குவிகம் நவம்பர் 2015 இதழில் வழக்கம் போல 25 பக்கங்கள் இருக்கின்றன !
நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து செல்லும்போது உங்களுக்கு சில பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older post என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப் பக்கங்களையும் பார்க்கலாம்.
பக்கத்தின் நடுவில் ” keep reading” என்று மெசேஜ் இருந்தால் அதைக் க்ளிக் செய்தால் முதலில் படித்ததன் தொடர்ச்சி கிடைக்கும்.
archieve menu இல் குறிப்பிட்ட மாதத்தைச் சொடுக்கினால் அந்த மாத இதழில் 25 பக்கங்களையும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் !
“யார் மூஞ்சிலடா முழிச்சே. தினமும் என் மூஞ்சில தானே முழிப்பே ! நேத்து ஒரு நாள் நான் என் மாமா வீட்டுக்குப் போனபோது என்ன பண்ணினே ?”
“எல்லாம் அந்த HR மேடம் மூஞ்சில தான் முழிச்சேன் !”
“டேய் மாப்ளே! என்னடா சொல்லற? அப்ப ராத்திரி அவ கூட தான் படுத்துகிட்டிருந்தியா?”
“அடசே ! ரூமில நாம என்னிக்காவது முழிச்சிருக்கோமாடா? அப்படியே கண்ணை மூடிக்கிட்டே பல்லைத் தேய்ச்சுட்டு ஆபீஸ் பஸ்ஸில தூங்கி ஆபீஸ் வந்துதும் முழிக்கிறோமே அது தானேடா ரியல் முழிப்பு !”
“நான் உன்கூட தானடா பஸ்ஸில வந்தேன். ஏன் உன்னை எழுப்பலே?”
“லூசு! அது நான் கேட்க வேண்டிய கேள்வி ! அந்த மாங்கா – அவன் தாண்டா நம்ம பாஸ், யாருகிட்டேயோ போனில மாம்ஸ் அப்படின்னு பேசிக்கிட்டு இறங்கினான். நீ லூசு மாதிரி ராம்ஸுன்னு உன்னைக் கூப்பிடறதா நினைச்சுக்கிட்டு அவன் பின்னாடியே ‘யெஸ் பாஸ் யெஸ் பாஸ் ’ னு ஓடினியே ! அப்பத் தான் அந்த HR மாமி என்னைத் தட்டி எழுப்பி ’ நேத்திக்கு ஹேங்க் ஓவர் இன்னும் போகலையான்னு கேட்டுட்டுப் போறாடா? ”
“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு மச்சி! நேத்து நான் இல்லாதபோது நிலவேம்பைக் குடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு நான் வைச்சிருந்த ‘அரிஸ்டோகிரெட்டை ’ ராவா அடிச்சிட்டியா?”
“போடா ! நேத்து ராத்திரி தூக்கத்தில ஒரு கனவு கண்ணா! ஒரு பொண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டாடா?”
“அதில்லேடா! ஒரு அழகான பொண்ணு ! என்னைப் பாத்த முதல் பார்வையிலேயே ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கிறா?”
“அப்ப இது பேய்க்கனவு தாண்டா ! அதுக தான் இப்படி அலையும் !”
“சே! சே! பேய் எல்லாம் இல்லடா ! நல்ல லட்சணமா ரெட் கலர் சாரி கட்டிட்டு வந்தா! ஆனா முகம் மட்டும் தெரியலைடா !”
“ அப்ப அது அந்த மிஸ் ஓ.எம்.ஆர். ஆக இருக்கும் !”
“யாருடா அந்த அழகு ராணி மிஸ் ஓ.எம்.ஆர். ?
வேற யாரு உன்னோட HR குவீன் தான். அவ ஒரு தடவை ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்குப் போனாளா? அப்ப அங்கேர்ந்து கான்பிரன்ஸ் கால்ல கூப்பிட்டு ’ ஐ மிஸ் ஓ.எம்.ஆர். ! ஐ மிஸ் ஓ.எம்.ஆர்! அப்படின்னு நூறு தடவை சொன்னாளாம். அதிலிருந்து அவளுக்கு இன்னொரு பெயர் மிஸ் ஓ.எம்.ஆர்.”
“ போடா! அந்த லிஸ்டை சிஸ்டத்தில பத்து தடவை பாத்துட்டேன். அதில என்னை டிஸ்டர்ப் பண்ணினவ இல்லேடா”
“ ஏண்டா! ஒருவேளை இந்த பார்க்காம காதல், பேசாம காதல்,கேக்காத காதல் தொடாம காதல் இந்த மாதிரி ஏதாவது இண்டர்வியூவுக்கு வராத பொண்ணை லுக் விட்டிருப்பியோ?”
“ ஏய்! ரைட்டா! கையைக்கொடு! இண்டர்வியூவுக்கு வராத பொண்ணு தான் என் கனவில வந்திருந்தா! அவ தான் அந்த சிவப்பு சாரிக் காரி. ”
“ என்னடா உளர்ரே? ”
“ கண்ணா! நேத்திக்கு என்கிட்டே கொடுத்த லிஸ்டில மொத்தம் ஒன்பது பேர் இருந்தாங்க! நான் சிஸ்டத்தில ஒன்பது பேரைப் பாத்தேன். அதில ஒண்ணு தான் அந்த சிவப்பு சாரி. ஆனா இண்டர்வியூவுக்கு எட்டு பேர் தான் வந்தாங்க !. இவ மட்டும் வரலை”
“பிரதர், வராதவங்க டீடைல்ஸ் எல்லாம் HR கிட்டே தான் இருக்கும். நீ வேணுன்னா நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் வாங்கிக்கோ! டேய்! என்ன சொன்னே ! ரெட் சாரியா? டேய் நானும் நேத்திக்கு அந்தப் பொண்ணை HR ரூமில பாத்தேண்டா ! ஒருவேளை உன் மூஞ்சியைப் பாத்துட்டு இந்தக் கம்பெனியே வேண்டாமுன்னு போயிட்டாளோ என்னவோ? ”
“ நீ அவ முகத்தைப் பாத்தியாடா? எப்படி இருந்தா? ”
“ சாரி மச்சி! எனக்கும் முதுகு தான் தெரிஞ்சுது. முதுகு ஓகே! முகத்தைப் பாக்கலாமுன்னு மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போனேன். என் போராத நேரம் , அப்பவும் என் கையிலே காபி கப் இருந்தது. மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டேயே வராதேன்னு கண்ணாலேயே மிரட்டினா! நேரா திரும்பிட்டேன்.”
“ சரி, நீ இங்கேயே இரு. நான் மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் அவளைப் பத்திய தகவலைப் பிடிச்சிட்டு வர்றேன்”
“ ஏண்டா! ரைட் அபௌட் டர்ன் அடிச்சு உடனே வர்ரே! எனக்குப் புரிஞ்சுது! நீ போய் அவ கிட்டே ரெட் சாரி வேணும்னு கேட்டிருப்பே ! அவ இன்னிக்கு ரெட் சாரி .கட்டியிருக்கா! பளார்னு அறைஞ்சு அனுப்பியிருப்பா? சரியா? ”
“ போடா! இடியட் ! மிஸ் ஒ.எம்.ஆர். சீட்டில காணோம். வர இன்னும் ஒன்றரை மணிக்கூர் ஆகும்னு அந்த மலையாள அசிஸ்டெண்ட் பறஞ்சுது. ”
“ ஒ! ஓமனக்குட்டியா ? தப்பா நெனைச்சுக்காதே! பேரே அப்படித் தான். அட! புரிஞ்சு போச்சு! நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். எங்கே போயிருக்குன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு என்ன கிழமை?
” அதுக்கும் கிழமைக்கும் என்னடா சம்பந்தம்? “
” இன்னிக்கி செவ்வாய்க் கிழமை. சாயங்காலம் மூணு முதல நாலரை வரை ராகு கால பூஜை பக்கத்தில இருக்கிற துர்க்கை கோயில்ல நடக்கும். கல்யாணம் ஆகணுமுன்னு வேண்டிக்க நிறைய பெண்கள் அங்கே போவாங்க!. மிஸ் ஒ.எம்.ஆர். சிவப்புப் புடவை -ராகு காலம் – ஒண்ணும் அரையும் ஒண்ணரை.“
” உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? “
“நானும் அங்கே போயிருக்கேன். முறைக்காதே! அங்கே வந்திருக்கறதில ஏதாவது நமக்குத் தோதாகுமான்னு பாக்க!நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். வர்ரதைப் பாத்தப்புறம் அந்தப் பக்கமே போகிறதில்லே!”
“இந்த ரெட் சாரியை விடுடா? நம்ம ரெட் சாரி மேட்டருக்கு வாடா? ”
“என்ன என் ரெட் சாரியைப் பத்தி ஏதாவது காமெண்டா?” என்று கேட்டுக் கொண்டே மிஸ் ஒ.எம்.ஆர். என் கிட்டே வந்தாள். இவன் சாரின்னு இடத்தை விட்டே ஓடிட்டான்.
“ என்னது? சாரியா? இது வேற சாரி மேடம்! இவன் இன்னைக்கும் காபியை என் டேபிள்ள கொட்டிட்டானாம். அதுக்குத் தான் சாரி கேட்டுட்டுப் போறான். ”
“ எப்படித் தெரியும்? ஒ! நேத்திக்கு அவ வந்து என் கிட்டே பர்மிஷன் கேட்ட போது பாத்தீங்களா? ”
“ சிஸ்டத்தில புரபைலில் பாத்தது தான்”
“ எனக்கு ஒரு அர்ஜண்டான வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்ரதுக்கு ஒண்ணரை மணி நேரம் ஆகும். அதனால நீங்களே சோலாவா இண்டர்வியூவை முடிச்சுட்டு ரிபோர்ட் அனுப்பிடறீங்களா? ”
“ஓகே மேடம்!”
“என்னை மிஸ் ஒ.எம்.ஆர்.என்றே கூப்பிடலாம் . அது எனக்குப் பிடிச்ச பட்டப் பெயர் தான்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
நானும் வழிந்து கொண்டே என்னை டிஸ்டர்ப் செய்த பெண்ணை இன்டர்வியூ செய்ய ஆவலுடன் சென்றேன்!
இன்றைக்கும் அவள் சிவப்பு சாரியில் தான் வந்திருந்தாள். ‘சிவப்பு தான் இவளுக்குப் பிடிச்ச கலரோ?’ இல்லே இருப்பது ஒரே ஒரு சிவப்பு கலர் சாரி தானா என்று நினைத்துக் கொண்டே கேட்டேன்.
கமல் என்ற யானையை வைத்துக் கொண்டு யானைப் படையே அமைக்கலாம். அல்லது பட்டத்து யானையாகவோ கோவில் யானையாவோ அலங்கரித்திருக்கலாம். இல்லையென்றால் தேக்கு மரக் காட்டையே இழுக்கச் சொல்லியிருக்கலாம். .
அதையெல்லாம் விட்டுவிட்டு செல்வா யானையை வைத்துக் கொண்டு ரோட்டில வித்தை காட்டுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. ஸ்கிரீன் பிளே கமல் தான். யானை தன் தலையிலேயே ……..
ஒரு ராத்திரியில நடக்கிற ஸ்பீட் படம் இது சந்தேகமேயில்லை.(அது தான் சாமி தூங்காவனம்!) ‘இங்கிலீஷ் படம் படம் மாதிரி போகுதில்லே’ என்று பக்கத்தில் இருந்தவர் சொல்லும் போது படமே இங்கிலீஷ் ( இல்லே பிரேஞ்சோ?) படத்தின் ரீமேக் என்ற பாணியில் அவர்களே டைட்டிலில் போட்டது நினைவுக்கு வந்தது.
பட ஆரம்பத்திலேயே கமலின் வயித்தில ஒரு வில்லன் கத்தியாலே கீசிடறான். அவர் படம் முழுதும் வயித்தைப் பிடித்துக் கொண்டே ஓடறார்.. குதிக்கிறார்… முத்தம் கொடுக்கிறார்…(சாரி திரிஷாவுக்கு இல்லே)… சண்டை போடறார்.(திரிஷா கூட ) ..சென்டி டயலாக் கொடுக்கிறார்-.. ஜோக் அடிக்கிறார்… கார் ஒட்டறார்…
இயற்கையா இருக்கணும்னு நிறைய சொதப்பறார். நிறைய அடி வாங்குகிறார். திட்டு வாங்குகிறார்.கொஞ்சம் மச மசன்னு இருக்கார். அவருடைய படங்களில் ஒரு சின்ன புத்திசாலித்தனம் இருக்கும் அதுக்காக அவர் படம் பாக்கப் பிடிக்கும். அது இதிலே மிஸ்ஸிங் . ஒருவேளை அது தான் அவருடைய புத்திசாலித் தனமோ?
பாபநாசத்தில அடி வாங்கலாம். ஆக் ஷன் ஹீரோ அடி மேல் அடி வாங்கலாமா?
மற்றவர்களைப் பற்றி – கதையைப் பற்றி சொல்லப் பெருசா ஒண்ணும் இல்லை.
“ டாக்டர்..
என்ன சொல்றீங்க..?
என்று கேட்டான் நாவரசு பதற்றத்துடன். அவன்
மனைவி மேகலை கவலையோடு அருகில் நின்றிருந்தாள்.
அந்த ஐந்து
மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது டாக்டர் செல்வராகவனின் கிளினிக்.
“ ஐ ஆம் ஸாரி..
மிஸ்டர் நாவரசு.. காயம் என்னவோ சின்னக் காயம்தான். பட்.. ஓபன் வூண்ட்.. உங்க வைஃப் நன்றாகக் கழுவி
ரெண்டு நாளா காயத்தை டிரஸ் செய்து கொண்டிருந்தது வாஸ்தவம்தான். ஆனா காயம் இன்ஃபெக்ட் ஆயிருக்கு. அது எத்தனை தூரம் புரையோடி இருக்குன்னு பார்க்கறதுக்கு
சில டெஸ்டுகளுக்கு எழுதித் தரேன். செக் பண்ணி ரிப்போர்ட் கொண்டு வாங்க.. அப்புறம்
அதன்படி மருந்து கொடுக்கலாம். இப்போ பெயின் கில்லரும் ஜெனரல் ஆன்டிபயாடிக்கும்
எழுதித் தரேன். இட் வில் டேக் கேர் ஃபார்
தி டைம் பீயிங்..” என்று கூறியபடியே ஒரு பேப்பரில் அரைப் பக்கத்துக்கு டெஸ்டுகளும், இன்னொரு பேப்பரில் சில மருந்துகளும் எழுதிக் கொடுத்தார்
டாக்டர்.
“ ஆனால் எப்படி
டாக்டர்… இதோ பாருங்க இந்த பஞ்சாலதான் அவனுடைய காயத்தைக் க்ளீன் பண்னினேன்”
என்று ஒரு பஞ்சு ரோலை எடுத்து நீட்டினாள் மேகலை.
அதைப் பார்த்த
டாக்டரின் கண்களில் ஒரு மின்னல்.
“ ஒரு
நிமிடம்.. இங்கே வாருங்க நாவரசு..” என்று அழைத்தபடியே அந்த கிளினிக்கின் ஒரு
மூலைக்குச் சென்றார் டாக்டர். அங்கு ஒரு
மேஜையில் ஒரு மைக்ரோஸ்கோப்பும்,
டேபிள் லாம்பும் இருந்தன.
அந்த டேபிள்
லாம்ப் ஸ்விட்ச்சை ஆன் பண்ணிய டாக்டர், அந்த பஞ்சு ரோலின் ஒரு பகுதியைப் பிய்த்து அந்த விளக்கு வெளிச்சத்தில் காட்டியபடி
உன்னிப்பாகப் பார்த்தார்.
அதைப்
பார்த்துக் கொண்டிருந்த நாவரசு, “
பாருங்க டாக்டர்.. இட் ஈஸ் வெரி க்ளீன்.. பாக்டீரியா ஒன்றும் தென்படவில்லையே.”
என்றான்.
“ ஒன் மினிட்..”
என்றவர் அந்த பஞ்சை மைக்ரோஸ்கோப் லென்ஸின் அடியில் வைத்துப் பார்த்தார்.
சாதாரணக் கண்
பார்வைக்குத் தெரியாத பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன.
“ கம் ஆன்..
இப்பப் பாருங்க” என்று நாவரசையும் அழைத்துக் காட்டினார்.
மைக்ராஸ்கோப்
வழியாகப் பார்த்தவன் திடுக்கிட்டுப்போய் நின்றான். “ எப்படி.. டாக்டர்.. இந்தக் கம்பெனி, நல்ல கம்பெனி
ஆச்சே.. இது எப்படி சாத்தியம்” என்றான் நாவரசு.
“ எனக்கு வர
கேசஸ்லே திஸ் ஈஸ் நாட் தி ஃபஸ்ட் கேஸ்.
காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு.
திஸ் ஈஸ் எ ராக்கெட்..
ஆஸ்பத்திரியிலே உள்ள அஸிஸ்டென்டுகளைக் கையிலே போட்டுக் கொண்டு, அங்கு டாக்டர்கள் யூஸ் பண்ணிய பஞ்சை மலிவாக வாங்கிக்கிறாங்க இந்த கூட்டம். அந்த அஸிஸ்டென்டுகளும் விளைவு தெரியாம, ‘ என்ன ஆயிடப் போறது.. அவர்கள் சுத்தம் செய்துதானே விற்கப் போறாங்க’ என்று சில சில்லரைக் காசுக்கு ஆசைப்பட்டுக் கொடுத்திடறாங்க.
இவங்க அந்தப் பஞ்சை மேல்வாரியா சுத்தம் செய்து பெயர் பெற்ற கம்பெனியின் பெயரில்
டியூப்ளிகேட் பேக் செய்து விற்றுடராங்க. ஏதோ, ஒரிஜினலாக, அதிகம் வீரியம் இல்லாத பாக்டீரியாக்கள், வைரஸ்களை க்ளீன் செய்த பஞ்சாக இருந்தால் இந்த டியூப்ளிகேட்
பஞ்சு யூஸ் பண்ணறவங்களை அதிகம் பாதிப்பதில்லை… பட், வீரியம் மிக்க வைரஸும்,
பாக்டீரியாக்களும் உள்ள பேஷன்டை க்ளீன் பண்ணிய பஞ்சு என்றால் … மை காட்.. ஐ
கான்ட் இமாஜின்..”
நாவரசின்
தண்டுவடத்தில் ஜிலீரென்றது.
“ இன்னொரு
விஷயம் தெரியுமா? இந்த வைரஸ் ஆர் பாக்டீரியாக்கள் இன்னொருத்தருக்குப்
போகக் கூடாதென்றுதான் டிஸ்போஸபிள் ஸிரிஞ்சை யூஸ் பண்ணறோம். ஆனா, அதிலே கூட இந்த ஆஸ்பத்திரியில் உள்ள அசிஸ்டென்டுகள் செய்யும் கொடுமை இருக்கே…
நார்மலி, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்ஸ், நியூ ஸிரிஞ்சை எடுத்து மருந்தை நிறைத்து இஞ்செக்ஷன்
கொடுப்பதற்கு அசிஸ்டென்ட் ஹெல்ப் எடுத்துக்கறாங்க. ஆனா அந்த அசிஸ்டென்ட்ஸ்
ஸிரிஞ்சை மாத்தறது இல்லே. ஒருத்தருக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சையே இன்னொருத்தருக்கும்
யூஸ் பண்ணிடறாங்க. ஆனால் நியூ ஸிரிஞ்சை
எடுத்து யூஸ் பண்ணியதா கணக்கில் எழுதிடறாங்க.
சில சில்லரைக் காசின் மீதுள்ள ஆசைக்காக, பட்.. அட்.. வாட்.. காஸ்ட் .. என்னுடைய கிளினிக்கில் இது நாலாவது கேஸ். ஆல் ரெடி போலீஸிலே ரிப்போர்ட் பண்ணி
இருக்கேன். தே ஷூட் ஹாவ் ஃபௌண்ட் அவுட்
ஸம்திங்க் பைதிஸ் டைம்..” என்று கூறியபடியே நாவரசன் மகன் காயத்துக்கு மருந்து
போட்டு டிரஸ் செய்ய ஆரம்பித்தார்.
தலை சுற்றியது
நாவரசுக்கு. அரசாங்க ஆஸ்பத்திரியில்
அசிஸ்டென்டாக வேலை பார்க்கும் அவன் டாக்டர் கூறியபடி, பேஷண்ட்ஸுக்கு யூஸ் பண்ணிய பஞ்சை வித்திருக்கிறான். ஒரு பேஷண்டுக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சை இன்னொரு
பேஷண்டுக்கு யூஸ் பண்ணுவதும்,
புது ஸிரிஞ்ச் யூஸ் பண்ணியதாகக் கணக்குக் காட்டுவதும் அவன் விஷயத்தில் சர்வ
சாதாரணம்.
இதைத்தான் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்வார்களோ..?
நான் செய்து வந்த அநியாயம்,
என் பையைனையே, சுற்றி விட்ட ‘பூமராங்’ துவங்கிய இடத்துக்கே வருவது போல், பாதித்து விட்டதோ’ என்ற கலவரத்தோடு அந்தக் கிளினிக்கின் ஜன்னல் பக்கத்தில் இருந்த நாற்காலியில்
அமர்ந்தான். ஜன்னல் வழியே அந்தக் கட்டிடத்தின் மெயின் கேட்டைத் தற்செயலாகப்
பார்த்தான்.
போலீஸ் வான்
அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது.
கம்ப்யூட்டர் , இன்டர்நெட் இவற்றை எல்லாம் தங்கள் பையன்கள் -பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வக் கோளாறுள்ள அப்பா ஒருவரின் கதை. அவர் தன் பையனுடன் நடத்தும் உரையாடலைக் கேளுங்கள்! உங்கள் வீட்டிலும் நடப்பது போலத் தெரிகிறதா? வீட்டுக்கு வீடு வாசப்படி!
ஹிந்தியில் இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள்! நன்றாகவே புரியும் !!
நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.
கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.
ஆனால் ஈஸ்வரனும் ரக்ஷித்ததாகத் தெரியவில்லை. நான் நானாகத்தானே இருக்க முடியும்!
அன்புடன், வெசா
இப்படித் துவங்குகிறது அவருடைய பிளாக் (BLOG )
http://www.vesaamusings.blogspot.com/
இவரைப்பற்றிச் சிலர்:
என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும்
அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின்
அபிப்ராயங்களை மதிக்கிறேன். – க.நா.சு
சாமிநாதனது பேனா வரிகள் “புலிக்கு
தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது” என்றபடி சகலத்தையும் பதம்
பார்க்கும் – சி. சு. செல்லப்பா
தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா
கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு
தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட
முடியும். – சுந்தர ராமசாமி
எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும்
கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின்
கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது
விமரிசனம் – கோமல் சுவாமிநாதன்.
, “வெங்கட் சாமிநாதன்: தமிழ் இலக்கியவெளியில் ஒரு காட்டுக் குதிரை” என்ற கட்டுரையில் திருமாவளவன், “வெங்கட் சாமிநாதனுக்கு முன் “விமர்சனமரபு” என்று சொல்லும்படியான ஒன்று இருந்ததா என்பது இன்றைய வாசகன் எதிர்கொள்ள வேண்டிய முதற் கேள்வி,
வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்தவர்
வெங்கட் சாமிநாதன் ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம்,
திரைப்படம், நாட்டார் கலைபோன்ற பல்வேறு துறைகளிலும்
ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும்
முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம்,
நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை வலியுறுத்தியவர்.
மார்க்ஸீய எழுத்தாளர்களும் , திராவிட எழுத்தாளர்களும் தமிழ் எழுத்துலகை ஆக்கிரமித்துக் கொண்ட போது , அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே குரல் இவருடையது தான். அதற்காக இவர் CIA ஏஜண்ட் என்றும் , முதலாளித்துவத்தின் கைக்கூலி என்றும் திட்டப்பட்டவர்.
இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற
திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு
மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அவருடைய புத்தகங்களான கலை அனுபவம் , வெளிப்பாடு இரண்டும் விமரிசனத்துக்கு விளக்கம் கூறும் அனுபவங்கள்.
கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம்
வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல்விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
அவரது வெளியீடுகள்:
இலக்கிய விமர்சனம்: (கட்டுரைத் தொகுப்புகள்)
1. பாலையும் வாழையும்: அன்னம் பதிப்பகம், (1976) 2. எதிர்ப்புக் குரல், அன்னம் பதிப்பகம்(1978) 3, என் பார்வையில், அன்னம் பதிப்பகம் (1982) 4. என் பார்வையில் சில கவிதைகள்: கலைஞன் பதிப்பகம் (2000) 5. என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்: கலைஞ்ன் பதிப்பகம்(2000) 6. சில இலக்கிய ஆளுமைகள்: காவ்யா பதிப்பகம் (2001) 7. பான்ஸாய் மனிதன்: கவிதா பதிப்பகம், (2001) 8. இச்சூழலில்: மதி நிலையம் (2001) 9. விவாதங்கள், சர்ச்சைகள்: அமுத சுரபி பிரசுரம்(2003) 10, ஜன்னல் வழியே: சந்தியா பதிப்பகம் (2005) 11. புதுசும் கொஞ்சம் பழசுமாக: கிழக்கு பதிப்பகம்(2005) 12. யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: எனி இந்தியன் பிரசுரம் (2006) 13. க்டல் கடந்து: விருட்சம் பிரசுரம்: (2006) 14. இன்னும் சில ஆளுமைகள்; எனி இந்தியன் பிரசுரம் (2006)
நாடக விமர்சனம்:
15. அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அன்னம் பதிப்பகம், (1985) 16. பாவைக் கூத்து அன்னம் பதிப்பகம்.(1986) 17. இன்றைய நாடக முயற்சிகள்: தமிழினி பிரசுரம்(2004)
திரைப்படம்
18. அக்கிரகாரத்தில் கழுதை {திரைப்பட பிரதி} (இரண்டாம் பதிப்பு: காவ்யா பதிப்பகம்(1997) 19. திரை உலகில் (திரை விமர்சனங்கள்) காவ்யா பிரசுரம்(2003)
கலை விமர்சனம்
20. கலைவெளிப்பயணங்கள்: அன்னம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு (2003) 21. கலை உலகில் ஒரு சஞ்சாரம்: சந்தியா பதிப்பகம்(2004) 22. சில கலை ஆளுமைகள், படைப்புகள்: சந்தியா பதிப்பகம் (2004)
தொகுப்புகள்
23. தேர்ந்தெடுத்த பிச்சமூர்த்தி கதைகள்: சாகித்ய அகாடமி (2000) 24. பிச்சமூர்த்தி னைவாக: மதிலையம்(2000) 25. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் ஒன்று, : சந்தியா பதிப்பகம்(2005) 26. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் இரண்டு: சந்தியா பதிப்பகம்(2005)
மொழி பெயர்ப்புகள்
27. A Movement for Literature: Ka.Naa.Subramaniam: சாகித்ய அகாடமி(1990) 28. தமஸ்: (நாவல்: ஹ’ந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி) சாகித்ய அகாடமி(2004) 29. ஏழாம் முத்திரை: (Ingmaar Bergman’s filmscript); (தமிழில்) : தமிழினி, (2001)
வாழ்க்கை விமர்சன குறிப்புகள்
30. வியப்பூட்டும் ஆளுமைகள்: தமிழினி (2004).
உரையாடல்கள்:
31. உரையாடல்கள்: விருட்சம் வெளியீடு, (2004)
விருது:
டோரண்டோ பல்கலைக் கழகமும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து அளிக்கும வாழ்நாள் சாதனைக் கான இயல் விருது 2003.
வெங்கட் சாமிநாதன் 80 வயது பாராட்டு விழாவும் , வம்சி பதிப்பகம் வெளியிட்ட, வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “சினிமா என்ற பெயரில்” நூல் வெளியீட்டு விழாவும் 2013 இல் நடைபெற்றது. இந்திரா பார்த்தசாரதி, வெளி ரங்கராஜன், கணையாழி ராஜேந்திரன், சச்சிதானந்தம், பாரதி மணி, சுகா, சீனு ராமசாமி, செங்கதிர், திலிப் குமார், க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோர்
நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பித்தவர்கள்.
அக்கிரகாரத்தில் கழுதை:
ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக் குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இல்லாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ ‘கெடுக்கப்பட்டு’ கர்ப்பமாகிறாள்.
லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று முடிவுகட்டிக் கழுதையைக் கொன்று விடுகின்றனர் . ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.
“ The Walk “ என்ற படத்தைத் தவற விடாமல் பாருங்கள். டிரைலர் மேலே! விமர்சனம் கீழே!
கயிற்றில் நடந்து வித்தை காட்டும் ஒருவனுக்கு நியூயார்க் நகரத்திலிருக்கும் 100 மாடிகள் உயரம் கொண்ட WORLD TRADE CENTER இன் இரு கட்டடத்துகளுக்கிடையே கயிற்றில் நடக்க வேண்டும் என்பது கனவு.
சட்டப்படி முடியாது என்றாலும் சட்டத்தை மீறி நாலைந்து நண்பர்களின் உதவியால் இரவில் கயிற்றைக் கட்டிவிட்டுவிடுகிறான். காலைப் பொழுது விடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் போது ஒரு டவரிலிருந்து இன்னொரு டவருக்குக் கையில் குச்சியுடன் நடக்கிறான். போலீஸ் ஒரு டவரின் முனைக்கு வந்து அவனைப் பிடிக்கக் காத்திருக்க முனை வரைக்கும் வந்த அவன் திரும்ப அடுத்த முனைக்குச் செல்கிறான். இப்படி நாலைந்து முறை நடக்கிறான். நடுவில் பார்க்கும் மக்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்கிறான். கயிற்றிலேயே சற்று நேரம் படுக்கவும் செய்கிறான்.
இதெல்லாம் நடக்கிற கதையா என்று கேட்கிறீர்களா ?
உண்மையில் ஒருவன் நடந்ததைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். அவன் கயிற்றின் நுனிக்கு வரும் போது நாமும் சீட்டின் நுனிக்குப் போகிறோம்.
அது தான் படத்தின் வெற்றி. அருமையான படம். விடா முயற்சிக்கு இதை விடச் சிறந்த படம் இல்லை.
(அந்த WORLD TRADE CENTER தான் பிற்பாடு செப்டம்பர் 11, 2002 இல் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இன்று அதே இடத்தில் அதை விடச் சிறந்த 102 மாடி டவர் – FREEDOM TOWER என்ற பெயரில் கட்டியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்,)
இந்தியாவின் சரித்திரம் சரியான ஆதாரப் பூர்வமான விவரங்கள் கிடைக்கப்படாத காரணத்தால் மிகவும் தடுமாற்றத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னால் எழுத்து வடிவான சரித்திர ஆதாரங்கள் எதுவும் அகப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய ஆதிக்கத்துக்குப் பின்னால் பாரசீக எழுத்தாளர்கள் எழுதியவை இந்திய வரலாற்றை ஓரளவு நேர்த்தியாகக் கோர்க்க உதவியுள்ளன.
இருப்பினும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற சரித்திர ஆய்வுகள் பெரும் தகவல்களைத் தந்துள்ளன. நாணயங்கள், பிரகடனங்கள், கல்வெட்டுகள், காப்பியங்கள், மத நூல்கள் என்று பல்வித சான்றுகள் கிடைத்துள்ளன.
மன்னர்கள் எழூப்பிய அரண்மனைகள், கட்டிடங்கள், கோவில்கள், பல சரித்திரக் குவியல்களாகும். பதினொன்றாம் நூற்றாண்டில் சோழமன்னன் ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் ஒரு மாபெரும் சரித்திரச் சுரங்கம். அந்தக் காலத்து வாழ்வுமுறை, மன்னர்களின் படையெடுப்பு, அரசுமுறை போன்றவை அதன் மூலம் அறியமுடிகிறது.
மௌர்யர், குப்தர், ஹர்ஷவர்த்னர் என்று பெரும் வம்சாவளிகள் இந்தியாவில் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டு வந்தனர். இவர்கள் ஆண்ட காலத்தில் பெரும் நகரங்களாகத் திகழ்ந்தவை பாடலிபுத்ரம் மற்றும் கன்னோசி. இவற்றைப் பற்றிய முழு ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படையெடுப்பினாலும், குறிப்பாக இஸ்லாமியப் படையெடுப்பினால், பல நகரங்கள், ஆலயங்கள் , கோட்டைகள் ,கட்டடங்கள் அழிந்தன என்றாலும் இன்றும் அழியாமல் எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. எனினும் அவைகள் அந்த சாம்ராஜ்யங்களைப் பற்றிய தகவல்கள் எவற்றையும் தரவில்லை.
இவற்றைக் கூறுவதின் நோக்கம் இந்த இந்திய சரித்திரச் சித்திரம் கிடைத்த ஆதாரங்களை வைத்தே சில ஊகங்களுடன் வரையப் பட்டுள்ளது. எதிகாலத்தில் வேறு பல ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். அவை வரலாற்றின் போக்கையே மாற்றவும் கூடும்.
இந்தத் தொடர் கட்டுரைகள் இணைய தளம் , சரித்திர ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் இந்திய வரலாற்றின் ஒரு காலப் பகுதியை விளக்கும். சிந்து சமவெளிமுதல் நேற்றைய இருபதாம் நூற்றாண்டு வரை நிகழ்வுகள் தொகுக்கப்படும்.
இந்த வரலாற்றுப் பதிகத்தின் முக்கியக் குறிக்கோள்கள்:
காலக்கிரமமாக நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறுவது
சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தருவது
சொந்த சரக்கைச் சேர்க்காமல் சரித்திர அறிஞர்கள் கூற்றை அப்படியே பிரதிபலிப்பது
ஆர் சூடாமணி உளவியல் எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். ஏராளமான புதினங்களும்
சிறுகதைகளும் எழுதிவந்தவர். எல்லா மாத வார இதழ்களும் இவரது படைப்புகளால்
அலங்கரிக்கப்பட்டன. சூடாமணி ராகவன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும்
எழுதியிருக்கிறார். சிறந்த நீர்வண்ண ஓவியரும் கூட. இவரது பாட்டி ரங்கநாயகி
அவர்களும், சகோதரி ருக்மணி பார்த்தசாரதி
அவர்களும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள். இவரது இன்னொரு சகோதரி பத்மாசனி
நன்கறியப்பட்ட மொழிபெயர்ப்பாளார். எழுத்தாற்றல் மற்றுமின்றி,
மனத்திண்மை,
தீர்க்கதரிசனம்,
பெருநோக்கு,
சேவை
போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தனது
சொத்துக்களை தர்ம நிறுவனங்களுக்குக் கொடையாக அளித்துள்ளார். கலைமகள் வெள்ளிவிழா
விருது, இலக்கிய சிந்தனை ஆண்டு விருது ஆகியவை இவர் பெற்ற குறிப்பிடத்தக்க
விருதுகள் ஆகும்.
இவரது கதைகள் ஆரவாரமில்லாத
குடும்பப் பின்னணியில் அமைந்தவை. மனிதாபிமானமும், உளவியல் நோக்கும், நேர்மறை
எண்ணங்களும் (possitve thinking) உள்ளடக்கிய சிறந்த கதைகள் இவரது சாதனை.
இவரது வீம்பு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.
அப்பாவை ரேஷன் கடையில் பார்த்ததுமே பகீரென்றது இளைத்துத் துரும்பாயிருந்தார். நாலே
மாதங்களில் இவ்வளவு வித்தியாசமா?
தந்தையின் எதிர்ப்பை மீறி
வேறு ஜாதிப் பெண்ணை மணமுடிக்க விரும்பியதால், உனக்கு ‘அவள் வேண்டுமா இல்லை நான்
வேண்டுமா?’, ‘இனி நீ எனக்கு மகனுமில்லை. நான் உனக்கு அப்பனுமில்லை’ என்று ‘வெளியே போ’ என்று விரட்டப்பட்ட மகன் சங்கர்.
தந்தை ரேஷன் கடையில் தட்டுத்
தடுமாறி பொருட்கள் வாங்குவதை பார்த்துவிடுகிறான். நான்கு மாதங்களுக்கு
முன்பெல்லாம் ரேஷன் கடை சென்றுவருவது அவன்தான்.
பெற்றோரைப் பிரிந்து,
விரும்பிய பெண்ணை மணந்தாலும் சங்கருக்கு மன அமைதி
இல்லை.
‘உங்களைப்
பார்க்க வேண்டும் என்று எப்படித் துடித்திருக்கிறேன்? பார்த்தால் எங்கே உடைந்து போய்விடுவேனோ என்பதனாலேயே இந்தக்
கீழ்ப்பாக்கம் வட்டாரத்துக்கு வரக்கூடாது, உங்களைப் பார்க்க நேர்ந்துவிடக் கூடாது
என்று எப்படி என்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கிறேன்’
அவன் மனைவியோ ‘இப்படி
வேதனைப்படுகிறீர்களே? அவங்கக்கிட்ட போக விரும்பினா அப்படியே போங்க. நான் தப்பா நினைக்க
மாட்டேன்’ என்கிறாள்.
கடைக்குள் அவர்
தடுமாறுவதையும், யாரோ மோதிவிட்டு ‘என்ன பெருசு, கண் தெரியலே?“ என்று
கேட்பதையும் பார்த்துவிட்டு, வேதனையுடன் அவர் கண்களில் படாமல் அங்கிருந்து
ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு
போய்விடுகிறான்
அப்பாவோ பார்த்து
விடுகிறார். ‘என்ன சௌக்யமாப்பா?’ என்று
ஒரு வார்த்தை கேட்டால் வாய் முத்தா சிந்திவிடும்? என்று எண்ணுகிறார்.
நாலு
மாசமாய் இவனைப் பார்க்காமல் என் கண் எப்படிப் பூத்துப்போய்விட்டது! இவன் அம்மா
தினமும் ராத்திரி அழுது ஓய்ந்து தூங்குகிறாள். சரியாத்தான் சொன்னார்கள், பெத்த
மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று
இவரும் நேரில்
பார்த்துவிட்டால் உடைந்துபோவோமோ என்னும் அச்சத்தில்தான் அவனிருக்கும்
வட்டாரத்திற்குப் போவதில்லையாம்.
கடையிலிருந்து வீட்டுக்கு
ரேஷன் பொருட்களைக் கொண்டுபோக ஒரு பையன் உதவி செய்கிறான்.
இவன் அம்மாவோ பார்த்துவிட்டு
வரச் சொல்லுகிறாள். மகன் ஒரு முறையாவது வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே.
எனக்காக இல்லாவிட்டாலும் அம்மாவிற்காக.
அவன் ஒருமுறை வளைந்து கொடுத்தால், ஒரு நல்ல நாள் பார்த்து மருமகளையும் அழைச்சுக்கிட்டு வீடு வந்து சேர்
என்று சொல்லமாட்டேனா? என்னைக் கண்டு கொள்ளாமலேயே ஸ்கூட்டரில் ஏறிப்
பறந்துவிட்டானே! என்றெல்லாம் எண்ணுகிறார்
தந்தை.
உதவிக்கு வந்த பையன்
சாமான்களை வராந்தாவில் வைக்கிறான். குளிர்ந்த மோர் கொடுக்கிறார். பையன்
கிளம்புகிறான். கொடுக்கின்ற காசை வாங்க மறுக்கிறான்.
"ரேஷன்
கடை வாசல்ல பழுப்புப் பான்ட் மஞ்ச சட்ட போட்ட ஒருத்தர் பஜாஜ் ஸ்கூட்டரிலே
வந்திருந்தார். அவர்தான் எனக்கு உங்களை அடையாளம் சொல்லி இருபது ரூபா பணம் தந்து
உங்க சாமான்களை வீட்டுக்குத் தூக்கிக்கிட்டு வந்து கொடுக்கும் படியாக
சொன்னார்”
பையன்
சொன்னது பிரக்ஞையில் பதியவில்லை. துக்கமும் மகிழ்ச்சியும் கலந்து வீசிய ஒரு திடீர்
சூறாவளியில் நான் அலைப்புண்டு அமிழ்ந்து கொண்டிருந்தேன்.
என்று
கதை முடிகிறது.
சூடாமணி அவர்களின் கதைகளில்
எளிய வார்த்தைகளில் எண்ண ஓட்டங்களும், வாழ்வின் சிக்கல்களும் அவற்றை அணுகும்
முறையும் மிகத் தெளிவாக இருப்பது காணலாம்.
இது தான் ஹேலோவீன் என்று சொல்லப்படும் நிகழ்ச்சியின் முக்கிய பங்கு.
முதலில் ஹேலோவீன் என்றால் என்ன? புனித மாலை என்றும் சொல்வார்கள்.
இது ஒரு அறுவடைத் திருநாள் அதாவது வெயில் காலம் முடிந்து குளிர் காலம் வருவதற்குத் தயார் செய்யும் காலம் . நம்ம ஊர் பொங்கல் போல.
இது ஒரு இறந்தவர்களை நினைக்கும் விழா. ( நம்ம ஊர் மாளய பக்ஷம் ஞாபகம் வருகிறதா? இதுவும் அதே சமயத்தில் தான் வருகிறது. அக்டோபர் 31 அன்று ). அன்றைக்குப் பாரம்பரிய கிறித்தவர்கள் கல்லறைக்குச் சென்று இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது வழக்கம். அன்றைக்கு மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். புரட்டாசியில் கவிச்சு கிடையாது. உலகில் 31 நாடுகளில் கொண்டாடப்படும் நிகழ்ச்சி இது..
நம்ம ஊரிலே பூசணிக்காய் இந்தச் சமயத்தில் ஏராளமாகக் காய்ப்பதால் அவற்றை வைத்துக் கொண்டு மக்கள் திருஷ்டி என்று அவற்றை வீணடிக்கிறார்கள்.
இங்கே பரங்கிக்காய் நிறையக் காய்ப்பதால் அதை வைத்துக் கொண்டு வித விதமான உணவு வகைகள் செய்கிறார்கள். இது ஒரு பறங்கித் திருவிழா கூட. ஆயிரக்கணக்கான பறங்கிக் காய்களை ஒரு இடத்தில் குவித்து அவற்றை வைத்து விளையாடி மகிழ்கிறார்கள்.
குழந்தைகளுக்கு இது ஒரு பயமுறுத்தும் தினமாக மாறிவிட்டது. .பட்டாசு , வெடி தீபாவளியில் வெடிப்பது போல. பூதம் பிசாசு ஆவி போல உடை அணிந்து மற்றவரை விளையாட்டாக பயமுறுத்துவது இதன் சிறப்பம்சம். பைசா தருகிறீர்களா அல்லது பயமுறுத்தட்டுமா? என்று குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் பேய் விளையாட்டு ஆடிவிட்டு வருவது இதன் சிற(ரி)ப்பு அம்சம். TRICK or TREAT என்று கேட்டுக்கொண்டு வரும் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து பயமுறுத்தலிலிருந்து மக்கள் தப்பிப்பார்கள்.
ஆக மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. சரி, அப்படியானால் யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் தோன்றுகிறதல்லவா? சாஸ்திரங்களிலும், கருட புராணம், கடோபநிஷத் போன்றவற்றிலும் கூறப்படும் மறுபிறவி, பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.
பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ (அதாவது செல்வந்தர் வீட்டு நாய்க்குட்டிகள் போல) வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் பிறவி எடுத்த அனைவரும், அதாவது நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது எனலாம். விஞ்ஞானப் படிப் பார்த்தால் பிரபஞ்ச சக்தி என்ற பரம அணுவிலிருந்து பிரிந்து வந்த அணு என்னும் துகள் மீண்டும் அந்தப் பரம அணுவோடு ஒன்றிணைவதே முக்தி அல்லது வீடு பேறு எனப்படுகிறது. உயிர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பிறவியில் அந்த நிலையை எய்தத் தான் போகிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை .
(கார்த்திகேயன் என்பவர் தன்னுடைய BLOG இல் “அந்த நிலையை எய்யத் தான் போகிறோம் ’ என்ற கட்டுரையில் எழுதியதன் சாரம் இவை)
இப்போது நமது வக்கீல் விக்டர் பௌத்த மதம் இந்த மரணத்திற்கு அப்பாலைப் பற்றி என்ன சொல்கிறது என்று விளக்குகிறார்.
பௌத்தக் கோட்பாடு:
பௌத்தமும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த உலக வாழ்வில் நமக்கு இருக்கும் ஆசையே இந்த ஜனன-மரண வட்டத்துக்குள் நம்மை தள்ளுகிறது என்கிறார் புத்தர். இந்தச் சுழலிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் ஆசையிலிருந்து மனிதன் விடுபடவேண்டும். நிர்வாணம் என்பது விடுதலை மட்டுமல்ல துறவும் கூட. எல்லாவற்றையும் துறந்தவன் விடுதலை அடைகிறான். இந்த விடுதலை பெறுவதே ஒவ்வொரு மனிதனின் தலையான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்துமதம் சொல்வது போல மனிதனிடம் அழிவற்ற ஆத்மா இருக்கிறது என்பதை புத்த மதம் ஒத்துக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு மனிதனிடமும் பழக்கம் , ஞாபகம், ஆசை, உணர்வு என்ற ஒரு மூட்டை உள்ளது. இவை மனிதனுடன் அடுத்தடுத்த ஜன்மங்களுக்கும் தொடர்ந்து போகின்றன. ’ நான்’ என்ற பொய்மை உணர்வை விட்டுவிடும் போது இந்த நினைவும் , தவிப்பும் மறைந்து அடுத்த ஜன்மம் வருவதற்கு வழியில்லாமல் போய்விடும். இது பிறவித் துன்பத்தையும் அழித்துவிடும்.
இந்தக் கருத்து இன்றைய மனிதனுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏனெனில், இந்தக் கருத்து நமது நிகழ் வாழ்க்கையை மோசமான ஒன்றாகக் காட்டுகிறது. நிர்வாண நிலையும் அவ்வளவு பிடித்தமானதாகத் தோன்றவில்லை.
திபெத்திய புத்த கொள்கைப்படி, இறந்தவனின் உயிர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட ‘பர்டோ’ என்ற ஒரு செயல்பாட்டில்
41 நாட்கள் இருக்கிறதாம். பர்டோ வாசம் முடிந்த பின் அடுத்த பிறப்புக்கோ அல்லது பிறப்பற்ற நிர்வாண நிலைக்கோ போகிறதாம்.
இறக்கும் மனிதனின் கடைசிகால ஆசைகளின் தன்மைகளே அவன் இறப்பிற்கு அப்பால் அமையும் நிலைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவை தான் அவனை நிர்வாண நிலைக்கோ அடுத்த பிறவிக்கோ உட்படுத்துகின்றன.
பர்டோவின் முதல் பயணம் மனிதன் இறந்ததிலிருந்து அரை நாள் முதல் நான்கு நாட்கள் வரை இருக்கும். இது இறந்தவனுக்குத் தன் உடல் தன்னிடமிருந்து பிரிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளும் காலமாகும். இறந்தவனுடைய மனம் ஒரு தூய வெள்ளை ஒளியை உணரத் தொடங்கும். ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட மனதுக்கு அந்த தூய ஒளி நன்றாகத் தெரிவதுடன் அதைத் தாண்டி உயர்ந்த நிலைக்குப் போகும் மார்க்கமும் தென்படும். சாதாரண மனிதன் அந்த ஒளியிலேயே விழுந்து விடுகிறான்.
இரண்டாவது பர்டோ நிலையில் இறந்தவன் அவனவன் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ற விளைவுகளைச் சந்திக்கிறான். பக்குவம் அடையாதவன் இன்னும் உடல் என்ற பந்தத்தில் விடுபடாதவனாக இருப்பான். அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப அவனுக்கு நல்லதும் கெட்டதும் இங்கு தான் நடக்கும். அவையெல்லாம் அவனுடைய உணர்வுகளின் மாயத் தோற்றமே தவிர வேறொன்று மில்லை. இறந்த மனிதன் அனைவரும் சலனமற்ற நிர்வாண நிலையை அடைய இந்தப் பாதையில் பயணித்துத் தான் ஆகவேண்டும். ஏற்கனவே பரிபூரண பக்குவ நிலையை அடைந்தவன் இந்த பர்டோ அனுபவத்தைப் பெறாமலேயே நிர்வாண சுவர்க்கத்தை அடைய முடியும்.
மூன்றாவது பர்டோவில் தான் அவன் மறுபிறப்பு என்ற பாதைக்கு வருகிறான்.
எடுத்த எடுப்பிலேயே சிவாஜி கணேசன் சுடப்பட்டு சாகிறார். ஜாவ்ர் அந்தக் கொலையைத் துப்பறிகிறார். கொலைக்குக் காரணம் என்று ஒவ்வொருவருவரும் பிளாஷ் பேக்கில் சொல்வது கதை. முடிவு அமர்க்களம்.
பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள்
‘BITCH’ என்று திட்டிக் கொண்டே கமல் ஸ்ரீதேவியைக் கொல்ல ஓடும் முதல் தரமான திகில் சித்திரம். “குத்துங்க எஜமான் குத்துங்க ; இந்தப் பொம்பளைகளே இப்படித்தான்” என்ற பாக்யராஜின் வசனம் தூள் !
பாக்யராஜின் விடியும் வரை காத்திரு
ரயிலைத் தவறவிட்டு அதனால் போலீஸிடம் மாட்டிக் கொள்ளும் நிலையிலிருந்த பாக்யராஜ் வெடிகுண்டு புரளியைக் கிளப்பி ரயிலை நிறுத்தி ஓடிப் போய் அதில் ஏறி தப்பிக்கும் காட்சியில் தான் “ கதை வசனம் இயக்கம் – பாக்யராஜ் ” என்று டைட்டில் போடுவார்.
கமலின் குருதிப்புனல்
“தைரியம்னா என்னன்னு தெரியுமா ? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது ” என்று கமல் பயத்துக்குப் புதிய பரிமாணம் கொடுப்பார். நாசரின் தீவிரவாதத்துக்கு எதிரா போராடி அதில் சாவதில் வெற்றி காணும் மனிதர்.
சத்யராஜின் நூறாவது நாள்
சத்யராஜின் மொட்டைத் தலை வில்லத்தனம் இந்தப் படத்தை சிறந்த திகில் படங்களில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறது.
பாலு மகேந்த்ராவின் மூடுபனி
ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தின் நிழல் இது என்றாலும் பாலு மகேந்த்ராவின் காமிராவில் ஊட்டி பின்னணியில் செம படம்.
.
ஏவிஎம்மின் அதே கண்கள்
முடிவைச் சொல்லிவிடாதீர்கள் என்று ஏவிஎம், பத்திரிகைகளையும் பார்த்த மக்களையும் கேட்டுக்கொண்ட படம்.
மாடர்ன் தியேட்டர்சின் வல்லவனுக்கு வல்லவன்
சி ஐ டி என்று நினைத்துக் கொண்டிருந்த ஜெமினி வில்லன். கொலைகாரன் என்று நினைத்த மனோகர் இன்ஸ்பெக்டர். கடைசியில் ஜெமினி நடுங்கிய விரலில் சிகரெட் பிடித்துக்கொண்டே வெடிக்கும் படகில் சாவது சிறப்பம்சம்.
கமலின் தூங்காவனம்
பையனைக் காப்பாற்ற நார்கோடிக்ஸ் போலீஸ் ஓரிரவுக்குள் நடத்தும் சாகசம்.
சிவாஜியின் புதியபறவை
இறந்து போன தன் மனைவி மீண்டும் வந்திருப்பபதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் சிவாஜி கடைசியில் தான் தான் மனைவியைக் கொன்றேன் என்று காதலி சரோஜாதேவியிடம் அவர் போலீஸ் என்று அறியாமல் சொல்வது படத்தின் கிளைமேக்ஸ்.
தெகிடி
டிடெக்டிவ் ஆபீஸில் வேலையில் சேரும் கிரிமினாலஜி மாணவன் அவன் துப்பறியும் மனிதர்கள் எல்லாரும் இறப்பதைக் கண்டு துப்புத் துலக்கியதில் அவனுடைய புரபசரே கொலை செய்தார் என்று கண்டு பிடிக்கும் புதுமையான கதை.
ஜெயம் ரவியின் தனி ஒருவன்
ஐபிஎஸ் ஆபிசர் ரவி கொலை கொள்ளை செய்யும் அரவிந்த்சாமியைப் பிடிக்க நடத்தும் தனி ஒரு மனிதப் போராட்டம்.
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
கொலையாளி துரத்திக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் திரும்பி கொலையாளியைத் தாக்க முயற்சிக்கும் கதை.
அமீரின் ராம்
தாயைக் கொலை செய்துவிட்டதாக மகன் ராமைப் பிடித்துப் பழி வாங்க நினைக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.
ஜீவாவின் கோ
அரசியல்வாதி பத்திரிகை நண்பனை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் ஆடி முடிவில் மாட்டிக்கொள்ளும் கதை.
எஸ் பாலச்சந்தரின் நடு இரவில்
ஒரு வீட்டில் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்பட யார் கொன்றது என்பது கடைசி வரைக்கும் தெரியாத திகில் படம்.
விஜயகாந்தின் ஊமைவிழிகள்
ஒரு பிக்னிக் கிராமத்திற்கு வரும் பெண்கள் எல்லாரும் காணாமல் போக அதைக் கண்டு பிடிக்கும் துப்பறியும் கதை.
(விட்டுப்போன படங்களைப் பற்றி மற்றவர்கள் எழுதலாம். )
குவிகம் இலக்கிய வாசல் சிறுகதைச் சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை !
அன்று வியாழக்கிழமை. மதியம் ஒரு மணி வாக்கில் வங்கியில் தனியாக
அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தேன் . என் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்குப்
பலவகைகளில் நான் உதவியிருக்கிறேன்.
அவர் தயக்கத்துடன், “என்னோடு கொஞ்சம் வர முடியுமா சார்?”
என்றார் .
“என்ன விஷயம்?”
என்று கேட்டேன்.
அவர் “ என் தம்பியைக் காணவில்லை” என்றார்.
“நான் காலையில் தானே பார்த்தேன் ?”
“அவன் இல்லை சார், இவன் வேறு ஒரு தம்பி” என்றார்
“எப்போதிலிருந்து காணவில்லை?”
“செவ்வாய்க்கிழமை காலையில் போனான். அன்று திரும்பி வரவில்லை.
அவன் சைக்கிள்ல சென்று கடை கடையா சரக்கு சப்ளை செய்வான். அன்று பட் ரோடு போயிட்டு
கே கே நகர் போகப் போவதாக அவன் மனைவியிடம் சொல்லியிருக்கான். செவ்வாய் இரவும்
வரவில்லை, புதன் இரவும் வரவில்லை.
கம்பெனியில் வேலை இருக்குமோ என்று அங்கும் விசாரித்தோம். அங்கேயும் வரவில்லை.
இப்போது ஒரு சேதி வந்தது. ஈக்காடுதாங்கல் ஆற்றில் ஒரு பிணம் மிதப்பதாகவும்,
போலீசார் அதைக் கரை ஏற்றுவதாகவும்
சொன்னார்கள். ஒருவேளை இவன்தானா என்று பார்த்துவரப் போகணும். நீங்கள் கூட
வந்தீங்கன்னா போலீசைப் பார்த்துப் பேச வசதியாயிருக்கும் ” என்றார்.
வங்கி மாடியில் குடியிருந்த மேலாளர் அவர்களைச் சந்தித்து விபரம்
கூறி, மதியம் லீவு சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டோம். நண்பர் சைக்கிளில்
செல்லாம் என்றார், நான் வேண்டாம்,. ஆட்டோவில் போகலாம் என்று கூறினேன்.
இருவரும் ஆட்டோவில் ஈக்காடுதாங்கலுக்கு விரைந்தோம். அங்கு இருநூறு,
முன்னூறு பேர் கும்பலாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை
விலக்கி வாராவதி அருகே சென்றோம். போலீஸ்காரர்கள் பிணத்தைக் கரை
ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக நாங்கள் அருகில் செல்வதற்குள் பிணத்தை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டனர். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கே கே
நகர் ஸ்டேஷனுக்குப் போவதாகச் சொன்னார்கள்.
நாங்களும் கே கே நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். அங்கும் பல
விதமான கேச்களுக்கு ஒரே கும்பல். இன்ஸ்பெக்டரைப் பார்க்கமுடியவில்லை. 4
மணிக்குத்தான் பார்க்கமுடிந்தது.
“என்ன விஷயம்?”
“இறந்தவர் என் தம்பி?”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அவன் போட்டிருந்த சட்டை மற்றும் உள்ளாடைகளை வைத்து.”
“சரி, சரி. பாடி போஸ்ட்மார்டத்திற்கு GH போய்விட்டது. அங்கு
போய் பாருங்கள்.”
உடனே GHக்கு அதே ஆட்டோவில் விரைந்தோம். பாடி போஸ்ட்மார்டம் பண்ணித்
தையல் போட்டுக்கொண்டிருந்தார்கள். விவரம் சொன்னதும் “பாடியை எங்கே கொண்டு
போறீங்க?” என்று கேட்டார்கள்.
“எங்க ஊர் திருச்சி அருகே.. அங்கேதான் கொண்டுபோறோம்.
"அப்ப ஏழு எட்டு மணிநேரம் ஆகுமே? அவ்வளவு நேரம் பாடி
தாங்காது. ஏற்கனவே இரண்டு மூணு நாள் ஊறி உப்பிப் போயிருக்கே. அதோட லோக்கல்னா
நாலைஞ்சு தையல் போட்டுக் கொடுத்திடுவோம். அவ்வளவு தூரம் போகணும்னா நல்லா பேக்
பண்ணி நிறையத் தையல் போடணும். செலவாகுமே?”
“பரவாயில்லை. நீங்க கேக்கறதைக் கொடுத்திடறோம். எங்க அம்மா
அங்கே இருக்காங்க. அவங்க பார்க்கணும்.”
“சரி, ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்க”
உடனே பணம் கொடுக்கப்பட்டது
இந்த சம்பாஷனையின் போது ஒரு தினப்பத்திரிகை நிருபர் என்னிடம்
வந்து, இறந்தது யார், பெயர் என்ன,வயசு என்ன, என்ன தொழில், திருமணமானவரா, எத்தனைக்
குழந்தைகள், என்று எவ்வாறு இறந்தார் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. செவ்வாய்கிழமை மதியம் நடந்த விபத்தைப் பற்றி வியாழன்
அன்று மாலை விவரம் சேகரிக்கிறார். இது வெள்ளியோ
சனியோ பத்திரிக்கைச் செய்தியாக வரும்.
போஸ்ட்மார்ட்டம் முடிய மாலை 7 மணி ஆகிவிட்டது. பிணக்கிடங்கு
ஊழியர் “நன்றாகத் தைத்திருக்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் எடுத்துச்
செல்லலாம். யூடிகொலன் பாட்டில் நாலைந்து
வாங்கிக்கொள்ளுங்கள். பிணப் பெட்டியில் கற்பூரம் மற்றும் மிளகு நிறைய போட்டு
எடுத்துச் செல்லுங்கள். ரொம்ப குலுக்கல்
இல்லாமல் வேகமாகச் செல்லாமல்,
நிதானமாக எடுத்துச் செல்லுங்கள். நாற்றம் தாங்க முடியாது. அவ்வப்போது யுடிகொலன்
தெளித்து வாருங்கள்” என்று நிறைய அறிவுரை கூறி பிணத்தை ஒப்படைத்தார்.
இதற்குள் வேனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூ. 1500 வாடகை.
சுமார் 300 கிலோமீட்டர் செல்ல வேண்டுமே. என் நண்பரின் உறவினர்கள் ஆறு பேர், நான்,
என் நண்பர் அனைவரும் ஒரு சவப்பெட்டியில் கிடத்தி, ஆஸ்பத்திரி ஊழியர்
சொன்னபடி ஏற்பாடு செய்து, தேவையானவற்றை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.
வண்டி செங்கல்பட்டைத் தாண்டுவதற்குள் வேனில் இருந்தவர்கள் வேனை
நிறுத்தச் சொன்னார்கள். என்ன விவரம் என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை என்றார்கள் நானும் கொஞ்சம் இறங்கி நின்றேன். வேனில் காலை நீட்ட வசதியில்லை. இருபுற
இருக்கைகளுக்கு இடையில் சவப்பெட்டி. இந்தப்பக்கம் நாலு பேர். அந்தப் பக்கம் நாலு
பேர். முன்னால் இருவர். கீழே இறங்கிய 3 பேர் குபுக் குபுக்கென்று வாந்தி
எடுத்தார்கள். பின்னர் மேலும் 4 பேர் வாந்தி எடுத்தார்கள். நான் மட்டும் ஏனோ
வாந்தி எடுக்கவில்லை . மதியம் ஒரு மணிக்கு சாப்பிடச் செல்லவேண்டிய நான், நண்பரின்
வருகையால் சாப்பிடவில்லை. ஒரு வேளை அதுதான் காரணமோ என்னவோ?
திண்டிவனம் செல்லும்போது மணி 9.30 ஆகிவிட்டது. பிறகு எங்கும்
ஓட்டல்கள் திறந்திருக்காது என்பதால்
அனைவரும் பசி எடுத்து.. சாப்பிடலாம்
என்றார்கள். யாரவது ஒருவராவது சவப்பெட்டி அருகில் இருக்கவேண்டும் . நான் நானாகவே
“நான் இங்கு இருக்கிறேன். இது நகரமாகையால் , ஒரு வேளை வாடை தாங்காமல் யாரவது
போலீசில் சொல்லி அவர்கள் வந்து விசாரித்தால்.. நான் இருந்தால்தான் நல்லது.”
என்றேன். அவர்கள் அனைவரும் படிக்காத வியாபாரிகள் . அதனால் இதற்குச்
சம்மதித்தார்கள். என் நண்பர் மட்டும், “டிரைவரும் கூட இருக்கட்டும் உங்களுக்கு உணவு வாங்கி வருகிறோம்”
என்றார். நான் மட்டும் தனியாக
சவப்பெட்டியுடனும் டிரைவர் முன் சீட்டிலும் அமர்ந்திருந்தோம்.
சாப்பிடப் போனவர்கள் திரும்பும்போது அரை பாட்டில் பிராந்தியும்
கொண்டு வந்தார்கள் அனைவரும் குடித்திருந்தனர். என்னை மது அருந்துமாறு வற்புறுத்தி
சாப்பிட வைத்தார்கள். நான் மது அருந்தினேன். உணவு உண்ணவில்லை.
ஒருவழியாக இரவு 3 மணிக்கு அவரது
ஊரை அடைந்து அவரது வீட்டில் சவப் பெட்டியை இறக்கி, உள்ளே வைத்தார்கள்.
தொலைபேசியில் முன்னமே விவரம் அறிவிக்கப் பட்டிருந்ததால் தயார் நிலையில் இருந்தார்கள். உள்ளே ஒரே
ஒப்பாரி சத்தம். இதற்கிடையில் ஒரு பெண்மணி வண்டியில் வந்தவர்கள் எல்லோரும் வீட்டின் வெளியில் நின்றிருந்த இடத்திற்கே
வந்து காப்பி கொடுத்தாள்.என் நண்பர், என் டம்ளரை வாங்கி, அந்தப் பெண்மணியிடம் " அவரு பிராமணன். இன்னும் கொஞ்சம் பால்
ஊற்றிக் கொண்டுவா “ என்றார். என் மணம் நெகிழ்ந்தது. தன் தம்பி இறந்திருக்கும்
தருணத்திலும், இவர் நமக்கு மரியாதை செய்கிறாரே என்று வருந்தியது. இரவெல்லாம் என்ன
நடந்தது என்று பேசிக் கொண்டிருந்தோம். உறவினர், கிராம மக்கள் அனைவரும் வந்து
விவரம் கேட்டபடி இருந்தனர்.
மறுநாள் காலை 6 மணிக்கு, வெட்டியான் வீட்டிற்கே ஆளனுப்பி
வரவழித்து, பேரம் பேசி, பணம் கொடுத்து அடக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 7 மணி
வாக்கில் மெயின் ரோடில் இருந்த டீக்கடை போன்ற ஒரு ஹோட்டலில் காலை உணவு
அருந்தினோம். 10 மணிக்கு வெட்டியானிடமிருந்து செய்தி வர, சவ ஊர்வலம் புறப்பட்டு
மயானத்தை அடைந்தது. லேசாகத் தூறல் ஆரம்பித்திருந்தது. வெட்டியான் அது போதும் என்று
நினைத்தான். ஆனால், ஊர்ப்பெரியவர் "இன்னும் 2 அடி தோண்டவேண்டும். இது
காட்டுப் பகுதி.ஓநாய்களும், நரிகளும் நடமாடும் இடம் இன்னும் ஆழம்
தோண்டவேண்டும்.” என்றார். வெட்டியான் மேலும் ஆயிரம் ரூபாய் கேட்டான். வாக்குவாதம் தொடங்கி, கைகலப்பு ஆகும் அளவிற்கு
இருந்தது. மழை கனமாகக் கொட்டத் தொடங்கியது. சச்சரவு முடிவடையும் என்று
தோன்றவில்லை.
நான் நண்பரிடம், “ஏற்கனவே 4 நாள் ஊறிவிட்ட பாடி. வெட்டியான்
பிடிவாதமாக இருக்கிறான். கொடுத்துவிடுங்கள்” என்றேன்.
அவர் ரகசியமாக, “பணம் இல்லை. ஏற்கனவே கடன் வாங்கி வந்த
பணமெல்லாம் மற்ற செலவாகிவிட்டது” என்றார்.
மழையில் பிணமும், கூட வந்த 50 பேரும் நனைந்துகொண்டு இருந்தோம்.
எனவே நான், “அவன் தோன்டவில்லை என்றால், நான் தோண்டுகிறேன் ” என்று
குழியில் இறங்கி, மண்வெட்டி கடப்பாரை எடுத்துத் தோண்ட ஆரம்பித்தேன். கிராம மக்கள்
பதறிவிட்டனர். எல்லோரும் “நீங்க மேல வாங்க சார்” என்றார்கள். “இது ஒண்ணும் சரிப்பட்டு
வராது” என்று சொல்லித் தொடர்ந்தேன்.
அப்போது அங்கு வேடிக்கைப் பார்க்க வந்திருந்த கிராம இளைஞன், "நான் தோண்டுகிறேன், நீங்க ஏறுங்க சார்.
அவன் என்னை என்ன பண்ணிடுவான்,
பார்த்துடறேன்.“ என்று புதை குழியில்
குதித்தான். அவனிடம் பொறுப்பை ஓப்படைத்தபின் மேலே ஏறி வர ஒருவர் கை
கொடுக்க, ஏறும்போது சறுக்கி விழ இருந்த என்னை மற்றொருவரும் கை கொடுத்துத்
தூக்கிவிட்டார்கள். ஒரு வழியாக அடக்கம் செய்து முடித்தோம்.
பின்னர் மதிய சாப்பாடு
மெயின் ரோடு விடுதியில் சாப்பிட்டபின், காத்திருந்த வேனில் ஏறி, சென்னை
வந்தடைந்தோம் மறுநாள் என் நண்பர் நடந்ததை
என் அலுவகத்தில் எல்லோரிடமும் விவரிக்க, ஆண், பெண் சக ஊழியர்கள் என்னை ஆச்சரியத்தோடு
பார்த்தார்கள். நான்தான் அன்றைய ஹீரோ. எனக்கென்னமோ, 63 வயதில் அதை நினைக்கும்பொழுது, என் வாழ்வில்
நடந்தவைகளை நினைத்துப் பார்க்கும்பொழுது, என்னை ஒரு ஹீரோவாக நினைத்துப் பார்க்க
முடியவில்லை.
நமது குவிகம் இலக்கியவாசலின் ஏழாம் நிகழ்வில் சாரு நிவேதிதா அவர்கள் அசோகமித்திரனின் எழுத்தாற்றலைப் பற்றிப் பேசினார்.
சுபா சுரேஷ் அவர்கள் ‘அவளைப் ’ பற்றி ஒரு கவிதை மொழிந்தார்.
டாக்டர் பாஸ்கரன் தனது சிறுகதையை வாசித்தார்.
மற்றும் ஆவணப் படத் தயாரிப்பாளர் அம்சத்குமார் , விருட்சம் ஆசிரியர் அழகிய சிங்கர் கலந்துகொண்டார்கள்.
அரங்கு கொள்ளாத அளவிற்குக் கூட்டம் கூடி விழாவை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் குவிகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பீஹாரின் 6.68 கோடி வாக்காளர்களில் 56.8 சதவீதம் வாக்களித்து சமீபத்தில் முடிவுற்ற மாபெரும் தேர்தல் இது. இதில் நீதிஷ் -லாலு -ராகுல் இன் மகா கூட்டணி 178/243 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. நீதீஷின் JD(U) 71 இடங்களிலும் லாலுவின் RJD 80 இடங்களிலும் காங்கிரஸ் 27 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிஜேபி 53 இடங்களிலும் அதன் தோழமைக் கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதன் மூலம் நாம் அறியப்படும் கருத்து என்ன?
மோடி-பிஜேபி செல்வாக்கு சரிகிறதா?
சகிப்புத்தன்மை ஒரு முக்கியக் காரணமா?
ஊழல் மக்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா?
ஜாதி தான் துருப்புச் சீட்டா?
கூட்டணி பலமாக இருந்தால் தான் வெற்றி வாகை சூட முடியுமா?
நீதிஷ் முதல்வர் என்றதால் விழுந்த ஓட்டுக்களா?
லாலு பீனிக்ஸ் பறவையா அல்லது கிங் மேக்கரா?
இன்னும் சில கேள்விகள்:
இந்த கூட்டணி அரசு தாக்குப் பிடிக்குமா?
பீகாரின் முன்னேற்றம் இதனால் பாதிக்கப் படுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாராலும் பதில் சொல்லமுடியாது. கடிகாரமும் நாள்காட்டியும் தான் விடை சொல்லும்.
ஒன்று மட்டும் உடனடியாகத் தேவை. இந்த ஊடகங்கள் அடிக்கும் கூத்தையும் கருத்துக் கணிப்பையும் யாராவது ஏதாவது செய்தால் நல்லது!!
படம்: நன்றி: இந்தியா டு டே ..
Editor and Publisher’s office address:
S.Sundararajan B-1, Anand Flats, 50 L B Road, Thiruvanmiyur Chennai 600041 போன்: 9442525191 email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன் துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி இணை ஆசிரியர் :அனுராதா ஆலோசகர் :அர்ஜூன் தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா வரைகலை : அனன்யா