அட்டைப்பட விளக்கம்

நன்றி ஜீ நியூஸ்  

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19ம் தேதி நிகழ உள்ளது. சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் இதுவாகும். பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். இது 580 ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணமாக இருக்கும்.

 580 ஆண்டுகளில் இதுவே மிக நீண்ட பகுதி சந்திர கிரகணமாகவும் இருக்கும்!’ மிக நுட்பமாக நிறம் மாறும் நிலவை காண வாய்ப்பு கிடைக்கும். அது சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். மேலும், இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று மதியம் 2.19 மணிக்கு EST (இந்திய நேரப்படி மதியம் 12.49) தொடங்கும் என நாசா (NASA) கூறியுள்ளது.

திரை ரசனை வாழ்க்கை 11 – எஸ் வி வேணுகோபாலன்

ஜெய் பீம் – நீதிக்கான நம்பிக்கை

காவல்துறை அத்துமீறல்களும், பொது சமூகத்தின் கள்ள மௌனமும்... ஒளிர்கிறதா Jai Bhim? | Suriya starrer Amazon Prime Video release Jai bhim movie review

நீதிபதி கே சந்துரு பணி நிறைவு செய்த தேதி மார்ச் 8, 2013. ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நீதி பெற்றுத் தந்தவர், பின்னியக்காள் எனும் பெண் பூசாரியின் உரிமையை நிலை நாட்டியவர், உலகப் பெண்கள் தினத்தன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றது தற்செயல் ஒற்றுமை. எங்கள் வங்கி ஊழியர் தொழிற்சங்க சார்பான வழக்குகளில் பேருதவி புரிந்தவர், நெருக்கமாக அறிந்தவர் என்ற முறையில் எண்பதுகளின் இறுதியில், எந்த விசாரணையும் இன்றி நாளேட்டில் நிர்வாகத்தின் விளம்பரம் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரது வழக்கை எடுத்துக் கொள்ள அவரைப் போய்ப் பார்த்தோம். வாய்ப்பே இல்லை, பலவீனமான வழக்கு என்று சொன்ன தோழர் சந்துருவை, மறுநாள் மாலை பார்க்கச் சென்றபோது, ஒற்றை வாக்கியத்தில் அந்தப் பணி நீக்கத்திற்குத் தடை உத்தரவு பெற்றிருந்தார் அவர்.

அன்று காலையில் நாளேடுகளில் வந்த ஒரு செய்தியை சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார் அவர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரச்சனை ஒன்றிற்குப் பதில் அளித்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, இது குறித்துப் புதிய வெளியுறவுத் துறை செயலாளர் உங்களுக்குத் தெரிவிப்பார் என்று சொல்லவும் தான், ஏ பி வெங்கடேஸ்வரன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விஷயமே வெளியே தெரியவந்தது.

‘என்ன வழக்கு, சந்துரு?’ என்று கேட்ட நீதிபதியிடம், ‘ஒரு வித்தியாசமான காலத்தில் நாம் வாழ்கிறோம்…வெளியுறவுச் செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் நீக்கப்படுகிறார், ஒரு பள்ளி ஆசிரியை பத்திரிகை விளம்பரம் மூலம் நீக்கப்படுகிறார்’. அவ்வளவு தான், ஸ்டே கிடைத்துவிட்டது.

மிகுந்த புத்திக்கூர்மையும், எளிய மக்கள் பால் அர்ப்பணிப்பும், அநீதிக்கு எதிரான கடுமையான அறச்சீற்றமும், ஓயாத தேடலும், உழைப்பும் மிக்க வழக்கறிஞராக, பின்னர் நீதிபதியாகத் திகழ்ந்த அவரது முக்கியமான வழக்கின் மீது புனையப்பட்ட செம்மையான திரைக்கதை இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம், கடந்த பல ஆண்டுகளில் பெரிதும் பேசப்படும் முக்கிய படைப்பாக வந்திருக்கிறது.

சாதாரண மக்கள் தங்கள் கஷ்ட நஷ்டங்களோடு வாழ்வதையே இயல்பாகக் கருதிப் போய்க் கொண்டிருப்பவர்கள். அதில் இடி விழும்போது, தீப்பற்றிக் கொள்ளும் போது திண்டாடிப் போகிறார்கள். எத்தனை அடியுதைகளும் அவர்களை அசைப்பதில்லை. கொஞ்சம் காசுக்கு எத்தனை பாடும் எடுக்கிறவர்கள், எத்தனை பெரிய காசு கிடைக்கும்போதும் சமரசம் செய்து கொள்ள மறுத்துத் திடமாக நின்று நீதிக்காகப் போராடவும் செய்கிறார்கள். அதிகார வர்க்கம், ஆதிக்க மனப்பான்மை இந்த எளிய மக்களின் போராட்டங்களைக் கால் தூசுக்குக் கூட மதிக்காமல் அவர்களை இன்னும் கொடூரமாக ஒடுக்கப் பார்க்கும் வேளையில், நியாயங்களுக்காக உரக்கக் குரல் கொடுக்கும் மனிதர்கள் மற்றும் சீருடைக்கு உள்ளே சீரழிந்துவிடாத இதயமுள்ளவர்கள் தலையீடு செய்யும்போது ஒரு சின்ன வெளிச்சம் தட்டுப்படுகிறது. நீதி வழங்கப்பட்டு விடுகிறது. எல்லாம் சிதைந்து போன ஓர் ஏழையின் குடிசையில் அது ஒரு மிகப் பெரிய நம்பிக்கை ஒளி.

இந்த நம்பிக்கையைப் பன்மடங்கு பெருக்கும் நோக்கில் தயாரித்து வெளியாகியுள்ள படத்தின் வெம்மை ஜனநாயக சிந்தனையும், அறவுணர்வும் உள்ள யாரையும் கொண்டாடவே சொல்லும்.
நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த ராஜாக்கண்ணு, திரைக்கதையில் இருளர் சமூக மனிதராக்கப் பட்டிருக்கிறார். வில்லியர் வாழ்க்கை, பாம்பு பிடித்தல், விஷ முறிப்பு மருத்துவம், குல வழிபாடு, சடங்கு, சாங்கியங்கள், பிழைப்புக்காகப் புலம்பெயர் கொத்தடிமை வாழ்க்கை யாவும் அசாத்திய இயல்போட்டமாகத் திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. காதல் மனைவியோடு எப்போதும் இணை சேரத்துடிக்கும் இளைஞன் தான், பெண் குழந்தை படிப்புக்காக, அடுத்து மனைவி பெற்றெடுக்கவுள்ள மகவுக்காக செங்கல் சூளையில் வேலை தேடிக்கொண்டு எல்லோரையும் பிரிந்து செல்லவும் தயாராகிறான். ஆனால், காலம் அவர்கள் எல்லோரது திசைகளையும் குழப்பிப் பிய்த்துப் போட்டுக் குதறிச் சின்னாபின்னம் ஆக்கிவிடுகிறது.

பாம்பு பிடித்து உதவி செய்ய வந்தவன் மீதே நகைத்திருட்டுக் குற்றம் சுமத்தப்பட, அவனுக்காக அவனுடைய மனைவி, தம்பி, அக்காள் எல்லோரையும் வேட்டையாடுகிறது காவல் துறை. ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்குகிறது. அத்து மீறிப் பெண்களை இராத் தங்க வைத்து சொல்ல நாக்கூசும் கொடுமைகளுக்கு உட்படுத்துகிறது. ராஜாக்கண்ணு பிடிபட்டதும், அவன் தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க வன்முறை சித்திரவதைகள் செய்கிறது.

பிறகு அவனும் மற்ற சொந்தக்காரர்கள் இருவரும் தப்பியோடி விட்டதாகக் கதை தயாரித்து, அவர்கள் குடியிருப்புக்குள் போய்ச் சொல்லி, ‘மரியாதையாக சரண்டர் ஆகச்சொல்லு’ என்று மிரட்டவும் செய்கிறது அதிகாரத் திமிர்.

காணாமல் போன கணவனைத் தேடும் செங்கேணிக்காக, வழக்கறிஞர் சந்துரு நடத்தும் போராட்டம், அதிகாரவர்க்கத்தின் போலி சான்றுகள், பொய் சாட்சிகள் எல்லாவற்றையும் உடைத்து நியாயம் நிலை நாட்டுவதற்கான ஓயாத வேதனை பொழுதுகள், இவற்றின் முடிவில் மழைச் சாரலாக நீதி கிடைப்பதில் நிறைவு பெறுகிறது படம். காவல் துறை உயரதிகாரி – ஐ ஜி அளவில் பொறுப்பு வகிப்பவர், மனசாட்சியைத் தொட்டு நியாயத்தின் பக்கம் நிற்பதும், மனித உரிமைக்கான வழக்குகளுக்குக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லும் வக்கீலும் புனைவல்ல, உண்மை நிகழ்வின் அசல் பிரதிபலிப்பு.

‘காசு இல்லாதவங்கள பாம்பு கடிச்சா, உதவி செய்ய மாட்டீங்களா’ என்று செங்கேணிக்கு சமாதானம் சொல்கிறார், சந்துரு, தனக்குக் கொடுக்க காசு இல்லையே என்று சொல்லும் அவளிடம். அவளோ, ‘அந்த போலீஸ்காரங்கள பாம்பு கடிச்சாக் கூட காப்பாற்றுவேன்’ என்று பதில் சொல்கிறாள்.

எப்போதும் சிரித்த முகமும், கேலியும் கிண்டலும், விடுகதை புதிர் போடவும், பெரிய தனக்காரர்கள் முன் பவ்வியமாக நிற்க வழிவழியாகப் பழகிப் போன உடல்மொழியும், உன்னைக் கல்லு ஊட்டுக்காரி ஆக்கிடுவேன் என்ற ஆர்வமிக்க வாக்குறுதியுமாக ராஜாக்கண்ணு பாத்திரத்தில் அசத்துகிறார் மணிகண்டன். செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் அசாத்திய நடிப்பை வழங்கி இருக்கிறார். பப்ளிக் பிராசிகியூட்டராக குரு சோமசுந்தரம், அட்வகேட் ஜெனரலாக ராவ் ரமேஷ் மிக நேர்த்தியாகத் தோன்றுகிறார்கள். எழுத்தாளர் பவா செல்லதுரை, பேராசிரியர் இரா காளீஸ்வரன் இருவரும் களப்போராளிகளாக வருகின்றனர்.

நீதியைத் தவிர வேறு ஒன்றுக்குத் தலைவணங்காத சந்துரு அவர்களைத் திரையில் அபாரமாகக் கொணர்ந்திருக்கும் சூர்யா மிகுந்த பாராட்டுக்குரியவர். நாயக பிம்பம் பற்றிய கவலை இல்லாது, கதையை, கதை மாந்தர்களை முன்னிறுத்தி இருக்கும் அவரது பங்களிப்பு நடிகராக அவரது வாழ்க்கைப்பாதையில் முக்கிய மைல் கல். சிறப்பான பங்களிப்பு. வெறும் நடிப்புக்காக அன்றி, இந்தக் கதை பேசும் விளிம்புநிலை மனிதர்களுக்கான உண்மையான அக்கறையோடு படத் தயாரிப்பாளராகவும் சூர்யா-ஜோதிகா பாராட்டுக்குரியவர்கள் ஆகின்றனர்.

ஐஜி பெருமாள்சாமியாக பிரகாஷ் ராஜ், கம்பீரமான நடிப்பை, உடல் மொழியை, பார்வைக் குறிப்புகளை வழங்கி இருக்கிறார். பொய்யான வழக்குகளில் சிக்கவைக்கப்படுவது குறித்து இருளர்குடியில் பலரும் சொல்கையில் ஒரு சிறுவனின் கதை கேட்கையில் அவர் வெளிப்படுத்தும் அதிர்ச்சி உள்பட குறிப்பிடவேண்டியது.

படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை மிக முக்கியமாகப் பேச வேண்டிய பங்களிப்பு. சேன் ரோல்டன் இசையில் பாடல்களும் முக்கியமானவை. ‘தலை கோதும்’ என்ற அழகான பாடலை ராஜூ முருகனும், ‘மண்ணிலே ஈரமுண்டு’ உள்ளிட்ட மற்ற பாடல்கள் (பவர் பாடல் மட்டும் எழுதிப் பாடி இருப்பவர் அறிவு) எல்லாம் யுகபாரதியும் சிறப்பாக எழுதியுள்ளனர். எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. ஒண்டுக்குடிசையில் ஏதுமற்றவர்களின் இயல்பான தாம்பத்திய வாழ்க்கைக்குக் கூட, மழையில் தகர்ந்து விழும் தடுப்புச் சுவர் அனுமதி மறுத்துவிடுவதை, வயலில் எலிகள் பிடிப்பதை, காவல் துறை ஒடுக்குமுறைகளை எல்லாம் பார்வையாளரை மிகுந்த சலனத்திற்கு உட்படுத்தும் வண்ணம் இயங்கியிருக்கிறது கேமிரா.

நீதி மன்ற விசாரணை காட்சிகள் தமிழ்த் திரையில் எத்தனையோ பத்தாண்டுகளாக ரசிகர்களுக்கு பரிச்சயமானவை. உண்மையான கோர்ட் ரூம் அனுபவத்தை ஜெய் பீம் வழங்குகிறது. நீதிபதிகள் வருகை, நுழைவு, வெளியேறுதல், சாட்சிக்கூண்டு உள்பட நுட்பமாக உண்மைத் தன்மையோடு காட்டப்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கம் எனும் மகத்தான களப்பணி குறித்த முதல் காத்திரமான பதிவைச் செய்துள்ளது ஜெய் பீம். பட்டா படி என்பது தான் அதில் முக்கியமான கற்பித்தல்.

கொடுமைகளைப் பேசும் கதையில் இயல்பான நகைச்சுவையாக, அரசு வக்கீல் தாமதமாக நுழைவது, காவல் துறை அதிகாரியின் மனைவி ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து, பையனை டியூஷன் போக வர ஜீப் அனுப்பச் சொல்லி அழைப்பது, சாட்சிகளைப் பொய் சொல்லப் பழக்குவது போன்றவற்றை இடித்துக் காட்டுகிறது படம்.
இடதுசாரிகள் இயக்கத்தின் விடாப்பிடியான முழக்கமும், துணிவுமிக்க போராட்டங்களும், எளிய மக்களுக்கான அவர்கள் அர்ப்பணிப்பும் படத்தில் அழகாக சொல்லப்படுகிறது. பள்ளிகளில் மாறுவேடப் போட்டியில் அம்பேத்கர் ஏன் இடம் பெறுவதில்லை என்று பள்ளி ஆண்டுவிழாவில் வக்கீல் சந்துரு எழுப்பும் கேள்வி, ஜெய் பீம் வாசகத்தின் அடிநாதமாக நீதிக்கான போராட்டத்தை அடையாளப்படுத்துகிறது.

‘இருளர்னா பாம்பு பிடிப்பானா இந்தப் பையன்’ என்ற அதிகாரியின் கேள்விக்கு, ‘பாம்பு பிடிக்க வேணாம்னு படிக்கத்தான் அய்யா சர்டிபிகேட் கேட்கிறோம்’ என்ற குரலுக்கும், ‘தலைக்கு ஒரு கேஸ் தான் போடணும்னு ஏதாவது இருக்கா, இவனுங்க மேல எத்தனை கேஸ் வேணும்னாலும் போட்டுக்கோ’ என்று சொல்லும் அதிகார வர்க்கத்தின் குரலுக்கும் இடையே இருக்கும் முரண் தான் பேசப்பட வேண்டியது. நிறைவுக் காட்சியில் ராஜாக்கண்ணுவின் மகள் சிறுமி அல்லி, வக்கீல் வீட்டில் நாளேட்டைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து படிக்கிறாள். ஒட்டுமொத்த படைப்புக்காக இயக்குநர் த செ ஞானவேல் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

உண்மையின் பக்கம் உறுதியாக நின்று போராடும் நம்பிக்கையைப் படம் பேசுகிறது. ஆதிக்க சக்திகளை அம்பலப்படுத்துகிறது. நெடிய போராட்டம் தான் என்றாலும், ‘நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம் நீதி நாட்டுவோம்’ என்று சமூகத்திற்குச் சொல்கிறது. ஒட்டுமொத்த கவனத்தையும் இந்த வலுவான திரைக்கதையும், செம்மையான வசனங்களும், காட்சி மொழியும் அதனால் தான் ஈர்க்கிறது. எந்தத் திசை திருப்பும் விமர்சனங்களையும் அதனால் தான் கடந்து நின்று தொடர்ந்து பேசவும் செய்கிறது.

( மனதை வருடிய படங்கள் உண்டு. நெகிழ வைத்த படங்கள் உண்டு. இது மனதை உருக்கும் படம். ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய திரைப்படம் – இதை அழகாக வரிகளில் படம் பிடித்த வேணுகோபாலுக்கு அனந்த கோடி நன்றி! – ஆசிரியர் ,குவிகம் ) 

 

கண்ணன் கதையமுது! – தில்லைவேந்தன்

                        கண்ணன் கதையமுது!

Pin on Baby krishna      

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess                            

 கண்ணன் கதையமுது!

பாயிரம்!

முன்னோர் வணக்கம்!

அறியா வயதில் எனைப்பிரிந்த
   அன்புத் தந்தை, என்அறிவை
நெறியாய் வளர்த்த என்பாட்டன்,
   நேற்றும், இன்றும், என்றென்றும்
சிறியேன் மனத்தில் வாழ்தெய்வம்
   தினமும் வணங்கும் என்அன்னை –
முறையாய் மூவர் திருவடிகள்
   முதலில் பணிந்து தொடங்குகிறேன்!

பிள்ளையார் துதி!

தொடங்கிடும் செயல்து லங்க,
   சொற்றமிழ் புகழ்வி ளங்க
தடங்கலும் தடையும் நீங்க
   தரைமிசை இசையும் ஓங்க,
புடமிடு பொன்னாய்க் குற்றம்
   பொசுக்கியே போக்கும் வெற்றிக்
கடபடக் களிற்றின் ஞானக்
   கழலினைப் பணிந்தேன் நானும்.

கண்ணன் துதி!

மீனும் பறக்க விரிவானின் மேல்தாவி மேவுதல்போல்
நானும் விருப்பத்தால் நற்றமிழ்ப் பாக்கள். நவிலவந்தேன்
பேனும் உலகில் பெருமாளாய்ச் செய்கின்ற பேரருளே
கானில் கறவைகள் கன்றுகள் மேய்த்த கருமுகிலே!

நிலமகள் சுமையைத் தீர்க்க
   நீளுல கதனில் வந்தாய்!
அலமரும் மனச்சு மையை
   அகற்றிட வரமாட் டாயோ?
வலமுறப் பார்த்தன் தேரை
   வாகுடன் செலுத்தி வென்றாய்!
நலமுற வாழ்க்கைத் தேரை
   நடத்திட வரமாட் டாயோ?

தமிழ் வணக்கம்

தேனோடு பாலாய்க் கனியோடு கரும்பாய்த்
   தித்திக்கும் என்றன் தமிழே
ஊனோடு மறமும் உயிர்போன்ற அறமும்
   உவந்தேத்தி நின்ற தமிழே
வானோடு முகிலும் மழையாக மாறி
   வாழ்த்தாதோ உன்னைத் தமிழே
கோனோடு மக்கள் குறைபோக்கி என்றும்
   கோலோச்சும் அன்னைத் தமிழே

அவையடக்கம்

உளத்தினில் கோயில் கட்டி
   உயர்ந்தவர் வாழ்ந்த நாட்டில்
திளைத்திடும் அறியா மையால்
   சிறிதுமே திறமை இன்றிக்
களத்தினில் இறங்கி விட்டேன்
   கண்ணனின் கதையைச் சொல்ல.
அளத்தலில் புலமை கொண்டோர்
   அவரெனைப் பொறுத்தல் வேண்டும்

வீடுகள் தோறும் பிள்ளை
   விரும்பியே சுவர்கள் மீது
கோடுகள் போட்டால் அன்பால்
   கொள்வரே படமே என்று.
பீடுறு குழல்வாய்க் கண்ணன்
   பெருங்கதை யானும் சொன்னால்
பாடுறு புலமை வல்லீர்
   பற்றுடன் ஏற்றுக் கொள்வீர்

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess

 

 

 

கண்ணன் கதையமுது  ( நூல்)

வடமதுரை

நெடுமுகில்கள் இடிமுழங்க மழைகொ டுக்கும்
   நீள்வயல்கள் கதிர்விரிய வாய்சி ரிக்கும்.
தடம்நிறைய, புனல்நிறைய,மனம்நி றைய,
   தண்டமிழ்போல் தழைக்கின்ற நகரைச் சொல்ல
இடம்கொடுக்கும் சொல்லில்லை, எந்த நாளும்
   இல்லையென்று சொல்லாத மக்கள் உண்டு.
வடமதுரை வண்நகரை வாழ்த்திப் பாட
   வரவேண்டும் மீண்டுமொரு கம்ப வண்டு!
( தடம் – நீர்நிலை)

மடமயில்கள் விளையாடும் சோலை போன்று
   மங்கையர்கள் நடமாடி மகிழ்ந்தி ருப்பர்.
அடவிகளும், அருவிகளும் பொழில்கள், பொய்கை
   அழகென்ற சொல்லுக்குப் பொருளைக் கூறும்
இடமகன்ற வீதிகளில் மாளி கைகள்
   இருபுறமும் உயர்மலைகள் என்று நிற்கும்
வடமதுரை எனப்புலவர் பரவிப் பாடும்
   வளநகரின் மன்னனவன் சூர சேனன்.
( அடவிகள் — காடுகள்)

கண்ணன் கதையமுது!

(வடமதுரை மன்னன் சூரசேனன் மகன் வசுதேவனுக்கும், தேவகனின் அருமை மகள் தேவகிக்கும் திருமணம் நடைபெற்றது. மணவிழா முடிந்ததும் மணமக்களைத் தேரில் ஏற்றிச் செல்கிறான் தேவகிக்கு அண்ணன் முறையான கம்சன்)

வசுதேவன் தேவகி திருமணம்

மன்னவனின் மைந்தனவன் அழகில் மிக்கான்
   வசுதேவன் பெயர்கொண்டான் அறத்தில் நிற்பான்
அன்னவனும் தேவகனாம் அரசன் ஈன்ற
   அருமைமகள் தேவகியை மணந்து கொண்டான்
பொன்னணிகள் தேர்,பரிகள், கரிகள் மற்றும்
   பொருள்யாவும் பரிசெனவே தந்தான் தந்தை.
மின்னனையாள் அண்ணன்முறை ஆன கம்சன்
   மெல்லியலாள் தேரோட்ட முன்வந் தானே.

கம்சன் தேரினைச் செலுத்துதல்

சங்கொடு முழவொ லிக்கச்
   ததும்பிடும் பண்வி ளங்க
மங்கையர் வாழ்த்துப் பாட
   மங்கல மொழிகள் கூறத்
தங்கையின் மனங்க ளிக்கத்
   தாவியே தேரில் கம்சன்
பொங்கிடும் பூரிப் போடு
   புரவியைச் செலுத்த லானான்

(அப்போது அங்கு வானில் ஒலித்த அசரீரியின் குரல், வசுதேவன்-தேவகியின் எட்டாம் மகனால் கம்சனுக்கு மரணம் நேரும் என்று கூறவே கொதிப்படைந்த அவன் தேவகியைக் கொல்ல முற்படுகிறான்)

அசரீரியின் எச்சரிக்கை

கடிவாளம் அண்ணன் கையில்
களிப்பொன்றே மணப்பெண் நெஞ்சில்
அடியோடு தமைம றக்க
ஆதவனை முகில்ம றைக்க
இடியோசை போன்று வானில்
எவ்வுருவும் இன்றிப் பேசும்
வெடிகுரலும் வரவே கம்சன்
விழிப்புடனே கேட்க லானான்.

மகிழ்வுடன் தேரை ஓட்டும்
மாபெரும் முட்டா ளோநீ
மகனென உன்றன் தங்கை
வயிற்றினில் எட்டாம் பிள்ளை
பகையெனக் கொல்வான் உன்னை
பார்மிசை மாய்ந்து வீழ்வாய்
மிகமிகத் தெளிவாய்க் கூறி
வெடிகுரல் நின்ற தம்மா!

திகைத்தான் கம்சன் திடுக்கிட்டான்
தீயாய் உள்ளம் கொதித்திட்டான்
பகைத்தேள் இவளின் வடிவத்தில்
பாசக் கொடுக்கால் கொட்டுமுன்னே
வகுத்தேன் தப்பும் வழியினைநான்
வாளால் வகிர்ந்து மாய்த்திடுவேன்
மிகுத்த சினத்தால் கூறியவன்
வெறியால் தரையில் குதித்திட்டான்.

( தொடரும்)

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess

                             

நாகரிகம் – வஸந்த்ரா

சைக்கிளை பிடித்து கொண்டு ஓடி... | Dinamalar

 

A boy pushing his bike underneath a barrier at a railway crossing in Patna, India Stock Photo - Alamyமின்சார இலாகாவில் நான் டைபிஸ்டாகக்  கோவையிலிருந்து திருப்பூர் மாறுதல் பெற்றுப்  பொறியாளர் அலுவலகத்தில் பணியேற்று ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. 

டைபிஸ்ட் இருவர். இருந்ததோ ஒரு டைப் மிஷின். எனவே இரண்டு ஷிப்ட். நான் காலை 8 முதல் ஒரு மணிவரை .

ஒருநாள் இன்ஸ்பெக்ஷன் காரணமாகக்  காலை  8.30 மணிக்கே கோவையிலிருந்து தலைமைப் பொறியாளரும்,உதவி மேற்பார்வைப் பொறியாளரும்  எங்களது அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் எங்கள் பொறியாளர் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அறையிலிருந்து அழைப்பு மணி அடித்தது.

எங்கள் அலுலவகத்தில் அன்றைக்குதான் ஒரு புதிய ஹெல்ப்பர் சேர்ந்திருந்தான் . என் பையன்  வயதுதான் இருக்கும். பள்ளியிலிருந்து நேராக ஆபீசுக்கு வந்தவன்போல மிகவும் சின்னப் பையனாக இருந்தான் . ஈரோட்டில் வேலை செய்த அவனது தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது.

அலுவலகர் அறையிலிருந்து மணி இரண்டாம் முறை அடித்தது. அவனுக்கு முன்னால்  இருந்த ஹெல்ப்பர் எல்லாம் மணி அடித்ததும் உள்ளே சென்று அதிகாரிகள் சொன்ன வேலையைச் செய்துவருவார்கள். இந்தப் பையன் மணிச்  சத்தம் கேட்டதும் மிரள மிரள விழித்தான்.

நான் அவனிடம் உள்ளே சென்று பார் என்று கண்ணால் ஜாடைகாட்டினேன்.

உள்ளே சென்ற அவன் ஒரு நிமிடத்தில் திரும்ப என்கிட்டே வந்தான். “ யக்கா , , 3 காப்பி வாங்கி வரச்சொன்னார்கள். நான் திருப்பூருக்குப் புதுசு! காப்பிக்  கடை எங்கே இருக்கு?’ என்று என்கிட்டே கேட்டான். நானும் ஊருக்குப் புதுசுதான். இருந்தாலும் அன்னபூர்ணா ஹோட்டலில் நல்ல காப்பி கிடைக்கும் என்று மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருந்துதான் அலுவலகர்கள் காப்பி வாங்கி வரச்சொல்வார்கள் என்று அறிந்திருந்தேன். அந்த ஹோட்டல் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அதனால் அவனிடம், “ தம்பி சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போய் நல்ல காபி வாங்கிவா “ என்று சொல்லிக்  காசுகொடுத்து அனுப்பினேன்.

‘சரிக்கா ‘ என்று சொல்லிவிட்டு சைக்கிளை ஆபீஸ் அறையிலிருந்து கஷ்டப்பட்டு இறக்கி எடுத்துக்கொண்டு போனான்.

வருவான் வருவான் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் ஆயிற்று அவன் வரவேயில்லை. இன்ஸ்பெக்ஷன் வந்த அதிகாரிகள் வேலையை முடித்துவிட்டுக்  கோவைக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டனர் ஆனால் இன்னும் அந்த ஹெல்ப்பர் பையன் வரவேயில்லை. எங்கள் அலுவலக அதிகாரிக்கோ செமக் கோபம். ” “ஒரு காப்பி சரியான நேரத்துக்கு வாங்கிவரத் துப்பு இல்லே! என்ன பையன் இவன்! அவன் வந்தா உள்ளே அனுப்புங்க” என்று என்கிட்டே சொல்லிவிட்டு அறைக்குப் போய்விட்டார்.

‘என்னாச்சு இந்தப் பையனுக்கு .ஏன் இன்னும் அவன் வரவில்லை ? சாதாரணமா 10-15 நிமிஷத்தில வந்திடலாம்.. இவன் போய் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆகப் போகுது. பொறியாளர் வேற கோபமா இருக்கார் இவனுக்கு என்ன ஆயிற்றோ? அவன் அப்பா ஆபீஸ் வேலையாக வெளியே சென்றிருந்தபோதுதான் பஸ்சில் அடிபட்டு இறந்துபோனார்.’ என்றெல்லாம் எண்ணி என் மனம் புதிதாகச்  சேர்ந்த பியூனுக்காக வருந்தியது.

ஒரு வழியாக அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு 3 டம்ளர் காப்பி எடுத்துக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க உள்ளே வந்தான். நான் அவனை ஒன்றும் சொல்லவில்லை. நேரே பொறியாளர் அறைக்குச் செல்லும்படி கூறினேன். ஒரு ஐந்து நிமிடத்துக்கு அவர் அவனைத் திட்டும் சத்தம் அலுவலகம் பூரா எதிரொலித்தது.

“சார்! அந்த யக்காதான் சைக்கிளை எடுத்துக்கிட்டு போகச் சொல்லிச்சு! அதனாலதான் சார் லேட்டாயிடுச்சு ‘ என்று கிட்டத்தட்ட அழும் குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்ட நான் உள்ளே சென்று “ சீக்கிரம் காப்பி வாங்கி வருவதற்காகத்தான் சைக்கிளை எடுத்துக்கிட்டுப்  போகச்சொன்னேன்.” என்று என் பேச்சை நியாயப்படுத்தினேன்.

“என்னடா உளரரே! சைக்கிள்ள போனாதானே சீக்கிரம் வரமுடியும்?” பொறியாளர் வெடித்தார்.

அதற்கு அவன், “ சார்! எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. அதனால சைக்கிளை போகும்போதும் வரும்போதும் தள்ளிக்கிட்டே வந்தேன்”

“ சைக்கிளை ஓட்டத் தெரியாதுன்னா சொல்லவேண்டியதுதானே ? என்று பொறியாளர் மிரட்டினார்.

அவன் கண்ணில் நீர் கட்டியது.

“ சார்! இன்னிக்குத்தான் நான் வேலையில சேர்ந்திருக்கிறேன். பொறப்படும்போது எங்க அம்மா, ‘ இன்னிக்குத்தான் வேலையில சேரரே! யார் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்யணும் நல்ல பையன்னு பேரு வாங்கணும் ‘ அப்படீன்னு சொன்னாங்க அதனாலதான் சார்! யக்கா சைக்கிளை எடுத்துட்டுப்போன்னு சொன்னதும் எடுத்துக்கிட்டுப்  போயிட்டேன்.” என்றான்.

பொறியாளரும் நானும் சிரித்துவிட்டோம்.

அவர், ‘சரி, சரி, மூணு காபியை நாம மூணுபேரும் குடிச்சிடலாம்” என்று சிரிப்பினூடே சொன்னார்.

அது பெரிய ஜோக் ஆகி அடுத்த ஷிப்ட்டில் வந்த அத்தனை பேருக்கும் தனித்தனியா சொல்லிச்  சிரித்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் அது புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனுக்கு எவ்வளவு வேதனையைத் தந்திருக்கும் என்பதை அன்றைக்கு நான் உணரவில்லை.

வருடங்கள் 34 உருண்டோடின!

விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அலுவலகத்திற்குச் செல்லவேகூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நண்பர் தன்னுடைய எலெக்டரிசிடி மீட்டர் பிரச்சினையை சரிபண்ணவே முடியவில்ல என்று வருத்தப்பட்டபோது அவருக்கு உதவலாம் என்று எங்கள் மின்சாரப் பொறியாளர் அலுவலகத்துக்குப்  பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்றேன்.

அலுவலகத்தில் மணிமேகலை முகுந்தன் உதவிப் பொறியாளர் என்று பெயர் போட்டிருந்தது.. சட்டென்று அவளை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற ஞாபகம் வந்தது. இருபது வருடங்களுக்கு முன்னால் அவள் அப்பாயிண்மெண்ட் ஆர்டரை நான்தான் டைப்பண்ணிக்  கையெழுத்து வாங்கி அவள் கையில் கொடுத்தேன். அன்று அவள் பாவாடை தாவணி போட்டுக்கொண்டு சின்னப் பெண்ணாக இருந்தாள்.

என்னைப் பார்த்ததும் மணிமேகலைக்கும் அந்த ஞாபகம் வந்திருக்கும். ‘வாங்க அக்கா’ என்று வரவேற்று பஜ்ஜி டீ எல்லாம் வாங்கிக்கொடுத்தாள். என் நண்பர் மீட்டர் பிரச்சினையைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். பொறியாளர் இங்கேதான் இருக்கிறார் அவரிடம் அனுமதிபெற்று உடனே சரி செய்துவிடலாம் என்று சொன்னாள். இன்னும் கொஞ்சம் ஊர்க்கதை பேசிவிட்டு நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினேன்.

அப்போது அந்த அறைக்குப் பொறியாளர் வந்தார். மணிமேகலை எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு ‘இவங்க இந்த ஆபீஸ் பழைய டைப்பிஸ்ட். எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடிச்சுக்கொடுத்ததே இவங்கதான் என்று என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தினாள். நான் வந்த விஷயத்தைப்பற்றியும் சொன்னாள். .

அவர் என்னை சில வினாடிகள் பார்த்துவிட்டு “என்னை நினைவிருக்கா யக்கா” என்றார். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு சட்டென்று ஞாபகம் வந்தது. அவர்.. அவன்.. அந்த ஹெல்ப்பர் .. என்னால் நம்பவே முடியவில்லை. அவரே கூறினார் .

மணிமேகலை மேடம். நான் முதன் முதலில் இவங்ககிட்டேதான் ஜாய்ன்பண்னினேன். என்  முதல்நாள் அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனக்கு உதவிசெய்ய இவர்கள் என்னைச்  சைக்கிளில் போய் காப்பி வாங்கிவரச் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்போது சைக்கிளே ஓட்டத் தெரியாது. யார் சொல்லையும் தட்டக்கூடாது என்று வீட்டில் அம்மா சொன்னதால் சைக்கிளைத்  தள்ளிக்கொண்டே போய் காப்பி வாங்கிவந்தேன்.. எல்லாரும் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். இப்போ நினைச்சுப் பார்த்தா எனக்கும் சிரிப்பாத்தான் வருது. ஆனால் அப்பவே முடிவுசெய்தேன். நாம முயற்சிபண்ணி பெரிய ஆளா வரணும் என்று. பார்ட் டைம் இஞ்சினியரிங் முடிச்சு இன்னிக்கு இங்கேயே பொறியாளரா வந்திட்டேன்.” என்று தயங்காமல் தன் முதல்நாள் அனுபவத்தைச் சொன்னார்.

‘சொன்னா  நம்பமாட்டீங்க ஒவ்வொரு புரமோஷன் கிடைக்கும்போது உங்களைத்தான் நினைச்சுக்குவேன்.’ என்று அவர் என்னிடம் சொன்னதும் என் கண்ணில் நீர் கட்டியது..

“வாங்க யக்கா ! நான் வெளியேதான் போயிக்கிட்டு இருக்கேன். உங்களை வீட்டிலேயே கொண்டுவிட்டு விடுகிறேன் ‘ என்று சொல்லித்  தன் ஸ்கோடாவில் அவரே ஓட்டிக்கொண்டு வந்து என்  வீட்டில் விட்டுவிட்டுப் போனார் அந்த ஹெல்ப்பர்.!

‘பிறர் மனம் துன்புறாதபடி செயல் புரிக! அதுவே நாகரிகம் ’ என்ற ஆன்றோர் வாக்கு ரிடையராகி பத்துவருடம் கழித்து மண்டையில் உதித்தது.

 

 

 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

பிறவிப் பெருங்கடலைப் போன்ற சாவுக்கடலைக் கடப்பதற்கு உதவக்கூடிய படகின் முக்கிய பகுதியை கோபத்தில் உடைத்த கில்காமேஷ் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நின்றான்.

சாவை வென்ற உத்னபிஷ்டிம் என்ற அதிசய மனிதனைக் கண்டுபிடித்து அவனிடமிருந்து அந்த ரகசியத்தைப் பெறவேண்டும் என்ற வெறியில் காடு மலை மேடு பள்ளம் கடந்து பலருடன் போராடி சிங்கங்களைக் கொன்று உடல் தளர்ந்து மனம் தளராமல் வந்த கில்காமேஷ்   இப்போது என்ன செய்வது என்று புரியாமல் மயங்கி நின்றான்.

கில் காமேஷின் பெருமைகளை அறிந்த சாவுக்கடலின் படகோட்டி அவனுக்கு எப்படி உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“படகோட்டியே! என தவறுக்கு வருந்துகிறேன். நான் எப்படியாவது சாவுக்கடலைக் கடந்து  உத்னபிஷ்டிம் அவர்களைச் சந்திக்கவேண்டும். அதற்கு உடைந்த இந்த இப்படகைச் சரி செய்ய வேண்டும்.  அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ?, சொல்!”  என்று வேண்டி நின்றான்.

“கில்காமேஷ்  அவர்களே ! உங்கள் பெருமை அறிந்தவன் நான். படகின் சர்ப்பங்கள் நிறைந்த பகுதியை உடைத்து விட்டீர்கள்! அந்தப் பகுதிதான் சாவுக்  கடலையும்  அதற்குப் பின்னால் உள்ள சாவு ஆற்றையும் அதில் உள்ள மிருகங்களையும்   கடந்து செல்ல உதவும்.  முதலில் நாம் படகைச் சரி செய்யவேண்டும். அது கடினமான காரியமாக இருந்தாலும் முடியாத காரியம் இல்லை. அதற்கு நீங்கள் ஒரு காரியம் செய்யவேண்டும் “

“படகோட்டியே! இப்போதுதான் எனக்கு உயிர் வந்தது போல இருக்கிறது. எதையும் செய்ய வல்லவன் நான். நான் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் சொல்லு” என்றான்.

9 Epic of Gilgamesh ideas | epic of gilgamesh, ancient mesopotamia, epic

“அந்த சர்ப்பப் பகுதியை உருவாக்க நூற்றிருபது கழிகள் தேவை. நீங்கள் காட்டிற்குச் சென்று அறுபது முழ நீளமுள்ள கழிகளை வெட்டி எடுத்து வாருங்கள். அவற்றை ஒன்றோடொன்று சேரும்படி பிடுமின் என்ற பசை பூசவேண்டும். அவற்றைப் படகுடன்  இணைக்க துளைகள் போடவேண்டும்.   நீங்கள் கழிகளைக் கொண்டுவாறுங்கள். அதுவரை படகு கவிழ்ந்துவிடாமல் இருக்க நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் படகோட்டி.

மெய்  வருத்தம் பாராத கில்காமேஷ் காட்டின் உட்பகுதிக்குச்  சென்றான். அறுபது அடி நீள நூற்றிருபது கழிகளை வெட்டினான். படகோட்டி கூறியது போல அவற்றிக்கு இடையே இடைவெளி தெரியாமல் இருக்க பிடுமின் தடவினான். குறுக்கு விட்டங்கள் அடித்து படகோட்டியிடம் கொடுத்தான். பின்னர் இருவருமாக சேர்ந்து இரவு பக்கம் பாராமல் உடைந்து போன படகைச் செப்பனிட்டார்கள்.பிறகு அதைக் கடலில் மிதக்கவிட்டார்கள். படகு பழைய நிலைக்கு வந்தது குறித்து இருவருக்கும் மிகழ்ச்சி.

தனது இலட்சியத்தை அடைய சாவுக்கடலை மிக வேகமாகக் கடந்தான். சாதாரணமாக நாற்பத்தைந்து நாட்கள் ஆகும் அந்தப் பயணத்தை மூன்றே நாட்களில் இருவரும் கடந்தார்கள். பிறகு சாவு நீர் ஆற்றிற்கு வந்தார்கள். அதுதான் கில் காமேஷின் லட்சியத்தை அடைவதில் இருக்கும் கடைசித் தடை. அதைக் கடாக்கும் வழியை படகோட்டி கூறினான்.

” இதோ வந்து விட்டது சாவு ஆறு. இப்போது நீங்கள் கொண்டுவந்த கழிகளை உபயோகிக்கவேண்டும். ஒவ்வொன்றாக கழிகளை எடுத்து நீங்கள் படகைத் தள்ளுங்கள். நான் படகைச் சரியான அபாதையில் செலுத்துகிறேன். உங்கள் கை நீரில் படாமல் பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம். பட்டால் சாவு இங்கேயே நிகழ்ந்துவிடும்.  கழிகள் மளக் மளக் என்று சில வினாடிகளில்  முறிந்துவிடும். உடனே அடுத்த கழியை எடுத்துத் துழாவ வேண்டும். இப்படி நூற்றிருபது கழிகளையும் உபயோகப் படுத்தவேண்டும். வாருங்கள் புறப்படுவோம்” என்றான் படகோட்டி.

கில் காமேஷ் மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டான்.  நூற்றிருபது கழிகளையும் ஜாக்கிரதையாக உபயோகித்தான். கடைசிக் கழியை உபயோகித்த பின்னரும் இன்னும் கொஞ்ச தூரம் செல்லவேண்டும் என்றிருந்தது. கில் காமேஷ் தன் மிருகத் தோலைக் கழற்றி அதையே வேக வேகமாக வீசிக்  காற்றை வரவழைத்துப் படகைச் செலுத்தினான். படகோட்டி கில்காமேஷின் வீடா முயற்சியைப் பார்த்து ஆச்சரியத்தின் வசப்பட்டான்.

கரையை அடைந்ததும் படகோட்டி கில்காமேஷைத் தன் எஜமான்  உத்னபிஷ்டிம் இருக்கும் இடத்திற்கு  அழைத்துச் சென்றான்.

தூரத்தின் தன் படகோட்டியுடன் மற்றொரு புதியவன் வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் உத்னபிஷ்டிம். படகு நாடுக கழி இல்லாமல் தாறு மாறாக வரும்போதே அவன் சந்தேகப்பட்டது சரியாயிற்று. கில் காமேஷைப் பார்த்து, “யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.

” நான்தான் கில்காமேஷ் ! ஊருக் நகரின் மன்னன்.  அனு என்ற கடவுளின் பராமரிப்பில் வாழும் மாவீரன் நான்!” என்று தயக்கமின்றி வந்தது அவன் பதில்.

” வீரன் என்றால் ஏன் இப்படி மிருகத்தின் ஆடையை ஊடுத்தியிருக்கிறாய்? ஏன் உன் முகம் உலர்ந்து போயிருக்கிறது? ஏன் இப்படி காற்றைப் பிடிக்கத்  திரிபவன் போல்  இந்த அமானுஷ்யப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

” உண்மைதான். நான் உலகில் யாரும் செய்ய இயலாத கடுமையான பயணத்தை மேற்கொண்டு இந்த இடத்திற்கு  வந்திருக்கிறேன். பனியும் வெப்பமும்  என்னைத் தாக்கின. எனக்கு வேண்டியவர்களும் மற்றவர்களும் என்னை இந்த ஆபத்தான பயணத்திற்குப் போகவேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் எனக்கு ஒரு முக்கியக் கடமை  ஒன்று இருக்கிறது. என ஆருயிர் நண்பன் எங்கிடுவை சாவுத் தேவன் என்னிடமிருந்து பிரித்துவிட்டான். எனக்காக உயிரையே கொடுத்தவன் அவன். எனது வலது கரம் அவன். தேவ உலகத்துக் காளையை நான் வெற்றி கொள்ள உதவியவன். செடார் காட்டு ஹம்பாபாவை நான் முறியடிக்க எனக்கு வழிகாட்டியாக இருந்தவன். இன்னும் எண்ணற்ற போர்களில் எனக்குத் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டவன். அப்படிப்பட்ட அவன் உயிரைச் சாவுத்தேவன் எடுத்துச் சென்றதை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. அவன் இறப்பதற்கு முன் என்னிடம் கூறியதை என்னால் மறக்கவே முடியாது. ” நண்பா! எனக்கு நேர்ந்த இந்த சாவு என்ற கொடுமை உனக்கு நேரக்  கூடாது. எல்வோரையும் வென்ற நீ அந்த சாவுத்  தேவனையும் வெல்லவேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவனை உயிர்ப்பிக்க என்னால் ஆன மட்டும் முயற்சி செய்தேன். அவன் உடல் புழுத்துப் போக்கும்வரை அவனைக் கட்டிக் கொண்டே இருந்தேன்.  ஆனால் அவனை என்னால் காப்பாற்ற  முடியவில்லை. 

என நண்பனுக்கு நேர்ந்த கதி எனக்கும் வந்துவிடுமே என்ற மரண பயம் எனக்கும் வந்தது. அதனால்தான் சாவை வெற்றி கொண்ட உங்களைத் தேடி வந்தேன். பல விதமான கஷ்டங்களைத் தாண்டி உங்களிடத்தில் வந்திருக்கிறேன். எண்ணற்ற  மலைகள் காடுகள் கடல்கள் நதிகள் எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். இருள் சூழ்ந்த பிரதேசத்தில் திக்குத் தெரியாமல் நடந்து வந்தேன். மது அரசியின் வீட்டிற்கு வரும்  முன்னரே என ஆடைகள் கிழிந்து விட்டன. தூக்கத்தின்  இன்பம் கூட என்னை விட்டுப் பொய் விட்டது. கொடிய விலங்குகளை எல்லாம் வேட்டையாடி அவற்றின் தோலையே ஆடையாக உடுத்திக் கொண்டேன்.  கிட்டத்தட்ட ஒரு காட்டு மிருகம் போல நான்  மாறிவிட்டேன். சாவுக்  கடலையும் சாவு ஆற்றையும்  உங்கள் படகுக்காரன் உதவியால் தாண்டி வந்தேன்.

ஓ உத்னபிஷ்டிம்! என தகப்பனே ! நீங்கள் கடவுளர்களின் அருள் பெற்றவர்!  . இறப்பை வென்ற மாவீரர்! நான் தங்களிடம் வாழ்வு சாவு பற்றிய ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எப்போதும் வாழ்வது என்கிற நித்தியத்தை எப்படி அடைவது என்பதை நீங்கள்தான் எனக்குச் சொல்லித்  தரவேண்டும்! நானும் தங்களைப்போல அமரனாக  இருக்க விரும்புகிறேன்! தயவு செய்து எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லிக் கொடுங்கள்!” என்று நெஞ்சுருக  வேண்டி நின்றான் கில்காமேஷ் !

உத்னபிஷ்டிம் கில்காமேஷை  உற்றுப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு கனிவு தெரிந்தது.  கில்காமேஷின் தோள்களில் கையைவைத்து பேசத்தொடங்கினார்!

(தொடரும்) 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

கண்டராதித்தன்

 

இராஜாதித்தன் முன்கதை:

 

வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருந்த சோழ நாடு, இராட்டிரகூட, கங்க கூட்டணியுடன் போரிட்டது.

இப்போரில், சோழ இளவரசன் யுவராஜா இராஜாதித்தன் அகால மரணமடைந்து, சோழர்கள் பெரும் தோல்வியைத் தழுவினர்.
சோழவளநாடு சோகமுடைத்தது!
இனி வருவது காண்போம்.

இராஜாதித்தனின் மரணம் சோழப்படையை கட்டுக் குலைத்தது.  குழப்பமடைந்த சோழப்படை, இரவோடு இரவாக, தஞ்சை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கியது. இராட்டிரகூட கிருஷ்ணன் வெற்றியால் கெலித்தான்.. களித்தான்.. குதூகலித்தான். “பூதுகா! உன்னால் தான் இந்த வெற்றி!” என்று அவனைப் பாராட்டினான். அவனுக்குப் பரிசுகள் பல அளித்தான்.

பராந்தகனால் இந்தப்பேரிடியைத் தாங்கமுடியவில்லை.  தூண் போல உறுதியாக இருந்த யுவராஜா இராஜாதித்தசோழன் சாய்ந்தான். எதிர்காலச் சோழர் நிலைமை கேள்விக்குறியானது.
சோழநாட்டை விரிவாக்கும் கனவு நொறுங்கியது.
இராஜாதித்தனின் தம்பி – கண்டராதித்தன் சிவன்பால் பற்று கொண்டு – போர்களில் அதிகமாகப் பங்கு பெறாமலிருந்தான். அவன் தம்பி அரிஞ்சயன் போர்களில் பங்கு பெற்றிருந்தான். தக்கோலப்போரிலும் காயங்கள் பட்டு சாகசம் செய்து, வீரத்தை வெளிப்படுத்தியிருந்தான். 

பராந்தகன் தன் மகன்களை அழைத்தான். அத்துடன் கண்டராதித்தனின் புது மனைவி மழவர் மகள் செம்பியன் மாதேவியையும், அரிஞ்சயனின் மகன் சுந்தரனையும் அழைத்தான். பராந்தகன் பேசினான்: “இராஜாதித்தன் மரணம் நம்மை வேரோடு ஆட்டிவிட்டது. சோழர்களது எதிர்காலம் இருண்டு விடுமோ என்று அச்சமாக உள்ளது. நாட்டு நிலைமை என்ன? முதலில், தொண்டை நாட்டு நிலைமை என்ன?” -என்றான்.

அரிஞ்சயன்: “தந்தையே! அண்ணனின் மறைவினால் சிதறிய நம் சோழப்படை இப்பொழுது கட்டுப்பாட்டில் உள்ளது. தொண்டை மண்டலத்தை நாம் இழந்தாலும், கிருஷ்ணன் படைகள் தஞ்சை வர இயலாது தடுத்து விட்டோம். கிருஷ்ணனின் படைவீரர்கள் இன்னும் தொண்டை மண்டலத்தில் தங்கு தடையின்றி சுழன்று வருகின்றனர். ஆனால், தொண்டை மண்டலம் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆங்காங்கே இருக்கும் சிறு குறுநில மன்னர்கள் அந்தப்படைகளுக்கு இன்னல் விளைவித்து வருகிறார்கள். நமது வீரர்கள் மாறுவேடத்தில் அங்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தி – அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  கிருஷ்ணனின் சிறுபடையொன்று சோழ நாட்டைச் சுற்றி ராமேஸ்வரம் சென்றுள்ளது. அவன் படைகளின் பெரும் பகுதி மானியக்கேது திரும்பிவிட்டது”

“பாண்டிய நாட்டு நிலை?” என்றான் பராந்தகன்.
“நமது தோல்வியால் தினவெடுத்த வீரபாண்டியன் துளிர்த்து எழுந்துள்ளான். இராஜசிம்மன் மரணத்திற்குப் பின் வீரபாண்டியன் இப்பொழுது மதுரையைக் கைப்பற்றிக் கொண்டு ஆளுகிறான். தாங்கள் ஆணையிட்டால், வீரபாண்டியன் மீது படையெடுத்துச் செல்வோம்” – என்றான் அரிஞ்சயன்.

பராந்தகன் தலையசைத்தான்.

“அரிஞ்சயா! உன் வீரத்தின் மீது எனக்கு அவநம்பிக்கை என்றுமே இல்லை. ஆனால் இன்றைய நிலையில் அதற்கு என் மனம் ஒப்பவில்லை. எனது வாழ்வின் அந்திம காலம் வந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு, இருப்பதைத் தக்க வைத்துக்கொள்வதே உசிதம்” என்றான்.

அனைவர் கண்களும் சற்றுக் கலங்கியது.

கண்டராதித்தன் பேசினான் “தந்தையே, முதலில் நாம் நமது படைதனைச் சீராக்க வேண்டும். காத்திருக்கவேண்டும். மேலும் சில கோவில் திருப்பணிகள் காத்திருக்கின்றன. அவற்றைத் தாங்கள் செய்து அமைதியுறவேண்டும். சோழ எல்லைகளுக்குள் நாம் இன்று கூட்டுப்புழு போல இருக்கிறோம். காலம் கனியும் போது பட்டாம்பூச்சியாக பறப்போம். அகலக்கால் வைக்காது – சிறிது சிறிதாக சோழநாட்டைப் பேரராசாக்குவோம்.”- என்றான்.

பராந்தகன்: “சரியாகச் சொன்னாய் கண்டராதித்தா! அரிஞ்சயனும் போரில் காயமுற்றிருக்கிறான். அவனுடைய மகன் பராந்தகன். என் பெயர் கொண்டவன். – சுந்தரன் என்று அவனுக்குப் பெயர் பொருத்தமானதே! நல்ல வீரனாக இருக்கிறான். அவனை இந்தப் பாண்டியர்களைக் கவனித்து, அவர்கள் மேலும் துள்ளாமல் பார்த்துக் கொள்ளச் செய்யவேண்டும்” – என்றான்.

பராந்தகன், மேலும் : “உடனே நாம் கண்டராதித்தனுக்கு யுவராஜாப்பட்டம் கட்ட வேண்டும். அரிஞ்சயா! நீ தான் கண்டராதித்தனைக் கண்ணும் கருத்தாக்கப் பாதுகாக்க வேண்டும்.” என்றான்.

பிறகு, பராந்தகன் கண்டராதித்தன், அவனது மனைவி செம்பியன் மாதேவி இருவரையும் அழைத்தான். அந்தரங்க அறையில் மூவரும் சந்தித்தனர்.

பராந்தகன்: “கண்டராதித்தா! நீ ஒருநாள் சோழ மன்னனாகாகக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிவபக்தியில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் இருவரும் கூட அதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். காலம் செய்த கொடுமை தானோ – காலன் இராஜாதித்தனைக் கவர்ந்தான். சிவன் சித்தம் இப்படியிருக்குமானால் நாம் என்ன செய்ய முடியும்?” என்றான்.

“தந்தையே! இறைவன் திருவுள்ளத்தை யாரே அறிய இயலும்? இந்த மழவர் மகள் இன்னும் பிள்ளை பெறவில்லை. வாரிசும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் அரசுப்பணியை விடச் சிவன் பணியே உகந்ததாக நினைக்கிறோம். ஆகவே எனக்குப் பட்டம் கட்டுவதை விட மாவீரன் தம்பி அரிஞ்சயனையே யுவராஜாவாகச் செய்வது உத்தமம்” என்றான்.

செம்பியன் மாதேவியும் “தந்தையே அவ்வண்ணமே செய்யுமாறு நானும் கோருகிறேன்” என்றாள்.
பராந்தகன் கண்ணில் ஒரு துளி திரண்டது.
“கண்டராதித்தா! மாதேவி! உங்கள் இருவரது மனங்கள் பொன் போன்றது. நீங்கள் சொல்வதற்கு நான் ஒப்பினாலும் அது நடவாது. அரிஞ்சயனிடம் நான் தனியாகப் பேசினேன். அண்ணனிருக்க தான் அரசனாவது ஒருநாளும் நடவாது என்று அடித்துச் சொல்லிவிட்டான். உன் தம்பி ஒரு தங்கக் கம்பி”, என்றான்.

கண்டராதித்தன், மாதேவி இருவரும் நெகிழ்ந்தனர்.
பராந்தகன் தொடர்ந்தான்:

“ஆனால் ஒன்று சொல்வேன். குடந்தை ஜோதிடர் நமது குடும்ப ஆஸ்தான ஜோதிடர். அவர் உன் ஜாதகத்தைப் பார்த்து – சிவநெறியுடனும், மன்னராகவும் இருப்பாய் என்றார். ராஜாதித்தன் உயிரோடு இருக்கும் போதே அவர் இப்படிச் சொன்னபோது, எனக்கு அவரிடம் கோபம் தான் வந்தது. இப்பொழுது அது உண்மையாக நடக்க உள்ளது. மேலும் உனக்கொரு மகன் பிறப்பான். அந்த மாதேவியின் மகனும் பின்னாளில் சோழ நாட்டை ஆளுவான் என்றார் அந்த சோதிடர்.”

இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.பராந்தகன் தொடர்ந்தான்.

“ஒரே ஒரு வேண்டுகோள். நீ அரசனான பின் உன் மகன் சிறுவனாக இருந்தால், அரிஞ்சயனை யுவராஜனாக்கி, உன் மகன் பெரியவனாகும் வரை பொறுத்திருந்து அவனை மன்னனாக்கவேண்டும். ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை இல்லாமல் போனால், அரிஞ்சயனுக்குப் பிறகு அவன் வாரிசுகள் சோழ ராஜ்யத்தை ஆள வேண்டும். மாதேவி, இளையவள் நீ! நீ தான் இதை செயலாற்ற வேண்டும். நமது சோழநாட்டுக்கு நாம் இதைச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்” – என்றான்.
“இது எங்கள் தலையாய கடமை” என்றாள் மாதேவி. கண்டராதித்தன் ஆமோதித்தான்.

கண்டராதித்தன் யுவராஜாவானான்.
விரைவில், பராந்தகன் பரலோகமெய்தினான்.
குடந்தை ஜோதிடரின் வாக்கு பலித்தது.
கி பி 950: கண்டராதித்தன் மன்னனானான்.
மாதேவிக்கு மகனும் பிறந்தான்.
கண்டராதித்தன், பராந்தகன் ஆணையிட்டபடி அரிஞ்சயனுக்கு யுவராஜா பட்டம் கட்டினான்.

சிவஞான கண்டராதித்தர் தில்லைப்பதியில் எழுந்தருளிய நடராசப் பெருமானிடத்தும், திருவாரூர்த் தியாகேசப் பெருமானிடத்தும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான்.
பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்தான்.
திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடகீழ்ப் பகுதியில் கீழ் மழநாட்டின் தலைநகரான திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. அது இப்போது கண்டிராச்சியம் என வழங்குகிறது.

பராந்தகன் வென்று இழந்த பாண்டிய நாட்டை வெல்வது தன் கடமையாக கண்டராதித்தன் நினைத்தான்।

கி பி 953- சோழப் பாண்டியப் போர் சேவூரில் நடந்தது.

சேவூர்ப்போரில், வீரபாண்டியன் படைகள் வெற்றி பெற்றன.

வீரபாண்டியன் ‘சோழன் தலை கொண்ட கோவீரப்பாண்டியன்’ என்று கல்வெட்டுகளில் பொறித்தான். சோழன் தலையை வெட்டிக் கால்பந்தாக உருட்டி விளையாடியதாக வீரபாண்டியன் பெருமை கொண்டான். அந்த சோழன் யார் என்பது குறித்து விபரம் அறியப்படாததால் சரித்திர ஆய்வாளர்களுடன் நாமும் சேர்ந்து குழம்பி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். அது பராந்தகனோ? கண்டராதித்தனோ? அரிஞ்சயனோ? எந்த சோழன் என்று கல்வெட்டுகள் எதுவும் குறிப்பிடப்படாமையால் ஒரு வேளை மற்ற இளவரசரகளில் ஒருவனோ’?

எதுவாயினும், சோழர்கள் இந்தத் தோல்வியையும், ‘தலை போன விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு (சுந்தர சோழன் மகன்) அன்று பதினொரு வயது. ஆவேசப்பட்டுவிட்டான். ‘இதே சேவூரில், இதே பாண்டியனின் தலையை வெட்டி தஞ்சைக்குக் கொண்டு வந்து கோட்டையின் நடுவேன்’ என்று அந்தச் சிறுவன் சபதமிட்டான். அந்தப் பிஞ்சு வயதில் இப்படி ஒரு வீரமா? அல்லது வீரமென்ற பெயரில் அப்படி ஒரு கொலைவெறியா? காலம் பதில் சொல்லும்.

கண்டராதித்தனின் முதல் மனைவி வீரநாராயணி முன்பே இறந்து விட்டார் என்பது முன்பே கூறினோம். இரண்டாம் மனைவி – இள மனைவி – மழவ நாட்டின் இளவரசி செம்பியன் மாதேவி- மகாராணி ஆனாள். இவள் தன் வாழ்நாளில் ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியில் சோழ நாட்டு வளர்ச்சியைப் பார்த்திருந்தார்.

பட்டத்திற்கு வந்த பின் ஒரு பிள்ளை பிறந்தது. மதுராந்தகன் என்று பெயரிட்டனர். இவள் சிறந்த சிவபக்தர். கோனேரிராஜபுரம் (திருநல்லம்) திருவக்கரை முதலிய சிவாலயங் களுக்குத் திருப்பணி புரிந்தாள். சிவபக்தியிலும், சிவத்தொண்டிலும் பெரிதும் ஈடுபட்ட காரணத்தால் இவள் `மாதேவடிகள்` என்ற சிறப்புப்பெயர் பெற்றாள்.

கண்டராதித்தரன் தமிழில் புலமை பெற்றிருந்தான். தில்லைப் பெருமானைப்பாடிய திரு விசைப்பாப் பதிகம் ஒன்று.

957: ஏழு வருடம் அரசனாக இருந்து, தமிழ் வளர்த்து, சிவப்பணி செய்து, சோழ நாடு மேலும் சுருங்காமல் காத்து ஆண்ட கண்டராதித்தன் மரணம் அடைந்தான். ‘மேற்கெழுந்திய தேவர்’ என்று கல்வெட்டுகள் கூறுகிறது. கடைசி நாட்களில் அவன் கங்க நாட்டு மைசூர் பகுதியில் இருந்தான் என்று அறியப்படுகிறது. செம்பியன் மாதேவி தம் புதல்வனைக் காக்கும் கடமையை மேற் கொண்டு, தாமும் உடன்கட்டை ஏறாது, உயிருடன் வாழ்ந்தாள். வாழ்ந்தது மட்டுமல்லாமல், பயண தலைமுறை சோழ அரசர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே திகழ்ந்தாள்.

சோழ வரலாற்றில், கண்டராதித்தன் ஒரு துளியானாலும், அவன் ஆற்றிய பணியை சரித்திரம் மறக்காமல் பேசுகிறது. சிறு துளி பெருவெள்ளமாகும் நாள் தொலைவில் இல்லை. சரித்திரம், இனி வரும் கதைகளைச் சொல்லவும் துடிக்கிறது.

(தொடரும்) 

 

ஆவலாதிக் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு

ஆவலாதிக் கவிதைகள்

அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar

1. சுயத்தால் நேர்ந்த
பாதிப்புகளின் பட்டியல் நீட்டி
தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால்
விளாசித் தள்ளியது
சோதனைகளின் சஞ்சலங்களால்
தூங்காமல் தவித்து
சிவந்த விழிகளுடன்
மறுநாளைத் துவங்கியபோது
முகமன் கூறிச் சிரிக்கிறது
என்ன செய்ய…

2. அந்த நாளின் ஆவலாதிகளை
மனைவியிடம் ஒப்புவித்துக்கொண்டே
அமைதிப்படுத்தியிருந்த
தொலைக்காட்சியை வெறித்திருந்தேன்
ஆறிக்கிடந்தது இரவு உணவு

3. இருவரும் பழகத் துவங்கிய
ஆரம்ப நாட்களில்
முன்னாள் நண்பர்களைப் பற்றி
புகார் வாசித்துக் கொண்டிருந்தோம்
இப்போது
அவனைப் பற்றிய புகாரைத்தான்
நீங்கள் வாசித்து கொண்டிருக்கிறீர்கள்

4. விழுந்த போதெல்லாம்
காயப்பட்டு காயப்பட்டு
சிதிலமானது.
தடுமாறாமல் இருக்க
கற்றுத் தேர்ந்த போது
சுயமிழந்திருந்தது நட்பு

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – -ஜி.பி.சதுர்புஜன்-

 குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
  25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
  26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
  27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
  28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
  29. மழையே வா ! – செப்டம்பர் 2021
  30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
  31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
  32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021                          தமிழ் !

புதிய கல்விக் கொள்கை குறித்த ஆவணம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியீடு..! தமிழ் மொழி புறக்கணிப்பு | Dinakaran

 தமிழ் எங்கள் தாய் மொழி !

 தொன்மையான தேன்மொழி !

 சங்க காலம் முதற்கொண்டு –

 இன்றும் வளரும் இனிய மொழி !

 

 ஐந்து பெரும் காப்பியங்கள் –

 அனைத்தும் தந்த அருமை மொழி !

 கம்பன் இளங்கோ வள்ளுவன் என்று –

 புலவர் பெருமை கொண்ட மொழி !

 

பாரதி என்ற பாட்டுத் தலைவனை –

பாருக்குத் தந்த பெரிய மொழி !

இயல் இசை நாடகம் எல்லாவற்றிலும் –

படைப்புகள் பெருகும் பெருமை மொழி !

 

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் –

பேசுவர்  தங்கத் தமிழில் தான் !

அம்மா அப்பா  போலே எனக்கு –

தமிழின் மேலும் பாசம் தான் !

 

எங்கள் தமிழை என்றும் காப்பேன் !

எப்போதும் அதை நேசிப்பேன் !

என்றும் நான் ஒரு தமிழன் தான் !

தமிழே எனக்கு தாய் என்பேன் !

 

                               பாப்பாவுக்கு பப்பாளி !

ஒட்டுண்ணியை விட்டு பப்பாளி மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - கழனிப் பூ

பாப்பா, பாப்பா பப்பாளி !

 பழங்களில் சிறந்தது பப்பாளி !

 பார்ப்பதற்கு எளிது பப்பாளி !

 பெருமைகள் கொண்டது பப்பாளி !

 

மா பலா வாழை போலில்லை –

முக்கனி  இல்லை பப்பாளி !

பூஜை நேரம் நம் வீட்டில் –

படைப்பதும் இல்லை பப்பாளி !

பரிமாறும் போதும் எப்போதும் –

பந்தியில் இல்லை பப்பாளி !

வெற்றிலை பாக்கு தட்டினிலே –

வைப்பதுமில்லை பப்பாளி !

 

வாயில் போட்டால் கரைந்திடுமே –

இன்சுவை கொண்ட பப்பாளி !

இனிக்கும் தன்மை முழுதாய்க் கொண்ட –

புளிப்பே இல்லா பப்பாளி !

 

வீட்டில்  பின்னே வயற்காட்டினிலே –

எளிதில் விளையும் பப்பாளி !

அண்ணாந்து பாரு – ஆஹா அங்கே –

அழகாய்த் தொங்கும் பப்பாளி !

 

தவளத்து மாமி அன்பாய் எனக்கு –

அன்றே தந்தாள் பப்பாளி !

அந்நியச் சிறுவன் என்றாலும் எனக்கு –

அன்பாய் தந்தாள் பப்பாளி !

 

சத்துகள் நிறைந்த பப்பாளி – நோய்

தடுப்பும் செய்யும் பப்பாளி !

சப்புக் கொட்டி சாப்பிடு நீயும் –

சமத்து பாப்பா – பப்பாளி !

 

              ****************************************************

 

 

 

 

 

 

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடைமழையாய் !- கமலா முரளி

Rain in various places in Chennai || சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

மெல்லத் தூறல் விழுந்திட
செல்லமாய் சிணுங்கி காத்து வீசிட,

சுகமாய் குளிர்ச்சி பரவிய,
இனிமையான மாலைப்பொழுது !

அடைமழையாய் அடித்து ஊற்ற,
அதிவேகமாய் காற்று வீச ,
குளிர்ச்சியில் உடல் நடுங்க ,
நிலவொளி , மின்னொளி இன்றி,
கொஞ்சம் அச்சம் பரவும் இரவு !

 

ஆகச் சிறந்த முகமூடி !

முறியாத மனம்; முறியாது மணம்! குடும்ப கோர்ட்டில் வழக்குகள் அதிகரிப்பு  தம்பதியர் ஈகோ தவிர்த்தால், மகிழ்ச்சி | Dinamalar Tamil News

சித்திரமாய் இருந்த என்னை

சிரித்து சிவக்க வைத்தாய் !

சிரிப்படன் களிப்புடன்….

சில நாட்கள் சென்றது ! உன்

சிந்தனையும் திரிந்தது ! நம்

சீரான உறவு முறிந்தது !

 

சீவனே இல்லாமல் நான் !

சிறப்பாய் வேறு துணையுடன் நீ !

 

சிதிலமாகிப் போனாலும்

சிரிக்க மறக்கவில்லை  நான் !

சிரித்து மழுப்பி மறைக்காவிட்டால்

சிரிக்குமே ஊர் நம்மைப் பார்த்து !

சிரிப்பு ஓர் ஆகச் சிறந்த முகமூடி!

 

சொல்லிவிடு – பானுமதி ந

அமைதிச்சாரல்: பவளமல்லி ..

சொல்லிவிடு
என்றாவது ஒரு நாள்
சொல்ல வேண்டும்
அந்த நாளின்
இளங்காலையில்
பவழமல்லிப் பாயைக்
காற்று தொட்டுச் செல்லும்
நம் காடுகளில் கூடுகள்
துறக்கும் பறவைகள்
நம் கிணற்று நீரில்
குடம் நீரள்ளும்
கன்றை அழைத்து
பசுக்கள் கூவும்
செம்பொன்னார் கோயில்
ஸ்வர நாதம்
கூரையெனக் கவிழும்
மரமல்லி மரத்தருகே
சொல்லி விட வேண்டும்..

அம்மா என்னிடம் சொன்ன பொய்கள் – மலையாளத்தில் ஆஷிதா – தமிழில் மீனா

 

மூலம்      : ஆஷிதா  [ Ashita 1956—2019 ]

 தமிழில் : தி.இரா.மீனா                              

         அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்

தமிழ் இனிது: அம்மாவின் பொய்கள்.....

என் அம்மா என்னிடம்  சொன்னது போன்ற அதிகமான  பொய்களைஉலகில் யாரும்   சொல்லியிருக்க முடியாது. அதை உணர்ந்த நிலை எனக்குள் நிரந்தர ஜுவாலையாய்…

பூஜை அறையில் ஒளிரும் விளக்கின் முன்னால்   உட்கார்ந்து கொண்டுஅம்மா இராமாயணம் படித்துக்  கொண்டிருக்கிறாள். கதவருகில் நான் உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து, அவள் முகம் தெளிவாகத் தெரிகிறது…

அவள் முன் நெற்றியில் விபூதி, மூக்கில் நழுவிக்   கொண்டிருக்கிற கண்ணாடி, படிக்கும் போது மிக மென்மையாக அசையும்  அவள் உதடுகள்.

இந்த வயதான காலத்தில் அம்மாவே ஞாபகங்களின்  மடிப்பில் மிகப் பெரிய சுருக்கம் போலத் தெரிகிறாள். உடைந்த நகமுடைய அவளுடைய ஆள்காட்டி விரல்,  புத்தக வரிகளினூடே மிக மெதுவாக நகர்கிறது.

உலகத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததுமான செயல்கள் என்று   நான்  எதிர்கொண்ட முதல் பொய்யென்பது அந்த விரலின் நுனியிலிருந்து  பிறந்ததுதான்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது,  மூலை கடையில் இருந்த அகமது இக்கா எனக்கு எலுமிச்சை மிட்டாய் தந்தார். அம்மா அதை என் கையிலிருந்து பிடுங்கி, மண்ணில் வீசியெறிந்தாள். “அகமது இக்கா — அந்த ஆள் உனக்கு யார்? வழிப்போக்கர்கள் எதைத் தந்தாலும்   வாங்கிக் கொள்கிறாயே ! அப்பா வீட்டுக்கு  வரட்டும் ,பார் !” என்று கத்தினாள். முற்றத்தில் பரவிக் கிடந்த எலுமிச்சை மிட்டாய்களை ஒவ்வொன்றாகத்  தள்ளிக் கொண்டு எறும்புகள் நகர்ந்தன.

வழிப்போக்கர்களால் தரப்படும் எலுமிச்சை மிட்டாய் போன்றவைகள் ஒருவர் வாழ்க்கையில் தரும் மகிழ்வுகளை மிகப் பின்னாளில்தான் வலியோடு உணர்ந்தேன். ஆனால் அகமது இக்கா கூட  ஒரு  வழிப்போக்கராகக் கருதப்பட்டது  சிறிதும் நியாயமில்லாததுதான்.

என்னிடம் ஓர்  இனிமையான வார்த்தை பேசவோ அல்லது அன்பாகப் பார்க்கவோ  முடியாமல்,  தன்  வாராந்தர வருகைகளின் போது முழு வீட்டையும்  பயமுறுத்திக் கொண்டிருக்கிற மனிதர்தான்  என் அப்பா!

பள்ளியிலிருந்து திரும்பும் போது,  சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, வழுக்கைத் தலையை வரண்ட கைகளால் தடவிக் கொண்டு  பார்க்கும் பார்வை. இரவு உணவிற்குப் பிறகு தொண்டையைச் செருமி,  மிகப்  பெரிதாக காரி உமிழும் செயல். வேலைக்காரர்களிடம் கோபமான உறுமல். வார நாட்களில் நான் செய்த தப்புகளுக்காக  மொத்தமாக விசில் ஒலியோடு கூடிய தன்  சாட்டை  கம்பைச் சுழற்றுபவர்– இதுதான் அப்பா.

அப்பா தன் கடுமையை லேசாகத் தளர்த்திக் கொள்ளும் ஒரே ஆள் அம்மாவின் நெருங்கிய உறவான செல்லம்மா அக்காதான். அம்மா, விபூதிச் சாம்பலின் மணமென்றால், செல்லம்மா அக்கா கொழுந்து  மல்லிகையின் வாசம், ஒட்டிக் கொள்ளும் மாயச் சிரிப்பு. அவள் சிரிக்கத் தொடங்குவதற்கு முன்பே மார்புகள் குலுங்கும், கன்னத்து தனிக் குழி இன்னும் ஆழமாகும், மூக்குத்தி மின்னிப் பளபளக்கும்.  செல்லம்மா அக்கா  ஒரு முறை கூட எங்கள் வீட்டிற்கு வந்ததாக எனக்கு நினைவேயில்லை.

இருப்பினும், நான் அவளுடைய நிரந்தர இருப்பை உணர்ந்திருக்கிறேன்-

அம்மாவின் சாபங்கள், அப்பாவின் வழக்கத்தை மீறிய  அமைதிப்  பொழுதுகள், ஒரு முறை அப்பாவின் சட்டைப் பாக்கெட்டில் நான் பார்த்த  மல்லிகை மொட்டு என்று. எனக்கு செல்லம்மா அக்காவைப் பிடிக்கும்.  

ஆனால்,சில சமயங்களில் அம்மா அப்பாவிடையே நடக்கும் விவாதங்கள்  சூடாகும் போது, நான் படுக்கை அல்லது மேஜைக்கு அடியில் ஒளிந்து கொண்டு  செல்லம்மா அக்கா செத்துவிட வேண்டும்  என்று விருப்பம் இல்லாமலே பிரார்த்தனை செய்வேன். அவள் செத்தும்  போனாள்.

செல்லம்மா அக்கா தற்கொலை செய்து கொண்டாள்.  அம்மா இனிமேல் அழுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது என்று நான் என்னைத் தேற்றிக் கொண்டேன். சாவு வீட்டிற்குப் போவதற்காக என்னிடமிருந்த ஒரு நல்ல கவுனை அணிந்து கொண்டேன். “ ஜனங்கள் என்ன நினைப்பார்கள்?” என்று

சொல்லி அம்மா சாயம் போன ஒரு  கவுனைத் அணியச் சொன்னாள். 

முரண்பாடான எண்ணங்கள் எனக்குள் எழ , அதைக்  கட்டுப்படுத்த முடியாமல் அம்மாவை வெறித்தேன். சாம்பலைப் போல அவள் முகம் புரிந்து கொள்ள முடியாமல்  வெளிறிக் கிடந்தது.

அது இலையுதிர் காலம். நான் நடக்கும் போது காய்ந்த சருகுகளை உதைத்தவாறு நடந்தேன். “நாம் அங்கு போன பிறகு சிரிக்கவோ , விளையாடவோ கூடாது.அவர்கள் எல்லோரும் துக்கத்தில் இருப்பார்கள்  என்பதை மறந்து விடக்கூடாது.இங்குமங்கும் அலையாமல் அமைதியாக நீ உட்கார்ந்திருக்க வேண்டும்,” என்று மெல்லிய குரலில் அம்மா எச்சரித்தாள்.

“செல்லம்மா அக்கா செத்துப் போனதில் உனக்கு சந்தோஷம்தானே அம்மா?” நான் கேட்டேன். அம்மா தடுமாறினாள்.அவள்  தன்னையே மறந்தது  மாதிரித் தெரிந்தாள்.எங்கள் இரண்டு பேருக்கும் சிறிது முன்னால் போய்க் கொண்டிருந்த  அப்பா நின்று,திரும்பிப் பார்த்தார். அவர் முகம் இருண்டு கிடந்தது.  ஒரு குறி போல ,அம்மா தன் வேஷ்டியின் ஒரு  முனையை எடுத்துக் கொண்டு கண்ணீரை வரவழைத்து, மூக்கை பலமாக  உறிஞ்சினாள். நான் வியந்து போனேன்.அம்மா தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நடந்த போது ஆழமான கன்னக் குழி உடைய ஒருவர் கேலியாகச் சிரிப்பது  போலிருந்தது.

வீட்டிற்குத் திரும்பும் போது நான் வேகமாக அம்மாவின் பின்னால் ஓடினேன்.“அம்மா , நான் பெரியவளான பிறகு எனக்குப் பிடித்த மாதிரியெல்லாம் பொய்கள் சொல்லலாமா ?’ என்னைத் துன்புறுத்திக்  கொண்டிருந்த கேள்வியைக் கேட்டே விட்டேன்.

அம்மாவின் முகம், அவளுடைய விபூதி அணிந்த முன்நெற்றி உட்பட்ட  இடங்களில் மல்லிகையை லேசாக முகர்ந்தது போல கோப வரிகள் வெளிப்பட்டன.

“ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை! ஏன் உன் வாயில் அபத்தமான  கேள்விகளே வருகின்றன? கெட்ட குழந்தைகளுக்குத்தான்  கெட்ட  எண்ணங்கள் வரும்.ஒவ்வொரு கெட்ட எண்ணத்திற்கும் கடவுள் உன்னைக்  கண்டிப்பாகத் தண்டிப்பார்,” அம்மா சொன்னாள். யாரோ  ஒருவருடைய சிரிப்பின் எச்சம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. நான் வெட்கத்தில் தலை குனிந்தேன்.

தன் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்க  அம்மா என்னை வெட்கமாக  உணரச் செய்தாள் என்று  நான் இப்போது உணர்கிறேன். நான்   குற்ற  உணர்வுடனிருக்க என்னிடம் காரணமிருந்தது. நான் உருவாக்கிக் கொள்ள முயன்ற என் ரகசிய உலகில் ,அம்மாவிடமிருந்து  சிலவற்றை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தேன்.   அம்மாவின் உலகில் செய்யக் கூடியவை,செய்யக் கூடாதவை,  ஒழுங்கு  முறை , அறிவுரைகள்  எனப் பல கட்டுப்பாடுகளிருந்தன. என் சிநேகிதிகளின் வீடுகள், செல்லம்மா அக்காவின் சிரிப்பு,வயல்களிலும், தென்னந்  தோப்புகளிலும்  வேலை செய்தவர்களுடன் நெருக்கம் என்று நான் கண்டு பிடித்த உலகம் வித்தியாசமாக இருந்தது.

அது வறுமையைச் சொல்லும் நவீனமில்லாத உலகம். ஆனால் நிச்சயமாக ஒரு சுதந்திர உலகம். ஒரு மகிழ்ச்சியான உலகம்.

ஓர் உண்மைக்கும்,பொய்க்கும் வித்தியாசமறியாத குழப்பமான ஒரு குழந்தையாகவே நானிருந்தேன். இருப்பினும் வலி தருகிற உண்மைகளை விட  அழகான வண்ணம் கொண்ட பொய்களையே விரும்பினேன்.தண்ணீர் அதன் இயற்கை தன்மையிலிருப்பது போல. வாய்ப்புக்  கிடைத்த    போதெல்லாம் நான் என் ரகசிய உலகிற்குள்ளேயே  அலைந்து கொண்டு  இருந்தேன். அம்மாவின் சட்டங்களை  உடைத்து ,நிகரற்ற சந்தோஷத்தை அனுபவித்தேன்.வேலைக்காரர்களோடு சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டு அவர்களின் எனாமல் தட்டில் சாப்பிடுவது; அறுவடைக்  காலங்களில்

செல்லம்மா  அக்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு வயல்களை வளைய வருவது ; காதில் விழுகிற வேலைக்காரர்களின் கெட்ட வார்த்தைகளை  மனனம்  செய்வது என்று. தடை செய்யப்பட்ட  மகிழ்ச்சிகளை அதிகம்  அனுபவித்ததால் என் தைரியமும் அதிகமானது.

என் இளம்பிராய பருவத்தின் மாலைப் பொழுது எனக்கு இன்னமும்  நினைவிலிருக்கிறது. இப்போது அம்மா உட்கார்ந்திருக்கிற அந்த விளக்கின் முன்னால் நான் உட்கார்ந்து கொண்டு பிரார்த்தனையினூடே, கடவுளுக்குப்  பயப்படாமல், பத்து தடவைகளுக்கும் மேலாக ’வேசி’ என்ற வார்த்தையைச் சொல்லியிருக்கி றேன். பல இரவுகள் தூக்கமின்றி, நகங்களைக் கடித்தபடி, கெட்ட எண்ணங்களுக்காக ஒரு  கெட்ட குழந்தைக்குக் கடவுள் சேர்த்து வைத்திருக்கும் தண்டனைகளை  நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்திலிருக்கிறது.ஒரு வழியாகத்  தூங்கும் போது, கனவுகளில் விசில் ஒலியெழுப்பும் சாட்டை ஒலி கேட்கும், மிகக் கடுமையான கனவுகளில் தண்டனை தரும் கடவுளாக அப்பாவின் முகம் தெரியும்.

ஒருநாள், அப்பா வயலிலிருந்து தூக்கி வரப்பட்டார். வாதம் ஒரு பக்கத்தைத்

தாக்கி விட்டது.அதே நாளில் எனக்குள்ளிருந்த  தண்டனை தரும் கடவுள் ஆதரவற்று, முடங்கிய பொய்யாக மறைந்து போனார்.பல வருடங்களுக்குப் பிறகு என் திருமணத்திற்கு முன்னால்,அப்பா செத்துப் போனார்.

சுற்றி வைக்கப்பட்ட  நகையின் ஒளியாய், அம்மா இன்னொரு பொய்யை எனக்குத்  திருமணப் பரிசாகத் தந்தாள்.வழக்கத்திற்கு மாறாகத்  திருமண நாளில் அம்மா என் அறைக்கு வந்தாள். எந்த மணப்பெண்ணையும் போல நான் எழுந்து நின்றேன்,மனதில் கடலளவு எதிர்பார்ப்புகளும் ,பதட்டமான உணர்வுகளுமாக.ஆராய்வது போல என்னைப் பார்த்தாள். பார்வையில் தெரிந்த கவலை என்னை ஆச்சர்யப்படுத்தியது.என் தோளில் கை வைத்தபடி “கனவு காண்பவளாக இனிமேலும் நீ இருக்க முடியாது. விரைவில்  நீ புது வீட்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறாய். வீட்டு   நிர்வாகம்   என்பது விளையாட்டான காரியமில்லை,”சொல்லி விட்டு ஒரு கணம் தயங்கினாள். பின் “ஆணின் மனதில் இடம் பெறுவதற்கு அது ஒன்றுதான் வழி. மறந்து விடாதே .” என்றாள்.

நான் மறந்து விடவில்லை.என் கணவர் நல்ல படிப்பாளி; நாகரிகமானவர்;

இலக்கிய ஆர்வமுண்டு; செய்தித்தாள்களை நான்கைந்து முறை படிப்பார்,  

நாட்டின் எதிர்காலம் குறித்த  கவலை உடையவர். மாவரைப்பது, துணி துவைப்பது ,பாத்திரம் தேய்ப்பது  என்று  அம்மாவின் வழிகாட்டுதல்களைத் தவறாமல்  நான் பின்பற்றினேன். விரும்பியே என் ரகசிய உலகின் கனவுகளைக்  கைவிட்டேன். வருடங்கள் கடந்து போக, குழந்தைகளின் அறையிலிருந்து கணவரின் படுக்கை அறை, பின்பு அங்கிருந்து சமையலறை ,மீண்டும்  குழந்தைகள் அறை என்று என் இருப்பின் எல்லைகளை முறைப்படுத்தி கணவனின் மனதில் இடம் பெறும்  தேடலில் என் பயணம்  தொடர்ந்தது. ஆனால் ஒரு  நாள் மாலை என் கணவனின் படுக்கை அறைக்குள் சமையல் அறையின் அழுக்கோடும், மணத்தோடும் நுழைந்த போது , வாளிப்பான,சதைப்பற்றான  தோற்றத்திற்கு மட்டுமே அலைபவர் என்று  புரிந்து கொண்டேன்.

நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்,என் நேர்மையின் மீது  யாரோ காரிஉமிழ்ந்தது போல உணர்ந்தேன்.எனக்குள் இருந்த கடலளவு எதிர்பார்ப்புகள்—எப்போது என்னிடமிருந்து மறைந்தன ? ஆணின் மனதில்  இடம் பெற ஒரேஒ ரு வழிதான் இருக்கிறது—கடைசியாக நான் உண்மையை  உணர்ந்தேன்,

என் அம்மா எனக்கு சொல்லத் தவறிய உண்மை, அவள் என்னிடம் சொன்ன அந்த  பொய்யின் தீவிரத்தில்  நான் உணர்ந்த உண்மை.

இப்படித்தான் நான் என் அம்மா, பாட்டி அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து முடித்த மற்ற பெண்களின் மொழியில் நான் தேர்ந்தேன் ; மௌனம் என்னும்  மொழி. சுய மறுப்பு என்னும் பழக்கம், மறுப்புகளும் ,முரண்பாடுகளும் இருப்பினும் எப்போதாவது பேச்சில் அதன் வெளிப்பாடு என்று. எனக்கு வயதான போது, உறவினர்களும், அக்கம் பக்கத்தவர்களும் நான் அம்மாவைப் போலிருப்பதாகச் சொன்னார்கள்.அவர்கள் கவனிப்பின் உண்மை, கண்ணாடி முன்னால் நிற்கும் போது  என்னை திடுக்கிடச் செய்யும். சின்ன ,அற்பமான பொய்கள் தமக்குள் ஒன்றாகி, படிப்படியாக  என்னை ஒரு மாபெரும் பொய்யளாக்கி விட்டது.

இராமாயணத்தின் வரிகள் என் காதுகளுக்குள் தவழ்கின்றன. அம்மாவின் வாசிக்கும் ஒலியில் ஏதோ முக்கியத்துவம் புகுந்து விட்டதாகத் தெர்கிறது– அல்லது அது என் கற்பனையா?அவள் கண்ணாடியைக் கழற்றி விட்டு புத்தகத்தை மூடுகிறாள். திடீரென்று படுக்கை அறையின் கதவு திறக்கிறது.

என்னுடைய எட்டு  வயதுப்  பெண் பட்டுப் புடவையைக்  கட்டியிருக்கிறாள்,    இடுப்பில் பொம்மைக்குழந்தை .“அம்மா, இங்கே பாரேன், நான் அப்படியே உன்னைப் போலவே  இருக்கிறேன் அல்லவா ?” சிரித்தபடி கேட்கிறாள்.

என் இதயம் சுற்றுகிறது.அம்மா திருப்தியான சிரிப்போடு அறையை விட்டுவெளியே வந்து, என்னைப் பார்த்து உட்கார்கிறாள்.பிறகு, கவனமாக, கடந்த சில நாட்களாகத் தன்னை எரிச்சல் படுத்திக் கொண்டிருக்கிற  கேள்வியை இயல்பான ஆர்வத்தோடு, தினமும் விசாரிக்கும் தொனியில் “ஏன் பாபு உன்னுடன் வரவில்லை? அவனிடமிருந்து கடிதமும் இல்லை.

நீங்கள் இரண்டு பேரும்… நீ….?”    ஒரு கணம் பிடிபட்ட மௌனம்.

நான் மிக இயல்பாக “ எதுவும் இல்லை அம்மா. நாங்கள் இருவரும்  சந்தோஷமாக இருக்கிறோம்.ரொம்ப சந்தோஷமாக.”  நானும் உலகிலேயே மிக அதிகமாக அம்மாவிடம் பொய் சொல்பவளாகியிருக்கிறேன்.

      ———————————————————-

மலையாள இலக்கிய உலகில் சிறுகதை,கவிதை ,நாவல்,மொழிபெயர்ப்பு  என்று பல்துறை பங்களிப்பு கொண்ட  ஆஷிதா கேரள சாகித்ய  அகாதெமி, பத்மராஜன், லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது உள்ளிட்ட பல  விருதுகள் பெற்றவர். மழை மேகங்கள், விஸ்மயா சின்னங்கள், அபூர்ண  அவிராமங்கள், மயில் பீலி ஸ்பரிசம் ஆகியவை அவருடைய  குறிப்பிடத்தக்க   படைப்புகளில் சிலவாகும்.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

ஜோதிட அனுபவம் - மாமியார் மருமகள் சண்டை வணக்கம் நண்பர்களே! ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைவு இருந்தால் ஜாதகரின் ...

 

மாமியாரை அம்மா என அழைக்கலாமா?

சமீபத்தில் நான் ஒரு அதிசய செய்தியைப் படித்த பின் அதைப் பகிரா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது.

அதற்கு முன்பு என் கவனத்தை இதுநாள் வரை ஈர்க்காத செய்தி ஒன்று ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு மாமியார்கள் தினமாம். மாமியார் தினம் இந்த வருடம் போன வருடம் இல்லை, 1934 ம் வருடம் முதல் கொண்டாட துவங்கினார்களாம். 1970 முதல்தான் அக்டோபர் கடைசி ஞாயிறு கொண்டாடத் துவங்கினார்களாம் கும்பிடப்பட வேண்டிய மருமகள்களும், மருமகன்களும்.

அதிசய செய்திக்கு வருவோம். கடந்த வாரம் ஒரு செய்தி இதழ் மணப் பருவத்தை நெருங்கிய மகளிரிடம் “ மாமியாரை அம்மா என அழைப்பீர்களா?” என கேள்வி ஒன்றை வைத்தது. இருபது பெண்களில் 19 பேர் அம்மா என அழைப்பதுதான் சரி என ஆணித்தரமாக கூறினார்கள்.

வருங் கால மாமியாரை மனதில் எண்ணிய பயம் கண்களில் தெரிய வில்லை.

பெரும் பாலானவர்கள் பிறந்த வீட்டை விட அதிக நாட்கள் வாழப் போவதும், அதிக பொறுப்புகள் எடுக்கப் போவதும் புகுந்தவீட்டில்தான், எனவே மாமியாரை அம்மாவாக அரவணைத்தால் வாழ்வில் வசந்தமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவது.
புத்திசாலி பெண்கள்.

பெண்களும் வேலைக்குச் செல்லும் இந்நாளில் வீட்டில் ஒரு பாட்டி கிடைக்கப் பெற்றால் அது கடவுள் தந்த வரம்.

மருமகள்கள் அனைவரும் இந்த முடிவெடுத்தால் டெலி விஷனில் சீரியல் கதை எழுதுபவர்கள் வேலை இல்லாமல் போவார்களே!

சற்று யோசித்தால் இந்த மாமியார்- மருமகள் சண்டையை பெரிது படுத்தி சில சமயங்களில் கேவலப் படுத்தி உணர்வை நியாயப்படுத்தியவர்கள் 18ம் நூற்றாண்டுக்கு பின் முளைத்த நம் எழுத்தாளர்கள்தான். கதையாக இருக்கட்டும், நாடகம்-சினிமாவாக இருக்கட்டும் காமெடி காட்சிகளில் எங்கோ இலை மறைவு காய் மறைவாக நடக்கும் மாமியார்-மருமகள் சண்டையை பெரிது படுத்தி  காட்டி கைதட்டல் வாங்கினார்கள்.

பின்னர் மருமகள் அனுதாபம் பெற மாமியாரை கொடுமைக்காரியாக்கி, அந்த காட்சியை சேர்ந்தே அமர்ந்து பார்க்கும் மாமியார் மருமகள் இருவர் கண்களில் நீரும், மனதில் வெறுப்பையும் வளர்த்தனர் நம் கதாசிரியர்கள்.

அது போகட்டும். எல்லா உறவுகளுக்கும் ஒரு வரலாறு இருக்குமே என வரலாற்றை திரும்பிப் பார்க்க மனம் எண்ணியது.

நமக்காக எழுத்தில் வடிக்கப்பட்ட முதல் ஆவணம் இதிகாசம். ஐந்தாவது வேதம் என கூறப்பட்ட மகா பாரதத்தில் இந்த யுத்தம் இல்லை. சமூக பொது நீதியாக விதுரன் கூறிய விதுர நீதியிலும் இல்லை.
மாறாக சங்க இலக்கியத்தில் ஒரிரு இடங்களில் மாமியார் மருமகள் உறவை கவிதையாக்கி உள்ளார்கள்.

அக நானூரில் ஒரு காட்சி, தொலை தூரத்திலிருந்து ஒரு தாய் தன் மகன் குடும்பம் நடத்தும் அழகை காண வருகிறாள். இருள் சூழும் நேரம் வீட்டின் முன் புறம் உள்ள தோட்டத்தில் மருமகள் முல்லைப்பூவில் மாலை தொடுத்து பேரனுக்குச் சூடும் அழகை ரசிக்கும் மகனைப் பார்த்து தானும் மதி மயங்கி நிற்கிறாள். மருமகள் மகனை வளைத்து விட்டாள் என்ற ஒப்பாரி  அங்கு இல்லை.

அடுத்த காட்சி புற நானூரில். கணவன் போரில் மாண்ட செய்தி கேட்டு மனைவி போர்களம் செல்கிறாள். கணவன் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடக்கிறான். ஒரு கணம் உலகம் இயக்கத்தை நிறுத்துகிறது. அடுத்த கணம் தன் மாமியார் மகனின் இறப்பை எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற கவலை பாடலாய் வடிகிறது.

மாமியார்-மருமகள் உறவை நம் முன்னோர்கள் இப்படித்தான் பார்த்தார்கள். காட்சிகள் மாறியது பின்னர்தான்.

எல்லா உறவுகளையும் கோபுரத்தில் ஏற்றி கொண்டாடும் நம் கவிஞர் கண்ணதாசன் கூட மாமியார்-மருமகள் உறவில் தன் குசும்பை காட்டுகிறார்.

SKIT : மாமியார் மருமகள் – THE WORD

செட்டியார் ஆச்சி தன் கணவன் நாராயணன் செட்டியார் தேடிக் கொண்டு வந்த மருமகள் பற்றிய பாடலும் அதற்கு எதிர்பாட்டு பாடும் மருமகளும் கண்ணதாசன் வரிகளில்

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

 

மேலே மாமியாரின் புலம்பலுக்கு மருமளின் பதிலுரை

அவகெடக்கா சூப்பனகை
அவமொகத்தே யாருபாத்தா

அவுகமொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன்நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தா எங்களய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா

கப்பல் முழுகிவிடும்

அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணுவிடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும்தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளுவீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச்சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேலை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேலுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்கதளத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணிநடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?

ஜூலை மாதம் 30 மாமனார்கள் தினமாம்.

 

கம்பன் கவி நயம் – சிந்தாமணி


கம்ப இராமாயணம் சுந்தர காண்டம்-

தினம் ஒரு மந்திரம் - ஏகச்லோக சுந்தர காண்டம்

இராம தூதனாக வந்து ஆறுதல் தந்த அனுமனை சீதை வாழ்த்துதல்

” மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்/
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?/
அம்மையாய் அப்பனாய அத்தனே அருளின் வாழ்வே/
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு என்றாள்”

கம்ப இராமாயணம் காப்பியங்களின் வரிசையில் முதன்மை நிலையில் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பினும், அழிழ்தனைய திகட்டாத் தீந்தமிழில் கம்பர் இராமாயணக் கதையை நாடகத்திற்குரிய விறுவிறுப்புடன் விவரித்திருப்பது மிக முக்கிய காரணம் எனலாம். அவன் கவிச் சித்திரத்தில் கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாக ஒளிவிடுகின்றனர்.


அசோக வனத்தில் அரக்கியர் வதை செய்ய அல்லலுற்று இருக்கின்றாள் சீதை. உடலும் உள்ளமும் வாட, இன்னலில் வதங்கிய சீதை, மெல்லிய இடையைப் போல மற்றைய அங்கங்களும் இளைத்து மெலியும் வண்ணம் துயருற்று இருந்தாள். ” நலன் அற உணங்கிய நங்கை/ மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்”. வாழ்வை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கலங்கித் திகைப்புற்ற சீதையின் துயர் போக்கி அனுமன், இராம தூதனாய், அவளுக்குப் புத்துயிர் தருகின்றான். அப்போது மனம் உவந்து சீதை அனுமனை வாழ்த்துகின்றாள்:


” பாதாளம், பூமி, வானுலகு என்னும் மூன்று உலகங்களையும் படைத்தவன் பிரம்மன். அவன் தந்தை நாராயணனே இப்போது இராம பிரானாக அவதரித்திருக்கின்றான். அந்த இராம பிரானின் தூதனாய் வந்த அனுமனே! உயிர் நீக்கத் துணிந்த எனக்கு புத்துயிர் தந்த நிறைவு பெற்ற பண்பாளனே! சிறையிலிருக்கும் இந்நிலையில் உனக்கு என்ன கைம்மாறு நான் செய்ய இயலும்? தாயும், தந்தையும், தெய்வமும் என மூன்றுருவும் ஓர் உருவாய் வந்து எனைக் காத்த அருளின் வடிவமே! உயிர் விடத் துணிந்த என்னைக் காத்து, எனக்கு மறுமை என்னும் புகழ்மிகு புத்துயிர் தந்தாய்” என அனுமனுக்குப் புகழ்மாலை சூட்டுகின்றாள் சீதாப் பிராட்டி.


” செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” என்றார் வள்ளுவப் பெருமான். சீதை இதற்கு முன்னர் அனுமனுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. கைம்மாறாய் உதவி செய்ய வேண்டிய நிலையில் இல்லாத அனுமன், சீதைக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும், விண்ணுலகும் ஈடாகக் கொடுத்தாலும் போதாது. எனவேதான், சீதை அனுமனை அருளின் வாழ்வே ( Personification of Benevolence ) என விளிக்கின்றாள். “தாயும், தந்தையும், தெய்வமும் இணைந்த வடிவாய் வந்து, என் உயிர் பிரியாது காத்து, புகழுறு புத்துயிர் தந்தாய். உனக்கு சிறையிலிருக்கும் என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்?” என வருந்துகின்றாள்.


கம்பன் கவியமுதம் தரும் பேரின்பம் சுவைத்தால், ” அமுதும் தேனும் எதற்கு?” என்றே கேட்க யுத்த காண்டம்-இராவணன் இராமனின் போர்த்திறம் கண்டு இவனோ வேத முதல்வன் என வியத்தல்:

Ramayana facts: சீதைக்காக மட்டுமா ராமன் ராவணனை கொன்றார்?... உண்மையான காரணம்  இதுதான்... - why does lord vishnu take the incarnation of rama for killed  ravana | Samayam Tamil
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ்வேத முதல்காரணன் என்றான்.


கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டம் இராவணனை கதாநாயக நிலைக்கு உயர்த்தி, எவராலும் வெல்லப்படாத மாவீரனாக உருவகிக்கப்பட்டு, இராம பிரானின் போர்த்திறம் கண்டு மலைத்து, ” இவன் யார்?” என்று வியந்து, வினவி, ” இவன் வேத முதல் காரணன்” என விழிப்புறுதல் அடைகின்ற அற்புதக் காட்சி.


யுத்த களத்தில் இராம- இராவண யுத்தம். மயிர்க் கூச்செறியும் மலைக்க வைக்கும் போர்ச் சம்பவங்கள். இராமனை எளிதில் வென்று விடலாம் என்ற அகந்தையில் இராமனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றான். இராமன் இராவணனின் தேர்க்கொடியை முதலில் அம்பு வீசி அறுத்து எறிகின்றான். பின்பு, தவவலிமையால் இராவணன் பெற்ற படைகள் அனைத்தையும்- தாமதப் படை, ஆசுரப் படை, மயன் படை, தண்டாயுதம், மாயையின் படை, சூலம்- இராமன் தன் வில்லாற்றலால் வலுவிழக்கச் செய்துப் பொடிப் பொடி ஆக்குகின்றான்.

அக்கணத்தில்தான், இராவணன் இராமன் ” யார் என?” எனத் திகைப்புற்றுப் பேசுகின்றான்:
” இவன் ( இராமன்) சிவபெருமானோ? அல்லன்; பிரம்மனோ? அல்லன்; திருமாலாம் நாராயணனோ? அல்லன்; நான் தவ வலிமையால் வரம் இருந்து அடைந்த ஆயுதங்களை எல்லாம் அழிக்கின்றான். அதனால் பெருந்தவம் செய்து வரம் பெறும் வலிமையுடையனும் அல்லன். இவன் வேதங்களின் வித்தான முதற் காரணனோ?” என தனக்குத் தானே வினவி, விடை கண்டு, இராமபிரானை வேதங்களின் தலைவன், மூவர்க்கும் முதல்வன் எனத் தெளிகின்றான்.

இதனால்தான் இராவணன் வீழ்ச்சியில் மாட்சி பெற்றவன் ஆகின்றான் எனப் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் ஆய்வு முடிவில் அறிவிக்கின்றார்.
Sent from Yahoo Mail for iPhone

நடமாடக் கோயில் நம்(ண்)பர் – மீனாக்ஷி பாலகணேஷ்

தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத்  தமிழ் வலைப் பூங்கா          

கிராமத்துத் தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் சென்று நான் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தபோது தொலைவில் ஓர் அழகான கனவினைப்போலத் தங்களுடைய தங்கரதம் தோன்றியது; யார் இந்த அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று நான் வியந்தேன்.

           எனது எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, எனது கொடுமை நிறைந்த நாட்கள் முடிவடைந்துவிட்டன என எண்ணிக்கொண்டேன்; கேளாமலேயே யாசகம் (பிச்சை) கொடுக்கப்படுவதற்காகவும், செல்வங்கள் புழுதியில் எல்லாப்பக்கங்களிலும் வாரி இறைக்கப்படுவதற்காகவும் நான் காத்திருந்தேன்.

           தங்கள் ரதம் நான் இருந்த இடத்தருகில் வந்துநின்றது. தங்கள் பார்வை என்மீது விழுந்தது; தாங்கள் ஒரு புன்னகையுடன் கீழிறங்கி வந்தீர்கள். என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்னிடம் ஒருவழியாக வந்துவிட்டதென எண்ணினேன். தாங்கள் திடீரென்று தங்கள் வலதுகரத்தை என்னிடம் நீட்டியவாறு, “எனக்கு அளிப்பதற்காக உன்னிடம் என்ன உள்ளது?” என்று கேட்டீர்கள்.

           ஆ, இதுவென்ன ஒரு யாசகனிடம் வந்து தாங்கள் கரம்நீட்டி யாசகம் கேட்பது ஒரு அரசனுக்குரிய கேலிசெய்யும் விளையாட்டா? நான் குழப்பத்திலாழ்ந்து எதையும்  முடிவெடுக்க இயலாமல் நின்றேன்; பின்பு மெல்ல எனது பையிலிருந்து  இருந்ததிலேயே மிகவும் சிறிய ஒரு சோள (தானிய)மணியை எடுத்துத் தங்களுக்குக் கொடுத்தேன்.

           ஆனால் அந்நாளின் முடிவில் நான் எனது பையைத் தரையில் கவிழ்த்தபோது, அந்தச்சிறு குவியலில் தங்கத்தாலான ஒரு சிறு தானியமணியைக் கண்டபோது மிகவும் வியப்பிலாழ்ந்தேன். என்னிடமிருந்த அனைத்தையுமே தங்களுக்குக் கொடுத்திருக்க எனக்கு மனமிருந்திருக்கலாமே என எண்ணியபடி மிகுந்த துயரத்துடன் அழலானேன்.

 (தாகூரின் கீதாஞ்சலி – பாடல் – 50)

                                                     0000000

           ராகவன் தான் படித்துக்கொண்டிருந்த தாகூரின் கவிதைகள் புத்தகத்தை மூடிவைத்து யோசனையில் ஆழ்ந்தான். நேற்றைய சம்பவங்கள் எண்ணத்தில் வலம்வந்தன.

                                                     0000000

காணாமல் போன கனவுகள்: 04/2019

           “நீங்கள் இன்னும் கிளம்பலையா? இதோ பூமாலைகூட வந்தாச்சு, கிளம்ப வேண்டியதுதான்,” ராஜியின் அதிகாரக்குரல் வாசலிலிருந்து கேட்டது.

           ராகவனுக்குக் கிடைத்த பிரமோஷனுக்காக கோவிலில் அம்பாளுக்கும் சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், சஹஸ்ரநாமம் என எல்லா ஏற்பாடும் பண்ணியிருந்தாள் ராஜி. ராகவனின் வேலை, கூடச் செல்வதுதான்.

           கதவை இழுத்துப் பூட்டினான். டிரைவர் பவ்யமாகக் கார்க்கதவைத் திறந்துவிட, ராகவன், ராஜி, அம்மா, அப்பா எல்லாரும் ஹாண்டா சிடியில் ஏறிக்கொண்டார்கள். கார் கோவிலை நோக்கி விரைந்தது.

           “இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பப்படாதா? சரியா பத்து மணிக்கு அபிஷேகம் ஆரம்பிச்சுடலாம் என்று சாஸ்திரிகள் சொல்லியிருந்தார்,” அம்மா முணுமுணுத்தார்.

           காலை நேர டிராஃபிக் நெரிசலில் புகுந்து புறப்பட்டுக் கார் ஒருவழியாகப் பத்தேகாலுக்கு கோவில் வாசலில் வந்து நின்றது.

           “எனக்கு பதினொன்றரைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதற்குள் முடிந்தால் தேவலை,” என்றான் ராகவன். “ஸ்வாமி கிட்ட கண்டிஷன் போடாதே ராகவா,” என்றார் அப்பா.

           அவர் குரலில் கொஞ்சம் எரிச்சல் இருப்பதாக ராகவனுக்குத் தோன்றியது. அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாது. அவர் அரசாங்கப் பதவியில் ஜி. எம். ஆக இருந்து ரிடையரானவர். கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயரெடுத்தவர்.

           காரை, வழக்கம்போல சில பிச்சைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். “ஆமாம், இது ஒரு தொல்லை, எப்பப் பார்த்தாலும்,” என்றபடி, ஒருவழியாகச் சில சில்லறைகளை அவர்களின் பாத்திரங்களில் போட்டுவிட்டு மாமியாரின் கையை இழுத்துப் பற்றிக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றாள் ராஜி. அவளுடைய அவசரம் அவளுக்கு!

தோல் நோயுடன் தெருக்களில் திரியும் நாய்கள்... அச்சத்தில் மக்கள்..! | Dogs roaming the streets with skin disease. people in fear .. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...

           “ஷ், ஷ்” என்ற டிரைவரின் குரலைக்கேட்டுத் திரும்பினார் அப்பா. ஒரு சொறிநாய் வழியில் படுத்திருந்தது; எலும்பெல்லாம் துருத்திக்கொண்டிருந்த உடலில் தோல் முழுக்கப் புண்களாகி, ஈக்கள் மொய்த்த வண்ணமிருந்தன. டிரைவர் அதனை விரட்ட முயன்று கொண்டிருந்தான். பரிதாபமாகக் கண்களால் இவர்களைப் பார்த்தது. எழுந்திருக்கக் கூட முடியவில்லை.

           அப்பா விறுவிறுவெனச் சென்று பக்கத்திலிருந்த கடையிலிருந்து ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கிவந்தார்.

           “ராகவா, உன் கையாலே அதுக்குக் கொடு,” என்ற கட்டளை வேறு. கீழ்ப்படிந்தான் ராகவன். நன்றி நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்தபடியே அதனைத் தின்றபடி, மிகுந்த சிரமத்துடன் புண்ணான வாலையும் ஆட்டியது நாய். ராகவனுக்கு அவன் அப்பாவைப் போலவே இளகிய மனம். கண்கள் லேசாகப் பனித்தன.

           “இப்பவே லேட் ஆயிடுத்து,” என மாமனாருக்குக் கேட்காமல் முணுமுணுத்தாள் ராஜி.

           வீட்டுக்குப் போனப்புறம் “மிருகங்களின் நண்பர்கள்” அமைப்புக்குப் ஃபோன் செய்யவேண்டும் என்று மகனிடம் சொன்னார்.

           சிறிது தொலைவில் நின்றுகொண்டிருந்த அம்மாவிடம், “உங்களோட அபிஷேகப் பலன் உன் பிள்ளைக்குக் கிடைச்சாச்சு,” என்று சீரியசாக, அமைதியாகக் கூறிவிட்டு அனைவரும் பின்தொடர, கோவிலுக்குள் சென்றார் அப்பா.

                                                     0000000

           பின் வீட்டுக்கு வந்து,’ மிருகங்களின் நண்பர்கள்,’ அமைப்புக்கு ஃபோன் செய்தது, அவர்கள் வந்து அந்த நாயை சிகித்சைக்காக எடுத்துச் சென்றது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தான் ராகவன். கண்கள் கலங்கின.

           அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு திருமந்திரப்பாடல் நினைவுக்கு வந்தது:

                     படமாடக் கோயில் பகவற்கொன்று ஈயில்

                     நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா

                     நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயில்

                     படமாடக் கோயில் பகவற்கது ஆமே

           கோயிலில் உள்ள இறைவனுக்குச் செய்யும் பூசை அவனுடைய அடியார்களுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலான அவன் தொண்டர்களுக்கு (வாயில்லாப் பிராணிகளுக்கு) எதேனும் உபகாரம் செய்தால் அது  இறைவனுக்கே பூசை செய்ததாகும்.

           என்ன சொல்ல வந்தேன் என வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பீர்களல்லவா?

                                                     0000000

 

வர்க் பிரம் ஹோம் –  எ. யாஸ்மின் பேகம்

சிறுகதை : ஏன்டா இப்படி? - Short story: Why is it like this?

ஏங்க…பக்கத்து வீட்டு சிந்து ரொம்ப தான் அலட்டிக்கிறா அவளுக்கு பேசக்கூடா நேரமில்லையாம் கேட்டா வரக் ஃப்ரம் ஹோம்னு சொல்றா.  ஆபீஸ் வேலையை வீட்டில பார்க்கறதுக்கு எதுக்கு இந்த அலட்டல்.  போன் செய்தா கூடா பேச நேரமில்லையாம் வேலையை முடிக்கனுமாம்” என்று புலம்பிக் கொண்டே காய்கறி வாங்கி விட்டு வீட்டினுள் நுழைந்தாள் சுஜிதா.

                           “அதுக்கு எதுக்கு நீ புலம்பறே முக்கால்வாசி வீட்டிலே இதுதான் இப்போ நடைமுறை.  எனக்கும் அப்படிதானே. நானே இந்த மாசத்துலயிருந்து தான் ஆபீஸ் போய் வேலை பாரக்கறேன்.  இப்போதான் சிறகை விரிச்சு வானத்துல பறக்கிற மாதிரி இருக்கு” என்றான் சுஜிதாவின் கணவன் தினேஷ்.

“அப்போ இத்தனை நாள் ஜெயிலயா இருந்தீங்க.. லாக்டவுன்ல எனக்கு இரட்டிப்பான வேலை சமையல் செய்து சுதந்திரமா ஒரு  நாடகத்தை பார்க்க விடறீங்களா ஆளாளுக்கு சேனலை மாத்திட்டு தீனியை கேட்டுட்டு எனக்கு இடுப்பே உடைஞ்சு போச்சு.”  என்று சீறீக் கொண்டு பாய்ந்தாள் சுஜிதா.

சரி சரி நீ பொங்காதே இப்போ தான் நிலைமை கொஞ்ச கொஞ்சமா சரியாயிட்டு வருதே.

அதாங்க நானும் சொல்ல வரேன்.  நிலைமை முழுமையா சீராகரத்துக்குள்ளே நானும் வரக் ஃப்ரம் ஹோம் செய்யலாம்னு இருக்கேன்.” என்று குண்டை தூக்கி போட்டாள் சுஜிதா.

சுஜி என்ன விளையாடறேயா நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லை.  வீட்டிலிருந்தே ஆபீஸ் வேலை செய்யறது ரொம்ப கஷ்டம். அதெல்லாம் முடியாது உன்னாலே.

“ஏன்  முடியாது….முடியாதுங்கற வார்த்தையே என் அகராதியிலே இல்லைங்க. நானும் படித்த பட்டதாரி.  கல்யாணத்துக்கு முன்னே நானும் டைபிஸ்டா வேலைப் பார்த்து இருக்கிறேன். லேப்டாப்பும் இருக்கு வேற என்ன வேணும்.  சிந்து மட்டும் பாருங்க ரொம்ப பண்றா எப்பக் கேட்டாலும் ஓர்க் ஃப்ரம் ஹோம்னு பீத்திக்கிறா”   

   சுஜி ஒண்ணு புருஞ்சுகக்கோ அவங்க ஸ்கூல டீச்சரா வேலை செய்யறாங்க . இப்பவல்லாம் குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸ் தானே நடக்குது. அந்த நேரம் நீ கால் பண்ணினா எப்படி பேசுவாங்க.  புலியை பார்த்து பூனை சூடு போடலாமா” என்று தினேஷ் நறுக்குத் தெறித்தாற்ப் போல் சொல்ல சுஜிக்கோ கோபம் தலைக்கேறியது.

“இப்ப என்னங்க நானும் ஆன்லைன் வேலை செய்து சம்பாதித்துக் காட்டாறேன். ஆடிக் காத்துல அம்மியும் நகரும் வேணும்னா பாருங்க.

  எது அம்மி நகரதையா …..

“இல்லை நான் வீட்டிலாயிருந்து சம்பாதிக்கறது”

“என்னமோ பண்ணு” என்று சொல்லிவிட்டு விட்டது வழி என்று கிளம்பி போனான் தினேஷ்.

அன்றே ஆன்லைனிலும் வலைத்தளங்களிலும் தேடி தன்னுடைய பயோ டேட்டாவை பதிவு செய்தாள்.

முகநூல் வாயிலாக நிறைய அழைப்புகள் வரவே.  மகிழ்ச்சியில் மூழ்கினாள் சுஜிதா.  எப்போதும் ஃபோனும் கையுமாக காணப்பட்டாள்

இரண்டே நாளில் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு வந்தது. செல்போன் சிணுங்கியது.

    “ஹலோ”…..

   “சுஜிதா மேடம் இருக்காங்களா”

  மேடம் என்று கேட்டதும் சுஜிதாவுக்கு ஏதோ ஐ.டி. கம்பெனியில் வேலைப் பார்ப்பது போல் உணர்ந்தாள்.

‘யெஸ் சுஜிதா தான் பேசறேன் நீங்க” என்று தன் குரலை சில வினாடிகள் சரி செய்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

நாங்க ஹோம் வொர்க் டாட் நெட் என்கிற கம்பெனியிலிருந்து பேசறோம். உங்க பயோ டேட்டாவை பார்த்தோம். நீங்க எங்க கம்பெனியில் ஓர்க் பண்ண தயாரா” என்று தடுமாற்றமில்லா கணீர் குரலில் பேசிய ஆண் குரல்.

  “அப்படியா….. ரொம்ப தேங்க்ஸ்….கண்டிப்பா ஓர்க் பண்றேன்.

  நீங்க உங்க ஆதார் அட்டை போட்டோ அனுப்புங்க.  உங்களுக்கு சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்.  உங்க வேலை ரொம்ப எளிமையான வேலை தான். தினமும் ஓய்வு நேரத்துல வேலையை முடிச்சா போதும். என்று தேன் ஒழுகுவது போல் பேசிய அந்த கம்பெனியின் சேல்ஸ் எக்ஸிகூட்டிவ் .

        “பதினைந்தாயிரமா…..” என்று வாயை பிளந்தாள் சுஜிதா.

    “மீண்டும் அந்த ஆண் குரல் தொடர்ந்தது.

  அதுக்கு முன் நீங்க டெபாசிட்டா ரூபாய் ஐயாயிரம் கட்ட வேண்டும்.

  இதை கேட்டதும் சுஜிதாவின் பிளந்த வாய் தன்னால மூடிக் கொண்டது.

  “இல்ல மேடம் ஐயாயிரம் வெறும் டெபாசிட் ஆன்லைன் சாப்ட்வேர் சார்ஜஸ் தான்.  இது நீங்க வேலையை விடும் போது சம்பளத்துடன் உங்க டெபாசிட்டையும் அனுப்பிடுவோம்.

 சரிங்க நாளைக்கே ரூபாய் ஐந்தாயிரம் அனுபிடறேன்.”

  சுஜிதா பல முறை யோசித்த போதிலும் அவளின் சம்பளத்தை எண்ணி மனது அங்கலாயித்தது.  யோசித்து காலம் தாழ்த்தாமல் ஒரு முடிவுக்கு வந்தாள் சுஜிதா.

தன் வாயை கட்டி வயித்த கட்டி தன் அம்மா அப்பா விஷேச காலங்களிலும் தன் கணவர் கொடுக்கும் மாத செலவிலும் மிச்சம் பிடித்து வைத்த சிறுவாடு பணத்தை பதுங்கியிருந்த உப்பு ஜாடியிலிருந்து வெளிவந்தது.

பிள்ளையாரப்பா கஷ்டப்பட்டு சேர்ந்த பணம்.  இதை முதலீடா கொடுத்து பதினைந்தாயிரம் சம்பளம் அடுத்த மாசம் என் கையில் உன் முன்னால இது மாதிரியே வந்துடனும் உனக்கு பத்து தேங்காய் உடைக்கிறேன். என்று தன் கையால் இரு பக்கமும் நெற்றி பொட்டை கொட்டிக் கொண்டே கும்பிட்டாள்.

மறுநாள் முதல் ஆன்லைன் வேலை ஆரம்பிக்கப்பட்டது சமையல் வேலையை முடித்தாள்.  காலை ஐந்து மணிக்கே எழுந்து வாக்கிங் போனாள்.      

   சுஜி என்று குரல் கேட்க திரும்பினாள்.

   சிந்து நீயா…..

   ஆமா பார்த்து ரொம்ப நாள் ஆச்சே”

   ஆமா சிந்து நானும் ரொம்ப பிஸி. வொர்க் ஃபார்ம் ஹோம் பண்றேன் தெரியுமா பதினைந்தாயிரம் சம்பளம்.

   “அப்படியா அதை பத்தி பேச தான் கால் பண்னினேன் நீ போனே எடுக்கலா”.

   “எனக்கு ஆன்லைன் ஓர்க் சிந்து எப்படி எடுக்க முடியும். வேலை தானே முக்கியம்.  நான் இப்பவெல்லம் வெட்டி அரட்டை அடிக்கறது இல்லை.  சிந்துவின் வார்த்தைகள் அவளுக்கே திருப்பி விழுந்தது.

   “சரி சரி நான் விஷயத்துக்கு வரேன்.” என்று சலித்துக் கொண்டு தொடர்ந்தாள் சிந்து.

   “எங்க ஸ்கூல ஆன்லைன் டியூட்டர் வேணும்னு சொன்னாங்க நிரந்திரமில்லை ஒரு மூணு மாசம் செய்தாக்கூடபோதும்.  மாசம் பத்தாயிரம் தருவாங்க.  சின்ன கிளாஸ்க்கு தான் எடுக்கணும். அதான் உன்னை சிபாரிசு செய்திருக்கேன்.”

   “அடடா….. என்ன சிந்து இப்போ சொல்றே நானே பிஸியா வேலை செய்றேன்.  அதுவுமில்லாமே நல்ல சம்பளம் நீ என்னடான பத்தாயிரத்துக்கு என் டைம் வேஸ்ட் பண்ணிட்டு பேசிட்டு இருக்கிறே.  சாரி சிந்து தப்பா நினைக்காதே” என்று அலட்டல் பேச்சால் வந்த வாய்ப்பை தூக்கி எறிந்தாள் சிஜிதா.

  எறும்பைப் போல் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டிருந்த சுஜிதா இப்போது உட்கார்ந்த இடத்திலேயே வேலையினால் பல இன்னல்களை சந்தித்தாள். பதினைந்து நாட்களாக விடாமல் உட்கார்ந்தபடியே வேலை செய்ததில் முதுகு வலிதான் மிச்சம்.      

  பத்தாததுக்கு கண் எரிச்சல், தலைவலி என்று கூடிக் கொண்டே போனது வியாதி. கெட்டு போனது ஆரோக்கியம். இருந்தாலும் கடின உழைப்பு வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் உழைத்தாள் சுஜிதா.

இன்னும் பதினைந்து நாட்களில் பதினைந்தாயிரம் சம்பளம் வந்துவிடும் என்று ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தாள்.  முழு நாளும் ஆன்லைன் வேலை என்று கவனித்ததில் வீட்டை கவனிக்காமல் விட்டு விட்டாள். எப்போதும் சுத்தமாக இருந்த வீடு குப்பை கூளமாய் போனது.  இதுக்கு நேரமின்மையே காரணமாயிருந்தது சுஜிக்கு.  வீட்டு வேலை, சமையல் வேலை, துணி வேலை என்று பெருகிக் கொண்டே போனது இதில் ஓர்க் ஃப்ரம் ஹோம் வேலை வேறு.

நாட்கள் ஓடியது. தேதியும் பிறந்தது. செல் போனில் நோட்டிபிகேஷன் சவுண்ட் வரவும் அதை பார்த்த சுஜிதாவுக்கு கண்கள் விரிந்தன.

  “ஏங்க……. இங்கே பாருங்க……. என் அக்கவுண்டல சம்பளம் பணம் வந்திருச்சு.” 

  “அதான் தெரியுமே”

  “தெரியுமா எப்படிங்க”

  “அட வேலைக்கு சேர்ந்து இன்னியோட ஒரு மாசம் மூணு நாள் ஆகுது.”

  “அது சரிதாங்க ஆனா ஒரு வேலை ஃப்ராட் கம்பனியா இருந்தா என்ன பண்றது தான் பயமா இருந்துச்சு.  என் பிரண்ட் மல்லிக்காவுக்கு அப்படிதான் நடந்துச்சாம்.”

  “சரி நீ அதை பற்றியெல்லாம் யோசிக்காதே சரி நான் கிளம்பறேன்.” என்று சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினான் தினேஷ்.

        கைபேசி சிணுங்கியது.

        “ஹலோ தினேஷ் இருக்கானா”

  “அவர் இப்போதான் கிளம்பி போனார். ஆனா செல் போனை மறந்து விட்டுட்டு போயிட்டார்.” என்றாள் சுஜிதா.

  “ இல்ல அவன் உங்க சேமிப்பு கணக்குக்கு பதினைந்தாயிரம் ட்ரான்ஸ்பர் பண்ண சொன்னான். அதான் பணம் ரிசீவ் ஆயிடுச்சானு கன்ஃபர்ம் பண்ண தான் கால் பண்ணினேன்.

 இதை கேட்ட சுஜிதா அதிர்ச்சி அடைந்தாள்.

சரியாக தினேஷ் வீட்டினுள் நுழைய.

“சுஜி என் போனை மறந்து விட்டுட்டேன் என்று சொல்லிக் கொண்டே போனை வாங்கினான். மறு முனையில் அவன் நண்பன் இருக்கவும் நிலைமையை புரிந்துக் கொண்டான்.

 டேய் பாலா நான் திரும்ப கூப்பிடறேன்.” என்று சொல்லிவிட்டு செல்போனை துண்டித்தான்.

“சுஜி நீ வேலை செய்த கம்பெனி ஒரு ஏமாற்று கம்பனினு காலையில தான் உன் போன் மூலமா வந்த மின் அஞ்சல் வாயிலா தெருஞ்சிக்கிட்டேன்.  நீ இவ்வளோ கஷ்டப்பட்டும் உனக்கு ஏமாற்றத்தை கொடுக்க விரும்பல. அதுவுமில்லாமல் நீ நினைக்கிற ஓர்க் ஃப்ரம் ஹோம் அவ்வளவு சுலபமில்லை. இதுல போலியும் காலந்திருக்கு. நம்பி ஏமாந்தவங்களும் நிறையா. நீ வீட்டிலிருந்து சம்பாதிக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை சுஜி அதை உன் திறமையைக் கொண்டு செய்யணும். இவ்வளவு வருடமா இந்த வீட்டுல நீ ஓர்க் ஃப்ரம்  ஹோம் மேக்கரா இருக்கே..  உன்னை ஒரு நாள் கூட நான் பாராட்டியது இல்லைனு நினைக்கும் போது  தவறு என் மேல தான் தோணுச்சு சுஜி. நீ யாருக்கும் அடிமையில்லை நீ சுதந்திரமாய் இருக்கலாம். உனக்கு பிடிச்ச விஷயத்தை நீ செய்யலாம்.”.

இதை கேட்ட சுஜிதாவுக்கு கணவனின் அன்பான பேச்சும் அனுசரணையும் அவளுக்கு தெம்பை தந்தாலும் இவ்வளவு நாள் கணவனை புரிந்துக் கொள்ளாமல் வீம்பாய் நடந்துக் கொண்டதை நினைத்து வருத்தமடைந்தாள் சுஜிதா.

     

 

அப்பாவின் பள்ளியறை – கவி. கோ. பிரியதர்ஷினி

அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar
வேண்டாமென்ற மணவிழாவிற்கு
திருமண பரிசாய்
கன்னத்து தோளோடு
உரிந்தது இரண்டடி
அலங்கார மேடையில்
சத்தமாய் அழுதது மௌனம்
திட்டிக் கொண்டே இருக்கிறார் அப்பா
என் சுயம் கேளாது
வெடிப்புற்ற உதடுகளுக்கு
முத்தம் துப்பியபடி
அழுகையை சுவைத்தது கைக்குட்டை
தயாராகிக் கொண்டிருந்தார்கள்
எல்லாரும்
என் கனவுகளை நறுக்கிக்கொண்டே
தென்படவில்லை இதுவரை
அவரவர் கண்களுக்கு
எனக்குள் மாய்ந்து போயிருந்த
நட்சத்திர பூ ஒன்றை
ஊடலில் கழுத்துகளில் குதித்தபடி
கொத்திக் கொண்டிருந்தன
மணச்சேர்க்கையின் மாலைகள்
வெள்ளையும் சிவப்புமாய்
மேடிட்ட மனக்கோட்டையில்
நழுவியும் கழுவியும்
இரக்கமற்று மறைந்தது
அவன் மேலூறிய அன்பு
சரிந்த பேரன்பிற்காய்
கிழியாமல் வாதிட்டது கண்கள்
அப்பாவின் திசை சாய்ந்து
மலைப்பாம்பை ஒத்து நெழிந்து
கொண்டிருந்தேன்
என் முன் தனல் அதனினும் நான்
கட்டப்பட்டது என் கைகளும் மௌனமும்
நிகழ்வதை துழாவிக் கொண்டிருக்கையில்
உடலும் ஏகியது மஞ்சள் முடிச்சு
அவிழ்ந்திருந்தது என் சரீரம்
என் ஒழுங்கிலிருந்து
விருப்பக் கிளையொடித்து
வேறொரு அறைக்கு
குடிபுகுத்தினார்கள்
இரவெல்லாம் ஏங்கிக்
கொண்டிருந்த வெள்ளந்தியாய்
அழைத்தேன் அப்பாவை
உரிந்த கன்னத்து தோளுக்கு
கசிய கசிய காதல்  ஊட்டி
“சீக்கிரம் உறங்கி
நாளைக்கு பள்ளி செல்
என்றபடியே
பள்ளியறை புகுந்தார் அப்பா
அம்மாவின் அறை பழகிக்கொண்டிருந்தது
அம்மாவை
போலொரு அம்மாவிற்கு

வீறு கொண்டு எழு மனமே – பத்ரிநாராயணன்

வீறு கொண்டு எழு மனமே
💪💪💪💪💪💪
நம்பிக்கை கவிதைகள்
வீறு கொண்டு எழு மனமே
பணத்தை தேடி மனதை பார்க்காத,
மனிதத்தை மருந்துக்கும் மதிக்காத,
மனிதநேயம் அற்ற மானிடர்களை கண்டு
வீறு கொண்டு எழு மனமே !!
விவசாயத்தை வேரருக்க காத்திருக்கும் வேட்டைகாரர்களை,
விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க விடாத,
விளைநிலத்தை மலடியாக்க நினைக்கும் மடையர்களை கண்டு
வீறு கொண்டு எழு மனமே!!
பெண்ணை பேடியாய் போகப் பொருளாய் பார்ப்பவரை,
பெண்ணீயம் பேசும் பெண்டீரே பெண்உரிமையை நசுக்கும் போது,
சமநிலை அளிக்காமல் பெண்ணை இரண்டாம் நிலைக்கு தள்ளுபவரை கண்டு
வீறு கொண்டு எழு மனமே!!
கொஞ்சி பேசியதும், விளையாடியதும் தமிழில்,
மனதுக்குள் தென்றலாகவும், உயிருக்கு மூச்சாகவும் இருந்த தமிழ்,
மற்ற மொழிகளை கற்பதும், கற்பிப்பதும் தமிழில்,
ஆங்கிலமே முதன்மை என்று கொடிபிடிக்கும் கொடூரர்களை கண்டு
வீறு கொண்டு எழு மனமே!!
வீறு கொண்டு எழு மனமே!!

குட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்

மண்டையிலே நுழைய மாட்டேங்குது..!

குழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கின்றோம் ? | வினவு

நான் என் நண்பன் சேகருடன் அவன் வீட்டில் பேசிக்
கொண்டிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.

‘என்னமோ.. தெரியலேப்பா.. வயசாயிடுச்சுன்னு நினைக்கிறேன்… ஒரே விஷயத்தை எத்தனை முறை படிச்சாலும்,கேட்டாலும் இந்த மண்டையில் நுழைய மாட்டெங்கிறது…’என்றான் நண்பன் திடீரென்று.

என் மகள் மிதிலா அவனையே இரண்டு நிமிடங்கள்
மேலும் கீழுமாகப் பார்த்தாள்.

‘அங்கிள்.. காரணம் ரொம்ப ஸிம்பிள்.. நீங்க புட்டபர்த்தி
சாய்பாபா மாதிரி ஒரு கூடை முடியை தலையில் வளர
விட்டிருக்கீங்க.. நீங்க படிச்சதெல்லாம் மண்டையில் நுழையாம அந்த முடி தடுக்கிறது.. ஒண்ணு பண்ணுங்க.. க்ளீனா மொட்டை அடிச்சிடுங்க.. அப்புறம் பாருங்க.. நீங்க ஒரு தடவை படிக்கும்போதே அதெல்லாம் ஒரு தடையுமில்லாம க்ளீனா டைரக்டா மண்டைக்குள் நுழைந்து விடும்..’ என்றாளே பார்க்கலாம்.

நானும் சேகரும் அயர்ந்து நின்றோம்.

அப்புசாமியும் தமிழ் சீரியல்களும் – ரேவதி ராமச்சந்திரன்

(அமரர் பாக்கியம் ராமஸ்வாமி மன்னிக்க)

சித்திரக்கதை: சித்திரக்கதையில் அப்புசாமி (Appusami in comics)

நான் ஆணையிட்டால் டடடாங் அது நடந்து விட்டால் டடடாங் இந்த ஏழைகள் வேதனை பட மாட்டார்’ என்று இரு கைகளையும் தூக்கிக்கொண்டு சீதேக் கிழவி வீட்டில் இல்லாத சந்தோஷத்தில் விசில் அடித்தவாரே நுழைந்தார் நமது நாயகன் அப்புசாமி. கொட்டாயில் போன வாரம் போட்ட எங்க வீட்டுப் பிள்ளை இன்னமும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி சினிமா பார்க்க சீதேக் கிழவி காசு தருவதில்லை. ‘கண் கெட்டுப் போய் விடும்’ என்ற பாவலா. பா  மு கழகத்தின் அக்கவுண்டஸ் பார்த்துப் பார்த்து அவள் தான் பூதக்கண்ணாடி போட்டு உள்ளாள். பொழுது போக வேண்டுமே! அப்போது தான் அவருக்கு இரண்டு நாள் முன்னாடி பார்க்கில் நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.

இரண்டு நாள் முன்னாடி கீழே ரசகுண்டுவைப் பார்க்க போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாமி கண்ணைக் கசக்கிக் கொண்டு இன்னொரு மாமியிடம் ‘அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் சித்ரவதை பண்ணுகிறார்கள். புருஷனோ ஜெயிலில் செய்யாத குற்றத்திற்காக! இவள் வயிற்றிலோ குழந்தை வேறு. பாவம்’ என்று கூறிக் கொண்டிருந்தாள். இவருக்கு பக்கென்று ஆனது. இது என்னதிது! அவளைக் காப்பாற்ற யாராவது முன் வந்தார்களா இல்லையா என்ற கவலையுடன் அந்த மாமியிடம் ஓடிப் போய் விசாரித்தார். அவர்கள் இருவரும் நக்கலாக முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு ‘யாருக்குத் தெரியும்! அடுத்தவாரம் டிவி பார்த்தால் தெரியும்!’ என்ற போதுதான் இவருக்கு உரைத்தது அவர்கள் இருவரும் டிவி சீரியல் கதை பேசுகிறார்கள் என்று. ஆத்திரத்துடன் இரண்டு உதடுகளையும் கடித்துக்கொண்டே (பல் இல்லாத குறையால்) வீடு வந்து சேர்ந்தார். அப்போது ஒரு ஐநா சபை தீர்மானம் போட்டார். அதை செயல் படுத்த ஆரம்பித்தார்.

‘காலையில் சந்தித்தேன் கண்களில் அன்புத்தேன்

நெற்றியில் சந்திரன்தான் நெஞ்சிலே பாய்கிறதே’ என்று சீதேயின் பின்னாடியே சென்று பாடினார். ‘சீத்தே இன்று நீ எவ்ளோ அழகாக இருக்கிறாய் தெரியுமா? உங்களோட இந்த பெரிய பொட்டு, அளவான அழகான புன்னகை, இந்த மேல் தூக்கிய சிறிய கொண்டை, நடயா இந்த நடையா என்ற ஒயில்’ என்று பின்னாடியே சென்றார்.

‘என்ன வேண்டும் ஏன் இந்த பசப்பு’ என்று சிடுத்து அதட்டிக் கேட்டாள் தர்மபத்தினி.

‘சீதே ஒரு ஐநூறு ரூபாய்  கொடென் சினிமா பார்க்க’ என்று அஸ்த்ரம் எய்தினார். ‘ஐநூறு என்று கேட்டால் இருநூறாவது தேறும் என்ற நப்பாசை’ அவளா மசிவாள்! கிடையாது!

‘என்ன ஐநூறா! பணம் என்ன மரத்திலேயா காய்க்கிறது! எவ்வளவு செலவு! பா மு கழகத்தின் தேர்தல் வேறு வருகிறது’ என்று பொட்டை சரி பண்ணிக் கொண்டே சொன்னாள்.

‘எனக்கு போர் அடிக்கறது. எத்தனை நாழிதான் பீமா ரசகுண்டுவுடன் தெருவில் கோலிக் குண்டு விளையாடுவது! பணம் கொடு சினிமாவுக்குப் போகணும்’ என்று சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடித்தார்.

‘முடியாதுன்னா முடியாதுதான்’ என்று சீதேயும் உறுதியுடன் நின்றாள்.

திடுமென்று நேற்று பார்க் சம்பவம் நினைவிற்கு வரவே ‘அப்படியானால் ஒரு டிவி வாங்கிப் போடு. நீயும் செய்தி வாசிக்கலாம் சாரி பார்க்கலாம், நானும் சிறிது பொழுது போக்கிக் கொள்வேன்’ என்றார். பாவம் அவருக்குத் தெரியாதது டிவி பார்ப்பது என்பது பொழுதைக் கொல்வதாகும் என்று. ஆனால் அதிசயமாக சீதேக்கு இது நல்ல யோசனையாகப் பட்டது. சரியாக அப்போது தீபாவளியும் வரவே அதற்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. வாழ்க்கையில் முதன் முதலாக ஹஸ்பண்ட் பேச்சைக் கேட்க முடிவு செய்தாள் பா மு கழக பிரெஸிடெண்ட்.

அப்புறமென்ன டிவி வந்தாச்சு. அப்புசாமிக்கு ஒரே குஷி. பீமா, ரசகுண்டுவை வரச் சொல்லி (சீதேயிடம் பர்மிஷன் வாங்கித்தான், இல்லாவிடில் வீடு இரண்டு பட்டு விடும்) படம் பார்க்க உட்கார்ந்தார். ‘கேடிவி போடு தாத்தா’ என்று பீமாவும், ‘ஊஹூம் சன் டிவி தான் பெஸ்ட்’ என்று ரசகுண்டுவும் சொல்ல அப்புசாமி இருக்கிற இரண்டு முடியைப் பிய்த்துக்கொண்டார். கடைசியில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து ‘காலையில் சன் டிவி, மதியமே கேடிவி, மாலையில் ஸ்டார் விஜய், நடு நடுவே விஜய், ஜெயா’ (மாலையில் சந்தித்தேன் ட்டூயூனில்) என்று பாரபட்சமில்லாமல் பாட்டு படித்தார்.

பொக்கைவாய்ப் பல்லைத் தேய்த்தாரோ இல்லையோ காபிக்குக் கூட நிக்காமல் டிவி வாய் திறந்தார். ஒரே சந்தோஷம்தான். பீமாவும், ரசகுண்டுவும் தம் பங்கிற்கு சின்ன பாக்கெட் பொரி கடலை வாங்கி வந்து தாத்தா வீட்டு நிலமையை  எட்டிப் பார்த்தனர். தாத்தாவை டிவி முன்னாடி பார்த்து குதூகலித்து உள்ளே நுழைந்தனர். தாத்தா தட்டு தடுமாறி சானலை மாற்றுவதை வேடிக்கைப் பார்த்தனர்.

காலையில் சன் டிவியில் ராசி பலன் சொல்லப்பட்டது. தாத்தா ஜாதகத்திற்கு இன்று இராஜயோகம்தான் என்றார் ஆஸ்தான ஜோசியர். ஆமாம் அதிசயமாக கேட்காமலேயே சீதே காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். பாவம் அவருக்குத் தெரியாதது அது வேலைக்காரிக்கு கலந்தது, ஆறியதால் இவருக்கு அடித்தது யோகம் என்று. கேடிவியில் ராமராஜன் மாட்டைத் தொரத்தினான்.

திடீரென்று சுந்தரிக்கு அம்மா இவள் அல்லவே என்று யோசிக்கும்போதுதான் தெரிந்தது சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு ரிமோடில் தட்டி விட்டோம் என்று. சுந்தரியின் கணவன் கார்த்திக்கு இன்னொரு பெண்டாட்டி என்றால் பாக்கியலக்ஷ்மியின் புருஷன் கோபி பழைய காதலியை மறக்கவில்லை.  பாவம் இந்த வயசான காலத்தில் இவருக்குப் புரியாத ஒன்று அதெப்படி ஒரே வீட்டில் இருந்து கொண்டே ஒருவரை ஒருவர் பார்ப்பதில்லை அவருடைய பெயரையும் சொல்வதில்லை என்று. ‘கண்ணம்மா என் காதலி’ என்ற பாரதிக்கு கண்ணம்மா எப்படி எதிரி ஆனாள்! தூக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது, தேன்மொழியின் தங்கை தமிழ் மணியின் கல்யாணம் இனிதே நிறைவேறியது. எல்லாம் மங்களம்தான். கொஞ்ச நாளிலேயே இவருக்கு அலுப்பு தட்டியது. இதென்னதிது மாமியார் மருமகளை திட்டுவதும், மருமகள் மாமியாருக்கு சாபம் இடுவதும் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது டிவி என்பது ஒரு சாபக்கேடு என்று. நல்ல மருத்துவம், பாடுக்குப் பாட்டு, பட்டிமன்றம் என்றெல்லாம் இருந்தாலும் ‘டிவி நம்மை அடிமைப்படுத்துகிறது, இதன் வலையில் சிக்கக் கூடாது, வெளியில் பீமா ரசகுண்டுவுடன் கோலிக் குண்டு விளையாடுவது உடம்பிற்கு எவ்வளவு நல்லது’ என்று நினைத்தார்.

ரிமோட்டை சீதேக் கையில் திணித்து விட்டு ‘விடுதலை விடுதலை டிவியிலிருந்தும் டிவி சீரியலிருந்தும் இன்றிலிருந்து விடுதலை’ என்று வெளிக்காற்றை ஆனந்தமாக சுவாஸித்தார் சுப்ரீம் ஸ்டார் அப்புசாமி.

                            

 

 

 

தாமதமாகி விட்டதே – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Cancer Side Effects: Anxiety, Sleep

ஸோஷியல் வர்க் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆலோசகரான ஆரம்பக் காலகட்டத்தில், எப்படியோ நேரத்தைக் கண்டெடுத்து ஹாஸ்பைஸில் (Hospice அதாவது வலிநிவாரணி பராமரிப்பு / இறப்பு நிலை உதவி இடம்/ மருத்துவமனை) தொண்டு செய்து வந்தேன். மனம் உருகும். அவர்கள் துணிந்து எதிர்கொள்ளும் வெவ்வேறு போராட்டம் ஊக்குவிக்கும். வாழ்க்கையின் அத்தனை நிறங்களைப் பார்க்க முடிந்தத

இவர்களின் இந்த நிலையைப் பற்றி விரிவித்தது எலிசபெத் க்யூபுலர்- ராஸ் (Elisabeth Kübler-Ross) அவர்கள் எழுதிய “ஆன் டெத் அண்ட் டையிங்” (“On Death and Dying”) புத்தகம். மரணத்தின் தறுவாயில் இருப்பவரின் பகிருதல், நோயின் வலியை எதிர்கொள்ளும் விதத்தை, தவிக்கும் நபர்களின் அனுபவத்தைச் சித்திரித்து இருந்தார். ஸோஷியல் வர்க் முதுகலை பட்டப்படிப்பில் மெடிகல் ஸோஷியல் வர்க் பாடத்தில் படித்ததிலிருந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் என்னைத் தூண்டியது.

அன்றும் அதே ஆர்வத்துடன் போயிருந்தேன். நிறுவனத்தின் நுழைவாயிலிருந்த அந்தப் பெண்மணியை, “வாய மூடு. இங்க இரு” என்று அதட்டிய படி, அவள் என்ன என்று தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் முன் உள்ளிருந்து காவி வேட்டி ஜிப்பா அணிந்த இளைஞன் அவளது வாகனத்துக்கு அருகில் வந்தான். அவளைப் பார்த்து “காசு கட்டணமாம், உன்கிட்ட இருக்கும், கொடுத்து விடு, வா அப்பா” எனச் சொல்லிக் கொண்டு கார் கதவை மூடினான். அவளை அங்கேயே விட்டு விட்டு இருவரும் சென்று விட்டார்கள்.

வெட்கம், சஞ்சலங்கள் கலந்து அவள் முகம் சிவந்தது. என்னை அறிமுகம் செய்து கொண்டவாறே அவளைக் கைதாங்கி உள்ளே அழைத்துச் சென்றேன். பல முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

சென்றவர்கள், கணவன் ரகு, மகன் ஆஷிஷ் என்றாள். தான் ஐம்பது வயதான சூரியகாந்தி, பேக்கரி நிறுவனம் நடத்துவதாகவும், பலருக்கு கற்றுத் தருவதாகவும் ஒரு சுருக்கமான அறிமுகம் செய்து கொண்டாள். உள்ளே நுழைந்ததும் அவளுடைய பையைத் துளவி, ஒரு துணியில் கட்டி வைத்திருந்த பணத்திலிருந்து சேர்வதற்கான தொகையைக் கட்டிவிட்டாள். ஒரு சிறு புன்னகை வந்து மறைந்தது.

நிறுவனத்தின் விதிகளின்படி ஊழியர்கள் அவளை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். தனி அரை. எல்லா அரைகளின் ஜன்னல்களும் தோட்டத்தைப் பார்க்கும் படியாகக் கட்டிடத்தின் அமைப்பு. வெட்டவெளியாக இருப்பதால் பல பறவைகள் அங்கே வரும். இதமான சூழலை உருவாக்கும்.

மருத்துவ பரிசோதனை நடந்தது. சூரியகாந்தி புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். அதன் பயன் குறைந்தது, உயிரோடு இருக்கப் போவது நாலைந்து மாதமே என்றதும் எந்த சிகிச்சையும் வேண்டாம் என முடிவு செய்தாள். வலியைத் தாங்க முடியாமல் அழுதாள். அவளுடைய உடல்நிலையில் அவளைக் கவனித்துக் கொள்ளக் கணவன் ரகுவிற்கோ மகன் ஆஷிஷிற்கோ பிடிக்கவில்லை என்பதால் இங்குச் சேர்ந்தாள். இந்த இருப்பிடமும் சூரியகாந்தி தானே தேடியது. 1980களில் இப்போது போல அல்ல, இதுபோன்ற நிர்வாகம் ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன.

சூரியகாந்தியின் மெடிக்கல் ஸோஷியல் வர்கராக என்னை நியமிக்கப் பட்டது. தொடங்கினேன். ஒவ்வொருவருக்கும் இவ்வாறே. எங்களுடன் ஆன்காலஜிஸ்ட், ந்யூட்ரிஷனிஸ்ட், ஆன்மீக ஆய்வாளர், ஃபிஸியோதெரபிஸ்ட் எனக் கைகோர்த்து ஹோலிஸ்ட்டிக்காக அந்த நபருக்கு ஏற்ப ஒரு அணியாக (டீம்) பார்த்துக் கொள்வோம்.

உளவியல் சம்பந்தப்பட்ட பல வேதனைகளைச் சுமந்து வந்தவர் தான் சூரியகாந்தியும். தானாகத் தேடி, வந்து சேர்ந்திருந்தாலும் சூரியகாந்தி இங்கு இருப்பது தனக்கு வேதனை அளிக்கிறது என்றாள். அங்கே பலருக்கு இவ்வாறு தோன்றுவது சகஜம். காரணம், தான் புறக்கணிக்கப் பட்டதாகத் தோன்றுவதுதான். இதனால் மனம் துடிதுடிக்க, உடல் நலனை மேலும் பாதிக்கும். பாதித்தது. சூரியகாந்தி உடல்நிலை சரிந்தது. அடுத்த ஸெஷன் பல நாட்களுக்கு பிறகே நடந்தது. உடல் நிலையில் பல மேடு பள்ளங்கள் இருப்பதால் ஸெஷன்கள் கணித்து வைத்தது போலப் போகாது. அப்படித்தான் நடந்தது.

வாழும் காலம் பாதிக்கப்பட்ட நிலை வேறு. சூரியகாந்தி நிலைமையைச் சிறிதளவாவது சமாதானம் செய்யப் புதிதாக வகித்தேன். அதனால் தான் இந்த புறக்கணிக்கப்பட்ட நினைப்பைப் பற்றி ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.

சூரியகாந்தி இங்குச் சேர்ந்ததை ஏற்றுக்கொள்ள “வேறுபடியாக இருந்திருந்தால்?” என்ற கற்பனைச் சூழலை ஸெஷன்களில் ஆராய்ந்தோம். புறக்கணிப்பு  இவளுடைய உடல் நலன் சரிய ஆரம்பித்ததுமே தொடங்கியது. அதை இப்போது உணர்ந்தாள். ரகு, ஆஷிஷ் கொண்ட கோபம் சூழலை மேலும் ஆக்கிரமித்து கடினமாக்கி இருந்திருந்தது. விளைவு? வீட்டில் கவனிப்பார் இல்லாமல் போனது. இப்போதும் ஆஷிஷை கைப்பேசியில் பலமுறை அழைத்தாள். அவனும் ரகுவும் தொந்தரவு செய்யாதே என்று பேச்சைத் துண்டித்து விட்டார்கள்..

ஒரு விதத்தில் மறைமுகமாக இந்தத் தோரணை உதவியது.

இங்கே முன்பின் தெரியாதவர்கள் அன்பு காட்டுவது முதலில் சூரியகாந்தியை வாட்டியது. மனம் ஆறவில்லை. ஒப்பிட்டுப் பார்க்க, யதார்த்தம் வென்றது. இங்கே அரவணைப்பும், கவனிப்பும் மனதைச் சமாதானம் படுத்தியது. ஏற்றுக்கொண்டாள்!

இந்த தெளிவு பிறந்ததுமே மனதை வருடியதைப் பகிரத் தொடங்கினாள். ஆஷிஷ் இப்போது தான் ஏதோ வேலை என்ற பெயரில் சம்பாத்தியம். ஆன்மீகம் தான் இஷ்டம் என்று ஏதோ ஒரு ஆசிரமத்தில் வேலை செய்கிறானாம். போன மாதம் அவன் சாரு என்ற பெண்ணை அழைத்து வந்து வீட்டில் அவனுடன் இருப்பாள் என அறிவித்தான். ரகு ஏதோ எதிர்ப்பு தெரிவித்தான். சில மணிநேரம் கழித்து அவனே “மாடர்ன் டைம்ஸ்” எனச் சொல்லி விட்டது தனக்கு வியப்பளித்தது என்றாள். தன் கருத்தைக் கேட்காதது துன்பம் தந்தது என்றாள்.

இதையே மையமாக வைத்து மேலும் உரையாடினோம். இந்நாள்வழியில் பிள்ளைக்குச் சலுகைகள் குவித்து வைத்ததை வர்ணித்தாள். பள்ளிக்குச் செல்ல மறுக்கும்போதோ, நண்பர்களைச் சண்டையில் காயப் படுத்தும்போதோ சூரியகாந்தி எப்போதும் அவன் பக்கம் பேசி சமாளித்து விடுவாள்.

பள்ளியில் பலவிதமான சேட்டை செய்வானாம். ஆசிரியர் அழைக்கும் போதெல்லாம் “குழந்தை தானே அப்படித் தானே செய்வார்கள்” என்று அவன் முன்னேயே சொல்வதால் சேட்டை அதிகரித்து, ஆசிரியரையும் அவமதிக்க ஆரம்பித்தான். இதை ஆண்பிள்ளை தைரியத்தின் அடையாளம் என சூரியகாந்தி  எடை போட்டு, ஊக்குவித்தாள். பள்ளி முதல்வர் பலமுறை அழைத்து, ஆஷிஷை மனநல நிபுணரை ஆலோசிக்க வலியுறுத்தினார். தங்களுடைய ஒரே குழந்தை. அவனுக்கு எப்படி பிரச்சினை இருக்க நேரிடும் என்று ரகு, சூரியகாந்தி நகைத்து, எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் விட்டு விட்டார்கள்.

இந்த சமயத்தில் சூரியகாந்தி பேக்கரி தொடங்கினாள். ரகு எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க மாட்டான். ஆறு மாதம் வேலை பிறகு நீண்ட இடைவெளி விட்டு விடுவான்.

நாளடைவில் பள்ளியிலிருந்து புகார்கள் அதிகரித்தன. வகுப்பில் ஆஷிஷ் புத்தகத்தில் கிறுக்கி, மற்றவரின் பொருட்களை ஒளித்து, உடைத்து விடுகிறான் என்று. பெற்றோரிடம் சொன்னால் ஆசிரியர்களுடன் விவாதித்து ஆஷிஷ் பக்கமே பேசினார்கள். ஆசிரியர்கள் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர். ஆஷிஷுக்கு படிப்பில் நாட்டம் குறைய, நடத்தை பிரச்சினைகள் அதிகரிக்க, அவனைப் பள்ளியிலிருந்து விலகச் சொல்லி விட்டார்கள். ரகு சூரியகாந்தி அவ்வாறு செய்தார்கள். எந்த பள்ளியிலும் சேர்க்க முயலவில்லை. செல்லம், சலுகை அதிகரித்தபடியே வளர்ந்தான். அக்கம்பக்கத்தில் சில்லறை வேலை செய்து சம்பாதிக்கத் தொடங்கியதால்  அவனுக்குப் பிரச்சினையே இல்லை என்று முடிவானது.

ஆஷிஷ் சாருவுடன் லிவ்-இன் தொடங்கியதும் கண்டிக்க மிகவும் தாமதமாகி விட்டது எனச் சூரியகாந்தி வருந்தினாள். சாரு  வெளிப்படையாகச் சூரியகாந்தியைப் பார்த்துக் கொள்ள இயலாது எனச் சொல்லி விட்டாள். ஆஷிஷ் இதை ஏற்றது தாயின் தவிப்பைத் தூண்டியது. தன்னை உதறிவிட்டானே!

இவற்றை நாங்கள் ஆராய, அதைப் பற்றிப் பேசப் பேச, தவிப்பைப் பகிர, மன குமறலைக் கொட்டித் தீர்த்தாள். கண்ணாடி முன் நின்று தன்னிடமே பேசுவதைப் போல அமைத்ததில் பயன்பெற்றாள் சூரியகாந்தி. இந்த நிலையில் தன்னுடைய தவறுகளை உணர்ந்தாள்.

ஆம், இந்த கட்டத்தைத் தாண்டிப் போவது தேவையாக இருந்தது. மனத்தைச் சமாதானம் செய்வது எப்படி என்ற தேடல் ஆரம்பமானது. இதைப் பற்றி நுணுக்கமாகச் சிந்தனை செய்யச் செய்தேன். சூரியகாந்தி உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு ஸெஷன்கள் மீண்டும் துவங்கிய போது இங்கிருந்தே தொடங்கினோம்.

இடைவெளி விட்டதின் பலன் கிடைத்தது. சூரியகாந்தி மகன் படித்த பள்ளி ஆசிரியைகளிடம் தான் அன்றைய தினத்தில் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாள். பள்ளி முதல்வர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் கடிதம் எழுதினாள். மனம் தொட்டுவிட்டாள் என்று விவரித்து அவர்களிடமிருந்து பாசம் ததும்பும் பதில்கள் வந்தது. தவற்றை உணர்ந்து, ஒரு பிராயச்சித்தமும் செய்யப் போக, மனம் லேசாகுவதை உணர்ந்தாள். மனதிலிருந்து ஒரு பாரம் இறங்கியது என்றாள்.

இதுவரை, மகனைப் பொக்கிஷம் போலப் பார்த்துக் கொண்டு, அவனுக்காக யோசித்துச் செய்ததில் விளைவுகள் என்னென்ன என்று ஆஷிஷ் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டாள். ரகு பேக்கரி பிஸினஸ் இப்போதாவது கவனிப்பாரா அல்ல கவனிக்காமல் இருந்து விடுவாரோ என அஞ்சினாள். கண்ணீர் பொங்கியது.

காரணம் இருந்தது. இங்குச் சேருவதற்கு முன்னால் வீட்டின் அத்தனை வரவு செலவுகளையும் சூரியகாந்தி தனியாகக் கவனித்துக் கொண்டாள். ஒரு விதத்தில் இவளுடைய பிஸினஸ் மூலமாக மட்டுமே சம்பாத்தியம். ஆண்பிள்ளைகள் இருவருமே வீட்டிலும் சரி பிஸினஸிலும் எந்த விதமான ஒத்தாசையும் செய்ததில்லை. சூரியகாந்தி ஆண்களை வேலை வாங்கக்கூடாது என்று தானே பார்த்துக் கொண்டாள். இப்போது வருந்தினாள்.

தான் மட்டுமே எல்லா பொறுப்பையும், முடிவுகளையும் சுமந்து சென்றதில், இப்போது எப்படி இருக்குமோ என நினைத்து, ஏதேதோ எண்ணங்கள் தோன்றப் பயந்தாள்.

அதன் விளைவாக, ஒரு நாள் நான் நிறுவனத்தை அடைந்ததும் செவிலியர் ஓடிவந்து சூரியகாந்தி எதுவும் உண்ணாமல் அடம்பிடித்து வருகிறாள் எனப் பதட்டத்துடன் சொன்னதும், விரைந்தேன். தான் செய்த தவறுகளின் விளைவாக ஆஷிஷ் கஷ்டப் படுவானே என்ற குற்ற உணர்வு தன்னை குடைவதால் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாள் சூரியகாந்தி.

இதுபோன்ற பிடிவாதச் செயல்களால் நலன் பாதிப்பு நேருமே தவிர, எதையும் சரி செய்ய முடியாது. சூரியகாந்தியிடம் தன் மகன், கணவரின் நிலைமையை விலாவாரியாக விவரிக்கச் சொன்னேன். ஒவ்வொன்றுக்கும் “ஏன் அவ்வாறு? அதனால்? விளைவு”? சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றேன். அவ்வாறே வர்ணிக்க,  அவளுடைய பங்கு எங்கே, எந்த அளவிற்கு இருந்தது என்றதை உணர்ந்தாள்.

தான் எதைத் தவிர்த்திருக்கலாம் என்றதை அறிந்து கொண்டாள். வேதனை வருத்தம் பொங்கியது. அதுவும் மேற்கொண்டு ஆராய அமைதியானது. ஏனெனில் இப்போது தான் சூரியகாந்தி ஏற்றுக் கொண்டாள் – தன் கைக்குள் இருப்பதை மட்டுமே செய்ய, ஆராய முடியும். ஆஷிஷ், ரகு என்ன செய்கிறார்கள் என்ற தகவல் எதுவும் இல்லை. அவர்கள் தொலைப்பேசியில் அழைக்கவும் இல்லை. பதட்டப் பட்டாள், தவித்தாள். உடல் நலனை மிகவும் பாதித்தது.

எங்களது நிறுவனத்தில், உடல் கவலைக்கிடமாக ஆகும்போது உற்றார் உறவினருக்குத் தகவல் சொல்வது வழக்கம். அதே போலச் சூரியகாந்தி நலன் பின் தங்க அவர்களுடன் தொடர்பு கொள்ள நாங்கள் முயல, அவர்கள் அங்கிருந்து வேறு எங்கோ சென்று விட்டார்கள் என்று தெரியவந்தது. புறக்கணிக்கப்பட்டாள்.  எங்களுடைய நிறுவனத்தின் எதிக்ஸ் குழு பக்குவமாக அவளிடம் எடுத்துச் சொன்னார்கள்.

எங்கோ இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படுவதில் அர்த்தம் இல்லை. மகனுக்கும் கணவருக்கும் எல்லாம் செய்ததால், பொறுப்பு இல்லாமல் இருந்தார்கள். தான் இங்குச் சேர்ந்து விட்டதால் இருவருக்கும் என்ன நேரும்? ஆழ்ந்த சிந்தனை செய்தாள். ஸெஷன்களில் பரிசீலனை செய்ய, புரிந்தது – அவர்களுக்குத் தானாக இயங்க இது வாய்ப்பாகும். வாழ்க்கையில் முதல்முறையாக தாங்களாகச் செய்வதால், இப்படி அப்படித்தான் இருக்கும். அதை வெற்றியாக ஆக்குவது அவர்கள் உழைப்பைப் பொருத்துதான். தான் கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்தாள்.

சூர்யகாந்தியை தன்னுடைய கண்ணோட்டம் மாறுவதைக் கவனிக்கச் சொன்னேன். எவ்வாறு ஸெஷன்களில் சிந்தனை செய்ததால் வாழ்வை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள். மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான தன்னுடைய குணங்களைப் பார்த்துச் சொல்லச் சொன்னேன்.

இவ்வாறு செய்யச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. எங்கள் டீம் மருத்துவர் அவள் உயிர் வாழ இன்னும் சில வாரங்களே என்று எச்சரிக்கை செய்தார். அதனால் அவளைத் தன்னை பற்றிக் குற்றச்சாட்டை மீறி, மற்ற குணாதிசயங்கள், ஆசைகளில் கவனம் செலுத்த வைத்தேன்.

தோட்டத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அங்கே சூரியகாந்தி தனக்கு எத்தனை வலி இருந்தாலும் பார்ப்பவர்களை விசாரித்து ஒரு வணக்கம் வைப்பது அவள் பழக்கம். இதை இயல்பாகச் செய்ய மற்றவர்களும் அப்படிச் செய்வதைப் பார்த்து சந்தோஷம் பெற்றாள். தோட்டக்கார தாத்தா, “பெயருக்குப் பொருத்தமாக செய்யர!” என்றார்.

இங்கே வந்ததிலிருந்து சமையற்காரரை அழைத்துப் பல நுணுக்கங்களைச் சொல்லித் தந்ததில் ஒரு பந்தம் வளர்ந்தது. இதை இப்போது மனம் மகிழ்ந்து சொன்னாள். தன்னிடம் உள்ள பாசத்தைக் காட்ட இப்படி வெவ்வேறு விதமான வழிகள்.

தன்னிடம் இருந்த பணத்தை எவ்வாறு பங்கு போடுவது என்று தன் எண்ணத்தை நிறுவனத்தின் அதிகாரி, எங்கள் டீம் வழக்கறிஞரிடம் விவரித்தாள். தனது பிஸினஸ், சொத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட நினைத்தாள். வழக்கறிஞர் அது பிரச்சினையில் முடியும் என விளக்கம் அளிக்க ஒரு உயிலைத் தயார் செய்தாள்..

சூரியகாந்தி நிலைமை மோசமாக ஆனது. சுயநினைவை இழந்தாள். நிர்வாகம் அவள் குடும்பத்தினரை மறுபடி தேடினார்கள். ரகு, ஆஷிஷ் வந்தார்கள். நாங்கள் அவள் நிலைமையைத் தெரிந்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள் என எடுத்துக் கொண்டோம்.

வந்ததும் பரபரப்பாக அவளுடைய அறை பற்றி விசாரிக்கத் தொடங்க அப்போது தான் அவர்களுக்குச் சூரியகாந்தி நிலை தெரியாது எனப் புரிந்தது. விவரத்தை விவரித்ததும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ரகு சலித்து “அடக் கடவுளே  தாமதாகி விட்டது” என்றதும் ஆஷிஷ் ரகுவை பார்த்து, “நாள் நட்சத்திரம் பார்த்த, இப்போ?” என்றான். எங்கள் திகைப்பைப் பார்த்து விவரத்தைச் சொன்னார்கள். அவசரமாக அவளைப் பார்க்க வந்ததே பிஸினஸை தங்களது பெயரில் மாற்றிய காகிதத்தில் கையெழுத்து வாங்குவதற்கும் வங்கியில் உள்ள அவள் சேமிப்பை மாற்றி வைக்கவும். வெறுப்புப் பொங்க, “இப்போது பார்த்து என்ன பிரயோஜனம்?” சொல்லி, சென்று விட்டார்கள். 

திடீரென மரணத்தின் மடியில் நிரந்தரமாகச் சூரியகாந்தி தூங்கி விட்டாள். வீட்டினருக்குத் தெரிவித்தோம். வேண்டா வெறுப்பாக வருவதாகச் சொன்னதால் சூரியகாந்தியைக் குளிர் சாதன பெட்டியில் வைத்தோம். இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. கைவிட்டதாக எடுத்துக் கொண்டு சூரியகாந்தி விரும்பியபடி நிர்வாகமே சடங்குகளைச் செய்து முடித்தனர்.

பல நாட்களுக்குப் பிறகு, சாருவுடன் ஆஷிஷ் வந்தான். சூரியகாந்தி பொருட்களில் அவள் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொள்ள என்றார்கள். சூரியகாந்தி தன் விருப்பத்தை எழுத்திருந்ததைக் காண்பித்தோம். தாமதிக்காமல் வந்திருந்தால் பணம் கிடைத்திருக்கும் என இருவரும் கடும் வாக்கு வாதம் போட்டுக் கொண்டு சென்றார்கள். மனிதர்களின் ஆசையை என்னவென்று  சொல்ல?

 

**********************************************************

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

மழைத் துளிகள்!

Photo by Pratik Gupta on Pexels.com

இரண்டு நாள் பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடாக ஆகியது. அண்ணா சாலை, சி.பி.ராமசாமி சாலை, நூறடி சாலை, ஜி.என்.செட்டி சாலை எல்லாம் அந்தப் பெயர்களுடைய சிறு நதிகளாக, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. சில இடங்களில் பிளாஸ்டிக் படகுகள் மனிதர்களையும், பொருட்களையும் (இதில் உணவுப் பொட்டலங்களும் அடக்கம்) ஏற்றிச் சென்றது.  இரண்டு நாட்களுக்கு சென்னை, வெனீஸ் நகரமானது! 

வழக்கம்போல் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஏரியின் நடுவில் பாதி மூழ்கிய நிலையில் நின்றுகொண்டிருந்தன. அடுக்கு மேல் அடுக்காகப் போடப்பட்ட பெரிய சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சிறிய தெருக்களில் மழைநீர் தேங்க, எங்கும் வெள்ளக்காடு. ஏரிகள், குளங்கள், கடல் என வெளியேறுவதற்கு வழியின்றி, மழைநீர் ஊருக்குள் இடம் தேடி, தெருக்களிலும், சாலைகளிலும் புகுந்தன!  2015 ஆம் ஆண்டு வெள்ளத்திலிருந்து நாம் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை, கற்றுக்கொள்ளவும் போவதில்லை!

மேகம் கருத்தவுடன் அம்மாவின் முதல் கவனம் வெளியில் காயும் துணிகளும், வடகம், வற்றல் போன்றவையும்தான் – வானத்தைப் பார்த்து முன்னெச்சரிக்கையாக, மழைக்காலத்தை எதிர்கொண்டவர்கள் – குடைகள், உடைகள், மெழுகுவர்த்திகள், விளக்குகள், மண்ணெண்ணை (இன்வெர்டர், ஜெனெரேட்டர் எல்லாம் அதிகம் புழங்காத காலம்) என தயார் நிலையில் வீடு இருக்கும். ஒரு வீட்டிற்கே இவ்வளவு முன்னேற்பாடு என்றால், ஒரு பெரிய நகரத்திற்கு எவ்வளவு கவனமும், முன்னெச்சரிக்கையும் தேவை? 

மின்சாரமின்றி, இரண்டு நாட்கள் வீட்டில் முடங்கிய போது அசை போட்ட சில நினைவுகள்…..

சிதம்பரம் வீட்டில் நான்கு தாழ்வாரங்கள் – நடுவில் முற்றம். மழை பெய்யும்போது, ஓட்டுக் கூரையில் வழிந்து, முற்றத்தின் நான்கு பக்கமும் வெள்ளிக் கம்பிகளாய் நீர் விழுவது – நீள் மணிகள் கோர்த்த திரைகளைப் போல – பார்க்கப் பரவசமாய் இருக்கும். அந்தக் கால சிமெண்ட் அல்லது ரெடாக்ஸைட் தரை, மழையில் ஈரித்துக் குளிர்ந்திருக்கும் – வழுக்காமல் இருக்கவும், தாழ்வாரத்தில் படுக்கவும் சணல் மணத்துடன், ‘சாக்கு’கள் (அரிசி வரும் சாக்குப் பைகள், பிரிக்கப் பட்டவை) விரிக்கப்படும். அவை தரும் கதகதப்பும், நிம்மதியான தூக்கமும் இன்றைய மெத்தைகளில் கிடைக்காது. பிரிக்கப்பட்ட இரண்டு, மூன்று சாக்குப் பைகளை இணைத்துத் தைத்து ஒரு பெரிய திரை (‘படுதா’ என்பார்கள்) – தாழ்வார ஓரங்களில் தொங்க விடப்படும் – சாரல் அடிக்காமல் இருக்கவும், ஓரளவிற்குக் குளிரைத் தடுக்கவும்!

சுடுநீர், வறுத்த வேர்க்கடலை, சூடான ரஸம் சாதம், பொறித்த வடகம், சில சமயங்களில் சூடான பஜ்ஜி, டீ – மழைக்கேற்ற, ருசியான, ஆரோக்கியமான உணவு!  

காகிதக் கப்பல் (கத்திக் கப்பலும் உண்டு – ஆனால் சீக்கிரமே தரைதட்டிக் கவிழ்ந்துவிடும்!) நீரோடு சென்று ஒரு கல்லில் முட்டி நிற்கும் அல்லது வேகமாக மிதந்து, கவிழ்ந்து மறைந்துவிடும்.

இன்று விதம் விதமாகக் குடைகள் – அந்நாளில் ’தாழங்குடை’ – பெரிய பனை மட்டையில் செயதது, இரண்டு பேர் தோள்கள் நனையாமல் மழையில் செல்லலாம்! – மடக்க முடியாது, அப்படியே திண்ணையில் வைத்துவிட்டால், நீர் வடிந்து, காய்ந்துவிடும்! வேகமான காற்றில், மேல்நோக்கி விரிந்து, கருப்பு ‘டிஷ்’ ஆண்டென்னா போலாகிவிடும் அபாயமில்லாதது! கவிழ்த்துப் போட்டு பரிசில் போல ஆற்றைக் கூடக் கடக்கலாம்!

‘ரெயின் கோட்டுகள்’ அரிது – மழையிலிருந்து காப்பாற்றி, வீட்டில் கழற்றும்போது அணிந்தவரை நனைத்துவிடும் அபாயமும் இல்லை!

மழைநீர் ஓடி, ஊருக்கு வெளியே ஓடைக்கரை வழியே பாலமான் ஆற்றில் கலந்து, வீராணம் ஏரிக்கோ, கடலுக்கோ சென்றுவிடும். அப்போதெல்லாம் அடுக்கு மாடிக்கட்டிடங்கள், ஏரிகளில் வீடுகள் போன்ற அபத்தங்கள் கிடையாது!

தி.நகரில் நாங்கள் இருந்த சைட் போர்ஷன் – மூன்று அறைகளிலும் மைசூர் ஓட்டுக் கூரை – வெளியில் பெய்யும் மழையில் பாதியளவு வீட்டினுள்ளும் ஒழுகும்! மாடிப்படிகளுக்குக் கீழே உள்ள நாலுக்கு இரண்டடி இடம்தான் காய்ந்திருக்கும்!  போர்ஷனுக்கு அருகில் இருந்த வயதான மாமரம், காற்றி ஆடும்போதெல்லாம், அம்மாவை பயம் தொற்றிக்கொள்ளும் – மேலே விழுந்து, குழந்தைகளுக்கு ஏதாவதாகி விடுமோ என்ற பயம். பயத்தில் தூங்காமல் கழித்த பல மழை இரவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. விறகடுப்பு, ஸ்டவ், குமுட்டி இவற்றில் சமைத்த சூடான சாப்பாடு! பிசைந்து, கையில் கொடுக்கும் அம்மாவின் பாசத்திற்காக எத்தனை மழை நாட்களையும் சகித்துக்கொள்ளலாம்!

உணவைச் சேமித்து மேடான இடத்திற்கு வரிசையாய்ச் செல்லும் எறும்பும், தோகை விரித்தாடும் மயிலும், வானம் பார்த்து ஒலியெழுப்பும் எருமையும், அடுப்பங்கரையில் பதுங்கும் பூனையும், தாழ்வாகப் பறக்கும் பறவைகளும் மழை வருவதை நமக்குத் தெரிவிப்பது இன்றைய் வானிலை முன்னறிவுப்புகளின் முன்னோடிகள்!

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு செண்ட் பாட்டில் கொடுத்தார். திறந்ததும், மழை பெய்யும்போது வரும் ‘மண்’ வாசனை அடித்தது!  மிகவும் வியக்கத்தக்க வகையில்,  மழை கிளப்பிவிடும் அதே மண் வாசனை! அறிவியல் முன்னேற்றம் மழை பெய்யச்செய்யும் பாக்டீரியாவை (சூடோமோனாஸ் சிரஞ்சி) உருவாக்கி, செயற்கை மழையையே பெய்யச்செய்யும் போது, மண் வாசனை ஒன்றும் சிரமமானதல்ல – ஆனாலும், மழையின்றி, அது ஏற்படுத்தும் மண் வாசனையை சின்னக் குப்பியில் கொடுக்கும் அறிவியல் வியப்புதான்!

மழை அளவைக் கணக்கிட ‘மழை மானி’ உண்டு. ஒரு மில்லிமீட்டர்  மழை என்பது, ஒரு சதுர மீட்டர் நிலத்தில் பெய்யும் ஒரு லிட்டர் மழை நீரைக் குறிக்கும் – ஓர் ஊரில் பெய்யும் மழை அளவைக் கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு சதுர மீட்டரில் தெரிந்திருக்க வேண்டும். சமீபத்திய சென்னை மழை கிட்டத்தட்ட 200 மில்லிமீட்டர் என்றால் 200 லிட்டர்/சதுர மீட்டர் – இதை சென்னையின் பரப்பளவால் பெருக்கினால் வரும், குறிப்பிட்ட நேரத்தில் பெய்த மழையின் அளவு!

இந்தியாவின் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி, மெளசின்ரம் இடங்களில்தான் அதிக அளவு மழை பெய்கின்றது (சராசரி 11,450 முதல் 11,900 மிமீ வரை). 

நம் சினிமாக்களில் பெரும்பாலும் மழை, சோகக் காட்சிகளிலும், வன்முறை காட்சிகளிலும், கதாநாயகி கற்பிழக்கும் காட்சிகளிலும் கொட்டித்தீர்க்கும்! சர்வர் சுந்தரம் படத்தில் ஸ்டூடியோவில் மழைக் காட்சி எடுப்பதைக் காட்டியிருப்பார்கள் – காற்றுக்குப் பெரிய ஃபேன், ஒருவர் காய்ந்த இலைகளையும், சிறகுகளையும் வீசியபடி இருப்பார், மேலே ஷவர் போல நீரைக் கொட்டுவார்கள் – மழையில் ஒரு பொம்மைக் குதிரையில் கதாநாயகன்! டிவி யில் காட்டப்படும் பழைய கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்களில் ஒரு மழை எல்லாக் காட்சிகளிலும் தெரியும் – அது ஓட்டித் தேய்ந்த பழைய ரீல்களில் விழுந்த கீறல்கள் – நிஜ மழையல்ல!

மழை என்றவுடன் வான் சிறப்பு எழுதிய வள்ளுவன், சங்கப் பாடலகளில் மழை எனப் பல நினைவுகள். கவிஞர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது மழை. 

“உன்னோடு பேசுகிறேன்……

 விட்டு விட்டுப்

 பெய்யும் மழைபோல்

 உன் நினைவை

 தொட்டு தொட்டுப் பார்க்கிறது மனது. – பார்கவி (நன்றி: Eluthu.com)

1979 அல்லது 80 – இரவு பதினோரு மணிக்கு, மழையில் மைலாப்பூர் நண்பர் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள் முழுவதும் நனைந்துவிட்டேன் – இடுப்பு வரை தண்ணீர் – தட்டுத் தடுமாறி நடந்து (நீந்தி!) வந்து, பஸ் ஏறி தி.நகர் வந்து சேர்ந்தேன். மறு நாள் செய்தி: நான் நடந்து வந்த அதே நீர்த் தேக்கத்தில் ஒரு லைவ் மின்சார ஒயர் அறுந்து விழுந்து, ஒருவர் பலி! தப்பித்தேன்.

நாம் மழையைக் கொண்டாடுவோம் – அதற்குரிய மரியாதையைக் கொடுப்பதுடன், நாமும் பாதுகாப்பாக இருப்போம் – கொண்டாட உயிர் வேண்டுமல்லவா?