சென்னையை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன – வர இருக்கின்றன – மெட்ராஸ், மதராசபட்டணம், வட சென்னை, மாநகரம், தூங்காவனம்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஏப்ரல் 12ல் வெளியானது ஆர் கே நகர்.
படம் செம டக்கர் ! வசூலில் அள்ளிக் கொண்டு போகிறது.! படம் வெளியாகும் முன்னே 89 கோடி வசூலாம்.
மறைந்த முதல்வர் அம்மாவின் இறுதி யாத்திரையோடு துவங்குகிறது. பார்ப்பவர் நெஞ்சை உருக்கச் செய்கிறது. (இதையே பின்னாடி பன்னீர் ஆளுங்க வேற மாதிரி செய்வாங்க )
அப்புறம் சின்னம்மாவின் வருகை – கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முதல்வர் நாற்காலிக்கு வருவது. அதில் உட்காரப்போகும்போது சிறைத் தண்டனை என்று அவரை பெங்களூருக்கு அழைத்துப்போவது. போவதற்கு முன் அவர் அம்மாவின் சமாதிக்குச்சென்று மூன்று முறை அடித்து சபதம் செய்து தினகரன் கையில் கட்சியைக் கொடுக்கும் காட்சி படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது.
அதுவரை அமைதியாக இருந்த பன்னீர், விஜய் சேதுபதிபோல அப்படியே ஒளி வட்டத்துக்கு வருகிறார். அவர் வரும் காட்சியில் எல்லாம் அமைதியான நடிப்பால் கைதட்டல் வாங்கிறார்.
அதற்கு முன் கூவத்தூர் காட்சி செம கலக்கல்!
நம்பிக்கைத் தீர்மானத்தின் போது சட்டசபையில் நடந்த கலாட்டாக்கள் பயங்கர காமெடி.
அதற்கப்புறம்தான் புது விதமாக ரி -என்ட்ரி ஆகிறார் தினகரன் அரவிந்த்சாமி ஸ்டைலில் தொப்பி போட்டுக் கொண்டு.
ஏப்ரல் 12ல் தேர்தல்
ஊரு இரண்டு படும் போது ஸ்டாலின் சீரியசாக தனது ஆளை உள்ளே நுழைக்கிறார். அத்தோடு இன்னும் நிறைய பேர் நிற்பது காமெடி பீஸ் போல இருக்கு! ( ரஜினி கூட சின்ன CAMEO செய்திருக்கிறார்)
பணம் எல்லா இடத்திலும் கொட்டுகிறது. (காசு பணம் துட்டு மனி மனி என்ற சூது கவ்வும் பாடல் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. )
கிளைமாக்ஸில் வருமானவரி சோதனையும் அப்போது நடக்கும் காட்சிகளும் (அதிலும் குறிப்பாக ஒரு ரகசிய டாக்குமெண்டை அதிகாரிகள் பார்க்கும் போதே கைமாறி கேட்டுக்கு வெளியே கொண்டு போகும் காட்சியில் டைரக்டர் எங்கோ போய் விட்டார்.) பரபரப்பாக இருந்தன.
அந்தக் களேபரத்தில் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று அறிக்கை வருகிறது.
எல்லா வேட்பாளர் முகத்திலும் முதலில் ஒரு கோபம் – பிறகு திகில் -பிறகு அப்பாடா என்பது மாதிரி இலேசான புன்னகை .
அப்போது டைட்டில் வருகிறது –
விரைவில் ஆர் கே நகர் பார்ட் -II !
தேவ சிற்பி விஷ்வகர்மா தன் மகள் ஸந்த்யாவிற்காக அமைத்துக்கொடுத்த தனி நீச்சல் குளம் அது. படிகள் பொன்னாலும் பக்கவாட்டச் சுவர்கள் வெள்ளியாலும் அமைந்தது அந்த நீச்சல் குளம். அதற்கு வானுலக சரஸ்வதி நதியிலிருந்து நீர் சுனையாக ஊறிக்கொண்டிருந்தது. அதில் ஸந்த்யா தன் தோழிகளுடன் உல்லாசமாக நீந்தி விளையாடிக் கொண்டிருப்பாள்.
சில சமயம் அவள் தனியே அந்தக் குளத்தில் நீந்த வருவாள். . யாருமில்லை என்பதால் சுதந்திரமாகவே நீந்திக் கொண்டிருப்பாள். அன்று அப்படிக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஸ்படிகம் போன்ற தண்ணீரில் ஒரு பொன்னைப் போல ஒளிவீசும் அழகான உருவத்தைக் கண்டாள். அந்த உருவம் அவள் மீது படர்வது போன்ற உணர்வை அடைந்தாள். திரும்பி நேராகப் பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. அதனால் முதுகைக் காட்டிக் கொண்டே தண்ணீரில் தெரியும் சூரிய தேவனின் அழகு பிம்பத்தைக் கண்டாள். அவள் முதுகை சூரியனின் கிரணங்கள் மெல்ல வருடுவதை உணர்ந்து இதுவரை அனுபவிக்காத இன்ப அதிர்வு உடல் முழுதும் பரவுவதை உணர்ந்தாள்.
அடுத்த நாளும் சூரியதேவன் வருகைக்காக அவள் மனதும் உடலும் ஏங்கியது. அந்த நேரமும் வந்தது. நேரிடையாகப் பார்க்கவேண்டும் என்று குளித்துக் கொண்டிருக்கும் அவளுக்குத் தோன்றியது. பொன்னிற உருவம்தான் தெரிந்தது. கண்கள் கூசின. இடையில் ஒரு சிறு மேகம் வந்ததால் அதன் வழியே சூரியதேவனின் அழகு முகத்தைப் பார்க்கமுடிந்தது. மேகம் மறைந்ததும் அவள் கண்கள் தண்ணீரில் தெரியும் அவனுடைய பிம்பத்தைப் பார்த்துப் பிரமித்தன. அவன் அழகை அள்ளிப் பருகியவண்ணம் ஒரு மயக்க நிலையில் இருந்தாள்.
திடீரென்று அந்த பிம்பம் பெரிதாகத் தோன்றியது. அவள் அருகே கரையில் சூரியதேவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளுக்குத் தலை சுற்றுவதைப் போல இருந்தது. அவன் அவளைக் கை நீட்டி அழைக்கக் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பு போலச் சென்றாள். கரையிலிருந்து கைலாகு கொடுத்து அவளைத் தூக்கினான். சூரியனின் வெதுவெதுப்பில் அவளது நீர்த்திவலைகள் எல்லாம் மறைந்து சூடு ஏறுவதை உணர்ந்தாள்.
குளிக்கச் சென்ற தன் பெண் இன்னும் வரவில்லையே என்று தேடிக்கொண்டு விஷ்வகர்மா அங்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்துத் திடுக்கிட்டார் !
(தொடரும்)
இரண்டு:
யமுனாவைக் கண்டதும் எமனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. இருக்காதா பின்னே? அவனுடைய ஆருயிர்ச் சகோதரி ‘எமி’ அல்லவா அவள்? இரட்டையர்களாகப் பிறந்த எமன், எமி இருவருக்கும் இடையே சிறு வயது முதல் இருந்த பாசத்துக்கு அளவே கிடையாது. எமி கேட்டாள் என்பதற்காக வானத்துச் சந்திரனை ஒருமுறை அவளுக்கு விளையாடப் பறித்துக் கொண்டுவந்தான் எமன். அதற்காக அவன் தந்தையின் கோபித்துக் கொண்டதைப்பற்றிக்கூட அதிகமாகக் கவலைப்படவில்லை.
எமிக்கும் அண்ணன் எமன் மீது உயிர்.
“வா! சகோதரி “ என்று வாஞ்சையோடு அவள் கரத்தைப் பிடித்து மண்டபத்துக்கு அழைத்து வந்தான்.
“இது என்ன அண்ணா? இவ்வளவு பெரிய தீபம்?”
“எமி! நீ முதல் முறையாக எமபுரிக்கு வருகிறாய்! அதுவும் இந்தத் தீபாவளி நாட்களில் வருவது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இன்று திரயோதசி. இன்று பூமியில் வீட்டைச்சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பர். மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று பூலோக மக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், நமது சொர்க்கபுரி, நரகபுரி இரண்டிலும் இருக்கும் பிதுர்க்கள் பூமிக்குச் செல்வார்கள்.
அப்படிச் செல்பவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்குத் திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டும். தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் பூலோகவாசிகள் ஏற்றும் தீபத்துக்கு என் பெயரை வைத்து ‘எம தீபம்’ என்று சொல்கிறார்கள். இதை அவர்கள் வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள்… வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம்.
இதனால் மக்களுக்கு விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது; நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!” இப்படி ஒரு வரத்தை நான் பூலோக மக்களுக்குத் தந்துள்ளேன்.
ஒருமுறை திருச்சிற்றம்பலம் * என்னும் கிராமத்தில் எனக்குத் தனிக்கோவில் கட்டி மக்கள் என்னை வழிபட்டனர்.
அவர்கள் விருப்பதிற்கேற்ப கருவறையில் எருமை வாகனத்தில் மேற்கு திசைநோக்கி நான்கு திருக்கரங்களுடன் . கீழ்வலக்கையில் தீச்சுடரும், இடக்கையில் ஓலைச்சுவடிகளும், மேல்வலக்கையில் சூலாயுதம் தாங்கியும், இடக்கரத்தில் கதையுடனும் அருள் பாலித்தேன்.
அப்போதுதான் அவர்கள் என்னிடம் வேண்டிக்கொண்டார்கள். “ ஸ்வாமி, மரணம் தவிர்க்கமுடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் திடீர் மரணம், விபத்துக்கள் சம்பவிக்காது , நோய் நொடியின்றி ஆரோக்யமாக இறக்க வழி கூறுங்கள்” என்று வேண்டினர்.
அப்போதுதான் தீபாவளிக்கு முந்திய நாள் தீபம் ஏற்றி வழிபடுங்கள் . நீங்கள் கேட்டுக்கொண்டபடி துர்மரணம் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறினேன்.
அவர்கள் ஏற்றும் தீபங்களின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத்தான் நமது எமபுரிப்பட்டிணத்திலும் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது.
எமி! இன்று உன் கையால் தீபத்தை ஏற்று! பூலோக மக்கள் சந்தோஷமாக வாழ அது வழிகாட்டும்” என்றான் எமன் .
சித்ரகுப்தன் , தீப்பந்தத்தை எடுத்துத் தர எமி எம தீபத்தை ஏற்றினாள். அது சுடர்விட்டுப் பிரகாசித்தது.
எமி! நாளை தீபாவளி ! உன்னை சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்! அதுவரையில் உன் அறையில் ஓய்வெடுத்துக் கொள் “ என்றான் எமன்.
(தொடரும்)
* தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோவில் உள்ளது
மணிரத்னம் 40% , பாரதிராஜா 20%, பாலச்சந்தர் 40% சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்திருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்பது என் கணிப்பு!
அருமையான கதை , நடிப்பு, வசனம், எடிட்டிங் .
ஒரு முழுப் படத்தைப் பார்த்த எண்ணம் நமக்கு உண்டாகிறது.
பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் !!
குற்றமும் தண்டனையும்! ( நன்றி வாட்ஸ் அப் )
நேற்று இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இணைந்து நடத்திய கூட்டம், சீனிவாசகாந்தி நிலையத்தில்.
ஓவியர் அமுதன் இலக்கியசிந்தனையின் பேச்சாளர்.
இவர் கண்ணதாசனுடன் பணி ஆற்றியவர். இந்த வகையில் கவிஞர் பற்றி நாம் அறிந்திராத பல நிகழ்ச்சிகளைக் கூறினார்.
இவரின் கூற்றின்படி காற்றுமண்டலம், புகைமண்டலம் போல்.. எண்ணங்களுக்கும் ஓர் மண்டலம் உண்டு. அதனால்தான் நாம் நம் கை கொண்டுதான் வரைகிறோம். ஆனாலும் அந்த ஸ்ட்ரோக் வந்து விழுந்தது என்று கூறுகிறோம். அதேபோல் பாட்டில் அந்த வரி வந்து விழுந்தது என்றும் சொல்கிறோம். நம் எண்ணத்தில் உதித்த வார்த்தைகளை எங்கிருந்தோ வந்து விழுந்தது என்று ஏன் கூறுகிறோம்…. அது இந்த எண்ண மண்டலம்தான். இங்கே சுழலுகின்ற எண்ணங்கள் எல்லோர் மீதும் விழுவதில்லை. யார் அதற்க்குத் தகுதி ஆனவரோ அவருக்கே இது பிராப்தம்.
அப்போது தகுதி என்பது எப்படி அளந்து பார்ப்பது? நம் sincerity அந்த தகுதி. எவ்வளவுக்கெவ்வளவு செய்யும் வேலையை நாம் நம் முழு மனதுடன் செய்கிறோமோ…. அப்போது இந்த அற்புத எண்ணங்கள் தானாகவே வந்து விழும்.
இதற்க்கு கண்ணதாசனை ஓர் உதாரணமாகச் சொன்னார்.
நாம் அனைவர் கேட்டு ரசித்த பாடல்….அவள் ஒரு நவரச நாடகம்….படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த பாடல் எழுதப்பட்டபோது, கவிஞரும் திரு MSVஅவர்களும் பாடல் கம்போஸிங்கில் இருந்தனர். சாதாரணமாக திரைப்படப் பாடலுக்குப் பன்னிரெண்டு வரியில் பாடல் இருந்தால் போதுமானது. இந்தப் பாடல் எழுதப்படுவதற்கு முன்பே கவிஞரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தப் பாடல், ‘காலங்களில் அவள் வசந்தம்போல்’ ஒர் all time memory hit பாடல் போல் இருக்கவேண்டும் என்று.இதை மனதில் வைத்துக்கொண்டு, கவிஞர் பாடல் வரிகள் சொல்லத் தொடங்கினார். இருபது,முப்பது,நாப்பது…..வரிகள் சொல்லிக்கொண்டே போனார். MSV அவர்களும்…..அண்ணே… பன்னிரெண்டு வரிகள் போதும். இவ்வளவு வரிகள் சொல்லுகிறீர்கள்? போதும்….
கண்ணதாசன் நிறுத்தவில்லை….
இல்லை என் மனதில் இன்னும் அந்த வரிகள் வந்து விழவில்லை….அது வரை நான் நிறுத்தமாட்டேன் ..
கடைசியாக அந்த வரிகள் வந்து விழுந்தன…
அவை….
தழுவிடும் இனங்களில் மான் இனம்….
தமிழும் அவளும் ஓர் இனம்…..
நிறைய வரிகள் கொடுத்துவிட்டேன். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் …. கடைசியாக சொன்ன இரு வரிகள் நிச்சயம் இருக்கவேண்டும்….
பதினந்து வரிகள் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம்….
ஆனால்…செய்யவில்லை…
இது sincerity … dedication.
அவருக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது…
ஆமாம்….
இந்த வார்த்தை மண்டலம் போல்….
கற்கள் மணடலம் ஒன்று இருக்காதுதானே….
(நன்றி : லதா ரகு )
குவிகம் இலக்கிய வாசல் சார்பாக திருமதி சரஸ்வதி “இளைஞர் விரும்பும் இலக்கியம்’ என்பதுபற்றி அழகாகப் பேசினார்.
சுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது முடிந்தது.
இப்படியும் ஒரு கோணமா… !
‘மிதிலா… இந்த பிள்ளையாரப்பனை நன்றாகக் கும்பிட்டு
‘பிள்ளையாரப்பா.. நாளையிலிருந்து ஆரம்பிக்கிற
பரீட்சைகள்ளே நிறைய மார்க்குகள் கொடுத்து என்
வகுப்பிலேயே முதல் மார்க் வாங்க வைப்பா..’ என்று
வேண்டிக்கிட்டு பதினோரு முறை பிரதிக்ஷணம் செய்.
எல்லாம் பிள்ளையார் பார்த்துப்பார்..கவலையே வேண்டாம்’
என்றேன் என் ஐந்து வயது மகளிடம்.
‘சரிப்பா..’ என்று நான் சொன்னபடியே வேண்டிக்
கொண்டு பிரதிக்ஷணம் செய்யும் மகளை பெருமையோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்.
கோயிலிலிருந்து வீட்டிற்கு வந்தவள் டி.வி. ரிமோட்டை
எடுத்து அவளுக்குப் பிடித்த ‘போகோ’ சானலைப் போட்டு
டி.வி. பார்க்க ஆரம்பித்தாள்.
‘ஏய்.. மிதிலா.. நாளையிலிருந்து எக்ஸாம். படிக்க
வேண்டாமா.. போ.. போ..’ என்று கத்தினாள் என் மனைவி.
‘போம்மா.. டாடி சொன்னபடி பிள்ளையாரப்பனை வேண்டிக்-
கிட்டு பதினோரு முறை பிரதிக்ஷணமும் வெச்சுட்டேன். அவர்
பார்த்துப்பார். எனக்கு நிறைய மார்க் போட்டு நான்
வகுப்பிலேயே முதல் மார்க் வாங்க வைப்பார்’ என்றாள் சர்வ
சாதாரணமாக.
நான் அயர்ந்து போய் நின்றேன். இப்படியும் ஒரு
கோணமா..?
சதவாஹன
சரித்திரம்…
சில நேரங்களில் மௌனமாக இருக்கும்…
ஆனால் பெரிதாக சாதித்து விடும்.
ஆனாலும் அந்த சாதனையும் சில நேரங்களில் அடக்கி வாசிக்கப்பட்டு அடங்கி விடும்.
கி பி முதல் நூற்றாண்டில் இருந்து குப்தர்கள் வரும் வரை … வட இந்தியாவின் இருண்ட காலம் என்று சொல்வர்.
அந்தக்காலக் கட்டத்தில் ஒரு ராஜ்ஜியம் ஆந்திராவில் விரிந்தது.
கலைகள் செழித்தது.
வர்த்தகம் உலகளவில் விரிந்தது.
முக்கியமாக ‘அமைதி’யும் சுபிக்ஷமும் இருந்தது.
சதவாஹனா!
இன்றைய மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் இந்த ராஜ்ஜியம் உருவானது,
கல்லினால் செய்யப்பட்ட ஸ்தூபிகள் அழகைச் சொரிந்தன.
அமராவதி நகரில் (இன்றைய குண்டூர் மாவட்டத்தில்) அன்று சிற்பக்கலை பயில்விக்கும் பெரும்பள்ளி ஒன்று அமைந்திருந்தது.
மஹா ஸ்தூபி (மஹா சைத்தியா) என்றழைக்கப்படும் உன்னதமான ஸ்தூபி அமராவதியில் நிறுவப்பபட்டது. அது மென்மையான பச்சை நிற சுண்ணாம்புக்கற்களால் செய்யப்பட்டது. வெகு நுணுக்கத்துடனும், விஸ்தாரமாகவும், நயத்துடனும் செதுக்கப்பட்டிருந்தது.
(இந்த ஸ்தூபி பின்னாளில் – பத்தொன்பதாம் நூற்றாண்டில் – பிரிக்கப்பட்டு- பல அருங்காட்சியகங்களில் காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று இங்கிலாந்து நாட்டில் உள்ளது)
மேலும் சில சிற்பங்கள் இரண்டு கதைகள் சொல்கின்றன:
ஒன்றில்,
அசித முனிவர் மன்னர் சுத்தோதனரின் (புத்தரின் தந்தை) அரண்மனைக்கு வருகை தருகிறார். மன்னர் மகன் சித்தார்த்தர் ஒரு உலகநாயகராகவும், மாமுனிவராகவும் வருவாரென்று அவர் ஆருடம் கூறும் காட்சி!
உலகநாயகரும் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்த கலவை!
பிறகு கேட்கவேண்டுமா?
மற்றொன்றில்,
மாபெரும் புறப்பாடு (great departure)!
இதில் புத்தர் உண்மையைத் தேடி, அரண்மனையையும் குடும்பத்தையும் விட்டு விலகிச் செல்லும் காட்சி!
மன்னர்கள் சரித்திரத்திற்கு வருவோம்.
வம்சத்தைத் துவங்கியவர் ‘சிமுகா’ (Simukaa).
மௌரியர்களுக்குப் பிறகு சுங்கர்கள்..
சுங்கர்களுக்குப் பிறகு ‘கன்வர்’கள்…
கன்வர்களின் கடைசி மன்னனை ‘சிமுகா’ கொன்று, தான் அரசனானான்.
கிருஷ்ணா நதியின் முகப்பிலிருந்து தக்ஷிண பீடபூமி வரை ஆட்சியை விரிவாக்கினான்.
பின்னர் வந்த மன்னன் சதகர்ணி சதவாஹனா!
(சதகர்ணி சதவாஹனா)
சதகர்ணி சதவாஹனா அஸ்வமேத, ராஜசூய யாகங்கள் செய்தான்.
கலிங்கத்தின் காரவேல் படையெடுத்த போது அவனுக்குப் பரிசுகள் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான்.
சரி…சரித்திரத்துக்கு சற்று அரிதாரம் சேர்த்து கதைப்போம்!
நாள்: கி பி 120
இடம்: அமராவதி
ஒரு தாய் தன் மகனுக்காக என்ன என்ன செய்வாள் என்பது யாரே எண்ண இயலும்?
சதவாஹன வம்சத்தில் ஒரு ராணி கௌதமி பாலஸ்ரீ.
இளவரசனான தன் மகன் மாபெரும் மன்னனாக வரவேண்டுமென்று அவள் கனவு மட்டும் கொள்ளவில்லை.
அவனது நலனுக்காகவே வாழ்ந்தாள்!
முதல் ஆசான் அவளே!
முதல் ஆலோசகர் அவளே!
அவளது முயற்சிகள் வீண் போகவில்லை.
மகனும் சதவாஹன வம்சத்தின் தலை சிறந்த மன்னனாகப் பெயரெடுத்தான்.
மகனது பெயர் “கௌதமிபுத்திர சடகர்னி”!
மன்னன் பெண்களை மதித்தான்.
அவர்களுக்கு உயர்கல்வி கற்றுவித்தான்.
அவர்களை சமயக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தான்.
தாயின் பெயர் என்றும் நிலைக்கவேண்டும் என்று மகன் விரும்பினான்.
தன் பெயரிலே தாய்க்கு இடம் கொடுத்தான் அந்த ‘கௌதமிபுத்திர’ சடகர்னி!
அத்துடன் அவ்வழி தனக்குப் பின் வரும் மன்னர்களும் பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தான்.
அவனுக்குப் பிறகு வந்த சில சதவாஹன மன்னர்கள்:
‘வஷிஷ்டி புத்ரா’, ‘கெளஷாகிபுத்ரா’.
இந்தப் புரட்சி இன்னும் 21ம் நூற்றாண்டில் கூட நடைமுறையில் இல்லை!
கௌதமிபுத்திரன் சக (sakha) அரசை போரில் வெற்றி கொண்டான்!
வாசகர்களே! பஞ்சாங்கத்தைப் போய்ப் பாருங்கள். சக வருஷம் என்று ஒரு வருடம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது இந்த வெற்றியின் நாளிலிருந்து துவங்கியது.
சாலிவாகன வருடம் – சக வருடம் இரண்டும் ஒன்று தான் என்று கூறப்படுகிறது.
(சக வருடம் பொறிக்கப்பட்ட நாணயம்)
(According to historian Dineshchandra Sircar, the historically inaccurate notion of “Shalivahana era” appears to be based on the victory of the Satavahana ruler Gautamiputra Satakarni over some Shaka (Western Kshatrapa) kings.)
புத்தம் – சமணம் ஓங்கியிருந்த சமயம் – மன்னன் பிராமணர்களை ஆதரித்தான்.
‘ஏக பிரம்மணா’ என்ற நூலில் இது எழுதப்பட்டுள்ளது.
ஆயினும் புத்தர்களுக்கு மானியம் அளிக்கத் தவறவில்லை.
நான்கு ‘குலங்கள்’ கலப்பதை தடுத்தான்.
இந்த குலங்கள் சமூகரீதியில் அமைந்திருந்தன.
மேலும் சக, யவன, குஷான – யாராக இருந்தாலும் ஹிந்து சமயத்தில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
ஆட்சி… கிருஷ்ணா நதியிலிருந்து சௌராஷ்டிரா வரையிலும் பரவிக் கிடந்தது.
அலெக்சாண்டர் முதல் பெரும் மன்னர்கள் பலர் புகழ் மோகம் தலைக்கேறியதும் ‘இறைவன்’ அவதாரம் என்று தங்களையே கூறிக்கொண்டனர்.
ஆனால் இந்த மன்னன் அவ்வாறு கூறாமல் தான் தர்மத்தின் வழி ஆள்பவன் என்றான்..
மக்கள் நலம் ஒன்றே தமது குறிக்கோள் என்றான்.
(இந்நாள் அரசியல்வாதிகள் சரித்திரம் படித்து இவ்வாறு நடந்தால் எப்படி இருக்கும்? இந்த சரித்திரத்தை கல்லூரிகளில் அரசியல் பாடங்களில் முதல் பாடமாக வைத்தால்? வரும் அரசியல்வாதிகள் கொள்கையுடன் இருப்பார்கள்!
‘அம்புட்டு ஆசை’!)
இவை அனைத்தும் அந்தத் தாயின்…
அறிவுரை!
அறவுரை!
அடடா.. நாம் தாயை சற்று மறந்து போனோமே!
தாயின் கதைக்கு வருவோம்.
மாபெரும் மன்னன் சாதிக்கவேண்டியதெல்லாம் சாதித்து, நோய்வாய்ப்பட்டிருந்த காலம்.
அரசு ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் மகாராணியே ஏற்று நடத்தினார்.
அரசன் மறைந்ததும் பேரன் வஷித்திபுத்திரன் மன்னனானான்.
தன் மகனின் சாதனைகளைக் கண்படுத்திய மகாராணி அவரது சரித்திரத்தை நாசிக் பிரசாதி (Nasik prasasti) என்று எழுதினார்.
அவனது சாதனைகளை பெருமையுடன் எழுதினார்.
அவளது மகன் மறைந்து இருபது ஆண்டு மறைந்தது.
அந்த மூதாட்டியின் படைப்பு அன்று அரங்கேறியது.
ஒரு தாய் மகனுக்கு எழுதிய முதல் சுயசரிதை இது தான் போலும்!
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் அவன் தாய் பின் நிற்கிறாள்.
நமது கதை முடிந்தது
(கதை என்றாலும் இதில் காண்பது சரித்திரமே!
நடைக்கு மட்டுமே நாம் பொறுப்பு)
சதவாஹன மன்னர்கள் மொத்தம் 19 .
அந்த ஆட்சியில் சிற்பம், ஓவியம் சிறந்தது.
சதவாஹனா ஓவியம்
மக்கள் நல்வாழ்வும் சிறந்தது.
இது தான் ராம ராஜ்யமோ?
சரித்திரம் அன்று சுகமாக இருந்தது.
இதுவும் ஒரு அடித்தளம்தானோ?
இதற்கு மேலும் இந்தியாவின் சரித்திரம் ‘மின்னும் நவரத்தினங்கள்’ போல் ஒளி விட்டு சிறக்க உள்ளதோ?.
விரைவில் காண்போம்!
அசோகரின் நுட்பமும் மித்திரனின் நட்பும்
இந்திய வரலாற்று வானில் சாம்ராட் அவர்
இலக்கிய வரலாற்று வானில் சாம்ராட் இவர்
அவர்,
வீரத்தால் வெற்றிகளைக் குவித்தவர்
அன்பால் அனைவரையும் அணைத்தவர்
நாடுபல சென்று நல்மதம் பரப்பினவர்
நாடும் மக்களுக்கு நல்லதை அளித்தவர்
இவர்,
எழுத்தால் வெற்றிகளைக் குவித்தவர்
எழுத்தில் அனைவரையும் இணைத்தவர்
ரத்தினச் சுருக்கமாய் முத்திரை பதித்தவர்
பத்தரை மாற்றுப் பொன்னாய் மின்னியவர்
மற்ற இலக்கியவாதிகள்,
பித்தளைப் பாத்திரங்களுக்குத் தங்கமுலாம் பூசுவர்
தத்துவக் கடலில் தத்தளித்துத் தவிப்பர்
பக்கத்துக்குப் பக்கம் மையால் நிரப்புவர்
சிக்கன எழுத்தைச் சிந்தையில் மறப்பர்
இவரோ,
பித்தளை தம்ளரில் காபி தருவார் வெயிலுக்கு இதமாய் விசிறி வீசுவார்
பக்கத்தில் வந்து தொட்டுக் காட்டுவார்
பட்டணப் பகட்டைச் சுட்டிக் காட்டுவார்
நறுக்கென்று சொல்லும் வித்தகர்
சுருக்கென்று குத்தும் வித்தையர்
குபுக்கென்று சிரிப்பைக் கிளப்புவார்
திடுக்கென்று கதையை முடிப்பார்
அடுத்த வீட்டுப் பெண் இவரது நாயகி
மாடி வீட்டு ஏழை இவரது நாயகன்
தெருவில் திரியும் மனிதரே கதைமாந்தர்
மொத்தத்தில் இவர் ஒரு சாமான்யர்
சாமான்யர்களுக்காக சாமான்யரைப் பற்றி
சாமான்யர் பார்வையில் எழுதிய சாமான்யர்!
பேசும் வார்த்தையில் அவரது அறிவு பளிச்சிடும்
எழுதும் எழுத்தில் அவரது நுட்பம் புலப்படும்
பழகும் விதத்தில் அவரது எளிமை வெளிப்படும்
வீசும் சிந்தனையில் அவரது பெருமை புரிபடும்!
எழுத்துக்கு இலக்கியமும் நட்புக்கு இலக்கணமும் படைத்தவர்
எவரையும் செல்லமாய்க் கோபிக்கும் குழந்தை மனத்தவர்
ஆகையால் இவர் எல்லோருக்கும் இனியதொரு மித்திரன்
அவர்தான் நம்எழுத்துலக சாம்ராட் அசோகமித்திரன் !!
(நன்றி: சு.ரவி)
சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்த அசோகமித்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
“அசோகமித்திரன் – என் பார்வையில் ” என்ற தலைப்பில் டாக்டர் பாஸ்கர் அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் !
இடம்:
ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
நேரம் :
மாலை 7.00 மணி , சனிக்கிழமை ஏப்ரல் 29, 2017
அனைவரும் வருக !
ஒகே காதல் கண்மணியில் ‘கணபதி கணபதி’ என்று அழைத்துக் கொண்டு வரும் பிரகாஷ் ராஜின் மனைவியை ( லீலா சாம்ஸன்) அவ்வளவு சுலபமாக நாம் மறக்க முடியுமா?
அந்தப் பாட்டுகுருவிற்கு வந்தது ஞாபகமறதி வியாதி !
அதைப்போல வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி வியாதியைப் பற்றிய உணர்வு பூரணமான ஒரு குறும்படம்.
இந்த வியாதி நம் பெற்றோர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு வந்திருக்கிறது என்பது தெரியாமல் அவர்களை நாம் எப்படிக் கேவலமாக நினைக்கிறோம் என்பதைச் சொல்லும் காவியம்.
இது குறும்படம் அல்ல. பெரும் பாடம்!
என் சுகவீனம் என்னோடு
சில நாட்கள்
மருத்துவமனை வாசம்
ஆம்.. இன்னும் உடலில் அவ்வாசம்
உலகில் என்ன நடந்தது
எனக்குத் தெரியாது
என் சுகவீனம் என்னோடு
வீடுதிரும்பினேன்
பலநாள் தினசரி
இறைந்து கிடந்தது
நாட்காட்டி கிழிபடாமலிருந்தது.
என் சுகவீனம் என்னோடு
வீடெங்கும் குப்பை கூளம்
ஏன் என்றேன்
கண்தெரிகிறது என்றாள் மகள்
சுத்தப்படுத்தாத வீட்டினிலே
ஒருவித வாடை
ஏன் என்றேன்
வாசனை தெரிகிறதென்றாள் மனையாள்,
அவளும் இளைத்திருந்தாள்
இப்போதுதான் பார்த்தேன்
என் சுகவீனம் என்னோடு
என்னறை என்னை
அந்நியனாய்ப் பார்த்தது
நான்விட்டுச்சென்றது
அப்படி அப்படியே…
படித்த புத்தகபக்கங்கள்
காற்றில் பறந்தது
என் சுகவீனம் என்னோடு
என்னைக் கிள்ளிப்பார்த்தேன்
வலித்தது இன்னமும்
கண்மூடவில்லை
என்ன நடந்தது
எனக்கு யாரும்
பதில் சொல்லத் தயாரில்லை
என் சுகவீனம் என்னோடு
மார்கழி மாதம்,, அருகிலுள்ள கோயிலிலிருந்து இனிமையான திருப்பாவை ஒலி கேட்டுக் கண் முழித்தாலும் எழ மனம் வராமல், குளிருக்கு இதமாகப் போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்தியபடி புரண்டு படுத்த மாலா, யாரோ தொடர்ந்தாற்போல காலிங் பெல்லை அடிப்பது கேட்டு , வேகமாக எழுந்து உடையைச் சரிசெய்தபடி கதவைத் திறந்தாள்.
“என்னக்கா, எம்புட்டு வாட்டி சொன்னாலும் கேக்க மாட்ற. மணி எட்டாச்சு பாரு. நா இன்னும் ரெண்டு வீடு வேல செஞ்சுட்டு வீட்டுக்கு போக வேணாவா. ஞாயித்துக்கிளம பிள்ளைங்க வீட்ல இருக்கும். அந்த மனுசனுக்கும் இன்னிக்கி ஒரு நாதான் லீவு. வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டுக் கவனிக்கத் தேவல்லயா. லீவு விட்டாலே நீ லேசுல எந்திருக்க மாட்ற”
“எந்திருச்சு என்ன செய்யப் போறேன் செல்வி” என்று புன்னகைத்தபடியே வாஷ் பேஸின் குழாயைத் திறந்து சில்லென்ற தன்ணீரில் முகத்தைக் கழுவினாள். டீவியை ஆன் செய்தபடியே பேஸ்ட்டை ப்ரஷ்ஷில் பிதுக்கியவள்,
”சரி பொண்ணுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லன்னியே. இப்ப தேவலையா”
“அதுக்கு பேய் பிடிச்சுருச்சுக்கா…”
” உளறாத”
“ஆமாக்கா, அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போய், ரத்தம் லாம் டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு வந்தேன். அப்புறம் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சுனு கார் எடுத்துகிட்டு காஞ்சிபுரம் போய் அங்க ஒருத்தரு கிட்ட மந்திரிக்கக் கூட்டிக்கிட்டுப் போனம். அவருதான் கண்டுபிடிச்சு மாங்காடுல ஒரு அம்மாவ பாக்க சொன்னாரு.. நேத்து மாங்காடு கூட்டிகினு போனம். அந்தம்மா இன்னும் முன்னாலயே கூட்டு வந்த்ருக்கலாம்லனு திட்டிச்சு.
ஒண்ணும் கவலப்படறதுக்கில்லக்கா.. உச்சி மண்டைல இருந்து முடி எடுத்து மந்திருச்சு மரத்துல வச்சு ஆணி அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டும். என்னடா இதுக்கு இப்டி வந்துருச்சேன்னு ஒரே பேஜாரா இருந்துச்சு. இப்பத்தான் நிம்மதியாச்சு .
பேய் ஒடம்புல இருக்க சொல்லத்தான் பத்து நாளா ஒண்ணுமே சாப்பிடல”
“என்ன இப்பிடி பேசற.. ப்ளட் டெஸ்ட், என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்”
“என்னக்கா வெவரம் இல்லாம பேசற.. அதுதான் பேய் பிடிச்சுருக்குனு கண்டு பிடிச்சிட்டம்ல… ரிப்போர்ட்டுலாம் வாங்கவே இல்ல.”
அவள் வேலையை முடித்து விட்டுப் போனபிறகும் அவளுடைய அறியாமை நிறைந்த வார்த்தைகள் சுத்தி சுத்தி வந்து கொண்டே இருந்தது. செல்போன் மணி சிந்தனையைக் கலைத்தது. உடன் வேலை பார்க்கும் சுமதி.
“ஈவினிங் சரியா 5 மணிக்கு உன்ன பிக் அப் பண்ண வரேன். ஆறு மணிக்கு அருணா சாயிராம் கச்சேரி டிக்கெட் கெடச்சது. நீ ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுண்ட்டே இருந்தியே”
இவளிடமிருந்து சரியாக பதில் வராமல் போகவே அவள் மறுபடியும்,
“என்னடி நீதானே ரொம்ப ஆசைப்பட்ட. அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு டிக்கெட் வாங்கினேன்”
“இல்லடி தலை வலிக்கரது. ஜுரம் வர மாதிரி இருக்கு. நீ வேற யாரயாவது கூட்டிகிட்டு போயேன்”
“உனக்காகத்தான் இவ்வளவு மெனக்கெட்டு வாங்கினேன். சரி போ”
என்று சற்றே அதிருப்தியுடன் மறுமுனை துண்டிக்கப்பட்டது.
ஒண்டிக்கட்டையாக இருப்பதில், இந்த விடுமுறை நாட்களை தள்ளுவதுதான் இவளுக்குப் பெரும்பாடு. சுமதிதான் அப்பப்ப வெளியேபோகத் துணை. சினிமாவோ, ட்ராமாவோ, ஷாப்பிங்கோ. நாளைக்கு ஒரு நாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பாள். சமாளிச்சுக்கலாம்.
பத்து நாட்களாக சரியாக சாப்பிடாமல், சோர்ந்து படுத்தே இருக்கும் பெண்ணுக்கு ஒரு சிகிச்சையும் அளிக்காமல், பேய் ஓட்டும் முட்டாள் ஜனங்கள் மீது ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறுபக்கம் பரிதாபமாக இருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவள், செல்வியை அலைபேசியில் அழைத்தாள். “நான் சொல்றத கேளு. சாயங்காலம் உன் பொண்ண கூட்டிகிட்டு, நீ டெஸ்ட் கொடுத்த ஆஸ்பத்திரிக்கு வந்துடு. நானும் அங்க வரேன். டாக்டர பார்த்து பேசிடலாம்”
“அதெல்லாம் வேணாம்க்கா. அது உள்ள இறங்கி இருக்கற பேய ஓட்டிட்டா எல்லாம் சரியாகிடும்.”
“வாய மூடு. நா சொல்றத மட்டும் கேள்”
மாலாவின் குரலில் இருந்த கடுமைக்குப் பலன் இருந்தது.
“சரிக்கா. கூட்டிகிட்டு வரேன்.”
ஆஸ்பத்திரியில், ரிஸல்ட்டை வாங்கிக்கொண்டு டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தபோது, அந்த பெண்ணால் உட்காரக் கூட முடியல. துவண்ட கீரைக்கட்டா அம்மாமேல் சாய்ந்து கொண்டிருந்தது. மாலாவுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப்பார்க்க மிகவும் கவலையாக இருந்தது. இவர்களுடைய முறை வந்ததும் மூவரும் உள்ளே சென்றார்கள்.
மாலா கையில் இருந்த ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர்,
“என்னம்மா டெஸ்ட் எடுத்து நாலு நாள் ஆச்சு. இப்பத்தான் ரிஸல்ட்ட எடுத்துகிட்டு வரீங்க. மஞ்சக் காமாலை வந்துருக்குமா இந்த பொண்ணுக்கு. நாலு நாள் முன்னாலயே மருந்து கொடுக்க ஆரம்பிச்சு இருக்கலாமில்ல. ஏம்மா உங்கள பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. எடுத்து சொல்ல மாட்டீங்களா”
“இப்ப என்ன செய்யறது டாக்டர்”
“என்ன பண்றது. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டியதுதான்.”
டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொடுத்து அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வண்டியை எடுத்தவள் வீட்டுக்கு அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தினாள். ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் புன்னகையுடன் காட்சி தந்தார். எப்பொழுதும் காணும் புன்னகைதான், இன்று வித்தியாசமாக தனக்கு எதோ செய்தி சொல்வதுபோல் தோன்றியது. அவளும் அவனைப் பார்த்தபடியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தாள். மாயக் கண்ணன் விடுத்த செய்தி அவளுக்குப் புரிபடவில்லை.
வீட்டுக்கு வந்த உடன் செல்விக்கு போன் செய்து மருந்தை ஒழுங்காகக் கொடுத்தாளா என்று விசாரித்து விட்டு, மதியம் செய்த சாதத்தில் சிறிது மோரைவிட்டு சாப்பிட்டுவிட்டுப் படுத்தாள். புரண்டு புரண்டு படுத்தாலும் வெகு நேரம் வரை தூக்கம் வரவே இல்லை. தூங்கின மாதிரியே இல்லை. அலாரம் அடித்து திடுக்கிட்டு எழுந்தாள். ஐந்து மணி. இப்ப எழுந்தாதான் சரியா இருக்கும், ஏழு மணி பஸ்பிடிக்க.
பல் தேய்த்து காபி போட்டு எடுத்துக் கொண்டுவந்து சோபாவில் அமர்ந்தாள். எது எப்டி போனாலும், காலை காபியை நிதானமாக டபரா டம்ப்ளரில் ஆத்தி மெதுவாக ரசித்து ருசித்து குடிக்க வேண்டும் மாலாவுக்கு. காபியை குடித்து குக்கரை வைத்துவிட்டு காய் நறுக்க உட்கார்ந்தபோது, அழைப்பு மணி சத்தம். செல்விதான். உள்ளே நுழைந்தவள், “அக்கா அந்த அருவாமனைய கொடுக்கா, இந்த கத்திலாம் சரிப்பட்டு வராது என்றபடியே பீன்ஸ் காம்பை கிள்ள ஆரம்பித்தாள்.
“எப்படி இருக்கா பொண்ணு. ராத்திரி நல்லா தூங்கினாளா”
“நைட்டு கஞ்சி போட்டு கொடுத்தேன்க்கா, அப்பால டாக்டர் கொடுத்த மாத்திரைய கொடுத்தேன். தூங்கிருச்சு. இப்ப கூட நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கு.”
“மாத்திரைய விடாம கொடுக்கணும் சரியா”
“எங்க அக்கா கூட திட்டிச்சுக்கா, பேய் பிடிச்சுருக்க சொல்ல என்னாத்துக்கு டாக்டர்கிட்ட இட்டுகினு போய் மருந்தெல்லாம் வாங்கி கொடுக்கறேன்னு. அப்பால இந்த மனுசன் வந்து எல்லாம் சத்து வரத்துக்குதான் மருந்து கொடுத்திருப்பாங்க, பரவால்ல சாப்டட்டும்னு சொன்ன பெறவுதான் அடங்கிச்சு. நாளைக்கி மறுபடியும் மாங்காடு கூட்டிக்கினு போகனும்க்கா அத்த”
“உன்னயெல்லாம் திருத்த முடியாது. ஆனால் டாக்டர் கொடுத்த மாத்திரையை விடாமகொடுக்கணும் சரியா? எனக்கு இப்ப நேரமாச்சு ஆபிஸுக்கு”
“சரிக்கா. கோபப்படாத. அதுக்கு குணமாகனும் அம்புட்டுதான். “
செல்வி உதவியுடன் மற்ற வேலைகளை முடித்து, வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பி பஸ் ஸ்டாப் வந்த போது, அங்கு அவளுக்கு முன் வந்திருந்த சுமதி அவளைப் பார்த்து முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
“ஸாரிடி ” என்று ஆரம்பித்து செல்வி கதையைச் சொன்னாள்.
“இத அப்பவே சொல்லவேண்டியதுதானே, செம்ம கடுப்பா இருந்தேன் நேத்து நைட்டெல்லாம், டிக்கட் வேஸ்ட்டா போயிருச்சேன்னு “
பஸ்ஸில் ஏறிய பிறகும் அவர்களுடைய பேச்சு செல்வியின் அறியாமையைப் பற்றியே இருந்தது.
“கண்டிப்பா இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும் சுமதி”
வார இறுதிக்குள் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
சனிக்கிழமை காலை வேலைக்கு வந்த செல்வியிடம், “செல்வி உன் பொண்ண கொண்டு வந்து இங்க விடு. ஒரு மாசம் லீவு போட்டுருக்கேன். நான் பாத்துக்கறேன்.
“உனக்கெதுக்குக்கா தேவல்லாத வேலைல்லாம். அத்த எங்கக்கா கிட்டத்தான் விட்ருக்கேன், இன்னும் ரெண்டு தபா மாங்காடு கூட்டிகிட்டு போய்ட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்க்கா”
“நான் சொல்றத கேளு. என் கிட்ட விடு நா நல்லா பாத்துக்கறேன் “
‘வேணாங்க்கா .”
“என் மேல நம்பிக்கை இல்லியா?”
“அதுக்கில்லக்கா, நீ பேயோட்டல்லாம் அனுப்ப மாட்ட”
“பேயெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் , முதல்ல நான் ஒரு வாரம் டாக்டர் கொடுத்த மருந்த கொடுத்து பத்தியமா சாப்பாடு போட்டு கவனிச்சுக்கறேன் .”
“சொன்னா கேக்க மாட்ட. நாதான் நெதம் இங்கிட்டு வரனே. நானும் பாத்திக்கறேன்”
“நீ எப்பவும் போல வீட்டு வேலைய கவனிச்சுகிட்டா போதும். அவள நான் பாத்துக்கறேன்.”
வீட்டு வேலையை முடித்து விட்டு , மதியம் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் செல்வி. கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் கதவைப் பிடித்தபடி இருந்த அந்தப் பெண்ணுக்கு பன்னிரெண்டு வயசு இருக்கும். ஆஸ்பத்திரியில் அன்று இருந்த டென்ஷனில் சரியாக கவனிக்கவில்லை. அழகான, ஆனால்,சோர்வான கண்கள், தீர்க்கமான மூக்கு, பயந்த முகம். பார்த்த உடன் மாலாவுக்கு பிடித்து விட்டது.
“இங்க வாம்மா”
சற்று மிரட்சியுடன் செல்வியை பார்த்த அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள். பயத்துடன் கூடிய வெட்கத்தில் புன்னகைத்த அந்தப் பெண்ணைப் பார்த்து , ” உன் பேர் என்ன?”
“மீனா”
ராகவ் உயிரோடு இருந்து, அவனுடன் மணமாகி காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால் , இந்த மீனா வயசிருக்கும். அதுவும் அவன் ஆசைப்படி பெண்ணாக பிறந்திருந்தால்…. கண்களை விட்டு நீர் வெளியே வராமல் இருக்கப் பிரயத்தனப்பட்டாள்.
உயிருக்கு உயிராகக் காதலித்த ராகவ் கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் இறந்ததும், அதற்குப் பிறகு அவளுடைய அப்பாவும் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் இவள் வேறு யாரையும் மணக்க மறுத்ததும், அந்தக் கவலையிலேயே அவள் பெற்றோர் ஒருவர்பின் ஒருவராகக் காலமானதும் முடிந்த கதை.
“செல்வி நீ போய்ட்டு நாளைக்கி வேலைக்கு வா. கவலைப்படாம போ, நான் நல்லா கவனிச்சுக்கறேன் “
மீனாவிற்கென பிரத்தியேகமாக வாங்கித் தன்னுடைய கட்டிலுடன் இணைத்துப் போட்டிருந்த கட்டிலில் அவளைப் படுக்க வைத்தாள் . அந்தப் பெண் மிகவும் தயக்கத்துடனேயே அதில் அமர்ந்தது. சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் அசதியில் தூங்கி விட்டது.
ஃபேனை மிதமான வேகத்தில் வைத்து விட்டு , சத்தம் ஏற்படுத்தாமல் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேவந்தாள்,
ஒரு வாரம் போனதே தெரியவில்லை. மீனா மாலாவிடம் ரொம்ப நெருக்கமாகிவிட்டாள். டாக்டரிடம் கொண்டு காண்பித்து, அவளுக்கு நேரத்துக்குச் சாப்பிடக் கொடுத்து, அவளுடன் கதை பேசிச் சிரிக்க வைத்து, மொத்தத்தில் மாலாவுக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது.
மேலும் பத்து நாட்கள் நன்கு கவனித்ததில் மீனா உடல் முற்றிலும் தேறிவிட்டாள். அடுத்த நாள் வேலைக்கு வந்த செல்வியிடம்,
”இங்க பாரு செல்வி, மீனாக்கு நல்லா குணமாயிடுச்சு. இன்னிக்கி வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போ”
“ரொம்ப நன்றிக்கா. நாகூட இம்புட்டு நல்லா கவனிச்சுருக்க மாட்டேன், பெத்த பிள்ளைக்குமேல கவனிச்சக்கா, எனக்கும் நல்லா புத்தில ஏர்றமாதிரி புரிய வச்ச. இனிமேட்டு பேய் அது இதுன்னு போகமாட்டேன். என் பிள்ள உசிர காத்த தெய்வம்க்கா” என கண்ணீருடன் காலில் விழப்போனவளை எழுப்பி,
“லூசு மாதிரி உளறாம குழந்தைய கூட்டிக்கிட்டு போ. கவனமா பாத்துக்கோ, மறுபடியும் உடம்புக்கு ஏதும் வராம பாத்துக்க. சனி ஞாயிறுல கொண்டு விடு. நாங்க ஜாலியா விளையாடுவோம், பீச்சுக்கு போவம், இல்ல கண்ணம்மா” என்றபடி மீனாவின் கன்னத்தைத் தட்டினாள். வெட்கத்துடன் அவளைப் பார்த்துச் சிரித்த மீனாவை அணைத்து முத்தமிட்டு,
”உனக்கு இங்க எப்ப வரனும்னு தோணுதோ அம்மா கூட வந்துடு சரியா”
மீனாவும் செல்வியும் போனபிறகு வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஏதோ யோசனையில் வெகு நேரம் அமர்ந்திருந்தவளின் சிந்தனையை காலிங் பெல் சத்தம் கலைத்தது. கதவைத் திறந்தவுடன், அங்கு நின்ற சுமதி,
“என்னடி இவ்வளவு நேரமா பெல் அடிக்கறேன். உன்னய பார்த்து நாளாச்சேனு கிளம்பினேன். நேத்துதான் பையன் யு.எஸ் கிளம்பி போறான். ரெண்டு வாரமா ரொம்ப பிஸியா போச்சு. சரி இன்னிக்கி வந்து உன்ன பார்த்துட்டு போகலாம்னு. எப்ப ட்யூட்டில ஜாயின் பண்ணப் போற”
“நல்லா போச்சுடி. அருமையான அனுபவம். ராகவ் போனதுக்கு அப்புறம் எதுலயுமே ஒட்டுதல் இல்லாம இருந்த என்னை இந்த பெண் கூட இருந்த நாட்கள் சுத்தமா மாத்திருச்சு. இந்த ஒரு வாரமா ஒரு யோசனை. பணம் காசு நிறைய இருக்கு. முதல்ல ஒரு குழந்தைய தத்து எடுக்கலாமான்னுதான் யோசிச்சேன். அப்புறமா என்ன தோணித்துன்னா , தி நகர்ல அப்பாவோட ரெண்டு க்ரவுண்ட் வீட்ட ஒரு சின்னப் பள்ளிக்கூடமா கட்டி, அஞ்சு க்ளாஸ் வரைக்கும் மட்டும் இருக்கறமாதிரி செய்யாலாமான்னு தோண்றது. இந்த வேலைய ராஜினாமா பண்ணிட்டு நிறைய நேரம் குழந்தைகளோட இருக்கற மாதிரி இருந்தா நல்லா இருக்குமே. நீ என்ன சொல்ற”
கண்களில் நீரோடு, அவள் பேச்சை ஆமோதித்த சுமதி, “இந்த மாதிரி ஏதாவது ஒரு மாற்றம்தாண்டி உங்க அப்பா அம்மாவும் உன் கிட்ட எதிர்பார்த்தாங்க. அவங்க இருந்தா சந்தோஷப் பட்டிருப்பாங்க. பரவால்ல இப்பவாவது தோணித்தே. வா நல்ல விஷயமா சொல்லியிருக்க,கோயிலுக்குப் போகலாம். நான் அப்டியே வீட்டுக்கு போறேன். எப்ப ஆபிஸ் வருவ?”
“திங்கக்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்”
முகம் கழுவி, புடவை மாற்றி, வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.
கரு நீலப் பட்டுடுத்திய கண்ணனுடைய மோகனப் புன்னகையின் அர்த்தம் புரிந்ததுபோல் இருந்தது அவளுக்கு. அவனைப் பெற்ற
தேவகியை விட வளர்த்த யசோதைதானே பாக்கியம் செய்தவளாக இருந்தாள்.
மௌனம்..
மவுனம் என்பது கடலென்றால்-அதில் முத்து பிறக்காதா
மவுனம் என்பது தவமென்றால்-அதில்
ஞானம் உதிக்காதா
மவுனம் என்பது கனவென்றால்-அதில்
கவிதை பிறக்காதா
மவுனத் திரையில் ஒலியின் விரல்கள்
ஓவியம் வரையாதா!
சப்தக் கடலலை ஓய்கையிலே மனச்
சாந்தி பிறக்காதா
சலனம் அடங்கிய நீருக்குள்ளே
சந்திரன் உதிக்காதா
சித்தம் ஒடுங்கிய கணநேரத்தில்
சிந்து பிறக்காதா
சித்திரம் கலைந்து போனாலும்-அதன்
சிரிப்பொலி கேட்காதா!
வார்த்தைகளில்லா நேரத்தில்-ஒரு
வாழ்த்தொலி கேட்கிறது
வடிவம் கலையும் நெஞ்சுக்குள்ளே
வண்ணம் பொழிகிறது
ஆர்த்தெழுமலைகள் ஓய்ந்தமனக்கடல்
அமைதியில் உறைகிறது
அதுவே தருணம் அடடா உடனே
கவிதை உதிக்கிறது!
மவுனம் என்பது ஆண்டவன் படைத்த
அற்புத நிர்வாணம்- அந்த
அழகுக்கேனோ வார்த்தைகளாலே
ஆடை அலங்காரம்?
கவனம் உள்ளே திரும்பும்போது
கணமும் யுகமாகும்-அந்த
கனத்த மவுனக் கணதிலுதிக்கும்
கவிதை வரமாகும்!
மவுனத்திற்கோர் எடையுண்டென்னுள்
கனமாய்க் கனக்கிறது.
நீர்சுமந்திருக்கும் சூல்மேகம்போல்
கவிதை சுமக்கிறது!
எவரோ வந்து தொட்ட கணத்தில்
சரமழை பொழிகிறது
மழையாய்க் கவிதை பொழிந்தபின்னாலும்
மனமேன் கனக்கிறது?
இதயத்துடிப்பிற் கிடையில் இருக்கும்
மவுனம் இசையாகும்
இரண்டு விழிகள் உரசலிலேயே
கதைகள் பலபேசும்
உதயம் இசைக்கும் உன்னத கீதம்
உட்செவி கேட்கிறது -அந்த
ஓங்காரத்தின் அணுவுக்குள்ளே
மவுனம் ஒலிக்கிறது!
மனமோர் அண்டப் பெருவெளி ஆங்கே
மவுனம் கருந்துளையாம்!
மகிழ்வோ, சோர்வோ, துயரோ எதையும்
மவுனம் விழுங்கிடுமாம்!
மனமொரு சதுப்பு நிலமென்றாலதில்
மவுனம் புதைமணலாம்!
மவுனத்திற்குள் புதைந்துகிடக்கும்
மருமம் யாரறிவார்!
மவுனம் என்பது வன்முறை ஆயுதம்
எதையும் சாதிக்கும்!
மரத்தடி அமர்ந்து வார்த்தைகள் இன்றி
ஞானமும் போதிக்கும்!
மவுனம் உணர்ந்து, மவுனம் உறைந்து
மலராய் இருந்துவிடு!
ஆறறிவால் அதை ஆரறிவார் அதில்
ஆழ அமிழ்ந்துவிடு!
பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காய் போன கதையாய்
அல்லவா போய்விட்டது..?
நான், ‘உதவாக்கரை.. சாமர்த்தியமில்லாதவன்..’ என்றெல்லாம்
அர்ச்சனை செய்து கொண்டிருந்த என் மகன் திலீபன் திடீரென ஒரு
வாரம் முன்பு ஒரு நல்ல செய்தியோடு வந்தான்.
‘அப்பா.. ‘பக்கத்து வீதியிலே உள்ள ராம விலாஸ் ஓட்டல்லே
டிபனும், சாப்பாடும் எவ்வளவு ருசியாக இருக்கு. எல்லா
ஜனங்களும் அந்த ஹோட்டலைப்போய் மொச்சுக்கறாங்க..
நம்ம ஓட்டலுக்கு யாருமே அதிகமா வறதில்லே.. சரியானபடி
வியாபாரம் ஆறதில்லே… இப்படியே போனா ஓட்டலை இழுத்து
மூடவேண்டியதுதான்…’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே
இருப்பீங்களே… இன்னிக்கு அங்கே போய் மெதுவாக விசாரித்து
அங்கிருந்து ஒரு குக்கை நம்ம பக்கம் கொண்டு வந்துட்டேன்.
என்ன.. அவங்க குடுக்கற சம்பளத்தை விட ரெண்டாயிரம்
ரூபாய் அதிகம் கொடுக்கணும்.. அவ்வளவுதான்.. இனிமே
பாருங்க.. நம்ம ஓட்டலுக்கு வரப் போகும் கூட்டத்தை..’ என்றான்.
‘ரெண்டாயிரம் அதிகம்’.. என்பது சிறிது அதிகம்தான். ஆனா
வியாபாரம் அதிகமானா அதை ஏறு கட்டிடலாம்… ‘ என்று
கணக்குப் போட்டு, ‘அப்படியா.. வெரிகுட்.. அவன் எப்ப ஜாயின்
பண்ணறான்’ என்றேன்.
‘நாளைக்கே…’ என்றான் திலீபன்.
அடுத்த நாளே அந்த புதிய குக் எங்கள் ஓட்டலில் வந்து
சேர்ந்தான். அன்று அதிசயமாக எங்களுடைய லோகல்
கவுன்ஸிலரிடமிருந்து வேறு ·போன். ‘மிஸ்டர் ஆதிமூலம்..
நான் சிபாரிசு பண்ணின பையன் உங்க ஓட்டல்லே இன்னிக்கு
சேர்ந்திருக்கான் போல் இருக்கு… அவனுடைய திறமையைப்
பார்த்து நீங்க சம்பளமும் டபுளா கொடுக்க ஒத்துக்கிட்டீங்க
போல இருக்கு. தாங்க் யூ… பையனை நல்லா கவனிச்சுக்குங்க..’
என்றார். பெருமையாக இருந்தது எனக்கு.
இதோ ஒரு வாரம் ஓடி விட்டது.. அந்தப் பையன்
உருப்படியாக சமையல் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.
டிபன், சாப்பாடு குவாலிடியில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல்
அப்படியே இருந்தது. ஜனங்கள் இன்னும் அந்த ராமவிலாஸையே
மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் சிறிது கோபத்துடன் அந்தப் பையனைக் கூப்பிட்டு
விசாரித்தேன்..’என்னப்பா அந்த ஹோட்டல்லே எல்லாம் ருசியாகச்
சமைச்சுட்டிருந்தே.. இங்கே வந்து உன் திறமையைக் காட்டவே
யில்லையே… இத்தனைக்கும் அங்கே கொடுத்த சம்பளத்தை விட
அதிகமா கொடுக்கிறோமே…’ என்றேன்.
‘ஐயா.. என்ன சொல்றீங்க.. சமையலா..? எனக்கு ஒன்றுமே
சமைக்கத் தெரியாது. அந்த ஓட்டலிலும் வரும் கஸ்டமர்ஸ¤க்கு
தண்ணி கொண்டு கொடுப்பேன். அதையேதான் இங்கேயும்
செய்து கொண்டிருக்கிறேன்…’ என்றான்.
எனக்கு அப்படியே தலை சுற்றி மயக்கம் வரும்போல்
இருந்தது.
‘அந்த ஹோட்டல் மானேஜரை உங்களுக்குத் தெரியுமே..
அவரிடம் விசாரியுங்களேன்…’ என்றார் இதையெல்லாம்
கவனித்துக் கொண்டிருந்த என் நண்பர்.
·போன் போட்டேன்.. ‘என்னப்பா.. இப்படி பண்ணீட்டே..
உங்க ஹோட்டல்லே வேலை செய்துட்டிருந்த ஒரு பையனை
நாங்க சேர்த்துண்டோம்.. அவனுக்கு சமையலைப் பத்தி
ஒன்றுமே தெரிய மாட்டேங்குதே..’
‘….’- மறுமுனையிலிருந்து வந்த பதில் கேட்டு என் முகம்
அஷ்ட கோணலாக மாறியது.
‘ஓகே.. தாங்க்ஸ்..’ என்று வைத்தேன் பெருமூச்சுடன்.
‘என்னாச்சுப்பா..?’ என்றார் என் நண்பர்.
‘அதையேன் கேட்கறே..? என் பையனுக்கு சில
வார்த்தைகள் சரியாக உச்சரிக்க வராது.. ‘சீ·ப்’ குக்குன்னு
கேட்கறதுக்கு பதிலா ‘சீப்’ குக்குன்னு கேட்டிருக்கான்.
அவர்களும் ஒன்றுக்கும் உதவாத இந்தப் பையனைக்
காட்டியிருக்காங்க.. குக்கிங் டிபார்ட்மென்டில் இருந்தானே
ஒழிய இந்தப் பையனுக்கு ஒண்ணுமே தெரியாதாம்.
கவுன்ஸிலர் சிபாரிசு வேறே.. வெளியிலே அனுப்ப முடியாது.
இவனுக்குத்தான் அங்கேயுள்ள சமையல்காரங்கள்ளே ரொம்ப
கம்மியான சம்பளமாம். அதனாலே இவனை கைகாட்டி-
யிருக்காங்க. என் பையன் சரியா விசாரிக்காம அவனைக்
கூட்டிட்டு வந்துட்டான். ஒரு சொற்பிழையினாலே வந்த
அவஸ்தையைப் பார்த்தீங்களா.. நமக்கு வந்துட்டிருக்கிற
நஷ்டம் போதாதுன்னு இது ஒரு தண்டம்..’ என்றேன் ஈன
சுரத்தில்.
‘இப்போ என்ன செய்யப் போறீங்க…’
‘வேதாளம் கதைதான்… கவுன்ஸிலர் ஆளு.. வெளியிலே
அனுப்ப முடியாது. அந்த ஹோட்டல்காரங்க மெதுவாக
வேதாளத்தை நம்ம தோள்ளே இறக்கிட்டாங்க… நாம அதை
எப்படி இன்னொருத்தர் தோள்ளே இறக்கறதுன்னு இப்போ
யோசிக்கணும்…’என்று இருக்கையில் சோர்ந்து உட்கார்ந்தேன்.
கடந்த மூன்று மாதங்களாக நான் என்னவென்று புரியாமலேயே எதையோ தேடியபடியே என் நேரத்தைக் கடத்தினேன். பார்ப்பவர்கள் நான் அலட்சியமாக இருக்கிறேன் என்றும், சோம்பேறி, கொழுப்பு அதிகம் என்றெல்லாம் விவரித்தார்கள். அப்படியா, என்று இருந்து விட்டேன் என்றாலும், மனம் கலங்கியது என்னமோ உண்மை தான்!
இப்பொழுது திரும்பிப் பார்க்கையில் இது நான் விழுந்த மிகப் பெரிய பாதாளம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் , இதற்கு முன்பு எனக்கு விஸ்தாரமான நண்பர்கள் குழு, வித்தியாசமானதும் கூட! அப்படிப்பட்ட நான், தனிமையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். நாங்கள் முன்பு இருந்த வீட்டுப்பக்க நண்பர்களின் அழைப்பிற்கும் பதில் சொல்வது குறைந்தது. பதில் பேசி, என்ன மாறப்போகிறது என்பதாலேயே!
நாங்கள் முன்பு வசித்திருந்தது நகரத்தின் மறு கோடியிலே. திடீரென்று என் பெற்றோர் நான் பத்தாவது முடித்தவுடன் வீடு மாறலாம் என்று முடிவு செய்தார்கள். என் உலகமே மாறியது. நண்பர்கள், ஸ்கூல், மார்க் எல்லாம் தான். எரிச்சலும், சலிப்பும் அதிகமானது. எதிலும் பிடிப்பு இல்லை. உற்சாகமும் இல்லை. சாப்பாடு கூட ருசிக்கவில்லை. ஏனோ-தானோ என்று நாட்களைக் கடத்தினேன். யாருடனும் பழக மனம் வரவில்லை.
இதை எல்லாம் கவனித்த என் வகுப்பு டீச்சர், என் அம்மாவைக் கூப்பிட்டுக் கலந்து பேசி, “இது ‘மன சோர்வு’டைய அறிகுறிகள் போல் தோன்றுகிறது. மனோதத்துவர் ஒருவரைப் பார்ப்பது நல்லது” என்றார். நான் திகைத்தேன். அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இந்த ஸ்கூல்ல மார்க் அதிகம் வரும்னுதானே வீட்டை விற்று இங்கே வந்தோம். இப்படி ஆயிடுத்தே! மனோதத்துவர்னா, ஸைக்கியாட்ரிஸ்டா, இந்த வயசுலயா?” என்றாள்.
டீச்சர் சமாதானம் சொல்லி விவரித்தார் “பிரச்சினை இல்லை! அறிகுறி தான். நான் பரிந்துரைக்கும் மனோதத்துவர் ‘ஸைக்கியாட்ரிக் ஸோஷியல் வர்கர். M.A. ஸோஷியல் வர்க்கில் மன நலப் பிரிவில் தேர்ச்சி பெற்று, பிறகு M.Philயில் இதையே மையமா கொண்டு பயின்றவர்” என்று விளக்கினார். “இவர், நம் பாதையை, நாமே வளமாக மாற்றிக் கொள்ள உதவுபவர். நம் வலிமைகள், குறைகள், அணுகுமுறை, வளம், தடைகள், குடும்பத்தினரின் பக்க பலம் எல்லாவற்றையும் நலமாகுவதற்குப் பயன் படுத்துவார்கள். நாம் மேம்படுவதே மருந்தாகும்”.
இதெல்லாம் கேட்டுப் புரிந்தாலும், என்னைத் தயக்கமும், சாக்குகளும் சூழ்ந்தது. என் டீச்சர் சொன்னதினாலேயே அந்த மன நல ஆலோசகரிடம் சென்றேன். அம்மா-அப்பா “நாங்க விவரிக்கிறோம்” என்றதை மதித்து முதலில் அவர்களுடன் பேசிவிட்டு, பிறகு என்னுடன் வெகு நேரம் தனியாகவே உரையாடினார்.
நாங்கள் பேசும்போது அவர் காட்டிய அந்த பூர்ண வாத்ஸல்யமும், உன்னிப்பாக எல்லாவற்றையும் உள்வாங்கியதும் என்னைக் கவர்ந்தது. அவர் கேட்ட கேள்விகளிலிருந்து என்னையும் என் நிலைமையையும் புரிந்தவர்போலே தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேல், என் பெற்றோருடன் கலந்து பேசுகையில், நான் சொன்ன பல விஷயத்தையும் அவர்களிடம் அந்தரங்கமாக வைத்தது, என்னை மிகவும் ஈர்த்தது. மனம் மாறத்தொடங்கியது.
இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் பாதி மனதோடு வந்திருந்ததை மன நல ஆலோசகர் தெரிந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால், உதவி நாடுகிறோம் என்று கருதினால் “இவர்கள் யார் சொல்ல” என்று தோன்றலாம். இதனாலயே தயக்கம் சூழுந்து, நம் சிந்தனையையும், செயலையும் தடுத்துவிடும். இதையே, நம்பிக்கையுடன் வாய்ப்பாகக் கருதினால் நாம் ஆக்கபூர்வமாக செயல் படுவோம். 45 நிமிடமோ, 1 மணி நேரமோ நாம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளும்பொழுது, தன்னைப்பற்றிப் புரிந்து கொண்டு, இப்போதைய நிலை பயனுள்ளதா, பயனற்றதா என்ற தெளிவு பிறக்கும். நமக்கே “மாற வேண்டும்” என்று தோன்றவேண்டும். நாம் தயாராகவில்லை என்றால் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுப்போம்.
சொல்லப் போனால், மன நல ஆலோசகருடன் முதல் சந்திப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. வாரத்திற்கு இரண்டு முறை போக ஆரம்பித்தேன். மெல்ல, மெல்ல நான் மாறுவதை உணர்ந்தேன். என் டீச்சரின் ஒரு சில வார்த்தைகளிலும் இது தெரிந்தது. 45 நிமிட உரையாடலைத்தவிர, நானாக செய்ய வேண்டிய பயிற்சிகளும் இருந்தன. என்ன, “ஏன்”, என்பதை நான்தான் சிந்தித்து, தீர்மானம் செய்து, விவரிக்க வேண்டும். இதை செயல்படுத்தும் கால அவகாசத்தையும் நானே நிர்ணயித்துக் கொண்டேன்.
மறுமுறை, மன நல ஆலோகரை சந்தித்தபோது, அன்றைய 45 நிமிடமும் நண்பர்களுடன் நான் பழகுவதை மையமாகக் கொண்டிருந்தது. என் நண்பர்களுடன் முன்பு பழகிய நிகழ்ச்சிகளைச் சொல்லும் பொழுது கண்முன் ஒவ்வொரு நினைவும் தெளிவாக வந்துநின்றது. நினைவுகளைக் கோர்க்க மிக இனிமையாகவும், இதமாகவும் இருந்தது. முடிவில், செய்முறை தீர்மானம் ஆனது. பழைய ஒரு நண்பனை மறுபடியும் தொடர்பு கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே கூச்சமும், குழப்பமும் வர ஆரம்பித்தது, ஆனால் அந்த ஃப்ளாஷ்பேக் உறுதியை நிலை நாட்டியது.
சொல்லி வைத்தாற்போல், நான் வீடு திரும்பியதும், அவன், அங்கு, என் அறையில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து ஸ்தம்பித்தேன்! தற்செயலா? சொன்னதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு தானாக அமைந்தது! இவன், எங்கள் பழைய வீட்டு அருகில் இருந்த நெருங்கிய நண்பன். தற்செயலாக மூத்த கூடைப்பந்து வீரர் ஒருவரைப் பக்கத்துத் தெருவில் காரில் கொண்டு விடும்போது, என் அம்மாவைப் பார்த்தான். அம்மா, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
ஒரு பக்கம் இவனைப் பார்த்த மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் மனதிற்குப் புதுத் தெம்பு வந்தது. அவன் என்னிடம் கை நீட்டியபடி “வாழ்த்துக்கள், நீ பல மாதங்களாக மெளனமாக இருந்ததுக்கு” என்று சொன்னது சில வினாடிக்கு பழைய மாதிரி தோன்றிற்று! நாக்கு சிக்கியது (வெட்கத்தில்). சற்று மொளனமானேன்.இப்படிப்பட்ட சுழ்நிலையில் இருக்கவே இருக்கு TV. கவனம் அதில் சென்றது. சுதாரிக்க முடிந்தது. சற்று நேரம் பேசினோம். விடை பெறும்போது திரும்ப சந்திக்க அழைத்தேன். ஆமோதித்தான். இந்த திடீர் நிகழ்வால் என்னுள் வந்த சிறு மாற்றத்தை அறிந்தேன். இது தான் மன நல ஆலோசகர் சொன்ன “Preparedness”இன் விளைவு என்று புரிந்தது.
இன்னொரு பயிர்ச்சியாக நான் செடி வளர்ப்பது என்று தேர்வு செய்தேன். அவர்கள் (வினோதமாக) வாடிய செடியை கண்டுபிடித்துப் வளர்க்க வேண்டும் என்றார். ஏன் வாடிய செடி? என் நிலையை பிம்பமாக காட்டும். நான் எரிச்சல், சலிப்பு என்று காண்பிப்பேன். இந்த செடி எப்படி தெரிவிக்கும்? துளிர் விடுமா? நான் காட்டும் அன்பு புரியுமா? எவ்வளோ நாளிலே துளிர் விடும்? மனத்துக்குள் “பார்ப்போம்” என்று நகைத்தேன்.
ஆவலின் தூண்டுதலில், செயல் பட்டேன். வித்தியாசம் தெரிந்தது. குறையும், குறைபாடுகளும் அல்ல, வண்ணமும், பல வழிகளும்! சற்று விவரிக்கிறேன்: வாடிய செடி துளிறுமா என்ற ஆவல் தூண்டியது. என்னைஅறியாமல் வேகமாக போய் பார்ப்பேன்; உள்வேகம் கூடியது. அது பூத்து குலுங்குவதுபோல் என் உடைகளின் வண்ணமும் விதவிதமாகியது. நானும் ஜொலிக்காரம்பித்தேன்!
அந்த சனிக்கிழமை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என் தோழர்களுடன் கூடுவது தொடர்ந்திருக்க, என் நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். எனக்கு உருவாக்குவதில் ஆர்வம் உண்டு என்பது இவர்களுக்கு தெரிந்ததே. என் அறையில் உதிரி பாகங்கள் குப்பை கூளமாக இருந்தது (தனி ரூம் இதற்காகவே). சில பாகங்களை என்னிடம் கொடுத்து, பண்ணி காட்டேன் என்றார்கள். டைமாகும் என்றேன், பரவாயில்லை என்றார்கள். மின் விசிறி தொடங்கினேன். 2 மணி நேரம் கழித்து கிளம்பினார்கள். தூக்கம் ஏமாற்றி கொண்டிருந்ததால், தொடர்ந்தேன். முடித்தேன், காலை 7 மணி. நண்பன் உள்ளே வந்தான். “டேய், முடிச்சிட்ட!” எடுத்து அழகு பார்த்தான். “ஸாரீ, பர்ஸை விட்டேன், அதான். சரி நீ தூங்கு, ஸண்டே தானே. நான் அம்மாக்கிட்ட சொல்றேன்”. கதவை மூடிவிட்டு சென்றான். தூங்கினேன். பல மாதங்களுக்கு பிறகு அப்படி ஒரு தூக்கம். எழுந்தபின், அவ்வளவு ஃப்ரெஷாக இருந்தது.
ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது. மன நல ஆலோசகர் சொன்னது ஞாபகம் வந்தது. நாம் முடியாது என்று ஆரம்பித்தாலோ, எல்லாவற்றையும் சோக கண்ணோட்டத்தில் பார்த்தாலோ வாழ்வு சுருங்கி விடும். பேசாதிருந்தால், தனிமை பெரிதாகும். இடமாற்றத்தை தடையாகவும், இடையூராகவும் கருதியிருந்ததால், நண்பர்களையும் பிரிந்ததில், பெற்றோரிடம் கோபம். அதனாலயே இப்படி உட்கார்ந்து விட்டேன். வாய்ப்புகள் என்னவோ கைக்கு எட்டின தூரத்தில் தான் இருந்தது.
நாங்கள் “ஆறு பேர் படை”. வீட்டுக்கு வந்தார்கள். என் நிலமையை பற்றி என்றும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களுக்கு என் வாடிய செடி பற்றி சொல்லி, காண்பித்தேன். அது என்னையும் மீறி ப்ரகாசமாய் பூத்து குலுங்குவதை பார்த்து எனக்கும் மேல் குஷியானர். என் நிலைமையை முழுவதும் இவர்களுக்கு எடுத்து சொன்னேன். நோ விமர்சனம். அதுதான் நண்பர்கள்!
நான் நன்றாவது வெளிப்படையாக தெரிந்தது. என் மன நல பயிற்சிகளில் உடற்பயிற்சியும் இருந்தது. முன் போல் கூடை பந்து விளையாடத் தொடங்கினேன்.
வாழ்வில் இன்னும் அர்த்தம் சேர்க்க என்னுடைய நெடு நாள் ஆசை, Physics பாடத்தை பலருக்கு, இலவசமாகவும் எளிமையான பொருட்களுடன் கற்று தர வேண்டும் என்று. பிரபல திரு அரவிந்த் குப்தாவின் ஏகலவ்ய சிஷ்யன், நான். பள்ளியிலும், விடுமுறை நாட்களிலும் 1 மணி நேரம் கற்று தர என் பெற்றோர் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
இப்படி ஒவ்வொன்றாக செய்கையில் வாழ்வின் அர்த்தம் விஸ்தரித்தது. நம் நோக்கங்கள் நம்போல் தனித்துவம் கொண்டதே, நாமே உருவாக்கலாம் என்று புரிந்தது. இதில் எனக்கு பிடித்தது – நமக்கு தெரிந்த தகவல்களையும், திறமையும் மற்றவருடன் பகிர்வதே பேரின்பம்!
என் மன நல ஆலோசகர் தெளிவு படித்தியது போல்,ஒவ்வொரு படி எடுத்த பின்னும், நானே எனக்கு சபாஷ் கொடுத்தேன். இப்படி செய்வதில் மண்டை கனமோ, கர்வமோ இல்லை என்று அறிந்தேன்.
என் பெற்றோர், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர், டீச்சர்,நண்பர்கள், வாடிய செடி, பங்குடனே இங்கு, உங்களிடம் இவ்வளவு பூரிப்புடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.
திரும்பி பார்க்கையில்
நோக்கம்
எரிசக்தியானது!
இதனால்
மாற்றம் செய்யவும்
மாற்றம் கொண்டு வரவும் உதவியது!
என்னுடைய
“ஏன்” என்ற தேடலுக்கு ஊக்கமானது
என்னை படைப்பாளியாக்கியது!
அறிந்தேன்
நோக்கத்தினால் விளைவும்
விளைவினால் நோக்கமும்!
நோக்கம் நம்
தனித்தவத்திலும்
வலிமையிலும்
நெறிகளிலும் அடங்கும்!
‘
(picture courtesy : FRONTLINE)
இந்தப்பாடல்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடியுங்கள்: ( விடை கீழே)
சிங்காரவேலனே தேவா …………. …………………….. (கொஞ்சும் சலங்கை)
இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை …………. ( திருவிளையாடல் )
கண்ணோடு காண்பதெல்லாம் …………. …………. (ஜீன்ஸ்)
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் …………. ……( தீபம்)
சின்னஞ்சிறு வயதினிலே எனக்கோர் …………. (மீண்டும் கோகிலா)
பூமாலையில் ஓர் மல்லிகை …………. …………. (ஊட்டி வரை உறவு)
வாராயோ வெண்ணிலாவே …………. …………. (மிஸ்ஸியம்மா)
ராகங்கள் பதினாறு …………. …………. …………. (தில்லுமுல்லு)
நீலவான ஓடையில் நீந்துகின்ற …………. …….( வாழ்வே மாயம்)
பூவே பூச்சூட வா …………. …………. …………. ……..( பூவே பூச்சூட வா )
ராக்கம்மா கையைத்தட்டு …………. …………. (தளபதி)
குயிலே கவிக்குயிலே …………. …………. ………..(கவிக்குயில்)
குருவாயூரப்பா …………. …………. …………. …….(புதுப் புது அர்த்தங்கள்)
கங்கைக் கரைத் தோட்டம் …………. …………. ( வானம்பாடி)
–
–
–
–
–
–
–
இதைப் பார்க்கும் போது கண்ணதாசனின்
“கை இரண்டினை உடல் கட்டி விட்டதன் காரணம் மெய் இரண்டினை சுகம் மீள வைப்பது தானரோ!”
என்ற கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது !
கைகளை வைத்துக் கொண்டு பேனா பேப்பர் இல்லாமல் நிழலில் கவிதை படைக்கிறார்.
(அமரர் ரா கி ரங்கராஜனி்ன் நான் கிருஷ்ண தேவராயன் ஒலிப்புத்தகம் 9 ம் தேதி வெளிவந்துவிட்டது)
17 மணி நேர ஒலித்தகட்டின் விலை 350 ரூபாய்
கிடைக்குமிடம்: http://nammabooks.com/bombay-kannan/nan-krishna-deva-rayan-audio-book
விழா விமர்சனம் :
தமிழ்ப் புத்தக நண்பர்களின் ”நான் கிருஷ்ணதேவராயன்” சிடி ஸ்பெஷல்!
தமிழ்ப் புத்தக நண்பர்கள் இம்முறை இரண்டு வாரங்கள் முன்னதாகவே கூடிவிட்டார்கள் – உண்மையிலேயே கூட்டம் ஸ்பெஷல்தான்!
ரா.கி. ரங்கராஜன் அவர்களின் ’நான் கிருஷ்ணதேவராயன்’ நாவலின் ஒலித்தகடு (Mp3 CD) – பாம்பே கண்ணன் தயாரிப்பு – மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் (ஆங்கிலத்தில் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி) இரண்டையும் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் வெளியிட, முறையே மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, டேக் செண்டர் சாரி இருவரும் பெற்றுக்கொண்டனர்!
பதினோரு நிமிடங்கள், ஒலிப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் மட்டும் – ஒலிபரப்பப்பட்டது. பின்னிசை, இடை இசை (BGM) உடன் வர, காதல்வயப்பட்ட கி.தேவராயன், காதலின் பெயரால் எல்லாக் கடமைகளையும் மறந்துவிட, ஏற முடியாத மலை உச்சியிலிருந்து அவனது அம்மா, காதலியை மறக்க சத்தியம் வாங்குவதாகக் காட்சி ……
நான் கதை வாசிப்பவன், கேட்பவனல்ல! கேட்பதில் நிறைவு எனக்குக் கிடைக்காது. எழுதுபவரின் மனஓட்டத்துடன், என் மனக் கற்பனையும் சேர்ந்து உருவாக்கும் திரைப் பிம்பம் எனக்குக் காது வழி கிடைப்பதில்லை. பேப்பர் குறைத்து, மரங்களின் மறுவாழ்வு அவசியமாவதாலும், வாசிப்பவர்கள் குறைந்து வருவதாலும், புத்தகங்கள் மறைந்து, கேட்கும் சிடிக்களுடன் சமரசம் செய்துகொள்ளும் நிலை அருகிலேயே இருப்பதால் இந்தக் கூட்டம் ’ஸ்பெஷல்’ ஆகிறது!
ரவி தமிழ்வாணனின் அறிமுக உரையைத் தொடர்ந்து, சாரி, பழம் புத்தகங்களின் மறுவாசிப்புக்கு சிடியின் அவசியத்தையும், பாம்பே கண்ணனிடம் ’நான் கி.தேவராயன்’ புத்தகத்தை ஒலி வடிவில் தயாரிக்கக் கேட்டுக்கொண்டதையும் சுருக்கமாக, அழகாகச் சொன்னார்!
தன் நாடக, திரை உலக அனுபவத்தில், அருமையான ஒலிப் புத்தகங்களை உருவாக்கும் பாம்பே கண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரே குரலில் கதை சொல்லாமல், கேரக்டர்களின் குரல்களில், இசையுடன் கதை சொல்வது வித்தியாசமாயும், ஒரு நாடகம் கேட்கும் அனுபவமாயும் இருக்கிறது – வாழ்த்துக்கள்!
வாழ்த்துரைத்த இந்திரா செளந்தர்ராஜன், நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. சுவடியிலிருந்து, காகிதத்தில் பதிப்பித்த உவேசா அவர்களைப் போல், காகிதத்திலிருந்து சிடியில் பதிக்கும் கண்ணனை வாழ்த்தினார்! ரா.கி.ர., ஜராசு ஆகியோரின் எழுத்துத் திறமையையும், ஆரம்பகால எழுத்தாளர்களை அவர்கள் ஊக்குவித்து நெறிப்படுத்தியதையும் சிலாகித்தார். Mp3 அளவு பேசினாலும், சுவாரஸ்யமான பல செய்திகளை, நகைச்சுவையுடன் வெளிப்படையாகச் சொன்னார்!
சமீப காலத்தில் இப்படிக் கண்ணில் நீர் வர நான் சிரித்ததில்லை – ஜ ராசு என்னும் மனிதர் கண்ணில் நீர் வரவழைத்து விட்டார்!! ராகிர வின் பன்முகத்தன்மை, எதையும் துணிவுடன் செய்வது, சேர,சோழ,பாண்டியரை விடுத்து, நாவலுக்குக் கிருஷ்ணதேவராயரைத் தேர்ந்தெடுத்தது, கமலின் உந்துதல் எனப் பல குறிப்புகள் – ராகிர வுடன் வெற்றிலை போட்டது, எல்.வி.பிரசாத்துடன் அப்புசாமி, சீதாப்பாட்டி படமெடுக்கப் பேசியது என ஹாஸ்யப் பிரவாகம்! முத்தாய்ப்பாய், வீட்டிற்குப் போனால் மிஸஸிடம் கிடைக்கப் போகும் அர்ச்சனைபற்றிச் சொல்ல, அரங்கே அதிர்ந்தது!! பேச்சுக்கிடையே சிலருக்கு ஹாஸ்யம் வரும் – இவருக்கோ ஹாஸ்யத்துக்கிடையே கொஞ்சம் பேச்சு வருகிறது!!
சரித்திர, மர்ம நாவல்களை மொழிபெயர்ப்பதை ஒரு சவாலாக செய்துவருகிறார் சுகந்தி. நான் கி.தேவராயனை அடுத்து அடிமையின் காதல் (ராகிர), நைலான் கயிறு (சுஜாதா) நாவல்களை மொழிபெயர்ப்பதாகக் கூறினார். தமிழிலும் நன்றாகவே பேசினார் – இண்டுவில் எழுதுவதாலோ என்னவோ, ஆங்கிலம் கொஞ்சம் அக்சென்டுடன், ‘பாஷ்’ ஆக இருந்தது!
ராகிர வின் புதல்வர் நன்றி கூறி எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தினார். குமுதம் குழுமத்துக்கும் (அன்றைய) ’ஸ்பெஷல்’ நன்றி சொன்னார். (உவேசா வுக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை பற்றிப் பேசிய இந்திரா செளந்தர்ராஜனுக்கும், அவர் விவரித்த, ஒன்றுக்கும் உதவாத பொன்னாடையைப் போர்த்தியது, அவர் கூறியபடி, ‘நடப்பது நடந்தே தீரும்’ என்பதை உறுதி செய்தது!)
சாருகேசியின் வழக்கமான ஷார்ட் அண்ட் ஸ்வீட் நன்றி நவிலல் – கூட்டம் நிறைவு!
ஏனிந்தக் கூட்டம் “ஸ்பெஷல்”?
1.இரண்டாம் வாரமே, அதுவும் ஒரு ஞாயிறன்று கூட்டம்.
2.நேரம் தாண்டியும், (சுமார் ஒரு மணி பதினெட்டு நிமிடம்) கூட்டம் நடந்தது.
3.சிடி/ புத்தக வெளியீட்டுடன், ‘நான் கிருஷ்ணதேவராயன்’ விமர்சனக் கூட்டமாகவும் அமைந்தது !
இதுவரை…….
இடைக்கால சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்த போது சோழர் கீழிருந்த வாணகப்பாடி நாட்டு சிற்றரசன் வந்தியத்தேவன் ஈழத்தின் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப் பட்டிருந்தான்.
புதுப் பதவியை ஏற்குமுன் பாண்டியர் வம்சாவளி மணிமகுடத்தையும் மற்றும் புராதானமான இரத்தின மாலையையும் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத் தெரியவருகிறது. அதனை மீட்டியபின்னர் பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்கு, முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியொடு பூதத் தீவுக்கு வருகிறான்.
இனி……………………..
அனைவரும் மீண்டும் வேளார் இருப்பிடம் வந்துசேர்ந்தனர். நடந்த அறிந்த விபரங்களை வேளாரிடம் கூறினான் திருமலை.
வந்தியத்தேவன் பெரிய வேளாரிடமிருந்து சிறிய கலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டான். அதில் மாலுமிகளைத்தவிர சில படை வீரர்களையும் சேர்த்துக் கொண்டான். சில தண்ணீர் குடுக்கைகளையும் எடுத்து வரச்செய்தான். செவ்வேந்தியின் உத்தரவுக்குப் பணிந்து மாலுமிகள் வந்தியத்தேவன், திருமலை முதலியோரை பூத தீவுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.. கலத்தை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினர். ஒரு படகு கீழே இறக்கப்பட்டது.
வீரர்கள் தண்ணீர் குடுக்கைகளை கயிற்றின் மூலம் முதுகில் கட்டிக் கொண்டார்கள். இரு மாலுமிகள் துடுப்பு போட, வந்தியத்தேவனும், திருமலையும் செவ்வேந்தியையும் கூட ஐந்து வீரர்களையும் அழைத்துக்கொண்டு கரையின் தென்பக்கம் வந்தனர்.
வந்தியத்தேவன் மாலுமிகளைக் கரையோரமாக தீவை வலம் வரச் சொன்னான். இருவரும் வீடு ஏதாவது தென்படுகிறதா என்று கரையை நோக்கிப் பார்த்த வண்ணமிருந்தார்கள்..
சிறிது தூரம் வந்ததும் கரையோர மரங்களுக்கும் புதர்களுக்குமிடையே ஒரு வீட்டின் கூரை தெரிந்தது.
படகைக் கரையோரம் சென்று நிறுத்துமாறு வந்தியத்தேவன் ஆணையிட்டான்.. அவ்வாறே படகு நிறுத்தப்பட்டு எல்லோரும் இறங்கிப் படகை மண்ணில் இழுத்து இருத்தினார்கள்.
வந்தியத்தேவன் வீட்டை நோக்கி நடந்தான். மற்றவரும் அவனைத் தொடர்ந்தனர். சிறிய வீட்டின் வாயிலை அடைந்ததும் வந்தியத்தேவன் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான்.
சுற்றுமுற்றும் தன் கண்களைச் சுழலவிட்டு, யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை.
செவ்வேந்தியிடம் பூட்டை உடைக்குமாறு பணித்தான். வீரர்கள் பூட்டை உடைத்தார்கள்..
அவர்களை வெளியிலேயே காவலிருக்கச் செய்துவிட்டு, திருமலையும் வந்தியத்தேவனும் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்ற வந்தியத்தேவனும், திருமலையும் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
ஆனால்..
அங்கே அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“திருமலை!உள்ளே நன்றாக சோதனை செய்தும் பயன் ஒன்றுமில்லையே! உள்ளே ஒரு புத்தர் சிலையைத் தவிர வேறேதுமில்லையே! ஒன்றும் புரியவில்லை! நமது முயற்சி வீண்தானா?” என்றான் கவலையுடன் வந்தியத்தேவன்.
திருமலை தனது பாதி மழித்த தலையை கையால் ஒருதரம் தடவிக் கொண்டான்!
“இல்லை வந்தியத்தேவா..சிறிது பொறு. நாம் சற்று வெளிப்புறமாகப் பார்ப்போம். நீ இடதுபுறமாகச் செல். நான் வலதுபுறம் பார்க்கிறேன்” என்று கூறி மளமளவென்று தனது சரீரத்தைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் வந்தியத்தேவனின் பதிலை எதிர்பாராமலே.
வீட்டைச்சுற்றி வலம் வந்தான். கிழக்குப் பக்கத்துச் சுவற்றை வந்தடைந்ததும், அவனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷ மிகுதியில் அவன் கூவத்தொடங்கினான்.
“வந்தியத்தேவா!கவலை வேண்டாம்! நமக்கு வேண்டியவை வீட்டின் இந்தச் சுவற்றில் இருக்கின்றன” என்றான்.
அவன் கூக்குரலைக் கேட்டவுடன் வந்தியத்தேவன் அவன் நின்றிருந்த இடத்தை நாடினான்.
அங்கு பாறைச் சுவற்றில் தமிழில் இடதிலிருந்து வலமாய் எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவைகள் ஸ்ரீராமஜயம் எழுதுவதுபோல் முதலிலிருந்து கடைசிவரை தொடர்ச்சியாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம்..
அவைகள் ஏதோ மலைத்தொடர் போல் தொடர்ச்சியாக நீண்டுகொண்டே போயின.
இதனைப் பார்த்த வந்தியத்தேவன்.. சிறிது சிந்தனைக்குப் பின் திருமலையைப் பார்த்து “இந்த எழுத்துக்கள் நம்மை வேண்டுமென்றே, ஏமாற்றுவதற்காக செதுக்கப்பட்டிருக்கிறதுபோல் தோன்றுகிறது. இந்த ஆயிரக் கணக்கான எழுத்துக்களின் இடையே ஏதாவது குறிப்புகள் மறைந்திருக்கலாம்!” என்று கூறி செவ்வேந்தியைப் பார்த்து “செவ்வேந்தி, இந்த புத்த மகா வாக்கியங்களைத் தவிர வேறு மாற்றான வார்த்தைகள் இடையே செதுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை முதலிலிருந்து தொடங்கி கடைசி வரை ஆராய்ந்து பார்த்துச் சொல்” என்றான்.
செவ்வேந்தி அவ்வாறே ஆராய்ந்து மிகவும் உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான், பாதி வரை மாற்றான எழுத்துக்கள் ஏதும் இல்லை.
தொடர்ந்து அலசிக் கொண்டிருந்தான். திடீரென்று..
“வந்தியத்தேவரே, நீங்கள் சொன்னது உண்மைதான்.முதல் எழுத்து ‘கி’ தென்படுகிறது அதற்குபின் இடை இடையே ஒவ்வொரு தனியான எழுத்து ஆங்காங்கே புகுத்தப்பட்டிருக்கிறது” என்றான்.
மகிழ்ச்சியுடன் திருமலையை நோக்கித் திரும்பிய வந்தியத்தேவன், “செவ்வேந்தி! நீ சொல்லும் எழுத்துக்களை நான் தரையில் அப்படியே எழுதுகிறேன்” என்று ஒரு குச்சியைக் கொண்டு எழுதலானான்.
செவ்வேந்தி படித்துச் சொல்லச் சொல்ல எழுத்துக்கள் பிரிக்கப்பட்டன.
முதலில் ‘கி..ழ..க்..கு’ என்று தொடங்கி சொல்லிக்கொண்டே போனான். வந்தியத்தேவன் தரையில் குச்சியால் அவன் சொன்ன வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக எழுத ஆரம்பித்தான். இடை இடையே அவன் கண்டுபிடித்துச் சொன்ன வார்த்தைகள் கடைசியாக முடிவடைந்தன. வந்தியத்தேவன் எழுதிய வார்த்தைகள்..
வந்தியத்தேவன் சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்து தெளிவாக்க ஆலோசனை பண்ணினான்! விடை கிடைத்தது! கீழே வார்த்தைகளை விளக்கம் தரும் வகையில் எழுதினான்:
வந்தியத்தேவனும் திருமலையும் மண்டைகளைப் பிய்த்துக்கொண்டு வார்த்தைகளின் நோக்கத்தை அறிய முயன்றார்கள்.
வந்தியத்தேவன் “இந்த வார்த்தைகளில் மறைந்திருக்கும் புதிர் பொக்கிஷங்களை அடைவதற்கான வழியைச் சொல்லுகின்றன போலும்! முதல் புதிர் ‘கிழக்கு.’ இந்த இடத்திலிருந்து மறைந்திருப்பவை கிழக்கு திசையில் இருப்பதாக அறிவிக்கிறது” என்றான்.
“இரண்டாம் எழுத்து ‘கால்வாய்’ நாம் செல்லும் பாதை ஒரு கால்வாயில் கொண்டுபோய்ச் சேர்க்கும்” என்றான் திருமலை.
“நாம் இதுவரை எடுத்திருக்கும் விடைகளை மனதில் வைத்துப் பார்க்கும்போது கால்வாயின் முடிவில் வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அங்கு ஒரு பாறை! அதை அடைவதற்கான வழி இந்தப் புதிர்களில் கிடையாது! அதைப் பற்றி தெரிந்துகொள்ள கால்வாயின் முடிவில் ஏதாவது குறிப்புகள் அல்லது வழிகள் தென்படலாம்! பாறையின் கீழே மறைந்திருக்கும் இடத்தைப் பற்றி ஏதோ விளக்கம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மேலே ஏதோ புலப்படும் என்ற புதிரின் விடை அங்கு சென்றபின்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்” என்றான் வந்தியத்தேவன்.
“சபாஷ்!வந்தியத்தேவா, நாம் இப்போதே கிழக்கு நோக்கிச் சென்று கால்வாயைக் கண்டுபிடிப்போம்” என்றான் திருமலை.
எல்லோரும் கிழக்கு நோக்கி நடக்கலானார்கள்.
சிறிது நேரம் கழித்து சதுப்புநிலக் கால்வாய் ஒன்று தென்பட்டது. இயற்கையால் ஆக்கப்பட்ட கடல் தண்ணீர் நிறைந்த கால்வாய் கடற்கரையின் தென் பக்கத்திலிருந்து தொடங்கி வடக்கு திசையில், நீளமாக ஒரு நீண்ட ஆறுபோல் வளைந்து வளைந்து சென்றது. அங்கிருந்து பார்க்கும்போது முடிவில்லாத கால்வாய் போன்று தோன்றியது.
வந்தியத்தேவன் கால்வாயை அடைந்ததும் கிழக்கிலிருந்து திசையைத் திருப்பி வடக்கு வழியாக கால்வாயை ஒட்டி எல்லோரையும் அழைத்துச் சென்றான்.
சென்று கொண்டே இருந்தார்கள். ஆனால் முடிவு வருவதாக இல்லை! அவர்களின் மனோநிலை அவ்வாறு இருந்தது! ஓரிரு காத தூரம் வரை வந்திருப்பார்கள்! ஆரம்பம் என்றால் முடிவு ஒன்று இருக்கத்தானே வேண்டும்! அந்த கால்வாய் ஒரு மலைத் தொடரின் அடிவாரத்தில் வந்து முடிவடைந்தது.
வந்தியத்தேவன் எல்லோரையும் கையைக் காட்டி நிறுத்தினான். வடக்கில் கால்வாய் முடிந்த இடத்திலிருந்து, தொடர்ந்து அதே திசையில் மேற்கொண்டு ஏதாவது பாறை தென்படுகிறதா என்று பார்த்தான். மலையைத் தவிர பாறை அங்கு எங்கும் காணோம்!
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது..
“அதோ!மலையின் நடுவில் பார்! அங்கு ஓர் தனி பாறை தென்படுகிறது. புதிரில் கூறப்பட்டிருந்தது போல் இங்கிருந்து வடக்கில்தான் இருக்கிறது. அந்தப் பாறையைத் தவிர பக்கத்தில் வேறு பாறைகள் இல்லை!” என்று உள்ளம் பொங்கக் கூறினான்.
“சரி திருமலை..நாம் அந்தப் பாறையை நோக்கி நகர்வோம்” என்று கூறி அனைவரையும் அப்பாறையை நோக்கித் திருப்பினான் வந்தியத்தேவன்.
எல்லோரும் பாறையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள். மலையில் பாறையின் தென்பாகத்தை அடைந்தார்கள்.
பாறை இரண்டு ஆட்கள் உயரமும், மேலே சுமாரான சமதரையும் இருப்பதையும் கவனித்துக் கொண்டான் வந்தியத்தேவன்.
“அடுத்த புதிர் ‘கீழே விளக்கம்’ அல்லவா?அப்படியென்றால் பாறையின் கீழ் ஏதாவது தென்படுகிறதா என்று பார்க்கலாம்” என்றான் வந்தியத்தேவன்.
அவனும் திருமலையும் பாறையைச் சுற்றி முழுவதையும் அலசினார்கள். ஒன்றும் பயனில்லை. பாறையைச் சுற்றிலும் புதர் வளர்ந்து மண்டியிருந்தது.
வந்தியத்தேவன் “திருமலை, ‘கீழே விளக்கம்’ என்ற புதிரின் விடை பாறைக்கு அருகில் மண்டியிருக்கும் புதரை அகற்றினால் தெரியக்கூடும்” என்றான்.
திருமலை அதை ஆமோதித்தான்.
இருவரும் மற்றவர் உதவியோடு பாறையைச் சுற்றிலும் அடர்ந்திருந்த புதர்களைத் தங்களின் வாளினால் வெட்டி அகற்ற ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வீரன் ஒருவன் “செவ்வேந்தி அவர்களே, இங்கு பாறையில் ஏதோ தென்படுகிறது” என்று கூவினான்.
அனைவரும் அவ்வீரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு நீண்ட சதுரமான திசைகாட்டியைப்போல் கல் ஒன்று, பாறையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, புதர்களை நீக்கியதால் தெரிய வந்தது. அதில் ஏதோ செதுக்கப்பட்டிருந்ததை வந்தியத்தேவன் கவனித்தான்.
அதில் ஒரு மலையின் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. ஒரு உருண்டைக் கல் மலையின் உச்சியின் சிறிது சரிவில் நன்றாக அமர்ந்திருந்தது! கீழே விழுந்துவிடாமல் சரிவில் இருந்தது ஒரு பெரும் அதிசயமாய் காணப்பட்டது! கல்லின் கீழ் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்ததையும், பெட்டியின் மேல் ஒரு மீனின் சின்னம் இருந்ததையும் கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தையும் அவர்கள் கண்டார்கள்!
திருமலையிடம் “கடைசியில் நாம் எதைத்தேடி வந்தோமோ அதன் இருப்பிடத்தைப்பற்றிய உண்மை தெரிந்துவிட்டது. ஆனால் எங்கே இருக்கிறது இந்த மலையும், உருண்டைக் கல்லும்?” என்றான் வந்தியத்தேவன்.
திருமலை “இதற்கான விடை கடைசி புதிரான ‘மேலே புலப்படும்’ என்பதில் இருக்கலாம்” என்றான்.
வந்தியத்தேவனும் திருமலையும் சிறிது நேரம் சிந்தித்தார்கள்.
“ஏன் திருமலை ஒருவேளை பாறையின் மேல் நமக்கு வேண்டியவைகளைப் பற்றிய மற்றும் ஒரு குறிப்பு கிடைக்குமோ என்னவோ?” என்று வினவினான் வந்தியத்தேவன்.
அதற்கு திருமலை “உண்மைதான் வந்தியத்தேவா. அப்படியாகத்தான் இருக்கவேண்டும். இவ்வளவு தூரம் வந்துவிட்டு அதையும் பார்க்காமல் போகமுடியாது. அதையும் பார்த்துவிடுவதே நல்லது” என்று ஆமோதித்தான்.
“திருமலை அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.இரண்டு ஆட்கள் உயரமான பாறை, செங்குத்தாக மற்றும் வழுமனாக இருப்பதால் அதில் ஏற ஏணி வேண்டும் அல்லது யுத்தத்தில் கையாளப்படும் இடுப்புடன் கூடிய கயிறு தேவை. அவை இரண்டும் நம்மிடம் இப்போது இல்லை. வேறு வழி கண்டு பிடித்தாக வேண்டும்” என்றான் வந்தியத்தேவன்.
ஒரு வழியும் அவர்களுக்குப் புலப்படாததால், கடைசியாக இதைப் பற்றி பேசி விவாதிக்க செவ்வேந்தியை அழைத்துப் பேசிப் பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தார்கள் இருவரும்..
செவ்வேந்தி “கவலையைவிடுங்கள். இது எங்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல! போர்ப் பயிற்சியில் இதை கையாளுவதைப் பற்றி நிறையவே கற்றிருக்கிறோம். ஒரு கணம் எனக்கு அவகாசம் கொடுங்கள்” என்று பதில் அளித்து வீரர்களிடம் சென்று கிசுகிசுத்தான்.
மூன்று வீரர்கள் வரிசையாக பாறையைப் பார்த்த வண்ணம் நின்றார்கள். நடுவில் இருந்தவனின் தோள்களில் பக்கத்திலிருந்தவர்கள் தலைக்கு ஒரு கையைப் போட்டு பிடித்துக் கொண்டனர். பிறகு மூவரும், பின் பக்கம் நான்கு கை விரல்களைக் கோர்த்து இரு கோப்பைகளாக்கினர். திருமலையும் செவேந்தியும் மூன்று வீரர்களுக்கு முன் வந்து நின்று கொண்டார்கள். இப்போது ஒரு வீரன் இடது பக்க கிண்ணத்தில் தன் ஒரு காலை வைத்து, இடப் பக்கமிருக்கும் இரு தலைகளிலும் தன் கைகளினால் அமுக்கி, நடுவரின் இடப்பக்க இரு தோள்களில் முதலில் தன் ஒருகாலைப் பொருத்தி, பின் மற்ற காலையும் வைத்து, மெதுவாக எழுந்து, இருகைகளையும் பாறையில் இருத்தி நன்றாக பாறையின் முன் சாய்ந்து கொண்டான்.
செவ்வேந்தி அவன் இரு கால்களை நன்றாகப் பிடித்துக் கொண்டான். அடுத்த வீரன் அவ்வாறே வலப் பக்கம் செய்தான். அவனிரு கால்களையும் திருமலை பிடித்துக் கொண்டான். இப்போது மேலிருக்கும் இருவரும் நான்கு கை விரல்களைக் கோர்த்து இரு கோப்பைகளாக்கினர்.
எஞ்சியிருந்த மாலுமிகள் வந்தியத்தேவனுக்கு உதவி செய்ய, அவன் இரு கோப்பைகளிலும் கால்களை வைத்து, தலைகளில் கைகளை வைத்து அமுக்கி, நடுவரின் தோளில் இரு கால்களையும் வைத்து மேலிருப்பவர்களின் உடம்பைப் பற்றியபடியே ஏறி நின்றான். பிறகு அதைப் போலவே மேலிருப்பவர்களின் தோள்களில், பாறையில் சாய்ந்த வண்ணம் ஏறலானான்.
வந்தியத்தேவனின் கால்கள் கிட்டத்தட்ட பாறையின் சமதரைக்கு இணையாக இருந்ததால், குனிந்து தரையில் கைகளை வைத்தபடியே ஏறி பாறையின் மேல்பாகத்திற்கு வருவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அங்கிருந்து தாவி பாறையில் ஏறி நின்றான்.
பாறையின் மேல்பாகத்தை முற்றிலும் நன்றாகச் சோதனை செய்தான். மூலை முடுக்கெல்லாம் தேடினான். என்ன ஏமாற்றம்! ஒரு குறிப்பும் தென்படவில்லை!
“திருமலை, இங்கு ஒரு விவரமும் இல்லை!இது பெரிய ஏமாற்றமே. இவ்வளவு சிரமப்பட்டும் பலன் இல்லாமல் போய்விட்டது” என்று பெருங் குரலில் கூறினான் வந்தியத்தேவன்.
பிறகு பாறையின் மறு பக்கத்தை நோக்கினான்.
மலையின் எஞ்சியிருந்த மேல் பாகம் தெரிந்தது. அதன் உச்சித் தொடர் நீண்ட நேர் கோடுபோல் இருந்தது ஒரு அதிசயமாகத் தென்பட்டது. உச்சியை அடைய சிறிது தூரமே பாக்கி இருந்தது. இதையெல்லாம் கவனித்த வந்தியத்தேவன்செவ்வேந்தியிடம் “கீழே வர இருக்கிறேன்” என்று கூறி சிறிது நேரத்தில், ஏறியதைப் போலவே இறங்கி வந்து அவர்கள் முன் நின்றான்.
“திருமலை, நமக்கு வேண்டியவைகள் இங்கில்லை” என்று மலையின் உச்சியைக் காண்பித்து “ஒருவேளை அங்கே புலப்படும்” என்றான்.
எல்லோரும் மறுபடி நடந்து உச்சியை அடைந்தார்கள். மறு பக்கத்தை நோக்கினார்கள். அவர்களின் கண்களை அவர்களால் நம்பமுடியவில்லை! மலையின் மறுபக்கத்தில் ஒரு பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு. சிறிது தூரத்தில் மரங்களும் செடிகளும் நிறைந்த ஒரு குன்று. அதன் சிகரம் இந்த மலையின் பாதி உயரமிருக்கும். சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது கீழே சரிவில், ஒரு உருண்டைக் கல்லின் மேல் பாகத்தின் முக்கால் பகுதி, பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்தது!
குன்றின் மறு பகுதியின் கீழே கடல் நீர். அது தீவின் மறு பக்க முடிவாக இருக்கலாம்! இவற்றையெல்லாம் எல்லோரும் கண்டார்கள்!
“இறுதியில் நமக்கு வேண்டியவைகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டோம்!வாருங்கள். அங்கு செல்லலாம்” என்று வந்தியத்தேவன் மலையின் மறுபக்கத்தில் இறங்கி நடக்கலானான். பள்ளத்தாக்கு மூலம் குன்றை சென்றடைய விரும்பினான். அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
எல்லோரும் பள்ளத்தாக்கில் இறங்கி சிறிது நேரம் சமதரையில் நடந்து குன்றின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
குன்று ஏறிச் செல்ல இயன்றதாய் அமைந்திருந்தது. உருண்டைக் கல்லின் அருகாமையில் வந்துசேர அவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
வந்தியத்தேவன் கல் அமர்ந்திருந்த இடத்தைக் கவனித்தான். அதைச் சுற்றிலும் பார்த்தான். நன்கு ஆராய்ந்தான். கைகளைக் கட்டிக்கொண்டு இரண்டு மூன்று தரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
திருமலையும் அவன் பங்குக்கு கையைப் பிசைந்துகொண்டு மனதை அலசி ‘எப்படி அந்தக் கல்லை நகர்த்துவது?’ என்பதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.
வந்தியத்தேவன் “மகிந்தன் யாரும் எளிதில் செய்ய இயலாத காரியத்தை எப்படியோ சாதித்திருக்கிறான்! கல்லின் அடியில் பொக்கிஷம் இருப்பது உண்மை! அதை அவனால் எப்படி அந்த இடத்தில் வைக்க இயன்றது? மாபெரும் சாதனை!” என்றான். பிறகு மேற்கு வானத்தை நோக்கி “சூரிய அஸ்தமனம் தொடங்க ஆரம்பமாகியிருக்கிறது. இனிமேல் பொக்கிஷத்தை அடையும் வழியைக் கண்டுபிடித்து, அதை இருட்டுவதற்குள் வெளிக் கொண்டுவருவது என்பது இயலாத காரியம். நாம் இப்போது படகுக்குத் திரும்பலாம். கலத்திற்குச் சென்று உண்ட பிறகு இரவில் அடுத்த காரியத்தை எப்படித் தொடங்கி முடிப்பது என்பதைப் பற்றி யோசிக்கலாம்” என்றான்.
எல்லோரும் வந்த வழி நடக்கலாயினர்.
ஆனால்..
அவர்களை இரு நரிக் கண்கள் நோட்டமிடுவதை யாரும் கவனிக்கவில்லை.
குன்றுக்கு வெகு தொலைவில் ஒரு புதருக்கு பின்னால் மறைந்திருந்த சோமன்சாம்பவன், வந்தியத்தேவன் குழுவினர் நடவடிக்கைகளை இமை கொட்டாது, இரத்தம் கொதிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் மறைந்ததும், வெளியில் வந்து தீவின் வட கடற்கரைக்குத் தலை தெறிக்க ஓடினான். படகில் ஏறி படகோட்டியிடம் வேகமாக வடக்குப் பக்கம் வலிக்கச் சொன்னான்.
மற்றவர்கள் நடந்து வந்துகொண்டிருந்த போது “நீ கொல்லிமலையில் கண்ட விவரத்தின்படி நாம் காலம் கடத்தும் ஒவ்வொரு கணமும் கடல் கொள்ளைக்காரர்களுக்கு சாதகமாய் அமையப்போகிறது. எந்த நேரத்திலும் அவர்கள் வந்து நமக்குத் தொல்லை கொடுக்கலாம்! என்று வந்தியத்தேவனிடம் கூறினான் திருமலை.
“அது முற்றிலும் உண்மை.இடும்பன்காரி கொல்லப்பட்டது இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய ஒரு நாள் சந்தர்ப்பத்திற்கு இப்போது பங்கம் விளையலாம்! அடுத்த நாள் அவர்கள் தொடங்க இருந்த பயணத்தை முதல் நாளிலேயே ஆரம்பித்திருக்கலாம்.. “ என்று வந்தியத்தேவன் சிறிது நேரம் மௌனமானான்.
இப்போது பாறைக்கு வெகு அருகில் அவர்கள் நடந்து வந்திருந்தார்கள்.
வந்தியத்தேவன் முகம் திடீரெனத் தெளிவடைந்தது. திருமலையின் தோளில் கையைப்போட்டு அவன் காதருகில், பாறைக்கருகில் இருந்த புதரைச் சுட்டிக்காட்டி என்னவோ சொன்னான். பிரகாசமடைந்த திருமலை, அவன் சொன்னதை ஆமோதித்தான்.
“நாளை விடியுமுன்னே நாங்கள் கிளம்பி எப்படியாவது பொக்கிஷங்களைப் பெறுவதற்கான வழியைக் கண்டுபிடித்து அவைகளை மீட்போம் என்பது உறுதி!நீ நமது கலத்திலிருந்து மற்றுமொரு படகில் மாதோட்டம் சென்று, வேளார் அனுமதியுடன் மூன்று போர்க் கலங்களுடன் இங்கு வந்து சேர்” என்றான் வந்தியத்தேவன்.
சரியென்று தலையை ஆட்டி திருமலை ஆமோதித்தான்.
படகு கலத்திற்கு வந்தவுடன், எல்லோரும் தயார் செய்யப்பட்டிருந்த உணவை உண்டார்கள். பின் திருமலை வேறொரு மாலுமியுடன் மற்றுமொரு படகில் மாதோட்டத்திற்கு விரைந்தான். வந்தியத்தேவன், செவ்வேந்தியிடம் விடிகாலையில், சூரியன் உதிக்கு முன்பே தீவுக்குச் செல்ல ஆயத்தம் செய்யும்படி ஆணையிட்டான். பின்பு எல்லோரும் உறங்கச் சென்றார்கள்.
வந்தியத்தேவன் நீண்ட யோசனைக்குப் பிறகு மனம் தெளிந்தவனாய் உறங்கலானான். ஏன் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்றும் சொல்லலாம்.
(தொடரும் )