அட்டைப்படம் ஏப்ரல் 2020

 

gita-amey

நன்றி தி வீக்

கோலாப்பூரைச் சேர்ந்த எஸ் எல்  ஹால்டங்கர் என்பவர் நீர்வண்ண ( Water color) முறையில் 1945 இல் அமைத்த படம்தான் ‘சுடரின் நம்பிக்கை’  கை விளக்குடன் பெண்’ என்னும் ஓவியம். 

இது மைசூர் அரசு கண்காட்சி சாலையில் இன்றும் மிகப் பிரசித்தி பெற்ற ஓவியம்.  

அந்த ஓவியத்தை அலங்கரித்தவர் ஓவியரின் மூன்றாவது மகள் கீதா. 

சமீபத்தில் அவர் தனது 102 வது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். 

 

 

 

காளிதாசனின் குமாரசம்பவம் – சுலப தமிழில் – எஸ் எஸ்

குமார சம்பவம்

 

காளிதாசனின் கைவண்ணத்தில் உருவான மாபெரும் காவியம்  குமார சம்பவம்.

தட்சன் மகள் தாட்சாயினி  என்னும் சக்தியைத் தேவியாகக் கொண்ட சிவன், தந்தைப் பாசத்தால் தன்னை எதிர்த்துப் பேசிய தேவியைத்   தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்குகிறார். 

கோபம் தணிந்தபின் சக்தியின் நினைவோடு அவள் பிரிவை மறக்க கடுந்தவம் புரியச்  செல்கிறார். 

தாட்சாயினி  இமவான் மகள் பார்வதியாகப் பிறந்து சிவனை அடையக் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அதேசமயம் தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் தேவ உலகத்தை ஆட்டிப் படைக்கிறான். 

இந்திரன் சூரியன் வருணன் அக்னி வாயு சந்திரன் மற்றும் அனைத்துத்  தேவர்களும் தாரகாசுரனுக்கு அடிமையாகப் பணிபுரியும் அவலம் வந்துள்ளது.

சிவனின் குமாரனால்தான் தாரகாசுரனைக் கொல்ல  முடியும். 

சிவனோ கோபத்  தவத்தில் ஆழ்ந்து இருக்கிறார்.

பார்வதி சிவன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். 

சிவ பார்வதி காதல்  எப்படி உருவாகும்?

காதல் கனிந்து சிவகுமாரன் உற்பத்தி எப்போது நடக்கும்?  

மன்மதன் துணையோடு  சிவ பார்வதி காதலைக் கனிய வைக்கத் தேவர்கள் திட்டமிடுகின்றனர். 

சிவனின் கோபத்தில் மன்மதனும் அவரது நெற்றிக்கண்ணுக்கு இரையாகி சாம்பலாகிறான். 

பின்   குமாரசம்பவம் எப்படி நிகழ்கிறது? 

கார்த்திகேயன் என்னும் முருகப் பெருமான் எப்படி உதிக்கிறார்? 

அதைத்தான் காளிதாசன் குமார சம்பவம் என்ற காவியமாக்கியிருக்கிறார். 

அமரத்துவம் பெற்று இலக்கிய வானில் சிரஞ்சீவியாகச் சுடர்விடுவது  காளிதாசனின் குமார சம்பவம் .

வர்ணனை எழிலும் உவமை அணியும் காதல் உணர்வும் பின்னிப் பிணைந்து வருவது குமார சம்பவம் !

ரவீந்திரநாத் தாகூர், கவி காளிதாசனின்  குமாரசம்பவத்தை இப்படிக் குறிப்பிடுகிறார்:

– ‘எல்லையில்லாத திரையில் வரைந்த ஓவியம் இது.

காதலின் நிரந்தரத் தன்மையை வர்ணிக்கிறது.

காதல் கொண்ட இதயத்தின் தூண்டுதல்களையும் வேண்டுகோளையும் தியாகத்தையும் இது விளக்குகிறது.

காவியத்தின் முடிவில் காதல் ஜெயிக்கிறது” 

 

இந்தக் காவியத்தின் சாரத்தை சுலப தமிழில் உங்களுக்காகத் தருவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 

குமார சம்பவம் என்ற கவிதைத் தொடர் தொடர்ந்து வரும் 

– எஸ் எஸ்

Is Devon Ke Dev Mahadev on Life OK one of the best mythological ...

முதல் சர்க்கம்

இமயம் 

பரத கண்டத்தின்  வடதிசையில் மலைகளுக்குக் கெல்லாம் அரசன்

தேவ  வடிவில்  அவன் இமவான்  மலை வடிவில் இமயம்

பூமிப் பசுவின் பாலை மக்கள்பெற   கன்றாய் மிளிர்வது  இமயம்

சந்திரனின்   களங்கம்போல்  சிரசில் உறைபனி  கொண்டது  இமயம்

மேகத்தின் மேலிருந்து குளிரையும் வெப்பத்தையும்  இதமாய்த் தரும் இமயம்

மரத்தில் பதித்த காதல்  எழுத்தென  யானைகள் நிறைந்த  இமயம்

யானைகள் உராய   மரப்பட்டை உதிர   வாசனை கமழ்ந்திடும்  இமயம்

யானைகளைத்  தாக்கும்  சிங்கத்தைப்  பிடிக்க வேடர் அலையும்   இமயம்

வேடர் களைப்பு  தீர  குளிர்ந்த மணக்காற்று  மெதுவாக வீசும் இமயம்

மகளிர்  முகத்தில் பூசிய  செங்காவிபோல்  முகப்பில் சிவந்த   இமயம்

முலைபெருத்து இடைசிறுத்த கின்னரப் பெண்கள்  நடனம்   பயிலும்  இமயம் 

மோகத்தில்  சிணுங்கும் கின்னரப் பெண்களுக்கு மேகத் திரையிடும்  இமயம்

குகைவழியே காற்றுவர   மூங்கில்கள்  குழலாகி    நாதம்  பிறக்கும் இமயம்

குகையெல்லாம்  ஒளிந்திருக்கும் காரிருளைக்  கொண்டாடிக் காத்து வரும் இமயம்

குகைக்குள்ளே   இருளகற்ற    ஒளிமலராம்    ஔஷதிகள்  தந்திட்ட    இமயம்

கவரிமான் வாலசைத்து சாமரம்   வீசிடும் எழில்கொண்ட இமயம்

மலைச்சிகர   உச்சியிலும் தாமரை மொக்குகள் கூம்பி நிற்கும்   இமயம்

மலையரசன்தனக்கு இமவான் எனப்  பிரும்மரே பேர்வைத்த  இமயம்

(தொடரும்)

வெண்ணிற இரவுகள் – தஸ்தயேவ்ஸ்கி

 

 

வெண்ணிற இரவுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

 

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது இணைய  தளத்தில் பதிவு செய்தது. 

மானசீகமாக அவரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இதைப் பிரசுக்கிறேன். ( எஸ் எஸ் ) 

 

வெண்ணிற இரவுகள் நாவல் சுருக்கம். 

 

 

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.

அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினரின் பிரச்சனைகளே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் மனஇயல்பு. அதாவது பேசமுடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களே அவரது முக்கிய கதாபாத்திரங்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் புதினங்களில் வரும் ஆண்கள் விசித்திரமானவர்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அவர்களை பற்றி நினைத்து கொள்கிறேன். இயேசுநாதரின் சாயல் கொண்ட இளவரசன் மிஷ்கனில் இருந்து கலிகுலாவின் சாயல் கொண்ட கரமசோவ் வரையான எத்தனை வேறுபட்ட ஆண்கள். குறிப்பாக அவரது கடைநிலை பாத்திரங்கள். அவர்களது மனஅழுத்தங்கள் அற்புதமானவை.

அவர்கள் சிக்கலான மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள். அதாவது தங்கள் மனதை தாங்களாகவே ஆழ்ந்து கவனித்து ஆய்வு செய்பவர்கள். தனக்கு தானே பேசிக் கொள்ளக்கூடியவர்கள். தன் மீது எவருக்கும் நேசமில்லை என்று மௌனமாக அழுபவர்கள். ஆனால் உலகத்தை நேசிப்பவர்கள். தன்னால் மற்றவர்கள் சந்தோஷப்பட முடியும் என்றால் அதற்காக அவமானத்தை ஏற்றுக் கொள்ள தயங்காதவர்கள்.

அவர்களின் தோற்றமும் மனதும் ஒன்றிலிருந்து மாறுபட்டது.புறத்தோற்றத்தை அவர்கள் பெரிதாக கவனம் கொள்வதில்லை. செயல்களே அவர்களது இயல்பை முடிவு செய்கின்றன. பெரும்பான்மையான சூழல்களில் காய்ச்சல் கண்ட மனிதன் தன்னை அறியாமல் சுரவேகத்தில் எதையெதையோ பேசுவதைபோல இவர்கள் விழித்தபடியே தன்னுணர்வுள்ள நிலையில் பேசிக் கொள்கிறார்கள்.

எது அவர்களை இப்படி நடக்க செய்கிறது. ஏன் இந்த பதற்றம். நடுக்கம். குழப்பமான தடுமாற்றம். கடந்த காலத்தின் துயரம் அவர்களை மறுபடி உள்ளே இழுத்துகொண்டுவிடுமோ என்ற பயம் ஒரு காரணம். மற்றொரு காரணம் தன்னை எவருக்கும் பிடிக்காது. தான் தனித்து விடப்பட்டவன். கனவுகளில் மட்டுமே வாழ்ந்து முடியப்போகிறவன் என்ற காரணமற்ற நம்பிக்கை. இந்த இரண்டோடு அடுத்தவர்கள் தன்னை சரியாக புரிந்து கொள்ளாமல் போய்விட்டால், வெறுக்க துவங்கிவிட்டால் என்னாவது என்ற தீராத சந்தேகம். இவை தான் தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகனை உருவாக்குகிறது.

சிறுவயதில் இருந்து அரவணைக்கபடாத. ஆத்மா தன் வாழ்நாள் முழுவதும் அதே ஏக்கத்துடன் நடுங்கியபடியே தானிருக்கும் என்கிறது தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு கதாபாத்திரம் . அது தஸ்தாயெவ்ஸ்கியின் குரலே.

ஒரு மனிதன் எப்படி வளர்க்கபடுகிறான். எந்த சூழல் அவனை உருவாக்குகிறது. பதினைந்து வயதிற்குள் அவன் என்ன துயரங்களை , நெருக்கடிகளை சந்திக்கிறான், எதற்காக ஏங்குகிறான் என்பது அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரக்கூடியது. அதை பற்றி சாதனையாளர்கள் பலரும் தங்கள் சுயசரிதையில் மறக்காமல் குறிப்பிடுகிறார்கள். பத்து வயதில் பசித்த நேரத்தில் உணவில்லாமல் போனவன் தன் வாழ்நாளில் எவ்வளவு கோடி பணம் சேர்த்தாலும் அன்று இந்த பணம் தன்னிடம் இல்லையே என்ற ஆதங்கத்திலிருந்து விடுபட முடியாது. வறுமையும் நிரகாரிப்பும் வாழ்நாள் முழுவதும் மனதிலிருந்து அகற்ற முடியாத வடுக்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வும் இப்படியானது தான். அவரது அப்பாவின் கோபக்காரர். பிள்ளைகளை வெறுப்பவர். மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தவர். அவரது நேசம் அவர்களுக்கு கிடைக்கவேயில்லை. அப்பாவை பிடிக்காத எதிரிகள் அவருக்கு நாட்டுசாராயத்தை வாயில் ஊற்றி அவரை கொலை செய்து விட்டார்கள். நோயாளியான அம்மாவின் அன்பை பிள்ளைகள் பகிர்ந்து கொண்டார்கள். அம்மாவும் இறந்து போய்விட்டால் யாரை நம்பி வாழ்வது என்ற பயம் ஆழமாக அவருக்குள் வேர்விடத்துவங்கியது. கடவுள் கருணையற்றவர் என்று பல நாட்கள் தஸ்தாயெவ்ஸ்கி புலம்பி அழுதிருக்கிறார்.

சாவு குறித்த பயமும், கைவிடப்படுவோம் என்ற அச்சமும் அவருக்கு சிறுவயதிலே துவங்கியிருக்கிறது. வளர்ந்து பெரியவனாகி அவர் சந்தித்த சிறைச்சூழல் மற்றும் நெருக்கடியான பொருளாதார நிலை அவரை மேலும் பலவீனமாகவே ஆக்கியது. பெருங்காற்றில் அலைபடும் புற்களின் நிலை கொள்ளாமை போன்றதே அவரது வாழ்க்கை

அவரது கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் இயல்பும் குழப்பங்களும் ஒளிந்து கொண்டுதானிருக்கின்றன. அவரது படைப்பில் வரும் பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். அவர்களால் தான் ஆண் தன்னை திருத்திக் கொள்கிறான். உருமாற்ற துவங்குகிறான். காதலை உணர்கிறான். காதலை மனது ஒரு நிமிசம் முழுமையாக உணர்ந்து கொண்டால் அதுவே வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று ஒரு வரி தஸ்தாயெவ்ஸ்கியிடம் இடம் பெறுகிறது.

அவரதுபுகழ்பெற்ற காதல்கதை வெண்ணிற இரவுகள். (White Nights, by Fyodor Dostoevsky) தலைப்பே மிகக்கவித்துவமானது. ஆறு முறை வேறுவேறு இயக்குனர்கள் இதை படமாக்கியிருக்கிறார்கள். இதில் Luchino Visconti , மற்றும் Robert Bresson படங்கள் அற்புதமானவை. இதே கதையை தழுவி ஹிந்தியில் Ahista Ahista , Saawariya ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன.

வெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைகாலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு. இரவு பத்து மணி வரை சூரியன் இருக்கும். அது போலவே சூரியன் உதயமாவதும் விடிகாலை மூன்று மணிக்கே துவங்கிவிடும். அது போன்ற நாட்களில் முழுஇரவும் புலர்வெளிச்சம் போன்றதொரு ஒளி இருந்து கொண்டேயிருக்கும் .மிக சிறிய இரவு கொண்ட நாட்கள் அவை.

மிட் சம்மர் என்று சொல்லக்கூடிய ஜீன்மாதத்தில் ரஷ்யாவில் இப்படியான நீண்ட பகல்கள் ஏற்படுவதுண்டு. இதை பீட்டர்ஸ்பெர்க் நகரில் விழாவாக கொண்டாடுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி பீட்டர்ஸ்பெர்க்கில் வசித்தவர். அவரது இளமைபருவத்தில் வெண்ணிற இரவு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நினைவுகளில் இருந்தே இந்த தலைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.

பீட்டர்ஸ்பெர்க் நகரின் சூரியன் ஒளிரும் இரவை பற்றி தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதுகிறார். அந்த சூரியன் நாம் அறிந்த சூரியன் இல்லை. அந்த வெளிச்சமும் வேறானது என்றே குறிப்பிடுகிறார். பகல் வெளிச்சத்தில் இருந்து பதுங்கி கொள்பவர்கள் இரவில் தான் சற்று ஆசுவாசத்துடன் நடமாடுகிறார்கள். நான் அது போன்ற ஒருவன் என்றே கதையின் நாயகன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இந்த நீள்கதையின் உபதலைப்பு கனவுலகவாசியின் குறிப்புகள். அதாவது கனவு காண்பதில் மட்டுமே வாழ்வை அறிந்த ஒருவன் சந்தித்த நிகழ்வுகள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 162 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயதுடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது.

இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். இதில் எங்கேயிருக்கிறது காதல் என்ற யோசனை உருவாககூடும். சந்திப்பு என்பதை இயல்பான ஒன்று என்ற தளத்திலிருந்து அபூர்வமானது என்ற தளத்திற்கு உயர்த்தி கொண்டு செல்வதன் வழியே தஸ்தாயெஸ்கி காதல்கதையை துவக்குகிறார்.

ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீதியை கடந்து செல்லும் கதாநாயகன் அங்கே உள்ள ஒரு வீட்டினை கடந்து செல்கிறான் . அவனால் ஒரு போதும் மறக்கமுடியாத பெண் வசித்த வீடது. அந்த வீடு இப்போது உருமாற துவங்கியிருக்கிறது. அதை பற்றிய தனது கடந்தகால நினைவுகளில் முழ்க துவங்குகிறான்.

நீண்ட பகல் தான் கதையின் ஆதார காரணம். அது இரவின் ஊடாக மறைந்திருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் பெரும்பான்மை கதைகள் போல கதை தன்மையில் துவங்குகிறது. கதையை சொல்பவனுக்கு பெயர் கிடையாது. வயது இருபத்தியாறு நடக்கிறது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறான். அவன் அதுவரை எந்த பெண்ணோடும் பேசிபழகியது கிடையாது. அவன் கனவில் வந்த ஒன்றிரண்டு பெண்களை தவிர வேறு பெண்களை அவனுக்கு தெரியாது. பெண்களை கண்டாலே கூச்சத்தில் ஒதுங்கிவிடுவான். பேச்சு தடுமாற ஆரம்பித்துவிடும்.

அவன் பீட்டர்ஸ்பெர்க்கின் விசித்திரமான சந்து ஒன்றில் குடியிருக்கிறான். அது பகலில் கூட சூரியன் வராத வீதி. அங்கே உண்மையில் வேறு ஒரு சூரியன் ஒளிர்கிறது. அதன் விசித்திரமான வெளிச்சத்தில் அவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். எது அந்த பீட்டர்ஸ்பெர்க்கின் இரண்டாம் சூரியன்.. தோற்று போன, அடையாளமற்று போன, கைவிட்டு போன பலரின் நிறைவேறாத ஆசைகள் தான் அங்கே இன்னொரு சூரியானாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. அவை இரவிலும் மறைவதேயில்லை.

அவர்கள் இயலாமையால், வறுமையால் யாரும் தங்களை நேசிக்க மாட்டார்கள் என்ற துயரத்தால் பீடிக்கபட்டவர்கள். அதனால் கனவு காண்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறார்கள். கனவுகள் அவர்களது நெருக்கடியிலிருந்து விடுபட்டு சந்தோஷம் கொள்ள வைக்கின்றன. பெயரில்லாத கனவுலகவாசிகளில் ஒருவன் இக்கதையை விவரிக்கிறான்.

சில வருசங்களுக்கு முன்பாக ஒரு இரவில் தான் சந்தித்த பெண்ணை பற்றி சொல்கிறான். அவள் குழப்பமானவள். செய்வதறியாமல் தடுமாறுகின்றவள். யாரோ ஒருவன் அவளை அழைக்க அவனை விலக்கி கத்துகின்றவள். இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியிராத அவனை அந்தபெண்ணின் துயரநிலை பேசவைக்கிறது. தன்னை மீறி அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். எதை எதையோ பேசுகிறான். தன்னால் கோர்வையாக பேசமுடியாது என்பதை பற்றி விரிவாக பேசுகிறான். மனம் தடுமாறுகிறான். அவளோ அவனிடம் எந்த வேறுபாடும் காட்டாமல் மிக இயல்பாக பேசுகிறாள். மறுநாள் சந்திக்கலாம் என்று விடைபெற்று போகிறாள். அந்த இரவு முடியும் போது அந்தப் பெண்ணின் பெயர் கூட அவனுக்கு தெரியாது.

இரண்டாம் இரவில் அவளுக்காக காத்திருக்கிறான். தன்னோடும் ஒரு பெண் பேசுகிறாள் என்பதே அவனை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. அவள் வருகிறாள். தயக்கம் குறைந்து அவளிடமே என்றாவது ஒரு நாள் தன்னோடும் ஒரு பெண் பேசுவாள் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். அது நிஜமாகிவிட்டது என்று பிதற்றுகிறான். அவள் ஏன் இவ்வளவு பதற்றம் கொள்கிறான் என்று வியப்படைகிறாள்.

உண்மையில் பெண்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் , என்ன பிடிக்கிறது எதற்காக அழுகிறார்கள் என்று எளிதாக புரிந்துகொள்ளவே முடியாது. அது ஒரு வேளை அது ஆண்களின் தவறாகவும் இருக்கலாம். அல்லது பெண்களின் இயல்பே அப்படியானதாகவும் இருக்கலாம் என்று அவனது தெளிவற்ற எண்ணங்களையும் அதற்கு அவள் சொல்ல வேண்டிய பதில்களையும் அவனே பேசுகிறான். அது அவளை வசீகரிக்கிறது.

நீ மிகவும் நல்லவன், பெண்ணோடு பேசுவது பெரிய விசயமில்லை என்று ஆறுதல் சொல்கிறாள். அவனோ நான் எதிர்பாராமல் அறைக்கு வரும் நண்பனுடன் பேசுவதற்கே தயங்க கூடியவன். என்னிடம் இப்படியான சூழலில் ஒரு பெண் பேசுகிறாள் என்பது இயல்பானதில்லை என்று துடிக்கிறான். அப்படியில்லை எந்த பெண்ணும் தன்னோடு ஒரு ஆண் சில நிமிசங்கள் பேசுவதை வேண்டாம் என்று பிடிவாதமாக விலக்கி போகிறவள் இல்லை. நீ பேச தயங்கியிருக்கிறாய். உன்னை வெளிப்படுத்திக் கொள்வது தான் உனது பிரச்சனை என்கிறாள்.

சந்தித்த மறுநிமிசம் தனது மனதை படித்துவிட்டவள் போல சொல்கிறாளே என்று வியந்த அவன் ஆச்சரியமாக இருக்கிறது சமார்த்தியமும் அழகும் ஒன்று சேர்வது அபூர்வம். நீ இரண்டும் ஒன்றாக கொண்டிருக்கிறாய் என்கிறான்.

அவள் புன்னகையுடன் நீ பிரமாதமாக பேசுகிறாய். உண்மையில் கூச்சப்படும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்கிறாள். அவன் உடனே என்னிடம் உள்ள ஒரே கவசம் கூச்சம் தான். அதை இழந்துவிட்டு என்னசெய்வது என்று அப்பாவி போல கேட்கிறான். மறுநிமிசமே அய்யோ உன்னிடம் நான் இப்படி பேசியிருக்க கூடாது. என் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லிவிட்டேன் என்று வெட்கத்துடன் புலம்புகிறான்.

இப்படியாக கடிகாரத்தின் பெண்டுலம் செல்வது போல அவனது தடுமாற்றம் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. அவளை பிரிந்து போனால் தன்னால் மறுபடி சந்திக்கவே முடியாமல் போய்விடும் என்று வேதனை கொள்கிறான். அவள் யாருக்கோ காத்திருக்கிறாள். ஏதோ துயரம் அவளை வீட்டிலிருந்து துரத்திவெளியே அனுப்புகிறது என்பதை புரிந்து கொள்கிறான். இவ்வளவு அழகான தூய்மையான பெண்ணை கூட கஷ்டப்படுத்தி வேதனை கொள்ள வைப்பது யார் என்று தெரியாமல் குழம்பி போகிறான்.

கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதை போல அவள் முன்னால் அவனது எண்ணங்கள் ஒவ்வொன்றாக பிரதிபலிப்பாகின்றன. அதுவரை மனதில் ஊறிக்கிடந்ததை அவளது வருகையே வெளிப்படுத்த வைக்கிறது. எது அவனை இப்படி நிலை கொள்ளாமல் தள்ளாடசெய்கிறது.

உண்மையில் தனது தனிமையை கண்டே நடுங்குகிறான். நண்பர்களும் கைவிட்டு போனார்கள் என்ற சூழலில் தனிமையை எதில் கரைத்து கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவன் மனது வெறுமையால் எதைஎதையோ கற்பனை செய்கிறது. அந்த கற்பனை அவனை மேலும் உலகை நோக்கி ஆசையுடன் உந்தி தள்ளுகிறது. ஆனால் புறஉலகை நேர் கொள்ளும் தைரியம் அவனிடமில்லை.

அவன் பகலில் ஒளிந்து கொள்கிறான். இரவில் மட்டுமே வெளியே வருகிறான். இரவில் உறக்கமற்று நடமாடுபவர்கள் நிம்மதியற்றவர்கள். வீடு அவர்களை சாந்தம் கொள்ள செய்ய முடியவில்லை. என்று கூறுகிறான். இயற்கையின் மாறுபாடு போன்றதே அவன் மனப்போக்கும்.

இரவில் ஒளிரும் சூரியனால் என்ன பயனிருக்கிறது. பகல் ஏன் நீண்டு போகிறது. பகல் அடங்காமல் இரவு வருவதில்லை. ஆனால் கோடைகால இரவு ஏன் சிறியதாக இருக்கிறது. தனது மனதின் நிறைவேறாத காதலை போன்றதே இத்தகைய இரவுகள் என்று நம்புகிறான் அவன்.

அவனது இரண்டாவது இரவில் அவள் பெயர் நாஸ்தென்கா என்று அறிந்துகொள்கிறான். அந்த பெயரை சொல்வதிலே தித்திப்பு கொள்கிறான். திரும்ப திரும்பி சொல்லி களிப்புறுகிறான். திடீரென அவளது பெயர் சுவைக்கபடும் இனிப்பு மிட்டாய் போலாகிறது. அந்த சொல்லை தன் நாவில் கரைந்துபோக செய்கிறான். நாஸ்தென்கா அவனது மிதமிஞ்சிய உணர்ச்சிபீறடலை புரிந்து கொள்கிறாள். தனது கதையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்

நாஸ்தென்காவிற்கு வயது பதினேழாகிறது. அவள் பாட்டியுடன் ஒரு வீட்டில் வசிக்கிறாள். பாட்டிக்கு கண்தெரியாது. அவர்கள் வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அங்கே ஒரு இளைஞன் குடிவருகிறான். பாட்டி அவனோடு பேசக்கூடாது. பழக்கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறாள். எங்கே தன்னை மீறி பேத்தி போய்விடுவாளோ என்று அவளது பாவாடையை தன்னோடு ஊக்குபோட்டு குத்திக் கொள்கிறாள். அதனால் நாஸ்தென்காவால் எழுந்து போக முடியாது. அப்படியிருந்தும் நாஸ்தென்கா அந்த இளைஞனால் வசீகப்படுகிறாள்.

அவன் அவளுக்காக படிக்க புத்தகங்கள் தருகிறான். அந்த புத்தகங்கள் அவளை மாற்ற துவங்குகின்றன. உலகம் வெளியில் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்பதை புத்தகங்களே உணர்த்துகின்றன. புத்தகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிடுகிறாள். அதை பயன்படுத்தியே அவளை காதலிக்க துவங்குகிறான். அவளையும் பாட்டிûயையும் அழைத்து கொண்டு ஒபரா பார்க்க செல்கிறான். அவன் மீது தீராத காதல் கொள்கிறாள் நாஸ்தென்கா. அவன் ஊருக்கு கிளம்பும் நாளில் தானும் கூட வருவதாக பெட்டியோடு கிளம்புகிறாள். அதை எதிர்பாராத அவன் திரும்பி வந்து அவளை அழைத்துபோவதாக வாக்குறுதி தந்து விடைபெறுகிறான். அன்றிலிருந்து அவனுக்காகவே நாஸ்தென்கா காதலுடன் காத்திருக்கிறாள்.

நாஸ்தென்காவின் காதலையும் தனிமையே உந்தி தள்ளுகிறது. அவள் பாட்டியோடு பிணைக்கபட்டு இருப்பதில் இருந்து விடுபட விரும்புகிறாள். அதுவே ஒருவனை காதலிக்கும்படியாக செய்கிறது. அந்த காதலை அவன் உணர்வதேயில்லை. அவள் தீவிரமாக காதலை நம்ப துவங்குகிறாள். காத்திருப்பதன் வழியே தான் காதல் உறுதியாகிறது என்று சொல்கிறாள்

நாஸ்தென்காவின் பாட்டி அற்புதமான கதாபாத்திரம். அவளுக்கு பார்வை மங்கிவிட்டிருக்கிறது. ஆனால் கடந்த காலம் நினைவில் பசுமையாக இருக்கிறது. அவளது இளம்பருவத்தில் அடித்த வெயில் அழகாக இருந்தது. அது போல இப்போது இல்லை என்று அடிக்கடி குறிப்பிடுகிறாள். இயலாமை தான் அவளது குருட்டுதனம். அடுத்த அறையில் உள்ள ஆண் தன் பேத்தியை வசீகரிப்பது அறியாத முட்டாள் இல்லை. மாறாக அது தான் தனக்கிருக்கும் ஒரே சாத்தியம். வேறு வழியில் தன் பேத்திக்கு உரிய மாப்பிள்ளையை தன்னால் தேடி தர இயலாது என்று அவள் அறிந்திருக்கிறாள்.

நாஸ்தென்காவை காதலிப்பவன் The Barber of Seville என்ற ஒபராவை காண அழைக்கும் போது அவளிடம் துளிர்ப்பது அவளது கடந்த கால காதலே. அது சொல்லபடாமல் கடந்து போகிறது. இந்த ஒபராவின் கதாநாயகி காதலுக்காக ஏங்குபவள். Gioachino Rossini ஒபராவும் நாஸ்தென்காவின் வாழ்க்கையும் ஒரு தளத்தில் ஒன்று போலவே உள்ளது. அதை சுட்டிக் காட்டுவதற்காகவே இதை பயன்படுத்தினாரோ என்னவோ.

ருஷ்ய கலாச்சாரத்தின் மீது பிரெஞ்சு கலாச்சாரம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து செகாவ், டால்ஸ்டாய் போன்றவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இக்கதையிலும் நாஸ்தென்கா பிரெஞ்சு புத்தகங்களை தான் படிக்கிறாள். பிரெஞ்ச் கலாச்சாரம் தங்களை விட உயர்வானது என்று மனப்பாங்கு ரஷ்யாவில் மேலோங்கியிருந்திருக்கிறது.

வெண்ணிற இரவுகளில் வரும் ஆணும் பெண்ணும் காதலின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். காதல் மட்டுமே தங்களுக்கான விடுதலை என்று உணர்கிறார்கள். நாஸ்தென்கா தன்னை காதலித்து கைவிட்டவன் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்றே வருத்தபடுகிறாள். அதே மனநிலை தான் கனவுலகவாசிக்கும் ஏற்படுகிறது.

அவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை. பேசி களைத்து போகிறார்கள். ஆனால் இருவருமே உடலை பெரிதாக எண்ணவில்லை. உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்ளவும் அரவணைக்கும் விரும்புகிறார்கள். தனது உருவத்தை கண்ணாடியில் பார்ப்பது போலவே நாஸ்தென்கா வழியாக தனது ஆசைகளை காண்கிறான். காதல் அவர்களை பித்தேற்றுகிறது.

அந்த பெண்ணிற்கு உதவுவதற்காக அவள் காதலனை தேடி போகிறான். அவளது கடிதத்தை தருகிறான். ஆனால் காதலன் நாஸ்தென்காவை பிடிக்கவில்லை என்று விலக்கவே அவளுக்காக துயரம் கொள்கிறான். முடிவில் நாஸ்தென்கா காதலன் உடன் ஒன்று சேர்ந்துவிடுகிறாள்.

அப்போது திடீரென காதலன் முன்பாகவே நாஸ்தென்கா ஒடிவந்து கனவுலகவாசியை கட்டிக் கொள்கிறாள். அந்த அரவணைப்பு பிரிவின் வலியை அவனுக்குள் நிரப்புகிறது. நிமிச நேரம் அந்த அணைப்பு நீள்கிறது. பின்பு அவள் காதலன் உடன் போய்விடுகிறாள். இந்த ஒரு நிமிசம் போதும் வாழ்வதற்கு என்று பெருமூச்சுவிடுகிறான் கனவுலகவாசி.

வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது. ஆனால் அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது.பிரிவே காதலை உணர செய்கிறது.

அவ்வகையில் எப்போது வாசிக்கையிலும் வெண்ணிற இரவுகள் நிராசையின் முடிவில்லாத பாடலை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கின்றன.
*

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

HISTORY OF INDIA: Chalukya Dynasties

பட்டாடக்கல் கோவில் 

விக்ரமாதித்யன் 2

 

கி பி 696 முதல் தொடங்கியது சாளுக்கிய நாட்டில் விஜயாதித்யன் ஆட்சி.

நாடு அமைதியாக இருந்தது. செல்வம் கொழித்தது. கோவில்கள் கட்டப்பட்டன. நாற்பது வருடங்கள் அமைதி.

அமைதிக்கும் நமக்கும் தான் விரோதமாயிற்றே! அமைதியில் சுவாரஸ்யம் என்ன இருக்கிறது?

சரி.. காலத்தை கொஞ்சம் ஃபாஸ்ட் பார்வர்ட் செய்யலாம்! ஒரு சரித்திர எழுத்தாளருக்கே இது சாத்தியமாகும்!

கி பி 728 : சாளுக்கிய மன்னன் விஜயாதித்யன் வயதாகி நோய்வாய்ப்பட்டிருந்தான். அவன் மகன் யுவராஜா இரண்டாம் விக்ரமாதித்யன் – வல்லவனாக வளர்ந்திருந்தான்.

தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால் ஆட்சி பெரும்பாலும் விக்ரமாதித்யனிடமே இருந்தது.

கி பி 733

அன்றைய சாளுக்கிய செய்தித்தாட்களில் தலைப்புச் செய்தி:

மன்னன் விஜயாதித்தன் மரணம்!

இரண்டாம் விக்ரமாதித்யன் சாளுக்கிய மன்னனானான்.

அந்நேரம் அரபு நாட்டினர் சிந்து மாநிலத்தில் சில இடங்களைப் பிடித்துக் கொண்டனர். தக்ஷிணத்தைத் தாக்க முற்பட்டனர்.

சாளுக்கிய நாட்டின் வடக்கே விக்ரமாதித்யனின் ஒன்று விட்ட சகோதரன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயரும் புலிகேசி!

அவன் அந்த அரபுத் தாக்குதலை முறியடித்துத் துரத்தினான். இந்த சகோதரன் புலிகேசியின் வெற்றியைக் கண்டு விக்ரமாதித்யன் மகிழ்ந்தான். அவனுக்கு ‘அவனிஜனாஸ்ரயா’ – அதாவது ‘அகிலத்தின் மக்களின் காவலன்’ – என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தான்.

இராஷ்ட்ரகூடம் என்ற நாடு சாளுக்கிய மன்னனின் கீழ் அன்று ஒரு குறுநில ராஜ்யமாக உதயமாகி இருந்தது. அதன் மன்னன் தந்திவர்மனும் அரபுத் தாக்குதலில் புலிகேசிக்கு உதவி செய்து விக்ரமாதியாதித்யனிடம் பாராட்டு பெற்றான்.

சரி.. இந்த இரண்டாம் விக்ரமாதித்யன் என்ன செய்தான்? உங்கள் ஊகம் சரி தான்! பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். ஒரு முறையல்ல. இரு முறையல்ல. மூன்று முறை.

அந்தக்கதை சொல்லுமுன்…

அதே நேரம் பல்லவ நாட்டில் – செய்தித்தாட்களில் தலைப்பு செய்தி:

மன்னன் ராஜசிம்மன் மரணம்! பல ஆண்டுகள் ஆண்டு கைலாசநாதர் கோவிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் காலமானான். அவன் மகன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் அரசனானான். முதல் சில வருடங்கள் பொதுவாக அமைதி நிலவியது. பரமேஸ்வரன் திருவடியில் சிவன் கோவில் கட்டினான்.

ஆட்சிக்கு வந்து மூன்றே ஆண்டில் பல்லவ நாட்டுக்கு கஷ்ட காலம் வந்தது. அது இரண்டாம் விக்கிரமாதித்யனால் வந்தது. அப்பொழுது அவன் சாளுக்கிய யுவராஜாவாகத்தான் இருந்தான். அவனுக்கு உதவியாக கங்க நாட்டு யுவராஜன் ஏரயப்பா.

இந்தச்  சண்டை பல்லவனுக்குப் பெரும் அனர்த்தமாக முடிந்தது. உடன்படிக்கைக்குப் பெரும் விலை கொடுக்கப்பட்டது. வெகு விரைவில் இரண்டாம் பரமேஸ்வரன் கங்கநாட்டுக்குப் படையெடுத்தான்.

கங்க மன்னன் ஸ்ரீபுருஷாவுடன் போர். அது பல்லவருக்குப் பேரழிவைக் கொண்டு வந்தது. ஸ்ரீபுருஷன் இரண்டாம் பரமேஸ்வரனைக் கொன்று அவனது அரசுக் குடையையும் கொற்றத்தையும் கைப்பற்றினான்.

இப்பொழுது கதையை சற்று நிதானமாகப் படியுங்கள்.

பல்லவ நாடு பெரும் பாதிப்பில் ஆழ்ந்தது.

இரண்டாம் பரமேஸ்வரனுடன் சிம்மவிஷ்ணு மரபு முடிந்துவிடுகிறது. சிம்மவிஷ்ணு – மகேந்திரன், நரசிம்மன் என்று அசத்திய பல்லவ வாரிசு வம்சம் முடிந்தது.

அட பல்லவர்கள் அவ்வளவு தானா என்று கவலைப்படவேண்டாம்!

சிம்மவிஷ்ணுவின் தந்தை யார்? சிம்மவர்மன்!

சரி அந்தப் பழைய கதை இப்ப எதுக்கு என்று தானே கேட்கிறீர்கள்? பொறுமை! சிம்மவர்மனுக்கு இன்னொரு மகன் இருந்தான். அவன் சிம்மவிஷ்ணுவின் தம்பி. பெயர் பீமவர்மன்.

சிம்மவிஷ்ணு ராஜாவான பிறகு பீமவர்மனுக்கு என்ன எதிர்காலம் இருக்கும்?

அவனது பேரனுடைய பேரன் நந்திவர்மன் ஒரு நாள் பல்லவ மன்னனாவான் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.. விசித்திரமான உலகம்…

உண்மையில் இரண்டாம் பரமேஸ்வரனுக்கு சித்திரமாயன் என்ற மகன் இருந்தான். அவன் சிறுவனாக மட்டும் இல்லை. உதவாக்கறையாகவும் இருந்தான். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்தான்.

பரமேஸ்வரன் மரணத்திற்குப் பின் சித்திரமாயன் தனக்கு ஆதரவு தேடி பாண்டிய மன்னன் உதவியை நாடி மதுரை சென்றான்.

பீமவர்மன் வரிசையில் வந்த இரண்யவர்மனை (நந்திவர்மனின் தந்தை) காஞ்சிப் பெரியவர்கள் மற்றும் அமைச்சர்கள் அணுகினர்.

அங்கு ஒரு சிறுகதை பிறக்கிறது:

மந்திரிமார்கள் இரணியவர்மனிடம் : “அரசே! நமது பல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வரன் தோற்று இறந்தான். சாளுக்கியர், கங்கர், பாண்டியர் அனைவரும் காஞ்சியைக் கொத்திவிடத் துடிக்கின்ற சமயம் இது. சித்திரமாயன் ஒரு உதவாக்கரை. பாண்டியனிடம் அடிமையாகக் கிடக்கிறான். காஞ்சியைக் காக்க உங்களை விட்டால் யாரும் கிடையாது. சிம்மவிஷ்ணு தொடங்கிய பல்லவ வாரிசு இன்று செல்லரித்து விட்டது. சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மனின் வழித்தோன்றல் தாங்கள். பல்லவ மன்னனாக முடிசூடி காஞ்சியைக் காக்க வேண்டும்.” – என்றனர்.

இரண்யவர்மன் அன்று எண்பது வயதைத் தாண்டியிருந்தான்.

இந்நாளில் அந்த வயதில் பிரதம மந்திரி – ஜனாதிபதி வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்நாட்களில் மன்னன் என்பவன் நாட்டைக் எதிரிகளிடமிருந்து காப்பது மட்டுமல்லாமல் போரிடவும் வேண்டும். தள்ளாத வயதில் மன்னனாக வந்து என்ன செய்வது?

இரண்யவர்மன்: “மந்திரிகளே! என் மீது நீங்கள் அபிமானம் வைத்து கேட்கிறீர்கள். என் வயது என்னைத் தடுக்கிறது. எனக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் அரசானவது உசிதமாக இருக்கும்” என்றார்.

“நல்ல யோசனை. உங்கள் மூத்த மகனை மன்னனாக்கலாம்” – என்றனர். மூத்தவன் அழைக்கப்பட்டான்.

மன்னனாவது எல்லா மனிதருக்கும் என்றுமே ஒரு பெருங்கனவு. மன்னனாவதற்காக உடன் பிறந்தவர்களைக் கொல்வது என்பது எவ்வளவு முறை விலாவாரியாக சரித்திரத்தில் பேசப்பட்டிருக்கிறது?

ஆனால் அன்று பல்லவ நாட்டின் நிலைமையே வேறு! அது காஞ்சி என்ற அழகு சுந்தரியை மோகங்கொண்ட எதிரிகள் கழுகு போல் கொத்தித் தின்னக் காத்திருக்கும் நாட்கள். மன்னன் என்று சொல்வதை விட மண்ணோடு மண்ணாக அழிவது என்ற சொல் சாலச்சிறந்தது. அந்த நிலை அன்று. இரணியவர்மனின் மூத்த மகன் மட்டுமல்ல – மற்ற இரண்டு தம்பிகளும் பல்லவ மணிமுடியைப்  புறக்கணித்தனர்.

நான்காவது மகன் இளையவன். பன்னிரண்டு வயது நிரம்பிய சிறுவன் – நந்திவர்மன். அவன் “நான் மன்னன் ஆகத் தயார்” என்றான்.

மந்திரிகள் இப்போது சங்கடத்துக்கு உள்ளானர். ‘இன்னொரு சிறுவனா’? இரணியவர்மன் சொன்னான்: “கவலை வேண்டாம். நந்திவர்மன் மன்னனாகட்டும். நான் அவன் பின்னிருந்து அவனையும் – இந்நாட்டையும் வழி நடத்துவேன்” – என்றான். பன்னிரண்டு வயதே இருந்தாலும் நந்திவர்மானது அறிவும், துணிச்சலும், வீரமும் நாடு முழுதும் பரவியிருந்தது. மக்கள் அவனை பெரிதும் விரும்பினர். மந்திரிகள் நினைத்தனர்: ‘சித்திரமாயனும் – நந்திவர்மனும் ஒரே வயதினர். இருப்பினும் அவர்கள் இருவரிடமும் தான் எத்தனை வித்தியாசங்கள்”. மந்திரிகள் மகிழ்ந்தனர்.

நந்திவர்மன் காஞ்சி நகர் நோக்கிப் பயணித்தான்.

அவனுடன் பல்லவ தளபதி ‘உதயசந்திரன்” கூட வந்தான்.

காஞ்சி அருகில் பல்லவாடி அரையர் என்ற குறுநில மன்னன் நந்திவர்மனை யானை மீது அமர்த்திக் கூட்டி வந்தான். நந்திவர்மன் காஞ்சி நுழைந்தான். அவனுக்கு காஞ்சி மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். காடக முத்தரையர் என்ற குறுநில மன்னன் அவனை வரவேற்றான்.

அடுத்த நாளே நல்ல நாள். அன்றே முடிசூட்டினர். ‘பல்லவ மல்லன்’ என்ற பட்டப்பெயர் அளித்தனர்.

சித்திரமாயன் மதுரையில் இருந்தான் – நந்திவர்மன் காஞ்சி மன்னனானதை உடனே அறியவில்லை. சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்யனுக்கும் இந்த பட்டாபிஷேகம் ரசிக்கவில்லை. சித்திரமாயனும் விக்ரமாதித்தியனுக்கு ஓலை அனுப்பி உதவி கேட்டான்.

கி பி 741

விக்ரமாதித்யன் விரைவில் படைகளைத் திரட்டிக்கொண்டு கங்க மன்னன் ஸ்ரீபுருஷன் துணையுடன் காஞ்சி படையெடுத்தான். இது அவனுக்கு இரண்டாம் முறை. பல்லவன் நந்திவர்மன் தோல்வியடைந்தான். அவனது குடையும் கொற்றமும் பறிபோனது.

நந்திவர்மன் காஞ்சியை விட்டு வெளியேறி அருகிருந்த நட்பு நாட்டில் இருந்தான். விக்ரமாதித்யன் காஞ்சியில் நுழைந்தான். நரசிம்மன் வாதாபியை கொளுத்தி அழித்தது அவன் மனதில் வண்ணப்படமாக ஓடியது. ராஜசிம்மன் கட்டிய ‘கைலாசநாதர் கோவிலுக்குப் போனான். புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்த கோவிலின் அழகு அவன் மனதை பெரிதும் கவர்ந்தது. கோவிலில் பொன்னும் பொருளும் ஏராளமாக இருந்தது. சாளுக்கிய தளபதி அந்த செல்வங்களைக் கொண்டு வந்து மன்னனின் காலடியில் வைத்தான்.

விக்ரமாதித்யன்: “தளபதி.. இந்த செல்வங்களையெல்லாம் இந்த கோவிலுக்கே கொடுத்துவிடு. அப்புறம் இந்நாட்டிலிருந்து எந்தச் செல்வத்தையும் நாம் எடுத்துச் செல்லலாகாது.” -என்று கண்டிப்பாக ஆணையிட்டான். காஞ்சியின் அழகு அவன் மனதை மயக்கியிருந்தது.

“தளபதி! இந்த காஞ்சி தெய்வத்தின் உறைவிடமாக திவ்யமாக இருக்கிறது. இதிலிருந்து ஒரு குண்டுமணியையும் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் காஞ்சி மக்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது.”

தளபதி “மன்னா? வாதாபி அழிந்ததை மறந்துவிட்டர்களா?..” என்று சொல்லி முடிப்பதற்குள் : விக்ரமாதித்யன்: “நான் நரசிம்மன் இல்லை. நான் ‘மனிதன்’” –என்று ரஜினி ஸ்டைலில் சொன்னான்.

தளபதி விக்ரமாதித்யனின் நல்ல மனதை கைலாசநாதர் கோவிலிலேயே கல்வெட்டில் பொறித்தான்.

விக்ரமாதித்யன் சித்திரமாயனை அரியணையில் அமர்த்தி விட்டு பாதாமி சென்றான்.

ஆனால் காஞ்சி மக்கள் பல்லவ மல்லன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார்கள். நந்திவர்மன் மெல்லப் படைகளைத் திரட்டினான். சித்திரமாயனைத் துரத்தி விட்டு காஞ்சியில் அரியணையேறினான்.

விக்ரமாதித்யன் கோபம் கொண்டான். இரண்டு வருடம் கழித்து, விக்ரமாதித்யன் தன் மகன் – யுவராஜா கீர்த்திவர்மனை – படையுடன் அனுப்பினான். இராஷ்ட்ரகூட தந்திவர்மனும் கீர்த்திவர்மனுக்குத் துணையாக படையுடன் வந்தான். இது விக்ரமாதித்யனுடைய மூன்றாவது காஞ்சிப்போர். நந்திவர்மன் மீண்டும் தோற்றான். மீண்டும் ஓடினான் காஞ்சியை விட்டு.

பாதாமியை அடைந்த விக்ரமாதித்யன் தளபதியை அழைத்துச் சொன்னான்: “தளபதி! நமது சாளுக்கிய வம்சம் இன்னும் எத்தனை தலைமுறை வரும்?” என்றான். “அதற்கென்ன குறை மன்னா? வாழையடி வாழையாக என்றும் இருக்கும்” – என்றான்  தளபதி. வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த விக்ரமாதித்யன் சிரித்தான்:

“தளபதி! பல்லவ – பாண்டியர்கள் நம்மைப் பழி வாங்க வருவர். கங்க மன்னன் – பாணநாட்டு மன்னன் இவர்களும் குறுநில மன்னர்கள். இராஷ்ட்ரகூட தந்திவர்மனுக்கும் பேரரசு நிறுவ வேண்டும் என்ற பேராசை உள்ளது. சாளுக்கிய மன்னன் ஒரு கணம் கண் இமைத்தாலும் அழிக்க அனைவரும் காத்திருக்கின்றனர்.” -என்றான்.

தளபதி: “தங்களைப் போல மாவீரர் தென்னிந்தியாவில் இன்று யாருண்டு மன்னா? ஏன் இந்தக் கலக்கம்?”.

“தளபதி! மாபெரும் சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாக மடிந்தன. மௌரியர்கள் – குப்தர்கள் எனன் ஆனார்கள்? சாளுக்கிய வம்சமும் ஒரு நாள் போய்விடும்” என்றான். அவன் எண்ணம் விரைவில் பலிக்கும் என்று அன்று யாரும் எண்ணவில்லை.  

சாளுக்கிய செய்தித்தாட்களில் கண்ணீர் அஞ்சலி: “விக்ரமாதித்யன் மரணம்”!

சாளுக்கிய உலகம் அழுதது. கீர்த்திவர்மன் சாளுக்கிய மன்னனானான். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை. விக்ரமாதித்யன் மரணம் தந்திவர்மனுக்கு  ஆசையை வளர்த்தது. சாளுக்கிய அரசு பல போர்களைக் கண்டு துவண்டு கிடந்தது.

தந்திவர்மனுக்கு இராஷ்ட்ரகூடத்தை பெரும் ராஜ்யமாக்க வேண்டும் என்று ஆசை. கீர்த்திவர்மனைக் கைவிட்டு நந்திவர்மனின் நட்புப் பாராட்டினான். தன் மகள் ‘ரேவா’வை நந்திவர்மனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். பல்லவப்படைக்கு தளபதி ‘உதயசந்திரன்’ தலைமை தாங்கியிருந்தான்.

ராஷ்ட்ரகூட-பல்லவ சேனை சாளுக்கிய கீர்த்திவர்மனைத் தோற்கடித்தது. கீர்த்திவர்மன் கொல்லப்பட்டான்.

விக்கிரமாதித்யனின் சந்தேகம் உறுதியானது. அத்துடன் சாளுக்கிய வம்சம் முடிந்தது. புலிகேசி கோலோச்சி பல்லவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அந்த ஒரு கணத்தில் சரித்திரத்தை விட்டு மறைந்தது.

ஒரு அரசின் முடிவில் இன்னொரு அரசு பிறந்தது.  இராஷ்ட்ரகூடம் பிறந்தது. பல்லவம் –  இராஷ்ட்ரகூடம் – கங்கர் -பாண்டியர் -இந்த ராஜ்யங்கள் இனிவரும் நாட்களில் தென்னிந்தியாவை எப்படியெல்லாம் கலக்கப் போகின்றன ?

அதைக் காணலாம். சற்றே பொறுத்திருங்கள்!

குவிகம் மின்னளவளாவல்

குவிகம்  இல்லத்தில் வாரம் தோறும் ஞாயிறு மாலையில் அளவளாவல் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனால் இது கொரானா காலம். நான்கு சுவார்களுக்கு மத்தியில் அனைவரும் இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. அறிவு பூரணமான செய்கையும் கூட. 

அப்படியானால்  அளவளாவல்? 

வழக்கம்போல ஏன் வழக்கத்தைவிடச்  சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 

எப்படி? ஜூம் என்ற செயலி மூலம் நம் கணினிகளை  இணைத்து வீடியோ ஆடியோ கலந்துரையாடல் நடத்தலாம் என்று தீர்மானித்தோம். 

நூறு பேர் கூட கலந்து கொள்ள முடியுமாம். 

இதை குவிகம் மின்னளவளாவல் என்று   குறிப்பிடுகிறோம் . 

   

அதன்படி நம் குவிகம் நண்பர்கள் கவிதை வாசிப்பு நிகழ்வு மார்ச் 22 அன்று நடைபெற்றது . 

கவிதையை ஒருவர் படிக்க மற்றவர்கள் அதை விமர்சனம் செய்தது நிறைவாக இருந்தது. 

அதன் ஆடியோ வடிவை இந்த வலைப்பக்கத்தகில் கேட்கலாம். 

https://www.podbean.com/media/share/pb-d6mvs-d6db41?utm_campaign=w_share_ep&utm_medium=dlink&utm_source=w_share

 

 

மார்ச் 29

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு சிறுகதைப் பற்றி நிறைய நண்பர்கள் மின்னளவளாவலில் பேசினார்கள்.  

 

 

ஏப்ரல் 5

இந்த வாரம் தமிழ் இனி என்ற குறும்படத்தைப்  பற்றி அழகாக விமர்சித்தோம் . 

ஏப்ரல் 12 

பிரபல   எழுத்தாளர் , தொலைக்காட்சி நாடக எழுத்தாளர் பா ராகவன்  அவர்களுடன் நேர்காணல். நாம் கேள்விக் கணைகளைத் தொடுக்க அவர் பதில் கூறியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.  

 

இனி வரும் வாரங்களில் இன்னும் தரமான சிறப்பான சம்பவங்கள் மின்னளவளாவலில் வர இருக்கின்றன. 

அலெக்ஸி – எஸ் எஸ்

Android Kunjappan Ver 5.25 | Photogallery - ETimes

EXT. AIRPORT SFO AN INTERNATIONAL FLIGHT IS LANDING AT SFO AIRPORT. YOU SEE THE BAGGAGE TERMINAL. RAMAN PILLAI (65) – DRAGGING CABIN BAG (ONLY CABIN BAG IS SHOWN) HIS FACE AND DRESS ARE SHOWN ONLY AFTER THE FIRST CHARACTER SPEAKS. SEVERAL PEOPLE ARE WALKING AROUND. YOU HEAR ANNOUNCEMENTS.

EXT. KESAVAN (35), BHARANI DAUGHTER N LAW (30) ARE WAITING AT THE BAGGAGE TERMINAL. TENSION IS SEEN ON THEIR FACES. SUDDENLY THERE IS A SURPRISE AND SHOCK ON THEIR FACES

 

KESAV

அப்பா! என்ன இது? இப்படியேவா வந்தீங்க?

Ext. Appa –raman pillai -non brahmin is shown in dhothi and vibuthi and chappal . Displeasure is seen on DIL’s face. On seeing his son, he leaves his cabin bag and leaps forward. Kesav rushes to take the Raman pillai’s cabin bag and stares his appa for a few second. Smile appears on Appa’s face and they hug each other.

BHARANI

என்ன அங்கிள் , இப்படி வேஷ்டி சப்பலோட வந்திருக்கீங்க!

PILLAI

இதுக்கு என்னம்மா குறைச்சல்? எனக்கு இது போதும். பிளேனில எல்லாரும் பாராட்டினாங்க! அது கிடக்கட்டும், எங்கே என் பேரன்?

KESAV

ஆதிக்கு இன்னிக்கு புட் பால் மேட்ச் ! அதனால அவன் வரலை ! பிளேனில வசதியெல்லாம் எப்படி இருந்துச்சு ? பொட்டியெல்லாம் எடுத்துகிட்டீங்களா?

PILLAI

ஒரு பிரச்சனையும் இல்லே! நல்ல வசதியா இருந்துச்சு. பொட்டியெல்லாம் எடுத்து வைக்க அந்தக் கருப்புசாமிதான் உதவினார்.

KESAV

கருப்புசாமியா? யாரு? அவரா ! ஓ கிரேட் ! பேரு நல்லா இருக்கே! வாங்க வீட்டுக்குப் போலாம்! அங்கே ஆதி கூட புதுசா இன்னொண்ணும் இருக்கு ! அது யாருங்க்கிறது சஸ்பென்ஸ் !

( கேசவ் , பரணி  இருவரும் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.)

 

Ext: an independent house  with a sticker  ‘SMART HOME’ . All the three people get down from the car and go near the main door.

KESAV

அப்பா ! அந்தக் கதவில தெரிற கண்ணடிக்கிட்டே உங்க முகத்தைக் காட்டுங்க!

ராமன் பிள்ளை கண்ணாடியை முறைத்துப் பார்க்கிறார்.  

Kural: ( An old lady voice is heard)

கேசவ் சார்,  பரணி மேடம் ! வெல்கம் ஹோம் !

ராமன் பிள்ளை ! உங்க பையன் வீட்டுக்கு முதல் முறையா வர்ரீங்க! உங்கள் வருகை நல்வரவாகுக! “

Kesav

நைஸ் அலெக்ஸி ! கதவைத் திற”

ALEXA:

Doors Open Automatically .

KESAV

அப்பா! இதைத் தான் நான் சொன்னேன் !  நம்ம வீடு ஒரு  ஸ்மார்ட் ஹோம் அலெக்ஸி  என்கிறது ஒரு கம்ப்யூட்டர் மனுஷி ! நம்ம வீட்டையே அவ தான் கண்ட்ரோல் செய்யரா! உள்ளே வாங்க! இன்னும் நிறைய இருக்கு உங்களுக்கு காமிக்க”

கேசவ் இரண்டு பெட்டிகளையும் அங்கே இருக்கிற ஒரு டிரெக்கில் வைக்கிறான்.

கேசவ்:

அப்பா உங்க கேபின் போட்டியையும் அந்த டிராக்கிலேயே வையுங்க ! அது உங்க ரூமுக்கு தானா வந்துடும்!  அலெக்ஸி ,  இந்த மூணு பெட்டியும்  கெஸ்ட் ரூமுக்கு போகணும்.  நாலாவது பேக் கிச்சனுக்குப் போகணும்

அப்பா! அலெக்ஸி ன்னு கூப்பிட்டு அதுக்கிட்டே ஏதாவது ரெண்டு வார்த்தை பேசுங்க , உங்க வாய்ஸை அது ரிககிநைஸ் பண்ணனும் ”

ராமன் :

என்ன பேசறது? சரி, அலெக்ஸி ! நல்லா  இருக்கியாம்மா?’

அலெக்ஸி :

ஒகே ! ராமன் சார் !, நான் உங்களை அங்கிள்னு கூப்பிடவா இல்ல வேற எப்படி அழைக்கணும்? “

ராமன்:

என்னை மாமான்னு   கூப்பிடு!

அலெக்ஸி :

ஓகே மாமா !

ராமன் ஆச்சரியத்தோட உள்ளே செல்கிறார்.

ராமன்:

எங்கேப்பா என் பேராண்டி?

கேசவ்:

அலெக்ஸி  ! ஆதி பத்தி சொல்லு!”

அலெக்ஸி :

“ ஆதி 8 மணிக்கு வந்தான். பீட்ஸா சாப்பிட்டான். இப்போ அவன் ரூமில தூங்கறான். அவனை எழுப்பட்டுமா? “

KESAV

வேண்டாம் !

Android Kunjappan Ver 5.25 (2019) - IMDb

மூவரும் கெஸ்ட் ரூமிற்குப் போகிறார்கள். ராமனோட மூணு பெட்டியும் அங்கே இருக்கிறது.

கேசவ்

அப்பா! இது தான் உங்க ரூம்!  இது பாத் ரூம். இப்படித் திருகினா சுடு தண்ணி வரும். கை கால் கழுவிட்டு  வாங்க ! சாப்பிடலாம் !

பாத் ரூமிற்குப் போகிறார்!

அலெக்ஸி : 

மாமா,  அந்த ஸ்டாண்டில துண்டு இருக்கு. சுடுதண்ணி பைப்பை நானே உங்களுக்கு சரியான சூட்டில திறக்கறேன். குளிக்கப் போறீங்களா? அந்த டாய்லெட்டில..

ராமன்:

அலெக்ஸி  !நீ கொஞ்சம் வெளியே போறீயா? நான் பாத்ரூம் போயிட்டுவந்து உன்னை கூப்பிடறேன்”  

அலெக்ஸி:

நல்ல ஜோக் மாமா! நீங்க குளிச்சுட்டு வாங்க! நடுவில ஏதாவது வேணுமுன்னா  கேளுங்க 

 

ஸீன்:

சாப்பாட்டு மேஜையில கேசவும் ராமனும் உட்கார்த்ந்து இருக்கிறார்கள். பரணி பறிமாறுகிறாள்.

கேசவ்:

அப்பா! பாருங்க ! உங்களுக்குப் பிடிச்ச ஆப்பம்,  சொதி, தேங்காய்ப்பால், இட்லி சட்னி,சாம்பார்   நல்லா  சாப்பிடுங்க!”

ராமன்

நல்லா இருக்குமா பரணி! எதுக்கு இத்தனை வகை  பண்ணியிருக்கே”

பரணி

ஐயோ, அங்கிள், இதெல்லாம் நான் செய்யல! . எல்லாம் அலெக்ஸி  தான்.செஞ்சிச்சு.  நீங்க வரப்போறதையும் உங்களைப் பத்தின எல்லா விவரத்தையும்  அதுக்கிட்டே  சொன்னோம். அது இனிமே உங்களுக்குத் தேவையானது எல்லாத்தையும் பாத்துக்கும்”

ராமன்:

அதுக்காக பாத் ரூமிலேயும் அவ இருக்கணுமா?

கேசவ்:

ஐயோ அப்பா! அது ஒரு கம்ப்யூட்டர்! ஆளு இல்லே ! இந்த வீடு ஒரு ஸ்மார்ட்  ஹோம் . இங்கே எல்லாத்தையும் அலெக்ஸியே  செஞ்சுடும்.

ராமன்

அதெப்படி?

கேசவ்:

இங்கே பாருங்க ! அலெக்ஸி ! அப்பாவுக்கு அவருக்குப் பிடிச்ச காபி  சூடா கொண்டுவா !

அப்போது மூலையில் இருந்த ஒரு ரோபோ கிச்சனுக்குள் சென்று ஒரு பித்தளை டவரா டம்ப்ளரில் காபி எடுத்துக் கொண்டு வருகிறது. ராமன் அசந்து போகிறார்.

ராமன்

இதுதான் அலெக்ஸியா? 

கேசவ்:

அலெக்ஸி என்கிறது கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர். இந்த ரோபோ எல்லாம் அலெக்ஸி  சொன்னபடி கேட்கும். நம்ம வீட்டிலே  ரெண்டே ரெண்டு ரோபோ தான் இருக்கு. கீழே ஒண்ணு, மாடியில ஒண்ணு.

பரணி:

மாமா! நாளைக்கு காலைல நானும் கேசவும் ஆபீஸ் போயிடுவோம். ஆதியும் ஸ்கூலுக்குப் போயிடுவான். நீங்க தனியா இருக்கணுமேன்னு கவலையே படாதீங்க, அலெக்ஸி   எல்லாத்தையும் கவனிச்சுக்கும்.

ராமன்:

எனெக்கென்னமா வேணும் ? சும்மா கிடந்தாலே போதும்.. அது சரிம்மா! இந்த அலெக்ஸி  வேற என்ன பண்ணும்?

பரணி:

இப்போ பாருங்க !

அலெக்ஸி , வீட்டு டெம்பரெச்சரை 70க்கு வைச்சுடு!  அப்பறம் நாளைக்கு காலேல  டிபனுக்கு , கொஞ்சம் இரு,  அங்கிள், உங்களுக்கு வெள்ளைப் பணியாரமும் சட்னியும் பிடிக்குமில்லே?

ராமன்:

அது கேசவனுக்கு ரொம்பப் பிடிச்சது. அதனால வீட்டில எல்லாருக்கும் பிடிக்கும்

பரணி:

அங்கிள்  அதையே பண்ணிடலாம் அலெக்ஸி  ! அதையே செஞ்சுடு.

அப்பறம், அலெக்ஸி  !  மாமாவோட போட்டியாத் தொறந்து அதில இருக்கிற துணியை எல்லாம் கிலோஸெட்ல வைச்சூடு. அழுக்குத் துணி இருந்தா தோய்ச்சு எடுத்து வைச்சுடு. அவருக்கு வேணுமுன்ன  டிவியைப்போட்டு அதில சன் டிவி சானலைப் போடு!  சாப்பிட்டு முடிஞ்சதும் தட்டையெல்லாம் டிஷ் வாஷரில போட்டிடு. காலையில வீட்டைப் பெருக்கி மொழுகணும். நாளைக்கு எங்க மூணு பேருக்கும் சாப்பாடு வழக்கம்போல எடுத்து  வைச்சுடு!

 

அப்பறம் முக்கியமா, இப்போலேர்ந்து அங்கிளுக்கு நீதான் எல்லா உதவியும் செய்யணும். அவர் கேட்கலைன்னு  நீ சும்மா இருக்கக் கூடாது.  அவருக்குத் தேவையானதை வேணுமான்னு கேட்டு சொன்னபடி செய்யணும். ஒகேயா?

அலெக்ஸி :

ஓகே, மேடம்,  அவர் அங்கிள் இல்லை எனக்கு.  மாமா.. நான் பாத்துக்கறேன் !

கேசவ்:

அப்பா! டயர்டா இருப்பீங்க ! படுத்துத்  தூங்குங்க ! நாலைக்குக் காலையில  நாம அதிகமா பேசமுடியாது. மூணு பேரும் காலையில  7 மணிக்கெல்லாம் போகணும். சாயங்காலம் 5   மணிக்கெல்லாம் மூணு பேரும் வந்துடுவோம்.

அப்ப விவரமா நாம பேசலாம்.

 

ராமன் அறைக்குப் படுத்துக்  கொள்ளப் போகிறார்.

 

அலெக்ஸி :

மாமா!  உங்களுக்கு மொந்தன் பழம் பிடிக்குமில்ல , அதோ அந்த தட்டில இருக்கு சாப்பிட்டுட்டு படுத்துக்காங்க!

மாமா, மறக்காம உங்க ஆயுர்வேத மருந்தை சாப்பிடுங்க!

மாமா:  நீங்க எடுக்கற போர்வை குளிர் தாங்காது. அந்த சிவப்புக் கம்பளி எடுத்துப் போத்திக்கங்க!

மாமா, புது இடம் உங்களுக்குத் தூக்கம் வரலையா? உங்களுக்குப் பிடிச்ச திருப்புகழ் சொல்லட்டுமா?

திருப்புகழ் சொல்லுகிறது

மாமா: உங்களுக்குக் காலு கொடையுதா ? நான் உங்களுக்குக் காலைப் பிடிச்சு விடட்டுமா?

ராமன்:

உனக்கெதுக்கு சிரமம்?

அலெக்ஸி :   

எனக்கென்ன சிரமம்.!

ரோபோ ஒன்று வந்து அவர் காலைப் பிடித்து  விடுகிறது.

ஏன் மாமா, கண் கலங்கறீங்க ? எதுக்கும் கவலைப்படாதீங்க ! நான் உங்களைப் பாத்துக்கறேன்”

ராமன்

நீ தூங்கிக்க, அலெக்ஸி .. நானும் தூங்க முயற்சிக்கிறேன். …

 

மறுநாள் காலை!

 

கேசவ்:

அப்பா நல்லா தூங்கிநீங்களா?

 

ராமன்:

அடேடே ! ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்குத் தான் நல்லா  தூங்கிட்டேன் போலிருக்கு. நீங்க ரெண்டுபேரும் ஆபீஸ் போக தயாராயிட்டிங்களே? ஆதி எங்கே?

கேசவ்:

ஆதி ஸ்கூலுக்குப் பஸ்ஸில  போயிட்டான். நாங்களும் போயிட்டு வர்ரோம். எது வேணுமின்னாலும் அலெக்ஸி க்கிட்டே சொல்லுங்க . அது செஞ்சிடும். அவசரமானா  அதுவே எனக்குப் போன் பண்ணி சொல்லிடும்.

ராமன்:

நீங்க ரெண்டுபேரும் கவலைப்படாமே ஆபீசுக்குப் போயிட்டு வாங்க!  என்னைப் பாத்துக்க தான் அந்த டீலக்ஸா  இருக்கே !  இல்லை, அது பேரு என்னடா? மனசில சட்டுன்னு  தங்கமாட்டேங்குது.

கேசவ்:

அலெக்ஸி ப்பா ! அப்பா அந்தப் பேரு கஷ்டமாயிருந்தா உங்களுக்குப் பிடிச்ச பேரு அதுக்கு வைச்சுக் கூப்பிடலாம்! என்ன பேரு வைக்கலாம் சொல்லுங்க?

ராமன்:

அப்படின்னா அதை நான் எச்சுமின்னே கூப்பிடறேன்.

கேசவ்:

அப்பா!

ராமன்:

ஆமாண்டா! உங்க அம்மா பேருதான். அவ தான் என்னை மாமா மாமான்னு கூப்பிட்டு எனக்குத் தேவையானதெல்லாம் அவ உயிரோட இருக்கறவறைக்கும் செஞ்சா !  அவ என்னை விட்டுப் போனதினாலேதானே இங்கேயே வந்திருக்கேன்.

 

கேசவ்:

ஒகே  அப்பா!  நீங்க அலெக்ஸி வை அம்மா பேரைச் சொல்லி  எச்சுமின்னே கூப் பிடலாம்! அலெக்ஸி : உன் மாமாவுக்கு இனிமே நீ எச்சுமி. சரியா?

அலெக்ஸி :

ஓகே !

கேசவ் , பரணி : நாங்க போயிட்டு வர்ரோம் !

போகிறார்கள் !

Android Kunjappan Version 5.25 review: This Soubin-Suraj movie is ...

ராமன்:

எச்சுமி! உன் பிரிவைத் தாங்க முடியாம நான் துடிச்சது உனக்குப் புரியலையா? உன் நினைவை மறக்கணும்னு தானே அமெரிக்காவிக்கே வந்தேன். இப்போ என்னோட ஒவ்வொரு மூச்சிலும் நீயே இருக்கியே?

அலெக்ஸி / எச்சுமி

மாமா , என்ன சொல்றீங்க? நான் உங்களைவிட்டு பிரியவேமாட்டேன்! உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் நான் சேவை செஞ்சிக்கிட்டே இருப்பேன். அதுதான் எனக்கு இட்ட கட்டளை.

ராமன்:

எச்சுமி, உன் பிரிவை என்னால தாங்க முடியலைம்மா !

எச்சுமி:

மாமா! நான் உங்க கூடதான் இருக்கேன்..

ராமன்:

ஐயோ! எச்சுமி ! உனக்குப் புரியலையே! நான் துடிக்கிற துடிப்பு உனக்குத் தெரியலையே! எச்சுமி ! என்னை உங்கிட்டேயே அழைச்சுட்டுப் போயிடு.!

எச்சுமி:

மாமா! என்ன சொல்றீங்க? ஒண்ணும்  புரியலையே?

ராமன்

எச்சுமி! நான் புரியறபடி சொல்றேன்.. என்னை என் எச்சுமி கிட்டே சேர்த்துடு .ஏ அலெக்ஸி –  எச்சுமி,  என்னைக் கொன்னு போட்டுடு…    அதுதான் எனக்கு வேணும்.. அது தான் என்னோட கட்டளை!

எச்சுமி:

சரி மாமா !

 

சில வினாடிகளுக்குப் பிறகு

 

(ஒரு ரோபோ போன் பண்ணுகிறது.).

 

அலெக்ஸி :

கேசவ் சார்! மாமா உத்தரவுப்படி அவரை அவர் எச்சுமிக்கிட்டே சேர்த்திட்டேன்..

 

(END)

 

 

 

 

 

 

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

தமிழ்மகன்

 

தமிழ்மகன்.

இயற்பெயர் வெங்கடேசன் மற்ற  புனைப் பெயர்கள் வளவன், தேனீ.

டிவிஎஸ்- இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய போட்டியில் முதல்பரிசாக டிவிஎஸ் 50 பெற்றுத்தந்தது   ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ என்ற புதினம். பத்திரிகையாளரும் எழுத்தாளரும்   ஆன இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.  சுவாரசியமான நடையில் அறிவியல் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன. திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார்.

‘வெட்டுப் புலி’, ‘மானுடப் பண்ணை’, ‘ஆபரேஷன் நோவா’ ஆகிய புதினங்கள் மற்றும் ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’  என்னும் குறுநாவல்  பரவலாகப்  பேசப்பட்ட படைப்புகள்  செய்தியாளராகவும் இணை ஆசிரியராகவும் பல பத்திரிகைகளில் பணி புரிந்தவர். கிட்டத்தட்ட தமிழில் வெளிவரும் எல்லா தின, வார, மாத இதழ்களிலும் பணி புரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

***

இவரது ‘ஔவை’ சிறுகதை இப்படித் தொடங்குகிறது.

ஓர் ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் அமுதாவிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை.

அமுதா என் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள். ஆரம்பத்தில் அதை நான் அலட்சியம் செய்தேன்.

என்று தொடங்குகிறது.

அலுவலகத்தில் சக ஊழியையான அமுதா கதைசொல்லியுடன் இயல்பாகவும் சகஜமாகவும் பழகுகிறாள்.  ஹாஸ்டலில் தாங்கியிருப்பவள்.   மழை நாளொன்றில் கதை சொல்லியின் ஸ்கூட்டரில் இயல்பாகப்  பயணிக்கும் அளவிற்கு நல்லதொரு நட்பாக அது மலர்ந்திருக்கிறது.

இருவரும் பல்கலைக் கழகத்தில் பேராசிரியை ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள்.

எதிர்பார்க்காத தருணத்தில் “சொல்லுங்க சார்” என்றாள். எதைப் பற்றியாவது சொல்லிக்கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். நான் அப்படி நினைப்பதைப் புரிந்துகொண்டவள் போல “ஏதாவது சொல்லுங்க சார்” என்றாள் கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாகக் கவனித்தபடி.

நிகல் கோகாயின் ‘ஓவர்கோட்’ கதையைப் பற்றுச் சொல்கிறார் கதைசொல்லி. பிறகு, அமுதா சந்திக்கவிருந்த பேராசிரியை எடுக்கும் வகுப்பருகில் சென்று நிற்கிறார்கள்

ஒளவையார் என்ற பெயரில் பல பெண்பால் புலவர்கள் இருந்தார்கள். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவை வேறு. முருகனிடம் சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒளவை வேறு. ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபாடிய ஔவை மிகவும் பிற்காலத்தவள். ஏனென்றால் போர்த்துகீசியர்கள் வருகைக்குப்பின் தான் இங்கு வான்கோழி அறிமுகமானது. சங்க காலத்தில் காதலைப் பற்றிப் பாடிய ஔவைகளே அதிகம். ஆக, ஔவைகள் என்றால் பாட்டி என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய இளம் ஔவைகள் இருந்திருக்கிறார்கள் ….”

அமுதா நிஜமா என்று கேட்கிறாள். அப்படித்தான் இருக்கவேண்டும். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவையை இளம் பெண்ணாகக் கற்பனை செய்து பாருங்களேன் என்கிறார் கதைசொல்லி.

“நல்லா இருக்குல்ல?” என்று வியந்தாள். “சங்க காலத்தில் இவ்வளவு பெண்பால் புலவர்கள் வேறுமொழிகளில் இருந்தார்களானு தெரியல. இங்க இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே பெண்கள் ரொம்ப சுதந்திரமா இருந்தாங்கன்னு தெரியுது. ஒளவையும் அதியமானும் இன்டலக்சுவல் ஃப்ரண்ட்ஸா இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது.”

அமுதாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆறுமாதங்கள் நிழலாகத் தொடர்ந்தவள் ஹாஸ்டலை விட்டும் அலுவலகத்தைவிட்டும் விலக நேருகிறது.

இடையில் ஊரில் இருந்து அவள் “எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்” என்று போன் செய்தபோது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப் பட்டேன்.

அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது. “அதனால என்ன சார். நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்” எனக்குக் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. *அமுதா நீ ஏன் ஆம்பளையா பிறக்காமப் போனே? என்ன இருந்தாலும் நாம முன்னமாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?”

கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“முடியும் சார். நாம எப்பவும் போல இருக்கலாம் சார் … கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்.”

திருமண அழைப்பிதழுடன் வருங்காலக் கணவனுடன் கதைசொல்லியை நேரில் அழைக்க வருகிறாள் அமுதா. அவளுடைய ஒரு ஃபிரண்ட் வீட்டிற்கும், அவரது  ஒரு ஃபிரண்ட் வீட்டிற்கும் இருவரும் சென்று அழைப்பதாக ஒப்பந்தமாம். இவர்தான் என் ஒரே ஃபிரண்ட் என்று அமுதா சொல்லிவிட்டாளாம். (“ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல்”)

நல்ல தோழிக்கு நல்ல கணவன் கிடைத்ததில் கதைசொல்லிக்கு பெரும் மகிழ்ச்சி.

“சொல்லுங்க சார்”  என்றாள்.

 நான் எதை எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் “கார்ட்டூன் படங்கள்ல டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும் சி.டி. இருக்கு பாக்றீங்களா?” என்றேன். – “போடுங்களேன்” அதிர்ஷ்டக்காரர்தான் சொன்னார்.

பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தது மனம்விட்டுச் சிரித்தாள். “பிரில்லியண்ட் காமெடி..” என வியந்து கொண்டே அமுதா தன் ஹான்ட் பேகிலிருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.

நெல்லிக்காய்.

என்று கதை முடிகிறது.

மென்மையான உணர்வுகளை இதமான வார்த்தைகளில் அழுத்தமாகத் தெரிவிக்கும் நடையில் ஒரு அற்புதமான கதை

“இயலாமை நீங்கியது!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

இந்த மாதம் நான் பகிர்வது என் க்ளையண்ட் ஒருவரின் பயணம், அவர் பார்வையிலிருந்து. எங்களது ஸோஷியல் வர்க் விதிமுறைகளின் படி, எங்களை ஆலோசிப்பவர்களைப் பற்றி பகிரங்கமாக எந்த விவரமும் தரக் கூடாது. பெயரை, விவரங்களைச் சற்று மாற்றி, பொருளை மட்டும் விளங்கச் செய்வோம், கற்கும், கற்றுத்தரும் நோக்கத்துடன். இம்முறை, அதே நோக்கத்துடன், க்ளைன்ட் தன் அனுபவத்தைப் பகிர வேண்டுகோள் வைக்க, ஏற்றுக் கொண்டேன்.

Times of India on Twitter: "Chandigarh's Government Medical ...

 

இவர்களின் க்ளையன்டான நான், என்னுடைய மனநோய் கட்டத்தில் மன நலன் தடுமாறத் தொடங்கிய, பின்பு முழுமையான நலனை அடைந்த பயணத்தைப் பற்றி விவரங்களைப் பகிர விரும்புகிறேன். இந்த நலன் அடையும் பயணம் பல மாதங்களுக்கு நீடித்தது. இங்கே பகிருவது மேலோட்டமாகத் தான்.

இருபத்தி ஆறாவது வயதில் எனது தடுமாற்றங்கள் ஆரம்பித்தது. வேலைகளை முடிக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும். அதற்காக நான் தொலைப்பேசி பக்கத்தில் அமர்ந்து கொள்வேன். இல்லை தாளைக் கையில் எடுத்துப் பார்த்திருப்பேன். அழைக்கவா? எழுதவா? என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். தொலைப்பேசியில் அழைத்தால், பிறகு என்ன சொல்ல? வார்த்தை தான் வருமா? பயம் சூழ்ந்து கொள்ளும், வேலை எதுவுமே ஓடாது. வாழ்வின் மேல் கோபம் கூடியது. இருட்டான நாழிகைகள்.

எனக்கோ இந்த சங்கடங்களைப் பற்றி எங்கே எப்படிப் பகிர, யாரிடம் பேசுவது என்றதும் தெரியவில்லை. செய்து முடிக்க வேண்டிய வேலைகளோ அப்படியே நின்றபடி இருந்தது. வாழ்வில் ஒரு வெறுப்பு. வெளிச்சத்திற்கு இடமில்லை போல் இருந்தது.

செயலற்ற நிலையிலிருந்தேன். இதுவே மேலும் உள்ளத்தில் தடை ஏற்படுத்தும் வகையில் இயங்கியது. வாழ்வே நின்று விட்ட நிலையில் இருப்பது போலத் தோன்றியது. இந்த குழம்பிய நிலையில் நான் முதல் முதலில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரை சந்தித்தேன்.

ஆரம்பமாகியது ஸெஷன்கள். என்னுடைய நிலைமைகள் எவ்வாறு, செயல்பட முயற்சிக்கும் போது நேர்ந்த அனுபவங்கள், ஏன் அவ்வாறு செய்தேன் என்றதைப் பற்றிப் பல வாரங்களுக்கு விரிவாக ஆராய்ந்தோம். மிக மெதுவாக, போகப் போக அவற்றின் பிணைப்புகளை அறிந்து கொண்டேன். திகைத்தேன்.

அதன் பிறகே, எதெல்லாம் இப்படி செயலற்ற நிலைமை நேரச் செய்கிறது என்பதை அடையாளம் காண ஆரம்பித்தேன். ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் எப்போதுமே என்னுள்ளே எதிர்மறை எண்ணங்கள் உடனடியாக உண்டாவதைக் கண்டுகொள்ள முடிந்தது. இதனால் தான் மனச் சஞ்சலம் ஏற்பட்டு, ஸ்தம்பித்துப் போய் விடும் நிலைமை, என்பது ஒப்பிட்டுப் பார்த்ததில் தெரிந்தது.

முதலில் இதை ஏற்றுக்கொள்ள மனம் போராடியது. எண்ணங்களைப் பதிவு செய்து, ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கருடன் உரையாடிய பின் அவற்றை அடையாளம் கண்டேன், ஏற்றுக் கொண்டேன்.

வாரங்கள் போக, என்னில் உள்ள பல பரிமாணங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஓரிரு அனுபவங்களை விவரிக்க விரும்புகிறேன். புது இடங்களில், அல்லது மனிதர்களிடம் பேச வேண்டுமென்றால் தயக்கம் கவ்விக் கொள்ளும். ஒரு வேளை இந்தத் தடையைத் தாண்டி பேசி விட்டால், மேற்கொண்டு என்ன சொல்ல என்பதற்கு விழிப்பேன். இந்தத் தருணங்களில் அச்சம் சூழ்ந்து, மனம் படபடவென்று அடிக்கும். அங்கிருந்த சென்று விடலாம் என்றால், அதுவும் மரியாதை இல்லை என்று தெரியும்.

சமூகத் திறன் நொறுங்கி இருக்கும். ஏதேதோ எண்ணங்கள் ஓடும். மனமோ “ஓடிவிடு, போ போ” என்றே சொல்லும். மன்னிப்பு கேட்டுச் சென்று விடலாம் என்றால் அதற்கும் என்ன சொல்ல என விழித்துக் கொண்டு, உறைந்து நிற்பேன். பார்ப்பவர்கள் என்னை முட்டாள், கோழை என்றே நினைத்து இருப்பார்கள் என்ற சிந்தனை வேறு ஓடும். பூமியில் தன்னைப் புதைத்துக் கொள்ளலாம் போலத் தோன்றும். படிக்கும் உங்களுக்கு இது சில்லியாக இருக்கலாம். என் நாட்களோ இதுபோலத்தான் ஓடிக்கொண்டு இருந்தது!

இது போல நிகழும் போதெல்லாம் மற்றவர்கள் என்னை எடை போடுவது போலவே தோன்றும். என்னுடன் இருக்க, பழக, தோழமை கொள்ள யாருக்கும் பிடிக்கவில்லை என்று தோன்றியது. அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது என்று, இந்த சிந்தனைகளை நினைவிலிருந்து தள்ளிவிட முயற்சி செய்து, தோல்வி அடைந்தது தான் மிச்சம். இவ்வாறு நினைவுகளைத் தள்ளி விடுவது தீர்வுக்கு வழி இல்லை என்பது ஸெஷன்களில் புரிந்தது.

எனக்கு நடப்பவற்றை, சூழலால் ஏற்படும் அதிர்வுகளை, உணர்வுகளின் பரிமாணங்களை, உறவுகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்வதற்கு, அந்த நினைவலைகளைக் குறித்துக் கொள்ள முடிவு செய்தோம். ஏன்? ஒவ்வொன்றையும் நினைவு படுத்திக் கொள்வது, உணர்வைத் தூண்டும். நடந்த போது எப்படி இருந்ததோ அச்சு அசலாக இப்போதும் இருக்கும். இப்படிச் செய்ததில் அப்போது நான் என்ன நினைத்தேன், அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்து கொள்ள முடிந்தது. ஆமாம் நீங்கள் நினைப்பது போல் இது அவ்வளவு எளிதான செயல் இல்லை. நினைவு அலைகள் சங்கடத்தைத் தர, அப்போது தான் உடல்-மனம் மொழியை அடையாளம் காண முடிந்தது.

இந்த நினைவுகளில் பலவற்றை ஸெஷன்களில் எடுத்து ரோல் ப்ளே செய்தோம். அதாவது அப்போது நடந்ததைத் திரும்ப உருவாக்கி நடத்திக் கொள்வது. இதிலிருந்து என்னுடைய செயல்பாடுகள், அணுகுமுறைகள், எதிர்மறை எண்ணங்கள் அடையாளம் காண்பது முதல் கட்டமானது. அதற்குப் பிறகு அதன் விளைவு, பிணைப்பு சரிசெய்யும் விதங்களை வரிசைப் படுத்த முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இது என்னுடைய முதல் மிகச் சிறிய வெற்றி.

என்னுடைய அச்சத்தை, சங்கடத்தைப் பார்த்த அனைவருமே பரிந்துரைத்தது, “எல்லாம் உன் கற்பனை”, “கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள், சரியாகிவிடும்”, “உனக்கு மன உளைச்சல்” என்று பலவற்றைச் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்கக் கேட்க நான் எதற்கும் உபயோகம் இல்லை என்றதே உறுதியாகிவிடுமோ எனப் பயந்தேன். இந்த கேள்விகளை முறியடிக்கவே பொய் சொல்வேன் “மருந்து எடுத்துக் கொள்கிறேன்” என்று. என்னைப் புரிந்து கொள்ளாமல், எடை போடுகிறார்களே என வருத்தப் பட்டேன்.

ஸெஷன்கள் போய்க்கொண்டு இருந்தது. அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. மனப்பான்மை மாற்றங்களில், பலங்கள், சமாளித்தல் திறன்களை அடையாளம் கண்டு, உபயோகித்து, வளங்களின் நன்மதிப்பு என்ற பல.

இவற்றை அறிந்து, பாராட்டத் தொடங்க, அது என்னை ஊக்குவித்தது. அப்போதுதான் என்னுடைய நலனுக்கு நான் எவ்வளவு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேனோ, அந்த அளவிற்கு முன்னேற்றம் என்று புரிந்தது. அதற்கு மனம் திறந்து, முயற்சி பல மடங்கு தேவை.
என்னுள் மாற்றம் வர வாழ்க்கை இனித்தது! ஆமாம் சரியாக நினைத்தீர்கள், நான் ஸெஷன்களுக்கு விடாமல் வந்ததால் தான் என்று சொல்வேன்.

இதைச் சொல்வதற்குக் காரணம் உண்டு. நான் படும் கஷ்டத்தை நண்பர்கள், பெற்றோர்கள் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒருவர் இந்த ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் பற்றிக் கூறினார். என்னிடம் சொல்லும் போது, நானும் எல்லோரைப் போலவே, “நான் என்ன பைத்தியமா?”, “அவ்வளவு தானா நான்?” என்று கோபித்துக் கொண்டேன். அப்போது எனக்குத் தெரியவில்லை, பிரச்சினை ஆரம்பித்த உடனேயே மனநல ஆலோசகரைப் பார்த்தால் நம் நலனை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று. முதலில் என்னவோ போல் இருந்தது.

முதல் ஸெஷனிலேயே புரிய வந்தது என்னுடைய அனுபவங்களைப் பற்றி. அதாவது உணர்வுகள் உடல் மனதோடும் பேசுவதைப் பற்றி. கேள்விகளைக் கேட்க, சிந்திக்கச் செய்தது. நேர்ந்ததைப் பல கோணங்களில் விவரித்தேன். எனக்கு தெளிவு பிறந்தது. ஆர்வம் தூண்டியது. இவர்கள் என் மேலே வைத்திருந்த நம்பிக்கையை நான் தன் மேல் வைக்கவில்லை என்பது வியக்க வைத்தது.

அவர்கள் கேள்வி கேட்ட விதமும், காட்டின பரிவும் மேலும் செஷன்களுக்கு வரச் செய்தது. எனக்கு என்னைப் பற்றிப் புரியப் புரிய, மேம்பாட்டு வர ஆரம்பித்தது. ஆழமான தெளிவு பிறந்தது. அதே சமயத்தில் நிலமை என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளதை அறிந்தேன். என்னுடைய பிடிப்பில் இருப்பதை மாற்ற முடியும் என்று உணர்வதே மாற்றத்தின் முதல் பாதை. வாழ்க்கையில் பிடிப்பு வலுவானது!

இந்த அறிதலால் என்னுடைய மனநலம் மேலும் வலுவுடன் இருக்க முயன்றேன். நலன் பெற ஆர்வத்திற்கு பெரிய பங்கு.

ஸெஷன்களில் இதுவரை யாரிடமும் பகிராத பலவற்றைப் பேசினேன். என்னைப் பூதக்கண்ணாடியில் பார்ப்பது போல் ஒரு போதும் தோன்றவில்லை. என்ன நினைப்பார்கள் என்று உள்ளுக்குள் முதலில் நினைத்தது உண்மை தான். ஸெஷன்கள் போக, அந்த மாதிரி எந்த வகையிலும் இல்லாததை உணர்ந்தேன்.

மாறாக என்னுடைய பலம், பலவீனத்தை அடையாளம் கண்டேன். அப்போது முடிவு செய்தேன், நானும் சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் திருப்பித் தர வேண்டும் என்று. ஆடம்பரமாக இல்லாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று. தேர்ந்தெடுத்தது, கூட வேலை செய்வோர்களை உதவுவது என்ற “பியர் ஸப்போர்டாக” இருக்க. குடும்ப, நண்பர்கள் துணை இல்லாமல் இவை எதுவும் சாத்தியம் இல்லை.

நாளாக நாளாக நான் மாறி வந்தேன். தயக்கம், சந்தேகங்களிலிருந்து விடுபட்டு, சமாளிக்கும் திறன்களை உபயோகிக்க ஆரம்பித்தேன். சின்ன சின்ன மாற்றங்கள் வருவதற்குப் பாட்டுக் கேட்பது, புத்தகம் படிப்பது, நல்ல சுடு தண்ணீரில் குளிப்பது, பல மைல்கள் நடப்பது- நானாகவும், மற்றவர்களுடனும் – டிவி பார்ப்பது எனப் பல உதவியது.

இவை எல்லாம் பழக்கம் ஆக, அதன் விளைவு? முக்கியமாக வேலையை ஒத்திவைப்பது (பொதுவாக procrastination என்று குறிப்பது) மறைந்து விட்டது. வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தினந்தோறும் செய்த உடற்பயிற்சியால் தூக்கம் நன்றானது. இதனால் பசி எடுத்து சாப்பிட்டேன். அது சகிப்புத்தன்மையை மேம்படுத்தியது. வாழ்வில் புத்துணர்ச்சி நிரம்பியது. ஆகையால் செய்வதை ரசித்துச் செய்தேன். அலட்சியமாக நிறைய செய்தேன். தலை கனமோ, கர்வமோ கொஞ்சமும் இல்லாமல். இந்தத் தெளிவும் ஸெஷன்களில் கற்றதே.

ஸெஷன்களில் புரிந்தது இவ்வளவு வருடமாக என்னை முன்னேற உதவியுள்ளது. இப்போதெல்லாம் யாராவது தத்தளித்து இருப்பதைப் பார்த்தால், இப்படி நான் என் மனநலனை மேம்படுத்தியதைப் பற்றிப் பொறுமையாகப் பகிர்ந்து கொள்வது என் பழக்கம். அதைத் தான் இங்கேயும் செய்ய விரும்பினேன்.

 

 

 

கண்ணனைக் காண வாருங்கள்- பானுமதி. ந

                                           கண்ணனைக் காண வாருங்கள்

What are the communication skills one must learn from Lord Krishna ...நம்முடைய பாரத தேசத்தில் எத்தனை எத்தனையோ திருத்தலங்கள், திருவிழாக்கள். நாம் திருவிழாக்களையும் இறையோடு இணைத்து அதன் மூலம், கலை, மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பேணி வருகிறோம்.அவ்வகையில் திரு ஆடல் நாட்களையும், திரு அவதார நாட்களையும் கொண்டாடி நம் மரபைக் காத்து வருகிறோம்.

பூலோக வைகுந்தம் எனப்படும் ஸ்ரீரங்கத்திலே பள்ளி கொண்டுள்ள பெருமாள் அறிதுயில் அல்லவா கொண்டுள்ளான்? “தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவழ வாயும்” அவை தாமரைக் கண்கள் மட்டுமல்ல, தூய அரைக் கண்களும் ஆகும்.அவனுக்குப் பிறப்பு,இறப்பு என எதுவும் கிடையாது. தூய உணர்வாகிய பிரும்மம் அவன்.ஆனால்,ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர அவன் அவதரிக்கிறான்.நல்லவர்களைக் காக்கவும், அல்லாதவரை அழிக்கவும் அவன் ஆவணி ரோகிணி அஷ்டமி நன்னாளில் பிறக்கிறான்.அவன் மாயன், வட மதுரை மைந்தன், யமுனைத் துறைவன்,ஓங்கி உலகளந்தவன்,போர்க்களத்தில் பார்த்தனை முன்னிட்டுக் கொண்டு மானுடர்க்கென கீதை சொன்னவன்.அவன் இராஜ கோபாலனாக இருக்கலாம்,கீதாச்சார்யனாக இருக்கலாம், அனைத்தையும் விட அவன் காலினில் சதங்கை கொஞ்ச கை வளை குலுங்க முத்து மாலைகள் அசைய வருகின்ற திருக்கோலம் தான் நமக்கு மிக உவப்பாக இருக்கிறது. சின்னஞ்சிறு பிள்ளை, தோழரோடு வெண்ணை  திருடிய கள்வன்,மாடு கன்று மேய்க்கும் ஆயன்,கோபிகைகளோடு ஆடியவன், இராதையின் வண்ணப் புதுச் சேலை தனில் புழுதி வாரிச் சொரிந்து வருத்திக்குலைப்பவன்,அவனை,அந்த தெய்வஅழகை ஒவ்வொரு அங்கமாக அனுபவிப்போம் வாருங்கள்.

திருமுடி

அவன் கேசம் கரு வண்டினை நிகர்த்திருக்கிறது;அன்னை யசோதா அதைக் கொண்டையாக்கி முடிச்சிட்டு, பூக்களாலும், முத்துச் சரத்தாலும் அலங்கரித்து,மயில் பீலியை சொருகியிருக்கிறாள்; அவன் தவழ்ந்தும், அசைந்தும் வரும் அழகைப் பார்த்துப் பார்த்து உள்ளம் பூரிப்பவள், உலகோருக்கு நிழல் தரும் மரம் என அவனை நினைக்கிறாள்

“கரு வண்டு நிறத்த கேசம் கொண்டையிட்டு மலர் சூடி

அரு முத்துச் சரம் சுற்றி மயில் பீலி இடை செருகி

வரும் அசைவில் அசையா மாந்தர் உள்ளம் உண்டோ?

தரு நிழலைத் தள்ளிப் போவோரும் உளரோ?”

நெற்றி

கீற்று மதியைப் போல் அவன் நெற்றி இருக்கிறது;அதில் சண்பகப்பூவின் மணம் எழுகிறது.கேசவன் என்னும் பெயருக்கேற்ப அவன் முடியின் கற்றைகள் ஒரு சிறந்த மகுடமென நெற்றியில் இலங்குகிறது.அவன்தான் மந்தார மலையைக் கொண்டு கடலைக் கடைந்து அமுதம் அளித்தவன்.அவனது உற்ற தோழனான பார்த்தனின் வில்லைப் போல் இவனது புருவங்கள் அழகுற அமைந்திருக்கின்றன.

“சந்திரக் கீற்றென்னும் செண்பக நெற்றியிலே

இந்திர மகுடமென்ன சுருள் கற்றை விளையாட

தந்திரம் மிகுந்த பார்த்தன் வில் போல் புருவம் மின்ன

மந்தார மலையை மத்தாக்கியவன் போற்றி!”

கண்

அவன் தாமரைக் கண்ணன்;கண்களும் மலர்ந்து சிரிக்கும் அழகன்.அடியாரை, கடைக்கண் பார்வையினாலே காத்தருள்பவன்.அன்புப் பார்வையினால் கோபியரை காதல் வசப்படச் செய்தவன்.

“கண் என்ன கமலம் தானோ?கடைக்கண் பார்வை தேனோ?

என்னென்ன மாயம் செய்தாய் கண்ணினால் கண்ணா நீதான்

அன்னமனைய இராதை ஆய்க்குலத்தோன் தோகை

பின்னே வரும்படி பார்த்தாய் காதல் பார்வை!”

நாசி

அவனது திரு நாசிகள் எள்ளுப்பூவைப் போல் அமைந்திருக்கின்றன.அவை அடியாரின் கஷ்டங்களை நுகர்வினாலேயே உணர்ந்து அவற்றை நீக்குகின்றன.அதே நாசிதான் நண்பர்களோடு வெண்ணைத் தாழிகளைத் தேடிச் சென்று, சிறு கைகளால் துளாவி, பங்கிட்டு உண்பதற்கும்,’நான் திருடவேயில்லையே’ என்று கள்ளம் சொல்வதற்கும் உறுதுணை!

“எள்ளுப் பூ நாசியால் எங்களைக் காத்தருள்வாய்!

பிள்ளைப் பருவத்திலே கள்ள வெண்ணை தேடி வந்து

சொல் ஒழுகும் தோழர் கூட்டத்தோடே பகிர்ந்து

இல்லை எனப் பொல்லா நாடகம் ஆடியவன்!”

காது

அவன் காதுகளில் தங்கக் குண்டலங்கள் அசைந்தாடுகின்றன;அவை முதுவீரர் பீஷ்மர் சொன்ன ஆயிர நாமங்களைச் செவிமடுத்து அசைகின்றன.அவை ‘சகஸ்ர நாமங்களை’ மட்டும் கேட்கவில்லை. தன் அருமைத் தங்கை சுபத்திரையின் மேல் காதல் கொண்ட அர்ச்சுனனின் ஆசையையும் கேட்டு நிறைவேற்றுகின்றன.

“மகர குண்டலங்கள் அசைந்தாட அந்த

அமர பீஷ்மன் சொல்ல ஆயிரனாமம் கேட்டாய்

பகரும் சொல் கேட்டுசுபத்திரை மேல் அன்பு கொண்டு

உருகி ஓடி வந்த அர்ஜுனனை வாழ வைத்தாய்!”

உதடு

அழகிய ரோஜா மொட்டுக்களைப் போல் அவன் உதடுகள் மென்மையாக இருக்கின்றன.ஆனாலும்,கம்சன் அனுப்பிய பூதகி என்ற அரக்கியின் முலை வழியே அவள் உயிரையும் உறிஞ்சுகின்றன.அவள் கொடு உயிர்,அவளே கொடுத்த உயிர்.கண்ணனின் உதடுகள் தீமைகளை உறிஞ்சி நம்மை நல்வழிப் படுத்தும் ஆற்றலைக் காட்டுகின்றன.

“ரோஜா மொக்கெனும் உதடுகள் விரித்து கம்ச

இராஜா அனுப்பிய அரக்கி முலை பற்றி

தாஜா செய்து அவள் கொடு உயிர் குடித்த சிம்ம

இராஜா என் கண்ணே என் தீமைபோக்காயோ?”

வாய்

கற்பூரம் நாறும் கமலப்பூ!  தித்தித்திருக்கும் திருப்பவளச் செவ்வாய்! யசோதைக்கு தன் வாய்க்குள் பிரபஞ்சத்தைக் காட்டியவன் அவன்.அவன் குழலிசையில் நம் புலன்கள் அடங்கி முத்தி நிலை வாய்க்கும்.மண்ணாசையால் அனைத்தையும் இழந்த கௌரவர்களை குருக்ஷேத்ரத்தில் வெற்றி கொள்ள பார்த்தசாரதியாக நின்று கீதை சொன்ன திருவாயன் அல்லவா?

“மண்ணுன்ட வாயில் மா உலகம் காட்டிடுவாய்

பண்பொழியும் குழலில் புலப்பசுக்கள் மேய்த்திடுவாய்

மண்ணாசை மிகக் கொண்ட கெளரவரை வெற்றி கொள்ள

கண்ணாகிக் காத்து நின்று குருவாகி கீதை சொன்னாய்!”

கழுத்து

மரா மரத்தின் கீழிருந்து ‘மரா,மரா என்று சொன்ன வான்மீகி முனிவர் படைத்த இராமாயணம்,அதன் அறச் சிந்தனைகளுக்காகவே போற்றப்படுகிறது;அதிலும் இராமனை விட அவன் பெயருக்கு சிறப்பு அதிகம் என்பது பல நூல்களில் சொல்லப்படுகிறது; கண்ணனை உயிர் உருகப் பாடிய மீரா, ’ராம’ நாமத்தையே தாரக மந்திரமாகக் கொண்டாள்.இராணாவின் அரசால் அவளது பக்தியை உணரமுடியவில்லை;அவளை சிறையில் அடைத்து விஷம் கொடுக்கிறார்கள்;அதை அவள் ’கிரிதரனு’க்குப் படைத்துப் பின்னர் அருந்துகிறாள்.அது நீலக் கோடாக கண்ணனின் கழுத்தில் இடம்பெயர்கிறது;மீரா விடுதலை செய்யப்படுகிறாள்

“மரா மரா என வான்மீகி சொன்ன நாமம்!

மீரா எனும் குயிலின் ஆத்ம கீதம்! அவள்

தரத்தினை அறியாதோர் கொடுத்தது கொடிய விஷம் கிரி

தரா எனவே உன் கண்டத்திலே அமிர்த மயம்!”

தோள்

பரம் பொருளே பாலனாக வந்திருக்கிறது என்பதை இந்திரன் மறக்கிறான்; கோவர்த்தன மலைக்கு கண்ணனின் விருப்பத்திற்கேற்ப ஆயர்கள் பூசை செய்வது தேவேந்திரனின் சினத்தை அதிகரிக்கிறது.மழை, மின்னல், இடி என்ற தன் படைக்கலங்களுடன் இந்திரன் விடாமல் போர் செய்ய, ஆயர்பாடியையும், உயிர்க்குலங்களையும் காக்கும் பொருட்டு கண்ணன் தன் இடது கை சுண்டு விரலால் மலையைத் தூக்கித்,தன் தோள் வலிமையால் இந்திரனை வெல்கிறான்.

“வானவர் உலகு நீக்கி வள்ளல் நீ வந்திட்டாய்

தானவர் தன்னிலையை முற்றுமே மறந்திட்டார்

ஆணவம் மிகக் கொண்டு வெள்ள மழை பொழிந்திட்டார்

பேணும் செம்மை பூண்டு கோவர்த்தனம் தூக்கி நின்றாய்!”

கை

அபயம் தரும் கரங்கள்,வரம் தரும் கரங்கள், பெண்ணின் மானத்தைக் காத்த கரங்கள்,அந்தக் கரங்களுக்கு ஈடு சொல்ல முடியுமோ,அதை வாழி என்று வாழ்த்துவதைத் தவிர!

“செந்தழல் பிறந்த தேவியின் கருங்குழல் பற்றிப் பாவி

வன்கழல் பொய் வீரர் சபையினில் ஏற்ற ஆவி

எரி தழல் வீழ் புழு போல் துடித்துன் நாமம் கூவி

செறி கழல் நினைந்தாளின் மானக் காத்த கரம் வாழி!”

மார்பு

திருப் பாற்கடலில் பள்ளி கொண்டவன். அவனது திரு மார்பில் உறைபவள் திருமகள்.திருமகள் உடனிருக்க நமக்கு குறையொன்றுமில்லை.கருவிலே திரு உடையவராவோம், நம் இருவினைகளைப் போக்கி அடைக்கலம் தரும் கண்ணனின் திருமார்பை எண்ணுவோம்.

“திருவினைத் தாங்கி நிற்கும் செந்திரு மாலா!

ஒரு மணி வயிற்றில் பிறந்து மறுவீடு வளர்ந்த பாலா!

உறும் வினை போக்கி உய்ய வழி காட்டு கோபாலா!

கரு நிறத்திடைச்சியர் கொண்டாடும் நந்த லாலா!

வயிறு

கண்ணன் உலகைப் படைத்தவன், காப்பவன், நல் வழியில் நம்மைச் செலுத்துபவன்;முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் அவன் தான் ஆதாரம்;பிரும்மனைப் படைத்து, அவன் மூலம் உலகைத் தோற்றுவித்து, உணவும், உயிர்களும் படைத்து,அறிவும், மொழியும் படைத்து, அனைவரையும் காப்பவன், எளியவனுக்கும் எளியவனாக இருக்கிறான்.புன்னை மர நிழலில் இளைப்பாறும் இடையனாகக் காட்சி தருகிறான்.

“முன்னை உலகாக்கி உயிர் வாழ உணவாக்கி

எண்கள் எழுத்தாக்கி பிரமனின் கருத்தாங்கி

அன்னை என ஆனாய்!ஆருயிர் தந்தை ஆனாய்!

புன்னை மர நிழலில் எமையாளும் எளியனானாய்!”

இடை

அன்னை அவனுக்குப் பீதாம்பரம் எனும் பட்டாடையை அணிவித்து பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள்;அவனோ தன்னை இராஜ குமாரன் எனவே நினைக்கவில்லை.வள்ளல் பெரும்பசுக்களை மேய்ப்பவனாகவே தன்னை வெளிப்படுத்தி கொள்கிறான்.

“மஞ்சள் பட்டுடுத்தி யசோதை பார்த்திருக்க

வள்ளல் பசுக்களை கானகம் ஓட்டிச் சென்று

திங்கள் குளிர் முதுகால்  மெய்யினைத் தடவித்தடவி

எங்கும் பெருகச் செய்தாய் பாலெனும் அமிர்த பானம்.”

தொடை

யானையைப் போன்ற நடையை அனைத்துப் புலவர்களும் போற்றிப் பாடுகின்றனர். அது கம்பீரமும், அழகும் இயைந்த நடை.யானையின் நடையையும், தேரின் அசைவையும் பார்க்காத கண்கள் இல்லை.கண்ணனின் சங்க நாதம் கூட பிளிறும் இசை கொண்டிலங்கும்.கருணை மிக்கவன்,தீயாரைச் செறுத்தல் வேண்டி சினம் கொண்டு சீறி அருளுகிறான்.

“களிறு போல் நடைஉடையாய்!பிளிறும் வெண்சங்கிசையாய்!

ஒளிரும் செஞ்ஞாயிறென சினம் தெளித்து வீறு கொள்வாய்!

மிளிரும் மண்டபத்தில் இரண்யனைத் தொடையில் வைத்து

பலரும் புகழ் பாட நரசிங்கனாய் கிழித்தெறிந்தாய்!”

 

மூட்டு

முனிவன் சொல்ல இறைவன் எழுதியது பாரதம்; மனிதன் சொல்ல இறைவன் எழுதியது திருவாசகம். மனிதன் சொல்ல  இறைவன் ஆமோதித்தது நாராயணீயம்.ஒவ்வொரு செய்யுளையும் செவிமடுத்து ஒப்புக்கொண்ட குருவாயூரப்பன் நம் சின்னக் கண்ணன் அல்லவா?

“வாத நோய்க்கு மாமருந்தே என உன்

பாதமிரண்டும் பற்றி நாராயண பட்டதிரி

ஓத உலகிற்கு வழங்கிய நாராயணீயம்

காதல் மிகக் கொண்டு நீ கொண்டாடும் நல் காப்பியம்!

கால்

மடு கலங்க, அதில் பாய்ந்து,காளிங்கனின் நீள்முடி ஐய்ந்திலும் நின்று நடம் செய்த தூயவன்;பாண்டவருக்காக தூதனாக நடந்தவன்;அன்பினால், பழத்தை எறிந்து விட்டு அதன் தோலை உண்ணக் கொடுத்த விதுரனின் விருந்துக்காக அவன் இல்லம் சென்றவன்.வாமனனாய் உலகை அளந்தவன்.பூதேவியின் மிகு பாரத்தைக் குறைக்க பாரதப் போரைப் பின்னின்று செய்தவன்.

“காளிங்கனை அடக்கிக் களி நடம் புரிந்த கண்ணா!

ஆலிங்கனம் செய்து விதுரன் விருந்து ஏற்றாய்!

ஆழி கலிங்கம் அணிந்த தேவி வேண்ட

ஊழி முதல்வனாய் மிகு பாரம் தீர்த்து வைத்தாய்!”

பாதம்

சரணாகதி என்பது நம் தர்மத்தில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. அது நம்மை அடக்கத்தில் ஆட்படுத்துகிறது.அவன் சரணங்களைப் பற்றினால் வீடு பேறு நிச்சயம் என்பது நமது தத்துவம்.இறைவனின் பாதங்கள் கல்லைப் பெண்ணாக்கும்;ஆண்டாளைப் போல் நாமும் அந்தப் பாதங்களைச் சரணடைவோம்.

“கல்லைப் பெண்ணாக்கும் கழலினைப் போற்றுவோம்!

முல்லை நிலத்தில் பாதம் பதித்தாய் போற்றி!

எல்லையில்லா வனப்புடை எந்தாய் அணைக்கும் பாதம்!

சொல்லை மாலையாக்கி அளித்த கோதைக்கு வேதம்!”

‘பொலிக சிறந்து பொலிக, இந்தப் பூதலம் தன்னில் அறம் வளர்க.மலிக கயமை அரக்கர்.மானுடம் சிறக்க கண்ணன் பிறந்தான்.

 

 

முத்தக்காலம் – செல்வராசு

Lovers Kissing. Line Drawing. Vector Illustration Royalty Free ...

ஒன்று :

நம் முதல் திருமண நாளன்று

காலையில் ஒரு பந்தயம் வைத்தாய்

அன்று பகல் முழுவதும்

என் பெயரை

நீ எத்தனைமுறை அழைக்கிறாயோ

அத்தனை முத்தங்கள்

இரவில் நான் தரவேண்டும் என்றாய்

நான் வெற்றி பெற்றால்

நீ நூறு முத்தங்கள் தருவதாகவும்

தோல்வியுற்றால் அபராதமாய்

நான் ஐம்பது முத்தங்கள் தர வேண்டும்

என்றும் நிர்ணயித்தாய்

மொத்தத்தில் அன்றிரவு

முத்தத்தில் நிறைந்தது

இரண்டு : 

வெட்கப்பட அறிந்திராத வயதில்

நீ பட்டாம் பூச்சி ரசித்திருந்த

நம் விளையாட்டுப் பொழுதில்

நீ கவனிக்காததைப் பயன்படுத்தி

கன்னத்தில் முத்தமிட்டேன்

அழுதவாறே வீட்டிற்கு ஓடினாய்

மறுநாள் காலையில் தான்

தோப்புக்கரணத் தண்டணை கொடுத்துவிட்டு

எனக்குக் கோலம் போடக் கற்றுக்கொடுத்தாய்

இன்றும் கோலங்கள் பார்க்கையில்

நீர் சுரக்கிறது கண்களில்

மூன்று : 

 பனிப்பொழிவு துவங்கியிருந்த

ஓர் மார்கழி அந்தியில் சொன்னாய் !

“ஒரு  பந்தயம்”

“சொல் இப்போதே தயார்”

“எலுமிச்சை ஒன்றை

நெற்றியில் இருந்து கால் பெருவிரல் வரை

உடம்பை விட்டு எடுக்காமல்

உருட்டிக் கொண்டே வரவேண்டும்”

“இதில் என்ன சிரமம்”

உருட்டுவது கைகளால் அல்ல

இதழ்களால் மட்டுமே

தோற்றால் தோற்ற இடத்தில்

முத்தமிட வேண்டும் நான் ஏற்கும் வரை”

“வென்றால்”

“இன்னுமொரு வாய்ப்புக் கொடுப்பேன்

நீ தோல்வியடைய”

தேவ விகடம் – பாரதியார்

பாரதியாரின் கதையில்தான் எத்தனை நையாண்டி எத்தனை சமூகக் குத்தல் ! 

பாரதியார் பாரதியார்தான் ! 

தேவ விகடம்

Ganesha- Our all Time favorite

நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, “நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்” என்றார்.

அப்படியே நாரதர் வலப் பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர் “முப்பது வண்டி கொழுக்கட்டையும், முந்நூறு குடத்தில் பாயசமும் ஒரு வண்டி நிறைய வெற்றிலை பாக்கும் கொண்டுவா” என்று கட்டளையிட்டார்.

இமைத்த கண்ட மூடும் முன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக் கொண்டார். நாரதரோ ஒரு கொழுக்கட்டையை யெடுத்துத் தின்று அரைக் கிண்ணம் ஜலத்தைக் குடித்தார். நந்திகேசுரர் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த இரண்டு மூட்டை பருத்திக் கொட்டையையும், இரண்டு கொள்ளு மூட்டைகளையும், அப்படியே இரண்டு மூட்டை உளுந்தையும், இரண்டு மூன்று கட்டுப் புல்லையும் ஒரு திரணம் போலே விழுங்கிவிட்டுக் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார்.

பிறகு வார்த்தை சொல்லத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கேட்டார்; நாரதரே, சமீபத்தில் ஏதேனும் கோள் இழுத்துவிட்டீரா? எங்கேனும் கலகம் விளைவித்தீரா?

நாரதர் சொல்லுகிறார்: கிடையாது சுவாமி. நான் அந்தத் தொழிலையே விட்டு விடப்போகிறேன். இப்போதெல்லாம் தேவாசுரர்களுக்குள்ளே சண்டை மூட்டும் தொழிலை ஏறக்குறைய நிறுத்தியாய் விட்டது. மனுஷ்யர்களுக்குள்ளேதான் நடத்தி வருகிறேன்.

பிள்ளையார்: சமீபத்தில் நடந்ததைச் சொல்லும்.

நாரதர் சொல்லுகிறார்: விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவர் பெரிய லோபி; தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி, அவர் பெரிய கர்வி. செட்டியாருக்குச் செலவு மிகுதிப்பட்டுப் பார்ப்பானுக்குக் கர்வம் குறையும்படி செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த யோசனை யெடுத்தேன். நேற்றுதான் முடிவு பெற்றது. முதலாவது, பார்ப்பான் விழுப்புரத்துக்கு வரும்படி செய்தேன்.

பிள்ளையார்: எப்படி?

நாரதர்: செட்டியாரின் சொப்பனத்திலே போய்த் தஞ்சாவூரில் இன்ன தெருவில் இன்ன பெயருள்ள சாஸ்திரியிருக்கிறார். அவரைக் கூப்பிட்டால், உமக்குப் பலவிதமான தோஷ சாந்திகள் செய்வித்து ஆண் பிள்ளை பிறக்கும்படி செய்வார் என்று சொன்னேன். அப்படியே செட்டியாரிடம் போனால் உமக்குப் பணமும் கீர்த்தியும் மிகுதிப்பட வழியுண்டென்று பார்ப்பானுடைய கனவிலே போய்ச் சொன்னேன். செட்டியார் காயிதம் போடு முன்பாகவே பார்ப்பான் விழுப்புரத்திலே செட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். செட்டியாருக்குக் குழந்தை பிறக்கும்படி ஹோமம் பண்ணத் தொடங்கினான். பார்ப்பான் காசை அதிகமாகக் கேட்டான். பாதியிலே செட்டியார் ஹோமத்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பானை வீட்டுக்குப் போகும்படி சொல்லி விட்டார். பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு வருஷ காலமிருந்து பகவத்கீதை பிரசங்கம் செய்யும்படி சாஸ்திரியை அந்த வீட்டு பிரபு வேண்டிக்கொண்டார். மேற்படி பிரபுவுக்கும் அந்தச் செட்டியாருக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம். செட்டியார் தனக்கு முப்பதினாயிரம் பொன் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பிரபு நியாயஸ்தலத்தில் வழக்குப் போட்டிருந்தார். செட்டியார் அந்தப் பணத்தைத்தான் கொடுத்துவிட்டதாகவும், நம்பிக்கையினால் கையெழுத்து வாங்கத் தவறினதாகவும், வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் சொன்னார். நியாயஸ்தலத்தில் செட்டியார் வாதத்திற்குத் தக்க ஆதாரமில்லை என்றும், பிரபுவுக்குப் பணம் சிலவுட்பட கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயிற்று.

செட்டியாரிடமிருந்த (கழனித் தொழில்) அடிமையொருவன் கள்ளுக்குக் காசு வாங்குவதற்காக இவரிடம் வந்து, செட்டியாருக்கு யாரோ ஒரு அய்யர் சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்தபோது, தன்னுடைய பெண்டாட்டி சொன்னதாகச் சொல்லிவிட்டான். செட்டியார், தன்னுடைய எதிரி வீட்டிலே போய் இருந்து தஞ்சாவூர்ப் பார்ப்பானே சூனியம் வைக்கிறானென்னும், அதனாலே தான் எதிரிக்கு வழக்கு ஜயமாகித் தனக்குத் தோற்றுப் போய் விட்டதென்றும் உறுதியாக நினைத்துக் கொண்டார். ஒரு மனுஷ்யனை அனுப்பித் தன் எதிரியின் வீட்டிலே எதிரியும் சாஸ்திரியும் என்ன பேசிக் கொள்ளுகிறார்களென்பதைத் தெரிந்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்தார். அந்த ஆளுக்கு மூன்று பொன் கொடுத்தார். இந்த வேவுகாரன் போய்க் கேட்கையிலே அந்த சாஸ்திரியும் வீட்டுக்காரப் பிரபுவும் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரமந்தான் சத்யம் மற்ற தெல்லாம் சூன்யம் என்று சாஸ்திரி சொன்னான். இதைக் கேட்டு வேவுகாரன் செட்டியாரிடம் வந்து எதிரி பக்கத்துக்குச் சூனியம் வைக்க வேண்டுமென்று பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கதை சொன்னான். செட்டியார் “பிரமாணம் பண்ணுவாயா?” என்று கேட்டார். “நிச்சயமாகப் பிரமாணம் பண்ணுவேன். சாஸ்திரி வாயினால் சூனியம் என்று சொன்னதை என்னுடைய காதினால் கேட்டேன். நான் சொல்வது பொய்யானால் என் பெண்டாட்டி வாங்கியிருக்கும் கடன்களையெல்லாம் மோட்டுத் தெருப் பிள்ளையார் கொடுக்கக் கடவது” என்று வேவுக்காரன் சொன்னான். இப்படி நாரதர் சொல்லி வருகையிலே, பிள்ளையார் புன்சிரிப்புடன், “அடா! துஷ்டப் பயலே! அவன் பெண்டாட்டியினுடைய கடன்களையெல்லாம் நானா தீர்க்க வேண்டும்! இருக்கட்டும்! அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

அப்பால் நாரதர் சொல்கிறார்: மேற்படி வேவுகாரன் வார்த்தையைக் கொண்டு செட்டியார் தன் எதிரியையும் எதிரிக்குத் துணையான தஞ்சாவூர் சாஸ்திரியையும் பெரிய நஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் இடமாக்கி விடவேண்டுமென்று துணிவு செய்து கொண்டார். ஒரு கள்ளனைக் கூப்பிட்டுத் தன் எதிரி வீட்டில் போய்க் கொள்ளையிடும்படிக்கும் சாஸ்திரியின் குடுமியை நறுக்கிக் கொண்டு வரும்படிக்கும் சொல்லிக் கைக்கூலியாக நூறு பொன் கொடுத்தார். இதுவரை செட்டியாரின் அழுக்குத் துணியையும், முக வளைவையும் கண்டு செட்டியார் ஏழையென்று நினைத்திருந்த கள்ளன், செட்டியார் நூறு பொன்னைக் கொடுத்ததிலிருந்து இவரிடத்திலே பொற்குவை யிருக்கிறதென்று தெரிந்து கொண்டான். மறுநாள் இரவிலே நான்கு திருடரை அனுப்பிச் செட்டியார் வீட்டிலிருந்த பொன்னையெல்லாம் கொள்ளை கொண்டு போய்விட்டான்.

செட்டியாரிடம் கொண்ட பொருளுக்குக் கைம்மாறாக அவரிடம் ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று நினைத்துச் செட்டியாரின் கட்டளைப்படியே சாஸ்திரியின் குடுமியை நறுக்கிச் செட்டியாரிடம் கொண்டு கொடுத்தான். பொன் களவு போன பெட்டியிலே இந்தக் குடுமியை வாங்கிச் செட்டியார் பூட்டி வைத்துக் கொண்டார். பார்ப்பான் கர்வ மடங்கித் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர்ந்தான். நேற்று மாலையிலே தான் தஞ்சாவூரில் தன் வீட்டிலே போய் உட்கார்ந்து, “தெய்வமே, நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே! அப்படி யிருந்தும் எனக்கு இந்த அவமானம் வரலாமா?” என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அப்போது நான் ஒரு பிச்சைக்காரன் வேஷத்துடன் வீதியிலே பின்வரும் பாட்டைப் பாடிக் கொண்டு போனேன்.

“கடலைப் போலே கற்றோ மென்றே கருவங் கொண்டாயே

கல்லா ரென்றே நல்லார் தம்மைக் கடுமை செய்தாயே”

இவ்வாறு நாரதர் சொல்லியபோது நந்திகேசுரர், “இந்தக் கதை நடந்ததா? கற்பனையா?” என்று கேட்டார்.

நாரதர், “கற்பனைதான்; சந்தேகமென்ன?” என்றார்.

பிள்ளையார் கோபத்துடன், “ஏன் காணும்! நிஜம்போல் சொல்லிக் கொண்டிருந்தீரே! உண்மையென்றல்லவோ நான் இதுவரை செவி கொடுத்துக் கேட்டேன். இதெல்லாம் என்ன, குறும்பா உமக்கு?” என்றார்.

“குறும்பில்லை. வேண்டுமென்றுதான் பொய்க் கதை சொன்னேன்” என்று நாரதர் சொன்னார்.

“ஏன்?” என்றார் பிள்ளையார்.

அதற்கு நாரதர், “நந்திகேசுரருக்குப் பொழுது போக்கும் பொருட்டாகக் கதை சொல்லச் சொன்னார்; சொன்னேன். தாங்கள் கேட்டதையும் அதோடு சேர்த்துக் கொண்டேன்” என்றார்.

“நான் கேட்ட விளையாட்டாக்கி நீர் நந்திக்குத் திருப்தி பண்ணினீரா? என்ன நந்தி இது? எஜமான் பிள்ளை நானா நீயா?” என்று பிள்ளையார் கோபித்தார்.

அப்போது நந்திகேசுரர் முகத்தைச் சுளித்துக் கொண்டு, “பிள்ளையாரே, உமக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாபகமிருப்பதில்லை. வாயில் காக்கும் வேலை எனக்கு; உமக்குப் பொழுது போகாமல் போனால் வேலை செய்பவரை வந்து தொல்லைப்படுத்துகிறீரா? முருகக் கடவுள் இப்படியெல்லாம் செய்வது கிடையாது. அவர் மேலே தான் அம்மைக்குப் பட்சம். நீர் இங்கிருந்து போம். இல்லாவிட்டால் அம்மையிடம் போய்ச் சொல்லுவேன்” என்றார்.

அப்போது நாரதர் சிரித்து, “தேவர்களுக்குள்ளே கலகமுண்டாக்கும் தொழிலை நான் முழுதும் நிறுத்தி விடவில்லை ” என்றார்.

பிள்ளையாரும், நந்திகேசுரரும் வெட்கமடைந்து நாரதருடைய தலையில் இலேசான வேடிக்கைக் குட்டு இரண்டு குட்டினார்கள்.

அப்போது நாரதர் சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்: “நேற்றுக் காலையிலே பிருஹஸ்பதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்; இன்று என்னுடைய ஜன்ம நட்சத்திரத்திற்குள்ளே அவருடைய கிரகம் நுழையப் போகிறதென்றும், அதனால் இன்று என்னுடைய தலையில் நந்திகேசுரரும், பிள்ளையாரும் குட்டுவார்களென்றும் சோதிடத்திலே பார்த்துச் சொன்னார். உம்முடைய கிரகசாரங்களெல்லாம் நம்மிடத்திலே நடக்காதென்று சொன்னேன். பந்தயம் போட்டோம். நீங்கள் இருவரும் என்னைக் குட்டினால் நான் அவரிடத்தில் பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டேன். நீங்கள் குட்டாவிட்டால் நமக்கு தேவலோகத்தில் ஆறு சங்கீதக் கச்சேரி இந்த மாதத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர் கட்சி வென்றது. பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்க வேண்டும்.”

அப்போது பிள்ளையார் இரக்கத்துடன் “பதினாயிரம் பஞ்சாங்கத்துக்கு விலையென்ன?” என்று கேட்டார்.

நாரதர், “இருபதினாயிரம் பொன்னாகும்” என்றார். பிள்ளையார் உடனே ஒரு பூதத்தைக் கொண்டு நாரதரிடம் இருபதினாயிரம் பொன் கொடுத்துவிடச் சொன்னார். பூதம் அப்படியே அரண்மனைப் பணப் பெட்டியிலிருந்து இருபதினாயிரம் பொன் நாரதரிடம் கொடுத்து பிள்ளையார் தர்மச் செலவு என்று கணக்கெழுதிவிட்டது. பிறகு பிள்ளையார் நாரதரை நோக்கி, “இந்தப் பந்தயக் கதை மெய்யா? அல்லது இதுவும், பொய்தானா?” என்று கேட்டார்.

“பொய்தான்; சந்தேகமென்ன?” என்று சொல்லிப் பணத்தைக் கீழே போட்டுவிட்டு நாரதர் ஓடியே போய்விட்டார்.

மன நோய் – பாம்பே கண்ணன்

மன அழுத்தமா? உங்களுக்கு ...

 

நிறைய யோசித்த பிறகு மன நோயாளிகள் மருத்துவரைப் பார்ப்பது என முடிவு செய்தேன்

எத்தனை நாட்கள் என்னையே நான் கவனித்துள்ளேன்

நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன் கடவுளே ஏன் என்னை மட்டும் இப்படி…. அக்கம் பக்கம் பார்க்கிறேன் யாரும் இப்படி இல்லை

நேற்று மாலை 5 மணிக்கு அவரது clinic ல் வரவேற்பு பெண்ணிடம் பெயர் சொல்லி உறுதி செய்து கொண்டேன்

இந்தமாதிரி மருத்துவமனைக்கு வருபவர்களை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து சற்று விலகியே இருப்பார்கள்

மன நோய்க்கும் பயித்தியம் என்ற நிலைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை அவர்கள் கையில் ஆயுதம் எடுக்கும் வரை

இந்த receptionist கூட பார்வைக்கு ஒரு மாதிரிதான் இருக்கிறாள்

சே சே வீண் கற்பனை

ஒருவேளை இங்கே வருபவர்களிடம் பேசி பழகி அந்த மன நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைக்கிறாளோ

இவளே இப்படி என்றால் உள்ளே அவர்…

.அறையை கண்ணோட்டம் விடுகிறேன்

ஒரே ஒரு பெண் மட்டும் அழுது கொண்டிருக்கிறாள்

அவள் அருகே அவள் அம்மா போல ஒருவர் சமாதானம் செய்ய முயன்று எதோ நினைவு வந்து அழுகிறார்

ஒரு முறை மேலே கடிகாரத்தைப் பார்க்க இன்னும் அழுகை பீரிட்டு கொண்டு வருகிறது

இதென்ன நேரம் பார்த்து நேரம் பார்த்து அழுகை?

அந்த நேரம் பார்த்து என் நண்பன் Medical Representative ஆக இருப்பவன் உள்ளே வர கொஞ்சம் கதிகலங்கி போனேன்

இவன் கொஞ்சம் தளர்ந்த நாக்கு உள்ளவன்
என்னடா இங்க?

வேறு சமயமாக இருந்தால்

அசட்டுதனமான கேள்வி என்று குதறி இருப்பேன்

ஆனால் இருக்கும் இடத்தை மனதில் கொண்டு என்னுடைய violent behaviour யே ஆதாரமாகக் கொண்டு வதந்தி பரப்பி பட்டம் கட்டி நான் admit ஆகி விட்டதாகக் கூட செய்தி பரப்பும் சாத்தியக்கூறுகள் இருந்ததால்

சார் ஒலிப்புத்தகம் கேட்டாரு கொடுக்க வந்தேன் என சமாளித்தேன்

அவன் மேற்கொண்டு எதாவது கேட்டு நான் உளருவதற்குள் டாக்டர் அழைக்க வேகமாக விடை பெற்று உள்ளே போனேன்

ஒரு psychiatrist என்றால் french beard வைத்திருப்பார் நல்ல தொப்பையுடன் சின்ன கண்ணாடி அணிந்து அதன் மேல் புறத்தில் எட்டி பார்ப்பார் மயக்கும் கண்கள் இருக்கும் தலை கலைந்து இருக்கும் என்ற சினிமா பாணி கற்பனைகளுக்கு நேர் மாறாக ஒருவர் என்னைப்பார்த்து முறுவலித்த விதம் கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்வது போல இருந்தது

உக்காருங்க என்ன பிரச்சனை சொல்லுங்க

என் மனசுலே எதோ கோளாரு டாக்டர்

அதை நாங்க சொல்லணும் ஏன் இப்படி தோணுது?

எல்லாரும் சிரிக்கும் போது என்னால சிரிக்க முடியலை எல்லாரும் அழும் போது என்னால அழ முடியலை

Very peculiar

ரொம்ப வருஷமா முயற்சி பண்ணிட்டு இப்ப டாக்டரை பாக்க முடிவு செஞ்சேன்

ஓகே ஓகே

எப்பவமே இப்படியா I mean கல்யாண வீட்டுலே…..etc etc

No டாக்டர் இது எங்க வீட்டுலேதான் அதுவும் குறிப்பா

சொல்லுங்க

டாக்டர் ஆர்வமானார்

இந்த TV லே அவங்க காமெடி நிகழ்ச்சின்னு ஒண்ணு வைக்கிறாங்களே அதுலே joke ன்னு சொல்லி அவங்களே சிரிக்கறாங்களே

டாக்டர் முகம் மாறியது

அழைச்சிகிட்டு வர கூட்டம் கைதட்டறாங்க laughter Machine லே வேற சிரிப்பு போடறாங்க எல்லாரும் சிரிக்கறாங்க ஆனா எனக்கு மட்டும் சிரிப்பு வரலை Is something wrong? ரொம்ப வேதனையா இருக்கு எல்லாரும் என்னை பைத்தியம்னு சொல்லிடு வாங்களோன்னு என்னை காப்பாத்துங்க என்னை சிரிக்க வையுங்க டாக்டர் சிரிக்க வையிங்க

டாக்டர் பெரிதாக சிரித்தார்

இது எந்த மனோ வியாதியுமில்லை You are perfectly Normal

டாக்டர் இதை ஒரு certificate ஆ தரமுடியுமா என் மனைவிகிட்ட காட்டணும் நான் கூட டிவி பாதிப்புன்னு பயந்திட்டேன்

No No That TV impact நீங்க வெளியே பாத்திருப்பீங்களே ரெண்டு பெண்கள் அவங்க பிரச்சனையே நேரத்துக்கு சாப்பிடறமாதிரி அந்த நேரத்துக்கு அழணும் எதுவும் பாக்கலைன்னாகூட சரியா அந்த நேரத்துக்கு அழுகை வந்திடும் இப்ப அதுக்குதான் treatmentகொடுத்துகிட்டு இருக்கேன்

என்று ஆழ் மனம் வழக்கமான செயல்களின் தூண்டுதல் அப்பறம் நிறைய ஆங்கில வார்த்தைகளில் எதேதோ விளக்கமளித்தார் எதுவும் இந்த மர மண்டையில் ஏறவில்லை

உங்க fees?
No Thanks என் Profeasion லே ஒரு normal person ஐ பாக்கறது ரொம்ப அபூர்வம் போயிட்டு வாங்க

டாக்டர்??

சாரி போங்க வராதிங்க

வெளியே வந்த போது

அந்த இரண்டு பெண்களும் அழுகை நிறுத்தி இருந்தார்கள்

விளம்பர இடைவேளை முடிவதற்குள் வெளியேறினேன்

 

வைரஸ் – நித்யா சங்கர்

How India's behemoth railways are joining the fight against Covid ...

‘ஏம்பா.. உன் பெயர் என்ன?’ என்றார் பெரியவர் தன்ராஜ் தன் எதிரே உட்கார்ந்திருந்த வாலிபனிடம்.

‘ரமேஷ்’ என்றான் வாலிபன். உக்கிரமான ஜலதோஷத்தினால் மூக்கெல்லாம் சிவந்திருந்தது. தும்மலும், இருமலும் அடுத்தடுத்து வர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.

டிரெயின் நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ரிஸர்வேஷன் கம்பார்ட்மென்டில் ஒர் ஸீட் கூட காலி இல்லாமல் ·புல் ஆக இருந்தது.

‘ஏன் தம்பி.. பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே.. இப்போபேப்பரைப் பார்த்தாலும், டி.வி.யை ஆன் செய்தாலும் ஒரே நியூஸ்.. கொரோனா வைரஸ்..நீயானா விடாம தும்மிட்டும், இருமிட்டும் இருக்கே… உன் கண்ணைப் பார்த்தா உனக்கு ஜுரம் கூட இருக்கும் போல இருக்கு…’ என்றார் பெரியவர்.

‘அய்யய்யோ.. நீங்க சொல்றதைப் பார்த்தா இது கொரோனா வைரஸின் ஸிம்டம்ஸ் மாதிரி இல்லே இருக்கு… இப்போ என்ன செய்யறது..?’ என்று அலறினாள் ஒரு மாமி.

நல்ல விஷயங்கள் வேகமாகப் பரவி மக்களைச் சேருமோ இல்லையோ.. இதுமாதிரி விஷயங்கள் உடனே எல்லோருக்கும் நொடியில் பரவி பீதியைக் கிளப்பி விடும்.

‘என்னது..? கொரோனாவா..? எங்கே..எங்கே..?’ என்று ஜன்னலோர ஸீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு வாலிபன் பதறிக் கொண்டு எழுந்தான்.

‘அது என்ன நயன்தாராவா…? சுட்டிக் காட்டறதுக்கு..? ஒருவர் தும்மலும், இருமலுமா இருக்கார்.. அது கொரோனாவா இருக்குமோன்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க..’ என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன்.

‘ஓ.. அப்படியா..’ என்று அசடு வழிய மறுபடியும் தூங்கிப்போனான்.

‘சுத்தம்.. பரப்பிரம்மம்..’ என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டான் பக்கத்தில் இருந்தவன்.

‘ஏண்டி.. புவனா.. யாருக்கோ கொரோனா வைரஸ் வந்துடுத்தாமே… உன் கோடோன்லே பார்… டிஷ்யூ பேப்பர் இருக்கான்னு… வாயையும், மூக்கையுமாவது மூடிக்கலாம்..’ என்றார் ராமசேஷன்.

அவர் கோடோன் என்று சொன்னது மாமியின் ஹான்ட்பேகை. பிரயாணத்தின்போது அவ்வளவு பெரிய பேகைத் தூக்கிக் கொண்டு வருவாள். பேகை முற்றிலுமாகப் பார்த்து விட்டு, ‘சே.. டிஷ்யூ பேப்பரை எடுத்து கண்ணுக்குத் தெரியற மாதிரி டேபிள்லேயே வெச்சிருந்தேன்… பட்.. வரும்போது அதை எடுத்து பையில் போட்டுக்க மறந்துட்டேன்…’ என்று அலுத்துக் கொண்டாள்.

‘ஆமா.. நீ எதை ஒழுங்காச் செய்தே இதைச் செய்யறதுக்கு.. இப்போ என்ன பண்ணறது..? ஏதாவது துணியை எடு.. மூஞ்சியை மூடிக்கலாம்..’ என்று கடிந்து கொண்டார் ராமசேஷன்.

‘ஐயா.. கொஞ்ச நேரம்தான்… நான் அடுத்த ஸ்டேஷனில் இறங்கிடுவேன்..’ என்ற ரமேஷ் பெரிதாக ஒரு தும்மல் போட்டான்.

அந்த கம்பார்ட்மென்டில் உள்ள எல்லோர் உடல்களும் நடுங்கின. அவர்களையும் அந்த வைரஸ் பிடிச்ச மாதிரி ஒரு அச்சம்… ஒரு பீதி…

அந்த இளைஞன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒர் முதியவர் அவனிடமிருந்து விலகி உட்கார நினைத்து இருக்கை யில் சிறிது நகர்ந்து தடுமாறி விழப் போனார். சக பிரயாணிகள் இரண்டு மூன்று பேர் அவரைப் பிடித்து சரியாக உட்கார வைத்தனர்.

‘ஏன்னா.. நாம நம்ம பொண்ணைப் பார்க்கப் போய்ட்டு இருக்கோம்… அவளைப் போய்ப் பார்க்கறதுக்குளே இந்தப் பாழாப் போன வைரஸ் நம்மளையும் தாக்கிக் கொன்னுடாதே? என்று பாதி தேமலுடன் கேட்டாள் இன்னொரு மாமி.

‘அப்படி ஒண்ணும் சீக்கிரம் தொத்திக்காது..’ என்றார் அவள் கணவர்.

‘மாமி.. நீங்க போய் உங்க மகளுக்கும், மருமகனுக்கும், குழந்தைகளுக்கும் இந்த வைரஸை டிஸ்ட்ரிப்யூட் பண்ணி, அவங்களுக்கும் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிற வரைக்கும் டைம் இருக்கு…’ என்றான் ஒருவன் நக்கலாக.

‘ஏய்… யாரும் பயப்படண்டா.. இந்த வைரஸ் காற்று மூலமா பரவாது.. யாருக்காவது அந்தப் ப்ராப்ளம் வந்தா அவரை விட்டுத் தள்ளி உட்கார்ந்திருந்தா போதும். நான் இப்பத்தான் வாட்ஸப்பில் படித்தேன்’

‘அட,, நீங்க ஒண்ணு.. இந்த வாட்ஸ் அப் மெஸேஜையெல்லாம் நம்ப முடியாது.. நாளைக்கே இந்த மெஸேஜ் தவறானது என்று வந்தாலும் வரும்..’

‘அதுவும் சரிதான்.. நாளைக்கே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவங்க வேறே யாரையாவது உற்று நோக்கினாலே அது பரவி விடும் என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..”

‘மகேஷ்.. உன்கிட்டே ·பேஸ் மாஸ்க் இருந்தா ரமேஷ¤க்குக் கொடு..’ என்றார் பெரியவர்.

மகேஷ் தன் கைப் பையிலிருந்து ஒரு மாஸ்க்கை எடுத்துக்கொடுத்தான். ரமேஷ் மாட்டிக் கொண்டான்.

‘ஆமாம்.. அவர் போட்டுண்டுட்டார்.. ஓ கே.. நமக்கும் ஒரு எக்ஸ்ட்ரா ஸே·ப்டி வேண்டாமா.. ? அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்.. அதற்குள்ளே இந்த வைரஸ் இந்த கம்பார்ட்மென்ட்லே உள்ள எல்லோருக்கும் தொத்தி விடுமே.. என்டே.. குருவாயூரப்பா.. இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ.. இப்படி ஆயிடுத்தே..’ என்றார் மற்றொருவர்.

வைரஸ் நமக்கு பரவி விட்டால் என்ன செய்வது என்ற பீதி அந்தப் பெட்டியிலுள்ள எல்லோர் முகத்திலும் ஒட்டி இருந்தது.

லக்கேஜ் வைக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், ‘மகேஷ்.. அந்தப் பார்ஸல் உன்னுடையதுதானே? அதில் மாஸ்க் தானே இருக்கு..’ என்று கேட்டார்.

‘ஆமா.. ஹோம் மேட் மாஸ்க்.. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி அந்த ஊரில் உள்ள ஒர் ·பார்மஸிக்கு டெலிவர் பண்ண கொண்டு போய்ட்டு இருக்கேன்’

‘ஒரு வேலை செய்யலாம்.. இப்போ இந்தப் பெட்டியில் உள்ள எல்லோருக்கும் மாஸ்க் அவசியம். அந்த பார்ஸலில் உள்ள மாஸ்க்கை எல்லோருக்கும் கொடுக்கலாம். நீ அந்த ·பார்மஸிக்கு நாளைக்கு ·பிரஷ்ஷா மாஸ்க் செய்துடெலிவரி பண்ணிடு’ என்றார்.

‘குட் ஐடியா..’ என்றார்கள் சக பிரயாணிகள் கோரஸாக.’அங்க உங்களுக்கு கிடைக்கிறதை நாங்க கொடுத்துடறோம். உங்களுக்கு பிஸினஸ¤க்கு பிஸினஸ¤ம் ஆச்சு.. எங்களுக்கும்நிம்மதியா பிரயாணம் செய்யலாம்..’ என்ற ஒருவர் மகேஷின் அனுமதியைக் கூட எதிர்பாராமல் அந்த பார்ஸலை எடுத்து பிரிக்க ஆரம்பித்தார்.

மகேஷ் திகைத்து நின்றான்.

‘எல்லோரும் இங்கே கூட்டம் போடாதீங்க.. அவங்கங்க ஸீட்டிலேயே உட்கார்ந்திருங்க.. மகேஷ் ஒவ்வொருததரிடமாக வந்து மாஸ்கை டிஸ்டிரிபூட் பண்ணுவார்..,’ என்றார் பெரியவர்.

‘மாஸ்க் எவ்வளவுங்க..?’

‘நாற்பது ரூபாய்..’ என்றான் மகேஷ்.

மகேஷ¤ம் பெரியவரும் ஒவ்வொருவரிடமாகச் சென்று மாஸ்கைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

‘கலிகாலம் ஐயா.. கலிகாலம்.. கலிகாலம் கடைசியிலே கல்கி பகவான் அவதரிப்பார்னோ… அவர் இந்த கொரோனா வைரஸ் ரூபத்துலே அவதரிச்சிருக்கார். அதுதான் இந்த உலகத்தையே ஆட்டிப் படைச்சிட்டிருக்கு..’ என்று கூறி சுற்றுமுற்றும் பார்த்தார் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு புரோகிதர்.

சாதாரண நேரமாக இருந்தால் அவர் கருத்தை ஆதரித்தும். எதிர்த்தும் வாதங்கள் எழுந்து அந்தப் பெட்டியே ஒரு களைகட்டி இருக்கும். ஆனால் அவர்கள் அப்போது இருந்த மூடில் அவர் சொன்னதையே யாரும் கவனிக்கவில்லை.

‘ஆனா கல்கி அவதாரத்தின்போது பிரளயம் வரும்னு சாஸ்த்திரத்தில் சொல்லி இருக்கே… இப்போ பிரளயம் ஒன்றும் வரலையே.. அதனாலே இது அவதாரமா இருக்காது’ என்று அவருக்கு அவரே எதிர் சமாதானம் சொல்லிக்
கொண்டார்.

‘ஐ ஆம் நாட் கோயிங் டு லீவ் திஸ்.. இர்ரெஸ்பான்ஸிபிள் ரயில்வே டிபார்ட்மென்ட்… டிரெயினில் ஏறறவங்களை கரெக்டா வைரஸ் இருக்கான்னு செக் பண்ணி அனுப்ப வேண்டாமா.. நான் பிரதமருக்கு ஒர் ட்வீட் அனுப்பப்போறேன்..’ என்று கத்திக் கொண்டிருந்தார் ஒரு கோட்ஸ¥ட் ஆசாமி.

‘தம்பி… முதல்லே ஒர் மாஸ்க் வாங்கி மாட்டிக்க.. அப்போதான் இந்த வைரஸ் உன்னைத் தொத்திக்காது.. ட்வீட் பண்ண நீ உயிரோடு இருக்கணும்லே..’ என்றார் ஒரு முண்டாசு கட்டிய பெரியவர்.

‘என்ன. இந்த மாஸ்க் பாக்கெட்டில் பெயரே இல்லையே. என்ன ப்ரான்ட் இது’ என்றாள் ஒரு ஸல்வார் கம்மீஸ்.

‘ ஏ.. நம்ம கிராமத்துக் காவல் தெய்வம் கருப்பண்ணசாமியே அனுப்பி வெச்ச மாதிரி இந்த தம்பி நம்மள காத்துக்கறதுக்காக இந்த முக மூடியைக் கொடுத்துட்டிருக்கு. நீ என்னடான்னா பிரான்ட் கிரான்ட்னு அதுலே நூறு குத்தம் கண்டு பிடிச்சுட்டு.. ஆத்திர அவசரத்துக்கு கிடைச்சதேன்னு சந்தோஷமா வாங்கி மாட்டிக்குவியா..’ என்று கண்டித்தாள் ஒரு கிராமத்துப் பாட்டி.

பெட்டியில் உள்ள எல்லோரும் அவசர அவசரமாக முகமூடியை மாட்டிக் கொண்டார்கள்.

டிரெயின் அடுத்த ஸ்டேஷனில் ஒரு பெருமூச்சோடு நின்றது.

சில பிரயாணிகள் அங்கே இறங்கினர். அந்தப் பெரியவரும், ரமேஷ¤ம், மகேஷ¤ம் இறங்கிக் கொண்டனர்.

‘ரமேஷ்.. உடனே போய் டாக்டர் கிட்டே செக் பண்ணிக்க.. ஆபத்பாந்தவன் மாதிரி வந்தே மகேஷ்.. ரொம்ப தாங்க்ஸ்..’ என்றார்கள் பயணிகள் ஒவ்வொருவரும்.
ரமேஷ் டிரெயினை விட்டு இறங்கியதும் அப்பெட்டியில் இருந்த பிரயாணிகளும் பெருமூச்சு விட்டனர் நிம்மதியாக. அவன் இறங்கியதும் வைரஸ் இந்த உலகத்தை விட்டே ஒழிந்து விட்டது போல அவர்களுக்குள் ஒரு உணர்வு

பெரியவரும், ரமேஷ¤ம், மகேஷ¤ம் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தனர்.

கடகடவென்று சிரித்தான் ரமேஷ். ‘மாமா.. நல்ல வேலை பண்ணினீங்க.. எனக்கு வந்த சாதாரண ஜலதோஷம், இருமலை வெச்சுட்டு.. கொரோனா வைரஸா இருக்குமோ என்று ஒரு சந்தேகத்தையும், பயத்தையும் கிளப்பி விட்டு மகேஷ¤க்கு நல்ல பிஸினஸ் வாங்கிக் கொடுத்துட்டீங்க…’

‘ஆமாம்.. மாமா.. இன்னிக்கு பூரா பார்மஸி பார்மஸியா ஏறி இறங்கினாலும் நான் எடுத்துட்டு வந்த ஸ்டாக் எல்லாம் தீர்ந்திருக்குமான்னு சந்தேகம்தான்..நீங்க ஒரேயடியா எல்லாத்தையும் வித்துக் கொடுத்துட்டீங்க.. ஆனா பாவம் அவங்களை ஏமாத்திட்டோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சிஎனக்குள் இருக்கு..’ என்றான் மகேஷ்.

‘இல்லை மகேஷ்.. இப்போ கொரோனா வைரஸ் எல்லா இடத்திலேயும் வேகமாப் பரவிட்டிருக்கு.. ரமேஷ¤க்கு இல்லாம இருக்கலாம்.. ஆனா அந்தப் பெட்டியில் உள்ள வேறே யாருக்காவது தொற்று இருந்திருக்கலாம். அப்போ எல்லோரும் தற்காப்பா முகமூடியோடு இருக்கிறது நல்லதுதானே.. நாம் அதைத் தானே செய்தோம். உணமையா இந்த வைரஸ் வேகமாக பரவிட்டிருக்கிற இந்த நிலையிலே அரசாங்கம் டிரெயின், பஸ் எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணனும். அதேமாதிரி ஜனங்கள் அதிகம் கூடுகிற மால்கள், தியேட்டர்கள், கோயில்கள் எல்லாவற்றையும் மூடிடணும் ‘ என்றார்.

மகேஷின் கைபேசி ‘க்ளிக்’ என்றது. ஏதோ மெஸேஜ்.. எடுத்துப் பார்த்தான்.

‘மாமா.. நீங்க சொன்னீங்க.. அரசாங்கம் செஞ்சுட்டாங்க நாளையிலிருந்து டிரெயின்கள், பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிச்சிருக்காங்க.. அதே மாதிரி மால்கள், கடைகள், திரை அரங்குகள், கோயில்கள் எல்லாவற்றையும் மூடி வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.’ என்றான்.

மூவரும் அவர்கள் ஊருக்குப் போவதற்காக பஸ்ஸைப் பிடிக்க பஸ் ஸ்டான்டை நோக்கி ஓடினார்கள்.

வலி கொடியது – சந்திரமோகன்

ஒரு மாலை நேரம் . உயர்ந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. அகன்ற அறையில் அந்த அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் வயது ஐம்பதுக்குள் இருக்கும்.

பெரிய மேஜையும் அவரைச்சுற்றி இருந்த தொலைபேசிகளும் அவர் பதவியைப் பறை சாற்றின.

சமீப காலத்திய பழக்கம் என்றாலும் எங்கள் இருவருக்குள் தொழிலையும் மீறிய ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது.

அன்று எனது வேலை முடிந்தவுடன் பேச்சு சமீபத்திய என் மனைவியின் மரணம் பற்றித் திரும்பியது .

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் முகத்தில் ஒரு இனம் புரியாத சோகத்தினையும் கண்களில் சில துளிகள் நீரையும் பார்க்க முடிந்தது.

ஏற்கனவே சில முறை இதைப்பற்றிப் பேசி இருக்கிறோமே ஏன் திடீரென உணர்ச்சி வசப்படுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சார் ?என்ன ஆச்சு? ” என்றேன்.

“மரணத்தின் வலியை நான் ரொம்பவும் அனுபவிச்சிருக்கேன் சார் ” என்றவர் தொடர்ந்தார்.

” எனக்குச் சிவகங்கையிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம் தான் சொந்த ஊர்.

என் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்தேன். அதன்பின் எல்லாமே என் தாய்தான்.வறுமையான குடும்பம்.

என் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு  பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார்.

எனக்கு எப்படி என் தாய்தான் உலகமோ அதுபோல அவருக்கும் நானே உலகம்.

பள்ளி விட்டவுடன் என் வயதினர் விளையாட ஓடும் பொழுது நான் அம்மாவைப் பார்க்க ஓடுவேன்.

அம்மாவின் அன்பிலும் ஸ்பரிசத்திலும் நான் வறுமையை உணரவில்லை.

உறவுகளின் துணையோடு தொழில் கல்வி முடித்தேன். அத்தருணத்தில்தான் உழைத்து ஓய்ந்த என் அம்மாவின் தள்ளாமையைக் கண்டேன்.

அம்மாவை உட்கார வைத்து இளைப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.

என் போன்று வளர்ந்த அனைவருக்கும் தோன்றும் மனதின் வெறியே.

ஊரிலோ அருகிலோ என் தொழில் கல்விக்கு ஏற்ற வேலையில்லை.

நண்பர்கள் அறிவுறுத்தலோடு சென்னை செல்ல முடிவெடுத்தேன்.

‘கவலைப்படாதீர்கள் அம்மா ! நம் துயரம் இன்னும் சில காலம் தான் . வேலையோடு சேர்ந்து ஒரு வீட்டையும் பார்த்து  வருகிறேன்’ என்றேன் அம்மாவிடம்.

அம்மா என்றும் மாறாத புன்னகையுடன் என் உச்சியில் முத்தமிட்டு,நெத்தியில் விபூதியிட்டார். பின் புடவையில் முடிந்திருந்த நூறு ரூபாவை என் பையில் திணிக்கும் பொழுது அவர் கண் கலங்கியது. என் கண்களும்தான்.

கையில் பையுடனும் ஒரு நண்பரின் முகவரியுடனும் சென்னை வந்திறங்கினேன்.

நண்பரின் முகவரி சரிதான் . ஆனால் நண்பர்தான் அங்கில்லை. எங்கெங்கோ தங்கி சில நாட்களில் என் கனவுக்கேற்ற வேலையும் அழகிய சிறு வீடும் வாடகைக்குக் கிடைத்தது.

பையில் முதல் மாத சம்பளம், அம்மாவிற்கு நான் ஆசையுடன் வாங்கிய புடவை. மனதில் சந்தோஷத்தோடு பயணித்தாலும் பத்துமணி நேரப் பயணம் பல நாட்களாக பயணிப்பது போலிருந்தது அம்மாவைக் காண ஆவலில்.

அதிகாலை பஸ்ஸிருந்து இறங்கி தெருவில் நடக்கிறேன். மூன்றாவது வீடே என் மாமாவின் வீடுதான் . மாமா திண்ணையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். என்னைப்பார்த்தவுடன் இறங்கி வீதிக்கு வந்து என் கையைப்பிடித்துக்கொள்கிறார்.

‘என்ன ராஜா, ஒரு கடுதாசியாவது போடக்கூடாதா? எவ்வளவு தவிச்சுப்போயிட்டோம்’ என்றார்.

நான் ‘என்ன ஆச்சு மாமா ?’ என்றேன்.

‘ஒன்றுமில்லை ,வா வீட்டுக்குப் போகலாம் . இரு சாவியை எடுத்து வருகிறேன்’ என்று உள்ளே சென்று சாவியை எடுத்து வந்தார்.

சற்று குழப்பத்துடன் அவர் பின்னே சென்று வீட்டினில் நுழைகிறேன்.

அங்கு அம்மா போட்டோவில் மாலையுடன்.

மாமாவின் குரல் கிணற்றிலிருந்து கேட்டது

’ தங்கச்சி, திடீரென மயங்கி விழுந்ததுப்பா. ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ளே முடிஞ்சிருச்சு. உன்னைப்  பட்டினத்தில கண்டு பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். நீ இருக்கிற இடத்த கண்டு பிடிக்க முடியல. நாங்களே எல்லாத்தையும் முடிச்சிட்டோம்பா’ என்றார்.

இப்ப சொல்லுங்கள் சார்! மரணத்தின் வலியை என்னை விட யாராவது அனுபவிச்சிருக்க முடியுமா ? ”  என அவர் கேட்ட போது என் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது…

குவிகம் பொக்கிஷம் – வனம்மாள் – அழகிய பெரியவன்

Azhagiya Periyavan (Author of அழகிய பெரியவன் ...

சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள்.

சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுட ன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும் கருஞ்சுவாலைக் கூட்டம்போல தூரத்தில் ஊசிமலை அவளுக்குத் தென்பட்டது.

வயோதிகத்தின் நியதிகளைத் தட்டாமல் ஏற்றிருந்த சாலம்மாளின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது. முந்தானையைச் சுருட்டித் தலைச்சும்மாடாகவும், முக்காடாகவும் மாற்றிக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே பேசியபடியும் போய்க்கொண்டிருந்தாள் அவள். இரண்டு மூன்று குடங்கள் சுமந்து வந்ததற்குள் களைத்து ஒரு மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

வெப்பக் காற்று மாந்தளிர்களில் பட்டு தணிந்து வீசியது. கருகும் தளிர்களின் வாசம்போல மாம்பூக்களின் வாசம் மெல்லக் காற்றிலே பரவி அடங்கியது. அவளைப் போலவே பக்கத்துத் துண்டுகளிலும் சிலர் மாஞ்செடிகள் வைத்திருந்தனர். சிலர் அப்படியே தரிசாகவிட்டு வைத்திருந்தனர்.

ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். அப்போது சாலம்மாளுக்கு நல்ல புத்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த ஊரிலும், சுத்துப்பட்டிலும் இருக்கிற வானம்பார்த்த பூமி கொண்ட ஏழை விவசாயிகள் சிலருக்கு இயேசுகாரர்கள் இலவசமாகவே மாங்கன்றுகளைத் தருவதாகக் கேள்விப்பட்டாள். உடனே முந்திக்கொண்டாள் சாலம்மாள். அவளுக்கிருந்த கையளவு நிலத்துக்கு அவர்கள் கொடுத்த சில செடிகளே போதுமானதாக இருந்தன. கிடைத்த மாஞ்செடிகள் எல்லாமுமே மெங்களூரா, நீலம் வகைகளாகவே இருந்துவிட்டதால் சாலம்மாளின் மனசு கேட்கவில்லை. மேல் ஆலத்தூர் அரசாங்கப் பண்ணை வரை போய் காதர், பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா என்று வகைக்கொன்றாகவும், சிலவற்றை வாங்கி வந்து வைத்தாள். செடிகளின் ஒட்டு பிரிந்துவிடாமல் தொட்டிகளை கவனமாக உடைத்து, பச்சைப்பிள்ளைகளை கையாள்வது போல நட்டு, குளம் குட்டை என்று விடாமல் அலைந்து நீர் ஊற்றினாள் சாலம்மாள். புதிய இடத்தில் பொருந்தாமல் இருப்பவர்களைப் போல இருந்த செடிகள் பச்சை பிடித்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது. மரஞ்செடிகள் என்றாலே சாலம்மாவுக்கு உயிர்தான். கையில் கிடைப்பதையெல்லாம் கொண்டு வந்து வைத்து அவள் வீட்டை நந்தவனமாக்கியிருந்தாள். கொத்திக் கொண்டும், நீர்வார்த்துக்கொண்டும், சருகுகளை அள்ளிக்கொண்டும் இருப்பது தான் அவள் வேலை. பூத்துக் குலுங்கும் அவள் தோட்டத்துப் பூக்கள் ஊர்ப்பெண்டுகளின் தலைகளிலெல்லாம் சிரிக்கும். அவள் தோட்டத்துக் காய் கனிகளுக்கே தனி ருசிதான் என்று சொல்வார்கள்.

“மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா!”

“புள்ளைங்க, திக்குதெச இல்லாததுக்கு எதுமேலியாவது ஆச இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இப்பிடியா?”

“நம்ம வேலூர் பக்கமா யாரோ ஒருத்தரு வீட்டு மரங்களுக்கு பத்திரிக்க அடிச்சி கல்யாணம் செஞ்சிவெச்சாராமே. அப்பிடி இவுளும் செய்வாளோ எனுமோ?” ஊரார் பேசிக்கொள்வதும் உண்டு.

சாலம்மாளின் மரப்பிரியத்தை எவராலும் புலங்காண முடிந்ததில்லை. ஊரிலிருக்கும் அத்தனை மரங்களும் அவளுக்குத் தாய்மடிதான். தினமும் ஒன்றின் நிழலிலாவது செத்த நேரம் ஒக்காந்து மனக்குறைகளைத்தானே புலம்பியபடி இருப்பது வாடிக்கையாயிருந்தது சாலம்மாளுக்கு.

காற்றும் மழையுமாக இயற்கை ஒருமுறை சாடிவிட்டுப் போய்விட்ட போது வானத்தைப் பார்த்து நெட்டி முறிப்பதும், மழையைச் சபிப்பதுமாக இருந்தாள் சாலம்மாள். கொய்யாவின் இளங்கிளையையும், முருங்கையையும் பேய்க்காற்று பதம் பார்த்துவிட்டுச் சென்றிருந்தது. முறிந்த கிளைகளைச் சேர்த்து செம்மண் துணி சுற்றிவிட்டாள் சாலம்மாள். சிரித்துவிட்டுப் போனவர்களையெல்லாம் சட்டை செய்யவில்லை அவள். இப்படித்தான் போன மாதம் கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்று அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தது. ஊர்முச்சையருகே கிளை விரித்திருந்த அரசமரத்தையும், ஊர் எல்லையிலிருக்கும் நாகமரத்தையும் படிப்பகம் கட்டவும், நீரேற்று அறை, தொலைக்காட்சிப் பெட்டி அறை கட்டவும் வெட்டிவிடுவது என்று தீர்மானமாகிவிட்டது. சாலம்மாளுக்கு இது தெரியவந்ததும் ஆங்காரியாகிவிட்டாள். மரத்தின்மீது முதல் வெட்டு விழுந்தபோது தலைவிரி கோலமாய் குறுக்கே மறித்து விழுந்தாள் சாலம்மாள். ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது.

“டேய் நாங்க அக்கா தங்கச்சிங்க தங்கியிருக்கண்டா இதுல..எங்களெ ஓட்டப்பாக்குறவன் எவன்டா?”

“தாயே பொறுக்கணும். நீ யாரு?”

“நாகலம்மா, பூவுலம்மா, எல்லம்மாடா எங்க இருப்பிடன்டா இது. நாங்க எடுத்து அடி வெக்கிறது எல்ல நாகமரம்டா. நாங்க இருக்கிற மரங்களெ வெட்டி எங்கள ஓட்டப்பாத்தா ஊரையே துவம்சம் பண்ணிடுவம்டா”

கத்திகளும், வாள்களும் கீழே விழுந்துவிட்டன. மரங்களை வெட்டுவதில்லை என்று பதில் பெற்றவுடன் மலையேறிவிட்டது சாமி. மரங்களைக் காப்பாற்றின அன்றெல்லாம் சாலம்மாள் அரசமரத்தடியிலேயேதான் கிடந்தாள். சாலம்மாள் தனிக்கட்டை. பிள்ளையில்லாததால் புருஷன் துரத்திவிட வாழாமல் வந்து ஊரோடு தங்கிவிட்டவள். நாதி என்றிருந்த ஒரே அண்ணனும் வேலை, வாழ்க்கை என்று ஊரைவிட்டுப் போய்விட்டான். கிராமத்து வீடும் கொஞ்சம் மேட்டுநிலமும் அவள் பாடு என்றாகிவிட்டது. யாரும் கண்டுகொள்ளாத அந்த மேட்டு நிலத்தில் வலு இருக்கும்வரை விழுந்து எழுவது என்று அல்லாடி வந்தாள். சும்மாடைப் பிரித்து முகம் துடைத்துக்கொண்டாள் சாலம்மாள். நேற்றுதான் நட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் வளர்ந்துவிட்டன. பூவெடுத்திருக்கும் கவைகளை உடைத்துவிட வேண்டும். காப்புக்கு விட இன்னும் கொஞ்சம் போகட்டும் என நினைத்துக்கொண்டாள். கானலின் ஊடாக சுழன்ற அவள் பார்வை கிழக்காக இருந்த வெற்றிடத்தில் நிலைகுத்தித் தவித்தது. அங்கிருந்த கானலும், வெம்மையும் அப்படியே பெயர்ந்து அவள் மனதுக்குள் வந்து இறங்கியது. பழசை நினைத்துக்கொள்ள கண்கள் மடைதிறந்துகொண்டன.

கேட்க நாதியில்லை என்பதால் ஊரிலே சாலம்மாள் என்றாளே இளக்காரந்தான். நடுத்தெரு இடைச்சி ரங்கமணிக்கும், அவள் மச்சினன்மார்களுக்கும் ரொம்பவுமே கிண்டல்தான். ஒருநாள் விறகு பொறுக்கிக்கொண்டு தன் நிலத்தின் வழியே வந்த ரங்கமணி மாவிலைகளைப் பிய்த்து கசக்குவதைப் பார்த்துவிட்டாள் சாலம்மாள். வேர் கிளம்பிவிடுமே என்று பதைபதைத்து திட்டித் தீர்த்துவிட்டாள் ரங்கமணியை. கன்றுகளை வைத்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. மறுநாள் சாலம்மாள் நிலத்துக்குப் போனபோது பாதி மாஞ்செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதை பார்த்தாள். தன் கழுத்தை யாரோ அறுத்திவிட்டது போல வலித்தது வலித்தது அவளுக்கு. “ அய்யோ எம் புள்ளிங்களே! என் செல்லங்க போச்சே” வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, வீழ்ந்திருக்கும் செடிகளை ஓடிஓடி எடுத்து அழுதாள் சாலம்மாள். சாலம்மாளின் பக்கத்து நிலம் ரங்கமணியுடையது. இவளின் நிலம்மீது ஒரு கண் ரங்கமணிக்கு இருந்தே வந்தது. “சின்னதுக்குத்தான் சின்னங் கொலையறதுன்ற மாதிரி ஆயிடுச்சே. அய்யோ எங் கொறையே. வேர் கெளம்பிடுமே, ஏண்டி இப்படி செய்யறன்னதுக்கேவா இப்படி பன்னிர்றது? ஒஞ் சாதித்திமிர எஞ் செடிங்க மேலியா காட்டறது?” ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிராது கொடுத்துவிட்டு அன்று முழுவதும் இழவு வீட்டுக்காரி மாதிரி இருந்தாள் சாலம்மாள். “மரங்களுக்குப் போய் இப்படி மாரடிக்கிறாளே” என்று சொல்லிக் கொண்டனர் ஊரார். பொழுது அமர கூடிய பஞ்சாயத்தில் வெட்டியது யார் எனத் தெரியாமல் பேச முடியாது என்று தீர்ப்பு வந்தது. இவரிவர்கள்தான் வெட்டியிருப்பார்கள். தாட்டிமமான, அரக்கி அரக்கி நடந்திருக்கும் காலாடித் தடங்கள் ரங்கமணியினுடையதுதான் என்று சாலம்மாள் சொன்னதை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.

அவுக்கென்றாகிவிட்டது சாலம்மாளுக்கு, மனசு ஆறாமல் மறுநாள் காலம்பரமே மாஞ்செடிகள் தந்த இயேசுக்கார அய்யா வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைத்தாள் சாலம்மாள்.

”நீ இப்படி அழவேண்டியதே இல்ல, வேற செடிகளுக்கு ஏற்பாடு பண்ணுவேன்” என்றதும் வேகமாய்த் தலையசைத்தாள் சாலம்மாள்.

வெட்டினவங்களுக்கு நீ தண்டென வாங்கித் தரணும் சாமீ, பாதி புள்ளைங்க களுத்த அறுத்துப்புட்டாங்களே”

“சரி நீ போயி போலீசுல சொல்லு. நான் பின்னாடியே வரேன்”

இயேசுக்கார அய்யா சொன்னதும் காவல் நிலையம் போய்விட்டாள் சாலம்மாள்.

“மரம் வெட்டின கேசெல்லாம் இங்க எடுத்துக்கறதில்ல பாட்டி” என்ற பதிலெல்லாம் அவளை அசரச் செய்யவில்லை. பகலுக்கும் காவல் நிலைய வாசலிலேயே மூக்குச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.

“சரி உன்னெ அடிச்சுப்புட்டு, மரத்தெ வெட்டிப்புட்டாங்கன்னு ஒரு மனு எழுதினு வா”

மனுகொடுத்தபிறகு காவல் நிலையத்துக்கும், இயேசுக்கார அய்யா வீட்டுக்கும் என நடந்தபடியே இருந்தாள். வழக்கு பதிவாகி முதல் சம்மன் வந்தபோதுதான் அவளுக்கு மனது ஆறியது. “என்னாதான் காலங்கெட்டுக் கெடந்தாலும் நியாயஞ் செத்துப் போகுமா? இருங்கடி இருங்க. துன்னத் துடிக்க எஞ்செடிகளெ வெட்டந்துக்கு இன்னிக்கு இருக்குது உங்குளுக்கு”

சம்மன் வந்த நாளெல்லாம் கோர்ட்டு வாசலில் தவம் கிடந்தாள். ஆனால் அவள் நினைத்தபடியெல்லாம் எதுவுமே நடக்காமல் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போனது.

ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே, “தப்பு தப்புத்தான்னு சொல்லிப்புட இந்த மனுசங்களுக்கு இத்தினி தயக்கமா?” என புலம்பிக் கொண்டே அண்ணன் மகன் தம்பிதுரை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள் சாலம்மாள்.

அவள் அண்ணன் போனபிறகு அவளுக்கென்று இருந்த ஒரே ஆதரவு தம்பிதுரைதான், அவன் தூரத்தில் இருந்தாலும் மாதத்துக்கு ஒருகால் பஸ் பிடித்துப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவாள் அவள். அவனின் எல்லா பிள்ளைகளையும் மார்மேல்போட்டு சாலம்மாள் தான் வளர்த்துவிட்டாள். அதிலும் சின்னவள் சிவப்பி என்றால் சாலம்மாளுக்கு கொள்ளை ஆசை. தம்பிதுரை அரசாங்க வழக்கறிஞரைப் போய்ப் பார்க்கச் சொன்னான். மறுநாளே விசாரித்துக் கொண்டு வழக்கறிஞரிடம் போய்ச் சேர்ந்தவள், ஒப்பாரியும், முறையிடலுமாக நெளியவைத்ததுவிட்டாள் அவரை.

“ஏம்பாட்டி, தேக்கு மரத்தெ வெட்டிட்டாப்பில ஏன் அழற? மரந்தானெ பாக்கலாம் வுடு”

“அய்யா அதுங்க மரம் இல்லய்யா, என் வயித்துல பொறந்த பொறப்புங்க மாதிரி, அந்தக் கொலகாரப் பாவிகளுக்கு நீதான் தீர்ப்புச் சொல்லணும்”

வாய்தாவுக்கு வாய்தா சாலம்மாளின் ஒப்பாரி அதிகமாகிக் கொண்டே போனது. இனிமேல் அலுவலகம் பக்கம் வந்தால் கேசை தோற்கடித்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் வழக்கறிஞர்.

பிராது கொடுத்து மறுநாளே ரங்கமணியின் கூட்டாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நினைத்தவளுக்கு இன்னும் எதுவுமே நடக்காதது அதிர்ச்சியாய் இருந்தது. நடையாய் நடந்து யார் யாரையோ பார்த்துவிட்டாள். எத்தனையோ வாய்தாக்களுக்கும் போய்விட்டாள். வேறு செடிகளுக்காக இயேசுக்கார அய்யாவை பலமுறை சென்று பார்த்ததிலும் ஒன்றும் நடக்கவில்லை. சாலம்மாள் ஓய்ந்துவிட்டாள்.

செங்கம்புதரிலிருந்து காடை ஒன்று ‘புர்’ என பறந்து போனதும்தான் சாலம்மாளுக்கு நினைவு திரும்பியது. வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. காற்றில் சலசலக்கும் மாஞ்செடிகளைப் பார்த்தபோது அவளுக்கு ஆயாசமெல்லாம் மறைந்துபோனது. மிச்சமிருக்கும் மரங்களைப் பராமரிப்பதும், தண்ணீர் விடுவதும், நெட்டி முறிப்பதும், அவைகளுடன் பேசுவதுமாக இத்தனை நாட்களை கழித்துவிட்டாள். வயல் வரப்புகளிலும், தண்ணீர் தொரவுகளிலும் ரங்கமணியைப் பார்த்துக்கொள்ளும்படி நேர்ந்துவிடும்போதெல்லாம் அவளின் ஏளனச் சிரிப்பில் சருகுகள் மிதிபடுவதுபோல் ஆகிவிடும் சாலம்மாளுக்கு. அதைத் தவிர்க்கவும் இந்த மோட்டாங்காடே கதியென்றும் ஆகிவிட்டது அவளுக்கு. அடுத்த வருடம் மகசூலுக்கு விடும்படி மரங்கள் ஆகிவிட்டிருப்பது சாலம்மாளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. நாளைக்குத்தான் கடைசி வாய்தா. தீர்ப்பு வந்துவிடும் என்று வக்கீல் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்து மேலும் சந்தோஷம் தந்தது. முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு குடத்தைத் தூக்கியபடி, வீட்டுக்குப் போகும் சரிவில் இறங்கினாள் சாலம்மாள்.

கோர்ட்டு வாசலில் பூவெடுத்துக் குலுங்கும் மாமரத்தின் கிழே சாலம்மாள் உட்கார்ந்திருந்தாள். வெய்யில், குட்டிகளைக் கவ்வும் பூனையென பாரித்திருந்தது. சாலம்மாளின் தேகக் கூட்டினுள் இருந்த இதயம் சிறு பிராயத்துப் பிள்ளையென ஓடியாடிக்கொண்டிருந்தது. மாமரத்தின் குதியாட்டத்தைக் கண்டதும் அடிவயிற்றில் நீர்கழித்துப் புரள்வது போல அவளுள் பொருமல் எழுந்தது. அந்த மரத்தை அவள் கைகள் வாஞ்சையுடன் தடவி நெகிழ்ந்தன. கண்களில் நீர் ஊற்றெடுத்து சொட்டிவிடத் திரண்டு தயங்கியது.

கோர்ட்டுக் கட்டிடம், மனிதர்களின் புழக்கத்துடன் களை கட்டியிருந்தது. வக்கீல்களும், காவலர்களும், மக்களும் ஓடியாடிக் கொண்டிருந்தனர். ரங்கமணியும் அவள் மச்சினன்மார்களும் தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததை சாலம்மாள் பார்த்தாள். அவர்கள் பேசிச் சிரிப்பது தன்னைப் பற்றித்தான் என நினைத்துக்கொண்டாள் சாலம்மாள். கோபம் அவளின் வறண்ட திரேகத்துள் பரவியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தன்னுடைய நடுவயது முதல் இந்த நாள் வரையிலாக கோர்ட்டு வாசலிலேயே தவம் கிடந்துவிட்டது போல் எண்ணி மலைத்துக் கொண்டாள். சாலம்மாளுக்கு என்று வானத்திலிருந்து கூப்பிடும் குரல் போல டவாலியின் அழைப்பு அப்போது கேட்டது. உள்ளே ஓடினாள் சாலம்மாள். நீதிபதி பேசினார். “மரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வெட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவை புதிதாக நடப்பட்டிருந்த மாஞ்செடிகள் என்பதனால் வேர் பிடிக்காமலும் செத்திருக்கலாம்”.

அதைக் கேட்டதும் சாலம்மாளிடம் பேச்சில்லை. அவளின் குரல்வளை உள்ளிழுத்து கேவலின் அவல ஒலி கேட்டது.

“அதுங்க செடிங்க இல்லய்யா. எம்புள்ளைங்க. இந்த கொட்டி* நம்பியிருந்தது அதுங்களைத்தான்யா”

பைத்தியமாய் பிதற்றியபடி கோர்ட்டு வாசல் மாமரத்தின் அடியிலேயே இருந்தாள். அவமானமும், கோபமும், துக்கமுமாக இருந்தது அவளுக்கு. அந்தச் செடிகளுக்காக எத்தனை நடை, எத்தனை படியேறல், எத்தனை முறையிடல்… வயிறு பற்றிக் கொண்டது.

ஒருபாவமும் அறியாத பாலகனுங்க. என்ன பண்ணுச்சிங்க அதுங்களெ வெட்ட? அதுங்களுக்கு வாயிருந்தா என்னா பேசியிருக்குங்க. வீட்டுக்கு வந்தும் கூட சோறு பொங்காமல் நடுராத்திரி வரை ஒப்பாரி வைத்து சன்னமாகப் பாடி அழுதுகொண்டிருந்தாள்.

காலையில் எழுந்த கையோடு அடுக்களைப் பானைகளைத் தூர எடுத்து வைத்துவிட்டு பிரிமனைகளை நகர்த்தினாள். அடியில் புதைந்திருக்கும் உண்டியல்களைத் தோண்டி எடுத்தாள். ஐந்து உண்டியல்களும் நிரம்பியும் நிரம்பாமலும் இருந்தது. எல்லாவற்றையும் போட்டு உடைத்து காசுகளைச் சேர்த்தால் சாலம்மாள். மூட்டையாக முந்தானையில் முடிந்துகொண்டபோது பாரத்தினால் அவள் உடலே கீழ்நோக்கி குஞ்சியது. நேராய் பக்கத்து ஊர்ப் பண்ணைக்கு விறுவிறுவென்று நடந்தாள். மாங்கன்றுகளுக்கு சொல்லிவிட்டு தன் நிலத்திற்குத் திரும்பினாள்.

வெய்யில் சுள்ளென்று உறைப்பதற்குள் பத்துப் பதினைந்து குழிகளை தோண்டிவிட்டாள் அவள். மண் ஆவியடித்து வாசம் கிளம்பியது. திடீரென சாலம்மாளுக்கு பேத்தி சிவப்பியின் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு வருசமும் கோடை விடுமுறையில் சிவப்பி சாலம்மாவுடன் வந்து இருந்து போவாள். கூலி நாழி என்று வருசமெல்லாம் சேர்த்த பணத்தில் சிவப்பி போகும்போது, துணிமணி என்று ஆனதை செய்து அனுப்புவாள் சாலம்மாள். இந்த வருசம் உண்டியல்களை உடைத்து மாஞ்செடிகளுக்கு சொல்லிவிட்டது சாலம்மாளுக்கு மனம் பாரமாய் இருந்தது.

“ராசாத்தி புள்ளெ வந்து ஏமாறுமே”

ஆற்றாமையோடு தோப்பைப் பார்த்தாள் சாலம்மாள். சிலுசிலுவென்று காற்றுக்கு துளிர்கள் ஆடிக்கொண்டிருந்தன.

“போட்டும், இந்த ஒரு வருசம். பொறகால எம்புள்ளிங்க நீங்களே பாத்துகுக மாட்டீங்களா ராசாத்தியெ”

மாமரங்கள் காற்றுக்கு மேலும் குலுங்கின. அவள் பேச்சை கேட்டபடியே குழிந்து கொண்டிருந்தது மண்

இந்தக் கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார் மகா ! 

அம்மா கை உணவு (26) – பொடியின் பெருமை- சதுர்புஜன்

பொடியின் பெருமை
Paruppu Podi for Rice in Tamil | Andhra Pappu Podi | How to make ...
ஒன்றுமில்லாவிட்டாலும் இங்கே பொடி இருக்குது!
ஒவ்வொன்றும் தனிச்சுவையாய்த்தான் இருக்குது!
சுடு சாதம் பிசைந்துவிட்டால் சுவை கூடுமே!
பொடி இருந்தால் போதும்_என்றன் பசி தீருமே!
கபகபன்னு பசியெடுத்தால் தேங்காய்ப் பொடி சாதம்!
அப்பளம் வடகம் கூட இருந்தால் சூப்பர் தானே!
பசியில்லை மந்தமென்றால் கறிவேப்பிலைப்பொடி சாதம்!
நல்லெண்ணெய் நிறைய விட்டு பிசைந்தடிக்கலாம்!
எள்ளுப்பொடி சாதமென்றால் கிளுகிளுப்பேறும்!
புதினாப்பொடி சாதமென்றால் புது ரத்த மூறும்!
பருப்புப் பொடி இருந்துவிட்டால் எதுவும் வேண்டாம்!
பசுநெய்விட்டு பிசைந்துவிட்டால் புகுந்து ஆடலாம்!
அங்காயப்பொடி என்ற ஒரு பொடி இருக்குது!
வயிறு கொஞ்சம் சரியில்லேன்னா அது மருந்தாகுது!
நாக்கு செத்துப்போச்சு தென்றால் நமக்கு பொடிபோலில்லை!
நாலுவிதப் பொடியிருந்தால் போதும் போதும்!
எத்தனையோ பொடி இருக்குது நம் வீட்டிலே!
எத்தனையோ ருசி இருக்குது நம்ம நாட்டிலே!
அம்மா செஞ்ச பொடி என்றால் அதில் அதிசயம் பாரு!
அன்பு அதில் கலந்திருக்கு_ அது அத்தனை ஜோரு!

 

பொழியட்டும் சார்வரி புத்தாண்டு!   – கோவை சங்கர்

தமிழ் புத்தாண்டு (@tamilputhandu) | Twitter

பட்டுவிட்டோம் பட்டுவிட்டோம் விகாரி வருடத்தில்

 உளம்நொந்து உடல்நொந்து கந்தலாய்ப் போய்விட்டோம்

எட்டாத   உயரத்தில்   நிற்கிறது   விலைவாசி

 வரவிற்குள்  செலவுகள்  அடங்காத  நிலைபேசி

திட்டங்கள்  பலகொண்டு  வருகிறது  அரசாங்கம்

 தடைபோட்டு  நிற்கின்றோம்  நம்மிலே  ஒருசாரார்

தொட்டதெற்கெலாம் கொடிபிடித்து அமைதியைக் குலைத்துவிட்டோம்

 வளர்கின்ற நாட்டினது வேகத்தைத் தடுத்துவிட்டோம்!

 

உலகையே ஆட்டிவரும் பொருளாதார மந்தநிலை

 நம்நாட்டைக் கசக்கியே  சக்கையாய்ப்  பிழிகிறது

ஆலைகள் உற்பத்தி படிப்படியாய்க் குறைகிறது

 வேலையில்லாத் திண்டாட்டம் கண்கூடாத் தெரிகிறது

உலகப்பொ ருளாதாரத் தேக்கத்தின் தாக்கம்

 நம்வாழ்க்கைத் தரத்திலே தெளிவாகப் புரிகிறது

சிலிர்ப்போடு வந்துள்ள கொரோனா வைரஸால்

 மக்களது வாழ்க்கையே தடம்புரண்டு நிற்கிறது!

 

இருளதுவும் விலகிடவே விடியலும் புலர்ந்திடவே

 ஜதிபோட்டு வருகின்றாள் சார்வரி  தேவியவள்

நீர்வளமும் நிலவளமும் தொழில்வளமும் செழிப்புற்று

 வாழ்க்கைத் தரமதுவும் படிப்படியா யுயர்ந்திடவே

பாரத   மக்கள்நீர்    ஜாதிமத    பேதமில்லை

 ஒருமித்து  வாழ்கவென  ஆசிகூற  வருகின்றாள்

பாரதனில்  முதலாக  பாரதமும்  வளம்பெறவே

 அன்போடும் மகிழ்வோடும் ஆசிபல கூறுகிறாள்!

 

பயிர்கள்  வளரட்டும்  தொழில்கள்  பெருகட்டும்

 நோயின்றி நொடியின்றி ஆரோக்கியம் மலரட்டும்

ஜாதிமத  பேதங்கள்  அடியோடு  ஒழியட்டும்

 உனக்குநான் எனக்குநீயென ஒற்றுமையும் துளிர்க்கட்டும்

எல்லாத்  துறைகளிலும்   முதலாக   நிற்கட்டும்

 நமக்குநிகர் நாமேயென பாரதமும் முழங்கட்டும்

இன்பமும்  மகிழ்ச்சியும்  கடல்போல்  பெருகிடவே

 பொன்மாரி பொழியட்டும்  சார்வரி  புத்தாண்டு!

மனிதன் நினைப்பதொன்று , இறைவன் நினைப்பதொன்று

வாட்ஸ் அப்பில் சில நல்  முத்துக்களும் இருக்கும் . அதற்கு இது ஓர் உதாரணம். 

 

Sri Math Bhagavad Gita

 

மனிதன் திட்டமிட்டதற்கு

இறைவன் அளித்திருக்கும்
இடைக்கால தீர்ப்பு.
இதோ
*மனிதன்*
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு என்று அறிவித்தது.
*கடவுள்*
இப்போதைக்கு NPR கிடையாது என்று அறிவித்தது.
*மனிதன்*
எப்பொழுதும் இல்லாமல் இப்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்தது.
*கடவுள்*
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ் இப்போது.
*மனிதன்*
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு – சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னது.
*கடவுள்*
மருத்துவர், செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள் என்று சொன்னது. மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு ஊதியம் அறிவித்தது.
*மனிதன்*
இவர் அவரை தொட்டால் தீட்டு என்பது அன்று.
*கடவுள்*
இப்போது எவரை தொட்டாலும் உயிருக்கே வேட்டு என்பது இன்று.
*மனிதன்*
ஒழுக்கமே இல்லாமல் கடைகளில் முண்டி அடித்து பொருட்களை வாங்கியது அன்று.
*இறைவன்*
ஒரு மீட்டர் இடைவெளி  விட்டு வட்டத்துக்குள் நிற்க வைத்தது இன்று.
*மனிதன்*
பொது இடங்களில் எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தது அன்று.
*கடவுள்*
பொது இடங்களில் வாயையே திறக்காமல் மாஸ்க் போட வைத்தது இன்று.
*கடவுள்*
செல்வாக்கைக் காட்ட ஊரைக்கூட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் செய்தது அன்று.
*கடவுள்*
20 பேருக்கு மேல் இல்லாமல் எளிமையான வைபவத்தை சொல்லி கொடுத்தது இன்று.
*மனிதன்*
செத்தால் ஆயிரம் பேர் வர வேண்டும் என்று நினைத்தது அன்று.
*கடவுள்*
செத்தால் தூக்கி செல்ல நான்கு பேர் போதும் என்று சொல்லி கொடுத்தது இன்று.
*மனிதன்*
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி என்றான் அன்று
*கடவுள்*
இப்போது கோவிலுக்கு செல்பவனுக்கு அடி உதை என்றான் இன்று.
*மனிதன்*
தூய்மை செய்பவர்களை
‘துப்புறவு பணியாளர்கள்’ என்றனர் அன்று.
*கடவுள்*
தூய்மை செய்பவர்கள்
இனி ‘ தூய்மை பணியாளர்கள் ‘என்று அழைக்கப்படுவது இன்று.
*மனிதன்*
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைப்பவனை உழைப்பாளி என்றான் அன்று.
*கடவுள்*
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி என்றான் இன்று.
*மனிதன்*
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல என்றான் அன்று.
*கடவுள்*
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது என்றான் இன்று
*மனிதன்*
டாஸ்மார்கை பூட்டவே இயலாது என்றான் அன்று
*கடவுள்*
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும் என்றான் இன்று
இன்னும் எத்தனை எத்தனையோ பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கும் ‘ கொரானா’ ஒரு வகையில் நமக்கு ‘ கடவுள்’ மாதிரி தான்.
இறைவனின்
இடைக்கால தீர்ப்பை
நாம் மதிக்காவிடில்
இறைவனின்
இறுதி தீர்ப்பு
எப்படி இருக்கும்
என்பதை
அவரவர்களே
யூகித்துக் கொள்ளுங்கள்.

தொலைவில் தொலைந்த விழுது – தில்லைவேந்தன்

முடி உதிர்வை தடுத்து, இளமையாக ...முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ...

  • தொலைவில் தொலைந்த விழுது
    தந்தையும் தாயும் தங்களின் துணையாய்த்
         தங்களை எண்ணித் தனிமையில் இருப்பர்.
    வந்திடும் நண்பர் உறவினர் தம்மை
         மகிழ்வுடன் கூடிப் பேசிட  அழைப்பர்.
    அந்தஅப் படத்தில் இருப்பதெம் மகனே
         ஆறிரு வயதில் என்றெலாம் சொல்லி
    முந்தைய  நினைவில் மூழ்கியே எடுக்கும்
         முத்தினைத்  தொடுத்துக் கண்களும் விடுக்கும்.
    மெல்லவே விடியும் ஒவ்வொரு நாளும்
         மெல்லவே நடக்கும், மெல்லவே முடியும்
    நல்லதோர் காப்பி, நாளிதழ் மற்றும்
         நயம்நிறை  இசையால் நகர்ந்திடும் பொழுது.
    கொல்லையில் மணக்கும் முல்லையும் மல்லியும்
         கொள்பவர் இன்றித் தவிக்குமே அழுது.
    தொல்லுயர்  ஆல   மரத்தினை  விட்டுத்
         தொலைவினில் ஊன்றித் தொலைந்தது விழுது.

மன மாற்றம் என்ன செய்கிறது !    – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Change Of Mind Clipart

மன மாற்றமே

நான் என்னும் இறுமாப்பை

நாம் என்று மாற்றுகிறது!

மன மாற்றமே

சுயநலம் என்னும் சுகத்தை

பொதுநலமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

கோபம் என்னும் தீயை

குணமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

குறுகிய எண்ணங்களை

பரந்த உள்ளமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

வேகமான முடிவுகளை

விவேகமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

ஆணவச் செயல்களை

பணிவாக மாற்றுகிறது !

மன மாற்றமே

பதற்றம் பரிதவிப்புகளை  

நிதானமாக மாற்றுகிறது!

மன மாற்றமே

பயம் என்னும் அச்சத்தை     

துணிவாக மாற்றுகிறது!

மன மாற்றமே

ஆர்ப்பரிக்கும் செயல்களை

அமைதியாக மாற்றுகிறது!

மன மாற்றமே

அலைபாயும் மனங்களை

சமநிலைக்கு மாற்றுகிறது!

மன மாற்றமே

வாழ்வின் சிக்கல்களை

எளிமையாக மாற்றுகிறது!

மன மாற்றமே

மன அழுத்தங்களை

பஞ்சுபோல் எளிதாக்குகிறது!

மன மாற்றமே

மாசு படிந்த வாழ்வை

தூய்மையாக மாற்றுகிறது.!

மன மாற்றமே

ஆசைகளுக்கு அணைகட்டி

திருப்தியாக மாற்றுகிறது !

மன மாற்றமே

அன்பை பெறுவதிலிருந்து

அன்பாகவே மாற்றுகிறது!

மன மாற்றமே

மரணத்தைக் கூட

மறந்து ஏற்றுக்கொள்கிறது!

 

 

இம்மாதக் குரல் – வைகோவின் திருவாசக உரை

வை கோவிற்கும் திருவாசகத்திற்கும் எப்படி ஒரு முடிச்சு? 

அந்தக் குரல் – அந்தத் தமிழ் – அந்த விளக்கம் எல்லாம் பிரம்மிப்பை ஊட்டுகின்றன. 

கேட்டு ரசியுங்கள் ! 

 

இப்படிக்குக் கொரோனா – கு. சிந்தாமணி

Earth Planet In Medicine Mask Fight Against Corona Virus. Concept ...

அற்புதக் கவிதை-
(விவியன்- ஸ்பெயின்)
நிலமகள் உன் காதில் கிசுகிசுத்தாள் ; ஆனால்/
நீயோ காதில் போட்டுக் கொள்ளவில்லை.
நிலமகள் உன்னோடு உரையாடினாள்; ஆனால்/
நீயோ செவிசாய்க்கவில்லை.
நிலமகள் உரக்கக் கூச்சலிட்டாள்; ஆனால்/
நீயோ அவள் வாயடைத்தாய்.
அதனால்தான் நான் பிறப்பெடுத்தேன்…
உன்னைத் தண்டிக்க நான் உதிக்கவில்லை…
உன்னைத் துயில் எழுப்பவே நான் உதயங் கொண்டேன்…
பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட
நிலமகள் உதவிக் கரம் வேண்டிக் கரைந்தழுதாள். ஆனால்
நீயோ செவிடாகிப் போனாய்.
கொழுந்துவிட்டு எரிந்தது ஊழித்தீ. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
சுழன்றடிக்கும் சூறைக்காற்று. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
அச்சுறுத்தும் புயற்காற்று. ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
கடல் விலங்குகள் நீர் மாசுக்களால் நித்தம் மரித்தன.
பனிப்பாறைகள் உருகி ஓடின அச்சுறுத்தும் வேகத்தில்,
கொடிய பஞ்சம்,
எனினும் நீ இன்னும் செவிசாய்க்கவில்லை.
நிலமகள் எத்தனை எதிர்மறைத் தாக்குதல்களை எதிர் கொண்டாள்;ஆனால்
நீயோ செவிசாய்க்கவில்லை.
இடைவிடா போர் ஓலங்கள்
இடைவிடாப் பேராசை
நீயோ தொடர்ந்து உன் வழியில் வாழ்வைத் தொடர்ந்தாய்…
பகைமை பன்மடங்காய்ப் படர்ந்த போதும் உனக்குக் கவலையில்லை,
கொலைகள் பல நித்தம் நிகழ்ந்த போதும் உனக்குக் கவலையில்லை,
அண்மையில் வெளிவந்த ஐ போன் வாங்குவதே உனக்கு அதிமுக்கியம்,
நிலமகள் உன்னிடம் என்ன சொல்ல எண்ணினால் என்ன?
ஆனால் இதோ நான் இங்கு இருக்கின்றேன்.
உலகைத் தன் வழித்தடங்களில் நில் என நிறுத்தி விட்டேன்.
இறுதியாக நீ என் குரலுக்குச் செவிசாய்க்கச் செய்துவிட்டேன்.
உன்னை அடைக்கலம் கொள்ளச் செய்துவிட்டேன்.
நீ உலகப் பொருட்களைப் பற்றிய சிந்தனைகளில் உழன்று கொண்டிருப்பதை நிறுத்தி விட்டேன்..
இப்போது நீயும் நிலமகளைப் போல, உன் ஒரே கவலை
உயிர் பிழைப்பதைப் பற்றி மட்டுமே.
இது எப்படி இருக்கு?
நிலம் தீயில் பற்றி எரிய.. நான் உனக்கு காய்ச்சல் தருகின்றேன்.
காற்றில் மாசுகள் நிறைந்திருக்க.. நான் உனக்கு மூச்சுத் திணறல் நோய்கள் தருகின்றேன்..
நிலம் நாளும் தன் வலிமை இழக்கை இழக்க இழக்க, நான் உன்னை வலிமை குன்றச் செய்கின்றேன்.
உன் சுகபோகங்களை நான் இழக்கச் செய்தேன்…
நீ வெளியில் சுதந்திரமாய் சுற்றித் திரிவதை..
நிலமென்னும் இக்கோளின் துன்பங்களை சற்றும் நினையாது
விஷய போகங்களில் மூழ்கிக் கிடந்தாய்
நான் உலகின் சுழற்சியை நிறுத்தினேன்…
இப்போது…
சீனாவில் காற்றின் தரம் மேம்பட்டிருக்கின்றது…
வானம் நிர்மலமாய் தெளிந்த நீல வண்ணத்தில் திளைக்கின்றது,
ஏனெனில் தொழிற்சாலைகள் காற்றில் மாசுகளைக் காறி உமிழவில்லை.
வெனிசில் நீர் தூய்மையாக உள்ளது,
ஏனெனில் நீரை மாசுபடுத்தும் கொண்டோலா படகுகள் பயனற்றுக் கிடக்கின்றன.
உன் வாழ்வில் எது இன்றியமையாதது என சிந்திக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ள கட்டாயம் நேர்ந்திருக்கின்றது.
மீண்டும் சொல்கின்றேன், உன்னைத் தண்டிக்க நான் இங்கே வரவில்லை,
உன்னைத் துயில் எழுப்பவே வந்திருக்கின்றேன்…
இவையெல்லாம் முடிந்து விட்டால், நான் இல்லாது போய்விடுவேன்…
இக்கணங்களை நினைவில் கொள்…
நிலமகளின் குரலுக்கு காது கொடு.
உன் ஆன்மாவின் குரலுக்கு செவிசாய்.
நிலத்தை மாசுபடுத்துவதை நிறுத்து.
ஒருவரோடு ஒருவர் போரிடுவதை நிறுத்து.
உலகப் பொருட்களில் மனம் உழல்வதை நிறுத்து.
அண்டை வீட்டாரை நேசிக்க ஆரம்பி.
உலகையும், அதன் உயிரினங்களையும் பற்றிக் கருதத் தொடங்கு.
படைப்பவனை நம்பத் தொடங்கு.
ஏனென்றால்,
மறுமுறை இன்னும் உக்கிரமாய் உதயம் கொள்வேன்
இப்படிக்கு,
கொரோனா நோய்த்தொற்று. 

உலகினை அடக்கிய நோய்த்தொற்று – சுரேஷ் ராஜகோபால்

( படம் நன்றி: வாட்ஸ் அப் ) 

மொய்த்திடும் கிருமியால்
மெய்யும் பொய்யாச்சு!
ஆறறிவு வீணாச்சு!
பேரருள் தேடி
அலையும் பேதை மனம்!
சிறைதனில் வாடல்
நமக்குத்தான்!
இயற்கை கொஞ்சமும்
தந்நிலை மாறவில்லை !
நமது கண்டுபிடிப்பால்
விளைந்தது நாசம்!

ஜனன மகிழ்வில்லை
மரண ஓலமில்லை
சிறைதனில் அடைபட்ட
உயிரினம் நாம்!
நமக்கு நாமே
சிறை கண்டோம்!
நெஞ்சமும் சிறையாச்சு
கொஞ்சமும் பாதிப்பு
குறையவில்லை ஏன்?
புலப்படாத புதிர்!

சிறையில் இருக்கும்
மிருகங்கள் கைதட்டி
சிரிக்கும் நேரமிது!
நமைப் பார்த்து
இது உனக்கு தேவையா
எனக்கேட்கும் நேரமிது!
புரிந்துநடந்தால்
உலகம் தப்பும்!
இதே தப்பை
திரும்பச் செய்தால்
உய்வில்லை உனக்கு!

மானங்கெட்ட மனிதா!
மதிக்கக் கற்றுக்கொள் !
இல்லையேல் மிதிபடுவாய்
கண்ணுக்கு தெரியாத இனத்தால்

!

வாழு வாழவிடு!
உன்கையில் உலகம்
தன்னையே கொடுத்தது!
நம்பிக்கைத் துரோகம்
செய்த இனமே
உன்னைப் புனிதனாக்கு!
உன் பாவத்தால்
பாவம் ஒன்றும்
அறியாத அப்பாவிகள்
பாவிகள் ஆகிவிட்டனர்
ஏனிந்த கொலைவெறி?

புரிந்து மாறிவிடு
இல்லையேல் மாண்டிடுவாய்
கொத்து கொத்தாக!
இயற்கை தன்னை
சுத்தம்செய்யும் நேரமிது,
வேடிக்கை பார்!
தன்னைக் காத்திட
இயற்கைக்குத் தெரியும்
உணர்ந்து திருந்திடு !
இல்லையேல்
மறந்திடு உன் உயிரை.

இம்மாத திரைக்கவிதை – மலர்ந்தும் மலாராத

Swami's Indology Blog: கண்ணதாசனின் ...

மலர்ந்தும் மலராத  – இந்த சொற்றொடர் நம்மைப் பாசமலராக்கி கண்களில் கண்ணீரைக் கொட்டும் காவியத்தை நினைவுறுத்தும் .  

இந்தப் பாடல் காலத்தை வென்ற பாடல் !

 

படம்: பாசமலர் 

பாடல்: கண்ணதாசன் 

பாடியவர்கள்: டி எம் சவுந்தரராஜன் சுசீலா 

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  

 

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த 
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

  • கொரோனா வைரஸ் !

    Corona: Caught in corona crossfire: How the current crisis has ...

    இருபத்தெட்டு நாட்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டேன் – கனடாவிலிருந்து சென்னை வந்து, படியேறிய பெருமாளாக நான்கு வார வீட்டு வாசம் – இன்னும் படியிறங்கி உலகைப் பார்க்கவில்லை. கொரோனா வைரஸுக்கு நன்றி சொல்வதா தெரியவில்லை – ஆனால் பலர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை வரவேற்று (மாசு கட்டுப்பாடு ) கொரோனா வைரஸுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என எல்லா இடங்களிலும், ஏராளமான செய்திகள் – சில ஆதாரபூர்வமாகவும், பல ‘சும்மா’ மனதிற்கு பட்டதை எழுதியதாகவும் – குவிந்த வண்ணம் உள்ளன. தொலைக் காட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம் – செய்திகள் என்ற பெயரில் உண்மைகளைக் கூட மக்களை அச்சப்பட வைக்கும் வகையில், அரசியல் கலப்புடன் பேசுகின்றன. 

    எனக்குத் தெரிந்த வரையில் இந்தக் கொரோனா தொற்று பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலில், இந்த வைரஸ் ஒரு செல்லை எப்படி அழித்து, அதனுள்ளேயே க்ளோன் போல பலவாக மல்டிப்ளை ஆகிறது என்பதைப் பார்ப்போம்!

    கொரோனா வைரஸ் – பல முட்கள் உள்ள கிரீடம் போன்ற (சப்பாத்திக் கள்ளி காய் போல்) வடிவுடையது. RNA வைரஸ், 30 kb அளவுடையது. ஒரு செல்லுக்குள் புகுந்து விட்டால், 4 – 5 முறை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சக்தியுடையது. முதலில், வைரஸின் முள் அல்லது ஸ்பைக் புரதம், திசுக்களின் செல் சுவற்றில் உள்ள ரிசெப்டாரில் ஒட்டிக்கொள்ளும்! எஸ் புரதம் (S protein) புகுந்த செல்லுக்குள் மாற்றங்களைச் செய்து, செல்லை செயலிழக்கச் செய்யும். இவற்றைத் தவிர E புரதம் (Envelop protein), M புரதம் (Membrane protein – வைரஸின் வடிவை செல்லுக்குள் பாதுகாப்பது) ஆகியவையும் செல்லின் அழிவுக்கும், உள்ளேயே ஒரு வைரஸ் பல வைரஸ்களாக பெருகிடவும் உதவுகின்றன. செல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் Type 1 interferon என்னும் புரதத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதுவும் இந்த வைரஸ் புரதங்களே! நுரையீரல் செல்களை அழிக்கத் தொடங்கினால், அதுவே மூச்சுமுட்டல், நிலைக்குப் போகும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது – நல்லவேளையாக, இது அரிதாகவே நடக்கிறது என்பது நல்ல செய்தி!

    சுவாசம் சம்பந்தப் பட்ட – மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், ப்ராங்கியோல், நுரையீரல் – உறுப்புகளையே முதன்மையாக இவை தாக்குகின்றன (Respiratory viruses).  முதன் முதலில் மனிதர்களில் கொரோனா வைரஸ் 1995 ல் கண்டுபிடிக்கப் பட்டது. (பறவைகள், விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உண்டு!).  பீட்டா கொரோனா வைரஸ் வகையில் HCOV NL 36, HCOV – HKU 1, MERS COV ஆகிய மூன்றும் மனிதர்களைத் தொற்றுவதாய்க் கண்டுபிடித்துள்ளனர்.  சாதாரணமாய் வரக்கூடிய – சீசனல் URI – ஜலதோஷம், தொண்டைவலி, காது வலி ஆகியவையும், வயாதானவர்கள், பிறந்த குழந்தைகள், எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் ஆகியோருக்கு, இவை நுரையீரலைத் தாக்கும் வாய்ப்புகள் – Lower Respiratory tract Infection –  அதிகம். 

    2002 ல் சீனாவில் SARS COV (Severe Acute Respiratory Syndrome) வைரஸ் தொற்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. வெளவாலில் இருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்பட்டது – உலகில் 30 நாடுகளில் (பேண்டமிக்) எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப் பட்டதாகவும், இதில் சுமார் 10% (800) பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப் பட்டது. 

    (Pandemic – உலகின் பல நாடுகளிலும் ஒரே சமயத்தில் பரவிடும் தொற்று; Epidemic – ஓரிடத்தில் திடீரெனப் பரவிவிடும் தொற்று (ஒரு நாடு, ஒரு மாகாணம் என்பது போல்); Endemic – ஒரு வியாதி ஓரிடத்தில் மிகப் பரவலாக எப்போதும் இருப்பது (மலேரியா – பிரெசில், ஆப்பிரிக்கா, ஆசியா).

    2012ல் MERS COV (Middle East Respiratory Syndrome Cov) என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது – வாந்தி, பேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதயம் மற்றும் மூளை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் இந்தத் தொற்றால் வந்தன.

    மேற்சொன்ன இரண்டு வைரஸ்களின் குழுமத்திலிருந்து தற்போதைய கொரோனா வைரஸ் புது அவதாரம் எடுத்து வந்திருக்கலாம் – ஜெனிடிக் கோடிங் வித்தியாசமாக இருப்பதால், வீச்சும், வீரியமும் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இதுபோன்றே Rhino virus, Respiratory Syncytial virus (RSV), Measles virus (மணல்வாரி அம்மை), Influenza A,B,C virus,  போன்றவையும் சுவாசம் சம்பந்தமான தொற்றுகளே – ஆனால் இவை கொரோனாவைப் போல அவ்வளவு வேகமாகப் பரவுவதோ, உயிருக்கு ஆபத்தான சுவாசப் பிரச்சனைகளை உருவாக்குவதோ இல்லை!

    கொரோனா வைரஸ் (COVID-19) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, சுவாச உறுப்புகளைப் பாதிக்கின்ற, கிரீடம் போன்ற அமைப்புடைய வைரஸ். டிசம்பர் 2019 ல் சீனாவின் ஊஹன் (Wuhan) ல் முதன் முதலில் தொடங்கியது. எதிலிருந்து என்பது தெரியவில்லை – பூனை போன்ற பண்ணை விலங்குகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

    சில உண்மைகள்:

    1. இந்தத் தொற்று உள்ளவர்களின் தும்மல், இருமல் மூலம் வைரஸ் பரவுகிறது. காற்றில் பரவாது. வைரஸ் கனமானது, அதனால் காற்றில் பரவாமல், தரையிலோ, சளித் துளிகள் விழுகின்ற இடங்களிலோ விழுந்து விடும். அதனால், இந்தத் தொற்று உள்ளவர்களிடம் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி இருந்தால் நேரடியாக சுவாசம் மூலம் தொற்றுவது தவிர்க்கப் படும். வைரஸுடன் விழுந்துள்ள சளித் துளிகள் – தரை, ஜன்னல், கதவு கிரில்கள், மேஜை, நாற்காலி, கார்க் கதவின் கைப்பிடி – நம் கையில் பட்டு, நாம் முகத்தைத் தொடும்போது, முகம், மூக்கு, கண் என வைரஸ் தொற்றி, சுவாச உறுப்புகளுக்குள் போகும் அபாயம் அதிகம். எனவேதான், எதைத் தொட்டாலும், கைகளை சோப்பு அல்ல்து சானிடைசர் போட்டு கழுவுவது – 20 – 40 நொடிகள் – முக்கியம். கூடுமானவரை, முகத்தைக் கைகளினால் தொடாமல் இருப்பது நல்லது – பிறர் முகத்தையும்!
    2. கீழே விழுந்த வைரஸ் சில மணிகள் முதல் சில நாட்கள் வரை தொற்றக் கூடும். விழுந்த இடம், தட்ப வெப்ப நிலை பொருத்து, இது மாறுபடும். சந்தேகமாக இருந்தால், கிரிமி நாசினி கொண்டு தரை, மற்ற இடங்களைத் துடைத்துவிடலாம். கைகளைக் கழுவுவதும், முகத்தை கையயால் தொடாமல் இருப்பதுவும் நல்லது.
    3. மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று வீட்டு ‘பெட்’ மிருகங்களுக்குப் பரவுமா என்று தெரியவில்லை. அவைகளையும் தனிமைப் படுத்துவது நல்லது.
    4. கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து, சிம்டம் முதலில் வரும் வரையான கால அவகாசம் 1 -14 நாட்கள். பொதுவாக 5 -6 நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும், இந்த இடைவெளி மாறக் கூடியது என்பதால் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை, தனிமைப் படுத்துதல் அவசியமாகிறது. நோய்த் தொற்று அதிகமாக உள்ள இடங்களிலிருந்து வருபவர்கள், கொரோனா தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், இருமல், தும்மல், ஜுரம் இவற்றுடன் தொற்று அதிகம் உள்ள இடத்திலிருந்து வருபவர்கள் ஆகியோர் தனிமைப் படித்தப் படுவர் – 28 நாட்களுக்கு. “தனிமைப் படுத்துவது, ஒருவருக்கு வியாதி இருப்பதாக அர்த்தம் இல்லை. ஒருவேளை இருந்தால், அவருக்கும், பிறருக்கும் நல்லது – வியாதி பரவுவது தவிக்கப் படும் என்பதால் தான்!
    5. மாஸ்க் – மூக்கு, வாய், தாடை ஆகியவற்றை நன்றாகக் ‘கவர்’ செய்வது அவசியம். மருத்துவ மனை, கொரோனா பாஸிடிவ் ஆன பேஷண்ட்ஸ், பொது இடங்களில் வேலை செய்பவர்கள் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும். சிறு பொத்தல்கள், கிழிசல் இல்லாத மாஸ்குகள் அவசியம். உபயோகித்த பின், மிகவும் கவனமாக, மூடிய குப்பைத் தொட்டியில் போடவும். கையில், முகத்தில் படாமல் கழற்றவும். பின்னர் கையை சோப்பு போட்டு நன்றாகக் கழுவவும். 
    6. தேவையில்லாமல் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கவும் – அடிக்கடி கை கழுவுவது, இருமல், தும்மல் வரும்போது, டிஷ்யூ பேப்பர் அல்லது கையினால் (மடக்கிய முழங்கையினால்) வாய், மூக்கை மூடிக்கொள்வது, இருமல், தும்மல் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளே போதுமானது. 
    7. எல்லா வைரல் காய்ச்சல்களைப் போலத் தான் – இருமல், தும்மல், காய்ச்சல், உடம்பு அசதி, வலி என்று வரும் – பொதுவாகவே மிகவும் குறைவான அளவில்தான் பாதிப்பு இருக்கும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்குத் தானாகவே சரியாகிவிடும் என்பதுதான் உண்மை. சிலருக்கு வாந்து பேதியும் இருக்கலாம். வயதானவர்கள், கைக் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாயுள்ளவர்கள் (ஸ்டீராய்ட், கேன்சர் மருந்துகள் எடுத்துக் கொள்கிறவர்கள்) போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் 2% – 3% இருக்கலாம். வயதானவர்கள், டயபெடிஸ், இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், தங்கள் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக்கொள்வது அவசியம்.
    8. சிலருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், சிம்டம் ஏதுமின்றி வலம் வருவார்கள் – அவர்களால் மீதி பேருக்குப் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனாலும், மிகக் குறைவான இருமல், தும்மல் இருப்பவர்களால், பரவும் வாய்ப்பு இருப்பதாலே, பொது அடைப்பு அவசியமாகிறது. எல்லோருக்கும் டெஸ்ட் செய்வது என்பது முடியாது – எனவே அவரவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளுதலே சிறந்த முறையாகும். வருமுன் காப்பதுதானே நல்லது?
    9. கூடிய வரையில் வெளியில் போவதைத் தவிர்க்கவும். அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும், முழு பாதுகாப்புடன் தனியே சென்று வரவும். கூட்டமான இடங்களை நிச்சயமாகத் தவிர்க்கவும்.
    10. வைரஸுக்கு இன்று வரை மருந்தில்லை – சில வைரஸ் களுக்கு – எச் ஐ வி, ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் – இருக்கும் மருந்துகளை முயற்சிக்கிறார்கள். சிறிது காலத்தில் வாக்சின் வரலாம் – பொதுவான சப்போர்டிவ் சிகிச்சையும், பாக்டீரியல் தொற்றைச் சமாளிக்க ஆண்டிபயாடிக்குகளும், மூச்சு முட்டலுக்கான சிகிச்சைகளும் ( ஆக்ஸிஜன், சில மருந்துகள், வெண்டிலேட்டர் சப்போர்ட்) மருத்துவ மனைகளில் அளிக்கப் ப்டுகின்றன. அதையும் மீறி உயிரிழப்பு என்பது 2% க்கும் குறைவுதான். மற்றபடி, ஹைட்ராக்ஸி க்ளோரோகுவின்(மலேரியாவுக்கு கொடுக்கப்படுவது), ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், பிசிஜி வாக்சின் போன்றவைகளின் உபயோகங்களுக்கு, ஆதாரபூர்வமான தரவுகள் இல்லை. மற்ற சிகிச்சை முறைகள்,  மஞ்சள், வேப்பிலை போன்றவற்றின் உபயோகங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கிரிமி நாசினிகளின் (சோப்பும் இதில் அடக்கம்) உபயோகம் மிகவும் முக்கியமானது. ஆல்கஹால் உள்ள சானிடைசர்கள் கொரோனா வைரஸின் கொழுப்பு சுவற்றை (லிபிட் கோடிங்) அழிக்கும் வாய்ப்பிருப்பதால் உபயோகிக்கலாம். 
    11. கொரோனா வந்து சரியானவர்களின் ‘பிளாஸ்மா’ வை  (இரத்தத்தில் இருந்து சிவப்பு, வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகளை பிரித்தெடுத்த பின் மிஞ்சுவது) மிகவும் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள் – அதில் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ (எதிர்ப்புச் சக்தி கொண்ட புரதம்) இருப்பதால், நோய்த் தொற்று குறைக்கப்படும்.
    12. இந்த தொற்றினாலும், அது பற்றிய செய்திகளாலும், நீண்ட கால ஊரடங்கு நிலையாலும் ஏற்படும் மன அழுத்தத்திற்கு, கவுன்சலிங் தேவைப் படும். மக்களை பீதி அடையும் வகையில் பரப்பப்படும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்துவது அவசியமே!   

    மருத்துவ மனைகளில் பின்பற்ற வேண்டியவை பற்றி  நான் குறிப்பிட வில்லை – அதற்கென்று சில தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.

    இப்போதைக்கு, தனித்திருத்தலும், கைகளைக் கழுவுவதும், முகத்தில் கை வைக்காமல் இருப்பதுவும், கூட்டங்களைத் தவிர்ப்பதுவும் நம்மை கொரோனாவிலிருந்து காக்கும். நாளடைவில் சமூகத்தின் எதிர்ப்பு சக்தி கூடுவதும், கொரோனா வைரஸின் வீரியம் குறைவதுமே இதிலிருந்து விடுதலை கிடைக்கும் வாய்ப்புகளாகும்.  இதைவிட மோசமான உலகம் தழுவிய நோய்த் தொற்றுகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம் – இதிலிருந்தும் மீண்டு வருவோம்.