Monthly Archives: January 2014
மாங்காட்டுப் பாடல்!
மாங்காடு காமக்ஷி அம்மனை வேண்டிக் கொண்டு ஆறு முறை ஆறு வாரங்களில் குறிப்பிட்ட தினத்தில் சென்று வணங்கி வந்து ஏழாவது வாரம் காய்ச்சின பாலை பக்தர்களுக்கு கொடுத்து வேண்டுதலை முடித்தால் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும்.!
முதல் வாரம்
கருணைஎன்ற கண்கொண்டு பார்க்கின்ற தாயே!
காமாட்சி பேர்கொண்ட மாங்காட்டுத் தாயே!
கிள்ளைமொழி பேசிஎன்னை கொள்ளைகொண்ட தாயே!
கீர்த்திபுகழ் ஞானம்எல்லாம் அள்ளித்தந்த தாயே!
குடம்நிறைந்த நீர்போல ததும்பாத தாயே!
கூரைவரை உயர்ந்துநின்று ஒளிர்கின்ற தாயே!
கெண்டைவிழி கொண்டுஎம்மை ஆண்டுவரும் தாயே!
கேழ்வரகு கூழ்போல அரைத்துவிட்ட தாயே!
கைகூப்பி வந்தோரை கைவிடாத தாயே!
கொட்டும்மழை போலவந்து குளிரவைத்த தாயே!
கோலமயில் வேலவனை கொஞ்சுகின்ற தாயே!
கெளரிஉமை பேர்கொண்டு ஆதரிக்கும் தாயே!
க்ருபைவேண்டும் எந்நாளும் காத்திடுவாய் நீயே
அடுத்த வார பாடல்கள் அடுத்த மாத இதழில்களில்!
குவிகம் !
ஜனவரி 2014
பூ : ஒன்று ———————- இதழ் : இரண்டு
இது இரண்டாம் இதழ்!
இதில் உங்களுக்குப் பிடித்த கவிதைகள், தொடர் கதைகள், நகைச்சுவை துணுக்குகள், கதைகள், கட்டுரைகள் உள்ளன.
புத்தாண்டில் நிறைய சாதிக்க வேண்டும்!
நிறையப் படிப்போம்!!
படிக்கும் பழக்கம் குறைந்து போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்!
சென்னையில் புத்தகக் கண் காட்சி வருகிறது! புத்தகங்களை வாங்கி வீட்டு அலமாரியில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பதை விட அவற்றை படிக்க வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டு வாங்குங்கள்!
மார்கழி மாதம் சங்கீத மாதம். சபாக்கள் எல்லாவற்றிலும் சங்கீத மழை பொழிந்து வருகிறது! நாமும் அதில் நனைந்து திளைத்து வருகிறோம்!
பொங்கல் வேறு வருகிறது! தமிழ் நாட்டின் தலை சிறந்த பண்டிகை! போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், கனுப் பொங்கல், உழவர் திருநாள். என்று பலவாறு கொண்டாடப்படும் பொங்கல் வாரம்! புது திரைப் படங்கள்! ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம் !
தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள்! பட்டி மன்றங்கள்! நடிகர் நடிகை பேட்டிகள்! பார்க்க முடியாத அளவுக்கு சினிமா! சினிமா!!
விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் கிளைமாக்ஸ்க்கு வந்து கொண்டிருக்கிறது!
ஜனவரியில் இந்தியக் குடியரசு நாள் வருகிறது! ஒழுங்கான குடிமகனாக நாம் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம்?
சிந்திப்போம் ! செயலாற்றுவோம்!!
=======================================================
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
========================================================
ஜில்லா – பட விமரிசனம்
மோகன்லால்- விஜய் பாசமுள்ள அப்பா -மகனாக முதற்பாதியில், அப்பறம் திருடன்- போலீஸாக இன் டர்வெலுக்கு அப்பறம் – முடிவில் மிகவும் கெட்டவர்களை வதைத்து கொஞ்சம் கெட்டவர்களைத் திருத்தி – அப்பாடா படம் ஒருவழியாக முடிகிறது!
விஜய் பாடுகிறார் காமெடி செய்கிறார் பஞ்ச் பேசுகிறார் காஜல் மற்றும் குத்துப் பாட்டு மச்சிகளுடன் டான்ஸ் பண்ணுகிறார்! ரசிகர் மன்றத்துக்கு செம தீனி!.
மோகன்லாலை சும்மா விஜய்யோடு தோளை இடித்து பாடுவதற்கும் சரமாரியாக பஞ்ச் டயலாக் பேசுவதற்கும் மட்டும் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.
கதை மதுரையில் நடக்கிறதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் மதுரையின் மணத்தைக் காணோமே!
காஜல் அகர்வால் சரியான காக்கிச் சப்பை ! நடிக்க ஸ்கோப்பே இல்லை. அவரும் விஜய்யும் ஒருவரை ஒருவர் பின்னால் பிடித்துக் கொள்வதில் காமெடியும் இல்லை -ரொமான்ஸும் இல்லை!
வில்லனின் பிளாஷ்பேக், கதைக்கு சிறிய டுவிஸ்ட்! ஆனால் ‘தம்’ இல்லை!
முதல் பாதியில் காக்கிச் சட்டையை கிழிக்கும் காமெடியில் விஜய் -சூரி கூட்டணி தூள் கிளப்புகிறது! காக்கிக் சட்டையை காமெடி பீஸாக்கி கிழிப்பது கொஞ்சம் டூ மச் தான்!
டான்ஸ் போது ‘அட ஜீவா’ என்று பார்க்கும் போதே காணாமற் போகிறார்!
மியூசிக் டி.இமான் ! பட்டையைக் கிளப்புகிறார்!
படம் மிகவும் நீளம்னு ‘எப்போ மாமா ட்ரீட்?’ பாட்டைத் தூக்கிட்டாங்களாமே?
லாஜிக் – விமரிசனம் இவையெல்லாம் கவலைப் படாமல் படம் எடுங்கள் என்று விஜய் டைரக்டர் ஆர்.டி.நேசனிடம் சொன்னாராம்! அவரும் சின்ஸியராக கில்லி, போக்கிரி, துப்பாக்கி, திருப்பாச்சி,தமிழன் எல்லாவற்றையும் கலந்து காக்டைலாக கொடுத்திருக்கிறார்! கிக் தான் வரவே இல்லை!
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு! ஆனால் சூப்பர் என்றோ குட் என்றோ சொல்லமுடியவில்லை!
பொங்கலோ பெண்கள்
பொங்கலோ பெண்கள்
பெண்களோ பொங்கல்
அரிசி பருப்பு இரண்டும் சேர்ந்தால் பொங்கல்!
வெல்லம் சேர்த்தால் அது சக்கரைப் பொங்கல் !
உப்பு சேர்த்தால் அது வெண் பொங்கல்!
இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தால் பெண்கள்!
தியாகம் சேர்த்தால் அது தாய்!
தாபம் சேர்த்தால் அது தாரம் !
பொங்கலுக்குத் தேவை முந்திரி ஏலக்காய் நெய்
பெண்களுக்குத் தேவை நகை அலங்காரம் பொய் !
சூடான போது பொங்கி வழிந்திடும் பால் பொங்கல்!
சூடான போது பொங்கி வழிந்திடும் காதல் பெண்கள்!
அடுப்பில் கிளறிட இளகிடும் பொங்கல்!
இடுப்பில் கிளறிட இளகிடும் பெண்கள்!
சுவைக்க மணக்கும் இனிப்புப் பொங்கல்!
சுவைக்க மணக்கும் இனிப்புப் பெண்கள்!
பொங்கல் சமைத்தால் அள்ளித் தின்னும் ஆடவர் !
பெண்கள் சமைந்தால் அள்ளிக் கொள்ளும் ஆடவர்!
கருப்பு மிளகுப் பொங்கலில் காரம் அதிகம்!
கற்பு மிகுந்த பெண்களில் பெருமை அதிகம்!
மஞ்சள் கொத்தை கட்டிக் கொள்ளும் பொங்கல்!
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும் பெண்கள்!
பொங்கலுக்குத் துணை ஆலையின் செங்கரும்பு!
பெண்களுக்குத் துணை காளையின் கரமிரும்பு!
கரம் பட்டதும் தன்னையே தந்திடும் பொங்கல்!
கரம் பட்டதும் தன்னையே தந்திடும் பெண்கள்!
பசித்தவன் இதழ்களில் சேர்ந்திடும் பொங்கல்!
மணந்தவன் இதழ்களில் சேர்ந்திடும் பெண்கள்!
தப்பான கைபட்டால் கெட்டுவிடும் பொங்கல்!
தப்பான கைபட்டால் கெட்டுவிடும் பெண்கள் !
தின்னத் தின்ன திகட்டாதது பொங்கல்!
அள்ள அள்ள திகட்டாதது பெண்கள்!
திருவிழா முடிந்ததும் வருவது மாட்டுப் பொங்கல்!
மணவிழா முடிந்ததும் வருவது மாட்டுப் பெண்கள்!
அடங்காத காளையை அடக்கும் மாட்டுப் பொங்கல்!
அடங்காத காளையை அடக்கும் மாட்டுப் பெண்கள்!
ஆதவனுக்கு உணவைப் படைத்திடும் கனுப் பொங்கல்!
காதலனுக்கு தன்னையே படைத்திடும் காதல் பெண்கள்!
சுற்றம் பார்த்து உறவை நாடும் காணும் பொங்கல்!
சுற்றிப் பார்த்து உறவை நாடும் நாணும் பெண்கள்!
தங்கத் தமிழ் நாட்டில் பொங்கலுக்குத் தனிச் சிறப்பு!
தங்கத் தமிழ் நாட்டில் பெண்களுக்குத் தனிச் சிறப்பு!
பொங்கலோ பெண்கள்!
பெண்களோ பொங்கல்!
முதல் பரிசு பெற்ற கவிதை!
ஆனந்த் பிளாட்ஸ் புத்தாண்டு 2014 சிறுவர்களுக்கான தமிழ்க்
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
( ராகுல் .எஸ் D1/18)
அறமும் பொருளும், , நலனும் அருளும்
நாளும் பொழுதும், வளர்ந்து பொங்கிய
ஓங்கிய நிலையில், தேங்கிய புகழில்
வாழ்வின் பொருளை வையகம் அறிந்திட
தோன்றிய பாரதம் ஊன்றிய பேதத்தால்
புகுந்திட்ட மொகலாயர் இருநூறு ஆண்டுகள்
சீர்களை சிதைத்து , வன்மத்தை பெருக்கிட
விட்டதை அழிக்க வெள்ளையர் நுழைந்திட
மீண்டும் இருநூறு ஆண்டுகள் அடிமை சேற்றில்
அனைத்தையும் இழந்து ஆதரவு இன்றி
தன்மானம் இழந்து சேவகம் புரிந்து
கைகட்டி வாய்மூடி கண்மூடி பின் சென்று
செக்கை இழுத்தும் கல்லை உடைத்தும்
பிராணிகள் தோல் முடி கைகளால் பிய்த்தும்
தூக்குக் கயிற்றில் தொங்கிய வீரர்கள்
குண்டடிபட்ட உயர்குல விளக்குகளும்
சவமாய் விழுந்த கணக்கை எல்லாம்
ஆய்ந்து அறிய ஆயுளும் இல்லாது
சிந்திய ரத்தமும் தாக்கிய துயரமும்
முடிந்தது ஒருநாள் என்று களிக்கவும்
இன்று அயலார் விதைத்த விதைகள் எல்லாம்
களையாய் முளைத்து தொடரும் அபாயம்
விலகும் நாள் தான் வருமோ இனியும்?
பண்டைய பாரதம் மலருமோ இனியும்?
ப்ரே பண்ணுவோம் ( விஜயலக்ஷ்மி)
“ப்ரே பண்ணுவோம் ” பாட்டுக்கு இப்படியும் அழகாக லிரிக்ஸ் எழுதலாம்!
ஏம்ப்பா! நம்ம நாடு ரொம்ப கெட்டுப் போச்சுன்னு நொந்து நூடுல்ஸ் ஆகாம நாட்டுக்காக ஒரு நிமிஷம் ப்ரே பண்ணுங்க ! நம்ம நாட்டு மக்களுக்காக ப்ரே பண்ணுங்க ! ஏன் நம்ம பக்கத்து நாட்டு மக்களுக்கெல்லாம் சேர்த்தே ப்ரே பண்ணுங்கப்பா ! ப்ரே பண்ணுங்க!
உன் பஞ்சம் தீர – லஞ்சம் ஒழிய – வஞ்சம் மாற –நெஞ்சம் உருகி பாரத மாதாவே உனக்காகத்தான்
நீ நலம் பெற– வளம் பெற –புகழ் பெற –தினமும் உனக்காகத்தான் ப்ரே பண்ணுவோம்!
தாய் மண்ணே நீ நல்லரசு வல்லரசாக உனக்காகத்தான் தினமும் ப்ரே பண்ணுவோம்! பாரத மாதா!
நாட்டில் லஞ்சமும் ஊழலும் ஒழிய வேண்டி
வெட்டுகுத்து கொலை கொள்ளை அழிய வேண்டி
ஜாதிமத பேதவெறி தொலைய வேண்டி
நீதிநெறி நியாயம் நேர்மை நிலைக்கத்தான் ப்ரே பண்ணுவோம்
நீ நல்லரசாக, நாங்க ப்ரே பண்ணுவோம்
நீ வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
போதை குடியை மக்கள் மறந்திட நாங்க ப்ரே பண்ணுவோம்
அரசே முன் வந்து டாஸ்மாக்கை மூடிட நாங்க ப்ரே பண்ணுவோம்
நாட்டில் ரௌடி , வன்முறை எல்லாம் அழிந்து போகும் நாளுக்காக ப்ரே பண்ணுவோம்!
அரசு பதவி பண மோகம் இன்றி கடமையை தினம் செய்யும் ஆளுக்காக ப்ரே பண்ணுவோம்!
நீ நல்லரசாக, நாங்க ப்ரே பண்ணுவோம்
நீ வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
நியாயமான தேர்தல் நாட்டில் நடந்திட நேர்ந்து ப்ரே பண்ணுவோம்
நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்திட சேர்ந்து ப்ரே பண்ணுவோம்
உண்மையாக உழைக்கும் மக்கள் வாழ்வில் முன்னேற ப்ரே பண்ணுவோம்
உழைப்பு இல்லா இலவசங்கள் வாங்க மறுக்கும் மக்கள் பெருக ப்ரே பண்ணுவோம்
இந்தியா வல்லரசாக நாங்க ப்ரே பண்ணுவோம்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவோம்
தரமான கல்வி முறை வந்திட வேண்டி
பாரதப் பண்பாடு காத்திட வேண்டி
மாதரின் இழிவு நிலை மாறிட வேண்டி
அன்பான, பண்பான சமுதாயம் உருவாக ப்ரே பண்ணுவோம்.
இந்தியா நல்லரசாக நாங்க ப்ரே பண்ணுவோம்
பாரதம் வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
எல்லா சாமிக்கும் நல்லா ப்ரே பண்ணுவோம்
வாங்க எல்லோருமாக நல்லா ப்ரே பண்ணுவோம்!
ரஜினி ஜோக்ஸ்
ஆர்ம்ஸ்டிராங்க் சந்திரனில் காலடி வைத்ததும் அவரை வரவேற்க ரஜினி காத்துக் கொண்டிருந்தார்.
ரஜினி இரவுகளில் தூங்குவதே இல்லை. சில சமயம் அவர் லேசாக கண்ணசைந்த நேரத்தில் தான் சுனாமி, தானே,கத்ரினா புயல் தோன்றின.
ரஜினி ராகவேந்தராக நடித்தது அனைவருக்கும் தெரியும். ஒரு சமயம் அவர் காலில் அடி பட்டு நடிக்க முடியாமல் இருந்த போது ராகவேந்த்ரா ஸ்வாமியே அவருக்காக நடித்தார் என்பது ரஜினிக்கும் எஸ்.பி. முத்துராமனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
ரஜினி பாம்புக்கு பயப்படுவது போல் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர் நாக தேவதைக்குக் கொடுத்த சத்தியம் தான்.
கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் “நான் ரஜினி”. அதில் அந்தப் படத்தில் வரும் எல்லா பாத்திரங்களிலும் (கிட்டத்தட்ட 100 வேடங்கள்) ரஜினியே நடிக்கிறார். டைரக்டர் லதா ரஜினிகாந்த்.
ஒரு சமயம் ரஜினி தெரியாமல் ‘லைவ் வயரைத்’ தொட்டுவிட்டார். அன்றையிலிருந்து தான் தமிழ் நாட்டுக்கு பவர் கட் வந்தது.
எல்லா பௌதிக விதிகளையும் மாற்றிய ரஜினி ஒரு சமயம் ஆப்பிள் ஒன்றை தூக்கி எறிந்தார். அது கீழே விழவே இல்லை. நியூட்டன் தன் விதியைத் திருத்திக்கொண்டார்.
First Prize in Anand Flats New Year Poem Competition on Patriotism
By Manasa.G (D1-47)
I do not know why you choose me
To be your child of pride
But what I do know is your deep, unusual history
That makes you the best, an unexplained mystery
For if I was not born here ,
All my life, I would’ve lived with fear
I wouldn’t have seen great monuments or bullock carts
I wouldn’t have heard grandma stories or splendid arts
I wouldn’t have had the knowledge I have now
That keeps other countries just wondering how
So, here is my PROMISE,
That no foreigner will accomplish
Few years from now, I will stand out of the crowd
And you will hear people exclaim ‘her mother must be so proud’
For you are My mother, My India, My light
மூலிகைக் குளியல் ( ராதை & சுந்தரம்)
மூலிகைக் குளியல்
இந்தக் காலத்தில் பெண்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர் அனைவரும் மூட்டு வலி,இடுப்பு வலி, தோள் பட்டை வலி, குதிகால் வலி போன்றவற்றினால் துன்பப்படுவதை கண் கூடாகப் பார்க்கிறோம்.
ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் வலி நிவாரணி மாத்திரைகளும், ஆய்ன்ட்மென்ட்களும் தற்காலிக நிவாரணம், மட்டுமே தருகின்றன.
மேற்கண்ட நோயுள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அபூர்வ தைலத்தை தேய்த்துக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறிய பிறகு புதியதாகத் தயாரித்த வெதுவெதுப்பான மூலிகை நீரில் குளித்து வந்தால் அவர்களின் வலிகளெல்லாம் முழுவதுமாக மறைந்து விடும் என்பது உறுதி.
அபூர்வ தைலம் தயாரிக்கும் முறை:
புளிய இலை ஆறு கையளவு, சாதாரண கல் உப்பு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் சேர்த்து ( தண்ணீர் தெளிக்காமல்) இடித்து தூளாக்கி ( அல்லது மிக்ஸியில் தூளாக்கி) அரை லிட்டர் நல்லெண்ணையில் ஊறப் போடவும். சுமார் ஆறு நாட்கள் ஊறிய பிறகு அபூர்வ தைலம் ரெடியாகி விடும். அபூர்வ தைலத்தை காய்ச்சவோ சூடாக்கவோ அவசியமில்லை.
மூலிகை குளியலுக்குத் தேவைப்படும் மூலிகைகள்:
- புளிய இலை 2. மஞ்சனத்தி இலை 3. தழுதழை 4. யூகலிப்டஸ் இலை 5. நொச்சி இலை 6. வேப்ப இலை 7. ஆடா தொடா இலை 8. தும்பை இலை 9. குப்பைமேனி இலை
இவற்றில் எவை கிடைக்கிறதோ அவற்றை பயன் படுத்தினால் போதுமானது.
இந்த இலைகளை எல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டு நல்ல வென்னீரை விட்டு வைத்தால் பத்து நிமிடத்தில் சாறு இறங்கி விடும். காப்பி டிகாஷன் கலரில் தண்ணீர் இருக்கும். அந்த கலவையை வடிகட்டி அந்த நீரில் குளிக்க வேண்டும். வடிகட்டின மூலிகை இலைகளை ஒரு வாரத்திற்குப் பயன் படுத்தலாம்.
இப்படி பதினைந்து நாட்கள் குளித்தால் எல்லா வலிகளும் உங்களை விட்டுப் பறந்து விடும். நல்ல தூக்கம் வரும். தலைவலி, சைனஸ், மூச்சுத் திணறல், சளிப் பிரச்சினை போன்றவை அனைத்தும் குணமாகும்.
அனைவரும் நலமுடன் இருக்க தன்வந்திரி பகவான் அருள்வாராக!
விளக்கு
ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத்தீ இட்ட விளக்கு!
விளக்கின் திரியின் நெருப்பின் நுனியில்
கலங்கித் திரிந்து தவிக்கும் மனது !
ஆண்டவன் உள்ளத்தின் மன விளக்கு!
சூரியன் உலகுக்கு முதல் விளக்கு!
மனைவி இல்லத்தின் குல விளக்கு!
வசந்தம் பொங்கிடும் சர விளக்கு!
கவலையைப் போக்கிடும் விடி விளக்கு!
கார்த்திகை நாளில் அகல் விளக்கு!
மங்களம் தந்திடும் குத்து விளக்கு!
பாடம் படிக்கையில் மின் விளக்கு!
பள்ளிக்குத் தேவையோ சிறு விளக்கு!
மிட்டாய்க் கடைகளில் பளீர் விளக்கு!
தன்னை உருக்கிடும் மெழுகு விளக்கு!
தாமதத் தொழிலாம் குழல் விளக்கு!
திசையைக் காட்டிடும் கலங்கரை விளக்கு!
வீதி ஓரங்களில் மஞ்சள் விளக்கு!
வெறியைத் துப்பிடும் சிவப்பு விளக்கு!
காற்றில் அணையா லாந்தர் விளக்கு!
அமுக்கினால் ஒளி தரும் டார்ச் விளக்கு!
மிதிக்க எரிந்திடும் சைக்கிள் விளக்கு!
சீமண்ணையில் எரிந்திடும் சிம்னி விளக்கு!
வீர விளையாட்டில் தீப விளக்கு!
சபரி மலையில் மகர விளக்கு!
கம்ப்யூட்டர் காதல்
கம்ப்யூட்டர் காதல்
காதல் என்பது சாப்ட்வேர்
காமம் என்பது ஹார்ட்வேர்
இரண்டும் சேர்ந்து படைத்த ப்ரோக்ராம்
குழந்தை என்பது அதன் பேர்
மடியில் தவழும் லேப்டாப்பாக
மாறிட எனக்கு வரம் தா
வளைவுகள் என்னும் கீ போர்டில்
வருடிட எனக்கு கரம் தா!
ஆடைகள் என்ற விண்டோசை
மெல்லத் திறந்திடு சீசேம் !
ஓப்பன் கோர்ஸ் ஒஎஸ்சை
முழுதாய் திறந்தால் பப்பி ஷேம்!
மேனி முழு தும் அம்பாய் மாறி
தேடுவது உந்தன் மவுசா!
கிளிக் கிளிக் என்று அமுக்கி என்னை
உசுப்புவது உந்தன் ரவுசா!
கருப்புச் சேலை திரையில்
கலர் கலராக வருவாயா
கண்ணை அடித்து வெப் கேமில்
என்னைப் படமாகப் பிடிப்பாயா
எந்தன் காதல் வரிகளை
மைக்கில் கேட்டு வந்தாயா
உந்தன் மோக முனகலை
ஸ்பீக்கர் போட்டு காட்டாதே
உணர்வுகள் என்னும் வெப் சைட்டில்
உறவுகள் கொண்டோம் இன்டர்நெட்டில்
நமக்குள் இருக்கும் ரகசியம் காக்க
பாஸ்வேர்ட் அதற்குத் தேவையில்லை
நீலக் கண்ணால் பார்க்கும் போது
ப்ளூடூத் ப்ளுரே தெரிகிறதே
மேடம் உந்தன் மோடத்தில்
காதல் பாடம் படித்தேனே
வைப் இல்லாவிட்டால் பரவாயில்லை
வை-பை இருந்தால் போதும் எனக்கு
வாடி என்றும் அருகில் அழைத்து
டிவிடியை சுழல வைத்தேன்
பென் டிரைவ் ஒன்றை சொருகிக் கொள்
டேட்டா பேஸூம் திறந்து கொள்ளும்
உடம்பின் சூட்டை குறைத்திடவே
கூலிங்க் பேடாய் நான் வரவா
காதல் என்ற சமூக வலையில்
உதடு தான் பேஸ்புக் வலைப் பதிவா
முத்தமிட்டு நான் போனால்
சத்தமில்லாமல் லைக் போடு
டேப்லெட் உன்னிடம் இருக்கும் வரை
நேரடிக் காதலில் தவறில்லை
பேட்டரி நன்றாய் இருக்கும் வரை
டிஸ்சார்ஜ் பற்றிக் கவலையில்லை
மெமரி சரியாய் இருக்கும் வரை
வைரஸ் கவலை தேவையில்லை
தேதிகள் கொஞ்சம் தவறிப் போனால்
ஆன்டி வைரஸ் போட்டுக்கொள்
ஹார்ட் டிஸ்க் சரியாய் இருக்கும் வரையில்
பேக்கப் பற்றி பயமில்லை
பிளக் அண்ட் பிளே வந்தபிறகு
குஷிக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை
காதல் டிஜிட்டலாய் மாறும் போது
மொழிகள் அதற்குத் தேவையில்லை
விண்டோஸ் மூடிச் செய்தால் காதல்
திறந்த வெளியில் செய்தால் காமம்
உடம்பின் வளைவுகளைத் தெரிந்துகொள்ள
ஸ்கேனர் எனக்குத் தேவையில்லை
காதல் பயணம் செய்யும் போது
டிரைவர் எதுவும் தேவையில்லை
யாரும் நம்மை பார்த்து விட்டால்
கண்ட்ரோல் ஆல்ட் டெல் போட்டிடுவோம்
நிறுத்து நிறுத்து என்றாலும்
ஸ்டார்ட் பட்டனைத் தான் அமுக்க வேணும்
எல்லாம் நன்றாய் முடிந்த பின்னர்
ஸ்லீப் மோடுக்கு போயிடுவோம்
சாதனைப் பட்டியலைப் பார்த்த பின்னர்
ரீ- ஸ்டார்ட் மீண்டும் செய்திடுவோம்!
மீனங்காடி (தொடர்)
மீனங்காடி
மேரி அவளது மூன்று வருட வேலையில் முதல்தர மேனேஜர் என்று பெயர் வாங்கியிருந்தாள்.
ஆபீஸுக்குசீக்கிரம் வந்து லேட்டாக வீடு திரும்பும் வர்க்கம் அவள் இல்லை என்றாலும் அவளது மேஜையில் பேப்பர் எப்பொழுதும் தங்கியிருக்காது. அவள் வேலையை அவ்வளவு அக்கறையுடன் செய்வதில் சிறிய சிறிய சிக்கல்களும் இருந்தன. மற்றவர்கள் தங்கள் வேலையையும் அவளிடம் தள்ளி விடத் துவங்கினர். மேரி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று சொல்லியே தங்கள் வேலையை அவளை விட்டு செய்யச் சொல்லுபவர் பலர்.
மேரி மிகவும் பொறுப்புடன் வேலை செய்கிறவள். மற்றவர்கள் சொல்லும் யோசனைகளை அக்கறையுடன் கேட்பாள். அதனால் எல்லோரும் அவளை எப்போதும் மதிப்போடுதான் பேசுவார்கள். “ மேரி என் குழந்தைக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை ! நீ என் வேலையைக் கொஞ்சம் கவனிச்சுக்கிறியா?” என்று யார் கேட்டாலும், “கவலைப்படாதே ! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்வதுதான் மேரியின் பதிலாக இருக்கும். அவள் பார்த்த வர்த்தகப் பிரிவு மிகவும் சௌகரியமாக இருந்தது. அவளும் டென்ஷன் ஏற்றிக் கொள்ளாமல் மற்றவர்களையும் டென்ஷன் படுத்தாமல் அழகாக நிர்வாகம் செய்து வந்தாள். கூட வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் மேரியையும் அவளது டீம் பற்றியும் பெருமையாகவே பேசுவார்கள்.
இதற்கு நேர்மாறாக ‘வரவு செலவு டிபார்ட்மெண்ட்’ ஒன்று மூன்றாம் மாடியில் இருந்தது. அந்த மோசமான டிபார்ட்மெண்ட் நிதிக் கம்பெனியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருத்தவே முடியாத, தண்டமான, மோசமான, சொன்னால் கேட்காத – இன்னும் அலுவலக அகராதியில் என்னென்ன கெட்ட வார்த்தையில் திட்ட முடியுமோ அத்தனையையும் தாங்கிக் கொண்டிருப்பது அந்த ‘டிபார்ட்மெண்ட்’. ‘ குப்பைதொட்டி’ ‘சாவு கிராக்கி’ என்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் கூட அதற்கு உண்டு. இதிலே என்ன கொடுமை என்றால் நிதிக் கம்பெனியின் மற்ற எல்லா டிபார்ட்மெண்ட்களும்இத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. ‘வரவு செலவு’ எல்லோருக்கும் பொது. ஆனால் அதில் இருக்கிற சாவு கிராக்கிகளுடன் பேச எல்லோருக்கும் கொஞ்சம் பயம் தான்.
இன்றைக்கு அந்த ‘குப்பைத் தொட்டியில்’ என்ன நடந்தது தெரியுமா?’ அங்கே நடக்கிற சண்டை, அடிதடி, வாக்குவாதம் பற்றி இப்படித்தான் மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள். அங்கே ஏதாவது வேலையாகப் போன அத்தனை பேரும் “ இது என்ன இழவு டிபார்ட்மெண்டோ” என்று அலுத்துக் கொண்டு தான் போவார்கள். மேரியின் கூட வேலை செய்கிறவன் ஒரு நாளைக்குச் சொன்னான்“ மேரி இந்த வருடம் நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது தெரியுமா? நம்ம மூணாம் மாடி சாவு கிராக்கி டிபார்ட்மெண்டில் உயிருள்ள ஒருவரைக் கண்டு பிடிப்பவர்க்குத் தானாம்”. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் மேரி !
சில வாரங்களுக்கு முன்பு மேரிக்கு பதவி உயர்வு வந்தது. அவள் பயந்தபடியே அவளை அந்த மூன்றாம் மாடி ‘வரவு செலவு’ டிபார்ட்மெண்டுக்கு பொறுப்பாளியாகப் போட்டார்கள். உயர் அதிகாரிகளுக்கு மேரியைப் பற்றித் தெரியும். அவள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அவளுக்குத்தான் தயக்கமாக இருந்தது, இப்போது இருக்கும் வேலை மிகவும் சந்தோஷமான வேலை. சுறுசுறுப்பான திறமையான மக்கள் ! அதுமட்டுமல்ல ! ஜான் மறைவதற்கு முன்பே அந்த டிபார்ட்மெண்டில் இருந்து வந்தாள். எல்லோருக்கும் ஜானைப் பற்றி மேரியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவள் சொந்த வாழ்க்கையில் கஷ்டப் பட்ட போதெல்லாம் துணையாய் நின்றவர்கள் அவள் டீம் மக்கள் !.
ஜான் மறைவதற்கு முன்னால் மேரி எந்த அடாவடி வேலையையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால் இப்போது ‘மூணாம் மாடி மூணாம் பேஸ்து’ என்று சிலர் சொல்வதைக் காதாலேயே கேட்டாள். அதைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருந்தாள். ஜானின் கடைசிக் காலத்தில் ஆஸ்பத்திரி செலவிற்கு வாங்கின கடன் இன்னும் அடையவில்லை. மிகப் பெரிய தொகை அது. இல்லையென்றால் ‘ இந்த பதவி உயர்வும் வேண்டாம் ! அந்த மூணாம் மாடி வேலையும் வேண்டாம்” என்று உதறி விட்டுப் போயிருப்பாள். அவளுக்குப் பதவி உயர்வை விட அந்த வேலை, சம்பளம் எல்லாம் மிகவும் தேவையாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். இரண்டு வருடங்களில் மூன்று பேர் வந்து ஓடிப்போன டிபார்ட்மெண்ட் அது !.
(தொடரும்)
காதல் அல்ஜீப்ரா
காதல் அல்ஜீப்ரா
காதலன் X ம் காதலி Y ம் கட்டிக்கிச்சாம்
( X + Y) ஹோல் ஸ்கொயர் ஆயிடிச்சாம்
காதலன் காதலி ஸ்கொயராகி
அப்பா அம்மா ஆயிடிச்சாம்!
2XY குழந்தையும் பொறந்திடிச்சாம்
Xம் பறந்து போயிடுச்சாம்
Y மட்டும் அழுது பொலம்பிகிச்சாம்!
திருப்பாவை – எளிய நடையில்
திருப்பாவை பாடல்கள் முப்பதையும் எளிமைப் படுத்தி புத்தகமாக வெளியிட முயற்சி செய்து வருகிறேன் :
மாதிரிக்கு இதோ:
ஆண்டாள் எழுதிய அழகான திருப்பாவை வரிகள் :
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை (ப்) பாடேலோர் எம்பாவாய்
எளிய நடையில் அடியேன் எழுதிய வரிகள் :
அடியே இளங்கிளியே ! இன்னுமா உறங்குகிறாய்
சுடுசொல் சொல்லாதீர் எப்போதோ எழுந்து விட்டேன்
நாங்கள் நன்கறிவோம் வாய்ப்பேச்சுக் காரி நீ
நீங்களும் குறைச்சலில்லை ஏனிந்தக் கூச்சல் ?
துள்ளிவாடி பெண்ணே உனக்கென்ன குறைச்சல்
எல்லோரும் வந்தாச்சா எழுந்துவந்து எண்ணிக்கொள்
கொடியாரைக் கொன்று படியாரை வென்ற
நெடியோன் கண்ணனைப் பாடவா பாவையே !!