Monthly Archives: September 2020
குண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்
குண்டலகேசியின் கதை 2
முன் கதைச் சுருக்கம் :
குண்டலகேசியின் முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்குங்கள் !
இயற்கை அழகும்,செல்வ வளமும், சமயப் பொறையும், வணிகச் சிறப்பும் கொண்டது பூம்புகார் நகரம். இந்நகரின் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை. அழகும், அறிவும், அன்பும், அருளும் நிறைந்தவள். இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்த இவள் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களை இனிக் காண்போம்:
பத்திரையின் தாய் இறத்தல்
சிறந்திடும் இன்ப வாழ்வில்
திருப்பமும் வந்த தம்மா.
அறந்திகழ் அன்புத் தெய்வம்
அன்னையும் மறைந்தாள் ஓர்நாள்.
பிறழ்ந்தது கனவு, தன்னைப்
பெற்றவள் பிரிவி னாலே
உறைந்தனள் துன்பத் தாலே
ஊழ்வலி அறிந்தார் யாரே?
பத்திரை வளர்தல்
தாயவள் பிரிவால் வாடித்
தவித்தனள் பத்தி ரையாள்.
சேயவள் மகிழ்ச்சி கொள்ளச்
செல்லமாய் வளர்த்தான் தந்தை.
ஆயநற் கலைகள் எல்லாம்
அறிந்திடும் வழிகள் செய்தான்.
தூயவள் அவளும் காலம்
சுழன்றிட வளர்ந்து வந்தாள்.
ஆற்றினில் ஆடி, வீழும்
அருவியில் குளித்துத் தென்றல்
காற்றினைப் போல்தி ரிந்து,
கவலைகள் தமைம றந்தாள்.
மாற்றுப்பொன் போன்றாள் செல்வ
வளங்களைப் பெற்று வாழ்ந்தாள்
சாற்றிடும் அவள்சொல் கேட்டுத்
தந்தையும் நடந்து கொண்டான்
பத்திரையின் அழகு
ஓவியப் பாவை அன்னாள்
ஒளியுமிழ் மின்னல் கண்ணாள்
கூவிடும் குயில்போல் சொற்கள்
கொண்டனள் புருவ விற்கள்
பூவென மலர்மு கத்தாள்
பொன்னென ஒளிர்கு ணத்தாள்
காவியத் தலைவி என்று
காண்பவர் வியப்பார் நின்று.
மாடத்தில் இருந்து பத்திரை கண்டவை
ஆனதோர் நாளில் அன்னாள்
அழகுமா ளிகையின் மாடம்
தானதில் சென்றாள் தன்னைச்
சார்ந்திடும் தோழி யோடு.
வானமும் முகிலும் சோலை
வனப்புடை நிலமும் கண்டாள்.
தேனுணும் வண்டாய் உள்ளம்
சிலிர்த்திட உவகை கொண்டாள்.
அப்புறமும், இப்புறமும் மக்கள் செல்லும்
ஆளரவம் மிகுதெருவோ யாரும் இன்றித்
துப்புரவாய்க் காட்சிதரும் விந்தை கண்டாள்
துடிப்புடனே காரணத்தை அறிந்து கொள்ள
ஒப்பிமனம் தோழியினைக் கேட்டுப் பார்த்தாள்
ஒன்றுமவள் அறியவில்லை. அந்த நேரம்
அப்பப்பா தெருவினிலே கண்ட காட்சி
அப்படியே குருதியினை உறைய வைக்கும்.
கள்வனைக் கொல்ல இழுத்துச் செல்லுதல்.
வழிப்பறி செய்வான், வம்புகள் செய்வான்,
வன்மையும் திண்மையும் கொண்டான்
வனப்புறு தோளன், சினத்துருக் காளன்
வஞ்சகக் கொலைமிகு கொடியன்
அழிப்பதும் உயிர்கள், அடிப்பதும் கொள்ளை
அறிந்திடான் அன்பெனும் சொல்லை.
அமைதியும் அறமும் நாட்டினில் சிதைத்தான்
அச்சமே மனங்களில் விதைத்தான்
பழிப்புறு கள்ளன் கயிற்றினால் கட்டிப்
பாவியைக் கொலைக்களம் நோக்கிப்
பத்திரை வாழும் தெருவழி இழுத்துப்
பற்றியே காவலர் போனார்.
கழிப்பதும் களைகள், காப்பதும் பயிர்கள்,
காவலன் மன்னவன் கடமை.
களவுடன் கொலையாம் கொடுமைசெய் காளன்
கதையினை முடித்திட விரைந்தார்.
( கள்வனின் பெயர் – காளன். சத்துவான் என்றும் கூறுவதுண்டு)
கள்வன் மேல் பத்திரை காதல் கொள்ளுதல்
வடிவதன் அழகும் புறமொளிர் விறலும்
மயக்கிட உருகினள் பேதை.
கொடியவன் அவன்மேல் கொடியெனும் கோதை
கொண்டனள் உடனடிக் காதல்.
நெடியவல் விதியோ? வளைந்தநல் மதியோ?
நெகிழ்ந்திடும் இளமையின் சதியோ?
மடியவே மன்னன் ஆணையும் உளதால்
வருந்தலே வாழ்க்கையின் கதியோ?
(புறமொளிர் விறல்- வீரத் தோற்றம்)
( தொடரும்)
தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்
( இந்த நாடகம் மகான் தாகூர் அவர்கள் எழுதித் தயாரித்த நாட்டிய நாடகம். NATIR PUJA என்பது அதன் பெயர். 1932 இல் ஒரு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது . தாகூர் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தில் படச் சுருள் நெருப்புக்கு இரையாகிவிட்டது என்ற செய்தி நாம் மனதில் வருத்தத்தை வரவழைக்கிறது. குவிகத்தில் இதன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்) )
கதை நிகழுமிடம்
புத்தபிரான் ஒருமுறை மகதநாட்டரசன் பிம்பிசாரனின் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு அசோகமரத்தடியில் அமர்ந்து தமது உபதேசங்களைச் செய்தருளினார். அவருடைய பக்தனாகிவிட்ட அரசன் அந்தப் புனிதமான இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்தான்; தனது அரண்மனையைச் சேர்ந்த இளவரசிகள் ஒவ்வொரு மாலைநேரமும் தங்கள் வழிபாட்டுப் பொருள்களை அங்கு சமர்ப்பிக்க ஏற்பாடு செய்தான்.
பின்னொரு நாளில் தனது மகனான இளவரசன் அஜாதசத்ரு அரியணையில் அமர விரும்புகிறான் என அறிந்த அரசன் பிம்பிசாரன், மனப்பூர்வமாகத் தன் அரியணையை அவன்வசம் ஒப்புவித்துவிட்டு, அந்த நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்து வரலானான்.
அரசி லோகேஸ்வரி, முதலில் இந்தப்புதிய மதத்தைச் சார்ந்தவளாக இருந்தாள். ஆனால் இப்போது தனது கணவன் நாட்டைத் துறந்ததையும், அதனை மகனுக்குக் கொடுத்து விட்டதையும் தவறெனக் கருதியதனால் புத்தருடைய உபதேசங்களுக்கும் அந்த மதத்துக்கும் எதிராகச் செயல்படத் தலைப்பட்டாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தொடக்கக் காட்சி:
உபாலி எனும் புத்தபிட்சு, பாடிக்கொண்டே வருகிறார்.
உபாலி: யாரேனும் உள்ளீரா? தருமம் செய்யுங்கள், புத்தபிரானின் பெயரால் தருமம் செய்யுங்கள்!
ஸ்ரீமதி, அரண்மனையைச் சேர்ந்த ஒரு நாட்டிய மங்கை, காட்சியில் நுழைந்து அவரைப் பணிகிறாள். பிட்சு அவளை ஆசிர்வதிக்கிறார்.
(ஸ்ரீமதியிடம்) குழந்தாய், நீ யாரோ?
ஸ்ரீமதி: வணக்கத்திற்குரியவரே, நான் இந்த அரண்மனையின் நாட்டியமங்கை, தங்களுக்குப் பணிவிடை செய்ய வந்துள்ளேன்.
உபாலி: இந்த நகரில் நீ மட்டுமே விழித்துக் கொண்டுள்ளாயா?
ஸ்ரீமதி: இளவரசிகள் இன்னும் உறங்கிக் கொண்டுள்ளனர்.
உபாலி: நான் கடவுளின் பெயரால் யாசகம் வேண்டி வந்துள்ளேன்.
ஸ்ரீமதி: வணக்கத்திற்குரியவரே, உள்ளே சென்று இளவரசிகளை அழைத்துவர எனக்கு அனுமதி கொடுங்கள்.
உபாலி: நான் யாசிப்பது உன்னிடமிருந்தே!
ஸ்ரீமதி: அந்தோ ஐயா! நான் ஒரு அபாக்கியவதியான ஜீவன். கடவுளுக்காகத் தாங்கள் பெற்றுக்கொள்ளும் காணிக்கைகளில் என்னுடையது மிகவும் நாணத்திற்குரியதாக அமைந்துவிடும். எனக்கு உத்தரவிடுங்கள், தங்களுடைய பாத்திரத்தில் நான் எதனை இடுவது?
உபாலி: உன்னிடமுள்ள உயர்வான பொருளையே தானம்செய்.
ஸ்ரீமதி: என்னிடம் உள்ளவற்றில் எது மிகவும் உயர்ந்ததென நான் அறியேன் ஐயா!
உபாலி: உண்மை. ஆனால் கடவுளின் கருணை உன்னிடத்தில் முழுமையாக உள்ளது. அதனால் அவருக்குத் தெரியும்.
ஸ்ரீமதி: கடவுளே மனமுவந்து என்னிடமிருந்து அதனை எடுத்துக் கொள்வாராக- இதுவே தங்களது ஆசிர்வாதமாகவும் இருக்கட்டும், வணக்கத்திற்குரியவரே!
உபாலி: அவ்வாறே ஆகட்டும், குழந்தாய். மலர்கள் நிறைந்த வனத்தில் தன்னையே ஒப்புதல்கொடுத்துள்ள பருவங்களின் அரசனான வசந்தம் விழித்தெழும்போது நீ பூஜைக்கு அளிக்கும் மலர்களை அவர் ஏற்றுக் கொள்வார். உனது நாள் வந்துவிட்டது – இதுவே நான் தரும் செய்தி. நீ உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள்!
ஸ்ரீமதி: நான் அந்த நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். (குனிந்து அவரைப் பணிகிறாள்)
அவர்கள் செல்கிறார்கள்; உடனே தொடர்ந்து அரசகுமாரிகள் நுழைகிறார்கள்.
அரசகுமாரிகள்: (வாயிலைப் பார்த்தவண்ணம்) இவ்வாறு வெளியேற வேண்டாம், ஐயா. எங்கள் காணிக்கைகளை ஏற்று மகிழுங்கள்.
(ஒருவருக்கொருவர்) ஓ, என்ன துர்ப்பாக்கியம்! அவர் சென்றுவிட்டார்.
ரத்னாவளி: இதில் என்ன தாபம், வாசவி? பிச்சை எடுப்பவர்களுக்குத் தான் குறைவில்லையே. கொடுப்பவர்களே குறைந்து விட்டனர்.
நந்தா: இல்லை ரத்னா. ஒருவருடைய காணிக்கைகளைச் செலுத்த சரியானவரைக் கண்டுபிடிக்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்று நாம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம்.
(அனைவரும் வெளியேறுகிறார்கள்)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அங்கம்-1
காட்சியிடம்: அரசியின் நந்தவனம்
அரசமாதா லோகேஸ்வரி, உத்பலா எனும் பிட்சுணி, பிட்சை எடுத்து வாழும் புத்தமத சகோதரி ஒருத்தி ஆகியோர் இவ்விடத்தில் நுழைகின்றனர்.
அரசி: ஓ! பேரரசர் பிம்பிசாரர் என்னை இன்னும் நினைவு வைத்திருக்கிறாரா?
பிட்சுணி: ஆம். அதுவே நான் கொணரும் செய்தி.
அரசி: இன்று அசோகமரத்தடியிலுள்ள வழிபாட்டு மேடையிலிருந்து காணிக்கைகளை அவர் எடுத்துக் கொள்வார் அல்லவா? அதனால்தான் என் நினைவு வந்ததோ?
பிட்சுணி: ஆம். இன்றிரவு வசந்தகாலத்துப் பூர்ணிமை!
அரசி: ஆனால் யாரை அவர்கள் வழிபடுகிறார்கள்?
பிட்சுணி: உங்களுக்கு நன்றாகத் தெரியும்! இந்த இரவில் நாம் புத்தபிரானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதுண்டல்லவா?
அரசி: செல்லுங்கள், எனது வழிபாடு நிறைவடைந்து விட்டதென்று என் கணவரிடம் சென்று கூறுங்கள். மற்றவர்கள் தங்கள் மலர்களையும் தீபங்களையும் அவருடைய வழிபாட்டு மேடையில் சமர்ப்பிக்கட்டும்- நான் எனது உலகத்தையே காலிசெய்து விட்டேன்.
பிட்சுணி: இவை என்ன தகாத சொற்கள், மகாராணி?
அரசி: அவர்கள் எனது ஒரே மகனான இளவரசன் சித்ராவை வஞ்சித்துக் கவர்ந்து சென்றுவிட்டனர். அவன் பிச்சைக்காரனின் (பிட்சுவின்) உறுதிமொழியை எடுத்துக் கொண்டான்- இன்னும் அவர்கள் எனது வழிபாட்டை எதிர்பார்க்கின்றனரா? ஒரு கொடியை அதன் அடிவேரை அறித்தெறிந்துவிட்டு, அதனிடம் என்ன தைரியத்தில் மலர்களை எதிர்பார்க்கலாம்?
பிட்சுணி: நீங்கள் அவனைக் கொடுத்து விட்டீர்கள், இழக்கவில்லை. ஒருகாலத்தில் அவனை நீங்கள் உங்கள் கரங்களில் ஏந்தியிருந்தீர்கள்; இப்போது இந்த உலகத்தின் நன்மைக்காகக் கொடுத்துள்ளீர்கள்.
அரசி: நல்ல பெண்மணியே, உனக்கென்று ஒரு மகன் உள்ளானா?
பிட்சுணி: இல்லை.
அரசி: எப்போதாவது இருந்தானா?
பிட்சுணி: நான் இளமையிலேயே விதவையானவள்.
அரசி: அப்படியானால் மௌனமாக இரு. உன்னால் புரிந்துகொள்ள இயலாதவற்றைப் பற்றிப் பேசாதே.
பிட்சுணி: மகாராணி, இந்த உண்மை மதத்தை அரண்மனைக்குள் முதன்முதலாக வரவேற்றது தாங்களே! பின் எவ்வாறு இன்று…….
அரசி: ஆ! அவர்கள் இன்னும் அதனை நினைவில் வைத்துள்ளனரா? உங்கள் தலைவர் அதனை மறந்துவிட்டார் என எண்ணியிருந்தேன். தினமும் நான் எனது உணவை உண்ணுவதற்காகத் தொடும் முன்பு பிட்சுவான தர்மருசி என்பவரை மதநெறி சம்பந்தமான புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் படிக்க வேண்டிக் கொள்வேன்: தினமும் நான் எனது உபவாசத்தை முடித்துக்கொள்ளும் முன்பு நூறு பிட்சுக்களுக்கு உணவளித்தேன். வருடந்தவறாமல், சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மழைக்காலம் முடிவடைந்ததும் மஞ்சள்நிற ஆடைகளை வழங்குவதனை எனது கடமையாகக் கொண்டிருந்தேன். புத்தரின் எதிரியான தேவதத்தனின் துர்ப்போதனைகளால் மக்களின் மனங்கள் அலைக்கழிக்கப்பட்டபோது, எனது நம்பிக்கையில் உறுதியாக நின்று, புத்தரை எங்களது நந்தவனத்திற்கு அழைத்துவந்து, அசோகமரத்தடியில் அமர்ந்து புனிதமான சொற்களைக் கூறுமாறு செய்வித்தேன். ஓ! கொடூரமான நன்றிகெட்டவனே! இதுவா எனக்கான பரிசு? – விஷம்! எனக்கெதிராக வெறுப்பில் எரிந்துகொண்டிருந்த பெண்களுக்கு, எனக்கு விஷம்வைக்கத் துணிந்தவர்களுக்கு என்னவாயிற்று? ஒன்றுமேயில்லை! அவர்களுடைய மகன்கள் இப்போதும் கூட அரசபோகத்தை அனுபவிக்கின்றனர்.
பிட்சுணி: மகாராணி! உண்மையின் மதிப்பை உலகின் வழக்கமான அளவுகோல்கொண்டு மதிப்பிடாதீர்கள். பொன்னுக்கும் பகலின் ஒளிக்கும் விலை ஒன்றேதானா?
அரசி: இளவரசன் அஜாதசத்ரு தனது விசுவாசத்தை தேவதத்தனிடம் ஒப்படைத்தபோது, நான் ஒரு முட்டாளைப்போல் நகைத்தேன். “அது ஒரு ஓட்டைக்கப்பல், ஏமாந்தவர்கள் மட்டுமே அதில் ஏறிச்சென்று கடலைக் கடக்க நினைப்பார்கள்,” என்றேன் நான். தேவதத்தனின் மந்திரதந்திரங்களின் துணைகொண்டு தன் தகப்பனார் உயிரோடு உள்ளபோதே அவரது அரியணையை அடைய எத்தனித்தான் இளவரசன்; நானும், எனது நம்பிக்கைகளின் மீதுகொண்ட பெருமையால் எனது ஆசானின் பெருமதிப்பு இளவரசனின் அந்தஆசையைத் தடைசெய்துவிடும் எனக்கருதினேன். அத்தகைய அப்பழுக்கற்ற நம்பிக்கையால் நான் சாக்யசிங்கா எனும் புத்தபிரானை இங்குவர வேண்டினேன்- இந்த அரண்மனைக்கு வந்து எனது கணவருக்குத் தன் ஆசிகளை அளிக்க வேண்டினேன். இருந்தும் கடைசியில் வென்றது யார்?
பிட்சுணி: வெற்றி தங்களுடையதே. வெளியுலகினை வெல்வதற்காகத் தங்கள் உள்ளத்தின் வெற்றியைப் (ஆத்ம வெற்றியை) புறந்தள்ளாதீர்கள்.
அரசி: வெற்றி? என்னுடையாதா?
பிட்சுணி: தங்களுடையதே ஆகும். தன் மகனுக்காக மகாராஜா பிம்பிசாரன் என்று அரியணையை விட்டுக்கொடுத்தாரோ அன்றே அவர் வேறொரு அரியணையை அடைந்தார்.
அரசி: வேறொரு அரியணை? அது ஒரு மாயை, ஒரு க்ஷத்ரிய அரசனுக்கான அவமதிப்பு! என்னைப்பற்றி எண்ணிப்பார்! இன்று நான் யார்? – கணவன் உயிரோடிருந்தும் ஒரு விதவை, ஒரு மகனைப் பெற்றிருந்தும் மலடி, எனது அரண்மனையிலேயே நான் நாடுகடத்தப்பட்டவள். இது நிச்சயமாக மாயையல்ல. உனது மதத்தைச் சேராதவர்களால் நான் இகழப்படுபவளல்லவா? செல், இதனை உனது எஜமானரிடம் சென்று சொல் – உங்கள் இடிமுழக்கம் போலும் சக்தியான அவரிடம் சொல்! அவர் இப்போது எங்கே? அந்த ஏமாற்றுப் பேர்வழிகளை ஏன் அவருடைய மின்னலொளி தாக்கவில்லை?
பிட்சுணி: மகாராணி, இவையனைத்திலும் உண்மை எங்கே? நீங்கள் கடந்துசெல்லும் ஒரு கனவைப்பற்றிப் பேசுகிறீர்கள். ஏமாற்றுக்காரர்கள் வேண்டுமளவு மட்டும் சிரிக்கட்டும்.
அரசி: இது கனவாகவே இருக்கட்டும்; ஆனால் நான் விரும்பும் கனவல்ல. மற்ற கனவுகள் அனைத்தும் என் மனதில் நாள்தோறும் குடியிருப்பவை- அவை செல்வங்கள், எனது மகன், அரசபோகம், பெருமை என்பன. நீ, தங்களது தலைகளைக் கர்வமாக உயர்த்திக்கொண்டு நடமாடும் மற்ற பெண்களிடம் சென்று உரையாடு, செல். அவர்கள் தாங்கள் காணும் கனவுகளின் மகிழ்ச்சியில் திளைக்கின்றர்களல்லவா? அவர்கள் வழிபாட்டிற்கான பொருட்களைச் சமர்ப்பிக்க வரட்டும், பார்க்கலாம்.
பிட்சுணி: அப்படியானால் நான் சென்றுவருகிறேன்.
அரசி: சென்றுவா, ஆனால் அவர்கள் முட்டாள்களல்ல என நினைவிலிருத்திக்கொள்; நான்தான் முட்டாளாக இருந்தேன். அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் அவர்கள் புத்தபிரானை நம்பவில்லை. சாக்யசிங்கரின் கருணையால் அவர்கள் தீண்டப்படவில்லை; அதனால் அவர்கள் பாதுகாப்பாக, ஆம் பாதுகாப்பாக உள்ளனர். ஏன் மௌனமாக நிற்கிறாய்? இதுவே உனது பொறுமை என நீ பாசாங்கு செய்கின்றாயா?
பிட்சுணி: நான் சொல்ல என்ன இருக்கிறது? எனது உள்ளம் கோபத்தின் வயப்பட்டுவிடுமோ என்று என்னையே பற்றி நான் அச்சங்கொள்கிறேன்.
அரசி: இன்னும் உனது இரக்கம்கொள்வது போன்ற நடிப்பும் மன்னிப்பும் என்னைப்போன்றவளிடமா? உன் அமைதியான வறட்டுக் கர்வம் என்னால் தாங்க முடியாதது. என்னை விட்டுச்செல்.
உத்பலா செல்ல எத்தனிக்கிறாள்; ஆனால் அரசி அவளைத் திரும்ப அழைக்கிறாள்.
(தொடரும்)
சரித்திரம் பேசுகிறது – யாரோ
சங்கரவிஜயம்-2
ஆதி சங்கரர்..
இந்த அவதார புருஷரது சரித்திரம், அவரது படைப்புகள், அவரது போதனைகள் என்று பல பரிமாணங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த திவ்விய நிகழ்வுகள் தொடர்கிறது.
இராமனைப்பற்றி தியாகராஜ ஸ்வாமிகள் இசையோடு பாடினார்..
மானிடருக்கு இது இசையமுதாக அமைந்தது..
அதுபோல்..
சங்கரரைப் பற்றி நமது நண்பர் இலக்கியவாதி ‘அசோக் சுப்பிரமணியம்’ எழுதுகிறார்.
குவிகம் வாசகர்களுக்கு இது ஞானஅமுதாக அமையட்டும்.
இனி அசோக்கின் வார்த்தைகள்:..’யாரோவின் கண்பார்வையில்’
*************************************************************************************************************************************
சங்கர திக்விஜயம் தொடர்கிறது..
துறவை நோக்கி:
அவருக்கு எட்டுவயது பூர்த்தியாகும் காலமும் வந்தது.
சங்கரனுக்கு திருமணம் செய்யும் நோக்கத்தில் தாயிருக்க, துறவறம் ஏற்கும் எண்ணத்தில் இளம் சங்கரர் இருந்தார்.
தன்னுடைய பணி உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்று அவதார புருடரான ஆச்சாரியருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?
ஆனால் தாயின் முழு சம்மதமில்லாமல் துறவியாக முடியாதே!
ஒரு நாள் நதியில் நீராட இறங்குகையில் அவரது காலை ஒரு முதலைப் பற்றிக்கொண்டது. கரையில் இருந்த தாய் கலங்கித் துடித்தாள். தன்னால் காப்பாற்ற முடியாத இயலாமையில் கதறினாள். சங்கரரோ சலனமே இல்லாமல் தாயிடம், தனக்குத் துறவறத்துக்கு அனுமதி கொடுத்தால், அது இருக்கும் ஜன்மாவைத் தொலைத்துப் புது ஜன்மம் எடுப்பதற்குச் சமமென்றும், அப்போது முதலைத் தன்னை விட்டுவிடும் என்று சொன்னார். தாயும் வேறு வழியில்லாமல், எங்கோ உயிரோடு இருந்தால் சரி என்று நினைத்து அனுமதி கொடுத்துவிட்டாள். அக்கணமே முதலைக் காலை விட்டது. சங்கரர் ஆற்றில் இருந்தபடியே ப்ரைஷோசாரணம் என்னும் முறைப்படி, குருமுகமாக அல்லாமல் தானே வரித்துக்கொண்டார் துறவை! முன்னரொரு சாபத்தினால் முதலையாயிருந்த கந்தர்வனுக்கும் சாப விமோசனமாயிற்று.
ஆசானைத் தேடி:
தனக்கு முறையாக துறவறம் வழங்குதற்குத் தக்க ஆசாரியரைத் தேடி, சங்கரர் அன்னையை விட்டு அந்த சிறுவயதிலேயே கால் நடையாகவே நர்மதைக் கரையினை அடைந்து அங்கு கோவிந்தபாதரைக் கண்டார். அப்போது நர்மதையில் பெருவெள்ளம் ஏற்பட்டு கிராமங்களையெல்லாம் மூழ்கடித்துகொண்டிருக்க, அதை தன் கமண்டலத்தில் அடக்கினார்.. இதையே காவிரிக்கு அகத்தியர் செய்த புராணக்கதையொன்றும் உண்டு.
கமண்டலத்துக்கு இப்படி ஒரு பயனுண்டு போலும்!
சமாதி கலைந்து எழுந்த கோவிந்தபாதர் எதிரில் நின்றுகொண்டிருந்த சிறுவனைப் பார்த்து, “யார்நீ” என்று வினவவும், அதற்குப் பதிலாக, அந்தகால, பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி பாகவதர் காலப் படங்கள்போல பாட்டாலேயே பதில் சொன்னார் சங்கரர். அவர் சொன்ன விடைப் பாடல் பத்தும் நிர்வாண தசகம் எனப்படும். அது சொல்லும் உயரிய கருத்து, “நான் உடம்பல்ல; இதிலுள்ள எதுவுமல்ல; நான் அகண்ட சச்சிதானந்த பிரம்மமே” என்பதாகும். குரு பரம்பரைக்கே மூலவரான தக்ஷிணாமூர்த்தியே சாட்சாத் சங்கரராக அவதாரம் பண்ணியிருக்கையில் அவருக்கு குரு தேவையா என்று கேள்வி எழும்.. கிருஷ்ண பரமாத்வுக்கு சந்தீபனி குருவாக இருக்கவில்லையா? பரமசிவனுக்கே முருகன் குருவாக இருக்கவில்லையா? குருவின் மகிமையை உலகுக்கு உணர்த்தப் பரமனே நடத்திய நாடகம்தான் எல்லாம். அவரின் உத்திரவால் பிரும்ம சூத்திரம், உபநிஷத்துக்கள், கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் இவற்றுக்கெல்லாம் பாஷ்யம் எழுதினார் சங்கரர். கங்கைக்கரையில் முதியவர் உருத்தாங்கி தன்னோடு வாது புரிந்த வியாசராலேயே இவருடைய உரைகளுக்கு அங்கீகாரமும் பெற்றார்.
ஒருமுறை நான்கு நாய்களுடன் சண்டாளன் வடிவில் வந்த பரமசிவனை, யாரென்று அறியாமல், “விலகிப்போ” என்றார். அவ்வடிவில் இருந்த சிவனாரோ சிரித்து, “ஊருக்குத்தான் உபதேசம் போலிருக்கிறதே! நீர் விலகிப் போ என்றது, உடலையா, ஆன்மாவையா” என்று கேட்கவும், விக்கித்து, வந்திருப்பது சண்டாள உரு தாங்கிய பரமசிவனாரே என்று உணர்ந்து “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து சுலோகங்களைச் சொல்லவும், சிவனார் தன் வேடத்தை நீங்கி அவருக்கு காட்சியும், அருளும் தந்து மறைந்தார்.
72 மதங்களைச் சுருக்கி ஆறாக்கி ஆறு தந்த வரலாறு:
சங்கரின் காலத்தில் 72 மதங்கள் இருந்தனவாம். இவையெல்லாம் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு, பல தீய சடங்குகளைக் கொண்டு, ஸனாததர்மத்தைச் சீர்குலைப்பதாக இருந்ததால் ஆச்சாரியர் அவதாரம் செய்து, அவற்றில் பலவற்றையும் கண்டனம் செய்து, நெறிசெய்து ஷண்மதத்தை நிர்மாணித்தார். இவற்றை
கணபதியை வழிபடும் காணாபத்யம்
முருகனை வழிபடும் கௌமாரம்
சக்தியை வழிபடும் சாக்தம்
சிவனை வழிபடும் சைவம்
விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம்
மற்றும் சூரியன் உள்ளிட்ட நவக்ரஹ தேவதையரை வணங்கும் சௌரம் என்பர்.
வந்த சீடர்களும் பெற்ற சீடர்களும்:
சோழ தேசத்தைச் சார்ந்த சனந்தனர் என்பவர் சங்கரர் பதினாறு வயது பாலத் துறவியாக காசியில் இருந்தபோது, அவரிடம் சீடராக வந்து சேர்ந்தார். ஒரு சமயம் சங்கரரது சீடர்களில் யாருக்கு அவரிடம் மிகுந்த ஈடுபாடு என்பதில் ஒரு போட்டி இருந்தது. இதை ஊகித்து உணர்ந்த சங்கரர், சனந்தரின் மேன்மையைக் காட்டவேண்டி, ஆற்றின் மறுகரையில் இருந்தவரை அழைக்க, அவர் அப்படியே ஓடிவர, அவரது ஒவ்வொரு அடிக்கும் கீழ் ஒரு பதுமம் தோன்றி அவரைத் தாங்கிற்றாம்! அந்த அளவுக்கு அவருடைய குருபக்தி இருந்ததாம். ஒரு கணமும் சிந்தியாமல் ஆற்றிலே இறங்கிவிட்டார். அன்றிலிருந்து அவருக்குப் பத்மபாதர் என்று பெயர். மற்றொரு சமயம் சங்கரரை நரபலியிட இருந்த காபாலிகனிடமிருந்து காப்பாற்ற, அவரது இஷ்டதெய்வமான நரசிம்ம மூர்த்தியே அவர்மேல் இறங்கியதாகவும் ஒரு கதையிருக்கிறது. இவரைச் சிருங்ககிரியின் முதல் ஆசாரியராகக் கருதுகிறார்கள்
பிரயாகையில் இருந்த மீமாம்சை என்னும் கர்மமார்க்க வித்தகரான குமாரிலபட்டரைச் சென்றவருக்கு, அவரோ, ஒரு பிராயச்சித்ததின் காரணமாக, உமித் தீயில் தன்னையே சுட்டுப் பொசுக்கிக்கொண்டு உயிர் தியாகம் செய்ய முனைந்திருந்ததைக் கண்டு, வருந்தினார். அவரோ சங்கரரின் ஒளியைப் பார்த்து, உண்மையின் தரிசனத்தைக் கண்டவராகத், மாஹிஷ்மதி நகரில் மீமாம்ஸை போதகராக இருக்கும் தன்னுடைய சீடரான மண்டன மிசிரரைச் சென்று, அவரை ஞானமார்க்கமான அத்வைதத்திற்குத் திருப்பும் படி வேண்டினார்.
சங்கர் மண்டனமிசிரோடு வாது புரிந்ததும், மண்டனரின் மனைவியாம் சரசவாணியே அதற்கு நடுவராக இருந்ததும் பெருங்கதை! எழுதினால் இரண்டு குவிகம் இதழே தேவைப்படும்! அதனால் அந்த வாதிலே மண்டன மிசிரரை வென்று அவரைத் தன்னுடைய சீடராக சுரேஸ்வரர் என்ற நாமகரணம் சூட்டி ஏற்றுக்கொண்டார். இவரை காஞ்சி, சிருங்ககிரி, மற்றும் துவாரகை மடங்களின் சரித்திர நூல்கள் தங்கள் ஆசார்ய பரம்பரையில் சொல்லிக்கொண்டாலும், இவர் மூன்றுக்குமே இப்போது ஒரு “கன்சல்ட்டண்ட்” என்ற முறையில் இயங்கியிருக்கலாம்! தவிரவும் கிருஹஸ்தராக இருந்ததால் மடத்தின் ஆச்சாரியராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. சங்கர மடங்களின் ஆச்சாரியர்கள் எல்லோருமே நைட்டிகம் எனப்படும் முழு பிரம்மச்சாரிகளே!
ஹஸ்தாமலகர், ஒரு ஊமை அந்தணச் சிறுவனாக சங்கரரிடம் அழைத்துவரப்பட்டார். அவரைப் பார்த்து, “நீ யாரப்பா” என்று சங்கரர் வினவ, அவரோ, உடனடியாக வாய் மலர்ந்தார் – “ நான் மனிதன் இல்லை; யட்சனில்லை; பிரும்மச்சாரியில்லை; கிருகஸ்தனும் இல்லை; துறவியுமில்லை. ஆனால் ஞானமே வடிவான மெய்ப்பொருள்” என்ற பொருளில் பனிரெண்டு சுலோகங்களாக. அவரைச் சீடராகக் கொண்டதுமல்லாமல், அவருடைய சுலோகங்களுக்கு சங்கரரே பாஷ்யம் எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. குருவே மெச்சிய சீடன்! அதற்கு “ஹஸ்தாமலகீய பாஷ்யம்” என்று பெயர்.
பின்னாளில் தோடகர் என்று அறியப்பட போகிற “கிரி” படிப்பில் சுமார்! ஆனால் குரு பக்தியில் உச்சமாக இருந்தவரைக் கண்டால் மற்ற மாணவர்களுக்கு இளக்காரம். அவனுடைய மகிமையை அவர்கள் உணர்ந்துகொள்ள ஒருநாள் அவர் வரும் வரை பாடம் எடுக்காமல் இருந்தாராம் ஆசாரியர். என்ன இந்த மக்கு மாணவனுக்காகவா ஆசாரியர் காத்துக்கொண்டிருப்பது, என்று மற்றவர்கள் நினைக்கும்போதே, ஆசாரியரைப் பற்றி தோடக விருத்தமாகப் பாடிக்கொண்டு வந்தாராம் அவர். மற்றவர்களைப் பார்த்து ஆச்சாரியர் பார்த்த பார்வையிலேயே அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்களா என்ன! அவரைத் தோடகர் என்றே அழைக்கலானார்.
இவரே கைலைக்குச் சென்று முக்தி அடைந்தார் என்று சிலர் கூறுவர்; காஞ்சியிலே சர்வக்ஞ பீடம் ஏறி அம்மடத்தின் முதல் ஆச்சாரியராக இருந்தார் என்று காஞ்சிமடச் சரித்திரக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன.
இவருடை 32 வயதிற்குள் இவர் எழுதிக் குவித்த சுலோகங்கள் ஏராளம். குறிப்பாக அழகு வெள்ளமாகிய சௌந்தர்ய லஹரி, சுப்ரமணிய புஜங்கம், பஜகோவிந்தம், மனீஷா பஞ்சகம், கணேசபுஜங்கம், மீனாக்ஷி பஞ்சகம், என்று பிரபலமாக அறியப்பட்ட சுலோகங்களோடு, மொத்தமாக 80க்கு மேற்பட்ட சுலோகத் தொகுப்புகளை அளித்திருக்கிறார் ஆச்சாரியர். விளக்கவுரைகளென (பாஷ்யங்கள்) பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அந்தப் பட்டியல்வேறு.. அப்பப்பா! அந்த ஞானக்கடல் பயணிக்காத ஞானப் பாதையே இல்லை. ஆச்சாரியப் பரம்பரையின் முதற்புள்ளி.. முற்றுப்புள்ளியும் அவரேதான்! ஆதியும் அவரே! அந்தமும் அவரே!
ஆதிசங்கரரின் உபதேசச் சுருக்கம்:
இவருடைய உபதேச பஞ்சகம் என்ற நூலே இவர் விட்டுச்சென்ற உபதேசங்களின் சுருக்கமாகக் கருதப்படுகிறது. இவ்வைந்தும் சுருக்கமாக:
- வேதம் படிக்கப்படட்டும்; கர்மாக்கள் செய்யப்படட்டும்; அதனால் ஈசன்மேல் பக்தி வளரட்டும்
- ஆத்மாவைக் காணும் விருப்பம் உண்டாகட்டும்
- சாதுக்கள் சேர்க்கையும் பரம்பொருள் நாட்டமும் உண்டாகட்டும்
- “நான் பிரும்மமாயிருக்கிறேன்” என்ற தியானம் இடையறாது இருக்கட்டும்
- தனியிருந்து பரம்பொருளானது அறியப்படட்டும்!
அவருடைய அத்வைத சித்தாந்தத்தின் சாரமே, “ஆத்மா ஒன்று; அதுவே சத்தியம்; மற்றவையெல்லாம் மித்தியை” என்பதே!
ஆதி சங்கரரின் சரித்திரத்தை ஆழமாக அறிய ஒரு சிலப் பக்கங்கள் நிச்சயமாகப் போதாது; அந்த ஞானக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முனைவது, முத்தின் முளையாவது கிட்டாதா என்ற நப்பாசையில்தான்.
மேலும் அறிய விரும்பினால், நஜன் அவர்கள் எழுதி பிரதிபா பிரசுரம் வெளியிட்ட “ஹரிஹர ஆச்சார்யர்கள்” என்ற புத்தகத்தையோ, அல்லது தெய்வத்தின் குரல் ஐந்தாவது பாகத்தையோ நாடுங்கள்.
சம்ப்ரதாயமாக சங்கரர் சம்பந்தமாக எழுதியோ, பேசியோ முடிக்கும்போது, “ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!” என்பது வழக்கம்..
அவ்வழக்கப்படி, “ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!”
*************************************************************************************************************************************
அசோக்கின் எழுத்துக்கு நன்றி.
சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி எழுதியதால் புனிதம் அடைகிறது. இனி வேறு கதைகளுடன் விரைவில் சந்திப்போம்..
குமார சம்பவம் – எஸ் எஸ்
ஐந்தாம் சர்க்கம்
மதன் எரிந்தது தன் அழகின் தோல்வியென பார்வதி கலங்கி நின்றனள்
சிவனின் அன்பு பெறத் தவமே நல்ல வழி எனத் திடமாய் நம்பினள்
தாய் மேனையோ மகளின் தவ எண்ணத்தை மாற்ற விழைந்தாள்
பார்வதியின் தளிர்மேனி தவத்தைத் தாங்காதென நயந்து சொல்லினள்
மன உறுதி கொண்ட பார்வதியின் முன் தாயவள் தோற்றுப் போனாள்
தவவாழ்வில் தான் செல்ல தந்தையிடம் அனுமதியை வேண்டி நின்றாள்
மகளின் மனமறிந்த இமயவன் ஆசிதர மயிலுறையும் சிகரம் சென்றாள்
மாலைகளை நீக்கி மரவுரியைத் உடல் அணிந்து தவக் கோலம் பூண்டாள்
அலங்காரம் இன்றி பார்வதி இருந்தாலும் அழகில் குறைவின்றி இருந்தாள்
முப்புரிக் கயிற்றை கட்டிய அவளிடை மேலும் கன்னிச் சிவந்தது
அழகையும் ஆட்டத்தையும் நீக்கி தர்ப்பையும் ஜபமாலையும் கொண்டனள்
தரையிலே படுத்து கைகளையே தலையணையாய்க் கொண்டாள்
அசைவைக் கொடியிடமும் பார்வையை மானிடத்தும் அடைக்கலம் தந்தனள்
தவ இல்லம் சுற்றி மரங்கள் நட்டு நேசமுடன் அதற்கு நீரையும் வார்த்தனள்
மான்களின் அச்சம் போக்கிட அவளும் அன்புடன் அவற்றைப் போற்றினள்
பனிமலை தன்னில் மும்முறை குளித்து நாள்முழுதும் ஜபத்தில் இருந்தனள்
பார்வதி அமைத்த ஆஸ்ரமத் தூய்மை தவத்திற்கே கிடைத்த பெருமையை
தவத்தின் பலனை விரைவில் பெற்றிட கடுந்தவம் புரியவும் தலைப்பட்டாள்
தங்கத் தாமரை மேனி தவத்தின் கடுமைகளைத் தாங்கும் வலிமை பெற்றது
கோடையில் நெருப்பின் மத்தியில் சூரியனை நோக்கித் தவமிருந்தாள்
சூரியன் சுட்டெரித்தும் தாமரை மலர் போல சோபையுடன் இருந்தாள்
மேக மழையும் சந்திர கிரணங்களும் அவள் உண்ணும் உணவாயின
பஞ்சாக்னி தகித்த அவளது உடலில் மழைநீர் தெறிக்க ஆவிதெறித்தது
நிஷ்டையில் பார்வதி அமர்ந்திட மழையும் அவளுடள் பொங்கி வழிந்தது
பெருமழை நாளிலும் குளிர்ந்த பாறையில் அமர்ந்து கடுந்தவம் புரிந்தனள்
கடும்பனிப் பொழுதும் கழுத்தளவு நீரில் நின்று கோரத்தவம் செய்தனள்
தாமரைகள் அருகிய குளத்தில் தாமரை மலரென தவமேற் கொண்டனள்
தாமே விழும் இலைகளையும் உண்ணாது அபர்ணா என பெயரும் பெற்றாள்
தளிர் மேனியாள் பார்வதி தவவலிமையில் மகரிஷிகளையும் வென்றனள்
கடுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்
தேஜஸ் கூடிய பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்
பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார்
பெண்ணியம்: – மகாலட்சுமி
புலவர் ரவீந்திரன் அவர்கள் தலைமையில்
கோவை சுதந்திரதினக் கவியரங்கத்தில்
வாசிக்கப்பட்ட கவிதை
பேரிடி வாங்கியும் – நாங்கள்
பேசாமல் போயின
காலங்கள்!
பெண்ணியம் ஏன்
பேச வந்தோம்
பெரிய மனிதர்களே
கேளுங்கள்!
ஒரு பெண் எத்தனை எத்தனை இன்னல்களில் வாழ்கிறாள் தெரியுமா..
இங்கே இயற்கைக்கும் ஈரமில்லை
இல்லையென்றால் அடுப்பில்
பற்றவைத்த நெருப்புக்கூட
அணையாது எரியுமா?
களவு போன ஆறுபோல
கைரேகை தொலைய
பாத்திரம் தேய்த்து,
நகக் கண்கள் குருடாக
வெங்காயம் உரித்து
காய்கறி அறுத்து
கூட்டுப் பொரியலோடு
சோறு பொங்கி
பரிமாற
ஒரு கல் உப்புக் கூடியதற்காக:
ஒருவன்
ஓடிவந்து அடிவயிற்றில்
மிதிப்பான்
இன்னொருவன்
சுடு சோற்றை
முகத்தில் வீசி
மூக்கை விடைப்பான்
மற்றொருவன்
எங்கள் அம்மாக்களைக்கூட
புணரப்போவதான வார்த்தைகளை
கூச்ச நாச்சமின்றிக் கூறுவான்
அப்போது கூனிக் குறுகிப் போய் நிற்பதுதான் பெண் என்றால்
ஒப்புக் கொள்ள முடியுமா?
நாங்கள்
அடுப்பறையில் இருக்கும் போது பங்கெடுக்காதவர்கள்
படுக்கறையில் வந்து கொஞ்சும் போது
துணி களைவது தான்
பெண் என்றால்
ஒப்புக்கொள்ள முடியுமா
கொடியிடை என்பீர்கள்
குனிந்து குனிந்து கூட்டிப் பெருக்கினால்
அப்படித்தான்
சிறுத்துப் போகும் இடை
நீங்கள் வாங்கித் தரும்
வளையல்
கை விலங்கு
நீங்கள் பூட்டிவிடும்
கொலுசு
கால் விலங்கு
மற்றும் நீங்கள் அவிழ்ப்தற்காகவே
அணிவிக்கிற ஆடைகள்
ஆடைகளல்ல
அவமானங்கள்
எங்கள் ரத்தத்தை
உறிஞ்சிக் குடித்துவிட்டு
எங்கள் நரம்புகளாலேயே
எங்கள்
கழுத்தை இறுக்கிவிட்டு
நீங்கள் தூவும் பூக்கள்
எங்கள் உடலுக்கல்ல
எங்கள் பிணத்திற்கு
நீங்கள்
புத்திசாலிகள்தான்
ஆதி நெருப்பை வைத்து
சமைக்க மட்டுமே
எங்களை பழக்கிவிட்டீர்கள்
மிருகங்களோடு மிருகமாய்
பெண்களை வேட்டையாடுனீர்கள்
எங்கள் மரணமேடுகளை
பின்பொருநாள் அம்மனாக்கினீர்கள்
கலுத்திறுக்கும்
தாலிக்கயிற்றுடன்
கல்யாணச்சந்தையில்
காணாமல் போனோம்
இவைகளுக்கு நடுவே
ஆண் பிள்ளைகளையும் பெற்றுத்தருகிறோம்
எங்களுக்கு
எதிராய் திரும்பும்
குறிகளோடு..
இனி பித்தலாட்ட
இதிகாசங்களைப்
பிய்த்தெறியுங்கள்
பெண்களை இழிவு செய்யும்
பக்தி மார்க்கத்தை
புதைத்து மேடேருங்கள்
பெண்ணின் கண்ணீர்
ஆண்களின் நாக்கில்
உப்பிழந்தது போதும்
கோலமிட்ட விரல்கள் இனி
வாளின் பதம் பார்க்கட்டும்
கூறுகெட்ட ஆண்களோடே
குடும்பம் நடத்தியவர்களுக்கு
காளை மாட்டின்
கூர் கொம்பு ஒன்றும்
கொடுமையானதல்ல
காகிதம் சுற்றிச் சுற்றி
பார்சல் பண்ணுகிற
ஆடை முறையைக் கொளுத்திவிட்டு
பறக்கத் தோதான
சிறகை மட்டும் அணி
பெண் குறிக்குப் பூட்டுப்போட்ட ஆணுலகமே….
உன் வீரத்தை
மீசை வளர்த்துக் காண்பித்தாய்
அதை நாங்கள்
முகத்தில் படிந்த
ஒட்டடை என்றே
உணர்கிறோம்
சமத்துவத்துடன் வா
இல்லையேல்
வழி மறிக்காதே..
தள்ளிப் போ
காற்று வரட்டும்!
ஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்
“சேட்ஜி உங்க கடனை எப்ப, எப்படித் திருப்பித் தரப் போறேனோ தெரியலையே’’
“ பிராமணாரே, இதெல்லாம் கடனல்ல, தானம்“
இல்லை சேட்ஜி, நானாகக் கேட்டுப் பெற்ற தொகையையாவது திருப்பித் தராவிட்டால் கடனாளியாகத்தான் இறப்பேன்“
இந்தப் பிராமணருக்கும், எல்லோரிடமும் வட்டியோடு கடனை திருப்பி வசூலிக்கிற சேட்டுக்கும் நட்பு உண்டானதே ஒரு சுவாரஸ்யம் தான். குலம் தழைக்கவும், பணம் பாதுகாக்கவும் பிள்ளை வரம் வேண்டி சேட்ஜி கோயிலுக்கு வரவும், பிள்ளைகளின் கஷ்டத்தைத் துடைக்கவும் அதற்குத் தேவையான பணத்தைப் பெறவும் பிராமணர் அதே கோயிலில் மணி அடிக்க கை நீட்டவும், அங்கே 2 கரங்கள் பிணைந்தன. இணைந்த கரங்களுக்குத்தான் எத்தனை எத்தனை எணணப் பரிமாற்றங்கள்!
ஜாதியில், தொழிலில் எதிரும் புதிரும் உள்ளவர்கள் நட்பில் அருகருகே உள்ளது அனைவர்க்கும் ஆச்சர்யத்தைத் தரும் விஷயமாகும்! ஆனால் யார் என்ன பேசுவார்கள் என்ற நினைப்பின்றி இவர்கள் இருவரும் என்ன பேசுவார்களோ! இந்த நட்பு பேச்சில் மட்டுமல்ல, சேட்ஜியின் செயல்களிலும் பிரதிபலிக்கும். தனக்கு குழந்தையைத் தராத ஆண்டவனை எண்ணி நிந்திக்கமல் பிராமணரின் குழந்தைகளுக்கு செய்வதைத் தன் பாக்கியமாகக் கருதினார்.
“வீட்டில் இன்று கணபதி ஹோமம், இந்தாருங்கள் வேஷ்டி, துண்டு, பலகாரம்’’ என்று ஒரு நாள்.
“கன்யாதானம் பண்ணினாள் சேட்டானி. இந்தாருங்கள் குழந்தைகளுக்குத் துணி’’ என்று மற்றொரு நாள்.
“இன்று புது கணக்குத் துவக்கம். ளுறநநவள இந்தாரும்’’ என்று மற்றொரு நாள்.
பிராமணருக்குப் புரியாமல் இல்லை. தன் வறுமை நிலைமையை மனத்தில் வைத்துத் தான் சேட்ஜி இப்படி தானம் பண்ணுகிறார் என்று. ஆனால் மறுக்கத்தான் முடியவில்லை. மனம் புழுங்கிக் கொண்டிருந்தார்.
பிராமணரின் மனைவியும் செட்டும் குடித்தனமுமாக இருந்தாலும் 4 பெண் குழந்தைகளின் தாயல்லவா அவள்? பெண் குழந்தைகளாகட்டும் தங்கச் சிலைகள், கை வேலை வண்ணங்களில் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். காகிதத் தேர், ஜரிகைப்பூ, புடவை லேஸ் என்று சிறிது சம்பாதித்து விடும்.
வேற்றூருக்குச் சென்றிருந்த சேட்ஜி வந்தவுடன் விசாரித்தது பிராமணரைத் தான். குளித்து உண்டு விட்டு அவரைப் பார்க்க கிளம்பினார். அப்போது பிராமணர் ஏதோ படங்களை வெட்டி சரிபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
” என்ன படங்கள் இதெல்லாம்?’’.
” ஒன்றுமில்லை’’ என்று அவைகளை ஒதுக்கி வைத்தார்.
சேட்ஜியா சும்மா விடுவார்!
கூரிய கண்கள் தான் அவற்றைக் கவளித்து விட்டனவே! மெதுவே அந்தப் படங்களைப் பிடுங்கிப் பார்த்தார். கொடைக்கானல் லேக் ஏரி, ஊட்டி பூக்கண்காட்சி. முதுமலைக் காட்டில் யானைக் கூட்டம், வண்டலூர் ஜீவில் 2 சிங்கங்கள். அப்பப்பா! இயற்கைக் காட்சிகள் கொள்ள அழகு!
சின்னப்பையன் போல் வெட்கப்பட்ட பிராமணர் “”””புத்தங்கள், பேப்பர்கள் இவைகளிலிருந்து அவ்வப்போது வெட்டி எடுத்து வைத்துள்ளேன். அப்பப்ப எடுத்துப் பார்த்துக் கொள்வேன். சுற்றுலா போய்விட்டு வந்த நினைவும் தெம்புமாக இருக்கும்’’ என்றார்.
பிராமணர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். “”””என்ன ஓய்! கையிலே பணத்தை வைத்துக் கொண்டு எனக்குத் தரமாட்டேன் என்கிறீரே!’’
பிராமணர் திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். “”””ஐயா! பணம் எங்கே? உங்களுக்கில்லாததா! என் வீட்டிலேயே என் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லையே! என்று புலம்பினார்.
“நான் சொல்வது இந்த கலைப்படங்களைத்தான். என்னங்காணும் இவைகளை ஓர் ஆல்பமாக தயாரித்து விற்றால் பணம் கிடைக்குமல்லவா!’’
“என்னதிது! இதை ஓர் ஆல்பமாக செய்ய 50 ரூபாய் தான் ஆகும். ஆனால் இதைப் போய் யார் வாங்குவார்கள்?’’
“இப்பொழுதுதானே நீர் சொன்னீர், இதைப் பார்த்தால் இந்த இடங்களுக்கு போய் வந்த நிறைவு என்று, ஆகவே யாராவது வாங்கமாட்டார்களா! என்னைப் போல் இந்த இடங்களுக்குப் போய் பார்க்க நேரம் இல்லாதவர்கள் யாராவது இதை வாங்குவார்களே!’’
சேட்ஜி சொல்லச் சொல்ல பிராமணருக்கும் ஓர் ஆசை, ஆவல். “”””நிஜம்தானே, நிஜம்தானே’’ என்று 2 முறை கேட்டு கண்களை மூடிக்கொண்டார். மனத்தில் ஆல்பம் விரிந்தது.
“வழவழப்பான நீர்வீழ்ச்சையை அட்டைப்படமாக போடவும்; படங்களை இடவாரியாகவோ அல்லது காட்சி வரிசையாகவோ வைக்கவும். போட்டி போட்டுக் கொண்டு யாரும் வாங்கிக் கொள்ளாவிட்டால் என்னைக் கேளும்.’’
மனிதனுக்கு நம்பிக்கைதான் பிரதானம். நம்பிக்கை விதைத்து விட்டால் போதும் ஆசை என்ற எருவுடன் சேர்ந்து மரம் வளர்ந்து விடும். பிராமணருக்குத் தோன்றியது ஏன் இதை செய்யக்கூடாது என்று. கதவுக்குப் பின் நின்றிருந்த பிராமணரின் மனைவி வெற்றிலைத் தட்டை அவர்கள் முன் வைத்து விட்டு “”””உங்கள் நண்பர் சொல்வதைத் தான் கேளுங்களேன். நம் தரித்திரம் விடியாதா என்று பார்ப்போம்’’ என்றாள்.
“இல்லை இல்லை முதலில் கடன் நிவிர்த்தி. அப்புறம் தான் எல்லாம்’’ என்றார் பிராமணர். பணம் கையில் கிடைத்த மாதிரி.
ஆல்பம் தயாரிக்க உதவின சேட்ஜி அதை அட்வர்டைஸ் பண்ணவும் உதவினார். நிஜமாகவே ஆல்பத்தைப் பார்க்க பிராமணருக்கே இது நாம் சேகரித்த படங்கள் தானா ஒன்று ஒரே ஆர்ச்சர்யம்!.
ஐந்து நாட்கள் கூட செல்லவில்லை. ஒரு கடிதம்-
“ஐயா தங்களது விண்ணப்பம் கண்டேன். எனக்கு எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்க்க ஆசை. ஆனால் வேலை மிகுதியால் முடியவில்லை. நீங்கள் கொடுத்துள்ள ஆல்பத்தின் விவரத்தைப் பார்க்கையில் என் மனோபாவம் ஓரளவாவது பூர்த்தியாகும் என்று தோன்றுகிறது. விலையைக் குறிப்பிட்டு ஆல்பத்தை அனுப்பி வைத்தால் பணத்தை அனுப்புகிறேன்’’ என்று.
பிராமணருக்கு ஏக சந்தோஷம். பணம் கிடைக்கப் போகிறதே என்றல்ல. பல நாட்பட்ட கடனை அடைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதே என்று. சேட்ஜியிடம் ஓடினார். சேட்டிற்கும் மகிழ்ச்சி. ஆல்பத்தை அனுப்ப ஏற்பாடு செய்தார். இதுக்கான செலவும் கடனுடன் சேர்க்கப்பட்டது. ரூபாய் 500 என்று அறுதியிட்டு ஆல்பத்தை கடைசி முறையாகப் புரட்டிவிட்டு தபாலில் அனுப்பினார். ஐந்தாவது நாளே பணம் வந்தது. அதிலிருந்து ஒரு பைசா கூட தொடாமல் அப்படியே சேட்டிடம் கொண்டுபோய் கொடுத்து தழுதழுதார்.
“சேட் ஒரு வழியாக நாள் பட்ட கடனை அடைத்துவிட்டேன். என் ஆத்மா சாந்தியடையும்’’ என்றார்.
சில நாட்கள் கழித்து சேட் படுத்த படுக்கையானார். தினமும் அவரைப் போய்ப்பார்த்து பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது பிராமணரின் வழக்கம். சேட்டானியின் துக்கத்திற்கு அளவேயில்லை. பர்த்தாவைத் தவிர வேறு யாரையும் பாராதவள் இப்ப பிராமணர் எதிரில் நின்று கொண்டு சேட்ஜியைப் பற்றி விசாரிக்கிறாள்.
சேட்ஜியின் நலனுக்காக ஹோமம் செய அதை முன்னிட்டு இந்த நேரத்திலேயும் அரிசியும் பருப்பும் பிராமணர் வீட்டிற்கு அனுப்பினார் பிராமணர்.
ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த பொழுதே சேட்டின் கண்கள் சொருகுவதைக் கண்டார். சேட்டானி கேவிக் கொண்டே கங்காஜலத் தீர்த்தத்தை எடுத்து தந்தாள். பிராமணர் அதை அவரது வாயருகில் கொண்டு சென்று தலையைப் பிடித்துத் தூக்கினார். மடியில் இருத்தி கங்கா ஜலம்விட்ட பிறகு மெதுவே தலையணையில் தலையை வைக்க கை எதிலேயோ இடறியது. தலையணையை சரி செய்ய தூக்கிய கண்கள் குளமாயின. அங்கே அவர் கண்டது அதே ஆல்பம் தான்!
கண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்
இன்று நான் எடுத்துக்கொண்டுள்ள பாடல் *நானும் ஒரு பெண்* என்ற படத்தில் வரும் *கண்ணா கருமை நிறக் கண்ணா* *உன்னை காணாத கண்ணில்லையே* .
இந்தப்பாடலை அறியாத, பாடலைக் கேட்டு நெக்குருகாத ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
கவிஞர் கண்ணதாசன் வந்தார், கதை, சூழல் கேட்டார், கண்ணனை நினைந்தார், காவியம் புனைந்தார். As they say, rest is history.
காலத்தால் அழியாத பாடல் உருவாகிவிட்டது.
இதோ *பல்லவி* :
*கண்ணா கருமை நிறக் கண்ணா* –
*உன்னை காணாத கண்ணில்லையே*
*உன்னை மறுப்பாரில்லை கண்டு* *வெறுப்பாரில்லை* –
*என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை*
*முதல் சரணம்* :
*மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா*
*நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா*
*இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல*
*இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா*
“இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா” என்ற வரி வரும்பொழுது ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும். Only Birds of the same feather flock together என்பது தெரிந்தும் , என்னை இவர்களுடன் சேர்த்து விட்டாயே, இது நியாயமா என்று கண்ணனிடம் கேட்கிறாள். பிறகு, “நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா” என்று உரிமையுடன் சாடுகிறாள். உனக்கு உவப்பான தோட்டத்தில் உனக்கு மட்டும் நல்ல இடமாக நீ தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாய். ( நல்ல இடமாக என்னை சேர்க்காமல்). நீ சிலைதானே, என் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் என்று ஆற்றாமையை வெளிப் படுத்துகிறாள்.
*இரண்டாவது சரணம்* :
*பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்*
*பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா*
*கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்*
*கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா*
எனக்கு, பொன் போன்ற மனதை தந்தாய், பூப் போன்ற நினைவையும் ( மெல்லிய உணர்வுகளையும்) தந்தாய். ஆனால் பிறர் கண்களுக்கு என் மனமும், குணமும் தெரியாமல் செய்து, என் நிறம் மட்டுமே தெரியும்படி செய்து விட்டாயே. நியாயமா? யாரிடமாவது பட்ட கடனை அடைக்க வேறு வழி இல்லாமல் என்னை இப்படி படைத்தாயா என்று குமுறுகிறாள்.
ஒரு பெண்ணின் உணர்வுகளை ஓர் ஆண் கவிஞரால் எப்படி இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்த முடிகிறது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில்தான் : அதுதான் கண்ணதாசன்.
இந்த பாடல் வெளிவந்தபோது, கருப்பாக பிறந்து அதனால் வேதனைப்பட்ட ஏராளமான பெண்களின் ஒட்டு மொத்த குரலாக, உள்ளக் குமுறலாக அது ஒலித்தது என்றால் அது மிகையில்லை. அதுவே பாடலின் வெற்றி.
பாடல் வெளிப்படுத்தும் சோகத்தை மனதில் கொண்டால், இதை *இனிய* பாடல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. *இதயத்தை தொட்ட* பாடல் என்பதே சரி.
![Naanum oru Penn] Kanna karumai nira kanna - Lyrical Delights](https://i.ytimg.com/vi/qswSVZoQFxY/maxresdefault.jpg)

தொண்டரடிப்பொடி ஆழ்வார்,
*பச்சைமா மலைபோல் மேனி*
*பவளவாய் கமலச் செங்கண்*
என்கிறார். அதையே கண்ணதாசன், ‘திருமால் பெருமை’ படத்தில் ‘மலர்களிலே பல நிறம் கண்டேன்’ என்ற பாடலில்
*பச்சை நிறம் அவன் திருமேனி*
*பவள நிறம் அவன் செவ்விதழே*
என்று பாடுகிறார்.
அதே ஆழ்வார் வேறொரு பாசுரத்தில் *காரொளி* வண்ணனே, கண்ணனே கதறுகின்றேனே…. என்கிறார். ( காரொளி வண்ணன் = கருமேகத்தை ஒத்த மேனி நிறமுடையவன் ).
கவி மரபு என்று எடுத்துக்கொண்டால் கவிகள் பச்சை, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் பேதம் பார்ப்பதில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
( இந்த கவி மரபைப்பற்றி நான் சொல்லவில்லை, ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள் ).
கருநீலம், கரும்பச்சை, கருப்பு என்பதெல்லாம் கலந்து சொல்வது கவிகளின் மரபு.
எது எப்படி இருப்பினும் நம் கண்ணதாசன் , ஆண்டாளின் பரம பக்தர். தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தில் ஆண்டாளுக்கு என தனி ஒரு அத்தியாயமே ஒதுக்கி இருக்கிறார். கண்ணனின் மேனி வண்ணத்தை பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறார்?
திருப்பாவையில், ” *கார்* மேனி செங்கண் கதிர்மதியம் பொல் முகத்தான்” என்றும் ,
நாச்சியார் திருமொழியில் ” கண்ணன் என்னும் *கருந்தெய்வம்* காட்சி பழகிக் கிடப்பேனை …” என்றும் கூறுகிறார்.
ஆண்டாள் வழி கவிஞர் வழி.
“கண்ணா *கருமைநிற* கண்ணா “.
அதே மாதிரி, திரைப்பாடலில், என் நிலைக்கு நீதானே காரணம் என்று சொல்லி , நீ மட்டும் நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்து இருக்கிறாய் என்று கண்ணனை குற்றம் சாட்டும் தொனியில் பாடுவது கூட ஆண்டாளின் தாக்கம்தான்.
நாச்சியார் திருமொழியில் பெருமாளை பற்றி கூறும்போது *பெண்ணின் வருத்தமறியாத பெருமான்* என்கிறார் ஆண்டாள்.
*கண்ண னென்னும் கருந்தெய்வம்*
*காட்சி பழகிக் கிடப்பேனை*
*புண்ணில் புளிப்பெய் தாற்போலப்*
*புறநின் றழகு பேசாதே*
*பெண்ணின் வருத்த மறியாத*
*பெருமா னரையில் பீதக*
*வண்ண ஆடை கொண்டு என்னை*
*வாட்டம் தணிய வீசீரே*
பொருள் :
கண்ணன் என்னும் கருந் தெய்வத்தையே எண்ணி உருகி ,அவனோடு வாழ்வதாக கற்பனை கண்டு அந்தக் காட்சியே பழகிக் கிடப்பவளை , அவனை அடைய முடியவில்லையே என்று ஏற்கனவே மனம் நொந்து புண்ணாக இருக்க அதை மேலும் புண்ணாக்கும் விதமாக பழிப்பு காட்டாதீர்கள். (புண்ணில் புளிப்பு எய்தது போல – ஆஹா ).
இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்
பா ராகவன்
புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், அரசியல் வரலாறுகள், தனிக் கட்டுரை நூல்கள் என இவரது புத்தகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
முதல் கதை கணையாழியில் பிரசுரமாகியது. ‘கல்கி’யில் துணை ஆசிரியர், குமுதம் குழுமத்தில் பணி, குமுதம் ‘ஜங்க்ஷன்’ ஆசிரியர். பிறகு பதிப்புத்துறைக்கு மாறி ‘கிழக்கு’ பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக ஏழாண்டுகள் பதிப்புத்துறைக்கும் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு செய்தவர்.
தற்போது முழுநேர எழுத்தாளர். பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிவருகிறார். ‘யதி’ , ‘ஒரு பூனைக்கதை‘, ‘இரவான்’ ஆகிய புதினங்களும் ‘டாலர் தேசம்’ தொடங்கி, ‘தலிபான்’, ‘அல் கொய்தா’, ‘காஷ்மீர்’ போன்ற அரசியல் நூல்களும், ‘பேலியோ டயட்’, ‘ருசியியல்’, ‘உணவின் வரலாறு’ போன்ற உணவியல் நூல்களும் இவரது பரந்துபட்ட களங்களுக்கு எடுத்துக்காட்டு.
இவரது ‘புவியிலோரிடம்’ என்னும் புதினத்தைப் பல்லாண்டுகளுக்கு முன் படித்து ரசித்திருக்கிறேன்.
*****
இவரது 108 வடைகள் என்னும் சிறுகதை
ஆஞ்சநேயர் தயாராக இருந்தார். அலங்காரம் முடிந்துவிட்டது. ஆபரணாதி விஷயங்களை பட்டர் அமர்க்களமாகச் செய்து முடித்து, விளக்குத் திரியைத் தூண்டிச் சுடர வைத்தார். வியர்வையைத் துடைத்துக்கொண்டு சந்நிதியை விட்டு வெளியே வந்தார். ஆச்சு. நாலு வரி மந்திரம். வடைமாலை சாத்திவிட வேண்டியதுதான். இன்றைய உபயதாரருக்கு என்ன செய்யலாமென்று ஆஞ்சநேயர் எண்ணியிருக்கிறார்?
என்று தொடங்குகிறது.
ஆஞ்சநேயர் ஒரு வினோத அற்புதம் செய்து வருவதாகப் பட்டர் உணருகிறார். அதை அவர் உணர்ந்ததே தற்செயல்தான். 108 வடைகளை எண்ணிக் கோர்த்து அதனைச் சாற்றி, பின்னர் அதையே பிரசாதமாக உபயதாருக்குக் கொடுப்பதுதான் எல்லாக் கோயில்களையும்போல இங்கும் நடைமுறை.
கோக்கும் போது எண்ணுவார். சரியாக நூற்று எட்டு. உதிர்க்கும்போது எண்ணுகிற வழக்கமோ அவசியமோ அவருக்கு ஏற்பட்டதில்லை. ஒருமுறை பக்தர் ஒருவர் எண்ணிப் பார்த்து ஒன்று குறைவதாகச் சொல்ல .. அடடா எப்படி இந்தத் தவறு ஏற்பட்டது? தயாரிக்கும்போதும் ராம நாமாவைச் சொல்லி கோர்க்கும்போது சரியாகத்தானே இருந்ததாகத்தானே நினைவு? எங்கே போனது அந்த வடை? என்று குழம்புகிறார் பட்டர்.
ஆச்சரியமாக மறுநாள் காலையில் அந்த பக்தர் ஓடிவந்து தன் பிரார்த்தனை உடனே பலித்துவிட்டது (பையனுக்கு யூ.எஸ் விசா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கிடைத்துவிட்டதாம்) என்று மகிழ்ச்சியோடு பட்டரிடம் சொல்கிறார். வடை மாயமானதையும் பிரார்த்தனை பலித்ததையும் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை அப்போது.
தொலைந்துபோன ஒருவடை பற்றிய சிந்தனை அதன்பின் பட்டருக்கு இல்லாமலானது. மேலும் மேலும் தினமும் வடைமாலைகள் சாத்தப்பட்டன. வேறு வேறு உபயதாரர்கள். வேறு வேறு பிரார்த்தனைகள். எத்தனை பேருக்கு பலித்தன? எத்தனை பேர் இன்னும் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள்?
இன்னொருமுறை இதேபோல் எண்ணிக்கை 107 வருகிறது. எண்ணிப் பார்த்த பக்தரோ ஒன்றும் சொல்லாமல் எல்லா வடைகளையும் விநியோகித்துவிட்டு போய்விடுகிறார். பக்தர் மறுநாள் கோவிலுக்கு ஓடி வருகிறார். அவர் பெண்ணின் நின்றுபோயிருந்த திருமணம் நாள் குறிக்கும் வரை வந்துவிட்டது.
பிறகு பட்டர் கவனமாகக் கவனிக்கத் துவங்குகிறார்,
பட்டருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமா? அப்படியும் இருக்குமா? யாருக்காவது உடனடியாக அருள் பாலிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆஞ்சநேயர் நூற்று எட்டில் ஒரு வடையை அதற்கான டோக்கன் அட்வான்ஸாகத் தானே சாப்பிட்டுவிடுகிறாரா என்ன?
இந்தக் கோயிலைக் கட்டிய செட்டியாரிடம் பகிர்ந்து கொள்கிறார். இருவரும் சேர்ந்து கவனிக்கத் துவங்குகிறார்கள். ஆரம்பத்தில் யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் மெள்ள மெள்ள பிராந்தியத்தில் இந்த விஷயம் பிரபலமாகிறது. தினத்தந்தியில் வர வேண்டியதுதான் பாக்கி.
அதற்கும் ஏற்பாடு செய்ய செட்டியாரிடம் பட்டர் சொல்லியிருக்கிறார். இதை உலகுக்கு அறிவித்துவிட்டால் தான் என்ன? கோயில் பிரபலமாகும். பெரிதாகும். வருமானம் சேரும். எண்ணிப் பார்க்க முடியாத என்னென்னவோ நடக்கக்கூடும்.
கோவிலைக் கட்டிய செட்டியாருக்கு ஒரு பரீட்சை பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. கடவுளிடம் விளையாடலாமா? கோபித்துக்கொண்டுவிட்டால்?
கட்டாயம் கோபித்துக்கொள்ள மாட்டார். அதுவும் கோவிலைக் கட்டியவரிடம் நிச்சயம் கோபித்துக்கொள்ள மாட்டார். செட்டியாருக்குத் தைரியம் வருகிறது. இவர் ஒரு வேண்டுதலுடன் ஒரு வெள்ளிக்கிழமை வடைமாலை சாற்றுகிறார்.
ஆஞ்சநேயா, நான் உன்னிய டெஸ்டு பண்றேன்னு தப்பா எடுத்துக்காத. இது டெஸ்டுக்கு டெஸ்டு. வேண்டுதலுக்கு வேண்டுதல். கேட்டது, கேக்காதது எல்லாத்தையும் அள்ளிக்குடுத்திருக்கே. ஊர் மதிக்கிற வாழ்வு. ஒண்ணுத்துக்கும் குறைச்சல் இல்லே. ஆனா எம்பொண்டாட்டி என்னோட பேசி ஆறு வருசம் ஆச்சி. என்னிக்கோ சபலப்பட்டு செஞ்ச தப்புக்கு இப்ப வரைக்கும் தண்டிச்சிக்கிட்டிருக்கா. வெச்சிக்கவும் முடியாம விடவும் முடியாம நாம்படுற பாடு ஒனக்குத்தான் தெரியும். என்ன செய்யணுமோ பாத்து செய்யி. இதுக்குமேல நான் என்ன சொல்றது?
வடை சாற்றப்படுகிறது. மனமுருக வேண்டிக்கொண்டு, கற்பூரம் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கிறார். பட்டர் வடையை எண்ணிப் பாத்திரத்தில் போடுகிறார். ஆர்வம் தாங்கமாட்டாமல் செட்டியார் அவசரமாக சந்நிதிப் படியேறி வந்து எட்டிப் பார்த்து, “எண்ணிட்டிங்களா?” என்று கேட்கிறார்.
பட்டர் மேனி நடுங்க எழுந்து ஆஞ்சநேயரைப் பார்த்தார். அவர் கரங்கள் தன்னிச்சையாக உயர்ந்து வணங்கின. கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்தது.
‘சொல்லுங்க ஐயரே. எவ்ளோ இருக்கு?
‘புரியல செட்டியார்வாள். நூத்தி ஒம்போது இருக்கு‘ என்றார் பட்டர்.
என்று முடிகிறது.
** * * * *
முழுநேர எழுத்தாளன் லௌகீக உலகில் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்கிற பொதுவிதிக்கு இன்றிருக்கும் ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர். (தான் வாங்கிய காருக்கு ‘ராயல்டி’ பெயரிட்டவர் இவர்.)
இது அவரது ஆரம்பகாலத்துக் கதைகளில் ஒன்று. புனைவுகளிலும் அபுனைவுகளிலும் வெகுதூரம் பயணித்துவிட்டார் திரு ராகவன். இன்னும் தொடவேண்டிய சிகரங்கள் பல இருக்கின்றன..
குவிகம் இலக்கியவாசல்
மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி
தோட்டா : மூன்றாவது வினாடி முடிந்துவிட்டது, மகாத்மா காந்தி! இன்னும் இரண்டு வினாடிகளுக்கு நீ உயிர் வாழமுடியும். துடித்துக் கொண்டிருக்கும் உன் இதயத்தை என் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது. வலிக்கிறதா, காந்தி?
காந்தி : இல்லை .
தோட்டா மிக்க மகிழ்ச்சி! உன் இதயம் கவலை ஏதுமின்றி என் வரவை நோக்கித் துடித்துக் கொண்டிருக்கிறது
காந்தி : நீ என்னுடன் தங்கிவிட்டாய், என் தோட்டாவே இங்கே அடிப்பாகத்தில் ..
தோட்டா : ஆம்! நான் உன்னுடன் தங்கிவிட்டேன்.
குரல் : அது உன்னுடனேயே தங்கி இருக்கும். உன் இதயத்தினுள் இருக்கும் தோட்டா உயர்ந்த கதவு ஒன்றின் சாவியாகும்.
காந்தி : அந்த கதவுக்கு பின்னால் என்ன இருக்கிறது?
குரல் : (மெல்லிய சிரிப்புடன்) எத்தனை காலமாக உனக்கு இப்படி ஒரு ஆவல்? என் அருமை காந்தி?
காந்தி : நான் போகவேண்டும் என்றால். நான் போகவேண்டிய பாதையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தானே?
குரல் : கொடுக்கப்படும் தண்டனைக்கு எதிராக ஏதும் செய்யக்கூடாது ஒருவன் என்று உன் ஆயுள் பூராவும் மற்றவர்களுக்கு நீ பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை?
காந்தி தண்டிக்கப்பட்டிருக்கிறேன் என்றால் பயணத்தை தொடருவோமே ! மேலும் உயரமாக வந்திருக்கிறோமோ?
குரல் : நாம் கடந்து வந்தது மேகத்தை!
காந்தி : அதன் மேல் புறத்திலா இருக்கிறோம்?
குரல் : அதோ பார்!
காந்தி : என் பின் விரிந்து கிடக்கும் மேகத்தை தவிரவேறு எதையும் நான் காணமுடியவில்லை .
குரல் : மீண்டும் முயன்றுபார்!
காந்தி : மேகம் இப்போது மறைந்து போய்விட்டது, என் குரலே! நான் இந்தியாவை காண்கிறேன், ஓ! என் குரலே! பளபளவென்று பளிச்சிட்டுக் கொண்டு என் இந்தியாவைச் சுற்றிப் பாய்ந்து கொண்டிருக்கும் கடலைப் பார்! மணமகனைப் போல் பளபளக்கும் நதிகளில் இந்தியாவை கடல் எப்படி ஆலிங்கனம் செய்கிறது பார், என் குரலே! கிழக்கு திசையில் உள்ள மலைகள் எப்படி நிழலை வீசுகின்றன? கங்கையின் நூற்றுக்கணக்கான நதிகள் எவ்வாறு மின்னுகின்றன? என் குரலே, இந்தியாவைப் பார் அங்கே!
குரல் : ஆனால் நாம் பயணத்தைத் தொடர வேண்டும்! அது கட்டளை!
காந்தி : கட்டளை என்றால் நாம் தொடர்ந்து பறந்து செல்ல வேண்டியது தான்! (குழப்பமான சத்தங்கள்)
நில் என்குரலே, என்ன அது? நாம் கேட்கும் இரைச்சல் என்ன?
குரல் : கல்கத்தா தொழிற்சாலையின் இரும்புப் பட்டறைகள். அங்கே மிகக் கடினமான இரும்பு தயாரிக்கப் படுகிறது. மாபெரும் குண்டுகளை கக்கும் பீரங்கிகள் செய்வதற்காக. கல்கத்தா நகரின் டம்டம் பகுதியில் இயந்திரங்கள் போடும் இரைச்சல்! அங்கே தோட்டாக்கள் தயாரிக்கப் படுகின்றன! உனக்காகக் கூட ஒரு தோட்டா அங்குதான் தயாரிக்கப் பட்டது.
காந்தி : ஆயுதம் உற்பத்தி செய்யும் பட்டறைகளின் இரைச்சலை மட்டும்தான் கேட்க முடிகிறது. ஏன் இப்படி, என்குரலே? வேறு எந்தவிதமான சத்தமும் பூமியிலிருந்து வராததேன்?
குரல் : வன்முறையின் இரைச்சல் இப்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதுதான் காரணம்.
காந்தி : என் இந்தியர்களுக்கு நான் நூல் நூற்பதற்காக இராட்டையைக் கொடுத்தேன். சுதந்திரமாகவும், சண்டைச் சச்சரவு இன்றி வாழ்வதற் காகவும்! ஆனால் அவர்கள் கல்கத்தாவில் மரணத்தை நூற்கிறார்கள். பயணத்தைத் தொடர்வோம், என் குரலே!
அதோ மலைகள் ஆழ்ந்து மறைகின்றன. மலைகளின் மேல் புதிய மலைக் கூட்டங்கள் எழுகின்றன. கடல்களின் பின்னால் புதிய கடற்கரைகள். மலைகளிலிருந்து மேகங்கள் புகை மண்டலம் என எழுகின்றன. தயவு செய்து மெதுவாகப் பறந்து செல்வோமே! என் குரலே! உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது?
குரல் : (மெல்லிய சிரிப்புடன்) மிகவும் அழகுதான்.
(இரைச்சல்கள்)
காந்தி : சற்றுப்பொறு! என்ன அங்கே? பீரங்கிகள் வெடிக்கும் போது எழும் வெடிச்சத்தம் போல் ஏதோ என் காதில் விழுகிறதே!
குரல் : உலகம் ரம்மியமாக இருக்கும். ஜாவா தீவின் மீது குண்டு பொழிகிறார்கள். மலேயா நாட்டின் காடுகளின் மீது குண்டு போடுகிறார்கள். கோபத்தினாலும், மரண பயத்தினாலும் உந்தப்பட்டு மூக்டன் நகரில் கத்துகிறார்கள்.
காந்தி : என் குரலே, போரின் இரைச்சல் ஏன் நாம் இருக்கும் இடம் வரை வந்து கேட்கிறது என்பதை விளக்குவாயா?
குரல் : வெறுப்பின் குரல் இன்று மிகவும் மேலோங்கி இருப்பது தான் காரணம்.
காந்தி : பிறரை நேசிப்பவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான் என்று அவர்களுக்கு நான் போதித்தேன். ஆனால் அவர்களோ ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கின்றனர்.
எவ்வளவு உயரத்தில் நாம் இருக்கிறோம். கடல்கள் முடிவடைவதில்லை என்பதுபோல, அகன்று விரிகின்றன. தங்கநிற பாலைவனத்திற்கு அப்பால் நீலக்கடல்களும் வெண்மையான கடல்களும் விரிவடைந்து பரவுகின்றன. வெள்ளை வெளேரென்று சைபீரியா விரிந்து கிடக்கிறது. அதனுடைய ஆறுகள் கறுமை இருட்டினுள் சங்கமமாகின்றன.
ஓ, என் குரலே! எல்லாம் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது?
குரல் : (சிரித்து) எவ்வளவு கம்பீரம்? (வெகுதூரத்தில் கலைந்துபோன சோககீதங்கள்)
காந்தி : என்ன அது?
குரல் : “கைதிகளின் சோக கீதங்கள்” தொலைதூரத்தில் இருக்கும் கைதிகளின் வருகைக்காகக் காத்து கிடக்கும் அன்னைகளின், மனைவிகளின் சோக கீதங்கள்!
தாய்நாட்டை இழந்துவிட்டு எந்தவிதமான நம்பிக்கையும் அற்று புதிய தாய்நாடு ஒன்றிற்கு செல்லும் கோடிக்கணக்கானவர்கள் இசைக்கும் சோககீதம்.
காந்தி : எப்படி இந்த சோக கீதத்தை இவ்வளவு உயரத்தில் நாம் இருந்தும் இன்னும் கேட்கமுடிகிறது?
குரல் : சோகத்தின் குரலுக்கு எல்லைகள் இல்லாத காலம் இது!
காந்தி : நான் எல்லோருக்கும் சமாதானத்தைப் பற்றிய செய்தியை அனுப்பி யிருந்தேன். ஏன் அவர்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை? ஏன்?
பயணத்தைத் தொடருவோம், என் குரலே!
உலகம் மிகவும் சிறியது. அது இருண்டிருக்கிறது. சூன்யத்தில் இருப்பது போல உலக நாடுகள் உள்ளன.
எல்லாம் எப்படி ஒரே அமைதியாக இருக்கிறது என்று காது கொடுத்து கேள், என் குரலே!
வெறுப்பு, போர், சோகம், வலி எல்லாம் ஆழ்ந்து மூழ்கி மறைந்து விட்டன.
ஆனால் . . . அதோ, என்ன அது?
இருண்ட நாடுகளில் நெருப்பு ஜொலிக்கிறது, அமைதியின்றி இங்கும் அங்கும் சிவப்பாக! என்ன வித்தியாசமான தீ அங்கே!
குரல் : அங்கே இருக்கும் பெரிய நகரங்கள், அங்கே உள்ள மனிதர்கள் அதிகாரம், பேராசை போன்றவற்றால் நிரப்பப்பட்டவை! நீ பார்க்கும் தீ அவைதான்!
காந்தி : ஏன் இந்த உயரத்திலும் தீ நம் கண்களுக்கு புலப்படுகிறது?
குரல் : அதிகாரத்தின் பிரகாசம் அப்படி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது இப்போது!
காந்தி : நாம் இப்போது பறந்து எங்கே போகிறோம்?
குரல் : என்னால் சொல்ல இயலாது!
காந்தி : கடவுளிடமா, என் குரலே!
குரல் : கடவுள் என்ற வளமற்ற சொல்லால் மட்டும் விவரிக்க முடியாதது.
காந்தி : என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய் என்று உனக்குத் தெரியாதா?
குரல் : நான் எப்படி அதைச் சொல்ல முடியும்? உங்கள் மொழிகள் அதற்காக ஏற்படவில்லையே? அங்கு எப்படியில்லை என்றுமட்டும் என்னால் சொல்லமுடியும்.
அங்கு வெறுப்பு இல்லை, போர் இல்லை, துக்கம் இல்லை, மனவலி இல்லை. அங்கு அதிகாரம் என்று கிடையாது, செல்வங்கள் இல்லை, வன்முறை இல்லை.
உங்கள் பூமியை ஆட்டிப்படைக்கும் எதுவுமே அங்கு இல்லை!
எப்போதாவது அபூர்வமாக பூமியுடன் தொடர்பு கொண்ட மிகவும் உயர்ந்த பதவி வகிக்கும் கருணை உள்ளத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பணியாளர்களின் ஒருவன் மேலே வருவான்.. அவனுடைய முடியிலும் உடைகளில் இருக்கும் மடிப்புகளிலும் சில சமயங்களில் பூமியின் வாசனை கடுகளகாவது பற்றிக் கொண்டிருக்கும். அதுகூட எப்போதாவது ஒருமுறைதான்.
அப்படிப்பட்ட வர்ணனைக்கு எட்டாத அளவிற்கு அமைதி நிலவுகிறது, நாம் போக இருக்கும் இடத்தில்.
காந்தி : அங்கு போவதற்கு விருப்பமில்லை எனக்கு.
குரல் : என்ன, விருப்பமில்லையா?
காந்தி : எனக்கு நிச்சயமாக விருப்பமில்லை. நான் என் பூமிக்கு திரும்பச் செல்லவேண்டும். மீண்டும் பிறவி எடுத்து என் சகோதரர்களுடம் துயரங்களை எல்லாம் நானும் அனுபவிக்க வேண்டும்.
சிப்பாயாகப் பிறந்து ஜாவாவிலுள்ள காடுகளில் சூரிய வெளிச்சதிற்கடியில் காயமுற்று கிடக்க வேண்டும். எரியும் நகரங்களில் நான் பிச்சைக்காரனாக இருக்கவேண்டும். சைபீரியாவில் கைதியாக இருந்து, இழந்துவிட்ட தாய்நாட்டை நினைத்து மனவலியை முழுமையாக பிரதிபலிக்கும் பாடல்களை பாடவேண்டும். தள்ளாடும் கால்களினால் தாய் நாட்டைவிட்டு வெளியேறும் கிழவியாக இருக்க வேண்டும். தன் பிள்ளையை நினைத்துக் கல்லறையின் அருகில் பெருமூச்சு விடும் தாயாக நான் இருக்கவேண்டும். நான் சொல்வதைக் கேள் குரலே,
என்னைத் திரும்பிப் போகவிடு, என் குரலே!
குரல் : திரும்பிச் செல்வதற்கான வழி ஏதும் இல்லை!
காந்தி : அப்படி என்றால் என்னை கீழ்நோக்கி விழவிட்டு விடு. தேவை யென்றால் கடுமையாகச் சபிக்கப்பட்டு நரகத்தில் இருக்கவிடு! எனக்குப் பெரும் அமைதியினுள் செல்ல விருப்பமில்லை! அதுவும் என் சகோதரர்கள் துக்கத்தை அனுபவிக்கம்போது!
குரல் நீ பேசவில்லை காந்தி! உன்னுள் இருக்கும் குழம்பிய குரல்கள், இன்னும் பேசுகின்றன. நீ மேலே போய்த்தான் ஆகவேண்டும் என்பது நியதி!
காந்தி : நீ எவ்வளவு கடுமையாகப் பேசுகிறாய், என் குரலே!
குரல் : அன்பு கடுமையாகவும் இருக்க வேண்டும், காந்தி!
காந்தி : நீ மிகவும் அதிகாரப்பித்து உடையவனாய் இருக்கிறாய்,
குரல் : நல்லதைச் செய்யவேண்டும் என்றால் அன்புகூடத் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கும், காந்தி!
காந்தி : அன்பினால்தான் என்றால், ஏன் இப்படி என்னிடம் கடுமையாக நடந்து கொள்கிறாய்-சரி, நாம் நம் பயணத்தை தொடர்வோம், என் குரலே!
(மணி ஓசை)
தோட்டா நான்காவது வினாடி முடிவடைந்து விட்டது, காந்தி. இன்னும் ஒரு வினாடி காலம் தான் நீ உயிர் வாழமுடியும்.. நான்.உள் இதய அறையில் தங்கி உறங்குவதற்குச் சிறந்த இடம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படாமல் இரு காந்தி! ஆறுதல் அடைந்து விடு. மகாத்மா! இன்னும் ஒரு விநாடியில் நாம் இருவருமே அமைதியில் ஆழ்ந்து விடுவோம்
கேள்வி – வளவ. துரையன்
இரும்படுப்பு அருவாமனை
என்று கூவிப் போகிறாள்
கைக்குழந்தையுடன்
கூடை முறம் வேணுமா
கேட்டுப் போகிறார்
கிழவி ஒருவர்
பால்காரரின் கணகண ஒலி
இன்னும் பரிதாபமாய்க்
கேட்டுக் கொண்டிருக்கிறது
சாணை பிடிப்பவரின்
வண்டிச் சக்கரம்
சும்மா சுற்றுகிறது
ஓலைக் கிலுகிலுப்பைக்
கொடுத்து அரிசி வாங்குபவள்
எங்கே போனாளோ?
பூம்பூம் மாடு இல்லாமல்
மேளச்சத்தம் மட்டுமே
வந்து கொண்டிருக்கிறது
எல்லாமே நவீனமானால்
மரபெங்கே போகும்
என்ற கேள்வி எழுகிறது.
நடுப்பக்கம் – சந்திரமோகன்

வழக்கு எண் 207 of 2019
‘ வீடு பரபரப்புடன் காணப்பட்டது’ என கதைகளில் படிப்போமே அது போலத்தான் அன்று மதியத்திற்கு மேலேயே வக்கீல் கணேசனின் வீடு இருந்தது. ஐந்து மாத காலமாக வீட்டில் முடங்கிக்கிடந்தான். காலையும், மாலையும் நன்றாக தூங்கி இரவு நேரங்களில் வாட்ஸ் அப்பில் மெஸ்ஸேஜும், வீடியோவும் பார்த்துக் கொண்டே லாக் டவுன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான் கணேசன்.
அவனுக்கு அடுத்த சோதனை. அவன் வாதாட வேண்டிய வழக்கு எண் 207 of 2019 ம் லிஸ்டில் இருந்தது. சோதனை மேல் சோதனை என்பது போல அந்த வழக்கை நீதியரசர் தமிழரசன் விசாரிக்க உள்ளார்.
நம் கணேசனுக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை. சிரித்தால் கோர்ட்டை அவமரியாதை செய்த குற்றமாகி விடும். கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு “ எதிர் கட்சி வக்கீல் சென்னை தாண்டி சென்றதில்லை போலும் கணம் கோர்ட்டார் அவர்களே. அது பாண்டிச்சேரி இங்கிலீஸ். பாண்டிச்சேரியில் காபி கடையை ஆங்கிலத்தில் லா கஃபே என்றுதான் எழுதியிருப்பார்கள்” என்றான்.
கணேசன் வாயை பொத்திக் கொண்டே பேசியதால் நீதிபதிக்கு ஒன்றும் புரியவில்லை ‘ அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்” என்பதோடு முடித்துக்கொண்டார். அதுவே நீதிபதி தமிழரசனாக இருந்திருந்தால் இரண்டு பேரையும் கிழித்துப் போட்டிருப்பார் என மற்ற வழக்கறிஞர்கள் கூறக்கேட்டு நடுநடுங்கி விட்டான் கணேசன்.மெயிலை பார்த்தவுடன் அவன் அறைக்கு சென்று கேஸ் கட்டுகளையும் சட்ட புத்தகங்களையும் தூசி தட்டினான். நல்ல வேளை வீட்டின் அழையா விருந்தாளிகளான எலிகள் எதையும் ருசிக்க வில்லை. நாளைய தினத்திற்கான கேஸ் கட்டு தேடின உடனேயே கிடைத்து விட்டது. கேஸை படிக்க ஆரம்பித்தான். கடந்த நாட்களில் அடுப்படி வரை சென்று தன் மனைவியிடம் ஒரு காஃபி கிடைக்குமா என மெதுவாக கேட்கும் கணேசன், இன்று உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘ கமலா! ஒரு காஃபி கொண்டு வா’ என கூவினான்.
முருகேசன் இருக்காரா ? – சுரேஷ் ராஜகோபால்
“சார், முருகேசன் இருக்காறா?” ஒரு தாடி வைத்த பெரியவர் அழைப்புமணியை அழுத்தியபின், வெளிப்பட்டவரிடம் கேட்டார். உடுத்திய உடையும் சரி தலை முடியும் சரி சுத்தமாக கலைந்திருந்தது. பஞ்சத்தில் அடிபட்டவர் என்பது தெளிவாக தெரிந்தது, யாரோ யாசகம் கேட்டு வந்துவிட்டாரென நினைத்து “இப்ப ஒண்ணும் கிடையாது போயிட்டு வாங்க” என்றார் முருகேசன்.
“இது முருகேசன் வீடுதானே?” பெரியவர்.
“உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்?” முருகேசன்
“நான் பட்டவாத்தலை குமாரசாமியோட நண்பன், அவரோட பிள்ளை முருகேசனை பாக்கத்தான் வந்தேன், ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும்… அதுதான் கேட்டேன்” பெரியவர் மென்னு முழுங்கினார்.
அப்பா எதோ கடன் கிடன் வாங்கி பாக்கியை வசூலிக்க என்னை கை காட்டி விட்டார் போல என முருகேசன் நினைத்து “என்ன பெரிசு அந்த பட்டவாத்தலை ஆளு பணம் பாக்கி ஏதாவது வச்சிருக்கரா ?”
“இல்லிங்க தம்பி, முருகேசன் ஐயாவைத்தான் பார்த்தது ஒன்னு சொல்லணும்” பெரியவர்
“இப்ப அவரை பாக்க முடியாது, வேலை விஷயமாய் வெளியூர் போகப்போறார் “ முருகேசன்
“அவங்கப்பா இறந்து போய்ட்டாரு” பெரியவர்
.
“அப்படியா, அவரை புதைக்க காரியம் செய்ய ஒரு இரண்டாயிரம் தரேன், போய் கருமாதி எல்லாம் செய்துடுங்க” முருகேசன்.
அவர் முருகேசனை ஒரு மாதிரி பார்த்தார்
அதற்குள் அடுத்த அறையிலிருந்து ஒரு பெண் குரல் “என்னங்க” அழைத்தது. “என்ன” என்று பார்த்தபடி அறைக்குள் நுழைய மனைவி புருவத்தை சுருக்கியபடி பார்த்தாள். “அப்பா இறந்துட்டாராம்”
“ஹூம் கேட்டது, இரண்டாயிரம் ரொம்ப அதிகம் ஒரு ஆயிரம் கொடுத்து ஆனுப்புங்க போதும்”
வெளியே ஆயிரம் பணத்துடன் பெரியவரிடம் வந்தான், பெரியவர் பணத்தை வாங்க மறுத்துச் சொன்னார், நானே என் செலவில அடக்கம் செய்துடறேன்.
“முருகேசன் இருக்காரா ” என்று முனகியபடி சென்றார்
இரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு
என்னை யாருக்கும் புரியவில்லை
உனக்கும்தான்
என்னைக் கடக்கும்போது
திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை
நான் அருகில் வரும்போதெல்லாம்
உனக்கு கூசுகிறது
எச்சில் தொட்டிக்குள்
விழுந்து கிடப்பவனைப் போல
அருவருப்பாக உணரச் செய்கிறது
உன் உதாசீனங்கள்
நாம் முதன்முதலாய்
நேர்முகத் தேர்வில் சந்தித்துக்கொண்ட
அந்த நாள் இனிமேல் வாய்க்காதா?
ஏற்கவொப்பாதெனிலும்
புரிந்துகொண்டிருக்கலாம்
புரிய வைக்க முயற்சித்திருக்கலாம்
வேற்று ஆளாக நினைத்து
ஒதுக்கியிருக்கலாம்
உன்னை நம்பி ஒப்புவித்த ரகசியங்களை
உரக்கப் பேசி சிரித்திருக்க வேண்டாம்
காறி உமிழாமலாவது இருந்திருக்கலாம்
எதையோ யாரிடமோ நிரூபிக்க
என் ரகசியங்களை ஏன் வெளிச்சமிட்டாய்
அழவைப்பதில் என்னடா ஆனந்தம் உனக்கு
நானல்ல நீதான் மனநோயாளி
அந்தச் சம்பவம்
சுரப்பிகளின் வஞ்சனை
உணர்வுகளின் வன்முறை
நிகழ்ந்திருக்கக் கூடாத தவறான ரசவாதம்
நான் தோற்றுப் போன மனச் சமர்
என்ன செய்ய ….?
நிகழ்ந்து தொலைத்த அந்தப் பொழுதை
என்ன செய்து , எப்படி அழிக்க?
வேலைக்கு வரவே பிடிக்கவில்லை
வித்தைக் குரங்கைப் பார்ப்பதுபோல்
வேடிக்கை பார்க்கிறார்கள்
காதுபடவே கேலி பேசுகிறார்கள்
கேவலச் சிரிப்புதிர்க்கிறார்கள்
நீ யாரிடமும் சொல்லாமலிருந்திருக்கலாம்
அன்று ஓடி மறைந்த பூரானைப் போல
விட்டுத் தொலைத்திருக்கலாம்
நீ பரப்பாமல் இருந்திருந்தால்
நீ வருவதற்கு முன் செய்ததையே
இன்னும் தொடர்ந்திருப்பேன்
உன்னை மறக்க முயன்றிருப்பேன்
அவமானங்களைச் செரித்திருப்பேன்
காலம் காயமாற்றினால்
வேறு யாரையாவது காதலித்திருப்பேன்
தனியனாக வாழ்ந்துமிருப்பேன்
அம்மாவின் நச்சரிப்புக்காகயாவது
ஒருத்தியை திருமணம் செய்திருப்பேன்
இதைவிட பெரிய அவமானத்தில்
தற்கொலையும் செய்திருப்பேன்
எனக்காக ஒன்றையாவது செய்
இனிமேல் யாரிடமும் சொல்லாதே
அவர்களின் பார்வை
அவமானகரமாக இருக்கிறது
கோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி
எனக்குப் புதையல் எதுவும் கிடைத்ததில்லை
இப்போதும் ஒன்றும் கிடைக்கப் போவதுமில்லை
ஆனால், அது ஒரு விஷயமே இல்லை
ஏனெனில் நான் எப்படியும் மகிழ்வாக இருக்கிறேன்.
நான் என் பயணத்தைத் தொடர்கையில்
விதைத்ததைவிட அதிகமாக அறுவடை செய்கிறேன்.
என் கிண்ணம் நிரம்பி வழிவதால் நான்
அதன் குட்டித்தட்டிலிருந்து குடிக்கிறேன்.
என்னிடம் அதிகச் செல்வமில்லை
சில சமயங்களில் கடினமாகவும் உள்ளது
உறவும், நட்பும் என்னை நேசிப்பதால்
நான் போதுமான வளத்துடன் இருக்கிறேன்.
இந்த ஆசிகளுக்கு இறைவனுக்கு நன்றிகள்
அவன் கருணையால் வந்த இந்த வரத்தால்
நான் சாஸரிலிருந்து குடிக்கிறேன்
ஏனெனில் என் கிண்ணம் நிறைந்து வழிகிறது.
பாதை கரடு முரடாகவும் செங்குத்தாகவும்
இருக்கையில் துணிவும், சக்தியும் தருகிறான்
நான் வேறேதும் ஆசிகள் கேட்கப் போவதில்லை
ஏனெனில் நான் போதுமான அளவில் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
மற்றவர் பாரம் தாங்க உதவ முடியாமல்
நாம் பரபரப்பாக இருக்க வேண்டாம்
அப்போது சாஸரிலிருந்து நாம் குடிக்கலாம்
நம் கோப்பைகள் நிரம்பி வழியும் போது.
Drinking From The Saucer
Poem by John Paul Moore
மொழி பெயர்ப்பு பானுமதி.ந)
“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
முதல் குழந்தை, சீமந்த புத்திரன் பிறந்தான். அடுத்த நான்கு மாதங்களுக்குத் தூக்கம், சாப்பிடும் உணவு எல்லாம் மாறியது. ஏனோ இதற்குப் பழகிக் கொள்ளக் கஷ்டமாக இருந்தது என்றாள் ஜோதி.
இந்த முப்பது வயதான இல்லத்தரசி, அம்மாவின் வீட்டிலிருந்தாள். ஐந்து வருடத்திற்கு முன்னால் அவளுடைய கணவருக்கு வெளிநாட்டில் வேலை அமைந்தது. கர்ப்பம் ஆகி ஆறாவது மாதத்தில், தாய்நாட்டில் தான் தங்களது குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஜோதியும், அவளுடைய கணவரும் முடிவு செய்ததால், பிரசவத்திற்குத் தாய்நாடு வந்திருந்தாள்.
குழந்தை வீரன் பிறக்கும் முன்பே, வெளிநாடு போய் ஒரு வருடம் சென்றதும் ஜோதிக்கு அவ்வப்போது தலைவலி வந்து போகும். வேலை எதுவும் செய்யாமல் ஓய்வு எடுத்தால் உடனே போய்விடும். கர்ப்பிணியான நிலையில், மருந்து வேண்டாமே என்று அம்மா கஷாயம் வைத்துத் தருவாளாம். தன்னுடைய கர்ப்பப் பரிசோதனைக்குப் போகும் போதும் மருத்துவரிடம் தலைவலியைப் பற்றி ஒவ்வொரு முறையும் கூறுவாள். சில பரிசோதனைகள் செய்து பார்த்த பின், எதுவும் பிரச்சினை இல்லை என வந்தது.
குழந்தை பிறந்த பின்னும் வலி இருந்தது. குழந்தை மருத்துவர் அவளுடைய நலனைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் உடல்வலி எனச் சொல்லிக் கொண்டே இருந்தாள். எதாவது பிரச்சினை இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்கையில், எந்த விதமான தொந்தரவும் இல்லை என்றே வந்தது. இந்த முறையும் உடல் நலன் நன்றாக இருப்பதையே காட்டியது. அப்படி என்றால் தன் வலி பொய்யா? ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை? ஜோதி வியந்தாள்.
மனம் வருந்தியது. மறுமுறை குழந்தையை எடுத்துப் போகும் போது ஜோதி துவண்டு இருந்ததைக் கவனித்த குழந்தை மருத்துவர் அவளுடைய கைனகாலஜிஸ்டடை அழைத்து ஜோதி முன்னால் பேசினார். அதைத் தொடர்ந்து, கைனகாலஜிஸிட் கைப்பேசியை ஸ்பீக்கர் வடிவில் போட்டு, அவர்கள் அவளை ஒர்சில கேள்விகள் கேட்டார்கள். ஜோதியை தன்னுடைய சஞ்சலங்களுக்கு மனநல நிபுணரிடம் சில செஷன்கள் வைத்துக்கொள்ளப் பரிந்துரைத்தார்கள்.
என்னைப் பார்க்கச் சொன்னார்கள். ஏனென்றால் ஜோதிக்கு மருந்து தேவையில்லை, கோளாறு வேறு என்று. எங்கள் துறையான “ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்”ல் இப்படிப் போன்றவர்களைப் பார்ப்போம்.
நாங்கள், க்ளையண்டின்ன் வளங்களை மையமாக வைத்து, அவர்களுக்குத் தன்னைப் புரிந்துகொள்ள வைப்போம், மனப் பயிற்சிகள் அளவிற்குச் சிகிச்சை தருவோம். இதை விவரித்து, ஜோதியிடம் உளவியல் சிகிச்சை தேவை என்றதை எடுத்துச் சொன்னோம். ஜோதி திகைத்து நின்றாள்.
ஒரு மாதம் ஓடியது. நண்பர்களுக்குத் தெரிந்த சில மருத்துவர்களைப் பார்த்தாள். மூவரும் வெவ்வேறு பரிசோதனை செய்த பிறகு, உடலில் பாதிப்பு இல்லை என்று சொன்னார்கள்.
நண்பர்கள் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு என்னைப் பார்க்கப் பரிந்துரைத்தார்கள். இதனால் மறுபடி வந்ததாக ஜோதி சொன்னாள்.
அவள் தன் கல்யாண வாழ்வைப் பற்றி விவரிக்க ஆர்வமாக இருந்ததால். அங்கேயே ஆரம்பித்தேன்.
இரு குடும்பத்தினர் பார்த்துச் செய்து வைத்த கல்யாணம். தனக்குக் கல்யாணம் என்ற செய்தியை தன்னுடைய உயிர்த் தோழியான சரளாவிடம் பகிர்ந்தாள். அவள் பல ஆலோசனை கொடுத்தாள். கூடவே இதையும் சொன்னாள், முதல் வருடம் முடியும் வரை கணவரிடம் எந்த வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளும்படி.
கல்யாணம் முடிந்த ஐந்தாவது மாதமே வெளிநாடு போக வேண்டியதாயிற்று. ஜோதியின் மனம் சந்தோஷத்தில் மிதந்தது. இதுவரை மாமனார் மாமியார், மற்றும் நாத்தனார் எனக் கூட்டுக் குடும்பத்திலிருந்தாள். தினமும் ஏதோ ஒன்றைத் தவறாகச் செய்து விடுவாள். மாமியார் சமாதானம் செய்து, “பயப்படாமல் செய். நீ, தனியாக இருந்தால் சரியாகச் செய்வாய்,” என்று சமாதானம் செய்வாள். ஆனாலும், இவர்களிடம் பயப்பட்டாள் ஜோதி.
அவளுடைய சினேகிதி சரளா இவளிடம் தன் மணவாழ்வின் பல அம்சங்களைச் சொல்லி வந்தாள். ஒவ்வொரு முறையும் சொல்லி முடிக்கும் போது “எல்லாம் என் மாமியார் காரீயால தான்” என்ற சொல்லைக் கேட்கக் கேட்க, ஜோதிக்கு மாமியார் என்றவளிடம் பயம் வளர்ந்து வந்தது. யாரிடமும் பகிரவோ சொல்லவோ இல்லை. கல்யாணம் ஆனதிலிருந்து ஜோதி தனது மாமியாரின் வார்த்தைகளில் உள் அர்த்தம் இருப்பதாக உறுதியாக இருந்தாள்.
வெளிநாடு போய் ஒரு வருடம் ஆனதும் மாமனார் மாமியார் இருவரையும் தங்களுடன் சில மாதங்கள் இருக்க அழைத்தார்கள். ஜோதி மனத்தில் பயந்து விட்டாள். கணவனிடம் சொல்லத் தைரியம் இல்லை. சரளாவிடம் பகிர்ந்ததும், “உஷார், உஷார்” என்று என்னவெல்லாம் ஆகலாம் என வர்ணித்தாள்.
அன்று ஆரம்பமானது, எதைச் செய்தாலும் ஒரு சந்தேகம், பயம். சமையலோ, அலங்காரம் செய்வதோ, எல்லாவற்றிலும். சந்தேகம் எழும், வடவட என ஆகும், உடனே உடல் முழுவதும் ஏதோ நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்ததைப் போன்ற வலியும் சோர்வும் சூழ, படுத்துக் கொண்டால் தான் தீர்வு. உடலின் வேதனை அதிகரித்தது.
மாமனார் மாமியார் இருக்கும் போதும் இப்படித் தான். பையன் வருந்தக் கூடாது என்று அவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். இது, ஜோதி மனதைச் சுருக்கென்று குத்தியது. குழம்பிப் போனாள்.
கர்ப்பம், குழந்தை பிறந்த பிறகும் இந்த நிலை நீடித்தது. குழந்தை மருத்துவர் கைனகாலெஜிஸ்ட் இருவரிடமும் ஜோதியின் நிலை அட்ஜெஸ்மென்ட் (சமாளிப்பு) டிஸாடர் என விளக்கினேன். இப்போதைக்குத் தகவல்களைப் பரிசோதித்த நிலை முடிந்து விட்டது, சிகிச்சைக்கு ஏறத்தாழ பத்து ஸெஷன்கள் தேவைப்படும் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஜோதிக்கும் விளக்கினேன்.
ஸெஷன்கள் ஆரம்பமானது. ஜோதி தன்னுடைய மாமியார் சார்ந்த பயத்தைப் பற்றிப் பகிர வேண்டும் என்றாள். அதிலிருந்து தொடங்கினோம். பல சம்பவங்களை விவரித்தாள். ஒவ்வொரு முறையும் சம்பவத்தை முடிக்கும்போது “சரளா சொன்னா மாதிரியே நடந்தது” எனச் சொல்லி முடித்தாள். அதனை ஆழமாக அலசினோம்.
அடுத்த கட்டமாக, கல்யாணம் ஆன பிறகு, ஒவ்வொரு வருடத்தில் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள், மாமியார் அதில் இருக்க வேண்டும். இவற்றில் என்ன – ஏன் நேர்ந்தது – மற்ற பாத்திரங்கள் – சமாதானம் ஆன முறை என்று பிரித்து விவரிக்கப் பரிந்துரைத்தேன். ஒவ்வொன்றாய்ச் செய்தாள்.
முதலில் தட்டுத் தடுமாறி முடித்தாள் ஜோதி. இரண்டாவது தடவையும் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. மூன்றாவதில் வியப்பு தட்டியது. என்னைக் கண் பிதுங்கி வருவது போல், முழித்துப் பார்த்தாள். மேற்கொண்டு செய்ய வைத்தேன். அவளாகவே தயங்கிக் கேட்டாள், “மேடம், நடந்தது வேற, இங்கே தெரிவது வேற மாதிரி வருகிறது என்று. ஜோதி குறிப்பிடுவது புரிந்தது, இருந்தும் மேலும் ஐந்து சம்பவங்களைப் பிரித்து எழுதி வரச் சொன்னேன்.
ஜோதி, பரபரப்பாக உள்ளே நுழைந்தாள். அவசரமாகக் குறித்து வைத்த காகிதங்களைப் பரப்பினாள். நான் அவற்றைப் பார்த்து வருகையில் என் கவனத்தைப் பல இடங்களுக்குத் திருப்பினாள். இவற்றை நினைவுபடுத்தி எழுத, அவளுடைய அனுபவத்தை, உணர்வை உரையாடினோம்.
ஜோதிக்கு தன் நிலைமையின் காரணிகள், தன்னுடைய தவறான சிந்தனை செய்யும் விதத்தைப் பற்றிப் புரிய வந்தது. இதை மேலும் அறிந்து கொள்ள, அவள் “சரளா சொன்னாள்” என்று குறித்திருந்த சிலவற்றிலிருந்து அவள் சரளாவிடம் பேசிய உரையாடல்களை எடுத்துக் கொண்டோம். இதை ஆராய, ஜோதி தான் எந்த அளவிற்குத் தோழி சொன்னதை ஏற்று, அதுதான் சரி என முடிவு செய்து, நடந்து கொண்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள். இவ்வாறு செய்தது மேலும் தெளிவு பட, சரளாவிடம் மறுபடி பேச முடிவானது. இந்த முறை “ஏன் இவ்வாறு செய்தோம்?” என்றதைக் கண்டறிய, பேசினாள்.
ஜோதிக்கு, இந்த உரையாடலில் மேலும் புரிய வர, எழுதிக் கொண்டாள். சரளா என்னிடம் வரத் தயாராக இருப்பதாகச் சொன்னதால் ஜோதி அவளை அடுத்த ஸெஷனுக்கு அழைத்து வந்தாள்.
இதனால் இரண்டு வித பயன் ஆனது. ஒன்று இருவரும் தாங்கள் பகிர்வதற்குக் காரணியைப் புரிந்து கொண்டார்கள். மற்றவரின் சிந்தனை, பரிந்துரை கேட்டுக் கொள்வது நன்மை, நல்லது தான். ஆனால் இருவரும் ஒரு எளிதான விஷயத்தைக் கோட்டை விட்டதை அடையாளம் காண முடிந்தது. அதாவது, சரளா தன்னுடைய நிலையை வைத்து ஜோதியை “இப்படி இரு, அப்படிச் செய்” என்றாள்.
ஜோதி- சரளாவின் ஒற்றுமை பெண்கள் என்பதனால். இருவரின் சூழல், உறவுகள், குணாதிசயங்கள், வேறுபட்டவை என்றதை மனதில் வைக்காததே அவர்கள் இருவரும் செய்த தவறு. இப்போது, இவற்றை மையமாக வைத்துப் பகிர வைத்தேன். இருவரும் இப்போது தங்களது நிலைக்கு, சூழலுக்கு எது பொருந்தாது / பொருந்தும் என வித்தியாசம் செய்யப் புரிந்து கொண்டார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் இதை வலுப்படுத்தப் பட்டது.
தானாகவே இன்னொரு விளைவு ஏற்பட்டது, சரளாவும் புரிந்து கொண்டாள், இனிமேல் யாருக்கு எடுத்துச் சொல்கிறோம், அதில் உஷாராக இருக்க வேண்டும் என்று. எனக்கு “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்”!
இப்போது, ஜோதி முழுமையாக உணர்ந்தாள். அதே போல தன்னுடைய உணர்வை மறைத்து வைத்ததின் விளைவே சோர்வு, வலி என்றது தெளிவுபட்டது.
மனம் கேட்கவில்லை, மாமியாரை அழைத்தாள். தன்னோடு வந்து இருக்க வற்புறுத்தினாள். ஜோதி, வீரன் இருவரையும் பார்த்து வெகு நாட்களாக ஆனதால் மாமனார் மாமியார் இருவரும் வந்தார்கள்.
ஜோதியிடம் பல மாறுதலை கவனித்து வந்த மாமனார்- மாமியார் மனநிறைவு அடைந்தார்கள். ஒரு நாள் கோவில் போயிருக்கும் போது இதை அவளிடம் சொன்னார்கள். ஜோதி, என்னை ஆலோசிப்பதைப் பற்றி எடுத்துக் கூறினாள். தனக்கு பெற்ற தெளிவையும் சொன்னாள். பெரியவர்கள் இருவரும் நெகிழ்ந்து போனார்கள். ஜோதி தனக்கு நேர்ந்ததை இப்படி மனம் விட்டு பேசுவதைக் கேட்டு அவள் மீது பாசம் கூடியது.
ஜோதி நிலை நன்றாக ஆனதால் ஸெஷன்களை முடிக்கும் வேளை வந்துவிட்டது. ஸெஷன்கள் இடைவெளியை அதிகரித்தோம். இந்தக் கட்டத்தில் ஜோதி, மாமியார்-மாமனார் வீரன் எல்லோரும் சேர்ந்து வந்தார்கள். ஜோதியின் நிலை சுதாரித்து வர குழந்தை மேல் பாசம் பொழிந்தாள். ஸெஷன் முடியும் வரை வீரனுடன் அவர்கள் நடைப் பயிற்சி முடித்துக் கொள்வார்கள்.
நால்வரும் வருவதிலும், திரும்பிப் போகையிலும் அவர்களுக்குள் உள்ள நெருக்கம், பாசம், அக்கறை நன்றாக தென்பட்டது!
மோர்க்காரி ! கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
அவன்:
ஆடு மாடு போற பாதையிலே
அசைந்து அசைந்து போறவளே
வட்ட சிவத்த பொட்டு இட்டவளே
வளைந்து வளைந்து போவதெங்கே?
உதடு ரெண்டும் புன்னகை காட்ட
உள்ளம் ஒன்றில் நான் இருக்க
பள்ள மேடுகளை கடந்து
மெல்ல மெல்ல நடப்பதெங்கே ?
மண் பானை கழுத்திலே
மோர் வடிய வடிய நடப்பவளே
என் தாகம் தீர்க்காமல்
மேகம்போல நகருவதெங்கே?
அவள் :
கட்டபொம்மன் முறுக்கு மீசை
கறுத்த கட்டழகா உன் மேலே
பெருக்க ஆசை நான் வச்சேன்
மனசெல்லாம் நிறஞ்ச மச்சான்
பாசமுடன் பேசும் என் மச்சான்
வாசம் செய்ய குடிசை வருவாயா?
மூச்சிறைக்க முள் பாதையில்
மோர் பானை சுமந்து கொண்டு
கிராம மக்களுக்கு நாளும்
தாகம் தணிக்க போறேன் மச்சான் !
உன் தாகம் என்னோடு
என் மோகம் உன்னோடு
சூரியக்கதிர் சுடும் பாதையில்
உன்னோட பேச்சு மச்சான்
என் பாதம் மனசு குளிந்திருக்கு !
நின்று பேச நேரமில்லை
நெனைச்சுப் பார்க்க மனசிருக்கு
ஆடி ஓடி மோர் விற்றால்தான்
அடுத்த வேளை கஞ்சி கிடைக்கும்!
பானை நிறஞ்சுருந்தாலும்
பருக மனசு வரலே மச்சான்
அக்கம்பக்கம் பார்த்தாலும்
உன் முகம்போல் யாருமில்லே!
கள்ளமில்லாமல் பேசும் மச்சான்
காது குளிர கேட்க நேரமில்லே
கீழ்வானம் சிவக்கும் முன்னே
குடிசை போய் குந்த வேணும்!
மோர் அளந்து ஊத்தையிலே
ஆசையான உன் முகம் தெரியும்
மோர் பானை காலியாகும்போது
உன் நெனைப்பு மச்சான்
என் நெஞ்சில் நிரம்பி நிற்கும் !
அவன் :
கண்டாங்கி சேலைக்காரி
கருத்த கண்ணழகியே
வெளுத்த உன் பல் அழகு
என் கண்ணை கூச வைக்க
நான் பார்க்க முடியலையே!
கருங்கூந்தலை அள்ளி
கட்டி முடிந்த கட்டழகியே!
புருவத்தை உயர்த்தி வளைத்து
கண்ணால் பேசுவது என்ன
கண் இமைகள் துடிப்பதென்ன ?
அவள் :
பாதிப்பானை பழைய சோறு
பருப்பு வைக்க காசு இல்லே
நாலு உரித்த வெங்காயம்
நான் ருசித்து சாப்பிட இருக்கு!
உன்னோட முகம் நெனைச்சு
கஞ்சி கலயத்தில் குடித்தால்
நெஞ்சமெல்லாம் நீ இருக்க மச்சான்
பஞ்சுபோல் என் மனசு பறக்குது
கொஞ்ச மனசும் துடிக்குது மச்சான்!
கம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்

அமெரிக்காவில் புலவர் கீரன் நிகழ்த்திய கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஒன்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவருடைய தயவில் கிடைத்தது. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வழக்கம்போல் உணர்ச்சிமயமான குரல் + தொனியில் மிக அருமையான பேச்சு. ஏழு நாள்களில் கம்பனை முழுமையாக விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், சில முக்கியமான பாடல்களைமட்டும் எடுத்துக்கொண்டு விளக்குகிறார், அவற்றினூடே கதையைச் சொல்கிறார்.
இப்படி அவர் எடுத்துக்கொண்ட ஒரு பாடல், நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’, மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி.
‘சீதையும் ராமனும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லை, தற்செயலாக(Accidentally)தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன், ‘இதற்குச் சாட்சி கம்பனுடைய பாட்டிலேயே உள்ளது!’
இப்படி அவர் சொன்னதும், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. காரணம், எனக்குத் தெரிந்து அந்தப் பாட்டில் ‘தற்செயல்’ என்கிற வார்த்தையோ அதற்கான குறிப்போ இல்லை, சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் கம்பர் சொல்கிறாரேதவிர, எது எதேச்சையாக நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிடவில்லை.
ஆனால், கீரன் அடித்துச் சொல்கிறார், ‘அது தற்செயலான நிகழ்வுதான், அதற்கான குறிப்பு அந்தப் பாட்டிலேயே இருக்கிறது, கொஞ்சம் பிரித்து மேயவேண்டும், அவ்வளவுதான்!’
முதலில் அந்தப் பாட்டைத் தருகிறேன், அதன்பிறகு, கீரன் தரும் அட்டகாசமான (அதேசமயம் ரொம்ப Practicalலான) விளக்கத்தைச் சொல்கிறேன்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!
இதற்கு என்ன அர்த்தம்?
எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் (சீதை) இப்படி (முந்தின பாட்டில் சொன்னபடி) நின்றிருக்க, அண்ணலும் (ராமனும்) அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன.
அவ்ளோதான். நோ விபத்து, நோ தற்செயல், கம்பர் அப்படிச் சொல்லவில்லை!
பொறுங்கள், கீரன் அவர்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ : இந்த வாசகம் முதலில் சரியா?
ஒரு கடை வாசலில் போர்ட், ‘ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்று எழுதியிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ’மற்ற ஆறு நாள்களும் கடை உண்டு, கூடவே ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்பதுதானே? ‘திங்கள்கிழமையும் கடை உண்டு, செவ்வாய்க்கிழமையும் கடை உண்டு, புதன்கிழமையும் கடை உண்டு’ என்று யாராவது நீட்டிமுழக்குவார்களா?
ஒருவர் ‘தயிர் சாதமும் சாப்பிட்டேன்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? குழம்பு, ரசம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறார், அதோடு தயிர் சாதமும் சாப்பிட்டார் என்பதுதானே?
’இந்த வருஷமும் அவன் பரீட்சையில ஃபெயில்’ என்றால் என்ன அர்த்தம்? இதற்குமுன் பல வருஷங்கள் ஃபெயிலாகியிருக்கிறான் என்பதுதானே?’
இதே வழக்கத்தின்படி, கம்பர் ‘அண்ணலும் நோக்கினான்’ என்று சொல்லியிருந்தாலே போதும், அந்த ‘உம்’மில் ‘அவளும் நோக்கினாள்’ என்பதும் விளங்கிவிடும், அதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
ஆக, கம்பர் ‘அண்ணல் நோக்கினான். அவள் நோக்கினாள்’ என்று எழுதியிருக்கவேண்டும், அல்லது ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். இரண்டு ‘உம்’கள் இந்த வாக்கியத்தில் அவசியமே இல்லை.
ஆனால், கம்பர் வேண்டுமென்றே இரட்டை ‘உம்’ போடுகிறார். ஏன்?
இதைதான் கீரன் பிடித்துக்கொள்கிறார். ‘தமிழில் ஒரே ஒரு சூழ்நிலையில்மட்டும் இரண்டு ‘உம்’கள் தேவைப்படும்’ என்கிறார். எப்போது?
சாலையில் ஒரு விபத்து நடக்கிறது, இரு வாகனங்கள் எதிரெதிரே வந்து மோதிக்கொள்கின்றன. அதை நேரில் பார்த்த ஒருவரிடம் ‘எப்படிய்யா விபத்து நடந்துச்சு?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார்?
‘இவனும் இடதுபக்கமா வந்தான், அவனும் அதேபக்கமா வந்தான், மோதிகிட்டாங்க.’
இந்த இடத்தில் ‘இவனும் இடதுபக்கமா வந்தான்’ என்பதோடு நிறுத்தினால் செய்தி முழுமையடையாது, ‘அவனும் அதேபக்கமா வந்தான்’ என்பதை வலியச் சேர்த்தால்மட்டுமே விபத்து நேர்ந்தது புரியும். அது திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலானது என்பதும் புரியும்.
அந்தப் ‘பத்திரிகையாளர் உத்தி’யைதான் கம்பர் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார். ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்தாமல், ’அவளும் நோக்கினாள்’ என்பதைச் சட்டென்று அடுத்த வாக்கியத்தில் கோப்பதன்மூலம் ஒரு சிறிய பரபரப்பை உண்டாக்குகிறார், தற்செயலாக இரு பார்வைகளும் சந்தித்துக்கொண்டுவிட்டன, ஜோடி சேர்ந்துவிட்டன என்று வாசிக்கிற நமக்குப் புரியவைக்கிறார்.
அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/
(நன்றி: என். சொக்கன்)
குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு
எனது நாடு இந்தியா !
என்றும் நானும் இந்தியன் !
உலகம் போற்றும் நாடிது !
உயர்ந்த காந்தி வீடிது !
இமயம் முதல் குமரி வரை –
எங்கள் தேசம் விரியுது !
எந்த பாஷை பேசினாலும்
அன்பும் பண்பும் தெரியுது !
தெலுங்கு தமிழ் இந்தி என்று
மொழிகள் பல பேசுவோம் !
தோளோடு தோள் சேர்த்து
தோழமை கொண்டாடுவோம் !
கங்கை முதல் காவிரி
அனைத்தும் எங்கள் சொந்தமே !
பரதம் பாட்டு கலைகள் பல
பிறந்து வளரும் பூமியே !
இந்து முஸ்லிம் கிறித்துவர்கள் –
இணைந்து வாழும் தேசமாம் !
இறைவன் என்றும் ஒன்றுதான் !
மறைகள் காட்டும் மார்க்கமாம் !
அன்னை தந்தை தந்த நாட்டை –
பேணி நானும் போற்றுவேன் !
அடுத்து வரும் தம்பி தங்கை
வாழ்த்தும் விதம் வாழுவேன் !
சித்தர் புத்தர் அவதரித்த –
சீர் மிகுந்த இந்தியா !
புத்தி சக்தி புவிக்களித்து –
புகழைச் சேர்த்த இந்தியா !
உலகம் போற்றும் தேசமென்று
இந்தியாவை மாற்றுவோம் !
ஒற்றுமையாய் வாழ்ந்து நாங்கள்
உலகுக்கு வழி காட்டுவோம் !
- காக்கா ! காக்கா !
காக்கா காக்கா வா வா வா !
என் ஜன்னல் பக்கம் வா வா வா !
உன்னைப் பார்த்தால் எப்போதும்
என் உள்ளம் துள்ளுது கா கா கா !
எங்கள் வீட்டுச் சாப்பாட்டில் –
உனக்கும் கொஞ்சம் தருவேன் நான் !
என்னைப் பார்த்து தலை சாய்க்கும் –
நண்பன் நீயே கா கா கா !
கருப்பாய் இருப்பது தனி அழகு என
கற்றுக் கொடுத்தாய் கா கா கா !
கொத்தித் தின்னும் உன் அழகை
நித்தம் ரசிப்பேன் கா கா கா !
தாத்தா பாட்டி பல பேர்கள்
தனியே இருப்பார் வீட்டினிலே !
நீயே அவர்கள் துணை காக்கா !
தினமும் அவரை பார்த்துக்கொள் !
கூட்டம் கூட்டமாய் பறக்கின்றீர் !
சேர்ந்து வாழ்ந்தே சிறக்கின்றீர் !
செல்லமான என் காக்கா !
பக்கம் வந்து பார் காக்கா !
காக்கா காக்கா வா வா வா !
என் ஜன்னல் பக்கம் வா வா வா !
உன்னைப் பார்த்தால் எப்போதும்
என் உள்ளம் துள்ளுது கா கா கா !
விடமாட்டேன் விடமாட்டேன்..! — கோவை சங்கர்
விடமாட்டேன் விடமாட்டே னுன்மலர்ப்
பாதங்கள் பணிவதையே விடமாட்டேன்
நான்வைக்கும் வேண்டுதலை யருளாமல்
உன்னையே நகரவே விடமாட்டேன்!
எப்போது மென்நாவு முன்நாமம்
தப்பாது தேவியுன் புகழ்பாடும்
என்னுள்ளில் பேரொளியா யுன்னுருவம்
பொன்போன்று கண்குளிர வொளிவீசும்!
சோதனைமேல் சோதனைகள் செய்தாலும்
நித்தமொரு பிரச்னைநீ தந்தாலுமென்
மனம்நொந்து உடல்நொந்து அழுதாலும்
உன்பாதம் தொழுவதையே விடமாட்டேன்!
குறைதீர வுனையண்டி வருபவரின்
குறைகள்நீ தீர்த்திடவே வேண்டாமோ
மனச்சுமை யிறக்கிடவே வருபவர்க்கு
மனச்சுமை யதிகமாக விடலாமோ!
சோதனைகள் செய்வதுன் விளையாட்டோ
அதற்குமோ ரெல்லையும் வேண்டாமோ
மனம்நொந்து அருள்வேண்டி வருபவர்க்கு
மனக்கவலை யதிகமாக்கல் முறைதானோ!
ஆத்திகம் நாத்திகம் இருசொற்கள்
‘ஆ’நீங்கி ‘நா’சேர்ந்தால் நாத்திகம்
‘ஆ’வதுவும் பிறழாமல் காப்பதுவும்
தேவியே மகாசக்தி உன்கையில்!
மனமுருகி வேண்டுகின்ற பக்தர்க்கு
மனம்குளிர வேண்டுதலை யருளிவிடு
அமைதியை வேண்டுகின்ற பக்தர்க்கு
அமைதியை நிறைவாக வளித்துவிடு!
திக்கெட்டு முன்நாமம் பரவட்டும்
இக்கட்டு இல்லாமல் இருக்கட்டும்
பக்தியின் பரவசத்தில் மூழ்கட்டும்
சக்தியுன் புகழெங்கும் பரவட்டும்!
பொறுமை – ப்ருத்யுஷ்
கொழு கொழு கன்றே,
எத்தனை பேருக்கு இது – கவிதை ஞாபகம் இருக்கிறது?
கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
தாயை மேய்க்கும் இடையா,
இடையன் கைக் கோலே,
கோலிருக்கும் மரமே,
மரத்திலுள்ள கொக்கே,
கொக்கு வாழும் குளமே,
குளத்தில் இருக்கும் மீனே,
மீனைப் பிடிக்கும் வலையா ,
வலையன் கைச் சட்டியே,
சட்டி செய்யும் குயவா,
குயவன் கை மண்ணே,
மண்ணில் விளையும் புல்லே,
புல்லை தின்னும் குதிரையே—என் பெயரென்ன. ?
உன் பெயரா.? ஈஈஈஈஈஈஈஈஈ- என்றதாம் குதிரை.
தன் பெயர் அறிந்த மகிழ்வில் பறந்ததாம் ஈ.
ஊர் ஊர்
என்ன வூர்
மயிலாப்பூர்
என்ன மயில்
காட்டு மயில்
என்ன காடு
ஆற்காடு
என்ன ஆறு
பாலாறு
என்ன பால்
கள்ளிப்பால்
என்ன கள்ளி
எலைக்கள்ளி
என்ன எலை
வாழையிலை
என்ன வாழை
ரஸ வாழை
என்ன ரஸம்
மொளகு ரஸம்
என்ன மொளகு
வால்மொளகு
என்ன வால்
நாய் வால்
என்ன நாய்
மர நாய்
என்ன மரம்
பலா மரம்
என்ன பலா
வேர்ப்பலா
என்ன வேர்
வெட்டிவேர்
என்ன வெட்டி
மணம் வெட்டி
என்ன மணம்
பூ மணம்
என்ன பூ
மாம்பூ
என்ன மா
அம்மா!
போகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்
சொந்தமென்று வந்தவொன்று சொந்தமில்லை என்றானால்
சந்ததமும் சங்கடங்கள் சொந்தமென்று ஆகும்
அந்தவொரு துன்பநிலை அனுபவிக்க நேர்ந்துவிட்டால்
அந்தமென உடலாவி அனலின்றி வேகும்.
எந்தவொரு மனிதனுக்கும் இல்வாழ்க்கை பட்டமது
அந்தரத்தில் கயிறின்றி ஆடுமெனில் நோகும்.
சிந்தவிழி நீரில்லா சந்தர்ப்ப சூழ்நிலையை
சந்திக்க விட்டபடி சகலதுமே போகும்
*
பந்தொன்று பலகால்கள் பட்டடேதா னுதைவாங்கும்
பரிதாப நிலைவந்து படர்வதுபோ லாகும்
பொந்துக்குள் குடியிருக்கும் பொல்லாத பாம்பின்வால்
பிடித்திழுத்து விட்டதுவாய் பாதியுயிர் சாகும்
கொந்தளிக்கும் பெருங்கடலின் கோரஅலை மோதலினைக்
கொண்டதுவே இதயத்தின் குமுறல்க லாகும்
நந்தவனம் தீப்பிடிக்க நறுமலர்கள் கருகுகையில்
நறுமணமும் துர்மணமாய் நாறுவதா யாகும்!
*
சந்தர்ப்ப சூழ்நிலைகள் சதிசெய்து விடுவதினை
சரிசெய்ய முடியாத சாபத்தின் எல்லை.
குந்தகங்கள் விளைவித்துக் கொடுக்கின்றப் பரிசாக
குடும்பத்துள் மூளுகின்ற கொடுந்துயர முல்லை,
வெந்தழிந்த வனத்துக்குள் விளையாடும் புகைபோல
வேர்கருகி மடியும்வரை விட்டிடாதத் தொல்லை
பந்தத்துள் நிகழ்மெனில் பலியாடாய்க் அறுபட்டுப்
போகும்பா தைமிகவும் தூரத்தில் இல்லை
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
ஹலோ, ஹலோ சுகமா?
விடிந்தவுடன் பல் துலக்கும் முன் கையில் எடுத்துப் பார்ப்பது செல்போனைத்தான்! கையுடனோ, பையுடனோ நம்முடைய ஓர் அங்கமாக – ‘டிடாச்சபிள்’ அங்கம்! – மாறிவிட்டது செல்போன்! அதுவும் இன்றைய ஸ்மார்ட் போன்கள் நம்மைப் பைத்தியமாக ஆக்கிவிட்டதுடன் நில்லாமல், அதற்கு அடிமையாகவும் மாற்றிவிட்டன. எழுந்தவுடன் சுப்ரபாதம் கேட்பது போல், முகநூலோ வாட்ஸ் ஆப்போ பார்த்து இரண்டு குட் மார்னிங், வாழ்க வளமுடன், ஹாப்பி டியூஸ்டே, வானத்தில் மேகம், பால்கனியில் காகம் என ஏதோ ஒன்றை ‘லைக்’ கவோ, அல்லது யாரையாவது ‘ஸ்மைல்’ போடவோ செய்யாவிட்டால், அந்த நாள் நல்ல நாளாகத் தொடங்காது! காதில் வயர் தொங்க, குனிந்த தலை நிமிராமல் நடக்கும் பெண்ணும், டூ வீலரில் தானாய்ப் பேசியபடி விரைவாய்ச் செல்லும் பையனும் செல்போன் கடவுளின் செல்லக் குழந்தைகள்!
தொலைவில் நேராகப் பேசிக்கொள்ள முடியாதவர்களுக்கான தொடர்பு சாதனமாக இருந்த தொலை பேசி, இப்போது அடுத்த அறையில் இருப்பவர்களுடன் கூட பேச முடியாத படி, ‘தொல்லை’ பேசியாகிவிட்டது!
சின்ன வயதில், வத்திப் பெட்டியில் நூல் கட்டி, பேசிய போன்கள் – நேரே கேட்டுவிடக் கூடாதென்று, ரகசியக் குரலில் பேசிய பேச்சு! – பரிணாம வளர்ச்சியடைந்து, இன்றைய செல் போன்களாக மாறிவிட்டன – வத்திப்பெட்டி போன்கள் நேசமானவை – இன்றைய வயர்லெஸ் போன்கள் மோசமானவை!
டைரக்ட் டயலிங் வருமுன், டெலிபோன் எக்ஸ்சேஞ் மூலம் நம்பர் கேட்டுப் பேசிய காலங்கள் ! வெளியூர் என்றால் தபால் தந்தி ஆபீஸில் ‘ட்ரங்க்’ கால் புக் செய்து, காத்திருந்து பேச வேண்டும் – சில சமயங்களில், சரியாகக் கேட்காமல் கத்திப் பேச வேண்டியிருக்கும் – அந்தக் கண்ணாடிக் கதவு போட்ட சின்ன ‘பூத்’ அதிர்ந்து குலுங்கும் சாத்தியம் அதிகம்! வெளியூரிலிருந்து கால் என்றாலே, வயிற்றில் புளியைக் கரைக்கும் – அப்போதெல்லாம் அவசரம் என்றாலே ‘கெட்ட’ செய்திதான்!
சிதம்பரத்தில் கமலீஸ்வரன் கோயில் தெருவின் முதல் வீடு ‘சின்ன போஸ்ட் ஆபீஸ்’ ஆக இயங்கி வந்தது. ‘டக..டக..டக் டக்’ என்ற தந்தி மெஷினின் சத்தத்துடன், கார்டு, கவர், ஸ்டாம்ப் வாங்கிய காலம் – அகால வேளை ட்ரங்க் கால்களை நினைத்தால் இப்போதும் முதுகு ‘சில்’லிடுகிறது! சின்ன போஸ்ட் ஆபீஸ சரியாக இல்லாத சமயங்களில் மேலவீதி பெரிய போஸ்ட் ஆபீஸ் சென்று பேசிய நாட்களும் உண்டு – எப்போது ட்ரங்க் கால் வந்தாலும், கூடவே இடியுடன் மழையும் வந்து, நம் கலக்கத்தை அதிகப் படுத்தும்!
வீட்டுக்கு வீடு போன் வந்தவுடன் உள்ளூர், வெளியூர் கால்கள் சுலபமாகி விட்டன. அயல் நாடுகளுக்கு மட்டும் ‘புக்’ செய்து பேச வேண்டியிருந்தது.
அடுத்த வீட்டு அல்லது எதிர்த்த வீட்டுக்கு நமக்கு யாராவது போன் செய்ய, நட்பின் காரணமாக அவர்களும் வந்து கூப்பிட, குரல் அடக்கி, மெதுவாகப் பேசியது ஒரு காலம். ‘அடிக்கடி தொந்திரவு செய்யாதீர்கள்’, ‘அவர்கள் வீட்டில் யாரும் இல்லை’, ‘அவர்களைக் கூப்பிட இங்கு யாரும் இல்லை’ போன்ற பல நிலைகளைத் தாண்டி போன் பேசக் கிடைத்தால் அது நம் பாக்கியம்! போனிருக்கும் வீட்டின் நாய் நம்முடன் நட்புடன் இருப்பது அவசியம் – இல்லையென்றால் பேசுவதற்குக் குரல் வளை இருக்குமா என்பது சந்தேகம்!
முதன் முதலில் என் வீட்டிற்கு வந்த போன் வெளிர் நீலக் கலரில், டிபார்ட்மெண்ட் கொடுத்தது. கனெக்ஷன் வந்து பத்து நிமிடங்களுக்குள் ஒரு போன் வர, அதற்குள் யாருக்குத் தெரிந்தது என்று வியந்தபடி, ஓடிச் சென்று ரிசீவரை எடுக்க, மறு முனையில் ஒரு கர கர குரல் ‘ டெலிபோன் டிபார்ட்மெண்ட் லேர்ந்து சார் – கனெக்ஷன் சரியான்னு செக் பண்றோம்’ என்றது!
நம்பர் டயல் செய்யும் மளிகைக் கடைப் போன் முதல், (கருப்பாக, முகத்தில் தன் நம்பருடன், ரிசீவரைத் தாங்கி இருக்கும் போன்!)ப்ரெஸ் பட்டன், கார்ட்லெஸ் என மாறி, மொபைல் போன் ஆனது. இப்போது ஸ்மார்ட் போனாகி உலகமே நாலுக்கு இரண்டு இன்ச் பெட்டிக்குள் அடங்கி விட்டது!
இப்போது எல்லாம் விரல் நுனியில் – (செல் போன் வந்த வருடம் 1983) காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை எல்லாம் போனில்தான்! நினைவிலிருந்து, விலாசங்களும், டெலிபோன் எண்களும் மறைந்து விட்டன – ஒளிரும் செல்போன் ஸ்கிரீன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது! செல் இல்லையென்றால் கை ஒடிந்தாற்போல் ஆகிவிடுகின்றது!
ஆளுக்கொரு காலர் டியூன் – சத்தம் கேட்டுப் பதறி, கையிலுள்ளவற்றைத் தவற விடும் பயங்கர டியூன்கள்- வித்தியாசமான டயலர் டியூன்கள் என எப்போதும் அதிரும் போன்கள்!
‘கணவன் 1’, ‘கணவன் 2’ என ஒளிர்ந்த ஸ்கிரீனைப் பார்த்து புருவம் உயர்த்த, போனுக்குச் சொந்தக் காரி, ‘என் கணவனிடம் இரண்டு போன்கள் இருப்ப’தாகச் சொன்னாளாம்!
முன்பு பொது இடங்களில் – ஏர் போர்ட், ரயில் நிலையங்கள் – புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம், குனிந்த தலை நிமிராமல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், உறவினர்களுடன் பேசுவதற்குக் கூட நேரமில்லை – ‘செல்போன் அடிக்ஷன்’ ஒரு வியாதியாகவே மாறிவிட்டது.
குழந்தைகளுக்கு ‘ஓர் அவசரத்திற்கு இருக்கட்டும்’ என்று கொடுக்கப் பட்ட செல் போன்கள், இன்று பல தவறான வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கின்றன. கொரோனா கொடுமையில், கல்வி கற்பதற்கே செல் போன் தேவை என்ற நிலை, அச்சுறுத்துவதாக உள்ளது.
வருகின்ற விளம்பரங்களும், தேவையற்ற வியாபார அறிவிப்புகளும் தினமும் வெறுப்பேற்றுகின்றன.
சென்சார் இன்றி எதையும் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளையும், வயதானவர்களையும் ஒரு சேரக் கெடுக்கின்றன.
நல்ல புத்தகங்கள், பாடல்கள், சொற்பொழிவுகள் என நல்லவைகளும் உள்ளன – உலகச் செய்திகள், அறிவியல் சார்ந்த செய்திகள் எனப் பலவும் கிடைக்கின்றன. இப்போது புதிய செயலிகளில் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. நெட் பாங்கிங், ஆன் லைன் சேல்ஸ் எல்லாம் அந்தச் சின்னப் பெட்டிக்குள்!
எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட் போன் உபயோகமாக இருக்கின்றது – தேவையற்றவைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது! பேசுவதற்குத் தனியாக ஆர்டினரி செல் போன் வைத்துக்கொள்ளலாம் என்று கூட சில சமயங்களில் தோன்றுகிறது.
போனில்லாமல் சில மணி நேரங்கள் இருக்கலாமென்று தோன்றுகின்றது…..
முடியுமா?