Monthly Archives: October 2014
தீபாவளி மருந்து
2/25
தேவையானவை (1 ½ கப்)
மல்லி விதை /தனியா 2 ½ டேபிள் ஸ்பூன்
ஓமம் 2 1/2 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் 2 டேபிள் ஸ்பூன்
மிளகு 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பவுடர் 1/4 ஸ்பூன்
வெல்லம் 3/4 கப்
நெய் 1-2 ஸ்பூன்
தேன் கொஞ்சம்
தனியா, ஓமம், ஜீரகம், மிளகு இவற்றை இலேசான சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்
பிறகு இவற்றை மிக்ஸியில் நல்ல பேஸ்ட்டாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இத்துடன் இஞ்சிப் பவுடரைச் சேர்க்கவும். (இஞ்சிக்குப் பதிலாகச் சுக்கை உபயோகித்தால் அதையும் ஊறவைத்து அரைத்துச் சேர்க்கவும்). இவை ஒரு கப் பேஸ்ட்டாக வரும்.
¾ கப் வெல்லத்தை வாணலியில் இட்டு ¼ கப் தண்ணீர் விட்டு சூடாக்கிக் கரைய வைக்கவும்.அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதை மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேஸ்ட்டைச் சேர்த்துக் கலக்கவும்.
இதை லேசான ஜுவாலையில் சூடாக்கிஅவ்வப்போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு 15 நிமிடம் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
பிறகு நன்றாக ஆறவைத்து தண்ணீர் இல்லாத பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
தீபாவளி மருந்து தயார்.
இது காரமாக இருந்தால் ஒரு ஸ்பூன் தேனைச் சேர்க்கவும்.
மற்றொரு முறை:
எல்லா சமாசாரங்களையும் டிரையாக இலேசான சூட்டில் வறுத்து,பிறகு நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மேலே சொன்ன மாதிரி வெல்லத்தைச் சேர்த்துத் தயார் செய்யவும்.
Thanks to Jayshri’s Kitchen
http://www.jeyashriskitchen.com/2012/10/deepavali-marundhu-recipe-how-to-make.html
ஜெயலலிதா ……….. அம்மா
3/25
தமிழ் நாட்டில் ஜெயலலிதா சரித்திரம் படைத்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
பெயரிலியே வெற்றியைப் படைத்த இவர் தான் பங்கேற்ற துறைகள் எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்தவர்.
.தமிழ் நாட்டின் நம்பர் 1 கதாநாயகி. நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர். எம் ஜி ஆருடன் மட்டும் 28 படங்கள் நடித்தவர். தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம் என்று பலமொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவெற்றி வாகை சூடியவர்.பரத நாட்டியத்திலும், பாடும் திறமையிலும் முன்னணியில் நின்றவர்.
எம்ஜிஆர் அரசியலில் வெற்றிப்பாதையில் பயணித்தபோது இவரையும் அழைத்துச் சென்றார். ராஜ்ய சபா உறுப்பினராக, கொள்கைபரப்புச் செயலாளராக இவர் உயர்ந்தார்.
எம்ஜிஆருக்குப் பிறகு தன்னை கட்சியின் தலைமையாளராக மாற்றிக் கொண்டு வெற்றி கண்டவர். மூன்று முறை முதல்வராக இருந்து திமுகவைத் தோற்கடித்தவர்.
தோல்விகள் இவரைத் தளர்த்தியதில்லை. மாறாக ஆக்ரோஷத்துடன் பாயும் புலி போன்று இருந்தவர்.
கனவுக்கன்னியாக இருந்தவர் இன்று தமிழகத்திற்கு அம்மாவாகி அமைச்சரையும் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரையும் தன் காலில் விழ வைக்கும் திறன் மிக்கவர்.
தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை அனுமதிக்காதவர்.
இன்று அவர் சொத்து சேகரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முதல் முதலமைச்சர். சிறையில் இருப்பவர் .
கட்சித் தொண்டர்கள் இவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அளவே இல்லை .
பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் இவரது தண்டனையைக் கேட்டு உயிரைத் துறந்தனர்.
அவரது புகைப்படத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு அழுத கண்ணீருடன் அடுத்த மந்திரிசபை பதவிப் பிரமாணம் எடுத்தது.
‘கர்நாடக அரசே! காவிரியை எடுத்துக் கொள். எங்கள் அம்மாவைத் தா ’ என்ற போஸ்டர் வரிகள்.
மக்கள் முதல்வர் அம்மாவை உடனே விடுதலை செய்! இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கர்நாடகா மக்கள் அனைவரையும் சிறைப் பிடிப்போம்
‘தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?
நீதி தேவதைக்குத் தண்டனையா?
– என்றும் போஸ்டர் வரிகள்.
முன்னாள் முதல்வர் என்று சொல்லாமல் மக்கள் முதல்வர் என்று கட்சியினரால் சொல்லப்படுபவர்.
மேல் முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப் படலாம். அல்லது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
எது எப்படி ஆயினும்,
தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஒரு சரித்திரம் படைத்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை!
108 சிவாலயம் – பாபநாசம்
4/25
போற்றி போற்றி பாடல் சொல்வது நூற்றெட்டு
ஏற்றி ஏற்றி எரியும் தீபம் நூற்றெட்டு
ஏற்றம் தந்திடும் காயத்ரி மந்திரமும் நூற்றெட்டு
ஊற்று நீரென இனிப்பது நூற்றெட்டுச் சிவாலயமே
விண்ணின் கதிரவன் சாய்கிரணம் கலசம்விழ
பொன்னின் கும்பமும் மின்னலிட்டு ஒளிகூட்ட
மண்ணில் உறையும் உயிரனைத்தும் பொன்னாக
மின்னும் கோபுரமே நூற்றெட்டுச் சிவாலயமே
முன்னவர் ராமலிங்க சுவாமி முன்னின்று
மூன்று வரிசையில் நூற்றாறு லிங்கமுடன்
அனுமன் பிடித்த மாலிங்கம் தான்சேர்த்து
அணியாய் அமைந்தது நூற்றெட்டுச் சிவாலயமே
ராவணன் கொன்றபாவம் தீர்த்தாய் கடலருகே
கரதூஷன் கொன்றபாவம் தீர்த்தாய் இத்தலத்தில்
கணக்குகள் இல்லாமல் பாவம் புரிந்தஎன்னை
பிணக்காமல் காத்திடுவாய் நூற்றெட்டுச் சிவாலயமே
குடத்தை மண்ணாற்றில் வைத்தபெண் கண்கலங்க
விடத்தை கண்டத்தில் கொண்டஉன்னை நினைந்துருக
மடந்தை துயர்தீர குடமுருட்டி நீர்தந்தீர்
குடந்தை அருகிலுள்ள நூற்றெட்டுச் சிவாலயமே
கணபதி தொடங்கி மூலவர் தாள்பணிந்து
மனதினில் சிவமுடன் பிரகாரம் வலம்வந்து
அனுமந்த லிங்கமும் அம்மனையும் சுற்றிவந்தால்
ஒமென்று உணர்த்திடும் நூற்றெட்டுச் சிவாலயமே
சங்கரர் துணையே பர்வத வர்த்தினி
குங்கும வாசனை பொருந்திய திருவடி
எங்கும் நிறைந்த பங்கய மேனியாள்
தங்கிடும் திருத்தலம் நூற்றெட்டுச் சிவாலயமே
பாவங்கள் செய்யா மனிதன் ஈண்டில்லை
பாவங்கள் செய்தபின் பரிகாரம் தான் தந்து
பாவங்கள் எந்நாளும் புரியாமல் காத்திடும்
பாவநாசம் உறை நூற்றெட்டுச் சிவாலயமே
மலைபோன்ற என்னைப் பொடிப்பொடி ஆக்கினும்
சிலைபோன்ற என்னை சிதைத்து வதைக்கினும்
அலைபோன்று என்னை அலக்க அழிக்கினும்
தலைவணங்க மறக்கிலேன் நூற்றெட்டுச் சிவாலயமே
சந்தங்கள் சேர்த்து ஓதுவார்கள் பண்ணிசைக்க
சிந்தனைக் குவித்து சிவாச்சாரியார் வேதமோத
சுந்தரன் எழுதிய ஈரைந்தும் படித்தவர்க்கு
சொந்தமாய் ஆகிடுமே நூற்றெட்டுச் சிவாலயமே
கும்பகோணத்திலிருந்து தஞ்சை சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ளது.
தலப்பெயர்கள்:
கீழைராமேச்சுவரம், 108 சிவலிங்கங்கள் இருப்பதால் நூற்றெட்டு சிவலிங்கக் கோயில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
தலவிருட்சம் :வில்வம்
மூர்த்திகள்:
இறைவன்:இராமலிங்கேசுவர்இறைவி:பர்வத வர்த்தினி, மலைவளர் காதலி அம்மன்..
தீர்த்தங்கள் :
குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம்.
இராமலிங்கர் உடனுறை பர்வத வர்த்தினி அம்பாள் ஆலயம் ராமபிரான் காலத்துக் கோவிலாகும். ராமபிரான், சீதை, லட்சுமணன், அனுமனுடன், இராமேஸ்வரம் சென்று காவிரிக்கரையான பாபநாசத்திற்கு வருகிறார்கள். அழகிய தென்னஞ்சோலையும், நீர்வளமும் நிறைந்த பகுதியான பாபநாசத்திற்கு வரும்போது அவர்களை ஏதோ ஓர் நிழல் தொடர்வதாக உணர்ந்தார்கள். இது இராமபிரான் வதம் செய்த பாவம்தான் ராமர். சீதையையும் தொடர்கிறது என உணர்ந்து பாவத்தைப் போக்கி கொள்ள கழுவாய் தேடினார்கள். தங்களுடைய பாவத்தை 108 சிவலிங்கம் எழுந்தருளச் செய்வதன் மூலம் போக்கிக் கொள்ள நினைத்து காவிரியிலிருந்து மணல் கொண்டு வந்து 107 லிங்கங்களை கையால் பிடித்தார்கள்.
ஒரே இடத்தில் கோவிலில் 108 சிவலிங்கங்களை வழிபடுவதன் மூலம் 108 சிவன் கோவில்களை வழிப்பட்ட பேறு கிடைக்கும். 108 சிவலிங்கம் உள்ளதால் பாபநாசம் சிவனின் புண்ணிய பூமியாய் திகழ்கிறது. இராமபிரானின் பாபம் நாசமானதால் இந்த ஊருக்கு பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனை பாபநாசத்தில் 108 சிவாலயத்தை வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
இக்கோயிலுக்கு பெருமை அளிக்கும் 108 சிவலிங்கங்களில் 106 சிவலிங்கங்கள் உள்ள ஒரு நீண்ட மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபத்தில் மூன்று வரிசைகளில் ஓர் வரிசைக்கு முப்பத்தி ஐந்து இலிங்கங்களாகவும், மூன்றாம் வரிசையில் முப்பத்தி ஆறும் ஆக 106 இலிங்கங்கள் உள்ளன. கருவறையில் உள்ள மூல லிங்கம் ஒன்றும், அனுமந்தலிங்கம் ஒன்றும் சேர்த்து இக்கோயில் 108 சிவ இலிங்கக் கோயிலாக விளங்குகிறது.
ஒரு வரிக் கதைகள்
5/25
செய்திக் கதிர் -நன்றி தினமலர்
6/25
- குழந்தைகள் உரிமைக்காகப் போராடிய கைலாஷ் சத்யார்த்துக்கும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாலாலாவுக்கும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கிடைத்திருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பெறும் முதல் நோபல் பரிசு இது தான். இந்த இரு நாட்டுக்கும் இது அமைதிப் பாலம் அமைக்கட்டும்.
- சிறுவயது முதல் பிரபலமான இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு
- தூர்தர்ஷன் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் ஜி ஜிங்பிங் (Xi Jinping) என்ற சீன அதிபர் பெயரை, ரோமன் எழுத்தை மனதில் கொண்டு லெவன் ஜின்பிங் (XI JINPING)என்று வாசித்தார். இதையடுத்து அவர் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
- ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் புல்லெட் ரயில். ஓடப் போகிறது.
- விஜயவாடா ஆந்திராவின் தலைநகரமாகிறது.
- ஹரியானாவும் மகாராஷ்ட்ராவும் மாநில சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகின்றன. தேர்தல் நாள் அக்டோபர் 15.
- தீபாவளி பயணத்திற்கு உதவ தமிழக அரசு 9088 ஸ்பெஷல் பஸ்களை இயக்கப் போகிறது.
- நுங்கம்பாக்கத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தும் வசதி விரைவில் வர இருக்கிறது.
- தமிழ் நாட்டில் அக்டோபர் 15 முதல் புதிய வாக்காளர்கள் சேகரிப்பு துவங்குகிறது.
- அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் சகாயம் என்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை கிரானைட் குவாரி ஊழலை விசாரிக்க கோர்ட் உத்தரவு.
- காவிரி வைகை இணைப்புப் பணி துவக்கம்?
- ஹட் ஹட் புயல் ஆந்திராவைத் தாக்கியதில் பயங்கர சேதம்
- ரேடியா என்ற அழிந்துபோகும் சாதனத்திற்கு உயிர் கொடுத்து பிரதமர் மோடி விஜயதசமியன்று உரை நிகழ்த்தினார்.
- மதுவின் ஆதிக்கத்தைப் படிப்படியாக குறைக்க கேரளா அரசாங்கம் முடிவு. தமிழகம் பின்பற்றுமா?
- அமிதாப் நடத்தும் கோன் பனேகா குரோர்பதியில் டில்லியைச் சேர்ந்த ஆச்சின் நெருலா, சர்தாக் நெருலா சகோதரர்கள் , மொத்த பரிசுத்தொகையான ரூ. 7 கோடியை வென்றுள்ளனர்.
- திருப்பதியில் பிரம்மோத்சவம்
- எல்லையில் சீனப்படைகள் ஊடுறவு. பேச்சு வார்த்தைக்குப் பிறகு பதட்டம் குறைந்தது.
- பாகிஸ்தான் படைகள் தாக்குதல். இந்தியா பதிலடி.
- உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி.
- ரயில் பயணிகள்,, எஸ்.எம்.எஸ்., மூலம் விரும்பிய உணவைப் பெறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
- டில்லி விலங்கியல் பூங்காவில் 20 வயது வாலிபர் வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த பகுதி வேலி மீது ஏறி, புலியை படம் எடுக்க முயன்ற போது உள்ளே விழுந்து பலியானார்.
- தேவையில்லாத சட்டங்களை நீக்க பிரதமர் மோடி உறுதி.
- இந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில். முடிக்க வேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக, ஏவப்பட்ட, ‘மங்கள்யான்’ செயற்கைக்கோள், வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
- 1993 முதல் 2010 வரை, பல்வேறு நிறுவனங்களுக்கு, சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட, 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது
- இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க இந்தியா வந்துள்ள பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.
-
- பெங்களூரு, பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை, நீதிபதி குன்ஹா அறிவித்தார். ஜெயலலிதா விற்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார்.
- ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு ஜாமின் வழங்க, பெங்களூரு உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து ஜாமின் கோரி அவர்கள், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
- ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் தமிழகத்திற்கு முதல்வராகிறார்.
- .
- மோடியின் மந்திரங்கள் :
- பிரதமர் நரேந்திரமோடி, 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 30 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் .
- அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நவராத்திரி விரதத்தில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்த 5 நாட்களும் எந்தவொரு உணவும் சாப்பிடவில்லை. ஒபாமா அளித்த விருந்திலும் இவர் வெறும் சுடு தண்ணீர் மட்டுமே குடித்தார்
- 20000 இந்தியர்கள் மத்தியில் மேடிசன் ஸ்கொயரில் மோடி இந்தியில் அபாரமான பேச்சு. அதில் ,
-
பாம்பாட்டிகளின் நாடு என்று கூறப்பட்ட நமது நாடு, ஒரு “மவுஸ் கிளிக்’கில் உலகையே நகர்த்தி கொண்டு செல்கிறது
-
ஆமதாபாத்தில் ஆட்டோவில் ஒரு கி.மீ., பயணம் செய்ய 10 ரூபாய் செலவாகிறது. ஆனால் ஒரு கி.மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே செலவு செய்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி உள்ளோம். ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கும் செலவை விட, குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளோம்.
-
தொழில் துவங்குவதில் இருக்கும் ரெட் டேப் அகற்றப்பட்டு ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிக்கப்படும்.
- இந்திய உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்காகவும், அதற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ என்ற மாற்றுத் திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
- தூய்மையான தேசத்தை உருவாக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் ‘சுவாச் பாரத்’ (தூய்மையான பாரதம்) என்ற திட்டம், காந்தி ஜெயந்தி அன்று துவங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், கமலும் பங்கேற்க வேண்டும் என மோடி விடுத்த அழைப்பை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார்.
- ஆந்திராவை டிஜிட்டல் மயமாக்கும் மாநில முதல்வரின் கனவை நனவாக்கும் வகையில், மாநில அரசு, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
லாஸ்ட் ஸன்டே (சிவமால்)
7/25
‘பூமா.. இன்னிக்கு ஈவினிங் முரளியும் அவன் வைஃப் சாந்தாவும் நம்ம வீட்டுக்கு வராங்களாம் .. நேத்திக்கு போன் பண்ணியிருந்தான்’ என்றான் சுந்தர்.
‘ஆமாமாம்.. அவங்க தான் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வராங்க.. நாம அங்கே போறதேயில்லெ…….. நமக்கும் ஒரு மரியாதை வேண்டாமா’ …..?
‘என்ன செய்யறது? .. அவன் வீடு ரொம்ப தூரத்திலில்லே இருக்கு..’
‘அவங்க மட்டும் இங்கே வரதில்லையாக்கும் ’
‘அவங்க டவுனுக்கு வராங்க ..அப்படியே நம்ம வீட்டுக்கும் வராங்க.. நாம் போறதானா அவங்க வீட்டுக்குன்னு தான் போகணும். நம்ம டைமே ஒத்து வரதில்லே…அவன் அப்படி தப்பா நினைச்சுக்கப்படாதுன்னு தானே ‘அப்போ வந்திருந்தேன்.. இப்போ வந்திருந்தேன்.. நீ இருக்கவில்லை’ ன்னு சொல்றேன்..’
‘ஆமாமா.. இப்படி எத்தனை நாள் தான் பொய் சொல்லப் போறீங்களோ? ’
‘நோ..நோ..இது பொய்யல்ல .. மற்றவங்களைப் பாதிக்கும் வகையில் நாம் சொல்லும் பொய் தான் பொய். மற்றவைக்கு புளுகு என்று பெயர் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கார் தெரியுமா? ‘
‘பொய்யோ.. புளுகோ . அவங்க தினமும் .ஈவினிங் வெளியிலே போயிடறாங்கன்னு இப்படிச் சொல்லிட்டிருக்கீங்க! அவங்களும் பாவம் நம்பிட்டிருக்காங்க. என்னிக்காவது மாட்டிக்கத் தான் போறீங்க’
‘டோன்ட் வொர்ரி .. மாட்டிக்க மாட்டேன்.’ என்றான் சுந்தர்.
சுந்தரும் முரளியும் காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பூமாவும் சாந்தாவும் ஹாலை ஒட்டிய அறையிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘முரளி.. லாஸ்ட் ஸன்டே ஈவினிங் நாங்க உங்க வீட்டுக்கு வந்திருந்தோம். நீங்க இருக்கலே.. பக்கத்து வீட்டம்மா நீங்க எங்கேயோ வெளியிலே போயிருப்பதாகச் சொன்னாங்க’ என்றான் சுந்தர்.
‘ஹெள ஸாட்.!. எப்போ லாஸ்ட் ஸன்டேயா ..டெலிபோன் பண்ணிட்டு வர மாட்டியோ’ என்றான் முரளி.
‘சடனா டிசைட் பண்ணினோம்..புறப்பட்டோம்.இட் ஈஸ் ஆல் ரைட். இப்பத்தான் பாத்தாச்சே’
‘அதையேன் கேட்கறே! நானும் ரொம்ப பிஸி.. பதினாலாம் தேதி எங்க அப்பா வரேன்னு எழுதியிருந்தார். அவருக்காகக் காத்துக் காத்து வீ ட்டிலே வெய்ட் பண்ணி ஹோல் டே போரடிச்சுப் போச்சு. அப்புறம் அவர் யூஷ்வல் பஸ் கிடைக்காம ஏதேதோ பஸ் பிடித்து ராத்திரி வந்து சேர்ந்தார். அப்புறம் அவரோட எல்லா இடத்திற்கும் சுற்றினதில் அலைச்சல் வேறு. நேற்றுத்தான் ஊருக்குப் போனார். அதனால் தான் இன்னிக்கு வரேன்னு நேற்று போன் பண்ணினேன் “ என்றான் முரளி.
‘அச்சா.’. என்றான் சுந்தர்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு முரளியும் சாந்தாவும் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்பிவிட்டு சுந்தரும் பூமாவும் உள்ளே வந்தார்கள்.
விளக்கை அணைக்க முன்னறைக்குப் போன பூமா ‘ஐயோ’ என்று அலறினாள்.
‘என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?’ என்று பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் சுந்தர்.
பூமா தன் விரலால் அங்கே மாட்டியிருந்த காலண்டரில் 14 ஆம் தேதியைக் காட்டினாள்.
அன்று ஸன்டே .. சுந்தர் முரளி வீட்டுக்குப் போயிருந்ததாகக் கூறினானே.. அந்த லாஸ்ட் ஸன்டே.. .
பார்க்காதே……காட்டாதே
8/25
பார்க்காதே பார்க்காதே !
காட்டாதே காட்டாதே !
எந்தப் பெண்ணின் நெஞ்சையும் தப்புக் கண்ணால் பார்க்காதே
சொந்தப் பெண்ணே ஆனாலும் சில்லும விஷமம் பண்ணாதே
மாடி வீட்டு பொண்ணு கிட்டே மோடி மஸ்தான் காட்டாதே
கோடி வீட்டு பொண்ணு கிட்டே பாடிலாங்க்வேஜ் பேசாதே !
கல்லுப் பிள்ளை போல நீயும் கட்டுக்குள்ளே இருக்கணும்
வெல்லப்பிள்ளை ஆனாலும் எறும்பு கடிச்சா பொறுக்கணும்
நல்லபிள்ளை போல நீயும் வாலைச் சுருட்டி இருக்கணும்
செல்லப் பிள்ளை போல நீயும் கையைச் சூப்பிக் கிடக்கணும் !
புல்லைப்பாத்த மாட்டைப் போல என்னை நீயும் மேயாதே
துள்ளிக்குதிக்கும் குட்டி போல முட்ட முட்ட வாராதே
அள்ளித்தின்ன முதலை போல வாயை நீயும் பிளக்காதே
கள்ளிப்பாலை குடிக்க நீயும் சப்புக் கொட்டி நிற்காதே !!
ஜோக்ஸ்
9/25
பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)
10/25
தாமரை மலரின்மேல் உறைபவளே போற்றி !
கமலத்தைக் கையிலேந்தி அருள்பவளே போற்றி !
கமகமக்கும் பட்டாடை மினுமினுக்கும் பொன்னகைகள்
தரித்துநல் தரிசனம் தருபவளே போற்றி !
எம்பெருமான் மாலனவன் நாயகியே போற்றி !
குறையாத செல்வங்கள் கொடுப்பவளே போற்றி !
எம்மீது உன் கருணைக் கண்பார்வை படட்டும் !
நலமாக வாழ்ந்திடவே அருள்மாரி பொழியட்டும் !
மன்பதையை இயக்குகின்ற வைகுண்ட நாயகியே !
மக்கள்தம் உணர்வுகளை அணுவணுவாய் உணர்ந்தவளே
அனுதினமும் உன்நாமம் பாடுகின்ற அடியார்க்கு
இன்பங்கள் செல்வங்கள் அள்ளியள்ளிக் கொடுப்பவளே
என்மனது நினைவுகளும் சொல்களும் செயல்களும்
எப்போதும் எஞ்ஞன்றும் உன் நாமம் போற்றிடவே
என்னையே நன்னெறியில் இயக்கிவிடு என்றுநான்
அன்னையே உன்னையே அடிபணிந்து வேண்டுகின்றேன் !
பொன்வேய்ந்த குடங்களிலே புனிதகங்கை நீரூற்றி
அபிஷேகம் ஆராதனை உளங்குளிர செய்வித்த
மின்னுகின்ற மேனியதில் ஆபரணம் அணிசெய்த
மிடுக்கோடு நிற்கின்ற திருமகளே போற்றி!
அன்போடு நெறியோடு துதிபாடும் அடியாரை
அரவணைத்து அருள்புரியும் நாயகியே போற்றி !
பொன்மகளே குலமகளே மாலனவன் தேவியென
வைகரையில் நான் தொழும் அன்னையே போற்றி!
ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)
11/25
கதைகளில் தான் சொல்ல விழைவது என்ன என்பதை “ இதனால் அறியப்படும் நீதி யாதெனில்” என்று கதையை முடிக்கின்ற காலகட்டத்தில் தெரிந்துகொண்ட நீதி என்ன என்று நாமே முடிவு செய்துகொள்ளும் வகையில் கதைகள் எழுதப்பட்டன. அதன் முன்னோடிகளில் ஒருவராக பிச்சமூர்த்தியை எடுத்துக்கொள்ளலாம்.
1933 ல் எழுதத் தொடங்கிய அவர் 50, 60 களில் மிகவும் கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். நிகழ்வுகள் அக்கால வாழ்க்கைமுறையை ஒட்டியே இருந்தாலும் கருத்து இன்றளவும் பொருத்தமாக உள்ளதுதான் சிறப்பு என்று தோன்றுகிறது.
உதாரணமாக அவரது “ஞானப்பால்” சிறுகதை
ஒரு சத்திரத்தை நிர்வாகம் செய்யும்,. கிடைத்த அதிகாரத்தை தன் சுய நலனுக்காகப் பயன்படுத்தும், தவசிப்பிள்ளை.கதாசிரியரின் வார்த்தைகளில் – “சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை, நெறிகளும் இல்லை. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பார்களா? அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை ஒருநாள் சீட்டைக் கிழித்துவிட்டான். ஆனால் பாவம்! தவசிப்பிள்ளை பேரில் மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. அதிருஷ்டம் வந்து பிடரியில் குந்திக்கொண்டு கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியதுதானே!”.
பெயரென்று ஒன்று இல்லாவிட்டாலும் , கழுத்தில் லிங்கம் ஒன்றை கட்டியிருப்பதால் ‘லிங்கக்கட்டி’ என்று அறியப்படுகிற .சத்திரத்தில் வந்து சேருகிற ஒரு பண்டாரம்
கதாசிரியரின் வார்த்தைகளில் – ”பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம். ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச் செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்”
ஆஹா, ஒரு ஆள் சம்பளம் மிச்சம். ஒரு கவளம் சோறுதான் செலவு என தவசிப்பிள்ளை தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொள்கிறார். தானுண்டு, பாத்திரம் பண்டம் தேய்த்து சத்திரத்தைக்கூட்டி செய்யும் வேலையுண்டு, கிடைக்கும் ஓரிரு கவளம் சோறு உண்டு என்று இருந்துவிடுகிறார்.
தவிர வருகின்ற மக்கள் மூலமாகவும் வேறெங்கேனும் கலந்துகொள்ளும் பூஜைமூலமாகவும் லிங்கக்கட்டிக்கு காசு கிடைக்கத் தொடங்குகிறது.
நாளடைவில் லிங்கக்கட்டிக்கு போடுகின்ற கவளத்திலும் கைவைக்கிற தவிசிப்பிள்ளைக்கு லிங்கக்கட்டியிடம் சேரும் காசு மேலும் ஒரு கண். வந்த காசில் கழுத்திலிருக்கும் லிங்கத்திற்கு ஒரு தங்கச்சங்கிலி போடலாமே என யோசனை சொல்கிறார். அந்த ஏற்பாட்டில் தானும் கொஞ்சம் காசு பார்க்கலாம் என திட்டம். ஆனால் லிங்கக்கட்டியோ வேறு ஏற்பாடு செய்து சங்கிலி செய்துகொள்கிறார்.
ஞானப்பால் உற்சவத்திற்காக சீர்காழி செல்லும் லிங்கக்கட்டியிடமிருந்து சங்கிலியும் லிங்கமும் திருடப்படுகிறது.
சத்திரத்திற்கு திரும்பி வந்து ‘லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சேனே? பைத்தியக்காரத்தனம்!’ என்று தவசிப்பிள்ளையிடம் சொல்கிறார்.
தவசிப்பிள்ளை ‘ஞானப்பால் கிடைச்சுப்போச்சு’ என்று கிண்டல் செய்கிறார்.
வேலைக்கு சம்பளம் கொடுத்து வேறு ஆள் வைத்துக்கொள்ளுமாறு லிங்கக்கட்டி சொல்ல “அடப்பாவி! நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?” என்கிறார் தவசிப்பிள்ளை.
நிலைகளனுக்கு நம்மை அறிமுகப்படுத்தும் லாவகம் …. கதைமாந்தர்களின் எண்ண ஓட்டத்தை உணரவைக்கும் சொல்லாடல்களும் உரையாடல்களும், சிக்கலில்லாத கதை சொல்லும் நேர்த்தி … ஆகியவை பளிச்சிடுகின்றன..
நிகழ்ச்சி அந்த காலத்தது என்றாலும் மனித இயல்பு இந்தக்காலத்திற்கும் பொருந்துகிறது என்பதுதான் வியப்பு.
இந்தக் கதையினை பிச்சமூர்த்தி அவர்களின் நடையிலேயே படிக்க விரும்பினால் கீழே குறிப்பிட்டுள்ள வலைப் பதிவில் காணவும்.
http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_25.html
இதே வியப்பு “வேப்பமரம்” கதையிலும் தெரியவருகிறது.
அந்தக் கதையை முழுவதுமாய் அடுத்த பக்கத்தில் காணலாம்!
ந. பிச்சமூர்த்தியின் ‘வேப்பமரம்’ சிறுகதை ( எஸ்.கே.என் )
12/25
நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும், என் கிளைகள் பேயாடும். மழை பெய்யும், வாசனை ஒன்றை விசிறுவேன். சித்திரை பிறக்கும். என் மலர்கள் தேனீக்களை அழைக்கும். நான் வெறும் வேப்பமரமாகத்தான் இருந்தேன்.
ஆனால் இப்போது யோகம் அடிக்கிறது. நான் தெய்வமாகி விட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாள் தவறாமல் யாராவது இங்கு வருகிறார்கள். மரக்கடை வியாபாரி ஒருவன் மட்டும் என்னை முறையாக அறுத்தால் 20 பலகையாகும். வியாபாரத்துக்கு அறுத்தால் 25 ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுது வருபவர்கள் எல்லாம் என் உடம்பைச் சுற்றி மஞ்சள் பூசிக் குங்குமம் இடுகிறார்கள். சாம்பிராணிப் புகை போடுகிறார்கள். அகலில் நெய்விளக்கு வைக்கிறார்கள். வெற்றிலை பாக்குத் தேங்காய் பழம் வைத்துக் கும்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் தாங்கவில்லை. ஏராளமாக மாவிளக்கைப் படைக்கிறார்கள்.
இந்த யோகம் ஒரு மாதமாக அடிக்கிறது. ஆனால் இந்தப் பங்களாக்காரருக்கு என்னால் தொந்தரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. எப்போதுமே ஒருவிதம் இல்லாவிட்டால் ஒருவிதம் என்னால் தொந்தரவுதான். வேப்பம் பழத்தைத் தின்று காக்கை எச்சமிட்டதோ, சின்னச் செடியாய் முளைத்து நான் ஆளானதோ இப்பொழுது இருக்கிறவருக்குத் தெரியாது. அப்பொழுதெல்லாம் அவர் சின்னப் பையன். தகப்பனார் இருந்தார். பல் குச்சிக்கு வேப்பங்கிளையைத் தெருவில் போகிறவர்கள் ஒடிக்க ஆரம்பித்ததிலிருந்து வம்பு ஆரம்பித்து விட்டது.
வேப்பமரம் ஒன்று இருக்கிற விஷயம் நகரசபையார் வெளியிட்ட ஏல நோட்டீசைப் பார்த்த பிறகுதான் இவர் கவனத்துக்கு வந்தது. அதற்குப் பிறகு என் விஷயத்தில் இவருக்குத் திடீரென்று அக்கறை பிறந்தது. வக்கீல் வீட்டுக்குப் போய் நகரசபைக்கு ஆட்சேபணை நோட்டீஸ் ஒன்று கொடுத்தார். அதற்குப் பிறகு நகரசபை ஆணையாளரைப் பார்த்துப் பேசினார். முடிவாக பிளான் சங்கிலி எல்லாம் எடுத்துக் கொண்டு அதிகாரி ஒருவர் வேலியோரம் வந்து அளந்து பார்த்தார். அவர் என்ன சொன்னாரோ என்னவோ, ஏலப் பேச்சு அதற்கு அப்புறம் அடங்கிப் போய்விட்டது.
ஆறுமாதங்களுக்கு முன்பு மற்றொரு சங்கடம் முளைத்தது. எனக்கு அது சங்கடமாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவரால் அப்படி நினைத்ததால்தானே? முளைப்பதும், இலை விடுவதும், கிளையாவதும், மலர்வதும் நாமாகச் செய்கிற காரியமா? அவை எல்லாம் தாமாக நடக்கின்றன. விரும்பினால்கூட, நம்மால் தடைப்படுத்த முடியாது. ரோட்டுப் பக்கம் போகாதே என்று ஒரு கிளைக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அது கேட்கவே இல்லை. அந்தக் கிளை பழுக்க ஆரம்பித்ததும் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் கவலைப்பட்டு என்ன பயன்? நாளடைவில் கிளை பட்டுப் போய்விட்டது.
ஒருநாள் யாரோ பிச்சைக்காரன் மரத்தடியில் தகரக் குவளையையும், கழியையும் வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தான். நல்ல வெயில் வேளை! பலமான காற்று ஒன்று அடித்தது. மளமளவென்று ஓசையுடன் பட்டுப்போன கிளை திடீரேன்று முறிந்து விழுந்தது. கிளை விழுந்த ஒரு நிமிஷத்துக்குள் அங்கே பெரிய கும்பலும் கூக்குரலும் ஆகிவிட்டன. அந்தக் கலவரத்துள் முதலில் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு தலையில் காயம்பட்ட ஒரு இளைஞனைத் தூக்கி ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு சிலர் சென்றபொழுதுதான் விஷயம் புரிந்தது. கீழே சென்றுகொண்டிருந்த இளைஞன் தலையில் கிளை விழுந்து, ஆபத்தை உண்டாக்கி விட்டது! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததற்கோ, தெருப்புறம் கிளை நீண்டு சென்றதற்கோ நானா பொறுப்பு? இந்தச் சின்ன விஷயம் அந்தக் கும்பலுக்குத் தெரியவில்லை. அடுத்தாற் போலப் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரனுக்கு ஒன்றும் நேரவில்லையே என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
ஒரே கும்பலாக விழுந்தடித்துக்கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தார்கள். பங்களாக்கார அம்மா பயந்துபோய் முன் ஹாலுக்கு வந்தாள். ஆளுக்கு ஒருவராக, நெருப்புக் கக்க, தாறுமாறாகப் பேசினார்கள். “மரத்தை வெட்டிவிட்டு மறுகாரியம் பார்க்கிறீர்களா? இல்லை, நாங்க வெட்டி விடட்டுமா?” என்று அதட்டிக் கேட்டபோது அந்த அம்மாளுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. “ஐயா வந்தவுடன் சொல்லிச் செய்யச் சொல்லுகிறேன்” என்றார். அதற்கு ஏற்றாற்போல், பங்களாக்காரர் நுழைந்ததும், கும்பல் அவர்மீது பாய்ந்தது. விஷயத்தை அறிந்துகொண்ட பங்களாக்காரர் இரண்டு நாளுக்குள் வெட்டி விடுவதாக உறுதி கூறியதில் கூட்டம் கலைந்தது. ஒருவன் மட்டும், “இப்பொழுதெல்லாம் வெட்ட வேண்டாம். ஓர் ஆளைக் கொன்ற பிறகு வெட்டலாம்” என்று அவருடைய உறுதிமொழியைக் கிண்டல் செய்துகொண்டே போனான்.
வீட்டுக்காரருக்கு ஒரே கோபம். மனத்துக்குள்ளாக என்மேல் பாய்ந்தார். கும்பல் மேல் பாய்ந்தார். இளைஞன் மேல் பாய்ந்தார். இரண்டு நாள் வரையில் இந்தப் பாய்ச்சலில் ஓயவில்லை.
மூன்றாவது நாள் நகரசபையிலிருந்து மரத்தை வெட்டி விடும்படி ஓர் அவசர உத்தரவு வந்தது. உத்தரவு வந்த பிறகு இந்தப் பாய்ச்சல் எங்கோ மறைந்துவிட்டது. ஏலம் போடுகிற முயற்சி தோற்றுவிட்டதால் நகரசபையார் இந்த வேலையில் இறங்கிவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டார். பழையபடி வக்கீல் வீட்டுக்குப் போய், புதிய நோட்டீஸ் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் வக்கீல் மட்டும் இதெல்லாம் பயன்படாதென்று சொல்லியும் இவருக்கு வீம்பு வந்து விட்டது. என்ன ஆனாலும் வெட்டப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்!
நாளைக்கு நடப்பது இன்று யாருக்குத் தெரிகிறது?
அடுத்த நாள் மாலை ஐந்துமணிக்கு பங்களாக்காரர் பங்களா முகப்பில் உட்கார்ந்திருந்தார். திடீரென்று ஒரு பெரிய கும்பல் பங்களாவுக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தது. உடனே அவருக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும் ஊமைப் பையனைப் போல் கண்ணை உருட்டினார்.
“அந்தப் பையன் சாகவில்லை. யாராவது செத்தாலொழிய மரத்தை வெட்டமாட்டீர்களாக்கும்!” என்று பலவாறாகக் கும்பல் இரைந்தது. “கோடாலிக்காரன் வரவில்லை. என்மேல் வஞ்சனை இல்லை” என்று ராஜதந்திரத்தைக் கடைப் பிடித்தார்.
அவர் பேச்சு எடுபடவில்லை. கும்பலின் அட்டகாசமும் கொதிப்பும் ஏறிக்கொண்டிருந்தன. எந்த நிமிஷம் என்ன ஆகுமோ என்று அவருக்குத் திகிலாக இருந்தது. அந்தச் சமயத்தில் அத்தனை பேர் கவனத்தையும் இழுக்கக் கூடிய பெரிய சத்தம் தெருப்புறத்தில் கேட்டது. கும்பல் முழுவதும் பறந்துவிட்டது. பங்களாக்காரரும் பின்தொடர்ந்தார்.
ஒரு பஸ் நடைபாதை மீதேறி என்மீது முட்டிக்கொண்டு நின்றது. வண்டியை விட்டுப் பிரயாணிகள் கலவரத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் இங்கிருந்து போன கும்பல், வீதிக் கும்பல் ஆக எல்லாமாகச சேர்ந்துகொண்டு விட்டன. பத்து நிமிஷம் ஒரே குழப்பம்.
“இந்த மரம் மாத்திரம் இல்லாவிட்டால் என்ன கதியாகியிருக்குமோ!” என்று ஜனங்கள் என்னைப் போற்றத் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் விஷயம் விளங்கிற்று.
தெருவில் வந்துகொண்டிருந்த பஸ்ஸின் டயர் வெடித்து விட்டது. பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் ஏதோ கணக்குப் பண்ணி ஸ்டீரிங்கை என்னை நோக்கித் திருப்பிவிட்டிருந்தான். என்மீது வண்டி மோதி நின்று விட்டது. நல்ல வேளை ! பஸ் பிரயாணிகள் 24 பேரில் ஒருவருக்கும் சொற்பக் காயங்கூட ஏற்படவில்லை.
“மரத்தை வெட்டாததும் நல்லதாகத்தான் போச்சு. இல்லாவிட்டால் இத்தனை பேரும் எமப்பட்டணந்தானே?” என்று கும்பலில் பழைய சமாச்சாரத்தையும் இதையும் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் என்ன, மரந்தானே? பார்த்துக்கொண்டிருந்தேன்.
இது நடந்த பிறகு மரத்தை வெட்ட வேண்டுமென்ற பேச்சை யாருமே எடுக்கவில்லை. ஆனால் பங்களாக்காரருக்கு மட்டும் என்னைப் பற்றிய நினைப்புத் தடித்துவிட்டது. ஒரு சமயம் என்னை வெட்டிவிடவேண்டுமென்று நினைப்பார். மற்றொரு சமயம் கூடாதென்று நினைப்பார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் இவ்வளவு குழப்பத்துக்கும் முடிவு ஏற்பட்டதே, அதுதான் அதிசயமாக இருக்கிறது. பஸ் வந்து மோதிய மூன்றாம் நாள் மற்றொரு கிளையில் அடிப்புறத்திலிருந்து பால் விடாமல் வடிய ஆரம்பித்தது. இதை யார் கவனித்தார்களோ, எப்படித்தான் இந்த விஷயம் ஜனங்களிடையே பரவிற்றோ தெரியவில்லை. அன்று முதல் தெய்வமாகிவிட்டேன்! தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றும் பெருமை எனக்கு உண்டாகிவிட்டது. வெகு பக்தியுடன், வடிகிற பாலைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். பல நோய்கள் குணமாவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். பங்களாக்காரர் இதுவும் ஓர் ஆச்சரியமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் ஒரு விஷயம். இன்று உச்சிப்பொழுதுக்குப் பிறகு ஒரு விஞ்ஞானி இங்கு வந்தார். அவருடன் ஒரு மாணவனும் வந்திருந்தான். மரத்தில் பால் வடிந்ததை ஊன்றிப் பார்த்தார்கள்.
“உடம்பில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்வதைப் போல மரத்திலும் செடியிலும் ஜீவரசம் ஏறுவது இயற்கை. சிரங்கு வந்தால் சரீரம் பொத்துக் கொண்டு ரத்தம் முதலியன வடிகின்றனவே. அதைப் போலவே மரத்தில் பொத்துக்கொண்டு ஜீவரசம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்” என்று விஞ்ஞானி மாணவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.
விஞ்ஞானி சொன்னது சரியா? ஜனங்கள் சொல்வது சரியா? எனக்குத் தெரியாது. நான் வெறும் வேப்பமரந்தானே?
குறிப்பு:
நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன்.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
இதழே ! இதழே !
13/25
கல்கி இதழில் 1992ல் பரிசு பெற்ற கவிதை
பனி சிந்தும் முகத்தினில்கட்டிக்கரும்பினைத் தட்டிப் பிழிந்த இதழ்
அவள் தந்த சுகத்தினை அள்ளிக் குடித்து தன் தாகம் தீர்த்த இதழ் – இனி
இன்ப இணைப்பினை இருவர் அடைந்திட முந்திப் பிறந்த இதழ் – அவன்
கொண்ட மனைவியின் கட்டுக் கவினுடல் பட்டுத் துடித்த இதழ் !
பொருள் இல்லை என்றவர்க்கு இல்லை என்று உரைத்து மெல்ல மடிந்த இதழ் – பணத்
தொல்லை இல்லையென கொள்ளை இன்பமது பொங்கி வழிந்த இதழ் – இனி
வெள்ளை உள்ளமதில் உண்மை உள்ளதென தெள்ளக் காட்டும் இதழ் – அழும்
பிள்ளை மகிழ்ந்திட தாய் அமிழ்து அருந்திடும் பால் மணம் தோய்ந்த இதழ் !
நல் மண்ணதில் பொன்னைக் கொழித்திடும் உழவன் பெருமிதம் படர்ந்த இதழ் – அவன்
கண்ணினுள் மணியவள் காதல் கிழத்தி பெய் மழை பொழியும் இதழ் – நல்
எண்ணமில் கயவன் வஞ்சக மனத்தவன் நஞ்சு மொழி பிறக்கும் இதழ் – நல்
வண்ணமே பேசி மக்களையே ( ஏ ) மாற்றும் அரசியல் வாதியின் இதழ் !!
14/25
அறிஞர் அண்ணாவின் மறைவு தினத்தன்று கலைஞர் கருணாநிதி வாசித்த இரங்கற்பா! அருமையான படைப்பு!
நாடகம் – இப்படிக்கு நந்தினி
15/25
காத்தாடி ராமமூர்த்தியின் ‘இப்படிக்கு நந்தினி’ நாடகம் பார்க்க ஒரு நண்பர் என்னை வீடு தேடி வந்து காரில் அழைத்துப் போனார்.
நண்பரின் பரிவு.. நலம் தரும் உரையாடல்கள் ..இலக்கியச் சிந்தனைப் பகிர்வு- கார் பயணம்-நாரத கான சபா -இலவசக் காட்சி -நாடகம் முடிந்ததும் சென்னையில் பெரும் மழை – எல்லாமே நன்றாகத் தான் இருந்தான
ஆனால் நாடகம்???
சும்மா சொல்லக் கூடாது.. ..நாடகத்தின் ‘நாட்’ கொஞ்சம் வித்தியாசமானது தான்.
குழந்தை இல்லையே என்று தத்தெடுக்க அநாதை விடுதிக்குச் சென்ற இளம் தம்பதிகள் குழந்தைக்குப் பதிலாக அங்கே தங்கியிருக்கும் வயதான ஒருவரை அப்பாவாகத் தத்தெடுத்து வருகிறார்கள்.
புதுமை அங்கு ஆரம்பித்து அந்தக் கணமே முடிந்து விடுகிறது. அதற்கு முன்னும் பின்னும் வழக்கமான காத்தாடியின் காமெடித் தொல்லை தான்.
நடிப்பும், காட்சி அமைப்பும், மேடை அமைப்பும், வசனமும் நன்றாக இருந்தாலும் …………….
கதை வசனம் எஸ். எல். நாணு
நாடக ரசிகர்களை இழுக்க – காத்தாடிராமமூர்த்தி
சுவீகாரஅப்பாவாக நடித்து இயக்கியவர் – டி.டி. சுந்தரராஜன்
ஆறு
16/25
ஆறு மனமே ஆறு அந்த ஆறுமுகன் பேர் கூறு
ஆறு தலை கொண்ட ஆறுமுகன் ஆறுதலைத் தருவான்
ஆறு ஒரு நதி – ஆறு ஒரு வழி – ஆறு ஒரு எண்
ஆறு ஒரு வினை – காயங்கள் ஆறும் – சூடும் ஆறும்
ஆறு என்றால் வழி – வழி காட்டுபவன் ஆறுமுகன்
ஆறுமுகனின் அழகை அருணகிரியார் சொல்கிறார்
ஏறுமயில் ஏறும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
ஈசனுக்கு ஓதும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
அடியவரை காக்கும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
நெடியவேல் பிடிக்கும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
சூரனை அழித்த முகம் – அறுமுகத்தில் ஒன்று
வள்ளியை மணந்த முகம் – அறுமுகத்தில் ஒன்று
வழிகாட்டல் என்ற மரபு தமிழ் இலக்கியத்தில் தனி பாணி
ஆற்றுப் படுத்துதல் என்ற அழகான பெயர் அதற்கு
பரிசில் பெற்ற புலவன் பரிசு பெற வரும் புலவனுக்கு
ஆற்றுப் படுத்திய பாடல்கள் தமிழில் பற்பல
சிறு பாணன் பாடினான் சிறு பாணாற்றுப்படை
பெரும் பாணன் பாடினான் பெரும் பாணாற்றுப்படை
நக்கீரர் உருகிப் பாடினார் முரு காற்றுப்படை
பொருநரை வேண்டிப் பாடினார் பொருநராற்றுப்படை
சீனியர் ஜூனியருக்குச் சொல்வது அமெரிக்காற்றுப்படை
பெண்ணுக்குத் தோழிகள் சொல்வது இரவாற்றுப் படை
படம் பார்த்து விமரிசனம் எழுதுவது சினிமாற்றுப் படை
சென்னையில் வழி கேட்டால் கிடைப்பது தப்பாற்றுப்படை
2Gக்கு மேல் 3G வருவது ஊழலாற்றுப்படை !
17/25
சிகாகோவில் 2014 மே மாதம் 4ந் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தின் முதல் பகுதி!
முதல் பாகம் : புது வெள்ளம்
18/25
சிகாகோவில் 2014 மே மாதம் 4ந் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தின் இரண்டாவது பகுதி!
இரண்டாம் பாகம்: – சுழற்காற்று
19/25
சிகாகோவில் 2014 மே மாதம் 4ந் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தின் மூன்றாவது பகுதி!
மூன்றாவது பாகம் : – கொலை வாள்
20/25
சிகாகோவில் 2014 மே மாதம் 4ந் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தின் நான்காவது பகுதி!
நான்காவது பாகம் : மணிமகுடம்
21/25
சிகாகோவில் 2014 மே மாதம் 4ந் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஐந்தாவது பகுதி!
ஐந்தாவது : தியாகச் சிகரம்
வியாழன்
22/25
வியாழ பகவான் ! குரு பகவான் !
குருவில்லா கல்வி பாழ் !
குருவுக்கு குருவான குமரன் ஸ்வாமினாதன் !
குருவாய் அருள்பவன் குருவாயூர் கிருஷ்ணன் !
குருவின் உருவம் தக்ஷிணா மூர்த்தி
குருவின் திருவடியில் பணிவது குரு பக்தி !
குருவின் திருவருள் தருவது குரு சக்தி !
கருவிலே உயிர் பெற்று சேயாய் உருமாறி
தெருவிலே தவழ்ந்து வறுமையில் உழன்று
வெறுமெனத் தவிக்கும் மனித உயிர்க்கு
திருவென ஞானம் தருவது குருவே !
ஞானம் தேடி அலையும் உருவே
ஒவ்வொரு உருவும் குருவே !
பொறுமையைப் போதிக்கும் மண்ணும் குருவே !
வெறுப்பைப் போக்கும் குருவும் அதுவே !
இருட்டை ஒழிக்கும் தீயும் குருவே !
தீயதை எரிக்கும் குருவும் அதுவே !
தாகம் தீர்க்கும் நீரும் குருவே !
பாவம் தீர்க்கும் குருவும் அதுவே !
அளக்க முடியா வானும் குருவே !
விளக்க முடியா குருவும் அதுவே !
தென்றலாய்த் தாலாட்டும் காற்றும் குருவே !
புயலாய்ப் பீறிடும் குருவும் அதுவே !
சூட்டைக் கிளப்பும் ஆதி த்தன் முதல் குரு !
நிலவு சொல்வது காதல் பாடம்
காற்று செய்வது மேனி வருடல்
ஆகாயம் சொல்வது திறந்த மேனி
நெருப்பு தருவது கதகதப்பு
மழைத்துளி சொல்வது உயிர்த்துளி
பூமியும் சொல்வது காந்த ஈர்ப்பு
உச்சத்தை சொல்வது இடியின் மின்னல்
கடல் நதி சொல்வது வாழ்வின் துவக்கம்
பஞ்ச பூதம் சொல்வது வாழ்வின் பாடம் !!
மங்கள்யான்
23/25
இந்தியா வெற்றிகரமாகச் செவ்வாய்ப் பாதைக்கு ஏவுகலனை அனுப்பி அமெரிக்கா,ஐரோப்பா,ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்ததாகத் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது.
பிரதமர் மோடி கூறியதைப் போல இது தான் உலகிலேயே மிகவும் குறைவான செலவில் செவ்வாய்க்கு அனுப்பப் பட்ட ஏவுகலனாகும்.கிலோமீட்டர் கணக்குக்கு (Rs. 7/-) ஆட்டோ கட்டணத்தை (Rs.10/-) விட குறைவான செலவில் செவ்வாய்க்கு சென்றிருக்கிறது நமது மங்கல்யான்.. (650 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை 4550 மில்லியன் ரூபாயில் கடந்தோம்) அடுத்தமுறை போகும் போது மீட்டருக்கு மேல துட்டு கேட்டாலும் கேட்கும்.
(இனிமேல் நாசா தனது அடுத்த ஏவுகலனை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் செய்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை)
Mass Orbiter Mission (MOM) -மங்கள்யான் இந்தியாவின் பெருமைக்கு ஒரு புதிய மைல்கல்.
மீனங்காடி
24/25
ஞாயிறு மதியம்
ஞாயிற்றுக் கிழமை மதியம். மேரி எப்பொழுதும் தனக்குத் தானே ஒதுக்கிக் கொண்ட நேரம்.
குழந்தைகள் இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஒருத்தியைப் போட்டு விட்டு இரண்டு மணி நேரம் தனக்காக அந்த நேரத்தைச் செலவழிப்பாள். அடுத்தடுத்து வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்கவும் , அமுக்கமான வாழ்க்கையைப் புதுப்பிக்கவும், ஓய்வெடுக்கவும் அந்த இரண்டு மணி நேரத்தைப் பயன் படுத்துவாள். நல்ல கதைகள் படிப்பது, பைக் ஓட்டுவது, காப்பி குடித்துக் கொண்டே ஓய்வெடுப்பது போன்றவை அவளது அந்த நேர வேலைகள். கோவாவைச் சுற்றி எக்கச்சக்கமான காப்பிக் கடைகள். அடுத்த தெருவில் இருக்கும் காப்பிக் கடையில் கடைசி டேபிளில் காபி குடித்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.
இன்றும் அதே இடத்தில் காபி ஆர்டர் செய்து விட்டு சாரா எழுதிய ‘ எளிமையான நிறைவு ‘ என்ற புத்தகத்தைப் படித்தாள். அதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அறிவுரை இருக்கும். அன்றைய தேதிக்கான கருத்தைப் படித்தாள்.
“ நீ ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் ! இந்த உண்மை பலருக்குத் தவறாகக் கூடத் தோன்றும்.! ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாவத்தை வெளிப்படுத்துகிறாய் ! அதை நீ ஒருவன் மட்டும் தான் செய்ய முடியும். நீ உலகில் பிறந்ததே ஒரு தனி அடையாளச் சின்னம் ஏற்படுத்தத்தான், அதுதான் உன் தனித் தன்மை. அதுக்கு மரியாதை கொடு. உன் திறமைக்கு உருவம் கொடு. நம்பிக்கைக் காலெடுத்து நட ! உன் செயல்கள் அனைத்தும் உன்னைப் போலவே உண்மை என்று உணருவாய் ! நீ மகிழ்ச்சியோடு கூறும் நன்றி என்ற சொல்தான் உன் வாழ்வின் அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்வாய்.! அவள் வேலையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள்.! நம்பிக்கை, முயற்சி இரண்டையும் நினைக்கும்போது தன்னை அறியாமல் மீனங்காடி ஞாபகம் வந்தது. நிச்சயமாய் அந்த மீனங்காடி பசங்கள் அனைவரும் கலைஞர்கள் தான். அதனால் தான் அவர்கள் ஒவ்வொரு நாளையும் உருவாக்குகிறார்கள். அப்போதுதான் அவளுக்கும் புதிதாக உதித்தது. ‘ தானும் கூட கலைஞன் ‘ என்ற எண்ணம் . அவள் பையில் ‘ தலைவனாகும் தகுதி ‘ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் இருந்தது. அதில் அவளது அபிமான எழுத்தாளர் ஜான் கார்டினரின். கட்டுரை இருந்தது. அதைப் படிக்க வேண்டி புத்தகத்தைப் புரட்டினாள் !
ஜான் கார்டினரின் கருத்துக்கள் !.
விதையாய் இருக்கும் மனிதன் பிஞ்சாய், காயாய், கனியாய் மாற வேண்டும். அதுதான் நியதி.
சிலர் மட்டும் ஏன் முளைக்காத விதையாய் இருக்கிறார்கள் ! அவர்கள் கற்றுக் கொள்வதை மறந்து விட்டவர்கள். வளர்வதை நிறுத்திக் கொண்டவர்கள்.
மேரி நினைத்தாள். தன் ஆபீஸில் நிறைய பேருக்கு அது பொருந்தும். ஏன் நேற்றைய மேரிக்கும் அது பொருந்தும். ‘ நேற்றைய மேரி ‘ என்ற நினைப்பை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
அப்படி அவர்கள் இருப்பதன் காரணத்தை ஆராய வேண்டும். ஒரு வேளை வாழ்வில் அவர்கள் பெற்ற துயரங்கள், காயங்கள் அவர்கள் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் தகர்த்திருக்க வேண்டும். இல்லை என்றால் ‘ஏன் ஓடுகிறோம்’ என்பதை மறந்து ஒடுபவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களைக் குறை கூறவில்லை. வாழ்க்கை கடினம். அதைத் தொடர்ந்து நடத்த தைரியம் தேவை ! அது இல்லாததால் அவர்கள் நடைப் பிணங்களாக – இயந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரெஞ்ச் எழுத்தாளர் கூறியது போல ‘ அவர்களது கடிகாரம் ஒரு கால கட்டத்தில் ஓடுவதை நிறுத்தி விட்டது ‘. நின்ற கடிகாரத்தை ஓடவைக்க முடியும்.
உன்னைப் பற்றி உனக்கே தெரியாத ஒரு உண்மை எனக்குத் தெரியும், அதுதான் உன் சக்தியின் அளவு. நீ செய்து காட்டியதை விட பல மடங்கு சக்தி உன்னிடம் இருக்கிறது,
கார்டினர் என்றால் கார்டினர்தான். என்ன அழுத்தமான கொள்கை ! எங்கள் ஆபீஸில் நிறைய கடிகாரங்களுக்கு சாவி கொடுக்க வேண்டும். என்னையும் சேர்த்து என்று மேரி எண்ணிக் கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரம் மேரி அவளது நோட்டுப் புத்தகத்தில் நிறைய எழுதினாள். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. வீட்டுக்குப் புறப்படு முன் எழுதிய குறிப்புக்களை ஒரு முறை படித்தாள். அதுதான் அடுத்த நாளுக்கு – அதாவது திங்கட் கிழமைக்கு வழி காட்டியாகப் போகிறது!
என் தொழிலில் எனக்கு இப்போதைய தேவை ‘ நான் தலைவி ‘ என்ற எண்ணம் ! தோல்வி வரலாம். துவண்டு விடக் கூடாது. கத்தி எடுக்கப் போகிறேன். காயம் எனக்கே படலாம். ஆனால் சும்மா இருந்தால் தோல்வி நிச்சயம். துவக்கப் போகிறேன். என் முதல்படி – என்னுடைய எண்ணப் போக்கை மாற்றிக் கொள்வது. தன்னம்பிக்கை, உண்மை, தைரியம் இவை தான் என் ஆயுதங்கள். நின்று கொண்டிருக்கும் கடிகாரங்களை ஓட விடப் போகிறேன். கார்டினர் சொன்னது போல கற்பதையும், வளர்வதையும் குறிக்கோளாகக் கொண்டு மீனங்காடியில் பார்த்துப் புரிந்து கொண்டதை வைத்து எங்கள் ஆபீஸில் அந்த குப்பை மேட்டை கோபுரமாக மாற்றப் போகிறேன் ! இது உறுதி . ‘
திங்கட் கிழமை காலை
காலையில் அஞ்சரை மணிக்கே குழந்தைகளை எழுப்ப வேண்டியதாயிற்று. வேறு வழி இல்லை. குழந்தைகளை சீக்கிரம் காப்பகத்தில் விட்டு வேலையை உடனே ஆரம்பிக்க வேண்டும். “ சாரி ! குட்டீஸ் ! இனிமே இந்த மாதிரி விடியற்காலையில உங்களை எழுப்ப மாட்டேன். இன்னிக்கு அம்மாவுக்கு ஆபீஸில் முக்கியமான வேலை இருக்குமா ! ப்ளீஸ் !. தூக்கம் கலையாத குழந்தைகள் “ பரவால்லேம்மா “ என்றார்கள். ஜோ, சீக்கிரம் போனால் சீக்கிரம் வீடியோ கேம் ஆடலாம் என்று சொல்லிக் கொண்டான்.
குழந்தைகள் தலையில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அவர்களைக் காப்பகத்தில் விட்டு விட்டு ஆறு மணிக்கெல்லாம் ஆபீஸ் சென்றாள். சூடான காபி எடுத்துக் கொண்டு தனது இருக்கைக்குப் போனாள். பேப்பரை எடுத்துப் பெரிய எழுத்தில் எழுதினாள்.
உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்
படிகள்
ஒன்று – ஒரு மீட்டிங் கூப்பிட்டு மனம் விட்டுப் பேச வேண்டும்.
இரண்டு – எல்லோருக்கும் புரிகிற மாதிரி ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘என்ற செய்தி தயார் செய்ய வேண்டும்.
மூன்று – எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.
நான்கு – நம்பிக்கையோடு உறுதியாகவும் இருக்க வேண்டும்.
அடுத்தது – மிகவும் கடினமான செயல். ‘ அவர்களிடம் எப்படிப் பேசப் போகிறேன் ?’ மனதில் தோன்றிய கருத்துக்களைப் பேப்பரில் எழுதினாள்.!
திங்கட் கிழமைகளில் மக்கள் இரண்டு ‘ஷிப்டில் ‘ வருவார்கள். முதல் குரூப் அவளுடன் மீட்டிங்கில் இருக்கும் போது அடுத்த குரூப் வேலையைப் பார்ப்பார்கள். அப்புறம் அடுத்த குரூப்போடு மீட்டிங்.
முதல் குரூப் வந்து சேர்ந்தது. மீட்டிங் துவங்கியது. வழக்கமாக அவர்கள் ‘ இது சரியில்லை அது சரியில்லை ‘என்ற குற்றம் குறைகளுடனே ஆரம்பிப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள். அனைவரும் நல்லவர்களாகவே தோன்றியது. அவள் நெஞ்சு ‘ பட பட ‘ என்று அடித்துக் கொள்வது அவளுக்கே கேட்டது. எல்லோரும் மேரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஆரம்பித்தது……
மேரியின் விளக்கம்
“ இன்று மிக மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது சேர்மேன் ஒரு கருத்தரங்கிற்குப் போய் விட்டு வந்த பிறகு நமது கம்பெனி இன்னும் சக்தி வாய்ந்த, சுறு சுறுப்பான, துடிப்பான கம்பெனியாக மாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். எந்தக் கம்பெனியின் வெற்றிக்கும் அவை தான் திறவு கோல்கள். ! அவர் நமது கம்பெனி மேலதிகாரிகளிடம் நமது செயல்பாடுகளைப் பற்றி விவாதித்தாராம். அந்த விவாதத்தில் நமது டிபார்ட்மெண்டைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா ? ‘ குப்பைத் தொட்டி ‘ ஆமாம் ‘ குப்பைத் தொட்டி தான் ‘ என்று மிகவும் வருத்தத்தோடு கூறிக் குறைப் பட்டுக் கொண்டாராம். நாம் வேலை செய்கிற – நமக்குச் சொந்தமான டிபார்ட்மெண்டைப் பற்றி கூறப்பட்ட வார்த்தை ‘ குப்பைத் தொட்டி ‘ ! அதை சரி படுத்துவது, மாற்றுவது தான் நமது முக்கியமான் கடமை ! வேலை ! இல்லையா ?”
மக்கள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மேரி ஒவ்வொருவராக அனைவரையும்உற்றுப் பார்த்தாள். ஆனந்த் எழுந்து நின்றான் – ரொம்பவும் சீனியர் அவன். “ இந்த வேலையை வேறு யாரையாவது செய்யச் சொல்லுங்கள் ! அப்போ புரியும் இது எவ்வளவு வெறுப்பான, போரான வேலை என்று. சுறு சுறுப்பு இருந்தா என்ன இல்லாட்டா என்ன ? வேலை எப்படியும் நடக்குதில்லே? வேலை செய்யாமல் சும்மாவா உட்கார்ந்திருக்கோம் ?”
குப்பைத் தொட்டி என்று சேர்மனே சொன்னாரே என்று யாரும் கவலைப் பட்டது மாதிரி தெரியவில்லை. மற்றவர்கள் சொல்லிக் கேட்டுக் கேட்டுப் பழகி விட்டது போலும்.
மேரி தொடர்ந்தாள்.
“ இது இத்தோட முடியற சமாசாரம் இல்லை ! சேர்மன் அவருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதை மறந்திடலாம். பிரசாத் கூட விட்டு விடலாம். ஆனால் நான் இதை இப்படியே விட்டு விடத் தயாரா இல்லை. இந்த ‘ குப்பைத் தொட்டி ‘ என்ற வார்த்தையை, நமது டிபர்ட்மெண்டைப் பற்றி சொன்ன விதத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். நம்மிடம் பேசப் – பழகத் தயங்குகிறார்கள் ! அவர்களைக் குறை கூறுவானேன் ? நம்மில் யாருக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்கிறது ? நாமும் இதைக் ‘ குப்பைத் தொட்டி ‘ என்று தானே நினைக்கிறோம்.! இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நான் இன்றைக்கு உறுதி எடுத்துக்கிட்டேன் ! ஏன் தெரியுமா ?”
ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஆச்சரியத்துடன் மேரியைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யாரும் பேசவில்லை, முணுமுணுக்கவில்லை. பயங்கரமான அமைதி நிலவியது.
“ உங்க எல்லாருக்கும் என் சோகக் கதை தெரியும். நானும் ஜானும் இரண்டு குழந்தைகளுடன் எப்படி கனவுகளுடனும் ஆசைகளுடனும் இந்த ஊருக்கு வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஜானின் திடீர் மறைவு என்னை தனியாளாக மாற்றி விட்டது. ஜானின் இன்சூரன்ஸ் பணம் அவரது ஆஸ்பத்திரி செலவிற்குப் பத்தலை. அதனால் நான் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறேன்.
இதற்கும் ஆபீசுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இது என்னை எப்படிப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். உங்களில் சில பேர் என்னை மாதிரி தனித்து இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறீர்கள். அவர்களுக்குப் புரியும் நான் சொல்வதன் அர்த்தம். புரியும்படி சொல்கிறேன் ! எனக்கு இந்த வேலை மிக மிக அவசியம் !சமீப காலங்களில் என் திறமை குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. அலை போகிற வேகத்தில் நானும் போனேன். வேலை போய் விடக் கூடாதே என்ற பயத்தில். இப்போது அந்த வேலைக்கே உலை வைபப்து போல் ஆகி விட்டது நான் சென்று கொண்டிருக்கும் பாதை ! இன்றிலிருந்து இதெல்லாம் பழங் கதையாகப் போகிறது.!
இன்று தான் இதன் கடைசி எல்லை.! எனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பது பற்றிச் சொன்னேன். ஆனால் அதற்காக என் வாழ்க்கையை, வருங்காலத்தை ஒரு ‘ குப்பைத் தொட்டியில் ‘ கழிக்க விரும்பவில்லை. குடும்பத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றிய பயம் இந்த நிமிடத்திலிருந்து என்னை விட்டுப் போய் விட்டது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க ஏன் அவற்றைக் கண்டு பயந்து ஓட வேண்டும்? நாம் ஆபீஸில் அதிக நேரம் செலவழிக்கிறோம். அதை ஏன் வீனடித்துக் கொள் வேண்டும் ? நாம் இருக்கிற இடத்தை – வேலை செய்யற இடத்தை – சந்தோஷமான இடமாக மாற்ற வேண்டும் – மாற்றப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் !
ஒரு நல்ல சேதி ! நான் ஒரு அலுவலக ஆலோசரை சந்தித்தேன். இந்த வேகம், விவேகம், சுறு சுறுப்பு, ஜாலி, சக்தி இவை எல்லாவற்றிலும் திறமையானவர். உலகப் புகழ் பெற்ற அலுவலகத்தில் இருக்கிறார். நீங்கள் எல்லோரும் விரைவில் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள் ! அவர் சொன்ன முதல் அறிவுரை என்ன தெரியுமா ?
“ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் “
மேரி இன்னும் விளக்கமாக எப்படி இந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சொன்னாள். விளக்கமாகவே சொன்னாள். கடைசியில் ‘ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் ‘ என்று அவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
சுரேஷ் கையைத் தூக்கினான்! மேரி தலை அசைத்ததும் பேசத் தொடங்கினான். “ ஒரு கேள்வி ! நாம் பைக் ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு மடையன் திடீரென்று குறுக்கே ஓடினால் அவனை இறங்கி நாலு அறையாவது அறையாமல் போக முடியுமா ! இந்த இடத்தில் நான் எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது ? “
“ சுரேஷ் ! நான் ஒரு பதில் கேள்வி கேட்கிறேன் ! ரௌடிகள் இருக்கிற குப்பத்துப் பக்கம் போகும்போது இப்படி நடந்தா உன்னால தைரியமா இறங்கி அடிக்க முடியுமா !”
“ ஐயய்யோ ! அவங்க நம்மை சட்னி ஆக்கிடுவார்கள் .”
‘ அங்கே வித்தியாசம் தெரியுதல்ல ! அங்கே வேற மாதிரி நடந்துக்கிறோம். அது மாதிரி தான் பய உணர்ச்சி இருந்தால் எல்லா இடத்திலும் ஒரேமாதிரி எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
“ ஓகே ! மேடம் ! நான் ஒப்புக்கிறேன் !”
“ சுரேஷ் ! இதை விட சரியான கேள்வியைக் கேட்க முடியாது ! இன்னொரு சமாசாரம் . மத்தவங்க பைக் ஓட்டுவதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாம் எப்படி நடந்துக்கணும் என்பதை மாத்திக்க முடியும். புரியலையா ? நம்ம கம்பெனியில் எந்த வேலையை யார் பார்க்கணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியாது. ஆனால் இந்த வேலையை – நம்ம வேலையை – இப்படித் தான் செய்யணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியும் ! புரியுதில்லே ? நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி தீவிரமா யோசியுங்கள் ! பிறகு முடிவெடுப்போம் நமது எதிர்காலம் இதைப் பொறுத்துத் தான் இருக்கப் போகிறது.! குட் லக் !”
அடுத்த ‘ ஷிப்ட் ‘ மீட்டிங்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் நடந்தது. யாரும் எதுவும் கேட்காதபோது சுரேஷ் எழுப்பின அதே கேள்வியை உதாரணமாக வைத்தாள். காலை மணி பத்தரை வரை மீட்டிங் போயிற்று. மிகவும் சோர்வாக இருந்தாலும் மனதளவில் தனது கருத்தைத் தேர்ந்தெடுக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது குறித்து மிகவும் சந்தோஷப் பட்டாள். !
ஒரு வாரம் ஓடியது. மேரி வழக்கம் போல தினமும் எல்லா இடங்களுக்கும் போனாள். நடுவில் சுரேஷைப் பார்த்தாள்.
“ மேடம் ! அன்னிக்கு மீட்டிங்கில் என்னைக் கிழிச்சிட்டீங்க !”
“ சாரி ! சுரேஷ் ! நான் சொன்னது தப்பாப் பட்டுதா?”
“ மேடம் ! நீங்க எனக்குப் பெரிய உதவி செஞ்சீங்க ! என்னுடைய சொந்த வாழ்க்கை சமீபத்தில் கன்னா பின்னான்னு போயிக்கிட்டிருக்கு. நீங்க எனக்கு ஞாபகப் படுத்தினீங்க ! என் முடிவுகளை நான் தான் எடுக்க வேணும்னு ! அதை எடுக்க எனக்கு தைரியம் தான் வேண்டியிருக்கு ! “
“ தைரியமா ? புரியலையே !”
“ என் வாழ்க்கை திசை மாறி ஓடிக்கிட்டிருக்கு. நான் அதை சரி செய்ய ஏதாவது செய்யணும். எல்லோரும் என்னைப் பழி வாங்கறாங்க என்று நினைச்சு எந்த பிரயோசனமும்இல்லை. பிரச்சனையை சந்திக்கணும். அதை விட்டு ஓடிப் போறதில எந்த பலனும் இல்லே என்பதை அன்றைக்கு புரிஞ்சிக்கிட்டேன். பொதுவா சொல்றேனேன்னு நினைக்காதீங்க ! இது என் சொந்த – பர்சனல் வாழ்க்கை.”
எல்லாம் சரியாப் போயிடும் சுரேஷ் ! நம்பிக்கை இருந்தாப் போதும். என்னை நம்பி இதைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சுரேஷ் .”
“ மேடம் ! நாங்கள் எல்லோரும் உங்களை நம்பறோம் ! நீங்களே பாருங்கள் ! எங்கள் வேலை எல்லாம் எவ்வளவு போராயிருக்கு ! அதனால் தான் ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் ! எங்க கூட எல்லோரும் மோத வருவது போல ஒரு உணர்ச்சி ! இதை மாத்த எந்த முயற்சி வேணும்னாலும் எடுங்க ! அதைச் செய்யற முதல் ஆளாய் நான் இருப்பேன் “.
ஆச்சரியமாக இருந்தது மேரிக்கு ! இப்படி எல்லாம் பாராட்டு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மக்கள் எல்லோருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாலும் ‘ நாம வேலை செய்யற இடத்திலே சந்தோஷம் இருக்கணும்’ என்ற கருத்து எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. ஆனால் வெளிப்படையா எதுவும் நடக்கலை!
அடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது.! மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.! அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் !
தலையங்கம்
25/25
11
பூ : ஒன்று இதழ் : 11
இந்தியா வல்லரசுப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு நிமித்தங்கள் -அறிகுறிகள் நிறையத் தென்படுகின்றன.
மோடியின் அமெரிக்கப் பயணம் அதற்குக் கட்டியம் கூறுகிறது. மேடிசன் ஸ்கொயரில் அவர் ஆற்றிய உரை வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் ஜனரஞ்சகமாக இருந்தது.
- பாரதத் தூய்மைத் திட்டம் ,
- மேக் இன் இந்தியா திட்டம்,
- வேண்டாத சட்டங்களை உடைத்து எறியும் திட்டம்,
- சீனாவுடன் நட்பு பாராட்டும் வகை,
- பாகிஸ்தானின் ஊடுருவலுக்குப் பதிலடி கொடுக்கும் திறன்,
- வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வரத் திட்டம்,
- ரெட் டேப்பை ஒழித்து ரெட் கார்ப்பெட் விரிக்கும் திட்டம்
- மங்கள்யான் வெற்றி
- அண்டை நாட்டினருடன் நேசக்கரம்
- எல்லோருக்கும் வீடு
- கங்கையைப் புனிதமாக்கும் திட்டம்
- கிராம மேம்பாட்டுத் திட்டம்
- வேலை வாய்ப்புப் பெருக்கும் திட்டம்
இவை எல்லாம் செயலாற்றத் தொடங்கினால் இந்தியா சத்தியமாக வல்லரசு தான்.
அந்தக் கனவில் மிதக்காமல் அவற்றைச் செயலாக்கும் பணியில் ஈடுபடுவோம்.
வல்லரசு வானமாக இருக்கட்டும். ஆனால் அது தொட்டு விடும் தூரம் தான்.
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா