Monthly Archives: July 2018
தலையங்கம்
தமிழ் நாட்டுக்கு இன்றைக்கு என்ன தேவை?
ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் ஊழல் இல்லாத அரசு !
தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி என்று சொல்வார்களே , அதுபோல எந்தத் துறையைத் தொட்டாலும் அதில் ஊழல் !
புரையோடிய புண்ணாகிவிட்டது ஊழல் !
மேல்மட்டம் முதல் அடித்தளம்வரை விரிந்து பரந்து கிடக்கிறது இந்த ஊழல் சாம்ராஜ்யம்!
பிரசவ ஆஸ்பத்திரி முதல் மயானம்வரை ஒவ்வொரு படியிலும் ஊழல் நெடி!
அரசியல், ஆன்மீகம், இசை, ஈடு, உதவி, ஊடகம், எழுத்து, ஏடு, ஐஸ்வரியம், ஒழுக்கம், ஓட்டு, ஔடதம் ,என்ற அனைத்து உயிர்த் துறைகளும் ஊழலில் ஊறிய மட்டைகளாக இருக்கின்றன.
மெய்யெழுத்து பொய்யெழுத்துக்களாகிவிட்டன.
உயிர்மெய் உயிர்வதையாகிவிட்டன.
ஆயுதம் காப்பதற்குப்பதிலாக அழித்து வருகிறது.
பயிருக்கு நடுவே களையிருந்தால் பிடுங்கலாம்; களையையே பயிராக வளர்த்தால் நாடு தாங்குமா?
இளைய சமுதாயமே! நீ பொங்கிவா! புயலாய் மாறிவா!
நீ நினைத்தால்தான் இந்த ஊழல் என்னும் நச்சுக் கொடியை வேரோடு வெட்டிச் சாய்க்கமுடியும்.
தம்பி வா! தலைமை ஏற்க வா!
ஊழல் செய்வது அண்ணனாக இருந்தாலும் அன்னையாக இருந்தாலும் அப்பனாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் அனைவரையும் எதிர்த்துப் போராடு!
அவர்களைத் திருத்திவிடு ! இல்லையேல் ……………………………
நீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்
தண்ணீரைப்பற்றி நினைத்துக்கொண்டேன். உயிர்களின் சிருஷ்டிக்கே தண்ணீர் ஒரு ஆதாரமாக இருக்கிறது.
தண்ணீர் இல்லாமல் நம் உயிர் நிலைக்காது. பூமியின் ஜீவராசிகளின் உயிர் வாழ்வுக்காக, ஜீவ நதிகளும், நிரந்தரமான பரந்த பனி ஏரிகளும், காலக் கணக்கற்றுக் கொட்டும் நீர் வீழ்ச்சிகளும், பருவம் பார்த்துப்பார்த்துப் பெய்யும் வான் மழையும், நிலத்தை ஆதரவாக அணைத்துக்கொண்டு உணவும் உறவும் கொடுக்கும் மகா சமுத்திரங்களும் பூமி வாழ்க்கையை ஆனந்தமாக்குகின்றன. குளிர்விக்கின்றன.
இயற்கையின் உன்னதக் கொடையாய் பூமியெங்கும் பரந்து தளும்பும் இந்தத் தண்ணீரை, மனித ஆன்மாவைக் கரைசேர்க்கும் புனிதமான தெய்வப்பதமாக, அன்னையாக, வேதங்களும் இதிகாசங்களும் போற்றிப் புகழ்ந்தேத்துகிறது; கொண்டாடுகிறது. உயிர் நிலைப்பதற்கு அடிப்படையான எல்லா இயற்கைக் கொடைகளும் தெய்வத்தின் பிரத்யட்ச பிரதிமைகளாகப் பூஜிக்கப்படுகின்றன .
நாளடைவில் பூமி, தேசங்களாகவும், தேசங்கள் மாநிலங்களாகவும், பின் மொழிவாரிப் பிரதேசங்களாகவும், அரசியல் வட்டங்களாகவும், மேலும் மேலும் எல்லைகளைக் குறுக்கி வகுத்துக்கொண்டு, தனித்தனி வேலிகளைப் போட்டுக்கொண்டு, நிலத்தை பங்குபோடத் தொடங்கிவிட்ட பிறகு சகஜமாக வித்யாசமற்று ஓடிக் கொண்டிருந்த நீரோட்டங்கள் அரசியல் நிறம் கலந்து உரிமைப் பிரச்னைகளுக்கு ஆட்பட்டு அவரவர்கள் அணைகளைக் கட்டி நீரை முடக்கி சொந்தம் கொண்டாடிக்கொண்டு போராடும் பரிதாப நிலைக்கு இன்று வந்துவிட்டது
நதிகளின் விதியும் கதியும் இப்போது கேள்விக்குறியாகி விட்டன.
காற்றைப்போல் நீரும் பிரச்னைக்கு அப்பாற்பட்டுப் பொதுவாகி விடக்கூடும்.. .மனிதன் அதன் வறட்சிக்குக் காரணமாக இல்லாமல் இருந்தால்……
நதிகளை இணைத்தால் பிரச்னை வெகுவாகக் குறையலாம். மனித மனங்கள் தங்கள் குறுகிய அபிமானங்களைத்தாண்டி கூடிச் செயல்படுத்த வேண்டிய விஷயம் இது?
பாரதியாரின் பல கனவுகளைப்போல் இதுவும் இன்னொரு கனவாகவே இருந்து விடக்கூடுமோ?
**************
சமீபத்தில் மொகலாய மன்னர்களின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு மன்னர்களும் தம் நாட்டு நீர் வளத்தை எப்படிப் பராமரித்து பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற தகவல் சுவையாக இருக்கின்றன.
அக்பர் சக்கரவர்த்திக்குக் கங்கா நதி நீர்தான் மிகவும் விசேஷமானதாக இருந்திருக்கிறது. அவர் தலைநகரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் அவருக்கும் அவரை சூழ்ந்திருக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையானது கங்கைத் தண்ணீர். அது கிடைக்கும்படியான சேகரிப்புகளை நிர்வகிக்கப் பொறுப்பான அதிகாரிகளும் அதற்கென்று வாரியமும் ஏற்படுத்தப்பட்டிருந்தன .
அந்த தண்ணீர்க் கிடங்குக்குப் பெயர்” “அப்தர் கன்னா” கங்கா நதிநீரை களங்கப் படுத்தாமல் இருப்பதற்காக அங்கே பாதுகாவலர்களை நியமித்திருந்தார். தினந்தோறும் அவர்கள் பெரிய பெரிய ஸீல் வைத்த மூடிகள் போட்ட தொட்டிகளில் நீரை நிரப்பி அரண்மனைக்கு வண்டிகளில் அனுப்பி வைப்பார்களாம்.
அக்பருடைய தர்பார் ஆக்ராவுக்கும் பதேபூர் சிக்ரிக்கும் அவ்வப்போது இடம் மாறும் சமயங்களில் அவருடைய சைன்யத்தைத் தொடர்ந்து பெரிய மாட்டு வண்டிகளில் கங்கை நீர்த் தொட்டிகளும் பின்தொடரும்.. அக்பர் லாஹூரில் இருந்தபோது அவருக்கு ஹரித்வாரிலிருந்து கங்கை நீர் கொண்டுவரப்பட்டது அக்பர் கங்கைநீரை விரும்பியது அதன் புனிதத் தன்மைபற்றிய மதநம்பிக்கைகளால் அல்ல. கங்கை நீர் தூய்மையானது என்ற அபிப்ராயம்தானாம்.
கங்கைநதியின் வெவ்வேறு கரைகளில் இருந்து நீரைமொண்டு அதன் சுவையின் தரத்தை அறிந்துகொள்ள அவர் தொழில்முறை சுவைஞரை [Water tasters} நியமித்திருந்தாராம்.
ஆனால் அவருடைய மகன் ஜஹாங்கீருக்குக் கங்கை ஜலம் அவ்வளவு முக்கியமல்ல. அவருக்கு இயற்கையாக ஓடிவரும் எந்த நதி நீரும் உபயோகத்திற்கு உகந்தது. அவர் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள நீர் நிலைகளில் நீரெடுத்து அதன் எடை வேறுபாட்டை அறிந்து அவற்றுள் எடை குறைந்த நீர் எதுவென்று கண்டுபிடித்து உபயோகிக்க விரும்பினாராம். ஒரு வேளை தூய்மையான நீர் எடை குறைவாக இருக்கும் என்ற ஊகம் போலும்!
ஷாஜஹான் மன்னருக்கு எப்போதும் யமுனை நீர்தான் விருப்பமானது. யமுனை ஜலம் பளிங்குபோல் தெளிவானது. பரிசுத்தமானது. ஆக்ராவிலும் செங்கோட்டையிலும் சுவையான நீரூற்றுக்கள்கொண்ட கிணறுகள் பல இருந்தபோதிலும் ஷாஜஹான் யமுனையைத்தான் விரும்பினார்.
ஔரங்கசீப் தன் தந்தை ஷாஜஹானை ஆக்ராக் கோட்டையில் சிறை வைத்திருந்த வருஷம் 1658ல் அவன் அந்தக் கோட்டைக்குள் யமுனைத் தண்ணீர் பாய்வதற்குக் கட்டிய நீர்க் குழாய்களை அடைத்துவிட்டானாம்.
ஒரு பெரிய முகலாய மன்னர் ஷாஜஹான் தன் அந்திம காலத்தில் தாகம் தீர்த்துக்கொள்வதற்குத் தனக்கு விருப்பமான யமுனைத் தண்ணீர் கிடைக்காமல் ஏங்கித் தவிக்க வேண்டிவந்திருக்கிறது. .
தன் மகனே தனக்குத் தண்ணீர் கிடைக்காமல் செய்த வேதனையில் வெம்பி அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினார் ஷாஜஹான்
“ என் புதல்வனே! மாவீரனே!
என்னுடைய துர்ப்பாக்கிய நிலைமையைப் பற்றி
நான் எவரிடம் ஏன் புகார் செய்யப் போகிறேன்?
இதோ இந்த மரத்தின் ஒரு சின்னத் துளிர் கூட
ஆண்டவனின் சித்தமன்றி விழக் கூடுமா?
நேற்றுத் தான் என் அதிகாரத்தின் கீழ் ஒன்பது
லட்சம்வீர்ர்கள் கட்டளைக்கு கைகட்டி நின்றார்கள்.
இன்று ஒரு வாய்த் தண்ணீருக்காக…. மகனே…. உன்னிடம்
கையேந்தி நிற்கிறேன்
ஹிந்து மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இறந்தவர்களுக்கும் ஒரு வாய்த் தண்ணீர் அளிக்கிறார்கள்.
என் தவப் புதல்வனே…….முகலாய வம்சத்தின் தலைவனே!
இப்போது தண்ணீருக்கு ஏங்கிப் புலம்பும் தந்தையின்
வேதனைக்கு நீ காரணமாகி விட்டாயே!.
“
இந்த செய்தியைப் படித்த ஔரங்கசீப் ஒன்றும் கலங்கிக் கண்ணீர் விட்டுவிடவில்லை. முகலாய அரசுகளில் உறவினர்களை சிறை வைப்பதும் கொலை செய்வதும்தான் அரசாங்க நடைமுறையாக இருந்திருக்கிறது. குடும்பப் பாசம் அரசியலில் இல்லை !
“” தந்தையே ! இதற்குக் காரணம் நானல்ல.
இந்த நிலைமையை வருத்திக் கொண்டது நீர் தான்…….”””.”
அருமையான புரந்தரதாசர் பாடல்
நன்றி : யூ டியூப்
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
விஷ்வகர்மா தன் திறமையெல்லாம் காட்டவேண்டிய தருணம் வந்தது. தான் செய்யப்போகும் காரியத்திற்கு மனைவி மகள் சூரியதேவன் மற்றும் உறவினர்கள் மந்திரிமார்கள் மற்ற எவருடைய ஒப்புதலும் கிட்டாது என்பதை நன்றாக அறிந்திருந்தார். வெளியே தெரிந்தால் இது பஞ்சமாபாதகம் என்று அவரை மூன்று உலகமும் தூற்றும். உலகத்தைப்பற்றிக் கவலைப்படாதவர் விஷ்வகர்மா. தன்னால் எதையும் செய்யமுடியும் என்ற அகம்பாவமும் கர்வமும் அவருக்கு எப்போதும் உண்டு. தேவலோகங்களையே நிர்மாணிக்கும் தேவ சிற்பி என்பதால் அவருக்குக் கிடைத்த மதிப்பிற்கும் செல்வாக்குக்கும் அளவே இல்லை. தன் எண்ணப் பிரதிபலிப்புகள்தான் நடைமுறைகளாக வரவேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருப்பவர்.
பிறவியிலிருந்தே ஸந்த்யா அவருக்கு ஒரு சவாலாக இருந்துவந்தாள். அவள் பிறவியில் ஏற்பட்ட குறையைப்போக்கத் தன்னைப் படைத்த பிரும்ம தேவருக்கும் தெரியாதபடி சில காரியங்கள் செய்தவரல்லவா அவர். இன்று, தான் நினைத்தபடி மகாபிரும்மருத்ரன் ஸந்த்யாவிற்குப் பிறக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டார்.
அதன் முதல் படி ஸந்த்யா கருவுற்றிருக்கிறாளா என்று சோதனை செய்யவேண்டியது. அவள் கருவுற்றிருந்தால் அதைக் கலைக்க ஏற்பாடு செய்யவேண்டியது. இவைதான் தனது முதல் கடமை என்று தீர்மானம் செய்தார். அதற்கேற்றாற்போல் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
” சூரியதேவரே ! அருமை மகளே! காந்த சிகித்சை மிகவும் அற்புதமாக முடிவடைந்துவிட்டது. இனி உங்கள் இனிமையான இல்லற வாழ்விற்கு எந்தவிதத் தடையும் இருக்கமுடியாது. சூரியதேவரின் கிரணங்கள் ஸந்த்யாவை இனி பாதிக்காது. ஆனந்தமாக நீங்கள் இருவரும் வாழ்வைத் துவங்கலாம். இன்றே உங்கள் திருமண நாளை நிச்சயம் செய்துவிடுகிறேன். வருகிற மகரசங்கராந்தியில் உங்கள் திருமணத்தை கோலாகலத்துடன் நடத்திவைக்கிறேன். ஹிம பர்வதத்தில் பரமேஸ்வரன் பார்வதி திருமணம் நடந்ததைவிட மிகவும் சிறப்புடன் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். தேவ உலகமே இதுவரை கண்டிராத அளவிற்கு உங்கள் திருமண விழா சிறப்பாக அமையும். அது சூரியதேவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும். ஆனால் அதுவரை நீங்கள் சற்றுப் பொறுத்திருக்கவேண்டும்.” என்று மேலும் பேசப்போன விஷ்வகர்மாவை சூரியதேவனின் கணீரென்ற குரல் தடுத்தது.
“விஷ்வகர்மா அவர்களே! எங்களை நீங்கள் மன்னிக்கவேண்டும். நானும் ஸந்த்யாவும் பார்த்த ஒரு கணத்திலேயே ஆதர்ச தம்பதிகளாகிவிட்டோம். அவளின்றி நானும் நானின்றி அவளும் இனி ஒரு கணம்கூடப் பிரிந்திருக்க முடியாது. என் இதயத்தில் அவள் சங்கமமாகிவிட்டாள். அதேபோல் அவள் மனம், எண்ணம், உடல் அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன். இனி நாங்கள் பிரிந்திருப்பது என்பது இயலாத காரியம். இன்றே நாங்கள் பெரியவர்கள் உங்கள் முன்னிலையில் சதி-பதிகளாகி விடுகிறோம். தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம் ” என்று விஷ்வகர்மாவை வணங்கினான் . ஸந்த்யாவும் அதற்கு உடன்பட்டவள்போல் சூரியதேவனுடன்சேர்ந்து தந்தையை வணங்கினாள்.
வேறு எவரேனும் விஷ்வகர்மாவின் இடத்தில் இருந்தால் இப்படித் தன் திட்டம் முறியடிக்கப்படுகிறதே என்று பதறிப்போயிருப்பார்கள். ஆனால் விஷ்வகர்மா செயல்களில் காட்டும் சாதுர்யத்தைத் தன் பேச்சிலும் காட்டினார். தன் மனத்தில் ஏற்பட்ட சலனத்தை முகத்தில் சிறிதளவுகூடக் காட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு கூறினார்.
“உங்கள் இருவருக்கும் இடையே உருவாகியிருக்கும் புதிய பந்தத்தை நான் நன்கு அறிவேன். உங்கள் திருமணம் திட்டமிட்டப்படி மகரசங்கராந்தியில் நடைபெறும். அதுவரையில் நீங்கள் பொறுத்திருக்கவேண்டும் என்றுதான் கூறினேனே தவிர பிரிந்திருக்கவேண்டும் என்று சொல்லவில்லை”.
” புரியவில்லை தந்தையே ” என்று வார்த்தையால் ஸந்த்யாவும் பார்வையால் சூரியதேவனும் வினவினர்.
” முதலில் செயலைச் சொல்கிறேன் . பிறகு அதைப் புரியும்படி சொல்கிறேன். செயல் என்னவென்றால் சூரியதேவன்தான் பர்வதத்திற்குச் செல்லவேண்டும். அவர்கூட ஸந்த்யாவின் ஸ்வரூபம் வரும். அதுபோல ஸந்த்யா இங்கிருப்பாள். அவள்கூட சூரியப் பிரபை இருக்கும். அதாவது ஸந்த்யாவின் ஸ்வரூபம் என்ற முப்புரப்பரிமாணப் பிரதியை சூரியதேவனுடன் அனுப்பிவைக்கிறேன். அதற்கான மந்திரம் என்னிடம் இருக்கிறது. அதை ஸந்த்யா உச்சரித்தால் அவள் ஸ்வரூபம் உங்களுடன் வரும். ஸந்த்யாவிற்கும் அதற்கும் கொஞ்சங்கூட வித்தியாசம் இருக்காது. அந்த ஸ்வரூபம் பேசும், பாடும், ஆடும். அதைத் தொடலாம். உணரலாம். ஸந்த்யா இல்லையே என்ற எண்ணமே சூரியதேவனுக்குத் தோன்றாது. தாம்பத்திய உறவைத்தவிர நீங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.
ஸந்த்யாவிற்கு என்னால் சூரியதேவனின் ஸ்வரூபம் தர இயலாது. ஆனால் அவளை ஒரு பளிங்கு அறையில் இருத்தி சூரியப் பிரபை விளக்கை ஏற்றிவைத்து சூரியதேவன் தன்னுடனே இருப்பதுபோன்ற பிரமையை என்னால் ஏற்படுத்தித் தரமுடியும். இதற்கு நீங்கள் இருவரும் ஒத்துழைக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் திருமணத்தை பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் ஒன்று சேரும் காலத்தில்தான் செய்வதாக அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்.” என்று மேலும் ஒரு அஸ்திரத்தைப் போட்டார் விஷ்வகர்மா.
வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்ட சூரியதேவனும் ஸந்த்யாவும் விஷ்வகர்மாவின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
சரி என்று புறப்படத் தயாரான சூரியதேவனை நிறுத்தினார் விஷ்வகர்மா.
” நீங்கள் புறப்படுமுன் உங்கள் இருவருக்கும் ஒரு சாந்துக் குளியல் செய்யவேண்டும் . காந்தச் சிகித்சை செய்துகொண்டவரும் செய்வித்தவளும், அதைத் தொடர்ந்து சாந்துகுளியல் செய்து கொள்ளவேண்டும். அப்போதுதான் காந்தப் பொடிகளின் கதிர்வீச்சு மற்றவரைத் தாக்காமல் இருப்பதோடு உங்கள் உடலிலிருந்தும் அறவே போய்விடும். அதற்கு நம் பளிங்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இருவரும் அதோ மூலையில் தெரியும் இரு கூண்டுகளுக்குச் செல்லுங்கள். அவை தானாகவே உங்களைக் குளியல் அறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். ” என்றார் விஷ்வகர்மா.
அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட சூரியதேவன் மௌனமாக இடது கோடியில் இருக்கும் கூண்டிற்குள் சென்றான். உள்ளே சென்றதும் கூண்டு மூடிக்கொண்டது. மெதுவாக சுழன்று விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
ஸந்த்யா வலது கோடியில் இருக்கும் கூண்டில் நுழைந்தாள். அவள் கூண்டு உடனே பறக்கவில்லை. விஷ்வகர்மாவின் ஆணைப்படி ஒரு மரகத பசுமை ஒளி வட்டம் அந்தக் கூண்டின் மேல் பகுதியிலிருந்து கீழ்ப் பகுதி வரை சுற்றிச்சுற்றி வந்தது. ஸந்த்யாவின் உடலினுள் இருக்கும் ஒவ்வொரு மூலக் கூறுகளையும் படம் பிடித்துக்கொண்டே வந்தது.
அவள் கருவில் மூன்று உயிர்கள் தோன்றியிருப்பதை அந்த ஒளிவட்டம் படம் பிடித்துக் காட்டியது. அதைப்பார்த்த விஷ்வகர்மாவின் கண்கள் தீப்பிழம்பைக் கக்கின.
சாந்துக் குளியலின்போது ஸந்த்யாவின் கருவில் இருக்கும் மூன்று உயிர்ப்புள்ளிகளையும் அழிப்பதற்கு மருந்து தயார் செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டார் விஷ்வகர்மா. ஸந்த்யாவின் கூண்டையும் பறக்கும்படி ஆணையிட்டுவிட்டு மருந்தைத் தயாரிக்கச் சென்றார் விஷ்வகர்மா.
அந்த மரகத ஒளிவட்டம் ஸந்த்யாவின் கால் நிழலில் பதுங்கியிருக்கும் ராகுவையும் காட்டிக் கொடுக்கத் தவறவில்லை. ஆனால் அவள் கருவில் இருக்கும் மூன்று உயிர்களைக் கண்டதும் காலடியில் தெரியும் ராகுவை விஷ்வகர்மா பார்க்கத் தவறிவிட்டார். அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் விஷ்வகர்மாவையே பின்னால் நிலை குலையச்செய்தன .
(தொடரும்)
இரண்டாம் பகுதி
ஆரக்கிளிலிருந்து வந்தவர் மிகவும் சாமர்த்தியசாலி. தான் சமாளிக்கவேண்டியது மும்மூர்த்திகள், முப்பெரும்தேவியர்கள், மற்றும் விநாயகர், முருகன் ,எமன், சித்திரகுப்தன் என்பதை நன்கு அறிந்தவர். இந்த பிராஜக்டுக்காகவே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். டேட்டாபேசில் ஆராய்ச்சி செய்து டாக்டரேட் வாங்கி, பல கம்பெனிகள் இவரைத் தங்கள் நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளத் துடித்தபோது அனைத்தையும் உதறிவிட்டு ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் சேர்ந்து சுவாமி தத்தாம்ஸானந்தா என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர். தத்தாம்ஸ் என்றால் சமஸ்கிருதத்தில் டேட்டா என்று அர்த்தம்.
பாகவதம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து அதில் பரந்து விரிந்துள்ள தகவல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, மிகப் பெரிய தீஸிஸ் எழுதியவர் தத்தாம்ஸானந்தா. ராமர், கிருஷ்ணர் பிறந்தபோது இருந்த கிரக நிலைகள், மகாபாரதப் போர்களின்போது கூறப்பட்ட அமாவாசை போன்ற திதிகள் இவற்றையெல்லாம் இணைத்து இதிகாச காலங்களை மிகத் துல்லியமாக வரிசைப்படுத்தியவர். அத்துடன் ஆர்யபட்டரின் தத்துவங்கள், இன்றைய கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாவதற்குக் காரணமாக இருந்தவர். வானவியல் , கணிதவியல் இரண்டிலும் தேர்ச்சிபெற்ற பல அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாகக் கிடிதபதம் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் கல்ப மன்வந்த்ரா யுகா போன்ற பெரிய அளவில் காலத்தைக் குறிக்கும் பதங்கள் தற்கால அண்ட இயலை ஒத்திருக்கிறது என்று வாதிட்டார். மேலும் கணிதபதம், காலக்ரியபதம், கோலபதம் போன்ற தத்துவக் கோட்பாடுகளையெல்லாம் விளக்கி உலகப் புகழ்பெற்றவர்.
அப்படிபட்ட ஒருவர்தான் இந்த எமபுரிப்பட்டணம் பிரஜாக்டை எடுத்துச் செல்லமுடியும் என்பதை அறிந்த நாரதர் தத்தாம்ஸானந்தாவை நேரில் சந்தித்து அவருடைய உதவி மிகவும் தேவை என்றும், இதை வெற்றிகரமாக முடித்தால், தேவ உலகமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.
சுவாமி தத்தாம்ஸானந்தா ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. பகவான் தனக்குத் தந்த ஆணையாக ஏற்றுக்கொண்டார். நாரதர் கூறியபடி ஆரக்கிளில் சேர்ந்தார்.
தான் வணங்கும் தெய்வங்கள் அனைவரையும் சந்திக்க இது மாபெரும் வாய்ப்பாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அவர்கள் முன்னிலையில் எப்படிப் பேசுவது என்று முதலில் ஒரு கணம் தயங்கினார். அவரது இந்தத் தவிப்பைப் போக்கவேண்டியது முதல் கடமை என்று உணர்ந்த நாரதர் ஒரு மாய வலையை சுவாமி தத்தாம்ஸானந்தா மீது போர்த்தினார். `அது அவருக்குப் புதிய உணர்வைக் கொடுத்தது. அமர்ந்திருப்பவர்கள் தெய்வங்கள் என்ற எண்ணம் மாறி அவர்கள் கிளையண்ட் என்ற உணர்வைத் தோற்றுவித்தது.
அதன்பின் சுவாமி தத்தாம்ஸானந்தா பிராஜக்ட் டைரக்டராக மாறினார்.
ஆரக்கிள் டேட்டாபேசில் இருக்கும் பாதுகாப்பு வளையங்களைப்பற்றி அழகாக எடுத்துரைத்தார். தகவல்கள் எப்படி குறியீடாகப் பாதுகாக்கப்படும் என்றும், தேவையான அளவு தகவல், தேவையானவர்களுக்குப் பகுத்துத் தரப்படும் என்ற என்கிரிப்ஷன் , ரிடாக்சன் விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தார்.
ஏற்கனவே என்கிரிப்ஷன்பற்றி அறிந்திருந்த எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் அவர் கூறிய கருத்துப் புரிந்தது மட்டுமன்றிப் பிடித்தும் இருந்தது.
எமபுரித் தகவல்கள் டேட்டாபேசில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை எமனுக்கும் வந்தது.
“யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் “என்று சுவாமி தத்தாம்ஸானந்தா கூறினார்.
பன்னிரண்டு கரங்கள் மேலே எழும்பின. முருகன் எழுந்து நின்றார். “ஆரக்கிள் என்றால் என்ன என்பதைப்பற்றி நீங்கள் கூறவேயில்லை. அது என்ன என்பதை இந்த சபையோர் தெரிந்துகொள்ளும்படி விளக்கலாமே?” என்று வினவினார்.
பிரவணத்துக்குப் பொருள்கேட்டுப் பதில் தெரியாத பிரும்மரையே சிறையில் அடைத்த முருகன் ஆயிற்றே! சுவாமி தத்தாம்ஸானந்தா தயங்கினார்.
“ஆரக்கிள் என்பது ஒரு நிறுவனம். அதுதான் இந்த டேட்டாபேஸை எல்லாம் …..”
” நான் அதைக்கேட்கவில்லை. ஆரக்கிள் என்ற சொல் எதைக் குறிக்கிறது?” முருகன் ஆணித்தரமாகக் கேட்டார்.
ஆரக்கிள் என்பது கிரேக்க பெண் பூசாரிகளைக் குறிக்கும் சொல். அந்தப் பூசாரிணிகள் தங்களை வேண்டி வழிபடும் மக்களுக்கு பின்னால் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைச் சொல்லும் திறமை படைத்தவர்கள். அதைப்பற்றிய ஒரு சுவையான கதை உண்டு.
ஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்
காற்றுச் சீரமைப்பியின் வெளிப்புறக் கூறுகள்
ஆங்காங்கே
கதறிக் கொண்டிருக்க
சமிக்ஞை உள்வாங்கும்
உணரித் தட்டுகள் – இவள்
சங்கதிகளையும் சேர்த்து உள்வாங்க
கவ்விகள் இருக்கும் துணிச்சலில்
கவலை மறந்து
கொடித் துணிகள் கொட்டமடிக்க
நிலவும் நட்சத்திரங்களும்
மேகங்களுள் முங்கியிருக்க
உலவும் உணர்வுகளோ
தேகத்திலேயே தேங்கியிருக்க
வீசும் காற்று இவளை
வேரோடு இடம் பெயர்க்க முயல –
வழக்கமான மொட்டை மாடி ஒன்று
இவளது
மௌனங்களை மெதுவாய்
மொழி பெயர்த்துக் கொண்டிருந்தது..!
யானை எத்தனை யானையப்பா
ஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை
சரித்திரம் பேசுகிறது – யாரோ
ரகுவம்சம் அனுமார் வால்போல் தொடர்ந்து வருகிறதே என்ற கவலைவேண்டாம். அடுத்த மாதம் சரித்திரம் உண்மையில் நகரும் !
சரித்திரம் எப்படியிருந்தாலும் காளிதாசனின் எழுத்திற்கு ஈடு இணை கிடையவேகிடையாது.
ராமன் மகன்கள்: லவன், குசன்!
குசன் நாகராஜனின் சகோதரியான குமுதவதியை மணந்துகொண்டான். குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.
ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்குச் சென்றபோது, அவர் தனக்குத் துணையாக குசனையும் அழைத்துச் சென்றார். அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா மரணம் அடைந்தான். ஆனால் அதுபோலவே அந்தக் கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தான். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மனவருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டான்.
ரகு வம்சத்தில்.. பலப்பல அரசர்கள் பிறந்து… மடிந்து… காலச் சக்கரம் ஓடியது…
பல மன்னர்களுக்குப் பிறகு அந்த சந்ததியில்…
துருவசாந்தி மன்னனானதும் தனது மூதாதையர்கள்போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தான். அப்போது ஒருநாள் அவன் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில், அவன் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு மரணம் எய்தினான். அந்நேரம் அவனுக்கு சுதர்சனன் எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு அவர் முடிசூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.
இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்கத்தொடங்கியது.
சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து அறிவில் சிறந்து விளங்கிற்று. நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். அவனது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த அவனைப் பல பெண்கள் மோகிக்கலாயினர்.
ரகுவம்ச ஆட்சி தொடர்வு முறிந்தது:
பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப்போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னிவருணனை ஆட்சியில் அமர்த்திவிட்டு, நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்துகொண்டான். அக்னிவருணன் ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவனுக்கு எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக்கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக்கிடந்தது. மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னிவருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைகொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக்கிடந்தான். காமம் தலைக்கேறப் பெண்கள் விஷயத்தில் துர்நடத்தை கொண்டவனாக மாறிக்கொண்டே வந்தான். அவனுக்கு எந்த அமைச்சரும் முன்வந்து அறிவுரை கூறமுடியாமல் பயந்தார்கள். அவர்கள் எத்தனை எடுத்துக்கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறிச் சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக்கொண்டது. சில நாட்களிலேயே அவனால் நடக்கக்கூட முடியாமல் போயிற்று.
அக்னிவருணனுக்குக் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. வியாதி பிடித்துக்கிடந்த அக்னிவருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காகத் தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரைத் தொந்தரவு செய்ய இயலாது என்று பொய்கூறி, அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில்கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக்கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.
அரசன் மரணம் அடைந்தபின், அதை வெளியில் தெரியாமல் மறைத்துவைத்து, அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்தபின், கைதேர்ந்த பண்டிதரை அழைத்து,அவரைக் கொண்டு யாகாக்கினி எனும் யாகம் செய்வதைப்போலப் போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்துவைத்து அவர் உடலை எரித்தார்கள்.
வாசகர்களே! அந்தக் காலத்திலேயே.. ஆட்சியாளர்கள் ‘தலைவரது’ மரணத்தை மர்மமாக மக்களுக்குத் தெரியாமல் மறைத்து வந்தனர்!
அனைத்துக் காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவியை நாட்டை ஆளுமாறு கோரினார்கள். ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.
அவளுடன் ரகுவம்சம் முடிந்தது!!
நன்றி:
நன்றி: http://www.sangatham.com/classics/raghu-vamsam-selected-slokas.html
காளிதாசரின் ரகுவம்ச காவியம் முடிந்தது.
அவர் எழுதிய மேகதூதம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் இவைகளைப்பற்றியெல்லாம் எழுத வேண்டாமா?
‘ஓட வேண்டாம் வாசகரே… சும்மானாச்சிக்கும் சொன்னேன். இருக்கும் ஒரு வாசகரையும் இழந்துவிட்டுப் பிறகு யாருக்குத்தான் எழுதுவது?’
… சரித்திரம் நகர்கிறது..
அடுத்த கதை என்னவாயிருக்கும்….
ஒரு ரூம் போட்டு யோசிக்கவேண்டிய சமாசாரம்…
சந்திப்போம் விரைவில்…
(தொடரும்)
உனக்காச்சு எனக்காச்சு..! கோவை சங்கர்
வாடிநீ மீனாட்சி உனக்காச்சு எனக்காச்சு
உன்னுடன் சண்டைபோட துணிச்சலும் வந்தாச்சு!
படிப்படியாய் சோதிக்கத் துன்பத்தைக் கொடுத்தாலும் – உன்
அடிபணிந்து நிற்பதையே விடமாட்டேன் விடமாட்டேன்
ஐம்புலனை நெறிகெட்டு சென்றிடவே வைத்தாலும் – தேவீ
உம்புகழ் பாடுவதை விடமாட்டேன் விடமாட்டேன்!
ஆதாயம் அதர்மத்தில் தானென்று சொன்னாலும் – தேவீ
அதர்மத்தின் பிடியில்நான் வரமாட்டேன் வரமாட்டேன்
பிறர்துன்பம் பெற்றால்தான் எனக்கின்பம் என்றாலே – சக்தீ
அவ்வின்பம் நாடிநான் வரமாட்டேன் வரமாட்டேன்!
கலிகாலம் பணப்பேய்க்கு நிகழ்காலம் ஆனாலது
எனையண்ட முடியாத இறந்த காலம்
புகழாரம் மனிதனைக் கெடுக்கின்ற அரிதாரம் – உன்
திகட்டாத நல்வாக்கென் வாழ்க்கைக்கு ஆதாரம்!
நல்வழி எவ்வழி அதுவே எம்வழி
அன்புடன் அமைதியும் பண்பட்ட வாழ்க்கையும்
தேவிநீ கொடுத்துவிடு இறைஞ்சியே நிற்கின்றோம்
அபயமென்று வந்துவிட்டோம் தருவதினி உன்பாடு!
கம்பளிப்பூச்சி – குறும்படம்
‘ வேலியே பயிரை மேய்ந்தால் ‘ ………………. என்னாவது?
நெத்தியடி குறும்படம்.
அம்மா கை உணவு (5) – சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
ரசமாயம் !
ரசமொன்று செய்தாயே பெண்ணே !
அறுசுவை உணவும் வேண்டாமென்றேன் –
உன் ரசமதைக் குடித்ததன் பின்னே !
நிசமொன்று சொல்வேனே கண்ணே !
தேனோடு முக்கனி சேர்ந்திருந்தாலும் –
உன் ரசங்கண்டு வெட்கிடுந்தானே !
தக்காளி தெரிந்தது பெண்ணே !
அது கொண்டு நீ செய்த மாயங்கள் தெரியலை –
தெரியவில்லையடி கண்ணே !
ஒரு கரண்டி குடித்தாலே பெண்ணே !
வாய் மறுபடி ஒரு கரண்டி வேண்டுமென்று சொல்லுது –
மறுக்கமுடியவில்லையடி கண்ணே !
மதுவைப் போல் தெரியுதடி பெண்ணே !
மனம் மயங்கியே போவதால் மற்றது மறத்தலால்
உன் ரசமுன் மதுதானே கண்ணே !
எது கொண்டு நீ செய்தாய் பெண்ணே !
மந்திரம், தந்திரம், மாயாஜாலங்கள் நீ –
யாரிடம் கற்றாயோ கண்ணே !
ரகசியம் தேடினேன் பெண்ணே !
ஐந்தறைப் பெட்டியில் அங்குமிங்கும் தேடினேன் –
அறியவில்லை புரியவில்லை கண்ணே !
அப்புறம் தெரிந்ததடி பெண்ணே !
அன்பைக் கரைத்து நீ அமுதத்தைக் காய்ச்சினாய் –
ரசப் பெருமை அதுதானே கண்ணே !
“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்
அந்தப் பள்ளியில் ஸ்கூல் கவுன்சிலராக அந்த ஆண்டுதான் நான் பணியைத் துவங்கியிருந்தேன். என் அறை எல்லோருக்கும் தெரிந்ததே, யாரும் வரலாம். ரிஷி அந்த வருடம் சேர்ந்த புது மாணவன். அவனுடைய அப்பா டூர் போவதால், அம்மா தனலட்சுமி மற்றும் அவன் அண்ணனுடன் எங்கள் ஸ்கூல் அருகில் வசிக்கும் தாத்தா-பாட்டியின் வீட்டில் குடியேறினார்கள்.
என் அறையை நோக்கி, கண்ணீர் வழிந்தபடி ரிஷி வந்தான். வருவதைக் கவனித்து, விரைந்துபோய் அழைத்து வந்தேன். அவன் சட்டை அவிழ்ந்தபடி இருக்க, மேலே ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்த சின்ன துணி சொருகி இருந்தது. ரிஷி இதைக் காட்டி, “அ..அ.வ.வ..ங்…க..” என்று அழ ஆரம்பித்தான். 12 வயதானவன். கண்களில் நீர் ததும்ப, விவரத்தை மென்று விழுங்கிச் சொன்னான். தன் பெயரைக் கேட்டதும் வகுப்பில் இருவர், ரிஷிகள்போல் காவி அணிய இப்படிச் செய்தனர் என்றான். “முனிவர்” என்று அழைத்து மற்ற மாணவர்கள் சிரிப்பதைப் பார்த்து, வகுப்பில் தனக்கு ஆதரவு இல்லை என்று உணர, வெட்கம் கவ்வ, இந்தப் பள்ளி வேண்டாம் என்று சொன்னான்.
ரிஷி, தலையைக் குனிந்து தனக்கு “stammering” (திக்குவாய்) என்று சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவன் அப்பாவும், பாட்டியும் இப்படிக் கேட்கச் சொன்னார்களாம். ரிஷிக்குத் திக்கும்போது, அவன் அப்பா அருகில் இருந்தால் அவன் உதடுகளைச் சுண்டிவிட்டு வார்த்தையைத் திரும்பச் சொல்லச் சொல்வாராம். அவன் திக்கிப் பேசினால் பாட்டி உடனே “பையனா இருக்க. எப்படித்தான் வாழப் போகிறாயோ?” என்பாளாம். தனலட்சுமி ரிஷியின் கைகளை அழுத்தித் தன் ஆறுதலைத் தெரிவிப்பாள். அப்பொழுதெல்லாம் தனலட்சுமியின் கண்கள் சிவந்து, கண்ணீர் ததும்பி இருக்குமாம். இவனுக்கு என்னசெய்வது என்று புரியாதாம்.
ரிஷியின் அண்ணனும் எங்கள் பள்ளியில்தான் சேர்ந்திருந்தான். மிகத் துணிச்சல்காரன், நல்ல உள்ளம் கொண்டவன், வகுப்பில் முதலிடம் பெறுபவன். ரிஷி தன் அண்ணனைப் பார்த்து வியந்தான். அவனைப்போல் இல்லாததால் கொஞ்சம் பொறாமை, பேச்சு திக்கிவிடுவதால் வெட்கப்பட்டுப் பேச மறுப்பான். வயது 12 என்பதால், அந்த வயதின் சுபாவமும் எனலாம்.
அவனைச் சமாதானப்படுத்தினேன். என் அறையில் ஒருவர் இருந்தால் வேறு யாருக்கும் உள்ளேவர அனுமதி கிடையாது. அங்கே வந்த அவன் வகுப்பு ஆசிரியர், இதைப் புரிந்துகொண்டு சென்று விட்டாள். ரிஷியுடன் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சென்று சந்தித்தோம், இதை ஆராய்வதாக உறுதி அளித்தார். சமாதானப்படுத்தி வகுப்புக்கு அனுப்பி வைத்தோம்.
வகுப்பில் இந்தக் குறையைப் பார்த்து, இரண்டு மாணவர்கள் கிண்டலாக அவனைப்போல் பேச முயல்வதாகத் தெரியவந்தது. ஸ்கூல் கவுன்சி்லர் என்பதால் முதல் கட்டமாக , அன்றைக்கே இதை என் செஷனில் எடுத்துக்கொண்டேன்.
ரிஷி போன்றவர்களுக்குச் சீண்டுவதால் நிலைமை அதிகரிக்கும். அதன் நேர் விளைவு, தனிமை, வெறுப்பு ஏற்படுவது. இதைப்பற்றிப் பிற மாணவர்கள் புரிந்துகொள்வது அவசியம் என்று எண்ணினேன்.
கிண்டல், நக்கல், கேலி, செய்வதின் விளைவைப் பல கோணங்களில் ஆராய்ந்தோம். பல மாணவர்கள் இதையும் கேட்டார்கள், “அப்படி என்றால், நாங்கள் கேலி செய்யாமல் இருந்தால்தான் சரியா?” என்று. நான் புரிய வைத்தேன், கேலி செய்வது மனிதனின் இயல்பே. அதைச் செய்யும்பொழுது, மற்றவரைப் புண்படுத்தி, அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளாமல் தனிமைப்படுத்துவது, இவை துன்புறுத்துவதாகும். இப்படிக் கிண்டல், கேலியை கொடூரமாகச் செய்யும்போது, அவர்களை உணர்வுகள் இல்லாத ஒரு ஜடம்போல் பாவிக்கிறோம்.
ரிஷி இப்படி அனுபவித்ததால், வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்ற நினைப்பதைப்பற்றிப் பகிர்ந்தேன், சக மாணவர்களின் பரிவுக் குறைவைக் காட்டுகிறது என்றேன். எங்கள் “உயிர் திறன்” வகுப்பு நேரத்தில் மற்றவரிடம் பேசுவது, பரிவு காட்டுவது, உதவுவது, என்று பல ஸெஷன்களில் எடுத்துக் கலந்துரையாடலாக ஆராய்ந்தோம். அவர்கள் புரிந்துகொண்டு செயல்பட, சிநேகம் அழகாக வளர்ந்துவந்தது.
மாணவர்களின் பெற்றோருடனும், நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று மணி நேரத்துக்கு நடத்தும் வர்க்ஷாப்பில், நக்கல் அடிக்கும் குணாதிசயங்களைப்பற்றியும் கலந்து ஆராய்ந்தோம். பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்துச் செய்வதுண்டு. பெற்றோர்களும் தங்கள் சொல்லும் விதம், பழகும் விதத்தில் கவனம் செலுத்தி, தேவையானால் மாற்றிக் கொள்ளவேண்டும்.
ரிஷி வகுப்பில் பதில் சொல்ல மறுப்பதாக அவன் வகுப்பு ஆசிரியர்கள் பகிர்ந்தார்கள். இது பேசுவதில் தடுமாறுவதால், அவன் தன்னம்பிக்கை குறைந்து இருந்ததைக் குறித்தது.
இதை அறிந்ததும் ரிஷியுடன் ஸெஷன்கள் ஆரம்பமானது. தனலட்சுமியையும் வாரத்தில் ஒரு நாள் சந்தித்தேன். அவன் அப்பா, ரிஷியைப் பராமரிக்க அவளைத் தன் பட்டயக் கணக்கர் (Chartered Accountancy) ஆலோசகர் நிறுவனத்தை மூடிவிட்டு இவனைக் கவனிக்கச் சொன்னார்.
வீட்டாரின் கவனம் முழுக்க ரிஷியின் மேல் நிலவ, அவனுடைய தன்னம்பிக்கை மேலும் ஊசலாடியது. வீட்டிலும், வெளியிலும் பேசவே தயங்கினான், தலையாட்டியே பதில் தெரிவித்தான்.
இதை மாற்ற, தினம் காலையில் பல் துவக்கியதும், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து ஒரு “ஹலோ”/ “காலை வணக்கம்” என்று சொல்லச்சொன்னேன். இப்படி நம்மைப் பார்த்துச் சொல்வதில் தைரியம் கூடும். தன்மேல் காட்டும் அக்கறையே அதற்குத் தீனி என்று சொல்லலாம்.
அவனுடைய வகுப்புத் தோழர்களுடன் சாப்பிட ஊக்குவித்தேன். சொன்னதைச் செய்தேன் என்பதாக, பல நாட்களுக்கு அவர்களுடன் போய் ஏதும் பேசாமல் சாப்பிட்டு வந்துவிடுவான். இதைப்பற்றி அவனுடைய ஸெஷன்களில் ஆராய்ந்தோம். ஒரிரு வார்த்தை சொல்ல முயலலாம் என்று ஆரம்பித்தோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் வாயால் தர முயற்சிப்பதும் சேர்ந்தது. அவன் முயற்சிக்க, மற்றவர்களும் ஊக்குவித்தார்கள்.
அந்த வகுப்புடன் என் ஸெஷன்ஸ் போய்க்கொண்டு இருந்ததால் சந்தேகங்களைத் தெளிவு செய்யமுடிந்தது. இந்த ஆரம்ப நிலையில் ஒன்றை வலியுறுத்தினேன். ரிஷி பேசும்போது, கேட்பவர் ஊக்குவிக்கத் தலை ஆட்டி, ம்ம் சொல்லி, தங்களின் முழு கவனம் தரவேண்டும், அவன் சொல்வதை அவனே முடிக்கவேண்டும். எங்கள் பள்ளிக்கூடம் ஒரு “இன்க்ளூசிவ் ஸ்கூல்” (Inclusive school),“மாற்றுத்திறனாளி” மாணவர்கள் எங்கள் வகுப்புகளில் உண்டு.அவர்களுக்குப் ப்ரத்யேகமாகப் பேச்சுப் பயிற்சி தருபவரையும், வகுப்பு மாணவர்களுக்கு மேலும் விளக்க ஸெஷன்ஸில் சேர்த்துக்கொண்டேன்.
இதையெல்லாம் வருட ஆரம்பத்தில் செய்ததில் ரிஷிக்குத் தெம்பு கூடியது. மாணவர்களும் தங்களைச் சுதாரித்துப் பழக, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ததால், அவர்களின் ஒற்றுமை, மதிப்பெண்கள் இரண்டுமே மேல்நிலையில் சென்றது.
ரிஷியின் அம்மா, இதை “Stammering” என்றாள், அவன் அப்பா “Stuttering” என்றார். என்னை விளக்கச் சொன்னார்கள். இரண்டுமே சரி. நம் நாட்டிலும், இங்கிலாந்திலும் இதை “Stammer” என்றும், அமெரிக்கா மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் இதை “Stutter” என்றும் கூறுவார்கள். இரண்டுமே, முதல் வார்த்தையை இழுத்துச் சொல்வது, இல்லை அதே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்வதாகும். பயம், சந்தேகம், எரிச்சல், கோபம், இந்த நிலையை நீடிக்கச் செய்யும்.
உச்சரிப்பிற்கு உதவும் என்பதால், நாங்கள் ஸெஷன்ஸ் ஆரம்பிப்பது, முடிப்பது ஒரு சிறிய சுலோகத்துடன். அதேபோல் பாட்டை hum செய்வதும் உதவும். ரிஷியிடம் “உனக்குத் தோன்றுகிற பாடலின் இரண்டு வரிகளை hum செய்” என்பேன். பிறகு வீட்டில் தனலட்சுமியுடன் இரண்டு-மூன்று வரிகளைப் பாடுவது என்று தொடக்கினோம். இப்படி, மற்றவருடன் இணைந்து வார்த்தைகளை உச்சரிப்பதில், ரிஷியின் திக்குவது வெளிப்படையாகத் தெரியாததினால், அதுவே தைரியத்தை அதிகரிக்கும். சட்டென்று சமாளிக்கும் திறனையும் வளர்க்கும்.
இந்த “நிழல் சொல்வதை” (shadow speech) ஒவ்வொரு மாதமும் வேறு வழிகளில் அமைத்து வந்தேன். பாதி வார்த்தைகளைச் சொல்வது, மற்றவருக்கு முன் ஆரம்பிப்பது, வாயைத் திறந்து மிக நிதானமாக (slow motion) உச்சரிப்பது எனப் பல.
ரிஷி தன் அண்ணனுடன் வார விடுமுறைகளில் நாளிதழைச் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். இருவரின் உறவு வளர்ந்தது, மறுபடியும் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்கள். விளையாடும் நேரங்களில் ரிஷியின் உச்சரிப்பு நன்றாகவே இருந்ததாக அவன் அண்ணன் தெரிவித்தான்.
ரிஷியின் அப்பாவுக்கு அவன் திக்குவது மிக அவமானமாக இருந்தது. அவருடைய எதிர்பார்ப்பினால் ரிஷிக்கு அழுத்தம் கூடி, திக்குவது அதிகமாகிறது என்று பல ஸெஷன்ஸிற்குப் பின் புரிந்துகொண்டார். அவர்களிடையே நிலவும் கசப்பு, வெறுப்புபற்றியும் கலந்துரையாடினோம். நிலைமையைச் சீர் செய்ய, (பேச்சே இல்லாமல் ஒருங்கிணைவதற்கு) அவர் ஊரில் இருக்கும் மாலைகளில் அரைமணி நேரம் சேர்ந்து சைக்கிள் செல்வதென்று ஆரம்பித்தோம். ஓர் அளவிற்கு இருவரும் சுமுகமாக ஆனதும், காய்-கனி வாங்க இருவரும் சேர்ந்துசெல்வது என்பதைக் கூட்டினேன். ஊரில் இருந்த நாட்களில் இதை எல்லாம் செய்யக் கொஞ்சம் பாசம் எட்டிப் பார்ப்பது தெரிந்தது.
வகுப்பிலும் மாணவரின் சுயமதிப்பை அதிகரிக்கும் விதங்களை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்தேன். முக்கியமாக, ரிஷியும் சரி, மற்ற மாணவர்களுக்கும் வகுப்பில் பேசக் கூடிய நிலையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் கவனம் தேவை. ரிஷியிடம், வகுப்பில் பதில் தர முன்வரச் சொன்னேன். முதல் மூன்று மாதங்களில் தெரியவில்லை என்று சொன்னவன் பின்பு சட்டென்று ஒரு வார்த்தை பதில் சொல்வான், முழுதாகச் சொல்ல ஏழு மாதங்கள் ஆயின. தன்னால் முடியும் என்பது புரியவர நேரமானது. தேவையானபோது உதவி கேட்க ஆரம்பித்தான்.
அவனுடைய வகுப்புத் தோழர்கள், பள்ளிக்கு வரும் therapist-டிடம் பேசி அறிந்து, ரிஷியிடம் வாய் அசைவு பயிற்சிகள் உதவலாம் என்று சொல்லி, செய்யப் பரிந்துரைகளைத் தந்தார்கள். இவை பொருந்துமா என்பது கேள்வி அல்ல. யார் இவனைக் கிண்டல் செய்தார்களோ, அவர்களே இப்போது இதைச் செய்தார்கள். அதான் வளரும் குழந்தைகளிடம் இருக்கும் சிறப்பு அம்சம். எடுத்துச் சொல்லிப் புரியவைத்தால், மாறிச் செயல் படுவார்கள்.
ரிஷியும் தான் செய்ய வேண்டியதை எல்லாம் முழுமையாகச் செய்துவந்தான். ஒரு நாள் திக்கியதும், அவன் பாட்டி வேதனைப்பட்டுக் கொண்டாள்: “என்னதான் பண்ணப் போரையோ” என்றதும், ரிஷி “ஏன் பாட்டி, நீ இவ்வளவு ஃபீல் ஆகிற? இப்போ நான் நல்லாப் படிக்கிறேன், ஒட்டப் பந்தய வீரன், கவிதை எழுதறேன், அப்புறம் என்ன குறைன்னு இவ்வளவு feeling?”
தமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி
கருவாகி உயிராகி உருபெற்று உருவாகி
வரமாக தாய் கரத்தில் தவழும் முதலாய்
அண்டங்கள் ஆளும் அறிவியல் அனைத்தும்
கோள்களும் பால்வெளியும் மாறும் இயல்புகளும்
பூதங்கள் ஐந்துடன் பூமியின் பரிவர்த்தனையும்
அஞ்சாமல் வாழவைக்கும் ஆன்ம விசாரணையும்
மகத்தான மானுடம் மறுகரை ஏறவே
கடலாக நுண்ணறிவை புதையலாய்ப் புகுத்தி
அழகான இலக்கணம் அணியாகக் கொண்ட
நம் தமிழை, தன்னேரில்லாத செந்தமிழை
வேண்டுமென்றே சீண்டாது வேண்டாத வார்தைகளை
இன்றைய இயல் இசை நாடக தமிழ் என்றே
அரங்கேற வைத்து அல்லல் படுத்தி
மாணவ மாணவியர் இளைஞர் மனஏட்டில்
கூடாத வார்த்தைகளை புழக்கத்தில் ஏற்றி
சமுதாய கேடுகளை அள்ளித் தெளித்து
தினந்தோறும் கலாசார சீரழிவைத் தந்து
வாய் திறந்து பேசவும் கூடாத மொழியாக
“எனக்கு டமில் தெரியாது. ஸோ வாட் பர்வாயில்லை” என்று
போலியாக தமிழர்வாழும் தேசமாய் மாறுவது
ஐயகோ! கெடு மதியார்க்கு தோதாக ஆனதே!
தமிழ்ச் சுவடி மர்மம்!
நன்றி: ச.நாகராஜன்
மாயச் சதுரத்தை அமைக்கும் மூன்றாவது வகை ஒரு கூட்டு எண்ணை கொடுக்கப்பட்டு அதற்காக சதுரத்தை அமைப்பதாகும்.
ஒரு பாடலைப் பார்ப்போம்:
கப்பலெண் மிகாமல் இரண்டோர் எட்டில்
கருதிய பதினொன்றில் பதிமூன் றாக்கிச்
செப்பமுடன் நவமாக்கிப் பக்க மாக்கிச்
சேர்ந்ததோர் நான்காறில் செய்த பின்பு
ஒப்பிய இலக்கத்தைப் பாதி யாக்கி
ஒன்று தள்ளி ராசியின்மேல் பதினா லாக்கி
எப்படியும் முதலேழில் மூன்றில் ஐந்தாம்
ஈரைந்தில் பதினாறாம் இயம்ப லாமே”
(சுவடி எண் 1475)
இரண்டு படிகளில் சொல்லப்பட்டுள்ள இக்கணக்கின் வழிமுறையில் முதலில் 2,8,11,13,9,15,4,6 ஆகிய சிறு சதுரங்களில் முறையே 1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் பதினாறு சதுரங்களை எண்களுடன் காண்போம்:
1 | 2 | 3 | 4 |
5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 |
இதில் இரண்டாம் கட்டத்தில் 1, எட்டாம் கட்டத்தில் 2 என்று இப்படி முறையே எண்களைப் பதிக்க வேண்டும்.
வருகின்ற சதுரம் முதல் படியில் இப்படி இருக்கும்
1 | 7 | ||
8 | 2 | ||
5 | 3 | ||
4 | 6 |
நவம் என்றால் ஒன்பது. ரா – இங்கு பன்னிரெண்டு.
பஷீகம் – 15 நாட்கள் கொண்டது. இங்கு 16. இவ்வாறாகச் சதுரத்தை அமைத்துக் கொண்ட பின்னர்க் கூட்டுத் தொகையில் பாதியில் ஒன்றைக் கழிக்க வேண்டும். பின்பு முறையே 12,14,1,7,3,5,10,16 ஆகிய கட்டங்களில் முன் கூறப்பட்ட எண்ணில் ஒன்றைக் குறைத்து இறங்கு வரிசையில் எழுத வேண்டும்.
சான்றாக சுவடியில் தரப்பட்டிருந்த மாயச் சதுரத்தின் கூட்டுத் தொகை 64. 64இல் பாதி 32.
ஒன்றைக் கழிக்க வருவது 31.
முன்னர் அமைத்த மாயச் சதுரத்தில் நிறைவு செய்யப்படாத கட்டங்களில் (12,14,1,7,3,5,10,16) முறையே 31,30,29,28,27,26,25,24 ஆகிய எண்களை நிரப்ப வேண்டும்.
29 | 1 | 27 | 7 |
26 | 8 | 28 | 2 |
5 | 25 | 3 | 31 |
4 | 30 | 6 | 24 |
மாயச் சதுரம் இப்போது அமைந்து விட்டது.
இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 64!
போனஸாக இன்னொரு விந்தையும் இதில் உண்டு!
நான்கு மூலைகளில் உள்ள கட்டங்களில் அமைந்துள்ள எண்களைக் கூட்டினாலும் வருவது 64 தான்!!
இப்படி இந்தச் சுவடி தரும் விந்தை பல!
இவற்றை நன்கு ஆராய்ந்த திருமதி சத்தியபாமா ஆய்வின் முடிவில் தரும் முடிவுகள் ஐந்து.
- அறிவிற்கு விருந்தூட்டும் தமிழரின் சிறந்த பொழுது போக்குக் கணித விளையாட்டுக் குறித்து அறிந்து கொள்ள இந்த மாயச் சதுரங்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன.
- மாயச் சதுரங்களை அமைப்பதற்கான இத்தகைய பாடல்கள் வேறு எந்தக் கணித நூல்களிலும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த நிலையில் இவை அரிதானவையாக விளங்குகின்றன.
- மாயச் சதுரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யும் ஒரு சில கணக்குகள், கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை முதலான நூல்களில் காணப்படுகின்றன.
- மாயச் சதுரங்களை உருவாக்கும் மேலை நாட்டினரின் கணிதச் செய்முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யக் கூடிய ஆய்வுக் களமாக இவை விளங்குகின்றன.
- காலம் குறித்த செய்திகள் கூறப்படவில்லை என்றாலும் காலத்தில் பழமையானவையாகப் பழந்தமிழரின் கணித அறிவை உலகிற்குப் பறை சாற்றுவனவாக இவை விளங்குகின்றன.
இந்த ஒரு சுவடியிலேயே இவ்வளவு அரிய பாடல்களைக் காணும் போது இன்னும் கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை போன்ற நூல்களை ஆராய்ந்தால் நாம் பெறக் கூடிய விந்தைகள் எவ்வளவோ.
திருமதி சத்தியபாமா அவர்களின் முழு ஆய்வையும் பதிப்பிக்க தமிழ் உலகம் முன் வர வேண்டும்.
தமிழின் பெருமை எல்லயற்றது.
தமிழரின் அறிவு நுட்பமானது; பரந்துபட்டது.
இதை உலகம் அறிய வழி செய்யவேண்டும்.
கவி காளமேகம் பாடல்கள்
காளமேகம் என்றால் சிலேடையும் வசைப் பாடல்களும் நமக்கு நினைவுக்கு வரும்.
அவரின் சிறப்புப் பாடல்கள் !
ஒன்று முதல் பதினெட்டு வரை அடைமொழி இன்றி ஒரு
வெண்பாவில் அமையப் பாடியது)
ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று – பன்னிரண்டு பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.
தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர்.
ஆசுகவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால்உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.
தமிழின் “க’ என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை தின்னும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)
பாட வேண்டும் !தில்லைவேந்தன்
சாகித்ய அகாடமி பரிசு 2018
சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை நூலுக்காக சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
அம்புப்படுக்கை வெளியிட்டபோது யாவரும்.காம் நிகழ்வில் சுனில் கிருஷ்ணன் பேசிய உரையின் காணொளி இங்கே!
(நன்றி: ஸ்ருதி டிவி )
கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால் சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்
சீரியல் தரும் பாடம்..!
‘குழப்பங்களிலோ, சங்கடங்களிலோ உழன்றால் அந்த
அகிலாண்டேசுவரியையும், மகேசுவரனையும் மனதார
வேண்டிக் கொண்டால் குழப்பங்களும், சங்கடங்களும் ஓடிப்
போய்விடும். ‘தேவி போற்றி.. பெருமானே போற்றி..’ என்று
வேண்டிக் கொண்டால் ஓடோடி வந்து குறைதீர்ப்பார்கள்’
என்றார் குருஜி.
கேட்டுக் கொண்டிருந்த எனக்குப் புல்லரித்தது. பக்தகோடிகள் நிரம்பிய அந்த ஹாலே நிசப்தமாய் இருந்தது.
எனக்கு அடுத்த இருக்கையில் இருந்த என் சுட்டிப்பெண்
மிதிலா, ‘அப்பா, இந்த குருஜி சன் டி.வி.யில் ஏழு மணிக்கு
வர ‘விநாயகர்’ சீரியல் பார்க்கறதில்லைன்னு நினைக்கிறேன்.
அங்கே சிவபெருமானும், உமாதேவியும் அசுரர்கள் கொடுக்கிற
நெருக்கடிகளாலும், குழப்பங்களாலும், சங்கடங்களாலும்
தவிக்கும் தவிப்பு இருக்கே.. அப்பப்பா.. அவர்களை நாமதான் போய்க் காப்பாத்தணும் போலிருக்கு. அவர்களுக்கு
அவர்களுடைய பிராப்ளங்களையே தீர்க்க முடியலே..
நமக்கு ஹெல்ப் பண்ண வரப் போறாங்களா என்ன..?’
என்றாள் மெதுவாக.
பக்கத்திலிருந்த பார்வையாளர்கள் மிதிலாவின் பேச்சைக்
கேட்டு மெதுவாகச் சிரித்தனர்.
நான் சங்கடத்தோடு இருக்கையில் நெளிந்தேன்.
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்..:-
அப்பா : இன்னிக்கு சாயந்தரம் போய் அந்த பல் டாக்டர்கிட்டே பல்லைக் காட்டிட்டு ஆயிரம் ரூபாய்
அழுதுட்டு வரணும்..!
மகள் : என்னப்பா… இன்னும் புரியாம பேசிட்டிருக்கியே..
நம்மகிட்டே வேலை செய்யறவங்க பல் இளிச்சிட்டுத்
தலையைச் சொறிந்தா நாமதானே காசு
கொடுக்கறோம். அதேமாதிரி டாக்டர்கிட்டே
நீ பல்லைக் காட்டினா அவர்தானே உனக்கப்
பணம் தரணும்.
அமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்
மாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்
சென்னையில் சமீபத்தில் இன்றைய எழுத்தாளர் திலகம் ஜெயமோகன் அவர்கள் இலக்கியத்துறையில் மாற்றங்கள் என்பதைப்பற்றிப் பேசிய பேச்சின் காணொளியைப் பார்த்துக் கேட்டு ரசிக்கலாம்.
நன்றி ஸ்ருதி டிவி
அஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்
தமிழ்த் திரையுலகு சாராயக் குப்பியுடன் பெண்கள் பின்னால் அலைந்துகொண்டு எதிரே வருபவர்களைப் பெருமையுடன் அரிவாளால் வெட்டிக் குவித்து சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது………. கவிதையாக ஒரு மராத்தி படம்.
ரேவதி நன்றாக இருக்கிறது என்று பதிவு போட்ட அன்றே மகனுடன் பார்க்க சமயமும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
கற்றுத் தேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர் சக்ரபாணி சாஸ்திரி வயதான காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார். மகள் கடையில் பொருள் வாங்கிவருவதற்குள் காரிலிருந்து இறங்கி மறைந்து விடுகிறார். குழந்தையாக மாறிவிடும் அவர் யானை மீதிருக்கும் ஆசையாலும், ஆச்சர்யத்தாலும் அதன் பின்னாடியே போய்விடுகிறார். அவரைத் தேடும் மகளின், மாப்பிள்ளையின் 24 மணி நேரப் பயணமே கதை.
ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்லும் யானைப்பாகன் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடத்தில் தவிக்கும் காட்சிகள், நினைவுகளில் பின்னோக்கி விரியும் காட்சிகள், அவை நிஜத்துடன் இணையும் இடம் அத்தனையும் முத்துமுத்தாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
லைட்டிங், சினிமாடோகிராஃபி பிரமாதம். ஆற்றங்கரை, யானை குளிப்பது, கடைவீதி, கார் ரோட்டில் விரைவது அத்தனையும் அழகு அள்ளும் காட்சிகள். உருவகமாக படத்தில் அந்த இடத்தின் தன்மையை, உணர்வுகளை எடுத்துக்காட்டும்படி அமைக்கப்பட்ட விதம் மிகவும் ரசிக்கத் தக்கது. படிக்கட்டில் அமர்ந்தபடி வரும் சீன் உலகத்தரமானது. யானை அடியில் யானைப்பாகன் செய்வதறியாமல் அமர்ந்திருக்கும் சீன், கடைசியில் அப்பா கிடைத்தபின் தோன்றும் சலனமற்ற நிலையை வெளிப்படுத்தும் ஈரச்சாலையில் கார் விரையும் சீன் அனைத்தும் அருமை.
இசை! சுகம். தேவையான அளவு தேவையான இடத்தில் தேனான இசை. பாக்ரவுன்ட் ம்யூசிக்கும் சரி, இரண்டு மராத்தி பாடல்களும் சரி கதையோடு இணைந்து உங்கள் மனதைத் தொடுகிறது. ஜோஜோ மனக்கல்ல மாலிங்க தேவாயி…..என்ற வரியும் யானை மணியோசையும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
தன் யானைப் பயணத்தில் பெரியவர் உதிர்க்கும் தத்வார்த்தமான சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் காட்சியோடு சேர்ந்து நம்மை ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. மெல்லிய காற்று நம்மை வருடுகிறது. லேசாக உணர்கிறோம். என்ன அருமையான மேற்கோள்கள்! கொஞ்சமாக இதோ….
Truth always emerges from awareness
Yagnyavalkya are you in search of food or knowledge?
God has sent him to you. You didnt call him
How he came he would go back
How much is he yours, how much a stranger
You come alone and go alone
Compassion the essence of humanity, the nectar the brahman
Who takes just enough to survive… he is a saint
I see myself as nothing but you glorious sun..
நடிப்போ பாராட்டி முடியாது. பெரியவரா, பெண்ணா, மாப்பிள்ளையா, யானைப் பாகனா, அவன் மனைவியா யார் சிறந்த நடிகர் என அசந்தே போகுமளவு ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பு. பெரியவர் சுவாதீனத்திலிருக்கும்போது கம்பீரம், தெளிவு – குழந்தையாகும்போது பயம், ஆர்வம், இன்னசன்ஸ் என்று அசத்துகிறார். யானைப்பாகனுக்கு சங்கடமான சூழ்நிலையை வெளிப்படுத்தும் ஒரு காட்சி போதும் நம் மனதில் இடம்பிடிக்க. அவன் மனைவியோ….அது நடித்த பாத்திரமா என்ன? அவளே அல்லவோ? கடைசியில் அம்மா என்று அவர் அழைக்கும் ஒரு தருணத்தில் அவர் முக பாவம்..அடேயப்பா. மகளாக நடித்தவரின் அழுத்தமான நடிப்பு படத்தில் மிகமுக்கியமானது.
காட்சிகளா? லைட்டிங்கா? நடிப்பா? வசனமா? எதையென்று சொல்வது. அனைத்தும் சிறப்பு. இது படமல்ல அம்மா…அனுபவம் என்கிறான் என் மகன்.
இன்று அப்பாவுடனும், இரண்டு மகன்களுடனும் மீண்டும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மூன்று ஜெனரேஷனும் ரசித்து, நெகிழ்ந்து, டிஸ்கஸ் செய்தபடி பார்த்தோம். பதினான்கு வயது மகனும் ஆர்வத்தோடு பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. அஸ்து!
மிச்சத்தை மீட்போம் !- பூ.சுப்ரமணியன்
உலகில் அதர்மங்கள்
உச்சத்தை தொடுவதற்கு முன்
‘அச்சமில்லை அச்சமில்லை’
உச்சஸ்தாயில் குரல் கொடுத்த
பாரதியின் வீர வரிகளை
மனதில் இருத்தி
மிச்சமிருக்கும்
மனிதநேயம் மீட்போம் !
‘ கடை விரித்தேன்
கொள்வார் யாருமில்லை ‘
கலங்கிய வள்ளலார்
உள்ளம் மகிழ
மிச்சமிருக்கும்
உயிர் இரக்கம் மீட்போம் !
கல்விக்கூடங்களில்
காமக்களியாட்டம் ஆடும்
கொடூர ஆசிரியர்ளை
கடுமையாக தண்டித்து
மிச்சமிருக்கும்
பண்பாட்டை மீட்போம் !
விளைநிலங்களை
வீடுகளாக மாற்றும்
விவசாயி பெருமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தி
மிச்சமிருக்கும்
விளைநிலங்களை மீட்போம் !
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து
படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்
குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்
உள்ளூரில் விலை போகாத மாட்டுக்கெல்லாம் கொம்பு சீவி பெயின்ட் அடிச்சுக் கொஞ்சம் தள்ளியிருக்கிற ஊரில் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்று சொல்வார்கள். அந்த ஊரில்போய் அந்த மாடு பேந்தப்பேந்த விழிக்குமா என்று தெரியவில்லை.
மேலே சொன்ன பாடலில் சொல்லப்பட்டதுபோல் பலபேர் நோட்டம் விடும் படித்த வேலை கிடைத்துவிட்டது. வெளியூராக இருந்தால் என்ன?
புதியதாக ஒரு ஊர். முன்பின் அறியாத மக்கள். பதினெட்டு வயது என்பது வளர்ந்த சிறுவனா, வளர இருக்கும் இளைஞனா? அப்பா ஒரு பஸ்ஸிலும் நான் ஒரு பஸ்ஸிலும் ஏறிக்கொண்டோம். முதலில் அவர் பஸ்தான்புறப்படவேண்டும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை . அவர் இறங்கிவிட்டார். என் பஸ் போகும்வரை காத்திருந்துவிட்டுப் போனார். அடுத்த பஸ்ஸில் ஏறி இருப்பார்.
அந்த சில நிமிடங்கள் மனதில் அதுவரை அனுபவித்திருக்காத உணர்வு. என்னவோ நாடு கடந்து திரும்பவே வரமுடியாத இடத்திற்குப் போகவில்லை. ஒரு வாரத்தில் திரும்பவும் சந்திக்கப் போகிறோம். பெரும்பாலான ஹிந்திப் படங்களில் தங்கை திருமணமாகிப் புகுந்தவீடு போவாள். அதை பிதாயி… விதாயி… ஏதோ ஒன்று சொல்வார்கள். பின்னணியில் ஒரு பாட்டும் ஒலிக்கும் . அப்போது அண்ணன்காரன் கண் முழுவதும் சோகத்தோடும் உதட்டில் போலிப் புன்னகையோடும் காட்சி அளிப்பான். இந்தக் காட்சியில் நடிக்காத நடிகர்களும் இல்லை என்றும், அதில் சோடை போகாதவர்கள்தான் சினிமாவில் நிலைத்து நிற்பார்கள் என்றும் பின்னாளில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்
வெளியூர் போகும் மாடோ , புகுந்தவீடு போகும் பெண்ணோ இல்லாவிட்டாலும் நான் எனது கண்களாலேயே உலகைப் பார்க்க ஒரு தேவை மற்றும் வாய்ப்பு. ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாத்தா பாட்டி சொன்னதுதான் வேதவாக்கு. சுடுதண்ணியில் குளிக்கணுமா, இல்ல குளத்துக்குப் போகணுமா என்புது முதல் அவர்கள்தான் வழி நடத்துவார்கள். அப்புறம் அம்மா. இதைச்செய் அதைச் செய்யாதே என்று எப்போதும் கட்டளைகள். அப்பா அதிகம் என் விஷயங்களில் தலையிட்டதாக நினைவு இல்லை. அப்புறம் அண்ணன். முக்கியமாக அவன் நண்பர்கள் கூட இருந்தால் என் மீது அவனுக்கு ஏதோ அதிகாரம் இருப்பதுபோல் காண்பித்துக் கொள்வான். ஒரு வகையில் பார்த்தால் எனது அரட்டை நண்பர்கள் சொல்லும் வழியில்தான் நான் நடந்திருக்கிறேன். – இவை அன்றைய நினைவோட்டம் அல்ல. திரும்பிப் பார்க்கும்போது தோன்றியவை.
முன்னேற்பாடாக அப்பா ஒரு ஜமக்காளமும் ஒரு காற்றுத் தலையணையும் கொண்டுவந்திருந்தார். இருக்க அறையும் தயார். இரவு தூங்கிவிடலாம். காலை காபி, குளியல் எல்லாம் பின்னால் யோசித்துக்கொள்ளலாம். குளம் ஒன்று பார்த்திருந்தேன்.. குளியல் பிரச்சினை இருக்காது என்று எண்ணம்.
ஊருக்கு வந்து, ஏற்பாடு செய்திருந்த அறைக்குப் போனேன். அது ஒரு ஓட்டு வீட்டின் முன்னறை. பூட்டாமல்தான் வைத்திருந்தார்கள். கதவைத் திறந்து விளக்கைப் போட்டால் ஒரு ஆச்சரியம். பாய், தலையணை, போர்வை ஒரு மண் கூஜாவில் தண்ணீரும் டம்பளரும். வீட்டுக்காரரின் முன்யோசனையும் கரிசனமும் மனதிற்கு இதமாக இருந்தது.
புத்தகம், கரும்பலகை, பிரம்பு ஆகியவற்றோடு ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடமாக இல்லாத, நான் கற்ற முதல் பாடம் இது. பிற்காலத்திலும் என் வீட்டிற்கு வந்து தங்குகிறவர்கள் குறைவு. அவர்களுக்கு என்னனென்ன தேவைகள் இருக்கக்கூடும் என்று யோசித்து ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்த இந்த அனுபவம்தான் காரணம்.
முதல்நாள் அலுவலில் நான் ஒன்றும் செய்யவேண்டியிருக்கவில்லை. அலுவலகத்திலிருந்த ஆறு பேர் அறிமுகம். ஒரு பதிவேட்டில் எனது விவரங்கள் பதிவு செய்வது இரண்டும் முடிந்தது. கனகேசன் என்பவர் செய்து வந்த வேலைகளை எனக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அவரருகில் ஒரு நாற்காலி போட்டு அமரச் செய்துவிட்டர்கள். ஒவ்வொரு வேலையைச் செய்யும்போதும், என்ன செய்யவேண்டும் என்றும், எதற்காக அது தேவைப்படுகிறது என்றும் விளக்கிக்கொண்டே கனகேசன் வேலைகளை செய்துவந்தார். புரிந்ததுபோலத்தான் இருந்தது.
மாலை நாலுமணி இருக்கும். கனகேசன் என்னை அவரது இருக்கையில் அமரச் சொல்லி , எதிரில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். முதல் பதிவினை நான் செய்வதை அக்கறையோடு கவனித்தார்.
“வேலைக்குச் சேர நாள் பார்க்கலியா?” என்று கேட்டார்.
நான் இல்லை என்று தலையசைத்தேன்.
“இன்னிக்கு மூணு மணி வரை நவமி. நாளைக்குச் செவ்வாய்க்கிழமை, அதுதான் நவமி போனதும் உங்களை வேலையைத் தொடங்கச் சொன்னேன்.” என்றார்.
எனக்கு நாள் கோள் என்பதைப்பற்றிய நம்பிக்கை இருந்ததா என்பதைவிட அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை. நான் வேலைக்குச் சேர நாள் பார்க்கவேண்டும் என்று என் பெற்றோர்களும் யோசித்ததாகத் தெரியவில்லை. அடுத்த வாரம் ஊருக்குப் போனபோது, அப்பாவைக் கேட்டேன்.
“இல்லைடா.. உன்னை திங்கட்கிழமை சேரச்சொல்லி ஆர்டர் வந்துவிட்டது. நாள் என்று பார்க்க ஆரம்பித்தால், யாரவது ஏதாவது சொல்லி, அதை நாம் கேட்கவில்லை என்றால் அது உறுத்திக்கொண்டே இருக்கும். எந்தப் பிரச்சினை வந்தாலும் பழியை ராகு , சந்திரன் மேல போடத் தோணும். இப்பப் பிரச்சினை இல்லை பார்.” என்றார்.
எப்படியோ, அப்பாவினுடைய பிராக்டிகல் அபிப்பிராயத்தாலோ, கனகேசன் சித்தப்படி நவமி – செவ்வாய்க்கிழமை தவிர்த்ததினாலோ நாற்பது வருடங்களுக்குமேல் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வும் பெற்றுவிட்டேன். இந்த ஜாதகம், நேரம், காலம் இதற்கெல்லாம் பின்னால் வருவோம்.
தினம் காலையில் வீட்டிற்கே காப்பி வந்துவிடும். குளத்தில் குளித்துவிட்டு வந்து, சுவற்றில் மாட்டியிருக்கும் சாமி படத்திற்கு ஒரு கும்பிடு போட்டு, உடைமாற்றி ஆபீசுக்குப் போகும் வழியில் அந்த சிறிய ஹோட்டலில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொள்வேன். மதிய சாப்பாடு ஆபீசுக்கே வந்துவிடும். இரவு ஹோட்டலுக்கே நேரில் சென்று ஆகாரம். அந்த சிறிய ஹோட்டலை அங்கு பலகாரக் கடை என்று சொல்வார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு சொல்வார் ஹோட்டல்காரர். இப்படியாக ஏற்பாடு வசதியாகத்தான் இருந்தது.
சனிக்கிழமைகளில் பாதிநாள் வேலை.. மதியமே பஸ் பிடித்து அந்த மாவட்டத் தலைநகர் சென்று பஸ் மாறி வீட்டுக்குப் போய்விடுவேன். மீண்டும் திங்களன்று காலையில் வீட்டை விட்டுக் கிளம்பி மீண்டும் பஸ் மாறி அலுவலகம் நேரே வந்துவிடுவேன். இதுதான் ரொடீன்.
கனகேசன் பார்த்துவந்த பணிகளை எனக்குக் கொடுத்துவிட்டு அவர் மேற்பார்வையாளர் போன்ற வேலைகளைச் செய்துவந்தார். எல்லாக் கோப்புகளும் பதிவேடுகளும் அவர் மூலமாகத்தான் கிளை நிர்வாகி சேஷையன் சாருக்குப் போகும். சேஷையன் தவிர எல்லோருக்கும் உதவியாளர் என்கிற ஒரே பதவி. அதில் கனகேசன் எல்லோருக்கும் சீனியர். அவர் செய்துவந்த வேலைகளை நேரடியாகப் புதிதாக வந்த எனக்குக் கொடுத்ததில்தான் ரமேஷ்பாபுவிற்கு வருத்தம். ஒரு சீனியரின் சீட்டை புது ஆளுக்குக் கொடுப்பது மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று எண்ணம். (அந்த ரமேஷ்பாபுதான் நான் சேர்ந்த அன்று என்னை விரோதமாகப் பார்த்த இளைஞர்.)
அடுத்த செட் பிரமோஷனில் கனகேசனுக்கு பிரமோஷன் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பிரமோஷன் என்று ஒன்று வரும்வரை சீனியாரிட்டி பிரகாரம் ஒவ்வோருவருக்கும் வேலைகளைக் கொடுக்கவேண்டும். முறைப்படி கனகேசன் சீட்டிற்கு அவருக்கு அடுத்த சீனியர் போயிருக்க வேண்டும் என்பது ரமேஷ்பாபுவின் வாதம். எல்லாரும் ஒரே கேடர்தானே? உழக்கில் என்ன கிழக்கு மேற்கு என்று சேஷையன் ரமேஷ்பாபுவின் யோசனையை நிராகரித்து விட்டாராம். அதனால், இந்த தேவையற்ற விவாதத்தில் என்மீது ரமேஷ்பாபுவிற்குக் கோபம். ஆனால் அது நீடிக்கவில்ல. ஒரே வாரத்தில் சகஜமாகப் பழகிக்கொள்ளத் தொடங்கிவிட்டோம்.
ஆபீஸ் என்று ஒன்பது மணிநேரம் கழிந்துவிடுகிறது. ஊரில் உள்ள டெண்ட் கொட்டகையில் வாரத்திற்கு இரண்டு படமாவது மாறும். அதில் இரண்டு மாலைப் பொழுதுகள் கடந்துவிடும். சில நாள் காலார நடந்துவிட்டுத் திரும்புவேன். எதிர்ப்படும் தெரிந்தவர் ஏதேனும் அரைகுறைக் கேள்விகளைக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விடுவார்கள். ஒருநாள் எதிரே வந்த ஒருவர் “என்ன சார், வடக்கே போகிறீர்களா?”என்று கேட்டார். சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை. கிழக்குப் பக்கம் மானசீகமாகத் திரும்பிக் கைளையும் மானசீகமாக நீட்டி, திசையைக் கண்டுபிடித்து , “ஆமாம்” என்றேன். அவர் “ சரி போயிட்டு வாங்க “ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அந்த ஊர் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்கள் கொண்டது. எங்கள் அலுவலகம் தவிர ஒரு டவுன் பஞ்சாயத்து ஆபீஸ், பி.ஹெச். சி. என்று சொல்லப்படுகிற ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், மாட்டாஸ்பத்திரி என்று குறிப்பிடப்படும் ஒரு கால்நடை உதவி நிலையம், எட்டாம் வகுப்புவரை உள்ள ஒரு பள்ளி, ஒரு கூட்டுறவு சொசைட்டி , ஒரு கிளை நூலகம் ஆகியவை இருந்தன. இவற்றில் வேலை பார்பவர்கள் (எங்களையும் சேர்த்து) மொத்தம் ஒரு ஐம்பது பேர் தேறும். அதில் பெரும்பாலானவர்கள் பக்கத்து ஊர்களில் இருந்து வருபவர்கள்தான். ஐந்தாறுபேர் மட்டுமே உள்ளூரில் தங்கி இருந்தோம்.
ஒரு நாள் குளக்கரையில் அந்த நூலகர் என்னைப் பார்த்தார். “புதிதாக நம்ப கிராமத்திற்கு வேலைக்கு வந்திருக்கீங்க. ஒரு நாள் நூலகம் பக்கம் எட்டிப் பாருங்களேன்” என்று சொன்னார். நானும் எட்டிப் பார்க்கப்போனேன். பூட்டியிருந்தது.
“சார். இன்னிக்கு வெள்ளிக்கிழமை” என்று குரல் வந்தது. எதிர் வீட்டுக்காரர். சம்பந்தமில்லாமல் கேள்விகள் மட்டும் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது. இது போல ஒரு ஸ்டேட்மெண்டும் விடுவார்கள் போலும் என்று தோன்றியது. நான் விழித்தேன். தொடர்ந்து,”வார விடுமறை” என்றார். குழப்பம் தீர்ந்தது.
அடுத்த வாரம், வெள்ளிக்கிழமை அல்லாத ஒரு நாள் மீண்டும் போனேன். ஒரே ஆச்சரியம். அந்த ஊரின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் ஏராளமான புத்தகங்கள். பருவ இதழ் பிரிவு என்று போட்டிருந்த சிறு அறையில் ஒரு பெஞ்சில் பல நாள் மற்றும் வார இதழ்கள் கிடக்க அரை டஜன் பேர் ஏதாவது படித்துக் கொண்டிருந்தார்கள்.
நூலகரைப் பார்த்தேன். உட்காரச் சொல்லி ஒரு படிவம் கொடுத்தார். சொற்பத் தொகையினை சந்தாவாக வாங்கிக்கொண்டு, மூன்று புத்தகங்கள் படிப்பதற்கு எடுத்துப் போகலாம் என்றார். .
எங்கே பார்த்தாலும் புத்தகங்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நீள மேஜைக்கு அருகிலிருந்த பெட்டியில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. திரும்பி வந்த புத்தகங்கள். சரியான இடத்திற்குப் போக வேண்டியவை. அதிலிருந்தே மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். புத்தகம் படிக்கத் தொடங்கிய கதை இதுதான்.
புதிய ஊரில் புதிய நபர்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் இன்றி நாட்கள் நகர்ந்தன
…… இன்னும் வரும்
கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு காலையிலேயே காலிங் பெல் அடித்தது.
‘சண்டே, காலை கொஞ்சம் சோம்பலாய்த் தூங்கலாம்னா, விடமாட்டாங்களே’ – கண்ணைச் சுருக்கி எதிரே கடிகாரத்தைப் பார்த்தேன். காலை மணி 5.55. வந்த கொட்டாவியைக் கையால் மறைத்தபடி, கதவைத் திறந்தேன்.
’குட் மார்னிங். ஞாயிற்றுக் கிழமையும் சீக்கிரமா வெளீல போய்டப் போறயேன்னு, எழுந்த உடனேயே வந்தேன்!’ சிரித்தபடி ஜிப்பாவில் நண்பன்.
‘குட் மார்னிங்’ – அரைசிரிப்புடன் கதவைத் திறந்து, சோபாவைக் காட்டினேன் – கையில் கொண்டு வந்திருந்த நியூஸ் பேப்பரைப் (என் வீட்டு வாசலில் கிடந்ததுதான்!) பிரித்தவாறே ‘நான் வெயிட் பண்றேன்’ என்று பல் தேய்க்க எனக்கு பெர்மிஷன் கொடுத்தான்!
இப்படித்தான், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், எதிர்பாராமல், வார நாட்களை விட ’பிசி’யாகி விடும்! ஓய்வில்லாமல் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதைப்போன்ற உணர்வு வந்து சோர்வைத்தரும்!
சனிக்கிழமை காலையிலேயே (அரை நாள், முழுநாள் வேலை இருந்தாலும், வாரத்தின் கடைசி வேலை நாள் என்பதால்!) ஹாலிடே மூட் வந்துவிடும். இப்போதெல்லாம், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலையே “வீக் எண்ட்” சிண்ட்ரோம் பிடித்துக்கொண்டு விடுகிறது ! அத்துடன் வெள்ளிக்கிழமையோ, திங்கட்கிழமையோ விடுமுறையானால், ’லாங்க்’ வீக் எண்ட் – ரயில், பஸ்களில் ஒரு அவசரத்துக்குக்கூட இடம் கிடைக்காது!
சிலருக்கு, சண்டே செய்வதற்கென்றே சில கடமைகள் இருக்கின்றன – துணிகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும், புத்தக அலமாரியைச் சரி செய்து, அடுக்கி வைக்கவேண்டும், அங்கங்கே இறைந்துகிடக்கும் பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் (ஒரு வாரமாய்த் தேடிக்கொண்டிருந்த ஸ்டேப்ளரோ, பால்(B) பேனாவோ கண்ணில்படும் அதிர்ஷ்டம் இருக்கிறது!), மதியம் கொஞ்சம் தூங்க வேண்டும் (பகலில் தூங்குவது கெடுதல் என்றாலும் ஞாயிறு பகல் மட்டும் விதி விலக்கு – வார நாட்களில் ஆபீசில் பகலில் தூங்குவது இவ்விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது!) – இப்படிப் பல திட்டங்கள் இருந்தாலும், ஒன்றும் நிறைவேறாமல், ‘சட்’டென வழுக்கி ஓடி விடும் சண்டேக்களே அதிகம்! அன்று மட்டும் கடிகாரம் டபுள் ஸ்பீடில் ஓடுமோ தெரியாது!
இரண்டு மூன்று வேலைகள் வரிசைகட்டி நிற்கும்போது, எதை முதலில் செய்வது, எங்கே தொடங்குவது என்ற யோசனையிலேயே, ஞாயிறு முழுவதும் தீர்ந்து விடுவதும் உண்டு!
அறுபது, எழுபதுகளில் – பள்ளிக்கூட நாட்களில் – ஞாயிறு அவ்வளவாக ரசிக்காது – வார நாட்களில் பள்ளிக்கூடத்தின் கொட்டங்கள் ருசிகரமானவை!
கல்லூரி நாட்களில், பையில் சில்லரை தேறாது; இருந்தாலும் நண்பர்களுடன் கூட்டமாக ஊர் சுற்றுவதில் சிக்கல்கள் இல்லை!
பையில் பத்து ரூபாய் இருந்தால் போதும், அந்த நாளைய சண்டே, ”ஸ்பெஷல்”தான்! காலை பாண்டிபசார் சாந்தா பவனில் ஒரு டிபன் – தக்காளி சட்னியுடன்! இரண்டு ரூபாய்க்குள் காபியுடன் நல்ல டிபன் கிடைத்த காலம் அது!! பஸ்ஸில் ஸ்டேஜுக்கு 4 பைசா வீதம் ஒரு ரூபாயில் மெட்ராஸைச் சுற்றி வரலாம்! ஃப்ரெண்ட்ஸ் வீடு, அரட்டை, பின்னர் லஞ்ச் (3 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு எல்லா மெஸ் / ஓட்டல்களிலும் கிடைக்கும்!) – சாந்தி தியேட்டர் மாதிரி பெரிய தியேட்டரில் மாட்டினீ ஷோ (ரூ1-75 க்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட்!), மாலை மெரீனாவில் இலவசக் காற்று ( சுண்டலுக்குக் காசு இருக்கும்!), மோர் சாதம் சாப்பிட வீட்டுக்கு வந்து விடலாம்!
இப்போதெல்லாம் சண்டேஸ் மிகவும் பிஸி – ஏதாவதொரு கூட்டம், ஒரு விழா, ஒரு சினிமா, ஏதாவதொரு ஓட்டலில் டின்னர் என வீடுகளில் சமையலுக்கும் விடுமுறை – வேண்டியதுதான்.
காலையில் சர்ச்சுகளிலும் / கோயில்களிலும் விசேஷக் கூட்டங்கள்! எல்லா கடவுளும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரொம்ப பிசி – ஓவர்டைம் செய்து அருள்பாலிக்கும் சூழ்நிலை!
வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில், எதைக் காண்பித்தாலும், பார்த்தே தீருவது என்ற சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், சினிமா விருது வழங்கும் விழா, சிறந்த குத்தாட்டப் போட்டி, இசைப் போட்டி, முன்னமேயே முடிவு செய்த விவாதங்கள், வந்து போனது தெரியாத திரைப்படங்கள், வெந்தும் வேகாத சமையற் குறிப்பு நிகழ்ச்சிகள், காமெடி என்ற பெயரில் அழவைத்து வேடிக்கை பார்க்கும் துணுக்குகள் என எதையாவது பார்த்துத் தொலைக்கும் சண்டேக்கள் !
கிரிக்கெட், ஃபுட் பால் என மேட்ச் இருந்து விட்டால் அந்த சண்டே தெருவில் ஈயாடும்!
காபி கொடுத்து, அவன் கொடுத்த இன்விடேஷனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு நண்பனை அனுப்பி வைத்தேன். மூன்று வாரமாக என்ன எழுதுவது என்று தெரியாமல், கடைசி நாள் வரை (அது நேற்றே போய்விட்டது!) திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல முழித்துக்கொண்டிருந்தேன் –
கலைந்து கிடக்கும் புத்தகங்களும், துணிகளும், சிடிக்களும் என்னை பயமுறுத்தின –
பேப்பர்க்காரன், பால்காரன்(ரி), ஜுரத்துடன் வாட்ச்மேன், தர்மம் கேட்டு மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர், ஃப்ரிஜ் மெகானிக் – தொடர்ந்து அடித்த காலிங் பெல்லைக் கழற்றி எறிந்து விடலாமா என்று நினைத்த வேளையில்,
செல் போன் அடித்தது – “ஃப்ரீயா இருக்கியா? இப்போ வரலாமா? ஒரு அவசரம்” – வேறொரு நண்பர்.
என்ன சொல்வது நான்?