Monthly Archives: December 2015
உங்கள் பார்வைக்கு
இந்தக் குவிகம் இதழ் உங்களுக்குத் தாமதமாகக் கிடைப்பதற்கு மன்னிக்கவும். வழக்கமாக 15 ந்தேதி வரும் குவிகம் (பெரும் பத்திரிக்கைகள் சொல்வதைப் போல) சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வந்திருக்கிறது.
தேவையானால் சென்னை மழையைக் காரணம் காட்ட முடியும்.
குவிகம் இப்பொழுது முதல் அதற்கே உரிய அமைப்புடன் kuvikam.com இல் வெளிவந்திருப்பது ஒரு பெருமை கலந்த செய்தி. இதனால் tumblr அமைப்பிற்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இது wordpress மூலம் வெளிவருவதால் இன்னும் அதிக சிறப்பம்சங்களுடன் வரும் என்பது உறுதியாகிறது.
உங்கள் நண்பர்கள் குவிகத்தில் எழுத விரும்பினால் ssrajan_bob@yahoo.com இல் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.
தலையங்கம் – சென்னையின் கண்ணீர்க் கதை
நவம்பர் 20. டிசம்பர் 1 – இரு தேதிகளையும் தமிழகம் , குறிப்பாகச் சென்னை மறக்க முடியாது. சென்னைத் தாயின் இரு விழிகளிலிருந்தும் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தினங்கள்!
மேகம் வெடித்தது போல் – வானமே பொத்துக்கொண்டு விழுந்தது போல் பெய்த மழை மக்களை அரட்டிவிட்டது- பிரட்டிப் போட்டது – மழையும் வெள்ளமும் தான் சென்னையின் மிகப்பெரிய தாதா என்பதை இந்த மழை நிரூபித்து விட்டது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்துத் தர மக்களையும் உலுக்கி எடுத்துவிட்டது.
குளங்கள் வழிந்தன – ஏரிகள் உடைந்தன – ஆறுகள் கரை புரண்டன – அணைகள் பொங்கின – தொடர் மழை – வீட்டுக்குள் சாக்கடையும் குடிநீரும் சேர்ந்து ஓடும் அவல நிலை – சாலைகளில் ஆறுகள் – வீடுகளில் குளங்கள் – உடமைகள் எல்லாம் பாழ் – வாகனங்கள் நீரில் மூழ்கின – விலைமதிப்பில்லா உயிர்களும் மடிந்தன. மீடியாக்களூம் பத்திரிகைகளும் பேஸ்புக்குக்களும் வாட்ச் அப்புக்களும் கோரக் காட்சிகளைப் படம் பிடித்துப் போட்டு அந்த சூட்டில் குளிர் காயும்.
ஒரே பாரட்டத்தக்க அம்சம் தனிமனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் ,மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்த பெருமை. அவரது கால்களில் நம் சிரம் பதியும்.
கட்சி டிவிக்கள் இதை சாக்காக வைத்துக் கொண்டு மற்றவர் மீது சேற்றை வாரி இ்றைக்கும். அரசாங்கமும் சட்டசபையில் நட்சத்திர விடுதிகளில் மக்களின் புனர் வாழ்வைப் பற்றி விவாதிக்கும். நாமும் ‘லட்சுமி வந்தாச்சு’ மானாட மயிலாட என்று சீரியலுக்குள் தலையை விட்டுக் கொண்டு விடுவோம்.
வெள்ளம் கற்றுக்கொடுத்த பாடத்தை மறக்கலாமா?
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
சரித்திரம் பேசுகிறது (யாரோ)
நதிகள் மனிதனது ஆதிக்கத்துக்கும் , வாழ்வின் மேம்பாட்டுக்கும் வித்தானவை.கால வெள்ளமும் நதி வெள்ளமும் பற்பல நாகரிகத்தை நகரங்களை விளைவித்து , பராமரித்து , அழித்து வந்துள்ளது. சிந்து நதிக்கரையில் கி மு 3000க்கு முன் ஒரு மாபெரும் நாகரிகம் தழைத்து வந்திருக்கிறது. அவற்றுள்
முக்கியமான இரு நகரங்கள் மொகஞ்சாதரோ , ஹாரப்பா.
சென்ற நூற்றாண்டில் தான் இந்த இரு நகரங்களையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் அகழ்ந்து எடுத்தார்கள். அதை ஆராய்ந்த சரித்திர ஆசிரியர் ஒருவர் இந்த நகரங்களின் மேன்மையையும் சிறப்பையும் கண்டு, இவை மிகப் பழைய கால நகரமாக இருக்க முடியாது , மிஞ்சிப் போனால் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்திய நகரங்களாகத் தான் இருக்க முடியும் என்று தவறாகக் கணித்தாராம். அவ்வளவு சீரும் சிறப்பையையும் கொண்ட நகர வாழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும் என்று அவரால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
ஆனால் உண்மை தெரியவந்ததும் , அனைவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றனர். அப்படிப்பட்ட நேர்த்தியான திட்டமிட்ட நகரங்கள் இவை. நேரான அகலமான சாலைகள் அமைத்து பருத்த சுவர்கள் கொண்டு காக்கப்பட்ட நகரங்கள் – பலம் பொருந்திய சுட்ட செங்கல் வீடுகள் – மூன்று மாடிக் கட்டிடங்கள் – கழிவு நீர் இணைப்புகளுடன் குளியலறை -கழிப்பறை அமைக்கப்பட்ட வீடுகள். பாசனத்திற்கென்று கால்வாய்கள் . கோதுமை பார்லி போன்ற பயிர் வளர்த்தல், ஆடு மாடுகள் வளர்த்தல் – இசைக்கருவிகள், பொம்மைகள், விளையாட்டுக் கருவிகள், பானைகள் அனைத்தும் உபயோகத்தில் இருந்தன. மக்கள் சுத்தம் காத்தனர் என்பதற்கு உதாரணமாக சீப்பு , மருந்து எல்லாம் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல் வைத்தியர் இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் துளைக்கப்பட்ட பற்களுடன் கூடிய மனித எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின்றன.
இந்த நகரங்களில் வசித்தவர்கள் வெளிநாட்டினருடன் வாணிகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக மெசபட்டோமியாவின் நகைகள், நாணயங்கள் இங்கே கிடைத்திருக்கின்றன. ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நகரங்களில் வசித்து வந்திருக்கவேண்டும் என்பதும் நிரூபணமாயிருக்கிறது.
இவை அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்தது என்றால் ஆச்சரியம் இருக்காதா என்ன?
சிறப்பின் செழிப்பாக இருந்த இந்த நகரங்கள் கிமு 1500 -1700 இல் மறைந்து விட்டன என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்கின்றனர். என்ன ஆயிற்று இந்த நகரங்களுக்கு ? இயற்கையின் பேரழிவோ? பஞ்சம் தாக்கியதோ ? நில நடுக்கமோ? வெளிநாட்டுப் படையெடுப்போ? அல்லது காடுகளை அழித்து, நில வளத்தைக் குலைத்து சுற்றுப்புறச் சூழ்நிலை அழிக்கப்பட்டதால் நகரமே அழிந்து பட்டனவா? தொடர் சங்கிலி போல் ஏன் இந்த நகரங்கள் நிலை பெற்று நிற்கவில்லை? இதற்கான விடை கிடைக்கவில்லை.
ஒரு அழகான கனவைப் போல் சிந்து சமவெளி நாகரிகம் அப்படியே மறைந்து போயிற்று. உலகின் பழமையான நாகரிகம் தனது பெருமையைக் கோடிட்டுக் காட்டிவிட்டு அப்படியே காணாமற் போயிற்று.
இந்திய சரித்திரத்தின் முதல் ஏடு இது.
இனி அடுத்த ஏட்டைப் புரட்டுவோம்!!
சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஒரு வீடியோ ஆவணத்தைப் பாருங்கள் !
குறும்படம் – தமிழ் இனி மெல்லச் சாகும்
தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற தலைப்பில் எடுக்கப் பட்ட குறும்படம்.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எப்படித் தமிழை மறந்து வாழுகின்றனர் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இது குறும்படம் மட்டும் அல்ல. பெரும் பாடம்.
இலக்கிய வாசல் – 9 வது நிகழ்வு
இது சங்கீத சீசன் . மழை சங்கீதத்தைக் கொஞ்சம் கெடுத்துவிட்டாலும் , நிறைய பாடகர்கள் பாடமாட்டேன் என்று சொன்னாலும், மற்ற உயர் மட்டப் பாடகர்கள் பாடுவதற்குத் தயாராய் இருக்கின்றனர். பாடுபவர் பாடட்டும் ; வேண்டாதவர் பாடாமலிருக்கட்டும்.
இலக்கியக் கூட்டங்கள் சாதாரணாமாகவே கொஞ்சம் பின்னிருக்கையில் உட்காரும் நேரம் இப்போது. ( காரணம் : டிசம்பர் சீசன் ) குவிகம் இலக்கியவாசலின் அடுத்த நிகழ்வு வருகிற 19 ந்தேதி சனிக்கிழமை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற உள்ளது.
திரு அழகிய சிங்கர் அவர்களின் புத்தகமான “நேர் பக்கம்” அன்றைக்கு அறிமுகமாகிறது.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் அழகியசிங்கரின் – ஏன் தமிழகத்தில் அனைவருடைய மதிப்பிற்கும் போற்றுதல்களுக்கும் உரிய உயர்திரு அசோகமித்திரன் அவர்கள் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்கிறார். புத்தகத்தைப் பற்றியும் மற்றும் இலக்கியங்கள் பற்றியும் பேசுவார். .
நிச்சயம் குவிகம் இலக்கிய வாசலுக்கு இது ஒரு பொன்னாள்.
மேலும் சில இலக்கிய விமர்சகர்கள் அழகியசிங்கரின் நூலை அறிமுகப்படுத்திப் பேசுவார்கள்.
வழக்கம்போல சிறுகதை மற்றும் கவிதை மணித்துளிகளும் உண்டு!
அனைவரும் வாருங்கள் !!!
சில்லு – நாடக விமர்சனம்
2065 இல் நடப்பதாக ஒரு கதையை 1965 பாணியில் எடுத்தால் எப்படியிருக்கும் என்பதற்கு சில்லு ஒரு நல்ல உதாரணம்.
இதன் கதையைப் பார்ப்போம் :
2065 இல் ஒரு தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கிறது. அந்த சமயத்தில் தான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘சில்லு’ பொருத்தப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பு. இது மக்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான ஏற்பாடு. அந்தத் தம்பதியரின் ஆண் குழந்தையான சான்டா என்கிற சந்தானகிருஷ்ணனுக்கு தவறுதலாகப் பெண் குழந்தை என்று சில்லுவில் பதித்துவிட தொடர்கிறது நகைச்சுவையான சீரியஸ் விவாதம்.. சில்லு பதிப்பது மனிதருக்குச் செய்யும் துரோகம் என்று ஒரு குழு அதை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது .
சான்டா காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்யும் போது அவனது உடலில் பொருத்தப்பட்ட சில்லில் பக் இருப்பதினால் திருமண தேதியன்றே உயிர் இழப்பான் என்ற உண்மை தெரியவருகிறது. செய்தியைக் கேட்டுத் துடிதுடிக்கிறான் சான்டா !.
சான்டா பிறந்தது முதல் அவன் வளர்ந்து இளைஞனாகும் வரை அவனுடைய பெற்றோர்களை விட அதிக பாசத்துடன் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருப்பது அடிப்பொடி என்ற ,மனித இயந்திரம். அடிப்பொடியின் மனத்தில் இருக்கும் பாசம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதிக் காட்சியில் தான் வளர்த்த ஒரு மனிதக் குழந்தைக்காக அடிப்பொடி செய்யும் தியாகம் மகத்தானது. மனிதரில் கூட யாரும் செய்ய முன்வராதது.
கடைசியில் சான்டாவும் சில்லுக்கு எதிரான போராட்டத்தில் இணைகிறான்.
கதையில் ஓட்டை என்று தனியாக இல்லை. கதையே ஓட்டை தான். மனித இயந்திரத்தைப் பெருமைப் படுத்துகிறார்கள். சில்லுவை எதிர்க்கிறார்கள். முரண்பாடு தூக்கலாக நிற்கிறது.
சில்லு என்று ஒரு வார்த்தை இல்லையென்றால் ராஜா – ராணி உண்மையான சேவகன் கொடுங்கோலுக்கு எதிரான போராட்டம் . என்று 40 களில் வந்த ராஜா ராணி – பட வரிசையில் சேர்ந்திருக்கும்.
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் முருகன் சார்!
வாட்ஸ் அப் புரளி (எஸ் எஸ் )
நாகமணிக்கு வதந்திகளைப் பரப்புவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. ஸ்கூல் படிக்கும் போது ‘கணக்கு வாத்தியார் , பங்கஜத்தைக் கணக்குப் பண்ணுகிறார்’ என்று ராத்திரியில காம்பவுண்ட் சுவற்றில் எழுதுவான். கொஞ்சம் நல்லா எழுத ஆரம்பித்த பின், நிறைய பேருக்கு ‘உண்மை விளம்பி’ என்ற பெயரில் எழுதுவான். இப்போ வாட்ஸ் அப் வந்தபிறகு அவன் தினம் ஒரு வதந்தியாவது அனுப்புவது என்பதைத் தன் கொள்கையாகவே வைத்திருக்கிறான்.
- ஒபாமா தீபாவளிக்காக அமெரிக்காவிற்கே விடுமுறை அளித்துவிட்டார்
- மோடி ஐந்து வருஷத்தில உலகநாடுகள் அத்தனையும் பார்த்து உலக சாதனை பண்ணப்போவதாக சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார்
- எந்திரன்-2 இல் ஜாக்கி சான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
- சென்னைக்கு 249 சென்டிமீட்டர் மழை கிறிஸ்துமஸ் அன்று பெய்யும் என்று ஐஎம்எஃப் அறிக்கை விட்டிருக்கிறது
- நயாகரா படத்தைப் போட்டுவிட்டு செம்பரம்பாக்கம் வழிகிறது என்ற தலைப்பு
இதெல்லாம் அண்ணன் நாகமணியின் கைங்கரியமே ! இதுக்காக அவன் ஓட்டலில் ரூம் போட்டும் யோசிப்பது உண்டு !
அப்படிப்பட்ட நாகமணிக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது. அவனுடைய தந்தை சிகாமணியின் படத்தைப் போட்டுவிட்டு ” மேற்கண்ட நபர் துரைசாமி சப்வேயில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்துகொண்டிருக்கிறது.” என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது தான் அவனும் அந்த சப்வே வழியாக வந்திருந்தான். அங்கே ஒரே அமளியாக இருந்தது. போலீஸ் எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். இவனும் தண்ணீரில் இறங்கி என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆட்டோவில் வந்த நிறைய பேர் தண்ணீரில் அடித்துச் சென்றிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களைக் காப்பாற்றக் கூட முயலாமல் இவனும் மற்றவர்கள் போல போட்டோவும் வீடியோவும் எடுத்து விட்டு வந்தான். அவனுடைய வதந்தி மில்லுக்கு உபயோகமாயிருக்குமே என்று.
ஒரு வழியாக வெளியே வந்து அவன் வேலை செய்யும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். அப்போது தான் அந்த வாட்ஸ் அப் வந்தது.
துடிதுடித்துப் போய் ஆஸ்பத்திரி முழுதும் தன் அப்பாவைத் தேடினான். எல்லாரிடமும் விசாரித்தான். கடைசியில் மார்ச்சுவரியிலும் தேடினான் . அந்த மாதிரி யாரும் வரவில்லை என்று உறுதி கூறினார்கள்.
அப்போது “நாகமணி ” என்று குரல் கேட்டது. அவனது அம்மா தான். ” நாகமணி நீ நல்லா இருக்கியா? நானும் உங்கப்பாவும் வந்த ஷேர் ஆட்டோ துரைசாமி சப்வே கிட்டே வரும் போது நீ அங்கே சப்வேயில் மாட்டிக்கிட்டிருப்பதாக வாட்ஸ் அப் செய்தி வந்தது. நானும் உங்க அப்பாவும் இறங்கி உன்னை தேடிக்கிட்டிருந்தோம். ரெண்டு பேரும் தண்ணியில மாட்டிக்கிட்டோம். நான் மயங்கி விழுந்ததும் என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க அவர் என்ன ஆனாரோ தெரியல. ” என்று கதறி அழுதாள்.
சற்று நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது. அதில் நாகமணியின் அப்பா சிகாமணி பத்திரமாக வந்தார் – அவர் தன் மனைவியயும் மகனையும் தேடி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு ஒன்றும் ஆயிருக்கவில்லை.
சப்வேயில் போட்டோ எடுத்தவர்கள் தன்னைப் பற்றியும், தன் தந்தையைப் பற்றியும் வதந்தி பரப்பியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான்.
இனி வதந்திகளைப் பரப்புவதில்லை என்று நாகமணி உறுதி எடுத்துக் கொண்டான்.
வான் சிறப்பு (?) — சுந்தர்
குப்பையும் செத்தையும் நீக்காச் சென்னையில்
அப்பித் தீர்த்த மழை
ஏரியில் வீட்டைக் கட்டிய சென்னைக்கு
பேரிடர் தந்த மழை
பிளாஸ்டிக் மயமான சென்னைத் தெருக்களில்
எலாஸ்டிக் ஆன மழை
தாழ்வு இடங்களில் தங்கிடும் மக்களின்
வாழ்வு பறித்த மழை
தூர்வாரா குட்டைகள் உள்ள சென்னையில்
சேறு பரப்பிய மழை
சாக்கடை சரியாய் அமைக்காச் சென்னையில்
சீக்காய் வந்த மழை.
போக்கிடம் இல்லா தண்ணீர் சென்னையை
சாக்கடை ஆக்கிய மழை
வானம் பொடித்துக் கொட்டி சென்னையின்
மானம் பறித்த மழை
பட்டாலும் புத்தியில்லா சென்னை மக்களை
முட்டா ளாக்கிய மழை
துருப்பிடித்த அரசு எந்திரங்கள் எல்லாம்
கருவருக்கச் செய்த மழை
இலக்கிய வாசல் 8 ஆம் நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் எட்டாம் நிகழ்வு நவம்பர் 21ந் தேதி திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.
திருமதி ஸ்ரீஜா வெங்கடேசன் அவர்கள் தான் இயற்றிய பாண்டிய காப்பியம் என்ற புத்தகத்தைப் பற்றியும், சரித்திர நவீனங்களைப் பற்றிப் பொதுவாகவும் பேசினார்.
விஜயலட்சுமி அவர்கள் குவிகம் இலக்கியவாசலின் எட்டு மாத நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டினார்.
நிகழ்ச்சிக்கு முன் வழக்கம் போல ஒரு கவிதை மற்றும் ஒரு கதை வாசிக்கப்பட்டன.
கதை : கீதா அவர்கள்
கவிதை : சாந்தி அவர்கள்
கிருபானந்தன் சரித்திர நவீனங்களில் இழையும் சரித்திரப் பின்னணியைப் பற்றியும் , மற்ற எழுத்தாளர்களிலிருந்து ஸ்ரீஜா அவர்கள் எவ்விதம் வேறுபட்டிருக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டினார்.
இதன் ஒலி வடிவத்தை இலக்கியவாசல் பிளாக்கில் கேட்கலாம்.
குறும்படம் – நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி என்ற நளன் அவர்களுடைய குறும்படம். சும்மா சொல்லக் கூடாது உங்கள் நெஞ்சில் அது ஒட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
படைப்பாளி – சா. கந்தசாமி (எஸ் கே என் )
மயிலாடுதுறையைச் சேர்ந்த, சென்னையில் வசிக்கும் இவரது முதல் நாவல் ‘சாயாவனம்‘. சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித இயல்புகள் இரண்டும் ஊடோடும் இந்த நாவல், நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாகத் தேசிய புத்தக அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டது.
பாலிய நண்பர்களைத் தேடிச் சந்திக்கும் ஒருவரின் அனுபவங்களும், பழைய நினைவுகளும் கொண்ட மிகச் சிறந்த படைப்பான ‘தொலைந்து போனவர்கள்’ , தொலைக்காட்சியில் , மிகவும் பாராட்டப்பட்ட டெலி பிலிமாக வந்தது.
‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக 1988 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணிகளும், தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய இவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ‘காவல் தெய்வங்கள்’ என்னும் ஆவணப்படமும் குறிப்பிடத்தக்கன.
இவரது ‘பாண்டிச்சேரி’ என்னும் கதை இப்படிப் போகிறது
கப்பலில் வேலை செய்யும் மரைன் என்ஜினீயர் கோபால், வேறொரு கம்பனிக்கு வேலைக்குச் சேரும்முன், ஒருமாத இடைவெளியில் சொந்த ஊர் பாண்டிச்சேரிக்குக் காலையில் வந்திருக்கிறான். நண்பர்களைப் பார்க்கச் சென்ற அவனுக்காக அவனது அண்ணன் சுந்தரமும் தங்கை சரஸ்வதியும் காத்திருக்கிறார்கள். வயதாகி முடியாமல் வீட்டோடு இருக்கும் தந்தை மகனைப் பார்த்ததில் கொஞ்சம் தெம்பாகத் தென்படுகிறார்.
சுந்தரத்தை விட இரண்டு வயது சிறியவனான கோபால், படிக்கும்போதே கெட்டிக்காரன் என்று பெயரெடுத்தவன். விளையாட்டிலும் அவன் முதல். கடைசி வருடம் படிக்கும்போது அம்மாவிற்குத் தொண்டையில் கேன்சர் முற்றி அடையார் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்தான் சுந்தரம். கோபாலால் நான்கு நாட்கள் கழித்துதான் வர முடிந்தது. அவனது கையை அம்மா விடவே இல்லை.
அவனுக்கு அம்மா மீது பிரியமா? அம்மாவுக்குத்தான் அவன் மீது பிரியமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா அவன் கையைப் பிடித்தபடியே கண்ணை மூடினாள்.
நண்பர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த கோபாலும் சுந்தரமும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்படுகிறார்கள்.
“சின்ன அண்ணே, உனக்காக நண்டு குழம்பு ஸ்பெஷலா வச்சியிருக்கேன்” என்றாள் சரஸ்வதி.
“நாங்க சாப்பாட்டுக்கு வந்துடுவோம்” சுந்தரம்.
“நீ இப்படித்தான் சொல்லுவ. ஆன வர மாட்ட”
“இன்னிக்குப் பாரு.. கண்டிப்பா வந்து நண்டு கறி சாப்பிடுவோம்”
“நாளைக்குப் போனா என்ன அண்ணே”
சுந்தரம் சரஸ்வதியின் கையைப் பிடித்துகொண்டு ” இதோ.. பாரு சரசு.. உங்க சின்ன அண்ணன் இன்னைக்குத்தான் ஊர்ல இருந்து வந்து இருக்கார். அதுக்காக ஒரு சின்ன பார்ட்டி..” என்றான்
“நீ பார்ட்டின்னு போனா ரெண்டு மணிக்குத்தான் வருவே” என்ற சரஸ்வதி, இவன் கையைப் பிடித்துக்கொண்டு, “சின்ன அண்ணே.. நீ சீக்கிரமா வந்துடனும்.. பத்து மணி ஆயிட்டா நான் படுத்துத் தூங்கிடுவேன். அப்பறம் கதவைத் திறக்க மாட்டேன்” என்றாள்.
“நாங்க ஒன்பது மணிக்கே வந்துடுவோம், சரசு” என்றான் சுந்தரம்.
“நீ ஒண்ணும் சொல்லாதே”
“சரசு, ஒன்பதரைக் கெல்லாம்நான் வந்து உன் பக்கத்துல நிக்கறேன்”
“இது போதும்” சரஸ்வதி ஒரு சிரிப்பு சிரித்தாள்.
தங்கை காத்துக்கொண்டிருப்பாள். சீக்கிரமாய் வந்து விடவேண்டும் என்ற முடிவோடு புறப்படுகிறார்கள்.
பாண்டிச்சேரி பீச்சைப் பார்த்து இரண்டு வருஷம் ஆகிவிட்டது என்று முதலில் கடற்கரைக்கு அழைத்துப்போகிறான் கோபால். அவன் பாண்டிச்சேரி கடற்கரையைப் பற்றி அறுபது கவிதை எழுதி உள்ளதாகவும், பஸிஃபிக் சமுத்திரத்தில் கப்பல் போய்க்கொண்டிருக்கையில் மேல்தளத்தில் அமர்ந்து வெறி பிடித்தது போல் எழுதியதாகவும் சரியாக வந்திருப்பதாகத் தோன்றுவதாகவும் சொல்கிறான்.
அண்ணனுக்குச் சந்தேகம், பிரெஞ்சிலா, தமிழிலா என்று. தமிழ் என்று அறிந்து “நிஜமாவா” என்று கேட்கிறான். ஹாலந்தில் ஒரு இலங்கைத் தமிழரிடம் காண்பித்த போது, புத்தகமாகப் போடலாம் என்றாராம். கானடாவில் ஒரு தமிழர், கவிதை என்பதே அறிவிற்கு எதிர் என்றாராம்.
சரசு காத்துக்கொண்டிருப்பாள் என்பதால் மீண்டும் சீக்கிரம் வீடு திரும்பும் தீர்மானத்தோடு தாய்லாந்து பார் செல்கிறார்கள். தென்னந்தோப்பில் கொரியன் புல் வளர்த்து, வண்ணக்குடைகள் கீழ் மேஜை நாற்காலிகளைப் போட்டு இருந்தார்கள். அரவிந்த், நாராயணன் ஆகியோர் இவர்களுக்காக அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். கோபால் கவிதை எழுதுவது அரவிந்திற்கு ஆச்சரியம். பாண்டிச்சேரி மண்ணுக்கே கவிதை ராசி உண்டு. அரவிந்தர், பாரதி, பாரதிதாசன் என்று நிறையப்பேர் பாண்டிச்சேரியில் இருந்துதான் கவிதை எழுதியிருக்கிறார்கள் என்கிறான்.
விஸ்கி ஆர்டர் செய்யப்படுகிறது
கிளாஸ் கிளாஸாக விஸ்கி ஆரம்பித்தது. அப்புறம் சிக்கன், டபுள் ஆம்லெட்.. சிப்ஸ்…கோபால் மற்றவர்களைவிட வேகமாகத்தான் குடித்தான். ஆனால் குடிக்கக் குடிக்க அமைதியானான். மெதுவாக சுண்டுவிரலால் மேசையைத் தட்டி அடிக்கடி விசில் அடித்துக்கொண்டிருந்தான். சுந்தரம் மேசையத்தட்டிச் சப்தமாகப் பேச ஆரம்பித்துவிட்டான்.
சுந்தரம் கோபாலிடம் கவிதை புத்தகம் நான்தான் போடுவேன். என்ன செலவானாலும் பரவாயில்லை என்கிறான். அரவிந்த் அவன் கையைப்பிடித்து நாற்காலியில் உட்கார வைக்கிறான். அவன் கையைத் தட்டிவிட்டு “தம்பி, தமிழில் கவிதை எழுதியிருக்கு. அதைப் புத்தகமா போடப்போறேன்” என்கிறான்.
எட்டே முக்காலுக்கு, கோபால் மணியாகுது என்கிறான்.
“பார்க்கு வந்துட்டா நேரம், காலம் எல்லாம் பார்க்கக் கூடாது” என்கிறான் நாராயணன்.
கோபால் பாத்ரூம் போக எழுகிறான். பாருக்கு வெளியே தென்னந்தோப்பில் அளவிற்கு மீறி குடித்த ஒருவன் கோபால் மீது விழ, இவன் அவனைத் தள்ள, “என்னடா என் தம்பியை அடிக்கிற” என்று சுந்தரம் அவனைக் காலால் உதைக்கிறான். அவன் பெரிதாகக் கத்தியபடி கீழே விழுகிறான்.
அவர்களில் ஒருவன் மேசை மீதிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து மேடை மீது தட்டி உடைத்து முன்னே பாய்கிறான். அண்ணனைக் காப்பாற்ற குறுக்கில் பாயும் கோபாலின் அடி வயிற்றில் பாட்டில் குத்தி ரத்தம் பீறிட கீழே சாய்கிறான்.
ஒரு ஆள் பீர் பாட்டிலை தூக்கிக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தான். பார்வை ட்யூப் லைட் மீது நிலை கொண்டது. பாட்டிலை தூக்கி அடித்தான். ட்யூப் லைட் உடைந்து சிதற எங்கும் இருள் பரவியது.
அவர்கள் இருளில் ஓடி மறைந்தார்கள்.
மணி ஒன்பது அடித்தது. சரஸ்வதி வாசல் பக்கம் வந்து சாலையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
என்று கதை முடிகிறது.
எளிய அன்றாட மனிதர்களும் இயல்பான நிகழ்வுகளும் கொண்ட இவரது கதைகள் சொல்லப்படும் விதத்தால் நம் மனதில் நீங்காத இடத்தைப் பெறுகின்றன.
இணையத்தில் கிடைக்கும் இவரது இரு கதைகள்
தக்கையின் மீது நான்கு கண்கள் அவள்
குறும்படம் – ஜீரோ கிலோமீட்டர்
இந்தக் குறும்படம் தான் பின்னர் இன்று நேற்று நாளை என்று மாறு வடிவத்தில் திரைப்படமாக வந்துள்ளது.
பார்த்து மகிழுங்கள்!!
நன்றி : இதை எடுத்து யு டியூபில் வெளியிட்ட அன்பருக்கு!
சித்தர் கருவூரார்
இராசராச சோழனின் குரு கருவூர்த் தேவர் ஆவார். இவருக்கு மரியாதை செய்யும் பொருட்டுத் தஞ்சை பெரிய கோயிலின் இராச கோபுரத்திற்கு நேர் பின்புறம் கருவூர்த்தேவருக்குச் சிறிய கோயிலை எழுப்பியுள்ளார் இராசராச சோழன்
.
சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார். கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.
ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். போகர் உபதேசப்படி,கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.
கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.
சோழ மன்னன் இரணிய வர்மனுக்காகத் தில்லையில் நடராசப் பெருமானின் சிலையை வடித்தவர் இவரே என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும். மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்பதையும் கருவூரார் தெளிவித்தார்.
திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கிக் குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டுப் பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.
தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாபிசேகமும் செய்து வைத்தார்.
தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தர், அபரங்சி என்ற தாசிக்கு ஞான சாதனையில் அவளுக்கிருந்த ஆர்வத்தைப் பாராட்டி திருவரங்கனிடமிருந்தே ஒரு நவரத்ன மாலையை வாங்கி அதை அவளிடம் தந்தார். மன்னனும் மற்றவரும் அவளை நிந்திக்க அரங்கனே வந்து அசரீரியாகச் சொன்னதாகவும் ஒரு கதை நிலவுகிறது.
முடிவில் “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூவியழைத்துக் கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவி இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார், இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.
கருவூரார் செய்த நூல்கள்:
கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 30
கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்). – ஆகியவைகள் ஆகும்.
தியானச் செய்யுள்:
கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே !
வாரி வழங்கி அருள் கொடுத்தாய் !
மாறாத சித்துடையாய் !
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு !
T 20-20-20
கிரிக்கெட்டில் 20-20 மிகவும் பிரபலமல்லவா?
அதைப்போல உங்கள் வாழ்க்கையில் தினமும் செய்ய வேண்டிய பெரிய பிராஜக்ட் அல்லது பொழுது போக்கு அம்சம் அல்லது படிப்பது , எழுதுவது இப்படி எதையாவது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் செய்ய வேண்டி யிருந்தால் உபயோகப்படுத்துங்கள் டெக்னிக் 20 – 20 -20 .
இதற்குப் பெயர் “போமோடோரோ டெக்னிக்” என்று பெயர் .
உதாரணமாக நீங்கள் ஒரு பெரிய நாவல் எழுத் திட்டமிட்டிருக்கிறீர்கள். தினமும் ஒரு மணி நேரம் எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறீர்கள். வீட்டில் உங்களுக்கு ஒரு மணிநேரம் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
அது நிச்சயம் கிடைக்காது. உங்கள் மனைவியோ, குழந்தையோ உங்களுக்கு அதைக் கட்டாயம் தரப்போவதில்லை. நீங்களும் ஒரு மணி நேரம் வீட்டின் மற்ற வேலையிலிருந்து தப்பிக்கலாம் என்றால் அது நியாயமில்லை.
இதற்கு என்ன வழி?
உங்கள் தேவையை மூன்று பாகங்களாகப் பிரியுங்கள். ஒரு மணியை 20-20-20 நிமிடங்களாகப் பிரியுங்கள். உங்கள் இல்லத்தாரை காலையில் 20 நிமிடம் மதியம் 20 நிமிடம் இரவு 20 நிமிடம் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் தானே என்று அவர்கள் உங்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். நீங்களும் அவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வரும்.
அப்பறம் என்ன?
நீங்கள் மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுவது போல 20 நிமிடம் மிகுந்த கவனத்துடன் உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யுங்கள்!
இதற்குப் “போமோடோரோ டெக்னிக்” என்று பெயர். போமோடோரோ என்பது சாதாரண அடுப்படியில் உபயோகப் படுத்தப்படும் அலாரம் மணி.
அதை இருபது நிமிடத்துக்கு அலாரம் அடிக்க வைத்துவிட்டு உங்கள் வேலையைத் தொடங்குங்கள்!
நீங்கள் சாதனையாளராகலாம்!
ஷாலு மை வைஃப் – எஸ் எஸ்
ஷாலுவை நான் சந்திப்பதற்கு ஆஞ்சநேயர் உதவினார் என்று சொன்னேன் அல்லவா? அது எப்படித் தெரியுமா?
ஷாலுவை நான் இன்டர்வியூ செய்த பிறகு அவளை ரெகமென்ட் செய்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும்படி ரிபோர்ட்டை மிஸ் ஒ எம் ஆருக்கு அனுப்பினேன். இன்னும் சிலநாட்களில் அவள் எங்கள் கம்பெனியில் சேர்ந்து விடுவாள். அதற்கப்புறம் .. என் கற்பனை .ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.
அதற்கு அடுத்த இரண்டு நாளும் தேசிய விடுமுறை. மகாபலிபுரத்துக்கு நானும் எங்கள் காலிக் கும்பல் ஐந்து பேரும் போவதாக முடிவு செய்திருந்தோம். ராம்ஸ் கார் எடுத்துக்கிட்டு வருவது மகாபலிபுரம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்குவது. லைட் ஹவுஸ் வரைக்கும் சைக்கிளில் போவது. அங்கே கொஞ்சம் வர்ற போற மக்களை வேடிக்கை பார்ப்பது – மத்தியானம் லைட்டா பீர் அடிப்பது சாயங்காலம் இரவில் மறுபடியும் தண்ணி அடிப்பது காலையில் பத்து கிலோமீட்டர் ஜாகிங் – சாயங்காலம் கிளம்பி ஈ சி ஆர் வழியாக வரும்போது திருவிடந்தை கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவது.சென்னை ரூமிற்கு வருவது – இது தான் எங்கள் பிளான்.
பசங்கள் எவனுக்கும் நல்ல கேர்ள் பிரண்டோ லவ்வோ செட் ஆகமாட்டேங்குது. அர்ச்சனை செஞ்சுவிட்டு மாலையோட ஒன்பது முறை சுத்தி வந்தா கல்யாணமே நடத்தி வைக்கிற திருவிடந்தை பெருமாள் இந்த சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் நிவர்த்தி செய்ய மாட்டாரா என்ன? அது மட்டுமல்லாமல் இப்போல்லாம் பொண்ணுகளைவிட பசங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தான் அவனுகளுக்கும் அவனைப் பெற்ற அப்பா அம்மாக்களுக்கும் அதிகமா இருக்கு. அமெரிக்காவில வேலை பார்க்கிற பசங்களுக்குக் கல்யாணம் ஈசியா இருபத்திரண்டு வயதிலேயே செட் ஆகி விடுகிறது. நம்ம ஊர் பசங்களுக்கு முப்பத்திரண்டுக்கு மேலே தான் குருபலன் வருது. ஏதோ கேர்ல்பிரண்ட் கிடைக்குதோ பசங்க சமாளித்துக் கொண்டு காலம் கழிக்கிறாங்க. அது கிடைக்காத எங்க மாதிரி மனிதப் பிறவிகளுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் நரகம் தான்.
எங்க செட்டில குமாரசாமின்னு ஒருத்தன் இருக்கான். அவன் வயசைப் பத்திப் பேசினா அவனுக்குக் கோபம் வர்ற அளவுக்கு வயசு. கல்யாணம் இன்னும் தகையல . தலை ஏற்கனவே கொஞ்சம் ஏறிப்போய் ‘பால்ட்’ ஆகிவிட்டது. இப்ப எல்லாம் பெரும்பாலான இடங்களிலே பொண்ணு பார்க்கிறது என்கிற சம்பிரதாயம் கிடையாது. அதிர்ஷ்டம் செஞ்ச சிலருக்குத் தான் அந்த மாதிரி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கிடைக்கும்.
இப்போ முதல்லே மீட்டிங் பாயிண்ட் தான். பையனும் பொண்ணும் அவங்க அவங்க சொந்தக்காரர் (அப்பா அம்மா கண்டிப்பாகக் கூடாது) ரெண்டு மூணு பேரோட ஒரு ஸ்டார் ஹோட்டல் லாபியில் சந்திக்கிறது. அரைமணிநேரம் நிலக்கரி ஊழல் முதல் அம்மா உப்பு வரை பேசிட்டு அந்த ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போயிடணம். கல்யாணத்தப் பத்தியோ பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் பத்தியோ அந்த முதல் மீட்டிங் பாயின்ட்டில் பேசினா அடுத்த மீட்டிங் கிடையாது. செலவெல்லாம் பையனோடது தான். அடுத்த மீட்டிங் காரில் நடக்கும். பையன் காரை ஓட்டிக் கொண்டு போய் பொண்ணு வீட்டுக்குப் போய் அவளை அழைத்துக் கொண்டு எங்கேயாவது பீச்சுக்கோ கோவிலுக்கோ ( சாய்ஸ் பொண்ணோடது) போய்விட்டு வரணும். அப்பப்போ ரெண்டு பேரும் தொட்டுக்கலாம். கன்னத்தில் முத்தமிடலாம். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாக் காரியம் கெட்டுவிடும். பொண்ணு உணர்ச்சிவசப்பட்டாக் கூட பையன் அடக்கி வாசிக்கணும். தப்பித் தவறிக்கூட கல்யாணம் எப்போன்னு கேக்கப்படாது. கேட்டா பிரேக் ஆயிடும்.
மூன்றாவது , இரண்டு பேரும் ரெண்டு நாளைக்கு மகாபலிபுரம், ஏற்காடு ,ஊட்டி, அப்படி போய்ட்டு வரணும். ஹோட்டல்ல தங்கணும். அங்கே என்ன நடந்ததுன்னு யாரும் கேட்கக் கூடாது. டூர் போயிட்டு வந்த உடனே பொண்ணு அவ அப்பா அம்மா கிட்டே ஓகேன்னு சொல்லிட்டா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ரெடின்னு அர்த்தம். எப்போ வைச்சுக்கலாம் என்கிறதை பொண்ணும் பையனும் ஹோட்டல் ரூமில் முடிவு எடுத்திருப்பாங்க . அதுக்கு ஏத்த மாதிரி பெரியவங்களுக்கு ஆசையாயிருந்தா பஜ்ஜி சொஜ்ஜி பண்ணலாம். நிச்சயதார்த்தம் பண்ணலாம்.
இன்னொரு முக்கியமான தேவை என்னன்னா இந்த மூன்று பேஸ் நடக்கும் போது குறைந்தது ஆயிரம் மெஸ்ஸெஜ் இரண்டு பேருக்கும் இடையே நடந்திருக்கவேண்டும். பகலில் போனில் பேசக்கூடாது. ராத்திரி பன்னிரண்டு மணி சுமாருக்கு ஒருமணி நேரம் பேசணும். அவள் அவனை வாடா போடா என்று தான் கூப்பிடுவாள். அவன் தவறிக்கூட வாடி என்று சொல்லக்கூடாது.
இது தான் இந்தியன் டேட்டிங்.
இந்தக் குமாரசாமி ஃபர்ஸ்ட் பேஸில் பாஸ் செய்துவிடுவான். இரண்டாவது பேஸில் ஓலா கேப் எடுத்துகிட்டுப் போனதால ஃபெயில் ஆகிவிடுவான். ஏன்னா அவனுக்குக் கார் ஓட்டத் தெரியாது.
எனக்கு இந்த சமாசாரம் எல்லாம் சரிப்பட்டு வராது. நேற்றைக்கு இண்டர்வியூ விற்கு வந்த ஷாலு என்னை ரொம்ப இம்பிரஸ் செய்துவிட்டாள் . அவள் எப்போது எங்கள் ஆபீஸில் சேருவாள் என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.
அதற்காகத் தான் பசங்களுடன் மகாபலிபுரம் போகவும் திருவிடந்தை போகவும் முடிவு செய்தேன். நான் தண்ணி அடிக்கிற கேஸ் இல்லை. இருந்தாலும் எங்க கும்பலுடன் போய் அவர்கள் தண்ணி அடிக்கும் போது அரட்டை அடிக்கப் பிடிக்கும். கடைசியிலே ‘”மாப்பிளே! நீயும் அடி மச்சி!” நாங்க தண்ணி அடிக்கிறதனால எங்களுக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்குது. நீ தண்ணி அடிக்காததால உனக்கும் ஒண்ணும் அமைய மாட்டேங்குது” என்று புலம்பல் எல்லாம் வரும்.
இந்த ராம்ஸ் கடைசி நிமிடத்தில் இப்படிக் காலை வாருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . கார் இல்லையாம். ஓசி கார் இல்லை என்றதும் காலிக் கும்பல் ஜகா வாங்கிவிட்டது. அங்கே போய் பீர் அடிக்கறதுக்கு இங்கேயே பாருக்குப் போய் ஹேப்பி அவரில் சீப்பா அடிக்கலாம் என்று தீர்மானித்து விட்டார்கள். எனக்கு பயங்கர கடுப்பு. ‘போங்கடா நீங்களும் உங்க பாருமாச்சு பீருமாச்சு ” என்று கத்திவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ராம்ஸ் வந்து தொத்திக்கொண்டு “வா மச்சி, நானும் வர்றேன். நம்ம ரெண்டு பெரும் திருவிடந்தை போயிட்டு அப்படியே மகாபலிபுரம் போகலாம் வா” என்றான்.
பைக்கைக் கிளப்பிவிட்டு இருவரும் புறப்பட்டோம்.
திருவிடந்தை பெருமாள் நல்ல சக்திவாய்ந்தவராக இருக்கவேண்டும். ஷாலு எனக்குக் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு மகாபலிபுரம் லைட் ஹவுஸ் பக்கம் போனோம். அங்கே புதுமையா ஒரு குரங்காட்டி குரங்கு கிட்டே லேப்டாப்பைக் கொடுத்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தான். கிளி, முயல், அணில் எல்லாம் போய் இப்போ ஹை டெக்கா குரங்கு வந்திருக்கு. அதைச் சுற்றி பயங்கர கூட்டம். ஒவ்வொருவரா குரங்காட்டி கிட்டே ஏதாவது கேள்வி கேட்கிறாங்க அவன் அதே கேள்வியை குரங்கு கிட்டே கேட்கிறான். குரங்கு கீ போர்டில ஏதாவது விளையாடும் . சற்று நேரத்தில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஏதாவது படம் வரும். அதைப் பார்த்து ஜோசியம் சொல்லுவான்.
அவன் கிட்டே டோக்கன் வாங்க செம கூட்டம் . ராம்ஸ் ” மாப்பிளே ! நமக்கு ரெண்டு பேருக்கும் டோக்கன் போடு ! குரங்கு ஜோஷியமாவது பலிக்குதான்னு பாப்போம்” என்று கெஞ்சினான். சரி அவனைக் கலாய்க்காலாம் என்று யோசித்துக்கொண்டே டோக்கன் வாங்க அதற்கான கவுண்டரில் கையைவிட்டேன். என்கூட ஒரு பெண்ணின் கையும் உள்ளே நுழைந்தது. அதன் வளையல் ஒடிந்து என் கையைக் கீறி ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. யாரது என்று கோபத்துடன் பார்த்தால் ரெட் வளையளுடன் ரெட்கலர் சாரியுடன் ஷாலு ! என் ஷாலு !!
(மற்றவை பிறகு )
வேற்றுமையில் ஒற்றுமை – நித்யா சங்கர்
ராமரும் அல்லாவும் ஒன்றே
இவ்வுண்மை நாமறிந்தால் நன்றே !
ராமரைத் தொழுகின்ற சோமனும் மனிதனே
அல்லாவை வழிபடும் அப்துலும் மனிதனே
மனிதர்க்கு மனிதர் என்னடா பேதம்
நான்பெரிதா நீபெரிதா என்னடா வாதம் !
இந்துவின் இரத்தம் சிந்தூரச் சிவப்பு
முஸ்லீமின் ரத்தமும் சிவப்பு நிறம்தானே
இறைவனவன் வேறானாலும் பிறப்பால்நாம் மனிதஜாதி
கழிக்கின்றோம் சண்டையில் வாழ்க்கையில் சரிபாதி !
மதப்பெயரால் வாதிடுதல் பைத்தியத்தின் செயலடா
வேற்றுமையில் ஒற்றுமை காண்போமென முழங்கடா
பாரதத்தின் புதல்வரென பெருமையொடு சொல்லடா
நமக்குநிக ரில்லையென தமுக்கடித்து கூறடா !
ராமின் தாத்தா – கீதா
இலக்கிய வாசல் நிகழ்வில் படிக்கப்பெற்ற கதை
ரங்கா தாத்தாவிற்கு ராம், பிரேம் என இரு பேரன்கள் இருந்தார்கள். இப்ப நாம் இந்தத் தாத்தாவைப் பற்றித் தான் பேசப் போகிறோம்.
இந்தத் தாத்தாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள். தாத்தா, பாட்டி இருவரும் சென்னையில் வசித்து வந்தார்கள். மகனை டாக்டருக்குப் படிக்க வைத்து, டாக்டர் படித்த பெண்ணையே மணமுடித்து, மகன், மருமகள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மகளையும் இஞ்சினியருக்குப் படிக்க வைத்து அவளையும் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு மணமுடித்து வைத்தார்கள்.
மகனுக்கு ஒரு பையனும், பின் மகளுக்கு ஒரு பையனுமாக இரு பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் தான் ராம், ப்ரேம் என்பவர்கள். இருவரும் சிறுவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு உதவியாகப் பாட்டியும், தாத்தாவும் வெளிநாட்டிற்குச் சென்று அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். வெளிநாட்டில் அவர்களை பார்க் மற்றும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுடன் மிகவும் சந்தோஷமாக இருந்து விட்டு வந்தார்கள்.
சிறிது காலத்திற்குப் பின், பாட்டி, தாத்தாவிற்கு வயதாகி விட்டபடியாலும், பேரன்களும் ஓரளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டதாலும், தாத்தா,. “இனிமேல் விடுமுறை விட்டவுடன் இருவரும் அம்மா, அப்பாவுடன் இந்தத் தாத்தா, பாட்டியை நீங்கள் தான் சென்னைக்கு வந்து கவனித்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார். உடனே ராம், ப்ரேம் இருவரும், “ சரி தாத்தா! என சந்தோஷமாகக் கூறினார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டை விட சென்னையில் தாத்தா, பாட்டியுடன் இருப்பதையே மிகவும் விரும்பினார்கள். அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் ஒன்றாக ஒரே வீட்டில் தாத்தாவுடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு விடுமுறைக்கும் வருவார்கள்.
தாத்தா, பாட்டி இருவருக்கும் தன்னுடைய மகன், மகளை வளர்க்கும்போது இருந்ததை விட கூட பாசமும், அதிகமான பொறுப்பும் கலந்து இருந்தது. ஆனால் என்னவோ தெரியவில்லை, பேரன்கள் ராம், ப்ரேம் மீது உயிரையே வைத்திருந்தார்கள். அந்த அளவுக்கு, ராமும், ப்ரேமும் பாட்டி, தாத்தா மீது பாசமாக இருந்தார்கள். விடுமுறை எப்ப வரும், பேரன்கள் எப்ப வருவார்கள் என வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள். இப்போது உள்ள கைபேசி எல்லாம் அப்போது கிடையாது. ஒரே ஒரு தொலைபேசி மட்டும் தான் கடைத்தெருவில் ஒன்று இருக்கும். மாதம் ஒருமுறை பேசிக் கொள்வார்கள். மற்றபடி, கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்வார்கள்.
அந்த நேரத்தில் தான் தாத்தா, பாட்டிக்கு அறுபதாம் கல்யாணம் என இருவரின் அம்மா, அப்பா, ராம், ப்ரேம் அனைவரும் வந்து சிறப்பாகக் கொண்டாடி விட்டு , ஜாலியாகக் கொண்டாடி விட்டு ப்ரேம், ராம் இருவரும் தாத்தா, பாட்டிக்குத் தாங்களாகவே வாழ்த்து அட்டை பண்ணிப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள். பாட்டியும், தாத்தாவிற்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளித்தார். ராம், ப்ரேம் இருவரும் ‘இன்னும் ஒரு மாதத்திற்குப் பின் விடுமுறை வந்துவிடும் தாத்தா, அப்போ வருகிறோம் ‘ என கண்ணீருடன் விடை பெற்றுச் சென்றிருந்தார்கள்.
பாட்டி தாத்தாவிடம், பேரன்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டதால் இனி அவர்களுக்கு கேரம் , செஸ் என விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து ஸ்டோர் ரூமில் வைக்கச் சொன்னாள். அந்த விடுமுறையும் விட்டு ராம், ப்ரேம் இருவரும் சென்னையில் தாத்தா வீட்டிற்கு சந்தோஷமாக வந்தார்கள். இருவரையும் பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் கிரிக்கெட் விளையாட வைப்பதும் தினமும் இரவு விளையாடி, பாட்டி கதை சொல்லி, இருவருக்கும் சாதம் ஊட்டி விட்டு மிகவும் ஜாலி ஆக இருந்தார்கள்.
ராம், ப்ரேம் இருவரும், ‘சிட்னியில் அக்கம் பக்கம் யாரும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். இங்கு எவ்வளவு ஜாலியாக இருக்கிறோம்’ என்று பேசிக் கொள்வார்கள். அதுவும் ராம் விளையாடும்போது எல்லாவற்றிலும் கொஞ்சம் துறுதுறுவென அவசரமாகச் செய்வான். தாத்தா அவனுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டே இருப்பார். “ நீ கொஞ்சம் நிதானமாக யோசித்து விளையாடணும். எதிலும் அவசரமாக இருக்கக் கூடாது” என்றார். அவனும் “ ஆமாம் தாத்தா! நான் பரீட்சையில் வீட்டுக்குச் சீக்கிரமாகப் போகணும் என அவசர அவசரமாக கேள்வித் தாளில் பின் பக்கம் உள்ள கேள்விகளைப் பார்க்காமல் அதற்கு விடை பண்ணாமல் விட்டு விட்டேன். 20 மதிப்பெண்கள் அப்படியே விட்டு விட்டேன். ஆனால் எனக்கு அந்த விடை முழுவதும் தெரியும். அதான் அம்மாவும் நீ பதட்டப்படாமல் நிதானமாகச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள்” என்றான்.
இப்படி அப்படியாக விளையாடி ஒரு வாரம் ஓடி விட்டது. அன்று காலை இருவரும் கிரிக்கெட் விளையாடுவதற்காகத் தாத்தாவுடன் வீட்டின் முன்பு இருக்கும் இடத்திற்கு வரும்போது, பாட்டி, ராம்! ப்ரேம்! எனச் சத்தமாகக் கத்தினார். உடனே தாத்தாவுடன் ஓடிச் சென்று பார்த்ததில், ‘ எனக்கு நெஞ்சு வலிக்கிறது’ என்று சொன்னாள். தாத்தாவும், ப்ரேமும் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு மாமாவிடம் மருத்துவரைக் கூட்டி வரச் சொல்லி அனுப்பினார்கள். ஆனால் பாட்டி சொன்னாள், “ எனக்குத் தெரியும், நான் இறந்து விடுவேன் போல் இருக்கிறது’’. ஆகையால் ராமிடம், “நான் தாத்தாவிற்கு ஒரு கைக் கடிகாரம் பரிசளித்தேன் அல்லவா? அது அந்த அலமாரியில் உள்ளது. அதை எடுத்து வா!” என்று சொன்னாள். தாத்தா உடனே, “ நான் பாட்டிக்குத் தைலம் தேய்க்கிறேன், நீங்கள் அவள் கேட்கும் கைக்கடிகாரத்தை எடுத்து வாருங்கள்” என்றார். ராம், ப்ரேம் இருவரும் ஓடிப்போய் அந்தக் கடிகாரத்தை எடுத்து வந்து பாட்டியிடம் கொடுத்தார்கள். அந்தக் கடிகாரத்தைப் பாட்டி தாத்தாவிடம் கொடுத்து, “ இதை எப்பவும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். இந்த டிக், டிக் என்ற சத்தம் உங்களுடனேயே நான் இருப்பதை உங்களுக்கு உணர்த்தும்” எனக் கூறி விட்டு இறந்து விட்டாள்.
ராமும், ப்ரேமும் தாத்தாவுடன் கூடவே இருந்து பாட்டியின் பிரிவு தாத்தாவுக்குச் சோகத்தைத் தராமல் பார்த்துக் கொண்டார்கள். தாத்தாவும் ஒரு வழியாக மனைவியின் பிரிவை மறந்து ராம், ப்ரேம் இருவரையும், ‘ உங்கள் படிப்பு வீணாகி விடும், அதனால் உங்க அம்மா, அப்பாவுடன் சிட்னி சென்று படிப்பைத் தொடருங்கள். எனக்குப் பாட்டி இருந்த இந்த வீட்டை விட்டு வெளியே வர இஷ்டமில்லை. என் கூடத்தான் பாட்டியின் ஞாபகமாக இந்தக் கைக்கடிகாரம் இருக்கிறதே, கவலைப்படாதீர்கள்” என்றார். ராம், ப்ரேம் இருவரும், ‘ சரி தாத்தா! நாங்க இப்ப செல்கிறோம். அடுத்த 3 மாதம் கழித்து விடுமுறை 10 நாட்களில் நாங்க இங்கு வருகிறோம்’ எனக் கூறி விட்டுச் செல்ல மனமில்லாமல் தனியாகத் தாத்தாவை விட்டு விட்டுச் சென்றார்கள்.
தாத்தாவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. தினமும் சாயந்திரம் சென்று கடைத் தெருவில் இருக்கும் போன் மூலமாக ராமிடமும், ப்ரேமிடமும் பேசி விடுவார். தனியாக இருப்பதாக ஞாபகம் வரும்போதெல்லாம் அந்தக் கடிகாரத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார். ப்ரேம், ராம் இருவருமே தொலைபேசியில் கூடப் பாட்டியாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் தாத்தா, நாங்கள் விடுமுறை விட்டதும் வந்து விடுவோம்’ எனக் கூறுவார்கள்.
அந்த விடுமுறை நாட்களும் வந்தது. தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம். அடிக்கடி அந்தக் கைக்கடிகாரம், டிக், டிக் என அடிப்பதை பாட்டி என்னோடயே ஓடிக் கொண்டு இருக்கிறாள் என ராம், பிரேமிடம் சொல்லிச் சிரித்துக் கொஞ்சம் பழைய நிலைமைக்குத் திரும்பி இருந்தார். எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
அந்தத் தருணத்தில், “ தாத்தா! நாங்க நாளைக்கு ஊருக்குப் பத்து மணிக்குக் கிளம்ப வேண்டும். அதனால் இந்த விளையாட்டு சாமான்கள் எல்லாத்தையும் அடுக்கி வைத்து விடுவோம் எனச் சொல்லி எல்லா அறைகளையும் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்க போனதும் நீங்க தனியாக சுத்தம் பண்ணக் கஷ்டப்பட வேண்டாம்” என்று எல்லா வேலையையும் முடித்து இரவு தூங்கப் போகும்போதுதான் தாத்தா கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அது கையில் இல்லை. ராமும், ப்ரேமும் ‘ என்ன தாத்தா! கதை சொல்லித் தூங்கலாம் என்று சொன்னீங்க, ஏன் வரவில்லை?’ எனக் கேட்டார்கள். உடனே தாத்தா, ‘ என் கையில் பாட்டியாகிய வாட்சை எங்கேயோ வைத்து விட்டேனே’ எனக் கொஞ்சம் சோர்வாகப் பேசினார்.
ராமும், ப்ரேமும் வீடு முழுவதுமாக அலமாரி, மேஜை, கட்டிலுக்கு அடியில் என எங்கு தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. அவர்கள் நாளைக் காலை பத்து மணிக்கு ஊருக்குக் கிளம்பி விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே ராம், ப்ரேம் இருவரும் பேசிக் கொண்டார்கள். “ தாத்தா அந்த வாட்சைத்தானே பாட்டியாக நினைத்து உற்சாகமாக இருப்பதாகக் கூறினார், இப்ப என்ன பண்ணறது?’ என யோசித்துக் கொண்டே இருந்தார்கள். அதற்குள் இரவு 11 மணி ஆகி விட்டது. தாத்தா சொன்னார், ‘ நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று. ஆனால் அவருக்கு என்னவோ தூக்கமே வரவில்லை.
காலையில் ராம் வெகு சீக்கிரமாக எழுந்து கொண்டு தாத்தாவிடம் சென்று, “ நான் அந்த ரூமில் தனியாகச் சென்று தேடி விட்டு வருகிறேன். ஒருவரும் அங்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான். ஒரு 20 நிமிடத்திற்குப் பின் ராம் அந்த அறையிலிருந்து வந்து, ‘ தாத்தா! இதோ பாட்டி’ என்று கைக்கடிகாரத்தைத் தாத்தா கையில் கொடுத்தான். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். தாத்தாவின் முகமும் சந்தோஷத்தில் மிகவும் தெளிவாக இருந்தது.
ராமிடம் அவன் அப்பா, அம்மா, ப்ரேம் அனைவரும் கேட்டனர். “ எப்படிடா கிடைத்தது?” என்று. உடனே அவன் சொன்னான். “ தாத்தாதான் பதறுகிற நேரத்தில் பொறுமையாக யோசித்து செயல்படணும் என்று அடிக்கடி சொல்வாரே, அதே மாதிரி நான் இரவெல்லாம் யோசித்தேன். அந்த அறையின் கதவை எல்லாம் சாத்தி விட்டு அமைதியாக அங்கு 15 நிமிடம் அமர்ந்தேன். அந்த வாட்ச், அதாவது பாட்டி டிக், டிக் என அடிக்கும் சத்தம் கேட்டு அதைக் கண்டு பிடித்தேன். தாத்தா சொன்ன மாதிரி பொறுமையாக யோசித்தால் எல்லாமே நமக்கு வெற்றி தான் என்று அனைவரிடமும் கூறினான். அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் ஊருக்குக் கிளம்பினார்கள். தாத்தாவும் தனியாக இல்லாமல் பாட்டியுடன் இருப்பது போல் சந்தோஷமாக வழி அனுப்பினார்.
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் ? பதறிய காரியம் சிதறி விடும். எனவே ராமின் தாத்தா கூறியபடி சிந்தித்து செயல்பட்டு வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவோம்.
ஈஸ்வர் அல்லா தேரே நாம் – நித்யா சங்கர்
1993 ஆம் வருடம்
‘ அயோத்தியா ராமர் பிறந்த இடம். அங்கே ராமர் கோவில் முதல்லே இருந்தது. அதை இடிச்சு மசூதி கட்டியிருக்காங்க. ராமர் பிறந்த இடத்துலே ராமர் கோயில் இருக்கணும்னு நாங்க கேட்கறதுலே என்ன தப்பு? எங்க ரிலீஜியஸ் ஸென்டிமெண்ட்ஸை மதிச்சு நீங்க ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது? நாங்கதான் உங்க மசூதியைக் கொஞ்ச தூரத்துலே ஒரு இடத்திலே கட்டித் தரோம்னு சொல்றோமே!’ என்றான் குமார் காட்டமாக.
‘ நாங்க இங்கே மைனாரிட்டி.. அதனாலே என்ன வேணும்னாலும் சொல்லலாம், செய்யலாம்னு பார்க்கறீங்களா? ராமாயணமே நடந்ததோ என்னவோ? அதைப் பற்றியே பெரிய சர்ச்சைகள் நடந்துட்டிருக்கு….. அப்படி இருக்கும்போது எங்க மசூதி உள்ள இடத்தை, ‘ இது தான் ராமர் பிறந்த இடம்… இந்த மசூதியை இடித்துக் கோயில் கட்டப் போறோம்னு சொன்னா என்ன நியாயம்? எங்க மசூதியை இடிச்சா எங்க ஸென்டிமென்ட்ஸ் பாதிக்காதா? ஏன் நீங்கதான் அதன் பக்கத்திலேயே கொஞ்ச தூரம் தள்ளிக் கோயில் கட்டிக்கிறது ! நீங்க ஏன் மசூதியை இடிச்சு அங்கே இன்னொரு கோயிலைக் கட்டிக்கணும்! என்று கத்தினான் அப்துல்.
அவர்கள் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கக் கூட்டம் சேரலாயிற்று.
‘ க்வஸ்சன் ஆஃப் ஸென்டிமெண்ட்ஸ்… இந்தியா பூராவும் உங்க மசூதிகள் இருக்கு. நாங்க அதன் பக்கம் வரலையே…. ராமாயணம் நடந்ததோ இல்லையோ என்பது வேறு விஷயம். ஆனா இது ராமர் பிறந்த இடம்னு நாங்க நம்பறோம். அவர் பிறந்த இடத்துலே ஒரு கோவில் வேணும்னு விரும்பறோம். அதை நீங்கள் ஏன் மதிக்கக் கூடாது?’
‘ ஆமாமா… இந்த ஒரு இடத்துலே ஒத்துகிட்டா எங்களுடைய ஒவ்வொரு மசூதியா கை வைப்பீங்க ..’
‘ என்ன சொன்னே.. பேசுவீங்க .. பேசுவீங்க.. எப்போ பாகிஸ்தானைப் பிரிச்சுட்டாங்களோ.. அப்பவே நீங்க எல்லாம் அங்கே போயிருக்கணும். எங்க ராமர் பிறந்த இடத்திலே நாங்க கோயில் கட்டத்தான் போறோம். யார் தடுக்கறாங்கன்னு பார்த்துடுவோம்?’ என்று இடி போல முழங்கினான் சுடலை, அந்தக் கூட்டத்திலிருந்து மெதுவாகத் தலை நீட்டி. அந்த வட்டார இந்துக்களின் ‘தாதா’ அவன்.
‘ சுடலை!.. என்ன பேசறேங்கறதை யோசிச்சுப் பேசு.. என்ன! எங்க மசூதியை இடித்துக் கோயில் கட்டிடுவியா? நாங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு இருப்போம்னு நினைச்சுட்டியா..’ என்று கர்ஜித்தான் சுலைமான்,. அப்துல் பக்கம் நின்று கொண்டு – முஸ்லீம்களின் ‘தாதா’ அவன்.
நடு நடுங்கினார்கள் குமாரும், அப்துலும்’.
கூடி நின்ற இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை யொருவர் நோக்கிக் கத்திக் கொள்ள ஆரம்பித்தனர். வாய்ச் சண்டை முற்றி, கைகலப்பாக மாறி, கற்களும் பாட்டில்களும் பறக்க ஆரம்பித்தன. சுடலை, சுலைமானின் தோழர்கள் கத்திகளை எடுத்து விளையாட ஆரம்பித்தனர், வட இந்தியாவில் ஏதோ ஒரு ஊரில் கட்டலாமா கூடாதா என்ற வாக்குவாதத்தில் இருக்கும் கோயிலுக்காக.
யாரோ அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லிப் போலீஸ் வருவதற்குள் பல உயிர்கள் உடலை விட்டுப் பிரிந்து விட்டன. குமார், அப்துலின் உடல்கள் அடுத்தடுத்துக் கேட்பாரற்றுக் கிடந்தன.
‘ ராமா! உனக்கு வேண்டிப் பேச ஆரம்பித்த என் கதியைப் பார்த்தாயா? எங்கே நீ ! எங்கே உன்னைப் பார்ப்பது? ‘ என்று தேவலோகத்துக்குச் சென்ற குமாரின் உயிர் ராமரைத் தேடிக் கொண்டு இருந்தது.
பக்தனே.. இப்படியே நேராக ஒரு காத தூரம் போனேயானால் அங்கே ஒரு சுனை இருக்கும். அங்கே நான் இருப்பேன்’ என்றது ஒரு குரல்.
அந்த சுனையை நோக்கி ஓடியது குமாரின் உயிர்.
‘ அல்லா எங்கே நீங்கள்..? உங்களை நான் எப்படி வந்தடைவது?’ என்று அப்துல் உயிர் அல்லாவைத் தேடியது.
‘ அப்துல்! நேராக சிறிது தூரம் போனால் அங்கே ஒரு சுனை இருக்கும். அங்கே நான் இருப்பேன்’ என்றது ஒரு குரல்
சுனையை அடைந்த குமாரின் உயிர் அங்கே அப்துலின் உயிரும் நின்றிருப்பதைப் பார்த்தான்.
‘ அடப் பாவி இங்கே நீயும் வந்திட்டியா..? அங்கேதான் தகராறு பண்ணி, அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஒரேயடியா சொர்க்க லோகத்துக்கு அனுப்பிட்டாங்க.. இங்கே என் ராமரைப் பார்க்க வந்த இடத்திலேயும் தகராறு பண்ண வந்துட்டியா..?’
‘ இல்லே.. குமார்.. நான் அல்லாவைத் தேடித்தான் இங்கே வந்தேன். எங்கே என் அல்லா?’
அவர்கள் அருகிலிருந்து ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது.
‘ குமார்! அப்துல்! ராமரும் நானே, அல்லாவும் நானே.. ஏசுவும் நானே, ஈஸ்வரனும் நானே.. திருமகளும் நானே.. துர்க்கையும் நானே.. எனக்கு உருவமே கிடையாது. தேவையானபோது ஒவ்வொரு உருவில் உலகத்தில் அவதரித்தேன். எல்லா தெய்வங்களும் என்னுள் ஐக்கியம்..’
‘ ஏன் ஸ்வாமி? அப்படீன்னா எதுக்கு எல்லோரும் இப்படி அடிச்சுக்கணும்? நாங்க பார்த்ததை உலகத்துக்கு மறுபடி போய் சொல்லணும்னா முடியாது. அட நீங்கதான் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டான் குமார்.
‘ சொல்லாமல் என்ன? எல்லா மதத் தலைவர்கள் மூலமும் சொல்லத்தானே செய்கிறேன். யார் கேட்கிறார்கள்? இந்தக் கிழங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு அல்லவா இந்தக் கால உலகத்து ஜனங்க நினைக்கிறாங்க!’
‘ என்ன ஒரு தப்பு செஞ்சோம். இந்த ராமர் கோயில், பாபர் மசூதியினால் இந்தியா பூராவும் அடிதடி நடந்துட்டிருக்கே’ என்றான் அப்துல்.
‘ அடிதடி மட்டுமா? எவ்வளவு உயிர் சேதம்.. பொருள் சேதம், கலவரத்தும்போது அரசாங்கத்துக்கு உடமையான பொருள்களையெல்லாம் சேதம் பண்ணிடறோம். அதையெல்லாம் பழுது பார்க்க அரசாங்கத்துக்குப் பணம் தேவைப்படும். தேவைப்பட்ட பணத்தை ஈட்டுவதற்கு வரிகள் போடறாங்க. மன வலி, உடல் வலியோடு இந்தப் புது வரிகளும் சேர்ந்து மக்களை வாட்டப் போகுது.
“கலிகாலம்பா.. இது கலிகாலம்.. சொன்னால் புரியாது. இந்த ஜனங்களுக்கு.. புரிஞ்சுக்காம அடிச்சுண்டு சாகப் போறாங்க..” என்றார் கடவுள் மெதுவாக சிரித்தபடி.
‘ நீங்களே சொல்லுங்க.. ராமர் பிறந்த இடத்துலே, ராமர் கோயில் கட்டணும்னு ஒரு சென்டிமென்ட் இந்துக்களுக்கு.. ஏன் இந்த முஸ்லீம்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது’ என்றான் குமார்.
‘ நீங்க வெறும் வெற்று நிலத்திலேயா கட்டறேன்னு சொல்றீங்க விட்டுக் கொடுக்கறதுக்கு? எங்க மசூதியை இடிச்சிட்டு அங்கே அல்லவா கட்டறேன்னு சொல்றீங்க? அப்ப எங்க ஸென்டிமென்ட்ஸுக்கு நீங்க மதிப்புக் கொடுக்கறீங்களா?’ என்று திருப்பினான் அப்துல்.
‘ அமைதி! அமைதி! இங்கே சொர்க்க லோகத்துக்கு வந்துமா சண்டை. இது ஒரு நம்பிக்கையையும், ஸென்டிமென்டையும் பொறுத்து இருக்கிறதுனாலே பலாத்காரத்தினாலேயோ, சட்டங்களாலேயோ முடிவு செய்ய முடியாது. அரசியல்வாதிகள் விலகிக் கொண்டு, இந்து மத, இஸ்லாம் மத குருமார்கள் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம். இல்லேன்னா மனஸ்தாபங்களும், அதிருப்தியும் தான் மிஞ்சும்” என்றார் கடவுள் முடிவாக.
‘ அப்துல்! நம்ம பிரச்சினைக்கு முடிவை அவர் கிட்டேயே கேட்டுட்டா என்ன?’
‘ சரி நீ கேள்!’
‘ மகனே! என்ன முணுமுணுக்கிறாய்?’
‘ இல்லே.. நீங்கதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லணும் . ராமர் கோயிலை அயோத்தியில் கட்டலாமா?’
‘ பரவாயில்லையே நீங்க, அங்கே உங்க கவர்ன்மெண்ட் தலையைப் பிச்சுக்கிறது போதாதா? மெதுவா என்னை வம்பிலே மாட்டி விடப் பார்க்கறீங்களே? இனி ஒரு நிமிஷம் இங்கே இருந்தாலும் ஆபத்துதான் போலிருக்கு. நான் கிளம்பறேன்’ என்ற குரல் மெதுவாக மெதுவாகக் குறைந்து கொண்டே நின்று விட்டது.
திகைத்து நின்றிருந்தார்கள் குமாரும், அப்துலும்.
‘ தம்பி ‘ என்ற குரல் கேட்டுத் திரும்பினார்கள்.
காந்தியடிகள் நின்றிருந்தார்.
‘ தம்பி இப்படி நீங்கள் எல்லாம் அடித்துக் கொள்வதற்கா நாங்க கஷ்டப்பட்டுச் சுதந்திரம் வாங்கினோம்? இந்தியா, ‘எம்மதமும் சம்மதம்’னு முழங்க வேண்டும் என்றல்லவா ஆசைப் பட்டோம். குமார், அப்துல் நீங்க ஒண்ணைப் புரிஞ்சுக்கணும். நீங்க ரெண்டு பேருமே இந்தியர்கள். அப்துல் ஒன்றும் அரேபியாவில் இருந்து வரவில்லை. குமார் நீ இந்து மதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கிறே.. அப்துல் நீ அல்லாவை வணங்கறே.. அவ்வளவுதான். உங்களுக்குள் ஏன் இந்தச் சண்டை? பாபர் மஸ்ஜீத் இருந்த இடத்திலே, கவர்ன்மென்ட் முன் வந்து நான்கு வாயில்கள் கொண்ட பெரிய கட்டடத்தை எழுப்பட்டும். கிழக்கு வாயில் உள்ளே நுழைந்தால் ராமர் கோயில் இருக்கட்டும். மேற்கு வாயில் உள்ளே நுழைந்தால் முகமதியரின் தொழுகை இடமாக இருக்கட்டும். வடக்கு, தெற்கு வாயில்களை, கிறிஸ்துவர்களோ, புத்த மதத்தினரோ அல்லது வேறு இரு மதத்தினர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். மதத்தின் பெயரால் சண்டை போடும் உலகத்தினருக்கு ‘ எல்லா மதமும் ஒரே தத்துவத்தைத்தான் எடுத்துச் சொல்கிறது’ என்று பறைசாற்றும் ஒரு முன்னோடியாக இந்த அயோத்தியா திகழட்டும்’ என்று கூறி மறைந்தார்.