பட்டம் பெற்றவர்.
சித்ர கலாரத்னா விருது, எம் ஏ சிதம்பரம் செட்டியார் பரிசு, முரசொலி பரிசு என்று பல விருதுகளைப் பெற்றவர். அதற்குத் தகுதியானவரும் கூட.
கோபுலு அவர்களின் சிறப்புக்களைப் பாராட்ட ஒரு அழகான கூட்டம், ஓவியர்கள் மணியம் செல்வன், நாகராஜன், மாருதி, ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் மாலன், ஜீவ சுந்தரி ( பெண் இனி பத்திரிகை ஆசிரியர் ),சுபாஷினி பங்குபெற திருவான்மியூர் பனுவல் புத்தகாலயத்தில் நடைபெற்றது. அதில் கேட்ட முத்துக்கள்:
– கோபுலு இரண்டு கையாலும் படம் வரைவாராம். அதுவும் ஸ்ட்ரோக் வந்து வலது கை முடியாமல் போன போது இடது கையால் வரைந்தாராம்.(ஸ்ட்ரோக் போடும் எனக்கே ஸ்ட்ரோக்கா? )
– சாவி -கோபுலு கூட்டணி ,( இங்கே போயிருக்கிறீர்களா?) ஜெயகாந்தன் – கோபுலு கூட்டணி (பாரிசுக்குப் போ , சில நேரங்களில் சில மனிதர்கள்,) கலக்கியதாம்.
– 20,000 க்கும் மேற்பட்ட ஜோக்குகளுக்குப் படம் வரைந்திருக்கிறாம்.
அழும் உலகத்திற்குச் சிரிப்பைப் பரிசாகத் தருவது தான் அவரது சித்தாந்தம்
அவரது குடும்பத்திற்கு குவிகத்தின் அஞ்சலி!!
.
பக்கம் – 4
ஆறு வீடும் பாழும் வீடு – நாட்டுப்பாடல் (யாரோ)

ஒரு ஊரிலே இருந்த வீடு ஆறு வீடு
ஆறு வீடும் பாழும் வீடு
அதிலொரு வீட்டுக்கு ஓலையில்ல
ஓலையில்லா வீட்டில் தான்
இருந்த பெண்கள் ஆறு பெண்கள்
ஆறு பெண்கள் பாழும் பெண்கள்
அதிலொரு பெண்ணுக்குக் காதே இல்ல
காதில்லாப் பெண்ணுக்குத் தான்
செய்த கம்மல் ஆறு கம்மல்
ஆறு கம்மலும் பாழும் கம்மல்
அதிலொரு கம்மலுக்குக்
கல்லே இல்ல
கல்லில்லாக் கம்மலைத் தான்
செய்த தட்டான் ஆறு தட்டான்
ஆறு தட்டானும் பாழும் தட்டான்
அதிலொரு தட்டானுக்குக்
கையே இல்ல
கையில்லாத தட்டானுக்கு
கொடுத்த பணம் ஆறு பணம்
ஆறு பணமும் பாழும் பணம்
அதிலொரு பணத்துக்கு அச்சே இல்ல
கேட்டதெல்லாம் கட்டுக் கதை
கட்டுக் கதையைக் கேட்டுக்கிட்டு
திட்டம் போட்டு வீடு செல்வோம்!
(எழுதியது: யாரோ)
பக்கம் – 5
மே 3 – எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்
சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்…
* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.
* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!
* முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!
* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!
* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!
* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!
* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!
* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!
* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!
* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!
* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!
* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!
* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!
* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!
* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!
* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!
* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!
* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!
* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் பரபரப்பு பெற்றது!
* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!
* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!
* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!
(நன்றி : முக நூல்)

டெய்ல் பீஸ் :
சுஜாதா மெக்சிகோ சலவைக்காரி ஜோக் செம ஜோக் என்று சொல்லிவிட்டு ரொம்ப காலம் அதைச் சொல்லாமல் டபாய்த்துக் கொண்டிருந்தார். பிறகு எப்போது சொன்னாரோ தெரியவில்லை நெட்டில் கிடைத்தது:
சென்சாருக்குத் தப்பினால் 25ம் பக்கத்தில் அதை நீங்கள் படிக்கலாம்.
இல்லையென்றால் நெட்டில் தேடிக் கொள்ளுங்கள்.
பக்கம் – 6
மக்கள் முதல்வர்! மீண்டும் முதல்வர் !!

படம் : நன்றி ; NDTV
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ,சுதாகரன்,இளவரசி உட்பட நால்வரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நீதிபதி குன்ஃகா வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி உள்ளது.
அ.இ.அ. திமுகவின் தொண்டர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி, பட்டாஸ் கொளுத்தி உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
செல்வி ஜெயலலிதா:
இந்தத் தீர்ப்பு மனநிறைவை தருகிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறைத் துடைத்த தீர்ப்பு. அரசியல் எதிரிகள் என் மீது சுமத்திய பழியை துடைத்திட்ட தீர்ப்பு. நான் எந்தத் தவறும் செய்யாதவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது
தமிழிசை சௌந்தரராஜன் (பி.ஜே.பி )
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். இந்தத் தீர்ப்பை மதிக்கிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். தீர்ப்பை அரசியலாக்கக் கூடாது
சுப்பிரமணியசாமி “அதிர்ச்சி”! மேல்முறையீடு செய்யப்போவதாகத் தகவல்! .
“இது இறுதித்தீர்ப்பல்ல”-கருணாநிதி
இது ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் கிடைத்த இழப்பு! – பா.மு.க. ராமதாஸ்
நீதிபதி குமாரசாமியின் கணக்கில் தவறு இருக்கிறது. அதனால் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று பப்ளிக் பிராசிக்யூடர் ஆச்சார்யா கூறினார்.
கர்நாடக அரசு, தீர்ப்பின் முழு விவரங்களையும் சட்ட நுணுக்கங்களையும் பரிசீலினை செய்த பிறகு மேல்முறையீட்டைப் பற்றித் தீர்மானிக்கப் படும் என்று கூறுகிறது.
மே 10 அன்னை தினம் மே 11 அம்மா தினம் – அது மட்டுமல்ல MUMMY RETURNS – நெட்டில் சுட்டது!
பக்கம் – 7
கொட்டடி கொட்டடி தாழம்பூ- நாட்டுப் பாடல் (யாரோ)

கொட்டடி கொட்டடி தாழம்பூ!
குனிஞ்சு கொட்டடி தாழம்பூ
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி ஏலக்கா
பய்யன் வருவான் பாத்துக்கோ
பணம் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்குப் பையில் போட்டுக்கோ
வீராப் பட்டணம் போகலாம்
வெள்ள இட்டிலி வாங்கலாம்
சவுக்குத் தோப்பு போகலாம்
சமச்சு வைச்சுத் தின்னலாம்
புளிய மரத்துப் போகலாம்
புளியங்கொட்டை பொறுக்கலாம்
பனைமரத்துக்குப் போகலாம்
பல்லாங்குழி ஆடலாம்
(எழுதியது யார் என்பது தெரியவில்லை)
பக்கம் – 8
ஜோக்ஸ்

டாக்டர் ! என் இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்யும் போது அதிலிருக்கும் என் முதல் காதலை எடுத்துவிடாதீர்கள்!

டாக்டர்! நீங்க கொடுத்த சிரப் சிறப்பு! எப்படி என் ஜோக்?
செருப்பு பிஞ்சிடும்! இது கி.வா .ஜ. அவர்களின் ஜோக்.

டாக்டர் ! எனக்கு அறிவு சுத்தமா இல்லாத மாதிரி தோணுது!
எப்பொழுதிலிருந்து இப்படி தோணுது?
விஸ்டம் டூத்தை எடுத்ததிலிருந்து!

டாக்டர்! என்கால்ல ஆபரேஷன் பண்ணும் போது கால் வலிச்சா என்ன பண்ணுவீங்க?
சேர்ல உட்கார்ந்துகிட்டு ஆபரேஷன் பண்ணுவோம்!

காக்கா முட்டை படத்துக்கு தேசியவிருது வழங்கப்படும் போது கக்கா மூட்டை என்று சொன்னார்களாம்!
பக்கம் – 9
முடியும் வரை தூங்கிவிடு (கோவை சங்கர்)

தொங்குகின்ற தூளியிலே தூங்குகின்ற பாப்பாவே
தொங்குகின்ற நிலைதானே யுனையீன்ற பெற்றோர்க்கும்
மண்ணுலகில் நடக்கின்ற சொல்லவொணா அவலங்கள்
கண்டுகண்டு வெதும்பியவர் தூங்கியே நாளாச்சு!
இவ்வுலகில் நாமெல்லாம் இருப்பதுவோ சிலகாலம்
இவ்வுண்மை புரிந்திருந்தும் பாரிந்த அலங்கோலம்
நான்பெரிது நீபெரிதென பணப்பேயு மாட்டிடவே
சண்டையிலே கழிக்கின்றோம் வாழ்க்கையிலே பெரும்பகுதி
கடவுளெலா மொன்றெனவே நன்றாகத் தெரிந்தாலும்
மதச்சண்டை ஜுவாலைகள் குழப்பங்கள் குமுறல்கள்
ஜாதிபேத மிலையென்று எத்தனைதான் சொன்னாலும்
ஜாதிகள் பெயராலே பலப்பல கட்சியிங்கு
மக்களா இலையிவ ரறிவற்ற மாக்களா
துக்கமான மனதினிலே துளிர்விடும் சந்தேகம்
இதையெலா முணர்கின்ற பருவம்நீ யடையும்வரை
மெதுவாக இப்போதே முடியும்வரை தூங்கிவிடு

பக்கம் – 10
ஏலாலம்பர ஏலு – நாட்டுப் பாடல்

ஆறு காசு எண்ணை வாங்கி ஏலாலம்பர ஏலு – நான்
அதிரசம் சுட்டுவைச்சேன்
ஏலாலம்பர ஏலு
மாமியாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மயிரப் பிடிச் சண்டை செய்வ
ஏலாலம்பர ஏலு
மூத்தாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மூக்கறுத்து நாயங் கேப்ப
ஏலாலம்பர ஏலு
மச்சினன் தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மண்டை ஓடச்சி சந்தா செய்வ
ஏலாலம்பர ஏலு
நாத்தனாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
ஓதட்ட அறுத்து நயம் கேட்ப
ஏலாலம்பர ஏலு
மாமனாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மண்டை ஓடைச்சி சந்தா செய்வ
ஏலாலம்பர ஏலு
ஆம்படையான் தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
ஆளும் பொருத்தாச்சே
ஏலாலம்பர ஏலு
(வல்லியம்மாள் பாடியது )
பக்கம் – 11
தி.ஜானகிராமன் கதைச் சுருக்கம்
கங்கா ஸ்நானம்

சின்னசாமியின் அக்கா சாகும்போது தான் வாங்கின கடனை அடைக்கச் சொல்லி புருஷனின் நிலத்தை வித்து நாலாயிரம் ரூபாயை அவனிடம் கொடுக்கிறாள். மூவாயிரத்து சொச்சம் கடன். பாக்கியை அவன் காசிக்குப் போக உபயோகித்துக்கோ என்ற கட்டளை வேற.
சின்னசாமியும் பணத்தை எடுத்துக்கிட்டு துரையப்பாவின் வீட்டுக்குப் போகிறான். ராத்திரி ஆனதால் காலையில் வரவு வச்சுக்கலாம் என்று சொல்கிறார். பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அவரின் உபசரிப்பில் நிம்மதியாகத் தூங்கினான். காலையில் வரவு வைக்கும் போது ‘அவர் பணத்தை எடு ’ என்றதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. முதல் நாள் வாங்கி வைத்ததை மறந்துவிட்டாரா அல்லது விளையாடுகிறாரா? கடைசியில் அவர் வாங்கவே இல்லை என்று சாதித்துவிட்டார். பஞ்சாயத்து கோர்ட்டு என்று பலவாறு முயற்சித்தான் சின்னசாமி. ஊர்ப் பெரியவர் துரையப்பவாவை ஒண்ணும் செய்ய முடியவில்லை. கடைசியில் கடனோ கிடனோ வாங்கி அந்தக் கடனை மறுபடியும் அடைத்தான்.
அக்கா ஆசைப்படி சின்னசாமியும் அவன் மனைவியும் காசிக்குப் போகிறார்கள். ஒரு வாத்தியார் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் கங்கையில் குளிக்கும் போது கேள்விப்படுகிறார்கள் அந்த துரையப்பாவும் காசிக்கு வந்து அவர்கள் தங்கியிருக்கும் அதே வாத்தியார் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று.
திரும்ப அவன் முகத்தில் முழிப்பதா? அவன் பாவத்துக்கும் சேர்த்து கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு அவன் அங்கே இருந்தால் வேறு ஜாகைக்குப் போக வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள்.
பக்கம் – 12
சித்தர் பத்திரகிரியார்

பத்திரகிரியார் உண்மையில் ஒரு அரசர். பட்டினத்தாரின் பெருமைகளைக் கண்டு உணர்ந்து அவரது சீடராக திருவிடைமருதூர் கோவிலில் பிச்சைஎடுத்தவர். கிடைத்த உணவைக் குருவுக்குக் கொடுத்துத் தானும் உண்டு மீதியை ஒரு நாய்க்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்.
ஒருமுறை பட்டினத்தார் இவரைப் பற்றிச் சொல்லும் போது "சோற்றுக்கட்டியையும் நாயையும் வைத்துக் கொண்டு சம்சாரியாக வாழ்கிறார்’“ என்று சொல்ல, பிச்சை எடுக்கும் திருவோட்டை நாயின் தலையில் அடித்து அதற்கு முக்தி அளித்தார். அந்த நாய் ஒரு அரசகுமாரி வடிவில் வந்து அவரை மணந்து கொள்ள வேண்டியது. ” எனக்கும், என் எச்சிலை உண்ட இவளுக்கும் இந்தப் பிறவி நோய் வரலாமா “ என்று இறைவனை உருகி வேண்ட, ஒரு பெருஞ்சோதி வந்து இருவரையும் தன்னுள் ஒடுக்கி இருவருக்கும் முக்தி அளித்தது.
அவர் குரு பட்டினத்தாருக்கு அதற்குப் பின்னரே முக்தி கிடைத்தது.
இவரது 231 பாடல்கள்கள் அனைத்தும் இரு வரிக் கண்ணிகள். எல்லாக் கண்ணிகளும் ‘எக்காலம்?’ என்ற கேள்வியுடன் முடியும். இந்த உலக மோக வாழ்வைத் துறந்து இறைவன் அடிசேரும் காலம் எக்காலம் என்றும், அந்தக் காலம் விரைவில் வாராதா என்று ஏங்கும் சித்தர் தான் பத்திரகிரியார்.
அவரது நெஞ்சுருக்கும் கண்ணிகள் சிலவற்றைப் பார்போம்!
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
கால் காட்டி கைகாட்டி கண்கள் முகம் காட்டி
மால் காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும்
எக்காலம்?
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடக்காமல்
தேறாத சிந்தனையைத் தேற்றுவதும் எக்காலம்?
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனில் கண்டு திருக்கறுப்பது
எக்காலம்?
தித்திக்கும் தெள்ளமிதைச் சித்தாந்தத்து உட்பொருளில்
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது
எக்காலம்?
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது
எக்காலம்?
கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது
எக்காலம்?
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரை மறந்து தூங்குவதும்
எக்காலம்?
கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறது போல் உனை அடைவது
எக்காலம்?
பிறப்பும் இறப்பும் சுற்றுப் பேச்சும் அற்று
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது
எக்காலம்?
சித்தர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்!!
பக்கம் – 13
தாட்பூட் தஞ்சாவூர்னு தேட்டை போட வந்தான் !-சுரா

வீட்டு மேல யாருன்னு கேட்டுக்கிட்டு வந்தான்
கோட்டு சூட்டு போடாமலே ஊட்டுக்குள்ளே வந்தான்
தாட்பூட் தஞ்சாவூர்னு தேட்டை போட வந்தான்
இடுப்பு மேல கையைவைச்சுத் துடுக்குத் தனமா கேட்டான்
காட்டாமணி செடி ஓடச்சி தோட்டத்துக்கு வந்தான்
பட்டனைப் போடாமலே சட்டை போட்டு வந்தான்
வெட்டுக் கத்தி எடுத்துக்கிட்டுத் துட்டுப் பறிக்க வந்தான்
வேட்டுச் சத்தம் போட்டுக்கிட்டு ரோட்டுமேலே வந்தான்
பாட்டு ஒண்ணு பாடிக்கிட்டு ரூட்டுப் போட வந்தான்
ஆட்டுக்குட்டி கத்தும் போது முட்டுக்குத்தி நின்னான்
சட்டிப் பானை தயிரையும் சப்புக் கொட்டித் தின்னான்
இட்டுக் கட்ன பாட்டையெல்லாம் கட்டக் குரலில் சொன்னான்
கட்டி வைச்ச சோத்தை எல்லாம் வெட்டி வெட்டித் தின்னான்
ஈட்டிக்காரன் போலவந்து வட்டி போட்டுத் தின்னான்
எட்டி எட்டி பாத்துக்கிட்டு வெட்டித்தனமா நின்னான்
ஏட்டிக்குமேல் போட்டியாக பாட்டு படிச்சு நின்னான்
ஓட்டிவிட்ட மாட்டைப் போல சீட்டி அடிச்சு வந்தான்
கட்டை வண்டி ஓட்டிக்கிட்டு நெட்டப் பயலா வந்தான்
கூட்டுக்குள்ளே குடியிருக்க சேட்டை பண்ண வந்தான்
மேட்டுக் குடி பாட்டன் போல கிட்டக் கிட்ட வந்தான்
கிட்டக்கிட்ட வந்து என்னைத் தொட்டுகிட்டு நின்னான்
ஒட்டி ஒட்டி வந்து அவனும் கட்டிப் பிடிக்க வந்தான்
பொட்டப் பய போல அவனும் வெக்கம் கெட்டு நின்னான்
அட்டை போல ஒட்டிக்கிட்டு லூட்டியடிக்க வந்தான்
கோட்டை செவரைத் தாண்டி அவன் ஆட்டைப் போட வந்தான்
வேட்டு வைச்சப் பாறைபோல மாட்டிக்கிட்டுத் துடிச்சான்
சாட்டை ஒண்ணை வச்சுக்கிட்டு மாட்டை ஓட்ட வந்தான்
பட்டா சிட்டா இல்லாமலே வீட்டைக் கட்ட வந்தான்
சீட்டுக்கட்டு ராசா போல ஆட்டிக்கிட்டு வந்தான்
சிட்டுக்குருவி லேகியத்தைத் தொட்டு நக்கி வந்தான்
சுட்டுப்போட்ட மீனைப் போல சூட்டைக் கிளப்ப வந்தான்
திட்டம் போட்ட பயபுள்ளே ஆட்டம் ஆட வந்தான்
சேட்டையெல்லாம் காட்டிவிட்டு மூட்டைகட்டிப் போனான்
பொட்டப் புள்ளை என்மனசைத் துடிக்க விட்டுப் போனான்!
பக்கம் – 14
இனிதே திறந்தது இலக்கிய வாசல்
18.04.2015 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இலக்கிய சிந்தனையாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் குவிகம் இலக்கியவாசல் தொடக்க விழா இனிதே நடைபெற்றது !
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது !
குவிகம் இலக்கிய வாசலை முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் திறந்துவைத்தார் !
‘இலக்கியமும் நகைச்சுவையும்’ என்ற தனது முதல் நிகழ்ச்சியை “குவிகம் இலக்கிய வாசல்” முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அரங்கேற்றியது !
தனிநபர் புகழ்ச்சியை புறந்தள்ளி தமிழ்இலக்கிய நிகழ்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குவிகம் இலக்கியவாசல் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்தும் அமைப்பாளர்கள் .சுந்தரராசன், கிருபானந்தன் அவர்களின் முயற்சியை ஊக்குவித்தும் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் தமிழ் இலக்கியங்களிலே புதைந்துகிடக்கும் நகைச்சுவை நயங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்

அடுத்துப் பேசிய முனைவர் வ வே சு அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பிலே தான் இயற்றிய கவிதைகளை மன்றத்தில் படித்து அனைவரையும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினார் !
தனது பள்ளிப் பருவத்திலே நடந்த மறக்கவொண்ணா நகைச்சுவை நினைவுகளை அவர் கவிதையில் வடித்துப் படித்தது அரங்கத்தினரின் கரவொலியைப் பெற்றது !

மூன்றாவதாய் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கவிதைப் படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவைக் கவிதைகளை அரங்கத்தார் ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துகொண்டார் !
வாழ்வியலை ஒட்டிய அவரது கவிதைகள் அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.

சுந்தரராசன் அனைவரையும்வரவேற்றார் !

இலக்கிய ஆர்வலர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது

நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவிதைகள் படிக்கப்பெற்றுப்
பாராட்டைப் பெற்றன !




கிருபானந்தன் நன்றி நவில தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது !
பக்கம் – 15