பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சி …

Image may contain: 1 person

மதிப்பிற்குரிய நண்பர் கவிஞர் ரவி சுப்பிரமணியன்  எழுதிய பாடல் வரிகளைவிட  உக்கிரமாக வேறு யாரும்   இந்த அவலத்தை வார்த்தையில் வடித்துவிட முடியாது. 

துன்பத்தில் துவண்டிருக்கும் இளம் பெண்களுக்குத் தந்தையாய் தாயாய் அபயக்கரம் நீட்டுகிறார்.

காளியின் படத்தைப் பதிவு செய்துவிட்டு – பாரதியின்  காளிக் கூத்துக்  கவிதையைப் பாடிவிட்டுத் தன் அறச் சீற்றத்தை  மனவலியுடன் தருகிறார். 

இதற்கு என்னுடைய  ஒரே பதில் – ஒரே வார்த்தை …

“நெஞ்சு பொறுக்குதில்லையே” 

 

 

வெடிபடும் அண்டத்து
இடிபல தாளம் போட- வெறும்
வெளியில் இரத்தக் 
களியொடு பூதம் பாடப் – பாட்டின்
அடிபடுபொருள் உன் 
அடிபடும் ஒலியில் கூடக் – களித்து
ஆடுங் காளீ ! 
சாமுண் டீ! கங்காளீ!
அன்னை ! அன்னை ! 
ஆடும் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சக்தி பேய்தான் 
தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்
சடசட சட்டென்று 
உடைபடு தாளம் கொட்டி – அங்கே
எத்திக்கினிலும் 
நின்விழிஅனல் போய் ஒட்டித் – தானே
எரியும் கோலம்
கண்டே சாகும் காலம்,
அன்னை ! அன்னை ! 
ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை.

– பாரதியார்.

————————-

தத் தரிகட தத் தரிகட தத்தோம்
——————————————
வெறிதிமிர்த்த வேட்கையின் முன்
நிராதரவாய் ஒலமிடுகிறது
அபயம் வேண்டும் குரல்
பயத்தில் அதிர்ந்து

கோரப்பற்களின் மினுக்கத்தில் 
சிதறுண்ட நம்பிக்கை
பம்மிப் பம்மிப் பதறுகிறது

சிறகசைக்கும் வேளையில்
முள் வலையில் சிக்கி முனகும்
உன் மீச்சிறு செருமல்
நெஞ்சை அறுக்கிறது

அணில்கள் தாவும் மர நிழலில்
பறவைகளின் கீதங்கள் கேட்டபடி
காற்று உதிர்க்கும் பூக்கள் சிதற
தலை உணர்த்திப் பாடிக்கிடக்கவேண்டிய வயதில்
என்ன நேர்ந்தது மகளே உனக்கு

பளுவேறி உறக்கம் சிதைக்கும்
இவ்வலிக்கு என் செய்வேன்

உன் தவறேதும் இல்லை
உடல் நடுங்கி மனம் குன்றி 
சஞ்சலம் கொள்ளாதே
தூய மெல்லுடல் உனது

மறுபடி ஏன் உமிழ்ந்த சளியையே 
பார்த்துக்கொண்டிருக்கிறாய்

தரை கிடக்கும் மீனின் கண்களென
அனாந்திரத்தில் வெறிக்காதே
வீறிடும் நினைவறு
துர்பொழுதின் கனங்களை உதறு

ரெளத்திரக் காளியாகு 
சூலத்தால் குடல் கிழித்து வதம் செய்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்

கொந்தளிப்பை திருகி எறி 
பற்றி எரியட்டும் அந்த நாசகாரன்கள்
அனுகூல நாய்கள் அலறி ஓடட்டும்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்

போதும் வா 
சமனம் கொள்

இந்தா 
இந்த ஆறுதலைப் போர்த்திக்கொள்

சல்லிசல்லியான மனம் தேற
உன் கைகளைப் பற்றிக்கொள்கிறேன்

வெளியேறும் கதவின் வழி
இதோ தெரிகிறது பார்

மூர்க்க வக்கிரன்களின் காமத்தால் 
மிகு வெக்கையான
இவ்விடத்தைக் கடந்துவிடலாம்

நதியின் குளிர்மையுடன்
கதிரொளி மினுங்கும்
அழகியதொரு நிலம் அங்கே
உனக்கென செழித்துகிடக்கிறது வா.

( திரு ரவி சுப்பிரமணியன்  துடிதுடித்து முகநூலில் எழுதிய கவிதை  )

நாடாளுமன்றத் தேர்தல் 2019

 

Image result for election 2019

தமிழகச் செய்தி :

தேர்தல் நாள் : ஏப்ரல் 18 

அதிமுக கூட்டணி  போட்டியிடும் தொகுதிகளின்  பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிமுக-20 ;

தென்சென்னை,  காஞ்சீபுரம் (தனி),  திருவண்ணாமலை (தனி),  சேலம், நாமக்கல்,  ஈரோடு, திருப்பூர்,  நீலகிரி (தனி),  பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி,  திண்டுக்கல், கரூர்,  பெரம்பலூர், சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி),  மயிலாடுதுறை, மதுரை,  தேனி,  திருவள்ளூர்(தனி),  திருநெல்வேலி,

பாமக-7  ;

மத்திய சென்னை,  ஸ்ரீபெரும்புதூர்,  அரக்கோணம், தர்மபுரி,  ஆரணி,  விழுப்புரம் (தனி), கடலூர்.

பாஜக-5 ;

கோயம்புத்தூர்,  சிவகங்கை,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி,

தேமுதிக-4  ;

வடசென்னை,  கள்ளக்குறிச்சி,  திருச்சி, விருதுநகர்.

என்.ஆர்.காங்கிரஸ் -1;

புதுச்சேரி.

த.மா.கா -1

தஞ்சாவூர்

புதிய தமிழகம் -1 ,

தென்காசி,

புதிய நீதிக்கட்சி -1 :

வேலூர்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின்  பட்டியல் வெளியாகி உள்ளது.
திமுக (20) :
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, பொள்ளாச்சி, சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நீலகிரி, வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை.
காங்கிரஸ் (10) :
தமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர்,
கன்னியாகுமரி, புதுச்சேரி 
விடுதலை சிறுத்தைகள் கட்சி(2) :
விழுப்புரம்,  சிதம்பரம்
இந்திய ஜனநாயக கட்சி (1): 
பெரம்பலூர் ,
மதிமுக (1)  ;
ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி (2) ;
மதுரை , கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2)  ;
நாகை , திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1)  ;
ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1);
 நாமக்கல்
மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. 
இது தவிர தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைகளில் 18 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்று எதிக்கட்சிகள் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளன. 

 “எப்படிப் புரியவைக்க?” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Related image

திவாகர் தயக்கத்துடன் என்னை அணுகினான். இந்த 24 வயதுடையவன், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவன். ஏன் இப்போது என்னை அணுகினான் என்ற கேள்வி எழுந்தது. எதற்காக ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரைத் தேடி வரவேண்டும்?

திவாகர் கல்லூரியிலிருந்து கேம்பஸ் தேர்வு வழியாக வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அவனுடன் ஐந்துபேர் தேர்வானவர்கள். நல்ல இடம், அதிக சம்பளம். திவாகர் அப்படியே பூரித்துப்போனான்.

அவன் பெற்றோர் இருவரிடமும் ஏற்பட்ட சில மாற்றங்களினால் வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே இந்த மகிழ்ச்சி கரைந்துபோக ஆரம்பித்தது. அவனுடன் வித்தியாசமாகப் பேசுவது, ஏதேதோ கேள்விகள், அவர்களின் மனப்பாங்கு ஏனோ மாறியுள்ளது எனத் தோன்றியது. இருவருமே தான் கிளம்பும் நேரத்தையும், திரும்பி வரும் நேரத்தையும் மிகக் கூர்மையாகக் கவனிப்பதை உணர்ந்தான். வேலையினால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அம்மா அழுதுகொண்டு, அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, தம்பி சிடுசிடுவென்று இருப்பதைக் கவனித்தான். இதுவரைக்கும் இப்படி ஒரு பொழுதும் இருந்ததில்லை.

அம்மாவைச் சமாதானப் படுத்தவோ, நம்ப வைக்கவோ முடியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண் ஏதோ கேட்டதற்குப் பதில் சொன்னதை அம்மா பார்த்தாள். வீட்டிற்கு வந்ததும் மிகவும் திட்டினாள் என்றான். இதுவும் முதல் தடவையே. இன்னொரு நாள் கோவிலில் தெரியாத பெண்ணிற்குப் பைக்குள் பிரசாதம் போட உதவியதைப் பார்த்த அம்மா அங்கேயே சத்தம் போட்டாள். வெட்கமானது. இந்த இரு சம்பவங்களுக்குப் பின்பு, கைப்பேசியில் யார் அழைத்தாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ யார், என்ன என அம்மா கேட்டுக்கொண்டே இருப்பாளாம். எவ்வளவு சொன்னாலும் அவளுக்குச் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருந்தது.

நாளாகநாளாகத் தன்னால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை என எண்ணியதில் சலிப்புத் தட்டியது. அதுவரையில் வராத கோபம் வந்தது. கோபத்தில் சுருக் எனப் பேசினான். சந்தேகங்கள் அவன் குழப்பத்தை அதிகமாக்கியது. ஒரு அமைதியற்ற நிலை உணர ஆரம்பித்தான். இப்படித் தான் இருப்பதை வெறுத்தான். அப்பாவிடம் பேசுவது அர்த்தமற்றது என நினைத்து அவரை அணுகவேயில்லை.

ஒன்று மட்டும் எனக்கு மிகத் தெளிவாக, வெளிப்படையாகத் தெரிந்தது- மேற்சொன்ன ஒவ்வொன்றும் மன அழுத்தம் கொடுக்க, வேலையில் முழு கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. வேலையை நேரத்திற்கு முடித்துத் தராததை அவனுடைய மேல் அதிகாரிகள் ரசிக்கவில்லை.

அதிகாரிகள் அவனை எச்சரிக்கை செய்தார்கள். திவாகரின் ட்ரைனிங் ப்ரோபேசன் காலத்தில் இப்படி நேர்வது நல்லது அல்ல. அபாயகட்டம். திவாகர், வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டான். வேலையிலிருந்து போகச் சொன்னால்? தலைகுனிவு. இந்தத் தருணத்தில்தான் திவாகர் ஒரு மனநல ஆலோசகரைப் பார்க்க முடிவெடுத்தான்.

திவாகரின் கல்லூரியில், பல ஆளுமை நிபுணர்களை அழைத்து, அவர்களின் தொழில், அந்தத் துறையில் நடத்தும் சாதனைகளைப்பற்றி மாணவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளச் செய்திருந்தார்கள். அப்படி ஒரு மனநல ஆலோசகர் பகிர்ந்ததும், மாணவர்கள் மனதில்பதிந்தது – நம்  உள்ளிலோ, அல்ல வெளியிலோ,  தாளமுடியாத அனுபவிப்பு / சூழ்நிலைகளினால் (திவாகரின் இப்போதைய குடும்பச் சூழல்போன்று) ஸ்தம்பித்து விட்டால், தெளிவு பெற மனநல நிபுணர்களின் உதவி நாடுவது நல்லது, அவமானம் அல்ல, பெரும்பாலும் இதற்கு மருந்துகள் தேவையில்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள்.

மனநல ஆலோசகரை நாடுவதால் மனத்திடத்தை வளர்த்துக் கொள்ளமுடியும் என்பதற்குச் சான்றாக, சில வகுப்புத் தோழர்களும், நெருங்கிய நண்பர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்படி நாடி, தம் பிரச்சினைகளுக்குத் தெளிவுபெற்றார்கள். பல நன்மை தரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நண்பர்கள் திவாகரை மனநல ஆலோசகரை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்கள்.

என்னை அணுக அச்சம் இருந்தது. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்தது. கூடப் பிறந்தவரும் தம்பி. உள்மனத்தின் ஊக்கத்தில் வந்தான்.

ஆமாம், எது திவாகரின் மனதைத் துளைத்தது? பிரதானமாக நின்றதோ, அம்மாவுடன் அவன் உறவு ஊசலாடுகிறதோ என்ற அச்சம்தான். அம்மா, திவாகர் செய்யும் ஒவ்வொன்றையும் விசாரிப்பது, கேள்வி கேட்பது, அவனை சதா சஞ்சலத்தில் வைத்தது. அம்மாவின் இந்த திடீர் மாற்றத்தினால் தன் இதயம் படபடப்பதாக உணர்ந்தான். சந்தேகம் சூழ்ந்துகொண்டதில் தவறுகள் அதிகரித்தது. கூட வேலை செய்வோரும், டீம் ஹெட்டும் பொறுமை இழந்தார்கள். இவை முதல் மாதத்திலேயே!

நான் திவாகர் கூறுவதை எதிர்க்காமல், குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டதால், தன்னை ஏற்றுக்கொண்டதாக அவனுக்குத் தோன்றியது. தன் சூழல் நேர்ந்ததற்கான காரணிகளை, தன்னைப்பற்றிய அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டான். இங்கு பகிரும் ஒவ்வொன்றும் வம்பு-தும்பு அல்ல, அவசியம் என்பது தெளிவானது. சொல்வதைக் கோர்த்து அதிலிருந்து பல விஷயங்களுக்கு அர்த்தம் விளங்க அவற்றை உபயோகித்தேன் என அறிந்தான்.

அவன் உள் மனதை உறுத்தியது, “நான் நல்ல மகனாக இல்லையோ?” என்பது..

இதை நாங்கள் ஆராய்ந்தது திவாகருக்குத் தன் அம்மாவின் பதட்டத்தின் காரணியைப் புரிந்துகொள்ள வாய்ப்பானது. அவன் அம்மா அவன் புது சூழலில் இருப்பதைப் பார்த்து “நான் அவனுக்கு வழி காட்டாவிட்டால், என் குழந்தை எப்படிச் சமாளிப்பான்?” என்று எண்ணி அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து ஆராய்ந்தாள். கேள்விகள் கேட்டாள். அம்மா, ‘தன் குழந்தை’ எந்தவிதமான தொல்லைகளும் இல்லாமல் இருக்கப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தால் இப்படி இயங்கினாள்.

இதனால் திவாகரின் அம்மாவுடன் நான் ஸெஷன் ஆரம்பித்தேன். அவளிடம் திவாகரைப்பற்றிக் கேட்க, அம்மா அளித்த பதில், “என் பிள்ளை நல்லவன். இந்த உலகை அறியமாட்டான். அதுவும் பெண்கள் வஞ்சகம், தந்திரமானவர்கள் என்பது அவனுக்குத் தெரியாது. கேள்விகள் கேட்டால், யோசிப்பான். அதான் கேட்டேன்”. அவன் அம்மாவை அவளுடைய சித்தி வளர்த்தாள். அந்த சித்தி தன் வாழ்க்கையில் வெவ்வேறு பெண்மணிகளினால் ஏமாற்றம் அடைந்திருந்தார். சித்தி, அம்மாவிடம்., “பெண்ணை மட்டும் நம்பாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். அது சரியா? இப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்காமல், ஆராயாமல் சித்தி சொன்னதை அவன் அம்மா அப்படியே ஏற்றுக்கொண்டாள். தான் பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு எண்ணம்! அதிலிருந்து அவர்களின் அபிப்பிராயம் இப்படி மாறியது.

அம்மாவுடன் இதைப்பற்றிப் பல வாரங்கள் உரையாடவேண்டியதாயிற்று. அம்மா, தான் நினைப்பதையும், அந்த சித்தி பகிர்ந்ததையும், இதனால் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் ஒரு தாளில் எழுதி விட்டு, மறு பக்கத்தில் இதற்கான தன் கடந்தகால வாழ்கையில் கண்ட ஆதாரங்களையும், இப்பொழுது தினசரி வாழ்வில் காணும் ஆதாரங்களையும் குறித்து எழுத வேண்டும். பல வாரங்கள் தேடியும் அப்படி ஆதாரம் எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை.

செய்யச் செய்யப் புரிந்து ஏற்றுக்கொண்டார் – ஒன்று நடந்துவிட்டால் மற்ற நேரங்களிலும் அச்சு அடிப்பதுபோல் அப்படியே நடக்கும் என்பதில்லை. அதே மாதிரி, ஒருமுறை ஒருவர் ஒன்று செய்தால் அடுத்த முறையும் அப்படியே செய்வார் என்பது இல்லை. எல்லோரும் இப்படி என்று நினைத்தால், தவறானது. 

அம்மாவிற்குத் தெளிவானது. ஒருவரின் அனுபவத்தில் சூழலின் தாக்கம் உள்ளடங்கும். அதனால்தான் ஒன்றை வைத்து எல்லாவற்றையும் அப்படியேதான் எனச் சொல்லமுடியாது என்பதை ஆதாரபூர்வமாகப் பார்த்தாள். நாளடைவில், அவர்களையும், மற்றவர்களையும் இது பாதிக்கிறது எனப் புரியவர, அடுத்த ஸெஷன்களில் இந்த மனப்பான்மையால் அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததையும், அதன் பாதிப்புகளையும் ஆராய்ந்தோம்.

திவாகரின் அம்மா தன் சிந்தனைகளைச் சுதாரித்துவர, அப்பாவை ஸெஷனுக்குள் சேர்த்துக்கொள்ள நேரம் வந்தது. அவருடைய அச்சங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அவரின் மிகப் பெரிய அச்சம்: திவாகருக்கு அதிக அனுபவம் இல்லை, வெளி உலகம் தெரியாதவன். இதன் விளைவாக, எந்தப் பெண்ணாவது அவனிடம் பரிவுடன் பேசிப் பழகினால் அவளிடம் மனதைப் பறிகொடுத்து விடுவானோ என்று. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்ததாலும் அவருக்கு இந்த அச்சம். அவனைக் கடுமையாகத் திட்டி, கேள்வி கேட்டு மடக்கினால் அதைச் சந்திக்க திவாகருக்குதத் தைரியம் வளரும் என முடிவு எடுத்திருந்ததால்தான் அவனிடம் கடுமையாகப் பழகுவதாகச் சொன்னார்.

எங்கள் உரையாடல்கள் வளர, அவருக்குப் புரியஆரம்பித்தது, திவாகரின் யோசிக்கும், முடிவு எடுக்கும் திறன்தான் தனக்குக் கேள்விக்குறியாக இருந்தது என்று. இதை அறியாமல், வேறு எதற்கோ அவனைக் கோபித்துக்கொண்டோம் என உணர்ந்தார்.

மேலும் தெளிவு பெறுவதற்கு ஆலோசித்தோம். அப்பாவை நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்தவற்றை எடுத்து திவாகருடன் பேசப் பரிந்துரைத்தேன். அவைகளைப்பற்றி அவன் தன் அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள, அவன் நிலை, சிந்தனை ஆற்றல், மனப்பான்மை, அவருக்குத் தெரியவரும். அவனுக்கும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

இதையே திவாகரைச் சற்று வேறுவிதமாகச் செய்யவைத்தேன். கலந்துரையாடலில் எழும் சிந்தனைகள், ஒரு தலைப்பட்ட கருத்துகள், ஓரவஞ்சனை, மனச்சாய்வு, என்பதை எல்லாம்பற்றி எழுதியபிறகு, அதன் பக்கத்தில் அதற்கு எதிர்வாதமும், அவன் அப்பாவின் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுவதையும் எழுதி வரச்சொன்னேன். இதைச் செய்ய, அவன் சிந்தனைத் திறன் நன்றானது. பிரச்சினைகளை மிகச் சுலபமாகச் சந்திக்க ஆரம்பித்தான். அப்பா-பிள்ளை பந்தம் இணைப்பு அதிகரித்தது. இதை “மேஜிக்” என்றே சொன்னார்கள்.

அப்பாவை திவாகருடன் தினம் ஒருமணி நேரம் கழிக்கச்சொன்னேன். அவருக்கு திவாகருடன் விளையாட்டுப் போட்டிகள் பார்ப்பது பிடிக்கும். முன்பு செய்ததுதான். அதையே இப்பொழுதும் துவங்கினார்கள். இருவரின் நெருக்கத்திலும், புரிதலிலும் பல திருப்பங்கள் வந்தன. இவர்களின் இணைப்பு கூடுவது பளிச்சென்று தெரிந்தது! பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.

திவாகர், அவன் அம்மா, அப்பா, மூவரும் தங்களின் அனுபவங்களை மற்றவர்களின் சூழலிலிருந்து பார்க்க, மேலும் தெளிவு பெற்றார்கள். மூவரும் கடந்த மாதத்தில்  வெளிப்படுத்தியது அவரவர் பயத்திலிருந்து என்பது  அவர்களுக்குப் புரிந்தது. இதில் பரிதாபம் என்னவென்றால் அவர்கள் பாசமான குடும்பத்தினர். ஏனோ இந்தமுறை தங்களுக்குள் நிலவி வரும் அச்சத்தை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளவில்லை.

என்னுடன் பகிர்வதை முழுமையாக ஏற்றதினால், தன் உள்ளுணர்வைப் பகிரங்கமாகப் பகிர்ந்தார்கள். என்மேல் அவர்கள்  வைத்துள்ள நம்பிக்கையுடன், நானும் அவர்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கை கை கொடுத்தது. இதனால்தான் அவர்கள் சந்தித்த பல இடையூறுகளைச் சரிசெய்ய முடிந்தது.

அடுத்த கட்டமாக மூவரையும் ஒன்றாகப் பார்த்த ஸெஷன்கள். தங்கள் உணர்வு, விருப்பம், வேறுபாடுகளை, மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும் விதங்களைச் சரிசெய்யும் சந்தர்ப்பமானது. வேறுபாடுகள் நிலவியபோதெல்லாம் சரிசெய்யப் பல வழிகளை ஆராய்ந்தோம். பிரச்சினை ஒன்றுக்குப்  பதில்கள் பல்வேறு, அவற்றைத் தேட வழிகள் பல உண்டு என்ற புரிதல் வந்தது.

இப்போதெல்லாம் திவாகர் தன் வேலை, அதன் சலிப்பு, சிரிப்பு, சிறப்பைத் தானாக வீட்டில் பகிர்ந்தான். அப்பா இரு விஷயத்தை மிகவும் பாராட்டினார்:  இதையெல்லாம் திவாகர் பகிர்ந்துகொள்ளும்போது, தன் நிறுவனத்தை இழிவுபடுத்திப் பேசாததையும், நிறுவனத்தின் இரகசியம் பாதுகாத்த விதத்தையும். அம்மா, முழுமையாக ஏற்றக் கொண்டாள் – எந்தவித அச்சமோ, பயமோ இல்லாமல் தன் மகனோடு எல்லா வயது பெண்களும் சகஜமாகப் பழகிவருவதை. தன் ஆண்பிள்ளையை நம்பினாள். மிகவும் பெருமைப்பட்டாள்.

 

HOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..

ரவீந்திரநாத் தாகூரின் கதையை அதன் மெருகு குறையாமல் படமாக்கியுள்ளார்கள் !

ஒரு லட்சம் பார்வையாளர்கள்!

நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு !

சிறப்பான ஒளிப்பதிவு!

அருமையான நடிப்பு!

பார்க்கத் தவறாதீர்கள் !

 

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

 

சூரிய தேவனுக்கோ, விஷ்வகர்மா தன்னை மயக்கத்தில் ஆழ்த்தித் தம்மை ஒன்றும் செய்யஇயலாதவனாக மாற்றிவிட்டாரே என்ற கோபாக்னி அவன் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஸந்த்யாவின் மீது தான் கொண்டிருந்த அளப்பரிய காதல் தன்னை விஷ்வகர்மாவின்  கைப்பாவையாக மாற்றிவிட்டதே என்ற ஆத்ம நிக்ரகம் அவனை வாட்டிஎடுத்தது.

அந்தக் கோபத்தில்தான் அருணனிடம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துவிட்டுத் தன் கோபத்தை எரித்துக்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். 

 சுற்றிலும் நெருப்புக்  கோளங்கள், எரிவாயுக்கள் கொதிக்கும் கொப்பறையிலிருந்து குமிழி குமிழிகளாக வந்துகொண்டிருந்தன.   நெருப்பு ஆறு சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தது.  நடுவே ‘ஓம்’ வடிவில் அமைந்த மாபெரும்  ஹோம குண்டம். அதிலிருந்தும் வருகின்ற தழல்கள் தாமரை வடிவில் எரிந்து கொண்டிருந்தன. அதன் நடுவே கைலாய பர்வதத்திலிருந்து  கொண்டுவந்த கல் இருக்கை . அந்த  சிம்மாசனத்தில் எரியும் நெருப்புக்களின் மத்தியில் அமர்ந்து அழிக்கும் கடவுளான பரமசிவனை தியானித்துக்கொண்டே தன் மனதில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கோபத்தை ஹோம நெருப்பில் விழச்செய்து தன்னைச் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தான் சூரியதேவன்.  கிட்டத்தட்ட அது முடிவடையும்  சமயத்தில்தான் அதைத் தடை செய்யும் விதத்தில் கதவு தட்டப்பட்டது.

எந்தக் கோபத்தை எரிப்பதற்காக  அவன் அங்கே கடும்  முயற்சி எடுத்துக்கொண்டிருந்தானோ அது பாதியில் தடைபெறும்படி கதவைத் தட்டியதால் அவன்  கோபாவேசம் மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றின. 

கதவைத் திறந்தால் அங்கே ஸந்த்யா நின்றுகொண்டிருந்தாள். 

எவளுக்காகத் தன் ஆற்றலையே காந்தச் சிகித்சையின் மூலம் குறைத்துக்கொள்ளத் தயாராய் இருந்தானோ  அதே ஸந்த்யா எப்பொழுதும்போல் அவனை மயக்கும் விதத்தில் நின்றுகொண்டிருந்தாள். 

 பனிமழையில் குளிர் நிலவென இருக்கும் தடாகத்தில் பொன்மலர்போலக் குளித்துக்கொண்டிருந்த  அவளைக் கண்ட பிறகுதானே அவன் மனதில் புதுவித ஆசை என்னும் அக்னி உதித்தது. நெருப்பையே எரிக்கும் புதுவித காம அக்னி அல்லவா அது? குளிர்த்தீ !

அவளுடன் அவன் கூடியிருந்தபோது அவன் அதுவரைத் தீண்டிராத  புதுவித சுகத்தை அனுபவித்தான். அதற்காக  அவன் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராயிருந்தான். அதைச் சாதகமாய்ப்  பயன்படுத்திக்கொண்ட விஷ்வகர்மாவின் வலையில் தான் விழுந்ததுபற்றி  எண்ணும்போது அவனுக்குத் தன்மேலேயே ஆத்திரம் பிறந்தது.  காந்தச் சிகித்சை சாந்துக்குளியல் என்று  தன்னை அவர் சிக்கவைத்ததை  நினைக்கும்போது அவன் கோபம் வீசிவிட்ட நெருப்புபோல்  வளர்ந்துகொண்டேயிருந்தது.  

ஆனால் ஸந்த்யாவின்  அழகு உருவத்தைக் கண்டதும் அவனுடைய கோபாக்னி குறைவதை உணர்ந்தான். ‘இவள் என் அருகே இருந்துவிட்டால் எனக்கு நெருப்பாற்றில்  கோபத்தை  எரிக்க வேண்டிய அவசியமே இல்லை ‘ என்பதை உணரத்தொடங்கினான்.   அவளைப் பிரிந்ததுதான் தன்னிலை தடுமாறச் செய்தது என்பதை உணர்ந்துகொண்டான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. 

அதனைக் கண்ட அருணன் ‘இனி பயமில்லை’ என்று உணர்ந்துகொண்டு சூரியதேவனை வணங்கிவிட்டு ரதத்தை எடுத்துக்கொண்டு சென்றான். 

ஸந்த்யா தன் வலது காலை எடுத்துவைத்து  சூரியதேவனின்  அரண்மனைக்குள் சென்றாள். 

அவள் காலடி பட்டதும்  அந்த அறையில் இருந்த வெப்பச் சலனங்கள் எல்லாம் மறந்து குளிர்த் தென்றல் உலாவத் தொடங்கியது.  

ஆனால் ஸந்த்யாவின் முகத்தைப்பார்த்த சூரியதேவன் திடுக்கிட்டான். அவள் முகத்தில் ஏன் இந்த கோபாக்னி? குளிர் முகத்தில் எப்படி வந்தது இந்த அக்னிச் சீற்றம்? 

” என்ன தைரியம் உங்களுக்கு? சூரியதேவன் அக்னியின் சாட்சிதானே? அந்த அக்னி சாட்சியாக நாம் புரிந்த காந்தர்வ மணத்தில் ஜனித்த குழந்தைகளை  அழிக்க ஆணையிட்ட நீங்கள் ஒரு நல்ல தந்தையா?” 

ஸந்த்யாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்  சூரியதேவனை அப்படியே நிலைகுலையச் செய்தன. 

(தொடரும்) 

 

இரண்டாம் பகுதி

 

Image result for solomon pappiah raja bharathibaskar and liyoni

 

“எனதருமை எமபுரிப்பட்டணவாசிகளே!” என்று  அவருக்கே உரிய கணீர் குரலில்  ஆரம்பித்தார் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து அமர்க்களமாகப் பேசிவந்த சாலமன் பாப்பையா அவர்கள். 

மதுரைக்காரரின் குரலில் அந்த ஊருக்கே உரிய நக்கலும்  நையாண்டியும் சேர்ந்து கொட்டும். தமிழ் அறிஞர், இலக்கிய விரிவுரையாளர், கலைமாமணி  என்று பட்டங்கள் பல இருந்தாலும் பட்டிமன்ற நடுவர் என்பதுதான் அவருக்கே உரித்தான பெயர்.

இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் .

உதாரணமாக அவருடைய  சமீபத்திய பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றத்தைப்   பார்த்த பின்னர்தான் அவரையும்  அவரது குழுவையும் எமபுரிப்பட்டணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று எமனும் சித்திரகுப்தனும் பெரிதும் விரும்பினார்கள்.

சாலமன் பாப்பையா அவர்களிடம் இதுபற்றி சித்திரகுப்தன் பேசியபோது அவரும் அவருக்கே உரிய பாணியில்,                               ” அழச்சுக்கிட்டுப்போய் மறுபடியும் இங்கனே இட்டுகிட்டு வருவீகளா? இல்லே அங்கனேயே பிடிச்சு வைச்சிறுவீகளா? ” என்று கேட்டார்.  ராஜாவும் ” ஐயா கேட்டது ரொம்ப சரியான கேள்விங்க! எதுக்கும் நீங்க கொடுக்கப்போகிற செக்கை எங்க புள்ளைங்க பேரிலேயே கொடுத்திடுங்க, பின்னாடி எந்தப் பிரச்சினையும் இருக்கப்பிடாது பாருங்க” என்றார்.

திண்டுக்கல் லியோனியும் , ” எங்களுக்கு எந்த தண்டனை  காத்துக்கிட்டிருக்கு? அந்தகூபமா?  கும்பிபாகமா ? ” என்று கேட்க ” பட்டிமன்றம் அமைத்து ஐயா தீர்ப்புப்படி தேர்ந்தெடுத்துக்கலாம்” என்று பாரதி பாஸ்கர்கூற அப்போதே விவாதமேடை களைகட்டிவிட்டது. 

முதலில் அந்தப் பொங்கல் விழாப் பட்டிமன்றத்தைப் பாருங்கள். அதன் பின்  விவாதமேடையில் அவர்கள் பேசியதைக் கேட்போம். .

 

 

(தொடரும்) 

 

 

திரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை

பாரதியின் வரிகள் சிறந்த வரிகள் என்று சொல்லவேண்டியதேயில்லை !
இளையராஜாவின் இசையில் அந்த வரிகள் நம்மை ஒரு மயக்க உலகிற்கே எடுத்துச்செல்கிறது.
பாரதியின் பாடல் வரிகளுடன் பாடலைக் கேளுங்கள்!

Image result for நிற்பதுவே, நடப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

சரித்திரம் பேசுகிறது – யாரோ

திருநாவுக்கரசர்

Image result for திலகவதியார் வரலாறு

Image result for திருவருட்செல்வர்

‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பர்.
அதுபோல் சண்டை போட்டு வென்றவன் சரித்திரத்தில் நாயகன்.
அட .. பொதுவாகச் சொன்னேன்!
சில நாயகர்கள் – ‘இலக்கியவாதி’கள் – காளிதாசன் போல.
சில நாயகர்கள் – ‘பேரழகி’கள் – ஆம்ரபாலி போல.
சில நாயகர்கள் – ‘உலகம் சுற்றும் வாலிபர்’கள்- பாஹியான் போல.
சில நாயகர்கள் – ‘இறையருள் பெற்ற சமயக்குரவர்கள்’ – திருநாவுக்கரசர் போல.
இன்று அவர் தான் நமது நாயகர்.

Image result for திலகவதியார் வரலாறு

இடம்: பல்லவ நாட்டின் திருமுனைப்பாடி.
அங்கு புகழனார்-மாதினியார் என்ற தம்பதிகள்.
அவர்கள் மகள் ‘திலகவதி’!
மகன் ‘மருள்நீக்கியார்’!
திலகவதி பெதும்பையானாள்!
அதாவது 12 வயது அடைந்தாள் என்று எழுதியிருக்கலாம்.
ஆனால் என் தமிழ்ப்புலமையை வேறு எங்கு காட்டுவது?
திலகவதி மணப்பருவம் அடைந்தாள் (அந்தக்காலத்தில்!)
மணமகன் – பல்லவ நாட்டு சேனாதிபதி ‘கலிப்பகையார்’!
திருமணம் நிச்சியக்கப்பட்டது.
பல்லவ நாட்டில் அனுதினமும் யுத்தம்.
கலிப்பகையார் யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில்…
தந்தை புகழனார் மரணமடைந்தார்..
தாயார் மாதினியாரும் காலமானார்.
மக்கள் இருவரும் துவண்டனர்..
இடி மேல் இடி இடித்தது..
போர்க்களத்திலிருந்து மரணமென்னும் தூது வந்தது.
கலிப்பகையார் வீர மரணமடைந்த செய்தி.
மணமாவதற்கு முன் மரணம்.
திலகவதி.. துடித்தார்…
‘இனி வாழ்வில் அர்த்தம் இல்லை’ என்று துவண்டார்.
தன்னைக் கைம்பெண்ணாகக் கருதினார்.
சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி!
திலகவதி உயிர் துறக்க முடிவு செய்தார்.
பாலகன் மருள்நீக்கியார் அழுதான் :
“அக்கா! நீயும் போவதானால்.. பின்னே எனக்கு யாரும் இல்லை. நான் உனக்கு முன்னே போகிறேன்”
திலகவதி:
“தம்பி! உனக்காக நான் வாழ்வேன்”.
மாறாத துன்பங்களைச் சந்தித்த மருள்நீக்கியார் – பற்றற்ற வாழ்வுக்கான வழி தேடினார்.
அந்நாளில் சமணசமயம் ஓங்கிக்கிடந்தது.
ஈர்க்கப்பட்ட மருள்நீக்கியார் – சமணத்தைப் பயின்று பெரும் புலமை கொண்டார்.
சமணத்தில் ஆழ்ந்த அவருக்கு ‘தருமசேனர்’ என்று பட்டமளித்தனர்.
தமக்கையார் திலகவதியார் பெரும் சிவபக்தை…
தம்பி – சிவமார்க்கத்தை விட்டுச் சென்றது அறிந்து – வருந்தினார்.

 

மருள்நீக்கியார் திடீரென்று சூலை (வயிற்று வியாதி) நோயால் பாதிக்கப்பட்டார்.
பெரும் வேதனையில் துடித்தார்.
தனக்குத் தெரிந்த சமண மருத்துவங்கள் செய்துபார்த்தார்.
ம்ஹூம்.
சமண மருத்துவர்கள் குணப்படுத்த முயன்றனர்.
வேதனை மேலும் கூடியது.
தணல் மேல் நீந்தும் புழுவென துடியாய்த் துடித்தார்.
மயங்கி விழுந்தார்.
சமணக்குருமார்கள் மயில்பீலியைக் கொண்டு தடவி – மந்திரித்த குண்டிகை நீரைக் குடிக்கச்செய்து வைத்தியம் செய்துபார்த்தனர்.
வைத்தியம் பலிக்காமல் – அவர்கள் கம்பி நீட்டினர்.
மருள்நீக்கியார் தமக்கை திலகவதியிடம் சென்றடைந்தார்.
“அக்கா. உயிர் போகிறதே” – என்று அலறிப் புலம்பினார்.
திலகவதி: “சிவபெருமான் உன்னை சோதனை செய்து ஆட்கொள்ளவே இந்த நோய் தந்தார் போலும். அவரைத் தியானித்து இந்தத் திருநீறு அணிந்து… சிவனைப் போற்றிப் பாடுவாய்”- என்றாள்.
சிவாலயம் அடைந்து சிவலிங்கம் முன் அமர்ந்து ‘கூற்றாயினைவாறு விலக்கலீர்’- என்று பதிகம் பாடினார்.
உடனேயே.. நோய் நீங்கியது.

வானில் ஒரு அசரீரி: ”நாவால் இனிய தமிழ்ப்பாடல் பாடினை. இனி நீ நாவுக்கரசன் என்றழைக்கப்படுவாய்”
மருள்நீக்கியார் … திருநாவுக்கரசர் ஆனார்.

அவரது சைவத்தொண்டு துவங்கியது..
கதை இங்கு முடிந்தது என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
இங்கு தான் நம் கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’.
ஆக்ஷன் சினிமாபோல ஒரு திரைக்கதை விரிகிறது!

சமணமதகுருக்கள் வெகுண்டனர்.
‘துரோகி’ – என்று திருநாவுக்கரசரைத் தூற்றினர்.

அரண்மனையை அடைந்து மன்னன் மகேந்திரவர்மனைச் சந்தித்தனர்.
மன்னன் சமணனாயிற்றே!

“அரசே.. தருமசேனர் தனக்கு சூலை நோய் என்று பொய் சொல்லி – நமது மதத்தை விட்டு விட்டு.. சைவனாகினார்”- என்று புலம்பினர்.
மன்னன் அமைச்சரை அழைத்து தருமசேனரை அழைத்துவர ஆணையிட்டான்.
அமைச்சர் திருநாவுக்கரசரை அணுகி :
“மன்னர் மகேந்திரனின் கட்டளை – உங்களை உடனே அழைத்து வர”

திருநாவுக்கரசர்: “நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்…” என்று பதிகம் பாடி – வருவதற்கில்லை என்றுரைத்தார்.
அமைச்சர் மனம் நெகிழ்ந்து.. அவர் தாள் பணிந்து :”தயவு செய்து வந்தருள வேண்டும்” – கெஞ்சினார்.
திருநாவுக்கரசர் அன்புக்குப் பணிந்து உடன் சென்றார்.

பல்லவன் சபை.
சமண குருக்கள்: “மன்னா.. வெண்ணீறு அணிந்த இவனை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளவேண்டும்”.
மன்னன்: “அவ்வாறே ஆகட்டும்”
திருநாவுக்கரசரை எரியும் நெருப்பில் இருந்த சுண்ணாம்புக் காளவாயில் தள்ளினர்.
சூரியனைப் போல சுட்டெரித்த தீ!
அது..
நிலவின் அடியில் வீசும் இளவேனில் தென்றல்போல் அவருக்குக் குளிர்ந்தது..
‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ – என்று பதிகம் பாடினார்.

ஏழு நாட்கள் கடந்தபின் – மன்னன் ஆணைப்படி – சமணகுருக்கள் நீற்றறையைத் திறந்தனர். திருநாவுக்கரசர் புன்முறுவலுடன் சுகமாக இருந்தார்.

ஆத்திரம் பொங்க சமணகுருக்கள்- மன்னனிடம் சென்று:
“மன்னா.. இவன்.. சமண மந்திரங்களைக் கூறி சாவிலிருந்து தப்பினான். இவனை நஞ்சிட்டுக் கொல்லவேண்டும்” – வேண்டினர்.
பல்லவன் : “அப்படியே செய்யுங்கள்” என்றான்.
அவர்களும் திருநாவுக்கரசரை நஞ்சு கலந்த பாற்சோறு அருந்த வைத்தனர்.
நஞ்சே அமுதமாயிற்று.
சமணர்கள் நிலைகுலைந்தனர்.

Image result for அப்பர் படம்
மன்னரிடம் சென்று:
“இவனை மத யானையால் இடறச்செய்து கொல்லவேண்டும்”- என்றனர்.
பல்லவன்: “சரி”
மதயானை திருநாவுக்கரசர் மீது ஏவிவிடப்பட்டது..
திருநாவுக்கரசர் சிவனை சிந்தையிலிருத்தி : “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்”- என்று துவங்கி “அஞ்சுவது யாதொன்றுமில்லை.அஞ்ச வருவதுமில்லை “ என்று முடியுமாறு பதிகம் பாடினார்.
மதயானை சமணர்களைத் துரத்தி …பலரைக் கொன்றழித்தது.
தன் வினை தன்னைச் சுடும்!

எஞ்சியவர்கள் மன்னரிடம் சென்றனர்.
மன்னன் சமணர்களை வேண்டாவெறுப்பாகப் பார்த்தான்.
‘இனி என்ன”- கர்ஜித்தான்.
சமணர்கள் “தருமசேனரைக் கல்லில் கட்டிக் கடலில் செலுத்தவேண்டும்”.

Related image
மன்னன்: “இதுவே கடைசி முறை.. “-எச்சரித்தான்.
கல்லில் கட்டிக் கடலில் படகில்சென்று திருநாவுக்கரசரை கடலில் தள்ளிவிட்டுத் திரும்பினர்.
‘சொற்றுணை’ என்று தொடங்கி ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ – என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார்.
உடனே கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்தது…கல் தெப்பமாயிற்று… வருணன் – காற்றை கரை நோக்கி வீச…கரை சேர்ந்தார்.
மனிதர்குலத்தை கரை சேர்க்கப் பிறந்தவர் … சுகமாகக் கரையேறினார்!

இரண்யன் பிரகலாதனை செய்ததுபோல … மகேந்திரன் திருநாவுக்கரசரை செய்தான்..
நரசிம்மர் பிரகலாதனைக் காத்து … இரண்யணைக் கோபித்து அவனைக் கிழித்தார்..

சிவபெருமான் திருநாவுக்கரசரைக் காத்து… மகேந்திரனுக்குப் பாடம் புகட்டினார்.
அன்பே சிவம்!!

வைணவ ரசிகர்கள் கோபப்படவேண்டாம்! 

 

Image result for அப்பர்

மகேந்திரன் – திருநாவுக்கரசரின் மகிமை அறிந்து… சமணர்களைத் துரத்தினான்

திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவதிகை அடைந்தார்.
கேள்வியுற்ற மகேந்திரன் .. நால்வகைப்படையுடன் மங்கல வாத்தியம் முழங்க திருநாவுக்கரசரின் பாதங்களைப்பற்றி.. வணங்கி.. பிழை பொறுத்தருள வேண்டினான்.

திருநாவுக்கரசர் பல்லவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து திருவெண்ணீர் அளித்தார்.

மகேந்திரவர்மன் அன்றிலிருந்து சைவனானான்!

இந்தியாவின் சரித்திரத்தில்.. சமணம் மெல்ல அழியத் துவங்கியது..

இந்தக்கதைக்கு இங்கு ‘இடைவேளை’ நேரம்!

நமது சூப்பர் ஸ்டார் திருநாவுக்கரசர் கதை…

 

(தொடரும்..)

 

நினைவுகள்! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 


அம்மா நிலாவைக் காட்டி
நிலா நிலா ஓடி வா
பாடி குழந்தை பருவத்தில்
அன்னம் ஊட்டி விட்ட
அந்த நிலாக்கால நினைவுகள்!

விண்ணில் மிதந்து வரும்
முழுநிலவைப் பார்த்து
மண்ணில் அமர்ந்து
கூட்டாஞ்சோறு உண்டு
உறவுகளுடன் உறவாடி
மகிழ்ந்த நிலாக்கால நினைவுகள்!

காதலனாக முழுநிலாவின்
நிழலில் அமர்ந்துகொண்டு
காதலியின் முகம் கண்டு
கவிதையில் முகம் செதுக்கி
ஓவியமாகிய அவளின் நினைவுகள் !

காதலர்களாக முழுநிலா ஒளியில்
சிரித்த சிரிப்புகள் சிந்தனைகள்
காதல்கள் மோதல்கள்
உறவுகள் ஊடல்கள்
துடிப்புகள் நடிப்புகள்
படிப்புகள் படிப்பினைகள் !

இளையநிலாவைக் கண்டு
அள்ளக் அள்ளக் குறையாத
காதலர்களின் மனதில் நிழலாடிய
இன்பங்கள் துன்பங்கள்
நிலாக்கால நினைவலைகள்!

மகளிர் தினம் -ஹேமாத்ரி

Related image

*மகளிர் தினம் –  இருக்கட்டும் தினம் தினம்….*
தாலாட்டிய *தாயே*,
துணையாகும் *மனைவியே,*
செல்ல *மகளே*
மலரான *மங்கையே*,
தாங்கும் *மாதரே*
வழிகாட்டும் *பாட்டியே*
அச்சாணியாய் உலகை, *சுற்றவைப்பது நீங்கள்*,
எண் ஜான் உடம்பை, *தோற்றுவிப்பது நீங்கள்*,
மிச்சமில்லாமல் பாசம் *வைப்பது நீங்கள்*,
மிஞ்சுவோர் யாருமில்லா, *ஒப்பற்றவர்கள் நீங்கள்…..*
இஷ்டப்படுவது *நடப்பதில்லை,*
கஷ்டமென்பது *நிற்பதுமில்லை,*
நஷ்டப்படுவது *புதிதில்லை,*
அதிர்ஷ்டமென்பதும் *வருவதில்லை,*
*இருந்தாலும் அஷ்டலக்ஷ்மியாய் காத்திருக்கும், மானிட தெய்வங்கள் நீங்கள்,*
தன்வலி *தெரிவதில்லை,*
தனக்கென *வாழ்வதில்லை,*
தன்ருசிக்கு *சமைப்பதில்லை,*
தனியாக *சாப்பிடுவதில்லை,*
*இருந்தாலும் அன்னலக்ஷ்மியாய் பரிமாறும், ஆத்மார்த்த ஜீவன்கள் நீங்கள்*
சிக்கனம், சேமிப்பு *உங்களின் மனக்கணக்கு*,
துண்டுவிழும்போது சமாளிப்பது *உங்களின் தனிக்கணக்கு.*
நோயற்ற வாழ்வை ஆண்டவனிடம் கேட்பது,
*ஓய்வின்றி உழைத்திடவோ….*
சோர்வுற்று தளரும்போது,
ஆண்டவனே தேடும் *ஆறுதல் நீங்களல்லவோ…..*
பாட்டிமடி *இதமடி,*
தாய்மடி *சுகமடி,*
மனைவிமடி *இன்பமடி*,
மகள்மடி *வரமடி,*
இவைதான் *மண்ணுலகின் சொர்கமடி…*
கடவுளுக்கே *இதில்கொஞ்சம் பொறாமையடி…*
குப்பையை கூட *கூட்டத்தான் தெரியும்,*
உறவுகளை கூட *பெருக்கத்தான் தெரியும்,*
குடும்பத்தின் நிலையை *வகுக்கத்தான் தெரியும்,*
வேண்டாததையெல்லாம் *கழிக்கவே தெரியும்,*
*பெண்களின் சுமைக்கணக்கு யாருக்கு தெரியும்…..*
பெண்களை *மதி,*
மாறிடும் *தலைவிதி,*
பெண்மையை *வாழ்த்து,*
நிலவிடும் *அமைதி.*
பெண்மை எனும் *உண்மையை போற்றுவோம்….*
பெண்மை எனும் *தியாகத்தை போற்றுவோம்….*
*மகளிர் தினம்,*
*இருக்கட்டும் தினம் தினம்….*

குவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்


Image result for முதியோர் இல்லம் கிழவி

 

“பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெpaavannan-3ல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்தி வந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான  இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப் பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

பதினோராவது வாரத்துக்கான கட்டுரையை எழுதி முடித்ததும் அனுப்புவதற்காக மின் அஞ்சல் பக்கத்தைத் திருப்பியபோது எனக்கொரு மடல் வந்திருக்கும் செய்தியை அறிந்தேன். முதலில் திரையில் புலப்பட்ட ஒற்றைவரி முகவரியை வைத்து எழுதியவர் யாராக இருக்கும் என்று ஊகிக்க முயற்சி செய்தேன். என் மனத்தில் வழக்கமாக எனக்கு மடலெழுதும் நண்பர்களின் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் பளிச்சிட்டு மறைந்தன. கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவித ஆர்வம் உந்த அந்த மடலைத் திறந்தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தது அக்கடிதம். பல ஆண்டுகளாக இலக்கிய அறிமுகம் உள்ளவராகத் தெரிந்தார். தொடராக வந்திருந்த பத்துக் கட்டுரைகளைப்பற்றியும் சிற்சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அம்மடல் பொதுவாக என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது. நன்றியைத் தெரிவித்து அவருக்குப் பதில் அனுப்பினேன்.

அவர் பெயர் சந்திரன். எங்கள் நட்பு இப்படித்தான் தொடங்கியது. பிறகு கட்டுரை வெளியானதும் ஒவ்வொரு வாரமும் அவரிடமிருந்து அஞ்சல் தவறாமல் வரத் தொடங்கியது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதாகத் தெரிவித்திருந்தார் அவர். ஒவ்வொரு அஞ்சலிலும் தினசரி வாழ்வில் தாம் கண்ட விசேஷமான செய்தியொன்றை எழுதி அனுப்புவார். இருசக்கர வாகனத்தில் சென்று அவசரத்தில் தடுமாறி மரத்தில் மோதிக் கால் உடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கிதார் வாசிக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றிய குறிப்பை ஒரு மடலில் எழுதியிருந்தார். ஒரு பூங்காவில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து தன் சேமிப்புப் பையிலிருந்து ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆனந்தமாகத் தின்ற பிச்சைக்காரன் ஒருவனைப் பற்றி ஒருமுறை எழுதியிருந்தார். தன் வீட்டைப் பற்றியும் சுற்றுப் புறத்தைப்பற்றியும் சொற்சித்திரங்களாகவே தீட்டியிருந்தார். வீட்டுக்கு அருகிலிருந்த விலங்குக்காட்சிச் சாலையைப் பற்றி அவர் எழுதிய தகவல்கள் ஏராளமானவை. ஒவ்வொரு விலங்கின் கூண்டுக்கும் அவர் பெயர் சூட்டியிருந்த விதம் விசித்திரமானது. சிங்கத்தின் கூண்டுக்கு ”இடியோசையின் இல்லம்”. சிறுத்தையின் கூண்டுக்கு “வேகத்தைத் துறந்த விவேகியின் வீடு”. பஞ்சவர்ணக்கிளிகளின் கூண்டுகளுக்கு “பறவைகளின் இசைக்கோயில்”.

“பெங்களூர் நகரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் ஹுடி என்னும் கிராமத்தில் “ஆஷ்ரயா” என்கிற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தைத் தெரியுமா?” என்று ஒரு முறை கேட்டிருந்தார் சந்திரன். அச்சமயத்தில் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிற உள்ளூர் நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினேன். பலருக்கு அதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவர் மட்டும் அது ஒரு முதியோர் இல்லமென்றும் சேவை மனப்பான்மை கொண்ட சிலரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார். திருமணமாகாத தன் சகோதரிகள் இருவரும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்கிற முதியோர்களுடன் பேசியும் பழகியும் அவர்கள் தேவையை நிறைவேற்றியும் ஊக்கமூட்டியும் வருவதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் சொன்னார். அந்தத் தகவலை அன்று இரவே நான் சந்திரனுக்கு அனுப்பினேன். அதற்கப்புறம் இரண்டு மாதங்கள் அதைப்பற்றிய பேச்சே இல்லை.  ஒருநாள் திடீரென்று தன் பெரியம்மா அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன் சார்பில் அவரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் ஓய்வு நாளுக்காகக் காத்திருந்த இடைவெளியில் அவரிடமிருந்து விரிவான மடலொன்று வந்தது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் தனக்கு ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்தது என்று தன் மடலைத் தொடங்கியிருந்தார் சந்திரன். தாயார் மட்டுமே அவருக்கு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் தனியாகவே வாழ்ந்தார் சந்திரன். பிறகு இந்தியாவுக்குத் திரும்பி தாயாரையும் தன்னோடு அழைத்துச் சென்றார். தாயாருக்குப் பிரியமான சகோதரி ஊரில் இருந்தார். ஏழைக் குடும்பம். ஆறு பிள்ளைகள். முடிந்தவரை பெரியம்மாவின் குடும்பத்தையும் தாங்கியே வந்தார் சந்திரன். ஆப்பிரிக்கப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். பேரப்பிள்ளைகளோடு ஆனந்தமாக ஆடிப் பொழுது போக்கிய அம்மா வெகுகாலம் உயிருடன் இல்லை. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்துபோனார். இடைக்காலத்தில் இந்தியாவில் பெரியம்மாவின் நிலையும் மோசமானது. ஆறு பிள்ளைகளும் ஆறு விதமாக வளர்ந்தார்கள். சந்திரன் அனுப்பிய பணத்தையெல்லாம் தாய்க்குத் தெரிந்து பாதியும் தெரியாமல் பாதியுமாக சாப்பிட்டுத் தீர்த்தார்கள். மூத்தவன் சதாகாலமும் குடிபோதையில் மிதந்தான். இரண்டாவது மகன் சம்பாதித்த பணத்தையெல்லாம் விபச்சாரத்தில் அழித்தான். மூன்றாவது மகனும் நான்காவது மகனும் உள்ளூரிலேயே திருட்டு வழக்கொன்றில் அகப்பட்டுச் சிறையிலிருந்து தப்பித்து மும்பைப் பக்கம் ஓடிப்போனார்கள். பள்ளியிறுதி முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்து ஊரையே மறந்து போனான் ஐந்தாவது மகன். ஆறாவது பையன் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தான். அலுவலகத்துக்கு எதிரே இருந்த ஆயத்த ஆடை அங்காடியில் வேலைபார்த்த ஒரு பெண்ணோடு பழகித் திருமணம் செய்துகொண்டான். மனைவியை உள்ளே அழைத்துக்கொண்டதும் பெரியம்மா வாசலுக்கு மாற்றப்பட்டார். மனமுடைந்த பெரியம்மா தன் துக்கத்தையெல்லாம் யாரோ ஒருவர் மூலம் கடிதமாக எழுதிச் சந்திரனுக்கு அனுப்பினார். பெரியம்மாவின் துயரம் தன் அம்மாவின் துயரமாகத் தெரிந்தது சந்திரனுக்கு – இணையத் தளங்களில் தேடித்தேடி பெங்களூருக்கு அருகே ஹுடியில் தங்கும் ஆஷ்ரயா இல்லத்தின் முகவரியைக் கண்டறிந்து அங்கே சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை வேறொரு நண்பர் மூலம் செய்துமுடித்தார். ஒருவருடம் ஓடிவிட்டது. மாதத் தவணைகளை அங்கிருந்தபடியே நேரிடையாகச் செலுத்திவந்தார். சமீபகாலத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கனவுகள் அவரைப் பாடாய்ப்படுத்திவந்தன. விலங்குக்காட்சி சாலையில் நின்றிருந்தபோது அக்கூண்டுகளையும் முதியோர் இல்லங்களையும் சம்பந்தப்படுத்தி யோசித்த கணத்திலிருந்து அக்கனவு விரட்டத் தொடங்கிவிட்டது. பெரியம்மா பலவித விலங்குகளின் உருவத்துடன் ஒவ்வொரு  முறையும் கனவில் வந்து கம்பிகளைப் பிடித்தபடி ஏக்கத்துடன் முறைத்துப் பார்ப்பதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நினைத்தவுடன் விடுப்பெடுப்பது சாத்தியமாக இல்லை. அவர் சார்பில் இல்லத்துக்குச் சென்று அந்தப் பெரியம்மாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வரவேண்டும். இதுதான் அக்கடிதத்தின் சாரம்.

அடுத்த ஞாயிறு அன்று பேருந்துத்தடம் விசாரித்து அந்த இல்லத்துக்குக் கிளம்பினேன். மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருந்தது. இறுதியாக இறங்கிய நிறுத்தத்தின் அருகே ஓர் ஓலைக்குடிசை டீக்கடை மட்டும் காணப்பட்டது. ஒரே ஒரு சிகரெட் மட்டும் வாங்கிப் பற்றவைத்தபடி ஆசிரமத்தைப்பற்றி விசாரித்தேன். டீக்கடைக்காரப்பெண் குடிசைக்கு வெளியே வந்து தொலைவில் தோப்பைப் போலக் காணப்பட்ட ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி “அதுதான் இல்லம்” என்றாள்.

“அதுவரிக்கும் பஸ் போகாதா?”

“இல்லத்துக்கு இதுதான் ஸ்டாப். எல்லாரும் இங்க எறங்கித்தான் நடந்துபோவாங்க. நீங்க வெளியூரா?”

நான் வேடிக்கைக்காக “ஆமாம்” என்றேன்.

“வயசானவங்கள இங்க கொண்டாந்து உட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா போயிடறாங்க சார். கூழோ கஞ்சியோ ஒன்னா சேர்ந்து லட்சணமா குடிக்கறத உட்டுட்டு பணம்பணம்னு எதுக்குத்தான் சார் மக்கள் அலையறாங்களோ? காலம் ரொம்ப மாறிப்போச்சி சார்”.

”நல்லா கவனிச்சிக்கிடறாங்களா இங்க?”

“கவனிப்புக்கெல்லாம் எந்தக் கொறையுமில்ல சார். நூறுபேரு கவனிச்சிக்கிட்டாலும் பக்கத்துல பெத்த புள்ள இருந்து பாக்கற மாதிரி ஆவுமா, சொல்லுங்க.”

“அடிக்கடி நீங்க போவீங்களா?”

“காலையில அங்க பால்பாக்கெட் வாங்கிப்போயி குடுக்கறதெல்லாம் எங்க ஊட்டுக்காருதான். ஒங்க ஜனங்க யாராவது இருக்காங்களா இங்க? நான் வேற எகணமொகண இல்லாம ஏதேதோ பேசிட்டிருக்கேன்”.

“எங்க ஜனங்க யாருமில்ல. எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தருக்கு வேண்டியவங்க இருக்காங்க”.

புன்னகையுடன் சிகரெட்டை அணைத்துவிட்டு அவளிடம் விடைபெற்று நடக்கத் தொடங்கினேன். அவளுடைய தமிழ் திருவண்ணாமலைப் பக்கத்து மொழியைப் போல இருந்தது. பெங்களூரின் பல புறநகர்களில் இப்படிப்பட்ட பல குரல்களைக் கேட்டிருக்கிறேன். நமக்குப் பழக்கமான குரல் ஏதாவது காதில்விழாதா என்று நினைத்தபடி நடக்கும்போதெல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஒரு குரல் ஒலித்து அரைக்கணம் நிறுத்திவிடும்.

மஞ்சளாகப் பூப்பூத்த சின்னச்சின்ன முட்செடிகள் இருபுறமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்திருந்தன. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத குருவிகள் எல்லாம் கிளைகளிலும் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் சில பிள்ளைகள் கிரிக்கெட் ஆடியபடி இருந்தார்கள். அந்தப் பாதை முடியுமிடத்தில் “ஆஷ்ரயா” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. அதையொட்டி உடனடியாக சுற்றுச்சுவர் தொடங்கியது. சுவரின் மேல்விளிம்பு தெரியாத வகையில் சிவப்புக் காகிதப்பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. எல்லா இடங்களிலும் அவற்றின் கிளைகள் படர்ந்திருந்தன. வாசலில் இருந்த காவலரிடம் விவரம் சொல்லி உள்ளே நுழைந்தேன். பெரிய பூந்தோட்டத்தில் நுழைந்ததைப் போல இருந்தது. கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் வகைவகையான நிறங்களில் பூக்கள் பூத்திருந்தன. இரு சேவகர்கள் மரங்களின் கீழே உதிர்ந்திருக்கும் இலைகளையெல்லாம் கூட்டிச் சேகரித்த்படி இருந்தார்கள். பூந்தோட்டத்தையொட்டிப் பச்சைக் கம்பளத்தைப் போல பளபளக்கும் பெரிய புல்வெளி, பெரிய நிழற்குடையின் கீழே வட்டமாக வடிவமைக்கப்பட்ட சிமெண்ட் பெஞ்சுகள். அழகான சுற்றுச்சுவர். சிலைகளுடன் எளியமுறையில் அமர்ந்திருந்த கோவில். தேவாலயம். தொழுகைக்கூடம். கையில் கோலேந்தி நடக்கும் மூதாட்டி ஒருத்தியையும் முதியவர் ஒருவரையும் கரம்பற்றி நடத்திச் செல்லும் ஒரு சின்னஞ்சிறுவனைப் போன்ற சிலைகள் பீடத்தில் வீற்றிருந்தன. அதைச்சுற்றியும் அழகான பூச்செடிகள் பிறகு வட்டமான பளிங்குத்தொட்டி. அதற்குள் பலவித உயரங்களில் பொருத்தப்பட்ட நீரூற்றுகளிலிருந்து நீர் பீய்ச்சியடித்தபடி இருந்தது. எதிரில் ஒரு சிறிய கண்ணாடிக்கூடம். உள்ளே நான்கைந்து மேசைகள். கூடத்தின்மீது பலவிதமான கொடிகள் படர்ந்து பச்சைப்பசேலென காணப்பட்டது. பின்னால் விரிந்த வெளியில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுசிறு இல்லங்கள். எல்லாமே ஓட்டு வீடுகளுக்கு உரிய அமைப்பில் கட்டப்பட்டவை. மறுபுறம் மருத்துவமனை, வேறொரு புறத்தில் உடல் எரிமையம். அதன் புகைப்போக்கி மேகத்தைத் தொடுவதைப் போல மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே வாகன நிறுத்தங்கள், பக்கவாட்டில் நடப்பதற்குத் தோதான கிளைப்பாதைகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தேன். தாமதமாகத்தான் கட்டிட அமைப்புகளைக் கவனித்தேன். எல்லாமே தரையோடு ஒட்டியவை. படிக்கட்டுகளோ, மாடிப்பகுதியோ எங்கேயும் காணப்படவில்லை. முதுமையின் சக்தியைக் கருத்தில்கொண்டு அவை வடிவமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும் அந்த இடத்தின் தனிமை விசித்திரமான ஒரு உணர்ச்சியை என் மனத்தில் பரப்பியது. ஆழ்மனத்தில் என்னை அறியாமலேயே ஒருவித அச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

நீரூற்றுக்கு இடதுபுறமாக இருந்த விசாரணை மையத்துக்குள் நுழைந்தேன். அந்த அறையின் உள்சுவர் முழுக்க அழகான புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தன. தயக்கத்துடன் பார்வையை அங்குமிங்கும் படரவைத்தபடி திரும்பியபோது ஒரு மேசையின் பக்கம் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் புன்னகையைப் பார்க்க நேர்ந்தது. ஒருகணம் அப்புன்னகையை ஒரு சிற்பத்தின் புன்னகையாக நினைத்துப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு மெல்ல அவளை நெருங்கி என்னிடம் இருந்த குறிப்புகளைக் கொடுத்தேன்.

“தையல்நாயகி, எஸ் ஸெவன்”

என் குறிப்பை வாய்விட்டுப் படித்தபடி அவள் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். குடில்கள் தொடங்கும் பகுதிவரைக்கும் கூடவே வந்து நான் செல்ல வேண்டிய திசையையும் திரும்ப வேண்டிய இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றாள். அவள் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன் நான். எல்லா இல்லங்களும் ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இல்லத்துக்கு முன்னால் மொசைக் கற்கள் பதிக்கப்பெற்ற சிறு முற்றம். ஒரு சிறு நிழற்குடை. அதன்கீழ் ஒரு சாய்வு நாற்காலி. அதைச்சுற்றிச் சின்னத் தோட்டம். தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்களின் மஞ்சள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

தற்செயலாகத்தான் ஒரு இல்லத்தின் ஜன்னல் பக்கமாக என் பார்வை சென்றது. இரண்டு கண்கள் என்மீது பதிந்திருந்தன. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவை என்னைத்தான் பார்க்கின்றனவா என்கிற சந்தேகத்தில் மீண்டும் அத்திசையில் பார்த்தேன். வைத்த விழி வாங்காமல் அப்பார்வை என் மீதே நிலைகுத்தியிருந்தது. தோல் சுருங்கிய அம்முகத்தையும் எதையோ யாசிக்கும் அக்கண்களையும் நீண்ட கணங்களுக்கு என்னால் பார்க்க முடியவில்லை. உடனடியாகத் திரும்பி மற்ற இல்லங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். உண்மையிலேயே என் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஜன்னலில் பக்கத்திலும் இருகண்கள். நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து உயரும் பார்வை. பாதையைப் பார்த்தபடி  வேகமாக நடக்கத் தொடங்கினேன். யாரோ என்னை அழைப்பதைப் போலிருந்தது. தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. அடையாளம் காட்டிய பெண்ணைக்கூட.  இறக்கி வைத்துவிட்டுப் போன பெரிய பெரிய எந்திரங்களைப் போல நிமிர்ந்துகூட பார்க்கமுடியாத அளவு நெஞ்சில் அச்சம் துளிர்த்ததை ஆச்சரியமாக உணர்ந்தேன். மறுகணமே என் பகுத்தறிவு மூளை விழித்து அந்த அச்சத்தை விரட்டியது. அந்த இடத்தின் விசித்திரம் ஒரு சின்னச் சத்தம்கூட காதில் விழவில்லை என்பதுதான். ஒரு தும்மல் சத்தம்கூட கேட்கவில்லை.

இல்லத்தின் கதவை நெருங்கி அழைப்புமணியை அழுத்தினேன். என் புலன்கள் இல்லத்துக்குள் ஏற்படக்கூடிய துணிகள் உரசும் ஒலியையோ செருப்புகள் அழுந்தும் சத்தத்தையோ ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தன. சில கணங்கள் வரை எதுவும் கேட்கவில்லை. மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டெனத் திறந்தது. வெளிப்பட்ட அந்த உருவத்தின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உருக்குலைந்த சதைக் கோளத்துக்குக் கையும் காலும் முளைத்ததைப் போலிருந்தது அத்தோற்றம். என் இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

”தையல்நாயகிங்கறது நீங்கதானேம்மா?”

கேட்க நினைத்த கேள்வி நெஞ்சிலிருந்து எழாமல் வறட்சி அடைந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஈரத்தைப் படர வைத்தபிறகுதான் சகஜமாகக் கேட்க முடிந்தது. என் கேள்வியையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கண்கள் மட்டும் அசைந்தன. என்னை ஆராய்வதைப் போல உற்றுப் பார்த்தன. நான் மீண்டும் “தையல்நாயகிங்கறது நீங்கதானே?” என்று கேட்டேன். அவர் மேலும் நெருங்கிவந்து “ம்?” என்று என்பக்கம் செவியைக் கொடுத்தார். என் கேள்வியை மறுபடியும் நான் கேட்கவேண்டியதாக இருந்தது.

“என் சின்னப்புள்ளைதான் இங்க கொண்டாந்து உட்டுட்டுப் போனான். அப்புறமா வரவே இல்ல”

தொடர்பில்லாமல் பேசியபடி அவர் உள்ளே திரும்பினார். அவரைத் தொடர எனக்கு அச்சமாக இருந்தது. அதைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.

இல்லம் மிகவும் தூய்மையாக இருந்தது. டெட்டால்  மணம் கமழ்ந்தது. சுவரில் இயற்கைக் காட்சிகளின் ஓவியம் ஒருபுறமும் குழலூதும் கிருஷ்ணனின் படம் மறுபுறமும் ஒட்டப்பட்டிருந்தன. அப்பால் கம்பியிட்ட ஜன்னல். வெளிப்புறக் காட்சிகளும் மேகங்களும் அசையும்  மரக்கிளைகளும் படம்படமாகத் தெரிந்தன. மறுபுறம் குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. ஜன்னலோரமாகவே கட்டில். மருந்து மேசை. மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. என் உடல் பதறுவதை உணர்ந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிவயிற்றில் குளிர்ச்சி பரவி உறைவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே நின்றேன். தோல் சுருங்கிய முகம். ஒடுங்கிய கன்னக் குழிகள். வெள்ளையாகப் புரண்ட நீண்ட கூந்தல் அள்ளிக் கொண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அக்கண்கள் முதலில் ஊட்டிய அச்சம் கரைந்தது. குழப்பத்தையும் கலவரத்தையும் அவை வெளிப்படுத்துவதை உணர்ந்தேன். முதுமையின் சரிவும் தளர்ச்சியும் படிந்த உடல். காதுகளின் விளிம்பிலும் முன்நெற்றியிலும் வெண்முடி காற்றில் புரண்டு அலைபாய்ந்தது. சட்டென என் பக்கமாக விரலை நீட்டி “நீங்க யாரு” என்று கேட்டார்.

”உங்க தங்கச்சி பையன் சந்திரனுக்கு சிநேகிதன் நான். சந்திரன் சந்திரன் தெரியுமில்ல..?”

சற்று சத்தமாகவே நான் சொன்னேன். ஆனால் என் ஒலிகள் எதுவும் கேட்காத உலகில் அவர் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. கட்டிலில் உட்கார்ந்தபடி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். மேலுதடும் கீழுதடும் உட்குழிந்து காணப்பட்டன. கோடுகோடாக எழுந்த சுருக்கங்களின் நீட்சி உதடுகள் வரை தாக்கியிருந்தது.

“ஆறு ஆம்பளை புள்ளைங்க பெத்து என்ன பிரயோஜனம் சொல்லு. ஊரு உலகத்துல புள்ளைங்க தலையெடுத்து பெத்தவங்கள காப்பாத்தும்ன்னு பேரு. நான் பெத்ததுங்க எல்லாமே அதுக்கு நேர்மாறா போச்சிங்க. ஒவ்வொருத்தனா போவும்போது கடைசி பையன் பாத்துக்குவான்னு இருந்தேன். அவனும் இங்க கொண்டாந்து தள்ளிட்டு போயிட்டான். என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”

”உங்க தங்கச்சி பையன் சந்திரன் சிநேகிதன்தான் நானு. அவர்தான் உங்கள பாத்துட்டு வரச்சொல்லி அனுப்பனாரு”

அவர் பதில் சொல்லவில்லை. என் சொற்கள் அவர் மூளையைத் தொடவே இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியே தெரியும் பனைமரங்களின் அசைவையே வெகுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர் மௌனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“அந்தக் காலத்துல எங்களுக்கு பெரிய பலசரக்குக்கட இருந்திச்சி. வில்வண்டி வச்சிருந்தாரு அவரு. எங்க போனாலும் நாங்க அதுலதான் போவோம்.”

அவராகவே ஒரு கதையைத் திடீரென சொல்லத் தொடங்கினார். அவரைப் பெண்பார்க்க வந்தது, திருமணம் நடந்தது, செழிப்பான முறையில் நடந்த வியாபாரம், வரிசையாகப் பிறந்த பிள்ளைகள், சந்தையில் யார் பிடியையோ விலக்கிக் கொண்டு ஓடோடிவந்த எருதுகளின் முரட்டுத்தனமான தாக்குதலால் நேர்ந்த மரணம் என அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனார். பிறகு ஒரு கணம் நிறுத்தி “நீங்க யாரு?” என்றார். நான் நிதானமாக மறுபடியும் என்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னேன். அவர் கண்கள் என்மீது படிந்திருந்தனவே தவிர என் சொற்களைக் கேட்டுக்கொண்ட சுவடுகளே அந்த முகத்தில் தெரியவில்லை.

மருந்துமேசை மீது ஒரு புத்தகம் கிடந்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள அதை எடுத்துப் புரட்டினேன். அதுவரை நான் பார்த்திராத புத்தகம். வெறும் படங்கள். எல்லாமே தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள். ஒருபுறம் குன்றும் மரங்களும் ஆறும் சூழ நிற்கிற கோயில்களின் கம்பீரத் தோற்றம். மறுபுறம் கருவறை நாயகரின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூடுதலாக சிற்சில பக்கங்களில் சில தூண்சிற்பங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

“ஒங்கள நல்லா கவனிச்சிக்கறாங்களா இங்க? சந்திரனுக்கு ஏதாவது சொல்லணுமா?”

அவர் எவ்விதமான பதிலும் சொல்லவில்லை. என் மனம் அதிர்ச்சியில் உறையத் தொடங்கியது. ஒரு சிற்பத்தின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போல சங்கட உணர்வு எழுந்தது. நான் அவர் புருவங்களைக் கவனித்தேன். வெளுத்து வளைந்திருந்தன அவை. கண்கள் மட்டும் இமைத்தபடி இருந்தன.

சட்டென அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

”அவருக்கு நான்னா ரொம்ப உசிரு. எங்க போய் வீட்டுக்குத் திரும்பிவந்தாலும் கையில பூ இல்லாம வரமாட்டாரு. சமையக்கட்டுக்கு வந்து அவரு கையாலியே தலையில வச்சிட்டுப் போனாத்தான் அவருக்கு நிம்மதி. ஒருநாளு அவர் எனக்கு பூ வச்சிவிடறத என் மாமியார்க்காரி பாத்துட்டா. சம்சாரி இருக்கற எடமா, இல அவிசாரி இருக்கற எடமா இதுன்னு ஒரே சத்தம். எவளுக்காவது இங்க கண்ணியமா இருக்கத் தெரியுதா, தாசி மாதிரி கொண்டை போட்டு பூ வச்சிட்டு திரியறாளுங்கன்னு பேசிட்டே இருந்தா. அவரு உடனே பின்பக்கமா போயிட்டாரு. நா சத்தம் காட்டாம அடுப்பு வேலையை கவனிச்சிக்கிட்டிருந்தேன். அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா. என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு. எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.

அவர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துத் தீயிலிட்ட பூ இன்னும் தன் கண் முன்னால் எரிந்து வதங்குவதைப் போல தேம்பித் தேம்பி அழுதார். உதடுகள் கோணிக்கொள்ள அவர் அழுத கோலத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. சங்கடமாக இருந்தது. அழுகையின் உச்சத்தில் அவர் சொன்ன சொற்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. எங்கோ பார்வை நிலைகுத்த சுவரில் சாய்ந்துகொண்டார். தேம்பலால் அவள் நெஞ்சு தூக்கித்தூக்கிப் போட்டது. கழுத்து நரம்புகளும் நெஞ்சுக்குழியும் நெளிந்தன. அவற்றின் அசைவுகள் என் சங்கட உணர்வை மேலும் மேலும் அதிகரித்தன. மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். முன் குவியலுக்கிடையே தவறிவிழுந்த கண்ணாடித் துண்டுகளைப் போல அவர் கண்கள் பளிச்சிட்டன. நாக்கைச் சுழற்றி உதடுகளை மற்றொருமுறை ஈரப்படுத்திக் கொண்டார்.

கண்ணீரும் அச்சமும் நிரம்பி அக்கண்களிலிருந்து என் பார்வையை விலக்க இயலவில்லை. பெரும் குற்ற உணர்வுடன் மூண்ட வேதனையால் என் தொண்டை இறுகி உலர்ந்து போனது. எழுந்து அவரை நெருங்கித் தொட்டு ஆறுதல் சொல்ல நினைத்தேன். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு பின்வாங்கினேன். சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது. அந்த உட்கூடம், ஜன்னல், திரைச்சீலை, சுவரோவியங்கள், கழிப்பறைக் கதவுகள், தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள் புத்தகம் என ஒவ்வொன்றின் மீதும் தயக்கத்துடன் என் பார்வை படர்வதையும் பெருமூச்சுடன் எழுந்திருப்பதையும் நடக்கத் தொடங்குவதையும் அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார். அக்கேள்வியால் என் உடல் குறுகிச் சிலிர்த்தது. சில நொடிகள் கதவில் சாய்ந்தபடி அக்கண்களைப் பார்த்தேன். அந்த இல்லங்களின் ஒவ்வொரு ஜன்னல்களிலும் தென்பட்ட கண்களையெல்லாம் மறுபடியும் எண்ணிக்கொண்டேன். ஒருகணம் கூட என்னால் அங்கே நிற்க முடியவில்லை. வேகவேகமாக இல்லத்தைவிட்டு வெளியேறினேன். கச்சிதமாக வளைந்து நீளும் சாலைகளையும் புல்வெளிகளையும் நீரூற்றுகளையும் தாண்டி நுழைவாயிலைக் கடந்து தரையில் கால்வைத்த பிறகுதான் சீராக மூச்சுவிட முடிந்தது. என் வேதனையைச் சந்திரனுக்குத் தெரியப்படுத்தும் விதத்தைப் பற்றிய கவலையை முதன்முதலாக உணர்ந்தது மனம்

என்னதான் முடிவு..?– கோவை சங்கர்

 

 

 

 

 

 

 

 

புத்தம்புது பொருள்கேட்கும் சின்னஞ்சிறு குழவியும்
பெற்றவரைக் கேட்பதுவும் என்னதான் முடிவு?
பகலின்றி இரவின்றி ராப்பகலாய்ப் படித்துவிட்டு
தேர்வெழுதிக் கேட்பதுவும் என்னதான் முடிவு?

கால்சோர மெய்சோர கண்களுமே பூத்துவர
கற்படிகள் தேய்ந்திடவே பணிமனைகள் மீதேறி
‘காலியில்லை’ போர்டுகண்டு மனமுருகிக் கேட்பதுவும்
‘கடவுளே அடியேனுக்கு என்னதான் முடிவு?’

காதலிலே தோல்வியினைக் கண்டவக் காளையவன்
கருத்துடனே நோக்குவதும் என்னதான் முடிவு?
கடிமணம் கொண்டவன் பேதங்களைக் கண்டுவிட்டு
கதறிக் கேட்பதுவும் என்னதான் முடிவு?

வயிறொன்று பசியினை யள்ளிச் சொரிந்திட
வறுமை கோலத்தில் குழந்தைகள் கலங்கிட
வற்றிய வயிறுடனே ஏழையவன் கேட்பதுவும்
‘வறுமைக்கு ஆண்டவனே என்னதான் முடிவு?’

வாழ்வின் சாரமே தொக்கியே நிற்பது
வளமிக்க கேள்வியாம் ‘என்னதான் முடிவில்?’
இகத்தின் முதல்வன் இறைவனை நாடும்
இவ்வேழை கேட்பதுவும் ‘என்னதான் முடிவு?’

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து

Image result for retired staff from government department in chennai

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு

பின்னாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஊழியர்களில் ஒருவர் பயிற்சி மையத்தில் அறிமுகமான தங்கப்பன். எங்கள் நிறுவனத்தில் பல தங்கப்பன்கள் இருந்ததால் இவரை இங்க்லீஷ் தங்கப்பன் என்று கூறுவார்கள்.

கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்தையை இழந்தவர். அவர் தந்தை எங்கள் அலுவலக ஊழியர். கருணை அடிப்படையில் இவருக்கு வேலை வழங்கப்பட குடும்ப சூழ்நிலையை முன்னிட்டு அந்தக் கால புகுமுக வகுப்பிலிருந்து விலகி பணியில் சேர்ந்தவர்.
ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களைத் தமிழ்மொழியில் படித்துவிட்டு கல்லூரியில் எல்லாம் ஆங்கிலமயம் என்று தடுமாறுவது மிகவும் இயற்கை. தங்கப்பனின் உறவினர் ஒருவர் இந்தத் தடுமாற்றத்தில் கிட்டத்தட்ட மனநோய்க்கு ஆளாகிவிட்டார். அதனால் பதினோராம் வகுப்பு முடிந்து முடிவுகள் வருவதற்குள் தங்கப்பனை ஆங்கிலம் பயில சென்னையில் ஒரு பயிலகத்தில் சேர்த்திருந்தார்கள். ஆர்வத்துடன் இவர் கற்றாலும் மொழி இவருக்குப் பிடிபடவே இல்லை.

அவர் கற்ற ஆங்கிலம் கல்லூரிப் படிப்பிற்கு உபயோகப்படவில்லை. ஆனாலும் தேவை இருக்கிறதோ இல்லையோ இவர் அலுவலகத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
பயிற்சி மையத்தில் சிறு குழுக்களைப் பிரிப்பார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஏதேனும் தலைப்பைக் கொடுத்து கலந்துரையாடச் செய்வார்கள். குழுவில் ஒருவர் நடந்த உரையாடல்களின் கருத்துக்களை எல்லோருக்கும் சொல்வார்கள். தனது குழுவிற்காக அந்தப்பணியை தங்கப்பன் ஏற்றார். தமிழில் யோசித்து ஆங்கில மாற்றம் செய்து தப்பும் தவறுமாகப் பேசி சமாளித்துவிட்டார்.
வகுப்பில் மற்றவர்கள் அந்தக் காலகட்ட மனமுதிர்ச்சியில் சற்று அதிகமாகவே தங்கப்பனைக் கலாய்த்து விட்டார்கள். முகம் எல்லாம் சிவந்து சிறுத்துப் போய்விட்டது இவருக்கு.

உங்கள் ஊகம் சரிதான் அந்த கேலியில் பங்கெடுக்காத ஒரே நபர் நான்தான். சாதாரணமாகப் பேசுவதே சொற்பம். (நல்ல நாளிலேயே தில்லைநாயகம் என்பார்களே அதுபோல்) தங்கப்பன் அன்று மாலையே ஒரு தமிழ் ஆங்கிலம் அகராதி ஒன்றும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் ஒன்றும் வாங்கிவிட்டார். எப்படியாவது தான் சிறந்த ஆங்கிலப் பேச்சாளனாக வரத்தான் போகிறேன் என்று என்னிடம் மட்டும் சொன்னார். அதில் அவர் வெற்றி பெற்றாரோ இல்லையோ முயற்சியை மட்டும் எப்போதும் விடவில்லை. அவர் என்னுடன் இரு அலுவலகங்களில் இரு வேறு சந்தர்ப்பங்களில் வேலை பார்த்திருக்கிறார்.

வேலையில் கெட்டிக்காரன் என்று எப்போதும் பெயர் வாங்கியதில்லை. என்னையும் தங்கப்பனையும் தராசில் வைத்தால் எந்தத் தட்டு தாழும் என்று சொல்லமுடியாது என்று அலுவலகத்தில் பேசிக்கொள்வார்கள்.  ஒரே பிரிவில் இருவரையும் வைத்தால் அதோகதி என்று எண்ணியோ என்னவோ வேறுவேறு பிரிவுகளில்தான் நாங்கள் இருப்போம்.

சில்லறைச் சச்சரவுகள் அலுவலகத்தில் அவ்வப்போது எழத்தான் செய்யும். என்னை யாராவது எதாவது சொன்னால் அவர்களைக் கலங்கடிக்க எனக்கு ஒரு வழிதான் தெரியும். பதிலுக்கு ஒரு வெற்றுப் பார்வைதான். மேலே என்ன சொல்வது அல்லது செய்வது என்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு போய்விடுவார்கள். எனக்கு அதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருந்திருக்க வேண்டும்.
தங்கப்பன் நேர் எதிர். இங்கிலீஷ் தங்கப்பன் என்றாலே ‘யார் அந்தச் சண்டைக் கோழியா?” என்று கேட்பார்கள் தன்னை சம்பந்தப்படுத்தி ஏதேனும் சச்சரவு வரக்கூடும் என்று தெரிந்தாலே, சகட்டுமேனிக்கு ஆரம்பித்துவிடுவார்.

“வாட் நான்சென்ஸ்..! தேர் இஸ் எ லிமிட் டு எவரிதிங். ஆல் யூஸ்லெஸ் பீபுள் ஆர் ட்ரையிங் டு ஆக்ட் ஸ்மார்ட். ஐ வில் டீச் தெம் அ லேசன்.” என்று ஆங்கிலத்தில் ஆரம்பிப்பார். உடனே தமிழுக்கு மாறிவிடுவார். “தலைக்கனம் பிடிச்சவன், அகராதி புடிச்சவன் எல்லாருக்கும் இந்த ஆபீசுல இடம் கொடுத்துட்டாங்க … “என்றெல்லாம் சற்று பலமாகவே முனகுவார். எதிராளி ஆரம்பிக்கும் முன்பே பின்வாங்கிவிடுவார்.
ஆனால் இயல்பாகவே மென்மையானவர். பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்த்தாலே நெகிழ்ந்துவிடுவார். அவர் வீட்டருகில் பல எளியவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்துவந்திருக்கிறார்.

ஒருமுறை அவர் நண்பர் ஒருவர் இவரை ஒரு உணவகத்திற்கு அழைத்துக் கொண்டுபோனார். என்ன காரணமோ நானும் உடனிருந்தேன். நண்பர்.வடநாட்டு முறைப்படி சப்ஜி ஆர்டர் செய்தார். அதுவரை இந்த நடைமுறை எனக்குத் தெரியாதே என்று வெளிப்படையாகச் சொன்னார். பல சமாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளாமலேயே வளர்ந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டார். அலுவலகத்தில் தன் வேலையில் யாரேனும் தப்பு கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தாலே பாயும் தங்கப்பன் இவர்தானா என்று எனக்குத் தோன்றியது.

அவருக்கு இரு மகன்கள். வீட்டில் கணினி வாங்குவது அப்போதுதான் தொடங்கியிருந்த நேரம். பிள்ளைகள் கணினி வாங்கித்தரச் சொல்லிக் கேட்டார்களாம். அதற்குக் கணிசமான தொகை செலவு செய்வதற்குமுன் பலரிடம் விசாரித்து வந்தார். அலுவலக நண்பர்கள் மேல் இவருக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் அலுவலகக் கணினிக்கு பேப்பர், ரிப்பன் போன்றவற்றை கொடுத்துவரும் நபர் மூலமாக ஒரு கணினி வியாபாரம் செய்யும் என்ஜினீயர் ஒருவரைப் பிடித்தார்.

எந்த வகைக் கணினி வாங்கலாம் என்று இவர் கேட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பொறியாளர், “உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ற கணினிதான் வாங்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டார். அதுபோலச் செய்யவும் செய்தார். அவர்கள் தேவைக்கேற்ப சரியான தேர்வு செய்து கணினி விற்றார்.

அவர் அப்போது சொன்னதை தங்கப்பன் அடிக்கடி சொல்வார்.

“எனக்கு நல்ல லாபம் கிடைப்பது என் நோக்கமல்ல. உழைத்துச் சம்பாதித்த காசு அதற்கேற்ற பயனைத் தரவேண்டும். நீங்கள் இன்னும் இரண்டு மூன்றுபேரிடம் என்னைப்பற்றிச் சொல்வீர்கள் அல்லவா? அதுவே எனக்கு பெரிய லாபம்.” என்றாராம்.

தனது தாழ்வு மனப்பான்மையை ஆவேசத்தால் மறைப்பது ஒரு வழி என்று எங்கோ படித்தபோது எனக்கு நினைவிற்கு வந்தது தங்கப்பன்தான்.

நானும் தங்கப்பனும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் ஒய்வு பெற்றோம். நான் எந்தப் பதவி உயர்வும் பெறாமலே வேலைக்குச் சேர்ந்த அதே பதவியில் ஒய்வு பெற்றேன். தங்கப்பன் தாமதமாக முதல் பதவி உயர்வு பெற்றார். ஒய்வு பெறுவதற்குச் சற்றுமுன் இரண்டாவது பதவி உயர்வும் கிடைத்தது. ஓய்வூதியம் சற்று அதிகமாகக் கிடைக்க இது காரணமாயிற்று.

ஒரு மகன் திருமணத்திற்கு நான் போயிருக்கிறேன். அவர் மனைவி கனிவும் பாசமும் மிக்கவர். எனது அலுவலக நண்பர்கள் குடும்பத்திலேயே தங்கப்பன் குடும்பம் ஒன்றுடன்தான் என் மனைவி மக்களுக்குப் பழக்கம்.

பெரிய மகன் வளைகுடா நாட்டில் குடும்பத்தோடு இருக்கிறான். இரண்டாவது மகன் பேராசிரியராக ஒரு கலாசாலையில் பெரும் மதிப்போடு பணியாற்றுகிறான். முனைவர் ஆய்வுகளுக்கு இவனை கெய்ட் ஆகக் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லும் அளவிற்கு புகழுடன் இருக்கிறான். பெற்றோர்கள் அவனுடன்தான். செய்தித் தாள்களில் முனைவர் மனோகரன் தங்கப்பன் என்ற பெயர் அடிபடும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருக்கும்.

கிட்டத்தட்ட எங்கள் வயதுக்காரரான சேஷாத்ரி என்ற சக ஊழியர் இருந்தார். எங்களுக்கு சிலவருடங்களே சீனியர் ஆன அவர் படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெற்றுவந்த திறமைசாலி. எங்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அரசு நியமித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இருப்பார். நிறுவனத்திற்குள் ஊழியர்கள் பெறக்கூடிய அதிக பட்ச பதவி உயர்வாக இரண்டாவது பெரிய பதவிவரை உயர்ந்து ஓய்வுபெற்றார். அவரை நான் சில நாட்கள் முன் சந்தித்தேன்.

“தங்கப்பன் இருமகன்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் பெரிய பதவி வகித்தவன். ஆனால் எனது பிள்ளைகள், என் கவனக் குறைவு காரணமாகவோ என்னவோ, இன்னும் செட்டில் ஆகவில்லை. எங்கள் இருவரில் வாழ்வில் வெற்றி பெற்றவன் யார் என்று இப்போது புரிகிறது.” என்றார்.

நான் வேலைக்குச் சேர்ந்தபோது மனதாரப் பாராட்டியது வேம்பு என்கிற எதிர்வீட்டுப் பையன் என்று நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். நான் இந்த நிறுவனத்தில் சேர இருப்பதைத் தெரிவித்தவுடன் என்னைவிட அவன் மிகவும் சந்தோஷப்பட்டதாகத் தோன்றியது. அவன் எவ்வகையிலோ இந்தத் தங்கப்பனுக்கு உறவினன்.

தங்கப்பன் என்னும் தன் உறவினன் சில நாட்கள் முன்புதான் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான் என்று சொன்னான். அந்தத் தங்கப்பனை பயிற்சி மையத்தில் சந்திப்பேன் என்றோ ஒரே அலுவலகத்தில் வேலை செய்வோம் என்றோ தெரியாது.
ஏதோ ஒரு சமயத்தில் வேம்புவைப் பற்றி தங்கப்பன் விசாரித்தார். வேம்புவைப் பற்றி எனக்குத் தெரியாத சில விவரங்களையும் தெரிவித்தார். தங்கப்பன் விவரித்தபோது கண்களில் தெரிந்த வியப்பும் கனிவும் இன்றும் நினைவிருக்கிறது. சொல்லப்படுபவரின் குணநலன்களோடு சொல்பவரின் குணநலன்களும் இது போன்ற சமயங்களில் வெளிப்படும்.

வேம்புவின் தந்தை சங்கரலிங்கம் தன் தகப்பனார் பெயரான பொன்னுலிங்கம் என்பதைத்தான் அவனுக்குப் பெயராகச் சூட்டினார். கிட்டத்தட்ட தவமிருந்து பெற்ற பிள்ளை. அதற்கு முன் இரு குழந்தைகள் பிறந்திருந்தாலும் நாள் கணக்கிலேயே இறந்துவிட்டன. பெரியவரான தாத்தா பெயரை வைத்துக் கூப்பிடமுடியாது என்பதால், கூப்பிட வேறு பெயர் தேவைப்பட்டது. குழந்தைகள் தக்கவில்லை என்றால், பிச்சை, குப்பன், வேம்பு என்று பெயரிட்டு அழைப்பது வழக்கம். அதனால் குழந்தை பொன்னுலிங்கம் ‘வேம்பு’ ஆகிவிட்டான்.
அரிசி மற்றும் தேங்காய்தான் குடும்ப வியாபாரம். நல்ல செயலான குடும்பம். மேலும் கோவில் குளம் என்று தர்மம் செய்வது அவர்கள் வழக்கம். ஆனால் அதற்கான புகழ் தேடிக்கொள்வது அவர்கள் விருப்பமில்லை. சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு ஒரு பெரும் தொகையினை அளித்திருந்தார்கள். ஆனாலும், கூட்டத்தோடு கூட்டமாகத்தான் அந்த நிகழ்வில் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

பல உறவினர்களுக்கு, முக்கியமாகக் கல்விச் செலவுகளுக்கு, உதவுவதில் தயங்கியதே இல்லை. சுற்றத்தில் இந்தக் குடும்பம்தான் பசையுள்ள குடும்பம். ஆனால் எளிமையான வாழ்க்கையும் ஆழமான பக்தியுமாக இருந்தார்கள்.

திருமணம் ஆகி பல வருஷங்களுக்குப் பின்பிறந்தவன் வேம்பு. ஒருமுறை பெற்றோரை அழைத்து வருமாறு வேம்புவிடம் சொல்லியிருந்தார்கள். சங்கரலிங்கம் மகனுடன் போயிருந்தார். தலைமை ஆசிரியர் புதியதாக வேலைக்கு வந்தவர். “அப்பா ஊரில் இல்லையா? தாத்தாவை அழைத்து வந்திருக்கிறாயே?” என்று கேட்டாராம்.

தாத்தா பொன்னுலிங்கம் வியாபாரத்தில் கெட்டிக்காரர். கொள்முதலிலும் ஏலம் எடுப்பதிலும் நல்ல அனுபவம். அவர் காலத்திற்குப்பிறகு அப்பா சங்கரலிங்கம் குடும்பத் தொழிலைத் தொடர்ந்தாலும் அவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்று சொல்ல முடியாது.
கிராமப் பக்கங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. ஒரு கண் உள்ள நெல்- இரு கண் உள்ள மாடு- மூன்று கண் உள்ள தேங்காய் மூன்றுமே வியாபாரியை எப்போது வேண்டுமானாலும் கவிழ்த்துவிடும் என்பார்கள்

ஒரு பெரும் தென்னந்தோப்பை ஏலம் எடுத்த விவகாரத்தில் பெரும் நஷ்டம் வந்துவிட்டது. இயற்கையின் ஆவேசத்தில் தோப்பு பாழாயிற்று. அந்தக் காலத்தில் காப்பீடு போன்ற வசதிகள் இல்லை. முழு நஷ்டத்தையும் தந்து இதர சொத்துக்களை விற்று ஈடு செய்தார். கொஞ்சமும் வருத்தப்படவில்லை.

வேம்புவின் தாய் நோய்வாய்ப்பட்டார். துரதிருஷ்டம் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று சொல்வார்களே, அதுதான் இந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்டது. சில நாட்களில் தாயும் தொடர்ந்து தந்தையும் மறைய வேம்பு அனாதையாக ஆனான். சுற்றத்தினர் தங்களால் இயன்றவகையில் உதவத்தான் செய்தார்கள்.

இலவச கல்விக்கும் ஹாஸ்டலுக்கும் யாரோ ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். வேம்புவிற்கு ஒரு தாய் மாமன் உண்டு. அவர் இளம் வயதிலிருந்தே உடல்நலம் குன்றியவர். அவரும் இவனுடன் சேர்ந்துகொண்டதால், ஹாஸ்டலை விடும்படியாகிவிட்டது, உறவினர்கள் ஒன்றுகூடி இவர்கள் செலவுகளை கவனித்துக்கொண்டார்கள். இவையெல்லாம் தங்கப்பன் எனக்கு அளித்த தகவல்கள். நானே கவனித்த சில விஷயங்களும் உண்டு.

சரித்திரம் நிகழ்ந்ததோ இல்லையோ, ‘வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது’ என்பது வேம்புவிற்கு மிகவும் பொருத்தம்.

 

Period. End of sentence

 

 

 

 

 

 

Image result for பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்

 

இந்திய பெண்கள்  மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ஆவணப் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார்.                               பல இடங்களுக்குச்சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.

இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்தியப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச்சொல்வதை மையமாகக்கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ எனக் கூறினார்.

இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

 

குவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி

கதையின் ஆசிரியர்  ந . பானுமதி  அவர்களைப்பற்றி ……

 

மின்னிதழ்களான  பதாகை மற்றும் சொல்வனத்தில் இவரது  ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

நவீன விருட்சம் மற்றும் புதுகைத் தென்றல் இதழ்களிலும் இவரது கதைகளும் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பொன்றில் இவரது ‘’”அஸ்வத்தாமா” கதை இடம் பெற்றுள்ளது.

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இவர் ‘கவிமாமணி’, ’ஸ்வாமி இராமானுஜர் ஆயிரத்தாண்டு விருது’ ஆகியவை பெற்றவர்

ஊமைக்காயம்

 

Related image

“கயல், மகிழ்ச்சிதானே! உனக்கு மணவிலக்கு கிடைத்துவிட்டது. உன் பணத்தில் நீ கட்டிய வீடு, ஒருமுறை கூட இதுவரை நீ பார்த்திராத வீடு, உனக்கே உனக்கு என்று நீதிமன்றம் சொல்லிவிட்ட வீடு; உன் மகள் இசையுடன் இனி நீ அங்கு நிரந்தரமாக, சுதந்திரமாக இருக்கலாம். புது வாழ்க்கை தொடங்க என் வாழ்த்துக்கள்.” வழக்குரைஞர் என்னிடம் சொல்கையில் ஒருபுறம் வெற்றிக் களிப்பும், மறுபுறம் வெறுமையுமாக உணர்ந்தேன். எத்தனை நெருங்கிய சொந்தங்கள் எனக்கு, இன்று ஒருவரும் அருகிலில்லை. என் திருமணமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை, என் மணவிலக்கும். இத்தனை பெரிய உலகில் பத்து வயது சிறுமியைக் கையில் பற்றிக்கொண்டு மிகத் தனியாக நிற்கிறேன். இல்லை, சோர்விற்கு இடமில்லை  வாழ்ந்து காட்ட வேண்டும், மகள் நல்ல துணையில்லையா, வேலை ஒரு கௌரவமில்லையா, நானே உழைத்து நானே முன்னேறும் இவ்வாழ்க்கை ஒரு வரமில்லையா?

அறுபத்தி நான்கு குடியிருப்புகள் அந்த வளாகத்தில் இருந்தன. என்னுடையது ‘சி’ ப்ளாக், இரண்டாம் மாடி. நான் என் சாமான்களுடன் நுழையும்போதே காவலாளி தடுத்தான்.

‘செகரட்டரி’ வந்து சொன்னாத்தான் உள்ள போகலாம்.’

“என் வீட்டுக்கு நான் போறதுக்கு யாரு சொல்லணும்?”

‘அந்த நியாயமெல்லாம் அவரிட்ட பேசு. அவரு சொல்லாம லாரி ஒரு இன்ச் நவராது’

“என்னம்மா இது, முன்னாடியே பேசி வக்கறதில்லையா? என்ன டிலே பண்றீங்க” லாரி ஓட்டுனர் படபடத்தார்.

‘அப்படிச் சொல்லுய்யா, பர்மிஷன் இல்லாம வர்லாமா? அவரு என்னைய வேலய விட்டுத் தொரத்திடுவாரு.’

நான் இம்மாதிரியான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை; என் வீட்டிற்கு நான் செல்வதை யாரோ தடுப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

“சரி, செகரட்டரி எங்க இருக்காரு, ஃபோன்ல கூப்டுங்க, இல்ல நம்பர் தாங்க நான் பேசறேன்”

“புது நம்பரை அவரு எடுக்க மாட்டாரு. க்ளப்புக்குப் போயிருக்கிறாரோ என்னமோ? இன்டர்காம்ல கேக்கறேன். ஐயா வரல்லியா?”

நான் பதில் சொல்லாது நின்றேன்.

காவலாளியும், லாரி ஓட்டுனரும் இகழ்ச்சியான பார்வையை பரிமாறிக்கொள்வதைக் கவனித்தேன். ”பழகிக்கோ கயல்” என்று மனதினுள் சொல்லிக்கொண்டேன்.

படபடப்புடன்  ஒரு முதியவர் வாசலுக்கு வந்தார். ’ஆரு, என்னது, சி ப்ளாக் ஆறா, சந்த்ரன் வீடு இல்லியோ அது? என்னது உங்க வீடா? கோர்ட் சொல்லிடுத்தா? டிவோர்சியா? எப்படி சமாளிப்பேள்? டாக்குமென்ட் இருக்கா? பெண் குழந்தையா? ஈஸ்வரா! பகலோட வரப்படாதோ? உள்ள அனுப்புடா, முழிக்கிறான் பாரு.’

ஒரு வழியாக சாமான்களை இறக்கிப் பேசினதை விட அதிகத் தொகை கொடுத்து நிமிர்கையில் இசை உறங்கியிருந்தாள்.சாப்பிட வெளியிலும் போகமுடியாது, இங்கேயும் செய்யமுடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம். எதிரெதிராக இரு ஃப்ளாட்கள்  ஒவ்வொரு தளத்திலும். கட்டிட அமைப்பில் நிறைய இடம் இருக்கும் தோற்றத்தை புத்திசாலித்தனமாக ஏற்படுத்தியிருந்தார்கள். காலை புலர்கையில் இசை விழித்துக்கொண்டு பசிக்கிறது என்றாள்.அவளுக்கு கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்கலாம் என்றால் பாலில் தா என அடம். எதிர்த்த வீட்டில் கேட்கலாமென பெல் அடித்தேன். முழுதாக இரு நிமிடங்களுக்குப் பிறகு கதவு பாதி திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் முகக் குறிப்பால் என்ன என்றார்.

“எதிர் வீடு என்னோடது. நேத்துதான் வந்தேன். எக்ஸ்ட்ரா பால் இருந்தா தாங்க.மாலயில வாங்கித் தரேன்.”

‘பாலுமில்ல, ஒன்னுமில்ல’ என்று கதவு சாத்தப்பட்டது. அதிர்ந்தேன். என்ன பிழை என்னிடம்? இசையை அடிக்கும் வேகம் வந்தது. இல்லை, அது இயலாமை. பிறர் உனக்கு எதையும் செய்யக் கடன்பட்டவர்களில்லை என்று என்னையே சமன் செய்துகொண்டேன்.

“பால் எங்க கிடைக்கும்? காய்கறி கட கிட்டக்க இருக்கா? பலசரக்குக் கட பக்கமிருக்கா?” என்று அந்த காவலாளியைத்தான் கேட்க நேர்ந்தது. அவன் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே ’நேரப் போயி ஜங்க்ஷன்ல  திரும்பு. அல்லாமிருக்கும்’ என்றான். பெரு நகரின் கலாசாரத்தை நோக்கி இந்த ஊர் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

காலை உணவை முடித்துக்கொண்டு அனைத்துப் பொருட்களையும் சுமந்துகொண்டு திரும்பி வருகையில் ‘மிஸஸ். சந்த்ரன்‘ என்று பெண்குரல் கேட்டது. “என்பெயர் கயல்”.

“சாமாங்க இருக்கு. அப்புறம் வரேன்”

“அப்படியா? சரி, உள்ள வாங்களேன்.” ஏ1 வாசலிலிருந்து அழைத்த பெண்மணி செக்ரட்டரியின் மனைவி என சொல்லாமல் தெரிந்தது.

 “சும்மா இப்படி வைங்கோ, உங்க பொண்ணா, அப்படியே சந்த்ரன் ஜாட”

நான் பதில் சொல்ல முயலவில்லை. வீண், இதெல்லாம் வீண். என் தன்மானத்திற்கு நான் தரவேண்டிய விலை. இவைகள் உறுத்தும் ஊவா முட்கள். எரிச்சல் தரும் பார்வைகள், பின் முதுகில் ஊறும் நமட்டுச் சிரிப்புகள், பாவமே என்று பரிதாபப்படும் பகல் வேஷங்கள். காளியென இவர்களைக் கிழித்துப் போட்டுவிடலாம், ஆனால், எத்தனைபேரை அப்படிப் போடமுடியும்? அந்தக் காளியே மகிஷனை வதைத்தபிறகு விட்டுவிட்டாளே?

அந்த வளாகமே சந்திரனை அறிந்திருந்தது. அவனை நல்லவன் என்ற அதன் மதிப்பீட்டிலிருந்து சரித்துக்கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. இசை, விளையாடப் போகையில் பெரியவர்கள் வந்து அவளிடம் கேள்விகள் கேட்பதாகச் சொன்னாள். “அந்த சவிதா இல்ல அவளும், இளங்கோவும் ‘உங்க அப்பா உன்னோட இல்லியா? அவரு கெட்டவரா’ன்னு கேக்கறாங்க மம்மி” என்று  அழுதாள். “மம்மி நம்ம வூருக்கே போலாம், அங்கதான் ராதா, சுரேஷ் எல்லாரும் ஒன்னும் கேக்க மாட்டாங்க.”

“நான்  பேசறேன்.      நீ ப்ரண்ட்ஸ்ஸோட நல்லா வெளயாடலாம். அம்மாகூட எல்லாரையும் விட்டுட்டுத்தானே  இங்க இருக்கேன். குட் கேர்ள் இல்ல, வீட்டுப்பாடம் எழுதவேணாமா? நாளக்கி தீம் பார்க் போலாம் ஓகேயா?”

இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் சிலர் நட்புடன் சிரிக்கிறார்கள். தங்கள் இல்லங்களுக்கும் அழைப்பதில்லை, என் வீட்டிற்கும் வருவதில்லை. ஆனால், ஒதுக்கம் குறைந்துள்ளது. ஏன், அம்மாகூட ஒன்றும் கேட்பதில்லை. இணக்கம் வராமலா போய்விடும்? எனக்கும் அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், இசையின் படிப்பும், அவளின் வயலின் வகுப்பும் என்று நேரம் பறக்கிறது. நீல இரவு விளக்கின் ஒளியில் என் கன்னங்களில் வழியும் கண்ணீர் பளபளவென்று மினுங்கி என் வாழ்வைப் போல் காய்ந்தும் விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் எதிர் வீட்டில் ஆள் இருக்கும் அரவமே இருப்பதில்லை. அன்று பார்த்த முகம், பாதி உடல் ஏனோ மருள் காட்சியெனத் தோன்றித் தோன்றி மறைந்தது.

இசையின் பள்ளி எங்கள் இருப்பிடத்திலிருந்து இரு கிலோ மீட்டருக்குள்தான். நானே அழைத்துச் சென்று விடுவேன், அழைத்து வந்தும் விடுவேன். அன்று காலையில் இருந்தே மனம் அமைதியாக இல்லை. முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்ப்பு பாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்க, இசையின் பள்ளி நிர்வாகம் மதியம் மூன்றுமணிக்கு அனைவரையும் வீட்டிற்குச் செல்லுமாறு சொல்லிவிட்டது. இசை என்னிடம் அதைச் சொல்கையில் நான் முக்கிய கூடுகையிலிருந்தேன். தவிப்பாக இருந்தது, அவள் பள்ளியிலும் இருக்கமுடியாது, வெளியிலும் நிற்கமுடியாது, நானும் போகமுடியாது, கலவரம் நடந்தால் என்ன செய்வது? என் கவனம் சிதறுவது எனக்கே தெரிந்தது. ’மிஸ். கயல், நீங்கள் நிலையாக இல்லை, ஹேவ் சம் டீ’ என்றார் நிர்வாக இயக்குனர்.’ நான் அங்கு இருக்க வேண்டிய அவசியத்தை அவர் சொல்லும் முறை, நான் அவசரத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடாத நிலை. தவித்தேன், நல்லவேளை, சவிதாவின் தாய் இசையையும் அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டதாகவும், தன் வசம் இருக்கும் சாவியால் வீட்டிற்குள் போய்விட்டதாகவும் இசை சொல்ல நிம்மதியாக இருந்தது.

அலுத்துச் சலித்துத் திரும்புகையில் எங்கள் வளாகத்தின் வாசலில் ஒரே கூட்டம். மேகத்திலிருந்து விடுபட்ட நிலவுபோல என் எதிர் வீட்டு அம்மா நின்றுகொண்டிருந்தார். ’யாரப் பாத்து என்னடா சொன்ன? என்ன உன் நெனப்பு? பொசுக்கிடுவேன், பாத்துக்க’ என்று கத்திக்கொண்டிருந்தார். காவலாளியை இரண்டுபேர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

Image result for watchman misbehaving in a flat in chennai

“அப்பவே சொன்னேன், தனிப்பட்ட மொறையில வாட்ச்மேன் வேணாம், செக்கூரிடி ஏஜென்சி மூலமா  வைப்போம்னு; யாரும் கேட்டாத்தானே” என்றார் ஒருவர்.

”இப்படியும் சொல்வீங்க, மெய்ன்டினன்ஸ் ஏத்தினா கத்துவீங்க”

“சரி சார், அதையெல்லாம் அப்புறமா பேசலாம்; இவன என்ன பண்ணப்போறீங்க?”

‘போலீஸ்ல சொல்லிடுவோம்.’

“ஐயா, என்னய போலீசிலெல்லாம் மாட்டிடாதீங்க. நான் மன்னிப்புக் கேக்கறன், அம்மாகிட்ட. புத்தி பிசகி செஞ்சுட்டம்மா, எனக்கே அவமானமா இருக்கும்மா, மன்னிச்சுடுங்க. இந்தத் தெருவுக்குள்ள இனி நொழைய மாட்டன்.”

“அவன கணக்கு தீத்து அனுப்பிடுங்க, வேற ஆள பாத்து வையுங்க” என்ற அந்த அம்மா எங்கள் ப்ளாக்கை நோக்கி நடந்தார்.

என் ஃப்ளாட் வாசலில் தென்னம் விளக்குமாறு குச்சிகள் கிடந்தன. என் வீட்டில் தென்னம் துடைப்பம் கிடையாதே, என்னதான் நடந்திருக்கும்? இசை என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதாள்.

 “பயந்திருக்கா, அவன வெரட்டியாச்சு, இனி வரமாட்டான், கதவ இன்னாருன்னு பாக்காம தொறக்காத இனி”என்ற அந்த அம்மா என்னைப் பார்த்து.

“ஊமைக் காயத்தை உண்மையாச் சொல்லணும்னு இல்ல; சொல்ல முடியாத நெஜங்கூட நல்லதுதான். எத்தனையோ காயங்கள், யாரோ பேசி சச்சரவு தீந்தா போறாதா? போ போ உள்ள. எந்தக் கெடுதலும் நடக்கல”

அந்த அம்மாவின் கதவு மூடியதில் என் காயங்கள் ஆறின.   

 

பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு

எம்ஜிஆர், சிவாஜி, கமல், மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகக்  கொண்டுவருவது !

Related image

 Image result for பொன்னியின் செல்வன் -கமல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மணிரத்னம்  அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மீண்டும் முயற்சி  செய்கிறார் என்பது  தற்போதைய சுடும் செய்தி! 

Image result for பொன்னியின் செல்வன் -கமல்

தமிழ்  ஹிந்து செய்தி:  

விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். தற்போது தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை  மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

கடந்தமுறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

இப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம்.  இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து  இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை அவருடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தனது ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியில் வெற்றி பெறுவாரா என்பது, இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களைவைத்துத் தெரிந்துவிடும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

பொன்னியின் செல்வனை மணிரத்னம் ஏற்கனவே எடுத்து முடித்ததுபோல் நாம் கற்பனையில்  ஐந்து வருடத்துக்கு முன் சொன்ன வீடியோ இதையும் பார்த்து ரசியுங்கள்

 

 

அம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்

Image result for வெண்பொங்கல்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
  12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019

 

 

வெண்பொங்கல் வேண்டுதல்

 

இட்லி தோசை என்று எதை நீட்டினாலும்

இருக்கட்டும் என்று சொல்லி சற்றுத் தள்ளி வைப்பேன்.

பொங்கலென்று சொல்லிவிட்டால் போதுமடா போதும்

பொங்கி வரும் பசி எனக்கு பிடுங்கித் தின்னத் தோணும்.

 

பொங்கலன்று நாம் பொங்கும் தித்திப்(பு) பொங்கலன்று –

நான் சொல்லும் பொங்கல் நல்ல விறுவிறு வெண்பொங்கல்.

பார்த்தாலே பசி எடுக்கும் கப கபவென எரியும் –

உண்ண உண்ண உயிர் சிலிர்க்கும் ருசி உனக்குத் தெரியும்.

 

கொதிக்க கொதிக்க வேணுமடா வெண்பொங்கல் எனக்கு –

கரண்டி நெய்யை மேலே விட்டு கிளறிக்கொண்டு கொட்டு !

உப்பும் மிளகும் தூக்கலாக இருக்க வேணும் எனக்கு –

சப்புக் கொட்டி சாப்பிடவே செய்யும் இந்த சரக்கு.

 

குளித்து முடித்து வந்து விட்டால் பசியும் வந்து சேரும் –

பொங்கல் வாசம் வந்து விட்டால் கையும் வாயும் பேசும்.

சட்னி சாம்பார் எதுவென்றாலும் சேர்த்தடிக்கத் தோணும்

கொத்சு என்று சொன்னால் மனசு குட்டிக்கரணம் போடும்.

 

பெருமாள் கோயில் பொங்கலென்றால் பெருமை உனக்குப் புரியும்

பக்தி கொஞ்சம் பசியும் கொஞ்சம் போட்டு வயிற்றைக் கிளறும்

அம்மா கையால் செய்த பொங்கல் மீண்டும் எனக்கு வேணும்

தவம் இருந்தால் கிடைத்திடுமோ மீண்டும் அந்தச் சொர்க்கம்.

 

பொங்கலோ பொங்கல் என்று உரக்க நீயும் சொல்லு

வெண்பொங்கல் வீட்டில் செய்தால் வயிறும் மனமும் நிறையும்

முந்திரியைப் போட்டு நெய்யில் வறுவறுன்னு வறுத்து

வெண்பொங்கல் வேண்டுமம்மா – வேண்டுதல் நிறைவேற்று.

 

 

குவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்

Related image
“ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண்டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது” என்று கூறத் தொடங்கினார் முஸே டி’ என்டோலின்.

பாபர்க் கு கார்மீலில் இருக்கிற எனது வீடுதான் உங்களுக்குத் தெரியுமே! ருஷ்யர்கள் படையெடுத்து வந்தபொழுது எனது பக்கத்து வீட்டில் ஒரு பைத்தியக்காரி வசித்து வந்தாள். Maupassant_2அவளுக்குப் பைத்தியம் ஏற்பட்டதே ஒரு பெருங்கதை. இந்த உலகத்திலே துன்பத்தில் யாருக்குத்தான் பங்கு கிடையாது! அந்த ஸ்திரீக்கு துன்பம் தனது ஏகபோக அன்பைச் சொரிந்தது. அவளது இருபத்தைந்தாவது வயதில் தகப்பனாரை இழந்தாள். அவர் இறந்த ஒரு மாதத்திற்குள் அவள் புருஷனும், அப்பொழுதுதான் பிறந்த குழந்தையும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக வந்த துன்பத்தின் கடாக்ஷத்தால் அவள் படுத்த படுக்கையாகி, பல நாட்கள் ஜன்னி கண்டு பிதற்றினாள். இதன் பிறகு கொஞ்ச நாள் சோர்வும், அமைதியும் அவளைக் கவ்வின. அசையாது அலுங்காது, படுத்த படுக்கையாக, வெறுமெனக் கண்களை மிரள மிரள விழித்துக்கொண்டு கிடந்தாள். உடம்பு குணமாகி விட்டது என்று நினைத்து அவளைப் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்படி செய்ய முயற்சித்தார்கள். ஆனால், அவளைத் தூக்க முயன்றவுடன், அவள் கூச்சலிட்டு, கொல்லப்படுபவள் போல் ஓலமிடத் தொடங்கியதால், குளிப்பாட்டி உடைகளை மாற்றுவதற்கு மட்டுமே அவளைப் படுக்கையிலிருந்து எடுக்கவும், மற்றபடி படுத்த படுக்கையாகவே கிடக்கவும் அனுமதித்தார்கள்.

 வயது முதிர்ந்த வேலைக்காரி ஒருத்தி அவள் பக்கத்தில் இருந்து அவளுக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தாள்.

அந்தப் பிரமை மண்டிய உள்ளத்தில் என்ன ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்று ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. அவள் மறுபடி பேசியதே கிடையாது. என்ன நடந்தது என்று திட்டமாக அறியாமல் வெறும் துன்பக் கனவு கண்டு கொண்டிருக்கிறாளா? அல்லது அவளது கலங்கிய மூளை சலனமற்றுவிட்டதா? இப்படிப் பதினைந்து வருஷங்கள் கழிந்தன. இத்தனை காலமும் அவள் உயிர்ப் பிணமாகக் கிடந்தாள்.

சண்டை ஆரம்பித்தது. டிஸம்பரில் ஜெர்மானியர் கார்மீலுக்குள் வந்தனர். எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. அப்பொழுது நல்ல மாரிக்காலம். ஜலம் கல்லைப் போல் உறைந்து பாறைகளைக்கூட உடைத்துத் தகர்த்துவிடும் போல் இருந்தது.

எனக்கோ, அங்கு இங்கு அசைய முடியாதபடி கீல்வாதம். நாற்காலியில் சாய்ந்தபடியே அவர்கள் தட்தட் என்று கால் வைத்துப் போகும் சப்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ராணுவப் படை இடைவிடாமல் சென்று கொண்டேயிருந்தது; தட்தட் என்ற சப்தம் காதில் இடித்துக் கொண்டேயிருந்தது. ராணுவ அதிகாரிகள் தங்கள் படைகளைப் பிரித்து, உணவு கொடுக்கும்படி, வீட்டுக்குப் பத்து இருபது பேராக எங்கள் ஊர்க்காரர் மீது சுமத்திவிட்டனர். எனது பக்கத்து வீட்டிற்குப் பன்னிரண்டு பேர் சுமத்தப் பட்டனர். அதில் ஒருவன் ராணுவ அதிகாரி – மேஜர் – வெறும் தடியன், முரடன்.

கொஞ்ச நாட்களுக்கெல்லாம் அமைதியாக நடந்து வந்தது. பக்கத்து வீட்டுக்காரி நோயாளி என்று அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. முதலில் அவன் அவளைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நாட்களில் அவர்கள் பார்க்க முடியாத ஸ்திரீ என்பது அவனது மனத்தை உறுத்தியது. அவளுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தீராத் துயரத்தால், பதினைந்து வருஷங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று கூறினார்கள்; அவன் நம்பவில்லை; அந்தப் பைத்தியம் தன் மனத்தில் இதைப் பெருமை என்று நினைத்துக்கொண்டு, ‘படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டேன்’ என்கிறது என்று எண்ணிக்கொண்டான். இப்படி நோயாளி என்று வேஷமிட்டு, பிரஷ்யர் முன்பு வராமல், ஏமாற்ற முயலுகிறாள், அடைந்து கிடக்கிறாள் என்று எண்ணிவிட்டான்.

அவன், அவளைப் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவள் அறைக்குச் சென்றான்.

“எழுந்து கீழே வா! நாங்கள் எல்லோரும் உன்னைப் பார்க்க வேண்டும்” என்று முரட்டுத்தனமாகக் கூறினான்.

அவள் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தாள்.

“அதிகப் பிரசங்கித்தனத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டேன். மரியாதையாக நீ எழுந்து நடந்து கீழே வராவிட்டால், உன்னை நடக்கச் செய்ய எனக்குத் தெரியும்!” என்றான் அந்த முரட்டு மேஜர்.

அவள் அவனைக் கேட்டதாகத் தெரியவில்லை. சலனமற்றுக் கிடந்தாள். அவள் பேசாமல் இருப்பதே தன்னை அவமரியாதை செய்வது என்று நினைத்துக்கொண்டு, “நாளைக்கு நீ கீழே இறங்கி வராவிட்டால்…” என்று தலையை அசைத்து உருட்டி விழித்துவிட்டு அவ்விடத்தை விட்டு வந்துவிட்டான்.

மறுநாள் கிழட்டு வேலைக்காரி பயந்துபோய் அவளுக்கு உடைகளை அணிவிக்க முயன்றாள். அதற்குப் பைத்தியம் கூச்சலிட்டுக்கொண்டு தன் முழு பலத்தோடும் முரண்டியது.

அந்த முரடன் சப்தத்தைக் கேட்டு மேலே ஓடினான். வேலைக்காரி அவனை இடைமறித்து, காலில் விழுந்து, “அவள் வரமாட்டேன் என்கிறாள், எஜமான். மன்னிக்க வேண்டும். துயரத்தில் மூளை கலங்கியவள்” என்றாள்.

 படைவீரன் கோபத்தால் துடித்தாலும், சிறிது தயங்கினான். அவளைப் பிடித்து இழுத்து வரும்படி உத்தரவிடவில்லை.

பிறகு, உடனே கலகலவென்று சிரித்துவிட்டு, ஜெர்மன் பாஷையில் உத்தரவிட்டான். சிறிது நேரங் கழித்து, சில சிப்பாய்கள் ஒரு படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அந்தக் கலைக்காத படுக்கையில், பித்துக்குளி, மௌனமாக, என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காது, படுத்துக் கிடந்தது. படுக்கையைவிட்டு எழுப்பாதவரை அதற்கு என்ன கவலை? அவள் பின்பு ஒரு சிப்பாய் பெண்கள் உடையை எடுத்துக்கொண்டு நடந்தான்.

அந்த முரட்டு மேஜர், “நீயாக உடுத்திக்கொண்டு நடந்து வருகிறாயா, இல்லையா? அதைத்தான் பார்க்கிறேன்!” என்று கைகளைத் தேய்த்துக் கொண்டான்.

இந்தக் கூட்டம் இமாவில் காட்டுப் பக்கம் சென்றது. இரண்டு மணி நேரங் கழித்து, சிப்பாய்கள் மட்டும் தனியாகத் திரும்பினார்கள். பைத்தியக்காரி என்னவானாள் என்பது தெரியவில்லை. அவளை என்ன செய்தார்கள்? எங்கு கொண்டு சென்றார்கள்? ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது.

பனி அதிகமாகப் பெய்தது. எங்கு பார்த்தாலும் உறைபனி. காடுகள் பனித் திரைகள் மாதிரி நின்றன. ஓநாய்கள் வீட்டுக் கதவண்டைவரை வந்து ஊளையிடத் தொடங்கின.

அந்தப் பைத்தியத்தின் கதி என் சிந்தனையைவிட்டு அகலவில்லை. பிரஷ்ய அதிகாரிகளிடம் இதற்காக மனுச்செய்து கொண்டேன். அதற்கே என்னைச் சுட்டுவிட முயற்சித்தார்கள். வசந்த காலம் வந்தது. வீட்டுக்குத் தலைவரியாகச் சுமத்தப்பட்ட படை சென்றுவிட்டது. ஆனால், எனது பக்கத்து வீடு அடைத்தபடியே கிடந்தது. வீட்டைச் சுற்றிய தோட்டத்தில் புல்லும் பூண்டும் கண்டபடி வளரத் தொடங்கின. கிழட்டு வேலைக்காரி மாரிக் காலத்திலேயே இறந்துவிட்டதால், அந்தச் சமாசாரத்தைப் பற்றி ஒருவரும் கவலை கொள்ளவில்லை. நான் ஒருவன் தான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை என்ன செய்தார்கள்? அவள் காட்டு வழியாகத் தப்பித்துக் கொண்டாளா? யாராவது அவளைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்களா? அவள்தான் பேசாமடந்தையாச்சே; சந்தேகம் தீர்ந்தபாடில்லை. காலந்தான் சிறிது சிறிதாகக் கவலையைக் குறைத்தது.

அடுத்த இலையுதிர் காலம் வந்துவிட்டது. காட்டுக் கோழி ஏராளம். கீல் வாதத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் காட்டிற்குச் சென்று ஐந்நூறு பட்சிகளைச் சுட்டு வீழ்த்தினேன். அதில் ஒன்று ஒரு குழிக்குள் விழுந்துவிட்டது. அதை எடுக்கப் பள்ளத்தில் இறங்கினேன். அது ஒரு மண்டையோட்டின் பக்கத்தில் கிடந்தது. உடனே அந்தப் பித்துக்குளியின் ஞாபகம், என் மனத்தில் எதை வைத்தோ அடித்தது போல் எழுந்தது. அந்த நாசமாய்ப் போன வருஷத்தில் எத்தனை பேரோ இறந்திருக்கலாம். ஆனால் அந்தப் பித்துக்குளியின் மண்டையோடுதான் இது என்று நான் திட்டமாகக் கூறுவேன்.

உடனே எல்லாம் ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. அந்தக் குளிரில் யாருமற்ற காட்டில் படுக்கையை வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். பித்துக்குளி, மனப் பிராந்தியைப் பிடித்துக்கொண்டு, குளிரில் விறைத்துவிட்டது. பனி அவளை மூடியது.

ஓநாய்கள் அவளைத் தின்றன. பட்சிகள் மெத்தைப் பஞ்சை எடுத்துக் கூடு கட்டின. அந்த மண்டையோட்டிற்கு மட்டும் ஒரு புழுவும் குடியிருக்க வரவில்லை. அவள் அஸ்தியை நான் சேகரித்து, ‘நமது சந்ததி இனியாவது யுத்தத்தை அறியாமல் இருக்க வேண்டும்’ என்று அதன் மீது பிரார்த்தித்தேன்.

ரகுவம்ஸம்

 

By Sesa Dasa Here are three questions for you to ponder, dear reader: First, which came first, the chicken or the egg? Second, what do a highway billboard, a small town storefront, and the Greek ph…

 சூர்ய குல  மன்னர்  ஸ்ரீ ராமபிரானின் பரம்பரையைப்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

காளிதாசர் ரகுவம்ஸம்  என்று ஒரு காவியம் படைத்திருக்கிறார். 

1. ப்ரம்ஹாவின் மகன் மரீசி
2. மரீசி யின் மகன் காஷ்யப்
3. காஷ்யப் மகன் விவஸ்வான்
4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
5. வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்).
6. இக்ஷ்வாகு மகன் குக்ஷி.
7. குக்ஷி மகன் விகுக்ஷி
8. விகுக்ஷி மகன் பான்
9. பான் மகன் அன்ரன்யா
10. அன்ரன்யா மகன் ப்ருது
11. ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)
12. த்ரிஷங்கு மகன் துந்துமார்
13. துந்துமார் மகன் யுவனஷ்வா
14. யுவனஷ்வா மகன் மாந்தாதா
15. மாந்தாதா மகன் சுசந்தி
16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்
17. துவசந்தி மகன் பரத்
18. பரத் மகன் அஸித்
19. அஸித் மகன் ஸாகர்
20. ஸாகர் மகன் அஸமஞ்ச
21. அஸமஞ்ச மகன் அன்ஷுமான்
22. அன்ஷுமான் மகன் திலீபன்
23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
24. பாகீரதன் மகன் காகுஸ்தன்
25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் ) 
26. ரகு மகன் ப்ரவ்ருத்
27. ப்ரவ்ருத் மகன் ஷம்கன்
28. ஷம்கன் மகன் ஸூதர்ஷன் 
29. ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்
30. அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்
31. சிஹ்ராக் மகன் மேரு
32. மேரு மகன் பரஷுக்ஷுக்
33. பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்
34. அம்பரீஷ் மகன் நகுஷ்
35. நகுஷ் மகன் யயாதி
36. யயாதி மகன் நபாங்
37. நபாங் மகன் அஜ்
38. அஜ் மகன் தஸரதன்
39. *தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன்*
40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்

பிரும்மாவின்  39 வது தலைமுறை ஸ்ரீ ராமர்

 

(நன்றி: இணையதளம்) 

 

புரந்தரதாசர் – முகநூல் பதிவு

Related image

ஒன்பது கோடி

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன்.

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும்.

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திருவிளையாட்டு.

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் “செல்வோம்… செல்வோம்…’ என்று போய்விட்டாள்.

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.

அதுவும் எப்படி? அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்.

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.

“பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா….’

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு.

“சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே’ என்று கெஞ்சுகிறார் அந்த மகான்.

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்டமாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி.

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

பெரிய கோவில். மக்கள் “பாண்டுரங்கா… பாண்டுரங்கா’ என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார்.

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்.

“”ஐயா… தர்மப் பிரபுவே…”

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

“”ஐயா… தர்மப் பிரபுவே… சுவாமி…”

“”டேய்! யாருடா நீ?” அதட்டினார் ஸ்ரீனிவாசன்.

“”ஐயா… நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்குப் பூணூல் போடலாம்…. பிரபு… ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்…. சாமி…”

“”போ… போ… வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை…” விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப்பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.

ஒருநாள், “”உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு…” என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

“இது ஏதடா வம்பாப் போச்சே…’ என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். “”இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே…”

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, “”பிரபு… இது தேய்ந்து போயிருக்கிறதே… எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்…” என்றான் இறைவன்.

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

“”நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டுவந்து என் கடையில் அடமானம் வை… நல்ல காசு தருகிறேன்” என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

“”பவதி… பிக்ஷாம் தேஹி…”

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

“”என்ன வேண்டும் சுவாமி?”

“”அம்மா… நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்குப் பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை.

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா…

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா…”

“பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?’ என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

“”அட… நீ என்னம்மா… புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?” என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

“அட… உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே… அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?’

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி.

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றியது.

“”இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக்கொண்டு ஏதாவது பணம் கொடும்” என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கிப் பரீட்சித்துப் பார்த்து, “இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே..’ என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, “”ஓய் பிராமணரே… இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்…” என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

“”சரஸ்வதி… மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா…”

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். “ஐயய்யோ… இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?’

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். “இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதேமேல்…’ என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.

“”தாயே துளசி… நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா” என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. “என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே” என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்… பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, “”இந்தாருங்கள் மூக்குத்தி…” என்று கொடுத்தாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக்கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, “எனக்குப் பணம் வேண்டாம்… என்னுடைய நகையைக் கொடுங்கள்…’ என்று கேட்டால் என்ன செய்வது?

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை!

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்துவிட்டான்.

“”ஐயா… பிரபுவே.. நான் கொடுத்த நகைக்குப் பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்…” என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சினார்.

“”ஐயா… மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது.  வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாகப் பணம் தருகிறேன்.”

“”சரி… சரி… சாயங்காலமும் என்னை ஏமாற்றிவிடாதே. நான் வருவேன்…”

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார்.

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

“”என்னடா… ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?”

“”சுவாமி… என்னை மன்னித்துவிடுங்கள்… கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்….

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்… பின்னர் மறைந்து விட்டார்…”

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.!

கடையைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்திவிட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னைப் பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.

“இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

போ… உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்….’

புரந்தரதாசன் ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார்.

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்றுமுறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார்.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற “ஸ, ரி, க, ம, ப, த, நீ..’ என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.

காலஞ்சென்ற திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் தமிழ் நாட்டில் புரந்தரதாசரின் பதங்களைப் பாடி பக்தியை ஊட்டினார்.

எம்.எஸ்.ஸின் “ஜகதோ தாரணா’வும் கேட்க கேட்க பக்தியை நம் மனத்தில் விதைப்பவை.

அப்படிப்பட்ட மகான் புரந்தரதாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்றோர் உயிர்– தில்லைவேந்தன்

Related image
என்னை எனக்கே பிடிக்கவில்லை
     எதையும் ஒழுங்காய் முடிக்கவில்லை
முன்னை நினைவும் மறையவில்லை
     மூண்ட வருத்தம் குறையவில்லை
தன்னை மறந்தே உறங்கிடவும்
     சற்றே சுமையும் இறங்கிடவும்
இன்னும் வரம்நீ தரவில்லை
     இறைவா மனமேன் வரவில்லை?
நூலைப் புரட்டி இலக்கியத்தின்
     நுட்பச் சுவையை அறியவில்லை
ஆலைக் கரும்பாம் அமுதஇசை
     அளிக்கும் இன்பம் தெரியவில்லை
காலை வானில் கதிரெழுதும்
     கவிதை அழகு புரியவில்லை
வேலை, வேலை, வேலையென
     விரைந்த காலம் திரும்பவில்லை.மழலைக் குரலில்  துளிர்தேனை
     மாந்தக் காதைத் திறக்கவில்லை
குழலைக் குயிலும் இசைக்கையிலே
     குளிர்ந்து நெஞ்சம் பறக்கவில்லை
விழலைப் பயிராய்ப் பார்த்திட்டேன்
     வீணாய்ச் செருக்கைச் சேர்த்திட்டேன்
நிழலைத் தேடி அலைந்திட்டேன்
      நிலைத்த உண்மை களைந்திட்டேன். 

ஆடல், பாடல்,  அருங்கலைகள்,
     அறிவைக் கடந்து  ஞானத்தைத்
தேடல், தெளிதல் இவையெல்லாம்
       சிறிதும் அறிய விழையவில்லை.
பீடு    யர்ந்த   பண்பாட்டின்
     பெருமை, அருமை, தொன்மையெலாம்
கூடும்   மூப்பும்  நோயதுவும்
     கூறும்  முன்னே விளங்கவில்லை
      
       
கிண்ணம்  நிரம்ப   நீரிருக்கக்
     கேணி  சென்றேன் நீரிறைக்க.
எண்ணும் எழுத்தும் கற்றென்ன?
     எண்ணம் அறியக் கற்கவில்லை.
கண்ணும், காதும்  இருந்தென்ன?
     காண, கேட்கப் பழகவில்லை..
மண்ணில் மற்றோர் உயிரென்றே
     வாழ்ந்து மறைந்தே போவேனோ?

                                                
     

குவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்

திரு நடராஜன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு  எண்பது வயதைக் கடந்தாலும் இன்னும் பல சீரிய முயற்சியில் தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். அவற்றுள் மிக முக்கியமானது ” தேசியச் சொற்கள்” (National words) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பல வருடங்கள் ஆராய்ச்சிக்குப்பிறகு  இலட்சக்கணக்கில் செலவுசெய்து வெளிக்கொண்டு வந்ததுதான். 

மார்ச் 3 ஞாயிறு அன்று  திரு நடராஜன் தனது புத்தகத்தைப்பற்றியும் அதன் மூலம் எப்படி நமது பாரதநாட்டை மொழி அளவில் ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதுபற்றியும்  விளக்கமாகப் பேசினார்.

‘பாரதி’ என்ற பேசும் மொழியை பாரத நாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதே இவரது ஆராய்ச்சியின் முடிவு. 

அதன்படி இந்தியாவில் வழக்கில் இருக்கும் முக்கிய மொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு  3000 -4000 சொற்களைக்கொண்ட பேசும் மொழியைத் தயார் செய்தோமேயானால் இந்தியாவில் எவரும் எங்கு சென்றாலும் சுலபமாக உரையாடலாம்.  ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், உருது,  பீகாரி, பஞ்சாபி ,குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், ஒவ்வொன்றிலிருந்தும் 300-400  சொற்றொடர்களை எடுத்துக்கொண்டு ‘பாரதி’ யை உருவாக்கலாம்.

உதாரணாமாக FRUIT என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக இந்தியாவில் உள்ள அனைவரும் ‘பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.  TIFFIN என்பதற்கு அனைவரும் நாஷ்டா என்று பயன்படுத்தலாம்.  

இந்தச் சொற்களை அனைவரும் அவரவர் மொழியிலேயே எழுதிக்கொள்ளலாம். 

அது சரி, எந்த மொழியிலிருந்து  எத்தனை சொற்களை எடுத்துக் கொள்வது? 

அதற்கும் நடராஜன் பதில் வைத்திருக்கிறார். 

வழக்கில் உள்ள மொழிகளைப்  பேசுவோரின் விகிதாசாரத்தில் எடுத்துக்கொண்டால் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு இந்தியப் பொதுமொழியை உருவாக்கலாம் என்பது இவரது வாதம். 

அதைப்போல உலகில் ஆங்கிலம்  பேசுபர்களின் எண்ணிக்கையில்  இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாம் நம்முடைய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதை உலகம் ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும். அமெரிக்கன் ஆங்கிலம், பிரிட்டன் ஆங்கிலம் என்பது போல  பாரதீய ஆங்கிலமும் வரவேண்டும். அதற்கு BHANGLISH  என்று பெயர் வைக்கலாம் என்பது திரு நடராஜனின் கருத்து. 

இவரது இந்த இரண்டு கருத்துக்களுக்கும் அரசியல் இயக்கங்கள் ஆதரவு அளிக்க முன்வருமானால் இது நடைமுறைக்கு விரைவில் வந்துவிடும். 

அந்த நல்ல நாளை எதிர்பார்க்கிறோம்.  

இப்படிப்பட்ட புதுமையான முயற்சிபற்றிய நிகழ்வைக் குவிகத்தில் அளவளாவலாக அமைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். 

 

 

Image may contain: 1 person, eyeglasses and text

பிரபல எழுத்தாளரும் சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக தமிழக அரசு விருது வாங்கிய திரு எஸ் சங்கர நாராயணன் குவிகம் அளவளாவல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அவரது அளவளாவல்பற்றி சரஸ்வதி காயத்ரி அவர்களின் முகநூல் பதிவு: 

 

குவிகம் இலக்கிய வாசல்..இன்று மாலை சரியாக 4. மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு முடித்தார்கள்.

எஸ்.சங்கரநாராயணன் சார்அவர் உரையை அச்சிட்டு கொடுத்தார்.அதனை அவர் உறவினர் அழகாக வாசித்தார்.

ரமேஷ் வைத்யாவின் கலகல பேச்சுடன் தொடங்கின ” அளவளாவல்” ( என்ன அழகு இந்த வார்த்தை. ல,ள கரம் பழக இதை பத்துமுறை சொல்லி பயிற்சி எடுக்கலாம்.😊)பங்கேற்பாளர்களின் அறிமுகத்தோடு நிறைவு பெற்றது.

உங்களின் கனவு நனவாக வேண்டும் சார். வெயிலுக்குப் பின் சிறு தூறலாவது விழுமென்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.  பார்ப்போம்.

குவிகம் அமைப்பினருக்கும் Sundararajan Subramaniam சார் மற்றும் அவரின் மனைவிக்கு நன்றியும் அன்பும்.

தங்கள் இல்லத்தை இலக்கிய இல்லமாக மாற்றியிருக்கும் Kirupanandhan Kirubanandan Srinivasanஅவர்களுக்கும் நன்றியும் அன்பும். 

 // மீண்டும் இயற்கையை வணங்கும்  அந்த நாளுக்கு கலாச்சாரத்தால் மனிதர்கள் ஒத்திசையும் ,இழைந்து பழகும் காலத்துக்குத் திரும்ப வேண்டும். இது எனது கனவு. வேர்களை நோக்கிய பயணம் இது. வேர்களற்று அந்தரத்தில் பிடுங்கி எறியப்பட்ட செடிகள் நாம். வெயிலில் வாடி உலர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.//

      

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

பங்களூரில் ஸிந்துஜாவைத் தேடி….

பங்களூருவில் நாளைய டிராஃபிக்கைக் குறைக்க, இன்றைக்குச் சாலையின் மத்தியில் அரக்கர்கள்போல் நிற்கும் கான்கிரீட் தூண்களும், அதன்மேல் தொண்ணூறு டிகிரியில் உட்கார்ந்திருக்கும் பெரிய பீடமும், நாளை ஏதோ ஒரு முதன் மந்திரியால் பச்சைக் கொடி அசைத்து வெள்ளோட்டம் விடப்படும் மெட்ரோ ட்ரெயினுக்காகக் காத்திருக்கின்றன! இன்றைய சாலைகளைக் குறுக்கி ஒற்றையடிப் பாதைகளைப்போல மாற்றி, எல்லாவகை வாகனங்களையும் ஊர்வலம் செல்ல வைத்திருக்கின்றன. உள்ளே நடப்பது தெரியா வண்ணம், சுற்றிலும் தகர பேனல்கள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அநேகமாக இதே நிலைதான் – ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்வதைப்போல இருக்கின்றன!

தடைகளின்றி  சில கிலோமீட்டர்கள் ஏதாவதொரு வாகனத்தில் செல்லமாட்டோமா என்ற ஆதங்கத்துடன், கன்னடத் தமிழில் பேசிய வெங்கடேசனுடன் (பேக்கு, பேக்கு என்ற போதெல்லாம் திரும்பிப் பார்த்து, ‘என்னை இல்லை’ என்று உறுதி செய்துகொண்டேன்!) மேலும் கீழும் குதித்தவாறு ( பாலைவன சஃபாரி இதைவிட குலுக்கலும், வயிற்றைக் கலக்கலும் குறைவாயிருந்த நினைவு!) பென்னர்கட்டாவிலிருந்து சுமார் 20 கிமீ தள்ளியிருந்த கோத்தனூர் நாராயணபுரா கிராஸ் சென்றேன்.

மூன்று பேருடன் குறுக்கே வேகமாய்ப் போகும் ஸ்கூட்டர், முதுகில் பல்லியைப்போல ஒட்டிக்கொண்டு, பாய் ஃப்ரண்டின் காதைக் கடித்தவாறு, கழுத்தைச்சுற்றி, முகம் மறைத்த ஓட்னியுடன், பல்சரில் பவனிசெல்லும் புதுமைப் பெண், புரியாத கெட்டவார்த்தையில் திட்டியவாறு ராங் சைடில் ஓவர்டேக் செய்யும் கருப்பு, மஞ்சள் ஆட்டோ, நாட்பட்ட அழுக்குடன் அசமஞ்சமாய் நின்று, புகை கக்கிக் கிளம்பும் நகர பஸ், விதவிதமான கலர், சைசுகளில் அரை இன்ச் இடைவெளியில் ஊரும் கார்கள் – ஐம்பதடிக்கு ஒரு சிக்னல், சிக்னல் இல்லாத ஜங்க்‌ஷன்களில் குழப்படியான ட்ராஃபிக் ஜாம், வாயில் வெற்றிலை பாக்குடன், வித்தியாசமாகக் கட்டிய புடவையுடன் பெண்கள், நீலநிற யூனிஃபார்மில் ஆண்கள் (குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளுக்கு நடுவில் சாலையைக் கடந்தபடி மெட்ரோ வேலை), நான்கு சக்கர வண்டிகளில் சப்போட்டா, கிர்னீர் பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை – பாதி சாலையை அடைத்தவாறு வியாபாரம்!

ஒரு காலத்தில் மரங்களும், பார்க்குகளும் நிறைந்திருந்த பெங்களூர், இன்று ராட்சச வடிவில் விண்ணைத்தொடும் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன், வெயில் சுட்டெரிக்க, புழுங்கித் தொலைக்கிற பங்களூருவாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது – இயற்கையை அழிப்பதில் நமக்கு ஈடு நாம்தான்!

20 கிமீ தூரத்தை இரண்டரை மணியில் கடந்தேன்! இரண்டு யூ டர்ன், ஒரு ராங் ஒன் வே, மூன்று முறை நிறுத்தி வழிகேட்டது எல்லாம் இதில் அடக்கம். (கூகுள் மேப் போட்டிருக்கலாமே என்னும் அறிவு ஜீவிகள், எனக்கு அந்த அளவுக்கு விபரம் பத்தாது என்பதையும், டிரைவர் வெங்கடேசனுக்கு வயது அறுபதுக்குமேல் என்பதால் அவருக்கும் இதெல்லாம் தெரியாது என்பதனையும் அறியவும்!)

இவற்றையெல்லாம் கடந்து, அந்தப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து, செக்யூரிடியிடம் என் ஜாதகம் பதித்து, பின்னால் இருந்த ‘ஏ’ ப்ளாக்குக்குச் சென்றேன்! குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்த பிறகு, லிஃப்ட் ஏறுமுன், ஆராம்ஸாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்த நான்கைந்து நாரீமணிகளைத் தாண்டி, லிஃப்டில் 7 ஆம் நம்பரை ஒத்தி, தானாய் மூடித் திறந்த கதவுகளைவிட்டு வெளியேவந்தேன். சிரித்த முகத்துடன் வாசலிலேயே வரவேற்றார் ஸிந்துஜா – எழுத்தாளரும் என் நண்பருமான, ட்டிஆர் நடராஜன்!

அழகிய சிங்கர்தான் ஸிந்துஜாவை எனக்கு அறிமுகம் செய்தார் ‘ஸிந்துஜா கதைகளை படிங்க – ஸிம்பிளா கதை சொல்வார்’ என்றார்! விருட்சத்தில் ஓரிரண்டு கதைகள் படித்திருந்தேன். தினமணிக் கதிர் ஆசிரியர் பாவைசந்திரன் அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு, அவரது ‘நல்ல நிலம்’ நாவலுடன், எம் வெங்கட்ராம் கதைகள், ஸிந்துஜா சிறுகதைகள் புத்தகங்களைக் கொடுத்தார் – அறிமுகமே இல்லாத எனக்கு, அவர் கொடுத்த ஊக்கம் வியப்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது! சென்ற புத்தகக் கண்காட்சிக்கு ஸிந்துஜாவுடன் சென்றிருந்தேன். கே வி ராஜாமணி, சிங்கர், ‘தென்றல்’ சுவாமினாதன், சந்தியா நடராஜன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளுமைகள் – பார்த்துப் பேசினோம்!

அவரது சிறுகதைகள் இயல்பான நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்(தனி பதிவுதான் போடவேண்டும்). எழுத்துக்களும் அவரைப்போலவே – எளிமையும், நேர்மையும் கொண்டவை!!

ஏகாந்தமான, ஏழாவது தளத்தில் கலை நயத்துடன் ஒரு ஃப்ளாட். மகள் கொண்டுவைத்த மிக்சர் வகையறாக்களுடன், ‘சில்’லென்ற லெமன் ஜூஸ் – அன்றைய, இன்றைய பத்திரிக்கைகள், தீபாவளி மலர்கள், இன்று சிறுகதைகள், போட்டிகள், முகநூல் பதிவுகள், எப்போது, எப்படி எழுதுகிறோம், தனி வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என நாற்பது நிமிட உரையாடல் (அரட்டை அல்ல!). மனதுக்கு நிறைவாக இருந்தது.

நா பா வின் குறிஞ்சி மலருடன் விடைபெற்றுக்கொண்டேன். கார் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.

மாலை ஐந்துமணிக்குமேல் ஆகிவிட்டதால், அதிகமான டிராஃபிக்கில் மூன்றுமணி நேரத்தில், ஊர்ந்தபடி வீடு வந்துசேர்ந்தேன்!

இனிமேல் பங்களூரு வந்தால் ‘ககன’ மார்க்கத்தில்தான் வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன் (உடலைச் சுருக்கி, காற்றுபோல் ஆக்கி, நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் ஆகாயமார்க்கமாகச் செல்வது! – மேல் விபரங்களுக்கு கோமலின் ‘பறந்து போன பக்கங்கள்’ பக்கம் 72 – -73 – குவிகம் பதிப்பு – பார்க்கவும்!).