குவிகம் ஐந்து ஆண்டுகள்

குவிகம் ஐந்து ஆண்டுகள்

 

  • 2013 நவம்பரில் துவங்கப்பட்ட குவிகம் மின்னிதழ்  இந்த இதழுடன் ஐந்து ஆண்டு நிறைவு பெறுகிறது.

  • 1500க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பக்கங்கள் இணைய தளத்தில் குவிகத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

  • எத்தனை பேர்  எதைப் படித்தார்கள் – விடுத்தார்கள் என்பதற்கான  புள்ளி விவரம் இருக்கிறது.

  • 200 பேரில் ஆரம்பித்துத்   தற்போது 2700 பேருக்கும் அதிகமான  நபர்களுக்கு அனுப்பி வருகிறோம்.

  • அர்ஜூன், விஜயலக்ஷ்மி, கிருபாநந்தன்  மூவரும் குவிகத்தின் மூன்று முக்கிய புள்ளிகள்.

  • கல்கண்டுபோல ஆரம்ப காலத்தில் இருந்த குவிகம் தற்போது குமுதம்மாதிரி இருக்கிறது.

  • பல நண்பர்கள்  தங்கள் சிறந்த படைப்புக்களை குவிகத்திற்கு  அனுப்பிப்  பேருதவி புரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த கரங்கூப்பு !

  • மின்னிதழில் தொடங்கிய குவிகம் இதழ், குவிகம் இலக்கியவாசல், குவிகம் பதிப்பகம், குவிகம் இல்லம், குவிகம் புத்தகப் பரிமாற்றம் , அளவளாவல் , என்று விரிந்து வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

2018 ஆம்  ஆண்டிலேயே  குவிகம் மின்னிதழைப் பெரும் அளவில் மாற்ற  எண்ணினோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அதைச் செயலாற்ற  முடியவில்லை.

இந்த ஆண்டு 2019 ஜனவரியிலிருந்து புதிய மாற்றங்கள் கண்டிப்பாக வரும்.

அதற்காக உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் வரவேற்கிறோம்.

குறிப்பாக, கீழ்க்கண்ட செய்திகளில் உங்கள் கருத்து அவசியமாகிறது.

 

  1. குவிகம் — தொடரலாம்/ நிறுத்தலாம்

  2. தலையங்கம் —- தேவை/தேவையில்லை

  3. சிறுகதைகள் – A4 அளவில் ஒரு பக்கம் போதும் / 4-5 பக்கங்கள் இருக்கலாம்.

  4. கட்டுரைகள் – அதிகம் வேண்டும் /வேண்டியதில்லை

  5. ஜோக்குகள் — தேவை/தேவையில்லை

  6. சினிமா விமர்சனம் /செய்திகள் — தேவை / தேவையில்லை

  7. குறும்படம் — அதிக அளவில் தேவை / ஓன்றிரண்டு போதும்

  8. ஆடியோ பக்கங்கள் — தேவை /தேவையில்லை

  9. ஆராய்ச்சிக் கட்டுரைகள் – தேவை/தேவையில்லை

  10. படங்கள் — தேவை/ தேவையில்லை/ இன்னும் அதிகம் வேண்டும்

  11. தொடர் கதைகள் —- தேவை/தேவையில்லை

  12. Font / Page Design — பரவாயில்லை/ மாறவேண்டும்

  13. குறுஞ்செய்திகள் : நிறைய வேண்டும் / வேண்டாம்

  14. மற்ற உங்களுக்குத் தேவையான செய்திகள்:

                1)

                2)

                3)

 

தங்கள் கருத்துக்களை   editor@kuvikam.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்பவும்.

நன்றி.

சுந்தரராஜன்

(ஆசிரியர், குவிகம் )

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

படம்: By សុខគឹមហេង – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=58228026

ஸந்த்யாவின் சாந்துக் குளியல் அறையில்  அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் விஷ்வகர்மாவின் குடும்பத்தை முற்றிலும் உலுக்கிவிட்டது என்றால் அது தவறில்லை.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர் விஷ்வகர்மாதான்.  அந்த அறையில் இருக்கவேண்டிய  ஸந்த்யா அங்கு இல்லை . அவளுக்குக் கொடுக்கும்படி தான் அளித்த மருந்து  கிண்ணத்தில் அப்படியே இருக்கிறது. சாளரத்தில் புறாவும் முட்டைகளும் எரிந்து கிடக்கின்றன. தரையில் ராகு தலை துண்டிக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். மனைவியோ கையில் வாளுடன்  நிற்கிறாள்.  

வேறு சாதாரணமானவர் யாராக இருந்தாலும் இந்த சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருப்பார்கள். ஆனால் விஷ்வகர்மா தேவ சிற்பி மட்டுமல்ல. எந்த இக்கட்டையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். பிரும்மாவிற்கே தெரியாமல் காரியம் செய்யத் துணிந்தவர் அல்லவா? 

முதலில் தலைவேறு முண்டம்வேறு என்று கிடக்கும் ராகுவை சரிசெய்து அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ராகுவின் தலை எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் கண்கள் சுழன்றுகொண்டேயிருந்தன. உடல் துடிப்பு எதுவும் இல்லாமல் அமைதியாக உறங்குவதுபோல் இருந்தது. இப்படி இருப்பது ராகுவிற்கு எந்தவித வேதனையும் தரவில்லை என்பதை அவனுடைய முகக்குறிப்பே உணர்த்தியது. 

விஷ்வகர்மா அவன் தலையை எடுத்து அவன் உடலருகே மெள்ளக் கொண்டுபோனார். காந்தத்தைக் கண்ட இரும்புபோல ஒன்றை ஒன்று ஆகர்ஷித்து ஒட்டிக்கொண்டன. ராகுதேவன் எழுந்து நின்று விஷ்வகர்மாவிற்குத் தலை வணங்கினான். தன் திட்டத்தை எல்லாம் அழித்தவன் அவன் என்றும் அவனை எப்படித் தண்டிக்கலாம் என்றும் யோசித்தார். 

“ஸ்வர்னபானு!” அவனைப் பழைய அசுரப் பெயர்கொண்டு அழைத்தார்.

“வேண்டாம் ஐயா! என்னை ராகு என்றே அழையுங்கள்! நான்  தற்போது அசுரன் அல்லன். தேவர்களுடன்  சேர்ந்து ராகுதேவன் ஆகிவிட்டேன். உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. உங்கள் திட்டத்தை முற்றும் தொலைத்தவன் நான். அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். ஆனால்  மகாருத்ரபிரும்மன் வரவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது எனக்கு இட்ட கட்டளை!” 

“சுக்கராச்சாரியாரின் கட்டளைதானே! ,அசுர குலத்தைக் காக்க அவர் செய்யும் முயற்சி!”

” அவர் மட்டுமல்ல. பிரும்மா, சிவன், விஷ்ணு மும்மூர்த்திகளின் கட்டளையும் அதுவே” 

விஷ்வகர்மா திடுக்கிட்டார்.  ” நான் அதற்காக முயலுவது மும்மூர்த்திகளுக்குத் தெரியுமா?” பயத்துடன் கேட்டார் விஷ்வகர்மா. 

” யார் அதை முயன்றாலும் அவர்களைத் தடுக்கவேண்டும் என்பது எனக்கு இட்ட கட்டளை. நீங்கள் முயல்வீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கிறார்கள்;  உனக்கு சூரியனை விழுங்க சரியான சந்தர்ப்பம் என்று அனுப்பி வைத்தவரே பிரும்மன்தான்” என்றான் ராகுதேவன். 

“ஆஹா! பிரும்மருக்கு எப்போதும் என் மீது ஒரு சந்தேகம். எப்படி இருந்தாலும் இன்று உன்னைத் தண்டிக்காமல் விடப்போவதில்லை. என் மனைவி பாவம்,  கத்தியால் வெட்டினால் நீ இறந்து விடுவாய் என்று நம்பியவள். இப்போது செய்வது அறியாமல் நிற்கிறாள். இதோ பாரம்மா! நான் ஆரம்பித்த இந்தப் பிரச்சினையை நானே தீர்த்து வைக்கிறேன். நீ போய் ஸந்த்யா என்ன ஆனாள் என்று கவனி. முடிந்தால் அவளை  ஏதாவது அறையில் கட்டிப்போடு.” என்று கூறினார் விஷ்வகர்மா. 

அவள் சென்றதும், அங்கே அமைதியாக நின்றுகொண்டிருந்த ராகுவிடம் ” எனக்கு உன்னிடம் பிடித்ததே இந்த நிதானம் தவறாத செய்கைதான். உன்னை நான் எப்படித் தண்டிக்கவேண்டும் என்பதையும் நீயே சொல்” என்று கூறினார். 

ராகுதேவன் மெல்ல சிரித்துக்கொண்டு , ” என்னைத் தண்டிக்க மும்மூர்த்திகளைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை அறிந்து கொண்டதால் என்னிடமே வழி கேட்கிறீர்கள் அல்லவா? நான் ஒரு வழி சொல்லுகிறேன். அது உங்களுக்குச் சம்மதமா என்று சொல்லுங்கள்” 

தன் அறிவை மயக்க ராகு  ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட விஷ்வகர்மா அவன் சொல்வதைக் கேட்டுவிட்டு முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தார். அது மட்டுமல்லாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அவன் தன்னை மீறி எதுவும் செய்யமுடியாது என்று  அசைக்க முடியாத நம்பிக்கை வத்திருந்தார். 

ராகு மெல்ல தன் வலையை விரிக்க ஆரம்பித்தான். 

” விஷ்வகர்மா அவர்களே! மகாபிரும்மருத்ரனைத் தோற்றுவிக்கவேண்டும் என்பது உங்களின்  ஆசை.  அதற்காக உங்கள் மகளையே பலி கொடுக்கத்துணிந்தீர்கள்!” 

” என்னது, என் மகள் பலியாவாளா?” 

” ஆம், உங்கள் அருமை மகள் சந்த்யாவிற்கு நீங்கள் கொடுத்த மருந்து வேலைசெய்து அதனால் அவள் வயிற்றில் ஜனித்த கருக்கள் கலைந்தால் அவள் சர்ப்பம் தீண்டி மரணமடையவேண்டும் என்பது விதியாகும். அவளுக்கு கர்ப்பம் ஏற்படக் காரணமே என்னுடைய ராகு தோஷம்தான். மற்றவர்களுக்கு அது தோஷம், எனக்கு அது யோகம். என் பார்வைபட்டால் அது யாராக இருந்தாலும் காமம் அதிகமாகிவிடும். அதுவும் அதீத காமம் ஏற்படும். அந்தக் காம நோயிலிருந்து அவர்கள்  மீளவேமுடியாது. என் பார்வை சூரியதேவன்மீது பட்டதால்தான் அவனுக்குத் தங்கள் மகள் மீது அளவில்லா காமம் பிறந்தது. இருவரும் தங்களை மறந்து உறவு கொண்டதற்குக் காரணம் என் திருஷ்டிதான். அப்படி ஒரு சாபம் எனக்கு. யார் கொடுத்தது தெரியுமா? என் மனைவிகள் நாகவல்லி நாககன்னி இருவரும் சேர்ந்து கொடுத்தது. அது ஒரு தனி காமக்கதை. 

அந்தக் கதையைச் சொல்லட்டுமா?  “

விஷ்வகர்மா கதையைக் கேட்கும் சுவாரசியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ராகுவின் வலையில் விழுகிறோம் என்பதை உணரவில்லை.

(தொடரும்) 

இரண்டாம் பகுதி 

Related image

நாரதர் நினைத்ததை சாதித்தார். 

தேவ உலகுக்கு  வாட்ஸ்அப் கிடைக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் ஒன்றுவிடாமல் செய்தார்.

முடிவில் பரமசிவன்  மிகவும் கோபத்துடன் எழுந்து நின்று ” நாரதா இது என்ன இந்த வாட்ஸ் அப்பைக் கொண்டுவந்து உன் நாடகத்தைத் துவக்குகிறாயா?”  என்று கேட்டதும் நாரதர் சற்று ஆடிப்போய்விட்டார். 

“மகாதேவா! ” என்று அவர் ஏதோ  சால்ஜாப் சொல்ல முயற்சி செய்யும்போது , மகாவிஷ்ணு  அவருக்கு வக்காலத்து வாங்கினார்.

“நாரதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நானும் கூகிளில் தேடிப்பார்த்தேன். நாரதன் சொன்னது முழுதும் சரி. பூமியில் மனிதர்கள் எது சரியான செய்தி, எது தவறான செய்தி என்று தெரியாமல்  தடுமாறுகிறார்களாம். உதாரணாமாக, சமீபத்தில் ஒரு பெரிய சிலை இந்தியாவில் திறக்கப்பட்டதாம். அதில் ஒரு கல்வெட்டில் ஏதோ சொற்பிழை ஏற்பட்டுவிட்டதாக ஒரு இலட்சம் வாட்ஸ்அப் குரூப் மெம்பர்கள் சாடியிருந்தார்கள். இன்னும் லட்சம் பேர் அப்படி தவறே  நடக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுதவிர, பொய்யான தகவல்களால் தவறே செய்யாதவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு கிழவியின் படத்தைப் போட்டு – இவள் குழந்தைகளைக் கடத்துகிறவள் என்று வாட்ஸ்அப்பில்  போட்டதும் அவளை , கும்பலாக சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட வாட்ஸ்அப் நம்ம பட்டணத்துக்கு  வந்தால் ‘அப்புறம் இந்திரன் அகலிகை வீட்டுக்குப் போனதையும் முனிவர் சாபம் கொடுத்ததையும் போட்டோ எடுத்து எல்லோருக்கும் ஷேர் பண்ணிவிடுவார்கள். அப்புறம் இந்திரன் பாடு ஆபத்துதான்.” என்றார்.

சபை ஏக மனதாக வாட்ஸ்அப்பை நிராகரித்தது. 

அதற்குள் மகாவிஷ்ணுவிற்கு வைகுண்டத்திலிருந்து போன் வந்தது.  பன்னிரண்டு ஆழ்வார்களும் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். 

” நீஙகள் இந்த மீட்டிங்கைத்  தொடர்ந்து நடத்துங்கள்! எனக்கு முக்கியமான வேலையிருக்கிறது.” 

மகாவிஷ்ணு அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். கூடவே லக்ஷ்மியும் வந்தாள். 

“அப்படி என்ன எனக்குத் தெரியாத வேலை வைகுந்தத்தில் ?” என்று லக்ஷ்மி கேட்டதும்  மஹாவிஷ்ணுக்குக் கோபம் வந்தது. 

” நான் எத்தனைதடவை சொல்லியிருக்கேன் லக்ஷ்மி!  இன்னிக்கு ஆழ்வார்களுடன் திவ்வியப்பிரபந்தம்பற்றி ஒரு கலந்துரையாடல் இருக்குன்னு”

” ஒஹோ! ஆழ்வார்கள் மீட்டிங்கா?  பொதுவா உப்புமா மீட்டிங்குன்னுதானே சொன்னீங்க! அப்போ அந்த ஆண்டாளும் வருவா இல்லே? அதை எங்கிட்டே சொல்லவே இல்லையே!”

” இங்கே பார்  லக்ஷ்மி ! ஆண்டாள் சமாசாரத்தைப்பற்றி நாம ஏற்கனவே  பேசி முடிச்சுட்டோம் ,அவ பன்னிரண்டு பேர்ல ஒருத்தி. அவ்வளவுதான். ” 

” இன்னும் பதினோரு பேர் இருக்காளா?”  

” இந்த பாரு!, நம்ம ரெண்டு பேரும்  நீ பாக்கற சீரியல்ல வர்ரவங்க மாதிரி பேசிக்கிட்டிருக்கோம். இது  கொஞ்சம்கூட சரியில்ல. நாம எல்லாம் ஸ்வாமி- தாயார் . அந்த மாதிரி நடந்துக்கணும். 

” நான் தாயார், அவள் சின்னம்மாவாக்கும்.!  நான் எல்லாம் தாயார் மாதிரி நடந்துக்கறேன். எல்லாத்தையும் கண்டும் காணாததுமாதிரி இருக்கேன் . நீங்க ஸ்வாமியா லட்சணமா நடந்துக்கோங்க!. ஒவ்வொரு தடவையும் நீங்க பூலோகம்  போனீங்கன்னா எனக்கு திக்குன்னு இருக்கு” 

” சரி, சரி, நீயும் வாயேன். நல்ல தமிழ்ப்பாட்டு கேட்டுட்டு வரலாம்.” 

” நான்பாட்டுக்கு, சும்மா இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்கோ!  நானும் சரஸ்வதியும் பார்வதியும் எமபுரிப்பட்டணத்தை  சுத்திப்  பாத்துட்டு அப்படியே அந்த எமி வந்திருக்காளாம். அவ கிட்டே கொஞ்சம் பேசிட்டு வர்ரோம். ” 

” அடேடே ! நான் எமியை மறந்தே போயிட்டேன். நல்ல உசரமா வளர்ந்திட்டாளாமே? எமன் சொன்னான். அவ சின்னவளா இருந்தபோது பார்த்தது. நானும் வேணும்னா உங்ககூட வர்றேன்”

” அப்போ அந்த ஆழ்வார் மீட்டிங்?”

“அதை நாளைக்கு தள்ளிப்போடலாம். . இப்பவே கருடாழ்வார்கிட்டே சொல்லி அவங்களுக்குத் தகவல் குடுக்கச் சொல்லிடறேன்.”  

” ஐயே! ஒண்ணும் வேண்டாம். நீங்கபாட்டுக்கு போயிட்டு வாங்க. நாங்க பெண்கள் எல்லாம் கொஞ்சம் பேசிட்டு அப்படியே நரகாபுரிக்குப் போய் கொஞ்சம் புது டிசைன்ல துணி வாங்கிட்டு மெதுவா வர்ரோம். நம்ம வைகுந்தத்தில எல்லாம் பழைய ஸ்டாக் ”  என்று சொல்லி லக்ஷ்மி  கிளம்பிப்போனாள்.

 லக்ஷ்மி சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த நாரதர்,  மெதுவாக ” நாராயணா.. நாராயணா.. ” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார். 

” என்னாச்சு நாரதா! மீட்டிங் முடிஞ்சுடுச்சா? “

” எந்த மீட்டிங்பற்றி கேட்கிறீங்க? பிராஜக்ட் மீட்டிங்கா? ஆண்டாள்  மீட்டிங்கா? இல்லே  எமி  மீட்டிங்கா? “

” உனக்கு எப்பப் பார்த்தாலும் வம்புதான். அங்கே என்ன சத்தம் கேட்குது?” 

” அப்பாதான் அம்மாகிட்டே ஏதோ சத்தம் போட்டுகிட்டிருக்கார்”

” என்னாச்சு பிரும்மருக்கும்  சரஸ்வதிக்கும்?” 

” ஒண்ணுமில்லே ! அம்மாவை மீட்டிங்க்கோட மினட்ஸ்  எழுதச் சொன்னாராம். அம்மா கம்ப்யூட்டரில   அடிச்சுட்டு அதை சேவ் பண்ணலையாம்.” 

‘” இதுக்குத்தான் நான் கணபதியையே மினட்ஸ்   எழுதச் சொல்லலாம்னு சொன்னேன். அவன் ஷார்ட் ஹேன்ட்ல எல்லாம் எழுதிடுவான்.  இந்த பரமசிவன்தான் சரஸ்வதியே எழுதட்டும் என்றார்.” 

” அது ஒண்ணும் பிரச்சனை இல்லே. ஸ்வாமி தத்தாம்ஸானந்தா ரிக்கவர்  பண்ணித் தர்ரேன்னு சொல்லியிருக்கார்.” 

” ரொம்ப நல்லதாப் போச்சு. நான் போயிட்டு வர்றேன். கொஞ்சம் கருடனை வரச்சொல்லு.” 

” இதோ சொல்றேன். ஒரு சின்ன உதவி செய்யணும். போகும்போது மகாதேவரை கைலாசத்தில டிராப் பண்ண முடியுமா?” 

” ஏன் , அவரோட நந்தி  என்னாச்சு?” 

Image result for saraswathi sabatham 1966 cast” அது பார்வதிகூட எமபுரிப்பட்டணம் போகுது. கலைமகளும், மலைமகளும், அலைமகளும் அதிலதான் எமியைப் பார்க்கப் போறாங்க! நானும் அங்கதான் போயிட்டிருக்கேன்.” 

” ஜாக்கிரதையாய் போயிட்டு வா! மறுபடியும் சரஸ்வதி சபதம் அப்படீன்னு ஆரம்பிச்சுடப் போறீங்க!” 

” அதைவிட ஆபத்தான விஷயம் நடக்கப்போகுதுன்னு பரமசிவன் மாமா  அப்பாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தார்.” 

“அவர் சொன்னா  நிச்சயம் நடக்கும். நீலநாக்கு  ஆச்சே! ” 

பிரும்மா விஷ்ணு சிவன் பயந்தமாதிரியே நடந்தது.

(தொடரும்) 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

களப்பிரர்கள்

Image result for களப்பிரர்கள்

 

 

குப்த சாம்ராஜ்யம் அழிந்தது.

ஹூணர்களும் அழிந்தனர்.

புயலாகத் தோன்றி மின்னலாக மறைந்தான் யசோதர்மன்!

பேரரசுகள் மறைந்தன… சிற்றரசுகள் துளிர்த்தன…

இந்திய சரித்திரம் – வழி தெரியாமல் … தலைவனில்லாது… நத்தை போல் ஊர்ந்தது…

நாமும் தவிக்கிறோம் … யாரைப் பற்றி எழுதுவது?

சரி … வட இந்தியாவிற்கு இந்த நிலை வந்தது…

என்று… தெற்கு நோக்கிச் சென்று பார்க்கலாம் என்று பார்த்தால்..

அங்கும் இருண்ட காலமாக இருந்தது.

காதல், மானம் , வீரம் என்று சங்கம் சிறப்பித்துப் பாடிய சேர, சோழ , பாண்டியர் எங்கே?

பெட்டிப்பாம்பு?

தென்னகத்தை ஆளும் மன்னர்கள் யார்?

 

கி பி 300- 700:

இருண்ட காலம்?

அது இருட்டடிக்கப்பட்ட காலம் என்று சிலர் கூறுகின்றனர்.

களப்பிரர்  தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பதுபற்றித் தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில்  ஜைன சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்தனர். எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால்..ஒரு முன்னூறு வருட சரித்திரத்தை ஒரு சிலர் அழித்து விட முடியுமா?

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

ஆனால்  என்ன செய்வது – பூசணிக்காயைக் காணவில்லையே!

எதை நம்புவது?

ஒரு வேளை – எதிர்காலம்  இதற்கு சான்றுகள் அளிக்கக் கூடும்.

நாம் அறிந்ததை வைத்து நமது கதையைப் பார்ப்போம்.

Image result for களப்பிரர்கள்

சங்ககால இறுதியில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை, ‘களப்பிரர்’ என்ற பெயர்கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை, தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். அந்த இனக்குழுவினர் எங்கிருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும், சரியாக அறியமுடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், அவர்களைப்பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ, நாணயவியல் ஆதாரங்களோ கிடைக்கவில்லை. 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வேள்விக்குடி’ செப்பேட்டில், களப்பிரர்களைப்பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய அரசனால் வெளியிடப்பட்டது.

சாதவாகனப் பேரரசர் வீழ்ச்சியுற்றபின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலைபெற்று, தனி அரசுகளாகச் செயல்பட்டன.தமிழ்நாட்டின் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலை வாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் தமிழகத்தைத் தாக்கியிருக்கக்கூடும்.

 

ஒன்று மட்டும் தெரிகிறது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

யசோதர்மன்- குப்தருடன் கூட்டு சேர்ந்ததால் சக்தி வாய்ந்த ஹூணர்களையே அழிக்க முடிந்தது.

ஆனால்.. கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் காலத்திற்குப்பிறகு பல மன்னர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழிந்தனர். ஒரு சோழன் மற்றொரு சோழனைக் கொன்றான்.

மேலும் சங்க இலக்கியங்கள் வீரத்தை மிகவும் உயர்த்தி…’சண்டையிட்டால் தான் நீ வீரன்’  என்று பாடி … மன்னர்களை உசுப்பேத்தி அவர்களை அழித்தது!!

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுவது:

இது இருண்ட காலம் அல்ல…

இது ஒரு விடியல் காலம்..

 

களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும் அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும், நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும், மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியவைகளே ஆகும்.

 

ஒரு கதை புனைவோம்…கற்பனை சிறிதுதான் … ஆனால் சரித்திரம் பெரிது..

 

களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் !

எல்லா மன்னர்களும் விக்ரமாதித்யன் என்று பட்டம் சூட்டிக்கொண்டதுபோல் – எல்லா களப்பிர மன்னர்களும் அச்சுதன்தான்!

சேர சோழ பாண்டியர் மூவரையும் போரில் வென்றான்.

மூவேந்தர்கள் தங்கள் வீரத்தை விட்டாலும்…புலமையை மட்டும் விடவில்லை…

அச்சுதன் கூறினான்:

“தமிழ் நாட்டின் மூவேந்தர்களே! கரிகாலன்,செங்குட்டுவன், நெடுஞ்செழியன்  பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்… வீரம் … வீரம் என்று ஆர்ப்பாட்டம்போட்டு உங்களுக்குள்ளே சண்டைபோட்டீர்கள். இன்று உங்கள் வீரம் எங்கே?…உங்கள் புலமை மட்டும் ஒடுங்கவில்லை. நாட்டின் தலை சிறந்த கவிகள் நீங்கள்தான். உங்கள் கவிகளை நீங்கள் பாடவேண்டும்… எனக்கு மகிழ்ச்சி தந்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்கும் …ஆனால் உங்கள் உடல் மட்டும் எனது சிறையில்தான் தங்கும்”.

அட்டகாசமாகச் சிரித்தான்.

அவர்களைத் தளையிட்டு – சிறையிட்டான் – தில்லை நகரில்.

 

இடம்: தில்லை நகர் – அச்சுதன் அரண்மனை…

அச்சுதன் அரியாசனத்தில் வீற்றிருந்தான்.

சிறைத்தலைவன் அரண்மனைக்கு வந்தான்:

“மன்னர் மன்னா! சிறையிலிருந்து செய்திகள்!” – மன்னனிடம் மூன்று ஓலைச்சுவடிகளைக் கொடுத்தான்.

“என்ன சிறைத்தலைவரே இது?”

“மூவரும் … தங்களது விடுதலைக்காக விண்ணப்பித்து எழுதிய கவிகள் இவை”.

அச்சுதன் அதை வாங்கிப் படித்தான்:    

 

சேரன் பாடிய வெண்பா:

தினை விதைத்தார் முற்றம் தினையுணங்கும் செந்நெல்

தனை விதைத்தார் முற்றமது தானாம் – கனைசீர்

முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த்தானை

அரசுணங்கும் அச்சுதன் தன் முற்றத்து.

 

அச்சுதன் மகிழ்ந்தான்:

“ஆஹா! அற்புதம்!சேரனை விடுதலை செய்க”

 மேலும் படித்தான்.

 

சோழன் பாடிய வெண்பா:

அரசர் குல திலகன் அச்சுதன் முற்றத்தில்

அரசரவதரித்த அந்நாள் – முரசதிரக்

கொட்டிவிடும் ஓசையினும் கோவேந்தர் காற்றளையை

வெட்டி விடும் ஓசைமிகும்.

 

அச்சுதன் மகிழ்ந்தான்:

“மகிழ்ச்சி! சோழனையும்  விடுதலை செய்க”

 

சேரனும் சோழனும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு இறைஞ்சி வேண்டியது அச்சுதனை மகிழ்வித்தது. சோழன், களப்பிரனை “அரசர் குல திலகன்” என்றே பாடியது கண்டு – மனம் மகிழ்ந்த அச்சுதக் களப்பாளன் அவ்விருவரையும் உடனே விடுதலை செய்தான்.

 

பாண்டியன் பாடிய வெண்பா:

குறையுளார் எங்கிரார் கூர்வேலி ராமன்

நிறையறு திங்களிருந்தார் – முறைமையால்

ஆலிக்குந்தானை அலங்குதார் அச்சுத முன்

வாலிக் கிளையான் வரை

 

அச்சுதன் மகிழ்ச்சி திடீரென தடைப்பட்டது.

குருவிகளை வேட்டையாடும் கழுகு போல் … முகம் பயங்கரமாக மாறியது.

“எனக்குப் பிடிக்கவில்லை … பாண்டியனின் தளை இன்னொன்று ஏற்றப்படட்டும்”.

சிறைக்காவலருக்கும், மந்திரிமார்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

“பாண்டியன் பாட்டில் என்ன குறை கண்டீர்கள் மன்னா?” – மந்திரியார் வினவினார்.

அச்சுதன் :

“பாண்டியன் சிறைப்பட்டிருந்த நிலையிலும் பெருமிதம் குறையாமல் தன்னை இராமனுடன் ஒப்பிட்டுக் கொண்டு பாடியிருக்கிறான். அதனாலே அவனுக்கு கூடுதல் விலங்கு”!

சிறையில் பாண்டியன் “நமது பெருமிதம் நமது எதிரியாயிற்றே!.. “ – என்று நொந்தான்.

மிகவும் பணிந்து வேறொரு வெண்பா பாடினான் .

“காவலரே! மாமன்னர் அச்சுதனிடம் இந்த வெண்பாவைச் சேர்த்து எனது பணிவைக் கூறுங்கள்”

 

பாண்டியன் பாடிய வெண்பா:

குடகர் குணகடலென்றார்த்தார் குடகர்க்

கிடகர் வடகடலென்றார்த்தார் – வடகடலர்

தென்கடலென்றார்த்தார் தில்லையச்சுதானந்தன்

முன்கடை நின்றார்க்கும் முரசு

 

அச்சுதன் முகமலர்ந்தான்:  “இது.. இது…சரியான பாட்டு… பலே பாண்டியா! உனக்குத் தந்தேன் விடுதலை”

பாண்டியனும் விடுதலை பெற்று ஓடினான்.

 

இந்த பாண்டியன் வம்சத்தில் 300 ஆண்டு காலம் கழிந்து ‘கடுங்கோன்’ என்ற மன்னன் இந்த களப்பிர மன்னனைத் தோற்கடித்து மீண்டும் பாண்டிய ஆட்சியைத் தொடங்குவான். அது போல விஜயாலய சோழனும்  களப்பிர முத்தரையனை தஞ்சையில் வென்று சோழநாட்டை ஸ்தாபிப்பான்.

 

அதுவரை அவர்களுக்கு இருண்ட காலமே!

 

சரித்திரம் இந்தியாவில் அலைகிறது…வேறு என்ன சுவாரஸ்யமான கதைகள் உள்ளன? தேடுவோம்..

 

 

 

 

 

TSUNDOKU – சுண்டோகு- தில்லைவேந்தன்.

Image result for tsundoku

தலைப்பு புரியவில்லையா? கவிதையைப் படியுங்கள் ! தானே புரியும்.

படிக்க வேண்டும் என்றெண்ணிப்
பலநூல், பலநாள் சேர்த்துவைத்தேன்
அடுக்கி வைக்க இடமில்லை;
ஆனால் ஆர்வம் விடவில்லை.
இடுக்கும் இண்டும் செருகிவைத்தேன்
எல்லாப் பரணும் அடைத்துவைத்தேன்
தடுக்க இயலா மனநோயா ?
தாளா விருப்பா ? தெரியவில்லை !

இலக்கியங்கள் இலக்கணங்கள்
என்றோ படித்த பாடங்கள்
கலக்கும் கரிய பேய்க்கதைகள்
காதல் கதைகள் , போர்க்கதைகள்
விலக்க முடியாப் புராணங்கள்,
விரும்பித் தொகுத்த இதழ்க்கதைகள்.
நலக்க ருத்து நவில்நூல்கள்
நானே அறியாப் பலநூல்கள்.

இங்கும் அங்கும் சிலவற்றை
எடுத்துப் பிரித்துப் பார்த்தாலும்
எங்கு நேரம் இருக்கிறது ?
ஏறும் வயதோ சிரிக்கிறது.
மங்கும் கண்ணோ மறைக்கிறது
மாறா ஆர்வம் மறைகிறது.
தெங்கம் பழம்கொள் நாயைப்போல்
திகைப்பு நெஞ்சில் விரிகிறது.

    இதன் தலைப்பு : படிக்கச் சேர்த்தல்                   

சுண்டோகு - TSUNDOKU - ஜப்பானிய வார்த்தை - TSUN + DOKU என்ற இரு பதங்களின் சேர்க்கை. TSUN என்றால் சேர்த்தல் -
to pile up ; doku என்றால் படிக்க - reading ஆக, TSUNDOKU என்றால் படிக்க வேண்டும் என்ற ஆசையால் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம்'
( இதனால் தான் புத்தகக் கண்காட்சியில் 10-15 கோடி ரூபாய் புத்தக விற்பனையோ? )

Related image

TSUNDOKU வியாதிக்கு இருவகை மருந்து உண்டு !

ஒன்று இயற்கை வைத்தியம்: புத்தகங்களைப் படிப்பது.

இரண்டாவது, இன்றைய வைத்தியம்:  குவிகம் புத்தகப் பரிமாற்றம்.

 

 

வைதீஸ்வரன் விரும்பிய கவிதைகள் – டாக்டர் என் கோபி

எனக்கு பிடித்த கவிதைகள் –  வைதீஸ்வரன்

Image result for வைதீஸ்வரன்

Acharya Gopi.jpg

இங்கே தரப்படும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தெலுங்கு மொழியிலிருந்து பெறப்பட்டவை. எழுதிய கவிஞர் கோபியை நான் பிரபலமாக அறிந்தவனில்லை. அவர் கவிதைகள் அருமையாக உள்ளன. பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்புகிறேன்.

துன்பங்களின் போது
தாயாரின் முந்தானைக்குள் பதுங்கியது போல்
நான் கவிதைகளுக்குள் புதைந்து கொள்கிறேன்

**
வியர்வை எறும்புகள்
எத்தனை தட்டினாலும் விலகுவதில்லை

**
அவள் மரணம் நொடியில் நிகழ்ந்தது
எங்கள்மரணம்
நொடிக்கு நொடி நிகழ்கிறது.

**
காலண்டர்களை தின்று கொழுத்த
காலத்துக்கு
இயக்கம் மட்டும் உண்டு
இலக்குகள் இல்லை

**
கண்களிலிருந்து
உதிர்வதால் அவை
கண்ணீர் போலாகுமா?

**
அதோ
அந்தப்பையன்
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தெறிகிறான்!!

டாக்டர் என் கோபிபற்றி மேலும் பல  தகவல்கள் ( இணைய தளத்திலிருந்து) 

தெலுங்கு கவிதைத் தளத்தின் அதி நவீன கவிதை வடிவம் “நானிலு”.  “தெலுங்கு பல்கலைக்கழகத்தின்” முன்னாள் துணை வேந்தரும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான முனைவர். என். கோபி அவர்களால முதன் முதலாய் வடிவமைக்கப்பட்ட “நானிலு” வெகு எளிதாய் புரிந்துகொள்ளப்படும் தன்மையிலேயே தெலுங்கு இலக்கிய உலகின் இன்னொரு பரிமாணமாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நாலடிக் கவிதைகள் இலக்கிய இலக்கண வரையறைகளுக்கப்பாற்பட்டவை.

ஹைகூக் கவிதைகள்போல இறக்குமதி செய்யப்பட்டதல்ல இது. 

நானிலு கவிதைகளின் சில அடையாளங்கள்… நான்கு வரிகள். சுமார் பத்து முதல் இருபது வார்த்தைகள். முதல் இரு வரிகளில் ஒரு செய்தி….தகவல் அல்லது குறீயிடாக அமைத்து அடுத்த இருவரிகள் அதைச் சார்ந்தோ எதிர்த்தோ தொடர்புபடுத்தியோ அமைவது இதன் பிரதான அடையாளம். மரபு, புது, ஹைகூ என எல்லாவகைக் கவிதை வடிவங்களுமே மேற்சொன்ன அடையாளம் கொண்டதாகவே அமைகிறதென்றாலும் “நானிலு” கவிதைகளில் பொருள் சார்பு சற்று அழுத்தமாய் விழுகிறது. அணுகுமுறை அதாவது வெளிப்பாடு அதி எளிமையாயினும் பொருட்செறிவு வீரியமானது.

தெலுங்கு கவிதைக்களத்தில் ஒரு நவீன கவிதை முயற்சியை துணிவுடன் மேற்கொண்டு ஒரு “ட்ரெண்ட் செட்டர்” ஆன திரு. கோபி அவர்களின் முதல் சீடர் திரு. எஸ்.ஆர்.பல்லம். கவிஞர் பல்லத்தின் தொகுப்பிலிருந்து தன் குருவுக்குக் காணிக்கையாய் படைத்த நானிலுக்களில் சில

விளக்குடன்
ஒப்பிடத்தேவையில்லை
மண்ணெண்ணெய்க்கு
தாரைவார்க்காமாலிருந்தால் போதும்

சொல்வது
புரியாததற்கு
மொழி மட்டுமல்ல
மனமும் காரணம்தான்

யாத்திரை என்றால்
பயணமல்ல
உன்னுள்ளேயே
நீ செல்லும் பிரவாகம்

அரிசிமணி மீது
சித்திரம் அழகுதான்
அது சோற்றுப்பருக்கையாகும்போது
இன்னும் அழகு

நன்றி: திசைஎட்டும் அக்-டிசம்பர் 2005 இதழ்

இதைப்போன்று தமிழில் அந்தக்காலத்தில் அம்மானை என்று ஒரு வகை பிரபலம். அதைப்பற்றி அடுத்த பக்கத்தில் பார்க்கலாம். 

 

அம்மானை – எஸ் எஸ்

Image result for அம்மானை

அம்மானை என்பது மூன்று பெண்கள் ஆடும் கல்  விளையாட்டு.  இன்றும் கிராமங்களில் மூன்று கல்  , ஐந்து கல்  என்று கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து ,  பெண்கள் ஆடும் ஆட்டம் நடைபெற்று வருகிறது.  ஆனால் பழங்காலத்தில் இந்த விளையாட்டு ஆடும்போது இலக்கிய நயம் ததும்பும் பாடல்களைப்  பாடி விளையாடியதால்  அந்தப் பாடல் முறைக்கே அம்மானை என்று பெயர் வந்தது.

முதல் பெண் ஒரு செய்தியைப்  பாட்டாகக்  கூறிவிட்டு,    கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள்.  அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ  இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும்.

இரண்டாவது பெண் ,  முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள். 

மூன்றாவது பெண் அந்த வினாவிற்கு  விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.

இதுவே ‘அம்மானை’ விளையாடும் முறையாகும்.

உதாரணமாக ,  திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,

முதற்பெண் (பொதுச்செய்தி)

“தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளுமானவர் தாம் ஆண்பெண் அலியலர் காணம்மானை

வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.

இரண்டாவது பெண் (வினா)

“ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில் சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை?

அவ்வாறு  திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும்  அல்லாதவரானால்  சீதையை மணந்தது ஏன்.?

மூன்றாவது பெண் (விடை)

“ “தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை” ”

சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் (சாபம் என்றால்  வில்  என்று பொருள் )என்னும் இருபொருள்பட விடைகூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.

இந்த அம்மானை வடிவில்  சிலப்பதிகாரத்திலும்  இளங்கோ அடிகள் பாடியிருக்கிறார்.

மாணிக்கவாசகர் திருவாம்மானை என்று பத்துப் பாடல்கள் சிவபெருமானைப்பற்றிப் பாடியுள்ளார். இதில் மூன்று பெண்கள் பாடுவதுபோல் இல்லாமல் , வினா-விடையும் இல்லாமல் ஒரு பெண்ணே சொல்லவேண்டியதைக் கூறி அம்மானை என்று முடிப்பதுபோல் அமைத்திருப்பார்.

இராமப்பையன் என்பவர் எழுதிய அம்மானைப் பாடல்களால் நாயக்கர் வம்சத்தைப்பற்றித்   தெரிந்துகொள்ள முடிகிறது.

கிறித்துவத் தமிழ்த் தொண்டரான வீரமாமுனிவர் ‘கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை’ என்ற நூலை எழுதியுள்ளார். 

இசுலாமியத் தமிழ்த் தொண்டரான உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர்  சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக்கொண்டு ‘பரத்தியர் அம்மானை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.

‘லாவணி’ என்றழைக்கப்படும் சமீபத்திய கதைப்பாட்டும் அம்மானைக் கதைப் பாட்டுப்போலவே அமைந்திருக்கும். குதிரை லாவணி போன்றவை அன்றாடப் பேச்சு வழக்குத் தமிழில் குறிப்பிட்ட இலக்கணம் ஏதுமின்றி அமைவதைப் பார்க்கலாம்.

“அம்மானை என்னும் செய்யுள் வகை சிலப்பதிகாரத்தில் பிறந்து, மணிவாசகரின் திருவம்மானையில் தவழ்ந்து, சிற்றிலக்கியம் பிரபந்தங்களில் முழு வளர்ச்சியுற்று, அண்மைக்கால அம்மானைக் கதைப் பாட்டுக்களைத் தன் குழந்தைகளாகப் பெற்று நம்மிடையே இன்னும் இளமை குன்றாத் தமிழ் இலக்கியமாகத் திகழ்கிறது ” என்று கனடாவில் இருக்கும்  அறிஞர்  அனந்த் எழுதுகிறார்.

 

 

 

குவிகம் பொக்கிஷம் – அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி

i_paa

 

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். 

பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப்   புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள்.

அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா.

அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களை தாராளமாக நீட்டியபடி.  இன்னொருவர் அங்கு உட்கார வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை.  உலகத்தைப் பந்தாகச் சுற்றி தம் குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் காலருகே இரண்டு பேர் பணிவுடன் நின்று கொண்டிருந்தார்கள். தமிழர்கள். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு வடநாட்டுக்காரருக்கு பணிவிடை செய்வது போல் முறுக்கேறிய மீசையுடன் இரண்டு தமிழர்கள் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

‘பழம் எல்லாம் சரியா?’ என்று பாதிஹிந்தியிலும், பாதி ஆங்கிலத்திலும் அவர் கேட்ட கேள்விக்கு, அவர்கள் தலையை ஆட்டி ‘சரிய்யா’ என்றார்கள் தமிழில்.

‘ஸீட்’டுக்குக் கீழே இரண்டு பழக்கூடைகள் இருந்தன.

அவர் எங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

‘எங்கே போகிறீர்கள்?’ என்றார் ஹிந்தியில்.

‘டெல்லிக்கு’ என்றாள் என் மனைவி.

‘ஹும்!’ அவர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.

அது ஏ.ஸி. ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்புப் பெட்டி. இன்னொரு ஸீட்டில் உட்கார வேண்டியவன் – அவன் இளைஞன், இருபத்திரெண்டு வயதிருக்கலாம் – ஒரு சூட்கேஸ், பை, சகிதமாக வந்து அவரருகில் நின்றான்.

‘என்ன வேணும்?’ என்றார் ஆங்கிலத்தில்.

‘இது என் இடம், எழுந்திருங்கள், உட்கார வேண்டும்.’

‘தம்பி, அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு உட்காரு. ஐயா ரயில்வே போர்ட் மெம்பர்.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இவரா ரயில்வே போர்ட் மெம்பர்? அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முகத்தில் ஒரு தனிக்களை இருக்கும்.  இவரைப்பார்த்தால், ஜோதிடர் என்று சொல்லாம். இல்லாவிட்டால், ஓர் அரசியல்வாதி என்று சொல்லலாம், ஒரு மந்திரி என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருப்பவர் என்று யாருமே சொல்லமாட்டார்கள். மேலும், ‘ரயில்வே போர்ட் மெம்பர்’, இந்த வகுப்பில் ஏன் பயணம் செய்ய வேண்டும்? அவருக்கு ஸலூன் இருக்கக்கூடுமே!

‘அவர் யாரா இருந்தா எனக்கு என்னய்யா? என் இடம் எனக்கு வேணும்..’ என்றான் இளைஞன்.

அவர் அந்தப் பையன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், ஓர் ஆரஞ்சுப் பழத்தை உறித்துக் கொண்டிருந்தார்.

‘ப்ளீஸ் கெட் அப், ஐ வான்ட் டு ஸிட்டெளன்’ என்றான் அவ்விளைஞன், குரலில் சற்று கண்டிப்புத் தோன்ற.

‘வேறு இடம் பார்த்துக் கொள். நான் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்’ என்றார் அவர் ஹிந்தியில்.

‘ஓகே. நானே சொல்லுகிறேன். நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என் ஸீட்டை உங்களால் ஆக்ரமிக்க முடியாது. நீங்கள் ரயில்வே போர்ட் மெம்பர் என்று சொல்வதே பொய். அரசியல்வாதியாக இருக்கலாம்’ என்றான் அந்த இளைஞன் ஹிந்தியில்.

அவன் ஹிந்தியில் சொன்னது, அவருடைய பணியாளர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அவர் அவர் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு கால்களை மடக்கிக் கொண்டார்.

‘என்னய்யா பெரியவரைப் போய் இப்படி..’ என்றான் அவருடைய ஆட்களில் ஒருவன்.

‘அப்படிச் சொல்லுங்க.. பெரியவர், மரியாதை தரவேண்டியதுதான். ரயில்வே போர்ட் மெம்பர், அது இதுன்னு சொல்லாதீங்க..’

‘ரயில்வே போர்ட் மெம்பர்தான்யா; நாங்களும் ரயில்வேயில்தான் வேலை செய்யறோம்.’

அந்த இளைஞன் அவர்களைப் புன்னகையுடன் நோக்கிவிட்டு உட்கார்ந்தான். அவர்களையும் அவர் இவ்வாறு சொல்லி ஏமாற்றியிருக்கக் கூடுமென்று அந்தப் புன்னகை கூறியது.

அவர் என் மனைவியை நோக்கி ஹிந்தியில் சொன்னார். ‘என் பேர் ரவிஷங்கர் மிஸ்ரா. இது நான் எழுதிய நூல், கவிதைத் தொகுப்பு’

அவர் தம் பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அவர் கவிஞராக இருக்கக் கூடுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. நானும் இலக்கிய ரசிகனாக இருக்க முடியாதென்று அவர் நினைத்த காரணத்தினால் தான் அந்தப் புத்தகத்தை என் மனைவியிடம் கொடுத்தார் என்று எனக்குத் தோன்றியது.

என் மனைவி அந்தப் புத்தகத்தைப் புரட்டினாள்.நானும் பார்த்தேன்.

சின்னச் சின்னக் கவிதைகள். மூன்று வரிகளுக்கு மேலில்லை.

‘முன்னுரை யார் என்று பாருங்கள்’ என்றார் அவர்.

ஓர், அரசியல் பெரும்புள்ளி.

புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவர் கையை நீட்டினார். கவிதைகளை என் மனைவி படித்தாக வேண்டுமென்று அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.

‘எனக்குப் பல்கலைக் கழகப் பட்டம் டாக்டர் என்பதோடு, நான் தொழிலிலும் டாக்டர்’ என்றார் அவர்.

கவிஞர், டாக்டர், இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றிற்று.

அவர் இன்னொரு புத்தகத்தை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தார்.

மருத்துவ நூல், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி எல்லாம் கலந்த ஒரு நூல்.

‘அல்லோபதி இல்லையா?’ என்று நான் கேட்டேன்.

‘எனக்குத் தெரியும்.. ஆனால் நம் நாட்டுக்கேற்றவை இவைதான் என்பது என் அபிப்பிராயம். புற்றுநோயைக் கூட குணப்படுத்திவிட முடியும், செய்து காட்டியிருக்கிறேன்.’

‘நீங்கள் ரயில்வே போர்ட்மெம்பர் என்று இவர்கள் சொல்லுகிறார்களே?’ அவர் அதை மறுக்கவுமில்லை, ஆமோதிக்கவுமில்லை. வெறும் புன்னகைதான் பதில்.

ரயில்வே அட்வைஸரி கவுன்சில் மெம்பரா இருக்கலாம் என்றான் அந்தப் பையன்.

இரண்டும் ஒண்ணுதானுங்க! என்றான் அந்த இருவரில் ஒருவன்.

எப்படிங்க ஒண்ணா இருக்க முடியும்? ரயில்வேல வேலை செய்யறீங்க, இது, கூடவா தெரியலே? என்னவா இருக்கீங்க? என்றான் இளைஞன்.

பழ காண்ட்ராக்டருங்க

எனக்குப் புரிந்தது.

வண்டி புறப்படும் போலிருந்தது.

கோயிங் ஸார். குட் ஜர்னி ஸார். என்று கைகளைக் கூப்பி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் வண்டியை விட்டு இறங்கினார்கள்.

‘என் பேர் மோகன்’ என்று சொல்லிக் கொண்டே கைகளைக் கூப்பினான் அந்த இளைஞன். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும், என் அப்பாவை உங்களுக்குத் தெரியும். ராஜகோபாலன் பிடிஐ ‘ என்று தொடர்ந்தான்.

ஓ.. அப்படியா? அவர் எப்படியிருக்கார்?

செளக்கியம். நான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். அடுத்த வாரம் அமெரிக்கா போறேன்.

குட்.. கம்ப்யூட்டரா?

ஆமாம்.

அங்கேயே செட்டில் ஆயிடுவே..

நோ நோ.. திரும்பி வந்துடுவேன்…

அவர் எங்களிருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக நான் மோகன் அமெரிக்கா போகப் போவதைப் பற்றிச் சொன்னேன்.

கையை நீட்டு என்றார் அவர் எழுந்து உட்கார்ந்தவாறு.

மன்னிக்கவும். எனக்கு நம்பிக்கையில்லை.

அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேருக்கு நம்பிக்கையுண்டு தெரியுமா?

இருக்கலாம் எனக்கு இல்லை.

நான் பெரிய ஜோதிடன். டில்லியில் மிஸ்ரா என்று நீ கேள்விப்பட்டதேயில்லையா? நன்றாக ஹிந்தி பேசுகிறாய், நீ டில்லயில் தானே இருக்கிறாய்?

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் டில்லியில்தான். எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது.

மொரார்ஜியிடம் எண்பதில் சொன்னேன், உங்களுக்கு இன்னும் கொஞ்ச காலந்தான் பதவியென்று. இந்திராகாந்தி என்னை தேடிக் கொண்டு வந்தார். தேர்தலில் ஜெயிப்பீர்கள் என்றேன். கைலாஷ் காலனியில் என் வீட்டுக்கு வந்தாயானால், வாசலில் வரிசையாய் கார் நின்று கொண்டிருக்கும், ஜோஸ்யம் கேக்க. உனக்குக் காசு வாங்காமல் சொல்லுகிறேன் என்கிறேன், வேண்டாமென்கிறாய்.

மன்னிக்கவும். இறந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று ஸஸ்பென்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை போரடிக்கும் என்றான் மோகன்.

என்ன நடக்குமென்று தெரிந்து கொண்டால், தவறுகள் செய்யாமல் உன்னைத் திருத்திக் கொள்ள உதவுமல்லவா?

விதியில் உங்களுக்கு நம்பிக்கையிண்டா?

நிச்சயமாக

அப்படியானால் நடப்பது நடந்துதானே ஆகவேண்டும்? தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள இயலும்?

குதர்க்கம் பேசுகிறாய். இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லோருமே இப்படித்தானிருக்கிறார்கள். உங்கள் ரீகன் மனைவியும் ஜோஸ்யம் கேட்கிறாள் தெரியுமா?

எங்கள் ரீகனா? நான் அமெரிக்காவுக்குப் போகப் போகிறேன் என்பதால் அமெரிக்கனாகி விடுவேனா? என்று கூறிவிட்டு மோகன் சிரித்தான்.

அப்பொழுது கண்டக்டர் அங்கு வந்தார். ‘நீங்கள் தான் மிஸ்டர் மிஸ்ராவா?’ என்றார் மிகவும் பவ்யமாக.

அவர் தலையசைத்தார்.

எல்லாம் செளகர்யமாக இருக்கிறதா?

இருக்கிறது. நான் மிஸ்டர் மிஸ்ரா இல்லை, டாக்டர்…’

மன்னிக்கவும்… மருத்துவ…

ஆமாம்.

ஏதாவது வேண்டுமா, உங்களுக்கு?

ஒரு தலையணைதான் கொடுத்தான் உங்கள் பையன். போதாது; இரண்டு வேண்டும்’

‘எஸ் ஸார்’

வண்டி தாமதமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு நாளைக்கு அடுத்த நாள் பதினொன்று மணிக்கு உங்கள் மந்திரி ஸிந்தியாவுடன் அப்பாய்ன்ட்மென்ட் புரிந்ததா?

எஸ் ஸார்.

ஏதாவது வேண்டுமானால், பிறகு சொல்லுகிறேன்.

எஸ் ஸார்

இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ரயில்வே அட்வைஸரி கவுன்ஸிலில் மெம்பர் என்பதாலா, இல்லாவிட்டால் அவர் சொல்வது போல் அரசாங்க ஜோஸ்யர் தானா?

அவர் அணிந்திருந்த ஒன்பது மோதிரங்கள் மீது என் கவனம் சென்றது.

”ஒன்று கேட்கலாமா?” என்றேன் நான்.

”கேளுங்கள். ”

”கையில் ஒன்பது மோதிரங்கள் அணிந்திருக்கிறீர்களே.. ”

”அதுவா?” என்று அவர் புன்னகையுடன் கூறினார். ”நவரத்தினங்கள். ஒன்பது என்ற எண்ணின் விஷேஷம் தெரியுமா? ”

”தெரியாது. ”

‘”ஒன்பதை இரண்டால் பெருக்கி வரும் தொகையின் எண்களைக் கூட்டிப் பாருங்கள். ஒன்பது. இந்த மாதிரி எந்த எண்ணால் பெருக்கிக் கூட்டிப் பார்த்தாலும் கடைசியில் வருவது ஒன்பதுதான். உதாரணமாக 9 x 102 = 918; 9 + 1 + 8 = 18; 1 + 8 = 9. இந்த மாதிரி, இது ஏன் தெரியுமா? ”

”தெரியாது. ”

”ஒன்பதுதான் இறைவன். எதனாலும் பாதிக்கப் படாதவன். ஒன்பதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டால், எல்லா நன்மைகளும் ஏற்படும். இன்று என்ன தேதி? ”

”பதினெட்டு. ”

”அதாவது, 1 + 8 = 9.  நான் எந்தக் காரியம் செய்தாலும் ஒன்பதில்தான் செய்வேன். நவக்கிரகங்களின் தாத்பர்யம் இப்பொழுது புரிகிறதா? ”

”எல்லோருக்குமே ஒன்பது நல்லதுதானா?” என்று கேட்டாள் மனைவி.

”நிச்சயமாக. ”

என்னை நவரத்தினக் கல் மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று நச்சரிக்கப் போகின்றாளோ என்ற பயம் எனக்கு வந்தது.

‘எல்லாருக்குமில்லை’ என்ற நான் இழுத்தேன்.

”இல்லை. எல்லாருக்குந்தான்.” என்றார் அவர் உறுதியான குரலில்.

என் மனைவி அவரிடம் கையை நீட்டினாள்.

”ஒரு கேள்வி கேளுங்கள் சொல்லுகிறேன்.” என்றார் அவர்.

”எனக்கு ஆஸ்துமா உண்டு. அது எப்பொழுது போகும்? ”

அவர் ஐந்து நிமிஷங்கள் கையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு சொன்னார். ”நவக்கிரக பூஜை செய்யுங்கள். பூஜை ஒன்பது நாள் நடக்க வேண்டும். நவரத்தினக் கல் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். பாதிப் பேர் இதுதான் நீலம் இதுதான் மரகதம் என்று பொய் கல்லைக் காட்டி ஏமாற்றுவார்கள். உண்மையான கல் வேண்டுமானால், இந்தாருங்கள்..” என்று சொல்லிக் கொண்டே அவர் தம்மருகில் வைத்திருந்த டயரியில் இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொடுத்தார்.

”இந்த ஆள் நம்பகமானவன். என் பேரைச் சொல்லுங்கள். இந்தாருங்கள், இதுதான் என் முகவரி. ”

”நவகிரக பூஜை நீங்களே வந்து செய்வீர்களா?” என்று கேட்டேன் நான்.

”அது என்னால் முடியாது. நான் ஆட்களை அனுப்பி வைக்கிறேன். ”

அவர் உடனே கண்களை மூடிக்கொண்டார். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து ‘மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு மணிநேரம் தியானம் செய்யவேண்டும் ‘ என்றார்.

”செய்யுங்கள். ”

”இந்த ஆளை நம்பறீங்களா?” என்றான் மோகன்.

”ஏதானும் சக்தி இருக்கணும். இல்லாமலா. மொரார்ஜி, இந்திராகாந்தி எல்லாரும் இவரைத் தேடிண்டு போறா?” என்றாள் என் மனைவி.

”பதவி வந்துட்டா அதுக்கு நாம தகுதியா என்ற சந்தேகம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்துடும். அதனால் ஜோஸ்யர்களை தேடிண்டு போறாங்க. சக்தியுமில்லே ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. ”

என் மனைவியும் கண்களை மூடிக்கொண்டதிலிருந்து அவள் அவனுடன் வாக்காட விரும்பவில்லை என்று தெரிந்தது.

திடீரென்று கண்விழித்தேன். ஒரே சத்தம். ‘டாக்டர்.. டாக்டர்’

நாலைந்து பேராக மிஸ்ராவை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அவர் கண்களைத் திறக்கவேயில்லை.

”என்ன அவருக்கு?” என்றேன் நான்.

”எங்களுக்குத் தெரியாது, கண்டக்டர் சொன்னார், இவர் டாக்டர்னு. இங்கேயிருந்து மூணாம் கம்பார்ட்மெண்ட்லே ஒரு குழந்தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுது. என்னன்னு தெரியலே. இவரைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்”. என்றான் ஒருவன்.

”டாக்டர் மிஸ்ரா, டாக்டர் மிஸ்ரா” என்று நானும் அவரை எழுப்ப முயன்றேன்.

அப்பொழுது என் மனைவி சொன்னாள்,” உங்களுக்குச் சத்தம் கேட்கலியா, அவருக்கே பயங்கர ஆஸ்துமா மூச்சு வாங்கறதைப் பாருங்க.. ”

மேலே படுத்துக் கொண்டிருந்த மோகன் கீழே இறங்கினான்.

அவன் வந்தவர்களிடம் சொன்னான் : ”இவர் டாக்டருமில்லை ஒண்ணுமில்லை. குழந்தையைக் காப்பாத்தணும்னா வேற கம்பார்ட்மெண்ட்லே டாக்டர் இருந்தாப் பாருங்க’

வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அவரை எழுப்பி, ”என்கிட்டே மருந்து இருக்கு, சாப்பிடறாரா கேளுங்கோ.. ‘ என்றாள் என் மனைவி.

மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினேன். கண்களைத் திறந்து சுற்று முற்றும் பார்த்தார். அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

”டெட்ரால் எஸ்ஏ இருக்கு வேணுமா?” என்றாள் என் மனைவி.

”வண்டியிலே நவகிரக பூஜை செய்ய முடியுமா?” என்று கேட்டான் மோகன்.

”அது தப்பு. கஷ்டப்படறவாளுக்கு உதவி செய்யணும். கிண்டல் செய்யக் கூடாது. ஆஸ்துமான்னா என்னன்னு கஷ்டப்படறவாளுக்குத் தெரியும்.” ‘ என்றாள் என் மனைவி.

ஐயாம் ஸாரி மாமி என்றான் மோகன்

சங்கீதக் கொலு

சங்கீதமும் சாப்பாடும் என்ற இந்த வீடியோ வினாடி வினா – கொலு – சாப்பாடு- கர்னாடக சங்கீதம் இவை அனைத்தும் கலந்த சுவையான கலவை. 

ரசியுங்கள்!

 

நான்காவது தடம் – நிறைவுப் பகுதி அ.அன்பழகன்

இதன் முன்பகுதியைப் படிக்க விரும்புவர்கள் இந்த லின்ங்கைக்  க்ளிக் செய்யவும் 

நான்காவது தடம் – முதல் பகுதி 

 

George Gurdjieff

போர் மேகங்கள் சூழ்ந்த அந்த காலகட்டத்தில் குர்ட்ஜிப்பின் பயணங்கள் எதுவும் எளிதாக இருக்கவில்லை. பெரும்பாலும் நடைப்பயணம். கிடைத்தால் குதிரைப்பயணம். சில நேரங்களில் கப்பல் பயணம். . இப்படிப் பயணித்துக்கொண்டேஇருக்கிறான். உள் சுதந்திரந்திற்கான சூட்சுமத்தைத் தேடி குர்ட்ஜிப் மேற்கொண்ட பயணத்தில் கிருத்துவ குருமார்கள், இஸ்லாமிய சூபிகள்,புத்த துறவிகள்,பாரத தேசத்து ஞானிகள் என்று பலரையும் சந்திக்கிறான். ஒவ்வொரு சந்திப்பும் குர்ட்ஜிப் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

” Time buries the wisdom under the sand ” .” ஞான ரகசியம் மணலுக்கு அடியில் எங்கோ புதைக்கப்பட்டிருக்கிறது ” என்பது குர்ட்ஜிப்பின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே குர்ட்ஜிப் எகிப்தை நோக்கிப் பயணிக்கிறார் – மணலுக்கு முந்தைய எகிப்து என்ற ரகசியத்தை கண்டறிவதற்காக……….

மணலுக்கு முந்தைய எகிப்தின் தோல் வரைபடம் ஒன்று ஒரு பாதிரியிடம் இருப்பதைப்பார்த்து மிகுந்த உணர்ச்சி வசப்படுகிறார் குர்ட்ஜிப். பாதிரி அறியாமல் அவர் வீட்டிற்குள் நுழைந்து மிகவும் சாமர்த்தியமாக அந்த தோல் வரைபடத்தின் பிரதி ஒன்று எடுத்துக்கொண்டு வருகிறார் குர்ட்ஜிப். வரைபடத்தில் உள்ள மணலுக்கு முந்தைய எகிப்தைக் கண்டறிவதற்காக ஒரு நண்பரின் துணையோடு எகிப்து செல்கிறார். எகிப்தில் பிரமிடுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். குர்ட்ஜிப் எதையும் மேம்போக்காகப் பார்க்கிற மனிதர் இல்லை.  இசை,நடனம், சிற்பம் எதுவாக இருந்தாலும் அதை ஊடுருவி அதன் உள்ளே மறைந்திருக்கக்கூடிய அதிநுட்பமான உண்மையைக்கண்டறியக்கூடிய அபூர்வமான ஆற்றலைப்பெற்றிருந்தார் குர்ட்ஜிப்.  பிரமிடுகளைச்சுற்றிலும் (Sphinx) ஸ்பிங்ஸ் எனப்படும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட பிரம்மாண்டமான சிலைகள் காணப்படும்.  அந்த ஸ்பிங்ஸ் சிலைகளைப்பற்றிய குர்ட்ஜிப்பின் கருத்துக்களைப் படிக்கும்போது அவரது நுட்பமான அறிவு நம்மை வியக்க வைக்கிறது. ” ஸ்பிங்ஸ் என்பது ஒரு அபூர்வமான கலைப்படைப்பு.  இயல்பான மனித மனத்திலிருந்து உருவாகிய சிலை அல்ல அது. மாறாக மிகுந்த கணிதத்தன்மையோடும், திட்டமிடலோடும், எண்ணங்களை, செய்திகளை, தகவல்களை, பாரம்பரிய ரகசியங்களை, பயத்தை, எச்சரிக்கையை, பாதுகாப்பு உணர்வை, கருணையை, தைரியத்தை, எதிர்ப்புணர்வை, இன்ன பிற உணர்வுகளை திட வயமாக்கி வடிக்கப்பட்ட மஹா சூட்சுமம் அது. வெளியிலிருந்து அதை கவனிக்கும் மனித மனத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அச்சிலையை அன்றாடம் கடந்து செல்லும் உள்ளூர்வாசிகளுக்கு ஒருவித சமாதானத்தையும், பாதுகாப்பு உணர்வையும் தரும் அச்சிலை வெளியிலிருந்து படை எடுத்து வருபவனுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் அதிர்வு கொண்டது.”

எகிப்தில் குர்ட்ஜிப்பின் தேடல் முடிவுக்கு வர காரணமாக இருந்தது ஒரு ஞானியின் சந்திப்பு. “இதுவரை தெரியாத ஒன்றைப்பற்றித் தெளிவாக முடிவு கட்டியிருக்கும் உங்களின் மனதால் அதை ஒருக்காலும் புரிந்து கொள்ள முடியாது – ஒருவேளை மணலுக்கு முந்தைய எகிப்து என்ற விஷயத்தை நீங்கள் கண்டு பிடித்து விட்டாலும் கூட.” ” முடிவான உண்மையைக்குறித்த குறியீடுகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் விட்டுச்செல்கிறார்கள் என்பது உண்மையில்லையா?” “உண்மைதான். ஆனால் அந்த குறியீடுகளைப் புரிந்து கொள்ள உன் முந்தைய முடிவுகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். மேலும் எல்லா குறியீடுகளும் உமக்கானதல்ல. உமக்கல்லாதவற்றை விட்டு கடந்து போகும் முதிர்ச்சியை நீர் பெற்றுக்கொள்ள எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்”. இந்த சந்திப்பினால் எகிப்திய தேடல் முடிவு பெறுகிறது. குர்ட்ஜிப்பின் பயணங்களில் மிகவும் முக்கியமானது ‘சர்மௌங் ரகசிய ஞான மடாலய’ பயணம்

சர்மெளங் மடாலயம்’ என்பது சூபி ஞானமரபுகள் ஒன்றின் ரகசியப்பயிலகம்(Esoteric School). ஏராளமான சூபி ஞானிகளை உருவாக்கிய ஞானப்பொக்கிஷம் ‘சர்மெளங்’.  முடிவான உண்மையின் ரகசிய சாவியைக்கொண்டது அந்த மடாலயம். பொதுவாக இவர்கள் பயிற்சிகளையும், சாதனைகளையும், வெளிப்படையாகச்செய்வதில்லை. அவை மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அதுவுமல்லாமல் ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த மடாலயம் இடம் மாற்றம் செய்யப்படுகின்றன. அந்த மடாலயம் இராக்கில் ஒரு ரகசியப் பள்ளத்தாக்கில் இருப்பதைக் கேள்விப்படும் குர்ட்ஜிப் தன் நண்பர் ஒருவரின் துணையோடு மிகவும் சிரமப்பட்டு அந்த இடத்தைக் கண்டடைகிறார். மிகுந்த முயற்சி செய்து சூபிகுருமார்களின் நம்பிக்கையைப்பெற்று மடாலயத்தின் உள்ளே நுழைந்து விடுகிறார். சர்மெளங் ரகசிய பயிற்சிகளையும் கற்றுக்கொள்கிறார். சர்மெளங்கின் பரீட்சார்ந்தங்களில் குறிப்பிட்ட உடலசைவுகள் மற்றும் சில அசையா அபிநயங்களின் மூலம் சில சக்தி நிலைகள் தட்டி எழுப்பப்படுகின்றன.  காலம் காலமாக ஒரேபோன்ற(monotonous) சில வார்ப்பசைவுகளைக்கொண்ட மனித உடலை சில முத்திரைகள், இசை, மற்றும் உடலசைவுகளைக்கொண்டு அதனுடைய பழக்க வரிசை உடைப்பதன் மூலம் எண்ண ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்படும். அதனால் மனம் ஒடுங்குகிறது. இந்த உடற்சக்தியின் உருப்படிவுகளை(pattern) மாற்றியமைக்க சர்மௌங்கிகள் சில நடன சூத்திரங்களை,முத்திரைகளை,அபிநயங்களை நீண்ட காலம் ஆய்ந்து வடித்திருக்கின்றனர். இந்த இயங்கு தியானப்பயிற்சிகளை மிகுந்த தீவிரத்தோடு மேற்கொள்கிறார் குர்ட்ஜிப். உடலாற்றலை சமன்படுத்தி, எண்ணங்களை,உணர்வுகளை சாந்தப்படுத்தும் அந்தப் பயிற்சிகளால் குர்ட்ஜிப்பின் உடல் லேசாகியது. எண்ணங்கள், குறிப்பாக, பெண்களைக் குறித்த சிந்தனைகள் அறவே அற்றுப்போனது. இதுவே தான் தேடிவந்த முடிவான உண்மை என்று, பயிற்சியில் தன்னை தீவிரப்படுத்திக்கொண்டார் குர்ட்ஜிப்.  வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவங்கள் தோன்றி மறைந்தன. உடலும், மனமும் லயமானது. கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகள் அனைத்தும் மெல்ல மெல்ல விடுபடுவதுபோல் இருந்தது. தன் இருப்பைக் குடைந்து துளைத்துக்கொண்டிருந்த கேள்விகள், உள்ளத்தை உரசி ஒலி எழுப்பிக்கொண்டிருந்த ஐயங்கள் எல்லாம் மறைந்து போயின. இந்த அனுபவங்கள் எல்லாம் கொஞ்ச காலமே நீடித்தது. ஷேக் என்ற ஞானியின் சந்திப்பு குர்ட்ஜிப்பை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது…..

தனக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் அனைத்தும் மறைந்து போனது குறித்து ஷேக் என்ற ஞானியிடம் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் குர்ட்ஜிப். அதற்கு அந்த ஞானி கூறியது: “ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை எதிர் நோக்குவது என்பது மின்னல் ஒருமுறை வெட்டிச்சென்ற அதே இடத்தில் மறுநாளும்,அடுத்த நாளும்,ஒவ்வொரு நாளும் சென்று மின்னல் வீச்சுக்காக காத்துக்கிடப்பதைப்போன்றதே.” மிகுந்த விரக்தியோடு குர்ட்ஜிப்பின் கேள்வி வருகிறது .” முடிவான ஞானத்தைப்பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”. ஞானி கூறுகிறார்: “இது நீ வாழ்ந்து வந்த வாழ்க்கையை நீ முழுப்பிரக்ஞையோடு இழக்கத் தயாராக இருக்கவேண்டும். நேரடியாகச்சொல்லப்போனால் நீ சாகத் தயாராக இருக்கவேண்டும்.உன் வாழ்க்கை என்று நான் குறிப்பிடுவது வெறும் பொருள் சார்ந்ததை மட்டும் அல்ல. இது வரை நீ கற்றறிந்த ஆன்மிகப்பாடங்கள்,பயிற்சிகள், பயணங்கள், சூத்திரங்கள்,தத்துவங்கள் எல்லாவற்றையும்தான்.”

ஞானியின் பதிலால் குர்ட்ஜிப் ஏமாற்றமடைகிறார்.விரக்தியின் விளிம்பிற்குச்சென்று மீள்கிறார். மெல்ல மெல்ல அவர் தன் தேடலை முற்றிலும் கைவிடுகிறார். எப்போதென்றே சுட்டிக்காட்ட இயலாத நுணுக்கமான காலக்கசிவின் ஊடே அல்லது காலம் நசிப்படையும்போது குர்ட்ஜிப்பின் கேள்விகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடுகிறது.

கால ஓட்டத்தில் குர்ட்ஜிப் தனக்கென ஒரு ஆன்மிகப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் பயணிக்கிறார். இதுவரை இங்கே இருக்கும் ஒட்டு மொத்த ஞான மரபுகளை மூன்றாகப்பிரிக்கலாம். துறவியின் பாதை, பக்கீரின்பாதை, யோகியின் பாதை. இவை மூன்றையும் உள்ளடக்கியும்,தாண்டியும் ஒரு நான்காம் பாதையை பதித்தவர் ஞானி  குர்ட்ஜிப். நடனத்தின் அசைவுகளின் மூலமே குர்ட்ஜிப் தனது நான்காம் தடத்தை வடித்தெடுத்திருக்கிறார். இந்திய யோக முறைகளும், பரதநடனமும் குர்ட்ஜிப்பின் நான்காம் தடத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன.

முடிவுரை: இது நான்காம் தடம் புத்தக விமர்சனம் அல்ல. அந்த புத்தகத்தைப் படிக்கும்போது என் மனதைத் தொட்ட விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த தொகுப்பு பதிப்பிடவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. என் மனதிருப்திக்காக எழுதியது. எழுதுவது என்பது எனக்குக் கைவராத கலை.ஏதோ ஒரு வகையில் என்னை எழுதத் தூண்டிய என் இனிய நண்பர் சுந்தரராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. என் மனதை ரொம்பவும் தொட்ட பல விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் எழுதி வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி.

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (அத்தியாயம் பதினாறு)- புலியூர் அனந்து

அத்தியாயம் பதினாறு

Related image

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்.
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
அப்பாவி யென்பார்கள் தப்பாக யெண்ணாதே…
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் சென்றார்கள்
பல்லாக்கை தூக்காதே…பல்லாக்கில் நீயேறு… சிவ சம்போ 

வகுப்பறைப் பழக்கம் விட்டு வெகுநாட்கள ஆகிவிடவில்லை. ஆனாலும் இந்த அனுபவம் புதியதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தேன். சுமார் முப்பது இருக்கைகள். பள்ளிகளில் அமர ‘பெஞ்ச்’ அல்லது ‘டெஸ்க்’ தான் இருக்கும். இங்கே அமர நாற்காலிகளும் வலது கைப்பிடி முனை ஒரு பெரிய புத்தகம் வைக்கும் அளவில் பெரியதாக இருந்தது. இரண்டு இருக்கையில் அந்த பெரிய கை இடது பக்கம் இருந்தது. பயிற்சி பெறுவோர் எழுதுவதற்கான ஏற்பாடு அது என்று ஊகிக்க முடிந்தது.

Image result for training of younsters in tamilnadu

கரும்பலகைக்குப் பதிலாக வெண்ணிறப் பலகை. அதில் பங்கேற்பவரை ‘வரவேற்கிறோம்’ என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. எழுத்துக்கள் கருநீல நிறத்தில் இருந்தன. நான் உள்ளே நுழையும்போதே சுமார் பத்துபேர் இருக்கைகளில் இருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் ‘சிலீர்’ என்று இருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தேன். சினிமாக்களில் பார்த்திருந்தபடியால் அது என்ன என்று தெரிந்தது. எங்கள் ஊர் தியேட்டர்கள் எதுவும் ஏர்கண்டிஷண்ட் கிடையாது.

எங்கேயோ பார்த்துக்கொண்டு உள்ளே நகர்ந்ததில் ஒரு இருக்கையில் மோதிக்கொண்டேன். அனைவரும் திரும்பி என்னைப் பார்த்தார்கள். ஆரம்பமே குளறுபடிதான். நான் தலையைக் குனிந்துகொண்டே ஏதோ ஒரு இருக்கையில், (முதல் வரிசையோ கடைசி வரிசையோ இல்லாமல் தவிர்த்து) அமர்ந்தேன். நல்லகாலம், இடதுகைக்காரர்களுக்கான இருக்கை அல்ல அது.

நான்கு நான்காக நான்கு வரிசைகள். நடுவில் பாதை மீண்டும் நான்கு நான்காக நான்கு வரிசைகள். வந்திருந்தவர்கள் பரவலாக அமர்ந்திருந்தார்கள் என் வரிசையில் இன்னும் ஒருவர்தான் இருந்தார்.. வகுப்பு ஆரம்பிக்க.ப் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

ஒரு மெல்லிய அட்டையில் ஒரே ஒரு காகிதத்தைக் ‘கிளிப்’ போட்டு வைத்திருந்தார்கள். ஒரு பேனாவும் வைத்திருந்தார்கள், அந்தக் காகிதம் ஒரு படிவம். பயிற்சிபெறுவோரின் சுய விவரக்குறிப்பு. எனக்குப் படிவம் என்றாலே ஒரு நடுக்கம். கட்டாயம் தவறு செய்துவிடுவோம் என்று அதீத அவநம்பிக்கை. குறைந்தது எழுத்து சரியில்லை என்று திருத்த வேண்டியிருக்கும் . அது என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று புரியாமல் செய்துவிடும்.

இந்தமுறை அடித்தல் திருத்தல் இல்லாமல் ஓரளவிற்குத் தெளிவாக எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். மின்சார ரயிலில் வரும்போது ஒரு நோட்டீஸ் கொடுத்தான் ஒரு சிறுவன். அதிலிருந்த விஷயம் எனக்குத் தேவை இல்லாதது. ஏதேதோ வியாதிகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவரின் அறிவிப்பு. ஏதோ நினைவில் அதனைப் பையில் போட்டுக்கொண்டு விட்டேன் போலிருக்கிறது. ஒரு பக்கம்தான் விளம்பரம். மற்றொரு பக்கத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக எழுத்து எழுத்தாக எழுதிக்கொண்டேன். ஏதோ காப்பியடித்து அந்தச் சிறு படிவத்தைப் பூர்த்தி செய்தேன். ஒரே ஒரு அடித்தலும் ஒரு திருத்தலும் தான். மானசீகமாக என் முதுகில் நானே தட்டிக் கொண்டேன். அந்த அடித்தலும் என்னாலல்ல. எனக்கு பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் அமர வந்தவர் என்னை நகரச் சொன்னபோது ஏற்பட்ட கவனக் குறைவுதான். ஓரிடத்தில் ஐந்து என்ற எண் ஆங்கில ‘S’ போலிருந்ததைத் தவிர மிகவும் சரியாக நிரப்பியிருந்தேன். முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக் அறை நிரம்பத் தொடங்கியது. ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, பார்த்தாலே அதிகாரிகள் என்று விளங்கும் வகையில் தோற்றமளித்த மூன்று பேர் சரசரவென்று உள்ளே நுழைந்தார்கள். பயிற்சி மைய அதிகாரிகள் என்று புரிந்தது. எல்லோரும் தன்னிச்சையாக எழுந்து கொண்டோம். பள்ளியில் ஆசிரியர் வரும்போது எழுந்து நின்ற நினைவு வந்தது.

அதில் ஒருவர் ” ப்ளீஸ். சிட் டவுன்” என்றார்.

அவர் தொடர்ந்து பேசினார். குட் மார்னிங்க், வெல்கம், ப்ரண்ட்ஸ் போன்ற சில வார்த்தைகள் தவிர எந்த சொல்லும் எனக்குப் புரியவில்லை. பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைக்கூட தமிழில்தான் நடத்துவார்கள்.

புரிந்துகொள்ள முயற்சி செய்வதைக்கூட விட்டு விட்டு கவனிப்பது போல பாவனை செய்து கொண்டு இருந்தேன். இடையிடையே எல்லோரும் சிரிப்பார்கள். நானும் சிரிப்பது போல் நடிப்பேன்.

இரண்டாவது ஆள் பேச ஆரம்பித்தார். மீண்டும் அதே கதை.

முதல் வரிசையில் முதலில் அமர்ந்து இருந்தவன் எழுத்து தன் பெயரையும் ஊரையும் சொன்னான். அறிமுகப் படலம் தொடங்கியுள்ளது என்று புரிந்துகொண்டேன். வரிசையாக ஒவ்வொருவரும் எழுந்து ஊரையும் பெயரையும் சொன்னார்கள். என் முறை வருவதற்கு ஆறு ஏழு பேர் இருந்தார்கள். நான் ஊரையும் பெயரையும் எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எழுந்து முப்பது பேர் நடுவில் என் பெயரைச் சொல்லக்கூட தைரியம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

நான் அமர்ந்திருந்தது இரண்டாம் வரிசையில் ஒரு கோடி இருக்கை. முதல் வரிசை முடிந்ததும் இரண்டாம் வரிசைக்காரர்களில் யார் முதலில் என்று தெரியாததால் நானும் மற்றொரு கோடி இருக்கை ஆசாமியும் ஒரே நேரத்தில் எழுந்து பெயரைச் சொன்னோம். எல்லோரும் சிரித்தார்கள். இருவரும் மௌனமானோம். சில நொடிகளில் இருவரும் சேர்ந்து ஆரம்பித்தோம். மீண்டும் மௌனமானோம். நிகழ்ச்சி நடத்துபவர் பிரச்சினையைத் தீர்த்தார். என்னை நோக்கி கையைக் காட்டி “ யூ” என்றார்.

நானும் பெயரைச் சொல்லிவிட்டு ஊரையும் சொன்னேன். இதற்குள் கால்கள் கிடுகிடுத்துக்கொண்டு இருந்தன. மூன்றாவது அதிகாரி குறுக்கிட்டார். அவர் சொன்னவற்றில்

‘டெக்ஸ்டைல்’ ‘ஃபேமஸ்’ என்ற இருவார்த்தைகள் புரிந்தன. நான் தன்னிச்சையாக “நோ சார்!” என்றேன்.

இரண்டாமவர் அதற்குப் பதில் சொன்னார்.. எனது ஊரின் பெயரையே உடைய இன்னொரு நகரம் நெசவிற்குப் பெயர் போனது. அது வேறு மாவட்டத்தில் இருந்தது. இதை ஒருவர் மற்றவருக்கு விளக்கமாகச் சொன்னார் என்று அனுமானித்தேன். மீண்டும் வகுப்பறை மௌனமாயிற்று.. நான் நின்றுகொண்டே இருந்தேன்.

ஒரு அதிகாரி “நெக்ஸ்ட்” என்று சொல்ல, அடுத்தவர் எழுந்திருக்க நான் அமர, ஓரிரு நிமிடங்களில் படபடப்பு அடங்கியது. பலபேர் முன்னிலையில் ஆங்கிலத்தில் நான் சொன்ன முழு வாக்கியம் “நோ சார்!”

அறிமுகப்படலம் முடிந்தது. அதிகாரிகளில் இருவர் வெளியேற, ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். படிவத்தைப் பூர்த்தி செய்து முடித்துவிட்டவர்கள் அதைக் கொடுத்துவிடலாம் என்று சொல்லப்பட்டது. பூர்த்தி செய்யாத மற்றவர்களுகாகச் சில நிமிடங்கள் அனுமதித்தார்கள். எல்லாப் படிவங்களையும் அடுக்கிக்கொண்ட அந்த அதிகாரி, மேலாக அந்த விவாங்களைப் பார்த்து மாற்றிமாற்றி அடுக்கிக்கொண்டார்.

என் அருகில் அமர்ந்து இருந்தவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். .எங்கே தங்கியிருக்கிறேன் என்று விசாரித்தார். சற்று தொலைவாயிற்றே என்றார். நான் மாலையில் இடம் மாற இருப்பதையும் அண்ணன் கொண்டுவந்து விடுவான் என்றும் சொன்னேன்.

வகுப்பு தொடங்கி விட்டதால் உணவு இடைவேளையின்போது பேசலாம் என்றார்.. தென்னிந்திய மாநிலங்கள் நான்கிலும் (இப்போதுதான் ஐந்தாயிற்றே) வந்திருந்த அனைவரையும் பயிற்சியாளர் மீண்டும் வரவேற்றார். சுமார் ஒரு மணி நேரம் எங்கள் நிறுவனம் ஏன் ஏற்பட்டது, அதன் நோக்கம், செயல்பாடுகள் என்ன, அந்த நிறுவனத்தில் நாங்கள் என்ன பங்கு வகிக்கிறோம் என்றெல்லாம் பேசினார் என்று நினைக்கிறேன். “an important screw in a big machine” என்ற சொற்றொடர் மட்டுமே இன்று நினைவில் இருக்கிறது.

அருகிலிருந்த நீளவட்ட அறையில் எல்லோருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து புன்னகைக்கவும் ஓரிரு வார்த்தைகள் பேசவும் அவகாசமிருந்தது.

பக்கத்து இருக்கைக்காரன் என்னிடம் வந்தான். அவன் சென்னைவாசியாம். வீட்டிற்குச் செல்கையில் என்னை அண்ணன் அறைக்குக் கொண்டுபோய் விடுவதில் தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் என் அண்ணன் அலைவதைத் தவிர்க்கலாம் என்றும் சொன்னான். அண்ணன் கொடுத்திருந்த தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டான். பயிற்சி மைய அலுவலக அறைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனான். அனுமதி பெற்றுத் தொலைபேசியை உபயோகித்தான்,

என்னிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தான்.  அண்ணன், மாலையில் தான் இங்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும், அறைக்கு அந்த நண்பனுடன் வந்துவிடு என்றும் சொல்லிவிட்டான்.

மதியம் எங்களை ஐந்து ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்தார்கள். வேறு வேறு மாநில/ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவில் அமையும்படி பார்த்துக் குழு பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.  இரண்டு பக்கத்தில் ஒரு வியாசம் எழுதிக் கொடுக்க வேண்டுமாம்.

சளசளவென்று பேசிக்கொண்டே அந்த வேலையினை எல்லாக் குழுக்களும் செய்தன. என் குழு அளித்த கட்டுரையில் என் பங்கு என்னவென்று அனுமானிப்பவருக்கு எந்தப் பரிசும் அறிவிக்கப் போவதில்லை. கட்டுரைகள் கொடுக்கப்பட்டது. முதல் நாள் பயிற்சி முடிந்தது

ஓரிரு நொடிகளில் முடிவெடுத்த அந்த அடுத்த இருக்கைக்காரன் என் வயதுக்காரன்தான். . ஒரு காரியத்தை இலகுவாக செய்வது எப்படி என்று தெரிந்தவனாகவும் இருந்தான். அவன் சொன்னபடியே செய்தோம்..

அந்த அடுத்த இருக்கை சென்னைவாசியின் பெயர் சற்று நீளம் – கோபதிசங்கர நாராயணமூர்த்தி. (கோமதி என்று யார் சொன்னாலும் கோபதி என்று திருத்துவான்). ஐந்து நாட்கள் கூடப் பழகியதில் அவர்.. அவனானது. தெளிவாக யோசித்து முறையாக முடிவெடுக்கும் திறன் உள்ள அவன் முன்னுக்கு வந்துவிடுவான் என்று சந்தேகமில்லாமல் தோன்றியது.

பகுதி நேரத்தில் மேற்படிப்பும் படித்துவந்த கோபதி, எங்கள் நிறுவனத்திலிருந்து விலகியதும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முதல் ஐந்து இந்திய மேலதிகாரியாக ஓய்வு பெற்று பல சமூகசேவை நிறுவனங்களில் தொண்டாற்றி வருவதும் பின்னால் செய்திகள். மேலே சொன்ன பாடல் நிச்சயம் கோபதிக்குத்தான் என்று தோன்றுகிறது

பயிற்சியில் மேலும் சில மனிதர்கள்! அனுபவங்கள்….
….. இன்னும்

 

திரைக்கவிதை – பட்டுக்கோட்டையார்

 

Image result for pattukkottai kalyanasundaram

எளிமையும் இனிமையும் கருத்தும் நிறைந்த பாடல்கள் பல எழுதிப் பிரபலமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். 

அவரது கல்யாணப்பரிசு படப்பாடலை இம்மாத திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

1959 இல் வெளியான படப்பாடல் இது. 

ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று ரேடியோவில் – டி வி யில்  இந்தத் தீபாவளிப் பாடல் ஒளி பரப்பாமல் தீபாவளியே நிறைவு ஆகாது. 

கேப்பு, மத்தாப்புக்களை வைத்து ‘உன்னைக் கண்டு நான் ஆட’ என்று இனிமையான பாடலைத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டையார்!

அதே மெட்டில் சோகம் இழையோடும்  ‘ உன்னைக் கண்டு நான் வாட’ என்று வரிகளை மாற்றி அமைத்திருப்பார். 

ஏ.எம்.ராஜாவின் இசையில் சுசீலா/ராஜாவின் குரல்களில் பாடலும் இசையும்  காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். 

 

படம் : கல்யாணப் பரிசு
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா

Image result for unnai kandu naan aada

ஆனந்தம் 

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா…
உறவாடும் நேரமடா…

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயெதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா…
வேறேன்ன வேண்டுமடா…

 

(சோகம்)

 

Image result for Kalyana Parisu 1959

உன்னக் கண்டு நான் வாட
என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா காணாத தூரமடா

நெஞ்சமும் கனலாகி நீராகும் போது
நிம்மதி என் வாழ்வில் இனியேது
கொஞ்சிடும் மொழிகேட்டு மகிழ்ந்தவள் எங்கே
குலத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே
கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகிப் போனதடா கனவாகிப் போனதடா

ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை
அன்புக்குப் பொருள் சொன்ன அருள் மங்கை
பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாளே
பழகும் உனையும் மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா கதையாகிப் போனதடா

 

 

 

குவிகம் பற்றிய நேர்காணல் – தழல்

குவிகம்  குழுமத்தின் இரட்டையரில் ஒருவரான கிருபாநந்தன் ‘தழல்’ என்ற காணொளி அமைப்பின் நிறுவனர்  நெய்வேலி பாலு  அவர்களுக்கு அளித்த பேட்டியை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.  

திரு பாலு 50க்கும் மேற்பட்ட காணொளிகளை ‘ தழல்’ என்ற அமைப்பின்  சார்பில் எடுத்து யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

இலக்கிய அமைப்புகளை நிறுவியவர்களுடன் நேர்காணல் நடத்தி இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றும் தொண்டைப்பற்றி விளக்குவதே அவரது இப்போதைய  நோக்கமாகும்.  

அந்த வரிசையில், “படைப்புலகின் பலகணிகள் இலக்கிய அமைப்புகள் ” என்ற தலைப்பில் முதலில் அவர் தேர்ந்தெடுத்தது நமது ‘குவிகம்  இலக்கியவாசல் அமைப்பு ‘என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.  

படைப்புலகின் பலகணிகள் இலக்கிய அமைப்புகள் -1 ‘குவிகம் இலக்கியவாசல்’

 

‘மகரந்தத் துணுக்குகள்’ ஹைக்கூ கவிதை

Image result for மகரந்தத் துணுக்குகள்

புதுமையான முறையில் கவிஞர் குடியிருக்கும் மேன்சனிலேயே 
வெளியிடப்பட்ட ஹைக்கூ கவிதை நூல்

சென்னை. அக்.16. கவிஞர் ஜென்ஸி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் 
சாலையிலுள்ள சுப்ரீம் மேன்சனின் தரைதளத்தில் புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட 
கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவிற்கு தலைமையேற்று, கவிதை நூலினை பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் 
கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார்.

கவிதை நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, “தமிழ் கவிதையில் இன்றைக்கு சொல் புதிது, பொருள் புதிது என எழுதும் இளைய கவிஞர்கள் பட்டாளம் கிளம்பியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதை எழுதிய கவிஞர்கள் பலரும் இன்றைக்கு ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் 
ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். கவிதையின் கருப்பொருளும் சமூக அக்கறையுமே ஒரு
கவிதையின் வெற்றியை தீர்மானிக்கும். கவிதையின் புறக்காரணியான வடிவம் ஒரு பொருட்டல்ல.
தமிழில் ஹைக்கூ மகாகவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு 530-க்கும்
மேற்பட்ட பலவகை ஹைக்கூ நூல்கள் வெளிவந்துள்ளன.

முன்னரே தனது சிறுகதை நூலின் வழியே அறிமுகமாகியுள்ள கவிஞர் ஜென்ஸியின் கவிதையாற்றலுக்கு இந்த ஹைக்கூ நூல் சான்றாகும். தன் மனதைத் தொட்ட எந்தவொரு சமூக நிகழ்வையும் குறைந்த வார்த்தைகளில் செறிவான காட்சிக் கவிதைகளாகப் படைத்துள்ளார் ஜென்ஸி. இந்தக் கவிதைகளிலுள்ள செறிவும் காட்சியழகும் வாசிப்பாளனை நிச்சயம் ஈர்க்கும். பக்கம் பக்கமாக வெறும் வார்த்தை அலங்காரத்தோடு எழுதப்பட்டு 
வந்த தமிழ்க் கவிதைகளுக்கு செறிவையும் அழுத்ததையும் தந்த பெருமை ஹைக்கூ கவிதைகளைச் 
சாரும். கவிஞர் ஜென்ஸி, தனது சமூக அக்கறையை செறிவான மொழியில் சுருக்கென ஹைக்கூவாகப் 
படைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.


கவிஞர்கள் ப்ரியம், உமா சுப்பிரமணியன், கோவை நாவரசன், முருகு பாண்டியன், மேன்மை
இதழின் ஆசிரியர் மு.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் ஜென்ஸி ஏற்புரையாற்றினார்.
நிறைவாக, கவிஞரின் சகோதரர் எஸ்.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

தகவல்: தமிழ் 24 நியூஸ்

சத்யஜித் ரே அவர்களின் சிறுவர் காவியம்

சத்யஜித் ரே அவர்களின் குழந்தைகளுக்கான படம். அவர் ஒரு ஜீனியஸ்தான் சந்தேகமில்லை.  இல்லையென்றால் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னும் அப்படம் இத்தனை அபாரமாக இருக்கிறது!

பார்த்து ரசியுங்கள். 

 

“தலைவலியால் வெளியானது”! – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

Image result for சிறுகதை

எட்வின் தலை வலித்ததால் சிகிச்சைக்கு வந்தார். எங்கள் துறையின் வழக்கம், எப்பொழுதும் முழு நலனை மனதில்கொண்டு, எங்களை அணுகுபவரின் எல்லாத் தகவல்களையும் சேகரிப்பதாகும். அதனால்தான், டாக்டர் தலைவலி பற்றிய தகவல்களை சேகரிக்கும்போது கூர்ந்து கவனித்துக் கேட்டார். இது தலைவலி மட்டும் அல்ல, வேறு மனநல சிக்கல்கள் ஒட்டி இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பதால் என்னிடம் அனுப்பி வைத்தார். எங்கள் படிப்பு, ட்ரைனிங் இரண்டிலும் உடல்-மனம்பற்றிய புரிதல் எங்களுக்கு உண்டு  என்பதால்.

என்னிடமும் தலைவலிக்கான தகவல்களை விலாவரியாக எட்வின் விவரித்தார். தனக்கு நெற்றி அப்படியே டைட்டாக இருப்பதாக, குறிப்பாக நெற்றியின் இடது-வலது புறம் இரண்டிலும் இருப்பதாகக் கூறினார். ஏதோ வேலையினால் தலைவலியைக் கண்டு கொள்ளாவிட்டால் அது போய்விடுமாம். வலி வருகையில் தனக்குள் ஒரு பதட்ட நிலை நிலவுவதாக இந்த 28 வயதுள்ளவர் சொன்னார்.

வேலையில் பளு அதிகமானால், அல்லது  தன் இரு குழந்தைகள் பற்றிய சிந்தனையோ, அல்லது  மனைவியை ஞாபகப்படுத்திக்கொண்டாலோ உடனே விறுவிறுப்பாக வேர்த்து ஊற்றி, கை ஜில்லிட்டு, வாய் உலர்ந்துபோய், தலை கனக்கிறது என்றார். சாப்பாடு நேரத்தில் பசி எடுப்பது இல்லையாம். தூக்கம் சரியாக இல்லை என்றார். இருதயப் பகுதியைத் தொட்டு, அங்கே பாரமாக இருப்பதையும் சொன்னார்.

எட்வினுக்கு அரசுப் பேருந்தில் வேலை. பிறந்தது கேரளா, வேலை வேறு மாநிலத்தில். சிறுவயதிலிருந்தே இந்த வேலையைத்தான் செய்யவேண்டும் என்று இருந்தார். வேலை பிடித்திருந்தது, விரும்பிச் செய்தார்.

மிகவும் ஆசைப்பட்டுப் பெற்றோரின் ஆசியுடன் ஷீலாவை மணம் செய்துகொண்டார். ஒரு வருடத்திற்கு முன்னால் அவளுக்கு ஜுரம் வந்தது, அவளைக் காப்பாற்ற முடியவில்லை. ஆறு வயதான ஜீவன், நான்கு வயதில் ரூபா என இரண்டு குழந்தைகள்.

தான் ஷீலாவை மிகவும் காதலித்ததாகக் கூறி, அவள் மறைவைத் தாளமுடியவில்லை என்றார். அலசஅலச, மெதுவாகத் தனக்குத் தற்கொலை செய்துகொள்ளத் தோன்றிய எண்ணங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

எட்வின், தங்கள் மகள் ரூபா அப்படியே அச்சு அசலாக ஷீலாவைப்போலவே இருப்பதும், ஷீலாவுடைய பல சுபாவங்களை அவளிடம் பார்ப்பதும் தன்னை வாட்டுவதாகச் சொன்னார். அத்துடன் இந்த இரண்டு பிள்ளைச் செல்வங்களை எப்படி உருவாக்குவது என்பது கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறினார்.

தற்காலிகமாக எட்வினின் மூத்த அக்கா ஊரிலிருந்து வந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாளாம். ஆனால் அவள் விவசாயிக்கு வாழ்க்கைப்பட்டவள். நிலத்தைக் கவனிக்க ஆள் தேவைப்படுவதால் திரும்பிப் போகவேண்டிய சூழ்நிலை. அவருடைய தந்தை சர்ச் பாதிரியார். ஆகையால் இங்கே வருவது இயலவில்லை. பிள்ளைகளைத் தங்களிடம் விடப் பெற்றோர்கள் சொன்னாலும் அவர்களைப் பிரிந்திருப்பது எட்வினால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

எல்லாம் சேர்ந்து, எட்வினுக்கு மன அழுத்தமானது. நமக்கு உடல் வலி என்பது எப்போதும் வரும். ஏற்றுக்கொள்வோம். உணர்வுகள் தாங்கும் எல்லையை மீறிவிட்டால், அதை நாம் அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால், மனது அதை எப்படி நமக்குத் தெரிவிக்கும்?  சில சூழ்நிலைகளில் அது நமக்குப் பரிச்சயமான உடல் வலியாய்த் தோன்றுகிறது. இந்த உடல் பாஷையில் எட்வினுக்குத் தலையில் வலியாகத் தோன்றியது. பிரச்சினைக்கு விடை தெரியாததால் தலை வலித்தது. தன்னை மாய்த்துக்கொள்ள யோசித்தார்.

இவர்கள் ஏன் இப்படி நினைக்க வேண்டும்?  தன் துன்பங்களைப்பற்றி புரிந்து கொள்ளும் நபரிடம் சொல்ல விருப்பமே. அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகிறது. சோக நிலையில் இருப்பதால், தனக்கென்று யாரும் இல்லையோ என்று சட்டென்று முடிவெடுப்பதாலும், மன அழுத்தத்தில் ஹோப்லெஸ், ஹெல்ப்லெஸ் என்பதை அதிகமாக உணர்வதாலும்,  தற்கொலைபற்றிய யோசனை வந்துவிடுகிறது.  இவர்கள் நிலை இப்படி இருக்கிறதோ என்று ஒரு இழை சந்தேகம் யாருக்கேனும் எழுந்தால்கூட, அதைத் தீவிரமாக விசாரிப்பது மிகவும் அவசியம்.

நான் எட்வினிடம், தனக்கு நேர்வதைப்போல மற்றவருக்கு வராமல் இருக்க, தன்னைப்போல் யாராவது சஞ்சலத்தில், துக்கத்தில் இருந்தால், அவர்களுடன் இருங்கள் என்று பரிந்துரைத்தேன். அவர்கள் துக்கம் எட்வினை பாதிக்காது. மாறாக ஒன்றும் பேசாமல் அருகில் இருந்தாலே, ஒரு துணையாகும்.  நம்மால் ஒருவருக்கு ஆதரவு என்பது எட்வினுக்கும் தெம்பைக் கூட்டும்.  நம் சம்ப்ரதாயங்களிலும் சோகத்தின்போது இப்படித்தானே செய்வது வழக்கம்!

எட்வினுக்குத் தற்கொலை சிந்தனை இன்னும் இருந்திருந்தால் அதற்கு வேண்டிய சிகிச்சைக்கு அவரை ஸைக்காட்ரிஸ்டிடம் அனுப்பவேண்டி வந்திருக்கும். இப்போதைக்கு எட்வினுக்கு தேவைப்படவில்லை. தன்னுடைய நிலையில் குழம்பியிருந்தார்.

இவரும், ஷீலாவும் தங்கள் குழந்தை செல்வங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைக் கனவுகண்டு முடிவெடுத்து வைத்திருந்தார்கள். ஜீவன் ஆர்க்கிடெக்சர் என்றும், ரூபா பத்திரிகையாளர் என்றும். தாங்கள் யோசிப்பது பொருத்தம்தானா என்று அறிந்துகொள்ள அவர்களின் பத்தாவது வயதில் உளவியல் பரிசோதனையும், ஆப்ட்டிட்யூட் பரிசோதனையும் செய்வதாக இருந்தார்கள்.  ஜீவன் கட்டிடங்களைப் பார்த்ததுமே “இதை இப்படிச் செய்ய வேண்டும்”, “தோட்டத்தின் அந்தப் பாகம் மரங்களுக்கே” என்று சொல்வதைக் கேட்டுக்கேட்டு இந்த முடிவெடுத்தார்கள். அதேபோல், ரூபா தன் நண்பர்களைச் சேகரித்து, “என்ன பார்த்த? அதை எழுது” ,”நீ போய் பக்கத்துத் தெரு நிலவரத்தைப் பார்த்து வந்து விவரி” என்பதாலும். அவர்கள் தெருவில் இருப்பவர்கள் ரூபாவை ஆச்சர்யமாகப் பார்ப்பார்களாம். ஆகையால், அவளைப் பிற்காலத்தில் பத்திரிகை ஆசிரியராகப் பார்த்தார்கள்.

தன் பங்குக்கு வேலையிலிருந்து வந்ததும் பாடம் கற்பித்துத் தந்தார். இவர்களின் மற்ற பராமரிப்பை அக்கம்பக்கத்தினர் பார்த்துச் செய்தனர். எட்வினுக்கு ஞாயிற்றுக்கிழமை ட்யூடீ என்றால் யாரேனும் ஒருவர் (கிருத்துவராக இல்லாவிட்டாலும்) அவர்களை சர்ச் கூட்டிச் செல்வார்கள். அப்படிப் பாசமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

என்னுடன் கவுன்சலிங் ஸெஷனுக்கு வெகு சீக்கிரம் வந்து முடித்துக்கொண்டு பணிக்குச் செல்வார். நன்றாக ஓவியம் வரைவதால் எப்பொழுது நேரம் இருக்கிறதோ அதைக் கற்றுத்தர யோசனை அளித்தேன். பிள்ளைகளின் நண்பர்களுடன் இது ஆரம்பமானது. அவருடைய மனைவி ஷீலாவின் பிறந்த நாளிற்கு ஒரு அழகான ஓவியம் தீட்டினார். அதை ஒரு விடுதிக்குத் தருவதாக முடிவானது.

நான் தொண்டுசெய்யும் ஒரு விடுதியை இதற்குத் தேர்ந்தெடுத்தோம். அதை விடுதியில் வந்து கொடுத்தார். விடுதி குழந்தைகள் அவரை வரவேற்றுப் பின்பு நன்றி கூறினார்கள். இவர்களுடன் ஏன்  எட்வின் தன் குழந்தையை விடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.

கரஸ்பான்டன்ட் மேடம் வந்தவுடன், அறிமுகம் செய்தேன்.  எட்வின்  ஓவியம் தீட்டிய காரணம் கேட்டதும், அவர்  கண்கலங்கி விட்டார்.  ஜீவன், ரூபா இருவரையும் அணைத்துக் கொண்டார். அவர் பல பிள்ளைகளுடன் பேசி விளையாடுவதை எட்வின் கவனித்தார். விளையாடினாலும் பாசம் கலந்த கண்டிப்பு இருந்தது.

எட்வினின் அடுத்த சில ஸெஷனில் இதை மையமாக வைத்துப் பேசினோம். எட்வினுக்கு பிள்ளைகளின் அன்றாட பராமரிப்புபற்றிய சிந்தனை, ரூபா பெண் குழந்தை என்பதையும் யோசித்தார். விடுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி, பாசமாக இருப்பார்கள் என்பதைப்பற்றியும் பேசினோம். உள்ளூரில் இருப்பதால் எட்வினால் பிள்ளைகளை  சந்திக்க முடியும் என்பது ஊக்கவைத்தது.

தன் பெற்றோருடன் கலந்து, யோசித்தபின் அவர் அப்பா என்னைச் சந்தித்தார். அவர் விடுதியைப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொன்னார். தன் ஊரில் இருக்கும் விடுதியைப்பற்றி விவரித்தார். சிறு வயதிலிருந்தே தான் அங்கு தொண்டு செய்ததும் அதிலிருந்து தான் பாதிரியார் ஆக விரும்பியதையும் சொன்னார். அவர் மனைவி ஒரு நர்ஸாக இருப்பது தனக்குப் பெரிய உதவி என்பதையும் கூறினார். விடுதி பார்த்து சந்தோஷம் அடைந்தார் “எல்லாம் நன்றாக அமையும்” என சொல்லிக்கொண்டே இருந்தார்.

பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு இடம் கிடைத்தது.  தானும் ஷீலாவும் கண்ட கனவுகளை எழுதியதை, ஒவ்வொரு பிரதியை எட்வின் பள்ளியிலும், விடுதியிலும் கொடுத்தார். உடைகள், புத்தகம் வாங்கியானது.

ஜீவன், ரூபாவை  விடுதியில் தங்குவதற்கு மெதுவாகத் தயார் செய்யஆரம்பித்தேன். எட்வினும் தன் பங்களிப்புத் தந்துவந்தார். முதல் இரண்டு மாதத்திற்கு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் அவ்வளவு பாசம் என்பதாலும். அப்பாவைப் பிரிவது எப்படி என்ற காரணத்தினாலும்.  முதல் கட்டமாக, அந்த வாரத்தில் நான் அங்கு தொண்டு செய்யப் போகும்போது ஜீவன், ரூபா இருவரையும் அழைத்துச்சென்றேன். கூடவே அவர்கள் பக்கத்து வீட்டிலிருந்து ஒருவரும் வந்தார். அன்றைக்கு ஒரு மணி நேரம் என்னுடன் நான் செய்வதில் உதவினார்கள்.  இது, இப்படி அப்படி என்று எதையும் நான் கூறவில்லை. அவர்களும் அந்த அம்மாவும் தானாகப் பார்த்துப் புரிந்துகொள்ள விட்டுவிட்டேன்.

ஐந்து நாளைக்குப் பிறகு இருவரும் எட்வினுடன் வந்தார்கள். விடுதிபற்றிப் பல கேள்விகளை ஜீவனும், ரூபாவும் கேட்டார்கள். திரும்பப் பார்க்க விருப்பப்பட்டார்கள். இந்த முறை அவர்களை, எட்வினுடன் போய் பார்க்கப் பரிந்துரைத்தேன். நான் இருந்தேன், ஆனால் என் வேலையைச் செய்தேன். அதே ஒரு மணி நேரம்.

கரஸ்பான்டன்ட் மேடமிடம் சொல்லி இருந்ததால் ஒப்புக்கொண்டார். இந்த முறை தாங்கள் தங்கும் இடத்தைப் பார்வை இட்டார்கள். ரூபாவிற்குத் தலை பின்னுவதற்கு யார் உதவுவார்கள் என்று கேட்டதற்கு, அவளுடைய சீனியர் அக்காவின் பொறுப்பாகும் என்று விளக்கினார்கள்.

ரூபா, ஜீவன் மெதுவாக சுதாரித்துக்கொண்டார்கள். நடுப்பரீட்சை முடிந்ததும் சேர்ந்தார்கள். வார இறுதியில் எட்வின் பார்க்க வரலாம் என்று சொன்னார்கள். இவர்கள் இருவருமே கல்யாணி அக்கா அரவணைப்பில் இருப்பதாகத் தெரிவித்தவுடன் எட்வின் தானும் ஷீலாவும் இவர்களைப்பற்றிக் கண்ட கனவை அவளிடம் சொன்னார். கரஸ்பான்டன்ட் மேடம் இவர் தந்த பிரதியைப்பற்றிச் சந்தோஷமாகக் கூறினார். எட்வினுக்குத் தெம்பு கூடியது.

வாழ்க்கையில் ஒரு பொறுப்பு, அர்த்தம் இருந்துவிட்டாலே நாம் வாழ்வதற்குத்தான் யோசிப்போம். அந்த வகையில் எட்வின் தன் பாதையைக் காண ஆரம்பித்தார். அப்படி என்றால் மன அழுத்தத்திற்கு இனி வேலை இருக்காது!

எட்வினுக்கு இருக்கும் நேரத்தைப்பற்றி யோசித்தோம். தான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்வரையில் கால் பந்து விளையாட்டில் கலந்துகொண்டதாகச் சொன்னார். இப்போதைய சூழ்நிலையில் அவர் குழந்தைகள் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு இதைப் பயிற்றுவிக்க யோசித்தோம். மற்றவர்கள் நமக்கு ஆதரவு தர, இது திருப்பித் தரும் ஒன்றாக அமையும். ஓரளவு சுயநலத்தின் சுவடு இருந்தது. அங்கு இருக்கும்போது, பிள்ளைகளைப் பார்க்கலாம்.

Image result for an orphanage in kerala with a football coach

இதில் இன்னும் ஒரு நல்லது உண்டு. எட்வினின் வாழ்க்கையில் இந்தத் தருணம் மிக முக்கியமானதாகும். விடுதியில் பிள்ளைகள் இருப்பதால் பொறுப்பு இல்லை, இனி மாய்ந்து விடலாம் என்று மனம் நினைக்கலாம். மறுமணம் இல்லை என்பதால் வாழ்விற்கு அர்த்தம் தேவைப்படுகிறது. அந்த நிலையில் இந்தக் கால் பந்து கற்றுத் தருவது உதவியது. ஏற்கனவே ஓவியம் சொல்லித் தருவதுடன் இதுவும் சேர்ந்தது.

எட்வினின் பேருந்து நிலையத்தில் அவரைப்பற்றிப் பல பயணிகள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். அதை அவர் தொழிற்சங்கத்திடமும் பகிர்ந்துகொண்டார்கள். பெரும்பாலும், இவை எட்வினின் பொறுப்புணர்ச்சியைக் குறித்தே இருந்தன. இவர் பயணிகளிடம் காட்டும் மரியாதை, எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, வயதானவர், பார்வை இல்லாதவர்களைப் பத்திரமாக ஏற்றிக்கொள்வது, என்பதெல்லாம் பயணிகளின் ஃபீட்பேக் மூலம் சங்கத்திற்குத் தெரியவர, அவர்களின் இளைஞர் அணியின் பொறுப்பாளராக அவரை நியமித்தார்கள்.

இந்த வாய்ப்பைத் தன் முன்னேற்றம் என்பதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அணியின் பல பணிகளைச் செய்யஆரம்பித்தார். தன்னுடைய  கௌன்சலிங் ஸெஷன்கள், ஓவியம் மற்றும் கால்பந்து கற்றுத் தருவது எதற்கும் பங்கம் வராமல், எல்லாம் செய்து வந்தார். மன அழுத்தம், தற்கொலை போன இடமே தெரியவில்லை!

 

 

 

 

 

அம்மா கை உணவு (9)-கூட்டுக்களி – ஜி.பி. சதுர்புஜன்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
போளி புராணம் ஆகஸ்ட் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அன்னை கைமணக் குறள்கள் செப்டம்பர் மாதம் 2௦18 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
கலந்த சாதக் கவிதை அக்டோபர் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது

 

கூட்டுக்களி கொண்டாட்டம் !


Related image

 

 

 

 

 

 

 

 

 

 

 

தாயிட்ட கூட்டைச் சுவைத்தபின்னும் தரணியிலே
சேயினுக்கு வேறெதுவும் சுவைக்குமோ என்றவனை
நீயிட்ட கூட்டால் குழைத்து விட்டாய் – சுவையால்
கவியெழுத என்னைத் தூண்டி விட்டாய் !

எழுபிறப்பும் எடுத்து வந்ததுவே இதற்கெனவே
அன்னை உணவாலே உணர்ந்து கொண்டேன் !
உன்கையால் உண்ட உணவாலே – இன்னும்
இருக்கும் போதே இன்பம் இனிது கண்டேன் !

அடிமுதல் காணாத அண்ணாமலையானும்
கண்டானா உன்கூட்டின் அடிமுடியை ?
எழுகறிகாய் சேர்த்த இனிய சுவையினிலே
கண்டானா சிதம்பர இரகசியத்தை ?

ஆனந்தக் களியாட்டம் ஆடுதற்கு
என்ன உண்டான் என நானும் நினைத்திருந்தேன் –
அன்னை போல் உன்னைப்போல் உமையாளும் உணவளித்தால்
களியாட்டம் ஏன்தான் அவன் போட மாட்டான் ?

சாப்பாட்டு இராமன் என சபையோர் பலரும்
சாடுவது எனக்கு கேட்கிறது !
சுவைத்துப் பார்; முதலில் சுவைத்தால் தானே
சுவர்க்க வாசல் திறக்க வழி வாய்க்கிறது !

போயும் போயும் இந்தக் கூட்டினுக்கா
இந்த ஒரு பாட்டம் எனக் கேட்பவர்கள் –
கூட்டையும் களியையும் காட்டி விட்டால்
கூட்டுப் புழுவாய் ஆவீர்கள் !

ஆதலின் உலகோரே , விழித்தெழுங்கள் !
கூட்டுக்களி தின்று களித்திடுங்கள் !
உண்ணும் உணவிலும் ஒவ்வொரு பொருளிலும்
உள்ள சுவையை உணர்ந்திடுங்கள் !

புலன்களுக்கப்பாலே உள்ள சுவை தெரிய
புலன் தரும் சுவைகளைப் பெற்றிடுங்கள் !
பொருள்களின் பின்னால் புலப்படும் அருளை
மெய்யறிவாலே சுவைத்திடுங்கள் !

 

குட்டீஸ் லூட்டீஸ்.. – சிவமால்

 

Related image

சரிதானோ….!

தர்ம ஆஸ்பத்திரிகள் நிறுவி நடத்திவரும் அந்த மடத்தின் குருஜியிடம், ஆஸ்பத்திரி விவரங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். என் பத்து வயது மகள் மிதிலாவும் கூட இருந்தாள்.

ஏதோ யோசித்துக்கொண்டே நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மிதிலா திடீரென்று,

‘ குருஜி.. நாம் இந்த ஜன்மத்தில் நோய்களும், நொடியும் வந்து படும் அவஸ்தைகள் பூர்வ ஜன்ம கர்மா – பாவங்களின் பயன்.. அதனாலே எல்லோரும் நல்லதையே நினையுங்கள்.. நல்லதையே செய்யுங்கள்னு ஒவ்வொரு சொற்பொழிவிலும் சொல்றீங்க.. அப்படியிருக்கும்போது, மக்களுக்கு நோய் வந்தால் அவர்களுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாத்தி அனுப்பறீங்க.. அவங்க பூர்வ ஜன்ம பாவக் கணக்கு முடியாம, கொஞ்சநாளைக்குப் பிறகு மறுபடியும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படறாங்க… எதுக்கு இந்த இன்ஸ்டால்மெண்ட் அவஸ்தை.

அதனாலே அவங்க நோய்வாய்ப்பட்டா பூர்வ ஜன்ம பாவங்களின் பலனை முழுதுமாக அனுபவிக்கட்டும்னு சிகிச்சையளிக்காம விட்டுட்டீங்கன்னா அவங்க பூர்வ ஜன்ம பாவத்தின் பலனை முழுமையா ஒரேயடியா அனுபவிச்சிட்டு, எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கலாமே…

அதனாலே எதற்கு இவ்வளவு செலவு செய்து ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள், மருந்துகள்…..!’ என்றாள்.

விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தேன் நான்… அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த குருஜியின் முகத்தில் ஈயாடவில்லை…!

அவள் சொல்வது சரிதானோ..!

 

காற்றுவெளி இதழ்

 

 

ISSUU.COM என்று ஒரு இணையதளம் உங்கள்  பத்திரிக்கைகளை வெளியிட உதவி செய்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள காற்றுவெளி என்ற பத்திரிகை ISSUU.COM மூலமாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தைப் படிப்பது போலவே கம்ப்யூட்டரில் அல்லது  மொபைலில் பார்க்கலாம்.

காற்றுவெளியின் இதழைப் படிக்கக் கீழே கொடுக்கப்பட்ட லின்ங்கைச் சொடுக்கவும்.

http://kaatruveli-ithazh.blogspot.com/

இன்ப இலக்கியம் – எஸ் எஸ்

 

Image result for faces and expressions in indian paintings

இன்ப இலக்கியங்கள்பற்றி ஒரு கூட்டம் அல்லது அளவளாவல் நடத்த வேண்டும் என்பது ஒரு யோசனை. 

நண்பர்கள் சிலர் ,  ‘வேண்டாமே இந்த விஷப் பரீட்சை’  என்று பயமுறுத்துகிறார்கள்.

சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய படிமக் கவிதைகள்வரை ஆராய்ந்து படித்த பெருந்தகையினர் இதுபற்றிப் பேசலாம்.

வள்ளுவர் காமத்துப் பால் எழுதவில்லையா? அதனால் திருக்குறளின் தரம்  தாழ்ந்துவிட்டதா என்ன?

காமத்துப் பால் சொல், பொருள், உவமை நயம் கொண்டு, மகிழ்ச்சி, இரங்கல், சோகம், காமம், உளவியல் இவற்றை அடக்கி இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்டது. காதலர் கூடியிருந்து மகிழ்தல், பிரிந்து வருந்துதல், பிரிந்த பிறகு மீண்டும் கூடுவோம் என்று நம்பிக்கையோடு இருத்தல், பிரிந்த பிறகு மீண்டும் காணும் நம்பிக்கை இழந்து சோர்ந்து துயருறுதல்,  பிரிந்தவர் மீண்டும் வந்தபோது உரிமையோடு ஊடுதல்  என்ற இந்த ஐந்து வகை  உணர்வுகளை வள்ளுவர் படம்  பிடித்துக் காட்டுகிறார்.

எல்லா எழுத்தாளர்களும் இந்த பாலுணர்வைத் தங்கள் கதைகளில் இலைமறை காயாகவோ விரிவாகவோ எழுதுவதுண்டு. 

தி.ஜானகிராமன், சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்களின் கதைகளில் இது அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்.  

Related image ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளில்  சாமர்த்தியமாக இதைப் புகுத்திவிடுவார்கள். 

இர்விங்க் வாலஸின் ‘செவன் மினட்ஸ்’ என்ற நாவல் ‘ஆபாச இலக்கியம்’ என்றால் என்ன என்பதை ஆராயும் களமாக இருக்கும்.

தற்சமயம் இளைஞர்கள் தங்கள் கதைகளில் – கவிதைகளில் பாலுணர்வு உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளில் வடிக்கின்றனர்.

முகனூல், வலைப்பதிவுகளில் இதுவரை எழுதத் தயங்கிய வரிகளைத் தயக்கமின்றி எழுதுகிறார்கள். ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் எழுதத் தொடங்கிவிட்டார்கள்.  

சில சிற்றிதழ்களும் இவற்றை விலாவரியாக எழுதிவருகின்றன. 

எந்த அளவிற்குப் போகலாம் என்பதற்காகவாவது ‘இன்ப இலக்கியம்’ பற்றி ஒரு கருத்தரங்கம் வைக்கவேண்டும். 

காலம்  கூடி வரும்போது இதுபற்றி யோசிப்போம்.

 

மேலும் சில செய்திகள்: 

 

தமிழில்  ஜெயமோகன் பாலுணர்வெழுத்து பற்றி எழுதியிருக்கிறார்.  அவரது வலைப் பதிவிலிருந்து சில வரிகள்.

( திரு ஜெயமோகன்  அவர்களுக்கோ  மற்ற யாருக்காவது இதில் ஆட்சேபம் இருந்தால் நீக்கி விடுகிறேன்.)

தொ.மு.சி ரகுநாதன்  இந்தக் கருத்தைப் பற்றிக் கூறும்போது , புதுமைப்பித்தன்,சி சு செல்லப்பா, பிரமிள், வல்லிக்கண்ணன், எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் பாலுணர்வு புத்தகங்களைப் படித்தவர்கள் என்றும்  கூறியிருக்கிறார்.   

 புதுமைப்பித்தன் ஆங்கிலப் பாலுணர்வு எழுத்துக்களை விரும்பிப் படிப்பார் என்றும் தனக்கும் அதில் ஆர்வம் உண்டு என்றும் ரகுநாதன் சொல்லியிருக்கிறார். சி.சு.செல்லப்பா பாலுணர்வு நூல்களைப் படிப்பதில் மோகம் உடையவர் என்று அவ்வப்போது பேச்சு உண்டு — பிரமிள் அதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். பிரமிளும் அந்த மோகம் உடையவரே. வல்லிக்கண்ணனிடம் ஒரு தகரப்பெட்டி நிறைய பாலுணர்வுப் புத்தகங்கள் இருந்தன என்று சொல்வார்கள்.

தமிழில் எந்த ஒரு இலக்கிய வகைமைக்கும் முதல்தொடக்கம் புதுமைப்பித்தனின் ஆக்கங்களிலேயே இருக்கும். அவரது ‘விபரீத ஆசை’ யே தமிழ் பாலுணர்வு எழுத்தின் முதல் முன்னுதாரணமாக கொள்ளத்தக்கது. நண்பனின் பிணம் கிடக்க அவன் மனைவியுடன் கூடுபவனின் தடுமாற்றமும் பதற்றமும் பிறழ்வுநிலையும் சொல்லப்பட்ட கதை அது. அதன் பின் நேராக எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ ‘தீ’ என்ற இரு ஆக்கங்கள். பாலுணர்வெழுத்தில் தமிழில் இன்றுவரை சிறப்பாகச் சொல்லப்படவேண்டிய ஆக்கம் சடங்குதான்.

எழுபதுகளில் தமிழ்நாடனின்’காமரூபம்’ போன்ற நூல்கள் பாலுணர்வுஇலக்கியங்கள் என்று கொண்டாடப்பட்டன. ஆயினும் அவை சொல் அலங்காரங்களில் மறைந்து நின்று சொல்ல முயன்றவையே. பாலுணர்வெழுத்தில் தமிழின் அடுத்த முக்கியமான ஆக்கம் தஞ்சை பிரகாஷின் ‘மீனின் சிறகுகள்’ அவரது கரமுண்டார் வீடு, கள்ளம் போன்ற நாவல்களிலும் பாலுணர்வு அம்சம் இருக்கிறது.

சமீபத்தில் ஜெ.பி.சாணக்யா பாலுணர்வுக் கதைகளை எழுதியிருக்கிறார். ‘அமராவதியின் பூனை’ என்ற அவரது கதை குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான கதைகளில் சொற்களின் புதருக்குள் கதையைச் சிக்கவைக்கும் உத்தியையே அவரும் மேற்கொண்டிருக்கிறார். எஸ்.பொன்னுதுரை உட்பட பலரும் செய்துவந்த விஷயம் அது.

இன்றைய எந்த எழுத்தாளனும் மகாபாரதத்தைவிட பாலுணர்வை, பாலியல் திரிபை எழுதிவிடவில்லை.

பாலுணர்வு பலவகையில் இலக்கியத்துக்கு இன்றியமையாது.

பாலுணர்வு இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று.

பாலுணர்வு என்பது அழகியலுடன் தொடர்புடையது. அழகும் பாலுணர்வும் பிரிக்கமுடியாதவை. அழகை உருவாக்க பாலுணர்வை எழுதியே ஆகவேண்டும்

தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும். 

மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்.


எஸ்.பொன்னுத்துரை  அவர்கள் எழுதிய தீ என்ற நாவலின்  ( காலச்சுவடு பதிப்பகம்)  முன்னுரையில் ஆஸ்திரேலியா ரஞ்சகுமார்  இலக்கியத்தில் பாலுணர்வு என்பது பற்றி இப்படிக்  கோடிட்டுக்  காட்டுகிறார்

  • கன்னட இலக்கியம் பாலுணர்வு தொட்டு பல அரிய பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது   – குறிப்பாக யு ஆர் அனந்தமூர்த்தி 
  • தமிழில் பாலுணர்வு பற்றி வந்த புனைகதைகள்  ஒப்பிட்டளவில் குறைவானவை. வீரியம் குன்றியவை. பாலுணர்வையும் மையமாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களான  தி. ஜானகிராமன், லா ச ரா, சிதம்பர ரகுநாதன், கரிச்சான்குஞ்சு , அ.மாதவன், நீல பத்மனாபன், சாரு நிவேதிதா, எஸ் .பொ.மு, உமா வரதராஜன், தளையசிங்கம், தமிழ்நதி, உமா மஹேஸ்வரி, சல்மா என்ற சிறு வரிசை உண்டு. 
  • தீயில் அடிவயிற்றுப்பசியைப் பற்றி எஸ்.பொ அவர்கள் எழுதியுள்ளார்.

இன்னொரு வலை நண்பர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

அதிகமாக விற்பனை ஆகும் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஆபாச புத்தகங்களும்,சோதிட புத்தகங்களும் இருக்கும்.நம் நாட்டில் இதுதான் நிலை.வெளியே தெரியாமல் அதிகம் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிடும்.டீனேஜ் ஆண்மகன்கள் இதன் வாசகர்கள்.


 

நிமிஷக்கதைகள்-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்

 

painting4-modern-art-work

1

‘குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

‘ஆமாங்க ‘ என்றான் கைதி.

‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட்.

‘அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ‘ என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, ‘யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ‘ என்றார்.

மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக் கைதிதான்.

 

2.

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

‘சாமியார் சமாதியாகிவிட்டார். ‘ ‘இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ‘ என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் ‘சாமியார் சமாதியாகிவிட்டார் ‘ என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, ‘டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ‘ என்று கத்திக்கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், ‘மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ‘ என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

3.

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுதவேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ‘ என்று எழுத்தாளன் கேட்டான்.

‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ‘ என்றாள் விபச்சாரி.

‘இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ‘ என்றான் எழுத்தாளன்.

‘கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு… இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ‘ என்றாள் விபச்சாரி.

‘கண்ட கண்டவங்ககிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? ‘

‘யாரும் கண்ட கண்டவங்ககிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு ‘

‘மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? ‘

‘அப்படியா ? ‘

‘பின்பு ? ‘

‘சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? ‘

‘ஊம், இருக்கு ‘

‘நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க ‘

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

4.

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. ‘வா, வா ‘ என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.

‘யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ‘ என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டுவிட்டான்!

– சரஸ்வதி, ஏப்ரல், 1961

சிகாகோவில் 2019 ஜூலை 3-4 ல் 10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோ, 2019
 
ஜூலை 3-4 இல் நடைபெற உள்ளது. 
 
விவரங்களுக்குக்  கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.!
 
இந்த விழாவிற்குச் செல்ல விருப்பம் உள்ளவர்கள் கை  தூக்கவும் !! 
 
 
 

தீபமேந்தி வருகின்றாள்…! -கோவை சங்கர்

         

பெண்ணெனும் தெய்வத்தின் இலக்கணமே யவள்தானோ
இலக்கணமே பெண்மையினை யவளிடத்துக் கற்றதுவோ
காண்போரை மருட்டுகின்ற கண்ணுடையாள் செந்நுதலாள்
கற்பனைக்கு மெட்டாத பேரழகுக் கன்னியவள்
வெண்ணிலவோ நங்கைமுகம் கொடியன்ன துடியிடையாள்
பெண்மையி னெழிலோங்க வாழ்த்துக்கள் கூறிடவே
கண்ணனவன் ஒன்னலரை வென்றிட்ட இந்நாளில்
தீபாவளித் திருநாளில் தீபமேந்தி வருகின்றாள்!

அறக்கொடி யுயர்ந்திடவே மறக்கொடி வீழ்ந்திடவே
நல்லவரும் வாழ்ந்திடவே தீயவரும் மாய்ந்திடவே
இறைவனாம் கண்ணனவன் கடைக்கண்ணும் நோக்கிடவே
அன்னநடை மங்கையவள் தீபமேந்தி வருகின்றாள்!
முறையற்ற வழுக்காறு அவாவெகுளி யின்னாச்சொல்
வெடிக்கின்ற வெடியேபோல் வெடித்துச் சிதறட்டும்
இறையருள் பெருகட்டும் இசைப்பண் பாடட்டும்
இல்லமது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கட்டும்!

 

 

தலையங்கம் – நாட்டாமை ! தீர்ப்பை மாத்தி எழுது !

முதலில் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

 

இந்த வருடம் தீபாவளி சற்று வித்தியாசமான தீபாவளி. 

வெடிகள் வெடிக்கும் நேரத்தை அப்பாவோ, அம்மாவோ, குழந்தைகளோ தீர்மானிக்கவில்லை. உச்ச நீதி மன்றமும் மாநில அரசும் சேர்ந்து எப்போது, எவ்வளவு  நேரம் வெடிக்கலாம் என்று தீர்மானிக்கின்றன. காற்றில் கலக்கும் மாசினைக் குறைப்பதற்காக வழங்கிய தீர்ப்பு இது. 

 ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருளை,   தீவிரமாக ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவது அறிவு’ என்ற கொள்கையில் ஊறிப்போனவர்கள் நாம்.  உடனே கம்ப்யூட்டரையும்  மொபைலையும் தட்டி வாட்ஸ் அப் , பேஸ்புக், டுவிட்டர் என்று சகட்டுமேனிக்கு எழுதத் தொடங்கிவிடுவோம். 

அந்தக் காலத்தில் எரிந்த கட்சி எரியாத கட்சி  என்று லாவணிக் கச்சேரியில் வருமாம்.

அதுபோல, இன்று மோடிக்கு ஆதரவு, இந்துத்வா, இவை ஒரு கட்சி ;  மோடிக்கு எதிர்ப்பு மதச்சார்பின்மை சேர்ந்தது இன்னொரு கட்சி.  இந்த இரண்டு கட்சிகளும் தாக்கிக்கொள்ளும் விதம்  இருக்கிறதே, குழாயடி சண்டை – பேட்டை ரவுடிகள் பேசும் பேச்சு எல்லாம் பிச்சை வாங்கணும்! 

‘அப்பா’ வெடி வெடிக்கலாம் வாங்கப்பா சீக்கிரம், என்று கெஞ்சும் மகனைத் தவிக்கவிட்டு மீம்ஸ்க்கு பதிலடி கொடுக்க அப்பா மொபைலில் தீவீரமாயிருப்பார்.

‘அம்மா கொஞ்சம் சட்னி போடேன்’ என்று கெஞ்சும் மகளைத் தவிக்கவிட்டுட்டு, வாட்ஸப் வீடியூவை பார்வேர்ட் செய்யும் அம்மாக்களைப் பார்க்கலாம். 

இதே தீவிர-வாதம்தான் பெண்களை சபரிமலைத் தீர்ப்புக்கு எதிராக எழ வைத்தது. 

இத்தனை பேர்கள் மதக் கோட்பாட்டில் ஒருமையாக இருக்கிறார்கள் என்றால் ஜனநாயக முறைப்படி அதற்குத் தலை வணங்க வேண்டியது நமது கடமையாகிறது. 

அதனால்தான் சென்ற மாதம் எழுதிய சபரிமலை தீர்ப்புபற்றிய தலையங்கத்தை மாற்றிக்கொள்கிறோம்.

( உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை மறுசீராய்வு செய்யப்போகிறது என்று சொல்வதற்கு முன்னரே நம் தீர்மானம்  முடிவாகிவிட்டது.)

சில சம்பிரதாயங்களுக்கு மரியாதை கொடுப்பது நமது கடமை. 

ஜல்லிக்கட்டும் சரி, சபரிமலைப் போராட்டமானாலும் சரி. நமது கருத்து மாறுபட்டதாக இருந்தாலும்   மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கொள்கிறோம். 

‘ நான் எப்படியும் போயே தீருவேன்  அரசாங்கமும் நீதியும் என் பக்கம் ‘ என்று தீர்மானமாக இருக்கும் சில பெண்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.

” உங்கள் குரல் பெரிதாகும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். 

‘கத்தினால்தானே எங்கள் குரல்  உலகுக்குக் கேட்கும் ‘ என்று நீங்கள் சொல்லலாம்.

தேவையேயில்லை. உங்கள் குரலில் உள்ள நியாயம் பெரிதாகும்போது பாதை தானே பிறக்கும்.

அதுவரை, காத்திருப்போம்.