ஒரு அழகான தமிழ்ப் பாடலுடன் இந்த மாத குவிகம் இதழைப்
பாருங்கள் !
( பாடியவர்: ஆலங்குடி சுந்தரம் )
பிந்துசாரன்
பிந்துசாரன் பிறந்த கதை பார்த்தோம். (
(பிம்பிசாரன் வேறு . அவன் ஆம்ரபள்ளி கதையில் வருபவன் . பிந்துசாரன் சந்திரகுப்தனின் மகன். நெற்றியில் விஷப் பொட்டுடன் பிறந்தவன் , குவிகம் மே இதழில் உள்ள சரித்திரம் பேசுகிறது பகுதியைப் படிக்கவும்)
பிந்துசாரன் பிறப்பதற்குப் பிரசவம் பார்த்த சாணக்கியர் – அவனது ஆட்சியிலும் மந்திரியாகவும் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.
பிந்துசாரனின் மற்றொரு மந்திரி சுபாந்து.
சுபாந்துவுக்குச் சாணக்கியரைக் கண்டாலே ஆகாது.
பொறாமை!
சுபாந்துவுக்கு பொறாமை தாங்க முடியவில்லை.
ஒரு நாள் அரண்மனையில் சுபாந்து – மன்னன் பிந்துசாரனைத் தனியாகச் சந்தித்தான்.
“அரசே! நான் இப்போது சொல்லப் போவது சத்தியமான வார்த்தைகள். இதைச் சொல்வதால் தாங்கள் என்னிடம் கோபம் கொள்ளலாகாது!”
“அமைச்சரே! உங்கள் கருத்தை என்றாவது தவறாகக் கருதி இருக்கிறேனா? கூறுங்கள்”
“உங்கள் தாய்.. மகாராணி துர்தாரா.. அன்பும் அறிவும் கொண்ட பேரரசி” என்று நிறுத்தினார்.
“என்ன செய்வது சுபாந்து! நான் கொடுத்து வைக்காத பாவி! பிறந்த போதே அன்னையைக் கொன்றவன் நான்! தாயை ஒரு முறை கூடக் காணக் கிடைக்கவில்லை” – பிந்துசாரன் கண்கள் சற்றே கலங்கின.
“அரசே! அவர் மரணத்திற்குத் தாங்கள் எப்படிக் காரணமாவீர்கள்? ஆயினும் அதற்குக் காரணமானவர் சுதந்திரமாக உலவுவதுதான் எனக்கு இன்னும் வருத்தத்தைக் கொடுக்கிறது”
“என்ன சொல்கிறாய் சுபாந்து” பிந்துசாரனின் குரலில் சூடு ஏறியது…சற்றே நடுங்கியது!
சுபாந்து சாணக்கியரின் விஷத்தினால் மகாராணி துர்தாரா இறந்ததைக் கூறினார்.
“அரசே இந்நாள் வரை யாரும் தங்களுக்கு இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் – சாணக்கியர் மீது அனைவருக்கும் அவ்வளவு பயம். மகாராணியையே விஷம் வைத்துக் கொன்றவர் நம்மைக் கொல்லாமல் விடுவாரா என்ற பயம் எல்லோருக்கும்“
சுபாந்து பொய் சொல்ல மாட்டார் என்று நம்பினான்.
“சாணக்கியரை இன்றே கொன்று இதற்கு முடிவு கட்டுகிறேன் “ – பிந்துசாரன் வாளெடுத்துப் புறப்பட்டான்.
சாணக்கியருக்கு ஆயிரம் காதுகள்.
காற்று நுழையாத இடத்திலும் அவரது உளவாளிகள்.
மன்னரின் சூளுரை அவர் காதில் உடனே சென்றடைந்தது.
சாணக்கியர் தனது உடன் இருந்த இரு வயோதிக தாதிகளை (நர்ஸ்) அழைத்தார்.
“நீங்கள் இருவரும் எனது தக்ஷசீல காலத்திலிருந்து என்னுடன் பணி புரிகிறீர்கள். எனது எல்லா ஆயுர்வேத மருத்துவத்திற்கும் என்னுடன் துணை நின்றீர்கள். மகாராணி துர்தாரா பிரசவமும் உங்கள் உதவியால் தான் நடந்தது. சாணக்கியன் என்ற ஆலமரத்தின் வேர் நீங்கள்”
தாதிகள் இதைக் கேட்டு நெகிழ்ந்தனர்.
‘எதற்காக இப்படிப் பேசுகிறார் இன்று?’ என்று சற்றே குழப்பமும் அடைந்தனர்.
சாணக்கியர் தொடர்ந்தார்:
“இன்று மன்னன் பிந்துசாரன் – நான் மகாராணியைக் கொன்றேன் என்று – என்னைக் கொல்ல வருகிறான்”
“ஐயோ…“ – தாதிகள் பதறினர்.
சாணக்கியர் : “இந்தக் கிழவனுக்கும் வயதாகி விட்டது. எனது வாழ்வின் கடமைகள் அனைத்தும் முடிந்து விட்டது. இறைவனை நாடிச் செல்லும் நேரம் வந்துவிட்டது “
தாதிகள் விம்மினர்.
சாணக்கியர் :
“வருந்தாதீர்கள். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எனது சொத்துக்களை இந்நாட்டின் ஏழை, அநாதை, மற்றும் விதவை நிலையங்களுக்குக் கொடுத்து விடுங்கள். நான் விரதம் இருந்து இறைவனடி சேர முடிவு செய்து விட்டேன் “
தாதிகளுக்குத் துயரம் தாள முடியவில்லை.
“மன்னர் சந்திரகுப்தர் முதல் மன்னர் பிந்துசாரர் வரை – அரசர்களுக்கு நன்மை செய்தே வாழ்வைக் கழித்த உங்கள் சேவைக்கு இது தானா பரிசு” தாதிகள் இருவரும் கண்ணீர் வடித்தனர்.
சாணக்கியர் புறப்பட்டார். சுடுகாடு அருகில் உள்ள ஓரிடத்தில் – மாட்டு சாணத்தால் செய்த வரட்டிகளை வைத்து சிறு மேடை அமைத்து அதில் அமர்ந்தார். அன்ன ஆகாரம் இல்லாமல் விரதமிருந்து உயிர் விடத் துணிந்தார்.
பிந்துசாரன் கோபத்தின் உச்சியில் இருந்தான். நேரே சாணக்கியரின் அரண்மனை சென்றான். சாணக்கியரின் தாதியர் இருவரைக் கண்டான்.
‘ இந்த மூதாட்டிகள் தானே நான் இந்த உலகுக்கு வர உதவினர்!’ பிந்துசாரன் கரங்கள் கூப்பின. சற்றே சாந்தமடைந்தான்.
இருப்பினும் சாணக்கியர் செய்த கொடுமையை எண்ணி…
“சாணக்கியர் எங்கே?” என்று உறுமினான்!
ஜூலியஸ் சீசர் மரணத்திற்குப் பின் மார்க் ஆண்டனியின் சொற்பொழிவு ஷேக்ஸ்பியர் எழுதியதால் பிரபலமானது.
அன்று இந்த தாதியர் பேசியது அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.
ஒரு நூற்றாண்டு காலமாக மக்கள் நலம் – மன்னர் சந்திரகுப்தர் மற்றும் அவரது குடும்ப நலம்- ஒன்றையே மனதில் கொண்டு நாளும் இரவும் உழைத்த சாணக்கியரின் தியாகத்தை எடுத்துரைத்தனர்.
“நல்லது செய்வது என்றே அவர் செய்த ஒன்று மகாராணியை பலி வாங்கியது. ஆனால் அது சந்திரகுப்தர் செய்த தவறு. அந்நாள் வரை மகாராஜாவும் மகாராணியும் தனித் தனியாகத்தான் உணவருந்த செய்யப்பட்ட ‘முறை’ யை மீறியதால் அது நிகழ்ந்தது. அதிலும் சாணக்கியரின் சமயோசிதத்தால் தான் ‘தாங்கள்’ உயிர் பெற்றீர்கள். சாணக்கியர் தவறு செய்ததாக நினைத்திருந்தால் – தங்கள் தந்தையே அவரைத் தண்டித்திருப்பாரே! எதற்காக உங்களை சாணக்கியரிடம் ஒப்புவித்து நாடு துறந்தார்? மன்னர் மன்னரே! சுபாந்துவிடம் குறை ஒன்றுமில்லை. சுபாந்துவின் பொறாமை மட்டும் தான் அவனது குறை. அதனால் இழைத்த இந்த தவறுக்கு அவனை நீங்கள் மன்னித்து விடவேண்டும்”
இதை எழுத நான் ஷேக்ஸ்பியர் இல்லையே. வெறும் ‘யாரோ’ தானே!
பிந்துசாரன் உண்மையை அறிந்தான்.
தாதியர் கால்களில் விழுந்து வணங்கினான்!
உடனே சாணக்கியர் இருக்குமிடம் சென்று மன்னிப்புக் கேட்டுத் தனது தவறுக்குப் பிராயச்சித்தம் என்ன செய்வது என்று கெஞ்சினான்.
சாணக்கியன் சொன்னான்: ‘அரசே… உங்கள் மன்னிப்பை நான் ஏற்கிறேன். ஆனால் சுபாந்துவும் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.”
மனிதனுக்குத் தான் என்ற அகங்காரம் அழிவதேயில்லை.
சாணக்கியனும் இதற்கு விலக்கில்லை!
பிந்துசாரன் ஒப்புக்கொண்டு புறப்பட்டான்.
சுபாந்துவை சந்தித்தான்.
கடுங்கோபத்தில் “உன்னை இன்றே கொல்லவேண்டும். ஆனால் நீ உயிர் வாழ ஒரே ஒரு வழி உள்ளது. சாணக்கியரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டால் நீ உயிர் பிழைக்கலாம்”
சுபாந்து மனமொடிந்து போனான். அரசனிடம் மன்னிப்புக் கேட்டு சாணக்கியரிடமும் மன்னிப்புக் கோர ஒப்புக்கொண்டான்.
சுபாந்து ஒத்துக்கொண்டாலும் மனம் சாணக்கியரை அடியோடு வெறுத்தது.
சாணக்கியரை சந்தித்து மன்னிப்பு வேண்டினான். அதே நேரம் அவர் அமர்ந்திருந்த வரட்டி மேடையில் ஒரு நெருப்புத் துண்டை மெல்ல ரகசியமாகச் செருகினான்.
காற்று சற்று வலுத்திருந்தது.
நெருப்பு கொழுந்து விட்டு பரவியது.
சாணத்தால் ஆன வரட்டி – சில நொடிகளில் முழு மேடையும் பற்றி எரிந்தது.
நெருப்புக்கு எல்லாம் ஒன்றுதான்!
சாண வரட்டியானாலும் சரி…. சாணக்கியரானாலும் சரி….
எதையும் எரிக்கும். யாரையும் எரிக்கும்.
அது மௌரிய சாம்ராஜ்யத்திற்கு அடிகோலிய சாணக்கியரையும் பாரபட்சமில்லாது எரித்தது!
பிந்துசாரன் அவன் ஆட்சியில் பதினாறு அரசாங்கங்களை வென்றான். அவன் ஆதிக்கத்தில் அகப்படாதவை : கலிங்கம், மற்றும் தென்னிந்திய சேர சோழ பாண்டியர் மட்டுமே..
பிந்துசாரன் பல நாடுகளை வென்றது மட்டுமல்லாது நாட்டின் அரசாங்கத்திலும் முன்னேற்றம் செய்தான். ஆயுர்வேதத்திற்கு பெரும் ஆதரவு அளித்தான். கலாச்சாரத்திற்கும் அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளித்தான். தந்தை பின் பற்றிய சமண மதத்தைப் பின் பற்றாது –புத்த மதத்தையும் பின் பற்றாது – அஜீவக மதத்தைப் பின் பற்றினான்.
பிந்துசாரன் பல மனைவிகளைக் கொண்டிருந்தான்.
அவர்களில் ஒருத்தி ‘தேவி தர்மா’!
தேவி தர்மா – சம்பா நகரத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த அழகிய பெண்!
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சில பெண்களின் அழகு பெரும் பிரசித்தம் அடைவதுண்டு. அது போல் தேவி தர்மாவின் அழகும் அந்நாளில் பெருவாரியாகப் பேசப்பட்டது. கால நிமித்தகர் இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறும் போது ‘மன்னனை மணந்து சக்கரவர்த்தியை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள்’ என்றனர்.
பெற்றோர்கள் அவளை பொன்னகையால் அலங்கரித்து –பாடலிபுத்திரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மன்னன் பிந்துசாரனை சந்தித்து :
‘எங்கள் மகள் மங்களகரமான பெண். தேவதை! இவளைத் தாங்கள் மணந்து கொள்ள வேண்டும்’ என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.
பிந்துசாரன் அவளை அந்தப்புரத்தில் சேர்த்தான்.
அந்தப்புரம் ஒரு பெரும் விடுதி போல் இருந்தது.
பதினாறு பேர் பிந்துசாரனின் மனைவியர்.
மற்றவர் பிந்துசாரனின் காமக் கிழத்தியர்.
அனைவருக்கும் இந்தப் பேரழகி மேல் ‘பொறாமை’ வந்தது.
‘மன்னன் இந்தப் பெண்ணிடம் உறவு கொண்டால், நம் ஒருவரையும் பிறகு சீண்டவே (தீண்டவே) மாட்டான்’ என்று எண்ணினர்.
அரண்மனைப் பெண்கள் ஒன்று கூடினர்.
கூடி, திட்டமிட்டு – அவளுக்கு சிகை அலங்காரம் பயிற்றுவித்தனர்.
‘இப்படிப்பட்ட சிகை கலாவல்லியுடன் மன்னன் உறவு கொள்ள மாட்டான்’ என்று நம்பினர்.
சிகை அலங்காரக் கலையில் தேவி தர்மா பெரும் தேர்ச்சி பெற்றாள்.
மன்னன் அந்தப்புரம் வரும்போது. அவனுக்கு உடல் அமைதி பெற உருவி இதமாக வருடி விடுவாள். மன்னன் உடனேயே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவான்..
மகிழ்ந்த மன்னன்:
“பெண்ணே! என் மனமும் உடலும் குளிர்ந்திருக்கிறது. உனக்கு ஒரு வரம் தருகிறேன்.
கேள்”
‘அரசே! நான் தங்களுடன் உறவு கொள்ள வேண்டும்’
பிந்துசாரன் : “ஆனால்… நீ ஒரு சிகை அலங்காரப் பெண் ஆயிற்றே …நான் அரச வம்சத்தினன்.. பின் எப்படி…” என்று இழுத்தான்.
“மன்னர் மன்னா! நான் சிகை அலங்காரக் குலத்தில் பிறந்தவள் அல்ல. பிராமணப் பெண். என்னை உங்களுக்கு மனைவியாக என் தந்தை தந்தாரே… நினைவில்லையா?!”
ஒன்று இரண்டு என்று இருந்தால் அவனுக்கு நினைவு இருக்கும். இப்படி அந்தப்புரம் நிரம்பி வழிய பெண்கள் இருந்தால் பிந்துசாரன் என்ன செய்வான் … பாவம் J
“அப்படி என்றால்… யார் உன்னை இந்த சிகைத் தொழில் செய்யச் சொன்னார்கள் ?”
“அந்தப்புரப் பெண்கள்”
“இனி நீ இதைச் செய்ய வேண்டாம். இன்று முதல் நீ என் ராணி!”
அவர்கள் உறவு இரண்டு மகன்களைப் பெற்றுத் தந்தது.
முதல் மகன் பிறந்த உடன்:
‘இவன் பிறந்ததால் நான் சோகமற்றுப் போனேன். ஆகவே இவனை ’அசோகன்’ என்றழைப்பேன்.
இந்திய சரித்திரத்தில் பெரிதும் போற்றப்பட்ட சக்கரவர்த்தி அசோகனின் கதை சொல்வதற்கு
…சரித்திரம் அட்டகாசமாகப் பேசும்…
‘ஷாலு என் வைப் ‘ என்று என் குடும்பத்தைப் பற்றி ஒரு நகைச்சுவைத் தொடராக சும்மா எழுதிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு சீரியஸ் திருப்பம் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் இப்போது மிகப் பெரிய எலிப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
குவிகம் ஆசிரியரின் குரல் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
” நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும் கோமாதா பூஜையையும் பஜ்ரங் பலியையும் தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள். ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள்.
இதனால் சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்”
மோடி, யோகா, பெண் சாமியாரிணி, கோமாதா அவற்றைப் பற்றி எழுதியதால் நான் ஹிந்துத்துவத்துக்கு விரோதி என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் முத்திரை குத்த அதை ஒரு ஆயிரம் பேர் லைக் வேற போட பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து கொண்டே போயிற்று. மக்கள் எழுதிய கமெண்ட்களை எல்லாம் படித்த பிறகு எங்கே போய் என் முகத்தை வைத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. அந்தக் காலத்தில் பிடிக்காதவர் போஸ்டருக்கு சாணி அடிப்பது போல இப்போ கமெண்ட் என்ற பெயரில் நம்மைக் கிட்டத்தட்ட உரிச்ச கோழி ஆக்கிவிடுகிறார்கள்.
உதாரணம் சொல்லும் போது கூட ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருக்கு. சல்மான் கான் ஏதோ உளறப் போக இப்போ கோர்ட் அது இதுன்னு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையா வந்திருக்கிற மாதிரி ஆகி விடக் கூடாது. இன்னும் கொஞ்சம் போனா ‘ இனிமே நான் கீ போர்டைத் தொட மாட்டேன். என் பிளாக்லே நானே வைரஸ் விட்டு அழிச்சுக்குவேன்’ அப்படின்னு அறிக்கை கொடுக்க வேண்டியிருக்கும். கந்து வட்டிக்காரங்களை விட இந்த கமெண்ட் போடற மக்கள் ரொம்பவும் மோசம். ஆராய்ச்சி செய்து நம்ம ஜாதியைக் கண்டுபிடித்து அந்த ஜாதியைச் சொல்லித் திட்டத் தொடங்கிவிடுவார்கள்.
சரி, பொதுவான விஷயத்தைவிட்டு என் பிரச்சினைக்கு வருவோம். குவிகம் ஆசிரியர் காப்புரிமை ஆசிரியருக்கே என்று சொல்லி எல்லாவற்றிக்கும் நான் தான் காரணம், தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கிற பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.
அந்தக் காலத்தில் குமுதம் ஆசிரியர் எழுதிய ஒரு பிராக்டிகல் ஜோக்கிற்காக நீதிமன்ற வாசப்படியை அடிக்கடி மிதிக்க வேண்டி வந்ததை நினைத்து இப்போ இந்த ஆசிரியரும் ரொம்ப ஜாக்கிரதையா காரியம் செய்கிறார் .
இறைவி படத்தில தயாரிப்பாளரைக் கேவலமாகச் சித்தரித்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கம் கார்த்திக் சுப்பராஜ் மேல வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லையா? அது மாதிரிதான்.
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ” பத்திரிகையைத் தடை செய்யவேண்டும் . எழுதிய எழுத்தாளரை குண்டா சட்டத்தில் உள்ளே போடவேண்டும் ” என்று சில நற்பணி மன்றங்கள் அவருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
மீடியாக்களும் இதை சும்மா விடவில்லை. ஊதி ஊதிப் பெரிதாக மாற்ற முயல்கிறார்கள்.
ஓர் அரசியல் தலைவர் இது ‘ வலையில் வளரும் விஷக் களைகள்’ என்று கவித்துவமாகத் திட்டினார்.
இன்னொருவர் ‘இப்படி எழுதறவங்களோட விரலை முறிக்கணும்னு’ ஜாடையா சொன்னார்.
இன்னொரு கூட்டணித் தலைவரோ எனக்கு எதிராக இணைய தளத்தில் ப்ரவுஸ் யாத்திரை போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்.
மற்றொரு தேசிய மதச் சார்பற்ற கட்சியின் தலைவர்கள், மாறுபட்ட கருத்தைக் கூறியதால் அவர்கள் ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பது யாருக்குமே புரியவில்லை.
ஆங்கில சேனலில் என் தொடரைப் பற்றிக் கூறி அரைமணிநேரம் கார சாரமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு கட்சிப் பத்திரிகை ‘ ஆப்பசைத்த குரங்கு’ என்று என் படத்தைப் போட்டுக் கார்ட்டூன் போட்டது.
இன்னொரு பெரிய மனிதரோ ‘ இவன் தன்னை ஆர்.பி.ஐ. கவர்னர் என்று நினைத்துக் கொண்டு எழுதுகிறான் ‘ என்று என்னை மரியாதையாகச் சாடினார்.
என் நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச காலம் என்னைத் தலை மறைவாய்ப் போகும்படி வலியுறுத்தினார்கள். ஆபீஸில் என் பாஸ், இந்தப் பிரச்சினை முடியற வரைக்கும் ஆபீஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கவேண்டாம் என்று அன்போட எச்சரித்தார். மொத்தத்தில் என்னை -சாதாரணமா குடும்பக் கதை எழுதிய என்னை – ஒரு மெட்ராஸ் ஐ வந்தவன் மாதிரி -ஒரு தீவிரவாதி அளவில் மாற்றி விட்டார்கள். சில எழுத்தாளர் அமைப்புக்கள் எனக்காக வரிந்துகட்டி ஆதரவாகப் பேச அது எரிகிற நெருப்பில் எண்ணை விடுவதைப்போல ஆயிற்று.
‘ சரி, சக எழுத்தாளர் நண்பர்களிடம் யோசனை கேட்கலாம்’ என்று போனால் அவர்கள் என்னை மேலும் குழப்பமடையச் செய்துவிட்டார்கள். மன்னிப்பு அறிக்கை எழுதுவதிலிருந்து ஜனாதிபதிக்குக் கருணை மனு போடும் வரையான அத்தனை யோசனைகளும் வந்தன.
சரி குவிகம் ஆசிரியர் குழுதான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் குவிகம் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர், துணை ஆசிரியர், இணை ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழு என்று எல்லோரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சாத்தப்பட்டது. எல்லோரும் மிகுந்த யோசனையில் இருந்தார்கள். ‘இப்போ என்ன செய்வதாக உத்தேசம்?” என்று புதிதாக வந்த துணை ஆசிரியர் கேட்டார்.
” ஒரு வருஷத்துக்கு மேலா இந்தத் தொடரை நான் எழுதி வருகிறேன். இத்தனை நாளும் நீங்கள் அனைவரும் தான் இது நன்றாகப் போகிறது என்று சொல்லி என்னைத் தூண்டிவிட்டீர்கள். பேஸ்புக்கில் இதைப் பெரிதாக விளம்பரம் செய்து உங்கள் சர்குலேஷனை ஏற்றிக் கொண்டீர்கள். ‘ஷாலு ரசிகர்கள் மன்றம்’ என்று ஒரு வாசகர் வேறு பேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்போ பிரச்சினை என்று வந்ததும் எல்லோரும் என் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்க முயலுகிறீர்கள். இது நியாமா?”
“பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? ” என்று கேட்டார் ஆசிரியர்.
” எது பத்திரிகை தர்மம்? எழுத்தாளரைக் காவு கொடுப்பது தான் பத்திரிகை தர்மமா?’ நானும் சூடாகக் கேட்டேன்.
” இங்கே பாருங்க! இந்தப் பிரச்சினைக்கு நான் ஒரு வழி சொல்றேன். அதுபடி நீங்க செஞ்சீங்கன்னா நீங்களும் தப்பலாம் , நம்ம பத்திரிகையும் தப்பும்’ என்றார் குவிகம் ஆசிரியர்.
” என்ன ? என்ன ? என்று எல்லோரும் ஒருமித்துக் கேட்டனர். நானும் கேட்டேன்.
” இந்தத் தொடரை எழுதியதற்காக உங்கள் கைப்பட எழுதிய மன்னிப்புக் கடிதத்தை அட்டையில் போட்டுவிடுவோம். ‘இந்தத் தொடர் இனி வராது’ என்று நாங்களும் முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறோம்.”
“இது கோழைத்தனம். நாம் தைரியமாக இந்தத் தொடரைத் தொடர வேண்டும். இதனால் நாம் இழப்பது ஒன்றுமில்லை. எழுத்துரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோமே?’ என்று ஒரு ஆலோசகர் குழுவில் உள்ள இளைஞர் ஒருவர் கூறினார். அவர் மூட்டிய தைரியம் மற்றவர்களையும் பற்றிக் கொண்டது – குவிகம் ஆசிரியரைத் தவிர.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் குவிகம் ஆசிரியர் மசிகிறவராகத் தெரியவில்லை. மற்றவர்களை எப்படி கன்வின்ஸ் செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
குவிகம் ஆசிரியருக்குப் புதிய யோசனை தோன்றியது. ” இதுவரை நீங்கள் ‘ஷாலு மை வைஃப் ‘ என்று எழுதிவந்தீர்கள். இப்போ ‘ என் ஹஸ்பெண்ட் என் எனிமி’ என்று ஷாலுவை எழுதச் சொல்வோமே?. பெண்ணீயமும் திருப்தி அடைந்த மாதிரி இருக்கும். சபாஷ் சரியான போட்டி என்று மக்களும் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சில மாதங்கள் கழித்து – மக்கள் எல்லாரும் மறந்த பிறகு ‘ஷாலு மை வைஃபை ‘ நீங்கள் தொடரலாம். குமுதத்தில அந்தக் காலத்தில சுஜாதா ஒரு கதை எழுதினார். அதில சில பிரச்சினை வந்ததுன்னு அதை அப்படியே நிறுத்திவிட்டார் ஆசிரியர். கொஞ்ச நாள் கழிச்சு அதே கதையை வேற பெயரில் சுஜாதாவே எழுதினார். மக்களும் ஏத்துக்கிட்டாங்க ‘ என்று வயா- மீடியாவுக்கு வந்தார்.
மற்ற ஆசிரியர்களும் இந்தப் புதுமைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
‘ஷாலுவையும் குருஜினியையும் கிண்டல் செய்து எழுதியதற்கு இந்தத் தண்டனை எனக்குத் தேவை தான்’ என்று நினைத்துக் கொண்டேன்.
” சரி ஷாலுவிடம் சொல்கிறேன்.” என்று சொல்லி விட்டுக் கிளம்பும் போதுதான் அந்த சம்மன் எஸ்எம்எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது. கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது அந்த எஸ் எம் எஸ். இது என்ன கிணறு வெட்ட தண்ணி வந்து அதிலேர்ந்து திமிங்கிலம் வந்த மாதிரி இருக்கே என்று பயந்து கொண்டே படித்தேன்.
என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள் போலும்.
” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா என்னா சார்) விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.
ஜட்ஜ் ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.
அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில் இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது. உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம். “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை உடனே தடை செய்யவேண்டும் ” என்று புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.
எனக்குத் தலை சுற்றியது. ‘குவிகம் பிரச்சினையை ஒருவாறு முடிக்கலாம் என்றாலும் குடும்பப் பிரச்சினை இப்போ எங்கேயோ போயிக்கிட்டிருக்கே. இது ரொம்ப ரொம்ப முக்கியமான சமாசாரம். இதற்கு உடனே முடிவு கட்டிவிட வேண்டும் ‘ ‘ என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்குப் போனேன்.
வீடு பூட்டியிருந்தது.
(அடுத்த இதழில் முடியும்) அனைவரும்: அப்பாடா!!!
அபயமென்று வந்தவரை ஆட்கொள்ளும் முருகா
உபாயமொன்று சொல்லிடுவாய் எமக்கின்று முருகா
உற்பத்தி பெருகிடினும் கடைக்குவந்த பண்டங்கள்
கறுப்பு சந்தையிலே காணாமல் போகிறது
விண்முட்டும் விலையேற்றம் விழிகளும் பிதுங்குகிறது
செலவுமேல் செலவாகி பணமெலாம் கரைகிறது!
ஊழலின் சூழலில் மாந்தர்க்கு திண்டாட்டம்
கள்ளமுடை மாந்தர்க்கு நாளெல்லாம் கொண்டாட்டம்
சுயநலக் கும்பலின் கொடுமைகள் ஏராளம்
அமைதியை அழிக்கின்ற வன்முறையின் வெறியாட்டம்!
ஊழலிலா காற்றினையே சுவாசிக்க வேண்டும்
சுயநலமிலா உலகினிலே இருந்திடவே வேண்டும்
யாமும்நல் மனிதராய் வாழ்ந்திடவே வேண்டும்
அதற்குபல வழிகள்நீ சொல்லிடவே வேண்டும் !
உலக அளவிலான குறு நாடகங்களை ( பத்தே நிமிடங்கள்) ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் அறிமுகப்படுத்து கிறார்கள் இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.
தென் இந்தியாவில் ஜூலை மாதத்தில் அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் (நுங்கம்பாக்கம்,சென்னை ) இந்த விழா நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தி அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து இயக்குனர்,நடிகர்களுக்குப் பரிசுகள் வழங்கி உலக அளவில் அவர்களைக் கொண்டு செல்ல இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு உதவுகிறது.
ஜூலை 6 லிருந்து – 23 வரை இந்த குறு நாடக விழா நடைபெற உள்ளது. முப்பது நாடகங்கள் மற்றும் திடீர் வரவு ( wild card ) கிட்டத்தட்ட 20 நாடகங்கள் நம்மை மகிழ்விக்க வருகின்றன.
27,29.30,31 தேதிகளில் இவற்றின் இறுதிச் சுற்று நடைபெறும்.
வருகின்ற நாட்களில் வரப் போகும் நாடகங்கள் :
Top 30 Week Two (13, 15, 16 and 17 July 2016 – 7 pm to 9 pm) | ||
Play | Playwright | Director/ITC |
The Goon | Pete Malicki | Ramakrishna Dhanasekaran |
Objectum Sexuality | Ron Burch | Meera Sitaraman |
Who Am I | R.Baskar | (Koothu -P- Pattarai) R. Baskar |
Unsubscribe! | Drishya Gautam | (The Stirfry Collective) Drishya Gautam |
Nee | John Pradeep | Udhaykumar Gunasekaran |
Real or Reel | Sabarish Menon | (The Drama Troupe) Sabarish Menon |
Damayanthi | Janardhan Raghavan | Guru Narayan Chandrasekaran |
Making a Supershero | Bhargav Prasad | Bhargav Prasad |
Sweep Sweep | Balakrishnan Venkataraman | (Theatre Nisha) Janani Narasimhan |
A tale of a tall girl or 27 f 5 11 | Shruti Parasuram | (Evam Lab) Sunil Vishnu |
Wildcards 2 (16 and 17 July 2016 – 2 pm to 4 pm) | ||
Play | Playwright | Director/ITC |
Ariyanai 234 | Vishnu Varatharajan, Kishore | (Saaral Koothu Pattarai) Prasanna M |
Forgive me Father | Sally Bartley | Dharish Kumar |
Debutantes | Shakila Arun | (Applause Theatric Activities) Shakila Arun |
Man & Monkey | Cordis Paldano | (Theatre of Maham ) Hari Ramakrishnan |
The Animal | Sudarsun Raghavan | (Theatre Zilch) Sudarsun Raghavan |
Right Swipes and Wrong Moves | Susan Goodell | Charles Britto |
A Play on Consent | Tarana Reddy | Prarthana Chandrasekaran |
–
Top 30 Week Three (21, 22, 23 and 24 July 2016 – 7 pm to 9 pm) | ||
Play | Playwright | Director/ITC |
Hammer Time | Sasha Siljanovic | Sushant Alexander |
War Kiss | Alex Broun | Karthik Anantharaman |
Red Wire Blue Wire | Albert Jamae | Shravan Karthikeyan |
How to find Joy in Nothingness | Charles Britto | Adhira Pandilakshmi |
Yours Urgently | Rajiv Rajaram | (MP Sabha) Rajiv Rajaram |
Chennai Pattinam 2065 | Mathivanan Rajendran | (Stray Factory) Mathivanan Rajendran |
Makku Police Manguttu Thirudan | Karthikeyan Ravi | John Pradeep |
Sweet | Manibharathi | (Azhagammai Theaters) Manibharathi |
Thaathaavin Petti | Vinodhini Vaidyanathan | (Theatre Zero) Amit Singh |
Boob Job | Meera Sitaraman | Balakrishnan Venkataraman |
இளமை + புதுமை + வித்தியாசமான கதைக் களன் + அட்டகாசமான நடிப்பு + வசனம் + அதி வேகக் காட்சி அமைப்பு – இவையே இந்த விழாவின் சிறப்பம்சங்கள்.
ஜூலை 8 அன்று நடைபெற்ற பத்து நாடகங்கள், நமக்கு ஒரு புது உலகத்தை அறிமுகப் படுத்தியது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில நாடகங்கள் தமிழில் இருந்தன.
The Funny Big Girl, First Day First Show, The Blind date, Manitha uravukal (தமிழ்), The Ordinary City, Ballet of Death (தமிழ்), How to find joy in Nothingness (தமிழ்), Shakespeare – As you Like It,Never Give Up (தமிழ்), Jam .
பார்த்த எட்டு நாடகங்களைப் பற்றி நம் கணிப்பு:
The Blind Date: ஒருவன் தன் காதலிக்காக் காத்திருக்கும் போது காதலியின் பாட்டியைப் பார்த்து மயங்கி ஆவலுடன் டேட்டுக்குப் போகத் துடிக்கும் நாடகம்.
Manitha uravukal: எட்டு வருடங்களாக அமெரிக்காவிலிருந்து வராத மகன் ஒரு நாள் வருகிறான். ஆனால் பெற்றோர்களுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு உடனே புறப்பட்டுச் செல்கிறான் – அவனுடைய பெற்றோர்கள் துயரில் துடிக்கிறார்கள்.
The Ordinary City: சென்னையை வெறுக்கும் ஒரு வடக்கத்திக்காரன் கடைசியில் ஊரைவிட்டுப் போகும்போது சென்னையின் அருமையை உணர்ந்து தவிக்கும் கதை
The Ordinary City, Ballet of Death : கண்ணுக்குத் தெரியாத ஒரு ‘குரல்’ஆறு பேரின் மனதில் இருப்பதைச் சொல்ல அதனால் ஏற்படும் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு சாகும் காமெடி கதை
How to find joy in Nothingness : ஒரு முன்னாள் ராணுவ வீரன் தனக்குக் கிடைத்த ஓட்டல் காவல்காரன் வே:லையில் நிறைவு கொள்வது பற்றிய கதை.
Shakespeare – As you Like It: ஜூலியட் எப்படி ஆணாதிக்கத்தால் பந்தாடப்படுகிறாள், புரூட்டஸ் ஜூலியஸ் சீசரைக் கொன்றது எப்படி GIF ஆக வந்தது, புரூட்டசும் ஆண்டணியும் பேசும்போது அருண் கோஸ்வாமி போல controversy கிளப்புவது எப்படி என்று சொல்லும் கலக்கல் காமெடி கதை
Never Give Up: ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிய எண்ணிய பெண் கடைசி 100 மீட்டரில் துவண்டு விழ, ஆனால் மனம் கலங்காமல் வலியைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை முடித்து அடுத்த ஒலிம்பிக்ஸில் சாதனை படைக்கத் தயாராக நிற்கும் பெண்ணைப் பற்றிய கதை
Jam: டிராஃபிக் ஜாமிலும் இனிமை காணமுடியும் என்ற மேஜிக்கைச் சொன்ன கதை
பார்வையாளர்கள் ஒட்டில் Shakespeare – As you Like It மற்றும் Never Give Up இரண்டும் சிறந்த நாடகங்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன.
மகத்தான இறுதிச் சுற்றைப் பார்க்க ஆவலாயுள்ளோம் !
*வாழ்க்கை*
சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை….
மலைத்து வாழ்வதல்ல வாழ்க்கை
பிறர் மலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை….
தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை….
ஆர்ப்பரித்து வாழ்வதல்ல வாழ்க்கை
அர்ப்பணித்து வாழ்வதுதான் வாழ்க்கை….
நிதி நிலைக்க வாழ்வதல்ல வாழ்க்கை
நீதி நிலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை….
கோடிநாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை….
இருக்கின்ற பொழுது வாழ்வதல்ல வாழ்க்கை
இறந்த பின்பும் வாழ்வதுதான் வாழ்க்கை….!!!
( சென்ற இதழ் தொடர்ச்சி )
அடுத்த நாள்… ‘விபரீதம் ஏதாவது நடந்தால் என்ன செய்வது என்று ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆபீஸிற்கு வந்து விட்டார் பரந்தாமன். மெதுவாக எல்லா ஸ்டா·பும் ஆபீஸிற்கு வந்தார்கள்.
பத்து மணிக்குத் தன் செக்ரடரியைக் கூப்பிட்டார்.
‘மோகனா .. நம்ம ஆபீஸ் அன்டு ·பாக்டரி அட்டென்டன்ஸ் எப்படி இருக்குன்னு செக் அப் பண்ணி சொல்லு..’என்றார்.
மோகனா வெளியே போய் யார் யாருக்கோ ·போன் பண்ணி தகவல்களை சேகரித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
‘ஸார்.. அன்டென்டன்ஸ் ஆஸ் யூஷ்வல் ஸென்ட் பெர்ஸென்ட் ஸார்…”
‘வாட்..?’ ஆச்சரியமாகப் பார்த்தார் பரந்தாமன்.
‘ஸார்.. அப்புறம் ஒரு விஷயம்.. நம்ம கம்பனி காம்பௌண்டுக்கு வெளியே நம்ம ஸ்டாபுடைய மனைவி-மார்கள் சில பேர் ‘எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ என்று போர்டு வைத்துக் கொண்டு
உண்ணாவிரதம் இருக்காங்க… நம்ம டைரக்டர்ஸ் வீட்டுலேயிருந்தெல்லாம் டெலி·போன் வந்தது.. அவங்க வீட்டு முன்னாலேயும் இதே போல பெண்கள் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்காங்களாம்’
‘வாட்.. போலீஸிற்குத் தகவல் சொன்னீங்களா..?’
‘போலீஸிற்கு இன்·பார்ம் பண்ணியாச்சு.. அவங்க கூட இரண்டு கான்ஸ்டபிள்களை நிறுத்தியிருக்காங்க, கலாட்டா ஆனா தடுப்பதற்காக. ஆனா அந்த பெண்கள் சத்தமோ கூச்சலோ போடாம அந்த போர்டை மட்டும் வெச்சுக்கிட்டு ஏதோ பத்திரிகைகளையெல்லாம் புரட்டிப் பார்த்துட்டு உட்கார்ந்துண்டிருக்காங்க. சில பத்திரிகைக்காரங்க
அவங்களப் பார்த்து விசாரிச்சுட்டு போறாங்களாம். நாளைக்கு பேப்பர்களில் இதே நியூஸா இருக்கப் போறது‘
‘ஓ ஷிட்… சரி.. சரி.. நீ போ’ என்றார் எரிச்சலோடு.
‘ஸார்.. உங்களைப் பார்க்க நம்ம கஸ்டமர் ஒருத்தர்வந்துருக்கார்’
‘சரி.. வரச் சொல்..’
‘நமஸ்காரம்…’ என்று சொன்னபடியே எதிரே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார் அந்த கம்பனியின் நீண்ட கால கஸ்டமர் சச்சிதானந்தம்.
‘எஸ்.. மிஸ்டர் சச்சிதானந்தம்.. எப்படி இருக்கீங்க?.. என்ன விஷயம் சொல்லுங்க..’என்றார் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு.
‘ஸார்.. நான் வந்த வேளை சரியில்லை போலிருக்கு..இத்தன வருஷமா இல்லாம நம்ம கம்பனிக்கு முன்னாலே உண்ணாவிரதம்… இந்த லேபர் பிராப்ளம் எப்பத்தான் தீருமோ..? எனிவே நான் வந்த வேலையைச் சொல்-
லிடறேன். நான் ஒரு ஆர்டர் கொடுத்திருந்தேன் இல்லையா.. அதன் ஸப்ளை ஏப்ரலில்தான் டியூ.. பட், எனக்கு அது கொஞ்சம் முன்னால் கிடைத்தால் தேவலை..ஸே.. இந்த மாதம் அதாவது மார்ச் மாதம் பதினஞ்சாம் தேதிக்குள் கிடைத்தால் பரவாயில்லை..’
‘பார்க்கறேன்.. சச்சிதானந்தம்.. நீங்கதான் பார்த்தீங்களே.. நான் செக்கப் பண்ணி நாளைக்குச் சொல்றேன்..’
‘இந்தப் போராட்டத்தோட கிரேவிடி எனக்குத் தெரியாது.. ஏப்ரல், மே மாத சப்ளைகளெல்லாம் கரெக்டா வந்துடுமான்னு பார்த்துச் சொல்லுங்க..
இல்லேன்னா, நான் ஆல்டர்னேடிவ் அரேஞ்ச்மென்ட் பண்ணியாகணும்’ என்று எழுந்தார் சச்சிதானந்தம்.
‘ஓகே..’ என்றார் பரந்தாமன் எரிச்சலை வெளிக்காட்டாமல்.
ஒருவர் ஒருவராக டைரக்டர்களிடமிருந்து ·போன் வர ஆரம்பித்தது பரந்தாமனுக்கு. ஒரு குடும்பமா, ஒண்ணுக்கு ஒண்ணா இருந்துட்டு இவ்வளவு நாள் கம்பனி முன்னேற்றத்திற்காக பாடுபட்டுட்டு முதுகிலே குத்திட்டான் பார் அந்த ரவி..அந்த சச்சிதானந்தம் இனி சப்ளையெல்லாம் ரெகுலரா வருமான்னு கேட்கறார்… டிஸ்கிரேஸ்·புல்.. ‘ என்று தன் வீட்டில் மனைவியிடமும், மகளிடமும் கத்திக்கொண்டிருந்தார் பரந்தாமன்.
‘அப்பா.. இன்னிக்கு நைட் நியூஸிலே அஸோஸியேஷன் லீடர் ரவியின் இன்டர்வியூ இருக்காம்’ என்றாள் அவர் மகள் புவனா.
‘டாம்மிட்… அதைப் போய் என்னப் பார்க்கச் சொல்றியா..?’
‘ அப்பா.. கூல்..கூல்.. அவர் என்னதான் சொல்றார்னு கேட்போமே.. ஆஸ் அ மானேஜிங் டைரக்டர் உங்களுக்குப் பொறுமை வேண்டாமா அப்பா.. அவர்
சொல்றதைக் கேட்கறதாலே நமக்கு என்னப்பா நஷ்டம்..?’
‘சரி.. சரி.. பார்க்கலாம்’
புவனா டி,வி.யை ஆன் செய்தாள். நியூஸ் வந்து கொண்டிருந்தது. ரவி டி.வி. யின் திரையில் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
‘மிஸ்டர் ரவி.. வணக்கம்.. தொழிலாளர்களின் டிமாண்ட்ஸை மானேஜ்மென்ட் ஏத்துக்கலேன்னா வேலை நிறுத்தம், கதவடைப்பு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கோம். இது என்ன புதுமையான போராட்டம்?
உங்க ஸ்டா·பெல்லாம் வேலையில் இல்லா மனைவிமாரையும், மகள்களையும் உங்க கம்பனி ஆபீஸ், ·பாக்டரி, கம்பனி டைரக்டர்ஸ் வீடுகளுக்கு முன்னால் உண்ணாவிரதம் செய்ய வைத்திருக்கிறீர்கள்.. அதுவும் கூச்சலில்லை,கோஷமில்லை… ‘கோரிக்கைகளை நிறைவேற்று’ என்ற போர்டுகளை மட்டும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். ஆண்களாகிய நீங்களெல்லாம் கம்பனிக்குள் சென்று வேலை செய்திருக்கிறீர்கள்;;; ? என்றார் நிருபர் புன்னகையோடு.
‘எங்களுடைய உழைப்பினால் உருவானது இந்தக் கம்பெனி. இன்னிக்கு பொருள்களின் தரத்திலாகட்டும், விற்பனையிலாகட்டும், நிகர் லாபத்தி லாகட்டும் முதல் இடத்தில் இருக்கிறது. எங்க கம்பெனியின் உற்பத்தி
பாதிக்கப்பட்டால் அது இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும், ஏற்றுமதியைப் பாதிக்கும். அப்படிப்பட்ட கம்பெனியின் சரிவிற்கு நாங்கள் காரணமாக இருப்போமா..? ஒரு போதும் மாட்டோம்.. எங்களது கோரிக்கைகள் – எங்களைப் பொறுத்தவரை நியாயமான கோரிக்கைகள் – எங்களுக்கும், எங்கள் மானேஜ்மென்டுக்கும் உள்ள பிரச்னை.. ஒரு குடும்பச் சண்டை மாதிரி.. அதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்..”
‘நீங்கள் முழுமனதாக ஒத்துழைப்பு கொடுத்து, உற்பத்தி குறையாது பார்த்துக் கொண்டால், உங்கள் கம்பனி மானேஜ்மென்ட் உங்கள் டிமாண்டை அக்கறையோடு பரிசீலித்து ஒத்துக் கொள்வார்கள் என்று
நினைக்கிறீர்களா..? அவர்களுக்கு தொந்தரவு ஏற்படாதவரை அவர்கள் அப்படியே ஒதுங்கி அலட்சியமாக இருந்து விடலாமில்லையா..?
‘ஒரு சில முதலாளிகள் அதுமாதிரி இருக்கலாம். எங்கள் முதலாளிகள் எங்கள் கூடப் பிறவா சகோதரர்கள் மாதிரி.. எங்களுடனேயே வளர்ந்-
தவர்கள். அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை – அவை கம்பெனியின் உற்பத்தியை, விற்பனையை, லாபத்தை எந்த விதத்திலேயும் பாதிக்காது என்று புள்ளி விவரத்துடன் கூறி இருக்கிறோம்… அவர்களுக்கும் சிறிது டைம் வேண்டும் அல்லவா..? சிந்தித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். கத்தியின்றி, ரத்தமின்றி போராடி சுதந்திரம் வாங்கிய நாடு இது.. சாத்வீகப் போராட்டத்திற்கு உள்ள பலம் வயலன்ஸிற்குக் கிடையாது.. உண்ணாவிரதம் இருக்கும் எங்கள் மனைவிமார்களுக்கும் புள்ளி விவரத்தோடு எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தைச் சொல்லி இருக்கிறோம். அவர்கள் எங்கள் டைரக்டர்களின் மனைவிமார்களிடம் நிச்சயமாக டிஸ்கஸ் செய்திருப்பார்கள். டைரக்டர்களின் மனைவிமார்கள் எங்கள் பக்கம்தான் இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அந்த முறையிலும் எங்கள் மானேஜ்மென்டுக்கு பிரஷர் இருக்கிறது..‘
‘அதாவது மதுரையைப் பிடித்தால் சிதம்பரம் தானாக தலையாட்டும்னு சொல்றீங்க’
மெலிதாகச் சிரித்தான் ரவி.
‘உங்களுடைய போராட்டம் – நூதனமான போராட்டம்- இப்போது நாடு முழுவதும் பிரசித்தமாகி விட்டது. இதனால் உங்களுடைய கஸ்டமர்ஸ்
உங்களை விட்டுப் போகலாமல்லவா..? இது உங்கள் கம்பெனிக்கு அட்வர்ஸ் பப்ளிஸிடி இல்லையா?’
‘இல்லை.. அப்படி நான் நினைக்கவில்லை.. நீங்கள் எங்கள் கம்பெனிக்குக் காலணா செலவு இல்லாமல் நல்ல பப்ளிஸிடி தேடிக் கொடுத் திருக்கிறீர்கள்.. இந்த இன்டர்வியூ மூலம் எங்கள் கஸ்டமர்ஸ¤க்கும், ஜெனரல் பப்ளிக்குக்கும் எங்களால் – எங்கள் போராட்டத்தால் –
எங்க கம்பெனியின் உற்பத்திக்கோ, விற்பனைக்கோ ஒரு பங்கமும் வராது என்று புரிந்திருக்கும். என்னால் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமா சொல்ல முடியும். எங்களது நீண்ட கால கஸ்டமர் ஒருத்தர் இன்று எங்களது எம்.டி.யை அணுகி, ‘நாங்கள் ஏப்ரலில் சப்ளை செய்ய
வேண்டிய சில ஐட்டங்களை மார்ச் பதினஞ்சாம் தேதிக்குள் கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். நாச்சுவரலி எங்கள் எம்.டி. ஒன்றும் சொல்ல முடியாது நாளை சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது தெரிய வந்த நான் அவரைத் தொடர்பு கொண்டு எங்கள் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவரது சப்ளைகள் ரெகுலராக இருக்கும். அவர் விரும்பியபடியே ஏப்ரலில் சப்ளை செய்ய வேண்டிய ஐட்டங்களையும் எம்.டி.யிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு சப்ளை செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தேன்‘
‘இட் ஈஸ் வெரி கிரேட்…. உங்களை மாதிரி தொழிலாளர் தலைவர்கள் இருந்தால் எல்லாக் கம்பெனிகளும் செழிப்பாக இருக்கும். ஆமாம்.. உங்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி உங்கள் கம்பெனி காம்படிடர்ஸ் உங்களை அவர்கள் பக்கம் இழுக்க டிரைபண்ணலியா..?’
‘செய்தார்கள்.. செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன், எங்கள் திறமையையும், இனீஷியேடிவையும் பார்த்து ,நாங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் நாங்கள் எல்லாம் எங்கள் கம்பெனிக்கு கமிடெட் ஸ்டா·ப்… ஸோல்ஜர்கள்.. அவர்கள் என்ன கொடுத்தாலும் போக மாட்டோம் எங்கள் கம்பெனி மானேஜ்மென்ட் எங்களை வெளியே அனுப்பினால் ஒழிய.
எங்களது டைரக்டர்கள் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து ஒரு நல்ல பதில் சொல்வார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறோம். நன்றி..‘
ரவி டி.வி. ஸ்கிரீனிலிருந்து மறைந்தான். புவனா டி.வி யை ஆ·ப் செய்தாள்.
பரந்தாமன் கண்களில் கண்ணீர். ‘ரவி புள்ளி விவரங்களோடுதானே கேட்டான். அவன் கேட்டவற்றில் நியாயம் இருக்கிறதே. நாம் கோரிக்கைகளை ஒத்துக்கொண்டுதான் பார்ப்போமே..’
அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. மற்ற டைரக்டர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச டெலிபோன் நம்பர்களைச் சுழற்ற ஆரம்பித்தார்.
இருட்டென்றால் அப்படி கும்மிருட்டு
அமாவாசைக்கு அடுத்த நாள் இன்னிக்கி
இருப்பதோ பட்டிக்காடு மின் தடையும் வேற
ராந்தலும் வெளக்கும் அவிஞ்சு மணி மூணாச்சு
காலையில சரியா கூவிச்சு வெடக்கோழி
ஆறு அஞ்சு மணியைப் பாத்ததுமே மூடிக்கிச்சு
மதியம் சாப்பாட்டுக்குக் கோழி தயாராச்சு
கோழியக் கேட்டுட்டா மசாலா அறைப்பாக
உறிச்ச நாட்டுக்கோழி தளதளன்னு கொஞ்சிச்சு
மணக்க மணக்க மாமியா அறைச்சுத் தர
குலுக்கிக் குலுக்கிக் கொழுந்தியா கொதிக்கவைக்க
எட்டூருக்குக் கேட்டுச்சு நாட்டுக்கோழி வாசம்
தலை வாழை இலை போட்டு அள்ளி அள்ளி வச்சாக
வாயைத் தொறந்தாக்கா காக்கா கொத்தும் வரை
மாமனும் பிடி பிடிச்சேன் முட்ட முட்டத் தின்னுப்புட்டேன்
ராத்திரி ஆனதும் ஒருக்களிச்சு எழுந்திருச்சேன் வயித்துக் கோழிக்கு றெக்கை முளைச்சிடுச்சு
குறுக்கும் நெடுக்குமா முட்ட முட்டத் தொடங்கிச்சு பரக்கப் பரக்க நானும் இடந்தேடி ஓடிப்போனேன்
இருட்டே நல்ல துணை தனியிடமே செம சொகம்
கிருட்டுக்கிருட்டுன்னு சுவத்துக்கோழி கத்திச்சு
சளக்கு சளக்குன்னு கறுப்புப் பண்ணி பொறளுது
உஸ்உஸ்ஸுன்னு கரும் பாம்பு நெளியுது
கீக்குக்கீக்குன்னு சொறித் தவளை கத்திச்சு
வழ்வழ்ழென்று கிழ நாய் ஊளையிட
பாம்போ பண்ணியோ நாயோ தவளையோ
என் அவசரம் எனக்கு வேறெதுவும் தெரியலே
முள்ளளுச்செடிகிட்டே முட்டுக்குத்தி உக்காந்தேன்
கடனையெல்லாம் முடிச்சிபுட்டு காலார நடைநடந்து
தேங்கிக் கிடக்கும் பள்ளத்துக் குட்டையில்
காலைக் கழுவி இடக்கர் அடக்கல் முடித்தேன்
மாப்பு தான் நானும் ஆனாலும் தமிழ் வாத்தி .
குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் புதுமையான ‘ஸ்பேசஸ்’ அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.
சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின் நோக்கம் பற்றியும் கூறி அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
வேணுகோபால் அவர்கள் வாசித்த “தர்பன சுந்தரி’ எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது !.
பேராசிரியர் சிந்தாமணியின் கவிதைகள் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன.
இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல் தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள் சர்வ தேச வானொலி மற்றும் பிராஜக்ட் மதுரை.
தாரிணி கணேஷ், கோமல் சாமிநாதன் அவர்களின் இலக்கிய இதழ் “சுபமங்களா” வெளியிட்ட படைப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும் இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.
புத்தகமா இ- புத்தகமா ? என்ற கேள்வி எழுந்தாலும் அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும் இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது .
இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டார்.
நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இந்த விழாவின் விவாதங்களின் முழு விவரமும் காண கீழே கொடுத்துள்ள இலக்கியவாசலின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்!!
கால் பதித்து ஏறுகையிலேயே
காணாமல் போகும் மாயப்படிகள்
அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டு இருக்கையிலேயே
கவிழ்ந்து விழும் விமானங்கள்
சூரியனாய் மாறிய நட்சத்திரங்கள்
தீபாராதனை காண்கையிலேயே கால் கை அசைக்கும் கடவுள்கள்
படித்துக்கொண்டு இருக்கும்போதே பறிபோகும் பக்கங்கள்
ஆசையுடன் விழுங்கப் போகையில் அருவமான அன்னம்
கால்கள் தரையில் பதியாமல் பறக்கிற நடை,
கீழே நழுவும் மலையும் வயலும் கடலும் காடும்
குழந்தைகளாய் வளைய வரும் வளர்ந்த பிள்ளைகள்
முடிவில்லா பாதைகளும் ,மூடிய நுழைவுகளும்
எத்தனையோ வருடம் கழித்து சந்தித்த தோழி
அருகே போனதும் அன்னியமாய்ப் போனது
அலுவலகம் செல்லும் வழியிலேயே அவிழ்ந்து விழும் உடைகள்
தேடி அவலமாய்த் தவிக்கும் பொழுதுகள்
சிரித்தபடி குசலம் கேட்டு உறவாடும் மரித்த உறவுகள் என
வண்ண வண்ணக் கனவுகளில் தோய்ந்த என் பின்னிரவுகளும்
அதிகாலைகளும்
என் இருப்பை நிறைப்பவை !
வாட்ச் மேன்
என் நண்பனைப் பார்ப்பதற்காக, அவன் அபார்ட்மென்ட் முன்பு ஆட்டோவை நிறுத்தி, மனைவி மகளுடன் கீழே இறங்கினேன்.
ஆட்டோ டிரைவருக்குப் பணம் கொடுப்பதற்காக பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொண்டே, ‘ரமா.. டைம் என்னாச்சு..?’ என்று கேட்டேன்.
என் மகள் மிதிலா அந்த அபார்ட்மென்ட் கேட்டருகில் இருந்த வாட்ச் மேனிடம் போய், ‘அங்கிள்.. டைம் என்னாச்சு..?’ என்று கேட்டாள்.
அந்த வாட்ச்மேன், ‘பாப்பா.. அங்கிள்கிட்டே வாட்ச் இல்லே.. டைம் தெரியாதே..’ என்றான் மெலிதாக சிரித்துக் கொண்டே.
‘என்ன அங்கிள்..? உங்களிடம் வாட்ச் இல்லை. பின் ஏன் உங்களை எல்லோரும் வாட்ச்மேன் என்று கூப்பிடறாங்க..?’ என்றாள் மிதிலா.
வாட்ச்மேனுடன் நாங்களும் திகைத்து நின்றோம்!.
தசாவதாரத்தில் கலக்கிய பலராம் நாயுடு கமல் இப்போது தனி படமாக சபாஷ் நாயுடு என்று வருகிறார்.
இப்படத்தில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம் கமலுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் கமலின் மகளாகவே நடிக்க இருக்கிறார். பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. லைக்கா நிறுவனம் வழங்க, கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் கமல் தனது முந்தைய படங்களில் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்டே இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தின் பாத்திரமான பல்ராம் நாயுடு வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்கள். இயக்கமும் கமல் !
தசாவதாரம் பலராம் நாயுடு காமெடி கொஞ்சம் பார்ப்போமா?
இடைச்சேவல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவரும், இவரது நெருங்கிய நண்பரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கி ராஜநாராயணனும் சாகித்ய அகடமி விருதுபெற்ற, குறிப்பிடத்தக்க படைப்பாளிகள். இவர் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், விமரிசனங்கள் ஆகியவையும், இவரது சிறுகதைகளைப் போலவே படிப்பினையைப் போதனையாகச் சொல்லாத அரிய அனுபவம் என்று கூறலாம். இவர் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர். கீர்த்தனைகள் படைத்தவர்
*****
மிகவும் பேசப்படும் இவரது குமாரபுரம் ஸ்டேஷன் என்னும் கதை
‘குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவிற்கு எந்த ஊரும் கிடையாது. ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயராவது வைத்துத்தானே ஆகவேண்டும்?’
என்று தொடங்குகிறது .
புதியதாக மாற்றலாகி வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரின் பால்ய நண்பர் சுப்பராம ஐயர் ஓரிரு நாட்கள் தங்குகிறார். இந்த ஸ்டேஷனுக்கு பிரயாணிகளும் வருவதுண்டோ என்கிற ஐயம் அவருக்கு. ‘இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன் இருந்தால் போதும் இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது’ என்கிறார்.
அதற்கு ஸ்டேஷன் மாஸ்டர் கோவில்பட்டி சந்தை தினங்களில் பத்து டிக்கட்களாவது தேறும் என்கிறார். தவிர, கோடையில் சுற்றுவட்டாரத்தில் நிலத்தில் வேலை செய்பவர்கள் மண்கலயங்களில் குடிநீர் எடுத்துச் செல்வார்களாம்.
தண்ணீர்ப்பந்தலுக்குப் பதிலாக ஸ்டேஷன் கட்டிவிட்டார்கள் என்று கேலி செய்கிறார் சுப்பராம ஐயர். ஸ்டேஷன் மாஸ்டர் பள்ளிக்கூடம் என்பது எதற்காக என்று கேள்வி கேட்கிறார். நூறு குழந்தைகள் படிக்கத்தான் என்று பதில் வருகிறது. பிள்ளைகள் எதற்காகப் படிக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி. சுப்பராம ஐயர் பதிலளிக்கா விட்டாலும் ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லுகிறார்.
‘எந்த பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம். படிக்காதவனுக்கும் வேலை உண்டு என்று சட்டம் செய்யட்டும். எவனாவது மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.
மூன்றாம் நாள் காலையில் எட்டுமணி பாசஞ்சர் வண்டியில் சுப்பராம ஐயர் ஊர் திரும்ப இரயிலுக்காகக் காத்திருக்கிறார். கோவில்பட்டி சந்தைக்குச் செல்லும் பயணிகள் முன்னதாகவே வந்து வெற்றிலைப் பாக்கு போட்ட வண்ணம் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதோ மாடு வாங்கிவந்த கதையை ஓர் ஆசாமி சொல்ல மற்றவர்கள் கவனமாக ‘ஊம்’ போட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேச்சுகளில் உள்ள உண்மை சுவாரஸ்யம், அர்த்தம் மற்றும் தூரத்தில் தெரியும் கிராமங்களும் தனக்கு ஒரு பாடம் கற்பிப்பதாக உணர்கிறார், சுப்பராம ஐயர்.
பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக அவசர அவசரமாக வருகிறார்கள். காலில் பூட்சும், க்ளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாக, பள்ளிக்கூடத்திற்கு எப்போதோ வரும் பெரிய இன்ஸ்பெக்டரைப்போல காணப்படும் சுப்பராம ஐயரை வியப்போடு பார்க்கிறார்கள்.
ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கட் கொண்டு வந்து கொடுக்கிறார். இரயிலும் வருகிறது. கூட்டமில்லை. ஐயர் ஏறிய பெட்டியிலேயே அந்தச் சிறுவரும் அவர்களுடன் வந்த பெரியவரும் ஏறிக்கொள்கிறார்கள். ஏராளமான சாமான்களோடு பூதாகரமான ஆகிருதியுடன் ஒருவரும் அவருடைய கனத்தில் முக்கால் வாசியாவது இருக்கும் ஒரு அம்மாளும் அந்தப் பெட்டியில் ஏற்கனவே இருக்கிறார்கள். அந்த மனிதரின் வைரக்கடுக்கன், வைரமோதிரம், தங்கப்பித்தான்கள் சிறுவர்களின் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறது.
பூதாகாரமான மனிதர் சௌஜன்யமாக சிறுவர்களை எங்கே பிரயாணம் என்று கேட்கிறார். அவர்கள் ஊரான இடைச்சேவலில் ஏழாம் வகுப்பு இல்லை என்றும், கோவில்பட்டியில் உள்ள பெரிய பள்ளியில் பரிட்சை எழுதிச் சேருவதற்குத்தான் அவர்கள் செல்கிறார்கள் என்றும்சிறுவர்கள் சார்பில் பெரியவர் பதில் சொல்கிறார்.
நானே கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் என்று அந்த வைரக்கடுக்கன் ஆசாமி மூன்று கேள்விகள் கேட்கிறார்
“வாட்டீஸ் யுவர் நேம்?”. “வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?’, “வாட் கிளாஸ் யூ பாஸ்?” எனக் கேட்கிறார். பதில்கள் கேட்டு நீங்கள் எல்லாம் பாஸ் என்கிறார். மேலும் கேள்விகள் கேட்கச் சொன்னால், “நம்ம இங்க்லீஷ் அவ்வளவுதான். அதுக்குமேல எங்க வாத்தியார் கத்துக்கொடுக்கல” என்று சிரிக்கிறார்.
பூதாகாரமான ஆசாமி திருநெல்வேலியில் பங்கஜ விலாஸ் என்னும் ஹோட்டல் நடத்துவதாகவும், நிறைய படிக்கும் பையன்கள் இவர் ஹோட்டலில்தான் சாப்பிடுவதாகவும் தர்மத்திற்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டிவருவதாகவும் சொல்கிறார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. என்றாலும் அவர் ஹோட்டலில் சாப்பிடும் மாணவர்கள் எல்லாம், ஏன் இந்த நான்கு சிறுவர்களும் கூட, தன் குழந்தைகள் தானே என்கிறார்.
அந்தப் பரீட்சைக்குப் பெரிய வாத்தியார் ஒரு மாசம் வீட்டில் வைத்து, மிகுந்த முயற்சி எடுத்துப் பாடம் சொல்லிக்கொடுத்தாகவும், அந்தப் பையன்களில் ஒருவன் தனது பேரன் என்றும், மற்ற பையன்களில் ஒருவன் வசதி இல்லாதவன் ஆகையால் அவன் செலவுகளைத் தானே பார்த்துக் கொள்வதாகவும் பெரியவர் சொல்கிறார்.
சுப்பராம ஐயர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயரை எழுத்துக்கூட்டி ‘அன்னா கரீனா – லியோ டோல்ஸ்டோய்’ என்று ஒரு சிறுவன் படிக்கிறான்.
“டோல்ஸ்டோய்!. அதுவும் சரிதான்! சொல்லிக்கொடுக்காத வரையில் யாருக்கும் டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்?” என்று நினைத்துக்கொள்கிறார் சுப்பரம ஐயர்.
பரிட்சைக்குத் தயார் செய்வதற்காகப் பெரிய வாத்தியார் கொடுத்திருந்த காகிதங்களைச் சிறுவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
“பட்டிக்காட்டுப் பயல்கள் ஆனாலும் படிப்பு நல்ல படிப்புதான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைகமேல அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேனே” என்றார் பெரியவர்
“அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர்.
இதைக் கேட்டதும் சுப்பராம ஐயரின் உடம்பு சிலிர்த்தது.
இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட ஹோட்டல்காரர், படிச்சிருந்தா உத்தியோகம் பார்த்திருக்கலாம் . ஆனா இத்தனை வருஷமா பள்ளிப் பிள்ளைகளுக்கு உபகாரம் செய்திருக்க முடியாது என்கிறார்
“..நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்காரனை மிரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம்..”
கோவில்பட்டியில், பெரியவரையும் பிள்ளைகளையும் தங்குவதற்காக அவர்கள் ஊரைச் சேர்ந்த ஒரு போர்ட்டர் தன் வீட்டிற்கு அழைத்துப்போகிறான்.
சுப்பராம ஐயர் வீடு போகும்போது நினத்துக்கொள்கிறார்.
குமாரபுரம் ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்துடன் வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது, ஹோட்டல்காரரின் தர்ம குணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப்போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு இப்படி, எல்லாமே அவருக்கு ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டது போன்ற ஆனந்தப் பரவசம் .. கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும், போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்று அவருக்கு ஒரு நிமிடம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ‘குமாரபுரம் ஸ்டேஷனுக்கு பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேற்படிப்பிற்காக இவர்கள் வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர்ப்பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்…
அந்தச் சிறுவர்கள் சேர வந்திருந்த பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு இடம் கிடைப்பதும் அந்தப்பள்ளியில் பரிட்சை வைத்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் ஹெட் மாஸ்டர், அந்த சுப்பராம ஐயர்தான் என்று கதை முடிகிறது.
*****
பலராலும் குறிப்பிடப்படும் இவரது கதைகள்: அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று, தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி.
இணையத்தில் கிடைக்கும் சில கதைகள்
அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு , தியாகம்
எஸ் கே என்
நான் ஒரு பருவ மழை.
பொறுத்து, புலம்பி, பூசை செய்து , வசை பாடி வையம் அழைக்கும் வேளைகளில்
புதிராய், பூதமாய் , புரியாத மாயமாய் , கசையடிக்கும் மசியாத கள்வனென நின்றாலும்
இந்தக் காசினிக்கா தெரியாது?
நான் புனலாய் ,புது வெள்ளாமாய், பூரிப்புடன் பொங்கிப் பிரவாகிக்கும்போது,
என்னைக் கூவி அழைத்தவரும்
கொஞ்சி விளித்தவரும் அஞ்சிச் சொல்ல வேண்டுமே
உன் கரை தாண்டும் வெள்ளம் கருணையல்ல கொடுமையே
போதுமடா சாமி தாங்காது பூமி!
நான் ஒரு பருவ மழை!
என் கவிதை மனம் இன்று விழித்துக்கொண்டது. இடியும் மின்னலும் மழைக்கு அறிகுறியென்றால் உங்கள் எழுத்துக்கள் என்னை எழுப்பி விடும் மின்னல்கள்.
மீண்டும் பேசும் வரை …. குடையை பத்திரப் படுத்துங்கள்
முப்பது வருடங்கள் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற அன்று நன்றி அறிவித்தலாக அலுவலக நண்பர்களும் நிர்வாகமும் அணிவித்த மாலையும் கழுத்துமாக பரிசுப் பொருட்களுடன் காரைவிட்டு இறங்கிய ரங்கராஜனிடம் “நீங்க ஜாக்கிரதையா இறங்குங்கோ நானும் சீனுவும் இதெல்லாம் எடுத்துண்டு வரோம், சீக்கிரமா உள்ளே போங்கோ, யார் கண்ணாவது படப்போறது ” என்றாள் வைதேகி
“சரிடீ சும்மா என்னை மெரட்டிண்டே இருக்காத,நானும் கொஞ்சம் எடுத்துக்கறேன் ” என்றபடி அவரால் முடிந்த அளவு எடுத்துக்கொண்டு “காரிலிருந்து எல்லாம் எடுத்தாச்சன்னு ஒருவாட்டி பாத்துட்டு அனுப்பு, அப்புறமா இத மறந்துட்டேன் அதைக் காணோம்னு புலம்பாத ” என்றபடி உள்ளே போனார் ரங்கராஜன்
“சரி நானும் கிளம்பறேன் அம்மா காத்திண்டு இருப்பா உங்காத்துக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுதான் வந்தேன் இருந்தாலும் கவலைப் படுவா” என்றான் சீனு
“இருடா கைகால் ஓடவிடாம ஆக்காதே ஒருவாய் காப்பி போட்டுத்தரேன் சாப்டுட்டு அப்புறமா போயேன் யாரு வேண்டாம்னா ” என்றபடி,உள்ளே போய் காப்பியை எடுத்துண்டு வந்து ” இந்தாங்கோ ஒருவாய் காப்பி சாப்டுங்கோ ..இந்தாடா சீனு நீயும் சாப்புடு ” என்றபடி காபி கொடுத்துவிட்டு உள்ளே போனாள் வைதேகி
சீனு கையில் காப்பியை வைத்துக்கொண்டு ” என்ன சார் ரிடையர்ட் ஆயாச்சு , இனிமே எப்படி பொழுது போகும் உங்களுக்கு ? வழக்கமா காத்தாலெ 7 மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீசுக்கு ப் போய்ட்டா சாயங்காலம் 7 மணியாகும் வரதுக்கு… ஏதாவது ப்ளான் வெச்சிருக்கேளா ? ” என்றான்
” டேய் சீனு என் மனசில ஓடறதைக் கண்டுபிடிச்சா மாதிரி கேள்வி கேக்கற. நான் கூட்டுப் புழுடா எனக்கு அந்த வேலையை விட்டா ஒண்ணும் தெரியாது.. ஏதோ இதுவரைக்கும் வேலை கொடுத்த அந்த ஆபீசுக்காகவே யோசிச்சு யோசிச்சு வேலை செஞ்சாச்சு. இது வரைக்கும் ஒருநாள் கூட லீவு எடுத்ததில்லே அதுக்காகவே எங்க எம் டி மேடையிலே என்னை எப்பிடிப் பாராட்டினார் பாத்தியா ? எப்போ வேணா மறுபடியும் வேலை செய்யணும்னு எண்ணம் வந்தா இந்த ஆபீஸ் உங்களுக்குக் கதவைத் திறந்தே வெச்சிருக்கும்னு சொன்னார், கவனிச்சியோ ? ” என்றார் ரங்கராஜன்
” சார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்கோ. எல்லாருமே மேடையிலெ அப்பிடித்தான் பாராட்டுவா . அதெல்லாம் நம்பிண்டு அங்கே போய் நிக்காதீங்கோ …மதிக்கமாட்டா , அதெல்லாம் மேடை நாகரீகம் அவ்ளோதான் ” என்றான் சீனு. ” உங்க அனுபவத்தை அதும் மூலமாக் கிடைச்ச அறிவை, யுக்திகளை எல்லாம் யாருக்காவது சொல்லிக்குடுங்களேன், நல்ல பொழுது போக்கா இருக்கும் எல்லாருக்கும் உதவியா இருக்கும் . இப்பவே மணி எட்டாறது ஏதாவது கொஞ்சம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுங்கோ …. உழைச்சது போதும். சரி நான் கிளம்பறேன் ” என்றபடி சீனு கிளம்பினான்,
“இந்த வேளைக்கு நீங்க உழைச்சு நாம் படிப்படியா முன்னுக்கு வந்து நம்ம கடமைகளையும் முடிச்சாச்சு இனிமே பெரிய பொறுப்புன்னு எதுவும் நமக்கு இல்லே. உழைச்சது போதும் நீங்க பாட்டுக்கு வேளாவேளைக்கு சாப்புடுங்கோ, நல்ல நல்ல புஸ்தகமா வாங்கிப் படிங்கோ, கொஞ்ச நேரம் டீவி பாருங்கோ, மனசை நிம்மதியா வெச்சிண்டு இருங்கோ” என்றபடி அங்கே வந்த வைதேகி வாசல் கதவைத் தாப்பாள் போட்டுட்டு வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
” தாய்க்குப் பின் தாரம்னு சொல்லுவா. நான் ஆபீஸ்லே மேனேஜரா இருந்தேன் . அங்கே நான் சொன்னதை எல்லாரும் செய்வாங்க. இனிமே நீ சொல்றதைத்தான் நான் செய்யணும். நீதான் எனக்கு மேனேஜர் ” என்று சிரித்தபடி கூறினார் ரங்கராஜன்.
.” அடப் போங்கோன்னா உங்களுக்கு எப்பவுமே கேலியும் கிண்டலும்தான். நான் நல்லதைத்தான் சொல்லுவேன். நான் சொல்றதைக் கேக்கலாம் தப்பில்லே ” என்றாள் வைதேகி. ” இப்போ டீவியைப் பாருங்களேன் ” என்றபடி டீவியைப் போட்டாள் வைதேகி
அந்த தொலைக் காட்சித் தொடரில் ஒரு பெண் கருமையில் முக்கி மீண்டும் பொருத்திக் கொண்டாற்போன்ற கண்களோடு நெற்றியில் பலவிதமான பொட்டுக்களோடு பளபள ஆடை அலங்காரங்களோடு தன் காதலனிடம் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள் . ” ரமேஷ் என்னை ஏமாத்திடலாம்னு நெனைக்காதே என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்திய நீ கல்யாணம் செஞ்சுண்டா அதைப் பாத்துண்டு நான் சும்மா இருக்க மாட்டேன், உன்னையும் வாழவிடமாட்டேன்” என்றாள் முகத்தைக் கர்ண கடூரமாக வைத்துக்கொண்டு.
எரிச்சலுடன் அடுத்த சேனலுக்குத் தாவினார். அங்கே ஒருவன் “இதோ பாரு! எனக்குக் கிடைக்காத உன்னை யாருக்குமே கிடைக்காம செஞ்சிருவேன் . கொன்னுடுவேன் ” என்று பயமுறுத்திக் கொண்டிருந்தான்
“ஏண்டி இவ இப்பிடி ராக்ஷசி மாதிரி கத்தறா இவளை எப்பிடி இவன் காதலிச்சான் முட்டாள் முட்டாள்!” என்றார் ரங்கராஜன்
” நானும் நீங்களும் சீரியல் எல்லாம் பாத்ததில்லே அதுனால்தான் தெளிவா இருக்கோம் . இதெல்லாம் பாக்காதீங்கோ ! நேஷனல் ஜியாகரபிக் ன்னு ஒரு சேனல் இருக்கு. அனிமல் ப்ளானட்டுன்னு ஒண்ணு இருக்கு . அதெல்லாம் பாருங்கோ ! ட்ராவல் அண்ட் லிவ்விங் ன்னு ஒரு சேனல் இருக்கு அதைப் பாருங்கோ ! இனிமேயாவது ரெண்டு பேரும் கிளம்பி எல்லா ஊரையும் சுத்திப்பாக்கலாம் ” என்றாள் வைதேகி,
” உண்மையிலேயே நமக்கெல்லாம் இந்தப் பாழாய்ப்போன காதலைத் தவிர உருப்படியா யோசிக்கறதுக்கு எதுவுமே இல்லையா ? எப்பிடி எல்லாருக்கும் மூளை இப்பிடி வறண்டு போச்சு ? அது சரி, இந்தக் காதலப் பத்தி உன் அபிப்ராயம் என்ன ? ” என்றார் ரங்கராஜன்.
வைதேகி, ” போறும் \ ரொம்ப வழியாதீங்கோ ! காதலைப் பத்திப் பேசற வயசைப் பாரு …… இந்தக் கண்றாவியைப் பத்தி எனக்கொண்ணும் தெரியாது. உங்களை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா. நாமளும் வாழ்ந்து நம்ம கடமையை நெறைவேத்தியாச்சு. அவ்ளோதான் எனக்குத் தெரியும் . தனித்தனியா பொறந்தோம், ஒண்ணா சேர்ந்தோம், தனித்தனியா போகப்போறோம், இதுலே காதல்னா என்னான்னு சொல்றது ?” என்றாள்.
ரங்கராஜன் அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்.
” உங்களுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு குடுக்கும் போது எங்கம்மா சொன்னா .. நீயும் சந்தோஷமா இரு , மாப்பிள்ளையையும் சந்தோஷமா இருக்க விடுன்னு . அதைத்தான் நானும் செஞ்சுண்டு இருக்கேன. இப்போ காதலிக்கறவா யாரு சந்தோஷமா இருக்கா ? எனக்குத் தூக்கமா வரது. உங்களுக்கு அடுப்பு மேடையிலே பால் காச்சி வெச்சிருக்கேன். மறந்து போய்ட்டேன்னு அப்பிடியே வெச்சிட்டு வந்துடாதீங்கோ ! எறும்பு உள்ளே விழுந்து செத்துப் போகும். பாலைக் குடிச்சுட்டு நேரத்தோட தூங்குங்கோ” என்றபடி உள்ளே போனாள் வைதேகி,
அப்பிடியே சோபாவில் உட்கார்ந்து அசை போடத் துவங்கினார் ரங்கராஜன்.
அவருக்குத் திருமணம் ஆனதிலிருந்து இன்று வரை எல்லாக் காட்சிகளும் மனத்திரையில் நடனமாடின. ‘நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்’ என்னும் பாட்டு சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. வைதேகி வெச்சிருந்த இதமான சூட்டுடன் கூடிய பாலைக் குடிச்சுட்டுப் படுக்கை அறைக்குப் போன ரங்கராஜன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த வைதேகியைப் பார்த்தார் அவர் மனதுக்குள் அன்பு பாசம் நேசம் எல்லாம் கலந்த நறுமணமான ஒரு தாமரை மலர்ந்தது. அருகே சென்று குனிந்து போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்திவிட்டுப் படுத்தார். காதல் என்றால் என்னவென்று புரிந்தது அவருக்கு.
‘சித்திரவீணை என். ரவிகிரண்’ என்றழைக்கப்படும் என். ரவிகிரண் தென்னிந்தியாவின் மைசூரைச் சேர்ந்த சித்திரவீணை கலைஞர் ஆவார். பாடகர், பாடல் இயற்றுநர், இசை ஆசிரியர், இசை எழுத்தாளர் என கர்நாடக இசைத் துறைகளில் பங்காற்றி வருகிறார்
இரண்டு வயதில் புதிய ராகத்தைக் கண்டுபிடித்து அதற்கு தன் அம்மா சூடாமணியின் பெயரை வைத்த இளம் புயல் இவர்.
கர்நாடக இசையில் இருக்கும் 35 தாளத்திற்கும் இசை அமைத்தவர் இவர். இது ஒரு தனி சாதனையாகும்.
பயிற்சிக்கும் மேடையில் பாடுவதற்குமான 72 மேளகர்த்தா ராகமாலிகா கீதத்தை கர்நாடக இசை உலகில் மலரச் செய்தவர்.
அவரோகணத்திலேயே இசை அமைத்துப் பாடிய பெருமை இவருக்கு உண்டு.
தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் என்று ஐந்து மொழிகளில் இசை அமைத்த வித்தகர் இவர்.
சங்கீதா சூடாமணி , இசைப் பேரொளி என்ற பட்டங்களைப் பெற்றவர்.
அவரது சமீபத்திய சாதனை :
திருக்குறளின் 1330 பாடல்களுக்கும் கர்நாடக இசையில் இசையமைத்து அதற்குப் பெருமை சேர்த்தது தான். அதுவும் மூன்று நாட்களில் ( ஜனவரி 12-14) மொத்தம் 16 மணி நேரத்தில் இதை முடித்தது அவரது பெருமையின் சிகரம். சில பாடல்களில் ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையுடன் நாட்டுப்புற இசையையும் இணைத்திருக்கிறார். 169 ராகங்களில் 1330 குறளையும் இணைத்திருக்கிறார். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தானகோபாலன் , அருணா சாய்ராம், சௌம்யா, உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன் போன்ற 75 பிரபலங்கள் மூலம் அவரது திருக்குறள் இசையை இசைக்க வைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா பிரபலங்கள் முன்னிலையில் ஜூலை 3ஆம் நாள் நாரதா கான சபாவில் நடைபெற்றது.
அதற்காக ரவிகிரண் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
அந்த விழாவைத் தவறவிட்டவர்கள் இந்த வீடியோவில் அதைப் பார்க்கலாம்.
அறையில் யானை என்று அறியப்படும் சூழ்நிலை இதுதான்:
ஒரு கேள்வி, பிரச்சினை அல்லது சர்ச்சைக்குரிய விஷயத்தை விவாதம் வரும் என்றோ, சங்கடம் ஏற்படுத்தும் என்றோ சமூகத்தில் தடை செய்யப்பட்டதென்றோ காரணங்களினால் அனைவருக்கும் தெரிந்திருந்தும் தவிர்க்கப்படும் சூழ்நிலை. அறையில் யானை இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது அங்கே இல்லாதது போன்றே அனைவரும் நடந்துகொள்வார்கள்.
குருடர்கள் யானையை அறிந்த கதை:
குருடர்கள் சிலர் யானை பார்க்கப் புறப்பட்டார்கள். யானை பார்த்த பின்னர் அவர்கள் யானை எப்படி இருக்கிறது என்று விளக்குகிறார்கள். யானையின் வயிற்றுப் பகுதியை தடவிப்பார்த்தவன் சுவர் போன்றது என்றான். யானையின் காதைத் தடவிப்பார்த்தவன் முறம் போன்றது என்றும் வாலைப் பிடித்தவன் துடைப்பம் போன்றது என்றும் துதிக்கையை தடவியவன் மலைப் பாம்பு போலிருக்கிறது என்றும் காலைத் தடவியவன் கோயில் தூணைப் போலிருக்கிறது என்றும் தந்தத்தைத் தடவியவன் கூரிய ஈட்டி போன்றது என்றும் சொன்னார்கள்.
இந்த இரண்டையும் பின்னணியாகக் கொண்டு ஒரு கவிதை:
நீதிக்கதை
ஆளாளுக்குக்
கருத்துச்சொன்ன
ஆறுபேருக்கு
விளக்கிச்சொன்ன
ஏழாமவனிடம்
எட்டாமவன் கேட்டான்:
சரிதான்:
எல்லாம் சரிதான்:
காது இருக்கிறது துதிக்கையும் வாலும்
இருக்கிறது
சுவர்போல் உடலும்
தூண்போல் காலும்
கூடத் தெரிகிறது
ஆனால் யானை எங்கே?
-எம் யுவன்
(விருட்சம் கவிதைத் தொகுப்பிலிருந்து)
அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி – நீங்கள் கேட்டவை -பழையன என்று வரும். அதில் வரும் பாடல்களைக் கேட்கும் போதே நீங்கள் பத்து-பதினைந்து வருடம் காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் போனதுபோல இருக்கும்.
அந்த வரிசையில் “முக்தா வீ சீனிவாசன்” அவர்கள் எழுதிய ‘தமிழ் திரை உலகம் ஆயிரம் செய்திகள் ‘ என்ற புத்தகத்திலிருந்து சில டிட்பிட்ஸ்.
(இதன் சிறப்பு என்னவென்றால் முக்தா வீ சீனிவாசன் அவர்களே சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் அமர்ந்து விற்பனை செய்தபோது வாங்கிய புத்தகங்கள் இவை.)
இந்தியாவின் முதல் பேசும்படம் ‘ஆலம் ஆரா’ 14.03.1931 அன்று வெளியானது.
முதல் தமிழ் பேசும்படம் ‘பக்தபிரகலாதா’ . கதாநாயகி தமிழிலும், கதாநாயகன் தெலுங்கிலும் மற்றொருவர் ஹிந்தியிலும் பேசி நடித்த படம்.
தமிழில் ஆரம்ப சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் கே.சுப்ரமணியன் ( தஞ்சாவூர் பாபநாசத்துக்காரர்)
எல்லிஸ் ஆர் தான்காண் என்ற அமெரிக்கர் பல தமிழ்ப் படங்களை இயக்கினார். அவர் தான் சதி லீலாவதியில் எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தியவர்.
ஜெமினி எஸ் எஸ் வாசன் 70 படங்களுக்கு மேல் தயாரித்தவர். நந்தனார், சந்திரலேகா, அவ்வையார்,வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்றவை அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட். ( ஜெமினி கணேசன் இவரது ஜெமினி ஸ்டூடியோவில் பணிபுரிந்ததால் அந்தப் பெயரைப் பெற்றார்.)
ஏ வி எம், சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற கிராமபோன் கம்பெனியை 1932இல் ஆரம்பித்தார். பின்னர் அவர் தயாரிப்பாளராகி, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்களுடன் இணைந்து எடுத்த பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.
பாட்டே இல்லாத அந்தநாள் என்ற படத்தை இயக்கியவர் வீணை எஸ் பாலசந்தர். ( இன்றைக்குப் பார்த்தாலும் படம் டக்கராக இருக்கும்)
தமிழக முதல்வராக இருந்த ஐந்து முதல்வர்கள் திரை உலகத் தொடர்பு கொண்டவர்கள்: அண்ணா, கருணாநிதி,எம்.ஜி.ஆர்., வி என் ஜானகி, ஜெயலலிதா ஆகியவர்கள்.
சென்னையில் விஜயா வாகினி, ஏ வி எம் , சேலத்தில் மாடர்ன் ஸ்டுடியோ, கோவையில் பக்ஷிராஜா ஸ்டுடியோ ஆகியவை முக்கியமான ஸ்டுடியோக்கள்.
கவிஞர் கண்ணதாசன் முதல் பாட்டு எழுதிய படம் ‘கன்னியின் காதலி’ பாடல் ‘கலங்காதிரு மனமே’
தியாகராஜ பாகவதர் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார். அவரது ஹரிதாஸ் என்ற படம் மூன்று வருடங்கள் ஓடியது.
பி யு சின்னப்பா மிகவும் பிரபலமான கதாநாயகர். அவர் தன் வருமானத்தையெல்லாம் புதுக்கோட்டையில் வீடாக வாங்கிக் குவித்தார். அதனால் புதுக்கோட்டை அரசர் ‘இனி யாரும் பி யு சின்னப்பாவுக்கு வீடு விற்கக் கூடாது’ என்று தடையுத்தரவு போட்டாராம்.
டி ஆர் மகாலிங்கம் , கே ஆர் ராமசாமி, எம்.ஆர் ராதா, சகஸ்ரநாமம், எம்,கே,ராதா, ரஞ்சன், எஸ் எஸ் ராஜேந்திரன், என். எஸ் கிருஷ்ணன் , தங்கவேலு, சந்திரபாபு , ஜெய்சங்கர், ரவிசந்திரன், முத்துராமன், சிவகுமார் , பாலையா, நம்பியார், வீரப்பா, நாகேஷ் , கே பி.சுந்தராம்பாள், டி பி ராஜலட்சுமி, எம்.எஸ் சுப்பலக்ஷ்மி., எஸ்.டி சுப்பலக்ஷ்மி, டி ஆர் ராஜகுமாரி, கண்ணாம்பா, பானுமதி, பத்மினி, வைஜந்திமாலா, சாவித்திரி,சரோஜாதேவி, தேவிகா, மனோரமா ஆகியோர் அந்தக்காலப் பிரபலமான நடிக, நடிகைகள்.
தியாகராஜ பாகவதரும், என் எஸ் கிருஷ்ணனும் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளரை கொன்றதற்காகச் சிறைத் தண்டனை பெற்றவர்கள். எம்.ஆர்.ராதாவும் எம் ஜி ஆரைச் சுட்ட காரணத்திற்காகச் சிறைத் தண்டனை பெற்றார்.
கிரேஸி மோகன் – தமிழ் நாடக உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக சிரிப்பு மழை பொழிந்துகொண்டிருக்கின்றவர். (எஸ் வி சேகர் ஒருவரைத் தான் இவருக்குப் போட்டியாளராகக் கருதவேண்டும்). இவர்கள் வந்த பிறகு தமிழ் நாடகத்தின் தலையெழுத்தே சிரிப்புத் தோரணமாக மாறிவிட்டது என்று குறையும் உண்டு. ஆனாலும் நாடகம் திரைப்படம் தோலாக்காட்சி என்ற மூன்று துறைகளிலும் நகைச்சுவையை வாரி வழங்கியவர் கிரேஸி மோகன்.
அவருடைய முதல் நாடகம் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், கிரேஸி மோகன் எழுதி எஸ் வி சேகர் நடித்த நாடகம். பயங்கர ஹிட். அதன் டாப் கிளாஸ் நகைச்சுவை வசனங்கள் குமுதம் பத்திரிகையில் தொடராக வந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
அவரது மற்ற நாடகங்கள்
ஒரு சொந்தவீடு வாடகை வீடாகிறது, – எஸ் வி சேகர்
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட், எஸ் வி சேகர்
ரிடர்ன் ஆப் கிரேஸி தீவ்ஸ்,
கிரேஸி கிஷ்கிந்தா,
அய்யா அம்மா அம்மம்மா – காத்தாடி ராமமூர்த்தி
அலாவுடீனும் 100 வாட்ச் பல்பும்
மேரேஜ் மேட் இன் சலூன் -பாலசந்தரால் திரைவடிவும் ஆனது.
மாது பிளஸ் டூ
மதில் மேல் மாது
மாது மிரண்டால்
ஜூராஸ்ஸிக் பேபி
மீசை ஆனாலும் மனைவி
ஒரு பேபியின் டயரிக் குறிப்பு
சாட்டிலைட் சாமியார்
சாக்லேட் கிருஷ்ணா
கூகுள் கடோத்கஜன்
திரைப் படங்களிலும் கிரேஸி மோகன் தன் சிரிப்பு முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. அவரும் கமலும் சேர்ந்தால் படம் சிரிப்பில் எகிறும். படங்களில் இவரும் சேர்ந்து நடிக்கும் போது காமெடி சும்மா களை கட்டும்.
கிரேசியின் கிரேஸி படங்கள் :
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காம ராஜன்
மகளிர் மட்டும்
இந்திரன் சந்திரன்
சதி லீலாவதி
அவ்வை சண்முகி
தெனாலி
காதலா காதலா
பம்மல் கே சம்மந்தம்
பஞ்சதந்திரம்
வசூல் ராஜா எம் பி பி எஸ்
ஆஹா
அருணாசலம்
இந்தப் படங்களில் இவருடைய நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கும்.
தொலைக்காட்சியில் 90 களில் அதுவும் டிடி1 மற்றும் டிடி2 இருக்கும் போது இவரது நகைச்சுவைத் தொடர்களில் ஈர்க்கப்படாத மனிதர்களே இல்லையென்று சொல்லலாம்.
ஹியர் ஈஸ் கிரேஸி மாது -சீனு நில் கவனி கிரேஸி சிரி க ம ப த நி கிரேஸி நேரம் விடாது சிரிப்பு சிரி சிரி கிரேஸி
இவற்றைத் தவிர விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகைகளில் இவர் எழுதிய தொடர் நாடகக் கதைகள் சிரிப்பை அலை அலையாகக் கொண்டு சேர்க்கும். அவற்றுள் முக்கியமானவை இரண்டு.
ஒன்று சிரிப்பு ராஜ சோழன். மற்றொன்று கலிகால கரிகாலன்.
கலிகால கரிகாலனை அவரது crazymohan.com என்ற அவரது வலைப் புத்தகத்தில் காணலாம்.
ஒவ்வொரு ஓலையிலும் ஒவ்வொரு விசித்திரமான சித்திரம் வரையப்பட்டிருந்தது.
அதை நோட்டம்விட்ட வந்தியத்தேவனின் தலை சுற்றியது. ‘ஏதோ புதிர் பொதிந்த ஓலைகள் போல் தோன்றுகின்றனவே!’ என்று மறுபடியும் அவைகளை நோக்கினான்.
‘சோழர்களால் முறியடிக்கப்பட்ட பாண்டிய நாட்டை மீட்டு பாண்டியர்களின் ஆட்சியை நிலைநாட்ட சபதம் எடுத்துக் கொண்டவர்கள் ‘ஆபத்துதவிகள்’ எனப்படும் சதிகாரர்கள். அந்தக் கும்பலின் ரகசியம் ஒன்றை சோழ ஒற்றன் அறிந்து கொண்டிருக்கிறான். அதைத் தெரிந்துகொண்ட சதிகாரர்கள் அவனைத் துரத்திக் கொன்றிருக்கிறார்கள். அறிவாளியான ஒற்றன், உண்மையை ஓலைகளில் சங்கேத சித்திரமாகப் பதித்து எவரிடமாவது கொடுக்க நினைத்திருந்தான் போலும்!
பாண்டிய சதிகாரர்களின் மிகப் பெரிய ரகசியம் ஒன்று இந்த குறிப்பேடுகளில் புதைந்து கிடக்கிறது, நன்கு பொறுமையாக அலசி புதிர் முடிச்சை அவிழ்க்க வேண்டும். மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும்! சோழ நாட்டை முன்னெச்சரிக்கையுடன், விழிப்பாக இருக்கச் சொல்ல வேண்டிய கடமை நம் தலை மேல் சுமத்தப்பட்டிருக்கிறது’ என்று எண்ணிய வந்தியத்தேவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு தன் குதிரையை நோக்கி நடந்தான்.
அவன் அருகிலிருந்த சிற்றூரை அடைந்த போது ஒரு நாழிகை ஆகிவிட்டது. அங்கிருந்த ஊர்ச்சபைத் தலைவரைப் பார்த்து தான் யார் என்றும் வழியில் நடந்த விபரங்களையும் கூறி, மாண்ட சோழ ஒற்றனின் நல்லடக்கத்திற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டான். விவரங்களை அறிந்த ஊர்ச்சபைத் தலைவரும் அப்படியே செய்வதாக உறுதியளித்தார். நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் வந்தியத்தேவன்.
அத்தியாயம் 02. வந்தியத்தேவன்.
குதிரையில் அமர்ந்த வந்தியத்தேவன் குடந்தையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான். இந்த சமயத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது!
‘விஜயாலயன்’ அஸ்திவாரம் அமைத்து நிலை நாட்டிய சோழ பரம்பரையில் உதித்த ‘மதுராந்தக உத்தம சோழர்’ அரசாண்டு கொண்டிருந்த காலம் அது.வந்தியத்தேவன், தமிழ் வரலாற்றில் புகழ்பெற்ற வாணர் குலத்தில் தோன்றியவன். சோழர்கள் கீழ் இருந்த வாணகப்பாடி நாட்டு வல்லத்து அரசன். ‘அரையன்’ என்னும் சொல்லை நாட்டின் பெயரையும் சேர்த்துப் பட்டப் பெயராக அந்த நாட்களில் வழங்கப்பட்டு வந்தது. ஆகையால் நமது வீரன், ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ என்று அழைக்கப்பட்டான்.
வந்தியத்தேவன் சிறுவனாய் இருக்கும் போதே வாணர் ஆட்சியின் பொற்காலம் முடிவடைந்தது. வந்தியத்தேவன் பெற்றோர், உறவினர், நாடு அனைத்தையும் இழந்து அனாதையானான். நசிந்த குலத்தின் கடைசி வாரிசாக மிஞ்சினான். வாலிபப் பருவத்தை அடைந்ததும் இழந்த நாட்டை சிறிதேனும் மீட்க உறுதிகொண்டான்.
அதற்கான சந்தர்ப்பம் ஒன்று அவனைத் தேடி வந்தது. சோழர் கீழ் இருந்த கடம்பூர் வல்வில்ஓரி குலத்து இளவரசன், அவனுடைய இளம் வயது நண்பன் கந்தமாறன், வந்தியத்தேவனைக் காஞ்சீபுரத்திற்கு அழைத்தான். அப்போதைய சக்ரவர்த்தி சுந்தரசோழரின் மூத்த குமாரன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், படைத்தளபதி மாதண்டநாயகனாக நியமிக்கப்பட்டிருந்தான். சோழர்களின் வடதிசைப் படையை, காஞ்சீபுரத்தை மையமாகக் கொண்டு எல்லையைப் பாதுகாத்து வந்தான். அவனுடன் அங்கு கந்தமாறன் எல்லைக் காவலில் பணிபுரிந்து கொண்டிருந்தான். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய வந்தியத்தேவன் வல்லத்திலிருந்து பாலாறு வழியாகக் காஞ்சிக்குப் பயணத்தைத் தொடங்கினான்.
காஞ்சியை நெருங்கும் சமயம் வனவிலங்குகள் நிறைந்த காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டான். ஒரு ஓடையில் சர்வலட்சணங்களும் பொருந்திய வாலிபன் ஒருவன் குனிந்து தண்ணீர் பருகிக் கொண்டிருந்தான். சத்தம் இல்லாமல் மெதுவாய் பதுங்கிப் பதுங்கி அடிமேல் அடி வைத்து நடந்து வந்த புலி ஒன்று பக்கத்தில் இருந்த பாறையின் மேலேறி அந்த வாலிபன் மேல் பாயத் தருணம் பார்த்தது.
ஒரு கணம்தான்! வந்தியத்தேவன் குதிரையிலிருந்தபடியே தொங்கவிடப்பட்டிருந்த வேலை எடுத்து மின்னல் வேகத்தில் புலிமேல் குறிதவறாது எறிந்தான். புலி பாய்வதற்கும், பறந்து வந்த வேல் அதன் கழுத்தின் ஒரு பக்கத்தில் தைத்து, உள்ளே புகுந்து மறுபக்கத்தின் வழியாக வெளிவந்து சிறிது நீட்டிக் கொண்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது. பாய்ந்த புலி கோரமாகக் கத்திக் கொண்டே வெருண்டு, நெளிந்து, வாலிபனைத் தள்ளிக்கொண்டு தண்ணீரில் தொப்பென்று விழுந்தது. உணர்வை இழந்து தண்ணீரை விழுங்க ஆரம்பித்து, மூழ்கியது!
கனமான வஸ்து ஒன்றால் தள்ளப்பட்ட வாலிபன் என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் திடுக்கிட்டான். அதிர்ச்சியால் இடறி தண்ணீரில் விழுந்தான். விழும் முன் ஒருகணம் வந்தியத்தேவனையும் புலியையும் நோக்கினான். வாயில் தண்ணீர் புகுந்து தத்தளித்தான். மூச்சு முட்டியது. நினைவை இழந்தான்.
அதற்குள் வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தடால் என்று கீழே குதித்து கையில் கத்தியை உருவிக்கொண்டு பாய்ந்து வந்தான். தண்ணீருக்கு அடியில் சென்ற புலி இன்னும் வெளியே வரவில்லை. கத்தியைக் கரையில் வைத்துவிட்டுத் தண்ணீரில் இறங்கி மூழ்கிக் கொண்டிருந்த வாலிபனைத் தூக்கினான். தண்ணீரை வெகுவாகக் குடித்திருந்த அவனை மெதுவாகத் தரையில் குப்புறப் படுக்க வைத்தான். வயிற்றின் பின்புறத்தில் முதுகில் கையை வைத்து அமுக்கி அமுக்கி எடுத்தான். வாலிபன் வாயிலிருந்து தண்ணீர் குப்குப்பென்று வெளிவந்தது. அவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கத்தியை மறுபடி கையில் எடுத்து புலி தண்ணீரில் விழுந்த இடத்தை நோக்கினான். அடியிலிருந்து ரத்தம் மேல் வந்து தண்ணீரைச் சிவப்பு நிறமாக்கத் தொடங்கிக் கொண்டிருந்தது.
திடீர் என்று குதிரைகளின் குளம்புகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட வந்தியத்தேவன் அச்சத்தம் வந்த திக்கை நோக்கி எழுந்து நின்றான். அதில் வந்த வீரர்கள் சரட்சரட் என்று குதிரையிலிருந்து இறங்கி ஓடிவந்தனர். வாலிபன் குப்புறப்படுத்திருப்பதையும் வாளேந்திய ஒரு வீரன் ஒருவன் பக்கத்தில் நிற்பதையும் கண்டு வந்தியத்தேவனைக் குற்றவாளி என்று எண்ணி சூழ்ந்து கொண்டு பிடித்தனர். வியந்துபோன வந்தியத்தேவன் அமைதியாக வாலிபன் இருந்த இடத்தை நோக்கினான். மற்றவர்கள் அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
வாலிபன் மெல்லக் கண்விழித்தான்.
வந்திருந்த வீரர்கள்..
‘வட திசை மாதண்டநாயகன்..
பட்டத்து இளவரசர்..
ஆதித்தகரிகாலர்!
வாழ்க! வாழ்க!!’
என்று கோஷம் எழுப்பியது வந்தியத்தேவனை வியக்க வைத்தது. வீரர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் அருகில் வந்து “இளவரசே! உங்களுக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே? இந்த வாலிபன் உங்களைத் தாக்க முயன்றானா? சொல்லுங்கள்! உடனே இவனை எமலோகத்திற்கு அனுப்புகிறேன்!” என்றான்.
ஆதித்த கரிகாலன் முதலில் கட்டுண்ட வந்தியத்தேவனைப் பார்த்துப் பின் தண்ணீரை நோக்கினான். இரத்தச் சிவப்பாக மாறியிருந்த இடத்தில், செத்த புலி திடீரென அடியிலிருந்து தண்ணீர் மட்டத்திற்கு மேல் வந்து மிதந்தது. வேல் புலியின் கழுத்திலே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். அதற்குள் எங்கிருந்தோ வந்த பறவைகள் கூட்டம் புலியை மொய்க்க ஆரம்பித்தன. நடந்ததை புரிந்து கொண்ட கரிகாலன் காவலர்களை நோக்கி வந்தியத்தேவனின் கட்டுக்களை அவிழ்க்குமாறு கட்டளையிட்டு, மெல்ல எழுந்து எல்லோரையும் விலக்கி வந்தியத்தேவன் அருகில் செல்லத் தலைப்பட்டான். உடன் வந்த காவலர்கள் தலைவன் விரைந்து சென்று வந்தியத்தேவனின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு மன்னிப்புக்கோரும் பாவனையில் தலைதாழ்த்திச் சொல்லிவிட்டு தன் வீரர்களுடன் சிறிது தூரம் தள்ளிச் சென்றான்.
அதற்குள் வந்தியத்தேவனின் அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டு “நண்பா! யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” என்று கரிகாலன் கனிவுடன் கேட்டான்.
“பெயர் வந்தியத்தேவன்..”என்று ஆரம்பித்த வந்தியத்தேவன் முடிக்கவில்லை. அதற்குள் கரிகாலன்,
“ஆகா!வல்லவரையன் வந்தியத்தேவனா? உன்னைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும்! கந்தமாறன் என்னிடம் உன் வீரத்தைப் பற்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறான். அதை, அறிமுகமாகுமுன்பே, என் முன்னாலேயே நிரூபித்துவிட்டாயே! குறி தவறாமல் வேலை புலி மேல் பாய்ச்சி என் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் அல்லவா!” அதிலும் என்ன ஒரு வேகம்.. என்னவொரு குறி.. அபாரம் நண்பா.. அபாரம்!” என்றான்.
“இளவரசே!தக்க சமயத்தில் சந்தர்ப்ப இடத்திற்கு என்னால் வந்ததினால் இதை சாதிக்க முடிந்தது. என்னுடைய இடத்தில் யாராய் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றான் வந்தியத்தேவன்.
“நல்ல அறிவும், வீரமும் உள்ள உன்னிடம் மிகுந்த பணிவும் காணப்படுகிறது. அது உன் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது நண்பா!” என்று கரிகாலன் பதில் கூறினான்.
“வீரமும், விவேகமும் பணிவும் என் பெற்றோர்கள் சின்ன வயதிலேயே எனக்குப் புகட்டியிருக்கும் விஷயங்கள். ஆனால் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை இளவரசே..!” என்று சொல்ல ஆரம்பித்த வந்தியத்தேவன் முடிக்கவில்லை.
கரிகாலன் அவன் பேசுவதைத் தடுத்து “ஆம்! நண்பா அறிவேன். ம்.. கவலையை விடு. நீ இழந்த வாணகப்பாடியை மறுபடியும் அடையலாம்! நீ மேலும் என் பொருட்டு சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன! வா. பாசறைக்குச் சென்று மற்றவைகளைப் பற்றிப் பேசலாம்” என்று வந்தியதேவனின் தோள்களில் கையைப் போட்டு, குதிரைகளினருகே சென்று வீரர்களிடம் ‘போகலாம்’ என்பதை கையை உயர்த்தி, மறுபடியும் முன்னால் தாழ்த்தி செய்கை மூலம் உணர்த்தினான். அனைவரும் புரவிகளில் ஏறிப் பாசறைக்கு விரைந்து சென்றனர்.
இப்படியாக ஆரம்பித்த அவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்த வந்தியத்தேவனின் தீரமான வீரச்செயல்களாலும் யாரையும் ஈர்த்துச் சிரிக்க வைக்கும் வாக்குச் சாதுர்யங்களினாலும், கரிகாலனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அவன் இட்ட பல வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். கரிகாலனின் சகோதரி இளைய பிராட்டி, குந்தவையின் காதலைப் பெற்றான். பிற்காலத்தில் ராஜராஜன் என்று சரித்திரத்தில் புகழ் பெறப்போகும் கரிகாலனின் சகோதரன் அருள்மொழியின் ஒப்பிலா நட்பைப் பெற்றான்.
இந்த நிலை வெகுகாலம் நீடிக்கவில்லை. காரணம் கரிகாலன் தன் பதினெட்டாம் வயதில் பாண்டியர்களுடன் நடத்திய போரில் வீரபாண்டியனின் தலையைக் கொய்து வெற்றி பெற்றான். கோபம் அடைந்த பாண்டியனைச் சேர்ந்த ஆபத்துதவிகளான வீரபாண்டியனின் மகள் நந்தினி மற்றும் ரவிதாசன், கருத்திருமன் போன்றோர் கரிகாலனையும் சோழர் குலத்தையும் வேரோடறுத்துப் பாண்டிய நாட்டை மீண்டும் ஸ்தாபிக்க சபதம் எடுத்தனர்.
வந்தியத்தேவன் கரிகாலனைச் சேர்ந்த சில காலத்தில் இந்தச் சதிச்செயலைப் பற்றிய செய்தியை ஓரளவு புரிந்து கொண்டான். கரிகாலனை கண்ணும் இமையுமாக கண்காணித்து வந்தான். ஆனால்.. விதி வலியது. சதிகாரர்கள் வெற்றி பெற்று கரிகாலனை மர்மமான முறையில் கொன்றார்கள். கரிகாலனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் மேல் விழும்படியான சூழ்நிலையை வேறு உருவாக்கியிருந்தார்கள். பழி அவன் மேல் விழுந்தது. வல்லவரையன் தஞ்சைப் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான். உண்மையான குற்றவாளி அவன் அல்ல என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான்.
சுந்தர சோழருக்குப் பிறகு உத்தம சோழர் அரச பதவியை ஏற்றார். வந்தியத்தேவன் செய்த சேவைகளைப் பாராட்டி வாணகப்பாடியை திரும்பவும் பெற்று வல்லத்து குறுநில மன்னன் ஆகினான். மேலும் ஈழத்தின் புது சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். பதவியை ஏற்குமுன் வல்லத்து மாளிகைகளை நிர்மாணம் செய்வதில் தற்சமயம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் வல்லத்திலிருந்து குடந்தை வழியாகத்தஞ்சை செல்லும் போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
தொடரும்
ஜூன் 24, வெள்ளிக்கிழமை. இன்போசிசில் பணிபுரியும் ஸ்வாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒரு கொலையாளியால் தாக்கப்பட்டு கொடூர மரணம் அடைந்தார். அவர் அடிபட்டுக் கிடக்கும் காட்சியைப் புகைப்படத்திலும் வீடியோவிலும் பார்த்துத் துடிக்காத மனித இதயமேகிடையாது. .
காவல் துறை முதலில் மெத்தனமாகச் செயல்பட்டது. உயர்நீதிமன்றம் முடுக்கிவிட்ட பிறகு அபார திறமையுடன் செயலாற்றி ராம்குமார் என்ற இளைஞனைக் குற்றவாளி எனக் காவல்துறை பிடித்திருக்கிறார்கள். பிடிபடும் போது அவன் கழுத்தில் வெட்டிக்கொண்டது பதட்டத்தை மேலும் அதிகப் படுத்தியது..
நேரடியாகப் பார்த்த சாட்சியம் குறைவாக இருப்பதால், பிடிபட்டவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கவேண்டிய பொறுப்பு காவல் அதிகாரிகளுக்குச் சற்று அதிகமாகவே இருக்கிறது.
ஜாதிகள் வேறு இதில் குறுக்கிடுவது அனைவருக்கும் வேதனையைத் தருகிறது.
ஊடகங்களும் முகநூல்களும் இணைய தளங்களும் வாட்ச் அப்புகளும் இந்த வழக்கில் மட்டுமல்ல இதைப்போன்ற மற்ற பரபரப்பான – முக்கியமான விவகாரங்களில் தங்கள் மூக்கை அதிகமாக நுழைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பி மக்களைத் தவறான பாதையில் திசை திருப்புகிறார்கள்.
தீர்ப்புக்கள் நீதிமன்றத்தில் தான் எழுதப்படவேண்டும். ஊடகங்கள் அதில் புகுந்தால் நீதிக்கும் நேர்மைக்கும் ஆபத்து.
இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.
இதைத் தடுக்கப் புதிய சட்டம் வரவேண்டும்.
வரும்.