நாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்

Related image

Image result for beauty of kallidaikurichiImage result for beauty of kallidaikkurichi

Related image

 

உழுகிற மாடு வயலை – தன்
உழைப்பால் உயர்த்திப் பார்க்கும்
அழகிய எங்கள் கிராமம் – மலை
அருகில் அமைந்த சொர்க்கம்.

கொக்குடன் மைனா, கிளிகள் – சிறு
குருவி பறக்கும் வயல்கள்
திக்குகள் எங்கும் இளமை – நமைத்
தேடி அழைக்கும் எழில்கள்.

ஓட்டது கூரை மேலே – தினம்
துள்ளிக் குரங்கு ஓடும்
வீட்டது பின்னே நன்கு – குளிர்
வீசும் வாய்க்கால் பாயும்.

பம்பரம், கோலி, கிட்டி – கபடி
பந்தும் ஆடும் இளையோர்
கம்பினைச் சுற்றி வீச -உயிர்க்
காதல் புரிவர் வளையோர்.

பண்டிகைக் கால மெல்லாம் – இசைப்
பண்ணும் கூத்தும் சேர்த்து
கண்களுக் கின்பம் கூட்டும் – நற்
கலைஞர் நிறைந்த நல்லூர்.

அலைநிறை பொருநை நதியில் – மீன்
அலையும் காட்சி கண்டால்
அலைகிற எண்ணம் நிற்கும் – உள்
அமைதி மேலும் ஊறும்.

நெல்லிடை ஓங்கும் செல்வம் – அங்கு
நித்தம் வாசம் செய்யும்
கல்லிடைக் குறிச்சி ஊரை – நாம்
கல்யா ணபுரி என்போம்.

மணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு

மணி மணியா சம்பா நெல்லு…. 

(உழவர் பாட்டு)

ஏர்பிடிச்சு மாடுகட்டி
எருவடிச்சு மண் உழுது
பதுக்கிவெச்ச வெத நெல்லால்
நாத்து வெச்சு பாத்திகட்டி
மூச்செறைக்க நீரெறைச்சு
நாள்பாத்து நடவு செஞ்சு
மழைசெதும்ப பேயணும்னு
மாரியாத்தாவ வேண்டிக்கிட்டு

கருக்கலில் வயக்காடுவந்து
கம்மாத்தண்ணி வரத்திருப்பி
உரமடிச்சு மருந்தடிச்சு
உறங்காம களபறிச்சு
பட்டினியோ பழஞ்சோறோ
பாராமலே கிடந்துண்டு
கதிர்முத்தி தல சாஞ்சா
காவலுக்குத்தானிருந்து

கருத்த மேகம் பாத்துப்புட்டா
பதபதச்சு நாள்குறிச்சு
கருப்பசாமி துணைவேண்டி
களமெறங்கி வாளெடுத்து
கதிரறுத்து கட்டுகட்டா
இடுப்பொடிய கதிர்சுமந்து
களத்துமேடு கொண்டுவந்து
மாடுகட்டி போரடிச்சு

முறமெடுத்து புடைக்கயிலே
தங்கம்போல தகதகக்க
மணிமணியா சம்பா நெல்லு (என்)
மனசுபோல சம்பா நெல்லு
பதரில்லாத சம்பா நெல்லு
அளஞ்சளஞ்சு சம்பா நெல்லு
அளந்தளந்து மூடகட்டி
அள்ளிக்கொண்டு போகையிலே
கெடய்க்கும் சுகம் வெளங்கலியே

பட்டபாட்டுக்கு நட்டமில்லாம
வெலைகிடைக்குமா தெரியலியே
கந்துவட்டி கைமாத்து
பாங்குல வாங்கின நகைக்கடனு
ஆளான புள்ளய கட்டிக் குடுக்கணும்
ஆம்புளப்புள்ளய படிக்க வைக்கணும்
கருப்பசாமிக்கு படியளக்கணும்
மாரியாத்தாளுக்கு படையல் செய்யணும்

மிஞ்சுமா என்னமும்
ஏங்குதே ஏம்மனம்
சாப்பிட ஒக்காந்தா
சோறு எறங்கல
பெஞ்சாதி சொல்லுது
வீணாக்காதே சோறன்னு!?!

துணிந்தேன், சரி செய்தேன்!- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

 

Image result for old school teacher from tamilnadu

நான் மேல் படிப்புப் படித்துக்கொண்டிருந்த காலம். நம் நாட்டின் மிகச் சிறந்த, மனநல அரசு மருத்துவமனை. அன்றாடம் ஒரு மருத்துவர் தன் டீமுடன் நோயாளிகளைப் பார்ப்பது வழக்கம். இன்று எங்கள் முறை.

அன்று வந்திருந்தவர் ஒரு ஐம்பது வயதுள்ளவர்.  ஜானகி, நன்றாக வாரிய தலை, பச்சை நிற நூல் சேலை, கையில் பை. சற்றுத் தடுமாறித் தள்ளாடியபடி என்னை நோக்கிவந்தார். அருகில் வரவர, அவரின் கைகளில், முகத்தில் பல தழும்புகள் இருப்பதைக் கவனித்தேன். நான் கவனித்ததால் தன்னுடைய தலைப்பினால் மறைத்து, “கீழே விழுந்துவிட்டேன், ஒண்ணும் இல்ல” எனச் சொன்னாள். சொல்வதை ஏற்றுக்கொண்டேன்.

எதிர்நாற்காலியில் உட்கார்ந்ததும் ஜானகி கண்கலங்கி, தன் நிலையை விவரித்தாள். அவள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. வேலையிலிருந்து ஓய்வுபெற யோசிப்பதாகவும், முப்பது வயதுடைய மகன் ராஜாவுடன் இருப்பதாகவும் கூறினார். கடந்த நான்கு வாரமாகத் தனக்குப் பசி மற்றும் தூக்கம் சரியில்லை என்றும், ஒரு இனம்தெரியாத பதட்டநிலை உணர்வதாகவும், சட்டென்று அழுகை வருவதாகவும் கூறினாள். அவர்களின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் அம்மா சொன்னதால் வந்ததாகத் தெரிவித்தாள். தான் இங்கு வருவதை ராஜாவிற்குச் சொன்னதும் அவன் கோபத்தில் சத்தம் போட்டதாகவும், அதில் திகில் அடைந்து கீழேவிழுந்து அடிபட்டுக்கொண்டதாக மெல்லிய குரலில் சொன்னாள்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “தப்பாக நினைக்காதீர்கள், ராஜா ரொம்ப நல்லவன்” என்றாள். அவனுடைய வேலை பளு, விரும்பிய பெண் ராதா அவனைவிட்டு விலகிவிட்டது அவனுக்கு அவமானமாக இருக்கிறது, அதனால் கோபம் என விவரித்தாள்.

இதுவரையில் வீட்டு நிர்வாகம் பூராகவும் ஜானகி பொறுப்பில்தான் இருந்தது. சமீப காலமாக, ஏன் செய்யவேண்டும் எனச் சலிப்பு வருவதாகக் கூறினார். அவர்களின் கணவர் மாரடைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் மரணம் அடைந்த சம்பவத்தை விவரித்தார். மகனிடம் அதிக பாசம் இருந்ததால் அவர் மறைவை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவர் எப்பொழுதும் ஜானகியிடம் கோபித்துக்கொள்வார். குறிப்பாக அவள் ராஜாவுக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்துதருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

அதே மூச்சில், ராஜா நல்லவன், இளகிய மனம் உள்ளவன் என்றும் சொன்னாள். எந்தத் தொந்தரவும் அவனை அணுகாமல் பார்த்துக்கொள்வதே தன் பிரதானப் பொறுப்பு என்றாள்.  இதற்காகவே ஜானகி புத்தகம் படிப்பது, பாட்டுக் கேட்பது, நடைப் பயிற்சி என்று ஒவ்வொன்றாக நிறுத்தவேண்டியதாயிற்று.  நிறுத்தினாள்.  நாளடைவில் மந்தமாக ஆவதுபோல் தோன்றியது என்றாள்.

விவரங்களை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் மன உளைச்சல் என முடிவானது. மருந்துகள் இல்லாமல் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் அவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டேன்.

வாரம் ஒருமுறை அவள் வருவதாக முடிவெடுத்தோம். வந்தாள். தான் சூழ்நிலைகளைக் கையாளும்விதம் சரியில்லாததால் சில நெருக்கடி நிகழ்ந்தன எனப் புரிய ஆரம்பித்தது. குறிப்பாக ராஜா இளைஞன் என்றாலும்,  ஜானகியே அவனுக்கு எது நல்லது, எது  கெட்டது என்று முடிவு எடுப்பதால், அவனுடைய முடிவு செய்யும் திறன்கள் எப்படி, ஏன் பாதிக்கப்படும் என்பதை ஆராய்ந்தோம். மேலும் ஜானகி சூழ்நிலையைக் கையாளுவதை மையமாக வைத்துப் பல வழிமுறைகள் சிந்தித்தோம். அதேபோல் மனதை அமைதிசெய்ய என்ன செய்யலாம் என்பதையும் ஆராய்ந்தோம்.

மூன்று வாரங்களுக்குப் பின்பு குணமாகும் சாயல் எட்டிப்பார்த்தாலும் ஏதோ இடையூறாக இருப்பதை உணர்ந்தேன். எங்கள் சீஃப் இடம் பகிர்ந்தேன். நாங்கள் மாணவர்கள் என்பதால், செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு. அவர்களிடம் உரையாடி, தெளிவுபெற்றேன்.

அடுத்த சந்திப்பில் வெளிப்படையாக என் கணிப்பை ஜானகியுடன் பகிர்ந்தேன். அவள் முழு நலன் அடையாததை அவள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.

ஜானகி மௌனமாக என்னைப் பார்த்துப் பல நிமிடங்களுக்குப் பிறகு ராஜாவைப்பற்றிப் பேசினாள். அவன் மது அருந்துவதுபற்றி யாரிடமும் சொல்லாமல்  மறைத்தாள். அவனுக்குத் தான் விரும்பிய ராதா இல்லை என்றதும், சோகத்திலிருந்து மீள அதிகமாக அருந்தினான். ராஜா போதையில் விழுந்துகிடக்கும் தகவல் தெரிந்ததும் ஜானகி அவனை எப்படியாவது கூட்டி வந்துவிடுவாளாம். இதைச் செய்கையில் பலமுறை கை கால் தவறி விழுந்து இந்தக் காயங்கள்.  தன் மகனிடம் வேறு எந்தக் குறையும் இல்லை என்பதை வலியுறுத்தினாள்.

இந்த வர்ணனைகள், இதற்கு முன்னால் வார்த்தைக்கு வார்த்தை ராஜா நல்லவன் எனச் சொன்ன சூழல்களை அவளுக்கு நினைவூட்டி, அதிலிருந்து அவள் செய்வதைப் புரிந்துகொள்ளச் செய்தேன்.

எங்கள் பாஷையில் இப்படி நடந்துகொள்வதை, ‘கோ டிபென்டன்ஸீ’ என்போம். அதாவது போதைக்கு அடிமையானவர்களுடன் கூட இருப்பவர்கள் அவர்களின் பழக்கத்தை மூடிமறைக்க முயல்வார்கள்.  கஷ்டமோ நஷ்டமோ போதையில் உள்ளவர்களுக்கு எல்லாம் அனுகூலமாகச் செய்வது என்று முற்படுவார்கள். அக்கம்பக்கத்தில், உறவுக்காரர்கள் யாருக்கும் போதைப் பழக்கம் தெரியக்கூடாது என முயல்வது. அப்படியாவது பழக்கம் அடங்கும் எனக் கருதுவார்கள். தங்களின் பொழுதுபோக்கைப் பலிகொடுத்து விடுவார்கள். தாங்கள் இப்படிச் செய்வதால் போதையினால் நிகழும் முழு மாற்றத்தையோ விளைவுகளையோ கண்டுகொள்ளமாட்டார்கள்.

மாறாக, போதைப் பழக்கம் இன்னும் அதிகரிக்கும். இப்படிக் கூட இருப்பவர்கள் பொறுத்துக்கொள்வது, அவர்களுக்கு உதவுவது ‘கோ டிபென்டஸீ’ எனப்படும்.  இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணிப்பார்க்க, பல வாரமோ, வருடங்கள்கூட ஆகலாம்.

கடைசியில் உதவி தேடிவந்ததே பாராட்டப்பட வேண்டியது!  ஜானகிக்குத் தன்னுடைய கோ டிபென்டஸீ, அதன் தோற்றம், விளைவுகளைப்பற்றிப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.

ராஜாவும் அவ்வப்போது, “என் அம்மாபோல் யாரும் இல்லை” எனப் புகழாரம் சூட்டுவதாகச் சொன்னாள். இதுதான் ஜானகிக்கு டானிக் என்றாள். இதைப் பெறுவதற்காகத் தன் பங்குக்கு அவனுக்கு எல்லாம் செய்தாள். அவள் தன் நிலைமையை மேலும் புரிந்துகொள்ள, மாற்ற யோசித்தேன்.

இப்படித் தான் செய்வதின் விளைவுகள் புரிய, அவளை ஆல் அனோன் (Al Anon) ஏ ஃப் ஜீ (AFG, Alcoholics Anonymous Family Group) என்று அழைக்கப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தேன். போதைக்கு அடிமையானவர்களின் மனைவி, பெற்றோர், கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் எனப் பாதிக்கப்பட்ட நபர்கள் குழுவாகும். இதற்குக் கட்டணமோ, அனுமதிக் கடிதமோ தேவையில்லை. இந்தக் குழுவில் எல்லோரையும் ஒன்றுபடுத்துவது வீட்டில் ஒருவரின் போதைப்பழக்கம், அதனால் நேரிடும் சஞ்சலங்கள்.  குழுவில், அவரவர் தங்களின் அனுபவங்களைப் பகிர, தாங்கள் செய்யும் தவறுகளை அறிய, மாற்றி அமைக்கச் சிறந்த வாய்ப்பாகிறது.

இப்போது ஜானகி அணுகியது மாற்றத்தின் முதல் கட்டம். மிக முக்கியம். ஆல் அனோன் (Al Anon)ல் பங்கேற்புடன் ஆரம்பித்து, மெல்லப் பேசத்தொடங்கினார், ஜானகி. அதே நேரம், தானாக நிறுத்திய தன் பொழுதுபோக்கை மறுபடி ஆரம்பிக்க நாங்கள் கலந்துரையாடினோம்.

தன் அம்மாவின் மாற்றத்தைக்கண்டு, ஆச்சரியப்பட்டு எங்களைக் காணவேண்டும் என ராஜா கூறியதை ஜானகி என்னிடம் பகிர்ந்தாள்.  அடுத்தபடியாக ராஜாவை அழைத்தேன். தன் அம்மாவிற்காக என எண்ணி வந்தான். முப்பது வயதுடையவன், ஏனோதானோ என உடை.

ஜானகிபற்றிக் கேட்க, அவனைப்பற்றிச் சொல்லச் சொன்னேன். தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று சொன்னான். இவன் ஒத்துழைப்பிற்கு அவன்போக்கில் போக முடிவெடுத்தேன்.

எங்கள் துறையில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவரவருக்கு ஏற்றவாறே சிகிச்சை முறையை அமைப்பது. நான் இதைக் கடைப்பிடிப்பதுண்டு. ராஜாவிற்கு அவர் போக்குவழியில், ஊக்குவிக்கும் முறையைக் கையாண்டேன்.

ராஜா தன் சூழ்நிலையை விவரித்தான். வேலைப்பளுவை சமாளிக்க 30 எம்.எல் மது அருந்துவதைத் தொடங்கியதாகச் சொன்னான். அவன் விரும்பிய ராதா விலகியதும் எம்.எல் அதிகம் ஆனதாகச்சொன்னான். ராதா, மது அருந்துவதைத் தடுக்க முயன்று,  தோல்விபெற்றதும் விலகியதாகத் தெரிவித்தான். தன்னால் சமாளிக்க, தாங்கமுடியவில்லை என்றால் மது அருந்துவானாம். அப்படி என்றால் சமாளிக்கும் திறன் தரைமட்ட நிலையில் இருப்பதை அவன் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். பல நாட்கள் தூக்கம் சரியில்லை, பசி எடுப்பதில்லை, கவனித்து வேலை செய்யமுடியவில்லை என்பதால் வேலைக்குப் போகவில்லை என்றான்.

மது அருந்துவது பிடிக்கவில்லை என்றும் விளக்கினான். மது அருந்தினால்தான், மனோதைரியம் வருகிறதுபோலத் தோன்றியது என்றும் கூறினான். இதனை அடிப்படையாகவைத்து, ராஜாவைத், தன் எண்ணம், உணர்வு, நடத்தை எல்லாமே எவ்வாறு தான் மது அருந்த வசதிப்படுத்தி ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கிறது என்பதைக் கவனிக்கச் சொன்னேன். அவனால் புரிந்துகொள்ள முடியாததால் இவற்றை மூன்றாகப் பிரித்து: நிலை-உணர்வு-எண்ணம் என வரிசைப்படுத்தி எழுதி வரச்சொன்னேன்.

இதே தருணத்தில் அம்மாவுடன் ஒரு வாரம் அவர்கள் ஊர், குலதெய்வம் தரிசனமும் ஆனது. அந்த முழு நேரமும் மது ஞாபகம் வரவில்லை, அருந்தாமல் இருந்தான். இந்த நிலையைப்பற்றி விலாவாரியாக உரையாடியதில், தன்னுடைய சமாளிக்கும் திறனைப்பற்றி, நலத்திற்கு ஏற்றவாறு எவையெல்லாம் செய்தால், மது அருந்தும் பழக்கத்தை வெட்டி வீசமுடியும் என்பதில் கவனம் செலுத்தினோம். இதைத்தான் சற்று முன் சொன்னது, அவர்கள் போக்கில் போனால் எதிர்ப்பு இல்லாமல் அவர்களாகச் சரிசெய்ய முயல்வார்கள்.

இந்த யுக்தியை இன்னொரு தெளிவு பெறவும் உபயோகித்தேன். ராஜா தான் உறுதிகொள்ள, அவமானம் மறக்க மது அருந்துவதாகக் கூறியிருந்தார். ஏன் இப்படிக் கருதவேண்டும் என்பதை ஆராய்ந்தோம்.  இங்கே ஜானகியை உடன் சேர்த்துக்கொண்டேன்.  அவர்களும் ராஜாவுக்குத் தானாக முடிவுகளைச்செய்ய வாய்ப்பளிக்கும் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால். வீட்டு நிலவரங்கள், அனுபவங்கள் என வரிசைப்படுத்தி முடிவுகள் எடுக்கும் திறன், பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதங்களை அம்மா பிள்ளை இருவரும் தெளிவு பெறும்வரை, வெவ்வேறு கோணங்களில் பல ஸெஷன்களில் பயிற்சிசெய்தோம்.

ராஜா தான் சிந்திக்கும் விதத்தைப் பார்த்ததில், எவ்வளவு சுலபமாக ஒரே ஒரு நிகழ்விலிருந்து எப்போதும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி விடுகிறோம் என்று பளிச்சென்று புரிய வந்தது. இதிலிருந்து ராஜாவிற்குத் தன்னுடைய இன்னொரு குணாதிசயம்பற்றியும் தெளிவானது. அவனைப் பொறுத்தவரை ஒன்றை அனுபவித்தால் எப்பொழுதும் அப்படியே என்று இருந்துவிடுவான். வேறு விதத்தில் இருக்கலாம், நடந்துகொள்ளலாம் என யோசிக்கத் தோன்றாது. அதாவது எல்லாவற்றையும் நல்லது அல்லது  கெட்டது என்று அச்சுப் போட்டுவிடுகிறோம் என்று. இந்த மனப்பான்மை கடிவாளம் போடும் என்று, ராஜா அனுபவ உதாரணங்களை வைத்துப் பல ஸெஷன்களில் ஆராய்ந்து புரிந்துகொண்டான்.

தான் மாற்றம் அடைவதை வெளிப்படையாகக் கூறினான். மனதில் ராஜாவிற்குச் சஞ்சலம். இதுவரையில் சந்தித்த சிக்கல்களை இனி சந்திக்கக்கூடுமே? அபாய நிலைகளை வரிசைப்படுத்தினோம். ஸெஷன்களில், ஒவ்வொன்றையும்
அவனுடைய அனுபவம் மற்றும் கதைகள் உபயோகித்துப் புரியவர;  இவற்றுடன் தானாக எழுதி, மற்றும் ஜானகியுடன் கலந்து உரையாடினான். தெளிவு பிறக்க ஆரம்பித்தது.

ராஜாவும் ஜானகியும் எங்களைத் தாம் ஏன் அணுகினோம், என்னவாயிற்று, எங்கு இருக்கிறோம் என்ற சுய பரிசோதனை செய்ய விரும்பினார்கள்.

அதற்கு அவர்களை ஆராயச்சொன்னது – எதனால் அவன் மது அருந்தலை வெற்றியின் பரிசாக எண்ணியது, தன் சோகத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் மது குடித்து அதை முழுக வைத்தது, மற்றும் தோழமை மற்றவர்களுடன் இருக்கவில்லை என ஆராயப் பரிந்துரைத்தேன். ஜானகி விட்டுக் கொடுத்தது ஏன் உதவவில்லை என்பதையும் தைரியமாக ஆராய்ந்தார்கள்.

இத்துடன் முடியவில்லை. இங்குப் பகிர்ந்தது சிலவற்றையே. அவர்கள் மறுபடியும் ராதாவைச் சந்தித்து, வாழ்வில் பல மாற்றங்கள் நேர்ந்தது; அது நீண்ட தொடர்…

இந்தக் கேள்விகளோ, பதிலோ முக்கியம் இல்லை. நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் துணிச்சலாகத் தன்னை, தன் செயல், சிந்தனைகளை ஆராயத் தயாராக இருப்பதே மாற்றத்தின் ஆரம்பம் என்பேன். என்னசெய்வது என்ற கேள்வி கேட்கும் எண்ணங்கள் பக்குவத்தைக் காட்டுகிறது. அதனால்தான் எங்கள் துறையில், ஒருவர் “சரி செய்யப் போகிறேன்” என்ற ‘தயார்’ நிலையிலிருந்து ஆரம்பித்தால் எந்தப் பிரச்சினையும் பெரியது அல்லவே அல்ல. நம்பிக்கை மிகப் பெரியதே!
**********************************************************************

தென்றலே தூது செல்ல மாட்டாயோ..! — கோவை சங்கர்

Related image

இன்பமெனும் நினைவூற்றை யெழுப்பிவிடும் மென்காற்றே
துணையின்றி நிற்குமெனைக் கேலிசெயு மிளந்தென்றல்
அன்பே ஆரமுதே கற்கண்டே நற்கனியே
அன்னநடை மின்னிடையா லுளங்கவருந் தண்மயிலே
பொன்னே பொற்றொளிரே நெறிதவறாப் பெட்டகமே
பேதையெனைப் பித்தனாய்ச் செய்துவிட்ட பெண்ணெழிலே
என்றெல்லாங் கூறிடவே துடிக்கின்ற வுள்ளத்தை
என்னருமைக் கன்னியிடம் நீகூற மாட்டாயோ!

தவிப்புதருந் தனிமை எங்குமிலை இனிமை
தொலைதூரங் காதலியும் போவதிது புதுமை
புவனமதை எழிலாக்கும் வெண்ணிலவைக் காண்கையிலே
பளிங்குபோல் சிரிக்குமென் னல்லிமுகம் பார்க்கின்றேன்
உவகையொடு புத்தகமும் கருத்துடனே படிக்கையிலே
உளங்கவரும் மீன்விழியாள் பார்வையினா லழைக்கின்றாள்
செவ்வியதாய் கண்மூடி அரைத்தூக்கம் போடுகையில்
கனவில்வருங் கன்னியவள் தொட்டுதொட்டு எழுப்புகிறாள்!

என்னிதயங் கொளைகொண்ட பெண்மானைப் பிடித்தற்கு
இவ்வுலகில் பயின்றுவரும் போலீஸின் துணையில்லை
என்னுயிரின் நிம்மதியைக் குலைத்துவருங் கன்னிக்கு
ஆயுள்சிறை கொடுத்திடவே நீதிபதி இங்கில்லை
தனிமையிலே மனம்நோக படுத்திருக்கும் வேளையிலே
தண்கையு மென்னுடலில் பட்டதுபோ லிருந்திடவே
அன்புடனே ஆவலொடு அவள்கரத்தைப் பிடித்தற்கு
எழுந்தெழுந்து பிரமையென்று ஏமாற்றம் கொள்கின்றேன்!

கயல்விழி கொடியிடை நன்னுதல் பூங்குழல்
தண்கரம் பவளவாய் மென்னுடல் மலரிதழ்
மயக்குநல் மதிமுகம் ஈர்த்திடும் முன்னழகு
தயங்காது என்நினைவி லகலாது நின்றிடவே
ஐயகோ பூங்கொடியே சோதனைகள் போதாதோ
என்மனதை வாட்டுதலும் உனக்கென்ன விளையாட்டோ
மெய்யன்பன் ஓர்கணமும் பொறுத்திடவே முடியாது
தேன்சுவையு மளித்திடவே யோடியோடி வாராயோ!

போதுமுன் சோதனை நான்படும் வேதனை
பைங்கிளியே என்னருகு விரைந்துநீ வாராயோ
பேசுதற்கு பலவுண்டு தேன்குரலைத் தாராயோ
பிர்ந்துநிற்குங் கொடுமைதனை யழித்திடவே வாராயோ!

சரித்திரம் பேசுகிறது – யாரோ

மகேந்திரவர்மன்

 

Image result for மஹேந்திர பல்லவன்

சரித்திரத்தில் பொதுவாக – ஒரு காலகட்டத்தில் – ஒருவன் பெருநாயகனாக இருப்பான் – அருகில் இருக்கும் மன்னர்கள் அவனிடம் தோற்றிருப்பர் – அல்லது அடங்கியிருப்பர்.

ஒரு சிறு கற்பனை செய்து பாருங்கள்: அலெக்சாண்டர் – ஜூலியஸ் சீசர் – சமுத்திர குப்தன் அனைவரும் ஒரே சமயத்தில் ஆண்டால்?

அது போல ஒரு காட்சிதான் அன்று இந்தியாவில் விரிகிறது…

மகேந்திர பல்லவன் (நரசிம்ம பல்லவன்), இரண்டாம் புலிகேசி , ஹர்ஷவர்த்தனன் – மூவரும் ஒரே சமயத்தில் ஆண்டு – போரிட்டு – பெருமையுடன் நாட்டையும் ஆண்டனர். ஒவ்வொருவரும் ஒரு நாயகர்தான்.

ஒவ்வொருவரும் சரித்திர நாயகர்தான்.

இவ்விதழில் நமது நாயகர் ‘மகேந்திரவர்மன்’.

Image result for harsha pulikesi and mahendra varman

 

சண்டை சமாச்சாரங்களை முதலில் ஆராய்வோம்:

சாளுக்கிய – பல்லவ யுத்தங்கள் எப்படி நடந்தன என்பதுபற்றிப் பல கருத்துக்கள் – மாறுபட்ட கருத்துக்கள் – சரித்திரத்தில் – தாறுமாறாகச் சிதறிக்கிடக்கிறது.

சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தான். அய்ஹொளே கல்வெட்டு,  ‘அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்கவந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச்செய்தது. புலிகேசியின் பெரும்படைக் கடலைக்கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்துகொண்டான்.’- என்று கூறுகிறது. புலிகேசியை காஞ்சி அருகில் வரும்வரை விட்டுவிட்டதால் அது ஒரு தோல்வி என்று ஒரு கூற்று.

புலிகேசியை காஞ்சிக்கருகில் வரவிட்டு – மகேந்திரன் – அவனைத் துரத்தினான் –என்பது பல்லவர் கூற்று. ( பின்னாளில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது). புலிகேசியை காஞ்சிவரையில் வரவிட்டு – அவனைத் துரத்தியது ராஜதந்திரம் என்பது பல்லவர் கூற்று.

சாளுக்கியன் கல்வெட்டு:

Image result for mahendra varman

 “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாதாயிற்று.  புலிகேசியும் பல்லவப் பனியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” –என்கிறது.

காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினான். போர் நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. தன் நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றிவளைத்துக்கொண்டான்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருந்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான்.

கங்க அரசனான துர்விநீதன் புலிகேசியுடன் சேர்ந்து மகேந்திரனுடன் போரிட்டான். துர்விநீதன் காடுவெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுக்கட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா’வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர்செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்”  என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத் தம்பி மகன்; கங்க-துர்விநிதனுக்கு மகள் வயிற்றுப்பேரன். எனவே அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும். அப்பொழுது நடந்த போர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.

சரி! சண்டை போதும்.

சமயத்துக்கு வருவோம். சமயத்தில் அன்று தென்னிந்தியாவில் பெரிய திருப்புமுனை ஏற்பட்ட காலம். சமணமதம் கோலோச்சி வந்த காலம்.

மன்னர்கள் பெரும்பாலோர் சமணத்தை ஆதரித்த காலம்.

சிம்மவிஷ்ணு வைணவத்தை ஆதரித்தாலும் – மகேந்திரன் பட்டத்துக்கு வந்தவுடன் சமணத்தைத் தழுவினான்.

சைவத்திருமுறையில் சிங்கமென வந்த திருநாவுக்கரசர் மகேந்திரனின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக்

கொண்டுவந்தார்.

அது என்ன?

 

சைவசமயம்  மறுபிறப்பு அடைந்த பொற்காலம் பிறந்தது.

மகேந்திரன் அதற்குப் பெரிய காரணமாயிருந்தான்.

 

மகேந்திரன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன்.

இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன்.

சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன்.

Related image

மகேந்திரன் மாமல்லபுரத்தில் செய்தது என்ன?

நாடகத்துறையில் மகேந்திரன் செய்தது என்ன?

என்ன என்ன என்ன?

 

விரைவில்..

 

திரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்

 

Image result for செந்தமிழ்த் தேன் மொழியாள்

Related image

 

 

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே

 

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

 

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ – அவள்  (செந்தமிழ்த் தேன் மொழியாள்)

 

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ – அவள் ( செந்தமிழ்த் தேன் மொழியாள்)

 

மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ – (அவள் செந்தமிழ் தேன்மொழியாள் )

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for ராகு + விஷ்வகர்மாImage result for ராகு + விஷ்வகர்மா

ராகுதேவனின் நிலை மிகவும் கேவலமாக இருந்தது. தனக்கும் விஷ்வகர்மாவிற்கும் இடையே நடக்கும் அறிவுப் போட்டியில் தான் வெற்றி அடைந்துவருவதாக எண்ணி அதன் மிதப்பில் சற்று இறுமாந்திருந்த ராகு தற்போது தோல்வியின் அதலபாதாளத்திற்குத்  தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து திக்பிரமையில்  ஆழ்ந்தான்.

தன்னைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் விஷ்வகர்மா  என்று முதலில் எண்ணிய  ராகு , உண்மையில் அவர் தன்னைப் பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார் என்பதை அறிந்ததும் அவன் மனம் துடியாய்த் துடித்தது.

ஆனால்  நிலைமை தலைக்குமேல் போய்விட்டது.    ராகுவிற்கு அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி  எதுவும் இல்லை. அவரும் தன்னைபோலவே இரு வரம் கேட்பது அவன் உள்ளத்தை அறுத்தது.

அவனைச் சுற்றிலும் உறைந்துகிடக்கும் ஆயிரக்கணக்கான பாம்புகளையும் பனிச்சிலைபோல நின்று கொண்டிருக்கும் தன் இரு நாக  மனைவிகளையும் பார்த்தான்.

“விஷ்வகர்மா அவர்களே! தங்கள் பெருமை அறியாது தங்களுடன் மோதவந்தது என் தவறுதான்.  நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுங்கள் ” என்று  உணர்ச்ச்சிகளை அடக்கிக்கொண்டு கூறினான்.

“ராகு தேவனே! நீ உடனடியாகச்  செய்யவேண்டியவை  இரண்டு. முதலாவது, நீயும் உன் நாகப்படைகளும் இனி ஒருகணம்கூட இந்த உலகில் இருக்கக்கூடாது. உங்களுக்கென்று பூவுலகில் ஒரு தளம்  அமைத்துத் தருகிறேன்.  திருநாகேஸ்வரம் என்ற சிவத்தலத்தில் நீயும் உன் மனைவியரும் இருந்து அங்கு எழுந்தருளியிருக்கும் நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட  சிவபெருமானை வணங்கி உன்னைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரவேண்டும்.

Related image

தன்னை நாடு கடத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ராகு  ‘ தங்கள் உத்தரவு ‘ என்று பணிவாக அதை ஏற்றுக்கொண்டான்.

“இரண்டாவது. இது மிக முக்கியமானது. கவனமாகக் கேட்டுக்கொள் !  என் மகள்  ஸந்த்யாவின் நிழலில்கூட உன் பார்வைபடக்கூடாது. அதற்கான சத்தியம் நீ செய்துதரவேண்டும்” என்றார் விஷ்வகர்மா.

ஸந்த்யாவின் நிழலில்.. என்று அவர் கூறியதும் ராகுதேவனின் மனதில் சட்டென்று  ஒரு கபடப்  புன்னகை தோன்றியது. மிகவும் சாமர்த்தியமாக அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டான்.

“விஷ்வகர்மா அவர்களே!  நீங்கள் கேட்டுக்கொண்டபடி சத்தியம் செய்துதருகிறேன். ஸந்த்யாவின் நிழலுக்கு என்னால் எந்தவிதத் தீங்கும் நேராது. இது சத்தியம் சத்தியம்” என்று அவசர அவசரமாகக் கூறினான்.

வேண்டுமென்றே நிழலுக்குக்கூட என்று சொல்லாமல் நிழலுக்கு என்று மட்டும் கூறினான்.

வெற்றிக் களிப்பில் இருந்த விஷ்வகர்மாவும் ராகுதேவனின் வார்த்தையில் மறைந்திருந்த  சாமர்த்தியத்தைக் கவனிக்கவில்லை.

அதனால் பிற்காலத்தில்  என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன  என்பதை அந்தக் கணத்தில் யாரும்  உணரவில்லை.

ராகுவைத் தன் மனத்திலிருந்தும் அந்த  இடத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்ட விஷ்வகர்மா அடுத்து ஸந்த்யாவின் நிலைமை என்னவாயிற்று  என்று யோசிக்கஆரம்பித்தார். 

சூரியதேவனைத் தொடர்ந்து சென்ற ஸந்த்யாவும் சூரிய மண்டலத்திற்குள் சென்றாள்.  சூரிய மண்டலம் தகதகவென்று நெருப்புக் கோளமாக இருந்தது. காந்தச் சிகித்சை எடுத்துக் கொண்டதால் அவளுக்கு அந்த நெருப்புக் கோளங்களின் பாதிப்பு சகித்துக்கொள்ளும் அளவில் இருந்தது.  சூரியனின்மீது அவளுக்கு இருந்த அளவிடமுடியாத காதல் எதையும் தாங்கும் மனப்பாங்கையும் அவளுக்குக் கொடுத்திருந்தது.  

சூரிய மண்டலத்தின்  முகப்பில் சூரியனின் சாரதி  அருணன் குதிரைகளுடள் அமர்ந்துகொண்டிருந்தான்.  வான ஊர்தியில் அங்கு வந்து இறங்கும் ஸந்த்யாவைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.  சூரியதேவனுக்கும்  ஸந்த்யாவிற்கும் இடையே உள்ள உறவைப்பற்றி அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அவர்களுக்குத் திருமணம் ஆனபிறகு தோழிகளுடனும் அலங்காரப் பொருட்களுடனும் ஆடம்பரமாக வருவாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்படி திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தது ஆச்சரியமாக இருந்தது. 

அதுமட்டுமல்ல. சற்று முன்தான்  ஏதோ ஒரு மயக்க நிலையில் சூரியபகவானும் வந்து தன்னிடம் சரியாகக்கூடப் பேசாமல் அரண்மணைக்குச்சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு தன்னை  யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரித்துவிட்டுப் படுத்துவிட்டார்.  

இப்போது ஸந்த்யாதேவி வந்திருப்பதால் அதனால் என்ன பிரச்சினை வருமோ என்றும் பயந்தான்.  

இருப்பினும் ஸந்த்யாதேவியை மரியாதையுடன் வரவேற்று,

” தேவி! சூரிய மண்டலத்திற்குத் தங்கள் வரவு நல்வரவாகுக! தாங்கள் திடீரென்று வந்ததால் தங்களுக்கு உரிய மரியாதையைத்  தர இயவில்லையே என்ற கவலையில் இருக்கிறேன். தங்களுடைய கட்டளை யாதோ?” என்று பவ்யமாக வினவினான் அருணன். 

” தங்கள் மரியாதையை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே என்னை சூரியதேவனிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள் ஸந்த்யா. 

” தேவி! தற்போதுதான் வந்த அவர் தன் அரண்மனையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று கட்டளையும் போட்டிருக்கிறார். தங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத்  தெரியவில்லை ” என்று உண்மையான கவலையில் கூறினான் அருணன். 

” நீர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. என்னை அவரிடம் உடனே அழைத்துச் செல்லவேண்டியதுதான்” என்று கோபத்தோடு மொழிந்தாள் ஸந்த்யா . 

வேறு வழியின்றி அவளை ரதத்தில் அமர்த்தி சூரியதேவனின் அரண்மனையை நோக்கிச்  செலுத்தினான். அரண்மனையின் எல்லாக் கதவுகளும் அவர்களுக்காகத் தானாகவே  திறந்து வழிவிட்டன. 

சூரியதேவன் இருக்கும் அறைக்கு வாசலில் வந்து சேர்ந்தார்கள். அருணணின் மரியாதை கலந்த எதிர்ப்பைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத ஸந்த்யா அந்த அறைக்கதவைத் தன் கரத்தால் வேகமாகத் தட்டத்தொடங்கினாள். 

Image result for suryadev and sandhya

“யாரது என்னைத் தொந்தரவு செய்வது”? என்று கேட்டுக்கொண்டு கோபாவேசத்துடன்  எரியும் நெருப்புபோலக் கதவைத் திறந்தான் சூரியதேவன். 

அந்த ஒளிவெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அருணனே கண்களை மூடி கைகூப்பி நின்றுகொண்டான். 

எதற்கும் கலங்காத ஸந்த்யா சூரியதேவனை நோக்கிக் கோபப் பார்வை பார்த்தாள். 

சூரிய மண்டலமே ஸ்தம்பித்துப்போயிற்று. 

(தொடரும்) 

 

இரண்டாம் பகுதி

 

 

 

நாரதரும் எமியும் அந்த விவாத மண்டபத்திற்குச் சென்றதும்தான் புரியவந்தது அது ஒரு ஸ்பான்சர் நிகழ்ச்சி என்று.

எமபுரிப்பட்டணம் பிராஜக்டை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக சிவா மற்றும் ராம் கன்சல்டிங்க் சேர்ந்து இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

சன் டிவி தான் இதனை நடத்தப்போகிறது.

அவர்களின் ஆஸ்தான பட்டிமன்ற பேச்சாளர்கள் மூவரையும் அழைத்து வந்திருக்கிறது. 

ராஜா , பாரதி பாஸ்கர், திண்டுக்கல் லியோனி 

சாலமன் பாப்பையா தான் நடுவர். 

பட்டிமன்றம் என்றால் இரண்டில் ஒன்று.  விவாதமேடை என்றால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவாதத் தலைப்புக்களைக் கொடுத்து அதில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது. 

இப்போதைய தலைப்பு “எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா? ” என்பதுதான். 

பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர். 

ஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி 

காத்தல் சார்பில் ராஜா  அணி 

அழித்தல்  சார்பில் திண்டுக்கல் லியோனி  அணி 

இந்த நிகழ்வு எமபுரிப்பட்டணத்தில் நடைபெறுவதால் சொர்க்கபுரி, நரகபுரி மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். 

பிரும்மா விஷ்ணு சிவன் மூவர் மட்டும்  வரவில்லை. அவர்களுக்குத் தெரியும் இதில் பெரிய பிரச்சினை உண்டாக்கப்போகிறது என்று. 

காரணம்  சரஸ்வதியும் பார்வதியும் லக்ஷ்மியும் நாரதர் வைத்திருந்த அழைப்பிதழைப் பார்த்து அங்கே சென்றிருக்கிறார்கள். 

நல்லவேளையாக அவர்கள் மூவரும் கல்லூரி மாணவிகள்போல மாறுவேடம் பூண்டு சபையின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

மூவரும் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய என்ன செய்வது என்று தனித்தனியே  தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். 

நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து சாலமன் பாப்பையா பேச எழுந்தார். 

சபை கரகோஷத்தில் நிறைந்தது. 

அப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எமி  நாரதரிடம் கேட்டாள்.

” நீங்கள்தான் முக்காலமும் அறிந்த ஞானி ஆயிற்றே? சொல்லுங்கள் ! எந்த அணி ஜெயிக்கும்? “

“எமி ! என்னுடைய கருத்து சரியாக இருந்தால், இன்று எந்த அணியும் ஜெயிக்காது!”

“அதெப்படி? சாலமன் பாப்பையா எப்போதும்  மற்ற பேச்சாளர்மாதிரி பட்டிமன்றத்தில் இரண்டும் சரி என்று சொல்லாமல் அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் சொல்வாராமே? அவர் சொல்வது இருக்கட்டும். நீங்கள் சொல்லுங்கள் ! எது சிறந்தது?  ஆக்கலா? காத்தலா? அழித்தலா?” 

” எமி,  நாமிருவரும் இந்த விவாதமேடைக்கு வந்திருக்கவே கூடாது. இங்கே பார் எமி, பிரும்மா  என்னைப் படைத்த தந்தை . காக்கும் கடவுள்  நாராயணர் எனது  ஞானத் தந்தை.  அழிக்கும் கடவுள் மகாதேவரோ எனது ஆத்மத் தந்தை. அதனால் நான் எது ஜெயிக்கும் என்று சொல்வது சரியல்ல. அது கிடக்கட்டும். நீ சொல்லு . எது ஜெயிக்கும்? “

” நான் எப்பவும் அண்ணா கட்சிதான்.  அழித்தல் தொழில்தான்  சிறந்தது. பாருங்கள் அதுதான் ஜெயிக்கும்.”

” எமி! அதோ மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்.! யார் என்று தெரிகிறதா?” 

” கல்லூரி மாணவிகள்போல் இ ருக்கிறார்களே! யார் அவர்கள்? ” 

” முப்பெரும் தேவியர்தான். இந்த நிகழ்ச்சியில் அமைதியாகத் தீர்ப்பு சொல்ல அவர்கள் விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை!”

ஐயையோ! அப்போது தீர்ப்பு என்ன ஆகும்?” 

“பொறுத்திருந்து பாரேன்! “

சாலமன் பாப்பையா துவக்கினார். 

(தொடரும்) 

 

திருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் !

Image result for திருப்பாவையில் விஷ்ணுImage result for திருப்பாவையில் விஷ்ணு

திருப்பாவையில் விஷ்ணுவைப் பற்றிய குறிப்புகள் எத்தனை வருகின்றன என்று கேட்டிருந்தோம் 

இதோ அதற்கான பதில்: 

மார்கழித் திங்கள்:

1. நந்தகோபன் குமரன்
2. யசோதை இளம் சிங்கம்
3. கார் மேனி செங்கண்
4. கதிர் மதியம் போல் முகத்தான்
5. நாராயணன்

வையத்துள் வாழ்வீர்காள்:

6. பரமன்

ஓங்கி உலகளந்த உத்தமன்

7. ஓங்கி உலகளந்த உத்தமன்

ஆழி மழைக் கண்ணா :

8. ஊழி முதல்வன்
9. பற்பனாபன்

மாயனை மன்னுவட

10. வட மதுரை மைந்தன்
11. யமுனைத் துறைவன்
12. ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு
13. தாமோதரன்

புள்ளும் சிலம்பின காண்:

14. புள்ளரையன்
15. பேய் முலை நஞ்சுண்டவன்
16. சகடம் கலக்கழித்தவன்
17. வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18. அரி

கீசு கீசு என்று எங்கும்:

19. நாராயணன்
20. மூர்த்தி
21. கேசவன்

கீழ் வானம் வெள்ளென்று:

22. மாவாய் பிளந்தான்
23. மல்லரை மாட்டியவன்
24. தேவாதி தேவன்

தூமணி மாடத்து:

25. மாமாயன்
26. மாதவன்
27. வைகுந்தன்

நோற்றுச் சுவர்க்கம்:

28. நாராயணன்
29. புண்ணியன்

கற்றுக் கறவைக் கணங்கள்

30. முகில் வண்ணன்

கனைத்து இளம் கற்றெருமை:

31. இலங்கை(க்) கோமானைச் செற்றவன்
32. மனத்துக்கு இனியான்

புள்ளின் வாய் கீண்டானை :

33. புள்ளின் வாய் கீண்டான்
34. கிள்ளிக் களைந்தான்

 உங்கள் புழக்கடை:

35. சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
36. பங்கயக் கண்ணான்

எல்லே இளம் கிளியே :

37. வல் ஆனை கொன்றான்
38. மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
39. மாயன்

நாயகனாய் நின்ற:

40. மாயன்
41. மணி வண்ணன்

 அம்பரமே தண்ணீரே

42. ஓங்கி உலகு அளந்தவன்
43. உம்பர் கோமான்
44. உம்பி

உந்து மத களிற்றன்:

45. பந்து ஆர் விரலி மைத்துனன்

குத்து விளக்கெரிய:

46. மலர் மார்பன்
47. மைத் தடம் கண்ணினாய் மணாளன்

முப்பத்து மூவர்:

48. கலி
49. செப்பம் உடையவன்
50. திரள் உடையவன்
51. செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
52. மணாளன்

ஏற்ற கலங்கள்:

53. ஆற்றப் படைத்தான் மகன்
54. ஊற்றம் உடையவன்
55. பெரியோன்
56. தோற்றமாய் நின்ற சுடர்

 அம் கண் மா ஞாலத்து :
   ————
மாரி மலை முழைஞ்சில்:

57. பூ வண்ணா

அன்று இவ்வுலகம்:

58. அன்று இவ்வுலகம் அளந்தவன்
59. தென் இலங்கை செற்றவன்
60. சகடம் உதைத்தவன்
61. கன்று குணில் ஆவெறிந்தவன்
62. குன்று குடையாய் எடுத்தவன்
63. வென்று பகை கெடுத்தவன்

ஒருத்தி மகனாய்:

64. ஒருத்தி மகனாய்ப் பிறந்தவன்
65. ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
66. நெடுமால் .

மாலே மணிவண்ணா.

67. மால்
68. மணிவண்ணா.
69. ஆலின் இலையாய்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:

70. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

கறவைகள் பின் சென்று:

71. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
72. இறைவா

சிற்றம் சிறு காலே:

73. மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவன்
74. பறை கொள்வான்
75. கோவிந்தா

வங்கக் கடல் கடைந்த:

76. மாதவன்
77. கேசவன்
78. திருமால்

 

அம்மா கை உணவு (12) – சதுர்புஜன்

Image result for பருப்புசிலி

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019

 

  • பருப்புசிலி பாசுரம்

 

பருப்புசிலி என்றொரு பதார்த்தமுண்டு – அட

என்ன ருசி சொல்லவொரு வார்த்தையில்லை !

மோர்க்குழம்போடு சேர்த்து குழைத்தடித்தால்

நிகரென்று எதுவுமே இல்லையடி !

 

ரசம் சாம்பார் என்று போரடித்தால் –

உசிலிதான் உதவிக்கு வந்திடுமே !

சிறப்புகள் நானும் சொல்லிடுவேன் – இந்த

தரணியில் இதற்கொரு நிகருமுண்டோ ?

 

இட்டிலித் தட்டினில் வேகும்போதே – மணம்

பரப்பி வரும் – வீடே கமகமக்கும் !

ஆவி பறக்க சோறெடுத்து – அதில்

பசு நெய்யும் பிசையவே போதை வரும் !

 

உப்பும் காரமும் நன்கு கொப்பளிக்க – அதில்

கொத்தவரைப் பிஞ்சாய்க் கலந்திருக்க

பச்சையும் மஞ்சளும் டாலடிக்கும் – கொடும்

பசியினைக் கிளறிக் கபகபக்கும் !

 

பருப்புசிலிக்கு மோர்க்குழம்பு – பெரும்

பொருத்தமடி ! பெரும் பொருத்தமடி !

கோபமணைக்கும் காதலைப் போல் – மோர்க்

குழம்பும் உசிலியைத் தழுவுதடி !

 

கூடவே ஒருபிடி கேட்குமடி – உசிலி

உச்சத்தை வேகமாய் காட்டுமடி !

கும்மென்று வயிறும் ஆச்சுதடி – உடல்

அக்கடா என்றே போச்சுதடி !

 

வழுக்குதடி – உள்ளே இழுக்குதடி – வெந்த

சேப்பங்கிழங்கு வழுக்கியே போகுதடி !

வெண்டையும் நன்றாய் சேருமடி – இதற்கு

வேறெதும் ஈடிணை இல்லையடி !

 

எப்படித்தான் முன்னோர் பிடித்தனரோ ? கண்டு

சுவைகளைத் தேடிக் கொடுத்தனரோ ?

காலம் காலமாய் அவர் கொடுத்த பெரும்

சுவைகளைப் போற்றிட வேணுமடி !

 

 

 

 

நீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Image result for மீன்கள் ஏரியில்

சிறுமியர் விளையாடும்
ஓட்டாஞ்சில்லை குளத்து நீரில்
ஓரக்கண்ணால் எறிந்தபோது
துள்ளி துள்ளி ஓடுவதுபோல்
நீர்பரப்பில் துள்ளி துள்ளி
நீந்தி சிலிர்க்கும் ஒரு மீன் !

அமைதியான நீர்பரப்பில்
ஆதவன் கதிர் ஒளியில்
பல வண்ணங்களில்
நீந்தி விளையாடும்
ஒளிரும் மீன்குஞ்சுகள் !

புரண்டு ஓடும் நதியில்
ஆனந்தமாக குளிக்கும்போது
நம் பாதங்களை மட்டுமல்ல
நம் உள்ளங்களையும்
முத்தமிடும் மீன்கள் !

கதிரவனின் ஒளிக்கதிர்கள்
பறக்கும் பறவை ஒலிகள்
பதுங்கும் நண்டுகள்
மணக்கும் தாமரை மலர்கள்
கண்ணாடித் தொட்டி நீரில்
தேடித் தேடி காணாமல்
கவலையுடன் நீந்தும் மீன்கள் !

 

Image result for மீன்கள் ஏரியில்

 

குவிகம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா

 

அப்பா அவள் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.

ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது.

நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை.

நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்!

மாரடைப்பா

அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை

அடைத்து விட்டனவோ?

அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது.

போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது’ என்றாள் கடைசியாக.

திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது.

அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்!

இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது

நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவதும் வீட்டிலிருக்க மாட்டான்: இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டுவிட்டு வெளியே போவான்; இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான்.

அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது எனக்கே சங்கடமாக இருந்தது. நான் எழுத்தாளன் இரவும் பகலும் வீட்டிலேயே இருப்பவன்.

காலையிலும் மாலையிலும்தான் சிறிது நேரம் வெளியே போவேன்.

அந்த மனிதன் முந்திக் கொண்டு விட்டான்.

‘ஸார், நீங்கள் இங்கே தனியே இருக்கிறோமே என்று சங்கோசப்பட வேண்டாம். நான் சந்தேகப்படும் பேர்வழியல்ல; நீங்களும் உங்கள் ஜோலியோ நீங்களோ என்று இருக்கிறீர்கள். மனுஷ்யாள் தன்மையை அறிய எவ்வளவு நேரமாகும்? உங்களைப் போன்ற ஆசாமி வீட்டில் இருப்பது, நான் சதா வெளியே போவதற்குச் செளகரியமாக இருக்கிறது.

‘உங்களைப் போல என்று சொல்ல என்னிடம் என்னத்தைக் கண்டான்?

அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது.

அவன்-அவன் பெயர் கோபாலய்யர்-ஆபீஸுக்குப் போகுமுன்பே நான் முற்றத்திலிருந்த குழாயை உபயோகித்துக் கொண்டு விடுவேன். பிறகு, அந்தப் பக்கமே போகமாட்டேன். அவன் வெளியே போனதும் அவள் ரேழிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவாள். சாவித்திரி யாருடனும் வம்பு பேசுவதில்லை; வெளியே வருவதே இல்லை.

இப்படி ஒரு வாரமாயிற்று. இரவு இரண்டு மணிக்கு அவன் வந்து கதவைத் தட்டுவதும், சாவித்திரி எழுந்து போய்க் கதவைத் திறப்பதும், பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவள் அவனுடன் உள்ளே போவதும் எனக்கு அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒரு நாள் அவன் வந்து கதவைத் தட்டியபோது அவள் அயர்ந்து தூங்கிப் போய் விட்டாள் போல் இருக்கிறது. நாலைந்து தடவை கதவைத் தட்டிவிட்டான். நான் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

‘ஒ! நீங்களா திறந்தீர்கள்? மன்னிக்க வேண்டும்! என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் உள்ளே போனான். நான் என் அறையில் போய் படுத்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

உள்ளே போனவன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை என்ன செய்தானோ தெரியவில்லை. பிறகு தெரிந்தது; உதைத்தான் காலால் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, ரொம்ப நாழி தட்டினர்களா? மத்தியானமெல்லாம் தலைவலி, உடம்பு… தெரியாமல்…’ என்று அவள் மெதுவாக பயந்து சொன்னது என் காதில் பட்டது.

‘உடம்பு தெரியுமா உனக்கு உடம்பு தெரியச் சொல்கிறேன்! என்று சொல்லிக் கொண்டு அடித்தான் அவளை அடித்தது என் காதில் விழுந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று கடைசியாகச் சும்மா இருந்துவிட்டேன்.

பிறகு இரவு முழுவதும் மூச்சுப் பேச்சு இல்லை. ஆனால் அவள் தூங்கவே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நானும் தூங்கவில்லை.

மறுநாள் இரவு கதவை அவள் விழித்திருந்து திறந்தாள். ஆனால், அன்றும் அவளுக்கு அடி விழுந்தது. முதல் நாள் போல அவள் பேசாமல் இருக்கவில்லை.

“என்னை ஏன் இப்படி அடித்துக் கொல்லுகிறீர்கள்? நீங்கள் செய்வது எதையாவது நான் வேண்டாமென்கிறேனா?

‘ஒஹோ, இப்பொழுது உனக்கு வாய் வேறா? ‘

எவ்வளவு நாள்தான் நானும்…’

‘சீ, வாயைத் திறந்தால் பல்லை உதிர்த்து விடுவேன்?

‘உதிர்த்து விடுங்கள்!”

பளாரென்று கன்னத்தில் அறை விழுந்த சத்தம் கேட்டது. என்னை யறியாமல் நான் எழுந்து ரேழிக் கதவண்டை போய், ஸார், கதவைத் திறவுங்கள் என்றேன்.

அதற்குமுன் என்னோடு பல்லிளித்துக் கொண்டு பேசி வந்த மனிதன் உள்ளே இருந்து மிருகம் போலச் சீறினான்.

“எதற்காக?”

‘திறவுங்கள், சொல்லுகிறேன்!

‘முடியாது, ஸார்!

” திறக்காவிட்டால் கதவை உடைப்பேன்!”

அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே ரேழிக்கு வந்து மறுபடியும் கதவை மூடிக்கொண்டு என்ன ஸார்?’ என்றான்.

‘உங்கள் மனைவியை நீங்கள் அடித்தது போல் காதில் பட்டது?

இருக்கலாம், அதைப் பற்றி உங்களுக்கென்ன?

‘நீங்கள் அந்த மாதிரிச் செய்யும்படி நான் விடமுடியாது!”

“என்ன செய்வீர்கள்?”

போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன், முதலில் நானே பலாத்காரமாக உங்களைத் தடுப்பேன்.”

அவன் முகத்தில் சோகமும் திகிலும் தென்பட்டன. திருதிருவென்று சற்று விழித்தான். என்னுடைய திடமான பேச்சைக்கண்டு அவன் கலங்கிப் போனான் என்று தெரிந்தது. அவன் கோழை என்று உடனே கண்டேன்; இல்லாவிட்டால் ஒருவன் பெண் பிள்ளையை அடிப்பானா?

‘நீங்கள் சாது, ஒரு வழிக்கும் வரமாட்டீர்கள் என்று உங்களை ரேழியில் குடிவைத்தேன். நீங்கள் அனாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதாக இருந்தால் காலையிலேயே காலி செய்து விடவேண்டும்.

‘நான் காலி செய்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளுவோம். இனிமேல் நீங்கள் விடிகிற வரையில் உள்ளே போகக்கூடாது.

‘நீர் யாரையா, இந்த மாதிரியெல்லாம் உத்தரவு செய்ய?

“யாராயிரருந்தால் என்ன? இப்பொழுது நீர் நான் சொன்னபடி செய்ய வேண்டியதுதான்; மீறினீரானால் உமக்கு நல்லதல்ல.

‘பயமுறுத்துகிறீர்களோ?

பயமுறுத்துவது மட்டுமல்ல-செயலிலே காட்டி விடுவேன். வாரும், என் அறையில் படுத்துக் கொள்ளலாம். அம்மா, கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் அவள் பக்கம் திரும்பி.

போட்டு விடுவாளோ அவள்?”

‘நான் இங்கே இருக்கிறவரையில் நீர் இனிமேல் அந்த அம்மாள் மேல் விரல் வைக்க முடியாது.”

அப்பொழுது சாவித்திரி கதவைத் திறந்துகொண்டு வந்தாள். என்னுடன் அவள் பேசினதே இல்லை.

தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புருஷனைப் பார்த்து, வாருங்கள் உள்ளே! என்றாள்.

‘நீ போடி உள்ளே! உன்னை யார் இங்கே வரச் சொன்னா என்று அவன் அவள்மேல் சீறி விழுந்தான்.

‘அம்மா, விஷயம் உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நான் தலையிடாமல் இருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அனாவசியமாக உங்களுக்கு சங்கடமே என்றுதான் நானே தலையிடுகிறேன் என்றேன் அவளைப் பார்த்து.

‘நீங்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டு தலையிடுவது தான் எனக்குச் சங்கடம் என்று அவள் சொன்னாள்.

சரி, கதவு திறந்திருக்கட்டும். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். வாசற்கதவைத் தாளிட்டு வருகிறேன். இவரும் நானும் என் அறையில் படுத்துக் கொள்ளுகிறோம் என்றேன்.

நான் இங்கே படுத்துக்கொள்ள முடியாது. எனக்கு வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது என்று அந்த மனிதன் வெளியே போக ஆயத்தமானான்.

என்ன மனிதன் அவன் அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை.

சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற்கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய்ப் படுத்துக்கொண்டேன்.

தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.

அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி…!

தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.

நான் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போலத் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

வேண்டாம், விளக்கு வேண்டாம், அணைத்து விடுங்கள் என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையிலேயே உட்கார்ந்து விட்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். ‘புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்.

‘உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேனே என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று… வந்தேன்.

‘அம்மா…’

‘என் பெயர் சாவித்திரி.

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப் போய் விட்டது

‘இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே. அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது ?”

ஆனால் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களா? ‘

வாயைத் திறந்து சொல்ல வேண்டுமா?”

‘பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை குருவி போலத்தான் மனிதர்களும். இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?

‘புருஷன்…’

‘என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்…’

‘நீங்கள் அப்படி…’

‘நீங்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே பெரியவர்கள். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும், எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’

‘இல்லை.”

ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால், நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்த துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவையாக இருந்தன.

‘அம்மா… சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக்கொண்டு…’

’இனிமேல் என்னை என்ன செய்துவிடப்போகிறான். கொலைதானே செய்யலாம்? அதற்குமேல்?’

‘நீ இப்படிப் பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்கு புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்.

‘நல்ல வார்த்தையா? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?

பின் என்ன செய்யப் போகிறீர்கள்?”

‘என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை – அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிற வரை அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.’

அடடா, இப்படியேயா!’

வேறு வழி என்ன இருக்கிறது?

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

‘என்ன பதில் இல்லை? என்று அவள் சிரித்தாள்.

‘நான் என்ன சொல்வது… அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?” என்று திடீரென்று கேட்டேன்.

கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே சில மாதங்களுக்குப் பிறகு.? ‘

என்ன சாவித்திரி…”

அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புது முகத்தைப் பார்ப்பீர்கள்.”

‘நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்பொழுது, நானும் பேசலாமா?

‘தாராளமாக!’

‘என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது!”

அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்று உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது…’

‘நீ எப்படி அந்தமாதிரிப் பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?”

‘எப்படியா? என் புருஷனைப்போல் என்னிடம் பல்லைக்காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன். மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?”

‘சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?

“எது சுகம்? நகைகள் போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர்; புடவை, ரவிக்கை-நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம்; நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.

‘அதாவது…’

‘என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.”

பின் எதைத்தான் சுகம் என்கிறாய்? ‘

நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?”

‘உன் புருஷன் ஏன்…?”

‘என் புருஷனுக்கு என் சரீரம் சலித்துப்போய் விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.

‘சாவித்திரி தைரியமாக ஒன்று செய்யலாமே!

‘நான் எதையும் செய்வேன். ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம் அவ்வளவுதான்.

‘உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்து பார்க்கிறேனே!”

‘வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கிவிட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.

“எது சொன்னாலும்…’

‘ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

‘நான் போய்ப் படுத்துக்கொள்ளட்டுமா?”

தூக்கம் வருகிறதா?”

தூக்கமா? இப்பொழுது இல்லை

பின் சற்று தான் இரேன்.

‘உங்கள் தூக்கமும் கெடவா?

‘சாவித்திரி…”

‘ஒன்றும் சொல்லாதீர்கள்!”

நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது

. நிஜம்மா என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

‘பொய் சொன்னால்தான் நீ உடனே…

அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்’

‘சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக் கட்டும். என் கட்டை சாய்ந்தபிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.

‘ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? ‘

இல்லை, இனிமேல் இந்த சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கேதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது.

நான் சொல்லவில்லையா? என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல் இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன்.

அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்… என் படுக்கையில் அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஒய்ந்து போனது போலப் பிரித்த படியே கிடந்தன.

திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

‘சாவித்திரி, என்னம்மா? என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்.”

போதும்!”

‘சாவித்திரி, விளக்கு…’

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.

‘நீ சொல்வது அர்த்தமாகவில்லை, சாவித்திரி!’

‘இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்!”

‘ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’

‘ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டுச் சிறிதும் தயங்காமல் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

சட்டென்று என் உள்ளத்திலும் சற்று எரிந்த விளக்கு அணைந்தது.

போதும்!

எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா,என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்…?

******

கலாமோகினி, ஜனவரி-19

நேற்று இன்று2 நாளை! நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

Image may contain: 3 people, including Jayaraman Raghunathan

Image may contain: 2 people, people sitting

தங்கள் ஆறாவது படைப்பாக நான்கு குறு நாடகங்களை அரங்கேற்றியது தியேட்டர் மெரீனா – சுஜாதா அவர்களின் மூன்று சிறுகதைகள் மற்றும் ஜெயராமன் ரகுனாதனின் ஒரு கதை – குறுநாடகங்களாக மேடையில் ஜவஹர் சேகர் இயக்கத்தில் நடிக்கப்பட்டன. அறிவியல் கதைகளை (Science Fiction) தமிழில் ஓரளவுக்குப் பிரபலமாக்கியது சுஜாதா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவற்றில் மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்து, நாடகமாக்கி, ஒரு விஷுவல் ட்ரீட்(மெண்ட்) கொடுக்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் தியேட்டர் மெரீனா என்றே சொல்ல வேண்டும்! ஜெ.ரகு மற்றும் தியேட்டர் மெரீனா குழுவினருக்கு வாழ்த்துக்கள்!.

இன்றைய அரசியல் பேசியபடியே ஒரு டீக்கடை பெஞ்ச் – அரசியல்வாதி, அவர் அல்லக்கை, பொதுஜனம் (ஒருவர்) – பேசியபடியே டீக்கடைக்காரர் ஒவ்வொரு கதையாக அறிமுகப்படுத்துவது நல்ல உத்தி மற்றும் காமிக் ரிலீஃப்! இந்த வசனங்களை எழுதியவர்(கள்) நகைச்சுவையுடன் இன்றைய அரசியலை அலசியிருக்கிறார்(கள்)! சில வசனங்கள் கரண்ட் பாலிடிக்ஸ் பேசுகின்றன. ஜவஹர் சேகர், பிரசன்னா, வெற்றி, கார்திக், முகுந்த் எல்லோருமே நல்ல ‘டைமிங்’ சென்சுடன் டயலாக் பேசினார்கள் – சேகர் சினிமா சிரிப்பு நடிகரை நினைவுபடுத்தும் கை ஆட்டங்களைத் தவிர்க்கலாம் – ஒரிஜினலாகவே அவருக்கு நல்ல காமெடி வருகிறது.

மகாபாரதச் சிறுகதை ‘நச்சுப் பொய்கை’ (நேற்று) – சுஜாதா தன் பாணியில், அதன் சீரியஸ் தன்மை குறையாமல் எழுதி, முடிவில் ஒரு அறிவியல் உண்மையைக் கூறி அசத்தியிருப்பார்! அப்படியே நாடக வடிவம்பெற்று, சுவை குறையாமல் நடிக்கப்பட்டது – கொஞ்சம் நையாண்டியைக் குறைத்திருக்கலாமோ என்று தோன்றியது; ஏனெனில், கதையில் நம்மை எதிர்பாராத அறிவியல் உண்மையைக் கூறிப் பரவசப்படுத்தும் சுஜாதா, இந்த கலாட்டாவில் மறைந்து விடுகிறார்.

ரகுநாதன் தன் ‘இரண்டாவது கதவு’ (இன்று) நாடகத்தை, வாத்தியார் பாணியிலேயே சொல்லியிருக்கிறார் – சபாஷ்! இந்தப் பிறவியில் பெண்களைக் கொடுமைப்படுத்துபவர்களுக்கு, நரகத்தில் எண்ணைக் கொப்பரைதான் என்பதை நகைச்சுவையாக சொல்கிறார் – கொடுமைக்கார கணவன், அப்பாவியாய் அடங்கி நடக்கும் அவன் மனைவி, மகன், மகள் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் – நரகத்தின் முதல் வாயிலில் செல்ஃபி எடுத்துச்செல்லும் பெண், நொண்டி, அரசியல்வாதி எல்லோரும் நொடியில் சிரிக்க வைக்கிறார்கள்! இளங்காதலர் உரையாடலில், ரகுநாதனுக்குள் உறைந்திருக்கும் சுஜாதா தெரிகிறார். வெல் டன் ரகு!

“கடவுள் பெட்டி” (இன்று) – பெட்டிக்குள்ளிருக்கும் கடவுள் வெளிவரும் அறிவியல் புதினம்! நாடகம் முழுதும் சுஜாதாவின் கைவண்ணம் தெரிகிறது. ஶ்ரீனிவாசன், தினேஷ், கிரிதரன் மூவருமே சிறப்பு – தினேஷின் ஆட்டத்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா சபாஷ்! ‘இறக்கிறானா, பறக்கிறானா’ வில் சுஜாதாவின் முத்திரை!

“தீபாவளி” (நாளை) – நாளைய ரோபோக்கள் உலகில், வர்ச்சுவல் பாத்திரங்கள் கொண்டாடும் தீபாவளியும், அதன் நகைச்சுவையும் (வழக்கமான தமிழ் நாடக பாணியில் வசனமும், நடிப்பும்!) – குறிப்பிட்ட நேரம் முடிந்தபிறகு, அவை மறைந்திட, மீண்டும் ரோபோ – இன்றைய அவசரமான, இயந்திர வாழ்க்கையில் நாம் எவற்றையெல்லாம் இழந்துவருகிறோம் என்பதை சுஜாதா, எதிர்கால இமாஜினரி மனிதர்களுடன் (இயந்திரங்களுடன்) தீபாவளியை இணைத்து எழுதியிருந்ததை, நல்ல முறையில் நாடகமாக்கியிருக்கிறார்கள்- அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தக்‌ஷினின் இசை நாடகத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது – கடவுள் பெட்டி டான்ஸ், தீபாவளி ரோபோ இசை எல்லாமே சிறப்பாக செய்திருக்கிறார்.

செட்ஸ், லைடிங் எல்லாமே கதைகளுக்கு ஏற்றபடி, அமைக்கப்பட்டிருக்கின்றன.

சுஜாதா நிச்சயமாக வாழ்த்தி மகிழ்ந்திருப்பார் – தன் அறிவியல் கதைகளை சிதைக்காமல் நாடகமாக மேடையேற்றியதற்காக!

மேலும் சுஜாதா கதைகளை நாடக வடிவில், விஷுவலாகக் காணும் சாத்தியக்கூறுகள் நிறையவே தென்படுகின்றன!

நல்ல முயற்சி – தியேட்டர் மெரீனா, ரகுனாதன் மற்றும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வாழ்த்துக்கு உரியவர்கள்!

டாக்டர் ஜெ.பாஸ்கரன்

மதுரை சின்னபுள்ள.

 

 இவர்தான் சின்னப்பிள்ளை!

 

மதுரை மாவட்டம் புல்லுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை.
அவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருக்கிறது. 
யார் அந்த சின்னப்பிள்ளை? 

அவர் என்ன சாதனைகள் செய்தார்? 

எதற்காக இந்தப் பட்டம் ?

கடன்கள்

களஞ்சியம் என்ற மகளிர் சுய உதவிக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

களஞ்சியம்

 

  • மகளிர் சுய உதவிக்குழு துவக்கும்போது பதினான்கு மகளிர்கொண்ட சுய உதவிக்குழுவிற்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாயிரம் மகளிர்க்குத் தலைவியானார்.
  • ஏழு மாநில மகளிர் களஞ்சிய சுய உதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
  • தற்போது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம், ராஜஸ்தான்  மத்தியப் பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களைச் சேர்ந்த இருநூற்று நாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இக்கூட்டமைப்புக்குள் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ எட்டு இலட்சம் மகளிர்.
எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றாலும்,  தன்னம்பிக்கையின் காரணமாக அந்த நாள்முதல் இன்றுவரை தன் கிராமத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களின் வாழ்வியல் உரிமைக்காகப் போராடும் சாதனைப் பெண்ணாக இவர் விளங்குகிறார்
சின்னப்பிள்ளை
இப்படிப்பட்ட இவர் இங்கு இருப்பதால்  தமிழகம் இன்று பெருமை பெறுகிறது !

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து

 

நேற்றுவரை ஓடி ஓடி வட்டிமேல வட்டி போட்டு

சேர்த்ததெல்லாம் நீ தானே

ஈரெழுத்து ஓரெழுத்தாகி சேர்த்ததெல்லாம் செத்ததாகி

இன்று  கட்டையாகிக் கிடப்பவனும் நீ தானே !

Related image

 

பயிற்சி மையத்தில் கிடைத்ததுதான் முதல் வெளி அனுபவம். அதற்குமுன் அலுவலகத்தில் சிலரைச் சந்தித்திருந்தேன். அப்போதெல்லாம் சற்று பயம் இருக்கும். செய்யவேண்டியவற்றைச் சரியாகச் செய்கிறோமா என்ற கேள்வி பின்னணியில் எப்போதும் இருக்கும். இங்கே அதெல்லாம் இல்லை. நிதானமாக நடப்பவற்றை வேடிக்கைபார்க்க நல்ல சந்தர்ப்பம்.

எல்லோரும் கிட்டத்தட்ட சம வயதினர். வேறுவேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள்.  அனைவருக்குமே முதல் பயிற்சிமைய அனுபவம் இதுதான். அவரவர் அலுவலக சூழ்நிலையில் இருந்து சற்று விடுபட்டு மீண்டும் பள்ளி, கல்லூரி வாழ்க்கையைப்போல் கவலையற்ற நிலை. எங்கள் வகுப்பிற்கான பொறுப்பில் இருந்த அதிகரிக்கும் இதுதான் முதல் அனுபவம்.

அப்போது சந்தித்தவர்களில் யார் யார் நினைவில் உள்ளார்கள் என்று யோசிக்கிறேன்.

பின்னாட்களில் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக, தொடர்ந்து ஒரு பன்னாட்டு நிறுவன இந்தியத் தலைமை அதிகாரியாக செல்வாக்குடன் வாழ்ந்த  கோபதி, வாழ்வின் அர்த்தம்  என்ன என்கிற ஞானத்தைத் தேடி சந்நியாசி ஆன ஞானப்பிரகாசம், ஜாலியாக இருப்பதே லட்சியம் என்று இருந்த சீதாராமன் ….

ஒய்வு பெறுமுன் இங்கே சந்தித்த  சிலருடன் பணிபுரிந்திருக்கிறேன்.  பதவி உயர்வுபெற்று எனக்கு அதிகாரியாக வந்தவர்கள் இருவர்.  ஒருவன் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பலமுறை எனது அலுவலகத்திற்கு வந்திருக்கிறான்.  ஒருவன் இன்னொருமுறை பயிற்சி மையத்தில்  ஒரு நிகழ்வில் இருந்தான்.

பெண்கள் என்று பார்த்தால் மூன்று பேர். அதில் ஒருத்தி வேறு மாநிலத்தவள்.  யாருடனும் பழகாமல் எப்போதும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்த  அகிலா இன்னொருத்தி. கலகலப்பாகப் பழகும் மஞ்சுளா என்ற பெண், மூன்றாமவள். அதிகம் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்கு  இருந்ததில்லை.

அம்மா, பாட்டி தவிர குடும்பத்தில் பெண் என்பவள் என் தங்கைதான். அவளை வீட்டில் எல்லோரும் குழந்தையாகவே பாவித்தார்கள். என்னுடன் வேலைபார்த்த எல்லாப் பெண் ஊழியர்களும் மரியாதைக்கு உரியவர்களாக இருந்தார்கள். வீட்டிலும் அலுவலிலும் திறம்பட கடமையைச் செய்துவந்தவர்கள். வெட்டி வம்பு, பொறாமை எதுவும் கிடையாது.

 பெண்களின்  எண்ண ஓட்டங்கள், விருப்பு வெறுப்புகள்பற்றி எனக்கு எப்போதுமே கவனம் இருந்ததில்லை.

அதற்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ஐந்து வருடங்கள் கழித்து அகிலா எங்கள் அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்தாள். திருமணம் ஆகியிருந்தது.  கணவர் வேலை பார்க்கும் ஊருக்கு அருகில்  என்பதால் விருப்ப மாற்றல் பெற்று வந்துசேர்ந்தாள். அடையாளம் தெரியாதவாறு  குண்டாகி இருந்தாள். திருமணமாகி நான்கு வருடங்களில் இரண்டு குழந்தைகள். கேலியும் கிண்டலுமாகப் பேசுவாள். முன்பு பார்த்த  அகிலாவிற்கு நேர் எதிர்.

ஆனால் தன் சொந்த விஷயத்தைப்பற்றிப் பேசும்போது ஒரே அலுப்பு தெரியும். தனது மாமியார் மற்றும் கணவன் குடும்பத்தைப்பற்றி எப்போதும்  புகார்.    தன் கணவரை ‘அது’ என்றுதான் குறிப்பிடுவாள். ‘அது’ சாமர்த்தியம்  இல்லாத ஜந்து என்பதுபோல் சித்தரிப்பாள்.

மற்றவர்கள் அனுதாபத்தைச் சம்பாதிப்பது நோக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் அனுதாபப்படுகிறார்களோ இல்லையோ ஒரு வம்பு கேட்டு ரசிப்பது நிச்சயம்.சிலருக்குக் குரூர ‘ஸாடிஸ்டிக்’ மகிழ்ச்சி கூட  வெளிப்படையாகத் தெரியும். இது ஏன் அகிலாவிற்குப் புரியவில்லை என்று யோசிப்பேன்.

“அது சட்டுன்னு ஒரு வேலையை முடிச்சுடாது. சாரே தேவலாம்.” என்று என்னைக்காட்டி ஒருமுறை சொன்னாள். எனக்கு வருத்தப்படுவதா, சந்தோஷப்படுவதா  என்று தெரியவில்லை. வேறு யாரவது  அந்த நிலையில் இருந்தால்,  ஏதேனும் பதிலடி கொடுத்திருப்பார்கள். நான் மௌனமாக இருந்துவிட்டேன்.  

பின்னர் ஒரு விஷயம் காதில் விழுந்தது. அகிலாவின் கணவர் வேலை பார்த்த இடத்தில் மேல் வரும்படி நிறையவாம். ஆனால் அகிலாவின் கணவன் அதில் நாட்டம் இல்லாதவர். சக ஊழியர்கள் கார், வீடு என்றெல்லாம் வாங்கினாலும், இவர் தன் பாதையில் இருந்து விலகியதில்லை.

அவருடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி அகிலாவிடம்  எச்சரிக்கை செய்திருக்கிறாள். அகிலாவின்  கணவர் ‘யோக்ய சிகாமணி’ ஆக இருப்பது சக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதாம். அவர்கள் கடுப்பாக இருக்கிறார்களாம். இவருக்கு எதாவது பிரச்சினை ஏற்படுத்தவும் செய்யலாம்.

‘ஊரோடு ஒத்துவாழ முடியவில்லை என்றால் இப்படித்தான்’ என்று  அகிலா சொல்லிக் கொண்டிருந்தாள் அங்கலாய்ப்புடன்.

சில வருடங்களில் ஒரு புகாரின் அடிப்படையில் கணவருக்கு மாற்றலானதும் அகிலாவும் இரண்டாவது விருப்ப மாற்றல் (பெரும் முயற்சிக்குப்பின்) வாங்கிக்கொண்டு போய்விட்டாள். 

அந்த இடைக்காலத்தில் அவள் புலம்புவது சகஜமாயிற்று. முதலில் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் நாளடைவில் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.  ஒருமுறை உதவி மேலாளர், “புலம்பாமல் போய் வேலையைப் பாருங்கள்.” என்று கோபித்துக்கொள்ளும் அளவிற்குப் போய்விட்டது. 

அப்போது அலுவலகத்தில் இன்னும் ஒரே ஒரு பெண் ஊழியர்தான் இருந்தார், அவருக்குத்தான் பெரிய தலைவலி. அவருக்குத்தான்  அகிலாவின்  புலம்பல்கள் அதிகம் செவிமடுக்க நேரிட்டது. எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாத ஒரு முகபாவத்துடன் மௌனமாக இருக்கக் கற்றுக்கொண்டார். அந்தப் பெண்மணிதான் அனுதபத்துக்குரியவள் என்று தோன்றும்.

அகிலா மாற்றலானதும் எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

பல வருடங்கள் கழித்துக் கிடைத்த சில தகவல்கள்.

முதல் தகவல்:

அகிலாவின் கணவர்  வேலை பார்த்துவந்த  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடந்தது. பெரிய அளவில் ஒரு மோசடி வெளிப்பட்டது.  பல ஊழியர்கள் வெகு நாட்கள் சஸ்பென்ஷனில் இருந்தார்கள். இருவருக்கு  வேலை போய்விட்டது. (அதில் எச்சரிக்கை செய்யவந்த பெண்மணியும் ஒருத்தி.)  ஒருவர் சிறைத் தண்டனை பெற்றார்.

வழக்கு விசாரணை சமயத்தில் ஒரு வக்கீல் தெரிவித்த அபிப்பிராயம் எனக்கு விநோதமாகப்பட்டது. ..

(செய்யவேண்டிய வேலைகளைச் செய்வதற்கே ஐம்பதும் நூறும் தினம் கிடைக்கிறதே, இவர்கள்  ஏன் பெரிய ஊழலில் ஈடுபடவேண்டும்? என்றார் அவர். அதிக வாடகை கேட்கும் ஆட்டோ ஓட்டியிடம் “வழக்கமாக இருபது ரூபாய்தான் அதிகம் கொடுப்பேன் – நீங்கள் ஐம்பது கேட்கிறீர்களே?” என்பதுபோல.)

மற்றுமொரு தகவல்:

பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருந்துவந்த அகிலாவிற்கு அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு உடல்நலம் குன்றியது. விடுப்பு எடுக்கக்கூட வழியில்லாமல் வேலையையே விடும்படி ஆகிவிட்டது. நாற்பது வயதிற்குள்ளாகவே இறந்தும் போய்விட்டாள்.

மூன்றாவது தகவல் :

Image result for office in tamilnadu+ corruption charge+ suicide

வேலை போன அந்த ‘எச்சரிக்கை’ப்  பெண்மணி தற்கொலை செய்துகொண்டாள்.

திருப்தியுடன் வாழப் பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணமே எல்லா மகிழ்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கமுடியாது. சில சமயம் அந்தப் பணமே எமனாக உருப்பெறலாம்.

மேலே சொன்ன பாட்டில் வருவதுபோல் ‘சேர்த்தது’ எல்லாம் ‘செத்த’பின் பயன்படாது.

ஒரே மரணச் செய்திகளாகப்  போய்விட்டது. கொஞ்சம் சோக மனநிலையை  மாற்ற ஒரு ஜோக். பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் வெளியூரில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு சென்னை திரும்பினார். அவர் பேசிய அரங்கம்  சுடுகாடாக இருந்த இடம் என்று கேள்விப்பட்டுக் கோபத்துடன் கூட்டம் ஏற்பாடு செய்தவர்களிடம் அது குறித்துக் கேட்டாராம்

“அதனால் என்ன மேடம். இங்கு வரணும்னு என்று ஒருத்தொருத்தன் உயிரையே  விடறான்.” என்று பதில் வந்ததாம் .

(அட, இதுவும் சுடுகாடு..சாவு என்று ஆகிவிட்டதே..!

போதும் ….. நடு நடுவில் ஜோக், குட்டிக் கதை சொல்லும் டெக்னிக் பலருக்குக் கைவந்திருக்கிறது. எந்தக் குழுவிலும் ரசிக்கும்படியாக பேசுபவர்கள் பலர் இந்த டெக்னிக் பயன்படுத்துவார்கள்.  ஆனால்   நமக்குச் சரியாக வராதுபோல் தெரிகிறது. விட்டுவிடலாம். இனி நேரடியாகவே சொல்வோம்…..)

மேலும்….

உலகம் இனியது! – – தில்லைவேந்தன்

Images of children from India, Bangladesh and other select countries. Many are tribal, rural or similar.:

 

சிந்தை முளைக்கும் என்பாடல்
சிறகை விரித்துப் பறக்கட்டும்
நொந்து வடிக்கும் கண்களுக்கும்
நொடிந்த உள்ளப் புண்களுக்கும்
முந்தி அமைதி தருகின்ற
மூவா மருந்தாய் இருக்கட்டும்
இந்த உலகம் இனியதென
எடுத்துச் சொல்லிச் சிறக்கட்டும்.

வாழ்வு போர்செய் களமென்றும்
வறண்ட பாலை நிலமென்றும்
சூழும் துன்பச் சிறையென்றும்
சொல்லி வருந்தல் முறையன்று.
வீழும் விதைதான் மரமாகும்
வீழும் மழைதான் குளமாகும்
ஊழும் வினையும் என்செய்யும்
ஊக்கம் உழைப்பும் பொன்செய்யும்.

என்ன இருந்தும் எவையிருந்தும்
எதுவும் கூட வருவதில்லை.
மின்னி மறைந்தே போவதற்குள்
வெற்று நினைவாய் ஆவதற்குள்
சின்னஞ் சிறிய உதவிகளைச்
சிரித்தே பிறர்க்குச் செய்திடுவோம்
அன்ன வற்றில் வருநெகிழ்ச்சி
அளவே இல்லாப் பெருமகிழ்ச்சி.

சிரிப்பே இல்லா முகம்கண்டால்
சிரிப்பை அள்ளித் தந்திடுவோம்
கரிப்பென்று இகழ்ந்து பேசாமல்
கடலுள் முத்தைக் கண்டெடுப்போம்.
வரப்பு, வேலி பயிர்களுக்கே
வாழ்வில் உறவுக்கு அவையேனோ?
விரிப்பாம் பரந்த வானம்போல்
மேன்மை மேவி விளங்கிடுவோம்!

 

 

உள்ளக் குமிழி- வளவ. துரையன்

Image result for மகிழ்ச்சி

மகிழ்ச்சியை
நிலையென்றெண்ணி
திளைத்தாடும்
மனத்தினைக்
கரை போட்டுத்தடுத்துவிடு

ஓடும் மழை நீரின்
ஒழுங்கான குமிழியாய்
உள்ளத்தில் தோன்றினாலும்
உள்சென்று ஆழத்தில்
உயறைபனியாய் ஆனது

நட்பு கொண்டு வந்து
சேர்த்ததோ
நாடிய உறவுதான்
அள்ளித் தந்ததோ
எப்படியோ
வந்துவிட்டது தூறல்

பாம்பின் நிழலில்
பதுங்குவது தெரியாமல்
மனம் பரவசத்தில்
துள்ளிக் கொள்கிறது

பூக்கள் மலர்வது
பறிப்பதற்கு மட்டுமன்று

 

 

இயந்திரமும் மனிதன் தான் ! குறும்படம் – 3.0 ?

மனிதன் இயந்திரமாவதைப்  பார்த்திருக்கிறோம். ஒரு குட்டி ரோபோட் எப்படி மனிதனாகிறது என்பது இந்தக் குறும்படத்தைப் பார்த்தாலே புரியும்.  நல்ல கற்பனை!

 

குவிகம் கதைப்போட்டி முடிவு

 

Image may contain: 3 people, people sitting and people standing

Image may contain: 2 people, people standing and people sitting

Image may contain: 3 people, including Kalavathi Bhaskaran, people smiling

Image may contain: 6 people, including Shenba Bala Chandran, people smiling, people standing

 

பரிசு பெற்ற கதைகள்

முதல் பரிசு:  இலையுதிர்காலம் –  ஹேமா

இரண்டாம் பரிசு:  ஊமைக்காயம் – ந. பானுமதி

மூன்றாம் பரிசு: எங்கம்மா போன? – அருணா கதிர் 

 

மற்ற பரிசு பெற்ற கதைகள் 

அரும்பு –  வேதகௌரி
இரவின் விடியல் –  பாத்திமா பைஸல்
எங்கே அவள்? – ஷெண்பா
என் காதல் அவன் ராகத்தில்.!!  – மதி நிலா
கண்நீர் கேணி  – ரா.ஹேமலதா
கருவேப்பிலைத் தாய் – யாஸ்மின் ரியாஸ்தீன்
கலைகின்ற மேகத்திலும் ஒரு காட்சி தரிசனம்  – ஆனந்தி
கனன்றிடும் பெரும்நெருப்பு  – சுதா ரவி
குட்டி  – அன்னபூரணி தண்டபாணி
குறையொன்றுமில்லை.  – இன்னிலா
சாவித்திரிபாய்  – பத்மகுமாரி
தனிமை – மணிமாலா மதியழகன்
திருமாங்கல்யம்  – பொற்கொடி
மௌன மொழி  – Dr. நித்யா மனோஜ்
யார் தந்த சாபம்? –  அய்ஷீ
வானவில் வர்ணங்கள் –  லதா ரகுநாதன்

 

அனைத்தையும் குவிகம் பதிப்பகத்தில் வெளியிட்ட “எங்கம்மா போனே?” என்ற புத்தகத்தில் படிக்கலாம் !!

 

எங்கம்மா போன? – அருணா கதிர்

 

குவிகம் பெண்கள் சிறுகதைப்  போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற  கதை 

Image result for kakka muttai

 

“டேய்..டேய். எந்திரிங்கடா. டே தம்பி” என கால்களால் எத்தி எழுப்ப நினைத்தவன், அந்த இரு சிறுவர்களும் சுருண்டு படுத்திருந்த நிலைகண்டு மனமிரங்கி, முதுகில் தட்டி உலுக்கினான். “முகம் கழுகிட்டு வாங்க.பெரியய்யா விழிக்காரு” என்றபடிக்கு சிமெண்ட் தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரை கைகாட்டிச் சென்றான். திடீரென உறக்கம் கலையப் பெற்றிருந்த சேகர் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தான். எங்கே படுத்திருக்கிறோம் என்று புரிபடவே சில நொடி பிடித்தது. அவன் அருகில் வாயில் விரல் போட்டவண்ணம் படுத்திருந்த தம்பியை மெல்ல எழுப்பினான், “குமாரு.. டே குமாரு. எழுந்திரிடா.” என்றவன், மெல்ல சிமெண்ட் தொட்டியை அடைந்தான்.

வாய் கொப்பளித்து, முகத்தை கழுவிக்கொண்டிருக்கும் தே, காலையில் எழுப்பியவன் திரும்ப வந்திருந்தான், “இன்னும் மேக்கப் முடியலையாடா. சுறுக்க வாங்க” என்று சேகரையும், குமாரையும் தரதரவென இழுத்துச் சென்றான். குமார் இன்னமும் தூக்க கலக்கத்திலேயே நடந்துவர, சேகரின் புலங்கள் விழித்திருந்தன. சுற்றத்தை கவனித்து, உள்வாங்கிக்கொண்டே நடந்தான். நேற்று இரவு படுத்திருந்த கொட்டகை, பழைய சாமானங்கள் அடுக்கும் குடோன் என புரிந்தது. நிறைய தட்டுமுட்டு சாமானங்களும், தேங்காய் நார் மூட்டைகளும் கிடந்ததை கவனித்தான். கொட்டகையை அடுத்து பெரிய தென்னத் தோப்பு ஒன்று வந்தது. அதன் மையப்பகுதியில் பெரிதாக நிழல் பரப்பிக்கொண்டு வீற்றிருந்த மாமரத்தின் கீழே சிலர் அமர்ந்திருந்தனர். கட்டை நாற்காலியில் கொஞ்சம் தோரனையாக வீற்றிருந்தவர் முன்பு, சேகரும், குமாரும் நிறுத்தப்பட்டனர்.

“இவனுகதானா”என்று வெள்ளை மீசை பெரியவர் வினவினார். இழுத்துவந்தவன், பவ்யமாக தலையசைத்தான்.

“டே, உண்மைய சொல்லணும். உங்க அம்மா எங்க போனா? உங்ககிட்ட ஏதும் சொல்லிட்டு போனாளா? என்ன தெரியுமோ சொல்லுங்க, உங்களை விட்டர்றேன்.” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு மொழிந்தார். சேகரும், குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இரண்டு தினங்களுக்கு முன்னால், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த சமயம், காலையில் எழுப்பியவன் வழிமறித்தது சேகரின் நினைவில் ஓடியது.

“டே, ஆனந்தி பசங்க நீங்கதானடா” என்றான்.

சேகர் ஆமாம் என்று தலை அசைக்க, “உங்க அம்மா பண்ணை வீட்டில இருக்காவ, உங்களை அங்க கூட்டிட்டு வரசொன்னாவ.. வா” என்று பதிலுக்கு காத்திராமல், அவனது பைக்கில் குமாரை லாவகமாக ஏற்றி அமர வைத்திருந்தான். சேகருக்கு முதலில் எதுவுமே புரியவில்லை. தன் ஒன்பது வயது மூளையில் “ஏதோ சிக்கல்” என்று மட்டும் உதித்தது. சேகரை விடவும் இரண்டு வயது இளையவனான குமார், வண்டி சவாரியை அனுபவித்துக் கொண்டிருக்க, சேகர் குழப்பத்துடனேயே இருந்தான்.

இந்த தோப்பின் ஓரத்தில் இருந்த பண்ணைவீட்டிற்கு தருவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இரண்டு நாட்களாக, ஆள்மாற்றி ஆள் வந்து, “உங்கம்மா எங்க?” என்று கேட்டவண்ணம் இருந்தனர்.

“தெரியலைன்னே. வீட்டிலன் இருப்பாங்க. இல்லைன்னா ஏ.எம் குடோனில பீடி சுத்த போயிருப்பாக..” என்று தனக்குத் தெரிந்த விவரத்தை மறைக்காமல் சேகர் வந்த தினத்தன்றே சொல்லியிருந்தான். ஆனாலும் விடாப்பிடியாக தினமும் யார்யாரோ வந்து விசாரித்தவண்ணமே இருந்தனர். இன்று, இந்த பண்ணை வீட்டின் பெரியவர் முறை.

வெகு நேரம் வெயிலிலேயே நிற்கவைத்திருந்தார். “சார், என்னாச்சு சார்? ஏன் எங்க அம்மாவை தேடறீங்க? அவங்க வீட்டிலதான் சார் இருப்பாங்க. வீடு எங்க இருக்குன்னா..” என சேகர் வாயெடுக்கும் முன்னர், “வீட்டில இருந்தா இன்னேரம் உங்களைத் தேடி வந்திருக்க மாட்டாளாடா? அதெல்லாம் வீட்டில பார்த்தாச்சு, உங்கம்மா அங்க இல்லை.”

“எதுக்கு சார், எங்கம்மாவை தேடறீங்க”

“தேடாம என்னடா பண்ண சொல்லற? இருவது லட்ச ரூவா சரக்கு, பீடில சுத்தித்தர்றேன்னு வாங்கிட்டுப் போன உங்கப்பன் செத்துப் போயிட்டான். இழவு விழுந்த வீட்டில உடனே கேட்க வேண்டாம்னு இவ்வளவு நாளும் பொறுமையா இருக்கேன். உங்கம்மாவைக் கேட்டா தெரியவே தெரியாதுங்கறா. சரக்கும் கைக்கு வரலை, பணமும் வரலை. உங்கப்பன் அடக்கம் பண்ண செலவுக்குன்னு வாங்கின இருவதாயிரம் ரூபாவும் வரலை. உங்கம் இன்னைக்கு தரறேன் நாளைக்கு தர்றேன்னு இழுத்தடிக்கறா. சரி, பசங்கமேல இருக்கற பாசத்தில் காசை குடுத்திருவான்னு உங்களை புடிச்சுட்டு வந்தா, அவ ஆளு எஸ்கேப்பு. எங்க போனான்னே தெரியலை” என்று பொறருமிய வெள்ளை மீசை, கண்களால் ஜாடை செய்து, குமாரை அருகில் அழைத்தான்.

“உன் பேர் என்னடா?”

“எஸ்.செந்தில் குமார்.” என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்ததைப்போல் கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு மொழிந்தான் குமார்.

“என்ன படிக்கற?”

“ரெண்டாப்பு”

“உங்கம்மாவை எப்படா பார்த்த?”

அருகில் நின்றிருந்த அண்ணனை ஒருமுறை பார்த்த குமார், “அம்மா அன்னைக்கு காலையில் ஸ்கூல்ல எங்களை விட்டுட்டு, பிரின்சிபல் சாரைப் பார்க்கப் போனாக, அப்போ டாடா காட்டினப்போ பார்த்தேன் மாமா” என இன்னமும் மழலையின் சாயல் மாறாத குரலில் மொழிந்தான்.

“பிரின்ஸிபளை எதுக்கு பார்க்க போனா?” என்று கேட்ட கேள்விக்குக் குமாரிடம் பதிலில்லை.

“சார், ஸ்கூல்லை ஒரு பையன் இவனை அடிச்சுட்டான் சார், இவனும் திரும்பதத் தள்ளி விட்டுட்டான், அந்த பையனுக்குக் கீழ விழுந்து கைல அடிபட்டு ரத்தம் வந்திருச்சு சார். அம்மாவைகக் கூட்டிட்டு வந்தாதான் கிளாஸ்குள்ள விடுவேன்னு சொல்லிட்டாக. அதான் போயிருப்பாக” என்று திருதிருவென விழித்த குமாருக்குப் பதிலாக சேகர் மொழிந்தான்.

“டே கதை சொல்லறதை நிறுத்துங்கடா.. பரணி, இவனுகளுக்கு சாப்பிட ஏதாவது குடுத்து, குடோன்ல போடு..” என்று மேலோட்டமாக மொழிந்த வெள்ளை மீசை, அவ்விடம் விட்டு அகல முயல, “சார், முழுபரிட்சை நடக்குது சார். ஏற்கனவே ஒரு பரிட்சைக்கு போகலை, லீவ் எடுத்தா அடுத்த கிளாஸ் அனுப்பமாட்டாங்க சார்.” என்று தயங்கிக் தயங்கி சேகர் சொல்ல, அவனை நின்று நிதானமாக கவனித்தார் பெரியவர்.

கலைந்த தலைமுடியும், கசங்கிய சட்டையும், அழுது வீங்கிப் போயிருந்த கண்களும் என்னவோ செய்திருக்க வேண்டும். “டே, பரணி, இதுகள வீட்டில விட்டிரு.. எதுக்கும் ஒருகண்ணு வை, அவ அம்மா மாதிரியே ஓடிறப் போறானுக..” என்றபடிக்கு அவ்விடம் விட்டு நகர்ந்தார். பரணி என்று அழைக்கப்பட்டவன், சிறுவர்கள் இருவரையும் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு, நெறிசலான எந்த குடியிருப்புப் பகுதியில் இறக்கிவிட்டான்.

“அண்ணே எங்க அப்பா என்ன சரக்குன்னே வாங்கினாரு. நான் வேணும்னா வீட்டில தேடிப் பார்க்கவாண்ணே” அக்கரையாக வினவிய சேகரின் தலையில் மெல்ல தட்டினான் பரணி.

“உங்கப்பா என்ன வேலை செஞ்சான்னு தெரியுமாடா?”

“ம்ம்.. புகையில் குடோனுக்கு அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போவாங்க. ஏ.எம் குடோன். கடைவீதி கிட்ட இருக்கே அது..”

“அது, ஊருக்குக் தெரிஞ்சு செஞ்ச வேலை, ஊருக்குத் தெரியாம என்ன வேலைப் பார்த்திட்டு இருந்தான் தெரியுமா? கஞ்சா அடைக்கறது, பீடிக்குள்ள கஞ்சா அடைச்சு லாவகமா சுருட்டி கடைக்கு சப்ளை செஞ்சுட்டு இருந்தான்.” என்று பேசிக் கொண்டே வண்டியை செலுத்தியவன், நீலவண்ண பெயிண்ட் அடித்த சிறிய இரும்புக் கதவின் முன் நிறுத்தினான்.

“நான் வேணா வீட்டில இருக்கான்னு தேடிப் பார்க்கவாண்ணே”

“இன்னமுமா தேடாம இருப்பாங்க, அதெல்லாம் தேடியாச்சு.. ஒண்ணும் அகப்படல. இந்த பாரு ஒழுங்கா ஸ்கூலுக்குப் போனமா, பரிட்சை எழுதனுமான்னு இருக்கணும். உங்கம்மா மாதிரி ஊரைவிட்டு ஓடலாம்னு ப்ளான் பண்ண அவளோ தான் பார்த்துக்க. பெரியவர் ஏதோ நல்ல மூட்ல இருந்ததால உங்களை விட்டுட்டாரு. ஒருகண்ணு எப்பவும் உங்க மேல இருக்கும். ஜாக்கிரதை.. தினமும் உங்களை செக் பண்ண நான் வருவேன்.” என்று மிரட்டிவிட்டே சென்றான். அவன் சென்ற திக்கை வெறித்துக் கொண்டு நின்ற சேகர், ஒருகையால் குமாரை பிடித்துக் கொண்டு மூடியிருந்த இரும்புக் கதவின் மேல் கைவைக்க, “டிர்ர்ர்ர்” என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது.

பெரிய அறையினை இரண்டாகத் தடுத்து ஒருபக்கம், படுக்கை அறையாகவும், மற்றொன்றில் சமையல்கட்டும் கொண்டிருந்த சிறிய வீடு. பகல் வேளையில் விளக்கு எரிந்தால் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும் வண்ணம் பார்த்து கட்டப் பட்டிருந்தது. விளக்கை எரியவிட்ட சேகரையும் குமாரையும் வீடு முழுக்க கலைந்து கிடந்த சாமானங்கள் வரவேற்றன. “அதெல்லாம் தேடியாச்சு” என்று பரணி கூறிய வார்த்தைகள் மீண்டும் காதுகளில் ஒலித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, சாமனங்களை ஒதுக்கிக் கொண்டிருந்தவனின் கைகளை, குமார் பிடித்துக் கொண்டான். “அப்பா சாமிக்கிட்ட போன மாதிரி, அம்மாவும் நம்மளை விட்டு போயிருச்சான்னா? அம்மா எங்கன்னா போச்சு?” என்று சேகரை கட்டிக் கொண்டு விம்மியவனை தேற்றவழி தெரியாமல் உடன் சேர்ந்து கண்கலங்கினான் சேகர்.

அழுது கொண்டே தூங்கிவிட்டிருந்த தம்பியை ஓரமாக படுக்க வைத்துவிட்டு, பக்கத்து வீட்டு, ராதா அத்தையின் கதவைத் தட்டினான். “எங்கடா போனீங்க.ரெண்டு நாளா ஆளையே காணோம்? வீட்டுக்கு வேற யார் யாரோ வந்து போனானுவ?” என்று உரிமையுடன் வினவினான் அம்மாவின் சினேகிதி ராதா.

“அத்தை, எங்கம்மா எங்க போனாங்கன்னு தெரியுமா? உங்ககிட்ட ஏதாச்சும் சொல்லிட்டு போச்சா?”

“இல்லையே சேகரு. ரெண்டு நாளா பீடி சுத்தக்கூட வரலை.. வீடும் பூட்டியே இருக்கவும் நீங்க எல்லாருமே எங்கையோ போயிருக்கீங்கன்னுல்ல நினைச்சேன். எங்கடா போனீங்க?” என்று ராதா கேட்டுக் கொண்டே இருக்க, “நான் வர்றேன்த்தை..” என்றபடிக்கு பதிலேதும் சொல்லாமல் சென்றிருந்தான்.

தம்பி இன்னமும் உறங்கிக் கொண்டிருக்க, மீண்டும் வீட்டினுள் முடங்கியவன், மீதி சாமானங்களை பத்திரமாக அதனிடத்தில் வைக்கத் துவங்கினான். ஒன்பது வயது மனம் கலங்கிப் போயிருந்தது. தந்தை கணேசன் இறந்து முழுதாக ஒருமாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அம்மாவையும் காணவில்லை.

“ஊர்ல எல்லாரும் சொல்லற மாதிரி நீ ஓடிப் போயிட்டியாம்மா? இனிமே திரும்பி வர மாட்டியாம்மா? நீயில்லாம நாங்க என்னம்மா பண்ணுவோம்”என்று முனுமுனுத்தவனின் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கலைந்து கிடந்த பாத்திரங்களின் மத்தியில் அப்படியே அமர்ந்துவிட்டான்.

சமையல் சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அலமாறியை அப்போது தான் கவனித்தான். சமையல் சாதனங்கள் கொண்ட அலமாரியின் மேல் ஷெல்ஃபில் இருந்த முருகர் படத்தினைக் காணவில்லை. பரணியின் ஆட்கள் சரக்கு தேடும் போது, கீழே தள்ளிவிட்டிருக்கலாம் என எண்ணியவனின் கண்கள் தரையில் துளாவ, படம் அங்கும் இல்லை. கூடத்தில் பாடபுத்தகங்கள் வைக்கும் மூலையின் மேலே “யாமிருக்க பயமேன்” என்ற வாசகத்துடன் பழனியாண்டவர் சிரித்துக் கொண்டிருந்தார். கண் இமைக்காமல் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சேகர், அதன் கீழே குமார் எழுதிப் பழகவென தொங்கவிடப் பட்டிருந்த கருப்பு சார்டினை ஊன்றி கவனித்தான்.

“தினமும் பள்ளி செல்ல வேண்டும்”

“குமார் தமிழ் நீதிக்கதைகள் படித்தல் வேண்டும்” என்று அம்மாவின் கையெழுத்தில் கிறுக்கப் பட்டிருந்த வாசகங்களை கவனமாக திரும்ப வாசித்தான். படிக்கப்படிக்க இன்னமும் கண்களில் கண்ணீர் பெருகியது.

கீழே விழுந்திருந்த போதும் இன்னமும் ஓடிக் கொண்டிருந்த கடிகாரம் எட்டு முறை அடித்தது. ஒருமுடிவுடன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்த சேகர், குளித்து பள்ளிக்குத் தயாரானான். “அத்தை, இன்னைக்கு எனக்கு முழுப்பரிட்சை. நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வந்துடறேன். அதுவரைக்கும் குமாரை கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?” தம்பியை குளிப்பாட்டி ராதா அத்தையின் வீட்டில் கொண்டு விட்டான்.

ஓரே ஓட்டமாக பள்ளியை எட்டியவன், பரிட்சை ஹாலிற்குச் செல்லாமல், நேரே தலைமை ஆசிரியரை தேடிச் சென்றான். இவனது வருகையை ஒருவாறு அவர் எதிர்பார்த்தது போல் தோன்றியது.

“குட்மார்னிங்க சார். எங்க அம்மா உங்களைப் பார்க்க.” என்று அவன் இழுக்கும் முன்னரே, தலைமை ஆசிரியர், மேஜையின் மேல் வைத்திருந்த அந்த காகிதங்களை இவனிடம் நீட்டினார். “சாதாரணமா இப்படி செய்யறதில்லை. முழுப்பரிட்சை முடியாம, டி.சி குடுக்கக் கூடாது. இருந்தாலும் உங்க அம்மா அன்னைக்கு அவ்வளவு கெஞ்சி கேட்டதால இதை செய்யறேன். நீ நல்லா படிக்கற பையன், உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நல்லா படி. தம்பியையும் அம்மாவையும் பார்த்துக்கோ. ஆல் த பெஸ்ட்” என்றார்.

சேகரின் மூளை கொஞ்சம் தெளிவது போல் இருந்தது. “சார் எங்கம்மா வேற ஏதாவது சொன்னாங்களா சார்?” என்றான் தயக்கத்தினூடே.

“உங்க பாட்டி வீடு திட்டக்குடில இருக்கறாதாகவும், இனிமே அங்க போய் படிக்கப் போறீங்கன்னு சொன்னாக. யார் வந்து கேட்டாலும் திட்டக்குடி போயிட்டோம்னு சொல்ல சொன்னாங்க. வேற எதும் சொல்லலியே சேகர்” என்றார். சிறிது நேரம் புரியாமல் விழித்தவன், தலைமை ஆசிரியருக்கு நன்றி உரைத்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான்.

ராதா அத்தையின் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குமார், சேகரின் தலையைக் கண்டதும் ஓடிவந்தான்.

“சேகரு, உன்னை தேடிட்டு ஒரு ஆள் வந்துட்டுப் போனான்ப்பா.” என்று வீட்டின் வாசலில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த ராதா தகவல் கூறினார்.

“யாருத்தே”

“அந்த பைக்ல கூட்டிட்டு வந்த மாமா”என்று ராதாவிற்கு பதிலாக குமார் பதிலளித்தான்.

“என்ன கேட்டாரு”

“நீ எங்கன்னு கேட்டாரு. ஸ்கூலுக்குப் போயிருக்க பரிட்சை எழுதன்னு சொன்னேன். உங்கம்மா வந்தாளான்னு கேட்டாரு, இல்லைன்னேன். சாயந்தரமா வர்றதா சொல்லியிருக்காரு” என்று சொல்லிக் கொண்டே இட்லிபானையை சுரண்டிக் கொண்டிருந்தாள். தம்பியை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தவன், நேரே, குமாரின் புத்தகப்பையினை திறந்து, அவனது தமிழ்புத்தகத்தில் நீதிக்கதைகள் பக்கத்தினைப் பிரித்தான். மூன்று கதைகள் இருந்தன, முயலும் ஆமையும், காகமும் நாகமும், வேடனும் புறாவும் என்ற தலைப்பில் இருந்த கதைகள் மூன்றையும் வாசித்தான். அதில், காகமும் நாகமும் கதையில், நாகப்பாம்பின் புத்திற்குள், காகம் ராணியின் தங்கமாலையை உள்ளே போடுவது போன்ற படம் அச்சடிக்கப் பட்டிருக்க, அதன் அருகில் பெருக்கல் குறி காணப்பட்டது.

அண்ணன் தன் பாடபுத்தகத்தை புரட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குமாரை வெளியே அழைத்து வந்தான். குமாருக்கு விளையாட சில சமையல் பாத்திரங்களையும், கரண்டியையும் எடுத்துப் போட்டு, “வாசல்ல உட்காந்து ட்ரம்ஸ் விளையாட்டு விளையாடு. அண்ணா படிக்கனும்” என்று அமரவைத்தான்.

அடுத்த அரைமணி நேரம், குமாரின் டிரம்ஸ் வாசிப்பிற்குத் தகுந்தாற் போல் தானும் தட்டிக் கொண்டிருந்தான்.

மாலை சூழ்ந்ததும் குமாருக்கு முக்கு கடையில் இரண்டு புரோட்டா வாங்கிக் கொடுத்து, தானும் உண்டுமுடித்தான். “தூங்கு குமாரு.நாளைக்கு சீக்கரமா எந்திரிக்கனும்” என்று அம்மா வேணும் என்று சினுங்க ஆரம்பித்திருந்தவனை சமாதானம் செய்து, உறங்கச் செய்தான். வாசலில் பரணி வந்து இருவரையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்க, சேகர் அயர்வுடன் குமாரின் அருகில் சுருண்டான்.

மூன்று மணி வரையிலும் உறக்கம் வராமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவன், மெல்ல எழுந்து, புத்தகப்பையை ஒரு தோளிலும், அசதியாக உறங்கிக் கொண்டிருந்த தம்பியை மறு தோளிலும் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளிப்பட்டான்.

வீட்டில் இருந்து இரண்டு மையில் தூரத்தில் ரயிலடியை நோக்கி சீராக நடந்தவன், நான்கு மணிக்கு சென்னை செல்லும் ரயிலில் இரண்டு டிக்கெட்டுகளுடன் அமர்ந்திருந்தான். மெல்ல பொழுது விடியத் துவங்கும் போது, ரயில் அந்த ஊரில் இருந்து சென்னை நோக்கி வெகுதொலைவு வந்துவிட்டிருந்தது.

அதே நேரம், ஆந்திர மாநிலத்தில் பெயர் தெரியாத கிராமம் ஒன்று, காலை நேரத்தின் பரபரப்பு ஏதுமின்றி சோம்பலாக விடிந்தது. அந்த சிறிய ஓட்டு வீட்டின் அருகில் டீக்கடையில் ஜரூராக வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி, பாய்லர் துலக்கிக் கொண்டு அருகே அமர்ந்திருந்த தன் சின்னம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“இன்னையோட நாலு நாள் ஆச்சு சின்னம்மா,,இதுகளை இன்னமும் காணம் பாரேன்.”

“ஆமாடீ இப்போ புலம்பு. எந்த அம்மாவாவது பெத்த புள்ளைகளை அம்போன்னு விட்டுட்டு ஓடிவருவாளா? வர்றதுன்னு ஆச்சு, அதுகளையும் கூட்டிட்டு வர்றதுக்கு என்ன?”

“புரியாம பேசற சின்னம்மா நீ. நான் என்ன வேணுமின்னா விட்டுட்டு வந்தேன். அதுக்கிட்ட சொல்லிக்க கூட நேரமில்லை சின்னம்மா. இருவதாயிரம் கடனுக்கு வட்டி அஞ்சாயிரம் ஆயிருச்சுன்னு தினமும் கதவை தட்டறான். கடன் வாங்கி ஒருமாசம் கூட ஆவலை. இன்னும் பத்து மாசம் போனா ஒரு லட்சம் குடுன்னு கேட்பான். நான் எங்க போவேன். சரக்கு எங்க, சரக்கு எங்கன்னு தினமும் ஓரே ரகளை”

“அதுக்கு, ஊரை விட்டு ஓடு வந்துருவியா ஆனந்தி. ஏதாவது வித்துகித்து கடனை அடைக்கப்பார்ப்பாளா?”

“என்னத்தை விக்க, ஒரு பொட்டு தங்கம் கிடையாது. விக்கனும்னா என்னைத் தான் விக்கனும். அடுத்து அப்படித்தான் நூல்விட்டு பார்பானுவ எடுப்பட்டவுனுக.” என்று இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகள் கொண்டு அர்ச்சித்தவள், கண்களை கவனமாக ரோட்டில் பதித்திருந்தாள்.

“ஏண்டி, இங்க இருக்கேண்ணு உன் பசங்களுக்குத் தெரியுமா? எப்படி வருவானுக. உனக்கே நான் இந்த ஊர்ல இருக்கன்னு ஒரு மாசத்துக்கு முந்தி தான் தெரியும்.”

“அதெல்லாம் வருவானுக சின்னம்மா. சேகரு கையில் அகப்படற மாதிரி ஒரு இடத்தில உன் விலாசம் எழுதி வச்சிட்டு தான் வந்திருக்கேன்.”

“இந்த விலாசம் எழுதியிருந்தா, சேகரு படிக்கறதுக்கு முந்தி, அந்த கோஷ்ட்டி கையில் சிக்கியிருக்குமே ஆனந்தி.”

“அவ்வளவு கூட யோசிக்கமாட்டனா. அதெல்லாம் சேகரு மட்டும் கண்டுபிடிக்கர மாதிரிதான் வச்சிருக்கேன். எனக்கு என்ன பயம்னா, நான் போயிட்டேங்கற துக்கத்தில எங்க நான் எழுதிவச்சதை கண்டுபிடிக்காம போயிருவானோன்னு தான்.ஆனா சேகரு விவரமானவன், சின்னதுக்கு அவ்வளோ சாமர்தியம் பத்தாது. ஆனா சேகரு கெட்டி. கண்டுபிடிச்சிடும்.” என்று சொல்லிக் கொண்டிருந்த ஆனந்தியின் முகம் பெறுமையில் மிளிர்ந்தது.

“என்னமோ நீயும் படத்துல நடக்கறாப்ல கதை சொல்லற. பார்க்கலாம் உன் மகனுக வரானுகளான்னு” என்று சின்னம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“இதோ வர்றானுகள்ல” என்று கையில் பிடித்திருந்த டீ கோப்பைகளை மேடையில் வைத்துவிட்டு, புழுதி பறந்த சாலையில் கடந்து சென்ற பேருந்தில் இருந்து, குமாரை ஒருகையில் பிடித்துக் கொண்டு இறங்கிய சேகரை நோக்கி தடதடவென ஓடினாள் ஆனந்தி.

சேகருக்கு அம்மா ஓடிவருவது தெரிந்து, தம்பியை முன்னே ஓடவிட்டு, பின்னாலேயே தானும் வேகமாக நடந்தான்.

“கண்ணு ராசா” என்று மாறி மாறி இருவரின் முகத்திலும் முத்தம் பதித்தவள், குமாரை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டாள். அருகில் நின்றிருந்த சேகரின் கண்களை கள்ளச் சிரிப்புடன் ஏறிட்டாள். “கண்டுபிடிச்சிட்ட என் போலீசு.” என்று பெரிய மகனை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டாள்.

“அம்மாவைக் காணோம்னு ரொம்ப தவிச்சுப் போயிட்டீங்களாடா. கண்கொத்தி பாம்பு மாதிரி எங்க போறோம் வற்றோம்னு ரொம்ப கவனமா பார்த்தானுகடா. என்னால அவனுகளை ஏமாத்திட்டு உங்களை கூட கூட்டியார முடியலை. ஒருதடவை தான் சான்ஸு. தப்பிக்கபாக்கறோம்னு தெரிஞ்சுது கொன்னுடுவானுக.. அதான் சேகரு அப்படி யோசிச்சேன். அம்மாவை மன்னிச்சிருடா.”

“சே, போம்மா, எங்கிட்ட ஜாடையாவாது சொல்லிய இருக்கலாம்ல.. கொஞ்ச நேரம் நீ நெஜம்மாவே போயிட்டன்னு நினைச்சு பயந்துட்டேன்ம்மா.”

“இல்லடா கண்ணு, உனக்கு தெரிஞ்சா, அவனுக மிரட்டி கேட்டா எங்க சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன். அதான் உனக்கு மட்டும் புரியற மாதிரி எழுதிவச்சிருந்தேனே”

“ம்ம்ம்ம் முருகர் படம் சமையல் அலமாரில இல்லாம இருக்கறதைப் பார்த்து தான் கண்டுபிடிச்சேன். ஒரு பொருள் எடுத்த இடத்தில எப்பவுமே வைக்கற நீ, படத்தை மாத்தி வச்சது ஏன்னு யோசிச்சேன்”

“என் அறிவாளி போலீஸ். சரி, ஸ்கூலுக்குப் போனியா? ஹெட்மாஸ்டரைப் பார்த்தியா?” என்று ஆனந்தி வினவ, கையில் பிடித்திருந்த புத்தகப்பையினுள் கைவிட்டு, இருவரது டி.சியையும் வெளியே எடுத்துக்காண்பித்தான்.

“ஏம்மா இனிமே இந்தூர்ல தான் இருக்கப் போறமா?” என்று சேகர் வினவியதை ஆனந்தி காதில் போட்டுக் கொள்ளவில்லை. நேரே சின்னம்மாவின் வீட்டிற்குச் சென்றவள், தயாராக வைத்திருந்த தன் பேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு வெளிப்பட்டாள்.

“ஏண்டி, இப்போ தான வந்தானுக, அதுக்குள்ள இழுத்துகிட்டு ஓடனுமா.ரெண்டு நாள் இருந்துட்டு அப்பறமா போகலாம்ல.” என்று சின்னம்மா எவ்வளது தடுத்தும் ஆனந்தி கேட்கவில்லை.

“சரி எங்க போறேன்னு எங்கிட்ட கூட சொல்லக்கூடாதாடீ.”

“எங்க போறேன்னு எனக்கே தெரியாதப்போ உனக்கு என்ன சொல்லறது சின்னம்மா.. எங்க போனாலும் என் பையனுகளோட நான் சந்தோஷமா இருப்பேன். அவ்வளோ தான் சொல்ல முடியும் இப்போதைக்கு” என்றவள், இருமகன்களையும் பிடித்துக் கொண்டு, பயணமானாள்.

வெளிக்காற்று சுகமாக முகத்தில் பட, சட்டென குமார் உறங்கி விட்டிருந்தான். “ஏம்மா வெளியூர் போனா கையில பணம் வேணாமா? அதுக்கு சின்னப்பாட்டி வீட்டிலையே இருக்கலாம்ல.” என்று மெல்லிய குரலில் சேகர் வினவினார். அவனது தலையை மெதுவாக வருடிய ஆனந்தி அந்த சிறிய பேக்கினுள் கைவிட்டு, மஞ்சள் பை ஒன்றினை எடுத்துக் சேகரின் கையில் வைத்தாள்.

அதனுள் இரண்டு பெரிய நோட்டுக்கட்டுகள் தட்டுப்பட்டன. “ஏதும்மா இது?” என்று கண்களை அகல விரித்தவனிடம், “நாகப்பாம்பு குடுத்துச்சு.” என்று சொல்லி கண்சிமிட்டினாள்.

“பொந்துக்குள்ள இருந்துச்சா?”

“ம்ம்ம் மழைக்கு பாம்பு வந்தப்போ செவுத்தை அடைச்ச பொந்துக்குள்ள உங்கப்பா சரக்கு வித்த பணத்தை பத்திரப்படுத்தி வச்சிருக்காரு. உனக்கு விலாசம் எழுதி உள்ள போட நான் தோண்டினப்போ இது கிடைச்சிது.”

“இதை அவனுக்கிட்ட குடுத்திருந்தா பிரச்சனை முடிஞ்சிருக்குமேம்மா.எதுக்கு இவ்வளோ கஷ்டம்.”

“உங்கப்பா எவ்வளோ வாங்கினாருன்னு தெரியலை சேகரு. இதுல இருக்கறது வெறும் ஒரு லட்சம் தான். மீதிப்பணம் எங்கண்ணு தொல்லை பண்ணுவானுக.. அதான். நாம புதுவாழ்க்கையைத் தொடங்க இது போதும்னு கிளம்பிட்டேன். சின்னதா ஒரு சாப்பாட்டு வண்டி போடலாம். உன்னை பக்கதில இருக்கற பள்ளிக்கூடத்தில சேர்த்துவிடரேன். படிச்சு பெரிய போலீஸ் ஆகனும்” என்று கண்களில் மின்னலடிக்க ஆனந்தி சொல்லிக் கொண்டிருந்தாள். தடதடவென ஓடிக் கொண்டிருந்த ரயில், மெல்ல விடிவெள்ளி பூத்திருந்த இரவுக்குள் பயணிக்கத் துவங்கியிருந்தது.

இந்திய சமையல் செய்யும் ரோபோ

நூற்றுக்கும் மேலான இந்திய சமையல்வகைகளை ரோபோ மூலம் செய்யும் இயந்திரத்தை பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயார்செய்திருக்கிறார்கள் !

மெஷினும் நாம் வாங்கும் விலையில் !

நம்முடைய சொந்த சமையல் குறிப்பைக் கொடுத்தாலும் அது செய்யுமாம்.

மொத்தத்தில் அவர்கள் சொல்வது, உங்கள் அம்மாவின் சமையல் குறிப்பை அப்படியே சமைத்துத்தரும் இந்த மெக்கானிக்கல் சமையற்காரர்!

அசத்தல் இல்லே?

பாருங்கள் வீடியோவை !

(கொடுமை என்னவென்றால் டெமோவில அதுகூட உப்புமாதான் பண்ணுது!!)

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

சாருகேசி அவர்களுக்கு அஞ்சலி !
Image may contain: 1 person, eyeglasses and closeup
திரு சாருகேசி மறைந்தார் – மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த மனிதநேயப் பண்பாளர் மறைவு இயல், இசை,நாடக, பத்திரிகை உலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
13-2-2019 மாலை தமிழ்ப் புத்தக நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் கூட்டத்தில் டேக் மையம் சாரி, திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியம், சுஜாதா ரங்கராஜன், யோகா, சீதா ரவி, ராமநாராயணன் மற்றும் சாருகேசி அவர்களின் சகோதரி ஆகியோர் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆர் வி ராஜன் தயாரிப்பில் சாருகேசியின் பன்முகத்தன்மையையும், மனிதநேயத்தையும் போற்றும்வகையில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறும்படம்போல் ஒளிபரப்பப்பட்டன.
அறுபது ஆண்டுகளில் குழந்தைகளுக்கான மூன்று கதைத் தொகுப்புகள், இரண்டு நகைச்சுவைக் கதைத் தொகுப்புகள், ‘நகை’  என்ற  ஒரு  சீரியஸ் கதைத் தொகுப்பு  ( இதுவே ‘JEWELS’  என்ற  பெயரில்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது – மொழிபெயர்த்தவர்  திரு C.G.ரிஷிகேஷ்) என எழுதிக் குவித்தவர்.
மற்றொரு புத்தகம் – கட்டுரைத் தொகுப்பு – ‘மம்முட்டி முதல், மன்மோகன்சிங்வரை’. இவரது இயல்பான  நகைச்சுவை  பல கட்டுரைகளில் வெளிப்பட்டுத் தெறிப்பதைக் காணலாம்.
ஆரம்ப காலத்தில் இவரது நகைச்சுவை எழுத்துக்களை ஊக்குவித்தவர் கல்கண்டு திரு தமிழ்வாணன் அவர்கள். பின்னர் கல்கி 
ராஜேந்திரன் அவர்கள், இவரது கதைகள்,  பேட்டிகள், கட்டுரைகள் சிறப்புடன் வெளிவரக் காரணமாயிருந்தார்.
ஆங்கிலத்திலும் எழுதும் திறமையினால்,  தி ஹிந்து, எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ், ஸ்ருதி, மெட்ராஸ் மியூசிங்ஸ், போன்ற ஏடுகளில் இவரது கட்டுரைகள் வாரம் தோறும் வெளிவந்தன. ’சிறந்த மொழி மாற்று எழுத்தாளர்’ விருதை திரு காஸ்ரீஸ்ரீ வழங்கினார்.
இவரது அண்ணாதுரைபற்றிய  நூல்,  குருபக்தி  போன்றவை புகழ்  பெற்றவை.
Image result for சாருகேசி புத்தகங்கள்Image may contain: 2 people
மஹாசுவாமிகள், சீனப் பயண அனுபவம்  ஆகிய புத்தகங்கள் பல பதிப்புகள் பெற்றவை. 8000 க்கும் மேல் கட்டுரைகள், இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியிருக்கும்  இவர்,  இனி  எழுதப்போவதில்லை,  மொழிமாற்றம் மட்டும் செய்ய  உத்தேசம்  என்று கூட்டம் ஒன்றில்  சொன்னது,  அரங்கத்தில் யாருக்கும் ஏற்புடையதாய் இல்லை !
இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இனி அவர் சொன்னபடியே எழுதப்போவதில்லை.
தன் புத்தகங்கள் விற்றுவரும் தொகையை. ‘ஆட்டிஸம்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிவிட்டார் –
அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சிலருக்குச் செய்தியாக இருக்கக்கூடும். ஒரு சாலை விபத்தில் இறந்த தன் சகோதரனின் உடல் உறுப்புகளைத் தானம்செய்த அருமையான குடும்பம் அவருடையது (Jewels புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் இந்த வேதனையை சாருகேசி விவரித்திருப்பதப் படிக்கும் எவர் மனமும் கசிந்துருகும்). அவரது குடும்பத்தார் அவரை குடும்பத்தின் ‘பீஷ்மர்’ என்று குறிப்பிடுவார்களாம்!
அசோகமித்திரன்பற்றி எழுதிய கட்டுரையை மெட்றாஸ் ம்யூசிங்ஸில் படித்து, அவருடன் பேசினேன். ரத்தினச்சுருக்கமான வார்த்தைகளில் என்ன ஒரு அடக்கமாக மேதமை. அன்று எனக்கு அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்தன.
தமிழ்ப் புத்தக நண்பர்கள் கூட்டத்தில் என்னையும் ஒரு புத்தக விமர்சனம் செய்யவைத்து, பாராட்டிய (ஆசீர்வதித்த) அபூர்வ மனிதர் அவர். என் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும், மற்றைய இலக்கியக் கூட்டங்களுக்கும் தவறாமல் நண்பர் ஆர் வி ராஜனுடன் வந்திருந்து வாழ்த்தியவர்.
என் டாக்டர் நண்பனிடம் அவ்வப்போது அவர் உடல்நிலையைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆனாலும் அவர் யாரும் தன்னை வந்து பார்ப்பதை விரும்பவில்லை என்று அறிந்தேன். தன் சோகங்களை அவர் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை –
அவர்தான் சாருகேசி என்னும் மனிதநேயர்.
கோபுலுவின் சித்திரம்போல், எப்போதும் கையில் சிறு பேப்பருடன் இசை, நாடக, இலக்கியக் கூட்டங்களில் அமைதியாய் வளையவரும் சாருகேசி !
சார் – WE WILL MISS YOU FOREVER.