திரைக்கவிதை

 

 

படம்: பாசம் 
இசை: M S விஸ்வநாதன் , T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலா, P B ஸ்ரீனிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்

 

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பெண்: கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா

கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ..வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

ஆண்: மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பெண்: பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

நந்திவர்மன்-2

 

The 2nd Nandivarman period from 8th century || 8-ம் நூற்றாண்டை சேர்ந்த 2-ம் நந்திவர்மன் கால நடுகல் கண்டெடுப்பு

 

 

 

 

 

 

 

 

 

 

அந்நாள் தென்னிந்தியாவின் அரசியல் ‘பரமபதம்’ போன்றது.
எப்பொழுது ஏணி வரும் எப்போது பாம்பு வரும் என்பது யாருக்கும் தெரியாது.
பல மன்னர்கள் – அவர்களில் யார் யாருக்கு நண்பன் – யார் யாருக்கு எதிரி – என்பது நாளுக்கு நாள் மாறி வரும்.
கொள்கையற்ற கூட்டணிகள்..
கண்ணி வெடி நிறைந்த கானகம் போல மக்கள் வாழ்வு.
நந்திவர்மன் பாண்டிய வெற்றிக்குப் பிறகு.. அரசாட்சியை வலுச் செய்தான்.
அடுத்து என்ன செய்யலாம்?
வேறு என்ன?
‘யுத்தம் செய்’!

இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்க்கன் – நந்திவர்மன் இருவரும் சேர்ந்து சாளுக்கியரை அழித்ததைப் பார்த்தோம். தந்திதுர்க்கன் – வைரமேகன் என்னும் மறுபெயர் உடையவன். அவன் காஞ்சியை வென்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்த வைரமேகனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். எனவே, இருவரும் சமாதான நிலையில் காஞ்சியில் இருந்தனர் என்றே கொள்ளவேண்டும்.

காட்சி ஒன்று விரிகிறது.
காதல் அதில் மலர்கிறது.:
இடம் காஞ்சி:
தந்திதுர்க்கனின் மகள் இளவரசி ரேவா!
நமது கற்பனையில் இளவரசிகள் என்றாலே ‘பேரழகி’ என்று எண்ணம்.
(நமது என்று சொல்லும் போது உங்களையும் சேர்த்துச் சொன்னதுக்குப் போய் இப்படி கோபித்துக் கொள்ளலாமா?
சரி.. என் கற்பனையில்.. திருப்தி தானே?)
ஆனால் இவள் உண்மையிலேயே பேரழகி.
தந்திதுர்க்கன் – காஞ்சி செல்வதாகச் சொன்ன உடனே..
ரேவா : ‘அப்பா நானும் வருகிறேன். காஞ்சியைக் காண எனக்கும் ஆசை”
காஞ்சியைக் காண யாருக்குத்தான் ஆசை இருக்காது?
காஞ்சி – ஓரு கனவு நகரம்.
இரண்டாம் புலிகேசி – காஞ்சி மீது படையெடுத்ததற்குக் காரணம்:
‘காஞ்சியின் மீது அவன் வைத்த காதல்’- என்று கல்கி சொல்கிறார்.
தந்திதுர்க்கன் ரேவாவையும் காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறான்.
பல்லவ மல்லன் நந்திவர்மன் மாளிகை.
அங்கு ரேவா பல்லவனைக் கண்டாள்.
பல்லவன் பல்லவி பாடாத குறைதான்.
அவனும் நோக்கினான். அவளும் நோக்கினாள்.
இளவரசி – காஞ்சியின் கோலம் காண விழைகிறாள்.
பல்லவனின் ரதத்தில் – ஒரு நகர் வலம்!
நந்திவர்மன் தானே ரதத்தின் சாரதியாக வந்து நகரத்தின் எழிலை இளவரசி ரேவாவுக்கு சுற்றிக் காட்டினான்.
நந்திவர்மன் 27 வயது நிரம்பிய வாலிபன்.
பல்லவ மக்கள் அவனை விரும்பியதின் ஒரு காரணம் – அவனது வசீகரமான வடிவம்.
அழகும் அழகும் சந்தித்தால்?
மன்மதன் அன்று அவ்விடம் ரொம்ப பிஸி.
ஒரு பாடுபட்டு ஹீரோவையும் – ஹீரோயினியையும் சந்திக்க வைத்து விட்டேன்.
இனி அவர்களது காதல் எப்படி வளர்ந்தது என்பதை கூறவேண்டாமா?
அதை வாசகர்களான உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
சிவாஜி ரசிகர்கள் – ‘ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக’ என்று பாடிக்கொண்டே கற்பனை செய்யுங்கள்.
எம் ஜி ஆர் ரசிகர்கள் – ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.” -என்று பாடிக்கொள்ளுங்கள்.
காதல் கடிமணமாயிற்று.
அவளுக்குப் பிறந்த மகனுக்குத் ‘தந்திவர்மன்’ என்னும் பாட்டன் பெயரை இட்டனர்.
பொதுவாக..மற்ற நாட்டு இளவரசியைத் திருமணம் செய்தால் இரண்டு அரசுகளின் உறவு மேலோங்கும்.
ஆனால்-சில நேரங்களில் உறவு பகையை மூட்டும்.
இராஷ்டிரகூட-பல்லவ உறவுகள் முதலில் சுமுகமாகவே இருந்தது.
இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்க்கன் கி.பி. 725 முதல் 758 வரை ஆண்டு காலமானான்.

அடுத்து வருவதை நமது வாசகர்கள் நன்கு அறிவர்.
வேறென்ன.. வாரிசுரிமைப் போர் தான்.
முதலாம் கிருஷ்ணன் – இவன் தந்திதுர்க்கனின் சிற்றப்பன்.
தந்திதுர்க்கனுக்கு ஆண் பிள்ளை இல்லாததால், முதலாம் கிருஷ்ணன் தனது முதுமைப் பருவத்தில் அரசனாக ( கி.பி. 758 முதல் 772) இருந்தான்.
கிருஷ்ணனுக்கு இரண்டாம் கோவிந்தன், துருவன் என இரு மகன்கள் இருந்தனர்.
மூத்தவனான இரண்டாம் கோவிந்தன் கி.பி. 772இல் அரசு கட்டில் ஏறினான்.
இவன் தம்பியிடம் அரசை ஒப்புவித்து உலக இன்பங்களில் கருத்தைச் செலுத்தியிருந்தான்.
பிறகு துருவன் தான் அரசனாகச் செய்த சூழ்ச்சியைக் கோவிந்தன் அறிந்து, அவனை நீக்கிப் புதியவன் ஒருவனை அரசியலைக் கவனிக்கப் பணித்தான்.
இந்த ஒழுங்கற்ற முறைகளால் உள்நாட்டில் சிற்றரசர் குழப்பங்களை உண்டாக்கினர்.
துருவன் சிறந்த அரசியல் நிபுணன்.
அவன் தன் முன்னோர் தேடிய அரசு நிலைகுலையும் என்பதை உணர்ந்தான்.
உடனே பட்டந்துறக்கும்படி கோவிந்தனை வற்புறுத்தினான்.
ஆனால், அவ்வற்புறுத்தல் பயன்பெறவில்லை.
துருவன் தனக்கு இசைந்த சிற்றரசரைச் சேர்த்துக்கொண்டு அண்ணனை வெல்ல முற்பட்டான்.
கோவிந்தனும் கங்கபாடி, வேங்கி அரசரைத் தனக்கு துணையாகக்கொண்டான்.
நம் பல்லவ அரசனான நந்திவர்மனும் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான்.
போர் கடுமையாக நடந்தது.
துருவனே வெற்றி பெற்றான்.
துருவன் கி.பி.780இல் இராட்டிரகூடப் பேரரசன் ஆனான். அவன் 794 வரை அரசாண்டான்.
இப்பொழுது புரிந்ததா- நந்திவர்மனுக்கும் – இராஷ்டிரகூடத்திற்கும் பகை வளரக் காரணம் என்னவென்று?

துருவன் விட்டானில்லை.
அரசனாகி மூன்று வருடங்கள் கழிந்தது.
கி பி 783: துருவன் போர்க்கூட்டணியில் தன்னை எதிர்த்த அனைவரையும் பழி வாங்க நினைத்தான்.
முதலில் கங்க நாட்டின் மீது படையெடுத்து அதை வென்றான்.
கங்க நாட்டு யுவராஜன் சிவமாரனைச் சிறைப்பிடித்து, தன் மகன் ஸ்தம்பாவை அங்கு ஆளுனராக்கினான்.
பின் தன் பார்வையை காஞ்சிக்கு திருப்பினான்.
நந்திவர்மன் இந்தத் தாக்குதலை முறியடிக்க செய்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தது.
சமாதானம் கோரினான்.
அதற்குப் பெருவிலை கொடுக்கப்பட்டது.
பல போர் யானைகளைக் கொடுத்து சமாதானம் வாங்கினான்.

நந்திவர்மன் தோல்விகளைக் கண்டு துவள்பவனல்ல.
கங்கநாட்டில் ஸ்தம்பா ஆளுநராக இருந்தாலும் பழைய கங்க மன்னன் ஸ்ரீபுருஷன் அவனுக்கு கீழ் அரசனாக இருந்ததான்.
இராஷ்டிரகூட துருவன் தென்னகத்தை வென்ற பிறகு- வட இந்தியாவில் படையெடுத்துச் சென்றான்.
இதுதான் சரியான நேரம் என்று, நந்திவர்மன் கங்க நாட்டின் மீது படையெடுத்தான்.
ஒரு பழைய கடன் பாக்கி காத்திருந்தது.

முன்னாளில் – கங்க நாட்டு யுத்ததில் பரமேஸ்வர பல்லவன் தனது ‘உக்ரோத்யம் என்னும் வைரம் பதித்த கழுத்தணியை பறி கொடுத்திருந்தான்.
முன்பு பரமேஸ்வர பல்லவன் கதை சொல்லும் போது இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த நகையின் கதை பின்னாள் தொடரும் என்று சொல்லியிருந்தோம். வாசகர்கள் அதை மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
நந்திவர்மன் கங்க அரசனிடமிருந்து அதைக் கைப்பற்றினான்
 
நந்திவர்மன் போரில் வெற்றிகள் கண்டாலும் தோல்விகளும் பல கண்டவன்.
உதயசந்திரன்- பல்லவனுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த தளபதி.

ஒரு சிறுகதை சொல்வோம்:
ஒரு நாள் உதயசந்திரன் நந்திவர்மனை அரண்மனையில் சந்தித்தான்:
உப்பரிகையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
மாலை வெயில் காஞ்சி நகரின் அழகை மஞ்சளால் அபிஷேகம் செய்திருந்தது.
மன்னனின் நினைவுகள் கனவுலகில் சஞ்சாரமித்தது.
“உதயா! நான் சிறுவனாக இருந்த போது..
கம்புஜதேசத்தில் (இன்றைய கம்பூசியா) இருந்த சம்பா தீவில் (இன்றைய வியட்நாம்) இருந்தேன்.
எனது தந்தை விக்ராந்தவர்மர் பல்லவ அரசின் வழி வழியாக வந்தவர்.
காஞ்சியின் அழகைப் பற்றியும் – நரசிம்ம பல்லவரின் பாராக்கிரமங்களைப் பற்றியும் , பல்லவ திருக்கோவில்களைப் பற்றியும் மிகவும் சிலாகித்துச் சொல்வார்.
அதைக் கேட்டு நானும் காஞ்சியின் காதலனானேன்.
‘மன்னர் வாரிசு’ நிலையில் பல்லவ நாடு எதிரிகளின் கைகளின் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் வந்தனர்.
காஞ்சிக்கு மன்னன் இல்லாததைக் கூறி.. என் தந்தையை பல்லவ நாட்டு மன்னனாக வரச்சொன்னார்கள்.
அவர் மறுக்க – என அண்ணன்மார்கள் அனைவரும் மறுக்க – எனக்கு காஞ்சி மேலிருந்த காதலால்..
நான் ஒப்புக் கொண்டு கப்பல் ஏறி..ஸ்ரீவிஜயம்.. கடாரம் வழியாக மாமல்லபுரம் வந்து காஞ்சியை அடைந்தேன்.
அந்நாளிலிருந்து இந்நாள் வரை காஞ்சியைக் காக்க பாடுபட்டிருக்கிறேன்.
உன்னால் பல வெற்றிகள் கிடைத்தது..” – என்று நிறுத்தினான்.

உதயசந்திரன்: ‘அரசே! தாங்கள் பரிவேள்வி செய்ய வேண்டும்’ -என்றான்.
நந்திவர்மன் சோகமாகப் புன்முறுவல் செய்தான்.
“பரிகாசமா?” – என்றான் மன்னவன் – முறுவலைக் குறைக்காமல்.
“அரசே! என்ன கேள்வி இது?” – உதயசந்திரன்.
“பரிவேள்வி என்றால் என்ன தெரியுமா?” – மன்னன்.
“அஸ்வமேத யாகம்” -தளபதி.
“அது தெரியாதா? நான் சந்தித்த வெற்றிகளை விட தோல்விகளே அதிகம்.
கதை இப்படியிருக்கும் போது.. பரிவேள்வி செய்தால் உலகமே என்னை பரிகசித்து எள்ளி நகையாடாதா?” -என்றான் மன்னன்.
‘அரசே இனி நமக்குத் தோல்வி என்பதே கிடையாது. இந்த யாகத்தின் வாயிலாக இந்த உலகுக்கு பறைசாற்ற வேண்டும்” -என்று அடித்துக் கூறினான்.
ஒப்புக்கொண்டான் மன்னன்.

குதிரையை வடக்கே அனுப்பினான்.
அதுவேங்கி நாடு சென்றது.
அதனை ஆண்ட விஷ்ணுராசன் என்னும் கீழைச் சாளுக்கியன் பல்லவன் பெருமையை ஒப்புக் கொண்டான்.
ஆனால் அவனுக்குக் கீழ்ப்பட்ட பிருதிவி-வியாக்கிரன் என்பவன் அக் குதிரையைக் கட்டிவிட்டான்.
உடனே உதயசந்திரன் அங்கு சென்று, அச் சிற்றரசனைப் போரில் முறியடித்து நாட்டைவிட்டுத் துரத்தி மீண்டான்.
தோற்றவனுடைய விலை உயர்ந்த அணிகலன்களைப் பல்லவனுக்குப் பரிசளித்தான்.

அறுபத்தைந்து வருடம் ஆண்ட நந்திவர்மன்- தோல்வி-வெற்றி பல கண்டாலும்..
திருக்கோவில் பணி செய்து – திருமங்கையாழ்வாருடன் நட்பு பூண்டு – இயன்ற அளவு அமைதியை பல்லவ மக்களுக்கு அளித்து -பல்லவ வம்சம் அழியாது காத்தான்.

பொதுவாக எந்த அரசரைப்பற்றியும் கல்வெட்டு- பட்டயங்களில்..
‘அவன் இந்திரன்-சந்திரன்’ என்று புகழ் பாடுவது வழக்கம்.
சிலநேரங்களில் அது நகைப்புக்கும் இடமாகும்.

நந்திவர்மனைப்பற்றி பட்டயங்கள் கூறுவது:
பல்லவ மல்லன்
சிறந்த கல்விமான்
புலவன்:
இசை விருப்பன்
கவி புனைவதில் வால்மீகி போன்றவன்
வில்வித்தையில் இராமன்
அரசியலில் பிரகஸ்பதி

இது எப்படி இருக்கு?
சரித்திரம் தொடர்கிறது…

திரை ரசனை வேட்கை  – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன் 

பலே பாண்டியா    
Vaazha Ninaithaal - Bale Pandiya Video Song | Sivaji Ganesan | Devika | Viswanathan–Ramamoorthy - YouTube
மாப்ளே... மாமா பலே பாண்டியா'வுக்கு 57 வயது! | மாப்ளே... மாமா பலே பாண்டியா'வுக்கு 57 வயது! - hindutamil.in
பலே சிவாஜி ! பலே ராதா!! பலே பந்துலு !!!

15 நாட்களில் மூன்று இடங்களில் ஒரே காலத்தில் படப்பிடிப்பு முடித்து வெளியான அட்டகாசமான நகைச்சுவைப் படம் என்று கொண்டாடப்படுகிறது பலே பாண்டியா. ஆண்டு:1962. மூன்று முக்கிய வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளுத்துக் கட்ட அவரது கால் ஷீட் வெறும் 11 நாட்கள் தான் என்பது அதிர வைக்கும் கூடுதல் செய்தியாக இருக்கிறது. அமெரிக்காவுக்குப் புறப்பட இருந்த அவரிடம் இயக்குநர் – தயாரிப்பாளர் பத்மினி பிக்சர்ஸ் பி ஆர் பந்துலு அவர்கள் அழைத்துப் பேசியவுடன் ஒப்பந்தம் ஆன படம். பந்துலு  அவரைப் பற்றியே நிறைய இருக்கிறது பேச ! புகழ் பெற்ற மா.ரா. வசனம். தாதா மிராசி எழுதிய திரைக்கதையின் தன்மை அருமையானது.  இள வயதிலே பார்த்த படத்தை, மிக அண்மையில் தொலைகாட்சி சானல் ஒன்றில் சிறிது நேரம் பார்க்க நேர்ந்து வியப்பு மேலும் அதிகரித்தது. அசாத்திய எளிமையில் எப்படி இப்படியொரு வெற்றிப்படம் வழங்க முடிந்தது!    

அப்பாவி பாண்டியன், ரவுடி மருது, விஞ்ஞானி சங்கர் ஆகிய மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன், தனவந்தர் அமிர்தலிங்கம் பிள்ளை மற்றும் கள்ளர் தலைவன் கபாலி இரு வேடங்களில் எம் ஆர் ராதா நடிக்கும் என்று போட்டுத்தான் படத்தின் டைட்டில்கள் ஓடத் தொடங்குகின்றன.        

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கண்ணதாசன், பந்துலு, சிவாஜி, எம் ஆர் ராதா  மட்டுமல்ல, தேவிகா, பாலாஜி, சந்தியா (ஆமாம், ஜெயலலிதாவின் அம்மாவே தான்!), எடிட்டர் தேவராஜன், ஒளிப்பதிவாளர் வி ராமமூர்த்தி என ஒட்டுமொத்த டீமின் அசாத்திய பங்களிப்பு தான் முழு வெற்றிக்குக் காரணம்.     

‘தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என்று கதாநாயகன் மிரட்டத் தொடங்கும் காட்சியில் தொடங்கும் படம், வில்லன் பாத்திரத்தின் தற்செயலான தற்கொலையில் முடிகிறது. ஆனால், இப்படியான கதையை ஒவ்வொரு ஃபிரேமிலும் எப்படி அத்தனை ஹாஸ்யமாக நகர்த்திக் கொண்டே செல்ல முடிந்தது என்பது தான் பிரமிக்க வைப்பது. வசனங்கள், பாடல்கள், திடீர் திருப்பங்கள் என அசர வைத்திருப்பார் பந்துலு. படத்தின் எல்லா பாத்திரங்களும் ஒரு வித கோமாளித்தன பாவனையில் தான் அதிகம் காட்சி அளிப்பார்கள். என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற திகில் அம்சங்களுக்கு எல்லாம் கஷ்டப்படாமல், ஆனால் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை.   

முழுவதும் முடிந்தபின் படத்தைத் தாமே பார்க்கையில் சிவாஜி தமது நடிப்பைக் குறித்துத் தாமே என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அப்பாவி என்றால் அக் மார்க் அப்பாவியாக நடித்திருப்பார். மூன்று வேடங்களிலும் அவரது வசன உச்சரிப்பு கூர்ந்து கவனித்துக் கொண்டாட வேண்டியது. 

தற்கொலை முடிவில் இருந்து தம்மைக் காப்பாற்ற முன்வரும் திருடர் தலைவன் கபாலியிடம், வாழ்வதற்கான முன் நிபந்தனைகள் பாண்டியன் விவரிப்பது அசத்தலாக இருக்கும். அதற்குமுன், உயரமான கட்டிடத்தின் உச்சி மாடியிலிருந்து கீழே பார்த்து, ‘மகா ஜனங்களே, என்னைத் தடுக்காதீர்கள், நான் கீழே விழுந்து என் மண்டை உடைத்துக் கொள்வதற்குத் தேவையான இடத்தைத் தாருங்கள்…தள்ளி நில்லுங்கள்” என்று அவர் பேசுவதில் தொடங்குகிறது படம். அங்கே காரில் வந்து இறங்கும் எம் ஆர் ராதா, கூட்டம் நிற்பதன் சூழலைக் கேட்டறிந்து கொண்டு,”ஏண்டா ஒருத்தன் சாகறத பாக்கறதுக்கு இத்தனை கூட்டமா, எது எதுக்குத் தான் கூட்டம் சேர்ரது என்ற விவஸ்தையே இல்லாமப் போச்சு நாட்டிலே” என்று ஒரு பஞ்ச் அடிப்பார். அப்புறம் பைனாகுலர் எடுத்து உயரே பார்க்கும்போது, “யார் இவன் சாகறதுக்கு இந்த லொகேஷனை செலக்ட் பண்ணவன்… எலெக்ஷன்ல எதாவது தோத்துட்டானா?” என்று அடுத்த பஞ்ச். 

பின்னர் சிவாஜியைத் தமது பெரிய பங்களாவுக்கு அழைத்துச் செல்வார், “:ஏன் சார், நீ ஒருத்தன் மட்டும் இருக்கறதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பங்களா… நூறு பேரை இங்கே தங்க வைக்கலாம், இது ரொம்ப மோசம் சார்” என்று சிவாஜி சொன்னது, உஷ் என்று சொல்லும் ராதா, குரலை சன்னமாக ஆக்கிக்கொண்டு, “பங்காளவுக்குள்ளே பாலிடிக்ஸ் பேசக்கூடாது” என்பது அராஜக வெடி பஞ்ச் ! எதற்கு, இத்தனை சிரமப்பட்டு ஒருவனை சாகாமல் காப்பாற்றி அழைத்து வருகிறார் என்பதுதான் கதையே. தனது உத்தம சிஷ்யன் ரவுடி மருதுவும், அப்பாவி பாண்டியனும் ஒரே முக வாகு என்பதால், மருதுவின் பேரில் ஒரு லட்ச ரூபாய் எல் ஐ சி பாலிசி போட்டு, அப்பாவியை காலி செய்துவிட்டு அந்த இன்சூரன்ஸ் பணத்தை அபேஸ் செய்வதுதான் ராதாவின் திட்டம்.  

வாத்தியாரே எனும் சென்னை பாஷை திரையில் இடம் பெற்ற குறிப்பிடப்படும் பட்டியலிலும் இந்தப் படத்திற்குத் தனியே இடமுண்டு. படம் முழுக்க, சிவாஜி, ராதாவை சார் சார் என்று அழைப்பதே தனி நகைச்சுவை. முதலில் பைனாகுலர் சார் என்பார். அப்புறம், கபாலி சார் !  காலண்டரை எடுத்து வைத்துக் கொண்டு, முப்பது நாள் ஆயிருச்சே, நீ இன்னிக்கு சாகப் போறியே என்று பொய்யழுகை அழுகிற எம் ஆர் ராதாவிடம், ‘சார் நான் திருந்திட்டேன் சார், சாக மாட்டேன் சார்’ என்று சொல்லிவிட்டு, ‘அக வாழ்க்கைக்கு கீதா, புற வாழ்க்கைக்கு கபாலி’ (அந்த கபாலியை என்ன சுவாரசியமான உச்சரிப்பில் கலக்குவார் கணேசன்) என்று அவர் பங்குக்கு பஞ்ச் வைத்துவிட்டுப் போகும் காட்சி உள்பட அபாரம்.

ரவுடி மருது, ஒரு மல் ஜிப்பா, லுங்கியோடு புகை பிடிப்பது, கபாலியின் திறமையைக் கொண்டாடுவது என்று அப்பாவி பாண்டியனை விடவும் அப்பாவியாக இருக்கும் திருடன் பாத்திரம். (மருது பாத்திரத்தைக் கண்ணீர் திரையிடத் தான் நினைவு கூர முடியும், ஐந்து மாதங்களுக்குமுன் நெஞ்சுவலி ஏற்பட்டு மறைந்துவிட்ட என் சித்தி மகன் சுரேஷ், லுங்கியை இழுத்து செருகிக்கொண்டு சிவாஜி ஒயிலாக நடக்கும் காட்சியைத் திரும்பத்திரும்ப ரசித்து செய்து காட்டுவான் எங்கள் இளமைக் காலத்தில்!). 

மனநிலை பிறழ்ந்த பெண்ணை சாலை விபத்தில் காப்பாற்றும் பாண்டியனைத் தமது மகனாகவே ஏற்கும் சுவீகாரத் தந்தையும் ஓர் அப்பாவி. அவரது முகவரி என்ன தெரியுமா: கைலாசபுரம் எஸ்டேட், வைகுண்டம் போஸ்ட்!  கதாநாயகியின் முறைப் பையனாக வரும் பாலாஜி மேலடுக்கு அப்பாவி. சிவாஜி, பாலாஜி தமாஷ் சண்டைக் காட்சி ஒன்றும், வெள்ளை கர்ச்சீஃப் உயர்த்தி பாலாஜி சரணடையும் இடமும், அதற்கு அப்புறமும் சிவாஜி வீர வசனம் பேசும் விதமும் படத்தின் இயல்பான போக்கில் நகைச்சுவையை சேர்த்துக் கொண்டே போகும். 

அப்பாவை சமாதானம் செய்ய கொஞ்ச காலம் பொறுத்திடக் கூடாதா என்று கேட்கும் தேவிகாவிடம், அப்பாவி சிவாஜி,”இப்படி பொறுக்கிப் பொறுக்கிப் பொறுக்கியாவே ஆயிடுவேன்” என்று குரலைத் தினுசாக வைத்துக் கொண்டு பேசுவது அசத்தலாக இருக்கும். 

காதலி கீதாவின் (தேவிகா)  தகப்பன் அமிர்தலிங்கம் பிள்ளை, இன்னும் அப்பாவி பாத்திரம். அதில் எம் ஆர் ராதா ஏக கலக்கல் செய்திருப்பார். இரண்டு எம் ஆர் ராதாவும் ஒருவரை ஒருவர் மிகப் பெரிய நிலைக்கண்ணாடி இருக்கும் இடத்தில் எதிரும் புதிருமாகச் சந்திக்கும் காட்சி அசாத்தியமானது. அந்தக் காட்சி ஏற்படுத்தும் கலகலப்பு அசாதாரண நகைச்சுவை.

விஞ்ஞானி சங்கர் அதைவிடவும் அப்பாவி.  மறதி மிக்க அறிவுஜீவியான பாத்திரத்தில், அவரது தலைமுடியும், ஐ யம் ஸாரி ரேஞ்சில் ஆங்கிலம் கலந்தடிக்கும் வசனங்களும் இன்னும் நகைச்சுவை ரசனையாக இருக்கும். மனைவியின் (சந்தியா) டாம்பீகச் செலவுக்கு ஊர் முழுக்கக் கடன், விஞ்ஞானிக்கு. படத்தின் காட்சியமைப்பில், பரிசோதனைக் கூடம் வெடித்து அவர் எரிந்துபோனார் என்று ஊருக்குச் சொல்லி விடுவாள் மனைவி. கடன் கொடுத்தவர்கள் எல்லாம், ‘எங்களுக்குச் சேர வேண்டிய பங்கு எடுத்து வச்சிருக்கீங்களா?” என்று கேட்கையில், கபட வேடத்தில் அங்கே வந்து நிற்கும் கபாலி, “சாம்பல்ல ஆள் ஆளுக்கு ஒரு பங்கு எடுத்துப் பல் வெளக்கிட்டுப் போங்க” என்று சொல்வது அவருக்கான அடுத்த பஞ்ச் !  உண்மையில், சங்கரைத் தமது தம்பி பாண்டியனாக நடித்து சொத்தில் பங்கை அடிப்பதுதான் சங்கரின் மனைவி திட்டம். 

இடையே ஆள் மாறாட்டங்கள் வெவ்வேறு பாத்திரங்களைத் திணறடிப்பதும், பதற வைப்பதும் அதிரடி சிரிப்பு வெடிகளாக மாறும். மூன்று சிவாஜிகளும் சந்திக்கும் இறுதிக் காட்சியில் குழப்பங்கள் தீர்வதும், அந்தக்கால தர்மப்படி திருடன் பாத்திரம் இறக்க வேண்டிய நியாயம் நடப்பதும், பாண்டியனைச் சுட நினைத்துத் தனது சிஷ்யன் மருதுவையே சுட்டுவிட்டு, அந்தத் துக்கம் தாளாமல் அதே துப்பாக்கியால் கபாலி தன்னையே மாய்த்துக் கொள்வதுமாக படம் நிறைவுக் கட்டத்தை எட்டி விடுகிறது. திருடர் பாத்திரம் என்றாலும், படத்தைப் பார்ப்பவர்கள் கபாலி பாத்திரத்தையும், மருது பாத்திரத்தையும் நேசிக்கவே செய்திருப்பார்கள், அவர்களது எதிர்பாராத முடிவு நிச்சயம் கலங்க வைக்கும். 

படத்திற்கான பாடல்கள் அத்தனையும் அபார வெற்றி! டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா இணை குரலில், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ வானொலியில் அதிகம் ஒலிபரப்பான பாடல்கள் வரிசையில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். தனிப்பாடல் ஒன்றிலிருந்து காய்களை வைத்து எடுத்து எழுதிய அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலா எப்போதும் கேட்கத் தக்க சுவாரசியமான பாடல். எழுபதுகளில், விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பில் தமது சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் பாடல்களை வழங்கியபோது கவிஞர் கண்ணதாசன், இந்தப் பாடலுக்கான இணைப்புரையில், அந்தத் தனிப்பாடலில் ஐந்தாறு காய்கள் தான் இருந்தன, இந்தப் பாடலில் இருபதுக்கு மேல் காண முடியும் என்று ரசனையோடு பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உள்ளமெல்லா மிளகாயோ (இளகாயோ), ஒவ்வொரு பேர் சுரக்காயோ, கோதையெனைக் காயாதே கொற்றவரைக்காய்…என்று பாடல் முழுவதும் அமர்க்கள சொல் விளையாட்டு காதல் விளையாட்டாக வழங்கப்பட்டிருக்கும். டி எம் எஸ், பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ், ஜமுனா பாடிய கூட்டுக் கொண்டாட்டம் அது. சிறைக் காட்சிக்காக இடம் பெற்ற ‘யாரை எங்கே வைப்பது என்று’ பாடலை டி எம் எஸ் சிறப்பாகப் பாடி இருப்பார். ‘நான் என்ன சொல்லிவிட்டேன்’ பாடல் இனிமையிலும் இனிமையான கவிதை. பி பி ஸ்ரீனிவாஸ், ஜமுனா குரல்களில் ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’ பாடல் மென்குரல்களின் காதல் கீதம். 

ஆனால், ராக ஆலாபனை, கொன்னக்கோல் சகிதம் அடித்து நொறுக்கி தூள் கிளப்பிய பாடலான, ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ அசாத்திய சுவை நிரம்பியது. பாடலில் டி எம் எஸ் மற்றும் எம் எஸ் வி குழுவின் ராஜூ போட்டுப் பின்னி எடுத்தது ஒரு ருசி என்றால், பாடல் காட்சியில், எம் ஆர் ராதா, சிவாஜி, பாலாஜி மூவருமே கலக்கி இருப்பார்கள். ஒரு தேர்ந்த பாடகர் போன்ற பாவனைகளோடு சிவாஜி அந்தப் பாடலுக்கு வாயசைப்பது ரசனையின் தனி இன்பம். சோபாவில் இருப்பு கொள்ளாமல் குதித்து குதித்து நிமிர்த்தும் எம் ஆர் ராதாவின் சேஷ்டைகள், கொனஷ்டகள் ஈடு இணையற்றவை.மெல்லிசை மன்னர்கள் கொண்டாடப் பட வேண்டிய மகத்தான இசையை தமிழ்த்திரைக்குக் கொடை அளித்துச் சென்றுள்ளனர்.  சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி ஒன்றில் இளம் பாடகர் திவாகர் இந்தப் பாடலை, மாமா மாப்ளே வரை மிகவும் அருமையாக  இசைத்து முடிக்கவும், எஸ் ஜானகி அவர்கள் மேடைக்கே சென்று உச்சி மோந்து பாராட்டிப் பரிசும் வழங்கி, பக்க வாத்திய கலைஞர்களையும் ஆசீர்வதித்து இறங்கிய காட்சி மறக்க முடியாதது.

பத்மினி பிக்சர்ஸ் பதாகையில் 55 படங்களை வழங்கிய பந்துலு அவர்கள். ஆகப் பெரும்பான்மையான படங்களை அவரே இயக்கவும் செய்தவர். ஏராளமான நஷ்டங்களை சந்தித்தும், திரைக்கலையின் மீதான தமது காதலை முறித்துக் கொள்ளவில்லை அவர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற அசாத்திய வெற்றிப்படங்கள் பல குவித்தவர். இளம் வயதில், புகழ் பெற்ற ஹம்பி புராதன கட்டிடங்கள் பார்த்தபோதே நினைத்துக் கொண்டாராம், என்றைக்காவது எனது கனவுக் கலையில் அவற்றை மிளிரவைப்பேன் என்று. அதைச் செய்தும் காட்டியவர். சிவாஜியை வைத்து நிறைய எடுத்தவர், ஒரு கட்டத்தில் எம் ஜி ஆரை வைத்துப் படங்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவை முதன்முறை எம் ஜி ஆரோடு இணையாக நடித்த வைத்தவர். கன்னடத் திரைப்பட உலகம் கொண்டாடிய அவரது நூற்றாண்டு (1911-2011), தமிழ்த் திரையுலகத்தில், கலையுலகில் கண்டு கொள்ளப்படாது கடந்து போனதைப் பற்றிய கட்டுரையைத் தற்செயலாகப் படித்தபோது அத்தனை வேதனை பரவியது நெஞ்சில். அற்புதமான அந்தக் கட்டுரையில் கொட்டிக் கிடக்கின்றன செய்திகள் ( https://www.thehindu.com/features/cinema/a-100-goes-unsung/article2853657.ece )

பலே பாண்டியா படம், எந்தக் காலத்திலும் ரசித்துப் பார்க்கத் தக்க படைப்பு. மனிதர்களுக்குள் எழும் ஆசை தான் படத்தின் சரடு. நியாயமான ஆசை, அநியாயமான ஆசை இரண்டுக்குமான போராட்டம் தான் திரைக்கதை. ஆசையை அழித்து அன்பு ஓங்கி நிற்பது படத்தின் நிறைவான நிறைவுக் காட்சி. 

(ரசனை பரவும்…)
கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmailcom

காளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்

The most loved couple of Life OK- Mahadev & Parvati | Mahadev, Shiva parvati images, Devon ke dev mahadev

ஆறாம் சர்க்கம்

 

தந்தையிடம் விவாகம்  பற்றி பேசுவதே உசிதமென தோழி மூலம் கூறினள்

சிவபெருமான் பதிலை நாடி வெட்கத்தில் நாணி பேசாமல் நின்றாள்

பிரானும் அப்படியே செய்வதாய்க் கூறி  சப்தரிஷிக்களை எண்ணினார்

நினைத்த மாத்திரத்திலேயே சப்தரிஷிக்களும் அருந்ததியும் அங்குவந்தனர்

சிவனைக் காணவருவதால் ஆகாயகங்கையில் நீராடிவிட்டு வந்தனர்

கானகக் கற்பகமரம் போல் அணிகலன் இருந்தும் பற்றின்றி இருந்தனர்

சப்தரிஷிக்கள் வருவது கண்டு சூரியதேவனும் வணங்கி வழிவிட்டான்

பிரளய காலத்தில் விஷ்ணு காத்த பூமிபோல அழிவின்றி இருந்தவர்கள்

பிரும்மருக்கு உலகைப்படைப்பதில் உதவிய ஆதி பிரும்மரும் இவர்களே

தவத்தினால் தூய்மைபெற்ற இவர்கள் தொடர்ந்து தவத்தைத் செய்தனர்

சப்த்ரிஷிகளுக்குள் முதலாமவர் வசிஷ்டர் அவர் பாதம் பணிபவள் அருந்ததி

அருந்ததியுடன் வந்த சப்தரிஷிகளை சிவனும் மகிழ்வுடன் வரவேற்றார்

வசிஷ்டர் அருந்ததி இல்லறம் கண்ட பிரான் அந்த அறத்தையே விரும்பினார்

மன்மதன் தூண்டியபோது சினந்தவர் தர்மம் தூண்டியபோது மகிழ்ந்தார்

சிவனைக் காணும் பேறுபெற்ற முனிவர் பிரானைப் பூஜித்து பேசலுற்றார்

 

“தர்மம்  காத்து வேதம் போற்றியதன் பலனை இன்று யாம் பெற்றோம்

உலகையே காக்கும் பிரான் எங்களை நினைத்தது பாக்கியத்தின் பாக்கியம்

சிவனை நினைத்தாலே முக்தி சிவனே நினைக்க பெற்ற பேறுதான்  என்னே

சிகரத்தில் இருக்கும் நாங்கள் இன்று மகோன்னதபதவி அடைந்தோம்

திருஷ்டி பெற்ற நாங்கள் எண்ணத்தில் செயலில் மேலும் உயர்ந்தோம்

எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை  என்பதும்   தாங்கள் அறியாததல்ல

கண்ணால் கண்டாலும்  தங்கள் ஆற்றல் அறியும் ஆற்றல் எங்களுக்கில்லை

முத்தொழிலையும் புரிந்து வரும்  தங்களின்  தற்போதைய கோலமென்ன?

எது எவ்வாறாயினும் எங்களுக்கு இட்ட  கட்டளைஎன்னவென்று இயம்புங்கள்

 

முனிவர் உரைகேட்ட நம்பிரான் புன்னகையில் பிறை மின்ன பதில்அளித்தார்

 

“முனிவீர்காள்! சுயநலமின்றி உதவுதல் என்செயலென நீவிர் அறிவீர்!

தாரகாசுரனை அழிக்க  என்மகன் வரவேண்டும் என்பது தேவர்களின் அவா

அக்னிபோன்ற மகனைத் தரவேண்டி  பார்வதியை மணக்க விழைகின்றேன்

இமவான்  இல்லம்சென்று பார்வதியைப்  பெண்கேட்டு  நீவிர் வரவேண்டும்

யாகத்தில் பாகம் பெரும் இமவானின் சம்மந்தம் எனக்கும் பெருமை தரும்

பெருமைமிக்க தங்களுக்கு மணம் பேசி முடித்தல்  இயலாத செயலன்று

அருந்ததிதேவி உடன்வந்தது  அனுகூலமாய் உறுதுணையாய் இருக்கும்

இமவான் நகர் சென்று மணம் பேசி முடித்து எமைக்காண வந்திடுவீர்”

 

சிவனும் மணவாழ்வை விரும்புகிறார் எனஅறிந்த முனிவர் மனமகிழ்ந்தனர்

சிவன் ஆணையை சிரமேற்கொண்டு முனிவர் அனைவரும்  புறப்பட்டனர்

மனோவேகம் கொண்ட அவர்கள்  விண்வழியே ஔஷதிப்ரஸ்தம் சென்றனர்

 

முனிவர் அடைந்த  ஔஷதிப்ரஸ்தம் சொர்க்கத்தை விஞ்சிய எழில்நகரம்

கங்கை அணியாக ஒளிச் செடிகள் மின்ன ரத்தினங்கள் மதிலான  நகரம்

மனிதரும் விலங்கும் பறவையும் கொஞ்சிக் குலாவிடும் எழில் நகரம்

மேக ஒலியுடன் மிருதங்கமும் போட்டியிடும் உயர் மாளிகை நிறை நகரம்

கல்பக மரஉச்சியில் பட்டுத்துணி  பறக்க இயற்கைப் பதாகையுடை நகரம்

மாடத்தில் மின்னும் நட்சத்திரங்கள் விரித்த மலரென அழகூட்டும்  நகரம்

இரவில் செல்லும் காதல் பெண்களுக்கு  செடிகளே ஒளிகாட்டும் நகரம்

காதல் நோய் தவிர்த்து மற்ற நோய்நொடி அறியா  மாந்தர்வாழ் நகரம்

ஊடல் புரியும் காதல் பெண்ணின் கோபத்தை காதலர் ரசிக்கும் நகரம்

நகரைச் சுற்றி  எழில்மலைகள் உத்யான வனமாகக் கொஞ்சும் நகரம்

 

சொர்க்கத்தை விஞ்சும் ஔஷதிப்ரஸ்தம் சப்தரிஷிக்களை மயக்கியது

வான்வழி வந்த சப்த முனிவர் சடாமுடி பறக்க இமவான் இல்லம் சென்றனர்

நீரின் அலையில் தெரியும் சூரியபிம்பமென முனிவர் ஒளிவீசி நடந்தனர்

முனிவர் வருகை கண்டு இமவான் வணக்கத்துடன் எதிர்கொண்டு சென்றான்

மலையென வருபவன் இமவானே என மனதால் கண்டு தெளிந்தனர் முனிவர்

வணங்கி வரவேற்ற இமவான் தானே வழிகாட்டி  அழைத்துச் சென்றான்

அந்தப்புரம்  வந்த முனிவர்களை ஆசனத்தில் அமர்த்தி கைகூப்பி பேசினான்

 

“ முனிவரீர் மேகமின்றி வந்த திடீர் மழைபோல் தங்கள் வருகை இனியதே

பெருமக்கள் வரவு எனக்குப்  பெருமையையும் உயர்வையும்  தருகின்றன

பெருந்தகையர் பாதம் பட்டதும் என் மலைவடிவு புண்ணியத் தலமாயிற்று

கங்கையும் முனிவர்தம்  பாதத்துளிகளும்  எம்மைப் புனிதமாக்குகின்றன

பாதம்பட்டதால் மலைவடிவும் சேவை ஏற்றதால் மனிதவடிவும் பேறு பெற்றன

முனிவரீர்  வருகை தந்த மகிழ்ச்சி என் உடலெங்கும் கொப்பளிக்கிறது

முனிவரீர்தம் ஒளிவெள்ளம் என்மன இருளை அறவே அகற்றிவிட்டது

எதையும் சாதிக்கவல்ல பெருமக்களுக்கு அடியேன் என்ன செய்ய இயலும் ?

தங்களுக்குப் பணி புரியும் வாய்ப்பினைத் தவறாமல் தந்தருளுங்கள்

நான் என் மனைவி மகள் அனைவரும் தங்கள் அடிமை ஆணையிடுங்கள்”

 

இமவான்  கூற்று பலமுறை சொல்வது போல் மலைகளில் எதிரொலித்தது

பிச்சை – தீபா மகேஷ்

 

 

This Moving Project By A Transgender Activist Perfectly Highlights The Plight Of The Pakistani Transgender Community

அடையாறு சிக்னலில் அந்த மதிய வேளையிலும் டிராபிக் அதிகமாகத்தான் இருந்தது. ராகவ் கார் ஸ்டீயரிங்கை பிடித்தபடியே மணி பார்த்தான். ரெண்டே முக்கால். மூன்று மணிக்கு க்ளையன்ட் மீட்டிங். இந்த சிக்னல் தாண்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்.

அலுவலகத்தில் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும் போதே ரெண்டரை ஆகிவிட்டது. அவன் பாஸ்தான் போவதாக இருந்தது. ஆனால், திடீரென்று ராகவ் ‘ கே ன் யூ ப்லீஸ் கோ? ஐ ஹேவ் ஸம் இம்போர்ட்டண்ட் வொர்க் டு ஃபினிஷ்’ என்று இவன் தலையில் கட்டிவிட்டார்.

‘பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்’ என்ற முன்னோர் வாக்கின்படி உடனே கிளம்பினான்.

கிளம்பின அவசரத்தில் ஏதாவது முக்கியமான பேபர்ஸ் மறந்து விட்டோமோ என்று யோசித்தான். அப்புறம், ஸெல் ஃபோனில் தான் உலகமே இருக்கிறதே , சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

ஏதேதோ யோசனையில் ஸ்டீரிங்கில் தாளம் போட்டபடி இருந்தவன் அந்த சத்தம் கேட்டு திரும்பினாான். கார் கதவின் கண்ணாடியை “டொக்”, “டொக்” என்று தட்டினாள் அவள்.

கொஞ்சம் வயதான தோற்றம். மெலிந்த தேகம். மாநிறம். கலைந்த தலைமுடி. சாயம் போன பச்சை நிறத்தில் ஒரு புடவை. கையில் சில கண்ணாடி வளையல்கள். கழுத்தில் பழுப்பேறிய ஒரு மஞ்சள் கயிறு. வாடிய முகம், வியர்வை கோடுகள் என தளர்ந்து போய் பார்க்க பரிதாபமாக இருந்தாள்.

ராகவ் யோசனையோடு கார் ஜன்னலை இறக்கி ‘என்ன’ என்பது போல பார்த்தான். “சார், ப்ளீஸ் ஹெல்ப். என் ஹஸ்பண்ட்ட கேன்சர் இன்ஸ்டிடியூட்ல சேர்த்திருக்கேன். ஹாஸ்பிடல் ரெஜிஸ்ட்ரேஷன்க்கும் மருந்துக்கும் பணம் கட்டணும், டூ செவ்ன்ட்டீ ருபீஸ் ஈச். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”, என்றாள்.

அவளைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய பரிதாப உணர்ச்சி சட்டென்று மறைந்து அறிவு விழித்துக் கொண்டது. தரமணி, திருவான்மியூர் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் பலரைப் பார்த்திருக்கிறான்.. அழுக்கு உடை, பரட்டை தலை, கையில் குழந்தை என ரகம் ரகமாக கார் கதவை தட்டி பிச்சைக் கேட்பார்கள் பெரும்பாலும் அதே ஆட்கள் தான் ‘டியூட்டி’ மாறி வருவார்கள்.

இவள் அவர்களில் ஒருத்தியாக இருப்பாளோ? இது ஒரு நூதன முறை ஏமாற்று வேலையோ? ஆனால் இவள் பார்ப்பதற்குப் பிச்சைக்காரி போல இல்லையே? இங்கிலீஷ் எல்லாம் பேசுகிறாளே? இவர் சொல்வது ஒரு வேளை உண்மையாக இருக்குமோ? இவள் கணவர் ஒருவேளை நிஜமாகவே ஹாஸ்பிடலில் இருக்கிறாரோ?
அப்படி இருந்தால் அவரைக் காப்பாற்ற கையில் பணம் இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை.

மனதில் இயல்பாக தோன்றிய கருணை, புத்தியை அடக்கியது.

கண் எதிரே உதவி கேட்டு நிற்பவளை எப்படி உதாசீனம் செய்வது? இவளுக்கு உதவி செய்யாமல் போனால் அந்த குற்ற உணர்வு என்னை உறுத்தாதா?” என்றெல்லாம் யோசித்தான்.

மறுபடியும், “சார், ப்ளீஸ்.. ஹெல்ப் பண்ணுங்க”, என்றாள் அவள். சிக்னல் பச்சையாவதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தன. ராகவுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

இல்லாமை என்னுமொரு
பொல்லாத பாவியாய்
எந்நேரமும் இடருராமல்
ஏற்காமல், ஏற்பவர்க்கு
இல்லை என்று உரையாமல்

கற்பகவல்லியம்மை பதிக வரிகள் அவன் மனதில் ஓடின.

சட்டென்று முடிவு செய்து தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐநூறு ருபாய் தாளை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதைக் கையில் வாங்கியவள் “தேங்க்ஸ்” என்று சொல்லுவதற்குப் பதிலாக “சார் , ஐநூறு பத்தாது. ஆஸ்ப்பிட்டல்க்கு 270, மருந்துக்கு 270” என்றாள்.

அவசரத்தில் தனக்குக் கணக்கு மறந்து போனது அப்போது தான் உரைத்தது. அதற்குள் சிக்னல் போட்டு வண்டிகள் நகர ஆரம்பித்திருந்தன. மேலும் ஒரு நூறு ருபாய் தாளையும் கொடுத்து விட்டு அவள் நன்றிக்குக் காத்திராமல் வண்டியைக் கிளப்பினான்.

வழியெல்லாம் நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தான் . மனதில் பொங்கிய கருணையெல்லாம் வடிந்து புத்தி மறுபடியும் வேலை செய்யத் தொடங்கியது.

சே !! இது என்ன முட்டாள்தனம் !! முன்ன பின்ன தெரியாதவங்க கேட்டா, அப்படியே 600 ருபாய் எடுத்துக் கொடுத்துடறதா? அவங்க சொல்றது உண்மையா பொய்யான்னு எல்லாம் விசாரிக்க வேண்டாமா? முதல்ல கொடுத்த ஐநூறு பத்தாதுன்னு அப்புறம் ஒரு நூறு வேற. சரியான ஏமாளி நான், என்று ராகவிற்குத் தன் மீது கோபம் கோபமாய் வந்தது.

நல்ல வேளை, அதற்குள் க்ளையன்ட் ஆஃபீஸ் வந்து விட்டது. காரைப் பார்க் செய்துவிட்டு, வந்த வேலையை நினைவுப் படுத்திக் கொண்டு நடந்ததை மறக்க முயன்றான்.

ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை.

வலிய தானே போய் ஒரு பெருஞ்சுமையை தலையில் ஏற்றிக் கொண்டது போலிருந்தது.

எதற்காக இந்த கோபம்? யார் மீது வெறுப்பு? அவள் மீதா, தன் மீதா? அறுநூறு ரூபாய் கொடுத்ததற்கா? இல்லை ஏமாந்து போனதற்கா? இல்லை இரண்டிற்கும் சேர்த்தா? தெரியவில்லை.

“என்ன ஏதோ யோசனைலேயே இருக்கீங்க?“ இரவு உணவின் போது அமுதா கேட்டாள்.

மதியம் நடந்ததைச் சொல்லலாமா என்று ஒரு கணம் தோன்றிய எண்ணத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டான்.

வேண்டாம், இப்போது சொன்னால் அவள் ஒன்று சொல்ல நான் ஒன்று சொல்ல தேவையில்லாமல் ஒரு விவாதம் ஆரம்பிக்கும். அதற்கெல்லாம் எனக்குத் தெம்பில்லை என்று நினைத்து “ஒன்றுமில்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.

அவளும் அதற்கு மேல் எதுவும் வற்புறுத்திக் கேட்கவில்லை.

முன்பெல்லாம் இருவருமாக வெளியே போகும் போது யாராவது பிச்சை கேட்டால் , ராகவ் கொடுக்காமல் வர மாட்டான்.

கோவில் வாசலில், கடைத் தெருவில், ரோட்டில், சிக்னலில் என்று எங்கும், கையேந்தும் எவருக்கும், அவன் இல்லை என்று சொன்னதில்லை.

‘பொண்ணுக்கு கல்யாணம் யா, மடிப்பிச்சை போடுங்க “

“கண்ணுச்சாமி ஐய்யா, சபரி மலைக்கு மாலை போட்டிருக்கு, காணிக்கை கொடுங்கய்யா”

வித விதமான தேவைகள் … வேண்டுதல்கள் …

என்ன சொல்லிக் கேட்டாலும், ராகவ் அஞ்சோ பத்தோ கொடுக்காமல் வரமாட்டான். சில சமயங்களில் அது ஐம்பது , நூறு எனப் போவதும் உண்டு, ஆனால் இந்த விஷயத்தை பொறுத்த வரை அமுதாவின் பார்வையே வேறு.

“ராகவ், இதெல்லாம் என்கரேஜ் பண்ணாதே. இதுல ரொம்ப பேர் பிராடு பேர்வழிங்க. இது ஒரு பெரிய இல்லீகல் நெட்ஒர்க் , தெரியுமா” என்பாள்.

“இதுல என்ன பெரிய தப்பு ? நான் குடுக்கிற பத்து இருபதுல என்ன பிரச்சனை வரும் ? அவங்க வயித்துப் பசிக்குப் பிச்சை எடுக்கிறாங்க. இந்த உலகத்தில பசி எல்லாருக்கும் ஒண்ணுதானே. பசிக்கறபோது சாப்பிட பணம் இல்லங்கறது எவ்வளவு பெரிய கொடுமை, யோசிச்சிப் பார்”.

“அப்படி இல்ல ராகவ். பசிக்கறவங்களுக்கு உதவி பண்ணனும்னா சாப்பாடு வாங்கிக்கொடு. பணம் கொடுக்காதே. உன் நல்லா மனசை, செய்யற உதவிய அவங்க சுயலாபத்துக்குப் பயன்படுத்தி உன்னை ஏமாத்தறாங்க, புரிஞ்சிக்கோ ” என்பாள்.

அவள் சொல்வதிலும் கொஞ்சம் நியாயம் இருப்பது போல் தோன்றியது. ஆனால்,பிச்சை கேட்பவர்களுக்கு எல்லாம் சாப்பாடு மட்டும் வாங்கிக் கொடுத்துத் தீருமா? உணவைத் தாண்டியும் மனிதனுக்குத் தேவைகள் இருக்கத்தானே செய்கின்றன ? பணம் இல்லாமல் இந்த உலகில் என்ன தான் நடக்கும்?

ஆனாலும் அமுதா சொன்னதற்காக உணவு பொட்டலங்கள் வாங்கி, பூக்காரப் பாட்டி, இளநீர் விற்கும் தாத்தா, குப்பை அகற்றும் கார்பரேஷன் தொழிலாளிகள் என்று எல்லோருக்கும் கொடுப்பான். அதை வாங்கும்போது அவர்கள் கண்களில் தெரியும் சந்தோஷம் அப்படியே மனதை நிறைத்துவிடும்.

சில சமயம் வினோத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.

ஒருமுறை பிஸியாக குப்பையைக் கிளறிக் கொண்டிருந்த ஒருவரிடம் உணவு பொட்டலத்தை நீட்டிய போது, ” என்ன சார் இது, சாப்பாடா ? வெறும் இட்லினா வேண்டாம் ” என்று சொல்லிவிட்டு பிறகு அதைத் திறந்து பார்த்து , ‘ஓ கேசரி , பொங்கல் எல்லாம் இருக்கா’, என்று வாங்கிக்கொண்டார்.

யார் சொன்னது, “பெகர்ஸ் காண் ட் பி சூஸெர்ஸ்” என்று.

ஆனாலும் அவன் கேட்ட அதட்டல் தோரணையில் கொஞ்சம் ஆடித்தான் போனான். இதை வந்து அமுதாவிடம் சொன்ன போது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

அடுத்தடுத்துத் தோன்றிய எண்ண அலைகளில் தொலைந்து போய், அப்படியே உறங்கிப் போனான்.

காலையில் அலுவலகம் செல்லும் போது, தன்னிச்சையாக அந்த சிக்னலில் கண்கள் அவளைத் தேடின. ஆனால் மனதுக்குள், கடவுளே, நான் அவளைப் பார்க்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டான்.

அலுவலகத்தில் வேலை சரியாக இருந்தது. ஆனாலும் இடை இடையே நான் நேற்று செய்தது சரியா என்ற கேள்வி மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில், இந்த கேள்விக்குத் பதில் தெரிந்து மனம் சமாதானம் ஆகாவிட்டால் வேலையைத் தொடர முடியாது போல இருந்தது.

காலண்டர் சாயங்காலம் மீட்டிங் ஒன்றும் இல்லை என்று சொல்லியது. நல்லதாய் போச்சு.

அம்மாவைப் பார்த்து விட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவு செய்து காரை எடுத்தான்.

நீ இன்னிக்கு வருவனு தோனிச்சுடா என்றபடியே வரவேற்றாள் அம்மா. எப்படி தெரியும் என்ற கேட்க நினைத்து பின் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.

சூடான காபியின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது. அந்த வாசனையை அப்படியே உள்ளிழுத்தான்.

காபியை சுவைத்தபடியே நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான்.

அம்மா பொறுமையாக கேட்டுக் கொண்டாள்.

பிறகு, ஒரு கணம் அவனை ஆழமாகப் பார்த்து, “ராகவா, இந்த உலகத்தில பெரிய விஷயம் என்ன தெரியுமா?

அன்பும் கருணையும் தான்.

அந்த அம்மா உன் கிட்ட யாசகம் கேட்ட போது உன் இதயத்தில ஒரு நிமிஷம் அன்பும் கருணையும் வந்துது பார், அது தான் நிஜம். அது தான் கடவுள்.

அவங்க நல்லவங்களா கெட்டவங்களா, என்ன ஏமாத்தினாங்களா, நான் பண்ணினது சரியா, தப்பா, இதெல்லாம் மாறிக்கிட்டே இருக்கற மனசோட ட்ரிக்ஸ். இன்னிக்கு சரின்னு தோணும், நாளைக்கே தப்புனு தோணும்.

நீ அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்காதே. இறந்த காலமும் எதிர் காலமும் நம்ம மனசுல தான் இருக்கு. நிஜத்துல இல்ல.

அதனால நீ அத உன் தலையில சுமக்க வேண்டிய அவசியம் இல்ல, புரிஞ்சுதா?“ என்றாள்.

அவள் சொன்ன விதத்தில் வாழ்வின் அத்தனை சூட்சுமங்களும் புரிந்தது போல் இருந்தது. மனம் நொடியில் லேசாகியது.

அதன் பிறகு அவன் அதை மறந்தே போனாள்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் மதியம் ஆஃபீசிலிருந்து கிளம்பி வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தான்.

அடையார் சிக்னலில் நின்ற போது, அவனுக்கு முன்னால் இருந்த காருக்கு அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள். தள்ளி இருந்ததால் முகம் சரியாகத் தெரியவில்லை.

இனம் புரியாத ஒரு உணர்வு சட்டென்று மனதில் படர்ந்தது.

“இறந்த காலமும் எதிர் காலமும் நம்ம மனசுல தான் இருக்கு. நிஜத்துல இல்ல. அதனால நீ அத உன் தலையில சுமக்க வேண்டிய அவசியம் இல்ல, புரிஞ்சுதா.”

அம்மாவின் வார்த்தைகள் மனதில் ஒலித்தன.

ராகவ் எஃப் எம்மை பெரிதாக்கி விட்டு சிக்னலை நோக்கி விரைந்தான்

********

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020

 

 

 

  1. நானும் செய்வேன்!

எங்கள் வீட்டு வேலைகளை

நானும் செய்வேன் !

அம்மா அப்பா இருவருக்கும்

உதவிகள் செய்வேன் !

 

வாசல் தெளிக்கப் போகும்போது

தண்ணீர் இறைப்பேன் !

அம்மா கோலம் போடும்போது

புள்ளிகள் வைப்பேன் !

 

அடுக்களையில் சமைக்கும்போது

பாத்திரம் தருவேன் !

அப்பா காய்கள் நறுக்கும்போது

நானும் கற்பேன் !

 

வீட்டை சுத்தம் செய்யும்போது

ஒத்தாசைகள் செய்வேன் !

துணிகள் அவர்கள் தோய்க்கும்போது

உலர்த்தவும் செய்வேன் !

 

தோட்டத்திலே செடிகளுக்கு

தண்ணீர் வார்ப்பேன் !

அப்பா கடைக்குப் போகும்போது

பையை சுமப்பேன் !

 

சின்னவனாய் இருந்தாலும்

நானும் மனிதன் !

சிறுமியாய் இருந்தாலும்

நானும் பெண்தான் !

 

அம்மா அப்பா, இதோ வரேன்

நானும் அங்கே !

உங்களுக்கு உதவியாக

என்றும் இருப்பேன் !

             

 

  1. அணிலே ! அணிலே !

அணிலே, அருகில் வந்தே உன்

அன்பை அழகாய் காட்டுகிறாய் !

எங்கே கற்றாய் இந்த பாசம்

எனக்கும் அதனை சொல்லிக்கொடு !

 

எங்கள் வீட்டில் கொய்யா பழுத்தால்

உடனே உண்ண வருகின்றாய் !

உன் சின்ன வாயால் கடித்துக் கடித்து

எனக்கும் கொஞ்சம் தருகின்றாய் !

 

இங்குமங்கும் மரத்தில் ஏறி

ஓடிப் பிடித்து ஆடுகிறாய் !

உன்னைப் பார்த்தால் எனக்கும் இங்கே

உற்சாகம்தான் பிறக்கிறதே !

 

உட்கார்ந்துகொண்டு கொறிக்கும்போது

என் உள்ளத்தை அள்ளிப் போகின்றாய் !

அம்மா உன்னை தேடி வருவாள் –

அதற்குள் நீயும் திரும்பிப் போ !

 

கீச் கீச் என்று கத்திக் கொண்டே

வீட்டைச் சுற்றி வருகின்றாய் !

அணிலே, அணிலே, நானும் வாரேன் –

உன் விளையாட்டில் என்னைச் சேர்த்துக் கொள் !

 

நாட்டிய மங்கையின் வழிபாடு-3 –     மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ் 

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன் | சொல்முகம் வாசகர் குழுமம்

 

 

 

 

 

 

 

 

 

 

முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்;

தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.

          இளவரசன் அஜாதசத்ரு விரும்பியவண்ணம் அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான் பிம்பிசாரன். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பாததால் மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.

          ஸ்ரீமதி எனும் நாட்டியமங்கையிடம் உபாலி எனும் பிட்சு யாசகம் வேண்டி வருகிறார். எதைக் கொடுப்பது எனத் திகைப்பவளிடம் உரிய சமயத்தில் கடவுளே அதனைப் பெற்றுக்கொள்வார் எனக் கூறுகிறார். மாலதி என்றொரு கிராமத்துப்பெண் வழிபாட்டுவேளையில் பணிபுரிய ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள்…..

          இனித் தொடர்ந்து படிக்கவும்………….

       

மாலதி: சகோதரி, நான் அதனை எவ்வாறு கூறுவது? நெருப்பைப்போன்ற ஒரு குரல் காற்றில் வந்தது. ஒருநாள் என் சகோதரன் அதனைச் செவியுற்றான். அவன் பதினெட்டே வயது நிரம்பியவன். நான் அவனது கையைப் பிடித்து நிறுத்தி, “என் சகோதரா, எங்கே செல்கிறாய்?” எனக்கேட்டேன். “அதனைத் தேடிச் (அந்தக் குரலை நாடி) செல்கிறேன்,” என்றான் அவன்.

ஸ்ரீமதி: இன்று கடல் தனது அழைப்பை எல்லா நதிகளின் அலைகளுக்கும் அனுப்பியுள்ளது; ஆகாயத்தில் முழுநிலவு பிரகாசிக்கின்றது. (மாலதியின் கரத்தைப் பற்றிக்கொண்டு) ஆனால் இது என்ன? உன் விரலில் ஒரு மோதிரம்! புழுதியின் விலைக்குத் தேவலோகத்து மலர் ஒருத்தி தன்னையே விற்றுவிட்டாளா?

மாலதி: நான் இதன் கதையை உங்களுக்குக் கூறுகிறேன், அப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஸ்ரீமதி: மிகுதியான துயரம் எனக்கு அனைத்தையும் புரிந்துகொள்ளும் சக்தியை அளித்திருக்கிறது.

மாலதி: நாங்கள் ஏழைகளாக இருந்தபோது அவர் செல்வந்தராக இருந்தார். நான் மௌனமாக அவரை தொலைவிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து என்னிடம் அன்புசெலுத்துவதாக பகிரங்கமாகக் கூறினார். என் தந்தை,”மாலதி அதிர்ஷ்டசாலி,” என்று கூறினார். நேரம் கூடிவந்தபோதில் அவர் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்தார் – ஒரு மணமகனின் உடைகளிலல்ல – ஒரு பிட்சுவின் ஆடையணிந்து வந்தார்; என்னிடம் கூறினார்: “நாம் எங்காவது எப்போதாவது சந்திக்க நேரிட்டால், அது இங்கல்ல, ஆனால் விடுதலையின் பாதையில்தான்.”

சகோதரி, என்னை மன்னிப்பாயாக! என் கண்கள் கண்ணீரால் நிறைந்துள்ளன, ஏனெனில் என் இதயம் பலவீனமாக உள்ளது.

ஸ்ரீமதி: பயப்படாதே, சகோதரி, உனது கண்ணீர் தடையின்றிப் பெருகட்டும். உனது விடுதலைப் பாதைக்கு அது வழிவகுக்கும்.

மாலதி: நான் அவரை வணங்கிக் கூறினேன்: “எனது பிணைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது. நீங்கள் வாக்குறுதி தந்தபடி அந்த மோதிரத்தை எனக்கு அளியுங்கள்.” இதுவே அவர் தந்த அந்த மோதிரம். இது என் விரலிலிருந்து நழுவி எப்போது, என்று நமது கடவுளின் சன்னிதியில் விழுகின்றதோ அப்போது நாங்கள் விடுதலையின் பாதையில் திரும்பச் சந்திப்போம்.

ஸ்ரீமதி: தங்கள் இல்லங்களை (வாழ்க்கையை) அமைத்துக்கொண்ட எண்ணற்ற பெண்கள் இன்று அவற்றை உடைத்தெறிகின்றார்கள். எண்ணற்ற பெண்கள் இன்று துறவிகளின் உடையணிந்து திறந்த சாலைகளில் செல்கின்றார்கள். இது வழியின் (மார்க்கம், பாதை) அழைப்பா அல்லது வழிப்போக்கனின் அழைப்பா? யாருக்குத் தெரியும்? எத்தனைமுறை நான் எனது கைகளைக் கூப்பியவண்ணம், எனது இதயமும் ஆத்மாவும் இணையத் தொழுதிருப்பேன்: “மகாபுருடரே! பெருமைவாய்ந்த தாங்கள் இரக்கமின்றி இருக்காதீர்கள். தாங்களே பெண்களின் கண்களில் நீரைப் பிரளயமாக வரச்செய்துள்ளீர்கள்; அவர்களுக்கு அமைதியை அளிப்பவரும் தாங்களாகவே இருக்க வேண்டும்!”

(ஒருபுறம் திரும்பி நோக்கி) இதோ நமது இளவரசிகள் வருகின்றார்கள்.

                    இளவரசிகள் உள்ளே நுழைகின்றனர்.

வாசவி: யார் இந்தப்பெண்? எங்கே, நான் அவளைப் பார்க்கட்டும்! தனது தலைமயிரைச் சுருட்டிக் கோபுரம் போலத் தலைமீது வைத்துக்கொண்டு அதன்மீது ஒரு ஜாவா -மலரையும் தனது காதின் மீதான அந்த மயிர்க்கற்றைகளில் அணிந்திருக்கிறாள்! நந்தா, பாரேன், அந்த ஆகண்டா மலர்களாலான மாலை அவளுடைய குழற்கற்றைகளில் எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்று பாரேன். அதுவென்ன சிவப்புநிற விதைகளாலான அந்தக் கழுத்துமாலை? எங்கிருந்து அவள் வந்தாள், ஸ்ரீமதி?  

ஸ்ரீமதி: அவளுடைய கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள்; அவள் பெயர் மாலதி.

ரத்னாவளி: ஒரு அபூர்வமான கைப்பற்றப்பட்ட பொருள்! எங்களுடைய ஆத்மாக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, இந்த கிராமத்துப் பெண்களிடம் உன்னுடைய புனிதமான பொருட்களைத் திணிக்கிறாய்.

ஸ்ரீமதி: கிராமத்துப் பெண்களிடம் இவற்றிற்குக் குறைவில்லை, இளவரசி. புழுதியாலும் ஆபரணங்களாலும் களங்கப்படுத்தப்படாத தேவலோகத்தின் எண்ணங்கள் அவர்களிடம் எப்போதுமே உள்ளன; தேவலோகமும் தனக்குரியதைச் சுலபமாக அறிந்து கொள்கின்றது.

ரத்னாவளி: தேவலோகத்தின் இன்பங்களை உனது போதனையால்தான் அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் நான் அவற்றின் மீதான விருப்பத்தையே விட்டுவிடுவேன்!

நந்தா: அன்புள்ள அஜிதா, பாவம் இந்த ஸ்ரீமதியை இவள் ஏன் எப்போதும் இப்படிக் கிண்டல்செய்து வெறுப்பூட்டுகிறாள்? ஸ்ரீமதி யாருக்கும் போதனை செய்வதில்லையே……

வாசவி: ஓ! அவளுடைய அமைதியில் உலகிற்கான பல போதனைகள் பொதிந்துள்ளன. பார், அவள் எவ்வாறு புன்னகை புரிகிறாள்! அதுவே ஒரு போதனையாகத் தோன்றவில்லையா?

ரத்னாவளி: மிகவும் பொருள்பொதிந்தது! வார்த்தைகளால் விவரித்தால் இவ்வாறு சொல்லலாம்: “தாங்கள், கொடுமையை இனிமையால் அழிக்கலாம்; வீண்வாதத்தை ஒரு புன்னகையால் வெல்லலாம்.”

வாசவி: ஸ்ரீமதி, நீ (இவர்களின் சொற்களிலிருந்து) ஏன் உன்னைக் காத்துக்கொள்ளக் கூடாது? உனது அளவற்ற இனிமை எங்களுக்குத் திகட்டுகின்றது. மற்றவர்களை அவமானப்படுத்துவதனைவிட, கோபம்கொள்ளச் செய்வது எத்தனையோ கருணைமிகுந்ததாகும்.

ஸ்ரீமதி: நான் மிக நல்ல உள்ளம் படைத்தவளாக இருந்தால், கெட்டவளாக இருப்பதைப்போல வேஷம்போட இயலக்கூடும். நிலவுக்குத் தனது நிழலைக் காட்ட உரிமையுண்டானால், நிலவற்ற இரவும் மேகத்தை முகமூடியாக அணியக்கூடாதா என்ன?

அஜிதா:  பார்! அந்த கிராமத்துப்பெண் பேச்சற்று நிற்பதனை! அரண்மனைப் பெண்களின் நாக்குகள் (சொற்கள்) தேன்போல இனிமையாக இல்லாமல் கூராகக் குத்துகின்றனவே என  எண்ணிக்கொண்டு ஆச்சரியத்தில் அவள் நிற்கிறாள்.

(மாலதியிடம்) உனது பெயரென்ன, குழந்தாய்? நான் அதனை மறந்துவிட்டேன்.

மாலதி: மாலதி.

அஜிதா: நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாய் என்று எங்களுக்குச் சொல்.

மாலதி: உங்களுடைய கூர்மையான சொற்களைக்கேட்டு நான் வருந்தினேன்- ஏனென்றால் நான் எனது சகோதரியிடம் அன்புசெலுத்த வந்துள்ளேன். (ஸ்ரீமதியைச் சுட்டிக் காட்டுகிறாள்).

அஜிதா: நாங்கள் அன்பு செலுத்துபவர்களை வேடிக்கையாகக் குத்திக் கிண்டல் செய்வதுண்டு. இது அரண்மனையின் ஒருவிதமான பேச்சுத்திறமை. நினைவில் வைத்துக்கொள்.

பத்ரா: நீ இன்னும் என்னவோ சொல்ல வந்தாய் மாலதி.  நீ எங்களைப்பற்றி என்ன நினைக்கிறாய் என அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

மாலதி: நல்லது, ஒரு போதுமில்லை. நான் சொல்லவந்தது: “பாடல்களைக் கேட்கும் பொழுதை வீணாக்குகிறீர்களே, உங்களுடைய குரல்களே உங்களுக்கு இனிமையாக உள்ளதா?”

          இளவரசிகள் நகைக்கின்றனர்.

வாசவி: நல்லது, ஒரு போதுமில்லை! நல்லது, ஒரு போதுமில்லை! இந்தப் புதுவிதமான வியப்பிடைச்சொல்லைக் கேட்க நமது இலக்கணப் பண்டிதரைத் தான் கூப்பிடவேண்டும்.

ரத்னாவளி: நல்லது, ஒரு போதுமில்லை! வாசவி! அரச மகுடத்தின் தலைசிறந்த ரத்தினமே!

வாசவி: நல்லது, ஒரு போதுமில்லை! ரத்னாவளி! நிலவின் மயக்கும் எழில் படைத்தவளே! என்னவொரு மொழிப்புலமை!

மாலதி: (ஸ்ரீமதியிடம் திரும்பி) அவர்கள் என்னிடம் கோபம் கொண்டுவிட்டார்களா?

நந்தா: பயப்படாதே, மாலதி. கல்மழையைச் சொரியும்போது ஆகாயம் மலர்களிடம் கோபம் கொள்வதில்லை: அவற்றை ஆகாயம் வருடிச்செல்லும் முறை அதுவே.

ஸ்ரீமதி: (பாடுகிறாள்)

                    இரவின் மௌனமான அமைதியில் என்ன ரகசியம் என்னை வந்தடைந்தது!

                          நான் அறியேனே!

                 அது விழித்திருத்தலா, அது உறங்கியிருத்தலா?

                          நான் அறியேனே!

                 நான் வீட்டில் பணிபுரிகிறேன், நான் தெருவில் சுற்றியலைகிறேன்.

                          ஆனால், என் இதயத்தில் இது என்ன குரல் இசைக்கின்றது?

                          நான் அறியேனே!

                 சொல்லவொணாத வலியில் என் நெஞ்சம் நடுங்குகின்றதே!

                              அது பயமா? அது வெற்றியா?

                 திரும்பத் திரும்ப அது என்னிடம் கரைகின்றதே

                          “வந்து விடு!”

                 அது எதிரொலிப்பது என் இதயத்திலா அல்லது ஆகாயத்தின் ஆழங்களிலா?

                          நான் அறியேனே!

வாசவி: உன் கண்களில் நீர் நிறைந்துள்ளதே, மாலதி. அவளுடைய பாடலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

மாலதி: என் சகோதரி அந்த அழைப்பைக் கேட்டிருக்கிறாள்.

வாசவி: என்ன அழைப்பு?

மாலதி:  எந்த அழைப்பு எனது சகோதரனை அலையச் செய்ததோ, எந்த அழைப்பு என்… (தயங்குகிறாள்)

வாசவி: எனது என்ன?

ஸ்ரீமதி: சும்மாயிரு, அன்பே மாலதி! மேலே ஒன்றும் கூறாதே; உன் கண்ணீரைத் துடைத்துக்கொள். இது அழுவதற்கான இடமல்ல.

வாசவி: அவளை ஏன் நிறுத்தினாய், ஸ்ரீமதி? எங்களுக்குச் சிரிக்க மட்டும்தான் தெரியும் என நீ எண்ணுகிறாயா?

பத்ரா: சிரிப்பினால் ஒரு உயரத்தை எட்ட இயலாது என்று எங்களுக்குத் தெரியும்.

மாலதி: இளவரசிகளே, இன்று காற்றில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரலைத் தாங்கள் கேட்டீர்களா?

நந்தா: இல்லை, குழந்தாய், காலை வெளிச்சம் தாமரை தன் இதழ்களை விரிக்க உதவும்; ஆனால் அரண்மனையின் சுவர்களைத் திறக்க உதவாது.

அரசி லோகேஸ்வரி உள்ளே நுழைகிறாள்; இளவரசிகள் எழுந்து அவளை வணங்குகின்றனர்.

  (தொடரும்)

                    

 

                   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடி மேல் அடி – வளவ.துரையன்

மாணவிகளை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை - TheDindigul

 

    அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அந்த அடியும் ஒரே இடத்தில் சரியாக விழுந்தால்தான் பலன் கிடைக்கும் அம்மியும் நகரும். அடிப்பது பெரிதன்று.

அடிக்குமுன் பலமுறை யோசனை செய்ய வேண்டும். அதனால்தான் எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும் என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். ஆனால் இப்போது தெய்வம் மிகவும் தாமதமாகத்தான் வந்து அடிக்கிறது போலும். நாம்தான் பார்க்கிறோமே. அதற்கும் சோம்பல் வந்து விட்டதோ?

      வலியார் யார்? எளியார் யார்? என்பதற்கும் அளவு கோலாக அடி பயன்படுகிறது. சிலநேரம் அடியால் நன்மைகளும் உண்டு. இரும்பைக் காய்ச்சிப் பழுக்க வைத்து அடி அடியென்று அடித்தால் தான் கத்தி,சுத்தி, அரிவாள், கடப்பாரை எல்லாம் உருவாகின்றன. நாம் அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது வேறு விஷயம்.

இந்த மீட்டர் எல்லாம் வருவதற்குமுன் அடி நீட்டளலவையில் முக்கியமான பங்கு வகித்தது.12 அங்குலம் ஒரு அடி; 3 அடி ஒரு கெஜம்; 220 கெஜம் ஒரு பர்லாங்; 8 பர்லாங் ஒரு மைல் என்பது அந்தக் காலத்தில் பள்ளியில் மனனம் செய்ய வேண்டிய வாய்பாடு.

அந்த அடி வாய்பாட்டைக் குழப்பிச் சொன்னதால் நானும் அடி வாங்கியதுண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. பிள்ளைகைளைப் பள்ளியில் சேர்க்கும் போதே சரியாகப் படிக்கா விட்டால் கண்ணை மட்டும் விட்டு விட்டு உரித்துவிடுங்கள் என்று சொல்வார்கள். இப்போது வகுப்பறையில் பிரம்பே இருக்கக் கூடாது என்ற விதி உண்டு. மீறிப்பையன் மேல் கை பட்டுவிட்டால் பெற்றோர் வந்து சாலை மறியல்தான்.   

    அடி என்பது விளிச்சொல்லாகவும் சொல்லப்படுவது உண்டு. ’அடியேய்’ என்பது மனைவியை அழைக்கும் முறையில் ஒன்றாகச் சொல்வார்கள். இபோதெல்லாம் அது மாதிரிக் கூப்பிட்டால் பெண்னிய வாதிகள் ஆணாதிக்கம் என்று அடிக்க வந்து விடுவார்கள். இப்போது கணவன் மனைவி இடையே பெயர் சொல்லிக் கூப்பிட்ட காலம் கூடப் போய் இருவருமே பால் வேறுபாடு இன்றி ‘என்னப்பா’ ’வாப்பா’ ’சரிப்பா’ தான். எப்படி அழைத்தால் என்ன? மன அணைப்பு சரியாக இருந்தால் சரி.

 அடி என்பது காலால் நடந்து உண்டாக்கும் அடியையும் குறிக்கும். ”நான் வைப்பது ஒரு சிறிய அடிதான்; ஆனால் இது மனிதகுல முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான அடி” என்று நிலவில் முதல் முதல் நடந்த போது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொன்னது குறிப்பிடத் தக்கதாகும்.

தன் சிறிய காலால் மூன்று அடி மண் கேட்டு  வாங்கிப் பின் அளக்கும்போது திருவிக்ரமனாக பேருரு எடுத்துப் பெரிய காலால் அளந்தது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. சரி விடுங்கள் கடவுள் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் போல் இருக்கிறது.

காலடி என்று ஓர் ஊரே உள்ளது. ஆதி சங்கரர் அவதாரம் செய்த ஊர்.  

சில கவிதைப் போட்டிகள் பற்றிய அறிவிப்பில் இத்தனை வரிகளுக்குள் எழுதவேண்டும் என்று சொல்வார்கள். அது சரியன்று. உரைநடைக்குத்தான் வரி என்று சொல்ல வேண்டும் கவிதை, பாடல்களுக்கெல்லாம் அடி என்பதே சரி.

சிலப் படித்த பேராசிரியர்களே ‘வள்ளுவர் ஒண்ணே முக்கால் அடியில் பெரிய பெரிய கருத்துகளையெல்லாம் எழுதியிருக்கிறார் என்று மேடையிலே முழங்குகிறார்கள். திருக்குறள் இரண்டு அடிகளே பெறக்கூடிய குறள் வெண்பாவில் எழுதப் பட்டது. அதில் முதல் அடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் இருக்க வேண்டும். எனவே இரண்டாம் அடி முக்கால் அடியன்று. முழு அடிதான்

    அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள்; ஏன் அது அடிக்காமலே அணைக்கக் கூடாதா? என்பதுதான் இன்றைய கேள்வி. முதலில் அடிப்பானேன்? அப்புறம் அணைப்பானேன்? ஆனால் சில நேரங்களில் அடிக்கத்தான் வேண்டும் என்று சொல்பவர்கள் அடியாத மாடு படியாது என்பார்கள்.

 ஓர் ஐயம்; அப்படியானால் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்ற பழமொழி ஏன் வந்தது?

அடிக்காமல் அணைக்கப் பழகுவோம். அதுவே அனைவர்க்கும் நல்லது.

 

சற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்       

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 1- Dinamani

அதே வாடையோடு கயிற்றுக் கட்டிலில் கவிழ்ந்திருந்தார் அவர். வாரத்தின் கடைசி நாளில் பத்து ரூபாய்கூட தரத் துப்பில்லாத ஜென்மத்தை ‘அவர்’ என்றால் என்ன, ‘அவன்’ என்றால் என்ன? கட்டிடங்களுக்கு பிளம்பிங் செய்வது அவரின் தொழில். ஆயினும் ஒரு பைசா வீடு வந்து சேர்வதில்லை. ஓரத்தில் சின்னமலைக் கரட்டில் இருந்து சூரியன் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கீழே நடந்தால் பத்து நிமிட நடையில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. இரவெல்லாம் கும்மாளமிட்டுப் போயிருந்த பெருங்குடி மக்களின் மிச்சங்களின் வாடை காற்றெங்கும் பரவியிருந்தது.

“பாலத்துக்கு அந்தாண்ட பெரிய பிள்ளைங்க படிக்கற ஸ்கூல்ல வேல இருக்குன்னு நேத்தே சார் சொல்லிட்டுப் போனாரு… தொர… போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறீங்களாமே…”

“இல்ல ஆத்தா… போனுக்கு காசு போடல… அப்பறம் எப்படி பேசறது…” அதிகாரம் இறங்கிப்போய் கெஞ்சிற்று அவர் குரல். ஆத்தா என்று அழைக்கும் போது மனதுக்கு இளக்கமாகத்தான் இருக்கிறது. என்னவோ குறுகுறுவென்று ஓடுகிறது. ஆனால் குடித்துவிட்டு வந்து குடலை வெளித்தள்ளும் நாற்றத்தோடு உறுமும் போது செவிட்டில் அறையலாம் போல வெறி கிளம்புகிறது.

“காசெல்லாம் தர மாட்டேன்… தந்தா நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்… ரோட்டு கடைக்கார அண்ணன்… கிட்ட போனுக்கு காசு போட்டுக்கங்க…”

அந்தக் கடையையொட்டி கீற்றுப் பந்தலில் சின்னதாய் காய்கறிக் கடை வருமானத்தில் வாழ்க்கை ஓடுகிறது.

“ஸ்கூல் வேலக்கி போனா… வேலய முடிச்சுகிட்டு காசு வாங்கிட்டு வாங்க… அரை நேரம் செஞ்சிட்டு அங்க நோவுது, இங்க நோவுது..ன்னு அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு வந்து… அந்தக் கருமத்த குடிச்சுட்டுக் கெடந்தீங்கன்னா… அவ்ளோதான்…”

மணி ஐந்தரை இருக்கும். ஆறு மணியில் இருந்து எட்டு மணி வரை தான் ஏதோ கொஞ்சம் காய்கறி விற்கும். அதற்குமேல் ஒன்றும் இருக்காது.

வந்து இந்த ஆட்டுக்குட்டிகளை ஓட்டிப் போனால் ரோட்டைத் தாண்டி கொஞ்சம் மேய்ச்சல் நிலம் இருக்கிறது. குட்டிகள் மேய்ந்துவிட்டு வரும் வரை கொஞ்சம் ஓய்வுதான். மறுபடியும் நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் காய்கறி விற்கும். அதற்குள் குட்டிகளை வீட்டுக்குள் அடைக்க வேண்டும். குட்டிகள் என்றால் நிறைய இல்லை. கருப்பில் மூன்றும் வெள்ளையில் இரண்டுமாய் மொத்தம் ஐந்து.

** ** **

“செலுவி… போலாமா…”

பக்கத்தில் கிழங்கு விற்கும் பாட்டியின் குரல் அழைத்தது. செல்வி என்ற என் பெயரை செலுவி என்று கசக்கிப்பிழியாமல் இருக்க பாட்டியால் முடியவே முடியாது.

“ஏங்க… எட்டு மணிக்கு வந்துர்றேன்… எங்கயும் போயிறாதீங்க…”

“ம்…மே..” என்ற குரலில் தான் விழித்துக் கொண்டதை சொல்லிற்று ஐந்தில் ஒன்று. கொஞ்சம் சுட்டியாய் இருக்கிறது. அடக்க முடிவதில்லை. பிறக்கும் போதே ஒரு பக்கம் காது மழுங்கிப் போய்… ஒரு காது மட்டும் நீண்டு… நுனி மடங்கி… சற்றே நீண்ட அதன் காதை செல்லமாய் மெல்லத் திருகினேன். என்னையும் அவரையும் தவிர யாருமில்லா இந்த வீட்டில், இந்தக் குட்டிகள்தான் எனக்குப் பேச்சுத் துணை.

ஓடு வேய்ந்த வீட்டின் முன்னிருக்கும் கொஞ்ச இடம் இந்தக் குட்டிகளுக்குதான். எனக்கும் அவருக்கும் எல்லாம் சரியாய் நடந்தாலும் மாதா மாதம் எது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேனோ அது நடப்பதில்லை. நடக்க வேண்டாம் என்று நினைப்பது மட்டும் சரியாய் நடந்துவிடுகிறது. அடிவயிறு முட்டித்தள்ள கழிவறைக்குள் ரத்தம் சிதறுகையில் பொங்கி வரும் அழுகைக்கு…

என்றைக்காவது விடிவு வரும்.

மற்ற நான்கு குட்டிகளும் விழித்துக் கொண்டன. எழுந்ததும் குட்டிகளுக்கு சாப்பிட ஏதாவது வேண்டும். சொருகி வைத்திருந்த தழையை எடுத்து கொஞ்சம் உதறினேன்.

நன்கு வளர்ந்து விட்டாலோ அல்லது பணமுடை ஏதாவது வந்துவிட்டாலோ விற்றே தீர வேண்டிய நாள் வரும். டவுனில் இருந்து அறுப்புக் கடை ஆள் வந்து வாங்கிப் போகையில்

“அண்ணே… வலிக்காம அறுத்து வுடு…” என்றபடி அனுப்பிவைக்கையில் கண்களில் நீர் துளிர்க்கும். போகமறுத்து கால்களைத் தரையில் ஊன்றியபடி நிற்கும் குட்டியை ‘தரதர’ வென்று இழுத்துப் போகையில், திரும்பி நிற்க, குட்டிகளின் கதறல் காதுகளில் நிறையும்.

“ம்…மே…” ஐந்தும் ஒரே சமயத்தில் கத்திற்று. கூடவே…

“செலுவி…” என்று பாட்டியும்.

“நா… எட்டு மணிக்கு வந்துர்றேன்…” என்று மறுபடியும் அவரிடம் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கி நடக்கையில் அடிவயிறு ‘சுள்’ ளென்று வலித்தது. மாதத்தின் வரக்கூடாத நாள் வரப்போவதற்கான அறிகுறியில் மனமும் வலித்தது.

** ** **

தட்டி வைத்துக் கட்டியிருந்த குளிக்கும் இடத்திலிருந்து சோப்பின் வாசனை.. அவரின் குரல்…ட்டு மணிக்கு வந்தபோது குட்டிகள் “ம்…மே…” என்று முட்டின. மிச்சம் இருந்த தழைகளை உருவிப் போட்டேன்.

“துண்டு வுட்டுட்டு வந்துட்டேன்… எடுத்துட்டு வா…” என்றழைத்தது. அதிகாரமற்ற குழைவும் இழைவுமான குரல். எதற்கென்று எனக்குத் தெரியாதா?

என் முகம் அவருக்கு எல்லாவற்றையும் உணர்த்தியிருக்க வேண்டும். ரோட்டுக் கடையில் இட்டிலிகளை வாங்கி வந்து.. தின்றுவிட்டு வெளியே புறப்பட்டார்.  நல்ல… இதமான மனிதர்தான்… அந்தக் கருமம் உள்ளே இறங்காத வரை…

ரோட்டுக்கு அந்தப் பக்கம் மேய்ச்சல் நிலமிருக்கிறது. குட்டிகளை இழுத்துப் போய்வர உடலில் இப்போதைக்குத் தெம்பில்லை கண்கள் என்னையுமறியாது சொருகிற்று.

** ** **

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை.

“செலுவி…” என்ற பாட்டியின் கலவரமான குரல் என்னை எழுப்பிற்று. முன்பக்கம் இருந்த காலி இடத்துக்கு வைத்துக் கட்டியிருந்த தட்டிக்கதவு ஒருக்களித்துத் திறந்திருந்தது. குட்டிகளைக் காணவில்லை.

வேகமாய் ஓடித் திறக்க, சற்றே பெரிய காது ரத்தத்தில் மூழ்கியபடி, குட்டி நெஞ்சு உடைந்து போய் சாலையில் துடித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் அதில் வந்த மூன்று பேரும்… ‘திருதிரு’ வென்று விழித்துக் கொண்டிருக்க… “அய்யோ…” என்று நெஞ்சைப் பிடித்தபடி கத்தினேன்.

“என்னத்துக்கு இவ்ளோ வெசையா போவீங்க….”

“ஆட்டுக்குட்டின்னாலும் புள்ளக்குட்டின்னாலும். ஏத்திட்டுப் போயிடுவானுங்க…”

நான் தூங்கும் முன் என் காலில் முட்டிய குட்டி என் கண்முன்னால் கண் பிதுங்கி செத்திருந்தது. எனக்குப் பிடிக்காத ரத்தம் அதன் தலைக்குக்கீழ் சாலையில் உறைந்திருந்தது.

தொகையியொன்றைக் கொடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் குட்டியைத் தூக்கிக் கொண்டு போய்விட எனக்கு அழுகை பொங்கிற்று.

** ** **

காலையில் அத்தனை சொல்லியும் முழுதாய் வேலையை முடிக்காது காசு வாங்கி அந்தக் கருமத்தை நிரப்பிக் கொண்டு வரும் அவரைப் பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. மணி மூன்றுக்கு மேல் இருக்கும். சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கையில் தட்டிக் கதவைத் திறந்து கொண்டு அவர் வருவது தெரிந்தது.

“அரை நேரத்துக்கு… மேல… வேல… தோது வர்ல… டவுனுக்கு சாமான் வங்கப் போனேன்… அப்படியே இதயும் வாங்கிட்டு வந்தேன்… சகாயமா கெடச்சுது… கொழம்பு வச்சிரு…”

தடுமாறியபடி வந்த குரலில்… கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து…

“தீச்சுப்புட்டான்… ஆனா வெட்டல… நாம வெட்டிக்கலாம்…”

என்றபடி சற்றே பெரிய காதுடன் இருந்த குட்டியின் தலையை எடுத்து அவர் வெளியே வைக்க…

“அய்யோ…” என்றபடி அலறிச் சரிந்தேன்

அழகிய மழைக்காலம் – பானுமதி ந

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் பலத்த மழை எச்சரிக்கை- Dinamani

*லூயிஸ் க்ளூக்கின் மழைக் கவிதை

(2020 ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் இவர்.  காப்புரிமை அவர் பெயரில் இருக்கிறது. அறிமுகம் செய்வதற்காக மட்டும் இங்கே மொழி பெயர்த்துத் தரப் படுகிறது. – பானுமதி ந)

 

தனிமை

இருள் சூழ்ந்திருக்கிறது இன்று
மழையினூடே மலைகள் தெரியவில்லை
மழையின் ஒலி மட்டும் கேட்கிறது
அது வாழ்க்கையை பூமிக்குள் பதுக்கி விட்டது
குளிரையும் துணையாக அழைத்து வந்துள்ளது
விண்மீன்களும், நிலவும் இன்றிரவு இருக்காது

காற்று இரவில் எழுந்தது. காலை முழுதும்
கோதுமை வயல்களை ஓங்கி அடித்தது
முற்பகலில் அது ஓய்ந்தது
வறண்ட நிலத்தை நனைத்துப் பின்
பெரு வெள்ளமென புயல் அடித்தது

பூமி இல்லாமல் போய்விட்டது.
இருண்ட ஜன்னல்களில் ஒளிரும் மழையைத் தவிர
பார்ப்பதற்கு ஏதுமில்லை எதுவும் இயங்காத
ஓய்வு கொள்ளும் இடம் இது

மொழியும், நுண்பார்வையுமற்ற
இருட்டில் வாழும் விலங்குகள் போல்
நாம் முன்னர் என்னவாக இருந்தோமோ
அதற்கே திரும்பி விட்டோம்.

நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு
அத்தாட்சி இல்லை.
முடிவற்ற மழை மட்டும்.

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

பலகார வகைகள்
Indian Sweets.JPG
மருமகள் தட்டில் கொண்டு வந்து வைத்த தீபாவளி பலகாரமான லட்டும் அல்வாவும் மௌனமாக இருந்த என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
சே! சே! பலகாரம் எப்படி சிரிக்கும்.

சிரித்தது என் மன சாட்சி.

இது போல சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தீபாவளியன்று மனைவியிடம் ‘ ஏம்மா! தீபாவளின்ன எப்பவும் லட்டும், அல்வாவும்தானா? வருஷா வருஷம் வித விதமா எவ்வளவு வெடி வருது. அது மாதிரி புதுசா ஏதாவது பண்ணக் கூடாதா” என வம்பிழுத்தது ஞாபகம் வந்தது.

அதற்கு கிடைத்த பதிலை இங்கே கூறப் போவதில்லை.
ஆனால் நான் வகை வகையான பலகாரத்தேடலை மட்டும் இன்றும் நிறுத்த வில்லை.
‘பலகாரம்’ என்பது பண்டைத் தமிழோ?
காலை உணவு சாப்பிட ‘பலகாரம் சாப்பிட வாங்க’ என்றுதான் மலேஷிய தமிழர்கள் இன்றும் அழைப்பார்கள்.
பலகாரங்கள் அதிலும் இனிப்புகளில்தான் எத்துனை வகை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை.
எனக்கு திடீரென சந்தேகம் வரும். நம் மூதாதையர்கள் என்னவென்ன இனிப்புகள் செய்திருப்பார்கள் என.
சங்க இலக்கியத்தில் அது பற்றி ஏதாவது செய்தி உள்ளதா என எனது குரு சிந்தாமணியைத்தான் கேட்க வேண்டும்.
ஆனால் 120 ஆண்டுகளுக்கு முன்பு என்ன இனிப்புகள் இருந்தன என எனக்கு தெரியும்.
நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகம் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை எழுதிய “பஞ்ச லட்சணத்திருமுக விலாசம்”.
இந்த நூல் 1899 ம் ஆண்டு வெளி வந்த ஒரு  அங்கதம்  (satire) வகை நூலாகும்.
தமிழில் வந்த முதல் நையாண்டி (Lampoon) இலக்கியமாம்.
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை கேலியும் கிண்டலுமாக கூறி இருப்பார் சிவகங்கை மன்னரிடம்
கணக்கு வேலை பார்த்த நூல் ஆசிரியர்.Pittu - Deep Into Sri Lanka
அதில் அன்றைய தினத்தில் இருந்த பலகாரங்களை பற்றி கூறுவார். செய்யுள் நடையில் உள்ள வரிகளை அனைவர்க்கும் புரியும்பொருட்டு சந்தி பிரித்தும், (எனக்கு) புரியாத வார்த்தைகளை நீக்கியும் கொடுத்துள்ளேன். என் சரக்கு எதையும் சேர்க்க வில்லை.
பல சிறு கிளை சம்பவங்களை விவரிக்கும் நூலில் ஒரு பிரதி வாதியை பிடித்து செல்ல கோர்ட் சேவகன் வருவான்.
பிரதிவாதி சேவகனிடம் உறவு கொண்டாடி உணவு அருந்தி செல்லலாம் என கூறி தன் மனைவியிடம் விதம் விதமாக விருந்து தயாரிக்க சொல்வான்.
அதில் கீழே சொன்ன இனிப்பு வகைகளும் சேரும்.
பின்னர் இல்லாத சில சாமான்கள் வாங்கி வருவதாக கூறி சென்று தப்பி விடுவான்.
பிரதி வாதி தன் மனைவியிடம் செய்ய சொன்ன இனிப்பு வகைகள்:
“பச்சரிசி முக்குறுணி பத்தாது.
பற்ற வில்லை யென்று அச்சமயம் மூக்கால் அழுகாதே;
நீயென்ன சின்னஞ் சிறிசோ? தெரியாதா? பின்னும் கேள்
பச்சைக் கடலை , பசும் பயறு, கோதும்பை, மொச்சை, முளைத் துவரை பந்தி நிறை சாரப் பருப்பு, வாதாம் பருப்பு வந்தன
ஈதெல்லாம் வகை வகையாய் யந்திரத்தில் மாவரைத்து தெள்ளி , மதுரம்(இனிப்பு) புகட்டி , அதை நீ வளமாய் சேர்ப்பாய்;
நிமிடத்தில் நாவினிய சீனிச் சர்க்கரையும் , தேனும் குடங் குடமாய் நான் இச்சணம் அழைத்து நல்குவேன்;-
மானே தண் பூமலி வெண் பூந்தி, பொலிவுறு சிலேபி, லட்டு, மாமதுரம் மிக்க மதுர் பேணி; பாதாம் அல்வா, நெய் உருண்டை, பால் அடை, ரவா லாடு, குஞ்சாலாடு, மோது நொக்கல்
பால்கோவா, சேவு, பணியாரம், தோசை, போளி, வடை, சுகியம், நால் விதமாம் அப்பளம், அதிரசம், சீரா, பர்பி,
முப்பழம் சேர் அல்வா முதலாக
என்ன பலகாரம் உண்டோ யாவும் உன்
கை பக்குவத்தால் நன்னயமாய் முந்தி நடக்கட்டும்.
தே மதுரம் போல் திரட்டுப் பால் பண்ணுவதை
நீ மறந்திடாதே நினைவில் வைப்பாய்;
நறிய செழும் பாயாசத்துக்காகப் பழுதறு கோதுமை ரவை ஆய அதில்
தீம்பாலை அளந்து விட்டுத் தூய பன்னீர்,சுக்கு, சாதிக்காய், துடி சேர் கிராம்புடனே, பக்கரசம் வாதாம் பருப்பு நெய்யும் – ஒங்க நலஞ் சேரும்
கற்கண்டொடு நற் சீனியும் ஒன்றாய் கலந்து, சாரம் தெளிவு பட தாளித்தும்
பக்குவமாய் செய்தால் அண்ணாவுக்கு
அது பிரியமாய் இருக்கும் அன்றோ?
வாய்க்கு ருசியாய் வளமாய் கறி வகையும் ,சீக்கிரம் ஆகட்டும் செழுஞ் சமையல்”
என்று கட்டளை இட்டு “ மாடுலவு ஷாப்பில் சாமான் கொஞ்சம் வேண்டும், அதை ஓடி, இதோ வாங்கி, ஒரு மினிட்டில் – நாடி மிக வாரேன்” என தப்பி விடுவான்.
வீட்டில் ஒன்றுமே இல்லாது , ஏமாற்றியது தெரிந்து சேவகன் புலம்புவதாக கதை செல்லும்.
எனக்கு பழையன பிடிக்கும். எனவே அந்த நூலை ரசித்து படித்தேன். அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் பற்றியும், ஏமாற்றி விற்கும் துணி வியாபாரி, நகை வியாபாரி களைப்பற்றியும் நகைச்சுவையுடன் கூறி உள்ளார்.
பண்டை காலத்தைய இனிப்புகளை என் நண்பர் சிந்தாமணி அவர்கள் பட்டியல் இட்டு அனுப்பியுள்ளார்.
பழந்தமிழர் உண்ட இனிப்புப் பலகாரங்கள்
தேன்பாகில் சமைத்த அடை, தேங்காய்த் துருவலையும், வேகவைத்த பருப்பையும் உள்ளீடாகக்( பூர்ணம்) கொண்டு செய்யப்பட்ட மோதகம்( கொழுக்கட்டை), குங்குமப்பூ மணக்கின்ற தேறல்(தேன்),
இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பம்,
இனிப்புப் பால்பருப்பு,
அக்கார அடிசில்,
கரும்புப்பால் அவல்,
இனிப்பு உளுந்தங்களி.
மேலே கூறிய பலகாரங்களை உண்டு சுவைக்க வாய்ப்பும் இல்லை வயதும் இல்லை. படித்தாவது சுவைப்போம்.சைவர், அசைவர் யார்? திரு முருக கிருபானந்த வாரியார் விளக்கம் –
ஆட்டின் கழுத்தை ரத்தம் பெருக கத்தியால் கூறு போடுவதைப் பார்க்கின்ற போது
கண்ணில் நீர் வந்தால் சைவர்; நாக்கில் நீர் சுரந்தால் அசைவர்.

திருநர் குரல் – செவல்குளம் செல்வராசு

திருநங்கைகளை அவமதித்ததாக புகார் - விஜய் சேதுபதியை கைது செய்ய வற்புறுத்தல் || transgender Complaining about Vijay Sethupathi

மழைச் சாலை தவளை போல

வாழ்வு நசுங்கிக் கிடக்கே

மனசாட்சி இல்லாமத்தான்

சமுதாயமும் இருக்கே

 

இப்படித்தான் பிறந்ததென்ன

எங்க குத்தமா

இது புரியாம ஒதுக்குறீங்க

ஒட்டுமொத்தமா

 

மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைய

ஒதுக்கவில்லையே

மனவளர்ச்சி குறைஞ்ச பிள்ளையக்கூட

ஒதுக்கவில்லையே

 

எங்கள மட்டும் பிள்ளையாக

ஏத்துக்கவில்லையே

என்னென்னவோ கெஞ்சிப் பார்த்தோம்

சேத்துக்கவில்லையே

குடும்பத்தில் சேத்துக்கவில்லையே

 

பள்ளிக்கூடம் படிக்கப் போனா

பகடி பண்ணுறாங்க

கல்லூரிக்குள்ள நுழையப் போனா

கதவச் சாத்துறாங்க

 

கைகழுவி அழுத ரத்த சொந்தங்களும்

கைகொட்டி சிரித்த மத்த சொந்தங்களும்

கைதட்டி உதவி கேட்க வைச்சது எங்களைத்தான்

கடைசியில் நம்பி வந்தோம் நாங்க உங்களைத்தான்

 

நல்லவங்க ஒதுங்கி ஒதுங்கிப் போறதாலதான்

கேடு கெட்டவங்க கிட்ட வந்து கிண்டல் பண்ணுறான்

எட்டும் ஒன்னும் எதனையின்னு சீண்டிப் பாக்குறான்

எகத்தாளம் பிடிச்ச பய இடுப்பக் கிள்ளுறான்

 

இயலாமையின் உச்சத்தோட கை நீட்டுறோம்

ஏதாவது உதவி செஞ்சா கை கூப்புறோம்

உங்கள கை கூப்புறோம்

 

ஏதாவது வேலைக்குத்தான் போகச் சொன்னீங்க

எதார்த்தத்த புதைசுப்புட்டு நல்லாச் சொன்னீங்க

எங்களுக்கு வேலை இங்க தருவதாருங்க

முடிஞ்சாக்க வேலை வாங்கி தந்து பாருங்க

 

நீங்க கொடுத்த பணத்தில் கோட்டை கட்ட

ஆசை இல்லைங்க

வங்கியில் சேர்த்து வைக்க

கணக்கும் இல்லைங்க

 

போக்கு வழி எல்லாமே அடைச்சதாலதான்

வீதி நிறைஞ்சு வீடு நுழைஞ்ச வெள்ளம் நாங்கதான்

சபிப்பதையும் சகிப்பதையும் விட்டுத்தள்ளிட்டு

சக உயிராக எங்களையும் பார்த்துப் பழகுங்க

இனிமேலும் எங்களைத்தான் வெறுக்காதீங்க

ஏதாவது உதவி செய்ய மறக்காதீங்க

 

இப்படித்தான் பிறந்ததென்ன

எங்க குத்தமா

இது புரியாம ஒதுக்காதீங்க

ஒட்டுமொத்தமா

 

 

காதல் – ஜெயா ஸ்ரீராம்

 

250+ Best Black Dog Names That Are Just Plain Brilliant

 

“இங்க சித்த வந்து பாருங்கோ, உங்க பொண்ணு என்ன பண்ணியிருக்காள்” என வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் ராதாவின் அலறல் கேட்டு அவள் கணவர் சேகர் ஓடோடிவந்தார். அவர்களது புதுவீட்டில் சின்னதாக தோட்டம் போட்டு வைத்த செடிகள் சிலவற்றை பிடுங்கி போர்டிகோவில் போட்டு இருந்தது அவர்கள் வீட்டிற்கு வந்த மூன்று மாத நாய்க்குட்டி .

 

சேகருக்கு உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி நாய்க்குட்டியின் விஷமத்தை பார்த்து.  ராதாவிற்கோ நாய்  என்றாலே  ஒரே பயம். அதனாலேயே அவள் சேகரின் நண்பர் கொடுத்த நாய்க்குட்டி ரோஸி மீது புகார் செய்துகொண்டேயிருப்பாள். “இன்று ரோஸி என் நல்ல செருப்பை கடித்துவிட்டது; இன்று செடிகளை பிடுங்கி வெளியில் போட்டுவிட்டது; இன்று தோட்டத்து மண்ணை கிளறி போர்டிகோவில் போட்டுவிட்டது” என ராதாவின் புகார் பட்டியல் நீளும். இதன் பொருட்டு ஒவ்வொரு முறையும் ராதா சண்டை போடும் போது சேகரும்  ” சரி இந்த ரோஸியை இதை கொடுத்த எனது நண்பர் கணேஷிடமே திருப்பி கொடுத்து விடலாம்” என்பார். கணேஷும் அவர்கள் வீட்டிற்கு வரும்போது “சரி மேடம் இதை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம்” என்று சொல்வாரே தவிர அதை சேகர் வீட்டிலிருந்து எடுத்துப்போகும் உத்தேசம் துளியும் அவருக்கு இல்லை.

 

ராதா சேகர் தம்பதிக்கு ஒரு பெண்ணும், பையனும் உண்டு. இருவரும் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். கணவர் சேகரும் வேலை நிமித்தம் மாதம் ஒருமுறையோ இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ வெளியூர் செல்ல நேரிடும். அப்போது எல்லாம் தனியாக இருக்கும் ராதாவிற்கு ரோஸிதான் துணை. சேகர் ஊரில் இருக்கும்போது நாயின் உணவை பற்றி கவலை படாத ராதா அவர் வெளியூர் செல்லும்போது தனக்கு பிடிக்காது என்ற போதும் ரோஸிக்காக முட்டை வேகவைத்து, ஓடு எடுத்து, உள்ளிருக்கும் மஞ்சள் கருவை உதிர்த்து முதலில் அதை கையால் எடுத்துக்கொடுத்து சாப்பிட செய்வாள். ராதா பூஜை செய்யும்போது, ரோஸி பூஜையறை வாசலில் படுத்து சத்தம் போடாமல் விழித்திருக்கும். இதனால் ரோஸிமீது புகார் சொல்வதை விட்டு அதன் மேல் அன்பு காட்ட தொடங்கினாள் ராதா. குழந்தைகளும், கணவரும் கூட இது விஷயமாக ராதாவை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. வருடங்கள் ஓடின ரோஸியும் அவர்களது வீட்டில் ஓர்  அங்கத்தினர் ஆகிவிட்டது.

 

பத்து வயது ஆன போது ரோஸியின் அழகு சொல்லி மாளாது. குட்டியாக இருக்கும் பத்து வயது என்று யாரும் நம்ப மாட்டார்கள். அதன் ப்ரவுனும், கருப்பும் கலந்த நிறமும் கரு விழிகளும், சிறிய உயரமும் புஸு புஸு என நிறைய முடிகளும், இது தவிர அதன் ஓரப்பார்வையும் பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொள்ள செய்யும். தினமும் அதை வெளியில் அழைத்துச் செல்லும்போது தெரு வாசிகள் அதை பார்த்து கொஞ்சுவது சேகருக்கு ஒரே பெருமை. பெண்ணினத்திற்கு உரிய குணமும் அதற்கு உண்டு. கணேஷ், சேகர், , ராதா  மற்றும் அவர்கள் குழந்தைகள் தவிர வேறு யாரும் அதை தொட அனுமதிக்காது. ஒரே ஒரு முறை மேட்டிங் விடுவதற்குள் அவர்கள் பட்டபாடு அப்பப்பா! எந்த  நாயை பார்த்தாலும் ஒரே பாய்ச்சல் தான்.

ரோஸி, ராதா சேகர் வீட்டிற்கு வந்து 10 வருடங்கள் ஓடி விட்டன. ஒரு நாள் காலையில் வாசல் தெளிக்கும் போது கேட்டிற்கு வெளியே ஒரு கருப்பு நாய் இருப்பதை ராதா பார்த்தாள். அது இவர்கள் ரோஸியையே பார்த்துக்கொண்டிருந்தது. ரோஸி அதன் அருகில் கூட செல்லாது. காருக்கு அடியிலேயே படுத்துக்கிடந்தது .

ராதா சேகரை கூப்பிட்டு அந்த கருப்பு நாயை விரட்டச்சொன்னாள். சேகரும் அதை விரட்ட, நாயும் சிறிது தூரம் சென்று, அவர்கள் உள் சென்றவுடன் பழையபடி அதன் இடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். எவ்வளவு முறை விரட்டி அடித்தும் திரும்பத்திரும்ப வந்து விடும். மற்ற நாய்களையும் வர விடாது கடித்து குதறிவிடும். சண்டையில் கருப்பு நாய்க்கும் காயம் உண்டாகும். அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் ரோஸிக்காக தவம் கிடப்பதை நிறுத்தவில்லை. இத்தனைக்கு பிறகும் ரோஸி துளியும் அதை லட்சியம் செய்யாது. இது எல்லாவற்றிலும் கொடுமை மழை பெய்தபோதுதான். மழை பெரிதாக வந்த போதும் மழையில் நனைந்து நின்றதே தவிர அதன் இடத்தை விட்டு துளியும் நகரவில்லை.

அதை அகற்றும் நோக்கத்தில் இருந்ததால் ராதாவும், சேகரும் பரிதாபப்பட்டாலும் உண்பதற்கு ஆகாரம் கொடுக்கவில்லை. ஆனாலும் ரோஸியின் மீதுள்ள காதலால் வெளியிலேயே இருக்கும். சேகர் ரோஸியை வெளியில் இரு நேரமும் கூட்டி செல்லும்போது இடைவெளி விட்டு பாதுகாப்பாக அதை பின்தொடரும் .

பல நாட்கள் காத்திருந்தது ரோஸி தன்னிடம் மசியவில்லை தனக்கு கிடைக்காது என நினைத்து கருப்பு நாயும் எங்கோ சென்று விட்டது.

இதைப்பார்த்த சேகருக்கும், ராதாவுக்கும் பக்கத்து வீட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவில் வந்தது.

அவர்கள் பக்கத்து வீட்டில் காலேஜ் படிக்கும் இளம்பெண் ஸ்வாதி இருந்தாள். அவளுக்கு நன்கு படித்து கலெக்டர் ஆகி நாட்டிற்கு சேவை செய்யும் எண்ணம் இருந்தது. இதை அவள் பெற்றோர் பெரிதும் ஊக்குவித்தனர். அவள் அனைவரிடமும்  நட்புடன் பழகுவாள். அதே போல் தான் அவளுடன் படிக்கும் ராஜேஷிடமும் நட்பு காட்டினாள்.

ராஜேஷின் கெட்ட சகவாசத்தையும், கெட்ட பழக்கங்களையும் தாய் தந்தையுடன் மதிக்காமல் சண்டைபோடும் குணத்தையும் அறிந்த ஸ்வாதியின் அப்பா அவனுடன் பழகுவதை விட்டு விடச்சொன்னார்.

ஸ்வாதி செல்லமகளாக இருந்தாலும் தந்தை சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். அதனால் ராஜேஷ் பேச வந்தபோது, தன்னுடன் பேசுவதை விட்டு விடும் படியும் கூறினாள்.

ஆனால் ராஜேஷோ “நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. இருவரும் மேஜர்  திருமணம் செய்துகொள்ளலாம்” என நச்சரிக்க ஆரம்பித்தான்.

“என் பெற்றோர் சொல்லை என்னால் மீற முடியாது அதுவும் இல்லாமல் என் குறிக்கோள் நன்கு படித்து கலெக்டர் ஆவதுதான் . நீயும் உன் வருங்காலத்தை உத்தேசித்து திருத்திக்கொள்” என்றாள் ஸ்வாதி.

ஆனால் ராஜேஷின் ஆத்திரம் அடங்கவில்லை. “நீ எப்படி நன்றாக வாழ்கிறாய் பார்க்கிறேன்” என கறுவிக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவில் ஸ்வாதியின் தந்தை ஒரு துக்க காரியத்திற்கு சென்று வந்ததால் வாசலில் கை, கால் அலம்ப ஸ்வாதியை தண்ணீர் கொண்டு வரச்சொன்னார்.

ஸ்வாதி தண்ணீருடன் வெளியே வருவதை மறைந்திருந்து பார்த்த      ராஜேஷ் தன் கையில் இருந்த ஆசிட் பாட்டிலை அவள் முகத்தில் வீசி அடித்தான். “எனக்கு இல்லாத நீ எப்படி நிம்மதியாக வாழ்வாய்” என கத்திவிட்டு ஓடிவிட்டான். அவள் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்தனர். அனைவரும் தவித்த தவிப்பிற்கு வார்த்தையே இல்லை.

அங்கு இருந்த அனைவரும் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவள் உயிரை காப்பாற்றினர் .

பல வருடங்களுக்கு பிறகு ஸ்வாதியின் தாய் தந்தையரின் கவனிப்பினால் அவள் முகத்தின் வடுக்கள் மறைவதற்கும்  அவள் கலெக்டர் ஆவதற்கும் அவர்கள் செலவழித்த பணமும், அடைந்த மனவேதனையும் அங்கிருந்த ராதாவும் சேகரும் உட்பட அனைவரும் அறிவார்கள்.

சேகருக்கும், ராதாவுக்கும் அந்தக்காதலுடன் இந்த ரோஸி காதலை ஒப்பிடத்தோன்றியது .

இரண்டும் ஒரு தலைக்காதல். ஐந்தறிவு நாய் தான் காதலித்த காதலி தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்த போது, எங்கிருந்தாலும் தன் காதலி நன்றாக இருக்க நினைத்து அதை விட்டு அமைதியாக விலகிச் சென்றுவிட்டது.

ஆனால் ஆறறிவு படைத்த ஒரு சில மனிதர்கள் தான் காதலித்த பெண் நன்றாக, நிம்மதியாக இருக்கக்கூடாது என நினைத்து அவளை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

காதல் என்பது காத்திருத்தல். தன் காதலி சந்தோஷப்படுவதை பார்த்து விலகி இருந்து சந்தோஷப்படுதல். அதில் க்ரோதம், ஆத்திரத்திற்கு இடமே இல்லை. தான் விரும்புபவர் தன்னை கட்டாயப்படுத்தி விரும்ப வேண்டும் என நினைக்காதிருத்தல்.

இதை ஆறறிவு படைத்த மனிதன் உணரும் நாள் என்று வருமோ?

 

 

 

 

குண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்

முன் கதைச் சுருக்கம் :பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
தந்தையின் அறிவுரையும் கேட்காமல் தன் காதலில்  பிடிவாதமாக இருந்தாள்.
அவள் கண்ணீரால் கரைந்த வணிகன் வேறு வழியில்லாமல் கொலைத் தண்டனையிலிருந்து காளனை விடுவிக்க முற்படுகிறான்………...   
குண்டலகேசி கதை | Gundalakesi story - YouTube
தந்தை உரைத்த  ஆறுதல்“விழிபுனல்  மண்ணில்  விழுந்தோட
மொழிபல    பேச    முயலாதே
பழிபல எண்ணிப் பதைத்தாலும்
வழிபல   தந்தை  வகுப்பேனே”             தந்தை கூறுவதுA0111

“பூந்தளிர் அன்னாள், என்றன்
      பொன்மகள் கண்கள்  நீரை
ஏந்திடும் நிலையைக் கண்டேன்
      எரிதழல்  மெழுகாய் ஆனேன்.
மாய்ந்திடக் காளன்,  வீரர்
        வாளினை வீசும் முன்னே
வேந்தனைச் சென்று காண்பேன்
       விரைவனே கோயில் இன்னே!

       ( கோயில் — அரசன் மனை)
        ( இன்னே – இப்பொழுதே)

மண்ணிலே உள்ள செல்வம்
       வாய்த்திடும் போதும், பெற்ற
பெண்ணவள் தாயும் இல்லாள்,
       பெருந்துயர் உற்று வாடிக்
கண்ணிலே நீர்சொ ரிந்தால்,
       காண்பவன் தந்தை கொல்லோ!
வெண்ணிறக் குடையோன் மன்னன்
       விதியினை மாற்றச் செய்வேன்!”

அரசனைக் கண்டு விடுதலை வேண்டுதல்

கண்டனன் பெண்ணின் துன்பம்,
     கடிதினில் தேரில் ஏறிக்
கொண்டனன், அரண்ம னையைக்
     குறுகினன் வேந்த னுக்கு
விண்டனன் நிகழ்ந்த வற்றை.
      வேண்டினன் விடுத லையை.
பண்டுதொல் மரபில் வந்த
       பார்பதி சீற்றம் கொண்டான்.

              ( பார்பதி — அரசன்)

சீற்றத்துடன் அரசன் கூறுவது

கன்றினுக் காகத் தேரின்
     காலிலே மகனைக் கொன்றும்,
அன்றொரு  புறவுக் காக
      அரிந்துதன் தசையைத் தந்தும்,
நன்றறம்  காத்த மன்னர்
      நலிவிலாக் குடியில் வந்தேன்
என்றுநீ  அறியாய் போலும்,
      என்முனே வராதே போ!போ!

பித்தெனப் பெண்ணைப் பெற்றாய்,
     பெருங்குடி வணிக னோநீ?
கத்தியும் பொன்னே   என்று
     கண்ணிலே குத்த லாமோ?
இத்தரை   காக்கும் மன்னன்
     என்முறை பிழைக்க லாமோ?
புத்தியும் கெட்டுப் போனாய்
       போவென வெகுண்டு சொன்னான்!

.             வணிகன் நயவுரை!

வணங்கிய வணிகன் சொன்னான்,
     ” வாழ்கநின் கொற்றம் மன்னா!
இணங்கியே ஏற்றுக் கொண்டேன்
      இயம்பிய கருத்தும் நன்றே!
பிணங்கிடும் மகளைக் கண்டு
     பெற்றவன் என்ன செய்வேன்?
உணங்கிடும் உள்ளத் தோன்நான்
     உரைப்பதைச் சற்றுக் கேளாய்!

     ( உணங்கிடும் – வருந்திடும்)

குலமுறை அறிவேன், உன்றன்
     கோதறு குணமும், நீதி
நிலவிடும் தன்மை மற்றும்
      நேர்மையும் அறிவேன் மன்னா!
சிலமுறை விதியின் சூழ்ச்சி
       தெரிந்திடாப் பேதை ஆனேன்.
அலமரும் என்னைக் காக்க
     ஆருளர் உன்னை விட்டால்?

கொற்றவன் தந்தை ஆவான்
     குடிகளுக் கென்று முன்னோர்
சொற்றனர். பத்தி ரைக்குச்
     சுற்றமும் தாயும் இல்லை.
உற்றதோர் தந்தை போல
     உதவிட வேண்டும் நீயே.
மற்றவன் திருந்தி வாழ
     வாய்ப்பினை நல்கு வாயே!”

                   விடுதலை!

தள்ளரும் உலகின் தன்மை
     சாற்றியே வணிகன் நெஞ்சை
அள்ளிடும் விதத்தில் கூற,
     அரசனும் சினத்தை விட்டுக்
கள்வனின் விடுத லைக்குக்
     கட்டளை இட்டான். வாழ்வில்
துள்ளிடும் விதியின் ஆட்டம்
     தொடங்கியே தொடர்ந்த தம்மா!

( தொடரும்)

 

 

உள்ளே ”அவள்”! (கவியோகி வேதம்)-

 

Ambal sits on the Meru at 8 pm daily during Navarathri!” – Sage of Kanchi

அம்பாள் என்னுள் இருப்பதனால்

  அடியேன் உயிர்ப்பாய் உலவுகின்றேன்;

தெம்பும் துணிவும் அவள்தந்தாள்!

  திடமாய் வாழ்வைக் கழிக்கின்றேன்!

 

தீபம் திரியைத் தின்றிடினும்

  திரும்ப நெய்யால் உயிர்த்தல்போல்

பாப  வினைகள் கீழ்-இழுத்தும்,

   பதமாய் என்னை மேல்கொணர்வாள்;

 

‘கர்மா’ என்றால் நம்பாதீர்!

  காக்கும்  ‘தேவி’ ஒளிர்கின்றாள்!

பர்மாத் தேக்காய் நின்றிடுங்கள்;(அவள்)

  பாதம்  ‘சரணே’ என்றிருங்கள்!

 

நாபி மூச்சைத் தலைகொணர்வீர்;

  நாளும் தவமே செய்வீர்நீர்!

கோபம், பொறாமை கொள்ளாதீர்!

 குறையும் உண்டோ? சொல்வீரே!.

 

புதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

கவிதை - புதுக்கவிதை - ஷக்தீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels

 

புதுக்கவிதைகளில் பொதிந்திருக்கும் பல வடிவங்களை எடுத்துக்காட்டோடு எடுத்துக்காட்டுவது இந்தக் கட்டுரை !

அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை! 

நவீனக் கவிதைகள் – பாகம் இரண்டு | குவிகம்

புதுக்கவிதை உத்திகள்

உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்திமுறைகள் புதுக்கவிதைகளில் பயன்படுத்தப் பெறுவதை இங்குக் காண்போம்.

 உவமை

ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த
உலகமும் ஒன்றேதான் (தமிழன்பன்)

வாலிபன். . .
பிணம் விழுவதை
எதிர்பார்க்கும் கழுகாக
மணமேடையில்
உன்னை எதிர்பார்க்கிறான் . . .
அவன்மீது மட்டுமே
ஆத்திரப்படாதே (தமிழன்பன்)

என்னும் கவிதையில் வரதட்சணை வாங்கும் மணமகனுக்குப் பிணம் தின்னும் கழுகு செயலடிப்படையில் உவமையாகின்றது.

கோவலன் வருகைநோக்கிய கண்ணகியின் நிலை குறித்து,

வாங்க முடியாத
பொருள்கள் பற்றி நாம்
வர்த்தக ஒலிபரப்பில்
கேட்டுக் கொள்வதுபோல்
வருவான் கோவலன் என்று
தோழி சொன்னதையெல்லாம்
கேட்டுக் கொண்டிருந்தாள் . . . கண்ணகி (தமிழன்பன்)

என இடம் பெறும் கவிதையில் வினையுவமை அமைகின்றது.

உருவகம்

உவமையும் பொருளும் வேறுவேறல்ல; ஒன்றே எனக் கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும். புல் குறித்து அமைந்த கவிதையொன்று பின்வருமாறு:

பச்சை நிறத்தின் விளம்பரமே!
குசேலரின் உணவுக் களஞ்சியமே!
குதித்தோடும் கடல்நீரைக் காதலிக்காமலே
உப்புருசி பெற்றுவிட்ட
ஓவியப் புல்லே

(நா.காமராசன்)

படிமம்

உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது. முற்றுருவகப் பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.

கை ஓய இருளை விடியும்வரை
கடைந்த இரவு
ஒரு துளி வெண்ணெயாய் உயரத்தில்
அதை வைத்துவிட்டு நகர்ந்தது

(தமிழன்பன்)

என்பதில் விடிவெள்ளி குறித்த படிமம் காணப்படுகின்றது.

நட்சத்திரங்களைக் குறித்தமைந்த படிமமாக,

இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின்
துண்டுகள்

(தமிழன்பன்)

என்பது அமைகின்றது.

குறியீடு

சொல் என்பதே குறிப்பிட்ட பொருளை உணர்த்தும் குறியீடாகும். சில சொற்கள் மற்றொன்றிற்காக நிற்பதும், மற்றொன்றின் பிரதிநிதியாகச் செயல்படுவதும், மற்றொன்றைச் சுட்டிக் காட்டுவதும் ஆகிய நிலைகளில் அமைவதுண்டு. தன்னோடு நெருக்கமான தொடர்புடைய பொருளைக் குறித்த உணர்வினைக் குறியீடு தோற்றுவிக்கின்றது.

குறியீட்டை இயற்கைக் குறியீடு, தொன்மக் குறியீடு, வரலாற்றுக் குறியீடு, இலக்கியக் குறியீடு என வகைப்படுத்தலாம்.

இயற்கைக் குறியீடு

வறுமையில் வாடும் மக்களைக் குறித்து அமைந்த கவிதை 

இலையுதிர்காலம் இல்லாமலேயே
உதிருகின்ற உயர்திணை மரங்கள்

(தமிழன்பன்)

என்னும் கவிதை இதற்குச் சான்றாகும். மரங்களாவது பருவ காலச் சூழலுக்கேற்பத்தான் இலைஉதிர்க்கும். ஆனால் பட்டினிச்சாவில் பலியாவோருக்குப் பருவம் ஏது?

தொன்மக் குறியீடு

தொன்மம் என்பது பழமையைக் குறிக்கும். புராண இதிகாச நிகழ்வுகளை ஏற்றும், மாற்றியும் புதுக்கியும் கவிஞன் தன் கருத்தைப் புலப்படுத்தும் முறை இது.

சமத்துவம் குறித்த சிந்தனையை மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி மண்கேட்டு அளந்த வாமன அவதாரக் கருத்தை அமைத்து உரைக்கின்றார் கவிஞர்.

ஓர் அடியை
முதலாளித்துவ
முடிமேல் வைத்து
ஓர் அடியை
நிலப்பிரபுத்துவ
நெஞ்சில் ஊன்றி
ஓர் அடியை
அதிகார வர்க்கத்தின்
முகத்தில் இட்டு
மூவடியால்
முறைமை செய்ய
எழுகிறது (தமிழன்பன்)

வாமனன் முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும், அளந்து மூன்றாம் அடியை மாபலி தலைமேல் வைத்தான் என்பது புராணம்.

அங்கதம்

அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்; சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.

தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.

தனிமனித அங்கதம்

கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு

(மேத்தா)

சமுதாய அங்கதம்

தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !

(ஞானக்கூத்தன்)

என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.

வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று ! (மேத்தா)

அரசியல் அங்கதம்

ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள் !

(தமிழன்பன்)

மற்றவர்
குனியும்போது
ஆகாயத்தையும். . .
நிமிரும்போது
நிலத்தையும். . .
சுருட்டிக்கொள்ள
வல்லமை படைத்த
அரசியல்வாதிகள். . .
இந்த
வாக்குச் சீட்டுக்களை
வழிப்பறி செய்வது . . .
கடினமானதல்ல. . .

முரண்

சொல் முரண், பொருள் முரண், நிகழ்ச்சி முரண் என இதனை வகைப்படுத்தலாம்.

சொல் முரண்

நாங்கள்
சேற்றில்
கால் வைக்காவிட்டால்
நீங்கள்
சோற்றில்
கைவைக்கமுடியாது !

இறப்பதற்கே
பிறந்ததாய் எண்ணிப் பழகியதால்
நமது
மூச்சில்கூட நாம் வாழ்வதில்லை
மரணம் வாழ்கிறது !
(தமிழன்பன்)

பொருள் முரண்

பொருளில் முரண் அமையத் தொடுப்பது இது.

மதங்களின் வேர்கள் தந்தது
ஆப்பிள் விதைகள்தான்
ஆனால் அதன்
கிளைகளில்தான் கனிகிறது
நஞ்சுப் பழங்கள்
(பா. விஜய்)

கரியைப்
பூமி
வைரமாக மாற்றுகிறது – எமது
கல்வி நிலையங்களோ
வைரங்களைக்
கரிகளாக்கித் தருகின்றன
(தமிழன்பன்)

நிகழ்ச்சி முரண்

கிடைத்தபோது
உண்கிறான்
ஏழை
நினைத்தபோது
உண்கிறான்
பணக்காரன்
(மு.வை.அரவிந்தன்)

வாழ்க்கை இதுதான்
செத்துக்கொண்டிருக்கும் தாயருகில்
சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை
(அறிவுமதி)

சிலேடை

காமத்துப்பால்

கடைப்பால் என்றாலே
கலப்புப்பால் தான் !
(அப்துல் ரகுமான்)

என்னும் கவிதையில், கடை என்பது, விற்பனை நிலையம்,

கடைசி என்னும் பொருள்களையும், கலப்பு என்பது பாலும் நீரும் கலப்பு,

ஆண் பெண் கலப்பு என்னும் பொருள்களையும் தந்து

சிலேடையாகத் திகழ்வதைக் காணலாம்.

இருண்மை

எடுத்துக்காட்டு :

தேசிய இறைச்சிகளான நம்
பரிமாற்றம்
ஆரம்பிக்காமல் முடிந்துவிட்டது.
(தேவதச்சன்)

நான் ஒரு உடும்பு
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமேயில்லை
(நகுலன்)

எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன் நிழல்
(பிரமிள்)

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

அநுத்தமா

பயணங்கள் பலவிதம் - 08

எழுத ஆரம்பித்த புதிதிலேயே  ராஜேஸ்வரிக்கு ‘அநுத்தமா’ என்ற புனைப்பெயர் சூட்டியவர் அவரது மாமனார். முதல் கதையான ‘அங்கயற்கண்ணி’ கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. ‘ஜெகன்மோகினி’நடத்திய போட்டியில் பரிசினைப் பெற்றுத்தந்த கதை ‘மாற்றாந்தாய்’.

புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்பட்ட அநுத்தமா அவர்களின் ‘கேட்டவரம்’ என்கிற நாவல், பெரும்பாலான பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஐம்பதுகளின் வாழ்வியலை இவரது படைப்புகள் பிரதிபலிக்கின்றன என்று சொல்வார்கள். திருமணத்திற்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றவர்

ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள் தவிர வானொலி நாடகங்கள் பலவற்றை  எழுதியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக உரையாற்றும் ஆற்றல் கொண்டவர். மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறார். அகிலன், கி வா ஜ, ராஜாஜி ஆகியோரின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்.

** ** ** **

இவரது ராமய்யா என்னும் கதை

சூரியாஸ்தமன சமயம். கதிரவனின் கிரணங்கள் மேற்கு வானத்தைத் தங்க மயமாக இழைத்து விட்டன. அந்த ஒளி வீட்டின் மீதும் வீசி, எல்லா வற்றையும். இரத்தின மயமாகப் பிரகாசிக்கச் செய்தது. தூரத்தில் ஒரு சிற்றாற்றின் சலசலப்பு காதில் இன்பகரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

என்று சம்ப்ரதாயமாகத் தொடங்குகிறது.

குடும்பத் தலைவர் வேலைபார்க்கும் நகரத்தின் சந்தடியைத் தவிர்க்க இருபது மைல் தொலைவில் தோட்டம் துரவுடன் வீட்டில் வசிக்கும் குடும்பம். அந்த வீடும் ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல். அந்த ஏகாந்தத்தையும் இயற்கை எழிலையும் மகன் மாதுவுடன் சேர்ந்து ரசித்து அனுபவிக்கும் இல்லத்தரசியின் பார்வையிலும் சொற்களிலும் நகர்த்தப்படும் கதை.

ஒரு பொன் மாலைப்பொழுதில் வெளியில் ஒரு ‘வயோதிகர்’ வந்து நிற்பதைக் குழந்தை அறிவிக்க ‘இந்தக் காலத்தில் யாரை நம்புவது?’ என்னும் எண்ணத்தோடு உள்ளே சென்று விடுகிறாள்.

அந்த நேரத்தில் கணவர் வீடு திரும்பி வந்தவரை யாரென விசாரிக்கிறார். உதவியாள் தேவைப்படுமா என்று கேட்கிறார் வந்தவர்.

அந்தக் கிழவனின் குரல் கணீரென்று, காதில் வெகு நேரம் அதிர்ச்சி உண்டாக்கும் வகையைச் செய்தது. வயது ஐம்பது இருக்கும். உடம்பு கோடிட்டு சுருங்கி காலதேவன் மனித ரூபம் எடுத்து வந்தாற் போலிருந்தது.

அந்தக்கால வழக்கப்படி ஐம்பது வயது என்றாலே கிழவன் தானே? எல்லோரையும் நம்பிவிடும் கணவர் ‘சரி’ என்று சொல்லிவிடுவாரே என்று மனைவி கவலைப்படுகிறாள். கணவர் உள்ளே வந்ததும் சொல்லவும் செய்கிறாள்.

ஆனால் அவர் சிரித்தார். “நீ இங்கே தனியாக இருப்பதற்கு ஒரு துணையாயிற்றுஎன்றார். இவர் இப்படிப் பேசத் தொடங்கினால் என் ஜம்பம் ஒன்றும் சாயாது என்று நெடுநாள் பழக்கத்தில் எனக்குத் தெரிந்த விஷயம்தான். அவருக்கு நான் சொல்லுவது புரியாமலில்லை. புரிந்து கொள்ள மறுப்பவர்களிடம் என்ன செய்வது? மேலெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நான் விர்ரென்று உள்ளே சென்று விட்டேன்.

சற்று நேரம் சென்று வழக்கம் போல் செடிகளுக்குத் தண்ணீர் விடுவதற்காகப் பின்புறம் செல்கையில் ஜலம் இழுத்துக் கொட்டும் வேலையில் முனைந்திருந்த அந்தப் புதிய நபரைப் பார்க்கிறாள். அதிருப்தியுடன் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு திரும்பிவிடுகிறாள்.

என் கணவர் சமையலறைக்கு வந்தார். “ராமய்யா எங்கே சாப்பிடுவான்? பாவம், அவனுக்கும் சேர்த்து சாதம் வடித்து விடு” என்றார்.

“ஆகா!” என்றேன், நான் எரிச்சலுடன்.

இரவு சாப்பிட்டானதும் பின் கதவைத் தாளிடும்போதுதான் அந்தக் கிழவரைக் கவனிக்கிறாள். அவருக்கும் உணவு இடுகிறாள்.

காலையில் எட்டு மணிக்குள் பாத்திரங்கள் கழுவி, குளித்து சமையல் முடிக்கவேண்டும். அதற்கு முன்பே மாட்டை வெளியில் கட்டி, சாணம் திரட்டி, வாசல் தெளித்து, வீட்டைப்பெருக்கி என பல கடமைகள்.

இன்றோ எழுந்து புழக்கடை வரும்போதே, மாடு வெளியில் கட்டப்பட்டு, கொட்டில் சாணம் எடுக்கப்பட்டு, தரை சுத்தமாக்கப்பட்டு …. அந்தக் கிழவனுக்கு தானே எஜமானன் என்ற எண்ணமோ என்று கறுவிக்கொண்டே மற்ற வேலைகளைக் கவனிக்கிறாள்.

காட்டிலிருந்து சுள்ளிகளை வெட்டி எடுத்துவருகிறார் ராமய்யா. எதற்கு என்ற கேள்விக்கு, ‘வேலிகட்ட’ என்பதுதான் பதில். எதையும் சட்டை செய்யாமல் முட்களைக் கழித்து குச்சிகளைச் சீராக்கி மும்மரமாக வேலையைத் தொடர்கிறார்.

அவனிடம் ஒரு மரியாதை, அவனது உதாசீனத்தில் ஒரு கோபம், அவன் மீது அனுதாபம், இரக்கம் இவை யெல்லாம் ஒருங்கே தோன்றி என் மனதில் ஆரவாரம் செய்தன. நான்-இந்த வீட்டு எஜமானி – ஒரு கேள்வி கேட்டால், ஏதோ பதில் சொல்லி விட்டுத் திரும்பிக் கொள்கிறானேஎன்று என் அகந்தை கர்ஜனை செய்தது. முன் பின் அறியாத ஒருவன் உன் வேலை பூராவும் தனது கடமையெனச் செய்திருக்கிறானே,’ என்று என் உள்ளத்தில் இருக்கும் தெய்வாம்சம் எடுத்துக் காட்டிற்று.

வந்தவரை வீட்டை விட்டு அனுப்பி விடும்படிக் கணவரிடம் கண்டிப்பாகச் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ராமய்யா அங்கே வந்துவிடுகிறார். மாலையில் வரும் போது கயிறும் ஆணிகளும் வாங்கி வர ஆக்ஞாபிக்க, கணவரும் எதற்கு என்று கூடக் கேட்காமல், ‘சரி’ என்று தலையை ஆட்ட ‘கிழவன்’ அவளுடைய சுதந்திரத்தையே பறித்துக் கொண்டு போய் விட்டதாகக் கருதிப் பொருமுகிறாள்.

வந்து இரண்டு மாதங்கள் கழிந்து வீட்டு மனிதன் போலாகி விடுகிறார். கேட்பதற்குப் பதில் தவிரப் பேச்சு கிடையாது. முக்கால்வாசி நாள் அவர் இருப்பதே ஞாபகம் வராது

நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன வென்று நமக்குப் பிரத்தியேகமாகக் கவனமிருக்கிறதா; மூக்கு, கண் என்று தனியாக உணருகிறோமா? அதே போல் ராமய்யா எல்லோருக்கும் ஒரு கை அதிகமானது போல் வீட்டில் ஓர் இன்றியமையாத பொருளாக விளங்கினான்.

கொஞ்சம் கொஞ்சமாக மாது ராமய்யாவின் தோழனாகி விட்டான். தாய் செல்லங் கொடுத்தால் அவனுக்கு கௌரவக் குறைவாகப் படும் என்கிற சந்தேகமும் வருகிறது

இப்பொழுது நான் என் குழந்தையை இழந்து விட்டேன். ராமய்யா இல்லா விட்டால் நான் என்ன செய்திருப்பேனோ? மாதுவின் விளையாட்டுத் தோழன் – குரு; என் வலக்கை; என் கணவரின் ஊன்று கோல்; என்றெல்லாம் நான் அவரைப் பற்றி நினைப்பதுண்டு.

எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும், சாபிடப்படுத்தும் ஒரே குழந்தை, அவன் தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான். துணி தோய்க்கக் கூட கற்றுக் கொண்டு விடுகிறான்.

இல்லத்தரசி மீண்டும் சூலுற, தண்ணீர் தூக்காதே; இருட்டில் வெளியே போகாதே. பால் சாப்பிடு, பழம் சாப்பிடு” என்றெல்லாம் ராமய்யா அதிகாரத்துடன் விரட்டியடிப்பது இவளுக்கு வியப்பாக இருக்கிறது.

 ஏன்? எனக்கு மாதம் முதிர்ந்து, என் தாயார் என்னை அழைத்துப் போக வந்ததும், அவளையும் அப்படியே அதட்டினார்!

“ஊருக்குப் போனவுடன் ஒரு தரம் எண்ணெய் கொடுங்கள் ” என்று ஆக்ஞாபித்தார். அம்மா இப்பொழுதும் அதைச் சொல்லிச் சொல்லி சிரிப்பாள்.

மாதுவிற்குத் தங்கை தங்கத்துடன் வீடு திரும்புகிறாள். எல்லோரும் இறங்குவதற்கு முன்னேயே வண்டியிலிருந்து இறங்குகிறாள். அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து அவரது மனப்பூர்வமான ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகே அமைதி குடி கொண்டது.

இப்போதெல்லாம் மாதுவும்  ராமய்யாவும் தங்கத்துடனே பொழுது போக்குகிறார்கள்.  ராமய்யாவின் சந்தோஷத்தைக் கலைக்க மனமின்றி, பெரும்பாலான வீட்டு வேலைகளைக் கணவரும் மனைவியுமே பகிர்ந்துகொள்கிறார்கள்.

அதற்கும் ஒரு முடிவு வருகிறது.  ராமய்யா நோய்வாய்ப்படுகிறார்.

“ஏன் மனங்கலங்குகிறாய்? நான் எல்லோரையும் இழந்து விட்டு பரதேசியாக வழியில் திரிந்து, அநாமதேயமாகச் சாக வேண்டியவன். பிள்ளையும், பெண்ணும், பேரனும், பேத்தியும் என்னைத் தாங்க, நான் செல்வது எவ்வளவு சந்தோஷம் என்று யோசித்துப் பார்.”

என்கிறார்.

எப்படிக் குடும்பத்தில் அமைதியாக நுழைந்தாரோ, அதே அமைதியுடன் வேறு உலகமும் போய்விடுகிறார்.

அவர் வந்த புதிதில் அவர் இருந்ததையே மறந்த நான், இப்பொழுது அவர் இங்கு இல்லாததை மறந்து விடுகிறேன். இப்பொழுது மாதுவுடன் தங்கம் விளையாடு கிறாள். ஆனால் அவளுக்கு ராமய்யா தாத்தாவின் போஷணை இல்லாமல் போய்விட்டதே என்பதுதான் எனக்குக் குறை.

என்று முடிகிறது கதை.

** ** ** **

‘அவன்’, ‘அவர்’ என்று மாறிமாறிச் சொல்லப்படுவது கதை சொல்லியின் அந்தந்த நிகழ்வில் இருக்கும் மனநிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. உளவியலும் மனிதநேயமும் கதை முழுவதும் ஊடுருவி இருக்கிறது.

சிக்கலில்லாத எளிய கதை; கதையோட்டமும் நடையும் இதமாக இருக்கின்றன.

எஸ். கே என்

 

ஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்

My window of Hope – Twin Quill

நாட்டின் பாராளுமன்றத்தில் மழைக்காலக்  கூட்டத் தொடர் 

நம் சென்னையில் மேலடுக்குச் சுழற்சிப் பெரு மழை 

என் இல்லத்திலும் இடியுடன் கூடிய கன மழை 

நான் தயாரானேன் 

‘இந்த நேரத்தில் எங்கே ‘ இடி முழங்கியது 

நான் இடிதாங்கி பதில் அளிக்கவில்லை 

இந்த மழையில் அழைத்தது யார் ?

நான் தலை வாரிக் கொண்டேன் 

நான் சொன்னால் கேட்கக் கூடாது என்று  குதர்க்கம். அப்படித்தானே ?

‘ஆம்’ என்று சொல்ல எத்தனை வினாடிகள் பிடிக்கும். 

எங்கே போகிறேன்  என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்? 

சட்டை செய்யாமல் சட்டை போட்டுக்கொண்டேன் 

ஜன்னலுக்கு வெளியேயும் இடி மின்னல் மழை 

கொட்டும் மழையில் கூப்பிட்டவர் யார்  என்று சொல்லிவிட்டுப் போகலாமே ? 

நான் முக்கியமில்லை;  யார்  முக்கியம்

மடிக்கணிணியை எடுத்துக் கொண்டேன். 

கடைசி முறையாகக் கேட்கிறேன். வருந்தி அழைத்தது யார் ? சொல்வீர்களா மாட்டீர்களா? 

நந்தி வழி மறிப்பது போல இருந்தது. 

என் மௌனம் கலைய இது கடைசி வைக்கோல் !

சொன்னேன் 

இருவரும் சிரித்துவிட்டோம். 

ஜன்னலுக்கு வெளியே இன்னும் மழை பெய்கிறது.  

தகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா

தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா

மொழி பெயர்ப்பு சிறுகதை : மலையாளம்
மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை
ஆங்கிலம் :சாமுவேல் மத்தாய்
தமிழில் : தி.இரா.மீனா

வெள்ளம்

 

கிராமத்தின் அந்த மேட்டுப்பகுதி கோயிலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கோயில் தெய்வம் கூட இப்போது கழுத்தளவு வரையான தண்ணீரில் நின்று கொண்டிருந்தது.தண்ணீர் எங்கும் தண்ணீர். அந்தகிராமத்தின் மக்களனைவரும் வறண்ட பகுதிகளைத் தேடிப் போய்விட்டனர். ஒரு வீட்டிற்கு ஒரு படகு சொந்தமாக இருந்தால்,அந்த வீட்டின் உடைமை களைப் பாதுகாக்க யாராவது ஒருவர் அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

மூன்று அறைகளைக் கொண்ட அந்த கோயிலின் மாடிப் பகுதியில் அறுபத்தியேழு குழந்தைகள், முன்னூற்றி ஐம்பத்தியாறு முதியவர்கள், நாய்கள்,பூனைகள், ஆடுகள், காட்டுக் கோழிகள் என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அங்கிருந்தனர்.

சென்ன பறையா அந்தத் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் இரவு,பகலாக நின்றிருந்தான்.அவனுக்கு என்று படகு இல்லை.அவனுடைய முதலாளிமூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடிவிட்டார். அவனுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுவதற்கு முன்பேயே அவன் குச்சிகளையும் தென்னை ஓலைகளையும் சேர்த்து வைத்து ஒரு பரணைக் கட்டிவிட்டான்.வெள்ளம் வேகமாக வடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அதைக் கட்ட இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டான். அவன் தன் வீட்டை விட்டுப் போய் விட்டால் நான்கைந்து வாழை மரங்கள் ஒரு வைக்கோற்போர் ஆகியவற்றை யாராவது கை தேர்ந்த சாமர்த்தியசாலி கவர்ந்து கொண்டு போய் விடுவான் என்பதாலும் அவன் அங்கேயே தங்கி விட்டான்.முழங்கால் மூழ்கும் அளவிற்கு தரையில் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஏற்கெனவே கூரை மேலிருந்த இரண்டு வரிசை தென்னையோலைகள் தண்ணீரில் மூழ்கியிருந்தன. உள்ளேயிருந்து சென்னன் கூப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆனால் அவன் குரலைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? கர்ப்பிணியான ஒரு பறைய பெண், நான்கு சிறுகுழந்தைகள், ஒரு நாய், ஒரு பூனை —இவர்களனைவரும் அவனை நம்பியிருப்பவர்கள்.அடுத்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் தண்ணீர் கூரையின் மேல் பாய்ந்து விடும் என்பதும் அதுதான் அவர்கள் எல்லோருக்கும் முடிவு என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரியும். இந்த மூன்று நாட்களில் மழை சிறிது கூடக் குறையவில்லை. வேயப்பட்டிருந்த கூரையின் ஒரு வரிசையைப் பிரித்து எல்லாத் திசைகளிலும் பார்த் தான்.வடக்கிலிருந்து ஒரு பெரிய படகு மிதந்து வந்து கொண்டிருந்தது. படகோட்டிக்கு கேட்டு விடவேண்டும் என்ற வேகத்தில் மிகப் பெரிதாக கத்தினான்.அதிர்ஷ்டவசமாக நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் குடிசையை நோக்கிப் படகைத் திருப்பினர். ஒரு சிறிய திறப்பு வழியாகத் தன் மனைவி, குழந்தைகள், பூனை, நாய் அனைத்தையும் ஒவ்வொருவராக வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.அதற்குள் படகு அருகில் வந்து விட்டது. குழந்தைகள் அதற்குள் ஏறியபோது “ஹே சென்னச்சா…” என்று மேற்கிலிருந்து யாரோ கூப்பிட சென்னன் குரல் வந்த பக்கம் திரும்பினான்.

அது, தன் வீட்டின் உச்சியில் நின்று கொண்டு கூப்பாடு போட்ட மடையத்தரா குஞ்சப்பன்.சென்னன் தன் மனைவியைப் படகினுள்ளே தள்ளினான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பூனை புகுந்து கொண்டது. நாயின் நினைவு யாருக்குமேயில்லை.அந்தக் கணத்தில் நாய் வீட்டின் மேற்குப் பகுதிக்குப் போய் அங்குள்ள பொருட்களைத் தானாகவே மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது.படகு முன்னே நகர்ந்து போக  குடிசையின் தொலைவு விரிந்தது.

குடும்பத்தினர் எப்போதும் சாதாரணமாக எங்கிருப்பார்களோ அந்த இடத்திற்கு வந்த நாய், ஏற்கெனவே போய்விட்ட படகைப் பார்த்தது.அது பறந்து போய் விட்டது போலிருந்தது.எச்சரிக்கை உணர்வில் ஊளையிட்டது. வெறுப்பிலிருக்கிற கையாலாகாத மனிதன் போல அது பலவிதமான ஒலிகளை எழுப்பியது. ஆனால்அதைக் கேட்க யாரிருக்கிறார்கள்?கூரையின் நான்கு பகுதிகளிலும் ஓடி மோப்பம் பிடித்து ஊளையிட்டது. குடிசையில் ஒண்டியிருந்த ஒரு தவளை பயந்து தண்ணீரில் குதித்தது.தவளையின் குதியலால் தண்ணீர் கொப்பளிக்க, நாய் பயந்துபோய் அந்த இடத்தையே பார்த்தது.

உணவைத் தேடி குடிசை முழுவதும் சுற்றிவந்தது.ஒரு தவளை நாயின் நாசிக்குள் தன் சிறுநீரைத் தெறிக்க விட்டு தண்ணீருக்குள் குதித்து விட்டது. நாய் தும்மி, இருமியது.தன் ஒரு உள்ளங்கையால் முகத்தைச் சுத்தம் செய்து கொண்டது.மீண்டும் மழை கொட்ட நாய் பதுங்கிக் கொண்டது. இதற்கிடையே அதன் முதலாளி பத்திரமாக அம்பாழப்புழா போய் விட்டார்.அது இரவு நேரம்.மெதுவாக மிதந்து வந்த ஒரு பெரிய முதலை குடிசையை உரசிக் கொண்டு நகர்ந்தது. நாய் பயத்தில் ஊளையிட்டது. ஆனால் முதலையோ அதைப் பார்க்காமலேயே அந்த இடத்தைக் கடந்து விட்டது.அந்தப் பரிதாபமான விலங்கு குடிசையின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு கருமையான வானத்தைப் பார்த்து ஊளையிட்டது. அதன் சோக மான அழுகை மிகத் தொலைவிலும் கேட்டிருக்க வேண்டும்.

ஒலியின் கடவுளான வாயு தன் கருணையால்,அந்த அழுகையை எங்கும் எதிரொலிக்கச் செய்தார்.சிலர் அதைக் கேட்டு “ஐயோ, ஒரு நாயை யாரோ வீட்டில் பரிதவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டார்கள் –வெட்கக் கேடு “ என்று தமக்குள் முனகிக் கொண்டனர். அதன் முதலாளி கரைக்குச்
சாப்பிடப் போயிருக்கலாம். தன் உணவுக்குப் பிறகு அந்த நாய்க்குச் சாப்பாடு எடுத்து வருவது அவர் வழக்கமாக இருக்கலாம்.  இப்போது,  தான்
சாப்பிடும் போது அவருக்கு நாயின் நினைவு வந்திருக்கும். இதுவரை பெரிதாக, நீண்டதாக இருந்த நாயின் ஊளை பலவீனமாகத் தொடங்கியது. 

இராமாயணச் சுலோகங்கள் சொல்லும் ஒரு குரல் நாய்க்கு கேட்க அது தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கொஞ்ச நேரம் அமைதியாக
இருந்தது.பிறகு, தன் நெஞ்சம் உடைந்தது போல மீண்டும் ஊளையிடத்தொடங்கியது.

மிக அமைதியாக இருந்த அந்த நள்ளிரவில் இராமாயணச் சுலோகங்கள் ஒலி காற்றில் பரவியது.நாய் மீண்டும் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனமாக அசைவின்றி நின்று அதைக் கேட்டது. அந்த இனிமை யான ஒலி குளிர்ந்த காற்றில் கலந்தது. அந்தச் சப்தம் தவிர கேட்ட மற்றுமொரு ஒலி என்பது காற்றுதான்.தன் மென்மையான மூக்கு சிவந்தும் வீங்கியும் போனதை நாயால் உணரமுடிந்தது.

மதிய நேரத்தில் இரண்டு மனிதர்கள் சிறிய படகில் அந்த இடத்தைக் கடந்தனர்.நம்பிக்கையோடு அந்த நாய் வாலையாட்டி அவர்களைப் பார்த்துக் குரைத்தது.ஒரு மனிதன் தன் உணர்வைச் சொல்லமுயல்வது போலத் தன் நிலையை உணர வைக்க முயற்சி செய்தது.தண்ணீருக்குள் நின்று்கொண்டு படகிற்குள் குதித்து விடுவது போல போஸ் குடுத்து நின்றது.”ஏய், ஒரு நாய் அங்கே நிற்கிறது “ஒருவன் கத்தினான். அந்தக் குரலில் இருந்த பரிவை உணர்ந்து கொண்டது போல நன்றியுணர்வில் நாய் தன் வாலை யாட்டியது. “ இருக்கட்டும் விடு” என்றான் மற்றொருவன் .இரண்டு முறை படகிற்குள் குதிக்க முயன்றது,ஆனால் படகு போய்விட்டது.

அந்த நாய் மீண்டும் குரைக்கத்தொடங்க படகிலிருந்த ஒருவன் தலையைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். “ ஐயா “ — இல்லை ,அது அந்த படகோட்டி யின் குரலில்லை; அது அந்த நாயின் மனித முனகல். அந்தக் கோபமான, சோர்வடைந்து விட்ட அழுகுரல் கீரீச்சிடும் காற்றோடு கலந்து நீரலைகளில் எதிரொலித்தது.

கண் பார்வையிலிருந்து படகு மறையும் வரை நாய் படகையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றது.உலகத்தையே வெறுத்து விடை பெறுவது
போலக் குடிசையின் முகட்டில் அது ஏறியிருந்தது. மனிதன் மேல் இனிஒரு காலத்திலும் அன்பு காட்டப் போவதில்லை எனத் தனக்குள்ளேயே
அது சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.அது குளிர்ந்த தண்ணீரை அளைந் தது. தண்ணீரில் வளைந்து குதியாட்டம் போட்டு போய்க் கொண்டிருந்த ஒரு தண்ணீர்ப் பாம்பைக் குறி வைத்தபடி தலைக்குமேல் பறவைகள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தது.தன் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்காக சென்னன் ஏற்படுத்தியிருந்த ஓட்டை வழியாகத்தான் தண்ணீர்ப் பாம்பு உள்ளே வந்திருந்தது.நாய் அதையே கண்காணித்துக் கொண்டிருந்தது.பசியிலும்,சாவு பயத்திலும் இருந்த நாய் பலமாகக் குரைத்தது.நாய் எழுப்பிய அந்த மொழி உலகளாவியது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

புயலும்,மழையும் மீண்டும் தொடங்கியது.குடிசையின் அடிவாரத்தில் தொடர்ந்து அலைகள் மோதிக் கொண்டிருந்ததால் கூரை நிலையின்றி
ஆட்டம் காண ஆரம்பித்தது.தண்ணீரிலிருந்து ஒரு நீண்ட தலை வெளிப்பட்டது; அது ஒரு முதலை. கோழிகள் எங்கிருந்தோ ஒத்த குரலில் கூவிக்
கொண்டிருந்தன. ”எங்கிருந்து நாய் அழுவது கேட்கிறது? அதன் சொந்தக்காரர்கள் குடிசையை விட்டு வெளியேறி விட்டார்களா?” நாய்க்கு மீண்டும் மனிதக் குரல்கள் கேட்டது. வாழை மரத்தின் அருகில் ஒரு படகில் வாழைப் பழத் தார்களும்,வைக்கோற்போரும் ,தேங்காய்களும் நிரம்பிக் கிடப்பதை நாய் பார்த்தது.தண்ணீரின் விளிம்பருகே சென்று படகிலிருந்தவர்களைப் பார்த்து கோபமாகக் குரைத்தது.

படகிலிருந்தவர்களில் ஒருவன் வாழை மரத்தின் அருகே சென்றான். “ஜாக்கிரதை ;நாய் தாவிக் குதித்து வந்துவிடும் போலிருக்கிறது.” நாய் குதித்தது, அந்த மனிதன் தன் பிடியைத் தளர்த்தி விட்டுத் தண்ணீரில் விழுந்து விடட்டும் என்ற விதத்தில்.மற்றொருவன் அவன் படகுக்குள் ஏற உதவி செய்தான்.இதற்குள், நாய் தண்ணீரிலிருந்து நீந்தி வெளியே வந்து மீண்டும் குடிசையின் உச்சிக்கு வந்துவிட்டது.

திருடர்கள் வாழையின் ஒவ்வொரு கொத்தையும் வெட்டினார்கள். கோபமாகக் குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து “ பொறு, உன்னை
கவனித்துக் கொள்கிறோம் “என்றனர்.வைக்கோலைப் படகிற்குள் குவித்தனர். கடைசியில் ஒருவன் குடிசையின் உச்சியில் ஏறினான்.நாய் அவன் காலில் பாய்ந்து கால் சதை தன் வாயில் வரும்படி கடித்தது.வேதனை பொறுக்க முடியாமல் அலறி ,அவன் படகிற்குள் குதித்தான். இதற்குள் மற்றொருவன் தன் கையிலிருந்த துடுப்பால் நாயின் தலையில் தாக்கி னான். பலவீனமான குரலில் நாய் ’மொவ் ,மொவ்’ என்றழுதது.சிறிது நேரத்தில் அந்தச் சத்தமும் நின்றுவிடலாம்.நாய் கடித்த வேதனை பொறுக்கமாட்டாமல் படகிலிருந்தவன் பெரிதாகக் கத்தினான்.அருகிலிருந்தவன் அவனைச் சமாதானப்படுத்தினான். மற்றவர்கள் காதில் விழுந்து யாரும் அங்கு வந்து விடக்கூடாது என்று அழுகைச் சத்தத்தைக் குறைக்க வைத்து, படகைச் செலுத்தினான்.தொலைவில் படகு போன திசையைப் பார்த்து நாய் குரைத்துக் கொண்டிருந்தது.இரவாகிவிட்டது .மிதந்து வந்த ஒரு பசுவின் சடலம் குடிசையருகே சிக்கிக் கொண்டது. நாய் அருகே வந்து அதைப் பார்த்தது, ஆனால் அதன் மேலேற தைரியமில்லை. மெதுவாக அந்தச் சடலம் சிக்கலிலிருந்து விடுபட்டு நீரோட்ட திசையில் நகர்ந்தது. நாய் நூல் பின்னலாக அதற்குள் சிக்கியது. வால் ஆடிக்கொண்டிருக்க சடலத்திற்குள் தன் பற்களைப் புதைத்துக் கொண்டது. அந்த மிகுதியான சதைக்குள் தன்னை இடுக்கிக் கொண்டது. சிறிதுநேரம் சடலம் அடியில் போக, நாய் சில கணம் மறைந்து போனது. அதற்குப் பிறகு புயலின் பெரும் ஊளைச் சத்தம், தவளைகளின் கரகரப்பொலி குரல் , ஆற்றின் அலை சத்தம் ஆகியவற்றை மட்டுமே கேட்க முடிந்தது. நாய் அமைதியாகிவிட்டது ; அதனுடைய பரிதாப அழுகையும், முனகல்களும் கேட்கவேயில்லை.அழுகிப் போன சடலங்கள் ஆற்றில் மிதந்தன, காக்கைகள் தொந்தரவின்றி அவற்றைக் கொத்திக் கொண்டிருந்தன.எங்கும் எல்லாமும் பாழாகிக் கிடக்க ,திருடர்கள் மனம் போனபடி தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் குடிசை சிதைந்தது. முடிவற்ற அந்த நீர் பெரும்பரப்பில் எதையுமே பார்க்க முடியவில்லை.தான் இறக்கும் வரை தன் எஜமான
னின் உடைமைகளை நாய் பாதுகாத்தது .இப்போது முதலைகள் அதைச் சாப்பிட்டு விட்டன. குடிசையும் அழிந்து போனது.

தண்ணீர் குறையத் தொடங்கியது.தன் நாய்க்கு என்ன நேர்ந்தது என்று அறிய சென்னன் தன் குடிசையை நோக்கி நீந்தி வந்தான். ஒரு தென்னை யின் கீற்றடியில் ஒரு நாயின் உடல் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தான். தன் விரல்களால் சடலத்தின் உடலைப் புரட்டிப் போட்டுப் பார்த்தான்.தன் நாயோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.ஒரு காது கடிக்கப்பட்டு , தோல் அரித்துப் போய் அழுகியிருந்ததால் அதன் நிறத்தை அறிவது கூடக்கடினமாக இருந்தது.

நன்றி :

Contemporary Indian Short Stories Series II, Sahitya Academy

 

தகழி சிவசங்கரம் பிள்ளை : [ 1912 – 1999 ]

ஞானபீட விருது பெற்ற மிகச் சிறந்த மலையாள படைப்பாளியான தகழி முப்பது நாவல்களும் அறுநூறு சிறுகதைகளும் எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற அவருடைய செம்மீன் என்ற நாவல் பல இந்திய மொழிகளிலும், அயலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருடைய கதைகள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்தவை.

இக்கதையின் நாயகனாக அமையும் நாய் ’ மனிதன் மீது இனி ஒருகாலத்திலும் அன்பு காட்டப் போவதில்லை ’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும் ’ என்ற சூழலைப் பிரதிபலிப்பது இக்கதையின் கருவும் , கூடவே சேர்ந்து படைப்பாளியின் வெற்றியும்.

 

அவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்

ஒன்றும் குறையில்லை! | Dinamalar

 

                  அவள் அப்படித்தான்

ஆச்சு. பார்வதியின் பையன் ரகுராமனுக்குக் கல்யாணம் ஆகி விளையாட்டுப் போல ஒரு வருடம் ஓடி விட்டது. இல்லை இல்லை ஒட்டியாகி விட்டது.  ஆம், நல்ல நாட்டுப்பெண் ஜானகி வாய்த்தாள் அவளுக்கு. ஊரில் உலகத்தில் இல்லாத மாதிரி. இது என்னடா இது கூத்து! ஒன்றுமே என்றால் ஒன்றுமே தெரியவில்லை. ஜானகி ஒரே பெண் என்றாலும் இப்படியா வளர்த்திருப்பார்கள். நல்ல சம்பந்தி. ஒரு காபி போடுவதிலிருந்து இரவு அப்பளம் சுடுவது வரை ஒன்றிலிருந்து ஒன்றாக எல்லாமே சொல்லித்தர வேண்டியுள்ளது.

காபி டிகாஷன் போடும்போது டிகாஷனில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்தால் நல்ல திக்கான டிகாஷன் கிடைக்கும் என்ற விவரம் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்; ஆனால் டிகாஷனே எப்படி போடுவது என்று தெரியாவிட்டால் என்ன செய்வது? பூரியுடன் சிறிது ரவையைச் சேர்த்தால் பூரி மொறு மொறுவென்று உப்பலாக இருக்கும் என்ற ரகசியம் தெரியாவிட்டாலும் பூரிக்கு மாவு பிசையக்கூடத் தெரியவில்லையே! பார்வதிக்கு தன்  பையன் எப்படி ஜானகியுடன் குடித்தனம் நடத்தப்போகிறானோ என்ற கவலை எழுந்தது. ஆனால் பார்வதியைக் கேட்டு கேட்டு அவள் சொன்ன மாதிரி ஒரு ஒரு வேலையும் அச்சுப்பிறழாமல் செய்வதில் மட்டும் சமர்த்து.ம்.

எதிர் வீட்டு பங்கஜம் கொஞ்சம் சர்க்கரை வேண்டுமென்று வந்தாள். சர்க்கரை வாங்கவா வந்தாள் மஹூம். தன் நாட்டுப்பெண் பவானியின்  சாமர்த்யத்தைக் காட்ட வந்தாள். வீட்டு வேலையும் செய்து விட்டு, ஆபீசுக்கும் போய் வருகிறாள். ‘உன் மாட்டுப்பெண் ஜானகி வீட்டு வேலைகளை உன்னை கேட்டுத்தான் செய்கிறாளாக்கும்’ என்று நொடித்தாள். ஆனால் பவானி பங்கஜத்திடம் கூட சொல்லாமல் நகை வாங்கி உள்ளே பதுக்கி வைத்து இருக்கிறாள் என்பதை பார்வதி எப்படி அவளிடம் கூற முடியும்!

அடுத்த வீட்டு அம்புஜம் அதை விட மோசம். தன் நாட்டுப்பெண் மேகலை இரண்டு இடத்தில் பகுதி நேர வேலை செய்கிறாள் என்று பீற்றல். ஆனால் அதற்காக இவள் முதுகொடிய எல்லா வீட்டு வேலைகளையும் செய்வதும், அந்த மேகலை இவளை அலட்சியப்படுத்துவதும் எல்லோர்க்கும் தெரிந்த ரகசியம்தான். இருந்தாலும் ஜானகிக்கு சமர்த்து குறைவுதான் என்று பார்வதிக்கு உள்ளூர மிக வருத்தம்.

திடீரென்று ராகுராமனுக்கு டெல்லியில் பத்து நாட்கள் வேலை வந்து விட்டது. ஜானகியிடம் அம்மாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு பார்வதியையும் ஜானகியிடம் சண்டை போடாமல் இருக்கும்படி கெஞ்சி விட்டுப் புறப்பட்டான். அந்தக் காலத்தில் கைப்பேசி வரவில்லை. போனும் ரொம்ப புழக்கத்தில் இல்லை. ஏதாவது அவசரம் என்றால் அருகிலுள்ள கடையிலிருந்து இந்த எண்ணிற்கு போன் செய்யுமாறு தன் ஆபீஸ் நம்பரைக் கொடுத்து விட்டு, ஆனால் நீங்கள் போன் செய்யாதவரை நான் என்  வேலையைக் கவனமாகச் செய்வேன் என்று கூறிக் கொண்டே ஆயிரம் கவலைகளோட இரயில் ஏறினான்.

அவன் சென்ற மறு நாளே பிரியாத மகனை அருகில் காணாமலோ என்னவோ தூக்கம் தொண்டை அடைக்க லேசாகத் தலைவலி என்று பார்வதி  படுத்தாள். பின் இடைவிடாத இருமல், ஜலதோசம், காய்ச்சல், உடம்பு வலி  என்று அப்படியே கட்டையை நீட்டி விட்டாள். வீடு அவ்வளவுதான். நாறிப் போகும். போகட்டும். என்ன செய்வது. எழுந்து கொள்ளக் கூட முடியவில்லையே என்று அரற்றிக் கொண்டே தூங்கினாள்.

ஜானகி வீட்டு சமையலைச் செய்து, துளி மிளகு, சீரகம் தூக்கலாகப் போட்டு ரசம் வைத்து, குக்கரில் வைக்காமல் குழைவாக அளவாக சாதம் வடித்து, மணத்தக்காளியை நெய்யில் மணக்க மணக்கப் பொரித்து, சிறிது மோரை சுடப் பண்ணி (நிறைய பேருக்கு இது தெரியாத ரகசியம், சுட்ட மோர் வயிற்றுக்கு ரொம்ப இதம்), நாரத்த ஊறுகாயுடன் பார்வதியை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து, வெந்நீரில் உடல் முழுவதும் துடைத்து, துணி மாற்றி, படுக்கை விரிப்புகளை மாற்றி, நிதானமாக மின்விசிறியை  ஒட விட்டு, மெலிதான துணியால் போர்த்தி பார்வதியைத் தூங்க வைத்து, வெளிச்சமும், வெளிக்காற்றும் சிறிது படுகிற மாதிரி அறைக் கதவை லேசாக சாற்றி வெளி வந்தாள்.

வீடு முழுவதும் பெருக்கி, டெட்டால் கலந்த தண்ணீரால் துடைத்து, குளியலறையை சுத்தமாக அலம்பி, எல்லாத்துணிகளையும் சிறிது உப்பில்  ஊற வைத்து, துவைத்து, உதறி, நீவி விட்டு உலர்த்தினாள். பார்த்தால் பட்டுப்    போல இருந்தன துணிகள். அயர்ன் கூட தேவையில்லாமல் சுருக்கமில்லாமல் உலர்த்தப்பட்டிருந்தன. பின் குளித்து, உடை மாற்றி, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, மாமியாரின் நலனுக்குப் பிரார்த்தனை செய்து விட்டு, சிறிது சாப்பிட்டாள்.  மீதி சொச்ச வேலைகளையும் முடித்து விட்டு, குரோஷாவை வைத்துக் கொண்டு ஒரு சால்வையைப் பின்னினாள். இரவும் அளவான ஆகாரம் பார்வதிக்குக் கொடுத்து விட்டு, தானும் உண்டு, பார்வதியின் அறையிலேயே கூப்பிட்ட குரலுக்கு எழுந்து கொள்ள சௌகரியமாக தரையிலேயே படுத்துக் கொண்டாள்.

பக்கத்திலுள்ள வைத்தியரை ஆலோசித்து மாயத்திரை எதுவும் வேண்டாம் என்று சொன்னதால் ஆறுதல் அடைந்து, சுக்கு கஷாயம் சுட சுட வைத்துக் கொடுத்தாள். பக்கத்து வீட்டுப் பெண் தயங்கித் தயங்கி கேட்ட பாட சந்தேகங்களைத தீர்த்து வைத்து அவளுக்கு இரண்டு பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.

இப்படியே பத்து நாட்கள் கழிந்தன. இதோ ரகுராமனின் குரல் கேட்கிறது. ஊரிலிருந்து வந்த அவருக்குத் தேவையானதை செய்து தந்து பார்வதியையும் மெல்ல வெளியில் கூட்டி வந்து உட்கார வைத்தாள்.

பார்வதிக்கு மூக்குக்கு மேல் ஆச்சரியம். ஆனந்தம். ஆஹா நம் ஜானகியா இப்பட!. ஒன்றும் தெரியாது என்று நினைத்தோமே. இது என்ன மாயம்! அப்போதுதான் அவளுக்கு சுரீரென்று ரகசியம் புலனாயிற்று. தன் கணவரை சிறு வயதிலேயே பிரிந்த மாமியாருக்கு மரியாதை கொடுத்து, அவருக்கு ஒரு அதிகாரத்தோரணையை காட்ட சந்தர்ப்பம் தந்து, அவளின் அன்பிற்காக இது நாள் வரை அடி பணிந்திருக்கிறாள் என்ற. மனதிற்குள் சந்தோஷ ஊற்று. அவள் அப்படித்தான்!

 

 

கம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்

தமிழுக்கு கதி – கம்பர், திருவள்ளுவர். 

வள்ளுவர்:

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பயிர் அழுகிய நிலத்தில் மீண்டும் உழவு பணி Dinamalarஅக்னிச் சிறகு....: உழவுக்கு உயிரூட்டுவோம்..!!

அதாவது.. உழவே சிறந்தது என்றார்.

நம் பாரதியோ  ..’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – என்றார்.

கம்பர் ஏரெழுபது – என்று எழுபது பாடல்களால் உழவில் சிறப்பை அக்கு வேறு ஆணி வேறாக பாடினார். உழவின்  எல்லா அங்கங்களையும் அலசியிருக்கிறார்.

ஏர்விழா, ஊற்றாணிச் சிறப்பு, நுகத்தின் சிறப்பு, நுகத்தாணியின் சிறப்பு, பூட்டு கயிற்றின் சிறப்பு, கொழு ஆணியின் சிறப்பு, ஏர் ஓட்டுதலின் சிறப்பு – என்று ஆழமாக நுழைந்து கவிக்கிறார்.
நாம் களிக்கிறோம்!

இனி கம்பனின் ஏரெழுபதைப் பற்றிப் பார்ப்போம்..

பலருக்கு கம்பராமாயணம் தெரிந்த அளவிற்கு அவனது தனிப்பாடல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் காரணம்: தமிழ்ப்புலவர்களும் கதா காலட்சேபம் செய்கிறவர்களும் அவன் நெய்த இராமாயணம் என்னும் மிக நீண்ட பட்டுத் துணியைப்பற்றி பேசினார்களே அன்றி அவன் நெய்த ஏரெழுபது போன்ற பல சிறு வைர மணி/ துணிகளைப்பற்றி பேசவில்லை; மற்றொறு காரணம்: பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழ்ப் பாடங்களில் கம்பராமாயணத்தில் ஒரு பகுதியை கோர்த்த அரசு, தனிப்பாடல்களை சேர்க்கவில்லை.

ஏரெழுபது பிறந்த வரலாறு மிகவும் ருசிகரமானது. குலோத்துங்கனுக்கு தான் புவிச்சக்கரவர்த்தி என்ற அகந்தை இருந்ததாம்; நம் கம்பருக்கோ தான் கவிச்சக்கரவர்த்தி என்பதில் பெருமை இருந்தது. ஒரு சமயம் குலோத்துங்கன் கவிச்சக்கரவர்த்தியும் புவிச்சக்கரவர்த்திக்கு அடிமைதானே என சபையில் கூற, கம்பர் எப்போதும் கவிச்சக்கரவர்த்தி புவிச்சக்கரவர்த்திக்கு அடிமையாக மாட்டான் என்று கூற, தர்க்கம் முற்றியது. குலோத்துங்கன் எனது ராஜ்ஜியத்தில் தானே உமக்கு இந்த பெருமை; வேறெங்கும் கிடைக்காதே என்று கூறுகிறான் ,

கம்பன் கவியால் பதிலடி கொடுக்கிறான்:

‘கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா
நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்’

அரசரால் கொடுக்கப்பட்ட அணிகலன்களை எல்லாம் கழற்றி வைத்து கம்பர் வெளியேற முற்படுகிறார்.
குலோத்துங்கன் மேலும் கம்பரை சீண்ட,

‘மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ’ என்ற பாடலைப்பாடி வெளியேறுகிறார் கம்பர்.

நீண்டதூரம் நடக்கிறார். நடந்த களைப்பு மேலிட, இளைப்பாறும் போது ஒரு காட்சி கண்ணில் படுகிறது. நல்ல நண்பகல். எதிரில் தெரிந்த வயல் காட்டில், ஏரோட்டிக் களைத்த கணவனுக்கு மனைவி, தான் கரைத்துக் கொண்டு வந்த மோரை கொடுக்கிறாள்.

பசியும் தாகமும் மேலிட கம்பரும் சென்று உழவனிடம் கையேந்துகிறார். உழவன் மனைவி கம்பருக்கும் தான் கொண்டுவந்த மோரில் சிறிதை கொடுக்கிறாள். தாகமும் பசியும் தணிந்தது. உடன் இந்த விவசாயத் தம்பதியினருக்கு தன்னால் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்று சிந்திக்கிறார்… என்னால் கவி பாடுவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாது என உணர்ந்து, அப்போதைக்கு தனிப்பாடலாய் பாடிய செய்யுள்தான்,

செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்

பின் நன்றியுணர்ச்சி ஏரெழுபதாக பொங்கியதாக வரலாறு. அதில் எனக்குப்பிடித்த இரண்டு செய்யுள்களை மட்டும் பார்க்கலாம். இவை இரண்டும் அடுத்தடுத்த பாக்களாகவே அமைந்தன என்பது சிறப்பு.

முதலாவது ஏரோட்டுதலின் சிறப்பு, அடுத்தது உழவனின் சிறப்பு.

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே

அருமையான பாடல். மிகவும் இனிமையான சுலபமாக புரியும் சொற்கள் கொண்ட எளிய நடை. எந்தவிதமான விளக்கமும் தேவையில்லை…

சுருக்கமாகச் சொல்வதென்றால் :ஏரோடினால் எல்லா நற்செயல்களும் நடக்கும், ஆனால் பசி நடக்காது!

இதற்கடுத்த பாடல், இந்த காலத்து அந்தாக்ஷரியைப்போல! வள்ளுவன் சொன்ன ஒன்றரை அடிகளிலிருந்து தொடர்ந்து தன் நால்வரிக்கவியை முடித்தான் கம்பன்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே

வள்ளுவன் வாக்கை அப்படியே உபயோகித்ததிலிருந்து கம்பர் வள்ளுவன் மீது வைத்த மதிப்பு எத்துணை என்று தெரிகிறது!

இந்தப்பாடலை ஒருவர் எனக்கு கூறியதுதான் கம்பரின் தனிப்பாடல்களை நான் படிக்கத் தூண்டுகோலாக இருந்தது. இந்த பாடலும் மிகவும் எளிமையாக புரிந்துகொள்ளும் சொற்களால் ஆனது. ஈற்றடியில் உள்ள கடைசி மூன்று சொற்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை!

இது கம்பன் உழவுக்கு செலுத்திய அஞ்சலி!

 

 

 

 

 

திட்டிவாசல் – ர வெ சு

சும்மா: திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS. 

ஒரு அழகிய ஆங்கில கவிதையின், “விக்கட் கேட்” { Wicked (Wicket) Gate } or The Castle எழுதியவர் எட்வார்ட் முயூர் (Edward Muir),தமிழாக்கம் :

மிகப் பெரிய, பிரும்மாண்டமான அரண்மனை, அதில் கோலோச்சும் ஒரு நல்ல வீரம் செறிந்த அரசர். அரசருக்குத் திறமையான மந்திரி பிரதானிகள்.  செழிப்பான நாடு, நீர் வளமும் நில வளமும் அந்த நாட்டின் செழுமையைப் பறைசாற்றும். இயற்கை எழில் கொஞ்சும் சூழல் . .

இத்தனை சிறப்பு வாய்ந்த அரசரின் மேற்பார்வையில்  கோட்டைதனை பாதுகாக்கும் வீரம் செறிந்த மாபெரும் படை.  அரண்மனையைச்  சுற்றி மிகவும் வலுவான கோட்டை, அதற்கு வெளியே அகழி.

இரும்பு மற்றும்  மரத்தாலான பெரிய கதவு இருக்கும். இந்தக் கதவை வாகனங்கள் அல்லது நிறைய ஆட்கள் செல்லும்போது மட்டும் திறந்து விடுவார்கள். மற்ற நேரங்களில் அந்தக் கதவிலேயே ஓர் ஆள் மட்டும் உள்ள சென்று வருவது போல் வழி .( அதைத்தான் திட்டிவாசல் என்கிறார்கள்.).

பல காத தூரத்திலிருந்து திடீரென  ஒரு நாள்  எதிரி மன்னனின்  ஒரு பெரும் படையெடுப்பு,  எப்படியும் இந்த நாட்டை அபகரித்து விடவேண்டும் என்ற நோக்கமே பிரதானம்.  கோட்டையை மெள்ள மெள்ள சுற்றி வளைத்து விட்டார்கள். இந்த படையெடுப்பு இந்த படையெடுப்பு  செய்தி அரசருக்குத் தூதுவன் மூலம் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக அரசரும் மந்திரி பிரதானிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார் .

படைவீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டனர். வாசலின் பிரதான கதவு  பாதுகாப்பாக மூடப்பட்டது.  நாட்டு மக்களுக்கு டமாரம் மூலம் செய்தி சொல்லப் பட்டது. “மகா ஜனங்களே அச்சமடைய வேண்டாம், நம்மிடம் போதுமான அளவு நீர், உணவு, மற்றும் சிறப்பான பாதுகாப்பு உள்ளது. படைவீரர்கள் தயார் நிலையில் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள்”. மக்களும் வெற்றி முழக்கமிட்டனர்.

இதே சமயம் எதிரிப் படை வெகு வேகமாக, கோபமாக, ஆக்ரோஷமாகச் சண்டையிடத் தொடங்கினர் . இந்த நாட்டு மன்னனும் படை வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து எதிரிப் படையினை தாக்கக் கட்டளையிட்டான். எதிரி ஓரிரு நாளில் புறங்காட்டி ஓட வேண்டும், என்றார். அரசரின் கட்டளைப்படி படைவீரர்கள், நாங்கள் யாருக்கும் சளைத்தவரில்லை, என்று போரிட்டனர்  கோட்டை மதில் மேல் நின்று போரிட்டனர்.  உயிர்ச்சேதம் இரண்டு பக்கமும் அதிகமாக இருந்தது.

மறு நாள் காலை எதிரிகள் படை கோட்டை திட்டி வாசல் வழியாக பெரும் படையென  உள்ளே நுழைந்தனர்.

 எல்லோருக்கும் பெரும் வியப்பு, அதிர்ச்சி, நடுக்கம்.  உள்ளே வந்த படை அரசரை முதலில் கைது செய்தனர் மற்ற மந்திரிகளையும் பிறகு கைது செய்தனர்.

எதிரி ராணுவ தளபதி நாட்டு மக்களிடம் “நீங்கள் அச்சம் பெற வேண்டாம், உங்கள் அரசை நாங்கள் பிடித்துவிட்டோம், நீங்கள் எங்கள் நாட்டுப் பிரஜை , அச்சப்பட வேண்டாம், இதில் உடன்பாடு இல்லாதவர்களை நாங்கள் சிறை பிடித்துச் செல்கிறோம்.” ஒரு சில எதிர்ப்புக்குப் பின்னர் நாடே அடிமையானது.

எதிரிகள் வசமான உடன் அந்த நாட்டு மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர் .  அரசர் நிலை என்ன , அவர் நாட்டை மீண்டும் மீட்பாரா ? மற்ற மந்திரிகள் நிலை என்ன  என்ற கலக்கம் மிகுந்தது .

இந்த நாட்டு மக்களில் சிலர் ஏற்பது போல ஏற்று எப்படி நாட்டை   மீட்பது எப்படி நமது படை   தோற்றது, அதுவுமின்றி (கோட்டை) திட்டி  வாசல், எப்படி உடைக்கப்பட்டது என்று செய்தி சேகரித்தனர். அரசர் எங்கு இருக்கிறார் இல்லை  உயிரோடு இருக்கிறாரா என்பதற்கு விடை கிடைக்கவில்லை .

ஆனால் திட்டி வாசல் உடைக்கப்  பட்டதற்குப் பிரதான வாயில் காப்போன் எதிரிப் படையினரிடம் பணித்து பின்னர் ஏமாந்து உயிர் விட்டதுதான் மிச்சம் .

வென்றது எதிரியின் படை பலமோ,ஆயுத பலமோ அல்ல, வாயிற்காப்போனின்  கேவலமான பேராசை!

கதவு திறக்கப் பட்டவுடன் அவனைப் பழிவாங்கி விட்டது எதிரிப் படை.

தங்கக்காசுக்குப் பணித்து விட்டனரே , வெட்கம் கெட்ட வாயிற்காப்போன் குழுவினர். அவர்கள்  சதியில் ஒரு அரசே நிர்மூலம் ஆகிவிட்டதே,  இதை எப்படி வெளியே சொல்வேன், அப்படியே என்னோடு, என் உயிரோடு, என் மூச்சோடு  ரகசியம் போகட்டும்.

குவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! - YouTube

விதுரர் என்னும் தர்மாத்மா!

பாகவத தர்மம் அறிந்த பன்னிரண்டு ஞானிகளில் முதன்மையானவன் யமதர்மராஜன். மாண்டவ்யர் என்ற ரிஷியின் சாபத்தினால், தாழ்ந்த குலத்தில் பிறக்க நேரிடுகிறது. இது எப்படி ஏற்பட்டது ?

மெளன விரதத்தில் இருந்த மாண்டவ்யர், தவத்தில் இருக்கும்போது, கொள்ளைக்காரர்களைப் பிடிக்க வந்த காவலாளிகள் இவரையும் கொள்ளைக்காரன் என்று பிடித்துச் செல்கிறார்கள் – தன் ஆசிரமத்தில் இருந்த கொள்ளைக்காரர்களைப் பற்றி இவர் வேண்டுமென்றே எதுவும் சொல்லவில்லை என்று அரசன் முன்பு நிறுத்துகின்றனர். மெளன விரதத்தால், அரசனுக்கும் இவர் பதில் சொல்லாததால், கொள்ளைக் காரர்களைப் போலவே, இவரையும் கழுவிலேற்றச் சொல்கிறான் அரசன். தன் தவ வலிமையால், இவர் கழுமரத்திலேயே தவம் செய்தவாறு இருப்பதைத் தெரிந்துகொண்ட அரசன், தன் தவறை உணர்ந்து, அவரை மரத்திலிருந்து இறக்கி, மன்னிப்புக் கேட்கிறான். அரண்மனை வைத்தியர்களைக் கொண்டு வைத்தியமும் செய்கிறான். ஆனாலும் ஒரு ஆணி உடலிலேயே தங்கி, மிகுந்த வலியையும், வேதனையையும் அளித்ததால், யமதர்மராஜனிடம் சென்று, தனக்கு இந்தத் தண்டனை அளிக்கத் தான் செய்த பாவம் என்ன என்று கேட்கிறார். அதற்கு தர்மராஜன் ‘ போன ஜென்மத்தில், தும்பிகளை முள்ளால் குத்தி, பறக்க விட்டீர்கள். அதன் பலன்தான் இந்த தண்டனை ‘ என்கிறான்.

“அப்போது எனக்கு என்ன வயது இருக்கும்?”

“மிகச் சின்ன வயது – சிறுவனாக இருந்த போது”

“பன்னிரண்டு வயதுக்கு முன், ஒரு குழந்தை செய்யும் தவறு, மன்னிக்கக் கூடிய குற்றம்தான் – ஏனெனில், அதற்குப் பின்னால் வன்மமோ, பொறாமையோ, தீய எண்ணங்களோ கிடையாது. தர்மத்தின் தலைவனான நீ, ஒரு சிறிய குற்றத்திற்கு, தேவைக்கு அதிகமான அளவில் தண்டனை வழங்கி விட்டாய். அதன் பலனை நீ அனுபவித்தே தீர வேண்டும். தர்மமும், நியாயமும், சாத்திரங்களும் அறிந்த மனிதனாகப் பிறந்தும், உன் அறிவுரைகள் ஏற்கப்படாத சூழ்நிலைகளிலேயே நீ இருக்க நேரிடும். தாழ்ந்த குலத்தில் பிறந்து, வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் நீ புறக்கணிக்கப் படுவாய்” என்று மாண்டவ்யர் சாபம் இடுகிறார். தன் தவறை உணர்ந்த தர்மராஜனும், இந்த சாபத்தை ஏற்றுக்கொள்கிறார்!

வியாச முனிவரின் கருணை மிகுந்த பார்வையால்,அழகான பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர் விதுரர். ‘உனக்கு தர்மாத்மாவான மகன் பிறப்பான்’ என அவளுக்கு வரமளிக்கிறார் வியாசர. தர்மராஜன் தன் சாப வினையால், விதுரனாக, மனிதப் பிறவி எடுக்கிறார். (மற்றொரு ரூபம் யுதிஷ்டிரராக தர்மராஜா இருக்கிறார்!).

திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட எல்லா பயிற்சிகளும் விதுரனுக்கும் கொடுக்கப்பட்டாலும், திருமணம் மட்டும், அரண்மனை பணிப்பெண்ணின் மகள் கன்யா வுடன் செய்து வைக்கப்படுகிறது! பிறப்பிலிருந்தே புறக்கணிக்கப் பட்டவர் விதுரன்.

வியாச முனிவர் வைத்த பெயர் ‘விதுரன்’ – ‘விதுர்’ என்றால் அறிவு, ஞானம். நீதி, தருமம், நியாயம், நன்னடத்தை போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்டவர். தன் சகோதரன் திருதராஷ்டிரனுக்கு மந்திரியாய் நல்லாட்சி புரிய உதவியவர். கெளரவர்களிடமும், பாண்டவர்களிடமும் சமமான அன்பையும், அக்கறையையும் கொண்டவர். திருதராஷ்டிரனாலும், துரியோதனனாலும் பலமுறை அவமானப் படுத்தப் பட்டாலும், அவர்களுக்கு நல்ல யோசனகளையும், தர்மத்தையும், நியாயங்களையும் சொல்லியவர். திருதராஷ்டிரனுக்குக் கண்களைப் போல கூடவே இருந்து தர்மத்தை எடுத்துரைத்தவர். இவர் அறிவுரைகளை ஏற்காதபோதும், தன் அண்ணன் மேல் கொண்ட பாசத்திற்காக, புறக்கணிக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் உடன் இருந்தவர். மகாபாரதத்தில், இவ்வளவு வருத்தங்களும், புறக்கணிப்புகளும் கொண்ட மற்றொரு தர்மாத்மா கிடையாது!

Facebookஶ்ரீகிருஷ்ணன் மீது அளவிலா பக்தியும், மரியாதையும் கொண்டவர். அந்தப் பரந்தாமனால் மிகவும் மதிக்கப் பட்டவர். பாண்டவர்களுக்காகத் தூது வந்தபோது, திருதராஷ்டிரன், துரியோதனாதிகள், பீஷ்மர், துரோணர், கிருபர் போன்றோரின் அழைப்பை கிருஷ்ணன் ஏற்கவில்லை. விதுரனின் விருந்தோம்பலைத்தான் ஏற்றுக்கொள்கிறான். விழுந்து வணங்குபவனைக் கைகளில் தூக்கி, மார்போடு அணைத்துக் கொள்கிறான் கிருஷ்ணன். இரவு முழுவதும் விதுரனுடன் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான் பரந்தாமன்!

துரியோதனன் பிறந்ததிலிருந்தே அவனுக்கு விதுரனைப் பிடிக்கமல் போனதற்குக் காரணம் இருக்கிறது! பிறந்தவுடனேயே கழுதை போல குரல் எழுப்பினான் துரியோதனன். விதுரன் திருதராஷ்டிரனிடம் சென்று, “அரசே, இது நல்ல சகுனம் அல்ல. இவன் நம் குலத்தையே அழித்துவிடுவான். அதனால் இவனைத் தியாகம் செய்வதே நல்லது” என்கிறார். மேலும் அவர்,” ஒரு குடும்பத்தைக் காக்க, தனியொருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்தைக் காக்க, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு நாட்டைக் காக்க, ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். ஒருவர் தன் ஆத்மாவைக் காக்க, இப்பூவுலைகையே தியாகம் செய்யலாம்” என்கிறார். திருதராஷ்டிரனின் பாசம் கண்ணை மறைத்தது – கெளரவ குலமே அழியக் காரணமானான் துரியோதனன்.

“யதோ தர்மஸ்ததோ ஜய:” -எங்கு தர்மம் உள்ளதோ அங்குதான் வெற்றியும் உள்ளது என்பதை தன் ஒவ்வொரு உரையிலும் வலியுறுத்தும் மஹான் விதுரர்.

தவத்திற் சிறந்த தவமுனி மைத்ரேய மகரிஷி, பாண்டவர்களின் நிலைக்கு வருந்தி, துரியோதனனை எச்சரிக்கிறார். ‘துரியோதனா, பாண்டவர்களைச் சமாதானப் படுத்து. இல்லையென்றால் பூண்டோடு நீங்கள் அழிவது உறுதி” என்கிறார். “நான் எதற்கும் அஞ்சாதவன்” என்று சபையில் தன் தொடையைத் தட்டி அவரை அவமதிக்கிறான் துரியோதனன். கோபம் கொண்ட மைத்ரேயர், “எந்தத் தொடையைத் தட்டிப் பேசினாயோ, அதன் வழியாகவே உன் உயிர் பிரியும்” என்று சாபம் இடுகிறார். அப்போதும் விதுரர், மகரிஷியிடம் இந்த சாபத்திற்கு என்ன விமோசனம் என்று கேட்டு, துரியோதனனைக் காக்கவே முயற்சி செய்கிறார். கெளரவர்களையும், பாண்டவர்களையும் சமமாகக் கருதினாலும், பாண்டவர்களின் பக்கம் தர்மமும், நியாயமும் இருக்கவே, ஒவ்வொரு இக்கட்டிலும் விதுரர் பாண்டவர்களைக் காப்பாற்றவே செய்கிறார்.

விதுரர் எவ்வளவோ தர்ம உபதேசங்களை எடுத்துரைத்த போதிலும், திருதராஷ்டிரனுக்கு மனதில் நிம்மதி ஏற்படவில்லை. மேலும் விஷயங்களைக் கேட்கிறார். அப்போது விதுரன்,” நான் ஒரு அடிமையின் வயிற்றில் பிறந்தவன் – சுதன் – தெரிந்திருந்தாலும், தத்வ உபதேசம் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது” என்கிறார். ஞானியாக இருப்பவரும் சாஸ்திர நெறிமுறைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது என்பதை உணர்த்தும் விதமாக விதுரன் நடந்துகொள்கிறான். பிரம்மாவின் புதல்வர் ஸனத்ஸுஜாதர் என்கிற ரிஷி மூலம், திருதராஷ்டிரனின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். ‘விதுர நீதி’யும், ‘ஸநத்ஸுஜாதீயம்’ ம் எல்லோராலும் ஆழ்ந்து கற்கப் பட வேண்டியவை!

தருமர் அரியணை ஏறியதும், விதுரர் சில காலம் சென்று, திருதராஷ்டிரன், காந்தாரி ஏனையோருடன் வனவாசம் சென்று விடுகிறார். தலையில் ஜடாமுடியுடன், திகம்பரராக ஆகிவிடுகிறார். யுதிஷ்டிரர் வனத்திற்கு வந்து, அவருக்குப் பூஜைகள் செய்து, தன்னுடன் வரும்படி கேட்டுக்கொள்கிறார். ஆனால் விதுரர் ஒரு சித்தராய், சித்தி அடையும் நிலையில் இருந்தார். தன் யோக பலத்தால், யுதிஷ்டிரரின் பிராணனுடன் ஐக்கியமாகி, அவரது உடலில் பிரவேசித்து விடுகிறார். கானகத்தில், உயிர்ற்ற மரத்தைப் போல விதுரரின் சரீரம் நின்றுவிடுகிறது!

தர்மராஜாவின் மற்றொரு பாதியில், இணைந்து விடுகிறார் தர்மாத்மா விதுரர்!

தர்மம், நீதி, நியாயம், புறக்கணிக்கப் பட்டாலும் சகோதரர்களிடம் பாசம், நடுவு நிலைமை, ஆபத்தில் சமயோசிதமான உதவி, உலக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் பற்றிய தெளிவு என ஒரு முழுமையான பாத்திரப் படைப்பு விதுரர்!

(வாசிக்க வேண்டிய புத்தகங்கள் : மஹாபாரதத்தில் முக்கிய பாத்திரங்கள் – கீதா ப்ரெஸ், கோரக்பூர், The serpent’s Revenge by Sudha Murthy – Puffin Books, மகாபாரதம் -பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் – இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை ப்ரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட்)

ஜெ.பாஸ்கரன்.