சென்னையை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன – வர இருக்கின்றன – மெட்ராஸ், மதராசபட்டணம், வட சென்னை, மாநகரம், தூங்காவனம்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஏப்ரல் 12ல் வெளியானது ஆர் கே நகர்.
படம் செம டக்கர் ! வசூலில் அள்ளிக் கொண்டு போகிறது.! படம் வெளியாகும் முன்னே 89 கோடி வசூலாம்.
மறைந்த முதல்வர் அம்மாவின் இறுதி யாத்திரையோடு துவங்குகிறது. பார்ப்பவர் நெஞ்சை உருக்கச் செய்கிறது. (இதையே பின்னாடி பன்னீர் ஆளுங்க வேற மாதிரி செய்வாங்க )
அப்புறம் சின்னம்மாவின் வருகை – கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முதல்வர் நாற்காலிக்கு வருவது. அதில் உட்காரப்போகும்போது சிறைத் தண்டனை என்று அவரை பெங்களூருக்கு அழைத்துப்போவது. போவதற்கு முன் அவர் அம்மாவின் சமாதிக்குச்சென்று மூன்று முறை அடித்து சபதம் செய்து தினகரன் கையில் கட்சியைக் கொடுக்கும் காட்சி படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது.
அதுவரை அமைதியாக இருந்த பன்னீர், விஜய் சேதுபதிபோல அப்படியே ஒளி வட்டத்துக்கு வருகிறார். அவர் வரும் காட்சியில் எல்லாம் அமைதியான நடிப்பால் கைதட்டல் வாங்கிறார்.
அதற்கு முன் கூவத்தூர் காட்சி செம கலக்கல்!
நம்பிக்கைத் தீர்மானத்தின் போது சட்டசபையில் நடந்த கலாட்டாக்கள் பயங்கர காமெடி.
அதற்கப்புறம்தான் புது விதமாக ரி -என்ட்ரி ஆகிறார் தினகரன் அரவிந்த்சாமி ஸ்டைலில் தொப்பி போட்டுக் கொண்டு.
ஏப்ரல் 12ல் தேர்தல்
ஊரு இரண்டு படும் போது ஸ்டாலின் சீரியசாக தனது ஆளை உள்ளே நுழைக்கிறார். அத்தோடு இன்னும் நிறைய பேர் நிற்பது காமெடி பீஸ் போல இருக்கு! ( ரஜினி கூட சின்ன CAMEO செய்திருக்கிறார்)
பணம் எல்லா இடத்திலும் கொட்டுகிறது. (காசு பணம் துட்டு மனி மனி என்ற சூது கவ்வும் பாடல் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. )
கிளைமாக்ஸில் வருமானவரி சோதனையும் அப்போது நடக்கும் காட்சிகளும் (அதிலும் குறிப்பாக ஒரு ரகசிய டாக்குமெண்டை அதிகாரிகள் பார்க்கும் போதே கைமாறி கேட்டுக்கு வெளியே கொண்டு போகும் காட்சியில் டைரக்டர் எங்கோ போய் விட்டார்.) பரபரப்பாக இருந்தன.
அந்தக் களேபரத்தில் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று அறிக்கை வருகிறது.
எல்லா வேட்பாளர் முகத்திலும் முதலில் ஒரு கோபம் – பிறகு திகில் -பிறகு அப்பாடா என்பது மாதிரி இலேசான புன்னகை .
அப்போது டைட்டில் வருகிறது –
விரைவில் ஆர் கே நகர் பார்ட் -II !
தேவ சிற்பி விஷ்வகர்மா தன் மகள் ஸந்த்யாவிற்காக அமைத்துக்கொடுத்த தனி நீச்சல் குளம் அது. படிகள் பொன்னாலும் பக்கவாட்டச் சுவர்கள் வெள்ளியாலும் அமைந்தது அந்த நீச்சல் குளம். அதற்கு வானுலக சரஸ்வதி நதியிலிருந்து நீர் சுனையாக ஊறிக்கொண்டிருந்தது. அதில் ஸந்த்யா தன் தோழிகளுடன் உல்லாசமாக நீந்தி விளையாடிக் கொண்டிருப்பாள்.
சில சமயம் அவள் தனியே அந்தக் குளத்தில் நீந்த வருவாள். . யாருமில்லை என்பதால் சுதந்திரமாகவே நீந்திக் கொண்டிருப்பாள். அன்று அப்படிக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஸ்படிகம் போன்ற தண்ணீரில் ஒரு பொன்னைப் போல ஒளிவீசும் அழகான உருவத்தைக் கண்டாள். அந்த உருவம் அவள் மீது படர்வது போன்ற உணர்வை அடைந்தாள். திரும்பி நேராகப் பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. அதனால் முதுகைக் காட்டிக் கொண்டே தண்ணீரில் தெரியும் சூரிய தேவனின் அழகு பிம்பத்தைக் கண்டாள். அவள் முதுகை சூரியனின் கிரணங்கள் மெல்ல வருடுவதை உணர்ந்து இதுவரை அனுபவிக்காத இன்ப அதிர்வு உடல் முழுதும் பரவுவதை உணர்ந்தாள்.
அடுத்த நாளும் சூரியதேவன் வருகைக்காக அவள் மனதும் உடலும் ஏங்கியது. அந்த நேரமும் வந்தது. நேரிடையாகப் பார்க்கவேண்டும் என்று குளித்துக் கொண்டிருக்கும் அவளுக்குத் தோன்றியது. பொன்னிற உருவம்தான் தெரிந்தது. கண்கள் கூசின. இடையில் ஒரு சிறு மேகம் வந்ததால் அதன் வழியே சூரியதேவனின் அழகு முகத்தைப் பார்க்கமுடிந்தது. மேகம் மறைந்ததும் அவள் கண்கள் தண்ணீரில் தெரியும் அவனுடைய பிம்பத்தைப் பார்த்துப் பிரமித்தன. அவன் அழகை அள்ளிப் பருகியவண்ணம் ஒரு மயக்க நிலையில் இருந்தாள்.
திடீரென்று அந்த பிம்பம் பெரிதாகத் தோன்றியது. அவள் அருகே கரையில் சூரியதேவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளுக்குத் தலை சுற்றுவதைப் போல இருந்தது. அவன் அவளைக் கை நீட்டி அழைக்கக் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பு போலச் சென்றாள். கரையிலிருந்து கைலாகு கொடுத்து அவளைத் தூக்கினான். சூரியனின் வெதுவெதுப்பில் அவளது நீர்த்திவலைகள் எல்லாம் மறைந்து சூடு ஏறுவதை உணர்ந்தாள்.
குளிக்கச் சென்ற தன் பெண் இன்னும் வரவில்லையே என்று தேடிக்கொண்டு விஷ்வகர்மா அங்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்துத் திடுக்கிட்டார் !
(தொடரும்)
இரண்டு:
யமுனாவைக் கண்டதும் எமனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. இருக்காதா பின்னே? அவனுடைய ஆருயிர்ச் சகோதரி ‘எமி’ அல்லவா அவள்? இரட்டையர்களாகப் பிறந்த எமன், எமி இருவருக்கும் இடையே சிறு வயது முதல் இருந்த பாசத்துக்கு அளவே கிடையாது. எமி கேட்டாள் என்பதற்காக வானத்துச் சந்திரனை ஒருமுறை அவளுக்கு விளையாடப் பறித்துக் கொண்டுவந்தான் எமன். அதற்காக அவன் தந்தையின் கோபித்துக் கொண்டதைப்பற்றிக்கூட அதிகமாகக் கவலைப்படவில்லை.
எமிக்கும் அண்ணன் எமன் மீது உயிர்.
“வா! சகோதரி “ என்று வாஞ்சையோடு அவள் கரத்தைப் பிடித்து மண்டபத்துக்கு அழைத்து வந்தான்.
“இது என்ன அண்ணா? இவ்வளவு பெரிய தீபம்?”
“எமி! நீ முதல் முறையாக எமபுரிக்கு வருகிறாய்! அதுவும் இந்தத் தீபாவளி நாட்களில் வருவது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இன்று திரயோதசி. இன்று பூமியில் வீட்டைச்சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பர். மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று பூலோக மக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், நமது சொர்க்கபுரி, நரகபுரி இரண்டிலும் இருக்கும் பிதுர்க்கள் பூமிக்குச் செல்வார்கள்.
அப்படிச் செல்பவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்குத் திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டும். தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் பூலோகவாசிகள் ஏற்றும் தீபத்துக்கு என் பெயரை வைத்து ‘எம தீபம்’ என்று சொல்கிறார்கள். இதை அவர்கள் வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள்… வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம்.
இதனால் மக்களுக்கு விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது; நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!” இப்படி ஒரு வரத்தை நான் பூலோக மக்களுக்குத் தந்துள்ளேன்.
ஒருமுறை திருச்சிற்றம்பலம் * என்னும் கிராமத்தில் எனக்குத் தனிக்கோவில் கட்டி மக்கள் என்னை வழிபட்டனர்.
அவர்கள் விருப்பதிற்கேற்ப கருவறையில் எருமை வாகனத்தில் மேற்கு திசைநோக்கி நான்கு திருக்கரங்களுடன் . கீழ்வலக்கையில் தீச்சுடரும், இடக்கையில் ஓலைச்சுவடிகளும், மேல்வலக்கையில் சூலாயுதம் தாங்கியும், இடக்கரத்தில் கதையுடனும் அருள் பாலித்தேன்.
அப்போதுதான் அவர்கள் என்னிடம் வேண்டிக்கொண்டார்கள். “ ஸ்வாமி, மரணம் தவிர்க்கமுடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் திடீர் மரணம், விபத்துக்கள் சம்பவிக்காது , நோய் நொடியின்றி ஆரோக்யமாக இறக்க வழி கூறுங்கள்” என்று வேண்டினர்.
அப்போதுதான் தீபாவளிக்கு முந்திய நாள் தீபம் ஏற்றி வழிபடுங்கள் . நீங்கள் கேட்டுக்கொண்டபடி துர்மரணம் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறினேன்.
அவர்கள் ஏற்றும் தீபங்களின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத்தான் நமது எமபுரிப்பட்டிணத்திலும் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது.
எமி! இன்று உன் கையால் தீபத்தை ஏற்று! பூலோக மக்கள் சந்தோஷமாக வாழ அது வழிகாட்டும்” என்றான் எமன் .
சித்ரகுப்தன் , தீப்பந்தத்தை எடுத்துத் தர எமி எம தீபத்தை ஏற்றினாள். அது சுடர்விட்டுப் பிரகாசித்தது.
எமி! நாளை தீபாவளி ! உன்னை சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்! அதுவரையில் உன் அறையில் ஓய்வெடுத்துக் கொள் “ என்றான் எமன்.
(தொடரும்)
* தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோவில் உள்ளது
மணிரத்னம் 40% , பாரதிராஜா 20%, பாலச்சந்தர் 40% சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்திருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்பது என் கணிப்பு!
அருமையான கதை , நடிப்பு, வசனம், எடிட்டிங் .
ஒரு முழுப் படத்தைப் பார்த்த எண்ணம் நமக்கு உண்டாகிறது.
பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் !!
குற்றமும் தண்டனையும்! ( நன்றி வாட்ஸ் அப் )
நேற்று இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இணைந்து நடத்திய கூட்டம், சீனிவாசகாந்தி நிலையத்தில்.
ஓவியர் அமுதன் இலக்கியசிந்தனையின் பேச்சாளர்.
இவர் கண்ணதாசனுடன் பணி ஆற்றியவர். இந்த வகையில் கவிஞர் பற்றி நாம் அறிந்திராத பல நிகழ்ச்சிகளைக் கூறினார்.
இவரின் கூற்றின்படி காற்றுமண்டலம், புகைமண்டலம் போல்.. எண்ணங்களுக்கும் ஓர் மண்டலம் உண்டு. அதனால்தான் நாம் நம் கை கொண்டுதான் வரைகிறோம். ஆனாலும் அந்த ஸ்ட்ரோக் வந்து விழுந்தது என்று கூறுகிறோம். அதேபோல் பாட்டில் அந்த வரி வந்து விழுந்தது என்றும் சொல்கிறோம். நம் எண்ணத்தில் உதித்த வார்த்தைகளை எங்கிருந்தோ வந்து விழுந்தது என்று ஏன் கூறுகிறோம்…. அது இந்த எண்ண மண்டலம்தான். இங்கே சுழலுகின்ற எண்ணங்கள் எல்லோர் மீதும் விழுவதில்லை. யார் அதற்க்குத் தகுதி ஆனவரோ அவருக்கே இது பிராப்தம்.
அப்போது தகுதி என்பது எப்படி அளந்து பார்ப்பது? நம் sincerity அந்த தகுதி. எவ்வளவுக்கெவ்வளவு செய்யும் வேலையை நாம் நம் முழு மனதுடன் செய்கிறோமோ…. அப்போது இந்த அற்புத எண்ணங்கள் தானாகவே வந்து விழும்.
இதற்க்கு கண்ணதாசனை ஓர் உதாரணமாகச் சொன்னார்.
நாம் அனைவர் கேட்டு ரசித்த பாடல்….அவள் ஒரு நவரச நாடகம்….படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த பாடல் எழுதப்பட்டபோது, கவிஞரும் திரு MSVஅவர்களும் பாடல் கம்போஸிங்கில் இருந்தனர். சாதாரணமாக திரைப்படப் பாடலுக்குப் பன்னிரெண்டு வரியில் பாடல் இருந்தால் போதுமானது. இந்தப் பாடல் எழுதப்படுவதற்கு முன்பே கவிஞரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தப் பாடல், ‘காலங்களில் அவள் வசந்தம்போல்’ ஒர் all time memory hit பாடல் போல் இருக்கவேண்டும் என்று.இதை மனதில் வைத்துக்கொண்டு, கவிஞர் பாடல் வரிகள் சொல்லத் தொடங்கினார். இருபது,முப்பது,நாப்பது…..வரிகள் சொல்லிக்கொண்டே போனார். MSV அவர்களும்…..அண்ணே… பன்னிரெண்டு வரிகள் போதும். இவ்வளவு வரிகள் சொல்லுகிறீர்கள்? போதும்….
கண்ணதாசன் நிறுத்தவில்லை….
இல்லை என் மனதில் இன்னும் அந்த வரிகள் வந்து விழவில்லை….அது வரை நான் நிறுத்தமாட்டேன் ..
கடைசியாக அந்த வரிகள் வந்து விழுந்தன…
அவை….
தழுவிடும் இனங்களில் மான் இனம்….
தமிழும் அவளும் ஓர் இனம்…..
நிறைய வரிகள் கொடுத்துவிட்டேன். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் …. கடைசியாக சொன்ன இரு வரிகள் நிச்சயம் இருக்கவேண்டும்….
பதினந்து வரிகள் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம்….
ஆனால்…செய்யவில்லை…
இது sincerity … dedication.
அவருக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது…
ஆமாம்….
இந்த வார்த்தை மண்டலம் போல்….
கற்கள் மணடலம் ஒன்று இருக்காதுதானே….
(நன்றி : லதா ரகு )
குவிகம் இலக்கிய வாசல் சார்பாக திருமதி சரஸ்வதி “இளைஞர் விரும்பும் இலக்கியம்’ என்பதுபற்றி அழகாகப் பேசினார்.
சுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது முடிந்தது.
இப்படியும் ஒரு கோணமா… !
‘மிதிலா… இந்த பிள்ளையாரப்பனை நன்றாகக் கும்பிட்டு
‘பிள்ளையாரப்பா.. நாளையிலிருந்து ஆரம்பிக்கிற
பரீட்சைகள்ளே நிறைய மார்க்குகள் கொடுத்து என்
வகுப்பிலேயே முதல் மார்க் வாங்க வைப்பா..’ என்று
வேண்டிக்கிட்டு பதினோரு முறை பிரதிக்ஷணம் செய்.
எல்லாம் பிள்ளையார் பார்த்துப்பார்..கவலையே வேண்டாம்’
என்றேன் என் ஐந்து வயது மகளிடம்.
‘சரிப்பா..’ என்று நான் சொன்னபடியே வேண்டிக்
கொண்டு பிரதிக்ஷணம் செய்யும் மகளை பெருமையோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்.
கோயிலிலிருந்து வீட்டிற்கு வந்தவள் டி.வி. ரிமோட்டை
எடுத்து அவளுக்குப் பிடித்த ‘போகோ’ சானலைப் போட்டு
டி.வி. பார்க்க ஆரம்பித்தாள்.
‘ஏய்.. மிதிலா.. நாளையிலிருந்து எக்ஸாம். படிக்க
வேண்டாமா.. போ.. போ..’ என்று கத்தினாள் என் மனைவி.
‘போம்மா.. டாடி சொன்னபடி பிள்ளையாரப்பனை வேண்டிக்-
கிட்டு பதினோரு முறை பிரதிக்ஷணமும் வெச்சுட்டேன். அவர்
பார்த்துப்பார். எனக்கு நிறைய மார்க் போட்டு நான்
வகுப்பிலேயே முதல் மார்க் வாங்க வைப்பார்’ என்றாள் சர்வ
சாதாரணமாக.
நான் அயர்ந்து போய் நின்றேன். இப்படியும் ஒரு
கோணமா..?
சதவாஹன
சரித்திரம்…
சில நேரங்களில் மௌனமாக இருக்கும்…
ஆனால் பெரிதாக சாதித்து விடும்.
ஆனாலும் அந்த சாதனையும் சில நேரங்களில் அடக்கி வாசிக்கப்பட்டு அடங்கி விடும்.
கி பி முதல் நூற்றாண்டில் இருந்து குப்தர்கள் வரும் வரை … வட இந்தியாவின் இருண்ட காலம் என்று சொல்வர்.
அந்தக்காலக் கட்டத்தில் ஒரு ராஜ்ஜியம் ஆந்திராவில் விரிந்தது.
கலைகள் செழித்தது.
வர்த்தகம் உலகளவில் விரிந்தது.
முக்கியமாக ‘அமைதி’யும் சுபிக்ஷமும் இருந்தது.
சதவாஹனா!
இன்றைய மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் இந்த ராஜ்ஜியம் உருவானது,
கல்லினால் செய்யப்பட்ட ஸ்தூபிகள் அழகைச் சொரிந்தன.
அமராவதி நகரில் (இன்றைய குண்டூர் மாவட்டத்தில்) அன்று சிற்பக்கலை பயில்விக்கும் பெரும்பள்ளி ஒன்று அமைந்திருந்தது.
மஹா ஸ்தூபி (மஹா சைத்தியா) என்றழைக்கப்படும் உன்னதமான ஸ்தூபி அமராவதியில் நிறுவப்பபட்டது. அது மென்மையான பச்சை நிற சுண்ணாம்புக்கற்களால் செய்யப்பட்டது. வெகு நுணுக்கத்துடனும், விஸ்தாரமாகவும், நயத்துடனும் செதுக்கப்பட்டிருந்தது.
(இந்த ஸ்தூபி பின்னாளில் – பத்தொன்பதாம் நூற்றாண்டில் – பிரிக்கப்பட்டு- பல அருங்காட்சியகங்களில் காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று இங்கிலாந்து நாட்டில் உள்ளது)
மேலும் சில சிற்பங்கள் இரண்டு கதைகள் சொல்கின்றன:
ஒன்றில்,
அசித முனிவர் மன்னர் சுத்தோதனரின் (புத்தரின் தந்தை) அரண்மனைக்கு வருகை தருகிறார். மன்னர் மகன் சித்தார்த்தர் ஒரு உலகநாயகராகவும், மாமுனிவராகவும் வருவாரென்று அவர் ஆருடம் கூறும் காட்சி!
உலகநாயகரும் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்த கலவை!
பிறகு கேட்கவேண்டுமா?
மற்றொன்றில்,
மாபெரும் புறப்பாடு (great departure)!
இதில் புத்தர் உண்மையைத் தேடி, அரண்மனையையும் குடும்பத்தையும் விட்டு விலகிச் செல்லும் காட்சி!
மன்னர்கள் சரித்திரத்திற்கு வருவோம்.
வம்சத்தைத் துவங்கியவர் ‘சிமுகா’ (Simukaa).
மௌரியர்களுக்குப் பிறகு சுங்கர்கள்..
சுங்கர்களுக்குப் பிறகு ‘கன்வர்’கள்…
கன்வர்களின் கடைசி மன்னனை ‘சிமுகா’ கொன்று, தான் அரசனானான்.
கிருஷ்ணா நதியின் முகப்பிலிருந்து தக்ஷிண பீடபூமி வரை ஆட்சியை விரிவாக்கினான்.
பின்னர் வந்த மன்னன் சதகர்ணி சதவாஹனா!
(சதகர்ணி சதவாஹனா)
சதகர்ணி சதவாஹனா அஸ்வமேத, ராஜசூய யாகங்கள் செய்தான்.
கலிங்கத்தின் காரவேல் படையெடுத்த போது அவனுக்குப் பரிசுகள் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான்.
சரி…சரித்திரத்துக்கு சற்று அரிதாரம் சேர்த்து கதைப்போம்!
நாள்: கி பி 120
இடம்: அமராவதி
ஒரு தாய் தன் மகனுக்காக என்ன என்ன செய்வாள் என்பது யாரே எண்ண இயலும்?
சதவாஹன வம்சத்தில் ஒரு ராணி கௌதமி பாலஸ்ரீ.
இளவரசனான தன் மகன் மாபெரும் மன்னனாக வரவேண்டுமென்று அவள் கனவு மட்டும் கொள்ளவில்லை.
அவனது நலனுக்காகவே வாழ்ந்தாள்!
முதல் ஆசான் அவளே!
முதல் ஆலோசகர் அவளே!
அவளது முயற்சிகள் வீண் போகவில்லை.
மகனும் சதவாஹன வம்சத்தின் தலை சிறந்த மன்னனாகப் பெயரெடுத்தான்.
மகனது பெயர் “கௌதமிபுத்திர சடகர்னி”!
மன்னன் பெண்களை மதித்தான்.
அவர்களுக்கு உயர்கல்வி கற்றுவித்தான்.
அவர்களை சமயக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தான்.
தாயின் பெயர் என்றும் நிலைக்கவேண்டும் என்று மகன் விரும்பினான்.
தன் பெயரிலே தாய்க்கு இடம் கொடுத்தான் அந்த ‘கௌதமிபுத்திர’ சடகர்னி!
அத்துடன் அவ்வழி தனக்குப் பின் வரும் மன்னர்களும் பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தான்.
அவனுக்குப் பிறகு வந்த சில சதவாஹன மன்னர்கள்:
‘வஷிஷ்டி புத்ரா’, ‘கெளஷாகிபுத்ரா’.
இந்தப் புரட்சி இன்னும் 21ம் நூற்றாண்டில் கூட நடைமுறையில் இல்லை!
கௌதமிபுத்திரன் சக (sakha) அரசை போரில் வெற்றி கொண்டான்!
வாசகர்களே! பஞ்சாங்கத்தைப் போய்ப் பாருங்கள். சக வருஷம் என்று ஒரு வருடம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது இந்த வெற்றியின் நாளிலிருந்து துவங்கியது.
சாலிவாகன வருடம் – சக வருடம் இரண்டும் ஒன்று தான் என்று கூறப்படுகிறது.
(சக வருடம் பொறிக்கப்பட்ட நாணயம்)
(According to historian Dineshchandra Sircar, the historically inaccurate notion of “Shalivahana era” appears to be based on the victory of the Satavahana ruler Gautamiputra Satakarni over some Shaka (Western Kshatrapa) kings.)
புத்தம் – சமணம் ஓங்கியிருந்த சமயம் – மன்னன் பிராமணர்களை ஆதரித்தான்.
‘ஏக பிரம்மணா’ என்ற நூலில் இது எழுதப்பட்டுள்ளது.
ஆயினும் புத்தர்களுக்கு மானியம் அளிக்கத் தவறவில்லை.
நான்கு ‘குலங்கள்’ கலப்பதை தடுத்தான்.
இந்த குலங்கள் சமூகரீதியில் அமைந்திருந்தன.
மேலும் சக, யவன, குஷான – யாராக இருந்தாலும் ஹிந்து சமயத்தில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
ஆட்சி… கிருஷ்ணா நதியிலிருந்து சௌராஷ்டிரா வரையிலும் பரவிக் கிடந்தது.
அலெக்சாண்டர் முதல் பெரும் மன்னர்கள் பலர் புகழ் மோகம் தலைக்கேறியதும் ‘இறைவன்’ அவதாரம் என்று தங்களையே கூறிக்கொண்டனர்.
ஆனால் இந்த மன்னன் அவ்வாறு கூறாமல் தான் தர்மத்தின் வழி ஆள்பவன் என்றான்..
மக்கள் நலம் ஒன்றே தமது குறிக்கோள் என்றான்.
(இந்நாள் அரசியல்வாதிகள் சரித்திரம் படித்து இவ்வாறு நடந்தால் எப்படி இருக்கும்? இந்த சரித்திரத்தை கல்லூரிகளில் அரசியல் பாடங்களில் முதல் பாடமாக வைத்தால்? வரும் அரசியல்வாதிகள் கொள்கையுடன் இருப்பார்கள்!
‘அம்புட்டு ஆசை’!)
இவை அனைத்தும் அந்தத் தாயின்…
அறிவுரை!
அறவுரை!
அடடா.. நாம் தாயை சற்று மறந்து போனோமே!
தாயின் கதைக்கு வருவோம்.
மாபெரும் மன்னன் சாதிக்கவேண்டியதெல்லாம் சாதித்து, நோய்வாய்ப்பட்டிருந்த காலம்.
அரசு ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் மகாராணியே ஏற்று நடத்தினார்.
அரசன் மறைந்ததும் பேரன் வஷித்திபுத்திரன் மன்னனானான்.
தன் மகனின் சாதனைகளைக் கண்படுத்திய மகாராணி அவரது சரித்திரத்தை நாசிக் பிரசாதி (Nasik prasasti) என்று எழுதினார்.
அவனது சாதனைகளை பெருமையுடன் எழுதினார்.
அவளது மகன் மறைந்து இருபது ஆண்டு மறைந்தது.
அந்த மூதாட்டியின் படைப்பு அன்று அரங்கேறியது.
ஒரு தாய் மகனுக்கு எழுதிய முதல் சுயசரிதை இது தான் போலும்!
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் அவன் தாய் பின் நிற்கிறாள்.
நமது கதை முடிந்தது
(கதை என்றாலும் இதில் காண்பது சரித்திரமே!
நடைக்கு மட்டுமே நாம் பொறுப்பு)
சதவாஹன மன்னர்கள் மொத்தம் 19 .
அந்த ஆட்சியில் சிற்பம், ஓவியம் சிறந்தது.
சதவாஹனா ஓவியம்
மக்கள் நல்வாழ்வும் சிறந்தது.
இது தான் ராம ராஜ்யமோ?
சரித்திரம் அன்று சுகமாக இருந்தது.
இதுவும் ஒரு அடித்தளம்தானோ?
இதற்கு மேலும் இந்தியாவின் சரித்திரம் ‘மின்னும் நவரத்தினங்கள்’ போல் ஒளி விட்டு சிறக்க உள்ளதோ?.
விரைவில் காண்போம்!
அசோகரின் நுட்பமும் மித்திரனின் நட்பும்
இந்திய வரலாற்று வானில் சாம்ராட் அவர்
இலக்கிய வரலாற்று வானில் சாம்ராட் இவர்
அவர்,
வீரத்தால் வெற்றிகளைக் குவித்தவர்
அன்பால் அனைவரையும் அணைத்தவர்
நாடுபல சென்று நல்மதம் பரப்பினவர்
நாடும் மக்களுக்கு நல்லதை அளித்தவர்
இவர்,
எழுத்தால் வெற்றிகளைக் குவித்தவர்
எழுத்தில் அனைவரையும் இணைத்தவர்
ரத்தினச் சுருக்கமாய் முத்திரை பதித்தவர்
பத்தரை மாற்றுப் பொன்னாய் மின்னியவர்
மற்ற இலக்கியவாதிகள்,
பித்தளைப் பாத்திரங்களுக்குத் தங்கமுலாம் பூசுவர்
தத்துவக் கடலில் தத்தளித்துத் தவிப்பர்
பக்கத்துக்குப் பக்கம் மையால் நிரப்புவர்
சிக்கன எழுத்தைச் சிந்தையில் மறப்பர்
இவரோ,
பித்தளை தம்ளரில் காபி தருவார் வெயிலுக்கு இதமாய் விசிறி வீசுவார்
பக்கத்தில் வந்து தொட்டுக் காட்டுவார்
பட்டணப் பகட்டைச் சுட்டிக் காட்டுவார்
நறுக்கென்று சொல்லும் வித்தகர்
சுருக்கென்று குத்தும் வித்தையர்
குபுக்கென்று சிரிப்பைக் கிளப்புவார்
திடுக்கென்று கதையை முடிப்பார்
அடுத்த வீட்டுப் பெண் இவரது நாயகி
மாடி வீட்டு ஏழை இவரது நாயகன்
தெருவில் திரியும் மனிதரே கதைமாந்தர்
மொத்தத்தில் இவர் ஒரு சாமான்யர்
சாமான்யர்களுக்காக சாமான்யரைப் பற்றி
சாமான்யர் பார்வையில் எழுதிய சாமான்யர்!
பேசும் வார்த்தையில் அவரது அறிவு பளிச்சிடும்
எழுதும் எழுத்தில் அவரது நுட்பம் புலப்படும்
பழகும் விதத்தில் அவரது எளிமை வெளிப்படும்
வீசும் சிந்தனையில் அவரது பெருமை புரிபடும்!
எழுத்துக்கு இலக்கியமும் நட்புக்கு இலக்கணமும் படைத்தவர்
எவரையும் செல்லமாய்க் கோபிக்கும் குழந்தை மனத்தவர்
ஆகையால் இவர் எல்லோருக்கும் இனியதொரு மித்திரன்
அவர்தான் நம்எழுத்துலக சாம்ராட் அசோகமித்திரன் !!
(நன்றி: சு.ரவி)
சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்த அசோகமித்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
“அசோகமித்திரன் – என் பார்வையில் ” என்ற தலைப்பில் டாக்டர் பாஸ்கர் அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் !
இடம்:
ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
நேரம் :
மாலை 7.00 மணி , சனிக்கிழமை ஏப்ரல் 29, 2017
அனைவரும் வருக !
ஒகே காதல் கண்மணியில் ‘கணபதி கணபதி’ என்று அழைத்துக் கொண்டு வரும் பிரகாஷ் ராஜின் மனைவியை ( லீலா சாம்ஸன்) அவ்வளவு சுலபமாக நாம் மறக்க முடியுமா?
அந்தப் பாட்டுகுருவிற்கு வந்தது ஞாபகமறதி வியாதி !
அதைப்போல வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி வியாதியைப் பற்றிய உணர்வு பூரணமான ஒரு குறும்படம்.
இந்த வியாதி நம் பெற்றோர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு வந்திருக்கிறது என்பது தெரியாமல் அவர்களை நாம் எப்படிக் கேவலமாக நினைக்கிறோம் என்பதைச் சொல்லும் காவியம்.
இது குறும்படம் அல்ல. பெரும் பாடம்!
என் சுகவீனம் என்னோடு
சில நாட்கள்
மருத்துவமனை வாசம்
ஆம்.. இன்னும் உடலில் அவ்வாசம்
உலகில் என்ன நடந்தது
எனக்குத் தெரியாது
என் சுகவீனம் என்னோடு
வீடுதிரும்பினேன்
பலநாள் தினசரி
இறைந்து கிடந்தது
நாட்காட்டி கிழிபடாமலிருந்தது.
என் சுகவீனம் என்னோடு
வீடெங்கும் குப்பை கூளம்
ஏன் என்றேன்
கண்தெரிகிறது என்றாள் மகள்
சுத்தப்படுத்தாத வீட்டினிலே
ஒருவித வாடை
ஏன் என்றேன்
வாசனை தெரிகிறதென்றாள் மனையாள்,
அவளும் இளைத்திருந்தாள்
இப்போதுதான் பார்த்தேன்
என் சுகவீனம் என்னோடு
என்னறை என்னை
அந்நியனாய்ப் பார்த்தது
நான்விட்டுச்சென்றது
அப்படி அப்படியே…
படித்த புத்தகபக்கங்கள்
காற்றில் பறந்தது
என் சுகவீனம் என்னோடு
என்னைக் கிள்ளிப்பார்த்தேன்
வலித்தது இன்னமும்
கண்மூடவில்லை
என்ன நடந்தது
எனக்கு யாரும்
பதில் சொல்லத் தயாரில்லை
என் சுகவீனம் என்னோடு
மார்கழி மாதம்,, அருகிலுள்ள கோயிலிலிருந்து இனிமையான திருப்பாவை ஒலி கேட்டுக் கண் முழித்தாலும் எழ மனம் வராமல், குளிருக்கு இதமாகப் போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்தியபடி புரண்டு படுத்த மாலா, யாரோ தொடர்ந்தாற்போல காலிங் பெல்லை அடிப்பது கேட்டு , வேகமாக எழுந்து உடையைச் சரிசெய்தபடி கதவைத் திறந்தாள்.
“என்னக்கா, எம்புட்டு வாட்டி சொன்னாலும் கேக்க மாட்ற. மணி எட்டாச்சு பாரு. நா இன்னும் ரெண்டு வீடு வேல செஞ்சுட்டு வீட்டுக்கு போக வேணாவா. ஞாயித்துக்கிளம பிள்ளைங்க வீட்ல இருக்கும். அந்த மனுசனுக்கும் இன்னிக்கி ஒரு நாதான் லீவு. வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டுக் கவனிக்கத் தேவல்லயா. லீவு விட்டாலே நீ லேசுல எந்திருக்க மாட்ற”
“எந்திருச்சு என்ன செய்யப் போறேன் செல்வி” என்று புன்னகைத்தபடியே வாஷ் பேஸின் குழாயைத் திறந்து சில்லென்ற தன்ணீரில் முகத்தைக் கழுவினாள். டீவியை ஆன் செய்தபடியே பேஸ்ட்டை ப்ரஷ்ஷில் பிதுக்கியவள்,
”சரி பொண்ணுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லன்னியே. இப்ப தேவலையா”
“அதுக்கு பேய் பிடிச்சுருச்சுக்கா…”
” உளறாத”
“ஆமாக்கா, அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போய், ரத்தம் லாம் டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு வந்தேன். அப்புறம் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சுனு கார் எடுத்துகிட்டு காஞ்சிபுரம் போய் அங்க ஒருத்தரு கிட்ட மந்திரிக்கக் கூட்டிக்கிட்டுப் போனம். அவருதான் கண்டுபிடிச்சு மாங்காடுல ஒரு அம்மாவ பாக்க சொன்னாரு.. நேத்து மாங்காடு கூட்டிகினு போனம். அந்தம்மா இன்னும் முன்னாலயே கூட்டு வந்த்ருக்கலாம்லனு திட்டிச்சு.
ஒண்ணும் கவலப்படறதுக்கில்லக்கா.. உச்சி மண்டைல இருந்து முடி எடுத்து மந்திருச்சு மரத்துல வச்சு ஆணி அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டும். என்னடா இதுக்கு இப்டி வந்துருச்சேன்னு ஒரே பேஜாரா இருந்துச்சு. இப்பத்தான் நிம்மதியாச்சு .
பேய் ஒடம்புல இருக்க சொல்லத்தான் பத்து நாளா ஒண்ணுமே சாப்பிடல”
“என்ன இப்பிடி பேசற.. ப்ளட் டெஸ்ட், என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்”
“என்னக்கா வெவரம் இல்லாம பேசற.. அதுதான் பேய் பிடிச்சுருக்குனு கண்டு பிடிச்சிட்டம்ல… ரிப்போர்ட்டுலாம் வாங்கவே இல்ல.”
அவள் வேலையை முடித்து விட்டுப் போனபிறகும் அவளுடைய அறியாமை நிறைந்த வார்த்தைகள் சுத்தி சுத்தி வந்து கொண்டே இருந்தது. செல்போன் மணி சிந்தனையைக் கலைத்தது. உடன் வேலை பார்க்கும் சுமதி.
“ஈவினிங் சரியா 5 மணிக்கு உன்ன பிக் அப் பண்ண வரேன். ஆறு மணிக்கு அருணா சாயிராம் கச்சேரி டிக்கெட் கெடச்சது. நீ ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுண்ட்டே இருந்தியே”
இவளிடமிருந்து சரியாக பதில் வராமல் போகவே அவள் மறுபடியும்,
“என்னடி நீதானே ரொம்ப ஆசைப்பட்ட. அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு டிக்கெட் வாங்கினேன்”
“இல்லடி தலை வலிக்கரது. ஜுரம் வர மாதிரி இருக்கு. நீ வேற யாரயாவது கூட்டிகிட்டு போயேன்”
“உனக்காகத்தான் இவ்வளவு மெனக்கெட்டு வாங்கினேன். சரி போ”
என்று சற்றே அதிருப்தியுடன் மறுமுனை துண்டிக்கப்பட்டது.
ஒண்டிக்கட்டையாக இருப்பதில், இந்த விடுமுறை நாட்களை தள்ளுவதுதான் இவளுக்குப் பெரும்பாடு. சுமதிதான் அப்பப்ப வெளியேபோகத் துணை. சினிமாவோ, ட்ராமாவோ, ஷாப்பிங்கோ. நாளைக்கு ஒரு நாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பாள். சமாளிச்சுக்கலாம்.
பத்து நாட்களாக சரியாக சாப்பிடாமல், சோர்ந்து படுத்தே இருக்கும் பெண்ணுக்கு ஒரு சிகிச்சையும் அளிக்காமல், பேய் ஓட்டும் முட்டாள் ஜனங்கள் மீது ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறுபக்கம் பரிதாபமாக இருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவள், செல்வியை அலைபேசியில் அழைத்தாள். “நான் சொல்றத கேளு. சாயங்காலம் உன் பொண்ண கூட்டிகிட்டு, நீ டெஸ்ட் கொடுத்த ஆஸ்பத்திரிக்கு வந்துடு. நானும் அங்க வரேன். டாக்டர பார்த்து பேசிடலாம்”
“அதெல்லாம் வேணாம்க்கா. அது உள்ள இறங்கி இருக்கற பேய ஓட்டிட்டா எல்லாம் சரியாகிடும்.”
“வாய மூடு. நா சொல்றத மட்டும் கேள்”
மாலாவின் குரலில் இருந்த கடுமைக்குப் பலன் இருந்தது.
“சரிக்கா. கூட்டிகிட்டு வரேன்.”
ஆஸ்பத்திரியில், ரிஸல்ட்டை வாங்கிக்கொண்டு டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தபோது, அந்த பெண்ணால் உட்காரக் கூட முடியல. துவண்ட கீரைக்கட்டா அம்மாமேல் சாய்ந்து கொண்டிருந்தது. மாலாவுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப்பார்க்க மிகவும் கவலையாக இருந்தது. இவர்களுடைய முறை வந்ததும் மூவரும் உள்ளே சென்றார்கள்.
மாலா கையில் இருந்த ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர்,
“என்னம்மா டெஸ்ட் எடுத்து நாலு நாள் ஆச்சு. இப்பத்தான் ரிஸல்ட்ட எடுத்துகிட்டு வரீங்க. மஞ்சக் காமாலை வந்துருக்குமா இந்த பொண்ணுக்கு. நாலு நாள் முன்னாலயே மருந்து கொடுக்க ஆரம்பிச்சு இருக்கலாமில்ல. ஏம்மா உங்கள பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. எடுத்து சொல்ல மாட்டீங்களா”
“இப்ப என்ன செய்யறது டாக்டர்”
“என்ன பண்றது. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டியதுதான்.”
டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொடுத்து அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வண்டியை எடுத்தவள் வீட்டுக்கு அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தினாள். ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் புன்னகையுடன் காட்சி தந்தார். எப்பொழுதும் காணும் புன்னகைதான், இன்று வித்தியாசமாக தனக்கு எதோ செய்தி சொல்வதுபோல் தோன்றியது. அவளும் அவனைப் பார்த்தபடியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தாள். மாயக் கண்ணன் விடுத்த செய்தி அவளுக்குப் புரிபடவில்லை.
வீட்டுக்கு வந்த உடன் செல்விக்கு போன் செய்து மருந்தை ஒழுங்காகக் கொடுத்தாளா என்று விசாரித்து விட்டு, மதியம் செய்த சாதத்தில் சிறிது மோரைவிட்டு சாப்பிட்டுவிட்டுப் படுத்தாள். புரண்டு புரண்டு படுத்தாலும் வெகு நேரம் வரை தூக்கம் வரவே இல்லை. தூங்கின மாதிரியே இல்லை. அலாரம் அடித்து திடுக்கிட்டு எழுந்தாள். ஐந்து மணி. இப்ப எழுந்தாதான் சரியா இருக்கும், ஏழு மணி பஸ்பிடிக்க.
பல் தேய்த்து காபி போட்டு எடுத்துக் கொண்டுவந்து சோபாவில் அமர்ந்தாள். எது எப்டி போனாலும், காலை காபியை நிதானமாக டபரா டம்ப்ளரில் ஆத்தி மெதுவாக ரசித்து ருசித்து குடிக்க வேண்டும் மாலாவுக்கு. காபியை குடித்து குக்கரை வைத்துவிட்டு காய் நறுக்க உட்கார்ந்தபோது, அழைப்பு மணி சத்தம். செல்விதான். உள்ளே நுழைந்தவள், “அக்கா அந்த அருவாமனைய கொடுக்கா, இந்த கத்திலாம் சரிப்பட்டு வராது என்றபடியே பீன்ஸ் காம்பை கிள்ள ஆரம்பித்தாள்.
“எப்படி இருக்கா பொண்ணு. ராத்திரி நல்லா தூங்கினாளா”
“நைட்டு கஞ்சி போட்டு கொடுத்தேன்க்கா, அப்பால டாக்டர் கொடுத்த மாத்திரைய கொடுத்தேன். தூங்கிருச்சு. இப்ப கூட நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கு.”
“மாத்திரைய விடாம கொடுக்கணும் சரியா”
“எங்க அக்கா கூட திட்டிச்சுக்கா, பேய் பிடிச்சுருக்க சொல்ல என்னாத்துக்கு டாக்டர்கிட்ட இட்டுகினு போய் மருந்தெல்லாம் வாங்கி கொடுக்கறேன்னு. அப்பால இந்த மனுசன் வந்து எல்லாம் சத்து வரத்துக்குதான் மருந்து கொடுத்திருப்பாங்க, பரவால்ல சாப்டட்டும்னு சொன்ன பெறவுதான் அடங்கிச்சு. நாளைக்கி மறுபடியும் மாங்காடு கூட்டிக்கினு போகனும்க்கா அத்த”
“உன்னயெல்லாம் திருத்த முடியாது. ஆனால் டாக்டர் கொடுத்த மாத்திரையை விடாமகொடுக்கணும் சரியா? எனக்கு இப்ப நேரமாச்சு ஆபிஸுக்கு”
“சரிக்கா. கோபப்படாத. அதுக்கு குணமாகனும் அம்புட்டுதான். “
செல்வி உதவியுடன் மற்ற வேலைகளை முடித்து, வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பி பஸ் ஸ்டாப் வந்த போது, அங்கு அவளுக்கு முன் வந்திருந்த சுமதி அவளைப் பார்த்து முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
“ஸாரிடி ” என்று ஆரம்பித்து செல்வி கதையைச் சொன்னாள்.
“இத அப்பவே சொல்லவேண்டியதுதானே, செம்ம கடுப்பா இருந்தேன் நேத்து நைட்டெல்லாம், டிக்கட் வேஸ்ட்டா போயிருச்சேன்னு “
பஸ்ஸில் ஏறிய பிறகும் அவர்களுடைய பேச்சு செல்வியின் அறியாமையைப் பற்றியே இருந்தது.
“கண்டிப்பா இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும் சுமதி”
வார இறுதிக்குள் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
சனிக்கிழமை காலை வேலைக்கு வந்த செல்வியிடம், “செல்வி உன் பொண்ண கொண்டு வந்து இங்க விடு. ஒரு மாசம் லீவு போட்டுருக்கேன். நான் பாத்துக்கறேன்.
“உனக்கெதுக்குக்கா தேவல்லாத வேலைல்லாம். அத்த எங்கக்கா கிட்டத்தான் விட்ருக்கேன், இன்னும் ரெண்டு தபா மாங்காடு கூட்டிகிட்டு போய்ட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்க்கா”
“நான் சொல்றத கேளு. என் கிட்ட விடு நா நல்லா பாத்துக்கறேன் “
‘வேணாங்க்கா .”
“என் மேல நம்பிக்கை இல்லியா?”
“அதுக்கில்லக்கா, நீ பேயோட்டல்லாம் அனுப்ப மாட்ட”
“பேயெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் , முதல்ல நான் ஒரு வாரம் டாக்டர் கொடுத்த மருந்த கொடுத்து பத்தியமா சாப்பாடு போட்டு கவனிச்சுக்கறேன் .”
“சொன்னா கேக்க மாட்ட. நாதான் நெதம் இங்கிட்டு வரனே. நானும் பாத்திக்கறேன்”
“நீ எப்பவும் போல வீட்டு வேலைய கவனிச்சுகிட்டா போதும். அவள நான் பாத்துக்கறேன்.”
வீட்டு வேலையை முடித்து விட்டு , மதியம் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் செல்வி. கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் கதவைப் பிடித்தபடி இருந்த அந்தப் பெண்ணுக்கு பன்னிரெண்டு வயசு இருக்கும். ஆஸ்பத்திரியில் அன்று இருந்த டென்ஷனில் சரியாக கவனிக்கவில்லை. அழகான, ஆனால்,சோர்வான கண்கள், தீர்க்கமான மூக்கு, பயந்த முகம். பார்த்த உடன் மாலாவுக்கு பிடித்து விட்டது.
“இங்க வாம்மா”
சற்று மிரட்சியுடன் செல்வியை பார்த்த அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள். பயத்துடன் கூடிய வெட்கத்தில் புன்னகைத்த அந்தப் பெண்ணைப் பார்த்து , ” உன் பேர் என்ன?”
“மீனா”
ராகவ் உயிரோடு இருந்து, அவனுடன் மணமாகி காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால் , இந்த மீனா வயசிருக்கும். அதுவும் அவன் ஆசைப்படி பெண்ணாக பிறந்திருந்தால்…. கண்களை விட்டு நீர் வெளியே வராமல் இருக்கப் பிரயத்தனப்பட்டாள்.
உயிருக்கு உயிராகக் காதலித்த ராகவ் கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் இறந்ததும், அதற்குப் பிறகு அவளுடைய அப்பாவும் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் இவள் வேறு யாரையும் மணக்க மறுத்ததும், அந்தக் கவலையிலேயே அவள் பெற்றோர் ஒருவர்பின் ஒருவராகக் காலமானதும் முடிந்த கதை.
“செல்வி நீ போய்ட்டு நாளைக்கி வேலைக்கு வா. கவலைப்படாம போ, நான் நல்லா கவனிச்சுக்கறேன் “
மீனாவிற்கென பிரத்தியேகமாக வாங்கித் தன்னுடைய கட்டிலுடன் இணைத்துப் போட்டிருந்த கட்டிலில் அவளைப் படுக்க வைத்தாள் . அந்தப் பெண் மிகவும் தயக்கத்துடனேயே அதில் அமர்ந்தது. சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் அசதியில் தூங்கி விட்டது.
ஃபேனை மிதமான வேகத்தில் வைத்து விட்டு , சத்தம் ஏற்படுத்தாமல் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேவந்தாள்,
ஒரு வாரம் போனதே தெரியவில்லை. மீனா மாலாவிடம் ரொம்ப நெருக்கமாகிவிட்டாள். டாக்டரிடம் கொண்டு காண்பித்து, அவளுக்கு நேரத்துக்குச் சாப்பிடக் கொடுத்து, அவளுடன் கதை பேசிச் சிரிக்க வைத்து, மொத்தத்தில் மாலாவுக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது.
மேலும் பத்து நாட்கள் நன்கு கவனித்ததில் மீனா உடல் முற்றிலும் தேறிவிட்டாள். அடுத்த நாள் வேலைக்கு வந்த செல்வியிடம்,
”இங்க பாரு செல்வி, மீனாக்கு நல்லா குணமாயிடுச்சு. இன்னிக்கி வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போ”
“ரொம்ப நன்றிக்கா. நாகூட இம்புட்டு நல்லா கவனிச்சுருக்க மாட்டேன், பெத்த பிள்ளைக்குமேல கவனிச்சக்கா, எனக்கும் நல்லா புத்தில ஏர்றமாதிரி புரிய வச்ச. இனிமேட்டு பேய் அது இதுன்னு போகமாட்டேன். என் பிள்ள உசிர காத்த தெய்வம்க்கா” என கண்ணீருடன் காலில் விழப்போனவளை எழுப்பி,
“லூசு மாதிரி உளறாம குழந்தைய கூட்டிக்கிட்டு போ. கவனமா பாத்துக்கோ, மறுபடியும் உடம்புக்கு ஏதும் வராம பாத்துக்க. சனி ஞாயிறுல கொண்டு விடு. நாங்க ஜாலியா விளையாடுவோம், பீச்சுக்கு போவம், இல்ல கண்ணம்மா” என்றபடி மீனாவின் கன்னத்தைத் தட்டினாள். வெட்கத்துடன் அவளைப் பார்த்துச் சிரித்த மீனாவை அணைத்து முத்தமிட்டு,
”உனக்கு இங்க எப்ப வரனும்னு தோணுதோ அம்மா கூட வந்துடு சரியா”
மீனாவும் செல்வியும் போனபிறகு வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஏதோ யோசனையில் வெகு நேரம் அமர்ந்திருந்தவளின் சிந்தனையை காலிங் பெல் சத்தம் கலைத்தது. கதவைத் திறந்தவுடன், அங்கு நின்ற சுமதி,
“என்னடி இவ்வளவு நேரமா பெல் அடிக்கறேன். உன்னய பார்த்து நாளாச்சேனு கிளம்பினேன். நேத்துதான் பையன் யு.எஸ் கிளம்பி போறான். ரெண்டு வாரமா ரொம்ப பிஸியா போச்சு. சரி இன்னிக்கி வந்து உன்ன பார்த்துட்டு போகலாம்னு. எப்ப ட்யூட்டில ஜாயின் பண்ணப் போற”
“நல்லா போச்சுடி. அருமையான அனுபவம். ராகவ் போனதுக்கு அப்புறம் எதுலயுமே ஒட்டுதல் இல்லாம இருந்த என்னை இந்த பெண் கூட இருந்த நாட்கள் சுத்தமா மாத்திருச்சு. இந்த ஒரு வாரமா ஒரு யோசனை. பணம் காசு நிறைய இருக்கு. முதல்ல ஒரு குழந்தைய தத்து எடுக்கலாமான்னுதான் யோசிச்சேன். அப்புறமா என்ன தோணித்துன்னா , தி நகர்ல அப்பாவோட ரெண்டு க்ரவுண்ட் வீட்ட ஒரு சின்னப் பள்ளிக்கூடமா கட்டி, அஞ்சு க்ளாஸ் வரைக்கும் மட்டும் இருக்கறமாதிரி செய்யாலாமான்னு தோண்றது. இந்த வேலைய ராஜினாமா பண்ணிட்டு நிறைய நேரம் குழந்தைகளோட இருக்கற மாதிரி இருந்தா நல்லா இருக்குமே. நீ என்ன சொல்ற”
கண்களில் நீரோடு, அவள் பேச்சை ஆமோதித்த சுமதி, “இந்த மாதிரி ஏதாவது ஒரு மாற்றம்தாண்டி உங்க அப்பா அம்மாவும் உன் கிட்ட எதிர்பார்த்தாங்க. அவங்க இருந்தா சந்தோஷப் பட்டிருப்பாங்க. பரவால்ல இப்பவாவது தோணித்தே. வா நல்ல விஷயமா சொல்லியிருக்க,கோயிலுக்குப் போகலாம். நான் அப்டியே வீட்டுக்கு போறேன். எப்ப ஆபிஸ் வருவ?”
“திங்கக்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்”
முகம் கழுவி, புடவை மாற்றி, வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.
கரு நீலப் பட்டுடுத்திய கண்ணனுடைய மோகனப் புன்னகையின் அர்த்தம் புரிந்ததுபோல் இருந்தது அவளுக்கு. அவனைப் பெற்ற
தேவகியை விட வளர்த்த யசோதைதானே பாக்கியம் செய்தவளாக இருந்தாள்.