தலையங்கம்

image

சென்னையையே குலுக்கும் அளவிற்கு 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பலி. கூலிக்கு வேலைசெய்யம் அந்த நைந்த உள்ளங்களின் நைந்த உடல்களைக் கூட நம்மால் எடுக்க முடியவில்லை! மாட மாளிகை கூட கோபுரம் கட்டி என்ன பயன்? 

ஜூன் மாதம் முதல் மின் வெட்டு இருக்காது.. என்று சொல்லும் போதே பவர் கட்.! தமிழக மக்களுக்கு  எதையும் தாங்கும் உள்ளமும்  உதையும் தாங்கும் உடம்பும் எப்போதும் உண்டு!

மோடியின் முதல் பட்ஜெட்! பா.ப.ப. ( பார்ப்பதற்கு பட்ஜெட் பரவாயில்லை! )  நிதியமைச்சர் முதுகெலும்பு தேய 45 நாட்கள் நன்றாக  ஹோம் வொர்க் செய்திருக்கிறார்! (அதனால் உரை படிக்கும் போது 5 நிமிஷம் ரெஸ்ட் இ‌டையே  எடுத்துக் கொண்டார்!) பீடி சிகரெட்டிலிருந்து ராக்கெட் வரை எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்! தீட்டவில்லை! ஐ‌ஐ‌டி ஐ‌ஐ‌எம் எல்லாம் வரப் போகுது! நல்ல காலம் தான்!அம்மா பாராட்டியிருக்கிறார். நல்ல சகுனம்  தான்! நமோநாமிக்ஸ் இதுதானா? இனிமேல்  தான் வருமா?  

இன்ஜினியரிங் சேர்க்கையில் ஐ‌டிக்கும் கம்ப்யூட்டருக்கும் மவுசு சற்று குறைந்து போயிருக்கிறது!

தமிழக மீனவர்கள்( இவர்கள் இந்தியர்கள் இல்லையா?) இலங்கையால்  படும் துயரம் தொடர்கதையாகவே இருக்கிறது! அம்மாவுக்கு லெட்டர் எழுதினால் வேலை முடிந்துவிடுகிறது! இவர்களுக்கு?

காவேரியில் தண்ணீர் வரவில்லை! நமது கண்களில் தான் வருகிறது! பருவமழைப் பொய்த்துவிட்டது என்று ரமணன்கள்  சொல்வதைக் கேட்டு நம் காது புளித்துவிட்டது.

காவிரி  தென்பெண்ணை பாலாறு  தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி  என
மேவிய ஆறுகள் பலவோட திரு
மேனி செழித்தது தமிழ்நாடு!

பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் தான் ஞாபகம் வருகிறது! 

ஐ‌பி‌எல் வெறி முடிந்து விம்பிள்டன் பைட்டும் முடிந்து  ஃபுட்பால் கொலைவெறியும்  முடிந்துவிட்டது! ஹோஸ்ட் பிரசீலுக்கு செமை நெத்தியடி! 7 கோல்  போட்டு அதம் செய்துவிட்டது ஜெர்மனி!

வெற்றிக் கோப்பையும் ஜெர்மனிக்கே!  சூப்பர்!

image

===================================================

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன் 

துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி

ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன் 

தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா 

=====================================================

பெருமாளே (விஜயலக்ஷ்மி)

image

பெருமாளே !       பெருமாளே !
ஸ்ரீ ரங்க நாதப்     பெருமாளே !
நாடி  வருகின்ற   கோடி       மக்களின்
குறை தீர்க்கும்     பெருமாளே – எங்கள்
குறை தீர்க்கும்     பெருமாளே !

பாற்கடலில்        பள்ளி       கொண்ட    பெருமாளே !
பாதங்களைப்       பணிகின்றோம்     இந்நாளே !
அறிவும்           இல்லாத    பொருளும்   இல்லாத
பாமரரைக்         காத்திடணும்  – இந்தப் 
பாமரரைக்         காத்திடணும் 

அலையலையாய்   மக்கள் கூட்டம்     வந்திடணும்
கோவிந்தன்  உன்  நாமம்       பாடிடணும்
ரத்ன சேவை கண்டிடணும்      முத்து சேவை கண்டிடணும்
ஏகாதசி      திருநாளிலே – வைகுந்த
ஏகாதசி      நன்னாளிலே !

பாரெல்லாம் உன்  நாமம்       பாட        வேண்டும்
தெருவெல்லாம்    பக்தி        வெள்ளம்    ஓட   வேண்டும்
தேடி உன்னை     நாடணும்    நாடி உன்னைப்     பாடணும்
நாராயணன்        நாமம்       எந்நாளுமே  – ஸ்ரீமந்
நாராயணன்        நாமம்       எந்நாளுமே !!

2048 game

நிச்சயமாக! இந்த விளையாட்டு உங்கள் நேரத்தை முழுவதும் ஆக்ரமித்துக்கொண்டால் அதற்குக் குவிகம்  பொறுப்பல்ல!

2048 game

ஜெயபரணி

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான சாண்டில்யனின்  கடல் புறாவைப் பலமுறை படித்ததின் தாக்கம் தான் இந்த  "ஜெயபரணி".

படங்களுக்கு  நன்றி  மணியம் செல்வன் .

image

             “ பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ “ என்ற ஜெயங்கொண்டாரின் சொல்லுக்கிணங்க சோழ நாட்டின் பெரும்படை கலிங்க தேசத்தை எரித்துக் கைப்பற்றிப் பரணி பாடும் அளவிற்கு அழியாப் புகழை ஏற்படுத்திய சோழ – கலிங்க யுத்தம் என்றைக்கு வெடிக்குமோ என்றிருந்த காலம் அது.  பின்னால் நடக்கப் போகும் பெரும் விபரீதத்தை உள்ளடக்கி வழக்கமான ஆரவாரங்களுடன் பவனி வந்து கொண்டிருந்தது கலிங்கத்தின் மாபெரும் துறைமுகப் பட்டினம் பாலூர்.

            தலையிலிருந்து கால் வரை பூரண கவசமணிந்து தயாராக நிற்கும் அழகான பெண்ணைப் போல காட்சியளித்தது பாலூர் நகரம்.  என்ன கவசங் கொண்டு மூடினாலும்  சீலையிட்டு மறைத்தாலும் பெண் என்ற இன்பப் பிரதியை – அவளின் அழகுப் பிரதேசங்களை முழுதும் மறைக்க முடியுமா ?  அதைப் போன்றே பாலூர் துறைமுகத்தின் போர்க்கால நடவடிக்கைகள் அதன் இயற்கை எழிலைக் கொஞ்சம் கூடக் குறைக்கவில்லை.

            பச்சை வண்ண சோலை வனத்தருகே நீண்ட கடற்கரை மணல் வெளி.  அந்த மணல் வெளியில் நடுவே முத்தும் பவழமும் பதிக்கப் பட்ட பொன்மீன் மேடை.   பௌர்ணமி முழு நாளில் நிலவின் கிரணங்கள் அந்த பொன்மீன் மேடையைச் சுற்றி ஒளி வெள்ளத்தால் நனைக்கும் பொழுது, தானாகவே தோன்றும் ‘ ‘ நிலவொளி மன்றம் ‘ என்ற திறந்த வெளி அரங்கம்.  பாரத தேசத்தில் அன்றைக்கு நிலவொளி மன்றத்தையும், பொன்மீன் மேடையையும் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. எத்தனை புலவர்கள் அவற்றின் எழிலைப் பற்றியும், அதில் நடைபெறும் கலைப் போர்களைப் பற்றியும் வரி வரியாக எழுதியுள்ளார்கள்.!

            கலைப்போர் ! ஆம். வைகாச வசந்த ருது பௌர்ணமியில் நிலவொளி மண்டபத்தில் வருடா வருடம் நடைபெறும் நடனப் போட்டிகள்தான் அந்த கலைப் போர்.  பாரதத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நடனப் பெண்மணிகள் வருவார்கள்.  ஏன் ! பாரசீகம், சீனம், கிரீஸ், அரபு நாடு போன்ற தேசத்து அழகிகளும் புத்த பௌர்ணமியில் அந்த பொன்மீன் மேடையில் ஆடும் ஒரு கணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.  நடனப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் ‘ நாட்டியப் பேரொளி‘’க்குக் கிடைக்கும் பரிசிலை வைத்து ஒரு சிற்றரசையே விலைக்கு வாங்கலாம்.  அது மட்டுமல்ல.  நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டுப் பெண்களின் அழகையும் திறமையையும் கணித்து ‘ அழகுப் பேரரசி ‘ என்ற பட்டம் அளிக்கப் பெறும் அழகுப் போட்டியும் நடை பெறும்.  அவற்றைக் காண வரும் மக்கள் கூட்டம் சொல்லி மாளாது.

            கலைப் போர் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.  கலை நிகழ்ச்சிகள் என்றாலே தமிழ் நாட்டின் பெண்மணிகளுக்கு எத்தனை விருப்பம் என்பதை எல்லோரும் உணர முடியும்.  அதுவும் சோழ நாட்டு கலா வல்லிகள் கலிங்கத்தின் பாலூரில் நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில் கலந்து கொண்டு பரிசில்கள் பெற்றுச் செல்வது ஒன்றே, கலிங்கத்துக்கும் சோழ நாட்டுக்கும் பகைமையை வளர்க்கக் காரணமாக இருந்தது.  இரு போட்டி நாட்டு கலைஞர்களுக்கிடையே நடை பெறும் போட்டிகளை, நாடுகள் மோதுவது போல எண்ணுவது மனித இயற்கைதானே !  தமிழகத்துத் தாரகைகள் நடனப் போட்டிகளில் வெற்றி பெறுவதைப் போல அழகுப் போட்டிகளில் பெரும்பாலும் கலிங்கத்துக் கட்டழகிகளே வென்று வந்தது கலிங்க மக்களுக்கு ஆறுதலை அளித்து வந்தது.

            போர் மேகம் திரண்டு எந்த நேரமும் சோழ – கலிங்கப் போர் துவங்கும் என்று இருக்கும் அந்த வருடம் புத்த பூர்ணிமா திரு நாளைக் கொண்டாடுவதா, வேண்டாமா என்ற பலத்த சர்ச்சை  இருந்து வந்தது.  இருப்பினும் இது நாள் வரை நடைபெற்ற விழாவைப் போர்க் காலத்தை முன்னிட்டு நிறுத்தினான் என்ற அவப் பெயர் தனக்கு வரக் கூடாது என்பதற்காக, விழாவை வழக்கத்தை விட சிறப்புடன் நடத்த உத்தரவிட்டான் கலிங்க மன்னன் அனந்த வர்மன்.  ஆனால் அதே சமயம் நாட்டின் பாதுகாப்பையும் நன்றாக இறுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தான்.  அதனால் மக்கள் கூட்டத்தை விடப் போர் வீரர்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.  சில துஷ்டப் பெண்கள் கூட “ இந்த வருடம் பருவப் பெண்களின் நாட்டியத்தை விட போர் வீரர்களின் நாட்டியந்தான் அதிகமாக இருக்கிறது “ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்கள்.

            அது மட்டுமல்லாமல் எரிகிற தீயில்  எண்ணெய் வார்த்தது போல முதல் ஒன்பது நாட்களில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தயார் நிலையில் இருக்கும் நாடுகளில் சோழ நாடும் கலிங்கமும் இருந்தது.  அதுவும் சோழ நாட்டு கார்குழலியின் நடனத் திறமையைப் பற்றிப் பேசாத மனிதனே இல்லை.  அவள் பெண்தானா, இல்லை தேவலோகத்திலிருந்து குதித்த ரம்பையா என்ற சர்ச்சை நிலவியது.  கார்குழலிக்கும் கலிங்கத்தின் கனவுக் கன்னி காமவல்லிக்கும் கடும் போட்டி இருந்து வந்தது.  காமவல்லியின் புது விதமான சுழல் நடனங்கள் கலிங்கத்துக்கு வெற்றி தேடித் தரும் என்று கலிங்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

            பொன்மீன் மேடையை ஒட்டிக் கட்டப் பட்டிருந்த சிறு சிறு குடில்களில் அன்றைக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் ஒப்பனை புரிந்து கொண்டிருந்தனர். அந்தக் குடில்களிலிருந்து நேரடியாக மேடைக்குச் செல்லத் தனித் தனியாக திரைச் சீலைப் பாதையும் அமைக்கப் பட்டிருந்தது  சேடிப் பெண்கள் சூழ இருக்கும் அழகுத் தாரகைகளும் அருகில் ஆண்மகன் யாரும் இல்லை என்ற தைரியத்தில் தங்கள் அழகுகளைச் சற்று சுதந்திரமாகவே விட்டு வைத்திருந்தார்கள்.

            சோழ நாட்டுக்காக விடப் பட்டிருந்த குடிலில் கார்குழலி தன்னை அலங்கரித்துக் கொள்வதை விட உடன் ஆடும் மற்றப் பெண்களின் அலங்காரத்தைச் சரி செய்வதையே கவனித்துக் கொண்டிருந்தாள்.  “ தேவி ! தாங்கள் இன்னும் தயாராகவில்லையே “ என்று தோழி சந்திரமதி கூறியதும் தான் சுவற்றில் பதித்திருந்த ஆள் உயர எழினியில் தன் கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்   கார்குழலி.  ‘ இப்படியா அரை குறை ஆடையுடன் உலவிக் கொண்டிருந்தோம், எந்த ஆடவனாவது தன்னை இந்தக் கோலத்தில் பார்த்து விட்டால் ‘ – அந்த எண்ணம் அவளது சிவந்த முகத்திற்கு அதிக சிவப்பை அளித்தது.  பாதம் வரை படர்ந்த அந்தக் கார்குழலை சீவி நெற்றிச் சுட்டி அணிந்து,  இந்த முகத்திற்கு ஒப்பனை தேவையேயில்லை என்பதைப் போன்ற சிவந்து, கனிந்த முகமும், சாதாரணப் பார்வையிலேயே நயன நாடகம் புரியும் கயல் மீன் கண்களும், கச்சைக் கயிற்றை இறுக்கிக் கட்டாததால் கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் மாங்கனிகளும், இறுக்கினால் ஒடிந்து விடுமோ என்று மேகலை கூட மெல்லப் பற்றியிருக்கும் இடையும், முழங்கால் வரை மறைக்கும் பட்டுச் சிற்றாடையும், வழவழப்பில் குழலியிடம் தோல்வி கண்டு நிற்கும். அந்தத் தந்த சிலைக்குக் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதே வெட்கமாக இருந்தது.  கூட இருக்கும் சேடிப் பெண்களின் கண்களில் கூடக் கார்குழலியின் அழகு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. அதைக்  கண்ட சந்திரமதி, “ .“பெண்களே நீங்கள் மேடை அமைப்பைக் கவனியுங்கள்.  நான் தலைவிக்கு அலங்காரம் செய்கிறேன் “ என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

“கதவை நன்றாகச் சாத்தடி சந்திரமதி ! யாராவது வந்து விடப் போகிறார்கள் “

“ யாரும் வரமாட்டார்கள் அம்மா ! நீங்கள் வீணாய்க் கவலைப் படாதீர்கள்.” என்று கூறி அன்று அவளுக்கு அணிவிப்பதற்கான கருஞ் சிவப்புப் பட்டுப் புடவையை எடுத்து வைத்தாள்.

“ உங்களை இப்படிப் பார்க்கும்போது நான் ஆண்பிள்ளையாய் இல்லையே என்ற ஏக்கம் வருகிறதம்மா !’ 

‘ என்ன வெட்கம் கெட்ட பேச்சுப் பேசுகிறாய் சந்திரமதி ?

“ சத்தியமாய் அம்மா ! நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன் !  இன்றைக்கு நிலவொளி மன்றத்தில் நீங்கள் ஜொலிக்கும்போது, எத்தனை ராஜ குமாரர்கள் உங்களைக் கண்டு உருகப் போகிறார்களோ ?  எல்லாப் பெண்களும் உங்களைப்  பார்த்து பொறாமைத் தீயில் வாடப் போகிறார்கள்! .”

“ பரிகாசப் பேச்செல்லாம் வேண்டாம் சந்திரமதி !”

“ எப்படியோ அம்மா! இதுவரை அம்பலத்தில் ஆடிய நீங்கள் இனி அறையில் ஆட வேண்டிய காலம் வரத்தான் போகிறது.”

“ என்னடி புதிர் போடுகிறாய்?”

“ ஆம்! அம்மா! தங்கள் தாயார் கூறியதைத்தான் கூறுகிறேன்.  இன்னும் இரண்டு திங்களில் இந்தத் தந்த தேகத்திற்குப் புது சொந்தக்காரர் வரப் போகிறார். “

“ எனக்கே தெரியாமல் எவன் வரப் போகிறான்?”

“ வரப் போகிறவரை அவன் இவன் என்று சொல்லாதீர்கள் அம்மணி !  தங்கள் தந்தையாருக்கும், சிறிய தந்தையாருக்கும் இதில் சம்மதம் தானாம்.”

“ சந்திரமதி ! வாயை மூடு ! எதையும் இரைந்து பேசாதே !  நாம் இருக்கும் நாடு எது என்று புரிகிறதா ? “

“ ஏன்! கலிங்க நாடு ! அதற்கென்ன ? பயப்படுகிறீர்களா தேவி ?”

“ யாரைப் பார்த்தடி ‘ பயப்படுகிறீர்களா ‘ என்று கேட்டாய் ?  பல்லவராயரைத் தந்தையாகவும்,கருணாகரரைச் சிறிய தந்தையாகவும் அடைந்த நானா பயப்படுவேன்?” கோபத்தில் வார்த்தைகள் சற்று அதிர்ந்தே பிறந்தன .. அதன் விளைவுதான் பயங்கரமாக இருந்தது.  தீப்பொறி போல சம்பவங்கள் தொடர்ந்தன.

            கார்குழலி பார்த்துக் கொண்டிருந்த ஆளுயரக் கண்ணாடி நகர்ந்தது.  அதற்குப் பின்னாலிருந்து குறுவாளில் குருதி சொட்ட அறைக்குள் நுழைந்தான் ஓர் ஆறடி உயர வாலிபன்.  திடுதிப்பென்று நிகழ்ந்த அந்த செயலைக் கண்ட அதிர்ச்சியில் மயங்கியே விழுந்து விட்டாள் சந்திரமதி.  ஆனால் சோழ நாட்டின் பிரதான படைத் தலைவரும், பல்லவ வழித் தோன்றலும், பிற்காலத்தில் ‘ தொண்டைமான் ‘ என்ற பட்டம் பெற்று வண்டை  நாட்டு மன்னனாக முடி சூட்டப் பட்டவருமான கருணாகரத் தேவரின் அண்ணனும், பல போர்க்களங்களைக் கண்டு போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதையே தன் தொழிலாகக் கொண்ட பல்லவராயரின் புதல்வியாகக் கார்குழலி இருந்ததால், வந்தவனைத் துணிவுடன் ஏறெடுத்துப் பார்த்தாள்.  நல்ல உயரமும், மென்மையான உடல் வாகும், வீரக் களையும் சொட்ட நிற்கும் அந்த வாலிபன் பெருங் குடியைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதை ,அவன் கண்கள் அவளைப் பார்த்து விட்டுத் தரையைப் பார்த்ததிலிருந்து புரிந்து கொண்டாள்.  தான் இருந்த அரைகுறை நிலை அவளுக்கு நினைவு வர, பட்டாடையை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, “ யார் நீ “ என்று சீறினாள்.  அவனது மௌனம் அவளது கோபத்தைக் கிளறவே, “ அத்து மீறி இங்கு வருபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா “ என்று கனல் தெறிக்கக்  கேட்டாள்.

 image

      “ தெரியும் ! மரண தண்டனை !  அதைத் தான் இவனுக்கு அளித்தேன் “ என்று கூறி சரேலென விலகினான்.  அவனுக்குப் பின்னால் இருந்த  சுரங்கப் பாதையில் நெஞ்சில் குருதி கொப்பளிக்கப் பிணமாய்க் கிடந்தான் கலிங்கத்தின் காவலன் ஒருவன்.  கலிங்க வீரனைக் கொன்ற அந்த வாலிபன் அனந்தவர்மனின் பார்வையிலிருந்து தப்ப முடியாதே என்ற உணர்ச்சியால் கேட்டாள்.  “ யார் நீங்கள் ?”

“ விஜயேந்திரன் “ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டுத் திடுக்கிட்டாள் கார்குழலி.

“ யார் ! சாவகத் தீவின் இளவரசரா ?”

“  ஆம் ! தேவி ! தங்கள் சிறிய தந்தையின் உப தளபதி. சந்தேகமாயிருந்தால் இதோ பாருங்கள் “ என்று கூறி தனது இடது புஜத்தைக் காட்டினான்.  சுறாமீனின் பற்கள் பட்ட வடு அவனது புஜத்தை விகாரப் படுத்துவதற்குப் பதிலாகத் தனி அழகைக் கொடுத்திருந்தது.  அவனுடைய வீரக் கதையையும் அது பறை சாற்றியது. சோழ நாட்டுப் பெண்ணொருத்தியை சுறா மீனிடமிருந்து காப்பாற்றுகையில், சுறா மீன் அவனது இடது புஜத்தைக் கவ்வி இழுக்க, வலது கரத்தால் அதைக் கொன்ற மாவீரன் விஜயேந்திரன் என்பது அன்று தமிழகம் முழுவதும் பிரசித்தம்.  நடனப் போட்டிக்குக் கட்டாயம் போவேன் என்று தீர்மானித்துக் கூறியதும், தனது சிறிய தந்தை கூறியதும் நினைவிற்கு வந்தது. 

“ குழலி ! நிலவொளி மன்றத்திற்கு எப்படியும் போவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாய் ! அனந்தவர்மனைப் பற்றி நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை !  பரவாயில்லை ! உனக்காக உன்னைக் காப்பாற்ற எனது வலது கரம் அங்கிருக்கிறது “

            அதுவுமில்லாமல் அவளது தந்தையும், தாயும் அடிக்கடி அவளிடம் விஜயேந்திரனைப் பற்றிப் பிரஸ்தாபித்து வந்தது, சற்று முன் சந்திரமதி கூறியது, இரண்டையும் சேர்த்துப் பார்த்த அந்த புத்திசாலிப் பெண் தனக்கு முன்னே நிற்பவன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளன் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறவில்லை.  வெட்கத்தில் அவள் நெளியும்போது தானா அந்த விபரீதமும் நடக்க வேண்டும் ?  அவள் மார்பில் போர்த்தியிருந்த பட்டாடை வழுக்கித் தரையில் விழ, அவளது அழகுகள் விஜயேந்திரனை மின்னல் போலத் தாக்க, அந்த சில வினாடிகள் யுகங்களாகத் தேங்கின.  மயக்கம் தெளிந்து எழப் புறப்பட்ட சந்திரமதி இருவரது மயக்கத்தையும் தெளிய வைத்தாள். விஜயேந்திரனே மௌனத்தைக் கலைத்தான்.

            “ தேவி ! தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து அதிகமாகிறது.  நீங்கள் யார் என்ற உண்மை இருவருக்குத் தெரிந்து விட்டது.  ஒருவனைத்தான் கொல்ல  முடிந்தது.  மற்றவன் ஓடிவிட்டான், காலில் என் குறுவாள் பதிந்தும் கூட.  அதனால் நீங்கள் இப்போதே என்னுடன் வாருங்கள். உங்களைப் பத்திரமாக சோழ நாடு சேர்ப்பிப்பது என் கடமை.”

தன்னைக் காப்பாற்ற ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் குழலிக்கு அதிக தைரியத்தைக் கொடுத்தது.

“ மன்னிக்க வேண்டும் சாவக இளவரசரே ! இத்தனை  தடைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் ஓடுவது நமது சோழ நாட்டுக்கு அவமானமல்லவா? “

“ தேவி! நான் சொல்வதை…..” என்று மேலே சொல்லப் போனவனை பேச முடியாமல் செய்தது அருகிலிருந்த கடல் தேவி ஆலயத்தின் மணி ஓசை.  அந்த ஆலயமணி ஓசை அவர்கள் தப்பிக்கும் பாதையை அடைத்து விட்டதே என்று வருந்தினான்.  அந்த பூஜை முடிந்த பிறகுதான் போட்டிகள் துவங்கும்.  பூஜை ஆரம்பித்த பிறகு நிலவொளி மன்றத்திற்கு யாரும் வர இயலாது.  அது போல திரும்பிப் போகவும் முடியாது.  அப்படிப் பாலூர் நகரின் காவலை அமைத்திருந்தான் அனந்தவர்மன். 

“ இனி பேச நேரமில்லை தேவி! இன்னும் சில வினாடிகளில் உங்களுக்கு அழைப்பு வந்து விடும் – மேடைக்கு வரச் சொல்லி.  மேடையில் ஆபத்தை எதிர் பார்க்கிறேன்.  ஆனால் எனது கரங்கள் உங்கள் பாதுகாப்புக்குத் தயாராய் இருக்கும்.” என்று கூறி வந்த வழியே மறைந்து விட்டான் விஜயேந்திரன்.

            ஆதவன் நிலத்தில் மறைய நீரிலிருந்து எழும்பிய முழுமதி – புத்த பூர்ணிமா மெல்ல உச்சிக்கு வரத் தொடங்கியது.  அதன் வெள்ளிக் கிரணங்கள் அந்த நிலவொளி மன்றத்தை அதன் பெயருக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தது.  அதற்கு வெகு நேரம் முன்னரே மக்கள் வெள்ளம் மன்றத்தில் நிரம்ப ஆரம்பித்து விட்டது.  காவலர்கள் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை வைப்பது போல பந்தங்களைக் கொளுத்தி அதற்காக அமைக்கப்பட்ட கம்பங்களில் சொருகிக் கொண்டிருந்தனர்.  பொன்மீன் கடல் மணலில் படுத்திருப்பதைப் போலிருக்கும் அந்த பொன்மீன் மேடை  வண்ணத் தோரணங்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு தேவேந்திரனது நாட்டிய  சபையைப் போலக் காட்சியளித்தது.  பொன்மீன் மேடைக்குச் சற்றுத் தூரத்திலிருந்த கடல் தேவியின் ஆலயத்தின் மணியோசை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.  மக்கள் அனைவரும் பூஜைக்குப் பிறகு தொடரப் போகும் நாட்டிய நிகழ்ச்சிகளைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். 

            கடல் தேவியின் ஆலய மணியின் ஓசை நின்று ஒரு நிசப்தத்தைத் தோற்றுவித்தது. அங்கிருந்து வெளியே வந்த நான்கு பூசாரிகளில் ஒருவர் உச்சாடன நீர் எடுத்து வர, மற்றொருவர் குங்குமப் பிரசாதம் எடுத்து வர, மூன்றாமவர் உடுக்கு அடித்து வர,  நான்காமவர் வெண்கலத் தாம்பாளம் போன்ற மணியில் ‘ ணங் ணங் ‘என அடித்து வர – அந்நால்வரும் பொன்மீன் முகப்பில் இருக்கும் மேடையில் பொன்னாலான துர்க்கை அம்மனுக்குப் பூஜை செய்து முடிக்கவும் ‘ ஜெயவிஜயீபவ ‘ ‘ கலிங்காதி மன்னர் அனந்தவர்மர் வாழ்க ‘ என்ற வாழ்த்தொலி எழும்ப, அனந்தவர்மன் மன்றத்தில் நுழைந்தான்.  எப்பொழுதும் போர்க் கோலத்தில் இருக்கும் அனந்தவர்மன் அன்று பட்டாடை உடுத்தி, இடுப்பில் பட்டையான வாளும் கட்டியிருந்தது அவனை வித்தியாசமான கலாரசிகனாகக் காட்டியது.  குங்குமப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட அனந்தவர்மன் வலக் கரத்தை உயர்த்தி சமிக்ஞை செய்ய நாட்டியப் போட்டிகள் முறையாகத் துவக்கப் பட்டன. 

            வேங்கி நாட்டு நடனக் குழுவும், அதைத் தொடர்ந்து வந்த வங்க தேசம், ஸ்ரீவிஜயம் ஆகிய நாட்டு நடன அரசிகளும் சேர்ந்து மக்களுக்குப் புதிது புதிதான நாட்டிய முத்திரைகளைக் காட்டி மகிழ்ச்சிப் படுத்தினர்.  நான்காவதாகக் கலிங்கத்தின் நட்சத்திரமான காமவல்லி மேடையில் வந்து அழகுகள் தெறிக்க மயக்கும் புன்னகையுடன் நின்ற போது, கலிங்க மக்களின் உற்சாகம் கரை புரண்டது.  ‘ காமவல்லி’ ‘ காமவல்லி ‘ என்று கூறிக் கொண்டே மக்கள் வண்ண மலர்களை வாரித் தூவினர்.  அதுவும் காமவல்லி ரதி தேவியாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு மன்மதன் மீது காதல்  பாணம் தொடுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவனையும் அது மன்மதனாகவே மாற்றியது.  கரகோஷம் வானைப் பிளந்தது.  மக்களின் ரசனையை நன்கு புரிந்து கொண்ட காமவல்லியும், உடல் குலுக்கி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தாள்.  இம்முறை ‘ நாட்டியப் பேரொளி ‘ இவள்தான் என்பதை ஒவ்வொரு கரகோஷமும் கட்டியம் கூறியது.

image

            கடைசியாக வந்தது சோழ நாட்டின் முறை. திரைச் சீலைக்குப் பின்னால் நடனம் ஆரம்பிப்பதற்கு முன் செய்யப்படும் பூஜை மணி ஓசை கடைசியில் நிற்கும் காவலர் கூட்டத்திற்குக் கூடத் துல்லியமாகக் கேட்கும் அளவிற்கு அமைதி விளங்கியது.  திரைச் சீலை அகன்றதும், நடராசப் பெருமானைப் போல ஒற்றைக் காலில் நின்று பதம் பிடித்துக் கொண்டிருக்கும் கார்குழலியைக் கண்டு கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது.  இவள் பெண்ணா, அல்லது பொன்னாலான சிலையா என அனைவரும் வியந்து நிற்கும் பொழுது கார்குழலியின் நயனங்கள் மெதுவாக அசையத் தொடங்கின.  அதைத் தொடர்ந்து அவளது விரல்களும், பாதங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அசையத் துவங்கியது.  ஒரு நாட்டியப் பிரளயம்.  இப்படி ஒரு தெய்வீக அழகு இருக்க முடியுமோ என அனைவரும் அதிசயிற்கும் அளவிற்கு அவளது நாட்டியம் தொடர்ந்து நடை பெற்றது.  பாதங்கள் பூமிக்கும், வானத்திற்கும் பறக்க, கண்கள் பாவங்கள் ஆயிரம் காட்ட, சுழன்றாடும்போது பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் பகையை மறந்து அவளுக்கு அடிமையாயினர்.  கடல் தேவியின் பூசாரிகளில் ஒருவனாக வந்து பொன்மீன் மேடைக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் விஜயேந்திரன் கூட இப்படி ஒரு நடனத்தை ஆயுளில் கண்டதில்லை என்று வியந்து கொண்டிருந்தான்.  அதே சமயம் கலாரசிகர்கள் எண்ணற்றவர் இருப்பினும் பொறாமைத் தீயில் வேகும் சில வெறியர்களின் செய்கை பின்னால் கலிங்கத்தை எரிக்கக் காரணமாயின என்ற சொல்லுக்கிணங்க சம்பவங்கள் தொடர்ந்தன.

            வண்ண விளக்குகளைக் கையில் வைத்துக் கொண்டு தங்கத் தாம்பாளத்தில் நின்று தீப தேவதையாகக் கார்குழலி காட்சி அளித்து சிலை போல மாறி நிகழ்ச்சியை முடித்த உடனேயே மேடைக்கு வந்த நடுவர்கள் கார்குழலியை ‘ அழகுப் பேரரசியாக ‘ அறிவித்ததோடு மட்டுமல்லாமல், நாட்டியப் போட்டியிலும் சோழ நாடு வெற்றி பெற்றதாக அறிவித்ததும் மக்களின் கரகோஷம் வானைப் பிளந்தது.  அதே சமயம், கலிங்க நாட்டு வெறியர்கள் குழப்பம் விளைவிக்கவும் தலைப்பட்டனர். சம்பிரதாயமாக வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில் வழங்கும் கலிங்க மன்னன் அனந்தவர்மனாலும் சோழ நாட்டின் வெற்றியை ஜீரணிக்க இயலவில்லை.  தயக்கத்துடன் மேடைக்குச் செல்ல எழுந்த அனந்தவர்மன் காதில் கலிங்கத்தின் காவலன் ஒருவன் ஏதோ கூற, அவன் ஆத்திரத்துடன் மேடை மீது ஏறினான். 

image

“ எனதருமை மக்களே ! நாட்டியப் போட்டியிலும், அழகுப் போட்டியிலும் வெற்றி பெறும் மகளிருக்கு செங்கதிர் மாலையும், தங்கப் பதக்கமும் மற்றும் நவரத்தினங்களையும் பரிசில்களாக அளிப்பது நம் பழக்கம்.  இம்முறை இரண்டிலும் வெற்றி பெற்ற கார்குழலி நங்கையாருக்கு எமது பாராட்டுதல்கள்.  நடனம், அழகு மட்டுமல்லாமல் நாம் வைக்காத மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தப் பெண்ணை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.  அதுதான் உளவு வேலை.  ஆம்! இந்தப் பெண் நடனப் போட்டியில் கலந்து கொள்ள வந்ததின் முக்கிய நோக்கம் நமது கலிங்கத்தின் படை பலத்தையும், போர் ரகசியங்களையும் தெரிந்து கொள்ளத்தான்.  அதுமட்டுமல்ல, இவள் யார் தெரியுமா? சோழ நாட்டின் சேனாபதியின் அண்ணன் மகள். இவளது ரகசியத்தைத் தெரிந்து கொண்ட நமது கலிங்க வீரனைக் கத்தியால் குத்தி ‘ கொலையரசி ‘ என்ற பட்டமும் பெறப் போகும் பெண்ணரசி இவள்.  அழகாக இருக்கிறாள்; அற்புதமாக ஆடுகிறாள்: ஆனால் முடிவில் விஷத்தைக் கக்கப் போகிறாள்.  ஆம்! இவள் ஒரு படமெடுத்தாடும் பாம்பு.  இந்த நாக கன்னிகைக்கு என்ன பரிசு தருவது? நீங்களே தீர்ப்புச் சொல்லுங்கள் “  மக்களின் உணர்ச்சிகளுக்கு நெருப்பு வைத்தான் கலிங்க மன்னன்.

“ கொல்லுங்கள் ! நாகப் பாம்பை அடியுங்கள் “ என்ற குரல் முதலில் குழப்பம் விளைவித்த வெறியர்களிடமிருந்து எழுந்தது.  அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு “ மக்கள் தீர்ப்பே இந்த மன்னன் தீர்ப்பு . சவுக்கால் அடிபட்டு இவள் இந்த நிலவொளி மன்றத்தில் பொன்மீன் மேடையிலேயே மரணமடைய வேண்டும்.  அதுதான் அவளுக்கும் அவளை அனுப்பிய சோழ நாட்டுக்கும் சரியான தண்டனை.  அதையும் நானே நிறைவேற்றுகிறேன்” என்று கூறி இடுப்பில் சொருகியிருந்த சவுக்கை எடுத்து அவள் முன் நின்றான்.

“ கலிங்க மன்னனே ! கலிங்க கலா ரசிகர்களே ! நாட்டியத்தின் மீதுள்ள காதலால் தான் இந்த நிலவொளி மன்றத்திற்கு வந்தேனே தவிர வேறு உளவுத் தொழில் புரிய அல்ல.  அதுவும் பெண்களை இதற்கு அனுப்பும் வழக்கமும் சோழ நாட்டில் இல்லை.  இன்னொன்றையும் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள். பல்லவராயரின் மகள் சாவைக் கண்டு பயப்படும் கோழை அல்ல.  உங்கள் தண்டனை என்னை ஒன்றும் செய்யாது.  ஆனால் நான் சிந்தப் போகும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் இந்த கலிங்க நாடு பதில் சொல்லும் காலம் வரும்.  இது சத்தியம் “ என்று கூறினாள் கார்குழலி.

image

“ அதையும் பார்ப்போமே “ என்று கூறி சாட்டையால் அவளை மூன்று முறை ‘ பளீர் பளீர் ‘ என்று அடித்து விட்டு அவள் எப்படி துடிக்கிறாள் என்று பார்த்தான் அனந்தவர்மன்.  சாட்டை அடிபட்ட அந்தத் தந்தத் தேகத்திலிருந்து ரத்தம் பீரிட்டது.  இவ்வளவு நேரம் எல்லாவிதமான பாவங்களையும் முகத்தில் காட்டிய கார்குழலி அப்போது எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக நின்றாள்.  அவளது அமைதி அனந்தவர்மனின் ஆத்திரத்தைக் கிளப்பியது. மறுபடியும் அவளை அடிக்கக் கையைத் தூக்கிய போது தான் கழுத்தில் கூர்மையாக ஏதோ குத்துவதை உணர்ந்து பின்னால் திரும்ப எத்தனித்தான்.  “ இன்னும் ஒருமுறை உன் கை அசைந்தால் உனது உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும் “ என்று சொல்லி கடல் தேவியின் சூலாயுதத்தை அனந்தவர்மன் கழுத்தில் வைத்து அழுத்தி ராட்ஷச னைப் போல் நின்று கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

            காவலர் ஆயிரக் கணக்கானோர் அருகில் இருந்தும் தனியே மேடைக்கு வந்த தன் விதியை நொந்து கொண்டான்.   “ டேய் ! உயிர் மீது ஆசையிருந்தால் உடனே ஓடிவிடு ! இல்லையென்றால்…..”

“ உன்னால் எதுவும் செய்ய முடியாது அனந்தவர்மா ! அக்கிரமக்காரனுக்கு சொந்த நாடே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொள்.  கார்குழலிக்கு நீ கொடுத்த சாட்டையடியே போதும், உன்னையும் உன் ஊரையும் எரிக்க.  ஆனால் நீ எனக்குச் செய்த துரோகத்திற்கு என்ன பரிசளிப்பது? ‘

“ யார் நீ?”

“ விஜயேந்திரன் ! தெரியவில்லையா ! சாவகத் தீவின் இளவரசன்.  உன்னால் மறக்க முடியுமா “  இருபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் தீவிற்கு விருந்தினனாக வந்து தங்கி என் தந்தையையும் தாயையும் பதில் விருந்துக்கு என உன் கப்பலுக்கு அழைத்து எரியும் நெருப்பில் அவர்களைத் தூக்கி எறிந்து என் நாட்டையும் கைப்பற்றிக் கொண்ட துரோகியே ! உன்னையும் உன் நாட்டையும் சுட்டு எரிக்கப் போகிறேன் பார் !  உன்னைக் காப்பாற்ற வரும் காவலர் கூட்டத்தை எப்படித் தடுக்கிறேன் பார் !” என்று கூறி சூலாயுதத்தின் பின்புறத்தால் அருகிலிருந்த வெண்கல மணியை அடிக்கத் தான் காண்பது கனவா, இந்திர ஜாலமா என்று புரியாமல் அனந்தவர்மன் திகைத்தான்.

            விஜயேந்திரனின் ஆட்கள் வரிசையாக வைக்கப் பட்டிருந்த விளக்குக் கம்பங்களிலிருந்து தீப்பந்தங்களை எடுத்து காவலர்கள் மீது வீச, காவலர்களின் முன்னேற்றம் தடைபட்டது.  பூசாரி வேடத்திலிருந்த விஜயேந்திரனின் மற்றுமொரு சேவகன் கையில் வைத்திருந்த நெருப்புச் சட்டியில் ஏதோ தூவ பெரும் புகை அந்தப் பொன்மீன் மேடையை சூழ்ந்து கொண்டது.  மேடையையே மக்கள் காண இயலாத அளவிற்குப் புகை மறைத்ததோடு மட்டுமல்லாமல் புகையின் எரிச்சல் கண்களைத் தாக்க மேடைக்கு எதிர்த் திசையில் மக்கள் வெள்ளம் ஓடவும் ஆரம்பித்தது.  யாரோ எறிந்த தீப்பந்தம் மேடையில் விழ, திரைச் சீலையிலெல்லாம் நெருப்புப் பிடித்துக் கொண்டு பரவத் தொடங்கியது.  அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு சூலாயுதத்தைத் தட்டி விட்டுத் தன் இடுப்பில் இருக்கும் பட்டை வாளை எடுக்க முயற்சித்தான் அனந்தவர்மன்.  ஆனால் அதற்குள் விஜயேந்திரனின் சூலாயுதம் தன் தோளில் பாயும் என்பதை அனந்தவர்மன் உணருவதற்குள் அது நிகழ்ந்தது.  மேடையில் உள்ள திரைச் சீலை எரியத் தொடங்கியதும், தப்பிச் செல்லும் வழி அடைபட்டு விடக் கூடாதே என்று விஜயேந்திரனும் மயங்கி விழப் போன கார்குழலியைத் தூக்கிக் கொண்டு நெருப்பின் ஊடே கடல் தேவி ஆலயத்தை நோக்கி ஓடினான்.

 “ அப்படியே படுத்துக் கொள் குழலி !” என்று கூறி, முதுகிலும், இடையிலும் பட்ட சாட்டைக் காயங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பை மெதுவாக ஒத்தினான் விஜயேந்திரன்.  உடலில் பட்ட வேதனையை விட முதுகை அவன் முகத்திற்குக் காட்டிக் கொண்டு அழகுகள் அழுந்த அவன் மடியில் படுத்திருக்கும் குழலிக்கு இன்ப வேதனைதான் அதிகமாக இருந்தது.  காயம் பட்டிருக்கிறது என்ற சாக்கில் தன் ஆடைகளைத் தேவைக்கு அதிகமாகத் தளர்த்தியும், ஒத்தடம் தருகிறேன் என்று கூறி முரட்டு இதழால் முத்தமிடும் அந்த வாலிபனின் சிகிச்சை இன்னும் தேவையாக இருந்த போதிலும் வெட்கம் வேட்கையைத் தடுக்க “ விடுங்கள் “ என்று கூறி எழ முற்பட்டவளை, அப்படியே அழுத்தி முதுகை மெல்ல வருடிக் கொடுத்தான்.

“ நாம் எங்கிருக்கிறோம்?”  மெதுவாக ஒலித்த கார்குழலியின் காதருகே ஒலித்தது விஜயேந்திரனின் மறுமொழி. “ சொர்க்கத்திற்கு அருகில் “

“ அதைக் கேட்கவில்லை “

“ நானும் அதைச் சொல்லவில்லை குழலி ! இந்த நதியைக் கடந்து விட்டால் தெரிவது தான் சோழ நாட்டின் பாசறை “

image

அப்பொழுதுதான் கவனித்தாள் குழலி, தானும் விஜயேந்திரனும் படகில் சென்று கொண்டிருப்பதை.  தன்னந்தனியாக நிலவு பொழியும் நள்ளிரவில் மனதுக்குப் பிடித்த மணாளன் மடியில் படகின் தாலாட்டில் மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணை மெல்லப் புரட்டினான். ‘ ம் ம் ‘ என்ற இன்ப வேதனை அவள் குரலில் தெரிந்தது.  நிலவின் வெள்ளிக் கீற்றில் அந்தப் பொன் முகத்தைப் பவழம் தவழும் இதழை ,விருந்துக்கு அழைக்கும் கன்னக் கதுப்பைக் கண்ட விஜயேந்திரன் தேனைக் கண்ட நரி போலானான்.  தன்னைக் காப்பாற்ற இவ்வளவு முன்னேற்பாட்டுடன் வந்திருக்கும் வீர புருஷனைக் கண்டதும் அவள் நாணம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொள்ளத் துவங்கியது.  தனது மலர்க் கரங்களைக் கொண்டு அவன் முகத்தைச் சிறைப் படுத்தினாள்.  மெல்லத் திறந்து மூடும் அவளது கண்கள் அவனை “ வா! வா! “ என அழைத்துப் பொன்னுலகத்தின் வாசலைக் காட்டியது.

            நதியின் பிரவாகத்திலிருந்து எட்டிப் பார்த்த மீன் கூட்டங்கள் கூட அந்தக் காதலர்களின் நிலையைக் கண்டு வெட்கி நதிக்குள் அமிழ்ந்து கொண்டன.

                      *******************************************************

       

 

 

அன்னையே தாயே

மாணிக்கப்   பதுமை     மரகதப்      பசுமை

மஞ்சள்     குங்குமம்    மங்கலப்     புன்னகை

நெளிந்த     குழல்கள்    ஜொலிக்கும் மூக்குத்தி

தழைந்த     ஆரம்       குலுங்கும்   கொலுசு

புஜங்களில்   வங்கி       கரங்களில்   வளையல்

இடையில்   மேகலை    ஜடையில்   வில்லை

நெற்றியில்  சுட்டி        விரலில்     மோதிரம்

காதில்      கம்மல்      கழுத்தில்    மாலை

தழைந்த     பட்டு        பாதத்தில்    மெட்டி

சேர்ந்த      உருவே     அழகுத்      திருவே

அன்னையே  தாயே       காத்திடு     எமையே !!

மரு

image

ஷீலாவுக்கு மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவில் ஸ்டிக்கர் பொட்டு வைத்தாற்போல மொழு மொழுன்னு மரு-மச்சம் – கருப்புக் கலரிலே!அது பர்த் மார்க்காம். அதைக் கண்டாலே அவளுக்குப் பயங்கர வெறுப்பு. அதுக்காகவே கண்ணாடி பார்ப்பதைக் கூட முடிஞ்ச வரை தவிர்ப்பாள். எமரி பேப்பர் போட்டுத் தேச்சுக் கூடப்  பார்த்தாள். ரத்தம் தான் வந்ததே தவிர மரு போகவில்லை. உதட்டுக் கிட்டே மச்சம் இருந்தா அதிலே ஆர்வம் ஜாஸ்தியாம் என்று பிரண்ட்ஸ்களின் கலாட்டா வேற. மற்றபடி பாக்க அசின் மாதிரி டக்கரா  இருப்பா. .

அதுக்காகவே டாக்டர் சுரேஷ் கருப்பாக இருந்தாலும் சரி என்று கல்யாணம் செய்து கொண்டாள் . முதலிரவில் கேட்டாள் இதை எப்படி எடுப்பது என்று. சுரேஷ் சொன்னான். “ரொம்ப சுலபம். நானே ஒரு சின்ன ஆபரேஷன் செய்து எடுத்துவிடுவேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு ரகசியம் சொல்றேன். கிட்ட வா” என்று காதில் சொன்னான். அப்படியா! அப்போ  இதை ஆயுசுக்கும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி அவனை ஆசையோடு இறுக்கிக் கட்டிக் கொண்டாள் .. 

This gallery contains 8 photos.

தமிழில் வித்தியாசமாகப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சூது கவ்வும், பீட்ஸா போன்ற படங்களுக்குப் பிறகு தற்சமயம்  ராமானுஜன்,முண்டாசுப்பட்டி , வடகறி, யாமிருக்க பயமே, அரிமா நம்பி, சைவம், அதிதி, வாயை மூடி பேசவும் போன்ற படங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. தியேட்டரில் பார்க்க முடிந்தால் பாருங்கள்! இல்லையா, ஒரிஜினல் டி‌வி‌டி  ஓரிரு மாதங்களில் வரும் அப்போது பாருங்கள். திருப்தியாக இருக்கும் (திருட்டு டி‌வி‌டி  -டவுன்லோடிங் வேண்டாமே!)

மீனங்காடி ( எட்டாவது வாரம்)

image

“நிச்சயமா ! ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்காக இதைச் செய்யணும்?” மேரி கேட்டாள்.

டோனி மெதுவாகச் சொல்லத் தொடங்கினான்.

“ மேடம் ! என் வாழ்க்கையில் இந்த ‘மீனங்காடி’ ஒரு திருப்பு முனையா அமைந்தது என்றால் தப்பில்லை. என்னைப் பற்றிச் சொல்லி போரடிக்க விருப்பமில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறிக் குட்டிச் சுவரா போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குப் புது அர்த்தமே இங்கு வந்த பிறகு தான் கிடைத்தது.  எனக்கு இப்படி புது வாழ்வு கிடைத்ததற்கு நன்றி சொல்கிற மாதிரி ஏதாவது செய்யணும் என்று எனக்கு எப்போதும் ஒரு ஆசை !  நீங்கள் உங்கள் பிரச்சினைகளைச் சொன்னதுமே முடிவு செய்து விட்டேன்.  இந்த மீனங்காடியில் உங்களுக்கு மருந்து கிடைக்கும். அந்த மாதிரி சந்தோஷத்தை உண்டாக்குகிறோம் நாங்கள் !

டோனியும் மேரியும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய நண்டு பறந்து சென்றது.  யாரோ தூக்கிப் போட்டது தான். கூடவே வந்தது கோரஸ்.

“ போகுது பார் ! போகுது பார் ! அந்த நண்டு நியூ டெல்லிக்குப் போகுது பார் ! – போகுது பார் ! போகுது பார் ! எதிரொலித்தது.

“ ரொம்ப சரி டோனி ! இந்த மீனங்காடியில் எது இருக்கிறதோ இல்லையோ, நிச்கயமாக ஒரு சந்தோஷ அலை அடிக்கிறது ! அதைப் புரிந்து கொள்ள சீக்கிரம் வருவேன் .”

வாட்சைப் பார்த்தாள். சீக்கிரம் நடந்து போனால் தான் இடைவேளை முடிவதற்கு முன் ஆபீஸ் போய்ச் சேரலாம். நாம் வந்து போகும் நேரத்தை எல்லாம் அந்த டைப்பிஸ்டுகள் குறித்து வைத்தாலும் வைப்பார்கள்.

“  ஹேய் ! நீங்க ஏன் நாளைக்கு இதே நேரத்தில் இங்கே வரக் கூடாது? வரும்போது மறக்காம ரெண்டு டீ கப் கொண்டு வாங்க ! எனக்கும் சேர்த்து ! “  சொல்லிக் கொண்டே திரும்பப் போய் பக்கத்தில் இருக்கும் ஒரு பையனுக்கு ஏரி மீனுக்கும், கடல் மீனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லத் தொடங்கினான் !

                              மீண்டும் மீனங்காடி 

image

அடுத்த நாள் சரியாக சாப்பாட்டு நேரத்தில் மேரி அந்த மீனங்காடிக்கு வந்தாள். டோனி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல ஆர்வத்தோடு பேசினான்.

“ இந்த மார்க்கெட் கடைசியில் ஒரு நல்ல ஹோட்டல் இருக்கிறது ! வாருங்கள் போகலாம்” என்று கூறி, அவளை  அழைத்துச் சென்றான்.  அங்கிருந்து பார்த்தால் துறைமுக ஏரியா நன்றாக இருந்தது. இருவரும் ‘ வடா பாவ் ‘ சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினர்.  அவன் சொன்ன மீனங்காடி கதையைக் கேட்டதும் இந்த மீன் மார்க்கெட்டிலும் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றனவே என்று ஆச்சரியப் பட்டாள்.  இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே இவர்கள் இவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்றால் அந்த மீனங்காடியில் ஏதாவது சிறப்பு இருக்கத்தான் செய்யும் என்று மேரி எண்ணினாள்.

“ நீங்க சொன்னதைக் கேட்டதும் எனக்கு எங்கள் ஆபீஸ் தான் நினைவுக்கு வருகிறது ! இரண்டு இடத்திலும் ஒரே மாதிரி பிரச்சனைகள் .”

“ நிஜமாகவா? “

“ ஆமாம் ! எங்கள் டிபார்ட்மெண்ட் மக்கள் ஒரே மாதிரி வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து அலுத்துப் போய் விட்டார்கள்.  அவர்கள் பிரச்சினை என்னவென்றால், “ நாம செய்யற சின்னத் தப்பை எல்லாம் பெரிசு படுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  ஆனால் நாம செய்யற ஆயிரம் நல்லதை எல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டேன் என்கிறார்கள்” என்பதுதான். ‘ சரியான பேஜார் வேலை’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். நீங்களோ இந்த மீனங்காடியில் பேஜாரான வேலையை ஜோரான வேலையா மாற்றி இருக்கீங்க ! கேட்கவே ஆச்சரியமா இருக்கு  ! ”

“ எந்த வேலையானாலும் அதை செய்துதான் ஆகணும் என்றால் அது வெறுப்பாகத் தான் இருக்கும். இந்த கம்ப்யூட்டர் மக்களை எடுத்துக் கொள்ளுங்களேன். உலகம் பூரா சுற்றி வருகிறார்கள். ரொம்ப ஜாலியா இருக்குமே என்று கேட்டால்  ‘ சரியான போரப்பா ‘ என்று தான் சொல்கிறார்கள்.  எந்த வேலையும் கொஞ்ச நாட்களில் போரடிக்க ஆரம்பிச்சிடும். “

“ ரொம்ப சரி டோனி !  நான் ஸ்கூலில் படிக்கும்போது மாடலிங் செய்தேன். மற்ற டீனேஜ் பெண்ணுகளுக்கெல்லாம் ஒரே பொறாமை.  இப்படி ஜாலியான வேலை கிடைச்சுதே என்று.  ஆனால் எனக்கு கொஞ்ச நாளிலேயே அது போரடிக்க ஆரம்பித்து விட்டது.  அதே மாதிரி பின்னால்  பத்திரிகையில் செய்தி தயாரிக்கும் வேலையும் கிடைத்தது.  நாளாக நாளாக அதுவும் அலுப்பாகத் தோன்ற ஆரம்பித்தது.”

“ நீ சொல்லுவது உண்மை தான் மேரி ! இப்படி யோசிச்சுப் பாரு ! எந்த வேலையும் போராக இருக்கும் என்று சொல்வது போல எந்த வேலையையும் ஜாலியா சந்தோஷமா செய்ய முடியும் என்பதும் உண்மையாகத்தானே இருக்கணும்? ”

“ எனக்குப் புரியலை ! சரியாகச் சொல்லேன் டோனி !

“ ரொம்ப சுலபம் ! இந்த மீன் மார்க்கெட்டில் இருக்கிற மற்ற எல்லா கடைகளையும் கவனி ! அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி செய்த வேலையையே திரும்பத் திரும்ப செக்கு மாடு மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ‘ மீனங்காடி ‘ வித்தியாசமாகச் செய்கிறதாலே எங்களுக்கு நல்ல வியாபாரம்.  நான் முன்பே சொன்ன மாதிரி நாங்களும் இப்படித் தான் இருந்தோம். பிறகு நாங்கள் எல்லோரும் ஒரு மனதா இந்தப் புதிய எண்ணத்தைத் தேர்ந்தெடுத்தோம். ‘ எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் எந்த வேலையை எப்படிச் செய்வது என்ற முடிவு நிச்சயமாக நம் கையில் தான் இருக்கு ! இதுதான் நாங்கள் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் ! அதனால் தான் இந்த மீனங்காடி இப்போது உலகப் புகழ் பெறும் அளவுக்கு உயர்ந்து விட்டது.  நாம் செய்கிற வேலையில் நமது எண்ணத்தைக் கொண்டு வருவது தான் மிக மிக முக்கியம் ! ”

image

(தொடரும்)

மருந்தீஸ்வரர்

image

உடல்       வாதை      நீக்கிடும்     ஈஸ்வரர்         மருந்தீஸ்வரர் !
மனச்       சோர்வை    மாற்றிடும்   ஈஸ்வரர்     மருந்தீஸ்வரர் !
பிறவித்     துயரைப்     போக்கிடும்   ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
பிறவிப்     பயனைத்    தந்திடும்     ஈஸ்வரர்     மருந்தீஸ்வரர் !
வாய்க்கு     உணவை    ஈந்திடும்     ஈஸ்வரர்   மருந்தீஸ்வரர் !
செவியில்   தேன்தமிழ்   ஓதிடும்     ஈஸ்வரர்   மருந்தீஸ்வரர் !
கண்ணில்    கனிவை  பெய்திடும்   ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
நாசியில்   சிவமணம் சேர்த்திடும்  ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
மனதில் மகிழ்வை   முகிழ்த்திடும் ஈஸ்வரர்   மருந்தீஸ்வரர் !
நெஞ்சில்    ஈரம்           கசிந்திடும்   ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
மெய்யைமெய்யால் வேய்ந்திடும் ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !!

பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)

image

அழகின் இலக்கணமாய் நிற்கின்ற திருமகளின் 
  கருணையே பொங்குகின்ற கண்களாம் மேகங்கள் 
ஏழ்மையில் உழலுகின்ற அடியார்கள் வாழ்வதுவும் 
  பசுமையோடு வளம்பெறவே பொன்மாரி பொழியட்டும் 
ஊழ்வினையால் செய்துவிட்ட தீவினையின் வெப்பத்தை 
  வருணவன் உதவியோடு மெதுவாகத் தணியட்டும்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே ஆசிகளும் வழங்கட்டும் 
  வாழ்க்கையே சோலைகளாய்ப் பூத்துக் குலுங்கட்டும்.

மெய்வருத்தி மனதினிலே உன் நாமம் நிலைநிறுத்தி
  வேள்விகள் யாகங்கள் தவங்களென செயவியலா 
மெய்யுருக்கி உனைப்பாடி அனுதினமும் சேவித்து 
  அடைந்தேன் தஞ்சமென நாடிவந்த அடியார்க்கும் 
மையுண்ட கருணையே பொங்குகின்ற கண்களின் 
   விழியசைவால் சொர்க்கபுரி கொண்டுபோய் காட்டிடுவாய் 
கயல்விழியால் மென்மையொடு அன்புநிறை அருள் நோக்கால் 
  அடியார்க்கு எண்ணிய எண்ணியாங்கு அருளிடுவாய் 

ஈரேழு  உலகங்கள் இனிதாக உருவாக்கி
  இயக்குகின்ற போதுநீ அலைமகளாய்த் தெரிகின்றாய் 
தரணியிலே தஞ்சமென்று  அடிபணிந்த அடியாரைக் 
  காக்கின்ற   போதுநீ  திருமகளாய்த்  திகழ்கின்றாய்  
உறுமுகின்ற ஒன்னலர்கள் தலைதெறிக்க ஓடிடவே 
  வீறுகொண்டு எழுந்தநீ மலைமகளாய்த்  தெரிகின்றாய் 
திருமகளாம்  கலைமகளாம்  மலைமகளாம்  தேவியரே
 களிப்போடு மனதார தண்டனிட்டு வணங்குகிறேன்! 

(பொன்மகள் தொடர்ந்து வருவாள்) 

சவுக்குச் சித்தன்!

image

பரட்டைத்தலை! கோவணத்தாண்டி! சித்தன்! கையில் சவுக்குடன்   குளத்துக் கிட்டே நின்று கொண்டிருந்தான். அவனைத்தாண்டிக்  குளத்தில்  முகம் கழுவ நாத்திகப்   புலவருக்குப் பயம்.

‘பயப்படாதே புலவா!என் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னா காசு தர்றேன்! இல்லேன்னா நீ எனக்கு அடிமையாகணும்!’

கை நிறைய காசைக் காட்டினான்.பஞ்சப் புலவருக்கு சபலம்.

“உனக்குத் தெரியாத பொருளைப் பற்றி  உன்னால் பாட முடியுமா?" 

‘முடியாது ‘என்றார் பகுத்தறிவுப் புலவர்.

‘அப்ப நீ என் அடிமை! இந்தா உனக்குத் தண்டனை! கையில் இருந்த சவுக்கால் புலவரை விளாசிவிட்டு , காசையும் சவுக்கையும்  அவர் முகத்தில் வீசி எறிந்துவிட்டுக் குளத்தில் குதித்து மறைந்து போனான் சித்தன்!

புலவருக்கு வலிக்கவில்லை!

அவர் தன் உடைகளைக் களைந்து கோவணம் கட்டிக் கொண்டார். சவுக்கால் தன்னை அடித்துக் கொண்டே ஆயுள் முழுவதும் பாடல்கள் பாடினார் சிவனைப் பற்றி!

சவுக்குச் சித்தர் பாடல்கள்!

பாபாவின் திருவடி

 

image

விழாமல்          காக்கும்           பாபாவின்   முத்திரை   !
விழுந்தாலும்      தூக்கும்           பாபாவின்   தளிர் விரல் !
மலைத் துயரை    மண்ணாக்கும்      பாபாவின்   திரு  முகம் !   அலைத் துயரை    பின்னோக்கும்      பாபாவின்   திருக் கரம்  !
மனக் கசப்பை    இனிப்பாக்கும்      பாபாவின்   திரு விழிகள்!
உடல் உழைப்பைப்  பொன்னாக்கும்  பாபாவின்   பொன் மேனி!
காமத்தை         ஒழித்து விடும்     பாபாவின்   பார்வை ஒளி!
கோபத்தை         அழித்து விடும்     பாபாவின்   ஸ்வாஸம்  !
இதயத்தை         உருக வைக்கும்    பாபாவின்   ஸ்பரிசம்    !
இன்பத்தை        அள்ளித் தரும்     பாபாவின்   திரு மொழிகள் !
தன்னையே        தந்து விடும்       பாபாவின்   திருவடிகள்  !  

  •       
  •                   அறைக்கிறியே
  •  
  • image
  • image

அரைக்      கீரையை    அறைக்கிறியே
      அம்மியில்   மனசை     அறைக்கிறியே
முளைக்     கீரையே     முளைக்கிறியே    
      காதலை     நெஞ்சில்    முளைக்கிறியே
 
கடையிறியே       கடையிறியே
      பருப்புக்     கீரையை    கடையிறியே
முறுக்கிறியே முறுக்கிறியே
      முருங்கைக்  காயை முறுக்கிறியே

நெருக்கிறியே நெருக்கிறியே
      கயிற்றுக்    கட்டிலில்    நெருக்கிறியே
உருக்கிறியே       உருக்கிறியே
      இரும்பு      மனசை     உருக்கிறியே

வறுக்கிறியே       வறுக்கிறியே
      வாளை     மீனை       வறுக்கிறியே
நறுக்கிறியே        நறுக்கிறியே
      ஆசையைக்  கிள்ளி       நறுக்கிறியே

வெறுக்கிறியே      வெறுக்கிறியே
      எட்டிப்      போனா      வெறுக்கிறியே
மொறைக்கிறியே   மொறைக்கிறியே
      கிட்ட        வந்தா       மொறைக்கிறியே

தருகிறியே         தருகிறியே
      உன்னையே  எனக்குத்    தருகிறியே
மருகிறியே        மருகிறியே
      மடியில்     மயங்கி      சரிகிறியே

சொருகிறியே சொருகிறியே
      இடுப்பு      மடிப்பில்    சொருகிறியே
பருகிறியே         பருகிறியே
      இதழை     இதழால்     பருகிறியே

உருகிறியே        உருகிறியே
      குச்சிஐஸ்   போல       உருகிறியே
திருகிறியே        திருகிறியே
      நெஞ்சில்    ஆசையைத்  திருகிறியே !!

ஜோக்ஸ்

image

டேய்! ரொம்பப் பேசினீங்கன்னா என் சொத்தையெல்லாம் அனாதை ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன்!

இதுக்குமேல பேசினா உங்களையே அனாதை ஆஸ்ரமத்துக்கு அனுப்பிச்சுடுவோம்!

image

நம்ம அரசியல்வாதிகளெல்லாம் விமர்சகர் பற்றிக் கவலைப்படுவதேயில்லை!

ஏன்?

எந்த விளக்குக் கம்பமாவது நாயைப் பற்றிக் கவலைப்படுமா என்ன?

image

அந்த பேஷண்டுக்கு ஆபரேஷன் செய்ய ஏன் எல்லா டாக்டரும் துடிக்கிறார்கள்?

அவர் கிட்னியிலே வைரக்கல் இருக்காம்!

image

நம்ம ராமசாமி சரியான கஞ்சன்டா ?

எப்படி சொல்லுறே?

அவன் பேண்ட் பாக்கெட்டிலேர்ந்து காசை எடுப்பது வாஷிங் மெஷின்லே போடும்போது மட்டும் தானாம்!

image

மச்சி! சீசன்லே ஆக்ரா வர்ரோம்! தங்க வசதியெல்லாம் இருக்குமில்லே?

கவலைப்படாதே மாமு! தாஜ்மகாலிலேயே தங்க வைச்சுடறேன்!

அடப்பாவி! ஷாஜகான் கிட்டே படுக்க வைச்சுடாதே!

சரி! மும்தாஜ் ஒகேயா?

image

என்னா மச்சி! கையிலே ரோசாப்பூமாலை?

யாருக்குப் போடலாம்னு தான் யோசிக்கிறேன்!

என்னை விட பெரிய மனுஷன் எவன் இருக்கான்? சும்மா போடு!

 நீ படு! நான் போடறேன்!

உதகைப் பூங்காவில் வண்ண வண்ண மலர்களும் புல்வெளியும் நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்!

மூன்று

image

முத்தமிழ்          முதல்       முக்கனி     வரை
மூவேந்தர்         முதல்       மூவுலகம்   வரை
மூணாம் பேஸ்து   முதல்       மூணு சீட்டு வரை
மூணாறு          தமிழில்     நிறை ஓடியிருக்கிறது

மூன்றின்    அழகே தனி !
மூன்றின்    சுவையே    தனி !
மூன்றின்    பெருமை    தனி !
மூன்றின்    சிறப்பு       தனித்தனி !             
 
கணவன்  மனைவி  இடையில்   குழந்தை    – மூன்றின் சிறப்பு
காதலன்     காதலி      இடையில்   தோழி       – மூன்றின் சிறப்பு
மொத்தம்  சில்லறை    இடையே    தரகர்       – மூன்றின் சிறப்பு
வாதி        பிரதிவாதி    இடையே    நடுவர்      – மூன்றின் சிறப்பு
சொர்க்கம்   நரகம்        நடுவில்     உலகம்      – மூன்றின் சிறப்பு
உண்மை    பொய்       நடுவில்     மௌனம்    – மூன்றின் சிறப்பு
மேலே          கீழே        நடுவில்     திரிசங்கு    – மூன்றின் சிறப்பு
இளமை    முதுமை    நடுவில்     வாலிபம்    – மூன்றின் சிறப்பு
வெற்றி      தோல்வி      நடுவில்     சமம்        – மூன்றின் சிறப்பு
ஆசை       கோபம்         நடுவில்     ஊடல்        – மூன்றின் சிறப்பு
ஆண்       பெண்          நடுவில்     அரவாணி    – மூன்றின் சிறப்பு
கோடை     வாடை    இடையில்   வசந்தம்     – மூன்றின் சிறப்பு

வாமனன்    கேட்டது     மூன்றடி     மண் !
மதனை     எரித்தது     மூன்றாவது  கண் !
திருமணம்   துவங்க      மூன்று      முடிச்சு !
திருமணம்   முறிய      மூன்று      தலாக் !
image

பாலச்சந்தர் ஒரு மாபெரும் டைரக்டர்

image

image


பாலசந்தர் அவர்களின் அரங்கேற்றம் நீர்க்குமிழியில் தான். ஆனால்  அவர் இந்தியத் திரை உலகில் மாபெரும் சாதனையாளராய் தாதா சாகிப் பரிசு பெற்றவராக இருக்கிறார் என்பதை நினைத்தாலேஇனிக்கும். அவரது சரித்திரத்தை மரோசரித்ராவை புன்னகையின்எதிரொலியை வெற்றியின் புதுப்புது அர்த்தங்களை உங்கள் முன் முழுவதுமாக சொல்லத்தான் நினைக்கிறேன்.

சமுதாயச்சீர்திருத்தம் நகைச்சுவை ஆழமான காதல் இவை தான் பாலச்சந்தரால் போடப்பட்ட மூன்று முடிச்சுக்கள்.

தண்ணீர் தண்ணீர் என்று அலையும் சமுதாயத்தின் தப்புத்தாளங்களை நிமிர்த்த அவருக்கு என்றைக்கும் அச்சமில்லை அச்சமில்லை. வறுமையின் நிறம் சிவப்பு என்று சுட்டிக் காட்டி அதைத் தீர்க்க உன்னால் மட்டும் முடியும் தம்பி மனதில் உறுதி வேண்டும் என்றும் சொன்னார். நவக்கிரகத்தை வெறுமனே சுற்றி கண்ணா நலமா என்று கேட்டுக்கொண்டு பத்தாம் பசலியாக  தில்லுமுல்லு  செய்து பொய்க்கால் குதிரையாக ஓடும் மனிதர்களின் தவறுகளை நெற்றிக்கண் கொண்டு எரித்து நிழலை நிஜமாக்கியவர்

அவர் ஒரு மணம் வீசும் ஜாதிமல்லி. அவரது பட்டணப் பிரவேசம் நம்க்குக் கிடைத்த அபூர்வ ராகம். அதில்  சிந்துபைரவியும் கிடைக்கும். சக்ஸபோனின் டூயட்டும் கிடைக்கும். 

அவரது காவியத் தலைவிகள் நம்ம ஊர் கண்ணகி போல அக்னி சாட்சி சொல்லி தாமரை நெஞ்சங்களுடன் கல்யாண அகதிகளாக நான்கு சுவர்களுக்குள்ளும் இரு கோட்டிற்குள்ளும் நூல்வேலிக்குள்ளும் அடைந்து கிடப்பவர்கள் அல்ல.

அவரது நாயகனோ வெறும் அழகன், புன்னகை மன்னன் மட்டுமல்ல. சர்வர் சுந்தரமாக இருந்தாலும் மேஜர் சந்திரகாந்தாக இருந்தாலும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று நமக்குக் காட்டி சாதாரண இயக்குனர் நான் அவனில்லை என்றவர்.

பாமா விஜயத்திலும் மன்மதலீலையிலும் நகைச்சுவ உணர்வை அனுபவி ராஜா அனுபவி என்று வாரி வழங்கியவர்.  பழைய யுகத்துக்கும் வரப்போகிற கல்கி புது யுகத்துக்கும் பாலமாக  இருப்பவர். நாடகமா திரைப்படமா என்று பூவா தலையா போட்ட மக்களிடம் அவை இரண்டும் ஒரு வீட்டின்இருவாசல் என்று உணர்த்தியவர்.

அவர் படங்கள் 47 நாட்கள் ஓடும். வெள்ளிவிழாவும் காணும். நூற்றுக்கு நூறு மார்க்கும் வாங்கும் தகுதிபடைத்தவர் பாலச்சந்தர் என்று சொன்னால் அது உண்மையே தவிர பொய் கொஞ்சம்கூட இல்லை. திரை உலகில் நாணலைப் போல் வளையாமல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பாலச்சந்தர் எப்போதும் அவர் ஒரு தொடர் கதை

ஒருவர் மற்றொவருக்காகவே என்று  ஏக்துஜேகேலியே என்று காதலுக்கு மொழி தடையில்லை என்று நிரூபித்தவ்ர். தமிழகத்திலிருந்து இந்தியா துணைக் கண்டம் முழுவதும் ஏன் அதற்கு மேல் தன் புகழிற்கு வானமே எல்லை என்பதை உலகறியச் செய்த மாமனிதர் பாலச்சந்தர்.  

அவர் படங்களைப் பார்த்தால் பரவசம் எப்போதும் நம் நெஞ்சில் நிலவும்.

image

 (பாலச்சந்தர் அவர்கள் முன்னிலையில் படித்துப் பாராட்டைப் பெற்ற வரிகள்)

பச்சைத் தேநீர் (Green Tea )

image

தயாரிக்கும் விதம்:

சுத்தமான நீரைக் கொதிக்க வைத்து சில நிமிடம் குளிர வைக்கவும்.

ஒரு கப்புக்கு ஒரு கிராம் அளவில் கிரீன் டீயை  சேர்த்து ஒரு நிமிடம் தரமான சுவைக்கும் மூன்று நிமிட நேரம் கடும் சுவைக்கும் வைக்கலாம்.

எலுமிச்சம்பழச் சாறு / தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

கசப்பு  பிடிக்காதவர்கள் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். 

எதுவும் சேர்க்காமல் கிரீன் டீயை சும்மா குடிப்பது ரொம்ப நல்லது.

image

பலன்கள்:

1. கிரீன் டீயில் உள்ள   ஆண்டியாக்சிடண்ட் புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.

2. இதய நோய்களைத் தடுக்கிறது.

3. இதில் உள்ள பாலிபினால் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது.

4. இது உடலில் உள்ள கொழுப்பை அகற்றி உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

5. தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

6.  இதில் உள்ள என்ஸைம்கள் எலும்புகள் தேயாமல் பாதுகாக்கிறது.

7. நல்ல கொலஸ்டிராலை அதிகரித்து தீய கொலஸ்டிராலைக்  குறைக்கிறது. 

8. இது ரத்தத்தில் சர்க்கரை அதிகமாவதைத் தடுத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.

9. ஆசிடைல் கோலின்  என்ற தாதுப் பொருளின் வேகத்தைக் குறைத்து அல்ஸிமெர்ஸ்/பார்க்கின்சன்  நோய்கள்  வராமல் காப்பாற்றுகிறது.

10. உயர்ந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது.

11. உணவில் உள்ள நச்சுப் பொருட்களின் தாக்கத்தைக் குறை க்கிறது.

12. நோய் எதிப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

13. இதில் உள்ள வைட்டமின் சி குளிர்காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

14. இதில் உள்ள தியோபைல்லின் ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்துகிறது.

15. இதில் உள்ள எல்-தியானின் மற்றும் அமினோ அமிலங்களும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது,

16. வாய் நாற்றத்தைப் போக்கவும் இது பயன்படுகிறது.

17. மேலும் அலர்ஜியைக் கூடக் கட்டுப்படுத்துகிறது. 

18. காதுகளைச் சுத்தம் செய்ய கிரீன் டீயில் நனைத்த பஞ்சைப் பயன்படுத்தலாம். 

19. தோலில்  ஏற்படும் படர் தாமரையைக் கூட கிரீன் டீயில் நீர் சேர்த்துப் பயன் படுத்தலாம். 

மொத்தத்தில் இது ஒரு சகலரோக நிவாரணி என்றால் சந்தேகமில்லை!

நன்றி: ஆர்கானிக் கிரீன் டீ தயாரிக்கும் போப்ஸ் எண்டர்ப்ரைசஸ்  அவர்களின் குறு வெளியீடு!

This gallery contains 9 photos.

கடவுளின் சொந்த நாடு என்று கூறப்படும் கேரளத்தின் இயற்கை அழகு அந்த வார்தைகளை உண்மையாக்கிக் காட்டுகிறது. கோட்டயம் அருகே இருக்கும் ஆறுகளும் குமரகத்தின் பின்னீர்ப் பகுதியில்  மிதக்கும் படகு வீடுகளும் , குட்டிக்கானோம் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களும் பைன் மரப் பள்ளத்தாக்குகளும் வாகமனில் தெரியும் பச்சைப் பசேல் என்ற இயற்கைப் புல்வெளியும் நம் உடலுக்கு கிளர்ச்சியையும்  மனதுக்கு மயக்கத்தையும் தரும் என்பதில் சந்தேகமேயில்லை!

மாங்காட்டுப் பாடல்

வர்ணனை 

image

மாங்காட்டுத் தாயே !

மண்ணில்     விளைந்த  மணியோ    தாயே உன்     திருமுகம்
மானில்          பொதிந்த   விழியோ     தாயே உன்     இமைகள்
மின்னல்        மின்னும்   பொன்னோ தாயே உன்    கன்னம்
மீன்கள்          துள்ளும்    அழகோ       தாயே உன்     கண்கள் 
முன்னம்       கொய்த      மலரோ       தாயே உன்     இதழ்கள்
மூங்கில்        வளைந்த   எழிலோ      தாயே உன்     தோள்கள்
மென்மை      கொஞ்சும்  தளிரோ      தாயே உன்     விரல்கள்
மேயும்           பசுவின்     மடியோ       தாயே உன்     தாய்மை
மையல்          கொண்ட  மயிலோ      தாயே உன்    கழுத்து 
மொய்க்கும்   மலர்க்      கொடியோ   தாயே உன்    கொடியிடை
மோனம்         பதிந்த       நிலையோ   தாயே உன்    வடிவுடை
மௌனம்        கொண்ட கடலோ        தாயே உன்    திருவுடை
இம்மையில்   செய்த      பலனே         தாயே உன்    திருவடி 

This gallery contains 2 photos.

சென்னையின் சோகம்! . சென்னையில் போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கட்டும் போதே இடிந்து விழுந்து 60க்கும் மேற்பட்டவர் பலியானது சோகத்தின் உச்ச கட்டம்.

கும்பகோணம்

கும்பகோணம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவை: 

டிகிரி காபி !டிகிரி காபி !டிகிரி காபி !டிகிரி காபி !

சரி, இந்த டிகிரி காபியை  எப்படித் தயாரிப்பது?

image

தேவை: 

சரியாக வறுத்து அரைத்த புது காபி பவுடர் ( சிக்கரி குறைந்த அளவு  இருக்கவேண்டும்) – 3 ஸ்பூன் 

பால்          1 .5 கப்  

சர்க்கரை – தேவையான அளவு  1-2 ஸ்பூன் 

தண்ணீர்  1/2  கப் 

செய்முறை:

தண்ணீரைக் குமிழிகள் வரும்வரைக் கொதிக்க வைக்கவும். 3 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை பில்டரில் போட்டு இலேசாக அமுக்கவும். கொதிக்க வைத்த  வெந்நீரை அதில் விட்டு உடனே மூடிவிடவும். 15 நிமிடத்தில் ஸ்ட்ராங்கான டிகாக்ஷன்   தயார்.

1.5 கப் பாலைத் தண்ணீர் விடாமல் கொதிக்கவைக்கவும். 

¼ கப்  டிகாஷனை பித்தளை டம்ப்ளரில் விடவும். ¾ கப் பாலையும் தேவையான சர்க்கரையையும் அதில் சேர்க்கவும்.

பித்தளை டவராவில் அதை ஆற்றி நுரைவரும்படிக் கலக்கவும்.  

டிகிரி காபி தயார்.

குறிப்பு: டிகாஷனில் பாலைச்  சேர்க்கவேண்டுமே தவிர பாலில் டிகாஷன் சேர்க்கக் கூடாது. 

போட்ட காபியை மறுபடியும் சுடவைக்கக் கூடாது.  

image

கேம்ப்ரிட்ஜ் என்று சொல்லப்படும் அரசாங்கக் கல்லூரி

( கல்லூரிக்குக் காவேரி ஆத்துப் பாலத்தைத் தாண்டி வருவதால் கேம்-ப்ரிட்ஜ் என்ற பெயர்)

image

கும்பகோணம் கொழுந்து வெத்தலை 

image

மகாமகம்- பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தமிழகத்தின் கும்பமேளா  ( அம்மாவும் தோழியும் குளித்தபோது ஏற்பட்ட நெரிசலில் மக்கள் இறந்தது ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)

image

எண்ணற்ற கோவில்கள்: 

image

நவக்கிரகக் கோவில்கள் 

image

மற்றும் 

 ஊசி மோர்மிளகாய் ( குட்டி குட்டி மோர்மிளகாய் – வறுத்து சும்மாவே சாப்பிடலாம்)

கொசு

யானைக்கால்

பள்ளியில் பிடித்த  நெருப்பில் 94 சின்னஞ் சிறு குழந்தைகள் மடிந்தது மனதை விட்டு நீங்கா சம்பவம்

பித்தளைப் பாத்திரங்கள், தாராசுரம் 

சோழர்/ நாயக்கர் காலத்தில் தலை நகரம் 

கும்பகோணத்திற்கு அருகில் முக்கியமான கோவில்கள்:

சுவாமிமலை – அறுபடை வீடுகளில் ஒன்று

திருநாகேஸ்வரம் கோவில் 

ஒப்பிலியப்பன் கோவில் 

பட்டீஸ்வரன் துர்க்கை அம்மன் கோவில் 

கூத்தனூர் சரஸ்வதி கோவில் 

தாரசுரம் கோவில் 

திருவிடைமருதூர் கோவில்

பாபநாசம் 108 சிவாலயம் 

திருக்கருகாவூர் கற்பகரக்ஷாம்பாள்  கோவில் 

நாச்சியார் கோவில் 

மன்னார்குடி ராஜகோபாலன் கோவில் 

திருக்கடையூர் அபிராமி கோவில் 

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் 

பானபுரீஸ்வரர் கோவில் 

பாண்டுரங்கன் கோவில் ,கோவிந்தபுரம்

பிரபலங்கள்:

கணிதமேதை ராமானுஜன்

ஸ்ரீனிவாச சாஸ்த்ரி 

உ வே சாமிநாதய்யர் 

ஜி‌ கே  மூப்பனார் 

எம் எஸ் சுவாமிநாதன் 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 

டைரக்டர் ஷங்கர்