மார்ச் 2017 இதழில் …….

1 அட்டைப்படம்
2 எமபுரிப் பட்டணம் – எஸ் எஸ்
3 இலக்கியவாசல் 24
4 ஆதியோகி – வீடியோ
5 நந்து – ஜெயந்தி நாராயண்
6 கார்ட்டூன் – லதா
7 தூர்தர்ஷன் – வீடியோ
8 சரித்திரம் பேசுகிறது! – யாரோ
9 சுட்ட இட்லி – நன்றி வாட்ஸ் அப்
10 மணி மகுடம் – ஜெய் சீதாராமன்
11 ராவெசு கவிதைகள் – ராவெசு
12 கடிகாரம் – அழகியசிங்கர்
13 யானை – நன்றி ஸ்மைல் பிரபு
14 விதியை மாற்றுவது – நன்றி முகநூல்
15 விசித்திர உறவு – பொன் குலேந்திரன்
16 காமராஜர் ஒரு மகாத்மா – நன்றி முகநூல்
17 டிகாக்ஷன் போடும் கலை – சுஜாதா
18 கண்ணாடி நண்பன் – எஸ் எஸ்
19 யதார்த்தம் – நித்யா சங்கர்
20 நேபாளத்தின் புதுவித நீர்வீழ்ச்சி – ராமன்
21 அப்பாவின் கண்ணாடி – குறும்படம்
22 கேள்வியும் கவிதைப் பதிலும் – நடராஜன்
23 ராகவா லாரன்சின் சிவலிங்கா – டிரைலர்
24 தலையங்கம்
25 கடைசிப் பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

எமபுரிப் பட்டணம் (எஸ் எஸ் )

முன்னுரை!

எமபுரிப்   பட்டணம் என்ற இந்தத் தொடரை இரண்டு பிரிவாக எழுதப் போகிறேன்.

Image result for எமன்

 

முதல் பகுதி , புராணங்களை  மையமாக வைத்து அவற்றில்  குறிப்பிட்டுள்ள கதைகள் , கிளைக் கதைகள் போன்றவற்றை விளக்கும் கதைத்தொகுப்பு.  முக்கியமாக கருட புராணம், விஷ்ணு புராணம் ¸மார்க்கண்டேய புராணம், சிவபுராணம், கந்த  புராணம் , சாம்ப புராணம்  போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். அதில் வரும் கதைச் சம்பவங்கள் பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்தவையாக இருக்கக்கூடும்.  அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அந்த சிக்கலில் ஒரு சௌகரியமும் உள்ளது.

முதலில் சிக்கலைப் பற்றிச் சொல்லுவோம்.  ஒவ்வொரு புராணத்திலும் கதை கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . அவற்றில் வரும் பாத்திரங்கள் ஒன்றாக இருந்தாலும் அவைகளின் தன்மை மாறுபட்டு இருக்கின்றது. எது சரி , எது தவறு  என்பது யாருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

உதாரணங்கள் சொல்லி உங்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி ஓடச் செய்யப்போவதில்லை.

இதில்  என்ன சௌகரியம் என்றால்,  இந்தப் புராணப் பகுதியிலும்  கொஞ்சம் நமது கற்பனையைக் கலந்து கொள்ளலாம்.இந்தப் புராணத்தில் கொஞ்சம், அந்தப் புராணத்தில் கொஞ்சம் என்று எடுத்துக் கொள்ளும்போது  நம் கதை  ஒரு புதுப்  புராணம்போல் ஆகலாம். அதைத்தான் புராணக் கதைகளைத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கும் நண்பர்களும் செய்கிறார்கள். ராமாயணம் , மகாபாரதம் என்று நாம் அதிகமாகப் படித்துப் பழக்கப்பட்ட கதைகளைச் சொல்லும் போதும்,  ‘ இது மக்களை மகிழ்விப்பதற்காக மூலத்தை ஒட்டி சற்று மாறுபட்டுச் சித்தரித்துள்ளோம் ‘ என்று சுற்றி வளைத்து,    “பொறுப்புத் துறப்பு” என்ற பகுதியில் கோடிட்டுக் காட்டி விடுவார்கள்.

அந்தப் “பொறுப்புத் துறப்பின்” சௌகரியம் எனக்கும் கிட்டும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

ஆனால் நாம் காணப் போகும் எமபுரிப்பட்டணத்தின்  இரண்டாம் பகுதி முற்றிலும் புதியது. முழுக்க முழுக்க நம் கற்பனையே. இதற்கும் முதல் பகுதிக்கும் சில நிகழ்வுகள் இணையாக வந்தால் அவை தற்செயலாக நேர்ந்தது என்றே கொள்ளவேண்டும். இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ? பூலோகத்திலிருந்து அவனிடம் செல்லும்  மனிதர்கள்  –  அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், விஞ்ஞானிகள் ,  மன்னர்கள், சாமானியர்கள் எல்லோரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தப் பகுதி .

இது ஜாலியாக இருக்கும்.

இந்த இரண்டு பிரிவான கதை, புராணமும், நவமும் கலந்ததாக இருக்கும்.  புராணம் என்பது பழையது. நவம் என்பது புதியது. இரண்டும் கலந்து வருவது இந்தத் தொடரின் சிறப்பு.

இன்னொரு  முக்கியமான கருத்து. மனிதன்  இறந்த பின் எங்கு செல்கிறான், அவன் இந்த உலகில் செய்த நல்லது,கெட்டது அவற்றிக்குத் தண்டனைகளும், பரிசுகளும் கிடைக்கின்றனவா, அவன் மறு பிறவி எடுக்கிறானா, போன்றவை  மிகவும் ஆழமான தத்துவார்த்த எண்ணங்கள். எல்லா மதங்களும் இவற்றை வெவ்வேறு பாணியில் சொல்லுகின்றன. அவற்றை எண்ணிப் பார்க்கும் போது  அவை ஒரு திகில் கலந்த பயமாகவே இருக்கின்றன.

Related image

பயம் தான் மனிதனை ஆட்டிப்படைக்கும் முதல் சக்தி. அந்தப் பயத்தில் மனிதன் நல்லதும் செய்கிறான். கெட்டதும் செய்கிறான். பயம் ஒருவனை நல்லவனாக வைத்திருக்கின்றது என்றால் அந்தப் பயமே அவனுக்குத் தீங்காகவும் மாறிவிடுகிறது. பயப்படாத ஜீவ ராசியே உலகில் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பய உணர்ச்சியே மூலாதாரம்.மனிதனின் ஒவ்வொரு வெளிப்பாடும் பயத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பயத்தை மனிதன் ஒருகாலும் வெல்ல  முடியாது. வென்றது மாதிரி நடிக்கலாம். அது உள்ளூர அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும். எல்லா பயங்களிலும் மனிதன் அதிகமாகப் பயப்படுவது எம பயம் – அதாவது மரண பயம் ஒன்றிற்குத்தான். சாவைப் போல மனிதனைப் பயமுறுத்துவது வேறொன்றும் இல்லை. அது அவனை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். பிறந்த உடனேயே ஏன் அதற்கு முன்னாலேயே மரிக்கும் சிசுக்கள் உண்டு. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் துடிதுடித்து இறந்த மனிதர்களும் உண்டு. இந்த சாவு எப்போது யாரை எங்கு எவ்வாறு பிடிக்கும் என்பது தான் புரியாத புதிர். மனித வாழ்வில் அவிழ்க்க முடியாத மிகப் பெரும் புதிர் – சாவு .

Related image

இந்தப் புதிர்தான் – அத்துடன் இணைந்த பயம்தான் மனிதனுக்கு அவன் வாழ்வில் சுவாரஸ்யம் கூட்டுகிறது என்று சொன்னால்  ஏற்றுக்கொள்வீர்களா?

உண்மை அது தான்.

இந்த சுவாரஸ்யமான பய உணர்ச்சியுடன் எமபுரிப்  பட்டணத்துக்குச் செல்வோம் !

 

 

எமபுரிப் பட்டணம்

Related image

Related image

( படங்கள்  நன்றி :  ” சனி” தொடர் – கலர்ஸ் டி வி )

ஆதித்யன் என்ற பெயர்கொண்ட சூரிய தேவன்*  தன்  ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் தகதக என்ற பொன் கிரணங்களைப் பாய்ச்சிக்கொண்டு  பவனி வந்துகொண்டிருந்தான்.  கீழ்த் திசையில் அவன் உதிக்கும்போதே உலகைச் சூழ்ந்துள்ள இருள் விலகிச் சென்றன. அவன் தான் பிறந்த விதத்தை எண்ணிக் கொண்டே பவனி வந்து கொண்டிருந்தான்.

பிரளயத்திற்குப் பிறகு பகவான் விஷ்ணு உலகத்தைப் படைக்க எண்ணம் கொண்டு பிரும்மனைப் படைத்தார். பிறகு பிரஜாபதிகளைப் படைத்தார். மரீசி முனிவர் அதிதி  தேவியின் மூலம் மண்ணிலும் விண்ணிலும் பரவி இருக்கும்மாதிரி ஒரு அண்டத்தை ஏற்படுத்தினார். அந்த அண்டத்திலிருந்து சூரியன் தோன்றினான்.   அவனுக்குள் இருந்த இருபது பிரபைகளும், ஆயிரம் கிரணங்களும்  மழை , பனி , வேனில் என்று பல பருவங்களை ஏற்படுத்தி பூவுலகையும், வான் உலகையும் உய்வித்துக் கொண்டிருந்தன.

சூரிய தேவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. உதயகிரியிலிருந்து புறப்படும் சூரியன் ஜம்பூத்வீபத்தில் பிரகாசித்து ஈசான்யத்தில்  இருக்கும் பரமேஸ்வரனைத்  துதித்து,  அக்னியைப் போற்றி, மற்ற பிதுர்க்களுக்கு ஆசி  வழங்கி , நடுவில் இருக்கும் நாராயணன், பிரும்மா அவர்களை வணங்கி, இந்திரனுடைய அமராவதிப் பட்டணம் மற்றும் தேவர்களின் பட்டணங்களில் சஞ்சாரம் செய்து ஒவ்வொரு திக்குப் பாலகர்களும் வணங்கி வாழ்த்தத் தன் பயணத்தைத் தினமும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.   அதனால்,  அவன் தன்னைப்பற்றியும் தன் பொன்னிறக் கிரணங்கள் பற்றியும் அளவுகடந்த பெருமை கொண்டிருந்தான்.

அவன் கவனம் எப்போதும் எங்கும் சிதறவே சிதறாது. அவனது குதிரைகளும் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து அடி பிறழாமல் அமைதியாகவே சென்றுகொண்டிருக்கும். அவன் தேர்க்கால் படும் இடங்களைச் சுற்றி தேவர்களும் கந்தர்வர்களும், அசுரர்களும், மனிதர்களும் , நாகர்களும், அப்சரஸ்களும் , மற்ற விலங்கு, பறவை , புழு பூச்சி இனங்களும் அண்ணார்ந்து பார்த்து சூரியனுக்கு வணக்கம் சொல்லிவிட்டே செல்வார்கள்! தான் கர்வப்பட்டால் அது தப்பில்லை என்ற எண்ணம் அடிக்கடி சூரிய தேவனுக்குத் தோன்றும். அந்தப் பெருமை அவன் தேஜசை அதிகப்படுத்தியது.  தனக்கு நிகர் என்று சொல்ல யார் இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டே வந்த சூரியனின் கண்கள் திடீரென்று கூசுவதுபோல் ஒரு கணம் தோன்றியது. ‘சே ! சே ! என் கண்களாவது, கூசுவதாவது? நான்தான் மற்றவர்களைக் கூசும்படிச் செய்ய வல்லவன். இது ஏதாவது பிரமையாக இருக்கும்.’  என்று எண்ணினான்.

ஒரு வேளை என் கர்வத்துக்குப் பங்கம் நேரிட, யாராவது தேவ அசுரர்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. மீண்டும் கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பான்.   அப்போது  மறுபடியும் அதேபோன்று   அவன் கண்களை வேறு ஒரு கிரணம்  தாக்குவதை உணர்ந்தான். அது அவன் கண்களை அப்படியே கட்டிப்போட்டது. அதுவும் சில நொடிகள்தான். உடனே அது மறைந்து விட்டது. தன் ஒளிப் பாதைக்கு எதிராக மற்றொரு ஒளி வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அன்றைய தினம் அவன் பயணம் தொடர்ந்தது. அந்தக்  கிரணம் மீண்டும் வரவில்லை. அவன் மனமோ ஒரு நிலையில் இல்லை.

மறுநாள் அந்த  இடத்துக்கு வந்தபோது அதே போன்று கண் கூசும் நிலையை உணர்ந்தான். நிச்சயமாக அங்கு ஏதோ ஒரு தங்கமோ, வைரமோ, ரத்தினமோ மலை வடிவில் புதியதாக தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ணித் தேரை, ஒரு கணம் நிறுத்தி, கண்களை இடுக்கிக்கொண்டு  உற்றுப் பார்த்தான்.

இது தேவதச்சன் விஸ்வகர்மாவின் மாளிகையல்லவா ?  அது என்ன பொன்னால் ஆன தாமரைக் குளமா? அதில் இங்கும் அங்கும்  ஒரு பெண்  நீந்துகிறாளே ?  யார் அவள்? அடேடே ! அவள் தேக காந்தியிலிருந்தல்லவா அந்த ஒளி வருகிறது? என் பொன் கிரணங்களை மங்கச்செய்யும் அளவிற்கு அவள் தேக ஒளி மின்னுகிறதே ? யார் அவள்? 

juhi-parmar-in-shani-serial

சூரியனின் ரதத்தில் பூட்டியிருந்த ஏழு குதிரைகளும் சிலிர்த்துக் கொண்டன – தங்களுக்குள் சிரித்துக் கொண்டன. ரதம் மட்டும் தன் பாதையில் தொடர்ந்து சென்றது. சூரியனின் மனம் மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கும் குமரியின் முதுகுப்புறத்திலேயே தங்கிவிட்டது.

(தொடரும்)

 

நவம்:

எமபுரிப்பட்டணத்தில் அன்றைக்குத் தீபாவளிப் பண்டிகை. தீபாவளிக்கு முந்திய இரவு.

வாட்டசாட்ட கம்பீரத்துடன்  எமன் அட்டகாசமாகத் தன் அரியணையில் அமர்ந்திருந்தான். சித்திரகுப்தனுக்கும் கிங்கரர்களுக்கும்   நன்றாகத் தெரியும். எப்போதும் ஒருவித கோப முகத்துடனேயே இருக்கும் எமன் இன்று சிரித்து மகிழும் திருநாள். நரகபுரி,சொர்க்கபுரி இரண்டின் கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும். அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் அன்று பூலோகத்தைப் பார்க்கும் சந்ததர்ப்பம் கிடைக்கும். அவர்கள் வான வீதிக்கு வந்து அதன் விளிம்பில் நின்று கொண்டு பூலோகத்தில் நடக்கும் தீபத் திருநாளை மனம் திருப்தி அடையும்வரை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

“அதோ விளக்குகளை ஏற்றத்  தொடங்கிவிட்டனர்.பூமி ஜகஜ்ஜோதியாக மின்னுகிறது  பாருங்கள்! “ என்று கிங்கரன் ஒருவன் உரத்த குரலில் கூறினான். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று பூமியில் மக்கள் ஏற்றும் தீபம்  எமபுரிப் பட்டணத்தை நோக்கி  என்பதில் எமன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

“ தலைவரே! எம தீபம் ! எம தீபம் ஏற்றிவிட்டார்கள் ! ” என்று அவன் கணக்கன் சித்திரகுப்தன் கூறியதும் துணைத் தலைவன்  தர்மத்வஜன் அருகிலிருந்த கோட்டை மணியை அடித்தான். உடனே  நரகாபுரியிலிருந்து எண்ணை நிறைந்த கொப்பரையை  ஆயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் தூக்கிக் கொண்டு  வந்தார்கள். சொர்க்கபுரியிலிருந்து  ஆயிரம் அடி  நீளமுள்ள திரியும்  கொண்டுவரப்பட்டது. வழக்கமாக எமன் தன் கையாலேயே அந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவான்.

‘ இன்று ஏன் இன்னும் நம் தலைவர் தீபத்தை ஏற்ற முன்வரவில்லை? நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா? ‘ என்று அனைத்துக் கிங்கரர்களும் தவிக்க, தர்மத்வஜன் முன்வந்து கணீரென்ற குரலில் பேசினான்.

“ எனதருமை எமபுரிப் பட்டணவாசிகளே! நாளை சதுர்த்தசி ! தீபாவளிப்  பண்டிகை ! அதனால் இன்று பூலோகம் முழுதும் எம தீபம் ஏற்றி நம் தலைவரை வாழ்த்தி,  அவர் அருளை வேண்டி  பூஜை செய்கின்றனர். அதனை அங்கீகரிக்கும் வகையில் நாமும் இந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவோம்.  வழக்கமாக நம் தலைவரே  இந்த தீபத்தை ஏற்றி நமக்கெல்லாம் விருந்துகொடுப்பார். ஆனால் இன்று அவர் ஏற்றப்போவதில்லை. இந்த தீபத்தை ஏற்றுவதற்காக முதன் முறையாக நமது மதிப்பிற்குரிய விருந்தாளி ஒருவர் வருகிறார். அதோ அவரே வந்து விட்டார்! அவரை வாழ்த்தி வரவேற்போம்” என்றான் தர்மத்வஜன்.

வாசலில் அழகுத் தேவதையாக நின்று கொண்டிருந்தாள் யமுனா !!

(தொடரும்)

 


  • சூரியனின் பெருமையை உபபுராணமான சாம்ப புராணம் விவரிக்கிறது

 

 

 

 

 

குவிகம் இலக்கியவாசல் -24

 

 

வருகிற மார்ச் 25ந்தேதி நடைபெறும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு, நமது 24 வது நிகழ்வாகும்.

இரண்டு வருடங்களாக இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பெரிய சாதனை இல்லை என்றாலும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்துவந்த நிகழ்ச்சித் தொகுப்பாக உள்ளது.

நாம்  கடந்து வந்த பாதை : நிகழ்வைப் பற்றிய முழு விவரம் அறிய கோடிட்டவற்றைக் கிளிக்குங்கள் :

  1. இனிதே திறந்தது இலக்கிய வாசல்  – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு , ஜெயபாஸ்கரன்  – ஏப்ரல் 2015
  2. நான் ரசித்த ஜானகிராமன் – கலந்துரையாடல் – மே 2015
  3. திரு பிரபஞ்சன் நேர்காணல் – ஜூன் 2015
  4. சிறுகதைச் சிறுவிழா   – ஜூலை 2015
  5. முகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம் – நீரை அத்திப்பூ  – ஆகஸ்ட் 2015
  6. திரைப்பாடல்களில் இலக்கியம் – கலந்துரையாடல் –  செப்டம்பர் 2015
  7. அசோகமித்திரன் படைப்புகள் –  சாரு நிவேதிதா –  அக்டோபர் 2015
  8. பாண்டிய நெடுங்காபியம் – திருமதி ஸ்ரீஜா  – நவம்பர் 2015
  9.  நூல் அறிமுகம்- நேர்பக்கம் – அழகிய சிங்கர் –  டிசம்பர் 2015
  10. புத்தக உலகம் – ஒரு பதிவு – ரவி தமிழ்வாணன் –  ஜனவரி 2016
  11. பொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்- பாம்பே கண்ணன் – பிப்ரவரி 2016
  12. நாடகம் – “நேற்று இன்று நாளை”-  ஞானி – மார்ச்  2016
  13. முதலாம் ஆண்டுவிழா – இயல் -இசை – நாடகம்  : அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, வில்லுப்பாட்டு, ‘மனித உறவுகள்’ நாடகம் – ஏப்ரல் 2016
  14. நானறிந்த சுஜாதா” – சுஜாதா தேசிகன் + ரகுநாதன் – மே  2016
  15. லையில் சிக்கும் இலக்கிய மீன்கள்  – கலந்துரையாடல்  -ஜூன்  2016
  16. “கதை கேளு.. கதை கேளு” – சிறுகதை சொல்லும் நிகழ்வு – ஜூலை  2016
  17. சமீபத்தில் படித்த புத்தககங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்  – ஆகஸ்ட்  2016
  18. இன்று … இளைஞர் … இலக்கியம் –  செப்டம்பர்  2016
  19. இணையத்தில் கோமலின் சுபமங்களா – திருப்பூர் கிருஷ்ணன் -அக்டோபர்  2016
  20. எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்; ஜெயகாந்தன் ஆவணப்படம் – ரவி சுப்ரமணியன் – நவம்பர்  2016
  21. நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்- இந்திரன் -டிசம்பர்  2016
  22. லா ச ராவின் ” அபிதா”  – ஸப்தரிஷி & கலந்துரையாடல் – ஜனவரி 2017
  23. சிறுகதைகள் அன்றும் இன்றும் – ரகுநாதன் -பிப்ரவரி 2017
  24. இளைஞர் விரும்பும் இலக்கியம் – சரஸ்வதி  – மார்ச் 2017 (25ந்தேதி நடைபெறும்)

நந்து – ஜெயந்தி நாராயண்

 

Image result for srirangam streets in 1970s

“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே”

ஒவ்வொரு தடவையும் அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போய் பெருமாளை சேவிச்சு ராத்திரியே ஊர் திரும்பற மாதிரி ஆயிடறது. அதனால இந்த தடவை நாலு நாள் தங்கி, தண்ணி இருக்கோ இல்லியோ, கொள்ளிடம் போய் ஒரு குளியல், காட்டழகிய சிங்கர் கோயில், காலாற அம்மா மண்டபம், போற வழில ராகவேந்திர மடம், அப்புறம் தெற்கு வாசல்ல அந்த பக்கோடா கடை இருக்கான்னு பாக்கனும், ரெங்கராஜா தியேட்டர்ல ஒரு படம், தேவில ஒரு படம், அப்புறம் கிடைத்த நேரமெல்லாம் ஸ்ரீரங்கம் கோயிலையும் வீதிகளையும் சுத்திச்சுத்தி சுவாசிக்கனும்.

பாய்ஸ் ஹைஸ்கூல் போய்ட்டு அப்டியே மறக்காம ஆர் எஸ்வி பாத்துட்டு வரனும். என்ன மனுஷம்ப்பா.. கணக்கை அப்டியே ரத்தத்துல ஏத்தினவராச்சே.

யாரையும் துணைக்கு கூட்டிக்கல. தனிமைல அப்டியே பழைய நினைவுகளோட சஞ்சரிக்கறச்ச யார் கூடஇருந்தாலும் தொல்லைதான்.

“என்ன திடீர்னு” என்று கேட்ட கீதாவிடம்

“தினசரி வாழ்க்கைல இருந்து ஒரு மாற்றம் வேண்டிருக்கும்மா. ரொம்ப நாளா நினச்சுண்டு இருந்தேன். நேத்து சடார்னு தோணித்து. போயிட்டு வந்துடலாமேன்னு கெளம்பிட்டேன்”.

தானும் கூட வரட்டுமான்னு கீதா கேக்கல. எனக்கான இடத்தை அவளும், அவளுக்கானத நானும் ஆரம்பத்துல இருந்தே கொடுத்துப் பழகிட்டோம்.

திடீர்னு புறப்பட்டதால ட்ரெயின்லாம் யோசிக்கல. பஸ்ஸப் பிடிச்சு திருவானைக்கால இறங்கி ஆட்டோ பிடிச்சு ஸ்ரீரங்கம் வந்து ரூம் போட்டாச்சு.

பல்ல தேச்சுட்டு, தோள்ள துண்டப் போட்டுண்டு கொள்ளிடம் கிளம்பினேன். கீழ வாசல்கிட்ட போறச்ச,

“டேய் கண்ணா எப்டிடா இருக்க” என்று தோளில் தட்டியவரை திரும்பி பார்த்தேன்.
நெரச்ச தலையும் ஒரு மாச தாடியோட அடையாளம் தெரியல.

“என்னடா முழிக்கற? நாந்தாண்டா ரெங்கன்… ரெங்குடு”

அஞ்சாறு வருஷம் முன்னால ஊருக்கு வந்தப்ப பாத்தது. அதுக்குள்ள இப்டி கெழவனா போய் அடையாளமே தெரியலயே.

“ரெங்குடுவா என்னடாது தாடியும் வேஷமும்”

“சோம்பேறித் தாடிதான். வி.ஆர்.எஸ் கொடுத்துட்டேன்.. ஆபிஸா கொள்ள போறது தினமும் ஷேவ் பண்ண அதான் அப்டியே விட்டாச்சு. ஆமா, நீ எங்கடா இந்தப் பக்கம்?”

“சும்மா நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டு போலாம்னு”

“சும்மா நாலு நாளா?” நம்பிக்கையில்லாமல் பார்த்தான்.

“ஆபிஸ் இல்லியோ”

“அது எப்பவும்தான் இருக்கு. சும்மா ஒரு மாறுதலுக்கு”

“ஏகாதசிம் போது இப்டி நாலு நாள் வந்திருக்கப்டாதோ. பெருமாள நன்னா ஆயிரக்கால் மண்டபத்துல சேவிச்சுருக்கலாம். வேடுபறி மாதிரி கம்பைன் பண்ணிண்டு வந்திருக்கலாம்”

“இல்ல சாதாரண நாள்ல வந்து இங்க தங்கிட்டு போலாம்னுதான்” என்றவனை விசித்திரமாக பார்த்து விட்டு

“சரிடா நா வரேன். மத்யானம் கும்மோணம் கிளம்பறேன். மச்சினி பொண்ணுக்கு ரெண்டு நாள்ள கல்யாணம். நாந்தான் எல்லா ஏற்பாடையும் கவனிச்சுக்கறேன்”

அவன் போன பின் கிழக்கு ரெங்கா தாண்டி, கொள்ளிடம் நோக்கி போறச்ச கண்லபட்ட கழுதைய கூட பாசமா பார்த்தேன்.

எப்பவும் போல் கணுக்கால் தண்ணியில் கொள்ளிடம். அங்கே காய்ந்திருந்த புல்வெளியில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். நந்து போட்ட பவுன்ஸர்ல வடக்கு சித்திரை வீதி மொட்ட முரளி மண்டைல அடி பட்டு அவன் பொழச்சதே பெரிய விஷயமா போச்சு. அவனோட அப்பா வந்து எங்க வீதில போட்ட சத்தத்துல நானும் நந்துவும் அப்பலேர்ந்து கிரிக்கெட் மட்டயக்கூட தொடபயந்தோம்.

ஏதோ நினைவுகளுடன் தண்ணீரிலேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து விட்டு பின் நிதானமாக ஒரு குளியல் போட்டு கரையேறினா ஒரே பசி. ரூமுக்கு போய் ட்ரஸ்ஸ மாத்திண்டு சாப்டுட்டு அப்டியே படுத்தவன் நல்லா தூங்கிட்டேன்.

Srirangam olden days vaganam

ரெண்டு மணி நல்ல வெயில். இப்ப போனா பெருமாள் சேவையாகுமேன்னு கிளம்பினேன். பெருமாள் சன்னதில நல்ல கூட்டம். இது வேலைக்காகாதுன்னு கம்பத்தடி ஆஞ்சனேயர் கிட்ட சித்த நாழி உட்கார்ந்திருந்திட்டு அப்டியே ப்ரதக்‌ஷனமா வந்து சொர்க்கவாசல் கிட்ட பல்லிய பார்த்துட்டு தாண்டினப்ப, சின்ன வயசுல அந்த வழியா இராப்பத்தும் போது ஆழ்வார ஏளப் பண்ணிண்டு போனது ஞாபகம் வந்தது. அரைப் பரீட்சை லீவு, நானும் நந்துவும் கோயிலே கதின்னு இருப்போம். அப்ப மட்டுமே கிடைக்கற செல்லூரப்பம்க்கும் பல்லை உடைக்கும் உருப்படி என்ற பட்சணத்துக்கும் ஏக டிமாண்ட். தாத்தாக்கு கூட அம்மா அம்மியில் பொடி பண்ணிக் கொடுப்பா.

மெல்லிய புன்னகையுடன் வெளியேவந்து வலது புறமாகவந்து மேலப்பட்டாபிராமன், தன்வந்திரி  தாண்டி தாயார் சன்னதிக்குப் போனால், ப்ராட்டி, பெருமாள் அளவு ரொம்ப பிகு பண்ணிக்காமல் அருமையான தரிசனம் தந்தாள். மஞ்சக் காப்பை தாமரை இதழில் சுத்திக் கொண்டு வெளியே வந்தபோது பங்குனி உத்திர மட்டயடி உத்ஸவ நினைவுகளில் புன்னகையுடன் படிகளில் அமர்ந்தேன். தாயார் சன்னதி கோஷ்டி, பெருமாள் மேலே பழங்ளை விட்டு எறிந்த போது, ஒரு முறை பெருமாள் பக்கத்திலிருந்த என் மேல் சொடேரென்று மேலே விழுந்த பழக்கலவையும், அந்த வேகத்தில் அதிர்ந்து பிறகு அன்று முழுவதும் நினத்து நினைத்து நானும் நந்துவும் சிரித்துக் கொண்டே இருந்ததும் ஞாபகம் வர என் புன்னகை இன்னும் விரிந்தது.

“நீ..நீங்க கண்ணனில்ல”

லேசாக காதுகளிடை நரை, வைரத்தோடு, வைர மூக்குத்தி மினுமினுக்க, அந்த பளீர் சிரிக்கும் கண்கள். அட கமலா.

“கமலாதானே “

“ஆமா நீங்க எங்க இருக்கேள் இப்ப? ஆத்துல அழச்சுண்டு வரலியா” என்றபடியே, கண்கள் என்னைச் சுற்றித் தேடின.

“இல்ல நா மட்டும்தான் வந்தேன். சென்னைலதான் இருக்கேன். நீ எங்க இருக்க? எத்தன பசங்க?”

“ நா பெங்களூருல இருக்கேன். ஒரே பொண்ணு. போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு”

அவள்  ஏதோ கேள்விகள் கேக்க இயந்திரத்தனமா பதில் சொல்லிண்டே இருக்க மனசு பழய நினைவுகளில்.

நந்து ரொம்ப ஆசைப்பட்டான் கமலா மேல. ஆனா சொல்ல பயம். அவ பார்வைல இருந்து எங்களால எதுவும் கண்டு பிடிக்க முடியல. வேலை கிடச்சவுடனவேணா அம்மாகிட்ட சொல்லி அவாத்துல கேக்க சொல்லலாமாடான்னான். நா அவனுக்கு மேல பயந்தாங்குள்ளி. ஆமாண்டா வேலைகூட இல்லாம எப்டீன்னேன். அவன் வேலையோட வரதுக்குள்ள அவளோட கல்யாண பத்திரிகை வந்துடுத்து. அவ மனசுல என்ன இருந்ததுன்னு கடைசிவரை தெரியல. நந்துவோட சொல்லாமல்போன காதல் கதை முடிவுக்கு வந்தது.

“நந்து என்ன பண்றான்” னு அவ கேள்விக்கு நா பதில் சொல்றதுக்குள்ள,

“உன்னை எங்கல்லாம் தேடறது” என்றபடியே வந்த  இளம் பெண் அவளுடைய மகளாக இருக்கலாம்.

“சரி அப்புறம் பார்க்கலாம்” என்றபடியே நகர்ந்தாள்.

பழசை அசைபோட்டுண்டே ரொம்ப நேரம் தாயார் சன்னிதியிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு, வெளியேவந்து சாப்டுட்டு ரூமுக்கு வந்தேன்.

“சீசந்திக்கு காசு”

ரெண்டு பசங்க என்னைக் கடந்து சென்றார்கள். அட இன்னும் இந்தப் பழக்கம் இருக்கா?

Image result for sapparam in srirangam

நானும் நந்துவும் சின்ன வயசுல ஸ்ரீஜெயந்தியப்ப வீடு வீடா ஸ்ரீஜெயந்திக்கு காசுன்னுபோய் , வசூலித்த காசுல கலர் பேப்பர், க்ருஷ்ணர் படம், கோந்துல்லாம் வாங்கி, ஆத்துல இருந்த அட்டை, அத்தோட சிராய் அதிகம் இல்லாத விறகை தரையில் தேய்த்து மொழு மொழுன்னு ஆக்கி, அழகா ஒரு சப்பரம் பண்ணி தூக்கிண்டு, நாலு வீதியும் கோலாகலமா கத்திண்டே போனது ஞாபகம் வந்தது. என்ன க்ருஷ்ணருக்கு விளக்கு இல்லை, ஆத்துல இருந்த டார்ச்லைட்ட சப்பரத்துக்குள்ள வைக்கலாம்னு நைசா எடுத்துண்டு போனப்ப அண்ணா பார்த்து பிடுங்கிவச்சுட்டான். அதெல்லாம் அவ்ளவ் நாழி எரிஞ்சா பேட்டரி தீந்துபோயிடும்னு.

கார்த்தால எழுந்து விஸ்வரூப தரிசனம். பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் மற்றும் உபரி சன்னதிகள் சேவிச்சுட்டு கால் ஓஞ்சு கருட மண்டபத்துல உக்காந்தேன். அப்படியே அங்க ப்ரசாதம் வாங்கி காலை உணவ முடிச்சுண்டேன்.

இப்ப போனா ஆர் எஸ் வி ய பாக்கலாம். ட்யூஷன்லாம் முடிச்சு ஃப்ரீயா இருப்பார். போனப்ப சார் எங்கயோ வெளிலபோய்ட்டு அப்பத்தான் உள்ள நுழஞ்சார்.

“சார் நான் கண்ணன், கீழச் சித்திரை வீதி, 1986 பேட்ச்”

“ஆங்.. ஞாபகம் இருக்கு !உங்க செட்ல நீங்க ஆறு பேர் செண்டம் வாங்கினீங்களே”

“ஆமா சார் எல்லாம் உங்களாலதான்”

எப்பவும்போல லேசான வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா உங்க திறமை. வாங்கினீங்க”

இப்பவும் தினம் நாலு பேட்ச்க்கு ட்யூஷன் எடுக்கறார்.

அவர்கிட்ட அரை மணி பேசிட்டு போஸ்ட் ஆபிஸ்தாண்டி திட்டி வழியா சிந்தாமணிகிட்ட வரச்ச ஸைக்கிளில் போஸ்ட்மேன் கடந்து போனபோது சுப்பையா ஞாபகம் வருவதை தடுக்க முடியல. நீளமான தாடி, நெற்றியில் பளீரென்ற குங்குமம் விபூதி, இதுதான் சுப்பையா. போஸ்ட் இருக்கான்னு கேக்கற யாருக்கும் இல்லைன்னு சொல்ல மாட்டார். “நாளைக்கு கண்ணு” ம்பார்.. அப்ப கடிதம்தான் முக்கிய தகவல் சாதனமா இருந்தது. ஊர்லேர்ந்து மாமா, சித்தி போடற கடிதங்கள், வேலைக்கு காத்திருந்த அண்ணாவுக்கான நேர்முகக் கடிதம், இப்படி எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். திட்டி பக்கத்தில் ஒரு ஆத்துல வச்சு அவர் கட்ட பிரிச்சதுமே பாதி பேர் அங்க போய் தபால வாங்கிண்டு வந்திடுவோம்.

ஸ்ரீரங்கத்துல மட்டும் எப்பவுமே ஒரு நாளைக்கி 36 மணி நேரம் இருக்கறாப்ல எனக்கு தோணும். நீண்ட பகல். எனக்கும் வசதியா இருந்தது. வெயிலப் பாக்காம என் இஷ்டப்படி சுத்தினேன்.

Related image

மூன்று நாட்கள் வேகமா போய்டுத்து. நெனச்சபடியே காலாற ஸ்ரீரங்கம் முழுக்க நடந்து அந்த மண்ண சுவாசிச்சு கடைசியா வேணாம் வேணாம்னு நெனச்ச கீழச் சித்திரை வீதி – எங்காத்துக்கு பக்கத்துல வந்தேன். நிறைய மாறிப் போயிருந்தது. எங்காகம் அடையாளமே தெரியல. அடுத்தாப்ல நந்துவாகம் மாற்றம் ஏதுமில்லா அதே திண்ணையுடன் பூட்டப்பட்டு இருந்தது. நாங்க எல்லாம் வாடகைக்கு இருந்த வீடுகள்தான்னாலும், எங்களுடைய இளமைப் பருவம் முழுதும் கழிந்த அந்த வீட்டின்மேல் எனக்கு அலாதி ப்ரேமை.

பூட்டியிருந்த நந்துவாத்து வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன். ரொம்ப நாளா நானும் நந்துவும்தான் இப்டி நாலு நாள் இங்க வரனும்னு யோசிச்சுண்டு இருந்தோம்.

“இப்படி எனக்கு துணைக்கு வரமுடியாதபடி போய்ட்டயேடா. மூணு நாளா மனசுக்குள்ள பொங்கி வந்த துக்கம் பீரிட்டுவர, போன மாசம் ஆக்ஸிடெண்ட்ல இறந்துபோன நந்துவ நெனச்சு உடஞ்சு போய் அழ ஆரம்பித்தேன்.

பகல் ஒரு மணிக்கு யாருமில்லாத வீதியில் நிழலுக்கு படுத்திருந்த ஆடு என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டது.

தூர்தர்ஷன்

 

 

உங்களைத்  தூங்கவைத்து,  விழிக்கவைத்து,  மயக்கிய அந்தக் கால தடங்கலுக்கு வருந்திய (T V ) நிகழ்வுகள்!

 

 

மால்குடி நாட்கள்

 

ஆர் கே லக்ஷ்மணின் கார்ட்டூனுடன் வரும் ஆர். கே நாராயணனின்                ” மால்குடி டேஸ் ” – பார்ப்பது ஒரு சுகானுபவம். இந்த எபிசோடைப் பாருங்கள் !

 

தேசபக்திக்குப் புது விளக்கம் கொடுத்த பாடல் !

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

புனித தாமஸ்

 

சரித்திரம்…
மன்னர்களால் மட்டுமே பதியப்படுவதில்லை.
மன்னர்கள் பிறக்கின்றனர்.
சாதிக்கின்றனர்.
இறக்கின்றனர்.
சிலர் உலகை மாற்றும் செயல் செய்தனர்.
சரித்திரம் அவர்களை சுமந்தது.

சமயங்களாலும், இறையருளாளர்களாலும், குருமார்களாலும் உலகில் பெரும் மாற்றங்கள் விளைந்தன.
சில… காலவெள்ளத்தில் காணாமல் போயின.
சில… காலத்தைக் கடந்து மனித மனங்களில் குடியேறி… என்றும் இடம் பிடிக்கின்றன.

புத்தருக்குப் பிறகு இயேசுநாதரது வாழ்வும் தியாகமும் சரித்திரத்தைப் புரட்டி எடுத்தது.
இயேசுவின் புகழ்பரவ அவர் சீடர்கள் பெரும் பங்கேற்றனர்.
அப்படி முனைந்த ஒரு சீடரின் கதை இது..

முன்கதை:

இயேசுநாதர் ஜூதாவிற்குச் செல்லத் திட்டமிட்டார்.

அவரது சீடர்கள் – அங்கு அவருக்குத் தீங்கு விளையும் என்று அவரை எச்சரித்தனர்.

ஒரு சீடரான தாமஸ் :

“நாமும் செல்வோம்.. அவருக்கு எது நேர்ந்தாலும் நாமும் அவருடன் இருப்போம். துன்பங்களை எதிர்கொள்வோம்… மரணத்தைக் கண்டும் மயங்கிடோம்’ – என்றார்.

அந்தக் கடைசி நாளிரவு விருந்து (Last Supper) நடைபெற்றது.

இயேசு பேசினார்:

“நான் மறுபடியும் வருவேன். வந்து உங்களனைவரையும் என்னுடன் சேர்த்துக்கொள்வேன். என்னிருப்பே உங்களிருப்பாகும். நான் செல்லும் பாதையும் உங்களுக்குத் தெரியும்”

தாமஸ் வினவினார்:

“அந்த வழியை எவ்வாறு நாங்கள் அறிவோம்?”
இயேசு தாமசை நோக்கி:

“நானே வழி.. நானே உண்மை.. நானே வாழ்க்கை”

நாட்கள் சில நகர்ந்தன.

சரித்திரத்தின் அவரது மாபெரும் உயிர்த்தியாகம் சிலுவையில் நிகழ்ந்தது.

பின்னர் அவர் உயிர்த்தெழுந்தபோது அதை அவரது சீடர்கள் கண்டனர்.

தாமஸ் அன்று அங்கு இல்லை.

தாமசை சந்தித்த சீடர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றிக் கூறினர்.
தாமஸ் அதை உடனே அங்கீகரிக்காமல்
‘அதற்கு என்ன ஆதாரம்?’ – என்று வினவினார்.
“நான் இயேசுவின் கைகளில் அவரது நகங்களைப் பார்த்து, என் விரல்களால் அந்த நகங்களைத் தொட்டு, என் கரங்களால் அவரைத் தடவிப் பார்த்த பின்தான் நம்புவேன்”
இதுவே சீடர் தாமசுக்கு ‘சந்தேகிக்கும் தாமஸ்’ (Doubting Thomas) என்று பெயர் வரக் காரணம்!

ஒரு வாரம் சென்றது.

சீடர்கள் அனைவரும் ஒரு வீட்டில் கூடினர்.
தாமசும் அங்கிருந்தார்.
தாளிடப்பட்ட வீட்டில்…
திடீரென்று…
இயேசுநாதர் மறு தரிசனம் தந்தார்.
“அமைதி என்றும் உங்கள் அனைவரையும் தழுவட்டும்” – என்றவர்.
தாமஸ் பக்கம் திரும்பி:
“தாமஸ்…எனது உடல் காயங்களைத் தொட்டுப் பார்ப்பாயாக’ என்றார்.

மேலும்.. இயேசுநாதர் முறுவல் கொண்ட முகத்துடன்:
“என்னைப் பார்த்ததால் நீ என்னை நம்புகிறாயா? என்னைக் காணாமல் இருந்தாலும் என்னை நம்புகிறவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!”

வெட்கம்கொண்ட தாமஸ் உண்மையை உணர்ந்தார்.

‘என் தலைவன்… என் இறைவன்…’ என்று புளகித்தார்.
இயேசுவின் தெய்வத்தன்மையை தாமஸ் முதன் முதலில் உலகில் வெளிப்படுத்தினார்.

பின்னாளில்,

இயேசுவின் தாய் ‘மேரி மாதா’ – மரணம் அடைந்ததை சீடர்கள் ஜெருசலேத்தில் கண்டனர். அச்சமயம் தாமஸ் இந்தியாவில் இருந்தார். மேரியை அடக்கம் செய்த பேழையில் தாமஸ் அதிசயமாக அனுப்பப்பட்டு அங்கு மேரி மாதா சுவர்க்கம் செல்லும் காட்சியைக் கண்டார். மேரி மாதாவின் இடையிலிருந்து அவரது
அரைகச்சை கீழே விழுந்தது. தாமஸ் அதை எடுத்துக் கொண்டார்.
இப்பொழுது இவரது கூற்றை மற்ற சீடர்கள் நம்பாது ‘சந்தேகித்தனர்!’!

சந்தேகம் ஒரு தொத்து வியாதி போலும்!!

பிறகு காலிப் பேழையையும் , அந்த அரைக்கச்சையையும் கண்ட பின் சந்தேகம் தீர்ந்தனர்!

(மேரி மாதா சுவர்க்கம் செல்லும் காட்சி)

தாமஸ் இந்தியா சென்று பணி செய்வதில் விருப்பமில்லாமல் இருந்தார்.
இயேசுநாதர் அவர் கனவில் வந்து:
‘அஞ்சாதே தாமஸ்! இந்தியா சென்று நமது வாக்கைப் பரப்புவாயாக. எனது அருள் என்றும் உனக்கு உண்டு’.

வருடம்: 52 AD

தாமஸ் நான்கு வருடம் சிந்து நாட்டில் காலம் கழித்தார்.

பின் இந்தியாவின் கேரளப் பகுதியில் மலபார் கடற்கரைச்         சாலையை வந்தடைந்தார். அங்கு ஆறு வருடங்கள் வசித்தார். அங்கு மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட தாமஸ், பின்னர் கடல் வழியாக மயிலாப்பூருக்கு வந்தார்.

ஒரு நாள்… தாமஸ் மயிலையில் (இந்நாளின் சாந்தோம்) கடற்கரையில் அமர்ந்து தவத்தில் இருந்தபோது….
மாபெரும் மரக்கட்டைகள் அலைகளால் தள்ளப்பட்டு…
கரையில் ஒதுங்கின.
மன்னன் மகாதேவனுக்கு இச்செய்தி உடன் அறிவிக்கப்பட்டது.
அவர் யானைகளுடன் அங்கு வந்தார்.
தாமஸ் புன்முறுவலுடன் இக்காட்சியைக் கண்டு கொண்டிருந்தார்.
பல யானைகள் பலவாறு முயன்றும் அந்த மரக் கட்டைகளை அசைக்கவும் இயலவில்லை.
தாமஸ் தனது அரைக்கச்சையை உபயோகித்து அந்த கட்டைகளை நீரிலிருந்து கரைக்கு இழுத்தார்.
மன்னன் வியப்புக்கு ஆளானான்.
‘இந்த மரக்கட்டைகளை உங்களுக்குத் தானமாகத் தந்தேன்” – மன்னன்.
தாமஸ் அந்த கட்டைகளை வைத்து ஒரு சிறிய தேவாலயத்தைக் கட்டினார்.

மன்னருக்கு தாமசை பிடித்திருந்தது.
ஆனால் அவரது மந்திரிமார்கள் அவரை விரும்பவில்லை.
அவர்களது தொந்தரவு தாங்கமுடியாமல் நான்கு கல் தொலைவிலிருந்த குன்று ஒன்றில் (இன்றைய செயின்ட் தாமஸ் மவுண்ட்) ஒரு குகையில் குடியேறினார்.

இங்கும் தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே சைதாப்பேட்டை அருகில் இருக்கும் சின்னமலையில் சில காலம் மறைந்து வாழ்ந்தார். அப்போது அருகில் இருக்கும் பெரியமலை என்று அழைக்கப்பட்ட இன்றைய செயின்ட்தாமஸ் மவுண்ட்டிற்குச் சென்று ஜபம் செய்வார்.

இன்றும் அந்தக் குகையின் கற்சுவற்றில் தாமசின் கை விரல்கள் பதிந்த தடயம் உள்ளாதாம்.
அன்று அங்கு ஒரு அதிசய நீரூற்று..
அவர் மீது நம்பிக்கை கொண்டு வருபவர் அந்த ஊற்றின் நீரைப் பருகினால் அவர்கள் தங்கள் குறை நீங்கப்படுவார்களாம் – உடல் நலம் பெறுவார்களாம்.

டிசம்பர் 21 , 72 AD :

மயிலாப்பூர் காளி பூசாரிகள் தாமசிடம் கோபம் கொண்டனர்.
தங்கள் தெய்வத்தை அவர் அவமதிப்பதாகக் கருதினராம்.
மேலும் தங்களைப் பின்பற்றுபவர்களை மத மாற்றம் செய்தாரென்றும் குற்றம் சாட்டினர் .
மதப்பூசல் தொன்று தொட்டு வந்துள்ளது.
ஈட்டிகளாலும், கற்களாலும் அந்தப் பூசாரிகள் அவரைக் கொன்றனர்.
தாமஸ் மயிலாப்பூர் மன்னனால் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றார். அவ்வாறு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமே இன்றைய சாந்தோம் ஆகும்.
சில நாள் கழித்து – மன்னன் மகாதேவனின் மகன், இளவரசன் பெரும் நோயுற்றிருந்தான். தாமசின் சவப் பேழையைத் திறந்து அந்த எலும்பை வைத்து மன்னர் தன் மகனைக் குணப்படுத்தினாராம்.

Martyrdom of St. Thomas, by Peter Paul Rubens, dating to about 1636. Credit: Ophelia2, Wikimedia Commons

(13ம் நூற்றாண்டில் வந்த மார்கோபோலோ – மயிலைத் துரத்திய வேடன் ஒருவன் தவறுதலாக எய்த அம்பு தாமசைக் கொன்றது என்று எழுதியுள்ளார்)
தாமசின் எலும்புகள் மயிலாப்பூர் கொண்டு வரப்பட்டு அவர் எழுப்பிய தேவாலயத்திற்குள்ளே புதைக்கப்பட்டது.

தாமஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது மயிலாப்பூரில், அவரை மதித்து தமிழக அரசனால் கட்டப்பட்ட ஆலயம் – கபாலீஸ்வரர் கோவில். அந்தக் கோவிலை கி.பி 16ஆம்  நூற்றாண்டில் வந்த போர்சுகிசியர்கள் இடித்துவிட்டு சாந்தோம் தேவாலயத்தினை கட்டுகின்றனர். அவ்வாறு இடித்த கபாலீஸ்வரர் கோவிலை வேறு இடத்தில் கட்டுகின்றனர்.
(எப்புடி? எதையும் நம்பிப் பொங்கி எழவேண்டாம்!
எது எவ்வளவு உண்மையோ?
‘யாரோ’ அறிவர்?
கதை கேட்டோமோ ..காப்பி குடித்தோமா என்று இருக்க வேண்டும்.. சரியா!!)

போர்த்துகீசியர்கள் புனித தாமஸின் நினைவாகத்தான் மயிலாப்பூருக்கு அருகில் அமைத்துக் கொண்ட தங்களின் இருப்பிடத்திற்கு சாந்தோம் என்று பெயரிட்டனர். அதாவது புனித தோமா (SAN+THOME) என்று அர்த்தம். ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறியபிறகு, செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வந்து வழிபட வசதியாக ஒரு சாலை வேண்டும் என்று நினைத்ததின் விளைவுதான் இன்றைய மவுண்ட்ரோடு… அண்ணா சாலை!
இந்த மலையைச் சுற்றிலும் நிறைய ஐரோப்பியர்கள் வசித்ததால் இதனை உள்ளூர் மக்கள் பரங்கி மலை (பரங்கியர் வசிக்கும் மலை) என்று அழைத்தனர்.

சரித்திரம் இப்படி பல மணமுள்ள மலர்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
இந்த சிறு மலர்களைச் சேர்த்து மாலையாக்குவதே நமது நோக்கம்.
தவறும், குறையும் இல்லாது சரித்திரம் எழுதுவது என்பது நடவாதது.
ஆகவே … நண்பர்களே… பொறுத்தருளுங்கள்…

வேறு மலர் தேடி இந்த வண்டு பறக்கிறது…

சுட்ட இட்லி – நன்றி வாட்ஸ் அப்

Image result for idli imagesImage result for idli images

Related image

 

இட்லியே ! இட்லியே ! கீழே கொடுத்துள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம்  கூறு! 
Optimism
Pessimism
Feminism
Journalism
Imperialism
Postmodernism
Nationalism
Pacism
Socialism
Racism
Realism
Capitalism
and
Escapism

  • இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism…
  • இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism…
  • இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism…
  • இட்லிய ‘சுட்டது’ யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism…
  • இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்குன்னு சொன்னா Imperialism…
  • இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism…
  • இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா
    Nationalism…
  • இட்லி உனக்கு கிடையாதுன்னா Pacism…
  • இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.
  • இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.
  • இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism…
  • இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.
  • இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!

அட    அட    அட 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 09. புத்த ஸ்தூபி

வந்தியத்தேவன், திருமலை, செவ்வேந்தி மூன்று நபர்களும் ஏறிய புரவிகள் அனுராதபுரத்தின் தென்மேற்குத் திசையில் விரைந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவன் பயணத்தின் நோக்கத்தை செவ்வேந்திக்கு விளக்கிக்கொண்டே வந்தான். முடிவில் அவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியை வந்தடைந்தார்கள். அங்கிருந்து ஒற்றையடிப் பாதையில் சிறிது நேரம் சென்றார்கள். அது ஒரு மைதானத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அங்கு அந்த பிரம்மாண்டமான வட்ட வடிவமான உயர்ந்த சுவர்கள் எழுப்பிக் கட்டப்பட்ட கோவில் ஒன்றைக் கண்டார்கள். அதன் நடுவே மிகவும் உயரமான ஒரு புத்த ஸ்தூபியும் இருந்தது. கோவிலைச் சுற்றிலும் நிறைய ஜன்னல்கள் காணப்பட்டன. ஒரே ஒரு வாயில் மட்டும் இருந்தது. மைதானத்தைச் சுற்றிலும் காட்டுச் செடிகளும், புதர்களும் தாறுமாறாய் வளர்ந்து, கவனிப்பார் அற்று மண்டிக் கிடந்தன. அது இந்தப் பகுதிக்கு வந்து போவோர் மிகக் குறைவு என்பதைத் தெரிவித்தது.

கோவிலை அடைந்ததும் மூவரும் குதிரையிலிருந்து இறங்கி முகப்பு வாயிலுக்கு வந்துசேர்ந்தார்கள். அதிசயமாகக்  கதவு திறந்திருந்தது! சுற்றுமுற்றும் பார்த்த அவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். ஒரு புத்த பிட்சு உள்ளிருந்து வெளியே வந்து,

‘புத்தம் சரணம் கச்சாமி,                                                                                                 தர்மம் சரணம் கச்சாமி,                                                                                                 சங்கம் சரணம் கச்சாமி’

என்று கூறி அவர்களை வணங்கிவிட்டு சுவற்றில் மாட்டியிருந்த தீப்பந்தத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியில் சென்றார். இருவரும் வெளியில் வந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது அவர் கோவிலில் இருந்து வெளிநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள்.

வந்தியத்தேவன் “இந்த இடத்தைச்  சுத்தம் செய்து கவனித்துவரும் புத்த பிட்சு போலும்! திறந்து வைத்துவிட்டு அவர் இருப்பிடத்திற்கு செல்லுகிறார்! நல்ல சமயம். அவர் திரும்பி வருவதற்குள் நமது காரியத்தை முடிக்க வேண்டும்” என்றான்.

செவ்வேந்தி தீப்பந்தத்தை சுவற்றிலிருந்து எடுத்து கையில் உயரத் தூக்கியபடி வர, அனைவரும் கோவிலினுள் அடியெடுத்து வைத்தார்கள்.

கோவிலின் வட்டவடிவமான சுவற்றில் வர்ணக் கற்களால் ஒட்டப்பட்டு வரைந்த சித்திரங்கள் மேலும் கீழுமாக பெரியதும் சிறியதுமாக நிறைய காணப்பட்டன. முதலில் ஸ்தூபியைச் சுற்றி ஒரு தடவை வலம் வந்து முன்னோட்டம்  விட்டார்கள்.

சித்திரங்கள் மிகவும் அபூர்வமாகவும் அற்புதமாகவும் காணப்பட்டன. சில புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்தன. சில ஜாதகா கதைகளிலிருந்து கூறப்படும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தன. வேறு சிலவோ புத்தரின் முந்தைய அவதாரங்களான போதிசத்வாவைப் பற்றி இருந்தன. ஒரு சில எதைப் பற்றி வரையப்பட்டிருக்கிறது என்று புரியாமல் இருவரும் விழித்தார்கள்! கடைசிப் பகுதி வெறுமையாக சித்திரங்களற்று இருந்தது.

“இந்த பெரும் சாதனையைச் செய்தவர்கள், இறுதிப் பகுதியை வரையாமல் விட்டதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும்” என்றான் வந்தியத்தேவன் மற்ற இருவரையும் நோக்கி.

மறுபடியும் இருவரும், செவ்வேந்தி முன் செல்ல இரண்டாவது சுற்றைத் தொடங்கினார்கள்.

“புத்தர், ஜாதகா, போதிசத்வா போன்ற சித்திரங்களை ஒதுக்கி வேறு ஏதாவது மாறுதலாகத் தென்படுகிறதா, என்று பார்’ என்று வந்தியத்தேவன் திருமலையிடம் சொன்னான்.

கடைசியாக வெறுமையாய் இருந்த இடத்திற்கு முந்தைய பகுதியை அவர்கள் வந்தடைந்தார்கள். அங்கு வரையப்பட்டிருந்த கிரீடம் ஒன்றை வந்தியத்தேவனின் நுணுக்கக் கண்கள் கண்டு பிடித்தன. அதை திருமலையிடம் கூறினான். இருவரும் அடுத்திருந்த சித்திரங்களை ஆழமாக ஆராய ஆரம்பித்தார்கள்.

அந்த விசித்திரச் சித்திரங்கள் அவர்கள் எதிர்பார்த்து வந்த மர்ம செய்தியை தெரியப்படுத்துவதற்காகவே வரையப்பட்டிருப்பதாக இருவரும் முடிவு கட்டினார்கள்! இதனை மறுபடியும் கருத்திருமனின் கூற்றிலிருந்து நினைவுபடுத்திப் பார்த்தான் வந்தியத்தேவன்

கிரீடத்திற்கு அருகில் கழுத்தில் அணியும் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம் ஒன்று வரைந்திருந்தது. யானைமேல் தேவர் ஒருவர் அமர்ந்திருந்தார். யானை வெள்ளை நிறமாக இருந்தது. அந்த யானை மேகத்தில் பறப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. பின்னர் மன்னர் ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். யானையிலிருந்து இறங்கியிருந்த தேவர் மன்னருக்கு முதலில் கிரீடத்தைச்   சூட்டினார். பிறகு அந்தஆபரணத்தை மன்னர் கழுத்தில் அந்த தேவரே அணிவிப்பது போல் வரையப்பட்டிருந்தது.

அதன் பிறகு புத்தர்பிரான் மேகத்தில் பறந்து வந்துகொண்டிருப்பதைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. பின்பு புத்தர் அலைகள் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பில் இறங்கியிருப்பதைத் தெரிவித்தது. தொடர்ந்து வரையப்பட்டிருந்த சித்திரத்தில் அதே நிலப்பரப்பும், அதில் இரண்டு கொம்புகளுடன் கூடிய பூதம் ஒன்றும் வரையப்பட்டிருந்தது. ஆனால் புத்தர் இதில் இல்லை. இறுதியில் கடற்கரை ஓரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட ஒரு சிறிய வீடு. சித்திரங்கள் இதோடு முடிவடைந்தன.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சித்திரங்கள் சொல்லும் செய்தியை அறிந்துகொள்ள முயன்றார்கள். சிறிது நேரம் சென்றது.

வந்தியத்தேவன் “உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று திருமலையிடம் கேட்டான்.

“நன்றாகவே புரிகிறது.ஆனால்.. சில புதிர்களும் உள்ளன” என்றான் திருமலை.

“சரி; வா!மீண்டும் அதை உறுதிப்படுத்திக் கொள்வோம்” என்று கூறிய வந்தியத்தேவன் ஒவ்வொன்றாகப் பார்த்து ஆரம்பித்தான்.

“கிரீடம்தான் மணிமகுடம் என்றும், ஆபரணம்தான் இரத்தின ஹாரம் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது!”

வந்தியத்தேவன் வெண்மையான யானையைச் சுட்டிக்காட்டி “இது தேவேந்திரனின் வாகனமான ஐராவதமாக இருக்கலாம்!” என்றான்.

“அப்படியானால் அதில் அமர்ந்து பறந்து வருபவர் தேவேந்திரனாக இருக்க வேண்டும்” என்று முடித்தான் திருமலை.

“நன்கு!கண்டுபிடித்துவிட்டாய்! மன்னனின் பின்பக்கத்தில் கொடி ஒன்று பறப்பதை நோக்கினாயா? அதில் மீன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பார்! மன்னர் பழம் பெருமை வாய்ந்த பாண்டியனாய் இருக்க வேண்டும்.”

“மணிமகுடத்தைச் சூட்டி தேவேந்திரன் இரத்தின ஹாரத்தை பரிசாக அணிவிப்பது இப்போது தெளிவாகிறது!”

‘ஆம்!இப்போது புத்தர் முதன் முதலில் பறந்து வந்து ஈழத்தில் இறங்கியதாகக் கூறப்படும் இடம் இது என்று நினைக்கிறேன்.! இடம் அலைகள் சூழ்ந்த நிலப்பரப்பைக் குறிக்கிறது! இடத்தின் பெயர் கூட..”

“தீவு!ஆம். இப்போது ஞாபகம் வருகிறது. போத தீவு!”

“அடுத்ததை நோக்கினாயா?அதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் இரட்டைக் கொம்பு உள்ள பூதம்.. இது என்னவாக இருக்கும்?”

“அதே போத தீவில் இருப்பதாக வரையப்பட்டிருக்கிறது. பூதத்திற்கும் போத தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!”

‘சந்தேகமில்லை!போத தீவின் பெயர் நாளடைவில் மருவி பூத தீவாக மாறியதைத்தான் இது தெரிவிக்கிறது” என்றான் வந்தியத்தேவன்.

மறுபடியும் வந்தியத்தேவன் “பொக்கிஷங்கள் பூதத் தீவில்தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் எனக்கு ஒரு சந்தேகம். அனுராதபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் இந்த புத்த ஸ்தூபியும், பூத தீவும் நம் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. அப்படியிருக்க மகிந்தன் ஏன் அதை இந்த இடங்களில் கொண்டு வந்து எப்படி வைத்தான்? அதுதான் புரியவில்லை!” என்றான்.

“அதுதான் மகிந்தனின் மிகப்பெரிய சாதுர்யம்!! இதை வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும். பொக்கிஷங்கள் சோழர் கட்டுப்பாட்டு இடங்களில் இருக்க வாய்ப்பில்லை என்றும் மகிந்தன் பிரதேசங்களிலேயே தேட முயல்வார்கள் என்பதுதான் அவனுடைய சித்தாந்தம்!” என்று பதிலளித்த திருமலை “ஆனால் பூத தீவில் எங்கு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை சித்திரங்கள் விளக்கவில்லையே” என்றான்.

வந்தியத்தேவன் “கடற்கரையில் தனித்திருக்கும் வீட்டை கவனித்தாயா? உன் கேள்விக்கான விடை அதற்குள்ளிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்றான்.

“சரி; மேற்கொண்டு என்ன செய்வது?அனைத்துச் சித்திரங்களையும் பார்த்தாகிவிட்டது. அடுத்து..?” என்று வினா எழுப்பினான் திருமலை.

“மீண்டும் பயணம்தான்.வா, செல்வோம்” என்று திரும்பினார்கள் மூவரும்.

செவ்வேந்தி சுவற்றில் தீப்பந்தத்தைப் பொருத்தினான். இருவரும் இதுவரை சேகரித்த விவரங்களில் திருப்தி அடைந்தவர்களாய் வெளியில் வருவதற்கும் பிட்சு இருப்பிடத்திலிருந்து திரும்பி வருவதற்கும் சரியாய் இருந்தது. நன்றி கூறிவிட்டு மூவரும் புரவிகளில் ஏறி மாதோட்டத்தை வந்தடைந்தார்கள்.

(தொடரும் )

ராவெசு கவிதைகள்

காலம் தந்த பாடமிது

Related image

 

கடற்கரையோரம் காத்தது
மடத்தனமோ என்று நினைத்தேன்
சடுதியில் நீ வந்தாய்
முடிவொன்றைத் தந்தாய்
இதுதானா என்றதற்கு
உன்மௌனம் மொழியானது
மணல்தட்டி எழுந்தாய்
தலைதிருப்பி நடந்தாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலும்
சிற்பமாய் நின்றது
மேகங்கள் தடுமாறி
கும்மிருட்டு சூழந்தது
எதிர்காலக் கனவுகள்
எதிரெதிராய்ப் போயின
காலங்கள் நின்றன
ஆயினும் ….
காலங்கள் கடந்தன

வையகம் நின்றதோ
பையத்தான் போனதோ
வாழ்வின் விளக்குகள்
தாழ்ந்தே போயினவோ
கண்களின் நீர்த்துளிகள்
மண்ணிலே விழுந்தன

காற்றுவந்து சொன்னது
மாற்று மருந்தானது
கண்ணீரில் கரையாதே
கண்ணீரில் கரையாதே

காலம் தந்த பாடமிது.

 

புது உணவு அலாதி

பலப் பல உணவுவகை
புதிதான வழிமுறை
தோழியர் பலரிடம் கேட்டு
சஞ்சிகை பலபடித்து
தொலைக் காட்சியில் வந்ததை
அழகாய்க் குறிப்பெடுத்து
பக்குவமாய்த் தட்டில் வைத்து
நீட்டிடுவாள் நம்முன்னே

உப்புமாவைத்தான்
ஆம்
அதே உப்புமாவைத் தான் !

உணர்வாய் நீயே!!

கடிகாரம் – அழகியசிங்கர்

 

வீட்டில் கொஞ்ச நாட்களாய் கடிகாரம் அசையாமலிருந்தது.  கடிகாரம் சுவரில் சார்த்தியிருந்ததால் அசையாமல் தான் இருக்கும்.  ஆனால் பெயருக்குத்தான் அது கடிகாரமாக இருந்தது.  அதன் முட்களும் அசையாமலிருந்தன.  மாதக்கணக்கில் இப்படி அசையாமலிருந்த கடிகாரத்தை, வீட்டிலுள்ளவர்கள் அலட்சியப் படுத்தினார்கள்.

 ஆனால் அந்த வீட்டிலுள்ள வயதான பெண்மணி மட்டும் ‘ இதை எடுத்துக்கொண்டுபோய் ரிப்பேர் செய்யக் கூடாதா? ‘ என்று அடிக்கடி முணுமுணுக்காமலிருக்க மாட்டாள்.  எல்லார் காதுகளிலும் அவள் முணுமுணுப்புகள் விழுந்தாலும், யாரும் அவள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த வீடு இருந்த தெருவிலேயே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடையும் இருந்தது.  கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.  யார் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போய் அங்கு கொடுப்பது என்பதுதான் கேள்வி.

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை

 

விசித்திர உறவு (பொன் குலேந்திரன்)

Image result for two ladies in srilanka getting married and their suicide

 

 

 

 

 

 

 

Image result for polgahawelaகொழும்பிலிருந்து வடக்கே நாற்பத்தைந்து மைல் தூரத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த கிராமம் பொல்ககாவலை. அக்கிராமத்தை வடக்கே போகும் ரயில் பிரயாணிகளில் தெரியாதவர்கள் இல்லை என்று துணிந்து சொல்லலாம்.

Sri Lanka railway Map

பெயருக்கேற்ப தென்னந்தோட்டங்கள் நிறைந்த கிராமம் அது. பிரபல்யமான புகையிரதச் சந்தி, அக்கிராமப் பெயரை பலர் மனதில் பதிய வைத்து விட்டது. புகையிரத நிலையத்தில் நின்று கிழக்கே பார்த்தால் பனிபடர்ந்த மலைத்தொடர்களையும், தேயிலைத் தோட்டங்களையும், மேற்கே பார்த்தால் தென்னம் தோட்டங்களையும் வயல்வெளிகளையும் காணலாம். கொழும்பு, கேகாலை, குருணாகலை ஆகிய நகரங்களில் இருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும் இடமது. கண்டிக்கும், பதுளைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் போகும் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய புகையிரத நிலையமது.

Related image

ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மாடாக உழைத்த மலைநாட்டுத் தமிழர்கள், குடியுரிமையிழந்து, புலம்பெயர்ந்து தம் சொந்த மண்ணாம் தமிழ் நாட்டுக்குப் போவதற்காக வந்து மூட்டை முடிச்சுக்களுடன் கடும் குளிரில் தலைமன்னார் போகும் இரவு மெயில் ரயிலின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடம் பொல்ககாவலைப் புகையிரத நிலையம். பல இனக்  கலவரங்களின்போது யாழ்ப்பாணம் ரயிலில் செல்லும் தமிழ் பிரயாணிகளை வழிமறித்து அடித்து, அவர்களுடைய பொருட்களை சிங்களவர்கள் கொள்ளையடித்ததும் இந்தப் புகையிரத ஸ்தானத்தில்தான். பழமையில் ஊறின பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் கிராமம். அத்தகைய கிராம மண்ணில் இரு ஜீவன்களுக்கிடையே விசித்திரமான உறவு மலர்ந்து கிராமவாசிகளின் ஏளனமான பார்வைக்கு விருந்தாகுமென எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அக்கிராமத்தில்தான் எங்கள் கதையின் கதாநாயகி குணவதி நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தாள். கதாநாயகி என்பதை விட கதாநாயகன் என்று சொல்வதே மிகப் பொருத்தமாகும். வயதுக்கு அதிகமான வளர்ச்சி. அவளுடையதோற்றமும் நடையும் குரல் வளமும் ஆண்களைப் போன்றது எனக் கிராமத்தவர்கள் பலர் வர்ணித்தது உண்டு. அவள்  பேசும்போது அவளின் குரல் ஆண் குரலா அல்லது பெண் குரலா என்று வித்தியாசம் கண்டு பிடிப்பது மிகக் கடினம். இந்தமாற்றத்தை அவளுக்கு எட்டு வயதாயிருக்கும்போதே பெற்றோர்கள் அவதானித்தனர். பெண்மைக்கு வித்தியாசமான குணாதிசயங்களையுடைய அவளை ஏளனமாக அவளுடன் படித்த சக மாணவிகள் விமர்சித்ததுண்டு.

பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நாடகங்கள் மேடை ஏறும் போது ஆண் வேஷத்துக்கு முதலில் தெரிந்தெடுக்கப்படுபவள் குணவதிதான். அவளைக் “குணா” என்ற ஆண் பெயர் கொண்டுதான் அவளது தோழிகள் அழைப்பார்கள். அதைக் குணவதி பெரிதாக எடுத்துக்  கொள்வதில்லை.  தன் ஆண்மைக் குணம் தனக்கு பாதுகாப்பிற்காகக் கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்பது அவள் கருத்து. மற்றைய பெண்களைவிடத் தன்னிடம் பழக ஒரு வித பயமும் மரியாதையும் மாணவர்கள் வைத்திருந்ததை அவளால் அவதானிக்க முடிந்தது. மாணவர்களுடன் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் மாணவிகள் முதலில் குணாவைத் தான் முன்னின்று வாதாடி பிரச்சனையைத் தீர்த்து வைக்க அனுப்புவார்கள். அவளின்  ஆண்மைத் தோற்றத்தினால் சில  மாணவிகள் அவள் மேல் விளக்க முடியாதளவுக்கு அன்பு வைத்திருந்தார்கள்.

“ எடியே குணா! நீ மட்டும் உண்மையில்  ஒரு ஆணாக இருந்திருந்தால் நீதாண்டி என் வருங்காலக் கணவன் என்று” சிலமாணவிகள் நகைச் சுவையாகச் சொல்லுவார்கள். ஒரு பெண்ணுக்கேற்ற மார்பக அமைப்பு, மெதுமை அவளுக்கில்லாதது சக மாணவிகளுக்கு ஆச்சரியமாயிருந்தது.

………

புகையிரத நிலையத்துக்கருகே உள்ள தபாற் கந்தோரில் தபாற்காரனாகப் பல வருடங்களாக வேலை செய்யும் குணபாலாவின் இரு பெண்குழந்தைகளில் மூத்தவள் குணவதி. குணாவின் தாய் குணாவுக்கு எட்டுவயதாக இருந்த போது விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, இரு குழந்தைகளையும் குணபாலாவின் கையில் பாரம் கொடுத்து விட்டு இவ்வுலகையிலிருந்து விடைபெற்றுவிட்டாள். அதன் பின் குணபாலாவின் விதவைத் தாய் சீலாவதியின் மேல் தான் இருகுழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு விழுந்தது. குணாவின் தங்கை ஞானாவதி ருதுவாகும்போது வயது பன்னிரண்டு. அப்போது பதினைந்து வயதான குணா ருதுவாகாமல் இருந்தது சீலாவதிக்கும் குணபாலாவிற்கும் பெரும்கவலை. கிராமத்து சாஸ்திரியாரிடம் அவளது சாதகத்தைக் கொண்டு போய்க் காட்டிக் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் அவர்களைத் திடுக்கிட வைத்தது.

“ஆணாகப் பிறக்க வேண்டிய இச்சாதகக்காரி ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாவின் நிமித்தம் இப்போது பெண் பிறவி எடுத்திருக்கிறாள். இதனால் இப்பிறவியில் இவளுக்குச் சில எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து, உங்கள் குடும்பத்துக்கு அவப்பெயர்கூட வரலாம். நீங்கள் தினமும் பன்சலாவுக்குப்  போய் புத்தபகவானைத் தியானித்து உங்கள் மகளைக் காப்பாற்றும்படி வேண்டுங்கள். இவளுக்குத் திருமணம் நடக்கும் ஆனால் …..” என்று முழுவதையும்விளக்கமாய் கூற விரும்பாமல் அரை குறையாகச் சொல்லிவிட்டு சாதகத்தைத் திருப்பி சீலாவதியின் கையில் கொடுத்துவிட்டார்;   சாஸ்திரியார். காலதாமதமாகி பதினேழு வயதில் குணவதி ருதுவானாள்.

………

பொல்ககாவலை அரசினர் மஹாவித்தியாலத்தில் உயர்தர வகுப்பில் படித்துக்   கொண்டிருந்தபோது அவளுக்கு எதிர்பாராத விதமாக ஒரு கிராமப் பள்ளிக் கூடத்திலிருந்து மேற்படிப்பிற்காக புலமைப்பரிசு பெற்று அந்தப்பாடசாலைக்கு மாற்றலாகி வந்த “மல்லிக்கா” வின் அறிமுகம் கிடைத்தது. படிப்பில் மல்லிகா வெகு கெட்டிக்காரி. அதுவுமில்லாமல் கலையார்வம் உள்ளவள். மல்லிகாவும் குணாவும் முதற் தடவையாகச் சந்தித்தபோது ஏதோ பலவருடங்களாக பழகியது போன்ற ஒரு உணர்வினால் அவர்கள் இருவரும் ஈர்க்கப்பட்டனர். புதிதாகப்  பள்ளிக்கூடத்தில் சேர்ந்த மல்லிகாவை மாணவிகள் ஒன்று சேர்ந்து பயமுறுத்தும் சமயங்களில் அவளை அவர்களின் தொல்லைகளிலிருந்து மீட்டு பாதுகாப்புக் கொடுத்தவள் குணா.

பள்ளிக்கூடத்தில் அரங்கேறிய “ரோமியோ ஜுலியட்” நாடகத்தில் முக்கிய பங்கேற்று ஜுலியட்டாக நடித்தாள் மல்லிகா. அவளுடன் முதல் முறையாக ரோமியோவாக நடிக்கும் சந்தர்ப்பம்  குணாவுக்குக் கிடைத்தது. அந்த நாடக ரோமியோ ஜுலியட். காதல் ஜோடிகளைப் பற்றிப் பாராட்டிப் பேசாதவர்கள் இல்லை.

நாடகத்தின் பின் அவர்கள் உறவு மேலும் வளர்ந்தது. கணிதப் பாடத்தில் தனது சந்தேகங்களை மல்லிகாவிடம் கேட்டு அடிக்கடி தெரிந்து கொள்வாள் குணா. அதைக் காரணம் காட்டி இருவரும் பாடசாலை முடிந்த பின்னரும் தனியாக வகுப்பில் சந்தித்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சந்திப்பால் அவர்கள் உறவு வளரத்தொடங்கியது. அந்த உறவு காலப்போக்கில் ஒரு இறுக்கமான பிணைப்பை அவர்களிடையே தோற்றுவித்தது. அந்த உறவு காதலா அல்லது இரு பெண்களுக்கிடையிலான நட்பா என அவர்களின் சினேகிதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. குணாவை சில மாணவிகள் கேலி செய்யும்போது அவளுக்காக அவர்களுடன் வாதாடுவாள் மல்லிகா. இருவரினதும் நட்பைப்பற்றி மாணவிகள் பலர் கேலியாகப் பேசிக்கொண்டனர். இவர்கள் உறவு தலைமை ஆசிரியரின் காதில் எட்டியவுடன் அவர் இருவரையும் அழைத்து எச்சரிக்கை செய்தார்.

மல்லிகாவுடைய தொடர்பை அதிக காலம் நீடிக்க குணாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆரம்பத்தில் குணபாலாவை தலைமையாசிரியர் அழைத்து குணா மல்லிகா சினேகிதத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த போது அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவிலலை. ஏதோ இரு மாணவிகளுக்கிடையே உள்ள நட்பு என்றே கருதினான். ஆனால் அதைப்பற்றி அவன் தாய் சீலாவதி சொன்னபோது அவள் சில வருடங்களுக்கு முன் உள்ளூர் சாஸ்திரி சொன்னதை நினைவுபடுத்தினாள். அதன் பிறகு குணபாலாவின் போக்கு மாறியது.

“நீ படித்தது போதும் உன் ஆச்சிக்கு வீட்டில் உதவியாக இரு” என பாடசாலைக்குப்போகாமல் குணாவை நிறுத்திவிட்டான். குணாவுக்கு அந்தத் தடை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தந்தைக்கும் ஆச்சிக்கும் தெரியாமல் மல்லிகாவை வயல் வெளிகளில் சந்திக்க அவள் தவறவில்லை. விசித்திரமான அவர்கள் உறவு வேறு பரிணாமம் எடுத்தது. கணவன் மனைவிபோல் மறைவாக பழகத் தொடங்கினர். குணாவின் மென்மை கலந்த வேறுபட்ட ஆண்மையினால் மல்லிகா கவரப்பட்டாள். சமூகத்தின் எதிர்ப்பு மேலும் அவ்விரு ஆத்மாக்களின் உறவை வலுப்படுத்தியதே தவிர பாதிக்கச் செய்யவில்லை. ரோமியோ ஜுலியட் காதலைப் போல் எதிர்ப்பில் மேலும் கிளை விட்டு வளர்ந்தது.

சாஸ்திரியார் சொன்னது போல் தன் குடும்ப மானத்துக்கு மகள் பங்கம் ஏற்படுத்தி விடுவாளோ என்ற பயம்  குணபாலாவை பீடித்துக் கொண்டது. குணவதியின் நடத்தையால் தனது இரண்டாவது மகளின் மண வாழ்க்கை பாதிக்கப்படுமோ எனப் பயந்தான் அவன். தாயின் ஆலோசனைப்படி கண்டியிலிருந்த தனது சகோதரியின் மகன் சோமசிரிக்கு குணாவைத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானித்தான்.

சோமசிரி இராணுவத்தில் ஒரு படைவீரன். கைநிறையைச் சம்பளம். சலுகைகள் வேறு. தந்தையினதும் ஆச்சியினதும் திட்டம் குணாவுக்கு மறைக்கப்பட்டது. திடீரென ஒரு நாள் குணபாலா குடும்பம் கண்டிக்குப் பயணமாக வெளிக்கிட்ட போது குணா ஆச்சியிடம் அங்கு போவதன் காரணத்தைக் கேட்டாள். “ உன் கண்டி மாமியும் மச்சானும் எங்களைப் பார்த்து பலமாதங்கள். ஆகிறது என்று கடிதம்போட்டிருக்கிறார்கள் அதுதான் போய் ஒரு கிழமை இருந்திட்டு வருவோம்” என மழுப்பினாள் ஆச்சி சீலாவதி. குணபாலா மௌனமாயிருந்தான்.

கண்டியில் தனக்கும் சோமசிரிக்கும் திடீர்த் திருமணம் நடக்கும் எனக் குணா எதிர்பார்க்கவில்லை. சோமசிரியை அவள் கண்டு பல வருடங்கள். பொல்ககாவலைக்கு இரு தடவைதான் அவன் தாயுடன் வந்திருந்தான். இப்போது அவன்  தோற்றத்தில்தான் எவ்வளவு மாற்றம். அவன் நடையில்கூட பெண்களைப்போல் ஒரு வகை நளினம். திருமணத்துக்குப் பின் இரண்டாவது மகளுடனும் தாயுடனும் ஊருக்குத் திரும்பினான் குணபாலா. குணாவை சோமசிரிக்கு திருமணம்   செய்துகொடுத்துக் கண்டியில் வாழவைத்து அதன் மூலம் குணா – மல்லிகா உறவைக் கத்தரித்து விட்ட சாதனையால் அவன் மனம் பெருமைப்பட்டது. குடும்ப கெளரவம் சீரழியாமல் காப்பாற்றி விட்டேனே என்ற ஒரு நிம்மதி அவனுக்கு.

………

குணபாலா நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு. மகளின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கவில்லை. திருமணமாகி ஒரு மாதத்துக்குள் தான் கணவனுடன் வாழ முடியாது. தன்னை திரும்பவும் ஊருக்குஅழைக்கும்படி மன்றாடித்  தகப்பனுக்குக்  கடிதம் போட்டிருந்தாள் குணவதி. கடிதத்தில், தன் கணவனும் மாமியும் தன்னைஅடித்துத் துன்புறுத்துவதாகவும். அவர்களுக்கு மல்லிகாவுடன் தான் வைத்திருந்த சினேகிதம் எப்படியோ தெரிய வந்துவிட்டதாகவும் அதன்பிறகு அவர்கள் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறை கூறி எழுதியிருந்தாள். அதுவுமல்லாமல் தனக்கும் கணவனுக்கும் இடையே தாம்பத்திய உறவு, தான் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தியானதல்ல எனவும், உறவின் போது அவரின் சுயநலப் போக்கு தனக்கு அவர் மேல் வெறுப்பை வளர்த்திருக்கிறதேதவிர கணவன் மனைவி என்ற உறவை வளர்க்க வில்லை எனப் பச்சையாக நீண்ட கடிதம் எழுதியிருந்தாள்.

சோமசிரி பலாலிக்கு மாற்றலாகிப் போனது குணாவுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்கு ஒரு பிரச்சனை தீர்ந்த மாதிரி இருந்தது. இனி தான் ஊருக்குப் போகலாம், மல்லிகாவைத் திரும்பவும் சந்திக்கலாம் என மனதுக்குள் சந்தோஷப்பட்டாள். “பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விஞ்ஞான பட்டப் படிப்புக்கு பேராதனைக்கு வருகிறேன்” என்ற மல்லிகாவின் கடிதம் கிடைத்தவுடன் குணாவுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. எவ்வளவு காலம்தான் அவளை விட்டுப் பிரிந்து இருப்பது?. அவள் தன் மிருதுவான கரங்களால் என் கரங்களை அழுத்தும் போது ஏற்படும் மனச் சந்தோஷத்திற்கு ஈடுதான் என்ன?  குணவதியின் மனம் மல்லிகாவின் ஸ்பரிசத்தைத் தேடி ஏங்கியது.

நாங்கள்  இருவரும் பெண்கள் என்பதற்காகக் கணவன் மனைவியாக வாழ சமூகம் இடம் கொடுக்காதா?  எங்கள் உரிமை மறுக்கப்படுமா? சில வெளி நாடுகளில் இந்த உறவைச் சட்டம் ஏற்கும் போது இங்கு மட்டும் ஏன் இந்த உறவுக்குத் தடை? சோமசிரியுடன் என் மனத்துக்குப் பிடிக்காத சுகமற்ற தாம்பத்திய வாழக்கையை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத் தானா சமூகம் எதிர்பார்க்கிறது? என் வாழ் நாள் முழுவதும் நான் சித்திரவதை அனுபவிக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்து, “ என்னைத் தேடவேண்டாம் எனக்கு சோமசிரியுடன் வாழப்பிடிக்கவில்லை” எனச் சுருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாமியாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் குணவதி.

கடிதத்தைக் கண்ட குணவதியின் மாமியார், பதறிப்போய் தன் தம்பிக்குத் தந்தி அடித்து வரவழைத்தாள். குணவதி எங்கே போனாள் என்பது எல்லோருக்கும் புதிராயிருந்தது. அவள் பொல்ககாவலைக்கு வந்திருக்க மாட்டாள் என்பது குணபாலாவுக்குத் தெரியும். வருமுன் மல்லிகா எங்கே என்பதைப் பாடசாலையில் விசாரித்து அறிந்த பின்னரே கண்டிக்குச் சென்றான் குணபாலா. திருமணத்துக்கு முன் குணவதிக்கும் மல்லிகாவுக்கும் இடையே இருந்த விசித்திரமான உறவைப் பற்றி தனக்கு ஏன் மூடி மறைத்தாய் என குணபாலாவிடம் கோபப்பட்டாள் அவன் தங்கை.

“திருமணத்துக்குப் பின் அவள் திருந்திவிடுவாள் என நான் நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” எனச் சொல்லிக் கவலைப்பட்டான் குணபாலா. “இப்போது மல்லிகா பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள் என விசாரித்ததில் தெரியவந்தது. எதற்கும் நாங்கள் பேராதனைக்குப் போய் மல்லிகாவைச் சந்தித்து குணா அங்கு வந்தாளா எனக் கேட்போம். நீ அதுவரை பதட்டப்படாமல் என்னோடை புறப்பட்டுவா” எனத் தங்கையை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு பேராதனைக்குப் புறப்பட்டான் குணபாலா

………

Image result for lovers committing suicide in a river in sri lankaபேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தினூடாக அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது மஹாவலி நதி. இரு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நதியின் ஓட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அந்த நதியில் தான் எத்தனை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தம்முயிர்களை மாய்த்துக்கொண்டனர்.  அதன் கரை  ஓரத்தில் ஒரே மாணவர் கூட்டம். ஏதாவது படகுப் போட்டி நடக்கிறதா என மாணவர்களிடம் விசாரித்தான் குணபாலா. “ அப்படி ஒன்றுமில்லை. இரு காதலர்கள் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் பிரேதங்கள் கரையில் ஒதுங்கியிருக்கின்றன. போலீசும் விசாரணை நடத்துகிறது. இறந்தவர்களில் ஒருத்தி பல்கலைக் கழக முதல் வருட மாணவி அது தான் அங்கு கூட்டம்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டவுடன் குணபாலாவுக்குத் தலை சுற்றியது. அது குணவதியும் மல்லிகாவுமாக இருக்குமோஎன்று அவன் மனம் படபடத்தது. அவன் நிலை தடுமாறுவதைக் கண்ட அவன் தங்கை “ ஏன் அண்ணே பதறுகிறாய். வா போய் யார் என்று பார்ப்போம்” எனத் தமையனையும் அழைத்துக் கொண்டு அங்கு நின்ற மாணவர்களின் உதவியுடன் நதிக்கரைக்குச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் அணைத்தபடி கணவன் மனைவி போல் நதிக் கரையில் ஒதுங்கியிருந்த இரண்டு பிரேதங்களும் குணவதியுடையதும் மல்லிகாவினதும்  என்பதை அடையாளம் கண்டு பிடிக்க இருவருக்கும் அதிக நேரம் எடுக்கவில்லை. பிரேதங்களின் உடல்கள் ஊதியிருந்தன. இருவர் கழுத்துகளையும் காட்டுப் பூக்களினாலான மாலைகள் அலங்கரித்தன, ஏதோ இறப்பதற்கு முன் கணவன் மனைவியாகி மாலை மாற்றிக்கொண்டார்களோ எனப் பார்ப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்..

இறந்த ஒரு பெண்ணின் தகப்பனும் மாமியும் வந்திருப்பதை அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்,  உடனேஅவர்களை ஒரு ஓரத்துக்கு அழைத்துச் சென்று “இந்தக் கடிதம் மல்லிகாவின் அறையில், அவளுடைய சினேகிதி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்ட கடிதம். இதை வாசியுங்கள். அதன் பிறகு விசாரணையைத் தொடருவோம்” என்று குணபாலாவின் கையில் கடிதத்தைக் கொடுத்தார் சப் இன்ஸ்பெக்டர். கடிதத்தை நடுங்கும் கைகளால் வாங்கித்  தங்கைக்குக் கேட்கும் விதத்தில் மெதுவாக, அழுகை நிறைந்த குரலில் வாசிக்கத் தொடங்கினான் குணபாலா.

” எங்கள் பெற்றோர், இனித்தவர், நண்பர்கள், சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு..

எங்கள் இருவருக்கும் இடையேலான உறவு விசித்திரமான உறவானாலும் ஒரு புனித உறவு. நாங்கள் ஒருவரை ஒருவர் மனமாரக் காதலித்தோம். எங்கள் உறவின் நோக்கம் உடலுறவல்ல. சமூகமும் நீங்களும் அதைத் தப்பாகக் கணக்குப்போட்டீர்கள். பௌத்தர்களாகிய நீங்கள் போன பிறவியில் நம்பிக்கை வைத்திருப்பீர்களானால் எங்கள் உறவு போன பிறவியின் தொடர்கதை. முதல் முறை நாங்கள் பாடசாலையில் சந்தித்த போது ஏதோ எங்களுக்கிடையே புரியாத ஒரு ஈர்ப்பை  உணர முடிந்தது. அதுவே காதலாக மலர்ந்தது.

எங்களின் உறவைத் துண்டிப்பதற்கு எங்களில் ஒருத்தியான குணாவுக்குக் கட்டாயத் திருமணத்தை நடத்தி வைத்தீர்கள். அவளது சொற்பகால மணவாழ்க்கை சோகம் நிறைந்தது. நாங்கள்  இருவரும் பெண்கள் என்ற காரணத்தால் கணவன் மனைவியாக சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழமுடியாது என எமக்குத் தெரியும். உங்களை விட்டு எங்குச் சென்று நாம் வாழ்ந்தாலும் சமூகம் ஏளனமாகப் பேசி எம்மை ஒதுக்கி வைக்கும். அந்தத் துன்பம் நிறைந்த, நிம்மதி அற்ற வாழ்வை இப்பிறவியில் அனுபவிப்பதை விட அடுத்த பிறவியிலாவது நாம் ஆண் பெண்ணாகப்  பிறந்து காதலராக ஒன்று சேர இறைவன் அருள் புரியட்டும். எங்கள் தற்கொலைக்கு நாங்களே பொறுப்பு.

Image result for two ladies in srilanka getting married and their suicideகடைசியாக ஒரு வேண்டுகோள். எங்கள் இருவரையும் தயவு செய்து நதிக்கரை ஓரத்தில் அருகருகே புதைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் புனித நதியின் அரவணைப்பில் சமுதாயத்தின் தொந்தரவின்றி, நாம் நீண்ட நித்திரை செய்ய விரும்புகிறோம். இந்த ஆசையையாவது சமுதாயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு
என்றும் சமுதாயத்தால் பிரிக்கமுடியாத
குணா – மல்லிகா

………

(குறிப்பு- 2002ம் ஆண்டு, சிறிலங்காவின் தென்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொண்டு கற்பனையும்கலந்து  இச் சிறுகதை எழுதப்பட்டது. பாத்திரங்களின் பெயர்களும், ஊர் பெயர்களும் கற்பனையே )

காமராஜர் ஒரு மகாத்மா – நன்றி முகநூல்

 

Image result for kamarajImage result for kamarajar and mahatma gandhi

 

Image result for kamarajar standing stills

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.
கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும்  மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ’

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார்  மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்குக் கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச்  சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார்.  மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா! கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டுக் காத்திருக்க  வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம், உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்கிறார். “அய்யா! நான்தான் அசெம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா”  என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து  யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா’ என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க’ என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நம்முடன் பேசியிருப்பது  முதல்வர் காமராசர் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று
அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள  சோபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கிக் கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா.
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்தக் கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை  ‘வா…வாண்ணே! வந்து பக்கதில உட்காருங்க’  என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்கத் தயங்கித் தயங்கிப் பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…
ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்..  நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது.

‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகாரக் குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ,சற்றுத் தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டுப் போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க  மாட்டார்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டி பேச வார்த்தைகளின்றிக் கையெடுத்துக் கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்துக் கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை
மக்களுக்காகவே இருந்தார்….

இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு…

 

*டிகாக்ஷன் போடும் கலை!* — நன்றி முகநூல்

 

முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் தவறான செய்தி வரக் கூடும் என்பதற்கு இது நல்ல உதாரணம். *டிகாக்ஷன் போடும் கலை!*  என்ற இந்தக்  கதை சுஜாதா அவர்கள் எழுதியதாகக்  குவிகத்தில் வெளியிட்டவுடன், நிறையப் பாராட்டுதல்கள் வந்தன. ‘ஆஹா’ என்று சந்தோஷப்பட்டால், சுஜாதா தேசிகன் அவர்கள் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசியுள்ளார். 

இது சுஜாதா எழுதியதே இல்லையாம். ஆனால் பேஸ்புக் , வாட்ஸ் அப் இரண்டிலும் வெகு நாட்களாக வலம் வருகிறதாம்.

 உடனே சுஜாதாவின் மற்றொரு சீடரான ரகுநாதனிடம் கேட்டேன். அவரும் இது சுஜாதா எழுதியது அல்ல என்று சொல்லிவிட்டார். 

சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு ஜட்ஜுகளும் சமீபத்தில் கொடுத்த தீர்ப்பு மாதிரி ஆகி விட்டது. 

தவறாகப் பிரசுரித்ததற்காக  குவிகத்தையும்  என்னையும் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். – சுந்தரராஜன் 

 

*டிகாக்ஷன் போடும் கலை!* – சுஜாதா எழுதியதாக வலைப்பக்கங்களில் வலம் வரும் கதை 

Image result for chennai man making filter coffee

Image result for husband trying to prepare filter coffee

 

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் –அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி.வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால்போதும் என்று டாக்டர்சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பிகூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால்   வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது…மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்குமேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க”என்று சொல்லிவிட்டுத் தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனேதவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனித்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்துகொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம் எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம்மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால்  எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் புல் காப்பிப் பொடிபட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டிபடும் என்று அவர்கள் நினைத்துக் காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டுவிடுவாளாம்.எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப்ஆகிவிட்டது.

காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும் என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும்மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த  பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவதுகலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா…

மனைவி ஒரு  பில்ட்டர் கலெக்டர். பல வகையான பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும். அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டுபிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார்    அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகலஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சுமமூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படிபாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச்சேதத்துக்குரிய மாபெரும்   குற்றமில்லா விட்டாலும்; நாளைக்குக் கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என்நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

Image result for coffee spill in kitchen

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும்   ஆயிட்டுது…

ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு,தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம்போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான்அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலேஅம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்து ஆகி வந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்ககண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்லச் சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ்குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாகஇறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தர       வேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமானகொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா,தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான்அடுப்பேற்றினேன்.

Image result for indian ever silver coffee tumbler spill

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி,தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.

மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர்  இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில்மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலைசெய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்துஅலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும்பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும்  விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒருஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துஅதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து

‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன்ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால்என்று ஜோடி பிரிந்தது.  செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்குத் திரும்புவதற்குள்,

‘தூ தூ… என்று மனைவியின்கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி,உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”

”எதை?”

”என் தலையை!”

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

”ஒரு வாய் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம்பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் –வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம்தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை…

”இதனுடைய மேல் பில்ட்டர்எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

Image result for kumbakonam filter coffee

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னாபொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல்ஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்

கண்ணாடி நண்பன் (எஸ் எஸ் )

கண்ணாடி நண்பன்

 

Related image

மாபெரும் போராட்டம் ! முடிவில் உனக்கே வெற்றி !
உலகம் உன்னைத் தலைவனாக்குகிறது ! தலைவிரித்து நீ ஆடாதே !
நேராகக் கண்ணாடி முன் நின்று உன்னையே நீ உற்றுப்பார் !
அந்த பிம்பம்  சொல்வதைக் காது கொடுத்துக் கேள் !

உன் அம்மா அப்பா மனைவி மக்கள் ஆயிரம் சொல்லட்டும் !
அவர்கள் கருத்துக்கு நீ செவி சாய்க்க வேண்டியதில்லை !
பின் யாருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் ?
உன்னையே பார்க்கும் கண்ணாடி நண்பனின் சொல்லைக்   கேள் !

உன் கண்ணாடி நண்பனை மகிழ்வி ! மற்றதைத் தள்ளி விடு!
அவன் உன்னுடன் என்றும் இருந்தவன் – இருக்கப் போகிறவன் !
அந்த பிம்பம்  உன் நண்பனாக இருந்தால் மட்டுமே
வாழ்வில்  நீ வெற்றி பெற்றவன் ஆவாய் !

ஆண்டாண்டு காலமாய் உலகை நீ முட்டாளாக்கலாம் !
உலகமும் அதை நம்பி உன்னைத் தட்டியும் கொடுக்கலாம் !
ஆனால் நீ உன் கண்ணாடி நண்பனை ஏமாற்றினாய் என்றால் !
உன் கடைசிப் பரிசு வெடித்த இதயமும் கண்ணீரும் தான் !

 

( 1934 இல் பீட்டர் டேல் விம்ப்ரோ அவர்களால் எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்றும்   பிரபலமாய் இருப்பதற்குக் காரணம் இதன் சொற்களில் உள்ள சத்தியம் தான் ! 

அதன் ஆங்கில மூலத்தைப் படித்தால் அதன் பெருமை இன்னும் நன்கு புரியும் !  )

Image result for watching self in the mirror

 

 

 

யதார்த்தம் –நித்யா சங்கர்

 

 

Image result for tamil novels திக்பிரமையடைந்து, அலுப்போடு, சலிப்போடு, ஓய்ந்து போய்
உட்கார்ந்திருந்தார்கள் சரவணனும், மீனாட்சியும். எல்லாம் நல்ல
படியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. ஆனா கடைசியிலே
யமுனா இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாளே!

யமுனாவின் ஜாதகக் கட்டை எடுத்து வரன் தேட ஆரம்பித்து
நேற்றோடு ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. பார்த்த உறவினர்களிடமும்,
நண்பர்களிடமும் வரன் பார்க்கச் சொல்லி, அவர்களும் பல வரன்களை
சிபாரிசு செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே
இருக்கின்ற வலைகளிலெல்லாம் நுழைந்து சலித்துப் பார்த்தாகி விட்டது.
ஒன்றும் குதிர்ந்த பாடில்லை.

பல ஜாதகங்கள் இவளுடைய ஜாதகத்திற்கு பொருந்தவில்லை.
அப்படிப் பார்த்துப் பொருந்திய பல வரன்களை யமுனா ஏதாவது
காரணம் காட்டி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். பெண் பார்க்க
வந்த சில வரன்கள் ஏதோ காரணங்கள் கூறி அவர்கள் தட்டிக்
கழித்தனர். கடைசியில் பார்த்தால் ஒன்றும் கல்யாணத்தில் முடியவில்லை.


ஆனால் இன்று பெண் பார்க்க வந்த ராஜாராமன் குடும்பத்தைப் பார்த்தவுடனே பிடித்து விட்டது சரவணனுக்கும், மீனாட்சிக்கும். பையன்
ராஜாராமனும், அவன் பெற்றோர் சபேசனும் காயத்ரியும் தான் பெண் பார்க்க வந்திருந்தார்கள். அம்மூவரின் அடக்கமான தன்மை, கலகலப்பான – அதே சமயம் கண்ணியமான பேச்சு, பார்த்தவுடனே பிடித்துவிட்டது. ‘ஆண்டவனே, இவ்விடம் நல்லபடியா முடியவேண்டும்’ என்று இருக்கின்ற கடவுள்களிடமெல்லாம் வேண்டிக்கொண்டே, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமான பெண்பார்க்கும் படலம் முடிந்தது. காபி, டிபன்
சாப்பிட்டாகி விட்டது.

சபேசன் மெதுவாக, ‘பெண்ணும், பையனும் தனியாக சிறிது
நேரம் மனம் விட்டுப் பேசட்டுமே… ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள
உதவுமல்லவா..’ என்றார்.

‘வை நாட்…. யமுனா…. மாப்பிள்ளையை மாடி ரூமிற்குக் கூட்டிக்
கொண்டு போ..’ என்றார் சரவணன்.

யமுனாவும், ராஜாராமனும் மாடி ரூமிற்குச் சென்றனர். இங்கு
ஹாலில் பெரியவர்கள் அரசியலைப் பற்றியும் சமையல் பற்றியும்
காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து
கொண்ட விதத்தையும், சிறு உரிமைகளை யதார்த்தமாக எடுத்துக்
கொண்ட பாங்கையும் பார்த்தபோது அவர்களுக்கும், யமுனாவையும்
தங்கள் குடும்பத்தையும் பிடித்துப் போயிருக்க வேண்டும் என்று
தோன்றியது சரவணனுக்கும், மீனாட்சிக்கும்.

அரைமணி நேரம் கழித்து கீழே வந்த யமுனாவின் முகத்தி –
லிருந்தோ, ராஜாராமன் முகத்திலிருந்தோ ‘எஸ்’ஸா, ‘நோ’வா
என்று தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை பெற்றோர்களால்.

உலக வழக்கப்படி, ‘ஓகே… அப்ப நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு
பையன்கிட்டேயும் பேசிட்டு பதில் சொல்கிறோம்’ என்றபடியே
எழுந்தார் சபேசன்.

ராஜாராமனும், காயத்ரியும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

வீட்டிற்கு வெளியே வந்து, அவர்கள் காரில் ஏறி அமரும்
வரை பார்த்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார்கள்
சரவணனும், மீனாட்சியும்.. யமுனா ஹாலில் உட்கார்ந்து டி.வி.பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஓகே… மீனாட்சி… எனக்கு பரம திருப்தி. பையன் ராஜா
மாதிரி இருக்கான். கை நிறைய சம்பளம். அவன் பெற்றோர்களும்
ரொம்ப தன்மையா, அன்பா இருக்காங்க. இது பிக்ஸ் ஆச்சுன்னா
யமுனா ரொம்ப லக்கி. நீ என்ன சொல்றே…?’ என்றார்
வாயெல்லாம் பல்லாக.

‘ஆமாங்க.. எனக்கும் அவங்களைப் பார்த்ததும் பிடிச்சுப்
போச்சு.. ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு.. இந்த இடத்தை
முடிச்சிடலாம்..’

‘அட.., நம்ம பாட்டுக்கு பேசிட்டிருக்கோம். யமுனா
ஒண்ணுமே சொல்லலியே.. ‘ என்றார் சரவணன் யமுனாவைப்
பார்த்து.

‘அவ சந்தோஷத்துலே வாயடச்சுப் போய் உட்கார்ந் –
திருக்கான்னு நினைக்கறேன். ஏண்டி, வாயத் திறந்து சொல்லேன்
சம்மதம்னு’ என்றாள் மீனாட்சி.

ஒரு நிமிடம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த
யமுனா, ‘ஐ ஆம் ஸாரி அம்மா… நமக்கு இந்த இடம் சரிப்பட்டு
வரும்னு தோணலே.’ என்றாள் மெதுவாக.

‘என்னடி சொல்றே…?’ என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள்
சரவணனும், மீனாட்சியும் கோரஸாக.

‘ஆமாம்மா… அவருடைய விருப்பு வெறுப்புகளையும்,
பழக்கவழக்கங்களையும், பற்றி பேசிட்டிருந்தப்ப, ‘வெளி நாடுகள் பலவற்றுக்குப் போயிருக்கேன்.. வெளிநாட்டு கலாசாரம்…. ஐ லவ் இட்… நோ ரெஸ்ட்ரிக்ஷன்… கம்ப்ளீட் ·ப்ரீடம்… நோ கமிட்மென்ட்..வெளிநாட்டுக்குப் போகும் போது பல தடவை நானும், என் கேர்ள்ப்ரண்டும் ஒரே வீட்டிலே குடும்பம் நடத்தி இருக்கோம்னா – அதாவது லிவிங்க் டுகெதர் அண்டர் ஒன் ரூ·ப் னா – பார்த்துக்கோயேன். அந்த அஸைன்மென்ட் முடிஞ்சு நான் விடைபெறும்போது நோ ஹார்டு ·பீலிங்க்ஸ்.. ஆல் தி பெஸ்ட் சொல்லிக்கொண்டோம். இப்பவும் ·பேஸ்புக்கில் தொடர்பில் இருக்கோம். நான் வெளிநாடு போகும்போது ஐ வான்ட் ஸச் ·ப்ரீடம். தேர்
ஷ¤ட் நாட் பி எனி கம்ப்ளெய்ன்ட்ஸ்..’னு சொல்றார்மா… நமக்கு
இது சரிப்பட்டு வருமா..’ என்றாள் யமுனா.

‘கடவுளே… ஒரு மாதிரி தோதுப்பட்டு வர நிலையிலே
இது இப்படி ஆச்சே… நமக்கு இதெப்படிம்மா சரிப்பட்டு வரும்’
என்றார் சரவணன் ஈனக் குரலில்.

‘அதத்தான்பா நானும் கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டேன்..’
என்று சொல்லியபடியே தன் ரூமிற்குப் போனாள் யமுனா.

விக்கித்து நின்றனர் சரவணனும், மீனாட்சியும்.
அலுவலகத்தில் ஏதோ ஒரு ·பைலை புரட்டிக் கொண்டிருந்த யமுனாவின் ஸெல்·போன் சிணுங்கியது. ஸெல்·போனில் யார் கூப்பிடுவது என்று பார்த்தாள்.

‘ராஜாராமன்….’

ஒரு புன்முறுவலோடு ·போனை எடுத்து, ‘ஹலோ’ என்றாள்.

‘என்ன யமுனா.. சமாளிச்சுட்டீங்களா..? அப்பா அம்மா
என்ன சொன்னாங்க..? ‘

அவங்க ரொம்ப அப்ஸெட் ஆயிட்டாங்க… அவங்களுக்கு
உங்களையும், உங்க குடும்பத்தையும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நான் சொன்னதுக்கப்புறம் இது வரை ஒரு வார்த்தை கூட பேசலே.. ஸ்தம்பித்து உட்கார்ந்து இருக்காங்க… உங்க வீட்டிலேஎப்படி..?’

‘எங்க வீட்டிலேயும் அதே கதைதான்.. ஆனா உண்மை-
யிலே எனக்கும் உங்களையும், உங்க குடும்பத்தையும் ரொம்பப்
பிடிச்சிருக்கு. ஆனா என் காதல் குறுக்கே வந்துடுத்து. என்னை
நம்பி இருக்கும் அவளுக்காக நான் இப்படி நடந்துக்க வேண்டி
வந்துடுத்து. எங்கப்பா ரொம்ப ஸ்டாடஸ் பார்க்கறவரானதாலே
எனக்கும் என் காதலைப்பற்றிச் சொல்ல முடியாத நிலை. அவருக்கு
மெதுவாகச் சொல்லிப் புரிய வைக்கணும். அவ மட்டும் என்
வாழ்க்கையிலே வந்திருக்கலேன்னா உங்களை டெ·பனிட்டா
சூஸ் பண்ணி இருப்பேன்’

‘ஓகே… நானும் அதேமாதிரிதான் மாட்டிட்டிருக்கேன். என்
லவ்வைப் பற்றியும் அப்பா அம்மா கிட்டே சொல்ல முடியாம
தவிச்சிட்டிருக்கேன். அதே மாதிரி ஸ்டாடஸ் பிரச்னை… அவர்
மட்டும் என் வாழ்க்கையிலே வராம இருந்தா உங்கள் பெயரை
எப்பவோ ‘டிக்’ பண்ணியிருப்பேன். ஆனா இந்த ‘லிவிங்
டுகதர்’ பொய்யை அனாவசியமாக சொன்னோமோன்னு
நினைக்கிறேன்.. நம்ம காரக்டரையே கெடுத்துக்கற மாதிரி
சொல்லிட்டோமே.. வேறே ஏதாவது சாக்குச் சொல்லி இருக்கலாம்’

‘நீங்க வேறே… இப்படி ஸ்ட்ராங்கா, தடாலடியா ஏதாவது
சொல்லி யிருக்கலேன்னா ரெண்டு பேரையும் உட்கார வெச்சு
‘கட்டுடா தாலியை’ ன்னு சொல்லி யிருப்பாங்க..’ என்று சிரித்த
படியே ‘உங்க காதலைப் பற்றி சீக்கிரம் வீட்டில் சொல்லுங்க..
நானும் சொல்ல டிரை பண்ணறேன்.. ஆல் தி பெஸ்ட்..’ என்றான்.
பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது டிபன் சாப்பிடலாம்னு
பக்கத்திலிருந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் ராஜாராமன்.
ஹோட்டலில் சுமாரான கூட்டம்.  இருக்கை ஏதாவது காலி
யிருக்கிறதா என்று கண்களை சுழல விட்டவன் கண்கள் அந்த
டேபிளைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் மலர்ந்தது.

‘யார் அது..? யமுனா மாதிரி இருக்கே… ஆமா அவளேதான்.’
என்று அந்த டேபிளை நோக்கி விரைந்தான்.

‘ஹலோ.. யமுனா.. வாட் எ ஸர்ப்ரைஸ்.. எப்படி இருக்கீங்க?’

அவளும் அவனைப் பார்த்ததும் குதூகலத்தோடு, ‘ஹாய்..
எப்படி இருக்கீங்க..?’ என்று கூறியபடியே சைகையால் உட்காரும்படி
எதிர் இருக்கையைக் காட்டினாள்.

‘என்ன தனியா வந்திருக்கீங்க..? ஹஸ்பன்ட் கூட வர்லையா..
நான் உங்களைப் பெண் பார்க்க வந்து ஒரு வருடம் ஓடிட்டது
இல்லே..’ என்றான் ராஜாராமன்.

‘இல்லே ராஜாராமன்.. என்னுடைய காதல் நிறைவேறலே..
அப்பாவை எப்படியோ சம்மதிக்க வெச்சு அவர் வீட்டுக்கு
சம்மந்தம் பேச அனுப்பினேன். முதல்லே இன்டரஸ்ட் காட்டினவங்க போகப் போக அவ்வளவா இன்டரஸ்ட் காட்டலே.
அவருக்கும் பல டைம் ·போன் பண்ணினேன். முதலில் பிடி
கொடுக்காமல் பேசினார்.  அப்புறம் ·போன் அட்டென்ட்
பண்ணறதையே நிறுத்திட்டார். ஸோ அந்த இடம் கைகூடலே..
அப்பா இன்னும் ஜாதகக் கட்டைத் தூக்கிட்டு அலஞ்சுண்டிருக்கார்.. ஆமா.. வாட் அபௌட் யூ… ‘ என்றாள் யமுனா.

‘அதையேன் கேட்கறீங்க… உங்களுக்கு நடந்த மாதிரிதான் எனக்கும் நடந்தது. அவள் என்கிட்டே பேசறதையே
கம்ப்ளீட்டா அவாய்டு பண்ணிட்டா… ப்ச்… யாருக்கு எங்கெங்கு விதிச்சிருக்கோ அங்கேதான் நடக்கும்’ என்றவன் கண்களை நாலாபக்கமும் சுழல விட்டான்.

‘ஓ மை காட்.. இன்னிக்கு என்னாச்சு.. யார் யாரையோ
பார்க்கறேன்… யமுனா நான் காதலிச்ச பெண்ணை பார்க்கணும்னா
அப்படியே மெதுவாகத்  திரும்பி, என்ட்ரன்ஸில் உள்ள அந்த
முதல் டேபிளைப் பாருங்க.. அவள் அவளுடைய ஹஸ்பன்டோட வந்திருக்கான்னு நினைக்கிறேன்..’

யமுனா மெதுவாக அந்த முதல் டேபிளைப் பார்த்தாள்.
பார்த்தவள், ‘என்னங்க அபிராமியா..?’ என்றாள்.

‘ஆமாம்.. அவளேதான். உங்களுக்கு அவளைத்
தெரியுமா..?

‘தெரியும்.. அவளுடைய அப்பா என்னுடைய அப்பாவுடைய கொலீக்.. அவ கல்யாணத்தின் போது நான் ஊரிலில்லை. அதனால் அவ கல்யாணத்தை அட்டென்ட் பண்ண முடியலே…’ என்று சொல்லியபடியே அபிராமியின் பக்கத்தில் இருந்த நபரைப் பார்த்ததும் திகைத்து, ‘என்ன அவரா..’ என்றாள்.

திகைத்து இருந்த அவள் முகத்தைப் பார்த்த ராஜாராமன்,
‘என்னாச்சுங்க யமுனா..’ என்றான்.

‘அவளைக் கைப்பிடித்தவன்தான் என் மாஜி காதலன் அரவிந்த்…’ என்றாள் மெதுவான குரலில்.

சில நிமிடங்கள் யோசித்தவன், ‘இப்போது க்ளியராகப்.
புரிகிறது யமுனா… அந்த அரவிந்தின் அப்பா என்னுடைய
அப்பாவுடைய கொலீக்… நம்முடைய மீட்டிங்கிற்கு அப்புறம்
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அப்பா, ‘என் கோலீக், அவன்
பையனுக்கு நாம ராஜாராமனுக்குப் பார்த்தமே அந்தப் பெண்
யமுனா வீட்டிலே பேச்சு வார்த்தை நடந்து வரதா சொன்னான்
நான் அந்தப் பெண் காரெக்டர் கொஞ்சம் அப்படி இப்படின்னு
சொல்லிக்கிறாங்க என்று ஸ்ட்ராங்கா சொல்லி வெச்சேன். அவங்க போய் அந்த ·பேமிலியில் ஏன் மாட்டிக்கணும்னு, அவனும் நமக்கு எதற்கு ரிஸ்க்குன்னு அலயன்ஸையே டிராப் பண்ணிட்டான்’னு சொன்னார். அதனால்தான் அரவிந் உங்ககிட்டே பேசறதையும் கட் பண்ணிட்டார். மோஸ்ட் பிராபப்ளி என்னுடைய கேஸ்லேயும் அது மாதிரி நடந்திருக்கலாம். ‘ என்றான் ராஜாராமன்.

‘டாமிட்.. பின் காதல்ங்கறதுக்கு என்னங்க அர்த்தம்?
யாரோ சொன்னாங்கன்னு காதலியையோ அல்லது காதலனையோ
சந்தேகப்பட்டா அது உண்மையான காதலா..?’ என்று
பொரிந்தாள் யமுனா.

‘அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் யமுனா… நாலு பேர்
நாலு வகையா ஒருத்தருடைய ஒழுக்கத்தையோ நடத்தையையோ தப்பா பேசினா, ‘நமக்கு எதற்கு வம்பு… ஒதுங்கிக்குவோம்னுதான் மனுஷனுக்குத் தோணும். அதனாலேதான் சமுதாயத்திற்கு எல்லோரும் பயப்படணும்னு சொல்றது.. நாம காதல் நிறைவேறணும்னு ஒரு பொய்யைச் சொன்னோம். ஆனா பார்த்தீங்களா..அதுவே நமக்கு வில்லனா மாறிடிச்சு… உலகம் எவ்வளவு சின்னதா ஆயிட்டுது பார்த்தீங்களா…? உங்கள் காதலன் என் காதலியை…. வண்டர்·புல்… ஆசைப்படலாம்… ஆனா அந்த ஆசை நிறைவேறலைன்னா அதப்பத்தியே நினைச்சு துவண்டுடாம, கிடைச்சதை சந்தோஷமா ஏத்துட்டு வாழணுங்க… அதுதான் வாழ்க்கையின் தாத்பர்யம்.. யதார்த்தம்… நீங்க அன்னிக்கு சொன்னீங்க… என் காதல் மட்டும் குறுக்கே வரலேன்னா உங்க பெயரை டிக் பண்ணியிருப்பேன்னு.. இன்றும் அந்த மன நிலையில்தான் இருக்கீங்களா..? ‘ என்றான் ராஜாராமன் திடுதிப்பென்று.

‘யூ ஆர் கரெக்ட்… இப்போ நாம் ரெண்டு பேருமே எலிஜிபிள்
·பார் மாரேஜ்… ஏன் நம்ம ப்ரொபோஸலை ரீ ஓபன் பண்ணக்
கூடாது..?’ என்றாள் யமுனா.

‘பட்… அதில் ஒரு சிக்கல் இருக்கே… ஆயிரம் பொய்கள்
சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம். அது தப்பில்லேன்னு
சொல்வாங்க. நாம் ஒரு பெரிய பொய்யைச் சொல்லிக் கல்யாணத்தை
நிறுத்தி இருக்கோமே..? இப்போ எப்படிச் சமாளிக்கறது..?’

‘இப்போ உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நடத்துவோம்.
இப்போ அதைக் கொண்டாட ஸ்வீட்டோடு சாப்பிடுவோம்’
என்றாள் யமுனா குதூகலத்தோடு.

‘வெயிட்டர்..’ என்று கூப்பிட்டான் ராஜாராமன்.

 

நேபாளத்தின் புதுவித நீர்வீழ்ச்சி – ராமன்

Davis Falls

Davis FallsDavis FallsDavis FallsImage result for devis falls story in nepalImage result for devis falls story in nepal

 

 நீர்வீழ்ச்சிகளை மலையின் உச்சியிலிருந்து கீழே தரைமட்டத்தில் கொட்டுவதைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள்! நில மட்டத்தின் கீழ் ஆரம்பித்து மிக ஆழமாக பூமிக்குக் கீழே  கொட்டும்  நீர்வீழ்ச்சியை  எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா?

அப்படி ஓர் நீர்வீழ்ச்சி நேபாளத்தில் காஸ்கி டிஸ்ட்ரிக்கில் பொகாரோ என்னும் இடத்தில் இருக்கிறது! அது டேவிஸ் ஃபால்ஸ் என்று அழைக்கப்படும்.

அது எப்படி நேபாளத்தில் ஓர் ஆங்கிலப்  பெயரால் அழைக்கப்படுகிறது என்னும் கேள்வி உங்கள் மனதில் எழலாம்! இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து விழும் ஆதாரமான தண்ணீர் ஃபேவா என்னும் ஏரியில் ஆரம்பிக்கிறது. பொகாரோவில் வந்தடையும்போது மலையைத்  துளைத்து நிலமட்டதிற்குக்  கீழ்  ப்ரவாகமாக குகைப் பாதையில் செல்லத் தொடங்குகிறது. குகைப் பாதையின் ஆழம் சுமார் 500 அடி(150 மீட்டர்). பின்னர் தரைமட்டத்திற்கு கீழ் 100 அடியில் குப்தேஷ்வர் மகாதேவ் என்னும் மற்றொரு குகையின் வழியாக ஓட ஆரம்பிக்கிறது!

 1960ம் வருடம் குகைப்  பாதையைப்பற்றி அறியாமல்  டேவி என்னும் ஒரு ஸ்விஸ் நாட்டுப் பெண்ணும் அவள் கணவனும்  நீந்தி மகிழ்ந்து கொண்டிருக்கும்போது தேவி என்ற அந்தப்   பெண் குகைப் பாதையில் சிக்கி நீரில் அமிழ்ந்து கொல்லப்பட்டாள். அவளின் சடலம் மூன்று நாட்களுக்குப் பிறகு  மிகுந்த முயற்சிக்குப்பின் கிடைத்தது.

டேவியின்  பெண்ணின் பெற்றோர் அந்த இடத்திற்குடேவிஸ் ஃபால்ஸ்என்று பெயர் வைக்க விண்ணப்பித்து அப்பெயரே அந்த அருவிக்கு  நிலைத்தது!

நீர்வீழ்ச்சி நேபாளத்தில் பாதாளே சாங்கொ’(தரைமட்டத்திற்கு கீழே உள்ள நீர்வீழ்ச்சி) எனவும் ஆழைக்கப்படுகிறது!

அதன் அழகை இந்த you tubeன் மூலம் கண்டு களியுங்கள்:

 

 

அப்பாவின் கண்ணாடி – குறும்படம்

 

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்ப்ரதா, அந்த போட்டியின் பல ரவுண்டுகளிலும்  சிறந்த படம் சிறந்த இயக்கம் போன்ற பிரிவுகளில் முதல் பரிசை வென்றவர். 
இறுதிப் போட்டிக்கு இவர் இயக்கிய லைன் ஆஃப் கண்ட்ரோல் என்ற குறும்படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுதலுக்கும் ஆளாகி எல்லா பிரிவுகளிலும் முதல் இடத்தில் வந்து,ஒட்டுமொத்த அளவில் நாளைய  இயக்குனர் சீசன் ஐந்தின் ‘டைட்டில் வின்னிங்’ படமாகவும் வந்திருக்கிறது . 

 இந்த ரஜிதா கல்பப்ரதா,  சுஜாதாவின் “எல்டராடோ”  கதையை              ” அப்பாவின் கண்ணாடி ” என்ற பெயரில் குறும்படமாக எடுக்க, அது சிறந்த படம் சிறந்த இயக்கம் என்று இரண்டு விருதுகளைப்  பெற்றுக் கொடுத்தது.

அதில் நடித்த நடிகர் ஜெயப்பிரகாஷ் சிறந்த நடிகர் விருது பெற்றார். 

அப்பாவின் கண்ணாடி  ஒரு அழகான கவிதை போன்ற படம். ஷேக்ஸ்பியர் சொன்னது போல ” If you have tears shed them now”

கதையைப் படிக்க கீழே  க்ளிக்குங்கள்

SUJATHA-eldorado (tamilnannool.com)

குறும்படம் பார்க்க கீழே  க்ளிக்குங்கள் !

 

கேள்வியும் கவிதைப் பதிலும் – நடராஜன்

 

Image result for after retirement

பணி ஓய்வு பெற்ற கவிஞர் ஒருவரிடம் அவரது நண்பர், “இப்போது எப்படி பொழுதைப் போக்குகிறீர்கள்?”என்று கேட்டார். அதற்குக் கவிஞர் “நான் இரண்டு முரண்பட்ட கவிதைகளை விடையாகச் சொல்கிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் விடையாகக் கொள்ளலாம் ” என்றார்.
இதோ அந்த முரண்பட்ட கவிதைகள்

( குறிப்பு – இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியவை.
மீள்பதிவு )

விரும்பிய வாழ்வு

நித்தநடைப் பயிற்சியிலே புலரும் காலை
நிகரில்லா இயற்கைஎழில் கொஞ்சக் கண்டும்
சித்தமெல்லாம் சிவனென்று கோயில் சென்றும்
சிற்றுதவி மற்றவர்க்குச் செய்து கொண்டும்
புத்தகங்கள் பலபடித்துக் கொண்டும், என்றும்
புதிதாகச் சிலவற்றைக் கற்றும், பெற்றும்,
இத்தனைநாள் நான்விருப்பப் பட்ட வாழ்வை
இப்போது வாழ்கின்றேன், இறைவா நன்றி !

So What’s Your Plan After Retirement , health insurance , pension planRelated image

அனுபவிக்க ஆயிரம்

தெம்புடனே ஊர்சுற்ற வண்டி உண்டு;
திருக்கோயில் பஜனையிலே சுண்டல் உண்டு;
வம்பளக்க வாயுண்டு, பொழுதைப் போக்க
வண்ணவண்ணத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஓய்வுச்
சம்பளமும் பங்குச்சந்தை வரவும் உண்டு
சாப்பிடவோ விடுதியுண்டு வீதி தோறும்.
அம்பலத்தே ஆடுகின்ற ஈசா, வாழ்வை
அனுபவிக்க ஆயிரந்தான் வழிகள் உண்டு !

தலையங்கம்

 

1எடிட்

Image result for modi win in up

Image result for sasikala and panneerselvam

Image result for tamil nadu politics in 2017

Image result for neduvasal

Image result for neduvasal

தமிழக அரசியல் வானில் கரு மேகங்கள் !

  • ஜெயலிதா அவர்களின் மறைவு 
  • சசிகலா முதல்வராக முயற்சி
  • உச்ச நீதி மன்றத்தின் தண்டனையினால்  சசிகலா சிறைவாசம் 
  • தினகரன் துணை பொதுச் செயலாளர் 
  • பன்னீர்செல்வம் போர்க்கொடி 
  • கூவத்தூர்  விடுதியில்  122 எம் எல் ஏக்கள் கூண்டோடு அடைப்பு 
  • எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுத்தல் 
  • அடி தடி ரகளையுடன் சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி 
  • சசிகலா பொதுச் செயலாளர் பதவி வகிப்பது முறையா ? தேர்தல் அதிகாரிகள் ஆராய்ச்சி
  • உள்ளாட்சித் தேர்தல் விரைவில் 
  • இத்தனை அரசியல் போட்டா போட்டிகளுக்கு நடுவே ,  வாடி வாசல் (ஜல்லிக்கட்டு) , நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் ) போராட்டங்கள் !

இவையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய செய்திகள் 

இவற்றையெல்லாம் விட எகிறும் வட இந்தியா தேர்தல் நிலவரம்

  • உத்தரப் பிரதேசத்தில், மற்றும் உத்தர் கண்டில்  பி ஜே பியின் இமாலய வெற்றி 
  • மணிப்பூர், கோவா இரண்டையும் பி ஜே பி யே கைப்பற்றும் நிலை
  • பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி   

மொத்தத்தில்  மோடியின் கரங்கள் பலமடைந்திருக்கின்றன.

செல்லா நோட்டு விவகாரம் செல்லா நோட்டாகிவிட்டது.

நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது! 

மோடிஜி !

நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உங்கள் பின் அணிவகுத்து வரத் தயாராயிருக்கிறோம்!