அட்டைப்படம் -ஏப்ரல் 2021

 

          (அட்டைப்படம் வடிவமைப்பு: ஸீன் )

 

எப்படி இருக்கிறது இந்தப் புத்தகச் சாலை ?

சாலை அல்ல நூலகம்! 

அம்மாடியோவ் ! எத்தனை எத்தனை புத்தகங்கள்?

குவிகம் குறும் புதினம்

குவிகம்  குறும் புதினம் திட்டம்  

 

குவிகம் அமைப்பு மின்னிதழ் , பதிப்பகம் , அளவளாவல் என்ற கிளைகளில்  படர்ந்து   வருவது அனைவருக்கும் தெரிந்ததே! 

தற்போது குறு நாவல்களை அச்சில்  சிறப்புப் பதிப்பு வகையில்  ( Limited Edition)  குறும் புதினமாக மாதந்தோறும் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளோம்

சிறுகதை, புதினம் இரண்டிற்கும் தளங்கள் நிறைய உள்ளன. ஆனால்  குறும்  புதினம்  என்கிற குறு நாவலுக்குக்கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு!  அந்த வெற்றிடத்தை நிரப்பவே  இந்தத் திட்டம்!

இந்தத் திட்டத்தை எப்படிச் செயலாற்றப்  போகிறோம்? 

இது அங்கத்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படும்  திட்டம்.

அதன்படி 100 -120 பக்கங்களில் இரு  குறு   நாவல்களை ஓர்   அழகான  புத்தகமாக  அச்சடித்து  மாதா மாதம் அங்கத்தினர்களுக்கு    வழங்க இருக்கிறோம்.

எப்படிப்பட்ட குறு நாவல்கள்?

  1. பிரபல ஆசிரியர்கள் எழுதியவை

  2. குறு நாவல் போட்டிகளில் பரிசு பெற்றவை 

  3. பிரபல நாவல்களைச் சுருக்கி குறு நாவலாக மாற்றப்பட்டவை

 4. புதியதாக நாமே போட்டி வைத்துத் தேர்ந்தெடுத்தவை 

 5. அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கும் / எழுதும் குறு நாவல்கள்             

எந்தக் குறு நாவல்களை வெளியிடலாம் என்பதை அதற்கென்று அமைக்கப்பட  குவிகம் குழு தீர்மானிக்கும்.

சமூகம்  சரித்திரம், நகைச்சுவை, விஞ்ஞானம் , பெண்ணியம் போன்ற வகைகளில் (genre) அமைந்த குறு நாவல்களைத் தர இருக்கிறோம்.  

போற்றிப் பாதுகாக்க  வேண்டிய   தரமான இலக்கியத்தை  அங்கத்தினர்களுக்குத்  தருவதே எங்கள் நோக்கம். 

ஒவ்வொரு மாதமும் இரண்டு குறுநாவல்கள் வெளியாகும்.அதில் ஒன்று பிரபலமான குறு நாவல்களை அனுமதியுடன் பிரசுரிக்க உள்ளோம்.

மற்றொன்று எழுத்தாளர்கள்  குவிகத்திற்காக எழுதப்பட்ட புதிய  படைப்பு!

இந்தப் புதிய குறு நாவல்ளைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு பரிசுப் போட்டியும் அமைத்திருக்கிறோம்.

பரிசுகள்:மூன்று சிறந்த குறு நாவல்களுக்கு Rs.5000/- Rs.3000/- Rs. 2000/-என்று  சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளோம்.அவற்றைத் தவிர பிரசுரிக்கப்படும் அனைத்துப்  படைப்புகளுக்கும் சன்மானம் வழங்கப்படும்.

போட்டிக்கான  விதிமுறைகள்:

இலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம் கொண்ட குறு நாவல்களை வாசர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்!

குறு நாவல்  5000 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கவேண்டும்

இதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.

சமூகம், சரித்திரம். நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.

ஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் பிரசுரிக்கப்பட்ட 12 குறு நாவல்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகள் வழங்கப்படும் .ஏப்ரல் 22 புத்தாண்டில் முந்திய வருடத்திற்கான பரிசுகள் வழங்கப்படும்.

படைப்புகள் kurumpudhinam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ‘word’ கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்ப கடைசித் தேதி 30/06/2021.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்று போட்டிகள் நடத்தி குறு நாவல்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.

வாருங்கள் புதிய இலக்கியம் படைப்போம் !

———————————————————————

இத்திட்டம்பற்றி உங்கள்  ஆலோசனைகள்

( எந்த வகை குறுநாவல்கள் படிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எழுதலாம் ) 

1.

2.

3.

 

நண்பர்களே!   படைப்பாளிகளே!

தமிழ்ப் புத்தாண்டு முதல் (14.04.2021)  குவிகம் குறும் புதினம் மாத இதழ் தொடங்கி விட்டது  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

பூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா 

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விடயங்கள்.. - Visar News

“பாட்டி, நா கண்ணாடி போட்டுண்டு இருக்கேன். அப்பா போட்டுண்டு இருக்கா. அம்மா போட்டுண்டு இருக்கா . நீ மட்டும் ஏன் கண்ணாடி போட்டுக்கலே?” என்று கேட்டான் சுந்தா.

“நீங்கள்லாம் போட்டுண்டா ஷ்டெயிலா இருக்கே! பாட்டிக்கு ஷ்டெயில் எல்லாம் வேண்டாம்னு  வச்சுட்டார் அவர்” என்றாள் அபயம்.

“அவர்னா யாரு? உங்க டீச்சரா?” 

“ஆமா.அங்கேர்ந்து என்னைப் பாத்துண்டு இருக்கற டீச்சர்தான்” என்று மேலே கையைக் காட்டிப் பாட்டி சிரித்தாள்.

“உங்க சார் ரொம்ப உசரமா? எங்க டீச்சர் குட்டச்சி.”

“அப்பிடியே வாயிலே போடுவேன்” என்று சமையல் உள்ளிலிருந்து கத்தினாள் சாலா. “அப்படீல்லாம்  பெரியவாளைப் பேசக் கூடாதுடா” என்றாள் பாட்டி.

“எங்க டீச்சர் மட்டும் என்னை  டேய் கண்ணாடின்னு கூப்பிடறா?” என்று முறையிட்டான்.

பாட்டி கூடத்தில் உட்கார்ந்து கொண்டு மடித்த இடதுகாலைத் தடுப்பாக வைத்து மார்பு மேல் பலகையை சாய்த்து வைத்துக் கொண்டிருந்தாள். நார்மடிப் புடவை உடம்பையும் முண்டனம் செய்யப்பட்ட தலையையும் இழுத்து மூடியிருந்தது. இடது கை பாட்டிற்கு பருப்பைப் பலகை மேலிருந்து கீழாகத் தள்ளி விட வலது கை அதைப் பிடித்துப் பிடித்துத் தடவியபடி நீள அகலமாய்த் தள்ளி விட்டுக் கொண்டிருந்தது. தரையில் விரித்து வைத்திருந்த நியூஸ் பேப்பரில் ராகுல் காந்தி மீது துகள்களும் தூசிகளும் ஓரத்தில் விழுந்து கிடக்க மீதி இடத்தில் பருப்பு முத்துக்கள் ஓடி நின்றன.

“பாட்டி எதுக்கு டாலை இப்படிப் பண்றே?” என்று சுந்தா கேட்டான்.

“எனக்குப் பொழுது போகணுமோன்னோ” என்றாள் பாட்டி. “டால்னா என்னடா அது  இங்கிலீஷா?”

“ஐயோ பாட்டி!” என்று சிரித்தான் பேரன். “அது இந்தி!  உனக்குத் தெரியாதா? எங்கப்பாக்கும் தெரியாது.”

“ஆமா. நரசி என்ன பண்ணுவன் பாவம்! அவன் படிக்கறச்சே புஸ்தகத்தையே தீ வெச்சு படிக்காதேன்னு  ஆர்ப்பாட்டம்னா செஞ்சா! ஊரே பத்தி எரிஞ்சதே” என்றாள் பாட்டி.

“எங்கம்மாக்கு இந்தி நன்னா தெரியும்” என்றான் சுந்தா.

“அவ பம்பாய்க்காரியாச்சே!”

பேரன் பாட்டியை நெருங்கி வந்தான். 

“ஒதுங்கி உக்காரு. நீ என் மேலே பட்டா நா மறுபடியும் கெணத்தங்கரைக்குப் போகணும்.”

சுந்தா அவள் மேல் படாத அளவுக்கு நெருங்கி “நீ கிராமமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“யார் சொன்னா?”

அவன் சமையலறையைச் சுட்டிக் காட்டினான். 

உயிர் தேடும் உறவு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements

தீடீரென்று சத்தத்தைக் காணோமே என்று சமையல் உள்ளிருந்து வெளியே வந்தாள் சாலா. சுந்தா கனகாரியமாய்ப்  பருப்புக் குமியலில் கையை விட்டு அளைந்து கொண்டிருந்தான்..பிறகு  அவளைப் பார்த்துச் சிரித்தான். குறுகுறுவென்ற சிறிய முகத்தில் வரிசைப் பற்களின் ஒளி பாய்ந்து ஆளை மயக்கும் புன்னகை.

“இன்னக்கி ஹோம் ஒர்க்குக்கு ஸ்நானத்தைப் பண்ணிட்டியா? எழுந்திருடா. பாட்டியோட ராயசம் பண்ணினது போறும். போய் ரெயின்போவையும் தாமஸ் ஆல்வா எடிசனையும் நெட்ருப் பண்ணு. போன தடவையே ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று சாலா விரட்டினாள்.

சுந்தா முனகிக் கொண்டே எழுந்து போனான்.

“எதுக்கு அவனை ஏதோ ஐ ஏ எஸ் பரிட்சைக்குத் தயார் பண்ணற மாதிரி படுத்தறே?” என்றாள் மாமியார் மெல்லிய குரலில்.

“ஏன் அவனும் அப்பா மாதிரி படிச்சா போறும்ன்னு  உங்க நினைப்பா?” என்று இழுத்து விட்டாள். பழுக்கக் காய்ச்சிய கரண்டியின் நெடியடிக்கும் வார்த்தைகள்.   

வேலை முடிந்து பலகையைப் பக்கத்திலிருந்த சுவர் ஓரமாகச் சார்த்தினாள் பாட்டி. நியூஸ் பேப்பருக்கு அருகே வைத்திருந்த சம்புடத்தை  எடுத்து அதில் சுத்தப்படுத்தப்பட்ட பருப்பைப் போட்டு மூடினாள். நியூஸ் பேப்பரோடு குப்பையையும் தூசியையும்  கட்டித் தனியே வைத்தாள். சுவரில் இருந்த கடிகாரம் எட்டு தடவை ‘கர் கர்’ என்று காறிற்று. நரசி குளிக்கப் போயிருந்தான்.  

இவ்வளவு நேரம் மடித்து வைத்திருந்த கால் மரத்துப் போயிருந்ததால் அவள் காலை நீட்ட சிரமப்பட்டாள். நாலைந்து நிமிஷம் ஆகும் ரத்தம் ஓடியாடி சரிப்பட்டு  வர.  அவள் பார்வை கூடத்தைத் தடவிற்று. சாய்வு நாற்காலியில் பேப்பர் படித்து விட்டு அதை அங்கேயே  எறிந்து விட்டு நரசி போயிருந்தான். பேப்பரிலிருந்து இரண்டு தாள்கள் நாற்காலியின்  கீழ் பரத்திக் கிடந்தன. முன்தினம் விளையாடி விட்டு சுந்தா கொண்டு வந்து போட்ட கிரிக்கெட் பேட்டும் பந்தும் மூலையில் கிடந்தன. டெலிபோன் ஸ்டாண்டுக்குப் பக்கத்திலிருந்த ஸ்டூல் மல்லாக்கக் கிடந்தது.

கால் நிலைக்கு வந்தவுடன் மெதுவாக எழுந்து போய் எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்தலாம் என்று பாட்டி நினைத்தாள். அப்போது அவனுடைய ஸ்டடி ரூமிலிருந்து தலை தெறிக்க ஓடி வந்தான் சுந்தா.

“எதுக்குடா இந்த ஓட்டம்?” என்றாள் பாட்டி.

குடிக்க வேண்டும் என்று வாயருகில் விரலை வைத்துச்  சைகை காட்டியபடி கூடத்தின் ஒரு மூலையில் இருந்த பானையை நோக்கிச் சென்றான். பானையின் மீது வைத்திருந்த டம்ளரை எடுக்கும் போது அது கை தவறிக் கீழே விழுந்து அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது.

“என்ன சத்தம்?” என்று கேட்டுக் கொண்டே சாலா அங்கே வந்து விட்டாள். அவனைப் பார்த்ததும் “ஓஹோ, ராஜாவுக்குத் தாகம் எடுத்துடுத்தோ? கழிச்சால போறவன் எப்படியெல்லாம் ஏமாத்தறான்” என்று திட்டிக்  கொண்டே. வேலைக்காரி வருகிறாளா என்று பார்க்க    வாசலுக்குச் சென்றாள். திரும்பி வரும்போது அவள் பார்வை கூடத்தைச் சுற்றியது. தரையில் கிடந்தவைகளைத்  திட்டிக் கொண்டே எடுத்து வைத்தாள். “எனக்கும் உக்காந்துண்டு பேசாம பாத்துண்டு இருக்க முடியறதில்லே. ஒழிச்சு ஒழிச்சே நான் தேஞ்சு போயிடுவேன்” என்று கிரிக்கெட் பேட் இருக்கும் இடத்திற்குப் போனாள். உட்கார்ந்திருந்த கிழவி சிரமப்பட்டு எழுந்து தரையில் கிடந்த பேப்பர் பக்கங்களை எடுத்தாள்.

“நீங்க எதுக்கு எழுந்தேள்? தேமேன்னு உக்காருங்கோ. அவர் வேறே குளிச்சிட்டு வரப்போ நீங்க குனிஞ்சு நின்னேள்னா என்னைப் பாத்துக் கத்துவார். இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்றாள் சாலா. சுந்தா அவன் தாயையும் பாட்டியையும் பார்த்துக் கொண்டே நின்றான். 

பாட்டி கையில் எடுத்த பேப்பர் தாள்களைச் சாய்வு நாற்காலி மேல் வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் மீண்டும் தரையில் உட்கார்ந்து கொண்டாள். 

“இந்த வேலைக்காரியை ஒழிச்சுக் கட்டிடணும். முக்காவாசி வேலையை நான் முடிச்சதுக்கப்பறம் மஹாராணி பூவும் கொண்டையுமா சினிமாக்காரி மாதிரி அசைஞ்சு அசைஞ்சு வருவா” என்றபடி சாலா டெலிபோன் அருகே குப்புறக் கிடந்த ஸ்டூலை எடுத்து நிமிர்த்தி வைத்தாள்.அப்போது வேலைக்காரி சுந்தரி வீட்டுக்குள் வந்தாள். சாலா திட்டியது அவள் காதில் விழுந்திருக்கக் கூடும். ஆனால் அதைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் சாலாவைப் பார்த்து “எதுக்கும்மா நீ இதெல்லாம் பண்ணுறே? விடு, நான் பாத்துக்கறேன். உனக்குதான் ஆயிரம் வேலை சமையக்கட்டுலே இருக்கே.பாவம்!” என்றாள்.

“நீ ஒருத்தி இருக்கியோ, நான் பொழைச்சேனோ” என்று சாலா அங்கிருந்து நகர்ந்தாள்.

சுந்தா வாய் விட்டுச் சிரித்தான்.

“என்னடா இளிப்பு வேண்டியிருக்கு? போ. படிக்கிற வழியைப் பாரு” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள் சாலா. பிறகு அவள் பாட்டியைப் பார்த்தாள்.  பாட்டி தரையில் கிடந்த ஒரு ஈர்க்குச்சியைப் பொறுக்க முயன்று கொண்டிருந்தாள்.

டிரஸ் செய்து கொண்டு கூடத்துக்கு  வந்த நரசிக்கு சாலா டிபன் எடுத்துக் கொண்டு வந்தாள். 

“கொல்லையிலே ஓணத்திருக்கற அம்மாவோட புடவையை நீ பாத்தியோ?” என்று மனைவியிடம் கேட்டான்.

“அது காஞ்சீவரம் பட்டா என்ன? நார்மடிப் புடவையைப் போய் சாலா திடீர்னு எதுக்குப் பாக்கணும்?” என்று பாட்டி சிரித்தாள்.

சாலா “எதுக்குக் கேக்கறேள்?” என்றாள்.

“கிழிஞ்சு கிடக்கு” என்றான். 

சாலாவின் முகம் மாறுவதையும் உதட்டைக் கடித்துக் கொண்டு நிற்பதையும் பாட்டி பார்த்தாள்.

“நன்னாயிருக்குடா நீ சொல்றது” என்று பிள்ளையைப் பார்த்துச் சொன்னாள் பாட்டி. “எதோ ஒரு ஓரத்திலே கிழிஞ்சு இருக்கு. அதுக்காகக் கல்லு மாதிரி இருக்கற புடவையைத் தூக்கி எறிஞ்சுடுங்கிறாயா?” 

“சாலா , நீ காமதேனு செட்டியாருக்குப் போன் பண்ணி ஒரு ஜோடி நார்மடி இன்னிக்கே அனுப்பச் சொல்லு. திடீர்னு அண்ணா அம்மாவைப் பாக்கறேன்னு வந்து நிப்பான். ‘நா வாங்கிக் கொடுத்த  புடவையையே எங்கம்மா கிழிசலாக் கட்டிண்டு நிக்கறா. எந்தம்பிக்கு ரெண்டு புடவை அம்மாவுக்கு வாங்கித் தரக் கூட  நேரமில்லே’ன்னு ஊர் பூரா சொல்லிண்டு அலைவான். அப்பப்போ நீயும் இதெல்லாம் பாத்து வச்சுக்கணும்” என்று சொல்லியபடி ஒரு யுத்த களத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போனான். சாலா மாமியாரை முறைத்துப் பார்த்து விட்டு உள்ளே போனாள். 

பத்து நிமிஷம் போயிருக்கும்.சமையலறையில் சாலாவின் உரத்த குரல் கேட்டது. சமையல் கட்டிலிருந்து  வாசல் வரை நடந்து போகும் குரல்.

“நானென்னமோ வாங்கிக் குடுக்கறதுக்கு நடுவிலே நிக்கற மாதிரின்னா இந்த மனுஷன் கத்திட்டுப் போறது. தெனைக்கும் ஒவ்வொருத்தர் துணிலேயும்  ஓட்டை இருக்கா கிழிசல் இருக்கான்னு நான் போய்ப் பாத்துண்டுஇருக்கணுமா?  கிழிஞ்சுடுத்து, புதுசு வாங்கிக் கொடுன்னு என்கிட்டே சொல்ல வேண்டாம். நான் மூணாம் மனுஷி. வெளியே இருந்து வந்தவ. பெத்த பிள்ளைகிட்டே சொல்றத்துக்கு என்ன?  ஊமைக் கோட்டானா இருந்து நல்லவ, பாவம்னு பேர் வாங்கிக்குங்கோ எல்லாரும்  நான் ஒரு பைத்தியம். கத்திண்டு கிடக்கறேன்.” 

சாலாவுக்கு சாதாரணமாகவே கீச்சுக் குரல். அது கோபத்தின் உக்கிரத்தில் பெரிதாக எழும்பும் போது ஏதோ தகரத்தட்டில் ஆணியை வைத்துக் கீச்சுவது போல இருக்கும். “இதுக்காகவே சின்னவன் பொண்டாட்டிக்கு கோபம் வராம நாமெல்லாம் பாத்துக்கணும்” என்று ஒரு தடவை சாலா ஊரிலில்லாத போது நரசியின் அண்ணா சொல்லிச் சிரித்தான். 

“எதுக்கும்மா இப்பிடிக் கஷ்டப்படறீங்க?” என்று சுந்தரி அவளைச் சமாதானப்படுத்தும் குரல் கேட்டது.

“இந்த குடும்பத்துக்கு வந்ததுலேந்து கஷ்டத்தைத் தவிர வேற என்னத்தை நான் கண்டேன்? வந்து மொதல் பத்து வருஷம் நான் படாத பாடா? ரெண்டு புடவை ரெண்டு ரவிக்கை வாங்குவா. அதுவும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை. சம்பளம் கொடுக்க வேண்டாத சமையக்காரிக்கு இதுவே ஜாஸ்திதானே. கல்யாணத்துக்கு எங்கப்பாம்மா வாங்கிக் கொடுத்த கூரைப் புடவையைத்தான் நான் எந்த ஊர்லே, எந்த சொந்தக்காராளாத்திலே விசேஷம் நடந்தாலும் கட்டிண்டு போகணும். ரெண்டாவது பட்டுப்புடவைன்னு ஒண்ணு கிடையாது. ‘பச்சை நீலத்திலே உடம்பு, அதுக்கு மாங்கா போட்ட விராலி மஞ்சள் பார்டர் வச்சு ஒரு புடவையை எங்காத்து விசேஷத்திலே யாராவது பாத்தேள்னா அது சாலாதான்’ன்னு என் ஒண்ணுவிட்ட நாத்தனார் ஒருத்தி என்னையும் வச்சுண்டு எல்லார் கிட்டேயும் சொல்லுவா. மானம் போகும்.  அப்போ புடவையும், நகையுமா உடம்பு பூரா போட்டுண்டு ஆத்து நிர்வாகம் பண்ணின பெரியவாளுக்கு இதெல்லாம் கண்ணிலேயே படலையே . அப்போ இந்தப் புருஷர் எங்கே புத்தியை கடன் கொடுத்திருந்தார்?”

தன் காதில் விழட்டும் என்றுதான் சாலா பெரிய குரலில் சொல்லுகிறாள்;  ஏற்கெனவே ஊமைக்கோட்டான் என்று சாடி விட்டாள். இன்னும் வேறு வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா?

அபயம் பெங்களூருக்கு பிள்ளையுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரவில்லை. பெரியவன்  திருச்சியில். சின்னவன் பெங்களூரில். யாரையும் உபத்திரப்படுத்தக் கூடாது என்றுதான்  அபயம் திருவையாற்றில் தனியாக இருந்தாள். நடுத்தெருவில் வீடு. இந்தத் தெருவில் வீட்டு வாசல் என்று ஆரம்பித்து அடுத்த தெருவில்கொல்லைப்புறம் அமைந்த வீடுகளை உள்ளடக்கிய தெருவுக்கு நடுத்தெரு என்று பெயர் வைத்தவன் குசும்புக்காரனாக இருக்க வேண்டும். நிலத்திலிருந்து அரிசியும், பருப்பும்,  வருஷா வருஷம் கொண்டு வந்து கொடுத்து விடும் ஒரு ஏமாற்றாத குத்தகைக்காரன் அவளுக்கு இருந்தான். ஒரு ஆத்மாவுக்கு, அதுவும் வயதானவளுக்கு எவ்வளவு வேண்டும்? எனவே அரிசியையும் பருப்பையும் மூட்டைகளில் ஏற்றி முத்துக் கோனார் தனது லாரிகளில் திருச்சிக்கும்  பெங்களூருக்கும்  அனுப்பி விடுவான். மாடுகளை விட லாரிகளில் அதிகம் பணம் கறக்க முடிகிறது என்று அவனும் வியாபாரத்தை மாற்றி விட்டான்.

இரண்டு மூன்று வருஷங்களுக்கு ஒரு முறை அவள் தங்களுடன் சில காலமாவது தங்க வேண்டும் என்று இரு பிள்ளைகளும் அவளைக் கூட்டிச் செல்லுவார்கள். பெரியவன் வீட்டில் அவள் ஆறு மாதம் இருந்தால், சின்னவன் தன்  வீட்டிலும் அதே காலம் அவள் இருக்க வேண்டும் என்பான். இது சாலாவுக்கு உடன்பாடாக இல்லா விட்டாலும் கூட. பெரியவனின் மனைவி சாரதா அவள் வயது தந்த முதிர்ச்சியினாலும், வயதுக்கு வந்து விட்ட இரண்டு பெண்களை  வைத்துக் கொண்டிருந்ததாலும் அபயத்திடம் அனுசரணையாக இருப்பாள். இதை சாலாவால் பொறுத்துக் கொள்ள முடியாது. சாரதா தன் பெண்கள் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் நகை நட்டு எல்லாவற்றையும் அபயத்திடமிருந்து அபகரிக்கவே மாமியாரை மயக்குகிறாள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் பெரியவனும் அவன் மனைவியும் எரிச்சலுற்றாலும், நாளாவட்டத்தில் சாலாவைப் பொருட்படுத்தாமலிருக்கப் பழகி விட்டார்கள். அகண்ட காவேரியின் கம்பீரத்தையும், அலை புரளலையும், இளம் நங்கையின் நாட்டியம் போன்ற பூம்புனலின் அழகையும் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை எதற்குப் பிய்த்தெடுத்து  கரையோரமாக மிதந்து செல்லும் கழிவுகளைக்  காண உபயோகிக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் தீர்மானித்து விட்டவர்கள் போலிருந்தனர்.  

இப்போதும் அபயம் பெங்களூருக்கு வந்து இரண்டு மாதமாகிறது.அவ்வப்போது மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்குவதற்கு சாலா சளைக்காமல்தான் இருக்கிறாள். 

ஆறு மணி இருக்கும். அபயம் நன்றாக இருட்டும் முன் கோயிலுக்குப் போய்விட்டு வந்து விடலாம் என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் போய் விளையாடி விட்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் சுந்தா. அவளைப் பார்த்ததும் “பாட்டி இரு. நான் போய் மூஞ்சி அலம்பிண்டு வந்து உன்னைக் கோயிலுக்குக் கூட்டிண்டு போறேன்” என்று சிரித்தபடி உள்ளே ஓடினான்.

அப்போது சாலா அங்கே வந்தாள். “எங்கேடா கிளம்பியாறது? நாலு மணிக்கு விளையாடறேன்னு போயிட்டு ஆறு மணிக்குத்தான் உள்ளே நுழைஞ்சே. இப்ப கோயிலுக்குக் கிளம்பியாச்சா? இப்போ ஊரெல்லாம் சுத்திட்டு ஏழு மணி எட்டு மணிக்கு வருவே. வந்ததும் உனக்குப் பசிச்சிடும் ” என்று பொரிந்தாள்.

“கோயிலுக்குப் போயிட்டு சீக்கிரம் வந்து படிக்கிறேம்மா” என்று சுந்தா கெஞ்சினான்.

“அதெல்லாம் எங்கையும் போக வேண்டாம்.போய்ப் புஸ்தகத்தை எடு” என்று அதட்டினாள்.

“நா கோயிலுக்குப் போகக் கூடாதுன்னா நா படிக்க மாட்டேன் போ” என்றான் கெஞ்சல் மறுக்கப்பட்ட கோபத்தில்.

“என்னடா நாயே? எதுத்துப் பேசற அளவுக்கு அவ்வளவு கொழுப்பு ஏறிடுத்தா உனக்கு? பெரியவான்னு ஒரு மட்டு மரியாதை கிடையாதா? துரை படிக்க மாட்டாரோ?” என்று அவனருகே சென்று கன்னத்தில் ‘பளா’ரென்று அறைந்தாள். வலியில் சுந்தா ஓவென்று கதறி அழ ஆரம்பித்தான்.

“வாயை மூடு” என்று சாலா அவனை மறுபடியும் அடிப்பதற்குக் கையை ஓங்கினாள்.        

“அடிக்காதே சாலா. குழந்தைக்கு சமாதானமா ரெண்டு வார்த்தை சொன்னாப் போச்சு. அடிச்சா இன்னும் பிடிவாதம்தான் ஜாஸ்தியாகும்” என்றாள் பாட்டி.

“நீங்க சித்தே பேசாம இருக்கேளா? ரெண்டு மாசமா செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் சீரழிஞ்சு போயிருக்கான்” என்றாள். சுந்தா அழுது கொண்டே அவனுடைய அறைக்குள் ஓடினான். அபயத்துக்கு வெளியே போக மனதில்லாமல் போய்விட்டது. குழந்தை உள்ளறையில் விசும்புவது அவள் மனதைக் கரைத்தது. 

ஆறரைக்கு நரசி ஆபிசிலிருந்து வந்தான். சாலா அவனுக்குக் காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.  நரசி சாலாவிடம் “பொடியன் எங்கே? விளையாடப் போனவன் இன்னும் வரலையா?” என்று கேட்டான்.

வாசல் ரூமிலிருந்து இருமும் சத்தம் கேட்டது!

“அவன் படிச்சிண்டிருக்கான்” என்றாள் சாலா. 

காப்பியைக் குடித்து விட்டு “செட்டியார் புடவைக்கு என்ன சொன்னார்?” என்று கேட்டான்.

“கடைப்பையன் இன்னிக்கி லீவாம். நாளைக்கி அனுப்பறேன்னார்.”

“நாளைக்கு வேணும்னுதானே இன்னிக்கிக் கேட்டது?” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தான். “ஏழுதானே ஆறது. வா. ஒரு வாக் மாதிரி போயிட்டு வாங்கிண்டு வந்துடலாம். எய்ட்த் கிராஸ்தானே?” என்று எழுந்தான். பிறகு நினைவுக்கு வந்தவன் போல”அம்மாவுக்குப் பலகாரம்?” என்று கேட்டான்.

 “உப்புமா கிண்டி வச்சிருக்கு” என்றாள் சாலா.

அவர்கள் இருவரும் வாசல் ரூமை நெருங்கும் போது சுந்தா வெளியே வந்து நின்றான். “நீயும் வரியாடா?” என்று நரசி அவன் கையைப் பிடித்துக் கொண்டான். மூவரும் வெளியே வந்து நடந்தார்கள்.

“ஏண்டா ஒண்ணும் பேசாம என்னவோ மாதிரி இருக்கே?” என்று நரசி சுந்தாவிடம் கேட்டான். பதில் வராததால்  மனைவியைப் பார்த்தான்.

“ஒண்ணுமில்லே” என்றாள் சாலா.

“என்னை அடிச்சிட்டா” என்று லேசாக விசும்பினான் சுந்தா.

“ஆமா.படிக்காம ஊர் சுத்தினா கொஞ்சுவாளாக்கும்!” என்றாள் சாலா 

“கோயிலுக்குத்தானே போறேன்னேன்” என்றான் சுந்தா.

“எதுக்குக் குழந்தைகிட்டே கைநீட்டறே?” என்று மனைவியைக் கடிந்து கொண்டான் நரசி.

“ஆமா. என்னைத் தூத்திண்டே இருக்கணும் உங்களுக்கு”” என்றாள் சாலா கோபத்துடன்.

நரசி மேலும் பேசினால் பிரச்சனை என்று மௌனமாக நடந்து வந்தான்.

“எல்லாம் உங்க அம்மாவால வர்ற வினை. வயசான காலத்திலே தேமேன்னு ஆத்துலே கிடக்காம கோயில் என்ன வேண்டிக் கிடக்கு கோயில்?  அன்னிக்கிப் பண்ணின அக்கிரமங்களுக்கு எல்லாம் இப்ப ஸ்வாமி கால்லே போய் விழுந்தா சரியாப் போயிடுமா என்ன?” என்றாள் சாலா விடாமல்..

“ஏய் சாலா, இப்ப எதுக்கு இந்த அனாவசியப் பேச்சு எல்லாம்?” என்று நரசி அவளை அடக்க முயன்றான்.

“ஓ உங்களுக்கு அனாவசியமா ஆயிடுத்தா?. அது சரி.  நான்னா வலிக்க வலிக்க அடி  வாங்கிண்டேன். அதுவும் வருஷக்கணக்கா. அதெல்லாம் மறக்குமா எனக்கு?”

“சரி, மறக்காம ஆயுசு பரியந்தம் மனசிலே வச்சு பூஜை பண்ணிண்டிரு.  எங்கம்மா வந்து ரெண்டு மாசம்தான் ஆறது. அதுக்குள்ளே அவளைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளணுமா? இன்னும் ரெண்டு மூணு மாசம் பல்லைக் கடிச்சிண்டு பொறுத்துக்கோ. அவளைக் கொண்டு போய் விட்டுடறேன்.”

அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. செட்டியார் கடையில் புடவைகளை வாங்கிக் கொண்டு, வீடு திரும்ப ஒரு ஆட்டோ பிடித்து விட்டான் நரசி.

மறுநாள் காலையில் வழக்கம் போல எட்டரைக்கு  நரசி ஆபீசுக்குக் கிளம்பிப் போய் விட்டான். ஹாப்காம்ஸில் காய் வாங்கிக் கொண்டு வர சாலா சென்று விட்டாள். பாட்டி கூடத்தில் இருந்த சாய்வு நாற்காலியில்சாய்ந்திருந்தாள். சுந்தா அவளருகில்  வந்து “பாட்டி, நீ ஊருக்குப் போயிடுவியா?” என்று கேட்டான்.

“இல்லியே. நா இங்கே தான் இருக்கப் போறேன். என்னோட ராஜா பரீட்சை பாஸ் பண்ணப்பறம் சொக்கட்டான் பிள்ளையாருக்குப் பாட்டிதானே  சக்கரைப் பொங்கல் நெய்வேத்யம் பண்ணி உனக்கு சாப்பிடக் கொடுக்கணும்?” என்றாள்.

“இல்லே, நீ போயிடுவே!”

பாட்டி பதில் எதுவும் தராமல் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.

“பாட்டி, எங்கம்மாக்கு உன்னை ஏன் பிடிக்கலே?” என்றான் சுந்தா திடீரென்று.

“யார் சொன்னா? அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நேத்திக்கு ராத்திரி கூட எனக்குப் பிடிச்ச உப்புமா அவதானே பண்ணிக் கொடுத்தா?”

அவன் அவளை உற்றுப் பார்த்து “இல்லே நீ பொய் சொல்றே” என்றான்.

அந்த அம்பின் நேரடித் தாக்குதலை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

“சொல்லு, ஏன் எங்கம்மா எப்பப் பாத்தாலும் உன்னோட சண்டை போடறா?” என்றான் மறுபடியும் பேரன்.

“உனக்குச் சொன்னா புரியாதுடா குழந்தை” என்றாள் பாட்டி.

ஆனால் சுந்தா விடவில்லை.”ஏன் பாட்டி எங்கம்மா நீ இங்கே இருக்க வேண்டாங்கறா? எப்பப் பாரு உன்னைத் திட்டிண்டே இருக்காளே?” 

பாட்டி பெருமூச்சு விட்டபடி “நான் அன்னிக்கி செஞ்சதை அவ இன்னிக்கிச் செய்யறாடா” என்றாள்.  

 

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்

          மோகினியும், ஜெகனும் : வணக்கம்.

          அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம்.

          மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

          அழகியசிங்கர் ; ஆமாம்.

          ஜெகன் : இந்தக் கதை அசோகராஜன் என்ற 40வயதுக்காரன் லதா என்கிற 20 வயதுக்காரியை காதலிக்கிற கதை.

          அழகியசிங்கர் : ஆனா லதாவை அசோக் காதலிப்பதாக எந்த இடத்திலும் நாவலில்  கூறவில்லை.

          மோகினி : அசோகராஜன் லதா என்ற வண்ணாத்தியை காதலிக்கிறான்.  அவள் அழகாக இருக்கிறாள்.

          ஜெகன் : அவள் அம்மா இறந்து விடுகிறாள்.  அந்த ஊர்வலத்தில் அசோக் ராஜா லதாவைப் பார்க்கிறான்.  வளர்ந்த பெண்ணாக அவன் கண்களுக்கு அப்போதுதான் அவள் தென்படுகிறாள்.

          மோகினி : அசோகராஜா குறும்படம் எடுப்பவன். நாடகம் அல்லது நதிக்கரை என்ற குறும்படம் முடித்தபோதுதான் லதாவின் அம்மா இறந்து விடுகிறாள்.

          அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் ஒரே பேச்சு.  அதுவும் லதாவுடன்.

          ஜெகன் : ஒரு இடத்தில் அசோகராஜா இப்படிக் குறிப்பிடுகிறான். 

          ஜெகன் படிக்கிறான். . ‘இதோ இந்தக் கணம் கூட நாம் ஒரு அறைக்குச் சென்று உடலுறவு கொண்டு விடலாம்.  ஆனால் அது வேண்டாம்.’

          மோகினி : லதாவை வண்ணாத்தி என்று கூறும் அசோகராஜா தான் எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று எங்கும் கூறவில்லை. ஏனோ நாவலாசிரியர் இதைத் தெரியப்படுத்தவில்லை.

அழகியசிங்கர் : அவனுக்குச் சோரன் கீர்க்கிகார்ட் புத்தகத்தை தோழி கண்ணகிதான் அறிமுகப்படுத்தினாள்.  அசோகராஜாவிற்கு கீர்க்கிகார்ட் புத்தகம் பிடித்திருந்தது.  கொஞ்ச நாட்களாய் கற்பனையில் மார்க்ஸ் என்ற பாத்திரத்தில் உலாவிக்கொண்டிருந்த அவன் திரும்பவும் அசோகராஜா ஆகிவிட்டான்.

          ஜெகன் : அசோகராஜன் தன் வீட்டைவிட்டு வந்தது பற்றிச் சிறப்பாக நாவலில்  குறிப்பிட்டிருக்கிறார். அசோகராஜா அக்கா அந்த வீட்டை எடுத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். இது குறித்து அசோகராஜாவிற்கு எந்த வருத்தமும் இல்லை.அமைந்தகரை குடியிருப்பில் ஒரு சிறிய குடியிருப்பை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கிறான்.பக்கத்தில் மாடர்ன் லான்டிரி இருந்தது.அங்குச் சலவைக்குத் துணிப்போட்ட 3ஆம் நாள் மூன்று வயதுக் குழந்தை லதாவைப் பார்க்கிறான்.

          மோகினி : லதாவின் அப்பா சோமு  அசோகராஜ்ஜைப் பார்த்து தான் முன்புபோல் என் மனைவியிடம் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறான்.

          ஜெகன் : கல்யாணம் ஆகாத அசோகராஜாவிடம் அவன் இதைக்  கூறியிருக்கிறான்.

          மோகினி : சோமு பைத்தியமாகக் காரணமாக அவனுடைய அப்பா வேலுதான் காரணமாக இருப்பார் என்பதை  அசோகராஜா கண்டுபிடித்து விடுகிறான்.

          ஜெகன் : ஒரு உறவு மீறல் வாழ்க்கை முழுவதும் சிதைத்து விட்டது என்கிறாள் லதா. 

          அழகியசிங்கர் : ஒரு கிழவர் தன் மருமகளுடன் உறவு கொள்வது  ஒரு சமூக அவலம் என்கிறார் கதாசிரியர். 

          மோகினி : சோமுவின் பைத்தியம் முற்றி விடுகிறது.  அதற்குக் காரணம் அவன் மனைவியும் அப்பாவும் வைத்துக்கொண்டிருந்த தகாத உறவு. 

          ஜெகன் : கூனி குறுகிப் போய் வேலு வீட்டிலேயே கிடந்திருக்கிறார்.   சோமு தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

          மோகினி : ஒரு குடும்பம் எல்லாவிதங்களிலும் கெட்டுப் போய் விடுகிறது என்பதற்கு உதாரணமாகச் சோமு, சேகர்,  வேலு போன்றவர்களில் தகாத உறவுகள் ஒரு காரணமாக அமைகிறது. 

          அழகியசிங்கர் : இந்த நாவல் எழுதும்போது எய்ட்ஸ் நோய் உலகம்  முழுவதும்  பரவி எல்லோரையும் அச்சப்பட வைத்திருக்கிறது.

          மோகினி : ஆமாம்.  சேகருக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்தான் என்று நாவலில் வருகிறது

          ஜெகன் : அசோகராஜனுக்கு ஏன் லதா அம்மாவிற்கு  எய்ட்ஸ் நோய் வரவில்லை என்று சந்தேகம் வருகிறது.  சேகருடன் அவளும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாள் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவள் அம்மா புற்று நோயால்தான் இறந்தாள்.

          அழகியசிங்கர் : கல்லூரியில் படிக்கும்போது கோபால் என்ற பையனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவன் பிடியில் சிக்கித் தவிக்கிறாள். 

          மோகினி : இந்த நாவல் சமுதாயத்தில் சீரழிந்து  போனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வருகிறது

          ஜெகன் : கோபாலுக்கும் அசோகராஜாவிற்கும்   சண்டை வருகிறது.  கோபால் சண்டை போடுகிறான்.  வயதான அசோக ராஜா ஏன் லதாவுடன் அடிக்கடி சுற்றுகிறான் என்பதுதான் வாதம்.

          மோகினி : அவள் விரும்பினால் கோபால் திருமணம் செய்து கொள்ளலாம்.  தனக்கும் அதுதான் விருப்பம் என்கிறான்  அசோகராஜா.

          அழகியசிங்கர் : அசோகராஜனின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.  அவன் அக்கா ராஜஸ்தானுக்கு ஒரு திருமணத்திற்குப் போகவேண்டுமென்று போகிறாள்.  அப்பாவைத் தனியாக விட்டுவிட்டு.  அசோகராஜாவை வீட்டிற்கு வந்திருந்து  பார்த்துக்கொள்ளச் சொல்கிறாள்.  அவன் மறுத்து விடுகிறான். அந்தத் தருணத்தில் அப்பா இறந்து விடுகிறார்.  இருத்தஙூயல் கொள்கைப் படி பாசம் என்று எதுவும் கிடையாது போலிருக்கிறது. 

          ஜெகன் : இந்த நாவலின் அடுத்த கட்டம். கோபால் பற்றியது.  ஏற்கனவே கோபால் திருமணமானவன்.  அவன் லதாவைத்  திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.  அவனைத் திருமணம் செய்து கொண்ட பெண் கோபாலை மிரட்டுகிறாள்.  அவனை அவளுடன் வந்து இருக்கச் சொல்கிறாள்.  அவன் முடியாது என்கிறான்.  தன் உடல் மீது தீ வைத்துக்கொள்கிறாள்.  உடனே கோபாலையும் கட்டிப்பிடிக்கிறாள்.  தீக்காயத்தால் அவள் இறந்து விடுகிறாள்.  அவன் தீக்காயங்களுடன்  மருத்துவமனையில் சேர்ந்து பிழைத்து விடுகிறான். கோபால் எப்போதுமே அசோகராஜாவை எரிச்சலுடன் பார்க்கிறான். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தபோதும் அப்படித்தான் பார்க்கிறான்.  

          மோகினி : தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறாள்  லதா.

          அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் லதா – அசோகராஜா  பற்றித்தான்.  அடிக்கடி லதா அசோகராஜாவைப் பார்க்க வருகிறாள். அவளுடைய துன்பத்தையெல்லாம் அவனிடம் சொல்கிறாள்.

          மோகினி : நிறைய உபகதைகள்.  இசை ஆசிரியர் செல்வம் வீட்டில் கருக்கலைப்பு செய்துவிட்டுத் தங்குகிறாள் லதா. அங்கு இசை ஆசிரியர் செல்வம் பற்றி செய்தி வருகிறது.

          ஜெகன் : முன்பே சொன்னதுபோல் இந்த நாவல் எய்ட்ஸ் பற்றிப் பேசுகிறது.

          அழகியசிங்கர் : ஆமாம். சிவலிங்கம் என்ற கதாபாத்திரம்.  பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு.  அவருக்கு  எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது.  அவர் மனைவிக்கு அது பரவியிருக்கும் என்று நம்புகிறார்.

          மோகினி : லதாவிற்கு அசோகராஜா மீது வெறியான காதல்.  அதுதான் அவளை கோபாலை நாடவிடாமல் தடுத்துவிட்டது.  கண்ணகி அவள் கணவனைக் கொன்றது.  அசோகராஜானின்  பால்ய கால நக்ஸலைட் நண்பன் அய்யாவு போன்றோரால்   என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார்  முதலில் சிவலிங்கம் மனைவி இறந்து போகிறாள்.  பின் அந்த அதிர்ச்சியில் அவர் இறந்து விடுகிறார்.  அடுக்கடுக்காக மரணங்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள் இந்த நாவலில்.

          ஜெகன் :  இந்த நாவலைப் பற்றி கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்? 

          அழகியசிங்கர் : இந்த நாவல் ஒரே மரண ஓலமாகஒலிக்கிறது . லதா அசோகராஜாவிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.  அவனும் அவளிடம்.  அந்த அன்பு கடைசிவரை வரம்பு மீறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  கோபாலுக்கு அசோகராஜாவின்  மீது ஒரே சந்தேகம். லதாவை கோபால் சீரழித்தும்  அவன் அவளை விட முடியாமல் இருக்கிறான்.  பலரிடம் அவன் தொடர்பு வைத்திருந்தாலும் அவன் லதாவை விட முடியவில்லை.  அவனால் அவளிடம் உள்ள தாபத்தைத் தணிக்க முடியவில்லை இதற்குக் காரணம் அசோகராஜாவும் அவளும் பழகிய விதம்.  

          இந்தக் கதையின் இறுதிப் பகுதியில் கோபாலைத் தள்ளிவிட அவன் இறந்துவிடுகிறான்.  இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சிதான்.  கோபால்தான் மூர்க்கமாக அவனைத் தாக்குகிறான். கோபாலைத் தடுத்துத் தள்ளிவிடுவதால் தடுமாறி தலையில் அடிப்பட்டு இறந்து விடுகிறான்.  இந்த இடத்தில் நாவல் ஆல்பெர் கம்யூவின் நாவலான அந்நியனை ஞாபகமூட்டுகிறது.  காரணமில்லாமல் ஏற்படுகிற கொலையில் அதில் வரும் கதாபாத்திரம் ஜெயிலுக்குப் போகிறது.  இங்கு போலீஸ் ஸ்டேஷன்  போகிறான் 

அசோகராஜா. 

          இறுதியில் வன்முறையில் முடிந்து விடுகிற இந்த நாவல், முதலிலிருந்து கடைசிவரை துயரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. 

அசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்

Ashokamithran passed away: சகாப்தம் நம்மை விட்டுச்செல்கிறது: மனுஷ்யபுத்திரன் - manushyaputhran tributes ashokamithran | Samayam Tamil

அவரை நான் முதன் முதலில் சந்தித்தது 1972ம் வருடம். நண்பர் சாருகேசியுடன், கிருஷ்வேணி தியேட்டர் அருகேயுள்ள, தாமோதரரெட்டி தெருவில் விசாரித்துக்கொண்டு போனேன். அந்த கால கட்டத்தில்தான் (1968-1970) தொடர்கதைகள் மட்டுமின்றி நேராகவே (அதாவது பத்திரிகைகளில் வெளிவராத) சில நாவல்களும் புத்தகமாக வெளிவந்தன.

அது போல் வெளி வந்த ஒரு நாவல்தான் ‘கரைந்த நிழல்கள்’. தன்னிலை ஒருமையாக சில அத்தியாயங்களும் (first person) படர்க்கையாக வேறு அத்தியாயங்களும் மாறி மாறி வரும். புரிவதற்கு கஷ்டமாக இருந்தது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும், ஆனால் வெளியே பகட்டாகத் தெரிந்த திரை உலகுக்குப் பின்னால் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நுட்பமாகப் புரிய வைத்தது அந்த நவீனம்.

ராஜ்கோபால் என்ற ஒரு பாத்திரம்; சினிமாவில் பணி புரிபவன் என்கிற ஒரு காரணத்தாலேயே, அவனுக்கு யாரும் பெண் தர முன் வரமாட்டார்கள். அதனாலேயே அவன் சில தீய பழக்கங்களில் இறங்குவான். ஒரு கட்டம்:– ஓட்டலிலோ, வெளியிடத்திலோ ஆறிப் போன பஜ்ஜியைச் சாப்பிடுவான். பிறகு நடந்து செல்லும் போது, குமட்டிக் கொண்டு வரும், வாந்தி எடுத்து விடுவான்.

”அதை நக்க ஒரு சொறி நாய் வந்தது” என்று எழுதியிருப்பார் அசோமித்திரன். அந்தப் பாராவைப் படித்தபோது எனக்கு – வாசகன் என்ற முறையில் – ஏற்பட்ட உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தை இல்லை.

சோகம், அருவருப்பு, ஆத்திரம் போன்ற கலவையான உணர்ச்சிகள் என்னை ஆட்கொண்டன.

அவரிடமே அதைச் சொன்னேன். நூலில் கையெழுத்து ‘அன்புடன் ஜ. தியாகராஜன்’ பெற்றுக் கொண்டேன். மேசையின் மீது சிற்சில பத்திரிகைகள் கிடந்தன. ஆ! என் அபிமான பத்திரிகை குமுதம் கூட!

”உங்களுடைய ‘விட்டேன் ஒரு குத்து’ சிறுகதை ரொம்ப வித்தியாசமாக இருந்தது சார்” என்றேன். அவர் மகிழ்ச்சியில்லாமல் புன்னகை புரிந்தார்.

”நிறைய வெட்டி விட்டார்கள். செக்கை திருப்பிவிடலாம் என்கிற கோபமே வந்தது.” என்றார்.  ”உங்களுக்கு பிடிச்சுதா?” என்று கேட்டார். (1967ல் குமுதத்தில் வந்த கதை, ரூ.80 வந்திருக்கலாம்).

ஆம் , சொல்ல மறந்து விட்டேனே! ஒரு குறிப்பிட்ட போட்டிக்கு, (வண்ணக் கதைகள் – கலைமகள்) நானும் கதை அனுப்பினேன். கொடுக்கப்பட்ட தலைப்பு: ‘வெண்புறா’ மிகமிக மெதுவாக, பெண் விடுதலை பற்றின உணர்வுகள் வந்த காலம். ‘கூண்டுக் கிளியாக குடும்பத்தில் அடைபட விருப்பமில்லை, வெள்ளை உடை உடுத்தி நர்ஸாக பணிபுரியப் போகிறேன்’ என்ற கற்பனையில் எழுதி அனுப்பினேன்.

ஆஸ்பத்திரி, நர்ஸ், தனியாக வசிக்கும் பெண்ணின் மனநிலை – (எனக்கு 20 வயது) எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் ஆர்வத்தில் எழுதினேன். (அபத்தமான கதை)

அசோகமித்திரனின் ‘வெண்புறா’தான் ரூ.100யைக் கவ்விக் கொண்டு பறந்தது. செகந்தராபாத், முஸ்லீம்கள் வாழும் சூழல். எனக்குச் சரியாக புரியவில்லை. ஆனால் அதே சமயம் கலைமகளில் அவர் எழுதிய ‘அம்மாவுக்காக ஒரு நாள்’ (அற்புதமான கதை) கலைமகளில் படித்து வரிக்கு வரி ரசித்தேன். அம்மாவை சினிமாவிக்கு ஒரு முறை அழைத்துப் போவாதாகச் சொன்ன பிள்ளை மறந்து விடுவான்! சோர்வு எலக்ட்ரிக் டிரெயினில் வருகிற அலுப்பு, ஜனக் கூட்டம் (டிசம்பர் 25) எல்லாமாகச் சேர்ந்து மறந்துவிடும் அவனுக்கு அதில் ஒரு வாக்கியம்.

”இந்துக்கள் வருஷா வருஷம் பல பண்டிகைகள் கொண்டாடுகிற சந்தோஷத்தை, கிறிஸ்துவர்கள் ஒரே நாளில் பெறுகிறார்கள்.”

வீட்டுக்குள் நுழைந்தவுடன்தான் ஞாபகம் வரும்! ”ஸாரிம்மா, என்னை மன்னித்துவிடும்மா” என்று என்னவெல்லாமோ சொல்லி, பிள்ளை இறைஞ்சுவான்.

இதனால் அம்மாவின் ஏமாற்றம் போய்விடுமா? அம்மாவுக்கு மகிழ்ச்சி வருமா? என்று அடுக்கடுக்காக பல வரிகள்.

”சரி சரி, சாப்பிட வா” என்று அம்மா அழைப்பதோடு கதை முடியும்.

அசோகமித்திரனின் சிறுகதைகள் தொகுதி அப்போது வெளியாகியது. தலைப்பு ஞாபகமில்லை. ஆனால் அதில்தான் ‘எலி’ ‘புலிக் கலைஞன்’ இரண்டும் இடம் பெற்றிருந்தன. ஒண்டுக்குடித்தன வீட்டில் ஒரு எலி வந்து படுத்துகிற பாட்டை விவரமாகச் சித்தரித்திருப்பார். பொறி வைத்துப் பிடித்து விடுகிறார்கள்.

அதை அப்படியே ஜாக்கிரதையாக வெளியே கொண்டு போய்விடும் போது, எங்கிருந்தோ ஒரு காக்கை  பறந்து வந்து கொத்திக் கொண்டு போய்விடும். புலிக் கலைஞன் மிகப் பிரபலமான கதை. (எ.க.எ. நூலில், ரா.கி. ரங்கராஜன் காட்சிப்படுத்துதல் தலைப்பில் இந்தப் புலிக்கலைஞனை quote பண்ணியிருக்கிறார்.)

ஆபீஸ் பணியில் பதவி உயர்வு கிடைத்தவுடன் ராயப்பன்பட்டி (1977) செல்ல வேண்டியிருந்தது. அந்த 1978-80களில் சென்னை செய்திகள் எல்லாம் ஓரளவு சாருகேசி மூலம்தான் தெரிந்தது. (1978ல் சாவி, தன் பெயர் தாங்கின பத்திரிகையுடன், ‘சுஜாதா’ என்று கூட ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்)

1980களில் மிகத் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா தன் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ தொடரின் முதல் அத்தியாயம் ஆரம்பித்து இருந்தது. அயல் நாட்டு ‘சர்ச்’ ஒன்றை அற்புதமாக வர்ணித்திருப்பார்.

அவரைச் சந்திக்கப் போன போது, போனில் யாருடனோ உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தார். ”புது கலர் மெஷின் வாங்கி இருக்கிறீர்களா?” என்றெல்லாம் தொ.பே.யில் வினவினார்.

”யார் சார், ரங்கராஜனா?” என்றேன்.

”எஸ்.ஏ.பி. என்றாரே பார்க்கலாம்! அப்போது மிகத் தற்செயலாக அசோகமித்திரன், சுஜாதாவை பார்க்க வந்தார்.

அவர்களிருவரும் பேசி முடித்தவுடன், நான் கிளம்பினேன். அசோகமித்திரன் சைக்கிளில் வந்திருந்தார்.

”என் வீட்டுக்கு வாருங்களேன்” என்று அழைத்தேன். ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் எதிரில் என்று அடையாளம் சொன்னேன்.

பச்சை வெஸ்பாவில் நான் முன்னால் சென்றேன். அவர் சொன்னபடி வந்துவிட்டார். காபி கொடுத்து உபசரித்தேன், ரசித்து அருந்தினார்.

”ரொம்ப நன்னயிருக்கே? எங்கே பொடி வாங்கறேள்?”

மனைவி இதற்கு மந்தைவெளி கடை பெயரை சொன்னாள். சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார். இப்போது, அவரைக் குறித்து பேச்சு வரும் போதெல்லாம், தான் போட்ட காபியை ருசித்ததை எண்ணி மனைவி மகிழ்ந்து போவாள்.

1985க்குப் பிறகு, சென்னையை விட்டு வேறு வேறு ஊர்களில் வாசம் – பணி நிமித்தமாக ஒரு விடுமுறையின் போது சென்னைக்கு வந்த சமயம், அசோகமித்திரனுக்குப் பாராட்டு விழா. (சாகித்ய அகாடமி விருது என்ற நினைவு). நல்ல கூட்டம், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கொடுக்கும் நிகழ்ச்சியுமிருந்தது.

கூட்டத்தின் நடுவே உட்கார்ந்திருந்த நான் எழுந்தேன். மேடைக்கு சென்று ”இவர் துன்பத்தை மிகைப்படுத்துகிறார். சாதாரணமாக எல்லாரும் ‘புண்ணிலிருந்து ரத்தம் வழிந்தது’ என்று மட்டும் எழுதுவார்கள். ஆனால் அசோகமித்திரன் புண், ரத்தம், சீழ் வருகிற விதம், ரணமான வலி எல்லாவற்றையும் விஸ்தாரமாக எழுதுவார். இவர் ‘சோக மித்திரன்’ என்றே பெயர் வைத்து கொள்ளலாம்” என்றேன் படபடப்பாக.

இறுதியாய்ப் பதிலளித்த அசோகமித்திரன் டால்ஸ்டாய் எழுத்திலிருந்து மேற்கோள் காட்டினார். ”சந்தோஷமாக நிறைவாக இருக்கும் குடும்பம் எல்லாம் ஒரே ரகம். ஆனால் துன்பங்களில் உழலும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விதம்” என்றார். ”பொதுவாக சோகத் தன்மைக்கு இலக்கியத்தில் ஒரு வலு உண்டு” என்றார்.

சொல்ல விட்டுப்போய் விட்டதே! 1974-76 கால கட்டத்தில் குஷ்வந்த் சிங் ‘வீக்லி’யில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அ.மி. கதை பரிசு பெற்றது. நயேந்திர சைகல் நடுவர் குழுவில் இருந்தார். சினிமா உபநடிகையைப் பற்றின சிறுகதை. தமிழ் நடையைப் போல, அவர் ஆங்கிலமும் வெகு எளிமை.

பின்னர் அதே வீக்லியில் The Great Dream Bazaar’  என்ற தலைப்பில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்தன. அனைத்தும் ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்கள். தலைப்பை பத்திரிகை மாற்றி விட்டதாக பின்னர் தெரியவந்தது. (அ.மி. தந்த தலைப்பு – 14 years with Boss)

ஓய்வு பெற்று சென்னைக்கு வந்த பிறகு, சிற்சில கூட்டங்களில் சந்தித்தேன். மிகச் சாதாரணமாக நண்பர்களிடம் உரையாடுவது போல், பேசுவார். இந்தியா டுடே தமிழில் வாஸந்தி, நடராஜன் ஆகியோர் பணியாற்றியபோது, அவர் சிறுகதைகள் வெளியாகின. வேறொன்று – ரஜினிகாந்த சிறப்பு மலர் தயாரித்த போது, அதில் ரஜினியைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதினார். இதே போல் ரகுவரன் இறந்து போனவுடன்.

யோசித்துப் பார்க்கையில் அ.மி.ன் பலமே இதில்தான் என்று அழுத்தமாகச் சொல்லலாம். சினிமா நடிகர்கள், வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்கள், பின்னணிப் பாடகர்கள் – எல்லோரையும் பற்றி, அவர்களுடைய பிளஸ் பாயிண்டுகளைச் சற்று உயர்த்தி நயமாக எழுதுவார். ஒருமுறை தொலைபேசி உரையாடலில், ”ஓ.பி. நய்யார்தான், சங்கர் ஜெய்கிஷனின் ‘ரிதம்’ போல் இசை அமைத்தார்” என்று சொல்லி, ‘தும்ஸா நளி தேக்கா, நௌதோ கியாரா’ போன்ற படங்களின் இசையைச் சுட்டிக் காண்பித்தார். சிவாஜியை மிகை என்று ஒரேயடியாக பிரபல எழுத்தாளர் ‘இறக்கிய’ போது அதற்கு எதிர்வினையாற்றி தினமணியில் எழுதினார்.

”Only a Journalist; Not a writer ”   என்று 1960களில் இலக்கிய கொம்புகள் எல்லாரும் கல்கியை ஒரம் தள்ளியபோது, அவரைப் போல திறமைசாலி உலகிலேயே யாருமில்லை என்று எழுதினார். தியாகபூமியை மனதார பாராட்டியிருக்கிறார். (Hindu)

2014 பிப்ரவரி மாதம் புத்தக நண்பர்கள் அமைப்பு துவங்கியபோது, ‘அப்பாவின் நண்பர்’ என்ற தொகுப்பை நான் விமர்சித்தேன். மற்றொருவர் திருப்பூர் கிருஷ்ணன்.

”உங்க குரல் சரியா இல்லையே வாதூலன்?” என்று கூட்டம் முடிந்தபின் சொன்னார். என் கைத்தடியை அப்போதுதான் கவனித்து ”எங்கே வாங்கினேள்? வீட்டிலே எல்லாரும் என்னையும் ஸ்டிக் வைச்சுக்க சொல்லறா?” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

அதே  அமைப்பு, இந்திரா பார்த்தசாரதி, அ.மி. இருவருக்கும் வாழ்நாள் சாதனை விருதும், பண முடிப்பும் (TAG சாரி உபயம்) வழங்கினார்கள். தலைமை வகித்த முன்னாள் நிதி அமைச்சர், ப. சிதம்பரம் நூறு வருடம் வாழ வேண்டுமென்று வாழ்த்து கூறினார்.

தளர்ந்து போயிருந்த அசோகமித்திரன், ”வேண்டாம், வேண்டாம்” என்று கையை அசைத்தார்.

பின்னர், அவருடைய பேட்டி ஒன்று விகடனின் வெளியான நினைவு; சாருகேசி அவரைச் சந்தித்த பேட்டி ஹிண்டு (ஆங்கிலம்)வில் வெளியாயிற்று. மறுவாரமே, அவர் இறந்து போய்விட்டார்.

வாதூலன்என்னுடைய ‘கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்’ நூலைப் படித்து ரசித்து ஓர் சிறிய பாரா ‘ஓம் சக்தி’யில் எழுதினார். ‘கலிபோர்னியா திராட்சை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதினார். அதை என்னுடைய பேறாகவே எண்ணுகிறேன்.

இன்றைக்கு, எம்.ஸிடி. பள்ளித் தோழர்கள் 80 வயது கடந்தவர்கள், எனக்கு சிலர் உண்டு. வங்கி நண்பர்கள் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறேன். எழுத்தாளர் உலகில் நண்பர்கள் நிறைய பேர் உள்ளார்கள். (அக்கறை அமைப்பினால் கிடைத்தவர்கள்).

ஆனால், அவர்களுக்கிடையே அசோகமித்திரன் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

உலக இதிகாசங்கள் – கில்காமேஷ்

Enkidu VS Gilgamesh by DomeGiant on DeviantArt

oleg kuzmin - The battle of Gilgamesh and Enkidu with the heaven bull

கில் காமேஷின் அதி உன்னதமான திட்டம் அது . காட்டு மிருகங்கள் எங்கிடுவை தங்கள் இனம் என்று கருதி அவனுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. அவன் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் அவனை தன் இனம் அல்ல என்று உணர்ந்து விலக்கிவிடும். பின்னர் எங்கிடுவை அழித்து விடலாம் என்று எண்ணினான்.

அதன் படியே அழகி ஒருத்தியை வேட்டைக்காரனுடன் அனுப்பி வைத்தான். அந்த அழகியும் எங்கிடு வருவதற்காகக் காத்திருந்தாள்.

மூன்று நாட்கள் கழித்து எங்கிடு வந்தான். அழகியைப் பார்த்துப் பார்த்தபடியே நின்றான். அந்த அழகி மெல்லத் தன் காம வலையில் எங்கிடுவை வீழ்த்தினாள். ஆறு நாட்கள் அவளுடன்  சுகம் கண்ட அவனை மிருகங்கள் ஒதுக்கி வைத்தன.  அவனாலும் மிருகங்களுடன் தொடர்ந்து ஓட முடியவில்லை.

அந்த அழகியின் காலடியில் அமர்ந்தான் எங்கிடு. அவள் அவனை மேலும் வசியம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றாள். கில் காமேஷ் பற்றியும் சொல்லி அவனை நகரத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அவள் பேச்சு எங்கிடுவிற்கும் பிடித்திருந்தது. தன் மிருக வழக்கத்தை அறவே ஒழித்தான். மனிதர்களைப் போல ரொட்டியும் மதுவும் குடித்தான். உடலையும் அழகு செய்து கொண்டான். நல்ல உடைகளை உடுத்தினான்.  வேட்டைக் காரர்களுக்கு உதவியாக சிங்கங்களை வேட்டையாடினான். அவனை விடப் பலசாலி அந்தப் பிராந்தியத்தில் யாரும் இல்லை என்ற பெயர் நிலைத்தது.

ஊருக் நகரில் கில் காமேஷும் தன்னைத் தேடி ஒரு  தேவமகன் ஒருவன் வரப் போவதாகவுக் கனவில் கண்டான். அந்த தேவ மகனைத்  தன் காதலிகளைவிட அதிகமாகக் காதலிப்பது போன்ற உணர்வையும் அடைந்தான்.

அவனுடைய தாய் அவன் கனவைப் புரிந்துகொண்டு வருபவன் எங்கிடு. அவன் உன்னை என்றும் பிரியாத தோழனாக இருந்து உன்னைக் காப்பாற்றுவான் என்று கூறினாள். கில்காமேஷும் எங்கிடுவைக் காணக் காத்திருந்தான்.

ஆனாலும் கில் காமேஷின் முரட்டுத்தனம் குறையவில்லை. பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றான். ஆண்கள் அனைவரையும் தனக்கு குற்றேவல் செய்ய வற்புறுத்தினான். ஊருக் நகர மக்கள் அவன் கொடுமை தாங்காது எங்கிடுவிடம் முறையிட்டனர்.

எங்கிடு  தான் கில்காமேஷைத் தோற்கடித்து நாட்டில் புதிய  திருப்புமுனையைக் கொண்டு வருவதாக உறுதி பூண்டான்.

உடனே எங்கிடு  ஊருக் நகரத்திக்குச் சென்றான். நகர மக்கள் அவனைக் கண்டு முதலில் பயந்தாலும் இவன் கில் காமேஷை வென்றுவிடுவான் என்று நம்பினர்.

கில்காமேஷை  வரவழைக்க ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். காதல் அரசி என்ற அந்தப் பெண் கணவனுக்காக முதல் இரவில் காத்திருந்தாள். அதைக் கேள்விப்பட்ட கில்காமேஷ் மன்னனான தனக்குத் தான் கன்னி கழிக்கும் உரிமை இருக்கிறது என்று அதை நிலை நாட்ட வந்தான்.

கில் காமேஷ் வருகைக்காகக் காத்திருந்த எங்கிடு அவனை வழி மறித்தான்.  இருவருக்கும் இடையே பலத்த யுத்தம் நடந்தது. இருவரும் காட்டு விலங்குகளைப் போல முட்டி மோதினார்கள். பல நாட்கள் சண்டை நடந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாமல் இருந்தது.

gilgamesh fighting enkidu, mesopotamia and ancient greece

முடிவில் கில் காமேஷ் பூமியில் காலை நன்கு ஊன்றிக் கொண்டு எங்கிடுவை அலாக்காகத் தூக்கி கீழே வீழ்த்தினான். எங்கிடு தன் தோல்வியை உணர்ந்தான். கிழகாமேஷிடம்  ” நீதான் உண்மையில் மாபெரும் வீரன். தேவர்கள் உன்னை எல்லா மனிதர்களுக்கும் மேலே உயர்த்தியிருக்கிறார்கள். நீ மன்னனாக இருப்பது நியாயமே ” என்று கூறினான்.

அதைக்கேட்ட கில் காமேஷ் தான் கனவில்கண்ட  தேவகுமாரன் இவனே என்று உறுதி கொண்டான். அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான். ” “எங்கிடு இன்று முதல் நீயே என ஆருயிர்த் தோழன் ” என்று பெருமிதத்தோடு கூறினான்.

அன்றுமுதல் ஊருக் நகரில் அவர்கள்  இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இணை பிரியாத தோழர்களாக வலம் வந்தனர்.

கில்காமேஷின் அகம்பாவம், ஆணவம் அகங்காரம் எல்லாம் படிப்படியாகக் குறைந்தது.

அப்போது கில்காமேஷ் ஒரு கனவு கண்டான். அதன் அர்த்தம் என்ன என்பதை எங்கிடு விளக்கிக் கூறினான்.

” கில்காமேஷ்! உன்னை உலகத்துக்கு மன்னனாக கடவுள் நிர்மாணித்திருக்கிறார். யுத்தங்களில் நீ எப்போதும் வெற்றி பெறுவாய் என்ற வரத்தையும் உனக்கு அளித்திருக்கிறார். வேறு யாருக்கும் தராத மேம்பட்ட மனித நிலையையும்  உனக்கு அவர்  வழங்கியிருக்கிறார்.  நீ தொடர்ந்து யுத்தங்கள் செய்து கொண்டே இருப்பாய். ஆனால் நீ உன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. உன் மக்களிடம் நீ நியாயமாக இருக்கவேண்டும். அப்படிச் செய்வதாக கடவுள் முன் நீ ஆணையிடு! ஆனாலும் நீ இறப்பு என்பதிலிருந்து தப்ப முடியாது!” என்று விளக்கினான்.

அதைச் சொல்லும் போதே எங்கிடுவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“நண்பா!  என்ன ஆயிற்று உனக்கு?  ஏன் இப்படி கண் கலங்குகிறாய்?” என்று கில்காமேஷ் கேட்டான்.

” நான் பலவீனமடைந்துவிட்டேன் போல் தோன்றுகிறது. சோம்பலாக ஒரு காரியமும் செய்யாமல் இருப்பது எனக்குச் சிரமமாயிருக்கிறது” என்று கூறினான்.

அப்போது கில்காமேஷ் வீரதீரத்துடன் கூறினான்.

” எங்கிடு! என விதி நிணயித்த அளவில் நான் அதிபராக்கிரம செயல்களை இன்னும் செய்யவில்லை. வா!  நாம் இருவரும் புதிய மனிதர்கள் வாழும் செடார் மரங்கள் நிறைந்த பிரதேசத்துக்குப் போவோம். அங்கே புகழ் பெற்ற வீரர்களின் பெயர்கள் அங்கே நிரந்தரமாகப் பதிக்கப்பட்டிருக்கும். அதில்  என்  பெயரையும் பொறிக்கச் செய்வேன். அதுமட்டுமல்ல இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்வோம்.  சென்ற இடங்களிலெல்லாம் நம் வீரத்தை நிலை நாட்டுவோம். மனிதர் காலடி படாத இடத்திற்குச் சென்று தேவர்களுக்கு  மகோன்னத ஆலயம் எழுப்புவோம். காட்டில் நடக்கும் அநீதிகளுக்கு முடிவு காட்டுவோம்.  எல்லவற்றிற்கும் மேலாக  செடார் காட்டை ஆண்டுவரும் ஹம்பாபா என்ற ராட்ஷசனை வென்று நமது வீரத்தைப் பறை சாற்றுவோம்.

அதிகக் கேட்ட எங்கிடு திடுக்கிட்டான்.

(தொடரும்)

நன்றி : கில்காமேஷ் க நா சுப்பிரமணியம் , சந்தியா பதிப்பகம்

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-                                           

குழந்தைப் பாடல்கள் - பூஞ்சிட்டு

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  1. பிறந்த நாள் !

மின்னம்பலம்:சிறப்புப் பார்வை: ஏன் பிறந்த நாள் கேக்கில் மெழுகுவத்தி ஏற்றுகிறோம்?

பிறந்த நாள் கொண்டாட வாங்க – என்

வீட்டுக்கு எல்லோரும் வாங்க !

இனிப்புகள் தருவாள் அம்மா –

சேர்ந்து சுவைக்கலாம் வாங்க !

 

கோவிலுக்கு போகலாம் வாங்க !

சேர்ந்து கும்பிடலாம் வாங்க !

நல்லபடி வாழனும் என்று – நாம்

அனைவரும் வேண்டலாம் வாங்க !

 

நண்பர்கள் எல்லோரும் வாங்க – நாம்

குஷியாய் இருக்கலாம் வாங்க !

வேடிக்கை விளையாட்டு எல்லாம் – நாம்

சேர்ந்து ஆடலாம் வாங்க !

 

கேக்கு உண்ணலாம் வாங்க – நீங்க

கேக்கறதை தருவேன் வாங்க !

பாட்டு பாடலாம் வாங்க – சேர்ந்து

ஆட்டம் போடலாம் வாங்க !

 

அல்லி, ரங்கா, ரமேஷ், துர்கா –

அனைவரும் வீட்டுக்கு வாங்க !

ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்நாள் –

சேர்ந்து கொண்டாட வாங்க !

 

  1. வேப்ப மரம்

விதையாகும் கதைகள்: உதிராத கடைசி இலை! - வத்திக்கான் செய்திகள்

எனக்கு பிடித்தது வேப்ப மரம் !

என் நாட்டில் எங்கும் வேப்ப மரம் !

கசப்புகள் நிறைந்த வேப்ப மரம் !

மருத்துவ குணங்களும் நிறைந்ததுவாம் !

 

எங்கோ தொடங்கும் ஒரு காற்று –

வேப்ப மரக் கிளை நுழைந்து வரும் !

மூச்சை முழுதாய் விட்டுப் பார்த்தால்

மனமும் உடலும் மலர்ந்து விடும் !

 

வயிற்றுப் பிரச்சினை வந்து விட்டால்

வேப்பங் கொழுந்தே மருந்தாகும் !

வேப்ப மர நிழலில் போய் நின்றால்

வெய்யில் நம்மை வாட்டாதே !

 

வேப்பம் பூவைப் பார்த்து விட்டால்

பாட்டி எடுத்து வைத்திடுவாள் !

பாட்டி கையால் ரசம் செய்தால்

பத்து ஊருக்கு மணந்திடுமே !

 

அம்மை போன்ற நோயைக் கூட

வேப்ப இலையால் விரட்டிடுவோம் !

அம்மா போல் எனக்கு வேப்ப மரம் !

அரவணைக்கும் என்னை வேப்ப மரம் !

 

வேப்பங்காய் போல் எதுவேனும்

இளமையில் இருப்பது கண்டீரோ ?

பழுத்து விட்டால் வேப்பம் பழமும்

இனிக்கும் என்பதை அறிவீரோ ?

 

மரமே ! மரமே ! வேப்ப மரமே !

என் வீட்டில் என்றும் இருந்து விடு !

தருவேன் ! தருவேன் ! அன்பைத் தருவேன் !

என் நாட்டை என்றும் காத்து விடு !

 

              

நாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்  

           முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்மிக நொந்து போயிருக்கிறாள்.

            நாட்டியமங்கையான ஸ்ரீமதியை வழிபாட்டு மேடையில் காணிக்கை செலுத்தக் கூறியுள்ளனர். இளவரசிகளுக்கும் அரசிக்கும் அதில் விருப்பமில்லை; எவ்வாறு ஸ்ரீமதியைத் தண்டிக்கலாம் எனக் கலந்தாலோசிக்கின்றனர். இதனிடையே நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். புத்த பிட்சுக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்வதன் மூலம், அவளையும் தண்டித்து, வழிபாட்டு மேடையையும் அலங்கோலமாக்கலாம் என இளவரசிகள் கலந்தாலோசிக்கின்றனர்.

           இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                           ————————————

           பத்ரா: அஜிதா, அது என்ன சப்தம்? யாரோ அழுவது போல உள்ளதே அல்லது அது கோபத்தில் கத்தும் குரலா?

           நந்தா: அழிப்பவர்கள் ஏற்கெனவே தோட்டத்தில் தங்கள் நாசவேலையைச் செய்கிறார்கள் போலுள்ளதே. சீக்கிரம், ஸ்ரீமதி! வா, அரசியின் மாளிகையில் நாம் ஒளிந்து கொள்ளலாம்.  (நந்தா செல்கிறாள்)

           பத்ரா: வா அஜிதா. இது ஒரு பயங்கரமான தீயகனவு போலுள்ளதே!

  (எல்லா இளவரசிகளும் வெளியே செல்கிறார்கள்)

           மாலதி: சகோதரி, நான் கேட்பது மரணத்தின் குரலை! ஆகாயத்தில் அந்தத் தீப்பிழம்பைக் கண்டாயா? நகரமே சீக்கிரத்தில் பற்றி எரியப் போகிறது. ஓ! நமது கடவுளின் பிறந்தநாளன்றுதான் இந்தச் சாவின் வெறியாட்டம் நிகழ வேண்டுமா?

           ஸ்ரீமதி: புதிய பிறப்பின் வெற்றிகரமான ஊர்வலம் சாவின் வாயில்வழியாகவே செல்லும்.

           மாலதி: எனது பயங்களை எண்ணி நான் வெட்கப்படுகிறேன் சகோதரி. நாம் வழிபாட்டுக்குச் செல்லும் வேளையில் பயப்படுவதென்பது எவ்வளவு கொடுமையானது.

           ஸ்ரீமதி: எதனைக் கண்டு நீ பயப்படுகிறாய் சகோதரி?

           மாலதி: எந்த அபாயத்தை எண்ணியுமல்ல, ஆனால் எனக்கு ஒன்றும் புரியாததனால் எல்லாமே இருட்டாக உள்ளது.

           ஸ்ரீமதி: வெளித்தோற்றங்களுக்கிடையே வாழாதே. தனது அழிவற்ற பிறந்தநாளைக் காணும் அவரிடம் உன்னையே கண்டெடு; நமது பயங்களனைத்தும் மறைந்துவிடும்.

           (ஒரு காவல்பெண் நுழைகிறாள்.)

           காவல்பெண்: எனக்குக் கீழ்ப்படிய மாட்டாயா, ஸ்ரீமதி?

           மாலதி: நீங்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறிவிட்டீர்கள்? எங்களை இங்கிருந்து போகச் சொல்லாதீர்கள். இரு பெண்கள் தோட்டத்து மண்ணில் அமர்ந்து கொண்டிருந்தால் அது உங்களை எவ்விதத்தில் துன்புறுத்துகிறது?

           காவல்பெண்: அது உங்களுக்குந்தான் என்ன நன்மையைச் செய்யப்போகின்றது?

           மாலதி:  ஏனெனில் எங்கள் கடவுள் ஒருதரம் இங்கு வந்திருப்பதனால், இந்தத் தோட்டத்தின் மூலையிலுள்ள மண்கூடப் பவித்திரமானது; நீ எங்களை வழிபாட்டு மேடையை அடைய அனுமதிக்காவிட்டால், நாங்கள் இங்கேயே அமர்ந்து, இருக்குமிடத்திலேயே பாடல்களைப் பாடாமலும், மலர்களை இடாமலும் எங்கள் உள்ளங்களில், அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

           காவல்பெண்: நீங்கள் ஏன் பாடக்கூடாது? நான் அதைக்கூடக் கேட்கத் தகுதியில்லாத மோசமானவளா? மற்ற காவலர்கள் இப்போது இங்கே இல்லை: ஸ்ரீமதி, நமது கடவுளின் புகழை உன் இனிய குரலால் நீ இசைப்பதனை நான் கேட்க  எனக்கு ஒரு வாய்ப்பை அளி. நானும் அவருடைய தொண்டர் என்று நீ அறிந்துகொள்ள வேண்டும். என்றைக்கு எனது பாவமிகுந்த கண்களினால் அவரை இந்த அசோகமரத்தடியில் கண்டேனோ, அன்றிலிருந்து எனது உள்ளத்தில் ஒரு நிரந்தரமான இடத்தை அவர் எடுத்துக்கொண்டுவிட்டார்.

           (விழுந்து பணிகிறாள்)

           ஸ்ரீமதி: (இசைக்கிறாள்)

                     அறிவின் ஒளியான சூரியனுக்கு வணக்கங்கள்!

                     எனது உள்ளத்தின் ஆனந்தத்திற்கு வணக்கங்கள்!

                     பெருந்தன்மையின் கடலுக்கு வணக்கங்கள்!

                     சாக்கிய குலத்தின் மகனுக்கு வணக்கங்கள்!

           என்னுடன் நீயும் ஏன் இசைக்கக்கூடாது?

           காவல்பெண்: எனது பாவம் நிறைந்த நாவினால் நான் அதனைக் கூறலாமா?

           ஸ்ரீமதி: உனது உள்ளத்திலுள்ள அன்பு உன் நாவைப் புனிதமாக்கும். என்னுடன் கூடப் பாடுவாய்!

                     (அவர்கள் சேர்ந்திசைக்கிறார்கள்)

                     அறிவின் ஒளியான சூரியனுக்கு வணக்கங்கள்!

                     எனது உள்ளத்தின் ஆனந்தத்திற்கு வணக்கங்கள்!

                     பெருந்தன்மையின் கடலுக்கு வணக்கங்கள்!

                     சாக்கிய குலத்தின் மகனுக்கு வணக்கங்கள்!

           காவல்பெண்: எனது உள்ளத்திலுள்ள சுமை இப்போது மிகவும் குறைந்துவிட்டது. இந்தநாள் ஒரு நிறைவான நாள். நான் உன்னிடம் கூறவந்ததைக் கூறிவிடுகிறேன். இங்கிருந்து தப்பிச்செல்ல நான் உனக்கு ஒரு வழியைக் காண்பிக்கிறேன்.

           ஸ்ரீமதி: ஆனால்…. ஏன்? எதற்காக?

           காவல்பெண்: மகாராஜா அஜாதசத்ரு, தேவதத்தரிடமிருந்து தீட்சை பெற்றுக்கொள்ளப் போகிறார். அதனால், அசோக மரத்தின் கீழுள்ள நமது கடவுளின் வழிபாட்டு மேடையை உடைத்தெறிந்து விட்டார்.

           மாலதி: ஐயோ! ஐயோ! சகோதரி! இந்த அபாக்கியவதிக்கு அந்த வழிப்பாட்டுமேடையின் தரிசனம் மறுக்கப்பட்டு விட்டதே. எல்லாமே நசித்து விட்டதே!

           ஸ்ரீமதி: நீ எப்படி அவ்வாறு சொல்லலாம் மாலதி? நமது கடவுளின் நிரந்தரமான இருப்பிடம் சுவர்க்கத்தில்தான். மகாராஜா பிம்பிசாரர் கட்டிவைத்த மேடைதான் அழிக்கப்பட்டது; ஆனால் நமது கடவுளின் இருப்பிடம் கற்களால் பலப்படுத்தப்பட வேண்டாம்; ஏனெனில் அவருடைய புகழ் ஒன்றே அதனை எப்போதும் காப்பாற்றும்.

           காவல்பெண்: இந்த வழிபாட்டு இடத்திற்கு யாரேனும் மாலை வழிபாட்டிற்கு விளக்கைக் கொண்டுவந்தாலோ அல்லது ஒரு பாடலைப் பாடினாலோ, அவர்களுக்கு மரணதண்டனையே அரசரால் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஸ்ரீமதி, நீ இங்கு ஏன் இருக்க வேண்டும்?

           ஸ்ரீமதி: நான் இங்கேயே தான் இருக்க வேண்டும்.

           காவல்பெண்: எத்தனை நேரம்?

           ஸ்ரீமதி: வழிபாட்டுக்கு அழைப்பு வரும்வரை – நான் உயிரோடு உள்ளவரை.

           காவல்பெண்: நான் முதலிலேயே உன்னிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

           ஸ்ரீமதி: மன்னிப்பா?

           காவல்பெண்: அரசரின் ஆணைப்படி நான் உனக்குத் தீங்கிழைக்க நேரலாம்.

           ஸ்ரீமதி: அப்படியானால் நீ அதனைச் செயல்படுத்த வேண்டும்.

           காவல்பெண்: என் கரங்கள் அரண்மனை நாட்டியமங்கையைத் தாக்கலாம்; ஆனால் எங்கள் கடவுளின் பெண் ஊழியர் முன்பாக நான் சிரம்தாழ்த்திப் பணிகிறேன். எனக்கு மன்னிப்பை அளிப்பாயாக.

           ஸ்ரீமதி: என்மீது விழும் அத்தனை அடிகளுக்கான மன்னிப்பையும் அளிக்க எனது தலைவர் அருளுவாராக. புத்தபிரானே, மன்னிப்பீர்! புத்தபிரானே, மன்னிப்பீர்!

                                (இன்னொரு காவல்பெண் நுழைகிறாள்.)

           இரண்டாம் காவலாளி: ரோடினி!

           முதலாமவள்: என்ன? பாடலி?

           பாடலி: நமது தாயான பெண்மணி உத்பலாவை அவர்கள் கொன்றுவிட்டனர்.

           ரோடினி: ஓ, என்ன துர்ப்பாக்கியம்!

           ஸ்ரீமதி: யார் அவளைக் கொன்றது?

           பாடலி: தேவதத்தனின் சீடர்கள்.

           ரோடினி: ரத்த ஆறு ஓடத் துவங்கிவிட்டது. அவ்வாறெனின் நம்மிடமும் ஆயுதங்கள் உள்ளன. இந்தப் பாவத்திற்கான தண்டனை கிடைக்காமல் போகாது. ஸ்ரீமதி, இப்போது மன்னிப்பைப்பற்றிப் பேசாமல், ஆயுதங்களை எடுத்துக்கொள்.

           ஸ்ரீமதி: என் ஆர்வத்தைத் தூண்டாதே, ரோடினி. நான் ஒரு வெறும் நாட்டியப்பெண் தான்; ஆனாலும் என் கைகள் நீ வைத்திருக்கும் வாளை ஏந்த விழைகின்றன.

           ரோடினி: இந்தா, எடுத்துக்கொள்!

           அவள் வாளைக் கொடுக்கிறாள்; ஸ்ரீமதி அதனைப் பெற்றுக் கொண்டவள், கைகள் நடுங்க அதனைக் கீழே தவற விடுகிறாள்.

           ஸ்ரீமதி: வேண்டாம், வேண்டாம்! என்னிடம் எனது தலைவரிடமிருந்து பெற்ற மற்ற ஆயுதங்கள் உள்ளன. போராட்டம் தொடங்கிவிட்டது. அனைத்து தகாத செயல்களும் முறியடிக்கப்படட்டும். என் தலைவரின் எண்ணம் நிறைவேறட்டும்!

           பாடலி: வா, ரோடினி, நாம் அன்னை உத்பலாவின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வோம்.

           (அவர்கள் செல்கிறார்கள். ரத்னாவளி வேறுசில காவலர்களுடன் உள்ளே நுழைகிறாள்.)

           ரத்னாவளி: அவள் இதோ இருக்கிறாள். அவளுக்கு அரசரின் ஆணை என்னவென்று தெரியட்டும்.

           ஒரு காவலன்: ஸ்ரீமதி, அரசரின் நாட்டியமங்கை, அவருடைய கட்டளைப்படி, அசோகவனத்திற்குச் சென்று அங்கு நடனமாட வேண்டும்.

           ஸ்ரீமதி: நடனமாடவா? இன்றைய தினத்திலா?

           மாலதி: என்ன? இப்படியொரு கட்டளையைப் பிறப்பிக்க மகாராஜா அச்சம் கொள்ளவில்லையா?

           ரத்னாவளி: ஆ! கட்டாயமாக! உண்மையாகவே மக்களின் தலைவருக்கு தனது நாட்டிய மங்கையின் முன்பு நடுநடுங்கும் காலம் வந்துவிட்டது. ஓ! எத்தகையதொரு திருத்தவே முடியாத பட்டிக்காட்டுப் பெண்!

           ஸ்ரீமதி: எப்போது நாட்டியமாட வேண்டும்?

           ரத்னாவளி: இன்றுமாலை, வழிபாட்டு நேரத்தில்….

           ஸ்ரீமதி: நமது கடவுளுடைய இருக்கைக்கு முன்பாகவா? அவருடைய கோயிலிலா?

           ரத்னாவளி: ஆமாம்.

           ஸ்ரீமதி: அப்படியே ஆகட்டும்!

          (அனைவரும் செல்கின்றனர்)

         ( தொடரும் )          

ஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு

         

3 Idiots Movie Wallpapers, Posters & Stills

      

இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு யு.எஸ்ஸிலிருந்து பறந்து வந்து சென்னை மண்ணை மிதித்து ஐ.டி.சி. சோளாவில் செக்-இன் செய்த மறுகணம் செல் போன் சிணுங்கியது. வேறு யாரு.. என் சகதர்மிணி தான்..

                ”சொல்லும்மா.. இப்பத்தான் செக் இன் பண்ணினேன்.. ப்ரெட்டி ஹாட்.. ஹோட்டல் இஸ் குட்.. அனு தூங்கிட்டாளா? டேக் கேர்.. ஒன் வீக்குல வந்துருவேன். ஓக்கே.. வில் கேச் அப் லேடர்”

                செல்லைக் கட் பண்ணியவுடன் அழைப்பு மணி அலறியது.

சைக்கியாட்ரிஸ்ட் கௌன்ஸில் சேர்மேன் திருவாளர் நிர்மல் மூன்று நான்கு எடுபிடிகள் சூழ உள்ளே வந்தார்.

 

                ”வெல்கம் டு சென்னை டாக்டர்”

 

                விலை உயர்ந்த  பொக்கேயைக் கையில் திணித்தார். மறுநாள் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்த கான்பரன்ஸ் ஏற்பாடுகளைப் பற்றி விளக்கினார்.. மாலையில் வந்து மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதாகக் கூறி அவர்கள் விடை பெற்றுச் சென்ற பின் சற்று அயர்ச்சியுடன் நாற்காலியில் சாய்ந்தேன்.. பின் திடீரென்று ஞாபகம் வந்தவனாக செல்லைத் துழாவி ஒரு நம்பரைத் தட்டினேன்..

                 “ஷங்கி..”

                 மறுமுனையில் பரவசமான குரல்..

                 “ஹே.. ராகவ்.. லேண்ட் ஆயாச்சா? இரு.. இப்பவே வரேன்”

                 “அவசரப் படாதே ஷங்கி.. இன்னும் ரெண்டு நாள் என்னை விட்டுரு.. கான்பரென்ஸ் முடியட்டும்.. அப்புறம் நமக்காகவே மூணு நாள் ஒதுக்கியிருக்கேன்.. ஆமா.. நம்ம ஸ்கூல் ஐவர் கேங்குல வேற யாரையாவது பிடிக்க முடிஞ்சுதா”

                 ”ம்.. நச்சு.. சி.ஏ.வா பிராக்டீஸ் பண்ணறான்.. மாது ஆட்டோமோபைல் ஸ்பேர்ஸ் பிஸ்னஸ்.. ஆனா இப்ப ஊருல இல்லை.. சீனு சிங்கப்பூர்ல ப்ரிட்ஜ் கட்டிண்டிருக்கானாம்”

                 “சரி.. நாம மூணு பேரும் மீட் பண்ணறோம்”

                 சொன்னது போல் கான்பரென்ஸ் முடிந்த மறுநாள் காலையில் ஷங்கியிடமிருந்து கால்.

                 அன்று மதியமே தி பார்க்கில் சந்திக்க ஏற்பாடு..

                 பல வருடங்கள் கழித்து நண்பர்கள் சந்தித்த போது முதலில் வார்த்தைகள் வரவில்லை.. முதல் சில நிமிடங்கள் “ஹேய்.. ஹேய்” என்று கட்டிப் பிடிப்பதிலேயே கழிந்தன..

                 ஒரு வழியாகச் சுதாரித்து உள்ளே சென்று ரிசர்வ் செய்திருந்த இருக்கைகளில் உட்கார்ந்து.. வேண்டியதை ஆர்டர் செய்து..

                 பின் பல வருடங்கள் பின்னோக்கிப் பயணம் செய்து மூன்று பேருமே பள்ளி மாணவர்களாக மாறினோம்..

                 ”ராகவ்.. ஞாபகம் இருக்கா.. இங்கிலீஷ் சார் லவ்வுக்கு அர்த்தம் கேட்ட போது.. நீங்க கணக்கு டீச்சர் மாலினியைப் பண்றதுன்னு பட்டுன்னு சொன்னியே.. அப்ப கிளாஸே சிரிச்சுது”

                 “ஆமாண்டா.. மனுஷன் ஆடிப் போயிட்டார்”

                 “அப்புறம் அவர் ஸ்கூலுக்கே வரலையே.. ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டார்”  

                 என் மனதிலும் பிளாஷ்-பேக் ஓடியது.

                 “இப்ப நினைச்சா பாவமா இருக்கு.. இப்பலாம் லவ் ரொம்ப சாதாரண விஷயம்.. ஆனா அந்தக் காலக் கட்டத்துல.. லவ் பண்றது வெளில தெரிஞ்சா அவமானம்னு தானே நினைச்சா.. நான் அப்படிச் சொல்லியிடுக்கக் கூடாது”

                 ஷங்கி உள்ளே புகுந்தான்..

                 “டேய்.. ரொம்ப பீல் பண்ணாதே.. எது சரி தப்புன்னு தெரியாத வயசு அது.. அப்படிப் பார்த்தா.. தீபாவளிக்கு அடுத்த நாள் ஹிஸ்டரி டீச்சர் நாற்காலிக்கு அடில நான் பட்டாசுக் கொளுத்தி.. அவங்க பதறி அடிச்சு ஓடி கீழே விழுந்து.. இப்ப நினைச்சா எவ்வளவு டேஞ்சரஸ்னு தோணும்.. ஆனா நினைக்கக் கூடாது.. நினைச்சா நம்ம பால்யத்தை அனுபவிக்க முடியாது”

                 ஷங்கி சொல்வதை ஏற்கலாமா கூடாதா என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் பேச்சு வாணிக்குத் தாவியது.

                 வாணி.. அவள் தான் எங்கள் பள்ளியின் ஆல் இன் ஆல் அழகு ராணி.. எங்களை விட இரண்டு வருடங்கள் ஜூனியர்.    

                 நச்சு தான் ஆரம்பித்தான்.      

                 ”சரியான கேரக்டர்டா.. எப்பவும் எங்கயும் தனக்குத் தான் முக்கியத்துவம் இருக்கணும்.. தன்னைப் பாராட்டித் தான் எல்லாரும் பேசணும்..”

                 ஷங்கி தொடர்ந்தான்.

                 “கரெக்ட்.. பச்சையா சொல்லணம்னா.. சாவு வீட்டுல கூட அவ தான் பொணமா இருக்கணம்னு நினைக்கிற டைப்”                 

                 இதைக் கேட்டு நச்சு சிரித்து விட்டான்.

  1.                  “டேய்.. இது ரொம்ப ஓவர்.. நீயும் ராகவும் தானே அவளை உசுப்பேத்தி விட்டுட்டே இருந்தீங்க.. அவ பார்க்க சுமாரா இருந்தாலும் உன்னை மாதிரி அழகு வேற யாருமே கிடையாதுன்னு நீங்க ரெண்டு பேரும் சொல்வீங்க.. அவ படு சுமாரா பாடினாலும்.. அடுத்த பி.சுசீலா நீ தான்னு அப்படின்னு அவளை ஏத்தி விட்டீங்க.. அவ சாதாரணமா ஏதாவது பண்ணினாக் கூட.. உன்னால மட்டும் தான் முடியும்.. வேற யாராலயும் முடியாதுன்னு கூசாம அளந்தீங்க”

                 “அப்படி நாங்க சொன்னதுல அவளுக்கு எவ்வளவு கிக் இருந்தது தெரியுமா? அதை சந்தோஷமா ரசிப்பா.. நாங்க அவளைப் பாராட்டின உடனே கூட இருந்த மத்த பசங்களும் அவளைப் பாராட்டினப்போ அவ அப்படியே வானத்துல மிதக்க ஆரம்பிச்சுருவா.. நிஜமாவே தன்னை ஆல் இன் ஆல் அழகு ராணியா நினைக்க ஆரம்பிச்சுருவா”

                 இதைக் கேட்டு நச்சு கொஞ்சம் சீரியஸானான்..

                 “டேய்.. நீ சொல்ற இந்த.. கிக்.. மிதப்பு தான் பின்னால அவளை ரொம்பவே பாதிச்சிருக்கு தெரியுமா?”

                 ”என்னடா சொல்றே?”

                 “வாணி இருந்த வீட்டுக்குப் பக்கத்துல தான் என் மாமா பையன் குடியிருந்தான்.. அவன் தான் சொன்னான்.. ஸ்கூல்ல எல்லாரும் அவ ஆசைப்பட்ட மாதிரியே அவளைப் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப் பட்ட அவ.. காலேஜுக்குப் போன அப்புறமும் அதை எதிர்பார்த்திருக்கா.. ஆனா காலேஜ்ல யாரும் அவளை சீந்தவே இல்லையாம்.. ஏன்னா.. காலேஜ்ல உண்மைலயே அழகான பெண்கள் இருந்தாங்களாம்.. அவங்க உண்மைலயே நல்லாப் பாடினாங்களாம்.. ஆடினாங்களாம்.. அதனால வாணி பிகேம் எ நான்-எண்டிட்டி இன் காலேஜ்.. ஷங்கி சொன்ன மாதிரி சாவு வீட்டுலயே பிணமா இருக்க ஆசைப்படறவ.. அந்த நெக்லெக்டை அவளால ஏத்துக்க முடியலை.. டெப்ரெஸ்ட் ஆயிட்டாளாம்..”

                  ”ஐயையோ.. அப்புறம்?”

                  ”என் மாமா பையனுக்கு டெல்லி டிரான்ஸ்பர் ஆகிப் போயிட்டான்.. அப்புறம் நோ நியூஸ் எபௌட் ஹர்”

                  நச்சு கவலையோடு முடித்தான்.

                  நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

                  “நான் எம்.பி.பி.எஸ். முடிச்சு ஜி.ஹெச் சைக்கியாட்ரி டிபார்ட்மெண்டுல ஹவுஸ் சர்ஜனா இருந்த போது.. திடீர்னு பார்த்தா வாணி.. அவப்பாவோட வந்து இருந்தா.. நச்சு சொன்ன மாதிரி ஷி வாஸ் டெப்ரெஸ்ட்.. ஆரம்ப ஸ்டேஜ் தான்.. ட்ரீட்மெண்ட் அண்ட் கவுன்சிலிங் ஆரம்பிச்சு.. ஷீ ரெஸ்பாண்டட் வெல்.. ஆனா ட்ரீட்மெண்ட் முழுசா முடியறதுகுள்ள அவ அப்பா திடீர்னு கார்டியக் பெயிலியர்ல போயிட்டார்”

                  “ஓ காட்”

                  “அதுக்கப்புறம் அவ ட்ரீட்மெண்டுக்கு வரலை.. என் ஹவுஸ் சர்ஜன்ஷிப் டெர்ம் முடிஞ்சு போச்சு.. அண்ட் கொஞ்ச நாளுல நான் பர்தர் ஸ்டடீஸுக்கு யு.எஸ். கிளம்பிட்டேன்”

                  இதைக் கேட்டு நச்சு ரொம்பவே வருத்தப் பட்டான். அவன் எப்பவுமே கொஞ்சம் செண்ட்டிமெண்டல் டைப்..

                  “இதுக்குத் தான் சொல்வாங்க.. எப்பவுமே தகுதியில்லாத புகழும்.. தன்னைப் பத்தி எப்பவுமே ரொம்ப உயர்வா நினைக்கிற நினைப்பும் அழிவுல தான் கொண்டு விடும்னு”

                  இதைக் கேட்டு ஷங்கி சிரித்து விட்டான்.

                  “பாருடா. ரஜினி பட டைலாக் மாதிரி எடுத்து விடறான்.. டேய்.. ஒண்ணு நடக்கணம்னு இருந்தா நிச்சயமா நடக்கும்.. யாராலயும் தடுக்க முடியாது.. அதோட கடவுள் எல்லாரையும் ஒரே மாதிரி படைக்கறதில்லை.. வாணி அப்படி அவஸ்தைப் படணங்கறது டெஸ்டினி..”

                  நச்சுவின் கவலை இன்னும் தீரவில்லை.

                  “ஹும்.. சுலபமா சொல்லிட்டே.. பாவம்.. சின்ன வயசுலயே அம்மா போயாச்சு.. அப்பாவும் இல்லை.. இப்ப எப்படி இருக்காளோ?.. எங்க இருக்காளோ?”

                  உடனே ஷங்கி சொன்னான்..

                  “வேற எங்க.. வாழ்க்கைல இவ்வளவு பட்டதுக்கு அப்புறம் ஏதாவது மெண்டல் அசைலத்துல மோட்டு வளையை வெரிச்சுப் பார்த்திட்டு உட்கார்ந்திருப்பா.. என்ன ராகவ்?”

                  இதைக் கேட்டு நான் சிரித்தேன்.

                  ”இல்லை ஷங்கி.. அவ எந்த மெண்டல் அசைலத்துலயும் இல்லை”

                  ஷங்கி ஆச்சர்யத்துடன் கேட்டான்.

                  “உனக்கெப்படித் தெரியும்?”

                  அமைதியாக அவனைப் பார்த்தேன்.

                  ”ஏன்னா.. இருபத்தஞ்சு வருஷமா அவ மேல என்னைப் பைத்தியமாக்கிண்டிருக்கா”

    

    

 

அன்பெனும் நூலில் – தீபா மகேஷ்

Kumbakonam Railway Station Picture & Video Gallery - Railway Enquiry

கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் அந்த இரவு வேளையிலும் கூட்டமாகவே இருந்தது.

வைதேகி நுழை வாயில் அருகில் இருந்த டிஜிடல் ஸ்க்ரீனில் சென்னை ட்ரெய்ன் எந்த ப்ளாட்ஃபார்ம் என்று பார்த்தாள்.  இரண்டு என்றது. கையில் இருந்த ஒரு சின்ன பெட்டியோடு ஐந்தாம் ப்ளட் ஃபார்ம் நோக்கி நடக்க ஆரம்பித்தவள் சட்டென்று நின்றாள்.

அரவிந்த் எங்கே ?

வாசலில் முந்தியடித்து போவதும் வருவதுமாக இருந்த போர்டர்களுக்கும் ஜனங்களுக்கும் வழி விட்டு ஒதுங்கி  நின்று கொண்டிருந்தான்.

 அவன் வரட்டும் என்று காத்திருந்தாள்.

“என்ன ஒரு இன்டிஸ்ஸிப்லின்ட் க்ரௌட்., அப்படியே மேல வந்து விழறா. நீ எப்படிதான் உள்ள வந்தியோ அம்மா”, என்று அவர்களைத் திட்டிக் கொண்டே வந்தான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பொதுவாக சிரித்தாள்.

ஏதாவது சொல்லப் போய் இன்னொரு வாக்குவாதம் ஆரம்பிக்க வேண்டாம். ஆச்சு, ட்ரெயினில் ஏறி படுத்தால் காத்தால சென்னை போய்டலாம். அதுவரைக்கும் எதுவும் பிரச்சனை இல்லாம இருக்கணும் என்று நினைத்துக் கொண்டாள்.

ப்ளாட்ஃபார்ம் நெடுகிலும் ஆங்காங்கே பெஞ்ச்சுகளும் ,  ஃபேன்களும் போட்டு சுத்தமாகத்தான் இருந்தது.

ஒரு கிழவி கூடையில் பிஞ்சு கத்திரிகாய்களும், பச்சை சுண்டாக்காய்களும் வைத்து விற்றுக் கொண்டிருந்தாள். பார்த்தாலே அருமையாக இருந்தது. அந்த கிழவி வேறு “வாங்கிக்கோ” என்று ஆசை காட்டினாள். வாங்கலாம் தான். அப்புறம், இதை வேற கும்பகோணத்திலேந்து தூக்கிண்டு வந்தியா என்று அப்பாவும் மகனும் சேர்ந்து கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி என்ன ஆசை சாப்பாட்டின் மேல். வயதாகிக் கொண்டே போகிறது. பிடித்ததை எல்லாம் விட பழகிக் கொள்ள வேண்டாமா?

“ஒரே ஸ்டஃப்பி யா இருக்கு. ஏ.ஸீ வைட்டிங் ரூம் போகலாமா?” என்றான் அரவிந்த்.

“நான் இங்கியே இருக்கேன்டா. நீ வேணும்னா போய்ட்டு வா” என்று சொல்லிவிட்டு காலியாக இருந்த ஒரு  பெஞ்ச்சில் உட்கார்ந்தாள்.

வானம் பளிச்சென்று கரு நீல புடவை கட்டிக் கொண்டு நட்சத்திரங்களின் ஒளியில் மின்னியது. நிலா கண்ணுக்குத் தென்படவில்லை.

அவளுக்குக் கும்பகோணம் வருவது என்றால் அலாதி பிரியம். அந்த மண்ணின் பழமையும், எளிமையான மக்களும், சரித்திரக் கதைகள் சொல்லும் நூற்றுக் கணக்கான  கோவில்களும், ஊரைச் சுற்றி உள்ள பசுமையான வயல்களும், சுழித்து ஓடும் காவிரியும் அவளை வேறு உலகுக்கு கூட்டிச் செல்லும்.

இதெல்லாம் வெளிப்படையான காரணங்கள். ஆனால், அவையெல்லாம் தாண்டி மிக முக்கியமான காரணம், ஒப்பிலியப்பன். அவர்கள் குலதெய்வம்.

அது என்னவோ அவர் மேல் அப்படி ஒரு தீராத காதல்.

முன்பெல்லாம் வருடம் இரு முறை வருவார்கள். சேர்ந்தார்ப் போல விடுமுறை நாட்கள் வந்தால் போதும், கும்பகோணம் போகலாம், என்று கணவனை நச்சரிக்க தொடங்கி விடுவாள். வந்து இரண்டு நாட்கள் தங்கி, சுற்றி இருக்கும் கோவில்கள் எல்லாம் தரிசனம் செய்து, பொறுமையாக திரும்புவார்கள். ம்ம் , அது ஒரு காலம்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், இப்போது வருஷம் ஒரு முறை வருவதே பெரும் பாடாகி விட்டது. அதுவும் அரவிந்த்  யூ. எஸ். போனதிலிருந்து எல்லாம் மாறி விட்டது.

முதலில் மேற்படிப்பு, அப்புறம் வேலை என்று விளையாட்டு போல ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. இந்த ஐந்து வருடத்தில் அவன் சென்னை வந்த போதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால் கும்பகோணம் போவது மட்டும் தடைப்பட்டுக் கொண்டே போனது. காரணங்களைத் தாண்டி அவனுக்கு வருவதில் இஷ்டம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

பக்தி என்பது உள்ளிருந்து எழும் உணர்வு அல்லவா? அதை வெளியில் இருந்து  கட்டாயப்படுத்தித் திணிக்கவா முடியும்? அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட மகனிடம்? சரி, இதுவும் பெருமாள் சித்தம் என விட்டுவிட்டாள்.

அப்படி நினைத்துக் கொண்டாளே தவிர நடைமுறையில் அது அவ்வளவு எளிதாக இல்லை.

போன வருடம் அவன் உடம்பு சரியில்லாமல் இருந்த போது, அவள் நம்பிக்கையின் வேர்  ரொம்பவே ஆட்டம் கண்டது.  முதலில் சாதாரண ஜுரம் என்று தான் ஆரம்பித்தது, அப்புறம் தீராத வயிற்று வலி வந்து சேர்ந்தது.  

உடம்புக்கு வந்தா என்ன? டாக்டர் கிட்ட போய் மருந்து சாப்பிட்டா சரியாய் போய்விடும் என்ற அவன் ‘லாஜிக்’ அந்த வயிற்று வலியிடம் வேலை செய்யவில்லை. மருந்து சாப்பிட்டதும் சரியாவது போல் நடித்து , பின் திரும்பவும் பழையபடி வலிக்க ஆரம்பித்தது. அவன் உடலும் மனமும் சோர்ந்து போனது.

சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கொள்ளாமல் போய், குழந்தை ரொம்பவே அவஸ்தைப் பட்டான். கூட  இருந்து சமைத்துப் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் அமெரிக்கா என்ன  பக்கத்திலேயா இருக்கிறது? ஒவ்வொரு முறை அவன் ஃபோன் பேசும் போதும் அவள் துடித்துப் போய்விடுவாள்.

நாம் அன்பு செலுத்துபவர்கள் நம் கண் முன்னே வேதனைப் படுவதைப் பார்த்தும், உதவ முடியாமல் இருப்பது போல ஒரு கொடுமை எதுவும் இல்லை. வலி என்னவோ அவனுக்குத் தான் என்றாலும், வேதனை எல்லாம் வைதேகிக்கு தான்.

பெருமாளே, அவனை குணமாக்கு. அவனைக் கூட்டிண்டு உன் சந்நிதிக்கு வரேன், என்று மனம் உருக வேண்டிக் கொண்டாள்.

“வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் மேல் மாளாத காதல் நோயாளன் போல்”, என்று அவள் தனக்குத் தெரிந்த ஒரே மருத்துவனின் திருவடியைப் பற்றிக் கொண்டாள்.

மந்திரத்துக்குக் கட்டுப் பட்டது போல, அவன் உடல்நலம் ஒரு மாதத்தில் தேறியது.

ஆனால் அவனை கும்பகோணம் கூட்டி வர ஆறு மாதம் ஆயிற்று. அவனைக் கெஞ்சி, கொஞ்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தாள்.

ஒரே ஒரு நாள் தான். ஒரே ஒரு கோவில் தான், என்று அவன் கண்டிஷனுக்கு எல்லாம் தலை ஆட்டினாள்.

ஒரு வழியாக எல்லா தடைகளையும் தாண்டி, இன்று காலை ஏகாந்த தரிசனம். பெருமாள் சந்நிதியில் நின்ற போது மனம் உருகி காரணமே இன்றி கண்ணீர் வழிந்தது. எத்தனை நேரம் நின்றிருப்பாள் என்று தெரியவில்லை, கண் விழித்த போது, ஸ்ரீதர் பட்டர் இவளைப் பார்த்து சிரித்தார்.

அவர் தூரத்து சொந்தம், ஒரு வகையில் அண்ணன் முறை.

“அதான், பையனுக்கு உடம்பு எல்லாம் சரியாப் போச்சே, இன்னும் என்ன கவலை,” என்றார் புன்னகைத்தபடி..

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன அண்ணா, இவனை இங்க கூட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. அஞ்சு வருஷம் ஆச்சு, கோவில் பக்கம் வந்தே. எது சொன்னாலும் விதண்டாவாதம். தாங்க முடியறது இல்ல. சரியா வளர்க்கலியோ, தப்பு பண்ணிட்டமோனு மனசு கெடந்து தவிக்கறது.” என்றாள்.

தாயுள்ளித்தின் தவிப்பை, வேதனையை அவர் புரிந்து கொண்டார். கனிவோடு அவளைப் பார்த்து, வைதேகி, உனக்கு ராமானுஜர் சரித்திரத்துல, உறங்காவிலி கதை  தெரியுமோ ? என்றார்.

அவளுக்குத் தெரியும் என்றாலும் அதை அவர் சொல்லி இன்னொரு முறை கேட்கத் தோன்றியது.

“நீங்க சொல்லுங்க அண்ணா”, என்றாள்.

“உறங்காவிலிக்குத் தன் மனைவி பொன்னாச்சி மேல அளவிட முடியாத காதல். அவளைப் போல அழகியும், அவள் கண்களைப் போல தன்னை அடிமை கொள்கிற பொருளும் இந்த உலகத்திலேயே இல்லைனு நம்பினான்.

ஒரு சமயம் ஸ்ரீரங்கம் சித்திரைத் திருவிழால ராமானுஜர் அவர் சீடர்களோட போயிண்டு இருக்கற போது, உறங்காவிலி தன் மனைவிக்குக் குடை பிடிச்சிண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நடந்து வந்த காட்சியைப் பார்த்தார். மத்தவங்க எல்லாம் உறங்காவிலியைப் பரிகாசம் பண்ணார்கள். ஆனா, ராமானுஜர் என்ன நினைச்சார் தெரியுமா, இதோ, ஒருவன் இருக்கிறான், அவனுக்கு எப்படி அன்பு பண்ணனும் தெரிஞ்சிருக்கு. இப்படி அன்பு பண்ண தெரிஞ்சவனுக்குத் தான் பக்தி பண்ண முடியும்னு அவனைக் கூப்பிட்டு வரச் சொன்னார்.

அவனைக் கூட்டி வந்து ரங்கநாதரோட தாமரை மலர் போன்ற கண்களை சேவிக்க வெச்சார். பெருமாள் தன் திருக்கண்களைத் திறந்து அவனுக்குத் தரிசனம் தர அவன் அப்படியே மெய் மறந்து நின்றான், அப்புறம் ராமானுஜர்க்கு சீடரானான்.

ஆழ்ந்த அன்பு தான் பக்தி. நாம எது மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கோமோ , அதோட குறைகள் நமக்குத் தெரியாது. அப்போ லாஜிக் எல்லாம் பாக்க மாட்டோம். அந்த அன்பு பக்தியா மாற ஒரு க்ஷணம் போதும்.

அவனோட மனசுல அன்பு பொங்கி நிறையனும்னு பிரார்த்தனைப் பண்ணிக்கோ, அவன் அருமையான குழந்தை. அவனைப் பகவான் பார்த்துப்பார். நீ கவலைப் படாதே,” என்றார்.

அவர் வார்த்தைகளில் இருந்த சத்தியமும், அதை அவர் சொன்ன விதமும், அவள் மனம் சட்டென்று லேசாகியது.

“அம்மா”,  என்ற அரவிந்த்தின் குரல் அவள் நினைவுகளைக் கலைத்தது. “ட்ரெய்ன் வந்துடுத்து, ஏ 2 கோச் முன்னாடி வரும் வா” என்று நடக்கத் தொடங்கினான்.

கம்‌பார்ட்‌மென்டில் நுழைந்த உடன் அடுத்த பிரச்சனை ஆரம்பமாகியது. அவர்கள் ஸீட்டில் ஒரு இளம் பெண் தன் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். படிய வாரி பின்னிய தலைமுடியும், அதில் மணத்த மல்லிகையும் அவள் இந்த ஊர் பெண் என்று சொல்லாமல் சொல்லியது.  முதல் முறையாக தனியாக பிரயாணம் செய்கிறாள் போல, கொஞ்சம் பயந்தது போல் இருந்தது அவள் முகம்.

உங்க  ஸீட் நம்பர் என்ன, என்றாள் வைதேகி.  

அந்த பெண் தன் கையில் இருந்த டிக்கெட்டைப் பார்த்த படியே, “ஏ 2 கோச், ஸீட் நம்பர் 2, 3 எங்களது” என்றாள்.

அரவிந்த் ஃபோனில் இருந்த டிக்கெட் நம்பரை மறுபடியும் செக் செய்தான். “இல்ல, ஸீட் நம்பர் 2, 3, எங்களது, வைதேகி, அரவிந்தன். நீங்க சரியா செக் பண்ணுங்க”, என்றான்.

அவள் மறுபடியும் பார்த்துவிட்டு, “இல்லங்க எங்க நம்பர்தான். கரெக்ட்டாதான் போட்டிருக்கு”, என்றாள்.

“திஸ் இஸ்  வை ஐ ஹேட் திஸ் ஸிஸ்டம்.. எப்படி ரெண்டு பேருக்கும் அதே ஸீட் நம்பர் குடுக்க முடியும்?” என்று ஆரம்பித்து விட்டான்.

”இப்போ இங்க உட்காருவோம். டி. டி. ஆர் வந்துடுவார், கேட்கலாம்,” என்று அவனை சமாதானப் படுத்தினாள்.

நல்ல வேளை , டி.  டி. ஆர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து விட்டார்.

“மேடம், உங்களோடது ஃபர்ஸ்ட் க்ளாஸ், ஏ 1, ஸீட் நம்பர் 2 , 3 . இது செகண்ட் ஏ ஸீ கோச். இப்படியே உள்ள போங்க, ரெண்டு கம்‌பார்ட்‌மென்ட் முன்னாடி வரும்” என்றார்.

அவருக்கு தாங்க்ஸ் சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.

ஃபர்ஸ்ட் க்ளாஸ் கோச் இன்னும் வசதியாக நன்றாக இருந்தது.

அரவிந்த்தான் நிலைக் கொள்ளாமல் இருப்பது போல் தோன்றியது. கதவைத் திறந்து வெளியில் சென்றான். இப்போ என்ன ஆச்சு என்று யோசித்தாள். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்ப வந்தான். “நான் அந்த லேடி கிட்ட போய் ஸாரீ சொல்லிட்டு வந்தேன் அம்மா. ஷி வாஸ் ரைட்.  ஐ வாஸ் ராங். நான் பண்ணது தப்புனு தோணித்து. அதான், ஸாரீ கேட்டுட்டு வந்தேன். அந்த குழந்தை சோ க்யூட் தெரியுமா, என்ன பார்த்து சிரிச்சு என் கூட விளையாடித்து,” என்றான்.

அந்த டிரிப்பில் முதன்முறையாக அவன் சந்தோஷமாக சிரிப்பது போல தோன்றியது வைதேகிக்கு.

பரீட்சை -பி.ஆர்.கிரிஜா-

K.Karthik Raja's - KKR Whatsapp Collections : மகனுக்கு ஒவ்வொரு அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.!No.1 Tamil Blog in the world|Tamil News Paper|k.karthik raja|Whatsapp News|Breaking News Headlines|Latest ...

செந்திலுக்கு தன் மேலேயே கோபம் கோபமாக வந்தது. அம்மா நொடிக்கு நூறு முறை சொல்லியும் கூட அவனுடைய சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறான். இதோ, நாளை விடிந்தால் அவனுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளது.

கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்ததிலிருந்து தான் ஏதோ பெரிய ஒன்றை சாதித்து விட்டது போல் கர்வத்துடன் நடந்து கொள்ளத் தொடங்கினான். புத்தகத்தைத் தொட்டு நீண்ட நாட்களாகி விட்டது, படித்தால்தானே ! நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, வீண் அரட்டை அடிப்பது, தெரு முனையில் நின்று கொண்டு அங்கு வரும் பெண்களை சைட் அடிப்பது என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அம்மாவோ முன் ஜாக்கிரதை முத்தண்ணா . ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே முழங்க ஆரம்பித்து விடுவாள். காரியத்திலும் மகா கெட்டி. உடனே இறங்கி விடுவாள்.

“செந்தில், இன்னுமா குருட்டு யோசனை ? பாழாய்ப் போன யோசனை! சட்டென்று எழுந்து வேலையப் பார். சமையல் அறையிலிருந்து வெளியே வந்து சத்தம் போட்டு விட்டு திரும்பச் சென்றாள் அவன் அம்மா சாந்தி.

அம்மா இரைவது காதில் சம்மட்டியாக இறங்கியது. அவனுக்கு அம்மாவின் மேல் கோபம் தலைக்கு மேல் ஏறியது. உடனே பஞ்சை எடுத்து இரண்டு காதுகளிலும் அடைத்துக் கொண்டு செல் போனை குடைந்து கொண்டிருந்தான்.

சொல்வது காதில் விழுகிறதா? என்னதான் அப்படி சோம்பேறித்தனமோ?  எனக்கு நேர்மாறாக வந்து பிறந்திருக்கு என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள் சாந்தி.

அவள் கணவர் ரமேஷ் எதற்கும் கவலைப்படாமல் தலை முழுக்க தமிழ்ப் பேப்பரில் அமிழ்த்திக் கொண்டு படிப்பது மாதிரி போக்குக் காட்டிக் கொண்டிருந்தார். “இருக்கறது ஒரு பையன், அவன் என்ன படிக்கிறான்னு கூட தெரியாம இப்படி கல்லு மாதிரி இருக்கீங்களே, அப்படி என்னதான் பேப்பரில் இருக்கோ ?” என்று எரிச்சலுடன் கணவருக்கும் ஒரு டோஸ் விட்டாள் சாந்தி.

செந்தில், நாளைக்குப் பரீட்சைக்கு எல்லாம் தயார் செய்து விட்டாயா ? பாஸ் பண்ணி விடுவாய் அல்லவா ? திரும்பவும் ஆரம்பித்து விட்டாள் அவன் அம்மா.

இந்த முறை செந்திலால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வேக வேகமாகத் தன் ரூமிலிருந்து வெளியே வந்து, “ அம்மா, ஏன் இப்படிக் கத்திக் கூப்பாடு போடற? நான் என்ன சின்னக் கொழந்தையா ? இனிமே நீ இப்படிக் கழுத்தறுத்தே, நான் வீட்டுக்குத் திரும்பியே வரமாட்டேன், ஆமா சொல்லிட்டேன்,” என்று கோபமாக அம்மாவைப் பார்த்து சத்தம் போட்டு விட்டு விருட்டென்று வெளியேறினான் செந்தில்.

“என்னங்க, எப்போதும் எதிர்த்துப் பேசாத செந்தில் இன்னிக்கு என்னப் பார்த்து இப்பிடி கத்திட்டுப் போறான், நீங்க என்னடான்னா ஒன்றும் தெரியாத மாதிரி இப்பிடி சோபாவில் ஜடம் மாதிரி உக்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்க்கறீங்க ? ம்ம்… எல்லாம் என் தலை எழுத்து,” என்று ஆயாசத்தில் புலம்பி விட்டு வழக்கம் போல் சமையலறைக்குள் புகுந்தாள் சாந்தி.

செந்தில் வழக்கம் போல் குமார் வீட்டிற்குச் சென்றான். “வாடா, உனக்காகத்தான் நான் வெய்ட் பண்றேன், வா வா, நாம போற வழிலே கார்த்திக்கைப் பிக் அப் பண்ணிட்டு அப்படியே பீச் போலாம், என்ன, ஓகே யா ? என்றான். இல்ல, குமார், எனக்கு மனசே சரியில்ல, நாளை பரீட்சைக்கு ஒண்ணுமே படிக்கல, பாஸ் பண்ணுவேனான்னு தெரில டா….என் அம்மா வேறு தினம் தினம் போரடிக்கறாங்க, படி, படின்னு… எனக்கு எங்க அம்மாவைப் பார்த்தாலே வெறுப்பா இருக்குடா…. என்று குமாரிடம் கொட்டித் தீர்த்தான் செந்தில்.

கவலைப் படாதடா, எல்லா அம்மாக்களும் அப்படித்தான், இந்தா, ஒரு தம் அடி, எல்லாம் சரியாய்ப் போய்டும் என்று ஒரு சிகரெட்டை செந்திலிடம் நீட்டினான். செந்தில் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்தான். மனது லேசான மாதிரி இருந்தது. அதற்குள் கார்த்திக்கும் அங்கு வந்து சேர்ந்து கொண்டான். மூவருமாக, ஒரே பைக்கில் பீச் சென்று விட்டு, இரவு எட்டு மணி வாக்கில் வீடு திரும்பினான் செந்தில்.

அவன் வீட்டை நெருங்கினால், ஒரே கூட்டம். அவன் வீட்டை ஒட்டி உள்ள வீட்டு வாசலிலும், இவன் வீட்டு வாசலிலும் ஒரே ஜனத்திரள். அங்குள்ள ஒரு பெரியவரைப் பார்த்து என்ன என்று விசாரித்தான். அதற்கு அந்தப் பெரியவர் பக்கத்து வீட்டைச் சுட்டிக் காட்டி, தம்பி, உனக்கு விஷயமே தெரியாதா? அந்த வீட்டு அம்மா அரை மணி நேரத்துக்கு முன்புதான் மாரடைப்பால் இறந்து போனாங்க. அவங்க பொண்ணு அவங்களை பயங்கரமாத் திட்டி விட்டு வெளியே போச்சாம். அதிர்ச்சியில அந்த அம்மா மாரடைப்பு வந்து போய்ட்டாங்க…. என்று சொல்லிக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.

மேற்கொண்டு அவர் கூறியது எதுவும் செந்தில் காதில் விழவில்லை. அவன் அலறி அடித்துக் கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்து ஹால், சமையலறை, பெட்ரூம், கொல்லைப் பக்கம் என்று அம்மாவைத் தேடினான். அம்மா பின் கட்டில் ஒரு ஓரமாக உள்ள துளசிச் செடியில் உள்ள மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தாள். செந்தில் வேகமாகச் சென்று அம்மா என்று அலறிக் கொண்டு அப்படியே அவளைக் கட்டிக் கொண்டான். சாந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அவள் மகனின் இந்த செய்கை அவளுக்கு பேரானந்தத்தை அளித்ததென்னவோ உண்மைதான்.

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

டெஸ்டில் பாஸா பெயிலா

Tamil Nadu's uneven testing a challenge in Covid diagnosis - News Analysis News

பள்ளி கல்லூரி நாட்களில் டெஸ்ட் ரிசல்டைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஆனால் இன்று வரப் போகும் டெஸ்ட் ரிசல்டை நினைத்தால்தான் கவலையாக உள்ளது. காரணம் இருவரும் எழுதிய டெஸ்டில் என மகன்  பெயிலென வந்தது. கவலை கூடி விட்டது.

தெனாலி பட கமல் போல கடந்த சில நாட்களாக எங்கும் பயம் எதிலும் பயம். நான் கடந்த ஒரு வாரத்தில் வீட்டை விட்டு வெளி சென்றதே காலை வாக்கிங்  மட்டுமே.

அச்சமயம் கூட மாஸ்க் அணிந்து எதிரே வருபவரை கண்டால் பயந்து ஒதுங்கி விடுவேன். பின் இருந்து யாராவது என்னைக்  கடந்நு சென்றாலும் பயந்து ஒதுங்கி விடுவேன்.

என மகனுக்கு  ஓரிரு நாட்களாக தொண்டையில் கிச் கிச்.   தன்னைத்  தனிமைப் படுத்திக் கொண்டான். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை.  இருந்தும் கொரோனா  பாஸிடிவ்.  

எனக்கும்  நேற்று இரவிலிருந்து தொண்டையில் கிச் கிச் . காலை எனக்கே சற்று பயம் வந்தது.
மூக்கு வாசனை வருகிறதா என பார்க்க ஒரு காரமான தைலத்தை முகர்ந்து பார்த்தேன்.
சற்று அதிகமாக உறிஞ்சி விட்டேன் போல. தலை வரை சுர்ரென்று ஏறி கண்களில் நீர்.

பரவாயில்லை முகர்ச்சியில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் இரண்டாவது டெஸ்டாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய பர்பியூம் (perfume) எடுத்து முகர்ந்து பார்த்தேன் . அருமையான வாசனை, ஏன் அதை அப்பொழுது உபயோகிக்க வில்லை என்ற எண்ணம் உறுமலுடன் வந்தது.

பின்னர் வாய்வழியாக வைரஸ் நுழைவதை தடுக்க சுடு நீர் மருந்து.  எவ்வளவு சூடாக இருக்க வேண்டுமென தெரியாததால் கொதிக்கும் நீரை கையில் வைத்து குடிக்கும் பக்குவத்தில் எடுத்துக்கொண்டேன்.

குடித்த பின் அடிவயிற்றின் வெளிப்பக்கமே சுட்டது. வைரஸ் சூடு தாங்காமல் ஓடியே போயிருக்கும்.
சரி, நமக்கு கொரானா இல்லை நானாக முடிவு செய்தேன் . ஆனாலும் என  மகன் விடவில்லை. டெஸ்ட் எடுக்க வைத்து விட்டான்.

மீறி பிடிவாதம் பிடித்தால் அப்பீல் சுப்ரீம் கோர்ட் செல்லும். சுப்ரீம் கோர்ட் நியூ ஜர்ஸியில் உள்ளது. என் மகள்தான் ஜட்ஜ். அவள் ஏதாவது செய்து வீட்டிற்கு ஆம்புலனஸ் அனுப்பி வைத்து விடுவாள்.
அம்மாவை விட்ட அவர்களுக்கு என்னையும் விட்டுவிடுவோமோ என்ற பயம்.

சோதனைச் சாலையில்  மூன்றாவது மாடிக்கு போகச் சொல்லி பின்னர் முதல் மாடிக்கு அனுப்பி பின்னர் மீண்டும் மூன்றாவது மாடியில் எடுத்தார்கள். நான் முறையிட்டது பிடிக்க வில்லை போலும் !

அவர் என் மூக்கில் நுழைத்த குச்சி கண் வரை சென்றது.

ஒருவழியாக அந்த வைபவம் முடிந்து பரிசோதனை முடிவு வருவதற்காக ஒரு நாள் காத்திருப்பு. 

மறுநாள் முடிவு தெரிந்தது! 

அப்பாடா ! எனக்கு கொரோனா நெகட்டிவ்.  

என மகனுக்கு  ரிப்போர்ட்தான் பாஸிடிவ் . கடவுள் கிருபையால் அவனுக்கு  ஒரு சிறு தொந்திரவும் இல்லை. ஜாலியாக தனிமை படுத்திக் கொண்டுள்ளான்.

எனக்கோ  கொரோனா நெகட்டிவ்.

ஆனால் நேற்று மாலை முதல் எனக்கு கடுமையான இருமல், 102 டிகிரி காய்ச்சல். உடம்பு வலி. டாக்டரின் அறிவுரையின்படி  இரவு சி டி ஸ்கேன்  எடுத்தார்கள்.

கடைசியில் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனாலும் வீட்டில் என்னையும் தனிமைப் படுத்திக் கொள்ள அனைவரும் ஏகமனதாக அன்புக் கட்டளை இட்டார்கள் !

இப்போது  என் வீட்டில்  என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டிருக்கறேன். 

கொரானாவை பையனுக்கு இறைவன் கொடுத்து அதன் விளைவுகளை எனக்கு கொடுத்து விட்டார் போலும்

Facebook

ட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)

Bollywood... Dil Se

‘யுவர் ஆனர்.. அடுத்ததாக நிருபர் மோகனை விசாரிக்க விரும்புகிறேன்’ என்றார் பரந்தாமன்.

‘மோகன்.. மோகன்.. மோகன்..’ என்று டவாலி கத்த அந்த கோர்ட்டே ஆவலால் உறைந்து போயிருந்தது.

மெதுவாகச் சாட்சிக் கூண்டை நெருங்கிய உருவத்தைக் கண்டதும், ‘யுவர் ஆனர்.. திஸ் ஈஸ் அப்சல்யூட் இம்பர்ஸனேஷன்.. இவர் மோகனே அல்ல.. ‘ என்று தன் இருக்கையிலிருந்து குதித்தெழுந்தார் ராமன்.

‘யூ ஆர் கரெக்ட்.. ராமன்.. இவர் முகம் மோகனுடையது அல்ல.. மோகனின் கஸின் சீனுவுடையது… ஆனால் உடம்பும், உயிரும் மோகனுடையதுதான்.. ‘ என்றார் பரந்தாமன்
நகைத்தபடியே.

‘நோ.. ஐ அப்ஜக்ட்… முதலில் இவர் மோகன்தான் என்று நிரூபிக்க வேண்டும்.. அப்புறம்தான் இவரை மோகனாகக் கூண்டில் ஏற்ற முடியும்’

‘என்ன செய்வது..’ என்ற குழப்பத்தோடு ப்ராஸிக்யூடரைப் பார்த்தார் நீதிபதி.

‘யுவர் ஆனர்.. சில விஷயங்களை மனதில் நிறுத்தி இந்த சாட்சியத்தை என் போக்கில் விசாரிக்க விரும்புகிறேன்.. இவர் சாட்சியம் கூறக் கூறப் பல விஷயங்கள் வெளியே வரும்.. உங்களுக்கும் இவர்தான் நிருபர் மோகன் என்று புரியும்.. அத்தோடு அதை ஊர்ஜிதம் செய்ய மற்ற சில எவிடன்ஸ¤களையும் அப்புறமாக சமர்ப்பிக்கிறேன்..’

‘யுவர் ஆனர்.. ஐ அப்ஜக்ட்..’

‘மிஸ்டர் ராமன்.. அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப்
பார்ப்போமே.. ‘ என்ற நீதிபதி பரந்தாமன் பக்கம் திரும்பி ‘வித் தட் ஸ்டிபுலேஷன், ஐ பெர்மிட்.. அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு..’ என்றார்.

‘தாங்க் யூ யுவர் ஆனர்.. ‘ என்ற பரந்தாமன் சாட்சிக்
கூண்டில் நிற்கும் மோகனிடம் திரும்பி, ‘மிஸ்டர் மோகன்.. மார்ச் ஆறாம் தேதி நடந்த அந்தக் கோர சம்பவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைக்  கூறுங்கள்.’ என்றார்.

‘சம்பவம் நடந்த மார்ச் ஆறாம் தேதி மாலை ஆறு
மணிக்கு தணிகாசலம் ஸாரின் கஸ்ட் ஹவுஸ் இருந்த ஏரியாவில் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு அந்த கஸ்ட் ஹவுஸ் இருக்கும் வீதி வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தேன்..அப்போது தணிகாசலம் ஸாரின் பையன் பாபுவின் கார்
என்னைத் தாண்டிப் போய் கஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தது. பாபு காரை ஓட்ட பின் ஸீட்டில் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இந்தக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராமுவும் சோமுவும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண்ணின் முகமும், கைகளும், துணியால் இறுகக் கட்டப்பட்டிருந்தன. இது அசாதாரணமாகப்
படவே நான் அவர்கள் கஸ்ட் ஹவுஸ் பின் பக்க கேட் பக்கம் ஓடினேன்.. கேட் முன்பக்கம் எப்பொழுதும் ஒரு வாட்ச்மேன் உண்டு.. பின்பக்கம் செக்யூரிடி ஏதும் கிடையாது.. அந்தப் பின்பக்க கேட் மூடப் பட்டிருந்தது. அந்தக் காம்பவுண்ட் சுவர் அதிகம் உயரம் இல்லாததால் சுவர் மேல் ஏறி உள்ளே
குதித்தேன்.. குதித்தவன் பின்பக்கமாக உள்ள ஸ்பைடர் ஸ்டெப்ஸில் ஏறி மொட்டை மாடியை நோக்கி மெதுவாக ஏறினேன்.. ஏறிக் கொண்டிருந்தவன் வென்டிலேட்டர், ஜன்னல்
வழியாக உள்ளே பார்த்துக் கொண்டே சென்றேன்.. ஒரு வென்டிலேட்டர் வழியாக உள்ளே பார்த்ததும் அப்படியே உறைந்து நின்றேன்.. அதிலிருந்து பெட்ரூம் நன்றாகத் தெரிந்தது. கட்டிலில் அந்தப் பெண்ணைக் கிடத்தி இருந்தார்கள். அப்பொழுது அவள் வாயில் இருந்த துணியை நீக்கி இருந்தார்கள். அவள். ‘அண்ணா.. அண்ணா.. வேண்டாம் அண்ணா.. என்னை விட்டுடங்கண்ணா..’ என்று கதறிக்
கொண்டிருந்தாள். எனது வீடியோ காமிராவை எடுத்து அங்கே நடந்த அந்தக் கோர சம்பவத்தை அப்படியே படமாக்கினேன். பிஞ்சு உடல் மூன்று ஆண்களின் ஆளுமை தாங்காமல் அப்படியே தளர்ந்து சரிந்து விட்டது.

‘டேய்.. செத்துட்டாடா’ என்றான் சோமு.

‘மூன்று பேர் முகங்களிலும் கிலி படரத் தொடங்கியது.

‘அந்தக் காட்சியைப் பார்த்து உறைந்து நின்ற நான், சிறிது கவனக் குறைவாக அந்த வென்டிலேட்டரின் கதவைத் தட்ட, அது சிறிது சத்தம் செய்ய, குற்றவாளிகள் மூவரும் வென்டிலேட்டர் பக்கம் திரும்பி நோக்கி என்னைப் பார்த்து விட்டார்-
கள்.

‘டேய்.. அது அந்த நிருபர் மோகன் இல்லே.. அவனை
விடக் கூடாது. பிடிங்க…’ என்று கத்தினான் பாபு.

‘மூவரும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

‘நான் ஸ்பைடர் ஸ்டெப்ஸில் சீக்கிரமாக இறங்கி வீதியிலே ஓட ஆரம்பித்தேன். அவர்கள் மூவரும் என்னைத் துரத்திக் கொண்டு வந்தார்கள்.

‘இரவு கவியும் நேரமாதலால் ரோட்டிலே கூட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒவ்வொருவர் போய்க்கொண்டிருந்தார்கள். சிறிது தூரம் ஓடியதும் எதிர்ப்பக்கமாகப் பார்த்தால் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நாலு கூலிப்-
படையாட்கள் மரக் கட்டைகளோடு நின்றிருந்தனர். பாபு டெலி·போன் செய்து அவர்களை வரவழைத்திருக்க வேண்டும். முன்னால் அந்த நால்வர். பின்னால் குற்றவாளிகளான
இந்த மூவர்.

‘இனி தப்பிக்க வழியில்லை’ என்று நன்றாகப் புரிந்தது. நல்ல வேளையாக நான் அவர்களையும், அந்தக் கொடூர சம்பவத்தையும் பார்த்ததைப் பார்த்தார்களேயொழிய, நான்
வீடியோ எடுத்தது அவர்களுக்குத் தெரியாது. நான் மெதுவாக அந்த ரோட்டின் புதர் மண்டிய ஒரு பக்கம் நகர்ந்து அந்த வீடியோ காமராவை ஒரு புதரடியில் போட்டு விட்டேன் அவர்கள் எல்லோரும் என்னை அடிப்பதில் குறியாக இருந்தார்களே யொழிய நான் காமிராவை புதரடியில் போட்டதைக்
கவனிக்கவில்லை.

‘நான் மெதுவாக சாலையின் நடுப்பக்கம் வந்து, அடிகள் வாங்கத் தயாரானேன். குங்க்·பூ, கராத்தே, யோகா போன்றவைகளைக் கற்றுப் பயிற்சி செய்து காய்த்துப் போன உடம்பு என்னுடையது. நாலு பக்கங்களிலும் அவர்கள் என்னைத்
தாக்க வலி பொறுக்க முடியாமல் கத்துவது போல் நடித்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் அடி வாங்கி சோர்ந்து விட்டவன் போல் ரோட்டில் தடாரென்று விழுந்தேன்.

‘என்னுடைய நல்ல காலமோ, அல்லது அவர்கள் கெட்டகாலமோ. ஏதோ ஒரு கார் சாலையில் வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் ‘தலைவா, நாம அடிச்ச இந்த
அடிக்கு அவன் பிழைக்க முடியாது. யாரோ வருகிறார்கள். நாம் ஓடி விடுவோம்’ என்றான் கூலிப்படையாள் ஒருவன்.

‘மாரி… நீ சொல்றதும் சரிதான்.. நீ தூரத்தில் எங்காவது மறைந்து கொண்டு இங்கு என்ன நடக்கிறது ன்னு பார்த்து அப்புறம் வந்து சொல்.. நாங்கள் தப்பித்து ஓடி விடுகிறோம்.’
என்றான் பாபு.

‘போகிற போக்கில் கூலிப்படை ஒருவன் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ஆஸிட் பாட்டிலை என் மீது வீசி விட்டு ஓடினான்.

‘அந்த பாட்டில் என்னுடைய தோளில் பட்டு கீழே விழுந்தது என்றாலும் ‘அய்யோ.. ஆஸிட் என் கண்ணிலே பட்டுவிட்டதே.. என் முகமே எரிகிறதே… கண்ணே போய் விட்டதே’ என்று அலறினேன்.

‘ரோட்டிலே வந்த கார் நின்றது. அதிலிருந்த நபர் என்னை நோக்கி ஓடி வந்து என் முகத்தை நிமிர்த்திப் பார்த்து‘மோகன் நான்தான் டாக்டர் சரவணன்.. ஏன்,,என்னாச்சு..?’
என்றார் கலவரத்தோடு.

‘டாக்டர்.. மெதுவா.. நான் அப்புறமா விரிவாகச் சொல்றேன். ரோட்டோரமா ஏதோ தேடுவதுபோல் போய் அந்தப் புதருக்குப் பக்கத்தில் சென்று நான் போட்டு வைத்திருக்கும் வீடியோ காமராவை எடுத்து உங்கள் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வாருங்கள்’

‘அவர் நிலமையைப் புரிந்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் காமிராவை எடுத்துப் பாக்கேட்டில் போட்டுக் கொண்டு வந்தார். பின் அவரும் அவர் டிரைவருமாக
என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றனர்.

‘ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் அவரிடம் கிசுகிசுப்பாக, ‘டாக்டர்.. என்னை நேரே ஐ.ஸீ.யூ. க்கு கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு நல்ல நம்பிக்கையுள்ள ஒரு நர்ஸ் மட்டும் இப்போதைக்கு இருக்கட்டும்’ என்றேன்.

‘அதன்படியே என்னை ஐ.ஸி.யூ.வில் கொண்டு கிடத்தினார்கள். அங்கே வேறு யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு நடந்ததை டாக்டரிடம் கூறினேன். அந்த வீடியோ காமராவை அவருடைய பர்ஸனல் லாக்கரில் பத்திரப்படுத்தி
வைக்கும்படியும் கூறினேன்.

‘டாமிட்.. வீஷ¤ட் நாட் லீவ் திஸ்… வீஷ¤ட் டீச் தெம் எ
லெஸன்’

‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா நான் இந்த முகத்தோட இருந்தா என்னை நிச்சயம் கொன்னுடுவாங்க’ என்றேன்.

‘அப்பொழுது ஐ.ஸி.யூ. வின் வெளியே இருந்த நர்ஸ் கதவைத் திறந்து ‘ஸார்.. உங்களிடம் டாக்டர் மதன் அர்ஜன்டா பேசணுமாம்’ என்றாள்.

‘ஒரு நிமிடம்..’ என்று வெளியே அந்த டாக்டரிடம் பேசி விட்டு வந்த டாக்டர் சரவணன், ‘மோகன் வெரி ஸாரி.. உங்க கஸின் சீனுவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவனை இரண்டு மணி நேரத்திற்கு முன்னாலே அட்மிட் பண்ணி இருந்தாங்க.
எங்களாலே அவனைக் காப்பாற்ற முடியலே.. ஹீ ஈஸ் நோ மோர்…’ என்றார்.

‘மை காட்.. துன்பத்திற்கு மேல் துன்பம்.. அவன் அங்கேஇறந்து கிடக்கிறான்… எனக்கு இங்கே இப்படி..’ என்று முகத்தை மூடிக் கொண்டு விசும்பினேன்.

‘விசும்பிய நான் திடீரென்று கண்களைத் துடைத்துக் கொண்டு, ‘டாக்டர்.. ஒன்று செய்தால் என்ன.? நான் இந்த முகத்தோட இருந்தா ஆபத்து.. என் சாயல்லேயே இருக்கும் சீனு இறந்து விட்டான்.. என் முகத்தில் ஆஸிட் விழுந்த மாதிரி ஆக்ட் வேறே கொடுத்திருக்கேன்.. என் முகத்திலே சிறு
ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்து என் முகத்தை சீனு முகம் போல் மாற்றி விடுவோம்.. நீங்கள் நாளைக்கு பேப்பர்லே ‘நிருபர் மோகன் மாலை ஏழு மணி அளவில் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஆஸ்பத்திரியில்
சேர்க்கப் பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் இறந்து விட்டார்’ என்று நியூஸ் கொடுத்திடுங்க. சீனு குணமாகி டிஸ்சார்ஜ் ஆன மாதிரி
ஹாஸ்பிடல்லே ரிக்கார்டு பண்ணிடுங்க.. நான் வெளியே போய் இந்தக் கேஸ் முடியும் வரை சீனுவாக இருக்கேன்’ என்றேன்.

‘பிரில்லியன்ட் ஐடியா.. இப்பவே உங்க ·பாமிலி எல்-
லோர்கிட்டேயும் பேசி அப்படியே செய்துடறேன்’ என்றார் டாக்டர் சரவணன். அவர் எங்கள் ·பாமிலி டாக்டராகவும் இருந்ததால் எங்கள் குடும்பத்தினர் எல்லோரிடமும் பேசி அப்படியே செய்யவும் முடிந்தது. நான் சீனுவாக டிஸ்சார்ஜ் ஆகி டாக்டர் சரவணனின் தனிப்பட்ட க்ளினிக்கில் போய்ச்
சேர்ந்தேன். சீனுவின் முகத்தில் – உடம்பில் – சிறிது ஆஸிட்டும் தெளிக்கப்பட்டு அவனது உடல் என் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. இதை வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த பாபுவின் ஆட்கள் உண்மையென்று நினைத்து
இத்தனை நாட்கள் கவலை இல்லாமல் சுற்றித் திரிந்து கொண்-டிருந்திருக்கிறார்கள். எனக்கு அந்த டாக்டரின் தனிப்பட்ட க்ளினிக்கில் காதும் காதும் வைத்தமாதிரி ப்ளாஸ்டிக் ஸர்ஜரி
நடந்தது. அந்த ஏரியாவில் இருந்த இன்ஸ்பெக்டர் மிகவும் நாணயமானவர். டாக்டர் சரவணன் அவரிடம் விவரங்களைக் கூற. ‘நான் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகவும், நான் குற்றுயிரும் குலையுயிருமாய் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கே அதிகாலை இறந்து விட்டதாகவும் ரிகார்டு தயாரிக்கப்பட்டு ·பைல் செய்யப்பட்டது. என்னதான் காய்ச்ச உடம்பு ஆனாலும் அவர்கள் அடித்த அடிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மீள
எனக்கு மூன்று மாதங்கள் ஆகின’ என்று முடித்தார் மோகன்.

கோர்ட்டில் இருந்த பார்வையாளர்களுக்கு – நீதிபதி,
அட்வகேட் ராமன் உட்பட – ஒரு பெரிய சொற்பொழிவைக் கேட்ட ஒரு உணர்வு.

‘மோகன்.. அந்தப் பெண் கதறக் கதற இந்த சம்பவம்
நடந்தது என்று சொன்னீர்கள்.. அவள் கதறலைக் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து ஒருவர் கூடவா வரவில்லை…’

‘மிஸ்டர் தணிகாசலம் அந்த இடத்தில் ஒன்பது க்ரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார். நட்ட நடுவிலே இந்த கஸ்ட் ஹவுஸ். சுற்றிலும்  தோட்டங்களும், செடிகளும், மரங்களும். அங்கே உள்ளே போய் விட்டால் என்ன நடக்கிறதென்றே வெளியுலிகிற்குத் தெரியாது.. கத்தினாலும் கேட்-
காது…’

‘ஓ ஐஸீ.. மோகன்.. அந்த சம்பவத்தை பதிவு செய்த
காமராவை கொண்டு வந்திருக்கிறீர்களா..’ என்றார் பரந்தாமன் குதூகலமாக.

‘ஆமாம்’ என்றபடியே அந்த சம்பவம் அடங்கிய பென் டிரைவை கொடுத்தார் மோகன்.

அதை வாங்கி ‘யுவர் ஆனர்.. இதை ப்ராஸிக்யூஷன் எக்ஸிபிட்டாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’

‘பெர்மிஷன் க்ரான்டட்..’

‘யுவர் ஆனர்.. இப்பொழுது பதினொன்றரை மணி ஆயிற்று.. நான் இந்த பென் ட்ரைவில் உள்ள பதிவைப் போட்டுக் காட்ட விரும்புகிறேன்.. இந்த கோர்ட கண்ணியத்தையும், மறைந்த ஆத்மாவின் மானத்தையும் மனதிற் கொண்டு அந்தக்
கோர சம்ப்வத்தை நீங்களும், நானும், குற்றம் சாற்றப்பட்ட மூன்று பேரும், அட்வகேட் ராமனும் மட்டும் பார்க்கும்படி உங்களது சேம்பரில் போட்டுக் காட்ட விரும்புகிறேன்..’

‘பெர்மிஷன் க்ரான்டட்.. சரியாக பன்னிரண்டு மணிக்கு அதைப் பார்க்கலாம். அதற்கு கொர்ட் ஸ்டா·ப் ஏற்பாடு செய்வார்கள் ‘ என்றார் நீதிபதி.

‘தாங்க் யூ.. யுவர் ஆனர்.. அதற்குள் நான் இன்னும் மூன்று சாட்சிகளை விசாரிக்க விரும்புகிறேன்..’

‘கோ எஹெட்..’

‘அடுத்து டாக்டர் சரவணனை விசாரிக்க விரும்புகிறேன்..’

டாக்டர் சரவணன் சாட்சிக் கூண்டில் ஏறி அன்று அந்த சாலையில் மோகனைப் பார்த்ததிலிருந்து ப்ளாஸ்டிக் சர்ஜரி ஆகி அவர் குணமாகி வீடு திரும்பும் வரை நடந்ததைக் கூறினார். அவர் கூறியதும், மோகன் கூறியதும் நூற்றுக்கு
நூறு ஒத்துப் போயிருந்தது.

அடுத்து நான் இந்த ஊர்க் கோடியில் இருக்கும் நைட்
க்ளப் மானேஜர் தாமஸை விசாரிக்க விரும்புகிறேன். தாமஸ் சாட்சிக் கூண்டில் ஏறினார். தாமஸைப் பார்த்ததுமே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மூவர் முகமும் பேயறைந்தது போல்
ஆயிற்று.

அறிமுகக் கேள்விகளுக்குப் பின், ‘ மிஸ்டர் தாமஸ்..
சம்பவம் நடந்த அன்று குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவரும் உங்கள் க்ளப்புக்கு வந்தார்களா.?’என்று கேட்டார் பரந்தாமன்

‘ஆமாம்.. ராத்திரி ஒரு எட்டு மணி அளவில் வந்திருப்பார் கள். சுமார் பன்னிரண்டு மணி வரை அங்குதான் இருந்தார்கள்

‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்..?’

‘இந்தக் கேஸ் விஷயமாக போலீஸ் வந்து என்னை விசாரித்தபோது நான் அன்றைய மாலை ஸீ.ஸீ.டிவி. ·புட்டேஜைப் போட்டுக் காட்டினேன். அதை நானும் பார்த்தேன்.. அதனால்
எனக்கு உறுதியாகத் தெரியும்..’

‘வெரி குட்.. அந்த பதிவைக் கொண்டுவந்திருக்கிறீர்களா?

‘ஆமாம் கொண்டு வந்திருக்கிறேன்..’

‘யுவர் ஆனர்.. அந்தப் பதிவை இந்தக் கோர்ட்டிற்குப்
போட்டுக் காட்ட அனுமதி வேண்டுகிறேன்..’

‘பெர்மிஷன் க்ரான்டட்..’

அந்தப் பதிவு கோர்ட்டாருக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது.. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நன்றாகக் குடித்து விட்டு வெறியோடு நடன மங்கையர்களை அணைத்துக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தார்கள்.

‘யுவர் விட்னெஸ்.. மிஸ்டர் ராமன்..’

தலையைத் தொங்கப் போட்டு, அலுப்போடு உட்கார்ந்திருந்த ராமன், ‘நோ க்வெஸ்சன்ஸ்’ என்றார்.

‘யுவர் ஆனர் உங்கள் கேபினில் எல்லாம் ரெடியாக இருக்குமென்று நினைக்கிறேன்.. அந்தக் கோர சம்பவத்தின் பென் டிரைவைப் போட்டுப் பார்க்கலாமா..?’ என்றார் பரந்தாமன்.

‘கோர்ட் ஈஸ் அட்ஜர்ன்ட் டில் ட்வெல்வ் தர்ட்டி.. பன்னிரண்டரை மணிக்கு கோர்ட் மறுபடியும் கூடும்’ என்று எழுந்-
தார் நீதிபதி.

நீதிபதியின் சேம்பரில் நீதிபதி, பரந்தாமன், மோகன், ராமன், குற்றவாளிகள் மூவர், அவர்களை அழைத்து வந்த கான்ஸ்டபிள்கள் இருவர், மூச்சுக்கூட விட மறந்து திரையை
யே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எக்ஸிபிட்டாக கொடுக்கப்பட்டிருந்த பென்டிரைவை ஓட விட்டார் ஒரு ஸ்டா·ப். அந்தக் கோர சம்பவம் திரையிலே விரிந்தது.

அதைப் பார்க்கப் பார்க்கக் குற்றவாளிகளைத் தவிர
மற்றவர்களின் முகங்களில் ஒரு கோபமும், வெறுப்பும், அருவருப்பும் தோன்றி மறைந்தன.

அதைப் பார்த்து முடித்த நீதிபதி குற்றவாளிகளைப் பார்த்தார். அவர் முகத்திலே ஒருவித கோபமும்,வெறுப்பும் தெரிந்தது. குற்றவாளிகள் முகத்திலே மாட்டிக் கொண்டோமே என்ற ஒர் உணர்வு தோன்றி மறைந்ததேயன்றி ஒரு குற்ற உணர்வோ பச்சாத்தாபமோ தென்படவில்லை.

பன்னிரண்டரை மணிக்கு கோர்ட் மறுபடியும் கூடியது. டி·பன்ஸ் அடவகேட் ராமனைக் காணவில்லை. முடிவு என்னவாக இருக்கும் என்று யூகித்ததாலோ என்னவோ பார்வையாளர்கள் கூட்டம் பாதியாக இருந்தது.

நீதிபதி பரந்தாமனைப் பார்த்தார்.

பரந்தாமன் எழுந்து, ‘ யுவர் ஆனர் சம்பவம் நடந்த
அன்று குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவரும் ஊரில்தான் இருந்திருக்கிறார்கள். திருச்சி ஏ.பி.ஸி. லாட்ஜில் அல்ல என்று தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பார்த்த அந்த வீடியோ பதிவு குற்றம் செய்தவர்கள்
இவர்கள்தான் என்று தெள்ளத் தெளிவாக சந்தேகம் ஏதுமில்லாமல் நிரூபிக்கிறது. அதனால் இவர்களைக் குற்றவாளிகள்
என தீர்ப்பு வழங்கி, அதிக பட்ச தண்டனையையும் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

‘எனி ஸ்டேட்மென்ட் ·ப்ரம் டி·பன்ஸ் அட்டர்னி’

‘யுவர் ஆனர்.. ஆ·பீஸிலிருந்து அர்ஜன்டா ·போன்
வந்ததால் மிஸ்டர் ராமன் பொக வேண்டி இருந்தது..நோ ·பர்தர் ஸ்டேட்மென்ட்’ என்றார் ராமனின் உதவியாளர்.

‘ஓகே..சாட்சியங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் பாபு, ராமு. சோமு, இம்மூவரும்தான் குற்றவாளிகள் என்று சந்தேகமே இல்லாமல் ஆணித்தரமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதனால் அவர்-
களை இந்த பாலியல் வழக்கில் குற்றவாளிகள்தான் என்று இந்தக் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. தண்டனை விவரத்தை அடுத்த வாரம் வியாழக் கிழமையன்று கூறுகிறேன். அது வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த வழக்கைமிகவும் திறமையாக கையாண்ட பப்ளிக் ப்ராஸிக்யூடர் பரந்தாமனையும், தைரியமாக உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ரிப்போர்டர் மோகன், டாக்டர் சரவணன், அந்தப் ப்ளாஸ்டிக் சர்ஜரி ரகசியத்தை இதுவரைக் காத்து
வந்த அந்த டாக்டரின் அஸிஸ்டென்ட்ஸ் எல்லோரையும் இந்தக் கோர்ட் பாராட்ட விரும்புகிறது. கோர்ட் ஈஸ் அட்ஜர்ன்ட்..’ என்று எழுந்தார் நீதிபதி.

தங்கள் சூழ்நிலையையும் மறந்து கைதட்டினார்கள்
பார்வையாளர்கள். குற்றவாளிகள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

——————————————————-

 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

‘அப்படி அந்தக் கதையில் என்ன இருக்குன்னு, கதையின் ஆரம்பத்தில் ‘கவனம் சிதறாமல் முடிவு வரை படிக்கவும்’ என்று பெட்டிச் செய்தியாக போட்டிருக்காங்க’

‘அந்தக் கதையில் அப்படி ஒன்றும் இல்லை.. படிப்பவர்கள் ஆவலைத் தூண்டி அந்தக் கதையை முழுதும் படிக்கவைக்க எழுத்தாளர் மேற்கொண்ட யுக்தி அது..’

 

———————————————————-

சலம்பல் – செவல்குளம் செல்வராசு

 

நான் இதை வாங்கி இருக்கவே கூடாது

நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள்

இன்னும் யார் யாருக்கோ

தேவைப்படும் போதெல்லாம்

அலைபேசி ஒலிக்கிறது

வீட்டுக் கதவு தட்டப்படுகிறது.

இரவல் வாங்கியவர்கள் யாரும்

விரைவில் தருவதே இல்லை

வீடு வந்து ஒருபோதும்

ஒருமாதம் தொடர்ச்சியாக

வீட்டில் இருந்ததும் இல்லை

 

நிலையாமைத் தத்துவங்கள்

படித்திருந்த போதும்

பொதுவுடைமை நூல்கள்

வாசித்திருந்தபோதும்

பக்குவம் போதவில்லை

எனதென்ற உணர்வை

மனம் விடுவதாயில்லை.

 

இரவல் கொடுத்து விட்டு, 

திரும்ப வரும் நாள் வரையில்

நினைத்துக் கொண்டேயிருக்கிறது

திரும்ப வந்தாலும்

இனி எப்பொழுது

யார் கேட்டுவருவார்களோ

என பதட்டப்படுகிறது

இது மனநோயாய் இருக்குமோ?

 

“அதென்ன தங்கப் பல்லாக்கா டே

ரொம்பத்தான் சலம்புத”

என நினைப்பவர்கள் மட்டும்

வாங்கி வையுங்கள்

வீட்டில் ஒரு கோக்காலி

 

 

 பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா

Indian Women Authors Lalithambika Antharjanam Chaturang Anniversary issue | प्रतिकारदेवतेचं अवतरण घडवणारी कथा | Loksatta

’அப்படியானால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.அதை யாரிடமும் சொல்ல
மாட்டேன் என்று சபரிமலை கடவுள் மேல் அல்லது கொடுங்காளூர் பகவதி மேல் சத்தியம் செய்ய வேண்டும்.”

“சபரிமலைகடவுள், கொடுங்காளூரம்மன் மேல சத்தியம் நான் யாரிடமும்..” ஜானகியம்மா மிக ஆர்வமாக இருந்தார்.”

அப்புறம்.. நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.” என்று மெதுவாகச் சொன்னேன்.

“ஒரு கதையா!கடவுளே,என்ன இது ,..வெறும் கவிதை மட்டுமில்லை, கதை
களும் கூட ..கொண்டு வா.. பார்க்கிறேன்..”

என் பார்வையில் ,ஜானகியம்மா நல்ல வாசிப்பாளி.’வாய்மை’,குழந்தைகள்
நலன்’,’ அரசனிடம் பக்தி’ என்று சில கட்டுரைகளை ஆசிரியர்கள் கூட்டத்தில் எழுதிப் படித்திருக்கிறார்.ஈஸ்வர பிள்ளை ஐயாவின் நடை போல அவரது எழுதுக்களிருக்கும். ..எப்படியானாலும் அவர் வாசிப்பாளி.

என் கதையைப் படித்து விட்டுப் புகழ்ந்தார்.             ” பத்திரிக்கைகளுக்கு அனுப்பு.
கதா பத்திரிகை ஆசிரியர் என் மாமா மனைவியின் ,மாமாவின் மகன். நீ
அதற்குக் கண்டிப்பாக அனுப்பு .”

எனக்குள் ஒரு நடுக்கத்தையுணர்ந்தேன்.’ஆனால் ஜானகியம்மா,என் பெயர்! ஐயோ,ஜனங்கள் என்ன சொல்வார்கள்?நான்தான் இதை எழுதினேன் என்று நம்மிருவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். நீங்கள் சத்தியம் செய்தால் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு போகலாம்.”

ஜானகியம்மா சந்தோஷமாக அதை எடுத்துக்கொண்டு போனார்.

கதா வார இதழில் ’ மோகினி ’என்ற பெயரில் அது பிரசுரமானது. அவர் ஓர் அழகான
பெயரைக் கண்டுபிடித்துக் கொடுத்ததற்காக மகிழ்ந்தேன்; என் பெற்றோரைவிட அவருக்கு நன்றியுடையவளாக உணர்ந்தேன். மோகினி—அந்தப் பெயரைப் பார்த்த அளவிலேயே மனிதர்கள் படிப்பார்கள்.

கதா வார இதழ் ஆசிரியர் மோகினிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு ஜானகியம்மா திரும்ப என்னிடம் வந்தார். மோகினியின் கலைத் திறத்தை வானளாவப் புகழ்ந்த ஆறு பக்கக் கடிதம்;கதையின்
சில குறைகளைச் சொல்லி,கதாசிரியர் இன்னும் அதிகம் எழுதவேண்டி, படைப்புகளை கதாவிற்கு அனுப்பக் கோரி….

நான் எத்தனை தடவை அந்தக் கடிதத்தைப் படித்தேன் என்று சொல்லப்போவதில்லை.உன் முதல்கதை பிரசுரம் குறித்த பாராட்டுக் கடிதத்தை-எத்தனை முறை படித்திருப்பாய்?அந்த இரவில் தூங்கியிருக்க முடியாது.

கடைசியில், நான் பெரிய ஆள் !அப்படி நினைக்கும் போதே கிடைக்கும் பெருமை!  இவை மட்டும்தான் இலக்கிய வாழ்வின் மகிழ்வுகள் என்பது உண்மை.  நாம் இங்கே நிறுத்தியாக வேண்டும்.ஆனால் நீயும், நானும் அதைச் செய்ய மாட்டோம்..  உண்மையான எழுத்தாளனின் உண்மை வரலாறென்பது அதன்பின்தான் ஆரம்பிக்கிறது.

நான் நிறையக் கதைகள் எழுதினேன்.எனக்குத் தெரிய வந்ததெல்லாம் கதைகளானது.என் அறிவு எவ்வளவு விசாலமானது என்று கேட்காதே.ஒரு சிறியகுளத்திலிருந்து பார்த்தாலும் கடலின் நடுவிலிருந்து பார்த்தாலும், தொடுவானம் ஒன்றுதான், அதனதன் இடங்களிலிருந்து. மோகினியின் புகழ் நாளும் வளர்ந்தது.

பாராட்டுக்களிலும்,வாழ்த்துக்களிலும் அவள் மூழ்கியிருந்தாள் அந்த நாட்களில் எங்களுடைய சிறிய தபால்அலுவலகத்திலிருந்து ஜானகியம்மாவின் வீட்டிற்கு மட்டுமே கடிதங்கள், பத்திரிக்கைகள் வரும்.

ஒரு நாள் மாலையில் வேகமாக வந்த ஜானகியம்மா ”சகோதரியே, சிக்கல் வரும் போலிருக்கிறது,கதா ஆசிரியர் புகைப்படம் கேட்கிறார்,அது பத்திரிக்கை அதிக அளவு விற்க உதவும்” என்று.

சரி.இப்போது என்ன செய்வது என்று நினைத்தேன். புகைப்படம் என்னிடமில்லை, இருந்திருந்தாலும் ,கொடுத்திருக்க மாட்டேன். மோகினி—மயக்கும் அந்த பெயருக்கேற்ற புகைப்படமிருக்க வேண்டும்..

’.ஜானகியம்மே..!உங்களிடம் அழகாக இருக்கிற, பிரசுரம் செய்தால் கோபித்துக் கொள்ளாத யாருடைய புகைப்படமாவது இருக்கிறதா?’என்று கேட்டேன். அவர் யோசித்தார்.

’என் பெட்டியில் சில பழைய படங்களிருக்கின்றன. என் சகோதரனுக்கு பெண் பார்த்தபோது வந்த படங்கள்.ஒன்று பொருத்தமாக இருக்கும்,அழகான குண்டு முகம்.சுருட்டை முடி.உதடுகளில் குறும்புப் புன்னகை.அந்தக் கண்களைப் பார்க்கும் ஒருவர் அவளைப் பெண் கவிதாயினி என்றே நினைப்பார்—என் சகோதரன் அவளைப் பார்க்க அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தான். அந்தத் திருமணம் நடக்கும் என்று எல்லோரும் நம்பியிருந்தோம்.. ஆனால் அவளைப் பார்த்த பின்புதான் உண்மை தெரிந்தது!.. ஒல்லியான கருப்பான பெண்.எப்படி அவ்வளவு அழகான புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் எடுத்தார்?…வீட்டிற்கு வந்து புகைப்படத்தைத் தூக்கியெறிந்தான். அதை நான் எடுத்து வைத்துக் கொண்டேன்.அந்தப் பெண் அழகில்லை. ஆனால் படம் அழகு. யாருக்கும் தெரியப் போவதில்லை.

அந்தச் சிக்கல் தீர்ந்தது.மோகினியின் படம் பத்திரிக்கையில் வந்த போது என்னவெல்லாம் அமளி ! அவளுடைய வார்த்தைகளைப் போல தோற்றமும் மயக்கம் தருவதாக இருந்தது என்றனர் ஜனங்கள். அந்த வார இதழ் மட்டும் ஆயிரம் பிரதிகள் அதிகம் விற்றதாக ஆசிரியர் சொன்னார். ஒரு பிரபல கவிஞர் அதைப் பற்றிக் கவிதையும் எழுதி விட்டார். அவருடைய ஓவிய நண்பர்களில் ஒருவர் ஓவியமாகவே வரைந்து விட்டார்.அந்தப் படத்தின் பெயர் ’கவனமோகினி—கவிதை மோகினி.அது ஒரு கண் காட்சி யில் முதல்பரிசும் பெற்றது…அந்தப் படம் குறித்துக் கதைகளும், கவிதைகளும் வெளியாயின. 

ஜானகியம்மா கொடுத்த புகைப்படத்தின்ஒரு பிரதி என் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஓர் உற்சாகம்.

மோகினி —அது என்னைத் தவிர யார் ?

நான் மோகினி,நான் மோகினி’ என்று வெளியே போய் சத்தமாகக் கத்தவேண்டும் என்று விரும்பினேன்.ஏனெனில் அந்தப் படம் என் கதையோடு வந்ததால் நான் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தேகம் கூடப்படத் தொடங்கிவிட்டேன்.

மோகினியைப் பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் வேண்டும் என்று ஜானகியம்மாவுக்கு கடிதங்கள் வருவதாகச் சொன்னார்.பல கதைகள்..வடக்கில் ஒரு பெரிய அதிகாரி,எம்.ஏ .படித்தவர்,திருமணமானவர், ஆகாதவரென்றெல்லாம்.. சில இளைஞர்கள் அவளைப் பார்த்துப் பேசியிருக்கின்றனர். ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர் அவள் தன்னைக் காதலித்ததாக..எளிய ஆத்மாக்கள்..எளிய ஆத்மாக்கள்.. அவர்களுக்கு மட்டும் அவளைப் பார்க்க வாய்ப்பு  கிடைத்திருந்தால்..  வெகு நேரம் நான் சிரித்தேன். ஜானகியம்மாவும்தான்.

மோகினியின் புகழ் வளர,எனக்குச் சிக்கல்கள் அதிகமாயின.வீட்டு வேலையில் நாள் முழுவதும் கழிந்தது.பொதுவாக யாருக்கும் தெரியாமல் நான்நள்ளிரவில்தான் எழுதுவேன்.ஜானகியம்மா கேட்கும் போதெல்லாம் கதை கொடுத்து விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.

என் கண்களில் குழி விழுந்தது. நான் மெலிந்து கொண்டேயிருந்தேன்.ஆனால் மோகினியின் கதைகள் பிரசுரமாகிக் கொண்டேயிருந்தன. கதைக்காக இல்லை.பெயரைக் காப்பாற்றுவதற்கு. அவர்களுக்கு அது போதும். உடல்நலக் குறைவு கதைகளைப் பாதித்ததா?..இருக்கலாம். இல்லாவிட்டால் வாசகர்கள் கதைகள் சுவையற்றுப் போனதை எப்படியுணர்வார்கள்?

என்னைப் போன்றவர்களுக்கு இலக்கிய வாழ்வு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை .விருப்பப்படி உலகின் எல்லா இடங்களுக்கும் போவது, இரவும்
பகலும் நெடுஞ்சாலைகளிலும்,குறுக்கு வழிகளிலும் பயணிப்பது,பலவித அனுபவங்களை எதிர்கொள்வது போன்ற விஷயங்கள். முன்பு, பாத்திரங்கள் தானாக வந்து மனக்கதவைத் தட்டியதால் எழுத முடிந்த காலம். கதைக்கருவை வேட்டையாடி எழுதும் காலம் இப்போது! ஒருவருக்கு எப்போதும் கொடுமையான உயிரினம் கிடைக்கலாம்..விஷ ஜந்துக்கள்,, அருகாமையில் போகவே ஒருவருக்கு பயம். பிறகென்ன செய்வது்? சிலகாலம் மட்டுமே நிலைக்கும் விந்தை பெயரும்,புகழும் !அதன் பிறகு வாசகர்கள் எழுத்தின் ஆழத்தைத் கிளறுவார்கள் அங்கு எதுவும் இல்லையெனில்… அல்லது ஏதாவது இருந்தால்…இரண்டும் அபாயகரமானவை.

மோகினியின் கதைகளில் விஷயமேயில்லை என்று விமர்சனப் பேச்சு வரத்தொடங்கியது.நம் விமர்சகர்கள் எப்போதும் கதைகளை நோக்கி தங்களது அம்புகளை எறியாமல்,அதன் மேல் அல்லது கீழிருக்கும் பெயரைப் பார்த்து எறிவார்கள்…அந்த மோகினிக்கு கதை எப்படி எழுத வேண்டுமென்று கூடத் தெரியாது,அவள் பழமைவாதி,அவளுக்கு வேட்கையில்..நம்மைப் பற்றி எழுத என்ன தைரியம்’ ஒரு பள்ளியாசிரியர் பல்லைக் கடித்தார். இன்னொரு சிறந்த விமர்சகர் ’பெண்கள் பெண்கள்தான். காகம் குளித்தால் கொக்காகுமோ ?”என்றார்.

மோகினி அவள் பெயர் கூட அற்பமானதுதான். பெயருக்காகவும், உருவத்திற்காகவும் அவளைப் புகழ்ந்த பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட அவளை ஏளனம் செய்தனர்.

என் நம்பிக்கைக்குரிய ஜானகியம்மா – மோகினியைப் படைத்தவர்–ஒரு
முறை சொன்னார்; என்னால் இனிமேல் இதைச் செய்ய முடியாது.நான்தான் இப்படி எழுதுகிறேன் என்று பலர் நினைக்கிறார்கள்.நான் இல்லை என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள் .இனிமேல் உண்மையைச் சொல்லப்போகிறேன்.மதிப்பான ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டும் “

நான் பதில் சொல்லவில்லை.அவர் உண்மையைச் சொல்லி விடுவார். என்ன உண்மை?நான் மோகினி,அவருடைய எல்லாத் தவறுகளும் என்னுடையவை என்றெல்லாம்.மோகினியின் புகழ் உச்சத்தில் இருக்கும் போது அவர் ஏன் அதைச் செய்யவில்லை?காதலுடன் இளைஞர் கூட்டம் அவரை மோகினி என்று தவறாக நினைத்துச் சுற்றி நின்றபோது அவர் ஏன்சொல்லவில்லை?மோகினியின் நிழலைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை ஓர் எழுத்தாளராகக் காட்டி கணவனைப் பெற்ற போது ஏன் சொல்லவில்லை?

ஜானகியம்மா உண்மையைச் சொன்னாரா என்றெனக்குத் தெரியாது. சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. கவிதைகளையும்,கதைகளையும் எழுதிய—இந்த நாட்டுப்புறப் பெண் –இவள்தான் பிரபலமான மோகினி …என்பதை யாரும் நம்பமாட்டார்கள். ஜானகியம்மாவையோ அல்லது அப்படிச் சொல்பவர்களையோ நம்பமாட்டார்கள்.

நான் பூஜித்த, மோகினியின் படம் இன்னமும் என் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தேன். பழையதான அந்தப் படத்தில் கருமையான சுருள்முடி நரைக்கத் தொடங்கியது போலிருந்தது. ஒரு புறத்தில் முகத்தின் நிறம் மங்கியிருந்தது.நீல பட்டுப் புடவை துறவுக்கான காவியாகத் தெரிந்தது. முகத்தில் வடுக்களும், புள்ளிகளும்.மோகினி உலகையே வெறுத்தவள் மாதிரித் தெரிந்தாள்.அது பார்க்கப் பொறுக்காத காட்சி.நான்கு பக்கங்களிலும் சுற்றிப் பார்த்து யாருமில்லாததை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,படத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டேன்…இது என் உண்மையான உருவமெனில்..இது உண்மையான பெயரெனில். மோகினி தொலைந்து போனாள்.உணர்வுகளின் வெற்று நாடகம். எல்லாப் பெயர்களும் ,உருவங்களும் உணர்வுகளின் நாடகம்தான். அதற்கப்பால் உண்மையில்லையா?.. ரகசியமெனினும் கூட தொலைந்து போய் விடக்கூடாதா?

அந்த கேள்விக்கான விடை இன்னமும் எழுதப்படவில்லை.

சினேகிதியே !நான் எழுதுகிறேனா என்று கேட்காதே.மோகினி போய்விட்டாள். அவளுடன் வந்தவை அவளுடன் மறைந்து விட்டன.ஆனால் ஒரு புதிய பெயர் இலக்கிய உலகில் உதித்திருக்கிறது. அந்தக் கதைகள் மோகினியின் கதைகளை விட எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் ஜனங்கள். நீ என்ன நினைக்கிறாய்?..எதுவாக இருப்பினும்,எனக்குக் கவலையில்லை. எப்படிப் போனாலும் எனக்கு வருத்தமில்லை…ஆனாலும்…

அன்புடன்
முகமறியா சிநேகிதி.
———————–
நவீன மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டவை. ’அக்னிசாட்சி ’நாவலுக்காக சாகித்ய
அகாதெமி விருது பெற்றவர்.

எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர் போன்ற புறவய பொதுப் பணிகளைச் செய்ய பெண்கள் போராட வேண்டியிருந்ததான நிலையை ஆழமான விமர்சனமாக கதை முன்வைக்கிறது.

திரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்

திரை ரசனை வாழ்க்கை 6
Karnan (2021) Tamil Movie: Made Collections In Crores - Tech Kashif
 
டி ஆர் செவண்டன் (கணக்கு எண் 474 என்று நினைவு) எனும் ஓர் எளிய வாடிக்கையாளர்தான், வங்கனூர் எனும் சிற்றூரின் இளம் ஊழியனாக வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்த என்னிடம் நிறைய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பியவர். நடுவயதுக்காரர். ஆனால், வேறொரு பெரியவர் வரும்போதே, தலையைத் தாழ்த்திக் கொண்டு நுழைவார், கண்ணை இறுக மூடிக்கொண்டு கைகூப்பி வணங்குவார், நாங்கள் எழுந்து நின்று வணங்கி, இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொள்வோம்.  அந்த ஊருக்குள் நுழையும்போதே, திடீர் என்று ஊரின் இடதுபுறம் சாலை பிரிந்து வேறெங்கோ முடிச்சு முடிச்சாக வீடுகள் சில இருந்த இடத்தில் தன்னை முடித்துக் கொண்டது. மேற்படி இருவருமே அதே ஊரை, இல்லை, ஊரின் சேரி என்றழைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியைச் சார்ந்தவர்கள். ஆனால், செவண்டன் கேள்விகளோடு வாழ்ந்தவர்.
சாதீய படிநிலைகளைப் பற்றிய பாடங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியான தருணங்களாக வாய்த்துக் கொண்டே இருக்கிறது. ‘இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். 
னி மனித வாழ்க்கை, சண்டை சச்சரவு, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, காதல், குடும்பம் இப்படியாக நிறைய கதைகள் வாசிக்கிறோம், திரையில் காண்கிறோம். சமூகத்தின் ஒட்டு மொத்த முகத்தை, அதன் கூட்டு அவஸ்தையை, கூட்டுக் கண்ணீரை,  கூட்டாக எழுந்து நிற்கும் ஆவேசத்தைத்  திரையில் அதிகம் காண்பதில்லை.  அத்திப்பட்டி எனும் சிற்றூரின் கூட்டுக் கவலையை, அதற்குத் தீர்வு கேட்டு ஒரே முகமாக அந்த ஊர் திரண்டு நின்றதை கோமல் சாமிநாதன் அவர்களது தண்ணீர் தண்ணீர் பேசியது. அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினால், அதிகார வர்க்கமும், அரசு எந்திரமும் எப்படி அதை அடக்கி ஒடுக்கும் என்பதையும் அந்தப் படைப்பு மக்களுக்குக் கொண்டு சேர்த்தது.
உரிமை கேட்பது ஒரு பக்கம், யார் கேட்பது என்பதும் சேர்த்து நோக்கப்படும் சமூகம் இந்திய சமூகம். தங்கள் பிறப்பினால் சுமக்க நேர்ந்த சாதி, அதன் வம்சாவழி சூட்டப்பட்ட பெயர்கள், பெயர்களைத் தொலைத்துக் கட்டிவிட்டு பொதுப்பெயர்களை சூட்டிக் கொண்டால் குறைந்துவிடாத சாதீய இழிவின் பளு, புதிய பெயர்களுக்கான அபாரதத்தையும் சேர்த்து வலிக்கிறது. கர்ணன் என்ற பெயரே கலகத்தின் முதல் குரலாக இருக்க, படம் இன்னும் அடிப்படை அம்சங்களின் நுணுக்கங்கள் பற்றிய பார்வையையும் எடுத்து வைக்கிறது.
‘இதெல்லாம் ஒரு ஊரு, இவனுக எல்லாம் ஒரு ஆளு, பஸ் ஒண்ணு தான் கேடு’ என்று பார்க்கும் ஆதிக்கப் பார்வை. பொத்திப் பொத்தி வளர்க்கும் கோழிக்குஞ்சு கொஞ்சம் சுதந்திரமாகப் பஞ்சாரத்தை விட்டு வெளியே காலெடுத்து வைத்தால், அதை அப்படியே தூக்கிக் கொண்டுபோய்விட என்றே காத்திருக்கும் பருந்து. ‘தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா’ என்ற கேள்வி. 
திரையில் தோன்றும் உயிரினங்கள் ஒவ்வொன்றும், இயற்கைக் காட்சிகள் ஒவ்வொன்றும், மனிதர்களது உடல் மொழியும், கண்களும் கதை சொல்லிப் பார்க்க நேர்வது எத்தனை அற்புதமான அனுபவம் என்பது விவரிக்க முடியாதது. அந்த வரிசையில், கர்ணன் அப்படியான ஓர் அசத்தல் அனுபவத்தை அளித்தது.
அவமதிப்புக்கு உள்ளாக்கப்படும் ஒரு சமூகம் எந்தச்  சுரணையுமற்று அதை ஏற்றுக் கொண்டு குனிந்தே நடக்க விதிக்கப்பட்ட மக்கள், ஒரு கட்டத்தில் நிமிர்ந்து நிற்பார்கள், கேள்வி கேட்பார்கள்  என்பதைச் சொல்லும் படம் கர்ணன். அதை வசனமாகப் பேசாமல், தொகுத்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தாமல்,  கண்ணீரால் கடத்தாமல் பளிச்சென்று பார்ப்போர் உள்ளத்தோடு நேரடியாக உரையாடும் ஒரு மொழியில் பேசுகிறது.  என்ன கதை என்று கேட்பவர்களுக்கு இது தான் கதை. காலா காலத்தின் கதை. 
பொடியன் குளம் மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஒரு பேருந்து வரவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.  சாலையில் எங்கே இறங்கிக் குறுக்கே நடந்தால் ஊருக்குப் பக்கமாக இருக்குமோ அங்கே ஒரு பேருந்து நிறுத்தம் கேட்கின்றனர். ஆனால் ஊருக்கே வருகிறது, பேருந்து அல்ல, வாகனங்களின் ஊர்வலம், காவல் துறை பட்டாளமே வந்து இறங்குகிறது. கேட்டதைக் கொடுப்பதை விடக், கேட்பவர்களது வாயை அடைப்பது எளிதானது என்று  அதிகார வர்க்கத்திற்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்களைப் போருக்கு அழைக்கிறது சட்டம் ஒழுங்கு காப்பாற்ற வேண்டிய துறை. எந்த பதிலும் அவர்கள் சொல்லக் கூடாது என்பது அதன் எதிர்பார்ப்பு. அவர்கள் அந்தப் பதிலைக் கொடுக்கையில் அது இன்னும் விசுவரூபம் எடுக்கிறது, தனது படையின் எந்த வரிசையில் இருப்போரையும் பலி கொடுத்தாவது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டியது அதன் தருமம். 
ஆனால் அந்தச் சட்டத்திற்கு எல்லாம் மேலே உயரே உன்னதமான பீடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது அரசியல் சாசனம். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது அதன் பிரகடனம். சட்டத்தின் பிரம்பு ஒவ்வொரு முறை ஓங்கும்போதும், முதல் அடியை அந்த சாசனத்தின் மீது போட்டுத்தான் தனது திருப்பணியைத் தொடங்குகிறது. 
இதன் தத்துவங்கள் எல்லாம் அறிந்தவர்கள் அல்ல பொடியன் குளம் மக்கள். அவர்களது செல்லச் சிறுமி ஒருத்தி பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நட்ட நடுச் சாலையில் வலிப்பு கண்டு விழுந்து துடித்துத் தனது துடிப்புகள் அடங்கிப் போகிறவரை கடந்து போகும் எந்த மவராசனும் வண்டி நிறுத்தி முதலுதவி தந்தோ, வேறெங்கும் எடுத்துப்போய்க் காப்பாற்றவோ முனைப்பு காட்டாதது தற்செயலானது அல்ல, அறத்தின் வீழ்ச்சியுமல்ல, ஏதோ இரக்க சிந்தனையுள்ளவர்கள் அந்த பூமியில் யாருமே இல்லை என்பதாலும் அல்ல. அப்படித்தான் அது நிகழ்கிறது. 
அந்தச் சிறுமி பின்னர் அந்த மக்களது உளவியல் பரிமாற்றங்களில் கலந்து உயிர்ப்போடு காட்டுப் பேச்சியெனும் நாட்டார் தெய்வமாக நிலைத்து விடுகிறாள். ஆற்றுப்படுத்தவும் செய்கிறாள்,  ஆவேசமும் கொள்ள வைக்கிறாள்.
வீட்டிடை பொந்தினுள் இருக்கும் பூனை பேசுகிறது, பின்னர், அப்படியான மறைவிடங்களிலிருந்து இரும்பு ஆயுதங்களும் ! பட்பட்டென்று சிறகடிக்கும் பட்டாம் பூச்சியும், ஊர்ந்து போகும் புழுவும், நத்தையும், தூண்டிற் புழுவைக் கவ்வப் போய்க் காவல் துறை அதிகாரியின் முள்ளில் சிக்கித் துடிக்கும் மீனும், முன்னங்கால் கட்டுப் போட்டுவிட்டதால் தத்தித் தத்திக் கால காலமாக ஊரைக் கடந்து செல்ல முடியாது திணறிக் கொண்டிருக்கும் கழுதையும் எல்லாம் பேசுகின்றன படத்தில். 
அதன் கட்டறுபடும் வேளையில் அது ஒய்யாரமாக ஓடிப்போய் மலையுச்சியில் பேச்சியோடு நிற்கும் மலைச் சிகரமும்,  ஊர்க்காரர்கள் நிறத்திலேயே கம்பீரமாக மின்னும் கறுப்புக் குதிரையும், சடார் என்று திரும்பிப் பார்க்கும் நாயும்…..படத்தில் பேசவே செய்கின்றன. அவர்களோடு பேச மறுப்பவர்கள், அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் இருப்பவர்கள் மனநிலை மட்டுமே. 
குளத்தில் கல்லெறியும் நாயகன், குளத்து மீனை இரு கூறாக்கி வாள் வீசவும் செய்கிறான், ஓடப்பராயிருப்போர் உதயப்பராகவும் ஆகிடுவார் என்பதை உணர வைக்கவும் செய்கிறான்.  அவனைப் பார்க்கப் பார்க்கக் காதல் உலை பொங்க வைத்துக் கொண்டாடுபவளும் அண்ணனின் சுய மரியாதைக்கே முதலிடம் கொடுத்துக் காதலனைக் கேள்விக்கு உட்படுத்துபவளாகவும் இருக்கிறாள். அதில் நொந்து போய்ச் சோர்ந்து கிடக்கும் நாயகனை அவனுடைய அக்காள், இராணுவ வேலைக்கோ,  வேறெதற்கோ போய் உருப்படியாயிரு என்று பாசத்தால் விரட்டிக் கொண்டே இருக்கிறாள்.  
வன்தொண்டனாக இருக்கும் அவனது முரட்டுப் பாசத்தையும், உரிமை மீதுறும் வசவுகளையும் சிரிப்பால் பருகியபடி மிகுந்த பொறுப்புணர்வோடு வழி நடத்தும் ஏம ராஜா எனும் (ஆசை மனைவி மஞ்சனத்தியைப் பறிகொடுத்துவிட்ட) தாத்தா, அவனைக் காதலியோடும், அவனது குடும்பத்தோடும், ஊர்ப் பெருந்தலைகளோடும் இழை பிசகாது ஒட்ட வைப்பவராகவும், அவனது சேக்காளியாகத் தன்னை மாற்றிக் கொண்டு தமது வாலிப மீட்சி உணர்வுக்குத் தீனி போட்டுக் கொள்பவராகவும், அவனது நலனை ஊரார் நலனோடு பின்னிப் பிணைந்து நெசவு செய்பவராகவும் வாழ்ந்து மறைகிறார்.
குரு சேத்திரங்கள் எப்போதோ எங்கோ அல்ல இப்படியான ஒடுக்குமுறைக்கு ஆட்படும் பொடியன் குளங்களில் அவ்வப்பொழுது நேர்ந்து கொண்டே இருக்கும் என்பதே கர்ணன் சொல்ல வருவது. இதிகாச பாத்திரங்களின் பெயர்கள் இப்போது வேறு சமூக எதார்த்த எதிரொலியாக துரியோதனன், திரௌபதை, கண்ணபிரான், அபிமன்யு  என…
போர்க்களத்தை ஒதுங்கி இருந்து விவரிப்பவனாக, உத்திகள் சொல்பவனாக, பார்வையாளனாக, படை நடத்துபவனுக்கு சாரதியாக மட்டும் இருந்தவன்  மகாபாரத கண்ணன். பொடியன் குளத்து குரு சேத்திரத்தில் காவல் துறை உயரதிகாரியாக வரும் கண்ணபிரான், தள்ளி நின்று அழித்தொழிப்பை  மேற்பார்வையிடவே செய்து கொண்டிருந்தாலும், தனது முன் வினைப் பலனை (காவல் நிலையத்தில் வைத்து ஊர்ப் பெரியவர்களை அடாத அடி அடித்துத் துவைத்து எடுத்ததற்கு) அடைந்தே தீர வேண்டி நேர்கிறது. கண்ண(பிரா)னே காட்டுகிறான், சாற்றுகிறான், கண்ண(பிரா)னே தன்னைக் கொலை செய்யுமளவு கர்ணனை ஆத்திரமூட்டி விடவும் செய்து விடுகிறான்.  அது அந்த யுத்தத்தின் தருமம் அல்ல. சமூக ஏற்றத் தாழ்வு குறித்து மரபணுவுக்குள் கால காலமாகக் கடத்தப்பட்டு வந்திருக்கும் விஷயங்களின் துயரமிக்க வெளிப்பாடு.
கல்லூரியில் சேர்க்க மகளை அழைத்துச் செல்கையில், சாதீய இழிவுச் சொல் எத்தனை காதில் விழுந்தாலும் பேசாமல் கேட்டுக் கொண்டு வந்திறணும் என்று சொல்லும் தந்தை, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நேரத்தில் வம்புக்குச் சீண்டும் இளவட்டங்களின் ஆதிக்க உணர்வைத் தட்டிக் கேட்கப்போய்ப் படும் அவமானமும், அடியுதையும் ஒரு காட்சி. வயிற்றுப் பிள்ளைக்காரி வெயிலில் எந்நேரம் நின்றாலும் நிற்காமல் போகும் பேருந்துகளில் ஒன்றைக் கோபத்தோடு அவளது மகன் கல்லெறிந்து நிறுத்தும் காட்சி. பேருந்து பின்னர் அடித்து நொறுக்கப் படும் காட்சி. பேருந்து நிறுவன உரிமையாளரே, விபரீத நிலைமையை வளர்க்க வேண்டாம், புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்னபிறகும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஊர்ப் பெரியவர்கள் அப்புறம் என்ன ஆனார்கள் என்று ஊராரைத் தவிக்க விடும் காட்சி.
இவற்றை ஒரு சுவாரசியமான கதைபோக்காக, சின்னச் சின்ன நிகழ்வுகளாகப் பார்க்க முடியாத அவஸ்தையை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது குழு பார்வையாளருக்குள் ஏற்படுத்துவது தான் கர்ணன் படத்தை முக்கியமானதாக கவனிக்க வைப்பது. பேருந்தை அடித்து நொறுக்கியவர்களைத் தற்காத்து வைப்பது என்று ஊர்க்குடும்பன் துரியோதனன் (ஜி எம் குமார் என்னமாகச் செய்திருக்கிறார், ஆஹா) சொல்ல, ஒரு கட்டத்தில் வடமலையான் (யோகி பாபு) உண்மையைச் சொல்லிவிடும்போது, காமிரா உயரே சென்று நீர்த் தேக்கத் தொட்டியின் மேற்பரப்பில் ஒளிந்து உட்கார்ந்திருப்போரைக் காட்டுகிறது. பின்னர் காவல் நிலையம் முழுக்கத் தேடியும், எங்கே என்று தட்டுப்படாத ஊர்ப்பெரியவர்கள், காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் அடித்து நொறுக்கி வீசி ஒளித்து வைக்கப் பட்டிருப்பதைக் காட்டுகிறது காமிரா. வேறு சமயங்களில் உயரங்களைத் தொட முடியாதபடிக்குத்  தாழ்த்தப்பட்டே இருக்கின்றனர் அவர்கள்.
தாங்களும் மனிதர்கள் தான், தங்களுக்கும் ஊரருகே பஸ் நிக்கணும், ஊர்ப் பிள்ளைகள் படிக்கணும், வேலை தேடணும் என்பது தான் மையப்புள்ளி. அதற்கு வழி மறுக்கப்படுகையில், கலகக் குரல் எழும்புகிறது. எதிர்த்துக் கேட்டால் ஊரே அழியும், அடிமைப்பட்டுப் பிழைக்கப் பார் என்று அதிகார வர்க்க அறிவுறுத்தல் ஆவேசத்தைத் தூண்டவே செய்கிறது. அதற்குப் பின், நிலைமைகளில் மாற்றங்கள் நிகழவே செய்கின்றன. ஆனால், கொடியை உயர்த்துபவன் (படத்தில் கர்ணன் உயர்த்துவது வாள்), அதற்கான விலையைக் கொடுத்தே – சிறை பிடிக்கப்பட்டுத்  தண்டிக்கப்பட்டு ஊர் மீள்கிறான், வெற்றி வரவேற்புக்கும், இடைக்காலத்தில்  மரித்துப் போனவர்களுக்கான வழிபாடுகளுக்கும் இடையே. 
ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான அரசியல் தெறிப்பு அல்ல கர்ணன்.  ஆனால், அதற்கான விதைகளை ஆழ ஊன்றும் உணர்வுகளின்  வெடிப்பு.  எனவே தான் அது விஷயங்களை நேரடியாகப் பேசுகிறது. நீண்ட கால வியூகங்கள் தீட்டும் காட்சிகள் இல்லை இதில். சம கால வாழ்க்கை, நாம் வசதியாக நம்புவதைப் போல் இராத உண்மையை முகத்தருகே பேசுகிறது திரைப்படம். 
தனுஷ் அசாத்திய உழைப்பை, கதைக்களத்திற்கு உரிய பங்களிப்பை நடிப்பிலும், பாட்டிலும் வழங்கி இருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், த இராமலிங்கம் அவர்களது  படத்தொகுப்பும் நிறைய பேசப்படும். சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ் பேசத் தொடங்கும்போதே அதற்கான பின்னணி இசையைத் தொடுக்கத் தொடங்கியவராக இருக்கிறார். அசர வைக்கும் பறையோசை, ஆதிக்க உணர்வுகளின் செவிப்பறை  அதிர ஒலித்துக் கொண்டே இருக்கிறது

அவரவர் வீட்டினுள் அவரவர் நுழைந்து வெளியேறுவதும், அவரவர் ஊரில் அவரவர் நடப்பதும், வசிப்பதுமாக எத்தனை தன்னியல்பாக ஒரு திரைப்படம். ஒவ்வொரு காட்சியும் நகர்த்திக் கொண்டே செல்வதில், பார்வையாளர்கள் காமிராவின் கண்ணுக்குப் படாத அருகமர்வில் அதே சிற்றூரில் உடன் வாழவே செய்து, மகிழ்வுற்று, துயருற்று, அரற்றவும் கூடவே ஆடிப் பாடவும் செய்து தியேட்டர் ஊழியர்கள் நினைவுபடுத்தி வந்து நிற்கும்போதே மீள்கின்றனர் என்பதைப் பார்க்க முடிந்தது. 
‘ஏமராஜா’ லால் நிச்சயம் விருதுகள் குவிப்பார் எனில், மஞ்சனத்தி புருஷா என்று அவரை விளித்து யுகாந்திரக் காதலைக் குழிந்தே போய்விட்ட கண்களிலும், கன்னங்களிலும் வெளிப்படுத்தும் அந்த மூதாட்டி பெற்றுக் கொள்ளும் ஆசை முத்தம் பெருவாழ்வு வாழும்.  தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா சந்திர மௌலி பன்முக உணர்ச்சிகளை அனாயாசமாக உயிர்ப்போடு முகத்தில், உடல் மொழியில் கொண்டு வந்துவிடுகிறார்.  காதலியாக வரும் ரஜீஷா விஜயன் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  குதிரைக்கார சிறுவன் காளீஸ்வரன், பஸ் மீது கல்லெறியும் சிறுவன், காவல் நிலையத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு சாட்சியாகிப்போன தேநீர்க் கடை சிறுவன், தொடக்கத்தில் ஊரையும் ஆட்களையும் விவரிக்கும் காவல் துறை அதிகாரி  எல்லார் கண்களிலும் நடிப்பை வருவிக்கிறார் மாரி செல்வராஜ்.  நடராஜ் எனும் நட்டி, கண்ணபிரான் பாத்திரமாகவே பார்க்கப்பட்டுக் கடுமையான வசவுகளுக்கு சமூக ஊடகங்களில் ஆட்பட்டிருப்பதை விடவும் வேறென்ன வேண்டும், வெகுமானம் !  பூ ராமுவுக்கு அளவான பாத்திரம். 
யுக பாரதி, இரண்டு சிறப்பான பாடல்கள் வழங்கி இருக்கிறார், ‘மஞ்சனத்தி புராணம்’ (தேவா என்னமாகப் பாடி இருக்கிறார்) அசர வைக்கும் அனுபவம் எனில், ‘தட்டான் தட்டான்’ பாடல் (தனுஷ் லயித்துப் பாடி இருக்கிறார்) சமூகத்தின் காதல் கொண்டாட்டம். ‘கண்டா வரச்சொல்லுங்க’ (மாரியம்மாள் என்ன குரல்), ‘உட்றாதீங்கப்போவ்’ (தீதி, என்ன வித்தியாசமான இழைப்பு ) இரண்டும் உள்ளத்தில் எப்போது எழுதி வைத்திருந்தார் மாரி என்று கேட்க வேண்டும். 
பரியேறும் பெருமாள் படத்தில் எதிரெதிராக உணரப்படும் சமூகத்து மனிதர்களை அருகருகே ஒரு ரோஜாப் பூ நடுவே அமர்ந்து உரையாட வைத்திருந்தார் மாரி. இந்தப் படத்தின் வரையறையை, அதன் அழகியல் தன்மை, கலையின் சிறப்பான வெளிப்பாடு இவற்றின் உள்ளடக்கம் குறைவுபடாமலே கூட சற்று விரித்து  சமூக எதார்த்தத்தின் இன்னொரு முகத்தையும் காட்டி இருக்க முடியும் மாரி. மாற்றங்களுக்கான குரலை அங்கீகரிக்க மட்டுமல்ல, சாத்தியப்படுத்த வேண்டிய பங்களிப்பும் செய்வோரையும் உள்ளடக்கியதே ஒடுக்குமுறைக்கு எதிரான களங்கள். கர்ணன், பார்க்க விடுபடக் கூடாத ஒரு காட்சி மொழிப் படங்களில் ஒன்று. 
ங்கனூரின் செவண்டன் இப்போது எங்கே எப்படி இருக்கிறார் தெரியாது, கர்ணன் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நெஞ்சில் நிறைந்திருந்தது அவரது முகமும், அவர் எழுப்பி இருந்த கேள்விகளும்.

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

ரஸவாதி

ஆதார ஸ்ருதி (old copy) » Buy tamil book ஆதார ஸ்ருதி (old copy) onlineஆதார ஸ்ருதி\\\'யின் நாயகன் - ரஸவாதி!- Dinamani

 

கல்லூரி நாட்களிலேயே பல பத்திரிகைகளில் ரஸவாதியின் (ஆர்.ஸ்ரீனிவாசன்)   படைப்புகள் வெளிவந்தன. மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர். கவனிக்கப்பட்ட எழுத்தாளரான இவருக்கு ‘கலைமகள்’ நாவல் பரிசு பெற்ற ‘ஆதரஸ்ருதி’ மேலும் எண்ணற்ற ரசிகர்களை உருவாக்கியது. இதன் கன்னட மொழியாக்கமும் தொடர்கதையாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிறையச் சிறுகதைகள் எழுதியுள்ளார். ‘அமுதசுரபி’ நாவல் போட்டியில் பரிசு பெற்ற புதினம் ‘அழகின் யாத்திரை’. அதனை மேடை நாடகமாக்கி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘சேவா ஸ்டேஜ்’ குழுவில் நடித்திருக்கிறார். ‘வழி நடுவில்’ என்னும் பரிசுகள் வென்ற மேடை நாடகம் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. பல வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். உதவி இயக்குநராக ‘எங்கள் குல தெய்வம்’ படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

ஓய்வுபெற்ற பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு எழுத இயலாமல் போனது. அதிலிருந்து மீண்டு ‘சேது பந்தனம்’ என்னும் புதினத்தை எழுதி முடித்தார். அந்த நாவல் இவர் மறைந்த பிறகு வெளிவந்தது.

* * * * * *

தோழர் கஜபதி என்னும் கதை …..

கஜபதியைத் தெரியுமோ உங்களுக்கு? ஒல்லியாக, கோட்டு போட்டுக்கொண்டு “பைல்”கட்டும் அதுவுமாக, பழைய குடையுடன், பத்தாம் நம்பர் பஸ்ஸுக்காக பாரீஸ் கார்னரில் காத்திருப்பாரே அவரேதான்.

என்று தொடங்குகிறது.

அரசு அலுவலகங்களில் உழைத்தே ஓடாய்ப்போன லக்‍ஷக்கணக்கான குமாஸ்தாக்களில் கஜபதியும் ஒருவர். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாமல் காலந்தள்ளும் ஒரு அப்பாவி! வெள்ளைக்காரன் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டவர். – இது அறிமுகம்.

குழிவிழுந்த கன்னம், பள்ளத்தில் கிடந்தாலும் மூக்குக்கண்ணாடி வழியே மிரள மிரள விழிக்கும் கண்கள். அவரது நெற்றிச் சுருக்கங்கள் இருபதாண்டுகளுக்கு மேலான அனுபவங்கள் பதித்த சுவடுகள். வழுக்கைத் தலை, இடையிடையே கருப்போடியிருக்கும் பிசிர் பிசிரான மீசை. – இது தோற்றம்

மாதம் முழுவதம் போடப்படும் பிய்ந்துவிட்ட பித்தான்களுக்குப் பதிலாக குண்டூசிகள் குத்தப்பட்ட ஒரே கோட், குல்லா, டயர் செருப்பு, பளிங்குக் கண்ணாடி – இது உடையலங்காரம்.

அவருக்கு இப்போது பெரிய பிரச்சினை

காரியாலயத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என்று சங்கம் தீர்மானம் செய்ததுதான் அவருக்கு ஆபத்தாகப் போயிற்று. சங்கக் கூட்டம். பகல் லஞ்ச் டைமில் காம்பவுண்டுக்குள் இருந்த பெரிய புளிய மரத்தினடியில்தான் வழக்கமாக நடக்கும். தலைவர் ஆவேசமாகப் பேசினார். நூறு நூற்றைம்பது சக ஊழியர்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸி.ஐ.டிக்களும் மாறு வேஷத்தில் அந்தக் கும்பலில் இருந்ததாகச் சில தோழர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

கஜபதி மட்டும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று கோப்புகளுடன் போராடி மேலதிகாரிகளின் பார்வைக்காகக் குறிப்புகள் எழுதிக்கொண்டு இருந்தார். அவருடைய ‘விசுவாசம்’ அப்படி.

சட்டமும், ரூலும் தெளிவாக இல்லாவிட்டால் மழுப்பின மாதிரி பட்டும் படாமலும் உத்திரவுகள் போடும் அதிகாரிகள்கூட கஜபதியின் “நோட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஓ.கே. உத்திரவை உடனே போட்டு “பைலை” திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு நல்ல பெயர் அவருக்கு மேல் மட்டத்தில். ஆனால் அதிகாரிகளிடம் சொந்த முறையில் தொடர்பு வைத்துக்கொண்டு சில்லறைச் சலுகைகளை அடையும் தைரியமோ சமார்த்தியமோ அவருக்குக் கிடையாது. யார் யாருக்கோ எதற்காகவோ அட்வான்ஸ் இன்க்ரிமெண்ட் தந்து கொண்டிருந்த அந்த அதிகாரிகள் கஜபதியின் வேலையைப் பாராட்டித் தட்டிக் கொடுப்பதுடன் நிறுத்திக் கொண்டார்கள்.

எப்படியாவது தீர்வு வந்துவிடும்; வேலை நிறுத்தம் வராது என்று நம்பிக்கொண்டு இருந்தவர். போராட்டம் ஸ்ட்ரைக் வரை முற்றிவிட்டது என்பது இவருக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அலுவலக தூண்கள் சுவர்கள் எல்லாம் காணப்படும் சுவரொட்டிகளும் கோஷங்களும் இவரை மிரளச்செய்கின்றான். அதிகாரிகளுக்குப் பணிந்தே பழக்கப்பட்டவர்

தங்கள் கீழ்ப்படிதலுள்ள” என்று வெள்ளைக்காரன் ஆண்டபோது கடிதங்களில் அச்சடித்தே இருக்குமே அதற்கு நிரந்தரமான உதாரணம் கஜபதிதான் என்று கூடச் சிலர் கேலி செய்தார்கள். பணிவு காரணமாக மேலதிகாரிகளுடன் இப்போதும் முதுகு வளைந்து குனிந்துதான் அவர் பேசுவார்.

வேலைநிறுத்தத்தின்போது எந்த ஊழியரும் வேலைக்கு வரக்கூடாது என்று ‘யூனியன்’ சொல்லிவிட்டது. வயதானவர்களும் பயந்தவர்களும் ‘மெயின்கேட்’ முன்பு நடக்கவிருக்கும் மறியலில் கலந்துகொள்ளாவிட்டாலும் வீட்டிலிருந்து வேலைக்கு வராமல் ஒத்துழைப்பு தந்தால் போதும் என்று சொல்லியிருந்தார்கள். ஒரே நாள் விவகாரமாக இருந்தாலும் ஒருவர்கூட வேலைக்குப் போகக்கூடாது என்று சங்கம் தீர்மானமாக இருந்தது.

சர்க்கார் கெடுபிடிகளில் இறங்கியது. பத்து பத்துக்கு வருகைப் பேரேடு அதிகாரியின் மேஜைக்குப் போய்விடும். வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள்.

இருபத்தாறு ஆண்டுகளாக செய்யாத ஒரு காரியத்தை அன்று செய்ய கஜபதி விரும்பவில்லை. எப்படியும் “க்ரேஸ்டய”த்துக்குள் காம்பவுண்டுக்குள் நுழைந்து விடவேண்டும். என்னும் துடிப்புத்தான் அவருக்கு இருந்தது.

“என்ன, நேரம் ஆகுதே? கிளம்பலியா?” என்று மனைவி கேட்டபோதுதான் தெய்வத்தின் உத்திரவே வந்து விட்டதுபோல அவருக்குத் தோன்றிற்று. போகத்தான் வேண்டும் என்கிற முடிவும் உடனே உண்டாகிவிட்டது அவர் மனதில்.

வழக்கமான அலங்காரங்களுடன் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்து வந்தும் ஒன்பது மணி பஸ் போய்விட்டிருந்தது. ஒன்பது இருபது பேருந்தைத்தான் பிடித்து ‘கிரேஸ் டைம்’ முடிவதற்குள் அலுவலகம் போகவேண்டுமே என்று கவலை ஏற்படுகிறது.

“சர்க்காரிடம் எனக்கு இருக்கும் விஸ்வாசம் இந்த பஸ்ஸுக்கு என்னிடம் இல்லையே” என்று அவருக்கு ஒரு கணம் தோன்றிற்று. அது அவர் நாள் தவறாமல் தினமும் போகும் பஸ்!

அடுத்த பஸ்ஸில் போனால் கூட பத்து ஐந்துக்குப் போகும். ஓட்டமும் நடையுமாக ஆபீஸ் வாசலுக்கு ஐந்து நிமிஷத்துக்குள் போய் விடலாம். ஆனால் வாலண்டியர்கள் மறிப்பார்களே! எப்படியாவது திமிறிக் கொண்டாவது பலவந்தமாக உள்ளே போய்விட வேண்டியதுதான்.

பேருந்து நிறுத்தத்தில் பலர் ‘இங்கே தடியடி’ , ‘அங்கே துப்பாக்கிச் சூடு’, ‘நாலு பேருக்கு மேலே கூட்டம் கூடக் கூடாதாம்’ என்று ஸ்ட்ரைக் அவலை மென்றுகொண்டிருந்தார்கள். கஜபதி அதைக் காதிலேயே வாங்கவில்லை.

யார் யார் வேலைக்கு வரக்கூடும் (சங்கத்தின் வார்த்தைகளில் ‘கருங்காலிகள்’) என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். சாதாரணக் குமாஸ்தாக்களுக்கு சாதாரணக் காட்டுமர நாற்காலிகள்தானே.

குடும்பத் தொல்லையைத் தவிர்க்க, இருபத்திநாலுமணி நேரமும் ஆபீஸிலேயே இருக்க மாட்டோமா என்று ஏங்குபவர்களும், இந்த சமயத்திலாவது டிபார்ட்மென்டில் நல்லபெயர் எடுக்கலாம் என்று நப்பாசைப்படும் வழக்கமாக ஒழுங்காக வேலைக்கு வராத சிலரும் பொழுது விடிவதற்குள் உள்ளே வந்து, பல் தேய்ப்பதே ஆபீஸ் குழாயில்தான் என்பதாகத் தீர்மானம் செய்திருந்தார்கள். இதுவும் அவருக்குத் தெரியும். தன்னைப் பற்றி குறிப்பாகத் தலைவர் சொன்னதுதான் அவருக்கு சங்கடமாகப் போயிற்று.

“கஜபதி போன்ற, வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் நம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைத்தால் நமக்குப் பலம் பெருமை எல்லாம்”

தனது குடும்பத்தின் கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்? இன்னும் ஐந்தாறு வருடம் ஒட்டிவிட்டால் கௌரவமாக ரிட்டையர் ஆகிவிடலாம். இன்று நேரத்திற்குள் அலுவலகம் போய்விட முடியமா? நேரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. டைம்கீப்பர் சரியாகப் பதில் சொல்லவில்லை. ‘மீட்டருக்கு மேலே’ கொடுத்து ஆட்டோ அல்லது டாக்சியில் போக ‘தெம்பு’ இல்லை.

பேருந்தும் வருகிறது. சிரமப்பட்டு ஏறிவிட்டார். அலுவலகம் நெருங்கும் சமயத்தில் பேருந்து மேலும் போகாது என்று தெரியவருகிறது. இவரது அலுவலக வாசலில் கலாட்டாதான் காரணம். கஜபதி இரங்கி ஓட்டமும் நடையுமாக விரைகிறார். வழியில் வரிசையாய் லத்தியும் கையுமாகப் போலீஸ்.

“யாரய்யா? பெரியவரே, நில் அங்கேயே. போ திரும்பி! வெலவெலத்துப்போய் கஜபதி நின்றார். குண்டாந்தடியும் முறுக்கு மீசையுமாக அந்த ஸ்பெஷல் போலீஸ்காரன் கறுப்பண்ணசாமி சிலை போல விழி பிதுங்க நின்றான், வழியை மறித்து.

“ஆபீசுக்கு…”

“யாரும் எந்த இடத்துக்கும் இந்த வழியாப் போகக் கூடாது. சொன்னாப் புரியலே? போய்யா!… நிக்காதே. ஓடு” கழி ஓங்கியதைப் பார்த்ததுமே பயந்துபோய் அவர் வந்த வழியே ஓட ஆரம்பித்தார்.

மறுநாள் அலவலகம் சென்றபிறகு விவரங்கள் தெரிய வருகின்றன. சுமார் முந்நூறுபேர் அலுவலகம் வந்திருந்தார்களாம். அவர்களில் ஒருவராக கஜபதி இல்லை. அவரது மேஜைக்குச் செல்லும் முன்பு பலர் அவரை என்னவோபோலப் பார்த்தார்கள். இருக்கையில் அமர்வதற்கு முன்பே உள்ளிருந்து அழைப்பு.

அறைக்குள் நுழைந்த கஜபதியை ஆபீஸர் ஒரு முறை பார்த்தார். மேஜை மேலிருந்து டைப்படிக்கப்பட்டிருந்த காகிதம் ஒன்றை அவரிடம் நீட்டினார். அவர் பக்கத்தில் இருந்த ஹெட்கிளார்க் வேறொரு பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.

இருவருமே அவரிடம் பேச்சு எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை. அறைக்கு வெளியே வந்து அந்தக் காகிதத்தைப் படித்தார் கஜபதி.

“……. வேலைக்கு வராததால் வேலை நிறுத்தம் செய்ததாகக் கருதப்படுகிறது. இன்றிலிருந்து உம்மை ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறோம். கடமை தவறியது பெரிய குற்றம் அதற்காக உம்மை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை இதைப் பெற்றுக்கொண்ட பத்து நாட்களுக்குள்ளாக……”

தான் நிரபராதி. சந்தர்ப்பக் கோளாறால்தான் வரமுடியவில்லை என்று அவர் உள்ளம் கதறுகிறது. வெளியே இவரைப்போல ‘சஸ்பெண்ட்’ ஆனவர்கள் கும்பல். பலர் வந்து இவருக்குக் கை குலுக்குகிறார்கள். அலக்காக மேடைக்குத் தூக்கி வந்துவிட்டார்கள். மாலைகள் வருகின்றன. தலைவரின் உத்தரவின் பேரில் முதல்மாலை கஜபதிக்கு விழுகிறது. பலத்த கரகோஷம்.

 “வேலை நிறுத்தம் வெற்றிகரமாகவே நடத்தி முடித்தோம். தோழர்களின் ஒத்துழைப்பை சங்கம் பாராட்டுகிறது. குறிப்பாக தோழர் கஜபதியைப் போன்ற ஸீனியர்கள் இத பங்குகொண்டு கைகொடுத்து வெற்றிபெறச் செய்து நடத்தி கொடுத்ததுதான் விசேஷம். சங்கத்துக்குத் தனிப் பெருமை அதுவேதான். பல குடும்பத் தொல்லைகளிருந்தும்கூட, பின் விளைவுக்கு அஞ்சாமல் இத்தனை வயதிலும் ஒத்துழைத்த அந்தப் பெரியவரின்… பலத்த கைதட்டல். “தோழர் கஜபதி! வாழ்க!” கோஷம் கஜபதியின் காதை அடைத்தது. திருகத்திருக விழித்தபடி மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்தார் அந்தப் – பரம விசுவாசி!

என்று கதை முடிகிறது.

* * * * * *

கதர் ஜிப்பா, வேட்டி அணிந்த தேசபக்தர், நல்ல ஓவியர். புல்லாங்குழல் ‘மாலி’யிடம் முறையாக இசை பயின்ற ஆர் ஸ்ரீனிவாசன் பல சிறுகதைகள் இசையைப் பின்னணியாகக் கொண்டவை. (‘தோடி’, ‘அரங்கேற்றம்’, ‘ஆராதனை’, ‘வித்வானும் ரசிகையும்’, ‘சங்கராபரணம்’).

குறிப்பிடத்தக்க எழுத்தாளாராகப் பிரபல விமரிசகர் ஐராவதம் (ஸ்வாமிநாதன்) அவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர். ஐராவதம் பரிந்துரைகள் எப்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை என்று அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார்.

ரஸவாதி சிறுகதைகள் கொண்ட தொகுப்பு  விருட்சம வெளியீடாக இந்த மாதம் (ஏப்ரல் 2021)  வெளிவருகிறது.

 

அவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்

Dinamalar Cinema on Twitter: "36 வயது, 60 படங்கள் : த்ரிஷாவின் அழகிய சாதனை : பிறந்தநாள் ஸ்பெஷல்! #TrishaKrishnan #HBDSouthQueenTrisha #HappyBirthdayTrisha https://t.co/Q0kOd8UVIx… https://t.co/Aux3TqfSGl"
‘புஜ்ஜிக்குட்டி, இன்னைக்கு ராத்திரி பாவ்பாஜி பண்ணுடா செல்லம்’!
தேவி மாதிரி அழகா, சிகப்பா இருக்கா என்று மூத்த பெண்ணான எனக்கு அம்மா அப்பா பார்த்துப் பார்த்து வைத்த பார்வதி என்ற பெயர், காரியம் ஆக வேண்டுமென்றால் என்னவரால் புஜ்ஜிக்குட்டி, செல்லம் என்றாகும்.

என் கணவரால் மிகவும் விரும்பப்படும் இந்த பாவ்பாஜி செய்வதில் என்னவோ நான் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டேன். . நிறையக் காய்களைப் போடுவதால் மட்டுமே பாவ்பாஜி ஆகி விடாது. அதன் இரகசியம் அந்தக் காய்கறிகளின் அளவிலும், அதில் சேர்க்கப்படும் மசாலாவிலும் உள்ளது. நான் செய்யும் பாவ்பாஜி பாரெங்கும் மணக்கும், அந்தக் கைப்பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை என்று அதை ருசித்த எல்லோரும் சொல்வதுண்டு. எங்கம்மா எதைச் சொல்லித்தந்தாரோ இல்லையோ, நன்றாக சமைக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஓர் ஆணின் இதயத்திற்குள் வயிற்றின் மூலமாகத்தான் நுழைய முடியும் என்று. ஆனால் எப்படி நுழைவது! இதயம் வயிற்றுக்கு மேலே அல்லவா இருக்கிறது!

சொன்னபடி இராத்திரி பாவ்பாஜி செய்யவில்லை என்றால் வீடு ரெண்டு பட்டுவிடும். எனவே பாவ்பாஜி செய்வதற்கு எல்லா சாமான்களும் இருக்கின்றனவா என்று பார்க்க சமயலறைக்குள் நுழைந்தேன். ம்.. நான் பயந்த மாதிரி காய்கள் மிகவும் கொஞ்சமாக இருக்கின்றன. வெங்காயம் முக்கியமானது. இல்லவே இல்லை. நல்லதாய்ப் போயிற்று. இப்பவே பாரத்தேன். என் பையன் அர்ஜூன் ஸ்கூலிலிருந்து வருவதற்குள் வாங்கி வந்து விடலாம் என்று காலை செருப்பில் நுழைத்து வாயிலுக்கு வந்தேன்.

மடமடவென்று நடையைக் கட்டினபோது, ஆ இதென்ன இந்த செருப்பு சமயம் தெரியாமல் அறுந்து விட்டது. எத்தனை தடவை சொல்லியாகிவிட்டது புதுசு வாங்கித்தரும்படி. இரண்டொரு நாட்களில் எப்படியும் வாங்கியேயாக வேண்டும். கவனத்தை செருப்பிலிருந்து திருப்பி பாவ்பாஜியில் செலுத்தி வேக நடை போட்டேன்.

எதிரில் வந்து கொண்டிருந்த கமலா என்னைப் பார்த்து அர்ஜூன் ஸ்கூல் பற்றி, அடைக்கு போட வேண்டிய அரிசி அளவைப் பற்றி சிறிது நேரம் பேசினாள். இங்கும் அங்கும் அலை பாய்ந்த மனத்தோடே அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு நடை கட்டினேன்.

திடீரென்று அடுத்தத் தெருவில் இருக்கும் ரகு எதிரில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். இந்தப் பக்கம் வருகிறான் என்றால் கண்டிப்பாக வீட்டுற்குத்தான் செல்கிறான். ஐயகோ! அனுஷா வீட்டில் தனியாக இருக்கிறாளே! மாமனார் மாமியார் வேறு ஊரில் இல்லை அவள் பாதுகாப்பிற்கு. ரகுவின் சில்மிஷம் ஊரறிந்த ஒன்று. நல்ல பெயரே கிடையாது அவனுக்கு. இந்தப்பாழும் செருப்பால் வேகமாக நடக்க முடியவில்லை.

பதைபதைத்தபடி வேண்டிய காய்களை அவசர அவசரமாக வாங்கிக்கொண்டு, தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன். வீடு நிசப்தமாக இருந்தது வேறு என் பயத்தை அதிகமாக்கியது.
மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அப்பாடி ! மனம் நிம்மதியடைந்தது அந்தக் காட்சியைப் பார்த்து! ஸ்கூலுக்குச் செல்லாத ஐந்து வயது ரகு நாலு வயது அனுஷாவுடன் பொம்மை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

இன்று ரகுவிற்கும் ராஜ (பாவ்பாஜி) யோகம்தான்!

குண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்

      தமிழறிவு!!: குண்டலகேசி

   முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள். 

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்டு, அவளைப் பழிவாங்க நினைத்தான். 

அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……

         வழியில் கண்ட வனப்புமிகு காட்சிகள்

                மலைப் பகுதியின் எழில்

 

ஆடையென மேகநிரை மாமலையை மூடும்

     அழகுமயில் அதைக்கண்டு  சிறகுவிரித் தாடும்

ஓடையிலே விலங்கினங்கள் நீரருந்தி ஓடும்

     உயர்மரத்துக் கிளையுகந்து வான்முகட்டைச் சாடும்

பேடையினை ஆண்பறவை இலைநடுவே தேடும்

     பெண்குயிலும் துணையுடனே சேர்ந்திசைப்பண் பாடும்

வாடையினால் சிலபறவை கூடுகளில் வாடும்

     வனப்புடைய  வண்ணமலர் செடிகொடிகள் சூடும்!

 

மேகத்தின் நிழல் போன்ற யானைக் கூட்டங்கள்

 

அகிலும் மணக்கும் சந்தனமும்

     அடர்ந்த  மலையின் சாரலிலே

முகிலின் பரந்த கரியநிழல்

     மொத்தம் வந்து படிந்ததெனத்

திகழும் யானைக் கூட்டங்கள்

     சேர்ந்து நெருங்கி உறங்கினவே 

நிகரில் மருப்பும் ஒளிவீசும்

     நெளியும் மின்னாய்க் கண்கூசும்

 

        ( மருப்பு — யானைக்கொம்பு)

 

           தினைப்புனம் காக்கும் பெண்கள்

 

நெடுமரத்தின் உச்சியிலே நிலைத்தபரண் மீதமர்ந்து

தடதடவென் றடிக்கின்ற தட்டையொடு தழலொலித்து

விடுகதிர்கள் கவர்கிளிகள் விலகிடவே அவைவிரட்டும் 

சுடர்தொடிக்கை மடவார்கள் சூழ்ந்ததினைப்  புனம்கண்டார்.

 

      ( தட்டை, தழல் — கிளிகளை வெருட்டும் கருவிகள்)

                 தட்டுவதால் ஓசை எழுப்புவது தட்டை

                 சுழற்றுவதால் ஓசை எழுப்புவது தழல்

 

                                கானகச் சிறப்பு

வானாடு பறவையினம் வண்முகிலுள் போய்மறையும்

கானாடு பிணைமறிகள்  கலையுடனே தாம்விரையும்

தேன்நாடு பொறிவண்டு  செறிமலர்கள் இதழுறையும்

கான்நாட்டின் காட்சிகளைக்  கண்டவரின் மனம்நிறையும்!

 

                      ( பிணை- பெண் மான்)

                           ( மறி – மான் குட்டி)

                         ( கலை – ஆண் மான்)

 

                              வஞ்சகம் கண்டிலள்

பஞ்சுநிகர் மஞ்சுதவழ் மாமலையும், அம்மலைமேல்

விஞ்சியுயர் விண்தொட்டு விளையாடும் வியன்மரங்கள்,

கொஞ்சுகுளிர் வீழருவி கோலமிகு காட்சிகளை

வஞ்சியவள் கண்டனளே வஞ்சகம்தான் கண்டிலளே

       

            போகாதே எனத் தடுத்த பறவைகள்

முத்தன்ன வெண்ணகையாய் மொய்குழலாய் மென்னடையாய்    சித்திரையின் முழுநிலவாய்ச் சிரிப்பவளே பத்திரையே

இத்தரையில் கொடியவன்பின் இனிப்போதல் விடுவையெனக்

கத்தினவே  புள்ளினங்கள் காவென்றும் கீயென்றும்

            

        செல்லாதே  எனத்தடுத்த மரக் கிளைகள்

 

சேலாடு விழியுடையாய், செல்லற்க, செல்லற்க,

வேலோடு வழிப்பறிசெய் வீணன்பின் செல்லற்க,

நூலோதிப் பயனென்ன? நோக்கறிந்து பிழைப்பையெனக்

காலாடு மரக்கிளைகள் கைகளினால் தடுத்தனவே

                        ( கால் — காற்று)

                ( காலாடு — காற்றில் ஆடும்)

(தொடரும்)

 

சரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ

நான்காம் பாகம்

இடைக்காலச் சோழர்கள்

விஜயாலயன்

Ancient tamizhan: Vijayalaya Cholan

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

விஜயாலயன்

 

விஜயாலயன் என்றதும் கல்கியின் பொன்னியின் செல்வன் தான் நமக்கு நினைவு வரும். வயது முதிர்ந்து, இடுப்பிற்குக் கீழே செயலற்று இருந்த போதும் போர்க்களத்தில் வீரர்கள் அவரைத்தூக்கிக் கொள்ள அவர் தன் இரு கைகளிலும் பெரும் வாள் ஏந்தி சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தும் காட்சியை அழகாக, அசாத்தியமாக வர்ணிப்பது என்பது கல்கிக்கு மட்டுமே சாத்தியம்.

கடைச்சங்க காலத்திற்குப் பின் சோழர் பெருமை குறைந்து..
குறுநில மன்னராகி..
பேரரசுகளுக்குக் கப்பம் கட்டி..
சரித்திரத்தில் இடம் பெறாமல்..
பல சோழர்கள்..
இருந்தனர் – இறந்தனர் – தொலைந்தும் போயினர்.
இளவரசிகளை உற்பத்தி செய்து மற்ற நாட்டு மன்னர்களுக்கு மணமுடித்து..
‘நானும் ராஜகுலம் தான்’ – என்று அரசியலில் அலைந்து திரிந்தனர்.
அரசியல் களத்தில் – ஆதாயத்திற்காக ஏதாவது கூட்டணியில் சேர்ந்து போரிடும் கூலிப்படையாகவும் இருந்தனர்.
அப்படிப்பட்ட நாட்களில் ..
அந்த சோழக் குறுநில மன்னர்கள் தங்களுக்கு என்றுதான் விடிவுக்காலம் வருமோ எனக் கனாக் கண்டிருந்தார்கள்.
கல்கியும் அந்த ஆதங்கம் தாங்காமல் தானோ ‘பார்த்திபன் கனவு’ என்று சோழக்குறுநில மன்னன் கதையை எழுதினார் போலும்.

மு.மேத்தா வின் ‘மகுட நிலா’வின் நாயகன் நமது விஜயாலன்.
அவரது காந்தக் கவிதை ஒரு கந்தகக் கவிதையாக வெடிக்கிறது :
“எத்தகைய கொடிய இருட்டையும் கிழக்கின் உறைவாள் கிழிக்காமல் விட்டதில்லை. இருண்ட கண்டமாய் இருந்த இனத்துக்கு வெகுதொலைவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தின் பெயர்தான் – விஜயாலயன். வானச் சுவடியில் வைகறைக் கவிதையை யாரோ வரைந்து கொண்டிருந்தார்கள்” -இது சோழர் எழுச்சியைப் பற்றிய மேத்தாவின் வரிகள்:
அந்த நாவலின் முதல் வரி: “வெளிச்சம் வேகவேகமாக வந்து கொண்டிருந்தது”.

மேலும் மேத்தா எழுதுகிறார்:
“வரலாற்றின் நாயகர்கள் என்று வழிபடப்படுகிறவர்களெல்லாம் ஒரு காலத்தில் கலகக்காரர்கள் என்று கருதப்பட்டவர்களே!”.
விஜயாலயன் அப்படிப்பட்ட புரட்சித் தலைவன்!

சரி.. நாமும் கல்கியின் உந்துதல் நிமித்தம் – சற்றே கதை புனைவோம்.

காந்த மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றான். சோழ மன்னர்கள் தங்களைப் பரகேசரி, இராஜகேசரி, என மாறி மாறி அழைக்கின்றனர். தந்தை பரகேசரி என்றால் மகன் இராசகேசரி. முதல் பரகேசரி விஜயாலயன்! “தஞ்சை கொண்ட பரகேசரி”!

அவன் சிறந்த சிவபக்தன்.

(விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில்)
விஜயாலயன் ‘விஜயாலய சோழிஸ்வரம்’ என்ற கோயிலைக் கட்டினான்.
இது நார்த்தமலையில் (இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில்) அமைந்துள்ளது.
அவன்…
கனவுகளைச் சுமந்து வளர்ந்தான்.
கனவுகள் அவனைச் சோம்பேறியாக்கவில்லை.
கனவுகள் அவன் திறத்திற்கு உரமாயிற்று.
வீரம், விவேகம் அவனுக்கு ஏராளமாக இருந்தது.
துர்க்கை அம்மனின் அருளும் இருந்தது.
வாள் சுழற்றும் வித்தையில் சூரனாக இருந்தான்.
இருகரங்களிலும் வாள் பிடித்துச் சுழன்று சண்டையிடுவது அவன் தனிச் சிறப்பு.

போரென்று ஒன்று வந்தால் – அதில் விஜயாலயன் நிச்சயம் பங்கு பெற்றிருப்பான்.
பெரும்பாலும் பல்லவருக்கு உதவியாக. மெர்சனரீஸ் என்பது போல – கூலிப்படை என்றும் சொல்வர். கூட்டணிப் போரில் அவன் தவறாது அங்கம் வகிப்பான்.
அந்த அங்கத்திற்குப் பெருமை சேர்த்தான்.
அங்கம் வகிப்பதுடன் தன் அங்கத்தில் புண்படுவது பொருட்படுத்தாது போர் புரிவான்.
புண்படுவது – அவன் வீரத்தைப் பண்படுத்தியது.
பல போர்களில் ஈடுபட்டு தன்னுடம்பில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றிருந்தான்!
இதைப் பல கவிதைகள் கல்வெட்டில் பதித்தன.

அரசனான இரண்டு வருடங்களில் – பழையாறை தாண்டி இந்த சோழநாடு வளர வேண்டுமென்றால் என்ன செய்வது என்று யோசித்தான்.
அந்நாளில் – சோழன் நிலையே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் நிலையும்.
இருவரும் பேரரசர்கள் நிழலில் வாழும் மன்னர்கள்.
முத்தரையர் – தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர். இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.  தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர். அந்நாளில் – முத்தரையர் தம் ஆதரவை வரகுண பாண்டியனுக்கு அளித்திருந்தனர்.

விஜயாலயன் ஒரு முடிவு செய்தான்:
‘தஞ்சை எனக்குத் தஞ்சமாக வேண்டும்’.
“சோழர் குலத்தின் தீபம் போன்ற அவர், தன் சொந்த மனைவியின் கரங்களைப் பற்றுவது போல், தஞ்சையைக் கைப்பற்றினார்” – என்று கல்வெட்டுகள் ஒரு கவிதையைப் படைக்கிறது. தஞ்சையைக் கைப்பற்றிய பிறகு, நிசும்பசூதன் என்னும் அசுரனை வதம் செய்த, துர்க்கையாம் நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தான்.

விஜயாலயனது வெற்றி, முத்தரையரின் நண்பர் பாண்டியன் வரகுணவர்மனுக்கு கோபத்தை விளைவித்தது.
பலமிக்க பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர்.
வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தில் நடந்த போரில் விஜயாலயன் தோல்வியுற்றான். தஞ்சையும் பறிபோனது. தோல்விகளைக் கண்டு விஜயாலயன் துவளவில்லை. சோழர்களுக்கு வெற்றி தோல்விகள் ஒரு ரோலர் கோஸ்டர் போல மேலும் கீழும் மாறி மாறி வந்தன. காலமும் விஜயாலயனுக்கு மூப்பை அளித்தது. கால்களைச் செயல்படுத்த இயலாது போயிற்று.
ஆனால் அவன் உறையில் இன்னொரு ஆயுதம் இருந்தது.

அது அவன் மகன் ஆதித்தன்.

ஆதித்தன் தன் தந்தையின் வீரத்தின் நிழலில் வளர்ந்தவன் – பெயருக்கேற்ப சூரியனைப் போலப் பிரகாசித்த வீரனாக வளர்ந்திருந்தான். வீரம் – அறிவு இவற்றுடன் ராஜதந்திரமும் சேர்ந்த கலவை அவன்.
இனி வருவது தமிழகத்தைப் புரட்டிப்போட்ட திருப்புறம்பயப் போர்.
பல்லவன் அபராஜிதன் – சோழன் மற்றும் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி என்று நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

கணக்குப்பார்த்தால் .. பல்லவ படை- பாண்டியப் படை இரண்டும் பெரும் படைகள். கங்க – சோழ படைகள் இரண்டும் சிறு படைகள்.
பெரும் போர்.

பல்லவ – பாண்டிய படைகள் இரண்டும் எண்ணற்ற வீரர்களை இழந்தது. கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி போரில் இறந்தான்.
முதன் முதலாக தன் மகன் ஆதித்தன் சோழ படையின் மாதண்ட நாயக்கனாக போர்க்களத்தில் இறங்கி வெற்றிக்கனியைப் பறிப்பதைப் பார்த்து மகிழலாம் என்று பல்லக்கில் ஏறி திருப்பயம்புரம் வந்து சேர்ந்த விஜயாலய சோழனுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

கடல் போல் திரண்ட இரண்டு படைகளும் ஒன்றையொன்று வெல்லப் போராடி கொண்டிருந்தன. புழுதி பறந்த போர்க்களத்தின் முடிவு இழுபறியாகிக் கொண்டிருந்தது. தன் மகன் ஆதித்தனின் முதல் போர் வெற்றியைப் பார்த்து மகிழ வந்த விஜயாலயன்- போரின் போக்கினால் சிந்தனை வசப்பட்டான். பல்லவ சோழ படைகள் மெல்ல மெல்ல தங்கள் வலிமையை இழந்து – போரிடும் மூர்க்கத்தை மறந்து – தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது.

பல்லவ மன்னன் அபராஜித வர்மன் சரணடையும் முடிவை எடுக்கிறான். அதைக் கேட்டதும் குமுறிக் கொந்தளித்து கோபத்தின் உச்சிக்குச் சென்றான் விஜயாலயன். போர் உடை தரித்து இரண்டு கைகளிலும் வாள் பிடித்து இரண்டு வீரர்களின் தோளில் ஏறியபடி களம் புகுந்தான். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழன், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி புகுந்து சென்ற விடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தான். எட்டுத்திக்கும் எதிரிகளின் தலையைப் பறக்க விட்டான். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். நடக்க இயலாதவனின் வீரம் சோழ படைகளிடம் புது உத்வேகத்தைப் பாய்ச்சியது. வெகுண்டெழுந்த சோழப்படை எதிரிகளைத் துவம்சம் செய்து நிர்மூலமாக்கியது. தனக்கு ஏற்பட்ட பலத்த காயங்களையும் பொருட்படுத்தாது விஜயாலயன் போரிட்டிருந்தான். காலத்தின் விளிம்புக்கு வந்தான் அந்த மாவீரன்.

ஆதித்தன் கலங்கி நின்றான் : “தந்தையே! உங்கள் வீரம் என்றும் அழியாது. உங்கள் பெயரைக் கவிதைகள் பாடும். கல்வெட்டுகள் அதைச் சொல்லிச் சிவக்கும். சரித்திரம் பேசும். ஆனாலும் என் கண்கள் உங்கள் தேகம் படும் பாட்டைத் தாங்கவில்லை” -என்றான்.

விஜயாலயன்:

“மகனே .. நமது கனவு வசப்படும் நாள் நெருங்கியது. புலிக்கொடி பாரெங்கும் பறக்கும் நாள் விரைவில் வரும். கண்ணீரோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. கடமைகள் காத்திருக்கின்றன. பாதைகளும் காத்திருக்கின்றன – உன் பாதங்களுக்காக!” – விஜயாலயனின் அந்த உத்வேகமான சொற்களில் முதலாம் ஆதித்தன் ஆறுதல் அடைகின்றான்.

போரில் வீர மரணமடைந்த விஜயாலய சோழன் என்ற கிழவனுக்குத் தெரியாது! தான் மிகப்பெரிய ஒரு சோழ சாம்ராஜ்யத்திற்கு அடி கோலியிருக்கிறோம் என்று.! பாண்டியர்கள் பல நூற்றாண்டு தலையெடுக்காமல் செய்தது அந்தத் தோல்வி. விஜயாலயனின் பரம்பரையில் வந்தவர்கள்தான் ராஜராஜ சோழனும், தென் கிழக்கு ஆசியாவை வென்ற ராஜேந்திர சோழனும்!

கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தான். போரில் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஆதித்த சோழனுக்குக் கிட்டியது. போரின் முடிவில் சோழர்களின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தன.

அந்தக் கதைகளைச் சுகமாக அனுபவிக்கலாம் விரைவில்..

 

செய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Baskaran Kannan: மழை துளி-3

செய்,

துளியேனும் செய்!

 

செய்,

துணிந்து செய்!

முயன்று செய்,

முடிப்போம் என நம்பிச் செய்.

செய், துளியேனும் செய்!

 

எதனைச் செய்தாலும்

ரசித்து, ருசித்துச் செய்!

தொடர்ந்து செய்!

செய்,

துளியேனும் செய்!

 

மாற்றத்தைக்

கொண்டு வா!

அதற்குச்

செய்,

துளியேனும் (நீயும்) செய்!

 

உன்னில் உள்ள வளம் என்ன?

உன் வலிமைகள் என்ன?

என்பதை

சிந்திப்பீர், சிந்திப்பீர்!

 

வளங்களை அதிகரித்து,

வலிமைகளைக் குவித்துக் கொள்!

நலங்கள் பெருகும்!

 

பாதையை வடிவமைத்து

செல்,

வெற்றியின் நம்பிக்கையுடன் செல்!

 

கணக்கில்லா உன் வரப்பிரசாதம்!

இருப்பது ஒவ்வொன்றும் கொடுப்பினை என்று உணர்வதே முதல் வரப்பிரசாதம்!

 

உன்னுள் வளங்கள் கைகொடுக்க,

கனவுகளை

நிறைவேற்றி பூர்த்தி செய்யவே

உறவின் கரங்கள் உதவ இருக்க!

 

தயக்கம் என்ற இடையூறா?

உதவி கேட்பது,

மற்றவர்களை ஆதரிப்பது

கற்றுக்கொள்வது

மதிப்பது, உதவுவது!

இவையே உன்

 அடையாளாமாகிக் கொள்!

 

செய்து கொண்டே இரு,

இலக்கையை அடைவாய்!

பொறுத்துச் செய்வதால்

வெல்வாய்!

 

பலனை எதிர்பாராமல் செய்!

பிறந்த பயனை அறிந்து கொள்!

அதற்கெனவே

செய்,

துளியினும் செய்!

 

ஒற்றுமையுடன், மற்றவரையும்

கூட அழைத்துச் செய்

வெல்வோம் என எண்ணிச் செய்!

அதற்கு,

செய்,

துளியினும் செய்!

 

 

கம்பன் கவி நயம் – மதுரன்

Ramayan | Hanuman, Shri hanuman, Lord hanuman

கணையாழியைக் கண்ட சீதையின்  நிலை

 

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 

 

நாலே வரிகளை உடைய வெண்பாவில் 14 அல்லது 16 வினைச் சொற்களை மட்டும் வைத்துப் பாடியவன் கம்பன் ஒருவனே.

இந்தப் பாடலில் 9  வினைச் சொற்கள் உள்ளன. 

 

பாடலின் பொருள்:

சீதை அம்மோதிரத்தை தன் கையால் வாங்கினாள்;

அதைத் தன் மார்பின் மீது பதித்துக் கொண்டாள்;

தலை மேல் வைத்துக் கொண்டாள்;

கண்களிலே ஒற்றிக் கொண்டாள்;

அதனால் அவளது தோள்கள் பூரிக்கப் பெற்றாள்;

மனம் குளிர்ந்தாள்;

உடல் மெலிந்தாள்;

உடலில் தோன்றிய காதல் வெப்பத்தாள் ஏங்கினாள்;

பெருமூச்சு விட்டாள்;

அவள் நிலை இத்தகையது என்று சொல்ல முடியுமோ  என்று கம்பன் வியக்கிறான்.

 

அதேபோல் இன்னொரு நயம் !

பசுபதிவுகள்: 1133. பாடலும் படமும் - 41

 

( நன்றி : பசுபதி சார்) 

இன்று போய் நாளை வா என்று ராமன் சொன்னதும் ராவணன்

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்

1) எட்டுத் திசை யானைகளோடு போரிட்ட மார்பையும்,
2) திருக்கயிலையையே பெயர்த்தெடுத்த தோள்களையும்,
3) நாரத முனிவர்க்குச் சரிக்குச் சரியாக இசை வாதம் செய்த நாவையும்,
4)மாலை அணிந்தகிரீடங்கள் பத்தையும் ,
5) சிவன் உவந்தளித்த சந்திரஹாஸம் எனும் வாளையும்,
6) தன் வீரத்தையும்
போர்க்களத்திலேயே போட்டு விட்டு இராமனிடம் தோற்று வெறும் கையோடு இலங்கையில் நுழைந்தான் இராவணன் என்கிறான் கம்பன்.
சொற்சிலம்பில் முதல்வன் கம்பன் !!

குறுங்கவிதைகள் – என் பானுமதி

 

தற்சமயம்

சிறுமி சோப்பு நுரைக் குமிழில்

விளையாடுகிறாள்

வண்ண வண்ண பலூன்கள்

அவை இனிமை மறைந்தாலும்.

நதியிலாடும் பூவனம் - நீலாவின் குறுங்கவிதைகள் - Photos | Facebook

பிரதி பலிப்பு

மொட்டை மாடியில்

கண்ணாடி விரிசலென

வெய்யில்

ஜவ்வரிசி வடகம்

நேற்று

அந்தத் தோட்டப் பூ தேன் மிக்கது

சிலிர்த்தது பொன் வண்டு

அது

தோட்டக்காரனை இன்று அறிந்தது.

 

கூடு

எப்படி இந்தக் கூட்டில்

எது வழியே

எங்கிருந்து

எப்படி என்றெல்லாமே

பதிலுடன் கூடிய வினாக்களோ

இல்லையோ

கேளுங்களேன் சற்று

ஏனென்பதை மட்டும்.

 

வாதை

சலசலக்கும் கீற்றுகள்

இரையும் மனம்

மௌன வாய்.

 

ஆயாசம்

இளஞ் சிவப்பு பாதங்கள்

ஊன்றிய கட்டைச் சுவர்

ஒரே முனை நோக்கித் தவம்

எதிரெதிரே பார்க்கையில்

கோதும் சிறகு

ஆயாசப் பேடை

 

மீறல்

அவ்வப்போது கரையை சிறிதாக

மீறுவதில் உனக்கு

எத்தனை கேள்விகள்

 

 

கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

உதக வாத்தியமும் ஆனையாம்பட்டியும்!
ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் சென்னை நகர ஓட்டல் ஒன்றில் லஞ்சுக்குச் சென்றிருந்தேன். குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலில் எதிரெதிரே அமர்ந்து கொண்டிருந்தோம். பெரிய தட்டில் பச்சை, ஆரஞ்சு வண்ணங்களில் பல ‘மெலமைன்’ கப்புகளில் கூட்டு, பொறியல், ரசம், சாம்பார், ஊறுகாய் எனக் கொண்டு வைத்தார், சர்வர் சுந்தரம் ஜாடையில் ஒருவர்! இவ்வளவு கப்புகளா என வாயைப் பிளந்த மாமா, “என்னடா இது, ஜலதரங்கம் வாசிக்கறா மாதிரி இவ்ளோ கப்பு?” என்றார். தஞ்சாவூர் ஆசாமி அவர், எதிலும் சங்கீதத்தையே பார்ப்பவர்!
நம்மில் பலருக்கு ‘ஜலதரங்கம்’ பற்றிய ஞானம் குறைவுதான். பல நல்ல பாரம்பரியக் கலைகளைப் போல, ஜலதரங்கமும் அருகி வருவது வருத்தத்துக்குரியதுதான்.
சமீபத்தில் என் உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமணத்தில் வித்தியாசமான இசைக் கச்சேரி வேண்டும் என்று, ஜலதரங்கம் ஏற்பாடு செய்திருந்தார்கள். பனகல் பார்க்கில், எப்போதாவது மாலையில் சிறிது நேரம், ஆல் இந்தியா ரேடியோவில் ஜலதரங்கம் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்று ஜலதரங்கம் வாசிப்பது! தமிழில் “நீரலை இசை”, “நீர்க்கிண்ண இசை” என்று அறியப் படுகிறது. ’உதக வாத்தியம்’ என்ற பெயரும் உண்டு (உதகம் – புவி, நீர் என்கிறது சைவ சித்தாந்த அகராதி). இந்தியாவில்தான் உருவானது – இனிமையான தாள வாத்திய வகையைச் சேர்ந்தது.
ஆரம்ப நாட்களில் வெண்கலக் கிண்ணங்களில் நீரை ஊற்றி, விளிம்புகளை ஒல்லியான, உறுதியான குச்சிகளால் தட்டி எழுப்பப் படும் ஓசைகளைச் சுவரம் பிரித்து வாசிக்கப் பட்டது ஜலதரங்கம். கிண்ணத்தின் அளவு, அதில் விடப்படும் தண்ணீரின் அளவுகளைப் பொறுத்து, வேறு வேறு சுவரங்கள் எழுப்பப்படுகின்றன. பதினாறு முதல் தேவைக்கேற்றாற் போல், இருபது, இருபத்தைந்து கிண்ணங்கள், பல அளவுகளில் உபயோகப் படுகின்றன.
இப்போதெல்லாம், பீங்கான் கிண்ணங்களில் நீரூற்றி இசைக்கப் படுகின்றன. இடது பக்கத்திலிருந்து, வலது பக்கம் வரை அரை வட்ட வடிவில் தேவைக்கேற்ற நீருடன் கிண்ணங்கள் – பெரியதிலிருந்து, சிறியது வரை – வைக்கப் படுகின்றன. (மன்னாதி மன்னன் படத்தில் எம் ஜி ஆர் தன் முன்னால் பல ‘தபேலா’ க்களை வைத்துக் கொண்டு, ‘ஆடாத மனமும் உண்டோ’ பாடலுக்கு வாசிப்பதுதான் நினைவுக்கு வந்தது!) இரண்டு கைகளிலும் குச்சிகளைக் கொண்டு, கிண்ணங்களின் விளிம்பில் தட்டி ஓசை – சுவரங்கள் – எழுப்பப் படுகின்றன. நீரினளவைப் பொறுத்து மாறும் சுவரங்களை வைத்துப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. வயலின், மிருதங்கம் பக்க வாத்தியங்களாக, ஜலதரங்கக் கச்சேரிகள் நடக்கின்றன.
இடதிலிருந்து வலதுக்கு சுருதி ஏறிக்கொண்டே போகும்! வராத சுவரங்கள், அந்நிய சுவரங்களுக்கான கிண்ணங்களை சுருதி சேர்த்து, அரை வட்டத்திற்கு வெளியே வைத்து, தேவைக்கேற்ப உபயோகிப்பார்கள்! விளிம்பில் தட்டினால் சுவரங்களும், நீ மட்டத்தின் மேல் லேசாகத் தட்டினால், கமகங்களும் உண்டாகும். வேகமாகத் தட்டி வாசிக்கும்போது, கிண்ணங்கள் கவிழ்ந்துவிடாமல் இருக்கவும், அதில் ஊற்றப்படும் நீர் உதவும். (மேடையில் பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது கிண்ணங்களை வைத்து, நீர் நிரப்பி, ஸ்ருதி கூட்டி கச்சேரி ஆரம்பிக்கக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஆகிறது. அதுபோலவே, கச்சேரி முடிந்து, நீரை எடுத்து, கிண்ணங்களைத் துடைத்து வைப்பதற்கும்!)
சேலத்திலிருந்து 67 கிமீ தூரத்தில் உள்ளது ஆனையாம்பட்டி கிராமம். அங்கிருந்த திரு.சுப்பைய்யர் ஜலதரங்கம் வாசிப்பதில் மிகவும் தேர்ந்தவர். அவர் மகன் ஆனையாம்பட்டி கணேசன் அவர்கள்தான் அன்று திருமணத்தில் வாசித்தார். 90 வயது இளைஞர், இரண்டு கைகளினாலும் குச்சிகளைக் கொண்டு அவர் வாசிப்பதைக் காணவே ஆயிரம் கண்கள் வேண்டும். என்ன வேகம், ஸ்வர சுத்தம், தாளக் கட்டு – அபாரம். காஞ்சிப் பெரியவரின் ஆசி பெற்று, காஞ்சி மடத்தில் வாசிப்பவர். ஆல் இந்தியா ரேடியோவின் ‘ஏ’ கிரேட் ஆர்டிஸ்ட். வாத்தியத்திற்கு தமிழ்நாட்டில் வயது 121 – அதில் 70 வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறார் திரு கணேசன் அவர்கள். அவர் மகன் திரு வெங்கடசுப்ரமணியன் வயலின் வாசிக்க (ரொம்ப அழகா, ஜலதரங்கத்துக்கு இடம் கொடுத்து கூடவே வந்தது பிரமாதம்!), சிதம்பரம் பாலஷங்கர் மிருதங்கத்திலும், ராஜாராம் கடத்திலும் (இவர் விக்கு விநாயகராமின் மருமகன்) சிறப்பாய் வாசித்து, கச்சேரி களை கட்டியது. வாதாபி (ஹம்சத்வனி), எந்தரோ மஹானுபாவுலு (ஶ்ரீராகம்), சரச சாம தான (காபிநாராயணி), மாமயிலேறி (பிலஹரி), நகுமோ (ஆபேரி) என இசைப் பிரவாகம் அன்று மண்டபத்தை நிறைத்தது.
கலைமாமணி, லலிதகலாவேதிகாவின் பொற்பதக்கம் மற்றும் விருது எனப் பல விருதுகள். ஆசியாவிலேயே, ஜலதரங்கம் இசைக்கு முதன்மையாக – அத்தாரிடி – இருப்பவர் திரு கணேசன் அவர்கள்.
“இது போன்ற தொடர்ச்சியில்லாத வாத்தியங்களில் மொழியை – சாகித்தியங்களை – கொண்டு வருவது அவ்வளவு சுலபமில்லை. கிண்ணங்களின் வயது 100 க்கும் மேல். எந்த விரிசல் இல்லாமலும், விரலால் தட்டிப் பார்த்து ஸ்வரத்திற்குச் சமமாக இருக்கிறதா என்றும், உகந்த அளவு தண்ணீர் நிரப்பிய பின் வரும் நாதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கிக் கொள்ளணும். …. அமரும் மேடை கான்கிரீட் மேடையா, அல்லது மரத்தினாலானதா என்பதைப் பொறுத்து வெளிவரும் நாதமும் வித்தியாசப் படும்.” என்கிறார் திரு கணேசன்.
“இப்போதெல்லாம் பெரிதளவில் கச்சேரிகள் வருவதில்லை. அதற்காக நான் ரொம்ப கவலைப் படுவதில்லை” என்கிறார் 90 வயதான இந்த இசைக் கலைஞர்.
நமது பாரம்பரியம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள், ஜலதரங்கம் போன்ற கலைகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பல கலாச்சார மரபுகள் அழிவதைப் போல, நல்ல கலைகளையும் கவனிக்காமல் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற வருத்தம் வருகிறது.