குவிகம் குறுக்கெழுத்து – சாய்நாத் கோவிந்தன்

இன்றைய குறுக்கெழுத்துப் புதிருக்கான விடை! - Seithi Mediacorp
மே மாதக் குறுக்கெழுத்துப்போட்டி 
இந்த மாதப் போட்டிக்கான தலைப்பு : இடங்கள் (Places) 
ஏப்ரல் மாதக் குறுக்கெழுத்திற்கான சரியான விடை: 
1
ப்
2
ரி
3
கை
4
து
ணை
தி
சு
தி
ம்
5
6
ரி
ம்
7
பி
ர்
தி
8
ழி
9
ண்
டி
10
கை
சி
ற்
ட்
வீ
11
சி
12
கா
சி
13
பா
ந்
14
தி
லை
15
ரா
ம்
16
நி
ல்
17
கு
ம்
மா
ம்

சரியான விடை எழுதியவர்கள் : 14 பேர் 

விட்டுப்போன கட்டத்தால்  தவறவிட்டவர் -2 

தவறான எழுத்தால் தவறவிட்டவர் – 4 

மொத்தம் பங்குபெற்றோர் : 20 

 

சரியான விடை எழுதியவர்கள்: 

விஜயலக்ஷ்மி  , துரை  தனபாலன், விஜயா சம்பத், சிவகுமார், கல்யாணராமன் 

வரதராஜன் , விஜயா சம்பத்,  அனிதா ராஜேஷ்,  ஜெயா ஸ்ரீராம்,  சாந்தி ரசவாதி

இந்திரா ராமநாதன் , கௌரிசங்கர், ராமமூர்த்தி, நாகேந்திர பாரதி ~

 

இவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர் 

துரை தனபாலன் அவர்கள்!

அவருக்கான பரிசு ரூபாய் 100 காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். 

 

 

 

 

 

 

 

 

 

வ வே சு வைக் கேளுங்கள்

Jalamma Kids - kelvi-pathil

 

 

 

 

 

வ வே சு

  1. வசந்தா திருப்பூர் பிள்ளையார் – முருகன் ( கார்த்திகேயன்) இருவரும் தெற்கில் ஒருமாதிரி வடக்கே ஒரு மாதிரி இருக்கிறார்களே ! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? – 

 

தெற்கில் கணபதி பிரும்மச்சாரி; முருகன் சம்சாரி. வடக்கில் கணபதி சம்சாரி; கார்த்திகேயன் பிரும்மச்சாரி. வள்ளி கதை அங்கு கிடையாது. கண்ணனுக்கு அங்கே மீரா; இங்குள்ள கோதை அங்கே கிடையாது. இங்கே சிவன் , அங்கே உருத்திரன். இந்தப் பின்னணி பற்றியெல்லாம் அறிஞர் அ.ச.ஞா எழுதியுள்ளார். அவரும் கூட இதன் காரணம் என்னவென்று எழுதவில்லை.  நமது மதத்தின் பெருமையே அதுதான். தெய்வ உருவங்கள் மட்டுமன்றி அவை சார்ந்த புராணங்களும் மாறுபடும். வேற்றுமைகளுள் ஒருமை காண்பது நமது மதம். சின்னச் சின்ன மாறுதல்களுடன் நமது நாட்டில் மட்டும் 300 வகையான இராமாயணங்கள் உள்ளன. 

நான் சொல்லும் காரணம் இது: அக்காலத்தில் எல்லாமே “கர்ண பரம்பரைதான்” பக்தி இலக்கியங்கள் காதால் கேட்கப்பட்டுப் பரவியவை. இமய முதல் குமரிவரை பல மொழிகள் பேசும் மக்களிடை ஒரு செய்தி வாய்வழி பரவுமென்றால் அதில் மாற்றங்கள் இல்லாமலிருந்தால்தான் அதிசயம்.

  2. ராய செல்லப்பா – கம்பனுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்குமா?

நிச்சயம் தெரியும். அகச் சான்றுகள் பல உள்ளன. பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கம்பனுக்கு மூலத்தின் மொழி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. கம்பனுக்கு இரண்டு முக்கியப் பெருமைகள் உண்டு. ஒன்று வால்மீகியை அடியொற்றி எழுதினான்; இரண்டு வால்மீகியிலிருந்து மாற்றியும் எழுதினான்.

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவர் ஆனவர் தம்முளும், முந்திய 

நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்

பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ.

என்ற கம்பன் பாடலில் தேவபாடையான சம்ஸ்கிருதத்தில் இராமாயணம் பாடிய மூவர்களில் மூத்தவரான வால்மீகியின் சொல்வழியே நான் தமிழ்ப் பாக்கள் வடித்திருக்கிறேன் என்கிறான். மற்ற இருவர் வசிட்டர், போதாயனர் ஆவர்.

மேலும் தமிழகத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன்புவரை  தமிழ்ப்பண்டிதர்கள் (உ.வே.சா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை , தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், போன்ற பலர்) தமிழ் , சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளும் அறிந்தவர்களாகவே இருந்துள்ளனர். மொழிவெறுப்பு வளராத காலம் அது.

  1. ராம் – usa சமீபத்தில் படித்த நாவல்களில் நீங்கள் பெரிதும் ரசித்த நாவல்? 

 

இரா. முருகன் எழுதிய ராமோஜியம் ( கிழக்குப் பதிப்பகம்)

 

  1. சுந்தரராஜன் USA சங்க காலத்தில் உரைநடை எப்படி இருந்திருக்கும் ? –

எட்டுத்தொகை பத்துப்பாட்டு மூலமே நாம் சங்கத்தை அறிவோம்..அவை அனைத்தும் செய்யுள் நடையிலேதான் உள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர் சேனாவரையர், கல்லாடனார், நச்சினார்க்கினியார் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் போன்றோர் உரைநடை செய்யுள் நடையை விடக் கடுமையானது.

பேச்சு நடை எப்படி இருந்திருக்கும்..ஒருவேளை 

அந்தக் கால ராஜாராணி திரைப்பட வசனங்கள் போல இருந்திருக்கக் கூடும்

  1. துரை தனபாலன் : நத்தம் போலக் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு  அல்லால் அரிது என்ற குறளின் பொருளை சற்று விளக்கமாகக் கூறுங்கள். (மு.வ., இளங்குமரனார் போன்றோரின் விளக்கங்கள் கூட நிறைவாகத் தோன்றவில்லை)-

புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் தரும் அற்புதமான குறள் இது. இங்கே புகழ் என்பது இல்லறத்தான் ஈகையினாலே பெறுகின்ற கீர்த்தி .பூதவுடலை வருத்தி வளர்வதன்றோ புகழுடம்பு .  வாழும் போது உள்ளது பூதவுடல் ; அது வீழ்ந்த பின்னே நிலைப்பது புகழுடல் . அழியப் போகின்ற உடலைப் பயன்படுத்தி அழியாப் புகழைப் பெறுவது வித்தகர்களுக்கே உரியது ;பிறர்க்கு அரிது.

நத்தம் ஆகும் கேடும் , உளது ஆகும் சாக்காடும் என்று “ஆகும்” என்பதைக் கொண்டு சேர்த்து போட்டுப் பாருங்கள் ,புரிந்துபோய்விடும் 

ஆக நிலையாமையைப் பயன்படுத்தி நிலைத்த புகழைப் பெ றுவது வித்தகர்களான அறிவாளிகளுக்கே கூடும் என்பது குறள் சொல்லும் பொருள் .

  1. நாகேந்திர பாரதி ‘சித்தர் பாடல்களின் சிறப்பு ’ பற்றி ஓர்  ‘அறிமுக முன்னோட்டம்’ தர இயலுமா? – 

கேள்வி பதில் பகுதியைக் கட்டுரை எழுதப் பயன்படுத்திக் கொண்டால் அது தவறல்லவா! எனவே சுருக்கமாகச் சொல்கிறேன் .

 

நமது சித்தர் பரம்பரை தொடங்குமிடம் பொதிகை !ஆம் ! அகத்தியர்தான் சித்தர் குழாத்தின் தலைமகனாகக் கருதப்படுபவர் . அங்குதான் தமிழும் பிறந்தது. எனவே சித்தர் பாடல்களின் முதல் சிறப்பு அவை முதலில் பிறந்தவை என்பதே. 

பத்தாவது திருமுறையாக வைக்கப்பட்டு வணங்கப்படுவது திருமூலர் எழுதிய திருமந்திரம் . உதாரணத்திற்கு திருமூலர் எனும் சித்தரின் பாடல் சிறப்புகளை எடுத்துச்  சொல்கிறேன்,

சிவாகமப் பேரறிவைக் கொண்ட ஆதி நூல் திருமந்திரம்தான். எளிய சிறு கலிவிருத்தங்களால் அமைந்த இதன் மூவாயிரம் பாடல்களும் ஒரே யாப்பில் சமைந்தது என்றாலும் வாசகர்களுக்கு அலுப்போ  சலிப்போ தோன்றுவதில்லை.

அந்த யாப்பைக் கையாளுவதில் திருமூலர் அபார வெற்றி அடைந்திருக்கிறார் ஆழ்ந்த சிந்தனைகள் , உள்ளுணர்வுகள் . அவற்றுள் புதைபொருட்கள் ஆகியவை இவற்றில் உண்டு. கடினமான உருவகங்களைக் கொண்டதேனும் ,பழகு தமிழில் மிக எளிய நடையில் குறியீடுகள் மூலம்  பாடல்கள் அமைந்திருப்பது திருமூலரின் மேதாவிலாசத்திற்குச் சான்று 

பொருத்தமான எளிய சிறு  சொற்கள் இவர் பாடலிலே சிறகடித்துப் பறக்கின்றன சிந்தனையைக் கிளறுகின்றன .ஓசையும் பொருளும் இசையுமாறு உருவகக்  கவிதைகளை இயற்றியுள்ளது பெரிய சாதனையாகும். உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் .

யோகப்பயிற்சியால் வைராக்யம் தோன்றும். அதனைக் கொண்டு தத்துவ ஆராய்சசி செய்ய ,சிவம் வெளிப்படும். சிவம் வெளிப்பட சித்த விருத்திகள் அடங்கும்.சிவாநுபூதி கிடைக்கும். இதனைச் சொல்லும் எளிய பாடல். எளிய சொற்களுக்குள் குறியீடாக  தத்துவம் அடங்கியிருக்கும் . 

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தொழுது கொண்டோடினர் தோட்டக்  குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே .

( வழுதலை வித்து = யோகப்பயிற்சி ; பாகல் =வைராக்கியம் ; புழுதி =தத்துவம்; பூசணி =சிவம் ; தோட்டக்குடிகள் =இந்திரியங்கள்; வாழைக்கனி =சிவாநுபூதி )

இது போலவே அனைத்து சித்தர் பாடல்களும் எளிய வழக்குச்  சொற்கள் கொண்டு மரபு சார்ந்த யாப்புகளில் புனைய பட்டவை. ஆனால் இக் குறியீடுகளை விளங்கிக் கொள்வது அத்தனை சுலபமல்ல.

      7.ஜி.பி.சதுர்புஜன். தந்தை, மகன் ( தந்தை மகற்காற்றும் உதவி, மகன் தந்தைக்காற்றும் உதவி) என்பதைப் பற்றியெல்லாம் எழுதிய திருவள்ளுவர், ஆசிரியர், மாணவன் ஆகியவர்களைப் பற்றி எழுதாதது ஏனோ? – 

எழுதவில்லை என்பதை நீங்களே தீர்மானம் செய்து விட்டால் எப்படி?  நிச்சயம் எழுதியுள்ளார் . ஆனால் மாணவர் ஆசிரியர் என்று பெயர் குறிப்பிடாமல் எழுதியுள்ளார். ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம் .

செல்வம் உள்ள ஒருவனிடம் வறுமையான ஓர் ஏழை எவ்விதம் நாணத்தை விட்டு உடல் வளைந்து பணிந்து நிற்பானோ அவ்விதம் ஆசிரியர் முன் நின்று கற்றுக்கொள்பவனே தலை சிறந்த மாணவன் .பிறர் எல்லாம் கடையர் என்கிறார் வள்ளுவர் .

“உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர் ( குறள் 235 }

சரி! ஆசிரியரைப் பற்றி எங்கே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?

கேட்பவரைத் தன் பேச்சாலே முற்றும் கவர வேண்டும் அதாவது பிணிக்க வேண்டும் . கேளாதவர்கள் விரும்பிக் கேட்க வரவேண்டும் . 

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கிறார். மாணவரின் கவனம் சிதையாமல் தன் சொல்வன்மையால் அவர்களைக் கட்டிப் போட  வேண்டும். அந்த சார் கிளாசா “போர்” என்று சொல்லாமல் அவரைக் கேளாத  மாணவரும் “விரும்பி “ அவர் வகுப்புக்கு ஒடி வரவேண்டும் . அதுதானே சிறந்த ஆசிரியரின் இலக்கணம் . 

“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் “ என்ற குறள் நல்லாசிரியருக்குப் பொருந்தாதா? இவை போல இன்னும் பல உள்ளன .

நல்ல மாணவராகத் திருக்குறளில்  தேடிப்பாருங்கள் .வள்ளுவனார் நல்ல ஆசிரியராகத் தென்படுவார் .

  1. கவிஞர் செம்பருத்தி : திருக்குறள் அதிகாரத் தலைப்புகளைக் கொடுத்தது வள்ளுவரா அல்லது தொகுப்பாசிரியர்களா ?

நிச்சயமாகத் தொகுப்பாசிரியர்கள்தான் செய்திருக்க வேண்டும். வள்ளுவர் என்ற மாபெரும் புலவர், அட்டவணை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துப் பாடல்கள் என்று திட்டம் போட்டுக்கொண்டு சரியாக 133 அதிகாரங்களை எழுதியிருப்பார் என்று எண்ணுவது குறளாசானின்  மேதைமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும் 

திருவள்ளுவர் ஆயிரக்கணக்கான குறள்  பாக்களை எழுதியிருப்பார் .கிடைத்ததைத் தொகுத்தவர்கள் வகைப்படுத்தியதே இந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது எண்ணிக்கை.

இதெல்லாம் என் சொந்த சரக்கல்ல .பல ஆண்டுகளுக்கு முன் இதே கேள்வியைக் கேட்ட போது பேராசிரியர் நாகநந்தி சொன்ன பதில் இது .

  1. சங்கரநாராயணன் , சென்னை : இலக்கணம் என்றாலே கசப்பாக இருக்கிறதே என்?

கட்டுப்பாடு என்றால் யாருக்கும் பிடிப்பதில்லை. இலக்கணம் என்பது மொழிக்கட்டுப்பாடு . ஆனால் அது இல்லையென்றால் மொழி அழிந்துவிடும் முதலில் கசந்தாலும் இலக்கணம் புரியத் தொடங்கிய பின் இனிக்கும். இது என் சொந்த அனுபவம் .

  1. ஆதிகேசவன் : சென்னை :பக்திக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டா ?

பக்தி நெஞ்சம் சம்பந்தப்பட்டது ; அறிவியல் மூளை சம்பந்தப்பட்டது . நெஞ்சுக்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

 

உலக இதிகாசங்கள் – இலியட் எஸ் எஸ்

Ilias Picta – Wikipedia

ஹோமர் எழுதிய இலியட் கதையைப் படிக்கும்  போது  இலியட் என்பதற்கான அர்த்ததைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

டிராய் என்ற நகரம் தற்போதுள்ள துருக்கிப் பகுதியைச் சேர்ந்தப் பழமையான  நகரம். ஹோமர் கதை சொன்ன காலத்தில் அது அனைவராலும் டிராய் என்றே அறியப்பட்டது. ஆனால் அதற்கும் முந்திய காலத்தில் -அதாவது ஹோமரின் கதை நடந்த காலத்தில் அந்தப் பகுதி இலியோஸ் , இலியம்  என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரைப் பற்றி – அங்கு நடந்த போரைப் பற்றி எழுதப்பட்டதால் இந்தக் காவியம் ‘இலியட்’ என்று அழைக்கப்படுகிறது. ஹோமர் கதையிலேயே இலியம் -டிராய் என்ற  இரண்டு பேரும் மாறி மாறி வரும். இரண்டும் ஒரே நகரத்தைக் குறிப்பவைதான்.

சுருக்கமாக இலியட் என்றால்  இலியோஸ் நாட்டின் கதை என்று பொருள்.

இது எப்படி என்றால் ராமர்+ அயனம் சேர்ந்து ராமாயணம் ஆனது போல. அயனம் என்றால் பாதை -பயணம் என்று பொருள். ராமரின் வாழ்க்கைப் பாதை , ராமர்  சென்ற நீண்ட பயணம்   ராமர் காட்டிய வாழ்க்கை நெறி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

இன்னொரு முக்கிய செய்தி.  இலியட் கதைக்குள் நுழையும் முன் கிரேக்கக்  கடவுள்கள் பற்றிய சில உபகதைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் ராமாயணத்தை  மகாவிஷ்ணு, சிவன், பிரும்மா,  இந்திரன், சூரியதேவன், சமுத்திரராஜன், வாயு, குபேரன்,பரசுராமர், போன்ற தேவர்களைத் தெரியாமல் படிப்பது   போல இருக்கும்.

இலியட் காவியத்தின் நாயகனான அக்கிலிஸ் பிறப்பு எப்படி நடைபெற்றது என்பது முதல் கதை.

கிரேக்க இதிகாசத்தில் தலைமைக் கடவுள் ஜீயஸ். அவனது தம்பி பொசைடன். இருவரும் திட்டீஸ் என்ற கடல் தேவதை  மீது மோகம் கொள்கிறார்கள். இருவரும் அவளுக்காக சண்டை போட்டுக்கொள்ள இருந்தார்கள். அப்போது கடவுள்களில்  முக்காலமும் அறிந்த ஞானி ஒருவர் ‘இவளுக்குப் பிறக்கும் மகன்  அவன் தந்தையை விட மிகமிக  சக்திவாய்ந்தவனாக இருப்பான் ‘ என்று கூறுகிறார்.  அண்ணன் தம்பி இருவருக்கும் தங்களைவிட தன் மகன் உயர்ந்த இடத்தில் வந்தால் தங்கள் கடவுள் பதவிக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து  திட்டீஸ் மீது கொண்ட காதலைத் தியாகம் செய்ய முன் வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவளுக்கு பீலியஸ் என்ற அரசனுடன்  திருமணம் செய்து வைக்கின்றார்கள். அதிலும் அவர்கள் சுயநலம் கலந்து இருக்கிறது. மானுடன் ஒருவன் மூலம் திட்டீஸுக்குப் பிறக்கும் மகன் மனிதன் தானே! அவன் எப்படியும் இறந்துவிடுவான், தங்கள் பதவியை யாரும் அசைக்க முடியாது என்பதில் கருத்து ஒருமித்து இருந்தார்கள்.

பீலியஸ் -திட்டீஸுக்கு பிறந்த மகன்தான் இலியட்டின் நாயகன் அக்கிலிஸ். நமது பீமனைப் போல் வீரமும் வலிமையும்  கொண்ட  மாபெரும் போர் வீரனாகத் திகழப் போகின்றவன்!

கடல் தேவதை திட்டீஸ்  தன் மகன் அக்கிலிஸ் மீது உயிரையே  வைத்திருந்தாள்.  அதனால்  அவன் அழிவே இல்லாத மானிடனாக  இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினாள். பாதாள உலகில் உள்ள சிறிய நதியின்  தண்ணீரில் எந்த மனிதனின் பாகங்கள் படுகின்றனவோ அவை அழியாமல் இருக்கும் என்ற ரகசியத்தைத் தெரிந்துகொள்கிறாள்.  குழந்தையாய் இருக்கும் தன் மகன் அக்கிலிஸைக் குதிகாலைப் (Achille’s heels)  பிடித்து அவன் உடல் முழுவதையும்  அந்த பாதாள நதித்  தண்ணீரில்  முக்கி  எடுக்கிறாள். 

அவள் நம்பிக்கை வாழ்ந்ததா அல்லது மகாபாரத காந்தாரி மாதிரி பொய்த்ததா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.

அது என்ன மகாபாரதக் காந்தாரி  கதை?

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் நடக்கும் 17 வது நாளில்  காந்தாரி தன் மகன் துரியோதனன் கதாயுகப் போரில் எந்த இடத்தில் அடிபட்டாலும் இறந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறாள்.  கண்ணைக் கட்டிக் கொண்டு அவள் அத்தனை நாள் சேமித்து வைத்த நேத்ர சக்தியை  தன் மகனின் உடலில் செலுத்தினால் அது அவன் உடலை  வஜ்ரமாக்கிவிடும் என்பதை அறிந்திருந்தாள்  காந்தாரி! அதனால்  அவனைப்  பிறந்த மேனியுடன் வரச் சொல்கிறாள்.  தனக்கு நித்திரத்துவம்  தரும் அந்த நேத்ர சக்தியைப் பெற அவனும் வெட்கத்தைவிட்டுப் பிறந்த மேனியுடன் சென்றான்.  ஆனால் எதிரில்  கிருஷ்ணன் வருவதைப் பார்த்து அவன் இடுப்பில் துணியைக் கட்டிக் கொண்டான். . காந்தாரி தன்  கண் கட்டை அவிழ்த்து அவன் முழு உடலைப் பார்க்கையில் தன் உடல் வஜ்ரம்போல் மாறுவதை  அவனும் உணர்ந்தான். ஆனால் இடுப்பில் மர்ம பாகத்திற்கு கீழ் தொடை வரை அவன் ஆடை அணிந்திருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள்.  இனி அவளால் மீண்டும் நேத்ர சக்தியைப் பிரயோகிக்கமுடியாது. இது கிருஷ்ணன் செய்த சதி என்பதை உணர்ந்து கோபம் கொள்கிறாள்.

‘கவலைப்படாதே அம்மா! கதாயுத்தத்தில் தொடையில் யாரும் அடிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது ” என்று துரியோதனன் கூறுகையில் கண்ணன் எங்கோ சிரிப்பது அவன் காதில் விழவில்லை. இறுதிப்போரில் பீமன் அவனது தொடையில் அடித்தே அவனைத் தோற்கடிக்கிறான். அதுவும் கண்ணன் அர்ஜுனன் மூலம் துரியோதனனின்   தொடைதான் அவனது பலவீனம் என்பதைத் தொட்டுக் காட்டிய பிறகே அது நிகழ்கிறது.

பீலியஸ் -திட்டீஸ் திருமணத்தின் போது நடந்த இன்னொரு நிகழ்வு இலியட் கதைக்கு அடிகோலிய உப கதை !

நம் நாரதர் போல கிரேக்க இதிகாசத்திலும் எரிஸ் என்ற தேவதை இருந்தாள்.  செல்லுமிடமெல்லாம் ஏதாவது கலகம் செய்வது  அவள் வழக்கம். அதனால்  அவளை பீலியஸ் -திட்டீஸ் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அழைப்பில்லாமலே  அவமானப்படுத்தப்பட்ட  எரிஸ் யாருடைய  கண்ணுக்கும் தெரியாமல் திருமணத்திற்கு  வந்தாள்.

வந்தவள் சும்மா இருக்கவில்லை. அவளால் அது முடியாது. அங்கிருந்த ஒரு மேடையில் ‘உலகில் மிகச் சிறந்த அழகிக்கு இது சொந்தம்’ என்று ஒரு தங்க ஆப்பிளில் எழுதிவைத்துவிட்டுச்  சென்று விட்டாள்.  பிறந்தது கலகம். 

அங்கிருந்த முப்பெரும் தேவியர் மூவருக்கும் போட்டி!  தங்களில் யாருக்கு அந்த தங்க ஆப்பிள் சொந்தம் என்பதற்காக! தங்க ஆப்பிள் மீது ஆசையினால் அல்ல.  அதன் மூலம் ‘தான்தான் அகிலாண்டகோடி உலகுக்கும் அழகி என்பது நிரூபணம்  ஆகும் ; ஆகவேண்டும்’  என்ற கொலைவெறி !

( இரண்டாம் நூற்றாண்டு ஓவியம்  இந்தப் பிரபஞ்ச அழகிப்போட்டியைப் பற்றியது)

அவர்கள் ஹீரா, அதினி, அப்ரோடைட்டி என்ற மூன்று தேவதைகள். ஹீரா திருமணங்களின் தலைவி. அதினி அறிவிக்கு அதிபதி. அப்ரோடைட்டி  காதல் தேவதை ! அவர்களுக்குள்தான் அப்போது அழகுப் போட்டி துவங்கியது. அழகில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.

பீலியஸ் -திட்டீஸ் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்துத் தேவர்களும் தங்களில் யார் அந்த பிரபஞ்ச அழகி என்பதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மூவரும் ஆணையிட்டார்கள்.  அவர்களில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது ? அதனால் பிறக்கும்  மற்ற இரண்டு பேரின் கோபத்தை எப்படி சமாளிப்பது ?    இதற்கான விடை  தெரியாமல்  எல்லாக் கடவுளர்களும் திணறினார்கள்.

ஜீயஸ் கடவுளுக்கு ஒரு யுக்தி உதித்தது.

“இந்தப் பிரபஞ்ச அழகிப் போட்டியின் நடுவராக டிராய் என்ற நகரத்தின் இளவரசன் பாரிஸ் என்பவனை நியமிப்போம். அவன் பிரபஞ்சத்தின் பேரழகன்! அவன் கூறினால் மூன்று தேவியரும்  ஒப்புக் கொள்வார்கள், அதுமட்டுமல்ல அவன் ஒருமுறை சிறந்த காளைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் அவனுடைய காளை கலந்துகொண்டபோதும் மற்றவருடைய காளையைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தான். அந்த அளவு நியாயமானவன். ”  அனைவரும்  ஒப்புக் கொண்டனர்.

Eve Holden on Twitter: "Depictions of The Judgement of Paris. Paris must judge a beauty contest between Hera, Athena & Aphrodite. This could be war… 🎨 Henry Justice Ford, Eduard Veith, Walter

பாரிஸ் அங்கு வரவழைக்கப்பட்டான். அவனுடைய அழகு தேவ உலகத்து மாதர்களை உரித்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. இருப்பினும் தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதை நன்றாகப் புரிந்துகொண்டான் பாரிஸ் . தன்னால் மறுக்கவும் முடியாது. ஒருவரை சிறந்த அழகி என்று கூறினால் மற்ற இருவரின் கோபம் எந்த அளவிற்குப் போகும் என்பதையும் உணர்ந்திருந்தான். ஒரு முடிவுக்கு வந்தான்.

பிரபஞ்ச அழகி போட்டி துவங்கியது. மூன்று பெரும் தங்கள் அழகுகள் தெறிக்க அங்கே நடனமாடினார்கள். பாடினார்கள். ஒய்யாரமாக நடந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அழகு.   தனித்தனியே அவர்கள் வரும்போது அவள்தான் பிரபஞ்சப் பேரழகி என்று அனைவரும் நிச்சயமாகக் கூறினார். ஆனால் மூவரும் சேர்ந்து வரும் போது யார் பேரழகி என்று சொல்ல முடியாமல் திகைத்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஏன் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஏரிஸ் தேவதையும்   பாரிஸ் எப்படித் தீர்ப்பு வழங்கப் போகிறான் என்று இதயத்தைக் கையில்  பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.

பாரிஸ் எழுந்து நின்றான்.

“இந்த இடத்தில் மூவரும் சேர்ந்து இருக்கும்போது என்னால் சரியான தீர்ப்பு  வழங்க முடியாது. அதோ இருக்கும் ஈடா மலை உச்சியில் நான் காத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவராக மலை உச்சிக்கு வந்து அருகிலிருக்கும்  ஈடா  அருவியில் குளித்துப் பின்னர் பிறந்த மேனியாக என்னிடம் வரட்டும். நான் ஒவ்வொருவரையும் அவர்களின் உண்மையான அழகினைப் பார்த்து அவர்களில் யார் பேரழகி என்ற தீர்ப்பை வழங்குகிறேன்.” என்று கூறினான்.

அனைவருக்கும் அது சரி என்றே பட்டது. பாரிஸ் மலை  உச்சிக்குச் சென்றான். முதலில் வந்தவள் ஹீரா. திருமணத்தின் தேவதை அல்லவா ? அவள் அருவிக்கு வர வர அவளது  ஆடைகள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. அவள் அருவியில் குளித்து மெல்ல மலை உச்சிக்குச் செல்லும் படியில் ஏறி நடந்த வரும்போது சந்தனக் காற்று  அவளிடமிருந்து பரவி பாரிஸை மயக்கியது. அவன் அருகில் அவனை முத்தமிடுவது போல பக்கத்தில் வந்த ஹீரா ” என்னைப் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுத்தால் டிராய் என்னும் சிறிய ஊரில் இளவரசனாக இருக்கும் உன்னை இந்தக் கண்டத்துக்கே  அரசனாக்குகிறேன்”      என்று மயக்கும் குரலில் மற்றவர் கேட்காதவாறு கூறினாள். பாரிஸ் அவளிடம் ” தேவி! மலையடிவாரத்தில் காத்திருங்கள்! நான் இன்னும் சற்று நேரத்தில்  முடிவை அறிவிக்கிறேன்” என்றான்.

அடுத்து வந்தவள் அதினி ! புத்திக்கு அதிபதி அல்லவா? அவள் அப்படியே காற்றில் மிதந்து வந்தாள். அவளது ஆடைகள் மெல்லிய திரைச்சீலை போல அழகை மறைப்பதற்குப் பதிலாக அதிகப் படுத்திக் காட்டியது.  அருவியில் அவள் குளிக்கும்போது அந்த ஆடை மெல்ல மறைய அவள் தேகம் பனிக்கட்டிபோல கண்ணாடி போல மின்னத் தொடங்கியது. அவளும் மெதுவாக பாரிஸ் இருக்கும் உச்சிக்கு வந்து அவனைக் கட்டிப் பிடிப்பதுபோல  அருகே வந்து .” அழகா! நீ என்னைப் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுத்தால் எந்தப் போரிலும் நீயே வெல்லும்படி உனக்கு புத்தி  சாதுரியத்தை வழங்குவேன்! உன்னை வெல்ல உங்கள் உலகத்தில் யாரும்  இருக்க மாட்டார்கள்! அதனால நீ பெறப்போக்கும் பொன்னும் பொருளும் அளவில்லாதபடி இருக்கும்” என்று ஆசை வார்த்தைகளைத் தேன் ஒழுகுவது போலக் கூறினாள். அவள் அருகாமை பாரிசுக்கு மயக்கத்தைத் தந்தது. மிகவும் தடுமாறி,” தேவி! மலையடிவாரத்தில் காத்திருங்கள்! நான் இன்னும் சற்று நேரத்தில்  முடிவை அறிவிக்கிறேன்” என்றான்.

மூன்றாவதாக வந்தவள் அப்ரோடைட்டி! காதல் தேவதை ! முதலிரவுக்கு வரும் பருவப்பெண்  போல நாணத்தையும் வெட்கத்தையும்  இதழிலும் நெஞ்சிலும் தேக்கி வைத்துக் கொண்டு தலையிலிருந்து கால் வரை முழுதும் போர்த்திய தங்க உடையில் நடந்தே அருவிக்கு வந்தாள். நடை பழகும் அவளது ஒவ்வொரு அடியும் பார்ப்பவர் உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டிக்கொண்டே இருந்தது. மறைந்த அழகே  இவ்வளவு அழகு என்றால் முழுவதும் தெரிந்தால் என்ன அழகோ என்று பாரிஸை முற்றிலும் மயக்கியது அவளது தவழும் நடை. அருவியில் குளிக்கும்போது அவளிடம் புன்னகையைத் தவிர வேறு உடை இல்லை. பாரிஸ் அவள் அழகைப் பார்த்து மூச்சு விடாமல் அப்படியே சிலை போல நின்றான். அதே மயக்கும் புன்னகையுடன் பாரிஸ் அருகே  வந்து அவன் மடியில் விழுந்தாள். ” இப்போது சொல்! நான் தானே பேரழகி? ” பாரிஸால் ஒன்றும் பேச முடியவில்லை. ” எனக்குத் தெரியும் மற்ற இருவரும் உனக்கு அதைத்  தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொல்லியிருப்பார்கள் ! ஆனால் நான் தப் போகும் சுகத்திற்கு அது ஈடாகாது. அதுதான் பெண் சுகம்! என்னைப் பிரபஞ்சப்  பேரழகியாக்கு! உனக்கு என்னைப் போலவே இருக்கும் உலகப் பேரழகியின் சுகத்தைத் தருகிறேன்! அதோ பூவுலகில் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்த அழகியை என் கரத்தில் பார்! ” என்று அவளது கைவிரல்களை விரித்துக் காட்டினாள். அவள் கையில்     கிரேக்கப் பேரரசின்   ஸபார்ட்டா நாட்டு அரசன் மெனிலியஸ்  மனைவி ஹெலனின் முகம் தெரிந்தது!

Judgement of Paris (Photos Prints, Framed, Posters, Puzzles, Cards, Housewares,...) #593801அந்த முகம் ஆயிரக் கணக்கான கப்பல்களை அழித்த முகம்!

அந்த முகம்  இலட்சக்கணக்கான போர் வீரர்களைக் கொன்ற முகம்!

அந்த முகம் ஒரு நாட்டையே அழிக்கும் ஆற்றல் படைத்த அழகு முகம்!

ஹீரா மண்ணாசை காட்டினாள் ! அதினி  பொன்னாசை காட்டினாள்! அப்ரோடைட்டி  பெண்ணாசையைத் தூண்டுகிறாள்!

முடிவில் பெண்ணாசையே வெல்கிறது! இதிகாசம் தரும் பாடம் அதுதானே!

காதல் தேவதை அப்ரோடைட்டியையே பேரழகியாக தீர்ப்பு கூறி தங்க ஆப்பிளைக் கொடுக்கிறான் பாரிஸ்!

அப்போது விதிக்கப்பட்டது இதிகாச வித்து!

இராவணன் சீதையத் தூக்கிக்கொண்டு செல்லப் பிறந்தது ராம -ராவண யுத்தம்

தங்க ஆப்பிள் ( Apple of discard ) பாரிஸ் ஹெலனைத் தூக்கிக் கொண்டு செல்லப் பந்தாய் உருண்டது!   

கிரேக்கர்களுக்கும் டிராய் நாட்டுக்கும் இடையே பத்தாண்டு டிரோஜன் யுத்தம் வரக் காரணமாயிற்று! !

(தொடரும்)

 

 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜராஜன்- மும்முடிச்சோழன்

இராஜராஜன் நமது நாயகனாக இருக்கும் போது எழுதுவதற்கு நமக்கு என்ன குறை? சரித்திரத்துடன், சொந்த சரக்கையும் சேர்த்து ஒரு கலக்குக் கலக்குவோம்.

முன்கதை:

காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம். இந்த இடத்துக்குப் பயணப்பட்டு திரும்பிய அருண்மொழி, மாறன் என்ற மாவீரனை தன்னுடன் அழைத்து வந்தான்.

இனித் தொடர்வோம்.

உத்தம சோழன் சோழ மன்னனாக இருந்த போது, அருண்மொழிவர்மன் சும்மா இருக்கவில்லை. சோழப்படையைப் பலப்படுத்தினான். மாறன், தான் காந்தளூர்ச்சாலையில் பயின்ற போர்க்கலையை போதித்து, நல்லப் பயிற்சியைக் கொடுத்து, சோழர் படையைப் பலப்படுத்தினான். சேரனின் கடற்படை ஒரு தகர்க்கமுடியாத பலமாக இருப்பது அறிந்து – அதை விட பலமான கப்பற்படையை அருண்மொழி சிருஷ்டித்தான்.

வருடங்கள் 8 உருண்டோடின.
கி பி 985.
மதுராந்தகன் மறைந்தான்.
ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985.
அருண்மொழி பட்டாபிஷேகம் செய்து சோழ மன்னனானான் – ராஜராஜனானான்.

அந்நாளில், சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலை. ‘தன் அண்டை நாட்டில் ஒரு போர்ப் பயிற்சிக் கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல’ என்று ராஜராஜன் கருதினான். தனது மூதாதையர் பாண்டியர்களை பல முறை வென்றும் – திரும்பத் திரும்ப முளைத்து எதிர்க்கும் பாண்டியரின் பலத்தை ஆராய்ந்தான். அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காந்தளூர்ச்சாலைப் போர்க்கழகத்தில் பயிற்சி பெற்றவர்களே என்று தெரிய வந்தது. அதனால்தான் 8 வருடமுன்பு, காந்தளூர்ச்சாலையைத் தானே பார்வையிட வந்தான். போட்டியிலும் கலந்து கொண்டான்.

அதை நாமும் பார்த்தோம். ரசித்தோம்!
ராஜராஜன் சேர, பாண்டிய, ஈழக் கூட்டணியின் வலுவை நன்கு அறிந்திருந்தான். இவற்றை ஒவ்வொன்றாக அழிக்கவேண்டும்.
காந்தளூர்ச்சாலை சேரனின் நேர் ஆளுமையில் இருந்தது.

வந்தியத்தேவருடன் ஆலோசனை செய்தான்.
முடிவு செய்தனர்.
சேரனுக்குச் செய்தி அனுப்புவோம்.
செய்தி இதுதான்:
“காந்தளூர்ச்சாலை உடனடியாக மூடப்படவேண்டும்”
ராஜராஜன் மாறனை அழைத்தான்.
“மாறா! நீதான் சேரனிடம் தூது செல்லவேண்டும்” – என்றான்.
“இக்கணமே புறப்படச் சித்தம் சக்கரவர்த்தி” என்றான்.

வஞ்சி மாநகரில் மாறன், சேரன் மன்னன் பாஸ்கரனை அவன் அரண்மணையில் சந்தித்தான்.
சேரனின் முகத்தில் லேசான புன்சிரிப்பு.
‘அன்று, உன்னை நான் வென்றேனே’ என்பது போல பாவனை.
மாறனின் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு வந்தது.
‘அன்று, நீ என் தலைவனிடம் தோற்றவன் தானே’ என்பது போன்ற ஒரு பாவம்.
சேரனுக்கும் அந்த தோல்வி நினைவுக்கு வந்து அவன் முகம் சற்றுச் சுருங்கியது.
சேரன் சொன்னான். “மாறா! அன்று, என்னுடன் சேருமாறு நான் உன்னை அழைத்தேன். நீயோ – அந்த சோழனிடம் போய்ச் சேர்ந்துவிட்டாய். மதுராந்தகனுக்குப் பயந்து அடங்கிப்போய் ஆட்சியைக் கைவிட்ட அருண்மொழியிடம் நீ சேர்ந்தாய்!” என்று ராஜராஜன் மீது தன்னிடம் இருந்த வெறுப்பைக் காட்டினான்.
மாறன் கோபத்தை அடக்கிக்கொண்டு:
‘மன்னரே! மாமன்னர் சோழதேவர் ராஜராஜர் தங்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்” என்று சொல்லி “கழகம் மூடப்படவேண்டும்” என்றான்.
“என்ன கழகத்தை மூடவேண்டுமா?” என்றான் சேரன்.
மாறன் தொடர்ந்தான்:

“காந்தளூர்ச்சாலையின் போர்க்கழகம் மூடப்படவேண்டும் என்பது சோழச்சக்கரவர்த்தியின் விருப்பம்” என்றான்.
சேரன் கோபித்து, “ஆஹா.. காந்தளூர்ச்சாலையின் மகிமை அருண்மொழிக்கு பயம் கொடுத்தது போலும். உன்னைப்போல ஓரிரு துரோகிகள் காந்தளூர்ச்சாலைப் போர்க்கழகத்திலிருந்து பகைவன் பக்கம் சென்றிருக்கலாம். ஆனால் காந்தளூர்ச்சாலையின் ஏனைய வீரர்கள் எல்லோரும் சேரநாட்டைக் காக்க சூளுரைத்துள்ளனர். உலகிலேயே சிறந்த கடற்படை – அது எங்களது. அது சோழனுக்கு ஒரு சிம்ம சொப்பனம் ஆகும். ஆம். புலிக்கு அது ஒரு சிம்ம சொப்பனம்! நீயும் ஒரு புலியின் வால்! அருண்மொழிக்குச் சொல். காந்தளூர்ச்சாலை மூடப்பட மாட்டாது.” என்ற சேரன் ராஜராஜனைப் பற்றி இழிவாகப்பேசினான்.
மாறன் பொங்கிவிட்டான்.

“சரியாகத்தான் சொன்னீர்கள் சேரமன்னரே! நான் புலியின் வால் தான். ஆனால், புலியின் கரங்கள் எத்தகையது என்பதைத் தங்களைத் தவிர வேறு யார் அறிவார்கள்” என்றான். இதைச் சொல்லும் போது மாறனின் முகத்தில் கோபம் மறைந்து, இகழ்ச்சி கலந்த ஒரு புன்முறுவலும் விளைந்தது.

‘மாறன், தான் காந்தளூர்ச்சாலையில் 8 வருடமுன் போட்டியில் அருண்மொழியின் கரங்களில் தோற்றதைத் தான் குறிப்பிடுகிறான்’ என்பதை சேரன் உணரத்தவறவில்லை.
கொதித்தான்!

‘மாறா! புலியின் வாலை ஒட்ட நறுக்குகிறேன். உன்னைச் சிறையில் பிணைத்து வைக்கிறேன். புலி என்ன செய்கிறது என்று பார்ப்போம்” என்றான்.
“புலியின் வாலைப் பிடித்தவன் கதி என்னவாகும் என்பது தாங்கள் அறியாததா?” என்றான் மாறன்.
சேரன், மாறனை உதகைக்கோட்டையில் சிறை வைத்தான்.

ராஜராஜன் மாறனிடமிருந்து செய்தி வரவில்லையே என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். செய்தி வந்தவுடன் – ராஜராஜன் கோபத்தின் உச்சத்தை அடைந்தான்.
அந்தக் கோபத்தை சிவாஜி கணேசனாலும் காட்டியிருக்க முடியாது!
“பஞ்சவன் மாறாயனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அது வேறு யாருமல்ல – ராஜராஜன் மகன் ராஜேந்திரன் தான்.
“ராஜேந்திரா! பாஸ்கரன், மாறனைக் கைதுசெய்து கட்டிவைத்து உதகைக் கோட்டையில் காவலில் வைத்திருக்கிறானாம். என் உடலெங்கும் தீ பரவியுள்ளதுபோல எரிகிறது. நாம் உடனே படையெடுத்து சென்று உதகையை அழித்து அதை முழுதும் தீக்கிரையாக்கி, மாறனை சிறை மீட்டு வரவேண்டும். நமது கடற்படை இன்றே குமரிமுனையைச் சுற்றி காந்தளூர்ச்சாலைத் துறைமுகம் நோக்கிப் பயணப்படட்டும். சேரன் கடற்படை அழிக்கப்பட வேண்டும். வழியில் பாண்டியன் அமர புயங்கனையும் ஒடுக்கவேண்டும். நீதான் இந்தப் படையெடுப்பின் தலைமை. நானும் வருகிறேன்” என்றான்.

ராஜேந்திரன் சொன்னான்: “தந்தையே! அவ்வண்ணமே செய்வோம். சேர நாடு செல்ல இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று கொங்குநாட்டு வழியாகச் சென்று – பாலக்காட்டுக் கணவாய் ஊடாகச் – சேர நாட்டிற்குள் புகுந்து திருச்சிவப்பேரூர் (திருச்சூர்) வழியாகவோ, பரதப்புழை ஆற்றங்கரையிலுள்ள திருநாவாய் வழியாகவோ செல்லலாம்.
மற்றொன்று, பாண்டியநாடு வழியாக நெல்வேலி கடந்து நாகர்கோயில் வழியாக சேர நாடு செல்லலாம். வழியில் பாண்டியர்களையும் வென்று – அமர புயங்கனையும் வென்று – சேர நாட்டுக்குச் செல்லலாம். அமர புயங்கனுக்கு அடங்கிய சில குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆளுகின்றனர். அவர்களையும் வெல்வது அவசியம்” என்றான்.

ராஜராஜன் – “நல்லது. பாண்டியனை வென்று பின் சேரநாடு செல்வதே உத்தமம்” என்றான்.
படை புறப்பட்டது.
சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். ராஜராஜ சோழன் எப்பொழுதும் போருக்கு செல்வதற்கு முன்பாக பட்டீஸ்வரன் துர்க்கை அம்மனை வணங்கிவிட்டுத்தான் தன் படையெடுப்பைத் துவங்குவான். அவ்வாறே இந்த முதல்படையெடுப்பையும் துவங்கினான்.

கோவிலில் துர்க்கை அம்மன் – ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் மலர் மாலை அணிந்து, எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் இருந்தாள். சாந்த சொரூபிணியாக புன்னகை தவழும் முகத்துடன், சிம்ம வாகன முகத்துடன் இருந்தாள்.

ராஜராஜன், அக்கா குந்தவை, வந்தியத்தேவர், ராஜேந்திரன் அனைவரும் துர்க்கையை வழிபட்டனர். படைகள் புறப்பட்டன. சோழப்படைகள் பாண்டியரைப் புறங்கண்டது. ராஜராஜன், பாண்டிய மன்னன் அமரபுஜங்கனைச்   சிறைப்பிடித்தான். சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் ராஜராஜன், பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. இந்தப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது.

பாஸ்கர ரவிவர்மனின் ஆட்சி, சேரநாடு, குடமலைநாடு, வேணாடு, கொங்குநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அதாவது இன்றைய கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி. அதில் காந்தளூர்ச் சாலை ஒரு கடற்கரை நகரம். இங்கு, போர் கப்பற்படைகளுக்கு இடையில் நடந்தது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் சோழப்படை சேரர்களின் கப்பல்களை வீழ்த்தின- எரியூட்டின.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதயகிரி என வழங்கும் உதகை என்று சிலர் சொல்கின்றனர். உதகை என்னும் இடம் ஊட்டியும் அல்ல; உதயகிரியும் அல்ல; அவ்விடம் வடகேரளத்திலுள்ள மகோதயபுரம் என்றும் சிலர் சொல்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் உதகைக் கோட்டையின் அழகை வார்த்தைகளால் கூற இயலாது. மலையின் முகட்டில் – 18 காடுகள் சூழ்ந்து, கம்பீரமாக இருந்த கோட்டை அது. எதிரிகள் நெருங்க நினைக்கவே அஞ்சும் அந்த மலைக்கோட்டை, அழகுடன் பலமும் நிறைந்திருந்தது. 18 காடுகளை தாண்டி எதிரிகள் வந்தால் கோட்டையிலிருந்த விற்கூடங்களும், வேற்கூடங்களும் எதிரிகளை தாக்கி அழித்து விடும். இப்படி ஒரு கோட்டை இருக்கும் போது எந்த எதிரிக்கும் அஞ்சாமல் சோழனையும் பகைக்கத் துணிந்தான் சேரன் என்றே சொல்ல வேண்டும்.

உதகைக் கோட்டைக்கு வெளியே இருந்த அடர்ந்த காடுகள் உள்ள இந்தப் பகுதியில்தான், அதன் விளிம்பில் சோழர் படை முகாமிட்டிருந்தது. ராஜராஜன், “ராஜேந்திரா! உதகையைத் தாக்குவதில் நமது திட்டமென்ன?” என்றான்.
“தந்தையே! இந்தக் கோட்டையின் வலிமையை நாம் குறைவாக எடை போடக்கூடாது. நமது படையின் பெருவலிமை எதற்கும் குறைந்ததல்ல. ஆயினும் நேரடித் தாக்குதலில், நமது படைக்கு நிறைய சேதம் ஏற்படும். அதைத் தவிர்க்க, அக்னி பகவானை நமது படையில் சேர்த்துள்ளேன்” என்றான்.
ராஜராஜன் சிரித்துவிட்டான்: “அக்னி பகவான் என்ன செய்யப்போகிறார்?” என்றான். ராஜேந்திரனும் சிரித்துக்கொண்டே: “தந்தையே! பொதுவாக குதிரை, அல்லது யானைப் படையை முதலாக வைத்து போர் தொடங்குவோம். இந்தப்போரில், தீயை முதலில் வைத்து போரிடுவோம்” என்றான்.
ராஜராஜன் : “மேலும் சொல்” என்றான்.
ராஜேந்திரன்: “காடுகளை தீயால் எரித்து அழித்துக் கொண்டே நாம் முன்னேறுவோம். கோட்டை நெருங்கியவுடன், கோட்டை மதிலைத் தாண்டி உள்ளே பாயும் எரியம்புகளால் கோட்டைக்குள் தீ மூட்டுவோம். தீ முற்ற முற்ற, கோட்டை வீரர்கள் கோட்டையின் கதவைத் திறந்து சரணாகதிக்கு வருவர். அப்படி வராவிடில், நமது யானைகள் கோட்டைக் கதவை உடைக்கும். கோட்டைக்குள் நமது வேளக்காரப்படை முதலில் நுழையும். சிறைச்சாலையில் தவிக்கும் நமது மாறனை விடுவித்து நம்மிடம் கொண்டு வரும். அதன் பின்னர், உதகை முற்றிலும் எரிக்கப்படும். இது, தங்கள் தூதனை அவமதித்ததற்காக சேரனுக்கு நாம் வழங்கும் தண்டனை” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
‘நன்று. தீயனைத் தீய்த்திடவேண்டும். தொடங்கட்டும் நமது தாக்குதல்” என்றான் ராஜராஜன்.

திட்டமிட்டபடியே அனைத்தும் நடந்தது. பன்னிரண்டு மணிநேரத்தில் பதினெட்டுக் காடுகள் கடந்து சென்றனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட வேகம், வெறி கொண்ட சோழர் படை என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
வெந்து தணிந்த காடுகள் இடையே அந்த மலைக்கோட்டை – தங்கத்தட்டில் வைக்கப்பட்ட முத்துப்பேழை போல ஜொலித்தது. உதகையும் எரியூட்டப்பட்டு – மூன்று தினங்கள் எரிந்தது. கோட்டைக் கதவுகள் உடைக்கப்பட்டன.

ராஜராஜசோழன் குதிரையின் மீது ஏறி உதயகிரிக் கோட்டையின் (உதகை) உள்ளே நுழையும் காட்சியை உதயசூரியன் எழுவது போல் இருந்தது. (ஜெயங்கொண்டார் தமது கலிங்கத்துப்பரணியில் இதை அழகுபடக் கூறியுள்ளார்).
மாறன் விடுவிக்கப்பட்டான்.
கோட்டையில் இருந்த சேரமன்னன் பாஸ்கரன் – ரகசியப் பாதை வழியாக தப்பியோடி, குதிரைமீது பயணம் செய்து – கடற்கரையை அடைந்தான். அங்கு தயாராக இருந்த கப்பலில் ஏறித் தப்பித்து ஓடினான். உதகை அழிக்கப்பட்டது. சேரநாட்டு அதர்ம வேதபாடசாலைகள் அழிக்கப்பட்டன. மேலும் சேரமன்னனின் வலிமைமிக்க யானைப்படைகளைக் கவர்ந்து, உதகைக் கோட்டையை வெற்றிகொண்ட செய்தியுடன், இவ்வெற்றியின் நினைவாக ராஜராஜசோழன் தமது பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளன்று சேர மண்டலத்தில் விழாவெடுத்தான். (கலிங்கத்துப்பரணி இதைச் சிறப்பித்துக் குறிப்பிடுகின்றது). உதகைக் கோட்டையின் சிறப்பு, அது எரியூட்டி அழிக்கப்பட்ட நிகழ்ச்சி, சேர மன்னன் கடல் வழியே ஓடிய செய்தி இவற்றை திருக்கோயிலூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.

காந்தளூர்ச்சாலை, முன்பே சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகு ராஜராஜசோழன் மூவேந்தர்களின் முடியையும் தரித்தவர் என்ற பொருளில் மும்முடிச்சோழன் என்ற பட்டம் புனையத் தொடங்கினான். சேர நாட்டு அரசியல் நடைமுறைகளை மாற்றி அமைத்த நிகழ்வுதான் ராஜராஜன் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனைவதற்கான முகாந்திரத்தை உருவாக்கித்தந்தது.

மாறன் கூறினான்:
“சக்கரவர்த்தி. இந்தக் காந்தளூர்ச்சாலைக் கழகம் நான் படித்த பாடசாலை. இதன் பெருமைகளை நாம் அனைவரும் அறிவோம். இதை மூடாமல்- இதை சோழநாட்டுப் பயிற்சிக்கு உபயோகப்படுத்தலாமே” என்றான் தயங்கி.
ராஜராஜன்: “மாறா! உனது கருத்துக்கு மாற்று உண்டா? அப்படியே ஆகட்டும்” என்றான்.
ஆக, காந்தளூர்ச்சாலை கலமறுத்து ராஜராஜசோழன் மும்முடிச்சோழனாக முடிசூடிய பின்னரும், காந்தளூர்ச்சாலைப் பயிற்சிக்கூடம் மூடப்படவில்லை. திருநாவாய்த் திருத்தலத்தில் நிகழ்ந்துவந்த மகாமக விழாவையும் அவ்விழாவின்போது நிகழ்ந்த போட்டிகளும் மீண்டும் தொடர்ந்தன.

மும்முடிச்சோழன் ராஜராஜன் பார்வையை வடக்கே உயர்த்தினான்.
சாளுக்கிய, இராட்டிரக்கூட, வெங்கி ராஜ்யங்கள் விரிந்து கிடந்தன.
பராந்தகன் ஆட்சியில் நிகழ்ந்ததற்குப் பாடம் சொல்லும் நேரம் வந்தது. மேலும் தென்னிந்தியாவிலேயே இன்னொரு ராஜ்யம் துள்ளிக்கொண்டிருந்தது.
ஈழம்.
அதற்கும் ஒரு பாடம் புகட்டவேண்டும்.
ராஜராஜனுக்கு நிறைய வேலைகள் காத்துக்கிடக்கிறது.
அவை விரைவில்…

திரைப்பாடலில் சித்திரை – கமலா முரளி

சித்திரை பற்றி திரைச்சித்திரப் பாடல்களில்…

புது வருடம் பிறக்கும் போது புத்துணர்வு பொங்குவது இயல்பு தானே !

திரையிசையை நினைக்காமல்… பாடாமல்…புத்துணர்வு பற்றிச் சொல்வது மாங்காய் பச்சடி வேப்பம்பூ ரசமில்லா புதுவருஷ விருந்து போல அல்லவா ?

சித்திரை பற்றிய திரையிசைப் பாடல்களைப் பற்றி சிந்திக்கும் போது

“சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் ….” பாடல் தான் முழுநிலவாய் மனதில் வியாபிக்கும்.

தண்டவாளத்தின் மேல் புகைவண்டி பயணிக்கும் சத்தம், ரயிலின் விசில்,கவியரசரின் வரிகளுக்கு, மெல்லிசை மன்னர் இசையில், பி.சுசீலாவின் இனிய குரலில் புன்னகையரசியின் காந்தப் புன்னகையுடன்….

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் ம்… ம்… ம்…

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்

சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்…..

“எஸ்..எஸ்… சொர்க்கத்துக்குப் போகும் உணர்வு தான் …. கேட்போருக்கு ..”

ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் அப்பாடலை எத்தனை முறை கேட்டாலும், சித்திரை நிலவாய் நம் மனம் பளிச்சிடும் !

“சித்திர…. சித்திரைப்பூ….” போன்ற சொற்களுடன் அநேக பாடல்கள் உண்டு என்றாலும் அது ஓவியத்தையோ அல்லது அழகிய பூக்களையோ குறிக்கக் கூடும்.

சித்திரை மாத அழகை வருணிக்கும் பாடல்களின் வரிசையில்

1963ஆம் ஆண்டு வெளியான ”துளசிமாடம்” படத்தில் இடம் பெற்ற

‘சித்திரை மாத நிலவினிலே

தென்றல் வீசும் இரவினிலே

உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்

அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்”

பாடலைக் குறிப்பிட வேண்டும்.

கவிஞர்.கா.மு.ஷெரிஃப் அவர்களின் வரிகளை, மெல்லிசைத் திலகம் மகாதேவன் இசையமைப்பில் ,டி.எம்.எஸ் அவர்கள் பாடியிருப்பார். கண்ணியம் மிகுந்த பாடல் வரிகள் ( அத்தகைய திரைச்சூழலுக்கு, பிற்காலத்தில் முனகல்களே பாடல் வரிகளாக இருந்ததுண்டு ), ஏவி..எம்.ராஜனின் கம்பீரமும் கண்ணியமும் கலந்த முகபாவம் ! மிகச் சிறப்பான பாடல் அது !

மக்கள்திலகம் பற்றிக் குறிப்பிடாமல் திரையிசைப் பாடல் கட்டுரையா ?

சித்திரை வெயிலைப் பற்றி ஒரு பாடலின் இடையில் வருகிறது,”கணவன் ”  திரைப்படத்தில் வாலி அவர்களின் வைர வரிகளில், மெல்லிசை மன்னர் இசையில் வரும் “என்னப் பொருத்தமடி” என்ற பாடலில் வரும்.

“உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்

சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்

எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்

இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்

ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் ..

பாருங்கடி ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி”

எனத் துள்ளலாக வரும் அப்பாடல் !

சித்திரை மாத வெயிலைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் “ஜோடி” திரைப்படத்தில் எழுதியிருப்பார்.

“வெள்ளி மலரே, வெள்ளி மலரே

  நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்

  ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய்

  மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

  சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

  இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ

  தேன் சிதறும் மன்மத மலர் நீ என்றே சொல்வாயோ ?”

 

என இலக்கிய நயத்துடன் மலரைக் கேட்டிருப்பார்.

 

“சிவப்பதிகாரம்” படத்தில், வித்யாசாகர் இசையில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள பாடல், “அப்படியோர் ஆணழகன்” எனத் துவங்கும் அப்பாடலில்,

 

“சித்திரையில் என்ன வரும்?

வெயில் சிந்துவதால் வெக்க வரும்.

நித்திரையில் என்ன வரும்?

கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்.

கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால்

உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட

தித்திப்பு நெஞ்சில் வரும்.”

 

இது மட்டுமல்ல ! கோடை மழை என்பது அனைவரும் அறிந்த இயற்கை நிகழ்வு என்றாலும், சித்திரை என்றால் வெயில் தான் என்பதை, ”அவர்கள்” திரைப்படத்தில், எம்.எஸ்,வி இசையில் வரும்

 

”ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்

இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்

மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்”

எனும் பாடலின் வரிகளும் சித்திரை நிலவு பற்றிய அழகிய கவிதைகள், பாடல் வரிகள் எத்தனையோ இருந்தாலும், சித்திரை மாதத்து வெயிலும் கவிஞர்கள் மனதை விட்டு அகலுவதில்லை போலும் !

சித்திரை மாதம் என்பது புதுவருஷத்தின் முதல் மாதம் !

முதல் மாதம் பற்றிய பாடல்களைப் பற்றி யோசிக்கும் போது, எல்லா மாதங்களையும் உள்ளடக்கிய பாடலைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து செல்ல முடியுமா ?

மிகப் பிரபலமான, வரலாற்றுப் பின்னணி கொண்ட “ராஜ ராஜ சோழன்” படத்திலிருந்து தான் அந்தப்பாடல் :

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்,டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும்  எம்.ஆர்.விஜயா ஆகியோர் பாடிய பாடல் :

”மாதென்னை படைத்தான் உனக்காக

மாதங்கள் படைத்தான் நமக்காக

கீதங்கள் படைத்தான் இசைக்காக

காதலை படைத்தான் கணக்காக

கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்

எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு  

மார்கழி மாதத்து பனிமுத்து போல்

இன்று மயக்கியதே உந்தன் சொல்லழகு

தை மகளே அத்தை மகளே

என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே  

மாசில்லாத என் மாமணியே

இந்த மணமகள் தேடிய மன்னவனே 

பங்குனி என் வாழ்வில் பங்கு நீ

இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ

சித்திரை மாதத்து வானம் நீ

எங்கள் தெய்வ புலவரின் வேதம் நீ  

வைகாசி பிறையின் வடிவமே

வாடாத அழகு பருவமே  

ஆனி மஞ்சனம் போலவே

புது அலங்காரம் செய்த தெய்வமே 

ஆடி காவிரி வெள்ளமே

வரும் ஆவணி மாதத்து மேகமே 

புரட்டாசி திங்களில் ஒரு மனம்

ஐப்பசி மாதத்தில் திருமணம் 

நம் திருமணம் ”

 

                                                     

தமிழ்த் திரைக் கவிஞர்கள் –  முனைவர் தென்காசி கணேசன்

 கவிதாயினி ரோஷனாரா பேகம்

தமிழ்த் திரைக் கவிஞர்கள் வரிசையில், இந்த மாதம்,  நாம் காணவிருப்பது, தமிழ்த் திரையின்  முதல் கவிதாயினி – பெண் கவிஞர். ஒரு அதிசய ஒற்றுமை என்னவென்றால், தமிழ் திரை உலகில் இரண்டு பெண் கவிஞர்கள் தான் வந்திருக்கிறார்கள். ஒருவர் இம்மாதம் நாம் காணவிருக்கும்  ரோஷனாரா பேகம். இன்னொருவர் கவிதாயினி தாமரை.  இரண்டு பேரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  கொங்கு நாட்டில் இருந்து, பொங்கும் தமிழில்
பாடல்கள் தந்தவர்கள்.

தமிழ் திரை உலகின் முதற் பெண் கவிஞர் என்ற பெருமையைக் கொண்டவர், ரோஷனாரா பேகம். இஸ்லாமிய பெண்கள் திரை உலகிற்கு வருவது எனபது இன்றையக் காலத்தில் கூட,  இல்லாத நிலையில் , 1968ல் இந்தப் பெண் வந்தது ஆச்சர்யமான விஷயம் தான். ஒரே ஒரு வருத்தம் – திரை உலகில் அவர் எழுதிய முதற் பாடலும் கடைசிப் பாடலும் இதுவே என அமைந்துவிட்டது. காலத்தின் சுவடுகளில் காணாமல் போய்விட்டார்.

ரோஷனாராவின் தந்தை ஒரு மோட்டார் நிறுவனம் வைத்திருந்தார். தாய், மருத்துவப் பணியில் இருந்தவர். கோவை உக்கடத்தில் வசித்து வந்த ரோஷனாராவிற்கு நல்ல குரல் வளம். படிக்கும்போதே அவரே எழுதி, பாடி பல பரிசுகள் வாங்கியவர். தந்தையின் நட்பு வட்டத்தில் இருந்த மெல்லிசை மன்னர் மூலம், கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளர் வேலுமணி தயாரித்த , குடியிருந்த கோயில் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னைக்கு வந்து நான்கு நாட்கள் மட்டுமே தங்கி, இந்தப் பாடலை எழுதினார் என்பார்கள். பாடலின் பல்லவியாக,

குங்குமப்பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்

என்ற வரிகளைக் கேட்டவுடன், மன்னருக்கும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் ஆச்சர்யமான சந்தோஷம்.

காரணம், குடியிருந்த கோயில் படத்திற்கு ,முதலில் வைத்த பெயர் சங்கமம்.. படத்தின் பெயரையே, பாட்டின் முதல் வரிகளில் கொண்டு வந்ததால்,
பாடலில் சந்தம், அழகுணர்ச்சி இவற்றுடன் காதலும் சேர, கவிதாயினியின் வரிகள் மிக அழகு.

திரை உலகில் பல வருடங்கள் கோலோச்சி வரும் ஒரு கவிஞர் போல, அற்புதமான வரிகளைத் தந்தவர்.  இலக்கியத்  தரத்துடன் தந்திருப்பது மிக அழகு. அதற்கு ஏற்றாற்போல், மெல்லிசை மன்னரின் நளினமான இசையில், TMS  சுசீலா  இருவரின் குரல்களில்,  இந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ரசிக்கப்பட்டது.
 –
இதோ முழுப்பாடல், நமது ரசிப்புக்கு.. பாடலை பாடல் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்!

குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும் –  இளமை
ஒன்றெனப் பாடும்

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே  மான்தளிர் தேகம் 

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண்ணான பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி

 

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கும் எங்கும் ஆனந்த கங்கை

ஜில் என்னும் குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு பேசும்

மெளனமே தான் அங்கு பேசும் பேசும் பேசும்

மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது

 

பக்கோடா காக்கா – SL நாணு

“கா.. கா”

காலம்பர காக்கா கத்தினா நாங்க கடிகாரமே பார்க்க மாட்டோம்.. எங்களுக்குத் தெரியும்.. சரியா மணி ஏழரை..

எங்க பால்கனி க்ரில்ல உட்கார்ந்து கரெக்டா எதிர இருக்கிற சமையல் அறையை எட்டிப் பார்க்கும்..

அந்த சமயத்துல சாப்பாடு ரெடியாயிருக்காது.. அதனால மீனா.. அதான் என் சகதர்மணி ஒரு பிஸ்கட்டைக் கொண்டு வந்து பால்கனி திண்டுல வெப்பா.. அந்தக் காக்கா மறுபடியும் “கா.. கா”ன்னு கத்திட்டு பிஸ்கட்டைக் கவ்விண்டு பறந்து போயிரும்..

அப்புறம் சரியா ஒம்பது மணிக்கு மறுபடியும் “கா.. கா”..

இப்ப மீனா ஒரு கிண்ணத்துல சாதம் எடுத்து, பருப்பு போட்டு, நெய் விட்டு ரெடியா வெச்சிருப்பா.. அதை சுவாமி முன்னால வெச்சு நமஸ்காரம் பண்ணிட்டு பால்கனி திண்டுல கொட்டுவா. அந்தக் காக்காயும் “தேங்ஸ்”ன்னு சொல்ற மாதிரி அவளை ஒரு பார்வை பார்த்துட்டு சாதத்தை ருசிக்க ஆரம்பிச்சுரும்..

நான் கூட சில சமயம் கிண்டலாக் கேட்பேன்..                                     

“தினம் எனக்கு சுடச் சுட சாதம் போடறயோ இல்லையோ.. காக்காய்க்குப் போட்டுடறே.. இது என்ன நியாயம்?”

உடனே மீனா சீரியஸா என்னை அடக்குவா..

“ஐயையோ.. இப்படியெல்லாம் பேச்சுக்குக் கூட கிண்டல் பண்ணாதேங்கோ.. காக்கா யாரு? நம்ம பித்ருக்கள்.. தினம் காக்காய்க்கு சாதம் போடறது.. நம்ம பித்ருக்களுக்கு சாப்பாடு போடறதுக்கு சமம்”

எனக்கு இதுலலாம் அதிகமா நம்பிக்கை இல்லைன்னாலும் அதுக்கு மேல நான் எதுவும் பேச மாட்டேன்.. ஏன்னா நான் ஒரு வார்த்தை சொன்னாக் கூட.. என்னைப் பேச விடாம..

“உங்களுக்குத் தான் எதுலயுமே நம்பிக்கை கிடையாதே.. பித்ரு காரியம் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க இதுலலாம் நம்பிக்கை வெக்காததுனால தான்.. ஆபீஸ்ல உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் தட்டிப் போயிண்டே இருக்கு”

அப்படின்னு அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போட்டு.. என்னைக் கிட்டத்தட்ட வீரமணி ரேஞ்சுக்கு நாஸ்திகன் ஆக்கிருவா..

காக்காய்க்கும் மீனாவுக்கும் ஆன உறவே அலாதி தான்..

திடீர்னு ஒரு நாள் “வாங்கோ.. வாங்கோ” அப்படின்னு வாய் நிறைய யாரையோ வெல்கம் பண்ணினா.. யாரோ விருந்தாளி வந்திருக்கான்னு ஹாலுக்குப் போனா.. அங்க மீனாவைத் தவிற வேற யாரும் இல்லை.. அப்புறம் பார்த்தா காக்காயைத் தான் “வாங்கோ வாங்கோ”ன்னு மீனா ஆசையா வரவேத்திருக்கா..

அது மட்டுமில்லை.. அப்பப்ப காக்காயோட அவ பேசற அழகே தனி..

”என்ன அவசரம்.. சூடா இருக்கு.. மெதுவாச் சாப்பிடுங்கோ..”

“இன்னிக்கு சாதம் கொஞ்சம் குழைஞ்சிருக்கு.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ”

“நாளைக்கு அமாவாசை.. மறக்காம வந்துருங்கோ”

அந்தக் காக்காயும் மீனா சொலறதெல்லாம் புரிஞ்ச மாதிரி அவளைப் பார்த்து ”கா கா”ன்னு குரல் கொடுத்துட்டுப் போயிரும்..

சத்தியமாச் சொல்றேன்.. கல்யாணமான இத்தனை வருஷத்துல ஒரு தடவைக் கூட மீனா எங்கிட்ட இப்படி அக்கறையா அனுசரணையாப் பேசினதே கிடையாது..

சரி அதை விடுங்க.. சொந்தக் கதை.. சோகக் கதை.. உங்களுக்கு எதுக்கு?

மறுபடியும் காக்காய்க்கு வருவோம்..

ஒரு நாள் காலம்பர மீனா கவலையோட வந்து..

“ஏன்னா.. பிஸ்கட் காலியாயிருத்து.. நேத்து வாங்க மறந்துட்டேன்” அப்படின்னு சொன்னா.. வழக்கமா ரெண்டாவது டோஸ் டீ உறிஞ்சும் போது நான் ரெண்டு பிஸ்கட் டீயில முக்கி சாப்பிடுவேன்.. அதை நினைச்சுத் தான் மீனா கரிசனப் படறான்னு நம்பினேன்.

”அதனால என்னம்மா.. இன்னிக்கு பிஸ்கட் இல்லாம டீ சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..”

ஆனா அடுத்த கணமே மீனா வாய் திறந்த உடனே என் நம்பிக்கை எவ்வளவு பெரிய அபத்தம்னு புரிஞ்சுண்டேன்.. என் சுய கௌரவம் அதள பாதாளத்துகுப் போய்.. அதுக்கும் கீழ போக முடியாம தத்தளிச்சிண்டிருந்தது..

”ஆமா.. சின்னக் குழந்தையாட்டுமா உங்களுக்கு பிஸ்கெட் ஒண்ணு தான் குறைச்சல்.. இப்ப காக்காய் வந்துரும்.. அதுக்குப் போட பிஸ்கட் இல்லையேன்னு நான் கவலைப் பட்டுண்டிருக்கேன்”

இதைக் கேட்ட அப்புறம் இனி வாழ்க்கைல பிஸ்கட்டே சாப்பிடறதில்லங்கற முடிவுக்கு நான் வந்துட்டேன்னு நீங்க நினைச்சா.. மன்னிக்கணும்.. அப்படியெல்லாம் அவசரப் பட்டு முடிவு எடுத்து மாட்டிக்கிற ஆள் நானில்லை.. “வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு கவுண்டமணி பாணில உதறித் தள்ளிட்டுப் போற ஆள்..

சரி.. என்னை விடுங்க.. கமிங் பேக் டு காக்காய்..

பிஸ்கட் இல்லாம காக்காயை எப்படி சமாளிக்கறதுன்னு  மகனையும், மகளையும் கூப்பிட்டு வெச்சிண்டு கேபினட் ரேஞ்சுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினா மீனா.. (நான் எப்பவுமே எதிர் கட்சிங்கறதுனால ஆலோசனைக் கூட்டத்துல எனக்கு இடம் கிடையாது). இறுதியா அவா ஒரு முடிவுக்கு வந்தாச்சுன்னு தெரிஞ்சுது.. ஆனா அது என்ன முடிவுன்னு காக்காய் வந்து வழக்கம் போல குரல் கொடுத்த அப்புறம் தான் தெரிஞ்சுது..

சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து வந்த உடனே காப்பியோட கொரிக்க வழக்கமா ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி வெச்சிருப்பேன்.. நேத்து தான் கடைக்காரர் ரொம்ப ரெகமெண்ட் பண்ணினாரேன்னு நாடா பக்கோடா வாங்கிண்டு வந்திருந்தேன். காக்கா கத்தின உடனே பிஸ்கட்டுக்கு பதிலா அந்த நாடா பகோடாவுலேர்ந்து கொஞ்சம் சர்வ் பண்ணினா மீனா.. வழக்கமான பிஸ்கட் இல்லாம மெனு மாறினதுல அந்த காக்காயோட கண்ணுலயே சர்ப்ரைஸ் தெரிஞ்சுது,, சந்தோஷத்துல “ஊ.. லல்லா” ரேஞ்சுக்கு “கா.. கா”வை ராகம் இழுத்துக் கத்திட்டு பகோடாவை ஒவ்வொண்ணா கவ்வி “நறுக் முறுக்”ன்னு சாப்பிட்டு.. ஏதோ பத்ம விபூஷனே கிடைச்ச மாதிரி சந்துஷ்டியாப் பறந்து போச்சு..

ஐ.நா. சபையே தீர்த்து வெக்க முடியாத பிரச்சனையை தான் தீர்த்து வெச்ச சந்தோஷம் மீனா முகத்துல..

மணி ஒம்பது.. வழக்கம் போல டாண்ணு காக்கா வந்தாச்சு..

மீனாவும் ரெடியா கிண்ணத்துல வெச்சிருந்த ஆவி பறக்கற சாதத்தை பால்கனி திண்டுல கொட்டினா,,

அதை உத்துப் பார்த்த காக்கா திரும்பி மீனாவை முறைச்சுப் பார்த்தது..

”என்ன பார்க்கறேள்? சாதம் போட்டிருக்கேனே.. சாப்பிடுங்கோ”

ஆனா காக்கா அதை லட்சியம் பண்ணலை.. மறுபடியும் மீனாவை முறைச்சுப் பார்த்தது..

”ஐயையோ.. ஏன் சாப்பிட மாட்டேங்கறேள்? உடம்பு சரியில்லையா? இல்லை ஏதாவது தப்பு நடந்துருத்தா?”

மீனாவோட குரல்ல இருந்த கவலையான கரிசனம்.. ஒரு தடவைக் கூட என் விஷயத்துல.. சரி விடுங்கோ.. இப்ப எதுக்கு அது?

மீனா கேட்ட உடனே காக்கா காலைல பகோடா போட்ட இடத்துல  உட்கார்ந்தது.. அவளைப் பார்த்துத் தலையை ஆட்டி ஆட்டி குரல் கொடுத்தது..

“என்ன சொல்றேள்? புரியலையே..”

மீனா கவலையோட குழம்பினா..

இதைப் பார்த்துண்டிருந்த நான்..

“புரியலை? உன் விருந்தாளிக்கு சாதம் வேண்டாமாம்.. காலைல நீ போட்ட நாடா பகோடா தான் வேணுமாம்..”

நான் சொல்லி முடிச்ச உடனே “கா கா”ன்னு குரல் கொடுத்து காக்கா ஆமோதிச்சது..

மீனா நாடா பகோடாவைக் கொண்டு வந்து போட்டா.. உடனே காக்கா கண்ணுல ஆயிரம் வாட் பிரகாசம்.. லபக் லபக்னு ஒண்ணு விடாம சாப்டுட்டு ஜாலிலோ ஜிம்கானான்னு துள்ளலா(!) பறந்து போச்சு..  

அதுலேர்ந்து தினம் காக்காய்க்கு சாதம் கிடையாது.. கார சாரமா நாடா பகோடா தான்.. வழக்கமா காலம்பர மட்டும் வந்துண்டிருந்த காக்கா இப்பலாம்.. காலம்பர, மத்தியானம், சாயங்காலம்னு மூணு வேளையும் கரெக்டா வந்து நாடா பக்கோடா சாப்பிட்டுப் போறது..

மாசாந்திர மளிகை லிஸ்டுல முதல் ரெண்டு இடத்துல இருந்த மஞ்சப் பொடி, கடுகு.. இப்ப ரெண்டாவது,, மூணாவது இடதுக்குப் போயிருத்து.. முதல் இடத்தைப் பிடிச்சிருக்கிறது ரெண்டு கிலோ நாடா பகோடா..

எனக்குத் தாங்கலை..

“என்னடி இது அநியாயம்.. மாசா மாசம் ரெண்டு கிலோ நாடா பக்கோடாவா? கட்டுப்படி ஆகுமா?”

நான் கேட்ட உடனே மீனா கறாரா சொல்லிட்டா..

“இதப் பாருங்கோ.. பித்ருக்கள் விஷயத்துல கணக்குப் பார்க்காதேங்கோ.. அது நல்லதில்லை.. யாரு கண்டா.. உங்க பரம்பரைல யாருக்காவது நாடா பக்கோடா பிடிக்குமோ என்னமோ.. அதான் காக்கா அதை விரும்பிச் சாப்பிடறது”

மீனா இதைச் சொன்னதும் யோசிச்சுப் பார்த்தேன்..

அட ஆமாம்.. எங்கப்பாவுக்கு நாடா பக்கோடா ரொம்பப் பிடிக்கும்..

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

                           குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும்.

பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன்  கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
  25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
  26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
  27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
  28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
  29. மழையே வா ! – செப்டம்பர் 2021
  30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
  31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
  32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
  33. தமிழ் ! – நவம்பர் 2021
  34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
  35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
  36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
  37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
  38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
  39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
  40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
  41. என்ன மரம் ! – மார்ச் 2022
  42. சைக்கிள் ! – மார்ச் 2022
  43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
  44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022

 

 

தோட்டத்தில் காய்கறி !

இளைஞர்களுக்கான வீட்டுத் தோட்ட போட்டி - நியூஸ் தமிழ்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் –

எத்தனையோ காய்கள் பாருங்க !

வந்து பாரடி வசந்தி !

வரிசையாய் இருக்கு காய்கறி !

 

குண்டு குண்டாய் கத்தரிக்காய் !

வெடவெடவென்று வெண்டைக்காய் !

ஒல்லிப்பிச்சான் அவரைக்காய் !

பாம்பு போல புடலங்காய் !

 

தகதகதகவென தக்காளி !

பச்சைப் பசேலென பாகற்காய் !

குலையாய்த் தொங்குது வாழைக்காய் !

தரையில் படருது பரங்கிக்காய் !

 

பாத்தி பாத்தியாய் கீரைகள் !

பச்சை மிளகாய் பார் அங்கே !

பெருசு பெருசாய் பூசணிக்காய் !

பக்கத்திலே பார் கறிவேப்பிலை !

 

கிருஷ்ணா, கோபி, டேவிட்சன் !

ஜவஹர், சந்துரு, மந்திரா வா !

தோட்டத்துக் காய்கறி சாப்பிடலாம் !

நன்றாய் உடல்நலம் காத்திடலாம் !

 

 

இந்தியாவும் தமிழ்நாடும் !

தமிழ்நாடு எப்படி உருவானது? – Nakkeran

இந்தியா எனது தாய்நாடு !

தமிழ்நாடே என் தாய்வீடு !

இந்தியன் என்றால் பெருமைதான் !

தமிழன் என்பதென் அடையாளம் !

 

எல்லா மொழியும் பேசிடுவோம் !

தமிழ்மொழி தாய்மொழி போற்றிடுவோம் !

உலகத்து மேடைகள் அனைத்திலுமே –

தங்கத் தமிழில் முழங்கிடுவோம் !

 

எத்தனை பெரிய பாரம்பரியம் –

கொண்டது எங்கள் பாரதமே !

தமிழரின் உயரிய பண்பாடு –

தரணி முழுவதும் தெரிந்ததுதான் !

 

பாரத நாடும் தமிழ்நாடும் –

இரண்டும் எந்தன் இரு கண்கள் !

ஒன்றை விட்டு மற்றொன்றை –

பிரித்துப் பார்த்தல் சரியாமோ ?

 

வந்தே மாதரம் என்றிடுவோம் !

தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடிடுவோம் !

இந்தியா என்பதே என் பேச்சு !

தமிழ்தான் எந்தன் உயிர் மூச்சு !

 

 

 

திரை ரசனை வாழ்க்கை 15 – எஸ் வி வேணுகோபாலன் 

 
டாணாக்காரன்
 
விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' - படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்- Dinamani
நிறைய முறை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவங்கள் உண்டு.   தொழிற்சங்க வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பிலிருந்தே. ஆனால், மிக மிக இளம் வயதில், பேருந்தில் கடந்து சென்ற ஒரு காவல் நிலைய வாசலில் கைக்குழந்தையோடு நின்றிருந்த ஓர் இளம் பெண்ணை, வாசலில் துப்பாக்கியோடு நின்றிருந்த காவலர் ஏதோ கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்த காட்சி நெஞ்சில் இன்னும் உறைந்திருக்கிறது. அவர் அவளை அப்புறம் சுட்டு விட்டிருப்பாரோ என்று அப்பாவியாக நான் என் பாட்டியைக் கேட்டதும் நினைவில் இருக்கிறது. கல்லூரிக் காலத்தில், பின்னர் வங்கிப்பணியில்  எத்தனையோ முறை செல்ல நேர்ந்ததுண்டு, எந்த அச்சமும் இன்றி.   
திரைப்படங்கள் காவல் துறை பற்றி, காவல் துறையினர் பற்றி பொது புத்தியில் விதைத்திருக்கும் விஷயங்கள் நிறைய உண்டு.  தங்கப் பதக்கம் சிவாஜி, சாமி விக்ரம், சிங்கம் சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல் என்று வகை வகையான காவல் துறை ஆசாமிகளை மக்கள் திரையில் பார்க்கின்றனர்.  என்கவுண்டர்களைக் கொண்டாடும் மனநிலையை சமூகத்தின் பிரதிபலிப்பாகப் படங்களும் சாகசத்தோடு கொண்டாடின.  விக்ரம் வேதா படம் காவல் துறை என்கவுண்டர்களை மறுவாசிப்பு செய்தது. 
காவல் துறையில் இயங்குவோரின் உளவியல் பற்றிய தேடல் அண்மைக்காலங்களில் தமிழ்த் திரையில் முன்னுரிமை பெறுவது முக்கியமானது. பழைய படங்களில் பட்டும் படாமலும் நழுவிப் போன அம்சங்கள் இப்போது பேசுபொருள் ஆவது சமூகத்திற்கும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதை, டாணாக்காரன் படத்திற்கான எதிர்வினைகளில் பார்க்க முடிகிறது. ஒன்றின் இயங்கும் தன்மையை அதன் உருவாக்கத்தில் வைத்துப் புரிந்து கொள்ளும் அனுபவத்தை இயக்குநர் தமிழ், காவல் துறை பயிற்சிப் பள்ளியைக் கதைக் களமாகக் கொண்டு படைத்து அளித்திருக்கிறார்.  
அவரே காவல் துறையில் சுமார் 12 ஆண்டுகள் பணி புரிந்து விட்டுத் திரைத் துறைக்கு விரும்பிக் குடி பெயர்த்தவர், இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர், புத்தக வாசிப்பு உள்ளிட்டு வலுவான அடித்தளத்தை அங்கே பயின்று வந்திருப்பவர் போன்ற செய்திகள் சிறப்பானவை. அதைவிட சுவாரசியமான விஷயம், ஜெய் பீம் படத்தில் முரட்டுக் காவல் அதிகாரி குருமூர்த்தி பாத்திரத்தில் நடித்திருப்பவர் அவர் தான் என்பது!
PRS மற்றும் ED இரண்டும் அதிகம் படம் முழுவதும் தெறிப்பவை. காவல் துறை பயிற்சி பள்ளி (போலீஸ் ரெக்ரூட் ஸ்கூல்), மற்றது கூடுதல் பயிற்சி (எக்ஸ்ட்ரா டிரில்) எனும் தண்டனை பயிற்சி. 
பேட்ச் பேட்சாக வந்து இறங்கும் புதிய ஊழியர்களை உற்சாகமாக வரவேற்று, உரிய பயிற்சி கொடுத்துப் பொறுப்புள்ள காவல் துறை அதிகாரிகளாக அவர்கள் தங்களை வளர்த்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் ஒரு பயிற்சி பள்ளியின் தத்துவார்த்தமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது அவர்களை மனித இயல்பு அறவே அற்றுப் போகிறவர்களாக உருமாற்றம் பெறுவதற்கான பட்டறையாக அடித்து நிமிர்த்தும் இடமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.  காவல் துறையில் ஜனநாயகத் தன்மை இருக்க வேண்டும் என்ற குரல் தான் திரைக்கதையின் அடிநாதம். இருட்டறைக்குள் காற்றும் வெளிச்சமும் கோருகிறது திரைப்படம்.
பெருங்கனவோடு பயிற்சிப் பள்ளிக்கு வந்திறங்குவோரில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் புத்தகத்தை மார்பில் வைத்து வாசித்துக் கொண்டிருக்கிறார் . இன்னொருவர், சட்ட நுணுக்க வகுப்பு எடுக்க வரும் ஆசிரியரின் கேள்வி ஒன்றிற்கு, ஊர்வலம், போராட்டம்னு கொடியெடுத்துக்கிட்டு வர்றவங்கள சுட்டுத் தள்ளணும்னு தான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கிறேன் என்று பதில் அளிக்கிறார். பயிற்சியாளர் இந்த இரண்டாமவனைச் செல்லப் பிள்ளையாகவும், முதலாமவனை விரட்டப்பட வேண்டியவனாகவும் முதல் சந்திப்பிலேயே முடிச்சு போட்டு வைத்துக் கொள்கிறார்.  பயிற்சி என்பது போட்டிகளோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.  குறிப்பிட்ட பயிற்சியாளரின் டீம் தான் வெற்றி பெற முடியும் என்பதை எழுதி வைத்துத் தான் போட்டிகளே நடத்தப் படுகின்றன. எதிர்த்துப் பேசுதல், கேள்வி எழுப்புதல் அறவே தடை செய்யப்பட்ட அந்த பயிற்சிக் களத்தில் அடியும், உதையும், புதிரான மரணங்களும், சக பயிற்சி பெறுபவன் கண் முன்னே செத்து விழுவதும் கூட அமைதியாகக் கடந்து போகும் வண்ணம் மரத்துப் போன மனம் கொண்டவர்களாக மரபணு மாற்றத்தை ஒரு பயிற்சிப் பள்ளி சாதிக்கும் அராஜக வேதியியல் தான் மொத்த திரைக்கதையும்.
 
எதற்கு போலீஸ் வேலைக்கு வந்தாய் என்ற கேள்விக்கு, மாமூல் வாங்கி நல்லாக் காசு சம்பாதிச்சு பிள்ளை குட்டிகளோடு செட்டில் ஆயிரணும் என்று பெருமையாகச் சொல்கிறார் வகுப்பில் ஒருவர். சேவை என்பதன் பொருளை ஆசிரியர் விளக்குவதை, பயிற்சிப் பள்ளியின் நடைமுறைகள் எதிர்மறையில் அணுகிக் கொண்டிருக்க, பயிற்சிப் பள்ளியிலேயே லஞ்சம் திரட்டப்படும் நேரத்தில் மோதல் உருவாகி விடுகிறது. அதிகாரிக்காக என்று வசூலிக்கப்படும் காசுக்கு ரசீது கேட்ட பாவத்திற்காகக் கூடுதல் பயிற்சி என்ற தண்டனை பயிற்சியில் வேகாத வெயிலில் ஓட முடியாத ஓட்டத்தில் உருக்குலைந்து, கனவுகளும் உடலும் உயிரும் ஒரு சேரச் சிதறி விழுகிறார் வயது கடந்த காலத்தில் பயிற்சிக்கு வந்தவர்.
 
கந்துவட்டிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத கொடுமையில் தனது பரோட்டாக் கடை மூடப்படுவதைக் காவல் நிலையம் சென்று புகார் செய்யப் போன தந்தை அவமானப்பட்டுத் திரும்ப நேர்வதைக் கண்ணுறும் சிறுவன், அந்த அதிர்ச்சியில் உயிரிழக்கும் தந்தை சாகும் முன்பு, நேர்மையான காவல் அதிகாரி இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எழுப்பும் கேள்விக்காகத் தான் காவல் துறையில் சேர விரும்பி வந்தது தான் கதாநாயகனின் பின்கதைச் சுருக்கம். பயிற்சிப் பள்ளி அந்த மனவுறுதியை நிமிடம் தோறும் சிதைக்கப் பார்த்துக் கொண்டே இருக்க, மேலும் உறுதியோடு ஒரு டீம் தயாராகிப் போட்டியில் சிறப்பாகப் பயிற்சி செய்து தங்களை நிரூபித்தாலும், முரட்டுப் பயிற்சியாளர் டீமுக்கே வெற்றி அறிவிக்கப்படுவது படத்தில் முக்கியமான இறுதிக்காட்சி.  எந்த விதத்திலும் சீர்திருத்தாமல் கட்டிக் காப்பாற்ற வேண்டிய அமைப்பின் தேர்ச்சியான பிரதிநிதியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அமைப்பின் தேவை என்கிறார் உயரதிகாரி. 
 
1997ல் பயிற்சியில் வந்து சேருவோர் என்று அடையாளப்படுத்தும் திரைக்கதை, 1982ல் காவல் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டும் அரசியல் காரணங்களுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்து நியமனம் பெற்றுப் பயிற்சிக்கு வரும் மூத்த மனிதர்களையும் உள்ளடக்கிய பயிற்சிக் களத்தைப் பேசுகிறது. தங்களது அத்து மீறல்கள், அடாவடி நடைமுறைகள், முரட்டு விதிமுறைகளை இந்தக் கலவையான பேட்ச்களுக்கு இடையே அவர்களுக்குள் இயல்பாக உருவாகும் முரண்பாடுகளுக்கு இடையே இலகுவாக நடைமுறைப்படுத்தும் முரட்டுப் பயிற்சியாளர், அவரை காபந்து செய்யும் அடுத்தடுத்த மட்ட உயரதிகாரிகள், கேள்வி கேட்ட பாவத்திற்காகப் பதவி  உயர்வு நிரந்தரமாக மறுக்கப்பட்ட அதிகாரி ஒருவர், நேர்மையான வகுப்பு ஆசிரியர் என்று மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றனர் கதா பாத்திரங்கள். 
 
தம் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், முந்தைய பேட்ச் பயிற்சி பெற்றவர்களிடம் கேட்டறிந்த உண்மைக் கதைகள் எல்லாம் கலந்து நிறைய நேரமெடுத்து எழுதிய திரைக்கதை என்கிறார் தமிழ்.
 ‘அதோ அந்த மரத்துக்குக் கீழே அன்றாடம் நிற்கிறானே ஒருத்தன், எதுக்கு?’ என்று கேட்கிறார் பழி வாங்கப்பட்ட அதிகாரி. எப்போதோ எந்த ஆண்டோ அங்கே நடப்பட்ட ஒரு செடியை கால்நடைகள் மேய்ந்து விட்டன என்று விரட்டுவதற்கு நிற்க வைக்கப்பட்ட வழக்கம், அந்தக் கன்று வளர்ந்து மரமாகவே உயர்ந்து நிற்கும்போதும் இன்னும் தொடரும் கோமாளித் தனத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  இது மணிமுத்தாறு பயிற்சிப் பள்ளிக்குச் சென்ற யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், உண்மைக் கதை என்கிறார் தமிழ். 
150 வருஷமாகச் சீருடைகள் கூட மாற்றப்படாத துறையில் நீ என்ன புதுசா மாற்றி விடப்போகிறாய் என்று நாயகனை அதே அதிகாரி கேட்கும் கேள்வி, காலகாலாமாகக் காவல் துறையினர் எண்ணற்றோர் மனத்திற்குள்ளும் எதிரொலிக்கும் கேள்வி தான். தன்னை இழிசொல் சொல்லித் திட்டிய அதிகாரியோடு மோதிய குற்றத்திற்காகப் பழி வாங்கப்பட்ட பாத்திரத்தில் எம் எஸ் பாஸ்கர் அத்தனை ஒன்றி நிற்கிறார். மனப்போராட்டங்களை  அவரது கண்களும் பேசுகின்றன. 
‘என் காலை நக்கி இருந்தால் உன்னை உயரத்திற்கு எடுத்துக் கொண்டு போயிருப்பேன், நீ என் மூஞ்சியில் நக்கிட்டே என்ன செய்றேன் பாரு’ என்று வெஞ்சினத்தோடு கேட்கும் முரட்டுப் பயிற்சியாளர்  ஈஸ்வர மூர்த்தியாக வெறுக்கத் தக்க பாத்திரத்தில், நடிகர் லால் வெளுத்து வாங்குகிறார். நேர்மையான அதிகாரியாக போஸ் வெங்கட் செதுக்கினாற்போல் செய்கிறார். மனைவி குழந்தைகளோடு வந்திறங்கி வயது காரணமாக சித்தப்பா என்றே அழைக்கப்பட்டு, எக்ஸ்ட்ரா டிரில் செய்யத் திணறிப் பயிற்சி மைதானத்தில் உயிரற்று விழும் வேடத்தில் புதுகை பூபாளம் கலைக்குழு பிரகதீஸ்வரன் உள்ளத்தைத் தொட்டு விடுகிறார். நாயகனின் தந்தையாக லிவிங்ஸ்டன் குறைந்த காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்.  நாயகனை வலுக்கட்டாயமாகக் காதல் செய்யும் பெண் காவலர் ஈஸ்வரி (அஞ்சலி நாயர்) பாத்திரம் கதையில் ஒட்டாமல் நிற்பது. 
மொத்தக் கதையின் வலுவைச் சுமக்கும் நாயகனாக விக்ரம் பிரபு ஆர்ப்பாட்டம் இன்றி நேர்த்தியாக நடித்திருக்கிறார்.  முக பாவங்களும், உடல் மொழியும், பயிற்சிக்கான உடலமைப்பும் பாராட்ட வைக்கின்றன. ஒளிப்பதிவு (மாதேஷ் மாணிக்கம்), படத்தொகுப்பு (பிலோமின் ராஜ்) மற்றும் இசை (ஜிப்ரான்) குறிப்பிட்டுச் சொல்ல வைக்கின்றன. 
மக்களின் நண்பராகக் காவல் துறை இயங்க வேண்டும் என்பதற்கான விதைகள் பயிற்சியில் ஊன்றப்பட வேண்டும். ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே அது எப்படி கருக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார் இயக்குநர் தமிழ். லாக்கப் மரணங்கள், அதை மறைக்கக் குடும்பங்களுக்கு லஞ்சம் என்று பெருகும் உள்வட்டக் குற்றங்கள் ஒரு புறமிருக்க, நேர்மையான மனிதர்களும் உள்ளடக்கியது தான் காவல் துறை. அமைப்பு ஏதன் பக்கம் நிற்கிறது என்பதை அதன் சாதீயத் தன்மை உள்ளிட்டுப் பேசுகிறது படம்.  வேறு ஒரு மொழியில் இதையெல்லாம் ஒரு திரைப்படம் பேசுமா என்று கேட்டார் நண்பர் ஒருவர். 
நாயகனின் பின் கதை உள்ளிட்டு இன்னும் வலுவான கதையமைப்பு, கூடுதல் அழுத்தம் திரைக்கதைக்குத் தேவை என்று கொஞ்சம் போதாமை உணர்வு தோன்றியதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஆனால், ‘அடுத்த மதத்தவரை வெட்டிக் கொல்லலாம் என்று சொன்னதைக் கூட, தனது மதத்திற்கான பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு, கிரிமினல் குற்றம் ஆகாது’  என்று நியாயப்படுத்தும் காவல் துறையை தேசம் எதிர்கொள்ளும் சூழலில், அடித்தளத்தில் கேள்விகளை வைக்கும் தன்மையில் டாணாக்காரன் திரைப்படம் முக்கியமான வரவு.

அரிதான நோயில்லை என்றதும் துடியாய்த் துடித்தேன்!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

anxiety: Do you often feel anxiousness, depression? This may help - The  Economic Times

 மடாலென கதவைத் திறந்தவாறே முகவாய்க் கட்டை துடிதுடிக்க, “நீங்கதானே ஸைக்கெட்ரிக் ஸொஷியல் வர்கர்?” என வினவினான் அவன். தலையாட்டினேன். கண்ணீர்த் தளும்ப, தன் கையில் வைத்திருந்த அத்தனை பரிசோதனைத் தாள்களையும் என் முன்னால் இருந்த மேஜைமீது தடாலென வைத்து விட்டு உட்கார்ந்து என்னைப் பார்த்தான் இளம் வயதான பிராண்.

தழுதழுக்கும் குரலில், “நீங்களே சொல்லுங்கள், எனக்கு வந்த உபாதையைக் கூகிளில் (googleல்) முழுக்க ஆராய்ச்சி செய்தே வந்திருக்கிறேன். ஆனால் டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, எல்லாம் நார்மல் என்றார். அது எப்படி சாத்தியம்?   உங்களைப் பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்” என்றான்.

பிராணைச் சமாதானம் செய்து, தாள்களைப் பிறகு பார்வையிடலாம் என்று தனக்கு நேர்ந்ததை விவரிக்கச் சொன்னேன். அனுபவத்தைக் கேட்டபின் இத்யாதியைப் பார்ப்பது என் பழக்கம். விவரித்தான்.

‌மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முதுகலைப் பட்டதாரி. முடித்த கையோடு கல்லூரியிலிருந்தே நேரடியாக எடுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை அமைந்தது. சிறந்த வேலை, கைநிறைய சம்பளம்.

பிராண் ஆச்சரியப் படவில்லை. படிப்பில் இதுவரை இவனே முன்னோடி. எல்லாம் பிராணுக்கு மிகச் சிறந்தவையாகவே நடந்தது. இன்னாள் வரை தோல்வி, வருத்தம் இவன் அகராதியில் தென்பட்டதே இல்லை என்று கர்வம் பூசிய பெருமையுடன் சொன்னான். 

இந்த வர்ணனை முடிப்பதற்குச் சரியாக யாரோ கதவைத் தட்ட, திறந்தேன். பிராணின் தந்தை எனக் கூறி, உள்ளே வர அனுமதி கேட்டார். க்ளையன்டை முதல்முறையாகப் பார்க்கும் போது அவர்களுடன் வருவோரை நாங்கள் பார்ப்பதுண்டு. தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் தீனதயாள். சொந்தமான பண்ட சாலை வைத்திருப்பதை விவரித்து, பிராண் மிகப் புத்திசாலி, எப்போதும் முதல் மதிப்பெண் மட்டுமே வாங்குபவன் எனப் பெருமை பொங்கக் கூறினார்.

மகன் ஆராய்ச்சி செய்ததை டாக்டர் மறுப்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றதும் பிராண் அவர் கையை இருக்கப் பிடித்துக் கொண்டான். இவை அவர்களின் உறவை, சிந்தனையை வெளிப்படையாகக் காட்டியது.

பிராணுக்குப் பத்து நாட்களாகக் கண்கள் சுருங்கியது போல், பேசினால் வாய் வலி, எப்போதும் ஏதோ அனாயாசமாக இருப்பது போலத் தோன்றியதாம். தனக்கு என்னவென்று இணையதளத்தில் தேடினான். முதலில் ஏதேதோ பொதுவான பிரச்சினைகள் தென்பட்டன. அலசிப் பார்த்து, தனக்கு உள்ளது மிக அபூர்வமாக வரும் ஒரு தசை பிரச்சினை தான் என முடிவு செய்தான்.  இதற்குத் தீர்வு ஏதும் கிடையாது என்றது இணையதளம்.

தீனதயாள், தாயார் சுமதி, தன் பிள்ளை எப்போதும் அலாதியான ஒருவன் எனப் புகழ்வதைப் போல நோயிலும் அலாதியானது எனப் பிரமித்துப் போனார்கள்!

அன்றிலிருந்து பிராண் மருத்துவர்களைப் பார்த்தான். தனக்கு வந்திருப்பது இதுதான், அதனால் இன்னின்ன பரிசோதனைகள் செய்யலாமா எனக் கேட்க, அதன் முடிவுகளிலிருந்தாவது உண்மையைப் புரிந்து கொள்வான் என ஒப்புக்கொண்டார்கள். அதைப் பார்த்து அவர்கள் எல்லாம் நார்மலாக உள்ளதாகச் சொன்னதும் வேறொரு மருத்துவரிடம் போவான். அப்படித்தான் இங்கேயும் வந்தான். டாக்டர் அவன் நார்மல் எனச் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றான்.

கண்ணீர் கொட்ட, தன் வேலைகளைச் செய்து கொள்ளக் கடினமாக உள்ளது என்றான். தந்தை தாயிடம் அடிக்கடி தசைகள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியதைச் சொல்ல, தாய் சாப்பாடு ஊட்டி, தந்தை ஷவரம் செய்தார். பிராண் தலையை வருடிக் கொடுத்து தீனதயாள் அவனுடையப் பரிதாப நிலையைப் பார்க்கக் கடினமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் சொன்னார். பிராண் அவர்களின் ஒரே பிள்ளை.

பிராண் வேலையைப் பற்றி விசாரிக்க, கடந்த இரு வாரங்களாக அவனை மீறி தவறுகள் நேர்வதே இந்த இன்னல்களால் தான் என்று தீர்மானித்ததைக் கூறினான். இதனால், இருமுறை பெரிய பொறுப்புகள் அவனுக்கு அளிக்கப் படவில்லை என்றான். தீனதயாள் இவனுடைய அருமை வேலை அதிகாரிகளுக்குப் புரியாததால்தான் எனக் கூறினார். இருவருக்கும் தனித்தனியாக ஸெஷன்கள் தேவை என உணர்ந்தேன்.

இருவரிடமும் சில ஸெஷன்கள் தேவை என்றதை எடுத்துக் கூறினேன். அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்களை, குழப்பங்களைத் தெளிவு செய்யவே என்றேன். ஒப்புக்கொண்டார்கள்.

பிராண் நேரத்தைக் குறித்துக் கொண்டு வர ஆரம்பித்தான். அவனை முதல் முதலில் வேலையைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். வேலையில் சேர்ந்ததும் படிப்பு போலவே வெற்றி பெற்று வந்தான். பெற்றோரும் அவனை உச்சி முகர்ந்தனர். தன் அலாதியான அறிவே முன்னேற்றத்திற்குக் காரணி என முடிவு செய்து கொண்டான்.

எல்லாம் நன்றாக இருந்த போது தான் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு, பிராண் வரைபடத்தில் செய்த தவற்றை வாடிக்கையாளர் மீட்டிங்கில் வெளிப்படுத்தினார். பிராணால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தானாவது தவறு செய்வதாவது, சான்ஸே இல்லை. இந்த மனோபாவத்தை அறிந்த அவனுடைய மேலதிகாரி அவனிடம் பேசினார்.

இது, பிராண் வாழ்வில் புதிய முதல் அனுபவம். இதுவரை அவனை யாரும் திருத்தியதே இல்லை. மனதில் இதே ரீங்காரம் செய்தது. அன்றைய தினம் அடைந்த சோர்வைக் கவனித்தான். கண்களைப் பார்க்க, சின்னதாக விட்டதோ என நினைத்தான். வீட்டிற்குச் சென்றதும் உடைகளை அணியும் போது, தொளதொளவென இருப்பதாகத் தோன்றியது. “அடடா, என்னவாயிற்று?”  என நினைத்தான். அன்றிலிருந்து உடல் அசைவுகளைக் கூர்ந்து கவனித்தான்.

வேலையில் நாட்டம் குறைந்தது. நேரம் அதிகம் மிஞ்சியது. கிடைத்த நேரத்தில் இணையதளத்தில் தேடி ஆராய்ந்தான். தேடத் தேட வெவ்வேறான நோய் இருக்குமோ என நினைத்தான். மேலும் தேடத் தேட இதெல்லாம் தனக்கு இல்லை என்றும், மிக அரிதான நோய் ஒன்றுதான் என முடிவு செய்து பெற்றோரை வரப்போகும் நிலைக்குத் தயார் செய்தான். மகனை முழுமையாக நம்பியதால் அவர்களைப் பயம் கவ்வியது.

இந்த விவரணை தர, இதைப்பற்றி  சற்று ஆராயலாம் என பிராணிடம் சொன்னேன். அவனுடைய மனோபாவம், சமூக உறவு எனப் பல விஷயங்களை அலசி ஆராய வேண்டிய அவசியம் இருந்த பின்னும்,அவனுடைய தனக்கு இந்த நோய்தான் என்ற முடிவு, வேலையில் தற்போது நிகழும் சங்கடங்களை முதலில் ஆராயலாம் எனத் தேர்ந்தெடுத்தேன்.

பிராணின் அறிவு பலமடங்கு பலமாக இருந்ததால் அதையே உபயோகிக்க முடிவெடுத்தேன். இதுவரை விவரித்த அனைத்தையும் கணக்கு வடிவத்தில் எவை கூடின, எவை தொடராமல் கழிந்தது என வரிசையில் எழுதப் பரிந்துரை செய்தேன்.

ஒப்புக்கொண்டான். ஆரம்பித்தான். ஆரம்பித்ததும் தடுமாற்றம் கண்டான். தனக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது. நிறுத்தி வைக்கப்பட்டது. ஸெஷனுக்கு வந்தான். இதை எதிர்பார்த்தேன்.  பிராண் வாழ்வில் முதல் சரிவு அனுபவமாயிற்றே! இவனுக்குப் புதிது! குழப்பமான நிலை.

 தனக்கு இது நடக்கின்றது என்றதை ஏற்றுக்கொள்ள பிராண் படும் அவஸ்தையை விலாவாரியாக விவரிக்கச் செய்தேன். பல கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தான். முக்கியமாக, கல்லூரியில் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகளில் பிராணைப் போல நல்ல மதிப்பெண் எடுப்போருடன் மட்டுமே கலந்துரையாடல் வைத்துக் கொள்வான். குறைந்த மதிப்பெண்கள் பெறுவோர் பேச முயன்றாலும் மறுப்பான்.

படித்த நான்கு வருடமும் அவனுடன் ப்ராஜெக்டுகளில் மீண்டும் மீண்டும் நான்கு நபர்கள் இருந்தார்கள். பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி விவரித்தான். பெயரைத் தவிர அவர்களுக்கும் கேம்பஸ் ப்ளேஸ்மேன்ட் கிடைத்தது என ஞாபகம்.

நான்கு ப்ராஜெக்டில் நடந்த ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பின் நோக்கி அந்த கடந்த காலத்தை ஃப்ளாஷ்பேக்காக முழுக்க ஞாபகப்படுத்திக் கொண்டு குறிக்கப்பட்டது. முதல்முதல் செய்தவற்றை நினைவு கூறுகையில் தானாக எல்லாவற்றையும் நடந்தபடி எடுத்து வைத்தான்.

இந்த பணியை பிராண் ஏற்றுக் கொண்டதும் அவர்கள் ப்ராஜெக்ட் செய்த முறையை படிப்படியாக எழுதச் சொன்னேன். இந்தமுறை திரைக்கதை போல. ஒவ்வொருவரின் பங்கேற்பு ஸெஷனில் மெதுவாகத் தென்பட்டது. நினைவில் நின்றதை எழுதும் போது ஞாபகங்களும் எழுந்தன. முதல் பாகத்தை எழுதுகையில் ஒரே ஒரு  பெயர் எட்டிப் பார்த்தது, பரத் உள்ளே நுழைந்தான்.

காத்திருந்த நாழிகை வந்துவிட்டது. செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி, அந்த இன்னொருவர் பெயர் கூறியதை ஸெஷனில் எடுத்துக் கொண்டேன். அதை விவரிக்க, அலசி ஆராய்ந்ததில் பிராண் ப்ராஜெக்ட் முழுமையாகத் தான் மட்டும் செய்யவில்லை, தான் செய்யாததும் உண்டு என்பதை உணர்ந்தான்.  அப்படி உணருவது இதுவே முதல் தடவை. வியந்தான். “எப்படிச் சாத்தியமாகும்?” என நினைக்க, மேற்கொண்டு செய்தால் விளக்கம் வரலாம் எனத் தொடர்ந்தான்.

நடுநடுவே அவன் தன் உடலில் கவனித்து வந்த மாற்றத்தைப் பற்றியும் எடுத்துக் கொண்டோம். இப்போதைக்கு அவனுடைய சிந்தனை, உணர்வுகள் செய்து கொண்டிருந்த செயலின் மீது இருந்ததால் கண்களில், தசைகள், மாற்றம் ஏதும் தெரியாததைக் கவனிக்க வைத்தேன். இது மிக முக்கியமான ஒன்று. பிராணுக்கு பிரச்சினைகளைச் சந்திக்க, அவற்றை எதிர் கொள்ளத் தெரியாததால் உள்ளூர பாதிக்கப்பட்டு, அதன் விளைவான உடலின் அசைவுகளை வேறு விதமாகச் சித்தரிக்க, அது நோய் எனத் தான் நினைத்து விட்டோம் என்று புரிய ஆரம்பமானது. இதன் இன்னொரு விளைவாக, ப்ராஜெக்டில் நடந்ததை மேலும் நினைவு செய்ய, சுபா, முரளி, அப்துல் பங்கைக் கூற ஆரம்பித்தான்.

பரத், சுபா, முரளி, அப்துல் எதைச் செய்தார் என‌ ஒவ்வொரு பாகத்திலும் ஓர் வரியில் எழுதி வரச் சொன்னேன்.

நால்வரின் குணாதிசயங்கள், நடத்தை தீனதயாள், சுமதி புகழ்வது போல் இல்லை என்றதும் பெற்றோரை ஸெஷனுக்கு அழைத்தேன். என் சார்பில், செயல்திட்டம் உருவாகும் விதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள நான்கு ஐந்து நிறுவனங்களில் அனுமதி கேட்டு, சில ப்ராஜெக்ட் மீட்டிங்கில் நான் பங்குகொள்ள ஏற்பாடு செய்து கொண்டேன். மேலாளர்களுடன் கலந்துரையாடி இவற்றிலிருந்து அறிந்த செயல்திட்டங்களின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன்.

பிராண் நால்வர் பிராஜெக்டில் செய்ததைக் குறித்து வந்தான். அவர்கள் தத்தளித்ததும் அதில் இடம் பெற்றிருந்தது. அவர்கள் எவ்வாறு தத்தளிப்பிலிருந்து மீண்டு வந்தார்கள் எனக் கேட்டதற்குப் பிராணால் பதில் தர முடியவில்லை. அவர்களிடமே கேட்டால் தெரியும் என அவன் நக்கலாகச் சொல்ல, அவ்வாறே அழைத்து வரப் பரிந்துரைத்தேன். அவர்கள் எதிர்ப்புகளைக் கையாளும் விதத்தை இவன் கேட்டு, உபயோகிக்கவே.

அவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்து வர சில நாட்கள் தேவைப் பட்டதால் தீனதயாள்-சுமதியைப் பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் பிராணிடம் மாற்றங்களைப் பார்த்ததாகச் சொன்னார்கள். முன்னைவிட  உடலைப் பற்றிய கவலை குறைந்தது என்றும் சொன்னார்கள். அவர்களுக்குப் புரிய வைக்க, பிராணின் பிரச்சினைகள், காரணியை அலசினோம்.

இரு பெற்றோரும் பிராண் செய்வதைச் சிறுவயதிலிருந்து புகழாரம் போற்றுவார்கள். செய்யும் போது அக்கம் பக்கத்தில் உள்ள அவன் ஈடு குழந்தைகளை ஒப்பிட்டுப் பிராண் மட்டுமே சிறந்தவன் என்பார்களாம். இதை மேற்கொண்டு விவரிக்க, இப்போது இருவருக்கும் புரிய வந்தது, இதனால் அவனுக்கு இன்று வேலையில் டீம்முடன் இணைய முடியாமல் போகிறது என்று.  ஏற்பட்ட மனப்பான்மையினால், தான் செய்ததை நிராகரிக்கப்பட்டதும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதை மேலும் ஆராய்ந்து பார்த்ததில் தீனதயாள்-சுமதியும் இப்போது தான் சிறுவயதிலிருந்து அவனிடம் சொன்னதை நினைவு கூறினார்கள். பிராணைப் போல இல்லாதவர்களிடம் பேசவோ பழகவோ கூடாது என்றதை வலியுறுத்தி இருந்தார்கள். பிராண் இதைக் கடைப்பிடித்தான். பிராணின் சமூகத் திறன் (மற்றவரோடு பழகும் திறன்) பற்றிய விவரணை செய்யச் செய்ய, இதனால் எந்த அளவிற்கு அது தடைப் பட்டது என்றதை உணர்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்தத் திறன்களின் பயன்பாட்டை விவரிக்கச் செய்தேன். மகனுக்கும் தேவை என உணர ஆரம்பித்தார்கள்.‌

இவற்றைப் புகட்டப் பல வழிமுறைகளைப் பட்டியலிட்டோம். பிராண் ஒரே பிள்ளை கவனம் முழுவதும் அவன் மேல் இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் அவனைப் பாதுகாக்கச் செய்தார்கள். பிரச்சினைகள் அவன் சந்திக்க நேராமல் போனது. அளவுக்கதிகமான பாசம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழி போல ஆனது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். தீனதயாள், சுமதி அதைச் செய்ய முயன்றார்கள். கடினமான மாற்றம் என்றாலும் விளைவைக் கண் எதிரிலேயே தங்களுக்கு பிரியமானப் பிள்ளையின் மீது பாதிப்பு காட்டுவதால், மாற்றம் செய்ய அது அங்குசம் ஆனது.

தானாக பரத், சுபா, முரளி, அப்துல் அழைத்துக் கொண்டு பிராண் வந்தான். எதையும் சொல்லவில்லை என்றான். பிராணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, வந்ததற்கு நன்றி தெரிவித்து அவர்கள் வகுப்புத் தோழன் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதைக் கூறி அவர்களின் பங்கேற்பு, ஒத்துழைப்பை வழங்க வேண்டுகோள் செய்தேன். தயக்கம் இல்லாமல் தங்களால் முடிந்த வரை உதவுவது முடியும் என்றார்கள்.‌ அவர்களால் சனிக்கிழமை வரமுடியும் என்று நேரம் குறித்து வைத்தோம். இதைக் கேட்டதும் பிராண் அவர்களைத் திடுக்கிட்டுப் பார்த்தான்.

வந்தவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளச் சற்று நேரம் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் எளிமையான நிலையில் வளர்ந்தவர்கள், அதிக பொறுப்புடன்.அதனால்தானோ  அவர்களிடம் மனோ முதிர்ச்சி தூக்கலாக இருந்தது? ஊக்குவிக்கும் விதத்தில் பிராணிடம் பேச, அவன் அவர்களை ஏறெடுத்துப் பார்த்துத் தலை அசைத்தது மனதிற்குச் சந்தோஷமானது. 

அடுத்த சில ஸெஷ்ன்களில் அவர்கள் பிரச்சினைகளோடு எதிர்நீச்சல் போட்ட சூழலை, எதிர்கொண்ட பாதையை விவரிக்கப் பரிந்துரை செய்தேன். ஒருவருக்கொருவர் ஆதரவு காட்ட இவர்கள் இடையே பிணைப்பு அதிகரித்தது. வேலையிடத்தில், வீட்டில், எவ்வாறு செய்தார்கள் என மேலும் சொல்ல, பிராண் தனக்கு நேர்ந்ததை ஒரு வாரத்திற்குப் பிறகு பகிர்ந்தான்.

இந்த தருணத்தில் நான் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அவர்களாக இயங்க விட்டேன். மெதுவாக ஒவ்வொருவரும் பிராணை அவன் சிந்தனை, பிரச்சினைகள் பற்றிப் பேச ஊக்குவித்தார்கள். தோல்வியடைந்த நிலையில் நிலைக் முனிந்து இருப்பதைப் பற்றிப் பேசும் போது, அவர்கள் தங்களது வாழ்நாளில் நடந்த அவமானத்தைப் பற்றிப் பேசி அவற்றிலிருந்து மீளச் செய்த விடாமுயற்சி, பரிபூரணமான உணர்வுகள், தடைகள்,  விவரித்ததில், பிராண் பூரண கவனமாக அவர்களுடன் மெய்மறந்து மனம் திறந்து உரையாடினான்.

இந்த நால்வரும் அவர்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள எளிய இடங்களில் வசிக்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதை அறிந்ததும், பிராண் சேர்ந்து கொண்டான்.‌

கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்கிய நிலையில் சுபா, பரத் இருவரும் பிராணை அவன் தவறு செய்த ப்ராஜெக்டில் மறுபடியும் அவனாகப் பார்த்து எங்கு, எதை விட்டான் என பரிசோதிக்கப் பரிந்துரைத்தார்கள். பிராண் அவ்வாறே செய்தான். என் பங்கை மேலும் குறைத்துக் கொண்டேன். பியர் க்ரூப் அதாவது அதே வயதினரை உரையாட வைத்தால் அதனால் வரும் தெளிவு, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இங்கேயும் தென்பட்டது!

பிராண் மற்றவர்கள் தந்த சில குறிப்புகளைத் தவிர்க்க விட்டதை ஒப்புக் கொண்டான்.‌ இதைப் பற்றி அவனுடைய டீம்முடன் பேசியதைச் சொன்னதுடன் அறையில் கைதட்டல். அப்துல் மெதுவாகக் கேட்டான் “இப்போ உன் உடலில் எந்த விதமான நோய் இல்லை என்றதை நம்புகிறாயா?” என. முரளி, பரத், சுபா மூவரும் அவனுடன் சேர்ந்து பிராண் உடல் நலத்தைப் பற்றி அவர்கள் கவனித்ததைச் சொல்ல, பிராண் தானும் அவ்வாறே எண்ணுவதைக் கூறினான்.

ஒற்றையாக வந்த பிராண் முடித்துக் கிளம்பும் போது பாசம் பற்றுடைய கூட்டமாகக் கிளம்பினான்.

 

கண்ணன் கதையமுது -7 – தில்லைவேந்தன்

KRS | கரச on Twitter: "ஒரு நல்ல அம்மா-அப்பா.. குழந்தைகள் செத்து விடும் என்று தெரிந்தே 'உருவாக்கு'வார்களா?🤦‍♂️ பிறந்த சில மணிகளிலேயே கம்சன் கொன்று ...கண்ணனின் தங்கை – வல்லமை

.                     ( தேவகிக்குக்   குழந்தை பிறந்த செய்தியைக் காவலர் கம்சனிடம் தெரிவித்தனர். தன்னைக் கொல்லப் பிறந்த குழந்தையைக் கொல்வதற்குக் கம்சன் விரைந்தான்)

 குழந்தை பிறந்த சேதி கேட்ட கம்சன் நிலை

 

வீரரும்    சேதி   சொல்ல,

     வெடுக்கெனத் துள்ளிக் கம்சன்

ஆரஞர் உற்றான்; ஓங்கும்

      ஆத்திரம் மிஞ்சிக் கெட்டான்;

 சாரமே விட்டு வெற்றுச்

       சக்கையைக் கொள்ளும் மூடன்,

ஈரமே நெஞ்சில் இல்லான்,

      இடியென முழங்க லானான்:

 

       ( ஆரஞர் – பெருந்துன்பம்)

 

“முடிவினைத் தருவ தற்கு

      மூண்டதோ வேளை?  பிள்ளை

வடிவமோ?  உயிரைக் கொள்ள

     வந்தவோர் கூற்றம் தானோ?

நெடியதோர் பகையை நானே

      நேரினில் சென்று கண்டு,

நொடியினில் கொன்று தீர்ப்பேன்;

      நோய்வரும் முன்னே காப்பேன்!”

 

தலைமுடிக் கற்றை,  காற்றில்

      தாவிடும் அரவாய் மாற,

உலைக்களத்  துருத்தி யாக

      உள்ளெழு சினமே மேவ,      

நிலைகுலை கம்சன்  மூச்சு

      நெருப்பென வெம்மை வீசக்

கொலைபுரி நெஞ்சம் கொண்டு

      குறுகினான் மிகவெ குண்டு  

              ( அரவு – பாம்பு)

 

          கவிக்கூற்று

 

மனத்தினில் எரியும் தீயின்

     வளரொளி  முகத்தில் நீளும்;

வனத்துறு புலியாய்ச்  சீறும்

     வஞ்சகம் அறிவை மீறும்;

சினத்தினைப் பொருளாய்க் கொள்ளும்

      தீமையைப் பயனாய்  அள்ளும்

வினைப்பயன் விதியாய்த்  துள்ளும்

      வீணனை ஒருநாள் கொல்லும்

 

       தேவகி வேண்டுகோள்

புயலெனச் சிறைக்குள் சென்றான்

      பூங்கொடி  நடுங்கி நின்றாள்

கயலெனும் கண்ணும்  நீரைக்

      காரெனப்   பொழியச் சொன்னாள்,

“செயலினை எண்ணிச் செய்வாய்

      சிறியபெண் மகவைப் பாராய்,

அயலவர் இகழ்வர்  அன்றோ

      அருமரு மகளைக் கொன்றால்”

 

 கம்சனின் கொலை முயற்சி

 

கதறினாள்  தங்கை, கம்சன்

     காதிலே கொள்ள வில்லை.

உதறினான் வலிய கையை,

     உற்றபெண் மகவின் கால்கள்

மதியிலான் பற்றிக் கொண்டான்

     மாய்த்திட எண்ணிக் கல்லில்

சிதறியே  போவ  தற்குச்

     சீறியே  ஓங்கி   னானே!

 

மாயை துர்க்கையாய்த் தோன்றுதல்

 

 ஓங்கிய கையை   நீங்கி,

     உயரமே குழந்தை ஏகி,

ஆங்கொரு துர்க்கை யாக

      ஆயுதம் பலவும் ஏந்தித்

தாங்கிய எட்டுக் கைகள்

     தாருடன் அணிகள் பூண்டு,

வீங்கிய   ஒளியைச்  சிந்தி,

      விண்ணிலே சிரிக்கக் கண்டான்!

               ( தார் – மாலை)

             ( வீங்கிய – மிகுந்த)

( தொடரும்)

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

திருப்புகழ் கிடைத்த கதை

அருணகிரியின் அருள் அலை: 3. திருப்புகழ் 1 முதல் பாடல்

அதிகாலை நான்கு மணிக்கு எழும் இந்திய (மனித) பறவைகளுக்கு திருப்புகழ் வகுப்புகளை குவிகம் ஆசிரியர் திரு. சுந்தர் சிபாரிசு செய்திருந்தார்.

அவரது வழக்கமான குசும்பாக அல்லாது நல்ல எண்ணத்தில்தான் கூறியிருப்பார்.  ஆனால் என் உள்மனது அதற்கு வாய்பே இல்லையே ராஜா என பறையறிவித்தது. அது எனக்கு நடு ஜாமம் ஆயிற்றே.

இருந்தாலும் மனது கிடந்து அடித்துக் கொண்டது. திருப்புகழை கேட்கத் துவங்குமுன், பாடத் துவங்குமுன், தேடத் துவங்கினேன். என் தேடலில் எனக்குத் தெரிந்தது திருப்புகழை தேடித் தேடி நமக்களித்தவர் 1846-1909 ஆண்டுகளில் வாழ்ந்த திரு. வ.சு. சுப்பிரமணிய பிள்ளை என.

No photo description available.

எதிர் வரும் சந்ததியருக்கும் நாம் தேடி விட்டுச்செல்லும் பொருட் செல்வம் பயன் தருகிறத்தோ இல்லையோ அறமும் கல்வியும் அவர்களை என்றும் கை விடாது. அது போலவே இலக்கியமும், அருட் பாக்களும் பல தலைமுறை கடந்தும் எந்த மண்ணில் வசித்தாலும் நம்மை இணைக்கும் என உணர்ந்து அழிவிலிருந்து அவைகளை காப்பாற்றி நமக்கு விட்டுச் சென்ற சான்றோரும் வணங்கப்பட வேண்டிய கடவுளரே.

இராச இராச சோழன் நம்பியாண்டார் நம்பியை வேண்டினார். நம்பி தான் வணங்கும் தோழன் திரு நாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வேண்டினார். பிள்ளையார் வழிகாட்ட நம்பி நமக்குத் தேடிக் கொடுத்தது மூவர் தேவாரம். தேடியிருக்க இல்லையெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவில்களில் பாடப்பட்டு வந்த பாடல்களுடன் தேவாரத் திரட்டு முடிவடைந்திருக்கும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் தேடிக் கொடுத்திரா விடின் இன்று நம்மை இணைக்கும்,  நாம் மகிழும் சங்க இலக்கியங்கள் பல காவிரி ஆற்றிலோ தாமிரபரணி ஆற்றிலோ மிதந்து கடலில் கலந்திருக்கும்.

அதுபோலவே தமிழ்த் தாத்தா காலத்தில் வாழ்ந்த திரு. வ.த. சுப்பிரமணிய பிள்ளை தமிழகமெங்கும் தேடித் தொகுத்திரா விடின் அருணகிரியார் எழுதிய 16000 பாடல்களில் நமக்கு கிடைத்த 1307 பாடல்கள் கூட கிடைத்திராது. படை வீடுகளிலும், வயலூர், விராலிமலை போன்ற கோவில்களிலும் பாடப்பட்ட ஒரு சில பாடல்களுடன் தொகுப்பு முடிந்திருக்கும்.

பிள்ளையவர்கள் தமிழ்த் தாத்தாவின் சம காலத்தவர் என்றேன். இருவருக்கும் உள்ள மற்றுமொரு ஒற்றுமை, இருவரும் இளவயதில் வறுமையில் வாடியவர்கள். பசியோ, பட்டிணியோ, பல மைல் தூர நடையோ இருவரும் சலிக்காமல் தேடியது, பல நூறு ஆண்டுகளில் உதிக்கப் போகும் சந்ததியருக்கு அவைகளை கொண்டு சேர்க்க வேண்டுமென்ற வைராக்கியமே.

சுப்ரமணிய பிள்ளை செங்கல் பட்டில் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் தன் பதினோராவது வயதில்தான் பள்ளிக்கூடத்தை மிதிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். அந்த மிஷன் பள்ளியிலும் ஆறு ஆண்டுகளே கல்வி. வயதான பெற்றோர், வேலையில்லாத அண்ணன், படித்த பள்ளியிலேயே மாதம் ஆறு ரூபாய் சம்பளத்தில் பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் கல்வியில் ஆர்வம் குறைய வில்லை.

சென்னையிலிருந்து பள்ளி ஆய்விற்கு வந்த Dr. மில்லர், இவரின் திறமையையும் ஆர்வத்தையும் கண்டு எட்டு ரூபாய் ஸ்காலர்சிப்பில் சென்னை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். மாதம் நான்கு ரூபாயை தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் அளித்துவிட்டு தன் செலவு போக மூன்று ரூபாய்களை பெற்றோருக்கு அனுப்புகிறார். விடுமுறைக்கு பையை தலையில் சுமந்து சென்னையிலிருந்து செங்கல் பட்டு பொடி நடையாக சென்று வருகிறார். தான் சென்னை செல்ல நண்பரிடம் வாங்கிய அரை அணா கடனையும் திருப்பிக் கொடுக்கிறார்.

பள்ளிக் கல்வியை சிறப்புற முடித்து அன்றைய FA ஐயும் முடிக்கிறார். மேலே BA  படிக்க வழியில்லை. படித்த பள்ளியிலேயே மாதம்  40 ரூபாயில் பணி. ஆசிரியர் பணியில் ஈடுபாடில்லை.  நீதித்துறையில் அடிப்படை ஊழியராய் நுழைந்து நீதிபதி பதவி வரை உச்சம் தொடுகிறார். அந்தக் கால கட்டத்தில்தான் திருப்புகழில் மயங்கி பாடல்களை தேடத்துவங்குகிறார். 
தமிழ் நாட்டின் பல் வேறு ஊர்களில் பணி புரியும் வாய்ப்பை திருப்புகழ் தேடலில் பயன் படுத்திக் கொள்கிறார். 

இவ்வளவு சிரமங்களுக்கும் இடையில் தினசரி தணிகை முருகன் மேல் ஒரு பாசுரம் எழுதுவதையும், ஒரு தேவார பதிகம் படிப்பதையும் நிறுத்த வில்லை.

தேடலில் அவருக்கு கிடைத்த 1307 பாடல்களை அச்சாக்கி பார்த்து மன நிறைவடைந்தார். 1909 ம் ஆண்டு தனது 63 வது வயதில் இரண்டாம் பதிப்பை அச்சிட்டு புத்தகக் கட்டுகளை அடுக்கி வைத்து பார்த்த வண்ணம் மன நினைவோடு தணிகை முருகனை சென்றடைந்தார்.

பல சிரமங்களுக்கிடையே வறுமையிலும் பிந்தைய தலை முறைக்கு, நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை தேடிக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களை நம் மனதில் இன்று வரை நிறுத்தி வைத்துள்ளது.

தேடல் அவர்களோடு நின்று விடவில்லை. இன்றும் தொடர்கிறது. நாம் கூட பார்க்கிறோமே அவர்களை! 

சுட்டெரிக்கும் கோடையிலும் சென்னையில் இன்று கனத்த  மழை!

மேலே கூறிய அனைவரும்தான் காரணமோ?

சின்னஞ்சிறு பாலகன் ஒருவன் கடினமான திருப்புகழின் ஒன்றான ‘முத்தைத் தரு  பத்தித் திருநகை’ பாடலைப் பாடுவதைக் கேளுங்கள்! 

ஆண்டவனே ! என்னை நாத்திகனாகவே இருக்கவிடு !

தமிழரங்கம்
கதை புதிது வாட்ஸ் அப் குழுமத்தில் 100 வார்த்தைகளில் 

“ஆண்டவனே என்னை நாத்தினாகவே இருக்க விடு. கண்ணில் நீர்மல்க வேண்டிக்கொண்டான் ” என்று முடியும் சொற்றொடரில் எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தோம். 

அடேயப்பா மொத்தம் 75 கதைகள் ! 

குவிகம் குறுங்கதைப் போட்டி முடிவுகள்:
நடுவர் : ரம்யா வாசுதேவன் 
போட்டிக்குச் சென்ற கதைகள் :  71  
நடுவர் தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த கதைகள்:
நாத்திகன் – அருணா கதிர் 
மக்கள் சேவை மகேசன் சேவை – சாந்தி ரஸவாதி 
நான் ஆத்திகனா? நாத்திகனா – கோவில்பட்டி மாரியப்பன் 
மூவருக்கும் பாராட்டுதல்கள் ! 
மூவருக்கும் பரிசுத்தொகையான ரூபாய் 200 அனுப்பி வைக்கப்படும்!! 
போட்டியில் பங்குபெற்ற மற்ற  கதாசிரியர்களுக்கும் உளமார்ந்த நன்றி! நீங்கள்தான் இதை வெற்றிகரமாகச் செய்தீர்கள் !! 
71 +2 கதைகளும் flip book ஆகச்  ( digital) செய்து அனுப்பி வைக்கப் படும்! 

பரிசு பெற்ற கதைகள் கீழே தரப்பட்டுள்ளன!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

முதல் பரிசு – நாத்திகன் – அருணா கதிர் 

 

“அவனும் நம்ம சாதிக்காரன் தாம்ல. கோவில் விசேஷமின்னு கெஞ்சறேன். ஆனாலும் கூட அனுமதி தரமாட்டானோ?” என்று ஆத்திரமாக வினவினான் மணி.

“அந்தாள பத்தி தான் தெரியும்ல. சாமியாவது, பூதமாவதுண்ணு திரிவான். சரியான இம்சை புடிச்சவன். விடுங்க பங்காளி” எனச் சமாதானம் செய்தான் செந்தில்.

“அவனுக்கும் அது குல தெய்வம்ல. திருவிழாக்கு பர்மிஷன் தந்தா என்னவாம் இப்போ? அந்த மாரியாத்தா இவனுக்கு நல்லா கூலி குடுக்கணும்” என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே சென்றான் மணி.

இருவரும் சென்றதும், பெருமூச்சு விட்டு, சற்றே ஆயாசமாக இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன், ” ஊரெல்லாம் கொரானா கோர தாண்டவம் ஆடுது. இதுல திருவிழான்னு கூட்டம் சேர்த்து இன்னும் பத்து பேர்த்துக்கு பரப்புவானுக. ஆண்டவனே! இந்த கொரானா முடியற வரைக்கும் என்னை நாத்திகனாவே இருக்கவிடு!” என்று கண்ணில் நீர் மல்க மானசீகமாக வேண்டிக் கொண்டான்.

 

இரண்டாம் பரிசு – மக்கள் சேவை மகேசன் சேவை. சாந்தி ரசவாதி 

“காக்க காக்க கனகவேல் காக்க”

“எல்லோரும் சாமியை வேரோடு பிடித்து இழுக்க நமக்கு மட்டும் லயிப்பு இல்லை?” நீலாவின் சுயபரிசோதனை. அலுவலகம் ,வீடு ஓடி, பணி ஓய்வு தான்.

.” அம்மா ஜீ எச் போய் மருந்து வாங்கி வீட்டுக்குப்போகணும்”- முனியம்மா. ‌ “இரு தோசை தரேன் கையில் கொண்டு போ” தண்ணீர் பாட்டிலுடன் டப்பா வந்தது. “காக்க காக்க ” தொடர் முயற்சி. ” மாடில கட்டிட வேலை பாக்குறவங்க ,தண்ணீர் வேணுமாம்” சபேசன் குரல். ” நீர் மோர் பானகம் கரைச்சி வைச்சிருக்கேன் குடுங்க நல்ல வெயில்””. “காக்க காக்க” “நந்தினி ஃபோன் ” சுரேஷ். அறிவிப்பு. தெரிந்தவர் மகள். குடிகாரக் கணவன் குழந்தைகள். ” ரெசுயூம் மெயில் அனுப்பியாச்சு. இண்டர்வீயு நல்லா பண்ணு. வாழ்த்துக்கள்”. மீண்டும்

” சஷ்டியை நோக்க ” ஆரம்பிக்க வேதனையும் திருப்தியும் கலந்த உணர்வு. மக்கள் பாசம் நிரம்பிய உள்ளத்தில் மகேசனை வரவழைப்பது கடினமோ? “ஆண்டவனே என்னை நாத்திகனாகவே இருக்க விடு ” கண்ணீர் மல்க வேண்டினாள்”

(2nd prize)

 

மூன்றாம் பரிசு – நான் ஆத்திகனா? நாத்திகனா? – கோவில்பட்டி மாரியப்பன் 

 

பண்ணையார் வீட்டுக்கு வந்ததிலிருந்து இராஜ உபசாரம் தான். மாலை நேரத்தில் ஊர் மந்தையில் நடைப்பயிற்சி . பண்ணையார் கவனிப்பில் ஒரு சுற்றுப் பெருத்துவிட்டதுபோல் உணர்வு. எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்வு? புரியவில்லை. ஊரில் கோவில் கொடை விழா ஆரம்பமாயிற்று.

 

தெருவில் வேப்பம் கொத்து வைத்து வைக்கோலால் தோரணங்கள் கட்டி இருந்தார்கள். பண்ணையார் வீட்டில் சொந்தக்காரர்கள் கூட்டம் வந்தவண்ணம் இருந்தது. காப்பு கட்டிய நாளிலிருந்து விரதமிருந்து மத்தியானம் மட்டும் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகுதான் எனக்கு சாப்பாடு. கோவில் கொடை விழா நாள். பண்ணையார் பக்கத்தில் வர ஊர் மக்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தோம்.

 

பூசாரி வந்து பண்ணையாருக்கும் எனக்கும் கற்பூரம் காட்டி விபூதி பூசினார். நான் மட்டும் பூசாரி உடன் அனுப்பப்பட்டேன்.மலங்க மலங்க விழித்துக் திரும்பிப்பார்த்தேன். பண்ணையார் வரவில்லை. மனம் திகில் அடைந்தது. மஞ்சள் தண்ணீர் ஊற்றி மாலை போட்டார்கள். என் முன் நின்ற பூசாரி கையில் தீட்டப்பட்ட அரிவாள். பெண்கள் குலவைச்சத்தம் கூட்டத்தை அதிரவைத்தது. கிடாய் நல்ல வளர்ப்புதான் என்று யாரோ பேசிக் கொண்டார்கள். முடிவு தெரிந்தது. ம்மேய்… ம்மேய்.. அலறினேன். மரண பயம். காட்டிலே ஆட்டோடு ஆடாகச் சுற்றித்திரிந்து இருந்தால் இந்த கதிக்கு ஆளாகி இருப்பேனா? என்னைக் கொன்று சாமிக்கு படைப்பது தான் ஆத்திகம் என்றால் விரத சாப்பாடு போட்டு வளர்த்தது இதற்குத்தானா? குலவை சத்தம் தொடர்ந்தது. திடீரென்று மின்சாரம் நின்றது. ஒரு வினாடிதான். பிடியில் இருந்து தப்பித்து சிட்டாய் பறந்தேன். “ஆண்டவனே என்னை நாத்தினாகவே இருக்க விடு. கண்ணில் நீர்மல்க வேண்டிக்கொண்டேன்”. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.

 

(3rd prize)

 

 

 

 

மாமழை கொண்டுவரும் மண்வாசம்! – மீனாக்ஷி பாலகணேஷ்

 

சங்க காலம் வரலாறு         

 பழந்தமிழ் நாட்டில், சங்ககாலக் கவிதைகளில் தலைவன் பொருள் தேடப் பிரிந்து செல்வதும், அன்பு மனையாள் அவன் பிரிவையும் அவன் சொன்னவாறு திரும்ப வாராததையும் குறித்து வருந்துதலும் வழக்கு. பொருள் தேடுவதென்பது அவன் தனது பணி நிமித்தம் மன்னனுடன் போருக்கோ, அல்லது அரச தூதுவனாக அயல்நாட்டுக்கோ, வாணிபம் செய்யவோ, இன்னபிற காரணங்களுக்காகவோ இருக்கலாம்.

           அகநானூற்றில் காணும் பல பாடல்கள் தலைவியின் பிரிவாற்றாமையைப் பற்றிக் கூறுவதாக அமைந்த பாடல்களே! அப்படி ஓர் பாடலைப் பார்ப்போம்.

           பிரிந்து சென்ற தலைவன் சொன்ன நாளில் திரும்பி வரவில்லை என வருந்துகிறாள் தலைவி. தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்: “தோழி! இருண்ட கார்கால மேகங்கள் விண்ணதிர முழங்குகின்றன. துள்ளிவிழும் கடுமையான பெருமழையையும் பெய்தன. அந்த மழைக்காலம் கழிந்தபின்னர் புகைபோன்ற பனித்துளிகள் பூக்களின் உள்ளே நிறையும்வண்ணம் பனிபெய்யும் பனிக்காலமும் வந்துவிட்டது.

           “அவரைப்பூக்கள் பூத்துள்ளன. வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலைசாய்த்துக் கிடப்பது காண இனிமையாக உள்ளது. வண்டுகள் மரக்கிளைகளில் அசைந்து கொண்டுள்ளன. இந்த முன்பனிக்காலத்தின் நள்ளிரவிலே என் தலைவரானவர் சினம்கொண்ட தம் வேந்தனின் பாசறையில் நீண்டகாலம் தங்கியுள்ளார்; எனது பிரிவின் வருத்தத்தை அறியாதவராக இருக்கிறார். என் இந்த நிலையினைப் போக்க அவர் விரைவில் வருவாரோ?” என்கிறாள்.

           முல்லைத்திணையில் அமைந்த இப்பாடலைப் பாடியவர் கழர்க்கிழான் எயிற்றியார் என்னும் புலவர்.

           மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித்

           துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுற

           காய்சின வேந்தன் பாசறை நீடி

           நம்நோய் அறியா அறனிலாளர்

           இந்நிலை களைய வருகுவர் கொல்? என

           ஆனாது எறிதரும் வாடையொடு

           நோனேன் தோழி! என் தனிமை யானே!

           அழகான கருத்துச் செறிந்த பாடல். இலக்கிய நயம், வாழ்வியல் எனப்பல நயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கும் பாடல். இக்காலத்தவருக்கு, இன்னும் பல சிந்தனைகளை எழுப்பும் பாடலும் கூட!

           இலக்கிய நயமாவது: முல்லைத்திணையில் முன்பனி வந்தது கூறப்படுகிறது. இங்கு நிலமும் கருவும் மயங்கி வந்ததனால் இது திணை மயக்கம் எனும் கருத்தைக் கொண்டு அமைந்தது.

           வாழ்வியல் வகையில் பார்த்தால், போர் பற்றிய சிந்தனைகள் கொண்டு அரசனுடன் பாசறையில் இருப்போர் தம் குடும்பம், மனைவி, மக்கள் பற்றிய சிந்தனைகளைப் புறந்தள்ளி இருப்பர் என்ற நியதி.

           மழையைப் பற்றிப் படித்தபோது எனது சிந்தனை வேறொரு இலக்கில் பயணித்தது.

           மழை வாசனையை உணர்ந்திருக்கிறோம் அல்லவா?

           புதுமழை பெய்யத் தொடங்கும்போது மண்ணிலிருந்து ஒரு தனி வாசம் எழுமே! என்னவென்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? மண்வாசம், மழைவாசம் என்று தள்ளிவிட்டுப் போய் விடுவோம். ஆனால் அதில் எத்தனை அறிவியல் செய்திகள் பொதிந்துள்ளன தெரியுமா?

                                           ^^^^^^^^^^^^^^^^^^

மண்வாசனைக்கு உண்மையான காரணம் இதுதான்!!

           The smell of the wet earth in the rain

                      rises like a great chant of praise from the

                                voiceless multitude of the insignificant.

                                           Tagore in Stray Birds – 311.

           மழைக்காலத்து ஈரமண்ணின் வாசனை 

                     அற்பமான, குரலற்ற  ஒரு பெரும் கூட்டம் பாடும்

                                சிறந்த புகழுரை போல எழுகிறது.

 

                                  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^

           தாகூர் ஒரு தீர்க்கதரிசிதானோ என்னவோ; குரலற்ற பெருங்கூட்டம் பாடும் புகழுரைதான் மண்வாசம்! அந்தப் பெருங்கூட்டம் என்பதே இவற்றை உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் கூட்டம்! தாகூரின் காலத்தில் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் சுத்தமாக இல்லை!! எது அவரை இவ்வாறு எழுதத் தூண்டிற்று என வியக்கிறேன்.

           ஆம், நம் கண்களால் காணவியலாத சின்னஞ்சிறு நுண்ணுயிரிகள்தாம் (Microbes) இந்த வாசனைக்குக் காரணம் என்றால் நம்புவீர்களா? ஸ்ட்ரெப்டோமைசீட் (Streptomycetes) எனும் ஒருவிதமான நுண்ணுயிரிதான் ‘பெட்ரிகார்’ (Petrichor) எனும் இவ்வாசனைக்குக் காரணம். ஜியோஸ்மின் (Geosmin) எனும் ஒரு வேதிப்பொருளை அவை மண்ணில் உண்டுபண்ணுகின்றன. மழைநீர் பட்டதும் உடனே எழும் இந்த வாசனைதான் நாம் அறிவது!! இந்த மண்வாசனை காலகாலங்களாக 440,000,000 வருஷங்களுக்கு முன்பிருந்தே மற்ற உயிரினங்களால் அறியப்பட்டுள்ளது. மண்ணில் இருந்து வருவது.  ஜியோஸ்மினைத் தயாரிக்கும் இந்த நுண்ணுயிரிகள் அறிவியல் மருத்துவ மேடையில் பெரியதோர் இடத்தை வகிக்கின்றன. என்ன தெரியுமா? இந்த நுண்ணுயிரிகள்தான் பலவிதமான ஆன்டிபயாடிக்குகளை உற்பத்தி செய்கின்றன. ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin) நாமனைவரும் அறிந்தது. ஸ்பைராமைசின் (Spiramycin) இன்னொன்று. இன்னும் பல உண்டு!!

           ஸ்ட்ரெப்டோமைஸிஸைத் தவிர இன்னும் சிலவகை நுண்ணுயிரிகளின் – மிக்ஸோபாக்டீரியா (Myxobacteria), பெனிசில்லியம் (Penicillium), ஏன் நாமுண்ணும் பீட்ரூட்டின் லேசான சுவையான மண்வாசனைகூட இந்த ஜியோஸ்மினால்தான்!

           மிக்ஸோபாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகள் வெவ்வேறு வேதிப்பொருட்களை (Chemicals) உற்பத்தி செய்கின்றன. எபிதிலோன் (Epithelon) என்ற ஒருவகை வேதிப்பொருள் புற்றுநோய் வைத்தியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் இக்சாபேபிலோன் (Ixobabilon) எனும் மருந்திற்கு மார்பகப் புற்றுநோய் வைத்தியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் பல.

           எனது ஆராய்ச்சிக்காலத்தில், மிக்ஸோபாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு ஜெர்மன் விஞ்ஞானியை எங்கள் ஆராய்ச்சிக்கூடத்திற்கு அழைத்து, எங்களில் சிலருக்கு இந்த பாக்டீரியாக்களை வளர்த்து அவற்றிலிருந்து வேதிப்பொருட்களைத் தயாரிக்கப் பயிற்சிதர வேண்டினோம். அவருடனான மூன்றுவாரப் பயிற்சிக் காலத்தில் அவர் எங்களை நுண்ணுயிரிகளின் புதியதொரு உலகிற்கே அழைத்துச் சென்று விட்டார்.

           தாவரங்கள், காளான்கள் (Fungus), நுண்ணுயிரிகள் இவற்றிலிருந்து கிடைக்கும் இயற்கையான வேதிப்பொருள்கள் மருந்து கண்டுபிடிப்புத் துறையில் கடந்த நூற்றாண்டிலிருந்து பெரும்பங்கு வகிக்கின்றன. கடந்த சிலவாண்டுகளில் மிக்ஸோபாக்டீரியாக்களும் இதில் சேர்த்தி!! தொற்றுநோய்கள் (Infectious diseases), தொற்றல்லாத புற்றுநோய் போன்றவைகளுக்கும் இவை பயன்படுகின்றன எனக் கண்டோம். இவை மண்ணில் இருப்பவை! ஆனால் கூட்டங்களாகச் சேர்ந்து வாழ்பவை! என்ன? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை வழுவழுப்பான ஈரப்படலங்களாக கூட்டமாக இரைதேடி நகரும். இரைகிட்டாதபோது, ஒரு கூடு (Fruiting body) போன்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு அதனுள் பாதுகாப்பாக (Spores) இருக்கும்! இதையெல்லாம் செய்வதற்காக இந்த அமைப்பு பலவகைப்பட்ட புரதங்களையும் வேதிப்பொருட்களையும் உண்டுபண்ணிக் கொள்கின்றது. அது பெரியதோர் ஆராய்ச்சி! இந்தப் புரதங்களும் வேதிப்பொருள்களும்தான் நமக்கு பலவகை நோய்களுக்கும் மருந்தாக அமைகின்றன! இது எப்படி இருக்கு? அற்புதம் இல்லை?

           நாங்கள் இந்த நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப் மூலமாக ‘செல் செல்’லாகக் கண்டு களித்து, கண்படைத்த பயனைக் கொண்டாடினோம்! பல நிறங்களிலும் வண்ணங்களிலும் அவை வலம் வரும் அதிசயத்தைக் கண்டு ரசித்தோம். சில படங்களை உங்கள் பார்வைக்கு விருந்தாக அளித்திருக்கிறேன். இவை வளருவதையும், முதிர்வதையும், கண்டு அவற்றிலிருந்து சரியான சமயத்தில் வேதிப்பொருட்களை எடுப்பதுமாக எங்கள் நாட்கள் இனிதே கழிந்தன.

           இதிலிருந்து விளங்கியது ஒரு பேருண்மை! இயற்கை, தொற்றுகள் மூலமும் நோய்கள் மூலமும் தொல்லைகள் தந்தாலும், தானே அதற்கு மருந்துகளையும் நிவாரணிகளையும் எங்காவது எதிலாவது வைத்திருக்கிறது. அவற்றைக் கண்டறிவதே நம் சமர்த்து!

                    

 

          

 

 

***************************************************************************************************

அடுத்து நமது தத்துவக் கதைகளுக்குள் புகலாம். இடிக்கும், மழைக்கும் கடவுள் இந்திரன்! ரிக் வேதப்படி அவனே மிகப்பெரிய கடவுள். மிகுந்த பலசாலி. மும்மூர்த்திகளுக்கும் முற்பட்ட கடவுளாம்!

           வாழ்விற்கு ஆதாரமான கடவுளாதலால் மழையோடும், அமிர்தத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறான். வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமிர்தத்தைத் தன் ஆட்களுக்காக சாமர்த்தியமாகக் கவர்ந்து செல்கிறான்.

           மற்றபடி இந்திரனைப்பற்றிய பல கதைகளை நாமறிவோம். பெண்கள் மீதான சபலம் அவனுடைய அற்பகுணம் என்கிறார்கள்! அவன் கௌதம முனிவரின் அழகிய மனைவியான அகலிகைமீது தவறான எண்ணம் கொண்டு சாபம் பெற்றது நம் அனைவருக்குமே தெரியும். கோவர்த்தன கிரியைக் குடையாய்த் தூக்கிய கிருஷ்ணன் மீதும், இடையர்கள் மீதும் பெருமழை பொழிந்து பின் தவறை உணர்ந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டதையும் நாமறிவோம்.

           எது எப்படியானால் என்ன? இனி மழைபெய்யும்போது, நாம் மண்வாசனையை உணரும்போது கட்டாயம் மிக்ஸோபாக்டீரியா பற்றிச் சிந்திப்போம். பெருமழை பெய்யும்போது (சங்ககாலத் தலைவிபோல) பணிக்குச் சென்ற நாம் மட்டுமின்றி கணவர், மகன், மகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்று கவலைப்படுவோம்.  குழந்தைகள் பள்ளியிலிருந்து வரவேண்டுமே, அவர்கள் வரும் சமயம் நாமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப வேண்டுமே என்றெல்லாம் நம் எண்ணங்கள் மழைநீரில் அலை மோதும். மழைக்காலம் தொடங்கி விட்டதே!…….

           விரைவில் மீண்டும் சந்திப்போம்.

 

                                     

 

 

 

 

 

 

 

தீர்ப்பு – மூலம் : பிரான்ஸ் காஃப்கா தமிழில் : தி.இரா.மீனா

(சென்ற மாத தொடர்ச்சி )

Yosl Bergner | Painting for Franz Kafka's The Judgement (1991) | MutualArt

                5                       

“அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருந்தால் என்னுடைய நிச்சய தார்த்தம் அவனுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் அவனிடம் சொல்வதற்கு இனி எனக்குத் தயக்கமில்லை.”

“ஜார்ஜ், நான் சொல்வதைக் கேள்.இந்த விஷயத்தை விவாதிக்கத்தான் என்னிடம் நீ வந்திருக்கிறாய்.அது உன்னுடைய நல்ல இயல்புதான்.ஆனால் நீ இப்போது முழு உண்மையையும் சொல்லவில்லையென்றால் அதனால் எந்தப் பயனுமில்லை.பொருத்தமில்லாத விஷயங்களை பேச எனக்கு விருப்பமில்லை.அம்மாவின் மறைவிற்குப் பிறகு இங்கு சில மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதைப் பற்றி பேசுவதற்கான நேரம் நாம் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாக வந்திருக்கிறது. தொழிலில் எந்தப் பிரச்னையும் இல்லை, அது என்னைக் காப்பாற்றுகிறது. என்னிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை —அதே சமயத்தில் எனக்குப் பின்னால் நடக்கிறது என்று சொல்லவும் நான் தயாரில்லை— எனக்கு பலமில்லை, என் ஞாபகசக்தி குறைந்து கொண்டிருக்கிறது, பெரும்பாலான விஷயங்க ளில் கவனம் செலுத்த முடியவில்லை.முதலாவதாக ,இயற்கை தன் வேலையைச் செய்கிறது, இரண்டாவதாக அம்மாவின் மரணம் உன்னைவிட எனக்குப் பெரிய அடி.ஆனால் நாம் இப்போது இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசுவதால் ஜார்ஜ் ,உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை ஏமாற்ற வேண்டாம்.இது ஓர் அற்பமான விஷயம், பேசக் கூடிய பெரிய விஷயமில்லை. அதனால் என்னை ஏமாற்றாதே. உனக்கு நிஜமாகவே பீட்டர்ஸ்பெர்க்கில் இந்த நண்பன் இருக்கிறானா?” அப்பா கேட்டார்.

ஜார்ஜ் சங்கடத்தோடு எழுந்து நின்றான்.”நாம் என் நண்பனை மறந்துவிடு வோம்.ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும் என்  அப்பா ஸ்தானத்தை மாற்ற முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கவனமாக உங்களைப் பார்த்துக் கொள்ளவில்லை.முதுமை தன் வேலையைக் காட்டுகிறது. தொழிலில் நீங்கள் எனக்கு மிக முக்கியமானவர்–உங்களுக்கும் அது நன்றாகத் தெரியும்.-ஆனால் தொழில் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்குமென்றால், அதை நான் நாளையே அதை மூடி விடுவேன்.உங்களுக்காக ஒரு புதிய வாழ்க்கைச் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.முழுவதும் வித்தியாச மானதாக மாற்ற வேண்டும்.நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கி றீர்கள். ஹாலில் நல்ல வெளிச்சமிருக்கிறது. உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பதிலாக நீங்கள் காலை உணவைச் சரியாகச் சாப்பிடுவதில்லை.காற்று வரும் ஜன்னலின் அருகே உட்கார்ந்துகொண்டால் உங்கள் உடலுக்கு நல்லது.அப்பா! நான் மருத்துவரை அழைத்து வருகிறேன்.அவருடைய அறிவுரைப்படி நடப்போம்.உங்கள் அறையை மாற்றி விடலாம்.நீங்கள் முன்னறைக்கு வந்து விடுங்கள்.நான் இங்கு வந்துவிடுகிறேன்.உங்களுக்கு எந்தச் சிரமும் இருக்காது.ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு நேரமிருக்கிறது.நான் இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்குப் படுக்கை போடுகிறேன் .உங்களுக்கு முழு ஓய்வுதேவை. வாருங்கள்,உடை மாற்ற உதவுகிறேன்.அல்லது இப்போதே முன்னறைக்குப் போக விரும்புகிறீர்களா?இப்போது என் படுக்கையில் நீங்கள் படுத்துக் கொள்ளலாம்.அது சரியாக  இருக்கும்.” அப்பாவின் மிக அருகில் நின்றான்.

“ஜார்ஜ்,” அழுத்தமாக அசையாமல் அப்பா கூப்பிட்டார். ஜார்ஜ் உடனே அவரருகில் மண்டியிட்டு உட்கார்ந்தான்.அவருடைய பெரிய கூர்மையான  விழிகள் தன்னை வெறிப்பதை உணர்ந்தான்..

“உனக்கு நண்பனென்று யாரும் பீட்டர்ஸ்பெர்க்கில் இல்லை.எப்போதும் கேலி பேசுபவனாகவே இருக்கிறாய். என்னிடம் கூட உன்னால் விளையாடாமலிருக்க முடியவில்லை.எப்படி உனக்கு ஒரு நண்பன் அங்கிருக்க முடியும்? என்னால் நம்பவே முடியவில்லை.”

                                                    6

“ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், அப்பா” ஜார்ஜ் சொன்னான்.அப்பாவை சாயும் நாற்காலியிலிருந்து எழுந்து நிற்க வைத்து அவர் இரவு ஆடையை களைந்தான்.அவர் வலிமையற்றுப் போய் நின்றிருந்தார்.”என் நண்பர்கள் என்னைப் பார்க்க வந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன.குறிப்பாக அவனை உங்களுக்குப் பிடிக்காதென்பது எனக்கு இன்னமும் நினவிலிருக்கிறது.என் அறையில் இரண்டுமுறை அவன் உட்கார்ந்திருந்த போதும் நான் நீங்கள் அவனைச் சந்தித்து விடாதபடி பார்த்துக் கொண்டேன்.அவனை நீங்கள் வெறுப்பது எனக்கு நன்றாகத் தெரியும்.பின்னொரு  நாளில் நீங்கள் அவன் பேச்சைக் கவனித்தும், கேள்விகள் கேட்டும் அவனிடம் நன்றாகப் பேசினீர்கள்.எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. நினைத்துப் பார்த்தால் அது உங்களுக்கு ஞாபகம் வரலாம்.அப்போதுதான் ரஷ்யப் புரட்சி பற்றிய வியப்பான கதைகளை அவன் நமக்குச் சொன்னான்.உதாரணமாக ,கீவியில் அவன் தொழில் பயணம் மேற்கொண்டபோது ஒரு கலவரத்தைப் பார்க்க நேர்ந்தது.மாடியில் நின்று கொண்டிருந்த பாதிரியார் ஒருவர்  சிலுவையைத் தன் உள்ளங்கையில் வைத்து அறுத்துக்கொண்டு கூட்டத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டதைச் சொல்லலாம். நீங்கள் கூட அந்தக் கதையை அடிக்கடி சொல்வீர்கள். 

இதற்கிடையே ஜார்ஜ் கவனமாக அப்பாவை உட்காரவைத்து அவருடைய ஆடைகள்,காலணி எல்லாவறையும் மெதுவாகக் களைந்தான்.அவருடைய உள்ளாடைகள் அவ்வளவு சுத்தமாக இல்லாமலிருப்பதைப் பார்த்து தான் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தான். அப்பாவை இது மாதியான விஷயங்களில் கவனித்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்றுணர்ந்தான்.தன் காதலியிடம் அப்பாவின் எதிர்காலம் பற்றி இன்னமும் அவன் விவரமாக எதுவும் பேசவில்லை.அவர் தனியாக இங்கேயே தங்கிக் கொள்வாரென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் இப்போது அவரைத் தன்னுடனே வைத்துக் கொள்ளும் உறுதியான முடிவுக்கு வந்து விட்டான்.மிகக் கூர்மையாக கவனித்தால் இப்போது எடுத்துக் கொள்ள விரும்பும் கவனம் எப்போதோ எடுக்கபட்டிருக்க வேண்டுமென்பது புரியும். அவரைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குப் போன போது அப்பா தன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை இறுக்கப் பிடித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால் படுக்கையில் அவரைக் கிடத்தியவுடன், எல்லாம்  இயல்பாகத் தெரிந்தது.அவர் தானாகவே தோள்வரை போர்வையை இழுத்துப்  போர்த்திக் கொண்டு ஜார்ஜைப் பார்த்தார்.

“உங்களுக்கு அவனை ஞாபகமிருக்கிறதில்லையா?’அவரை உற்சாகப் படுத்தும் பாணியில் தலையை ஆட்டியபடி ஜார்ஜ் கேட்டான்.

“நான் நன்றாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேனா?”தன் பாதங்களைச்  சரியாக மூடமுடியாதது போலக் கேட்டார்.

“படுக்கையில் படுத்தவுடன் தெம்பாகத் தெரிகிறதல்லவா?”கேட்டபடி  போர் வையைச் சரிசெய்தான்.

“நான் நன்றாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேனா?”அந்தக் கேள்விக்குத் தனக்கு கண்டிப்பாக பதில் கிடைக்க வேண்டுமென்பது போல மீண்டும் கேட்டார்.

“உம். இப்போது ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”

’இல்லை,” ஜார்ஜின் பதிலைத் தடுப்பது போலக் கத்தினார்.

      The Judgment (2016) - IMDb                                                                     7

போர்வையை முழு வேகத்தோடு இழுத்து படுக்கையின் மீது விழும்படி எறிந்தார். கம்பியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு“நீ மூடி மறைக்கப் பார்க்கிறாய்–நான் சிறுபிள்ளை போலாகி விட்டேன் என்றெனக்குத் தெரியும்— ஆனால் இன்னும் மோசமாகிவிடவில்லை.இவ்வளவுதான் எனது பலமென்றாலும் அது உனக்குப் போதும், உனக்கு அதிகமானதும் கூட. ஆமாம்,எனக்கும் உன் நண்பனைத் தெரியும்.என் மனதுக்கு நெருக்கமான வன் என்று உனக்குத் தெரியும்.அதனால்தான் பல வருடங்களாக அவனுக்கு நீ துரோகம் செய்கிறாய்.ஏன்?  நான் அவனுக்காக அழவில்லை என்று நினைக்கிறயா? அதனால்தான் உன் அறையை சாத்திக்கொண்டு முடங்கிக் கிடக்கிறாய்—யாரும் உன்னைத் தொந்திரவு செய்யக் கூடாது. முதலாளி எப்போதும் பிஸி—அந்த வழியில்தான் இரண்டு முகம் கொண்ட நீ ரஷ்யாவுக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாய்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு தந்தைக்கு தன் மகனை உற்று நோக்கக் கற்றுத்தர வேண்டியதில்லை.அசைய முடியாத அளவுக்கு அவன் மேல் நீ அழுந்த உட்கார்ந்து விட்டதாக நினைத்து, அந்தத் தருணத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டாய்!”

அப்பாவின் பயம்தரும் மாயத் தோற்றத்தை ஜார்ஜ் பார்த்தான். பீட்ட்ர்ஸ் பெர்க்கிலுள்ள நண்பனைப் பற்றி திடீரென்று அப்பா நன்றாகத் தெரிந்து கொண்ட விவரம் அவன் கற்பனைக்கு எட்டமுடியாததாக இருந்தது. ரஷ்யாவைப் பற்றிய விரிவான எண்ணத்தில் அவர் தொலைந்து  போயிருப்பது  தெரிந்தது. இழந்து விட்ட தொழிலில் அவரைப் பார்க்க முடிந்தது.சிதைந்த அவரது அலமாரிகளில் தகர்ந்து கிடந்த பொருட்கள், உடைந்து சிதறிய பொருட்கள் எல்லாம் கிடக்க  வெறுமையாய் நின்று கொண்டிருந்தார். ஏன் அவர் அவ்வளவு தூரம் போக வேண்டும்!

“ஆனால் என்னைப் பார்”அப்பா  கத்தினார்.ஜார்ஜ் அவரருகில் தன்னை மறந்து ஓடத் தொடங்கிய போது அவர் பேச்சில் திக்கல் வந்தது.”அவள் உன்னைத் தன் வசப்படுத்தியதால் நீ மயங்கி யாருடைய இடையீடுமின்றி அவள் வசமானாய்–அம்மாவின் நினைவை மறந்தாய். உன் நண்பனுக்குத் துரோகம் செய்தாய், அசைய முடியாதபடிக்கு அப்பாவைப் படுக்கையில் கிடத்தினாய். ஆனால் அசையமுடியும்.,முடியாதா அவரால்?”அவர் எந்த ஆதரவுமின்றி எழுந்து நின்று கால்களால் உதைத்துக் கொண்டார். உள்ளொளியால் பிழம்பு போல இருந்தார்.

ஜார்ஜ் தன்னால்  இயன்ற வரை அவருக்கு வெகு தொலைவில் நின்றிருந் தான். நீண்ட நாட்களாகவே எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக உற்று நோக்க அவன் முடிவு செய்திருந்தான்.அதனால் பின்னால், மேலிருந்து தொடர்பில்லாமல் கூட ஏற்படுகிற தாக்குதல் அவனை ஆச்சர்யப்படுத்தாது. பல காலத்திற்கு முன்பு எடுத்திருந்த –மறந்து போன முடிவு இப்போது ஊசியின் காதில் சிறிய நூலை வைத்திழுப்பது போல நினவுக்கு வந்தது.

“ஆனால் இப்போது உன் நண்பனுக்கு துரோகம் செய்யப்படவில்லை. அவ்வப் போது நடப்பவற்றைச் சொல்லிவிடுகிற பிரதிநிதியாக நான் இங்கிருக்கிறேன்.” தன் ஆட்காட்டிவிரலை முன்னும் பின்னும் அசைத்தபடி உறுதியாகச் சொன்னார்.

நீங்கள் நகைச்சுவை நடிகர்தான்!” ஜார்ஜால் அப்படி அழைப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. அது எவ்வளவு தவறானது என்று அவன் உடனே உணர்ந்து தன் நாக்கை கடித்துக் கொண்டான்.,ஆனால்  அது மிக காலதாமதமான உணர்வு என்று தெரிந்து அவன் கண்கள் வலியில் உறைந்தன.

                                         8

“ஆமாம்,சரிதான் நான் நகைச்சுவையாளனாகத்தான் இருக்கிறேன்! நகைச் சுவை! சரியான வார்த்தை!வயதான துணையற்ற அப்பாவிற்கு வேறு என்ன ஆறுதல் இருக்க முடியும்? சொல்—பதில் சொல்லும் என்னுடைய அருமை மகன் நீ— என் அறையில் என்ன மீதமிருக்கிறது ?துன்பப்படுத்தும் விசுவாச மில்லாத ஊழியர்கள் ,என் நரம்புகளில் இவை ஊடுருவி இருக்க எனக்கென்று என்ன மீதமிருக்கிறது? நான் உருவாக்கித் தந்த தொழிலை வைத்துக் கொண்டு என் மகன் உலகம் முழுவதும் மகிழ்ச்சியாகச் சுற்றி வருகிறான், தந்தையிடமிருந்து வெகுதூரம் விலகி இறுகிய நிலையில்! என்னிடமிருந்து வந்த உன்னை நான் நேசிக்கவில்லை என்று நீ நினைக்கிறாயா?”

“இப்போது வளைந்து அவர் முன்னால் வருவார்” என்று ஜார்ஜ்  நினைத் தான். அவர் இப்போது கீழே விழுந்து சிதறி விட்டாலென்ன ஆகும்!” இந்த வார்த்தைகள் அவன் மண்டைக்குள் பரவிக் கொண்டிருந்தன.

அவன் அப்பா முன்னால் வளைந்தார் ,ஆனால் விழவில்லை.ஜார்ஜ் அவர் எதிர்பார்த்தது போல அருகில் வராததால் அவர் தானாகவே நிமிர்ந்து நின்றார்.

“நீ இருக்குமிடத்திலேயே நில். எனக்கு உன் உதவி தேவையில்லை!உனக்கு இங்கு வந்து நிற்க இன்னமும் பலம் இருப்பதாக  நீ நினைக்கிறாய். அது தான் உன் விருப்பமும் கூட. ஆனால் உன் எண்ணம் தவறாக இருந்தால் ! நான் இப்போதும் உன்னைவிட பலமானவன்.நான் பின்வாங்குபவனாக ஒரு வேளை இருந்தாலும் உன் தாய் கொடுத்த பலமெனக்கு அதிகமென்பதால் உன் நண்பனுடன்  அற்புதமான உறவுத் தொடர்பிலிருக்கிறேன். உன் வாடிக்கையாளர்களும் என் சட்டைப்  பையில்தான்!”

“அவர் சட்டையில் பாக்கெட் கூட வைத்திருக்கிறார்!” ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.தன்னுடைய இந்த அபிப்பிராயத்தால்  அவரை உலகின் முன் கேலிக்குரியவாராக ஆக்கிவிடமுடியும் என்று நினைத்தான். இந்த நினைவு ஒரு கணம்தான் ஏனெனில் அவன் எல்லாவற்றையும் தொடர்ந்து மறந்து கொண்டிருந்தான்

“உன் காதலியுடன் சேர்ந்து என் வழியில் நீ குறுக்கிட்டுப் பார்!நான் அவளை உன்னிடமிருந்து விசிறியடித்து விடுவேன்-எப்படி என்று உனக்குத் தெரியாது.”

ஜார்ஜ் அதை நம்பமுடியாதவன் போல முகத்தைச் சுளித்தான்.அவர் ஜார்ஜின் முகத்தைப் பார்த்துவிட்டு தான் சொன்னது உண்மை என்பது போல ஜார்ஜின் முகத்தைப் பார்த்தார்

“உன் நண்பனுக்கு நிச்சயதார்த்தம் குறித்து எழுத வேண்டுமா என்று  கேட்டுக் கொண்டு இன்று எப்படி என்னிடம் வேடிக்கை காட்டுவது போல வந்தாய். முட்டாளே,அவனுக்கு எல்லாம் தெரியும்,முன்பாகவே தெரியும்!அவனுக்கு நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்,ஏனெனில் நீ எழுதும் பொருட்களை என்னிடமிருந்து வாங்க மறந்து விட்டாய். அதனால்தான் அவன் வெகு காலமாக இங்கு வரவில்லை.உன்னைவிட அவனுக்கு எல்லாம் நூறு மடங்கு தெரியும். படிப்பதற்காக அவன் என் கடிதங்களை வலது கையில் வைத்துக் கொண்டு இடது கையால் உன் கடிதங்களைப் படிக்காமல் சுருட்டிக் கசக்குகிறான்.”

உற்சாகத்தின் வேகத்தில் தன் முழங்கையை தலைக்கு மேல் வைத்து “அவனுக்கு ஆயிரம் மடங்கு விஷயங்கள் நன்றாகத் தெரியும்”என்றார்.

“பத்தாயிரம் மடங்கு”  தன் அப்பாவை முட்டாளாக்கும் பாணியில் அவன் சொன்னான்.

“இந்த மாதிரியான கேள்வியோடு வருவாய்  என்று தெரிந்து பல ஆண்டு களாக நான் உன்னை கவனித்து வருகிறேன்.எனக்கு வேறு எதிலோ கவனம் இருக்கிறதென்று நினைத்தாயா?நான் செய்தித்தாள் வாசிக்கிறேன் என்று நினைத்தாயா? பார் !”அவனை நோக்கி அவர் செய்திதாளைத் தூக்கி எறிந்தார்—அது ஜார்ஜ் கேள்விப்பட்டிராத மிகவும் பழைய ஒரு செய்திதாள்.

“பக்குவம் அடைவதற்கு எவ்வளவு காலமாக காத்திருந்தாய்! உன் தாயின் மரணம் வரைக்கும். இந்த மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க அவளில்லை.

                                          9

’உன் நண்பன் ரஷ்யாவில் அழிந்து கொண்டிருக்கிறான்—மூன்று ஆண்டுக ளுக்கு முன்பே தூக்கி எறியப்பட வேண்டியவன். நான்—என் விஷயங்கள் எப்படியாகி விட்டன பார். நீ அதன் மீது கண் வைத்துவிட்டாய்”

“அதனால் எனக்காக நீங்கள் காத்திருந்தீர்கள் ”ஜார்ஜ் கேட்டான்.

“முன்பே நீ அதை மறைமுகமாகச் சொல்ல நினைத்தாய். ஆனால் இப்போது அது பொருத்தமற்றது.” என்று சிறிது யோசனைக்குப் பிறகு இரங்கலான தொனியில் சொன்னார்

“வெளியுலகில் என்ன நடக்கிறதென்று இப்போது உனக்குத்  தெரிந்து விட்டது. இதுவரை உன்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியும்! அடிப்படையில் நீ அப்பாவிக் குழந்தையாகத்தான் இருந்திருக்கிறாய், ஆனால் அடிப்படையில் நீ கொடுமையான மனிதனாகவும் இருக்கிறாய். அதனால் இதைப் புரிந்து கொள்: தண்ணீரில் மூழ்கி இறக்கும் தண்டனையை நான் உனக்கு அளிக்கிறேன்!”

அந்த அறைக்குள்ளேயே தான் துரத்தப்படுவது போல ஜார்ஜ் உணர்ந்தான். அவனுக்குப் பின்னால் அப்பா படுக்கையில்  விழும் பெரும் சத்தம் காதில் கேட்க அவன் போய்விட்டான். சாய்ந்த நிலையிலிருந்த படிக்கட்டுகளில் மோதும் வேகத்தில் அவன் இறங்கிய போது  வீட்டைச் சுத்தம் செய்ய வந்த வேலைக்காரியைப் பார்த்தான்.

யேசுவே!”கத்திவிட்டு தன் முகத்தை துணியால் மூடிக்கொண்டாள். ஆனால் அவன் அதற்குள் அவளைக் கடந்துவிட்டான்.வெளிகேட்டைப் பாய்ந்து, திறந்து சாலையின் எதிரிலிருந்த தண்ணீரை நோக்கி ஓடினான். பசியான மனிதன் உணவை வெறியோடு பறிப்பது போல வேலியை இறுக்கிப் பிடித்தான். இளமையில்  உடற்பயிற்சி வல்லுனன் போல் இருந்து பெற்றோர்களுக்கு மிகப்பெருமை சேர்த்தவன். வேலியின் அருகே வரும் மோட்டார் வண்டி கண் ணில்பட அதன்  ஒலியில் தான் விழும் சப்தம் ஒடுங்கி விடும் என்ற எண்ணத்தில் தன்னுடைய பிடியை மெல்லத் தளர்த்தினான்.” அன்பான பெற்றோர் களே,நான் எப்போதும் உங்களை நேசிக்கிறவன் “என்று சொல்லிக் கொண்டே மூழ்கினான்.

பாலத்தின் மேல் அந்த நேரம் முடிவில்லாத நீண்ட போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தது.

              ———————————————-

பிரான்ஸ் காஃப்கா இருபதாம்  நூற்றாண்டின்  மிகச் சிறந்த எழுத்தாளர்க ளில் ஒருவர்  என விமர்ச்கர்கள் மதிப்பிடுகின்றனர். நனவிலி நிலை, அந்நியமாதல், உடல் மற்றும் மன ரீதியிலான கொடூரம் உள்ளிட்டவை  அவர் கதையின் கருப்பொருள்களாகின்றன.The Metamorphosis, The Trial, The Judgement ,The Castle  ஆகியவை அவரது சிறந்த படைப்புகளில் சிலவாகும்.

இந்தக் கதை குறும்படமாக வந்துள்ளது.. அதனை இங்கே பார்க்கலாம் ! 

 

 

 

 

ஆசை முகம் மறைந்து போச்சே….. எஸ்.கௌரிசங்கர்

“அப்பா! கோகிலம் மாமி காலமாயிட்டாளாம்”

நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்தித்தாளில் மூழ்கியிருந்த ரங்கநாதன், விச்சு ஏதோ சொல்வதைப் புரிந்து கொண்டு பேப்பரை விலக்கித் தலையை நிமிர்த்தினார்.

 “கோகிலம் மாமி செத்து போயிட்டாளாம்” என்று மீண்டும் சற்று உரக்கவே சொன்னான் விச்சு.

கேட்டதும் ரங்கநாதன் முகம் ஒரு மாதிரி இறுகிக் கொண்டது. நாக்கை வெளியே நீட்டி தன் காய்ந்த உதடுகளை நனைத்துக் கொண்டார். சற்று நிதானித்துக் கொண்டார்.

“எப்போ? யார் சொன்னா?”

“மாமியோட பொண்ணு ஃபோன் பண்ணிச் சொன்னா. இன்னிக்கி பொழுது விடிய அஞ்சு மணிக்கு ஆயிடுத்தாம்”

மீண்டும் சிறிது நேரம் மௌனம். எங்கோ சுவர் மூலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் திரும்பி, “அவளுக்கு என்ன ஆச்சு?”

“ஒரு வாரமாகவே கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்ததாம். நேத்திக்கு ரொம்ப மோசமாயிடுத்தாம். எழுபது  வயசுக்கு மேலே ஆயிடுத்தில்லையா?”

“எழுபத்தெட்டு!  இந்த தை மாசம் வந்தா எழுபத்தொன்பது. என்னைவிட இரண்டு வயசுதான் சின்னவள்.” ரங்கநாதனின் வயசுக் கணக்கு விச்சுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் தொடர்ந்து, “சரி! அவ இப்போ எங்கே இருக்கா?”என்று கேட்டார்.

“எங்கோ கூடுவாஞ்சேரி பக்கத்திலே நந்திவரமோ என்னவோ ஊர்ன்னு சொன்னா. அட்ரஸ் கொடுத்திருக்கா.”

சிறிது நேரம் ஏதோ எண்ணத்தில் மூழ்கி இருந்த ரங்கநாதன் சட்டென்று தீர்மானித்தவராய், “சரி! மணி ஒன்பதுதானே ஆறது. வண்டியை எடு! கிளம்பு, போவோம்”

விச்சு அதிர்ந்தான். “அப்பா! நீங்க எப்படி இந்த நிலைமையிலே? பேசாம இருங்கோ. வேணும்னா மாமியோட பொண்ணுகிட்டே ஃபோன்லே பேசி துக்கம் கேட்டுடுங்கோ”

“இல்லை. நான் நேர்லே போகணும். நான் வரேன். நீ கிளம்பு”. ரங்கநாதனின் வார்த்தையில் இருந்த அழுத்தமும், தீர்மானமும் விச்சுவுக்கு சற்று பயமாகவே இருந்தன.

“இல்லை, உங்களாலே நடக்கவே முடியலை. இப்போ அங்கே போகணும்னு என்ன அவசியம்?”

“விச்சு, சொல்றதைச் செய். போய் வண்டியை எடு. அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்லிடு”

“அப்பா, எனக்கு இன்னிக்கு ஹைகோர்ட்லே ஹியரிங் இருக்கு”

“ஜூனியரை விட்டு வாய்தா வாங்கிக்கச் சொல்லு. நீ என்னோட உடனே கிளம்பு”

சொல்லிக் கொண்டே ரங்கநாதன் நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ளத் தொடங்கினார். விச்சு அவரின் தோள்களைப் பிடித்து எழுப்பி விட்டான். பக்கத்தில் இருந்த “வாக்கரை” அருகில் நகர்த்தி வைத்தான். அவர் அதனை இருபுறமும் பிடித்து முன்னால் இழுத்துக் கொண்டு தானும் மெதுவாக தன் கால்களைத் தூக்கி முன்னால் வைத்து நகரத் தொடங்கினார்.

விச்சு சிறிது நேரம் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். பிறகு “அம்மா!” என்று கத்தினான். சிறிது நேரத்தில் உள்ளிருந்து வெளியே வந்த மங்களம் ரங்கநாதன் மெதுவாக நடந்து வாசலை நோக்கிப் போவதைப் பார்த்து விட்டு, “இப்போ எங்கே கிளம்பிப் போயாறது?”என்றாள்.

ரங்கநாதன் பதில் ஒன்றும் பேசாமல் இருக்கவே விச்சு, “கோகிலம் மாமி இன்னிக்கு காலம்பற செத்துப் போயிட்டாளாம். மாமியோட பொண்ணு ஃபோன் பண்ணிச் சொன்னா. அதைக் கேட்டவுடனே எங்கோ கூடுவாஞ்சேரியிலே அவா வீட்டுக்குப் போகணும்ங்கிறா அப்பா” என்று சொல்லி முடித்தான்.

 மங்களம் அவசரமாக ரங்கநாதனின் முன்னால் வந்து பாதையை மறித்து நின்று கொண்டாள்.

“இப்போ அங்கே போகாட்டா என்ன? சொந்தக்காராளா, ஒட்டா, உறவா? என்ன துக்கம் வேண்டியிருக்கு?” கோபத்தோடு கேட்டாள் மங்களம்.

ரங்கநாதன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பதில் ஒன்றும் பேசவில்லை.

“கால் இரண்டும் முடங்கிப் போயிருக்கு. இங்கே வீட்டுக்குள்ளே நடக்கறதுக்கே வாக்கர் வேண்டியிருக்கு. ஒரு தடவை பாத்ரூம் போயிட்டு வரதுக்கு ஒரு மணி நேரம் ஆறது. இதிலே கஷ்டப்பட்டுப் படியிறங்கிப் போய், அம்பது மைல் தாண்டி அப்படி அந்தத் துக்கத்திலே கலந்துக்கலைன்னா என்ன இப்போ?”

ரங்கநாதன் தரப்பில் மீண்டும் மௌனம்.

“போன வருஷம் என் அண்ணா போன போது இதோ அடி நிலத்திலே இருக்கிற அடையாருக்கு வரமுடியலை. இப்போ பழைய சினேகிதி போயிட்ட உடனே கால்லே புதுசா சக்தி வந்துடுத்தா என்ன?” மங்களத்தின் குரலில் ஆத்திரம் கொப்பளித்தது.

ரங்கநாதன் மீண்டும் பதில் சொல்லாமல் தன் பார்வையை அவளை விட்டு விலக்கினார்.

“அவ புருஷனுக்கு எல்லாம் செஞ்சு அவனை ஜெயிலுக்குப் போகாம காப்பாத்திக் கொடுத்தாச்சு.  அவமானம் தாங்காம அவன் செத்தே போனான். அப்பவே அவளையும் உங்களையும் சேர்த்துப் பேசி ஊரே சிரிப்பாச் சிரிச்சது. ஏதோ என் நல்ல காலம், காலை சுத்தின பாம்பு காலைக் கடிக்காம விட்டது. இப்போ முப்பது வருஷம் கழிச்சு வெக்கங்கெட்டுப் போய் அந்த ஜென்மத்தை நேர்லே போய் பார்க்கலேன்னா என்ன குறைஞ்சு போயிடும்?”

ரங்கநாதனின் வாய் ஏதோ வார்த்தைகளை முணுமுணுத்தது.

“என்ன சொல்றேள்?”

தொண்டையை ஒரு முறை செருமிக் கொண்ட ரங்கநாதன் நிதானமாகத் தன் மனைவியைப் பார்த்து, “இப்போ நீ இருக்கற இடத்திலே இருக்க வேண்டியவள் அவள்.  அந்த இடத்தை தியாகம் பண்ணி விட்டுக் கொடுத்தவள் அவள். நீ என்ன வேணாம்னாலும் நினைச்சுக்கோ, பேசிக்கோ. எனக்குக் கவலை இல்லை. நான் கடைசியா ஒரு தடவை அவள் முகத்தைப் பார்க்கப் போயிண்டிருக்கேன். என்னைத் தடுத்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றார்.

சொல்லிக் கொண்டே ரங்கநாதன்  மெதுவாக வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். விச்சு பயந்து கொண்டே அவரைப் பின் தொடர்ந்தான்.

ஐம்பது அறுபதுகளில் மைலாப்பூரில் “சீனியர் அட்வொகேட்” விஸ்வேஸ்வரன் மிகப் பிரபலம். அவர் கேஸ் எடுத்து நடத்தினால் தோல்விங்கிறதே கிடையாதுன்னு பிரசித்தம். வடக்கு மாட வீதியில் அவரின் பெரிய மாடி வீடும் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. விஸ்வேஸ்வரனின் ஒரே புதல்வன் ரங்கநாதன்.  பி.ஏ. முதல் வகுப்பில் முடித்துவிட்டு, சட்டப் படிப்பில் சேர்ந்து கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்பாவின் வக்கீல் குமாஸ்தா வைத்தியநாதனின் ஒரே புதல்வி கோகிலத்தின் மீது கொள்ளை ஆசை.  சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்கள். சேர்ந்து விளையாடியவர்கள். கோகிலம் சங்கீதம் கற்று கொண்டிருந்தாள். பருவம் வந்தவுடன் வசதி இல்லாததால் கோகிலத்தின் படிப்பு “ஸ்கூல் ஃபைனலோடு” நின்று போனது. பள்ளிப் படிப்போடு அவளின் பாட்டுப் படிப்பும் நின்றது.

வாலிபனான ரங்கநாதன் ஆசை இப்போது அவள் மீது காதலாக மாறியது. அவளுக்கும் “ரங்கு”வின் மீது அதே உணர்வுகள்தான். ஆனால் முன்போல இருவரும் தன் வீட்டிலோ இல்லை மற்றவர் வீட்டிலோ சுதந்திரமாகப் பார்த்துப் பேச முடியாத நிலைமை. அதனால் இப்போது இருவரது சந்திப்புகளும் கபாலி கோவிலிலோ ஏதேனும் பார்க்கிலோ சிலசமயம் கடற்கரையிலோ நடக்கத் தொடங்கின.

ஒரு வருடம் நவராத்திரியின் போது மழையில் நனைந்து ரங்கநாதனுக்குக் காய்ச்சல். அவன் வீட்டுக் கொலுவுக்கு வந்திருந்த கோகிலம், சுற்றும் முற்றும் பார்த்து அவனைக் காணாமல் தவித்தாள். ரங்குவின் அம்மா ஜகதாம்பாள் அவளைப் பாடச் சொன்ன போது சிறிதும் தயங்காமல், “ஏன் பள்ளி கொண்டீரய்யா, ரங்கநாதா” என்று பாட ஆரம்பித்தாள்.  பாட்டைக் கேட்டு விட்டு வீட்டில் தன் அறையில் படுத்துக் கிடந்த ரங்கநாதன், மெதுவாக எழுந்து கூடத்துக்கே வந்து விட்டான். ரங்குவின் அம்மா உட்பட எல்லோருக்கும் ஆச்சரியம்.

“அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதன் எழுந்துண்டானோ என்னமோ, கோகிலத்தோட பாட்டைக் கேட்டுட்டு இந்த ரங்கநாதன் ஜுரம் விட்டுப் போய் படுக்கையிலிருந்து எழுந்து வந்துட்டான்” என்றாள்   ரங்குவின் அத்தை. கோகிலம் வெட்கப்பட்டு எழுந்து தலையைக் குனிந்து சிரித்துக் கொண்டே, “நான் வரேன் மாமி” என்று அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள். ரங்கநாதன் உடனே, “எனக்காக பாட்டை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து பாடட்டும்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.  அவளும் நிறையப் பாடினாள். அன்றே தீர்மானித்தான் சீக்கிரமே தான் கோகிலத்தைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் விஷயத்தைப் பற்றி பெற்றோரிடம் பேசி விடுவது என்று.

“இதிலே என்ன தப்பு ஜகதா? ஏழையாய் இருந்தாலும் நல்ல குடும்பம். பொண்ணு நமக்கு நன்னா தெரிஞ்ச நல்ல பொண்ணு. அழகான அடக்கமான பொண்ணு. படிச்சிருக்கா. நன்னா பாடறா. எல்லாத்துக்கும் மேலே ரங்குவுக்கு அவளைத்தான் ரொம்ப புடிச்சிருக்கு. அப்புறம் என்ன?” என்றார் விஸ்வேஸ்வரன் தன் மனைவியிடம் கெஞ்சாத குறையாக.

“வீட்டுக்குத் தெரியாம ஒரு ஆம்பளையை வெளியிலே, பார்க்கிலே, பீச்சிலே பார்க்கிற வயசுப் பொண்ணு நல்ல பொண்ணா?” கோபத்தோடு கேட்டாள் ஜகதாம்பாள்.

“அம்மா நான்தான் அவளை அங்கேயெல்லாம் வரச் சொன்னேன்” என்றான் ரங்கநாதன்.

“நீ கூப்பிட்டா வெங்கங்கெட்டுப் போய் அவளும் அங்கே போயிடறதா?” என்றவள் தொடர்ந்து, “நல்ல பணக்கார இடம்னு பார்த்து தன் பொண்ணை அனுப்பி ரங்குவை மயக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்கான் அந்த பிராமணன். இவனும் ஏமாந்து போயி மாட்டினுட்டான்”

“இப்படியெல்லாம் பேசாதே ஜகதா! வைத்தா ரொம்ப நல்லவர். நான் இந்தக் கல்யாணத்துக்கு அவர்கிட்டே சம்மதம் கேட்கப் போறேன். கல்யாணச் செலவைக் கூட நாமே ஏத்துக்கலாம்”

“உங்க புத்தி ஏன் இப்படிப் போறது? அவ ஜாதகத்தைப் பார்த்தேளா? அதுக்கு பூராட நக்ஷத்ரம்”

“அதனாலே என்ன?”

“அதனாலே என்னவா? அவ கழுத்திலே தாலி ஏறின உடனே என் கழுத்திலே தாலி இறங்கிடும்”

“உளறாதே ஜகதா! எல்லாம் மூடநம்பிக்கை. நீ அனாவசியமா வேண்டாததையெல்லாம் நினைச்சு பயப்படறே. அதெல்லாம் ஒண்ணும் நடக்காது”. கோபத்தோடு உறுமினார் விஸ்வேஸ்வரன்.

“இல்லை! இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. நடக்க விடமாட்டேன்”

சுமார் ஒரு மணி நேரம் நடந்த வாக்குவாதத்திற்குப் பின் ரங்கநாதன் பொறுமை இழந்தான்.

“அம்மா! நீ ஒத்துக்கலைன்னாலும் நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அழைச்சிண்டு போய் நம்ம கற்பகாம்பாள் சன்னதியில் அவ கழுத்திலே தாலி கட்டுவேன்”

“நீ அப்படி கட்டிட்டு வெளியே வந்ததும், இதோ இந்தக் குளத்திலே என் பொணம் மிதக்கும்”

ஜகதாவின் கடைசி அஸ்திரத்தில் தந்தை, மகன் இருவரும் தங்கள் எல்லா ஆயுதங்களையும் இழந்து வீழ்ந்தார்கள். அம்மாவை மீறி ரங்குவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இரண்டே மாதத்தில் அவன் திருமணம் ஜகதாம்பாளின் தூரத்து உறவில் இருந்து வந்த மங்களத்தோடு நிச்சயம் ஆனது. கோகிலத்தைப் பார்த்து அவன் மன்னிப்புக் கேட்கக் கூட அவனுக்குத் துணிவில்லை. ஆனால் கோகிலம் அவன் திருமணத்திற்கு தன் வாழ்த்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினாள். அதைப் படித்துவிட்டு பதில் கடிதம் எழுதக் கூட ரங்குவிற்குத் தோன்றவில்லை.

ரங்கநாதனின் கல்யாணம் மிக விமர்சியாக நடந்தது. கல்யாணத்துக்கு கோகிலமும் வந்திருந்தாள். அவள் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தான் ரங்கு. மாலையில் நலங்கு வைபவத்தின் போது, கூட்டத்தில் யாரோ கோகிலத்தைப் பாடச் சொன்னார்கள்.  முதலில் தயங்கிய கோகிலம், பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு பாடினாள்.

“ஆசை முகம் மறந்து போச்சே….இதை யாரிடம் சொல்வேனடி தோழி”

ரங்கு மனத்துக்குள் கண்ணீர் விட்டு அழுதான்.

ரங்கநாதன் தன் தந்தையைப் பின்பற்றி அவரிடமே ஜூனியராகச் சேர்ந்து வக்கீல் தொழில் செய்ய ஆரம்பித்தான். சில வருடங்களிலேயே சிறந்த வக்கீல் என்று பெயர் எடுத்தான். ஐந்து வருடம் கழித்து பிறந்த தன் மகனுக்கு அப்பாவின் பெயரையே சூட்டினான். 

பல காலம் கல்யாணத்தை மறுத்துக் கொண்டு வந்த கோகிலம், கடைசியில் அப்பாவின் ஆசைக்காக கல்யாணம் செய்து கொண்டாள். மாப்பிள்ளை சௌகார்பேட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.  சொற்ப சம்பளம். ஆனாலும் கோகிலம் சமாளித்துக் குடும்பம் நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.

ஒரு நாள் அவள் கணவன் வேலையை உதறிவிட்டு வந்து கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து புதிதாக ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தான். முதலில் நன்றாக நடந்த கம்பெனி பின்னர் கூட்டாளிகளின் தவறான வழிகாட்டுதல்களால் தடுமாறத் தொடங்கியது. வெளியில் கொடுத்த பணம் திரும்பி வரவில்லை. பணம் போட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்க போலீஸ் கேஸாகப் போய் அவனை சிறையில் தள்ளும் நிலை வந்தது. கோகிலம் ரங்கநாதனிடம் ஓடி வந்தாள். இருபது வருடங்களுக்குப் பின் சந்திப்பு. தன் கணவனை எப்படியாவது காப்பாற்றும் படி காலில் விழுந்தாள்.  ரங்கநாதன் தன் சட்ட அறிவைப் பயன்படுத்தி கோகிலத்தின் கணவன் சிறைக்குச் செல்லாமல்  தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தினான். கேஸ் பல வருடங்கள் நடந்தது. முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு எந்த வழியும் புலப்படாத நிலையில், கடைசியில் அவனை “திவால்” நோட்டீஸ் கொடுக்க வைத்து கேஸை முடித்து வைத்தான்.

கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது பல முறை கோகிலம் ரங்குவை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் தொடர்பைப் பற்றி பலர் வேறு விதமாகப் பேசும் பேச்சுக்களும் மங்களத்தின் காதில் அடிக்கடி விழுந்தன. அவள் ரங்குவிடம் பல முறை சண்டை பிடித்தாள். ரங்கு அதைப் பற்றி கவலையே படவில்லை. கேஸ் முடிந்து  ஒரு வருடம் கழித்து கோகிலாவின் கணவன் ஒருநாள் திடீரென்று இறந்து போனான். ரங்கு கோகிலத்தைக் கடைசியாகப் பார்த்தது அன்றுதான்.

விச்சுவுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ரங்கநாதன் உள்ளத்தின் ஒரு மூலையில், அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாகக் கடல் அலை போல வந்து வந்து மோதித் திரும்பின. ஒரு மணி நேரப் பயணம் ஒரு யுகமாகத் தோன்றியது அவருக்கு.

கூடுவாஞ்சேரி வந்து சேர்ந்து விலாசத்தை விசாரித்துக் கொண்டு கோகிலத்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, அவளுடைய பெண்ணும் மற்றும் சிலர் மட்டுமே அங்கு இருந்தார்கள்.

“அம்மா நேத்திக்குக் கூட உங்களைப் பத்திச் சொல்லிண்டிருந்தா. அதான் விஷயத்தை உங்களுக்குச் சொல்லச் சொன்னேன். ஆனால் நீங்க வருவேளான்னு தெரியாது. வேறே உறவுக்காரா யாரும் வரத் தேவையில்லைங்கிறதாலே காத்திண்டு இருக்காம, சீக்கிரமே எல்லாத்தையும் முடிச்சுட்டோம்” என்றாள் கோகிலத்தின் பெண் அழுதுகொண்டே.

“நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்.” ரங்கநாதனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. விச்சுவைப் பார்த்து “போகலாம்” என்று கையை அசைக்க விச்சு அவரைக் கைத்தாங்கலாக மீண்டும் கார் அருகே நடத்தி அழைத்துக் கொண்டு சென்றான்.

“போயிட்டு வந்தாச்சா? போய் அந்தத் தெய்வத் திருமுகத்தைப் பார்த்துட்டு வந்தாச்சா?”

கேட்டுக் கொண்டே வந்த மங்களம், ரங்கநாதன் பதில் ஏதும் சொல்லாமல் கையில் ஒரு ஃபோட்டோவை வைத்து பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, அவர் பின்னால் வந்து எட்டிப் பார்த்தாள். அந்தப் படத்தில் பதினாறு வயது கோகிலம் ஒரு ஸ்டியோவில் தாவணி போட்டுக் கொண்டு கறுப்பு வெள்ளையில் நின்றிருந்தாள்.

“ஓ! ஆசை முகம் இன்னும் மறக்கலையோ?”

ரங்கநாதனின் பார்வை ஃபோட்டோவை விட்டு விலகவில்லை.

“ஆசை முகம் என்னிக்கும் மறக்காது. ஆனால் இன்னிக்கு மறைஞ்சு போச்சுடி” என்று ரங்கநாதனின் வாய் முணுமுணுத்தது மங்களத்தின் காதில் விழவில்லை.

வளர்ப்பு செல்லம் ஹெச்.என்.ஹரிஹரன்

Indian student in Ukraine, who refused to leave his pet dog, returns via  Hungary | Latest News India - Hindustan Times

“ஏண்டா.. அடுத்த வருடம் நீட் எழுதி ரேங்க வாங்கி மெடிக்கல் சேரவேண்டியதுதானே? வெளிநாட்டில்தான் படிப்பேன்னு என்ன பிடிவாதம்?” என்று அப்பா கேட்டுவிட்டு ஆபீஸ் போய்விட்டார். அதே கேள்வியை, அம்மா கமலம் சமையல் வேலையை முடித்தபிறகு, சாவகாசமாக முந்தானையில் கையைத் துடைத்தபடி அவன் அருகில் வந்து கேட்டாள்.

கம்ப்யூட்டரில் ஏதோ பார்த்துக்கொண்டே, “ஒரு வருடம் வேஸ்டா போகுதே அம்மா” என்றான்.

டாக்டருக்கு படிக்க வெளிநாட்டிற்கு போவதென்று அவன் முடிவு செய்துவிட்டான்… நண்பர்களும் சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு.. அதுதான் முடிவும் கூட. ஒன்றும் செய்யமுடியாது.

“என்ன நான் சொல்றது சரிதானே?” – அவனது யமாஹா கீபோர்டின் மேல் நின்று கொண்டிருந்த வளர்ப்புக்கிளியைப் பார்த்து கேட்டான். அவன் கேட்ட மாத்திரத்தில், கீபோர்டு மேல் ஸ்வரங்களை எழுப்பியபடி  தத்தித் தத்தி நடந்து வந்து “என்ன” என்று முதல் வார்த்தையை மட்டும் எழுப்பியது.

ஒற்றையாகவே வளர்ந்தவன். அம்மாவைக் கொஞ்சி, அவள் சிபாரிசு செய்து , அப்பா அவனது பிறந்த நாளைக்கு பரிசாக அளித்தார் கிளியை. என்றைக்கும் அவன் கேட்டதை இல்லையென்று  சொன்னதில்லை. அது வீட்டிற்கு வந்த நாளிலிருந்து, அவன் காட்டும் கரிசனத்தைப் பார்க்கவேண்டுமே.. கிளியைக் கூண்டில் அடைக்க ஒத்துக்கொள்ளவில்லை. அவனது அறையிலிருந்து சீலிங் பேனைக்கூடக் கழற்றிவிட்டு வேர்த்தாலும் பரவாயில்லை என்றான்.

அவனுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இருந்திருந்தால் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்திருப்பானோ என்று கமலாவிற்கு  சில சமயம் தோன்றும்.

சில வாரங்களில், அவனே செல்லவேண்டிய நாட்டையும், படிக்கப் போகிற கல்லூரியையும் தேர்ந்தெடுத்து அட்மிஷன் வாங்கினான்.

அப்பா, அம்மாவைக் கட்டியணைத்து கண்கலங்க விடைபெற்றுப் போனான். கமலா கதறி அழுதாள். அப்பா அவளைத் தோளில் அணைத்து சமாதானப்படுத்தினார். அவர் மனம் கலங்குவது வெளியில் எப்படியும் தெரியாது.

விமானத்தில் ஏறியதும் குறுஞ்செய்தி அனுப்பினான். “கிளியை விட்டுச் செல்கிறேன் என்று வருத்தமாக இருக்கிறது. அதை நன்றாகப் பழக்கியிருக்கிறேன்.பத்திரமாகப் பார்த்து கொள்ளவும். அதன் முடிவில், கண்ணீர் சிந்தும் ஒரு எமோட்டிகான்.

நாள் முழுக்க, கிளியைப் பார்த்துக் கொள்வது கமலாவின்  பணியாக மாறியது. அவ்வப்போது , அதன் நகங்களை சீராக்குவதும், உணவு கொடுப்பதும், அவ்வப்போது சிறகுகளைச் சற்றே கத்தரித்துவிட ஆட்களை வரவழைப்பதுமாக, மாதங்கள் நாட்கணக்கில் ஓடின. அவனில்லாமல் பேசுவதில்லை என்று உறுதி எடுத்தது போல,  கிளி பேசுவதையே நிறுத்தியிருந்தது. போனில் அவன் குரல் கேட்டால் சிறகை அடித்துக் கொள்ளும் ; அவ்வளவுதான்.

ஒரு நாள், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கப்போகிறது என்கிற செய்தியை டிவியில் பார்த்ததும் கமலா பயந்தே போனாள். அவன் படிக்கும் கார்கிவ் நகரில்தான் குண்டு வீச்சும் தொடங்கியது.. அவளுக்கு  இருப்பு கொள்ளவில்லை.

“கிளம்பி வாடா..” என்று போனில் அழைத்து கத்தினாள்.

“இல்லம்மா.. இங்க ஒரு நாயை வளர்த்துக்கிட்டு இருக்கேன்.. அதையும் ஊருக்கு கூட்டிட்டு வரவிட்டா நான் உடனே வந்துருவேன்.” என்றான்.

“ ஏண்டா.. நாயா முக்கியம்.. நீ கிளியை எங்கிட்ட விட்டுட்டு போனமாதிரி, அந்த நாயையும் யார்கிட்டயாவது குடுத்திட்டு வரவேண்டியதுதானே..” என்றாள்.

“யார்கிட்ட குடுக்கறது.. எல்லாரும் ஊரைவிட்டு ஒடிக்கிட்டு இருக்காங்க.. “

“சொந்த நாட்டுக்காரனே ஓடறான்.. நீ அந்த ஊர்ல ஒரு அன்னியன். உனக்கென்ன  அப்படி?” என்றாள் கமலா. தொடர்ந்து, “உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்காடா?” எனும்போதே அவளது குரல் கம்மியது.

“அம்மா .. நோ எமோஷனல் ப்ளாக்மெயில்..” என்றபடி போனை கட் செய்தான்.

அன்றிரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை. டிவியை ஆன் செய்தால், குண்டு வீசும் காட்சிகளே அனைத்து செய்தி சானல்களிலும் காண்பித்தபடி இருந்தார்கள்.

“வருவானா.. வரமாட்டானா இந்தப் புள்ளை..? “ என்று எண்ணங்கள் அலையாய் மனதிற்குள் மோதி கண்களில் நீரைப் பெருக்கியது.

சட்டென்று, “அம்மா.. அம்மா” என்று குரல் எழுந்தது.

“யாரது.. என் பிள்ளையா.. அவனா கூப்பிடுகிறான்…? இல்லை பிரமையா….” என்றபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குரல் கேட்ட திசையை நோக்கி ஓடினாள்.

கூப்பிட்டது அவனது கிளிதான். ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தது.

அவளைப் பார்த்ததும், “அம்மா..அம்மா” என்றது மறுபடியும்.

“நீயா..இத்தனை நாள் பேசாமலிருந்திட்டு இன்னிக்கு மட்டுமென்ன? “ என்றாள்.

அதே சமயம் அவளது மொபைல் போனில் அழைப்பொலி எழுந்தது.

“இது ஏன் அம்மான்னு சொல்லுது.. போன் வேற அடிக்குது.. என்னாச்சோ என் பையனுக்கு..” என்று மனது கதறியபடி தவிக்க, விரைந்து போனை எடுத்தாள்.

“கமலம்.. டைம்ஸ் சேனலை உடனே பாரு” என்று அவளது அக்கா தகவலைத் தெரிவித்தாள்.

கை நடுங்க, டிவியை ஆன் செய்தாள்.

அவளது மகன் ஐரோப்பியன் ஷெப்பர்டு நாயைக் கையில் தூக்கியபடி இந்திய போர்விமானத்தில் ஏறிக்கொண்டிருந்ததை காண்பித்து கொண்டிருந்தார்கள். அவனது பிடிவாதத்தையும், நாயின் மேல் கொண்டிருந்த பிரியத்தையும் மதித்து , அவனை நாயுடன் செல்ல அனுமதித்தார்கள் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நிருபர் மைக்கை அவன் முன்னால் நீட்டி, “என்ன சொல்ல நினைக்கிறீங்க ?” என்றார்.

“அம்மா ஐ லவ் யூ.. நான் வரதுக்கு முன்னால் , கிளிக்கு ஒரு கூண்டு வாங்கி வெச்சுருங்க..” என்று சொல்லி கண்ணடித்துவிட்டு, உதட்டில் விரலைப் பதித்து அம்மாவிற்கு பிரியம் சொன்னான்.

“எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற இடம்” என்று அவள் டிவியைத் திட்டிக் கொண்டே ஆப் செய்துவிட்டு, கிளியைப் பார்த்து , “உனக்கு போட்டிக்கு ஆள் வருது..” என்றாள்.

# # #

 

ரேஷன் தண்ணி – நாகேந்திர பாரதி

சென்னைக்கு வந்த சோதனை! | சென்னைக்கு வந்த சோதனை! - hindutamil.in

பக்கெட் நிரம்பி தண்ணீர் வழிந்து தூம்பு வழி போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் காத்தாயி. ,பாத்ரூமில் சத்தம் கேட்டு போய்ப் பார்த்த காத்தாயிக்கு அழுகையே வந்துவிட்டது. குழாயை திறந்து விட்டால் தண்ணீர் நிரம்பியதைப் பார்த்து மூடுவதில்லை .’ஆமா யாரும்மா குழாயை திறந்து விட்டது. எம்புட்டு தண்ணி வேஸ்டா போயிட்டு இருக்கு’ என்று கத்தியபடி பைப்பை இறுக்கி மூடினாள். உள்ளே தலை வாரிக்கொண்டு இருந்த அம்புஜம் அலட்சியமாகப் பதில் சொன்னாள் . ‘தண்ணி தான் நாள் முழுக்க வருதே . ஏதோ ஞாபகத்தில் அப்படியே விட்டுட்டேன் அதுக்கு ஏன் இப்படி கத்துற’ என்று வாயை அடக்கியவளிடம் ஒன்றும் சொல்ல முடியா விட்டாலும் ‘ தண்ணின்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட காத்தாயி தன் கிராமத்தை நினைத்துப்பார்த்தாள் .

கந்தனுக்கு வாக்கப்பட்டு மதுரை வருவதற்கு முன்னாடி பதினெட்டு வருஷம் இருந்த பரசுப்பட்டி கிராமத்தில் நாலு மைல் நடந்து போய் அங்கு இருந்த அந்த ஊற்றுக் கிணற்றில் வாளியைப் போட்டு மணிக்கணக்காக உட்கார்ந்து இருந்து தண்ணி ஊற ஊறக் காத்திருந்து இரண்டு குடம் பிடித்து வர எத்தனை சண்டை .அதையெல்லாம் அம்புஜம் கிட்ட சொல்லி இருந்தாலும் ஒரு அலட்சியம்.

‘வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து தண்ணியை மேல ஏத்துறமே . மத்த வீடுங்க மாதிரி , வீட்டைத் தினசரி தேச்சு விடவா சொல்றேன். மூன்று நாளைக்கு ஒருமுறை தான் உன்ன கழுவச் சொல்கிறேன். பெரிய பக்கெட் மூணிலேதான் தண்ணீரை பிடித்து வைக்கிறேன். இப்படிப் போற தண்ணி போகட்டுமே .ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் இல்லை’ என்று கேட்டபடி வந்த அம்புஜத்தைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாக வந்தது காத்தாயிக்கு.

‘உன்னோட நம்மளால பேச முடியாது தாயி .ஏதோ மனசிலே தோணிச்சு . சொன்னேன். கோச்சுக்காதே’ என்றபடி பரபரவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது காயப்போடுவது , வீடு துடைப்பது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு நெற்றி வேர்வையை முந்தானையால் துடைத்தபடி ‘போயிட்டு வர்றேன்’ என்றபடி வீட்டுக்கு விரைந்தாள் காத்தாயி . ஆச்சு. அஞ்சு வீடும் முடிஞ்சாச்சு. காலையில் முழுக்க சொந்த வீட்டு வேலை. மத்தியானத்தில் இருந்து சாயங்காலம் வரை அஞ்சு வீட்டு வேலை . மாசம் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய்.

அவ புருஷன், ஆபிசர் கணக்கா கரெக்டா ஆறு மணிக்கு . வீட்டுக்கு வந்துடுவான். பாவம் வெயில்ல தண்ணி வண்டியிலே தெருவெல்லாம் சுத்திட்டு, வந்தவுடனே வீட்டுல காத்தாயி இருந்து கருப்பட்டி காபி போட்டு கொடுத்தா மனசெல்லாம் நிறைந்து முகமெல்லாம் பல்லாயிடும் அவனுக்கு.

கருப்பா இருந்தாலும் முக லட்சணம் அவனுக்கு. தனக்கு வெளுத்த தோல் இருந்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்து போனது அந்த சிரித்த முகத்துக்காகத்தான் . தூரத்து சொந்தம்தான். நினைப்பு வேகத்தில் வீடு வந்து பூட்டு திறந்து, பாலை அடுப்பில வச்சு, ஓரம் சுட்டு சுயநினைவு வந்தது. ‘எப்படி வந்தேன் இம்புட்டு வெரசா அவனை நினைச்சுகிட்டே ‘ என்று வெட்கம் வந்தது அவளுக்கு.

‘ ஏ புள்ள’ என்ற குரலுக்கு ஓடிப் போய்க் கதவை திறந்த காத்தாயி ஆடிப்போனாள். காலில் பேண்டேஜ் கட்டோடு நொண்டி நொண்டி உள்ளே வரும் அவனைப் பார்த்து ‘அடி ஆத்தே என்ன ஆச்சு எப்படி ஆச்சு’ என்று பதறினாள் . ‘ஒண்ணும் இல்ல, நம்ம தண்ணி வண்டி முக்குத் தெருவுல திரும்பறப்போ அப்போ பிடி நழுவிடுச்சு. உடனே ஆஸ்பத்திரி போயி ஊசி போட்டு ,மீதித் தெருவெல்லாம் போயி தண்ணி ஊத்திட்டு, திரும்பி வர்றேன். எல்லாம் உன் நினைப்பு வந்து தான் கை நழுவிடுச்சு’ என்று சிரித்தான்.

அவன் காலைத் தடவி விட்டபடி காத்தாயி ‘ உடனே வர வேண்டியதுதானே அத்தோடு ஏன் சுத்தினே ‘ என்று கரிசனமாகக் கேட்க அவள் முகத்தையே உற்றுப்பார்த்த கந்தன், ‘என்ன இது இப்படிக் கலங்கி போச்சுகண்ணு. லேசான காயம்தான். விட்டுத்தள்ளு .நம்மள நம்பி எவ்வளவு குடும்பம் தண்ணிக்காக குடத்தோட காத்துக் கிடக்கு. நம்ம போகலைன்னா வேற ஆளை ஏற்பாடு பண்ணனும் .நேரத்திற்குப் போக முடியாது. அதுவும் அந்த புது ஆளுக்கு அந்தக் கூட்டத்தை மேய்க்கத் தெரியணும். நான் போய் நின்ற உடனே வந்து விடுவாங்க பாரு. அதுல ஒரு ஆளுக்கு ரெண்டு குடம் பார்த்து பார்த்து ஊத்தணும். நைசா நாலஞ்சு கொண்டு வந்துடுவாங்க. எவ்வளவு பொறுப்பான வேலை தெரியுமா ‘ என்று முகமெல்லாம் பெருமையாக பேசும் கணவனிடம் குறும்பாகக் கேட்டாள் . ‘பெரிய கலெக்டரு, ரொம்பத்தான் பொறுப்பு’ என்று கிண்டலடித்தாள்.

‘அப்படிச் சொல்லாத புள்ள. இன்னைக்கு தேதியிலே , இம்புட்டுத் தண்ணிக் கஷ்டத்துல நாங்கதான் சாமி மாதிரி பல பேருக்கு’ என்று பெருமையாகச் சொன்னான் . ‘தண்ணீர்க் கஷ்டம்’ என்றதும் வீணாகப் போய் கொண்டு இருந்த அந்த அம்புஜம் வீட்டுத் தண்ணி தான் ஞாபகம் வந்தது அவளுக்கு. உடனே புருஷனிடம் அதை விலாவாரியாக சொல்லிவிட்டாள் .

‘அந்த அம்புஜம் புருஷன் எங்க பெரிய ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறாரு . எனக்கு சம்பளம் வாங்க போறப்போ பாப்பேன். மனுஷன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியன் . ஊழலோ ஊழல். ஒரு கையெழுத்துக்கு ஆயிரம் ரூபா. அவர் பொஞ்சாதி எப்படி இருக்கும். அந்த மாதிரி வீட்டுக்கு எல்லாம் நீ வேலைக்கு போகாதே என்று நான் பலமுறை சொல்லியாச்சு. நீ விடமாட்டேங்கிறே’ என்றான். ‘என்னய்யா பண்றது மாசம் ஆயிரம் ரூபாயை விட மனசில்லை . அதுவும் இப்ப புள்ளை ஒண்ணை வயித்திலே ஏத்தி விட்டுட்டே. சேர்க்க வேண்டாமா அவனுக்கு ‘ என்றவளிடம் ‘ ஏய் , உனக்கு ஒண்ணுமே தெரியாது. நான் தான் ஏத்தி விட்டுட் டேனா ‘ என்று நெருங்கியவனைத் தள்ளிவிட்டாள் . ‘கால்லே பேண்டேஜ் வலி, இது வேறையா தள்ளிப்போய்யா ‘ என்று வெட்கத்துடன் சிரித்தாள் .

ஓரத்தில் பிடித்து வைத்திருந்த அந்த இரண்டு குடத் தண்ணி அவர்களுக்கு ஒரு நாளைக்குக் குடிக்க ,சமைக்க போதுமானது தான். குளிக்க, துவைக்கத் தான், பொது இடத்திலே ,உப்புத்தண்ணீ வர்ற , கக்கூஸ், பாத்ரூம் இருக்கே. பச்சையும் மஞ்சளுமாகப் பார்த்து வாங்கி வந்த குடங்களைத் தூக்கிக் கொண்டு காலையில் முதல் தெரு முடிந்து இவர்களின் இரண்டாம் தெருவுக்கு அவன் வரும்போது , கூட்டத்தோடு கூட்டமாகக் காத்திருந்து பிடித்து வைத்த இரண்டு குடங்கள்.

‘ என் புருஷன் வேலையிலே ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ பெருமை அவளுக்கு. ‘உன் புருஷன் தானே, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு கூட கேட்கலாமே’ என்று கேட்ட பக்கத்து வீட்டு சரசுவை வாயாலேயே ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கி விட்டாள் . அன்னையிலிருந்து அவளோட பேச்சு வார்த்தையே கிடையாது. ‘என் புருஷன் வேலையிலே சுத்தம் ‘ என்று ரொம்ப பெருமை காத்தாயிக்கு. ‘என்ன கேள்வி கேட்டுப் புட்டா ‘ என்று மாய்ந்து போன அவள் , அன்னைக்கு ராத்திரி கந்தன் கிட்ட சொல்லிச் சொல்லி புலம்பினாள் . அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் ‘போதும் போதும்’ என்று ஆகிவிட்டது அவனுக்கு. உள்ளூர அவனுக்கும் பெருமைதான். அவனை முழுசா புரிஞ்சுக்கிட்ட பொண்டாட்டி கிடைச்சிருக்காளே .

மறுநாள் அம்புஜம் வீட்டுக்கு போனபோது அம்புஜம் புருஷனிடம் பொரிந்து கொண்டிருந்தாள். ‘என்ன பெரிய ஆபிஸர் நீங்க .இன்னையிலே இருந்து தினமும் ஒரு மணிநேரம் தான் தண்ணி விடுவாங்களாம் . செக்ரெட்டரி கிட்ட கேட்டீங்களா.’

‘தண்ணீர் கஷ்டம் அதனால லாரிக்காரன் முதலில் கொடுத்ததிலே கால்வாசிதான் ஊத்த முடியும்னுட்டான் . வேற எவனும் கிடைக்கல. என்ன பண்றது. ரேஷன் தண்ணிதான். எத்தனை பேர் நிற்கிறார்கள் ரோட்டுல பார்த்தியா. நமக்கு வீட்டுக்குள்ளேயே ஒரு மணி நேரமாவது வருவதை நினைச்சு சந்தோஷப்படு ‘என்று சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தான் .

உள்ளே நுழைந்த காத்தாயியைப் பார்த்ததும் படக்கென்று வாயை மூடிக் கொண்டாள் அம்புஜம், வந்து சொன்னாள் . ‘அடியே , தண்ணி இனிமே ஒரு மணி நேரம்தான்.பார்த்து செலவு பண்ணுடி. படபடன்னு தண்ணி சம்பந்தப்பட்ட வேலைகளை எல்லாம் அரை மணி நேரத்துல முடிச்சுட்டு மூன்று பக்கெட்டுகளிலும் புடிச்சு வச்சுடு.’

அவள் பாதி வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்து ‘என்னடி பக்கெட்டிலே புடிச்சு வச்சுட்டியா . துவைச்ச தண்ணியை , தொட்டிச் செடிக்கு ஊத்தி விட்டுட்டு. மீதி இருந்தா கக்கூசுக்கு ஊத்தி விடு ” என்றாள் . ராத்திரி புருஷனிடம் இதைச் சொல்லும்போதே காத்தாயி வயிற்றுக்குள் பையன் உதைக்க ‘அவனுக்கும் சிரிப்பு வந்துடுத்து போலிருக்கு . கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்’ என்றபடி எழுந்து சென்றாள் காத்தாயி . காத்திருந்தான் கந்தன்.

 

வருஷத்தின் பிறந்த நாள்  – ரேவதி ராமச்சந்திரன்

“காற்று வெளியே புது கானம் பிறந்ததா

பங்குனியும் முடிந்தது இன்று சித்திரையும் மலர்ந்ததா

இன்று சித்திரையும் பிறந்தது தைய்ய தைய்யா

மனம் துள்ளிக்கொண்டு திரியுது தைய்ய தைய்யா”

ஆம், சித்திரையின் முதல் நாள் கோலாகலமாக தமிழ் நாட்டில் புது வருஷம் என்றும், கேரளாவில் விஷு என்றும், வடபிரதேசத்தில் வைஷாக்கி அல்லது பைசாக்கி என்றும், மேலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் என்று எல்லா இடத்திலேயும் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை உடுத்தி, ஆறு சுவையும் உள்ள ஒரு பச்சடி சாப்பிட்டு கோவிலுக்குச் செல்வது வழக்கம். கேரளாவில் இது ஒரு பெரிய பண்டிகை. அந்த சமயத்தில் கிடைக்கும் கனி கொன்னப் பூவால் ரங்கோலி (கோலம்)யை அலங்கரித்து, கண்ணாடிக்கு அலங்காரம் செய்து, அதன் முன்னால் எல்லா தானியம், பழம், காசு வைத்து மாசம் பிறக்கும் சமயம் முதன் முதலில் கண் திறந்து அவைகளைப் பார்ப்பது வழக்கம். மற்றும் சில இடங்களிலேயும் இந்த மாதிரி செய்வார்கள். அன்று எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு கோலாட்டம் ஆடுவார்கள். தஞ்சாவூரிலிருந்து பாலக்காட்டிற்கு வாழ்க்கைப்பட்ட புதுப் பெண் ஒருத்தி கனி காண எழுந்தவுடன் குளித்து வேலை செய்ய ஆரம்பிக்கணும் என்று மூன்று மணிக்கே குளிக்கச் சென்றது வேறு கதை. ஆனால் நான் இப்போது சொல்லப் போவது கன்னடக்காரர்களைப் பற்றி. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு இது புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

நாங்கள் இப்போது இருக்கும் விமான சேவையின் குடியிருப்பில் எல்லோரும் பெரிய பதவியில் இருப்பதாலும், இது விஸ்தாரணமான இடமாக இருப்பதாலும் சப்தம் எதுவும் வெளியில் கேட்காது. ஆனால் இந்த வருஷப் பிறப்பு அன்று நான் துளசியைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஓர் ஆபீசரின் மகன் அழுது கொண்டே வெளியில் வந்தான். நான் அவன் அம்மாவிடம் (ஆபீசரின் மனைவிடம்) கவலையுடன் விசாரித்த போது சிரிப்பு தான் வந்தது. என்ன புரியவில்லையா! அதுதானே இங்கே சொல்லப் போவது!

  கன்னடக்காரர்கள் இந்த வருஷப் பிறப்பை இரண்டு நாட்களாகக் கொண்டாடுகிறார்கள். முதல் நாள் நமது தண்ணீர் தீபாவளி மாதிரி தண்ணீர் வருஷப்பிறப்பு. தண்ணீரை நிரப்பி வைக்கிறார்கள். வெயில் காலத்தில் எண்ணை தேகத்தில் ஒரு வித பிசுபிசுப்புத் தன்மையைக் கொடுக்கும் என்று வருஷப் பிறப்பன்று எடுக்கும் எண்ணைக் குளியலுக்குப் பிறகு (அப்யஞ்சனம்) கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எண்ணைத் தேய்த்து குளிப்பார்கள். இது எல்லாவற்றையும் நான் எப்போதும் சொல்வது மாதிரி நமது முன்னோர்கள் யோசித்து, ஆராய்ந்து வகுத்து வைத்துள்ளார்கள். இந்தப் பண்டிகைக்காக வீடு சுத்தம் செய்வது அவசியம். சேமியாவில் ஏதாவது ஒரு இனிப்பு செய்யப்படும்.

மறு நாள் ‘யுகாதி’ என்று சொல்லப்படும் நாளில் காலையில் குளித்து பூஜை செய்து, புதிது உடுத்தி கொண்டாடுவார்கள். போளி அவசியம் உண்டு. பையன், பெண்ணுக்கு ஆரத்தி எடுப்பார்கள். இதெல்லாம் சரி. அந்தப் பையனை அழ வைத்து வந்து விட்டோமே என்று யோசிக்கிறீர்களா! அது தான் எனக்கு ஆச்சரியத்தையேத் தந்தது. வேப்பம்பூ, கொப்பரை, பொட்டுக்கடலை அல்லது வேர்க்கடலை, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாகப்  பிடித்து ஐந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதற்கு பயந்துதான் அந்தப் பையன் அழுது கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி மெதுவே ‘உண்மையாக எனக்கும் சின்ன வயதில் இது பிடிக்காது. பாட்டி கொடுத்தால் சாப்பிடுவது மாதிரி பாவனை செய்து வெளியில் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதன் பயனை உணர்ந்த நான் இப்போது இவனுக்கு சொல்லித்தருகிறேன்’ என்றாள். முன்னோர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது! ஆறு சுவையும் வருட முதல் நாள் எடுத்துக் கொண்டால் வருடம் முழுவதும் நாம் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள்வோம், நமது தேகமும் சுத்தமாகும், குளிர்ச்சியாகும், வரும் கோடையை எதிர் கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றெல்லாம் யோசித்து இந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை, முறைகளை கண்டுபிடித்து நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளனர். இவற்றைக் கடைப்பிடித்தால் நமக்கு அநேகம் நன்மைகளைக் கொடுத்துள்ள இயற்கைக்கும், அந்த இயற்கையோடு இணைந்து இந்த முறைகளை வகுத்துக் கொடுத்த நம்  முன்னோர்களுக்கும் நாம் மரியாதை செய்தவர்களாவோம்!

தான் கேட்காமலேயே வந்த வரம் தானே தாவரம்!   

 

சிரிப்பு வருது – அன்புதாசன்

அன்பரசன் – நண்பர்களுக்கு அவன் ‘அன்பு’.
அறிவழகன் – நண்பர்களுக்கு அவன் ‘அறிவு’.
இருவரும் அறைத்தோழர்கள்.
பொதுவாகவே, அறைத்தோழர்கள் என்பவர்கள் அறைப்பகைவர்களாகி, விரைவிலேயே முழுப் பகைவர்களாகி விடுவார்கள்.
ஆனால் அன்பும், அறிவும் அப்படிப்பட்ட நண்பர்களல்ல.
நகமும், சதையும் போல.
சேர்ந்தே இருப்பார்கள்.
சேர்ந்தே வேலை செய்வார்கள்.
சேர்ந்தே சாப்பிடுவார்கள்.
சேர்ந்தே சிரிப்பார்கள்.

பக்கத்து வீட்டில் ஒரு சர்தார்ஜி குடும்பம்.
அதன் குடும்பத்தலைவர் அரோரா சிங்.
பேசியே தமிழைக் கொலைசெய்வது என்பது அவருக்குச் சோளாப் பட்டுரா சாப்பிடுவது போல சந்தோஷமான செயல்.
‘அறிவழகன்’ என்ற பெயரை அவர் உச்சரிக்கும் அழகைத் தாங்காது, அறிவு திணறினான்.
“சிங்ஜீ, என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்.  ‘அறிவு’ என்றே கூப்பிடுங்கள்” – என்று சர்தார்ஜியிடம் அழாக்குறையாக விண்ணப்பித்துக்கொண்டான்.
“அது போலவே எனது நண்பனையும் ‘அன்பு’ என்று மட்டுமே கூப்பிடுங்கள்” -என்று கூறினான்.
அரோரா சிங் ‘அன்பு இருக்கிறானா?’ என்று கேட்கமாட்டார்.
‘அன்பு இருக்கா’ என்று தான் கேட்பார்.

நம் கதை இனி துவங்க உள்ளது.
அன்று மாலை நேரம்.
அன்பும், அறிவும் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அறிவு, அரோரா சிங் தமிழ் பேசுவது போலவே பேசிக்காட்டினான்.
அன்பு சிரித்தான்.
அறிவு சொன்னான்: “சர்தார்ஜி ஜோக்ஸ் என்று சொல்வார்களல்லவா? இவர் தமிழ் பேசினாலே அது சர்தார்ஜி ஜோக் தான் தெரியுமா?”.
அன்பு சிரித்தான்.
“அன்பு! நேற்று என்ன நடந்தது தெரியுமா? என்னைத் தேடி வந்து நம் அரோகரா சிங் என்ன சொன்னார் தெரியுமா?” என்றான் அறிவு.
“அரோகரா சிங்! என்ன சொன்னார்? “ அன்பின் சிரிப்பு அடங்கவில்லை.
“நம் அறையின் கதவைத் தட்டி விட்டு  
‘ஏய் அன்பு.. அறிவு இருக்கா?” என்று கேட்டார்”
“ஹா.. ஹா..” என்று சிரித்தான் அன்பு.
அறிவும் சிரித்தான்.
“ஹா.. ஹா.. ஹா.. “.
அன்பும் சிரித்தான். அறிவும் சிரித்தான்.
சிரிப்பு ஒரு நெருப்பு மாதிரி.. பற்றிக்கொண்டால் சில சமயம் விரைவில் நிற்பதில்லை.
“ஹா.. ஹா.. ஹா.. ஹா.. “- அன்பு.

ஐந்து நிடங்கள் இருவரும் சிரித்தபின் அறிவு ஓய்ந்தான்.
அன்பு ஓய்ந்தபாடில்லை.
“ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..” என்று தொடர்ந்தது அவன் சிரிப்பு ‘தீபாவளி சரவெடி’ போல.
ஒரு நிமிடம் கழித்து அறிவு சொன்னான்:
“டேய் அன்பு. போதும்டா சிரித்தது – ‘இனிமேல் இன்று ஜோக்ஸ் சமாப்த் ஹோதா ஹை’ என்று அரோரா பேசுவது போலப் பேசினான்.

அன்பின் சிரிப்பு மேலும் பெரிதானது. நிற்கவில்லை. அறிவு சொன்னான்: “டேய் அன்பு .. சிரித்தது போதும்” என்றான்.

நிற்கவில்லை.
நிற்கவேயில்லை.
அறிவு சொன்னான்:
“அன்பு! நிறுத்து“.
நிற்கவில்லை.
நிற்கவேயில்லை.
இது லிமிட்டுக்கு மேல் போவதை உணர்ந்த அறிவு:
“டேய் நிறுத்தடா. போதும் சிரித்தது” என்றான்.
அன்பின் சிரிப்பு ஒருவாறு அடங்கியது.
‘அப்பாடா.’ என்று அறிவு பெருமூச்சு விட்டான்.

மறுபடியும் அறிவு, அன்பைப் பார்த்தபோது அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. சிரிப்புச்சத்தம் தான் அடங்கியிருந்தது.
ஆனால், அவன் முகத்தில் சிரிப்பு இன்னும் இருந்தது.
“என்னடா, இன்னும் சிரிப்பு அடங்கலையா?” என்றான்.
அன்பு பேசவில்லை. ஆனால் அவன் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே நிரந்தரமானது போல இருந்தது. ஸ்மைலி எமோஜி போல வாய் மேல்புறம் குவிந்திருந்தது.
‘கண்ணாடியைப் பார்..”என்றான் அறிவு.
அன்பு பார்த்தான். அவன் சிரித்த முகம் அவனைப்பார்த்துச் சிரித்தது.

அறிவு ‘என்னடா பிரச்சனை இது. சரி. பாத்ரூம் போயிட்டு வர்றேன்” என்று போய் 5 நிமிடங்கள் கழித்து வந்தான். திரும்பி வருவதற்குள் அந்த முகத்தில் சிரிப்பு மறைந்திருக்குமல்லவா? ஆனால், அன்பின் முகத்தில் அதே சிரிப்பு நிரந்தரமாக இருந்தது!

“அன்பு, உனக்கு என்னடா ஆச்சு? மூஞ்சியில் சிரிப்பு போகலையே” -என்றான்.
அப்பதான் அன்புக்கு தனது முகத்தில் சிரிப்பு போகவில்லை என்பது விளங்கியது. ‘சரி மூஞ்சியை சோப்புப் போட்டுக் கழுவிக்கொண்டு வா. சிரிப்பு போகிறதா என்று பார்ப்போம்” – என்றான் அறிவு. அப்படியே செய்தான் அன்பு. முகத்தில் அழுக்கு தான் போயிற்றே தவிர புன்னகை போகவில்லை. மேலும் பிரகாசமாக இருந்தது. ஒரு மணி நேரமாயிற்று.
நிலைமையில் மாறுதல் ஏதுமில்லை.
‘டாக்டர் இந்திரனைப் போய்ப் பார்க்கலாம்” – என்றான் அறிவு,

டாக்டர் இந்திரனின் கிளினிக்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
அறிவின் சிரித்த முகத்தைக் கண்ட சக நோயாளிகளுக்கு சற்று மகிழ்ச்சி வந்தது. ஆனால் சிரிப்பு தொடர்ந்து இருக்கவே ‘சரியான இளிச்சவாயன்” என்று அருகிலிருந்தவர்களிடம் முணுமுணுத்தனர்.
டாக்டர் அறையிலிருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்தாள்.
டாக்டரின் உதவியாளராக இருக்கவேண்டும்.
‘அப்பா!’ – என்ன அழகு!
அன்பு அவளைப்பார்த்தவுடன் அவன் இதயத்துடிப்பு ஓரிரு கணங்கள் துடிப்பதை மறந்தது. புன்னகை மட்டும் மாறவில்லை.
அவள் “நீங்கள் தான் அன்பரசனா?”
“ஆமாம்” என்றான்.
அன்பின் முகத்தில் புன்னகை போகவில்லை.
“அடுத்து நீங்கள் டாக்டரைப் பார்க்கலாம்” என்றாள்.
“சரி” – என்றான் – புன்னகை மாறாமல்.
‘இதென்ன, இப்படி இளிக்குது’ என்று நினைத்துக்கொண்ட அந்தப்பெண், டாக்டர் அறைக்குள் மறைந்தாள்.

டாக்டர் இந்திரன் பல சோதனைகளைச் செய்தார்.
‘வாயைத் திற.. மூக்கைத் திற.. காதைத்திற’ என்று பலவாரியாக சோதனை செய்தார். புன்னகை மாறவில்லை. “சரி ஒரு ஊசி போடுகிறேன்” என்றவர் ஊசி போட்டார். வலியினால் முகம் சற்று மாறினாலும் முகத்தில் புன்னகை சற்றும் மங்கவில்லை.
டாக்டர் சொன்னார் “அன்பரசன். இது ஒரு சீரியஸ் நெர்வஸ் கண்டிஷன். நியூரோ டாக்டர் ஆதிமூலத்தைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

டாக்டர் ஆதீமூலத்தின் கிளினிக்.
சிலப்பல டெஸ்ட் செய்தார். அறிவிடம், அன்பிடமும்  சில கேள்விகள் கேட்டார். இருவரும் பதில் சொன்னார்கள்.
டாக்டர்  கேட்டார்: “சிரிப்பு அடங்காமல் போன பிறகு முதலில் என்ன செய்தீர்கள்?”.
“டாக்டர், சிரிப்பு அடங்க என்ன செய்யலாமென்று யோசித்தேன். எப்பவும் நாங்கள் பாசமலர் கிளைமாக்ஸ் பார்த்தால் ‘ஓவென்று’ பெரிதாகக் கண்ணீர் விட்டு அழுவோம். அந்தக்காட்சியை யூட்யூபில் தேடிப்பிடித்துப் பார்த்தோம்.
சிவாஜி ‘கை வீசம்மா கை வீசு’ என்று சொல்லும்போது எப்பொழுதுமே   நாங்கள் சேர்ந்து அழுவோம். ஆனால் இன்று நான் மட்டும் ‘ஓ’வென்று அழுதேன். இவன் கண்ணிலும் நீர் வந்தது. ஆனாலும் முகத்தில் அந்த சிரிப்பு அடங்கவில்லை. உடனே இது சீரியஸ் மேட்டருன்னு தீர்மானிச்சு, புறப்பட்டு டாக்டரைப் பார்க்கவந்தோம்” என்றான்.

“அப்ப, நீங்களே ஒரு ‘ஃபர்ஸ்ட் எய்ட்’ செஞ்சிருக்கீங்க” என்று கொஞ்சம் நக்கலாக நமுட்டுச்சிரிப்பு சிரித்தார் ஆதிமூலம்.
“சரி. ஒரு மயக்க ஊசி போடுகிறேன். 24 மணி நேரத்திற்குப் பின் கண்விழிப்பான். இதன் சைட் எஃபக்ட் என்னன்னா , நிறைய கெட்ட கனவு அதாவது நைட்மேர் வரும்” என்றார்.
“சிரிப்புப் போய் விடுமா  டாக்டர் “ என்று அறிவு கேட்டான் அழாக்குறையாக.
“24 மணிநேரம் கழித்துத்தான் எல்லாம் சொல்லமுடியும்” என்றார் டாக்டர்.

இந்த டாக்டர்களுக்கே இது ஒரு பழக்கமாகிவிட்டது. ‘அடுத்த 24 மணி நேரம் தாண்டினால் தான்’ என்று சொல்லிப் பழக்கமாகிவிட்டது போலும்.
24 மணிநேரம் கடந்தது. பல கெட்ட கனவுகளை அந்த 24 மணிநேரமும் சந்தித்திருந்தாலும், கிரேஸி மோகன் நாடகத்திலிருந்து வெளியே வந்தது போல் புன்னகை மாறாமல் அன்பு கண் விழித்தான்.
டாக்டர் முகத்தில் ஈயாடவில்லை.

“அன்பு.. நான் உனது கேஸ் விஷயமாக நேற்று ஜெர்மனியில் எனது டாக்டர் ஆசானிடம் பேசினேன். அவர் சொன்னது இது தான்.
‘இது ஒரு அபூர்வமான நெர்வஸ் வியாதி. ஆனால் என்ன ஆச்சரியம்! சென்ற வாரம் தான் இதற்கு ஒரு ஆராய்ச்சி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் பனிக் கரடியின் எச்சத்திலிருந்து இது தயாரிக்கப்பட்டது. இதைக் ஹியூமன் ட்ரையல் செய்ய நானும் முயற்சி செய்ய திட்டமிட்டிருந்தேன். இந்தச் சமயம் தான் உங்கள் கேஸ் பற்றி தெரியவந்தது. அந்த மருந்தை, இப்பொழுதே விமானத்தில் அனுப்பி வைக்கிறேன். இன்னும் 16 மணிநேரத்தில் சென்னை வந்து விடும்’ என்றார் என ஆசான்” என்றார் டாக்டர் ஆதிமூலம்.

“மருந்து எப்ப வரும் டாக்டர்?” என்றனர் இருவரும் கோரஸாக!
“மருந்து வந்து விட்டது! இனி நீங்கள் ஆனந்தமாகச் சிரிக்கலாம்”  சொன்ன டாக்டர் பல்லைக் கடித்துக்கொண்டார். டாக்டர் மேலும் சொன்னார்: “இன்னொரு சின்ன மேட்டர். இந்த மருந்தின் விலை ஐந்து லட்சம் ரூபாய்” என்றார்.
அன்பு ஆடிப்போய்விட்டான்.
அவன் முகத்தில் புன்னகை அடியோடு மறைந்தது.
முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது.
“டாக்டர் நீங்க கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இவனுக்குக் குணமாகிவிட்டது போல” – அன்று சொன்னான் அறிவு.
இப்ப, டாக்டருக்கு அது அதிர்ச்சியானது. “அன்பு, அறிவு.. 5 லட்சம் பில் கட்டிவிட்டுப் போங்க” என்ற டாக்டரின் அலறலைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து தப்பித்தோமென்று இருவரும் ஓடினர்.
வீட்டுக்குச்சென்ற நண்பர்கள் மறுநாள் மறுபடியும் ஆதிமூலத்தைத் தேடிவந்தார்கள். “வாங்க! பணம் கொண்டுவந்தீர்களா? இப்ப எப்படி இருக்கு” என்று அவர்களை வரவேற்றார் ஆதிமூலம்.
‘டாக்டர், சிரிப்பு நின்று விட்டது. நேற்றிலிருந்து இவனுக்கு சிரிப்பே வரவில்லை. நேத்து ராத்திரி கண் முழிச்சு நாங்கள் அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதனக்காமராசன் மூன்று படங்கள் பார்த்தோம். ஒரு காட்சியிலும் இவனுக்கு சிரிப்பே வரவில்லை. சிரிப்பு நின்றே விட்டது. கிசுக்கிச்சு மூட்டி கூட பார்த்து விட்டேன். சிரிப்பு வரவில்லை” என்றான்.

“ஜெர்மனிக்குப் போன் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார் ஆதிமூலம்.

  
 
 

 

 

 

 

 
 

 

 

வீடு பெறச் செல் – ஒரு அரிசோனன்

சென்ற இதழில் வந்த ‘வீடு பெற நில்’  என்ற கதையின் தொடர்ச்சி : 

IMD issues thunderstorm, heavy rain warning in 13 states today - BusinessToday

“வீடுபெற நில்” கதையின் முடிவு:

“ஏன்?  நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”  முனியாண்டியின் குரல் காதில் விழுந்த அடுத்தகணமே சுரேஷின் குரல் பெரிதாகக் கேட்டது.

   “பை, பை, அம்மா, மாமா, மாமி, எல்லோருக்கும், பை, பை.  நான் வரேன்.  உங்க எல்லோரோட வீடுகளும் இடிஞ்சுபோயிடுத்து.  பை, பை!”  உற்சாகமாகக் கையை ஆட்டிவிட்டு ஒடி மறைந்தான் சுரேஷ்.

   முனியாண்டி மட்டும் மலையில் ஏறும் கும்பலில் இருந்தான்.  மற்றவர்கள் வீடில்லாமல் கூச்சலிடும் கும்பலில் தாங்கள் இருக்கக் கண்டார்கள்…

…“டாக்டர்!  ஆக்சிடென்ட்லேந்து கொண்டுவந்தவங்கள்ல இந்தப் பையன் சுரேஷ் மட்டும்தான் பிழைச்சுக்கிட்டான்.  அவனுக்கு வைட்டல் சைன்ஸ் போயிட்டுபோயிட்டு வந்துட்டே இருந்திச்சு. நினைவும் வந்துவந்து போயிட்டே இருந்துது.  கண்ணைத் திறந்துட்டான்.  இப்ப அவனது சைன்ஸ் எல்லாம் ஸ்டெடியாக ஆயிடுச்சு.  இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் நார்மல்.” என்று நர்ஸ் டாக்டரிடம் தொலைபேசியில் சொன்னாள்.

   “மத்தவங்க.?…”

   “ஆக்சிடென்ட் ஆன மினிபஸ்லேந்து கொண்டுவந்த அத்தனை பெரும்….  பேரைப் படிக்கறேன், டாக்டர் – ஸ்ரீநிவாஸ், காமாட்சி, அப்துல்லா, தேவநாயகம், அம்புஜம், முனியாண்டி, சரஸ்வதி, கல்யாணராமன், வரதராஜுலு, சிங்காரவேலர் – இவங்க யாரும் பிழைக்கலை.  ஒரு நிமிஷம் முன்னாலேதான் ஒருத்தருக்கு அப்பரம் ஒருத்தரா சில செகண்ட்ஸிலேயே போயிட்டாங்க. . .”

*               *               *

கதை தொடர்கிறது:

. . . அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தாங்கள் பார்த்துப் பார்த்துக் கட்டிப் பராமரித்த வீடுகள் இடிந்துபோயினவா?  இனி எங்கே இருப்பது?  எங்கு செல்வது?  தங்கள் குடும்பம் என்ன ஆகும்?

ஒருவருக்கும் பேச்சே எழவில்லை.

முனியாண்டி என்ன ஆனான்? அவன் தன் குடிசையைப் பற்றிக் கவலைப்படவே இல்லையே? அவன் ஒருவன்தான் மலையேறிச் சென்றான்.  அவனுக்கு என்ன ஆயிற்று? அவன் திரும்ப மற்றவர்போல் சறுக்கிவிழுவானா?  அல்லாது, மலை உச்சியை அடைந்துவிடுவானா?  அங்கு என்னதான் இருக்கிறது?

முன்பு பதினோருபேர்தான் தனியாக நின்று பேசி, விவாதம்செய்தனர். சுரேஷைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே முடியாது.  அவனும் அவர்களுக்குப் பைபை, டாட்டா சொல்லிச் சென்றுவிட்டான். 

“பாவம், குழந்தை சுரேஷ்!  அவன் தனியா எப்படி வீட்டை வச்சுக் காப்பாத்திப்பானோ?” என்று கவலைப்பட்டாள் அவனது தாய், சரஸ்வதி. “அவனை இனிமே என்னால பார்க்கமுடியுமோ, முடியாதோ?” அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

“என்ன நாம இப்பிடி வந்து நன்னா மாட்டின்ட்டோம்?  எப்படி மீளறது?  நமக்கு யாரு இனிமே வீடு கட்டித் தருவா?” என்று புலம்பினாள் அம்புஜம்.

“அதை விடுங்க, மாமி.  கர்த்தர் அருள்செய்வார்.  நாம் எங்க வந்து மாட்டிக்கிட்டுருக்கோம்னு பாருங்க.” என்று சுற்றுமுற்றும் பார்த்தபடி கூறினார் தேவநாயகம்.

“இன்ஷா அல்லா, இது குரான்ல சொல்ற நரகம்தானா?  ஏன் அல்லாரும் இப்படிக் கூச்சல் போடறாங்க?” என்று கத்தியபடியே அவர்கள் அருகில் வந்தார் அப்துல்லா.  அவர் உடல் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தது.

“அடியாத்தி!  எனக்குப் பைத்தியமே புடிச்சுடும்போலல்ல இருக்கு.  என்னா இப்படிக் கவிச்ச நாத்தம் அடிக்குது?” என்று மூக்கைப் பிடித்துக்கொண்டாள் காமாட்சி.

“வாங்க, நாம தள்ளிப் போவோம்.  கொஞ்சம் நல்ல இடமாப் பார்த்து நின்னு யோசிப்போம்.” என்று அவர்களுக்கு யோசனை சொன்னார், ஸ்ரீநிவாஸ்.

“தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கே, அதை யாரால மாத்தமுடியும்?  அனுபவிக்கணூம்னு நம்ம தலைல எழுதி வச்சுருக்கு, வந்து மாட்டிக்கிட்டோம்!”  என்று தத்துவம் பேசினார், கல்யாணராமன்.

“தலையெழுத்தாவது, ஒண்ணாவாது?  இதெல்லாம் மக்களிடம் பணம் பறிக்க, மூடநம்பிக்கையை வளர்த்துத் துட்டுச் சம்பாதிக்க, உங்களைப் போன்றோர் செய்யும் மூளைச் சலவை!” என்று வழக்கப்படி முழங்கினார், சிங்காரவேலன்.

அதைக்கேட்டவுடன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டு சூள்கொட்டினாள் அம்புஜம். “நன்னாயிருக்கே, நீங்க சொல்றது?  இப்படி இக்கட்டிலே நம்ம எல்லோரும் மாட்டிண்டு இருக்கறச்ச பகவான் பேரை பத்துத் தடவை சொன்னா, வழியாவது பொறக்கும்.  அதை விட்டுட்டு, நாஸ்திகவாதம் பண்றது நன்னாவா இருக்கு?” என்று சரஸ்வதி, காமாட்சி இவர்களின் காதைக் கடித்தாள்.

“அதோ, அந்த எடம் கொஞ்சம் பரவாயில்லை, வாங்க அங்கே போவோம்.” என்று மீண்டும் அழைத்தார் ஸ்ரீநிவாஸ்.  அவர்களைப் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள்.  அதற்குள் அவர்களைப் பலரும் இடித்துத் தள்ளிக்கொண்டே இருந்தார்கள். 

அதனல், கால்தடுக்கிக் கீழே விழுந்தார், சிங்காரவேலன்.. 

“என்னைத் தூக்கிவிடுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்.”  என்று கத்தினார், சிங்காரவேலன்.

“உங்க தலையெழுத்து அது.”  என்ற பதில் கல்யாணராமனிடமிந்து வந்தது.

“சுயநலமிகளே, நீங்கள் நல்லாயிருக்க மாட்டீர்கள்!” என்று சபித்தார், சிங்காரவேலர்.  அவரை யாரும் கவனிக்கவில்லை.  ஏனோ, அவரைத் தூக்கிவிட மற்றவருக்கு மனமோ, இரக்கமோ வரவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரைக் குனிந்து தூக்கினால் தம்மை மற்றவர்கள் மிதித்துத் தள்ளிவிட்டால் என்ன ஆகும் என்ற எண்ணமே அவர்கள் மனதில் தோன்றித் தடுத்தது.

சிங்காரவேலன் கீழே கிடப்பதைக் கவனிக்காமல் அவரை மிதித்துத் தள்ளியவாறே பலரும் செல்லக் கண்டனர்.  அதைப் பார்க்கச் சகிக்காமல் மற்றவர் ஸ்ரீநிவாஸைப் பின்தொடர்ந்தனர்.

“பாவம்.” என்று முணுமுணுத்தாள் அம்புஜம்.

“விடுங்க, மாமி.  யாரு என்ன சொன்னாலும் அதுக்கு எதிராவே பேசி அந்த ஆளு தொல்லைகொடுத்தாரு.” என்று சமாதானப்படுத்தினார், அப்துல்லா.

“எல்லோருக்கும் கருணைகாட்டவேண்டும், இது கர்த்தர்மகன் ஏசுவின் வார்த்தை.” என்றார் தேவநாயகம்.

“தனக்கு மிஞ்சித்தான் தானமண்டி.”  என்று பதில்கொடுத்தார், வரதராஜுலு.

பெரிதாக மழைபெய்வதுபோல அவர்கள்மீது ஒரு திரவம் கொட்ட ஆரம்பித்தது. 

“என்னது இது?  பிசின்மாதிரி வழவழ கொழன்னு கொட்டுது?  தரையெல்லாம் வழுக்குதே?” என்று கவலைப்பட்டாள் காமாட்சி.

“விழாமல் இருக்கணும்னா, நாம எல்லோரும் ஒருத்தர் கையை இன்னொருத்தர் பிடிச்சால்தான் முடியும்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.

“அதெப்படி பழக்கமில்லாத புருஷா கையைப் பிடிக்கறது?” என்று கூச்சப்பட்டாள், அம்புஜம்.

“ஆபத்துக்குப் பாவமில்லை, மாமி, நாங்க ரெண்டுபேரும் வேணும்னா உங்க கையைப் பிடிச்சுக்கறோம்.  எங்க கையை மத்தவங்க பிடிச்சுக்கட்டும்.” என்றனர், காமாட்சியும், சரஸ்வதியும்.

“ஏதோ, நாம இந்த கஷ்டகாலத்தில ஒண்ணாச் சேர்ந்திருக்கோம்.  கூடப் பிறந்தவாளா நினச்சுக்குவோம்.”  என்று அம்புஜம் அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

அப்துல்லாவும், தேவநாயகமும் காமாட்சி, சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்கள் மெல்ல மெல்ல நடந்துசென்றனர்.

கொஞ்ச நேரத்தில் திரவம் கொட்டுவது நின்றது.  ஆனால், தரையில் நீர்மட்டம் உயர்த் தொடங்கியது.  கால்கள் மேலே அடியெடுத்து வைக்கமுடியாமல் வழுக்கின.

அவர்கள் முன்னால் சென்ற ஸ்ரீநிவாஸ், வரதராஜுலு வேகமாகச் சென்றதால் இவர்களால் அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை.

“கொஞ்சம் மெதுவாகப் போங்க,” என்று இவர்கள் கத்தினர்.  அவர்கள் காதில் அது விழவே இல்லை.  நடுவில் மற்றவர் கூட்டம் வந்துகொண்டே இருந்தது.  திருவிழாவில் பிரிந்துசெல்வதுபோல அவர்கள் பிரிந்துசென்று காணாமல் போய்விட்டார்கள்.

“நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்,” என்று ஒரு குரல் கேட்டது. 

திரும்பிப்பார்த்தால், கல்யாணராமன் நின்றுகொண்டிருந்தார்.

அவருடன் சேர்ந்துகொள்ளலாம் என்று இந்த நால்வரும் செல்வதற்குள், அவரை இடித்துத் தள்ளியது ஒரு கூட்டம்.  தடுக்கிக் கீழேவிழப்போனார், கல்யாணராமன்.

அவரைப் பிடிக்கைக் கையை நீட்டினார், தேவநாயகம்.  இருவர் கைகளிலும் வழவழப்பான திரவம் பட்டிருந்ததால், பிடி வழுக்கியது.

கல்யாணராமன் கீழே விழுந்தார்.  அவர்மேல் மிதித்துக்கொண்டு முன்சென்றது அங்கிருந்த கூட்டம்.

தீனமான குரலில் அவர் முனகுவது இந்த ஐவரின் காதிலும் விழுந்தது.

அவர்களைத் தள்ளியது, கூட்டம்.

பிரிந்துபோகாமலிக்கக் கைப்பிடியைத் தளர்த்தாமல் முன்னேறினர் நால்வரும்.

“எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு?  புது வீடு கிடைக்கறது ஒருபக்கம் இருக்கட்டும், நாம பிழைப்போமா?” என்று கலங்கி அழுதாள், அம்புஜம்.

“நம்ப கண் முன்னாடியே விழுந்தவங்க ரெண்டு பேருங்க கதி என்ன ஆச்சுதுன்னு தெரியலே!  இந்தக் கூட்டத்தப் பார்த்தா, எங்கே போறதுன்னே தெரியலையே?” புலம்பினாள் காமாட்சி.

“பை-பைன்னு சொல்லிட்டுப் போயிட்டானே, என் கண்ணு!  அவன் என்ன பண்றானோ?  குழந்தை பாவம், அவனாவது நல்லா இருந்தா சரி.”  என்று பரிதவித்தாள், சரஸ்வதி.

அவர்களுக்குள் திடுமென ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது.  அவர்களின் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு ஒன்றாயின.  கைகள் சிறுத்துக்கொண்டே வந்தன. தோளிலிருந்து கால்வரை உடல் ஒன்றாகி நெளியத் தொடங்கியது.  பாம்பின் உடல் மாதிரி நெளிந்தது.

“நமக்கு என்ன ஆறது?  எனக்கு ரொம்ப பயம்மா….”  எனத் துடித்தாள் அம்புஜம். அதற்குமேல் அவளுக்குப் பேச்சு வராமல் நின்றுபோய்விட்டது.

யாரும் அவளுக்குப் பதில் சொல்வதற்குள் அவர்கள் கைகளும் நூலாகச் சிறுத்தன.  அப்துல்லா, காமாட்சி, சரஸ்வதி இவர்களின் தலைகள் உருண்ட கூம்புகளாய் மாறின.  கண்கள் மட்டும் பெரிதாய்த் தெரிந்தன.  வாய், மூக்கு, காது — இவை காணாமல் போயின.

தேவநாயகத்தின் தலையும், தன் தலையும் உருண்டையாக மாறியதை அம்புஜத்தால் உணர முடிந்தது.  அவர்களின் சிறுத்த கைகளும் நூலாகி, உதிர்ந்து காணாமலே போய்விட்டன.  அவர்கள் தலைப்பிரட்டை போல தலை, வால் இரண்டுடன்தான் இருந்தார்கள். 

அவர்களின் உடலும் சிறுக்கவே, அந்தத் திரவத்தில் மூழ்கினர்.  மூக்கு, வாய் இல்லாததால் அவர்களுக்கு மூச்சுத் திணறவில்லை.  உடல் சிறுத்திருந்ததால் கூட்டத்தினர் இடையில் இடைவெளி அதிகம் இருந்தது.  அவர்களால் மிதிபடுவோம் என்ற அச்சமும் இல்லை.  அவர்களால், தங்களது வால்போன்ற உடலை நெளித்து ஆட்டியாட்டி மேலும், கீழும் நீந்தமுடிந்தது.

ஏதோ ஒரு மனப் பிணைப்பின் காரணத்தினால் ஐவரும் அதிக இடைவெளியின்றி அந்த வழவழப்பான திரவத்தில் ஒன்றாக நீந்தத் தொடங்கினர். எத்தனை காலம், எத்தனை தூரம் நீத்தினோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. வீடுபெறச் செல்லவேண்டும் என்ற உந்துதல்தான் பெரிதாதத் தோன்றியது.

தூரத்தில் ஒரு விளக்கு அவர்கள் நீந்தும் திரவத்திற்கு மேலே தெரிந்தது.  அதை நோக்கிச் சென்றால் தங்களுக்கு வீடு கிடைக்கும் என்று அவர்கள் உள்ளம் எடுத்துரைத்தது.

இனம் தெரியாத உற்சாகம் அவர்களைத் தொற்றிக்கொண்டது.

அவர்கள் அந்தக் விளக்கு வெளிச்சத்தை நோக்கி நீந்திச் சென்றனர்.

‘உஷ்’ஷென்று ஒரு சுழல் அவர்களைத் தடுத்து இழுத்தது.

“என் கண்ணே, சுரேஷ்!” என்ற ஒலியற்ற அலறல் கேட்பதுபோல அவர்கள் உணர்ந்தார்கள்.  சரஸ்வதியை ஏதொ ஒன்று இழுத்துச் சென்றது.  அந்த பயத்தில் — தாங்கள் தப்பிக்கவேண்டும் என்ற ஒரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் மற்ற நால்வரும் விளக்கு வெளிச்சத்தைக் குறிவைத்து நீந்திச் சென்றார்கள்.

ஊமை வலியில் அவர்களால் உள்ளுக்குள் அழத்தான் முடிந்தது.  சரஸ்வதியைச் சேர்த்து அவர்களுடன் வந்த எழுவர் பிரிந்துபோய்விட்டனர்.  அவர்களுக்கு வீடு கிடைக்குமா, கிடைக்காதா, அவர்கள் என்ன ஆனார்கள், அவர்கள் கதி என்ன என்று எண்ணக்கூட அவர்களுக்கு அவகாசமில்லை.

தாங்கள் சிக்கித்தவிக்கும் நிலையிலிருந்து தப்பவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

ஒருவழியாக திரவத்தின் மெல்பரப்பிற்கு அவர்கள் வந்துசேரவும், அந்த ஒளிவிளக்கை மறைத்துக்கொண்டு, ஒரு குழாய் அவர்களை உறிஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.

நால்வரும் அந்தக் குழாயின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு தொங்கினார்கள்.

அந்தக் குழாய் அவர்களை எங்கோ எடுத்துச் சென்றது. 

குழாயிலிருந்து வந்த பலத்த காற்று அவர்கள் நால்வரையும் ஒரு திரவத்தில் தள்ளியது. அவர்களால் அவர்கள் கண்களை நம்பமுடியவில்லை. 

அத்திரவத்தில் ஒரு வீடு மிதந்துகொண்டிருந்தது. 

காண்பதோ ஒரு வீடு, இருப்பதோ நால்வர்.  நால்வரும் ஒரே விதமாகச் சிந்தித்தனர். 

வீட்டுக்குள் நுழைந்தால், அது நம்முடையது, வீடுபெறச் செல்லவேண்டும். வீடுபெறச் செல்லவேன்டும்.

வேகமாக நால்வருமே அவ்வீட்டினில் புகுந்தனர்.  புகுந்த வேகத்தில் நால்வரின் வால்களும் அறுந்து வீழ்ந்தன.  வீடுபெற்ற நிம்மதியில் இனம்தெரியாக உறக்கம் அந்த நால்வரையும் ஆட்கொண்டது . . .

. . . ”என்னங்க, இப்படி மிஸ்டேக் ஆயிச்சு?  ஒரு எக்கிலே (கருப்பை முட்டையில்) நாலா?”

“பேசாம இரு.  இதுக்கு மேல நாம செய்ய ஒண்ணும் இல்லை.  ஃபீட்டஸும் (கருவும்) டெவலப் ஆக ஆரம்பிச்சுடுச்சு.  இவங்க ரொம்ப காம்ளிகேட்டட் கேஸ்.  ஒரு எக்தான் கிடைச்சுது.  இதுக்குமேல ஒண்ணும் செய்யமுடியாது. நடக்கறது நடக்கட்டும்.  ஃபெர்ட்டிலைஸ்ட் ஃபீட்டஸை கருப்பைலே சேர்க்கறதத் தவிர வேற வழியில்லே”.

“அதிசயம்! அதிசயம்! செயற்கை முறையில் கருத்தரித்தவருக்கு நான்கு குழந்தைகள் பிறப்பு!  தாயும், சேய்களும் நலம்”

எல்லாப் பத்திரிகைகளும், ஊடகங்களும் அல்லோலகல்லோலப்பட்டன.

 

உஷார்…! –நித்யா சங்கர்

Male Driver Driving Car With Passenger Stock Photo, Picture And Royalty  Free Image. Image 131546049.

அந்த விமான நிலையமே களைகட்டி இருந்தது.

விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் சாரை சாரையாக அந்த எக்ஸிட் கேட் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

வெளியே வருகின்ற பயணிகளை வழிமறித்து.’ஸார்.. டாக்ஸி வேண்டுமா.. எங்கே போகணும்..’ என்று நச்சரித்துக் கொண்டிருந்த டாக்ஸி டிரைவர்கள் ஒரு புறம்…

வருகின்ற பல பயணிகளை வரவேற்கக் குழுமியிருந்த உறவுகளின், ‘ஹாய்’…’ஹே’.. ‘ஹான்ட்ஸம்’… ‘ஆஸம்’.. ‘பெர்·பெக்ட்’.. ‘பியூட்டி·புல்’… ‘சான்ஸே இல்லே’.. ‘இப்படி
இளைச்சுட்டியே’.. என்ற பலவாறான ஆவேசக் கூச்சல்கள்.. கைகுலுக்கல்கள்… அணைப்புக்கள்.. அன்பு முத்தங்கள்..’ ஒரு பக்கம்…

வருகின்ற விருந்தினர்களின் முகம் தெரியாமல், அவர் பெயரோ., அவர்களை அழைக்க அனுப்பிய கம்பனியின் பெயரோ.., முதலாளிகளின் பெயரோ.., கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட அட்டைகளை வருபவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக  உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ப்ரைவேட் கார் டிரைவர்கள் ஒரு பக்கம்….

அந்த விமான நிலையத்தின் எக்ஸிட் கேட் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

அந்த ப்ரைவேட் டிரைவர்கள் மத்தியில், ஒரு புத்தகத்தை (வருகின்ற விருந்தாளி எழுதி இருக்கக் கூடும்) உயரப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் டிரைவர் மாணிக்கம். வருகின்ற ஒவ்வொரு பயணியின் முகத்தை ஆவலோடு
பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு ப்ரீ·ப் கேஸை சுமந்து கொண்டு ஸ்டைலாக நடந்து வந்த இளைஞன் ஒருவன், ப்ரைவேட் டிரைவர்கள் இருந்த பக்கமாக ஒவ்வொரு போர்டாக பார்த்துக் கொண்டே
வந்து, மாணிக்கம் உயரத் தூக்கிப் பிடித்திருந்த புத்தகத்தைப் பார்த்து சில விநாடிகள் நின்றான் தயங்கியபடியே..

‘நாம் வரவேற்க வந்த பயணி இவராகத்தான் இருக்க வேண்டும்’ என்று அனுமானித்த மாணிக்கம் சிறிது முன்னால் வந்து.. ‘ஸார்… நீங்க… மிஸ்டர் பிரபாகரன்தானே..’ என்றான்.

வாயின் கடைக் கோடியில் வழிந்த ஒரு புன்முறுவலோடு தலையை மெதுவாக ‘ஆம்’ என்று அசைத்தான் அவன்.

‘வாங்க ஸார்.. பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா..’ என்றபடியே அவன் ப்ரீ·ப் கேஸை வாங்க கை நீட்டினான்.

‘நோ..நோ.. பரவாயில்லே..’ என்றபடியே மாணிக்கத்தின் பின்னால் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு நடந்தான்.

‘டிரைவர்.. உங்கள் பெயர்..?’

‘என் பெயர் மாணிக்கம் ஸார்…’ என்றபடியே அந்த இளைஞனுக்குக் கார்க் கதவைத் திறந்து விட்டான்.

இளைஞனும் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டு, ‘ரொம்ப வெயிலா இருக்கு இல்லே…’ என்றான்.

‘ஆமா.. ஸார்… நைட் நல்ல மழை இருக்கும்னு நினைக்கிறேன்’

கார் புறப்பட்டது.

‘இன்னிக்கு காலையில் இருந்து பரந்தாமன் ஐயா உங்களைப் பற்றியேதான் பேசிட்டிருந்தார். வீட்டு உள்ளுக்கும் வெளிக்குமா இருப்புக் கொள்ளாமல் நடந்துட்டே இருக்காரு..சீக்கிரம் போகலாம்.. அவர் வெயிட் பண்ணிட்டிருப்பாரு..’

‘நம்ம வீடு இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்..?’

‘என்ன ஸார்.. ஒரு நாப்பது கிலோ மீட்டர் இருக்கும்..’

‘இப்பல்லாம் ஏர்போர்ட்டை ஸிடிக்கு வெளியிலே வெகு தூரத்துலே வெச்சுடறாங்க… இந்த டிரா·பிக்லே ஸிடிக்குள்ளே போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடுது.. ஹாரிபிள்..’

‘என்ன ஸார் செய்யறது..’ என்றான் மாணிக்கம்.

‘ மாணிக்கம் நாம வீட்டுக்குப் போற வழியிலே ஒரு மால் இருக்கு இல்லே… ‘

‘ஆமா ஸார்… பிக் பஸார்..’

‘அங்கே ஒரு ஐந்து நிமிஷம் நிறுத்தணும்.. வர அவசரத்துலே ஸாருக்கு ஒண்ணுமே வாங்காம வந்துட்டேன்.. கை வீசிட்டுப் பொனா நல்லா இருக்காது இல்லே’

‘சரி ஸார்.. அங்கே நிறுத்தறேன்..’ என்றான் மாணிக்கம்.

இளைஞனின் கைபேசி சிணுங்கியது.. ‘ஆமா.. ஒரு ஐந்து நிமிடம் பிக் பஸாரிலே இறங்கிட்டு அப்புறம் உடனே வந்துடறேன்’ என்றான் இளைஞன்.

‘பரந்தாமன் ஸாராகத்தான் இருக்கணும்.. அப்பப்பா.. அப்படி ஒரு பற்றுதலா இவர் மேல்..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மாணிக்கம்.

விமான நிலையத்திலிருந்து ஒரு முப்பது கிலோ மீட்டர் ஓடியபின், மெதுவாக அந்த ‘பிக் பஸார்’ காம்ப்ளக்ஸில் காரை நிறுத்தினான் மாணிக்கம்.

‘ஸார்.. சீக்கிரம் வந்துடுங்க.. ஐயா வெய்ட் பண்ணிட்டிருப்பாரு..’

‘ஐந்தே நிமிடம்தான்.. கவலைப்படாதே.. இதோ வந்து விடுகிறேன்..’ என்று கார் கதவைத் திறந்து கொண்டு அந்தக் காம்ப்ளக்ஸ¤க்குள் நுழைந்தான் ப்ரீ·ப் கேஸ¤டன்.

ஐந்து நிமிடம் ஆயிற்று.. பத்து நிமிடம் ஆயிற்று… அரை மணி நேரம் ஆயிற்று.. அந்த இளைஞனின் சுவடே தெரியவில்லை..

‘ஐயோ.. என்னாச்சு அவருக்கு..எங்காவது வழி தவறி காரைத் தேடிக் கொண்டிருக்கிறாரா.. ‘ என்று கார்க் கதவை பூட்டிக் கொண்டு அந்தக் காம்ப்ளக்ஸில் நுழைந்து அவரைத் தேடலானான் மாணிக்கம்.

அந்தக் காம்ப்ளக்ஸ் முழுதும் தேடியும் அவனைக் காணவில்லை..

‘அடப் பாவமே.. ஐயாவுக்கு என்ன பதில் சொல்றது..? கூட்டிட்டு வந்தவரை இப்படித் தவற விட்டுட்டோமே..’ என்று செய்வதறியாது திகைத்து நின்றான்.

அவன் கை பேசி சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தான். பரந்தாமன்..

‘மாணிக்கம்.. எங்கே இருக்கே.. என்ன பண்ணிட்டிருக்கே?’

‘ஸார்.. பிரபாகரன் ஸார் பிக் பஸாருக்குப் போய் ஏதோ வாங்கணும்னு சொன்னாரு.. அவரை பஸாருக்குக் கூட்டிட்டு வந்தேன்.. அவர் உள்ளே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகுது.. ‘ஏண்டா.. இன்னும் காணோமே என்று நானும் எல்லா இடத்துலேயும் தேடிப் பார்த்துட்டேன்.. அவர் ஆளையே காணோம்..’ என்றான் மாணிக்கம் சிறிது பயந்த குரலில்.

‘என்ன.? பிரபாகரனைக் கூட்டிட்டு வந்தியா.. அவர் வெளியிலே வர கொஞ்சம் நேரம் ஆயிடுத்து.. வெளியிலே வந்து பார்த்தா யாரையும் காணம். அப்புறம் ஒரு டாக்ஸி
பிடிச்சிட்டு வந்தார். அவர் வந்து அரை மணிக்கு மேலே ஆயிடுச்சு. நீ யாரைக் கூட்டிட்டு வந்தே.. யாரோ உன்னை ஏமாத்தி லி·ப்ட் வாங்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன். நீ இப்போ எங்கே இருக்கே.. அட்லீஸ்ட் நம்ம காராவது
இருக்கா.. இல்லே அதையும் அடிச்சிட்டுப் போயிட்டானா’

‘இல்லே ஸார்… நான் கார்லதான் உட்கார்ந்திருக்கேன்’

‘சே… இப்படி சொதப்பிட்டியே.. சரி நீ கூட்டிட்டு வந்த ஆளு இப்ப அவன் வீட்டுக்குப் போய், நீ ஏமாந்த விஷயத்தைச் சொல்லி ·பாமிலியோட சிரித்தபடியே சாப்பிட்-
டிட்டிருப்பாரு.. நீ பத்திரமா வீட்டுக்கு வந்து சேரு.. இதுக்குத்தான் நீ கிளம்பும்போது, அவரைக் காரிலே ஏத்தறதுக்கு முன்னாலே ‘உங்க பெயர் என்ன’ன்னு கேட்டு கன்·பர்ம் பண்ணிட்டு, கூட்டிட்டு வான்னு திரும்பத் திரும்பச் சொன்னேன். அப்படியும் கோட்டை விட்டுட்டியே.’ என்றார் பரந்தாமன்.

சுருக்கென்றது மாணிக்கத்திற்கு. எப்படி அவர் பெயரைக் கேட்பது என்று ‘நீங்க.. பிரபாகரன்தானேன்னு..’ கேட்டான். ‘நீங்க..’ என்று நிறுத்தி அவரை பெயரைச் சொல்ல விட்டிருக்க வேண்டும்.. அப்படிச் செய்திருந்தால் இந்தத் தவறு
நடந்திருக்காது. அவனுடைய தயக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் அந்த இளைஞன்.

தன் மடமையை நினைத்து தன்னையே நொந்தவாறு காரை ஸ்டார்ட் செய்தான் மாணிக்கம்.

கனிதல் – ஜனநேசன்

மனைவியை அடக்க பரிகாரம் !

மனைவியிடம்   தோற்றுக் கொண்டிருக்கிறேன்.   – “பெருமையா சொல்றீங்களா,  இல்ல ,பொறாமையால், ஆற்றாமையால் சொல்றீங்களா” ன்னு  நீங்க  முணங்குறது  கேட்குது. இந்தத் தோல்விக்கு பூர்வகதையும்   உண்டு. அந்தப் புள்ளியிலிருந்து  சொல்றேன். நீங்களே புரிஞ்சிக்குவீங்க.

 

வருசந்தோறும்  போகி வருமுன்னே ,  எங்க வீட்டில புகை கசிந்து கனன்று  பகையாகவும்  வெடிக்கும்.  வீட்டில் வராந்தா, வரவேற்பறையில்  தொடங்கி படுக்கை அறை வரை அங்கங்கே மூலைகளில் மினியேச்சர் அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டிடமாக நிற்கும் புத்தக அடுக்குகள் ; பழைய ஆங்கில,தமிழ் செய்தித்தாள்கள் ,வாராந்திர, மாதாந்திர இதழ் அடுக்குகள்  ; அவற்றை சுவரோடு இணைத்து வலைபின்னி கொசுக்களை ,சிறுபூச்சிகளை சிக்கவைத்து உண்டுவாழும்  சிலந்திகளை,  குறுக்கும் மருக்குமாக ஓடித்திரியும்  பல்லிகளையும், அதன் வயிற்றில் முத்துபோல மின்னும்  முட்டைகளோடு பார்க்கும்போது   மனைவி மனதில் ஆவேசம் பொங்கும்.

”ஏங்க  நாம வீட்டில  மனுசராத்தான் வாழ்றமா .இல்ல பல்லி ,சிலந்தி, கரப்பான்களோட குடித்தனம்  நடத்துறமா ?பாவம், அந்த வேலைக்காரம்மா ஒட்டடை களைஞ்சு ,கூட்டி சுத்தம் பண்ணி துணிமணிகள் துவைச்சு காயப் போட்டுட்டு  வர்றதுக்குள்ள சிலந்தி மறுபடியும் வலையை விரிச்சு ஊஞ்சலாடுது. பல்லிக பூச்சிகளுக்காக  நாக்கை நீட்டித்  தவம் கிடக்குதுக! அந்தம்மா நொந்து புலம்புது  “

பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடும்  என்னை விசித்திரப்பிறவி  போல பார்ப்பாள்; பல்லி எங்கிருந்தோ உச் கொட்டும். நின்று பேச நேரமில்லாமல் தலையில் அடித்துக்கொண்டு   பணிக்கு விரைவாள். அவள் அடக்கிய கோபம் போகி சுத்தத்தின் போது வெடிக்கும்.

வார, மாத இதழ்களை  எடைக்குப்போட்டு கிடைக்கும் தொகையை  சிறுவாட்டு கணக்கில்  சேர்த்துக் கொள்ளும்போது மட்டும் மனைவி , என்னை  எதோ பயனுள்ள ஜீவனாக  பார்வையால்  வருடியவாறே ,                    ” ஏங்க, இந்த புத்தகக் கட்டுகளையும்  கொஞ்சம் ஒதுக்கிக்  கொடுத்தா  எடைக்குப் போடலாமில்ல? இடத்தை அடைக்காம வீடாவது சுத்தமாகும்  பூச்சிகள் அடையாமலிருக்கும் !“  விநயமா  கேட்டாள்.

“ கொஞ்சம் பொறு; இதில சில முக்கியமான புத்தகங்களை  எடுத்து புத்தக அலமாரியில வச்சிட்டு, மீதியை  யாராவது படிக்கிறவங்களுக்கோ , நூலகத்துக்கோ கொடுத்துறலாம். இடம் சுத்தமாயிரும். “

“ யாருக்கோ ஓசியா கொடுக்கிறதுக்கு , எடைக்குப் போட்டாலும்  சில்லறைச் செலவுக்கு  ஆகுமில்ல. “

“ சரி, இப்போ உனக்கு என்னக் கொறைச்சல் ?  தேவையான எல்லா சாமான்களையும் வாங்கிப் போட்டுர்றேன். கைசெலவுக்கு பீரோவில வச்சிருக்கிற காசை எடுத்து செலவு பண்ணிக்கலாமே .நான் ஒளிச்சா  வைக்கிறேன்  , உன்கிட்ட கணக்கா   கேட்கிறேன்  ? “

“ ஆமாம், இந்த தேனொழுகிற  பேச்சுக்கு கொறைச்ச இல்ல .என்னோட எ.ட்டி.எம் . கார்டைக் கொடுத்திற வேண்டியது தானே  “

“அந்த கார்டை பாதுகாப்புக்காகத் தானே நான் வச்சிருக்கேன்; இந்தக் காலத்தில கொஞ்சம்  அசந்தா   எல்லாத்தையும்  முழுங்கி ஏப்பம் விட்டுருவான்களே ; அதுக்காகத்தானே பத்திரமா வச்சிருக்கேன். நீ கேட்டு என்னைக்காவது  பணம் கொடுக்காம இருந்திருக்கேனா “                                       “ இந்த மகாபாரதமெல்லாம்  வேணாம். அந்த மூலையில இருக்கிற புத்தகங்களை  எடுத்து ஒட்டடை  அடிச்சு சுத்தம் பண்ணிக் கொடுங்க. “

இப்படி ஊடலும் உரசலுமா புகையற போகிப் புகை பழையபேப்பர்காரன் கொடுக்கிற பணத்தில்தான் கொஞ்சம் தணியும். ஆனாலும்  புத்தகங்களைப் பார்க்கும்போது எல்லாம் கனரும். இந்தக் கங்கை  நிரந்தரமா அணைக்க யோசிக்கலானேன்.

அந்த வருசம்பூரா  வாங்கிய புத்தகங்களில் , வைத்திருந்து  திரும்பத் திரும்ப  எடுத்து வாசிக்க  சில புத்தகங்களை மட்டும் எடுத்து துடைத்து புத்தகஅலமாரியில் வைத்து மூடினேன் ; மீதியை  உள்ளூர் நூலகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

நூலகர் ; “ நன்றி சார். ரெண்டுவருசமா  புத்தகம் எதுவும் வாங்க ஒதுக்கீடு இல்லை. கொரோனா காலத்தில் வாசகர் யாரும் வரலை. லைப்ரரி  திறக்கும் நாள்களில் பராமரிப்பு வேலை மட்டுமே பார்க்கிறோம். பேப்பர்களும் வரலை; பேப்பருக்கான தொகையில மாவட்ட அலுவலர் ஒப்புதலோடு பத்து பனிரெண்டு மாதநாவல்களைத் தான் வாங்கிப் போட்டுருக்கோம். அதைத்தான் பெண்கள் விருப்பமா வாங்கிட்டுப்போய்  படிக்கிறாங்க. “

அந்தப் புத்தகங்களை  வாங்கிப் பார்த்தேன்; பெண்களைக் கவரும்  ஈர்ப்பான தலைப்புகளில் மேலட்டையில் கவரும் பெண்கள் படத்துடன் புத்தகம்; திறந்தால் உள்ளீடில்லா லகுவான நடையில் பக்கங்கள் நகர்கின்றன. நெருப்பை நெருப்பால்  அணைக்கலாமுனு  யோசனை வந்தது. பேருந்துநிலையக் கடையில்  ரெண்டு குடும்பநாவல்களை வாங்கினேன்.

வீட்டில்  மனைவி  பழைய சேலைகளை எனது மேஜைமீது அடுக்கிக் கொண்டிருந்தாள் .    

 “என்ன பழைய சேலைகளைப் போட்டுட்டு புதுப்  பாத்திரங்கள் வாங்கப் போறீயா “                                                       

“இல்லங்க ,உங்ககிட்ட காமிச்சிட்டு வேலைக்காரம்மாவுக்கு கொடுக்கணும் ; பழசைக் கழிச்ச்சாத்தானே புதுசு வாங்கலாம் “ என்று  சிரித்தாள்.     

 “சரி, யாருக்காவது பயன்படட்டும் . நான் தான் இனி எச்சரிக்கையா சேலையை பார்த்து பேசாம ஆளைப்பார்த்து பேசணும் “                             “என்ன முணங்கிறீங்க. உங்களுக்கு இஷ்டமில்லையா ? “                               “ யாருக்காவது பிரயோஜனப்பட்டா சரிதான்.”                                     வாங்கிவந்த புத்தகங்களை மனைவியிடம் கொடுத்தேன். அட்டைப்படமே நல்லா இருக்கே !.என்று பக்கங்களைப் புரட்டினாள்;  வாசிக்கவும்  ஈசியா இருக்கே  என்றவள்   அரைமணியில்  ஒரு நாவலை  முடித்துவிட்டாள்.

அப்புறம்  இரண்டுநாள்  கழித்து வேறு  வேறு தலைப்புகளில்  இன்னும் நாலு நாவல்களை வாங்கிக் கொடுத்தேன். மனைவி உட்காரும் இடமெல்லாம்  புத்தகங்கள் கிடந்தன. வீட்டில் டிவி சீரியல்கள் ஓடவில்லை . ரெண்டு நாள்கள் கழித்துப்   பார்த்தேன் , மனைவி அருகில் புத்தகங்களைக் காணோம். எங்கே என்று கேட்டேன்; பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு வாசிக்கக் கொடுத்ததாகச் சொன்னாள்.

புரிபடாத புத்தகங்களை எப்படி வாசிப்பது? | book reading - hindutamil.in

மனைவிக்கு வாசிப்பு ருசி ஏற்பட்டதும் , ஓய்ந்த வேளைகளில்  எனது  அலமாரியிலிருந்து  புத்தகங்கள்  எடுத்து வாசித்தாள் . நான்  மாதநாவல்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டேன். அவள்  எனது புத்தக அலமாரியில்  அவளது ரசனைக்கான  புத்தகங்களை தேடி படிப்பதை  மேஜை மேலிருந்த  புத்தகங்களைப் பார்த்து புரிந்து கொண்டேன். மனைவியின்  வாசிப்பு  தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஐம்பதுவயசுக்கு மேல் மாதவிடாய் நிற்றலில் வரும் வலியும் சலிப்பும் அலுப்பும் முகத்தில்  தென்படவில்லை. முன்புபோல கடுகடுத்து பேசுவதுமில்லை. ஏதாவது  சொல்வதென்றால் புன்னகை பூசிய முகத்தோடு  அளவாகப் பேசுகிறாள். சரி எதோ மாற்றம் நடக்குது  என்று மனதுக்குள்  நகைத்துக் கொண்டேன்.

இந்நிலையில் கொரோனா  இரண்டாவது  அலையின் கொடுந்தொற்று  தாக்குவதாக அச்சுறுத்தலும் மீண்டும்  ஊரடங்கு அறிவிப்பும்  வந்தது. வேகமாகப் பறந்து புதிய தலைப்புகளில்  நான்கு நாவல்கள் வாங்கித்  தந்தேன். மனைவி ஓய்ந்த வேளையில்  அந்த புத்தகங்களை  புரட்டிய பத்தாவது நிமிடம் என்னிடம்  வந்தவள்                                           

“ஏங்க இந்த புத்தகங்களின் தலைப்பும் அட்டைபடமும் தான் வேற வேற  ; உள்ளே கதை ஒரேமாதிரிதான்   இருக்கு. அந்தக் காலத்து தேவர்பிலிம்ஸ் படங்கள் பார்த்தமாதிரி தான் . வேற நல்ல புத்தகங்களாகக் கொடுங்க.” என்று  அவளே என் புத்தக அலமாரிக்குப் போய்  வேறுவேறு எழுத்தாளர்களின் நாலு புத்தகங்களை   எடுத்து வந்து ,  காட்டினாள். நல்லா இருக்கும் வாசித்துப் பாரு என்றேன்.

ஊரடங்குகாலத்தில்  புத்தகங்களில்  முடங்கிக் கிடந்தோம். ஒவ்வொரு புத்தகத்தின்  சாரத்தையும் , படைப்பாளியின் தனித்துவத்தையும் சில வாக்கியங்களில் சொன்னாள். பாராட்டினேன் . அவளது புன்னகை அழகாக மிளிர்ந்தது.

கண்கள் சோரும்போது ,ஒரு மாறுதலுக்காக தொலைக்காட்சி பார்க்கலாமென்றால் கொரோனா தொற்று  அரசியலாகவே  இருந்தன. பார்க்க சகிக்கலை. எப்பவாவது பழைய நல்ல படங்கள்  போடும்போது  சேர்ந்து பார்ப்போம். இருவரும் அந்தந்தக்கால  நினைவுகளில் மூழ்கி  , கடந்தகால  சம்பவங்களை அசைபோடுவோம் . புதுப்பிறவிகளாக உணருவோம் . தொலைதூரங்களில் வாழும் பிள்ளைகளுடன் பேசுவோம்.   மனைவி அவர்களிடம் முன்னைவிட பதற்றம் குறைந்து   பக்குவமாக பாசமொழுகப்  பேசுவாள்.

ஓரளவு பழைய எழுத்தாளர்களை வாசித்தபின்   அலமாரியிலிருந்து  புதியவர்களின் புத்தகங்களைத்  தேடி   புரட்டினாள். மனைவியின்  வாசிப்பு வேகம்  என்னிலும்  முந்தியது . பழைய படைப்பாளிகளுக்கும்  தற்போது எழுதுபவர்களுக்கும்  ஒற்றுமை வேற்றுமைகளை பட்டியலிட்டாள். பழையவர்கள் வாழ்க்கைச் சூழலில் பிரச்சினைகளின்  தீர்வைக் கோடிட்டுக் காட்டுவார்கள்.புதியவர்கள்  தீர்வை வாசகரின் யோசனைத் திறனுக்கு  விட்டுவிடுகிறார்கள் “ என்று முத்தாய்ப்பாக  சொன்னாள். எனக்கு தலையில்  கர்வம் கூடியது. உச்சியை முகர்ந்து முத்தமிடும்  வயது தாண்டி விட்டது. நவீனமாக ஹைபை செய்து கொண்டோம்.

மனைவி, “ஏங்க இந்த எழுத்தாளர்கள் எல்லாம் உங்கள்  நண்பருகன்னு  சொல்லுவீங்க .ஏன் ஒருத்தரைக் கூட வீட்டுக்கு கூட்டிட்டு வரலை.?”                           

“எழுத்து ரசனை இப்பத்தானே உனக்கு வந்திருக்கு ;கொரோனா ஓயட்டும் ; இனிமே  ஒவ்வொருத்தரையா கூட்டிட்டு வர்றேன். வர்ற  சென்னை புத்தகத் திருவிழாவுக்குப்  போவோம். அங்க எல்லாரையும்  பார்க்கலாம்; பேசலாம் .”

சில எழுத்தாளர்களின் விவரிப்பையும் ,உவமைகளையும், பாத்திரங்களின்  உணர்வுகளை காட்சிப்படுத்தும் திறனையும் அடிக்கடி  சொன்னாள். எனக்கு  மகிழ்ச்சியாக இருந்தது. அந்த எழுத்தாளர்களை  கைப்பேசியில்  அழைத்து  எனது மனைவியை அறிமுகப்படுத்தி, பேசச் செய்தேன். என் மனைவியின் நயமான சுருக்கமான மதிப்பீடு கேட்டு அந்த எழுத்தாளர்கள் பேருவகை  யில் திளைத்தார்கள். ’ கொரோனாவில்  முடங்கிக் கிடந்த  எங்களுக்கு உங்க பேச்சு புத்துணர்ச்சி ஊட்டுது ‘ என்று அவரவர்  பாணியில்  சொன்னார்கள். வீட்டில் சந்தோஷ வெளிச்சம் பளிச்சிட்டது .

இப்போது எழுத்தாள நண்பர்களது பட்டியலோடும்  அவர்கள் வெளியிட இருக்கும் புத்தகங்களை வாங்க ரெண்டு பெரிய ‘பிக் ஷாப்பர்’ பைகளோடும்   தயாராக  இருக்கிறோம். மூன்றாவது கொரோனா அலை, ஒமிக்கிரானோடு  தாக்கப்போகிறது  என்ற எச்சரிக்கையில்  சென்னை புத்தகத் திருவிழா தள்ளிப் போனது. ஏமாற்றத்தைத்   தந்தது.

அரசுகளின் தடுப்பூசி நடவடிக்கைகளில்  முடக்கத்தில் கொஞ்சம்  தளர்வும்  தைரியமும் வர புத்தகத் திருவிழா  தேதியும்  வெளிவந்தது. முடக்கத் தளரவில்  அவரவர் அலுவலகம்  போய் வந்தோம். முதல் சனி,ஞாயிறில் புத்தகத்திருவிழாவுக்குச்   செல்ல  இரயிலுக்கும் பதிவு பண்ணி ஆயிற்று.

அந்தவார வியாழனன்று மனைவிக்கு  தலைவலி காய்ச்சல்னு துடித்தாள் . மருத்துவசோதனை செய்ததில்   தொற்று தாக்கியது தெரிந்தது  . அது கொரோனாவா, திரிபா, ஒமைக்கிரானா  என்பதை மருத்துவ சோதனையில் தெளிய நாளாயிற்று. என்றாலும் வயதானவர்களுக்கான  பக்கவிளைவுகள் தாக்காமலிருக்க அனைத்துவித தற்காப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டோம். நோயுற்ற மனைவிக்கு  பக்கத்தில் இருந்து முகக்கவசம் அணிந்தபடி   பண்டுதம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் . மனைவி அரைத்தூக்கத்தில் முணுமுணுத்தார்                     

 “ இனி அடுத்த புத்தகத் திருவிழா தான்….”

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

Insomnia: 'No link' between sleepless nights and early death - BBC News

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே…..

The Anatomy of Insomnia | Psychology Today

இரவின் அமைதியில் ஆலயமணி படப் பாடல் ஜானகியின் குரலில் குழைந்து வந்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கண்ணதாசனின் பாடல். கேட்டபடியே, தூங்கிவிடக் கூடிய மெல்லிசை! இருந்தாலும், தூக்கம் வந்தால்தானே? தூக்கமின்மை (Insomnia) ஒரு நியூசென்ஸ்! 

“ராவிக்கெல்லாம் சுத்தமாத் தூக்கமே கெடையாது சார். நெல்லாத் தூங்கி ரொம்ப நாளாச்சி சார்” என்னும் முதியவரிடம் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

“எவ்வளவு நாளாக அல்லது மாதங்களாகத் தூக்கம் இல்லை?”

“படுத்தவுடன் தூக்கம் வராமல், லேட்டாக, 12 மணி, ஒரு மணி போல தூக்கம் வருகின்றதா?” (கவலை, மன அழுத்தம், ரீயாக்டிவ் டிப்ரஷன்)

“படுத்தவுடன் தூங்கி, அதிகாலையில் மூன்று, நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடுகின்றதா?”(என்டோஜினஸ் டிப்ரஷன்)

“தூக்கத்தின் நடுவில் அவ்வப்போது விழித்து, நேரமாகாமல் திரும்பத் தூங்க முயற்சிக்கிறீர்களா?”

“வேறு ஏதாவது நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா?”

முந்தைய இரவு தூங்காமல், என் கேள்விகளைக் கேட்டதும், ‘கொட்டாவி’ விடும் ஆத்மாக்களும் உண்டு – கேள்விகளில் குற்றம் இல்லை – தூக்கம் போதாமல், மறுநாள் பகல் நேரத் தூக்கத்தின் நுழைவாயில் அந்தக் கொட்டாவி!

“தூக்கமே வருவதில்லை சார்” – அடிக்கடி கேட்கும் வருத்தம் தோய்ந்த குரல்கள்!

60. வயதுக்கு மேல் முதியவர்களுக்கு(10-30%)த் தூங்குவதில் சிரமங்கள் இருப்பதாக அறிவியல் குறிப்பு ஒன்று சொல்கிறது.  தூக்கமின்மை ஒருவித மன உளைச்சலைத் தரவல்லது. தூங்காமல் இருப்பதைவிட, தூக்கம் வராமல், கடிகாரத்தை முறைத்தபடி, படுத்திருப்பது அதிக மனச் சோர்வையும், துயரத்தையும் தருகின்றது.

நாற்பது வயதுக்கு மேல், மனிதன் வாழும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும், சுமார் 27 நிமிட இரவுத்தூக்கம் குறைந்து விடுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் – அவர்கள் தூக்கம் வராமல் புரண்டு படுத்தவாக்கில் கண்டுபிடித்திருக்கலாம்! வயதானவர்களுக்கேயான சில வியாதிகளிலும், மனோவியாதிகளிலும் தூக்கம் குறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். சில வியாதிகளுக்கென எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் தூக்கம் கெடும் அபாயம் உண்டு.

தூக்கத்தின் நான்கு நிலைகள் – விழிப்பு, மேலோட்டமான உறக்கம்( light sleep), ஆழ்ந்த உறக்கம்(deep sleep), REM (rapid eye movement) உறக்கம் – இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் அதே வரிசையில் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு சுழற்சியும் 90 முதல் 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு வருவது அரிது. (கும்பகர்ணன் இந்த ஆழ்ந்த நிலை உறக்கதில் ஆறு மாதம் கூட இருந்திருக்கிறானே – அது என்ன மாதிரி ஸ்லீப் சைக்கிள் என தூக்கம் வராதவர்கள் ஆராயலாம்!).  REM உறக்க நிலையில்தான் கனவுகள் வருகின்றன. இதில்,  “அடிச்சுப் போட்டா மாதிரி தூங்கினேன்யா!” என்கிற ஆழ்ந்த உறக்க நிலைதான், நமக்குத் தேவையான ஓய்வையும், ஆரோக்கியத்தையும் தரவல்லது.  

தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவது அவசியம். மறுநாளின் சுறுசுறுப்புக்கும், புத்துணர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது! இரவில் தூக்கம் குறைந்தால், மறுநாள் பகல் பொழுதில் தூக்கம் வரும் வாய்ப்புகள் அதிகம். பலஹீனம், எளிதில் கோபம் அடைதல், மன உளைச்சல் ஏற்பட்டு, பகல் பொழுதில் ஒரு வித இறுக்கமும், எரிச்சலும் தோன்றுவதும் சாத்தியமே! பல வாகன விபத்துகள், இந்தப் பகல் நேர துக்கத்தினால் ஏற்படுபவையே. இரவு முழுதும் லாரி ஓட்டுபவர்கள், விடியற்காலையில் தங்களையறியாமல், சில நொடிகள் தூங்கிவிடுவதுதான் அதிகாலை சாலை விபத்துகளுக்குக் காரணம் என்கிறது ஓர் ஆய்வு.      

தூக்கம் வராமல் அவஸ்தைப் படுவோரின், ‘இத்தனை மணி நேரமா தூங்கவில்லையே’ என்கின்ற கவலையே அவர்களது தூக்கத்தைத் துரத்திவிடும்! சிறிது நேரத்திற்கொருதரம் – 10.00, 10.30, 10.38, 11.15 என – டைம் பார்த்து, தூங்கும் நேரத்தைக் கணக்கிடுவதிலேயே இரவு முழுதும் கழிந்துவிடும். (சரியாக கணக்கு வராதவர்கள், கால்குலேட்டர்களை உபயோகிக்கலாம்!). தூங்கி, விழித்துக் கடிகாரம் பார்த்தால், ‘சே.. அப்படியே இருக்கு…’. !  சிலர், காலை சீக்கிரம் எழுந்திருக்க அலாரம் வைத்துவிட்டு, தூங்காமல், ‘எப்போது அடிக்கும்’ எனக் காத்திருப்பதும் உண்டு!

ஏதாவது ஒரு பொசிஷனில் – கை கால்களை மடக்கியபடி, ஒருக்களித்துப் படுத்தபடி, நேராக சீலிங் ஃபானைப் பார்த்தபடி, குப்புறப் படித்தபடி (பெரிய தொந்தி இல்லாதவர்கள் மட்டும் முயற்சிக்கலாம்!) – தூக்கம் வருகிறதா என்று அலைபாய்வதில், அருகில் இருப்பவர் தூக்கத்தைக் கெடுத்த புண்ணியம் கிடைக்கலாம்!

ஒல்லித் தலகாணி, குண்டுத் தலகாணி, ஒரு பக்கம் மட்டும் மேடான ‘சர்வைகல் ஸ்பாண்டைலோசிஸ்’ ஸ்பெஷல் தலகாணி, கழுத்தைப் பக்கவாட்டில் அசைக்கமுடியாதபடி, அரைச் சந்திர வடிவ தலகாணி, ஒத்து ஊதுபவர் போல ஊதிப் பெருக்கிய ‘ஏர்’ பில்லோ எனப் பலவகையான தலையணைகளுக்கும் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, நம்மைத் தழுவ மறுக்கும் தூக்கம் துயரமானது! 

தூக்கம் வராமல், அடிக்கடி எழுந்து சென்று பாத்ரூம் செல்வது ஒரு தொல்லை என்றால், “மெதுவா, பார்த்து… பிடித்துக்கொண்டு உட்கார்ந்து போங்கள்” என்னும் மனைவியின் அரைத்தூக்க எச்சரிக்கை ஒலி, அதைவிட எரிச்சலூட்டுவது!

தூக்கத்தில் கை கால்களை வேகமாக ஆட்டுவது ஒரு வகை வியாதி – அனிச்சையான இவ்வகை ஆட்டங்களினால், தன்னையோ, அருகில் படுத்திருப்பவரையோ காயப்படுத்திவிடும் அபாயம் உண்டு! முதல்நாள் கோபத்தின் தொடர்ச்சியாக, தூக்கத்தில் அடிபடும் கணவர்களோ அல்லது மனைவிகளோ கவனமாக இருக்க வேண்டி, பொது நல சேவையாக இது சொல்லப்படுகின்றது!

தூக்கத்தில் நடக்கிற வியாதி – சோம்னாம்புலிசம் – என்பது, தூக்கம் கலையாமல், தன் சுய நினைவு இல்லாமல், தூக்கத்திலிருந்து எழுந்து நடப்பது! அந்த சமயத்தில் அவர்கள் செய்வது எதுவும் அவர்களுக்கு நினைவில் இருக்காது.

பொதுவாக 8 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளையே இந்த வியாதி அதிக அளவில் பாதிக்கும்.

சில குடும்பங்களில், மரபணு சார்ந்து இந்நோய் வரக்கூடும். அத்துடன், தூக்கமின்மை, அசதி, மன அழுத்தம் ஆகியவற்றாலும் வரக்கூடும். சில ஜுரங்கள், சில மருந்துகளாலும் தூக்கத்தில் நடப்பது சாத்தியமே. சோம்னாபுலிசம் அடிப்படையில், பல திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் தூக்கத்தில் நடப்பது மட்டுமே உண்மை, மற்ற சம்பவங்கள் எல்லாம் கதாசிரியரின் கற்பனையே!!

அருகில் மறுபாதி அமைதியாகத் தூங்குவதும், கல்யாண வீட்டில் சத்தத்துக்கிடையில் தூங்குவதும், ரயில், பஸ் பயணங்களில் ஏறி அமர்ந்தவுடன் தலை சாய்த்து (பெரும்பாலும் அருகில் முழித்துக்கொண்டிருக்கும் நம் தோள் மீதாக இருக்கும்!) தூங்கி விடுவதும், ப்ளாட்ஃபாரத்தில் டிராஃபிக் இரைச்சலில் சலனமின்றித் தூங்குவதும், அவரவர் வாங்கி வந்த வரம்! காது, மூக்கு வழிப் புகை விடுவதில் பலனில்லை!! 

இரண்டு பக்கமும் ஆழ்ந்த நித்திரையில், ‘ஜுகல்பந்தி’ குறட்டை ஒலி, நம் நித்திரைக்கு ஊதப்படும் சங்கொலி!

சரியான தூக்கத்துக்கு, ஓரளவுக்கு உதவக்கூடிய சில ‘டிப்ஸ்’:

  1. காப்பி, டீ போன்ற ஸ்டிமுலேடிங் பானங்களை மாலை 6 மணிக்கு மேல் தவிர்த்து விடுங்கள்.
  2. டி.வி., செல் போன், லேப் டாப், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் நண்பர்களுக்குத் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக விடை கொடுத்துவிடுங்கள். (முக்கியமாகப் பாம்புக் கண்களுடன் வரும் ஹீரோயின், வில்லிகள் பயமுறுத்தும் சீரியல்களைத் தவிர்த்தல் நலம். செய்திகள், முகநூல் அக்கப்போர்கள், கட்சி, ஜாதி சார்புடைய விவாதங்கள் போன்றவற்றைப் படுக்கப் போகுமுன் தவிர்ப்பது அவசியம்!)
  3. தூங்காவிட்டால் வரும் உடல்நலக் கேடுகளை – obesity, strokes, heart attacks, anxiety, depression போன்றவைகளை எண்ணித் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!
  4. கூடிய வரையில், படுக்கும் நேரத்தையும், காலையில் விழிக்கும் நேரத்தையும் சரியாகக் கடைபிடிக்கவும்.
  5. படுக்கையறை அதிக குளிரூட்டப்பட்டதாகவோ அல்லது அதிக வெப்பமுடனோ இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
  6. படுப்பதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உடற்பயிற்சிகளை முடித்துக்கொள்ளவும்.
  7. தூங்குவதற்காக ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்க்கவும் – ஆல்கஹால் தூக்க வியாதிகளையும், தூக்கமின்மையையும் தரவல்லது!
  8. இனிமையான இசையை – வீணை, ஃப்ளூட் போன்ற instrumental இசையை – மெல்லியதாகத் தூங்கும் அறையில் கசிய விடுங்கள்!

அப்படியும் தூக்கம் வரவில்லையா? பால்கனியில் அமர்ந்து, வானத்து நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குங்கள்!

70 வருடங்களுக்கு முன் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் “திகம்பர சாமியார்” (வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய துப்பறியும் நாவல் – த்ரில்லர் – 11 வேடங்களில் நம்பியார் கதாநாயகனாக நடித்த சூப்பர் படம்; இன்றும் வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்!) படத்தில், ஒருவர், நான்கு நாட்கள் தூங்காமல் இருந்தால், ஐந்தாம் நாள் அவரிடமிருந்து ரகசியங்களை வாங்கி விடலாம் என்பதை மிக அழகாகக் காட்டியிருப்பார்கள்! டி.பாலசுப்ரமண்யத்தை நாட்டியம், பாடல் என ஆசைகாட்டி, தூங்கவிடாமல் செய்து, அவரிடமிருந்து உண்மைகளை வாங்கி விடுவார்கள்! ஜாக்கிரதை, தூங்காமல் இருந்து, ரகசியங்களையெல்லாம் சொல்லிவிடாதீர்கள்! 

தூக்கமே வரவில்லையென வருத்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு டாக்டர் ஒரு வழி சொன்னார். ”கண்ணை மூடிப் படுத்து, ஒன்று, இரண்டு என எண்ணிக்கொண்டிருங்கள் – தானாகத் தூக்கம் வந்துவிடும்”. மறுநாள் காலை மருத்துவமனை வந்த டாக்டர், நர்சிடம் அந்த நோயாளி பற்றி கேட்க, ‘ஒன்றும் குழப்பமில்லை. ஏதோ மந்திரம் முணு முணுத்தபடி அவர் படுத்திருந்தார்’ என்றார் நர்ஸ். நோயாளியின் படுக்கையருகே சென்ற டாக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது….. கண்ணை மூடியபடி அந்த நோயாளி எண்ணிக் கொண்டிருந்தார் ..’ பதினோரு இலட்சத்து, எண்பத்தி மூணாயிரத்து, அறுநூற்றி இரண்டு….’ – தூக்கம்தான் வரவில்லை!