By ஸீன்ஸ்
Monthly Archives: December 2021
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
அரிஞ்சயன்
பராந்தகன், இராஜாதித்தன், கண்டராதித்தன் அனைவரும் சென்றபின் சோழ நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இனி வருவது காண்போம்.
பல அரசர்கள், ஆண்டு பல ஆண்டு, சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.
சில அரசர்கள், ஆண்டுகள் சிலவே ஆண்டும், சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.
அரிஞ்சயன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவன்.
அவன் காலம் – சோழர்களுக்கு ஒரு சோதனைக் காலம்.
கண் பெற்று இழந்தவன் நிலை அது!
விஜயாலயன் காலத்தில் கண் பெற்று, பராந்தகனின் இறுதிக்காலத்தில் கண் போன நிலை அது! அடுத்து வந்த கண்டராதித்தன் நாட்டைக் காபந்து பண்ணுவதிலேயே கவனமாக இருந்தான். சிவ வழிபாட்டிலே தனது நாட்களைக் கழித்தான்.
சுற்றி நின்ற பகைகள் சிரித்துக் கொண்டிருந்தது!
சோழவளநாட்டைத் தின்பதற்குத் துடித்திருந்தனர்.
கண்டராதித்தன் அரிஞ்சயனை கி பி 954 ல் யுவராஜாவாக அறிவித்திருந்தான். கி பி 957ல் கண்டராதித்தன் மரணம் அடைந்தான். கண்டராதித்தனின் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், அரிஞ்சயன் பட்டம் பெற்றான்.
இவன் பரகேசரி பட்டம் பெற்றவன். இவனுக்கு வீமன்குந்தவியார் ,கோதை பிராட்டியார் என மனைவிகள் இருந்தனர். அதைத்தவிர இன்னொரு மனைவி கல்யாணி. அவளை வைத்துக் காவியமே எழுதலாம்.
சரி.. ஒரு குறுங்கதையாவது புனைவோமே!
அந்நாளில் தென்னிந்தியா முழுதும் பேசப்பட்ட இளவரசி கல்யாணி. திருமுனைப்பாடியில் அரசாண்ட வைதும்பராயருடைய புதல்வி அவள்.
அழகு என்றால் அப்படியொரு அழகு. எல்லா நாட்டு இளவரசர்களும் அவளை அடைவது எப்படி என்று அறையில் தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். சோழ நாட்டு இளவரசர்களும் அதற்கு விதிவிலக்கல்லர்.
இராஜாதித்தனும், அரிஞ்சயனும் அந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தனர். ஆனால், வைதும்பராயருக்கும், பராந்தகனுக்கும் ஒத்துப்போகவில்லை. முக்கியமாக, வைதும்பராயருக்கு பராந்தகன் மீது வெறுப்பு. பராந்தகன் வைதும்பராயரைக் கப்பம் கட்ட சொன்னான். வைதும்பராயன் மறுத்தது மட்டுமல்லாமல், விரோதம் பாரட்டத் தொடங்கினான். சோழ எதிரியான இராட்டிரக்கூட மன்னன் கிருஷ்ணனுடன் கூட்டு வைத்துக்கொண்டான்.
ஏற்கனவே இரண்டு மனைவிகளிருந்த போதும், அரிஞ்சயன் துணிந்து விட்டான்.
‘தப்பாமல் நான் உன்னைச் சிறையெடுப்பேன், இரண்டு மூன்றாக இருக்கட்டுமே’ என்று மனத்துக்குள் ராகம் பாடினான் கல்யாணியின் மனநிலையை யாரோ அறிவர்.
கல்யாணியைக் கவர்ந்து பழையாறை அரண்மனையில் வைத்தான். பராந்தகன் அரிஞ்சயன் செயலை முழுமனதோடு ஆதரிக்கவில்லை. ஆயினும், கல்யாணியின் வரவு, வைதும்பராயரை சோழக்கூட்டணிக்கு வரவழைக்கும் என்று நினைத்திருந்தார். அவரது கணக்கு தவறியது. வைதும்பராயரது பகைமை விரிந்தது. கல்யாணியை கல்யாணம் செய்து கொண்ட ஒரு வருடத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. பராந்தகன் என்றே பெயர் வைத்தனர். அழகில் மன்மதன் போல விளங்கிய அந்தக் குழந்தை பராந்தக மன்னனின் செல்லப்பேரனாயிற்று. அவனை ‘சுந்தரா’ என்று அழைத்தான்.
சுருங்கிய நாட்டை சுருங்கிய நாட்களே ஆண்டான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன கால கட்டத்தில், அரிஞ்சய சோழன் தொண்டை மண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். தன் மகள் அரிஞ்சிகைப்பிராட்டியை வாணர் குல மன்னனுக்கு மணம் செய்து கொடுத்து வாண நாட்டை நட்பு நாடாக்கினான். போர் நிகழ்த்தி மேல்பாடி அருகில் உள்ள ஆற்றூர் என்னும் இடத்தில் இறந்தான்
வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று “ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி” என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது.
வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி. பின்னாளில் சுந்தரன் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயர் வைத்தது, இந்த ராணியின் பெயரைத்தான். கல்யாணி வைதும்பராயனின் மகள் . நான்காவது பூதி ஆதித்த பிடாரி கொடும்பாளூர் நாட்டின் இளவரசி.
இந்த அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும் .அதற்கு முன் பள்ளிப்படை என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். பழங்காலத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த மாவீரர்களின் ஞாபகமாக வீரக்கல் நட்டு கோயில் கட்டுவது மரபு .வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நட்டிருந்தால் அது “நடுகற் கோயில் ” என்று கூறுவார்கள் .அத்துடன் ஏதாவது தெய்வத்தின் சிலையை நிறுவியிருந்தால் அது “பள்ளிப்படை” என்று அழைக்கப்படுகிறது.
அரிஞ்சயன், தன் மகன் சுந்தரனால் சோழ நாடு நல்ல நிலைக்கு வரும் என்று நம்பினான். அந்த நினைப்புடன் போர்க்காயங்கள் ஆறாது ஆற்றூரில் காலமானான்.
(அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை)
ஆனால் அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. தனது சந்ததியினர் கொடிக்கட்டிப் பறந்து தரணி எல்லாம் ஆளுவர் என்று எண்ணவே இல்லை. அந்தக்கதைகளை விரைவில் எதிபார்க்கலாம்.
தொடரும் ..
குறும் புதினம் டிசம்பர்
உலக இதிகாசங்கள் எஸ் எஸ்
கில்காமேஷின் கதையைக் கேட்டபிறகு உத்தானபிஷ்டிமுக்கு அவன்பால் இரக்கம் உண்டாயிற்று.
அவன் தோள் மீது கையை வைத்து, ” நீ என் பதில் இல்லாமல் போகமாட்டாய் என்பது தெரிகிறது. ஆகவே உனக்கு ஒரு மர்மத்தை விளக்குகிறேன். கடவுள்கள் ரகசியமாக வைத்திருக்கும் அந்த விஷயத்தை உனக்குத் தெளிவு படுத்துகிறேன்” என்று கூறி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
” யூபிரடீஸ் நதிக்கரையில் உள்ள விர்ரூபக் நகரம் உனக்குத் தெரியுமல்லவா கில்காமேஷ் ? அதன் தேவர்களையும் உனக்குத் தெரியும். அனு என்பவர்தான் நகரத்தின் தந்தை . என்லில் அவரது வலதுகரம் போர்த்தேவன். நினுர்த்தா, என்னுகி ,ஈயா , இஷ்டார் போன்ற தேவர்கள் அவருக்குத் துணையாக இருந்து வந்தார்கள்.
அப்போது பூமியின் பாரம் அதிகமாகிவிட்டது என்பதை அனைத்துக் கடவுள்களும் உணர்ந்தார்கள். உலக மக்கள் செய்கிற அநியாயங்களும் , அக்கிரமங்களும் , கூக்குரலும் அதிகமாகிவிட்டது. அதனால் மனித குலத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைத்துத் தேவர்களும் உணர்ந்தார்கள். அதற்காக மிகப் பயங்கரமான ஆயுதமான பிரளயத்தை ஏவலாம் என்றும் முடிவு கட்டினார்கள். அதைச் செய்துமுடிக்குமாறு என்லில்க்கு உத்தரவிட்டார்கள்.
அந்தக் கடவுளர் கூட்டத்தில் இருந்த ஈயா என் உயிர்த்தோழன். யாருக்கும் தெரியாமல் என்னிடம் வந்து அந்த ரகசியத்தைக் கூறினான்.
” உத்தானபிஷ்டிம் ! உலக மக்களில் நீ மிகவும் நல்லவன். அதனால் உனக்கு மட்டும் அந்தப் பிரளயம் வரப்போகிற ரகசியத்தைக் கூறினேன். அதுமட்டுமல்ல மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டியது என் கடமை. அதனால்தான் உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் அழிக்கவேண்டும் என்ற சக்திவாய்ந்த என்லில்தேவனின் கட்டளையை மீறி இதைச் செய்கிறேன்.
நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்! உன் வீட்டை அழித்துவிட்டு மரங்களைக் கொண்டு பெரிய படகை நிர்மாணம் செய்! மழைத்தண்ணீர் உள்ளே வராத மாதிரி நெருக்கமான கூரையினால் அதை மூடு. மக்களை அண்டி வாழும் மிருகங்கள் பட்சிகள் அனைத்திலும் ஒரு ஜோடி – ஆண் பெண்ணாக உன் படகில் ஏற்றிக்கொள் ! உன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள் ! மற்ற சொத்துக்களைப் பற்றிக் கவலைப்படாதே! உன் உயிரைக் காப்பாற்ற வேண்டியதைச் செய்”
எனக்கு அதன் தாக்கம் புரிய சற்று நேரம் ஆனது. புரிந்ததும், ” ஈயாதேவனே ! உனக்குக் கோடான கோடி நன்றி! நீ சொன்னபடி நான் செய்கிறேன். ஊரில் உள்ளவர்களிடம் நான் என்ன சொல்வது?” என்று கேட்டேன்.
அப்போது ஈசா , ” நல்ல கேள்வி! என்லில் உன்மீது கோபம் கொண்டிருப்பதால் அவருக்குப் பயந்து ஈசா கடவுள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறேன் என்று அனைவரையும் நம்ப வைத்துவிட்டுப் புறப்படு. ” என்று வழியையும் கூறினார்.
அப்போதே படகு நிர்மாணிக்கத் துவங்கினேன். ஐந்து நாட்களில் படகு ஒரு வடிவத்திற்கு வந்தது. அடித்தளம் ஒரு ஏக்கரா அளவு என்று அமைத்து மேல்தளத்துக்கு 120 முழத்திற்கு 120 என்று அமைத்தேன். மேல் தளத்திற்குக் கீழே ஆறு மாடிகளும் தயார் செய்தேன். படகில் நீர் கசியாமலிருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். ஜோடி ஜோடியாக பறவைகள் மிருகங்கள் ஜந்துக்கள் போன்றவைகளுக்கு தடுப்பு அறைகள் அமைத்தேன். உணவு மற்றும் தேவையான சாமான்களையும் பத்திரப்படுத்தினேன். வேலை செய்தவர்களுக்கு உணவும் மதுவும் வழங்கினேன்.
என் குடும்பம் மற்றும் சில உறவினர்கள் படகு கட்ட உதவியவர்கள் அனைவரையும் படகில் ஏற்றி மிகுந்த சிரமத்துடன் அதை ஆற்று நீரில் மிதக்க வைத்து ஈசாவின் உத்தரவுக்காகக் காத்திருந்தேன்.
கடவுளர்கள் விதித்த அந்தப் பிரளய காலம் அன்றிரவு வரப்போகிறது என்ற தகவல் வந்ததும் நாங்கள் ஆற்று வெள்ளத்தில் படகைச் செலுத்திக் கொண்டு புறப்பட்டோம்.
நாங்கள் படகை மிகுந்த சிரமத்துடன் துடுப்பைப் போட்டு சென்று கொண்டிருந்தோம். படகு ஆற்றைக் கடந்து ஆழ்ந்த கடலுக்குள் சென்று கொண்டிருந்தது.
படகுக்கு வெளியே புயல்தேவன் தன் காட்டுக் குதிரையில் சவாரி செய்தான். பாதாளத்தின் தேவன் அணைகள் அனைத்தையும் உடைத்து உலகத்தை வெள்ளத்தில் ஆழ்த்தினான். போர்த் தேவனின் தளபதிகள் ஆறு குளங்கள் எல்லாவற்றிலும் நீரை நிரப்பி பூமியைத் தெரியாதபடி செய்தார்கள். மழைத்தேவன் தொடர் மழையைப் பொழியவைத்து உலகையே தண்ணீர்க் காடாக மாற்றினான். பெருங்காற்று வீசியது. மின்னல் கோரதாண்டவம் செய்தது. மண்பானையை உடைப்பதுபோல் தேவர்கள் பூமியை உருத் தெரியாமல் செய்துவிட்டார்கள். உலகம் முழுதும் இருட்டில் ஆழ்ந்தது. மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் ஜந்துக்கள் அனைத்தும் வெள்ளத்தில் கொல்லப்பட்டன. பிரளயத்தை ஏற்படுத்திய கடவுள்களால் கூட அதன் கொடுமையைக் காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டனர். பூமியிலிருந்து வானத்துக்குச் சென்று ஒளிந்து கொண்டனர்.
காதல் தேவதையான இஷ்டார் அந்தக் கோரத்தைக் கண்டு அழுது புலம்பினாள்.
” உலகில் என் காரியங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. காதலால் பிறந்த மக்கள் பூண்டேயில்லாமல் அழிகிறார்களே ! இப்படிப் புயலை அனுப்பக் கடவுள்கள் தீர்மானித்தபோது நான் ஏன் சம்மதித்தேன்? இவர்கள் என்னால் உண்டானவர்கள்! என் அன்பு மக்கள்! செத்த மீன்கள் நதியின் வெள்ளத்தில் மிதப்பதுபோல இவர்கள் இந்தப் பிரளய வெள்ளத்தில் மிதக்கிறார்கள்! இவர்கள் எல்லாரும் மடிய நானும் ஒரு காரணமாகி விட்டேனே! ” என்று புலம்பினாள்.
மற்ற தேவர்களும் தேவதைகளும் மனிதர்கள் இப்படிச் சாவது பற்றி வாயைக் கையால் பொத்திக் கொண்டு அழுதார்கள்.
இப்படி ஆறு நாட்கள் தொடர்ந்து பிரளயம் நீடித்தது. நாங்கள் மட்டும் பத்திரமாக அந்தப் படகுக்குள் இருந்தோம். ஏழாவது நாள் கடல் அமைதியுற்றது. இடியும் புயலும் இருந்த இடம் தெரியாமல் போயின. உலகத்தைப் பார்த்தேன். எங்கும் மௌனம். மனித நடமாட்டமே இல்லை. இந்தப் பிரளயத்தைத் தாண்டி யார் உயிருடன் இருக்க முடியும்? படகின் கூரைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சூரியனின் ஒளி என் கண்ணில் பட்டது. வாய் விட்டு அழுதேன்.
பூமி எங்காவது தென்பட்டால் அங்கு படகை நிறுத்த எண்ணினேன். எங்கும் தரை தென்படவில்லை. படகு காற்று அடிக்கும் திசையில் சென்றது. பல காதங்கள் போன பிறகு நிசிற என்ற ஒரு மலை தென்பட்டது. அதன் உச்சியில் என் படகு ஒட்டிக்கொண்டது.
வெளியே செல்ல எனக்குப் பயமாக இருந்தது. நாலைந்து நாட்கள் அந்த மலையருகே நின்றுய் கொண்டிருந்தேன். ஒரு புராவை வெளியே அனுப்பினேன். அது சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் படக்குக்கே வந்துவிட்டது. பிறகு ஒரு சிட்டுக்குருவியைப் பறக்க விட்டேன். அதுவும் தங்க இடம் கிடைக்காமல் திரும்பப் படகுக்கே வந்துவிட்டது. பின்னர் காகத்தை அனுப்பினேன். அதற்கு உணவும் தங்க இடமும் கிடைத்தது . அது திரும்ப வரவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் படகின் அனைத்து கதவுகளையும் திறந்து எல்லாவற்றையும் வெளியே விட்டேன்
பின்னர் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் அந்த மலை உச்சியில் இறங்கினோம்.
அங்கே ..
(தொடரும்)
குவிகம் இலக்கியத் தகவல்
கம்பன் கவிநயம்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி
அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க, பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச, மணம்கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான்.
தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்!
நோக்கம்:
‘இராம’ நாமத்தின் மகிமை
பொருள்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தினம் தினம் எல்லாவித நல்லதும், உங்கள் தேவைக்கான செல்வங்களும் கொடுக்கவல்லது இராம நாமம்!
(தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே)
தின்மை என்பது தீயசெயல் ஆகும். நன்மை என்பதின் நேரடி எதிர்பதமே தின்மை! பாவம் என்பது தீயவினை. தீயசெயல் என்பதும், தீவினை என்பதும் வெவ்வேறு. தீயசெயல் எப்போதுமே இந்த பிறவியில் நீங்கள் செய்யும் தீய நன்மையற்ற செயல்கள் ஆகும், பாவம் என்பது பெரும்பாலும் இந்த பிறவியில் நீங்கள் சந்திக்கும் கஷ்டங்கள், அந்த கஷ்டங்கள் முற்பிறவியில் நீங்க செய்த தின்மைகளினால் நேர்ந்தது! அதனால் திண்மை எப்போதும் தற்கால பிறவியின் தீ செயல்கள், பாவம் நீங்கள் முற்கால பிறவியில் செய்த தீசெயல்களின் சம்பளம் அவ்வளவு தான்! எது எப்படியோ இராம நாமம் இது எல்லாத்தையும் சிதைத்து விடும், அது இந்த பிறவியோ இல்லை ஆயிரம் பிறவிகளின் தாக்கமோ கவலையே இல்லை, இராம நாமம் இராம பானம் போல துளைத்து சிதைத்துவிடும்!
(சென்மமும் மரணமும் இன்றித் தீருமே)
சென்மம் என்பது பிறப்பு. பிறப்பும், மரணமும் இல்லது அந்த சுழற்சி இல்லாமல் போயி விடும் இராம நாமம் ஜெபித்தால்!
(இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்)
‘ராம’ நாமம் என்னும் இரண்டு எழுத்து மந்திரத்தினால் இந்த பிறவியிலேயே உங்களுக்கு இந்த அனைத்து மகிமைகளும் நிகழும்!
சிரம் தள்ளிய சரம் – அ கி வரதராஜன்
சிரம் தள்ளிய சரம் என்ற தலைப்பில் உயர்திரு அ கி வரதராஜன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போனது என்றால் மிகையில்லை.
இந்தத் தலைப்பில் என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும்போது இலக்குவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார்.
முடிவில் இலக்குவன் இந்திரஜித் போர் பற்றிக் கூறும்போது இலக்குவானால் இந்திரஜித்தை வெல்லவே முடியவில்லை என்றும் இராமன் அறத்தின் வழி நின்றது உண்மையென்றால் இந்த சரம் அவன் சிரத்தைத் தள்ளட்டும் என்று ஆணையுரைத்து அம்பு எய்துகிறான் இலக்குவன்.
இந்திரஜித்தின் சிரம் கொய்யப்படுகிறது.
இதனை அவர் முத்தாய்ப்பாகக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.
அவரின் முழு காணொளியை இங்கே கேளுங்கள்!
பூர்ணம் விஸ்வநாதன்-நூற்றாண்டு.! -ஆர்க்கே.!
தன் பதினெட்டாம் வயதில் நாடக மேடையில் தடம் பதித்து நாடக உலகில் தனிப்பாதை அமைத்த சாதனையாளர் கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருதுகள் பெற்ற பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவினை பாரதீயவித்யா பவனில் பூர்ணம் விஸ்வநாதன் குடும்பத்தினர் பூர்ணம் நியூ தியேட்டர் குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 1995 கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் பாரதீய வித்யா பவனுடன் இணைந்து தனித் திருவிழாவாகவே மயிலாப்பூரின் மாட வீதி பாரதிய வித்யா பவனில் கொண்டாடியது.
கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்ட இந்த கண்கவர் விழா மிகச்சரியாக ஆறு மணிக்கு களை கட்டியது.
கலைமாமணி சி வி சந்திரமோகன் தனக்கே உரித்தான கவிதைத் தமிழுடன் விழா இணைப்புரை பொறுப்பேற்க முத்ரா பாஸ்கர் அளித்த
“முத்ரா” தயாரிப்பிலான பூர்ணம் விஸ்வநாதன் குறித்து தயாரித்திருந்த ஒரு சிறப்பான ஆவணப் படம் திரையிடப்பட்டது.
“தரையிலிருந்து திரைக்கு” என நம் கவனத்தை தமிழ்ச்சுவை ஈந்து திரையிடலின் முன் நம் கவனம் ஈர்த்தார் இனிப்பு இணைப்புரையாளர் சி வி சி.
அந்த ஆவணப்படத்தில் கலாநிலையம் கே எஸ் நாகராஜன், பூர்ணத்துடன் பல காலம் இணைந்து நடித்த கூத்தபிரான், முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ நடராஜன், திருமதி சுசீலா பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் அவருடைய சிறப்பினை இயல்பாக பகிர்ந்துகொண்டனர். பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பங்க்ச்சுவாலிட்டி, வசன உச்சரிப்பிற்கு அவர் காட்டும் சிரத்தை, பயிற்சியில் பங்களிப்பாளர்களின் குறைகளை தனியே அழைத்துப் பேசும் நல்ல குணம் பற்றி பகிர, பூர்ணம் நியூ தியேட்டரின் சீனியர் நடிகர்கள் எம் பி மூர்த்தி அவரின் சிறந்த நிர்வாக திறன் பற்றி சொல்ல, விஸ்வநாதன் இரமேஷ் பூர்ணம் நாடகக் களங்களாக அவர் எடுத்துக்கொண்ட சமுதாய சிந்தனையை சிலாகித்தார். அவர் தம்முடைய கண்களை தானம் செய்ததையும் இறுதிப்பயண யாத்திரையில் தனக்கு நாடக மேக்கப் போட்டு நிறைவேற்றவேண்டும் என்ற அவரின் விருப்பத்தையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திருமதி பூர்ணம். பூர்ணம் விஸ்வநாதன் டெல்லியில் இசை விமர்சகர் சுப்புடுவுடன் நடித்தவர். முத்ரா ராம்கியின் குரல் வளத்தில் ஆவணப்படம் ஒரு பூரண அறிமுகம் தந்தது அவருடைய கலைப் பயணத்தை.
இறை வணக்க பாடலாய் கஜவதனாவை வணங்கிப் பாடினார் பூர்ணம் நியூ தியேட்டரின் சீனியர் அங்கத்தினரான உஷா ரவிச்சந்திரன். குருகுலம் கல்கத்தா எஸ் இரமேஷ் எல்லோரையும் சிறப்பாக வரவேற்று வரவேற்புரை வாசித்தார்.
பாரதிய வித்யா பவன் டைரக்டர் கே என் ராமசாமி விழாவின் தொடக்க உரையாற்றினார். பன்மொழி நாடகங்களை சிலாகித்து தமிழ் நாடகங்கள் இன்னும் சிறக்க வாழ்த்தினார். தாம் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பிற்கு ரசிகன் என்றும் திரைப்பட நடிப்பை விட நாடகத்தை அதிகம் நேசித்தவர் பூர்ணம் என்றும் குறிப்பிட்டார். அவர் உரையில் நாடகத்திற்கான முழு ஒத்துழைப்பையும் தர பாரதிய வித்யா பவன் சென்னை தயாராக இருப்பதாக மகிழ்வுடன் தெரிவித்தார். நாடக ஒத்திகைக்கான இலவச இடம் (மைக் வசதியுடன் கூடிய பிரத்யேக நான்காம் மாடியில்) நாடக நிகழ்த்துதலுக்கான சன்மானம் மற்றும் பாரதிய வித்யா பவனின் இலவச அரங்க பங்களிப்பு என தமிழ் நாடகக் குழுக்களின் வயிற்றில் கலையார்வப் பால் வார்த்தார்.
சிறப்புரையில் நாடகத்துறையிலிருந்து காத்தாடி இராமமூர்த்தி பூர்ணத்தின் நடிப்பு ருசியை சிலாகித்தார். நாடக மற்றும் திரைத்துறையில் அவருடனான தம் பயணத்தை
தனக்கே உரிய பாணியில் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாக பேசினார்.
திரைத்துறையிலிருந்து வந்து சிறப்புரை ஆற்றிய நல்ல பல திரைப்படங்கள் இயக்கிய திரை ஆளுமை வஸந்த் எஸ் சாய் தான் சிறு வயதில் பார்த்து வியந்த பூர்ணத்தை தொடர்ந்து தன் மூன்று படங்களில் பூர்ணம் ஸாரை நடிக்க வைத்ததை பெருமை பொங்க சொன்னார். தினத்தந்தி பேட்டி ஒன்றில் பிடித்த இயக்குனர்களில் பாலசந்தர் பாலுமகேந்திரா வஸந்த் என்று பூர்ணம் விஸ்வநாதன் பதில் சொன்னதை தனக்கான கௌரவம் எனக் குறிப்பிட்டார்.
ஒரு எஸ் வி ரங்காராவ் ஒரு எம் ஆர் ராதா ஒரு பூர்ணம் விஸ்வநாதன் என அவர் முத்தாய்ப்பாய் முடித்தது நடிப்பின் மூன்று தெய்வங்களின் குறியீடு போல இருந்தது. குருவைக் கொண்டாடும் குருகுலத்தை வாழ்த்திய விதம் தனித்துவம்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழா விருது நாடகத்தை வாசிக்கும் சுவாசிக்கும் விசுவாசிக்கும் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்/ஷ்ரத்தா நாடகக்குழுவின் T D S என அழைக்கப்படும் T D சுந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது. ராஜ கமலம் ட்ரஸ்ட் சார்பாக தரப்படும் அந்த விருதினை நிறுவி அளித்தவர் ஐ பி எஸ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் அவர்கள். பூர்ணம் விஸ்வநாதன் அவருடைய சித்தப்பா என்பது அனைவரும் அறிந்ததே. கலை இலக்கிய குடும்பம் அவருடையது என்பது அடுத்து பேசிய அவர் உரையில் தெரிந்தது. ஒரே நாளில் நாலு காட்சிகள் தொடர்ந்து நடித்த அவரை சிலாகித்தார் அவர். அவருடைய இசையார்வம் பற்றியும் சொல்லத் தவறவில்லை.
அடுத்ததாக பேசிய பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் மகன் ராஜா என்கிற சித்தார்த் தன் அப்பாவைப்பற்றி கலைஞனாக தந்தையாக என இரு பார்வையில் பூர்ணத்தை பற்றி சுவைபட பேசினார். இந்த விழாவே தன் குடும்ப விழா போன்ற உணர்வை தருவதாக சிலாகித்தார். அவரின் டைரி எழுதும் வழக்கத்தை விசேஷமாக குறிப்பிட்டார். தினசரி வாழ்க்கையில் அவருடனான ஹாஸ்டல் தருணங்களை பகிர்ந்து கொண்டார். இந்திய சுதந்திர தின அறிவிப்பையும் அதன் பொன்விழா அறிவிப்பையும் அவர் வானொலியில் அறிவித்ததை பெருமையுடன் குறிப்பிட்டார். குருகுல குழுவினரின் உறுப்பினர் அனைவருமே அவரின் குழந்தைகள் போலத்தான் என்றும் குறிப்பிட்டார். மற்ற குழுக்களின் நாடகத்தை அவர் விரும்பி பார்ப்பதையும் இசைக் கச்சேரிகளில் அவர் வந்தால் அவருக்கு பிடித்த ரேவதி ராகத்தை பாடுவதையும் குறிப்பிடத் தவறவில்லை.
இயக்குனர் வஸந்த் வேண்டுகோள் வைத்து மொத்த அரங்கமும் திருமதி சுசீலா பூர்ணத்திற்கு எழுந்து நின்று கரவொலி தந்து நன்றி கூறிய விதம் மனநெகிழ்வு.!
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் செக்ரட்டரி ராஜகோபால் சேகர் பூர்ணம் விஸ்வநாதன் வசன உச்சரிப்பு உடல்மொழி குறித்து மகிழ்வுடன் பேசினார்.
விருது பெற்ற T D சுந்தர் ராஜனை சக நாடகக் குழுக்கள் கௌரவிக்க ஏற்புரையில் விருது பெற்ற சுந்தர்ராஜன் உணர்வு பூர்வமாக சொன்னால் பிரிக்க முடியாத உறவு நாடகமும் பூர்ணமும் என்றார். தனக்கு கிடைத்த விருதினை நாடகத்துறை சம்பந்தப்பட்ட அனைவருக்குமான கௌரவம் என நெகிழ்ச்சியுடன் சமர்ப்பணம் செய்தார். இந்த வருட நாடக பத்மம் விருது பிரம்மகான சபாவால் இவருக்கு வழங்கப்பட இருப்பது காத்(து) தாடி ‘வாக்கில்’வந்த கூடுதல் சந்தோஷ இனிப்புத் தகவல்.
நடிகர் சிவகுமார் மற்றும் நாடக உலக ஏ ஆர் எஸ்ஸின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டன.
குருகுலத்தின் இளைய தலைமுறை பங்களிப்பாளரான கார்த்திக் கௌரிசங்கர் நன்றியுரை நவில, பூர்ணம் சுஜாதா காம்பினேஷனின் கிளாஸிக் ஓரங்க குறு நாடகமான “வந்தவன்” நாடகம் சிறப்புமிக்கதாய் நிகழ்த்தப்பட்டது.
ஒரு விழா பூரணத்துவமாய் பூர்ணம் விஸ்வநாதன் எனும் நாடக பிதாமகர் அவர்களின் நூற்றாண்டு விழாவை பல்லாண்டு காலம் நினைவு கொள்ளும் வகையில் நடந்து சிறந்தது குருவருள் அன்றி வேறென்ன.?
ஸ்ரீ குருப்யோ நமஹ.!
குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா ! – செப்டம்பர் 2021
- பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
- தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
- வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
- தமிழ் ! – நவம்பர் 2021
- பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
கைக்கடிகாரம் !
டிக் டிக் டிக் டிக் கைக்கடிகாரம் !
நிற்காமல் ஓடும் கைக்கடிகாரம் !
நேரம் காட்டும் கைக்கடிகாரம் !
நாள் தேதி காட்டும் கைக்கடிகாரம் !
சின்னதும் பெரிதுமாய் கைக்கடிகாரம் !
சிவப்பும் கருப்புமாய் கைக்கடிகாரம் !
பலவித வாருடன் கைக்கடிகாரம் !
விலைக்கேற்றாற்போல் கைக்கடிகாரம் !
எனக்கும் வேணும் கைக்கடிகாரம் !
அழகாய் இருக்கும் கைக்கடிகாரம் !
அப்பா போல் எனக்கும் கைக்கடிகாரம் !
அலாரம் அடிக்கும் கைக்கடிகாரம் !
ஓடுது பார் !
ஓடுது பார் ரயில் ஓடுது பார் !
தடதடவெனவே ஓடுது பார் !
பலரைச் சுமந்து சென்றாலும்
தளர்ச்சி சிறிதும் இல்லை பார் !
இருப்புப் பாதையை இறுகக் கவ்வி
இறுதிவரை கொண்டு சேர்க்குது பார் !
வீட்டைப் போலே வண்டிக்குள்ளே
எல்லா வசதியும் இருக்குது பார் !
காலை எழுந்தால் போதும் உடனே
காப்பி காப்பி வருகுது பார் !
ஒவ்வொரு வேளையும் இருந்த இடத்தில்
எல்லா உணவும் தருவது பார் !
இயற்கை அன்னை எழில்கள் எல்லாம்
ஜன்னல் வழியே தெரியுது பார் !
மலைகள் பறவைகள் செடிகள் கொடிகள்
பசுமையைக் காட்டி மயக்குது பார் !
தடால் தடாலென சத்தம் கேட்குது
பாலத்தின் மேலே போறோம் பார் !
சலசலவெனவே ஓடுது ஆறு
சீக்கிரம் வெளியே எட்டிப்பார் !
குட்டிப் பாப்பா பக்கத்து சீட்டில்
எட்டிப்பார்த்து சிரிக்குது பார் !
அண்ணன் தம்பி உறவுகள் இல்லை
ஆனாலும் பொங்கும் அன்பைப் பார் !
வெளியே தெரியும் மரங்கள் எல்லாம்
வானத்தை நோக்கி விரியுது பார் !
வயல் வெளியெல்லாம் வாயில்லாமல்
வணக்கம் வணக்கம் சொல்லுது பார் !
அதோ பார் அங்கே அழகாய் மேட்டில்
ஆட்டுக்குட்டி மேயுது பார் !
மே மே என்று கத்தும்போது
மெலிதாய் மேனி சிலிர்க்குது பார் !
காக்கை குருவி தெரியும் நாம்
கண்டிராத பறவையும் தெரியுது பார் !
கருப்பும் சிவப்பும் மஞ்சளும் இருக்கு
மனதைப் போட்டு மயக்குது பார் !
வீடு பள்ளி வகுப்பு தேர்வு
எல்லாம் தூரம் ஆனது பார் !
உலகம் வெளியே விரிந்து கிடக்குது
முழுதாய் மூச்சை விட்டுப் பார் !
தூரத்தில் தெரியுது ஆலை ஒன்று
புகையை வெளியே தள்ளுது பார் !
கிடைத்த இடத்தில் கிரிக்கெட் ஆடும்
என்னைப்போல் சில பிள்ளை பார் !
கருப்புக் கோட்டு போட்டு வருகிறார்
டீடீஈ டிக்கெட் கேட்பது பார் !
இல்லை என்று சொன்னால் போதும்
இடையில் இறக்கி விடுவது பார் !
கார்டு மாமா கையை அசைத்தால்
உடனே வண்டி கிளம்புது பார் !
சொன்னது கேட்டால் நன்மை உண்டு
சுலபம் பயணம் சுலபம் பார் !
சுப்பு பாலு சங்கரி கீதா
சீக்கிரம் வந்து வெளியே பார் !
வாழ்க்கை எல்லாம் பறக்கும் நொடிகள்
விட்டுவிடாமல் இன்றே பார் !
ஓடுது பார் ரயில் ஓடுது பார் !
தடதடவெனவே ஓடுது பார் !
இருக்கும்போதே இன்பம் பழகு
வாழ்க்கை ஓடுது ஓடுது பார் !
ஓ! மேகங்களே! மீனாக்ஷி பாலகணேஷ்
மழை கொட்டோகொட்டென்று கொட்டி நம்மை அச்சத்திலாழ்த்தும் நேரமிது.
ஆனால் இந்த மேகங்களைப் பார்க்கும்போது என்னென்ன எண்ணங்களெல்லாம் ஒவ்வொருவருக்கும் உதித்தன என்று அசை போட்டதின் விளைவே இந்தக் கட்டுரை!
00000000000
என் கனவுகளின் வானில் மிதக்கும் மாலைநேரத்து மேகம் நீ;
என் அன்பின் தாபங்களால் உனக்கு வண்ணங்களும் வடிவங்களும் தருகிறேன்.
முடிவற்ற என் கனவுகளின் கருவான நீ எனக்கே சொந்தம், எனக்கே சொந்தம்- (தாகூர்- தோட்டக்காரன்:30)
You are the evening cloud floating in the sky of my dreams.
I paint you and fashion you ever with my love longings.
You are my own, my own, dweller in my endless dreams!
காதலனின் அன்புமொழிகளாக அமைந்த இது, தாகூரின் தோட்டக்காரன் எனும் கவிதைத் தொகுப்பிலுள்ளது. அன்புக் காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் இன்மொழிகளால் புனையப்பட்டது. படிக்கவும் ரசிக்கவும் ஏற்ற விரசமில்லாத அருமையான தொகுப்பு.
மேகங்கள் எவ்வாறு காதலர்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டன என்பது வியப்பைத்தான் தருகின்றது. இந்திய மொழிகளில்தான் மேகங்களைக் காதலர்களுடன் தொடர்பு படுத்திக் கவிதைகள் காலகாலங்களாக, ஸ்ம்ஸ்க்ருதம், தமிழ், வங்கமொழி எனப் பலவற்றுள்ளும் பாடப்பட்டுள்ளன போலும். நான் அறியாதது இன்னும் பல மொழிகளில் இருக்கலாம்.
‘மேகம் காதல் வேட்கையைத் தூண்டும் பொருள்களில் ஒன்றாகும். மழைக்காலத்தில் மேகத்தின் தொடர்பால் தாழம்பூ பூக்கும்; அதன் மணமும் காதலைத் தூண்டுவதாகும்,’ என்று காளிதாசனின் மேகசந்தேசத்துக்கு உரையெழுதிய ஆசிரியர் திரு. வேங்கடராகவாச்சாரியர் கூறுகிறார்.
மேகசந்தேசம் ஒரு அருமையான காதல்காவியம். மனைவியைப் பிரிந்து வாடும் யட்சன் ஒருவனின் கதையாக அமைந்து அருமையான பாடல்களைக் கொண்ட இணையற்ற காவியநூல். யட்சர்கள் மென்மை உள்ளம் கொண்ட தேவலோக மனிதர்கள். எங்கும் பிறர் கண்களுக்குப் படாமல் அலைந்து திரிபவர்கள். ஒரு யட்சன் ஏதோ ஒரு தவறுக்காக தன் அரசன் குபேரனால் ஓராண்டிற்கு நாடுகடத்தப்படுகிறான். தனது தெய்வத்தன்மையை இழந்து பூலோகத்திற்கு வந்து தன் இளம் மனைவியைப் பிரிந்து வாடுகிறான். இவ்வாறே ஏழெட்டு மாதங்கள் செல்கின்றன. மழைக்காலம் வருகிறது. மழைமேகங்கள் அடர்ந்து வானில் உலவுகின்றன. மேகங்கள் ஆகாயத்தில் பலவிதமான வடிவங்கள் கொண்டு தோன்றும். மழைக்காலக் கருமேகங்களை யட்சன் யானைபோன்று காண்கிறான். அவை யட்சனுடைய பிரிவுத்துயரையும் தாபத்தையும் மிகவும் அதிகரிக்கின்றன.
ராமகிரி எனும் மலையில் தங்கியுள்ள யட்சன் அந்த மேகத்தை தன் நண்பனாக்கிக் கொண்டு அதனைத் தன் காதல் மனையாளிடம் தூது விடுகின்றான்.
காளிதாசன் இதனை முகாந்தரமாகக் கொண்டு பாரத பூமியின் இயற்கை அழகை வருணிப்பது மிகவும் அழகானது. பாடல்கள் (ஸ்லோகங்கள்) உள்ளத்தை இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் ஆழ்த்தும். இளம் உள்ளங்களைக் காதல் நினைவுகளில் திளைத்து மயங்கச் செய்யும். முதியோர் உள்ளங்களை இளம் பருவத்து இனிய நினைவுகளில் ஆழ்த்திவிடும்.
சம்ஸ்க்ருதம் தெரியாவிட்டாலும் இதனைப் படித்து ரசித்து அனுபவிக்க திரு. சுப்ர. பாலன் அவர்கள் கல்கியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ள ‘தூது செல்லாயோ’ எனும் அற்புதமான நூலைப் படித்து அனுபவிக்க வேண்டும். படிக்கும்போது கேட்டு ரசிக்க உடன் ஒரு அழகான இசைத்தொகுப்பின் பதிவு. விஸ்வமோஹன் பட் இசையமைப்பில் ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திர ஸாதே ஆகியோரின் மயக்கும் குரல்களில் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்ட காளிதாசனின் ‘மேகதூதம்’ நூலின் ஸ்லோகங்கள். (யூ ட்யூபில் உள்ளது. கேட்டு மகிழலாம்). மேகங்களை முழுமையாக ரசிப்பதற்கு இதுவே எளிதான அருமையான வழி!
00000000000
சங்க இலக்கியங்களில் பொருளீட்டிவரப் பிரிந்து சென்றிக்கும் தலைவனின் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி மழைமேகங்களைக் கண்டு பிரிவால் வருந்தும் பாடல்களைக் காணலாம். அவற்றின் கவிதைச்சுவையில் உள்ளம் பறிகொடுக்கலாம்.
ஆனால் அதிகமாக யாரும் அறிந்திராத ‘மேகவிடுதூது’ எனும் பெயரில் ஒரு அழகான இலக்கியச்சுவை நிறைந்த நூலை அண்மையில் விரிவாகப் படிக்க நேர்ந்தது.
திருநறையூரிலே கோயில் கொண்டெழுந்தருளியுள்ள பெருமாள் நம்பியிடத்து மையல்கொண்ட ஒரு தலைவி, அவரிடத்தே தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவித்து அவரணிந்த திருத்துழாய்மாலையை வாங்கிவரும்படி மேகத்தைத் தூதுவிடும் செய்தியைப் பொருளாக்கி நயமுடையதாகப் பாடப்பட்டிருப்பதொரு கலிவெண் பாட்டு இந்நூல்.
வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே- வானத்து (10)
என்றெல்லாம் மேகத்தைப் போற்றுகிறாள் தலைவி. வானம் எனும் சொல் ஆகாயம், மேகம் எனும் பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல் பலவிதங்களில் மேகசந்தேசத்தின் போக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. (இதனை இயற்றிய கவிஞரான பிள்ளைப்பெருமாளையங்கார் காளிதாசனைக் கட்டாயம் படித்திருப்பார். அந்த நயத்தைத் தமிழில் குழைத்து வடித்திருக்கிறார் போலும்!)
“மேகமே, பின்பு அதிகப்படியான எனது கவலையால் உன்னைத் தூதாக திருநறையூர்ப் பெருமானிடம் அனுப்புகிறேன். மன்மதன் குளிர்ந்த மலர் அம்புகளை என்மீது எய்யாமல் இருக்க, வெண்மையான சங்கை உடைய சீதரனிடம் எனக்காக ஒரு சொல் சொல்லமாட்டாயோ? அவனிடமிருந்து ஒரு துழாய் மாலையையாவது எனக்குக் கொண்டுவந்து தர மாட்டாயோ? கேதகை எனும் தாழைக்குக் கணவனான நீ எனக்கு அப்பெருமானைக் கணவனாக்க மாட்டயோ?” என்றெல்லாம் மேகத்தைக் கேள்விக்கணைகளால் துளைக்கிறாள்.
விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பான்
மைம்முகிலே சந்தாக மாட்டாயோ-பெய்ம்மதவேள்
தண்ணப்பஞ் செய்வதெலாந் தாமோ தானடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ-வெண்ணத்தின்
சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய்கொணர்ந்தெ
னாதரவு தீர்த்தருள லாகாதோ- கேதகைக்கு
மின்கேள்வ னாக்கியநீ விண்ணோர் பெருமானை
யென்கேள்வ னாக்கினா லேராதோ
சொல் பொருள் இலக்கிய நயங்களில் சிறப்பான நூல் இது.
00000000000
நமது திரைப்படங்களிலும் காதலியோ காதலனோ மேகத்தைத் தூதாக அழைக்கும் பாடல்களைக் கவிஞர்கள் இயற்றி அவை மிகவும் பிரபலமாகியுள்ளன. “அன்பு மேகமே இங்கு ஓடிவா, எந்தன் துணையை அழைத்துவா,” “ஓடும் மேகங்களே, ஒருசொல் கேளீரோ,” ஆகியன அப்படிப்பட்ட சில பாடல்கள்.
00000000000
மேக் ராகம் என்பது ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரு அழகான ராகம்- மேகம் என்றே பொருள்படும். மேகத்தோடிணைந்து மழை பொழியும் ராகம் மேக் மல்ஹார்!
தான்ஸேனின் சங்கீதத்தின் பெருமையை உணர்த்தும் ஒரு சிறுகதை.
அக்பர் சக்ரவர்த்திக்கு தீபக் ராகத்தை முறைப்படி பாடினால் விளக்குகள் தானாகவே எரியும் என்பதனை நேரில் காண ஆசை. அதனால் அந்த ராகத்தைப்பாட தன் ஆஸ்தான இசைக் கலைஞனான தான்சேனைப் பணிக்கிறார். பாடுபவனையே அந்த ராகம் வெப்பத்தில் எரித்துவிடும் என்பதனை உணர்ந்திருந்த தான்ஸேன் முன்னேற்பாடாகத் தன் மகளுக்கு மேக்மல்ஹார் ராகத்தைப்பாடப் பயிற்சியளிக்கிறார். தீபக் ராகத்தினால் விளக்குகள் எரியத்தொடங்கியதுமே அவள் மேக்மல்ஹாரைப் பாட வேண்டும்; அவ்வாறே பாட, பெருமழை பெய்து தீபக் ராகத்தினால் எழுந்த வெப்பத்தைத் தணித்ததென்பது ஒரு சுவையான கதை.
தமிழிசையிலும் மேகராகக் குறிஞ்சி எனும் ராகம் உண்டு.
00000000000
மேகங்கள் வானில் உலாவந்ததொரு தருணத்தில் இயற்கையின் சக்திகளும், சக்திவாய்ந்த மந்திரச் சொற்களும் கூடி அமைந்ததொரு தெய்வீகக் கீர்த்தனை அற்புதமானதொரு இசைக்கலைஞரின் குரலில் கூடிப் பரிணமித்து என்னையொரு தெய்வீகச் சூழலில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு. திறந்தவெளி அரங்கில் ஒரு கச்சேரி. அதிகமான கூட்டத்தால் மிகவும் பின்புறத்தில் தரையில் ஒரு ஒலிபெருக்கியின் சமீபம் அமர்ந்திருந்தேன். மாலை மணி ஏழு. இன்னும் பகல் வெளிச்சம் முழுமையாக மறையவில்லை. வானில் அங்கங்கே மேகங்கள் பல வடிவங்கொண்டு மிதந்தன. “ஜம்பூபதே” எனும் தீக்ஷிதர் கீர்த்தனையைத் தொடங்கினார் பாடகர். அவர் தன் இசையிலாழ்ந்து பாடப்பாட கண்களில் ஆனந்தவெள்ளம் புறப்பட்டுப் பெருகிற்று. கண்களை மூடி அமர்ந்து கேட்டது போய், கண்கள் திறந்து வானில் கருமேகங்களுடன் சஞ்சரித்தன.
‘பர்வதராஜனின் மகள் உன்னை வழிபடுகிறாள்; பஞ்சபூதங்களாலும் ஆன பிரபஞ்சமாக நீ உள்ளாய்! அனைத்துயிர்களுக்கும் தயை புரியும் சம்பு நீ!’ என்றெல்லாம் திருவானைக்காவில் நாவல்மரத்தடியில் குடிகொண்ட ஜம்புகேசுவரரைப் போற்றும் பாடல்.
பர்வதஜா ப்ரார்த்திதாப்புலிங்க விபோ
பஞ்ச பூதமய ப்ரபஞ்ச ப்ரபோ
சர்வஜீவ தயாகர சம்போ
அனைத்துயிர்களுக்கும் தயைபுரியும் சம்புவே என உருகியுருகிப் பாடகர் இசைத்த வேளையில் பஞ்சபூதங்களும் காற்று, மழை, இடி, மின்னல், எனப் பொழிந்த இயற்கையின் அற்புதத்தை, இசையோடு இணைந்து அனுபவித்தது ஒரு அபூர்வ அனுபவம். ஈசனை, அவனிருப்பை உணர்ந்து பிரமித்த தருணம் அது.
ஓ மேகங்களே! எத்தனை அற்புதங்களை உள்ளடக்கிக் கொண்டு உலகை வலம் வருகின்றீர்கள் நீங்கள்!
உங்கள் பெருமையைச் சொல்ல என்னால் எப்படி முடியும்?
———————————
பசுமாடு – வளவ. துரையன்
காலை ஏழுமணிக்குத்தான்
தெருக்குழாயில் குடிநீர்வரும்.
ஆனால் ஆறுமணியிலிருந்தே
வெல்லத்தை மொய்த்திருக்கும்
எறும்புகள் போலச்
சுற்றிலும் குடங்களின் முற்றுகை
அதிலும் தமிழ்நாட்டின்
இருப்பைப்போல்
பல்வகைப் பிரிவுகள்;
நெகிழி பித்தளை
மண் மற்றும் எவர்சில்வர்
எல்லாமே யாரோ ஒருவரால்
உருவாக்கப்பட்டவை
ஒழுக்கம் விழுப்பம் தருமென
ஒருவரிசையாகத்தான் நிற்பர்.
தண்ணீர் வந்ததும்
ஒரு கல்பட்ட
தேனீக்கூடு கதைதான்;
பிறகென்ன?
தமிழின் இடக்கரடக்கல்
இல்லாமலே பலசொற்கள்
மொழியப்பட்டன.
வந்தவற்றை வாங்கிப்படித்துப்
புதிய ஆயுதங்களாய் வீசினர்.
வாங்கும் கவளத்தொரு சிறிது
வாய்தப்பின் துயருறாத்
தூங்கும் களிறு போல
தண்ணீர் சிந்தி வழிந்தோடுவது
பற்றிக் கவலைப்படாத பிடிகள்
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு
அமைதியாகக்காத்திருந்தது
கன்றை ஈன்ற பசுமாடு
கண்ணன் கதையமுது – 2 – தில்லைவேந்தன்
(வசுதேவன்-தேவகியின் எட்டாம் மகனால் கம்சனுக்கு மரணம் நேரும் என்று அசரீரி கூறவே கொதிப்படைந்த அவன் தேவகியைக் கொல்ல முற்படுகிறான். தடுத்த வசுதேவன், பிறக்கும் பிள்ளைகளைக் கம்சனிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறுகிறான்)
வசுதேவன் உறுதிமொழி
கூந்தல் பற்றித் தங்கையினைக்
கொல்லக் கீழே தள்ளியவன்,
ஏந்து வாளை மேலுயர்த்த,
இளமான் அனையாள் நடுநடுங்கிச்
சோர்ந்து கண்ணில் நீர்வழியத்
தொழுது கையால் கும்பிட்டாள்.
தேர்ந்தெ டுத்த சொல்தொடுத்தான்,
சிறந்த ஞானி வசுதேவன்.
“மணநாள் அன்றே தேவகியை,
மாய்த்துக் கொன்று, திருநாளும்
பிணநாள் ஆக உருவானால்,
பெருமை உனக்கு வருமோசொல்?
குணமா மறவா! பெண்கொலையால்,
குலமும் மேன்மை பெறுமோசொல் ?
அணிமா மலராள் உயிர்பறித்தால்,
அழியாப் பாவம் விடுமோசொல்?
ஆற்றல் மிக்க மைத்துனனே,
அன்புத் தங்கை என்செய்தாள்?
சாற்றும் உண்மை செவிமடுப்பாய்,
சற்றும் அவளால் உன்னுயிர்க்குக்
கூற்றம் வருமென்று அக்குரல்தான்
கூற வில்லை. கொன்றுவிட்டால்,
தூற்றிப் பழிக்கும் இவ்வுலகம்.
சூழும் மாறாப் பெருங்களங்கம்
எட்டாம் மகவால் உயிர்க்கிறுதி
என்றே குரலும் கூறிடினும்
தட்டாது எல்லாப் பிள்ளைகளும்
தரையில் வந்த மறுகணமே,
கட்டா யமுன்றன் கைகளிலே
கடிதில் கொண்டு சேர்த்திடுவேன்.
மட்டார் மலர்பெய் குழலாளை
மட்டும் கொல்ல எண்ணாதே!”
சொலல்வலான், சோர்வும் இல்லான்,
சொல்நயம் அறிந்த நல்லான்,
சிலவுரை, பழத்தில் ஊசி
செலுத்தலைப் போலச் சொன்னான்.
“இலையொரு துன்பம், பிள்ளை
எடுத்துநான் தருவ தாலே,
குலமுறை மீறி விட்டால்
குற்றமே விளையும்” என்றான்.
கம்சன் அவர்களைப் போக விடுதல்
வனமலர் மாலை சூடும்
வாய்மையோன் சொற்கள் கேட்டுச்
சினமது தணிந்த கம்சன்
செற்றிடும் எண்ணம் விட்டான்.
“உனைமிக நம்பு கின்றேன்,
உறுதியைக் காத்தல் வேண்டும்.
நனைவிழி துணையைத் தேற்றி
நாடுநீ செல்வாய்” என்றான்.
( செற்றிடும்— கொல்லும்)
கம்சன் மனநிலை
ஈறது பிள்ளை எட்டால்
இயன்றிடும் என்ற எண்ணம்
ஊறியே உளம்வ ருத்த,
ஒவ்வொரு நாளும் தேரில்
ஏறியே சென்று பார்த்தான்
ஏவலர் செய்தி கேட்டான்.
நீறது பூத்தி ருக்கும்
நெருப்பெனும் சினத்துக் கம்சன்.
( ஈறு — இறுதி /மரணம்)
முதல் குழந்தை பிழைத்தல்
வசுதேவன் மனைவியவள் மணிவயிற்றில் கருவுயிர்த்துச்
சிசுவொன்று பிறந்தவுடன் சிந்தைமிக வருத்தமுற,
வசையறியா வாய்மையெனும் வழக்கத்தால் எடுத்துப்போய்
இசைவின்றி அம்மகனை ஈந்தானே மாமனிடம்
அமைதிதவழ் முகம்கண்ட அரக்கமன மைத்துனனும்
“சுமையகன்றேன் மகிழ்ந்தேனுன் சொற்காக்கும் தன்மையினால்,
குமையேன்நான், இவன்முதலாம் குழந்தையென்ற காரணத்தால்,
இமையெனநீ காத்திடவே எடுத்துப்போ மீண்டு”மென்றான்!
(தொடரும்)
நடுப்பக்கம் – சந்திரமோகன்
குவிகம் 100
நேற்று மாலை குவிகம்100, புத்தக அறிமுக நிகழ்வை கண்டு இரசித்தேன். அறிமுகப் படுத்த ஏதாவது இலக்கணம் உண்டா தெரியாது ஆனால் கவிதை, கட்டுரைகளை அறிமுகப் படுத்திய திரு. செந்தூரம் ஜெகதீஷ் அவர்களும், கதைகள் மற்றும் நாடகத்தை அறிமுகப்படுத்திய திருமதி. ரம்யா வாசுதேவன் அவர்களும் ‘அறிமுகப் படுத்தலின்’ இலக்கணத்தை நமக்கு அறிமுகப் படுத்தி அழகாக நிகழ்வை நகர்த்திச் சென்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.
ஆமாம்! இக்குழுமத்தில் புதிதாக இது யார் என்ற எண்ணம் ஒரிருவர் தவிற மற்றவர்களுக்கு தோன்றுவது நியாயம்தான்.
இக்குழுமத்திற்கு சற்றும் பொருந்தாதவன் நான். ஓரம் நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய என்னை இலக்கியவாதிகளும், படைப்பாளிகளும் உலவும் குவிகத்தின் நடுக் கூடத்திற்கு கை பிடித்து இழுத்து வந்து விட்டவர் நண்பர் சுந்தர்ராஜன்.
அகவை எழுபதில் இருக்கும் நான் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்னர் வரை கூட ‘ ஏடறியேன், எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன்’ என்ற வைரமுத்துவின் வரிகளின் உதாராணமாகத்தான் வாழ்க்கையின் தேடலில் தொலைந்திருந்தேன். நாற்பது ஆண்டுகள் தேடலில் எழுத்துக்கள் கூட அதிகம் படிக்கவில்லை, ஆனால் வாழ்க்கையை அதிகம் படித்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் மனைவி மறைந்த பின்னர் அவளுக்கு நான் எழுதிய கடிதம்தான் என் முதல் எழுத்து.
பின் துயரத்தை மறக்க சுந்தர்ராஜன், முத்து சந்திரசேகரன் மற்றும் எனது சென்னை கிறித்துவ கல்லூரி நண்பர்கள் இனைந்த வாட்ஸ்அப் குழுவில் எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் ஊக்குவித்தார்கள். சுந்தரின் கைதட்டல் பலமாக இருந்தது.
கடந்த ஆண்டு என் கட்டுரைகளையும் கதைகளையும் ஒழுங்கு படுத்தி 280 பக்கங்கள் கொண்ட புத்தகமாக பதிப்பித்து என்னை மகிழ்வித்தது குவிகம்.
பத்தாயிரம் மைல் பயணித்தவனும் பல நூற்கள் கற்றவனுமே ஒரு முழுமனிதன் என சீனப் பழமொழி போல வாழ்வில் ஒரு புத்தகமாவது எழுதி தன் சந்ததிக்கு விட்டுச்செல்பவன் ஒரு முழு மனிதன் எனவும் படித்த ஞாபகம்.
என்னை முழுமனிதனாக்கிய பெருமை சுந்தர ராஜன்- கிருபானந்தன் இருவரையும் சேரும்.
இங்கு கிருபானந்தமன் அவற்களைப் பற்றி சற்று கூற வேண்டும். என் புத்தகம் வெளிவந்த நாட்களில் அவர் அமெரிக்காவில் இருந்தார். அங்கு இரவு இங்கு பகல். அங்கு பகல் பொழுதில் என் எழுத்தைப் படிப்பார், இங்கு பகல் பொழுதில் அதைப்பற்றி என்னிடம் உரையாடுவார்.
எப்பொழுது உறங்குவார் என கேட்க வில்லை. நான் அதிகம் சந்தித்ததில்லை. வீடியோவில் முகத்தை காட்ட மாட்டார். சுந்தர் அவரை ‘கிருபா’ என்று அழைத்ததால் அவரை முப்பது வயது இளைஞர் என்று எண்ண வைத்த சுறு சுறுப்பு. என் புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்தார். தலை வணங்குகிறேன்.
நண்பர் சுந்தரைப்பற்றி அதிகம் புகழ்ந்தால் ஐம்பது ஆண்டுகள் நட்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
ஒன்று சொல்லியே ஆக வேண்டும்.
என்னுள் ஒளிந்து இருந்த சிறு திறமையை ஊக்குவித்து, வெளி கொணர்ந்து புத்தகம் போட வைத்து, குவிகத்தில் ‘நடுப் பக்கம்’ என எனக்கு ஒரு பக்கம் ஒதுக்கி குவிகம் 100 ல் என் கதையையும் இடம் பெறச் செய்துள்ளார். அனைத்திற்கும் காரணம் புதிய எழுத்தாளர்களை உலகிற்கு அறிமுப்படுத்தும் உயர்ந்த நோக்கமே. இத்தொண்டு இலக்கிய அன்னையால் ஆசீர்வதிக்கப் பட்ட அவருக்கு பல சிறப்புகளை கொடுக்கட்டும்.
இடியோ, மழையோ, இல்லை சென்னையில் உள்ளாரோ அல்லது ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்றுள்ளாரோ குவிகம் இலக்கிய வாசல் வீடியோவில் அவரது சிரித்த முகம் தோன்றினால் அச்சமயம் ஞாயிறு மாலை மணி 6.30. இந்த அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்,
சுந்தர ராஜன்-கிருபானந்தன் – குவிகம் மூவரும் பல்லாண்டுகள் வளமுடன் வாழ வாழ்த்தும்-
(குவிகம்100 ல் ஒரு கதைக்கு சொந்தக்காரன்)
படிக்கும் போதே மனதைக் குத்துது – வாட்ஸ் அப்பில் கிடைத்தது
யார் பெத்த கவிதையோ ? படிக்கும் போதே மனதைக் குத்துது!
வறுமை ஒன்னும் புதுசில்ல…!
– அரசுப்பள்ளி மாணவன்
அட்டை போடாத
அஞ்சாவது புக்கு
என்னைக்கோ கிழிஞ்சுருச்சு.
ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு
அறிவிப்பு மட்டும்
வந்திருச்சி..
பள்ளிக்கூடம்
பூட்டு போட்டு
மாசம் இன்னைக்கு
நாலாச்சு…
பிரைவேட்ல
படிக்கிறவனுக்கு
“ஸ்கூல்”
வீட்டுக்கே வந்தாச்சு.. .
ஆன்லைன்ல படிக்கிறேன்டா..
ஆணவமா ஆதி சொன்னான்..
எதிர்வீட்டு
கோபி சொன்னான்..
ரெண்டு ஜிபி
தேவைப்படுமாம்..
சட்டையில மட்டுமில்ல
அப்பா போன்லயும்
ரெண்டு பட்டன் இல்லை..
ஸ்மார்ட் போன் வாங்க
காசு இருந்தா
ஸ்கூல் பீஸ் கட்டி
சேர்த்திருப்பார்..
கூலிக்கு மாரடிக்கும்
குருவம்மா எங்கம்மா..
கூறுகெட்ட
கொரானாவால
வீட்டுக்குள்ளே
முடங்கிருக்கா..
அப்துல் கலாம் ஆவேன்னா…
அரசு பள்ளியில
சேர்த்துவிட்டா?
ஒரு வேல
சுடு சோறு
தின்பான்னு
ஆசைப்பட்டா…!!
இப்ப…
சொல்லித் தரவும்
ஆளில்லை…
சோத்துக்கும் வழியில்ல…
கத்து தந்த
வாத்தியாரும்
முழு சம்பளமும்
…வாங்கி விட்டு
முடங்கி கெடக்காரு…
அவரு பையன்
ஸ்ஸ்கூல் கான்வென்ட்ல ஆன்லைன்ல
இங்கிலீசுல தூள்
கிளப்புறான் !
வறுமை ஒன்னும்
புதுசில்ல…
வாழ்ந்து பார்த்து
பழகிடுச்சு…
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான்
வாசல் பார்த்து
காத்திருக்கேன்…
மாஸ்க் வாங்க
காசு இல்ல…
கர்ச்சீப் தான்
கட்டிக்கிறேன்…
புக்கு மட்டும் குடு சாமி…
புரட்டி கிரட்டி கத்துக்கறேன்…
இப்படிக்கு
அரசுப்பள்ளி மாணவன்😭😭😭
வாட்ஸ் அப் பகிர்வு
குட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்
ஒரு தடவ சொன்னா…..!
என் நண்பன் சேகரைப் பார்க்க அவன் ஆபீஸிற்குப்
போய், அவன் வருகைக்காக அவன் காபினில் உட்கார்ந்திருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
கோபமும் அலுப்புமாக காபினுக்குள் நுழைந்தான் சேகர்.
‘டாமிட்… இன்காரிஜிபிள்.. ஸ்டா·ப் எல்லோரும் நல்லாப் படிச்சவங்க.. ஆனா, ஒவ்வொரு வேலையையும் நூறு தடவ சொல்ல வேண்டியிருக்கு.. அப்பத்தான் புரிஞ்சுண்டு செய்யறாங்க.. ரொம்ப அவஸ்தைப்பா…’ என்றான் என்னைப்
பார்த்து.
‘கேட்டுக் கொண்டிருந்த மிதிலா மெதுவாகச் சிரித்தாள்.
என்னடி சிரிக்கறே என்ற கேள்விக் குறியோடு கண் புருவங்களை உயர்த்தி அவளைப் பார்த்தேன்.
‘ஒண்ணுமில்லேப்பா.. பாட்சா சினிமாவுலே ரஜினி அங்கிள் எப்பவும் ‘ நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..’என்பார். இங்கே சேகர் அங்கிள் நூறு தடவ சொன்னா ஒரு தடவ சொன்ன மாதிரின்னு தோணுது.. அதை நினைச்சேன்.. சிரிப்பு வந்தது..’என்றாள் சிரித்து கொண்டே..
அந்த இறுக்கமான சங்கடமான நிலமையிலும் எங்களாலும்
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்..:
ரெண்டு வீடு…!
ஜோதிடரைப் பார்க்க கூட்டம் நிரம்பி இருந்தது.
‘அங்கே முத்ல்லே உட்கார்ந்திருக்காரே.. அவர் இந்த
தொகுதி எம்.எல்.ஏ.. நல்ல செல்வாக்கு உள்ளவர். ஆனா
அவரைப் பத்தி ஒரு ரகசியம் தெரியுமா.. அவர் ரெண்டு
வீடு வெச்சிருக்கார்..’ என்றார் ஒருவர் மெதுவான குரலில்,
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.
‘அட நீங்க ஒண்ணு… இப்பப் பாருங்க.. பன்னிரண்டு
ராசிகள் – வீடுகள்… ஒன்பது கிரகங்கள்.. கணக்குப் போட்டு
பார்த்தோம்னா அட்லீஸ்ட் மூணு கிரகங்களுக்காவது ரெண்டு
வீடுகள் இருக்கும். நாம கடவுளா நெனச்சு வழிபடுகிற
கிரகங்களே அப்படி.. ஆ·ப்டர் ஆல் நாமெல்லாம் மனு-
ஷங்க.. விட்டுத் தள்ளுங்க.. கண்டுக்காதீங்க.. ‘
‘ !!! ‘
— சிவமால்.